பேரிடர்களை சகித்துக் கொள்வதற்கு நாம் பழக்கப்படுத்தப்படுகிறோம். பேரிடர்களின் துயரங்களுக்கு இயற்கையை காரணமாக்கிவிட்டு எளிதாகத் தப்பிச் சென்றுவிட முடியும் என்று மத்திய – மாநில அரசுகள் கருதுகின்றன.
சுனாமி அலை தாக்கியது 2004-ம் ஆண்டில். ஒக்கி புயல் 2017-ம் ஆண்டில். இரண்டிலும் மீனவர்களை காக்க வேண்டிய கடலோரக் காவல் படையும், கப்பற் படையும் கடமையைக் கை கழுவிவிட்டன.
சென்னையில் காற்று வீசுமா, மும்பையில் கிரிக்கெட் மேட்ச் மழை இடையூறின்றி நடக்குமா? – இவைதான் வானியல் ஆய்வு மையத்தின் கவலைகள்! ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மீனவர்கள் குறித்த அக்கறை அவர்களது இதயத்திலும் இல்லை, தொழில் நுட்பத்திலும் இல்லை.
சுனாமியின்போது கடலில் தத்தளித்த மக்களைக் காப்பாற்றியவர்கள் மீனவர்கள். ஒக்கி புயலில் கடலில் சிக்கிய மீனவர்களைக் காப்பாற்ற யாருமில்லை. மீனவர்களை மீனவர்களேதான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. விமானத்திலிருந்தும் ஹெலிகாப்டரிலிருந்தும் பாதுகாப்பாக தண்ணீர் திட்டுகளைப் பார்வையிடுகிறார்கள் அமைச்சர்கள். அவர்களின் கார் கதவைத் திறந்து விடுவதற்கும், பிரியாணி விருந்து ஏற்பாடுகளை செய்வதற்கும் மெனக்கெடும் அதிகார வர்க்கம் மக்களை கைவிடுகின்றது.
2015 பெருமழையின் போது கடலூருக்கு வந்த தன்னார்வலர்களின் குழு ஒன்று “நீரில் மூழ்கிய குடிசைகளை பார்க்க முடியவில்லையே, எப்படி சேதத்தை நம்புவது” என்றார்கள். இதுதான் நகர்ப்புறத்து மனிதாபிமானம். வெள்ளம் வடிந்த பிறகும், ஒக்கி புயல் கடந்த பிறகும்தான், வாழ்க்கை அதல பாதாளத்தில் இருக்கிறது என்பதைக் கூட அறிய முடியாத கண்ணியவான்கள் அவர்கள்.
சாகர்மாலா திட்டத்தின் மூலம் மீனவர்களை கடற்கரையை விட்டே விரட்ட திட்டமிடுகிறது இந்திய அரசு. இனயம் அல்லது கோவளம் துறைமுகம், அணுமின் நிலையங்கள், அனல் மின் நிலையங்கள், சுற்றுலா மையங்கள் மட்டுமே இனி கடற்கரையில் இருக்க வேண்டியவை என்பதால் மீனவர்களை துரத்துகிறது அரசு.
ஆழ்கடல் ஏற்கெனவே பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்களுக்கு தாரைவார்க்கப்பட்டு விட்டது. அவற்றுடன் போட்டி போட்டு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை ஒக்கி புயலுக்கு காவு கொடுத்திருக்கிறது அரசு.
மழை, புயல், சுனாமி முதலான இயற்கைச் சீற்றங்களால் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கையை விட, அரசாலும் அதன் மறுகாலனியாக்க திட்டங்களாலும் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகம். இதனை ஆவணப்படுத்துகிறது இந்தத் தொகுப்பு
தோழமையுடன் புதிய கலாச்சாரம்.
பேரிடர் : புயலா – அரசா ? – புதிய கலாச்சாரம் ஜனவரி 2018 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு (விவரம் கீழே தரப்பட்டுள்ளது) நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 20-ம் (நூல் விலை ரூ 20, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)
நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
உத்தரகாண்ட் : ஆன்மீக சுற்றுலாக்களால் கொல்லப்பட்ட பக்தர்கள்!
செம்பரம்பாக்கம் ஏரி வெள்ளம் பாசிச ஜெயா அரசின் குற்றம்!
கடலூர் பேரழிவு – நேரடி ரிப்போர்ட்
சென்னை மழைக்கு எல் நினோ மட்டும்தான் காரணமா?
எது வீரம்? யார் வீரர்கள்?
தமிழக வெள்ளம் : தனியார்மயம் உருவாக்கிய அழிவு!
வெயிலில் மரணம் : ஏ.சி அறையில் எச்சரிக்கை!
காஷ்மீர் வெள்ளம் : ஆர்.எஸ்.எஸ். மகிழ்ச்சி!
பீகார் வெள்ளம் : வடக்கிலும் ஒரு செம்பரம்பாக்கம்!
தானே புயல் பேரழிவு : தேவை, அற்ப நிவாரணமல்ல; மறுவாழ்வு!
மீனவர் துயரம் : உறங்காதே தமிழகமே, போராடு!
வெள்ளத்தில் தமிழகம் : நகரமயமாக்கத்தின் பயங்கரவாதம்!
நேபாளம் : எழவு வீட்டில் சீரியல் எடுக்கும் இந்திய ஊடகங்கள்!
பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
மின்னஞ்சல்
vinavu@gmail.com
அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
கடந்த 2017 நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், அரபிக் கடலில் வீசிய ஒக்கி புயல் தமிழகம் மற்றும் கேரளாவில் மிகப்பெரிய பேரழிவைத் தோற்றுவித்துள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் கடந்த டிசம்பர் 27, 2017 அன்று பாராளுமன்றத்தில் அளித்த அதிகாரப்பூர்வ தகவலின்படி, தமிழ்நாடு,கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் 661 மீனவர்களைக் காணவில்லை.
இதில் தமிழக மீனவர்கள் 400 பேர், கேரள மீனவர்கள் 261 பேர். கன்னியாகுமரி மாவட்ட நிர்வாக அறிவிப்பின்படி குமரி மாவட்டத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர்கள் 243 பேர் இன்னும் கரைக்குத் திரும்பவில்லை, இதில் குமரி மாவட்ட மீனவர்கள் (சொந்த மாவட்டம்) 176 பேர், இதர தமிழக மாவட்ட மீனவர்கள் 41 பேர், இதர மாநில மீனவர்கள் 26 பேர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை இணை அமைச்சர் திரு.கிரண்ரிஜு தெரிவித்த தகவலின்படி கேரளாவில் 74 மீனவர்களும், தமிழகத்தில் 19 மீனவர்களும் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.மற்றவர்களைக் காணவில்லை. இதுவரை கரை திரும்பாத அனைவரும் இறந்து விட்டார்கள் என்று முடிவு செய்து, அவர்களுக்கு இறுதிச் சடங்கையும் செய்து விட்டார்கள் மீனவர்கள்.
ஆழ்கடல் மட்டுமல்லாது குமரி மாவட்டத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது ஓகி புயல்.சுமார் 7000 வீடுகள்,லட்சக்கணக்கான மரங்கள்,பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்திருக்கிறது.
ஓகி புயல் பேரழிவு குறித்து மக்கள் கருத்து: ஓகி புயல் பேரழிவுக்கு அரசுதான் காரணம் என குமரி மாவட்ட மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள். குறிப்பாக மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமே நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகக் காரணம் என்கிறார்கள். இரு அரசுகளும் இதை மறுக்கின்றன.
உண்மை அறியும் குழுவின் நோக்கம் மேற்கண்ட இரு கருத்துக்களில் உண்மை எது? நிகழ்ந்த மனிதப் பேரழிவுக்கு யார் காரணம்? என்ற கேள்விகளுக்கு விடைகாணும் நோக்கில் கீழ்க்காணும் நபர்கள் கொண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.
உண்மை அறியும் குழுவின் அறிக்கையை வெளியிட்ட மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள்.
உண்மை அறியும் குழு உறுப்பினர்கள் :
சே.வாஞ்சிநாதன், வழக்கறிஞர், மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் ம.லயனல்அந்தோணிராஜ், மாவட்ட செயலாளர், ம.உ.பா.மையம், மதுரை டி.வி.பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர்,ம.உ.பா.மையம்,நாகர்கோவில் அரி ராகவன், வழக்கறிஞர், மாவட்ட செயலாளர், ம.உ.பா.மையம், தூத்துக்குடி இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், வழக்கறிஞர், திருச்சி தாஜுதீன், வழக்கறிஞர், திருச்சி விஜீலால், ஓய்வு பெற்ற ஆசிரியர், ம.உ.பா.மையம்,நாகர்கோவில் இராஜேந்திரன், சட்டக் கல்லூரி மாணவர், திருச்சி
கள ஆய்வு :
டிசம்பர் 25, 2017 -க்குள் ஆழ்கடலுக்குச் சென்றவர்கள் கரை திரும்பாவிட்டால் இறந்ததாகக் கருதுவோம் என்று குமரி மாவட்டம் தூத்தூர் பகுதி மீனவர்கள் அறிவித்ததை அடுத்து, மேற்கண்ட உண்மை கண்டறியும் குழு டிசம்பர் 26, 27, 28 – 2017 தேதிகளில் குமரி மாவட்டம் நீரோடி, வள்ளவிளை, சின்னத்துறை, தூத்தூர், பூத்துறை கிராம மக்களைச் சந்தித்து விசாரித்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,குளச்சல் மீன்வளத்துறை துணை இயக்குநர் அலுவலகம் சென்று அரசு தரப்பின் தகவலைக் கேட்டது. ஓகி புயல் பாதிப்பு குறித்த வினவு இணையதளத்தின் கண்ணீர்க் கடல் ஆவணப்படச் செய்திகளைச் சேகரித்துப் பதிவு செய்தது. மக்களின் வாக்குமூலங்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவசியமான இடங்களில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
மக்களின் கருத்துக்கள்
இடம் : நீரோடி,
பெயர் : கிளிமான்ஸ் (நீரோடி மீனவர்)
இங்கு நடந்த பேரழிவு குறித்து அரசு முன்னரே தெரிவிக்கவில்லை. இங்கு 50-க்கும் மேற்பட்ட மீனவர்களின் புகைப்படம் உள்ளது. இவர்கள் தற்போது உயிருடன் இல்லை. நாங்கள் 100 நாட்டிக்கல்( 1 நாட்டிக்கல் = 1.820 கி.மீ.) தாண்டி மீன்பிடிக்க கடலுக்குள் செல்வோம். 5 மற்றும் 6 நாட்கள் கடலில் இருப்போம். இந்த பேரழிவுக்கு பின்னர் 50 நாட்டிகல்வரை மட்டும் தான் கப்பல்படை சென்றது. தமிழ்நாடு அரசு எங்களைக் காப்பாற்றும் என்று எண்ணி இருந்தோம். இந்தப் பேரழிவுக்கு அரசு அதிகாரிகள்தான் பொறுப்பு. முக்கியமாக தமிழ்நாடு அரசு தான் காரணம். புயல் ஏற்பட்டு இரண்டு நாட்கள் கழித்து தான் எங்களுக்கு புயல் பற்றி தகவல் தெரிவித்தனர். இந்த அரசு புயலில் இருந்து காப்பாற்ற எந்த முன்னறிவிப்பு ஏற்பாடுகளும் செய்யவில்லை. இதுவரை எந்த அரசு அதிகாரியும் எங்களை விசாரிக்க வரவில்லை. இதுவரை எந்த நீதியும் அரசு எங்களுக்கு வழங்கவில்லை.
நான் 12 வயது முதல் கடலினுள் மீன்பிடிக்கச் சென்று வருகிறேன். நாங்கள் மொத்தம் 6 பேர் கடலிற்குள் புதன்கிழமை மீன்பிடிக்கச் சென்றோம். இதில் நான், மார்க்கண்டேயன், என்னுடைய மாமா மற்றும் 3 பேர் அடக்கம். ஏறத்தாழ 80 நாட்டிகல் வரை கடலினுள் சென்றோம். வியாழக்கிழமை புயல் வந்து. இதில் 6 பேரும் புயலில் சிக்கிக் கொண்டோம். எனக்கு உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டது. 2 இரவு 2 பகல் முழுவதும் படகை பிடித்து 3 பேர் தப்பித்தோம் 3 பேர் இறந்துவிட்டனர். எங்களை காப்பாற்றியது எங்களது மீனவர்கள் தான். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தார். கடற்கரை ஓரமாக வந்துவிட்டு எங்களை சந்திக்காமல் சென்று விட்டார்.
எங்களுக்கு புயல் வரும் என்று தெரியாது. எங்களுக்கு புயல் குறித்த எந்த தகவலையும் அரசு வழங்கவில்லை. எங்களுக்கு புயல் குறித்து முறைப்படி தகவல் தெரிவித்து இருந்தால் நாங்கள் நிறையப் பேர் பிழைத்திருப்போம். கடலுக்குள் புயலில் சிக்கி, 1 -ம் தேதி மிகுந்த கஷ்டப்பட்டு கரைக்கு வந்தோம். நாங்கள் கடலில் இருந்து கரைக்கு வந்த பின்னர் அதிகாரிகளிடம் கடலினுள் பலர் உயிருக்குப் போராடுவதாகத் தெரிவித்தோம். அதன்பின்பும், அதிகாரிகள் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக எங்களையும் கடலினுள் சென்று, எங்கள் மீனவர்களைக் காப்பாற்றும் முயற்சியையும் தடுத்தனர். அவர்கள் உரிய நேரத்தில் முயற்சி எடுத்திருந்தால் நிறைய பேரைக் காப்பாற்றியிருக்கலாம். அரசிடம் மீனவர்களைக் காப்பாற்றுவதற்கு உரிய தொழில்நுட்பம், கருவிகள் எதுவுமில்லை.
கடலில் சிக்கிக் கொண்ட எங்களுக்கு அரசு எந்தவித உதவியும் செய்யவில்லை. அரசு வைத்திருந்த தொழில்நுட்பக் கருவியினால் எந்தத் தகவலும் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. இந்த கருவியினால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை மற்றும் பாதுகாப்பு இல்லை. கப்பல் படை அதிகாரிகள் தங்களுடைய வயர்லெஸ் கருவி மூலம் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. கடலில் கடத்தல் நடந்தால் இவர்கள் வரமாட்டார்களா? நாங்கள் நான்கு நாட்கள் கடலினுள் தத்தளித்துக் கொண்டு இருந்தும் எங்களை காப்பாற்ற கப்பற்படை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்தக் கப்பல்படை எதுக்கு உள்ளது?
எங்கள் ஊரில் சுமார் 40 பேர் இறந்து உள்ளனர். 1 -ம் தேதி அதிகாரிகளுக்குத் தகவல் சொல்லியும் இவர்கள் கேட்கவில்லை. நாங்கள் சொன்ன நேரத்தில் அவர்கள் கடலினுள் சென்றிருந்தால் நிறையப் பேரைக் காப்பாற்றி இருக்கலாம். 5 -ம் தேதிக்கு பின்னால் தான் 13 பேர் இறந்திருப்பார்கள்.
இறந்தவர்கள் அனைவருக்கும் செல்போன் இருந்தது. அவர்கள் நிச்சயம் செல்போன் வாயிலாக தகவல் அதிகாரிக்கு தகவல் கொடுத்து இருப்பார்கள். ஆனால் அரசு அதிகாரிகள் எந்த உதவியும் செய்யவில்லை. எங்கள் பகுதி மீனவர்கள் சிலரை நாங்களே கடலினுள் சென்று காப்பாற்றினோம். இதுவரை எந்த நிவாரணமும் அரசு எங்களுக்கு வழங்கவில்லை. எங்களுக்கு எந்தவித நிவாரணமும் தேவையில்லை. அரசுதான் இந்தச் செயலுக்குப் பதில் சொல்லவேண்டும்.
கேரளாவில் பாதிப்புகள் இருந்தும் சரியான தகவல்களை கொடுத்து நிறைய மீனவர்களை அந்த அரசு காப்பாற்றியது. எங்களுக்கு என்று ஒரு அமைச்சர் இல்லை. எங்களால் அரசுக்கு நிறைய வருமானம் உள்ளது. ஆனால் எங்கள்அழிவு தான் அரசின் நோக்கம். எங்களை அப்புறப்படுத்துவதுதான் அரசின் நோக்கமாக உள்ளது. “இது ஒக்கி புயலல்ல மோடி புயல்”
14 -வயது முதல் கடலிற்குள் மீன் பிடிக்க சென்று வருகிறோம். ஒரு நாள் கடலில் தத்தளித்து கேரளாவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். அரசு வாக்கிடாக்கி போன்ற எந்த கருவியையும் பயன்படுத்தவில்லை. இப்புயலில் சிக்கி தவித்து வந்தவர்கள் கூறிய தகவல் அடிப்படையில் அரசு அதிகாரிகள் முயற்சி எடுத்து இருந்தால் நிறைய மீனவர்களை காப்பாற்றி இருக்கலாம். அரசு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.
நிதின்குமார் – மீனவர் – வள்ளவிளை கிராமம் – புயலில் தப்பியவர்
எங்கள் ஊரில் 68 பேரைக் காணவில்லை, 8பேர் இறந்துவிட்டனர். புயல் பற்றிய தகவல் எங்களுக்கு தெரியாது. சரியான தகவல்களை அரசு உடனுக்குடன் தெரியப்படுத்தி இருந்தால் நிறையப் பேரை காப்பாற்றி இருக்கலாம். இந்த செயலுக்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு முன்னால் காங்கிரஸ் அரசு ஒரிசாவில் புயல் ஏற்பட்ட போது மீனவர்களை உடனே காப்பாற்றியது. இப்போது எல்லா வசதியும் இருந்தும் மத்திய அரசு காப்பாற்றவில்லை. சாதாரணப் புயலை நாங்கள் சமாளித்து விடுவோம்.புயல் காற்று 120 கி.மீ வேகத்தில் வந்தது.காற்று இவ்வளவு வேகத்தில் வரும் என்ற தகவலை அரசு எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை. இதுதான் பிரச்சனைக்குக் காரணம்.
சுஜீன் – நீரோடி
இத்தாலி நாட்டு கப்பல் காப்பாற்றியதை இவர்கள் காப்பாற்றியதாக பொய் கூறுகிறார்கள். டாட் என்ற கருவியை 121 முறை எங்கள் மீனவர்கள் ஆபத்து நேரத்தில் பயன்படுத்தியும் எங்கள் மீனவர்களை காப்பாற்ற இந்த அரசு முயற்சிக்கவில்லை. இந்த டாட் என்ற கருவியை நாங்கள் தவறாக பயன்படுத்தினால் ரூபாய் 25000 /- தண்டத் தொகை கட்ட வேண்டுமெனவும் கூறுகிறார்கள். நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம், பாதிக்கப்பட்ட எங்களைக் காண எங்கள் தொகுதி M.P இதுவரை வரவில்லை. எங்களுக்கென்று மத்தியில் ஒரு அமைச்சர் இல்லை. எங்களால் அரசுக்கு நிறைய வருமானம் கிடைக்கின்றது. எங்களுக்கென்று ஒதுக்கிய நிதி என்னவாயிற்று ? நாங்கள் பலருக்கு வேலை கொடுக்கின்றோம். இந்த நாட்டிற்கு கடலோர பாதுகாப்பு வழங்குகின்றோம். எங்களது படகுகள் நவீனபடுத்தப்பட வேண்டும். கடலில் மிதக்கும் எங்களது மீனவர்களின் உடல்களை இந்த அரசு மீட்டுத் தர வேண்டும். எங்களுக்கு நிவாரணம் இரண்டாம்பட்சம்தான். தவறான தகவல்களை பத்திரிக்கைக்கு கொடுத்து எங்களையும், இந்நாட்டு மக்களையும் அரசு அதிகாரிகள் ஏமாற்றுகிறார்கள்
நாங்கள் சாலை மறியல் செய்த பிறகுதான் கப்பல் படையை அனுப்பினார்கள். கப்பல்படையினரும் தாமதமாகத்தான் வந்தார்கள். ஐந்து நாட்களுக்குப் பிறகு தான் வந்தார்கள். 60 நாட்டிகல் எல்லைக்குள்தான் கப்பல்படை தேடிவிட்டு வந்தார்கள். இதனால் தான் அதிக மீனவர்கள் இறந்தனர். அரசிடம் மீனவர்களை காப்பாற்றுவற்கு உரிய எந்தத் திட்டமும் இல்லை. மீனவர்கள் மீது அக்கறை இல்லை. மீனவர்களை இவர்கள் நேரடியாக சந்திக்கவில்லை. டிஜிட்டலில் தான் சந்திக்கிறார்கள். இந்த அக்கறையின்மைக்கு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். வருகிற 31 -ம் தேதி வரை இந்த அரசுக்கு கெடு வைத்துள்ளோம். அரசின் செயல்பாடுகளை பொறுத்து பின்னர் முடிவு எடுப்போம்.
டிக்ஸன் (38) – படகு உரிமையாளர் – வல்லவிளை – அரசு சார்பில் தேடுதல் பணிக்கு கப்பலில் அழைத்துச் செல்லப்பட்டவர்
டிக்சன்
பெரிய படைகள் இருந்தும் இந்த அரசு எங்களைக் காப்பாற்றவில்லை. இறந்த மீனவர்களின் உடல்களை நாங்கள் தான் கடலினுள் சென்று மீட்டு வந்தோம். எங்களை இந்த இடத்தில் இருந்து வெளியேற்றுவது தான் அரசின் திட்டமாக உள்ளது. கடலில் இருந்து 500 மீட்டர் தாண்டித் தான் குடியிருக்க வேண்டும் எனத் திட்டம் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
எங்களுக்கு டாட் என்ற தகவல் தொடர்பு வசதியை அரசு வழங்கியது. கடலில் ஆபத்து ஏற்படும் காலத்தில் டாட் கருவியில் உள்ள பட்டனை அழுத்தினால் உடனே கப்பல்படை விரைந்து வந்து உதவி வழங்கும் என்று கூறினார்கள். இந்த டாட்(DAT) கருவி பட்டனை புயலில் சிக்கிய மீனவர்கள் பலமுறை பயன்படுத்தியும் கப்பற்படை எந்த உதவியும் வழங்கவில்லை. ஆழ்கடலில் மீன் பிடிக்கும் எங்களை போன்ற மீனவர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை.
Coast Guard – கடலோர காவல் படை அதிகாரிகளை நாங்கள் கேட்டபோது புயல் வரப்போகுது என்று தகவல் முன்பே கூறிவிட்டோம். மீன்வளத்துறைதான் உங்களுக்கு தகவலை சரியாகச் சொல்லவில்லை. அதனால் அவர்களிடம் போய் கேளுங்கள் என்கிறார்கள். நாங்கள் எதை நம்புவது என்றே தெரியவில்லை. இவர்கள் எல்லோரும் சேர்ந்து எங்களது மீனவ மக்களைக் கொலைசெய்துவிட்டனர் .
நாங்கள் மறியல் செய்தபின் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்து எங்களிடம் பேசினார். பின்பு நான் உட்பட ஏழு பேரை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கப்பலில் தேடுவதற்காக அழைத்துச் சென்றனர். எந்த இடத்தில் எங்கள் மீனவர்கள் மீன் பிடிப்பார்கள் என்ற விபரத்தை அவர்களிடம் சொன்னோம். காலையில் அங்கு செல்வோம், இப்போது தூங்குங்கள் எனச் சொல்லிவிட்டார்கள். விடிந்தபின் பார்த்தால் கன்னியாகுமரி அருகில் கப்பல் நிற்கிறது. கரையிலிருந்து 25 நாட்டிகல் மைல் தூரத்தில்தான் கப்பல் இருந்தது. நாங்கள் எவ்வளவோ மன்றாடியும், மறுநாள் செல்வோம் என்றனர். அன்றும் கரையின் அருகிலேயே இருந்தனர். அதற்கடுத்த நாள் எங்களுடன் வந்த ஒருவர் “தேடுங்கள், இல்லாவிட்டால் கரையில் எங்களை விடுங்கள், இல்லாவிட்டால் கடலில் குதித்து விடுவேன்” என்று சொன்னபின் தூத்துக்குடி துறைமுகம் அழைத்து வந்தனர்.
அன்று மாலை 4 மணிக்கு துறைமுகம் வந்தும் கப்பல் கரைக்குச் செல்லவில்லை, நாங்கள் ஆத்திரப்பட்ட போது, “புரிந்து கொள்ளுங்கள்,எங்களால் 30 நாட்டிகல் மைல் தூரம்தான் செல்ல முடியும்,அதற்குள்தான் தேடச் சொல்லி உத்தரவு. உத்தரவு வந்தால்தான் கரைக்குப் போக முடியும்” என்று கப்பல்படை அதிகாரி சொன்னார். இதனை நான் வாட்ஸப்பில் போட்டுவிட்டேன். அது மீடியாவில் வந்துவிட்டது. உடனே அதை அழிக்கச் சொல்லிவிட்டார்கள், பின்பு நேராக கலெக்டர் அலுவலகம் வந்து, 250 நாட்டிக்கல் தூரம் வரை நன்றாகத் தேடியதாக ஒருவரை ஊடகங்களுக்குச் சொல்லச் சொல்லி பின்பு அனுப்பி விட்டார்கள்.
மற்றுமொரு முக்கியச் செய்தி. என்னுடைய கொழுந்தியா ரேஸ்மி கன்னியாகுமரியில் வசிக்கிறாள். அவள் இன்று எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். அவள் சொல்வது “எங்கள் ஊரான கன்னியாகுமரியில் இரண்டு நாட்கள் முன்பே புயல் வரப்போகுது என்று அறிவித்துவிட்டார்கள். ஆகையினால் எங்களது ஊரிலிருந்து தொழிலுக்குச் சென்றவர்கள் திரும்பி வந்துவிட்டனர். புதிதாக யாரும் தொழிலுக்கும் செல்லவில்லை.” ஆகையினால் கன்னியாகுமரியில் மீனவர்கள் யாருக்கும் பாதிப்பில்லை.
இப்போ எங்களுக்கு ஒன்று மட்டும் தெளிவா தெரியுது. அது என்னன்னா… Coast Guard அதிகாரி மற்றும் என் கொழுந்தியாள் ரேஸ்மி சொன்னது, மற்றும் எங்களை கடலுக்கு அழைத்துச் சென்று அலைக்கழித்தது, ஆகியவற்றிலிருந்து தூத்தூர் பகுதியை சார்ந்த மீனவ மக்கள் கடலிலேயே சாகட்டும் என்று வேண்டுமென்றே தகவலும் சொல்லவில்லை; காப்பாற்றவும் இல்லை! எங்கள் மக்களைக் கொலை செய்து விட்டார்கள். இவர்கள் இறப்பிற்கு இந்த அரசு தான் காரணம். நாங்கள் இணையம் வர்த்தகத் துறைமுகத்தை எதிர்த்துப் போராடியதால் இப்படி பழிவாங்கியுள்ளனர். நாங்கள் இந்த அரசை எதிர்த்து போராடத் தயாராக உள்ளோம். எங்களை ஒன்று சேர விடாமல் தடுக்கும் விதமாக இந்த அரசு செயல்படுகிறது.
ஆல்பர்ட் – வல்லவிளை கிராமம் – வினவு இணையதளத்தின் கண்ணீர்க் கடல் கலந்துரையாடல் நிகழ்வில் தெரிவித்தவை
மூன்று வகையில் மீன்பிடி தொழில் தூத்தூர் மீனவர்கள் செய்கிறார்கள். இதில் இரண்டு வகை மீனவர்கள் ஒரு நாளில் வந்து விடுவார்கள். மூன்றாவது வகை மீனவர்கள் 10, 15, 30, 50 நாட்கள் வரை கடலில் இருப்பார்கள். பாதிக்கப்பட்ட மீனவர்கள் பெரும்பாலும் லட்சத்தீவு அருகில்தான் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள். உடனே அரசு செயல்பட்டிருந்தான் காப்பாற்றியிருக்கலாம். புயல் வந்து 10 நாட்கள் கழித்து பாதர் சர்ச்சில் பேசிய செய்தியை பதிவு செய்து ஹெலிகாப்டரில் சென்று கடலில் ஒலிபரப்பினார்கள். இதை ஏன் முன்பே செய்யவில்லை? நிர்மலா சீத்தாராமனிடம் லட்சத்தீவு அருகில் சென்று தேட மும்பை, கோவாவில் இருந்து கப்பல் அனுப்புங்கள் என டிசம்பர், 3-ம் தேதியே சொன்னோம்.
எதுவும் செய்யவில்லை. நாங்கள்தான் சிலரைக் காப்பாற்றினோம். எங்கள் மீனவர்கள் நீந்தியே லட்சத்தீவு வந்துள்ளனர். அவர்களை கப்பற்படை காப்பாற்றியதாக பொய்ச் செய்தி போட்டார்கள். அரசும், கப்பல்படையும் சொல்லட்டும் கடலில் எந்த பொசிசனில் காப்பாற்றினார்கள் என்று? கப்பலின் Voyage data recorder பதிவை வெளியிடச் சொல்லுங்கள். நாங்கள் காப்பாற்றியதை நாங்கள் வெளியிடுகிறோம். நாங்கள் 1, 2 தேதிகளிலேயே கொச்சியிலிருந்து 64 டிகிரி கிழக்கில் தேடுங்கள் என்று 10 ஜிபிஎஸ் பொசிசன்கள் கொடுத்தோம், 720 நாட்டிகள் மைல் தூரத்தில் தேடச் சொன்னோம். இவர்கள் 30 – 60 நாட்டிகல் தூரத்தைத் தாண்டவில்லை. நாங்கள் சொன்ன தூரம் ஹெலிகாப்டரில் சென்றால் 3-4 மணி நேரத்தில் வந்துவிடும், இவர்கள் செல்லவில்லை.
மீனவர்களுக்காக தனி சேட்டிலைட் விட்டுள்ளதாக சென்ற ஆண்டே மோடி சொன்னார். எந்தப் பயனும் எங்களுக்கு இல்லை. 1, 2 தேதிகளில் எங்கள் பகுதியைச் சேர்ந்து சுமார் 1800 மீனவர்கள் கடலுக்குள் இருந்தார்கள். சொந்தமுயற்சியிதான் பலரும் தப்பித்தார்கள். அரசு திட்டமிட்டு இந்த மரணங்களை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்துறை கிராமம்- சர்ச் முன்பு
ஜோன்ஸ் – வயது 60 மற்றும் உடன் இருந்த 15 மீனவர்கள்
எங்கள் ஊரில் 65 பேர் இறந்துள்ளனர். எங்களுக்கு டாட் என்ற கருவியை கொடுத்துள்ளனர். இந்த டாட் மூலம் மீனவர்களுக்கு ஆபத்து, கப்பல் கடலில் மூழ்குதல். மீனவர்கள் உயிருக்கு ஆபத்து மற்றும் போட் தீப்பிடித்தல் ஏதேனும் ஆபத்து ஏற்படின் இதன் பட்டனை அழுத்தினால் உடன் கப்பல்படை அதிகாரிக்கு தகவல் சென்று எங்களை விரைந்து காப்பாற்றுவார்கள். இதன்படி புயலின் போது பல தடவை இந்த பட்டனை அழுத்தியும் எங்கள் மீனவர்களைக் காப்பாற்ற ஒரு அதிகாரி கூட கடலிற்குள் வரவில்லை.
இந்தாண்டு கிறிஸ்துமஸ்கு நாங்கள் யாரும் புத்தாடை போடவில்லை. இந்த அரசு எங்களை மாற்றான் வீட்டு பிள்ளையைப் போன்று பார்க்கிறது. இந்த பேரழிவைக் காண பாரத பிரதமர் வந்தார். எங்களில் ஒருவரைக் கூட அவர் பார்க்கவில்லை. எங்களது மீனவரின் உடலுக்கு 20 லட்சம் நிவாரணம் என்று அரசு அறிவித்து உள்ளது. ஆனால் கடலினுள் மிதக்கும் எங்களின் மீனவரின் உடலை எடுக்க இந்த அரசு முயற்சிக்கவில்லை. ஏனென்றால் ஒரு மீனவரின் உடலை மீட்டால் அவனுக்கு உடனே ரூபாய் 20 இலட்சம் அரசு வழங்க வேண்டும் என்பதால் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஒரு விமானத்திற்கு விபத்து ஏற்பட்டு கடலிலுனுள் விழுந்தால் உடன் உயரிய கருவிகளைக் கொண்டு உடனே தேடிக் கண்டுபிடிப்பார்கள். ஆனால் பல மீனவர்களின் உடல் கடலில் மிதக்கின்றது. ஒரு உடலைக்கூட இதுவரை இந்த கப்பல்படை மீட்கவில்லை.
நாங்கள் புயலினால் மீன் பிடிக்க கடலினுள் சென்று ஒரு மாதமாகப் போகிறது. வறுமையில் வாடுகின்றோம். வேலைக்கு செல்லாததால் பட்டினியாக பல நாட்கள் இருக்கின்றோம். இந்த தருவாயில் நிவாரணம் தான் எங்களுக்கு முக்கியமானதாக படுகின்றது. இந்த அரசினை எதிர்த்து போராடினால் கிடைக்கும் நிவாரணமும் நின்று போய்விடும் என அஞ்சுகின்றோம். கடலினுள் விபத்தினால் மீனவர்கள் இறந்தால் 1 இலட்சம் என அரசு அறிவிக்கின்றது. சென்னையில் மழைக்கு 1 குழந்தை இறந்தால் 10 இலட்சம் அறிவிக்கின்றது. 1 மீனவரின் உயிர் 1 இலட்சம் தானா ?
எங்களை அரசு பாரபட்சமாகப் பார்க்கின்றது. எங்கள் ஊரில் உள்ள ஒரு மீனவர் குடும்பத்தில் இருந்த ஆண்கள் 4 பேரும் இறந்துவிட்டனர். அக்குடும்பத்தில் இப்போது ஆண்களே இல்லை…
சுனாமியை எதிர்கொண்ட மீனவர்கள் இந்த புயலிற்கு பின்னர் கடலினுள் மீன் பிடிக்க செல்வதற்குப் பயப்படுகிறார்கள். இதுவரை அரசு இந்த புயலின் சேதத்தை தேசிய பேரிடர் என்று அறிவிக்கவில்லை. எங்களை கேரள அரசுடன் இணைத்து விடுங்கள். கேரள அரசு எங்கள் மீது அக்கறை காட்டும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கு மத்திய அரசு தான் தண்டிக்கப்பட வேண்டும் . இந்த புயல் பற்றிய தகவலை எங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்காமல் எங்கள் மீனவர்களை கொலை செய்து விட்டனர். தமிழக முதல்வர் காணாமல் போன மீனவர்களில் கடைசி ஆள்வரை கிடைக்க தேடுதல் முயற்சி செய்வதாக கூறியுள்ளார். இனிமேல் இவர்களால் இறந்த மீனவர்களின் உடலைக்கூட மீட்க முடியாது. நடுக்கடலில் உள்ள மீனவர்களின் உடலை சுறா மீன்கள் தின்றுவிடும். மீனவர்களின் உடலும் கிடைக்காது, நிவாரணமும் கிடைக்காது.
எந்த ஒரு புயல் வந்தாலும் 3 நாட்களுக்கு முன்னர் அரசுக்குத் தெரிந்துவிடும். வானிலை ஆராய்ச்சியாளருக்குத் தெரியும். எங்கள் ஊரிலிருந்து கப்பலில் வேலை செய்பவர்களுக்கு 28 -ம் தேதியே தகவல் வந்துவிட்டது. ஆனால் இதை மக்களுக்கு அரசு தெரியப்படுத்தவில்லை. தாமதமாக தெரியப்படுத்தியுள்ளனர். இதனால்தான் எங்கள் ஊரில் நிறையப் பேர் இறந்துவிட்டனர்.
திரு . ஆரோக்கியதாஸ் – சின்ன பாதிரியார் – தூத்தூர் சர்ச்
நாங்கள் பல கோரிக்கைகளை முதல்வரிடம் வைத்திருக்கிறோம். முதல்வர் எடப்பாடியாக இருக்கட்டும், பிரதமர் மோடியாக இருக்கட்டும், எங்களது கிராம மக்களைப் பார்க்காமல், நேரடியாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு வராமல் ஊருக்கு வெளியே ஒரு இடத்தை Fix பண்ணி அங்கேயே பேசிவிட்டு போய்விட்டார்கள். ராகுல்காந்தி மட்டும் மக்களை சந்தித்துப் பேசினார்.
29 -ம் தேதிதான் புயல் குறித்து எங்களுக்குத் தகவல் சொன்னார்கள். அதை நாங்கள் சர்ச்சில் அறிவித்தோம். ஆனால் அதிக வேகத்தில் காற்று வீசும் என்று யாரும் எங்களிடம் கூறவில்லை. புயல் வந்தபிறகு கூட இந்த கடலோர காவல்படை மீனவர்களை காப்பாற்ற நினைக்கவில்லை. நாங்கள் எங்களது மீனவர்கள் கடலுக்குள் மாட்டிக் கொண்டுள்ளனர் அவர்களை உடனடியாக காப்பாற்றுங்கள் என்று 1 -ம் தேதி கூறியும் பலநாட்களுக்குப் பிறகுதான் தேடினார்கள்.
தூத்தூர் கிராமத்தில் இருந்து 30 மீனவர்கள் கடலுக்குள் சிக்கிய மீனவர்களை காப்பாற்றப் போனார்கள். ஆனால் அங்கு சேதமடைந்த போட்டில் வெறும் ஐடி கார்டும் அழுகிய நிலையில் எங்களது மீனவர்களின் உடல்கள் மட்டும்தான் மிஞ்சியது. தூத்தூரில் மட்டும் 32 பேர் இறந்துள்ளனர்.
அரசு அதிகாரிகள் சொல்றாங்க, சமவெளியில் நடந்தால் மட்டும்தான் பேரிடர். கடலில் நடந்ததை பேரிடராக குறிப்பிட முடியாது என்று சொல்கிறார்கள். எங்களது மீனவர்கள் கடலுக்குள் சென்றவர்கள் புயல் அடித்தப் பிறகு கடலில் கிடந்த மற்றும் கிடைத்த மரக்கட்டைகளை பிடித்து கரையை வந்தடைந்தார்கள். ஆனால் கடலோர காவல் படை, சொந்த முயற்சியில் கரை திரும்பிய எங்களது மீனவர்களை பிடித்துக்கொண்டுவந்து, அவர்கள் காப்பாற்றியதாக தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கின்றனர், செய்தி ஒளிபரப்புகின்றனர்.
திரு. பிபின்சன் – தலைமை பாதிரியார் – தூத்தூர் சர்ச்
இந்திய கடலோர காவல்படை மீனவர்களுக்கு ஒத்துழைப்பதில்லை. இந்த அரசு தன்னிடம் உள்ள சாதனங்களை பிரயோசனப் படுத்துவதில்லை. அனைத்து சாதனமும் தூசி பிடித்துக் கிடக்குது. இந்த Coast Guard ஒரு Limited ஏரியாவை வைத்துக்கொண்டு அதற்கு மேல் போவதில்லை. இந்த அதிகாரிகள் 60 – 80 நாட்டிகல் மைல்தான் போனார்கள், அதற்குமேல் போகவில்லை. இங்கு எல்லாம் corrupted சிஸ்டம். fully corrupted, corrupted அதிகாரிகள் corrupted system -த்தை உருவாக்குகின்றனர். இது எப்படி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.
கடலில் இறந்தவர்கள் எல்லாம் புயலுக்கு முன்பாக போனவர்கள். இவர்களுக்கு அரசு முறையாக தகவல் கூறி இருந்தால் கரை திரும்பி இருப்பார்கள். அல்லது நாங்களே செய்தி கொடுத்து இருப்போம். ஆனால் information கொடுக்கவில்லை, வேண்டுமென்றே தவிர்த்து விட்டனர். எங்களுக்கு தகவல் 29 -ம் தேதி மாலை 3 மணிக்கு தான் சொல்கிறார்கள். 15 நாட்கள் வெயிட் பண்ணி தர்ணாப் போராட்டம் நடத்தி முதலமைச்சரை பார்க்க வேண்டிய சூழல் உள்ளது. ஒன்றும் செய்ய முடியாது.
இவங்க நியூட்ரலாக யோசிப்பது இல்லை. miss ஆனவங்களை 7 வருசம் கழித்து தான் இறந்ததாகக் கூறுகின்றனர். 7 பேர் பியான் புயலில் இறந்தார்கள் ஆனால் அந்த இறந்த 7 பேருக்கு இன்று வரை நிவாரணம் அரசு கொடுக்கல. 31 மீனவர்கள் எங்களது பகுதியில் இருந்து 5 போட்டுகளில் தேட சென்றனர். அவர்களையும் தேடவிடாமல் தடுத்து அனுப்பி விட்டனர். அதற்கான டீசல் செலவைக்கூடத் தரவில்லை. சமவெளியில் எப்படி toll ( சோதனைச் சாவடி ) இருக்கிறதோ அதே மாதிரி கடலிலும் இருந்து கொண்டு அதிகாரிகள் எங்களை காப்பாற்ற விடாமல் தடுத்து நிறுத்தி விட்டனர்.
ஜேக்கப் – தூத்தூர்
சார் நீங்க வேணும்னா பாருங்க ஒரு அரசியல்வாதியைக் கூட எங்கள் பகுதிக்குள் இனி நுழைய விட மாட்டோம். 1 -ம் தேதி என் அண்ணன் கில்பர்ட் கடலிலுள் மீன்பிடிக்கச் சென்றவர் இறந்துவிட்டார். அவர்தான் கிட்டத்தட்ட 36 வருடமாக மீன்பிடி தொழில் செய்து எங்களை எல்லாம் படிக்க வைத்து, கல்யாணம் பண்ணி வைத்தார். நீங்க நல்லா தெரிஞ்சுக்குங்க, உப்பு நீரில் கால் வைக்கத் தெரியாதவர்களைத்தான் கடலோர காவல்படை, மீன்வளத்துறையில் அதிகாரிகளாக நியமிக்கின்றனர். எங்கள் மீனவ மாணவர்கள் நன்கு படித்து அதிக மதிப்பெண் எடுத்தால் கூட அவர்களை சாதி வேற்றுமை பார்த்து வேலை தருவதில்லை, இதுதான் நிலைமை.
ப்ரட்டி மற்றும் சில இளைஞர்கள் – கடலோர காவல்படை கப்பலில் தேடச் சென்றவர் – பூத்துறை
ஏற்கனவே இத்தாலி கப்பல் இந்திய மீனவர்களைச் சுட்டதில் இருந்து எனக்கு அரசைப் பற்றித் தெரியும், எனது போட்டும் புயல் காற்றில் சிக்கிக் கொண்டது. கடலுக்குள் போன போட் இரவு கரை திரும்பவில்லை என்றால் நாங்கள் மறுநாள் காலை எங்களது மீனவர்கள் சென்று கடலிலுள் தேடுவோம் . 30 -ம் தேதி புயல் தாக்கியது 1 -ம் தேதி எங்களோட போட் செயிண்ட் ஆண்டனி, ஆபத்தில் இருப்பதாகத் தெரிந்தது. எங்களோட போட் எந்த Direction -ல் இருந்து மீன் பிடிக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். 2 -ம் தேதி எங்கள்ட போட்டில் நாங்கள் தேடப்போன போது அரசு எங்களை ( Coast Guard ) போக விடாமல் தடுத்து நிறுத்திவிட்டது. நீங்கள் கடலினுள் போகத் தேவையில்லை, இன்னொரு பெரிய புயல் வருகிறது என்று நிறுத்தி விட்டனர்.
மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் 3 -ம் தேதி வந்து எங்கள் மீனவ மக்களை சந்திக்காமல் போய்விட்டார். நாங்கள் கேட்டோம் ஏன் எங்களுக்கு முன்கூட்டியே சொல்லவில்லை என்று? அதற்கு மீன்வளத்துறை அதிகாரிகள் எங்களுக்கே தெரியாது என்று கூறி விட்டனர். எங்கள் போட்டில் ஆபத்து நேரத்தில் பயன்படுத்த ஒரு டாட் கருவி இருக்கும். அதை அழுத்தினால் அதிகாரிகள் போய் மீனவர்களை போய் காப்பாற்ற வேண்டும். ஆனால் எங்களது மீனவர்கள் அமுக்கியும், காப்பாற்றப்படவில்லை.
காணாமல் போன எங்கள் கிராம போட்டுகள்
1. தூய அந்தோணியார்
2. கிரிஸ்மா
3. அமலிமோல்
புயலில் சிக்கிய தூய அந்தோனியார் போட்டில் உள்ளவர்களை மீட்க கிரிஸ்மா போட் முயற்சித்தது. ஆனால், கிரிஸ்மாவும் அதில் இருந்த மீனவர்களும் சேர்ந்து இறந்து விட்டனர்.
நான் அரசு சார்பில் கப்பலில் தேடப் போனவர்களில் ஒருவன். 7 பேர் நாங்கள், Coast guard கப்பலான அபராஜ் கப்பலில் மீட்க புறப்பட்டுச் சென்றோம். ஆனால் அதிகாரிகள் நாங்கள் சொல்லும் SPOT -க்கு அருகில் கூடப் போகவில்லை. நாங்கள் 7 பேரும் COAST GUARD உடன் 4 –ம் தேதி தூத்துக்குடியில் புறப்பட்டு வெறும் கடல் ஓரங்களிலேயே அழைத்துச் செல்லப்பட்டோம். சும்மா சுற்றிக் காண்பித்தார்கள். நாங்கள் சொல்லும் இடத்தில் போகச் சொன்னோம். சரி நீங்கள் போய் சாப்பிட்டுக் கீழே இருங்கள் SPOT வந்த உடன் உங்களை கூப்பிடுகிறாம் என்றார்கள். சரி என்று நாங்களும் அவர்களது பேச்சை நம்பி கப்பலின் கீழ் அறைக்கு வந்து விட்டோம். பின்பு மாலை 4 மணிக்கு மேலே வாருங்கள் என்று எங்கள் ஏழு பேரையும் அழைத்தார்கள்.
உங்களுடைய spot, நீங்கள் கூறிய இடம் வந்துவிட்டது என்றனர்.நாங்கள் நம்பி மேலே வந்தால் வெறும் 30 நாட்டிக்கல் மைலில் தான் நிற்கிறார்கள் இவர்கள். அதாவது கடற்கரை தெரியும் தூரத்தில் நின்று கொண்டு உங்களது spot வந்துவிட்டது என்றார்கள். உடனே நாங்கள், என்ன சார் இடம் வந்துவிட்டது என்கிறீர்கள்? நாங்கள் குறிப்பிடும் பகுதிக்குப் போகாமல் கரை ஓரமாகவே போகிறீர்கள் என்று கேட்டதற்கு ஒன்றும் பதில் சொல்லவில்லை. பின்பு எங்களுக்கு எல்லை இவ்வளவுதான் எங்களால் வர முடியும். இதைத் தாண்டிப் போகமுடியாது. என்று ஒரு அதிகாரி கூறுகிறார். சரி, நீங்கள் ராத்திரி சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடுங்கள் அதாவது நீங்கள் 5-ம் தேதி காலை நீங்கள் குறிப்பிடும் பகுதியில் கூட்டிப் போகிறோம் என்றனர். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்று கூறியும் அவர்கள் கேட்கவில்லை.
5-ம்தேதி, மேலே வாருங்கள் நீங்கள் சொன்னபகுதி வந்துவிட்டது, ஒரு போட் தெரியுது என்றனர். நாங்களும் அதை நம்பி மேலே வந்து பார்த்தால் அது சிறீலங்கா போட். அதன்பின் எங்களுக்கு ஜிபிஎஸ் மூலம் ஏரியா பார்க்கத்தெரியும் என்பதால், அவர்களுக்குத் தெரியாமல் கப்பலின் ஜிபிஎஸ் பார்த்தோம், அது 30 நாட்டிகல் தூரம்தான் காட்டியது. என்ன சார் இது நாங்கள் சொன்ன இடத்துக்குப் போகாமல் வெறும் 30 நாட்டிக்கல் மைலில் இருந்து கொண்டு வந்துவிட்டது என்கிறீர்கள் என்று சண்டை போட்டதற்கு புரிந்து கொள்ளுங்கள், எங்களுக்கு அவ்வளவு தூரம் தான் அனுமதி என்றனர். அதாவது தூத்துக்குடியில் புறப்பட்டு கன்னியாகுமரி, குளச்சல் எனச் சென்றுவிட்டு, எங்கள் ஏழு பேரையும் வைத்து மறுபடியும் தூத்துக்குடி சென்றுவிட்டு விட்டனர்.
அதிகாரிகளிடம், என்ன சார் நிர்மலா சீதாராமன் கடைசி ஆள் கிடைக்கும்வரை கோஸ்ட்கார்டுடன் தேடுங்கள், எல்லோரையும் காப்பாற்றாமல் விடமாட்டோம் என்றாரே சார்! அது என்னாச்சு? என்று கேட்டதற்கு உயர் அதிகாரிகள் எங்களுக்கு இவ்வளவு தான் அனுமதி தந்துள்ளார்கள் என்றனர். இந்த மத்திய அரசு, மாநில அரசு எங்களை இனப்படுகொலை செய்துவிட்டனர். இதற்கு எல்லாம் காரணம் இந்த மாவட்ட அதிகாரிகளும், இந்த அரசினுடைய அலட்சியமும் தான். ஆனால் ஒன்று மட்டும் நல்லா தெரியுது எங்களை வேண்டுமென்றே கொலை செய்துவிட்டனர்.
ராபின் – தூத்தூர் கிராமம்
முதலமைச்சர் அருமையாய் பார்த்தார் மக்களை அல்ல, ஒரு கல்லூரிக்கு வந்துவிட்டு போய்விட்டார். எங்கள் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வரவில்லை. ஏதும் தவறு செய்யவில்லை என்றால் நேரடியாக மக்களை வந்து சந்திக்க வேண்டும் தானே? ராகுல்காந்தி சின்னத்துறை வந்து சென்றார். தூத்தூர் வரவில்லை. எல்லா அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் எங்களை நேரடியாகதான் அடித்துக் கொல்லவில்லை. மற்றபடி எங்களைக் கொலை செய்துவிட்டனர். இந்தப் பகுதியில் வரவேண்டிய இணயம் துறைமுக திட்டம் தடுக்கப்பட்டதால் எங்களைக் கொன்றுவிட்டார்கள்.
ஜிஜோ. த/பெ விக்டர் – தூத்தூர் கிராமம்
வருசத்துக்கு ஒரு பெரிய அலை வந்து எங்களுடைய 50 வீடுகள் அழிய நேரிடுகிறது. ஆனால் இதுவரை இந்த அரசு அதிகாரிகள் எந்த ஒரு உதவியும் செய்து தந்ததில்லை. ஒரு விசைப்படகு செய்ய 70 லட்சம் வரை செலவு செய்து கடன் வாங்கி தொழிலுக்கு போகிறோம். அதற்கான Tax எல்லாம் செலுத்துகிறோம். எங்களுக்கென்று ஒரு பேங்க் லோன் கொடுத்ததில்லை. கேட்டால் போட்டுக்கெல்லாம் லோன் கிடையாது, எதாவது சொத்து இருந்தால் கொண்டு வா என்கிறார்கள். எங்களுக்கு இந்த கடலை விட்டால் ஏது சொத்து ? நாங்கள் பிறந்ததிலிருந்து இங்குதான் இருக்கிறோம். நாங்கள் சம்பாதிக்கும் பணம் பெரும்பாலும் செலவினங்களுக்கே போய்விடுகிறது, எப்படி சேமிக்க முடியும்? எங்கள் இந்த நிலைமைக்கு அரசு தான் காரணம் சார்.
முட்டம் மீன்பிடி துறைமுக போட் உரிமையாளர்கள்
நாங்களும், எங்களது முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள பல போட்களும் புயலில் சிக்கித் தப்பினோம். நாங்கள் தப்பியதற்கு முக்கியக் காரணம், எங்கள் போட் நீளமாக, பெரிதாக இருந்ததுதான். கேரளாவில் நீளமான போட்டை அனுமதிக்கிறார்கள். ஆனால், தூத்தூர் மீனவர்கள் எங்கள் போட்டில் பாதி அளவுதான் வைத்துள்ளனர். கூடுதல் அளவை தமிழக அரசு அனுமதிப்பதில்லை. சிறிய போட் என்பதால்தான் தூத்தூர் பகுதி மீனவர்கள் புயல் காற்றைச் சமாளிக்க முடியவில்லை, அதனால் இறந்துவிட்டார்கள். இதுதான் பிரச்சனை
திரு. மனோ தங்கராஜ் – சட்டமன்ற உறுப்பினர் – பத்மநாபபுரம் தொகுதி – குமரி மாவட்டம்
பிரச்சனை புயல் காற்று குறித்து முன்கூட்டியே அறிவிக்காதது மட்டுல்ல, பாதிப்பு வந்தபின்பும் அரசு அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம், மீட்புப் பணிகள் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால் கீழே உள்ள அதிகாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தனர். ஓகி புயல் குறித்து, அரசின் கொள்கை முடிவு என்ன? என்பதே பலநாட்கள் தெரியவில்லை. எல்லாமே அலட்சியமாகத்தான் நடந்தது. பாதிக்கப்பட்ட கிராமங்கள் எங்கள் தொகுதிக்குள் தான் வருகிறது.
ஆனால் என்ன செய்வது? சட்டமன்ற உறுப்பினரான எனக்கே 30 -ம் தேதி புயல் வருகிறது என்று தெரியாது. நான் வழக்கமாக கிளம்பி வெளியில் செல்லத்தயாரான போது திடீரென கடும் வேகத்தில் காற்று அடித்து, மரங்கள், மின்கம்பங்கள் விழுந்தன. இதனால் எந்த தடுப்பு முறையும் பின்பற்ற முடியவில்லை. வழக்கமான புயல் என்றால் மழைதான் விழும், காற்று அதிக வேகத்தில் வீசப் போகிறது என யாரும் எதிர்பாக்கவில்லை. அரசோ, மாவட்ட நிர்வாகமோ அறிவிக்கவில்லை.
புயல் வீசியப் பிறகு ஒரு மீட்டிங் கலெக்டர் வைக்கிறார். அதில் அந்த அதிகாரிகள் மிகக் குறைந்த சேதத்தையே சொன்னார்கள். அதையே அரசுக்கு அறிக்கையாகவும் அனுப்பியுள்ளனர். 6000-7000 வீடுகள் சேதமடைந்துள்ளது, அரசுக்கு சொந்தமான ரப்பர் மரங்கள் மட்டும் சுமார் 1.6 இலட்சம் விழுந்துள்ளது என்றால் உண்மையான சேதத்தை மதிப்பிட்டுக் கொள்ளுங்கள். கடலுக்குச் சென்ற மீனவர்கள் குறித்த கணக்கே மாவட்ட நிர்வாகத்திடம் இல்லை.
அதிகாரிகளும், அரசும் இணைந்து நிவாரணமாக பகுதியாக சேதமடைந்த வீட்டிற்கு ரூபாய் 5,100 /- முழுவதுமாக சேதமடைந்த வீட்டிற்கு ரூபாய் 95,000/- ரப்பர் ஒரு ஹெக்டேருக்கு ரூபாய் 18,000/- என்று சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கே செல்லவில்லை, இவர்களாகவே தோராயமாக அறிவிக்கின்றனர்.
விவசாயிகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது, ஒரு ஹெக்டேருக்கு 525 ரப்பர் மரங்கள் இருக்கும் 1 மரத்திற்கு இந்த அரசு ஒதுக்கியது ரூபாய் 31 மட்டும்தான். இதில் புதிய ரப்பர் மரம் உருவாக்க முடியமா? அந்த மரம் வளரும்வரை விவசாயிகளுக்கு ஏற்படும் வருமான இழப்புகளுக்கு யார் பொறுப்பு?
பிரதமர் மோடி வந்தார் ஆனால் அவர் கன்னியாகுமரியிலேயே இருந்து கொண்டு டிஜிட்டலில் சேதத்தைப் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டார். நான் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. மோடி இரண்டு கேள்விகள் கேட்டார் .
1) நீங்கள் பிரதமர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயம் செய்கிறீர்களா ?
2) விவசாய விளைபொருட்களை எங்கு விற்கிறீர்கள் ?
மீனவர்கள் சேட்டிலைட் போன் கேட்டபோது, இது பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. பார்த்துதான் நடவடிக்கை எடுப்போம் என்று கூறிவிட்டுப் போய்விட்டார். மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு உயிர் இழப்பு, உற்பத்தி செலவு, இழப்பை கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும். இப்பிரச்சனையிலும் மதவாத அரசியல் செய்கிறது பாஜக.
அரசு தரப்பு கருத்துக்கள்
Dr. பரிதாபானு – மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – நாகர்கோவில்
எங்கள் கலெக்ரேட்டில் அனைத்து Dissaster management system உள்ளது, அதை நாங்கள் முழுமையாகப் பயன்படுத்திவருகிறோம். இந்த ஓகி புயலின்போது, கூடுதலாக இரண்டு நபர்களை வைத்து மிகவும் சீரியசாக வேலை செய்தோம்.
எங்கள் மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவுக்கும் ஒரு Dissaster member இருப்பார். அவர்களை எப்பபோது வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளலாம். ஓகிப் புயலின்போது சுமார் 2000 பாதிக்கப்பட்டோர் அழைப்புகளை ஏற்றுத் தேவையான உதவிகளை செய்து கொடுத்தோம். ஒரே ஒரு நாள் தான் புயல், ஆனால் அதனுடைய அழிவு என்பது மிகவும் பேரழிவு, அதை நான் மறுக்கமுடியாது.
கடலோரக் காவல்படை மூலம் மீனவர்களை மீட்டுள்ளோம். அதை நீங்கள் நம்பாவிட்டால் பரவாயில்லை, ஆனால் கடலோர காவல்படையுடன் ஏழு மீனவர்கள் மீட்கப் போனார்கள்.
அதில் இருவர் ஊடகங்களில் சொன்னார்கள், ஆழ்கடலில் சென்று தேடினோம் என்று. அதை நான் வீடியோ எடுத்து வைத்து இருக்கிறேன். இதை எப்படி மறுக்க முடியும்? எனவே மாவட்ட நிர்வாகம் சரியாகத்தான் வேலை செய்துள்ளது. இன்று மத்தியக் குழு சேதங்களை மதிப்பிட வந்துள்ளது. கலெக்டர் அந்த வேலையில்தான் உள்ளார். பேரிடர் தொடர்பு எண் ; 1077 யாரும் எப்போதும் அழைக்கலாம்.
ஒகிப் புயலின்போது 15 நாட்கள் மிகவும் கடுமையாகப் போராடி rehbilitation வேலைகளை செய்து கொண்டுதான் இருக்கிறோம். அதாவது 300 பேர் சிறப்பு டீம் கொண்டு ஒவ்வொரு வீடாக 8 கிராமங்களுக்கும் சென்று அவர்களுடைய வாக்களர் அட்டையை வைத்து கேட்டு துல்லியமான தகவல்கள் கணக்கிட்டு வைத்துள்ளோம்.
இதுவரை மொத்தம் 8 பேர் உடல் கிடைத்துள்ளது. அவற்றை டி.என்.ஏ. டெஸ்ட் செய்து அவர்கள் குடும்பத்துக்கு தலா 20 இலட்சம் என்று 1 கோடியே 60 இலட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. நான் தான் என் கையில் செக் தயார் செய்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரடியாக அவர்கள் கையில் கொடுத்தேன். மேலும் மத்தியக்குழு இன்றும், நாளையும் ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுவார்கள். அதன்பின் உரிய நிவாரணம் வழங்கப்படும். இதுதவிர பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு தகுந்த நிவாரண உதவிகளும் செய்து கொண்டிருக்கிறோம். மிகவும் வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஒக்கி புயலின்போது வெறும் இரண்டு மணி நேரம் தான் தூங்கியிருப்பேன். அவ்வளவு கடுமையாக மக்களுக்கு நிவாரணப் பணிகள் செய்து தருகிறோம் .
மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம்,குளச்சல்
பெயர் தெரிவிக்க விரும்பவில்லை – மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி
எங்கள் மீன்வளத்துறைக்கு அதாவது குளச்சல் மீன்வளத்துறைக்கு சென்னையில் இருந்து 28 -ம் தேதி அறிவிப்பு வந்தது. ஆனால் எங்கள் துறை மற்றும் மற்றதுறை அதிகாரிகளின் அலட்சியத்தினால் தான் இவ்வளவு இறப்பு. இவர்கள் கொஞ்சம் விரைவாக நடவடிக்கை எடுத்திருந்தால் கொஞ்சப் பேரையாவது காப்பாற்றி இருக்கலாம். அதிகாரிகளின் மெத்தனம் தான் இறப்புக்குக் காரணம் சார். இதை நான் சொல்லக் கூடாது, ஆனால் உண்மை அதுதான்.
குமரி மாவட்டத்தில் AD அலுவலகம் மொத்தம் மூன்று உள்ளது
1. கன்னியாகுமரி
2. குளச்சல்
3. நாகர்கோவில்
ஆனால் DD அலுவலகம் நாகர்கோவிலில் தான் உள்ளது. வழக்கமாக DD அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு புயல் குறித்த அறிவிப்பு வரும், வந்தவுடன் தான் நாங்கள் மீனவ மக்கள் குடியிருக்கும் பகுதிகளுடைய பாதிரியார்களிடம் சொல்வோம். சக அலுவலகத்திலிருந்து செய்திகள், அறிவிப்புகள் வந்தால்தான் கூற முடியும். நாங்கள் சொன்னபின் மீன்பிடிக்க போக வேண்டாம் என்று பாதிரியார்கள் அறிவிப்பார்கள்.
ஆனால் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர்களுக்கு இந்த அறிவிப்பால் எந்தவித பயனும் கிடையாது. அவர்களை காப்பற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது, ஏனென்றால் அதற்கான எந்த வசதிகளும் மீன்வளத்துறையில் இல்லை.
போட்டுக்கு லைசென்ஸ் உள்ளவங்க வந்து சொல்லிட்டு போவாங்க. இங்கு டோக்கன் முறை உள்ளது. அதை நாங்களும் பின்பற்றுவதில்லை, மீனவர்களும் வந்து டோக்கன் வாங்கிச் செல்வதில்லை. ஏனென்றால் டோக்கன் முறை என்பது விடியற்காலை வந்து டோக்கனை வாங்கிவிட்டு மீன்பிடிக்க சென்றுவிட்டு அன்று இரவு திரும்பிவிட வேண்டும். ஆனால் யாரும் அன்றே வருவதில்லை, இந்த டோக்கன் முறையும் தற்போது நடைமுறையில் இல்லை. சில மீனவர்கள் தெரிந்தே ஆழ்கடலுக்குச் சென்று மீன் பிடிக்கின்றனர். மற்ற நாட்டு எல்லைக்கும் செல்கின்றனர். சிலர் எல்லை எதுவரையிலும் உள்ளது என்று தெரியாமல் செல்கின்றனர். நம்முடைய கடல் எல்லை என்பது 300 நாட்டிகல் மைல். அப்படியிருக்கும் போது அங்குகூடச் சென்று ஏன் மீனவர்களைக் காப்பாற்றவில்லை என்பது தெரியவில்லை!
வெளிநாட்டு கப்பல் ஒன்று எல்லையில் நுழைந்தால் உடனே விசாரணை செய்து பிடித்து விடுகின்றனர் என்பது உண்மைதான். எங்கள் குளச்சல் மீன்வளத்துறைக்கு என்று ஒரு ரோந்து போட் உள்ளது, அதுவும் தற்போது முட்டத்தில் உள்ளது. அதை நாங்கள் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை, ஏனென்றால் அதை ஓட்டுவதற்கான டிரைவர் இல்லை. அதனால் அப்படியே படகை இயக்காமல் போட்டுவிட்டார்கள். அந்தப் படகும் 10 வருடங்களுக்கு முன் கலைஞர் இருந்த நேரத்தில் கொடுத்தது. கொடுக்கும்போதே டிரைவர் இல்லாத ரோந்து போட்டை தான் தந்தார்கள், அப்படி ரோந்து போட் கடலுக்குள் போக வேண்டும் என்ற நிலை வந்தால் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து டிரைவரை உரிய அனுமதிபெற்று வரவழைத்து குளச்சல் மீன்வளத்துறையிலிருந்து இரண்டு அதிகாரிகள் அவர்களுடன் செல்வார்கள்.
இப்படித்தான் இங்கு குளச்சல் மீன்வளத்துறை செயல்பட்டு வருகிறது. வானிலை அறிவிப்பு, மீனவர்களுக்கு ஐடி கார்ட் கொடுப்பது, போட் முன்பதிவு, டோக்கன் விநியோகிப்பது மட்டும்தான் எங்கள் பணி. மீனவர்களை ஆபத்தில் இருந்து மீட்கும் பணி எங்கள் குளச்சல் அலுவலகத்துக்கு கிடையாது, கடலில் செல்வதற்கே எங்களுக்கு வாய்ப்பில்லை. கடலோர காவல்படையோ, கப்பல்படையோதான் அதைச் செய்ய வேண்டும்.
தேவராஜன் – குளச்சல் – முன்னாள் மீன்வளத்துறை மேற்பார்வையாளர்.
பொதுவாக தூத்தூர் பகுதி மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்குச் சென்று மீன் பிடிப்பவர்கள். அதனால் அவர்களைத் தொடர்பு கொள்வது மிகவும் கடினம். அதற்கான சிஸ்டமும் எங்களிடம் இல்லை. அதிகாரிகளின் அலட்சியம் தான் இறப்புக்குக் காரணம். ஏனென்றால் புயலின்போது கடலோர காவல்படை ஒரு போட்டில் கடலுக்குள் சென்றுள்ளது. அங்கு போட் கவிழ்ந்து தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை அருகில் வந்து பார்த்துவிட்டு அப்படியே காப்பற்றாமல் திரும்பிச் சென்று விட்டார்களாம். மற்ற மீனவர்கள் இவரின் கண்முன்னே மூழ்கி இறந்துவிட்டார்களாம். இதை அந்த போட்டில் இருந்து தப்பிப் பிழைத்து வந்த ஒரு தெரிந்த மீனவர் என்னிடம் சொன்னார். உண்மையைச் சொன்னால் ஊர் மக்கள் பிரச்சனை செய்து விடுவார்கள் என்ற பயத்துடன் என்னிடம் மட்டும் சொன்னார். அவர் சொன்னதை உங்களிடம் சொல்கிறேன், ஏன் இந்த Coast Guard இப்படிச் செய்தார்கள் என்று தெரியவில்லை .
இயற்கை பேரிடர்கள் குறித்த சட்டத்தின் நிலை பேரிடர் மேலாண்மை சட்டம், 2005(THE DISASTER MANAGEMENT ACT,2005) இச்சட்டத்தின் பிரிவு-2 பேரிடர் என்றால் என்ன? என்று வரையறுக்கிறது. அவ்வரையறையின்படி இயற்கை மற்றும் மனிதர்கள் நடவடிக்கையால் குறிப்பிட்ட அளவிற்கு உயிர்சேதம், பாதிப்பு அல்லது சொத்துக்களுக்குச் சேதம் அல்லது சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவது “பேரிடர்” என்கிறது.
பிரிவு 2(e)-ன்படி பேரிடர் மேலாண்மை என்பது பேரிடர் அபாயத்தைத் தடுப்பது, பாதிப்பைக் குறைப்பது, தயார் நிலையில் இருப்பது, காப்பாற்றுவது, நிவாரணம் வழங்குவது, மறு நிர்மாணம் செய்வது.
கடந்த கால இயற்கைப் பேரழிவுகள் குறித்த அரசின் நிலை :
இந்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் (NATIONAL DISASTER MANAGEMENT AUTHORITY,GOVERNMENT OF INDIA) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் கடந்த 1972 -ம் ஆண்டிலிருந்து 2014 வரையிலான 30 பாதிப்புகள், முக்கிய பேரழிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.அவற்றில் கடந்த 2010 -ஆம் ஆண்டிலிருந்து வகைப்படுத்தப்பட்டுள்ள 15 பேரழிவுகளில், குறிப்பிட்ட சில பேரழிவுகள் இவை
1. 2010 – ஜம்மு காஷ்மீர்-லே-லடாக் பனிச் சரிவு- இறப்பு 257 பேர்
2. 2011 – சிக்கிம்- நில நடுக்கம் – இறப்பு 97 பேர்
3. 2011 – தமிழ்நாடு – தானே புயல் –இறப்பு 47 பேர்
4. 2011 – ஒரிசா – வெள்ளம் – இறப்பு 45 பேர்
5. 2012 – தமிழ்நாடு – நீலம் புயல் – இறப்பு 65 பேர்
6. 2013 – ஒரிசா-ஆந்திரா – பிலியான் புயல் – இறப்பு 23 பேர்
7. 2013 – ஆந்திரா வெள்ளம் – இறப்பு 53 பேர்
8. 2014 – ஜம்மு-காஷ்மீர் வெள்ளம் – இறப்பு இல்லை
9. 2014 – ஆந்திரா – ஹீட் ஹட் புயல் – இறப்பு இல்லை
மேற்கண்ட விபரங்களிலிருந்து இறப்பே இல்லாத புயல், வெள்ளம் முதல் 23 பேர் இறப்பு வரை மிகப்பெரிய பேரழிவுகள் என அறிவிக்கப்பட்டுள்ளன.
பேரிடர் மேலாண்மைக்கு சட்டப்படியான பொறுப்பு யார்?
பேரிடர் மேலாண்மை சட்டம், 2005, பிரிவு. 3 – தேசியப் பேரிடர் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். இதன் தலைவராக இந்தியப் பிரதமர் இருப்பார். மற்ற 9 உறுப்பினர்களை பிரதமரே தேர்வு செய்வார் எனக் கூறுகிறது.
பிரிவு. 14 – ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலப் பேரிடர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இதன் தலைவராக மாநில முதல்வர் இருப்பார். மற்ற எட்டு உறுப்பினர்களை அவரே நியமிப்பார் என்று கூறுகிறது.
பிரிவு. 25 – ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட பேரிடர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இதில் அந்த மாவட்ட ஆட்சியர் தலைவராக இருப்பார். மாவட்ட எஸ்.பி, மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பர்.
தேசியப் பேரிடர் மேலாண்மைத் திட்டம், 2016 இத்திட்டத்தின்கீழ் பிரதமர் தலைமையிலான தேசிய பாதுகாப்புக்கான கேபினட் குழுவும், தேசியப் பேரிடர் மேலாண்மை வாரியமும் பேரிடர் குறித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டிய முக்கிய அமைப்புகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. புயல் மற்றும் சூறாவளிக்கு பொறுப்பான துறையாக MINISTRY OF EARTH SCIENCE உள்ளது.
புயல், சூறாவளி, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களை முன்னறிவிக்க வேண்டிய பொறுப்பு மத்தியில் MINISTRY OF INFORMATION AND BROADCASTING-க்கும், மாநிலத்தில், மாநில, மாவட்ட பேரிடர் மேலாண்மை வாரியங்கள், வானியல் தகவல் துறை, வருவாய்துறைகளுக்கு உள்ளது.
மேற்கண்ட மக்களின் வாக்குமூலங்கள், மீன்வளத்துறை, குமரி மாவட்ட நிர்வாகத் தகவல்கள், மத்திய, மாநில அரசுகளின் பத்திரிக்கைச் செய்திகள், நாடாளுமன்ற அறிவிப்புகள், பேரிடர் மேலாண்மை தொடர்பான சட்டம், திட்டம், கடந்த கால விபரங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து கீழ்க்கண்ட முடிவுகளுக்கு வருகிறோம்.
உண்மை அறியும் குழு ஆய்வு முடிவுகள்
ஓகி புயல் குறித்த முன்னறிவிப்பு மீனவர்கள்,விவசாயிகள், குமரி மாவட்ட மக்களுக்கு சரியாக செய்யப்படவில்லை. குறிப்பாக மிக அதிக வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும், இதனால் பலத்த சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது, மக்கள் அதனை எதிர்கொள்ளத் தயார்நிலையில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்படவில்லை. இதுதான் கடும் பாதிப்புகளுக்கு மூலகாரணம்.
ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களுக்கு புயல், சூறாவளி, சுனாமி குறித்து எச்சரிக்கை செய்ய அரசிடம் வழிமுறைகளே இல்லை.
இரு மாநிலங்களில் சுமார் 661 மீனவர்களை இன்றுவரை காணவில்லை.நூற்றுக்கும் மேலானோர் இறந்துள்ளனர். பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. இம் மாபெரும் அழிவை “பேரிடர்” என்று இன்றுவரை மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கவில்லை. இதனால் அதிகாரிகள் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தினார்கள். இது மீட்பு நடவடிக்கைகளை கடுமையாக பாதித்தது. இந்நிகழ்வு ஒட்டு மொத்த அரசு நிர்வாகக் கட்டமைப்பும் ஊழல்பட்டு, தோல்வியடைந்துள்ளதைக் காட்டுகிறது.
பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறிப்பான திட்டம் தயாரிக்கப்பட்டு, செயல்படுத்தத் தயார் நிலையில் இருக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் இத்திட்டம் நடைமுறையில் இல்லை. ஆழ்கடல் மீனவர்களைக் காப்பது குறித்த திட்டமே இல்லை.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி நடக்கவேயில்லை. குறிப்பாக ஆழ்கடலில் சிக்கிய மீனவர்களை வேண்டுமென்றே சாகவிட்டு விட்டது மத்திய, மாநில அரசுகள். தப்பிப் பிழைத்த கொஞ்சப் பேரும் சொந்த முயற்சியால், மற்ற மீனவர்கள் உதவியால்தான் பிழைத்துள்ளனர்.
மீனவர்கள் மீதான அரசின் இந்த வெறுப்புக்கு இந்தியக் கடலோரங்கள் முழுவதும் கார்ப்பரேட் நலனுக்கான அணு உலை, துறைமுகங்கள், அனல் மின் நிலையங்கள், சுற்றுலா விடுதிகள் அமைக்கும் அரசின் முடிவுக்கு எதிராக உள்ளார்கள் என்ற கோபமே முக்கிய காரணம்.
பாதிக்கப்பட்ட மக்கள், பாஜக காலூன்ற முடியாத தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்களாக இருப்பதும், குமரி மாவட்ட மீனவர்கள் பெரும்பாலும் கத்தோலிக்க கிருத்தவர்களாக இருப்பதும் மோடி அரசின் திட்டமிட்ட அலட்சியத்துக்கு முக்கியக் காரணம்.
பரிந்துரைகள் :
உரிய தருணத்தில் ஓகி புயல் மற்றும் காற்றின் வேகம் குறித்து முன்னறிப்புச் செய்யாது, மீட்புப் பணிகளில் திட்டமிட்ட அலட்சியம் காட்டி, நூற்றுக்கும் மேலானோர் இறப்பிற்குக் காரணமான அரசின் செயல் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304-அ மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டம்,2005 பிரிவு-56 மற்றும் 61-ன் கீழ் தண்டனைக்குரியது.எனவே, இக்குற்றத்திற்கு சட்டப்படி பொறுப்பான தேசிய பேரிடர் மேலாண்மை குழுத் தலைவர் பிரதமர் திரு. மோடி, மாநில பேரிடர் மேலாண்மை குழுத் தலைவர் தமிழக முதல்வர் திரு. பழனிச்சாமி, கன்னியாகுமரி மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுத் தலைவர், மாவட்ட ஆட்சியர் திரு. சஜன்சிங் சவான் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
ஓகி புயல் பேரழிவில், வானியல் துறை, மீன்வளத்துறை, இந்திய கடலோர காவல்படை, இந்திய கப்பல் படை, குமரி மாவட்ட வருவாய்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் புரிந்த மனிதக் குற்றங்கள் குறித்து, பணியில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு உடனே சேட்டிலைட் போன் வழங்க வேண்டும். அந்தந்தப் பகுதி மீனவர்கள் கொண்ட பேரிடர் கால மீட்புக் குழு உருவாக்கப்பட வேண்டும்.
கேரளாவில் வழங்கப்பட்டது போல் உடனே ரூ.20 லட்சம் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். 7 ஆண்டுகளுக்குப் பின்தான் இறப்பு என அறிவிக்கப்படும் என்ற நடைமுறையைத் தளர்த்த வேண்டும்.
பொருட்கள் மற்றும் விவசாய அழிவிற்கு உற்பத்தி மற்றும் நீண்டகால வருமான இழப்பை கருத்தில் கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும்.
அரசு மேற்கண்ட கோரிக்கைகளை உடனே நிறைவேற்றாவிட்டால், குமரி மாவட்ட மீனவர்கள்-விவசாயிகளுடன், இதர தமிழக மக்கள் இணைந்து போராட வேண்டும்.
நாள் : 07.01.2018 உண்மை அறியும் குழு
(மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் வெளியிட்ட உண்மை அறியும் குழுவின் பரிந்துறைகள் பற்றி பல்வேறு செய்தித் தாள்களில் வெளியான செய்திகள் )
தகவல் : மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.
தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் ஒருவாரத்திற்கு மேல் தொடர்கிறது. மேலும் தீவிரமடைந்து வருகிறது. அவர்களுக்கு தரவேண்டிய பணத்தை தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல், போராடும் தொழிலாளர்களை சஸ்பெண்ட, கைது, போலீசு தாக்குதல் என அடக்குமுறை மூலம் அச்சுறுத்தி எடப்பாடி அரசு பணிய வைக்க முயற்சிக்கிறது. இதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதோடு 11-1-2018 அன்று தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் உள்ளோம். மக்கள் அனைவரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி போராட வேண்டும்.
ரூபாய் ஏழாயிரம் கோடி தொழிலாளர்களின் சம்பளப்பணத்தை பறித்துக் கொண்டு ஆயுள் காப்பீடு, சொசைட்டி, பி.எப். ஆகியவற்றிற்கு முறையாக செலுத்தாமல் மோசடி செய்தது கிரிமினல் குற்றம். சம்பந்தபட்ட அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கபட்டால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வரை வழங்க முடியும்.
ஓய்வு பெற்ற பிறகு தனக்கு சேர வேண்டிய பணி பயன்கள் அனைத்தும் சீட்டு கம்பெனி போல் ஏமாற்றபட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பறிகொடுத்த தொழிலாளர்கள் வீதியில் நின்று போராடுகிறார்கள். ஒரு நடத்துனர் பணத்தை தாமதமாக கட்டினால், அல்லது ஒருவருக்கு டிக்கட் போட தவறினால், ஒரு குடிகாரன் தள்ளாடி பேருந்தில் விழுந்து இறந்துவிட்டால் நடத்துனரும், ஓட்டுநரும், வழக்கு, கோர்ட், சஸ்பெண்ட் ஊதிய உயர்வு ரத்து என பல தண்டனைகளை நிரூபிக்கபடாமலேயே அனுபவிக்கிறார்கள்.
போக்குவரத்து கழகம் நட்டமடைந்ததற்கு இரவு பகலாக உயிரை பணயம் வைத்து பணி செய்த தொழிலாளிகள் எந்தவிதத்திலும் காரணமல்ல. ஊழல் – முறைகேடு நிர்வாகம் செய்த அதிகாரிகள் மற்றும் அரசுதான் காரணம். அரசு போக்குவரத்து கழக கட்டிடங்கள், பணிமனைகளை பல ஆயிரம் கோடிக்கு அடகு வைப்பது, ஓய்வு எடுக்க சென்ற தொழிலாளர்கள் பழுதடைந்த கட்டிட பணிமனை இடிபாடுகளில் இறந்து போனது, தொழிலாளிகளை பாதுகாக்க வக்கற்ற நிர்வாகத்தைதான் தமிழக அரசு நடத்தி வருகிறது.
நீதிமன்றங்கள் தங்கள் அதிகார வரம்பை தாண்டி கருத்து சொல்வது, ஒருதலைபட்சமாக உத்திரவு போடுவது ஆகியவற்றின் மூலம் அரசின் குற்றங்களுக்கு துணைபோகிறது. டாஸ்மாக்கை மூட வேண்டும் என மக்கள் கதறுகிறார்கள். நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவு நாங்கள் என்ன செய்யமுடியும்? என கைவிரிக்கிறது. அதே நேரத்தில் பேருந்தை தனியார்மயமாக்க கொள்கை வகுக்க அரசுக்கு அறிவுறுத்துகிறது. பல நூறு நீதிமன்றத் தீர்ப்புகளை அரசு அதிகாரிகள் அமுல்படுத்துவதில்லை. அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
தமிழக சட்டமன்றத்தில் எடப்பாடி அரசுக்கு அறுதி பெரும்பான்மை இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. அது நீடிப்பதற்கான அருகதையை இழந்துவிட்டது. மோடி அரசால் முட்டு கொடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது. பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி, எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு தீர்ப்புக்காக காத்திருப்பதும், சட்டமன்றத்தில் பங்கேற்பதும், வேறு வகையில் எடப்பாடி அரசுக்கு முட்டு கொடுப்பது ஆகும்.
எனவே இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே அனைத்து எதிரக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்துவிட்டு போராடும் தொழிலாளர்களோடு களத்தில் இறங்க வேண்டும்.
போக்குவரத்து துறையில் மட்டுமல்ல, ஒட்டு மொத்த மத்திய மாநில அரசுகள் பொருளாதார ரீதியில், அரசியல் ரீதியில் திவாலான நிலையில் உள்ளது. வளர்ச்சி விகிதம் இரண்டாண்டு பின்னோக்கி போய் விட்டது. “இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு!” வெறும் அறிவிப்பாகவே உள்ளது. வங்கிகள் திவாலாகும் சூழல், மக்கள் சேமிப்பு பணத்தை வலுக்கட்டாயமாக பிடுங்குதல், ஜி.எஸ்.டி. தோல்வி, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தரமுடியாத நிலை.
பல லட்சம் கோடி கடன் மற்றும் அதன் மீதான வட்டிச்சுமை, மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவுகளை சுருக்குதல், மானியம் ரத்து ஆகியவை குறித்து பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். மோடி எடப்பாடி அரசுகள் இந்த உண்மையை மறைத்து மேலும் மேலும் நெருக்கடிகளை மக்கள் மீது சுமத்துகின்றன.
இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுக்கு தர வேண்டிய பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ரூ 7,000 கோடியை கேட்டுப் போராடி வருகிறார்கள். ஒன்றரை லட்சம் போக்குவரத்து தொழிலாளர்களை தமிழக அரசு ஏமாற்றிவிட்டது. அதிகமாக ஊதிய உயர்வு கேட்கிறார்கள் என பொய்ப பிரச்சாரம் செய்கிறது. எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகிறார்கள் என அவர்கள் போராட்டத்தை எடப்பாடி அரசு கொச்சைப்படுத்துகிறது.
ஜாக்டோ ஜியோ போராட்டம். செவிலியர்கள் பணிநிரந்தரம், மின்வாரிய ஊழியர்கள் போராட்டம். விவசாயிகள் போராட்டம், மீனவர்கள் போராட்டம், என மக்கள் பிரச்சினைகள் தீர்ப்பதற்கு வக்கற்று வழியற்று போனது எடப்பாடி அரசு. போராடும் மக்கள் அனைவரும் அவர்கள் பிரச்சினையை அவர்களே பார்த்து கொள்ள வேண்டும் என்ற அரசின் கொள்கையை அதன் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்த வேண்டும்.
தமிழகத்தை ஆள அருகதை இழந்த எடப்பாடி அரசு இனியும் நீடிக்க அனுமதிக்க கூடாது. எதிர்க்கட்சிகள் இந்த சட்டமன்ற தொடரிலேயே அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும். போராடும் மக்கள் பிரிவினரோடு இணைய வேண்டும்.
வழக்கறிஞர் சி. ராஜு மாநில ஒருங்கிணைப்பாளர் மக்கள் அதிகாரம்.
தகவல் : மக்கள் அதிகாரம், தமிழ்நாடு. தொடர்புக்கு : 80157 21152.
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு ஏற்கமறுப்பதால் போராட்டத்தை தொடர்வது தவிர வேறு வழி அவர்களுக்கில்லை. இதனால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டிருந்தாலும் அதை பெரும்சுமையாக கருதாமல் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை மக்கள் ஆதரித்து வருகிறார்கள்.
தொழிலாளர்களின் இந்த போராட்டம் குறித்து அலுவலகம் ஒன்றில் துப்புரவு பணி மேற்கொள்ளும் ஒருவரிடம் கேட்டபோது, “எவ்ளோ கஷ்டப்பட்டு உழைக்கிறவங்களுக்கு சம்பளம் உயர்த்தினா தான் என்ன… கோடி கோடியா செலவு பண்ணி எனக்கு விழா எடுங்கன்னு எம்ஜியார் வந்து சொன்னாரா? தேவை இல்லாம அதுக்கு பண்றானுங்க.. தொழிலாளிங்கள இவ்ளோ கஷ்டப்படுத்துறானுங்க. இன்னா அய்யோக்கியத்தனம் இது” என்று சொல்லி விட்டு கிளம்பினார். பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் மனஓட்டம் இதுதான்.
ஊடகங்களின் துணை கொண்டு பொதுமக்களுக்கு எதிராக போராட்டத்தை திருப்பி விடலாம். வழக்கம்போல பேச்சு வார்த்தைக்கு அழைத்து ஏமாற்றி விடலாம் என்று மனக்கோட்டை கட்டிய இந்த அடிமை எடப்பாடியின் கோட்டை சரிந்தது.
ஜாக்டோ-ஜியோ மற்றும் செவிலியர்கள் போராட்டத்தில் நீதிமன்றத்தை ஏவிவிட்டு முடிவுக்கு கொண்டு வந்ததைப் போல, நீதிமன்றத்திற்கு இப்பிரச்சனையை கொண்டு சென்றார்கள். இந்த போராட்டத்திலும் தனது ஆண்டைத்தனத்தை கொண்டு “போராடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்” என்று முதலில் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது.
ஆனால் இதே நீதிமன்றம் தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை கொஞ்சம் கூட இந்த அரசு மதிக்கவில்லை. அப்படி இருக்கும் பொழுது நாங்கள் மட்டும் ஏன் மதிக்க வேண்டும் என்று நீதிமன்ற மிரட்டலுக்கும் அஞ்சாமல் போக்குவரத்து தொழிலாளிகள் போராட்டத்தை தொடர்கிறார்கள்.
போராட்டத்தில் உரையாற்றும் திரு. சௌந்திரராஜன் (சிஐடியூ)
தனது உத்தரவு கடுகளவு கூட எடுபடவில்லை என்று தெரிந்தவுடன் “நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது” என்றொரு தீர்ப்பை வழங்கி “மீசையில் மண் ஒட்டாததைப் போல” காட்டிக்கொண்டது சென்னை உயர்நீதிமன்றம்.
இனி எப்படிப்பட்ட தீர்ப்பும் தொழிலாளர்களை கட்டுப்படுத்த போவதில்லை. போராட்டம் ஒன்று மட்டும் தான் சரியான தீர்ப்பாக இருக்கும் என்பதை தொழிலாளர்கள் உணர்ந்து விட்டார்கள். அரசுக்கெதிரான தங்களின் கோபம் எரிமலையாய் வெடித்துள்ளது என்பதே உண்மை. இதற்கு சாட்சியமே 09.01.2018 அன்று தமிழகம் முழுவதும் உள்ள கோட்ட அலுவலகங்கள் எதிரில் தொழிலாளர்கள் குடும்பத்துடன் நடத்திய போராட்டம்.
சென்னையில் பல்லவன் பணிமனை முன்பு அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் திரு. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர். ஓவ்வொரு தொழிலாளியின் முகத்திலும் ஒரு நம்பிக்கை. போராட்டத்தின் மூலம் கோரிக்கையை வென்றே தீருவோம் என்ற முழக்கம்.
போராட்டத்திற்கு வரும் பெண்களுக்காக வழிவிடும் தொழிலாளிகள்
போராட்டத்திற்கு பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தவுடன், “லேடிஸ் வராங்க.. அவங்களுக்கு இடம் விடுங்க” என்று தொழிலாளிகள் வரவேற்று எழுந்தார்கள். இத்தனைக்கும் பேருந்துகள் ஓடவில்லை என்றாலும் ஆயிரக்கணக்கில் திரண்டுள்ளார்கள். அவரவர்கள் சொந்த செலவில் வாகனங்களை ஏற்பாடு செய்து வந்திருந்தார்கள். போராட்டத்தின் இடையில் சிறியளவு மழைத்தூரல் விழுந்ததும், நாற்காலியையே குடையாக பயன்படுத்தி கலையாமல் நின்றார்கள்.
“2015 மழை வெள்ளத்திலும், வர்தா புயலிலும் வண்டியை ஓட்டியவர்கள் நாங்கள். எங்களை இந்த மழை ஒன்றும் செய்து விடாது” என்று மேடையிலேயே அறிவித்தனர். சாலையின் ஒரு பக்கம் போராடும் தொழிலாளர்களின் காக்கி சட்டைகள். மற்றொரு பக்கம் போராட்டத்தை ஒடுக்கும் நிற்கும் காக்கி சட்டைகள். அமைப்பு ரீதியாக திரண்டுள்ள தொழிலாளர்கள் என்பதால் போலீசை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. “போலிசு யாராவது உள்ளே வந்தால் பெரிய பிரச்சனையாகிவிடும். நாங்கள் இங்கே பத்தாயிரம் பேர் கூடியிருக்கிறோம், இன்னும் நெறைய தொழிலாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்” என்று உறுதியுடன் அறிவித்தார்கள்.
மேடையின் அருகே நின்றிருந்த தொழிலாளர்கள், “எல்லா கணக்கையும் சரியாக ஒப்படைக்கிறோம் என்று பத்திரிக்கைகளுக்கு சொல்கிறார்களே, தைரியம் இருந்தால் அமைச்சராகட்டும், யாராகட்டும் இங்கே வந்து அதனை சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம். என்று சவால் விடுகிறார்கள்.
“எங்களிடம் இருந்து திருடிய பணத்தை திருப்பி கேட்கிறோம். எவ்வளவு திருடப்பட்டுள்ளது என்பது வரை எங்களிடம் கணக்கு உள்ளது” என்று இந்த சுரணையற்ற அரசுக்கு உறைக்கும்படி கேட்கிறார்கள். தொழிலாளர்களின் கேள்விக்கோ, அவர்களின் கோரிக்கைக்கைக்கோ நேர்மையாக பதில் சொல்ல துணிவற்று கிடக்கிறது இந்த அரசு.
“தஞ்சையில், தற்காலிக ஓட்டுனர்களை பணி செய்ய விடாமல் தடுத்தாக கூறி ஆறு தொழிலாளர்களை சஸ்பென்ட் செய்திருக்கிறார்கள். ஆனால், தற்காலிக ஓட்டுனர்களை வைத்து மக்களின் உயிரை பறித்த இந்த அரசை என்ன செய்வது?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
டிரேசி சாப்மனின் பாடல் வரிகளில் “இந்த அநீதிக்கெல்லாம் பதில் சொல்லாமல் தப்ப முடியாது” என்று வருவதைப்போல ஒரு முட்டுச்சந்தில் மாட்டிக்கொண்டு திணறுகிறது அரசு நிர்வாகம். எங்கள் பிரச்சனைக்கு தீர்வு தெரியாமல் போராட்டத்தை முடித்துக்கொள்வதாய் இல்லை என்கிறார்கள் தொழிலாளர்கள். இனியும் இந்த அரசு தப்பிக்க முடியாது.
இதன் தொடர்ச்சியாக இன்று தமிழகம் முழுவதும் உள்ள தொழிலாளர் நல ஆணையத்தை முற்றுகையிடும் போராட்டத்தையும் அறிவித்துள்ளார்கள். அவர்களின் போராட்டம் தொடரட்டும் ! வெல்லட்டும் !! அனைவரும் அவர்களுக்கு தோள் கொடுப்போம்!
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
Are the ancient Hindu myths of a land bridge connecting India and Sri Lanka true? Scientific analysis suggests they are. #WhatonEarthpic.twitter.com/EKcoGzlEET
இரண்டு நிமிடம் ஓடக்கூடிய ராம் சேது பாலம் பற்றிய காணொளியை, அமெரிக்காவில் உள்ள சைன்ஸ் சேனல் வெளியிட்டுள்ளது. இவர்களின் ஆய்வுப்படி, இந்த பாலத்திலுள்ள, கற்களின் வயது 7000-ம் ஆண்டு என்றும், அதற்கு மேல் உள்ள மண் திட்டுகளின் வயது 5000-ம் ஆண்டு என்றும் கண்டு பிடித்துள்ளனர். செயற்கைக் கோள் படத்தின் படி இந்த ஆதம் பாலம் மணல் திட்டுக்களாலும், அதன் மேல் இருக்கும் கற்பாறைகளாலும் ஒரு அறுபட்ட பாலம் போல இருக்கிறது. மணல் திட்டுக்கள் உருவாவது இயற்கை என்றாலும் இந்த பாறைகள் இங்கே எப்படி கொண்டு வரப்பட்டன என்று கேள்வி எழுப்புகிறது அந்த வீடியோ.
இந்திய மற்றும் தமிழக புவி அறிவியலை படித்தவன் என்ற முறையில் என்னுள் சில கேள்விகள் எழுகிறது
எதற்காக Dr. Aalan Lester (Geologist – புவி அறிவியல் வல்லுநர்) , இந்த மண்திட்டு உருவானதற்கான காரணத்தை புவிஅறிவியல் கோட்பாடுகளின் மூலம் விளக்காமல், இது இந்து கடவுள் ராம் தான் கட்டியிருப்பார் என்று கூறுவது மிகவும் வியப்பாக உள்ளது. இவர் புவி அறிவியல் வல்லுனரா அல்லது ஹிந்து புரோகிதரா என்ற ஐயம் ஏற்படுகிறது. அந்த வீடியோவில் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் அந்த பாறைகள் கட்டப்பட்டிருப்பது சாத்தியமில்லை என்பதை இதை சூப்பர் ஹீயூமன்தான் செய்திருக்க முடியும் என்று சொல்கிறார்கள். அதன் பொருள் அதை மனிதர்கள் கட்ட முடியாது, கட்டவில்லை என்பதே.
எனினும் சங்கபரிவாரத்தினர் இதை வைத்தே இராமாயண காலத்திற்கு சென்று வாயால் பாலத்தை கட்டிவிட்டார்கள். ராமன் தான் இந்த மண் திட்டை கட்டியிருப்பார் என்ற நோக்கத்தோடு, டாக்டர் ஆலன் லெஸ்டர் ஆதம் பாலத்தை கூறியிருப்பதை ஆதாரமாக கூறுகிறார்கள்.
இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் (2007), இந்த பாலம் மனிதனால் கட்டப்பட்டது என்றால், அதற்கு அருகில் மனிதன் வாழ்ந்தற்கான சான்றுகள் இருக்க வேண்டும். அவ்வாறான எந்த சான்றுகளும் அங்கு கிடைக்கவில்லை. இறந்த மனிதனின் எலும்புகளோ அல்லது எந்த எச்சங்களோ அங்கு இல்லை. இந்த பாலத்தை கட்டுவதற்கு பத்து லட்சம் வானரங்கள் பயன்படுத்தப்பட்டது என்று கூறுகிறது ராமாயணம். ஆனால் இன்று வரை, இந்தியாவின் எந்த மூலையிலும் குரங்கு போன்ற மனித உருவம் கொண்ட எலும்புக்கூடு எங்கும் கிடைக்கவில்லை.
ராமன் ராமேஸ்வரத்திற்கும் ஸ்ரீலங்காவிற்குமிடையே பாலம் அமைத்து தான் ஸ்ரீலங்காவிற்கு போனார் என்றால், அதற்கு முன் அவர் மண்டபத்திலிருந்து ராமேஸ்வரம் செல்வதற்கு முதலில் ஒரு பாலம் அமைத்திருக்கவேண்டும். ஏனெனில், மண்டபத்திலிருந்து 2.1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராமேஸ்வரம் ஒரு தீவு. ராமாயணமும், அமெரிக்க சைன்ஸ் சேனலும் ஒரே ஒரு பாலத்தைத்தான் குறிப்பிடுகிறது. பிரிட்டிஷ் அரசாங்கம் கட்டிய பாம்பன் பாலத்தை தவிர அங்கு வேறு எந்த ஒரு பாலமும் இல்லை. ஆதலால், ராமேஸ்வரத்திற்கும் ஸ்ரீலங்காவிற்குமிடையே உள்ள பாலமானது இயற்கையாக அமைந்தது தான் என்று தெரிகிறது.
தொல்உயிரியல் (Paleontology) என்பது மண்ணில் புதைந்த இறந்த உடற்கூட்டினை பற்றியும், அது வாழ்ந்த கால அளவை கொண்டும் அவை தொகுக்கப்படுகிறது. இந்திய தொல்உயிரியல் ஆராய்ச்சிபடி, இந்தியாவில் இமயமலையில் தான் முதன் முதலில் மனிதனின் முன்னோடியான மனிதகுரங்கின் உடற்பாகம் கிடைத்தது, இவ்வகையான குரங்குகள் வாழ்ந்த கால அளவு 1.2 கோடி. அதன் பிறகு முழு மனித உருவம் கொண்ட உடற்கூறு தமிழ்நாட்டில் கிடைத்தது, இதன் காலஅளவு 1.66 லட்சம்.
உலகின் எந்த ஒரு மூலையிலும், மனிதர்களின் முன்னோடியான மனித குரங்குகள் வாழ்ந்த கால அளவும், முழு உருவம் அடைந்த மனிதன் வாழ்ந்த கால அளவும் எங்கும் ஒத்துப்போகவில்லை. ஆனால் ராமாயணத்தில் முழு உருவம் கொண்ட மனிதனான ராமனும் மனித குரங்கு வடிவம் கொண்ட அனுமானும் தோழர்கள். இந்த இரண்டு உருவங்களும் ஒன்றாக இணைந்து 7000ஆம் ஆண்டில் ஒரு பாலம் கட்டினார்கள் என்பது அண்டப்புளுகு மற்றும் அறிவியலுக்கு ஒத்துவராத கோட்பாடு.
இந்திய தொல்பொருள் நிறுவனத்தின் ஆராய்ச்சிப்படி, இந்த பாலமானாது இந்தியாவிற்கும் ஸ்ரீலங்காவிற்கும் இடையேஉள்ள கடற்பரப்பில் ஏற்பட்ட புவி மாறுதல்களினால் உருவானது. இந்த மண் திட்டானது சுமார் 18,000-ஆம்ஆண்டு முதல் 7000-ஆம்ஆண்டு இடைப்பட்ட காலத்தில் உருவாயிருக்கவேண்டும். பிறகுதான் மனிதர்களும் விலங்குகளும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சென்றிருப்பார்கள்.
கற்களின் மேல் ராமா என்று எழுதியதால் தான், கற்கள் கடல் நீரில் முழுகாமல் மிதந்து கொண்டிருக்கிறது என்று காவி அறிஞர்கள் அடித்து விடுகிறார்கள். கற்களின் மீது ராமா என்று மட்டுமல்ல, ராவணா என்று எழுதியிருந்தாலும், தண்ணீரின் மிதந்துகொண்டுதான் இருக்கும். ஏ னெனில், ப்யூமிஸ்(Pumice) எனப்படும் எரிமலை கற்களும், பவளப்பாறை கற்களும், தங்களின் கனஅளவில் 70 முதல் 80 சதவிகிதம் வெறும் துளைகளால் ஆனது. இந்த கற்களின் அடர்த்தியானது (Density) கடல் நீரின் அடர்த்தியை விட குறைவானது, அதனால் தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டது.
அமெரிக்காவின் சைன்ஸ் சேனல் தங்களுடைய வீடியோவை வெளியிடும் முன்னே, வாழும்கலை நிறுவனம் (Art-Of-Living) ராம்சேது பாலம் பற்றிய வீடியோவை வெளியிட்டது. வாழும் கலை வீடியோவும் “இந்த பாலம் கட்டப்பட்ட கற்களின் வயது 7000 ஆண்டுகள் இருக்கும் என்றும், அமெரிக்காவில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிறுவனம் இதை கண்டுபிடித்தது” என்று கூறுகிறது. கண்டிப்பாக அமெரிக்காவின் சைன்ஸ் சேனல், தங்களுடைய ஆய்வின் முடிவை வாழும் கலை நிறுவனத்துடன் பகிரந்திருக்க வேண்டும். என்னுடைய ஊகம் என்னவென்றால், ஹிந்து சமய கொள்கை மீது பற்றுகொண்ட ஓரிரு ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவின் சைன்ஸ்சேனல் ஆராய்ச்சியின் பின்புலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
இராமாயணத்தில் வரும், இலங்கை, இராவணன் என்ற குறியீடுகளெல்லாம் இன்றைய தென்னிந்திய – இலங்கையைக் குறிப்பிடுவன அல்ல, அவை கற்பனையே என்று வரலாறும், வரலாற்று அறிஞர்களும் கூறிவிட்டனர். இடையில் பாலம் மட்டும் எப்படி எழ முடியும்?
6வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் !
திருப்பூர் மாவட்டத்தில் 463 பேருந்துகளில் இன்றுவரை (09.01.2018) 35% அரசு பேருந்துகள் தான் இயக்கப்படுகிறது. இந்நிலையில் வெளியூர் செல்வதற்கு தனியார் பஸ் கட்டணம் 50-100 ரூபாய் வரை அதிகமாக வசூலிக்கப்படுகிறது, இரவு பேருந்துகள் இயங்கவில்லை.
RTO அதிகாரிகள் மணல் லாரி, பள்ளிப்பேருந்து, ரோடுவேஸ் டிரைவர்களை வளைத்து பிடித்து, அவர்களைக் கொண்டு அந்த 35% பஸ்களை இயக்குகிறார். ஆளும்கட்சி தொழிற்சங்க டிரைவர்கள் கூட போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஒருவர், “பிடித்தமான வேலைக்கு சென்றுவிடுங்கள் என்று நீதிபதி கூறுகிறார் “சுழற்சி முறையில் எங்களுக்கும் நீதிபதி, கலெக்டர், தாசில்தார் RTO பணி கொடுங்கள் நீங்கள் போக்குவரத்து துறையில் வேலை செய்யுங்கள். அது முடியாவிட்டால் காவல்துறையில் SI – Inspector வேலை ஒரு ஆண்டு மட்டும் கொடுங்கள் அதற்கு பின்பு இலவசமாகவே ஓய்வு பெரும்வரை பணியாற்றுகிறோம்” என்றார்.
பெரும்பாலும் தொழிலாளிகள் தங்கள் ஊதியம் என்பதைத் தாண்டி, ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதியம் பற்றித்தான் போராட்டங்களில் பேசுகிறார்.
போராட்டம் விரிவடையாமல் பார்த்துககொள்ள பணிக்கு செல்பவர்களை மட்டுமே டெப்போவிற்குள் அனுமதிக்கிறது போலீசு.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், திருப்பூர்.
***
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்து, மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக நாகைமாவட்டம் சீர்காழி பனிமனை மயிலாடுதுறை பனிமனை பொரையார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டது.
இந்நிலையில் 08.01.2018 அன்று போராட்டத்தை ஆதரித்து சுவரொட்டி ஒட்டிய சீர்காழி பகுதி மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது வழக்கு பதிவு செய்துள்ளது மயிலாடுதுறை போலீசு.
தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால் தமிழ்நாடே ஸ்தம்பித்துள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான ஊதிய உயர்வு, ஓய்வூதியத் தொகை, நிலுவைத் தொகை போன்றவற்றை தராமல் தமிழக அரசு தொழிலாளர்களை ஏமாற்றி வருவதோடு, அவர்களுக்கு சேரவேண்டிய 7000 கோடி ரூபாயை வழங்காததன் எதிர்வினையே இந்த கொந்தளிப்பான போராட்டம்.
இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டமான கரூர் மாவட்டத்தில் பேருந்துகள் 100 சதவீதம் இயங்குவதாகவும், தொழிலாளர்கள் நீதிமன்ற உத்திரவை ஏற்று பணிக்கு திரும்புகிறார்கள் என்றும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கிறார்.
கரூர், குளித்தலை, முசிறி, அரவக்குறிச்சி ஆகிய பணிமனைகளில் மொத்தம் 305 பேருந்துகள் உள்ளது. அவற்றில் கரூர் நகர 1, 2 பணிமனைகளில் 54 நகர பேருந்துகளும், 98 தொலைதுார பேருந்துகளும், 24 ஸ்பேர் வண்டிகளும், மற்ற பணிமனைகளில் 129 பேருந்துகளும் இயங்குகிறது. அமைச்சர் 100 சதவீத பேருந்துகள் கரூரில் இயங்குவதாக குறிப்பிடடுள்ளது அப்பட்டமான பொய் ஆகும்.
உண்மையில் 20 சதவீத பேருந்துகள் மட்டுமே தற்சமயம் கரூரில் இயங்குவதாக கள ஆய்வு தெரிவிக்கிறது. அதிலும் பெரும்பான்மையாக நகரப் பேருந்துகள் மட்டுமே இயங்குகிறது. மேற்படி ஓடும் 20 சதவீதத்தில் 1 சதவீத போக்குவரத்து தொழிலாளர் ஓட்டுநர், நடத்துனர்கள் மட்டுமே பணி செய்து வருகிறார்கள் மீதமுள்ள அனைத்து பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்காலிக நடத்துனர் மற்றும் ஓட்டுநர்- மினி பஸ் ஓட்டுநர், லாரி டிரைவர், ஆட்டோ டிரைவர் ஆகியோரை வைத்து தற்சமயம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால் பல இடங்களில் விபத்துகள் ஏற்பட்டுள்ளது.
மேலும் அவ்வாறு செயல்படும் ஓட்டுநர், நடத்துனர்கள் உரிய கட்டணம் வசூலிப்பதில்லை, உரிய நிறுத்தங்களில் நிறுத்தாமல் மக்களை அலைக்கழிக்கின்றனர். மேலும் தற்காலிக ஓட்டுநர், நடத்துனர் சீருடை அணியாமல், கலர் கலராக சட்டை போடுவதால் மக்கள் மத்தியில் குழப்பங்கள் நிலவி வருகிறது. அவர்கள் உரிய கட்டணம் பெற்றுக்கொண்டு டிக்கெட் தருவதில்லை இதனால் அரசுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கரூரில் 08.01.2018 -ல் LPF, CITU, AITUC, INTUC, TTSF, தே.மு. தொ. சங்கம் போன்ற தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மேலும் இந்த வேலை நிறுத்தத்தை விளக்கி மக்கள் அதிகாரம் சார்பாக போராட்டங்களில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. போராட்டம் குறித்து பேசுகையில் போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் உறுதுணையாக நிற்பதை பெருமையாக கருதுவதாகவும், நோட்டீஸ் விநியோகித்த தோழர்களை கட்டி அரவணைத்து கைகுலுக்கி தோழர்களை உற்சாகப்படுத்தி உங்களின் ஆதரவு வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், கரூர். தொடர்புக்கு : 97913 01097.
அரசு போக்குவரத்து தொழிலாளிகளின் வேலை நிறுத்தம் ஐந்தாவது நாளாக தொடர்கிறது. நிலுவைத் தொகையை தொழிலாளர்களுக்கு கொடுக்க முடியவில்லை என்றால் அ.போ.கழகத்தை தனியார்மயமாக்கலாமே என்று உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. இதை நீதிமன்றம் அரசை சாடியதாக ஊடகங்கள் நீதிபதிகளுக்கு ‘போராளி’ வேடம் கொடுக்கின்றன.
ஊதியம் போதவில்லை என்றால் வேறு வேலைக்கு போகலாம் என்பதை செவிலியர் போராட்டம் முதல் மிரட்டி வரும் உயர்நீதிமன்றத்தின் யோசனை அல்லது சாடல் என்பது அரசை விமரிசிப்பது போல தனியார் மயத்தை ஆதரிக்கும் சதித்தனத்தை கொண்டிருக்கிறது. உண்மையில் நிலுவைத் தொகையை கொடுக்க முடியவில்லை என்றால் பதவி விலகலாமே என்றுதான் கேட்டிருக்க வேண்டும்.
இது ஒருபுறமிருக்க இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழில் ‘வண்க்கம்’ கூறி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையை ஆற்றினார். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் மக்கள் நலத் திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக அமல்படுத்தி வருவதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்த மக்கள் நலத்திட்டங்களின் யோக்கியதை என்ன? பல கோடி ரூபாயில் எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழா! போக்குவரத்து தொழிலாளிகளுக்கு பட்டை நாமம்! அடுத்து மின்வாரியத் தொழிலாளிகளும் போராடப் போவதாக கூறியிருக்கிறார்கள்.
ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கத்துடன் வெளிநடப்பு செய்தனர். சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உத்திரவிடக் கோரி அவர்கள் முழக்கமிட்டனர். பாஜக -வின் அடிமை அரசாக இருக்கும் எடப்பாடி அரசை பாதுகாக்கும் கவர்னரின் அரசியல் சாசனப்படியான வேலைகளை கடந்த நான்கைந்து மாதங்களாக தமிழகம் பார்த்துத்தான் வருகிறது. இதில் கூடுதல் காமடியாக ஆங்காங்கே குப்பைகளை வரவழைத்து பல பத்து உதவியாளர்களின் உதவியுடன் அகற்றும் மகத்தான ஆய்வுப் பணியையும் பார்த்து வருகிறோம். கருப்புக் கொடி காண்பித்தும் காவிப் படையின் முகவர் ஆய்வுகளை தொடர்கிறார்.
ஆளுநர் பன்வாரிலால், ஜி.எஸ்.டி. வரியை சுமுகமாக அமல்படுத்திய தமிழக அரசை பாராட்டுவதாக தெரிவித்தார். இந்த சுமூகமும் சரி, மத்திய பாஜக அரசின் சமூகமும் சரி தமிழகத்தில் எல்லா இடங்களிலும் சிறு உற்பத்தியாளர்களது வேலை நிறுத்தத்தையும் போராட்டங்களையும் கொண்டு வந்து இலட்சக்கணக்கான தொழிலாளிகளை நிர்க்கதியாக்கியது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் “விஷன் 2023” திட்டத்தை நோக்கி தமிழக அரசு செயல்படுவதாக பாராட்டிய ஆளுநர் பன்வாரிலால், ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க முதல்வர் எடப்பாடி அரசு எடுத்த முயற்சிக்கும் பாராட்டு தெரிவித்தார். ‘ஏ ஒன்’ குற்றவாளியின் விஷன் ஜாஸ் சினிமாவிலும், மிடாசின் கல்லவாலும் ஒளியூட்டப்பட்டிருந்தாலும், மனு ஸ்மிருதிப்படி பாராட்டித்தானே ஆக வேண்டும்?
ஒக்கிகி புயல் தாக்குதலின்போது கடற்படை மற்றும் கடலோர காவல் படையுடன் இணைந்து தமிழக அரசு மீட்பு பணியில் ஈடுபட்டதாக தெரிவித்தார் ஆளுநர் பன்வாரிலால். ஒக்கி புயலின் போது இதே ஆளுநர் குளச்சலில் மக்கள் கேட்ட கேள்விகளால் பயந்து போய் கன்னியாகுமரி அம்மன் கோவிலில் வணங்கி விட்டு ஆய்வுப் பணியை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பியது வரலாறு. தூய்மை இந்தியா திட்டத்தில் சிறப்பான பங்கை தமிழக அரசு அளித்து வருவதாகவும் கூறினார். பின்னே இவரே ஆய்வுப் பணி செய்வதால் இந்தப் பாராட்டு தனக்குத்தானே பாடப்படும் பாட்டு!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பதற்கும், வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ள தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்த ஆளுநர் பன்வாரிலால், மீனவர், வேளாண் திட்டங்களில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.
ஒக்கி புயலில் மீனவர்கள் தத்தளித்த போது ஆர்.கே நகரில் குத்தாட்டம் போட்டு நடவடிக்கை எடுத்த தமிழக அரசு, ஏ ஒன் குற்றவாளியின் வீட்டை நினைவிடமாக்கினால் இனி தமிழகத்தின் ஊழல் அமைச்சர்களின் இல்லங்கள் அனைத்தும் வாழும் நல்லவர்களின் கோவில்களாக கருதி திருமுழுக்குத்தான் செய்ய வேண்டும்.
இனி இன்றைய கருத்துக் கணிப்பு :
சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் உரை – உங்கள் கருத்து என்ன?
(மூன்று பதில்களை தெரிவு செய்யலாம்)
மக்கள் விரோத அரசாங்கத்துக்கு ‘மக்கள் ஆளுநரி’ன் பாராட்டு
அடிமை எடப்பாடி அரசுக்காக ஆண்டை பாஜக சார்பில் அவரே தயாரித்திருக்கும் ஆசியுரை
நல்ல அரசாங்கத்துக்கு நல்ல ஆளுநரின் பாராட்டு
அடுத்தடுத்த ஆய்வுப் பணிகளின் மூலம் பாஜக-வின் செல்வாக்கை உயர்த்துவதற்கு ஒரு முன்னோட்டம்
பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையில்லை என்பதற்கான அங்கீகாரம்
ஜேப்பியார் பொறியியல் கல்லூரிக்கு உடந்தையாக தொழிலாளர் வேலை உரிமையைப் பறித்த உயர்நீதி மன்றம் !
செம்மஞ்சேரி ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் பணி புரிந்த தொழிலாளர்கள் 16 ஆண்டுகால நவீன கொத்தடிமைத் தனத்தை மாற்ற சங்கம் துவக்கினார்கள். தொழிலாளர் நலத் துறையில் தொழிற் தாவாவை எழுப்பி, பேச்சு வார்த்தைக்கு அழைத்த அன்றே ஒட்டுமொத்த தொழிலாளரையும் வேலை நீக்கம் செய்து, பர்வீன் டிராவல்ஸ் மூலம் ஒப்பந்த முறையில் பேருந்துகளை இயக்க முயற்சித்தது நிர்வாகம்.
இதற்கெதிரான, தொழிற்தாவாவில் வந்த நிர்வாகப் பிரதிநிதிகளிடம் தொழிற் தாவா நிலுவையில் உள்ளபோது, அந்தத் தொழிற் தாவாவில் சம்மந்தப்பட்ட தொழிலாளர்களை அவர்களின் சுய விருப்பத்திற்கு மாறாக, வேலைநீக்கம் செய்வது சட்டவிரோதம், உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என விசாரணை குறிப்பில் பதிவு செய்து, நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கினார் தொழிலாளர் துறை உதவி ஆணையர் அவர்கள்.
தொழிலாளர் துறை ஆய்வாளர் (காஞ்சிபுரம்) அவர்களிடம் எழுப்பப்பட்ட மனுவிலும் தொழிலாளி விருப்பத்திற்கு மாறாக, அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் போட்டு, வேலை நீக்கம் செய்து விட்டதாக நிர்வாகம் தன்னிச்சையாக அறிவித்து, தொடர்ந்து வேலைக்கு வந்து கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு வழக்கமாக செய்து வந்த, வருகைப் பதிவேடுக்கான பயோ மெட்ரிக் சிஸ்டத்தை நீக்கியதும், மேலும் அவர்களை வேலை நீக்கம் செய்துவிட்டதாகக் கூறுவதும், தொழிற்தாவா நிலுவையில் உள்ளபோது செய்ய இயலாது எனவும், தொழிற் தகராறுகள் சட்டம் இதற்கு அனுமதிப்பதில்லை எனவும் பதிவு செய்ததோடு, தொழிலாளர்களுக்கு வருகைப் பதிவேட்டினைச் செய்ய பயோ மெட்ரிக் சிஸ்டத்தினைப் பொருத்தவும் உத்தரவிட்டு, அதன்படி வைக்கப்பட்டு, தொழிலாளர்கள் தொடர்ந்து பணி செய்து வந்தனர்.
நிரந்தரப் பணியாளரான தங்கள் பணியை, பர்வீன் டிராவல்ஸ் ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கொண்டு செய்ய விடாமல், 15.09.2017 முதல் 25.10.2017 வரை 40 நாள்களுக்கும் மேல் போராடித் தங்கள் பணியைச் செய்து வந்தார்கள் தொழிலாளர்கள்.
25.10.2017 -ல் மாணவர்களுக்குத் தொழிலாளர்களால் பிரச்சினை வராமல் இருக்க, போலீசைத் தலையிடக் கோருவதற்காகவும் நிர்வாகத்தின் பணியைத் தொழிலாளர்கள் தடுக்காமல் இருக்கக் கோரியும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் தடையாணை கோரியது நிர்வாகம்.
நிர்வாகத் தரப்பு வழக்கறிஞர், நிர்வாகம் தொழிலாளர்களுக்கு சில நிர்வாகக் காரணங்களுக்காக தொடர்ந்து வேலை தர இயலாது என்பதால், அவர்களது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி வேலை தர இயலாமையைத் தெரிவித்து விட்டது. அத்துடன் பேருந்து இயக்குவதை பர்வீன் டிராவல்ஸ் மூலம் ஒப்பந்த முறையில் இயக்க, ஒப்பந்தமும் செய்து விட்டது. இதனைத் தொழிலாளர் தரப்பு ஏற்காமல், தொடர்ந்து தடுத்து பணி செய்கின்றனர். இதனால் மாணவர்களுக்குப் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே, போலீசை வைத்து, தொழிலாளரை வேலை செய்வதை நிறுத்த அனுமதிக்க வேண்டுமென, 3 நிமிடத்தில் வாதத்தை முடித்து விட்டார்கள்.
தொழிலாளர் தரப்பு வழக்கறிஞர் அவர்கள், தடை வழங்கக்கூடாது, நிர்வாகம் சட்ட விரோத வேலைநீக்கம் செய்துள்ளது, இது சம்மந்தமான தொழிற் தாவா நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தொழிற் தகராறுகள் சட்டம், 1947 அடிப்படையிலும் இப்படிச் செய்ய இயலாது என தொழிலாளர் நல உதவி ஆணையர் அவர்களின் விசாரணைக் குறிப்பிலும் பதிவு செய்து நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி உள்ளார்கள்.
இதையே வருகைப் பதிவேடை நீக்கியது சம்மந்தமாக, காஞ்சிபுரம் தொழிலாளர் ஆய்வாளர் அவர்கள் ஆய்வு செய்து, வருகைப் பதிவேட்டை வைக்க உத்தரவிட்டுள்ளார்கள். நிரந்தரப் பணியாளர்கள் இருக்க, அவர்களது வருகைப் பதிவைச் செய்யாமல் இருப்பதுடன், அந்த இடத்தில் ஒப்பந்தப் பணியாளர்களைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் என்று அதை மாற்ற உத்தரவிட்டு, வருகைப் பதிவேட்டிற்கான பயோமெட்ரிக் சிஸ்டத்தை வைக்கச் செய்தார்கள். மேலும் கடந்த 16 ஆண்டுகளாக இவர்கள்தான் மாணவர்களை பேருந்துகளில் ஏற்றி வருகிறார்கள். நிர்வாகத்தின் சட்டவிரோத வேலை நீக்கத்தை மறுத்து கடந்த 40 நாள்களாக, இவர்களே மாணவர்களை ஏற்றி வந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் மாணவர்களுக்குத் தொழிலாளர்களால் பிரச்சினை வராமல் இருக்க, அதில் போலீசைத் தலையிடக் கோரியும், நிரந்தரப் பணியாளரை வேலைக்கு வராமல் தடுக்க வேண்டும் எனவும் நிர்வாகம் கோருவது தவறு எனத் தொழிலாளர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்கள்.
தொழிலாளர் தரப்பு வழக்கறிஞர் 10 நிமிடத்தில் தனது வாதத்தை முடித்தார். ‘மாண்புமிகு நீதியரசர்’ அவர்கள் வழக்கு உங்களுக்குச் சாதகமாகத்தான் உள்ளது. “நீங்கள் ஏன் தொழிலாளர் நீதி மன்றம் போகக்கூடாது. தொழிலாளர் நீதி மன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்றதோடு, தொழிலாளர் வங்கிக் கணக்கில் நிர்வாகம் பணம் செலுத்திவிட்டது. பிறகு ஏன் பிரச்சினை செய்கிறீர்கள்? வேண்டுமானால், மேலும் ஒரு நெகோஷேசன் (பேரம்) செய்து, கொஞ்சம் கூட்டி வாங்கிக் கொள்ளுங்கள்” என நிர்வாகத் தரப்பு வக்கீலாக 15 நிமிடங்களுக்கு மேல் தொழிலாளர் தரப்பைச் சம்மதிக்க வைக்க, ‘மாண்புமிகு உயர்நீதிமன்றத்து நீதிபதி’ திருவாளர். எம்.எஸ். ரமேஷ் அவர்கள் வாதாடுகிறார்கள்.
தொழிலாளர் தரப்பு வழக்கறிஞர் : “தொழிற்சங்கம் துவங்கி, தொழிற்தாவா ஏற்படுத்தியமைக்காக, நிர்வாகம் தொழிற் தாவா நிலுவையில் உள்ளதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும், தொழிற் தகராறு சட்டத்தைப் பொருட்படுத்தாமலும், சட்டவிரோத வேலை நீக்கம் செய்துள்ளது. எனவே, நிர்வாகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டும்” என்ற வாதத்தை வைத்துக்கொண்டிருக்கும் போதே, மாண்புமிகு நீதிபதி அவர்கள் பொறுமையில்லாமல், தான் நிர்வாகம் கோரியபடி, தடை வழங்குவதாகவும், ஒரு வாரத்திற்குப் பிறகு, மீண்டும் இதுபற்றி விசாரிப்பதாகவும், 1.11.2017 -க்கு வழக்கைத் தள்ளி வைப்பதாக தெரிவித்து, தான் முன் தயாரிப்புடன் செய்து வந்த உத்தரவைப் போட்டு, நிரந்தரத் தொழிலாளிகளின் வேலை உரிமையைப் பறித்து, நிர்வாகத்தின் முடிவுப்படி ஒப்பந்த முறையில் வேலை நடத்த, வாய்ப்புக் கொடுத்தார் மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள். 1.11.2017 அன்று இவ்வழக்கு விசாரணை பட்டியலுக்கே வரவில்லை.
இதுவரை 3 மாதங்கள் முடிந்துவிட்டது. இந்த வழக்கை அவர்கள், அவர்களாகவே தெரிவித்த படி, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இது சம்மந்தமாக, தொழிலாளர் தரப்பு வழக்கறிஞர் மென்சன் செய்வதன் அடிப்படையில் 8 முறை இந்த வழக்கை வழக்குப் பட்டியலில் இரண்டாவது பட்டியலின் இறுதியில் போட்டு, ஒரு நாளும் வழக்கு விசாரணைக்கு வராதபடி பார்த்துக் கொண்டது மாண்புமிகு உயர்நீதி மன்றம்.
நிரந்தரத் தொழிலாளர்கள் வேலை உரிமையை இழந்து, நீதிமன்றத்திடம் அலைந்து அலுத்துப் போய், இப்போது நாங்கள் என்ன செய்தால் இந்தச் சட்டமும் நீதியும் எங்கள் தரப்பு நியாயத்தை ஏற்கும் எனக் கொதிப்படைந்து கேட்கிறார்கள் தொழிலாளர்கள்.
முதலாளிகளுக்கு எதிராக, தொழிலாளர்கள் தரப்பு நீதிமன்றத்தில் முறையிட வந்தால், மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதிகள், நீங்கள் ஏன் தொழிலாளர் நீதிமன்றம் போகாமல், உயர்நீதிமன்றத்திற்கு வருகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பி, தொழிலாளர் கோரிக்கையை ஏற்காமல் தள்ளுபடி செய்து வந்துள்ளனர் மாண்புமிகு உயர்நீதிமன்ற நாட்டாமைகள்.
முதலாளிகள் தரப்பு தொழிலாளர்களுக்கு எதிராக எதைக் கேட்டாலும் வாரி வழங்குவதோடு, தொழிலாளர்களின் வேலை உரிமையைப் பறித்து, ஒழித்துக் கட்டுவதற்கு உற்றத் தோழனாகச் செயல்படுகிறார்கள். முதலாளிகள் தரப்பைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் மாண்புமிகு நீதியரசர்கள் தொழிலாளர் தரப்பு வாதத்தைக் கேட்கவே மறுக்கிறார்கள். முதலாளிகள் நடைமுறையில் இருக்கும் தொழிற் தகராறுகள் சட்டப்படி நடக்க மறுப்பதை பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. தொழிலாளர்களுக்கு எதிராக தொடர்ந்து துணிவோடு செயல்படுகிறார்கள் நீதிபதிகள்.
மேலும் தொடர்ந்து தொழிலாளர் தரப்பு வழக்கை மென்சன் செய்வதால், கண் துடைப்புக்கு இரண்டாவது பட்டியலில் கடைசியாகச் சேர்த்து விசாரணைக்கு வராமல் செய்வதன் மூலம் நிர்வாகத்தின் சட்டவிரோத செயல்களைத் தொடர்ந்து வழக்கப்படுத்திக் கொள்ள அனுமதித்து, தொழிலாளர்களுக்கு எதிராகச் செயல்படுகிறது நீதிமன்றங்கள். இதன் மூலம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்கான வேலை உரிமையைப் பறித்து, தொழிலாளர்கள் வாழ்வை அழிக்கிறது. இதையே காரணமாக்கி நீதிமன்ற உத்தரவை மீறி, தொழிலாளர் நலத்துறை செயல்பட முடியாது என நீதிமன்றத்தைக் காரணம் காட்டி, தொழிலாளர் நலத்துறை ஆணையகமும் நாசூக்காக ஒதுங்கிக் கொள்கிறது. பிறகு, தொழிலாளர் வர்க்கம் செய்வதறியாது கோபமும் அவமானமும் பொறுக்க முடியாமல் அடுத்த அடிமை வேலைக்குப் போய் மடிந்து விடுகிறார்கள்.
இந்த நாட்டின் தொழிற் தகராறு சட்டத்தை மதிக்காமல், தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக நடத்தும் முதலாளிகள் இவர்களிடம் உரிமை கோரினால் இந்தக் கொத்தடிமை வேலையையும் பறிக்கும் முடிவை நீதிபதிகள் உடனே அனுமதிக்கிறார்கள். இதன்மீது எந்தக் கேள்வியும் கேட்காததோடு, தொழிலாளர்களைப் பணிய வைக்க, அறிவுரைக்கு மேல் அறிவுரையாக வழங்குகிறார்கள். கூடுதலாகப் பெற்றுக்கொள்ளும்படி இடைத்தரகரைப் போன்ற பேரம் பேசும் வழிமுறையைக் காட்டுகிறார்கள். இப்படித் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் செயல்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.
உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இந்தச் செயல்கள் எந்த வகை நீதியாகும்? இந்த நீதிமன்றங்கள் யாருக்கானவை? முதலாளிகளின் கருணை இல்லமாக செயல்படும் இந்த நீதிமன்றம், உழைக்கும் மக்களின் விரோதியாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிராக தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைந்து கிளர்ந்து எழுந்து, போராடாமல் இருக்குமானால் உரிமை என்ற வார்த்தை கூட இனி உச்சரிக்கவே முடியாமல் ஒழிக்கப்படும்.
எனவே, நீதிமன்றம், முதலாளித்துவ பயங்கரவாதங்களை முறியடிக்க தொழிலாளர் வர்க்கம் மாற்றுப் போராட்ட வடிவங்களை கையாளவேண்டும். ஒன்றுபட்ட தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமையின்கீழ் இப்படியொரு புதிய அமைப்பைக் கட்டியமைப்பதன் மூலம்தான் இதனை சாதிக்க முடியும்.
தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்கான புதிய நெறிமுறைகளை மத்திய அரசு, ஜனவரி 2, 2018- அன்று வெளியிட்டிருக்கிறது. இதன் படி இனி தனி நபர்கள், மத நிறுவனங்கள், அரசு சார தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவர்கள் யாரும் கட்சிகளுக்கு நிதியளித்த விவரங்களை வெளிப்படுத்த தேவையில்லை. தேர்தல் நிதி பத்திரங்களை 2017 பிப்ரவரி மாதம் இந்திய அரசின் வரவு செலவு திட்டத்தை வெளியிட்ட போது மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிமுகப்படுத்தினார்.
நாட்டின் அரசியல் நிதி அமைப்பு முறையை தூய்மைப்படுத்துவதற்காக தேர்தல் நிதிப்பத்திரங்களின் திட்டத்தை இந்திய அரசு அறிவிக்கிறது என்று அரசின் பத்திரிக்கை தகவல் அலுவலக இணையத்தளம் தெரிவித்திருக்கிறது. இது தூய்மைப்படுத்துவதா, கறைகளை மறைக்கும் உத்தியா? அதற்கு முன் நிதிப்பத்திரங்கள் குறித்த அரசின் விளக்கத்தை பார்ப்போம்.
நிதிப்பத்திரங்களுக்கான கட்டுப்பாடுகள்: இது வட்டியில்லாத கடனுறுதி ஆவணங்களாக இருக்கும்; இந்த பத்திரங்கள் ஓராயிரம், பத்தாயிரம், ஒரு இலட்சம் மற்றும் ஒரு கோடி ரூபாய் வடிவில் இருக்கலாம்.
நிதிப்பத்திரங்களை நாடு முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் 52 கிளைகளில் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய நான்கு மாதங்களில் மட்டும் பெற்றுக் கொள்ளலாம்.
தேர்தல் நிதிப்பத்திரங்கள் 10 நாட்களுக்கு மட்டும் இக்காலங்களில் கிடைக்கும். சட்டப்படி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக மட்டுமே இது பயன்படும் இத்தேர்தல் பத்திரங்களின் ஆயுட்காலம் 15 நாட்கள் மட்டுமே. பொதுத் தேர்தல் காலங்களில் கூடுதலாக மேலும் 30 நாட்கள் வழங்கப்படும்.
கடைசிப் பொதுத்தேர்தலில் குறைந்தது 1 விழுக்காடு வாக்குகள் பெற்ற அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே இந்த நிதிப்பத்திரங்களை வழங்க முடியும்.
ஆயினும் இந்நெறிமுறைகள் மத்திய அரசு சொல்லிக்கொள்ளும் “வெளிப்படைத்தன்மை”யின் எதிர்நிலையை மேலும் தீவிரமாக அதிகரிக்க செய்யும் என்பது வெள்ளிடைமலை.
தேர்தல் நிதிபத்திரங்கள் பற்றிய மத்திய அரசின் அறிவிப்பு
பத்திரிக்கை தகவல் அறிக்கையில் கூறாத வேறு சில விடயங்களும் உள்ளன. நிறுவனங்கள் சட்டப்படி(Company Act) ஏற்கனவே ஒரு நிறுவனம் தன்னுடைய ஆதாயத்தில் இருந்து அளிக்கக்கூடிய தேர்தல் நிதியின் உச்சவரம்பு 7.5 விழுக்காடாக இருந்தது தற்போது நீக்கப்பட்டுள்ளது. இது பத்திரிக்கை தகவல் அலுவலக அறிக்கையில் இல்லை. மேலும் அச்சட்டத்தின் படி நிறுவனங்கள் எந்த கட்சிகளுக்கு எவ்வளவு நிதி வழங்கின என்பதை தெரிவிக்க வேண்டும் என்பதற்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறித்து அதில் தகவல் இல்லை.
அதாவது யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் ஒரு கட்சிக்கு நிதி வழங்க முடியும். அதை பொதுவெளியில் தெரியப்படுத்த தேவையில்லை. தேர்தல் நிதிப்பத்திரங்கள் பற்றிய தகவலானது பத்திரம் வழங்கப்பட்ட வங்கி(Issuing Bank), வழங்கிய பரத ஸ்டேட் வங்கி(SBI) மற்றும் ரிசர்வ் வங்கி என்று பயணம் செய்து கடைசியில் நிதியமைச்சகத்தை அடைந்து விட்ட பிறகு வேறு யாருக்கும் தெரியாது.
நன்கொடை பற்றிய தகவல்கள் வங்கியின் இருப்பு நிலைக்குறிப்பில் (Balancd Sheet) குறிப்பிடப்பட்டிருப்பதையே வெளிப்படைத்தன்மை என்று பா.ஜ.க ஆதரவாளர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் தம்பட்டம் அடிக்கிறார்கள். ஆனால் அதில் எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டிருக்கும் என்பது தான் இருக்குமே ஒழிய யார் கொடுத்தார்கள் என்ற தகவல் இருக்காது.
பெருநிறுவனங்கள் கட்சிகளுக்கு தாராளமாக பணம் செலவழிப்பது இனி செல்லுபடியாகாது, அனைத்தும் கணக்கில் வந்து தானே ஆக வேண்டும் என்று பெருமை பொங்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பொதுமக்கள் மற்றும் எதிர்கட்சிகளுக்கு மட்டும் தான் இச்செயல்முறை இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் யார் அதிகமாக நிதி அளித்துள்ளார்கள் எந்த கட்சிகளுக்கு அளித்தார்கள் தங்களுக்கு யார் அளிக்கவில்லை என்ற விவரம் KYC விதிமுறைகளின் படி ஆளுகின்ற அரசிற்கு அதாவது பா.ஜ.கவிற்கு மட்டுமே வெளிப்படையானது என்று அவர்களுக்கு டோனி ஜோசப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிலளிக்கிறார்.
“எந்தவொரு நபருக்கும் தகுதியுள்ள அரசியல் கட்சிகளுக்கும் இடையில் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான ஒரே புதிய நாணய வடிவத்தை இந்த தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் உருவாக்க அரசாங்கம் முயல்கிறது” என்று காமன்வெல்த் மனித உரிமைகள் முன்முயற்சி நிறுவனத்தில் (Commonwealth Human Rights Initiative) தகவல் பெரும் திட்ட ஒருங்கிணைப்பாளரான வேங்கடேஷ் நாயக் கூறினார். நிறுவனங்கள் சட்டத்தில் சேர்க்கப்படும் சட்டத்திருத்தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த தேவையில்லை என்பதால் கருப்புப்பணத்தை அரசியல் கட்சிகளுக்கு கொண்டு சேர்க்கும் முதன்மையான வழிமுறையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
ஏற்கனவே கார்ப்பரேட் நிறுவனங்களின் பேராதரவு பா.ஜ.க-விற்கு இருக்கும் நிலையில் பா.ஜ.க-விற்கு மட்டுமே இது பயனளிக்க கூடியது என்பதை யாரும் விளக்க தேவையில்லை. இதை வைத்து எதிர்கட்சிகளுக்கான நிதியாதாரத்தை எளிதாக பா.ஜ.க-வினால் கட்டுப்படுத்த முடியும். மேலும் ஒரு சதவீத வாக்கு பெற இயலாத, அங்கீகாரம் அற்ற கட்சிகளுக்கு வரும் நன்கொடைகளை ஒழிப்பது மூலம் நேரடியாக பாஜக, காங் மற்றும் மாநில அளவிலான ஆளும் வர்க்க கட்சிகள் மட்டும் நன்கொடைகளை பெற முடியும். இதன் மூலம் தேர்தல் அரசியலிலேயே கூட சிறு கட்சிகள் இயங்க முடியாத நிலை உருவாக்கப்படும்.
கருப்புப்பணத்தை ஒழிக்கிறோம் என்று தேர்தல் நிதியை 2,000 ரூபாயாக குறைத்தது பா.ஜ.க. அதே சமயத்தில் காசோலை மற்றும் இணைய பரிமாற்றம் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களை நிதியளிக்க பரிந்துரைத்தது என அனைத்திற்கும் பின்னரும் இந்த நடவடிக்கைகள் தான் இருந்தன.
இங்கு மட்டுமல்ல அமெரிக்காவிலும் கூட தேர்தல் பிரச்சாரத்திற்காக எவ்வளவு நிதி வேண்டுமென்றாலும் பெருநிறுவனங்கள் செலவிடலாம், அதை வெளியே தெரியப்படுத்தத் தேவையில்லை என்றும் அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பை 2010-ம் ஆண்டு வழங்கியது.
அமெரிக்க ஜனநாயகம் முதல் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் வரை கதை இதுதான். இதைதான் வெளிப்படைத்தன்மை என்று அருண் ஜெட்லியும் பா.ஜ.க அடிப்பொடிகளும் கூறுகிறார்கள். இந்நடவடிக்கை கறுப்புப் பணத்தை ஒழித்து விடும் என்று பா.ஜ.க பாதந்தாங்கி ஊடகங்களும் சேர்ந்து கோரஸ் பாடுகின்றன. இதுதான் முதலாளித்துவ ஜனநாயகத்தின் யோக்கியதை.
கொளுத்திப் போட குருமூர்த்தி – குலம் கெடுக்க தமிழருவி!
மதச்சிக்கலுக்கு தாமரை
மலச்சிக்கலுக்கு
பாபா முத்திரை
மெல்ல நோட்டம் பார்த்து
தலையைத் தூக்குது
சாரை!
இனிமேல்தான் இருக்கு
இந்தக் காவிப் பாம்புக்கு
ஏழரை!
மிஸ்டு காலில்
ஆள்பிடித்த பா.ஜ.க.
நோட்டோவுக்கு கீழே
இணையத்தில் ஆள்பிடிக்கும்
‘சூப்பர்ஸ்டார்’ இளைப்பாற
காத்திருந்து லோட்டா
இமயத்தின் மேலே!
ஜெயலலிதா இருந்தவரை
வயிறு சரியில்லை
செத்த பிறகு
சிஷ்டம் சரியில்லை
இஷ்ட்டத்துக்கு சுருட்டிக்கொள்ள
அப்பப்போ… தமிழன்
கறிவேப்பிலை!
கிள்ளுக்கீரையாக
தமிழ்நாட்டைப் பார்த்து
ஜொள்ளு விட்ட வாயில்
இப்போது
தமிழருவி.
சூடம் சத்தியமாய்
ஆன்மீக அரசியலை
கொளுத்திப்போட குருமூர்த்தி.
சோ செத்த இடத்தில்
முளைத்திருக்கும்
மணியனின் திருக்காட்சி!
கன்னத்தில் போட்டுக்கொள்ள
தூண்டிவிடும் தொலைக்காட்சி
இன்னும் ஒரு
போயஸ் தோட்டத்தை
தமிழரின் தலையில் கட்டும்
கொலைவெறியுடன்
ஆர்.எஸ்.எஸ். அரசாட்சி!
பக்தியை ஓட்டாக
திருட நினைப்பவர்க்கு
பட்டை நாமம் போடுவது
தமிழ்நாடு
பார்ப்பன
முகம் மாற்றி வந்தாலும்
அதற்கும் காத்திருக்கிறது
தமிழ்ச்சூடு!
தமிழ்நாடு
சாமியும் கும்பிடும்
மனுதர்மத்தையும்
நெம்பிடும்
அட புரியதவனே!
உன் ஆரியக் கவுச்சி
எங்க அய்யனார் சுருட்டில்
பொசிங்கிடும்!
ஒக்கிப் புயலுக்கு
ஒரு வார்த்தையை
காணும்…
மக்கிப்போன
ஆன்மீக அரசியலைத்
தூக்கிக்கொண்டா வருகிறாய்,
ரஜினி ஸ்டைலில்
காவியை நுழைத்தால்
தமிழகம்
பெரியார் ஸ்டைலில்
பிச்சி உதறும்!
எங்கப்பா..கரு.பழனியப்பன்..ஆவலாகக் காத்திருக்கிறேன்..ஆன்மீக அரசியல் விளக்கத்துக்கு..சினிமாக்காரர் என்பதால் பம்முகிறாரா..ச்சும்மா உசுப்பேத்துவோம்.
_________________
RajasekarChem® @RajasekarASho7
எந்த ஊரு??? மராட்டியம்ங்க… ஏ…தமிழ் நல்லா பேசுறியே… நாடக கம்பெனியில இருந்துருக்கன்ல… ஓ… அதான் டக்குன்னு (காவி) வேஷத்தை மாத்திட்ட… #ஆன்மீக_அரசியல் ?
_______________
SubaVeerapandian @Suba_Vee
பெரியார் மண்ணில் ஆன்மீக அரசியல் வரப்போவதாக எண்ணி மகிழ்கிறார் ஹெச்.ராஜா. இவ்வளவு காலத்திற்குப் பிறகேனும் இது பெரியார் மண் என்பது அவருக்குப் புரிந்ததே என்பதை எண்ணி மகிழ்கிறோம் நாம்!
______________________
Srinivasan Rahul? @Srinivtwtz
#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு ஆன்மீக அரசியல் என்றால் என்னன்னு கேட்டாங்க… வழக்கம்போல சாதி மத பேதமற்ற அரசியல்னு சொல்லிட்டு ராமகிருஷ்ணா மடத்துக்கு போய்ட்டு வந்தன் ??
______________________
T.A.Punithan @punithanadv
சமஸ்கிருத ஸ்லோகம் சொல்லி தொடங்குவாராம்! இராமகிருஷ்ண மடத்தில் லோகோவை உல்டா செய்து தன் லோகோவை அறிமுகம் செய்வாராம்! சாமியாரிடம் சென்று ஆசிவாங்கி, So called Secularism இல்லை என்று சிரிப்பார்களாம்! ஆன்மீக அரசியல் என்றால் மதச்சார்பற்றது என்று விளக்குவாராம்! யாரை ஏமாற்றுகிறீர் ரஜினி?
_______________________
ஏரியாக்கு வாடா ? @Gopi007twitz
ரஜினி முதல்வர் ஆகிவிட்டால் நடப்பவை
தொண்டன் – தலைவரே நம் மக்களை கொசு கடிக்கிறது அதை மருந்தடித்து கொல்ல ஆனையிடுங்கள்
ரஜினி – தொண்டனே இது ஆன்மீக ஆட்சி இந்த ஆட்சியில் யாரையும் கொல்லவோ துன்புறுத்தவோ கூடாது
ஆன்மீக அரசியல்
__________________
எவனோ ஒருவன் @EncmFfgtCkjyNHt Replying to @Mark2kali
இதே ஆன்மீக அரசியல் செய்யப்போகிறேன் என்று ஜோசப் விஜய்யோ அல்லது ஏஆர் ரஹ்மானோ அறிவித்திருந்தால் இன்றைய காட்சிகளே வேறு
______________
இடும்பாவனம் கார்த்தி @idumbaikarthi
சென்னை வெள்ளத்திற்கு 10 இலட்சமும், இராகவேந்திரா கோயிலுக்கு 10 கோடியும் அளித்ததிலிருந்தே அவர் செய்யப்போவது மக்கள் நலன் அரசியல் இல்லை. அது வெறும் ஆன்மீக அரசியல்தான் எனப் புரிந்து கொள்ள வேண்டாமா.?
_________________
இடும்பாவனம் கார்த்தி @idumbaikarthi
ஆன்மீக அரசியல் வேறு! மதவாத அரசியல் வேறு என விளக்கவுரை எழுதிய திருமாவளவன், தற்போது ரஜினிகாந்த் ஆட்சி அமைத்தால் அது ஆர்.எஸ்.எஸ். ஆட்சி என்கிறார். இதைத்தான் நாங்கள் முதல் நாளிலில் இருந்து சொல்றோம்.!
________________
வினோ @vinodhkrs
தட்டுல காசு போடலீனா விபூதிய நம்ம கைல வீசுவாங்க
10 ரூவா போட்டா கைல அழுங்காம போடுவாங்க
50 ரூவா போட்டா நம்ம நெத்திலியே பூசி விடுவாங்க
இதுதான் எனக்கு தெரிஞ்ச ஆன்மீக அரசியல்
_____________
Started his speech with Bhagawad Gita. Ends with “Jai Hind”. #ஆன்மீகஅரசியல் !
#SuperStarRajinikanth #PoliticianRajini
_____________________
புகழ் @mekalapugazh
“தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனை ஏன் அமைக்கவில்லை..என்கிறாரே ஸ்டாலின்” இவர்களுக்கு இதே வேலைதான்..போராட்டம் ..கோரிக்கை.. இதல்ல நம் அரசியல்..கடவுள் நம்பிக்கை மூலம் நோயில்லாமல் வாழலாம் என்பதே ஆன்மீக அரசியல்.. மீறி நோய்வந்தால் சென்னைக்கு அருகே தானே..சிங்கப்பூரிருக்கு..ஹஹ்ஹா..ஹாஹா.
_______________
மிஸ்டு காலின் ஆன்மீக அரசியல் வெர்ஷன் தான் வெப்சைட்ல பதிவு பண்றது போல
_____________________
Balu Manimaran @paalumani Replying to @HRajaBJP
‘ஆன்மீக அரசியல்’னா என்னன்னு வெளிநாட்டு நண்பர் ஒருவர் கேட்டார். “அது, ரஞ்சிதா போன்ற பிரபலமானவர்கள் பங்கு பெறும் அரசியல்”னு சொல்லி சமாளிச்சுட்டேன். தப்பா சார்?
____________________
சிந்தனைவாதி @PARITHITAMIL
பெரியார் வழியில் மதசார்பற்ற ஆன்மீக அரசியல் என்று யார் எந்த ரூட்டில் வந்தாலும் இங்கே மதவாத அரசியல் காலூன்ற முடியாது # இதுதான்டா தமிழ்நாடு ??? pic.twitter.com/EcVRB07UEs
பெரியார் வழியில் மதசார்பற்ற ஆன்மீக அரசியல் என்று யார் எந்த ரூட்டில் வந்தாலும் இங்கே மதவாத அரசியல் காலூன்ற முடியாது # இதுதான்டா தமிழ்நாடு Description: ? ? ?
___________________
கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz
தாமரை பாஜகட்ட சுட்டது, அந்த பாம்பு சந்திரமுகி படத்துல சுட்டது, உண்மை உழைப்பு உயர்வு நம்ம அண்ணாச்சி கிட்ட சுட்டது அந்த ஆன்மீக அரசியல் நம்ம நித்தியானந்தாகிட்ட சுட்டது // ஆன்மீக ஆராய்ச்சி ?
NEETக்கு எதிரா குரல் குடுத்தயா? இல்லிங்க GAIL நெடுவாசல் திட்டத்துக்கு எதிரா குரல் குடுத்தயா? இல்லிங்க ஹிந்தி திணிப்புக்கு எதிரா பேசுனயா? இல்லிங்க அட்லீஸ்ட் மதவாதம் டீமானிட்டைஷேஷனுக்கு எதிராவாது பேசுனயா? இல்லிங்க அப்பறம் என்ன மயித்துக்குடா அரசியல் அதுவும் ஆன்மீக அரசியல்?! ?
____________________
Ra Sindhan (சிந்தன்) @sindhan
ஆன்மீக அரசியல் என்பதற்கு ராமகிருஷ்ண மடம் தரும் விளக்கம் ‘மதச்சார்பின்மை என்றழைக்கப்படுவது அல்ல’. மற்றும் களிப்போடு ஒரு புன்னகை.
ஆன்மீக அரசியல் என்றாலே BJP RSSக்கு மறைமுக ஆதரவு என்று இன்னும் சிலருக்கு புரியாமல் கம்பு சுத்திக்கொண்டு இருப்பது தான் வேடிக்கையாக உள்ளது?#Rajinikanthpoliticalentry
_____________________
KRS | கரச @kryes
அறிஞர் அண்ணாவின் தொலைநோக்கு கண்வியக்கிறேன்! *வீர சிவாஜியோ *சிவாஜி ராவ் கேக்வாட் – ரஜினிகாந்தோ மிகத் தெளிவான, “பின்னணி பிராமணீயத்தின்” வரலாறு! — ரஜினி “ஆன்மீக அரசியல்” காலத்தில்.. அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு நூல்! http://www.annavinpadaippugal.info/nadagangal/chandramohan_1.htm … சிவாஜி கண்ட ஹிந்து ராஜ்ஜியம்!
ஆன்மீக அரசியல் என்றால் என்ன பாய்? ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் கொடுக்க துப்பு இருக்காது ஆனால் சாமி வேடம் போட்ட ஆசாமிகளை கோடிக்கணக்கில் செலவு செய்து ஊடக சமூகம் போற்றும்…. இது ஒரு உதாரணமே,
_____________________
KRS | கரச @kryes
ஸ்ரீமான். ரஜினிகாந்த் அவர்களின் “ஆன்மீக அரசியல்” பித்தலாட்டம், தோலுரிக்கப் போகிறேன்! சினிமா ரசிகர்கள் விலகியே நிற்க! யார் இந்தச் சென்னை, கவுதமானந்தா? அவரை, ரஜினி சந்தித்து, “ஆசி” பெற்றது ஏன்? So Called Secularism உங்களால் ஒழிய வேண்டும்.. எ. அவர்கள், ரஜினியிடம் சிரிப்பது ஏன்?
ஸ்ரீமான். ரஜினிகாந்த் அவர்களின் "ஆன்மீக அரசியல்" பித்தலாட்டம், தோலுரிக்கப் போகிறேன்!
சினிமா ரசிகர்கள் விலகியே நிற்க!
யார் இந்தச் சென்னை, கவுதமானந்தா? அவரை, ரஜினி சந்தித்து, "ஆசி" பெற்றது ஏன்?
So Called Secularism உங்களால் ஒழிய வேண்டும்.. எ. அவர்கள், ரஜினியிடம் சிரிப்பது ஏன்? pic.twitter.com/37S1N8xYaS
யோகி ஆதித்யநாத் பண்றதுதானே ஆன்மீக அரசியல்..
வடக்கே ஒரு வின் டீசல் தெற்கே ஒரு ரஜினி..டெட்லி காம்போ
_______________________
maniangopi @maniangopi
My Fav picks of #Rajinikanthpoliticalentry Speech 1) பகவத் கீதை சொல்லி ஆரம்பித்தது 2) ஆன்மீக அரசியல் 3) இந்த ஆர்ப்பாட்டம், போராட்டம் பண்றதுக்குலாம் மத்த கட்சிகள் இருக்கு 4) வாழ்க தமிழ்நாடு, வளர்க தமிழ்மக்கள்,ஜெய் ஹிந்த் #Rajinikanth #RajiniFansMeet #rajninewyearparty
___________________
லாவோ @Vidhushagan
இறுதியில் ‘ஜெய்ஹிந்த் “என்று சொன்னபோதே அது ஆன்மீக அரசியல் என்று புரிந்துகொண்டோம் தலைவா. ஜெய்ஹிந்த் ரஞ்சிதா படம். அப்ப ஆன்மீகம் அரசியலே தான்.
_______________
T.A.Punithan @punithanadv
ஆன்மீக அரசியல் கோமியத்துக்கு மார்கெட்டிங் பசுவுக்கு ஆம்புலன்ஸ் கார்பரேட் சாமியார்களை வளர்ப்பது ரஜினி காலில் விழனும், பாலபிசேகம் செய்யனும், கோயில் கட்டனும் எதுவாயினும் ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று நம்பணும் தரையில் உட்கார்ந்து பவ்யமாக பேசவேண்டும். யாரும் கேள்வி கேட்கக் கூடாது
____________________
கவி மைந்தன்✍✍? @raadhai_kanna
அங்கே தெளிவாய் தெரிகிறது மதவாதிய அரசியல் என்று (மத்தியில்) இங்கே மறைமுகமாய் பிரதிபலிக்கிறது ஆன்மீக அரசியல் என.. #நாடு_எங்க_சார் போகுது
________________
KRS | கரச @kryes
ஜாதிகள் நல்லதடி பாப்பா! – மனு தர்மம்(?) கொடுங்கோல் மனு.. வகுத்த ஜாதிகளைப் புகழ்ந்து ஆன்மீக அரசியல் எ. பேரில், பிராமணீய அரசியல்! இதோ ‘Swami’ Gautamananda “உண்மை முகம்”! ஆசி கேட்ட ரஜினியே.. ‘தில்’ இருந்தால் சொல்! மனு தர்மம்= தமிழ்நாட்டுக்கு நல்லதென்று சொல், பார்ப்போம்?
ஜாதிகள் நல்லதடி பாப்பா! – மனு தர்மம்(?)
கொடுங்கோல் மனு.. வகுத்த ஜாதிகளைப் புகழ்ந்து ஆன்மீக அரசியல் எ. பேரில், பிராமணீய அரசியல்!
இதோ 'Swami' Gautamananda "உண்மை முகம்"!
ஆசி கேட்ட ரஜினியே.. 'தில்' இருந்தால் சொல்! மனு தர்மம்= தமிழ்நாட்டுக்கு நல்லதென்று சொல், பார்ப்போம்? pic.twitter.com/tkYLQ6NrNd
So Called Secularism – “Swami” Gautamananda! So Called ஆன்மீக அரசியல், RSS! RSS தலைவன் மோகன் பகவத் & கெளதமானந்தா.. கொஞ்சி மகிழும் திருக்காட்சி; இதுவா, ரஜினிகாந்த்.. உங்கள் ஆன்மீக அரசியல்? அவனிடம் “ஆசி வாங்க ஓடிய” நீங்கள்.. பெரியார்/ அண்ணா/ காமராசர் சமாதிக்கு ஓடுவீர்களா?:(
So Called Secularism – "Swami" Gautamananda! So Called ஆன்மீக அரசியல், RSS! RSS தலைவன் மோகன் பகவத் & கெளதமானந்தா.. கொஞ்சி மகிழும் திருக்காட்சி; இதுவா, ரஜினிகாந்த்.. உங்கள் ஆன்மீக அரசியல்?
ரஜினியின் ஆன்மீக அரசியல், மத அரசியல் கிடையாது: தமிழருவி மணியன் விளக்கம்
//இவர் சொல்றது ஈயம் பூசின மாதிரியும் இருக்கு.. பூசாத மாதிரியும் இருக்கு..??
________________
களக்காடு புலி™ @mathanmohang Replying to @JananiP48541338
மதத்தைக் கொண்டு தமிழகத்தில் பிரிவினையை உண்டாக்க துடிக்கும் பாஜக-வையும்! பாஜக-வை பின்புலமாக வைத்துக் கொண்டு ஆன்மீக அரசியல் என்ற பெயரில் பாஜகவிற்கு ஆள் சேர்ப்பு கட்சி துவக்கி சினிமா மோகத்தில் மூழ்கி கிடக்கும் ரசிக அடிமைகளையும் துரத்தும் வரை தமிழகத்திற்கு விடிவு ஏற்பட போறதில்லை!
மக்கள்: ஆன்மீக அரசியல் அப்புடினா என்னங்க?
ரஜினி: என் பேரு என்ன? மக்கள்: Super star Rajinikanth
ரஜினி: சுருக்கமாக சொன்னா?
மக்கள்: SSR
ரஜினி: திருப்பிபோட்டா?
மக்கள்: RSS
ரஜினி: இப்போ புரியுதா?
______________
Satheesh Kumar @saysatheesh
தெற்கில் இருந்து ஒரு யோகி ஆதித்யனாத் #ஆன்மீகஅரசியல்
__________________
இராவணன் @ravanaasuran
RSS என்று வந்தான் அடித்து ஓட விட்டோம் இந்து முன்னணி என்று வந்தான் எட்டி உதைத்து விரட்டினோம் இந்து மக்கள் கட்சி என்று வந்தான் இடுப்பை ஒடித்து அனுப்பினோம் இப்போது ஆன்மீக அரசியல் என்று வருகிறான் அல்லையிலே மிதித்து அலறவிடுவோம்
___________________
RATIONAL ? @sarankaran_y
தமிழ்நாடு ஆன்மீக அரசியல் முன்னணி 2019 – அரசியல் மாநாடு
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1923-ம் ஆண்டு முதல், பட்டாசு உற்பத்தி நடைபெற்று வருகிறது. தற்போது சிறியதும்,பெரியதுமாக 911 பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றன. இதன் மூலம் நேரடியாக, மூன்று லட்சம் தொழிலாளர்கள் மற்றும் சார்பு தொழில்களான அச்சு, ஸ்கோரிங், லேமினேஷன், பேக்கேஜிங் தொழில்கள், அலுமினிய பவுடர், பொட்டாசியம் நைட்ரேட், பேரியம் நைட்ரேட் போன்ற ரசாயன தயாரிப்பு, பேப்பர் மில்கள், லாரி போக்குவரத்து போன்ற தொழில்கள் மூலம், வேலை செய்பவர்கள் என மொத்தமாக 8 லட்சம் தொழிலாளிகள் இத்தொழிலில் இருக்கின்றார்கள்.
கடந்த 10 நாட்களாக பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். பட்டாசு உற்பத்தி நிறுத்தப்பட்டதால் பல கோடி ரூபாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பட்டாசு தயாரிப்பதற்கும், விற்பதற்கும், வெடிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அனைத்து மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இது பட்டாசு உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு அல்லாமல் உற்பத்தியும் பெருமளவில் குறைந்துள்ளது.
காரணம், இவ்வழக்கில் தீர்ப்பு பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு எதிராக இருந்தால் பட்டாசு தொழில் அடியோடு முடங்கி விடும். பட்டாசு விற்பனையாளர்கள் வாங்க மாட்டார்கள் என்பது தான் அவர்கள் அச்சம். ஏற்கனவே இந்த வழக்கை காரணம் காட்டி விற்பனையாளர்கள் ஆர்டர் கொடுப்பதும் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் நீதிமன்றமும் விரைந்து தீர்ப்பு வழங்காமல் இழுத்தடித்து மேலும் உற்பத்தியாளர்களை வதைக்கிறது.
தங்களது வாழ்வாதாரத்தை காக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கை விரைந்து விசாரித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூற வேண்டும். சுற்றுச்சூழல் சட்டத்தில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டாசு உரிமையாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் தொழிற்சாலைகளை மூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, பட்டாசு வெடிப்பதால் காற்று மற்றும் ஒலி மாசு புகார் தொடர்பாக நீதிமன்றங்களில் தொடரப்படும் வழக்குகள் மற்றும் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்படும் தடைகள், சீன பட்டாசு இறக்குமதி போன்றவை காரணமாக இத்தொழில் நலிந்து விட்டது.
கடந்த ஆண்டு டெல்லி மற்றும் பட்டாசு விற்பனையின் மிகப்பெரிய சந்தையாகத் திகழும் வட இந்தியாவின் 5 மாநிலங்களில், கடந்த தீபாவளியையொட்டி பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டதாலும் சிவகாசியில் பட்டாசு தொழில் முடங்கியது.
சிவகாசி பட்டாசை பொறுத்த வரையில் வட இந்திய விற்பனையாளர்களின் பங்கு தான் அதிகம். பண்டிகை நெருங்குவதற்கு முன்னரே முன்பணம் கொடுத்து விடுவார்கள். அதனை நம்பித் தான் உற்பத்தியிலும் ஈடுபடுகிறார்கள். ஆனால் இந்த முறை பெரும்பாலான விற்பனையாளர்கள் கொடுக்கவில்லை. இதனால் பட்டாசு உற்பத்தி மற்றும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
உண்மையில் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்த போதும் காற்று மாசின் அளவு குறையவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான தடையை ஏற்கனவே உச்ச நீதிமன்றம் நீக்கியது.
டில்லியை அச்சுறுத்தும் காற்று மாசுபாடு
அமெரிக்க பெட்கோக் எனப்படும் ஒரு வகை நிலக்கரியை இறக்குமதி செய்வதில் உலகின் முன்னணி சந்தையாக இந்தியா திகழ்வதன் விளை பொருளாகவே உலகின் மாசுபட்ட நகரங்களில் முதன்மையான ஒன்றாக தலைநகர் டெல்லி இருக்கிறது.
பொதுப் போக்குவரத்தை ஊக்குவிப்பதும், தனியார் போக்குவரத்தை கட்டுப்படுததுவதும் மூலமாக இந்த மாசுபாட்டில் இருந்து தலைநகரைக் காக்க முடியும். அரசோ அத்தகைய முயற்சிகளை தீவிரமாக எடுக்கவில்லை.
அதேபோல், டெல்லி காற்று மாசுபாட்டுக்கு, அண்டை மாநிலங்களில் நெல் வயல்களில் வைக்கோல் எரிக்கப்படுவதும் முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. “ஒரு ஏக்கர் நிலத்தில் சராசரியாக 2 டன் வைக்கோல் உற்பத்தியாகிறது. இந்த வைக்கோலை டன்னுக்கு ரூ.5,500 என்ற விலையில் தேசிய அனல்மின் கழகம் (என்டிபிசி) வாங்கிக் கொள்ளும். மின்உற்பத்தி நிலையங்களுக்கு இந்த வைக்கோல் பயன்படுத்தப்படும் என்றெல்லாம் கூறினார்கள்.
ஆனால் எது எப்படி இருந்தாலும் பெட்கோக்கை இறக்குமதி செய்வதன் மூலம் அந்த முயற்சிகள் நீர்த்துப்போயின. ஏனெனில் நிலக்கரி அல்லது டீசலை விட பெட்கோக் சுற்றுச்சூழலுக்குப் பேராபத்தை விளைவிக்கிறது.
உலகின் பல நாடுகளில் பெட்கோக் அதன் நச்சுத்தன்மைக் காரணமாக தடை செய்யப்பட்டிருந்தாலும் இந்தியாவில் இதற்கு கட்டுப்பாடில்லை. இதனை தடை செய்ய வக்கில்லை. ஆனால், காற்று மாசு ஏற்பட பட்டாசு காரணம் இல்லை என தெரிந்தும், உச்ச நீதிமன்றம் மீண்டும் வழக்கை எடுத்துக்கொண்டுள்ளது.
பட்டாசுத் தொழில் பல இலட்சம் குடும்பங்களுக்கு வேலை அளிக்கிறது. அதை தொழிலாளர் நலன், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சுதேசித் தொழில் பாதுகாப்பு என்று முறைப்படுத்தினால் பிரச்சினையின்றி தொழிலை தொடர முடியும். அதை செய்வதற்கு தயாராக இல்லாத அரசு சிவகாசி பகுதி மக்களை கை கழுவி விட்டது.
இது உள்நாட்டு பட்டாசு உற்பத்திக்கு சாவு மணி அடித்து விட்டு வெளிநாடுகளில் இருந்து பட்டாசு இறக்குமதி செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்பதும், காற்று மாசுபாட்டிற்கான உண்மையான காரணமான கார்ப்பரேட் நலன் அடங்கியிருப்பதை மறைக்க வேண்டும் என்பதை தவிர வேறொன்றும் இல்லை!
ரஜினி எனும் காரியவாதி, சந்தர்ப்பவாதி, பார்ப்பனிய மதவாதி, கோமாளி எல்லாம் அரசியல் பேசுவதும், அதை கறிக்கடையை சுற்றி வரும் கால பைரவர்கள் போல ஊடகங்கள் நாக்கைத் தொங்கப் போட்டு சுற்றி வருவதிலும் இருந்து தெரிகிறது, இந்த ‘சிஸ்டம் சரியில்லை’ என்று! தமிழ் ஃபேஸ்புக்கில் மக்கள் கருத்துக்கள் சில….
Arul Ezhilan
ஜெயலலிதா என்ற நபர் உயிரோடு இருந்தவரை ரஜினி பெட்டிப் பாம்பாக அடங்கி அஞ்சி கிடந்தார்.அருகில் இருந்த கோபாலபுரமும் கருணாநிதியும் இல்லை என்றால் அப்படியே நசுக்கி கஞ்சா கேஸ் போட்டிருப்பார் ஜெயலலிதா..!
____________________
Villavan Ramadoss
மண்டபத்துலயும் சிஸ்டம் சரியில்லை. ஒரிஜினல் ஓனர் லதா பாட்டியோட ஒரு போருக்கு தயாராகுங்க தலைவரே….
//உங்களுக்கெல்லாம் கெடா வெட்டி கறிசோறு போடணும்ணு எனக்கு ஆசைதான் ஆனா இங்க ராகவேந்திரா மண்டபத்துல சைவ உணவுக்கு மட்டும்தான் அனுமதி உண்டு – ரஜினிகாந்த்.//
____________________
Aazhi Senthil Nathan
இன்றைக்கு நியூஸ் 18 விவாதத்தில், ரஜினி பேசிய காட்சி முடிந்தவுடன், குணசேகரன் முதலில் என்னிடம் தான் கேட்டு விவாதத்தைத் தொடங்கினார். “சங் பரிவார் என்கிற குடும்பத்தில் மற்றுமொரு அமைப்பாகவே அவரது அமைப்பு இருக்கும்” என்று கூறினேன். இதுதான் என் முதல் கருத்து. மாலனும் ஜி.சி.சேகரும் அடுத்தடுத்து அப்படி இல்லை என்று சொல்வதற்கான வேலையில் இறங்கினார்கள்.
ஐயோ பாவம், அவர்கள். தமிழிசையும் அர்ஜூன் சம்பத்தும் நாராயணனும் உடனடியாக என் உதவிக்கு வந்தார்கள். நான் சொன்னக் கருத்தை உறுதிசெய்தார்கள். ஆர் கே நகர் தோல்விக்குப் பிறகு தங்களுக்கு பலம் தேவைப்படுகிறது, அந்த பலத்தை ரஜினி அளிப்பார் என தமிழிசை நம்புகிறார். இந்து மக்கள் கட்சியும் பாஜகவும் ரஜினி பின்னால் செல்லும் என்கிறார் சம்பத்.
ரைட்டு. இனிமேல் ரஜினியை பாஜகவின் மறைமுக ஆதரவைப் பெற்றவர். பாஜகவின் பினாமி என்றெல்லாம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. நேரடியாக ரஜினியின் அமைப்பை இந்துத்துவ அமைப்பு என்று சொல்லி வேலையைச் செய்யவேண்டியதுதான்.
2018 இல் மேலும் ஒரு முனையில் யுத்தம் வெடிக்கிறது. தட்ஸ் ஆல். பாத்துக்கலாம்.
ஆனால் ரஜினியின் இந்த நகர்வு நமக்கெல்லாம் நிறைய வேலையைக் கொடுத்திருக்கிறது. அவருக்கு எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கிறதோ அந்த அளவுக்கு அது மக்களின் தோல்வியாக இருக்கும்.
தமிழ்நாட்டின் அத்தனை நியாயஸ்தர்களும் தமிழருவி மணியன்களும் இப்போது ரஜினி பக்கம் வருவார்கள். மாலன்களும் சேகர்களும் என மிகப்பெரிய ரஜினி மீடியா படை இன்றே உருவாகிவிட்டது. மீடியாவுக்கு 2018 முழுமைக்குமான பிரேக்கிங் நியூஸ் கிடைத்துவிட்டது. மீம்ஸ் இன்டஸ்ட்ரியின் வளர்ச்சி பல மடங்காக இருக்கும்.
நமக்குத்தான் வேலை அதிகம். மீம்ஸோடு முடங்கிவிடக்கூடாது, விவாதமேடைகளோடு நின்றுவிடக்கூடாது. செய்வோம். வச்சு செய்வோம்.
___________________
Deepa Lakshmi
காசு சேரும் வரை கம்யூனிசம்,
கல்யாணமாகும் வரை நாத்திகம் பெண்ணியம்,
அரசியல் கைகூடும் வரை சமூகநீதி,
சினிமாவில் வெற்றிப்படியாய் மட்டுமே இலக்கியப் பணி,
இப்படிப் பல ஆண்டுகளாய்த் தங்களின் ஆளுமையை நிறுவப் பயன்பட்ட கொள்கைகளை அவரவர் தனிப்பட்ட நியாயங்களுக்காகக் காற்றில் பறக்க விடும்போது…
நாடி தளர்ந்த பின் ‘ஆன்மிக அரசியல்’ பண்ண வரும் ரஜினிக்கு மட்டும் வரவேற்பு குறைந்து விடுமா என்ன?
🙂
Personal integrity matters, whatever you choose to blabber.
_____________
வாசுகி பாஸ்கர்
இதில் ரஜினி சொல்லும் ஆன்மீக அரசியல் எப்படியானதாக இருக்குமென்கிற புனைவுகளை அவர்தம் ரசிகர்கள் எத்தனை விதமாய் எடுத்துரைத்தாலும், ரஜினியின் பால் தாக்ரே வுடனான தொடர்பு, சிவ சேனா, பாபா, வட நாட்டு சாமியார்கள், பாஜக தொடர்பு என்று இவையெல்லாம் கண்முன் வந்து போவது மிக யதார்த்தமான ஒன்றே.” ரஜினி என்கிற புனித மனிதனை இப்படியாக சந்தேகப்படுவதா?” என்று வாதம் வைக்குமளவு எந்தவிதமான தெளிவான வரலாறும் கடந்த காலத்தில் இல்லை. ரஜினி தான் சார்ந்த ஹிந்து மதத்தின் ஒரு தீவிர பக்தியாளர் என்பதாக தான் அவர் செயற்பாடுகள் நமக்கு சொல்கிறது. ஒருவர் மற்ற மதங்களை பற்றி எதுவும் அவதூறாக சொல்ல வில்லை என்பதற்காகவே அதை எல்லோருக்குமானதாக எடுத்துக்கொள்ள இயலாது.
மதங்களையும், கடவுளர்களையும், எந்த வடிவத்தில் உள்ளே கொண்டு வந்தாலும் அது ஆதிக்கம் செலுத்தும் என்பதால் தான் பெரியார் கடவுளை சமூக சீர்திருத்தத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். உலகம் முழுக்க மக்களாட்சிக்கான சட்டங்கள் உருவாக்கப்பட்டபோது மதங்களின் தலையீடு இல்லாதிருப்பதே எல்லோருக்குமான அரசியல் சட்ட வடிவமாக முன் வைக்கப்பட்டது. அதுவே மதச்சார்பற்ற தன்மை என்று அங்கீகரிக்கப்பட்டது.
ஆகையால் ரஜினி; ஹிந்து மதத்தின் பிரதிநிதியாக இருந்துகொண்டு சாதி, மதமில்லாத ஆன்மீக அரசியல் என்று சொன்னாலும், ஆன்மீகத்திற்கும் அரசியலுக்கும் எந்த வகையிலும் நேரடி தொடர்பு இருக்கக்கூடாது என்பது தான் மதசார்பற்ற நிலை. மத ஒற்றுமையை நிலைநிறுத்த வேண்டி, ஒரு அரசு அலுவலுகத்தில் எல்லா மத விழாக்களையும் கொண்டாடுவதை விட, எதையும் கொண்டாட கூடாது என்று தடை விதிப்பதே, அந்த இடம் எல்லோருக்குமான இடமாக கருதப்படும். நாத்திகர்கள், ஆத்திகர்கள், பன் சமூகத்தவர் என்று வாழும் ஒரு தேசத்தில், ஆன்மீக குறுக்கீடு இல்லாததே எல்லோருக்குமானதாக நிலைப்பாடாக இருக்க முடியும். பக்தி என்பது கட்டில் சமாச்சாரங்களை விட தனியறையில் இருப்பதே நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை சேர்ப்பதாக இருக்கும்.
__________________
Arul Ezhilan
ரஜினி 25 -இது ரஜினியோட 25 ஆண்டுகால சினிமா பணியை கொண்டாடும் விதமாக தலைப்பு வைத்து நடத்தப்பட்ட விழா. இதை நடத்தியவர் லதா ரஜினிகாந்த். மொத்தமாக அந்த விழாவை வைத்து ரசிகர்களிடம் இருந்து வசூலித்தது அளவில்லா தொகை. ரஜினி தொப்பு, ரஜினி கீ செயின், ரஜினி படம் என ஒவ்வொன்றிலும் பணம் பார்த்தார் லதா ரஜினிகாந்த்.
__________________________
Raja Rajendran
ஆன்மீக அரசியல் என்றால் என்ன ?
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் நடைபெற்ற சிலை ஆய்வின்போது, பழைய சோமாஸ்கந்தர் சிலையிலும் தங்கம் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.
பழைய சிலையிலும்…. என்றால் என்ன அர்த்தம் ?
அதாகப்பட்டது மகா ஜனங்களே, புதிய சிலை செய்யப்போவதாய்ச் சொல்லி சுமார் 100 கிலோ (ஹல்லோவ் 100 கிராம் இல்ல) தங்கத்தை வசூலித்துவிட்டு ( என்று வைத்தால் பக்தாள்களிடம் பெறப்படும் நன்கொடை ஒய் ) புதிய சிலையில் அட்லீஸ்ட் சேர்க்க வேண்டிய 5 . 75 கிலோ தங்கத்தைக் கூடச் சேர்க்காமல் அமுக்கிட்டன்.
நன்னா கவனிக்கோணும். யாராரெல்லாம் இதற்கு உடந்தை என்று சிலை கடத்தல் தடுப்பு போலிசார் 9 பேரை எஃப் ஐ ஆரில் சேர்த்திருந்தும், ஒரே ஒரு கைது நடவடிக்கை கூட இல்லை. ஏனாம் ? அதாம்லே அரசியல், ஆன்மீக அரசியல்.
சரி. டுபாக்கூருங்க புது சிலையிலத்தான் தங்கத்தை அடிச்சிருக்கன், நம் முன்னோர்கள் ஒன்றும் மொடா முழுங்கிகள் கிடையாதே ? போக, பழைய சிலையில் 87 கிலோ தங்கம் நிச்சயம் கலந்திருக்காக்கும் என ஸ்தபதி அரசுக்குச் சொல்லியிருக்க, ச்சுரண்டிப் பாத்தா ஒரு கிராம், யெஸ் மகாஜனங்களே ஒரே ஒரு சொட்டு கிராம் தங்கம் இல்லை.
இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ தங்கம் தோராயமா 25 – 26 லட்சம்ன்னு வச்சா, 87 கிலோவுக்கு என்ன வரும் ? நேக்கு அவ்ளவா கணக்கு வராது, நான் குமாரசாமி ஸ்டூடண்ட். நீங்க சொல்லுங்கோ.
2001-ல முகமது அலின்னு ஒரு ஸ்ட்ரிக்ட் போலிஸ் ஆப்பிஸர். அடையாறு மேம்பாலத்து மேல நின்னு தூணச் சுரண்டிப் பாத்துட்டு, சிமெண்ட்ல மண் ஜாஸ்தின்னு கருணாநிதிய நடு ராத்திரி போய்க் கைது பண்ணா.
இங்க என்னடான்னா குவிண்டால் கணக்குல தங்கத்தை அடிச்சும், இன்னும் ஆராய்ஞ்சுண்டு கிடக்கா. ஏன் ?
சிமெண்ட் மண் எனில் அது அரசியல். சாமி சிலை அவருக்குத் தங்கம்ன்னு மனுஷா புடுங்கி அமுக்கிண்டா அது ஆன்மீக அரசியல்
இப்போது ஆன்மீக அரசியல் கட்சிகளுக்கு சந்தை ஆய்வு, நிகழ்ச்சி ஏற்பாடு மேலாண்மை, திறமையான நேரடி ஒளிப்பதிவு நிறுவனங்கள், பறக்கிற படப்பிடிப்புக் கருவிகள், அலைபேசி செயலிகள், நாக்பூர் கும்பலின் திட்டம், மயிலாப்பூர் மாஃபியா கும்பலின் ஆதரவு இவை இருந்தால் போதும். போராட்டங்களை, கொள்கைகளை எதிர்ப்பதையும், நிராகரிப்பதையும் வெளிப்படையாக அறிவித்து முடிந்தால் காக்கா பிக்காவென காக்கா குசுபோல சிரிக்க வேண்டும். ஊடகங்களில் நேரடியாக சென்று மாட்டாமல் ஏற்கனவே எழுதி தரப்பட்ட திரைக்கதைகளை மேடைகளில் ஒப்பித்து தப்பித்து ஓடல், மயிலாப்பூர் மாஃபியாக்கள் எழுதித் தருவதை அறிக்கையாக வெளியிட்டல், கண்ட மடங்களில் சாமியார் கும்பல்களின் காலடியில் விழுதல் இவற்றை தொடர வேண்டும். தயிர்வடை தின்று தூக்கத்தில் ஏப்பம் விடுவதைப் போல அவ்வப்போது உளற வேண்டும் அவை தத்துவமாக்கப்படும். ஊடகங்கள் தானாக ஒளிபரப்ப வந்துவிடும்.
___________________
Arul Ezhilan
ரஜினியை எதிர்க்கிறேன் அவர் கன்னடர் என்பதால் அல்ல…
பெரியாரை நேசிக்கிறேன் கிழவன் பலிஜா நாயுடு என்பதால் அல்ல..
சீனிவாசராவை ஏற்கிறேன் அவர் கன்னடர் என்பதால் அல்ல..
காமராஜரை நேசிப்பது அவர் தமிழர் என்பதாலும் அல்ல..
காரணங்கள்தான் முக்கியமே தவிற இனமோ, மொழியோ எனக்கு முக்கியமான ஒன்றல்ல..
___________________
ஜோதிஜி திருப்பூர்
ஆன்மீக அரசியல் என்றால் என்ன?
தீபம் காட்டும் அய்யருக்கு நூறு ரூபாய் போட்டு விட்டு கோவிலை விட்டு வெளியே வரும் போது அங்கே கோவில் வாசலில் பிச்சை எடுப்பவர்களைப் பார்த்து நாடு முழுக்க சோம்பேறிகள் அதிகமாகிவிட்டார்கள் என்று நாட்டைப் பற்றி கவலைப்படுவது.
___________________
Ravi Kumar
திரு ரஜினி இன்று ராமகிருஷ்ணா மடத்துக்குச் சென்று ஆசி பெற்றபோது அவரை அறிமுகம் செய்து கடைசியில் சுவாமி சொல்வதைக் கவனியுங்கள்: ” அரசியல்ல ஆன்மீகம் இருக்கணும்னு ஒப்பனா சொல்லிருக்கார். So called secularism இல்ல”
இதுதான் ரஜினி சொல்லும் மதச்சார்பில்லாத ஆன்மீகம்
______________________
Thiru Yo
அறிவித்த சூட்டோடு ராமகிருஷ்ண மடத்தில் சாமியார்களிடம் சரணடைவு. ராமகிருஷ்ண மடம் எதை வளர்க்கிறது என்பதை சொல்ல அவசியமில்லை.
சங்கிகளுக்கு களம் அமைக்கவே பெரியார் நீக்கம், திராவிட இயக்க நீக்கம் ஒரு பிரச்சாரமாக முன்வைக்கப்படுகிறது. அதன் ஒரு பரப்புரை தான் தமிழகம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பின்தங்கியதாக, ஐம்பது ஆண்டு காலத்தில் தமிழ்நாடு கெட்டுப்போனதாக சொல்லப்படுகிற போலி வாதங்கள். அதை செல்பவர்கள் ராஜாஜியின் ஆட்சி பற்றியோ, காங்கிரஸ் காலத்தில் (காமராசர்) தவிர மற்ற ஆட்சிகளில் சில ஆதிக்கச்சாதிகள் தவிர மற்றவர் நிலை பற்றி பேசுவதில்லை.
சங்பரிவாரக் கும்பல் ஏறி வருகிற பெட்டிக்குதிரை ரஜினி. பாஜக கும்பலை சுமந்து வருகிற ரஜினியை தமிழ்நாடு மக்கள் புறக்கணிக்க வேண்டும். இத்தகைய முதுகெலும்பற்ற நடிகர்களை நம்புவது ஆபத்தையும், அழிவையுமே ஏற்படுத்தும்.
_________
_____________
Arumugam Kr
எதுக்காகவும் போராட வேண்டாம்; அதுக்கெல்லாம் வேற ஆளிருக்கு!
எதைப்பத்தியும் கருத்துச் சொல்ல வேண்டாம்; அதுக்கெல்லாம் வேற ஆளிருக்கு!
யாரையும் விமரிசிக்க வேண்டாம்; அதுக்கெல்லாம் வேற ஆளிருக்கு!
சண்டைக் காட்சிகள்ல வேத்தாளு (டூப்பு) போட்டு நடிச்ச பழக்கம் இன்னும் போகலையோ?
அது சரிங்கிறேன்! எல்லாத்துக்கும் வேற ஆளிருக்குங்கையில, ஆள்றதுக்கு மட்டும் வேற ஆளில்லாமயா போயிரும்?
_____________________
Sukirtha Rani
சாதி அரசியல் கொடுமைகளுக்குச் சற்றும் குறைவில்லாதது ஆன்மீக அரசியல். அது காவி பயங்கரவாதத்திற்கே இட்டுச் செல்லும்.
__________________
Yuva Krishna
மதவெறியை எதிர்ப்பது உங்கள் கொள்கையெனில், இயல்பாகவே ரஜினியை எதிர்த்துதான் ஆகவேண்டும். பார்ப்பனீயம் எடுத்திருக்கும் பரிதாபமான ஆயுதம் அவர்.
_______________
Govi Lenin
திருக்குறளை கங்கையில் கரைத்து விட்டு, பகவத்கீதையை தமிழ்நாட்டில் விதைப்பதற்கு பெயர், ஆன்மிக அரசியல்.
_______________
Arul Ezhilan
ராமகிருஷ்ணா மடத்தின் தலைவரை சந்திக்கிறார் ரஜினி. ஒரு சாமியார் சொல்கிறார் //அரசியல்ல ஆன்மீகம் இருக்கணும்ணு சொல்லியிருக்கிறார். இந்த சோ கால்ட் செக்குலரிடம் இல்ல// என்கிறார் . ரஜினி தலையாட்டி அதை ஆமோதிக்கிறார். திராவிட இயக்கத்தின் ஆன்மாவே மதச்சார்பின்மைதான். ரஜினியின் ஆன்மீக அரசியலில் மதச்சார்புதான் இருக்கும் எனும் நிலையில் கருணாநிதியிடம் அந்த அரசியலுக்கு ஆசி வாங்கச் செல்வது எவளவு பெரிய மோசடி?
//புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல வேண்டும், அப்படியே உடல் நலம் விசாரிக்கணும் என்றுதான் ரஜினி தரப்பில் இருந்து கலைஞர் மகள் செல்வியிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள். ஸ்டாலினும் அங்கு சென்றார். ஆனால் ரஜினி திடீரென அரசியலுக்கு வருகிறேன் ஆசி வேண்டும் என்று சொல்ல அது கலைஞருக்கு புரியவில்லை. அவர் யார் கை கொடுத்தாலும் கொடுப்பார். கை கொடுத்தார் அதை ரஜினி ஆசியாக எடுத்துக் கொண்டு ஊடகங்களிடம் பொய் சொல்ல கடைசியில் வாங்கிக் கட்டும் சூழல் உருவானது.