Thursday, June 18, 2026
முகப்பு பதிவு பக்கம் 73

குஜராத்தில் அரசு குடியிருப்பில் முஸ்லிம்களுக்கு இடம் இல்லை – சவால் விடும் பாசிசக் கும்பல்!

குஜராத்தில் வதோத்ரா முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு உட்பட்ட ஹர்ணி என்ற இடத்தில் முதலமைச்சர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 462 வீடுகள் அடுக்குமாடி கட்டடங்களாக கட்டப்பட்டுள்ளது.

அவை அனைத்துமே குறைந்த வருவாய் பிரிவினருக்காக (Low income group) மானிய விலையில் அரசு கட்டிக்கொடுத்துள்ள வீடுகள்.

இதில் 461 வீடுகள் இந்துக்களுக்கும் ஒரு வீடு மட்டும் கடைநிலை அரசு ஊழியரான முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த விதவை பெண் ஒருவருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளாக இன்று வரையிலும் அந்த முஸ்லிம் பெண் தனது வீட்டில் குடியேற முடியவில்லை. மோட்நாத் குடியிருப்பு என்றழைக்கப்படும் அந்த குடியிருப்பில் உள்ள இந்து மத வெறியர்கள் திட்டமிட்டு அந்த முஸ்லிம் பெண் குடும்பத்தை கொலை மிரட்டலின் மூலம் குடியேற முடியாமல் தடுத்து வைத்துள்ளனர்.

வீட்டுக்கான விலையையும் கொடுத்துவிட்டு குடியிருப்புக்கான பராமரிப்பு செலவு என்று மொத்த தொகையாக ₹50 ஆயிரமும் செலுத்தி விட்டு வீட்டில் குடியேற முடியாத நிலையில்  மதவெறி பாசிசக் கும்பலுக்கு எதிராக அரசின் பல தளங்களில் புகார் செய்துள்ளார். இதை கண்டு ஆத்திரமுற்ற இந்து மத வெறியர்கள் மோட்நாத் குடியிருப்போர் கூட்டுறவு சங்கம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு அந்த முஸ்லிம் பெண்ணுக்கான வீடு ஒதுக்கீட்டை சட்டபூர்வமாகவே ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றனர்.

1991 ஆம் ஆண்டே கலவரப் பகுதிகள் தடுப்புச் சட்டம் என்ற ஒரு சட்டம் போடப்பட்டுள்ளது. அகமதாபாத், வதோத்ரா, ராஜ்கோட், பரூச், ஆனந்த், கோத்ரா, பவா நகர் போன்ற பல மாவட்டங்களில் பதற்ற பகுதிகள் என்று அடையாளம் காணப்பட்ட இடத்திலெல்லாம் இந்த சிறப்புச் சட்டம் அமலில் உள்ளது. அந்த சட்டம் இந்த வதோத்ராவில் உள்ள மோட்நாத் குடியிருப்பு பகுதிக்கும் பொருந்தும்.

அதன்படி சம்மந்தப்பட்ட பகுதிகளில் மாற்று மதத்தினருக்கு சொத்துகள் வாங்கவோ விற்கவோ செய்யும்போது மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன்தான் நடைபெற வேண்டும் என்று உள்ளது. சட்டம் அவ்வாறு கூறும் பொழுது பதற்றம் நிறைந்த இந்தப் பகுதியில் ஒரு மதக்கலவரத்தை தூண்டிவிடும் வேலையை அரசே செய்திருக்கிறது. எனவே இதற்கு அரசு பொறுப்பேற்று அந்த ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோருகின்றனர்.

மேலும் மாவட்ட ஆட்சியர் தங்கள் கோரிக்கையை ஏற்று அந்த ஒதுக்கீட்டை ரத்து செய்யாவிட்டால் முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் மேலும் டெல்லிக்கும் போராட்டத்தை விரிவுபடுத்துவோம் என்று அரசுக்கு சவால் விடுத்துள்ளனர்.


படிக்க: பிபிசி ஆவணப்படமும் குஜராத் படுகொலை குற்றவாளிகளும்


போராட்டக் குழு தலைவனாக சொல்லிக் கொள்ளும் ஜிதேந்திர பர்மர் என்பவனோ “அமைதியாக வாழும் எண்ணத்துடன் தான் அரசு குடியிருப்பில் இந்த வீடுகளை வாங்கினோம். இந்நிலையில் ஒரு முஸ்லிம் குடும்பத்தை கொண்டு வந்து இடையில் நுழைத்து அந்த அமைதியை கெடுப்பது அநீதி” என்கிறான். மேலும் “நாங்கள் ஒன்றும் இந்துக்களுக்கு மட்டுமே அரசு வீடு என்றோ முஸ்லிம்களுக்கு கொடுக்காதீர்கள் என்றோ கூறவில்லை. அவர்களுக்கு என்று உள்ள பகுதியில் அவர்களுக்கு கொடுங்கள் என்று தான் கூறுகிறோம். நாங்களும் அமைதியாக வாழ்வோம் அவர்களும் நிம்மதியாக வாழ்வார்கள் என்று தான் கூறுகிறோம்” என்று அமைதியான முறையில் விஷத்தைக் கக்குகிறான்.

மாவட்ட ஆட்சியரோ கையை பிசைந்து கொண்டு நாங்கள் எந்த பாகுபாடும் பார்த்து ஒதுக்கீடு செய்யவில்லை குலுக்கல் முறையில் தான் பயனாளிகளை தேர்வு செய்தோம் என்று அந்த கும்பலுக்கு பணிவுடன் பதில் அளிக்கிறார். ஏன் “அரசாங்கம் முறையாக செய்திருக்கிறது; போட்ட உத்தரவு போட்டது தான். ஒதுக்கீடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழவில்லை. எல்லோரும் ஒழுங்கு மரியாதையாக கலைந்து செல்லுங்கள். இல்லையெனில் போலீசை ஏவி அடித்து விரட்ட வேண்டி வரும்” என்று எச்சரிக்கவில்லை? மேலும் “6 ஆண்டுகளாக இந்த இஸ்லாமிய பெண்ணை குடியேற விடாமல் தடுத்து வந்தமைக்காக உரிய பிரிவுகளில் குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். நாளையே போலீசு பாதுகாப்புடன் அந்தப் பெண் குடியேற நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஏன் பேசவில்லை?

உரிமை கேட்டு போராடும் மக்களிடமெல்லாம் அதிகார வர்க்கம் இப்படி பேசித்தானே இதுவரை நாம் கேட்டிருக்கிறோம். ஏன் இந்த மதவெறி வன்முறை கும்பலிடம் மாவட்ட ஆட்சியரும் கார்ப்பரேஷன் ஆணையரும் பம்மிப் பம்மி பேச வேண்டும்? ஏனெனில் அங்கு சட்டத்தின் ஆட்சி என்று எதுவும் நடைபெறவில்லை. பெரும்பான்மை இந்து மதவெறி கும்பலின் ஆட்சி நடைபெறுகிறது என்பதை தான் இது காட்டுகிறது.

இஸ்லாமியர்களை தனி குடியிருப்பில் வைக்க வேண்டும் என்று பேசும் இந்து மத வெறி உயர் சாதி கும்பல், தாழ்த்தப்பட்ட சாதி மக்களை மட்டும் இந்து என்று சேர்த்தணைத்துக் கொள்ளுமா?

இவ்வளவு அப்பட்டமான சாதி மத வெறியை சட்டபூர்வமாக இயங்கும் அரசு என்றால் அங்கீகரிக்குமா?

இந்த கோரிக்கையை எழுப்புவது யார்?

மானிய விலையில் வீடு கிடைக்கிறதே என்று கந்து வட்டிக்கு கடன் பட்டு வாழ்நாளில் ஒரே ஒரு சொந்த வீட்டை பெரும் ஆவலில் இருக்கும் சாதாரண ஏழை மக்களா?

ஒரு விதவை பெண்ணால் எங்களின் அமைதி கெட்டு விடும் என்று அவர்களா கோரிக்கை வைக்கிறார்கள்?

பின்னாலிருந்து இயக்குவது இந்து மத வெறி உயர் சாதி கும்பல் என்பது ஆணையருக்கோ ஆட்சியருக்கோ தெரியாதா?

அவர்களெல்லாம் மக்களின் நல்வாழ்வுக்காக உயிரைக் கொடுக்கும் போராளிகளா?


படிக்க: என்.சி.ஆர்.பி-ன் தரவு: உண்மையான ‘’குஜராத் ஸ்டோரி’’


வானை நோக்கி ஒரு குண்டு சுட்டால் காக்கை கூட்டம்போல் பறந்து ஓடக்கூடிய பிழைப்பு வாத கும்பல் தான் என்பது போலீசு ஆணையருக்கு தெரியாதா என்ன?

இவர்கள் கூட்டாக ஒன்றிணைந்து சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவது என்று தங்கள் பதவிப்பிரமாணத்துக்கு உண்மையாக ஒரு கணம் நின்றால் இப்படிப்பட்ட ஒரு கும்பல் உருவாகாமலே தடுத்து விட முடியாதா? ஆனால் அதுவெல்லாம் அவர்களின் நோக்கம் அல்ல. சட்டப்படி அவர் ஆட்சியர், இவர் ஆணையர் என்று இருக்கிறார்கள். ஆனால், அமைச்சரவை உள்ளிட்ட அதிகார வர்க்கம் அனைத்தும் இந்து மத வெறிக்கு ஆட்பட்டு “தான் முதலாவதாக இந்து; அதன் பின்னர் தான் ஆட்சியர் ஆணையர் எல்லாம்” என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நாம் கவனிக்க வேண்டிய பிரச்சனை.

அவர்கள் மேற்கோள்காட்டும் கலவரப் பகுதியில் தடுப்புச்  சட்டம் கூட என்ன சொல்லுகிறது. இரு வேறு மதத்தினர் இடையே சொத்து பரிமாற்றங்கள் நடக்கும் போது அந்த சொத்துகள் ஏதேனும் நிர்பந்தப்படுத்தி வாங்கப்படுகின்றனவா விற்பவருக்கு உரிய விலை தரப்படுகின்றதா என்பனவற்றைப் பற்றி ஆட்சியர் ஒப்புதல் பெற வேண்டும் என்பதைத்தான் கூறுகிறது. இப்போது  1991 ஆம் ஆண்டில் போடப்பட்ட அந்த சட்டம் எங்கே இருக்கிறது? 2002 குஜராத் முஸ்லிம் படுகொலைகளுக்குப் பிறகு அங்கு ஏது கலவரம்?

இந்து மத வெறியர்கள் தான் எங்கும் சுடுகாட்டு அமைதியை நிலைநாட்டி விட்டார்களே. ஆனால் இந்த குடியிருப்போர் நலம் காக்கும் சங்கி கூட்டம் இப்போது அந்த சட்டத்தை காட்டி ஒரு முஸ்லிம் குடும்பம் இங்கு குடி வந்து விட்டால் கலவரத்துக்கு வழி வகுத்து விடும் என்று அப்பட்டமான பொய்யை திணிக்கின்றனர்.

இந்நிலையில் தனி ஒரு இஸ்லாமிய பெண்ணுக்கு எப்படி நீதி கிடைக்கும்? யார் பெற்று தருவார்கள்? சாத்தியமே இல்லை. உழைக்கும் மக்களும், ஜனநாயகத்தை விரும்புவோரும் அறிவுத்துரையினரும், ஒடுக்கப்பட்ட சாதியினரும் சிறுபான்மை மதத்தினரும் ஒரு அமைப்பின் கீழ் திரண்டு ஒன்றிணைந்து தெருவில் இறங்கிப் போராடுவதன் மூலம் தான் நியாயத்தைப் பெற முடியும்.

மக்கள் தாங்கள் உழைக்கும் வர்க்கம், உழைப்பாளிகள் என்று உணர வேண்டும். சாதியும் மதமும் நமது அடையாளங்கள் அல்ல. அவை நம்மை பிரித்தாள விரும்பும் சுரண்டும் கூட்டத்தாரின் சதி என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அந்த ஒற்றுமை தான் உடனடியாக அரசை சட்டத்தின் வரம்பிலாவது நிறுத்தி வைக்கும்.


ஆதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்: திமுக அரசே முதல் குற்றவாளி! | தோழர் வெற்றிவேல் செழியன்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்: ஸ்டாலின் அரசே முதல் குற்றவாளி!
தோழர் வெற்றிவேல் செழியன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



சட்டப்பூர்வமாக்கப்பட்ட தனியார் ஆம்னி பேருந்து வழிப்பறி | நேரடி அனுபவம்

நான் அவசர வேலையாக சென்னையில் இருந்து குடும்பத்துடன் மதுரை சென்றேன். ‘முகூர்த்தம்’, பண்டிகை காலம் என்பதாலும் உரிய நேரத்தில் திரும்பி வர வேண்டும் என்பதாலும் அரசுப் பேருந்தில் முன்பதிவு செய்ய வாய்ப்பு இல்லை என்பதாலும் தனியார் பேருந்தில் முன்பதிவு செய்து கொண்டோம்.

நாங்கள் சென்றது ஆம்னி பேருந்து. இந்த குளிரூட்டப் படாத சொகுசுப் பேருந்தில் படுக்கை வசதி கொண்ட ஒரு இருக்கையின் விலை 1500 ரூபாய். மூன்று டிக்கெட் புக் செய்தோம். ரெட் பஸ் என்ற செயலி மூலமாக புக் செய்தோம்.

ஜூன் 16 ஆம் தேதி இரவு மதுரையில் பேருந்து ஏறி, 17ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் பல்லாவரத்தில் இறக்கி விடும் வகையில் டிக்கெட் புக் செய்தோம். இறங்கும் இடம் பல்லாவரம் என்று டிக்கெட்டில் போடப்பட்டிருந்தது. இந்த டிராவல்ஸ் இன் பெயர் ஐங்கரன்.

பல்லாவரத்தில் இறக்கி விட வேண்டும் என்று ஏஜென்டிடம் சொன்னபோது அதை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. “பெருங்களத்தூர் அல்லது வண்டலூரில் இறங்கிக் கொள்ளுங்கள் பல்லாவரம் செல்லாது” என்று கூறினார். “டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளது; டிக்கெட்டில் பல்லாவரம் என்று எழுதப்பட்டுள்ளது” என்று கூறி டிக்கெட்டை எடுத்துக்காட்டிய பின்பும் அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

“இந்த டிக்கெட் புக் செய்ததற்கும் எங்கள் ட்ராவல்சுக்கும் சம்பந்தமில்லை. எங்களுக்கு அங்கு ஸ்டாப் இல்லை. எனவே நீங்கள் ரெட் பஸ் செயலியில் கேட்டுக் கொள்ளுங்கள்” என்று கூறி நிராகரித்து விட்டு காலியாக இருந்த ஐங்கரன் பேருந்தை நிரப்புகின்ற வேலையில் ஈடுபட்டிருந்தார்.

ஆம்னி பஸ் பேருந்து நிலையத்திற்கு வெளியே சென்னை செல்லும் பயணிகளைப் பிடித்து வந்து அவர்கள் எந்த அளவிற்கு ஏமாறுகின்றார்களோ அந்த அளவிற்கு அவர்களிடம் பணத்தைப் பறித்துக் கொண்டு பேருந்தை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் டிக்கெட் புக் செய்யும் போது பெரும் பகுதியான டிக்கெட் புக் செய்யப்பட்டு விட்டதாக காட்டியது செயலி. ஆனால் நேரில் பார்க்கும்போது பெரும் பகுதியான இருக்கைகள் காலியாகவே இருந்தது. செயலி மூலமாக டிக்கெட் அதிகம் இல்லாதது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கி எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டிக்கெட் கிடைத்தால் போதும் என்ற மனநிலையை பயணிகள் மத்தியில் உருவாக்குகின்றார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.


படிக்க: போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் சதியை முறியடிப்போம்!


பேருந்து உரிய நேரத்தில் புறப்படவில்லை. ஏஜென்ட்கள் பேருந்தில் உள்ள சீட்டை நிரப்புவதிலே கவனம் செலுத்தி வந்தார்கள். ஒரு பயணி எழுந்து வந்து “நான் உரிய நேரத்தில் சென்னை செல்ல வேண்டும். அதற்காகத்தான் இந்த பேருந்தில் ஏறினேன். ஏன் பேருந்தை கிளப்பாமல் இருக்கின்றீர்கள்” என்று கேட்டவுடன் பேருந்தை மெதுவாக நகர்த்தி டிக்கெட் போட்டுக் கொண்டே சாலையைச் சுற்றி வந்து டீசல் பங்கில் டீசல் போட்டுக் கொண்டே இருந்தார்கள். அதே நேரத்தில் டிக்கெட் போடுவதையும் நிறுத்தவில்லை. நானும் எனது பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்ற யோசனையிலேயே இருந்தேன்.

அந்த நேரம் பார்த்து பேருந்துக்குள் இரண்டு பயணிகள் “எங்களை ஏ.சி பஸ் என்று ஏமாற்றி காசை வாங்கி விட்டார்கள்” என்று பிரச்சனை செய்து கொண்டிருந்தார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு எனது மகள் மற்றும் அவர்கள் இருவர் என மொத்தம் நான்கு பேர் பேருந்தின் கீழே இறங்கி பேருந்தின் முன்பாக சாலையில் அமர்ந்து கொண்டோம். எங்கள் பிரச்சனையை தீர்க்காமல் பேருந்தை ஒரு அடி கூட நகர்த்த முடியாது என்று உறுதியாக அமர்ந்தோம்.

ஏஜென்ட்களும் டிரைவரும் எங்களை மிரட்டிப் பார்த்தார்கள். இங்கு பிரச்சனை நடந்து கொண்டிருப்பதை உணர்ந்த சக பயணிகள் இறங்கி எங்களிடம் வந்து விட்டார்கள். அவர்களிடம் பிரச்சனையை சொன்ன பிறகு எங்கள் நியாயத்தை ஆதரித்து நின்றார்கள். சாலையில் சென்ற மக்களும் நின்றார்கள். கூட்டம் கூடிவிட்டது.

நான் அருகில் இருந்த போலீஸ் பூத்திற்கு சென்றேன். அங்கு யாரும் இல்லை. அந்த வழியாக போலீஸ் ரோந்து வாகனம் வந்தது. அதை மறித்து நடந்ததை சொன்னேன். உடனே அவர்கள் அங்கு வந்து விட்டார்கள். மக்கள் கூடியது போலீஸ் வந்தது இதைப் பார்த்து பீதி அடைந்த ஏஜென்ட்கள் அனைவரும் ஓடி விட்டார்கள். உடனே அங்கு பேருந்தின் ஓனர் வந்தார். எங்களை பல்லாவரத்தில் இறக்கி விடுவதாக உறுதி கூறினார். ஏ.சி பஸ் என்று ஏமாற்றப்பட்டவர்களுக்கு அவர்கள் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டார். எங்கள் போராட்டம் வென்றது.

அங்கு வந்த போலீஸ் எங்களிடம் புகார் எழுதி கேட்டார்கள். “பிரச்சனை முடிந்ததால் புகார் கொடுக்க விரும்பவில்லை. நீங்கள் வந்ததற்கு நன்றி” என்று சொல்லி நாங்கள் பேருந்தில் ஏறி விட்டோம். போராட்டம் தான் தீர்வு என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறு சான்று. போராட்டத்தின் வீரியம் என்பது பிரச்சனையின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும்.


படிக்க: வந்தே பாரத் ; வர்க்கத் தீண்டாமை ! | தோழர் வெற்றிவேல்செழியன்


அரசு பேருந்து அழகாக சொகுசாக இல்லாவிட்டாலும் தனியார் ஆம்னி பேருந்துகளை விட டிக்கெட் விலை இரண்டு மூன்று மடங்கு குறைவு. சீசன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைத்து இருக்கைகளும் நிரம்பினாலும் நிரம்பா விட்டாலும் புதிய பேருந்தாக இருந்தாலும் பழைய பேருந்தாக இருந்தாலும் டிக்கெட் விலையில் எந்த மாற்றமும் இருக்காது. பேருந்து இடையில் பழுதாகி நின்று விட்டாலும் பயணிகளை அடுத்த பேருந்தில் ஏற்றிவிடும் வாய்ப்பு உள்ளது. எனவே மக்களுக்கு அனைத்து வகையிலும் பயன்படக்கூடியது அரசு பேருந்து மட்டுமே. அரசு பேருந்துகள் படிப்படியாக குறைக்கப்பட்டு போக்குவரத்து துறையே திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டு வருகின்றது.

மதுரையில் மாட்டுத்தாவணி அரசு பேருந்து நிலையத்தை விட தனியார் ஆம்னி பேருந்து நிலையம் இரண்டு மடங்கு பெரியது. இதை அரசே அவர்களுக்கு ஏற்பாடு செய்து தந்திருக்கின்றது. தொலைதூரத்திற்கு செல்லும் அரசு பேருந்துகளை விட ஆம்னி பேருந்துகள் மூன்று மடங்கு அதிகம். அனைத்து மக்களும் மலிவாக பயன்படுத்தக்கூடிய அரசு பொது போக்குவரத்தை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி தனியார் பேருந்துகள் வளர்ந்து வருகின்றன.

ஆம்னி பேருந்துகளுக்கு டிக்கெட் விலை நிர்ணயிக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல அவர்கள் நிலைமைக்கு தக்கவாறு டிக்கெட் விலையை எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக் கொள்ளலாம் என்று மக்களை கொள்ளை அடிப்பதற்கு வழிப்பறி செய்வதற்கு சட்டப்படி உரிமம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அரசு பேருந்து இல்லை என்ற நிலை வரும்போது தனியார் பேருந்தின் கொள்ளையடிக்கும் கொடூரம் எப்படி இருக்கும் என்பதை சற்று நினைத்துப் பாருங்கள்.

இன்று கூட அவர்கள் நினைத்தால் தொலைதூரப் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைக்க முடியும். நெருக்கடிக்கு உள்ளாக்க முடியும். அப்படி செய்தால் அரசால் அந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள முடியாது. இன்று கூட வெளி மாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளை ஆம்னி பஸ்களாக இயக்கக் கூடாது என்று அரசு போட்ட உத்தரவை அவர்கள் மதிப்பதில்லை. அதை எதிர்த்து பிரச்சனை செய்கின்றார்கள். அவர்கள் அந்த அளவிற்கு போக்குவரத்தில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக வளர்ந்து வருகின்றார்கள்.

வந்தே பாரத் என்ற பெயரால் சாமானிய மக்களின், நடுத்தர மக்களின் ரயில் பயணத்திற்கும் முடிவு கட்டும் வேலை விரைவாக நடந்து வருகின்றது. நாட்டின் பெருமையாக கருதப்படும் வந்தே பாரத் ரயில் நவீனமாக உள்ளது. குளிரூட்டப்பட்டுள்ளது; விரைவாக செல்கின்றது. பல வசதிகள் உள்ளது. ஆனால் டிக்கெட் விலை சாதாரண ரயிலை விட நான்கு மடங்கு அதிகம். நாட்டின் எத்தனை சதவீத மக்கள் இந்த விலை உயர்ந்த ரயிலை பயன்படுத்த முடியும். இந்த ரயிலில் முன்பதிவு இல்லாமல் பயணிக்கும் பெட்டி கிடையாது.

இதுதான் ரயில் போக்குவரத்தின் எதிர்காலம். இந்த எதிர்காலம் என்ன சொல்கிறது? பிறந்த ஊரில் வாழ வழி அற்றவன் ஊர் ஊராக சென்று, மாநிலம் வீட்டு மாநிலம் சென்று பிழைப்பவனுக்கு இருந்த ஒரே போக்குவரத்து மிக மலிவான போக்குவரத்து ரயிலில் உள்ள முன்பதிவில்லா பெட்டி மட்டுமே. எனவே, சாமானிய மக்களுக்கு இனி ரயில் போக்குவரத்து கிடையாது. பல ரயில்கள் தனியாருக்கு விற்கப்பட்டு விட்டன. அவற்றின் டிக்கெட் விலைகளும் பல மடங்கு ஏற்றப்பட்டு விட்டன. ரயிலின் இருப்புப் பாதைகள் தனியாருக்கு விற்கப்பட்டு விட்டன. பல ரயில் நிலையங்கள் தனியாருக்கு விற்கப்பட்டு விட்டன.

தமிழ்நாட்டின் கல்விக் கொள்ளையன் பச்சமுத்து ரயில் வாங்க இருக்கின்றான். லாட்டரி வியாபாரி மார்ட்டின் கோவையில் இருந்து சீரடிக்கு ரயில் விட்டுக் கொண்டிருக்கின்றான். நமது வரிப்பணத்தில் நமது தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட ரயில்கள், தண்டவாளங்கள் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டு தனியாருக்கு கூறு போட்டு கூவி கூவி விற்கப்படுகின்றன. இனி இருப்புப் பாதை வழியாகவும் சரி, சாலை வழியாகவும் சரி, நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பயணிக்க முடியாது என்ற நிலைமையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.

இதுதான் நாட்டின் கொள்கையாகவும் சட்டமாகவும் உள்ளது. மக்களாகிய நாம் போக்குவரத்து என்ற உரிமையை சட்டப்படி கேட்பதற்கும் வழிமுறை இல்லை. இறுதியில் போராட்டம் தான் நமக்கு இருக்கும் ஒரே வழி. ஒரு தனியார் பேருந்துக்கு எதிராக நான்கு பேர் போராடலாம்; வெற்றி பெறலாம். ஆனால் தனியார்மயம் என்ற அரசின் கொள்கைக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது. தனியார்மயத்திற்கு எதிரான நாடு தழுவிய அளவிலான மக்கள் போராட்டங்களின் மூலம் மட்டுமே நமக்கு நிரந்தர தீர்வு கிட்டும்.


தோழர் சி. வெற்றிவேல் செழியன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மெல்லச் சாகும் திராவிடம்!

ம்பேத்கர் சிலையிலிருந்து
ஆந்திரா நோக்கி
ஒரு கண்ணீர் நடை பயணம் வழியனுப்புங்கள்..
இது ஆறாத் துயரம்!

அத்திப்பட்டி அழிந்த ‘கதை’யை திரையில் பார்த்து
கண்ணீர் விட்ட தமிழினமே..
கண்ணீர் விட இன்னொரு ‘கதை’..
அதன் பெயர் பரந்தூர்!

கோரிக்கையை ஏற்காத
செவிகொடுத்து கேட்காத
தமிழ்நாட்டை விட்டுச் செல்வதில் பெருமை கொள்கிறோம்..
பதிமூன்று கிராம மக்களின் சொற்கள்
நெஞ்சில் தைக்கிறது பல்லாயிரம் அம்புகளாய்!

சொந்த நாட்டு மக்கள்
ஆந்திராவிற்கு அகதிகளாய்
தஞ்சம் கோர..
வந்தாரை வாழ வைக்கும் தமிழகமே..
இது உனக்கே அவமானம்!

ஆந்திரத்திற்கு வர வேண்டும் ஆத்திரம்
அதுவே திராவிடம்!

மதுரையை எரித்தாளாம் கண்ணகி!
புலவனுக்கு இருந்த அறநெறி..
இம்மண்ணின் புதல்வர்களுக்கு
இல்லாமல் போகுமோ..

ஓட்டுக்கட்சிகள் நவதுவாரங்களையும் மூடிக்கொள்ள..
பாஜக காட்டி பயமுறுத்தும்
திராவிட மாடல் அரசு
கார்ப்பரேட்டுக்கு விரிக்கிறது
சிவப்புக் கம்பளம்…
இதன் வழி உள் நுழையும் பாசிசம்!
இனி மெல்லச் சாகும் திராவிடம்!


ரஞ்சித்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



நாடெங்கும் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்கள்: உணர்த்துவது என்ன?

2024 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதுவரை நடந்த தேர்தல்களில், அனைவராலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இத்தேர்தல் பார்க்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பாசிசக் கும்பலை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பது பெரும்பான்மையான மக்களின் எண்ணமாக உள்ளது. “பா.ஜ.க. மீண்டும் வெற்றிபெற்றால் இனி தேர்தலே நடக்காது; எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டப்படும்; அரசியலமைப்பு சாசனம் மாற்றப்படும்” எனவே இத்தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என எதிர்க்கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் கூறுகின்றனர். அதற்காக பெரும்பான்மையான பாசிச எதிர்ப்பு சக்திகள் “இந்தியா” கூட்டணியை ஆதரித்து இத்தேர்தலில் பிரச்சாரமும் செய்தனர். இதுவரை தேர்தல் புறக்கணிப்பு மேற்கொண்டு வந்த அமைப்புகள் கூட, இம்முறை தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக “இந்தியா கூட்டணியை” ஆதரிப்பதாக நிலைப்பாடு எடுத்தன.

ஆனால், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதுதான், மக்கள் அதிகளவு தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு தொடங்கி கேரளா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, உத்தராகண்ட், டெல்லி, ராஜஸ்தான் என தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்கள் நடக்காத மாநிலங்களே இந்தியாவில் இல்லை என்று சொல்லுமளவிற்கு, மக்கள் தேர்தலைப் புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். முதற்கட்டத் தேர்தல் நடந்த தமிழ்நாட்டிலும் பல இடங்களில் மக்கள் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

போராட்டக்களமாகிய தமிழ்நாடு

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் நடந்ததை விட, தமிழ்நாட்டில்தான் அதிகளவில் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்கள் நடந்தன. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில் பெரும்பான்மையினர், தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், விமான நிலையம் அமைப்பதற்காக 13 கிராமங்களில் இருக்கும் 4791.29 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்காக முழுமையாக நிலம் கையகப்படுத்தப்படவிருக்கும் ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், விமான நிலையம் திட்டத்திற்கு எதிராக 600 நாள்களுக்கு மேலாக உறுதியான போராட்டத்தைக் கட்டியமைத்து வருகின்றனர். ஆனால், மக்களின் கோரிக்கைக்கு தி.மு.க. அரசு இதுவரை செவிமடுக்கவில்லை.

மாறாக, போராடும் மக்களை போலீசைக் கொண்டு மிரட்டுவது; பரந்தூர் கிராமத்திற்குள் செல்ல யாரையும் அனுமதிக்காமல் முழுமையாகத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது என ஆரம்பத்திலிருந்தே மக்களின் போராட்டத்தை ஒடுக்கி வருகிறது. தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏகனாபுரம், நெல்வாய் கிராம மக்கள் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்தனர்.

தேர்தல் புறக்கணிப்பைக் கைவிடக்கோரி, மக்களிடம் பேச்சுவார்த்தைக்குச் சென்ற தேர்தல் அதிகாரிகள் “போராட்டத்தையும் வாக்குப்பதிவையும் சேர்த்துப் பார்க்க வேண்டாம்”, “தேர்தலைப் புறக்கணிப்பதால் என்ன நடக்கப் போகிறது? இந்த புறக்கணிப்பு போராட்டத்தைக் கைவிடுங்கள்” என கேட்டபோது, கிராம மக்கள் “வாக்களிப்பதால் எங்கள் கிராமத்திற்கு நன்மை பயக்கப் போவதில்லை”, “தேர்தலைப் புறக்கணிப்பதாகக் கூறுவதால்தான் நீங்கள் கூட இப்போது தேடி வந்திருக்கிறீர்கள்” என தக்க பதிலடி கொடுத்து அனுப்பினர்.

தேர்தல் அன்று, அக்கிராமத்தில் உள்ள தலையாரியை வாக்களிக்க அழைத்துச் செல்ல வந்த அதிகாரிகளை, கிராம மக்கள் உள்ளேயே நுழைய விடாமல் திருப்பி அனுப்பினர். இதையே காரணமாக வைத்துக்கொண்டு, தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டவர்களில் 10 பேர் மீது அடாவடித்தனத்தனமாக பொய்வழக்கு பதிவு செய்துள்ளது தி.மு.க. அரசு.

இதேபோல், நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட என்.புதுப்பட்டி, வளையப்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள், அப்பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். ஓராண்டுக்கு மேலாக சிப்காட் எதிர்ப்பு இயக்கம் மூலம், இத்திட்டத்தைக் கைவிடக் கோரி 57 கட்டப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். ஆனால், தி.மு.க. அரசு இதுவரை போராடும் மக்களைக் கண்டுகொள்ளவில்லை. இதனால், வளையப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தேர்தலைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


படிக்க: மீண்டும் பாசிச பா.ஜ.க. ஆட்சி: என்ன செய்யப் போகிறோம்? | வெளியீடு


இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் ஆதிக்கச் சாதிவெறியர்களால் மலம் கலக்கப்பட்டது. இக்கொடூரம் அரங்கேறி ஓராண்டுக்கு மேலாகியும் குற்றவாளிகளைக் கைதுசெய்யாமல், பாதிக்கப்பட்ட மக்களையே சித்திரவதை செய்துவரும் தி.மு.க. அரசை கண்டித்து இறையூர், வேங்கைவயல் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் அன்று வாயில் கருப்பு துணி கட்டியும், கருப்புத்துண்டு அணிந்தும் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு 59 பேர் மட்டும் வாக்களித்ததாகக் கூறப்படுகிறது.

தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட வேங்கைவயல் கிராம மக்கள் விகடன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “குற்றவாளிகள் யார் என்பது அரசுக்கும், சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், அவர்களைக் கைதுசெய்ய அரசு முன்வரவில்லை. அதற்கு பதிலாக, பாதிக்கப்பட்ட எங்களை விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்து வருகிறார்கள். எங்கள் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களை விசாரணைக்கு ஆஜராக சொல்லி தொடர் சம்மன் அனுப்புகின்றனர். இதனால் வேலை, படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் கடும் மன உளைச்சலில் இருக்கிறார்கள். “பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம்” என்கிற கதையாக அன்றாடங்காய்ச்சிகளான எங்களின் வாழ்க்கையைச் சிதைக்கும் போலீசாரின் அடக்குமுறையை நாங்கள் எதிர்க்கிறோம். தேர்தலைப் புறக்கணிப்பதாகச் சொல்லி ஊரில் இரண்டு இடங்களில் போர்டு வைத்தவுடனே ஆர்.ஐ-யும், போலீசாரும் வந்து அவற்றை அகற்றச் சொன்னார்கள்.

“ஜனநாயக நாட்டில் அறவழியில் எங்கள் எதிர்ப்பைக் காட்டுகிறோம். அதைத் தடுக்க உங்களுக்கு உரிமையில்லை” என்று பதிலளித்தோம். “உடனே போர்டுகளை அகற்றாவிட்டால் ஊர் மக்கள் அனைவரின் மீதும் எஃப்.ஐ.ஆர். போட்டு உள்ளே தள்ளிவிடுவோம்” என்று மிரட்டினார்கள். “தாராளமாகத் தள்ளுங்கள். 30 குடும்பங்களையும் உள்ளே தள்ளுங்கள்” என்று நாங்கள் சொன்னதும் வேறு வழியில்லாமல் போர்டுகளை மட்டும் கழற்றிக்கொண்டு போய்விட்டார்கள்” என்றனர். தி.மு.க., அ.தி.மு.க. என எந்தவொரு ஓட்டுக் கட்சியையும் மக்கள் கிராமத்திற்குள் அனுமதிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவையில்லாமல் தமிழ்நாட்டில் சாலை வசதி, குடிநீர் வசதி, பள்ளிக்கூடம் போன்ற அடிப்படை வசதிகளை பல ஆண்டுகளாக செய்து தராத அரசுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் எதிராகவும், உயிர்க்கொல்லி ஆலைகளை மூடக்கோரியும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இவற்றில் பல போராட்டங்களில், போராடும் மக்கள் பேச்சுவார்த்தைக்கு வரும் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் “இவ்வளவு நாள் எங்கே போயிருந்தீங்க? இப்போ ஏன் வரீங்க? எங்க கோரிக்கையை நிறைவேற்ற உறுதிக் கொடுக்காம வாக்களிக்க வரமாட்டோம்” என்று கூறி திருப்பி அனுப்பியதை, பொதுத்தன்மையாகக் காண முடிந்தது.

தி.மு.க. அரசின் மக்கள் விரோதக் கொள்கைக்கு எதிராகவும் தங்களது அன்றாட வாழ்வாதார பிரச்சினைகள் மீதான பாராமுகத்திற்கு எதிராகவும் தமிழ்நாட்டில் நடந்த தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்களானது, “பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவைக் காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்” என பா.ஜ.க-விற்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்திக் கொண்ட தி.மு.க. அரசின் இயல்பைத் திரைகிழித்துக் காட்டியது.

வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்கள்:

வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை, அசாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, திரிபுரா, மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம் மற்றும் சிக்கிம் ஆகிய எட்டு மாநிலங்களில் மொத்தமாக 3 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்தியாவில், 1961-ஆம் ஆண்டு முதல் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு நடந்த மாநிலங்களில் வடகிழக்கு மாநிலங்கள்தான் அதிகம். ஆனால், இத்தேர்தலில் வழக்கத்திற்கு மாறாக வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்கள் நடந்தன. வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் வரலாற்றில் இது புதியபோக்கு என பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில் பழங்குடி மக்கள் மீது தொடுக்கப்பட்டு வரும் ஒடுக்குமுறைகளே இதற்கு முதன்மைக் காரணமாகும்.

கடந்த ஆண்டு மே மாதம் குக்கி பழங்குடியின மக்கள் மீது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை இன்றளவும் தொடரும் நிலையில், பெரும்பான்மையான குக்கி-சோ-ஹமர் பழங்குடியின அமைப்புகள் தேர்தலைப் புறக்கணித்தன. இது குறித்து பேசிய “குக்கி தேசிய சட்டமன்றம்” என்ற அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மங்போய் ஹாக்கிப், “சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கும் எதிர்கொள்வதற்கும் திறன்கொண்ட இந்தியப் படைகள், பயங்கரவாதிகளிடமிருந்து அப்பாவி குடிமக்களைப் பாதுகாக்கத் தவறியது வருத்தமளிக்கிறது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்ற கூற்றின் மீதும் நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது” என்றார். மக்களின் தேர்தல் புறக்கணிப்பால் சுராசந்த்பூர், காங் போக்பி போன்ற பகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்தது.

“ஒன்றிய அரசும் மாநில அரசும் தோல்வியடைந்துவிட்டன”, “இந்தத் தேர்தல் எங்களுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை” என்பதுதான் தேர்தலைப் புறக்கணித்த மக்களின் பெரும்பான்மை கருத்தாகும். 2019 மக்களவைத் தேர்தலில் 82 சதவிகிதத்துடன் அதிகபட்ச வாக்குகள் பதிவான மாநிலமாகத் திகழ்ந்த மணிப்பூரில், இம்முறை சுவரொட்டிகள், பேனர்கள், மெகா பேரணிகள் என தேர்தல் நடப்பதற்கான எந்த அறிகுறியையும் காண முடியவில்லை. மணிப்பூரில் குக்கி இனத்தைச் சார்ந்தவர்கள் இத்தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. “அமைதி ஏற்படும் வரை, வாக்களிக்க மாட்டோம்” (No peace No Vote) என்பதில் மக்கள் உறுதியாக இருந்தனர்.


படிக்க: பசுவளைய மாநிலங்களில் பாசிஸ்டுகளுக்கு முற்றும் நெருக்கடி!


இதேபோல், நாகாலாந்தில் முதற்கட்டத் தேர்தலின் போது எல்லைப்புற நாகாலாந்து பிரதேசம் (Frontier Nagaland Territory) என்ற கோரிக்கையை முன்வைத்து ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தேர்தலைப் புறக்கணித்தனர். கிழக்கு நாகா மக்கள் அமைப்பு (Eastern Naga People’s Organization) தேர்தல் அன்று முழு கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. எனவே, இந்த ஆறு மாவட்டங்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. சுமார் நான்கு இலட்சம் மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். இந்தத் தேர்தல் புறக்கணிப்பால் நாகாலாந்து தொகுதியில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 82.91 சதவிகிதமாக இருந்த வாக்குப்பதிவு விகிதம், இம்முறை 57.72 சதவிகிதமாகக் குறைந்தது.

இதேபோல் திரிபுராவில், ஆறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து தராத அரசைக் கண்டித்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இம்மாநிலத்தில் சுமார் 1,700 பேர் வாக்களிக்காமல் இந்தத் தேர்தலைப் புறக்கணித்தனர். இந்தத் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட ஒருவர், “அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தேர்தலுக்கு முன்னர் மட்டுமே எங்களைச் சந்திப்பார்கள். ஏமாற்றுத்தனமான வாக்குறுதிகளை அளிப்பார்கள். ஆனால், தேர்தலுக்குப் பிறகு எல்லாம் காணாமல் போய்விடும். கடந்த பல தசாப்தங்களாக நாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். நாங்கள் அரசாங்கத்திற்கு வரி செலுத்துகிறோம். எனவே அரசாங்கத்திடம் இருந்து அடிப்படை வசதிகளை பெறுவது எங்களது அடிப்படை உரிமை. பிறகு ஏன் நாங்கள் மட்டும் பல ஆண்டுகளாக மின்சாரம், குடிநீர், சாலை வசதி இல்லாமல் வறுமையில் வாழ வேண்டும்? இது “சப்கா சாத், சப்கா விகாஸ்” (எல்லாருக்கும் எல்லாவற்றையும் கிடைக்கச் செய்தோம்) என்பதற்கே முரணாக உள்ளது. எனவே, எங்களின் சமூகப் பிரச்சினைகளில் அரசு கவனம் செலுத்தும் வரை நாங்கள் நிர்வாகத்துடன் ஒத்துழைக்க மாட்டோம்” என்றார்.

மக்களின் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்கள் உணர்த்துவது என்ன?

போராடினால்தான் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வைக்க முடியும் என்பதை மக்கள் உணர்ந்து வருகின்றனர் என்பதையே தேர்தல் புறக்கணிப்பு போராட்டங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அப்படியெனில், மக்கள் தேர்தல் மீது நம்பிக்கையை இழந்துவிட்டார்களா? என்றால், உண்மையில் மக்கள் தேர்தல் மீது நம்பிக்கை வைத்து வாக்களிப்பதில்லை என்பதே எதார்த்தமாக உள்ளது. அதாவது, “தேர்தல் ஜனநாயகம்” என்பது மக்களுக்கான உரிமைகளை பெறுவதற்கானது என்ற மாயை சில குட்டிமுதலாளித்துவப் பிரிவினரைத் தாண்டி பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்குக் கிடையாது. மாறாக, அந்தந்தக் காலகட்டத்தில் தங்களது உடனடி வர்க்க நலன்களையும் சில சலுகைகளையும் பெறும் நோக்கத்தில் தேர்தலில் பங்கேற்கின்றனர். மேலும், ஓட்டுக் கட்சிகளின் பிழைப்புவாத, கவர்ச்சிவாத அரசியலின் விளைவாக சாதி, மதம், பணம் போன்ற காரணிகளை மையப்படுத்தியும் மக்கள் தேர்தலை அணுகுகிறார்கள்.

இன்னும் கணிசமான மக்கள் தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று ஆளும் வர்க்கத்தால் கட்டமைக்கப்பட்ட மனநிலை காரணமாக, தேர்தல் பங்கேற்பு என்பதைக் காலங்காலமாக செய்ய வேண்டிய கடமையாக, ஒரு சடங்காகக் கருதுகிறார்கள். சான்றாக, 1953-ஆம் ஆண்டு அம்பேத்கரிடம் எடுக்கப்பட்ட ஒரு நேர்காணலை, பி.பி.சி. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. “இந்தியாவில் ஏன் ஜனநாயகம் செயல்படாது?” என்று தலைப்பிடப்பட்டிருந்த அக்காணொளியில் அம்பேத்கர் நாட்டில் நிலவும் போலி ஜனநாயகக் கட்டமைப்பையும், தேர்தல் முறையின் வரம்பையும் அம்பலப்படுத்துகிறார்.

“தேர்தலைப் பொறுத்தவரை, வாக்கெடுப்பு அரசாங்கத்தை மாற்றுவதற்கானது என்ற உணர்வு மக்களுக்குக் கிடையாது; நமது தேர்தல் முறையும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க மக்களை அனுமதிப்பதில்லை; குறிப்பிட்ட சின்னத்துக்கு ஓட்டுப் போடுவதற்குத்தான் கட்சிகள், மக்களைப் பழக்கப்படுத்தியுள்ளனர். தேர்தல்களைவிட தங்கள் அடிப்படைத் தேவைகள் குறித்துதான் மக்கள் அதிகம் கவலை கொள்கிறார்கள்” என்று கூறுகிறார். மேலும், “நமது நாடாளுமன்ற முறையுடன் முற்றிலும் ஒத்திசைந்து செல்லாத சமூகக் கட்டமைப்பை நாம் பெற்றிருக்கிறோம். எனவே, இந்தியாவில் ஜனநாயகம் செயல்படாது” என்றும் கூறுகிறார்.

எனவே இங்கு நடக்கும் தேர்தல் மக்களுக்கானது கிடையாது; மக்களும் இந்தத் தேர்தலை ஜனநாயகத்துடன் தொடர்புபடுத்தி பார்ப்பதில்லை. மாறாக, தேர்தல் தங்களுக்கு வேறொரு வகையில் பயனளிக்கிறது என்ற அடிப்படையில்தான் பெரும்பான்மையாக மக்கள் தேர்தலில் பங்கேற்கின்றனர். இந்த பார்வையில் இருந்துதான் மக்கள் தேர்தல் புறக்கணிப்பிலும் ஈடுபடுகிறார்கள். அரசை நிர்பந்தித்து தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக தேர்தல் புறக்கணிப்பை ஒரு போராட்ட வடிவமாக கையிலெடுக்கின்றனர். அதனால்தான் சில இடங்களில் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மக்கள் வாக்களிக்கச் செல்கிறார்கள்.

ஆனால், இம்முறை நடந்த தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்கள் பலவற்றில் மக்கள் இறுதிவரை வாக்களிக்க செல்லாமல் இருந்ததையும், ஓட்டுக் கட்சிகளை சேர்ந்தவர்களை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்ததையும் பார்க்க முடிந்தது. சான்றாக, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத பா.ஜ.க. கும்பலை ஊருக்குள் நுழையவே விடாமல் விவசாயிகள் அடித்து விரட்டினர். இந்த நிகழ்வுகள் அனைத்தும், போராடினால்தான் தங்கள் கோரிக்கைளை நிறைவேற்ற முடியும் என்ற உணர்வை மக்கள் பெற்று வருகிறார்கள் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் பலர் மக்கள் கோரிக்கைகளைக் கைவிட்டுவிட்டு, ஆளும் வர்க்கக் கட்சிகளிடம் சரணடைந்து வரும் சூழலில், பாசிசத்தை வீழ்த்துவதை நோக்கி முன்னேற, மக்களின் இந்தப் போராட்ட உணர்வை நாம் வளர்த்தெடுப்பதும், மக்கள் எழுச்சிகளைக் கட்டியமைப்பதுமே முதன்மைத் தேவைகளாக உள்ளன.


மதி

(புதிய ஜனநாயகம் – ஜுன் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்; தமிழ்நாடு அரசே முதல் குற்றவாளி!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்;
தமிழ்நாடு அரசே முதல் குற்றவாளி!

உயிர்ப்பலிகளுக்கு காரணமான மதுவிலக்குத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட குற்றவாளிகள் அனைவரையும்
உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்!

20.06.2024

கண்டன அறிக்கை

ள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த பலருக்கும் வாந்தி, வயிற்று வலி, வயிற்றெரிச்சல் ஏற்பட்ட நிலையில் அடுத்தடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அதில் தற்போது வரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 90க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் எத்தனை பேர் இறந்து போவார்களோ என்ற அச்சம் நம்மை பிடித்து ஆட்டுகிறது.

விஷச்சாராய உயிர்ப்பலிகள் ஒவ்வொன்றாக நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, தமிழ்நாடு அரசு மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்தும் மாவட்டக் கண்காணிப்பாளர், டிஎஸ்பி உள்ளிட்ட பலரை பணியிடை நீக்கமும் செய்துள்ளது. இது ஒரு கண்துடைப்பு நாடகம் என்று மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

மதுவிலக்கு துறை அமைச்சர் முதல் மாவட்ட ஆட்சியர் மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளே இந்த படுகொலைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதுடன் அவர்கள் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து அந்தப் பணத்தையே உதவித் தொகையாக தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம், போதை மருந்துகளும் ஆறாக ஓடிக்கொண்டு தான் இருக்கின்றன. இதெல்லாம் தமிழ்நாடு போலீசுக்கும் அரசுக்கும் தெரியாதா?

காவல் நிலையம், நீதி மன்றத்தின் அருகிலேயே இந்த விற்பனை நடைபெற்று இருக்கிறது. போலீசும் உளவுத்துறையும் என்ன செய்து கொண்டிருந்தது என்ற கேள்விக்கு பதில் கூற வேண்டியது முதலமைச்சரின் பொறுப்பு.

உயிர்ப்பலிகள் நடந்தவுடன் அதை மூடி மறைப்பதற்கு இடமாற்றமும் பணியிடை நீக்கமும் தீர்வா என்ன?

கள்ளச்சாராயம், போதை பொருட்கள், டாஸ்மாக் கள்ளச் சந்தை விற்பனை ஆகியவை அரசின் ஒத்துழைப்போடுதான் நடைபெற்று வருகின்றன.

மக்களுடைய அடிப்படை பிரச்சனைகளுக்காகவும் அரசியல் பிரச்சனைகளுக்காகவும் போராடுவோர் மீது கடும் அடக்கு முறையை ஏவும் தமிழ்நாடு போலீசு, ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் போன்ற அடிப்படை ஜனநாயாக உரிமை கூட நிறைவேற்ற விடாமல் தடுக்கும் தமிழ்நாடு போலீசு, மக்களுக்காக போராடுவோர் பின்னே சென்று அவர்களுக்கு வீடு கொடுக்க விடாமலும் வேலை செய்யும் இடங்களில் மிரட்டியும் தன்னுடைய சேவையை செய்யும் இந்த தமிழ்நாடு போலீசுக்குத் தெரியாமல் தான் விசச்சாராய விற்பனை நடந்திருக்கிறது என்பதை நம்ப முடிகிறதா என்ன?

ஆக, கள்ளக்குறிச்சி விசச்சாராய விற்பனை – உயிர்ப் பலியில் திமுக அரசே முதல் குற்றவாளி. அதை மூடி மறைக்கும் நாடகங்களை நிறுத்த வேண்டும்.

கள்ளச்சாராயம் மற்றும் போதை விற்பனையில் தொடர்புடைய அனைத்து போலீஸ் அதிகாரிகளும் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மீண்டும் பாசிச பா.ஜ.க. ஆட்சி: என்ன செய்யப் போகிறோம்? | காணொளி

மீண்டும் பாசிச பா.ஜ.க. ஆட்சி: என்ன செய்யப் போகிறோம்?

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பசுவளைய மாநிலங்களில் பாசிஸ்டுகளுக்கு முற்றும் நெருக்கடி!

நாடு முழுவதும் மோடி அரசுக்கு எதிராக அடுத்தடுத்து நடைபெற்ற மக்கள் போராட்டங்களால் அரசியல் அரங்கில் ஏற்கெனவே தோல்வி முகத்திற்கு தள்ளப்பட்டுள்ள பாசிச மோடி கும்பல், பசுவளைய மாநிலங்களில் தீவிரமடையும் மக்கள் போராட்டங்களால் தற்பொழுது நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. ‘இந்துத்துவத்தின் இதயம்’, ‘காவி பாசிஸ்டுகளின் கோட்டை’ என்றெல்லாம் சங்கிகள் பீற்றிக்கொள்ளும் இப்பசுவளைய மாநிலங்கள்தான் 2014, 2019 என அடுத்தடுத்து மோடி கும்பலின் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அடித்தளமாக இருந்தன. தற்போதைய தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. பாசிஸ்டுகளின் வெற்றிக்கு அடித்தளமாக இருந்த இம்மாநிலங்களின் ஜாட், மராத்தா, ராஜ்புத் ஆகிய ஆதிக்கச் சாதி மக்களிடையே, பா.ஜ.க. எதிர்ப்புப் போராட்டமும், மனநிலையும் உருவாகியிருப்பது பாசிசக் கும்பலை கதிகலங்கச் செய்துள்ளது.

நாடு முழுவதுமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 272 தொகுதிகளில் வெற்றிபெற்றால் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, ஜார்கண்ட், உத்தராகண்ட், பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட எட்டு பசு வளைய மாநிலங்களில் மட்டும் மொத்தமாக 214 தொகுதிகள் உள்ளன. கடந்த காலங்களில், இம்மாநிலங்களில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம்தான் தனது வெற்றியை பா.ஜ.க. உறுதி செய்துவந்தது. தற்போது இம்மாநிலங்களில் பா.ஜ.க-விற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியால், தேர்தலின் தொடக்கத்தில், “400 இடங்களைப் பெறுவோம்” என முழங்கிய மோடி-ஷா கும்பல் தற்பொழுது அது குறித்து வாய்திறக்க முடியாத பரிதாபகர நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கரை ஒதுங்கிய ‘மோடி அலை’

கடந்த 2014 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் முறையே ‘வளர்ச்சி நாயகன்’, புல்வாமா மற்றும் பாலகோட் தாக்குதல்களை நடத்திய “56” இன்ச் மார்பு கொண்ட மோடி என ஊதிப்பெருக்கப்பட்ட மோடி பிம்பத்தைக் கொண்டுதான் தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்றது பாசிசக் கும்பல். தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில், மோடியின் மீதான அத்தகைய மாய அலைகள் எல்லாம் கரை ஒதுங்கிவிட்டன. மக்களும் பாசிசக் கும்பலின் பொய்ப்பிரச்சாரங்களை நம்பத் தயாராயில்லை.

இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் பத்திரிகையாளர்கள் “எந்த அலையும் இல்லாததே கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களுக்கும் இந்த தேர்தலுக்கும் இருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசம். இத்தேர்தலில் மோடி அலை, என்.டி.ஏ. அலை, இந்தியா கூட்டணி அலை, ராமன் அலை என எந்த அலையையும் காண முடியவில்லை” என்கின்றனர். இந்நிலையானது பாசிசக் கும்பலுக்கு ஏற்பட்டுள்ள முக்கியமான நெருக்கடியாகும்.

தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ராமன் கோவிலைத் திறப்பதன் மூலம் நாடு முழுவதும் இந்துமதவெறியைத் தூண்டிவிட முடியும் என்று கணக்குப் போட்டது மோடி-ஷா கும்பல். அதற்காகவே கட்டிமுடிக்கப்படாத ராமன் கோவிலை அவசர அவசரமாக கடந்த ஜனவரி மாதம் திறப்பதாக அறிவித்தது. கட்டிமுடிக்கப்படாத கோவிலைத் திறப்பதும், பார்ப்பனரல்லாத மோடி குழந்தை ராமன் சிலையை நிறுவுவதும் ஆகமத்திற்கும், சனாதனத்திற்கும் எதிரானது என சங்கராச்சாரியார்கள் எதிர்த்தனர். அவர்களது எதிர்ப்பையெல்லாம் கண்டுகொள்ளாத மோடி-ஷா கும்பல், அறிவித்ததுபோலவே ஜனவரி 22-ஆம் தேதி ராமன் கோயில் திறப்பை பிரம்மாண்டமாக நடத்தியது. ஆனால், மோடி-ஷா கும்பல் உருவாக்க எத்தனித்த ராமன் அலை ஒரு மாதத்திற்கு கூட மக்கள் மத்தியில் தாக்கம் செலுத்தவில்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் மட்டுமின்றி பசு வளைய மாநிலங்களிலும் ராமன் கோவிலை சீண்டுவதற்கு ஆள் இல்லை.


படிக்க: ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க வளர அடித்தளமிடும் கவர்ச்சிவாத-மிதவாத இந்துத்துவ அரசியல்!


ஒருபுறம் மீண்டும் மோடி அலையை உருவாக்க முடியாமல் பாசிசக் கும்பல் தோற்றுப்போனது, மறுபுறம் இந்தத் தேர்தலில் புல்வாமா தாக்குதலைப் போல தேசவெறியை கிளம்புவதற்கு நாடுதழுவிய பேசுபொருளை பாசிசக் கும்பலால் உருவாக்க முடியவில்லை. காஷ்மீரில் விமானப்படை வாகனத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடந்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகள், சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளை படுகொலை செய்ய அம்மாநில பா.ஜ.க. அரசு நடத்திய போலி மோதல் கொலை ஆகியவற்றை அமித்ஷாவே முன்னின்று ஊதிப்பெருக்கியதெல்லாம் அதற்கான முயற்சிகளே. ஆனால், இவையெல்லாம் அம்மாநில எல்லைகளைக் கடந்து வெளியில் தாக்கம் செலுத்தவில்லை.

மேலும், பா.ஜ.க. ஆட்சியின் ‘சாதனை’யாக மார்தட்டிக்கொள்ளும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரமும் இத்தேர்தலில் எடுபடவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது, “நாங்கள் ஒன்றும் காஷ்மீரில் நிலம் வாங்கவில்லையே” என்றுக் கூறி பா.ஜ.க.வின் முகத்தில் அறைந்திருக்கின்றனர், மீரட் பகுதி மக்கள். உக்ரைனில் போரை நிறுத்தியதாக மோடி கும்பலால் பரப்பப்பட்ட பொய் காணொளிக்கு, எந்த போரை நிறுத்தினார் மோடி?, முதலில் மணிப்பூர் போரை நிறுத்த சொல்லுங்கள் என்று பதிலடி கொடுத்திருக்கின்றனர் மக்கள். இவ்வாறு பாசிசக் கும்பலால் அடுத்தடுத்து தொடுக்கப்பட்ட அத்தனை அஸ்திரங்களையும் மக்கள் தவிடுபொடியாக்கினர்.

எனவே, தனது ‘வளர்ச்சி நாயகன்’, ‘தேசிய நாயகன்’ அரிதாரங்களையெல்லாம் கலைத்துவிட்டு அப்பட்டமான இந்துமதவெறியைக் கையிலெடுத்தார் மோடி. மேடை தோறும், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் பொய்யான வெறுப்புப் பிரச்சாரத்தைக் கக்கினார். நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி கட்டத்திலோ, “தான் உயிரியலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை, தான் கடவுளின் அவதாரம்” என்று அண்டப் புளுகை அவிழ்த்துவிட்டார் மோடி. மோடி கும்பலின் அஸ்திரங்கள் செல்லாக்காசாகிப் போனதோடு, பா.ஜ.க. ஆதரவாளர்கள் மத்தியிலேயே எதிர்ப்பையும் சம்பாதித்தது.

நாடு தழுவிய அளவில் ஒற்றை விவாதப்பொருளை உருவாக்க முடியாமல் பாசிசக் கும்பல் தோற்றுப்போனது ஏதோ தன்னியல்பாக நடந்தது அல்ல. தனது ஆட்சிக்காலத்தில் நாட்டு மக்கள் மீது நடத்திய பொருளாதாரத் தாக்குதலால் பசுவளைய மாநிலங்களிலும் மோடி மீதான அதிருப்தி உருவாகியிருக்கிறது. விலைவாசி உயர்வு, வேலையின்மை, அரசு வேலைகளுக்கான வினாத்தாள் கசிவு, அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான இளைஞர்களின் போராட்டம், விவசாய நெருக்கடி, மணிப்பூர் கலவரம், லடாக் பிராந்தியத்திற்கான மாநில அந்தஸ்து போராட்டம் போன்றவையே ஒற்றைப் பேசுபொருளை உருவாக்கவதற்காக பாசிசக் கும்பல் மேற்கொண்ட முயற்சிகளை தோற்கடித்துள்ளன.

இவையன்றி, பா.ஜ.க.வில் மோடி-அமித் ஷா கும்பலின் அசுர வளர்ச்சிக்காக அந்தந்த மாநிலங்களின் பா.ஜ.க-வின் முகமாக அறியப்பட்ட வசுந்தர ராஜே, சிவராஜ் சிங் உள்ளிட்ட உள்ளூர் தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டதால், அந்தந்த மாநிலம் மற்றும் தொகுதிகளுக்கே உரிய பிரத்யேகமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் திணறி வருகிறது பா.ஜ.க.

இக்காரணத்தால் உள்ளூர் பிரச்சினைகளுக்குக் கூட மோடி மட்டுமே முகங்கொடுக்க வேண்டியிருக்கிறது.  “ஒரு டி20 போட்டியில் அனைத்து ஓவர்களுக்கும் பந்து வீசும்படி ஜஸ்பிரித் பும்ரா கேட்கப்படுவது போல மோடியின் நிலை உள்ளது” என்று மட்டைப்பந்து விளையாட்டுடன் ஒப்பிட்டு நக்கலடிக்கின்றனர் பத்திரிகையாளர்கள்.

வாக்குப்பதிவு சரிவு, கலையும் பாசிஸ்டுகளின் கனவு

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலின் தொடக்கம் முதலே வாக்குப்பதிவு குறையத் தொடங்கியது. அடுத்தடுத்தக் கட்டத் தேர்தல்களில் வாக்கு விகிதத்தை அதிகரிப்பதற்கு அரசியல் கட்சிகளால் எடுக்கப்பட்ட முயற்சிகளும் வீணாகின. நாட்டின் பிற மாநிலங்களைக் காட்டிலும், பல்வேறு இந்துராஷ்டிர சட்டத்திட்டங்களாலும் மக்கள் விரோத ஆட்சியினாலும் பாதிக்கப்பட்டுள்ள பா.ஜ.க. ஆளும் பசுவளைய மாநிலங்களில்தான் அதிகளவில் வாக்குப்பதிவு குறைந்திருக்கிறது.

உ.பி-இல் நடைபெற்ற ஆறாம் கட்டத் தேர்தலில் வெறும் 54 சதவிகித வாக்குகளே பதிவாகின. இக்கட்டத்தில், மிகவும் குறைவான வாக்குகள் பதிவான மாநிலங்களின் பட்டியலில் காஷ்மீருக்கு அடுத்து உத்தரப்பிரதேசம்தான் இருக்கிறது. மேலும், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் இம்முறை 5 முதல் 8 சதவிகிதம் வரையிலான வாக்குப்பதிவு விகிதம் குறைந்துள்ளது.

இம்மாநிலங்களில், வாக்குப்பதிவு குறைவதில் இளைஞர்களின் வாக்கு முக்கிய பங்கு வகிக்கிறது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களில் மோடியை ஆட்சிக்கு கொண்டு வந்ததற்கு இளைஞர்கள் மற்றும் முதன்முறை வாக்காளர்களின் வாக்குகள்தான் முக்கிய பங்கு வகித்தன. ஆனால், இத்தேர்தலில் முதன்முறை வாக்காளர்கள் பலர் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். பலரும் இதனை இளைஞர்களிடம் உள்ள விட்டேத்தி கலாச்சாரம் என்று தட்டையாகக் கருதுகின்றனர். ஆனால், அது முழுமையான உண்மை அல்ல.

இந்த இளைஞர்கள், கடந்த பத்தாண்டுகளில் பாசிச மோடி அரசு அமல்படுத்திய கல்வியை காவி- கார்ப்பரேட்மயமாக்கும் திட்டங்களாலும், மோடியின் கொரோனா பெருந்தொற்று கால பாசிச நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து நாசகரத் திட்டத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள். மேலும், அக்னிபாத் போன்ற திட்டங்களுக்கு எதிராக மூர்க்கமான போராட்டத்தை முன்னெடுத்த இளைஞர்களும், வேலையின்மையால் கடுமையாக பாதிக்கப்பட்ட இளைஞர்களும் இத்தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். தேர்தலில் வாக்களிப்பதால் தங்களது வாழ்க்கை மாறிவிட போவதில்லை என்ற மனநிலை இவ்விளைஞர்கள் மத்தியில் உருவாகி வருவது பாசிசக் கும்பலுக்கு பீதியூட்டுவதாக அமைந்துள்ளது.

மேலும், காவிகளின் கோட்டையாகக் கருதப்படும் இப்பசுவளைய மாநிலங்களில் வாக்குப்பதிவு குறைவதற்கு,  பா.ஜ.க உருவாக்கிய “மோடி தோற்கடிக்க முடியாத தலைவர்” என்ற பிம்பமும் ஒர் காரணமாக அமைந்தது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற பிம்பத்தை உருவாக்கியது பா.ஜ.க. தேர்தல் தேதி அறிவித்த நாளன்று, அடுத்த ஆட்சி அமைந்ததும் முதல் 100 நாட்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அரசு அதிகாரிகளைக் கூட்டி மோடி நடத்திய விவாதம், ஜுன் மாதத்திற்குப் பிறகு நடக்கவிருக்கும் சர்வதேச உச்சி மாநாடுகளில் கலந்துகொள்ள மோடிக்கு விடுக்கப்பட்ட அழைப்பு இவையெல்லாம் மோடி மிகப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைப்பார் என்ற பொய் பிம்பத்தை உருவாக்கியது. இதன் காரணமாக தங்களது வாக்கு தேர்தல் முடிவை மாற்றிவிடப் போவதில்லை என்ற மனநிலை ஏற்பட்டு இஸ்லாமியர்கள் உட்பட பலரும் வாக்களிக்காமல் இருந்துள்ளனர்.

கேலிக்கூத்தாக பாசிசக் கும்பலின் இந்த பொய்ப்பிரச்சாரம் பா.ஜ.க. கட்சியினரிடமே தாக்கம் செலுத்தி பின்விளைவுகளை உருவாக்கியது. பா.ஜ.க. வெற்றி பெறுவது உறுதி என்று நம்பிய கட்சித் தொண்டர்கள், தேர்தல் பிரச்சாரத்திற்கு பெரிதாக அக்கறைக் காட்டவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹரியானாவின் பா.ஜ.க-வின் பிரச்சாரக் குழு உறுப்பினர்களில் ஒருவரான சஞ்சய் சர்மா, “கட்சித் தொண்டர்கள் மற்றும் வாக்காளர்களின் அக்கறையின்மையால் வாக்குப்பதிவு சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது” என்றார்.

இன்னொருபுறம், தேர்தலில் வாக்குவிகிதம் குறைந்ததற்கு பா.ஜ.க. மீதான வெறுப்பு ஒரு காரணமென்றாலும், அதைவிட பா.ஜ.க-வின் அரசியல்-பொருளாதாரத் திட்டங்களுக்கு எதிரான மக்கள் நலனைக் கொண்ட மாற்று அரசியல்-பொருளாதாரத் திட்டங்களை முன்வைத்து, போராடும் மக்களுக்குத் தலைமை தாங்குவதற்கு எதிர்க்கட்சிகள் தயாராக இல்லாததுதான் முதன்மை  காரணமாகும்.

இந்துராஷ்டிரத்தின் வே(சோ)தனைச்சாலை

பசுவளைய மாநிலங்களில் ஒன்றாகவும், இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாகவும் உள்ள உத்தரப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு குறைந்ததற்கு, மோடி-யோகி கும்பல் நடைமுறைப்படுத்திய இந்துராஷ்டிரத் திட்டங்களே, அதிலும் குறிப்பாக ராமன் கோயில் திறப்பே முக்கிய காரணமாகும். உண்மையில், ராமன் கோயில் திறப்பானது மோடிக்கு பலனளிக்கவில்லை என்பதைவிட, எதிர்விளைவுகளை உருவாக்கியிருக்கிறது.

அயோத்தியில் ராமன் கோவில் திறப்பதானது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பலின் இந்துத்துவத் திட்டங்களில் ஒன்று என்றாலும், ராமாயண இடங்களுக்கான சுற்றுலாத் தளமாக மாற்றுவது என்ற கார்ப்பரேட் நலனை உள்ளடக்கியதாகும். இந்த ராமன் கோவில் திறப்பு என்பது பக்திக்கானது அல்ல, பாசிசக் கும்பல் கொள்ளையடிப்பதற்கான ஏற்பாடு என்று குறுகிய காலத்திலேயே அம்பலமானது.

அயோத்தியை உலகிலேயே மிகப்பெரிய சுற்றுலா தளமாக மாற்றுவது என்ற திட்டத்தில் அயோத்தியைச் சுற்றி பல வணிகரீதியான திட்டங்களும், மறுகட்டமைப்புத் திட்டங்களும் பாசிசக் கும்பலால் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக அயோத்தியில் உள்ள வரலாற்றுச் சின்னங்களான பழங்காலக் கோவில்களும், விளைநிலங்களும், சிறுகடைகளும் அழிக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதிகளில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவந்த மக்களது வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு அகதிகளாகத் துரத்தியடிக்கப்படுகின்றனர்.

அயோத்தியின் கிராமப்புற மக்களிடையே, பா.ஜ.க. அரசால் தங்களது நிலம் எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படலாம் என்ற அச்சவுணர்வு மேலோங்கியுள்ளது. கடந்த காலங்களில் பா.ஜ.க-விற்கு வாக்குவங்கியாக இருந்த இம்மக்கள்தான் தற்பொழுது பா.ஜ.க-விற்கு எதிராக திரும்பியுள்ளனர்.


படிக்க: 2024 தேர்தல் முடிவுகள்: மக்கள் போராட்டங்களால் பாசிசத்தை வேரறுப்போம்!


அயோத்தியாவில் மட்டுமின்றி உத்தரப்பிரதேசம் முழுவதுமுள்ள விவசாய மக்களிடம் பா.ஜ.க. அரசின் மீது அதிருப்தி உருவாகியுள்ளது. யூரியாவின் கடுமையான விலையேற்றம், கரும்புக்கான அரசு நிர்ணயித்த விலை கடந்த ஏழு ஆண்டுகளில் ஒரு குவிண்டாலுக்கு ரூ.45 மட்டுமே அதிகரித்திருப்பது ஆகியவை விவசாய மக்களிடம் ஆளும் பா.ஜ.க-விற்கு எதிரான மனநிலையை உருவாக்கியிருக்கிறது. இதன் விளைவாக மேற்கு உத்தரப்பிரதேசத்தில் லோதி ராஜ்புத்கள், குர்மிகள், குஷ்வாஹாக்கள் மற்றும் சைனிகள் போன்ற இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த விவசாயிகள் பா.ஜ.க-வில் இருந்து விலகிச் சென்றுள்ளனர்.

மோடி அரசு அமல்படுத்திய காவி-கார்ப்பரேட்மயத் திட்டங்களால் இந்துராஷ்டிர சோதனைச்சாலையாக இருந்த உ.பி. தற்பொழுது பா.ஜ.க-விற்கு வேதனையாக மாறியிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தைப் போலவே பீகாரில் பா.ஜ.க. கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ளது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 39 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால், தற்பொழுது பீகாரில், பா.ஜ.க. வெற்றி பெறுவது சவாலானது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

இதற்குக் காரணம் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக வெடித்த இளைஞர்களின் போராட்டமும், வேலையின்மையால் ஏற்பட்ட பா.ஜ.க. எதிர்ப்பு மனநிலையும், நிதிஷ்குமாருடன் பா.ஜ.க. அமைத்த கூட்டணியுமாகும். இந்தியா கூட்டணியில் இருந்த ஒருங்கிணைந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமாரை திட்டமிட்டு அக்கூட்டணியிலிருந்து கழற்றியது பா.ஜ.க. இது பா.ஜ.க-விற்கு பீகாரில் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டதாக மாறியிருக்கிறது எனலாம். பீகாரில் நிதிஷ்குமார் மீது மக்களுக்கிருந்த அதிருப்தியை பா.ஜ.க. அறுவடை செய்து கொண்டது. இதன் காரணமாக நிதிஷ்குமார் கட்சியை பா.ஜ.க. கூட்டணிக்கு கொண்டுவராமல் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் அம்மாநில பா.ஜ.க-வினரிடமே நிலவுகிறது.

இதன் காரணமாக, பீகாரில் கூடுதல் எத்தனங்களை செய்ய வேண்டிய நிலை பா.ஜ.க-விற்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஏழு கட்டத் தேர்தல்களில் பீகாரில் மோடி 15 பேரணிகளையும் ஒரு ரோடுஷோவையும் நடத்தியுள்ளார். ஒரே வாரத்தில் இரண்டு நாட்கள் பீகாரில் தங்கி பிரச்சாரம் செய்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் பா.ஜ.க-வினர் பீகாரில் கட்சியும் பிரதமரும் எவ்வளவு தீவிரம் காட்டுகிறார்கள் என்பதையும் அதேசமயத்தில் நிலைமை சிறப்பாக இல்லை என்பதையும் இது காட்டுகிறது என்று தெரிவிக்கின்றனர்.

பீகாரில் மட்டுமின்றி எந்தெந்த மாநிலங்களிலெல்லாம் கடந்த தேர்தல்களில் பா.ஜ.க. அனைத்து இடங்கள் அல்லது பெரும்பான்மை இடங்களை வென்றதோ அங்குதான் இம்முறை பா.ஜ.க. அதிக நெருக்கடியை சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பல கிராமங்களுக்குள் பா.ஜ.க-வால் நுழைய முடியாத சூழல் உருவாகியுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை முற்றுகையிட்டு போராடி வென்ற விவசாயிகள், தற்போது குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் போராடும் விவசாயிகள் மீது பல்வேறு பாசிச ஒடுக்குமுறைகளை செலுத்தி டெல்லிக்குள் நுழையவிடாமல் ஒடுக்கி வருகிறது மோடி அரசு. இதனையடுத்து விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய விடாத பா.ஜ.க-விற்கு இங்கு வர தடை விதிக்கப்படுகிறது என்று பல கிராமங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன.

ஹரியானாவில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இத்தகைய அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. ஹரியானாவில் மொத்தமுள்ள 10 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஆறாம் கட்டத் தேர்தலான மே 25 அன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் பா.ஜ.க. கும்பலால் தேர்தல் பிரச்சாரத்திற்காக கிராமங்களுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது. போலீசை வைத்து சமாதானம் பேசியும் உறுதியாக நின்ற கிராம மக்கள் பா.ஜ.க-வினரை ஊருக்குள் நுழையவிடாமல் விரட்டியடித்தனர்.

இதேபோல் பஞ்சாப்பின் கிராமங்களிலும் பா.ஜ.க. கும்பலால் நுழைய முடியவில்லை. இதற்கிடையே, தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு செல்வார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மோடிக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்தனர். விவசாயிகளை கண்டு அஞ்சிய மோடி, அவர்களை சிறை, வீட்டுச்சிறையில் அடைப்பது என கொடூரமாக ஒடுக்கிவிட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஆர்.எஸ்.எஸ். – மோடி-ஷா மோதல்

இத்தேர்தலில் மோடி-ஷா பாசிசக் கும்பலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதில் ஆர்.எஸ்.எஸ்-க்கும் மோடி-ஷா கும்பலுக்கிடையிலான அதிகார மோதலும் ஒரு காரணமாக இருக்கிறது. பா.ஜ.க-வில் தங்களுக்கு நிகராக கட்சியில் யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்று சொந்த கட்சிக்குள்ளேயே அடியறுப்பு வேலை பார்த்துவரும் மோடி-அமித்ஷா கும்பல் ஆர்.எஸ்.எஸ்-யையும் விட்டு வைக்கவில்லை. மோகன் பகவத் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் கூட யாரும் தங்களுக்கு நிகராக இருக்கக் கூடாது, அனைத்து அதிகாரமும் தங்களது கைகளிலேயே குவிக்கப்பட வேண்டும் என்று காய் நகர்த்தி வருகிறது. இதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைமையுடன் நெருக்கமாக உள்ளவர்களைத் திட்டமிட்டு ஓரங்கட்டி வருகிறது.

உ.பி. முதல்வரான ரௌடி சாமியார் யோகி ஆதித்யநாத்தைத் தனித்து செயல்பட முடியாதபடி தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது இக்கும்பல். குறிப்பாக, உத்தரப்பிரதேசத்திற்கு எந்த அதிகாரியை நியமிக்க வேண்டும் என்பது கூட நேரடியாக மோடியால் கட்டுப்படுத்தப்படுகிறது. இத்தேர்தலில், தனக்கு விருப்பமான வேட்பாளரைப் பெறுவதற்கே யோகி போராட வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக, மோடியின் விசுவாசிகள் அம்மாநிலத்தில் இணை ஆட்சி நடத்துவதாக ஆதித்யநாத்தின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. உ.பி-இல் பா.ஜ.க-விற்கு எதிராக நடந்த ராஜ்புத் மக்கள் போராட்டத்தில், சிலர் “பா.ஜ.க.வில் ராஜ்புத்திரர்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லை, ராஜ்புத்திரரான யோகி ஓரங்கட்டப்படுகிறார்” என கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

உ.பி. மட்டுமல்லாமல் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் அம்மாநிலத்தின் செல்வாக்குமிக்க பா.ஜ.க. தலைவர்களை டம்மியாக்கி வைத்திருக்கிறது இக்கும்பல். ராஜஸ்தானில் வசுந்தர ராஜே, ம.பி-யில் சிவராஜ் சிங் சௌகான் ஆகியோரை ஓரங்கட்டிவிட்டது. வசுந்தர ராஜேவை முதல்வராக்காததால், தற்போதைய தேர்தலில் தனது மகன் போட்டியிடும் தொகுதியில் மட்டும்தான் பிரச்சாரத்தை மேற்கொண்டார் வசுந்தர ராஜே. பிற தொகுதிகளுக்கான பிரச்சாரத்திற்கு செல்லவில்லை.

மேலும், அமலாக்கத்துறை, ஐ.டி. ரெய்டுகளுக்கு பயந்து பிற கட்சியிலிருந்து பா.ஜ.க-வில் சேர்ந்தவர்களுக்கு தேர்தலில் சீட் வழங்கியிருக்கும் மோடி-ஷா கும்பல், ஆர்.எஸ்.எஸ்-க்கு நெருக்கமான பா.ஜ.க-வினருக்கு சீட் கொடுக்காத கடுப்பில் பல பகுதிகளில் பா.ஜ.க-வினர் பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டவில்லை என செய்திகள் வெளியாகியிருக்கிறது.

இவ்வாறு பிற கட்சிகளிலிருந்து பா.ஜ.க-விற்கு ஆள் சேர்ப்பதன் மூலம் மோடி-ஷா கும்பல் கட்சியை சித்தாந்த பலமின்றி தொளதொளப்பாக மாற்றி வருகிறது என்று ஆர்.எஸ்.எஸ். கருதுகிறது. இக்கருத்தை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நேரடியாகவே வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், அதனை மோடி-ஷா கும்பல் மதிக்காதது ஆர்.எஸ்.எஸ்-யை கடுப்பேற்றியுள்ளது. ஆர்.எஸ்.எஸ்-க்கும் – மோடி-ஷா கும்பலுக்கிடையே நீருப்பூத்த நெருப்பாக இருக்கும் இந்த அதிகார மோதலால் பசுவளைய மாநிலங்களில், இத்தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெறும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பா.ஜ.க. எதிர்ப்பு எதிர்க்கட்சிகள் ஆதரவு

பாசிசக் கும்பலுக்கு இத்துணை நெருக்கடிகள் இருந்தாலும் தாங்கள் உருவாக்கி வைத்திருக்கும் கட்டமைப்பு பலம், பணபலம், அதிகார பலத்தின் மூலம் பல்வேறு மோசடி முறைகேடுகளில் ஈடுபட்டு எப்படியாவது தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறது மோடி-அமித்ஷா கும்பல். முழுக்க முழுக்க அதிகாரப் பலத்தை மட்டுமே நம்பி தேர்தலை எதிர்கொள்கிறது. மக்கள் மத்தியில் பா.ஜ.க-வின் இப்போக்கை அம்பலப்படுத்தி போராட்டத்தை முன்னெடுப்பதற்கு பதிலாக மனு கொடுத்துக் கொண்டிருக்கின்றன எதிர்க்கட்சிகள்.

ஆனால், பெரும்பான்மையான ஜனநாயக சக்திகளும் இந்தியா கூட்டணி ஆதரவாளர்களும் மோடி தலைமையிலான பாசிசக் கும்பல் தேர்தல் களத்தில் நெருக்கடிகளை சந்தித்து வருவதையே இந்தியா கூட்டணிக்கான ஆதரவு என்று தலைகீழாக பரிசீலிக்கின்றனர் அல்லது அவ்வாறு காட்ட முயற்சிக்கின்றனர். இதே நிலைமைதான் ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தலின் போதும் இருந்தது. பாசிசக் கும்பல் தோல்வி முகத்தில் உள்ளது என்பதனாலேயே காங்கிரஸ் வெற்றி பெற்றுவிடும் என்று பலரும் கருதினர். ஆனால், தெலுங்கானா, மிசோரம் தவிர்த்து பசுவளைய மாநிலங்களில் பா.ஜ.க. தான் வெற்றி பெற்றது.

ஏனெனில், பசு வளைய மாநிலங்களில், மோடி-ஷா பாசிசக் கும்பலுக்கு எதிராகப் போராடும் மக்களுக்குத் தலைமை தாங்குவதற்கு எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை.

இந்தியா கூட்டணி, மக்கள் போராட்டங்களில் தலையிட்டு நம்பிக்கை அளிக்காதவரை அவை பா.ஜ.க. எதிர்ப்பு என்ற வரம்பிலேயே நிற்குமே ஒழிய இந்தியா கூட்டணி ஆதரவாக மாறாது.


துலிபா

(புதிய ஜனநாயகம் – ஜுன் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



நெல்லை சி.பி.எம் அலுவலகம் மீது தாக்குதல் | ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய்! | தோழர் செல்வம்

நெல்லை சி.பி.எம் அலுவலகம் மீது தாக்குதல்
ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய்! | தோழர் செல்வம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க வளர அடித்தளமிடும் கவர்ச்சிவாத-மிதவாத இந்துத்துவ அரசியல்!

2024 நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 1-ஆம் தேதி நிறைவடையப் போகிறது. நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கியபோது இருந்த களநிலவரமும் தற்போதைய களநிலவரமும் பெரியளவில் மாறியிருக்கிறது. இந்துத்துவ சித்தாந்தம் செல்வாக்கு செலுத்துகிற பசுவளைய மாநிலங்களில் பா.ஜ.க. கும்பல் சந்தித்துவரும் நெருக்கடிகளானது, இம்மாநிலங்களில் கடந்தமுறை பெற்ற வெற்றியைக் கூட தக்கவைக்க முடியுமா என்ற அச்சத்தை மோடி-அமித்ஷா கும்பலுக்கு உருவாக்கியுள்ளது. ஊதிப் பெருக்கப்பட்ட விஸ்வ குரு பிம்பம், அயோத்தி ராமர் கோயில் திறப்பு, சி.ஏ.ஏ. அமலாக்கம் போன்றவை தேர்தலில் ஓட்டுகளாக மாறும் என்ற பா.ஜ.க.-வின் கணக்கு மக்கள் போராட்டங்களால் பயனளிக்கவில்லை. வேலையின்மை, குறைந்தபட்ச ஆதாரவிலை, அக்னிபாத் திட்டம், இடஒதுக்கீடு கோரிக்கைள் ஆகியவற்றால் வடமாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கைக் குறையும் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஆனால், அதேசமயத்தில் இத்தேர்தலில் கிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் கூடுதல் தொகுதிகளை பெறும் வகையில் பா.ஜ.க. தனது தேர்தல் வியூகத்தை அமைத்துள்ளது. குறிப்பாக, ஒடிசா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கடந்த தேர்தலைக் காட்டிலும் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே, இம்மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவிற்கு பா.ஜ.க. வளர்ந்திருக்கிறது. மேலும், இம்மாநிலங்களை ஆளும் கொள்கைகளற்ற பிழைப்புவாத கட்சிகள் முன்னிறுத்தும் கவர்ச்சிவாத-மிதவாத இந்துத்துவ அரசியலானது, அம்மாநிலங்களை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. காவி கும்பல் சித்தாந்த ரீதியாக வளர்வதற்கான அடிநிலமாக மாற்றி வருகிறது.

பாசிசக் கும்பலுக்கான பாதையை செப்பனிடும் நவீன் பட்நாயக்

சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய இந்திய மாநிலங்களில் ஒன்றுதான் ஒடிசா. அம்மாநிலத்தில் இரண்டில் ஒரு பெண் இரத்தசோகையாலும், மூன்றில் ஒரு குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும் பாதிக்கப்படுமளவிற்கு வறுமை, வேலையின்மை, அடிப்படை வசதிகளின்மை, பசி, பட்டினி கோரத் தாண்டவமாடுகிறது. அதேசமயம், இரும்பு, பாக்சைட், மாங்கனீசு, கிராபைட், டோலோமைட், நிலக்கரி என பல்வேறு கனிம மற்றும் இயற்கை வளங்கள் நிறைந்த மாநிலமாகவும் ஒடிசா திகழ்கிறது.

இம்மாநிலத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் (BJD) ஆட்சியில் இருக்கிறது. தமிழ்நாட்டில் கருணாநிதியைப் போலவே, காப்பீட்டுத் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்கள், மூத்த குடிமக்களுக்கான மாத நிதி ரூ.1000 போன்ற 60 கவர்ச்சிவாதத் திட்டங்களை அமல்படுத்தியிருக்கிறார், நவீன். ஒடிசாவில் பி.ஜ.த. வேட்பாளர்களுக்கு பதிவாகும் ஓட்டுகள் நவீனுக்காக போடப்படுபவையே என்று சொல்லப்படுமளவிற்கு சமூக-பொருளாதார-அரசியல் ரீதியாக பின்தங்கிய கணிசமான ஒடிசா மக்கள் நவீனை ஆதரிக்கின்றனர்.


படிக்க: 2024 தேர்தல் முடிவுகள்: பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கு மாற்றுத் திட்டமும் மக்கள் போராட்டமும் முன்நிபந்தனை!


ஆனால், நவீனின் இந்த கவர்ச்சிவாத அரசியலை எதிர்த்து அரசியல் செய்வதற்கோ, சித்தாந்த ரீதியாக மக்களைத் திரட்டுவதற்கோ அங்குள்ள சி.பி.ஐ., சி.பி.ஐ(எம்) கட்சிகளும், அம்பேத்கரிய இயக்கங்களும் திராணியற்று உள்ளன. மேலும், கிட்டத்தட்ட 23 சதவிகிதம் பழங்குடி மக்களும் 18 சதவிகிதம் தலித் மக்களும் வாழும் ஒடிசாவில் சரியான அரசியலை முன்வைத்து அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய அமைப்புகளும் இல்லை. இந்தப் பின்னணியில்தான் நவீனால் தொடர்ந்து ஐந்து முறை முதலமைச்சராக முடிந்திருக்கிறது.

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன், ஒடிசாவின் சட்டமன்றத் தேர்தலும் ஒருசேர நடைபெற்று வருகிறது. நான்கு கட்டங்களாக நடைபெறும் சட்டமன்ற-நாடாளுமன்றத் தேர்தலில் பிஜூ ஜனதா தளத்திற்கும் பா.ஜ.க-விற்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது. இம்மாநிலத்தில் காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.ஐ(எம்) கட்சிகள் இணைந்து போட்டியிட்டாலும் இக்கூட்டணி களத்தில் இல்லாத நிலைமைதான் இருக்கிறது.

எனவே, தற்போது நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் நவீன் பட்நாயக்-இன் பிஜூ ஜனதா தளமே மீண்டும் வெற்றிபெற்று ஆறாவது முறையாக ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது ஒடிசாவில் கூடுதலான மக்களவைத் தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கின்றன.

கடந்த 2000-ஆம் ஆண்டு, பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்துதான், நவீன் முதன்முறையாக ஒடிசாவின் முதல்வரானார். ஒடிசாவில், 1947 போலி சுதந்திரத்திற்குப் பிறகான காலத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ். வேலை செய்து வந்தாலும், பா.ஜ.க-பி.ஜ.த. கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. வேகமாக வளர்ந்தது.

வடகிழக்கு மாநிலங்களைப் போலவே ஒடிசாவிலும் பழங்குடி மக்களை இந்துமயப்படுத்துவதற்காக விஸ்வ இந்து பரிஷத், வனவாசி கல்யாண் ஆசிரமம், ஓராசிரியர் பள்ளிகள், விவேகானந்தா கேந்திரா போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன. 2007-இல் இராமர்-சேது பாலத்தை இடிக்கக்கூடாது என்று பழங்குடிகளைத் திரட்டி ராம் தனு யாத்திரையை நடத்தியது விஸ்வ இந்து பரிஷத்.

இதன் தொடர்ச்சியாக, தனது பலத்தை பரிசோதிக்கவும் கிறித்துவ பழங்குடி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தவும் நடத்தப்பட்டதுதான் 2008-இல் காவி குண்டர்படையால் கிறித்துவர்கள் மீது நடத்தப்பட்ட கந்தமால் கலவரம். இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்த இக்கலவரத்தில் இந்துமதவெறியர்களால் 600 கிராமங்கள் சூறையாடப்பட்டன, 6000-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன, 300-க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் இடிக்கப்பட்டன, நூற்றுக்கணக்கான கிறித்துவர்கள் கொல்லப்பட்டனர், பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர். ஒடிசாவையே உறைய வைத்த இந்த கலவரத்திற்குப் பிறகான 2009 தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காக பா.ஜ.க-வுடனான 11 ஆண்டுகால கூட்டணியை முறித்துக்கொண்டு தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தார் நவீன் பட்நாயக்.

அதற்கடுத்து 2014-இல் ஒன்றியத்தில் அமைந்த மோடி ஆட்சியானது, இந்தியா முழுவதும், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. காவி கும்பலுக்கான மறுமலர்ச்சிக் காலமாக அமைந்தது. ஒடிசாவிலும், திரிபுரா, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் காவிக் கும்பல் வேகமாக வளர்ந்தது. இதன் தொடர்ச்சியாக தொடர்ந்து மூன்று ஐந்தாண்டுகளுக்கு வலுவான எதிர்க்கட்சி இல்லாமல் ஆட்சி நடத்திவந்த நவீனிற்கு 2019-இல் பா.ஜ.க. எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.

தற்போது நடப்பதை போலவே 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒருசேர நடத்தப்பட்ட ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் முந்தைய தேர்தலைவிட பா.ஜ.க. 13 இடங்கள் கூடுதலாக பெற்று 23 இடங்களை கைப்பற்றியது. அதேபோல், மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் 2014 தேர்தலில் ஒற்றை தொகுதியில் வெற்றிபெற்ற பா.ஜ.க. 2019 தேர்தலில் 8 இடங்களில் வெற்றிபெற்றது. கிட்டத்தட்ட 17 சதவிகிதம் வரை வாக்குவிகிதம் உயர்ந்திருந்தது.

எனவே, பா.ஜ.க-வுடன் போட்டியிட வேண்டுமென்பதற்காக தனது கவர்ச்சிவாத அரசியலுடன் மிதவாத இந்துத்துவ அரசியலையும் முன்னெடுத்தார் நவீன் பட்நாயக். குறிப்பாக 2019-க்குப் பிறகான, தனது ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் பல்வேறு இந்துத்துவ நடவடிக்கைகளையும் கார்ப்பரேட் அரசியலையும் தீவிரமாக மேற்கொண்டார்.

பட்டினி, வளர்ச்சியின்மை, வேலையின்மை, வீடுகள் பற்றாக்குறை, உடல்நலக் குறைபாடுகள், சூழலியல் நெருக்கடிகள் என பல்வேறு சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளில் உழன்று கொண்டிருக்கும் ஒடிசா மக்களுக்காக சமூக-பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யாமல், கிராமப்புறங்களில் உள்ள கோயில்களைப் பாதுகாப்பது- புனரமைப்பது போன்றவற்றில் முதலீடு செய்து கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்தது, நவீன் அரசு.

2018-இல் அறிவிக்கப்பட்ட “நமது கிராமம், நமது மேம்பாடு” என்ற திட்டத்தையே பூசி மெழுகி “நமது ஒடிசா புதிய ஒடிசா” என்ற பெயரில் கவர்ச்சிகரமாக அறிவித்தது ஒடிசா அரசு. கிராமப்புற வழிப்பாட்டுத் தலங்களைப் பாதுகாப்பது, பாரம்பரிய இடங்களைப் பராமரிப்பது, கிராமப்புறக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது என்ற பெயரில் இந்தத் திட்டத்திற்காக மட்டும் ரூ.4000 கோடி வாரியிறைக்கப்பட்டுள்ளது. பவானி பாட்னாவில் உள்ள கால்கண்டி பல்கலைக்கழகத்தின் பெயரை காலகண்டியின் இந்து தெய்வமான மணிகேஸ்வரியின் பெயரால் மாமணிகேஸ்வரி என பெயர் மாற்றியது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

நவீன் முன்னெடுத்த மிதவாத இந்துத்துவ நடவடிக்கையின் உச்சமே ரூ.973 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட பூரி ஜெகன்நாதர் ஆலய மறுகட்டுமானத் திட்டமும் அதன் பிரம்மாண்டத் திறப்பு விழாவுமாகும். மோடியின் 3.0 ஆட்சிக்கும் இந்துராஷ்டிரத்திற்குமான அடித்தளத்திற்கும் அயோத்தியில் ராமன் கோயில் திறப்பை பா.ஜ.க. கும்பல் அரங்கேற்றியது என்றால், பூரி ஜெகன்நாதர் ஆலயத் திறப்பு நவீனின் 6.0 ஆட்சிக்கான அடித்தளம் எனலாம். மேலும், மோடியின் இராமர் கோயில் திறப்பிற்கு 5 நாட்களுக்கு முன்பாக பூரி ஜெகன்நாதர் கோயில் திறக்கப்பட்டது.

இந்த ஜெகன்நாதர் கோயில் திறப்பை பிரம்மாண்டமாக நடத்திய நவீன் அரசு, கோவில் திறப்பில் மக்களை பங்கேற்க வைப்பதை திட்டமிட்டு மேற்கொண்டது. இதற்காக, ராம ஜென்ம பூமி இயக்கத்தின் போது, உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோயில் கட்டுமானத்திற்காக ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு செங்கல் தர வேண்டும் என்று காவி கும்பல் கையாண்ட வழிமுறையைப் போல, ஜெகன்நாதர் கோயில் திறப்பின் போது, ஒடிசாவின் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வெற்றிலை பாக்கையும் கைப்பிடி அளவு அரிசியையும் திரட்டியது நவீன் அரசு. மேலும், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் “ஜெய் ஸ்ரீ ராம்” முழக்கத்திற்கு எதிராக “ஜெய் ஜெகன்நாத்” முழக்கத்தை முன்னிறுத்தினார் நவீன். ஆனால், அந்த “பூரி ஜெகன்நாதரே மோடியின் பக்தர்தான்” “ஜெகன்நாதர் கோவிலுக்கு ஆபத்து” என ஜெகன்நாதர் கோவிலையே தனது தேர்தலுக்கான ஆயுதமாகப் பயன்படுத்தியது பா.ஜ.க. கும்பல்.

மேலும், ஒடிசா தேர்தலையொட்டி, மே 10 அன்று பி.ஜ.த. வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், புகழ்பெற்ற ஆளுமைகளின் பெயரில் 100 பாரம்பரிய பள்ளிகள் உருவாக்குதல், மாநிலம் முழுவதும் உள்ள பகபத் டுங்கி (Bhagabata Tungi) (கிராமப்புறங்களில் மதம், புனித நூல்கள், கலாச்சாரம் குறித்து உரையாடுவதற்கான சிறுகுடிசை) மேம்படுத்துவதற்கான நிதியை வழங்குவது, பாரம்பரிய இடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பதற்கான பாரம்பரிய மேம்பாட்டு நிதியாக ரூ.1000 கோடி உருவாக்குவது போன்றவற்றை வாக்குறுதிகளாக அளித்திருக்கிறது. ஏற்கெனவே நாடு முழுவதும் உள்ள 7,200 பகபத் டுங்கிகளை சீரமைப்பதற்காக ஒவ்வொரு டுங்கிக்கும் ரூ.50,000 நிதயுதவி அளிப்பதாக நவீன் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


படிக்க: 2024 தேர்தல் முடிவுகள்: மக்கள் போராட்டங்களால் பாசிசத்தை வேரறுப்போம்!


பா.ஜ.க-விற்கு போட்டியாக, ஒடிசாவின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் மேம்படுத்துவதாக நவீன் அரசு முன்னெடுத்திருக்கும் இந்நடவடிக்கைகளானது அப்பட்டமான கவர்ச்சிவாத-மிதவாத இந்துத்துவ அரசியலாகும். இந்த கவர்ச்சிவாத-இந்துத்துவ அரசியலானது, ஏற்கெனவே வறுமை, பசி, பட்டினி, வேலையின்மை, அடிப்படை வசதிகளின்றி அல்லலுறும் மக்களின் ஜனநாயக-அரசியல் உணர்வை மழுங்கடித்து மதப் பிற்போக்கில் அழுத்துவதும், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் இந்துமதவெறி அரசியலை நோக்கித் தள்ளுவதுமாகும். இவ்வாறு மக்களை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் இந்துத்துவ மதவெறி அரசியலை நோக்கித் தள்ளுவதன் மூலம் ஒடிசாவில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் இந்துத்துவ மதவெறி அரசியல் செழித்து வளர்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது நவீன் அரசு.

நவீனின் மிதவாத இந்துத்துவ நடவடிக்கைகளால், மக்கள் மட்டுமல்ல, பி.ஜ.த. கட்சியினரும், அதன் அணிகளுமே பா.ஜ.க-விற்கு பலியாகியிருக்கின்றனர். இதுவரை பி.ஜ.த-வைச் சார்ந்த ஆறு சட்டப்பேரவை உறுப்பினர்களும், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பா.ஜ.க-விற்கு தாவியிருக்கின்றனர்.

ஒடிசாவில் அனுமன் ஜெயந்தி கொண்டாடத் தொடங்கியது முதல் சம்பல்பூர், பலாசூர் என பல இடங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்கள் இந்துமதவெறிக் கும்பலால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளன. 2023-ஆம் ஆண்டு சம்பல்பூரில் நடத்தப்பட்ட கலவரத்திற்குப் பிறகு, ஒடிசாவின் ஜெகன்நாத பண்பாட்டில் அனுமன் பணத்திற்கான கடவுளாக வழிபடப்பட்டிருந்தாலும், தற்போது திடீரென அனுமனும், அனுமன் படம் பொறித்த கொடிகளும் பி.ஜ.த. கட்சி இளைஞர்களிடம் செல்வாக்கு செலுத்துகிறது என்கிறார், பி.ஜ.த-வின் மூத்த தலைவர். எனவே, பாசிச பா.ஜ.க-வின் இந்துமதவெறிக்கு மாற்றாக மிதவாத இந்துத்துவத்தை முன்னிறுத்துவதானது தனக்குத்தானே குழிப்பறித்துக் கொள்வது என்பதற்கு ஒடிசாவே சான்று.

மேலும் ஒடிசாவின் கனிம மற்றும் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக வேதாந்தா, ஜிண்டால், ஆதித்யா பிர்லா, அதானி என பல கார்ப்பரேட் கழுகுகள் துடித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு எதிராக அம்மாநிலப் பழங்குடி மக்கள் வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராடும் மக்களை மலைகளிலிருந்து விரட்டியடிக்க போலீசையும், துணை ராணுவப் படையையும் பழங்குடி மக்கள் மீது ஏவி வருகிறது ஒடிசா அரசு. பழங்குடி மக்களுக்கு ஆதரவாகப் போராடும் சமூக ஆர்வலர்களையும் ஊபா போன்ற கருப்பு சட்டங்களில் கைது செய்து சிறையிலடைத்திருக்கிறது. கூடுதலாக, நயவஞ்சகமாக பழங்குடி மக்களின் நில உரிமையைப் பறிப்பதற்கான சட்டங்களையும் நிறைவேற்றியிருக்கிறது ஒடிசா அரசு. தனது இருபத்தைந்து ஆண்டு ஆட்சிக்காலத்தில் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக பழங்குடிகள் மீது நவீன் அரசு நடத்திவரும் உள்நாட்டுப் போரை மூடிமறைப்பதற்கான திரைச்சீலையும் இந்த கவர்ச்சிவாத அரசியலேயாகும்.

கவர்ச்சிவாத-மிதவாத இந்துத்துவ அரசியல்

ஒடிசாவைப் போலவே தெலுங்கானா, ஆந்திரப்பிரதேச மாநிலக் கட்சிகளும் பா.ஜ.க-விற்கு போட்டியாக மிதவாத இந்துத்துவ அரசியலையே முன்வைக்கின்றன. தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சிக்காலத்தில், ஒடிசாவைப் போலவே “ஜெய் ஸ்ரீராம்” முழக்கத்திற்கு மாற்றாக “ஜெய் ஹனுமன்” முழக்கம் முன்வைத்தது; ஹனுமன் ஜெயந்தியை ஒட்டி 41 நாட்கள் ஹனுமன் பாடல்கள் பாடியது; சுதர்சன, சண்டி மற்றும் ராஜ சியாமள் யாகங்கள் நடத்தியது; ரூ.1800 கோடி செலவில் யாதத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம கோவிலை புனரமைத்தது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இவைமட்டுமின்றி, ஆந்திராவிலிருந்து தனித் தெலுங்கானா மாநிலமாகப் பிரிந்த பிறகும், சந்திரசேகர ராவ் மற்றும் ரேவந்த் ரெட்டி என இருவரது ஆட்சியிலும், ரெட்டி, வேல்மா மற்றும் பிராமணர்கள்தான் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதனால் பாதிக்கப்படுகிற இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினரைத் தன்பக்கம் திரட்டிக் கொள்ள பா.ஜ.க. கும்பல் எத்தனிக்கிறது.

ஒடிசாவைப் போலவே, ஆந்திரப் பிரதேசத்திலும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுகிறது.  தற்போது பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சி, தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர் என்பதால், பா.ஜ.க-வைப் போலவே அவரது மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. ஆந்திராவில் நடைபெறும் கோயில் திருட்டுகள் மற்றும் கோயில்கள் மீதான தாக்குதலுக்கு ஜெகன் கிறித்துவர் என்பதே காரணம் என பா.ஜ.க-வின் அரசியலையே தானும் செய்கிறது தெலுங்கு தேசம் கட்சி.

ஜெகனும் தன்னுடைய கிறித்துவ மதப்பற்றை மறைத்துக் கொள்வதில்லை என்றாலும், தான் இந்து விரோதி இல்லை என்பதை நிரூபிப்பதற்காக திருப்பதிக்கு செல்வது; பசு பூஜையில் கலந்து கொள்வது; சந்திரபாபு ஆட்சிக்காலத்தில் சாலை விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட்ட கோவில்களை கட்டுவது என தனது கவர்ச்சிவாத அரசியலுடன் மிதவாத இந்துத்துவ நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இக்கட்சிகளுக்கென தனிக் கொள்கையோ, சித்தாந்தமோ கிடையாது. தமிழ்நாட்டில் பா.ஜ.க. அடிமை சேவகம் புரிந்த எடப்பாடி பழனிச்சாமியைப் போல, தேர்தலில் ஓட்டுவாங்குகிற கண்ணோட்டத்தில் மட்டுமே இக்கட்சிகள் பா.ஜ.க-வை எதிர்ப்பதாக நாடகமாடுகின்றனவே தவிர, சித்தாந்த ரீதியாக பா.ஜ.க-வை ஆதரிக்கவே செய்கின்றன. எனவேதான், நாடாளுமன்ற மாநிலங்களவையில் பெரும்பான்மையின்றி பா.ஜ.க. திண்டாடும் போதெல்லாம் பா.ஜ.க-விற்கு இக்கட்சிகள் தோள் கொடுத்தன. காஷ்மீரின் சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, இந்திய விவசாயத்தையே கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் மூன்று வேளாண் சட்டங்கள், சிறுபான்மையினரை இரண்டாம்தர குடிமக்களாக நடத்தும் சி.ஏ.ஏ. என கடந்த பத்தாண்டுகளில் பா.ஜ.க-வால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்துராஷ்டிர அடிக்கட்டுமான சட்டத்திட்டங்கள் பெரும்பாலானவை இக்கட்சிகளின் ஒத்துழைப்பால்தான் நிறைவேற்றப்பட்டன.

எனவே, பா.ஜ.க-வுடன் கூட்டணியில்லை என்று சொல்லிக் கொண்டே, பா.ஜ.க-வின் இந்துத்துவ சித்தாந்தத்தை ஆதரிக்கின்ற இந்த பிழைப்புவாதக் கட்சிகள் எதிர்காலத்தில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளது. ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. ஊடுருவலுக்கு களம் அமைத்துக் கொடுக்கிற இக்கட்சிகளைப் புறக்கணிப்பதும், இக்கட்சிகளின் மிதவாத இந்துத்துவ அரசியலை முறியடிப்பதும் பாசிச எதிர்ப்பில் முக்கியமானதாகும்.


அப்பு

(புதிய ஜனநாயகம் – ஜுன் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



சாதி மறுப்பு திருமணம் – நெல்லை சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல்! | மக்கள் அதிகாரம் கண்டனம்

சாதி மறுப்பு திருமணம் – நெல்லை சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல்!

பிள்ளை சாதி வெறியர்களுக்கு பாடம் புகட்டுவோம்!

சாதி மறுப்புத் திருமணங்களை
மக்கள் அதிகாரம் நடத்தி வைக்கும், ஆதரவளிக்கும்!

16.06.2024

கண்டன அறிக்கை

சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தார்கள் என்று கூறி கடந்த ஜூன் 13ஆம் தேதி நெல்லை சிபிஎம் அலுவலகத்தை வெள்ளாளர் முன்னேற்ற கழகம் என்ற சாதி வெறி அமைப்பைச் சேர்ந்த பந்தல் ராஜா தலைமையில் பெண் வீட்டார் தாக்கியுள்ளனர்.

சிபிஎம் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த சாதி மறுப்பு காதல் தம்பதியினரின் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று போலீசிடம் புகார் அளித்த பின்னர் தான், இந்தக் கும்பல் சிபிஎம் அலுவலகத்தை தாக்கியதையும் போலீசு அமைதியாக வேடிக்கை பார்த்ததையும் அறிய முடிகிறது.

இச்சம்பவத்திற்கு தமிழ்நாடு முழுவதும் எழுந்த கண்டனங்கள் வாயிலாக வேறு வழியின்றி தாக்குதலில் ஈடுபட்ட 25 பேரில் 10 பேர் சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள்.  பெண் வீட்டார் திடீரென்று ஆவேசப்பட்டு நடந்த நிகழ்வு அல்ல இது.  பந்தல் ராஜா என்ற நபர் கட்டப்பஞ்சாயத்து நடத்திவரும் சாதி வெறி  ரவுடி. வெள்ளாளப் பிள்ளை சாதியினருக்கு தன்னைத் தலைவனாகக் காட்டிக் கொண்டு அச்சாதி இளைஞர்களை ஆதிக்க சாதி வெறியூட்டி பொறுக்கித் தின்பதற்கு பயன்படுத்தும் எண்ணற்ற ஆதிக்க சாதி – ஆர்.எஸ்.எஸ் வெறியர்களில் ஒருவனே. இந்தத் தாக்குதலை நியாயப்படுத்தி சமூக வலைத்தளங்களில் ஆதிக்க சாதி வெறியர்கள் பலர் எழுதி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெண் வீட்டாரின் கோபத்தை பயன்படுத்தி திட்டமிட்டு சிபிஎம் அலுவலகம் மீது இந்த பொறுக்கிக் கும்பல் தாக்குதல் நடந்திருக்கிறது. இந்த தாக்குதலுக்கு மாவட்ட போலீசார் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.

சாதி மறுப்பு திருமணங்களுக்காக சிபிஎம் அலுவலகம் எப்போதும் திறந்திருக்கும் என்று நெல்லை மாவட்டச் செயலாளர் தோழர் ஸ்ரீ ராம் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

தொடர்ந்து ஆதிக்க சாதி வெறியர்களின் கூடாரமாக மாறிக்கொண்டிருக்கும் நெல்லையில் சிபிஎம் கட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் அதற்குக் காரணமான போலீசு மற்றும் ஆதிக்க சாதி வெறியர்களையும் மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கின்றது.

சம்பவத்துக்கு காரணமான பந்தல் ராஜா உள்ளிட்டோர் தடுப்புக்காவல் சட்டத்தில் அடைக்கப்படுவதுடன் பந்தல் ராஜா உள்ளிட்ட ஆதிக்க சாதி வெறியர்கள் இதுவரை மேற்கொண்ட ஆதிக்க சாதிவெறி சம்பவங்கள் கட்டப்பஞ்சாயத்து ரவுடித்தனங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளும் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும்  என்றும்  சம்பவத்துக்குக் காரணமான போலீசுக்காரர்களும்  உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் ஆதிக்க சாதி வெறி சங்கங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இந்த நாட்டையும் இந்த நாட்டு மக்களையும் படையல் போடும் இந்த ஆர்.எஸ்.எஸ் – ஆதிக்க சாதிவெறி கும்பல், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி வ. உ. சிதம்பரனார் உள்ளிட்ட எவரையும் பயன்படுத்துவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது.

இதுவரை எண்ணற்ற சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி வைத்த மக்கள் அதிகாரம் இனிமேலும் அந்தப் பணியை மேற்கொள்ளும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாடு முழுவதும் சாதி மறுப்பு திருமணங்கள் நடத்தி வைப்போம். தடுக்க வரும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம். ஆதிக்க சாதிவெறி சங்கங்களை தடை செய்வதற்காகப் போராடுவோம்!


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



வேண்டாம் நீட் : மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் | நேரலை வீடியோ

நீட் தேர்வு – மோசடிகளின் உச்சம்! அதிகார வர்க்கம், கோச்சிங் சென்டர்களின் கூட்டுக் கொள்ளை! நீட் தேர்வை ரத்து செய்! வேண்டாம் நீட், வேண்டும் ஜனநாயகம்! என்ற முழக்கங்களின் அடிப்படையில், ஜூன் 15 அன்று காலை 11.00 மணியளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நீர் தேர்வை எதிர்க்கும் ஜனநாயக முற்போக்கு சக்திகள் கலந்துகொண்டு தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் நேரலை வீடியோவை வாசகர்களுக்கு வழங்குகிறோம்!

காணொளியை பாருங்கள் பகிருங்கள்!!

அர்ஜெண்டினாவில் கார்ப்பரேட்மயத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் | புகைப்படங்கள்

ர்ஜெண்டினா நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் அரசு செலவினங்களைக் குறைப்பது குறித்தான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது மற்றும் மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதை கைவிடுவது குறித்தான மசோதா ஒன்றை தாக்கல் செய்வதற்கான முயற்சியில் ஜேவியர் மிலே அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கையைக் கண்டித்து ஜூன் 12 அன்று தலைநகர் புவெனஸ் ஐரிஸ்-இல் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசு தடியடி, கடும் குளிரில் தண்ணீரை பீய்ச்சி அடிப்பது, கண்ணீர்ப் புகைக்குண்டு, ரப்பர் குண்டுகளைக் கொண்டு சுடுவது போன்ற அடக்குமுறைகளைப் பயன்படுத்தி போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தது. ஆனால், போராட்டங்கள் தொடரும் என்பதை மக்களின் உணர்வு பிரதிபலிக்கிறது.

அர்ஜெண்டினா மக்கள் நடத்திய எழுச்சிமிகு போராட்டத்தின் புகைப்படங்களை வாசகர்களுக்கு பகிர்கிறோம்.

அதிபர் ஜேவியர் மிலே-வுக்கு எதிராக தலைநகர் புவெனஸ் ஐரிஸ்-இல் குவிந்திருந்த மக்கள்
அர்ஜெண்டினா நாடாளுமன்றத்தை மக்கள் முற்றுகையிடமால் தடுப்பதற்காக போலீசு குவிக்கப்பட்டிருந்த காட்சி
போராடும் மக்களை ஒடுக்கும் போலீசு

போராடும் மக்களை அரசு அதிகாரிகள் ‘பயங்கரவாதிகள்’ என்று இழிவு படுத்தியுள்ளனர்.
போராடும் மக்களுக்கு எதிராக கண்ணீர்ப் புகைக்குண்டுகளைப் பயன்படுத்தும் போலீசு

“நாட்டிற்கு இழைக்கப்பட்ட துரோகத்தை மறக்க மாட்டோம்” என்று பதாகை கூறுகிறது


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அம்பலமான நீட் தேர்வின் யோக்கியதை | தோழர் ரவி

அம்பலமான நீட் தேர்வின் யோக்கியதை | தோழர் ரவி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாலஸ்தீனம்: இன அழிப்புப் போரை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்! நயவஞ்சக நாடகமாடும் அமெரிக்கா!

காசா பகுதி மீது யூத இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசு நடத்திவரும் இன அழிப்புப் போரானது, ஏழு மாதங்களைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டு இதுவரை 35,000-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொடூரமாகப் படுகொலை செய்துள்ள நிலையில், இன அழிப்புப் போரை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது இஸ்ரேல் அரசு. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இதைக் கண்டிப்பது போல நாடகமாடிக் கொண்டே தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி, இனப்படுகொலைக்குத் துணை நிற்கின்றன.

உலகை உலுக்கிய ரஃபா தாக்குதல்

கடந்த மே 7-ஆம் தேதி முதலாக, காசாவின் தெற்குப் பகுதியில் எகிப்தின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ரஃபா பகுதியில் இஸ்ரேலிய இராணுவப் படைகள் தரைவழித் தாக்குதலை தொடங்கியுள்ளன. மேலும், வடக்கு மற்றும் மத்திய காசாவின் பல பகுதிகளிலும் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இஸ்ரேலிய இராணுவத்தின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டினாலும் குண்டுவீச்சினாலும் பாலஸ்தீன மக்கள் நாள்தோறும் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள், குடியிருப்புகள் போன்ற மக்கள் அடர்த்தி அதிகமுள்ள இடங்களைக் குறிவைத்துத் தாக்குவதை, படுகொலை செய்வதை இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து செய்து வருகிறது. கடந்த மே 19-ஆம் தேதி, மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சில் 31 பேர் படுகொலை செய்யப்பட்டனர். வடக்கு காசாவின் ஜபாலியா நகரில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனையையும், பெய்ட் லஹியா நகரில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதையும் அப்பகுதி மக்கள் உறுதி செய்துள்ளனர்.

ஆனால், யூத இனவெறி இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலையையும், இஸ்ரேல் போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டையும் தொடர்ந்து மறுத்து வருவதன் மூலம் சர்வதேச அரங்கில் இஸ்ரேலை பாதுகாத்து வருகிறது, அமெரிக்கா.

முன்னதாக, காசாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் தாக்குதல் நடத்திய போது, ரஃபா பகுதிக்கு பல லட்சம் மக்களை விரட்டியது இஸ்ரேலிய இராணுவம். ஆனால், தற்போது ரஃபா மீதே தாக்குதல் நடத்தி தனது கோரமான இன அழிப்பு நோக்கத்தை வெளிக்காட்டியுள்ளது. மேலும், இங்குள்ள 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை மீண்டும் விரட்டியடித்து வருகிறது. அல் மவாசி என்ற பகுதிக்குச் செல்லும்படி இஸ்ரேல் அரசு அடாவடித்தனமாக அறிவித்து இருந்தாலும், பாலஸ்தீன மக்கள் காசாவின் பல்வேறு பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்து வருகின்றனர். மிகுந்த துயரங்களின் ஊடாக கடந்த 15 நாட்களில் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறியுள்ளனர். ரஃபாவிலிருந்து வெளியேறத் தயாராகிக் கொண்டிருந்த ஃபரித் அபு ஈடா, “எங்களுக்கு எங்கு செல்வது என்று தெரியவில்லை. காசாவில் பாதுகாப்பான அல்லது நெரிசல் அல்லாத இடம் எதுவும் இல்லை. நாங்கள் எங்கும் செல்ல முடியாது” என்று தமது வேதனையை வெளிப்படுத்துகிறார்.


படிக்க: காசா: நிவாரண வாகனத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்திய இஸ்ரேல்


இஸ்ரேல் அரசானது, எகிப்திலிருந்து தெற்கு காசாவிற்குள் நுழைவதற்கான ரஃபா நுழைவாயிலையும், அதன் அருகில் அமைந்துள்ள கெரெம் ஷாலோம் என்ற மற்றொரு நுழைவாயிலையும் கைப்பற்றி அவ்வழியாக உணவு, குடிநீர் போன்ற நிவாரணப் பொருட்கள் செல்வதைத் தடை செய்துள்ளது. காசாவின் கடற்கரையில் அமெரிக்கா கட்டியுள்ள தற்காலிகத் துறைமுகம் மூலமாக மிகச்சொற்ப அளவிலான நிவாரணப் பொருட்களே காசாவிற்குள் செல்கின்றன. நாளொன்றுக்கு 600 லாரிகளில் நிவாரணப் பொருட்கள் தேவைப்படும் நிலையில், 150-க்கும் குறைவான லாரிகள் மட்டுமே உள்ளே செல்கின்றன. இவ்வகையில் யூத இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசானது பட்டினியையும் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி இன அழிப்பைத் துரிதப்படுத்தி வருகிறது.

தற்போது நடத்தப்பட்டு வரும் போரானது, 1948-ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதற்காக 7.5 லட்சம் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்த “நக்பா” என்ற பேரழிவு நடவடிக்கையை விட மோசமானதாகி விடுமோ என்ற அச்சம் பாலஸ்தீன மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதை உறுதி செய்யும் வகையில், காசாவின் மீதான போரை நிறுத்துவதற்காக எகிப்து மற்றும் கத்தாரால் முன்மொழியப்பட்ட மூன்று கட்டப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக்கொண்ட போதிலும், இஸ்ரேல் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாமல் போரை தீவிரப்படுத்தி வருகிறது.

இஸ்ரேலின் தாக்குதல்களால், காசாவில் 70 சதவிகித கட்டடங்கள் இடிக்கப்பட்டிருப்பது; 36 மருத்துவமனைகளில் 24 மருத்துவமனைகள் செயலிழந்து இருப்பது, மற்றவை பெயரளவில் செயல்பட்டு வருவது; உலகின் பல நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் காசாவிற்குள் செல்வதைக் கட்டுப்படுத்தி மக்களைப் பட்டினியிட்டும் மருத்துவச் சிகிச்சையை மறுத்தும் படுகொலை செய்து வருவது; ஊட்டச்சத்து குறைபாட்டினால் பச்சிளம் குழந்தைகள் துடிக்கத் துடிக்க இறந்து வருவது என நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. இந்நிலையில், ரஃபா பகுதி உள்ளிட்ட காசா பகுதிகள் மீதான இஸ்ரேலின் தற்போதைய தாக்குதல்கள் இந்நிலையை மேலும் மோசமாக்கும், பல லட்சம் மக்களின் உயிருக்கே அபாயத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் மனிதாபிமானமிக்க ஒவ்வொருவரையும் பீடித்துள்ளது.

போர் நிறுத்தத்தை ஏற்க மறுக்கும் இஸ்ரேல்

எகிப்து மற்றும் கத்தாரால் முன்மொழியப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தமானது, காசா மீதான இஸ்ரேலின் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறது. காசா பகுதியில் இருந்து இஸ்ரேலிய இராணுவப் படைகளைத் திரும்பப் பெற வேண்டும், இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்களையும் ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேலியர்களையும் விடுவிக்க வேண்டும் என்று முன்மொழிகிறது.

அந்தவகையில், ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேலியர்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற இஸ்ரேலிய மக்களின் முக்கியக் கோரிக்கையை இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் முன்மொழிகிறது. எனினும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “போர் நிறுத்த ஒப்பந்தமானது இஸ்ரேலின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யவில்லை” என்றும் “இஸ்ரேல், ஹமாஸின் தீய ஆட்சியை மீட்டுருவாக்கம் செய்ய அனுமதிக்காது” என்றும் “ஹமாஸ் தனது இராணுவத் திறனை மீண்டும் கட்டியெழுப்ப அனுமதிக்காது” என்றும் கூறியுள்ளார். அதாவது போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க முடியாது, ஹமாஸ் அமைப்பினரை அழித்தொழிப்பது என்ற பெயரில் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து, அம்மக்கள் வாழும் பகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதே நெதன்யாகுவின் பதில். இத்தனை நாட்களாக நடத்தப்பட்டுவரும் போர் நமக்கு உணர்த்துவது அதைத்தான்.

மேலும், போர் நிறுத்தம் ஏற்பட்டால் தனது பிரதமர் பதவி பறிபோய் விடுமோ என்ற அச்சமும் நெதன்யாகுவிற்கு உள்ளது. 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில், நெதன்யாகு தலைமையிலான லிகுட் கட்சியானது மத சியோனிஸ்ட், ஷாஸ், யூ.டி.ஜே. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 64 இடங்களைக் கைப்பற்றி மிகக்குறுகிய பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. அதில் தீவிர வலதுசாரி மத சியோனிஸ்ட் கட்சியிடம் 14 இடங்கள் உள்ளன. அக்கட்சியைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விர் மற்றும் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகிய இருவரும், காசாவில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டால் தங்கள் கட்சியின் ஆதரவை திரும்பப் பெற்று ஆட்சியைக் கலைத்து விடுவோம் என்று பலமுறை வெளிப்படையாகவே மிரட்டியுள்ளனர். தீவிர வலதுசாரிகள் தங்கள் ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டால் ஆட்சியை இழக்க நேரிடும்; அதன் விளைவாக நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே எதிர்கொள்ள நேரிடும். அப்படி நடந்தால் மீண்டும் தன்னால் வெற்றி பெற முடியுமா என்ற அச்சம் நெதன்யாகுவிடம் உள்ளது.

தற்போதைய ஆட்சி கலைக்கப்பட்டால், இஸ்ரேலிய ஹாலிவுட் தயாரிப்பாளர் அர்னான் மில்ச்சன், ஆஸ்திரேலிய தொழிலதிபரும் இஸ்ரேலிய குடிமகனுமான ஜேம்ஸ் பாக்கர் ஆகியோரிடமிருந்து ஆடம்பரப் பரிசுகளைப் பெற்றது உள்ளிட்ட நெதன்யாகுவின் ஊழல் குற்றச்சாட்டுகள் மீண்டும் விசாரிக்கப்படும். அதனால் சிறைக்குச் செல்ல நேரிடும் என்ற அச்சமும் நெதன்யாகுவிடம் உள்ளது. சில மாதங்களுக்கு முன், நெதன்யாகுவின் ஊழல் குற்றச்சாட்டுகளை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், நாடாளுமன்றத்தில் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும், தீர்ப்புகளை முறியடிக்கும் புதிய சட்டத் திருத்தத்தை இஸ்ரேல் அரசு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்தம் – அமெரிக்காவின் மோசடி நாடகம்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொள்வதற்கு சி.ஐ.ஏ. இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் மூலம் அமெரிக்க அரசு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனாலும் அதை மீறி இஸ்ரேல் அரசு போரைத் தொடர்ந்து வருவதாகவும் ஒரு பிம்பம் அமெரிக்கப் பத்திரிகைகளால் கட்டமைக்கப்படுகிறது. ஆனால், இது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகப் போராடும் அமெரிக்க மக்களை ஏமாற்றும் அமெரிக்க அரசின் அயோக்கியத்தனமான நடவடிக்கையாகும். அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் சமயத்தில், பாலஸ்தீன ஆதரவு மற்றும் முற்போக்கு சக்திகள், மாணவர்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் இந்த ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றி வருகிறது, ஜோ பைடன் அரசு.

சொல்பேச்சு கேட்காத இஸ்ரேலுக்கு பாடம் கற்பிக்கும் நோக்கில் ஒரு பில்லியன் டாலர் (8346 கோடி ரூபாய்) மதிப்பிலான ஆயுதங்கள் வழங்குவதை ஜோ பைடன் நிறுத்தி வைத்திருக்கிறார்; குடியரசுக் கட்சி செனட்டர்கள் குழு கண்டிப்பாக ஆயுதங்கள் வழங்கியே ஆக வேண்டுமென மிரட்டி வருகிறார்கள்; ஆயுதம் வழங்க உத்தரவிடும்படி குடியரசு கட்சியினர் காங்கிரசில் தீர்மானம் கொண்டு வந்தால் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிபர் அதனை முறியடிப்பார்; எனினும் இஸ்ரேலுக்கான ஆதரவை எவ்வித நிபந்தனையுமின்றி அமெரிக்கா வழங்கும் என அமெரிக்காவின் இரண்டு கட்சிகளும் மிகக்கேவலமாக கூத்தடித்து வருகின்றன.

சமீபத்தில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்குரைஞர், ஹமாஸ் தலைவர்கள் மூவர், நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரை போர்க்குற்ற நடவடிக்கைகளுக்காக கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டுமென முன்மொழிந்துள்ளார். சில ஐரோப்பிய நாடுகள் இதை ஆதரித்து வரவேற்றுள்ள நிலையில், அமெரிக்கா முதல் சில நாட்களுக்கு கள்ள மவுனம் சாதித்தது. பிறகு, கைது வாரண்ட் கேட்பது ‘ஒப்புக்கொள்ள முடியாத செயல்’ என்றும், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே எந்த ஒற்றுமையும் இல்லை என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார். குடியரசுக் கட்சியின் சில செனட்டர்களோ, “நீங்கள் இஸ்ரேலைக் குறிவைத்தால் நாங்கள் உங்களைக் குறிவைப்போம்” என வெளிப்படையாகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், இந்நீதிமன்றத்துக்கான நிதியைக் குறைக்க வேண்டும் என்றும் பேசி வருகின்றனர். முன்னாள் அதிபர் டிரம்போ, இஸ்ரேலுக்குத் தொடர்ந்து ஆயுத உதவிகள் செய்ய வேண்டியது அவசியம் எனப் பேசி வருகிறார்.

மேலும், “இரண்டு நாட்களில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வராவிட்டால் இஸ்ரேலை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்று எங்களுக்குத் தெரியும்” என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மே 26-ஆம் தேதி கூறியிருந்தது. இந்நிலையில், அடுத்த நாள் இரவே ரஃபா எல்லையில் தற்காலிகத் தங்குமிடம் ஒன்றின் மீது கொடுந்தாக்குதல் நடத்தி சுமார் 45-க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்திருக்கிறது இஸ்ரேல். இந்தத் தாக்குதலில் குழந்தைகள் தலை துண்டாகி இறந்துபோன காட்சிகள் உலக மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. அமெரிக்கா ஆதரவு இருக்கும் வரையில் தங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற திமிரில்தான் இஸ்ரேல் இத்தகைய தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

ரஃபா தாக்குதலுக்காக இஸ்ரேலைக் கண்டிப்பது, குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பது என அமெரிக்கா நாடகம் போட்டாலும், பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்துவதற்கான எல்லா அதிகாரமும் அமெரிக்க அரசிடம் உள்ளது. ஆனால், மத்திய கிழக்கில் சரிந்துவரும் தன்னுடைய மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக, பாலஸ்தீன மக்களை இன அழிப்பு செய்ய வேண்டும் என்ற இஸ்ரேலிய அரசின் நோக்கத்திற்கு எந்தத் தடங்கலும் ஏற்படாமல் பாதுகாத்து மேலும் வளர்த்தெடுக்கிறது, அமெரிக்கா.

காசா மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போரானது எட்டு மாதங்களைக் கடந்துள்ள நிலையிலும் இஸ்ரேலிய இராணுவத்தினரின் தாக்குதல்களை ஹமாஸ் படையினர் வீரதீரத்துடன் எதிர்கொண்டு வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினர் “பாப்புலர் ஃப்ரண்ட்” போன்ற பாலஸ்தீன விடுதலைக்கான குழுக்களுடன் இணைந்து போரிட்டு வருகின்றனர்.

அதன் விளைவாக, இஸ்ரேலிய இராணுவத்தினர் கைப்பற்றத் திட்டமிட்ட இடங்களை கைப்பற்ற முடியாமல் பின்வாங்கியுள்ளனர். காசாவின் தெற்கிலுள்ள ஜைடவுன் பகுதியில் சில இடங்களை கைப்பற்ற திட்டமிட்டு, ஹமாஸ் படையினரின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் நான்காவது நாளிலேயே அப்பகுதியை விட்டு இஸ்ரேல் ராணுவம் வெளியேறியுள்ளதே அதற்கான சான்றாகும். தொடர்ந்து ஹமாஸ் படையினர் இஸ்ரேலிய படைகளுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், போர் தொடர்ந்து நடைபெற்றால் ஹமாஸ் அமைப்பினரிடம் பணயக் கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்களை விடுவிப்பது சாத்தியமில்லை. அதனால், பணயக் கைதிகளை விடுவிப்பதைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் போர் நடவடிக்கைகளை மட்டும் தீவிரப்படுத்தி வரும் நெதன்யாகு அரசுக்கு எதிரான மக்களின் கோபம் மேலும் அதிகரிக்கும். கடந்த மார்ச் மாதத்தில் இஸ்ரேலிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு வெளியே கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் மிகப்பெரிய அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகைய போராட்டங்கள் நாள்தோறும் நடந்து வருகின்றன.  இப்போராட்டங்களில் கலந்துகொள்ளும் மக்கள், நெதன்யாகு பதவி விலக வேண்டும், ஹமாசுடன் சமாதான ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும், பிணையக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற முழக்கங்களைத் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். இவ்வாறு போராடும் மக்கள் மீது நெதன்யாகு அரசு கடும் அடக்குமுறைகளை ஏவி வருகிறது.


படிக்க: காசா: அல்-ஷிஃபா மருத்துவமனையில் படுகொலைகளைச் செய்யும் பாசிச இஸ்ரேல்!


இன்னொரு பக்கத்தில், எட்டு மாதங்களைக் கடந்து போர் நடைபெற்று வருவதால் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் மத்தியிலும் எப்போது போர் முடிவடையும் என்ற எண்ணம் எழுந்து வருகிறது. இராணுவ அதிகாரிகள் மத்தியில் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணமும், போர் தொடர்ந்து நீடித்தால் இராணுவ வீரர்கள் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய மறுப்பார்கள் என்ற அச்சமும் நிலவுகிறது. மேலும், தங்கள் மகன்கள் காசாவில் பணியாற்றுவதை விரும்பவில்லை என்று 900 இஸ்ரேலிய தாய்மார்கள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கெலண்டுக்கு கடிதம் எழுதியிருப்பதும் இவற்றின் வெளிப்பாடுதான்.

இஸ்ரேல் அரசின் இன அழிப்புப் போரை நிறுத்த வலியுறுத்தி அமெரிக்காவில் துவங்கிய கல்லூரி – பல்கலைக்கழக மாணவர் போராட்டம் உலகெங்கிலும் பரவி தீவிரமடைந்து வருகிறது. மாணவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் பல நகரங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்கள், இஸ்ரேலிய அரசு – பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுடன் தமது பல்கலைக்கழக நிர்வாகங்கள் கொண்டுள்ள உறவுகளைத் துண்டிக்க வைப்பதில் பல இடங்களில் போராட்டக்காரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் போராடுபவர்கள் மீது அரசு ஒடுக்குமுறைகள் ஏவப்படும் நிலையிலும், நம்பிக்கையின் வெளிச்சக்கீற்றாக இப்போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இஸ்ரேலிய அரசுக்கெதிரான இஸ்ரேலிய மக்களின் போராட்டமும் உலகின் பல நாடுகளில் நடைபெற்றுவரும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களும்தான் பாலஸ்தீன மக்கள் மீதான கொடிய போரை நிறுத்துவதற்கான நமக்கான ஆயுதங்கள் ஆகும். மற்றபடி, ஐ.நா. சபை தீர்மானங்களாலும் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுகளாலும் இந்தப் போரைத் தடுத்து நிறுத்த முடியாது, அவை வெற்றுக் காகிதங்களே.

பாலஸ்தீன குழந்தைகளின் கதறலும் தாய்மார்களின் கண்ணீரும் இன்னும் இலட்சோப இலட்சம் பேரை வீதிக்குக் கொண்டு வரும். மேலாதிக்க வெறிபிடித்த அமெரிக்க ஏகாதிபத்தியமும், யூத இனவெறி பயங்கரவாத இஸ்ரேலும் இப்போராட்டங்களுக்கு முன் மண்கோட்டையாய் சரியும் நாள் வெகுதொலைவில் இல்லை.


அமீர்

(புதிய ஜனநாயகம் – ஜுன் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube