Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 128

100 நாட்களைக் கடந்து தொடரும் ஹாலிவுட் எழுத்தாளர்கள் போராட்டம்!

செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி ஹாலிவுட் எழுத்தாளர்கள் ஒட்டுமொத்தமாக அமெரிக்காவின் நியூயார்க் நகர வீதிகளில் போராட்டத்தில் குவிந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த ஹாலிவுட் சினிமா உலகமே ஸ்தம்பித்துள்ளது. நேற்றோடு (09/08/2023) இப்போராட்டம் நூறு நாட்களைக் கடந்துவிட்டது.

ஹாலிவுட்டில் பணிபுரியும் பெரும்பாலான எழுத்தாளர்கள் அங்கம் வகிக்கும் தொழிலாளர் சங்கமான ரைட்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்காவின் (WGA) உறுப்பினர்கள், மோஷன் பிக்சர் மற்றும் டெலிவிஷன் தயாரிப்பாளர்களின் கூட்டமைப்புக்கு (Alliance of Motion Picture and Television Producers – AMPTP) எதிராக வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள். வேலைநிறுத்தம் முடிவு பெறும்வரை WGA-இன் எந்த உறுப்பினரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுக்கு புதிய ஸ்கிரிப்ட்களை எழுதப் போவதில்லை என்று கூறியுள்ளனர். WGA-வில் கிட்டத்தட்ட 11,500 எழுத்தாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாறிவரும் இந்த உலகச் சூழலில் ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்ப அவர்களை ஈர்க்கும் வண்ணம் கதைக்களங்களை உருவாக்கும் வேலை கடுமையான பணிச்சுமையை கோரும் நிலையில், இதுவரை அவர்களுக்கான வேலை நேரங்கள் முறைப்படுத்தபடவில்லை. இத்துறையில் மற்ற கலைஞர்களைக் காட்டிலும் தங்களுக்கு குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது எனவும் போதிய மதிப்பும் கிடைப்பதில்லை என்றும் சில ஆண்டுகளாகவே கதை ஆசிரியர்கள் கூறி வருகின்றனர்.

இதனையொட்டி தயாரிப்பு நிறுவனங்களிடமும் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தனர். அதனை தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் கடந்த 100 நாட்களைக் கடந்து போராடி வருகின்றனர். ஆனால், தயாரிப்பு நிறுவனங்களோ இவர்களின் கோரிக்கையை மதிக்காமல் கதை ஆசிரியர்களே இனித்தேவையில்லை என்ற விதத்தில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தொடங்கிவிட்டன. உதாரணமாக, அண்மையில் மார்வெல் நிறுவனம் வெளியிட்ட “சீக்ரெட் இன்வேஷன்” (Secret Invasion) சீரிஸின் தொடக்கத்தில் வரும் காமிக் வரைபடங்கள் AI மூலமாக வரையப்பட்டதே.


படிக்க: ஏ.ஐ. லிசாக்களும் வேலையை இழக்கும் ஹென்றிக்களும்


இது போன்ற காரணங்களாலேயே 100 நாட்களைக் கடந்து போராட்டம் தொடர்கிறது. ஆனால், ஊதியம் போன்ற கோரிக்கைகளில் தற்காலிகமாக உடன்பட்டாலும் AI தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை நிறுத்த முடியாது என்று தயாரிப்பு நிறுவனங்கள் உறுதியாக உள்ளன. பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில் AI அபாயம் குறித்து பல விழிப்புணர்வு வேலைகளிலும் ரைட்டர் கில்ட் அமைப்பு தொடர்ச்சியாக பிரச்சாரப் பணியை செய்து வந்துள்ளது. இதன் விளைவாக சாக் ஆஃப்ட்ரா (SAG-AFTRA) என அழைக்கப்படும் 1,60,000 உறுப்பினர்களைக் கொண்ட ஹாலிவுட் நடிகர் சங்கமும் ரைட்டர் கில்ட்-க்கு ஆதரவாக களம் இறங்கியது.

நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெரும் தயாரிப்பு நிறுவனங்களின் முன்பு ஆயிரக்கணக்கில் கூடி பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தப்படுகிறது. இதை நியூயார்க் நகர சபை ஆதரிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல சிறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக டிஸ்னி, நெட்ஃபிளிக்ஸ், வார்னர் ப்ரோஸ், டிஸ்கவரி, அமேசான், பாரமவுண்ட் மற்றும் என்.டி.சி.யு, யுனிவர்சல் உள்ளிட்ட அலுவலகங்கள் முன்பு முற்றுகையிட்டு எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

நூறு நாட்களைக் கடந்து போராடும் கதை ஆசிரியர்களால் ஏற்கெனவே எழுதிய கதைகளில் திருத்தம் செய்ய முடியாமல் ஹாலிவுட் சினிமா நெருக்கடியில் இருக்கிறது. எழுத்தாளர்களை ஆதரித்து நடிகர்களும் களத்தில் இறங்கி உள்ளதால் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், ஆன்லைன் வெப் சீரியல் உள்ளிட்ட எந்த நிகழ்வும் வெளிவராமல் ஹாலிவுட்டே முடங்கும் நிலை உருவாகியுள்ளது.


படிக்க: செயற்கை நுண்ணறிவு : அறிவியல் உலகில் அறம் சார்ந்த கேள்விகள் !


இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில், தயாரிப்பு நிறுவனங்கள் தற்காலிகமாக பின்வாங்க கூடும் என்று பலரும் தெரிவிக்கின்றனர். அதே வேளையில் தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சியை எப்படி புறக்கணிப்பது என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த நிகழ்வையொட்டி சன் டி.வி வெளியிட்ட செய்தி தொகுப்பில், “ஆரம்ப காலம் தொட்டே அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் ஹாலிவுட் சினிமா இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது. அதை எப்படி புறக்கணிப்பது?” என்று கூறி தயாரிப்பாளருக்கான வர்க்க பாசத்தை காட்டிக்கொண்டது.

ஆனால், தகவல் தொழில்நுட்பம், பத்திரிக்கை, வணிகவியல் துறை, சினிமா என அனைத்திலும் ஊடுருவிவரும் AI தொழில் நுட்பத்தின் விளைவால் கோடிக்கணக்கில் வேலை இழக்கும் தொழிலாளர்களின் நிலையிலிருந்து இதைப் பார்க்க வேண்டும்‌.

அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தான் மனித குலத்தை இடையறாது முன்னேற்றியுள்ளது என்ற போதிலும், இந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்த நவீன சமுதாயத்தில் பெருமுதலாளிகளின் நலனுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. இந்த முதலாளித்துவ அமைப்பு முறையை மாற்றி ஒரு சோசியலிச சமுதாயத்தை அமைப்பதன் மூலம் தான் அறிவியல் தொழில்நுட்பங்களை மக்களின் நலனுக்காக பயன்படுத்த முடியும்.


கலை

பா.ஜ.க ஆட்சியில் மாபெரும் வங்கிக் கொள்ளை! | புஜதொமு

டந்த 9 நிதியாண்டுகளில், 2014-15 முதல் 2022-23 வரை, வங்கிகள் மொத்தம் ரூ.14.56 லட்சம் கோடி மதிப்பிலான வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக ஆகஸ்ட் 7 அன்று நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க ஆட்சியில் மாபெரும் வங்கிக் கொள்ளை!

  • கடந்த 10 ஆண்டுகளில் ரூ.14.56 இலட்சம் கோடிக்கான வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது!
  • ஏமாற்றும் உள்நோக்கம் கொண்ட கடனாளிகளது ( Willful defaulters) பட்டியலை வெளியிட அரசும், ரிசர்வ் வங்கியும் மறுப்பது ஏன்?
  • பொதுச்சொத்தை களவாடிய கார்ப்பரேட் கனவான்கள் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
  • கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 12 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் புதிய கடன் தரப்பட்டது ஏன்?

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
தமிழ்நாடு.

நன்றி : புதிய தொழிலாளி

நூறு நாள் வேலை திட்டத்தை ஒழித்துக் கட்டத் துடிக்கும் பாசிச மோடி அரசு!

ந்த மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கிராமப்புற வளர்ச்சித் துறை (rural development) அமைச்சர் கிரிராஜ் சிங் 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் குறித்து விவாதத்தில் ஒரு தகவலை தெரிவித்தார். இத்திட்டத்தை நிறைவேற்றுகின்ற 34 மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஐந்து கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளின் வேலைக்கான அடையாள அட்டைகளை (job card) பட்டியலில் இருந்து நீக்கி உள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் (2022-2023) சுமார் 61 லட்சம் வேலைக்கான அட்டைகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 247 சதவீதம் அதிகமாகும்.

இறந்துவிட்டவர்கள், நகரங்களுக்கு குடிமாறி போய்விட்டவர்கள், சரியான அடையாள ஆவணங்கள் இல்லாதவர்கள் மற்றும் போலி அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் என்று ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு நீக்கிக் கொண்டு தான் வருகிறார்கள். இருப்பினும் இது இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் 2012-ஆம் ஆண்டு கணக்கின்படி 14.2 கோடி பேர் பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டு வேலைக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன. இப்போது அதிலிருந்து தான் ஐந்து கோடி அடையாள அட்டைகள் நீக்கப்பட்டு இருக்கின்றன.

மேலும் இந்தத் திட்டத்திற்கென ஒதுக்கப்படும் நிதியை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் குறைத்துக் கொண்டே வந்திருக்கிறது மோடி அரசு. சென்ற ஆண்டு பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.73,000 கோடி. ஆனால் இந்த ஆண்டு (2023) பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்கு ரூ.60,000 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 18 சதவீதம் குறைவாகும்.

முதன் முதலில் 2006-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசாங்கத்தால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது அப்போது நிதி அமைச்சராக இருந்த பா.சிதம்பரம், அந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகை இதே ரூ.60,000 கோடி தான்.


படிக்க: நூறு நாள் வேலை திட்டம் : 25% நிதியைக் குறைத்த மோடி !


ஒருபுறம் பட்ஜெட்டில் திட்டத்திற்கான நிதியை குறைத்து விட்டு மறுபுறம் பயனாளர்களுக்கான கூலியை உயர்த்தி இருக்கிறார்கள். இந்தத் தொகையைக் கொண்டு இத்திட்டப் பயனாளர்களுக்கு வெறும் 40 நாட்களுக்கு மட்டுமே கூலியை கொடுக்க முடியும். உண்மையில் ஆண்டுக்கு 100 நாள் வேலை கொடுக்க வேண்டும் என்றால் பட்ஜெட்டில் ரூ.2.72 லட்சம் கோடி ஒதுக்கியிருக்க வேண்டும்.

ஆனால், இதிலும் மோசமான நிலைமை என்னவென்றால் ஒதுக்கீடு செய்துள்ள இந்த குறைந்தபட்ச தொகையை கூட உரிய முறையில் மாநில அரசுகளுக்கு கொடுக்காமல் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.6,600 கோடியை எட்டு மாதங்களாக பாக்கி வைத்திருக்கிறது இந்த மோடி அரசு. இந்நிலையில் ஒன்றிய, மாநில அரசுகள் இவற்றையெல்லாம் சாக்காக வைத்துக் கொண்டு சகட்டுமேனிக்கு வேலைக்கான பட்டியலில் இருந்து பயனாளர்களின் பெயர்களை நீக்கி விடுகிறார்கள்.

1990-களில் தனியார்மய தாராளமய கொள்கைகள் அமல்படுத்தபட்ட பிறகு 2000-ஆவது ஆண்டுகளில் நாடு முழுவதும் விவசாயம் அழிந்து விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொண்ட போது அப்போதிருந்த மன்மோகன் சிங் அரசு 2006-ஆம் ஆண்டு இந்த 100 நாள் வேலை திட்டத்தை கொண்டு வந்தது. இந்தியாவைப் பற்றி மோடி அரசு உலகின் மூன்றாவது பொருளாதாரம் என்று என்னதான் பீற்றிக் கொண்டாலும் பல கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை என்னவோ இந்த 100 நாள் வேலையை நம்பித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது.

மக்களின் உயிரை மட்டும் தக்கவைத்துக் கொள்ளும் ஒரு குறைந்தபட்ச ஏற்பாடு என்பது தான் இந்த 100 நாள் வேலை திட்டம். இது கிராமப்புறங்களில் வாழும் முதியோர்கள், யாருமற்றவர்கள் உள்ளிட்டு ஏதுமற்ற வாழ வழியற்ற மக்களின் கைகளில் நேரடியாக பணத்தைக் கொண்டு போய் சேர்க்கிறது. இந்தத் திட்டத்தை தான் கைவிட துணிகிறது இந்த மோடி அரசு.


படிக்க: நூறு நாள் வேலைத் திட்டம் உண்மையில் பலனளிக்கிறதா ?


ஆனால், மக்கள் என்று மோடி அரசுக்கு சிலர் இருக்கிறார்கள்.

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளிவந்து அதானின் பங்கு மதிப்புகள் சரிவை சந்தித்தபோது எல்.ஐ.சி-யிலும் எஸ்.பி.ஐ-யிலும் சேமித்து வைக்கப்பட்டிருந்த மக்களின் பணத்தை ரத்தமும் சதையுமாக கொண்டு போய் கொடுத்து அதானியை காப்பாற்றியது இந்த மோடி அரசு.

அம்பானியின் புதிய மடிக்கணியான ஜியோ புக் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து மடிக்கணினி இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது மோடி அரசு.

அம்பானிக்கும் அதானிக்கும் ஒன்று என்றால் நாட்டையே விற்றுக் கொடுத்து அவர்களைக் காக்க துணியும் இந்த பாசிச கும்பல் தான் இது போன்ற மக்கள் நலத்திட்டங்களை காவு கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஏனென்றால், கிராமப்புறங்களில் உள்ள வாழ வழியற்ற இந்த மக்களால் மோடி அரசாங்கத்திற்கோ கார்ப்பரேட் கும்பல்களுக்கோ எந்தப் பயனும் இல்லை. பிறகு ஏன் இவர்கள் உயிர் வாழ வேண்டும் என்பதுதான் இவர்களின் மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு காரணம். இந்த பாசிச கும்பல், உழைக்கும் மக்களை மக்களாகவும் மனிதர்களாகவும் ஒருபோதும் கருதுவதில்லை.

இந்த ஆர்.எஸ்.எஸ் – பாஜக அரசாங்கம் என்பது அம்பானிக்கும் அதானிக்கும் சேவை செய்யக்கூடியதே தவிர ஒரு போதும் உழைக்கும் மக்களுக்கானதல்ல!!


பாரி

இந்துராஷ்டிரத்தில் இயல்பாக்கப்படும் மதக்கலவரங்களின் உதாரணங்களே மணிப்பூரும் ஹரியானாவும்!

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பற்ற வைத்த நெருப்பு இன்றுவரை மணிப்பூரில் எரிந்து கொண்டுதான் இருக்கிறது. இதனைத்தொடர்ந்து ஹரியானாவிலும் மதகலவரங்களை அரங்கேற்றி இருக்கின்றனர் காவி கும்பல்கள். நூஹ் மாவட்டத்தில் தற்சமயம் எரிக்கப்பட்ட கார்களும், சூறையாடப்பட்ட கடைகளும் தீக்கிரையாக்கப்பட்ட மசூதிகளும் தான் எஞ்சி இருக்கின்றன. இதுவரை கலவரத்தால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இரண்டு போலீசு படையினரும் அடங்குவர்.

திட்டமிட்டு நடத்தப்பட்ட மதக்கலவரம்!

ஆர்.எஸ்.எஸ்-இன் சங்கபரிவாரத்தைச் சேர்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத் ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தின் மேவாத் பகுதியில் பிரஜ்மண்டல் ஜலபிஷேக யாத்திரையை ஜூலை 31 ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்தது. இந்த யாத்திரை நல்ஹட் சிவன் கோவிலில் இருந்து ஃபிரோஸ்பூர் ஜிர்காவின் ஜிர் கோவிலையும் அதன்பிறகு புன்ஹானா கிருஷ்ணர் கோவிலையும் அடைந்து ஊர்வலம் நிறைவடையும்.

இந்த மத ஊர்வலம் திட்டமிட்டே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியான நூஹ் நகரின் வழியாக செல்கிறது. இப்பகுதியை அடைந்த பிறகு காவிகள் இஸ்லாமியர்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியிருக்கின்றனர். குறிப்பாக, “மோனு மானேசர் ஜிந்தாபாத்”, “ஹிந்து மத துரோகிகளை சுட்டுக்கொள்வோம்” என்று முழக்கங்களை எழுப்பியிருக்கின்றனர். இந்த மோனு மானேசர் என்பவன் தன்னைப் ‘பசு பாதுகாவலர்’ என்று கூறிக்கொண்டு முஸ்லீம்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்துபவன். இதனையடுத்து, மோனு மானேசரின் மீது ஆத்திரத்தில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் ஊர்வலத்தின் மீது கல் வீசினர். இதன்பிறகு இருதரப்பினருக்கிடையில் மோதல் வெடித்துள்ளது.

இதில் காவிக் குண்டர்கள் வாள், தடிகள் மற்றும் குறிப்பாக துப்பாக்கிகளோடு ஊர்வலத்தில் பங்கேற்று இருக்கின்றனர். காவிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு போலீசு படையினர் கொல்லப்பட்டனர். இதுநாள் வரையில் தடிகளை பயன்படுத்தி வந்த காவிகள் இன்று துப்பாக்கிகளை பயன்படுத்தியிருக்கின்றனர்.

இதன் பொருள் என்ன? இதன் பொருள் காவிகள் துப்பாக்கிகளால் தான் இனி வரும் ஊர்வலத்தை நடத்துவார்கள் என்பதே. காவிகளின் பலத்தையும் அபாயத்தையும் நாம் இனிமேலும் புரிந்து கொள்ள தவறினால் நமக்கு எஞ்சியிருப்பது மரணம் மட்டுமே.


படிக்க: ஹரியானா: இந்துராஷ்டிர கொலை வெறியர்களின் அட்டூழியங்கள்


நூஹ் மாவட்டத்தை தொடர்ந்து குருகிராம் சோஹ்னா போன்ற பிற பகுதிகளுக்கும் வன்முறை வெடித்தது. குருகிராமில் தான் 22 வயதான இமாம் முகமது சாத் காவி குண்டர்களால் கொல்லப்பட்டார். நூஹ் மாவட்டத்தில் ஊர்வலத்திற்கு முன்பிருந்தே பதற்றமான சூழல் நிலவியது. இந்த பதற்றமான சூழலுக்கு காரணம் மோனு மானேசர்.

யார் இந்த மோனு மானேசர்?

மோனு மானேசர் தன்னை பசு பதுகாவலன் (கெள ரக்சக்) என்று கூறிக்கொள்கிறான். ஹரியானா அரசின் ‘பசு பாதுகாப்பு’ பணிக்குழுவின் உறுப்பினராக இருக்கிறான். பஜ்ரங் தள் அமைப்பின் பசு பாதுகாவலர் பிரிவின் தலைவன். இந்த ஆண்டு பிப்ரவரியில் ராஜஸ்தானை சேர்ந்த இரண்டு இஸ்லாமியர்களை (நசீர் மற்றும் ஜுனைத்) உயிருடன் எரித்து கொன்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளி. ஆனால், இதுவரை மோனு கைது செய்யப்படவில்லை. ஏனென்றால், இவனுக்கு ஆளும் பா.ஜ.க.வின் ஆதரவு உள்ளது. இவன் மத்திய அமைச்சர்களுடனும் (அமித்ஷா, அனுராக் தாக்குர்) உயர் அதிகாரிகளுடனும் எளிதாக புகைப்படம் எடுத்து தனது இணைய பக்கத்தில் பதிவிடுகிறான்.

நசீர் மற்றும் ஜுனைத் கொலை வழக்கில் ராஜஸ்தான் போலீஸ் இவனை தேடி சென்ற போது, ஹரியானா போலீஸ் ராஜஸ்தான் போலீஸிற்கு ஒத்துழைக்காமல் ராஜஸ்தான் போலீஸ் மீதே குற்றப் பத்திரிகையை பதிவு செய்துள்ளது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டினார். இதிலிருந்தே அவனது செல்வாக்கும் அவன் கைது செய்யப்படாததற்கான காரணமும் விளங்கிவிடும்.

மோனு மானேசர் யூடியூப் சேனலும் முகநூல் பக்கமும் வைத்திருக்கிறான். இந்த பக்கத்தில் இவனும் இவனது கூட்டாளிகளும் பசு கடத்தல்காரர்கள் என ‘சந்தேகிக்கபடுபவர்களை’ (முஸ்லிம்களை) வாகனத்தில் விரட்டி சென்று அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்து விடுவார்கள். அடித்து உதைக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் இவனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிடுவான். இதற்காகவே இவனை இரண்டு லட்சம் நபர்கள் பின்தொடர்கிறார்கள்.


படிக்க: ‘பசு பாதுகாப்பு’ எனும் ஆயுதத்தை சுழற்றும் பாசிஸ்டுகள்!


ஜுலை 4, 2021 அன்று ஹரியானாவில் நடைபெற்ற ஹிந்து மகாபஞ்சாயத்தில், “சகோதரர்களே நாம் இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கண்டாக வேண்டும். எனக்கு லவ் ஜிகாத் செய்கிறவர்களது பட்டியலை கொடுங்க. நானும், என் நண்பர்களும் அவர்களை உதைப்போம். நாங்க போலீசுக்கு பயப்படறவங்க இல்லை. ஏன்னா எங்க பெரிய அண்ணன் அங்க உட்கார்ந்திருக்காரு. அவர் பேர் தேவையில்லை. ஆனா, அவரு எங்க பின்னணியில் இருக்கிறார். எவன் லவ் ஜிகாத் பண்றவன்? எவன் நம்ம பொண்ணுங்களை கிண்டல் பண்றவன் சொல்லுங்க பின்னி எடுத்துவிடுவோம். நாங்க இதுல சமரசமே செய்ய மாட்டோம். நம்ம மதத்தின் மேல கைய வைக்கிறவன் மேல நமக்கு சமரசமே இல்லை. ஒரே வழி உதைக்கிறது தான். பேசுவது பயனளிக்காது. அவங்க உதைபட வேண்டியவர்கள். ஜெய் ஸ்ரீ ராம்!” என்று தனது வெறுப்பு பேச்சை பேசியிருக்கிறான். இதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை பாஜக அரசு. மேலும் இவன் குறிப்பிடும் பெரிய அண்ணன் அமித்ஷா என்று சந்தேகிக்க தோன்றுகிறது.

இதே காவி குண்டன் தான் ஊர்வலத்திற்கு முன்பு வீடியோவை வெளியிட்டுள்ளான். அதில், “பிரஜ்மண்டல் யாத்திரை ஆகஸ்ட் 31 ஆம் தேதி நடைபெறும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். எல்லா சகோதரர்களும் இதில் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொள்ள வேண்டும். நானும் கலந்து கொள்வேன்” என்று அழைப்பு விடுத்திருக்கிறான். இந்த வீடியோ வெளி வந்ததிலிருந்து இஸ்லாமிய சமூகத்தில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கலவரத்தின் தொடக்கப்புள்ளி இதுபோன்ற வெறுப்பு பிரச்சாரமும் ஆத்திரமூட்டும் வீடியோக்களும் தான்.

பாதிக்கப்பட்டவர்களையே பலிகடாவாக்கும் பாஜக அரசு!

“குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவது போல” கலவரத்தை நடத்த விட்டு கட்டுப்படுத்த முடியவில்லை என்று கதையளந்து கொண்டிருக்கிறது மோகன்லால் கட்டார் அரசு. பா.ஜ.க.வின் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதால, “மத யாத்திரையில் எத்தனை பேர் பங்கெடுக்கப்பார்கள் என்று முன்பே சொல்லவில்லை. சரியான தகவல் இல்லாததால் நிலைமை கட்டுபடுத்த முடியாததாக மாறியது” என்று கதையளக்கிறார். இந்த கலவரம் நடக்க வேண்டுமென்று பா.ஜ.க.வே விரும்பியிருக்கிறது என்பது தான் உண்மை.

ஏனென்றால், இந்து மத ஊர்வலம்  இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்குள் செல்ல ஏன் அனுமதிக்க வேண்டும்? மத ஊர்வலத்திற்கு எதற்கு வாள், தடி, துப்பாக்கிகள்? இதனை  கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு உளவுத்துறை குருடாகி விட்டதா?  மோனு மானேசர் பங்கெடுப்பாதாக வீடியோ வெளியிட்ட பின் ஏன் அவனை கைது செய்யவில்லை? வீடியோ வெளிவந்த பிறகு பதற்றத்தை தடுப்பதற்கு ஏன் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை? என்று இதுபோன்ற கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.


படிக்க: ஹரியானா: புல்டோசரைக் கொண்டு முஸ்லீம்கள் மீது அரசு நடத்தும் மதவெறி தாக்குதல்


அரசே கலவரத்தை வேடிக்கை பார்த்துவிட்டு 144 தடை உத்தரவு, இணைய முடக்கம், துணை ராணுவப் படைகளை அனுப்புவது என்று கபட நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் மீதே நடவடிக்கை எடுத்து வருகிறது மோகன்லால் கட்டார் அரசு. ஹரியானா அரசாங்கம் மோதல் நடந்த இடங்களிலிருந்து கிட்டத்தட்ட 20 கி.மீ தொலைவில் உள்ள மாவட்டத்தின் டாரு நகரில் 250-க்கும் மேற்பட்ட முஸ்லிம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடிசைகளை இடித்திருக்கிறது. ஆகஸ்ட்-6ம் தேதி கல்வீசிய கட்டிடத்தை இடித்திருக்கிறது. ஆனால் இதுவரை துப்பாக்கிகளை உபயோகித்த காவிக் குண்டர்களது வீடுகள் இடிக்கவில்லை; இடிக்கப்படவும் மாட்டாது.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக ஆர்.எஸ்.எஸ் – பாஜக இதுபோன்ற கலவரங்களை திட்டமிட்டு நடத்தும். இது அவர்களுக்கு தேர்தலில் பயனளித்தாலும் தேர்தலுக்காக மட்டுமே கலவரங்களை ஆர்.எஸ்.எஸ் நடத்தாது. நாஜி ஜெர்மனியில் யூதர்கள் எவ்வாறு கொடுமை செய்யப்பட்டார்களோ அதுபோன்றே இந்துராஷ்ட்ரத்தில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், பழங்குடி மக்கள் வதைக்கப்படுவார்கள். இந்த காவி பூதத்தை உழைக்கும் மக்கள் சேர்ந்து விரட்டுவதை தவிர வேறு வழியில்லை.


ஹைதர்

ஹரியானா: இந்துராஷ்டிர கொலை வெறியர்களின் அட்டூழியங்கள்

ஜூலை 31 அன்று ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் – பஜ்ரங் தள் இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகளால் தொடங்கப்பட்ட மதவெறி கலவரம் குருகிராம் உள்ளிட்ட அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. முஸ்லீம்களின் வீடுகளும் கடைகளும் தாக்கப்பட்டன. குருகிராம் பகுதியில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட முஸ்லீம் குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு அச்சத்தில் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கலவரம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் காவி குண்டர்களால் மிரட்டப்பட்டுள்ளனர்.

இந்துத்துவா கொலை வெறியர்களின் அட்டூழியங்களை இக்காணொலிகள் எடுத்துக்காட்டுகின்றன..

ஹரியானா: புல்டோசரைக் கொண்டு முஸ்லீம்கள் மீது அரசு நடத்தும் மதவெறி தாக்குதல்

0

ரியானாவின் நூஹ் மாவட்டத்தில், ஜூலை 31 அன்று விஷ்வ இந்து பரிஷத் மற்றும் அதன் இளைஞர் பிரிவான பஜ்ரங் தள் ஆகிய இந்து மதவெறி அமைப்புகள் கலவரத்தைத் தூண்டும் நோக்கோடு ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன. தங்களின் திட்டத்திற்கேற்ப அந்நாளில் கலவரத்தையும் அரங்கேற்றின.

ஹரியானா மாநிலத்திலேயே முஸ்லீம்கள் பெரும்பான்மை வகிக்கும் ஒரே மாவட்டம் நூஹ் தான். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நூஹ் மாவட்டத்தில் வசிக்கும் 2,80,000 பேரில் கிட்டத்தட்ட 77 சதவீதம் மக்கள் முஸ்லீம்கள். இந்தியா – பாகிஸ்தான் வகுப்புவாத பிரிவினையின் போது கூட மதக்கலவரங்கள் நடக்காத பகுதியாக நூஹ் விளங்கியது.

இந்துக்களும் முஸ்லீம்களும் நல்லிணக்கமாக வசித்துவந்த பகுதியான நூஹ்-இல் தான் தற்போது இந்த இந்துத்துவ கும்பல்கள் கலவரத்தை நடத்தியுள்ளன.

மத சிறுபான்மையினரான முஸ்லீம்களையும் கிறிஸ்தவர்களையும் தொடர்ந்து தாக்கிவரும் இத்தகைய காவி பாசிச கும்பல்கள் கலவரங்களை நடத்துவதும் அதற்கு அரசு உறுதுணையாக இருப்பதும் பாசிச பா.ஜ.க ஆட்சியில் சாதாரண நிகழ்வுகள் ஆகிவிட்டன.

இந்துத்துவ கும்பல்கள் நடத்திய தாக்குதலின் பதட்டம் தணிவதற்குள் அரசு அதன் பங்கிற்கு தாக்குதலைத் தொடங்கிவிட்டது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை இணையதள சேவை முடக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதனையடுத்து 150-க்கும் மேற்பட்ட முஸ்லீம்களை போலீசு கைது செய்தது. இதனால் அச்சமடைந்த பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர்.


படிக்க: மணிப்பூர், ஹரியானா என தொடரும் கலவரங்கள்!


அதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் முஸ்லீம்களுக்குச் சொந்தமான 400-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், உணவகங்களை ஹரியானா பா.ஜ.க அரசு இடித்துள்ளது.  இது குறித்துப் பேசிய பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ராமன் மாலிக் பொது நிலங்களில் இருந்த ’சட்டவிரோத ஆக்கிரமிப்புகள்’ அகற்றப்பட்டு வருவதாகவும், கலவரத்திற்கும் தங்கள் நடவடிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று திமிராகப் பேசியுள்ளார்.

தகரம் மற்றும் இரும்புக் கம்பிகளால் ஆன சிறிய கடைகளை இடிக்க புல்டோசர் ஓட்டுநர் தயங்கியபோது, ​​அங்கிருந்த ஒரு போலீஸ்காரர் அவரிடம், “இவையெல்லாம் அந்த யாத்திரையின்போது கற்களை வீசி வன்முறையைத் தூண்டியவர்களின் கடைகள். யாருக்கும் கருணை காட்டவேண்டாம். அவற்றை முழுவதுமாக அழித்துவிடு,” என்று கூறியுள்ளார். அரசு எந்திரம் பாசிச மயமாகி வருவதற்கு இது தக்க சான்று.

மேலும், வி.எச்.பி – பஜ்ரங் தள் காவி குண்டர்கள் விட்டுச்சென்ற இடத்திலிருந்து கலவரத்தை அரசு தொடர்கிறது என்பதையே இந்த நடவடிக்கைகள் நமக்கு உணர்த்துகின்றன.

”சட்ட ஒழுங்கு பிரச்சினை என்ற போர்வையில் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை அரசால் நடத்தப்படுகிறதா என்னும் கேள்வி எழுகிறது” என்று கூறி நான்கு நாட்களாக ஹரியானா அரசால் நடத்தப்பட்டு வந்த இடிப்பு நடவடிக்கைக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 7 அன்று தடைவிதித்தது.

ஹரியானாவில் எம்.எல்.கட்டார் அரசால் முஸ்லீம்களின் வீடுகளும் கடைகளும் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுவதற்கு முன்மாதிரிகள் உள்ளன. உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசும் மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சௌகான் அரசும் முஸ்லீம்களின் வீடுகளையும் கடைகளையும் அகற்றி மதவெறித் தாக்குதல்களை நடத்துவதில் முன்னுதாரணமாக இருந்துள்ளன.


படிக்க: ஹரியானா : பசு பயங்கரவாதிகளால் உயிருக்குப் போராடும் சிவம்


’புல்டோசர் பாபா’ என்று சங்கிகளால் அழைக்கப்படும் யோகி ஆதித்யநாத் ”ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பார்களா?” என்று கூறி முஸ்லீம்கள் மீதான தனது மதவெறித் தாக்குதலை நியாயப்படுத்தினார். அதேபோல் ‘புல்டோசர் மாமா’ என்று அழைக்கப்படும் சிவராஜ் சிங் சௌகான் “பேய்களுடன் சமரசம் செய்து கொள்ள நான் விரும்பவில்லை” என்று தனது முஸ்லீம் வெறுப்பைக் கக்கினார். உத்தரகாண்ட் ஒரு ‘தேவபூமி’என்று கூறி அங்குள்ள மசார்கள் (முஸ்லீம் கல்லறைகள்) புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் புல்டோசர் என்பது முஸ்லீம்களுக்கு எதிரான ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளது. சங்கிகள் புல்டோசர் ஊர்வலம் நடத்தி சிலாகித்துக் கொள்ளும் அளவிற்கு புல்டோசர் என்பது முஸ்லீம் வெறுப்பின் சின்னமாக மாற்றப்பட்டுள்ளது.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவருவதால் ஹரியானாவில் மட்டுமல்ல பா.ஜ.க ஆளும் அனைத்து மாநிலங்களிலும் அரசின் துணைகொண்டு சங்க பரிவார கும்பலால் மதவெறிக் கலவரங்கள், தாக்குதல்கள் அதிக அளவில் நடத்தப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. இச்சூழலை எதிர்கொள்ளும் பொருட்டு மக்களைக் களப் போராட்டத்திற்குத் தயார் செய்வதே பாசிச எதிர்ப்பு சக்திகளின் உடனடிக் கடமையாகும்.


பொம்மி

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2023 | மின்னிதழ்

ன்பார்ந்த வாசகத் தோழர்களே,

ஆகஸ்ட் – 2023 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.20

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

♦ தலையங்கம்: நேற்று குஜராத், இன்று மணிப்பூர்: ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க.வை தடை செய்!
♦ அவரை எதற்கு உள்ளே அழைக்கிறீர்கள்!
♦ பொது சிவில் சட்டம், அறிவிப்பு: இந்துத்துவத்தின் பிரம்மாஸ்திரமா? புஸ்வானமா?
♦ உணவுப் பொருட்களின் விலை உயர்வு: வெடிக்கக் காத்திருக்கும் பொருளாதார பயங்கரவாதத்தின் புகைச்சல்
♦ கவிழ்ந்து வரும் தாமரைக்கு சவக்குழி வெட்டுவோம்!
♦ தலித்துகள் – சிறுபான்மையினர் மீது பெருகிவரும் தாக்குதல்கள்: தீர்வு என்ன?
♦ வனம், கனிமப் பாதுகாப்பு சட்டத் திருத்தங்கள்: கார்ப்பரேட் கொள்ளையின் முகமூடி!
♦ கழன்றது முகமூடி : பாசிசக் கும்பலின் தோல்வி முகமும் பாசிச எதிர்ப்பு சக்திகளின் செயலூக்கமிக்கப் போராட்டமும்! – பகுதி 2
♦ புரட்சிகரப் பாதையை நிலைநாட்டிய பு.ஜ.தொ.ழு.வின் 25 ஆண்டுகள்! – இறுதி பகுதி

பழவேற்காடை அழிக்கப்போகும் அதானியின் துறைமுக விரிவாக்கம்

82 கிராம மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்து – 35 இலட்சம் மக்களுக்கு வெள்ள அபாயம் ஏற்படுத்தும் அதானி குழுமத்தின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டத்தை அதிமுக – பாஜக அரசுகள் அனுமதிக்கக்கூடாது.” 2021ல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கையின் ஒரு பகுதி இது. ஆனால், இன்று அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

சென்னைக்கு அருகாமையில் காட்டுப்பள்ளியில் L&T நிறுவனத்திற்குச் சொந்தமானத் துறைமுகம் ஜனவரி 30, 2013-இல் செயல்பாட்டைத் துவக்கியது. அதானி குழுமம் கடந்த 2018ம் ஆண்டு இந்தத் துறைமுகத்தின் 97% பங்குகளை ரூ.1950 கோடிகள் கொடுத்து வாங்கியது. M/s MARINE INFRASTRUCTURE DEVELOPER PRIVATE LIMITED எனும் பெயரில் இத்துறைமுகத்தை அதானியின் Adani Ports and Special Economic Zone Limited நிறுவனம் நடத்தி வருகிறது.

330 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த துறைமுகத்தை 6100 ஏக்கர் அளவிற்கு விரிவாக்கம் செய்யவதற்காக சுற்றுச்சூழல் அனுமதிகோரி அதானி குழுமம் 2018ஆம் ஆண்டு விண்ணப்பித்தது. இத்திட்டத்திற்கு தேவையான 6110 ஏக்கர் நிலப்பரப்பில், 2291 ஏக்கர் மக்கள் பயன்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்கள் , 1515 ஏக்கர் TIDCO மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான தனியார் நிலம் . இவற்றை கையகப்படுத்தப்போகும் நிலையில் ஏற்கனவே துறைமுகம் அமைந்துள்ள 337 ஏக்கர் போக, சுமார் 6 கிமீ வரையிலான கடல் பகுதிகளில் மணலை கொட்டி சுமார் 1967 ஏக்கர் கடல் பரப்பையும் ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ளனர். இத்திட்டத்திற்காக, நில மீட்பு (Sea Reclamation) என்ற பெயரில் கருங்காளி சேறு, ஆலமரம் சேறு, லாக்கு சேறு, காளாஞ்சி சேறு, கோட சேறு போன்ற கரைக்கடல் சேற்றுப் பகுதிகளில் சுமார் 6கிமீ நீளத்திற்கு 2000 ஏக்கர் பரப்பளவிற்கு மணல் கொட்டப்படும். கடல் பகுதியை மணல்கொட்டி நிரப்பி அதை அதன் இயல்பிலிருந்து  மாற்றுவது என்பது திரும்ப சரிசெய்ய முடியாத மிகப்பெரிய சூழலியல் பாதிப்புகளை உண்டாக்கும்.

அதானி குழுமன் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு(Environmental Impact Assesment) மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம்(Environemntal Management Plan) தயாரிப்பதற்கான ஆய்வு எல்லைகளை(Terms of Reference) 15.10.2019 அன்று ஒன்றிய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் வழங்கியது. இந்த ஆய்வு எல்லையின் கால அவகாசம் 4 ஆண்டுகளாகும்.

குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம் ஆகியவற்றை பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அப்போதைய அ.தி.மு.க. அரசால் 22.01.2021 அன்று நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு அப்போதைய எதிர்கட்சியான தி.மு.க. உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட பல சுற்றுச்சூழல், மீனவர் அமைப்புகள் இத்திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி தொடர் பிரச்சாரங்களை முன்னெடுத்தன.

இந்த எதிர்ப்பின் தீவிரத்தை உணர்ந்த அ.தி.மு.க. அரசு 22.01.2021 அன்று நடைபெற இருந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தை ஒத்திவைத்தது. அதானி குழுமம் தற்போது15.10.2023ஆம் தேதிக்குள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இத்தேதிக்குள் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தி திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டத்தை ஒன்றிய அரசிடன் அதானி நிறுவனம் சமர்ப்பிக்காவிட்டால் மீண்டும் தொடக்கத்திலிருந்து அடிப்படை ஆய்வுகளைச் செய்து சுற்றுச்சூழல் அனுமதிகோரி புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். இதனைத் தவிர்ப்பதற்குதான் செப்டம்பர் 5ஆம் தேதியன்று பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தி திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டத்தை 15.10.2023க்குள் ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்க அதானி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

13.01.2021 அன்று இவ்விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட தி.மு.க. தலைவர், இப்போதைய தமிழ் நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அதானியின் துறைமுக விரிவாக்கத்தைக் கடுமையாக எதிர்த்தார்.  “ 82 கிராம மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்து – 35 இலட்சம் மக்களுக்கு வெள்ள அபாயம் ஏற்படுத்தும் அதானி குழுமத்தின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டத்தை அதிமுக – பாஜக அரசுகள் அனுமதிக்கக்கூடாது. அதானி குழுமத்திற்காகத் தமிழகத்தின் பொருளாதார நலனையும் – சுற்றுப்புறச் சூழலியல் பாதுகாப்பையும் அ.தி.மு.க. அரசும் – மத்திய பா.ஜ.க. அரசும் போட்டிப் போட்டுக் கொண்டு தாரைவார்ப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. இந்தத் துறைமுக விரிவாக்கத் திட்டம் எவ்விதத்திலும் மக்களுக்கோ – சுற்றுப்புற சூழலியலுக்கோ நண்பன் இல்லை; மாறாகப் பரம விரோதியாகவே இந்தத் துறைமுக விரிவாக்கத் திட்டம் அமைந்திருக்கிறது என்பதை அ.தி.மு.க. அரசோ – அதானிக்காக வரிந்து கட்டிக் கொண்டு தமிழக மற்றும் ஆந்திர மீனவர்களை வஞ்சிக்க நினைக்கும் மத்திய பா.ஜ.க. அரசோ யோசித்துக் கூடப் பார்க்காமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது”  என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அதே ஆண்டு தேர்தலைச் சந்தித்த தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில் “ தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அதானி துறைமுகத்துக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது” எனக் கூறியது. இந்த நிலையில் அதானி நிறுவனம் விரைவாக இத்திட்டத்தை துவக்குவதற்கு ஏற்ற வகையில் செப்டம்பர் 5ஆம் தேதி பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த அறிவிப்பு வெளியாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ் நாடு அரசு எல்லா திட்டங்களையும் காலநிலை மாற்றம் எனும் கண்ணாடியைக் கொண்டே அணுகும் என்று அறிவித்த முதலமைச்சர் தனது வாக்குறுதியிலிருந்து பின்வாங்கக் கூடாது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்திக் கொடுத்துவிட்டால் ஒன்றிய அரசிடமிருந்து சுற்றுச்சூழல் அனுமதியோ, தேசிய காட்டுயிர் வாரிய அனுமதியோ பெறுவது அதானி நிறுவனத்திற்கு மிகவும் எளிய காரியாமாகி விடும்.

அப்படி நிகழ்ந்தால் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உவர்நீர் ஏரி அழிந்துபோகும். அந்த ஏரியையும் திட்டம் அமையவுள்ள கடற்பகுதியையும் நம்பி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 35 லட்சம் மக்களை வெள்ள அபாயம் சூழும்.

இதுமட்டுமின்றி அண்மையில் பிரதமர் மோடி அமெரிக்க சென்று திரும்பியவுடன் வெள்ளை மாளிகை வெளியிட்ட ஆவணத்தில் “அமெரிக்க ராணுவம் காட்டுப்பள்ளியில் உள்ள L&T துறைமுகத்துடன் மேற்கொண்டுள்ள MSRA ஒப்பந்தம் பல அரங்குகளிலும் அமெரிக்கா மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளுக்கான செலவு குறைந்த மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் நிலையான செயல்பாடுகளை எளிதாக்குகிறது” எனக் கூறியிருந்தது. ஏற்கெனவே காட்டுப்பள்ளிக்கு இதுவரை மூன்று அமெரிக்க ராணுவ கப்பல்கள் வந்து சென்றுள்ளன. இந்த நிலையில் அதானியின் துறைமுக விரிவாக்கம் தமிழ் நாட்டிற்கு பன்னாட்டு அளவில் ஆபத்தையே விளைவிக்கும்.

இதனைக் கருத்தில் கொண்டு உடனடியாக மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அறிவிப்பைத் திரும்பப்பெற தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் எனக் கோருகிறோம். இதே கோரிக்கையை தமிழ் நாட்டின் அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும், இயக்கங்களும் முன்வைக்க வேண்டும் எனவும் கோருகிறோம்.

– பூவுலகின் நண்பர்கள்

நன்றி: பூவுலகின் நண்பர்கள்

disclaimer

மக்களின் முழக்கமாகிய “BAN BJP – BAN RSS” சிவப்பு அலை பாடல்..

டந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி மணிப்பூர் கலவரத்தை ஒட்டி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழு சார்பாக BAN BJP – BAN RSS என்ற பாடலை வெளியிட்டோம். இப்பாடல் மாணவர்கள், இளைஞர்கள், பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் என்று பல்வேறு தரப்பினரிடமும் பெரும் வரவேற்பை பெற்று வெளியிட்ட 6 நாட்களில் பத்தாயிரம் பார்வைகளை கடந்துள்ளது.

யூடியூப் சேனலில் பார்த்தவர்கள் மட்டுமின்றி பலரும் “BAN BJP – BAN RSS” பாடலை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில் சில பதிவுகள் ஆயிரக்கணக்கான பார்வைகளை எட்டியுள்ளது. இதனடிப்படையில், யூடியூப் சேனலில் பார்த்த பத்தாயிரம் பேர் மட்டுமின்றி லட்சகணக்கானோரை இப்பாடல் சென்று சேர்ந்துள்ளது

2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க மதவெறியை மூர்க்கமான ஆயுதமாக கையாண்டு வரும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலுக்கு சம்மட்டி அடியாக BAN BJP – BAN RSS (பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ்-வை தடை செய்) என்று முழங்கிய இப்பாடலானது பாசிச எதிர்ப்பு கொண்ட அனைவரையும் கவர்ந்துள்ளது.

வினவு யூடியூப் சேனலில் இந்த காணொளியை வெளியிட்டதிலிருந்து பலரும் தங்களது வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். இந்த பாடல் வெளியானதையொட்டி இரண்டு இஸ்லாமியார்கள் (நான் ஒரு முஸ்லீம் என்று அவர்களே கூறினர்) தனித்தனியாக நம்மை தொலைபேசியில் தொடர்புகொண்டனர். அதில் ஒருவர் இன்றைய சூழலுக்கு இப்பாடல் மிகவும் பொருத்தமானது என்றும் மீண்டும் ஒருமுறை பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் நாட்டையே ஒழித்துக் கட்டி விடுவார்கள் என்றும் கூறினார். இன்னொருவர், “இது தான் சரியான அரசியல். இதை நீங்கள் தொடர்ந்து பேச வேண்டும். ஜல்லிக்கட்டு போராட்டத்தை போன்று ஒரு போராட்டத்தை கட்டியமைக்க வேண்டும்” என்றார்.

மேலும், “தேசபக்தி உள்ளவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய பாடல்” என்று நமது பாடலை வாட்ஸ் அப் மூலம் அதிகம் பேர் பகிர்ந்துள்ளனர். அதைப் பார்த்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனுசியா என்பவர் நம்மை அழைத்து மணிப்பூர் கலவரம் தொடர்பான தனது ஆதங்கத்தை நம்மிடம் வெளிப்படுத்தினார்.

இந்த பாசிச காலகட்டத்தில், குறுகிய காலத்தில் இப்பாடலுக்கு கிடைத்த வரவேற்பு என்பது புரட்சிகர பாடலுக்கும் மக்களின் உணர்வுகளை சரியாக பிரதிபலித்ததற்கும் கிடைத்த அங்கீகாரம் ஆகும். தேர்தலில் பா.ஜ.க வேண்டாம் என்பதே ஜனநாயகம் என்று பலரும் பேசிக்கொண்டிருக்கும் சூழலில் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்வதே ஜனநாயகம் என்று நாம் முழங்கியுள்ளதை மக்களும் ஜனநாயக சக்திகளும் அங்கீகரித்துள்ளனர். இனியும் தொடர்ச்சியாக நாம் நடப்பு அரசியல் மீது பாடல்கள் மூலம் வினையாற்றுவோம். அதற்கும் தாங்கள் இதேபோன்று தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஈரோடு புத்தகக்கண்காட்சி – ஆர்.எஸ்.எஸ் பற்றிய புத்தகங்களை அகற்றச் சொல்லும் தமிழ்நாடு போலீசு

மே17 இயக்க தோழர்கள்  வெளியிட்ட  ஆர்.எஸ்.எஸ் (உலகின் மிகப்பெரிய பயங்கரவாத குழு) எனும் புத்தகம், மதிமுகவின் பொருளாளர் தோழர்.செந்திலதிபன் அவர்கள் எழுதிய ‘இந்துத்துவ பாசிசம் வேர்களும், விழுதுகளும்’ எனும் நூலும், திராவிடர் கழகத்தின் தோழர்.மஞ்சை வசந்தன் அவர்கள் எழுதிய ‘அர்த்தமற்ற இந்துமதம்’ ஆகிய நூல்களை ஈரோடு புத்தகக்கண்காட்சியின் அரங்கிலிருந்து அகற்றச் சொல்லி காவல்துறை மிரட்டியுள்ளார்கள்.

இப்புத்தகங்களை நீக்க மறுத்த நிமிர் அரங்கின் தோழரை காவல்நிலையத்திற்கு வரச்சொல்லி காவல்துறை வண்டியில் ஏறுமாறு அச்சுறுத்தியுள்ளனர். பின் அவரது கையை பிடித்து காவல்துறை இழுத்துள்ளது. இவற்றிற்கான அடிப்படை காரணம், சமூகவிரோத சங்கிகள் சிலர் இப்புத்தகங்கள் பற்றி காவல்துறையில் புகார் தெரிவித்ததாக காவல்துறை சொல்லுகிறது. சமூகவிரோதிகளுக்கு கட்டுப்பட்டு ஈரோடு காவல்துறை வேலைசெய்கிறதா எனும் கேள்வியை இது எழுப்புகிறது. இந்த நடவடிக்கை எவ்வகையில் சட்டபூர்வமானது என காவல்துறை தெரிவிக்க வேண்டும்.

மேலும், வணிக தளத்திற்குள் நுழைந்து வணிகத்தை தடுக்கும் அதிகாரத்தை எங்கே இருந்து பெறுகிறார்கள். கருத்துரிமை தளத்திலும், பதிப்பக உரிமையிலும் காவல்துறை சங்கிகளின் விருப்பத்திற்காக தலையிடுவது கடுமையான கண்டனத்திற்குரியது. இதுபற்றி திமுக அரசு உடனடியாக காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக நந்தினி ஆனந்தன் சகோதரிகள் கிட்டதட்ட 1 மாதமாக சிறையில் உள்ளார்கள். தமிழக காவல்துறையை ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்துகிறதா எனும் கேள்வியை இந்த நடவடிக்கைகள் எழுப்புகின்றன.

திருமுருகன் காந்தி முகநூல் பக்கத்திலிருந்து

disclaimer

இஸ்ரேல் மக்கள் போராட்டம்: பாசிஸ்டுகளை முறியடிக்க பாலஸ்தீனியர்களோடு கைகோர்ப்பதே தீர்வு!

த்திய கிழக்காசிய நாடான இஸ்ரேல் சமீப மாதங்களாக மக்கள் போராட்டங்களால் குலுங்கி வருகிறது. நீதித்துறை அதிகாரத்தை இல்லாமல் செய்து எதேச்சதிகார அரசை நிறுவும் நோக்கில் பிரதமர் நெதன்யாகு அறிமுகம் செய்த நீதித்துறை மறுசீரமைப்பு தொகுப்பு மசோதாவிற்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய போராட்டம் 30 வாரங்களையும் கடந்து இன்னும் ஓயவில்லை. பல லட்ச கணக்கான இஸ்ரேலிய மக்கள் இப்போராட்டத்தில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். இஸ்ரேல் வரலாற்றில் இப்படி ஒரு போராட்டமே நடந்ததில்லை என்று இப்போராட்டம் வர்ணிக்கப்படுகிறது. இருப்பினும் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி இஸ்ரேல் அரசாங்கம் இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதனையடுத்து இஸ்ரேலில் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.

நீதித்துறை அதிகாரத்தை  ஒழித்துக்கட்டும் பாசிஸ்டுகள்:

இஸ்ரேல் நாட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில் மதவாத சியோனிச கட்சி, ஷா கட்சி உள்ளிட்ட யூத இனவெறி பாசிச கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்தார் நெதன்யாகு. ஆட்சி பொறுப்பெடுத்து கொண்ட கையோடு இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்-இல் நீதித்துறையின் விதியான “நியாயமான கோட்பாடு” என்ற அதிகாரத்தை பறிக்கும் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதாவை அறிமுகப்படுத்தினார், நெதன்யாகு.

இஸ்ரேல் அரசியல் அமைப்பு சட்டத்தில் நீதித்துறைக்கு வழங்கப்பட்டுள்ள “நியாயமான கோட்பாடு” அதிகாரமானது யூத சட்டமான “ஹலகா”வில் இருந்தே பின்பற்றபடுகிறது. இந்த ஹலகா சட்டத்தில் சட்ட முடிவு எடுப்பதில் நியாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. எழுதப்படாத அரசியலமைப்பு சட்டத்தை (Unwritten Constituition) கொண்ட இஸ்ரேல் நாட்டில் “நியாயமான கோட்பாடு” விதியை பயன்படுத்தி அரசாங்கத்தின் முடிவுகள் நியாயமாக உள்ளதா என்று கண்காணித்து அதை திருத்துவதற்கான அதிகாரம் நீதிமன்றத்திற்கு உள்ளது.

இஸ்ரேல் அரசியல் அமைப்பு சட்டத்தில் சொல்லிகொள்ளும் அளவிற்கு அதிகாரங்கள் வழங்கப்படாத இஸ்ரேலிய நீதித்துறைக்கு நாடாளுமன்றத்தை சோதிக்க (Check) இருக்கும் ஒரே வழி இந்த “நியாயமான கோட்பாடு” மட்டுமே. இவ்விதியின் மூலம் நாடாளுமன்றத்தில் நியமிக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் தகுதி வாய்ந்தவர்கள் தானா என்று சோதித்து இஸ்ரேல் நீதிமன்றத்தால் அவர்களை நீக்க முடியும். மேலும் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் சட்டங்களும் அமல்படுத்தப்படும் கொள்கைகளும் திட்டங்களும் “நியாயமான கோட்பாடு” விதிக்கு உட்பட்டுள்ளதா என்று சோதித்து அவற்றையும் நீக்கும் அதிகாரம் நீதித்துறைக்கு உள்ளது. தங்களுக்கு தொந்தரவாக இருக்கும் நீதித்துறையின் இந்த அதிகாரத்தை பறிக்க வேண்டும் என்பது பாசிஸ்டுகளின் நெடுநாள் திட்டமாகும்.


படிக்க: இஸ்ரேல்: நெதன்யாகு அரசை ஸ்தம்பிக்க வைத்த மக்கள் போராட்டம்!


எனவே இந்த மசோதா மூலம் நீதித்துறையில் மூன்று முக்கியமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது நெதன்யாகு அரசு. முதலில் நீதித்துறையின் “நியாயமான கோட்பாடு” என்பது தேர்ந்தெடுக்கப்படாத நீதிபதிகளுக்கு “நியாமற்ற” அதிகாரங்களை வழங்குகிறது என்று வாதாடும் பாசிஸ்டுகள் இம்மசோதாவின் மூலம் நீதித்துறையின் அதிகாரத்தை பறித்துள்ளனர். இரண்டாவதாக,  “ஓவர்ரைடு ஷரத்”-ஐ அறிமுகம் செய்துள்ளதன் மூலம் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்யவும் நாடாளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையை (Simple Majority) நிரூபித்து அம்முடிவுகளை முறியடிக்கவும் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. மூன்றாவதாக, நீதிபதிகளை நியமிக்கும் 9 பேர் கொண்ட நீதித்துறை தேர்வு குழுவில் அரசின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீதிபதிகளை நியமிப்பதில் அரசின் கை ஓங்குகிறது. இஸ்ரேலிய நீதிமன்றத்தில் ஏற்கனவே திட்டமிட்டு வலதுசாரி பாசிச சித்தாந்தம் கொண்டவர்கள் நிரப்பப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் இந்த சட்ட மசோதாவின் மூலம் பாசிச அடிவருடி நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் சட்டபூர்வமாகவே பாசிஸ்டுகளின் கரங்களில் குவிக்கப்படுகிறது.

இதற்கிடையே பிரதமரை “பதவிக்கு தகுதியற்றவர்’ என்று அறிவிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதியின் அதிகாரத்தை நீக்கும் சட்டமும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் ஒரு நாட்டின் பெயரளவிலான அதிகாரப்பகிர்வு கூட ஒழித்துகட்டப்பட்டு, பாசிஸ்டுகளுக்கு ஏதுவாக ஏற்கனவே அதிகாரங்கள் மையப்படுத்தப்பட்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்த அதிகாரங்களும் குவிக்கப்படுகின்றன.

எனவே, இச்சட்டத்திருத்தத்தின் மூலம் இஸ்ரேலிய பாசிஸ்ட்டுகளின் நெடுநாள் கனவான இஸ்ரேலையும் பாலஸ்தீனத்தையும் உள்ளடக்கிய “கிரேட்டர் இஸ்ரேல்” (இந்திய காவி பாசிஸ்டுகளின் “அகண்ட பாரதத்தை” போல) கனவை நனவாக்கிகொள்ள முடியும். அதாவது, பல தாசப்தங்களாக இஸ்ரேலிய வலதுசாரிகள் திட்டமிட்டு ஆக்கிரமித்து வரும் பாலஸ்தீனத்தை முழுமையாக விழுங்கி பாலஸ்தீன மக்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே அந்த கொடுங்கனவு. இந்த நோக்கத்தில் பல ஆண்டுகளாகவே நெதன்யாகு ஆட்சிக் காலத்தில் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் இஸ்ரேலின் மேற்கு கரையை  வைதீக தீவிர யூதர்கள் (Orthodox Ultra Jews – நம் நாட்டின் உயர்சாதி பார்ப்பனர்களை போல) திட்டமிட்டு ஆக்கிரமித்து வருகின்றனர். ஆனால், சில நேரங்களில் நீதிமன்றம் இந்த ஆக்கிரமிப்புக்கு எதிரான தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனால், தற்போது பாசிஸ்டுகளுக்கு இத்தடை விலகியுள்ளது.

இவையன்றி, இந்த சட்டத்திருத்தத்தின் மூலமாக ஊழல், மோசடி, நம்பிக்கை மீறல் மற்றும் லஞ்சம் வாங்கிய புகார்களில் சிக்கியுள்ள நெதன்யாகுவும், பிற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரது கூட்டாளிகளும் தப்பிக்க முடியும் என்பது இன்னொரு  அம்சம். ஏனெனில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நெதன்யாகுவின் கூட்டணி கட்சி தலைவர்களில் ஒருவரான ஷா கட்சியின் தலைவர் ஆர்யே டெரியை உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக நியமிப்பதற்கு எதிராக “நியாயமான கோட்பாட்டை” பயன்படுத்தி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் அவரை நீக்க வேண்டிய நிலைக்கு நெதன்யாகு தள்ளப்பட்டார். எனவே, தற்போது  எந்த கவலையுமின்றி பாசிஸ்டுகளால் ஊழல் செய்யமுடியும்.

மேலும், இந்த சட்டத்தை பயன்படுத்தி பாசிஸ்டுகளால் அரபு கட்சிகளை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடுக்க முடியும் என்கிறார் இஸ்ரேல் வரலாற்றாசிரியரான யுவால் நோ ஹராரி.  மேலும், தாங்கள் மத நூல்களை படிக்க வேண்டும் என்று காரணம்காட்டி கட்டாய ராணுவ சேவையிலிருந்து விலகி இருந்த வைதீக யூதர்களை ராணுவ சேவை செய்யும்மாறு தீர்ப்பு வழங்கிய நீதித்துறையின் தீர்ப்புக்கும் முடிவு கட்ட முடியும். தொகுப்பாக, இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் பெயரளவிலான நீதித்துறை அதிகாரம் கூட இனி பாசிஸ்டுகளுக்கு ஒரு தடையாக இருக்க போவதில்லை.

வரலாறு காணாத இஸ்ரேல் மக்கள் போராட்டம்:

ஏற்கனவே நெதன்யாகுவின் ஊழல் மோசடிகள் காரணமாக அவர் மீது ஆத்திரத்தில் இருந்த இளைஞர்களை பாசிஸ்டுகளின் இந்நடவடிக்கை வீதிக்கு அழைத்து வந்தது. ஜனவரி 4 ஆம் தேதி நீதித்துறை சீர்திருத்தம் குறித்து நீதித்துறை அமைச்சர் யாரிவ் லெவின் அறிவித்தவுடனேயே கிரைம் மினிஸ்டர் (Crime Minister – நெதன்யாகு ஊழல் வழக்கில் அம்பலப்பட்ட போது அவருக்கு எதிராக இஸ்ரேலில் உருவாக்கப்பட்ட இயக்கம்), ஓம்டிம் பெயசட் (Omdim Beyachad) உள்ளிட்ட இயக்கங்கள் போராட்டத்திற்கு அறைகூவின. மூன்றே நாட்களில் ஜனவரி 7 அன்று ஆயிரக்கனக்கானோர் டெல் அவிவ் நகரில் கூடி போராட்டம் நடத்தினர். ஜனவரி 14 தொடங்கி டெல் அவிவ் நகரின் கப்லான் தெருவில் வாராந்திர அடிப்படையில் சனிக்கிழமை இரவுதோறும் 60,000 முதல் 1,50,000 வரையிலான போராட்டக்காரர்கள் கூடத் தொடங்கினர்.

போராட்டகளம் தோறும் இஸ்ரேலின் நீலம் மற்றும் வெள்ளை நிறக் கொடிகள் எதிர்ப்பின் அடையாளமாக மாறியது. “இஸ்ரேல் கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரம்”, “அவர்களை நிறுத்துங்கள்”, “அவமானம்”, ”ஜனநாயகம் ஜனநாயகம்” உள்ளிட்ட முழக்கங்களும் பதாகைகளும் போராட்டக்களத்தை அலங்கரித்தன. இஸ்ரேலில் இப்படியொரு போராட்டத்தை எதிர்பார்க்காதவர்கள் அதனை “வரலாறு காணாத போராட்டம்” என்றும் “இஸ்ரேல்  வசந்தம்” என்றும் வர்ணித்தனர்.

மார்ச்  மாத இறுதியில்  போராட்டம் நடத்தும் மக்களுக்கு ஆதரவாக கருத்து சொன்ன இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மார்ச் 26 அன்று, நூறாயிரக்கணக்கில் ஒன்றிணைந்து இஸ்ரேல் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் செய்தனர். இஸ்ரேலியப் பல்கலைக்கழகங்கள் (மேற்குக் கரையில் அமைந்துள்ள ஏரியல் பல்கலைக்கழகத்தைத் தவிர) காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்தன. அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அனைத்து வகுப்புகளும் ஆராய்ச்சிகளும் நிறுத்தப்பட்டன. 23 உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், நீதித்துறை சீர்திருத்தத்தை நிறுத்தக்கோரி, பிரதமர் அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளதாக அறிவித்தனர்.


படிக்க: இஸ்ரேல்: பாசிஸ்டுகளுடன் கூட்டணியமைத்த நெத்தன்யாஹூ!


நாட்கள் செல்ல செல் போராட்டங்களும் அதில் பங்குபெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே சென்றன. டெல் அவிவ் முதல் ஜெருசலேம் வரை பல பேரணிகள் நடைபெற்றன. பல இடங்களில் சாலை மறியல்கள் நடந்தன. கிட்டத்தட்ட மார்ச் மாத தொடக்கத்திலேயே டெல் அவிவ் நகரம் போராட்டங்களால் முடக்கப்பட்டது. சிலர் ஜெருசேலத்தில் உள்ள பழமைவாத சிந்தனைக் குழுவின் அலுவலகங்களை முற்றுகையிட தொடங்கினர்.

இளைஞர்கள், தொழிலாளர்கள், வணிக தலைவர்கள், மருத்துவர்கள், பாதுகாப்பு படையினர் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் பங்குபெற ஆரம்பித்தனர். மருத்துவர்கள் இரண்டு மணி நேர வேலைநிறுத்தம் செய்தனர். ஜூலை 23 அன்று 200 இஸ்ரேலிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தாங்களும் போராட்டத்தில் இணைவதாக அறிவித்தன. விக்ஸ், விஸ், மண்டே மற்றும் ரெடிஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியர்கள் குழு போராட்டத்திற்கு வருவதற்காக 100 பேருந்துகளை வாடகைக்கு எடுத்தன. ஜூலை 23 அன்று, இஸ்ரேலின் 150 மிகப்பெரிய வணிக நிறுவனங்களின் அமைப்பான “இஸ்ரேல் பிசினஸ் ஃபோரம்” வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தது.

எந்த ராணுவத்தை வைத்து பாலஸ்தீனத்தை ஒடுக்க வேண்டும் என்று நெதன்யாகு கனவு கண்டு கொண்டிருந்தாரோ அந்த பாதுகாப்பு படையினரும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். ஜூன் 27 அன்று, நீதித்துறை அமைச்சர் யாரிவ் லெவின் வீட்டிற்கு வெளியே 300-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் (Israel Defence Force – IDF) ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றபட்டால் தாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றும் பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதற்கிடையே சட்டத்திருத்தத்திற்கு நெசெட் ஒப்புதல் அளித்ததையடுத்து போராட்டங்கள் வீரியமாக நடைபெறுகின்றன.

பாலஸ்தீனியர்களை இணைத்து போராடாமல் தீர்வில்லை:

ஆனால், வினோதமான விஷயம் என்னவென்றால் இஸ்ரேலின் மக்கள் தொகையில் சுமார் 20 சதவிகிதமாக உள்ள பாலஸ்தீனியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது தான். உண்மையிலேயே இந்த சட்டத்திருத்தின் மூலம் இஸ்ரேல் மாக்களை காட்டிலும் அதிகமாக பாதிக்கப்படபோவது பாலஸ்தீனியர்கள் தான்.

அதற்காக, நீதித்துறை பாலஸ்தீனியர்களின் அரணாக இருந்துள்ளது என்று பொருளில்லை. பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இராணுவ துப்பாக்கிச் சூடும் வன்முறையும் அடக்குமுறையும் நடக்கும் போது அதனை வேடிக்கை பார்த்து அதற்கு துணை போனது தான் இந்த நீதிமன்றம். ஆனால், நீதிமன்றத்தின் அதிகாரங்கள் ஒழித்துகட்டப்பட்டு அவை பாசிஸ்டுகளின் கரங்களில் குவிக்கப்படுவது தங்கள் மீதான ஒடுக்குமுறையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்பது பாலஸ்தீனியர்களுக்கு நன்றாக தெரியும். இருப்பினும் பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அதற்கு காரணம், இந்த போராட்டங்களில் தங்களுக்கு ஒரு வெளி உள்ளது என்ற நம்பிக்கை பாலஸ்தீன மக்களுக்கு அளிக்கப்படவில்லை.

பாலஸ்தீனியர்களின் விடுதலை அவர்களின் நிலத்தில் தான் உள்ளது. ஒருவேளை அதற்கான முழக்கம் இஸ்ரேல் மக்கள் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் அப்போராட்டத்தில் பங்குபெற்றிப்பர்.  அப்படி நடக்காததாலேயே இஸ்ரேலின் மதசார்பற்ற யூத மக்கள் நீதித்துறை சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராடி கொண்டிருக்கும் போது, இஸ்ரேல் அரசு தங்கள் நிலத்தை கையகப்படுத்துவதை எதிர்த்துப் போராடிய நில தினத்தை பாலஸ்தீனியர்கள் கொண்டாடி கொண்டிருந்தனர்.

மேலும், இப்போராட்டத்தில் பாலஸ்தீனியர்கள் போராடுவதற்கு ஏற்ற சூழலும் இல்லை. பல இடங்களில் பாலஸ்தீனிய குடிமக்கள் உரையாற்ற அழைக்கப்படுவதில்லை. அப்படியே அழைக்கபட்டாலும் தங்கள் நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை குறிப்பிடாமல் பேச ஒப்புக்கொண்டால் மட்டுமே பேச அனுமதிக்கப்படுகிறார்கள். பல இடங்களில் போராட்டத்தில் பாலஸ்தீன கொடிகள் ஏந்த அனுமதியில்லை. மேலும், இந்த போராட்டத்தில் பங்கேற்றால் நெதன்யாகு அரசால் யூதர்களை காட்டிலும் பாலஸ்தீனியர்களுக்கு கொடூரமான தண்டனை விதிக்கப்படும்.

எனவே பாலஸ்தீனிய மக்களையும் தங்களோடு இணைத்துக்கொண்டு அவர்களின் உரிமை முழக்கத்தையும் முன்வைத்து போராடுவதே இந்த போராட்டத்தின் பலத்தை அதிகரிக்கும். இது குறித்து எழுத்தாளரும், பாலஸ்தீனிய குடிமக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பலாட் கட்சியின் உறுப்பினருமான ஓர்லி நோய், “அரேபிய மக்களின் பங்கேற்பு இல்லாமலும் பிரதேசங்களிலும் இஸ்ரேலுக்குள்ளும் உள்ள நிறவெறியை பற்றி பேசாமலும் இஸ்ரேலை ஜனநாயகப்படுத்த வழி கிடையாது” என்கிறார்.

பாலஸ்தீனியப் நகரமான நாசரேத்தின் முன்னாள் துணை மேயர் சுஹில் டியாப் கூறுகையில், “இஸ்ரேலிய பாலஸ்தீனியர்களாகிய நாங்கள் போராட்டத்தின் சொற்பொழிவிலிருந்து விலக்கப்பட்டிருந்தாலும், முந்தைய ஆண்டுகளின் போராட்ட இயக்கங்களுடன் ஒப்பிடுகையில் போராட்டக்காரர்கள் சரியான திசையில் நீண்ட தூரம் வந்துள்ளனர் என்று நான் உணர்கிறேன்” என்கிறார். எனவே கொஞ்சம் கொஞ்சமாக ஜனநாயகப்பட்டு கொண்டிருக்கும் இப்போராட்டத்தில் பாலஸ்தீனியர்களை இணைக்க வேண்டியது மட்டுமே மீதம் உள்ளது. அதுவே பாசிஸ்டுகளுக்கும் சம்மட்டி அடியாக இருக்கும்.

தங்கள் வாழ்நாளில் பாசிஸ்டுகளால் சகித்துக்கொள்ள முடியாத விஷயம் என்றால் அது தாங்கள் பிரித்தாண்டு கொண்டிருக்கும் இரண்டு பிரிவினர் வர்க்க ரீதியாக ஒன்றிணைந்து தங்களுக்கு எதிராக குரல் எழுப்புவதே. இந்த வர்க்க அணிசேர்க்கை தான் இலங்கை பாசிஸ்டுகளான ராஜபக்சேக்களுக்கு உயிர் பயத்தை கொடுத்து நாட்டைவிட்டு ஓட வைத்தது. எனவே, தாங்கள் எதிர்த்து போராடி கொண்டிருப்பது பாசிஸ்டுகளை என்பதை உணர்ந்து பொது எதிரிக்கு எதிராக பாலஸ்தீனியர்களையும் இணைத்து அவர்களின் முழக்கங்களையும் முன்வைத்து போராடுவதே இஸ்ரேல் மக்கள் போராட்டத்தை  வெற்றியை நோக்கி கொண்டுசெல்லும். இல்லையேல், இன்று தற்காலிகமாக இஸ்ரேல் சட்டதிருத்த மசோதா திரும்பபெறபட்டாலும் நாளை பாசிஸ்டுகளுக்கு எதிராக கண்டிப்பாக பாலஸ்தீனியர்களோடு இணைந்துதான் போராட வேண்டியிருக்கும்.


துலிபா

கலவரம் நடத்துவதை வெளிப்படையாக சொல்லும் காவி பயங்கரவாதி! | தோழர் வெற்றிவேல் செழியன்

கலவரம் நடத்துவதை வெளிப்படையாக சொல்லும் காவி பயங்கரவாதி!
– தோழர் வெற்றிவேல் செழியன்

காணொலியை பாருங்கள் பகிருங்கள்

ஆசிரியர்களை கற்பித்தல் பணியில் இருந்து அகற்றும் திட்டமே மணற்கேணி | ஆசிரியர் உமா மகேஸ்வரி

ஆசிரியர்களை கற்பித்தல் பணியில் இருந்து அகற்றும் திட்டமே மணற்கேணி
– ஆசிரியர் உமா மகேஸ்வரி

காணொலியை பாருங்கள் பகிருங்கள்

மணிப்பூர், ஹரியானா என தொடரும் கலவரங்கள்!

மணிப்பூர், ஹரியானா என தொடரும் கலவரங்கள்!
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச குண்டர்படைகளை தடை செய்!

ஆர்.எஸ்.எஸ் சார்பு மெய்தி இனவெறிக் கும்பல்களால் முன்னின்று நடத்தப்பட்ட மணிப்பூர் கலவரத்தில் 2 பெண்களை நிர்வாணமாக்கி இழுத்து செல்லும் வீடியோவால் நாடே அச்சத்தில் மூழ்கியுள்ள நிலையில் தற்போது ஹரியானா கலவரம் அரங்கேறியுள்ளது.

ஜூலை 31 திங்கள்கிழமை அன்று ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிசத் மற்றும் பஜ்ரங் தளம் நடத்திய ஊர்வலம் கலவரமாக மாற்றப்பட்டது. ஊர்வலம் தொடங்க இருந்த சிவன் கோவிலில் மக்கள் சிறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், வன்முறை கும்பல் சூழ்ந்துள்ளதாகவும் செய்திகள் பரப்பப்பட்டதையடுத்து நூஹ் பகுதியில் வன்முறை மூண்டது.

கோவில் சேதப்படுத்தப்பட்டதாக வந்த தகவல் பொய் என கோவில் தலைமை பூசாரி மறுத்தது குறிப்பிடத்தக்கது. ஊர்வலத்திற்கு வந்த 2,000 பேர் கோவிலுக்குள் இருந்துள்ளனர். வி.எச்.பி மற்றும் பஜ்ரங் தள குண்டர்படைகள் திட்டமிட்டு பொய்ச் செய்திகளை பரவச் செய்து கோவிலில் இருந்த மக்களை அச்சமடையச் செய்து கலவரமாக மாற்றியுள்ளனர்.

நூஹ் மாவட்டத்தைத் தொடர்ந்து அன்று மாலையே குருகிராம், சோஹ்னாவில் கலவரம் வெடித்தது. குருகிராமில் 70 பேர் கொண்ட குண்டர்படை மசூதிக்குத் தீ வைத்தது. வெறிபிடித்த  இந்து மதவெறிக் கும்பல் மசூதியிலிருந்த 19 வயது இமாம்-ஐ கொன்றது.


படிக்க: ஹரியானா : பசு பயங்கரவாதிகளால் உயிருக்குப் போராடும் சிவம்


இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்; ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். ஒரே நாள் இரவில் இரண்டு மசூதிகளை எரித்துள்ளனர். பல இடங்களில் வழிபாட்டு தலங்கள், கார்கள், வாகனங்கள், கடைகள், கட்டிடங்கள், போன்றவை சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

***

ஹரியானா ‘பசுப் பாதுகாவலர்’ தலைவரும், பஜ்ரங்  தள் உறுப்பினருமான மோனு மானேசர் மூன்று நாட்களுக்கு முன் “நான் அங்கே வருகிறேன், உங்கள் அண்ணன் வருகிறார்” என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளான். அப்போதிருந்தே அப்பகுதி பதட்டமடைந்துள்ளதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

மானேசரின் வீடியோ வைரலானவுடன் மேவாட் (மேவாட் மாவட்டம் 2016 இல் நூஹ் என பெயர் மாற்றப்பட்டது) முஸ்லீம் இளைஞர்கள் தங்களது சொந்த வீடியோக்களை வெளியிட்டு  “மானேசரை  மேவாட்டில் அனுமதிக்க கூடாது, அவரை கைது செய்ய வேண்டும்” என்று ஹரியானா அரசின் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். மேவாட் இளைஞர்கள் குழு மானேசருக்கு எதிராக போராடவும் அழைப்பு விடுத்துள்ளது. இப்பதிவுகளில் ஹரியானா அரசின் சமூக ஊடகப் பக்கங்களையும் டேக் (Tag) செய்ததாக இளைஞர்கள் குழு கூறியது. அரசு நிர்வாகமும், ஆளும் பாஜக அரசாங்கமும் இதைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டன.

மானேசர் தனது டிவிட்டர் பக்கத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான உள்ளடக்கங்களையே தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளான். மானேசர் கொலைக்காரப் பட்டியலில் தேடப்படுபவன். அவன் இந்த யாத்திரையில் இணையப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானதே ஹரியானாவில் கலவரம் ஏற்படுவதற்கான துவக்கப்புள்ளி.

இந்த ஊர்வலத்தை பாசிசக் குண்டர்படை “பிரஜ்மண்டல்” யாத்திரை (Brij Mandal Jalabhishek Yatra)  என்ற பெயரில் நடத்தியுள்ளது. இந்த யாத்திரை 2021 முதல் பெரிய அளவில் VHP-ஆல் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

***

இப்பகுதியில் ‘பசுப் பாதுகாவலர்’ என்ற பெயரில் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் இந்து மதவெறி பாசிச அமைப்புகள் நீண்ட காலமாக இயங்கி வந்துள்ளன.

இந்தாண்டு, பிப்ரவரியில் பிவானி மாவட்டத்தில் இரண்டு முஸ்லீம் ஆண்களின் (நசீர் மற்றும் ஜூனைட்) எரிந்த எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவர்கள் பசுப் பாதுகவலர் என்ற பெயரில் மானேசரின் குண்டர்படையினரால் கொலை செய்யப்பட்டனர். இதற்கு முன்பு அதேப் பகுதியின், மெக்கானிக்கான வாரிஸ் கான் என்பவரின் மரணத்திலும் தொடர்புள்ளவனாக  மானேசர் இருந்துள்ளான்.

அதேபோல் 2022-ஆம் ஆண்டு ஏப்ரலில் ஹரியானாவில் முஸ்லீம் ஆண்களை தாக்கி சித்திரவதை செய்யும் வீடியோக்கள் வெளியானது. ஜாமியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூட்டில் முன்னணியில் இருந்த  ராமபக்த் கோபால் மற்றும் மானேசர் ஆகிய இருவரும் இந்த வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இப்பகுதியில் மதக் கலவர பதட்டங்கள், ‘பசுப் பாதுக்காப்பு’ குண்டர்களுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. ‘பசுப் பாதுகாவலர்’ கும்பலால் அடித்து கொலைச்செய்யப்பட்ட முஸ்லீம் குடும்பங்கள் மானேசரின் வன்முறை தாக்குதலுக்கு எதிராக ஹரியானா அரசு நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்துள்ளனர்.

இவையனைத்தும் தான் அப்பகுதியில் உள்ள முஸ்லீம் இளைஞர்களை மானேசருக்கு எதிராக தனித்தனியாக வீடியோ பதிவிட்டு பேச வைத்துள்ளது. ஹரியானா அரசு நினைத்திருந்தால் இந்த கலவரத்தை தடுத்திருக்கலாம். ஆனால் இந்த அரசு தடுக்காமல் முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரத்தை நடக்கவிட்டு வேடிக்கைப் பார்த்துள்ளது.


படிக்க: ‘பசு பாதுகாப்பு’ எனும் ஆயுதத்தை சுழற்றும் பாசிஸ்டுகள்!


கலவரம் நடந்த பின்னரே 144 தடை, இணையசேவை முடக்கம், துணை ராணுவப்படையை இறக்குவது போன்ற  கண்துடைப்பு நடவடிக்கையை செய்கிறது.

கலவரம் பற்றிப் பேசிய துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா “ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் யாத்திரை குறித்து முழுமையான தகவலை அதிகாரிகளுக்கு கொடுக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

“ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் வாள்கள், லத்திகளை ஏந்திச்சென்றனர்” என்று குருகிராம் மாவட்ட பா.ஜ.க தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராவ் இந்தராஜித் சிங் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கி ஏந்தியப்படி வி.எச்.பி மற்றும் பஜ்ரங் தள் குண்டர்படையினரும், போலீஸ் மற்றும் துணை இராணுவப்படையும் கலவரத்தின் போது ஒன்றாக நிற்கின்றனர். போலிசும், துணை இராணுவப்படையும் வேடிக்கை பார்ப்பதற்கு என்ன பொருள்? குண்டர்படையினரும் போலிசும் துணை இராணுவப்படையும் இந்த கலவரத்தை இணைந்து நடத்துவதாக தான் பொருள். இதுதானே குஜராத்திலும் மணிப்பூரிலும்  நடந்தது; நடந்துவருகிறது.

***

ஹரியானாவில் 2014 முதல் பா.ஜ.க தான் ஆட்சியில் உள்ளது. அன்று முதல் இன்றுவரை முதல்வராக மனோகர் லால் கட்டார் உள்ளார்.  முஸ்லீம் வெறுப்பைத் தனது அரசியலாக கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ஹரியானாவில் வி.எச்.பி, பஜ்ரங் தள் போன்ற மதவெறி அமைப்புகளை வளர்த்து வருகிறது.

ஹரியானாவில் அமைக்கப்பட்ட புலனாய்வு குழு 2000 வீடியோக்களை ஆய்வு செய்துள்ளது. அதனடிப்படையில் 176 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 93 பேர் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. பாசிசக் குண்டர்படை களத்தில் மட்டுமல்லாமல் ஊடகங்கள் மூலமும் மதவெறி அரசியலை புகுத்தி வருகின்றனர்.

2024 நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி இந்தியா தேர்தலை மட்டும் எதிர்கொள்வதாக இருக்கப்போவதில்லை, இதுபோன்ற ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி குண்டர்படையின் கலவரத்தையும் எதிர்கொள்ள வேண்டும். இந்த கும்பல் இருக்கும் வரை கலவரங்கள் ஓயப்போவதில்லை. அவர்கள் இருக்குமிடமெல்லாம் கலவரம் வெடிக்கும். இதற்கு ஒரே வழி ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி-யை தடை செய்வது மட்டுமே.


குழலி

”கொலைகார அகர்வாலே திரும்பிப்போ” – சென்னை கண்டன ஆர்ப்பாட்டம் | வீடியோக்கள்

“தூத்துக்குடியில் 15 தமிழர் படுகொலைக்கு காரணமான ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அனில் அகர்வாலே திருப்பிப்போ! சுரானா பள்ளியே, தமிழர் உணர்வுகளை இழிவுபடுத்தாதே!” என்ற தலைப்பில் எஸ்.டி.பி.ஐ, ஆம் ஆத்மி கட்சி, வெல்பேர் பார்ட்டி, தந்தைப் பெரியார் திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம், தமிழர் விடுதலைக்கழகம், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி, இளம் வழக்கறிஞர்கள் சங்கம், மே பதினேழு இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து சென்னை அடையாறு பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆகஸ்டு 5 அன்று நடைபெற்றது.
அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் பேசிய தலைவர்களின் வீடியோக்கள் தனிதனியாக பதிவிடுகிறோம்.

கொலைகார அகர்வாலை அடிச்சி விரட்டு – ம.க.இ.க சிவப்பு அலை புதிய பாடல்

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அனில் அகர்வாலே திரும்பிப்போ! – கண்டன ஆர்ப்பாட்டத்தின் முழக்கங்கள்!

ஸ்டெர்லைட்டை மூடவைத்தோம் போராட்டத்தாலே! – ம.க.இ.க சிவப்பு அலை புதிய பாடல்

ஸ்டெர்லைட்டுக்கு விலைபோன ஊடகங்கள்! | தோழர் திருமுருகன்காந்தி

ஸ்டெர்லைட் படுகொலை குற்றவாளிகளை தண்டிக்க துப்பில்லாத அரசு! | குடந்தை அரசன்

கொலைகாரன் அகர்வால் வந்தால் தமிழ்நாடு அமைதியாக இருக்காது! | தோழர் மருது

15 பேரின் உயிர் தியாகத்தால் ஸ்டெர்லைட் மூடப்பட்டது | தோழர் அமிர்தா

மணிப்பூர் ஊடகங்கள் போல் தமிழ்நாட்டு ஊடகங்களும் மாறிவிட்டதா? தோழர் குமரன்

ஸ்டெர்லைட்டை மீண்டும் தூத்துக்குடி மண்ணில் எந்த காலத்திலும் திறந்துவிட முடியாது | கிருஷ்ணமூர்த்தி

ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மக்கள் புற்றுநோயால் அவதிப்படுகிறார்கள் | முகமது பிலால்

எங்கள் போராட்டங்களை கண்டுகொள்ளாத திமுக அரசு ! | முகமது கவுஸ்

என் உயிரை கொடுத்தேனும்… ஸ்டெர்லைட்டை திறக்க விடமாட்டேன் | ஸ்டீபன்

தூத்துக்குடி மக்கள் மட்டுமல்ல.. தமிழ்நாட்டு மக்களும் ஸ்டெர்லைட்டை எதிர்க்கிறார்கள் | காந்தி மள்ளர்

ஸ்டெர்லைட் அகர்வால் வருகை: திமுகவும் கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? | அருள் தாஸ்

ஸ்டெர்லைட்டை தரைமட்டமாக்கி 15 தியாகிகளுக்கு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் | தோழர் சீராளன்

15 தியாகிகளை கொச்சைப்படுத்தும் ஸ்டெர்லைட் அனில் அகர்வால் | காசி புதியராஜா

காணொலிகளை பாருங்கள்! பகிருங்கள்!!