Wednesday, June 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 128

புதிய தொழில்நுட்ப வரைவு விதிகள்: அறிவிக்கப்படாத எமர்ஜென்சி!

0

னவரி 17, 2023 அன்று மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தகவல் தொழில்நுட்ப வரைவு விதிகளில் (IT Rules, 2021) புதிதாக திருத்தங்கள் செய்து வெளியிட்டுள்ளது. புதிய திருத்தங்களின்படி, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் (Press Information Bureau – PIB) உண்மை கண்டறியும் குழு போலியானவை என்று சுட்டிக்காட்டும் செய்திகளை சமூக வலைதள நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து நீக்க வேண்டும்.

திருத்திற்கான இந்த முன்மொழிவுகள் அமலுக்கு வந்தால் சமூக ஊடகங்கள் உட்பட எல்லா ஆன்லைன் தளங்களிலும் வரும் கருத்துகள்/செய்திகள் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் வரும். பி.ஐ.பி-க்கு அளிக்கப்படும் அதிகாரம், 2000-வது ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69A-இன் கீழ் வருகிறது. இந்த வரைவில் எது ‘போலி’ என்பது பற்றிய ஒரு தெளிவான வரையறை இல்லை. இந்துத்துவத்தை எதிர்க்கும் அனைத்து கருத்துகளும் போலி என்று கூறப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள இத்திருத்தங்களுக்கு எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா (Editors Guild of India), இணைய சுதந்திர அறக்கட்டளை (Internet freedom foundation) உள்ளிட்ட அமைப்புக்களும், காங்கிரஸ், சி.பி.ஐ, சி.பி.எம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பி.ஐ.பி அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற முகமை ஏதேனும் செய்தியின் உள்ளடக்கத்தைப் போலி என்று சுட்டிக்காட்டினால், அச்செய்தி இணையத்தில் இருந்து நீக்கப்படும் என்று வரைவு கூறுகிறது. இதற்கு முன்னர் செய்திகளை ‘போலி’ என்று மட்டுமே பி.ஐ.பி-ஆல் சுட்டிக்காட்ட முடியும். ஆனால் தற்போது செய்திகளை நீக்கும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டுள்ளது.

இத்திருத்தம் பி.ஐ.பி-க்கு மட்டும் செய்திகளை நீக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை; அங்கீகாரம் பெற்ற முகமைகளுக்கும் நீக்கும் அதிகாரத்தை வழங்குகிறது. “அங்கீகாரம் பெற்ற முகமை” என்ற பெயரில் எந்தெந்த நிறுவனங்களுக்கு / தனிநபர்களுக்கு அதிகாரம் வழங்கப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. ஆர்.எஸ்.எஸ் — பாஜக பாசிசத்தின் பரப்புரையாளர்களான அர்னாப் கோஸ்வாமி, ரங்கராஜ் பாண்டே போன்றவர்களே மத்திய அரசால் அங்கீகரிக்கப்படுவர்.


படிக்க: பொய்களை பரப்பும் முகநூல் மார்க்கை தொடர்ந்து ட்விட்டர் மஸ்க் | ஆர்.எம்.பாபு


பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) பொய்யான செய்திகளை மட்டும்தானா ‘போலி’ என்று முத்திரை குத்திவருகிறது? அரசை அம்பலப்படுத்தும் பல செய்திகளை போலியானவை என்று பி.ஐ.பி முத்திரை குத்தியிருக்கிறது. இத்திருத்தம் அமல்படுத்தப்பட்டால் அரசை கேள்வி கேட்கும் அனைத்து கருத்துகளும் போலியானவை என்று கூறப்பட்டு முடக்கப்படும்.

பி.ஐ.பி-யின் யோக்கியதையை அதன் உண்மை சரிபார்ப்புக் குழுவின் நடவடிக்கைகளில் இருந்து புரிந்துகொள்ளலாம். செய்தியாளர் தபஸ்யா “ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அங்கன்வாடியில் சத்துணவு வழங்கும் திட்டத்திற்கு ஆதார் அட்டை அவசியம்” என்ற மத்திய அரசின் முடிவு குறித்து ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவில் (Reporters’ Collective) எழுதியிருந்தார். அரசை விமர்சனம் செய்திருந்த காரணத்தால் பி.ஐ.பி உண்மை சரிபார்ப்புக் குழு இந்தச் செய்தி போலியானது என்றும் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை தேவையில்லை என்றும் கூறியது. போலி என்பதற்கான ஆவணங்கள் எதையும் வழங்கவில்லை.

தபஸ்யா இது குறித்து ஆர்டிஐ தாக்கல் செய்தபோது, ​​குழந்தைகளுக்கு ஆதார் அட்டை தேவையில்லை என்று 2022 ஆகஸ்ட்டில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தபஸ்யாவின் செய்தி ஜூன் 2022இல் வெளியிடப்பட்டது; அப்போது அமலில் இருந்தது மார்ச் 2022 வழிகாட்டு நெறிமுறைகள். பழைய மார்ச் வழிகாட்டு நெறிமுறைகளின் படி ஆதார் அட்டை கட்டாயமாகத்தான் இருந்திருக்கிறது என்பது தெரியவருகிறது. இதன் மூலம் பி.ஐ.பி-யின் பித்தலாட்டம் அம்பலமாகிறது.

அதேபோல், மே 2020-இல் கொரோனா பெருந்தொற்றின் போது, ஜோதி சி.என்.சி (Jyoti CNC) என்ற குஜராத் நிறுவனம் வெண்டிலேட்டர்களை இலவசமாக வழங்கியது. அந்நிறுவனத்துக்கு சில பாஜக தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இலவசமாக வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்கள் தரமற்றவையாக இருப்பதாக குஜராத் மற்றும் புதுச்சேரியில் இருந்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிறுவனத்திடமிருந்து வெண்டிலேட்டர்களை அரசு விலைக்கு வாங்குவதாக இருந்தது. இது குறித்து தி வயர்-இல் செய்தி வெளியானது. இது முற்றிலும் சரியான தகவல். ஆனால், பி.ஐ.பி இதையும் ‘போலிசெய்தி’ என்று முத்திரை குத்தியது.


படிக்க: பா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் !


மத்திய அரசு முன்மொழிந்துள்ள இந்த புதிய தொழில்நுட்ப வரைவு விதிகள் சாதாரணமாக கடந்து செல்லக் கூடியது அல்ல. கருத்துச் சுதந்திரத்தை நசுக்கக்கூடிய நடவடிக்கை இது. அவசரநிலை காலகட்டத்தில் செய்திகள் அனைத்தும் அரசால் தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெளியிட அனுமதிக்கப்பட்டன. தற்போதைய பாசிச மோடி அரசும் அதையே செய்ய எத்தனிக்கிறது, அவசர நிலையை பிரகடனம் செய்யாமல்.

பொம்மி

இளைஞர்களே! எது கெத்து?

0

பிழைப்புவாத நடிகர்களும், வரலாற்றை மறந்த இளைஞர்கள் கூட்டமும்!

ந்தியா சுதந்திரப் போராட்டத்திலும், தமிழகத்தின் மொழிப் போராட்டத்திலும் நெஞ்சை நிமிர்த்தி களத்தில் முன் நின்று போராடிய இளைஞர்களை கொண்ட இந்த மண்ணில்தான், பிழைப்புவாத நடிகர்களுக்காக தன் உயிரையும் மாய்த்துக் கொண்டிருகிறார்கள் இன்றைய இளைஞர்கள்.

கடந்த 11-1-2023 அன்று அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க சென்ற பரத் என்ற இளைஞர், துணிவு பட கொண்டாட்டத்தின் போது ஓடும் லாரியின் மீது ஏறி நடனம் ஆடியுள்ளார். அப்போது லாரி சற்று நகர்கையில் பரத் நிலைத் தடுமாறி லாரியில் இருந்து கீழே விழுந்து லாரி சக்கரத்தில் மாட்டி உயிரிழந்துள்ளார். அதேபோன்று இன்னொரு இடத்தில் கிரேனில் மூலம் உடலில் அளவு குத்தி கொண்டு அஜித் போஸ்டருக்கு மாலையிடும் காட்சியும் நெஞ்சை பதற வைக்கிறது.

அஜித் அல்லது விஜய் படம் வருகின்றது என்றவுடன் பல்லாயிரம் செலவு செய்து போஸ்டர் வைப்பது, பால் ஊத்துவது, வெடி வைப்பது இரவு முழுவதும் காத்திருப்பது என அந்த படத்தை திருவிழா போல் கொண்டாட ஒரு இலக்கற்ற இளைஞர்கள் கூட்டமே உருவாகியுள்ளது. இவர்களுக்கு வாழ்க்கை பற்றிய கவலையோ தன்னை சுற்றி உள்ளவர்களை பற்றிய அக்கறையோ துளியும் கிடையாது. நடிகர்களே தன் வாழ்க்கை என போதையில் முழுகி கிடைக்கிறார்கள்.

அஜித் படம் வந்தால் விஜய் படத்தை கேலிச் செய்து, போஸ்டர் ஒட்டுவது, மீம்ஸ் போடுவது, விஜய் படம் வந்தால் அஜித் படத்தை கேலிச் செய்து, போஸ்டர் ஒட்டுவது, மீம்ஸ் போடுவது என யார் கெத்து என காட்டி கொள்ள முயற்சிக்கிறார்கள் ரசிகர்கள்.

படிக்க : இறையூர் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: விசாரணை என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களை துன்புறுத்தாதே! | மக்கள் அதிகாரம்

அஜித் படம் வந்தாலோ அல்லது விஜய் படம் வந்தாலோ அதை தனித்தனியாக கொண்டாடும் ரசிகர் கூட்டத்தின் மத்தியில் படத்தின் விளம்பரத்திற்காக இரண்டு படத்தையும் ஒரே நேரத்தில் விட்டு ரசிகர்கள் மத்தியில் சண்டையும் போட்டியை உருவாக்கி டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்து கொண்டிருக்கிறார்கள் திரைப்படங்களை வெளியிடும் முதலாளிகள். ஆனால் இதை புரிந்து கொள்ள முடியாமல் அப்பாவி இளைஞர்கள் இதில் மாட்டிக் கொள்கிறார்கள். முதல் காட்சியின் டிக்கெட் விலை ரூ.1000 முதல் ரூ.2000 வரை இருந்தாலும் அதை ரசிகர்கள் வாங்கி கொள்கிறார்கள். அதற்காக பல நாட்கள் வரிசையில் காத்து கிடக்கிறார்கள்.

திரைப்படம் என்றால் அது வணிகம் (commerical) அல்லது காதல் (romantic) அல்லது பேய் படங்கள் (Adventure) என வகைவகையான திரைப்படங்களை தினம்தோறும் எடுத்துக் குப்பைகளை போல் அள்ளிக் கொட்டி கொண்டு இருக்கின்றனர். இந்த திரைப்படங்களில் கதைகளை விட கதாநாயகர்களுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. திரைக்கதைகளில் விஜய், அஜித் நடித்த காலம் போய் கதையே ’விஜய்’ ‘அஜித்’ தான் என்று மாறி நிற்கிறது. விஜய், அஜித்-காக மட்டுமே திரைப்படம் எடுக்கப்படுகிறது. இதில் திரைக்கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது விஜய்-அஜித் நடை, உடை அவர்கள் செய்வதை எல்லாம் கெத்தென காட்டப்படுகிறது.

இதனால் தன் திரைப்படத்தை பார்ப்பதை விட அவர்களை பார்த்து விட்டு வந்தால் போதுமென ரசிகர்கள் இரவு முழுவதும் காத்துக் கிடக்கிறார்கள். பணம் இல்லையென்றால் கூட கடன் வாங்கி கொண்டு படத்திற்கு செல்ல துடிக்கிறார்கள். அப்படி பார்க்கும் படத்தை முதல் பார்வை (status) வைப்பதும் அல்லது பிற நண்பர்கள் சொல்லி பெருமை படுவதே கெத்து என நினைக்கிறார்கள் இவர்கள். இப்படி பைத்தியம் பிடித்து இறந்து போனவர்களில் ஒருவர்தான் பரத்.

இன்று கல்வி தனியார்மயமக்கம் தீவிரமடைந்து வருகிறது. 2 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை தேடி தெருக்களில் அலைந்துக் கொண்டிருக்கிறார்கள். உலகளவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 82.8 கோடி மக்களில் இந்தியாவில் மட்டும் 22.43 கோடி மக்கள் உள்ளனர். பட்டினி குறியீட்டில் இந்தியா 107 இடத்தில் உள்ளது. வரி மேல் வரி போட்டு உழைக்கும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி கொண்டிருக்கிறது மத்திய-மாநில அரசு. உழைக்கும் மக்களோ அடிப்படை உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு நடு தெருவில் வீசியெறிப்பட்டுள்ளனர். ஆனால் இந்த அவலங்களுக்காக போராடுவதோ, எதிர்ப்பு குரல் கூட எழுப்பாத இந்த கதாநாயகர்களுக்காகத்தான் இரவு பகலாக இளைஞர்கள் திரையரங்கு வாயில்களில் பைத்தியம் போல் திரிந்துகொண்டிருக்கிறார்கள். அவரக்ளையே தெய்வமென வழிபடுகிறார்கள்.

ஆனால் நாம் வரலாற்றை சற்று திரும்பி பார்க்க வேண்டி இருக்கிறது.

மெரினா கடற்கரையில் காற்றை கிழித்து வரும் ஈட்டியை போல திரண்ட இளைஞர்கள்-மக்கள் 7 நாட்கள் தொடர் போராட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டுக்கு தடை என்ற மோடி அரசின் பாசிச நடவடிக்கையை முறியடித்தார்கள். நீட் எதிர்ப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் என எல்லா போராட்டத்திலும் களத்தில் முன் நின்றவர்கள் மாணவர்களும் இளைஞர்களும் தான்.

1937 ஆண்டு தமிழ்நாட்டின் வீதிகளில் தமிழ் மொழிக்காக்க இளைஞர்கள் திரண்டு போராடினார்கள். பல லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்களையும் அந்த போராட்டத்தின் இணைத்து கொண்டனர்.

இப்படி வீரம் விதைக்கப்பட்ட இந்த மண்ணில், தற்போதைய இளைஞர்கள், நடிகர்களுக்காக அடித்து கொள்வதும் நடிகர்களுக்காக தன்னுயிரை மாய்த்துக் கொள்வதென மூடர்களாக அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

படிக்க : புர்கா அணிய தடை: பறிக்கப்படும் இஸ்லாமியர்களின் கல்வி உரிமை!

இன்றைய தலைமுறை இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம் அதிகம் பயன்படுத்தப்படும் சொல் யார் கெத்து என்பதும் கெத்தாக வாழ வேண்டும் என்பதுதான். வண்ண வண்ண ஆடை உடுத்தி செல்வதும், விலையுயர்ந்த வாகனங்களை சாலைகளில் ஓட்டி சாகசம் செய்வதும், பிறரை அடிப்பதும்-துன்புருத்துவதும் தான் கெத்து என நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் கெத்து எது?

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடுவதும், கல்வி மறுக்கப்பட்ட ஏழை-எளிய மாணவர்களுக்காக போராடுவதே உண்மையான கெத்தாகும். அப்படி கெத்தாக நம் நாட்டில் உயிர்நீத்தவர்கள் பலர். பகத்சிங்கும் அவரது தோழர்களும் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வீரம் செறிந்த போரை தொடுத்தார்கள். தமிழ்நாட்டு மாணவர்கள் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக வீரம் செறிந்த போரை தொடுத்தார்கள்.

நாம் தொலைத்த வீரத்தையும், மறைந்து போன தியாகத்தையும் மீண்டும் இப்போது பட்டைதீட்டவேண்டிய தேவை எழுந்திருக்கிறது. திரைபடங்களும், நடிகர்களும் வாழ்க்கையென அடிமைப்பட்டு கிடக்கும் இளைஞர்களிடம் உரிமைக்காக களத்தில் முன் நின்று போராடுவதே கெத்து என்பதை தெளிவுபடுத்த வேண்டி இருக்கிறது.

பாரி

இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 4 | வீடியோ

மாபெரும் இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு பற்றி புத்தகங்கள் ஏதுமில்லை… ஆனால் அந்த மொழிப்பேரின் உணர்ச்சி மிகுந்த வரலாற்றை நாம் கற்க வேண்டியது அவசியம்.

அதனடிப்படையில், இந்தி மொழி எதிர்ப்பு போரின் வீரம் செறிந்த வரலாற்றை பல்வேறு பாகங்களாக வெளியிடவிருக்கிறோம்.

நான்காம் பாகம் :

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

இறையூர் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: விசாரணை என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களை துன்புறுத்தாதே! | மக்கள் அதிகாரம்

22.01.2023

இறையூர் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்!

தமிழ்நாடு அரசே!
விசாரணை என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களை துன்புறுத்தாதே!

தீண்டாமை குற்றங்களில் ஈடுபட்ட ஆதிக்க சாதி வெறியர்களின்
அடிப்படை உரிமைகளை ரத்து செய்!

பத்திரிகை செய்தி

புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சி, இறையூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் தண்ணீர்த் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டு, அவ்விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடித்தது. மனித சமூகமே வெட்கித் தலை குனியக் கூடிய இந்த சம்பவம் நடைபெற்று ஏறத்தாழ ஒரு மாதம் ஆகியும் கூட இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை.

போலீஸ் விசாரணையில் தொடர்ச்சியாக தாழ்த்தப்பட்ட மக்கள் துன்புறுத்தப்படுவது வெளியாகி அம்பலப்பட்ட பின்னர் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. ஆனாலும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. இதனை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.

படிக்க : புதுக்கோட்டை தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த சாதிவெறி! | தோழர் யுவராஜ்

கோவையில் கார் சிலிண்டர் வெடித்தவுடன், தமிழ்நாடு போலீசும் தேசிய புலனாய்வு முகமையும் மேற்கொண்ட அவசர அவசர கைதுகளும் விசாரணைகளும் நடைபெற்றன. இந்த விசாரணையை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது போலீசும் அரசும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ஆதரவாக எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாம் உணர முடியும்.

தமிழ்நாட்டில், ஆதிக்க சாதி வெறியர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆணவ படுகொலைகள், தாக்குதல்கள் என மேற்கொண்டு வரும் வன்முறை என்பது பல ஆண்டுகளாக நீடித்து வருகின்ற ஒன்றாகும். இந்த நிலையில்தான் அதிக்க சாதி சங்கங்கள் பலவும் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் சென்று இருக்கின்றன. ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ஆதரவாக ஏற்கனவே அரசும் போலீசும் இருந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ்-ம் பி.ஜே.பி.யும் ஆதிக்க சாதி வெறியர்களை வெளிப்படையாகவே ஆதரித்து செயல்படுகின்றன.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட எந்த ஒரு வன்முறை குற்றத்திலும் ஆதிக்க சாதி வெறியர்கள் முழுமையாகவும் நியாயமாகவும் தண்டிக்கப்படவில்லை. இப்படிப்பட்ட அரசின் செயல்பாடுகளும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்முறைகள் குறையாமலிருப்பதற்கு முக்கிய காரணமாகும். ஆதிக்க சாதி வெறியர்கள், தாங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தும் தீண்டாமை குற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே பி.சி.ஆர் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் போராடி வருகிறார்கள்.

படிக்க : குடிநீர் தேக்க தொட்டியில் மலம் – ஆதிக்கசாதி திமிர்! | மருது வீடியோ

தீண்டாமைக் குற்றங்களில் ஈடுபடக்கூடிய ஆதிக்க சாதி வெறியர்களுக்கு அனைத்து அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட வேண்டும். அவர்களை ஒட்டுமொத்த சமூகமே புறக்கணிப்பு செய்ய வேண்டும். அவர்கள் மீதான குற்றங்கள் உடனுக்குடன் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். இரட்டைக் குவளை முறை உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான அனைத்து குற்றங்களும் இந்த சமூகத்துக்கே எதிரான குற்றங்களாக வரையறுக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனியாக பள்ளிக்கூடம் கட்டுவது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்று தனியாக தண்ணீர்த்தொட்டி அமைப்பது போன்றவை அடியோடு நிறுத்தப்பட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கின்றது.

அதே வேளையில், மேற்கண்ட கோரிக்கைகள் சமூக ரீதியாக மக்களிடத்திலே சிந்தனை மாற்றம் வரும் வகையில் புரட்சிகர, ஜனநாயக அமைப்புகள் போராட வேண்டிய அவசியத்தையும் தெளிவுபடுத்துகிறது.

தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

புர்கா அணிய தடை: பறிக்கப்படும் இஸ்லாமியர்களின் கல்வி உரிமை!

0

மீபத்தில் (ஜனவரி 18) உத்திர பிரதேசத்தின் முராதாபாத்தில் உள்ள “இந்து கல்லூரி”யில் புர்கா அணிந்து வந்த மாணவிகள் கல்லூரி வாயிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அம்மாணவிகள் போராட்டத்தில் இறங்கினர்.

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள எம்.ஜே.பி. ரோஹில்கண்ட் பல்கலைக்கழகத்தின் (Mahatma Jyotiba Phule Rohilkhand University) உறுப்புக் கல்லூரிகளில் ஒன்று தான் இந்து கல்லூரி. இக்கல்லூரி அமைந்திருக்கும் முராதாபாத் பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். ஆகையால் இங்கு அதிக மாணவிகள் பர்தா அணிந்து வருவது வழக்கமாக இருந்தது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை (ஜனவரி 18) புர்கா அணிந்து வந்த பன்னிரண்டிற்கும் மேலான மாணவிகள் கல்லூரி வாயிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். அம்மாணவிகள் அங்கேயே கிட்டத்தட்ட 40 நிமிடம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பேசிய தலைமை பிராக்டர் (chief proctor) ஏ.பி. சிங் “புதிய ஆடை விதிகள் ஜனவரி 1 முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவர்களுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டு விட்டது. ஜனவரி 14 முதல் இவ்விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. சீருடையில் இல்லாத யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

இந்த புதிய விதிகளின்படி கல்லூரி வளாகத்திற்குள் புர்கா அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. வளாகத்தின் உள்ளே வரும்போது புர்காவை அகற்றிவிட்டு வெளியே சென்றபிறகு வேண்டுமானால் அணிந்து கொள்ளலாம் என்று நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது. போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த கல்லூரி ஆசிரியர்கள் புதிய ஆடை விதிகளுக்கு இணங்கி செல்லுமாறு மாணவிகளை கோரியுள்ளனர். ஆனால் போராடிய மாணவிகள் அதற்கு மறுத்து விட்டனர்.


படிக்க: ஹிஜாப் தடை ; இதோ இந்து இராட்டிரத்துக்கு தயாராகிவிட்டது நாடு !


சமாஜ்வாடி கட்சியின் இளைஞர் அமைப்பு இம்மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் இறங்கியது. “சீக்கியர்கள் டர்பன் மற்றும் கிர்பன் (ஒரு குறு வாள்) வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படும்போது, இஸ்லாமிய மாணவிகள் மட்டும் ஏன் குறிவைக்கப்படுகிறார்கள். இது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும். இது அரசியல் காரணங்களுக்காக திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதலாகும்” என்று அவ்வமைப்பினர் கூறினர்.

இது காவிகளின் திட்டமிட்ட தாக்குதலே. முன்னதாக, டிசம்பர் 2021-இல், கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள பி.யூ.கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. கல்லூரி விதிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்யவில்லை என்ற போதிலும் கல்லூரி நிர்வாகம் அதை அனுமதிக்கவில்லை.

ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி குண்டர்கள் ஹிஜாபுக்கு போட்டியாக காவித்துண்டு அணிந்து கல்வி நிலையங்களுக்கு வந்து கலகம் செய்தனர். ஆளும் கர்நாடக பாஜக அரசோ “சீருடை அணிவது அனைவருக்கும் கட்டாயம்” என்று கூறி கல்வி நிலையங்களுக்குள் ஹிஜாப் அணிவதை அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டது.


படிக்க: ஹிஜாப் அணிபவர்களை கொலை செய்ய அழைப்பு விடுத்த பஜ்ரங் தள்!


உடுப்பியில் தொடங்கிய இப்பிரச்சினை பிப்ரவரி 2022 வாக்கில் குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி ஆகிய கர்நாடகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. அதே காலகட்டத்தில் கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் ஜவுன்பூர்-இல் ஒரு கல்லூரியிலும், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஒரு தனியார் கல்லூரியிலும் ஹிஜாபுக்கு அணிவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஹிஜாப் விவகாரத்தை பயன்படுத்தி கர்நாடக மாநிலத்தில் காவி கும்பல் அரசியல் ஆதாயம் அடைந்தது. அதன் தொடர்ச்சியாகவே, தற்போது உத்திர பிரதேசத்தில் தொடங்கியுள்ள புர்கா பிரச்சினையை நாம் பார்க்க வேண்டும். இஸ்லாமியர்களை மைய நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்தவே காவி பாசிஸ்டுகள் இத்தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.

பொம்மி

மதுரை காயாம்பட்டி சாதிய வன்முறை | களவீடியோ

மதுரை காயாம்பட்டி சாதிய வன்முறை தொடர்பான களவீடியோவை மக்கள் கலை இலக்கியக் கழக தோழர்கள் எடுத்து தயாரித்துள்ளனர். அந்த களவீடியோவை தற்போது வெளியிடுகிறோம்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

“இந்தியா: மோடி மீதான கேள்வி” ஆவணப்படம்: மீண்டும் அம்பலமாகும் பாசிச மோடி!

0

பிபிசி “இந்தியா: மோடி மீதான கேள்வி” (India: The Modi Question) என்ற 2002 குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தின் முதல் பகுதியை ஜனவரி 17, 2023 அன்று வெளியிட்டது.

குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து பல தகவல்களை இந்த ஆவணப்படம் தொகுத்துக் கூறுகிறது. குஜராத் கலவரம் குறித்து இரகசியமாக விசாரிக்க ஒரு குழுவை பிரிட்டிஷ் அரசாங்கம் குஜராத்திற்கு அனுப்பியுள்ளது. தண்டனை பயமின்றி இஸ்லாமியர்கள் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டதற்கு அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி தான் காரணம் என்று அக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை கூறுவதாக இந்த ஆவணப்படம் பதிவு செய்துள்ளது.

பிரிட்டிஷ் அர‌சு அமைத்த அந்தக் குழுவின் அறிக்கை தற்போது வரை வெளியிடப்படவில்லை என்று இந்த ஆவணப்படம் மேலும் கூறுகிறது. வெளியான அடுத்த நாளே இந்த ஆவணப்படம் யூடியூப்-இல் இருந்து நீக்கப்பட்டுவிட்டது.


படிக்க : 2002 குஜராத் படுகொலை வழக்குகளை தள்ளுபடி செய்த உச்ச நீதி(காவி)மன்றம்!


அந்த ஆவணப்படத்தில் அறிக்கையின் பல பகுதிகள் புகைப்படங்களாக வருகின்றன. அதில் “குஜராத் கலவரத்திற்கு நரேந்திர மோடி நேரடிக் காரணம்” என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது காட்சியாகிறது. குஜராத் கலவரமானது திட்டமிட்ட வன்முறை என்றும் அப்பட்டமான இனப்படுகொலை என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் கணக்குகளின் படியே, குஜராத் கலவரத்தில் 790 இஸ்லாமியர்களும் 254 ‘இந்து’க்களும் உயிரிழந்துள்ளனர்.

இஸ்லாமியர்கள் மீதான வன்முறை தாக்குதல்களை தடுக்க வேண்டாம் என்று குஜராத் போலீசுக்கு மோடி உத்தரவிட்டிருந்ததாக இந்த ஆவணப்படம் கூறுகிறது. ஆனால், உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு, மோடி மற்றும் 63 பேர் மீது வழக்கு நடத்த போதிய ஆதாரமில்லை என்று 2012 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அறிக்கையை சமர்ப்பித்தது. அவ்வறிக்கையை 2013 ஆம் ஆண்டில் நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.

சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையை எதிர்த்து கலவரத்தில் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி எஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கு கடந்த ஆண்டு ஜூன் 24 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இக்கலவரமானது, ஆர்.எஸ்.எஸ்-இன் துணை அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்-ஆல் திட்டமிடப்பட்டு குஜராத் மாநில அரசின் துணையுடன் நடைபெற்றது என பிரிட்டிஷ் விசாரணைக் குழுவில் இடம்பெற்றிருந்த மூத்த அதிகாரி ஒருவர் இந்த ஆவணப்படத்தில் பேசி இருக்கிறார். 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று, அன்றைய முதல்வர் நரேந்திர மோடி மூத்த போலீசு அதிகாரிகளை சந்தித்து, என்ன நடந்தாலும் போலீசு குறுக்கிட வேண்டாம் என்று கூறியதாக ஆவணப்படம் கூறுகிறது.

பதிவானதைவிட அதிக அளவிலான வன்முறை நடைபெற்றதாகவும், திட்டமிட்டு அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்ட வன்முறை இது என்றும், இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளிலிருந்து இஸ்லாமியர்களை முற்றிலுமாக வெளியேற்றுவதற்கான முயற்சி இது என்றும் பிரிட்டிஷ் அரசின் விசாரணைக் குழு அறிக்கை கூறுகிறது.


படிக்க : 2002 குஜராத் கலவரம்: காவி பயங்கரவாதிகளின் படுகொலைகளை மறைக்க முடியாது!


குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து மோடியை பிரிட்டிஷ் அரசாங்கம் அக்டோபர் 2012 வரை இராஜதந்திர புறக்கணிப்பு (diplomatic boycot) செய்திருந்தது. அந்த சமயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அமைத்திருந்த விசாரணைக் குழுவும் குஜராத் அமைச்சர்களே நேரடியாக வன்முறையில் பங்கேற்றத்தையும் போலீசு அதற்கு உடந்தையாக இருந்ததையும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. அதேபோல், 2005 முதல் 2014 வரை மோடிக்கு விசா வழங்க அமெரிக்க அரசாங்கம் மறுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மோடி இந்திய பிரதமராக பதவியேற்ற பின்பு, தங்கள் சொந்த நலன் கருதி பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மோடி மீது விதித்திருந்த தடையை நீக்கிக் கொண்டன. அப்போது வரை இனப்படுகொலை குற்றவாளியாக தெரிந்த மோடி திடீரென புனிதராக மாறிவிட்டார். தனது விசாரணை அறிக்கையைக்கூட பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியிடவில்லை என்பதிலிருந்து நாம் இதைப்புரிந்து கொள்ளலாம்.

பாசிச பாஜக அரசும் மோடியும் குஜராத்தில் நடத்தப்பட்ட இஸ்லாமியர் மீதான படுகொலையில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று எவ்வளவு தான் மறுத்தாலும், அவர்களின் பங்கேற்பை உறுதி செய்யும் வகையில் பல ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

பொம்மி

இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 3 | வீடியோ

மாபெரும் இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு பற்றி புத்தகங்கள் ஏதுமில்லை… ஆனால் அந்த மொழிப்பேரின் உணர்ச்சி மிகுந்த வரலாற்றை நாம் கற்க வேண்டியது அவசியம்.

அதனடிப்படையில், இந்தி மொழி எதிர்ப்பு போரின் வீரம் செறிந்த வரலாற்றை பல்வேறு பாகங்களாக வெளியிடவிருக்கிறோம்.

மூன்றாம் பாகம் :

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஜோஷிமத் நகர நிலச்சரிவு: வெறும் இயற்கை பேரிடரா?

த்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அமைந்து இருக்கும் நகரம் ஜோஷிமத். மலைப்பகுதியில் அமைந்து இருக்கும் இந்த ஊர் ரிசிகேஷ் – பத்ரிநாத் ஹைவேயில் உள்ளது. இது சுற்றுலாப் பகுதியாகவும் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6,150 அடி உயரத்திலும் அமைந்துள்ள இந்த நகரத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றன.

இமயமலை அடிவாரத்தில் இந்த ஜோஷிமத் நகரம் அமைந்திருப்பதால் இங்கு வேளாண் தொழில் பெரிய அளவுக்கு நடப்பதில்லை. மாறாக இந்நகரின் வருவாய் சுற்றுலா பயணிகளிடமிருந்துதான் கிடைக்கிறது.

சில நாட்களுக்கு முன்பாக நிலச்சரிவு மற்றும் நில வெடிப்பு காரணமாக பல சாலைகளிலும் நூற்றுக்கணக்கான வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டது. ஆனால் அதிகாரிகள் வந்து பார்வையிடவே கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேல் ஆனது.

ஜனவரி 08, 2023 அன்று வந்த அதிகாரிகள் அதனை நிலப் புதைவு என்றும் அப்பகுதியை புதைவு பாதித்த மண்டலமாகவும் அறிவித்தனர். வழக்கம்போல் மோடியும் அடுத்த நாள் உத்தராகண்ட் முதல்வரிடம் தொலைபேசியில் நிலைமையைக் கேட்டறிந்தார். மேலும், இது வரையில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவ்விடத்தைவிட்டு தற்காலிகமாக இடம் பெயர்ந்துள்ளனர்.

படிக்க : உத்தரப்பிரதேசம்: அசம்கர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்!

இந்த சம்பவம் ஏதோ நேற்றோ அல்லது நேற்று முன்தினமோ திடீரென நடந்தது கிடையாது. 1970 ஆம் ஆண்டில் மேகவெடிப்பு காரணமாக அலக்நந்தா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஏராளமான கிராமங்கள் மூழ்கின. 1991 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 768 பேர் உயிரிழந்தனர். 1998 ஆம் ஆண்டு மால்பா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 255 பேர் உயிரிழந்தனர். 1999 ஆம் ஆண்டு சமோலியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 100 பேர் உயிரிழந்தனர். கடந்த 2013 ஆம் ஆண்டு கேதர்நாத் வெள்ளம், நிலச்சரிவுகளில் 5,700 பேர் உயிரிழந்தனர்.

ஜோஷிமத்திலுள்ள பாறைகள் வெறும் மணல் மற்றும் கல் படிவுகளால் ஆனது, அது முக்கிய பாறை அல்ல. இது பழங்கால நிலச்சரிவில் உண்டானவை. அதாவது இது காம்பிரியன் காலத்திற்கு முந்தயவை, இந்த இடம் நில அதிர்வு பகுதி 4-ஐ சேர்ந்தது எனவும் பல்வேறு வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

1976 மிஸ்ரா கமிட்டி அறிக்கையின்படி, புதிய கட்டுமானங்கள் மற்றும் 3, 4 மாடிகள் கட்டக்கூடாது என்றும் தெரிவித்திருந்தது. குறிப்பாக இந்த பகுதி குறித்து புவியியல் பேராசிரியர் ஒய்.பி.சுந்தரியால் கூறுகையில், “2013 கோதர்நாத் வெள்ளம், 2021 ரிஷி கங்கை திடீர் வெள்ளம் ஆகியவற்றிலிருந்து இந்த அரசாங்கம் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் வெளிப்படையாக தெரிந்துள்ளது” என்கிறார்.

2022 ஆம் ஆண்டில் வாடியா இன்ஸ்டிடியூட் ஆப் ஹிமாலயன் ஜியாலஜி ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், “ஜோஷிமத் நகரத்தில் இருக்கும் மண் குறைந்த தாங்கும் திறன் கொண்டது. குறிப்பாக அதிகப்படியான கட்டுமானத்திற்குப் பிறகு அதன் உறுதித் தன்மை மிகவும் குறையும்” என்றும் அறிவித்திருந்தது.

இவையெல்லாம் அறிந்தும் கூட ஜோஷிமத் நகரையொட்டி தேசிய அனல் மின் கழகம் (NTPC) அதாவது தபோவன் விஷ்ணுகாட் நீர்மின் நிலையம் தனது கட்டுமான பணிகளை கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வருகிறது. கட்டுமான பணியின் ஒரு பகுதியாக சுரங்கம் தோண்டும் பணியும் நடைபெற்றுள்ளது. இந்த பணியின் போதுதான் இங்குள்ள வீடுகளில் லேசான விரிசல் விழுந்திருக்கிறது. சுரங்கம் தோண்டுவதற்காக வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் அந்த அதிர்வுகள் காரணமாக வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து உள்ளூர் மக்கள் இந்த கட்டுமானப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று எலும்பை உறைய வைக்கும் கடுமையான குளிர் சூழலிலும் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தியதன் விளைவாகத்தான் நீர்மின் நிலையத்தின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன் (BRO)-இன் ஹோ ஹரே ஹெலாங் பைபாஸ் சாலை கட்டுமான பணியும் ஆசியாவின் மிக நீளமான ரோப்வேயான ஆலி ரோப்வேயின் இயக்கமும் தற்காலிகமாக  நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த விரிசல் இங்கு மட்டுமில்லாமல் உத்தரகாண்ட்-ல் உள்ள பவுரி, காந்தி நகர், சிங்தார், மனோகர் பாக், சுனில், கர்னபிராயக் பகுதிகளில் இரயில்வே பணியின் காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொதுவாக உலகெங்கிலும் 80%-க்கும் அதிகமான நிலச்சரிவு, நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதால்தான் ஏற்படுகிறது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்படி தபோவன் விஷ்ணுகாட் நீர்மின் திட்டத்திற்கான கட்டுமான பணியின்போது டிசம்பர் 2009-இல், ஒரு துளை போடும் இயந்திரம் ஏற்படுத்திய பாதிப்பை சரி செய்யும் வரை தினமும் 7 கோடி லிட்டர் நிலத்தடி நீர் வெளியேறியது.

மேலும் தனியார்மய – தாராளமய – உலகமய கொள்கையின் விளைவான நகரமயமாக்கல் காரணமாக சாலைகள் விரிவுபடுத்துவது, வரம்புக்கு மீறி கட்டிடங்கள் கட்டுவது, இயற்கை வளங்களை கொள்ளையடிப்பது, கனிம வளங்களை சுரண்டுவது போன்ற நாசகார வேலைகளை தனது கொள்ளை லாபத்திற்காக தெரிந்தே செய்து கொண்டிருந்தது இந்த ஆளும் அரசு.

படிக்க : உத்தரகாண்ட்: நீர் சடங்கு செய்ய அரசு ஊழியர்களுக்கு கட்டளையிடும் சங்கி அமைச்சர்!

மக்களின் உயிருக்கு உலை வைத்து, அவர்களை நிர்மூலமாக்கும் எந்தவிதமான மேம்பாட்டுப் பணிகளும், திட்டப்பணிகளும் இங்கு தேவையில்லை என்பதே ஜோஷிமட் மக்களின் கருத்து. இப்படி ஒரு நகரையே காவு கொடுக்கும் இந்த நிலைக்கு பொறுப்பேற்க போவது யார்?

உலகெங்கிலும் முதலாளித்துவம் மறுகாலனியாக்க கொள்கைகள் மூலம் இயற்கையை வரைமுறையின்றி சுரண்டி வருகிறது. இந்த சுரண்டலின் விளைவாக காலநிலை மாற்றம் இன்ற மனிதகுலத்தின் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

கனமழை, வெப்ப அலை, நில அதிர்வு, வெள்ளம், வறட்சி, எரிமலை வெடிப்பு ஆகியவை புதிய இயல்புநிலையாக மாறிவருகிறது. இதன் வெளிப்பாடுதான் பூகோள சொர்க்கம் என்று அழைக்கப்பட்ட ஜோஷிமத் இன்று புதையும் நகரம் என்று அறிவிக்கப்பட்டிருப்பது.

மறுகாலனியாக்க கொள்கைகளை அமல்படுத்தும் இந்த பாசிஸ்டுகளுக்கு எதிராக நாமும் போராடத் தவறினால் இந்த உலகமே அவர்கள் ஏற்கனவே வெட்டி வைத்துள்ள சவக்குழியில் வீழ்வது நிச்சயம்.

ஆசாத்

இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 2 | வீடியோ

மாபெரும் இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு பற்றி புத்தகங்கள் ஏதுமில்லை… ஆனால் அந்த மொழிப்பேரின் உணர்ச்சி மிகுந்த வரலாற்றை நாம் கற்க வேண்டியது அவசியம்.

அதனடிப்படையில், இந்தி மொழி எதிர்ப்பு போரின் வீரம் செறிந்த வரலாற்றை பல்வேறு பாகங்களாக வெளியிடவிருக்கிறோம்.

இரண்டாம் பாகம் :

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கொத்து கொத்தாக பணிநீக்கம் செய்யும் தொழில்நுட்ப நிறுவனங்கள்!

0

2023-ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து நாளொன்றுக்கு (ஜனவரி 16 வரை) 1,600 ஊழியர்களை உலகம் முழுவதிலும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் பணிநீக்கம் செய்துள்ளதாக layoffs.fyi என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டிருக்கிறது. கொரோனா பெருந்தொற்று துவங்கிய காலத்திலிருந்து பணிநீக்கம் தொடர்பான தரவுகளை இந்நிறுவனம் சேகரித்து வருகிறது.

இவ்வாண்டில் மட்டும் 104 தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த 26,000-ம் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் (2022) 1024 தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிந்த 1,54,336 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பணிநீக்கம் செய்யப்படும் போக்கானது 2022-ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலேயே தொடங்கிவிட்டது. அக்காலகட்டத்தில் மட்டும் 34 தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த 10,000-ம் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

2022-ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் மட்டும், 400-ம் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த 74,000-ம் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இது கொரோனா பெருந்தொற்றின் போது மேற்கொள்ளப்பட்டதைவிட, அதிலும் குறிப்பாக 2020-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 400-ம் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த 60,000-ம் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதைவிட, அதிகமாகும்.


படிக்க: 10000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருக்கும் அமேசான் நிறுவனம்!


2023-ஆம் ஆண்டில் பணிநீக்கம் செய்துள்ள 104 தொழில்நுட்ப நிறுவனங்களில் அமேசான் (Amazon), மெட்டா (Meta), ட்விட்டர் (Twitter), ஷேர்சாட் (ShareChat), ஓலா (Ola) உள்ளிட்ட பல்லாயிரம் கோடிகளில் லாபம் கொழிக்கும் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களும் இருக்கின்றன.

உலகின் நான்காவது பெரும் பணக்காரரான ஜெஃப் பெசோஸ்-இன் அமேசான் நிறுவனம் கொரோனா பெருந்தொற்றின் போது அதிக ஊழியர்களை பணிக்கு அமர்த்தியது. தற்போது நிச்சயமற்ற பொருளாதார சூழல் நிலவுவதாகக் கூறி 18,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பரில் அந்நிறுவனம் 10,000 ஊழியர்கள் வரை நீக்கப் போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது என்று பெருமிதம் கொள்ளும் சமூக வலைத்தள நிறுவனமான ஷேர்சாட், இரண்டு நாட்களில் மட்டும் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததுள்ளது; மொத்த ஊழியர்களில் 20 சதவிகிதத்தினரை பணிநீக்கம் செய்ததுள்ளது.

போக்குவரத்து சேவைகளை வழங்கி வரும் ஓலா நிறுவனமானது மறுசீரமைப்பு செய்வதாகக் கூறி 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததுள்ளது. கேஸ் ஃபிரீ (Cashfree) என்ற நிறுவனம் 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ஆன்லைனில் மளிகை பொருட்களை விற்கும் நிறுவனமான டன்சோ (Dunzo) செலவினங்களை குறைப்பதாகக் கூறி 3 சதவிகித பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

காயின் பேஸ் (Coinbase) என்ற கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் (crypto exchange firm) 950 ஊழியர்களை, அதாவது அதன் உலகளாவிய ஊழியர்களின் எண்ணிக்கையில் 8 சதவிகிதத்தினரை, பணிநீக்கம் செய்துள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தனது இந்திய ஊழியர்களில் 8 சதவிகிதத்தினரை பணிநீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


படிக்க: பொய்களை பரப்பும் முகநூல் மார்க்கை தொடர்ந்து ட்விட்டர் மஸ்க் | ஆர்.எம்.பாபு


மேலும், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களும் பணிநீக்கம் செய்ய உள்ளன. கூகுள் நிறுவனம் இவ்வாண்டில் 11,000 ஊழியர்களை நீக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தியரான சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் நிறுவனம் 10,000 ஊழியர்களை, அதிலும் குறிப்பாக இன்ஜினியரிங் மற்றும் எச்.ஆர் பிரிவிலிருந்து, பணிநீக்கம் செய்ய உள்ளதாக இன்று (ஜனவரி 18, 2023) தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐனவரி 16 அன்று புனேவில் பேசிய மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை அமைச்சர் நாராயண் ரானே, “ஜூன் மாதத்திற்குப் பிறகு இந்தியாவில் பொருளாதார மந்தநிலை (Recession) ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறியுள்ளார். அமைச்சரின் பேச்சு இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் செய்யும் பணிநீக்கத்தை நியாயப்படுத்துவதாக உள்ளது.

இப்பெரு நிறுவனங்கள் தங்களுக்குத் தேவை ஏற்படும்போது அதிக ஊழியர்களை பணிக்கு அமர்த்திக்கொள்வதும், அவர்களை கசக்கிப் பிழிந்துவிட்டு தேவை முடிந்தவுடன் தூக்கி எறிவதும் வாடிக்கையாகிவிட்டது. பணிநீக்கத்துக்கு இவர்கள் கூறும் காரணம் பொருளாதார மந்தநிலை. தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை இவர்கள் ஒருபோதும் மனிதர்களாக கருதுவதில்லை. இலாபம் குறைகிறது என்றால் தூக்கி எறிந்து விடுகிறார்கள் அரசின் உறுதுணையோடு.

பொம்மி

ஒரே நாடு, ஒரே தேர்தல் – ரிமோட் வாக்களிப்பு இந்து ராஷ்டிரத்துக்கான அடுத்த நகர்வில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிஸ்டுகள்!

ஒரே நாடு, ஒரே தேர்தல் –  ரிமோட் வாக்களிப்பு
இந்து ராஷ்டிரத்துக்கான அடுத்த நகர்வில்
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிஸ்டுகள் !
காவி – கார்ப்பரேட் பாசிசம்  முறியடிக்காமல் நமக்கு வாழ்வு இல்லை !

17.01.2023

பத்திரிக்கை செய்தி

ஒரே நாடு – ஒரே மொழி, ஒரே நாடு  – ஒரே ரேஷன்  வரிசையில் ஒரே நாடு – ஒரே தேர்தல் என்பதற்கான முன்னோட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தான் ஆட்சி செய்யாத மாநிலங்களை கலைத்தும் , எதிர்க்கட்சிகளையும் அதன் எம்.எல்.ஏக்களையும் வளைத்துப் போட்டு வந்த பாஜக ஒரே நேரத்தில் அனைத்து மாநிலங்களை கலைப்பதற்கான ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தை தேர்தல் ஆணையம் நடத்தி இருக்கிறது. இத்திட்டத்துக்கு அதிமுக அடிமைக்கும்பலின் இரு அணிகளும் ஓடோடிப்போய் விழுந்தடித்துக் கொண்டு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. பாசிச பாஜகவின் அடிமைக்கட்சிகள் தவிர மற்ற  தேர்தல்கட்சிகளும் அமைப்புக்களும் தொடர்ந்து இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன, எனினும் ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசக்கும்பலுக்கு தனது இந்து ராஷ்டிர கனவை நனவாக்க ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் அவசியமானதாக இருக்கிறது.

பல்வேறு காலங்களில் நடைபெறும் தேர்தல்களால் பெரும் பொருட்செலவு ஆவதால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும் என்று பாஜக, ஆர்.எஸ்.எஸ், தேர்தல் ஆணையம் ஆகியவை தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றன. வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலுடன் 9 மாநிலங்கள் மட்டுமே  தங்களின் ஆட்சிக் காலத்தை நிறைவு செய்கின்றன. மற்ற மாநில சட்டமன்றங்கள் 2023,2024,2025 ஆகிய காலங்களிலேயே நிறைவு செய்கின்றன.

நாட்டை அம்பானிக்கும் அதானிக்கும் விற்பதையே நோக்கமாக கொண்டிருக்கும் மோடி   உலகம் சுற்ற வாங்கப்பட்ட விமானத்தின் விலை எட்டாயிரம் கோடி ரூபாய். இப்படி ஒன்றிய அமைச்சர்கள், பாசிச பாஜக, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளுக்கு மட்டுமே பாதுகாப்புக்கென பல்லாயிரம் கோடிகள் செலவிடப்படுகின்றன. இதையெல்லாம் தடுக்காமல் , செலவீனத்தை குறைக்காமல் தேர்தல் வெவ்வேறு காலங்களில் நடத்துவதால் ஏற்படும் செலவுகளை காரணம் காட்டுவது ஏமாற்றே.


படிக்க: ஜனவரி 25: மொழிப்போர் தியாகிகள் தினத்தில் #getoutravi இயக்கம் | மக்கள் அதிகாரம்


மின்னணு ஓட்டு எந்திரத்தை ஆம்புலன்சிலும், இரு சக்கர வாகனங்களிலும் கடத்திக்கொண்டு போவதையோ பாஜக வேட்பாளர்கள் தங்கள் பொறுப்பில் மின்னணு ஓட்டு எந்திரங்களை வைத்திருப்பதையோ மின்னணு ஓட்டு எந்திரத்தை ஹேக் செய்வதையோ தடுக்க வக்கற்ற இந்திய அரசும் தேர்தல் ஆணையமும் நியாயமான முறையில் தேர்தல் நடத்துவதற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் உதவும் என்பது கேலிக்கூத்து ஆகும். ஏனென்றால் இப்படிப்பட்ட  முறைகேடுகளும் இந்து மதவெறி பாசிச கலவரங்களும் அராஜகங்களுமே மோடியை இருமுறை ஆட்சியில் நீடித்திருக்க வைத்து இருக்கின்றன.

இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்கு பல்வேறு மாநில, இன – மொழி பேசும் மக்களின் உணர்வுகளும் பண்பாடும்  பாசிச பாஜகவுக்கு மாபெரும் தடையாக இருக்கின்றது. குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடும் கேரளாவும் வரலாற்று மற்றும் பண்பாட்டு ரீதியாக இந்து ராஷ்டிரத்துக்கு எதிரான மன நிலையில் உள்ளன. பாஜக இம்மாநிலங்களில் இதுவரை ஆட்சியை பிடிக்காமல் போனதற்கு இவையே முக்கியக்காரணங்களாகும்.

ஆகவே, அனைத்து மாநில அரசுகளையும் கலைத்து குழித்தோண்டி இவர்கள் சொல்லும் ஜனநாயகம் மீது மண்ணள்ளி போடுகின்ற வேலைதான் ஒரே தேர்தல் . இதன்மூலம் தேர்தல் நேரத்தில் பயங்கரவாதப்’ பிரச்சினையையோ எல்லைப்’ பிரச்சினயையோ உருவாக்கி  அதன்மூலம் அனைத்து மாநிலங்களையும் கைப்பற்ற பாசிச மோடி அமித்ஷா கும்பல் முயல்கிறது. தேர்தல் பங்கேற்பில் மாற்றுக்கருத்து இருப்பினும் கூட இது குறைந்தபட்ச ஜனநாயக உரிமையை மறுத்து மேற்கொள்ளப்படும் பாசிச நடவடிக்கைகளை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

புலம்பெயர்ந்தோர் ஓட்டளிப்பதற்கு ஏதுவாக ரிமோட் முறையில் வாக்களிப்பு என்ற கிரிமினல் போர்ஜரி முறையை அறிமுகம் செய்துள்ள தேர்தல் ஆணையம். தென்னிந்திய மாநிலங்களில்  குறிப்பாக தமிழ்நாட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வட இந்தியர்கள், வட கிழக்கு இந்தியர்கள் பிழைப்பு தேடி வருகின்றனர். இவர்களை எளிதில் தன் வசப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிஸ்டுகள் ரிமோட் வாக்களிப்பு என்ற முறையை கொண்டு வருகின்றனர். இதற்கு வழக்கம் போல எதிர்க்கட்சிகள்  எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வெற்றிக்கும் தோல்விக்குமான வாக்குகள் வித்தியாசம் குறைந்துகொண்டே இருக்கிறது. அந்த வித்தியாசத்தை சரி செய்வதற்கான கருவியாக மோடி – அமித்ஷா பாசிசக்கும்பலுக்கு ரிமோட் வாக்களிப்பு முறை இருக்கும். கொரோனா காலத்தில் முதலாளிகளாலும் அரசாலும் கைவிடப்பட்ட லட்சக்கணக்கான வட இந்தியர்கள் பல நூறு கிலோ மீட்டர்கள் நடந்து சென்றார்கள். பலர் சோற்றுக்கு வழி இன்றி செத்தேபோனார்கள், அதற்கெல்லாம் வருத்தப்படாத பாசிச மோடி – அமித் ஷா கும்பல்  இப்போது புலம் பெயர்ந்தவர்கள் ஓட்டளிக்க வேண்டும் என்று  கூறுவதே மிகப்பெரிய ஏமாற்றுத்தனம். இதனை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.


படிக்க: தமிழ்நாட்டு வரிப்பணத்தில் உல்லாச வாழ்க்கை! வெட்கங்கெட்ட ரவியே வெளியேறு ! | மக்கள் அதிகாரம்


ஏற்கனவே இருக்கக்கூடிய இந்த அரசமைப்பை பயன்படுத்திக்கொண்டே தான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிஸ்டுகள் தங்கள் பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே நமக்கு அளிக்கப்பட்டதாக சொல்லப்படும் அனைத்து உரிமைகளும் வாக்களிக்கும் உரிமை உட்பட அனைத்தும் வெட்டி குறுக்கப்பட்டு பாசிச இருள் நோக்கிய வண்ணம் சென்று கொண்டு இருக்கிறோம். இனிமேலும் இதன் வழியே நம்முடைய குறைந்த பட்ச உரிமைகளைக்கூடப் பெற முடியாது.  காவி – கார்ப்பரேட்டுகள் தங்களின் பொற்கால ஆட்சியான இந்து ராஷ்டிரத்தை நிறுவிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் நாம் தேர்தல் ஜனநாயகத்திற்காக கெஞ்சிக்கொண்டிருப்பதில் எவ்விதப்பலனும் இருக்கப்போவதில்லை. ஏற்கனவே நாம் சென்றுகொண்டிருக்கும் பாசிச இருள் சூழ்ந்த பாதைக்கு நேர் எதிரான புரட்சிகரப் பாதையைத்தவிர வேறேதும் நமக்கு வழி இல்லை.

காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்பதற்கான போராட்டங்களை வலுவாக முன்னெடுப்போம். ஆர்.எஸ்.எஸ் – பாஜக, அம்பானி –அதானி பாசிஸ்டுகளின் பாசிச நடவடிக்கைகளை களத்தில் முறியப்பதற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியதே தலையாயக் கடமை என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321

ரோகித் வெமுலாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் | பாசிசத்தை வீழ்த்த உறுதி ஏற்போம்!

17-01-2016-அன்று இந்நேரம்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. ஐதராபாத் பல்கலைக்கழக விடுதியில் தனது நண்பர்கள் அறையில் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து துயரம் மிக்க தனது வாழ்க்கையில் இறுதி மணித்துளிகளை எண்ணிக்கொண்டு ஒரு காகிதத் தாளையும் பேனாவையும் கையில் இருக்க பிடித்துக் கொண்டு தனது வாழ்க்கையின் இறுதி வார்த்தைகளை எழுதி முடித்துவிட்டு அறையில் தூக்கு மாட்டிக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டான் ரோகித் வெமுலா. சக மாணவர்கள் யாரையும் அவனது முகத்தைக் கூடக் காண விடாமல், ஒரு அனாதைப் பிணம் போல எரியூட்டியது பல்கலைக்கழக நிர்வாகமும் போலீசும். இன்று ரோகித் வெமுலாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள்.

பார்ப்பன இந்துமதவெறியின் மீது கடும் வெறுப்பு கொண்டு அதை வேரறுக்க துடிதுடித்துக் கொண்டிருந்த ஒரு மாணவன் தான் ரோகித் வெமுலா. ஐதராபாத் பல்கலைக்கழக அம்பேத்கர் மாணவர் சங்க நிர்வாகிகளில் ஒரு மாணவர் யாகுப் மேமன் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்தார்; முசாபர்நகர் கலவரம் குறித்த “முசாபர்நகர் பாக்கி ஹே” எனும் ஆவணப்படத்தை, இம்மாணவர்கள் கூட்டமைப்பு பல்கலைக்கழக வளாகத்திற்குள் திரையிட விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி திரையிட்டது. வளாகத்தில் நடைபெறும் கலாச்சார விழாவில் மாட்டுக்கறி பிரியாணி வழங்கியது, அன்றாட உணவாக விடுதியிலேயே மாட்டுக்கறி வழங்க வேண்டும் என்ற அளவிற்கு வெமுலா தலைமையிலான மாணவர்கள் கோரிக்கை வைத்தது பல்கலைக்கழக நிர்வாகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியது.

மேலே, கோடிட்டு காட்டிய சம்பவங்கள் ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழக்தில் இயங்கி வரும் அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் (ABVP) என்ற ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பினருக்கும், பார்ப்பன வெறி பிடித்த பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும்  பெரும் இடையூறாக அமைந்தது.


படிக்க: ரோகித் வெமுலா கொலை – ஏ.பி.வி.பி அவதூறுகளுக்குப் பதில்


டிசம்பர் 16-ஆம் தேதி வெமுலா உள்ளிட்ட 5 மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. காரணம், “ஐதராபாத் பல்கலைக்கழகம் தேசத்துரோக, சாதிய பயங்கரவாதிகளின் கூடாரமாகிவிட்டது” என்று மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு எழுதிய கடிதங்கள். இதன் தொடர்ச்சியாக அமைச்சர் ஸ்மிருதி இரானி, அம்மாணவர்கள் யாரும் விடுதியில் தங்கக்கூடாது என்று நடவடிக்கை எடுத்தார். இதன்மூலம் ஊர் விலக்கம் செய்வது என்ற தீண்டாமை நடவடிக்கை பல்கலைகழக வளாகத்தில் வெமுலா உட்பட ஐந்து மாணவர்கள் மீது தொடுக்கப்பட்டது. அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக 15 நாட்களுக்கும் மேலாக போராடிக் கொண்டிருந்த நிலையில் ஞாயிறு (17-01-2016) அன்று இரவு தற்கொலை செய்து கொண்டார் ரோகித் வெமுலா.

“இந்தத் தருணத்தில் நான் புண்பட்டவனாக உணரவில்லை. என் மனம் துயரில் மூழ்கவில்லை. வெறுமையானவனாக, என்னைப் பற்றியே அக்கறையற்றவனாக உணர்கிறேன். இது பரிதாபத்துக்குரிய நிலைதான். அதனால்தான் இதைச் செய்கிறேன். எனக்காக கண்ணீர் சிந்தாதீர்கள். இவ்வுலகில் வாழ்வதைவிடச் சாவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.” இவை ரோகித் வெமுலா தன் இறுதிக் கடிதத்தில் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு எழுதிய வரிகள்.

பார்ப்பனிய சனாதன தர்மத்தையும், ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டைக் கூறு போட்டு விற்கும் தங்களது ‘கரசேவை’களையும் எதிர்த்தால், ஒன்று கொன்றொழிக்கப்படுவீர்கள் அல்லது உளவியல் ரீதியான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு தற்கொலைக்குத் தள்ளப்படுவீர்கள் என்பது தான் கல்புர்கி, பன்சாரே தொடங்கி ரோஹித் வெமுலா வரை நடத்தப்பட்ட கொலைகளின் மூலம் ஆர்.எஸ்.எஸ் கும்பல் உலகிற்கு உணர்த்த விரும்பும் பாடம்.


படிக்க: ரோகித் வெமுலா தற்கொலை : ஆர்.எஸ்.எஸ் கும்பலை துரத்தியடிப்போம் !


ரோகித் வெமுலா ஏதோ இந்துமதவெறி தாக்குதலுக்கு பலியாகி உயிர் நீத்த முதல் மாணவரோ அல்லது கடைசி மாணவரோ அல்ல. அவருக்கு முன்பும் அவருக்கு பின்பும் பல மாணவர்கள் சாதி – மத வெறி ஒடுக்குமுறையால் உயிரிழந்துள்ளனர். ஐ.ஐ.டி உள்ளிட்டு இந்தியா முழுவதும் உள்ள பல கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் சாதிய மதவாத ஒடுக்குமுறைகள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறன. மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் ஆர்.எஸ்.எஸ் -இன் கட்டுப்பாட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் முடிவென்ன?

“எனக்காக கண்ணீர் சிந்தாதீர்கள்..” ரோகித் வெமுலாவின் கடைசி வரிகள் இது. ஆம், அவருக்காக நாம் கண்ணீர் சிந்துவதை வெமுலா விரும்பவில்லை. அது பயணற்றதும் கூட. ரோகித் வெமுலா எதிர்கொண்டதை விட, இப்பொழுது பார்ப்பன இந்து மதவெறி பாசிச ஒடுக்குமுறைகள்  முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகரித்துள்ளன. இதை எதிர்கொள்ள ரோகித் வெமுலவை  நெஞ்சில் ஏந்துவோம். பாசிசத்துக்கு எதிரான போராட்டங்களை கட்டி அமைப்போம்.

ஊமைத்துரை

Enjoying on Tamilnadu’s Tax Money! Shameless Ravi Get Out! | People’s Power

11.01.2023

Enjoying on Tamilnadu’s Tax Money!
Shameless Ravi Get Out!

Press release

RN Ravi, Governor of Tamil Nadu, is acting as a spy for the Hindu Rashtra which is being established by saffron – corporate fascists. That’s why, he talks about Tamil pride and Thiruvalluvar’s pride but engages in anti-Tamil activities.

He said it would be appropriate to call Tamil Nadu as Tamilagam. He skipped some portions of the text of his customary address, which the Cabinet had written for him. When Tamil Nadu Chief Minister M.K.Stalin brought a resolution against his act, he condemned it and walked out of the Assembly.

He threatens the IAS and IPS officers in Tamil Nadu to listen only to what the central government says.


Also read: Conspiracy to reopen the murderous Sterlite! Let’s support the struggling Tuticorin people! | People’s power


Now ‘Aryan’ Ravi hadn’t used the name Tamil Nadu and the emblem of Tamil Nadu in the invitation for the Pongal festival which is to be held at the Governor’s Residence (Raj Bhavan)

Does it hurt for Ravi, who is getting fattier on the tax money of the people of Tamilnadu, to utter the word Tamilnadu? All the basic facilities provided to the Governor’s Residence, which works constantly against the interests of Tamil Nadu, should be stopped immediately and ‘Aryan’ Ravi should be expelled.

Ravi has launched such attack on Tamil Nadu and the Tamil people in the month of January, i.e., the month of commemoration of the (anti-Hindi) Language Martyrs. We, the people of Tamil Nadu, should not allow this anymore. Tamil Nadu, which had chased Modi with ‘Go Back Modi’, should continue its militant protests.


Also read: R.N. Ravi – The hand-picked spy of the fascist invasion


It was in response to his atrocities in Nagaland that Ravi was ousted by the people there. Even his farewell programme was not attended by any media; the media reflected the sentiments of the people of Nagaland.

Similarly, Ravi, who is constantly working against Tamil, Tamilnadu and Tamils, has no right to hold the Pongal festival. Therefore, People’s Power requests the media to boycott the Pongal festival which is to be conducted by Ravi.


With Comradeship,
Comrade Vetrivel Chezhian,
State Secretary,
People’s Power,
Tamil Nadu – Puducherry.
Contact : 99623 66321

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு: ஆக்ஸ்ஃபாம் அறிக்கை

0

2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, வெறும் 1 சதவிகித பெரும்பணக்காரர்களிடம் இந்திய நாட்டின் மொத்த சொத்தில் 40.5 சதவிகிதத்திற்கும் அதிகமான சொத்துகள் இருப்பதாக இன்று (ஜனவரி 16, 2023) வெளியாகியுள்ள ஆக்ஸ்ஃபாம் ஆய்வறிக்கை (Survival of the Richest: The India Supplement) கூறுகிறது. அடித்தட்டில் உள்ள 50 சதவிகித மக்களிடம் வெறும் 3 சதவிகிதத்திற்கும் குறைவான சொத்துகளே உள்ளன. உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) டாவோஸ்-இல் நடந்ததும் மாநாட்டின் முதல் நாளான இன்று இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில், முதல் 100 பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பு ₹54.12 லட்சம் கோடி ஆகும். மேலும், முதல் 10 பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டும் ₹27.52 லட்சம் கோடி ஆகும்; இது கடந்த 2021 ஆம் ஆண்டில் இருந்ததைவிட 32.8‌ சதவிகிதம் அதிகமாகும்.

2020 ஆம் ஆண்டு, இந்தியாவிலுள்ள பெரும்பணக்காரர்களின் (billionaires) எண்ணிக்கை 102-ஆக இருந்தது. அது 2021 ஆம் ஆண்டில் 142 ஆகவும், 2022-இல் 166 ஆகவும் உயர்ந்துள்ளது. பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் 22.89 கோடி பேர் இந்தியாவில் வறுமையில் வாடுகின்றனர். உலகிலேயே அதிக வறியவர்களைக் கொண்ட நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

வருமானத்தின் அளவிற்கு ஏற்ப வருமான வரி நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் மறைமுக வரிகளோ (indirect taxes) ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே மாதிரியாக வசூலிக்கப்படுகிறது.


படிக்க: ஆக்ஸ்ஃபாம் அறிக்கை 2022 : இந்தியாவில் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு


“மதிப்பு கூட்டு வரி (Value Added Tax – VAT) போன்ற நுகர்வு வரிகள் அதிகம் விதிக்கப்படுவதால் ஏழைகள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அவர்களின் வருமானத்தின் பெரும் பகுதியை மறைமுகவரியாக செலுத்த வேண்டி இருப்பதால் ஏற்றத்தாழ்வு அதிகரிக்கிறது” என்று அவ்வறிக்கை கூறுகிறது.

வருமானத்தின் அளவையும் அவர்கள் செலுத்தும் வரியையும் ஒப்பிடும்போது, அடித்தட்டில் உள்ள 50 சதவிகித மக்கள் மேல்தட்டில் உள்ள 10 சதவிகித மக்களை விட 6 மடங்கு அதிகமாக மறைமுக வரி செலுத்துகிறார்கள். 2021 — 2022-இல் வசூலான மொத்த ஜிஎஸ்டி-யில் அடித்தட்டு 50 சதவிகித மக்களின் பங்களிப்பு 64.3 சதவிகிதம் ஆகும்; மேல் தட்டில் உள்ள 10 சதவிகிதத்தினரின் பங்களிப்பு வெறும் 3 சதவிகிதமே ஆகும்.

இவ்வறிக்கை பணக்காரர்கள் மீதான சொத்து வரியை அதிகரிக்க பரிந்துரை செய்கிறது. 2017 – 2021 ஆண்டுகளில் மட்டும் அதானியின் விற்பனை செய்யப்படாத சொத்துகளின் மதிப்பு (unrealised gains) ₹1.79 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இத்தொகையை கொண்டு 50 லட்சம் ஆரம்பக் கல்வி ஆசிரியர்களை ஒரு வருடத்திற்கு பணிக்கு அமர்த்தலாம்.

“இந்தியாவின் 166 பெரும்பணக்காரர்களின் (billionaires) மொத்த சொத்துகளின்மீது ஒருமுறை 2 சதவிகிதம் வரி விதித்தால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கத் தேவையான நிதியை (அதாவது ஆண்டிற்கு ₹40,423 கோடி) பெறமுடியும். முதல் 10 பெரும்பணக்காரர்களுக்கு ஒருமுறை 5 சதவிகித வரி விதித்தால், 2022 – 2023 ஆம் ஆண்டில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (₹86,200 கோடி) மற்றும் ஆயுஸ் அமைச்சகம் (₹3,050 கோடி) ஆகியவற்றின் தேவையை விட ஒன்றரை மடங்கு அதிக நிதி கிடைக்கும்” என்று அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் மீதான ஜிஎஸ்டி-யை குறைத்து, சொகுசு பண்டங்கள் மீதான வரியை கூட்ட வேண்டும் என்று ஆக்ஸ்ஃபாம் பரிந்துரைக்கிறது.


படிக்க: ஆக்ஸ்பாம் அறிக்கை : வெடித்துச் சிதறக் காத்திருக்கும் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு !


இவ்வறிக்கை குறித்து பேட்டி அளித்த ஆக்ஸ்ஃபாம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் பெஹர் (Amitabh Behar)‌ “பணக்காரர்கள் செழிப்பதற்கான இந்த அமைப்பால் தலித்துகள், பழங்குடிகள், முஸ்லீம்கள், பெண்கள், முறைசாரா தொழிலாளர்கள் ஆகியோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய சொத்து வரி, வாரிசுரிமை வரி போன்ற வரிகள் விதிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

ஏற்றத்தாழ்வையே உயிர் மூச்சாகக் கொண்டு இயங்கி வரும் இந்த பொருளாதார அமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு, அதில் சில மாறுதல்களை மட்டும் செய்து பிரச்சினைகளை சரி செய்து கொள்ளலாம் என்று நினைப்பது மூடத்தனம். ஏற்றத்தாழ்வை ஒழித்துக்கட்ட இந்த பொருளாதார கட்டமைப்பையே ஒழித்துக் கட்டுவது அவசியமாகிறது.

பொம்மி