Saturday, June 20, 2026
முகப்பு பதிவு பக்கம் 156

பிபிசி ஆவணப்படமும் குஜராத் படுகொலை குற்றவாளிகளும்

பிபிசி செய்தி நிறுவனம், “India:The Modi Question” என்ற ஆவணப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட்டது. முதல் பாகம் ஜனவரி 17-ம் தேதியும், இரண்டாவது பாகம் 24-ம் தேதியும் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படம் குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 28 முதல் மார்ச் 2 வரை இந்து மதவெறியர்களால் நடத்தப்பட்ட கலவரத்தை பற்றியும் அதில் அன்றைய தேதியில் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மோடியின் பங்கு பற்றியும் பேசுகிறது. இதனால் பாசிச மோடி அரசு சமூக வலைதளங்களில் இந்த ஆவணப்படத்தை தடை செய்தனர். இதுவும் “கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்” என்று சனநாயக சக்திகளால் கண்டிக்கப்பட்டது.

இன்றைய காலகட்டத்தில், இப்படி ஒரு ஆவணப்படத்தை வெளியிடவும் அதன் மூலம் 2002 குஜராத் கலவரத்தை பற்றி பிரிட்டிஷ் அரசின் அயலுறவு அலுவலகம் தயாரித்த அறிக்கையை (கடந்த 20 ஆண்டுகளாக இப்படியொரு அறிக்கை இருப்பது கூட பொதுவெளிக்கு தெரியாது) பிபிசி நிறுவனம் வெளிக்கொண்டு வந்தது பற்றிய விவாதங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த ஆவணப்படமும் இந்த அறிக்கையும் இந்திய அரசு நிறுவனங்கள் ஒரு இனப்படுகொலையை செய்தவர்களை அது சார்ந்த வழக்குகளிலிருந்து விடுவிப்பதில் எந்த அளவு ஒத்திசைவோடு நடந்து கொண்டது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மேலும், இப்படி ஒரு இனப்படுகொலையின் போது குஜராத்தின் முதலமைச்சராக இருந்த ஒருவரை, 2014 நாடாளுமன்ற தேர்தலில் இந்திய ஊடகங்கள் எப்படி வளர்ச்சியின் நாயகனாக சித்தரித்து தனிப்பெரும்பான்மை வெற்றியை தேடித் தந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.

படிக்க : மோடியின் முகத்திரையை கிழிக்கும் பிபிசி ஆவணப்படம் | தோழர் அமிர்தா வீடியோ

2002 குஜராத் கலவரத்தை பற்றி அதை நெருக்கமாக இருந்து கவனித்த மனசாட்சியுள்ள சில பத்திரிகையாளர்கள், கலவரத்தின் போது நடத்தப்பட்ட கொடூரங்களை பற்றி இத்தனை ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வந்ததைவிட இந்த ஆவணப்படம் புதிதாக எதையும் சொல்லிவிடவில்லை. அந்த பத்திரிகையாளர்கள் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு வந்த சில விஷயங்களை ஆவணப்படம் மேலும் சில ஆதாரங்களுடன் விளக்குகிறது அவ்வளவே.

ஆவணப்படமும் அது வெளிக்கொண்டு வந்த அந்த அறிக்கையும் சொல்லும் சில எளிய உண்மைகள் இதுதான். “வன்முறையின் அளவு அறிக்கையிடப்பட்டதை விட அதிகமாக இருந்தது; இனப்படுகொலைக்கான அனைத்து அடையாளங்களும் இந்த கலவரத்தில் இருந்தது; இந்த இனப்படுகொலையை அரங்கேற்றும் பொருட்டு ஒரு முறையான வன்முறை பிரச்சாரம் நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டது; இந்தக் கலவரத்தின் நோக்கம் இந்து மக்கள் வாழும் பகுதிகளில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றுவதே; முஸ்லீம் பெண்களை பரவலாகவும் திட்டமிட்டும் பாலியல் பலாத்காரம் செய்வது கலவரத்தின் நோக்கமாக இருந்தது; வன்முறையைத் தூண்டுவதில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (VHP) அமைப்பை சேர்ந்த குண்டர்களின் பங்கு இருந்தது” என்பவைதான்.

மேலும், எவ்வாறாயினும், வி.எச்.பி குண்டர்கள் “தாங்கள் என்ன கொடூரங்கள் செய்தாலும் தண்டிக்கப்பட மாட்டோம் என்ற நிலையை மாநில அரசாங்கம் உருவாக்கி வைத்திருந்திருந்தது. அப்படி ஒரு சூழலை மாநில அரசாங்கம் உருவாக்கி வைக்காமல் இருந்திருந்தால், இவ்வளவு சேதத்தை ஒருபோதும் ஏற்படுத்தியிருக்க முடியாது” என்றும் “இதற்கு நரேந்திர மோடியே நேரடியான பொறுப்பு” என்றும் அறிக்கை உறுதிபடக் கூறுகிறது.

ஆனால், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் “மோடி அலை” உருவாக்கிய பத்திரிகைகள் இந்த கலவரத்தின் இரத்தக்கறை மோடியின் கரங்களில் இருப்பது பற்றி ஒரு செய்தி கூட வெளியிடவில்லை. அப்படியொரு சம்பவம் நடந்ததையே இந்த பத்திரிகைகள் மக்களின் கவனத்திற்கு கொண்டுவரவில்லை. அது ஏன் என்பது ஊர் அறிந்த ரகசியம். ஏனெனில், மோடி பிரதமராக வேண்டும் என்பதை இந்திய ஆளும் வர்க்கத்தின் பெரும் புள்ளிகள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்கள். குஜராத்தில் வணிகம் செய்வதை எளிமையாக்கியது, தொழிற்சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்தை எளிதாக்கியது மற்றும் தனியார் திட்டங்களைத் தடுக்கக்கூடிய அதிகாரத்துவ தாமதங்கள் ஆகியவற்றை ஒப்பீட்டளவில் குறைந்ததால், நிறுவனங்கள் மோடியை தங்களுக்கு சாதகமானவராக பார்த்தது.

இந்தியாவின்  உழைக்கும் தொழிலாளர்களுக்கு எதிராக வர்க்கப் போரை நடத்துவதற்கும், இந்திய பெருமுதலாளிகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டு சேர்ந்து அதன் பெரும் ஆதாயங்களை அடைவதற்கும் தேவைப்படக்கூடிய ஒரு “பலமானவர்” என்று ஆளும் வர்க்கம் ஏற்றுக்கொண்ட பெரிய செயல்முறையின்  ஒரு பகுதி தான் மோடி.

2012 ஆம் ஆண்டே மோடியை பாஜக அதன் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளராக அறிவிக்கும் முன்பே மோடி பிரதமர் வேட்பாளர் என்ற பிம்பம் ஊடகங்களால் முன்தள்ளப்பட்டது.

இன்று அப்பட்டமான மதவெறியோடு செயல்பட்டு வரும் மோடி, 2014 தேர்தலுக்கு முன்பு தன்னை மிதவாதியாக முன்னிறுத்த பல முயற்சிகளை மேற்கொண்டார். அவர் மத நல்லிணக்கத்தை மேம்படுத்த முயற்சிப்பது போன்று பாவனைகள் செய்தார். அவரது பேச்சுக்கள், இந்து மறுமலர்ச்சி என்பதாக இல்லாமல், வளர்ச்சி, முதலீடு போன்ற வார்த்தைகளை சுற்றியிருக்கும்படி பார்த்துக்கொண்டார். இவையெல்லாம் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட செய்திகளாக வளம் வந்தது.

மோடியிடம் கடினமான கேள்விகளைக் கேட்பதிலும், மோடி பேசும் வாய் வீச்சுகளை  விமர்சன ரீதியாக ஆராய்வதிலும் ஊடகங்கள் அக்கறை காட்டவில்லை.

2002 குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு பற்றி ஊடகங்கள் கவலைப்படவில்லை; அவை கலவரம் பற்றிய விசாரணையின் செயல்முறையை கேள்விக்குள்ளாக்கவில்லை, குறிப்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவின் (SIT) பங்கு, மோடி கீழ் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுவதற்கு வழிவகுத்தது பற்றி ஊடகங்கள் எதுவும் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் இதே ஊடகங்கள் “பத்திரிகை சுதந்திரம்” பறிபோவதாக இப்போது கூப்பாடு போடுகிறது.

2002 குஜராத் கலவரத்திற்கு அப்போதைய முதல்வர் மோடி உடந்தையாக இருந்ததாகக் சொல்லப்படுவதை மறுப்பவர்கள், சில மாதங்களுக்கு முன்பு – குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது – இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா (மோடியின் நெருங்கிய கூட்டாளி) “2002ல், கலவரக்காரர்களுக்கு (இஸ்லாமியர்கள்), ஒரு பாடம் கற்பிக்கப்பட்டது. அவர்களால் மீண்டும் தலை தூக்க முடியவில்லை. இதனால் குஜராத்தில் நிரந்தர அமைதி நிலவுகிறது” என்று பெருமிதமாக சொன்னார். இது பகிரங்கமாக இஸ்லாமிய மக்களை மிரட்டும் தொனியில் இருந்தது.

இப்படி ஒரு உள்துறை அமைச்சர் பேசமுடியும் என்ற சூழல் இன்று நேற்று உருவாக்கப்பட்டதல்ல. கடந்த 20 ஆண்டுகளாக குஜராத் படுகொலைக்கு காரணமானவர்களை விடுவிப்பதில் இந்திய அரசின் ஒவ்வொரு உறுப்பும் எத்தனை முனைப்புடன் செயல்பட்டிருக்கிறது என்பதன் சாட்சியமாக இருக்கிறது அமித்ஷாவின் மிரட்டல் பேச்சு.

பிப்.27, 2002 அன்று இரவு மோடியின் இல்லத்தில் கூட்டப்பட்ட “அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில்” மோடியின் குஜராத் மாநில அரசாங்கத்தின் வருவாய்த்துறை அமைச்சரான ஹரேன் பாண்டயா மற்றும் துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் பட் ஆகியோர் கலந்துகொண்ட ஆதாரம் மிகவும் முக்கியமானது. “இந்த சந்திப்பு ஒரு தனித்துவமான நோக்கத்தைக் கொண்டிருந்தது” என்றும் “மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும். இந்துக்கள் “எதிர்வினை” ஆற்றும் வழியில் குறுக்கிடக்கூடாது” என்றும் மோடி கூடியிருந்தவர்களுக்கு அறிவுறுத்தினார். 2009-ல், சஞ்சீவ் பட் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும், ஹரேன் பாண்டயாவின் கூற்றை உறுதிபடுத்தும் வகையில் சாட்சியம் அளித்தார்.

ஆனால், 2003-ல் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார் ஹரேன் பாண்டியா. தற்போது சஞ்சீவ் பட் சிறையில் இருக்கிறார்.

இந்த வழியில்தான், 2002 நிகழ்வுகள் பற்றிய விசாரணையை இந்திய அதிகாரிகள் அதன் ஒவ்வொரு கட்டத்திலும் நீர்த்துப்போகச் செய்துள்ளனர். 2002-இல் கொடூரமாக கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டபோது, ​​21 வயது மற்றும் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பிளிகிஸ் பானோவைப் போலவே, பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் உறுதியான முயற்சிகளின் விளைவாக நடந்த சிலருக்கு தண்டனைகள் கிடைத்தது.

ஆனால் அதுவும் நிரந்தரமாக அல்ல. கடந்த ஆண்டு குஜராத் மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக, பிலிகிஸ் பானோவின் குடும்பத்தின் கொலையில் பங்கு வகித்ததற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரையும் மாநில அரசு வீரவணக்கத்துடன் விடுதலை செய்தது. அவர்கள் இன்று பிலிகிஸ் பானோ வன்கொடுமை செய்யப்பட்ட அதே தெருக்களில் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள்.

2002 படுகொலைக்குப் பொறுப்பானவர்களைக் காப்பாற்ற குஜராத்தில் உள்ள போலீசுத்துறை, நீதித்துறை மற்றும் அரசாங்க அதிகாரிகளின் முயற்சிகள் மிகவும் அப்பட்டமாக இருந்தன, இறுதியில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எவ்வாறாயினும், இந்தியாவின் உச்ச நீதிமன்றம், மோடியை இந்த வழக்கில் இருந்து விடுவித்ததன் மூலம் நீதித்துறை நன்மதிப்பிற்கு தகுதியற்றது என்ற பெயரை ஈட்டியது.

2002 குஜராத் கலவரத்தில் அகமதாபாத்தின் முஸ்லீம் சுற்றுப்புறத்தில் 68 பேருடன்  காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி ஜாகியா ஜாஃப்ரி அது பற்றி வழக்கு தொடர்ந்தார். அவரது சாவு முஸ்லிம் எதிர்ப்பு வன்முறை மற்றும் இனப் படுகொலை என்னும் பெரிய சதியின் அங்கம் என்ற வகையில் விசாரிக்கப்பட வேண்டிய வழக்கை பிப்ரவரி 28, 2022 அன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து மேலும் ஒருமுறை தனது மோடி விசுவாசத்தை காட்டியது.

படிக்க : பிபிசி வருமான வரித்துறை ஆய்வு: ஊடகங்களை முடக்க எத்தனிக்கும் பாசிஸ்டுகள்!

அவ்வாறு செய்ததன் மூலம், உச்ச நீதிமன்றம் மோடி, அமித்ஷா மற்றும் குஜராத் அதிகாரிகளை விடுவித்தது மட்டுமல்லாமல், அவர்களுக்கு “க்ளீன் சிட்” கொடுத்தது. அடுத்த நாள், இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள் காட்டி, தீஸ்தா செதல்வாட் மற்றும் படுகொலைக்கு போலீசுத்துறை உடந்தையாக இருந்ததை அம்பலப்படுத்திய முன்னாள் குஜராத் போலீசுத்துறை அதிகாரி ஆர்.பி.ஸ்ரீகுமார் ஆகியோரைக் குஜராத் போலீசுத்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படை கைது செய்தது.

இவ்வாறு கடந்த 20 ஆண்டுகளில் குஜராத் இனப்படுகொலையை முன்னின்று நடத்திய பாசிச மதவெறியர்களை விடுவிப்பதில் இந்திய அரசின் ஒவ்வொரு உறுப்பும் தனது பங்கை சென்மையாக செய்திருக்கிறது. பெரு முதலாளிகளும் அவர்களின் ஊதுகுழலான “வெகுஜன” பத்திரிகைகளும் இந்த பாசிஸ்டுகள் அரசதிகாரத்தை கைப்பற்ற உதவியிருக்கிறார்கள். இந்த வேலையை செய்ததற்கான‌ பலனையும் பெற்றுக்கொண்டனர்.

இப்படி பாசிஸ்டுகள், அவர்களை அரவணைக்கும் பெருமுதலாளிகள், அவர்களின் ஊதுகுழலான ஊடகங்கள், நீதித்துறை, போலீஸ், விசாரணை ஆணையம் போன்ற அரசு கட்டமைப்புகள் என எல்லாம் மக்கள் விரோதமானதாக இருக்கும்போது எத்தனை ஆவணப்படங்கள் எத்தனை முறை உண்மைகளை வெளிக்கொண்டு வந்தாலும் பலனில்லை. வெகுமக்கள் போராட்டங்களே நீதியை வழங்கும் வல்லமை பெற்றது.

ராஜன்

இனவெறியர்களால் சித்திரவதைக்குள்ளாகும் வடமாநில தொழிலாளர்கள்!

திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டு தொழிலாளர்களை தாக்கினார்கள் என்ற வதந்தி பரவியதையடுத்து, உண்மை நிலைமை என்னவென்றே தெரிந்து கொள்ளாமல் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான மீம்கள், வீடியோக்கள் சமூகவலைத் தளங்களில் பெரிதளவில் வலம் வந்தன.

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிரான இவ்வெறுப்புப் பிரச்சாரங்கள் திட்டமிட்டே பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, பரிதாபங்கள் என்ற யூடியூப் சேனலில், “வடக்கு ரயில் பாவங்கள்” என்ற பெயரில் வீடியோ ஒன்று வெளியானது. 8 மில்லியன் பார்வைகளைக் கடந்த இவ்வீடியோ, “ரயில்களில் ஏறும் வடமாநில தொழிலாளர்கள் யாருக்கும் இடம் கொடுக்காமல் ஆக்கிரமித்து கொள்வார்கள்”; கண்டக்கண்ட இடங்களில் எச்சில் துப்புவார்கள், “பீடாவாயன், வடக்கன்களால் வேலை பறிபோகுது” போன்ற வசனங்கள் மூலம், வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான விஷக்கருத்தைக் கக்குகிறது. “இதுதான் தமிழ்நாட்டின் எதார்த்த நிலைமை”, “வடக்கன்ஸ் ஆதிக்கத்தில் இருந்து மீளுவோம்” போன்ற ஆயிரக்கணக்கான கமெண்டுகளும் இவ்வீடியோக்குக்கீழ் கொட்டி கிடக்கின்றன. “நான் 200 ரூபாய்க்கு வேலை செய்வேன். என் சித்தப்பா 80 ரூபாய்க்கு வேலை செய்வார்” என்ற இவ்வீடியோவில் இடம்பெற்ற வசனங்களை நாம் தமிழர் கூட்டத்தில் பேசி பூரிப்படைகிறார் சீமான்; அதனை நூற்றுக்கணக்கான இளைஞர்படை ஆரவாரத்தோடு ரசித்து வரவேற்கிறது.

படிக்க : நெடுமாறனும் சீமானும் கைக்கூலிகளே! || தோழர் மருது வீடியோ

வடமாநில தொழிலாளர்கள் மீதான இக்கருத்தியியல் தாக்குதல் என்பது அன்றாட வாழ்க்கையில் எதார்த்த நிலையாக மாறி வருகிறது. அண்மையில், இரயில் பயணத்தை மேற்கொண்டிருந்தேன். ஒரு நிலையத்தில், பெண்கள், சிறுவர்கள் என 8 – 10 வடமாநில தொழிலாளர்கள் திடுதிடுமென நான் இருந்த பெட்டியில் ஏறினார்கள். அவர்கள் கொண்டு வந்த மூட்டை பைகளோ அவர்களைவிட இரண்டு மடங்கு அதிகம். லக்கேஜ் வைக்கும் இடங்களில் வரிசையாக தங்களது மூட்டைகளை அடுக்கி, காலியாக இருந்த இருக்கைகளில் படுத்துக் கொண்டனர்.

நேரம் கடந்தது. பெண் ஒருவர் இந்தியில் வீரிட்டு கத்தும் சத்தம் கேட்டு, கண் அசந்திருந்த நான் திடீரென விழித்துக் கொண்டேன். அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என புரிந்துகொள்ள சிறிது நேரமானது.

வடமாநில தொழிலாளர்கள் ஏறிய இரண்டு நிலையங்களுக்கு அடுத்து, கூட்டம் அலைமோதியதால், இருக்கைகளில் படுத்துக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்களை எழுந்து உட்காரும்படி பயணிகள் கூறினார்கள். முன்பதிவு செய்யாத பெட்டியில் உட்கார இடமில்லை என்றால் படுத்திருப்போரை எழுந்திருக்க சொல்வது வழக்கம்தான். ஆனால், வடமாநில தொழிலாளர்கள் நாயைவிட மோசமாக நடத்தப்பட்டனர்.

அப்போது பெட்டியில் ஏறிய 22 – 25 வயதுடைய 3 தமிழ் இளைஞர்கள், இரண்டு வடமாநில தொழிலாளர்களை வற்புறுத்தி கீழே உட்காரச் சொல்லி, அவர்கள் அமர்ந்திருந்த இடங்களை ஆக்கிரமித்தனர். இருக்கைக்கு மேலே லக்கேஜ் வைக்கும் இடத்தில் படுத்திருந்த வடமாநில பெண்ணை எழுப்பி கீழே உட்கார சொன்னபோதுதான் அப்பெண் வீரிட்டு இந்தியில் கத்தினாள். அப்பெண்ணின் மொழி தெரியாது என்றாலும் அவளின் குரலில் இருந்த ஆதங்கம், பயங்கலந்த கோபத்தை யாராலும் புரிந்துகொள்ள முடியும். அப்பெண் கத்தியதையும் பொருட்படுத்தாத பயணிகள் சிலர், இடங்களை ஆக்கிரமிப்பதில் கிடைத்த வெற்றியில் சிலாகித்தப்படி அமர்ந்துகொண்டனர்.

கீழே இறங்க மறுத்த அப்பெண்ணை “இதுலாம் பொம்பளையா. இப்படி பேசுறா”, “என்னடா சொல்றா.. ஒன்னுமே புரியல” என்று அந்த மூன்று இளைஞர்களும் அப்பெண்ணை கலாய்க்க ஆரம்பித்தனர். 15 வயதுடைய ஒரு வடமாநில சிறுவனிடம் கத்திய பெண்ணைச் சுட்டிக்காட்டி “இது உங்க அம்மாவா டா இப்படி கத்துறா” என்றதும் அச்சிறுவனுக்கு ஒன்றும் புரியாமல் சிரிந்தபடி இருந்தான். “இது உங்க அப்பாவா..? இது உங்க அப்பாவா” என சில வடமாநில தொழிலாளர்களைச் சுட்டிக்காடி அவ்விளைஞர்கள் கேட்டனர்.

நேரம் சென்றது, இருந்தும் வடமாநில தொழிலாளர்களை ஏசுவதை அவ்விளைஞர்கள் சிறிதுநொடி கூட நிறுத்தவில்லை. இதில் என்ன வேதனை என்றால் வடமாநில தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒருத்தரும் அவ்விளைஞர்களை எதிர்த்துக் கேள்விக் கேட்கவில்லை என்பதுதான்.

ஆரம்பத்தில் வடமாநில தொழிலாளர்களின் உருவங்களைக் கேலி செய்தவர்கள் பின்னர், “எங்க போற”, “நீங்க (வடமாநில தொழிலாளர்கள்) மட்டும்தான் டிரெயின்ல போகனுமா? ஏன் நாங்கலாம் போகவேண்டாமா”, “இப்படி உட்கார்ந்துகிட்டா நாங்க எப்படி உட்காரது” என்றனர். தங்களுக்கு புரிந்தளவில் பதிலளித்த வடமாநில தொழிலாளர்கள் தொடர்ந்து கேள்விகளால் தொந்தரவுக்குள்ளாக்கப்பட்டார்கள். கேள்விப் புரியாமல் சிரித்த அச்சிறுவனையும் சில வடமாநில தொழிலாளர்களையும் பார்த்து “சிரிச்சே எங்க பொழப்ப கெடுக்க வந்துருங்கீங்க டா” என்று எரிந்து விழுந்தனர்.

எழுப்பூரில் இறங்கவேண்டிய அவ்வடமாநில தொழிலாளர்களை விழுப்புரத்திலேயே “இதுதான் டா நீங்க இறங்கவேண்டிய இடம். மூட்டை முடிஞ்சலாம் கட்டிக்கிட்டு ஒழுங்கா கீழ இறங்குங்கடா” என்று கத்திக் கொண்டே இருந்தனர். வார்த்தைகளால் தாங்கள் தாக்கப்படுவதைப் புரிந்து கொண்ட வடமாநில தொழிலாளர்கள் எதுவும் பேசமுடியாமல் அமைதியாக இருந்தனர். வடமாநில தொழிலாளர்களை ஏசுவதில் சிறிது நேரம் தங்களது வாயிக்கு ஓய்வு கொடுத்த அந்த இளைஞர்கள், வடமாநில தொழிலாளர்கள் குறித்த சீமானின் இனவெறி வீடியோக்களை சத்தமாக வைத்து கேட்டுக் கொண்டு வந்தனர்.

20 – 25 நிமிடங்கள் அமைதியாக இருந்திருப்பார்கள் அவ்வளவுதான், வீடியோக்களைப் பார்த்துவிட்டு, மீண்டும் “உங்களால தாண்டா எங்களுக்கு வேலை போயிடுச்சு. தமிழ்நாட்டில இருக்குற நாங்க 8 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குறோம். வடக்குல இருந்து அலுங்காம இங்க வந்து 25 ஆயிரம் சம்பாதிச்சிட்டு போறீங்க” என்று சீமான் கக்கியதை எடுத்து வாயில் போட்டு கக்கினான் ஒருவன். “வேலையும் புடுங்குவீங்க, இங்க இடமும் கொடுக்கமாட்டீங்களா டா”.. “டிக்கெட் எடுக்காம சீட்டுல உட்கார்ந்துட்டு வரீங்க” என்று பேசியபடியே, “டேய்.. டிடிஆர் வராரு டா” என்று கத்தி ஏதோ சாதித்ததுபோல் அருவருப்பாக சிரித்தனர்.

இருக்கையில் வடமாநில தொழிலாளருடன் அமர்ந்திருந்த தமிழ் பயணி ஒருவர் சிறுநீர் கழிக்க எழுந்து சென்று திரும்பி வந்து பார்த்தபோது, வடமாநில தொழிலாளர் ஒருவர் அசதியில் இருக்கையில் படுத்துவிட்டார். ”எங்கடா என் இடம்?” என்று கேட்ட அப்பெரியவரிடம், “பாருங்கண்ணா இவனுங்க இப்படிதான் பண்ணுவாங்க. இருக்க இடம் கொடுத்தா முதலாளி மாறி படுத்துக்குவாங்க” என்று அப்பெரியவரின் கோபத்தை ஏற்றிவிட்டான் ஒரு இளைஞன். அப்பெரியவரும் இளைஞர்களுடன் இணைந்து வடமாநில தொழிலாளர்களை ஏச ஆரம்பித்தார்.

படிக்க : அதானி: உலகப் பணக்காரன் அல்ல; உலகப் பாட்டாளி வர்க்க எதிரி!

“உனக்கு அடக்க ஒடுக்கமா உட்கார தெரியாதா டா. கால விரிச்சிக்கிட்டுதான் உட்காருவியா” என்று 15 வயது சிறுவனை பார்த்து கேட்டவர்கள், “ஏன்.. உட்கார இடத்துல கட்டியா. அடங்கி உட்காரு” என மிரட்டினர். ”இங்க ஏண்டா வந்த.. கஞ்சா விக்கதான” என கேள்வி மேல் கேள்வி கேட்டு தொந்தரவு செய்தனர். மொழி தெரியாத ஊருக்கு பிழைப்புத்தேடி வந்த அச்சிறுவன், இளைஞர்கள் கேட்ட கேள்வியால் பயந்து கூனிக்குறுகிப் போய் அமர்ந்திருந்தான். இரவில் நான்கு மணி நேரமாக துளியும் தூங்கவிடாமல் அவனை நச்சரித்து கொண்டு கேவலமாக சிரித்துக் கொண்டிருந்தனர் அந்த இளைஞர்கள்.

வடமாநில தொழிலாளர்களை சக மனிதர்களாக பார்க்க முடியாத அளவுக்கு இவ்விளைஞர்களுக்கு இனவெறி போதை ஊட்டப்பட்டிருக்கிறது. வேலைத்தேடி குடும்பம், குட்டிகளை விட்டு பல மைல் தூரம் கடந்து வந்திருக்கும் வடமாநில தொழிலாளர்கள், அற்பக்கூலிக்காக மாடாய் உழைக்கிறார்கள்; அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. அவர்களை போலதான் உழைக்கும் மக்களான நாமும் சுரண்டப்படுகிறோம் என்ற உணர்வு, இனவெறியால் திரையிட்டு மறைக்கப்படுகிறது.

ஏன் வேலை இல்லை, அந்தந்த மாநிலங்களுக்குரிய வேலைவாய்ப்பை அரசு ஏன் உருவாக்கவில்லை என்று சிந்திப்பதில்லை. லாபம் ஈட்ட வடமாநில தொழிலாளர்களை, குறைந்த கூலிக்கு வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் மீதோ; குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலத்தவர்களை, இரயில்வே, வங்கிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளாக பணியமர்த்தும் மோடி அரசின் மீதோ இளைஞர் ‘தம்பி’களுக்கு கோபம் வருவதில்லை. சீமான் போன்றவர்களால் ஊட்டப்பட்ட இனவெறியால் நமது எதிரி வடமாநில தொழிலாளர்கள்தான்; அவர்களை நேரடியாகவும் உளவியல் ரீதியாகவும் தாக்குவதன் மூலம்தான் தங்கள் உரிமைகளை மீட்பதாக தப்பெண்ணம் கொண்டவர்கள் இவர்கள். வடமாநில தொழிளார்களுக்கு ஆதரவாக மனிதாபிமான அடிப்படையில்கூட சக உழைக்கும் மக்கள் யாரும் குரல் கொடுப்பதில்லை என்பதுதான் இனவெறியைவிட கொடூரமானது.

ஆதினி

துருக்கி நிலநடுக்க மரணங்கள்: அரசு நிகழ்த்திய படுகொலையே!

0

டந்த பிப்ரவரி 6-ஆம் தேதியன்று துருக்கி – சிரியா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 46,000-ஐ நெருங்கியுள்ளது. துருக்கியின் தெற்குப் பகுதியிலும், சிரியாவின் வடக்குப் பகுதியிலும் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதிகாலையில் 7.8 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கமும், பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கமும் ஏற்பட்டன. ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகின. தற்போது வரை துருக்கியில் 39,672 பேரும் சிரியாவில் 5,800 பேரும் பலியாகியுள்ளனர். இடிபாடுகளை அகற்றும் பணி இன்னும் முடிவுறாததால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.

நிலநடுக்கத்தால் துருக்கியில் 10 மாகாணங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1.3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 82,000 கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன அல்லது இடிந்து தரைமட்டமாகிவிட்டன. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து கூடாரங்களில் வசித்து வருகின்றனர்.

துருக்கி அமைந்திருக்கும் புவியில் பரப்பு யுரேசிய மற்றும் அரேபிய தட்டுக்களின் (Eurasian and Arabian Plates) எல்லையில் உள்ளது. இவை தவிர, அனடோலிய தட்டும் உள்ளது (Anatolian plate). இத்தட்டுகள் மோதிக் கொள்வதானது வழக்கமான புவியியல் செயல்பாடு. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அரேபிய மற்றும் அனடோலிய தட்டுக்களின் மோதலால் ஏற்பட்டதாகும். இது நிலநடுக்கம் ஏற்பட்டதற்கான இயற்கைக் காரணம்.

ஆனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கி மரணித்ததற்கு இயற்கை மட்டுமே காரணம் அல்ல. துருக்கியில் எந்நேரம் வேண்டுமானாலும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்ற அறிவியல் உண்மை துருக்கி அரசுக்கு ஒன்றும் தெரியாததல்ல. கடந்த 2020-ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 33,000 நிலநடுக்கங்கள் துருக்கியில் பதிவாகியுள்ளன. அதில் 332 நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 4.0 மற்றும் அதற்கு மேலான அளவில் பதிவாகியுள்ளன.


படிக்க: பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ளவே துருக்கியின் ஸ்வீடன் எதிர்ப்பு!


துருக்கியின் பூகோள அமைப்பையும் முந்தைய பேரழிவுகளையும் கருத்தில் கொண்டே துருக்கியின் கட்டுமான விதிகள் உருவாக்கப்பட்டன. அவற்றின் படி, கட்டிடங்களைக் கட்டும்போது நிலநடுக்கத்தை எதிா்கொள்வதற்கான பொறியியல் தர அளவுகள் பின்பற்றப்பட வேண்டும். ஆனால், இந்த பாதுகாப்பு விதிமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்படவில்லை. இதன் விளைவாகவே ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கியில் கட்டுமானத் தொழில் என்பது பெரும் இலாபம் கொழிக்கும் ஒன்றாக உள்ளது. வெறும் 8.5 கோடி மக்கள் தொகை கொண்ட துருக்கியில், 2017-ஆம் ஆண்டு நிலவரப்படி, பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்களின் எண்ணிக்கை 3,30,000 ஆகும். 8.3 கோடி மக்கள் தொகையைக் கொண்ட வளர்ந்த நாடான ஜெர்மனியில் வெறும் 3,800 ஒப்பந்ததாரர்கள் மட்டுமே உள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற துருக்கி அதிபர் எர்துவான் “எல்லாம் விதி” என்று கூறியதன் மூலம் அரசுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே உள்ள கள்ளக் கூட்டை மறைக்க முற்படுகிறார். கட்டுமானம் தொடர்பான சட்ட விதிகள் ஒப்பந்ததாரர்களுக்கு ஏற்றவாறு பலமுறை மாற்றப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரர்களும் தாங்கள் ஈட்டும் இலாபத்தை அரசியல் கட்சிகளில் முதலீடு செய்கின்றனர்.

1999-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 17 அன்று துருக்கியின் மர்மாரா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 18,000-ம் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, கடந்த 2001-ஆம் ஆண்டில்‌ நிலநடுக்கத்தை தாங்கும் கட்டிடங்களை கட்டவும் ஆய்வு செய்யவும் புதிய சட்டம் இயற்றப்பட்டது. நவீன தொழில்நுட்ப மற்றும் அறிவியல் தர நிலைகளுக்கு ஏற்ப இச்சட்டத்தின் ஒழுங்குமுறைகள் 2018-ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டன.


படிக்க: இந்தோனேசியாவை உலுக்கிய பேரழிவு சுனாமியும், நிலநடுக்கமும் | படக்கட்டுரை


2001-ஆம் ஆண்டின் புதிய சட்டத்திற்கு பிறகு கட்டப்பட்ட கட்டிடங்கள் பாதுகாப்பானவையாக கருதப்பட்டன. ஏனென்றால், புதிதாக கட்டப்படும் கட்டிடங்கள் நிபுணத்துவம் வாய்ந்த தணிக்கை நிறுவனங்களால் ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆனால், கட்டுமான நிறுவனங்கள் தணிக்கை நிறுவனங்களை தாமே தேர்வு செய்து கொண்டன. தங்களின் இலாபத்தை பெருக்கிக் கொள்வதற்காக தணிக்கை நிறுவனங்களை தாமே தோற்றுவிக்கவும் செய்தன.

நிலநடுக்கத்தின் மையமாக அமைந்த காஹ்ராமன்மராஸ் (Kahramanmaras) நகரில் 2004-ஆம் ஆண்டிற்குப் பின் கட்டப்பட்ட கட்டிடங்கள். நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் இவை கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதியன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இவற்றில் பெரும்பாலானவை தரை மட்டமாகிவிட்டன.

இது ஒரு புறமிருக்க, சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் கட்டிடங்களை கட்டுவதும் அதிகரித்தது. இந்த சிக்கலை சரி செய்ய எர்துவான் அரசு, 2018-ஆம் ஆண்டில் “கட்டுமான பொது மன்னிப்பு” (construction amnesty) என்ற புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியது. அதாவது, 2017, டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் சட்ட உரிமம் பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு பதிவு சான்றிதழ் கட்டணத்தை செலுத்தினால் உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான் அது. இதன் மூலம் ஒரு கோடி மக்கள் பயனடைந்ததாகவும், அரசுக்கு 1600 கோடி துருக்கிய லிரா வருமானம் கிடைத்ததாகவும் எர்துவான் அரசு மார்தட்டிக் கொண்டது.

துருக்கி புள்ளியல் நிறுவனத்தின் கூற்றின்படி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களைச் சேர்ந்த குடிமக்களில் 51 சதவிகிதத்தினர் 2001-ஆம் ஆண்டு புதிய சட்டத்திற்கு பிறகு கட்டப்பட்ட கட்டிடங்களில் தான் வசித்து வந்தனர். இப்பகுதிகளில் மொத்தம் 2,94,165 கட்டிடங்கள் சட்ட அங்கீகாரம் பெற்றவை தான். தற்போது தரைமட்டமாகி இருக்கும் கட்டிடங்கள் சட்ட உரிமம் கொடுத்த அரசின் யோக்கியதையை அம்பலப்படுத்துகிறது.

இடிந்து விழுந்த கட்டங்களுக்குப் பொறுப்பானவா்கள் என சந்தேகிக்கப்படும் 131 பேரை கைதுசெய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக துருக்கியின் துணை அதிபா் ஃபுவாட் ஓக்டே (Fuat Okta) கூறியுள்ளார். இதில் 12 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போல மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதாகும்.

1999-ஆம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்ட போது, சில ஒப்பந்ததாரர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டனர். அவர்களும் கூட தண்டனை காலம் நிறைவடைவதற்கு முன்னதாகவே விடுதலை செய்யப்பட்டனர். தற்போது எர்துவான் அரசு மேற்கொண்டிருக்கும் கைதுகளையும் இவ்வாறே நாம் காண வேண்டியுள்ளது. துருக்கியில் நிகழ்ந்த இம்மரணங்கள் என்பன லாபவெறி பிடித்த ஒப்பந்ததாரர்களும் ஊழல் மயமான துருக்கி அரசும் இணைந்து நடத்திய சமூகப் படுகொலை ஆகும்.

பொம்மி

‘இந்துராஷ்டிரம்’ அதானிகளின் தேசம்!

தானி குழுமம் பற்றிய ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையால், அதானியின் பங்குமதிப்புகள் மாபெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. உலகப் பணக்காரர்களின் பட்டியலில் மூன்றாம் இடமிருந்த அதானி, இத்தலையங்கம் எழுதப்படும் நேரத்தில் 15-ஆம் இடத்திற்குச் சரிந்துள்ளார். இச்சரிவு மேலும் தொடரலாம்.

எட்டாண்டுகளில் அதானி அடைந்துள்ள பகாசூர வளர்ச்சி, ஊதிப்பெருக்கப்பட்ட பலூன் என்பதை ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்திவிட்டது ஹிண்டன்பர்க் அறிக்கை. பல்வேறு மோசடிகளின்மூலம் பங்குச் சந்தையில் தனது குழுமத்தின் பங்குகளைச் செயற்கையாக உயர்த்திக் காட்டி, அதைவைத்து வங்கிகளிடமிருந்து பெற்ற பல கோடி ரூபாய் கடன்களை மூலதனமாகக் கொண்டு வளர்ந்ததே அதானி குழுமம் என்பதை விரிவாக விளக்குகிறது, 106 பக்கங்களைக் கொண்ட ஹிண்டன்பர்க் அறிக்கை.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் போலியாக உயர்த்திக் காட்டப்பட்ட அதானியின் பங்குமதிப்பு 100 பில்லியன் (10,000 கோடி) டாலர்கள். இதை “கார்ப்பரேட் வரலாற்றிலேயே மாபெரும் மோசடி” (The Largest Con In Corporate History) என்று அழைக்கிறது ஹிண்டன்பர்க்.

பங்குச்சந்தை விதிகளின்படி, ஒரு நிறுவனத்தின் பங்குகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் 75 சதவிகிதத்திற்கு மேல் இருக்கக் கூடாது. அதானி குழுமத்தில், அதிகபட்ச வரம்பான 75 சதவிகிதத்தையும் அதானி குடும்பமே வைத்துள்ளதோடு, மீதமுள்ள பங்குகளில் 15 சதவிகிதத்தையும் வரியில்லா சொர்க்கங்களான மொரிஷியஸ் மற்றும் கரீபியன் தீவு நாடுகளிலுள்ள பினாமி நிறுவனங்கள் மூலம் அதானி குடும்பமே வைத்துள்ளதை ஹிண்டன்பர்க் அம்பலமாக்கியுள்ளது.


படிக்க: அதானி: உலகப் பணக்காரன் அல்ல; உலகப் பாட்டாளி வர்க்க எதிரி!


நம் நாட்டில் வரி ஏய்ப்பு செய்து, கொள்ளையடித்த கருப்புப் பணத்தை இத்தீவுகளுக்கு கொண்டுசென்று, மீண்டும் தனது நிறுவனத்திற்கே அந்நிய முதலீடுகளாகக் கொண்டுவந்துள்ளது அதானி குடும்பம். இத்தருணத்தில், மோடி சொன்ன கருப்பு பண ஒழிப்பு நமது நினைவுக்கு வந்துசெல்கிறது.

நிதி கையாளுகை மற்றும் முக்கிய முடிவெடுக்கும் இடங்களை அதானி குடும்பத்தினரே கட்டுப்படுத்துகிறார்கள் என்பதை அம்பலப்படுத்தும் அறிக்கை, அவர்கள் அனைவரும் ஊரை அடித்து உலையில் போட்ட கிரிமினல்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

அதானியின் இளைய சகோதரன் ராஜேஷ் அதானி மீதுள்ள சுங்க வரி ஏய்ப்பு, சட்டவிரோத நிலக்கரி இறக்குமதி குற்றச்சாட்டுகள்; அதானியின் மைத்துனர் சமீர் வோரா மீது பினாமி நிறுவனங்கள் மூலம் வைர வியாபாரத்தில் ஈடுபட்டு மோசடி செய்ததான குற்றச்சாட்டு; அதானியின் அண்ணன் வினோத் அதானி, ஹவாலா பணத்தை பினாமி நிறுவனங்களின் மூலம் அந்நிய முதலீடாகக் கொண்டுவந்த வழக்கு; கௌதம் அதானியின் மீதே, மோசடியில் ஈடுபட்டதாக பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி (SEBI) நடத்திய விசாரணைகள் – என பலவற்றை அந்த அறிக்கை சுட்டுக்காட்டுகிறது.

பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்டு பல்வேறு வங்கிகளில் கழுத்து முட்ட கடன் வாங்கிவிட்ட அதானி குழுமம் (கடந்த ஆகஸ்டு நிலவரப்படி, 2.2 லட்சம் கோடி கடன்), ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான, மூன்றே நாட்களில் 5.3 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. அதானியைக் கைதூக்கிவிடுவதற்காக, மோடியின் உத்தரவுக்கு இணங்க அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கிய எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ. தொழிலாளர் ஓய்வூதிய நிதியம், எஸ்.பி.ஐ. காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றிற்கும் இந்த நட்டத்தில் பங்கு உண்டு.

அதானி குழுமப் பங்குகளின் வீழ்ச்சியால் எல்.ஐ.சி நிறுவனம் இரண்டே நாட்களில் 16,580 கோடியை இழந்துள்ளது. அதானி குடும்பம் மஞ்சள் குளிக்க, சூறையாடப் பட்டதோ மக்கள் பணம்!


படிக்க: ஹிண்டன்பர்க் அறிக்கை: அதானியை பற்றி வாய்திறக்காத மோடி அரசு! | தோழர் பரசுராமன் வீடியோ


ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு 413 பக்கத்தில் பதிலறிக்கைக் கொடுத்துள்ள அதானி குழுமம், “ஹிண்டன்பர்க் அறிக்கை பொய்யானது, உள்நோக்கம் கொண்டது, அடிப்படை ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகள்” என்று கூறியுள்ளதோடு, “இது தேசத்தின் மீதான தாக்குதல்” என்று ஒரே போடாக போடுகிறது.

ஹிண்டன்பர்க் அறிக்கையை ‘வெளிநாட்டு சதி’ என்று தூற்றுவதன்மூலம் விவாதத்தை அதானி குழுமமும் பா.ஜ.க கும்பலும் மடைமாற்றத் துடிக்கின்றன; ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான காலகட்டத்தையும், அந்நிறுவனத்தின் பின்னணியையும் அதானியின் மோசடிகளை மறைப்பதற்கான ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

“ஷார்ட் செல்லிங்” என்ற பங்குச்சந்தை ஊகபேரம் மூலம் பல கோடிக்கணக்கான டாலர்களை லாபமாக ஈட்டும் நிறுவனம் ஹிண்டன்பர்க். ஒரு நிறுவனத்தின் பங்கு மதிப்பு குறையும் என்று முன்கூட்டியே கணித்து, அதை தரகர்களின் மூலம் வாங்கி விற்பதால் லாபம் ஈட்டுதலே “ஷார்ட் செல்லிங்” எனப்படுகிறது. கடந்த ஜனவரி 27-ஆம் தேதி அதானி குழுமம் 20,000 கோடி மதிப்புள்ள தனது பங்குகளை விற்பதாக அறிவித்திருந்த வேளையில், 24-ஆம் தேதி ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்தது.

அதானியைப் பற்றிய அறிக்கை வெளியிட்டதன் மூலம் ஹிண்டன்பர்க் பல கோடி டாலர்களை லாபமாகப் பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ‘நடுநிலையாளர்கள்’ அல்லது ‘பொருளாதார அறிஞர்கள்’ என்று கூறப்படுவோரில் பலர், இந்த கோணத்திலான விவாதங்களில் பங்கேற்பதன் மூலம் மையமான பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்கிறார்கள். ஹிண்டன்பர்க் ஒரு ஷார்ட் செல்லர் என்பது வெளிப்படையானது. ஆனால், அதன் மூலம் அந்நிறுவனத்தின் அறிக்கை “ஆதாரமற்றது”, “அவதூறானது” என்று எந்த பொருளாதார அறிஞர்களும் கூறத் துணிய முடியாது.


படிக்க: நாட்டை சூறையாடிய கொள்ளைக்காரனே அதானி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!


டெஸ்லா, டிவிட்டர் உள்ளிட்டு இதுவரை 30 பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மோசடிகளை ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தியுள்ளது; அவற்றில் ஒன்றுகூட ஆதாரமற்றது என்று நிரூபிக்கப்பட்டதில்லை.

நாடே அதானியின் அயோக்கியத்தனத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கையில், இத்தருணத்தில் முக்கியமாகப் பேசவேண்டிய பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி, எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. பங்குச் சந்தையில் அதானி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக இதுவரை செபி பலமுறை குற்றஞ்சாட்டி விசாரித்துள்ளது. இவ்வழக்குகளில், பெரும்பாலானவை, அற்பமான அபராதத் தொகையோடு முடித்துவைக்கப்பட்டு அதானி மேலும் சூதாட அனுமதிக்கப் பட்டார். சில வழக்குகள் ஓராண்டுக்கும் மேலாக விசாரணையில் உள்ளன. ஹிண்டன்பர்க் அறிக்கையானது, செபியின் இந்நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளது.

இன்னும் சில நாட்களில் அதானிக்கு முட்டுக் கொடுத்தோ அல்லது “இதுகுறித்து விசாரிக்கிறோம்” என்றோ செபியின் சார்பில் அறிக்கை வெளியாகலாம். ஆனால், அவையெல்லாம் வெறும் நாடகமே.

எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ, செபி, ரிசர்வ் வங்கி உள்ளிட்டு பல்வேறு அமைப்புகளும் அதானியின் மோசடிக்கு தெரிந்தே துணை போயிருக்கின்றன என்பதுதான் ஹிண்டன்பர்க் அறிக்கையின் மூலம் அம்பலமாகும் விசயம். எனவே, அதானி குழுமத்தின் மோசடி என்பது, தனியொரு கார்ப்பரேட் நிறுவனத்தின் மோசடியல்ல. இதுதான் அதானிக்கு பலம். அவரது பாக்கெட்டில், பாரதப் பிரதமர் மோடியே இருக்கிறார் எனும்போது, அவருக்கென்ன கவலை!

ஹிண்டன்பர்க் முன்வைத்துள்ள கேள்விகள் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற இதேநேரத்தில், இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகத்தைக் கட்டமைப்பதற்காக 9,500 கோடி மதிப்புள்ள டெண்டரை அந்நாட்டு அரசிடமிருந்து பெற்றுள்ளார் அதானி. மக்களின் பணத்தை மொட்டையடித்து, அதானிக்கு ‘ஜாமின்’ வழங்குவதற்கு ஒரு நாட்டின் அரசே இருக்கிறது என்ற நம்பிக்கையில்தான், இஸ்ரேல் பிரதமரும் மோடியின் நண்பருமான பெஞ்சமின் இவ்வொப்பந்தத்தை அதானிக்கு அளித்துள்ளார்.

வரும் 2024-க்குள் இந்துராஷ்டிரத்தை அறிவிக்க வேண்டும் என்று கூச்சல் போடும் காவி வெறியர்கள், இந்துராஷ்டிரம் “இந்துக்களுக்கான ராஜ்ஜியம்” என்று நம்மை ஏமாற்றிவருகிறார்கள். அதானியை அம்பலப்படுத்தும் அறிக்கையை, “தேசத்தின் மீதான தாக்குதல்” என்று சித்தரிப்பதன் மூலம், இந்துராஷ்டிரம் யாருக்கான தேசம் என்பதை தெளிவுபடுத்தி விட்டார்கள் காவி பாசிஸ்டுகள்!


புதிய ஜனநாயகம்
தலையங்கம்
பிப்ரவரி 2023

நெடுமாறனும் சீமானும் கைக்கூலிகளே! || தோழர் மருது வீடியோ

சீமானும் நெடுமாறனும் ஆர்.எஸ்.எஸ் கைக்கூலிகள் தான். அவர்கள் ஆர்.எஸ்.எஸ்-ன் அஜண்டாவைத்தான் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதிலே யாருக்கும் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது. எப்போதெல்லாம் இந்த ஆளும்வர்க்கம்(ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அம்பானி-அதானி பாசிஸ்டுகள்) அம்மனமாகி நிர்கிறதோ, அப்போதெல்லாம் அவர்களை பாதுகாக்க வருகிறார்கள் இவர்கள்.

மேலும்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

வேங்கை வயல் – பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் போலீசு! | மக்கள் அதிகாரம்

14.02.2023

வேங்கை வயல் – பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் போலீசு!
இது ஆதிக்க சாதி வெறியர்களை பாதுகாக்கும் அரசு!

பத்திரிகை செய்தி

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை திட்டமிட்டு கொட்டியவர்கள் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் தாங்களே மனிதக் கழிவைக் கொட்டியதாக ஒப்புக் கொள்ளச் சொல்லி தாழ்த்தப்பட்ட மக்களை  போலீஸ் தொடர்ச்சியாக சித்திரவதை செய்தது.

இதற்கு எதிராக தொடர்ந்து மக்கள் குரல் கொடுத்ததன் விளைவாக சிபிசிஐடி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இப்பொழுதும் கூட குடிநீரில் மனிதக் கழிவு கொட்டிய விவகாரத்தில், தாழ்த்தப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சிபிசிஐடி போலீசு வற்புறுத்துவதாக தாழ்த்தப்பட்ட மக்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று மனு அளித்திருக்கிறார்கள்.

மனித சமூகம் உருவாகி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆன பிறகும் சாதி ரீதியாக இழிவுப்படுத்துவதற்காக மனிதக் கழிவை தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் கொட்டிய விவகாரம் உலகை உலுக்கினாலும் அது ஒருபோதும் சாதி வெறியர்களையும் தமிழ்நாடு போலீசையும் கொஞ்சம் கூட அசைத்துப் பார்க்கவில்லை என்பதே உண்மை. அவர்கள் இதை பெருமையாகவும் மனு நீதியாகவே கருதுகிறார்கள்.

படிக்க : மதுரை: தலித்துகள் மீதான ஆதிக்க சாதியினரின் கொலைவெறித் தாக்குதல்!

மனிதக் கழிவை கொட்டிய விவகாரத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் சுட்டிக் காட்டும் நபரை விசாரிக்காத போலீசு, ஆதிக்க சாதி வெறியர்களை விசாரிக்காத போலீசு, தாழ்த்தப்பட்ட மக்களையே குற்றத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்துவது ஆக மிகவும் கொடூரமான விஷயமாகும்.

ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியும் ஆளும் வர்க்கமும் இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் அனாதைகளாக நிற்கிறார்கள் என்பதே உண்மை. அவர்களுக்கு ஆதரவாக மட்டுமல்ல நீதிக்காக நம்முடைய போராட்டம் தொடர வேண்டும்.

ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ஆதரவான போலீசின் நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் இச்செயலில் ஈடுபட்ட போலீசு அதிகாரிகள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.

ஆதிக்க சாதி வெறியர்களின் கூடாரமான இந்த அரசுக் கட்டமைப்பை இனி ஒரு போதும் பயன்படுத்த முடியாது. ஆதிக்க சாதி வெறி சங்கங்களை தடை செய்யவும் ஆதிக்க சாதி வெறியர்களை சமூகமே புறக்கணிக்கவும் சாதி என்பது இழிவு என்ற கருத்தினை மக்கள் மத்தியில் தொடர்ந்து விதைக்கவும் நாம் தொடர்ந்து போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் மருது,
செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.

அதானி: உலகப் பணக்காரன் அல்ல; உலகப் பாட்டாளி வர்க்க எதிரி!

டந்த இரு ஆண்டுகளும் வரலாற்றில் மிகக்கொடிய ஆண்டுகள். கொரோனா எனும் கொடிய வைரஸினால் உலகமே நிலைகுலைந்து, கொத்துக்கொத்தாய் மக்கள் மாண்டு போயினர். உலகமே தம் உயிரைக் காக்க போராடிக் கொண்டிருந்த போது, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடிக்க போட்டியிட்டுக் கொண்டிருந்த சிறுகும்பலும் இருக்கவே செய்தது. அதில் முதன்மையான நபர் அதானி. அப்போது அவருடைய ஒருநாள் வருமானம் 1,002 கோடி.

ஒரு சாதாரண ஜவுளித்தொழில் செய்யும் வணிகக் குடும்பத்தில் பிறந்த இவரால் எப்படி இவ்வளவு வருமானம் ஈட்ட முடிந்தது? எப்படி உலகப் பணக்காரர்கள் தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடிக்க முடிந்தது? ஒரே காரணம், மோடி – அதானி கூட்டணி. 2001 இல் மோடி குஜராத்தின் முதல்வரான பின்பே அதானியின் தொழில்களும் சொத்தும் வளரத் தொடங்கின. அதானியின் பல வணிக விரிவாக்கங்கள் மற்றும் தொழில் வளர்ச்சிகளே மோடியின் குஜராத் மாடலாகக் காட்டப்பட்டன என்றால் அது மிகையாகாது.

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலையின் போது, மோடியை ஆதரித்துப் பேசி பாதுகாத்தவர் அதானி. இப்படுகொலைகளுக்காக இந்தியத் தொழில் முனைவோர் கூட்டமைப்பு மோடியைக் கண்டித்தது. அப்போது கூட்டமைப்பின் உள்ளிருந்தே அதை எதிர்த்த அதானி, மோடிக்காக கூட்டமைப்பை விட்டு விலகப்போவதாகவும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். அந்தளவுக்கு மோடி-அதானி கூட்டணி அப்போதே வலுவாக இருந்தது.

மோடிக்கு மட்டுமல்ல, அவரது சிந்தாந்தத் தலைமையான ஆர்.எஸ்.எஸ்.க்குமே நெருக்கமானவர் அதானி. ஆர்.எஸ்.எஸ்-ன் தலைமையகமான நாக்பூர் அலுவலகத்தில் நடந்த ஷாகாக்கள், முக்கியக் கூட்டங்களில் அதானி கலந்து கொண்டிருப்பதை “நரக மாளிகை” என்னும் நூலின் ஆசிரியர் சுதீஷ் மின்னி அம்பலப்படுத்தியுள்ளது, அதானி – காவி உறவுக்கு ஓர் சான்று.


படிக்க: விழிஞ்சம் துறைமுகத்திட்டம்: தீவிரமடையும் அதானிக்கு எதிரான கேரள மீனவ மக்களின் போராட்டம் !


2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குஜராத் வைப்ரண்ட் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 15,000 கோடி முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்தார் அதானி. அதானி பராமரித்து வந்த முந்த்ரா துறைமுகம் மற்றும் புதிதாக உருவாக்கப்பட இருந்த சிறப்பு பொருளாதார மண்டலத் திட்டத்திற்காக 15,946 ஏக்கர் நிலத்தை ஒரு சதுரமீட்டர் 1 முதல் 32 ரூபாய் வரை என அடிமாட்டு விலைக்குத் தூக்கிக் கொடுத்தார் மோடி. அந்நிலத்தையே அரசுப் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு, 1 சதுரமீட்டர் 600 ரூபாய் என உள்குத்தகைக்கு விட்டார் அதானி.

குஜராத் அரசே இயற்கை எரிவாயுவை வெளிச்சந்தையில் வாங்கி, குறைவான விலைக்கு அதானி நிறுவனத்துக்கு விற்றது; அதானி நிறுவனம், குஜராத் மின் வாரியத்திற்கு ஒப்பந்தப்படி வழங்க வேண்டிய மின்சாரத்தை வழங்காத போது, குறைவான தண்டத்தொகையையே அரசு வசூலித்தது; முந்தரா துறைமுகத்தின் பங்குகளை அடிமாட்டு விலைக்கு அதானிக்கு விற்றது என இக்கூட்டணி செய்த முறைகேடுகள் கணக்கில் அடங்காதவை. இம்முறைகேடுகளின் மூலம் கோடிகோடியாய் மக்கள் பணத்தைக் கொள்ளையிட்ட அதானி, அடுத்தடுத்த தொழில்களில் கால்பதித்து பெரும்பணக்காரர் பட்டியலில் இணைந்து கொண்டார்.

2009 ஆம் ஆண்டு தன்னுடைய தனித்தனி தொழில்களுக்காக 11 நிறுவனங்களைத் தொடங்கினார். 2012 ஆம் ஆண்டு முதல் சூரிய மின் உற்பத்தியில் கால் பதித்தார். 2012 -2013 நிதியாண்டில் அதானி குழுமத்தின் ஆண்டு வருமானம் 47,352 கோடியாக அதிகரித்தது. ஆனால், 2000 ஆம் ஆண்டில் அதானி குழுமத்தின் மொத்த வரவு செலவு 3,300 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2013 வரை குஜராத்தை மையமாகக் கொண்டு தன்னுடைய கொள்ளையை நடத்திக் கொண்டிருந்த அதானி, 2014 இல் மோடி பிரதமரானதும் இந்தியா முழுக்க விரிவுபடுத்த ஆரம்பித்தார். 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு அதானியின் சொந்த விமானத்திலேயே பறந்து சென்றார் மோடி. அதானியின் விமானத்தில் மோடி பறக்கப் பறக்க, அதானி நிறுவனங்களின் பங்குகள் மேலேமேலே ஏறின. அதானியின் 3 நிறுவனங்களின் பங்குகள் கிட்டதட்ட 85.35% வளர்ச்சி கண்டன.

தேர்தலில் வென்று மோடி பிரதமரான பிறகு, அதானி குழுமமானது மின்னல் வேகத்தில் வளரத் தொடங்கியது. பிறரது தொழில் நிறுவனங்களை மொத்தமாக விலைக்கு வாங்குவதன் மூலம் தன் தொழிலை மேலும் விரிவுப்படுத்தியது. 2014 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில், தாம்ரா துறைமுகத்தை 5,500 கோடிக்கு எல்&டி மற்றும் டாடா ஸ்டீலிடம் இருந்து வாங்கியது. அடுத்து மூன்று மாதங்களில் 1200 மெகாவாட் அனல்மின் நிலையத்தையும், அதற்கடுத்த மூன்று மாதங்களில் 600 மெகாவாட் அனல்மின் நிலையத்தையும் விலைக்கு வாங்கியது.


படிக்க: அதானியே நமோ நமஹா!


பிறரது தொழில் நிறுவனங்களை வாங்குவது ஒரு வழிமுறை என்றால், தனக்கு முன் அனுபவம் இல்லாத துறைகளில் எல்லாம் தன் தொழிலை விரிவுபடுத்துவது மற்றொரு வழிமுறை. வானூர்தி நிலையத் தொழிலுக்குத் துளியும் சம்மந்தம் இல்லாத அதானி குழுமத்திற்கு 6 விமான நிலையங்களை இயக்குவதற்கான ஒப்பந்தம் 2019 பிப்ரவரியில் தரப்பட்டது. இதற்காக அதானி ஏர்போர்ட் ஹோல்டிங் என்ற தனி நிறுவனத்தையே புதியதாக உருவாக்கியது அதானி குழுமம். அதே போல் 5ஜி அலைக்கற்றையை வாங்கியதன் மூலம் தொலைத்தொடர்பு துறையிலும் நுழைந்திருக்கிறது.

இதன் விளைவாக அதானி குழுமம், நிலக்கரி துரப்பனம் மற்றும் வணிகம், துறைமுகங்கள், மின்சாரம், எரிவாயு உற்பத்தி மற்றும் பகிர்மானம் போன்ற துறைகளில் இந்தியாவின் முதன்மை நிறுவனமாக வளர்ந்துள்ளது. பிற துறைகளிலும் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. இதனூடாகவே பிற நாடுகளிலும் தன் ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வருகிறது.

மோடி இந்தியப் பிரதமரான உடனேயே, அதானியின் சர்வதேசக் கொள்ளைக்கு அடிக்கோல் நாட்ட ஆரம்பித்தார். அதானிக்காக, மோடியே ஆஸ்திரேலியாவிற்கு நேரடியாகச் சென்று நிலக்கரிச் சுரங்கத்தை பேரம்பேசி வாங்கிக் கொடுத்தார். அதற்காக 6500 கோடியையும் எஸ்பிஐ வங்கியில் இருந்து தூக்கிக் கொடுத்தார். இத்திட்டம் மட்டுமின்றி, அதானி குழுமத்தின் மொத்த வளர்ச்சிக்கும் அடிநாதமாக இருந்து வருவது வங்கிக்கடன்களே. குறிப்பாக, பொதுத்துறை வங்கிகள் மூலம் கொடுக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் வாராக்கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டு தள்ளுபடி செய்யப்படும் பல்லாயிரம் கோடிகளே, அதானி – அம்பானி உள்ளிட்ட பெரும்பணக்காரர்களை உருவாக்கி வருகின்றன. கோடானுகோடி உழைக்கும் மக்களின் வரிப்பணத்தை, வங்கிச் சேமிப்பைச் சூறையாடிக் கொடுத்து, அதானிகளை உருவாக்குவதை அரசு தனது முதன்மைப்பணியாக செய்து வருவதே இதற்கு அடிப்படை. இப்பகல் கொள்ளைக்கு அவர்கள் சூட்டியிருக்கும் பெயர் ‘தேசத்தின் வளர்ச்சி’.

ஆஸ்திரேலியா சுரங்க ஒப்பந்தத்தைப் போல, இலங்கை மின்சார ஒப்பந்தத்தையும் மோடியே பேரம்பேசி முடித்துக் கொடுத்தார். “இந்தியப் பிரதமர் மோடியின் அழுத்தத்தால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, அதானி குழுமத்திற்கு அனுமதி வழங்க தன்னைப் பணித்தார்” என அப்போது இலங்கையின் மின் வாரியத் தலைவராக இருந்த ஃபெர்டினாண்டோவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஒரு நாட்டில் மின்சார உற்பத்தி நிலையங்களைத் தொடங்கி மின் உற்பத்தி செய்து, அந்நாட்டு அரசிற்கே மின் விநியோகம் செய்வது ஒரு வழிமுறை என்றால், ஒரு நாட்டில் மின் உற்பத்தி செய்து, வேறொரு நாட்டிற்கு மின் விநியோகம் செய்வது அதானி குழுமத்தின் மற்றொரு வழிமுறை. வங்கதேசம் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு மின்சாரத்தை விநியோகம் செய்ய இரண்டாவது வழிமுறையே பின்பற்றி வருகிறது  அதானி குழுமம்.

டிசம்பர் 2022 முதல் வங்கதேசத்திற்கு அனுப்பவிருக்கும் 1,600 மெகாவாட் மின்சாரத்தை ஜார்கண்டில் உள்ள கோட்டா அனல்மின் நிலையத்தில் உற்பத்தி செய்கிறது. இதற்கான ஒப்பந்தம் பங்களாதேஷ் பவர் டெவெலப்மண்ட் போர்ட் (BPDB) உடன் 2017 ஆண்டே போடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் இந்தியா வந்த வங்கதேசப் பிரதமர், அதானியுடன் நடத்திய சந்திப்பின் மூலம் இவ்வொப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிருக்கும் அரசுகளைப் போலவே, வங்கதேச அரசும் அதானியிடம் இருந்து அதிகப்படியான விலைக்கே மின்சாரத்தை வாங்குகிறது. அதானியிடம் இருந்து 1 கிலோ வாட் மின்சாரத்தை 3.26 டாக்காவுக்கு வாங்குகிறது. இந்த விலையானது அந்நாட்டு மின்சார நிறுவனங்கள் இதே அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஆகும் செலவை விட அதிகமாகும்.


படிக்க: ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்! மாநாட்டுத் தீர்மானங்கள்


இதேபோல் மொராக்கோவில் மின்சாரம் மற்றும் உமிழ்வு இல்லாத எரிபொருளை (பசுமை ஹைட்ரஜன்) உற்பத்தி செய்து ஐரோப்பிய யூனியனுக்கு விநியோகம் செய்ய உள்ளதாக அதானி குழுமம் கூறியுள்ளது. 10 ஜிகாவாட் மின்சாரத்தை விநியோகம் செய்யும் இத்திட்டமானது, இந்தியாவிற்கு வெளியே மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய மின் உற்பத்தி திட்டமாகும்.

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் அடுத்த பத்தாண்டுகளுக்குள் 50 பில்லியன் டாலரை முதலீடு செய்வதன் மூலம், உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக மாறுவதை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது அதானி குழுமம். இதற்காக பிரான்ஸ் நாட்டு டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

நிலக்கரிச் சுரங்கம், மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் மட்டுமில்லாமல், சில நாடுகளில் சரக்குப் போக்குவரத்துத் துறைமுகங்களையும் அதானி துறைமுகம் கைப்பற்றிவருகிறது. 2017-ஆம் ஆண்டு மலேசியாவில் போர்ட் கிளாங் துறைமுகத்தின் விரிவாக்கமாக கேரி தீவில் ஒரு மெகா கொள்கலன் துறைமுகத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் அதானி குழுமம் ஈடுபட்டது.

அதே போல் 2022 ஜூலையில் இஸ்ரேலின் மத்தியத் தரைக்கடல் கடற்கரையில் உள்ள ஒரு முக்கிய வர்த்தக மையமான ஹைஃபா துறைமுகத்தை அதானி குழுமம் கைப்பற்றியது. உள்ளூர் இரசாயன மற்றும் தளவாடக் குழுமமான கடோட் உடன் கூட்டணி அமைத்துக்கொண்டு இத்துறைமுகத்தைக் கைப்பற்றியது. இஸ்ரேல் தங்கள் நாட்டிற்கான பொருட்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்ய பெரும்பாலும் கடல்வழியையே நம்பி உள்ளது. ஹைஃபா துறைமுகமே இஸ்ரேலுக்கான கண்டெய்னர் சரக்குகளில் கிட்டதட்ட பாதியைக் கையாளுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த அடிப்படையில் அதானி குழுமம் இத்துறைமுகத்தைக் கைப்பற்றியது முக்கியமானது என்றாலும், அதை விட முக்கியமாக அதானி குழுமமானது இத்துறைமுகம் மூலம் இந்தியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போக்குவரத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. அதைவிட, மலேசியாவில் உள்ள கேரி, இஸ்ரேலில் உள்ள ஹைஃபா மற்றும் இந்தியாவில் உள்ள துறைமுகங்கள் மூலம் அதானி குழுமமானது ஒரு ஒருங்கிணைந்த உலகப் போக்குவரத்தை உருவாக்கும் நோக்கத்தை மையமாகக் கொண்டே இயங்கிவருகிறது.

இப்படி அதானி குழுமமானது 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் தன்னுடைய கொள்ளையை விரிவுபடுத்தியது மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளிலும் தன்னுடைய கொள்ளையை விரிவுபடுத்தி வருகிறது. ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய நாடுகளில் அதானியின் கொள்ளைக்கு எதிராக மக்கள் போராட்டங்களும் நடைபெற்றுள்ளன. இதே சமயத்தில் அதானி குழுமத்தின் கொள்ளைக்கெதிராக – சுற்றுச்சூழல் அழிப்பிற்கெதிராக குஜராத், கேரளா, தமிழ்நாடு என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கேரளாவில் அதானியின் விழிஞ்சம் துறைமுகத்திற்கு எதிராக, அங்குள்ள  மக்கள் தற்போது தீவிரமாக போராடிவருகிறார்கள்.

கார்ப்பரேட் கொள்ளையர்களின் வேட்டைக்காடாக நாட்டை மாற்றுவதையே வளர்ச்சி – முன்னேற்றம் என புளுகி மக்களை ஏமாற்றி வரும் மோடியின் துணைகொண்டு, இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் தன் நாசகாரக் கொள்ளையை விரிவுபடுத்தி வருகிறார் அதானி. இந்த வகையில், அதானி இந்தியப் பாட்டாளி வர்க்கத்திற்கான எதிரி மட்டுமல்ல, சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் எதிரியும்கூட. எனவே, அதானியை வீழ்த்தும் போராட்டத்தில் இந்தியப் பாட்டாளி வர்க்கம், சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்துடன் ஒன்றிணைவது அவசியம். மோடி-அதானி கூட்டணியை முறியடிக்கவும் இது அவசியம்.

(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2022 இதழ்)

ஏ.பி.வி.பி குண்டர்களால் அச்சுறுத்தப்படும் பல்கலைக்கழகங்கள்!

டந்த 12 ஆம் தேதியன்று ஒடிசா மாநிலத்தில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் “இந்திய அரசலமைப்பு சட்டமும் ஜனநாயகமும்” (Indian Constitution & Education) என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

இக்கருத்தரங்கம் ஒடிசா மாநிலத்தில் செயல்படும் “சிட்டிசன்ஸ் மன்றம்” (Citizens Forum) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரதீப் நாயக் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள், குடிமை சமூக அமைப்பினர், கல்வியாளர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டிலிருந்து மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பிரீட்டோ, கணேசன் ஆகிய இருவர் இதில் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கத்தில் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சுராஜித் மஜும்தார் துவக்க உரையாற்றினார். அவர் இந்திய அரசமைப்பு சட்டத்தின் முக்கிய சாராம்சங்களை மையப்படுத்தி பேசிக் கொண்டிருந்த பொழுது. அக்கூட்டத்தில் இருந்த ஒருவர் பேராசிரியர் பேசுவதற்கு குறுக்கீடு செய்து கொண்டிருந்தார். உடனே அவரிடம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரதீப் கேள்வி கேட்பதற்கு என்று நேரம் ஒதுக்கப்படும் நீங்கள் அப்பொழுது உங்கள் கேள்வியை கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் அவர் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கூச்சலிட்டு கொண்டிருந்திருக்கிறார்.

மேலும் இருவர் அவருடன் சேர்ந்து பேராசிரியர் சுராஜித் பேசிக் கொண்டிருந்த மேடையை நோக்கி வந்து பல்கலைக்கழகங்களில் இது போன்று கூட்டங்கள் நடத்தக் கூடாது என்று மிரட்டி இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் தாங்கள் ஆர்.எஸ்.எஸ் இன் மாணவர் படையான ஏ.பி.வி.பி (ABVP) நிர்வாகி என்றும் கூறியிருக்கிறனர்.


படிக்க: கல்வி நிறுவனங்களில் அதிகரித்துவரும் ஏபிவிபி குண்டர்களின் அடாவடித்தனம்!


சிட்டிசன்ஸ் மன்றத்தின் நிர்வாகி பிரதீப் மற்றும் விரிவுரையாளர் சுரேந்திரா ஜெனா ஆகிய இருவரையும் ஏ.பி.வி.பி குண்டர்கள் கடுமையாக தாக்கி இருக்கிறார்கள் இதை தடுக்கச் சென்ற மனித உரிமை செயல்பாட்டாளர் வழக்கறிஞர் பிரீட்டோவையும் தாக்கி இருக்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏ.பி.வி.பி யின் குண்டர்கள் நடத்திய தாக்குதல்களை மனித உரிமை செயல்பாட்டாளர் கணேசன் அவர்கள் தனது செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார் இதைப் பார்த்த ஏ.பி.வி.பி குண்டர்கள் அவரது செல்போனை பிடுங்கி அவரை தாக்க துரத்தி சென்றிருக்கின்றனர்.

***

இதற்கு முன்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12 – ஆம் தேதி ஐஐடி பாம்பே-வில் (IIT-B) இடதுசாரி இயக்கங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற இருந்தது

அக்கருத்தரங்கத்தில் “நவீன இந்தியாவில் இடதுசாரிகளின் கலாச்சாரங்கள்” (Cultures of the Political Left in Modern India) என்ற தலைப்பில் டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இரு நாள் கருத்தரங்கு நடைபெற இருந்தது. இது உலகத் தர பல்கலைக்கழக குழுவிடம் (Institute of Eminence Cell) நிதி பெற்று நடத்தப்பட இருந்தது – அதாவது இந்திய அரசின் நிதி கொண்டு நடத்தப்பட இருந்தது.

இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஆய்வு மாணவர்களும் மூத்த பேராசிரியர்களும் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள இருந்தனர்.

இக்கருத்தரங்கையொட்டி 150 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன; அதில் 15 தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. அதில், மார்க்சிய – லெனினியத்திற்கும் நாட்டுப்புற கலாச்சாரத்திற்கும் உள்ள உறவு, 1889 ஆம் ஆண்டில் துப்புரவு தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தில் ஜோதிபா பூலே-வின் செய்தித்தாளின் பங்கு போன்ற தலைப்புகள் இடம் பெற்றிருந்தன.

ஆனால் இக்கருத்தரங்கம் ரத்து செய்யப்பட்டது என்ற அறிவிப்பு டிசம்பர் 11 அன்று வெளிவந்தது.

இக்கருத்தரங்கம் ரத்து செய்யப்பட்டதை குறித்து கேட்ட பொழுது கருத்து கூறிய ஐஐடி பாம்பேவின் இயக்குனர் “உலகத் தர பல்கலைக்கழக நிதியிலிருந்து இக்கருத்தரங்குக்கு நிதி அளிக்க முடியாது. இதன் தலைப்பு அதற்கு உட்பட்டதில்லை” என்று கூறினார். உலகத் தர பல்கலைக்கழகம் (Institute of Eminence) என்பது பல்கலைக்கழக மானியக் குழுவால் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் பொதுத்துறை கல்வி நிறுவனங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.1000 கோடி வழங்கப்படும்.

சட்ட உரிமைகள் கண்காணிப்பகம் (Legal Rights Observatory – LRO) என்ற வலதுசாரி கூட்டமைப்பு இந்த கருத்தரங்கை கடுமையாக விமர்சனம் செய்து, இதை ரத்து செய்யுமாறு கோரியிருந்தது.

அந்த அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானையும் டேக் (tag) செய்து, “ஐஐடி-க்கள் என்பன தொழில்நுட்ப கல்விக்கும் ஆராய்ச்சிக்குமானவை. இடதுசாரி / கம்யூனிச சித்தாந்தங்களுக்கு நிதியை வீணாக்குவது ஒரு கிரிமினல் குற்றமாகும். இது கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” என்று பதிவிட்டது.


படிக்க: ஐஐடி பாம்பே: இடதுசாரி இயக்கங்கள் குறித்த கருத்தரங்கு திடீர் ரத்து!


ஐஐடி பாம்பேவில் இப்படி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவது இது முதல் முறையல்ல.குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது, அது தொடர்பான கருத்தரங்கு நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், கருத்தரங்கின் தலைப்பிலிருந்து என்.ஆர்.சி (NRC) என்ற வார்த்தையை நீக்கிய பிறகு அனுமதி வழங்கப்பட்டது.

2014-ஆம் ஆண்டுக்கு பிறகு பல முறை இது போன்ற நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 2015 ஆம் ஆண்டில், “காஷ்மீர்: இந்திய தேசியத்தின் இருண்ட பக்கம்” (Kashmir: The Blind Side of Indian Nationalism) என்ற விரிவுரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதேபோல, 2019 ஆம் ஆண்டில் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சரத்து 370 ரத்து’ (காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து) குறித்தான விவாதத்திற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், மாணவர்கள் அந்த விவாதத்தை பூங்காவில் நடத்திக் கொண்டனர்.

***

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் “இந்தியா: மோடி மீதான கேள்வி” என்ற ஆவணப்படத்தை மாணவர்கள் திரையிட இருந்த போது பல்கலைக்கழக நிர்வாகம் மின்தடை செய்து ஆவணப்படத்தை திரையிடவிடாமல் செய்தது. ஆனால் மாணவர்கள் அதையும் மீறி தன்னுடைய செல்போனிலும் மடிக்கணினியிலும் அவ்வாவணப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆர்.எஸ்.எஸ்-யின் மாணவ குண்டர்படையான ஏ.பி.வி.பி மாணவர்கள் மீது கற்களை எறிந்து வன்முறை வெறியாட்டத்தை நடத்தியது.

இன்றைய மாணவர்களும் நாளைய இளைஞர்களும் பல விஷயங்களையும் அரசியலையும் கற்றுக் கொள்ளும் இடம் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள்தான்.

ஆனால் இன்றைக்கு மாணவர்கள் அரசு கொண்டுவரும் திட்டங்களையும், நடவடிக்கைகளையும் குறித்து விவாதங்களை முன்னெடுத்தாலோ அல்லது கருத்தரங்குகளை நடத்தினாலோ அதற்கு தடை விதிக்கப்படுகிறது. அதைமீறி மாணவர்கள் நிகழ்வுகளை நடத்தினால் ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி போன்ற கலவரக்காரர்களால் தாக்கப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது.

இன்னும் எத்தனை நாள்தான் ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி போன்ற குண்டர்களிடம் அடி வாங்கிக் கொண்டிருக்கப் போகிறோம்!

மாணவர்களே! இளைஞர்களே! அமைதி காத்தது போதும்; வாருங்கள் அமைப்பாய்த் திரள்வோம்!

இன்பா

பிபிசி வருமான வரித்துறை ஆய்வு: ஊடகங்களை முடக்க எத்தனிக்கும் பாசிஸ்டுகள்!

0

நேற்று (பிப்ரவரி 14) பிபிசி ஊடகத்தின் தில்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு (survey) நடத்தினர்.‌ வரி ஏய்ப்பு புகார் காரணமாக வருமான வரித்துறை இயக்குநா் உத்தரவின் அடிப்படையில், பிபிசி துணை நிறுவனங்களின் சா்வதேச வரி விவகாரங்கள் தொடா்பாக இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டாம் நாளாக இன்றும் வருமான வரித்துறையின் ஆய்வு தொடர்கிறது.

வருமான வரித்துறையின் ஆய்வின்போது, ஊழியர்களின் செல்போன்கள், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் கடவுச்சொற்களையும் பெற்றுக்கொண்டனர். இது குறித்து வெளியே பேசக் கூடாது என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.

கடந்த 2002-ஆம் ஆண்டில் சங்க பரிவார கும்பலால் நடத்தப்பட்ட குஜராத் படுகொலை குறித்த ஆவணப் படத்தை பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான பிபிசி கடந்த ஜனவரி மாதத்தில் வெளியிட்டது. “இந்தியா: மோடி மீதான கேள்வி” என்ற தலைப்பில் இரண்டு பாகங்களைக் கொண்டிருந்தது அந்த ஆவணப்படம். இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி தான் காரணம் என்பதை அது அம்பலப்படுத்தியது. குஜராத் கலவர வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று மோடி உள்ளிட்டோரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருந்த நிலையில் இந்த ஆவணப்படம் வெளியானது.

கடந்த ஜனவரி 21-அன்று, இந்த ஆவணப்படத்தை வெளியிட யூ-டியூப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தது மத்திய அரசு. ஆனால், மாணவர் அமைப்புகள் தடையை மீறி கல்லூரி – பல்கலைக்கழகங்களில் இந்த ஆவணப்படத்தை திரையிட்டனர். போலீசைக் கொண்டு பாசிச மோடி அரசு பல இடங்களில் இதை தடுக்கவும் செய்தது. இந்த ஆவணப்படம் பல்வேறு ஜனநாயக சக்திகளாலும் எதிர்க்கட்சிகளாலும் பொது இடங்களில் மக்களுக்கு திரையிடப்பட்டது. சில மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும் இது திரையிடப்பட்டது (தமிழ்நாட்டில் வி.சி.க செய்ததைப் போல).


படிக்க: “இந்தியா: மோடி மீதான கேள்வி” ஆவணப்படம்: மீண்டும் அம்பலமாகும் பாசிச மோடி!


இந்த ஆவணப்படத்தை வெளியிட்டதால் பிபிசி-ஐ தடை செய்ய வேண்டும் என்று ஹிந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அம்மனுவை தள்ளுபடி செய்து விட்டது.

இதைத்தொடர்ந்து, பிபிசி-யின் ஆவணப்படத்திற்கு எதிர்வினையாகவே தற்போது இந்த வருமான வரித்துறை ஆய்வு‌ நடைபெற்றுள்ளது. இது பத்திரிக்கை சுதந்திரத்தை வெளிப்படையாக நசுக்குவதாகும். எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட தனது ஏவல் நாயான வருமான வரித்துறையை, தற்போது ஊடகங்களை ஒடுக்கவும் பயன்படுத்துகிறார்கள். மோடி அரசின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ், சி.பி.எம், சி.பி.ஐ, ஆம் ஆத்மி, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கண்டித்துள்ளன. எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா (Editors Guild of India) அமைப்பும் மோடி அரசின் இந்த நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்துள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டில் பத்திரிகைச் சுதந்திரத்தில் 142-வது இடத்திலிருந்த இந்தியா, 2022-ஆம் ஆண்டில் 150-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. 2014 – 2020 காலகட்டத்தில் 135 பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தியாவில் 35 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மோடி அரசின் செயல்பாட்டையும் பாசிச கொள்கைகளையும் விமர்சிக்கும் ஊடகங்களை வருமான வரித்துறையைக் கொண்டு தாக்குவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே நியூஸ் கிளிக் (NewsClick), தைனிக் பாஸ்கர் (Dainik Bhaskar) போன்ற ஊடக நிறுவனங்கள் மோடி அரசின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.


படிக்க: ஜனநாயக ஊடகங்களின் குரல்வளையை நெறிக்கும் பாசிஸ்ட்டுகள்!


இதேபோல, 1970-களில் பாசிஸ்ட் இந்திரா காந்தி ஆட்சியில் கல்கத்தா (Calcutta) மற்றும் ஃபேந்தம் இந்தியா (Phantom India) என இரண்டு ஆவணப்படங்களை ஒளிபரப்பியதால் பிபிசி-க்கு தடை விதிக்கப்பட்டது. 1975-ஆம் ஆண்டில், எமர்ஜென்சி விதிமுறைகளுக்கு உட்படாத ஊடகங்களை தடை செய்தபோதும் பிபிசி-யும் தடைசெய்யப்பட்டது.

பாசிஸ்டுகள் ஒருபோதும் தங்களுக்கு எதிரான கருத்துகளை விரும்புவதில்லை. தங்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிடும் ஊடகங்களை மிரட்டிப் பணிய வைப்பார்கள் அல்லது தடை செய்வார்கள். சில சமயம், கார்ப்பரேட் முதலாளிகளைக் கொண்டு விலைக்கு வாங்கியும் விடுகிறார்கள்; அதானி என்.டி.டி.வி-ஐ (NDTV) வாங்கியதைப்போல. இப்போக்கின் நீட்சியே பிபிசி மீதான இந்த தாக்குதலும்!

பொம்மி

கவர்ச்சி முகமூடி அணிந்துவரும் கார்ப்பரேட் ஆதிக்கம்!

மிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் ‘வளர்ச்சித் திட்டங்கள்’ என்ற பெயரில், “வானவில் மன்றம்”, “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” போன்ற திட்டங்கள் புதிதாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மறைமுகமாக புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களைப் புகுத்துவது, கல்வித் துறையை கார்ப்பரேட்மயமாக்குவது ஆகியவற்றின் ஒருபகுதியாகவே இத்திட்டங்கள் அமைந்திருக்கின்றன.

ஏழை மாணவர்களுக்கு நவீன கல்வியைக் கொண்டு சேர்க்கும் வகையில், சமூகநீதித் திட்டங்களாக இவற்றைப் பாராட்டுகின்றன தி.மு.க. ஆதரவு ஊடகங்கள்; “திராவிட மாடல் அரசின் சாதனைகள்” என்று இத்திட்டங்களைப் பாராட்டுகிறார்கள் திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள். “வாரிசு அரசியல்”, “சட்டம் ஒழுங்கு சரியில்லை”, “வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” என்று வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் தி.மு.க.வைத் தாக்கிவரும் பா.ஜ.க, “தி.மு.க கல்வித்துறையில் அறிமுகப்படுத்திவரும் புதுப்புது திட்டங்களெல்லாம் புதிய கல்விக் கொள்கையிலேயே உள்ளன, ஆனால் அதை மறைத்துவிட்டு தாங்கள் புதிதாக அமல்படுத்தும் திட்டங்களைப்போல நடைமுறைப்படுத்துகிறார்கள்” என்று குற்றஞ்சாட்டுகிறது.

கார்ப்பரேட் கொள்ளை, கல்வி தனியார்மயத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் சி.பி.ஐ., சி.பி.எம். போன்ற பா.ஜ.க. எதிர்ப்புக் கட்சிகள்கூட இந்த விசயத்தில் அடக்கி வாசிக்கின்றன.

ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசு புதிய கல்விக் கொள்கையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி, கல்வியைக் காவிமயமாக்கி வருகிறது. ஏழை மாணவ-மாணவிகளின் கல்வி உரிமையைப் பறிப்பதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இச்சூழலில், கேள்விக்கிடமற்ற முறையில் தமிழக பள்ளிக் கல்வித் துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மாற்றங்களைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியமாக உள்ளது.

’வானவில் மன்றம்’: வண்ணம்பூசிவரும் கார்ப்பரேட்மயம்!

அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், கணிதம் மற்றும் அறிவியலில் புதியவற்றை அறிந்துகொள்ள எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கவும் “வானவில் மன்றம்” உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது தமிழக அரசு. இம்மன்றத்தின் அடிப்படை முழக்கம் “எங்கும் அறிவியல், யாவும் கணிதம்” என்பதாகும். அறிவியல் மற்றும் கணித பாடங்களை செய்முறைகளின் மூலம் கற்றுத்தரும் இத்திட்டம் ஆறு முதல் எட்டாம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு செயல்படுத்தப்படுகிறது.

சுமார் 25 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 13,210 அரசுப் பள்ளிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இத்திட்டத்திற்குத் தேவையான உபகரணங்களை வாங்குவதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் 1,200 ரூபாய் வீதம் 1.58 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏழாண்டுகளுக்கு முன்பே, அரசுப்பள்ளிகளுக்கு அறிமுகமான ‘ஸ்டெம்’ (STEM – science technology and engineering mathematics) திட்டம்தான் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஸ்டெம் திட்டத்தில் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதத்தை அப்பள்ளி ஆசிரியர்களே சொல்லிக் கொடுப்பர். ‘புதிதாக’ அறிமுகப்படுத்தியுள்ள வானவில் மன்றத்தின் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் பின்னணி கொண்ட என்.ஜி.ஓ அமைப்புகள், கருத்தாளர்கள்’ என்ற பெயரில் பள்ளிக்குள் நுழைக்கப்படுகின்றனர். முதற்கட்டமாக, 710 கருத்தாளர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.


படிக்க: தி.மு.க.வின் கார்ப்பரேட் பாணியிலான கவர்ச்சிவாத அரசியல் !


அரசுப் பள்ளிகளில் திறமையான அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும்போது, கார்ப்பரேட் சார்புடைய ஊழியர்களைப் பள்ளிக்குள் நுழைப்பதன் நோக்கம் என்ன என்ற கேள்வியைக் கல்வியாளர்கள் பலரும் எழுப்பியுள்ளனர். மேலும், கருத்தாளர்களாக வருபவர்களுடைய கல்வித்தகுதி என்ன? ஆசிரியருக்குரிய தகுதிக்கு அங்கீகரிக்கப்பட்டவர்களா? என்பது போன்ற எந்த விவரங்களையும் அரசு வெளியிடவில்லை. இதன்மூலம், எந்தக் கல்வித் தகுதியும் இல்லாதவர்களை கருத்தாளர்களாக அரசுப் பள்ளிகளில் நுழைத்து மாணவர்களுக்கு வகுப்பெடுப்பதற்கான வழிவகையைத் தமிழக அரசு செய்து கொடுத்துள்ளது.

இந்த கருத்தாளர்களும் எந்த கார்ப்பரேட் நிறுவனங்களிலிருந்து வருகிறார்கள் என்ற புள்ளிவிவரங்களும் வெளியிடப்படவில்லை. “ஆஹா குரு”, “பரிக்ஷன்”, “எய்ட் இந்தியா” மற்றும் “சுடர்” போன்ற அமைப்புகளின் அடையாளக் குறிகள் (லோகோ) தான் வானவில் மன்ற செயல்திட்ட முகப்பில் இடம்பெற்றுள்ளதாக அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உமாமகேஸ்வரி குற்றம் சாட்டுகிறார்.

அதுமட்டுமல்லாமல், இத்திட்டத்தின்படி, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளால் ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் அமைக்கப்படும் குழுக்களில் இக்கருத்தாளர்களும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இடம்பெறுகிறார்கள்.

மக்களைச் சுரண்டி கோடிகளைக் குவிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழியர்கள்தான் ‘லாபநோக்கமில்லாமல்’ அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சேவை செய்ய முன்வந்துள்ளார்களா?

கிராமப்புற பகுதிகளில் இயங்குகிற பல்வேறு அரசுப் பள்ளிகளில் கணித மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதும், இதனால் மாணவர்கள் சிரமத்தை அனுபவிப்பதும் நமக்குத் தெரியும். கல்விமீது அக்கறையுள்ள தமிழக அரசு, ஆசிரியர் நியமனங்களைப் பற்றிப் பேசாமலிருப்பது, ‘இனி அறிவியலையும் கணிதத்தையும் வானவில் திட்ட வகுப்புகளிலேயே படித்துக் கொள்ளுங்கள்’ எனச் சொல்லாமல் சொல்வதா?

மொத்தத்தில், “வானவில் மன்றம்” என்பது, அரசுப் பள்ளியில் போதிய ஆசிரியர்களை ஒதுக்காமல், பெற்றோர் ஆசிரியர் கழகங்களின் மூலமாக உள்ளூர் படித்த இளைஞர்களைக் கொண்டு மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தப் பணியைப் போன்ற ஒரு நடவடிக்கை அல்ல. மாறாக, இது, அரசுப் பள்ளிகளில் அயல்பணி (அவுட்சோர்ஸ்) முறையில் மாணவர்களுக்கு பாடங்களைக் கற்பிக்கும் முயற்சியாகும்!

நம்ம ஸ்கூல்”: ஏலம் கேட்பவர்கள் கேட்கலாம்!

தமிழகத்தில் உள்ள 37,000 அரசுப் பள்ளிகளில், பலவற்றில் கழிவறை, ஆய்வகங்கள் உள்ளிட்டு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இதனை தனியார் பங்களிப்புடன் நிவர்த்தி செய்யத் தொடங்கப்பட்டத் திட்டம்தான் தமிழக அரசு அறிவித்துள்ள “நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்”. சமூக அக்கறைக் கொண்ட தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளின் பங்களிப்புடன் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற முன்மொழிதல்கள் யாவும் புதிய கல்விக் கொள்கையிலேயே உள்ளன; நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் என்பது அதனை அமல்படுத்தும் வடிவமே.

தனியார் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ள எந்தவொரு அரசுப் பள்ளியையும் தத்தெடுக்கலாம்; நூலகம், ஆய்வகம், கழிப்பிடம், சுற்றுச்சுவர் போன்ற பல்வேறு கட்டுமான வசதிகளை ஏற்படுத்தித் தரலாம்; முன்னாள் மாணவர்கள் மற்றும் மக்களில் எந்த பிரிவினர் வேண்டுமானாலும் எந்தவொரு அரசுப்பள்ளிக்கும் நிதியுதவி அளிக்கலாம்; கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய சமூகப் பொறுப்பு நிதியை (CSR – corporate social responsibility) பள்ளிக் கூடங்களுக்கு நிதியுதவியாக அளிக்கலாம் – இவற்றின்மூலம் அரசுப் பள்ளிகளுக்கான செலவினங்கள் முழுவதையும் அரசே ஈடுசெய்ய வேண்டுமென்று எதிர்பார்க்காமல், தனியார் பங்களிப்பை அனுமதிப்பதன்மூலம் பள்ளிக்கட்டமைப்பை வலுப்படுத்தலாம் என்கிறது தமிழக அரசு.


படிக்க: கல்வித் தொலைக்காட்சியில் சங்கி நியமனம்! ஆர்.எஸ்.எஸ்-க்கு அடிமட்ட வேலை பார்க்கிறதா திமுக?


இத்திட்டம் தொடங்கப்பட்ட ஒரே நாளில் 50 கோடி ரூபாய் வரை நன்கொடையாக வந்துள்ளதாக அரசு அறிவித்து மகிழ்ச்சிக் கொள்கிறது. நன்கொடைகளை ஒருங்கிணைப்பதற்காக “நம்ம ஸ்கூல்” என்ற பெயரில் இணையதளமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் தமிழ்நாட்டில் உள்ள 37,000 பள்ளிக்கூடங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன; ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கும் எம்மாதிரியான தேவைகள் இருக்கின்றன என்பதும் பட்டியலிடப்பட்டுள்ளது. போதிய ஆசிரியர்கள் இன்மை, சேதமடைந்த கட்டிடங்கள், கழிப்பிட வசதியின்மை என தமிழக அரசுப்பள்ளிகளின் அவலநிலையை தொகுப்பாக அறியத்தரும் வகையில் இந்த இணையதளம் உள்ளது. இந்த அவலநிலைக்கு யார் பொறுப்பு?

பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்ந்து குறைக்கப்படுவது, அரசியல்வாதிகள்-அதிகார வர்க்கத்தின் ஊழல்-முறைகேடுகள், அலட்சியம் போன்றவைதான் இந்நிலைக்கான முதன்மைக் காரணங்களாகும். சரி இவற்றை ஒருபக்கம் ஒதுக்கிவிடுவோம்; இந்த தனியார் பங்களிப்புத் திட்டம், அரசின் கல்வித்துறை ஒதுக்கீடுகளுக்கான நிதி ஆதாரத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் ஒருங்கிணைக்கப்படுகிறதா என்றால் இல்லை?

கொரோனா பேரிடரைச் சந்தித்தபோது, தனியார் மற்றும் தொழில்நிறுவனங்களின் பங்களிப்புகளை தனது பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கச் சொல்லித்தானே ஒன்றிய, மாநில அரசுகள் கோரின. அப்படியிருக்கையில், பள்ளிக்கட்டமைப்பை வலுப்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் இத்திட்டத்தில் அரசின் பாத்திரம் கைகழுவப்பட்டு, “யார் வேண்டுமானால் பள்ளிக்கூடங்களைத் தத்தெடுத்து பராமரிக்கலாம்” என்று சொல்வதன் பொருள் என்ன?

நிவாரணப் பணி என்பது வேறு, சேவைத்துறை என்பது வேறல்லவா! பசுத்தோல் போர்த்திய புலியாக, அரசுப் பள்ளிகளை கார்ப்பரேட் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுசெல்வதற்கான சதிச்செயலே இத்திட்டம் என்று நாம் குற்றஞ்சாட்டுகிறோம்!

தமிழகத்தில் ஏற்கெனவே கட்டமைப்பு வசதிகள் குறைபாடுடைய நூற்றுக்கணக்கான பள்ளிகள், அங்கு பணிபுரியும் சமூக அக்கறை கொண்ட ஆசிரியர்களின் முன்முயற்சியாலே செயல்பட்டு வருகின்றன; முன்னாள் மாணவர்கள் மற்றும் அப்பள்ளியைச் சுற்றியுள்ள மக்களிடம் இருந்து சிறுசிறு உதவிகளைப் பெற்றும், சில இடங்களில் உள்ளூர் கார்ப்பரேட் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். நிதியைப் பெற்றும் இயங்கிவருகின்றன. இதையே நிறுவனமயமாக்கி கல்வித்துறையை கார்ப்பரேட்டுகளிடம் நேரடியாகவோ அல்லது பினாமிகளான என்.ஜி.ஓ.க்களிடமோ ஒப்படைத்துவிட்டு அரசானது கல்வித்துறையிலிருந்து முற்றாக கை கழுவிக் கொள்வதுதான் இத்திட்டத்தின் நோக்கம்!

டிஜிட்டல் கார்ப்பரேட் மயமாக்கத்தின் பிடியில் பள்ளிக்கல்வி!

கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர் செயற்பாட்டாளர்கள் மத்தியில் இத்திட்டம் ‘அரசு கல்வி கொடுப்பதிலிருந்து விலகும் நடவடிக்கை’ என விமர்சிக்கப்படுகிறது; இது மிகச் சரியான விமர்சனமாகும்; அதேநேரம் இத்திட்டங்கள், கார்ப்பரேட் ஆதிக்கத்தை கல்வித்துறைக்குள் நுழைப்பதற்கான சதி என்ற இன்னொரு அம்சத்தை நாம் அழுத்தமாகவும் விரிவாகவும் பேச வேண்டும்.

தமிழக அரசின் மேற்கண்ட இரு திட்டங்களும் தேசியக் கல்விக் கொள்கையுடன் தொடர்புடையவை என்பது தனியான விசயங்கள் அல்ல. அரசின் இந்நடவடிக்கைகளை கல்வித்துறையில் மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்படுவதன் தொடர்ச்சியாகவே நாம் பார்க்க வேண்டும். இந்தியாவில் 1990-களுக்குப் பிறகு, எல்லா துறைகளிலும் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன. மாவட்ட தொடக்கக் கல்வி இயக்கம், அனைவருக்கும் கல்வி இயக்கம், பெற்றோர் ஆசிரியர் கழகம் போன்றத் திட்டங்கள் எல்லாம் பள்ளிக் கல்வித்துறையில் என்.ஜி.ஓ.களின் ஆதிக்கத்தையும் அதன் வழியாக உலக வங்கியின் உத்தரவுகளையும் நடைமுறைப்படுத்துவதாக இருந்தன.

பள்ளிகளில் சுற்றுச்சுவர், நூலகம், கழிப்பறை, ஆய்வகங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் அரசுப் பள்ளிகளைப் புறக்கணிப்பது, தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்கள் வேலைவாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கும்போது, பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது போன்றவையெல்லாம் இக்கொள்கைகளின் தொடர்ச்சியே.

என்.ஜி.ஓ.க்களின் ஆதிக்கத்தை அதிகரிப்பது, கல்வி வழங்குவதில் இருந்து அரசு ஒதுங்கிக் கொள்வது, கல்வியை தனியார்-கார்ப்பரேட் கொள்ளைக்கானதாக மாற்றியமைப்பது என பல்வேறு கூறுகளைக் கொண்டு கல்வித் தனியார்மயத்தை ‘அடுத்தக் கட்டத்திற்கு’க் கொண்டுசெல்ல உருவாக்கப்பட்டதுதான் புதிய கல்விக் கொள்கை 2020; கல்வியில் நேரடியாக கார்ப்பரேட் (பொதுவில் தனியார்மயமல்ல) ஆதிக்கத்தை நிறுவுவதே, இங்கு அடுத்த கட்டமாகும். இந்த கொள்கைகளைத்தான் கவர்ச்சிவாத முகமூடி அணிவித்து நடைமுறைப்படுத்துகிறது தி.மு.க அரசு.

000

கல்வித்துறையில் கார்ப்பரேட் ஆதிக்கம் நிலைநாட்டப்படும் போக்கைப் பற்றி ஒரு சித்திரத்திற்கு (Outline) வரவேண்டுமானால், இன்றைய ஏகாதிபத்திய உற்பத்தி மற்றும் வினியோகக் கட்டமைப்பை புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பிட்ட பிராண்டுக்குச் சொந்தமான கார்ப்பரேட் நிறுவனம், தனது வணிகப் பொருளை முழுவதுமாக ஒரே தொழிற்சாலைக்குள் உற்பத்தி செய்வதில்லை.

ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கான செயல்முறையை பல்வேறு தனித்தனி வேலைகளாகப் பிரித்து, ஒவ்வொரு வேலைகளையும் தனித்தனி துறைகளாக்கி (தனிச்சிறப்புமயமாக்கல் – Specialization), அவற்றை அயல்பணி (அவுட்சோர்ஸிங்) மூலம் செய்துமுடிப்பதே கார்ப்பரேட் மயமாக்கப்பட்ட உற்பத்தி முறையாகும்.

அரசுப் பள்ளிகளை முறையாக பராமரிக்காமல் மக்களை தனியார் பள்ளிகளை நோக்கி தள்ளுவதற்கும், கல்வித்துறையை பல துறைகளாகப் பிரித்து கார்ப்பரேட்மயமாக்குவதற்கும் வேறுபாடுகள் உள்ளன. இவை இரண்டும் கல்வியை வியாபாரமயமாக்கும் (Commercialization) போக்கின் இருவேறு அங்கங்களாகும்; முன்னேறிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகளாகும்.

000

பள்ளிக் கல்வியில் டிஜிட்டல்மயமாக்கத்தை கவனிப்போம். பாடப் புத்தகங்களை நவீனப்படுத்துவது என்ற பெயரில் கியூ.ஆர்.குறியீடுகள் கொடுக்கப்படுகின்றன. ஆண்ட்ராய்டு ஃபோனைப் பயன்படுத்தத் தெரிந்த மாணவர்கள், பெற்றோர்கள் அதனைப் பயன்படுத்தி பாடம் தொடர்பான கூடுதல் விளக்கங்களை இணையத்தில் காட்சி வடிவமாகத் தெரிந்து கொள்கின்றனர். இதன்மூலம் ஒரு பாடத்தைப் புரிந்துகொள்வதில் கூடுதல் விளக்கம் கிடைப்பதானாலும், காட்சியாகப் பார்க்கும்போது மாணவர்களின் மனதில் பதிவை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாலும், இதனை நாம் வரவேற்கிறோம்.

மேலும் ஆன்லைன் வகுப்புகள், கல்வித் தொலைக்காட்சி போன்ற பலவும் கல்வி புகட்டுவதில் அமலாகிக் கொண்டிருக்கும் டிஜிட்டல்மயமாகும். இப்போது, “வானவில் மன்றம்” மூலம் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களை ஆர்வமூட்டும் வகையில் நடத்துவது என்ற பெயரில் டிஜிட்டல் வடிவக் கல்வி பின்பற்றப்படலாம். கல்வி புகட்டுவதில் ஆசிரியர்களுக்கு துணையாகவும் தற்காலிகமானதாகவும் இருந்த டிஜிட்டல் வடிவக் கல்வி, தற்போது தனித்துறையாகப் பரிணமித்துவருகிறது. இதற்கு உள்ளேயே கியூ.ஆர்.குறியீடுகள், ஆன்லைன் வகுப்புகளுக்கான செயலிகள், தொலைக்காட்சி சானல்கள் என பல வடிவங்கள் உள்ளன.

பள்ளிப்பாடங்களை டிஜிட்டல் வழியில் நடத்துவதற்கு நாளை வானவில் திட்டத்தின்வழியே உள்நுழைக்கப் பட்டிருக்கும் ‘ஆஹா குரு’ (நீட், ஜே.ஈ.ஈ தேர்வுகளுக்கு ஆன்லைன் பயிற்சியளிக்கும் கார்ப்பரேட் நிறுவனம்) போன்ற நிறுவனங்களுடன் அரசு உடன்படிக்கை செய்துகொள்ளலாம். இது ஊகமல்ல, இணையவழிக் கல்வியை ஊக்குவிப்பதை புதிய கல்விக் கொள்கையே வலியுறுத்துகிறது. பல்கலைக்கழக மானியக்குழுவானது, கலவைமுறைக் கற்றல் (Blended Education) என்ற பெயரில் கட்டாயமாக 40 சதவிகிதம் வகுப்புகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பிய நிகழ்வை, இந்த இடத்தில் இணைத்துப் பார்க்க வேண்டும். கல்வி புகட்டுவதில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தைக் கொண்டுவருவதற்கே இந்த டிஜிட்டல் திணிப்பு!

000

ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல், சொற்ப இடங்களை மட்டும் ஒப்பந்த (அவுட்சோர்ஸ்) அடிப்படையில் நியமித்துவருகிறது அரசு. நாளை இந்த ஒப்பந்தப் பணிகளிலும் கார்ப்பரேட் ஆதிக்கம் நிலைநாட்டப்படப்போகிறது. அரசுத்துறையில் ஒப்பந்த ஊழியர்களை நிரப்ப வெளிமுகமைகளை (ஏஜென்சிகள்) நாடலாம் என்பது அண்மையில் தமிழக அரசால் கொண்டுவரப்பட்டு, எதிர்ப்பின் காரணமாக திரும்பப் பெறப்பட்ட அரசாணை 115-ன் சாரம். தற்போது அது பின்வாங்கப்பட்டாலும் நடைமுறையில் அவை அமலாகப்போகின்றன.

கடந்த மே மாதம் “தமிழ்நாடு கல்வி பெலோஷிப்” என்ற பெயரில், பி.எட் படிப்பு முடித்த கிராமப்புற இளைஞர்களுக்கு உதவித்தொகை அடிப்படையில் அரசுப்பள்ளிகளில் வேலைவாய்ப்பு வழங்கும் சிறப்புத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அரசுப் பள்ளிகளை வலுப்படுத்துதல், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளித்தல் என்ற இரட்டை இலக்குகளை நிறைவேற்றப்போகும் மாபெரும் சமூகநீதித் திட்டம் என்று விளம்பரப் படுத்தப்பட்டது.


படிக்க: 2,381 அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் மூடல் : தனியார் பள்ளிகளை வளர்க்க திமுக அரசு செய்யும் சதி!


அண்மைய செய்தி என்ன தெரியுமா? பள்ளிக் கல்வித்துறை “மதி பவுண்டேஷன்” என்ற கார்ப்பரேட் பின்னணி கொண்ட என்.ஜி.ஓ அமைப்பின் வழியாக இந்த உதவித்தொகை பெறும் தன்னார்வலர்களை நியமிக்கப் போகிறார்களாம். அவர்களுக்கான மாத உதவித்தொகை ரூபாய் 40,000 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுநாள்வரை அரசே நேரடியாக நியமித்த கவுரவ விரிவுரையாளர்கள், தற்காலிக ஆசிரியர்களுக்கு அதிகபட்சம் பிச்சைக் காசாக ரூபாய் 10,000 முதல் 15,000களை மட்டுமே வீசியெறிந்த அரசு; என்.ஜி.ஓ தன்னார்வலர்களுக்கு எடுத்த எடுப்பில் 40,000 ரூபாய் சம்பளம் வழங்குகிறது.

தகுதியும் திறமையும் உள்ள, ஆசிரியர் தகுத்தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு ஆண்டுக்கணகாகப் பணி ஆணை வழங்காமல் இழுத்தடித்துவரும் அரசு, இப்போது எவ்விதம் தகுதியும் சோதனையும் இல்லாமல் சிறப்பு ஊழியர்கள் என்ற பெயரில் என்.ஜி.ஒ.க்களின் மூலம் ஆசிரியர்களை நியமிக்கிறது! அயல்பணி (அவுட்சோர்ஸ்) போன்ற இத்திட்டத்தின்மூலம் தற்போது ஒரு என்.ஜி.ஓ., மக்கள் பணத்தைக் கோடிகோடியாக கொள்ளையடிக்கப் போகிறது; அரசு ஆசிரியர் பணி ஒழித்துக்கட்டப்படப் போகிறது.

மறுகாலனியாக்கத்தில், எங்கே சமூகநீதி?

தற்போதைய கல்விமுறையானது மனப்பாடக் கல்வியாகச் சுருங்கி வெகுகாலமாகிவிட்டது. தனியார் மெட்ரிக் பள்ளிகள், பிராய்லர் கோழிகளை உற்பத்தி செய்வதைப் போல மாணவர்களை சுயசிந்தனை அற்றவர்களாகவும் படித்தல்-ஒப்புவித்தல் என்பதை மட்டுமே செய்யும் இயந்திரங்களாகவும் சுயநலப் பிராணிகளாகவும் மாற்றி வருகின்றன.

அரசுப் பள்ளிகளில்கூட விளையாட்டு நேரம், நீதிபோதனை போன்ற நேரங்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டுவிட்டன.  பள்ளி இறுதியாண்டு தேர்வு, பொதுத்தேர்வு, உயர்கல்விகளுக்கான நுழைவுத் தேர்வுகள் மாணவர்களை கல்வியில் இருந்து பிரித்து அவர்களை திறனற்றவர்களாக முத்திரைக் குத்தி இழிவுப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர்கள் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கையோ இவற்றை மேலும் தீவிரப்படுத்துகின்றன.

இச்சூழலில், அண்மைக் காலமாக ஆன்லைன் கல்விப் புகுத்தப்பட்ட பின்னர், மாணவர்கள் மத்தியில் பாலியல் சீரழிவுகள் அதிகரித்துள்ளன. பல மாணவிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக சமூக ஆய்வாளர்களும் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழக அரசின் செயல்பாடுகள் காரணமாக, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதாக கல்வி அமைச்சர் தெரிவிக்கிறார். ஆனால், உண்மை அதுவல்ல. கொரோனா ஊரடங்குக்கு பின்னர், தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க வசதியில்லாத பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகினர். ஆனால், அதே காலகட்டத்தில் பல இலட்சம் மாணவர்கள் கல்வியிலிருந்தே வெளியேறியுள்ளனர். தற்போது அரசுப் பள்ளிகளில் படிக்கும் பல மாணவர்கள், கொரோனா ஊரடங்கு காலங்களில் குடும்பப் பராமரிப்புக்காக வேலைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் குறைந்துள்ளது.

எதார்த்தம் இவ்வாறிருக்க, டிஜிட்டல்மயமாக்கம், கார்ப்பரேட்மயமாக்கம் என்பது ஏழை மாணவர்களை கல்வியில் இருந்து முற்றிலும் வெளியேற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளாகும்; சமுதாயத்தின் பெரும் பிரிவு மக்களை, எதிர்கால சந்ததியினரை கல்வியில்லாமல் ஒழிக்கும் இந்த நடவடிக்கைகள், மனுதர்மத்தை போதிக்கும் சாதி ஏற்றத்தாழ்வுகளை நேரடியாக ஆதரிக்கவில்லை எனினும், இவை சமூக ஏற்றத்தாழ்வுகளை மேலும் தீவிரப்படுத்துபவையே. சமூகத்தின் ஒரு பிரிவு மக்களை நிரந்தரமாக கல்வியில் இருந்து ஒதுக்கி வைக்கும் நவீன பார்ப்பனிய பயங்கரவாதத் தாக்குதல்களே!

திராவிட மாடலின் மெய்ப்பொருள்!

தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து மேற்கொள்ளும் பல்வேறு திட்டங்கள் உழைக்கும் மக்களின் அடிப்படை உரிமைகளை மறைமுகமாகப் பறிக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. மின்சார இணைப்புடன் ஆதாரை இணைப்பது, அரசுத் துறைகளில் அயல்பணி முறையில் ஊழியர்களை நியமிப்பது, அரசு அலுவலகங்களில் ஆவணங்களை டிஜிட்டல்மயமாக்குவது போன்றவை அனைத்தும் கார்ப்பரேட் மயமாக்குவதற்காகவே. இவை, காவி பாசிசத்திற்கும் வழிவகையாகவும் அமைகின்றன.

புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., அதை மறைமுகமாக அமல்படுத்துகிறது. தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை 80 சதவிகிதம் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டதாக ஆசிரியர் உமா மகேஸ்வரி குற்றஞ்சாட்டுகிறார். இந்தியாவில் எந்தவொரு மாநிலத்தையும்விட, தமிழகத்தில் தீவிரமாக புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டுகிறது ‘அகில இந்தியக் கல்விப் பாதுகாப்புக் கமிட்டி’யின் அறிக்கை. இந்நிலையில், தி.மு.க தலைமையிலான அரசு, மாநிலக் கல்விக்கொள்கையை வகுக்கக் குழு அமைத்துள்ளதாகக் கூறுகிறது; அதன் முடிவுகள் எப்படி இருக்கப் போகிறது என்பது தற்போதைய நடவடிக்கைகளே வெட்ட வெளிச்சமாகக் காட்டுகின்றன.

தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளும் திராவிட இயக்கங்களும் இவற்றையெல்லாம் எதிர்ப்பதில்லை. மாறாக, வாழ்த்தி வரவேற்கின்றன. சான்றாக, “வானவில் மன்ற”த் திட்டத்தை திராவிட விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், “பகவத் கீதை, சோதிடம், வேத-புராண சாஸ்திரங்கள் அனைத்தும் பாடங்களாக்கப்பட்டு மாணவர்களுடைய பிஞ்சுநெஞ்சில் நஞ்சு விதைக்கப்பட்டு வருகிறது; மாற்றாக, அறிவியல் மனப்பான்மை வளர்க்க வேண்டும் என்று குரல் கொடுக்கிற ஒரே அரசு திராவிட மாடல் அரசுதான்” என்று கூறியுள்ளார். ஆனால் கல்வித்துறையை கார்ப்பரேட் மயமாக்குவதுதான் திராவிட மாடலா? அல்லது சமூகநீதியா?

புதிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தித் திணிப்பு, வரலாற்றை தங்களுக்கு சாதகமாகத் திருத்தி எழுதுதல், பாடத்திட்டங்களில் புராணக் குப்பைகளைத் திணித்தல் போன்ற கல்வித்துறையை காவிமயமாக்கும் நடவடிக்கைகளை மட்டும்தான் சமூகநீதி பேசுவோர் எதிர்க்கின்றனர். கல்வித்துறையை கார்ப்பரேட் மயமாக்குவதைப் பற்றி இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.

தி.மு.க. அரசின் சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு போன்ற மக்கள் விரோத திட்டங்கள் ஒவ்வொன்றையும் பா.ஜ.க. கும்பலானது எதிர்க்கும்போது, கல்வித்துறையில் அமல்படுத்தப்படும் இத்திட்டங்களைப் பற்றி மட்டும் ஏன் வாய்திறக்கவில்லை. ஏனென்றால், பா.ஜ.க. கும்பலின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளோடு அவை ஒத்துப்போவதுதான் காரணம்.

’வளர்ச்சி’ என்ற பெயரில் நாட்டை அம்பானி – அதானி போன்ற பார்ப்பன, பனியா, மார்வாடி, குஜராத்தி, சிந்தி சாதிப் பின்னணி வடபுலத்து கார்ப்பரேட் கும்பலுக்கு பா.ஜ.க. திறந்துவிடுகிறது எனில், தி.மு.க.வோ தமிழக, தென்னிந்திய கார்ப்பரேட்டுகளுக்குத் திறந்துவிடுகிறது; திராவிட மாடலுக்கு இதான் மெய்யான பொருள்!

தங்கம்

1985 சென்னை துப்பாக்கிச்சூடு | வழக்குரைஞர் லிங்கன் நேர்காணல்

1970-களின் இறுதியில், உலக வங்கி நகர கட்டமைப்புகளுக்காக நிதி அளிக்கத் தொடங்கியிருந்தது. உலக வங்கி தேர்ந்தெடுத்திருந்த நகரங்களின் பட்டியலில் சென்னையும் இடம்பெற்றிருந்தது. 1973-ம் ஆண்டு, உலக வங்கியின் ஒரு குழு, சென்னை, கல்கத்தா முதலான இந்திய நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பெரும் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு ஏற்ற இடமாக சென்னை இருக்கும் எனத் தேர்வு செய்திருந்தது.

முதல் மெட்ராஸ் நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் (Madras Urban Development Project – I) என்ற பெயரில் உலக வங்கியின் நிதியுதவி சென்னையை வந்தடையத் தொடங்கியது. 1977-ம் ஆண்டு, 62 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாக அளித்தது உலக வங்கி. இரண்டாவது மெட்ராஸ் நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் 1980 முதல் 1988 வரை, உலக வங்கியால் தமிழ்நாடு அரசுக்கு 42 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனாக வழங்கப்பட்டன. சென்னையின் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் இந்த நிதியைக் கொண்டு மாற்றியமைக்கப்பட்டன.

இந்தக் காலகட்டத்தில் சென்னை முழுவதும் குடிசைப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் காலிசெய்யப்பட்டு, நகரத்துக்கு வெளியே குடி வைக்கப்பட்டனர். 1985-ம் ஆண்டு, மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தை எம்.ஜி.ஆர் தலைமையிலான தமிழக அரசு அறிவித்தது. அரசின் மொழியில், மெரினா கடற்கரையை அழகுபடுத்துவது என்பதற்கு, பாரம்பர்ய மீனவர்களைக் கடற்கரையைவிட்டு அப்புறப்படுவது என்று பொருள்.

நன்றி: விகடன்

***

எம்.ஜி.ஆர் அரசாங்கம் எவ்வாறு மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டம் எனும் பெயரில் மீனவர்களை அப்புறப்படுத்த முயன்றது என்பது குறித்தும் அதற்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்தும் வழக்குரைஞர் லிங்கன் அவர்கள் விரிவாக அளித்த நேர்காணலை வினவு செய்திப்பிரிவின் சார்பாக தொகுத்து வெளியிடுகிறோம். (வழக்குரைஞர் லிங்கன் அவர்கள் புயலைக் கிளப்பும் ஒக்கிப்புயல் விவாதங்கள்!, மீனவர்களும் அரசியல் பிரதிநிதித்துவமும் முதலான மீனவர் பிரச்சினைகள் குறித்த புத்தகங்களை எழுதியுள்ளார்)

மெரினா கடற்கரையை அழகு படுத்துவதாக 1985-ஆம் ஆண்டு இறுதியில் எம்.ஜி.ஆர் அரசு முடிவு செய்தது. அண்ணா சதுக்கம் முதல் கலங்கரைவிளக்கம் வரையுள்ள பகுதிகளில் கட்டுமரங்களை நிறுத்தவோ வலைகளை காய வைக்கவோ அனுமதிக்கப் போவதில்லை என்று முடிவு செய்தது.

1985-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மீனவர்கள் கட்டுமரங்கள் மற்றும் படகுகளை கடற்கரையில் நிறுத்தக்கூடாது, வலைகளை உலரவைக்கக்கூடாது என்று அரசாங்கம் திடீரென்று அறிவிக்கின்றது. இந்த முடிவின் அடிப்படையில் 1985-ஆம் ஆண்டு நவம்பர் 3-அன்று கட்டுமரங்களை, வலைகளை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பது குறித்து ஒரு  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அப்போதைய தலைமை செயலாளர் டி.வி.அந்தோணி மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கட்டுமரங்களையும் வலைகளையும் எப்படி அப்புறப்படுத்தலாம் என்று திட்டமிடப்பட்டது.

மறுநாள் காலை நவம்பர் 4-ஆம் தேதியன்று அதிகாலை 4 மணியளவில்  சீரணி அரங்குக்கும் கலங்கரை விளக்கத்திற்கும் இடையே உள்ள கட்டுமரங்களை அப்புறப்படுத்தினர். சீரணி, ஓளவையார் சிலை, ஐஸ் ஹவுஸ் ஆகிய பகுதிகளில் மாட்டாங்குப்பம், நடுக்குப்பம்,  அயோத்தியா குப்பம்  முதலிய பகுதிகளைச் சேர்ந்த கட்டுமரங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், அங்கு இருந்த படகுகளை அப்புறப்படுத்த 10,000 போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். போலீசு மூலம் 150 லாரிகளின் உதவியோடு கட்டுமரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

அன்று மாலை 4 மணிக்கு அயோத்தியா குப்பத்தில் மீனவர்கள் கூட்டம் நடத்தி போராட்டம் நடத்த முடிவெடுத்தனர். அதற்கு மறுநாள், அதாவது நவம்பர் 5-ஆம் தேதியன்று காலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகமான சென்னை எழிலகத்தில் மீனவர்கள் கட்டுமரத்தை திருப்பி தர வேண்டியும், மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டியும் கொட்டும் மழையில் உண்ணாவிரத போராட்டத்தில்  ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டம்  நடந்துக்கொண்டிருக்கும் வேளையில் மீனவர் சார்பாக மண்டல் குழுவில் தலைவர் சி.சுப்ரமணியம் ரிட் மனுவை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு அனுப்பினர். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, அவ்வழக்கை நீதிபதி  மோகனுக்கு ஒதுக்கினார். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டபின்பு வழக்கை நீதிமன்ற அமர்வுக்கு மாற்றப்பட்டது.


படிக்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவு கொடுத்தது யார்?


நவம்பர் 6-ஆம் தேதி அன்று சென்னை தலைமை செயலக அலுவலகத்தில் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் மனு கொடுக்க ஊர்வலமாக மீனவர்கள் சென்றபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதனையெடுத்து, காந்தி சிலை அருகே உண்ணாவிரதம் மேற்கொண்டபோது அன்னம்மாள் என்ற பெண்மணி உயிரிழக்கிறார். அந்த உண்ணாவிரத போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரான கருணாநிதி கலந்துகொள்கிறார். படகுகளைத் திருப்பித்தரவில்லை என்றால் நவம்பர் 8-அன்று எதிர்க்கட்சிகளோடு கூட்டம் நடத்தி போராட்டத்தை அறிவிக்க உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

நவம்பர் 7-ஆம் தேதி அயோத்தியாகுப்பத்தில் இருந்து மீனவர்கள் ஊர்வலமாக சென்றனர். அவர்கள், சென்னை பல்கலைக்கழகத்தின் அருகில் வந்துக்கொண்டிருந்த போது காவல்துறை தடுக்கிறது. தடுப்பை மீறி வழக்கு விசாரணை நடத்த தாமதம் செய்யும் உயர்நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். வழக்கு மதியம் 12 மணிவரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதற்கான காரணமாக விசாரிக்க வேண்டிய தலைமை நீதிபதி விடுமுறை மற்றும் அரசு எதிர் மனுத்தாக்கல் செய்ததுள்ளது ஆகியவை முன்வைக்கப்பட்டன. ஆர்ப்பாட்டம் கோட்டையை நோக்கி திரும்பியபோது மீனவர் கோதண்டராமன் மண்ணணெய் ஊற்றி தீக்குளித்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நவம்பர் 9-ஆம் தேதியன்று உயிரிழந்தார்.

சுமார் நான்கு மணி நேரம் கொட்டும் மழையில் கட்டுமரத்தை திருப்பி தரக்கோரியும்,கோதாண்டராமன் மறைவுக்காகவும்  மீனவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்தை அகில இந்திய மீனவர் சங்கத்தின் தலைவர் சுப்ரமணியம் தலைமையேற்று நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு இடையில், மீனவர் சார்பாக நவம்பர் 13-ஆம் தேதியன்று  பிரதமரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. அதன்பிறகு அகில இந்திய மீனவர் சங்கத்தின் பொது செயலாளர் காளப்பன் தந்தியின் மூலம் ரிட் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிக்கு அனுப்பினர். அந்த ரிட் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.


படிக்க: தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படையினரை கைது செய்து தண்டனை வழங்குக! மக்கள் அதிகாரம்


நவம்பர் 5-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நவம்பர் 14-அன்று நீதிபதிகள் டி.என் தங்கவேலு மற்றும் நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மீனவர் சார்பாக வழக்கறிஞர் பி.ஆர்.செல்வராஜ் மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் எம்.ஆர்.காந்தியும், அரசு தரப்பு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தியும் ஆஜராகினர்; ஆனால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதற்கிடையில் இரண்டு வாரம் அமைதியாக இருந்த சூழலில்  டிசம்பர் 4-ஆவது தேதி புதன்கிழமை நடுக்குப்பம், மெரினா காவல்நிலையம், காமராஜர் சாலை, குடிசை மாற்று வாரியம் ஆகிய இடங்களில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. போலீசார் 17 ரவுண்டு சுட்டனர். அதில் சேகர், அயோத்திக்குப்பத்தை சேர்ந்த துலுக்காணம், சேகர், மனோகர், நொச்சிக்குப்பத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை என ஐந்து மீனவர்கள் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர்; 19 பேர் காயமடைந்தனர். மீனவர்கள் மீது 8 வழக்குகள் பதியப்பட்டு 41 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் நடந்த அதே நாளில்தான் உச்சநீதிமன்றத்தில் சின்னப்ப ரெட்டி-பாலகிருஷ்ண ஏராடி-காலித் அடங்கிய அமர்வு கட்டுமரங்களை மீனவர்களிடம் ஓப்படைப்பதற்கும், முன்பு போல் மீன் பிடிக்க அனுமதிப்பதற்கும் இடைக்கால உத்தரவை வழங்கியது.

டிசம்பர் 5-ஆம் தேதி அன்று வழங்கப்பட்ட மற்றொரு தீர்ப்பில் மீனவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட கட்டுமரங்கள், வல்லங்கள், வலைகளை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்ற துணைபதிவளாரின் மேற்பார்வையில் அது நடக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சென்னை மாவட்ட ஆட்சியர், உயர்நீதிமன்ற துணைபதிவளார் முன்னிலையில் மீனவர்களிடம் அவர்களுடைய வலைகள், வல்லங்கள், கட்டுமரங்கள் ஒப்படைக்கப்பட்டன.

டிசம்பர் 6 அன்று துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆரம்பாக்கம், எண்ணூர், பழவேற்காடு, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் மக்கள் கறுப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். டிசம்பர் 7 அன்று துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடலை மாட்டுவண்டியில் வைத்து இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது.

டிசம்பர் 9-ஆம் தேதி அன்று தஞ்சை, நாகை மாவட்டங்களில் துப்பாக்கி சூட்டை கண்டித்து முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அதே நாளில்  திருவல்லிக்கேணியில் தோழமை கட்சிகளுடன் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. டிசம்பர் 10 அன்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை நீட்டித்தது.

கலங்கரைவிளக்கம் பகுதிக்கு பாதுகாப்பு வழங்கவேண்டி புறக்காவல் நிலையம் (outpost) அமைக்கத்தான் முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக அங்கு காவல் நிலையமே (police station) அமைக்கப்படுகிறது. துணை ஆணையராக இருந்த தேவாரம் துப்பாக்கிச் சூட்டிற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக ஆணையராக நியமிக்கப்படுகிறார். மெரினாவை அழகுபடுத்தும் திட்டத்தை எதிர்க்கும் மக்களை ஒடுக்கவே அங்கு காவல் நிலையம் அமைத்திருக்கிறார்கள் என்பது பின்னர்தான் புரியவருகிறது. துப்பாக்கி சூடு மீனவர்களை கடலில் இருந்து அந்நியப்படுத்தியது.

– வழக்குரைஞர் லிங்கன்

***

மீனவ நண்பனாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடைபெற்ற இந்த கோரசம்பவம் மீனவர்கள் மத்தியில் ஒரு ஆறாவடுவாக இன்றுவரை நீடிக்கிறது.

அதானி முதலாளி கிடையாது பயங்கரவாதி | தோழர் மருது | வீடியோ

குஜராத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு தீர்ப்பு வந்தது.உலகத்தில் இந்த மாதிரி தீர்ப்பையெல்லாம் இவர்களினால்தான் சொல்ல முடியும்.பசுவை ஒருவர் கடத்தினார் என்பதற்காக அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியிருக்கிறார்கள் நீதிபதிகள். ஆனால் பில்கிஸ் பானு என்கிற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வன்புணர்வு செய்த பார்ப்பன இந்துமத வெறியர்கள் அனைவரையும் விடுதலை செய்தபோது எதையும் கிள்ளி போடாத நீதிமன்றம் தற்போது மாட்டை கடத்தினால் ஆயுள் தண்டனை என்று கூறுகிறது.அப்படி அரசியலமைப்பு சட்டம் மாற்றி அமைக்கப்பட்டுவருகிறது.இப்படி எல்லாத் துறையும் முழுங்கிவிட்ட இந்த ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி காவி கும்பல் தற்பொழுது நீதித்துறையும் விளங்கிக் கொண்டிருக்கிறது.

நாட்டின் பிரச்சனை என்பது என்ன விலைவாசி உயர்வு நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருக்கிறது.
ஆனால் அதற்கு எதிராக பேசமால்,பசு மாட்டை கட்டி பிடிக்க சொல்கிறார்கள். பசுமாட்டை மட்டும் கட்டி பிடிக்க சொல்லும் இவர்கள் எருமை மாட்டை கட்டிப்பிடிக்க சொல்வார்களா? எருமை மாடு மட்டும் என்ன கேவலமா? பசு மாட்டை எங்களுடைய பயன்பாட்டிற்கும் உணவுக்காகவும் பயன்படுத்துகிறோமே தவிர கடவுள் நம்பிகை,புனிதமாக கூறுகிற ஆரிய பார்ப்பணிய கலாச்சாரத்திற்காக நாங்கள் பின்பற்றுவது இல்லை. இந்துராஷ்டிரத்தை நிறுவ அதற்கேற்றார் போல் இன்னொரு மாற்று பண்பாட்டை நம் தலையில் கட்டுகிறார்கள்.சொல்லப்போனால் இடது பக்கம் இருந்த ஒன்றை வலது பக்கம் நோக்கி சுற்ற நினைக்கிறார்கள்.இப்படி ஒவ்வொன்றாக மாற்றி அவர்கள் நினைக்கும் இந்துராஷ்டிரம் அமைவதற்கு ஏதுவான எல்லா சித்தாந்தங்களையும் மாற்றி அமைப்பார்கள்.ஏற்கனவே கல்வியை காவிமயப்படுத்தி கொண்டிருக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி தற்பொழுது நம்முடைய பண்பாட்டிலும் காவிமயத்தை பூசி வருகிறது. நம்முடைய பண்பாட்டிற்கு எதிரானது பார்ப்பனிய பண்பாடு. அப்படிப்பட்ட பிற்போக்கான பண்பாட்டை இங்கு விதைக்க துடிக்கிறார்கள் காவி கும்பல்கள்.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஜனநாயக ஊடகங்களின் குரல்வளையை நெறிக்கும் பாசிஸ்ட்டுகள்!

காவி பாசிஸ்டுகளின் கார்ப்பரேட் சேவையையும், சங்கப் பரிவாரக் கும்பல் வன்முறைகளையும் அம்பலப்படுத்துகிற ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சுதந்திர ஊடகங்கள்தான் (Freelance Media – சமூக அக்கறைக் கொண்டவர்களால் நடத்தப்படும் ஊடகங்கள்) காவி பாசிஸ்டுகளின் இலக்காகியிருக்கின்றன.

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலில் இந்துராஷ்டிர மாடலாக உள்ள உத்தரப்பிரதேசம்தான் இந்திய அளவில் முதலிடத்தில் இருக்கிறது. உலகளவில் ஊடக சுதந்திரக் குறியீட்டில் 180 நாடுகளின் பட்டியலில், கடந்த 2021 ஆம் ஆண்டில் 142-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 150-வது இடத்திற்கு சென்றிருக்கிறது என்கிறது “எல்லைகளில்லா பத்திரிகையாளர்கள்” (Reporters without Borders) என்ற அமைப்பின் அறிக்கை.

கொலைகள்… கைதுகள்… மிரட்டல்கள்

காவி பாசிஸ்ட்டுகளுக்கு  எதிராக போராடினால் ‘புல்டோசரை’யும், எழுதினால் கைதுகள்-வழக்குகளையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதே பாசிஸ்டுகள் உருவாக்கியிருக்கும் புதிய இயல்புநிலை.

கடந்த 2020-ஆம் ஆண்டு, உத்தரப்பிரதேசம் ஹத்ராஸில் தாழ்த்தப்பட்ட பெண் ஒருவர் தாக்கூர் ஆதிக்க சாதி குண்டர்களால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, நாக்கறுக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட அப்பெண்ணின் உடலைக்கூட அப்பெண்ணின் பெற்றோர்களிடம் ஒப்படைக்காமல், இரவோடு இரவாக போலீசே எரித்துக் கொன்ற கொடூரம் இந்தியாவையே உலுக்கியது. இக்கொலை குறித்து உண்மைகளை வெளிக்கொணர உ.பி.க்குச் சென்ற கேரளாவைச் சேர்ந்த சித்திக் கப்பான் என்கிற மலையாள இணையதளப் பத்திரிகையாளரை ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்து இரண்டு ஆண்டுகள் சிறை வைத்தது யோகி ஆதித்யநாத் அரசு. நீண்ட சட்டப்போராட்டம் மற்றும் களப்போராட்டங்களுக்குப் பின்னர்தான் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஹத்ராஸ் கொடூரம் நடந்த அதே நாளில், அப்பெண்ணின் உறவினர்களைப் பேட்டிக்கொண்டு கொலை தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வந்தார் “இந்தியா டுடே” வார இதழின் பத்திரிகையாளர் தனுஸ்ரீ பாண்டே. கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரனிடம் உ.பி அரசு தங்களை அச்சுறுத்துவதாகக் கூறும்படி தனுஸ்ரீ பயிற்சியளித்தார் என்று பத்திரிகையாளர் தனுஸ்ரீக்கு எதிராக அவதூறைப் பரப்பியது, காவி கும்பல். இதனைத் தொடர்ந்து தனுஸ்ரீ இந்தியா டுடே பத்திரிகையிலிருந்து விலகிவிட்டார்.

தனுஸ்ரீ இந்தியா டுடே பத்திரிகையில் இருந்து விலகியது தொடர்பாக ஆங்கில மாத இதழான “தி கேரவன்” கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அக்கட்டுரையில், பா.ஜ.க.வுக்கு எதிராக செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் இந்தியா டுடே பத்திரிகையிலிருந்து ஓரங்கட்டப்படுகின்றனர், இறுதியில் அவர்கள் வெளியேற்றப்படுகின்றனர் என்று குறிப்பிடுகிறது. இந்தியா டுடே பத்திரிகையே பா.ஜ.க. ஆதரவு பத்திரிகை என்றும், அந்தவகையில்தான் தனுஸ்ரீயும் அப்பத்திரிகையில் இருந்து ‘விலகும்’ நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.


படிக்க: கிட்டத்தட்ட 88% இந்திய ஊடகங்களின் தலைமைப் பதவிகள் உயர்சாதியினரின் கைகளில் உள்ளது!


இவை மட்டுமல்ல, உ.பி.யில் காவி கும்பல்களின் ஊழல்களையும் அரசு நிர்வாகத்தின் முறைகேடுகளையும் அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்கள் யோகி ஆதித்யநாத் அரசினால் நரவேட்டையாடப்பட்டுள்ளனர். உ.பி.யில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவாக வழங்கப்படும் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு கொடுக்கப்படும் அவலத்தை வெளியிட்டதற்காக பஸ்வான் ஜெய்ஸ்வால் என்ற உள்ளூர் பத்திரிகையாளரைக் கொடூரமாகத் தாக்கியிருக்கிறது உ.பி. போலீசு. சாராய மாஃபியா கும்பல்களின் ஊழலை அம்பலப்படுத்தியதற்காக ஸ்ரீவஸ்தவா என்ற பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சந்தோஷ் ஜெய்ஸ்வால் என்ற மற்றொரு பத்திரிக்கையாளர், ஆரம்பப் பள்ளிக் குழந்தைகள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்வதை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் உ.பி. அரசின் நிர்வாக சீர்கேடுகளை அம்பலப்படுத்தியத்திற்காக ஸ்க்ரோல் (Scroll) இணையதளத்தின் பத்திரிகையாளர் சுப்ரியா சர்மா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேற்கண்ட நிகழ்வுகள் சில சான்றுகளே. 2017 முதல் 2022 வரையிலான யோகியின் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில், 12 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; 48 பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்; 66 பத்திரிகையாளர்கள் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன என்கிறது, பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான குழுவின் அறிக்கை.

பெண் பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதனால், பல பத்திரிகையாளர்கள் அவர்களது துறையைவிட்டே ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கர்நாடகாவின் புகழ்பெற்ற பெண் பத்திரிகையாளரான கவுரி லங்கேஷ் படுகொலையே இதற்குச் சான்று.

பத்திரிகையாளர்களைக் கொலை செய்வது, கைது செய்வது ஒருபுறம் என்றால், சுதந்திர ஊடகங்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பது என்பதும் சாதாரண நிகழ்வாகியிருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் “தி வயர்” இணையதளத்தில் அமெரிக்க “மெட்டா” நிறுவனத்திற்கும் பா.ஜ.க.விற்கும் தொடர்பு இருப்பதாக (பேஸ்புக், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனம்) கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அக்கட்டுரையில், பா.ஜ.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவரான அமித் மாள்வியாவிக்கு ‘கிராஸ் செக்’ (Cross check) முறையின் மூலம் சில சலுகைகள் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படும் பா.ஜ.க-விற்கு எதிரான கருத்துகளை அமித் நீக்க முடியும் என்று அக்கட்டுரையில் எழுதப்பட்டிருக்கிறது.


படிக்க: புதிய தொழில்நுட்ப வரைவு விதிகள்: அறிவிக்கப்படாத எமர்ஜென்சி!


“மெட்டா” குறித்து வெளியிடப்பட்ட இக்கட்டுரை உறுதியான தகவல் ஆதாரங்களின் அடிப்படையில்தான் எழுதப்பட்டது என்று முதலில் கூறினாலும், பிறகு அந்த ஆதாரம் உண்மையானதல்ல என்று அறிந்தவுடன் தனது தவறுக்கு மன்னிப்புக் கோரியது “தி வயர்” இணையதளம்.

எனினும், தன்மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக டெல்லி காவல் நிலையத்தில் அந்த இணையதளத்தின் ஆசிரியர்களான சித்தார்த் வரதராஜன், சித்தார்த் பாட்டியா, எம்.கே. வேணு, துணை ஆசிரியர் ஜான்வி சென் உள்ளிட்டோர் மீது புகாரளித்திருக்கிறார் அமித். இந்தப் புகாரை முகாந்திரமாகக் கொண்டு “தி வயர்” இணையதளப் பத்திரிகையாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தியது போலீசு.

இதுமட்டுமின்றி, அமித்ஷா மகன் ஜெய்ஷாவின் சொத்து குவிப்பு குறித்து செய்தி வெளியிட்டதற்காகவும், டெல்லி விவசாயிகள் பேரணியின் போது உயிரிழந்த நவ்ரீத் சிங்கின் குடும்பத்தினரின் கருத்துகளை வெளியிட்டதற்காகவும் “தி வயர்” இணையதளத்தின் மீது வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு காவி பாசிச கும்பல்களின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் பத்திரிகைகள், பத்திரிகையாளர்களை முற்றிலுமாக முடக்கும் வகையில், பொய் வழக்குகளைப் போடுவது, சிறையில் அடைப்பது, காவி குண்டர்கள், போலீசை ஏவித் தாக்குவது, கொல்வது என பலவகைகளில் நெருக்கடிகள் கொடுத்து ஒடுக்கி வருகிறது காவி கும்பல்.

என்.டி.டிவி-யை விழுங்கிய அதானி

பத்திரிகை துறையில் காவி பாசிஸ்டுகளின் தாக்குதல் ஒரு முக்கியமான விசயம், என்.டி.டி.வி என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தை, அந்த நிறுவனத்திற்குத் தெரியாமலேயே சட்டவிரோதமாக அதானி கும்பல் வாங்கிய நிகழ்வாகும்.

இந்திய அளவில் இந்தி மொழியில் மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைத் தோலுரிக்கும் செய்தி நிறுவனம்தான் என்.டி.டி.வி. என்றழைக்கப்படும் “புதுடெல்லி  தொலைக்காட்சி” நிறுவனமாகும். பத்திரிகையாளர்களான பிரனாய் ராய் மற்றும் ராதிகாராய் இருவரும் ஆர்.ஆர்.பி.ஆர். ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் கீழ் என்.டி.டிவியைத் துவங்கினர். கடந்த 2008 ஆம் ஆண்டு விஸ்வபிரதான் கமர்சியல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் ரூ. 403 கோடி பத்தாண்டுகளில் திருப்பித் தருவதாக கடன்வாங்கியது ஆர்.ஆர்.பி.ஆர். ஹோல்டிங்ஸ். ஆனால், கடனைக் கட்ட முடியாததால் என்.டி.டிவியின் 29.8 சதவீத பங்குகள் விஸ்வபிரதான் நிறுவனத்துக்குச் சொந்தமானது.

விஸ்வபிரதான் நிறுவனத்தை அதானி குழுமம் 2012-இல் வாங்கியது. இதனால், விஸ்வபிராதானுக்குச் சொந்தமான என்.டி.டிவியின் பங்குகள் அதானி குழுமத்திற்கு சொந்தமானது. ஆனால், ஆர்.ஆர்.பி.ஆர். ஹோல்டிங்ஸ் நிறுவனர்களோ, விஸ்வபிரதான் நிறுவனத்தின் பங்குகள் அதானி குழுமத்திற்கு விற்பது குறித்து எவ்வித தகவல்களும் தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும், இது முறைகேடான கையகப்படுத்துதல் என்றும் குற்றஞ்சாட்டினர்.

இவ்வாறு முறைகேடான முறையில் அதானி குழுமம் என்.டி.டிவி-யை கையகப்படுத்தியிருக்கும்போதே, திறந்த சந்தையில் என்.டி.டிவியின் இதர பங்குகளை வாங்குவதற்கு அதானி குழுமத்திற்கு அனுமதியளித்திருக்கிறது இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி. நவம்பர் 23-ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 5-ஆம் தேதி வரை திறந்த சந்தையில் என்.டி.டிவி பங்குகளை வாங்கியதன் மூலம் 37.44 சதவீத பங்குகளைக் கைப்பற்றியது. பிரனாய் மற்றும் ராதிகா ஆகியோர் தங்களிடமிருந்த பங்குகளில் 27.26 சதவீதத்தை விற்றதன் மூலம், என்.டி.டிவி நிறுவனத்தில் 55 சதவீதப் பங்குகளைப் பெற்று அதிக பங்குகளைக் கொண்ட தனி நிறுவனமாக மாறியிருக்கிறது அதானி குழுமம்.

என்.டி.டிவி, என்.டி.டிவி இந்தியா, என்.டி.டிவி 24×7 ஆகிய நிறுவனங்கள் அதானி வசமாகியிருக்கின்றன. என்.டி.டிவி நிறுவனர்கள் மீது பண மோசடி விசாரணை, இந்தியாவிலிருந்து வெளியேற தடை போன்றவற்றின் மூலம் ஒன்றிய அரசு அச்சுறுத்தியே பங்குகளை விற்க வைத்திருப்பதாக செய்தி வெளியிட்டிருக்கிறது “அல் ஜசீரா” என்கிற சர்வதேச செய்தி நிறுவனம்.


படிக்க: டிஜிட்டல் செய்தி ஊடகங்களை ஒடுக்கத் துடிக்கும் மோடி அரசு!


இதனால், என்.டி.டிவி இயக்குநர் குழுவிலிருந்து ராதிகா மற்றும் பிரனாய் விலகியிருக்கின்றனர். அதானி குழுமத்திற்கு என்.டி.டிவி கைமாறிய உடன் என்.டி.டிவியின் விவாத நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவரும், ஆசியாவின் நோபல் பரிசு என்றழைக்கப்படும் “‘ரமொன் மகசேசே” விருதைப் பெற்றவருமான ரவீஷ் குமார், என்.டி.டிவி-யிலிருந்து விலகியிருக்கிறார். தன்னுடைய விலகல் குறித்து “ஃபாரீன் பாலிசி” (Foreign Policy) என்கிற செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “பெட்ரோல் விலை உயர்வும், வேலையில்லாத் திண்டாட்டமும் தலைவிரித்தாடும் சூழலில் மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்காமல் ஜெர்மனி அல்லது ஜப்பானில் என்ன நடக்கிறது என்று விவாதிக்க முடியுமா?” என்று கொந்தளித்திருக்கிறார். ஒன்றிய அரசின் கொள்கைகளை விமர்சித்ததால்தான் என்.டி.டிவியை பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறது அதானி குழுமம்.

இந்தியாவில் உள்ள 400 செய்திச் சேனல்கள் மற்றும் 10,000 செய்தித்தாள்களில் பெரும்பாலானவை அரசு – ஆளும் வர்க்கங்கள் கக்குவதையே செய்தியாக வெளியிடுகின்றன. மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்படுவது பற்றியோ, சொந்த நாட்டின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது பற்றியோ எவ்வித உறுத்தலுமின்றி போராடும் மக்களை வளர்ச்சிக்கு எதிரானவர்களாக சித்தரிக்கின்ற ஊடகங்கள்தான் அரசின் செல்லப்பிள்ளையாக இருக்கின்றன. ரவீஸ் வார்த்தையில் சொல்வதானால் “கோதி” (Godi- lapdog – வளர்ப்பு நாய்) மீடியாக்களாக இருக்கின்றன.

ஒட்டுமொத்த செய்தி ஊடகங்களும் காவிகளுக்கு சேவை செய்கிற சூழலில், மக்கள் பிரச்சினை வெளிக்கொண்டுவருகிற, விவாதிக்கிற சுதந்திர ஊடகங்களின் முக்கியத்துவம் முன்பை விட அதிகரித்துள்ளது. காவி பாசிஸ்டுகளை சுதந்திர ஊடகங்கள் அம்பலப்படுத்துவதால் தங்களின் ஊதிப் பெருக்கப்பட்ட வளர்ச்சி பிம்பம் மக்கள் மத்தியில் உடைப்படுவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, அதனால்தான் தங்களை விமர்சிக்கும் ஊடகங்கள், பத்திரிகையாளர்களின் குரல்வளையை நெறிக்கின்றனர் பாசிஸ்டுகள்.

பல்வேறு வகைகளில் அடக்குமுறைகளைச் செலுத்துவதன் மூலம், சமூக ஊடகங்கள் மற்றும் சுதந்திர ஊடகங்களை முடக்க எத்தனிக்கிறது பாசிச கும்பல். இதற்கெதிராக, ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள் தங்கள் கருத்துரிமை எழுத்துரிமையை நிலைநாட்ட ஒன்றிணைந்து போராட வேண்டியுள்ளது. இத்தகைய ஊடகவியலாளர்களுக்கு ஆதரவாக புரட்சிகர ஜனநாயக சக்திகளும், மக்களும் கைகோர்க்க வேண்டிய தருணமிது.

அப்பு

அயலி (Ayali): திரை விமர்சனம் (Movie Review) | தோழர் அமிர்தா வீடியோ

யலி என்ற இணைய தொடர் பெண்களின் பிரச்சினைகளை பல்வேறு கோணங்களில் வெளிக்காட்டுகிறது. குறிப்பாக பெண்களுடைய மாதவிடாய் என்பது ஒரு இயற்கையாக நடக்கக்கூடிய ஒரு விஷயம். ஆனால் அதை ஒரு தீட்டாக மாற்றி அதன் மூலம் அவர்களை அடிமைப்படுத்த பல சாஸ்திர,‌ சம்பிரதாயங்களை திணித்து வருகின்றனர். அண்மையில் கேரள நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தும் இன்றுவரை பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் போகமுடியாத சூழ்நிலையே உள்ளது. சில நாள்களுக்கு முன்பு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தீட்டு என்பது மனிதர்கள் உருவாக்கியது அது கடவுளால் உருவாக்கப்பட்டது இல்லை; ஆண் பெண் சமம் என்ற கருத்தை பொதுவெளியில் பேசினார். அதற்கு பிற்போக்கு சிந்தனை கொண்ட சங்கிகள் பலரும் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக ஆணும் பெண்ணும் சமமா நாங்கள் மேல் ஆடை இல்லாமல் வெளியே வருவோம் நீங்கள் அப்படி செய்வீர்களா என மிகவும் கீழ்த்தனமாக ஐஸ்வர்யா ராஜேஷின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த காவி கும்பல் எப்படி பெண்களை இழிவா பார்க்கிறார்கள். சனாதனத்தை பெண்கள் மீது எப்படி திணிக்க முயல்கிறார்கள் என்பது வெளிப்படையாகவே நமக்கு தெரிகிறது அந்த நேரங்களில் இம் மாதிரி வலைத்தொடர்கள் வந்தது வரவேற்கத்தக்க விஷயம். சமகாலத்தில் பெண் விடுதலை குறித்தும் பெண் கல்வி குறித்தும், பெண்கள் மீது திணிக்கப்படக்கூடிய இந்த மாதிரியான பழைய பிற்போக்கான விஷயங்களை சமூகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுவது அவசியமாகிறது.

இந்த 21ம் நூற்றாண்டின் இன்றைக்கும் பெண்களை இரண்டாம் பட்சமாகவும் பெண் கல்வி பயில்வது சொந்தமாக வேலைக்கு செல்வதையோ ஆபாசமாக பேசக்கூடிய நபர்களான சங்கராச்சாரியாராக இருக்கட்டும் எஸ்.வி.சேகராக இருக்கட்டும் இந்த பார்ப்பன காவி கும்பல்கள்தான் இந்த 21ம் நூற்றாண்டில் நாம் பேசக்கூடிய குரங்கு கூட்டம். இந்த இணைய தொடர் என்பது கிராமம், நகரம் என அனைத்து பகுதிகளிலும் திரையிட வேண்டியது சமகாலத்தைய அவசியமாகும்.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

வடகிழக்கு: பழங்குடியினரிடையே திட்டமிட்டு மத முனைவாக்கத்தை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ்!

0

நாகலாந்து மற்றும் மேகாலயாவில்  கிறித்துவர்களாக மதம் மாறிய   பழங்குடியினரை பட்டியல்  பழங்குடியின  பிரிவிலிருந்து நீக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்பான ஜனஜாதி தர்ம-சம்ஸ்கிருதி சுரக்ஷா மஞ்ச் (JDSSM) கூறியுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகலாந்தில் பெரும்பான்மையாக பழங்குடியின மக்கள்  வசித்து வருகின்றனர். மேகாலயாவில்  32 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். அதில் 85 சதவீதத்திற்கும் அதிகமானோர் கிறிஸ்தவர்கள். அவர்களில் 8.50 லட்சம் பேர் கத்தோலிக்கர்கள்.  நாகாலாந்தில்  20 லட்சம் மக்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் கிறிஸ்தவத்தை  பின்பற்றுகின்றனர். இரு மாநிலங்களிலும் உள்ள பெரும்பாலான மக்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்பான  ஜனஜாதி தர்ம சமஸ்கிருதி சுரசஷா மஞ்ச்  கிறித்துவராக மதம் மாறிய பட்டியல் பழங்குடியினருக்கு சலுகைகள் தரக்கூடாது என்றும் அவர்களை அப்பிரிவிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

மேலும், பிப்ரவரி 12-அன்று ஒரு லட்சம் பேரை திரட்டி  “சல்லோ டிஸ்பூர்” (Challo Dispur) என்ற பெயரில் ஆர்ப்பாட்டத்தை நடத்த இருப்பதாகவும் அறிவித்திருந்தது. இந்திய அரசியலைப்பு சட்டத்தின் 342 பிரிவு பட்டியலின மக்கள் பிரிவிலிருந்து பட்டியல் பழங்குடிகளை சேர்க்கவோ அல்லது நீக்கவோ வழிவகை செய்கிறது. எனவே கிறித்துவர்களாக மதம் மாறிய பழங்குடியினரை பட்டியல்  பழங்குடியின  பிரிவிலிருந்து நீக்க வேண்டும் என்பதற்கான திருத்தத்தை  ஜனாதிபதி முர்முவுக்கும், மோடிக்கும் அனுப்பி வைக்க இவ்வமைப்பு திட்டமிட்டுள்ளது.


படிக்க: சத்தீஸ்கர்: கிறிஸ்தவ பழங்குடிகள் மீது வன்முறையை ஏவும் ஆர்.எஸ்.எஸ்!


இதுகுறித்து ஜே.டி.எஸ்.எஸ்.எம்-இன் உறுப்பினரான பினுத் கும்பங்  பேசுகையில், “கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் போன்ற அந்நிய மதங்களை ஏற்றுக்கொண்டவர்கள் இரட்டிப்பு நன்மைகளைப் பெறுகிறார்கள். அவர்கள் சிறுபான்மையினராக பலன்களைப் பெற்றுக் கொண்டு தங்கள் குழந்தைகளை கிறிஸ்தவப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். ஆனால் பட்டியலினத்தவருக்கான உதவித்தொகை, வேலைகள், பதவி உயர்வு போன்றவற்றை எடுத்துக்கொள்கிறார்கள்” என்று கூறினார்.மேலும், “அதுமட்டுமின்றி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிடுகின்றனர். தங்கள் பாரம்பரியத்தை பாதுகாக்க கடுமையாகப் போராடும் பட்டியல் பழங்குடிகளின் உரிமைகளை அவர்கள் பறிக்கின்றனர்” என்றவாறெல்லாம் கிறிஸ்துவ பழங்குடியினர் மீது மதவெறி வெறுப்பை கக்கினார்.

அதே போல், ஜே.டி.எஸ்.எஸ்.எம்  அமைப்பின் தலைவரான பாகிராம் போரோ கூறுகையில், “எங்களுடைய அமைப்பின் நோக்கம் இந்தியாவில்  இருக்கின்ற பழங்குடியின மக்களின்   கலாச்சாரத்தையும்,   பழக்கவழக்கங்களையும், சடங்குகளையும் அவர்கள் பேசும் மொழியையும் பாதுகாக்க வேண்டியதாகிறது. பழங்குடியின மக்கள் அந்நிய மதங்களை நோக்கி நகரமால் தடுப்பதற்கும், மதம் மாறுவதை எதிர்த்து ஒவ்வொரு மாவட்டங்களிலும்  கிருத்துவர்களுக்கு எதிராக  பிரச்சாரம் செய்ய வேண்டும். இதன் மூலம்  பட்டியல் பழங்குடியின மக்களிடம் கிறித்துவ வெறுப்பை பேசுவதன் மூலம் நம்முடைய அமைப்பிற்கு  ஆதரவை நிலைநாட்ட முடியும்” என்று நேரடியாக பேசினார். மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சத்தீஸ்கரில் கிறித்துவ பழங்குடியினரின் மதமாற்றத்திற்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்தியதும் இதே ஜே.டி.எஸ்.எஸ்.எம் அமைப்பு தான்.

கிறித்துவர்களாக மதம் மாறிய பழங்குடியினரை பட்டியல்  பழங்குடியின  பிரிவிலிருந்து நீக்க வேண்டும் என்ற சங்க பரிவாரங்களின் கோரிக்கையானது  புதிதல்ல. பல மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகள் இந்தவகை பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன. கடந்த 2021-ஆம் ஆண்டு பா.ஜ.க-வின் பெமா காண்டு முதல்வராக உள்ள வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் பட்டியல் பழங்குடியினர் பிரிவிலிருந்து அபோர் பழங்குடியினரை நீக்கிய மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


படிக்க: ம.பி : பசு குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்ட இரண்டு பழங்குடியினர் !


சிறுபான்மையினருக்கு எதிராக கலவரத்தை அரங்கேற்றுவதன் மூலம்  மக்களை பிளவு படுத்தி தனக்கான மக்கள் அடித்தளத்தை உருவாக்கி வருகிறது ஆர்.எஸ்.எஸ். அது நாட்டில் இஸ்லாமியர்கள்-இந்துக்கள் என்ற வடிவத்தில் செய்யப்படுகிறது. அதையே காட்டி கிறிஸ்துவ பழங்குடியினர் பிற பழங்குடியினர் என்ற வடிவத்தில் பிளவை ஏற்படுத்தி பிற பழங்குடியின மக்களை தனக்கான அடித்தளமாக மாற்றி வருகிறது ஆர்.எஸ்.எஸ். இதனை பல்வேறு கிளை அமைப்புகளை உருவாக்குவதன் மூலம் நிறைவேற்றி வருகிறது. எனவே, பழங்குடி மக்கள் மத்தியில் இவர்களை அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.

ரோகித் வெமுலா