Wednesday, August 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 183

கவுத்தி – வேடியப்பன் மலை : கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகத் தொடரும் போராட்டம்!

ங்களை நிம்மதியாக வாழவிடுங்கள்; போராட்டமே எங்கள் வாழ்க்கையாகி விட்டது; ஜிண்டால் குழுமத்திற்கு எதிரான போராட்டம், எட்டுவழிச் சாலைக்கு எதிரான போராட்டம், குப்பை கிடங்கிற்கு எதிரான போராட்டம் – எனத் தொடர்ந்து போராடியுள்ளோம். இப்போது எங்களது நிலங்களைப் பறித்து எங்களை ஊரைவிட்டே விரட்டிவிட்டு சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு எதிராகப் போராடி வருகிறோம். நாங்கள் ஒருபோதும் எங்கள் நிலத்தை விட்டுகொடுக்க மாட்டோம். போராட்டத்தின்போது சாகவும் நாங்கள் தயங்க மாட்டோம்” என்கிறார்கள் போராடும் மக்கள்.
திருவண்ணாமலையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் செங்கம் வட்டத்திற்கு உட்பட்ட சின்ன பாலியப்பட்டு, பழைய காலனி, புதிய காலனி, செல்வபுரம், அண்ணா நகர், மாரியம்மன் நகர், சின்ன புனல்காடு, அருந்ததியர் காலனி, வாணியம்படி – என்று பாலியப்பட்டு பஞ்சாயத்திற்கு உட்பட்ட சுற்றுவட்டார கிராமப்புற பகுதியில்தான் போராடும் மக்கள் குறிப்பிடும் சிப்காட் தொழிற்பேட்டை அமையவுள்ளது. விளைநிலங்களையும், கவுத்தி – வேடியப்பன் மலையையும் அழித்து சுற்றுச்சூழலையும் அம்மக்களின் வாழ்வாதாரத்தையும் நாசமாக்கி சிப்காட் அமைக்கப்படவுள்ளது. 1,500 ஏக்கர் நிலத்தையும் 500 வீடுகளையும் அரசு கையகப்படுத்தி கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக அமைக்கப்படவுள்ள இந்த சிப்காட் தொழிற்பேட்டைக்கு எதிராக 54 நாட்களுக்கும் மேலாக தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் 9 கிராம மக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் செங்கம் வட்டாரமானது நெல், நிலக்கடலை, மலர்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான வேளாண் பொருட்கள் விளையும் பகுதியாகும். இங்கு சிப்காட் தொழிற்பேட்டை அமைந்தால், விளைநிலங்களும் பாரம்பரியமாக தாங்கள் வாழ்ந்துவந்த வீடுகளும் பறிக்கப்பட்டு சொந்த நாட்டில் அகதிகளாகத் திரியும் நிலைமை உருவாகும் என்பதை உணர்ந்த 9 கிராம மக்களும் உடனடியாக கிராமசபைக் கூட்டத்தை நடத்தி சிப்காட் தொழிற்பேட்டையை எதிர்க்க வேண்டும் என முடிவெடுத்தனர்.
படிக்க :
திருவண்ணாமலையை முழுங்க வரும் ஜிண்டால் – பின்னணி செய்திகள்
வெள்ளாற்றை பாதுகாக்க திரள்கிறது மக்கள் படை
மேலும், பாலியப்பட்டு ஊராட்சியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் சாதிய வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்து “சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கம்” என்ற பெயரில் ஒரு போராட்ட அமைப்பையும் உருவாக்கினர். சிப்காட் திட்டத்தை முழுமையாகக் கைவிடும் வரை தொடர்ந்து போராட்டத்தை நடத்தப்போவதாக பிரகடனப்படுத்தினர்.
தொடர் காத்திருப்புப் போராட்டத்தின் மூன்றாம் நாளன்று (24.12.2021) கிராமசபைக் கூட்டத்தைக் கூட்டி எங்கள் கிராமத்தின், கிராம மக்களின் நலனைக் காக்கும் விதத்தில் பாலியப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படக் கூடாது என்று அரசை வலியுறுத்தி தீர்மானமும் இயற்றியுள்ளனர்.
சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கத்தின் சார்பில், காத்திருப்பு போராட்டம், வீடுகளில் கறுப்புக் கொடியேற்றும் போராட்டம், கஞ்சி காய்ச்சும் போராட்டம், பொங்கல் தினத்தைக் கறுப்பு தினமாக அறிவித்தது – என 50 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தமிழக அரசோ, முதல்வரின் தனிப்பிரிவிற்குக் கூட மனுக்கள் அனுப்பியுள்ள இப்பகுதிவாழ் மக்களின் போராட்டத்தை கண்டும் காணாமல் அலட்சியப்படுத்தி வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான ஊடகங்கள் இப்போராட்டம் குறித்த செய்திகளை இருட்டடிப்பு செய்து வருகின்றன.
அதிகாரத் திமிரும்; அலட்சியப் போக்கும்
இது தொடர்பாக பி.பி.சி தமிழ் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி, பாலியப்பட்டு கிராமங்களைச் சுற்றி விவசாயம் சரியாக நடைபெறவில்லை; குடில்கள் அமைத்து வேறு விவகாரங்கள்தான் நடைபெறுகிறது; சிப்காட் தொழிற்பேட்டை வந்தால் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கும், வீடுகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
இயற்கை எழில் கொஞ்சும் பாலியப்பட்டு கிராமம்.
போராட்டம் தொடங்கிய 5-ம் நாளன்று அமைச்சர் எ.வ. வேலு, செங்கம் கிழக்கு பகுதியில் “ஒரு சில போலி விவசாயிகள் பச்சை துண்டு போட்டுக் கொண்டு போலியான முறையில் காத்திருப்புப் போராட்டம் நடத்துகிறார்கள்; அதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்; கண்டிப்பாக சிப்காட் தொழிற்பேட்டை அந்த பகுதியில் அமைந்தே தீரும்” என்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.
தொடர் போராட்டத்தின் 9-ம் நாளன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைத் தீர்ப்புக் கூட்டத்திற்குச் சென்றிருந்த 250–க்கும் மேற்பட்ட மக்களை மாவட்ட ஆட்சியர் நேரில் வந்துகூடச் சந்திக்கவில்லை. 10 பேரை மட்டும் அவரின் பங்களாவுக்குத் தனியாக அழைத்து, அரசுக்கு எதிராக எதாவது செய்து கொண்டிருந்தால் உங்களை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யக்கூட தயங்க மாட்டோம் என்று அதிகார திமிரோடு பேசியுள்ளார். அதுமட்டுமின்றி, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைச் சொல்லி அதைப்போல ஆகிவிடும் என்றும் மக்களை மிரட்டியுள்ளார்.
36-ம் நாளன்று மீண்டும் கிராமசபைக் கூட்டத்தில் சிப்காட் தேவையில்லை என்று தீர்மானம் நிறைவேற்றவிருந்த நிலையில், அக்கூட்டத்தை அரசு ரத்து செய்துவிட்டது. 45-ம் நாளன்று 500-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சிப்காட் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக 25 கேள்விகள் அடங்கிய 424 மனுக்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்துள்ளனர், மக்களின் மனுக்களைக் கூட ஆட்சியர் நேரடியாக வாங்காமல், அவரின் உதவியாளர் மூலம் வாங்கச் சொல்லி அலட்சியப்படுத்தியுள்ளார்.
மக்களின் போராட்ட வரலாறு
ஏற்கனவே, 2006-ம் ஆண்டு கவுத்தி – வேடியப்பன் மலையிலிருந்து 23 ஹெக்டேர் பரப்பளவில் 10 ஆண்டுகளுக்கு இரும்புத் தாதுவை வெட்டியெடுக்க தமிழக அரசின் டிம்கோ நிறுவனத்துடன் இணைந்து ஜிண்டால் என்ற கார்ப்பரேட் நிறுவனம் ஒப்பந்தம் போட்டது. இவ்வாறு மண்ணில் இருந்து இரும்புத் தாது எடுக்கப்படுவதால் கவுத்தி மலையின் அருகில் உள்ள 55 கிராமங்களின் வாழ்வாதாரமும் நீராதாரமும் விவசாய நிலங்களும் முழுமையாக அழிக்கப்படும் அபாயம் உருவானது.
கவுத்தி – வேடியப்பன் மலையை அழித்து இரும்பு தாதுவை வெட்டியெடுக்க ஜிண்டால் நிறுவனத்திற்கு வழங்கிய இத்திட்டத்தை எதிர்த்து 2008-ம் ஆண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் கவுத்தி – வேடியப்பன் மலைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு தொடங்கப்பட்டு பாலியப்பட்டு பகுதி உட்பட 55 கிராம மக்களும் ஜனநாயக சக்திகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, அப்போதைக்கு அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது. பின்னர், 2014-ம் ஆண்டு ஜிண்டால் நிறுவனத்துடன் மீண்டுமொரு ஒப்பந்தம் போடப்பட்டது. இதை எதிர்த்தும் இக்கூட்டமைப்பு சார்பாக தொடர் பிரச்சாரமும் உறுதியான போராட்டமும் நடத்தியதன் விளைவாக அது தடுத்து நிறுத்தப்பட்டது.
2018-ம் ஆண்டு அ.தி.மு.க அரசால் கொண்டு வரப்பட்ட சேலம் – சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியமைத்து போராட்டம் நடத்தியதன் விளைவாக அத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
2022 ஜனவரி மாதம் நகர்ப்புறக் குப்பைகளை பெரிய புனல்காடு பகுதியில் கொட்டுவதைக் கண்டித்து பாலியப்பட்டு பஞ்சாயத்தின் 500-க்கும் மேற்ப்பட்ட மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் தொடர் போராட்டத்தால் பெரிய புனல்காடு பகுதியில் குப்பை கொட்டும் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது அரசு. இவ்வாறாக கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பல்வேறு நாசகரத் திட்டங்களுக்கெதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர் இப்பகுதிவாழ் மக்கள்.
சிப்காட் அமைக்கும் திட்டத்திற்கு எதிராகப் போராடும் பாலியப்பட்டு கிராம மக்கள்.
நேரடியாக இரும்புத் தாதுவை வெட்டியெடுப்பதற்கான கார்ப்பரேட்டுகளுடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டதால், தற்போது சிப்காட், தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு இந்நிலத்தையும் கவுத்தி – வேடியப்பன் மலையையும் தாரைவார்க்கும் சதித்தனமான வழிமுறையைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. சிப்காட் என்ற முகமூடியை அணிந்துகொண்டு கார்ப்பரேட் நிறுவனங்களை உள்ளே நுழைத்து, பாலியப்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களைத் துரத்துயடித்துவிட்டு கவுத்தி மலையைக் கொள்ளையிடுவதற்குத் தந்திரமாக சேவை செய்து வருகிறது. இதை முழுவீச்சில் செயல்படுத்தப்போவதைத்தான் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலுவின் பேச்சும் வெளிப்படுத்துகிறது.
கார்ப்பரேட் நிலக்கொள்ளைதான் வளர்ச்சியா?
பாலியப்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் முறையான பேருந்து மற்றும் சாலை வசதி கிடையாது. சில ஆண்டுகள் வந்து கொண்டிருந்த தனியார் மினி பேருந்தும் இப்போது வருவதில்லை. செல்வபுரம், புனல்காடு, அருந்ததியர் நகர், மாரியம்மன் நகர் போன்ற இடங்களில் சாலை அமைப்பதற்குக் கொட்டப்பட்ட கற்கள் அப்படியே இருக்கிறது. கரடுமுரடான மண் சாலையில்தான் தினம்தோறும் மக்கள் வேலைக்குச் சென்று வருகின்றனர். மாணவர்கள் தினமும் 3 கீலோ மீட்டர் பள்ளிக்குச் நடந்து செல்கின்றனர்.
அவசர உதவிக்குக் கூட மருத்துவமனைகள் கிடையாது. தமிழ்நாட்டிலிருந்து பிரிந்த தனித்தீவு போல இப்பகுதி காட்சியளிக்கிறது. அடிப்படை வசதிகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ள இப்பகுதியில் விவசாயத்தை நம்பியே மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
“ஆடு, மாடு வைத்துத்தான் எங்கள் வயிறைக் கழுவி வருகிறோம்; சிப்காட் வந்தால் நிலம் முழுவதும் அழிக்கப்படும்; நிலத்தடி நீர் அனைத்தையும் அவர்கள் உறிஞ்சி கொள்வார்கள்; குடிநீருக்கு எங்கள் குடும்பம் அலைய வேண்டியிருக்கும்; இந்த இடத்தைவிட்டு எங்களை விரட்டினால் நாங்கள் எங்கு சென்று, எப்படி வாழ முடியும்?” என்கிறார் போராட்டத்தில் கலந்து கொண்ட புனல்காட்டை சேர்ந்த ஒரு பெண்மணி.
கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபத்திற்காக இத்தகைய விவசாயக் குடும்பங்களை அடித்து விரட்டிவிட்டு, அவர்களின் நிலங்களைப் பறித்து அமைக்கும் சிப்காட் தொழிற்பேட்டையை ‘வளர்ச்சி’ என்று கூறுகிறது தமிழக அரசு. பாலியப்பட்டு கிராமத்தில் சிப்காட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அடுத்த நாளே, ஆளும் கட்சி உதவியுடன் அரசு அதிகாரிகள் மக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி, பாலியப்பட்டு தீர்மானத்திற்கு எதிராக சிப்காட் தொழிற்பேட்டை எங்களுக்கு வேண்டுமென 10 கிராமங்களில் தீர்மானம் நிறைவேற்ற வைத்துள்ளனர். பாலியப்பட்டு மக்களை இரவும் பகலும் கண்காணிப்பதற்குப் போலீசாரையும் உளவுத்துறையையும் அரசு ஏவிவிட்டுள்ளது.
இதுபோன்ற தொழிற்பேட்டைகளை திருவண்ணாமலை மட்டுமின்றி, இன்னும் புதிதாக பத்திற்கும் மேற்பட்ட பகுதிகளில் தொடங்கப்போவதாக 2021 சட்டசபைக் கூட்டத்தொடர் விவாதத்தின்போது தெரிவித்துள்ளது தி.மு.க அரசு.
படிக்க :
சிறப்புக் கட்டுரை : சேலம் உருக்காலையை விழுங்கும் ஜிண்டால் !
விவசாயிகளை காவு வாங்கும் கெயில் – சிறப்புக் கட்டுரை
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியக் கொள்கைக்கு எதிராக தாங்கள் எதிர்க்கட்சிகளாக இருக்கும்போது சவடால் அடிப்பதும், ஆட்சிக்கு வந்ததும் அதையே “வளர்ச்சி, முன்னேற்றம், வேலைவாய்ப்பு’’ என்ற பெயரில் மூர்க்கமாகச் செயல்படுத்துவதையுமே எல்லா ஓட்டுக் கட்சிகளும் நடைமுறையாகக் கொண்டுள்ளன. தி.மு.க அரசின் நடவடிக்கைகளிலிருந்து நாம் பெறும் அனுபவமும் இதுதான்.
கவுத்தி – வேடியப்பன் மலையைக் கொள்ளையடிப்பது என்பது ஏதோ அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. எட்டுவழிச் சாலை, சாகர்மாலா, பாரத்மாலா, கூடங்குளம் அணுஉலை, அணுக்கழிவு மையம், நியூட்ரினோ ஆய்வுக் கூடம் உள்ளிட்டு நாட்டின் மீதும் கோடானுகோடி மக்கள் மீதும் தொடுக்கப்பட்டுள்ள கார்ப்பரேட் பாசிசத் தாக்குதலின் ஓர் அங்கம்தான் இது.
நாசகார ஜிண்டாலை எதிர்த்து ஒடிசா மாநிலத்தின் திங்கியா மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். கனிம வளங்களைச் சூறையாடும் கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக சத்தீஸ்கர் மாநில மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பாலியப்பட்டு உழைக்கும் மக்கள் அத்தகைய போராட்டங்களுடன் இணைந்து நிற்பதும், கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிரான அனைத்து தரப்பு உழைக்கும் மக்களின் ஒன்றிணைந்த போராட்டங்களைத் தொடுப்பதும்தான் இன்றைய அவசர, அவசியக் கடமையாக முன்னே நிற்கிறது.

பு.ஜ. களச் செய்தியாளர்

மார்க்சியம் : புகழ் பாடுதல் மட்டுமே ஒரு சித்தாந்தத்தை நிலைநாட்டி விடாது || ராஜசங்கீதன்

Young Karl Marx படத்தில் ஒரு காட்சி வரும். மார்க்ஸ் எழுதிய கட்டுரையை பிரசுரிக்கும் பத்திரிகை அலுவலக வாசலில் காவல்துறை நிற்கும். அவர்களை மார்க்ஸ் கடந்து அலுவலகத்துக்குள் செல்வார். அவர் எழுதியிருந்த கட்டுரை அன்று பிரசுரிக்கப்படும் நாள். பதிவேற்றப்போகும் கட்டுரையை மார்க்ஸ்ஸின் ஒப்புதலுக்காக படித்து பார்க்க கொடுப்பார்கள். அவர் படித்து முடித்துவிட்டு, அவர்களை பார்த்து புன்னகைப்பார். அவர் எழுதிய கட்டுரையில் பல முக்கியமான விஷயங்கள் அரசுக்கு பயந்து நீக்கப்பட்டிருக்கும்.
மார்க்ஸ்ஸின் சூடான எழுத்துகளால்தான் அலுவலகம் வரை காவல்துறை வந்து நிற்கிறது என குற்றம் சாட்டுவார்கள். அரசு கொடுக்கும் நெருக்கடியில் பத்திரிகையை நிறுத்த வேண்டியிருக்கும் என்று கூறுகிறார்கள். அரசுக்கு பயந்து, சென்சார் செய்து கட்டுரை வெளியிடுவதற்கு பத்திரிகை நிறுத்தப்படலாம் என்பார் மார்க்ஸ். பத்திரிகையாளர்கள் வெகுண்டு எழுவார்கள். இத்தனைக்கும் அதுவும் ஒரு சோஷலிச பத்திரிகைதான். பத்திரிகையை குறை சொல்வதா என கேட்டு, மார்க்ஸ்ஸின் வீரிய எழுத்துகளை குறை சொல்வார்கள்.
படிக்க :
ரசியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டிய மார்க்ஸ் எங்கெல்ஸ் || தோழர் லெனின்
மார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் !
பொறுமையாக நின்றிருந்த மார்க்ஸ் திரும்ப கத்துவார். இலக்கற்ற, தக்கையான சோஷலிச கட்டுரைகளையும் விரைவில் புரட்சி வர வேண்டும் என பிரார்த்திக்கும் கட்டுரைகளையும் பிரசுரிக்கும் பத்திரிகை வர வேண்டியதே இல்லை என்பார். அதற்கு பிறகு அவர் சொல்லும் வசனம் முக்கியமானது. No point in writing without ideas and concepts என்பார்.
Ideas and concepts!
எந்தவொரு சித்தாந்தமும் சிறக்கவும் நிகழ்தொடர்பில் இருக்கவும் அதற்கான ideas மற்றும் conceptsகள் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
காலமாற்றத்தை அவதானிக்கும் கருதுகோள்களும் அவற்றை முன்னெடுப்பதற்கான திட்டங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும். இவை எதையும் செய்யாத சித்தாந்தம் எதுவும் நீடித்ததற்கான சரித்திரம் இல்லை. புகழ் பாடுதல் மட்டும் ஒரு சித்தாந்தத்தை இருத்தி வைத்திடாது. எது ஒன்று சித்தாந்தத்தை வளர்த்தெடுக்கும் என நம்புகிறோமோ அதுவே அதை வீழ்த்தும் வாய்ப்பையும் கொண்டது என்பதுதான் இயங்கியல். மார்க்ஸியம் என்பார்கள்.
தோழியிடம் ஒருமுறை பேசும்போது கூட, மார்க்ஸ்ஸுக்கும் முன்னமே கம்யூனிசத்துக்கான சிந்தனை இருந்தது என்றார். உண்மைதான். கற்பானாவாத சோஷலிசமாக இருந்தது. அதைத்தான் Utopian World என்றார்கள். எல்லாருக்கும் எல்லாமும் எந்த குறையுமின்றி இருக்க கூடிய உலகத்தை கற்பனையாக இலக்கியம் பேசிக் கொண்டே இருந்தது. மார்க்ஸ்ஸுக்கு முன்னமே கம்யூனிசத்துக்கான சிந்தனைகள் இருந்ததுதான். பின் ஏன் மார்க்ஸ் முக்கியமாகிறார்?
Ideas and concepts!
கற்பனாவாத சோஷலிசமாக இருந்த விஷயத்தை, ஓர் அற்புதமான பொன்னுலகம் என பேசப்பட்ட கம்யூனிச சமுதாயத்தை படைப்பது நிஜத்திலேயே சாத்தியம் என்றார் மார்க்ஸ். அதற்கான சாத்தியங்கள், கருதுகோள்கள், திட்ட வரைவுகள் என அறிவியல் பூர்வமாக விளக்கினார். அப்படிதான் மார்க்ஸ் முக்கியமாகிறார்.
படிக்க :
டெக்ஃபாக் : சங்க பரிவாரம் நடத்தும் கலவரங்களின் தொழில்நுட்ப ஊற்றுக்கண் !
எச்சரிக்கை – உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் || களத்தில் காலூன்றும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக !
மார்க்ஸ் கொடுத்த அணுகுமுறை முக்கியமானது. எந்தவொரு விஷயத்தையும் அதன் முரண்களை புரிந்து அணுகி பார்த்து எதிர்காலத்தையும் இயக்கத்தையும் அனுமானிப்பது. அந்த அணுகுமுறை எந்த இயங்கியலுக்குமே பிரதானம். எந்த சித்தாந்தமாக இருந்தாலும் இயங்கியல் என ஒன்று அவசியம். இவை ஏதுமின்றி இருக்கும் வரலாறை வேறாக மாற்றி பொருளாதாரம், வரலாறு என்றேல்லாம் நாம் பேசலாம். ஆனால் யதார்த்தம் முற்றிலும் வேறாகத்தான் இருக்கும்.
இன்று உலகை பாருங்கள். உலக மூலதனம் இயங்கும் பாணியை கவனியுங்கள். அது கொள்ளும் கலாசாரத்தையும் உற்பத்தி மாற்றங்களையும் நுட்பமாக்குங்கள். அங்கிருந்து தொடங்குவது மட்டும்தான் உங்களின் விடிவாக இருக்கும். அந்த விடிவில் நிச்ச்சயம் மார்க்ஸ் இருப்பார்.
– மீள்
முகநூலில் : ராஜசங்கீதன்
disclaimer

புதிய ஜனநாயகம் – மார்ச் 2022 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் மார்ச் – 2022 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா- ரூ.240
இரண்டாண்டு சந்தா- ரூ.480
ஐந்தாண்டு சந்தா- ரூ.1,200
புதிய ஜனநாயகம் – மார்ச் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !
தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561
வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பாசிசத்திற்கான பாதை செப்பனிடப்படுகிறது, எச்சரிக்கை!
  2. தமிழகத்தில் காலூன்ற எத்தனிக்கும் காவி பாசிஸ்ட்டுகள்
  3. டெக் ஃபாக் செயலி : காவி பாசிஸ்டுகளின் பிடியில் டிஜிட்டல் உலகு!
  4. தில்லையில் தொடரும் தீட்சிதர் ஆதிக்கம் : தன்மானத் தமிழன் இனியும் சகிக்க மாட்டான்!
  5. கவுத்தி – வேடியப்பன் மலை : கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகத் தொடரும் போராட்டம்!
  6. குழந்தைத் திருமணச் சட்டம் 2021 : சீர்திருத்தச் சட்டமல்ல, ஒடுக்குமுறை திட்டம்!
  7. வீரளூர் சாதிவெறியாட்டம் : அணையா நெருப்பாக தமிழகத்தை தகிக்கும் சாதிவெறி!

தவறாமல் வாங்கிப் படியுங்கள் !! சந்தா செலுத்துங்கள் !


தோழமையுடன்,
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

தில்லையில் தமிழனுக்கு தமிழுக்கும் தடை ! – திருவாரூர் ஆர்ப்பாட்டம் !

ஸ்லாமியருக்கு ஹிஜாப் தடை!
தில்லையில் தமிழனுக்கும் தமிழுக்கும் தடை!
தில்லை இருப்பது தமிழ்நாடா?
அதற்குள் ஒரு தனி நாடா?
தமிழக அரசே!
தில்லை கோயிலை இந்து அறநிலைத்துறையின் கீழ் கொண்டுவர சிறப்புச் சட்டம் இயற்று”
என்ற முழக்கங்களின் கீழ் மார்ச் 11 அன்று காலை 11 மணியளவில் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் த. சண்முகசுந்தரம் தலைமையேற்றார்.
ஆரூர் சீனிவாசன், மாநில கொள்கை பரப்பு இணைச்செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், ப. மோகன், திராவிடர் கழகம் மாவட்ட தலைவர், அருண் காந்தி திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர்,  புரட்சி நெப்போலியன் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஷேக் அப்துல்லா மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர்,  முரளி மாவட்ட பொருளாளர் மக்கள் அதிகாரம், கிருஷ்ணமூர்த்தி வேதாரண்யம் பகுதி செயலாளர் மக்கள் அதிகாரம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

This slideshow requires JavaScript.


மக்கள் அதிகாரம்
திருவாரூர் – 6374741279

அன்றே சொன்னது புதிய ஜனநாயகம் : ஆம் ஆத்மி, பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிகள் !

புதிய ஜனநாயகத்தின் பார்வையில், பா.ஜ.க, ஆம் ஆத்மி-இன் தேர்தல் வெற்றிகள்!
.பி, உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு நடைபெற்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 10-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. ஐந்து மாநிலங்களில் பஞ்சாப் நீங்கலான மற்ற நான்கு மாநிலங்களிலும் பா.ஜ.க. மிகப் பெரிய வெற்றியைபெற்றுள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
403 தொகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய மாநிலம் உத்தரப் பிரதேசம். இங்கு வெற்றி பெறுவதானது, 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவதை தீர்மானிக்கும் முக்கிய காரணி. எனவே, அம்மாநிலத் தேர்தல் முடிவுகள் அனைவராலும் கவனிக்கப்பட்டன.
உ.பி.யை பொறுத்தவரை, தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும் சரி, பிந்தையதும் சரி சீட்டுகளைக் கூடக் குறையப் பெற்றாலும் பா.ஜ.க.வே ஆட்சியமைக்கும் என்று அறுதியிட்டன. அதே நேரம், தொடர்ந்து வந்த கருத்துக்கணிப்புகளில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள் அதிகரித்துச் சொல்லபட்டன.
எனவே, பா.ஜ.க.விற்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் கடுமையான போட்டி இருக்குமென்று விவாதிக்கபட்டது. ஒருபடி மேலே போய், “இந்த முறை பா.ஜ.க. படுதோல்வியைச் சந்தித்து சமாஜ்வாதி கட்சியே ஆட்சியைப் பிடிக்கும்” என்ற அளவிற்கு பா.ஜ.க. எதிர்ப்பாளர்கள், ஜனநாயக சக்திகளில் ஒரு பிரிவினர் பேசிவந்தனர்.
படிக்க :
உ.பி : யோகி ஆட்சியில் அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் படுகொலை !
கர்நாடகா, திரிபுரா, அசாம் : பற்றிப் படர்ந்து வரும் ‘இந்துராஷ்டிர பேரபாயம்’ || குறுந் தொடர்
ஆனால், உ.பி. தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்கி நடைபெற்று வந்தபோதே, கடந்த டிசம்பர் மாதம் வெளிவந்த இதழில், “உத்தரப் பிரதேசம்: இந்துராஷ்டிரத்திற்குள் ‘சாத்தியமான மாற்று’ இல்லை” என்ற கட்டுரையில், இத்தேர்தலின் போக்கு பற்றி, பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ்.க்கு “மாற்று கட்சி” என்று சொல்லிக் கொள்ளும்படி யாரும் இல்லை என்று விளக்கி எழுதியிருந்தோம். நாம் கணித்தவாறே தேர்தல் முடிவுகளும் வந்துள்ளன.
உத்தரப் பிரதேசம்: பா.ஜ.க.வை மீண்டும் வெல்ல வைத்தது எது?
“தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு எதிராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் கட்சிகளைப் போலல்லாமல் உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க.விற்கு எதிராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் காங்கிரஸ் உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகள் எதுவும் அதன் காவிக் கொள்கையை எதிர்த்து மூச்சுகூட விடுவதில்லை.
இவர்கள் காவி அரசியலை எதிர்ப்பவர்களில்லை என்பது பழையநிலை; பா.ஜ.க.வை எதிர்ப்பதாகச் சொல்லி களம் காண்பவர்களே, அதன் ‘இந்து அரசியலை’ தன்வயப்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தற்போது முதிர்ச்சிபெற்று வரும் புதிய எதார்த்தம். ஆம், அடுத்த ஆண்டுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துக் கொண்டிருக்கின்றன – “உத்தரப் பிரதேசம்: இந்துராஷ்டிரத்திற்குள் ‘சாத்தியமான மாற்று’ இல்லை”.
உத்தரப் பிரதேசத்தில், பா.ஜ.க. எதிர்ப்பு தேர்தல் களம் இப்படித்தான் இருந்தது. இதுகுறித்து விரிவாக அக்கட்டுரையில் விளக்கியிருக்கிறோம்.
“உண்மையான இந்துக்கள் நாங்கள்தான்” என்று பறைசாற்றிக்கொண்ட காங்கிரஸ் துடைத்தொழிக்கப்பட்டிருக்கிறது. “கிருஷ்ணரே என்னுடைய கனவில் வந்து, உன்னுடைய தலைமையில்தான் இராமராஜ்ஜியம் அமைக்கப்படும் என்று சொன்னார்” என்று பிரச்சாரம் செய்த அகிலேஷ் யாதவையும் உ.பி. மக்கள் வெல்லவைக்கவில்லை.
“முஸ்லீம்களுக்கு ஆதரவான கட்சி, பயங்கரவாத கட்சி” என்று சமாஜ்வாதி கட்சியை தாக்குதல் நிலையில் விமர்சித்து ஒதுக்கியது பா.ஜ.க. “இது 80 சதவிகிதத்தினருக்கும் 20 சதவிகிதத்தினருக்கும் இடையிலான போட்டி” என்று வெளிப்படையாக இந்து-முஸ்லீம் மோதலைத் தூண்டும் வகையில் பேசிய யோகியின் பிரச்சாரம் எடுபட்டிருக்கிறது.
எமது மேற்கூறிய கட்டுரையில் கூறியுள்ளதைப் போல, “பா.ஜ.க.வை எதிர்த்து காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் போட்டியிடுகின்றன. பிரச்சாரங்களின் உள்ளடக்கமோ பா.ஜ.க.வின் ‘இந்து’ அரசியல் VS பா.ஜ.க. எதிர்ப்பு ‘இந்து’ அரசியல் என்பதாக உள்ளது. ‘சாத்தியமான மாற்று’ என்று எவையும் நம் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை புலப்படவில்லை” என்று எழுதியிருந்தோம்.
உண்மையான ‘இந்து அரசியலிடம்’, ‘போலியான இந்து அரசியல்’ தோற்றுப் போயிருக்கிறது. நமது மதத்தை, தேசத்தை பாதுகாக்கும் ‘ஒரிஜினல்’ பாதுகாவலர்கள் பா.ஜ.க.தான் எனக் கருதியதால், அக்கட்சியை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள் உ.பி மக்கள். தேர்தல் பிரச்சாரமே ‘இந்து அரசியல்’ என்று போன பின்னர், பா.ஜ.க.வைத் தவிர வேறு யாரையும் ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்று அவர்களிடம் கேட்க முடியுமா?
30 ஆண்டுகால வரலாற்றில், உத்தரப் பிரதேசத்தில் இரண்டாவது முறையாக ஒரு கட்சி மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததில்லை என்ற நிலையை உடைத்திருக்கிறார்கள் காவி பாசிஸ்டுகள். 255 தொகுதிகளில் வென்றதோடு, சென்ற முறை பெற்ற 39.67 சதவிகிதம் வாக்குகளைவிட அதிகமாக, தற்போது 41.33 சதவிகிதம் வாக்கு பெற்றுள்ளார்கள்.
ஆம் ஆத்மி கட்சி வெற்றியை எப்படி பார்ப்பது?
இன்னொரு பக்கம், ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் தனக்கு ஏற்கெனவே இருந்த பலத்தையும் இழந்து, ஒரு “தேசியக் கட்சி” என்று சொல்வதற்கான தகுதியே கேள்விக்குறியாகியிருக்கிறது காங்கிரஸ் கட்சி. இதுவும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. எதிர்ப்பாளர்கள் இடையே ஒரு நம்பிக்கையின்மையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
பஞ்சாபில் கூட மக்கள் பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரசைப் பார்க்கவில்லை. ஆம் ஆத்மி கட்சியை பெரும்பான்மையாக வெற்றி பெறவைத்துள்ளார்கள். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஆம் ஆத்மியின் வெற்றியை அறுதியிட்டுச் சொன்னாலும் பலருக்கும் இது ஆச்சரியமாகவே இருந்தது.
இவ்வெற்றியை ஒரு ‘புரட்சி’ என்று சொல்கிறார் கெஜ்ரிவால், விரைவில் இது நாடு முழுக்க பரவும் என்றும் சொல்கிறார்.
குறுகிய காலத்தில் ஒரு கட்சி, ஒரு மாநிலத்தைத் தாண்டி இன்னொரு மாநிலத்தில் எப்படி பெரும்பான்மை அடிப்படையில் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது. தேசிய அளவில் தன்னை ஒரு அடையாளமாக காட்சிப்படுத்திக்கொள்ள முடிகிறது என்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.
இதுபற்றி எமது மேற்கூறிய கட்டுரையிலேயே, “ஆம் ஆத்மி: ஆளும் வர்க்கங்களுக்கு வாய்த்த ஸ்டெப்னி; ஆர்.எஸ்.எஸ்.க்கு வாய்த்த மற்றொரு அரசியல் கருவி!” என்ற உட்தலைப்பில் விளக்கியுள்ளோம்.
“…. … தொகுப்பாக பார்க்கும்போது, மற்ற கட்சிகளைவிட ஆம் ஆத்மி பேசும் இந்துத்துவ அரசியல் நேரடியாக காவி பாசிசத்துடன் நெருக்கமுடையது.
… .. ஆம் ஆத்மியின் இந்தப் போக்கை விமர்சிக்கும் லிபரல்கள், அக்கட்சியை ‘பா.ஜ.க.வின் பி டீம்’ என்கின்றனர். ஆம் ஆத்மி பா.ஜ.க.வின் பி டீம் என்று சொல்வதைவிட ஆளும் வர்க்கங்களின் பி டீம் என்று சொல்வதுதான் பொருத்தமானது. மோடி அரசின் பொருளாதாரத் தாக்குதல்களால் கிளர்ந்தெழும் உழைக்கும் மக்கள் நாளுக்குநாள் பா.ஜ.க.வின் மீது அதிருப்தியையும் ஆத்திரத்தையும் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் அதன் சித்தாந்தமான இந்துத்துவத்தின் மீதோ, தேசவெறியின் மீதோ அல்ல. இச்சூழலில் பா.ஜ.க.வின் செல்வாக்கு சரிந்தால் அதே ‘இந்துத்துவம் – தேசவெறியைப்’ பேசி வெகுமக்களைக் கவரக்கூடிய ஒரு கட்சியாக உருமாற வாய்ப்புள்ள ஆம் ஆத்மியை ஆளும் வர்க்கங்கள் தத்தெடுத்துக் கொள்ளும். சுருக்கமாகச் சொன்னால், பா.ஜ.க. என்ற டயர் பஞ்சரானால் வேறொன்றை மாற்றிக் கொள்வதற்கான ஸ்டெப்னியாக (Stepney) ஆளும் வர்க்கங்களுக்கு வாய்த்திருக்கிறது ஆம் ஆத்மி.
மேலும் ஆர்.எஸ்.எஸ். என்ற பாசிசப் படை, பா.ஜ.க. என்ற கட்சியை மட்டும் பயன்படுத்தித்தான் இந்துராஷ்டிரத்தை அடையவேண்டுமென்பதில்லை. ஆர்.எஸ்.எஸ்.க்கு பா.ஜ.க. ஒரு கருவி மட்டுமே. பா.ஜ.க. அல்லாத வேறொரு கட்சியையும் கூட ஆர்.எஸ்.எஸ். தங்கள் அரசியல் கருவியாக பயன்படுத்திக் கொள்ளமுடியும்” என்று எழுதியிருந்தோம்.
எனவே, ஆளும் வர்க்கங்களும் ஆர்.எஸ்.எஸ்-ம் தங்களுக்கான ஒரு மாற்றுக் கட்சியாக வைத்துள்ளதுதான் ஆம் ஆத்மி. பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்ற பின், “தேசிய அளவில் காங்கிரசுக்கு எதிரான இயல்பான மாற்றாக ஆம் ஆத்மி வளரும்” என்று அக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரான ராகவ் சதா பேசியிருக்கிறார்.
ஆம் ஆத்மி கட்சியின் ‘பிறவிப் பயன்’ என்ன என்று ராகவ் சதா விளக்கியதிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.
படிக்க :
யோகி ஆட்சியில் உ.பி : பாலியல் வன்முறையின் தலைநகரம் !
உ.பி-யில் தொடரும் அவலம் : 19 வயது தலித் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை !
எனவே, தொகுப்பாக ஐந்து மாநிலத் தேர்தல் முடிவைப் பொறுத்தவரை நான்கு மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றிபெற்றிருக்கிறது. ஆனால் ஐந்து மாநிலங்களிலும் (பஞ்சாபில் ஆம் ஆத்மியையும் சேர்த்து) ஆர்.எஸ்.எஸ். வெற்றி பெற்றிருக்கிறது என்றுதான் பார்க்க வேண்டியிருக்கிறது.
 000
கொரோனா காலத்தில் ஏற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் துயரம், அரசு மருத்துவ மனையிலேயே ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் இறந்த குழந்தைகள், கங்கை கரையில் செத்து மிதந்த பிணங்கள், பெண்களுக்கு எதிரான வல்லுறவு குற்றங்கள், தலித்துகள்-முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள், காரை ஏற்றி விவசாயிகளை படுகொலை செய்தது – என இவ்வளவு அநீதிகளுக்கு பிறகும் பா.ஜ.க.வை தேர்ந்தெடுத்திருக்கிறார்களே என்று உ.பி. மக்களை நம்மவர்கள் கடிந்து பேசலாம்.
தங்களின் இழிநிலையையே சிந்தித்து பார்க்க முடியாத அளவிற்கு, உ.பி மக்களுக்கு மதவெறி போதை தலைக்கு ஏற்றப்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். எனினும் இத்தனை கொடுமைகளுக்கும் எதிராக, “இவைகளுக்கெல்லாம் காரணம் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. தலைமையிலான காவி – கார்ப்பரேட் பாசிசம்தான். இதை வீழ்த்தாவிட்டால் வாழ்வில்லை” என அம்மக்களை அணிதிரட்டி, பாசிசத்திற்கு எதிராக வர்க்க உணர்வூட்ட யார்/எந்த கட்சி இருக்கிறது அங்கே? “நானும் இந்துதான். நாங்கள் அமைக்கப் போவதும் இராமராஜ்ஜியம்தான்” என்று பாசிசத்திற்கு பலியாகிப் போன ஓட்டுக் கட்சிகளைத் தாண்டி அங்கு யாருமில்லை.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வை எதிர்த்து நிற்பது என்பது பாசிச எதிர்ப்பு அரசியல் பேசுவதுதான்; அதற்கெதிராக களப்போராட்டங்களை முன்னெடுப்பதுதான்; இந்துராஷ்டிரத்திற்கு எதிரான அணிசேர்க்கையே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.விற்கு எதிரான “சாத்தியமான மாற்று”.

புதிய ஜனநாயகம்
ஆசிரியர் குழு.

தில்லையில் ஆதிக்கம் செலுத்தும் தீட்சிதர் கும்பல் || விடுதலை இராஜேந்திரன் உரை !

தில்லை கோவிலில் தமிழுக்கு அனுமதி மறுத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணின் மீது தாக்குதல் தொடுத்த பார்ப்பன தீட்சிதக் கும்பலை கைதுசெய்து, தில்லை கோவிலில் நந்தன் நுழைந்த வாயிலை அடைத்து எழுப்பப்பட்டிருக்கும் சுவரை இடிக்க வேண்டி வலியுறுத்தி, 11.03.2022 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக புரட்சிகர அமைப்புகள் கலந்துகொண்டன. திராவிடர் விடுதலைக் கழகம் அமைப்பின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் அவர்கள், தில்லை தீட்சிதர்களின் பொய்களையும் புரட்டுகளையும் அம்பலப்படுத்தி பேசினார்.
மத்திய அரசு அதிகாரிகளில் இருந்து, மாநில அரசு அதிகாரிகள் வரை அனைத்து மட்டத்திலும் அவர்கள் தமது செல்வாக்குக்குட்பட்ட நபர்களைக் கொண்டிருப்பதை விரித்துரைத்தார். அவரது உரையின் முழுமையான காணொலியை இங்கு காணலாம் !

பாருங்கள் ! பகிருங்கள் !

தில்லையில் தமிழுக்குத் தடை : நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

பத்திரிகை செய்தி

09.03.2022

இஸ்லாமியர்களுக்கு ஹிஜாப் தடை! தில்லையில் தமிழனுக்கு தமிழுக்கும் தடை!
தில்லையில் இருப்பது தமிழ்நாடா? அதற்குள் ஒரு தனி நாடா?
தில்லை கோயிலை இந்து அறநிலைத்துறையின் கீழ் சிறப்பு சட்டம் இயற்று !

என்ற தலைப்பின் கீழ் 09.03.2022 புதன்கிழமை மாலை 5.00 மணி அளவில் நெல்லை செய்துங்கநல்லூர், பெருமாள்புரம், பாளையங்கோட்டை காவல்துறை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தது. கடைசியாக வண்ணாரப்பேட்டையில் ஐனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மக்கள் அதிகாரம் சார்பாக ஐனநாயக அமைப்புகள் ஆர்ப்பாட்ட நிகழ்வுக்கு வரும்போது போலீசுத்துறை “மக்கள் அதிகாரம் ” தடை செய்யப்பட்ட அமைப்பு என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என்றும் தெரிவித்திருக்கின்றனர். அதை மீறி ஆர்ப்பாட்ட இடத்தில் நின்றால் கூட கைது செய்வோம் என்று மிரட்டியுள்ளது போலீசு.

தமிழன் கட்டிய கோயிலில் தமிழனும், தமிழும் போக முடியவில்லை. அதை எதிர்த்து ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினால், அதனை தடுத்து மக்கள் அதிகாரம் தோழர்களையும் மற்றும் இதர ஜனநாயக அமைப்பு தோழர்களையும் கைது செய்தது.

தில்லை என்பது மக்கள் சொத்து !
தீட்சத பார்ப்பனக் கும்பலை கைது செய் ! கைது செய் !
ஆடை என்பது எங்கள் உரிமை !
பார்ப்பனியத்தை விரட்ட பெரியாரின் தடியை கையிலெடு! என தோழர்கள் முழங்கினர்.

தி..மு.க திராவிட மாடல் தான் இந்த அடக்குமுறை ! திமுக பெரியார் மண்! சமூக நீதி! என்று சொல்லி ஆட்சிக்கு வந்தது. ஆனால் தில்லைக் கோயிலில் தமிழர்கள் போனால் தீட்சித பார்ப்பன ரவுடி கும்பல் அடிக்கிறது.

தில்லைக் கோயிலில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினால் அடக்குமுறை செய்கிறது போலீசுத்துறை. நெல்லையில் BJP, RSS கும்பலுக்கு எதிராக பேசினால் தடை. இதுதான் அறிவிக்க படாத சட்டமாக இருக்கிறது . உழைக்கும் மக்களுக்கு எதிராக “காவி-கார்ப்பரேட்” பாசிச கும்பலுக்கு எதிராக ஐனநாயக அமைப்புகள், விவாசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து களத்தில் முறியடிப்போம்!

தோழமையுடன்
செ.செல்வம்
நெல்லை மண்டல செயலாளர்
மக்கள் அதிகாரம்
தொடர்பு : 9385353605

 

“டிராட்ஸ்” (TRADS) : காவி பாசிசத்தின் இணையப் படை!

டந்த ஜனவரி மாதம் 1-ஆம் தேதி காலையில் புத்தாண்டு வாழ்த்து செய்திகளை எதிர்நோக்கி தொலைபேசியை எடுத்த முசுலீம் பெண்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், அவர்களை ‘புல்லி பாய்’ என்ற செயலியின் மூலம் ஏலம் விடும் செய்தி வந்தடைந்தது.
“இன்றைய நாளுக்கான ஏலம்” என்ற பெயரில், நூற்றுக்கும் மேற்பட்ட முசுலீம் பெண்களின் புகைப்படங்கள், அவர்களின் சமூக வலைதளங்களில் இருந்தே எடுத்து ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்பட்டிருந்தது. முசுலீம் மக்களை உளவியல் ரீதியில் தாக்கித் துன்புறுத்துவதை நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்ட இதில், 16 வயது குழந்தை முதல் JNU பல்கலைக்கழகத்திலிருந்து காணாமல் போன தன் மகன் நஜீப் அகமதுக்காக நீதி கேட்டு போராடிவரும் 65 வயதான தாய் வரை அனைவரின் புகைப்படங்களும் ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்பட்டிருந்தது. இவற்றில், அவர்களின் தனிப்பட்ட விவரங்களும் இணைக்கப்பட்டிருந்தது.
இதுபோன்ற பதிவுகள், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் “இராமர் கோயில் கட்டுவதை எதிர்க்கும் பெண்கள்” என்ற தலைப்பில் விளம்பரமாக்கப்பட்டன. இந்த இணைய துன்புறுத்தலில், முக்கியமாக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிஸ்டுகளின் சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் முசுலீம் வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களே குறிவைத்து தாக்கப்பட்டிருந்தனர்.
படிக்க :
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை || மக்கள் அதிகாரம் அறிக்கை
உக்ரைன் : ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர் | தோழர் சுரேசு சக்தி முருகன்
மண்டை முழுவதும் காவி வெறி தலைக்கேறிய சில கேடுகெட்ட கும்பல்கள், சமூக வலைதளங்களை முசுலீம் வெறுப்பு ஆயுதமாக பயன்படுத்தும் – இதுபோன்ற ஏலம் விடும் முறைக்கு புல்லிபாய் செயலி புதிதல்ல. இது மூன்றாவது முறை.
முதலாவதாக, கடந்த ஆண்டு மே 13-ம் தேதி, இஸ்லாமியர்களின் ஈகை திருநாளன்று ‘லிபரல் டாகே’ என்ற யூடியூப் சேனலில் ஒரு காணொளி பரப்பப்பட்டது. “ஈத் சிறப்பு” என்ற பெயரில் அச்சேனலின் நேரடி ஒளிபரப்பில், பாகிஸ்தான் மற்றும் நம் நாட்டு முசுலீம் பெண்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்தி, பாலியல்ரீதியாக துன்புறுத்தும் வகையில் பேசி ஏலம் விட்ட சகிக்கமுடியாத கொடூரம் அரங்கேறியது. அக்காணொலி நீக்கப்படுவதற்கே பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் கொடுக்கப்பட வேண்டியிருந்தது.
இரண்டாவது, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தற்போது பேசப்படும் “புல்லி பாய்” என்ற செயலியைப் போல “சுல்லி டீல்ஸ்” என்ற செயலி வெளிவந்து பெரும் சர்ச்சையாகியது. இதில் எண்பதுக்கும் மேற்பட்ட முசுலீம் பெண்களின் புகைப்படங்கள் ஏலம் விடப்பட்டிருந்தது..
இந்த ‘சுல்லி’ மற்றும் ‘புல்லி’ என்ற பெயர்கள் சங்க பரிவாரத்தினர், முசுலீம் பெண்களை இழிவாக பேச பயன்படுத்தும் ‘முல்லி’ என்ற சொல்லின் மாறுபாடாகும். “சுல்லி டீல்ஸ்“ செயலி வெளிவந்தபோதே பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டு வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக யாரும் கைதுசெய்யப்படவில்லை; வழக்கு விசாரணையே ஊற்றி மூடப்பட்டது.
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதிகள் 2021-ஐ கொண்டுவருவதற்காக, “இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் பெண்கள், சிறுமிகளை ஆபாசமாக சித்தரிக்கும் படங்கள், காணொளிகளை பகிர்வது அதிகரித்துவிட்டது. அவர்களை ஒடுக்க வேண்டும்” – என்றெல்லாம் மோடி அரசு கூறிய காரணங்கள் எத்தகைய அண்டப் புளுகு என்பதை இந்த நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.
000
தற்போதைய புல்லி பாய் விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புல்லி பாய் செயலியைக் கண்டித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் என நாடு முழுவதிலிருந்து கிட்டத்தட்ட 4,500 பேர் கையெழுத்திட்டு ஒரு பகிரங்க கடிதத்தை எழுதியுள்ளார்கள்.
இவ்வாறு பல்வேறு தரப்புகளிலிருந்து கண்டனங்களும் புகார்களும் வந்ததையடுத்து வேறு வழியின்றி காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. இதுதொடர்பாக, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் பிஷ்னோய், பெங்களூருவை சேர்ந்த விஷால் குமார், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மயங்க் ராவல், ஸ்வேதா சிங் மற்றும் இந்தூரை சேர்ந்த உம்கரேஷ்வர் தாக்கூர் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த “புல்லி பாய்” என்ற செயலி கிட்ஹப் (GitHub) என்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தளத்தில் வெளியிடப்பட்டது. கிட்ஹப் என்பது உலகின் மிகப்பெரிய திறந்தவெளி பயன்பாடுகளை உருவாக்கும் தளமாகும். யார் வேண்டுமானாலும் இந்த தளத்தில் எந்த மென்பொருள் குறியீட்டையும் பதிவேற்ற முடியும். இதற்குமுன் வெளிவந்த சுல்லி டீல்ஸ் என்ற செயலியும் இந்த தளத்தில் வடிவமைக்கப்பட்டதுதான்.
இதில் சுல்லி டீல்ஸ் செயலியை உருவாக்கிய உம்கரேஷ்வர் தாக்கூரும் புல்லி பாய் பயன்பாட்டை உருவாக்கிய நீரஜ் பிஷ்னோய் என்பவனும் “ட்ரேட்ஸ்”(TRADS) என்ற குழுவைச் சார்ந்தவர்கள் என்றும் அங்கிருந்துதான் முசுலீம் பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி ஏலம் நடத்தும் யோசனை வந்தது எனவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள். மேலும் கைதான நீரஜ் பிஷ்னோய் என்பவன் தாம் செய்ததில் தவறொன்றும் இல்லை, நான் செய்தது சரியே என்று கூறியுள்ளான்.
000
புல்லி பாய் மற்றும் சுல்லி டீல்ஸ் சம்பவங்களைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் இளைஞர்களிடையே “ட்ரேட்ஸ்” என்ற பெயரில் ஒரு குழு செயல்படுவது தெரிய வந்துள்ளது. ட்ரேட்ஸ் (Trads) என்பது “Traditionalists – பழமைவாதிகள்” என்பதன் சுருக்கமாகும். இவர்கள் பெரும்பாலும் இணைய வழியில், தன்னிச்சையாக செயல்படுபவர்களாக உள்ளனர்.
இவர்கள் நவ நாஜிக்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளின் மாற்று வலது (alternate right) என்று அழைக்கப்படும் வெள்ளை இனவெறி இயக்கங்களை முன்மாதிரியாக கொண்டு செயல்படுகிறார்கள். ஹிட்லர் யூதர்களை செய்தது போல, இஸ்லாமியர்களை வதைமுகாம்களில் அடைத்து சித்திரவதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர்கள் உயர்வானவர்கள், மற்றவர்கள் கீழானவர்கள் என்ற வர்ணாசிரம கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்; ஆண்கள் சுகிப்பதற்கான சதைப் பிண்டமாகவும் அடிமைகளாகவுமே பெண்களை பார்க்கச் சொல்லும் மனு நீதியை இந்திய அரசியலமைப்புச் சாசனமாக மாற்றவேண்டும் – என்று இவர்கள் கூறுகிறார்கள்.
இவர்கள் ஆர்.எஸ்.எஸ்-இன் இந்துராஷ்டிரக் கனவை கொண்டிருந்தாலும் அவர்களின் சில சாத்வீக (மென்மையான) வழிமுறையை கடுமையாக விமர்சிக்கிறார்கள். இவர்களை பொறுத்தவரை முஸ்லிம்கள், தலித்துகள், சீக்கியர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறையை மேலும் பகிரங்கமாக செய்யவேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த செயலியை கூட சீக்கியர்களை இழிவுபடுத்த அவர்களின் பெயர்களை பயன்படுத்திதான் உருவாக்கியுள்ளார்கள்.
சிறுபான்மையினர் மீதான ட்ரேட்ஸ் குழுவினரின் வக்கிரங்களை அவர்கள் வடிவமைத்து பரப்பிய மீம்ஸ்-களில் தெளிவாக காணமுடியும். பாலியல் வல்லுறவினால் இறந்த சிறுபான்மையின பெண் மீது சிறுநீர் கழிப்பது, தலித்துகளை கரப்பான்பூச்சிகளாக சித்தரித்து விஷவாயு மூலம் கொல்வது, முசுலீம் பெண்களை வல்லுறவு கொள்வது போன்று குரூரமான வடிவங்களில் மீம்ஸ்-களை பதிவிடுகிறார்கள். இதையெல்லாம் நகைச்சுவையாக்கி மகிழும் அளவிற்கு இவர்களுக்கு வெறி தலைக்கு ஏற்றப்பட்டிருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வெறுப்பை பிரச்சாரம் செய்ததற்காக தடை செய்யப்பட்ட பல டிவிட்டர் கணக்குகள் உண்மையில் ட்ரேட்ஸ்-ஆல் நடத்தப்பட்டதாக மும்பை காவல்துறை கண்டறிந்துள்ளது. இந்த புல்லி பாய் விவகாரத்தில் கைதானவர்கள் எல்லாரும் வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பார்க்கும்போது இவர்களைப் போன்றவர்கள் நாடுமுழுவதும் பரவலாக இருப்பதை உணரமுடிகிறது.
படிக்க :
புல்லிபாய் : சங்கிகளின் முசுலீம் வெறுப்பு அரசியல்
குறுஞ்செய்திகள் : புல்லிபாய், டெக் ஃபாக் செயலி விவகாரம் – கூடுதல் தகவல்கள்
மேலும், இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விசயம் என்னவெனில், இத்தகைய ஈனச் செயலில் ஈடுபட்டவர்கள் 18 முதல் 22 வயது வரை உள்ளவர்கள் என்பதோடு, அனைவரும் மாணவர்கள். இதில் மும்பை போலீசால் கைதுசெய்யபட்ட ஸ்வேதா சிங் என்பவர் 18 வயதே ஆன பெண். காவி பாசிசம் இளம் தலைமுறையினரில் ஒரு பகுதியினரை தனது வலுவான படையணிகளாக கட்டி வளர்த்துவருகிறது என்பதையே இவை காட்டுகிறது.
இவர்கள் ட்ரேட்ஸ் என்ற இணையவழி குழுவினர்தான். நேரடியாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை என்ற தகவல் நம்மை மேலும் திடுக்கிடச் செய்கிறது. ஏனெனில், இது காவி பாசிச கருத்துகளுக்கு உள்ள செல்வாக்கினை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.
அமைப்பு சாராமலேயே கூட, உலகு தழுவிய ரீதியில் பாசிச கருத்துக்கள் மீண்டும் புத்தெழுச்சி பெற்றுவருவது ஒரு போக்காக உள்ளது என்பது உண்மைதான். தற்போது தெரியவந்துள்ள ட்ரேட்ஸ் என்ற குழுவினரையுமே அப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.
எனினும், இந்திய சூழலில் இதுபோன்ற பாசிஸ்டு கருத்தாளர்கள் உருவாவதற்கான அடித்தளமாக இருப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் பன்னெடுங்கால பிரச்சாரமே என்பதோடு இணைத்துதான் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
வேதம், புராணம், மனு நீதி, பகவத் கீதை, இந்திய கலாச்சாரம் என பலபல வழிகளிலும் காவி பாசிசக் கருத்துக்களை மக்களிடையே, குறிப்பாக இளம் பிஞ்சுகளிடையே (இதை புதிய கல்விக் கொள்கை செய்கிறது) திணித்துவரும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் கருத்துப் பிரச்சாரத்தையும் கள நடவடிக்கைகளையும் முறியடிக்கும் போராட்டத்தினால் மட்டுமே காவி பாசிசத்தின் கருத்தியல் செல்வாக்கை வீழ்த்த முடியும்.
இதில் நாம் கவனத்தை செலுத்தாத பட்சத்தில், இளம் தலைமுறை பாசிசத்திற்கு பலியாவதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்!
மதி

நிலப்பிரபுத்துவ – முதலாளிய பெண்ணியத்தை புறக்கணிப்போம் || ராஜசங்கீதன்

மார்க்சியமோ கம்யூனிசமோ புரட்சியோ பேசாமல் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தின விழாக்களே தமிழ்ச்சூழலில் அதிகம்.
இந்தியச் சூழலில் நிலவும் நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ இணக்கத்தை அடையாளம் கண்டு வினையாற்றுபவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் மட்டும்தான். இந்தியப் பெண்ணியத்துக்குள்ளும் இத்தகைய இணக்கம் நிலவுவதை அடையாளம் கண்டுதான் பாலின சமத்துவம் அல்லது பெண் விடுதலைக்கான இடத்தை நாம் பேச முடியும்.
இந்தியச் சூழலில் மூலதனத்தை இயக்குவது பார்ப்பன – பனியாக் கூட்டணியே. சக தோழர்கள் பலருக்கு இந்தப் பார்வையில் முரண் இருந்தாலும், யதார்த்தம் இதுவே. பண்பாட்டு ரீதியாக தாம் பெற வேண்டிய ஆதிக்கத்தின் பொருட்டு பார்ப்பனர்களும் வணிக ரீதியிலான பெருக்கத்தின் பொருட்டு பனியாக்களும் இணைந்தும் இயங்கும் புரிதலுக்குள்தான் நாம் பேசுகிற சமூக விடுதலை, சமத்துவம், சோசலிசம், பெண்ணியம், சாதி ஒழிப்பு ஆகிய அனைத்துமே புதைக்கப்பட்டிருக்கிறது.
உதாரணமாக பார்ப்பன பெண்களும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சாதிப் பெண்களும் ஒன்றிணைந்து இயங்கும் போக்கை தனித்தனியே நாம் பார்க்க முடியும். இதன் அர்த்தம் என்னவெனில் பார்ப்பனப் பெண் இச்சமூகத்தில் வகிக்கும் உயர்ச்சியும் கொண்டிருக்கும் மூலதனப் பரிச்சயமும் மேற்குறிப்பிட்ட ஒத்திசைவின் மூலம் தானும் பெற்றுவிடலாம் எனப் பட்டியல் சாதிப் பெண்ணும் பிற்படுத்தப்பட்டப் பெண்ணும் நம்புவதால்தான். அந்த சமரசம் ஒருவேளை நேர்ந்தாலும் அது அந்த இரண்டு பெண்களுக்கு இடையிலான ஆதாயமாக மட்டுமே மாறும் என்பதும் மொத்த சமூகத்தின் ஆதாயமாகவோ விடுதலையாகவோ அது மாற முடியாது என்பதுமே நிலப்புரபுத்துவ-முதலாளித்துவக் கூட்டு கொண்டிருக்கும் சூட்சுமங்கள்.
படிக்க :
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை || மக்கள் அதிகாரம் அறிக்கை
மேக்கேதாட்டு அணை : ஓட்டுப் பொறுக்கி – இனவெறி அரசியலில் பா.ஜ.க.வும் காங்கிரசும் ஓரணி !
எனக்குத் தெரிந்த ஒரு உயர்சாதிப் பெண் இருக்கிறார். அவர் ஒரு பட்டியல் சாதி இளைஞரின் வளர்ச்சிக்கு உதவுகிறார். அல்லது அப்படி காண்பித்துக் கொள்கிறார். ஆனால் அவரின் நட்புவட்டத்தில் இருக்கும் அனைவரும் வலதுசாரி ஆளுமைகள்தான். அப்பெண்ணுக்கு ஒரு பெரும் (யாருக்குமில்லா) வாய்ப்பு வாய்க்கிறது. அவரை சாதி ஒழிப்பு சமூகமும் கொண்டாடும். இடதுசாரி வட்டமும் கொண்டாடும். வலதுசாரிகளும் கொண்டாடுவார்கள். இவை எல்லாமும் தன்னுடைய தனிச்சலுகை அல்லது பார்ப்பன வாழ்க்கைமுறை எதையும் இழக்காமலே அவர் அடைந்து விடுகிறார்.
எனவேதான் சாதியம் என்கிற வார்த்தைப் பிரயோகத்தில் பெரிய உடன்பாடு இருப்பதில்லை. இந்தியாவில் சாதியம் என்பது பார்ப்பனீயம் மட்டும்தான்.
ஒரு காலத்தில் வருணாசிரமாக மலர்ந்து முதன்மையான இடத்தில் தங்களை நிறுத்திக் கொண்ட பார்ப்பனர்கள், காலப்போக்கில் எழும்பத் தொடங்கிய சூத்திர கலகத்தின்போது பிற்படுத்தப்பட்ட சாதிகளுடன் கைகளை குலுக்கிக் கொண்டனர். பனியாக்களின் அறிமுகத்தை சூத்திரச் சாதிகளுக்கு வழங்கி வளர்ச்சியை உருவாக்கிக் கொடுத்தனர். பட்டியல் சாதிகளை ஒடுக்கும் அதிகாரம் சூத்திரச் சாதிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
பிறகு பட்டியல் சாதி கலகம் நேரத் தொடங்க, பார்ப்பனீயம் அவர்களை நோக்கி நட்புக் கரம் நீட்டி, பிற்படுத்தப்பட்டோர் – பட்டியல் சாதியினர் ஆகியோருக்கு இடையிலான வேறுபாட்டை ஆழப்படுத்தும் வேலையைச் செய்கிறது. இரு சூழல்களிலும் ஒரு விஷயம் தெளிவு.
சமூகப் பொருளாதாரப் பண்பாட்டுத் தளங்களில் பார்ப்பனர் தக்க வைத்துக் கொள்ளும் முதன்மை இடம்!
இந்தியச் சூழலில், பார்ப்பனீயத்துடன் சமரசம் செய்து கொள்வதில்தான் சமூக மாற்றமும் பொருளாதார உயர்ச்சியும் நேர்வதாக நம்பப் படுகிறது.
பார்ப்பனீயம் மற்றும் பார்ப்பனரின் அணுக்கத்துடன் மட்டுமே மூலதனம் அல்லது உற்பத்திக் கருவிகளை கையாளக் கூடிய இடம் கிடைப்பதாக நம்பப்படுகிறது. இந்தியப் பெண்ணியக் கருத்தாடல்களும் இதே வழியைத்தான் பின்பற்றுகின்றன. ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தைத் தவற விடுகிறோம்.
பார்ப்பனீயம் மற்றும் தனிச்சலுகை ஆகியவற்றைப் புறக்கணிக்காத பார்ப்பனப் பெண்ணின் அணுக்கத்துடன் உயர்ச்சியும் வாய்ப்புகளும் கிட்டினாலும் அந்தப் பெண்ணுக்குக் கீழ்தான் நாம் இருப்போம். பார்ப்பன மற்றும் உயர்சாதி ஆணின் மூலதனத்தைக் கைப்பற்றுவதே பெண்ணியம் என நம்பி இயங்கும் அப்பெண்களின் செயல்திட்டத்தின்படி மட்டுமே நாம் இயங்குவோம். அதாவது ஓர் உயர்சாதி ஆணின் மூலதனத்தை ஓர் உயர்சாதி பெண்ணுக்கு மாற்றிக் கொடுக்கும் அரசியலாட்டத்தில் நாம் பகடைக் காய்களாக இருப்போம்.
படிக்க :
போரும் – உழைக்கும் பெண்களும் | க்ளாரா ஜெட்கின் | இக்பால் அகமது
காவிக் கல்வி : பெண்ணடிமைத்தனத்தை பரப்பும் சி.பி.எஸ்.ஈ !
பார்ப்பனீயத்தை உடைக்க வேண்டுமென்றாலும் வருணாசிரமத்தைத் தகர்க்க வேண்டுமென்றாலும் மெய்யான பெண் விடுதலை நோக்கியப் பாதையை அமைக்க விரும்பினாலும் சமத்துவத்துக்கான பார்வையை பெற வேண்டுமென்றாலும் செய்ய வேண்டியது ஒன்றுதான்.
பார்ப்பனீய மனநிலை அற்ற, தனிமனிதவாதம் பாராட்டாத, தன்னலம் பேணாத, தனிச்சலுகைகள் கொள்ளாத, உற்பத்திக் கருவிகள் மற்றும் மூலதனத்தை சமரசத்தின்வழி பகிர்ந்துக் கொள்ளச் சம்மதிக்காத, நிலப்பிரபுத்துவ – முதலாளியப் பெண்ணியவாதத்தை வேறு வார்த்தைகளில் போற்றாத, மூலதனம் மற்றும் உற்பத்திக் கருவிகளைப் பற்றி பேசாமல் ஆண் – பெண் கருத்தாடலாக மட்டும் பெண்ணியத்தைச் சுருக்காத, சமத்துவமான உழைக்கும் மகளிர் பெண்ணியம் மட்டுமே வழி.
ஏஞ்சலா டேவிஸ் சொன்ன ஒரு மேற்கோளுடன் முடிக்கிறேன் :
“பெண்ணியம் என்பது பாலின சமத்துவத்தை தாண்டியப் பல விஷயங்களைக் கொண்டது. பாலினத்தைத் தாண்டியும் பல விஷயங்களைக் கொண்டது”
முகநூலில் : ராஜசங்கீதன்
disclaimer

மேக்கேதாட்டு அணை : ஓட்டுப் பொறுக்கி – இனவெறி அரசியலில் பா.ஜ.க.வும் காங்கிரசும் ஓரணி !

டந்த ஆண்டு ஜூலை மாதம், “காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டியே தீருவோம்; இதற்கு தமிழக அரசின் ஒப்புதல் எதுவும் தேவையில்லை” என கூறியது எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு. திட்டமிட்டபடி கட்டுமானப் பணிகளையும் ஆரம்பிக்கத் தொடங்கியது.
சட்டத்திற்கு புறம்பாக பிரச்சினையை கிளப்பிவரும் கர்நாடக அரசின் அடாவடியை நிறுத்தாமல், அணை கட்டுமானப் பணிகள் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு தனது தமிழின பகைமையை காட்டியது மத்திய மோடி அரசு.
“இது சட்ட நெறிமுறைகளை மீறிய செயல், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று பா.ஜ.க. தவிர்த்த தமிழகத்தின் அரசியல் கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினர்.
படிக்க :
நூல் விமர்சனம் : வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி || நக்கீரன்
உ.பி : யோகி ஆட்சியில் அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் படுகொலை !
கர்நாடக அரசையும் மத்திய மோடி அரசையும் கண்டித்து விவசாய சங்கத்தினர் உட்பட பலரும் போராடினர். மக்கள் அதிகாரம் அமைப்பின் தருமபுரி மண்டலம் சார்பாக மேக்கேதாட்டு நோக்கி பேரணியும் முற்றுகைப் போராட்டமும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, தமிழகத்தின் கடுமையான எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது மேக்கேதாட்டு அணை.
இந்நிலையில், அகில இந்திய அளவில் பாசிச பா.ஜ.க.விற்கு எதிரான ஒரே மாற்று எனக் கூறிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சியின் கார்நாடக பிரிவு, ஓட்டு பொறுக்கும் அரசியலுக்காக மேக்கேதாட்டு அணை பிரச்சினையை கையில் எடுத்துள்ளது.
000
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு நீர்த்தேக்கக் கட்டுமானப் பணியை உடனடியாக நிறைவேற்றக்கோரி மேக்கேதாட்டிலிருந்து பெங்களூரு நோக்கி “எங்கள் தண்ணீர் எங்கள் உரிமை” என்ற முழக்கத்தின் கீழ் பத்து நாட்கள் பாதயாத்திரையை நடத்த திட்டமிட்டது கர்நாடக காங்கிரஸ்.
அதன்படி, கடந்த ஜனவரி 9 அன்று காலை, ராமநகர் மாவட்டம், கனகபுரா தாலுகாவில், காவிரி மற்றும் அர்காவதி ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் புடைச்சூழ, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முரசு கொட்டி பாதயாத்திரையை தொடங்கிவைத்தார்.
இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் துணை முதலமைச்சர் பரமேஸ்வர், முன்னாள் அமைச்சர்கள் உட்பட திரைத்துறையினர் பலரும் கலந்து கொண்டனர்.
பாதயாத்திரையைத் தொடங்கிவைத்து பேசிய எம்.மல்லிகார்ஜூன கார்கே, “இரு மாநிலங்களுக்கும் (கர்நாடகா-தமிழகம்) உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, இந்த திட்டத்தை தமிழகம் எதிர்ப்பதன் மூலம் தேவையற்ற சர்ச்சையை கிளப்பியுள்ளது” என்றார்.
கனகபுரா எம்.எல்.ஏ.வும் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார், “இந்த பாதயாத்திரை மக்களுக்கானது; காங்கிரஸ் கட்சிக்காகவோ, பதவிக்காகவோ அல்ல” என்றார். தொடர்ந்து, “அன்று இந்திய விடுதலைக்காக காங்கிரஸ் போராடியதுபோல, இன்று தண்ணீருக்காக பா.ஜ.க.வுக்கு எதிராக போராடுகிறோம்” என்று இழிவான இனவெறியை தங்களின் போலி விடுதலைப் போராட்டத்தோடு இணைத்தார்.
சித்தராமையாவோ, தனது தலைமையிலான காங்கிரஸ் அரசால்தான் மேக்கேத்தாட்டு அணை திட்டம் தொடங்கப்பட்டது என்றும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் மாநில மக்களுக்கு, ஆளும் பா.ஜ.க. துரோகம் இழைத்துள்ளதாகவும் தமிழகத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளதாகவும் சாடினார்.
இதன் மூலம் தமிழினத்தை வஞ்சிப்பதில் பா.ஜ.க.வை விட கர்நாடக காங்கிரஸ்தான் முன்னோடியாக இருக்கிறது என்று பறைசாற்றிக் கொண்டார். இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் மறுத்த பா.ஜ.க. முதல்வர் பசவராஜ் பொம்மை, “தனது ஆட்சிக்காலத்தில் மேக்கேதாட்டு திட்டத்தை நிறைவேற்றாமல் கர்நாடக மக்களுக்கு துரோகமிழைத்தது காங்கிரஸ்தான்” என குற்றம்சாட்டினார்.
மேலும், கிருஷ்ணா நதிநீர் திட்டத்திற்கு காங்கிரஸ் அறிவித்த ரூபாய் 10 ஆயிரம் கோடியில் வெறும் 7 ஆயிரம் கோடிதான் செலவு செய்யப்பட்டது என்பதை குறிப்பிட்டு, எந்தவொரு நீர்ப்பாசனத் திட்டத்திலும் காங்கிரஸ் கட்சி உறுதியாக நின்று செயல்படவில்லை என்றார்.
அத்துடன் “மேக்கேதாட்டு திட்டத்தை பா.ஜ.க.தான் மேற்கொண்டுவருகிறது. நான் முதலமைச்சரான பிறகு, திட்டம் குறித்த முழு அறிக்கையும் மத்திய நீர் ஆணையம் மற்றும் காவிரி கண்காணிப்பு வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இம்மாதம் இத்திட்டம் குறித்த கூட்டம் நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்” என்றார்.
000
ரூபாய் 9 ஆயிரம் கோடி செலவில், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் புதிய அணை கட்டுவதன் நோக்கம், குடிநீர் நீர்த்தேக்க கட்டுமானம் அமைத்து உபரி நீரைத் தேக்கிவைப்பதும், அதன் மூலம் பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பிற மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்குவது மற்றும் மின் உற்பத்தி செய்வதும்தான் என்கிறது கர்நாடக அரசு.
ஆனால், இது தமிழகத்தின் நீர் உரிமையை பறிக்கும் கர்நாடக கட்சிகளின் இனவெறித் திட்டம் என்பதோடு, பெங்களூருவிலுள்ள ஓட்டல், ரியல் எஸ்டேட் முதலாளிகளின் நலனுக்காகவே மேக்கேதாட்டில் புதிய அணை கட்டப்படுகிறது. கர்நாடகத்தின் நீர் ஆதாரத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் திட்டத்தை கர்நாடக மக்களின், விவசாயிகளின் நலனுக்கான திட்டம் என புளுகி வருகிறது கர்நாட இனவெறிக் கட்சிகள்.
கர்நாடகாவில், ஏற்கெனவே காவிரியின் துணையாறுகளின் குறுக்கே நான்கு பெரிய அணைகளும் ஐந்துக்கும் மேற்பட்ட சிறிய அணைகளும் கட்டப்பட்டுள்ளன. கர்நாடகவிலுள்ள பெரிய அணைகள் மூலம் மட்டுமே 104.55 டி.எம்.சி. நீர் சேமித்து வைக்கப்படுகிறது. அதனால், கர்நாடகத்தின் தேவைக்குப் போக மீதமான நீர்தான் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் மேக்கேதாட்டுவில் அணை கட்டப்பட்டால், இந்த உபரி நீரும் தமிழ்நாட்டிற்கு வராது.
காவிரி நதிநீரை நம்பி விவசாயம் செய்யும் தமிழ்நாட்டின் 26 லட்சம் ஏக்கர் பாசன நிலம் பாலைவனமாகிவிடும். சென்னை, ராமநாதபுரம், வேலூர், திருப்பூர் உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு குடிநீரும் கிடைக்காது.
ஏற்கெனவே, காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரைத் தர மறுத்துவரும் கர்நாடக அரசு, மேக்கேதாட்டில் அணை கட்டுவதன் மூலம் தமிழகத்தின் உரிமைக்கு நிரந்தரமாகச் சமாதிகட்ட முயற்சிக்கிறது.
000
பல வகைகளில் பா.ஜ.க. உடன் கொள்கை வேறுபாடு இருப்பதாக காட்டிக் கொள்ளும் காங்கிரஸ் கட்சி, தமிழகத்திற்கு விரோதமாக கன்னட இனவெறியை கிளப்பிவிடுவதில் பா.ஜ.க.வுடன் போட்டி போட்டுவருகிறது.
பலவீனமாக இருந்தாலும் தேசிய அளவில், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.விற்கு மாற்று காங்கிரஸ்தான். அதுதான் மதச்சார்ப்பற்ற கட்சி, தாராளவாத ஜனநாயக கட்சி. எனவே அடுத்த தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரசை ஆதரிக்கலாம் என்று சிந்திக்கக்கூடிய முற்போக்கு ஜனநாயக சக்திகளும் அறிவுத்துறையினரும் மேக்கேதாட்டு விசயத்தில், கர்நாடக காங்கிரஸின் செயல்பாடுகளை தேசியத் தலைமை கண்டுகொள்ளாமல் வாய்பொத்திக் கொண்டிருப்பதை சற்று காண வேண்டும்!
படிக்க :
நீட் தேர்வு : சட்டப் போராட்ட அனுபவம், களப்போராட்ட அவசியத்தை போதிக்கிறது!
ஆதாய அரசியலுக்கு உதவுகிறதா நீதிமன்ற தீர்ப்புகள் ? || அரவிந்தாக்ஷன்
ஓட்டுப் பொறுக்கிகளுக்கு, ஓட்டுப் பொறுக்குவதற்கு உட்பட்டதுதான் கொள்கை-கோட்பாடுகள். இனவெறியை தூண்டினால் ஓட்டு கிடைக்குமென்றால் காங்கிரசு அதற்கு தயாராகவே இருக்கும் என்று காட்டுகிறது.
இனவெறி மட்டுமல்ல, மதவெறியிலும்கூட கேரளாவில், பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்கும் விசயத்தில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வோடு காங்கிரசும் கூட்டு சேர்ந்துகொண்டதே இதற்கு சான்று.
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வைப் போல அல்ல, காங்கிரஸ் ‘மென்மையானது’ என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் இந்த ‘மென்மை’ காவி பாசிசத்தின் ‘வன்மை’யிடம் அடிபணிந்துவிடும் என்பதைக் குறிப்பிட்டுதான் நாம் சாடுகிறோம்.
எனவே பாசிச எதிர்ப்போ, அடிப்படை ஜனநாயக கோரிக்கைகளோ; அவற்றை வென்றெடுக்க வேண்டுமானால் மக்கள்திரளை அரசியல்படுத்துவதும் ஜனநாயக சக்திகளின் களப் போராட்டங்களும்தான் தீர்வளிக்குமே ஒழிய, ஓட்டுக்கட்சிகளில் ‘சாத்தியமான மாற்று’ தேடுவது அபத்தம் என்பதை மேக்கேதாட்டு விசயமும் நமக்கு சொல்லுகிறது.
வெண்பா

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை || மக்கள் அதிகாரம் அறிக்கை

பத்திரிகைச்செய்தி
10.03.2022
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழுக்கும், தமிழனுக்கும் தடை !
யானைக்கு திருட்டுத்தனமாக சொகுசு மண்டபம் கட்டும் தீட்சித பார்ப்பனர்கள் !
தில்லைக் கோயிலை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர சட்டம் இயற்று !
சென்றமாதம் தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் தமிழில் பாடச் சென்ற தாழ்த்தப்பட்ட பெண்ணை தாக்கிய தீட்சிதர்களுக்கு எதிராகவும் தில்லைக் கோயிலை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும், நந்தன் நுழைந்தான் என்பதற்காகவே தீண்டாமை என்று கூறி அடைக்கப்பட்டிருக்கும் தெற்கு வாயிலை உடைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை உள்ளிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளும் தொடர்ச்சியாக போராட்டத்தை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கிழக்கு கோபுரம் அருகே முன்னதாக நாட்டியாஞ்சலி நடைபெற்ற இடத்தில் மீண்டும் தீட்சிதர்கள் பள்ளம் தோண்டி யானைக்கு என்று பிரம்மாண்ட சொகுசு கட்டிடம் கட்டி வருகிறார்கள் தீட்சித பார்ப்பனர்கள் . இந்தச் செய்தி பக்தர்களை மிகவும் வேதனை அடையச் செய்துள்ளது என்பது மட்டுமல்ல, பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்து தில்லை கோயிலை மீட்டெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நம் அனைவருக்கும் விடப்பட்டுள்ள சவால்.
படிக்க :
இலக்கியம் கற்றுக்கொள்ள இலக்கிய நூல்கள் மட்டும் போதுமா ? || பாவெல் சக்தி
நூல் விமர்சனம் : வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி || நக்கீரன்
இப்படி அனுமதியின்றி மண்டபம் கட்டுவதால் தொன்மை வாய்ந்த திருமலை நாயக்கர் மதில் சேதமடையும் வாய்ப்பு உள்ளது. கோயிலில் மண்டபம் கட்டுவதற்கு தொழில்துறை, நகராட்சி ஆகியவற்றிடம் இருந்து அனுமதியும் பெறவில்லை.
தீட்சித பார்ப்பனர்களின் இந்த திமிர்த்தனமாக நடவடிக்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஜனநாயக மற்றும் புரட்சிகர அமைப்புகள் போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
மேலும் இப்படிப்பட்ட தில்லுமுல்லுகளையும் அயோக்கியத்தனங்களையும் தொடர்ச்சியாக செய்துவரும் தீட்சிதர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.
தில்லைக் கோயில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான சிறப்புச் சட்டத்தை வருகின்ற சட்டமன்றத் தொடரிலேயே தமிழ்நாட்டு அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம் தமிழ்நாடு – புதுவை
9962366321

“இஸ்லாமியர்களுக்கு ஹிஜாப் தடை! தில்லையில் தமிழனுக்கு தமிழுக்கும் தடை! – கடலூர், திருவாரூர் ஆர்ப்பாட்டம் !

க்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் முழுவதும் 7,8,9 ஆகிய தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்து திட்டத்தின் ஒரு பகுதியாக கடலூர் மற்றும் திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
“இஸ்லாமியர்களுக்கு ஹிஜாப் தடை!
தில்லையில் தமிழனுக்கு தமிழுக்கும் தடை!
தில்லை இருப்பது தமிழ்நாடா?
அதற்குள் ஒரு தனி நாடா?
தமிழக அரசே!
தில்லை கோயிலை இந்து அறநிலைத்துறையின் கீழ் கொண்டுவர சிறப்புச் சட்டம் இயற்று” என்ற முழக்கங்களின் கீழ் மார்ச் 8 அன்று காலை 11 மணியளவில் கடலூர் மஞ்சகுப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் கடலுர் கிளை இணை செயலாளர் தோழர் இராமலிங்கம் தலைமை தாங்கினார்.

This slideshow requires JavaScript.

தோழர் மணிவண்ணன் சிதம்பரம் வட்டார அமைப்பாளர் ம.ஜ.இ.க,
தோழர் தி.ச.திருமார்பன் வழக்கறிஞர், மாநில அமைப்பு செயலாளர் வி.சி.க,
தோழர் தீனா அமைப்பாளர் பெரியார் சிந்தனையாளர் இயக்கம் புதுச்சேரி,
தோழர் வெண்புறா குமார் ஒருங்கிணைப்பாளர் கடலூர் அனைத்து பொதுநல இயக்கம்,
தோழர் பரிதிவாணன் தமிழர் கழகம்,
தோழர் முருகானந்தம் கடலூர் மண்டல செயலாளர் மக்கள் அதிகாரம்
ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இறுதியாக மக்கள் அதிகாரம் கடலூர் கிளைப் பொருளாளர் தோழர் ஜெயக்குமார் நன்றியுரையாற்றினார்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்.
000
7/03/2022 அன்று மாலை 6, மணியளவில் திருவாரூர் தாலுகா குளிக்கரை, கடைவீதியில் மக்கள் அதிகாரம், அமைப்பின் சார்பாக இஸ்லாமியர்களுக்கு ஹிஜாப் தடை! சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலில் தமிழனுக்கும் தமிழுக்கும் தடை! தில்லையில் இருப்பது தமிழ்நாடா ? இல்லை அதற்குள் ஒரு தனி நாடா ? தில்லை நடராஜர் கோவிலை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சிறப்பு சட்டம் இயற்று ! என்கிற முழக்கத்தை முன்வைத்தும், சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலில் சிவபக்தை இலட்சுமியை சாதியை சொல்லி இழிவுபடுத்திய தீட்சிதர்களின் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் போட்டு கைது செய்ய வேண்டும் என்றும், தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட இணைச் செயலாளர் ஆசாத் அவர்கள் தலைமையில், மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், த. சண்முகசுந்தரம் அவர்கள், ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேசினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர், செல்லத்துரை அவர்கள், தங்கராசு அவர்கள், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட பொருளாளர் முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து மத பிரச்சினைகள் மூலம் இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் மதச்சார்பின்மை என்கிற இந்திய அரசியலமைப்பு சட்டத்தை சீர்குலைக்கும் நோக்கிலும் தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதை கண்டித்தும் விளக்கி தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்-6374741279

கோகுல்ராஜ் கொலை வழக்கு || மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி !

பத்திரிகை செய்தி
08.03.2022
கோகுல்ராஜ் கொலை வழக்கு
ஆணவக் கொலை குற்றவாளி யுவராஜ் உள்ளிட்டோருக்கு சாகும்வரை சிறை !
நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதுடன் உறுதியான நெஞ்சுரத்தோடு இறுதிவரை போராடிய கோகுல்ராஜின் தாய், வாதாடிய வழக்கறிஞர் தோழர் ப.பா. மோகன் உள்ளிட்டோருக்கு மக்கள் அதிகாரம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது!
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த கோகுல்ராஜ் என்ற பொறியியல் பட்டதாரி காணாமல் போனார்.
நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக கோகுல்ராஜின் உடலானது நாக்கு துண்டிக்கப்பட்டவாறு கண்டெடுக்கப்பட்டது. ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவர் பேசிக் கொண்டிருந்ததால் நடத்தப்பட்ட கொலை இது.
இந்த கொலையை சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை என்ற சாதிவெறி அமைப்பின் நிறுவனரான யுவராஜ் தலைமையிலான சாதிவெறிக் கும்பல் நடத்தியது என்பது அடுத்தடுத்த நாட்களில் வெளிச்சத்துக்கு வந்தது, என்றாலும் யுவராஜை போலீசால் நெருங்கவே முடியவில்லை.
படிக்க :
சர்வதேச அளவில் இழிவுபடுத்தப்படும் ‘பறையா’ எனும் சொல் || வி.இ.குகநாதன்
உக்ரைன் : உலகத்தை மேலாதிக்கம் செலுத்துவதற்கான கழுத்தறுப்பு போர்!
சுமார் 100 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்தபடியே யுவராஜ் ஒட்டுமொத்த போலீசு துறையையே மிரட்டிக் கொண்டிருந்தான். இவ்வழக்கை விசாரித்த டிஎஸ்பி விஷ்ணு ப்ரியாவையும் மிரட்டினான். டி.எஸ்.பி விஷ்ணுபிரியா சில நாட்களில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். டிஎஸ்பி விஷ்ணு பிரியாவின் தந்தை எவ்வளவு தூரம் போராடியும் தன்னுடைய மகளின் சாவுக்கு அவரால் இறுதிவரை நீதியைப் பெறவே முடிய இல்லை.
பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, போலீசில் யுவராஜ் சரணடைந்தான். உழைக்கும் மக்களுக்காக போராடுபவர்களின் சட்டையைப் பிடித்து, இழுத்து, அடித்து, உதைத்து கைது செய்யும் போலீஸ், ஆதிக்க சாதி வெறியன் ஆணவக் கொலை குற்றவாளி யுவராஜ் சரண்டருக்காக காத்துக்கிடந்தது.
யுவராஜை கைது செய்த பிறகும் கூட கோகுல்ராஜின் தோழியான சுவாதி உட்பட பலரும் பிறழ் சாட்சிகளாக மாறிப் போனார்கள். இதனால் கோகுல்ராஜின் தாய், இப்பகுதியில் தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்தால் நேர்மையாக இருக்காது என்பதால் வேறு பகுதிக்கு மாற்றக் கோரினார் . மேலும் அரசு வழக்கறிஞர், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படவில்லை என்பதால் மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்களை அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்க வேண்டுமென்று நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். அவரின் மனுவை தூக்கி கிடப்பில் போட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சாதி வெறியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார்.
இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பிறகு, வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்களை இந்த வழக்கின் அரசு சிறப்பு வழக்கறிஞராக நீதிமன்றம் நியமித்தது .
அதன்படி இந்த வழக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட 15 பேரில் ஐந்து பேர் விடுவிக்கப்பட்டு 10 பேர் குற்றவாளிகள் என்று கடந்த ஐந்தாம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விசாரணைக்குப் பின் நீதிபதி சம்பத்குமார் குற்றவாளிகளுக்கான தண்டனையை இன்று (08-03-2022) அறிவித்தார்.
ஆதிக்க சாதி வெறி வெறியனும் – தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் தலைவருமான யுவராஜ் மற்றும் அவனது கார் ஓட்டுநர் ஆகியோருக்கு மூன்று ஆயுள் தண்டனையுடன் சாகும்வரை சிறையில் இருக்க தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 8 பேரும் சாகும் வரை சிறையில் இருக்க நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
யுவராஜ் உள்ளிட்ட ஆணவக்கொலை குற்றவாளிகள்- சாதிவெறியர்கள் மேல்முறையீடு செய்து தண்டனையில் இருந்து தப்பிப்பதற்கான வாய்ப்புகள் தான் அதிகமாயிருக்கிறது .
பரப்பன அக்ரகார நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து ஊழல் குற்றவாளி ஜெயலலிதா தன்னைத்தானே விடுதலை செய்து கொண்டார். மேலவளவு முருகேசன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் கருணையால் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார்கள்.
தர்மபுரியில் வேளாண் கல்லூரி மாணவர்களை எரித்துக் கொன்ற அதிமுக கொலைகாரர்களும் கூட ஆயுள் தண்டனையை முழுமையாக அனுபவிக்காமல் தப்பித்து வெளியே வந்தனர்.
ஆதிக்க சாதி வெறியர்களுக்கும் ஊழல் குற்றவாளிகளுக்கும் கொலைகாரர்களுக்கும் ஆதரவாக இந்த ஒட்டுமொத்த அரசுத் துறையும் செயல்பட்டு கொண்டிருக்கும் இந்த காலத்தில்தான் யுவராஜுக்கு தண்டனை கிடைத்து இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த தண்டனையும் தானாக இந்த அரசின் நீதித்துறையில் கருணையால் வந்தது அல்ல.
இந்த வழக்கில் மொத்தம் 106 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தன. அதில் முக்கியமான சாட்சி, கோகுல்ராஜின் தோழி திடீரென பிறழ் சாட்சியானார். இதேபோல் பல அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி, வழக்கின் போக்கையே மாற்றின. இருந்தபோதும் உறுதியாக வழக்கறிஞர்கள் போராடினார்கள்.
மூத்த வழக்கறிஞர் ப.பா மோகன் உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள் தன்னலம் கருதாமல் அர்ப்பணிப்புடன் போராடியதால் கிடைத்த தீர்ப்பு இது.
அரசு வழக்கறிஞராக செயல்பட்ட ப.பா. மோகன், இத்தனை ஆண்டுகளில் இதுவரை தனக்கு அரசு வழக்கறிஞருக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை கூட இந்த அரசு வழங்கவில்லை என்றும் இவ்வழக்கிற்காக ஒவ்வொருமுறை வந்து செல்லும் செலவை கூட தானே ஏற்று செயல்படுவதாகவும் கூறியுள்ளார். ஒரு அரசு வழக்கறிஞருக்கு டோல்கேட்டில் வந்து செல்வதற்கான இலவச பாஸைக் கூட கொடுக்காமல் இந்த அரசு எவ்வளவு ஏளனப்படுத்தி இருக்கிறது என்பதை நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
கோயிலில் தோழியுடன் பேசிக் கொண்டிருந்த ஒரு பட்டியலின பொறியியல் பட்டதாரி காணாமல் போனது – சில நாட்களில் தலை துண்டாகவும் நாக்கு அறுபட்ட நிலையில் அவரது பிணம் கண்டெடுக்கப்பட்டது – நான்தான் கொலை செய்தேன் என்று யுவராஜ் பகிரங்கமாக தெரிவித்த பிறகு நூறு நாட்களாகியும் அவனை கைது செய்யாமல் சரண்டர் ஆக மேற்கொள்ளப்பட்ட போலீஸின் முயற்சிகள் – கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட யுவராஜ் உள்ளிட்டோருக்கு சிறையில் கொடுக்கப்பட்ட ராஜமரியாதை – நீதிமன்றங்களில் யுவராஜ் ஆஜர் படுத்தும்போது அவனுடைய ஆணவமான பேச்சு – சாட்சிகள் எல்லாம் பிறழ் சாட்சிகளாக மாறிப்போனது – அரசு வழக்கறிஞராக ப.பா மோகனை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு உதாசீனப்படுத்தியது – நீதிமன்றம் மூலம் அவர் நியமிக்கப்பட்டார். இப்படி பல்வேறு தடைகளையும் மீறி அல்லவா இந்த தீர்ப்பு வந்திருக்கிறது!
படிக்க :
உக்ரைன் : ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர் | தோழர் சுரேசு சக்தி முருகன்
இலக்கியம் கற்றுக்கொள்ள இலக்கிய நூல்கள் மட்டும் போதுமா ? || பாவெல் சக்தி
சாதி ஆணவக் கொலைகள் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை. எனினும் இந்த வழக்கில் இருந்து குற்றவாளிகள் யுவராஜ் உள்ளிட்டோர் மேல்முறையீட்டின் மூலம் தப்பிப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன. அப்படிப்பட்ட சூழல் ஏற்படின் அதற்கு எதிராகவும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை, வன்னியர் சங்கம், முக்குலத்தோர் சங்கம் போன்ற ஆதிக்க சாதி வெறி அமைப்புகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கருத்தினை மக்களிடம் பரப்பி ஆணவக் கொலைகளையும் சாதிவெறி தாக்குதல்களையும் நடத்தி வருகின்றன. உடுமலை சங்கரை கொலை செய்த கௌசல்யாவின் குடும்பத்தினருக்கு ஆதிக்க சாதி அமைப்புகள் நிதி உதவி அளித்தது குறிப்பிடத்தக்கது .
இது போன்ற ஆதிக்க சாதி வெறி அமைப்புகள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசிடம் மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது. மேலும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு எதிரான, ஆதிக்க சாதி சிந்தனைக்கு எதிரான பண்பாட்டுத் தளத்தில் பரந்து விரிந்த பரப்புரையை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஜனநாயக – முற்போக்கு- பெரியாரிய- கம்யூனிச இயக்கங்களுக்கு உள்ளது என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை

மாநில அரசுகளை முடக்குவதே மோடி அரசுக்கு முழுநேர பணியாம்!

எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளின் செயல்பாட்டை முடக்கும் மோடி அரசு – பாகம் 1

பாகம் 2 :

மாநில அரசுகளை முடக்குவதே மோடி அரசுக்கு முழுநேர பணியாம்

ஒன்றிய அரசின் அதிகார வரம்பிற்குள் வரும் சிபிஐ(CBI) மற்றும் அமலாக்கத்துறை(ED) ஆகியவற்றை தனது ஆளுமைக்குள் வராத அரசியல் கட்சிளை மற்றும் அரசியல் ரீதியாக எதிர்க்கும் மாநில அரசுகளை அச்சுறுத்தும் ஆயுதமாக மோடி பயன்படுத்துவது என்பது நாடறிந்த ஒரு செய்தி. அதற்கு ஏராளமான ஆதாரங்களை தரமுடியும். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஒரு ரூ.2000-க்காக மக்கள் வங்கி வாசலில் மணி கணக்கில் வரிசையில் நின்றபோது தமிழ்நாட்டில் சேகர்ரெட்டியின் வீட்டில் ரெய்டு மூலம் எடுக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளாக ரூ.32 கோடி பற்றி ரிசர்வ் வங்கியே நற்சான்று தந்தது மறக்க முடியாது.

அதன் தொடர்ச்சியாக இன்றளவும் எந்த கட்சியிலிருந்தாலும் சரி, என்ன குற்றங்கள் செய்திருந்தாலும் சரி, பாஜக-வில் ஐக்கியமாகிவிட்டால் கங்கையில் குளித்து புனிதபடுத்தியது போல என்று கேலி சமூக ஊடகங்களில் வைரலாக இருக்கிறது. குதிரை பேரங்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் கேவலமான முறையில் பயன்படுத்தி தாங்கள் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் பல மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்திருப்பதை முதலாளித்துவ ஊடகங்களே அம்பலப்படுத்தியுள்ளன.

ஜிஎஸ்டி வரியை மாநிலங்கள் மூலம் வசூல் செய்து கொண்டு அவற்றுக்கு உரிய பங்கினை தராமல் இழுத்தடிப்பது அதன்மூலம் மாநில அரசுகளை நிதிபற்றாக்குறையில் நிறுத்தி உரிய திட்டங்களை அமுல்படுத்தவிடாமல் செயலற்ற அரசாக குறை சொல்லுவது என்று நரித்தனமாக நடந்து கொள்கிறது மோடி அரசு. புயல் வெள்ள நிவாரணங்களை எதிர்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு உரிய நேரத்தில் உரிய தொகையை தராமல் வேண்டுமென்றே சிக்கலில் மாட்டிவிடுவது என்ற பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறது.

படிக்க :

நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் ! பாஜக ஸ்டைல் !!

” லவ் ஜிகாத் ” சட்டத்தை அமல்படுத்தும் பாஜக மாநில அரசுகள் !

தன்னை எதிர்க்கும் மாநில அரசுகள் மீது அமைப்பு ரீதியாகவும் மோடி அரசு பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது. அதற்கு ஏற்றவாறு ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம் நயவஞ்சகமான முறையில் விசுவாசத்தை சோதனை செய்கிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகளை தனிப்பட்ட முறையிலும் கொள்கை ரீதியாகவும் தங்களிடம் கீழ்படிந்து விசுவாசமாக நடக்க வேண்டும் என்பதாக நிர்பந்திக்கப்படுவதை வெளிப்படையாக பல நேரங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.

தங்களின் கட்சி பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள குறிப்பாக மகாராஷ்டிரா மேற்குவங்கம் ஆகியவற்றிலுள்ள ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஒன்றிய அரசின் கட்சியின் கொள்கைகளுக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென மிகப்பெரிய நிர்பந்தத்துக்கு உள்ளாவதை வெளிப்படுத்தியுள்ளனர். இப்படிப்பட்ட நடைமுறை இயல்பாகவே சுயாட்சி மனப்பான்மையுள்ள மாநில அரசுகளை வக்கிரமான முறையில் நிர்வாக ரீதியாக முடக்கி போட்டு செயல்பாடற்றதாக்க வேண்டும் அல்லது தங்களுக்கு பணிய செய்யவேண்டும் என்பதற்காகவே செய்யப்படுகிறது. ஒருபுறம் இந்திய அரசியல் சட்டத்தை மதிப்பதாக காட்டிக் கொண்டே அதற்கு எதிரான நடவடிக்கைகளை செய்வதன் மூலம் ஒன்றிய அரசின் அடிப்படையையே தகர்த்து கொண்டிருக்கிறது மோடி அரசு.

மோடி – அமித்ஷா அரசு எதிர்கட்சி ஆளும் மாநிலங்களை ஆளுநர்கள் மூலம் நிர்வாக சீர்குலைவு வேலைகளை செய்து வருகிறது. பாண்டிச்சேரியில் அதன் ஆளுநர் கிரண்பேடி நடத்திய போட்டி அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மாண்பினை தகர்த்தது. மேற்குவங்கத்தில், மகராஷ்டிராவில் என ஆளுநர்கள் மூலம் அந்தந்த மாநில அரசுகளை செயல்படவிடாமல் குடைச்சல் கொடுத்து வருவது நாளும் வருகிற செய்திதான்.

பாஜக பெரும்பான்மை பெறாத மாநிலங்களிலும் அதிகாரத்தை கைப்பற்ற அரங்கேற்றும் குதிரை பேரங்கள், ஆள்கடத்தல், சிபிஐ மிரட்டல் போன்றவற்றுக்கு உறுதுணையாக பாஜக ஆட்சியை பிடிக்க என்ன அக்கிரமம், அநியாயம் நடந்தாலும் வாயே திறக்காமல் பாஜக-வின் கட்சிகாரர் போல நடக்கும் ஆளுநர்கள் எதிர்கட்சி மாநிலங்களில் பொறுப்பை காட்டுவதாக வம்படியான கோமாளித்தனங்களை அரங்கேற்றுகின்றனர். இப்போது தமிழ்நாட்டிலும் ஆளுநர் மூலம் மோடி – அமித்ஷா கூட்டணி தனது வேலையை காட்டிக் கொண்டிருக்கிறது. இந்தியா குடியரசான பின் முன்னெப்போதும் இல்லாத வகையில் கேவலமான முறையில் அரசியல் சட்டம் ஆளுநர்களை கொண்டு மீறப்படுகிறது.

மோடி பிம்பத்தை ஊதி பெருக்க மக்களின் வரிப்பணம்!

மாநில மத்திய அரசுகளின் கூட்டாட்சி என்ற இந்திய அரசியல் சட்டத்தின் மாண்பினை கேலி செய்யும் வகையில் எந்த பிரதமருக்கும் செய்யாத வகையில் மோடியின் பிம்பத்தை ஊதிபெருக்கி காட்ட அரசின் கஜானா தாராளமாக திறந்துவிடப்பட்டுள்ளது. மாநில அரசு பட்டியலில் இருக்கும் துறைகளில் திட்டங்கள் நிறைவேற்றபடும்போது கூட மோடியின் உருவப்படம் வருவது மோடியின் விளம்பர மோகம் மற்றும் மொத்த நாட்டுக்கே தான்தான் சர்வாதிகாரம் படைத்த தலைவன் என்ற அதிகாரத்துவத்தை நிலைநாட்டுவதாக உள்ளது.

பிரதமர் மோடியை சுற்றி செயற்கையாக போடப்படும் ஆளுமை வழிபாட்டுமுறைகள் அவரை சுற்றி ஒரு ஒளிவட்டம் போட்டு பாராளுமன்றம், நீதிமன்றங்கள், கட்சிகள், ஆட்சிகள் எல்லாவற்றுக்கும் மேலானவராக காட்டுவதற்காகும் செலவினங்கள் யாவும் மாநில மக்கள் வரிப்பணத்திலிருந்து கணக்குகாட்டப்படாத வகையில் பிடுங்கியெடுக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு பி.எம் கேர்ஸ் நிதி அமைப்பை கொரோனா பெருந்தொற்றையொட்டி பிரதமர் மோடி ஏற்படுத்தினார். ஏற்கனவே பேரிடர் நிதி என்ற தனி அமைப்பும் ஒன்றிய அரசிடம் உள்ளது. இந்த பி.எம் கேர்ஸ் என்பது எவரும் கேள்வி கேட்க முடியாத உள்நுழைந்து செயல்பாடுகளை ஆராய முடியாத வகையில் சீலிடப்பட்டுள்ளது. இது உண்மையில் இந்திய அரசின் பிரதமர் பேரில் இருந்தாலும் நாட்டின் எந்த சட்டத்திட்டங்களுக்கும், ஆடிட் வகைகளுக்கும் உட்படுத்தபட முடியாது.. இந்த நிதிக்கு தரப்படும் பணத்திற்கு வரிவிலக்கு உண்டு. அதுவும் கார்ப்பரேட் சமூக பொறுப்பு என்ற பெயரில். அதே சமயம் மாநில அரசுகள் ஏற்படுத்தியிருக்கும் நிவாரண நிதியகங்களில் செலுத்தப்படும் நன்கொடைகளுக்கு வரிவிலக்கு செய்யப்பட்டுள்ளது. ஒரு கூட்டாட்சி என்ற கொள்கையை தகர்க்க மோடி வைத்திருக்கும் ஆயுதங்களில் இதுவும் ஒன்று.

கூட்டாட்சி ஒன்றியத்தில் சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட அரசுகளை உண்மையில் ஒழித்த ஒரே பிரதமர் மோடி தான். கோவா, அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய யூனியன் பிரதேசங்கள் மாநிலங்களாக மாற்றப்பட்டன. அதே வேளையில் மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாயின. இது மத அடிப்படையில் மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்த வலிந்து திணிக்கப்பட்ட ஒன்று. 370 சட்ட பிரிவை நீக்கி முஸ்லீம் மக்கள் ஏதோ சலுகைகளை அனுபவித்து வந்ததை போன்ற அவதூறுகளை நாடு முழுக்க பரப்பியது. இதன் மூலம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான பெரும்பான்மை வெறுப்புணர்வை வளர்க்கும் தொனியுடன் கூடிய அழிவுக்கு வழிவகுக்கும் செருக்கு மற்றும் அடாவடித்தனத்துடனும் அதிகார போதையுடனும் செய்த செயலாகும். வேறெந்த இந்தியப் பிரதமரும் கூட்டாட்சிக் கொள்கை  அரசியல் சட்டத்தின் மீது இதை போன்றதொரு மிகக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தொடுத்ததில்லை.

ஜம்மு மற்றும் காஷ்மீரை போலவே அதற்கு வெளியேயும், நரேந்திர மோடியும், அமித்ஷாவும் மாநிலங்களின் உரிமைகளை பலவீனப்படுத்துவதற்கு 356-வது பிரிவை விட அப்பட்டமான மற்றும் கொடூரமான நுட்பமான கருவிகளைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பதுதான் நடைமுறையில் கண்கூடாக தெரிவது.

நாட்டின் மொத்த ஊடகங்களையும் அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு உடந்தையாக செயல்படவைத்து மக்களின் வரிபணத்தில் உருவாகி மிகச் சிறப்புடன் செயல்பட்டு வரும் பல்கலைக் கழகங்களின் மாண்புகளை குலைத்து சீரழிப்பது இராணுவத்தை அரசியல்மயமாக்கி தங்களது காவி எண்ணத்தோடு செயல்பட தூண்டுவது; அதை அம்பலபடுத்தி பேசுபவர்களை தேச விரோதிகள் என தூற்றுவது; பெரும்பான்மை மதவாதத்தை வெறித்தனத்துடன் கூடிய வன்முறைகளாக செயல்படுத்த பிரதமரே அதே மத நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று முழுஆதரவு கொடுப்பது என்று இந்திய குடியரசின் கூட்டாட்சி கொள்கையின் மீது பன்முக தாக்குதலை திட்டமிட்டு அரங்கேற்றி வெற்றிகரமாக செயல்படுத்துவதே இத்தனை ஆண்டுகால மோடி – அமித்ஷா ஆட்சியின் சாதனைகளாகும்.

படிக்க :

மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் அணைப் பாதுகாப்பு மசோதா !

நூல் அறிமுகம் || 1974 : மாநில சுயாட்சி || ஆழி செந்தில்நாதன்

இந்த சாதனைகளுக்காக மக்கள் பெருமைபட எதுவும் இல்லை. மாநில அரசுகளும் தேர்தல்கள் மூலம் சட்டப்பூர்வமாக அமைகின்ற அரசுதான். ஆனால், மாநில அரசுகளின் உரிமைகளை பறித்து நிதி ஆதாரங்களை முடக்கி எதற்கெடுத்தாலும் தன்னை நோக்கி கையேந்தும் நிலையில் வைப்பதன் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகளை முக்கியமாக ‘வாக்களிப்பதால் கிடைக்கும் சிறப்பான உரிமையை’ கேலிக் கூத்தாக்குகிறது.

மாநில சுயாட்சி கோரிக்கை மாநில அரசுகளின் ஓட்டாண்டித்தனத்தால் வலுவிழந்து இருப்பதும் மோடியின் காட்டுதர்பார் ஆட்சிக்கு காரணமாகும். மாநில சுயாட்சி கோரிக்கையின் மீது மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் அனைத்து அமைப்புகளும் கவனம் செலுத்தி மக்கள் இயக்கங்களை முன்னெடுத்து மாநில அரசுகளுக்கு நிர்பந்தத்தை உருவாக்க வேண்டும்.

மோடி அரசின் செயல்பாடுகளை தனி தனியான செயல்பாடுகளாக பார்க்காமல் ஒரு திட்டமிட்ட முறையில் கட்டமைக்கப்படும் பாசிசத்திற்கான ஊற்றின் மூலமாக மக்களுக்கு புரியவைக்கும் வகையில் தொடர்ந்து அம்பலபடுத்தி விளக்க வேண்டியது ஜனநாயக உணர்வுள்ள செயற்பாட்டாளர்களது கடமையாகிறது.

(முற்றும்)


மணிவேல்
மூலக்கட்டுரை : ராமச்சந்திர குஹா
நன்றி : ஸ்க்ரால்

போரும் – உழைக்கும் பெண்களும் | க்ளாரா ஜெட்கின் | இக்பால் அகமது

பிரிட்டன் சகோதரிகளுக்கு ஜெர்மானிய சகோதரிகளின் அறைகூவல் || க்ளாரா ஜெட்கின்1
(டிசம்பர் 1913)
ன்புக்குரிய சகோதரிகளே!
ஜெர்மானியப் பாட்டாளிவர்க்கப் பெண்கள் சோசலிசத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அந்நம்பிக்கையின் அடிப்படையில்தான் இன்றைய காலக்கட்டத்தில் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் சுதந்திரத்தையும் வலியுறுத்துகின்ற இச்செய்தியை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றார்கள்.
இந்த நூற்றாண்டு நாகரிகத்தையும் மனிதாபிமானத்தையும் உயர்த்திப்பிடிக்கின்ற நூற்றாண்டு எனப் பீற்றிக்கொள்கின்றார்கள். ஆனால் சமீபத்திய பால்கன் (Balkan) போரின்2 கொடூரமான மனித உயிர்ப்பலிகளையும் பேரழிவுகளையும் காட்டுகின்ற கொடுமையான புகைப்படங்களைப் பார்த்தபின் அந்த அச்சத்திலிருந்து மீள முடியாத நிலையில் நாங்கள் உறைந்துள்ளோம்.
எங்கள் கண்முன்னே குருதி கொப்பளிக்கும் உடல்கள்; சகமனிதனை இன்னொரு மனிதன் கொன்றுசாய்ப்பதால் கொப்பளிக்கும் குருதி; தரைமட்டமாக்கப்பட்ட கிராமங்கள் நகரங்கள்; கால்களும் கைகளும் பிற உறுப்புக்களும் அறுத்து எறியப்பட்ட நிலையில் ஏற்கனவே செத்துமடிந்தவர்களின் அருகில் செத்துக்கொண்டே இருக்கும் மனிதர்கள் எழுப்பும் தீனமான அவலக்குரல்கள்…இவை யாவும் எம் காதுகளில் விழுகின்றன. தங்கள் வாழ்வின் பொருட்டே பிழைப்புத்தேடி சென்று போரில் உயிரை மாய்த்துக்கொண்ட அன்புக்குரியவர்களின் மனைவியரும் சகோதரிகளும் தாய்மார்களும் குழந்தைகளும் விசும்பி அழும் அவலமான கேவல் ஒலிகள் எங்கள் காதுகளில் விழுகின்றன.
ஐரோப்பாவின் பெருந்தேசங்களின் மக்கள் கடந்த சில மாதங்களாகவே மிகக்கொடூரமான பேரழிவுப்போர்களின் விளிம்புக்குச் செல்வதும் மீள்வதுமான வாழ்வா சாவா என்ற கெடுநிலையில் வாழ்ந்துகொண்டிருப்பதை நாங்கள் நினைத்துப் பார்க்கின்றோம். இத்தகைய அவலநிலையை இவ்வுலகம் இதற்கு முன் கண்டதில்லை. நாங்கள் இதனை நினைத்து அச்சத்தில் நடுங்குகின்றோம். அப்பேரழிவின் இறுதிநாள் இன்றில்லை எனினும் பிரிதொரு நாள் வந்தே தீரலாம். நாகரிகமடைந்த நாடுகளின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள அந்த சிறுபான்மையினரின் கரங்களைப் பாருங்கள்! அவர்கள் பேசுவதைக் கேளுங்கள்! அவர்களின் கரங்களில் இருப்பதுதான் என்ன?
படிக்க :
சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தின் வரலாறு !! || அலெக்சாந்த்ரா கொலந்தாய்
சர்வதேச ஆண்கள் தினம் | பெண்கள் இல்லாத ஊரில், ஆண்கள் சிறப்பாக வாழ இயலாது ! | ஃபரூக் அப்துல்லா
உழைக்கும் மக்களின் பைகளில் இருந்து திருடிக்கொண்ட பணத்தைக்கொண்டு அவர்கள் ராணுவத்தளங்களையும் போர்க்கப்பல்களையும் கட்டுகின்றார்கள்; தரையிலும் கடலிலும் ஆகாயத்திலும் மக்களை கொத்துக்கொத்தாகக் கொன்றழிக்கக் கூடிய மிகத்துல்லியமான கடற்படைத் துப்பாக்கிகளையும் பிற ஆயுதங்களையும் வாங்கிக் குவிக்கின்றார்கள். பல இலட்சம் இளம்தொழிலாளர்களுக்குப் பயிற்சியளிப்பதாகச் சொல்லிக்கொண்டு அவர்களைத் துன்புறுத்துகின்றார்கள். வெளிநாடுகளில் உள்ள இவர்களது சகதொழிலாளிகளின் காயின்களாக3 (Cain) அவர்களை மாற்றும்பொருட்டே இப்பயிற்சி அளிக்கப்படுகின்றது.
அவர்களது சுயநலமிக்க ஆயுதக்குவிப்புப்போட்டிக்கும் போர்களுக்கும் வசதியாக, சாமானியமக்கள் தமது உடைமைகளையும் செங்குருதியையும் தியாகம் செய்யும் பொருட்டு மக்களை ஆயத்தமாக வைத்திருக்கும் கள்ளநோக்கத்துடன் சகநாடுகளின் மக்களுக்கிடையில் பகைமையும் வெறுப்புணர்வும் எப்போதும் நிலைத்திருக்கும்வண்ணம் இச்சுயநலமிகள் எப்போதும் வாய்கிழியப்பேசிக்கொண்டே இருக்கின்றார்கள். தமது நாட்டின் நலன்பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனில் அடுத்த நாட்டின் மீது போர்தொடுத்து மரணத்தைக் கட்டவிழ்த்துவிடத்தக்க வகையில் ஆகப்பெரும் ராணுவங்களும் போர்க்கப்பல்களும் இருப்பது அவசியம் என்று கூச்சலிடுகின்றார்கள்.
இங்கிலாந்தில் உள்ள எங்கள் அன்புச்சகோதரிகளே! பகைமையுணர்வும் வெறுப்புணர்வும் விசிறிவிடப்படும் வெறிக்கூச்சல்கள் வதந்திகளாகப் பரப்பப்படுகின்றன என்பதை அறிந்து ஜெர்மனியில் இருக்கின்ற சோசலிச உழைக்கும் பெண்களாகிய நாங்கள் ஆழ்ந்த கவலை கொள்கின்றோம். ஆனால் ஜெர்மன் மக்கள் மீது பிரிட்டிஷ் மக்கள் பொறாமையும் வெறித்தனமான பகைமையுணர்வும் கொண்டுள்ளதாக இங்கே ஜெர்மனியில் இருக்கின்ற அரசியல்வாதிகளும் செய்தித்தாட்களும் கட்டவிழ்த்துவிட்டுள்ள புரளிகளை நாங்கள் நம்பவில்லை என்று உங்களுக்கு உறுதியளிக்கின்றோம்.
பயங்கர சேதத்தை விளைவிக்கும் போர்க்கப்பல்கள் புதிதுபுதிதாகக் கட்டப்படுவதாக செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. போலித்தேசியவாத வெறிப்பேச்சுக்களை விசிறிவிட்டுக்கொண்டேதான் இருக்கின்றார்கள். ஆனால் நாங்கள் இப்புரளிகளை நம்பவில்லை என்று உங்களுக்கு உறுதியளிக்கின்றோம். இதேபோல் அங்கே உங்கள் நாட்டில் வெளிவரும் சில ஆங்கிலமொழிச் செய்தியேடுகளும் உள்ளூர் அரசியல்வாதிகளும் ஜெர்மன் மக்களின் உணர்வு என்பதாகச் சொல்லிக்கொண்டு உங்கள் மத்தியில் பரப்பிவிடும் வதந்திகளை உண்மை என நீங்கள் நம்பவேண்டாம் என உங்களை உள்ளன்போடு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.
ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வலுக்கட்டாயமாக சக்கரவர்த்தியின் சீருடையை அணியக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் அச்சுறுத்தும் துப்பாக்கிகளும் இதுவெல்லாம் உண்மைதானோ என்ற ஐயத்தைக் கிளப்பினாலும் நாங்கள் உறுதியளிக்கின்றோம், இவையாவும் உண்மை அல்ல. இங்கே ஜெர்மனியில் உள்ள போலிதேசியவாதம் பேசுகின்ற சுமார் அரைடஜன் வெறியர்கள் கிளப்பிவிடும் கட்டுக்கதைகளையே இச்செய்தியேடுகள் வெளியிடுகின்றன, எமது பொறுமையையும் சோதிக்கின்றன.
மக்கள் எனப்படுவோர் உண்மையில் யார்? ஜெர்மனியிலும் சரி உங்கள் மகாபிரிட்டனிலும் சரி, நாட்டின் முதல் பத்துப்பணக்காரர்கள், இளவரசர்கள், ராணுவ ஜென்ரல்கள், தங்க இழைப்பின்னல்களை அணிந்த அதிகாரிகள், வலிமைமிகு நிலக்கிழார்கள், ராணுவத்திற்கும் கடற்படைக்கும் ஆயுதசப்ளை செய்கின்ற கம்பெனிகளின் இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்கள், துப்பாக்கிகள், டாங்கிகளின் கவசத்தகடுகள், புகையில்லா வெடிகுண்டுகள், போர் விமானங்களைத் தயாரிக்கின்ற ‘மன்னர்கள்’ – இவர்களில் ஒருவர் கூட சாமானிய மக்கள் அல்லர். ராணுவத்திற்கும் கடற்படைக்கும் தேவையான ஏராளமான ஆயுதங்களை விற்பனை செய்வதன் மூலம் போர்க்களங்களில் வழிந்தோடும் குருதியில் இருந்து காசுகளைப்பொறுக்குகின்ற, போர்க்களங்களில் வீழ்ந்துபட்ட பிணங்களே உரமாகிப்போனதால் செழித்துவளரும் வயல்களில் இருந்து லாபத்தை அறுவடை செய்கின்ற ஒரு சிறு பகுதியினரை சாமான்யமக்கள் என்று சொல்ல முடியாது.
இலட்சோப இலட்சம் உழைக்கும் ஆண்களும் பெண்களுமே சாமானிய ஜெர்மன்மக்கள் ஆவர்; இந்த உழைக்கும் மக்களின் கரங்களும் மூளைகளும் இயங்காவிடில் இச்சிறு பகுதியினர் செல்வத்தை குவிக்க முடியாது, மனிதநாகரிகம் என்பதும் சாத்தியம் இல்லாத ஒன்றாகும்; ஆயினும் இந்த இலட்சக்கணக்கான மக்கள் செல்வத்தை, வாழ்க்கை வசதிகளை, மகிழ்ச்சியை அனுபவித்தார்களா என்றால் இல்லவே இல்லை. மகிழ்ச்சியான வாழ்க்கையிலிருந்து வெகுதூரத்தில் இருக்கின்ற இந்த சாமானிய மக்கள்தான் உண்மையான ஜெர்மன் மக்கள். தமது எதிரியை எல்லை தாண்டியிருக்கின்ற நாடுகளில் தேடக்கூடாது, வடக்குக்கடலின் மறுகரையில் தேடக்கூடாது என்ற உண்மையை அவர்கள் இப்போது உணர்ந்திருக்கின்றார்கள்.
இரக்கமற்ற தமது எதிரி வேறெங்கும் இல்லை, தமது சொந்தமண்ணில்தான் இருக்கின்றான் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். முதலாளித்துவமே தமது எதிரி, உழைக்கும் மக்களை சுரண்டி அவர்கள் மீது தமது ஆட்சியதிகாரத்தைச் செலுத்தும் சொத்துடைமைவர்க்கமே தமது எதிரி என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். முதலாளித்துவம் என்னும் இந்த ராட்சசனே உலகெங்கிலும் இருக்கின்ற உழைக்கும் மக்களின் பொதுவான எதிரி என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள்.
நாங்களும் உங்களைப்போலவே சங்கிலிகளால் கட்டுண்டுள்ளோம். உங்களது சுமைகள் எங்களது சுமைகளும் கூட, உங்களது துயரங்களை நாங்கள் பகிர்ந்து கொள்கின்றோம். ஆகவே நாங்கள் உங்களுடன் துயருருகின்றோம், உங்களோடு சேர்ந்து நாங்களும் நம்பிக்கை கொள்கின்றோம், ‘துயரங்களின் சமுத்திரத்’துக்கு எதிராக உங்களுடன் நாங்களும் ஆயுதங்களை ஏந்துகின்றோம். எங்கள் கணவர்களுடன், குழந்தைகளுடன், சகோதரர்களுடன் உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கிடையே சமாதானமும் சகோதரத்துவமும் நிலைத்திருக்க முன்வருகின்றோம். அவர்களுடன் இணைந்தே முதலாளித்துவத்துக்கு எதிராக, சோசலிசத்துக்காகப் போராடுகின்றோம்.
படிக்க :
உக்ரைன் : ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர் | தோழர் சுரேசு சக்தி முருகன்
உக்ரைன் : உலகத்தை மேலாதிக்கம் செலுத்துவதற்கான கழுத்தறுப்பு போர்!
இங்கிலாந்து என்ற தேசத்தின் முன்னணி அறிவாளிகளின் ஞானமும் கனிவுமிக்க இதயங்களும் தேசிய சோசலிச (National Socialist) இயக்கம் நிலைத்து நீடித்திருக்கவும், அது வெல்லமுடியாத பலமிக்க அமைப்பாகவும் விளங்கிட எத்தகு மகத்தான அரிய பங்குப்பணியை அளித்துள்ளார்கள் என்பதை நாங்கள் ஒருபோதும் மறவோம்.
மகாபிரிட்டனின் உழைக்கும் ஆண்களும் பெண்களும் தமது உணவுக்காக உரிமைக்காக சுதந்திரத்திற்காக முதலாளிவர்க்கத்துக்கு எதிராக நடத்திவரும் போராட்டத்தை மறவாமல் என்றும் நினைவில் இருத்தியுள்ளோம். எரிமலையின் கீழே நிலநடுக்கம் ஏற்படும்போது வெளிப்படும் எரிமலையின் சக்தி மலையின் அடியில் ஒளிந்திருப்பனவற்றை எவ்வாறு வெளியே அள்ளி வீசுகின்றதோ அதேபோல் ‘தொழிலாளர் போராட்டம்’ என்பது சமூகஅடுக்கில் ஒளிந்துள்ள வசதிவாய்ப்புப்படைத்த சிறு சுரண்டும்வர்க்கத்தை அம்பலப்படுத்துகின்றது, இவ்வர்க்கம் ‘தொழிலாளர் போராட்டம்’ என்ற நிலநடுக்கத்தை கண்டு அஞ்சுகின்றது.
இன்றைய நிலை எப்படியுள்ளது? உழைக்கும் வர்க்கத்தை முதலாளித்துவம் அச்சுறுத்துகின்றது, ஆனால் உழைக்கும்வர்க்கமோ சோசலிசத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது.
பிரிட்டனின் சகோதரிகளே! எங்கள் உண்ர்வுகளுடனும் இலட்சியங்களுடனும் நீங்களும் இணைந்திருக்கின்றீர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். அனைத்து விதமான குறுகிய தேசியவாதங்கள், வெறுப்புணர்வுக்கு எதிராகவும் ஆயுதக்குவிப்புக்கும் போருக்கும் எதிராகவும் போராடுவதில் நாங்கள் பெருமை கொள்கின்றோம். பாட்டாளிவர்க்கத்தின் விடுதலைக்காக பாட்டாளிவர்க்கமே நடத்தும் புனிதப்போரின் முதல்வரிசையில் போராளிகளாக நிற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். நமது குழந்தைகள் சோசலிசத்தின்பால் நம்பிக்கை கொண்டுள்ளார்கள், நாம் தொடங்கியிருக்கின்ற இந்தப்போரை அவர்கள் வெற்றிகரமாக முடித்துவைப்பார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கின்றது. முதலாளித்துவம் என்பது நம் அனைவரின் மீதும் நடத்தப்படும் சமூகப்போராகும். பாட்டாளிவர்க்கம் நடத்தும் வர்க்கப்போராட்டம் என்பதன் பொருள் உலகநாடுகளிலுள்ள அனைத்து உழைப்பாளிகளின் சகோதரத்துவம் என்பதே.
சோசலிசம் என்பது உலகசமாதானமே!
***
குறிப்புக்கள் :
1 க்ளாரா ஜெட்கின் (Clara Zetkin) (1857-1933): ஜெர்மன் நாட்டின் கம்யூனிஸ்ட். அரசியலில் உழைக்கும்பெண்களின் பாத்திரத்தின், போராட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர், சர்வதேச அளவில் அறியச்செய்தவர். அக்கால கட்டத்தில் ஜெர்மன் நாட்டில் பெண்கள் தொழிற்சங்க இயக்கங்களில் பங்கேற்பது தடைசெய்யப்பட்டிருந்தபோதும் பல்வேறு தொழிற்சங்கங்களில் நிர்வாகக்குழுக்களில் பங்கேற்றவர். சர்வதேச சோசலிஸ்ட் பெண்கள் இயக்கத்தின் (International Bureau of Socialist Women) செயலாளராக இருந்தவர்.
ரோசா லக்சம்பர்க், கார்ல் லீப்னெக்ட் ஆகியோருடன் இணைந்து ஜெர்மானிய கம்யுனிஸ்ட் கட்சியை 1918இல் நிறுவியவர். 1920இல் ஜெர்மானிய ரீக்ஸ்டேக்கின் உறுப்பினராகவும் இருந்தார். கம்யூனிஸ்ட் அகிலத்தின் (Communist International) செயற்குழுவில் உறுப்பினராகவும், சர்வதேச பெண்கள் தலைமையகத்தின் (International Women’s Secretaraiat) பொதுச்செயலாளராகவும் இருந்தார். பால்கன் போர்கள் முடிந்த நிலையில் 1913 டிசம்பர் மாதம் அவர் இச்செய்தியை வெளியிடுகின்றார்;
ஏகாதிபத்தியங்களுக்கு இடையே ஆன நாடுபிடிக்கும் போட்டி, ஆயுதக்குவிப்பு மற்றும் கெடுபிடிகளின் விளைவாக 1914இல் முதலாம் உலகப்போர் தொடங்கியது. நேசநாடுகள் என அறியப்பட்ட ரஷ்யப்பேரரசு, ஃப்ரெஞ்ச் மூன்றாம் குடியரசு, மகா பிரிட்டனும் ஐயர்லாந்தும் இணைந்த ஒன்றிய அரசியம் (United Kingdom) ஆகிய பேரரசுகள் ஒரு புறமும், ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி கூட்டணியில் மத்தியவல்லரசுகள் என்று அறியப்பட்ட நாடுகள் மறுபுறமும் இப்போரில் இறங்கின. போரின் போக்கில் இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகியவை நேசநாடுகளின் பக்கமும், துருக்கியின் ஓட்டோமான் பேரரசும் பல்கேரியாவும் மத்தியவல்லரசுகளின் பக்கமும் சேர்ந்து போரைத்தொடர்ந்தன. போரின் போக்கில் 1917ஆம் ஆண்டு ரஷ்ய ஜார் மன்னனின் ஆட்சி, லெனின் தலைமையிலான மாபெரும் ரஷ்யப்புரட்சியால் வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2 பால்கன் போர்: 1912-13இல் முதலாம் பால்கன் போர் நடந்தது. பால்கன் அமைப்பின் கீழ் அமைந்த கிரீஸ், பல்கேரியா, செர்பியா, மோண்டினெக்ரோ ஆகிய நாடுகளுக்கும் பலஹீனமடைந்து கொண்டிருந்த துருக்கியின் ஓட்டோமான் பேரரசுக்கும் இடையே இப்போர் நடந்தது. 1913இல் செய்துகொள்ளப்பட்ட லண்டன் ஒப்பந்தத்தின்படி எல்லைகள் மறுவரைவு செய்யப்பட்டு இப்போர் முடிவுக்கு வந்தது. ஆனாலும் தொடர்புடைய சில நாடுகளின் அதிருப்தி காரணமாக 1913ஆம் ஆண்டே மீண்டும் ஒரு போர் நடந்தது. புகாரெஸ்ட் ஒப்பந்தம் வரையப்பட்ட பின் இப்போர் முடிவுக்கு வந்தது.
3 காய்ன் (Cain): கிறித்துவர்களின் பழைய வேதாகமத்தின் ஒரு பாத்திரம். ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிறந்த முதல் மகன். தனது சகோதரன் ஆபெல்லை காய்ன் கொலை செய்ததாக கூறப்படுகின்றது.
***************
(புதுவிசை இதழ் எண் 48,செப்டம்பர் 2017இல் வெளியானது) – மீள்பதிவு
முகநூலில் : மு. இக்பால் அகமது
disclaimer