Tuesday, July 29, 2025
முகப்பு பதிவு பக்கம் 219

பள்ளி மாணவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு கல்வியை கடைச் சரக்காக்கும் மோடி அரசு || CCCE

ட்டீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் உள்ள அரசு பள்ளிகளில் சுமார் 1137 பள்ளிகளில் 2 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கின்ற 16067 மாணவர்களிடம் கொரானா ஊரடங்கின் விளைவாக மாணவர்களின் கற்றல் திறனில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பை அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் கடந்த ஜனவரி மாதம் நடத்தியுள்ளது. இதன் முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டன.

அதில்

1. 92% மாணவர்கள் முந்தைய வகுப்புகளில் படித்த மொழிப் பாடங்களில் உள்ள வார்த்தைகளை படிக்க இயலவில்லை. அம்மாணவர்களால் வாசிக்கவும் இயலவில்லை. முந்தைய வகுப்புகளில் படித்த மொழிப் பாடங்களை மறந்துவிட்டனர்.

2. 82% மணவர்கள் கூட்டல், கழித்தல் போன்ற எளிய கணித அடிப்படைகளையும் மறந்துள்ளனர். அம்மாணவர்களால் எளிய கூட்டல், கழித்தல் கணக்குகளைக் கூட செய்ய முடியவில்லை.

என்று அவ்வறிக்கை கூறுகிறது.

இது கடந்த 10 மாதகாலமாக அரசு பள்ளிகள் மூடியிருப்பதும் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான மாற்று வழிகளை அமல்படுத்தாததும் தான் இதற்குக் காரணம் என்கிறது அந்த அறிக்கை. கொரோனா ஊரடங்கு காலத்தில் இணையவழி கற்பிக்கும் முறையை மோடி அரசு மாற்றாக முன்வைத்தது. ஆளும்வர்க்க பிரதிநிதிகளோ இணையவழிக் கற்பித்தல் முறை கற்றல் திறனை அதிகரிக்கும் என பிரச்சாரம் செய்தனர்.

படிக்க :
♦ திஷா ரவி கைதும் “டூல் கிட்”டுகளின் வரலாறும் !
♦ பட்ஜெட் 2021 : சுகாதாரத்திற்கான நிதியை 137% அளவிற்கு அதிகரித்ததா மோடி அரசு ?

கல்வி அதிகாரிகளும் ஆசிரியர்களும் பேராசிரியர்களும் அரசு சொல்வதையே கிளிப் பிள்ளைப் போல நடைமுறையும் படுத்தினர். ஆனால் சமீபகாலமாக வரக்கூடிய செய்திகள் மற்றும் ஆய்வு அறிக்கைகளோ, மோடி அரசின் கூற்றுக்கு மாறாக, ஊரடங்கு மற்றும் இணையவழிக் கற்பித்தல் முறையினால் படிப்பிலிருந்தே மாணவர்கள் வெளியேறியுள்ளனர் என்ற கள உண்மையை ஆதாரத்துடன் முன்வைக்கின்றன. குறிப்பாக அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களே இதனால் மிக அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்கின்றன இவ்வறிக்கைகள்.

கடந்த வாரம் கூகுள் நிறுவனமும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையும் ஏற்பாடு செய்திருந்த இந்திய கல்வி மாநாட்டில் (Indian Education Summit-2021) பல கல்வி தொழிட்நுட்ப நிறுவனங்கள் கலந்து கொண்டன. அம்மாநாட்டில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் “ஆறாம் வகுப்பிலிருந்து தொழிற்கல்வியும் தொழிற்பயிற்ச்சியும் வழங்குவதன் மூலம் மாணவர்களிடத்தில் தன்னம்பிக்கையை விதைக்க முடியும். உலக நாடுகளிலே இந்தியாவில் தான் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence – AI) பற்றிய பாடம் பள்ளிகளில் கற்றுத்தரப்படுகிறது” என்றார்.

கோடிக்கணக்கான மாணவர்கள் பல மாதங்களாக கல்விகற்க முடியாமலிருப்பதை பற்றியோ கல்வி இடைநிற்றல் பற்றியோ இதுவரை பேசாமல் அமைதி காக்கும் கல்வி அமைச்சர் அம்மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவுப் பற்றி பாடம் நடத்துகிறோம் எனப் பெருமை கொள்கிறார்.

#####

கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி இணையவழி கற்பித்தலை அனைத்து மட்டங்களிலும் மோடி அரசு முன்தள்ளிய இதே காலகட்டத்தில் தான் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களின் வருவாய் பலமடங்கு அதிகரித்துள்ளது. கூடவே இத்துறையில் ஏராளமான அந்நிய முதலீடுகள் குவிவதும் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதும் நடந்துள்ளது.

உதாரணமாக பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட பைஜுஸ் என்ற கல்வி தொழில்நுட்ப நிறுவனம் (Byju’s edutech), ஆகாஷ் கல்வி சேவை நிறுவனத்தை ஒரு பில்லியன் டாலருக்கு (7260 கோடி ரூபாய்) வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஆகாஷ் நிறுவனமானது நீட் உள்ளிட்ட மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வுகள் மற்றும் ஐஐடி நுழைவுத் தேர்வு போன்ற தேசிய அளவிலான தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கும் நிறுவனமாகும். இதில் Blackstone என்ற அமெரிக்க தனியார் நிறுவனம் 39% பங்குகளை வைத்துள்ளது.

பைஜுஸ் (Byju’s) நிறுவனத்திலோ பேஸ்புக்கினுடைய முதலீடு, டைகர் குளோபல், பாண்ட் கேப்பிடல் என்ற அமெரிக்க தனியார் நிறுவனங்களுடைய முதலீடுகள் அதிக அளவில் உள்ளன. இது ஒரு உதாரணம் மட்டுமே.

இந்தியாவிலுள்ள கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவற்றில் ஏராளமான வெளிநாட்டு முதலீடுகளே உள்ளன. புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு கல்வியின் தரத்தினை மேம்படுத்துகிறோம் என்று கூறி இந்நிறுவனங்களுக்கு ஆதரவாக பல அறிவிப்புகளை மத்திய கல்வி அமைச்சகம் செய்துவருகிறது.

அனைத்து உயர்படிப்புகளுக்கும் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு, உயர்/பள்ளிக் கல்வியில் இணையவழி கற்றல்-கற்பித்தலுக்கு முன்னுரிமை, அரசுப் பள்ளிகளை தனியார் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியோடு (PPP model) மேம்படுத்துதல் போன்ற திட்டங்கள் இந்திய கல்வி சந்தையை தனியார் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களின் கைகளில் ஒப்படைப்பது என்ற கொள்கை முடிவின் வெளிப்பாடேயாகும். இதற்கு ஒத்திசைவாகவே நடப்பு பட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

கொரானா ஊரடங்கை ஒட்டி தடைப்பட்டிருந்த கல்விச் செயல்பாடுகளை பழைய நிலைக்கு கொண்டுவர கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டுமென கல்வியாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் மோடி அரசோ கடந்த ஆண்டைவிட 6.13% குறைவாகவே ஒதுக்கியுள்ளது. மேலும் கல்வியில் தனியாரின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான பல அறிவிப்புகளும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. ரமேஷ் பெக்கிரியாலின் பேச்சோ தாங்கள் எந்த வர்க்கத்திற்கானவர்கள்? என்பதை நேரடியாகவே வெளிப்படுத்துகிறது !

ராஜன்
CCCE-TN

செய்தி ஆதாரம் :
1. The Indian Express, February 11, 2021
2. The Economic Times
3. Loss of Learning during the Pandemic, Field Studies in Education, February 2021.
4. The News Minute

இந்திய உழவர் போராட்டம் குறித்து ஒரு டச்சு ஊடகம் || கலையரசன்

0

ந்திய விவசாயிகளின் போராட்டம் குறித்து நெதர்லாந்தில் இயங்கும் மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சியினர் வெளியிடும் Rode Morgen மாதாந்த சஞ்சிகையில் பெப்ரவரி மாத இதழில் வந்த கட்டுரையை இங்கே தமிழில் மொழிபெயர்த்து தருகிறேன்.

இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. ஆனால் ஏழை பணக்காரர்களுக்கு இடையிலான சமத்துவமின்மை அதை விட மிக வேகமாக வளர்கின்றது. ஏழைகளை மென்மேலும் ஏழைகளாக்கி கோடீஸ்வரர்கள் செல்வந்தர்கள் ஆகிறார்கள். மோடி அரசாங்கம் பெரும் வணிக நிறுவனங்கள் சுரண்டலை நடத்துவதற்கு உதவுகின்றது.

2016-ம் ஆண்டு வங்கிகளுக்கு உதவும் நோக்கில், மோடி 1000, 500 ரூபாய் தாள்களை செல்லாததாக்கினார். அதே நேரம் பெரும்பாலான மக்களுக்கு வங்கிக் கணக்கும் இல்லை, வங்கி அட்டையும் இல்லை. பதினெட்டு மில்லியன் இந்தியர்கள் அதை எதிர்த்து போராடினார்கள்.

படிக்க :
♦ திஷா ரவி கைதும் “டூல் கிட்”டுகளின் வரலாறும் !
♦ உலக வர்த்தகக் கழகத்தை அடித்து ஓட விடுவாரா சச்சின் ?

2019ம் ஆண்டு, முஸ்லிம்களை பாகுபடுத்தி பிளவை அதிகரிக்கும் புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன. அதைத் தொடர்ந்து பாசிச மோடி பெரிய அரச நிறுவனங்களை தனியார்மயமாக்கி உழைக்கும் வர்க்க மக்கள் மீது தாக்குதல் நடத்தினார். வேலை நேரம் அதிகரிக்கப்பட்டது. வேலைநிறுத்தம் செய்யும் உரிமையும், ஜனநாயக உரிமைகளும் குறைக்கப் பட்டன.

4 செப்டம்பர் 2020 நான்கு தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்பட்டன. அவற்றில் தொழில்முனைவோருக்கு நன்மையாகவும் தொழிலாளர்களுக்கு தீமையாகவும் பல அம்சங்கள் இருந்தன. நிரந்தர தொழில்களுக்கு பதிலாக ஒப்பந்த தொழில்கள் அனுமதிக்கப்பட்டன. நினைத்தபடி பணி நீக்கம் செய்வதை தடுப்பதற்கான பாதுகாப்பு நீக்கப்பட்டது. நிறுவனங்கள் தொழிற்சங்கத்தை ஆலோசிக்காமல் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம். சட்டரீதியான வேலைநிறுத்தங்கள் சாத்தியமில்லை. ஒரு கம்பனி ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்திருப்பதற்கான எல்லை 20 இலிருந்து 50 ஆக அதிகரிக்கப்பட்டது.

பாசிச மோடி அரசாங்கம் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத் திருத்தங்கள் கொண்டு வந்த அதே காலத்தில் இந்திய சனத்தொகையில் ஐம்பது சதவீதத்தை கொண்ட உழவர்களுக்கு எதிராகவும் மூன்று விவசாய சட்டங்களை கொண்டு வந்தது. இதன் மூலம் அரசு அரிசி, தானியங்களை ஒரு நிச்சயிக்கப்பட்ட விலைக்கு வாங்கி வந்ததை நிறுத்தி விடும். நிலம் குத்தகைக்கு கொடுப்பவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் நீக்கப்பட்டன.

இதன் மூலம் விவசாயிகள் தமது விளைபொருட்களை யாருக்கு வேண்டுமானாலும் விற்பதற்கான சுதந்திரம் கிடைக்கிறது என்று அரசாங்கம் கூறுகின்றது. எழுபது சதவீதமான விவசாயிகள் ஒரு ஹெக்டேயரை விடக் குறைவான நிலத்தையே சொந்தமாக வைத்திருக்கிறார்கள். இந்த விவசாயிகள் உலகில் பெரிய தானிய வர்த்தகர்களுடன் பேரம் பேச முடியுமா?

Cargill, Walmart போன்ற பெரிய நிறுவனங்கள் தாம் விரும்பியவாறு விலையை குறைத்து விடலாம். அதனால் விவசாயிகள் தாம் செலவிட்ட பணத்தை கூட திரும்பப் பெற முடியாது. பெரும் நிறுவனங்களின் இலாபவேட்டையில் உழவர்கள் பலி கொடுக்கப்பட்டுள்ளனர். குடும்பத்துடன் விவசாயம் செய்து வந்தவர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் நகரங்களில் சேரிகளை நோக்கிச் செல்ல நிர்ப்பந்திக்கப் படுவார்கள்.

26 நவம்பர் 2020 அன்று, அரசு சட்டங்களுக்கு எதிராக 250 மில்லியன் அளவிலான விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் தெருவில் இறங்கிப் போராடினார்கள். அது மனிதகுல வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய வேலைநிறுத்தப் போராட்டம். ஆனால் நெதர்லாந்தில் அதைப் பற்றி எந்த செய்தியும் இல்லை. சர்வதேச ஊடகங்கள் ஏகபோக மூலதனத்திற்கு சேவையாற்றுகின்றன. அதனால் அவர்களது அரசுக்கும், ஏகபோக மூலதனத்திற்கும் எதிரான தொழிலாளர், விவசாயிகளின் போராட்டம் குறித்து கவனம் செலுத்த விரும்பவில்லை.

27 நவம்பர் இந்தியா முழுவதும், குறிப்பாக பஞ்சாப், ஹரியானாவில் இருந்து விவசாயிகள் கால்நடையாகவும், டிராக்டர்கள், பேருந்து வண்டிகளிலும் தலைநகர் டெல்லியை நோக்கிச் சென்றனர். அவர்களது எண்ணிக்கை அரை மில்லியனாக வளர்ந்தது. நவம்பர் கடைசியில் இருந்து கடும் குளிரிலும், மழையிலும் நெடுஞ்சாலைகளை மறித்து நின்றனர். இந்த மறியல் போராட்டத்தின் போது 500 உழவர் அமைப்புகள் தற்காலிக சமையல் கூடங்களையும், மருத்துவ நிலையங்களையும், ஒரு பத்திரிகையும் கூட நடத்தினார்கள்.

படிக்க :
♦ விவசாயப் போராட்டத்தை திசைத் திருப்பும் ஊடகங்கள்!!
♦ தமிழகம் வெற்றி நடைபோடுகிறதா, கூழுக்கு அழுகிறதா?

ICOR சர்வதேச அமைப்பில் நெதர்லாந்து Rode Morgen கட்சியுடன் அங்கம் வகிக்கும், CPI (ML) Red star மற்றும் பல மார்க்சிய லெனினிச அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்களித்துள்ளன. போலிஸ் தடையரண்கள் போட்டு, கலவரத் தடுப்பு காவலர்களையும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும், வேறு பல தாக்குதல் உபகரணங்களையும் பயன்படுத்தியது. இந்தப் போராட்டத்தில் இதுவரை 54 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக இந்தியப் பிரதமர் மோடி பிற்போக்குவாத சட்டங்களை அமுல்படுத்த முடிந்தது. ஆனால் தற்போது அவரது அரசாங்கம் எதிர்க்க முடியாத விவசாயிகளுக்கு முகம் கொடுக்கிறது. அவர்கள் இதுவரை எட்டு தடவைகள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். 20 ஜனவரி நடந்த பேச்சுவார்த்தையில் அரசு சட்டத்தை நடைமுறைப் படுத்துவதை 18 மாதங்கள் பின்போடவும் ஓர் ஆணைக்குழு அமைக்கவும் சம்மதித்தது. உழவர் அமைப்புகள் அதை நிராகரித்ததுடன் சட்டங்களை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டுமென கோரின.

குடியரசு தினமான ஜனவரி 26 எப்போதும் பெரிய அணிவகுப்புகள் நடக்கும். இந்த வருடம் மில்லியன் கணக்கான விவசாயிகள் டிராக்டர்களுடன் தமது அணிவகுப்பை நடத்தினார்கள். தடையை மீறி தலைநகருக்குள் நுழைந்தனர். அதற்கு ஆயத்தப் படுத்துவதற்காக 23 ஜனவரி மாநிலத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அனைத்து தொழிற் சங்கங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தந்தன. இந்து தேசியவாத பாஜக ஆதரவு தொழிற்சங்கம் மட்டுமே கலந்து கொள்ளவில்லை. பல்லாயிரக்கணக்கான பெண்களும் போராட்டத்தில் பங்குபற்றி உள்ளனர். உழைக்கும் வர்க்க மக்களின் வர்க்க உணர்வானது மோடியின் பாஜக அரசாங்கத்தின் கீழ் அதிகரித்துள்ளது.

கலையரசன்
கலையகம்

disclaimer

முதலாளித்துவ பெருந்தொற்றிலிருந்து மீள்வது எப்படி ?

டந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்து, வெயில் தகிக்கும் சாலைகளில் நடந்து சென்றதையும் உணவின்றி இறந்துபோனதையும் நாம், மறந்திருக்கமாட்டோம்.

ஊரடங்கு காலத்தில் நாட்டின் மக்கள் அனுபவித்த இன்னல்கள் யாவும், இந்த அரசுக் கட்டமைப்பு எந்த அளவுக்கு மோசமானதாக இருக்கிறது என்பதற்கான சாட்சியாக இருந்தது. முதலாளித்துவ அறிவுஜீவிகள் சிலர், ”இந்த பெருந்தொற்று இந்த உலக கட்டமைப்பிற்கும் அடுத்த உலக கட்டமைப்பிற்கும் ஒரு வாயிலாக இருக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்கள். இதை வேறு வார்த்தைகளில் சொன்னால், பெருந்தொற்றால் இந்தக் கட்டமைப்பின் பிரச்சினைகள் மோசமாக வெளிப்பட்டதை இந்த உலகம் கண்டுணர்ந்தததன் காரணமாக இந்த உலகின் சமூக பொருளாதார நிலை மறுகட்டமைப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அறிவுஜீவிகள் எதிர்பார்த்ததற்கு மாறாக, உலகில் உள்ள பணக்காரர்கள் இந்த பெருந்தொற்றை பயன்படுத்தி மக்கள் பணத்தை அவர்களது மலிவு விலை உழைப்பாகவும், அரசாங்கத்தின் மூலமான சலுகைகளாகவும் பெற்று சுருட்டி தங்கள் நெருக்கடியை தீர்த்துக் கொண்டார்கள். நிலவும் இந்த சமூக பொருளாதார அமைப்பை பயன்படுத்தி தங்களின் நிலையை மேலும் உயர்த்திக்கொண்டார்கள்.

படிக்க :
♦ வேளாண் சட்ட எதிர்ப்பு : அடுத்தகட்டமாக மகா பஞ்சாயத்துகளைக் கூட்டவிருக்கும் விவசாயிகள் !
♦ விரைவில் சி.ஏ.ஏ. சட்டங்களை அமல்படுத்தப் போவதாக அமித்ஷா பேச்சு

சமீபத்தில் Oxfam நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, உலகின் முதல் பத்து பணக்காரர்களின் செல்வம் ஒட்டுமொத்தமாக அரை டிரில்லியன் டாலர்கள் அதிகரித்திருக்கிறது. ஆனால் இந்த பணம் வறுமையை ஒழிக்கவோ, தடுப்பூசி போடவோ பயன்படுத்தப்படவில்லை.

பணக்காரர்களின் சொத்து மதிப்பு உயரும் அதே சமயத்தில், இன்றைய பொருளாதார அமைப்பில் தனக்கு இருக்கும் வல்லமையை பயன்படுத்திக்கொண்டு ஏகாதிபத்திய நாடுகள் வளரும் நாடுகளை சுரண்டுவதில்தான் கவனம் செலுத்தினவேயன்றி, கொரோனாவை சமாளிக்க முடியாமல் திண்டாடி வரும் வளரும் நாடுகளுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. மாறாக, சர்வதேச நிதி நிறுவனங்கள் வட்டியைக் குறைத்து, மீண்டும் கடன் வாங்கச் சொல்கின்றன.

பெரும் வட்டிக்கு கடன் கொடுத்து கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்குச் செல்ல வேண்டிய பணத்தை வட்டிகட்ட நிர்பந்திக்கின்றன. வளரும் நாடுகளின் வெளிநாட்டுக் கடன் மொத்தம் 11 டிரில்லியன் டாலர்களாக இருக்கிறது. இதில் கடந்த ஆண்டு மட்டும், உலகின் 64 நாடுகள் தங்கள் நாட்டின் சுகாதாரத்திற்கு செலவிட்டதைவிட அதிகமான தொகையை கடன்களை அடைக்க செலவிட்டிருக்கின்றன.

இன்னொரு பக்கம் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கண்டுபிடிக்கும் தடுப்பூசிகளுக்கு காப்புரிமை வைத்துக் கொண்டு அதன் மூலமான சுரண்டலிலும் ஈடுபடுகின்றன. “தடுப்பூசிகள் மீதான காப்புரிமைகளை நீக்கிக் கொள்ளுமாறு” வளரும் நாடுகள் வைத்த கோரிக்கைகளை இந்த பணக்கார நாடுகள் அலட்சியம் செய்தன. இப்படிப்பட்ட மோசமான பெருந்தொற்று காலத்திலும் காப்புவாதம் அப்பட்டமாக பின்பற்றப்படுவதுதான் முதலாளித்துவக் கட்டமைப்பின் ‘சிறப்பியல்பு’.

ஐக்கிய நாடுகள் சபையின் (UN), உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் உணவு பாதுகாப்பின்மை பற்றிய 2020-ம் ஆண்டிற்கான அறிக்கை, “வரும் 2030-ம் ஆண்டிற்குள் உலகில் பட்டினியாக இருப்பவர்களின் எண்ணிக்கை 840 மில்லியனாக அதிகரிக்கும்” என்று சுட்டிக் காட்டுகிறது. எதார்த்தத்தில் நிலைமை இதை விட மோசமாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகம்.

உலகம் முழுவதும் சத்தான உணவு கிடைக்காமல் இருக்கும் மக்களின் எண்ணிக்கை 2 பில்லியனாக உள்ளது. இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 26% ஆகும். இந்த மக்கள் பட்டினியாக கிடக்கிறார்கள், அவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வழக்கமாக கிடைப்பதில்லை. பெருந்தொற்றுக்கு முந்திய நிலைதான் இது. “இந்த பெருந்தொற்று கட்டுக்குள் வைக்கப்படும் முன்பே, பட்டினி கிடக்கும் மக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகும்” என உலக உணவு செயல்திட்டம் எனும் நிறுவனம் கணித்திருக்கிறது.

உலகளவில் பசிக் கொடுமை தலை விரித்தாடும் இப்போதைய நிலையில், பொருளாதார கொள்கை விவசாயிகளுக்கு சாதகமாக மாற்றுவதன் மூலம், பெருந்தொற்று காலத்தில் தரமான உணவு கிடைக்க வழிவகை செய்யமுடியும். உணவு மலிவாக கிடைக்க மானியங்கள் அமல்படுத்தப்பட வேண்டும். ஆனால், IMF போன்ற உலக நிறுவனங்கள் பொது உணவு விநியோகத்திற்கான மானியங்களை வழங்க முன்வருவதில்லை. இந்த நிறுவனம்தான் மானியங்களை ஒழிக்கச்சொல்லி மூன்றாம் உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

உலகம் முழுவதும் நிலைமை இப்படியெனில், இந்தியாவில் இந்தப் பெருந்தொற்றை பயன்படுத்தி விவசாயத்தை கார்ப்பரேட்களின் கைகளில் ஒப்படைக்கும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரும் வேளாண் பொருட்கள் சந்தையை கார்ப்பரேட்டுகளின் கையில் ஒட்டுமொத்தமாக அள்ளிக் கொடுக்கவே இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

ஒருபக்கம் இந்திய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் வரலாறு காணாத அளவு உயர்கிறது. இன்னொரு பக்கம் வேலையிழப்பும், கூலி குறைப்பும், வறுமையும், பட்டினியும் நடந்துகொண்டிருக்கிறது. மக்களின் வாழ்நிலைக்கும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியாகக் காட்டப்படும் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதையே இது அப்பட்டமாகக் காட்டுகிறது.

உணவு, கல்வி, மருத்துவம் என முக்கிய ஆதாரங்களில், ஏகாதிபத்திய நாடுகள் தங்களின் வல்லாதிக்க நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு வளரும் நாடுகளை சுரண்டுகிறது. பணக்காரர்கள் ஏழை மக்களிடமிருந்து பணத்தை உருஞ்சுவதில் நுட்பமான செயல்படுகிறார்கள். இதைப் பயன்படுத்தி உழைப்பாளர்களின் கூலியை குறைத்தனர். வருமானம், கூலி குறையும் போது அது தொழிலாளர்களின் வாழக்கைத்தரத்தை மேலும் பாதிக்கும். மீண்டும் சந்தையில் தேக்க நிலை உருவாகும்.

முதலாளித்துவத்தின் இயல்பாகவே இருக்கின்ற நெருக்கடியை மக்களைச் சுரண்டிதான் முதலாளித்துவம் சரி செய்து கொள்ளும். இது போன்ற கொடுமையான பெருந்தொற்று காலத்திலும் இந்த அரசுக் கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது இலாபத்தை அதிகரிக்கவே அவர்கள் முயற்சி செய்து வருகிறது முதலாளித்துவம்.

உலகம் முழுவதும் உழைக்கும் மக்கள் ஆங்காங்கே போர்க் குணமிக்க போராட்டங்களை மேற்கொண்டு வந்தாலும், இவை எதுவும் மக்களைச் சுரண்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த பொருளாதாரக் கட்டமைப்பை நிகழ்ச்சிப் போக்கில் மாற்றிவிடப் போவதில்லை. மாற்றவும் முடியாது. சமூக மாற்றத்திற்கான அறிவியலான மார்க்சியத்தை தற்போதைய சூழலுக்கு சரியான முறையில் பிரயோகிக்கும் கட்சியால் மட்டுமே மக்களை வர்க்கரீதியாகத் திரட்டி, இந்த முதலாளித்துவ சமூகக் கட்டமைப்பை தகர்க்க முடியும்.

பெருந்தொற்றின் காரணமாக அரசே தனது சுரண்டலை குறைத்துக் கொள்ளும் என்றோ, கார்ப்பரேட்டுகளுக்குக் கடிவாளம் போடும் என்றும் நினைப்பது வெறும் பகல்கனவுதான்.


ராஜேஷ்
செய்தி ஆதாரம்:
Monthly Review Online

நூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு || மு. இனியவன் || முரா. மீனாட்சி சுந்தரம்

ந்திய வரலாற்றில், விடுதலைக்காகவும் ,சமத்துவத்துக்காகவும் போராடிய ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறுகள் பற்றிய செய்திகளை ஏடுகளில் காண்பது அரிதாக இருக்கிறது. காரணம் அவை முறையாக பதிவு செய்யப்படுவதில்லை. அதுவும் தமிழில் அது பற்றிய நூல்களும் அதிகளவு வெளிவரவில்லை. அப்படியே வந்தாலும் சிலவற்றைத் தவிர பலவும் அரைத்த மாவையே அரைத்தனவே தவிர மறைக்கப்பட்ட வரலாற்று சுரங்கங்களை தோண்டித் துருவிய சான்றுகளோடு வெளிவரவில்லை.

இந்த நிலையில் முனைவர் மு.இனியவன் எழுதிய ”பீமா கோரேகான் -பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு” என்ற வரலாற்று நூல், கள ஆய்வுகளோடும் வரலாற்றுத் தரவுகளோடும் வெளிவந்திருப்பது மகிழ்வைத் தருகிறது.

பதினோரு தலைப்புகளில் 160 பக்கங்கள் கொண்ட இந்த நூலை கோவையைச் சேர்ந்த அறிவாயுதம் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. நூல் சிறியதுதான். ஆனால் கனமானது. நூலாசிரியரின் கடின உழைப்பை ஓவ்வொரு பக்கத்திலும் உணரலாம். தொடக்கம் முதல் இறுதி வரை சுவை குன்றாமல் சரளமான நடையில் பயணிக்கிற இந்நூல் புதிய புதிய பல்வேறு வரலாற்று செய்திகளை நம் முன் பரிமாறிச் செல்கிறது.

படிக்க :
♦ நூல் விமர்சனம் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | ஆனந்த் தெல்தும்டே | எஸ். காமராஜ்
♦ வரலாறு : பார்ப்பனியத்தை வென்ற தலித் மக்களின் பீமா – கோரேகான் வெற்றித்தூண்

மகாராஷ்டிரா மாநிலம் பூனா மாவட்டத்தில் பீமா என்கிற ஆற்றின் கரையில் அமைத்துள்ள கோரேகான் என்ற சிற்றூர் பற்றி பலரும் அறியாமல் இருந்திருக்கலாம். ஆனால் 2018-ல் பீமா கோரேகானின் 200-வது ஆண்டு நினைவு தினத்தன்று (01-01-2018) லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களும் இடதுசாரிகளும் முற்போக்குவாதிகளும் கோரேகானை நோக்கி அணி திரண்டபோது அதை தாங்கிக் கொள்ள முடியாத மதவெறியர்களான, சங் பரிவாரங்கள் நடத்திய திட்டமிட்ட வன்முறையைக் காரணம் காட்டி இடதுசாரிகள், முற்போக்காளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் என பலரின் மீதும் அரசின் தேசதுரோக வழக்கு பாய்ந்த பின் கோரேகான் எல்லோரும் அறிந்த பெயராக மாறியது மட்டுமல்ல அதன் வரலாறு என்ன என்கிற தேடுதலும் அதிகரித்தது. அந்த கோரேகான் வரலாற்று சுவடுகளை தேடியவர்களில் இந்நூலின் ஆசிரியரும் ஒருவர் என்பதை இந்நூல் உணர்த்துகிறது.

மராட்டிய மண்ணின் மைந்தர்களான தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சித்பவன் பார்ப்பனர்களான பேஷ்வாக்கள் காலம் காலமாக தொடுத்த தீண்டாமை கொடுமைகள் கற்பனைக்கு அப்பாற்பட்டது. இந்தியா முழுவதும் தீண்டாமைக் கொடுமைகள் தாண்டவம் ஆடினாலும், பேஷ்வாக்களின் தலைநகரான பூனாவில் அவர்களின் வாழ்வியலில் உளவியல் ரீதியாக கட்டவிழ்த்து விடப்பட்ட பெரும் அடக்குமுறைகள் உச்சத்தைத் தொட்டன.

பூனாவின் தெருக்களில் தீண்டத்தகாதவர்களான மகர்கள் நடக்கும் போது அவர்களது காலடிப்பட்ட இடத்தின் தீட்டை பெருக்கி சுத்தப்படுத்த துடைப்பத்தை இடுப்பிலும்,, எச்சிலை துப்ப குவளையை கழுத்திலும் கட்டிக் கொண்டே செல்ல வேண்டும். தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள கையில் கருப்பு சரடு அணிந்திருக்க வேண்டும். எல்லா நேரங்களிலும் அவர்கள் தெருக்களுக்குள் நுழைந்து விட முடியாது. காலையிலும் மாலையிலும், நீண்ட நிழல் ஏற்படும் நேரங்களில் அவர்கள் நடமாட முடியாது. ஏனெனில் அவர்களது நீண்ட நிழல்கள் தங்கள் மீது பட்டு தீட்டாகி விடும். எனவே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் நடமாட உரிமையில்லை.

பீமாகோரேகான் வெற்றித் தூண்.

புதிய கோட்டைகள் கட்ட மகர்களை உயிரோடு நரபலி இட்டனர். சிறு தவறுக்கும் உயிரோடு கொளுத்தப்பட்டனர். இந்த அக்கிரமங்களை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களை தலை மட்டும் மண்ணில் தெரிய புதைத்து யானையை கொண்டு தலையை இடரச் செய்யும் நிகழ்வின் கொலைக்களமாக பேஷ்வாக்களின் அரண்மனை முற்றம் திகழ்ந்தது.

இவ்வாறாக காலம் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த மண்ணின் பூர்வக் குடிகளான மகர்கள், வீறுகொண்டு எழுந்து பேஷ்வாக்களை பீமா கோரேகான் என்ற இடத்தில் நடந்த யுத்தத்தில் வெற்றி கொண்டு பழி தீர்த்ததையும், அதன் பின்னே உள்ள வரலாற்றையும் அறிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது.

1818-ல் பீமா கோரேகானில் கிழக்கிந்திய ஆங்கிலேய படைப்பிரிவான மகர் படைப் பிரிவுக்கும், மராட்டிய பார்ப்பன பேஷ்வா படைக்கும் நடைபெற்ற யுத்தமே இந்நூலின் மையம் என்றாலும், மராட்டியத்தின் வரலாறு, சத்ரபதி சிவாஜியின் எழுச்சி, அதில் மகர்கள் வகித்த பங்கு, பின்னர் சிவாஜி பார்ப்பனியத்தால் வீழ்த்தப்பட்ட வரலாறு, பார்ப்பன பேஷ்வாக்களின் கொடுமையான ஆட்சி, அதில் ஒடுக்கப்பட்ட மக்களாகிய மகர், மாங், மாதாரி, மாதிகா, சாமர், ஆகியோர் அடைந்த இன்னல்கள், இழிவுகள் நிறைந்த துன்பியல் வாழ்நிலைகள் மற்றும் கோரேகானை வரலாற்றிலிருந்து தூக்கி எறியத்துடிக்கும் பார்ப்பன இந்துத்துவா சக்திகள், அதற்கு துணை நிற்கும் அரசின் வன்மங்கள் என ஏராளமான வரலாற்று நிகழ்வுகளுக்குள் இந்நூல் பயணிக்கிறது.

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் கால்பதித்த பின் நடந்த யுத்தங்கள் ஏராளம். அதன் 200 ஆண்டு கால வரலாறு முழுவதும் யுத்தங்களால் நிரம்பி வழிந்துள்ளன. ஆனால் 1818-ல் பீமா கோரேகானில் கிழக்கிந்திய ஆங்கிலேய மகர் படைப்பிரிவுக்கும், பார்ப்பன பேஷ்வா படைப் பிரிவுக்கும் நடந்த யுத்தம் என்பது எல்லாவற்றிலும் வேறுபட்டது. ஒரு அடிமை ஆண்டானை வெற்றி கொண்ட வரலாறு அது. பல நம்ப முடியாத அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியதும் அதுதான்.

பேஸ்வாக்களால் இழிவும் அவமானமும்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களாகிய மகர்களை இந்த போர்க்களம் ஸ்பார்ட்டகஸ்களாக உருமாற்றியது. ஒரு சிறிய படை பல மடங்கு பலமுடைய பேஸ்வாக்களை வென்று புதிய வரலாறு படைத்தது. எப்பொழுதாவது நடக்கும் அரிதினும் அரிதான வரலாற்று நிகழ்வு இது.

பீமா கோரேகானின் போர்க்களக் காட்சிகளை நூலாசிரியர் விவரிக்கும் விதம் அழகும் சுவையும் நிரம்பியது. இரு படைப் பிரிவுகளின் தளபதிகளும், வகுக்கும் போர் உத்திகள், களநிலவரம், படைகளின் அணிவகுப்பு என ஓவ்வொரு காட்சியையும் ஆசிரியர் எழுத்தில் வடித்துக் காட்டி போர்க்களத்திற்குள் வாசகர்களையும் இழுத்து செல்கிறார். ஒரு போர் வீரனாக நம்மையும் நிறுத்துகிறார்.

படிக்க :
♦ விரைவில் சி.ஏ.ஏ. சட்டங்களை அமல்படுத்தப் போவதாக அமித்ஷா பேச்சு
♦ பீமா கொரேகான் : மோடியைக் கொல்லத் திட்டமிட்ட சதிக் கடிதம் பொய்யானது ! ஆதாரம் அம்பலம் !

கோரேகான் அருகே பீமா ஆற்றங்கரையை கிழக்கிந்திய கம்பெனியின் படை கடந்து விட்டால் அது நேராக பூனா சென்று நகர பாதுகாப்புப் பணியில் தன்னை இணைத்துக் கொள்ளும். எனவே அதை தடுத்து, தாக்கி அழிக்க வேண்டும் என்பது பேஸ்வாக்களின் திட்டமாக இருந்தது.

எனவே “பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் தலைமையில் 20,000 குதிரைப் படைப் பிரிவினரும், 8000 காலாட்படையினரும் பீமா கோரேகானிலிருந்து 2 கி.மீ. தூரம் தள்ளியிருந்த மலைக்குன்றில் முகாமிட்டிருந்தனர். மறுபுறத்தில் கிழக்கிந்திய படையணியின், சுமார் 500 காலட்படைப் பிரிவினரும், 300 குதிரைப்படை வீரர்களும் கேப்டன் ஸ்டாண்டன் தலைமையில் இருந்தனர்”. “காலட்படைப் பிரிவில் மகர்களே அதிகளவில் இருந்தனர்”

போர் உச்சக்கட்டத்தை அடைந்தபொழுது பேஷ்வா படை வீரர்கள், அதிக அளவில் இருந்ததால் சுழற்சி முறையில் அவர்களால் ஓய்வு எடுக்க முடிந்தது. படைகளுக்கு முறையான உணவும்,ஓய்வும் கிட்டியது. அதேவேளையில் ஆங்கிலேய படைப் பிரிவு எண்ணிக்கையில் மிகவும் சிறியதாக இருந்தது. ஏற்கெனவே ஒரு யுத்தக் களத்தில் வெற்றி பெற்று பூனாவை நோக்கி திரும்பிக் கொண்டிருந்ததால் உடலளவில் அது களைப்புற்றும் இருந்தது.

போர் உச்சத்தை தொட்ட நேரத்தில் ஓய்வின்றி போர்க்களத்தில் நின்ற அவர்களுக்கு போதுமான உணவும் நீரும் கிடைக்கவில்லை. தாகமும், பசியும் உயிரை வாட்ட தோல்வியின் விளிம்பில் நிற்கின்றனர். ஆங்கிலேய படையின் லெப்டினண்ட் சிஸ் ஹோம்மின் தலை பேஷ்வா படைகளால் துண்டிக்கப்பட்டவுடன், ஆங்கிலப்படையின் மனஉறுதி குலையத் தொடங்கியது.

…. சரணடைந்து விடலாம் என்ற முடிவை எடுக்க சொல்லி சில ஆங்கிலேய வீரர்கள் கேப்டன் ஸ்டாண்டனிடம் கோரிக்கை வைக்க, ஸ்டாண்டனும் மகர் படை வீரனான சித்நாக்கும், “எதிரிகளின் கைகளில் சிக்கினால் தலை துண்டாடப்படுவது உறுதி. எனவே நாம் உயிர் வாழ வேண்டுமென்றால் சண்டையிட்ட தீர வேண்டும். நமது சக்தியை ஓன்று திரட்டி உயிர் உள்ள வரை போராடுவோம்; பேஸ்வா படையை வீழ்த்துவதே நமக்கு முக்கியம்” என்று அழுத்தம் திருத்தமாக அவர்கள் ஆற்றிய உரை சோர்ந்திருத்த,நம்பிக்கை இழந்து கிடந்த படைப் பிரிவுகளுக்கு புத்துயிர் ஊட்டியது.

வீறு கொண்டெழுந்த மகர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை எதிரியின் குருதியில் கரைத்தனர் என்று அந்தக் காட்சியை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் இந்நூலின் ஆசிரியர் முனைவர் இனியவன்.

நூல் இத்துடன் நின்று விடவில்லை. பீமா கோரேகானின் வெற்றிகளை சீரணித்துக் கொள்ள முடியாத பார்ப்பன இந்துத்துவவாதிகள் “அந்நியரான ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி படையணியில் இணைந்து கொண்டு உள்நாட்டைச் சார்ந்த படையணியை [சாதி இந்துக்களின் பேஸ்வா படை] வீழ்த்தியதை எப்படி உள்நாட்டு மக்களின் வெற்றியாகக் கொண்டாடலாம். ஆங்கில ஆட்சி அமைய வழி வகுத்த ஆங்கிலோ மராட்டியப் போரை கொண்டாடுபவர்கள் எப்படி இந்தியர்கள் ஆவார்கள்?” என்று எழுப்பும் கேள்விகளுக்கு நெற்றியடி கொடுப்பதோடு பீமா கோரேகான் மீதான மோடி அரசின் வன்மத்தையும் தோலுரித்துக் காட்டுகிறார்.

இறுதியில் “ உங்களது பார்வையில், செயலில் சாதி தீண்டாமை இருக்கும் வரை சக மனிதனை சாதியின் பெயரால் நீங்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் வரையில், புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியாரின் வழியில், மார்க்சியப் பாதையில் விடுதலைக்கான ஆயிரம் ஆயிரம் பீமா கோரேகான் போரைச் சந்தித்து முழுமுனைப்போடு சாதியத்தை வீழ்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்று தனது நூலை நிறைவு செய்கிறார்.

ஒரு இலக்கோடு விரிந்த பார்வையோடு எழுதப்பட்டுள்ள இந்த நூல் முற்போக்கு தமிழர்கள் பலரையும் தன்னுள் ஈர்த்துக் கொள்ளும் என்று நான் நம்புகிறேன்.

நூல் ஆசிரியர் : முனைவர் மு.இனியவன்
வெளியீடு : அறிவாயுதம் பதிப்பகம்
நூல் கிடைக்குமிடம் : 1, சாஸ்திரி வீதி எண்-4, கல்லுரிபுதூர், கோவை -41
தொடர்புக்கு : 9487412854, 93842 99877
விலை : ரூ 120
நூல் மதிப்புரை : முரா. மீனாட்சி சுந்தரம்

disclaimer

பீமா கொரேகான் : மோடியைக் கொல்லத் திட்டமிட்ட சதிக் கடிதம் பொய்யானது ! ஆதாரம் அம்பலம் !

0

பீமா கொரேகான் வழக்கில் இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட முன்னணி சமூகச் செயற்பாட்டாளர்கள் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முதன்முதலில் கைது செய்யப்பட்ட சமூகச் செயற்பாட்டாளரான ரோனா வில்சனின் கணிணியில் இருந்து கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்படும் கடிதங்கள் அனைத்தும் திட்டமிட்டு திருட்டுத்தனமாக அவரது கணிணிக்குள் நுழைக்கப்பட்டவை என்று அமெரிக்க ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்து தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பழங்குடியின மக்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தொழிலாளிகள் , விவசாயிகள், மலைவாழ் மக்கள் உள்ளிட்ட நசுக்கப்படும் பிரிவினைச் சேர்ந்தவர்களுக்காக குரல் கொடுத்து வந்த சுமார் 16-க்கும் மேற்பட்ட சமூகச் செயறபாட்டாளர்களை பீமா கொரேகான் வழக்கின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து விசாரித்து வருகிறது மோடி அரசு.

மகாராஷ்டிராவில் மாநில ஆட்சியில் பாஜக இருந்த வரையில் மாநில அரசின் கையில் இருந்த அந்த வழக்கு, கடந்த 2020-ம் ஆண்டில் மாநிலத்தில் பாஜக ஆட்சி கலைந்த நிலையில், என்...-வுக்கு மாற்றியது மத்திய மோடி அரசு. இதுவே இந்த வழக்கு தனது கையை விட்டு சென்று விடக் கூடாது என்ற பாஜகவின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.

படிக்க :
♦ பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டேவுக்கு பிணை மறுக்கப்பட்டது ஏன் ?
♦ அண்டப்புளுகர் அர்னாப் கோஸ்வாமியை அம்பலப்படுத்துகிறார் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ்

இந்த வழக்கை என்..ஏ கையில் எடுத்த பின்னர், கூடுதலாக பல்வேறு அறிவுஜீவிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தது. தலித் மக்களின் வரலாற்று வெற்றிச் சின்னமான பீமா கொரேகானில் அவர்கள் மரியாதை செலுத்தச் சென்றபோது, ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட ஆதிக்க சாதிக் கிரிமினல்கள் திட்டமிட்டு நடத்திய கலவரத்தை முதன்முதலில் மாவோயிஸ்ட்டுகளோடு தொடர்புபடுத்தியது புனே போலீசு.

இவ்வழக்கில் முதல் சுற்றில் கைது செய்யப்பட்ட சமூகச் செயற்பாட்டளர் ரோனா வில்சனின் கணிணியில் இருந்து கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்படும் ஒரு கடிதத்தைக் காட்டி அவரை மாவோயிஸ்ட் என்றும், “பாசிஸ்ட்” நரேந்திரமோடியினை கொல்ல திட்டமிட்டார் எனவும் குற்றம்சாட்டியது புனே போலீசு. ரோனா வில்சன் “அரசியல் கைதிகள் விடுதலைக்கான கமிட்டியின்” மக்கள் தொடர்புச் செயலாளராக செயல்பட்டுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில், அதன் பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மாவோயிஸ்ட் முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவ்வளவு வெளிப்படையாக பெயரைப் போட்டு மாவோயிஸ்ட்டுகள் கடிதங்களை எழுதுவதில்லை என போலீசு, சி.பி.ஐ ஆகிய அரசு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பு வகித்த அதிகாரிகளே காறித் துப்பிய அந்தக் கடிதத்தையே நீதிமன்றத்தில் ஆதாரமாக வைத்து இன்றுவரை அந்த வழக்கின் பெயரில் சமூகச் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் மாவோயிஸ்ட் முத்திரை குத்தி வந்தது அரசுத் தரப்பு.

ரோனா வில்சன்

இந்நிலையில் ரோனா வில்சனின் வழக்கறிஞர் அந்தக் கணிணியின் வன்தகட்டை (Hard Disk) ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் மசாச்சுவெட்சைச் சேர்ந்த நிறுவனமான “ஆர்செனல் கன்சல்ட்டிங்” எனும் நிறுவனத்திற்கு வழங்கினார்.

அந்த நிறுவனம் ஆய்வு செய்து முடித்த நிலையில் தனது அறிக்கையை கடந்த பிப்ரவரி 8, 2021 அன்று வெளியிட்டது. அதில், ரோனா வில்சனின் கணிணி 22 மாத காலத்திற்கும் மேலாக எதிரிகளால் (ஹேக்கர்கள்) கையாளத்தக்கதாக இருந்ததாகத் தெரிவித்திருக்கின்றனர்.

இதனைச் செய்தவர்களின் நோக்கம், அவரது கணிணியின் செயல்பாட்டைக் கண்காணிப்பதும், அதற்குள் ஆவணங்களை உட்செலுத்துவதும் தான் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. மேலும் இந்த இந்த குறிப்பான ஹேக்கர் பயன்படுத்திய வேவு மென்பொருள் உட்கட்டமைப்பும், பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பலரது கணிணியைத் தாக்குவதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டுகிறது.

மேலும் அந்நிறுவனம் தாம் இதுவரையில் சந்தித்த ஆதார உடைப்பு பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு அதிதீவிர பிரச்சினைகளில் இதுவும் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளது. முதல் ஆவணம் உள்நுழைக்கப்பட்டதற்கும் கடைசி ஆவணம் உள் நுழைக்கப்பட்டதற்கும் இடையிலான மிகபெரிய காலகட்டம் உள்ளிட்ட பல்வேறு அளவீடுகளைக் கொண்டு இந்த பிரச்சினையில் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரோனா வில்சனின் கணிணிக்குள் ஹேக்கர் தனது வேவு மென்பொருளை நுழைத்த நாள் வரை மிகத் துல்லியமாக கண்டுபிடித்துக் கூறியிருக்கிறது இந்த அறிக்கை. சமூகச் செயற்பாட்டாளர் வரவர ராவின் மின்னஞ்சல் முகவிரியை பயன்படுத்திய சிலர் அனுப்பிய சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களைத் தொடர்ந்து கடந்த 13.06-2016 அன்று வெற்றிகரமாக கணிணிக்குள் ஹேக்கர்கள் நுழைந்திருக்கின்றனர் என்று குறிப்பிடுகிறது அறிக்கை.

இந்த வழக்கு தொடர்பான கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும், இந்தக் கடிதம் ரோனாவில்சனின் கணிணியில் இருந்து கைப்பற்றப்பட்ட போதும், மராட்டியத்தின் ஆட்சியதிகாரத்தில் இருந்த தேவேந்திர பட்நாவிசிடம் இது குறித்து தற்போது கேட்ட போது, அந்தக் கடிதம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.

ஹேக்கர்கள் கணிணிக்குள் புகுந்து களேபரம் செய்வது தொழில்நுட்ப உலகில் புதிய விசயமில்லை. அவர்களது நோக்கம் பணம் திருடுவது, முடக்கி வைத்து மிரட்டி பணம் பிடுங்குவது, ஆவணங்கள் திருடுவது போன்றவையாகவே பெரும்பாலும் இருக்கும்.

இங்கு அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக, அரசியல் கைதிகளின் விடுதலைக்காகப் பேசும் ரோனா வில்சன் மற்றும் பிற சமூகச் செயற்பாட்டாளர்களின் கணிணிகள் கிட்டத்தட்ட நான்காண்டுகளாக கண்காணிக்கப்பட்டிருக்கின்றன. அதற்குள் அரசுக்குச் சாதகமான ஆவணங்கள் உள் நுழைக்கப்பட்டிருக்கின்றன.

எனில் இந்த வேலையைச் செய்தது பாஜக அரசுதான் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. மராட்டியத்தில் ஆட்சியில் இருந்த போது தனது கட்டுப்பாட்டில் இருந்த வழக்கு ஆட்சி முடிந்ததும் தனது கட்டுப்பாட்டை விட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காக அவசர அவசரமாக மத்திய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்...-விற்கு மாற்றப்பட்டது, இதற்கு வலுவான ஆதாரமாக இருக்கிறது.

படிக்க :
♦ மிரட்டும் பாஜக : தமிழகத்திலும் வருகிறது என்.ஐ.ஏ கிளை !
♦ என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது !

மக்களுக்காகப் போராடும் செயல்பாட்டாளர்கள் முடக்கப்படுவதையும் கொல்லப்படுவதையுமே திட்டமிட்டு சங்க பரிவாரக் கும்பல் செய்து வருகிறது. இவர்கள் முடக்கப்பட்டால் மட்டுமே, மக்களை ஒடுக்கிச் சுரண்டுவதும் தங்களது இந்து ராஷ்டிரக் கனவை நிறைவேற்றுவதும் சாத்தியம் என நன்கு அறிந்து வைத்திருக்கிறது சங்க பரிவாரக் கும்பல்.

தற்போது கையும் களவுமாக அம்பலப்பட்டிருக்கிறது இந்தக் கிரிமினலின் சதித் திட்டங்கள். இந்த ஆவணங்கள் உள்நுழைக்கப்பட்டவை என்ற இந்த அறிக்கையை முன் வைத்து பிணைக்கு மனுச் செய்துள்ளார் ரோனா வில்சன்.

கிட்டத்தட்ட மூன்றாண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார் ரோனா வில்சன். அவருக்கு பிணை கொடுக்காமல் இருக்க புதிய காரணத்தை இந்நேரம் தயாரித்திருக்கும் அரசுத் தரப்பு. அதற்கும் கண்மூடி ஆதரவளிப்பதுதான் நீதிமன்றத்தின் சமகால நடைமுறையாகவும் இருக்கும் பட்சத்தில், இந்த அம்பலப்படுத்தல்களை முன்னிலைப்படுத்தி அனைத்து சமூகச் செயற்பாட்டாளர்களையும் விடுதலை செய்யக் கோரி பொதுமக்களாகிய நாம் வீதியில் இறங்கிப் போராடினால்தான் தீர்வு கிடைக்கும். ‘

இல்லையேல், நாளை மோடிக்கு எதிராக டிவிட்டரிலும் முகநூலிலும் கருத்துச் சொல்லும் நமது கணிணிகளிலிருந்து ஏதேனும் கடிதத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறி நம்மையும் சிறையிலடைத்து அழகு பார்க்கும் இந்த பாசிச அரசு !


சரண்
நன்றி : Deccan Herald

மோடியின் வேளாண் சட்டங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னரே வாஷிங்டனில் தீர்மானிக்கப்பட்டவை!

பார்ப்பன பாசிஸ்டுகளின் ட்ரோல்களும், தற்போது அந்த திருப்பணியில் இணைந்துள்ள சச்சின் போன்ற கிரிக்கெட், சினிமா பிரபலங்கள் பலரும் தமது சமூக வலைத்தள பக்கங்களில் மோடிக்கும் பார்ப்பன பாசிச பிஜேபி கும்பலுக்கும் ஆதரவாக களம் இறங்கியுள்ளனர். ஆனால் அதிர்ச்சியளிக்கும் செய்தி என்னவென்றால் வெளிநாட்டினர் யாரும் இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது என்ற இவர்களது வாதம்தான்.

இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாட்டவர்கள் மூக்கை நுழைப்பது தவறு என்று பொங்கி எழும் இவர்கள், வேளாண் சட்டங்கள் அனைத்துமே 30 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் வரைவாக உருவாக்கப்பட்டு தற்போது இங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

படிக்க :
♦ உலக வர்த்தகக் கழகத்தை அடித்து ஓட விடுவாரா சச்சின் ?
♦ சிறப்புக் கட்டுரை : உலக வங்கியின் ஆணைப்படி தண்ணீர் தனியார்மயம்

மத்தியப் பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 18-ம் தேதி நடந்த ஒரு விவசாய மாநாட்டில் வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் மோடி பேசிய போது :

“25-30 ஆண்டுகளுக்கு முன்பு செய்யதிருக்க  வேண்டிய  காரியங்களை இப்போது செய்ய நாங்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளோம்… விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய சட்டங்கள் சில காலமாக செய்திகளில் உள்ளன.  இந்த விவசாய சீர்திருத்தங்கள் ஒரே இரவில் வரவில்லை. இந்த நாட்டின் ஒவ்வொரு அரசாங்கமும் கடந்த 20-22 ஆண்டுகளில் மாநில அரசுகளுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளன”என்று கூறினார்.

ஆனானப்பட்ட மோடிக்கே நிர்பந்தமா! அதனால்தான் விவசாய திருத்த சட்டங்களைப் போட்டாரா? எங்கள் தலைவரை நிர்பந்தப்படுத்தும் ”தேச விரோதி” யார் என்று இந்த கிரிக்கெட் வீரர்களும் பாலிவுட் நடிகர்களும் இந்நேரம் பொங்கியிருக்க வேண்டும்  அல்லவா ?

மோடி சொன்னது உண்மையா? அல்லது மக்களை திசை திருப்ப சொன்ன பொய்யா?
வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம். 1991-லேயே உலக வங்கி இந்தியாவின் பொருளாதார நெருக்கடி தீர என்று சில கட்டளைகளை இந்தியாவிற்கு இட்டுள்ளது. அதற்குப் பெயர் “இந்தியா: நாட்டின் பொருளாதார ஒப்பந்தத் தொகுதி” பகுதி1, 2.

அந்த கால கட்டத்தில் அதாவது, 1990-1991-களில் பன்னாட்டுக் கார்ப்பரேட்டுகளின் பகாசுர சுரண்டல் மற்றும் பங்குச் சந்தை சூதாட்டங்களால் நாடு திவாலாகி, பெரும் அன்னியச் செலாவணி நெருக்கடியில் சிக்கியிருந்தது. இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவென ஒரு ஒப்பந்தத்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இயங்கும் உலகவங்கியுடன் இந்திய அரசு போட்டுக் கொண்டது.  யார் இந்தியப் பொருளாதாரத்தை படுகுழியின் தள்ளினார்களோ, அவர்களே அதனை ‘மீட்பதற்கான’ வழிமுறைகளையும் வகுத்துத் தந்தார்கள்.

அப்படி 30 ஆண்டுகளுக்கு முன்னர் வகுத்துத் தரப்பட்ட ’வழிமுறைகள்’ தான் இந்தியாவில் ஒவ்வொரு ஆட்சியாளர்களாலும் படிப்படியாக சட்டத் திருத்தங்களாகவும், புதுப் புது சட்டங்களாகவும் கொண்டுவரப்பட்டன. அப்படி நடைமுறைப்படுத்த ‘நிர்பந்திக்கப்பட்ட’ சட்டங்களைத் தான் தாம் இப்போது கொண்டுவந்திருப்பதாக மத்தியப் பிரதேசத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் பேசியிருக்கிறார் மோடி. (மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது)

அப்படி, உலகவங்கியின் வழிகாட்டுதலின் கீழ் நிர்பந்திக்கப்பட்ட சட்டங்களில் ஒன்றுதான் இந்த வேளாண் சட்டங்கள்! இதே போல, தொழிற்சங்க சட்டத் திருத்தம், மின்சார சட்டத் திருத்தம், பொதுத்துறைகளை விற்பனை செய்யும் திட்டம், காப்பீட்டுத் துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டம், உள்நாட்டுத் துறைகளில் அன்னிய மூலதனத்துக்கான ஒதுக்கீடு, வங்கிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் சட்டம், கல்வியில் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை அனுமதிப்பதற்கான சட்டம் என தொடர்ந்து உலகவங்கியின் ஒப்பந்தத் தொகுதிகளை சட்டங்களாக அமல்படுத்தி வருகிறது மோடி அரசு.

இது குறித்து “கவுன்ட்டர்-கரண்ட்ஸ்” எனும் இணையதளம் விரிவாக ஒப்பிட்டு அம்பலப்படுத்தி எழுதியுள்ளது. இதனைப் படிக்கும் போதே நாட்டையும் மக்களையும் நேசிக்கும் யாருக்கும் ரத்தம் கொதிக்கும். ஆனால் மோடியோ எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை, உலக வங்கியின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதுதான் முக்கியமானது என்று கருதுகிறார்.

அப்படி உலக வங்கியின் ஓப்பந்தத் தொகுதியில் பரிந்துரைகள் என்ற பெயரில் போடப்பட்ட உத்தரவுகளில் சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.

1. உரங்கள், நீர், மின்சாரம், வங்கிக் கடன்களிலான விவசாய மானியங்களை வெட்டு – விவசாயத்தை வெளிநாட்டு வர்த்தகத்திற்குத் திறந்து விடு

அ) நான்கு ஆண்டுகளில் உரத்திற்கான அனைத்து மானியங்களையும் அரசாங்கம் அகற்ற வேண்டும். இந்தியாவின் உரத் தொழிலுக்கான பாதுகாப்பைக் ஒழிக்க வேண்டும், மேலும் உள்நாட்டு உரங்களின் விலையை உலகச் சந்தை விலைகளுக்கு நிகராக்க வேண்டும்; உரத் தொழிற்சாலைகளை “மறுசீரமைத்தல்” (அதாவது, உர ஆலைகளை மூட வேண்டும்). உரங்களை விற்பனை செய்வதில் அரசாங்கத்தின் தலையீடு மற்றும் ஒழுங்குபடுத்துதலை அகற்ற வேண்டும்.

ஆ) வங்கிக் கடனில் விவசாயத்திற்காக என்று ஒரு பங்கு ஒதுக்கி வைக்கப்படும் நடைமுறையை – அத்தகைய ‘முன்னுரிமைத் துறைக்கான’ கடன் ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும். மேலும் விவசாய கடனுக்கான வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டும். விவசாயத்திற்கான அனைத்து மானியங்களையும் ஒழிக்க வேண்டும்.

இ) நீர்ப்பாசனம், கால்நடை மற்றும் பிற விரிவாக்க சேவைகள் போன்ற விவசாயத்திற்கு வழங்கப்படும் எல்லா சேவைகளுக்கான கட்டணங்களையும் அதிகரிக்க வேண்டும். இவற்றில் அதிகளவில் தனியார் துறை ஈடுபாடு மற்றும் முதலீட்டை ஊக்குவிக்க முன்னுரிமை தந்து பட்டியலிட வேண்டும்.

ஈ) இந்திய விவசாயத்தைப் பாதுகாப்பதற்காக தற்போதுள்ள வெளிநாட்டிலிருந்து விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடைகளை முற்றாக அகற்ற வேண்டும். ஒரு தொடக்கத்திற்காக சமையல் எண்ணெய் வித்துக்களின் இறக்குமதிக்கான தடையை உடனடியாக நீக்க வேண்டும். விவசாய விளைபொருள் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளையும் அகற்ற வேண்டும்.

உ) விதைகளில் தனியார் ஆராய்ச்சியை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும், விதைகளை தனியார் விற்பனை செய்வதற்கான விதிமுறைகளை நீக்க வேண்டும், விதைகளுக்கான மானியங்களை அகற்ற வேண்டும்.

ஊ) விவசாயத்திற்கான மின்சார கட்டணங்களை வேளாண்மை அல்லாத மின் கட்டணங்களின் விலைக்கு உயர்த்த வேண்டும்.

படிக்க :
♦ யாருக்கான பட்ஜெட் : உரம், உணவு, பெட்ரோலிய மானியங்களில் வெட்டு !
♦ பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம் : கார்ப்பரேட்டுகளுக்கு நேரடி மானியம் !

2. பொது கொள்முதல் மற்றும் உணவு விநியோகம் முழுவதையும் முற்றாக அகற்றுவதை நோக்கி முன்னேறுதல் :

அ) “இந்திய உணவுக் கழகம் (எஃப்.சி.ஐ) உரிமம் பெற்ற முகவர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சேமிப்பாளர்களுக்கு துணை ஒப்பந்தம் செய்வதன் மூலமும், தானியங்களை விவசாயிகள் சேமித்து வைப்பதற்கான விலை சலுகைகளை வழங்குவதன் மூலமும் தானியங்களை வாங்குதல், போக்குவரத்து மற்றும் சேமிப்பதில் இந்திய உணவுக் கழகத்தின் பெரிமளவிலான நேரடி பங்கைக் குறைக்க வேண்டும்.” (அதாவது கார்ப்பரேட் பதுக்கல்காரர்களுக்கும் (சேமிப்பாளர்கள்),  கார்ப்பரேட்  ‘விவசாயிகளுக்கும்’ சலுகைகள் வழங்கி எஃப்.சி.ஐ.யின் பணியை குறைக்க வேண்டும். சுருக்கமாக எஃப்.சி.ஐ.-ஐ ஒழிக்க வேண்டும் – மொழி பெயர்ப்பாளர் குறிப்பு).

ஆ) இந்தியா ஒரு சிறிய அளவில் மட்டுமே உணவு தனியங்களை சேமித்துப் பராமரிக்க வேண்டும். பற்றாக்குறை ஏற்படும் நேரங்களில் தேவையானவற்றை உலகச் சந்தையில் வாங்க வேண்டும். விளைச்சல் குறைந்து பற்றாக்குறை ஏற்படும் ஆண்டுகளில் உலக சந்தையில் வாங்குவதற்கு அந்நிய செலாவணியை கையிருப்பாக வைத்திருக்க வேண்டும். (அன்னிய செலாவணி பற்றாக்குறை நெருக்கடியில் இந்த ஆலோசனை வழங்கப்படுகிறது என்பதை இங்கு நினைவூட்ட கடமைப்பட்டுள்ளோம் – மொழிபெயர்ப்பாளர்)

இ) விளைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அரசே நிர்ணயித்து வேளாண் விளைபொருளை வாங்கும் திட்டமான பொதுக் கொள்முதல் திட்டம் முற்றாக ஒழித்துக் கட்டப்பட வேண்டும்.

ஈ) ஏழைகள் என்று அதிகாரப்பூர்வமாக வரையறுக்கப்பட்டவர்களை மட்டுமே குறிவைத்து உணவு மானியங்களை குறைக்க வேண்டும். (வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்களுக்கு மட்டுமே ரேசன் கடைகளில் பொருள் வழங்கும் திட்டம் – மொழி பெயர்ப்பாளர்)  “தேவையில்லாதவர்களுக்கு” அரசின் நலத் திட்டங்கள், ​​ரேசன் கடை மூலம் பொருட்கள் வழங்கப்படுவது மறுக்கப்பட வேண்டும். அரசாங்கம் “தனியார் துறை விநியோகம் உட்பட மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை அடைவதற்கான புதிய முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.” (குடும்ப அட்டையை ஆதாருடனும் வங்கிக் கணக்குடனும் இணைப்பது – அரசு உதவித் திட்டங்களுக்கான பணம் வங்கியில் நேரடியாக போடப்படுவது – எரிவாயு மானியம் ஆதார் மூலம் இணைக்கப்பட்டு வங்கியில் பணம் செலுத்தப்படுவது என சுற்றிவளைத்து செய்யப்படுபவற்றை இங்கு நினைவுகூரவும் – மொழி பெயர்ப்பாளர்)

உலக வங்கியின் இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகையில், இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரங்கள், பெரும்பான்மையான மக்களின் ஊட்டச்சத்து தேவைகள் மற்றும் இத்தகைய விரிவான தாக்குதலை செயல்படுத்துவதில் இந்திய ஆட்சியாளர்கள் எதிர்கொள்ளும் அரசியல் சிரமங்களை எல்லாம், உலக வங்கியின் பரிந்துரைக்கப்பட்ட கால அட்டவணை சிறிதும் பொருட்படுத்துவதில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் பொருளாதார இறையாண்மை குறித்து இம்மியளவும் கவலைப்படவில்லை. ஆயினும்கூட, இந்த வழிகாட்டுதல்கள் என்ற பெயரிலான உத்தரவுகளில் பெரும்பாலானவற்றை, அடுத்தடுத்த இந்திய அரசாங்கங்கள் செயல்படுத்த முனைவதும், மக்களின் எதிர்ப்பு அதிகரித்து ஓட்டு போய்விடுமோ எனத் தயங்கி நிற்பதும், எஜமானனின் உத்தரவை நடைமுறைப்படுத்தாவிட்டால் சிக்கல் என மீண்டும் செயல்படுத்த முனைவதும், மக்கள் அதிருப்தியையும் எதிர்ப்பையும் எதிர்கொண்டு அவ்வப்போது ஓரளவு பின்வாங்குவது எனவும் ஊசலாட்டமாகவே இருந்தன.

விவசாயம் சார்ந்த இத்தகைய ‘பரிந்துரைகளால்’ பின்வரும் விளைவுகள் ஏற்பட்டு, விவசாயிகளை அவை விவசாயத்திலிருந்தே விரட்டியடிக்கின்றன.

* பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கான மானியங்கள் குறைக்கப்பட்டு, அவற்றின் விலைகள் கட்டுப்பாடு அகற்றப்பட்டதானது, இவற்றை விவசாயிகளால் வாங்கி பயன்படுத்த முடியாமல் அவற்றின் பயன்பாட்டில் கூர்மையான வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. இதனால் மண்ணின் ஊட்டச்சத்து சமநிலைக்கு தீங்கு விளைந்து விவசாயம் அழிகிறது. (விளைச்சல் குறைந்து விவசாயம் கட்டுபடியாகாமல் தற்கொலைகள் அதிகரிப்பதை இங்கு நினைவு படுத்துகிறோம். – மொ.பெ.)

* விவசாயத்திற்கு வங்கிகள் கடன் தருவது மிகப்பெருமளவு குறைந்து போனது. இதனால் விவசாயிகள் கந்து வட்டிக்காரர்களின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகிப் போய் 1990-களின் பிற்பகுதியிலிருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலைகளுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

* விவசாயத்திற்கான பொதுத்துறை விரிவாக்க சேவைகள் 1990-களின் நடுப்பகுதியிலிருந்து 2000-களின் நடுப்பகுதி வரையில் சரிந்தன; அதன்பிறகு ஒரு பகுதி மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது, ஆனால் இந்த சேவைகள் இன்னும் போதுமானதாக இல்லை.

* விவசாய இறக்குமதிகள் மீதான அளவு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன, விவசாய இறக்குமதிகள் மீதான கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, இந்தியா அதன் சமையல் எண்ணெய்களில் பாதி அளவை இறக்குமதி செய்கிறது. மற்ற உற்பத்திகளும் இறக்குமதி அச்சுறுத்தலை எதிர்கொண்டன. (இன்று சமையல் எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே போவதற்கு இறக்குமதியும் ஒரு காரணம்).

* ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்திய பொதுத்துறை விதை நிறுவனங்கள் விதைகளுக்கான சந்தையில் இருந்து அரசாங்கத்தால் படிப்படியாக விலக்கப்பட்டன; தனியார் துறை விதை நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. (விதைகளின் விலையை விவசாயிகளிடம் கேட்டுப் பாருங்கள். மயக்கமடைவீர்கள் – மொ.பெ)

* சமீபத்திய மின்சாரம் (திருத்தம்) மசோதா – 2020, அனைத்து மின்சார மானியங்களையும் ஒரேயடியாக அகற்ற முன்மொழிகிறது, இது ஏற்கெனவே நெருக்கடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மேலும் பெரும் சுமையாக மாறுகிறது. (இலவச மின்சாரம் ரத்தாகுவதன் காரணமும் இதுதான்)

இந்தியாவின் உணவுப் பொருளாதாரத்தின் கடுமையான மறுசீரமைப்பை, இப்போது மோடி அரசாங்கம் கோவிட்-19 நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு செயல்படுத்த வெறித்தனமான முறையில் இயங்கி வருகிறது. பொது கொள்முதல் மற்றும் உணவு விநியோகத்தை அகற்றுவதற்காகவே விவசாயம் தொடர்பான மூன்று சட்டங்கள் சமீபத்தில் பாராளுமன்றத்தால் ‘நிறைவேற்றப்பட்டன’.

நிச்சயமாக, உலக வங்கியின் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவது மிகவும் முன்பே தொடங்கிவிட்டது. 1997-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இலக்கு வைக்கப்பட்ட பொது விநியோக முறை “வறுமைக் கோட்டுக்கு மேலே” உள்ளவர்களை பொது விநியோக முறையிலிருந்து வெளியேற்றியது. இதன் மூலம் படிப்படியாக ரேசன் கடைகள் முழுவதையும் மூடுவதற்கு முனைகிறது. (ஆதார் இல்லாமல், குடும்ப அட்டையுடன் ஆதாரை இணைக்க முடியாமல், ரேசனில் பொருள் வாங்க முடியாமல் ஒரிசாவில் ஏழைகள் இறந்து போன செய்தியை இங்கு நினைவு கூரவும் – மொ.பெ)

படிக்க :
♦ யாருக்கான பட்ஜெட் : உரம், உணவு, பெட்ரோலிய மானியங்களில் வெட்டு !
♦ பட்ஜெட் 2021 : சுகாதாரத்திற்கான நிதியை 137% அளவிற்கு அதிகரித்ததா மோடி அரசு ?

செயல்படாத பிரதமர்! துடிப்பான முதல்வர் !

வாஜ்பாய் ஆட்சியில், கார்ப்பரேட்டுகளுக்கான கட்டுமானச் சேவையான தங்க நாற்கரச் சாலைகளை அமைத்து, அதையே ’ஒளிரும் இந்தியா’ என கூவிப் பார்த்தும் இருளில் தள்ளப்பட்ட விவசாயிகள் அந்த ஆட்சியை நம்பவில்லை. விளைவு! ஆட்சி போனது. பின்னர் வந்த காங்கிரசு, உலக வங்கி முன்தள்ளிய சீர்திருத்தங்களை தொடரப் பார்த்து, மக்களின், எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக சற்று பின்வாங்கியது. இதனால்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்படாத பிரதமர் என மன்மோகன் சிங்கை சாடி நிராகரித்தன.

எத்தனை எதிர்ப்பு வந்தாலும் தனது இசுலாமிய வெறுப்பை படுகொலைகளாக அரங்கேற்றிய அன்றைய குஜராத் முதல்வர் மோடி, கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக்  கொடுத்து வந்ததைக் கொண்டாடி, அவரை ‘துடிப்பான முதல்வர்” எனப் புகழ்மாலை சூட்டிய கார்ப்பரேட்டுகள் பிரதமர் பதவியில் அவரை அமரச் செய்தன. தனது கட்சியின் நிகழ்ச்சி நிரலான இசுலாமிய வெறுப்பையும் நடைமுறைப்படுத்தலாம், அதே நேரம் தனது எஜமானர்களுக்கும் சேவை செய்யலாம் என்பதைத்தான் தனது நடைமுறை மூலம் மோடி செய்து வருகிறார்.

எஜமானர்களின் விசுவாசமான அடியாள் !

உலக வங்கித் திட்டங்களை வரிக்கு வரி வெறித்தனமாக செயல்படுத்துவதில் மோடிக்கு நிகர் மோடிதான். பணமதிப்பழிப்பு நடவடிக்கை முதல் தற்போதைய வேளாண் திருத்த சட்டங்கள் வரை இப்படி வெறித்தனமாக செயல்படுத்தி தனது கார்ப்பரேட் எஜமானர்களை மகிழ்வித்து வரும் மோடிக்கு ஆதரவாகத்தான் சினிமாக் கழிசடைகளும் கிரிக்கெட் பிரபலங்களும் இருக்கின்றனர்.

மோடியின் பொய்கள், அவதூறுகளையே இம்மி பிசகாமல் இவர்கள் தமது சமூக வலைத்தள கணக்குகளில் எதிரொலிக்கின்றனர். விவசாயிகளால் எதிர்க்கப்படும் இந்த வேளாண் சட்டங்களைப் பற்றிய மேற்கூறிய உண்மைகளை கிரிக்கெட் பிரபலங்களும், சினிமா நாயகர்களும் பேசுவார்களா என்ன? அதை மூடி மறைக்கதான் சர்வதேச சதி! காலிஸ்தான் ஊடுருவல்! மாவோயிஸ்டுகள் ஊடுருவல்! என நாளொரு பொய்யும் பொழுதொரு அவதூறையும் கிளப்பி விடுகின்றனர்.

வரலாறு திரும்பும் !

பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்பு ரொட்டியின்றி மக்கள் போராடிய போது ‘ரொட்டியில்லையென்றால் என்ன? கேக் சாப்பிடச் சொல்லுங்கள்!’ என்று அந்த ராணி கூறினாராம். அதற்கு பதிலாகத்தான் அந்த மக்கள் கில்லட்டினைக் கொண்டு வந்தார்கள்! சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் பிறந்தது. எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும் என விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற அமைதியாக கோரிக்கை வைத்து போராடி வருகின்றார்கள். சட்டம் போட்டது போட்டதுதான் என அரியணையிலிருந்து கொக்கரிக்கிறார்கள் ஆட்சியாளர்களான கார்ப்பரேட் காவி பாசிஸ்டுகள்.

வரலாறு திரும்பும்! அப்போதுதான் இங்கு ஜனநாயகம் பிறக்கும்.

இராமையா
ஆதாரம் : countercurrents.org

அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா ?

தமிழ்த் தேச மக்கள் முன்னணியின் தோழர் பாலன், சீனிவாசன், செல்வராஜ் ஊபா சட்டத்தில் கைது மக்கள் அதிகாரம் கண்டனம்

டந்த 2019-ம் ஆண்டு மாவோயிஸ்ட் தோழர் மணிவாசகம் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதற்காக சேலத்தில் 07.02.2021 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் வீடுகளிலிருந்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் பாலன், தலைமைக் குழுத் தோழர் கோ.சீனிவாசன், தோழர் அனுப்பூர் செல்வராஜ் ஆகியோர் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

தோழர்கள் பாலன், கோ. சீனிவாசன்

ரவுடிகளும் கொலைகாரர்களும் பகிரங்கமாக பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை கைது செய்ய முடியாத போலீஸ், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தோழரின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் என்பதற்காக கைது செய்திருக்கிறது.

படிக்க :
♦ ஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் !
♦ ஊபா – ஆள்தூக்கி ஒடுக்குமுறைச் சட்டத்தின் பொன் விழா

அவர்கள் மீது Cr. 14/2020, IPC 188, 120b, 121, 121A (read with Unlawful Activities Prevention act), UAPA section 10, 13, 15 & 18IPC 188 – Disobedience to order duly promulgated by public servant ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அனைத்து முற்போக்கு ஜனநாயக இயக்கங்களும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

ஏற்கெனவே பாசிச பாஜகவுக்கு எதிராக இருப்பவர்களை ஊபா சட்டத்தின்கீழ் கைது செய்து சித்திரவதை செய்கின்ற மோடியின் அடியாளான எடப்பாடி அரசு, தமிழகத்திலும் இப்படிப்பட்ட ஜனநாயக விரோத செயலை அரங்கேற்றி உள்ளது. இக்கைது நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை .
99623 66321

தமிழகத்தின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி புறக்கணிப்பு!

1

த்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வருகிறது கேந்திர வித்யாலயா பள்ளிகள். தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 49 பள்ளிகள் உள்ளன.

இந்த பள்ளிகளில் தமிழ் கற்றுத் தரப்படுகிறதா, தமிழ் ஆசிரியர்கள் இருக்கிறார்களா, என்ற பல கேள்விகளை முன்வைத்து தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் 15-ஆம் தேதி 16 கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கு ஜனவரி 25-ஆம் தேதி கேந்திர வித்யாலயா நிர்வாகம் சார்பாக பதில்கள் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை தமிழ் மொழிக் கட்டாயப்பாடம் இல்லை என்று கூறியிருப்பது, தமிழகத்தில் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

படிக்க :
♦ இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் ஃபேஸ்புக் !
♦ தேசிய இன அடையாளங்களை அழிக்கும் மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு

தமிழ் மொழிப் பாடமாக கற்பிக்கும் பள்ளிகள் இருக்கிறதா என்று கேட்டதற்கு, NIL ஏதுமில்லை என்றும் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் தமிழை மொழிப் பாடமாக தேர்வு செய்ய முடியுமா என்று கேட்டதற்கும் இல்லை என்று பதில் கூறியுள்ளது கேந்திர வித்யாலயா.

தமிழகத்தில் இயங்கும் 49 கேந்திர வித்யாலயா பள்ளிகளிலும் 109 இந்தி ஆசிரியர்களும் 53 சமஸ்கிருத மொழி ஆசிரியர்களும் வேலை செய்கிறார்கள். இப்பள்ளிகளில் தமிழ் மொழி ஆசிரியர்கள் ஒருவர் கூட இல்லை என தனது பதில்களில் கூறியுள்ளது. மொழிப் பாடமாக தமிழ் நடத்தப்படுவதே இல்லை என்பதுதான் இதில் தெரியும் உண்மை.

6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை இந்தி, சமஸ்மிருதம் ஆகிய இருமொழிகளும் கட்டாயமான பாடம். பத்தாம் வகுப்பில் விருப்பப் பாடமாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என பதில் கூறியுள்ளது கேந்திர வித்யாலயா பள்ளி நிர்வாகம்.இது தனி ஒரு விவகாரம் அல்ல.

இதற்கு முன்னரே ஒவ்வொருமுறையும் தமிழை ஒழித்து இந்தியைத் திணிக்கும் பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது மோடி அரசு. ஒவ்வொரு திணிப்பின் போதும் தமிழ்நாட்டில் அவ்வப்போது எதிர்ப்புகள் உருவெடுக்கும்.

தற்போது கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஆர்.டி.ஐ தகவல் மூலம் இந்தி சமஸ்கிருதம் திணிக்கப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள், ஜனநாயக சக்திகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தி.மு.க-வும் இதற்கான கண்டனங்களை பதிவு செய்துள்ளது.

ஒரு வகுப்பில் படிக்கும் 20 மாணவர்கள் விரும்பம் தெரிவித்தால் மட்டுமே தமிழ் பாடம் எடுக்கப்படும் என்று சென்ற ஆண்டே கேந்திர வித்யாலயா நிர்வாகம் கூறுயது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்திருந்தனர். தமிழ் விருப்ப பாடமாக வைக்கப்பட்டிருப்பதை ஏற்கமுடியாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையும் கூறியிருந்தது.

கடந்த 2017, 2018, 2019 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டும் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக நம் வரிப்பணதிலிருந்து ரூபாய் 643.84 கோடி செலவளித்திருக்கிறது மோடி அரசு. ஆனால், தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூபாய் 22.94 கோடி மட்டுமே செலவு செய்துள்ளது. கடந்த 2004-ல் ஆண்டு செம்மொழி பட்டியலில் மத்திய அரசால் சேர்க்கப்பட்ட தமிழ்மொழிக்கே இந்த நிலை என்றால், இந்தியாவின் மற்ற மாநிலங்கள் உள்ள மொழிகளின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று சற்று யோசித்து பாருங்கள்.

கடந்த 1965-ஆம் ஆண்டு இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்தபோது அதனை ஏற்றுக் கொண்ட பல மாநிலங்களில் வட்டார மொழிகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டன. தாய்மொழி தெரியாமல் அழிக்கப்பட்டு, திணிக்கப்பட்ட இந்தி மொழியை மட்டும் கற்கும் தலைமுறையும் உருவாகிவிட்டது.

அன்று இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கடுமையான போராட்டங்கள் நடத்தப்பட்டன. நடைபெற்ற மொழிப்போரில், தமிழகத்தில் பலரும் தியாகிகளானார்கள். அதன் விளைவாகவே, தமிழகத்தில் மோடி அரசு இந்தி திணிப்பு அரங்கேற்ற முயற்சித்தாலே போராட்டங்கள் துவங்கி விடுகின்றன.

படிக்க :
பட்ஜெட் 2021 : சுகாதாரத்திற்கான நிதியை 137% அளவிற்கு அதிகரித்ததா மோடி அரசு ?
♦ ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, சென்னை பல்கலை மாணவர்களின் போராட்டம் வெற்றி உணர்த்துவது என்ன ?

கேந்திர வித்யாலயா முதல் ஐஐடி வரை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களில் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க முயல்வது, சமஸ்கிருத பண்பாட்டை ஊட்டி வளர்க்க பாடத்திட்டங்களை புகுத்துவது, இந்தி, சமஸ்கிருத வளர்ச்சிக்கென மற்ற மொழிகளின் வளர்ச்சிக்கு ஒதுக்கும் நிதியை விட 22 மடங்கு அதிகமான நிதியை ஒதுக்குவது, சமஸ்கிருதத்திற்கு என்று ஒரு துறையையே உருவாக்குவது போன்ற வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது மத்திய மோடி அரசு.

இந்தி, சமஸ்கிருதம் திணிக்கும் மோடியரசின் கிரிமினல்தனத்தை எதிர்த்துப் போராடி முறியடிக்கத் தவறினால், தமிழ் மொழியை இன்னும் சில பத்தாண்டுகளில் மியூசியத்தில் மட்டும்தான் பார்க்க முடியும்.


சந்துரு

அண்ணா பல்கலை : M. Tech படிப்பிற்கான 69 % இட ஒதுக்கீட்டை அமல்படுத்து || CCCE

07.02.2021

M.Tech படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்

அண்ணா பல்கலைக்கழத்தின் உயிரிதொழில் நுட்பத் துறையில் 2020-21ம் ஆண்டிற்கான முதுகலைப் படிப்பு (M.Tech) மாணவர் சேர்க்கையை இடஒதுக்கீடு பிரச்சனைக் காரணமாக நிறுத்தி வைப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவர்கள் தொடுத்துள்ள வழக்கில் வரும் திங்களன்று எழுத்துப் பூர்வமாகப் பதிலளிக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகிய ஐந்து பல்கலைக் கழகத்திலுள்ள உயிரி தொழில்நுட்பத்துறை சார்ந்த முதுகலை படிப்புக்கான (M.Tech/M.Sc) மாணவர் சேர்க்கை அகில இந்திய நுழைவுத் தேர்வான JNU-CEEB-ன் மதிப்பெண் அடிப்படையிலேயே நடத்து வந்தது.

படிக்க :
♦ 7.5 சதவீத இட ஒதுக்கீடு : புண்ணுக்குப் புனுகாகிவிடக் கூடாது || புதிய ஜனநாயகம்
♦ ஐ.ஐ.டி -யில் 10% இட ஒதுக்கீடு – ஒரு கேலிக் கூத்து !

இந்த ஆண்டு முதல் மத்திய உயிரி தொழில்நுட்பத் துறையின்(DBT) கீழ் இயங்கும் Regional center for Biotechnology(RCB) என்ற அமைப்பு நடத்துகின்ற GAT-B தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. மேலும் மாணவர் சேர்க்கை அந்தந்தக் கல்வி நிறுவனங்களே தங்களின் விதிமுறைகளின் அடிப்படையில் நடத்திக் கொள்ளலாம் எனவும் RCB அறிவித்துவிட்டது.

ஆனால், மத்திய இடஒதுக்கீடான 49.5 சதவீதம் அடிப்படையில் சேர்க்கை நடத்தினால் மட்டுமே மாணவர்களுக்கு வழங்கக் கூடிய ரூபாய் 12000/5000 மாத கல்வி உதவித் தொகையை வழங்க முடியும் என RCB தெரிவித்ததாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது. மாநில அரசோ 69 சதவீதம் இடஒதுக்கீட்டு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த சிக்கலை தீர்க்க முயற்சிக்காமல், இந்த ஆண்டிற்கான M.Tech மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் ரத்து செய்துள்ளது. குறிப்பாக மாணவர் சேர்க்கைகான தேதி முடிந்த பிறகும் கூட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்தியது குறித்துப் பல்கலைக்கழக நிர்வாகம் வாய் திறக்கவில்லை. மாணவர்களின் அழுத்தம் காரணமாகவே பல்கலைக்கழகம் நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இப்பல்கலைக்கழகங்கள் M.Tech படிப்பிற்கான மாணவர் சேர்க்கையைக் கடந்த பல ஆண்டுகளாக மத்திய அரசினுடைய 49.5 சதவீதம் அடிப்படையிலேயே நடத்தி வந்துள்ளன. RCB-ன் இந்த ஆண்டு அறிவிப்பில் அந்தந்த கல்வி நிறுவனங்களே தங்களின் விதிமுறைகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளது. மேலும் UGC-யோ மாணவர் சேர்க்கையில் மாநிலப் பல்கலைக் கழகங்கள் அந்தந்த மாநிலத்தில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையையே பின்பற்றலாம் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதற்குப் பிறகும் இப்பல்கலைக் கழகங்கள் 49.5 சதவீதம் இடஒதுக்கீட்டையே அமல்படுத்தியதோடு மட்டுமில்லாமல் கூடவே 10 சதவீதம் EWS அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடத்தியுள்ளன.

மாநிலப் பல்கலைக் கழகங்கள் அந்தந்த மாநில சட்டசபைகளில் இயற்றப்படும் மசோதாக்களின் அடிப்படையில் உருவாக்கப்படுபவை. நிர்வாகம், நிதி ஒதுக்கீடு, மாணவர் சேர்க்கை மற்றும் பேராசிரியர் பணிநியமனங்கள் ஆகியவை அந்தந்த மாநிலங்களுடைய முழுமையான பங்களிப்பிலும் கொள்கை முடிவுகளின் அடிப்படையிலும் இயங்குபவை.

ஆனால், இப்பல்கலைக்கழகங்கள் MTech/MSc மாணவர் சேர்க்கையில் தமிழகத்தில் கடைபிடித்து வரும் 69 சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் தமிழக மாணவர்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளன.

யாருடைய ஒப்புதலோடு 49.5 சதவீதம் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது?

முறையான அறிவிப்பின்றி இந்தாண்டு மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் நிறுத்தியது ஏன்?

தமிழக அரசு EWS 10 சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை. ஆனால் EWS கோட்டாவில் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடைபெறமுடியும்?

இவை குறித்து சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக நிர்வாகமும் தமிழக உயர்கல்வித்துறையும் முறையான விளக்கம் தரவேண்டும்.

படிக்க :
♦ அண்ணா பல்கலை : மாணவர் சேர்க்கையிலும் பல கோடி இலஞ்சம் – முறைகேடு !
♦ அண்ணா பல்கலை : மாணவர்களின் படிப்பை பாழாக்கும் புதிய தேர்வு முறையை இரத்து செய் !

மாணவர் சேர்க்கையில் 69 சதவீதம் இடஒதுகீட்டை அமல்படுத்துவதை உத்திரவாதப்படுத்துவதோடு, இம்மாணவர்களுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய கல்வி உதவித்தொகை கிடைப்பதையும் உறுதிபடுத்த வேண்டும். மேலும் அண்ணா பல்கலைகழக MTech உயிரிதொழிட்நுட்பப் பாடப்பிரிவில் நிறுத்தப்பட்டுள்ள இந்தாண்டு மாணவர் சேர்க்கையை தமிழக அரசு தலையிட்டு உடனடியாக நடத்த வேண்டும்.

முகநூலில் இருந்து : பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, சென்னை.

disclaimer

பட்ஜெட் 2021 : சுகாதாரத்திற்கான நிதியை 137% அளவிற்கு அதிகரித்ததா மோடி அரசு ?

கோவிட் பெருந்தொற்று காலத்தில் பொதுசுகாதாரம் என்பது அதிகம் பேசுபொருளான ஒன்றாக இருந்தது. குறிப்பாக பொதுசுகாதாரத்தை முற்றும் முழுதும் தனியார்வசம் ஒப்படைத்த அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே கொரோனாவை கட்டுப்படுத்த திண்டாடியபோது பொதுசுகாதாரத்தை முறையாக பேணிக் காத்து வந்த கியூபா,வியட்நாம், வெனிசுலா போன்ற நாடுகள் வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் கொரோனாவை சிறப்பாக கையாண்டதோடு ஏனைய நாடுகளுக்கும் தங்கள் உதவிக்கரங்களையும் நீட்டின.

பொது சுகாதாரத்திற்கு அதிமுக்கியத்துவம் நிறைந்த இந்தக் காலக்கட்டத்தில், பிப்-1 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை முன்மொழிந்து உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத் துறைக்காக பட்ஜெட்டில் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டதை விட 137 சதவீதம் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பெருமிதத்துடன் கூறினார். நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு ஒருபுறம் என்றால் “மக்களுக்கான மானியங்களை வெட்டு” என்ற உலக வங்கி – உலக வர்த்தகக் கழகத்தின் மிரட்டல் மறுபுறமிருக்க, எல்லாவற்றையும் மீறி எப்படி இந்த எண்களை சாத்தியப்படுத்தினார்கள் என்று பார்ப்போம்.

படிக்க :
♦ யாருக்கான பட்ஜெட் : உரம், உணவு, பெட்ரோலிய மானியங்களில் வெட்டு !

♦ பட்ஜெட் 2021 : விவசாயத்திற்கு ‘பெப்பே’ காட்டிய மோடி அரசு !

இந்த பட்ஜெட்டில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.71,269 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஆயுஷ் மற்றும் சுகாதார ஆராய்ச்சிக்கு அரசு ஒதுக்கிய தொகை ரூ.5,633 கோடியையும் சேர்த்துக் கொண்டால் மொத்தம் ரூ.76,902 கோடி ஆகும். மொத்த பட்ஜெட்டில் இது வெறும் 2.21 சதவீதம் மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது.

ஆனால், கடந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு மொத்தம் 2.27 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது; இதே (2020-21) நிதியாண்டில் திருத்தப்பட்ட மதிப்பீடாக 2.47சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டை ஒப்பிடும் போது கடந்த ஆண்டை விட மொத்த பட்ஜெட் தொகையிலிருந்து 0.26 சதவீதம் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது என்பதுதான் எதார்த்தம். ஆனாலும் எப்படி இந்த 137% அதிகரிப்பை மோடி அரசால் கொண்டு வர முடிந்தது ?

உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சூழலில் அதற்கு தடுப்பூசிக்கு ஏற்பாடு செய்வது என்பது தவிர்க்க முடியாதது. அதற்கு ஒதுக்கப்பட்ட தொகையான ரூ.35,000 கோடியையும் சேர்த்துத்தான் இந்த 137% அதிகரிப்பை பெருமை பீற்றிக் கொள்கிறது.

அதுமட்டுமல்ல, குடிநீர் மற்றும் கழிவு நீரகற்றுதலுக்கான நிதி ஒதுக்கீட்டை கிட்டத்தட்ட மும்மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூ. 60,030 கோடி. மேலும் இத்துறைக்கான நிதிக் கமிசன் ஒதுக்கீடு என ரூ. 36,022 கோடியை ஒதுக்கியுள்ளது. கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி ரூபாய், குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றுத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.திடீரென நான்கு மடங்கு அதிக நிதி இத்துறைக்கு ஒதுக்கியிருப்பது, இத்துறையை முழுமையாக தனியாரிடம் ஒப்படைத்து அவர்களிடமிருந்து அதிக பணத்தில் இந்த சேவைகளைப் பெற்றுக்கொள்ள மோடி அரசு முடிவெடுத்துள்ளதோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. குடிநீருக்கும் கழிவுநீரகற்றுக்கும் ஒதுக்கப்பட்ட இந்த 1 இலட்சம் கோடியையும் சேர்த்துத்தான் மோடி அரசின் 137% அதிகரிப்பு.

பொதுவாக, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ஒதுக்கப்படும் தொகைதான் மக்களுக்கு மருத்துவம் என்ற அளவில் ஒதுக்கப்படும் தொகையாகும். அதுபோக ஊட்டச்சத்துக்காக ஒதுக்கப்படும் தொகையும் மக்களின் சுகாதார வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் தொகையாக எடுத்துக் கொள்ளப்படும். அந்தத் தொகையை குறைத்துள்ளது மோடி அரசு. கடந்த நிதியாண்டில் ரூ. 3700 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு இந்த நிதியாண்டில் ரூ. 2700 கோடியாக குறைந்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு போட்டியாக இந்தியா உள்ள நிலையில், இத்துறையில் கைவைத்துள்ளது, பெரும் ஆபத்தானது.

அதே போல, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டங்களுக்கு சென்ற ஆண்டு 2020-21 பட்ஜெட்டில் திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.2,900 கோடி ஆகும். இப்போதைய ஒதுக்கீடும் அதே ரூ.2900 கோடி தான். எவ்வித கூடுதல் ஒதுக்கீடும் இல்லை.

பிரதமர் ஸ்வஸ்திய சுரக்சா யோஜனா திட்டத்திற்கு கடந்த ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.7,517 கோடி ஆகும். தற்போதைய பட்ஜெட் மதிப்பீடு ரூ.7000 கோடி மட்டுமே. இந்த வகையில் அடிப்படையான சுகாதார / மருத்துவ வசதிகளுக்கான ஒதுக்கீட்டைக் குறைத்துள்ளது மோடி அரசு.

பட்ஜெட்டிற்கு முன் நிர்மலா சீத்தாராமன் வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், 2017 தேசிய சுகாதாரக் கொள்கையை மேற்கோள்காட்டி, நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 1 சதவீதம் முதல் 2.5-3சதவீதம் வரை சுகாதாரத் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

ஆனால், தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வெறும் 0.34 சதவீதம் மட்டுமே. தற்போது அவர்கள் காட்டியுள்ள பெரும் தொகையெல்லாம், அவர்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால் வெறும் ஜூம்லாதான்.

அதுமட்டுமல்ல, 15வது நிதி கமிஷன், 2021-22 நிதியாண்டில் சுகாதாரத்திற்கான ஒதுக்கீடு மத்திய பட்ஜெட்டில், ஜிடிபியின் அளவில் 1.92 சதவீதமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறது. இது தேசிய சுகாதாரக் கொள்கை 2017 சுட்டிக்காட்டியதைவிட குறைவானது எனினும், இந்த இலக்கைக்கூட இந்த நிதிநிலை அறிக்கை எட்டவில்லை என்பதே உண்மை.

உலகமய தாரளமயத்திற்கு பின் பட்ஜெட்டில் அரசுகளின் செலவீனம் என்பது குறைக்கப்பட்டு கொண்டேதான் வந்துள்ளது. அவர்கள் மொழியில் இதை சொல்வதென்றால் மினிமம் கவர்மெண்ட் மேக்சிமம் கவர்னன்ஸ். அரசின் வேலை ஆலை நடத்துவதோ, சாலை போடுவதோ அல்ல! இவற்றையெல்லாம் தனியார்வசம் விட்டுவிட்டு, அவற்றை மேற்பார்வையிடுவதே அரசின் வேலையாம்.

இந்தப் பட்டியலில் இப்போது மக்களின் அத்தியாவசிய தேவைகளான உணவு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றையும் சேர்த்துள்ளார்கள். அதன் விளைவாகத்தான் விவசாய இடுபொருட்களுக்கான மானியம் தொடங்கி, உணவுப்பாதுகாப்பு உட்பட எல்லாவற்றிற்குமான மானியங்கள் சுருங்கிக்கொண்டே வருகிறது. இதற்கு சுகாதாரத்துறைக்கான ஒதுக்கீடும், விதிவிலக்கல்ல.


மூர்த்தி
செய்தி ஆதாரம் : Scroll, The Wire

தமிழகமெங்கும் விவசாயிகள் சங்கம் சாலை மறியல் ! மக்கள் அதிகாரம் பங்கேற்பு !

விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக டெல்லியில் போராடி வருகின்றனர். போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தில் விவசாயிகள் மீது போலீஸ் பல்வேறு அடக்குமுறை, தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. இதனால், நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருக்கிணைப்புக்குழு சார்பில் பிப்ரவரி 6-ம் தேதியன்று தமிழகத்தில் 3 மணி நேரம் சாலை மறியல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

• தொடர்சியாக விவசாயிகள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும்
• மாநில எல்லைகளில் தடுப்புகளை அதிகரிப்பதை எதிர்த்தும்
• போராட்ட தளங்களில் இணைய தளத்தை நிறுத்தி வைத்திருப்பது
• விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதாரவானவர்களின் ட்விட்டர் கணக்குகளை நிறுத்தி வைத்திருப்பது
• அரசாங்கத்தின் கட்டளையின் அடிப்படையில் சுயேட்சியான ஊடகவியலாளர்கள் மீது நடவடிக்கை
• வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் குறைவாக ஒதுக்கீடு
ஆகியவற்றை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. அதில் மக்கள் அதிகாரம் தோழர்களும் கலந்து கொண்டார்கள்.

சென்னை :

வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக தாம்பரம் பேருந்து நிறுத்தம் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. சி.பி.எம், மற்றும் ஜனநாயக அமைப்புகள் மற்றும் மக்கள் அதிகாரம், சென்னை மண்டல தோழர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகினர்.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை.

காஞ்சிபுரம் :

மோடி அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திட்டங்களை ரத்து செய்யக் கோரியும் டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைக்கு எதிராகவும், AIKSCC ஒருங்கிணைப்பில் நாடு முழுவதும் பிப்ரவரி 6 அன்று சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர். மறியலில் போராட்டத்தில் அனைத்து தோழர்கள், ஜனநாயக சக்திகளை கைது செய்து மண்டபத்தில் அடைந்தது போலீஸ்.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
காஞ்சிபுரம்.

 

கோவை :

புதிய முன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த டிசம்பர் 26-ம் தேதி இந்தியா முழுவதும் டிராக்டர் பேரணிகளை நடத்த வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் டிராக்டர் பேரணிகள், வாகன பேரணிகள் நடைபெற்றன. அன்றைய தினம் மட்டும் ஏறத்தாழ பத்தாயிரம் பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. அந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என 06.02.2021 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கன்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோவை மக்கள் அதிகாரம் தோழர் ராஜன் கண்ட உரை ஆற்றினர். மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

தகவல் :
தோழர் ராஜன்,
பகுதி ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
கோவை.

புதுச்சேரி :

விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மீது தடியடி நடத்தி பொய் வழக்குகள் போட்ட டெல்லி போலீசையும் மோடி அரசையும் கண்டித்து விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தி புதுச்சேரியில் விவசாய சங்கம் சார்பில் நடந்த மறியல் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் பங்கேற்று கைதானார்கள்.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
புதுச்சேரி.

 

விருதாச்சலம் :

டெல்லியில் நடைபெற்று விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மேலும் திருத்த சட்டத்தை ரத்து செய்ய கோரியும் அனைத்து கட்சி சார்பில் இன்று 6/2/2021 பாலக்கரையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு பூவனூர் மக்கள் அதிகாரம் தோழர் பாலு தலைமையில் தோழர்கள் வைத்தியநாதன், வினோத், காத்தவராயன் முருகானந்தம் இன்னும் பலர் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர்.

நூல் அறிமுகம் : தியாகி களப்பால் குப்பு || வாய்மைநாதன் || சு.கருப்பையா

ஞசை, திருவாரூர் மாவட்டங்களில் வாழ்ந்த விவசாயிகளின் விடிவெள்ளியாக திகழ்ந்த தியாகி களப்பால் குப்புசாமியின் வரலாறு, அப்பகுதியின் செங்கொடி வரலாற்றோடு இணைந்தது. நிலப்பிரபுத்துவக் கோட்டையாக திகழ்ந்த தென்பறை, களப்பால் பகுதிகளில் வாழ்ந்து வந்த விவசாயக் கூலிகளை இணைத்து சங்கம் அமைக்கவும், கொடூரமும், வக்கிரமும் நிறைந்த பண்ணையார்களுக்கு எதிராக போராடவும் பெரிதும் காரணமாக இருந்தவர் களப்பால் குப்பு.

சமூக நீதிக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் போராடும் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய போராளி தோழர் களப்பால் குப்பு.

களப்பாலை சேர்ந்த அருணாசலம்-சமுத்திரத்தம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் குப்புசாமி. களப்பால் கிராமத்தின் தலையாரியாகவும் இருந்த அருணாசலத்திற்கு தமது மகனை படிக்க வைக்க ஆசை. ஆனால் விவசாய கூலிகளின் குழந்தைகளுக்கு பள்ளியில் இடம் கிடையாது. பண்ணையாளுக்கு குழந்தை பிறந்தவுடன் பண்ணை முதலாளிக்கு தெரிவிக்க வேண்டும். அக்குழந்தை, ஆறு வயதில் மாடு மேய்க்கவும், பத்து வயதில் சாணம் அள்ளவும், பதினைந்து வயதில் வண்டி ஓட்டவும் வேண்டும்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : வாட்டாக்குடி இரணியன் || சுபாஷ் சந்திரபோஸ் || சு. கருப்பையா
♦ நூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்

அதனால் தனக்கு மகன் பிறந்ததையே மறைத்து விடுகிறார். தலையாரியின் மகன் என்பதால் குப்புசாமியை பள்ளியில் சேர்த்துக் கொள்கிறார் வாத்தியார். ஆனால் இவன் வாத்தியாரையோ, மற்ற உயர் சாதி குழந்தைகளையோ தொட்டுவிடக்கூடாது என்பதால் திண்ணையில் நின்று தான் படிக்க வேண்டும். சிறிய தவறு தெரிந்தாலும் பிரம்படிதான். எப்படியோ ஆறாம் வகுப்பு வரை படித்து விடுகிறான் குப்பு. அதன் பின்பு பண்ணையார் தொப்பையா முதலியாரின் தலையீட்டால் படிப்பை தொடரமுடியாத நிலை ஏற்படுகிறது. அவர் வீட்டில் பண்ணையாளாகி விடுகிறான்.

ஏழை சூத்திர கூலிகளுக்கு முதலாளி பண்ணை மானியம் போல்ட் ஐயரால் ஏற்படும் தொல்லைகள் சொல்லி மாளாது. ஒரு நாள் அந்தக் கொடுமைகளைக் கண்டு கொதித்து எழும் குப்பு , தன்னை அடிக்க வரும் பண்ணை ஆள் காதர் பாட்சாவின் சாட்டையை பிடுங்கி அவரை வெளுத்து வாங்குகிறான். ஆடிப்போய் விடுகிறது பண்ணை. அதனால் பண்ணையாரின் பிடியிலிருந்து தப்பிக்க குப்பு களப்பாலை விட்டு வெளியேறுகிறான்.

களப்பால் குப்புவின் குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை, அவர் முதலில் ஓவரூரை சேர்ந்த குப்பம்மாளை திருமணம் செய்கிறார்; ஆனால், சிறிது காலத்திற்கு பிறகு அவர் குப்புவைவிட்டு பிரிந்து சென்று விடுகிறார். அதன் பின்பு தலை ஞாயிறுவை சேர்ந்த வாஞ்சாலையை திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு சோலையம்மாள் என்ற மகளும், கணேசன், பக்கிரிசாமி மற்றும் சிவஞானம் என்ற மகன்களும் பிறக்கிறார்கள்.

அந்தக் காலகட்டத்தில், அதாவது, 1943-ம் ஆண்டில் தான் விவசாயிகள் சங்கம் தஞ்சைப் பகுதிகளில் வேரூன்றத் தொடங்கியது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள்; வேதபுரம் ரெங்கசாமி, நரசிங்கபுரம் கொள்கை வீரர் பி.வெங்கடேச சோழகர் ஆவார்கள். அதன் பின்பு, தோழர் பி.சீனிவாசராவின் வருகை விவசாயிகளின் போராட்டத்தை எழுச்சியுடன் வழிநடத்தியது. அவ்வாறு தென்பறையில் துவக்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தில் சேர்ந்து தமது சமூகப் பணியைத் துவக்கினார் களப்பால் குப்பு.

விவசாயச் சங்கத்தின் வீரம்செறிந்த போராட்டத்தினால் விவசாயக் கூலிகளின் மீது தொடுக்கப்பட்ட சவுக்கடி, சாணிப்பால் திணிப்பு ஒழிந்தது. அதனால், தஞ்சை மாவட்டத்தில் இருந்த கூலி உழவர்கள், பண்ணையாட்கள், குத்தகையாளர்கள், வார சாகுபடியாளர்கள், சிறுசிறு விவசாயிகள் ஆகியோர்களுக்கு தாரக மந்திரமாக “விவசாயச் சங்கம்” இருந்தது. களப்பால் குப்புவின் பங்களிப்பு சங்கத்திற்கு மிகப்பெரிய வலிமையைச் சேர்த்தது.

தோழர் பி.சீனிவாச ராவ் கலந்து கொண்ட விவசாய சங்க கூட்டங்களில் தேன் கூட்டில் மொய்க்கும் தேனீக்களை போல் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினார்கள். அவரின் ஒவ்வொரு வார்த்தைகளும் மக்களுக்கு புத்துணர்ச்சியை அளித்தது. “சாட்டையால் அடிக்காதே! சாணிப்பாலை நிறுத்து ! அடித்தால் திருப்பி அடிப்போம்! “வாடி போடி” என்றால் “வாடா போடா” என்போம் என்ற வார்த்தைகள் பண்ணையார்களின் மனதில் பயத்தை உருவாக்கின.

களப்பால் குப்பு , சீனிவாசராவை வைத்து பல்வேறு கூட்டங்களை நடத்தி வைத்தார். அதனால் அப்பகுதியில் எப்போதும் பதட்டம் நிலவியது. பிரச்சினையை முடிவிற்கு கொண்டுவர களப்பால் குப்புவை கொலை செய்ய திட்டமிட்டு பண்ணையார்கள் கூலிப்படையை நியமித்தனர். ஆனால், ஒவ்வொரு முறையும் தமது வீரத்தால் தப்புகிறார் குப்பு. ஒரு முறை இவரை கொலை செய்ய வந்த நான்கு கூலிப்படையினருடன் பேசி, அவர்களை மனம் மாற செய்வதும், அவர்கள் குப்புவை பாதுகாப்பாக வீட்டில் விட்டு செல்வதும் களப்பால் குப்புவின் விவேகத்திற்கு அடையாளமாக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து களப்பாலில் பிரமாண்டமான ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார் குப்பு. அதனை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், குப்புவிற்கு தணடனை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிந்தித்த பண்ணையார்கள் கூலிப்படையை ஏவி குப்புவின் மூத்த மகன் கணேசனின் கையில் வெட்டி விடுகிறார்கள் (இவர் பிற்காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினராக பணியாற்றி இருக்கிறார்). செய்தி கேள்விப்பட்ட குப்புவின் மனைவி அதிர்ச்சியிலும், ஏற்கனவே இருந்த பெரியம்மை பாதிப்பினாலும் இறந்து விடுகிறார்.

தகவல் அறிந்த குப்புசாமி மிகவும் துயரமடைந்தார்; ஆனாலும் ஒரேயடியாக குலைந்து போகவில்லை. “அவள் இறந்து விட்டாளா?” நொடி நேரம் அவர் அமைதியாக நின்றார்; பிறகு தெளிவாகவும் உறுதியாகவும் சொன்னார்: ” நான் வந்து என்ன செய்யப் போகிறேன்? நீங்களே அவளை அடக்கம் செய்யுங்கள்!” என்றார். அப்படிப்பட்ட மாவீரத்தையும், மன எழுச்சியையும் ஒரு பண்ணைத் தொழிலாளியின் மகனுக்கு செங்கொடிச் சங்கம் கொடுத்திருந்தது. இத்தகைய நெஞ்சுரம் கொண்ட இடதுசாரி தோழன் களப்பால் குப்பு.

இறுதியாக குன்னியூர் கிராமத்தில் சேரிவாசிகள் பண்ணையாட்களின் தாக்குதலுக்கு உள்ளாகி வீடுகளை இழந்தார்கள்; பெண்கள் கேவலப்படுத்தப்பட்டார்கள். பொறுமை கடந்த சேரி மக்கள் வெகுண்டெழுந்தனர்; குண்டர்களை எதிர்த்து மோதினர். அந்தக் கைகலப்பில் கூலிப்படையினர் இருவர் இறந்தனர். ஆனால் கொலைப்பழி களப்பால் குப்புவின் மீது விழுந்தது. தஞ்சை அமர்வு நீதிமன்றம் அவருக்கு “தூக்குத் தண்டனை” விதித்தது.

படிக்க :
♦ சங்க பரிவாரத்தின் வரலாற்றுப் புரட்டுகளை தோலுறித்த வரலாற்றாசிரியர் டி.என்.ஜா மறைந்தார் !

♦ பட்ஜெட் 2021 : விவசாயத்திற்கு ‘பெப்பே’ காட்டிய மோடி அரசு !

களப்பால் குப்பு திருச்சி சிறையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கான “கண்டம்” எனப்படும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுதலை செய்ய கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. சிறையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அந்தச் சூழ்நிலையிலும் குப்புவை கொல்லத் திட்டமிட்ட பண்ணை முதலாளிகள் மற்றும் போலீசின் கூட்டுச் சதியால, அவருக்கு மருந்து கொடுக்கும் சாக்கில் விஷமுள்ள மாத்திரைகள் இராமன் என்ற கைதியால் கொடுக்கப்பட்டது. அதனால் 18/04/1948-ஆம் தேதி இரத்தவாந்தி எடுத்து களப்பால் குப்பு இறந்தார்; அந்த எரிமலையின் வாழ்வு சிறைச்சாலை கொட்டடி மரணத்தில் முடிந்தது.

கி.பி.1911-ஆம் ஆண்டு பிறந்த களப்பால் குப்பு, இந்த மண்ணில் 37 ஆண்டுகளே வாழ்ந்தார். அவரின் வாழ்வும், தியாகமும் வருங்கால சந்ததிகளுக்கு பாடமாகவே இருக்கிறது. களப்பால் குப்புவின் வாழ்க்கை கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல் நகரங்களிலும் பேசப்பட வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பண்ணை முதலாளிகளுக்கு எதிரானப் போராட்டங்கள் தேவை இல்லைதான்.

ஆனால் சாதியமும், ஆணவக் கொலைகளும், மதவாதமும் மீண்டெழுந்துள்ள இத்தருணத்தில் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களைப் பாதுகாக்க களப்பால் குப்புசாமி போன்ற தோழர்கள் நம் நாட்டிற்கு அதிகம் தேவைப்படுகிறார்கள்.

தமிழ் மண்ணின் ஆகச் சிறந்த ஒரு போராளியை அடையாளம் காட்டிய எழுத்தாளர் வாய்மைநாதனுக்கும், நூலை வெளியிட்ட NCBH நிறுவனத்திற்கும் நன்றி!.

தியாகி களப்பால் குப்பு
பிறப்பு : 1911;
இறப்பு: 18/04/1948

நூல் : தியாகி களப்பால் குப்பு
நூல்ஆசிரியர் : வாய்மைநாதன்
வெளியீடு : NCBH
பக்கங்கள் :147
விலை : ரூ 100/-

நூல் அறிமுகம் : சு. கருப்பையா


disclaimer

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, சென்னை பல்கலை மாணவர்களின் போராட்டம் வெற்றி உணர்த்துவது என்ன ?

2

டந்த 57 நாட்களாக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் பிப்ரவரி 4, இரவு தமிழக அரசு கட்டணக் குறைப்பு தொடர்பான அரசாணையை வெளியிட்டது.

மாணவர்களின் தொடர் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது. பிற அரசு மருத்துவக் கல்லூரிகளில் பெறப்படும்  கட்டணத்தையே ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கும் நிர்ணயித்துள்ளது.

எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு ரூ.13,610 ; பி.டி.எஸ். படிப்பிற்கு ரூ. 11,610 ; எம்.டி, எம்.எஸ். எம்.டி.எஸ் படிப்புகளுக்கான ரூ.30,000 ; முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கு ரூ.20,000 ; பி.எஸ்.சி நர்சிங் படிப்பிற்கு ரூ.3000 கட்டணம்; எம்.எஸ்.சி நர்சிங் படிப்பிற்கு ரூ.5000 கட்டணம் என அரசால் ஏற்கெனவே நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது. அதே கட்டணமே இந்த மாணவ்ர்களிடமிருந்தும் இனி வசூலிக்கப்படும். மேலும் அந்த அரசாணையில்  ஏற்கனவே மாணவர்கள் செலுத்தியக் கட்டணம் திரும்ப தரமுடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க :
♦ கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து : சென்னை பல்கலை மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் !
♦ சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் !

மாணவர்களின் இத்தனை நாள் போராட்டத்தின் போது ஏதும் செய்யாத அரசு தற்போது ஏன் அடிபணிந்தது?

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள், கடந்த 2 மாத காலமாக கல்லூரிக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை சீர்குலைக்க மாணவர்களுக்குப் பல்வேறு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியது கல்லூரி நிர்வாகம். மூதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மதிப்பெண்ணில் கை வைப்போம் என்று மிரட்டுவது, ஒழுக்கு நடவடிக்கையின் படி மதிப்பெண்ணை குறைத்துவிடுவோம், என்பது உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்களை மாணவர்களுக்கு ஏற்படுத்தியது கல்லூரி நிர்வாகம்.

இந்த அச்சுறுத்தல்களையும் மீறி முதலாம் ஆண்டு மாணவர்களும், இண்டர்ன்சிப் மாணவர்களும் போராட்டத்தில் மன உறுதியுடன் கலந்து கொண்டது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் தெரிவித்தனர்.

40 நாட்களுக்கும் மேலாகியும் தமது போராட்டத்திற்கு யாரும் செவிசாய்க்கவில்லை என்று மாணவர்கள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்தனர். அதன் பிறகு தமிழகத்தின் பல்வேறு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் டாக்டர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது. ஜனநாயக சக்திகள் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இந்தப் போராட்டம் தீவிரமடைய ஆரம்பித்ததும், கல்லூரியை உயர்கல்வித் துறையில் இருந்து சுகாதாரத்துறைக்கு மாற்றிவிட்டோம் என்ற அரசாணையை வெளியிட்டு போராட்டத்தை முடிக்க நினைத்தது தமிழக அரசு. ஆனால், அரசாணையில் முக்கியமான கோரிக்கையான கல்விக்கட்டணம் தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை என்று, மாணவர்கள் கல்விக் கட்டணம் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிடும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். இந்த போராட்டம் மக்கள் மத்தியில் ஆதரவை அதிகரிக்கச் செய்தது.

இதன் விளைவாக பிப்ரவரி 4-ம் தேதி மாலையில் தமிழக அரசு கட்டணம் நிர்ணயம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. மாணவர்கள் எதிர்பார்த்த கட்டணத்தையே அரசு நிர்ணயம் செய்திருக்கிறது. இது கல்லூரி நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட மாணவர்களின் நெஞ்சுரமிக்கப் போராட்டத்தின் விளைவே ஆகும்.

இதே போல்தான், சென்னை பல்கலைக்கழகத்தில் மெரினா வளாக விடுதியில் முதுகலை மாணவர்கள் 27, 28, 29 மூன்று நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினர். விடுதி உணவகம் மூடல், ஊரடங்கில் கல்லூரி மூடப்பட்ட நாட்களில் விடுதி கட்டணம் உணவு கட்டணம் ஆகியவை வசூலிப்பதைக் கண்டித்து பல்கலைக்கழக வளாகத்தில் 3 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள்.

மாணவர்களின் தொடர் போராட்டத்திற்கு வெளியில் இருந்து பெற்றோர்கள், பிற மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவர் மத்தியிலும் ஆதரவு அதிகமாவதை கண்டு வேறு வழியின்றி செவிசாய்த்தது கல்லூரி நிர்வாகம்.

ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டமாக இருக்கட்டும், அல்லது சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமாக இருக்கட்டும், இரண்டிலுமே அரசை அடிபணியச் செய்ததில் நெருங்கி வரும் தேர்தலுக்கு ஒரு பங்கு இருக்கிறது எனினும், மாணவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு இடங்களில் இருந்து தொடர் ஆதரவு கிடைத்து வந்ததே முக்கியக் காரணமாகும்.

மத்திய மாநில அரசுகளின் மறு காலனிய கொள்கைகளால் சுரண்டப்படும் தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு தொழில் முனைவோர்,  மற்றும் மாணவர்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டத்தை ஒருவருக்கொருவர் குரல் கொடுத்து தோளோடு தோள் சேர்த்து நிற்கும் போது வெற்றி நிச்சயம் என்பதை மாணவர்கள் போராட்டங்களின் இந்த வெற்றி நமக்கு எடுத்துக் காட்டுகிறது.


சந்துரு

உலக வர்த்தகக் கழகத்தை அடித்து ஓட விடுவாரா சச்சின் ?

1

ந்தியாவின் இறையாண்மையை விட்டுக் கொடுக்க முடியாது. அன்னிய சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாமே தவிர பங்கேற்பாளர்களாக இருக்க முடியாது. இந்தியர்கள் இந்தியாவை அறிவார்கள். அவர்கள்தான் இந்தியாவின் முடிவை எடுப்பார்கள். ஒரு தேசமாக நாம் ஒன்றிணைந்திருப்போம்” என்று கிரிக்கெட் ‘கடவுள்’ சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டரில் ஒரு டிவிட்டை கடந்த 3-ம் தேதி வெளியிட்டார்.

சச்சின் மட்டுமல்லாமல், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள், இன்னாள் ‘வீரர்கள்’ அனைவரும் – ஒரு சிலரைத் தவிர – சச்சினின் மேற்கண்ட வாசகத்தை வெவ்வேறு வார்த்தைகளில் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அதாவது இந்தியாவின் பிரச்சினையை இந்தியர்களே தீர்த்துக் கொள்வார்களாம். வெளிநாட்டினர் தலையிடக் கூடாதாம்.

இதைத் தொடர்ந்து கிரிக்கெட் ‘கடவுளின்’ ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் தோண்டித் துருவி கழுவி ஊற்றிவிட்டனர், இந்திய கிரிக்கெட் “பக்தர்கள்”.

படிக்க :
♦ சச்சினின் ‘சீக்ரெட் ஆஃப் எனர்ஜி’ !
♦ டிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி ! கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு !

அமைதியான புன்னகை நிறைந்த முகம் கொண்ட ‘நல்லவரான’ சச்சின் டெண்டுல்கருக்கே இவ்வளவு அர்ச்சனை கிடைத்திருக்கிறது என்றால் மற்றவர்களுக்கு சொல்லவா வேண்டும். இந்திய இறையாண்மை குறித்து கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல, பல்வேறு பாலிவுட் திரை நட்சத்திரங்களும் – ஒரு சிலரைத் தவிர – ஒரே சாயலில் டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

இந்தப் பிரச்சினை, சி.என்.என் இணையதளத்தில் இந்திய விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி வெளியான ஒரு கட்டுரையிலிருந்து துவங்கியிருக்கிறது.

இந்திய விவசாயிகள் 60 நாட்களுக்கும் மேலாக போராடி வருவதையும், அவர்களுக்கான அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராமல், போராட்டக் களங்களின் அடிப்படை வசதிகளை பறித்ததோடு, இணையத்தை நிறுத்தி, விவசாயிகளின் போராட்டத்தை முறியடிக்க மோடி அரசு முயற்சிப்பதையும் மனித உரிமைகள் மீறலையும் பற்றி அந்தக் கட்டுரை பேசியிருக்கிறது.

இந்தக் கட்டுரையை தனது டிவிட்டர் பக்கத்தில் அமெரிக்கப் பாடகர் ரிஹானா, குறிப்பிட்டு, நாம் இதைப் பற்றி ஏன் பேசக்கூடாது? எனக் கேட்டுள்ளார். ரிஹானா அமெரிக்காவின் பிரபலமான பாடகராவார். கடந்த 2019-ம் ஆண்டுக் கணக்குப்படியே அவரது சொத்து மதிப்பு சுமார் 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

டிவிட்டரில் அவரை சுமார் 10 கோடியே 14 இலட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். இந்த அளவை ஒப்பீட்டளவில் பார்த்தால் அவரது பிரபலம் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளலாம். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் டிவிட்டர் கணக்கைப் பின் தொடர்வோரின் எண்ணிக்கை வெறும் ஆறரை கோடிதான். ஒரு நாட்டின் பிரதமரை விட அதிகமானோரால் பின் தொடரப்படும் ஒரு சர்வதேசப் பிரபலம் தான் ரிஹானா. ரிஹானா ஒரு கறுப்பினப் பெண்ணும் ஆவார்.

அத்தகைய செல்வாக்குள்ள ரிஹானாவின் டிவிட்டைத் தொடர்ந்து பல்வேறு அமெரிக்கப் பிரபலங்களும் இந்திய விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து பதிவிடத் துவங்கினர். சூழலியல் செயல்பாட்டாளரான க்ரெட்டாவும் விவசாயிகளின் போராட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என பதிவிட்டார்.

சமூக வலைத்தளங்களின் தாக்கம் சமீபத்தில் அமெரிக்க பங்குச் சந்தையையே ‘படுத்தி’ எடுத்துவிட்ட நிலையில், அமெரிக்கப் பங்குச் சந்தைக்குச் சேவகம் செய்யும் இந்திய அரசை மட்டும் விட்டுவைக்குமா என்ன?

ஏதேனும் தனிப்பட்ட நிறுவனங்கள் (டைட்டன், நெட்பிளிக்ஸ்) இந்திய அரசின் ஒடுக்குமுறைப் பொறியமைவை அம்பலப்படுத்தும் விதமாக ஏதேனும் விளம்பரம் வெளியிட்டால், அதற்கு வழக்கமாக சங்கிகளின் ட்ரால் படைதான் களத்தில் இறங்கி ட்ரால் செய்யத் துவங்குவார்கள். இந்தமுறை இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகமே களத்தில் இறங்கிவிட்டது.

வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முறையான விவாதங்களுக்கும், கலந்தாலோசனைகளுக்கும் பிறகுதான் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், இந்தப் போராட்டத்தில் அரசாங்கம் விவசாயிகளிடம் மிகவும் இறங்கி பேசிவருவதாகவும் முதல் பத்தியில் தெரிவித்து விட்டு இரண்டாவது பத்தியில் விவசாயிகள் போராட்டம் பற்றிய தமது அவதூறுகளை அடுத்த இரண்டு பத்திகளில் விசமாகக் கொட்டியுள்ளது.

மேலும் இந்தச் சட்டம் குறித்து முழு விவரம் தெரியாமல் சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் கருத்துத் தெரிவிப்பது துல்லியமானதாக இருக்காது என்றும் பொறுப்பற்ற செயல் என்றும் குறிப்பிட்டுச் சாடியுள்ளது.

இந்த அறிக்கையை #IndiaTogether #IndiaAgainstPropaganda ஆகிய இரண்டு ஹேஷ்டேக்குகளையும் போட்டு அறிக்கையாக வெளியிட்டது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்.

வெளிநாட்டு பிரபலங்கள் போட்ட டிவிட்டுகளுக்கு அஞ்சி மோடி அரசு தனது வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் அறிக்கை வெளியிட்டிருப்பதே அதன் இலட்சணத்தை காட்டியிருக்கும் நிலையில், அடுத்ததாக அது செய்த காரியம்தான் இந்தியப் பிரபலங்களின் யோக்கியதையை உலகுக்கே பறைசாற்றியிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள், பாலிவுட் நட்சத்திரங்களையே தனது ட்ரோல் படையாக களத்தில் இறக்கி விட்டிருக்கிறது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம். கிரிக்கெட் ஆட்டக்காரர்களும், பாலிவுட் நடிகர்களும் ட்ரோல்களாக களத்தில் இறங்கி ‘மேலிருந்து’ சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடத்தை டிவிட்டுகளில் வாந்தியெடுத்துக் கொண்டிருந்தனர்.

குரங்கின் கையில் பூமாலையைக் கொடுத்தது போல, இந்த ட்ரோல் பணிகள் ஒழுங்காக நடக்கிறதா என்பதைச் சரிபார்க்கும் வேலையை பாலிவுட் நடிகர் கங்கனா ரணாவத் வசம் ஒப்படைக்கப்பட்டது போலும்.

அம்மையார் டிவிட்டரில் பாஜகவின் எதிரிகளைப் பந்தாடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், விவசாயிகளுக்கு எதிரான டிவிட்டை ‘காட்டமாகப்’ போடாத கிரிக்கெட் ஆட்டக்காரர்களை உரிமையோடு கேவலமாகப் பேசியுள்ளார். கிரிக்கெட் ‘கடவுள்’ சச்சின் முதல் நேற்றுவந்த அல்லரை-சில்லரை வரை அனைத்தும் ஒரே குரலில், ஒரே வாசகத்தை வாந்திஎடுத்து வைத்த நிலையில், டிவிட் வாசகங்களில்  ‘வெரைட்டியில்லாத’ விரக்தியில் கொஞ்சம் காட்டமாகவே காட்டிவிட்டார் கங்கனா.

கிரிக்கெட் ‘வீரர்’ ரோஹித் சர்மாவின் ”காப்பி பேஸ்ட்” டிவிட்டுக்கு பதிலளித்திருக்கும் கங்கனா, “விவசாயிகளை பயங்கரவாதிகள் எனக் குறிப்பிட என்ன தயக்கம், மிகவும் மென்மையாக அணுகுகிறீர்கள். உங்களுக்கெல்லாம் ‘டர்ராக’ இருக்கிறதா?” என்றெல்லாம் கேட்டுவிட்டார். கிரிக்கெட் ரசிகக் கண்மணிகள் தங்களது ‘தலைவர்களை’ திட்டுவதை நிறுத்திவிட்டு, கங்கனாவை காறி உமிழத் துவங்கிவிட்டனர். இவையெல்லாம் சங்கபரிவாரத்தின் ட்ரோல்படைகளுக்குள் நடந்த ஊடல்கள்தான் என்றாலும் அன்றைய பொழுதை டிவிட்டர்வாசிகளுக்கு சுவாரசியமானதாக மாற்றியமைத்தன.

சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள் இப்படி தங்களது யோக்கியதையை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டிருந்த அதே சமயத்தில், இத்துறைகளில் முதுகெலும்புள்ளவர்களும் இருக்கிறோம் என்பதையும் ஒரு சில பிரபலங்கள் பதிவு செய்தனர்.

கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்ட போது இந்தியா தனது கருத்தைத் தெரிவித்ததை சுட்டிக் காட்டினார். அதன் மூலமாக, வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையை விடாதீர்கள் என்ற சங்கிகளின் ஓலத்தினிடையே ஒரு முட்டுக்கட்டையிட்டார்.

அதே போல இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, “நான் பொம்மலாட்டத்தைப் (puppet Show) பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் அதனைப் பார்ப்பதற்கு 35 ஆண்டுகள் ஆகிவிட்டது.” என்று தனது டிவிட்டில் குறிப்பிட்டிருந்தார். சங்க பரிவாரக் கும்பலின் ஆட்டுவித்தலில் தனது சகபாடிகள் இழிவான ஒரு செயலைச் செய்வதை குறிப்பின் மூலமாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்திய டென்னிஸ் வீரர் சோம்தேவ், ஒரே பாணியிலான, அதிலும் ஒரே வாசகத்தைக் கொண்ட டிவிட்டுகளை அப்படியே வாந்தியெடுத்து வைத்திருக்கும் பிரபலங்களை கிண்டல் செய்யும் விதமாக, “குறைந்தபட்சம் சொந்தமாகவாவது போடலாமே” என்று டிவிட் செய்திருந்தார்.

அதே போல பாலிவுட் சினிமாவில் நடிகர் டாப்ஸி பன்னுவும் பிரபலங்களின் இந்த இழிசெயலைச் சாடி டிவிட்டரில் எழுதியிருந்தார்.

“ஒரு டிவிட் உங்களது ஒற்றுமையை நடுநடுங்கச் செய்கிறதென்றால், ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையை உலுக்குகிறது என்றால், அல்லது ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையை உலுக்குகிறது என்றால், நீங்கள்தான் உங்களது மதிப்பு விழுமியங்களை உறுதிசெய்யப் பணியாற்ற வேண்டுமே தவிர மற்றவர்களுக்கான “பிரச்சார ஆசிரியராக” மாறக் கூடாது” என்று சூடு கொடுத்தார்.

அதே போல நடிகர் சித்தார்த், இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் வெளிநாட்டினர் தலையிடக் கூடாது என்ற கருத்தைச் சாடியும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும்  எழுதியிருந்தனர்.

இவை ஒருபுறம் அரங்கேறிக் கொண்டிருக்கையில், அமெரிக்க பிரபலங்களின் சமூக வலைத்தளங்களின் ‘உள் டப்பிக்குள்’ (InBox) சென்று கொலை மிரட்டல், ஆபாசப் பதிவு என இந்திய சங்கிகள் தங்களது ‘வழக்கமான’ அருவெறுக்கத்தக்க இழிசெயல்களைச் செய்யத் துவங்கியிருக்கின்றனர்.

விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்துப் பேசிய ஆஸ்திரேலிய ஊடகவியலாளர் சியோபன் ஹியானு தனது இன் பாக்சில் கொலை மிரட்டல்கள் வந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். மரியா அபி ஹபீப் என்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையாளர், இந்திய ட்ரால்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் மத்திய கிழக்கு நாடுகளிலிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். களை விட மோசமாக இருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மொத்தத்தில் இந்தியாவின் மானத்தை சர்வதேச அளவில் கப்பலேற்றிவிட்டு வந்திருக்கின்றனர் சங்கிகள்.

இந்தக் கூத்துக்களின் தொடர்ச்சியாக, உலகின் பழைமையான ‘ஜனநாயக’ நாடான அமெரிக்கா, தனது நாட்டு பிரபலங்களுக்கும் இந்திய வெளியுறவுத்துறைக்கும் இடையில் நடக்கும் தகராறில் தலையை விடவேண்டிய கட்டாயத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

“எந்த ஒரு ஊக்கமான ஜனநாயகத்திற்கும் அமைதியான போராட்டங்கள் ஒரு அடையாளங்கள் என்பதை நாங்கள் அங்கிகரிக்கிறோம். இதையே இந்திய உச்சநீதிமன்றமும் குறிப்பிட்டுள்ளதை நாங்கள் அறிவோம். இணையம் உள்ளிட்ட தகவல் தொடர்பு தடையின்றி கிடைக்கச் செய்வது கருத்துச் சுதந்திரத்திற்கும், முனைப்பான ஜனநாயகத்துக்கும் அடிப்படையானது என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.” என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தது.

ஜனநாயகம் குறித்து சங்கிகளுக்கு அதாவது இந்திய அரசாங்கத்திற்கு வகுப்பெடுத்ததோடு மட்டும் அது நின்று விடவில்லை. தனது காரியத்திலும் கண்ணாக, தனது முத்தான கருத்தையும் உதிர்த்துவிட்டுச் சென்றது.

பிரச்சினையை அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்த்துக் கொள்ள தாம் ஊக்குவிப்பதாகக் கூறிக் கொண்டே, “பொதுவில், இந்திய சந்தைகளின் திறனை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மற்றும் பெருமளவிலான தனியார்துறை முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா வரவேற்கிறது” என்று கூறியிருக்கிறது.

அமெரிக்காவின் இந்த அறிக்கை அதன் நோக்கத்தை மிகத் தெளிவாகக் காட்டியிருப்பதோடு, இந்திய அரசு வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருப்பதன் பின்னணியையும் பகிரங்கமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறது. வெறுமனே அதானி அம்பானியின் கைகளுக்குக் கிடைப்பதற்காக இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்படவில்லை என்பதையும் சர்வதேச நிதி மூலதனத்திற்கான ஒரு முக்கிய தளமாக இந்திய வேளாண் துறையை மாற்றுவதற்காகவே இச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

சச்சின் உள்ளிட்ட கிரிக்கெட் ஆட்டக்காரர்களும், ஹாலிவுட் நடிகர்களும் கண்ணை மூடிக் கொண்டு, தலையாட்டி பொம்மைகளாக மோடி கும்பலின் கோரிக்கைக்கு அடிபணிந்து இந்த டிவிட்டுகளை போடுவதன் பின்னணியில் இரண்டு விசயங்கள் இருக்கின்றன.

முதலாவது காரணம் சாதாரணமானதும் அனைவரும் அறிந்ததும்தான். சங்க பரிவார பாசிச கும்பலை எதிர்த்து ஏதேனும் பேசினால் தொழிலை நிம்மதியாகச் செய்ய முடியாது என்பதோடு, கடந்த கால வரி ஏய்ப்பு குட்டைகளை எல்லாம் கிளறி எடுக்க மறுநாள் காலையில் வருமான வரித்துறை வாசலில் வந்து நிற்கும் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருப்பது முதல் காரணம்.

இரண்டாவது காரணம் தான் முக்கியமானது. தனியார்மயத்தின் பங்குதாரர்களாகவே இந்தப் பிரபலங்கள் அனைவரும் இருக்கிறார்கள் என்பதுதான் அது. ஒவ்வொரு சினிமா நடிகரும், கிரிக்கெட் ஆட்டக்காரரும் நடிக்கும் விளம்பரத்தின் மூலம் கணிசமான வருமானத்தைப் பெற்று வருகிறார்கள்.

இந்தியாவின் இறையாண்மையை விட்டுக்கொடுக்க முடியாது என்று சவுண்டு விட்டிருக்கிறார், சச்சின். இந்த வேளாண் சட்டங்களே இந்திய இறையாண்மையை ஒழித்துக்கட்டும் விதமாக உலக வர்த்தகக் கழகத்தால் திணிக்கப்பட்டவைதானே. எனில் இவர்கள் உலக வர்த்தகக் கழகத்தை எதிர்த்துக் கலகம் செய்வாரா சச்சின் ?

போடும் ஜட்டியில் இருந்து, குடிக்கும் குளிர்பானம் வரை அனைத்து பன்னாட்டு பொருட்களுக்கும் இதே கிரிக்கெட் ஆட்டக்காரர்களும், சினிமா நாயகர்களும்தான் விளம்பர மாடல்களாகவும் பிராண்ட் அம்பாசிடர்களாகவும் இருந்து வருகின்றனர். தங்களது நலனும் கார்ப்பரேட் நலனும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்கவொன்னாதவை என இவர்கள் அனைவரும் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர்.

படிக்க :
♦ சர்வதேச நோக்கில் விவசாயிகள் போராட்டத்தின் முக்கியத்துவம் !
♦ சச்சின் டென்டுல்கரின் 35லட்ச ரூபாய் இரத்தப் புத்தகம்! காறித்துப்புவோம் !!

அதனால்தான், “#IndiaStandsTogether” (இந்தியா ஒன்றிணைந்து நிற்கிறது) என இப்போது ஹேஷ்டேகில் டிவிட் போடும் இந்த ‘தேச பக்தர்கள்’, 60 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் கடும் குளிரிலும் மழையிலும் நடுங்கிக் கொண்டு டெல்லியைச் சுற்றி அமர்ந்து போராடிக் கொண்டிருந்த போது, அவர்களோடு ஒன்றிணைந்து நிற்காமல், மவுனிகளாக அனைத்தையும் ‘பொத்திக்’ கொண்டு இருந்தனர்.

அமெரிக்கப் பாடகர் ரிஹானா தனது சமுக வலைத்தளப் பதிவின் மூலம் அளித்த ஆதரவும் உலகம் முழுவதுமான ஜனநாயக சக்திகளின் ஆதரவும், விவசாயிகளின் போராட்டத்திற்கு மேலும் ஒரு உத்வேகத்தைக் கொடுத்திருப்பதோடு, மக்களின் தலைவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆட்டக்காரர்களின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.

இந்திய விவசாயிகளின் போராட்டங்கள் அவர்களது வாழ்வாதாரப் பிரச்சினை மட்டுமல்ல, வருங்காலத்தில் நமக்கு உணவு கிடைப்பதை உத்திரவாதப்படுத்துவதற்குமான போராட்டமும் ஆகும் என்பதை பெருவாரியான மக்கள் உணரும் போது, தற்போது டிவிட்டரில் உருட்டப்படும் கிரிக்கெட் ஆட்டக்காரர்களும், சினிமா ஹீரோக்களும் வீதியில் உருட்டப்படுவார்கள்.


சரண்
செய்தி ஆதாரம் : The Wire, The Wire2

ஸ்க்ரிப்டை மாற்றுங்கள் மோடி ஜி || மனுஷ்ய புத்திரன்

ஸ்க்ரிப்டை மாற்றுங்கள் ஜி
உங்கள் தேசபக்தி நாடகத்தில்
ஏதேனும் புதிய சம்பவங்களையோ
வசனங்களையோ சேருங்கள்

நீங்கள் ஒவ்வொரு முறையும்
அதே நாடகத்தின்
அதே வசனத்தை பேசத் தொடங்கும்போது
குழந்தைகள் அடுத்த வசனத்தைச் சொல்லி
சிரிக்கிறார்கள்

ஸ்க்ரிப்டை மாற்றுங்கள் ஜி
நீங்கள் ஜெயிக்க விரும்பும்போதெல்லாம்
தேச பக்தி
ஒரு மந்திரக்கோல் போலாகிவிடுகிறது
எல்லையில் நம் வீரர்கள் இறக்கிறார்கள்
உங்கள் விபரீத முடிவுகள் அம்பலமாகும்போது
தேச விரோதிகள்
நாட்டை ஊடுருவுகிறார்கள்

பயங்கர வாதிகள்
கருப்புப் பணத்தை
பயன்படுத்தாதிருக்கவே
எல்லாப் பணத்தையும் ஒழிக்கிறீர்கள்
ஒரு மாற்றமும் இல்லாமல்
இந்த நாடகம் அரங்கேறுகிறது

தலை நகரம் விவசாயிகளால்
முற்றுகையிடப்பட்டிருக்கிறது
உங்கள் வழக்கமான தந்திரங்களால்
அதை உடைக்க முடியவில்லை
அவர்கள் காந்தியின் பிள்ளைகள்
திடீரென உங்கள் அடியாள் ஒருவன்
உள்ளே ஊடுருவுகிறான்
குழப்பங்களை உருவாக்குகிறான்
உடனே அன்னிய சதிகாரர்கள்
ஊடுருவிவிட்டார்கள் என்று கதறுகிறீர்கள்
அது ஒரு போலிக்கதறல் என
எல்லோருக்கும் தெரியும்
எனக்கு மிகவும் அலுத்துவிட்டது

‘இதைப்பற்றி நாம் பேசினால் என்ன?’
என ஏதோ ஒரு தேசத்துப் பாடகி கேட்கிறாள்
உடனே இங்கிருந்து
ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரன்
தேசத்தின் இறையான்மைக்கு
ஆபத்து எனக் கதறுகிறான்
அது ஒரு போலிக் கதறல் என
எல்லோருக்கும் தெரியும்

போராட்டம் இப்போது
டெல்லி தெருக்களில் அல்ல
ட்விட்டரில் நடக்கிறது
இலட்சணக்கான விவசாயிகள்
குளிரில் வெட்ட வெளியில் கிடக்கிறார்கள்
சிலர் சாகிறார்கள்
அவர்களுக்கு முன்
முள்வேலிகளை அமைக்கிறீர்கள்
அவர்களுக்கு குடிக்க தண்ணீர் தர மறுக்கிறீர்கள்
அதனால் எல்லாம் இந்தியாவின் இறையாண்மைக்கு
எந்தப் பாதிப்பும் இல்லை
நீங்கள் சாவிகொடுத்த பொம்மைகள்
உங்கள் வாக்கியங்களை கக்குகின்றன

நீங்கள் வெட்கப்பட வேண்டும்;
விவசாயிகளுக்கு எதிராக
நீங்கள் ஒரு நடிகனை பயன்படுத்துவதற்கு
ஒரு நடிகையை பயன்படுத்துவதற்கு
ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரனை பயன்படுத்துவதற்கு
உண்மையில் நீங்கள்
இந்த தேசத்தையே
ஒரு நாடக மேடையாக்கி விட்டீர்கள்
ஒரு விளையாட்டு மைதானம் ஆக்கிவிட்டீர்கள்

ஸ்க்ரிப்டை மாற்றுங்கள் ஜி
ஒரு அன்னியர் உங்களை விமர்சிப்பதால்
உங்களுக்கு கோபம்வருவதை
நான் நம்பவில்லை
விமானங்கள் ஓடிக்கொண்டிருந்தவரை
நீங்கள் அன்னியர்களுடன்தான்
உரையாடிக்கொண்டிருந்தீர்கள்
அவர்களுடன்தான்
எப்போதும் செல்ஃபி எடுத்துக்கொண்டீர்கள்
அவர்களிடம்தான் போர் விமானங்கள் வாங்கினீர்கள்
அவர்களிடம்தான் குண்டூசிகள்
இறக்குமதி செய்ய
ஒப்பந்தங்கள் போட்டீர்கள்
அன்னிய முதலீடுகளோடு ஒட்டிக்கொண்டு
கொஞ்சம் அன்னியக் கருத்துக்களும்
வந்துவிடுகின்றன
சிந்திக்கும் மனிதர்கள்
எல்லாவற்றிற்கும் கருத்துக்கள்
கூறவே செய்கிறார்கள்
சிந்தனையற்ற தேசபக்தி
புண்படுவதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது

இறையாண்மை என்பது
அதிகாரத்தில் இருந்தல்ல
நீதியிலிருந்தே பிறக்கிறது
உங்களிடம் நீதியைத்தவிர
எல்லாமே இருக்கிறது

ஸ்க்ரிப்டை மாற்றுங்கள் ஜி
தேச பக்திக்கூவலால்
உங்கள் எல்லாகுற்றங்களையும்
மறைக்க இயலாது
அந்த நாடகத்தை அதிகமாகவே
நிகழ்த்திவிட்டீர்கள்
ஒரு உண்மையான ஆபத்து
தேசத்திற்கு வந்தால்கூட
யாரும் நம்பமுடியாதபடி
அதைக் கேலிக்கூத்தாக்கிவிட்டீர்கள்

ஸ்க்ரிப்டை மாற்றுங்கள் ஜி
போரடிக்கிறது
பயங்கரமாக தலை வலிக்கிறது

நன்றி : மனுஷ்ய புத்திரன்

disclaimer