Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 316

கேள்வி பதில் : பாரத ரத்னா – சோசலிசம் – சீன அதிபர் வருகை !

கேள்வி: //பாரத ரத்னா விருதும் பாஜக காவிகளும் பற்றி …?//

– செல்வராஜன்

ன்புள்ள செல்வராஜன்,

மோடி அரசு பதவியேற்றதிலிருந்து இதுவரை ஐவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கின்றது. மதன் மோகன் மாளவியா, அடல் பிகாரி வாஜ்பாய், பிரணாப் முகர்ஜி, பூபேன் அசாரிகா, நானாஜி தேஷ்முக் ஆகியோர்தான் அந்த ஐவர்.

மதன் மோகன் மாளவியா காசி இந்து பல்கலைக் கழகத்தை நிறுவியவர். காங்கிரசு தலைவராக இருந்தாலும் இந்துத்துவக் கொள்கைகளை முன்னிறுத்தியவர். முசுலீம்களுக்கு தனி வாக்குத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதையும் கிலாபத் இயக்கத்தில் காங்கிரசு பங்கேற்பதையும் எதிர்த்தவர். அந்த வகையில் இவரை ஆர்.எஸ்.எஸ் இயக்கம் கொண்டாடி வருகிறது.

வாஜ்பாயியைப் பற்றி சொல்லவே தேவையில்லை. அக்மார்க் ஆர்.எஸ்.எஸ் காரர். பாஜக-வின் பிரதமராக பணியாற்றியவர். பிரணாப் முகர்ஜி மோடியின் முதல் ஆட்சியில் பாஜக-வின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் குடியரசுத் தலைவராக இருந்து ஒத்தூதிய காங்கிரசுகாரர். நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் காங்கிரசுக் கட்சி கண்டனத்தையும் மீறி கலந்து கொண்டு சங்கிகளுக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்தவர். பூபேன் அசாரிகா மிகச் சிறந்த இசைக் கலைஞர் என்றாலும் தனது இறுதிக் காலத்தில் பாஜக-வில் இணைந்தார்.

நானாஜி தேஷ்முக் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர். சங்கிகளின் ராமராஜ்ஜிய பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைத்தவர். இந்தக் கொள்கைகள் என்பது சமூக ஏற்றத்தாழ்வை விட்டுவிட்டு தனிமனிதனைச் சீரமைக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் உன்னால் முடியும் தம்பி வகையாறாதான். வல்லரசு

இப்படி பாரத ரத்னா விருதுப் பட்டியல் சங்கிகளின் மனம் கவர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது இனி அத்வானி, கோட்சே, சாவர்க்கர், ஹெட்கேவார், சியாம் பிரசாத் முகர்ஜி, கோல்வால்கர் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை கலைமாமணி விருதுகளை கண்டு கொள்ளாதது போல பாரத ரத்னாவையும் பாராமுகமாக விட்டு விட முடியாது. தொடர்ந்து விமரிசிக்க வேண்டும்.

நன்றி!

படிக்க:
100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை
♦ அரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை : மோட்டார் வாகன சட்டத் திருத்தம் !

♦ ♦ ♦

கேள்வி: //முதலாளித்துவ அமைப்பு முறை தோற்று வருவதாலேயே சோசலிசம் வந்து விடுமா?//

– சி.நெப்போலியன்

ன்புள்ள நெப்போலியன்,

முதலாளித்துவ அமைப்பு முறையின் தோல்வி அதன் இயங்கு முறையிலேயே உள்ளார்ந்து உள்ளது. தனி நபர் சொத்து குவிப்பும் – பெரும்பான்மை மக்கள் மேலும் மேலும் வருமானமிழப்பதையும், தனிப்பட்ட தொழிற்சாலையின் திட்டமிட்ட உற்பத்தியும் – நாடு தழுவிய அராஜக உற்பத்தியுமான இரு முரண்பாடுகள் முதலாளித்துவம் தானே தோண்டிக் கொண்ட சவக் குழிகள். இந்த அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு சொத்துடமையை சமூகத்திற்கு சொந்தமாக்குவதும், பெரும்பான்மை மக்களுக்கான திட்டமிட்ட மைய உற்பத்தியும் சோசலிசம் முன் வைக்கும் தீர்வுகள். அல்லது முதலாளித்துவ உற்பத்தி முறையின் அழிவிலிருந்து வந்தடைந்தே ஆகவேண்டிய மாற்றங்கள். அதைத்தான் புரட்சி என்கிறோம்.

இந்த மாற்றத்தை ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான புரட்சியே சாதித்துக் காட்டும். ரசியாவிலும், சீனாவிலும் அப்படித்தான் புரட்சிகள் நடந்தேறி சோசலிச சமூகம் உருவாக்கப்பட்டது. சரி இது வரலாறு மற்றும் அறிவியல்.

இன்றைய நிலைமையில் உலகெங்கிலும் அப்படி ஒரு சோசலிச முகாம் இல்லை. மார்க்சிய லெனினிய கட்சிகளும் பலவீனமாக உள்ளன. எந்த நாட்டிலும் அவை தீர்மானகரமான சக்தியாக இல்லை. அதே நேரம் முதலாளித்துவத்தின் தோல்வி, அதன் கட்டமைப்பு நெருக்கடி காரணமாக உலகெங்கிலும் போராட்டங்கள் பல்வேறு நாடுகளில் வெடித்து வருகின்றன. தொடர்ந்து நடக்கின்றன. முதலாளித்துவம் ஒழியட்டும் என்ற அரசியல் முழக்கங்கள் ஐந்து கண்டங்களிலும் முழங்குகின்றன. இந்தப் போராட்டங்களினூடாக சில நாடுகளில் கம்யூனிஸ்டுக் கட்சிகள் பலமடைந்து சோசலிச புரட்சி வருவதற்கான வாய்ப்புகள் பொதுவில் இருப்பதாக சொல்லலாம். அதன் மூலம் மீண்டும் இவ்வுலகில் ஒரு சோசலிச முகாம் தோன்றி உலகை வழிநடத்தலாம். அப்படி நடக்கவில்லை என்றால்?

முதலாளித்துவம் தனது உள் முரண்பாடுகளால் இந்த உலகை பெரும் போருக்குள் தள்ளி, சுற்றுச்சூழலை நாசம் செய்து அழிவைக் கொண்டு வரும்.

ஆகவே முதலாளித்துவத்தின் தோல்வி ஒரு அறிவியல் எனும் போது அதன் தீர்வில் இந்த உலகம் அழியுமா இல்லை புரட்சியால் காப்பாற்றப்படுமா என்ற இரண்டு தீர்வுகளே உள்ளன. மூன்றாவது ஏதுமில்லை.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி: //சீன அதிபரின் சென்னை வருகை எதற்காக?//

– சி. நெப்போலியன்

மோடியைப் போல சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தனது பிம்பத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விளம்பரப்படுத்துகிறார். வருகையில் நடந்த கண்காட்சிகள், விருந்துகளில் இது ஒரு நோக்கம். மற்றொருபுறம் அமெரிக்காவிற்கு போட்டியாக சீனா பொருளாதார, அரசியல் அரங்கில் செயல்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் முதலீடுகளைக் கொட்டி தனது செல்வாக்கு மண்டலங்களை வர்த்தகத்தின் மூலம் உருவாக்க விரும்புகிறது. இந்தியா, அமெரிக்காவின் அடியாளாக இருந்தாலும் வர்த்தகம் என்ற முறையில் சீனாவோடும் உறவாட வேண்டிய தேவை இருக்கிறது. சீன உறவை முற்றிலும் துண்டித்துக் கொள்ள முடியாது. அதனால்தான் பிரேசிலில் நடக்கும் பிரக்சிட் அமைப்பிலும் இந்தியா பங்கு பெறுகிறது. அமெரிக்காவிற்கு போட்டியான இந்த பொருளாதார அரசியல் அமைப்புகள் இப்போது பெரிய அளவிற்கு பங்களிப்பு செய்யவில்லை என்றாலும் எதிர்காலத்தில் செய்யலாம். அது அமெரிக்க சீன முரண்பாட்டின் வளர்ச்சியாகவும் பார்க்கலாம்.

நன்றி!

♦ ♦ ♦

படிக்க:
கம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் ? கேள்வி – பதில்
♦ கேள்வி பதில் : அறம் நேசம் மனிதம் அனைத்தும் ஒழிந்து விட்டதா ?

கேள்வி: //சீனா மீதான இந்திய ஆளும் வர்க்கங்களின் திடீர் பாசத்திற்கு காரணம் என்ன என புரியவில்லை?

சர்வதேச அளவில் அமெரிக்கா தலைமையிலான மேல்நிலை வல்லரசுகள் உலகை ஆட்டிப் படைக்கும் அதே பொழுது, சீனாவும் இந்த மே.நி. வல்லரசுகளை சாராமல் சுயமாக பொருளாதார ரீதியாக வளர்ந்து வந்துள்ளது. இதற்கு காரணம் மாவோவின் கம்யூனிசம் அல்ல என்றும் அதிகாரவர்க்க முதலாளித்துவம் மாவோவின் காலத்திற்கு பின் சீனாவின் அதிகாரத்தை கைப்பற்றியதும்தான் காரணம் என தெரிகிறது.

ஆனால், பிற மேல்நிலை வல்லரசுகளுக்கு போட்டியாக வளர்ந்தது எப்படி? புரியவில்லை.

மற்றும், தற்போதைய உலக பொருளாதார மந்தத்தில் சீனாவும் சிக்கி உள்ளதா? தெரியவில்லை.

இந்தப் பின்னணியில் இந்திய ஆளும் வர்க்கங்களின் சமீபத்திய நடவடிக்கைகளை விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.//

– திப்பு

ன்புள்ள திப்பு,

முன்னர் பார்த்த கேள்வி பதிலின் தொடர்ச்சியாக சில விசயங்களைப் பார்க்கலாம். சீனா இன்று அமெரிக்காவிற்கே சவால் விடும் அளவிற்கு ஒரு வல்லரசு நாடு போல வளர்ந்து விட்டதா என்று கேட்டால் ஆம், அப்படி வளர்ந்திருக்கிறது. இங்கிலாந்து, பிரான்சு, ரசியா, தென்கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த ராணுவ பட்ஜெட்டை விட சீனாவின் ராணுவ பட்ஜெட் அதிகம். அமெரிக்காவின் பட்ஜெட் இதை விட சில மடங்கு அதிகம் என்றாலும் இன்று அமெரிக்காவிற்கு அடுத்து இராணுவத்திற்கு அதிகம் செலவிடும் நாடு சீனாதான்.

அமெரிக்காவின் அன்றாட வாழ்க்கையில் புழங்கப்படும் சட்டை முதல் செல்பேசி வரை சீனாதான் தயாரிக்கிறது. அமெரிக்காவின் அன்றாட நுகர்வு சீனாவை நம்பி இருக்கிறது என்றால் மிகையில்லை. இன்னொரு புறம் சீனாவை புறந்தள்ளி பொருளாதார மேலாண்மையை பெறுவதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவோடு வர்த்தகப் போரை துவக்கியுள்ளார். பதிலுக்கு சீனாவும் அமெரிக்க இறக்குமதிக்கு வரிகளை உயர்த்தி உள்ளது.

சீனா இந்த பிரம்மாண்டமான பொருளாதார நிலைமையை எப்படி அடைந்தது?

மாவோ காலம் வரையிலான சீனா அடிப்படைக் கட்டமைப்புகளை வலுவாக கட்டியது. பின்னர் டெங்சியோ பிங் காலத்தில் அந்த அடிப்படைக் கட்டமைப்பின் வலுவில் முதலாளித்துவ பொருளாதாரம் கொண்டு வரப்பட்டு வேகமாக பொருளாதாரம் வளர்ந்தது. திறமையான தொழிலாளர்கள், மலிவான கூலி, பிரம்மாண்டமான அடிக்கட்டமைப்பு வசதிகள், அதற்கு மலிவான கட்டணங்கள் என்று சீனாவில் கட்டமைப்பை வல்லரசு நாடுகள் நன்கு பயன்படுத்திக் கொண்டன. மறுபுறம் சீனாவும் இந்த வர்த்தகத்தின் மூலம் பெரும் செல்வத்தை ஈட்டியது. இன்று அமெரிக்கா உள்ளிட்டு பல நாடுகள் வெளியிட்டுள்ள கடன்பத்திரங்களின் கணிசமான பகுதி சீனாவிடம்தான் உள்ளது. சோசலிசம் உருவாக்கிய மூலதனத்திரட்சியை சீன அதிகார வர்க்கம் திருடிக் கொண்டு இந்த முதலாளித்துவ வளர்ச்சியை சாதித்திருக்கிறது.

உலக பொருளாதார நெருக்கடியின் விளைவு சீனாவிலும் இருக்கிறது என்றாலும் வல்லரசு நாடுகள் போல பெரும் பாதிப்பு இல்லை. தனது நிதி மூலதனத்தை பெருக்கும் பொருட்டு சீனா உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் பல்வேறு முதலீடுகளைச் செய்து வருகிறது. நிலத்திலும், நீரிலும் அது செயல்படுத்தி வரும் பட்டுவழிப்பாதை திட்டம் பல்வேறு நாடுகளின் துறைமுகங்களையும், சாலைகளையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் இருக்கும் பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான சீன தொழிலாளிகளும், சீன அதிகாரிகளும் பணிபுரிகின்றனர்.

சரி, சீனாவின் இந்த வளர்ச்சி உள்நாட்டில் என்ன சாதித்திருக்கிறது?

வாரத்திற்கு இரண்டு பில்லியனர்கள் புது வரவாக அறிமுகமாகும் அளவிற்கு பெரும் பணக்காரர்கள் சீனாவில் வளர்ந்து வருகிறார்கள். சீன கம்யூனிசக் கட்சியிலேயே பெரும் பில்லியனர்கள் உறுப்பினர்களாகவும், பொறுப்பிலும் உள்ளனர். மறுபுறம் வறுமையும், வேலையின்மையும், சமூக நலத்திட்டங்களிலிருந்து மக்கள் தூக்கியெறியப்படுவதும் சீனாவில் நடக்கிறது. சீனத் தொழிலாளிகள் சீனாவின் கிழக்கு பொருளாதார மண்டல நகரங்களில் தம்பதி சகிதராக பணி புரிகின்றனர். ஆனால் அங்கே அவர்கள் ஒரு தரமான வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பமாக வாழ முடிவதில்லை. தமது குழந்தைகளை தொலை தூரத்தில் உள்ள கிராமங்களில் வயதான பெற்றோரிடம் விட்டு விட்டு நகரங்களில் ஓடிக் கொண்டிருக்கின்றனர். பணிநேரமும் அதிகம். நல்ல கல்வி, நல்ல சுகாதாரம் ஆகியவை நகரங்களில் பெரும் செலவு பிடிக்கும் வண்ணம் இருப்பதால் சீனத் தொழிலாளிகளின் குடும்ப வேர் இன்னமும் கிராமங்களிலேயே இருக்கிறது.

இன்று உலகிலேயே அணு அணுவாய் குடிமக்களைக் கண்காணிக்கும் நாடாக சீனா உருவெடுத்துவிட்டது. தலைநகர் பீகிங்கில் அடையாள அட்டை இல்லாமல் ஒருவர் கூட வாழ முடியாது. அப்படி பிழைக்கும் மக்கள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு நகரத்தை விட்டே துரத்தப்படுகிறார்கள். இப்படி வர்க்கரீதியான ஏற்றத்தாழ்வு சீனாவில் வளர்ந்து வருகிறது. இருப்பினும் இன்னமும் பெரும்பான்மை மக்களுக்கு கல்வியும், சுகாதாரமும், வேலையும் ஓரளவுக்கு வழங்கப்படுவதால் ஒட்டு மொத்த புள்ளிவிவரம் மற்ற நாடுகளை விட வாழ்க்கைத் தர மேம்பாட்டில் அதிகம் இருக்கும். இதற்கு, அங்கே வறுமை குறைந்து வருவதாக பொருள் இல்லை.

சீன முதலாளிகளுக்கு குறைவான வரிகளே விதிக்கப்படுகின்றன. பல முதலாளிகள் தமது சொத்துக்களை வரி இல்லா சொர்க்கங்களில் கொண்டு செல்கின்றனர். சீனாவின் பணக்காரக் குழந்தைகள் அனைத்தும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் படிக்கின்றனர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மகளே அமெரிக்க பல்கலைக் கழகம் ஒன்றில் படிக்கிறார். ஆனால் சீன அதிபரின் வருட ஊதியம் 22,000 டாலர் மட்டுமே. அதாவது மாதம் தோராயமாக ஒன்றரை லட்ச ரூபாய் மட்டுமே. இந்த வருமானத்தில் அவரது மகள் எப்படி அமெரிக்காவில் படிக்க முடியும்? அதற்கு சீனாவில் அனைவரும் ஒரு குடும்பமாய் வாழ்கிறார்கள். சீன அதிபரின் மாமன், மச்சான், அத்திம்பேர் முதலாளிகளாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் அதிபர் மகளின் கல்விச் செலவை ஏற்பார்கள் என்று சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். சீன கம்யூனிசக் கட்சியின் பொலிட் பீரோவில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் சீனாவின் ஏதாவது ஒரு தனியார் தொழிற்துறையைக் கட்டுப்படுத்துகிறார்கள்.

இந்த நிலைமைகள் அனைத்திற்கும் ஒரு கட்சி சர்வாதிகாரம் என்ற அரசியல் அமைப்பு சாதகமாக இருக்கிறது. நாட்டின் செல்வ வளங்களை வல்லரசு நாடுகளுக்கு விற்பதற்கும், பணக்காரர்களை உருவாக்குவதற்கும், ஏழைகளை நகரங்களில் வாழமுடியாதபடி செய்வதற்கும், போராட்டங்களை முடக்குவதற்கும் இந்த போலிக் கம்யூனிச ஆட்சி பொருத்தமாக இருக்கிறது.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

பாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் !

1

பாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள்

2003-ம் ஆண்டில் பாபர் மசூதிக்கு அடியில் இராமன் கோயில் இருந்ததற்கு சான்று உள்ளதாக கூறிய இந்திய தொல்லியல் துறையில் (Archaeological Survey of India – ஏ.எஸ்.ஐ) ஆய்வில் ஈடுபட்ட தொல்லியலாளர்களுக்கு இடையில் ஒருமித்த கருத்து இல்லை.

இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு கீழே ஒரு பிரமாண்டமான கட்டமைப்பு இருந்ததற்கான சான்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறிய தொல்லியல் துறை அதற்கு 574 பக்க அறிக்கையை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 2003 ஆகஸ்டில் வழங்கியது. ASI-ன் அறிக்கையை “தெளிவற்ற மற்றும் தன் முரண்பாடானது” என்று வழக்கின் ஒரு தரப்பான சன்னி வக்ஃபு வாரியம் கூறியது.

தொடர்ந்து, வக்ஃபு வாரியம் தரப்பில் சுப்ரியா வர்மா மற்றும் ஜெயா மேனன் என்ற இரண்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ASI-ன் அகழ்வாராய்ச்சிகளை கவனித்தனர். ஏ.எஸ்.ஐ.யின் ஆய்வு முடிவுகளை, தொடர்ந்து செப்டம்பர் 2010-ல் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பையும் ஏன் அவர்கள் எதிர்த்தார்கள் என்பதை பொருளாதார மற்றும் அரசியல் வார இதழில் (Economic and Political Weekly) அவர்கள் ஒரு கட்டுரை எழுதினார்கள். அதன் படி, அகழ்வாராய்ச்சியின் போது, ஏ.எஸ்.ஐ பின்பற்றிய பல்வேறு நடைமுறைகளுக்கு இருவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆய்வின் போது, “ஏ.எஸ்.ஐ. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் மனதில் ஏற்கனவே ஒரு முன்முடிவு இருந்தது என்பது உண்மை” என்று அவர்கள் கூறினார்கள்.

இந்தியாவில் ஆராய்ச்சியாளர்கள் மீதான ASI-யின் அதிகாரம் காரணமாக அதன் அறிக்கை கேள்விக்குட்படுத்தப்படவில்லை என்று கட்டுரையாசிரியர்கள் கூறினார்கள். “இந்தியரோ அல்ல வெளிநாட்டவரோ எந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் தளங்களை ஆராய அல்லது அகழ்வாராய்ச்சி செய்ய விரும்பினால் ASI-யிடமிருந்து உரிமம் பெற வேண்டும். எனவே எந்தவொரு தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் இந்திய தொல்லியல் துறைக்கு எதிராக அல்லது அதன் காலாவதியான முறைகளுக்கு எதிராக பேச தயாராக இல்லை” என்று கூறினார்கள்.

கர சேவகர்கள், 1992 டிசம்பர் 6-ம் தேதி அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து இப்போது 26 ஆண்டுகள் ஆகின்றன. 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்குவதற்கு முன்னதாகவே சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் ராமன் கோயில் கட்ட வேண்டும் என்று இந்துத்துவ பிற்போக்குச்சக்திகள் அழுத்தம் கொடுக்கின்றனர்.

படிக்க:
ஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன ?
♦ புதுச்சேரி – நெல்லையில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் !

நடைமுறை குறைபாடுகளுடனான முடிவுகளை ஏ.எஸ்.ஐ வந்தடைந்தது எப்படி என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பேராசிரியரான வர்மா Huffington Post பத்திரிக்கையிடம் பேசிய போது கூறினார். “பாபர் மசூதியின் கீழ் ஒரு கோயில் இருந்தது என்பதற்கு இப்பொழுது கூட தொல்பொருள் சான்றுகள் எதுவும் இல்லை” என்று அவர் வாதிடுவதுடன், “பாபர் மசூதிக்கு அடியில், உண்மையில் பழைய மசூதிகளே உள்ளன” என்று மேலும் கூறினார்.

அந்த இடத்தில் ஒரு கோயில் இருந்தது என்பதற்கு ஏ.எஸ்.ஐ மூன்று சான்றுகளை பயன்படுத்தியது – அனைத்தும் கேள்விக்குரியவை என்று வர்மா Huffington Post-டிடம் கூறியுள்ளார்.

1) ஒரு மேற்கு சுவர் : “மேற்கு சுவர் மசூதிக்குரிய ஒரு அம்சமாகும். அந்த சுவருக்கு முன்பு தான் நமாஸ் என்று நீங்கள் சொல்லுவீர்கள். இது கோவிலுக்குரிய ஒரு அம்சம் அல்ல. கோவில் இதைவிட மிகவும் வேறுபாடான அமைப்பு கொண்டது”.

2) ஐம்பது தூண் தளங்கள் : “இவை முற்றிலும் புனையப்பட்டவை. இது குறித்து பல புகார்களை நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்தோம். தூண் தளங்கள் என்று அவர்கள் கூறுவதுடன் ஒப்பிட்டால், இவை வெறுமனே உடைந்த செங்கற்களின் துண்டுகள் மற்றும் அவற்றுக்கு இடையில் சேறு பூசப்பட்டிருக்கிறது” என்பது தான் எங்கள் வாதம்.

3) கட்டிட துண்டுகள் : “இந்த 12-ல் [மிக முக்கியமான கட்டிடக்கலை துண்டுகள்] ஒன்று கூட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்படவில்லை. மசூதியின் சுண்ணாம்பு தளத்திற்கு மேலே கிடந்த சிதைவுகளிலிருந்து இவை எடுக்கப்பட்டன… ஒரு கோயிலில் அதுவும் ஒரு கல் கோயிலில் (இது ஒரு கல் கோயில் என்று கூறப்படுகிறது) அவர்கள் கண்டுபிடித்ததை விட செதுக்கப்பட்ட பொருள்கள் அதிகம் இருக்கும்.

முந்தைய அகழ்வாராய்ச்சிகள் :

பாபர் மசூதியைச் சுற்றி நடத்தப்பட்ட பழைய அகழ்வாராய்ச்சிகள் குறித்தும் வர்மா பேசினார். முதலாவது, ஏ.எஸ்.ஐ.யின் முதல் தலைமை இயக்குனர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் (Alexander Cunningham) 1861-ம் ஆண்டில் நடத்தியது. அயோத்தியில் மூன்று குன்றுகளில், இரண்டு புத்த ஸ்தூபிகள் மற்றும் ஒரு விஹாரம் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளதை வர்மா கோடிட்டு கட்டுகிறார். அப்பகுதியில் உள்ள சில கோயில்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படும் செவிவழி கதைகளைப் பற்றி அவரது அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று வர்மா கூறுகிறார்.

இரண்டாவது அகழ்வாராய்ச்சி 1969-ம் ஆண்டில் பாபர் மசூதி அருகே பனாரஸ் இந்து பல்கலைக்கழக தொல்பொருள் துறையால் (Department of Archaeology of the Banaras Hindu University) நடத்தப்பட்டது. இந்த அகழ்வாராய்ச்சியின் சில பதிவுகள் இன்றுவரை தப்பிப் பிழைத்திருந்தாலும், வரலாற்றின் தொடக்ககாலத்தில் மற்றும் இடைக்காலத்தில் இப்பகுதியில் குடியேற்றம் நடந்ததாக அவர்கள் முடிவு செய்தனர்.

1975 மற்றும் 1980-க்கு இடையில், ஏ.எஸ்.ஐ.யின் அப்போதைய தலைமை இயக்குனராக இருந்த பி.பி.லால் இந்த திட்டத்தை புதுப்பித்தார். இப்பகுதி குறித்த வரலாற்றில் லாலின் பணிகள் குறிப்பிடத்தக்கவை.

எனவே லாலின் வேலைத்திட்டம் தனித்து நிற்பதன் பின்னனி என்ன? வர்மாவின் கூற்றுப்படி (தெளிவுக்காக திருத்தப்பட்டது),

அயோத்தி, மதுரா மற்றும் வாரணாசி ஆகிய மூன்று தளங்களில் இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் கோயில்களின் முழு சிக்கலையும் 1988 வாக்கில் (விஸ்வ இந்து பரிஷத்) கையில் எடுத்தது. 1975 மற்றும் 1978 -க்கு இடையில் அயோத்தியில் எடுக்கப்பட்டு, அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டதாகக் கூறிய தூண் தளங்களின் புகைப்படத்தை மாந்தன் (Manthan – இராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம்) இதழில் (அதே ஆண்டில்) பி.பி.லால் வெளியிட்டார். மேலும் குரோஷியாவில் (Croatia) நடந்த உலக தொல்பொருள் மாநாட்டிலும் அந்த புகைப்படத்தை முன் வைத்ததுடன், அங்கு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டால் கோவில் இருந்ததற்கான ஆதாரங்களைக் கண்டுபிடிப்பார்கள் என்று கூறினார்.

படிக்க:
பாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் ! | காணொளி
♦ பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு ! | விடுதலை ராஜேந்திரன்

பாபர் மசூதி நினைவுச் சின்னத்திலிருந்து ஒரு பெரிய அளவிலான அரசியல் இயக்கத்தை உருவாக்க பாஜக-வுக்கு லாலின் கூற்றுக்கள் உதவியதுடன் 1992-ல் மசூதி இடிக்கப்பட்டது. 1999-ம் ஆண்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தபின், அகழ்வாராய்ச்சி மீண்டும் பெரிய நிகழ்ச்சி நிரலாக மாறியது. வர்மாவின் கூற்றுப்படி, 2002-ல் அங்கு அகழ்வாராய்ச்சி செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் ஏ.எஸ்.ஐ க்கு கட்டளையிட்டது.

கேள்விக்குரிய ASIன் அறிக்கை:

தனது இறுதி அறிக்கையில் விரும்பத்தக்க பல விடயங்களை ஏ.எஸ்.ஐ விட்டுவிட்டது என்கிறார் வர்மா. அறிக்கையின் தொடக்கம் சாதாரணமாக இருந்தாலும் முடிவு தனித்து நிற்கிறது என்று அவர் ஹஃபிங்டன் போஸ்ட்டிடம் தெரிவித்தார்.

முழு அறிக்கையையும் நீங்கள் படித்தால், கோவில் பற்றி எதையும் அவர்கள் குறிப்பிடப்படவில்லை என்பது தெரியும். இது ஒரு தரமான அறிக்கை. … மனித எலும்பு எச்சங்கள் பற்றிய ஒரு தலைப்பு மட்டும் அதில் காணாமல் போய்விட்டது. அதை தான் அவர்களும் கண்டுபிடித்தார்கள். ஆனால் அவர்கள் அதை ஒருபோதும் வெளியிடவில்லை.

நீங்கள் மேலும் காண்பது என்னவென்றால், அந்த [பிற] தலைப்புகளை எழுதியவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் கடைசியில், எந்த பெயரும் குறிப்பிடப்படவில்லை. அறிக்கையின் கடைசி பத்தியில், மேற்கு சுவர், தூண் தளங்கள் மற்றும் சில கட்டட துண்டுகள் ஆகியவற்றின் சான்றுகளின் அடிப்படையில் பாபர் மசூதிக்கு அடியில் ஒரு கோயில் இருந்தது என்று அவர்கள் கூறுகிறார்கள். இது உண்மையில் மூன்று வரிகளில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இல்லையெனில், விவாதத்தில் எங்கும், ஒரு கோயில் இருப்பதாக ஒரு பேச்சும் இல்லை. அதே சான்றுகளுடன், பாபர் மசூதியின் கீழே இரண்டு அல்லது மூன்று சிறிய மசூதிகள் இருந்தன என்பதை நாங்கள் விளக்கியுள்ளோம்.

[ இந்த கட்டுரை முதலில் டிசம்பர் 6, 2018 அன்று தி வயர் தளத்தில் வெளியிடப்பட்டது. நவம்பர் 8, 2019 அன்று மீண்டும் வெளியிடப்பட்டது வாசகர்களுக்காக இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. ]


சுகுமார்
நன்றிதி வயர். 

100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை

1

ந்தியா நிர்வகித்து வந்த ஜம்மு காஷ்மீருக்கு இந்திய அரசியலமைப்பு வழங்கியிருந்த 370-வது பிரிவை கடந்த ஆகஸ்டு 5-ம் தேதி நீக்கியது மத்தியில் உள்ள இந்துத்துவ அரசாங்கம். நீக்கத்துக்குப் பின், ஜம்மு காஷ்மீரில் கடுமையான தடைகள் அமலாக்கப்பட்டன.

காஷ்மீர் தெருக்களில் 700,000 படையினர் நிறுத்தப்பட்டனர். சந்தேகத்தின் பேரில் சிறார்களையும்கூட இராணுவம் கைது செய்து சித்ரவதை செய்தது. மக்களின் நடமாட்டம் முற்றிலுமாக முடங்கியது.

இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரின் பெண்கள் பல தசாப்தங்களாக நீடித்துவரும் மோதல்களால் அன்றாடம் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

தொலைபேசி மற்றும் இணைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் முடக்கப்பட்டன. கட்டுப்பாடுகள் இரண்டு மாதங்களுக்குப் பிறகு சற்றே தளர்த்தியிருந்தாலும், 70 ஆண்டுகாலம் பிரச்சினை நீடித்துவரும் நிலையில், மிக மோசமான ஒடுக்குமுறை செயல்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.

கடந்த செவ்வாய்கிழமையோடு (12-11-2019) காஷ்மீர் முடக்கத்துக்கு உள்ளாகி 100 நாட்களாகிறது. அங்காங்கே வன்முறை சம்பவங்களும் நடந்தன. பணிக்காக காஷ்மீர் வந்திருந்த வேறு மாநில தொழிலாளர்கள் மூவர் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டனர். பல கிரானேடு தாக்குதல்கள் நடந்தன. உள்ளூர்வாசி அல்லாத ஒருவர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

பின்வரும் ஒளிப்படங்கள் காஷ்மீர் மக்களின் வாழ்க்கை 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை சித்தரிக்கின்றன…

இந்திய பாராளுமன்றம் பிரிவு 370-ஐ நீக்கிய ஆகஸ்டு 5 அன்று காலை நேரத்தில் ஸ்ரீநகரில் லால் சவுக் பகுதியில் திரண்டன. இந்த முடிவை எதிர்த்து காஷ்மீரில் போராட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்க ஆயிரக்கணக்கான படை அனுப்பப்பட்டன. பிரச்சினைக்குரிய இந்தப் பகுதியில் ஒவ்வொரு முனையிலும் ஆயுதம் தாங்கிய படைகள் நின்றன.

பிரிவு 370 நீக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன், மத்திய அரசாங்கம் சுற்றுலா பயணிகள், இந்து ஆன்மீக பயணிகள், மாணவர்களை காஷ்மீரிலிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தியது. இது இந்திய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை பீதியடைய வைத்தது. குழப்பம் மற்றும் பதட்டத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான வெளியூர் தொழிலாளர்கள் காஷ்மீரை விட்டு வெளியேற ஸ்ரீநகர் சுற்றுலா வரவேற்பு மையத்தில் திரண்டனர். “இந்த பூலோக சொர்க்கத்திலிருந்து உண்மையில் எனக்குப் போக விருப்பமில்லை. வாழ்க்கைக்காக பணமீட்ட இங்கே வந்தபோது காஷ்மீர் மீதும் அதனுடைய மக்கள் மீது காதல் கொண்டேன். சூழ்நிலை காரணமாக இங்கிருந்து வெளியேறுவது தவிர எனக்கு வேறு வழியில்லை” என ஆகஸ்டில் தெரிவித்தார் மரவேலை செய்பவரான சுபம் சர்க்கார்.

படிக்க:
காஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் !
♦ காஷ்மீர் 100-ம் நாள் இணையம் தடை | பத்திரிகையாளர் போராட்டம் !

பெருந்திரள் போராட்டம் நடக்கக்கூடும் என்கிற பயத்தில் ஆகஸ்டு 11-ம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட ஈத் அல் அத்வா-வின்போது காஷ்மீரில் தடை இறுக்கப்பட்டது. ‘என்னுடைய வாழ்நாளில் ஈத் தொழுகைக்காக அனுமதி மறுக்கப்பட்டது இது இரண்டாவது முறை. பகுதியில் உள்ள தலைவர்களிடம் ஈத் தொழுகையை வெளியிடத்திலும் சிறு குழுக்களாக மசூதிகளில் செய்யும்படி போலீசு வலியுறுத்தியது’ என்கிறார் இங்கே வசிக்கும் முகமது ரம்சான்.

ஸ்ரீநகரின் அன்சார் பகுதியில் ஈத் தொழுகைக்குப் பிறகு, சுதந்திரத்தை வலியுறுத்தும் முழக்கங்களை எழுப்பிய காஷ்மீர் பெண்கள்.

பள்ளத்தாக்கு முழுவதும் கல்வி நிலையங்களில் படைகள் ஆக்கிரமித்ததால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஒரே இரவில் பதுங்கு குழிகள் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டன. அரசாங்கம் கல்விக்கூடங்கள் திறப்பதை அறிவித்தபோது, பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது குறித்து அச்சம் கொண்டனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் எதிர்ப்புகளைத் தடுக்க இந்திய படைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்துகின்றன. நிராயுதபாணியாக நின்ற எதிர்ப்பாளர்கள் மீது வீசப்பட்ட குண்டுகள் கடுமையான காயங்களையும் பார்வை இழப்பையும் ஏற்படுத்தியுள்ளன. ஆகஸ்டு 5 முதல் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களில் குழந்தைகள், சிறுவர்கள் உள்பட ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

ஸ்ரீநகரின் ஹப்பா கடல் பகுதியில் இளம் சிறார்களுக்கும் இந்திய பாதுகாப்புப் படைகளுக்கும் நடந்த மோதலில் வீசப்பட்ட கற் குவியல் இது. படையினர் மீது கல் வீசுவதும் சுதந்திரம் கோரி முழக்கங்கள் எழுப்புவதும் இந்தப் பிராந்தியத்தின் முக்கிய போராட்ட முறையாகும்.

சோபியனிலிருந்து கைது செய்யப்பட்ட மேலாண்மை படிப்பு மாணவரான அகூப் ரஃபிக் வானியின் தாயார் பர்வீனா, ‘இந்திய படைகள் என் மகனை கொண்டு போன அந்த இரவு குறித்த நினைவு வந்துகொண்டே இருக்கிறது. அவனுடைய வருகைக்காக நான் காத்திருக்கிறேன்’ என்கிறார். ஆகஸ்டு 8-ம் தேதி இரவு வீட்டிலிருந்த வானியை கைது செய்தது இந்திய படை. கொடூரமான பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் காஷ்மீருக்கு வெளியே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்திய அதிகாரிகள் 13,000 காஷ்மீர் சிறார்களை ஆகஸ்டு 5 முதல் கைது செய்துள்ளதாக ஐந்து பெண்களைக் கொண்ட உண்மையறியும் குழு தெரிவித்தது.

பட்காம் மாவட்டத்தில் உள்ள கிரெம்ஷோர் கிராமத்தில் ஆப்பிள் தோட்டத்தின் உரிமையாளரான குலாம் மொகினுதீன் மிர், இந்திய வர்த்தகருக்கு ஒரு பெட்டி ஆப்பிளை ரூ. 1000-க்கு விற்பனை செய்ததாகவும், பிரிவு 370 நீக்கத்துக்குப் பின் இந்தத் தொகையாக பாதியாகிவிட்டதாகவும் கூறுகிறார். ‘ஜம்மு காஷ்மீரின் சிறப்பு பிரிவை இந்தியா நீக்கியதிலிருந்து எங்களுடைய தொழில் கடுமையான நட்டத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறது’ என்கிறார் அவர்.

காஷ்மீருக்கு வெளியே அனுப்ப இருந்த ஆப்பிள் பெட்டிகளை அடையாளம் தெரியாத சிலர் அழித்துள்ளனர். இந்திய வணிகர்களுடன் வர்த்தகத்தை துண்டிக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்ட பின், இப்படியான சம்பவங்கள் ஜம்மு காஷ்மீர் முழுவதும் நடந்து வருகின்றன. வெளியூரைச் சேர்ந்த மூன்று டிரக் ஓட்டுநர்களும், ஐந்து தொழிலாளர்கள் தெற்கு காஷ்மீரில் கடந்த மாதம் சுட்டுக்கொல்லப்பட்டனர். 3.5 மில்லியன் மக்கள் சார்ந்துள்ள ஆப்பிள் தொழில் காஷ்மீர் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும்.

காஷ்மீர் பிராந்தியத்தில் வசிப்பவர்களிடையே மனம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்துவருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பதட்டம், அழுத்தம், கவலை உள்ளிட்ட பிரச்சினைகளை இந்திய அரசாங்கம் நிகழ்த்திக்கொண்டிருக்கும் முடக்கம் ஏற்படுத்தி வருவதாக உளவியலாளர்கள் தெரிவிக்கின்றன.

கல்வி பாதிக்கப்பட்ட நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கல்வி நிலையங்களை திறந்து மாணவர்களுக்கு உதவி வருகின்றனர். ‘பல பெற்றோரிடம் அவர்கள் குழந்தைகள் இலவசமாக கல்வி கற்க அனுப்பும்படி என்னுடைய மூன்று நண்பர்களுடன் சேர்ந்து அழைத்து வருகிறேன். தங்களுடைய குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் பெற்றோர் கேட்கின்றனர். இது சவாலானதாகவே உள்ளது’ என்கிறார் சரார் இ சரீஃப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியரான பிலால் அகமது.

ஸ்ரீநகரில் கையெறி குண்டு தாக்கப்பட்டதில் காயமடைந்த இவர், மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்று வருகிறார். சந்தைகளில் மக்கள் நெருக்கம் அதிகரிக்கும்போதெல்லாம் கிரானேடு தாக்குதல் நடத்தப்படுகிறது. ’நான் அத்தியாவசிய பொருட்களை வாங்கச் சென்றபோது ஸ்ரீநகர் மத்திய சந்தையில் கிரானேடு வீசப்பட்டது. நான் அப்படியே விழுந்தேன், எழுந்தபோது மருத்துவமனையில் இருப்பது தெரிந்தது’ என்கிறார் முகமது யூனூஸ். பள்ளத்தாக்கில் சமீபத்தில் நடந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.


கட்டுரை, படங்கள்: முக்தார் சஹூர்
அனிதா
நன்றிஅல்ஜசீரா. 

அரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை : மோட்டார் வாகன சட்டத் திருத்தம் !

வாகன ஓட்டிகளை விரட்டிப் பிடிக்கும் போக்குவரத்துக் காவலர் : சட்டத்தை நடைமுறைப்படுத்தவா, இலஞ்சத்தைக் கறக்கவா ?

மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் : அரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை !

ரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே அடையாள அட்டை, ஒரே வரி என்ற வரிசையில் இந்திய மக்களின் தலையில் இடியாக இறங்கியிருக்கிறது மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம். சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு என்ன தண்டனை கொடுப்பது, எவ்வளவு அபராதம் விதிப்பது என்பதை மாநில அரசுகள் தீர்மானித்து வந்த உரிமையை இச்சட்டத் திருத்தத்தின் மூலம் பறித்து, நாடெங்கும் ஒரேவிதமான அபராதம், தண்டனையைத் தீர்மானிக்கும் உரிமையை மோடி அரசு எடுத்துக்கொண்டு விட்டது.

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் நடக்கும் 5 இலட்சம் சாலை விபத்துக்களில் 1.5 இலட்சம் பேர் இறந்து போகிறார்கள் என்றும், போக்குவரத்து விதிமீறல்களுக்குக் கடுமையான அபராதம், தண்டனை விதிப்பதன் மூலம்தான் இந்த எண்ணிக்கையைக் குறைக்க முடியும் எனக் கூறி மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

வாகன ஓட்டிகளை விரட்டிப் பிடிக்கும் போக்குவரத்துக் காவலர் : சட்டத்தை நடைமுறைப்படுத்தவா, இலஞ்சத்தைக் கறக்கவா ?

இச்சட்டத்திருத்தப்படி குடிபோதையில் வண்டி ஓட்டினால் ரூ.2000 வரை இருந்த அபராதத் தொகை ரூ.10,000-மாகவும், அதிக சுமை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு ரூ.2000 வரை இருந்த அபராதத் தொகை, ரூ 20,000 ரூபாய் வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுருங்கச் சொன்னால், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறும் போது முன்பிருந்த அபராதத் தொகையைவிட இனி பத்து மடங்கு கூடுதலாக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

“குற்றத்திற்கு ஏற்றபடிதான் தண்டனை விதிக்கப்பட வேண்டும்” என்பதுதான் இயற்கை நீதி. ஆனால் “ சிறு குற்றங்களுக்குக் கூடக் கடுமையான தண்டனை தரப்பட வேண்டும்”. அப்பொழுதுதான் குற்றங்கள் குறையும் என்பது பாசிஸ்டுகளின் வாதம். இப்பாசிச சித்தாந்தப்படிதான் அபராதத் தொகை பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவு, தமது வாழ்வாதாரத்திற்காக மோட்டார் வாகனங்களை நம்பியிருப்போரின் வாழ்வையே அழிக்கக்கூடியதாக உள்ளது, இச்சட்டத் திருத்தம்.

ஒடிசா மாநிலம், புவனேஷ்வரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மீது போக்குவரத்து விதிமீறலுக்கு 46,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆட்டோ ஓட்டுநர் தனக்கு அபராதம் விதித்த போலீசுக்காரனை அடித்திருக்கிறார்.

படிக்க :
ராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் !
♦ நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்

அவரது ஆத்திரத்திற்கு நியாயமுண்டு. ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுநரால் இத்தொகையைக் கட்ட முடியுமா? அப்படியே கடன் வாங்கிக் கட்டினாலும், அதிலிருந்து அவர் மீண்டு விடமுடியுமா? அபராதத் தொகையைக் கட்டுவதை விடச் சிறைக்குப் போவதே மேல் என்றுதான் அவர் முடிவெடுப்பார்.

இது போன்று நாடெங்கும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. பொதுமக்கள் இச்சட்டத்திற்கு எதிராகக் குமுறத் தொடங்கிய பிறகு, மாநில அரசுகள் அபராதத் தொகையைக் குறைத்துக் கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது, மைய அரசு. எவ்வளவு அபராதம் விதிப்பது என்ற உரிமையை மைய அரசு வைத்துக் கொள்ளுமாம், சலுகையை மட்டும் மாநில அரசு அறிவிக்க வேண்டுமாம். இதன் பெயர் பெருந்தன்மையா அல்லது பித்தலாட்டமா?

இன்று வேலை கிடைக்காத இளைஞர்கள் பலர், இரு சக்கர வாகனத்தைக் கொண்டு உபேர், ஸோமாடோ ஆகிய நிறுவனங்களில் டெலிவரி பாய்ஸாக வேலை செய்து வருகின்றனர். இன்னும் பலர் ஆட்டோ அல்லது குட்டி யானை உள்ளிட்ட சிறு இரக வாகனங்களைக் கொண்டு தொழில் செய்து வருகின்றனர். இவர்களுள் பலரும் சாலை விதிகளை மதிப்பதில்லை என்பதே உண்மை. சாலை விதிகளை மீறுபவருக்குத் தக்க அபராதம் அல்லது தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், சாலை விபத்துக்களைக் குறைப்பது என்ற பெயரில் கொண்டுவரப்பட்டிருக்கும் இச்சட்டத் திருத்தம் சிறுசிறு வேலைகளையும், தொழில்களையும் தமது சொந்த முதலீட்டைக் கொண்டு  நடத்திவரும் அடித்தட்டு வர்க்கப் பிரிவினரை அடியோடு ஒழித்துக்கட்டி விடக் கூடியதாக இருக்கிறது.

சாலைகளைப் பராமரிக்காத அரசு சட்டத்தை மட்டும் கடுமையாக்குகிறது.

உண்மையில், பெரும்பாலான சாலை விபத்துக்கள் குடிபோதையில் வண்டி ஓட்டுவதாலும், குண்டும் குழியுமான சாலைகளாலும், சரியான மின்விளக்கு வசதிகள் இல்லாததாலும்தான் நடந்து வருகின்றன. 2017-ஆம் ஆண்டு வெளியான புள்ளி விவரப்படி, நாடு முழுக்க நடந்த விபத்துக்களில் 24% விபத்துக்கள் குடிபோதையால் மட்டுமே ஏற்பட்டுள்ளன.

தெருவுக்குத் தெருவும் நெடுஞ்சாலைகளிலும் திறக்கப்பட்டிருக்கும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களின் எண்ணிக்கையைச் சிறிதுகூடக் குறைக்க மறுக்கும் அரசிற்கு, குடிப்பழக்கத்தைத் தொட்டில் பழக்கம் போல ஊட்டி வளர்த்துவரும் அரசிற்கு, குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது தவறு என உபதேசிப்பதற்கோ அதனைக் கட்டுப்படுத்தப் போவதாகக் கூறிக்கொண்டு அபராதத்தை அதிகமாக்குவதற்கோ ஏதேனும் தார்மீக அடிப்படையிருக்கிறதா?

ஒருபுறம் நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் என்ற பெயரில் தனியாரின் பகற்கொள்ளைக்கு ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, மறுபுறம் சாலைகளைப் பராமரிக்க மறுக்கிறார்கள். சாலைகளைக் குண்டும் குழியுமாக வைத்துக்கொண்டே தலைக்காயங்களால் ஏற்படும் மரணங்களைத் தவிர்க்க தலைக்கவசம் அணியச் சொல்லி உபதேசம் செய்கிறார்கள். 500 ரூபாய், 600 ரூபாய் பெறுமானமுள்ள தலைக்கவசங்களை அணியாமல் போனால், அந்த தவறுக்கு ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கிறார்கள்.

படிக்க :
மழையில் கரையும் தார் சாலை ! | பாகலூர் பகுதி மக்கள் போராட்டம்
♦ சாலை விபத்துக்கு காரணம் எடப்பாடி பேனரா – ஹெல்மெட் போடாத வாகன ஓட்டியா ?

ஒருபுறத்தில் அதிவேகமாகச் செல்வதற்கென்றே நான்கு, எட்டு வழிச் சாலைகளை அமைத்துக்கொண்டு, அதிவேகமாகச் செல்லக்கூடிய அதிநவீன கார்களையும், பைக்குகளையும் உற்பத்தி செய்து சாலைகளில் ஓட விட்டுவிட்டு, இன்னொருபுறத்தில் “அதிவேகம் துரித மரணம்” என உபதேசிக்கிறார்கள். அதிவேகத்தைக் கண்காணித்து அபராதம் விதிக்கக் கண்காணிப்பு கேமராக்களை நிறுவி வருகிறார்கள்.

உண்மையில் இச்சட்டத்திருத்தத்தின் நோக்கம் சாலை விபத்துக்களைக் குறைப்பதோ, வாகன ஓட்டுநர்கள் மத்தியில் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோ அல்ல. மாறாக, மக்களைக் கொள்ளையடிப்பதற்கு செய்யப்பட்டிருக்கும் புதுவகை ஏற்பாடுதான் இது.

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 1,45,000 கோடி ரூபாய்க்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கியிருக்கும் மோடி அரசு சாதாரணப் பொதுமக்களிடமிருந்து அபராதத் தொகையாகப் பல்லாயிரம் கோடி ரூபாய்களைச் சட்டபூர்வமாக வழிப்பறி செய்கிறது.

இன்னொருபுறத்தில் இச்சட்டத் திருத்தம் வாகன உதிரி பாகங்கள் விற்பனை, ஓட்டுநர் பயிற்சி மையங்கள், மெக்கானிக் ஷாப்கள் உள்ளிட்ட ஆட்டோமொபைல் தொடர்பான தொழில்களைத் தரப்படுத்துவது என்ற பெயரில் தனியார்மயமாக்கும் சதித்தனங்களையும் கொண்டிருக்கிறது.

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் ஒவ்வொன்றும் 15 ஏக்கர் நிலத்தில் மருத்துவப் பரிசோதனைக் கூடம் மற்றும் பணிமனையுடன் இயக்கப்பட வேண்டுமென வரையறுக்கிறது இச்சட்டம். இதற்குத் தேவையான பெருமளவு முதலீட்டைத் தற்பொழுது பயிற்சிப் பள்ளிகளை நடத்திவரும் சிறு நிறுவனங்களால் செய்ய முடியாது. இச்சட்டத்தின் விளைவாக அத்தகைய சிறு நிறுவனங்கள் தமது கடைகளைக் காலிசெய்வதைத் தவிர வேறு வழி கிடையாது.

வாகன சோதனை என்ற பெயரில் கொல்லப்பட்ட திருச்சியைச் சேர்ந்த உஷா (இடது); மதுரையைச் சேர்ந்த விவேகானந்த குமார்.

நமது நாட்டில் பெரும்பாலான ஆட்டோ மெக்கானிக் ஷாப்கள் அதிகம் படித்திராத, சிறு வயதிலேயே வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்களால்தான் நடத்தப்படுகின்றன. தமது சொந்தக் கைக்காசையோ, கடன் வாங்கியோ மூலதனம் போட்டு நடத்தப்படும் இத்தகைய மெக்கானிக் ஷாப்புகளுக்குத் தகுதிச் சான்று அளிக்கும் உரிமையைத் தனியார் நிறுவனங்களிடம் தாரைவார்க்கத் திட்டமிடுகிறது, மைய அரசு.

மேலும், ஓட்டுநர் உரிமம் அளிப்பது, வாகனங்களுக்கு தகுதிச் சான்று, பெர்மிட் அளிப்பது, வாகனப் பதிவு, வாகனக் காப்பீடு உள்ளிட்ட அனைத்திற்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதோடு, இவையனைத்திலும் மாநில அரசுகள் தலையிட முடியாதவாறு இவற்றை வருங்காலத்தில் தனியாரிடம் ஒப்படைக்கவும் திட்டமிடுகிறது  இச்சட்டம். இதன் விளைவாக இனி ஆர்.டி.ஓ. அலுவலகங்களே தேவையற்றதாகிவிடும். ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருக்கும் இலஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்றுதான் பொதுமக்கள் கோருகிறார்கள். ஆனால், மோடி அரசோ இச்சட்டத் திருத்தத்தின் மூலம் சாலைப்போக்கு வரத்துத் துறையையே அரசிடமிருந்து பறித்துத் தனியார்மயமாக்குகிறது. தனியார்மயமும் கார்ப்பரேட்மயமாக்கமும் வேறுவேறல்ல.

இக்கார்ப்பரேட் மயமாக்கம் பளிச்செனத் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் சாலை விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கிறது, மோடி அரசு. தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள் தொழிலாளர்களின் உரிமையைப் பறித்து வருவதைப் போல, விவசாயச் சீர்திருத்தங்கள் விவசாயத்தை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பதைப் போல, இச்சட்டத் திருத்தம் ஒருபுறம் மக்களைக் கொள்ளையிடுகிறது. மற்றொருபுறம் ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிறுதொழில் முனைவோரை அழிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

பூங்குழலி

– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

ஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன ?

9

“அவள் படிப்பில் முதலிடத்தில் இருந்தாளா அல்லது தீவிரவாதிகள் அமைப்பில் முதலிடத்தில் இருந்தாளா? NIA விசாரிக்கட்டும். உண்மை வெளிவரும்” – டிவிட்டர் முட்டுச் சந்தில் முகமறியாத தேசபக்தர் ஒருவர்.

ஐயர் ஐயங்கார் டெக்னாலஜி என்று பரவலாக அறியப்படும் சென்னை ஐ.ஐ.டியில் படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீஃப் அவளது பேராசிரியர்கள் துன்புறுத்தியதை அடுத்து மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாள். அதையடுத்து சமூக வலைத்தளங்களில் #justiceforfathimalatheef என்கிற ஹேஷ்டேக் வைரலாக பரவி வருகின்றது. மேற்படி ஹேஷ்டேக் ஒன்றில் பதிவிடப்பட்ட டிவிட்டர் பதிவுக்கு வந்த மறுமொழி தான் மேலே உள்ளது.

பாத்திமா லத்தீப்.

இந்த சுற்றில் வாயைத் திறந்தால் அம்பலமாகி விடுவோம் என்பதால் பார்ப்பன பாரதிய ஜனதா லாபியும் நாம் தமிழர் தம்பிமார்களும் கொஞ்சம் அமுக்கி வாசிப்பதால் இதைப் போன்ற பதிவுகள் வெகு சொற்பமாகவே கண்ணில் படுகின்றன. மற்றபடி ஃபாத்திமாவுக்கு நீதி வேண்டி பொதுவானவர்கள் பல்லாயிரக்கணக்கில் பதிவிட்டு வருகின்றனர். ஃபாத்திமா தனது தற்கொலைக்கு காரணமாக பேராசிரியர் சுதர்ஷன் பத்மனாபனை குறிப்பிட்டிருக்கிறாள்.

சமூக வலைத்தளங்களில் ஃபாத்திமாவின் படுகொலைக்கு நீதி வேண்டி பதிவிடுகின்றவர்கள் பார்ப்பன பேராசிரியர் சுதர்ஷன் பத்மனாபனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்கின்றனர். அறப்போர் இயக்கத்தோடும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தோடும் நெருங்கிய  தொடர்பை பராமரித்து வந்துள்ள பத்மநாபன், இந்த இயக்கங்களுக்கு ஆதரவாக பல கூட்டங்களை நடத்திய விவரங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருகின்றன.

சமூக வலைத்தளங்களில் (குறிப்பாகடிவிட்டரில்) ஃபாத்திமாவின் படுகொலைக்கு நீதி வேண்டி வெளியாகி உள்ள பதிவுகளின் ஒரு சிறிய தொகுப்பை இந்தப் பதிவின் பின்பகுதியில்  தொகுத்துள்ளோம்.

♦ ♦ ♦

தற்கு முன்  ஃபாத்திமாவின் தாயார் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் இருந்து சில பகுதிகள் இங்கே.

பாத்திமா லத்தீபின் தாயார்.

”எங்களுக்கு பெண் பிள்ளையை கல்விக்கூடத்திற்கு வெளியூருக்கு அனுப்புவதற்கு பயமாக இருந்தது. நாட்டில் நிலவிவரும் மதவெறுப்பின் காரணமாக எனது மகளை முக்காடு(சால்)அணிவதற்கு கூட வேண்டாமென மறுத்துவிட்டோம். எங்கே முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என நாங்கள் அஞ்சினோம். நாங்கள் என்ன செய்ய பெயர் ஃபாத்திமா லத்தீஃப் ஆகிவிட்டதே. எல்லா பிள்ளைகளைப் போல சாதாரணமாக உடை அணிந்துகொள் என்று வலியுறுத்தினோம். ஏனெனில் நாட்டில் நிலவும் சூழல் அப்படிப்பட்டது.

முதலில் அவளுக்கு பனாரஸில் மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்தது. ஆனால் வட மாநிலங்களில் நிலவும் கும்பல் படுகொலையை நினைத்து நாங்கள் அஞ்சினோம். வேண்டாம் மகளே என நான் மறுத்தேன். அம்மா நான் விமானத்தில் அல்லவா போகப் போகிறேன் ஏன் கவலை என்றாள். வேண்டாம் மகளே.., விமானத்தில் போனாலும் சாலையிலும் நாம் நடக்க வேண்டியிருக்கும். சாலைகளில் சர்வசாதாரணமாக கும்பல் படுகொலை நடக்கும் தேசமிது வேண்டாம் மகளே என நான் பலவந்தமாக மறுத்தேன். அதன்பின் தான் மெட்ராஸ் ஐஐடி யில் படிக்க அனுப்பினோம்.

ஐஐடி யில் என் மகளுக்கு தொல்லைகள் தரப்பட்டிருக்கிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இன்டெர்னல் மதிப்பெண்ணை குறித்து பேராசிரியரிடத்தில் எனது மகள் விவாதம் செய்தது அவருக்கு பிடிக்கவில்லை. பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனின் தொல்லைகள் தாங்காமல் தான் அவள் இறந்துபோயிருக்கிறாள். அவளுக்கு முஸ்லிம் நண்பர்களும் ஐஐடி யில் குறைவானவர்களே. இந்தியாவின் சூழல் மாறிவருகிற காரணத்தினால் தமிழ்நாடு எனில் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பித்தான் நாங்கள் ஐஐடி மெட்ராஸில் படிக்க அனுப்பினோம்.

சுடிதார் பேண்டின் கயிறினை கட்டத்தெரியாத பெண் எனது மகள். காரணம் அது அவளை இறுக்கி வலியை உண்டாக்கும் எனச்சொல்வாள். 18வயதான பின்னும் அவளுக்கு அதனை இறுக்கமாக கட்டத்தெரியாத காரணத்தால் அவளுக்கு லெங்கின்சும், ஜீன்சும் வாங்கி கொடுத்தோம். அவள் தூக்குக் கயிறை நெரிப்பதை எப்படி எதிர்கொண்டாள் என்று தெரியவில்லையே..? அவளா இப்படி செய்து கொண்டாள்..?”

♦ ♦ ♦

”தமிழ்நாடு எனில் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பித்தான் நாங்கள் ஐஐடி மெட்ராஸில் படிக்க அனுப்பினோம்.” அந்த அப்பாவித் தாயின் நம்பிக்கையை காப்பாற்றத் தவறியிருக்கிறோம் நாம். உண்மையில் தமிழர்கள் என்று பெருமிதப்பட்டுக் கொள்வோரெல்லாம் சோற்றில் உப்பு போட்டு தின்பது உண்மை என்றால், சூடு சொரணை இருப்பது உண்மை என்றால் ஃபாத்திமாவைக் கொன்றவர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க தெருவில் இறங்கிப் போராட வேண்டும்.

தமிழ்நாடு என்பது எங்கள் அந்தப்புரம் தான் என்று கொக்கரிக்கின்றனர் சாதி வெறியர்களும் சனாதனப் பார்ப்பனர்களும், இந்துத்துவ பாசிஸ்டுகளும். தங்கை அனிதா முதல் ஃபாத்திமா வரை சனாதனம் பறித்த உயிர்களே இதற்கு சாட்சி.   நமது முகத்தில் செருப்பை சாணியில் முக்கி அடிகின்றனர் பார்ப்பனியவாதிகள், உறைக்கவில்லையா சக தமிழர்களே?  சாதி மதவாதிகள் எங்கள் மாநிலத்தில் ஆட்டம் போட முடியாது என்று நாமெல்லாம் அடித்துக் கொண்டிருந்த சவடாலை உண்மையென்று நம்பி ஒரு தாய் தன் மகளை அனுப்பி இன்று பறிகொடுத்து விட்டு நிற்கிறாள் – என்ன பதில் சொல்லப் போகிறோம்?

அனிதாவை பறிகொடுத்தோம். நமது அற உணர்ச்சிக்கு ஏற்பட்ட பங்கத்திற்கு டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் பதிவிட்டு களிம்பு தடவிக் கொண்டோம். இந்துத்துவ கூடாரத்தினர் களத்தில் நிற்கிறார்கள் – அன்றும் இன்றும். நாம் மெய் நிகர் உலகம் தரும் பாதுகாப்பில் சுகம் கண்டு தேங்கி நிற்கிறோம். நமது கையாலாகாத்தனத்திற்கு இன்று மற்றுமொரு உயிர் பறிபோய் உள்ளது. இனியும் நீதி கேட்கும் நமது குரல்கள் இணைய வெளிகளில் மட்டும் நின்று விடும் என்றால் நம்மை விட கோழைகள் தொடைநடுங்கிகள் இந்த உலகத்தில் இருக்க முடியாது.

படிக்க:
ஐஐடி மாணவர்களின் தற்கொலைகள்! தனியார்மயத்தின் கோரமுகம்!!
ரோஹித் வெமுலா முதல் நஜீப் வரை : தீவிரமடையும் பார்ப்பன பாசிசம்

நீதிக்கான குரல்களை நாம் தெருவில் இறங்கி எழுப்புவோம் தமிழர்களே. அந்தப் பெண் நம்மை நம்பித்தான் வந்தாள். அவளின் கொலைக்கு நீதி வாங்க வேண்டியது நமது கடமைதான்.

♦ ♦ ♦

மூக வலைத்தளங்களில் வெளியான பதிவுகளில் சில :

வேணி :
”என்னுடைய பெயரே இங்கு பிரச்சினையாக இருக்கிறது அப்பா” என்று தனது தந்தையிடம் கூறியிருக்கிறார் ஃபாத்திமா. அனைத்திந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ஐ.ஐ.டி ஆசிரியர்களின் சாதிய மற்று இசுலாமிய வெறுப்புரீதியான துன்புறுத்தல்களாக் தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

மேலும் வாசிக்க #JusticeForFathimaLatheef என்கிற ஹேஷ்டேக்கிற்கு செல்லவும்.

சாக்கியன்

ரிஹ்த்கோபென் ஒரு பயங்கர விலங்கு ! நீ வாய் திறக்கும் முன் உன்னை நொறுக்கியிருக்கும் !

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 05

பொலபொலவென்று விடிவதற்கு முன்னே விமானிகள் எழுப்பப்பட்டார்கள். சோவியத் டாங்கிகள் பிளந்து உட்புகுந்த இடத்திற்கு அருகே பெரிய ஜெர்மன் விமான அணி ஒன்று முந்திய நாள் இறங்கியது என்று தகவல் வேவு வீரர்களிடமிருந்து சேனைத் தலைமை அலுவலகத்துக்கு கிடைத்திருந்தது. கூர்ஸ்க் பிரதேசத்தில் சோவியத் டாங்கிகள் பிளந்து உட்புகுந்து விட்டதனால் எதிர்ப்பட்டுள்ள அபாயத்தைப் பெரிதென மதித்து ஜெர்மன் படைத் தலைமையினர் ஜெர்மனியின் சிறந்த விமானிகளால் செலுத்தப்பட்ட “ரிஹ்த்கோபென்” விமான டிவிஷனை இங்கே தருவித்திருப்பதாக முடிவு செய்யத் தரை அவதானிக்கை விவரங்கள் இடமளித்தன. உளவு வீரர்களின் தகவல்கள் இவற்றை உறுதிப்படுத்தின. இந்த டிவிஷன் கடைசி முறையாக ஸ்தாலின்கிராதுக்கு அருகே தகர்த்து நொறுக்கப்பட்டிருந்தது. பின்பு ஜெர்மன் பின்புலத்தின் உள்ளே எங்கோ வெகு தொலைவில் மறுபடி அமைக்கப்பட்டது. இந்தப் பகை டிவிஷன் தொகையில் பெரியது, புத்தம் புதிய “போக்கே-வுல்ப்-190” ரக விமானங்களைக் கொண்டது, மிகவும் அனுபவம் உள்ளது என்று அலெக்ஸேயின் ரெஜிமென்ட் எச்சரிக்கப்பட்டது. விழிப்புடன் இருக்கும் படியும் பிளந்து உட்புகுந்த டாங்கிகளைத் தொடர்ந்து முன் செல்லத் தொடங்கியிருந்த மோட்டார்ப் படைப் பிரிவுகளுக்குத் திண்ணமான காப்பு அளிக்கும் படியும் உத்தரவிடப்பட்டிருந்தது.

“ரிஹ்த்கோபென்!” ஜெர்மன் கோயெரிங்கின் தனிப்பட்ட அரவணைப்பில் இருந்த இந்த டிவிஷனின் பெயரை அனுபவம் உள்ள விமானிகள் நன்றாக அறிந்திருந்தார்கள். நெருக்கடியான நிலைமை எதிர்பட்ட எல்லா இடங்களிலும் ஜெர்மானியர் இந்த டிவிஷனை அனுப்பி வந்தார்கள். இந்த டிவிஷன் விமானிகளில் சிலர் ஸ்பானியக் குடியரசுக்கு மேல் கொள்ளைத் தாக்கு நடத்தியவர்கள். டிவிஷன் விமானிகள் அனைவருமே திறமையுடன், உக்கிரமாகப் போரிட்டார்கள், மிகமிக அபாயகரமான பகைவர்கள் எனப் புகழ்பெற்றிருந்தார்கள்.

“ஏதோ ‘ரிஹ்த்கோபென்’ விமானங்கள் நம்முடன் சண்டைபோட வந்திருக்கின்றனவாமே. அவற்றை எதிர்பட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்! ஆகா, இந்த ‘ரிஹ்த்கோபென்’களுக்குச் சரியான சூடு கொடுத்தோமானால் அற்புதமாயிருக்குமே!” என்றுச் சாப்பாட்டு அறையில் பொரிந்து கொட்டினான் பெத்ரோவ். மெரேஸ்யெவுக்கோ, செயல் பற்றிய சர்ச்சையில் கேலிகளும் வெட்டிப் பேச்சுக்களும் பிடிக்கவில்லை. அவன் சொன்னான்:

” ’ரிஹ்த்கோபென்’ என்றால் ஏதோ சாமானியமாக எண்ணாதே. ‘ரிஹ்த்கோபென்’ எதிர்ப்படும் போது, களைச் செடிகளுக்கிடையே எரிந்து சாம்பலாக நீ விரும்பாவிட்டால், உன்னிப்பாக விழிப்புடன் இரு. காதுகளை கூராக வைத்துக் கொள், தொடர்பை இழந்துவிடாதே. ‘ரிஹ்த்கோபென்’ இருக்கிறதே, தம்பி, இது பயங்கர விலங்கு. நீ வாயைத் திறப்பதற்குள் அதன் பற்களுக்கிடையே நொறுங்கிக் கொண்டிருப்பாய், தெரிந்ததா…… ”

பொழுது புலர்ந்ததுமே முதல் ஸ்குவாட்ரன் புறப்பட்டு விட்டது. கர்னல் தாமே இதற்குத் தலைமை வகித்தார். அது போரிட்டுக் கொண்டிருக்கையிலேயே பன்னிரு விமானங்கள் கொண்ட இரண்டாவது அணி பறக்கத் தயாராக நின்றது. அதற்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்லவிருந்தார் சோவியத் யூனியனின் வீரர் என்ற பட்டம் பெற்ற மேஜர் பெதோத்தவ். ரெஜிமெண்டிலேயே கமாண்டருக்கு அடுத்தபடி யாவரிலும் தேர்ந்த அனுபவமுள்ள விமானி இவர். விமானங்கள் ஆயத்தமாக இருந்தன, விமானிகள் அறைகளில் அமர்ந்திருந்தார்கள். எஞ்சின்கள் குறைந்த வேகத்துடன் முடுக்கிவிடப்பட்டிருந்தன. இதனால் காட்டுத் திறப்பு வெளியில் குப்குப்பென்று காற்று வீசத் தொடங்கியது. இடிப் புயலுக்கு முன், தாகமுற்ற தரை மீது, பெரிய, கனத்த முதல் மழைத் துளிகள் சடசடக்கையில், தரையைப் பெருக்கி, மரங்கள் அலைத்தாட்டும் இளங்காற்றை ஒத்திருந்தது அது.

முதல் அணியைச் சேர்ந்த விமானங்கள் வானத்தில் வழுகுவது போன்று நேர்குத்ததாக கீழே இறங்குவதைத் தன் விமானி அறையில் உட்கார்ந்து கவனித்தான் அலெக்ஸேய். தன் வசமின்றியே விமானங்களை எண்ணினான். தரையில் இறங்கிய இரண்டு விமானங்களுக்கு நடுவே இடைவெளி இருப்பதைக் கண்டதும் அவனுக்கு பதைப்பு உண்டாயிற்று. இதோ கடைசி விமானம் தரை சேர்ந்துவிட்டது. அப்பாடா! அலெக்ஸேயின் நெஞ்சச் சுமை இறங்கியது போலிருந்தது.

கடைசி விமானம் ஒரு பக்கம் ஒதுங்கியதும் ஒதுங்காததுமாக மேஜர் பெதோத்தவின் விமானம் மேலே கிளம்பியது. சண்டை விமானங்கள் இணை இணையாக வானில் பறந்தன. இதோ அவை காட்டுக்கு அப்பால் அணி வகுத்துக் கொண்டன. இறக்கைகளை அசைத்துவிட்டு, பெதோத்தவ் தனது விமானத்தை நேரே செலுத்தலானார். நேற்று பிளந்து ஊடுருவப்பட்ட இடத்தை ஒட்டியவாறு ஜாக்கிரதையாகத் தாழப் பறந்தன விமானங்கள். மிக உயரத்திலிருந்து தூரக்காட்சியாகக் காண்கையில் எல்லாம் பொம்மைகள் போன்று தோற்றம் அளிக்கும். இப்போதோ, அவ்வாறின்றி, அலெக்ஸேயின் விமானத்துக்கு அடியே தரை அருகே பாய்ந்து சென்றது. முந்தின நாள் அவனுக்கு மேலிருந்து பார்ப்பதற்கு ஏதோ விளையாட்டு போலக் காணப்பட்டது இன்று பிரம்மாண்டமான, எல்லை காண இயலாத போர்க்களமாக அவன் முன்னே விரிந்தது.

பீரங்கிக் குண்டுகளாலும் வெடி குண்டுகளாலும் குழிபறிக்கப்பட்டிருந்த வயல்களும் புல்தரைகளும் சோலைகளும் விமான இறக்கைகளுக்கு அடியே தலை தெளிக்கும் வேகத்துடன் விரைந்தன. போர்க்களத்தில் இறைந்து கிடந்த பிணங்களும் படையினரால் விட்டுவிடப்பட்டுத் தனியாக நின்ற பீரங்கிகளும் முழு முழு பீரங்கிப் படைப்பிரிவுகளும் தோன்றித்தோன்றி மறைந்தன. அடிபட்ட டாங்கிகளும் உடைந்து தகர்ந்த இரும்புச் சட்டங்கள், கட்டைகளின் நீண்ட குவியல்களும் தென்பட்டன. பீரங்கிக் குண்டு மாரியால் அறவே மொட்டையாக்கப்பட்ட பெருங்காடு கீழே பெருகியோடிற்று. மேலிருந்து பார்க்கையில் அது பிரம்மாண்டமான குதிரை மந்தையால் மிதித்துத் துவைக்கப்பட்ட வயல்போலக் காட்சி அளித்தது. இவை எல்லாம் திரைப்பட பிலிம் போன்ற விரைவுடன் பாய்ந்தோடியது. இந்த பிலிமுக்கு முடிவே கிடையாது எனத் தோன்றியது. இங்கு எவ்வளவு பிடிவாதமான, இரத்தப் போக்குள்ள போர் நிகழ்ந்தது, எவ்வளவு பெருத்த இழப்புகள் ஏற்பட்டன, இங்கே அடையப்பட்ட வெற்றி – எவ்வளவு மகத்தானது என்பவற்றை இவை பறை சாற்றின.

விசாலமான திடல் முழுவதிலும் குறுக்கும் நெடுக்குமாக இரட்டைத் தடங்கள் பதிந்திருந்தன டாங்கிகளின் சங்கிலிப் பட்டைகள். அவை மேலும் மேலும் முன்னே, ஜெர்மன் அணியிடங்களுக்கு உள்ளே இட்டுச் சென்றன. இந்தத் தடங்கள் ஏராளமாக இருந்தன. நாற்புறமும் தொடுவானம் வரை இந்தத் தடங்களைக் காண முடிந்தது. இன்னவை என்று தெரியாத விலங்குகளின் பிரம்மாண்டமான கூட்டம் வழி தெரியாமல் வயல்களின் ஊடாகத் தெற்கு நோக்கிப் பாய்ந்தோடியது போலத் தோன்றியது. முன் சென்றுவிட்ட டாங்கிகளைத் தொடர்ந்து சென்றன மோட்டார் பீரங்கிகளும், பெட்ரோல் லாரிகளும் டிராக்டர்களால் இழுக்கப்பட்ட பிரம்மாண்டமான செப்பனிடும் தொழிற் கூட வண்டிகளும் கித்தானால் மூடப்பட்ட சரக்கு லாரிகளும். மேலிருந்து பார்க்கும் போது அவை மெதுவாகப் போவது போல் தெரிந்தது இளநீலப் புழுதிப்படலம். சண்டை விமானங்கள் உயரே எழும்பிய பிறகோ இவை எல்லாம் வசந்த கால எறும்புப் பாதைகளில் சாரிசாரியாக எறும்புகள் ஊர்வது போன்று தோற்றம் அளித்தன.

காற்று வீசாமல் அசைவற்றிருந்த வானில் வெகு உயரே எழுந்த புழுதி வால்களுக்குள் மேகங்களில் போல மூழ்கியவாறு சண்டை விமானங்கள் படை வரிசைகளுக்கு மேலாகப் பறந்து முன்வரிசை ஜீப்புகள் வரை சென்றன. டாங்கிப் படைத் தலைமை அதிகாரிகள் அந்த ஜீப்புகளில் இருந்தார்கள் போலும் டாங்கிப் படை வரிசைகளுக்கு உயரே வானம் தூய்மையாக இருந்தது. ஆனால் தொலைதூரத் தொடுவானத்தின் மங்கிய விளிம்பின் அருகே சண்டை நடப்பதற்கு அறிகுறியாக ஒழுங்கற்ற புகைப்படலங்கள் தென்பட்டன. விமான அணி திரும்பிப் பாம்பு போல வானில் நெளிந்து போய்விட்டது. அதே சமயத்தில் தொடுவானக் கோட்டின் அருகே தரையை ஒட்டினாற் போலத் தொங்கிய ஒரு வரையுருவை முதலிலும் பின்பு வரையுருக்களின் முழுத் திரளையும் அலெக்ஸேய் கண்ணுற்றான். ஜெர்மன் விமானங்கள்! அவையும் தரையை அடுத்தாற் போல் பறந்தன. களைகள் மண்டிய செம்மைபடர்ந்த வயல்களுக்கு உயரே வெகு தூரம் தென்பட்ட புழுதி வால்களையே நோக்கி அவை முன்னேறின. அலெக்ஸேய் இயல்பூக்கத்தால் தூண்டப்பட்டுத் திரும்பிப் பார்த்தான். அவனுடைய பின்னோடி மிகக் குறுகிய இடைவெளிவிட்டு அவனைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்.

படிக்க:
மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக !
காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு எதிராக பதவி விலகிய ஐ.ஏ.எஸ். கண்ணன் கோபிநாத் மீது குற்றப்பத்திரிகை !

அலெக்ஸேய் உற்றுக் கேட்டான். எங்கோ தொலைவிலிருந்து ஒலித்தது குரல்:

“நான் – கடற்பறவை இரண்டு, பெதோத்தவ்; நான் கடற் பறவை இரண்டு, பெதோத்தவ். கவனியுங்கள்! என் பின்னே வாருங்கள்!”

வானத்தில் ஒழுங்குக் கட்டுப்பாடு மிகக் கடுமையானது. விமானியின் நரம்புகள் தாங்கும் எல்லைவரை இறுக்கம் அடைந்திருக்கும். எனவே, சில வேளைகளில் கமாண்டர் உத்தரவின் கடைசிச் சொல்லை உச்சரிப்பதற்கு முன்பே கூட விமானி அவருடைய விருப்பத்தை நிறைவேற்றி விடுகிறான். கண கணப்புக்கும் சீழ்கைக்கும் இடையே எங்கோ தொலைவில் ஒலித்தன புதிய கட்டளையின் சொற்கள். அதற்குள் அணி முழுவதும் இணை இணையாக, அதே சமயம் நெருக்கமான வரிசையை விடாமல், ஜெர்மானிய விமானங்களை குறுக்கிட்டுத் தாக்கத் திரும்பியது. பார்வையும் செவிப்புலனும் சிந்தனையும் எல்லாம் முடிந்தவரை கூராகி விட்டன. கண்களுக்கு எதிரே விரைவாகப் பெரியவையாகிய வேற்று விமானங்கள் தவிர எதையும் அலெக்ஸேய் காணவில்லை. தலைகாப்பின் காதுக் குழாயில் வந்த கணகணப்பையும் கிறீச்சொலிகளையும் தவிர எதையும் அவன் கேட்கவில்லை. இந்தக் குழாய் வழியே உத்தரவு இதோ ஒலிக்க வேண்டும். ஆனால் உத்தரவுக்குப் பதிலாக ஜெர்மன் மொழியில் கிளர்ச்சியுடன் ஒலித்த குரல் அவனுக்கு மிகத் தெளிவாகக் கேட்டது.

“பகை விமானங்கள்! பகை விமானங்கள்! ‘லா-5.’ பகை விமானங்கள்!” என்று கத்தினான் ஒருவன். அவன் ஜெர்மானியத் தரைக் குறி வைப்போனாக இருக்க வேண்டும். ஆபத்து பற்றித் தனது விமானங்களை அவன் இவ்வாறு எச்சரித்தான்.

புகழ் பெற்ற ஜெர்மன் விமான டிவிஷன் “ரிஹத்கோபென்” தனது வழக்கப்படி போர்க்களத்தில் குறிவைப்போரையும் தரை அவதானிக்கையாளர்களையும் வலைப்பின்னல் போல விரிவாக நியமித்திருந்தது. விமானச் சண்டைகள் நடக்கக்கூடிய இடங்களில் இவர்கள் வானொலிபரப்பு கருவிகளுடன் இரவில் போதிய நேரம் முன்பே பாராஷூட்டுக்களின் உதவியால் இறக்கப் பட்டிருந்தார்கள்.

கரகரப்பும் எரிச்சலும் கொண்ட இன்னொரு குரல் முன்னதை விடக் குறைந்த தெளிவுடன் ஜெர்மன் மொழியில் சொல்லிற்று:

“இடப்பக்கத்தில் ‘லா-5’! இடப்பக்கத்தில் ‘லா-5’! ” இந்தக் குரலில் கோபத்துடன் கூடவே நன்கு மறைக்கப்படாத கலவரமும் ஒலித்தது.

அலெக்ஸேய் மெரேஸ்யெவ் பகை விமானங்களைக் கூர்ந்து பார்த்தான். இவை “போக்கே-வூல்ப்-190″ ரகத் திடீர்த் தாக்குச் சண்டை விமானங்கள். விறலும் லாவகமும் உள்ளவை. அண்மையில் தான் இவை போர்ப்படைகளில் முழங்கத் தொடங்கியிருந்தன. சோவியத் விமானிகள் இவற்றுக்குப் “போக்கு”கள் என்று பெயரிட்டிருந்தார்கள்.

எண்ணிக்கையில் அவை அலெக்ஸேயின் அணியைப் போல் இரு மடங்காக இருந்தன. “ரிஹ்த்கோபென்” டிவிஷனின் அணிகளுக்குரிய தனிச்சிறப்பான, கண்டிப்பான வரிசையில் அவை பறந்தன. பின் தொடரும் ஒவ்வொரு விமானமும் முன்னுள்ளதன் வாலைக் காக்கும் படியான அமைப்பில் படிவரிசை அணியாக இணை இணையாய்ச் சென்றன அவை. உயரத்தில் தமக்கு இருந்த மேம்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டு பெதோத்தவ் தமது அணியைத் தாக்கில் ஈடுபடுத்தினார்.

அலெக்ஸேய் தனக்கென்று ஒரு பகை விமானத்தை மனதுக்குள் குறித்துக் கொண்டான். மற்ற விமானங்களைப் பார்வையிலிருந்து தப்ப விடாமல், அந்தப் பகை விமானத்தை இலக்குக் காட்டியின் மையத்துக்குக் கொண்டுவர முயன்றவாறு அதன் மேல் பாய்ந்தான். ஆனால் வேறொரு குழு பெதோத்தவை முந்திக் கொண்டுவிட்டது. “யாக்” விமானங்களைக் கொண்ட அந்தக் குழு வேறு புறமிருந்து வந்து ஜெர்மன் விமானங்களை மேலிருந்து இடைவிடாது தாக்கிற்று. ஜெர்மன் வரிசையைத் தகர்த்து சிதற அடிக்கும் அளவுக்கு வெற்றிகரமாக இருந்தது அந்தத் தாக்கு. வானில் ஒரே அமளி குமளி ஏற்பட்டது. இரு அணிகளும் தனித்தனியே சண்டையிடும் இணைகளாகவும் நால் விமானக் குழுக்களாகவும் பிரிந்தன. பீரங்கிக் குண்டுகளைப் பொழிந்து பகை விமானங்களை இடை மறிக்கவும் வாலில் தாக்கவும் விலாப்புறம் சுட்டுவீழ்த்தவும் முயன்றன சோவியத் சண்டை விமானங்கள்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

எடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை !

0

சுமார் 23 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தையே உலுக்கிய மேலவளவு முருகேசன் உள்ளிட்ட ஏழு பேரின் படுகொலையின் குற்றவாளிகளை “நன்னடத்தை” விதிகளின் படி விடுவித்துள்ளது தமிழக அரசு. மேலவளவு முருகேசன் படுகொலை என்பது ஒட்டு மொத்த தமிழகத்தின் முகத்தின் மீதும் சாதி வெறியர்கள் காறி உமிழ்ந்த நிகழ்வு. இந்திய வரலாற்றிலேயே குறிப்பிட்டு சொல்லத்தக்க சாதிய வன்கொடுமைப் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு கொடூரமான குற்றத்தை இழைத்தவர்களைத்தான் விடுதலை செய்துள்ளது தமிழக அரசு.

இணைய தலைமுறையினருக்கு மேலவளவு முருகேசனைத் தெரிந்திருக்காது – பழைய வரலாற்றை சுருக்கமாகவாவது அறிந்து கொண்டால்தான் இந்த விடுதலையின் பின் இருக்கும் தடித்தனத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

மேலவளவு : ஆதிக்க சாதி வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்டோர்கள். (கோப்புப் படம்)

1996-ம் ஆண்டு மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேலவளவு கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, தலித் மக்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதுவரை சூத்திரசாதி கள்ளர்களே ஊராட்சி மன்றத் தலைவர் பதவியில் இருந்து வந்த நிலையில், புதிதாக தலித் ஒருவரை தலைவராக ஏற்றுக் கொள்ள மறுத்தனர் சூத்திரசாதி வெறியர்கள். இதையடுத்து வட்டாட்சியர் தலைமையில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இறுதியில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டதை ஏற்றுக் கொள்வதாக சாதி வெறியர்கள் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டதை அடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அதிகாரத்தின் முன் மண்டியிட்ட சாதிவெறியர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தலித்துகளை மிரட்டியதை அடுத்து தலித்துகள் தரப்பில் இருந்து யாரும் மனுத் தாக்கல் செய்ய முன்வரவில்லை. மீண்டும் பேச்சுவார்த்தை, மீண்டும் தேர்தலுக்கான மாற்றுத் தேதி அறிவிப்பு என்கிற நாடகங்களின் ஊடே முருகேசன் உள்ளிட்ட 8 பேர் போட்டியிட முன்வந்தனர்.  தேர்தல் அன்று கலவரம்  செய்த சாதிவெறியர்கள்  வாக்குப் பெட்டிகளை களவாடிச் சென்றனர். இதனால், தேர்தல் தடைபெற்றது.

அதன் பின் மீண்டும் சில மாதங்கள் கழித்து கடுமையான போலீசு காவலோடு நடந்த தேர்தலில் முருகேசன் வென்றார். எனினும், ஊராட்சி மன்ற அலுவலகம் கள்ளர்கள் வசிக்கும் பகுதியில் இருந்ததால் அவரால் அங்கே செல்ல முடியாத நிலை தொடர்ந்து நீடித்தது.  ஒருபக்கம் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே தனது பணிகளை முருகேசன் மேற்கொண்டு வந்த நிலையில் சாதி வெறியர்கள் தலித் மக்களின் மேல் தொடர்ந்து வன்கொடுமைகளை கட்டவிழ்த்து வந்தனர்.

மேலவளவு முருகேசன்.

ஒரு சந்தர்பத்தில் மூன்று தலித் குடிசைகள் தீயிடப்பட்டன; இதற்கு நிவாரணம் பெற, முருகேசன் பாதிக்கப்பட்டவர்களை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். இவர்களை பின் தொடர்ந்து சென்ற சாதி வெறியர்கள், அவர்கள் திரும்பும் பேருந்தைக் குறித்து ஊரில் தகவல் சொல்லி சென்னகரம்பட்டி ராமர் என்பவர் தலைமையில் ஆட்களை திரட்டி தயாராக இருந்தனர். பேருந்து  அக்ரகாரம் பழைய கள்ளுக்கடை மேடு அருகே வந்த  போது  துரைப்பாண்டி என்பவர், ஓட்டுநரை மிரட்டி வண்டியை நிறுத்தினார். அதே நேரம், ராமர் தலைமையில் சுமார் 30 பேர் கொண்ட கும்பல் வண்டியை ஆயுதங்களுடன் சூழ்ந்து கொண்டது.

பேருந்தில் வந்த முருகேசன், ராஜா, செல்லத்துரை, சேவகமூர்த்தி, மூக்கன் (ஊராட்சி மன்ற துணைத் தலைவர்), பூபதி, சௌந்திரராஜன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். முருகேசன் தலையை உடம்பிலிருந்து தனியாக வெட்டி எடுத்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிணற்றில் போட்டனர். கொல்லப்பட்டவர்களில் முருகேசன் மற்றும் ராஜா இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள்.

♦ ♦ ♦

25.09.97 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு 85 நாட்கள் கழித்து 25.09.97 அன்று 41 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஜெயராமன், பாம்பு கடித்து இறந்து விட்டார். எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்களது பட்டியலில் 40 பேர் காட்டப்பட்டனர். அடுத்த ஆறே மாதத்தில் குற்றவாளிகளில் பெரும்பாலானோர் ஜாமீன் பெற்று ஊருக்கே திரும்பினர். அதன் பின் தலித்துகள் அச்சத்துடன் காலம் தள்ளி வந்தனர்.

நீண்ட விசாரணைகளுக்குப் பின் 26.07.2001 அன்று விசாரணை நீதிமன்றம் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. 23 பேர் விடுதலை செய்யப்பட்டனர். தீர்ப்பில் குற்றத்தை நிறைவேற்ற சதி செய்தது நிரூபிக்கப்படவில்லை என சொல்லப்பட்டு இருந்தது. அதே போல் வன்கொடுமை தடுப்பு சட்டம் (1989) இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனவும் தீர்ப்பளிக்கப்பட்டிருந்ததோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் வழங்கப்படவில்லை.

படிக்க:
தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது சீர்த்திருத்தமா? புரட்சியா?
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் ! 

ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்ட 17 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதே போல் தலித் மக்கள் தரப்பில் 23 பேர் விடுவிக்கப்பட்டதை சீராய்வு செய்யுமாறு உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. எனினும், தமிழக அரசு வழக்கை மேல் முறையீடு செய்யாமல் விலகிக் கொண்டது. மேல் முறையீடுகளின் மீதான விசாரணைகள் நடந்து வந்த நிலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பிணையில் வெளி வந்தனர்.

தொடர்ந்து நடந்த விசாரணைகளை அடுத்து 17 பேரின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், ஏற்கனவே விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. மேலும், மற்ற 23 பேரின் விடுதலையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யாதது துரதிர்ஷ்டவசமானது என்றும், அதனால் இவர்களின் விடுதலை உறுதி செய்யப்படுவதாகவும் 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், 2008-ம் ஆண்டில் அண்ணா பிறந்தநாளில் குற்றவாளிகளில் மூன்று பேர் நன்னடத்தைக் காரணமாக முன்விடுதலை செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு (2018) டிசம்பர் மாதமே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 14 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மேலூர் தொகுதி எம்.எல்.ஏ.-வான பெரியபுள்ளான் சட்டமன்றத்தில் பேசியிருந்தார். அப்போதே இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன.

இந்நிலையில் கடந்த 9-ம் தேதி குற்றவாளிகளில் 13 பேரை ”நன்னடத்தை” விதிகளின்படி விடுவித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. அதன்படி,  சின்ன ஓடுங்கன், செல்வம், மனோகரன், மணிகண்டன், அழகு, சொக்கநாதன், சேகர், பொன்னையா, ராஜேந்திரன், ரெங்கநாதன், ராமர், சர்க்கரை மூர்த்தி, ஆண்டிசாமி ஆகியோர் மதுரை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

மிக கொடூரமான வன்கொடுமைகளையும் படுகொலைகளையும் செய்த இந்த மக்கள் விரோதிகள் விடுவிக்கப்பட்டிருப்பதை கடுமையாக விமர்சிக்கும் சமூக செயல்பாட்டாளர்கள், மற்ற குற்ற வழக்குகளைப் போல் தீண்டாமை வன்கொடுமையால் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை நன்னடத்தை விதிகளை காரணம் காட்டி விடுவிக்க முடியாது என்கின்றனர். ஆனால், அரசு தரப்பில் ஆரம்பத்தில் வழக்கை நடத்திய போதே  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிடியில் இருந்து குற்றவாளிகளை தப்பவிட்டுள்ளனர்.

குற்றவாளிகளை இவ்வாறு விடுவிப்பது இனிமேல் தலித் மக்களின் மேல் எந்த குற்றத்தை இழைத்தாலும் தண்டனையில் இருந்து “நன்னடத்தையை” காரணம் காட்டி தப்பி விடலாம் என்கிற திமிரை சமூக விரோதிகளுக்கும், சாதி வெறியர்களும் ஏற்படுத்தும் என்பதை பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டுகின்றனர். ஜனநாயகத்தின் மீதும், சமூகத்தின் மீதும் கொஞ்சமேனும் அக்கறை உள்ளவர்கள் இந்த அயோக்கியத்தனத்த்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.

சாக்கியன்

பாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் ! | காணொளி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் பல்வகையான கருத்துக்களைக் கூறுகின்றனர். திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நீதிமன்றத் தீர்ப்பு மத நல்லிணக்கத்தை நடைமுறைப்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில், ராமர் கோவிலைக் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது சட்டப்படியானதா ? அல்லது கட்டப்பஞ்சாயத்துத் தனமானதா ?

உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டால் அதை விமர்சிக்கக் கூடாதா ? அத்தீர்ப்பை எதிர்க்கக் கூடாதா ? விவரிக்கிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் இராஜு.

 

பாருங்கள் ! பகிருங்கள் !

தமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் ? கருத்துக் கணிப்பு

தமிழக அரசியலில் ‘வெற்றிடம்’ – ரஜினி : கருத்துக் கணிப்பு

ழ்வார்பேட்டை ‘ஆண்டவரின்’ அலுவலகத்தில் மறைந்த இயக்குநர் பாலச்சந்தரின் சிலையை கமலோடு இணைந்து திறந்து வைத்தார் ரஜினி. இயக்குநர் பாலச்சந்தர் அறிமுகம் செய்தவர்கள் இன்று அரசியல் பேசுகிறார்கள், அக்கப்போர் நடத்துகிறார்கள் என்றால் அந்த பாவத்தின் பாவத்தில் பாலச்சந்தருக்கும் பங்கு இருக்கிறது. கலைத்துறையில் காசு பார்த்தவர்கள் சிலை திறந்ததோடு போயிருந்தால் பிரச்சினை இல்லை. சிலை திறந்த கையோடு போயஸ் கார்டன் திரும்பிய ரஜினியை பத்திரிகையாளர்கள் வழிமறித்து கேட்கிறார்கள். அப்போது தமிழக அரசியலில் ஆளுமைமிக்க தலைமைக்கு ‘வெற்றிடம்’ உள்ளது என்று போகிற போக்கில் ஒன்றைச் சொல்லிவிட்டுப் போனார் ரஜினி.

ஏன் வெற்றிடம், யார் வெற்றிடத்தை நிரப்புவார்கள், நிரப்புகிறவர்களின் தகுதி தராதரம் என்ன என்று கேட்டிருந்தால் ரஜினி குஜினியாக கும்மப்பட்டிருப்பார். “யார் சார் நீங்க” என்று தூத்துக்குடியில் ஒரு மாணவர் கேட்டு பிறகு சென்னை விமான நிலையத்தில் “ஸ்டெர்லைட் போராட்டத்தை தீவிரவாதிகள் நடத்தினார்கள்” என்று வெடித்தாரே அதுதான் ரஜினியின் உண்மையாக பாசிச முகம். ஒரு கருத்தையோ, ஒரு வாக்கியத்தையோ கோர்வையாகவோ, சில்லறையாகவோ பேசத்தெரியாத, தமிழகத்தின் தெற்கு வடக்கு எது என்றே தெரியாத இந்த அறிவாளி, ஏதாவது ரெண்டொரு வார்த்தை பேசினால் ஊடகங்களுக்கு டி.ஆர்.பி. போதை பிடித்து ஆட்டுகிறது.

உடன் தமிழகத்தின் அரசியல் வெற்றிடம் குறித்து ரஜினியை மையப்படுத்தி மாலை நேர விவாதத்தை இட்டு நிரப்புகிறார்கள். ரஜினியின் அரசியல் வெற்றிடம் குறித்து எட்டுவழிச்சாலை எடப்பாடிக்கும், திக்குத்தெரியாத பிரேமலதாவிற்கும் கோபம் வருகிறது என்றால் தி.மு.க.விற்கு சொல்லத் தேவையில்லை. ஆயினும் இவர்கள் எவரும் ரஜினியின் முட்டாள்தனத்தையும் இந்துத்துவ சார்பையும் வெளிப்படையாக கண்டிப்பவர்கள் அல்ல. ரஜினியை திட்டினால் நாலரை ஓட்டு வீணாகுமே என்று கவலைப்படுபவர்கள்.

படிக்க:
ரஜினி : வரமா – சாபமா ? அச்சுநூல்
ரஜினி படம் குறித்து வாய் திறக்க மாட்டேன் ! அம்பலப்பட்ட எச். ராஜா ! மரணமாஸ் ஆடியோ !

சரி, பேச்சுக்கு தமிழக அரசியலில் வெற்றிடமிருந்து அதை ரஜினி ஒரு பலூன் போல நிரப்பிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அந்த நிரப்புதல் எப்படி இருக்கும்?

♦ வடிவேலு மீம்ஸோடு போட்டி இருக்கும்
♦ துக்ளக் தர்பாரை விஞ்சி விடும்
♦ பாஜக-விற்கு படுஜோராக இருக்கும்
♦ பிரஸ் மீட் தடை செய்யப்படும்
♦ அனைத்தும் நடக்கும்

கேள்வி :  தமிழக அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும்?

டிவிட்டரில் வாக்களிக்க :

யூடியூபில் வாக்களிக்க இங்கே அழுத்தவும்

பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு ! | விடுதலை ராஜேந்திரன்

பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு ! “சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா?”

திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் தோழர். விடுதலை ராஜேந்திரன் அறிக்கை :

யோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்கி விட்டது.

இந்தியாவில் அனேகமாக அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தீர்ப்பை வரவேற்று விட்டன. ஆனால் இது சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா? என்ற கேள்விகளையும் நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது.

தோழர். விடுதலை ராஜேந்திரன்

இஸ்லாமியர்கள் தரப்பில் எடுத்துவைத்த வாதங்கள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதும், இந்துத்துவவாதிகள் முன்வைத்த வாதங்கள் பலவற்றையும் உச்சநீதிமன்றம் மறுத்திருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

ராமர் கோயிலை இடித்து விட்டுதான் பாபர் மசூதி கட்டினார்கள் என்று சங்பரிவார்கள் பிரச்சாரம் செய்தன. அங்கு கோயிலை இடித்துவிட்டு பாபர் மசூதியை கட்டவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

1949-ம் ஆண்டு வரை அங்கே தொழுகைகள் நடந்தன என்பதையும் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. அந்த மசூதியில் தொழுகைகள் ஏதும் நடக்கவே இல்லை என்று சங்பரிவாரங்கள் முன்வைத்த வாதத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. 450 ஆண்டு கால உரிமை முஸ்லிம்களுக்கு அந்த மசூதியில் இருக்கிறது என்பதை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

படிக்க:
அயோத்தி தீர்ப்பை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது – முன்னாள் நீதிபதி வேதனை !
அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்

450 ஆண்டுகாலம் ஒரு இடத்தில் மசூதி இஸ்லாமியர்களுக்கு இருந்தது அதை அவர்கள் பயன்படுத்தி வந்தார்கள் என்று சொன்னதற்கு பிறகு அவர்கள் நிலத்திற்கான உரிமை கோருவதற்கு (இஸ்லாமியர்களுக்கு) உரிமை இல்லை என்ற தீர்ப்பை இப்போது உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கிறது. அது மட்டுமின்றி 1949-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22, 23 தேதிகளில் மசூதிக்குள் அத்துமீறி நுழைந்து சில விஷமிகள் ராமன் சீதை சிலைகளை போட்டது சட்டவிரோதம் என்பதையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. 1992-ம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்டதும் குற்றத்திற்கு உரிய நடவடிக்கை என்பதையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இவைகளெல்லாம் முஸ்லிம்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் அவற்றை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்டவைகள். சங்பரிவாரங்கள் எடுத்து வைத்த வாதங்களுக்கு எதிரான கருத்துக்கள்.

ஆனால் நிலம் தங்களுக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றம் அந்த இடத்தில் இஸ்லாமியர்களுக்கு உரிமை இல்லை என்று கூறிவிட்டது. இந்துக்களுக்கு சொந்தமான இடம் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கிறதா? இதற்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெளிவான விளக்கம் இல்லை. மௌனம்தான் சாதிக்கிறது.

ஒப்பீட்டளவில் அது இந்துக்களுக்கு சொந்தம் என்கிற முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது என்று நீதிமன்றம் தீர்ப்பில் திரும்பத் திரும்ப கூறுகிறது. எப்படி இந்த முடிவுக்கு வந்திருக்கிறது என்பதற்கு தொல்லியல் துறை சமர்ப்பித்த அறிக்கை; அந்த அறிக்கை மசூதி இருந்த இடத்தில் பூமிக்கு கீழே நடத்தப்பட்ட ஆய்வுகளில் அங்கே இஸ்லாமிய கட்டுமானங்கள் ஏதும் இருந்ததற்கான சான்றுகள் இல்லை என்று கூறி இருப்பதை ஒரு காரணமாக காட்டுகிறது.

இரண்டாவதாக அங்கேதான் ராமன் பிறந்தான் என்கிற ஒட்டுமொத்த இந்துக்களின் நம்பிக்கையை காரணமாக காட்டுகிறது. ஒட்டுமொத்த இந்துக்கள் ராமன் அங்குதான் பிறந்தான் என்ற நம்பிக்கையை காரணம் காட்டி மசூதி இருந்த இடத்தில் கோயிலை கட்டிக் கொள்ளலாம் என்று நம்பிக்கையை இந்துக்களுக்கு சாதகமாக பயன்படுத்திய உச்சநீதிமன்றம் இஸ்லாமியர்களின் நம்பிக்கையை அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு பயன்படுத்தியிருக்கிறது. அதாவது தொழுகையை நடத்துவதற்கு மசூதிதான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. எனவே வேறு இடத்தில் மசூதி கட்டி அவர்கள் தொழுகை நடத்தலாம் என்று கூறுகிறது. ஆக இஸ்லாமியர்களுடைய நம்பிக்கையை அந்த இடத்திலிருந்து இஸ்லாமியர்களை வெளியேற்றுவதற்கும் இந்துக்களின் நம்பிக்கை மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயில் கட்டுவதற்காக உச்சநீதிமன்றம் இப்போது பயன்படுத்தி இருக்கிறது.

படிக்க:
காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு எதிராக பதவி விலகிய ஐ.ஏ.எஸ். கண்ணன் கோபிநாத் மீது குற்றப்பத்திரிகை !
♦ நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்

யார் இந்த மசூதியை இடித்தார்களோ, அவர்களே ஒரு அறக்கட்டளையை நிறுவிக் கொண்டு ராமர் கோயிலை கட்டிக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது பற்றி கோரிக்கை எதுவும் இந்த வழக்கில் இல்லை. ஆனால் உச்சநீதிமன்றம் ராமர் கோயில் கட்டுவதற்கும் ஏற்பாடுகளை செய்திருக்கிறது.

ஒருவேளை மசூதி இடிக்கப்படாமல் மசூதி அங்கு இருந்திருக்கும் என்று சொன்னால் இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பு வந்திருக்குமா என்ற கேள்வியை நாம் எழுப்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது. சட்டவிரோதமாக மசூதி இடிக்கப்பட்டது. சட்டவிரோதமாக இடிக்கப்பட்ட ஒரு மசூதி இன்றைக்கு ராமன் கோயில் கட்டுவதற்கு சட்டரீதியான ஒரு தீர்ப்பை பெற்றுத் தந்திருக்கிறது.

இது சட்டத்தின் முன் சரியான தீர்ப்புதானா என்ற கேள்வியை வரலாறு எதிர்காலத்தில் நிச்சயம் எழுப்பத்தான் செய்யும்.

நன்றி : ஃபேஸ்புக்கில் – திராவிடர் விடுதலைக் கழகம் – சென்னை

disclaimer

சதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் !

3

மாணவர்களின் உரிமைக்காகவும் பொதுப் பிரச்சினைகளுக்காகவும் போராட்டங்களை முன்னெடுத்தவர் என்பதற்காக முதுகலைப் படிப்பிற்கான அனுமதி மறுக்கப்பட்டு பழிவாங்கப்பட்ட கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் சுரேந்திரனை மீண்டும் கல்லூரியில் அனுமதிக்க உத்தரவிட்டிருக்கிறது, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

கரூர் பு.மா.இ.மு. மாவட்ட அமைப்பாளரான தோழர் சுரேந்திரன், கரூர் அரசு கலைக்கல்லூரியில் வரலாற்றுத்துறையில் இளங்கலை படிப்பை முடித்த மாணவர். இக்கல்லூரியில் பயின்ற மூன்றாண்டு காலத்தில் கல்லூரியில் அடிப்படை வசதிகளுக்காகவும் மாணவர்களின் உரிமைக்காகவும் மற்றும் பொதுவில் மக்களை பாதிக்கும் பொதுப்பிரச்சினைகளுக்காகவும் முன்னின்று பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்.

மாணவர் சுரேந்திரன்.

குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டம், நீட் திணிப்புக்கெதிரான போராட்டம், பேருந்து கட்டண உயர்வுக்கெதிரான போராட்டம், ஆசிரியர்களின் உரிமைக்கான போராட்டம், பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை தண்டிக்கக் கோரி நடைபெற்ற போராட்டம், இதே கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவந்த பேராசிரியர் இளங்கோவனை தண்டிக்கக்கோரி நடைபெற்ற போராட்டம் ஆகியவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

மாணவர்களிடம் சமூக அக்கறையையும் கண்ணெதிரில் நடக்கும் அநீதிகளைத் தட்டிக்கேட்க வேண்டுமென்ற உணர்வையும் ஏற்படுத்தி உரிமைக்கான போராட்டத்தில் அவர்களை பங்கெடுக்க செய்ததுதான் தோழர் சுரேந்திரன் செய்த குற்றம். இந்தக் குற்றத்திற்காகத்தான், வரலாற்றுத்துறையில் முதுகலை படிப்பில் சேர்க்க மறுத்து அவரை வெளியேற்றியது கல்லூரி நிர்வாகம்.

அதாவது, தோழர் சுரேந்திரன் 2018 – 2019 கல்வி ஆண்டில் இளங்கலை வரலாறு படிப்பை முடித்துவிட்டு, முதுகலை வரலாறு படிப்பதற்காக கடந்த  26-06-2019 அன்று சேர்க்கைக்கான விண்ணப்பத்தினை சமர்ப்பித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 12-07-2019 அன்று நடைபெற்ற மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு அழைக்காமலேயே, அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது.

முதலில் விண்ணப்பமே கல்லூரி நிர்வாகத்திற்கு வந்து சேரவில்லை என்று மழுப்பிய நிலையில், கல்லூரி முதல்வரிடம் சென்று முறையிட்டபோது, ”உன் மேல போலீஸ் கேஸ் நிறைய இருக்கு. கல்லூரியில நிறைய போராட்டங்களை நடத்தியிருக்கிற. உனக்கு சீட்டு கொடுக்கக்கூடாதுனு எஸ்.பி. ஆபீசில் இருந்து லெட்டர் வந்திருக்கு. உன் மேல கேஸ் இல்லைனு போலீசுகிட்ட இருந்து லெட்டர் வாங்கி வா, அதன் பிறகு சீட்டு கொடுக்கிறேன்” என்று போலீசின் கையாளாகவே பதிலுரைத்திருந்தார் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன்.

”கிரிமினல் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு எதுவும் இல்லை. எல்லாமே பொதுப்பிரச்சினைக்காக, உரிமைக்காக போராடியதற்காக போடப்பட்ட பொய் வழக்குகள். அரசியல் ரீதியான காரணங்களுக்காக தொடுக்கப்பட்ட வழக்குகள்.” என்று சுரேந்திரன் நிராகரித்தார்.

மேலும், ”உன்னை மீண்டும் கல்லூரியில் சேர்க்கக்கூடாது என்பது, 09-07-2019 அன்று கல்லூரி நிர்வாகக்குழுவில் விவாதித்து எடுத்த முடிவு. நான் அக்குழுவின் தலைவர் என்றாலும், இம்முடிவை மாற்றும் அதிகாரம் எனக்கில்லை” என்றும் தெரிவிருந்தார் அவர். இம்முடிவை, எழுத்துப்பூர்வமாக கொடுக்குமாறு கேட்டபோதும், அவ்வாறு கொடுக்க மறுத்துவிட்டார்.

இது தொடர்பாக, ஜனநாயக சிந்தனை கொண்ட கல்லூரி பேராசிரியர்கள் சிலரிடம் பேசியதிலிருந்து, ”வகுப்பறைகளில் அம்மாணவன் எந்தவித ஒழுக்கக்கேடான செயலிலும் ஈடுபடுவனில்லை. அவனால் எந்த இடையூறும் இல்லை” என்று தனது கருத்தாக வரலாற்றுத்துறை தலைவர் தெரிவித்திருந்த நிலையிலும், ”எதற்கெடுத்தாலும் மாணவர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துறான். இவனால் கல்லூரிக்குத்தான் கெட்டப்பெயர்.” என்று  பேராசிரியர் ராதாகிருஷ்ணன் முன் வைத்தக் கருத்தை ஆதரித்தும், போலீசு எஸ்.பி. கொடுத்த அழுத்தம் காரணமாகவும்தான் இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்பது உறுதியானது.

இதனைத்தொடர்ந்து, இவ்விவகாரத்தை ஊடகங்கள் வாயிலாக அம்பலப்படுத்தியதோடு, கடந்த 15-07-2019 அன்று கரூர் மாவட்ட ஆட்சியருக்கும் உயர் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தமது தரப்பு நியாயத்தை புகாராக அனுப்பியிருந்தார் சுரேந்திரன். மனு கொடுத்து ஒரு மாத காலம் ஆகியும் எந்த பதிலும் வராத நிலையிl, மீண்டும் கடந்த 22-07-2019  அன்று தமிழக ஆளுநர், உயர்க்கல்வித்துறை செயலர், உயர் கல்வி கல்லூரி இயக்குனர், மண்டல கல்லூரி இணை இயக்குனர் உயர்கல்வித்துறை, பாராதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர், கல்லூரி இணை இயக்குனர், கரூர் மாவட்ட ஆட்சியர், கரூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஆகியோருக்கும் கல்லூரியில் சேர்க்க ஆவண செய்யுமாறு கோரி கடிதம் எழுதியிருந்தார்.

சட்டப்பூர்வமான முறையில் உயர்கல்வித்துறையின் அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் முறையிட்டும் பலன் எதும் கிடைக்காத நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையாக, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடுத்தார், சுரேந்திரன்.

சுரேந்திரன் சார்பாக வழக்குரைஞர் வாஞ்சிநாதன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தாக்கல் செய்து வாதிட்டார். சட்டத்திற்கு புறம்பான வழியில் வஞ்சகமான முறையில்தான் மாணவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பது நீதிமன்றத்தில் அம்பலமானது. சுரேந்திரன் தரப்பில் எழுப்பப்பட்ட எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க முடியாமல் திணறியது, கல்லூரி நிர்வாகம். இதனைத் தொடர்ந்துதான், மாணவர் சுரேந்திரனை கல்லூரியில் முதுகலைப் படிப்பில் சேர்க்க வேண்டும் என்று கடந்த 21-10-2019 அன்று உத்தரவிட்டது, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.

நீதிமன்ற உத்தரவோடு, மூன்று வழக்குரைஞர்களை அழைத்துக்கொண்டு அரசு கலைக்கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரனை சந்தித்தார் சுரேந்திரன். நீதிமன்ற உத்தரவின்படி சுரேந்திரன் வரலாற்றுத்துறையில் முதுகலைப்படிப்பைத் தொடர அனுமதிக்கப்பட்டார். பல்வேறு தடைகளை உடைத்து மீண்டும் கல்லூரியில் இணைந்த செயலை பாராட்டி, ஜனநாயக சிந்தனைகொண்ட பேராசிரியர்கள் பலரும் கை  கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

படிக்க:
காஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் !
மாணவர்கள் என்றாலே ரவுடிகள் பொறுக்கிகள்தானா ? | பு.மா.இ.மு. கணேசன் நேர்காணல்

”தானுண்டு தன் வேலையுண்டு என ஒதுங்கிப் போவதால் பலன் ஏதுமில்லை. மாணவர்கள் சமூக பொறுப்புணர்வோடு பொதுப்பிரச்சினைகளுக்காக போராட முன் வர வேண்டும். கல்லூரி படிப்பைத் தாண்டி, தம்மை சுற்றி நிகழும் அரசியல் நிகழ்வுகளை அறிந்து கொள்ள வேண்டும்” என்று தொடர்ச்சியாக மாணவர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி. மாணவர்களை அமைப்பாக அணிதிரட்டி அரசியல்படுத்தப்படுவதையும் அதன் காரணமாக, மாணவர்கள் தங்கள் உரிமைக்காக போராட முன்வருவதையும்தான் கல்லூரி நிர்வாகம் பிரச்சினையாக பார்க்கிறது.

கல்லூரி நிர்வாகம் என்றில்லை பொதுவிலேயே, ”மது போதைக்கும், டிக்டாக், பேஸ்புக் போன்ற டிஜிட்டல் போதைக்கும் வேண்டுமானால், மாணவர்கள் ஆட்படலாம்.” ஆனால், ”போராட்டம் அது இது என்று போய்விடக்கூடாது; பின்னர், போலீசு கேசாகி அரசு வேலை உள்ளிட்டு எதிர்கால வாழ்க்கையே இல்லாமல் போய்விடும்” என்று பூச்சாண்டி காட்டப்படுவதுண்டு.

இந்தப் பூச்சாண்டிகளுக்கு பலியாகாமல், தனிப்பட்ட இழப்புகளை எண்ணி பின்வாங்காமல், போராடும் உரிமைக்காக நீண்டதொரு போராட்டத்தை நடத்தி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார், மாணவர் சுரேந்திரன். மாணவர்கள் முன்மாதிரியாகக் கொள்ளத்தக்க வெற்றி இதுவென்றால், அது மிகையல்ல.


தகவல்;
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
கரூர். 9629886351.

காஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் !

காஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் !

ந்து தேசியவாதிகளின் மொழியில் கூறுவதென்றால், “காஷ்மீர் இந்தியாவுடன் ஒருங்கிணைக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.” இந்த இரண்டு மாதங்களில் பா.ஜ.க.-வின் செய்தித் தொடர்பாளர்களும் அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க. அரசின் அமைச்சர்களும் காஷ்மீர் பற்றி விடுக்கும் செய்திகள் இவைதான். “ஜவஹர்லால் நேருவால்தான் காஷ்மீரில் தீவிரவாதம் வளர்ந்தது, இன்னும் ஓரிரு ஆண்டுகளில் புதிய காஷ்மீரை உருவாக்கிவிடுவோம், காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது.”

ஆகஸ்டு 5 -க்கு முன்பு காஷ்மீரில் நிலவிய சூழ்நிலை குறித்து நாம் அனைவரும் அறிவோம். ஆகஸ்டு 5-க்குப்  பிறகு அங்கு பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிப்பதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் அங்கு என்ன நடைபெற்று வருகிறது என்பதே பெரும் மர்மமாக உள்ளது. ஆனால், பா.ஜ.க. அரசும் அவ்வரசின் ஊதுகுழல்களும் காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாகத் தினந்தோறும் அறிக்கைவிட்டு வருகிறார்கள்.

தெருவில் நடமாடுவோரைக் கண்கானிக்கும் அரசுப்படையினர். பிறந்த மண்ணிலேயே அந்நியனைப் போல நடத்தப்படும் காஷ்மீரிகள்.

இயல்பு நிலை என்பது என்ன? மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை எவ்விதத் தடையுமின்றி நடத்துவதுதான் இயல்பு வாழ்க்கை. ஊரடங்கு உத்தரவுகளும், 144 தடையுத்தரவுகளும் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தெருக்களில் தடையரண்கள் ஏற்படுத்தப்பட்டு, மக்களின் நடமாட்டமே கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், தொலைத்தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், கடைகளும் பள்ளிக்கூடங்களும் இயங்க முடியாத நிலையில் காஷ்மீர் மக்கள் எப்படி இயல்பாக வாழ முடியும்?

காஷ்மீரைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் பீர்ஸதா ஆஷிக் 15.09.2019 தேதியிட்ட தி இந்து ஆங்கில நாளேட்டில், “பள்ளத்தாக்கில் ஒரு திருமணம், ஒரு இறுதிச் சடங்கு” என்ற தலைப்பில் கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார். அக்கட்டுரையில் பள்ளத்தாக்கில் சமீபத்தில் நடந்த மூன்று சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அம்மூன்றும் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை எப்படியிருக்கிறது என்பதை “நமக்கு” எடுத்துக் காட்டுகின்றன.

படிக்க :
♦ கீழடி : ‘‘ஆரிய மேன்மைக்கு ’’ விழுந்த செருப்படி !
♦ கும்பல் வன்முறை தடுப்பு சட்டத்தை கிடப்பில் போட்ட குடியரசு தலைவர் கோவிந்து !

♦ ♦ ♦

ண்பது வயதைக் கடந்த மூதாட்டியான மைமுனா புகாரி, கடந்த ஆகஸ்டு மாத இறுதியில், மாலை நேரத்தில் மூப்பு காரணமாக மரணமடைந்து விடுகிறார். மைமுனா காஷ்மீரிகளுக்கே உரித்தான பழக்க வழக்கங்களில் ஊறிப் போனவர். குழந்தையோ, பெரியவர்களோ அனைவருக்கும் தனது கையால் ஊட்டிவிட வேண்டும் என்று விரும்பியவர். அதனால்தான் மைமுனாவை அவரது உறவினர்கள் அனைவரும் கடவுளின் கொடை எனப் பொருள் தரக்கூடிய உருதுச் சொல்லான மௌஜ் என அன்புடன் அழைத்து வந்தார்கள்.

மைமுனா, இறக்கும் தருவாயில் தான் பார்த்து வளர்ந்த அனைவரும் தனது அருகில் இருக்க வேண்டும் என விரும்பியிருக்கக் கூடும். தனது ஆசிகளை அவர்களுக்கு வழங்க வேண்டுமென விரும்பியிருக்கக் கூடும். இவை எதுவுமே நிறைவேறாமல் அவர் இறந்துபோனார்.

பத்திரிக்கையாளர் பீர்ஸதா ஆஷிக்கிற்கு, இறந்து போன மைமுனா இரத்த உறவுமுறை சார்ந்த பாட்டி. மைமுனாவால் சோறு ஊட்டப்பட்டு வளர்ந்தவர் பீர்ஸதா ஆஷிக். அவருக்கும் மைமுனா இறந்து போன தகவல் கிடைக்கவில்லை. ஆகஸ்டு அன்று உள்ளூர் பத்திரிக்கையொன்றில் மைமுனாவின் இறப்பு குறித்து வெளியாகியிருந்த இரங்கல் செய்தியைப் பார்த்துத்தான் தனது பாட்டி இறந்து போனதை அவர் தெரிந்துகொண்டார். இதன் பெயர் இயல்பு நிலையா, துர்பாக்கிய நிலையா?

முள்வேலியின் ஊடாகத் தெரிகிறது ஆளரவமற்ற லால் சவுக் கடை வீதி. ஆளில்லாத வீதியே காஷ்மீரின் புதிய இயல்பு நிலை.

அந்த இரங்கல் செய்தியில், காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை காரணமாக, மைமுனாவின் ஆன்மா சாந்தியடையும் பொருட்டு உறவினர்கள் அனைவரும் கூடிப் பிரார்த்தனை செய்யும் சடங்கை வீட்டில் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுப் போன அவலமான நிலை குறிப்பிடப்பட்டிருந்தது. இறந்து போனவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தக்கூட முடியாத நிலையை, உங்களால் இயல்பு நிலை எனக் கூறமுடியுமா?

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதால், மைமுனா இறந்துபோன துக்கச் செய்தியை நெருங்கிய உறவினர்களுக்குத் தெரிவிப்பதே பெரும் சவாலாக இருந்தது. ஒவ்வொரு உறவினர் வீட்டிற்கும் நேரில் சென்றுதான் சாவுச் செய்தியைச் சொல்ல முடியும் என்ற நிலையில் அன்று இரவு முழுவதும் முடிந்த மட்டிலும் உறவினர்கள் வீட்டைத் தேடிச் சென்றார்கள் பீர்ஸதா ஆஷிக்கின் ஒன்றுவிட்ட சகோதரர்கள். அப்படிச் சொல்ல முடியாமல் விடுபட்டுப் போனவர்களுள் பீர்ஸதா ஆஷிக்கும் ஒருவர்.

மைமுனா இறந்த செய்தியை அறிந்தவர்களுள் யாருக்கெல்லாம் தெருவில் நடமாடும் இராணுவத்தின் அனுமதி கிடைத்ததோ, அவர்கள் மட்டும்தான் மைமுனாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த முடிந்தது, இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொள்ள முடிந்தது. மயானத்தில் சவக்குழியை வெட்டுபவருக்கும், மைமுனாவிற்கு இறுதிச் சடங்கை நடத்திவைக்கும் பெண் மதபோதகருக்கும்கூட சாவுச் செய்தியை உடனடியாகத் தெரிவிக்க முடியாமல் போனதால், மைமுனாவை அடக்கம் செய்வதற்கு மறுநாள் வரையிலும் காத்திருக்க நேர்ந்தது.

படிக்க :
♦ காஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை !
♦ காஷ்மீர் : கல்லறைகள் பொய் சொல்லாது !

மைமுனாவின் இறுதி ஊர்வலத்திலும், சவ அடக்கத்திலும் மிகக் குறைவான உறவினர்கள்தான் கலந்துகொள்ள முடிந்தது. அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடத்த வேண்டிய நான்காவது நாள் சடங்கிலும்கூட ஓரிரு உறவினர்கள்தான் கலந்துகொள்ள முடிந்தது. ஏனென்றால், அந்த மயானம் அமைந்துள்ள நோவாட்டா பகுதி ஆகஸ்டு -5க்குப் பிறகு இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்று, முட்கம்பிகளால் தடுப்புப் போடப்பட்டு, முன் அனுமதியின்றிப் பொதுமக்கள் நுழைய முடியாத பகுதியாக மாற்றப்பட்டிருந்தது.

♦ ♦ ♦

மைமுனா இறந்துபோன ஓரிரு நாட்களுக்குள்ளாகவே, ஆகஸ்டு மதிய நேரத்தில் குலாம் மொகைதீனுக்குத் தீவிரமான மாரடைப்பு ஏற்பட்டது. குலாம் மொகைதீன் வேறு யாருமல்ல; பீர்ஸதா ஆஷிக்கின் மனைவியின் மாமா. வீட்டில் இருந்தவர்கள் குலாம் மொகைதீனை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல முயன்றபோது, அவரோ சிறிது நேரம் காத்திருக்கச் சொன்னார்.

மிகக் கடுமையான வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நேரத்திலும், மரணம் காத்திருக்காது என்று தெரிந்திருந்த நிலையிலும் குலாம் மொகைதீன் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல விரும்பாததற்குக் காரணம், வெளியில் சென்றிருந்த தனது மகன் வீட்டிற்குப் பத்திரமாகத் திரும்பிவிட்டான் என்பதை அவர் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினார். அவனுக்குத் தகவல் சொல்ல வாய்ப்பில்லை என உறவினர்கள் எடுத்துச்சொன்ன பிறகும்கூட, குலாம் மொகைதீன் காத்திருக்க விரும்பினார், மகன் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில்.

வெளியில் செல்லும் இளைஞர்கள் வீட்டிற்குத் திரும்புவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதுதான் காஷ்மீரில் இன்று இயல்பு நிலை. அவர்கள் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுச் சித்திரவதைக் கூடத்திற்கு அனுப்பப்படலாம் அல்லது வேறு விபரீதங்கள்கூட நேரிடலாம்.

படிக்க :
♦ அறிவுத்துறையினரின் மௌனம் – பாசிசத்தின் பாய்ச்சல் !
♦ தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் ! 

நல்வாய்ப்பாக குலாம் மொகைதீனின் மகன் திரும்பி வந்துவிட, சாவின் விளிம்பில் நின்ற குலாம் மொகைதீனை ஒரு காரில் ஏற்றி – அவசர ஊர்தியில் அல்ல – மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார்கள் உறவினர்கள். அங்கிருந்த இருதய நோய் மருத்துவரான இர்ஃபான், குலாம் மொகைதீனைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, உயிர் பிழைப்பதற்குப் பத்து சதவீத வாய்ப்புக்கூட இல்லை என்ற அதிர்ச்சியான தகவலை உறவினர்களிடம் உணர்ச்சியின்றித் தெரிவித்தார்.

ஆனாலும், மருத்துவர் இர்ஃபான் நோயாளியைக் காப்பாற்ற அவசரமான அறுவைச் சிகிச்சைக்கான ஏற்பாடுகளில் இறங்கினார். அதற்கு உதவக்கூடிய மருத்துவர்களும், உதவியாளர்களும் அச்சமயத்தில் மருத்துவமனையில் இல்லை. அவர்களுக்குத் தகவல் தெரிவிப்பதற்கு அலைபேசி வசதியும் இல்லை. ஒருமைப்பாட்டைக் காப்பதற்காகத் தகவல் தொடர்புகள் முடக்கப்பட்டிருக்கும் கொடூரமான நிலையில், மருத்துவர் இர்ஃபான் மறுயோசனை எதுவுமின்றி, தனது காரிலேயே அந்த அறுவைச் சிகிச்சைக்குத் தேவைப்படும் மருத்துவர்கள், உதவியாளர்கள் வீடுகளுக்குச் சென்று, அவர்களை அழைத்து வந்து அறுவைச் சிகிச்சையை நடத்தி முடித்தார்.

♦ ♦ ♦

ஸிர் ஷா, காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க சுற்றுலா வழிகாட்டி. அவர், தன் மகன் யாஸிரின் திருமணத்தை ஆகஸ்ட் 28-ம் தேதி அன்று நடத்துவதற்கு முன்னரே திட்டமிட்டிருந்தார். தனது மகன் திருமண விருந்து திருப்திகரமாக இருக்க வேண்டுமென்பதற்கா 800 கிலோ அளவிற்கு இறைச்சி எடுத்துச் சமையல் செய்யவும் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், ஆகஸ்டு, 5-க்குப் பிறகு காஷ்மீரில் திணிக்கப்பட்ட புதிய இயல்பு நிலையின் காரணமாக, அவரது ஆசையெல்லாம் நிராசையாகிப் போனது. உறவினர்கள் அனைவருக்கும் திருமணப் பத்திரிகை தருவதுகூட சிக்கலாகிப் போனதால், நெருங்கிய உறவினர்களை மட்டும் திருமணத்திற்கு அழைப்பது என முடிவெடுத்தார் அவர். அலங்காரப் பந்தல் போடுவது, இசை நிகழ்ச்சி நடத்துவது என்பதெல்லாம் கைவிடப்பட்டன. 800 கிலோ இறைச்சிக்குப் பதிலாக, 200 கிலோ இறைச்சி எடுத்தால் போதும் எனத் திருமண விருந்தும் சுருக்கப்பட்டது.

திருமண ஆர்டர்கள் எல்லாம் நின்றுபோன நிலையில், கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களைக் கவலையுடன் பார்க்கும் சமையல் கலைஞர்கள்.

திருமண நிகழ்ச்சியை எந்த நேரத்திற்கு ஆரம்பித்து எவ்வளவு நேரத்திற்குள் முடிப்பது என்பதைக்கூட மணமகன், மணமகள் வீட்டார் கூடிப் பேசி முடிவெடுக்க முடியாத நிலை நிலவியதால், அங்கும் இங்குமாகத் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இதற்காக, மணமக்கள் வீடுகளுக்குச் சென்று திரும்பக்கூடிய வகையில் ஓர் உறவினரும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.

மணமகள், கயாம் என்ற பகுதியில் வசித்து வந்தார். அந்தப் பகுதியோ அதிதீவிரமான இராணுவக் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பின் கீழும் இருக்கிறது. அங்கு சென்று திரும்புவது என்பது அசாதாரணமான ஒன்று.

திருமண நாளன்று முகமூடி அணிந்த சிலர் மணமகன் வீட்டிற்கு வந்து, காஷ்மீரே துயர்மிக்க ஒன்றாக இருப்பதால், பாட்டுப் பாடியோ, இசை நிகழ்ச்சி நடத்தியோ விழாவை நடத்தாதீர்கள் எனக் கூறிவிட்டுச் சென்றார்கள்.

அதேநாளில் மணமகள் வீட்டிலிருந்து இன்னொரு செய்தி மணமகன் வீட்டிற்கு வந்தது. தமது பகுதியில் தினந்தோறும் இரவு ஒன்பது வரை இராணுவத்திற்கும் கல்லெறிபவர்களுக்கும் இடையே மோதல்கள் நடப்பது வாடிக்கையாக இருப்பதால், இரவு 10 மணிக்கு திருமண நிகழ்ச்சிக்காக மணமகள் வீட்டிற்கு வந்தால் போதும் எனத் தெரிவித்தது அச்செய்தி.

மணமகன் யாஸிரும் அச்செய்தியின்படி இரவு ஒன்பது மணிக்கு மணமகள் வீட்டிற்குச் செல்லத் தயாரானார். காஷ்மீர் முசுலீம் திருமண நிகழ்வுகளில் ஒரு சடங்கு கடைப்பிடிக்கப்படுவது உண்டு. மணமகன், மணமகள் வீட்டிற்குக் கிளம்பிச் செல்லும்போது, உறவினர்கள் மணமகனை வழிமறித்துத் தடுப்பார்கள். மணமகன் தன்னைத் தடுக்கும் உறவினர்களுக்குப் பணம் உள்ளிட்ட பரிசுகள் கொடுத்து வழி ஏற்படுத்திக் கொள்வார்.

அன்றும் யாஸிர் தடுத்து நிறுத்தப்பட்டார். ஆனால், உறவினர்களால் அல்ல. இந்திய இராணுவச் சிப்பாய்களால். தடுத்து நிறுத்திய இராணுவச் சிப்பாய்கள் யாஸிரிடம், “இந்த நேரத்தில் தேச விரோத சக்திகள் நடமாடுவதைத் தடுத்து நிறுத்துவதற்குத்தான் இந்தச் சோதனை” எனக் கூறினார்கள். அவர்களிடம் யாஸிர், தான் தீவிரவாதி அல்ல, மணமகன் என நிரூபிக்க வேண்டியிருந்தது.

துக்கத்திற்கு அழ முடியாத நிலையை, மகிழ்ச்சி நிறைந்த தருணங்களைக் கொண்டாட முடியாத நிலையை உங்களால் இயல்பு நிலை எனக் கூற முடியுமா? கூற முடியாதென்று நீங்கள் கருதினால், எச்சரிக்கை, உங்களை அவர்கள் ‘ஆண்டி இந்தியன்’ என முத்திரை குத்தவும் கூடும்.

மகேஷ்

– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

MCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் !

MCC (Millennium Challenge Corporation) ஒப்பந்தம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், நாம் மடகஸ்கார் நாட்டிலிருந்து கற்க வேண்டியது என்ன ?

MCC-யிடமிருந்து நிபந்தனையுடனான உதவித்தொகையைப் பெற்ற முதலாவது நாடு மடகஸ்கார் ஆகும். இது 2005-ல் நிகழ்ந்தது.

“சொத்துரிமையை உறுதிப்படுத்துவதன் மூலமும் கடன் பெற வழிசெய்து கொடுப்பதன் மூலமும் விவசாய உற்பத்தி, முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் போன்ற துறைகளில் பயிற்சி பெற வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுப்பதன் மூலமும் கிராமப்புற மக்களை அவர்களது சுயதேவைக்கான விவாசாயத்திலிருந்து விடுவித்து சந்தைப்பொருளாதாரத்துக்கு மாறுவதற்கு துணை செய்வதற்காக” 110 மில்லியன் டாலர்கள் உதவித்தொகை வழங்கப்பட்டது.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

2008-ம் ஆண்டு 1.3 மில்லியன் ஹெக்டேர் நிலம் கொரிய நிறுவனமான Daewoo-விற்கு இலவசமாக 99 ஆண்டுகால குத்தகைக்கு வழங்கப்பட்டது. சோளம், உற்பத்தி செய்வதற்கும் எண்ணை ஏற்றுமதிக்காக செம்பனை (palm) பயிரிடுவதற்குமே இந்நிலம் வழங்கப்பட்டது. 1.3 மில்லியன் ஹெக்டேர்கள் என்பது மடகஸ்காரில் பயிர் விளைவிக்கக்கூடிய ஒட்டுமொத்த நிலத்தின் அரைப்பங்காகும். பெல்ஜியம் நாட்டின் மொத்தப் பரப்பளவுக்குச் சமமான பரப்பு இது.

2009-ல் இந்த நிலப்பறிப்பினாலும், வாழ்க்கைச்செலவு அதிகரிப்பினாலும் உந்தப்பட்ட பொதுமக்களின் எதிர்ப்பு இரும்புக்கரம் கொண்டு வன்முறையுடன் அடக்கப்பட்டது. ரொய்ட்டர்ஸ் செய்திகளின்படி, இவ்வடக்குமுறை 135 பேரின் உயிரைக் காவுகொண்டது.

படிக்க :
இலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி அறிக்கை
♦ சி.ஐ.ஏ. சதி : பொலிவியா அதிபர் எவோ மொராலெஸ் ராஜினாமா !

மடகஸ்காரின் இராணுவம் இவ்வடக்குமுறையை ஏற்காமல் கலகம் செய்ததுடன், எதிர்க்கட்சியுடன் இணைந்துகொண்டு அரசாங்கத்தை வீழ்த்தியது. அரசியல் உறுதியின்மை தொடர்ந்த நிலையிலும், MCC உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்பட்டது.

இலங்கையைப் போலவே மடகஸ்காரும் இந்து சமுத்திரத்தில் உள்ள ஒரு நாடு. சீன முதலீட்டினை குறிப்பிடத்தக்களவு பெறும் நாடு. அத்துடன் அந்நாடும் “Belt and Road” திட்டத்தின் ஒரு பகுதியாயுள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பொருளாதாரக் கொள்கை என்பது அதன் இராணுவ வியூகத்துடன் கைகோர்த்துச் செல்வதாகத்தான் இருக்கும். இது, MCC-யினை Pivot to Asia எனும் அவர்களுடைய வியூகத்தின் பகுதியாக ஆக்குகிறது. ஆசியாவில் அமெரிக்க பொருளாதார, இராணுவ செல்வாக்கு குறைவாக இருக்கவேண்டுமேயன்றி கூடுதலாக இருக்கக்கூடாது என்பதைத்தான் வரலாறு எமக்குக் காட்டி நிற்கிறது.

MCC அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இன்னொரு நீட்சி. அது அபிவிருத்தியை இராணுவமயமாக்குவதுடன் தனியார்மயமாக்கலை வழக்கமானதாக்கி சட்டபூர்வமானதாக்குகின்றது.

விவசாய பொருளாதாரத்தை மீளப் புதுப்பித்தல், இலவசக் கல்வியையும் சுகாதாரத்தையும் வலிமையானதாக்குதல், வாழ்க்கைச் செலவுக்கு போதுமான சம்பளத்தை பெறக்கூடிய தொழிலை வழங்குதல், காணி நிலம், குடிநீர், சுத்தமான காற்று என்பனவற்றிற்கான உரிமையை உறுதிப்படுத்துதல் என்பனவே இலங்கையில் மிலேனியம் சவால்கள் ஆகும்.

சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி, ஐக்கிய அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஐக்கிய இராச்சியம், இந்தியா ஆகியவற்றின் தலையீடுகளும் வற்புறுத்தல்களும் நமது இலக்குகளை அடைய விடாமல் தடுக்கும் பாரிய தடைக்கற்களாக உள்ளன.

அபிவிருத்தி என்பது நாகரிக மேலாடை அல்ல! அமெரிக்க அளவுகோல் எங்களுக்கு பொருந்தாது!

#MCCயே_வெளியேறு!

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, இலங்கை

disclaimer

கெனேயின் புதிய விஞ்ஞானம் | பொருளாதாரம் கற்போம் – 43

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 43

புதிய விஞ்ஞானம்

அ.அனிக்கின்

ரு விவசாயி உரம் போட்டுப் பயிர் செய்கிறான்; பிறகு விளைந்த தானியத்தை அறுவடை செய்கிறான். தானியத்தில் ஒரு பகுதியை விதைக்காகவும் இன்னொரு பகுதியைத் தன்னுடைய குடும்பத் தேவைகளுக்காகவும் சேமித்து வைக்கிறான்; ஒரு பகுதியை விற்பனை செய்து நகரத்தில் கிடைக்கும் அவசியமான பொருள்களை வாங்குகிறான்; இத்தனைக்குப் பிறகும் அவனிடம் உபரி தானியம் இருப்பதைக் கண்டு அவன் மகிழ்ச்சியடைகிறான். இந்தக் கதை எவ்வளவு எளிமையானதாக இருக்கிறது. இதைப் போன்ற ஒரு கற்பனை தான் கெனேயின் பல்வேறு கருத்துக்களையும் தூண்டியது.

இந்த உபரியை விவசாயி என்ன செய்வான் என்பது கெனேக்கு நன்றாகத் தெரியும். விவசாயி உபரியை தானியமாகவோ பணமாகவோ தன்னுடைய நிலப்பிரபு, அரசர், திருச்சபை மதகுரு ஆகியோரிடம் கொடுப்பான். அவர்கள் ஒவ்வொருவருக்கும் எந்த விகிதாச்சார அளவின்படி கொடுப்பான் என்பதைக் கூட அவர் கணக்கிட்டார்: நிலப்பிரபுவுக்கு ஏழில் நான்கு பாகம், அரசருக்கு ஏழில் இரண்டு பாகம், திருச்சபை மதகுருவுக்கு ஏழில் ஒரு பாகம் என்ற விகிதாச்சாரத்தின்படி கொடுப்பான். இங்கே இரண்டு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அந்த விவசாயியின் அறுவடையில் அல்லது வருமானத்தில் கணிசமான பகுதியைப் பிடுங்கிக் கொள்வதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இரண்டாவதாக, இந்த உபரி எங்கேயிருந்து வருகிறது?

முதல் கேள்விக்கு கெனே தருகின்ற பதிலை சுருக்கமாக இப்படிக் கூறலாம். அரசருக்கும் திருச்சபை மதகுருவுக்கும் கொடுப்பதைப் பற்றி ஒன்றும் செய்ய முடியாது – அதாவது அது கடவுள் செயல். நிலப்பிரபுவைப் பொறுத்த வரையிலும் அவர் ஒரு சுவாரசியமான பொருளியல் விளக்கத்தைக் கண்டுபிடித்தார். அந்த நிலத்தை விவசாயத்துக்குத் தகுதியுடையதாகச் செய்வதற்காக அவர்கள் நெடுங்காலத்துக்கு முன்பு அதில் மூலதனத்தை முதலீடு செய்திருப்பதாக வைத்துக் கொள்ள வேண்டும். எனவே அவர்களுடைய ”நில முன்பணம்” என்று சொல்லப்படுகின்ற செலவுக்குத் தரப்படுகின்ற நியாயமான வட்டியே நில வாரம் என்று கருத வேண்டும். இதைக் கெனே உண்மையிலே நம்பினாரா என்பதைச் சொல்வது கடினம். எப்படி இருந்தாலும் நிலப்பிரபுக்கள் இல்லாத விவசாயத்தை அவரால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.

இரண்டாவது கேள்விக்குப் பதில் இதைக் காட்டிலும் சுலபமாக அவருக்குத் தோன்றியது. இந்த உபரியைக் கொடுத்தது பூமி, இயற்கை. எனவே அதே இயற்கையான வழியில் அது நிலத்தின் உடைமையாளரைச் சேருகிறது.

மாதிரிப் படம்

உற்பத்திப் பொருளிலிருந்து உற்பத்தியின் எல்லாச் செலவுகளையும் கழித்த பிறகு கிடைக்கும் உபரியை கெனே நிகரப் பொருள் என்று குறிப்பிட்டார்; அதன் உற்பத்தி, வினியோகம், செலாவணி ஆகியவற்றை அவர் ஆராய்ந்தார். பிஸியோகிராட்டுகளின் நிகரப் பொருள் என்பது உபரிப் பொருளுக்கும் உபரி மதிப்புக்கும் அதிக நெருக்கமான மாதிரிப் படிவமாகும்; ஆனால் அவர்கள் அதை நிலக் குத்தகையோடு நிறுத்திக் கொண்டார்கள், அது பூமியிலிருந்து கிடைக்கும் இயற்கையான பலன் என்றும் கருதினார்கள். எனினும் அவர்கள் ”உபரி மதிப்பின் தோற்றுவாய் பற்றிய ஆராய்ச்சியை செலாவணியின் வட்டத்திலிருந்து நேரடியான உற்பத்தியின் வட்டத்துக்கு மாற்றினார்கள், அதன் மூலம் முதலாளித்துவ உற்பத்தியைப் பற்றிய ஆராய்ச்சிக்கு அடிப்படையைப் போட்டார்கள்”.(1) அவர்கள் செய்த மாபெரும் சேவை இது.

கெனேயும் பிஸியோகிராட்டுகளும் உபரி மதிப்பை விவசாயத்தில் மட்டுமே கண்டுபிடித்தது ஏன்?

அங்கே அதன் உற்பத்தி, ஒதுக்கீட்டின் நிகழ்வுப் போக்கு மிகவும் வெளிப்படையானதாகும். தொழில் துறையில் இதைக் கண்டுபிடிப்பது ஒப்பிட முடியாத அளவுக்கு அதிகக் கடினமாகும். ஒரு தொழிலாளி ஒரு குறிப்பிட்ட கால அளவில் தன்னுடைய சொந்த வாழ்க்கைக்கு அவசியமானவற்றின் விலையைக் காட்டிலும் அதிகமான மதிப்பைப் படைக்கிறான் என்பது இங்கேயுள்ள முக்கியமான உண்மையாகும். ஆனால் ஒரு தொழிலாளி தன்னுடைய நுகர்வுக்குத் தேவையான பண்டங்களிலிருந்து அதிகமாக வேறுபட்ட பண்டங்களை உற்பத்தி செய்கிறான்.

அவன் வாழ்க்கை முழுவதிலும் திருகாணிகளையும் பூட்டுகளையும் செய்யலாம்; ஆனால் அவன் பெரும்பாலும் ரொட்டியும் எப்பொழுதாவது இறைச்சியும் சாப்பிடுகிறான், ஒயின் அல்லது பீர் குடிப்பதும் உண்டு. இதிலடங்கியிருக்கின்ற உபரி மதிப்பைக் கண்டுபிடிப்பதற்குத் திருகாணிகளையும் பூட்டுகளையும் ரொட்டியையும் ஒயினையும் ஒரு பொதுவான தொகுதியில் வகைப்படுத்துவதற்குத் தெரிந்திருக்க வேண்டும். அதாவது பண்டங்களின் மதிப்பு பற்றிய கருதுகோளைப் பெற்றிருக்க வேண்டும். கெனேயிடம் இந்தக் கருதுகோள் இருக்கவில்லை. மேலும் அவருக்கு அதைப் பற்றி அக்கறையும் இல்லை.

படிக்க :
♦ அயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து !
♦ அமெரிக்க இளம் தலைமுறையிடம் வளரும் சோசலிச ஆதரவு !

விவசாயத்தில் உபரி மதிப்பு என்பது இயற்கை கொடுக்கும் அன்புப் பரிசாகத் தோன்றுகிறதே தவிர கூலி கொடுக்கப்படாத மனித உழைப்பின் பலனாகத் தோன்றவில்லை. அந்த உபரிப் பொருள் இயற்கை வடிவத்திலேயே நேரடியாக இருக்கிறது. குறிப்பாக தானியத்தில் இதை நன்றாகப் பார்க்கலாம். கெனே தன்னுடைய பொருளாதார மாதிரிக்கு ஏழைக் கூலி விவசாயியை எடுத்துக் கொள்ளவில்லை. உழவு மாடுகள், மிகச் சாதாரணமான உழவுக் கருவிகள் ஆகியவற்றைச் சொந்தமாக வைத்துக் கொண்டிருப்பதோடு கூலி உழைப்பையும் உபயோகிக்கின்ற அவருக்குப் பிரியமான குத்தகை விவசாயியை எடுத்துக் கொண்டார்.

இந்த வகையைச் சேர்ந்த விவசாயியின் பொருளாதாரத்தைப் பற்றிய சிந்தனைகள் கெனேயை மூலதனத்தைப் பற்றி ஒரு விதத்தில் ஆராய்வதற்கு இட்டுச் சென்றன; எனினும் அந்த வார்த்தையை அவருடைய எழுத்துக்களில் நாம் பார்க்க முடியாது. உதாரணமாக, வாய்க்கால், கட்டிடம், குதிரைகள், ஏர்க்கருவிகள், பரம்புக் கட்டை ஆகியவற்றுக்காகச் செய்யப்படும் செலவு ஒரு வகையான முன்பணம் என்றும் விதைகள், பண்ணையாளுக்குச் செய்யப்படும் செலவு வேறு வகையான முன்பணம் என்பதையும் அவர் புரிந்து கொண்டிருந்தார்.

முதல் வகையில் சில வருடங்களுக்கு ஒரு முறை மொத்தமாகச் செலவழிக்கப்படுகிறது, பிறகு படிப்படியாக அந்தச் செலவு ஈடு செய்யப்படுகிறது. இரண்டாம் வகையில் வருடத்துக்கு ஒரு தடவை அல்லது வருடமுழுவதும் செலவு செய்யப்படுகிறது, அந்தச் செலவு ஒவ்வொரு அறுவடையின் போதும் ஈடு செய்யப்பட வேண்டும். ஆகவே கெனே முதல் மூலதனம் (இன்று நிலையான மூலதனம் என்று நாம் சொல்கிறோம்), வருடாந்தர மூலதனம் (இன்று செலாவணி மூலதனம்) என்பவற்றைப் பற்றிப் பேசுகிறார். ஆடம் ஸ்மித் இந்தக் கருத்துக்களை வளர்த்துச் சென்றார். இன்று இவை பொருளாதாரத்தின் மூலக் கருத்துக்களாகும்; ஆனால் அந்தக் காலத்தில் இந்த ஆராய்ச்சி மாபெரும் சாதனையாகும். மார்க்ஸ் தம்முடைய உபரி மதிப்புத் தத்துவங்கள் என்ற புத்தகத்தில் பிஸியோகிராட்டு களைப் பற்றிய ஆராய்ச்சியைப் பின்வரும் வாக்கியத்தோடு ஆரம்பிக்கிறார். ”முதலாளித்துவ வான எல்லைக்குள் மூலதனத்தைப் பற்றிய ஆராய்ச்சி முழுவதுமே பிஸியோகிராட்டுகள் செய்த பணியாகும். இந்த சேவையினால் தான் அவர்கள் நவீன அரசியல் பொருளாதாரத்தின் உண்மையான தந்தையர் என்று கருதப்படுகிறார்கள்.”(2)

இந்தக் கருதுகோள்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் கெனே மூலதனத்தின் செலாவணி மற்றும் புனருற்பத்தியைப் பற்றிய, அதாவது பகுத்தறிவுக்கு ஏற்ற வகையில் பொருளாதாரத்தை நிர்வாகம் செய்வதில் மிகவும் அதிகமான முக்கியத்துவத்தைக் கொண்ட உற்பத்தி, விற்பனை ஆகிய நிகழ்வுப் போக்குகள் தொடர்ச்சியாகப் புத்துருவம் பெறுவதையும் திரும்பத் திரும்ப நடைபெறுவதையும் பற்றிய ஆராய்ச்சியின் அடிப்படைகளை உருவாக்கினார். மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தில் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்ற புனருற்பத்தி என்ற சொல்லை முதன் முதலில் உபயோகித்ததே கெனே தான்.

கெனே தன் காலத்திய சமூகத்தின் வர்க்க அமைப்பைப் பின்வருமாறு வர்ணித்தார் : “நாட்டில் மூன்று வகைகளைச் சேர்ந்த குடிமக்கள் தான் இருக்கிறார்கள்: உற்பத்தி செய்கின்ற வர்க்கம், உடைமையாளர்களின் வர்க்கம் மற்றும் மலட்டு வர்க்கம்”.(3)

முதல் பார்வையில் இது விசித்திரமான பிரிவினையைப் போலத் தோன்றுகிறது. ஆனால் இது கெனேயின் போதனையிலிருந்து தர்க்கரீதியாகவே ஏற்படுகிறது; அந்தப் போதனையின் சிறப்பான அம்சங்கள், அதிலிருக்கும் குறைகள் ஆகிய இரண்டையுமே பிரதிபலிக்கிறது. உற்பத்தி செய்கின்ற வர்க்கம் என்பது நிலத்தில் பாடுபடுகின்ற விவசாயிகளே; அவர்கள் தங்களுக்கு உணவைத் தேடிக் கொண்டு மூலதனச் செலவை ஈடு செய்வதோடு மட்டுமல்லாமல், நிகரப் பொருளையும் படைக்கிறார்கள். உடைமையாளர்களின் வர்க்கம் என்பது நிகரப் பொருளை அடைகின்ற வர்க்கமாகிய நில உடைமையாளர்கள், அரசவை, திருச்சபை ஆகியோர்; அவர்களுடைய பணியாட்களும் இதில் அடங்கு கிறார்கள். கடைசியாக மலட்டுத்தனமான வர்க்கம் என்பது மற்ற எல்லோருமே, அதாவது கெனேயின் வார்த்தைகளில் ”விவசாயத்தைத் தவிர மற்ற காரியங்களிலும் மற்ற சேவைகளிலும் ஈடுபட்டிருக்கின்ற” எல்லோருமேதான்.

படிக்க :
♦ இந்தியாவில் அமேசான் நம்பர் 1 ஆனது எப்படி ? ஐரோப்பிய தொழிலாளியைக் கேளுங்கள் !
♦ கம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் ? கேள்வி – பதில்

மலட்டுத்தனம் என்ற வார்த்தையைக் கெனே எத்தகைய பொருளில் உபயோகித்தார்? அவர் கைவினைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களை – நில உடைமையாளர்களுக்கு மாறான அர்த்தத்தில் மலட்டுத்தனமானவர்களென்று கருதினார். இவர்களும் உழைக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய உழைப்பு நிலத்தோடு சம்பந்தமில்லாததாகும். அதன் மூலம் அவர்கள் எவ்வளவு நுகர்வு செய்கின்றார்களோ அவ்வளவு உற்பத்தி செய்கின்றார்கள்; அவர்களுடைய உற்பத்தி என்பது விவசாயத்தின் மூலம் படைக்கப்படுகின்ற பொருளின் இயற்கையான வடிவத்தை மாற்றிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கிறது. மற்ற இரண்டு வர்க்கங்களும் எப்படியோ ஒரு வழியில் இவர்களுக்குக் கூலி கொடுப்பதாக கெனே கருதினார். நில உடைமையாளர்கள் உழைப்பதில்லை; ஆனால் சமூகத்தின் செல்வத்தை அதிகரிக்கச் செய்யும் சக்தியுள்ளதாக கெனே கருதிய ஒரே உற்பத்திக் காரணியாகிய நிலத்தின் உடைமையாளர்களாக இருக்கிறார்கள். நிகரப் பொருளை ஒதுக்கிக் கொள்வதுதான் அவர்கள் செய்யும் சமூகக் கடமை.

கெனேயின் பகுப்பு முறையில் அதிகமான குறைகள் உள்ளன; அவர் தொழிற்சாலைகளிலும் விவசாயத்திலுமுள்ள தொழிலாளர்களையும் முதலாளிகளையும் ஒரே பிரிவிலே வைக்கிறார் என்பதை மட்டும் இங்கே குறிப்பிடுவதே போதும். இது மோசமான தவறாகும், டியுர்கோ ஓரளவுக்கு இதைத் திருத்தினார்; ஸ்மித் இதை முழுமையாகவே நிராகரித்தார்.

அல்லது முக்கியத்துவத்தில் சிறிதும் குறையாத ஒரு சிறு விவரத்தை எடுத்துக் கொள்வோம். முதலாளி என்பவர் ஏதோ ஒரு வகையில் கூலியை மட்டுமே பெறுகிறார் என்றால் அவரிடம் மூலதனத் திரட்சி எப்படிக் கிடைக்கிறது? எதிலிருந்து கிடைக்கிறது?

ஜோசப் ஷம்பீட்டர்

கெனே இந்தப் பிரச்சினையை இப்படிச் சமாளிக்கிறார். நிகரப் பொருளிலிருந்து, அதாவது நில உடைமையாளரின் வருமானத்திலிருந்து கிடைக்கப் பெறுவது மட்டும் தான் முறையான, பொருளாதார ரீதியில் “நியாயமான” திரட்சி எனக் கூறுகிறார். தொழிலதிபரும் வணிகரும் தங்களுடைய ”கூலியிலிருந்து” எதையாவது பிரித்துக் கொள்வதன் மூலமே திரட்சியைச் செய்ய முடியும், இது முழுவதும் ”நியாயமான” வழி என்று சொல்ல முடியாது என்கிறார். முதலாளித்துவத் தவிர்ப்பின் காரணமாகவே மூலதனத் திரட்சி ஏற்படுகிறது என்ற முதலாளித்துவத்துக்கு ஆதரவான வாதம் இங்கேயிருந்து தான் தோன்றுகிறது. பொதுவாகச் சொல்வதென்றால் முதலாவதாகவும் முதன்மையாகவும் கெனே சமுதாயத்தில் வர்க்க ஒத்துழைப்பையே பார்த்தார். அவர் ”வர்க்க நலன்களின் பரந்துபட்ட இணக்கத்தை வலியுறுத்தியது அவரை 19-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட இணக்கவாதத்தின் (ஸேய், கேரி, பஸ்தியா) முன்னோடியாக்குகிறது”(4) என்று ஷம்பீட்டர் அவரைப் பற்றி எழுதியிருப்பது தற்செயலானதல்ல.

ஆனால் கெனேயின் போதனையை இப்படி வகைப்படுத்தி விட முடியாது. அதிலிருந்து எத்தகைய செய்முறை முடிவுகள் ஏற்படுகின்றன என்பதைக் காண்போம். பெரிய அளவுத் தொகுதிகளில் விவசாயத்தை நடத்துவதை சாத்தியமான எல்லா வழிகளிலும் ஊக்குவிக்க வேண்டும் என்பது அவருடைய முதல் சிபாரிசாக இருந்தது இயற்கையே.

எனினும் இதற்கு அடுத்தபடியாக அவர் தெரிவித்த இரண்டு சிபாரிசுகள் அந்தக் காலத்தில் அவ்வளவு சாதாரணமாகத் தோன்றவில்லை. நிகரப் பொருள் மீது மட்டுமே வரி விதிக்க வேண்டும், ஏனென்றால் அது ஒன்று மட்டும் தான் உண்மையான பொருளாதார ”உபரி” என்று கெனே கூறினார். மற்ற எல்லா வரிகளுமே பொருளாதாரத்தில் சுமைகளை ஏற்படுத்துகின்றன என்றார். நடைமுறையில் இதன் அர்த்தம் என்ன?

நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் அவர் எந்தப் பிரபுக்களின் மீது சமூகத்தின் முக்கியமான, கௌரவமான கடமைகளைச் சுமத்தினாரோ, அவர்களே எல்லா வரிகளையும் கட்ட வேண்டுமென்பதே இதன் அர்த்தமாகும். அன்றைய பிரான்சில் நிலைமை இதிலிருந்து முற்றிலும் மாறான விதத்தில் இருந்தது: அவர்கள் எந்த விதமான வரியையும் கட்டவில்லை. மேலும், தொழில் துறையும் வர்த்தகமும் ”விவசாயத்தினால்” காப்பாற்றப்படுவதனால், இவற்றை சாத்தியமான அளவுக்குச் சிக்கனமாகச் செய்யவேண்டும் என்றார். உற்பத்தி, வர்த்தகம் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள எல்லாவிதமான கட்டுப்பாடுகளையும் தடைகளையும் நீக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் குறைக்க வேண்டும் என்பது இதன் அர்த்தமாகும். பிஸியோகிராட்டுகள் சுதந்திர உற்பத்திக்கு ஆதரவாகப் பேசினார்கள்.

படிக்க :
♦ பொருளாதார நெருக்கடி : அபிஜித் பானர்ஜியிடம் நிரந்தரத் தீர்வு உண்டா ?
♦ புதிய தொடர் : பொருளாதாரம் கற்போம்

கெனேயின் போதனையின் முக்கியமான அம்சங்கள் இவை. பிஸியோகிராட்டிய மரபின் முக்கிய அம்சங்களும் இவையே. இவற்றில் பலவீனங்களும் குறைகளும் எவ்வளவு இருந்தாலும் அது உலகத்தைப் பற்றி ஒன்றிணைக்கப்பட்ட பொருளாதார, சமூகப் பார்வையைக் கொண்டிருந்தது, தத்துவத்திலும் நடைமுறையிலும் அதன் காலத்துக்கு முற்போக்கானதாக இருந்தது.

கெனேயின் கருத்துக்கள் பல சிறிய பிரசுரங்களிலும் அவருடைய மாணவர்களும் அவரைப் பின்பற்றியவர்களும் எழுதிய புத்தகங்களிலும் சிதறிக் கிடக்கின்றன. அவருடைய புத்தகங்கள், 1756-க்கும் 1768-க்கும் இடையில் பலவிதமான வடிவங்களில் பெரும்பாலும் ஆசிரியருடைய பெயர் இல்லாமல் வெளியிடப்பட்டன. சில புத்தகங்கள் வெளியிடப்படாமல் கையெழுத்துப் பிரதிகளாகவே இருந்துவிட்டன; 20-ம் நூற்றாண்டில் தான் இவற்றைக் கண்டுபிடித்து வெளியிட்டார்கள், கெனேயின் எழுத்துக்களை நவீன வாசகர் படித்துப் புரிந்து கொள்வது சுலபமல்ல; அவருடைய முக்கியமான கருத்துக்கள் சுமாரான அளவுள்ள ஒரு புத்தகத்தில் அடங்கியிருந்த போதிலும், அவை திரும்பத் திரும்ப வெவ்வேறு விதமான அழுத்தங்களோடும் மாற்றங்களோடும் எடுத்துச் சொல்லப்படுகின்ற காரணத்தால் அவற்றைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கின்றது.

1768-ம் வருடத்தில் கெனேயின் மாணவரான டுபோன் டெ நெமூர் ஒரு புதிய விஞ்ஞானத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்தப் புத்தகம் பிஸியோகிராட்டிய மரபினரது வளர்ச்சியைத் தொகுத்துக் கூறியது. இன்று அதன் தலைப்புக்கு நாம் தருகின்ற பொருள் விளக்கத்தை அவர் ஒருவேளை உத்தேசித்திருக்க முடியாது; ஆனால் அவர் சரியான தலைப்பையே உபயோகித்தார் என்பதை வரலாறு காட்டிவிட்டது. கெனேயின் புத்தகங்கள் ஒரு புதிய விஞ்ஞானத்தை அரசியல் பொருளாதாரத்தை அதன் மூலச் சிறப்புடைய பிரெஞ்சு வடிவத்தில் படைத்தன.

 

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1) K. Marx, Theories of Surplus-Value, Part I, p. 45.

(2) K. Marx, Theories of Surplus-Value, Part 1, p. 44.

(3) Francois Quesnay et la Physiocratie, Paris, 1958, t. II, p. 793.

(4) J. Schumpeter, History of Economic Analysis, p. 234. 

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

அயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து !

1

யோத்தியில் சர்ச்சையில் சிக்க வைக்கப்பட்ட நிலம் யாருக்குச் சொந்தமானது என்கிற வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். “மகிழ்ச்சியில்லை.. ஆனால் பதவி விலகிவிட்டோம்” என்பதே அவர்களுடைய முதன்மையான கருத்தாக உள்ளது. நாட்டின் உயர்ந்த நீதிமன்றம் தங்களை வீழ்த்திவிட்டதாக அவர்கள் உணர்கிறார்கள்.

“உச்சநீதிமன்றம் என்பது உச்சநீதிமன்றமே. அது தகுதியின் அடிப்படையில் மட்டுமே விசயங்களைப் பார்க்கும் என எதிர்ப்பார்த்தோம்” என்கிறார் மும்பையில் உள்ள மர்காசுல் மாரிஃப் கல்வி மற்றும் ஆய்வு மையத்தைச் சேர்ந்த மவுலானா பர்ஹானூதின் காஷ்மி. மதரசாவில் பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தகவல் தொடர்பு தொழிற்நுட்பத்தைக் கற்றுத்தருகிறது இந்த மையம்.

“முழுமையாக இந்தத் தீர்ப்பை படித்துவிட்டேன். நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவர்களுடைய முடிவு இருக்கிறது என்பது தெரிகிறது” என்கிற மவுலான, நீதிமன்றம் முசுலீம் தரப்பு அந்த நிலத்துக்கு சம உரிமையுள்ளது என்பதை நிரூபிக்கத் தவறிவிட்டது என கூறியதையும் நிர்மோகி அகோராவின் வழக்கையும் ஸ்ரீ ராம் பிறந்த இடம் என்ற சட்டக் கோரலையும் நிராகரித்துவிட்டதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

“இப்படிப்பட்ட சூழலில், ராம் லல்லாவை அங்கீகரித்து கோயில் கட்ட அனுமதி வழங்குகிறது நீதிமன்றம். இது நீதி அல்ல. இது ஒருவகையான நாட்டாமைத்தனம். பெரும்பான்மையினரின் உணர்வுகளை அங்கீகரிப்பதன் மூலம் சூழ்நிலையை குளிர்விக்கும் முயற்சி. உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இருப்பது உண்மைதான். அதை அவர்கள் செய்துமுடித்திருக்கிறார்கள். ஆனால், ஒரு எளிய இந்திய குடிமகனாகவும் முசுலீம் அறிஞராகவும் நான் மகிழ்ச்சி கொள்ளவில்லை” என்கிறார் மவுலானா.

“எங்கள் உரிமைகோரல்களை மெய்பிக்கத் தேவையான அனைத்து ஆவணங்களும் எங்களிடம் இருந்தன, அவை இந்து தரப்பிடம் இல்லை. ஆனாலும், எங்களுடைய கோரல் நிராகரிக்கப்பட்டது. அப்படியெனில் எதிர்காலத்தில், ஆவணங்களின் மதிப்பு என்னவாக இருக்கும்?” எனக் கேட்கிறார் தர் அல் காஸா என்ற அமைப்பின் உறுப்பினரான மவுலானா சோயேப் கோடி. நிலம் தொடர்பான வழக்கில் ஆவணங்கள்தான் முக்கியமான ஆதாரங்கள் எனவும் அவர் கேட்கிறார்.

அயோத்தி வேறு இடத்தில் ஐந்து ஏக்கர் நிலம் மசூதி கட்ட நிலம் ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

படிக்க:
ராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் !
♦ அயோத்தி: இராமன் தொடுத்த வழக்கு! குரங்கு எழுதிய தீர்ப்பு!! – தோழர் மருதையன்

இதுகுறித்து பேசும் அனைத்திந்திய தனிநபர் சட்ட வாரியத்தின் செயற்குழு உறுப்பினர் மவுலானா சயது அதிர் அலி, “கடவுள் அருளால், இந்தியாவின் எந்த இடத்திலும் மசூதி கட்டிக்கொள்ள எங்களால் முடியும். எங்களுக்கு பாபர் மசூதி இருந்த இடம் முக்கியமானது. ஷரியத்தில், மசூதி என்பது எப்போதும் மசூதிதான். அது ஒரு கட்டிடம் அல்ல, அது நிற்கும் இடம் முக்கியமானது. ஏனெனில், மற்ற கட்டிடங்களைப் போல, நினைத்த இடத்தில் மசூதியைக் கட்டிவிட முடியாது. அதற்கென விதிமுறைகள் உள்ளன. ஒருமுறை அங்கே மசூதி கட்டிவிட்டால், அது காலம் கடந்தும் நிற்கிறது. எங்களுக்கும்கூட அதைத் தரும் உரிமை இல்லை”. என்கிறார் அவர்.

பாபர் மசூதி இருந்த அந்தக் குறிப்பிட்ட நிலத்துக்கு அடியில் கோயில் இல்லை என தெளிவாக உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது என சுட்டிக்காட்டுகிற மவுலானா சயது, ஆனபோதும் கோயில் கட்ட அந்த இடத்தைக் கொடுத்திருக்கிறது என்கிறார்.

“கிராம பஞ்சாயத்துகளில்தான் நிலத்துக்குப் பதிலாக நிலம் வழங்குவது நடக்கும்; நாட்டின் உச்சநீதிமன்றத்தில் அல்ல. எந்த சூழ்நிலையிலும், வஃக்புக்கு சொந்தமான நிலத்தை மாற்றிக்கொள்ள முடியாது; கொடுக்கவும் இயலாது. எங்களிடமிருந்து யாராவது அதை பிடிங்கிக் கொள்வது வேறு விசயம். அயோத்தியில் எங்கோ ஒரு இடத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தைப் பெற 68 ஆண்டுகளாக நாங்கள் போராடவில்லை. உச்சநீதிமன்றம் இந்த நில வழக்கை அறம், ஆதாரங்கள் மற்றும் அரசியலமைப்பு கொள்கையின் அடிப்படையில் முடிவு செய்திருக்க வேண்டும்” என்கிற அவர்,

“ஒரு சொத்து தொடர்பான வழக்கில் ஒருவருக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வரும். மற்றவருக்கு எதிராக வரும். இயற்கையாக, யார் இழக்கிறார்களோ அவருக்கு வருத்தம் இருக்கும். யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் ‘இது யாருடைய வெற்றியும் அல்லது, யாருடைய தோல்வியும் அல்ல’ என கூறிக்கொள்வார்கள்.” என மோடி உள்பட பாஜக தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துகளை விமர்சித்தார் மவுலானா.

“ஆனால், நாங்கள் ஏற்கனவே தீர்ப்புக்கு முன்பே அறிவித்தபடி, அமைதியின் விருப்பத்தின்பேரில் இந்தத் தீர்ப்பை ஏற்கிறோம். மேலும், எங்குமே அசம்பாவிதங்கள் நடக்கவில்லை என்பதைப் பார்த்திருப்பீர்கள். இப்போது இந்த அமைதியைக் காப்பதில் அரசாங்கத்துக்கே பங்கிருக்கிறது” என்றார் அவர்.

அயோத்தி தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் மீது தங்களுக்கிருந்த நம்பிக்கையை தகர்த்திருப்பதை குறிப்பிடும் மவுலானா காசிம், “உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளும் தகுதியின் அடிப்படையில் அல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் ஒத்த முடிவை எடுத்திருக்கிறார்கள். இது எதைக் காட்டுகிறது? 1949 மற்றும் 1992 நடந்த குற்றங்கள் குறித்து நீங்கள் பேசுகிறீர்கள், ஆனால் தண்டனை குறித்து பேசவில்லை. நாங்கள் முகத்தில் அறையப்போட்டோம் என்பதை ஏற்றுக்கொள்கிற நீங்கள், எங்களுடைய கோரலை கருத்தில் கொள்ளவில்லை. இதை நாங்கள் உச்சநீதிமன்றத்திடமிருந்து எதிர்ப்பார்க்கவில்லை” என்கிறார்.

“2010-ஆம் ஆண்டும் மூன்றில் ஒரு பங்கு நிலத்தை பிரித்துக்கொள்ளலாம் என சொன்னபோதே, நீதிமன்றத்தின் மீதிருந்த எங்களுடைய நம்பிக்கை குலைந்துவிட்டது. இந்தத் தீர்ப்பு மூன்றில் ஒரு பங்கு நிலத்தைக்கூட எங்களுக்கு வழங்கவில்லை” என்கிறார் மவுலானா.

படிக்க:
சி.ஐ.ஏ. சதி : பொலிவியா அதிபர் எவோ மொராலெஸ் ராஜினாமா !
♦ ஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து !

“ஏற்கனவே ஜனநாயகத்தின் தூண்கள், ஊடகமானாலும் சரி, நிர்வாகம் ஆனாலும் சரி அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளன. நீதிமன்றம் மட்டுமே விட்டுவைக்கப்பட்டிருந்தது. இப்போது முக்கிய தலைவர்கள் தீர்ப்புக்கு முன்பே கொண்டாட வேண்டாம் என்றும் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியதிலிருந்து இந்தத் தீர்ப்பு அவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது” என்கிற அவர்,

“சரிதான், நாங்கள் முன்பே சொன்னதுபோல எதிர்ப்பு இல்லாமல் இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டோம். ஆனால், இந்த முழு உலகமும் முட்டாள்தனமானதா? சர்வதேச அளவில் இவர்கள் சொல்லியிருக்கும் செய்தி என்ன?” எனக் கேட்கிறார்.

“பெரும்பான்மையினர் தீர்ப்பு குறித்து மகிழ்கிறார்கள். இன்றைக்கு நாட்டில் உள்ள மனநிலை அது. இதுதான் நாடு சென்றுகொண்டிருக்கும் திசையாகும். இனி, நீண்ட காலம் இந்தப் பாதையில்தான் செல்லும்” என்கிறார் மவுலானா.

இந்துத்துவ கும்பல் தங்களுடைய வன்முறை வெறியாட்டங்கள் மூலம் முசுலீம்களை தீர்ப்பை ஏற்கும்படி ‘தயார்’ செய்து வைத்திருக்கிறது. சட்டம் இனி ஒருபோதும் இந்துவுக்கும் முஸ்லீமுக்கும் சமமாக இருக்கப்போவதில்லை என முசுலீம்கள் உணர்ந்திருக்கிறார்கள். அயோத்தி தீர்ப்பு அதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறது.


கலைமதி
நன்றி : ஃபர்ஸ்ட் போஸ்ட்