Sunday, June 28, 2026
முகப்பு பதிவு பக்கம் 352

நாட்டின் சக்திவாய்ந்த நபருக்கு எதிராக நின்றதுதான் சஞ்சீவ் பட் செய்த ஒரே குற்றம் !

1

காவி பயங்கரவாதிகள் 2002 -ல் குஜராத்தில் நடத்திய முசுலீம் இனப்படுகொலைக்கு அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடி தூண்டுதலாகவும் துணையாகவும் இருந்தார் என ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட், உச்சநீதிமன்றம் வரை சாட்சியளித்தார்.

ஏகபோகமாக பதவியில் அமர்ந்திருக்கும், குற்றச்சாட்டுக்கு ஆளான நபர்கள் சஞ்சீவ் பட்-ஐ பழிவாங்க, இது போதுமான காரணமாக இருக்கிறது. அரதப்பழசான ஒரு வழக்கு தூசித்தட்டப்பட்டு, அந்த வழக்கில் 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்றுவிட்டார் சஞ்சீவ் பட்.

அவருடைய நண்பரும் சமூக செயல்பாட்டாளருமான ஹர்ஸ் மந்திர், அரச அதிகாரத்துக்கு எதிராக எதிர்த்து நின்ற சஞ்சீவ் பட்டின் மன உறுதியை கடிதமாக எழுதியுள்ளார். அதன் தமிழாக்கம் இங்கே…

*****

அன்புள்ள சஞ்சீவ்,

ங்களிடம் இந்தக் கடிதம் படிக்கக் கொடுக்கப்படுமா, அப்படி கொடுக்கப்பட்டால் எப்போது கிடைக்கும் என்பது குறித்தெல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஈடில்லாத உங்களுடைய வாழ்க்கை இணையர் ஸ்வேதா பட் மூலம் இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைக்கலாம் என நினைக்கிறேன். ஆனால், இந்தக் கணத்தில் எதிர்த்து நிற்கவும் சமாளிக்கவும் ஏராளமான விசயங்கள் உள்ளன. எனவே, இந்தக் கடிதத்தில் இருக்கும் அற்பமான விசயங்களை அவர் மறக்கக்கூடும்.

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் அவருடைய குடும்பத்தாருடன். (கோப்புப் படம்)

இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைக்குமானால், ஜாம்நகர் மாவட்டத்தின் எங்கோ உள்ள கடுமையான சிறைக் கம்பிகளுக்கு பின்னால் நின்று தனிமையில் இந்தக் கடிதத்தை படிப்பதாக கற்பனை செய்கிறேன், துக்கம் கொள்கிறேன். என்னுடைய பல ஆண்டுகால ஆட்சிப்பணியில், இந்தியாவின் பல சிறைச்சாலைகளைக் கண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாக இருக்கும், தரையில் படுப்பது கடினமாக இருக்கும், நாற்றமடிக்கும் கழிப்பறையை பயன்படுத்த நேரிடும், ஈக்கள், கொசுக்கள் தொல்லை கொடுக்கும்… எனவே, சிறை என்பது எத்தகைய கடுமையானதாக இருக்கும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

நீங்கள் ஏற்கனவே ஒன்பது மாதங்கள் சிறையில் கழித்துவிட்டீர்கள். ஆனாலும், இது கடினமாகவே இருந்திருக்கும். உங்களுக்கு இன்னும் சில நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இருக்கலாம் – மாவட்ட அமர்வு நீதிமன்றம் அல்லது, அகமதாபாத் அல்லது டெல்லியில் உள்ள இந்தியாவில் உயரிய நீதிமன்றங்கள் உங்களுக்கு நீதியை வழங்கலாம்.

ஜாம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதற்கு எதிரான நிலைப்பாட்டை அவை எடுக்கக்கூடும். எப்படியாயினும் நீங்கள் மன உறுதி மிக்கவர், போராட்ட குணம் மிக்கவர் என்பதை நான் அறிவேன். நீதிக்காக நீங்கள் தொடர்ந்து போராடுவீர்கள், நீங்கள் அப்பாவி என்பதை நிரூபிக்க தொடர்ந்து போராடுவீர்கள். ஒரு நாள் சுதந்திரமாக வெளிவருவீர்கள்.

கடுமையான சிறையின் பின்னால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் உங்களுக்கு, இந்தியாவில் சிறந்த மனிதர்கள், உலகம் முழுமைக்கும் உள்ளவர்கள் உங்களுக்கு ஆதரவாக, உங்களுடைய வாழ்க்கையின் கடினமான போராட்டத்தில் ஆதரவாக நிற்கிறார்கள் என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் அப்பாவி என்பதை நாங்கள் நம்புகிறோம். இந்த நாட்டின் சக்திவாய்ந்த ஒரு நபருக்கு எதிராக சாட்சி சொன்ன தைரியத்தின் காரணமாக நீங்கள் இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதையும் அறிவோம். இந்திய சுதந்திரத்துக்குப் பின் 2002 -ல் நடந்த மிகக் கொடூரமான படுகொலைகளில் அந்த நபருக்கும் இருந்த தொடர்பை நீங்கள் வெளிக்கொண்டுவந்தீர்கள்.

படிக்க:
பாஜக : ஞானஸ்நானத்துக்கு தயாராகும் சாத்தான்கள் | வில்லவன்
♦ சொராபுதீன் என்கவுண்டர் : 22 பேரும் விடுதலை ! நீதி தேவதைக்கு தூக்கு !

இந்த நாட்டின் முதலாவது, இரண்டாவது சக்தி வாய்ந்த நபர்களின் தீவிர கர்வத்தின் வெளிப்படையான விளைவுகளை நீங்கள் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். சிறிய விசயங்கள் பேரில் உங்களின் தைரியத்துக்கு எதிராக அரசு அதிகாரம் கட்டவிழ்த்துவிடப்படுகிறது. இந்தியாவில் அரசு அதிகாரத்தில் இருப்பவர்களின் தவறுகளை வெளிக்கொண்டு வந்ததால் உங்களைப் போல பாதிக்கப்பட்ட நபர் வேறு எவரும் இல்லை. உயர்ந்த அதிகாரம் கொண்ட அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் ஒருவரை எதிர்த்து குரல்கொடுத்ததற்காக முப்பது ஆண்டுகள் தனது வாழ்நாளை சிறையில் கழிக்க தண்டனை விதிக்கப்பெற்றவர் உங்களைத் தவிர எவரும் இல்லை.

இந்த வழியில் நீங்கள் தண்டிக்கப்படலாம் என்பது இந்தியாவின் குற்றவியல் நீதி – புலன்விசாரணை முகமைகள், நீதிமன்றங்கள் மற்றும் மனித உரிமை முகமைகளின் நேர்மை மற்றும் சுதந்திரத்தின் வீழ்ச்சியை கண்ணாடி போல காட்டுகிறது. நீங்கள் வீழ்த்தப்பட்டிருப்பது காக்கிச் சீருடையில் உள்ள உங்களுடைய சகோதர, சகோதரிகளை பெரிதும் புண்படுத்தும், உங்களுடைய ஆயுள் சிறை தண்டனைக்குப் பிறகு, அவர்கள் மவுனமாவார்கள்.

ஊடகங்களில் இதுகுறித்து எந்தவொரு குறிப்பிட்ட சீற்றமும் இல்லாதிருப்பது, அரச அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை அது வெளிப்படையாக எந்தவித கோபமோ எதிர்ப்போ இல்லாமல் வெளிப்படையாகவே பார்க்க விரும்புகிறது என்பதைத்தான் பிரதிபலிக்கிறது.

அரசு அமைப்புகளின் நிலைகுலைவு, UPSC போன்ற அரசியலமைப்பு அமைப்புகளும்கூட உங்கள் விசயத்தில் அவமானகரமாக காட்சியளிக்கின்றன. 2015 -ஆம் ஆண்டு நீங்கள் உங்களுடைய பணியிலிருந்து அனுமதி இல்லாமல் விடுப்பு எடுத்ததாகக்கூறி நீக்கப்பட்டபோது, அரசியலமைப்பின் 315 பிரிவு குடிமை பணி அதிகாரிகளின் சுதந்திரத்தை பாதுகாக்கிறது, அந்த அடிப்படையிலாவது UPSC பேசியிருக்கலாம். ஆனால், மவுனம் சாதித்தது அதை அப்போது எழுதினேன்.

பணிநீக்கம் என்பது ஒரு அதிகாரியைக் கையாளக்கூடிய மிகப் பெரிய நிர்வாக ரீதியிலான தண்டனையாகும். இது மிகவும் அரிதான வழக்குகளில் அரசு அதிகாரிகளின் கடுமையான குற்றங்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகும். ஆனால், UPSC உங்களிடம் உரிய விளக்கத்தைக்கூட பெறாமல், பணிநீக்கம் செய்தது. எனக்குத் தெரிந்த பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஆண்டுக்கணக்கில் அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்து, தனியார் நிறுவனங்களுக்காக பணியாற்றியவர்கள், தண்டனையிலிருந்து தப்பியுள்ளனர். அவர்கள், ஒருபோதும் பணியிலிருந்து நீக்கப்பட்டதில்லை.

நீங்கள் அனுமதியில்லாமல் விடுப்பு எடுத்தது உண்மைதான் எனில், எச்சரிக்கை கடிதமோ அல்லது விடுப்பு எடுத்த காலத்துக்கு சம்பள பிடித்தமோ, அந்தக் குற்றத்துக்கு ஏற்ற தண்டனையோ தரப்பட்டிருக்கலாம் என அப்போது நான் எழுதினேன்.

நாட்டின் உயர்ந்த இடத்தில் உள்ளவர்களால் நீங்கள் ஏன் பணியிலிருந்து நீக்கப்பட்டீர்கள் என்கிற மர்மத்தை, நீங்கள் அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்த நாட்களை எதற்காக பயன்படுத்தினீர்கள் என்பதிலிருந்து அறியலாம். குஜராத்திலிருந்து இந்திய போலீசு சேவை பணிக்கு வந்த நீங்கள், நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, படுகொலைகளை நடத்தியதில் உள்ள பங்கு குறித்து சாட்சியளித்தீர்கள்.

உச்சநீதிமன்றத்தின் சிறப்பு புலனாய்வு குழுவின் முன், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன் முன் சாட்சியமளித்தீர்கள். பின்பு இது எழுத்துப்பூர்வமாகவும் உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. சிறப்பு புலனாய்வு குழுவும் ராஜூ ராமச்சந்திரனும் ஜாக்கியா ஜஃப்ரி (குல்பர்க் சொசைட்டியில் 2002 மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட 70 பேரில் முன்னாள் எம்.பி. இஷான் ஜஃப்ரியும் ஒருவர். அவருடைய மனைவி ஜாக்கியா )அளித்த புகாரை விசாரித்தனர். ஜாக்கியா ஜஃப்ரி, குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி முதல் குற்றவாளி என்றும், வெளிப்படையாகவும்; வேண்டுமென்றும், உயிர்களை – உடைமைகளை காக்கத்தவறியவர் என்றும்; தன்னுடைய அரசியலமைப்பு கடமையை ஆற்றத்தவறியவர் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

உங்களை பணிநீக்கம் செய்தது அனுமானிக்க முடியாதததாக இருந்தது, அதிர்ச்சியளித்தது. ஆனால், அவர்கள் உங்களுக்கு மோசமானதைச் செய்தார்கள் என நாங்கள் நினைத்தோம். அதையும் காட்டிலும் மோசமான விளைவு உங்களுக்கு வரும் என எதிர்ப்பார்க்கவில்லை. நீங்கள் வாழ்நாள் வரை சிறையில் கழிக்கும் தண்டனை பெறும்வரை அவர்கள் ஓயப்போவதில்லை என நினைக்கவில்லை.

சுதந்திர இந்தியாவின் மிக முக்கியமான வகுப்புவாத படுகொலையில் நீங்கள் ஒரு சாட்சியாக வலிமையான மற்றும் அச்சுறுத்தலாக இருக்கிறீர்கள் என்பதையே உங்கள் தண்டனை பிரதிபலிக்கிறது. நீங்கள் வெளிக்கொண்டுவந்த ஆதாரங்கள் எவ்வளவு ஆபத்தானவை. உங்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் எந்தவொரு நபரும் சக்திவாய்ந்த நபர்களுக்கு எதிராக வாள் சுழற்றினால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு செய்தியை சொல்ல விரும்பினார்கள். மூத்த காவல்துறை அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண குடிமகனின் நிலைமை என்னவாகும்?

2002- ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி மோடி தலைமையில் நள்ளிரவில் நடந்த சர்ச்சைக்குரிய அந்தக் கூட்டத்தில் போலீசு அதிகாரிகளும் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் அப்போது என்ன பேசப்பட்டது என நினைவில்லை என்றும் மோடி என்ன அறிவுறுத்தல்களை கொடுத்தார் என்பது குறித்தோ தெரியவில்லை என கூறினார்கள். நீங்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனவும் கூறினார்கள். ஆனால், உங்களுடைய ஓட்டுநரும், பிபிசி செய்தியாளரும் இந்தக் கூட்டத்துக்கு நீங்கள் செல்லும் முன் உங்களிடமிருந்து விடைப்பெற்றார்கள், அவர்கள் நீங்கள் கூட்டத்தில் கலந்துகொண்டதை உறுதி படுத்தினார்கள்.

படிக்க:
குஜராத் கலவரத்தில் மோடிதான் குற்றவாளி – விசாரணைக்கு வருகிறது வழக்கு !
♦ ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை ! பழிவாங்கும் மோடி அரசு !

மூத்த அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மோடி சொன்ன அறிவுறுத்தல்கள் குறித்து பேசினால் என்ன நடக்கும் என்பதுகுறித்து நீங்கள் அறிவீர்கள். ஆனாலும் நீங்கள் பேசத் துணிந்தீர்கள். உயர்ந்த மன உறுதியுடன் என்ன சொல்ல வேண்டுமோ, என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தீர்கள்.

நீங்கள் சிறப்பு புலனாய்வு குழுவிடமும் உச்சநீதிமன்றத்திடமும் “இந்துக்கள் மிக மிக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பதாகவும், அவர்கள் கோபத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டியது அவசியம் என்றும் மோடி பேசினார்” எனத் தெரிவித்தீர்கள். இந்துக்களின் ஆத்திரம் – கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் போது மோடி வெளிப்படுத்திய கருத்து இது.

“குஜராத்தில் வகுப்புவாத கலவரங்களின் போது, குஜராத் போலீசு இந்துக்கள் மற்றும் முசுலீம்களை சமநிலையில் அணுகும் போக்கை கடைப்பிடித்து வந்திருக்கிறது. இந்த சூழ்நிலை, முசுலீம்களுக்கு பாடம் கற்பிக்க தகுந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, அதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காது” என மோடி மீது குற்றச்சாட்டுகளை வைத்தீர்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் ஏற்கப்பட்டிருந்தால் மோடி மீது கிரிமினல் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டிருகும்.

உங்களுடன் பணிபுரிந்த சிறப்பு புலனாய்வு அதிகாரிகள், சக போலீசு அதிகாரிகள் உங்களுடைய குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார்கள். நீங்கள் சொல்வதற்கு ஆதாரம் இல்லை எனவும் அந்தக் கூட்டத்தில் நீங்கள் கலந்துகொள்ளவே இல்லை எனவும் அவர்கள் கூறினர். புலனாய்வு குழு நிராகரித்த உங்களுடைய குற்றச்சாட்டின் மீது, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன், உங்களுடைய வார்த்தைகள் சட்டத்தின் முன் நிரூபிக்கப்பட வேண்டும் என சொன்னார். அவருடைய கருத்து ஏற்கப்பட்டிருந்தால் இந்தியாவின் வரலாறும் உங்களுடைய தலைவிதியும் மாறியிருக்கும்.

நரேந்திர மோடி பிரதமரான பிறகு சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் ஓய்வுக்குப் பிறகு மதிப்பிற்குரிய போலீசு அதிகாரி பதவியைப் பெற்றார். நீங்கள் வாழ்நாள் சிறைவாசத்தை பெற்றிருக்கிறீர்கள். இரண்டும் எதிர்பாராதவை.

நாட்டின் மிக சக்தி வாய்ந்த இடத்தில் இருக்கும் நபருக்கு இந்தக் காரணங்களே உங்களைப் பழிவாங்கப் போதுமானவை. ஆனால், இந்திய அமைப்புகள் சிறு குற்றங்களுக்கு பழிவாங்கும் வகையில் அரச அதிகாரத்தால் பயன்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தடுப்பு காவலில் வைத்திருந்த ஒருவர் இறந்துவிட்ட வழக்கில் நீங்கள் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, உங்களுக்கு ஆதரவாக பேசுவதை எதிர்த்து எவரேனும் வழக்கு தொடுக்கலாம்.

படிக்க:
நரவேட்டை மோடியை எதிர்த்து நிற்கும் சஞ்சீவ் பட்’டை ஆதரிப்போம்!
♦ மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம் !

குடிமைப் பணியில் என்னுடைய பல வருடங்களை கழித்த நான், தடுப்பு காவல் வன்முறைகள் மற்றும் நீதிக்கு அப்பாற்பட்ட கொலைகளை எதிர்த்தே வந்திருக்கிறேன். எப்படியாயினும் 2001 – 2016 வரை குஜராத்தில் 180 தடுப்பு காவல் மரணங்கள் நடந்திருப்பதாக தேசிய குற்ற பதிவு பணியகம் தெரிவிக்கிறது. ஆனால், ஒரே ஒரு காவல் அதிகாரிகூட இந்த மரணங்களுக்காக தண்டிக்கப்பட்டதில்லை. உங்களுக்கு எதிரான நடவடிக்கையை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

தடுப்பு காவல் மரணங்களில் எத்தனை விசாரிக்கப்பட்டிருக்கின்றன, எத்தனை போலீசு அதிகாரிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்? அப்படி நடந்திருந்தால் உங்கள் மீதான நடவடிக்கையையும் நான் ஆதரித்திருப்பேன். ஆனால், தடுப்பு காவலிலிருந்து விடுதலையான 30 நாட்களுக்குப் பிறகு, இறந்த ஒருவருக்காக நீங்களும் மற்றொரு போலீசு அதிகாரியும் மட்டும் தண்டனை பெற்றிருக்கிறீர்கள்.

சுதந்திர இந்தியா கண்ட மிக சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவருக்கு எதிராக, மிகக் கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளை எழுப்பிய உங்களின் மன தைரியத்தை இந்தியாவில் உள்ள ஏராளமான மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பது உங்களுடைய கடுமையான சிறை வாழ்க்கையை ஒருபோதும் குறைத்துவிடாது. எனக்குத் தெரியும், உங்களுக்கும் தெரியும், ஸ்வேதா, உங்களுடைய குழந்தைகளுக்கும் தெரியும் நீதிக்காக போராட்டம் நீண்டது, எதிர்பாராது, ஏராளமான ஏமாற்றங்களாலும் நிரம்பியது.

ஆனால், நீங்கள் உண்மை, நீதி என நம்புகிற ஒன்றுக்காக தொடர்ந்து உறுதியுடன் போராடுவீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். மேலும், ஒரு நாள்… ஒரு நாள் நிச்சயமாக நீங்கள் சுதந்திரமாக நடப்பீர்கள். ஸ்வேதாவுடனும் உங்கள் குழந்தைகளுடனும், நாட்டின் பெருந்திரளான ஆண்கள் பெண்களுடனும் நடப்பீர்கள். அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன்.


தமிழாக்கம் : அனிதா
செய்தி ஆதாரம்: த வயர். 

பாஜக : ஞானஸ்நானத்துக்கு தயாராகும் சாத்தான்கள் | வில்லவன்

48

வில்லவன்
பாஜக வட்டாரத்தில் சில மாற்றங்களை நீங்கள் அவதானித்திருக்கக்கூடும். இதுவரை மன்மோகன் சிங்கை முடிந்தவரைக்கும் அவமரியாதை செய்தது பாஜக, இப்போது ‘நிம்மி’ திடீரென அவரை சந்தித்து பேசுகிறார்.

முஸ்லீம்களின் ரத்தத்தை எரிபொருளாக பயன்படுத்தி இயங்கும் கட்சியின் பிரதமர் தன் கட்சிக்காரனின் ரவுடியிசத்தை கட்சி கூட்டத்தில் கண்டித்ததாக செய்தி வருகிறது. எழுபது ஆண்டுகளில் செய்ய முடியாததை எங்களால் ஐந்து ஆண்டுகளில் செய்ய முடியாது என நாடாளுமன்றத்தில் சொல்கிறார் மோடி. நாம் எல்லோரும் சேர்த்து நாட்டை உயரத்துக்கு கொண்டு செல்லலாம் என மற்ற கட்சிகளை முதல் முறையாக அழைக்கிறார். வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்பது எல்லோருடைய கடமை என்பதாக இருந்தது மோடியின் சமீப உரை ஒன்று.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன் “மத்திய அரசால் மட்டுமே எல்லாவற்றையும் செய்ய இயலாது” என மறைமுகமாக சொல்லிவிட்டார் (மாநில அரசுகளும் இணைந்து பணியாற்றினால்தான் முடியுமாம்). போன முறை ஆட்சிக்கு வந்தபோது பொங்கிப் பிரவாகம் எடுத்த எந்த சவடால்களும் இப்போது இல்லை. மயிலை மாமாக்களும்கூட ஜென் நிலையை பராமரிக்கிறார்கள். அடிமட்ட சங்கிப் பொறுக்கிகள் மட்டும்தான் ஜெய்ஸ்ரீராம் கொலைகளையும் தாக்குதல்களையும் செய்கிறார்கள். மேல்மட்டம் கொஞ்சம் உறைநிலையில் இருப்பதை கவனித்தீர்களா?

முன்பைவிட பெரிய வெற்றி, பாஜகவின் ஆளுகையின் கீழ் வராத அமைப்புக்களே இன்று இல்லை. ஓரிரு ஆண்டுகளில் மேலவையிலும் பெரும்பான்மை கிடைக்கவிருக்கிறது. எதிர்கட்சிகள் எல்லாமே தோல்வி மனோபாவத்திற்கு சென்றுவிட்டன. இன்று பாஜகவுக்கு கண்ணுக்கெட்டிய தூரம்வரை அரசாங்கத்திலும் அரசியலிலும் எதிரிகளே இல்லை. ஆனாலும் இந்த அமைதியும் பொறுப்புத்துறப்பும் நிகழ என்ன காரணம்?

இனி பாஜக சண்டையிடப்போவது இந்திய பொருளாதாரத்தோடும் அதன் வழியே மக்களோடும்தான். போலியான ஜிடிபி கணக்கீட்டின் மூலம் சொல்லிக்கொள்ளும்படியான எண்களை மத்திய அரசு காட்டிவிட்டது. ஆனால் அது பொய்தான் என முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் இந்தியாவின் நிஜ பகவான் அமெரிக்காவிடம் ஒப்புக்கொண்டுவிட்டார்.

படிக்க:
தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி : மோடி வித்தைகள் பலிக்காது !
இந்திய நாடு, அடி(மை) மாடு !

35,000 கோடி மதிப்புள்ள கார்களும் 17,000 கோடி மதிப்புள்ள இருசக்கர வாகனங்களும் இந்திய சந்தையில் விற்பனையாகாமல் தேங்கி நிற்கின்றன. வண்டிகளை நிறுத்த இடமில்லாமல் நிறுவனங்கள் லே-ஆஃப் கொடுக்க தயாராகிறது. ஆட்டோமொபைல் உதிரிபாக தொழிற்சாலைகளுக்கு ஆர்டர்கள் வருவது குறைந்திருக்கிறது. சூரத், திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் வீழ்ந்துகொண்டிருக்கின்றன. ஏற்றுமதி சரிந்திருக்கிறது. மூன்று முறை வட்டிவிகிதம் குறைக்கப்பட்டும் பொருளாதாரம் மோசமாகவே இருப்பதை ரிசர்வ் வங்கி கவர்னர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தைக்காட்டிலும் குறைவாகவே பெய்யும் என வானிலை முன்னறிவிப்புக்கள் சொல்கின்றன. வேலைவாய்ப்பின்மை உச்சத்தில் இருக்கிறது. சீனா, ஆசிய பசிபிக் நாடுகளைக் காட்டிலும் அது குறைவுதான் என அரசு சொல்கிறது.

ஊடகங்கள் ஒழுங்காக வேலை செய்தால் இன்னும் மோசமான தரவுகள் வெளிவரக்கூடும். இவை எதுவும் சரியாவதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை. ஐ.எல்.எஃப்.எஸ் எனும் இந்திய பெரு நிறுவனம் செத்துவிட்டது. பி.எஸ்.என்.எல், ஓ.என்.ஜி.சி வரிசையில் நிற்கிறது. பட்டியலில் எல்.ஐ.சியும் சேர்ந்துவிட்டால் சொந்தக்காரர்களுக்கு சொல்லியனுப்பிவிடலாம். பொருளாதார நெருக்கடி உச்சகட்ட வீக்கத்தில் இருக்கிறது. கச்சா எண்ணை விலை ஏறுவது அல்லது பருவமழை பொய்ப்பது போன்ற எது நிகழ்ந்தாலும் வீக்கம் வெடிப்பது உறுதி.

ஆகவே கிளுகிளுப்பூட்டும் வாக்குறுதிகளோ, தற்காலிக சமாதானங்களோ பாஜக தரப்பில் இருந்து வர வாய்ப்பில்லை. எதிர்முனையில் நிற்கும் பெரு முதலாளிகள் எரியும் வீட்டில் பிடுங்கும் முனைப்பில் இருக்கிறார்கள். அவர்களுக்குள் சண்டை வராமல் பிரித்துக்கொடுக்கும் வேலை ஒரு கூடுதல் தலைவலியாக மோடிக்கு இருக்கும்.

படிக்க:
மோடியின் வெற்றிக்கு அடிகோலிய அரசியல் பாமரத்தனம் !
♦ ஐந்து மாதங்களாக சம்பளம் தராமல் வஞ்சிக்கப்படும் பி.எஸ்.என்.எல். ஒப்பந்தத் தொழிலாளர்கள் !

அடிப்படைவாதத்துக்குக்கு பலியாகும் மக்கள்திரள், செய்திகளை தேடிப்போகாமல் வாட்சாப் தகவல்களால் சுயஇன்பம் காணும் இளைஞர்கள், எல்லா பிரச்சினைகளுக்கும் பக்தியின் வழியே தீர்வை கண்டடைய முனையும் மிடில்கிளால் இவை எல்லாம் சேர்த்து இந்த பிரச்சினைகள் பூதாகரமாகாமல் தடுக்கின்றன.

போதிய வருமானம் இல்லாமல் கடன் தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் இல்லாத நாளே இல்லை. இதைவிட வலுவான ஒரு எச்சரிக்கை நம் நாட்டுக்கு இருக்க முடியாது. ஆனாலும் அடுத்தவர்களைப் பற்றி கவலைப்பட முடியாத அளவுக்கு துரத்தும் வாழ்வியல் நெருக்கடியும் அடுத்தவன் பிரச்சினை பற்றி எனக்கு கவலையில்லை எனும் சுயநலமும் இந்த செய்திகளை கவனத்துக்கு வராமல் செய்கின்றன.

தாராளமயம் எல்லாவற்றையும் தனிநபர் பிரச்சினையாக பார்க்க கற்றுக்கொடுத்திருக்கிறது. மதமோ அது உன் தலையெழுத்து, பூஜை செய்து நிவாரணம் தேடு அல்லது சொர்கத்தில் கூலியை வாங்கிக்கொள் என சமாதானம் சொல்கிறது. ஆனால் சோத்துக்கு சண்டை போடும் காலம் வந்தால் இது எதுவும் அரசை காப்பாற்றாது.

இந்த கள எதார்த்தமும் அவை எதையும் சரிசெய்ய வாய்ப்பற்ற கையாலாகத்தனமுமே பாஜக தரப்பை அடக்கி வாசிக்க வைக்கிறது. இந்த பட்ஜெட்டின் பெரும் சவாலாக இருப்பது யாரிடம் இருந்து பிடுங்கி பற்றாக்குறையை சமாளிப்பது என்பதுதான். அதனால்தான் அவர்கள் தமது திமிர் பிடித்த பொறுக்கி முகத்தை மறைத்துக்கொண்டு விக்ரமன் பட நாயகனைப்போல வேதாந்தம் பேசும் சாந்த முகத்தை காட்ட முற்படுகிறார்கள்.

அவர்கள் காட்டும் முகம் எதுவானாலும் சரி, உங்களுக்கு அதனால் எதுவும் ஆகப்போவதில்லை. பொருளாதார சுயமைதுனங்கள் அதன் வேலிடிட்டியை இழந்துவிட்டது. இனி இந்த நாடு ஒரு கறைவை நின்றுபோகப்போகும் மாடு. அடிமாடு என்றாலும் முதலாளிகள் அதனை கசாப்புக்கு அனுப்பி லாபம் பார்க்க முடியும். அதன் வலியும் சுமையும் விடியப்போவது நமது பிள்ளைகள் தலையில்தான்.

ஜெய்ஸ்ரீராம் சொல்லச்சொல்லி கொல்லப்படுபவனும் நாமும் கிட்டட்டத்தட்ட ஒன்றுதான். இன்னும் சொல்வதானால் நம் நிலைமை இன்னும் மோசம், காரணம் நாம்தான் நம் பிள்ளைகள் அழிவை நேரில் காணப்போகும் தலைமுறை.

போலோ ஜெய் ஸ்ரீ ராம்…

வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

சென்னையில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் மிகக் கடுமையான வறட்சி நிலை !

1

சென்னையின் தண்ணீர் பிரச்சினை குறித்து தேசிய ஊடகங்கள் கடந்த வாரம் திடீர் அக்கறை கொண்டன. ‘ஒரு நகரம் வறண்டு போனது’, ‘மனிதர் ஏற்படுத்திய நெருக்கடி’, ‘21 நகரங்களில் வறண்டு போன நிலத்தடி நீர்’, ‘துளியும் இல்லை; சொட்டும் இல்லை’, ‘தானாக உருவாக்கிக்கொண்ட நீர் பற்றாக்குறை’ என விதவிதமான தலைப்புகளில் சென்னையில் தண்ணீர் பிரச்சினை அலசப்பட்டது. பிபிசி -யில் வந்த செய்தியின் அடிப்படையில் ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டி காப்ரியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தென்னிந்திய நகரமான சென்னையின் தண்ணீர் பிரச்சினைக்கு கவலை தெரிவித்திருந்தார்.

சென்னை நகர மக்கள் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை அனுபவிக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வறட்சிக்குரிய அறிகுறிகள் சென்னையில் மட்டுமல்ல, தென் இந்தியாவின் பல பகுதிகளில் காண முடிந்தது.

இந்திய வானிலை ஆய்வுத் துறை ‘2018 -ல் இந்திய பருவநிலை குறித்த அறிக்கை’யை ஜனவரி 16-ஆம் தேதி வெளியிட்டது. அக்டோபர் – டிசம்பரில் பெய்த வடகிழக்கு பருவ மழையின் அளவு சராசரிக்கும் கீழே பதிவாகியிருந்ததை சுட்டிக்காட்டியிருந்தது அந்த அறிக்கை. அதாவது நீண்ட கால சராசரியான 56% மழை மட்டுமே பதிவானதாக அறிக்கை கூறியது. 1901 -ஆம் ஆண்டிலிருந்து மழை குறைவாக பெய்த ஆண்டுகளில் இந்த பருவம் ஆறாவது இடத்தில் இருந்தது.

கேரளாவைத் தவிர, தென்னிந்தியாவின் மற்ற நான்கு துணை வானிலை ஆய்வு மையங்களான கடலோர ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு கர்நாடகாவின் உள்பகுதி ஆகியவை குறைந்த மழையளவையே பதிவு செய்ததாக இந்திய ஆய்வு மையம் கூறியது.

ஆண்டின் தொடக்கத்திலேயே சென்னைக்கு நீராதாரமாக விளங்கும் நான்கு நீர் தேக்கங்களான செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம், சோழாவரம் ஆகியவை முற்றிலுமாக வறண்டன. குடிநீர் விநியோகம் குறைக்கப்பட்டது.

படிக்க:
நூல் அறிமுகம் : உலகமயமாக்கலும் தமிழக விவசாயிகள் மீதான தாக்குதலும்
♦ காவிக் கும்பல் வன்முறைகளுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் !

நாட்டின் பெரும்பாலான இடங்களில் தென்கிழக்கு பருவமழை வேகமெடுக்கத் தொடங்கிய நிலையிலும் சென்னையிலும், சில தென்னிந்திய பகுதிகளும் தண்ணீர் பிரச்சினை குறைந்தபாடில்லை. ஏனெனில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை (அக்டோபர் – டிசம்பர்), தென்கிழக்கு பருவமழை (ஜூன் – செப்டம்பர்) இரண்டுமே சரியான மழை பொழிவை இந்தப் பகுதிகளில் கொடுக்கவில்லை.

உதாரணத்துக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி துணை வானிலை ஆய்வு பிரிவில், வடகிழக்கு பருவமழையில் வருடாந்திர மழை பொழிவில் 50% மட்டுமே பெற்றதாக பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழையே ஆண்டின் தண்ணீர் தேவையை தீர்த்து வைக்கும் மழையை அள்ளித்தருவதாகும். அதற்கு இன்னும் மூன்று மாத காலம் உள்ளது.

ஆனால், நாம் சென்னையைக் கடந்து பார்த்தால் நாடு முழுவதும் தண்ணீர் பிரச்சினை உள்ளதைப் பார்க்க முடிகிறது. காந்திநகர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் பராமரிக்கும் தெற்காசிய வறட்சி கண்காணிப்பகம், நாட்டின் 44% இடங்களில் வறட்சியை ஒத்த நிலை இருப்பதாகக் கூறுகிறது. 17% க்கும் அதிகமான இடங்கள் கடுமையான வறட்சியை சந்தித்துள்ளன. இவற்றில் சில பகுதிகளில் சராசரியான பருவமழையைப் பெற்றாலும்கூட வறட்சியிலிருந்து அவற்றால் மீள முடியாது என்கிறது வறட்சி கண்காணிப்பகம்.

கடந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழையும் தென்மேற்கு பருவமழையும் சராசரிக்கு கீழாகவே பெய்தன. அதனால்தான் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. இந்த வறட்சி நிலையை இந்த ஆண்டு பருவமழைக்கு முன்னதாக மார்ச் – மே மாதங்களில் பெய்த மிகக்குறைந்த மழையளவு (மைனஸ் 24%) மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி ஆரம்பிக்கும் தென்கிழக்கு பருவமழை இந்த ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி கேரளாவில் தொடங்கியது. எனவே, பருவமழை முன்னேற்றமும் மெதுவாக உள்ளது. 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் தாமதமாக மும்பையில் பருவமழை ஜூன் 25-ஆம் தேதி வந்தது.

ஜூன் 26-ஆம் தேதி கணக்கின்படி, 36 வானிலை துணை ஆய்வு பிரிவுகளில் 31 மையங்கள் பற்றாக்குறை மற்றும் பெரிய அளவிலான பற்றாக்குறை மழையளவை பதிவு செய்தன. இதுவரை தென்கிழக்கு பருவமழையின் அளவு மைனஸ் 36% அளவில் குறைவாக பதிவாகியுள்ளது.

தண்ணீர் சேமிப்பை கண்காணிக்கும் மத்திய தண்ணீர் ஆணையத்தின்படி, நாட்டின் 91 நீர்த்தேக்கங்களில் 27.265 பில்லியன் ச.மீ. அளவிலான தண்ணீர் மட்டுமே உள்ளது. அதாவது நீர்தேக்கங்களில் முழு கொள்ளளவில் 17% மட்டுமே நீர் உள்ளது. கடந்த ஆண்டு 29.699 பில்லியன் ச.மீ. நீரளவு இருந்தது.

வறட்சி பாதித்த மாவட்டங்களில் விவசாயிகள் காரீஃப் விதைப்பு தாமதமான நிலையில் செய்வதறியாதது உள்ளனர். ஆனால், வறட்சி முன்னறிப்பு இல்லாமல் வரவில்லை. அக்டோர்பர் 2018 -லேயே மகாராஷ்டிர அரசு பல தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. அதிகாரப்பூர்வமாக 151 தாலுக்காக்களைச் சேர்ந்த 28,524 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 358 தாலுக்காக்களைக் கொண்ட மகாராஷ்டிராவில், 42% பகுதி வறட்சி பாதிப்புக்கு ஆளானது.

ஜூன் 26 நிலவரப்படி மகாராஷ்டிராவில் உள்ள அணைகளில் 5.96 % மட்டுமே தண்ணீர் உள்ளது. அவுரங்காபாத் பிரிவில் இந்த நிலைமை மிக மோசமான கட்டத்தில் உள்ளது. வறட்சி பாதிப்புக்கான மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள இதில், 0.47% தண்ணீர் மட்டுமே உள்ளது. அவுரங்காபாத்தில் ஒன்பது அணைகளில் ஏழு அணைகள் வறண்டு விட்டன.

கர்நாடக மாநிலம் முன் அனுமானிக்கமுடியாத சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறது. 24 மாவட்டங்களில் உள்ள 100 தாலுக்காக்கள் வறட்சியை சந்தித்துத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த மாநிலம் ரூ. 16,500 கோடி அளவிலான நட்டத்தை சந்தித்துள்ளது.

கடந்த நவம்பரில் ஜார்க்கண்ட் அரசு, 18 மாவட்டங்களில் உள்ள 126 தொகுதிகள் வறட்சி தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாகக்கூறி நிவாரணமாக ரூ. 8.16 பில்லியனை மத்திய அரசிடமிருந்து பெற்றது. ஜார்க்கண்டில் 24 மாவட்டங்களில் 260 தொகுதிகள் உள்ளன. அதாவது, மாநிலத்தின் பாதி பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஒரு மாதம் கழித்து, குஜராத் அரசு, 51 தாலுக்காக்களில் உள்ள 3,367 கிராமங்கள் வறட்சி தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதாக அறிவித்தது. பீகார், ஆந்திரம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தன.

ஆண்டின் தொடக்கத்தில் மத்திய அரசு, ரூ. 6,680 கோடியை வறட்சி நிவாரணமாக மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு நிதியை அளித்தது. இதில் பெரும்பகுதியை ரூ. 4700 கோடியை மகாராஷ்டிரம் பெற்றது. கர்நாடகத்துக்கு ரூ. 950 கோடியும் ஆந்திராவுக்கு ரூ. 900 கோடியும் குஜராத்துக்கு ரூ. 130 கோடியும் நிதி உதவி வழங்கியது மத்திய அரசு.

வறட்சி கடுமையாக இருக்க பருவமழை பொய்த்தது மட்டுமல்ல, தவறான நிலத்தடி நீர் மேலாண்மையும் முக்கிய காரணம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 1970 -களில் எதிர்கொண்ட கடுமையான வறட்சி காலத்திலும்கூட இத்தகைய நிலமையை சந்தித்ததில்லை என்கிறார்கள் மராத்வாடா பகுதி மக்கள். வானத்திலிருந்து நீர்த்துளிகள் விழவில்லை என்றபோதும், நிலத்துக்கடியிலிருக்கும் நீர் குறைந்ததில்லை என்கிறார்கள் அவர்கள்.

படிக்க:
வரலாறு காணாத வறட்சி – ஆயிரக்கணக்கான கிராமங்கள் காலியாகின்றன !
♦ மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம் !

இப்போது, மராத்வாடா பகுதிகளில் ஆயிரம் அடிக்கீழேயும் நிலத்தடி நீர் இல்லை. பல கிராமங்கள் வெறுச்சோடிக் கிடக்கின்றன. தண்ணீர் இல்லாத காரணத்தால் மக்கள் தங்களுடைய வீடுகளைப் பூட்டிவிட்டு, வேறு இடம் தேடி சென்றுவிட்டார்கள்.

நாடு முழுவதும் வறட்சி கடுமையடைந்து வந்த சூழ்நிலையில், அதை எதிர்கொள்ள தென்மேற்கு பருவமழையின் முடிவில் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை. கடந்த ஆண்டின் வடகிழக்கு பருவமழை காலத்தின் முடிவில் நாட்டின் பாதிப் பகுதி வறட்சியை நோக்கிச் சென்றது. இருக்கும் நீர் ஆதாரங்களை மேலாண்மை செய்திருந்தால் இத்தகைய மோசமான தண்ணீர் பிரச்சினையை எதிர்கொண்டிருப்பது தவிர்க்கப்பட்டிருக்கும்.

இப்போது அனைவருடைய கவனமும் தாமதமானாலும் தென்மேற்கு பருவமழையையே நம்பியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு துறை மே 31, விடுத்த வானிலை அறிக்கையில் சராசரியான மழைபொழிவை எதிர்ப்பார்க்கலாம் என தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை காலம் நடந்துகொண்டிருக்கிறது. நாடு, மைனஸ் 36% குறைந்த மழைபொழிவையே பெற்றிருக்கிறது. இனி மழை பெய்ய ஆரம்பித்தாலும் விதைப்புப் பருவம் தப்பிவிட்ட நிலையில் தென் மாவட்டங்களில் வேளாண்மை பாதிப்புக்குள்ளாகும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டின் சராசரிக்கும் குறைவான பருவ மழை பொழிவும், இந்த ஆண்டின் வறட்சி பாதிப்பும், அரசும் – மக்களும் ஒன்றிணைந்து பருவ மழையின் ஒவ்வொரு துளியையும் பாதுக்காக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியிருக்கின்றன.


கட்டுரை: நிதி ஜம்வால்
கலைமதி
செய்தி ஆதாரம்: த வயர். 

வாசகர் புகைப்படம் : பொன்னம்மா ஆயா – ஆப்பக் கடை !

வாசகர் புகைப்படம் : பொன்னம்மா ஆயா – 10 ரூபாய்க்கு ஆறு ஆப்பம், 5 ரூபாய்க்கு ஆறு இட்லி !

ய்யம்பேட்டை கிராமம் ராஜீவ் காந்தி நகர். அங்கே ஆப்பக்கார ஆயாக் கடை; பொன்னம்மா ஆயா ஆப்பம் சுடுறதுல ஸ்பெஷலிஸ்ட். ரேஷன் அரிசி. கொஞ்சோண்டு வெல்லம். சுள்ளி அடுப்பு. இரும்பு கடாய் இத வெச்சிக்கினு அந்த நகரையே ஆப்பத்துக்கு அடிமையாக்கியது ஆயாவின் கடை. பத்து வருசமா ஒரு ஆப்பத்தோட விலை 2 ரூபா தான். 10 ரூபாய்க்கு ஆப்பம் வாங்குனா 6 ஆப்பம் தரும். இட்லியும் பத்து வருசமா 1 ரூபாதான் 5 ரூபாய்க்கு 6 இட்லி தரும்.

காலை 6 மணியிலருந்தே டிபன் ரெடியாயிடும். 10 மணி வரைக்கும் டிபன் இருக்கும். எந்த நேரமும் சாம்பாரும் இட்லியும் சூடாவே இருக்கும். காரணம் அடுப்பு எரிக்கும்போதே கனக்கும் நெருப்பை வெளியில் தள்ளி அந்த நெருப்பில சாம்பார் சட்டி வைக்கப்பட்டு இருக்கும். ஆப்பத்தை வடை போட்டு முடிச்ச சட்டியிலத்தான் போடும். வெல்ல ஆப்பம் அவ்வளவு சூப்பரா இருக்கும். முட்டை ஆப்பம் வேணும்னா முட்டைய நாமே வாங்கிக் கொடுத்துடணும்.

பாட்டியின் வேலை நம்மை பிரமிக்க வைக்கும். காலை 4 மணிக்கு எழுந்து ஆரம்பிக்கும் கடை மதியம் 12 மணி வரை ஓடும். பசியினு வர்ரவங்கள திருப்பி அனுப்பாது. தனக்குன்னு வச்சிருக்கும் மாவில் தோசை ஊத்திக்கொடுத்தாவது பசி போக்கும்.

மதியம் 2 மணிக்கு மேல பக்கத்து ஏரிக்கரைக்கு கிளம்பிடும், தண்ணி வறண்ட ஏரியில சுள்ளி ஒடைச்சிட்டு வரும். அதையும், செம கட்டி தனி ஆளா தூக்கி வரும். எப்ப பார்த்தாலும் எதாவது ஒரு வேல செய்துட்டே இருக்கும். 4 மணிக்கு வீட்டுக்கு திரும்பும். இப்ப, ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடித்தான் கிரைண்டர் வாங்கிச்சு. அப்பக்கூட உரல்ல அரைக்கிற மாதிரியே கிரைண்டர் பக்கத்துலயே இருக்கும். போட்டுட்டு எட்ட வராது. ஏன்னுக்கேட்டா, மாவு இட்லிக்கும், ஆப்பத்துக்கும் எடுக்கணும், அந்த பதம் வரும்போது டக்கு எடுத்தாத்தான் சரியாயிருக்கும்னு சொல்லும் ஆப்பக்கார ஆயா.

பொன்னம்மா பாட்டியின் கடையில் பசியாறும் மழலைகள்.


காமாட்சி


வாசகர் புகைப்படம் பகுதிக்கு புகைப்படம் அனுப்பும் வாசகர்கள், vinavu@gmail.com வினவு மின்னஞ்சல் அல்லது வினவு வாட்ஸ்அப் எண்ணுக்கு (91) 97100 82506 உடன் அனுப்புங்கள். கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்!

தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி : மோடி வித்தைகள் பலிக்காது !

மோடி அரசை வீழ்த்தும் வலிமை எதிர்க்கட்சிகளுக்கோ, மக்கள் இயக்கங்களுக்கோ தற்போது இல்லை என்பது உண்மைதான். ஆனால், முற்றி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மோடி அரசு தப்பிக்க முடியாது. இது உலக முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடி. புதிய தாராளவாதக் கொள்கை எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி.

உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் வளர்ச்சி முடங்கி, அது முட்டுச்சந்துக்கு வந்திருக்கிறது. 70% உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி மந்தமடைந்துவிட்டதாக ஐ.எம்.எஃப். கூறியிருக்கிறது.

“2020-இல் உலகு தழுவிய பொருளாதாரத் தேக்கத்தை (Recession) நோக்கி நிலைமைகள் முற்றி வருகின்றன. ஆனால், 2008 நெருக்கடியின் போது இருந்ததைவிடக் கடன் பன்மடங்கு அதிகரித்து விட்டதால், முன்னர் அரசுத் தலையீட்டின் மூலம் நெருக்கடியைச் சமாளித்ததைப் போல இந்த முறை சமாளிக்க முடியாது. அரசுகளின் கைகள் கட்டப்பட்டிருக்கும். வரவிருக்கும் நெருக்கடி மிகவும் கடுமையானதாக இருக்கும். நெருக்கடி வெகு நாட்கள் நீடிக்கும்” என்று எச்சரித்திருக்கிறார் அமெரிக்க அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் நொரியேல் ரூபினி. இத்தகைய எச்சரிக்கையை உலகப் பொருளாதார மன்றமும் விடுத்திருக்கிறது.

உலகப் பொருளாதாரத்தின் தேக்கநிலை காரணமாக இந்தியா, சீனா போன்ற நாடுகளின் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்து, வளர்ச்சி விகிதமும் குறைந்திருக்கிறது. உலகம் முழுவதும் காப்புவாதம் அதிகரித்து வருகின்ற காரணத்தினால், ஏற்றுமதியைச் சார்ந்து இயங்கும் பொருளாதாரங்களான இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளின் வளர்ச்சி விகிதம் 4.6% ஆகக் குறையும் என்று கணிப்புகள் கூறுகின்றன.

தனியார்மயம் – தாராளமயம் 10 சதவீத மேல்தட்டு வர்க்கத்தினருக்காக உருவாக்கியிருக்கும் நுகர்வுப் பண்பாடு.

ஏற்றுமதி வீழ்ச்சியடைந்திருக்கிறது. இதனை ஈடுகட்டும் வகையில் உள்நாட்டுச் சந்தை விரிவடையவில்லை. விரிவடைய வாய்ப்பும் இல்லை. ஏனென்றால், புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் ஊக்குவித்து வளர்க்கப்பட்டுள்ள சந்தை என்பது மக்கட்தொகையின் மேல் மட்டத்திலுள்ள 10% பேரை மட்டுமே சார்ந்து இயங்கும் நுகர்பொருள் சந்தை. இது தேங்கி விட்டது. கார்கள், இருசக்கர வாகனங்களின் விற்பனை வீழ்ச்சியடைந்ததன் விளைவாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைக்கின்றன. மாருதி நிறுவனம் 30% உற்பத்தியை குறைத்திருக்கிறது.

சோப், பற்பசை போன்ற எளிய நுகர் பொருட்களின் விற்பனையே வீழ்ச்சியடைந்திருக்கிறது. அந்த அளவுக்கு மக்களுடைய வாங்கும் சக்தி குறைந்து வருகிறது. கிராமப்புற வறுமை தீவிரமடைந்திருக்கிறது. இதன் விளைவாக ஒரு இந்தியனின் சராசரி உணவு உட்கொள்ளும் அளவு ஆப்பிரிக்க சராசரியை விடவும், மிகவும் பின்தங்கிய நாடுகளின் சராசரியை விடவும் குறைவானதாக வீழ்ச்சியடைந்திருக்கிறது.

விவசாயத்தின் அழிவு கிராமப்புற வேலையின்மையைத் தோற்றுவித்து, நகரமயமாக்கத்தைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. நகர்ப்புற வேலையின்மையும் அதிகரித்திருக்கிறது. வேலைவாய்ப்பை உருவாக்குவது குறித்த தனது வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத மோடி, வேலையின்மை குறித்து தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நிறுவனம் வெளியிட்ட புள்ளி விவரத்தைத் தேர்தலுக்காக முடக்கி வைத்துவிட்டார்.

படிக்க :
♦ வேலை வாய்ப்பின்மை புள்ளி விவரத்தை மறைத்து மோடி அரசுக்கு ஜிஞ்சக்க போடும் தி இந்து !
♦ மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம் !

தேர்தல் வெற்றிக்குப் பிறகு வேறு வழியின்றி அது வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1% வேலையின்மை நிலவுவதாக அது கூறுகிறது. இது குறைவான மதிப்பீடு. இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் (CMIE) கணக்கீட்டின்படி ஏப்ரல் 2019-இல் வேலையின்மையின் அளவு 9.35% ஆகும். அதாவது 4.17 கோடிப் பேருக்கு வேலை இல்லை. இவர்களில் 1.1 கோடி பேர் பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்கள். 2.2 கோடிப் பேர் 10 முதல் 12 -ஆம் வகுப்பு வரை படித்தவர்கள்.

உள்நாட்டுச் சந்தை சார்ந்த தொழில்கள் வளர்ச்சியடைந்தாலொழிய, இவர்களுக்கு வேலை வழங்குவதற்கான வாய்ப்பே இல்லை. இதுதான் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் முதல் இன்றைய பிரதமரின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ரதின்ராய் வரையிலான அனைவரும் கூறும் கருத்து. உள்நாட்டுச் சந்தை விரிவடைந்தால்தான், அதனைச் சார்ந்த தொழில்கள் வளரும். 90% உள்ள பெரும்பான்மை மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்தால்தான் உள்நாட்டுச் சந்தை விரிவடையும். விவசாய வளர்ச்சியை உத்திரவாதப்படுத்துவது, உள்நாட்டுத் தொழில்களை ஊக்குவிப்பது, சுயசார்புப் பொருளாதாரம் ஆகியவையே இதற்கான தீர்வு.

ஆனால், அம்பானிகளையும் அதானிகளையும் கொழுக்க வைத்து, ஏழைகளைப் பரம ஏழைகளாக மாற்றி வரும் புதிய தாராளவாதக் கொள்கையின் கீழ் ஏழைகளின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதென்பது சாத்தியமற்றது. சர்வதேச நிதிமூலதனத்தின் அடிமையான மோடி அரசு சுயசார்பு பொருளாதாரத்தைக் கனவு காணவும் முடியாது.  90 -களில் அவ்வப்போது சுதேசி சவடால் அடித்து வந்த சுதேசி ஜாக்ரண் மஞ்ச் இன்று சத்தமில்லாமல் அடங்கிவிட்டது.

மிகவும் பலவீனமான பிரதமர்கள் என்று கருதப்பட்ட சந்திரசேகர், ஐ.கே.குஜ்ரால் போன்றவர்கள்கூட அமெரிக்காவைக் கண்டு இந்த அளவுக்கு தொடை நடுங்கியதில்லை.  வெனிசுவேலாவிலிருந்தும், இரானிலிருந்தும் எண்ணெய், எரிவாயு இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டுமென்று டிரம்ப் உத்தரவிட்டவுடனே, மறுபேச்சின்றி அதற்கு அடிபணிந்தார் மோடி.

வேலைவாய்ப்பை உருவாக்கித் தராத மோடி அரசையும், வேலைவாய்ப்பு குறித்த அவரது திமிர்ப் பேச்சையும் கண்டித்துப் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நடத்தியப் போராட்டம். (கோப்புப் படம்)

இரான் எண்ணெயை விட அதிகமான விலை கொடுத்து சவுதி மற்றும் அமெரிக்காவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்கிறது மோடி அரசு.  இதனைப் புதிய காலனியம் (Neo- Colonism) என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு கூறும் அளவுக்கு தேசத்தையும் தேசிய கவுரவத்தையும் அடகு வைக்கும் அடிமையாகவே மோடி அரசு நடந்து கொண்டிருக்கிறது.

டிரம்பின் மிரட்டலுக்குப் பயந்து, ஹார்லே டேவிட்சன் என்ற ஆடம்பர மோட்டார் சைக்கிளின் இறக்குமதி வரியை மோடி அரசு பாதியாகக் குறைத்தது. வாஷிங்டன் ஆப்பிள் முதல் அமெரிக்காவில் கழித்துக் கட்டப்படும் கோழிக்கால்கள் வரை அனைத்துக்கும் இறக்குமதி வரியைத் தள்ளுபடி செய்தது. இத்தனைக்குப் பிறகும் சில இந்தியப் பொருட்களுக்கு (தோல் பொருட்கள், ஆயத்த ஆடைகள் போன்றவை) அளிக்கப்பட்டு வந்த வரிவிலக்குகளை தற்போது டிரம்ப் அரசு ரத்து செய்துவிட்டது. இதனால் ஆயத்த ஆடை மற்றும் தோல் தொழில்கள்  பாதிக்கப்படுவதோடு, பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள் வேலையிழப்பர்.

தொழில் உற்பத்தித் துறையில் தானியங்கித் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை அறிவு ஆகியவற்றின் வளர்ச்சி காரணமாக உலகெங்குமே புதிய முதலீடுகள் வேலைவாய்ப்பை உருவாக்காத முதலீடுகளாகவே இருக்கின்றன. இதற்கு இந்தியா விதிவிலக்கல்ல. இந்தியத் தரகு முதலாளிகளும் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் முதலீடு செய்யவில்லை.

பெரும்பாலான இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் மீளமுடியாத கடனில் சிக்கியிருக்கின்றனர். இந்தியாவை விடச் சர்வதேச நிதிநிறுவனங்களில் வட்டி விகிதம் குறைவு என்பதால், இவர்களுடைய கடன்களில் கணிசமான பகுதி அந்நியக்கடன்களாக உள்ளன. உள்நாட்டில் மின்சாரம், சாலை மற்றும் டெலிகாம் நிறுவனங்கள் மட்டும் பொதுத்துறை வங்கிகளுக்கு 3 இலட்சம் கோடி கடன் பாக்கி வைத்துள்ளனர்.

வங்கி அல்லாத கடன் வழங்கும் நிறுவனமான ஐ.எல். அண்டு எஃப்.எஸ். நிறுவனம் திவாலானதைத் தொடர்ந்து நடைபெற்ற புலன் விசாரணையில், சுமார் 61,375 கோடி ரூபாயை 82 நிறுவனங்கள் விழுங்கியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

ஐ.எல். அண்டு எஃப்.எஸ். நிறுவனம் திவாலானதைத் தொடர்ந்து அதற்குக் கடன் கொடுத்திருந்த பொதுத்துறை வங்கிகள் நெருக்கடியில் சிக்கிக் கடன் வழங்குவதைச் சுருக்கிவிட்டன. இதன் காரணமாக ரியல் எஸ்டேட் முதல் நுகர்பொருள் கடன் வரையிலான அனைத்தும் முடங்கி விட்டன. இதனால் அந்தச் சந்தைகள் தேங்கியிருக்கின்றன. இந்த துறைகளின் வேலைவாய்ப்பும் வீழ்ச்சியடைந்துள்ளது.

சர்வதேசச் சந்தையின் தேக்கம் காரணமாகவும், அமெரிக்க அரசின் காப்புவாத நடவடிக்கைகள் காரணமாகவும் ஏற்றுமதி சுருங்கி விட்டது. உள்நாட்டுச் சந்தைதான் கதி என்ற போதிலும், அதனை உருவாக்கக்கூடிய முக்கியமான தொழிலான விவசாயம் நலிந்து விட்டது. சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களின் போது, ம.பி., இராஜஸ்தான், சட்டிஸ்கரில் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யப்போவதாக காங்கிரசு வாக்குறுதி அளித்தவுடன், அதனைக் கடுமையாகச் சாடினார் அன்றைய நிதியமைச்சர் ஜெட்லி.

நகர்ப்புறங்களில் தெருவோரங்களில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் உழைக்கும் மக்கள். தாராளமயம் உருவாக்கியிருக்கும் சமூக ஏற்றத்தாழ்வின் எடுத்துக்காட்டு.

தற்போது மோடி அரசு, 14 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் தருவதாக வாக்களித்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், வழக்கமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்களை மிகக் கடுமையாக எதிர்க்கின்ற இந்திய தரகு முதலாளிகளின் சங்கமான எஃப்.ஐ.சி.சி.ஐ., விவசாயிகளுக்கு ரூ.6000 கொடுக்க வேண்டும் என்பதைத் தனது கோரிக்கையாகவே முன்வைத்திருக்கிறது. ஏனென்றால், அந்த மானியத்தின் உண்மையான நோக்கம் தேங்கிக் கிடக்கும் நுகர்பொருள் சந்தையை உயிர்ப்பிப்பதுதான்.

இந்த 84,000 கோடியை எங்கிருந்து திரட்டுவது? இந்த நிதியைத் திரட்ட கார்ப்பரேட்டுகளுக்கு வரி விதிக்க முடியாது. அவர்கள் ஏற்கனவே கார்ப்பரேட் வரியைக் குறைக்க கோரி வருகிறார்கள். அப்படி வரி விதித்தாலும் அதனைச் சர்வதேச நிதிமூலதனம் ஒப்புக்கொள்ளாது.

84,000 கோடியைப் பற்றாக்குறை பட்ஜெட் மூலம் ஈடுகட்ட முயன்றால், பற்றாக்குறையின் அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4% -ஐத் தாண்டும். இதன் விளைவாக கடனைத் திருப்புவதற்கான இந்தியாவின் நம்பகத்தன்மையைச் சர்வதேசத் தர நிர்ணய நிறுவனங்கள் குறைத்து விடும். இந்த வழியையும் நிதி மூலதனம் ஏற்றுக் கொள்ளாது. எனவே, மக்களிடமிருந்துதான் இது வரியாக வசூலிக்கப்படும்.

படிக்க :
♦ பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் 7.34 இலட்சம் கோடி ரூபாய்
♦ மலை முழுங்கி கார்ப்பரேட் திருடர்களைக் காப்பாற்றும் ரிசர்வ் வங்கி !

கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது, இரானிடம் எண்ணெய் வாங்குவது தடுக்கப்பட்டு, சர்வதேச சந்தையில் அதிக விலை கொடுத்து எண்ணெய் வாங்கவேண்டியிருப்பது ஆகிய காரணங்களால் அந்நியச் செலாவணி இருப்பு குறையும். இதன் தொடர்ச்சியாக அந்நிய முதலீடுகளும் குறையத் தொடங்கும்.

வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டுமென்றால் நிலம், உழைப்பு, மூலதனம் ஆகியவற்றின் மீது இருக்கின்ற எஞ்சிய சட்டத் தளைகளை நீக்கவேண்டுமென்றும், பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க வேண்டுமென்றும் ஆளும் வர்க்கங்கள் கூறுகின்றன. அதை அப்படியே ஏற்றுக்கொண்டு அமல்படுத்துகிறது மோடி அரசு.

பதவியேற்ற முதல் நூறு நாட்களில், பொதுத்துறை நிறுவனங்களுக்குச் சொந்தமாக இருக்கும் நிலங்களை கையகப்படுத்தி, நில வங்கி ஒன்றை உருவாக்கி பன்னாட்டு முதலீட்டாளர்களுக்குத் தேவையான நிலத்தை வழங்கப்போவதாகவும், 42 பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதன் மூலம் சாலை முதலான உள் கட்டுமானங்களுக்கான நிதியைத் திரட்டப்போவதாகவும், ஏர் இந்தியா நிறுவனத்தில் அந்நிய முதலீட்டுக்கு இருக்கும் உச்ச வரம்பை அகற்றுவதன் மூலம் அந்நிறுவனத்தை விற்பனை செய்யப்போவதாகவும், தொழிலாளர் நலம் தொடர்பான 44 சட்டங்களை ரத்து செய்துவிட்டு, ஊதியம், தொழிலுறவு, சமூகப் பாதுகாப்பு, பணியிடப் பாதுகாப்பு என்ற நான்கு பிரிவுகளில் அடங்குமாறு அவை அனைத்தையும் மாற்றப்போவதாகவும் நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறியிருக்கிறார்.

ஹைட்ரோ கார்பன் திட்டம், எட்டு வழிச்சாலை, சாகர்மாலா திட்டம், தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழிப்பது, நிலம் கையகப்படுத்தும் சட்டம் போன்ற அடுத்தடுத்த தாக்குதல் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆளும் வர்க்கம் வைத்திருந்தவை. அவற்றை இப்போது  தீவிரமாக மோடி அரசு நடைமுறைப்படுத்தும்.

இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கோ, கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கோ மோடி அரசிடம் மட்டுமல்ல, புதிய தாராளவாதக் கொள்கையைப் பின்பற்றும் எந்தக் கட்சியிடமும் தீர்வு இல்லை.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காதது மட்டுமல்ல, இருக்கின்ற வாழ்வாதாரங்களையும் ஆளும் வர்க்கம் மக்களிடமிருந்து பறிக்கின்றது. இதனை மக்களிடம் நியாயப்படுத்த முடியாத நிலை வந்து விட்டது. இந்த நெருக்கடியைச் சமாளிக்கத்தான் வலதுசாரி பாசிச அரசியல் சக்திகள் உலகெங்கும் அரசியல் அரங்குக்கு வந்திருக்கின்றன. நமது நாட்டில் இது கார்ப்பரேட் பாசிசம்.

தொரட்டி
புதிய ஜனநாயகம் ஜூன் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

 

அரசுக்கும் பாசிஸ்டுக் கட்சிக்குமிடையிலான உறவு !

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 3 | பாகம் – 19

டோக்ளியாட்டி

பாசிஸ்டுக் கட்சியை ஓர் இயக்கம் என்ற கண்ணோட்டத்துடன் முசோலினி ஆரம்பத்தில் செயல்பட்டு வந்தார். கட்சிதான் தலையாயது, மற்றவை எல்லாம் அதற்குக் கீழ்ப்பட்டவைதான் என்பதுதான் இதற்குப் பொருள். இதுதான் முசோலினியின் ஆரம்பகாலக் கண்ணோட்டம். ஆனால் அகஸ்டியோவில் நடைபெற்ற காங்கிரசில் இந்தக் கண்ணோட்டம் கைவிடப்பட்டது.

இதன் பின்னர், இரண்டு நிலைப்பாடுகளை நீங்கள் தெளிவாகக் காணலாம்; கட்சிதான் யாவற்றுக்கும் மேலான சக்தி என்பது ஃபரினாஸ்ஸியும் ஏனைய குட்டி பூர்ஷுவா அணிகளும் மேற்கொண்ட நிலையாகும். கட்சியானது அரசுக்கு கீழ்ப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது தேசியக் கட்சியைச் சேர்ந்த பழைய கன்சர்வேடிவ் சக்திகளும், ஃபெதர்ஸோனி, ரோக்கோ போன்றோரும் எடுத்த இரண்டாவது நிலைப்பாடாகும். 1923 முதல் 1932 வரை இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கும் இடையே ஊசலாட்டங்கள் இருந்து வந்தன. இதன் இறுதி முடிவு என்ன? தேசிய பாசிஸ்டுக் கட்சியின் சட்டதிட்டங்களில் இதனை நீங்கள் காணலாம். முழுவிவரங்களையும் படிக்காமல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களை மட்டும் படித்தால் போதுமானது.

பிஎன்எப் அரசுக்கு சேவை செய்யும் ஒரு மக்கள் படை என்று முதலாவது விதி கூறுகிறது. இதன் பொருள் என்ன? பிஎன்எப் இனியும் ஒரு கட்சி அல்ல, அது ஒரு மக்கள் படை. அதுவும் அரசுக்கு சேவை செய்யும் படை என்பதே இதற்குப் பொருள். எனவே இதிலிருந்து அரசுதான் பிரதானம் என்பது தெள்ளத் தெளிவு.

கட்சிக்கும் அரசுக்கும் இடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டன. அரசின் உருவகமாக மாகாண ஆளுநரும், பாசிஸ்டுக் கட்சியின் உருவகமாக மாகாணக் கட்சி செயலாளரும் செயல்பட்டனர். 1923-ல் இந்தப் போராட்டம் முழு அமைப்பையுமே சீர்குலைத்துவிட்டது. அதிகாரவர்க்கத்தினர் மீது ஆதிக்கம் செலுத்த கட்சிச் செயலாளர் விரும்பினார். இந்த நெருக்கடிகளை மட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகள் கைக்கொள்ளப்பட்டன. பாசிஸ்டுகளை அதிகாரிகளாக நியமிப்பது போன்ற நடவடிக்கைகளை இவ்வகையில் குறிப்பிடலாம்.

இந்தப் போராட்டத்தில் மிகவும் முனைப்பான கட்டம் 1924 – 1925-ம் ஆண்டுகளில் ஏற்பட்டது. அச்சமயம் பாசிசம் தோல்வியின் விளிம்புக்கே வந்து விட்டது. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அது அதிகாரத்தை இழக்கப் போகும் நிலையில் இருந்தது. இச்சமயம் ஸ்தாபன அமைப்பில் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்பட்டது. கட்சியையும் அரசையும் இரண்டற ஒன்றாக்கும் திட்டம் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்படி நேர்ந்தது. பழைய அணிகள் கட்சிக்குத் திரும்பின. 1924-ல் ஃபரினாஸ்ஸி பாசிசத்தைக் காப்பற்றினார். 1924 ஜனவரி 3-ம்10 தேதி சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரை உட்பட அந்த ஆண்டில் முசோலினி தொடர்ந்து பல உணர்ச்சிகரமான, நாடி நரம்புகளை முறுக்கேறவைக்கும் உரைகளை நிகழ்த்தினார். எனினும் பழைய சித்தாந்த அடிப்படையிலும், கட்சியின் ஆரம்பகால வடிவங்களுக்குத் திரும்பும் வகையிலும் இத்தாலி முழுவதிலும் ஃபரினாஸ்ஸி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கவில்லை என்றால் முசோலினியின் உரைகளால் எந்தப் பலனும் கிட்டியிருக்காது.

பாசிஸ்டுக் கட்சி எவ்விதம் தனது செயல்முறைகளை மாற்றிக் கொண்டது என்பதையும், கட்சிக்கும் அரசுக்குமுள்ள உறவுகள் பிரச்சினையும், பாசிஸ்டுக் கட்சியின் மேலாதிக்க உரிமையை ஒழுங்கமைக்கும் பிரச்சினையும் எவ்வாறு சமாளிக்கப்பட்டன என்பதையும் பார்த்தோம்.

ஏற்கெனவே நாம் பார்த்தது போல் 1925-ம் வருடம் ஒரு முக்கியமான கட்டமாகும். அப்போது ஃபரினாஸ்ஸியாலும் பழைய கட்சி அணியினராலும் பாசிசம் காப்பாற்றப்பட்டது. இது முக்கியமான தகவலாகும். இதனை மனத்தில் இருத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் கூர்ந்து கவனித்தால், ஒரு தீவிர அரசியல் நெருக்கடி நிலைமை ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், வெகுஜன இயக்கங்கள் விரிவடையும் ஒவ்வொரு சமயத்திலும் உடனே பாசிசம் இவ்வகையான சூழ்ச்சிகளில் இறங்குகிறது என்பதைப் பார்க்கலாம்.

இவ்வாறுதான் 1932-1933-ல் இளைஞர் பிரச்சினை எழுந்தது. வெகுஜன இயக்கங்கள் வளர்ந்தன. நமது கம்யூனிஸ்டுக் கட்சியின் செல்வாக்கு அதிகரித்தது. அப்போது பாசிசம் தனது பழைய கட்சி அணிகளைத் திரும்ப அழைத்துக் கொண்டது.

படிக்க:
காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !
மகாராட்டிரா : விவசாயிகளின் மயான பூமி !

ஆனால், இன்று கட்சி அணிகள் பிரச்சினை, பாசிஸ்டுக் கட்சிக்கு 1924-ம் ஆண்டில் இருந்ததுபோல் இல்லை. முன்னர் போல் இனியும் அபாயகரமானதாக இல்லை. பாசிஸ்டுக் கட்சி பெரிதும் வலுவடைந்துள்ளது. அரசுடன் உறுதியாகப் பிணைக்கப்பட்டுள்ளது. பழைய குட்டிபூர்ஷுவா சித்தாந்தம் அடிப்படையில் ஒழித்துக் கட்டப்பட்டுவிட்டது. இன்று, பழைய கட்சி அணியினர் செல்லாக் காசுகளாகி விட்டனர். ஒரு பகுதியினர் தீர்த்துக்கட்டப்பட்டு விட்டனர். இன்னொரு பகுதியினர் வெஞ்சிறையில் தள்ளப்பட்டுவிட்டனர். குடி பெயர்ந்தோர் இடையிலிருந்து சில சமயங்களில் அவர்கள் ஆத்திரமூட்டுபவர்களாகத் தலைகாட்டுகின்றனர் அல்லது பாசிஸ்டுக் கட்சியால் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றனர். எனினும் முன்னர் போல் கட்சியின் கொள்கையை நிர்ணயிக்கும் அளவுக்கு அவர்கள் செல்வாக்கு பெற்றவர்களாக இல்லை. கட்சிக்கும் அரசுக்கும் இடையேயான உறவு பற்றிய விவாதம் முன்போல் எவ்வகையிலும் கூர்மையானதாகவோ, காரசாரமானதாகவோ இல்லை.

1932-ல் அங்கீகரிக்கப்பட்டு இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள திட்டம் நாட்டில் நடைமுறையில் தற்போது நிலவும் உறவுகளைப் பிரதிபலிக்கிறது. ஆனால், அதனைச் செயல்படுத்தும்போது பாசிஸ்டுக் கட்சிக்கு பல உள் நெருக்கடிகளைத் தோற்றுவிக்கிறது. அநேக மோதல்கள் நிகழ்கின்றன. பலர் தீர்த்துக்கட்டப்படுகின்றனர். பலரது பொறுப்புகள் மாற்றப்படுகின்றன.

இந்த மாற்றம் 1927-ல் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது எனக் கூறலாம். பூர்ஷுவாக்களின் தீர்மானமான சக்திகள் பாசிஸ்டுக் கட்சி அமைப்பின் பகுதியாக இருந்தன. ஊதியம் பெறும் ஊழியர்களும் அதிகாரிகளும் ஏற்கெனவே பாசிஸ்டுக் கட்சியில் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர். ஆலைத் தொழிலாளர்களும் பண்ணைத் தொழிலாளர்களும் இன்னமும் ஓரளவுக்குத்தான் பிரதிநிதித்துவம் பெற்றிருந்தனர். இது 1927-ம் ஆண்டில் இருந்த நிலைமை.

இவ்விதம், அரசுடன் பாசிஸ்டுக் கட்சிக்குள்ள உறவு குறித்த பிரச்சினை தீர்க்கப்படும் தருவாயிலிருந்தது. தீர்வு நோக்கி அது முன்னேறிக் கொண்டிருந்தது. பாசிஸ்டுக் கட்சியின் உள் கட்டமைப்பு மாற்றப்பட்டு வந்தது.

நடைமுறையில், பாசிஸ்டுக் கட்சி, ஒரு கட்சி என்ற நிலையைக் கைவிட்டுவிட்டது. இங்கு அதன் தருக்கரீதியான வளர்ச்சியை நீங்கள் காணலாம். அது ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்குப் படிப்படியாக மாறி உயர் மட்டத்தை அடைந்ததைப் பார்க்கலாம். பாசிஸ்டுக் கட்சி ஒரு கட்சியாக இருப்பதை நிறுத்திக் கொண்டது. அது குறித்த எல்லா விவாதமும் முடிவுக்கு வந்தது.

அரசியல் வாதங்கள் எதுவும் நடைபெறுவதில்லை. பாசிஸ்டுக் கட்சி தனது கொள்கையில் ஏதேனும் மாற்றம் செய்யும்போது, வேறு எந்தக் குடிமகனையும் போலவே அதன் உறுப்பினர்கள் இது குறித்த செய்தியைப் பத்திரிகைகளில்தான் படிக்கிறார்கள். கட்சியின் கொள்கையை வகுப்பதில் அவர்கள் எவ்வகையிலும் பங்கெடுத்துக் கொள்வதில்லை. உட்கட்சி ஜனநாயகம் என்பது அரிதினும் அரிதாகிவிட்டது. அதிகாரவர்க்க அடிப்படையில் கட்சி மேலிருந்து ஒழுங்கமைக்கப்படுகிறது.

உச்சியில் இயக்ககம் (Directorate) இருக்கிறது. இது பாசிசத்தின் மாமன்றத்தால் (Grand Council) தேர்ந்தெடுக்கப்படுகிறது. இத்தனைக்கும் இந்த மாமன்றம் என்பது ஒரு கட்சி அமைப்பல்ல; அரசாங்க அமைப்பு. இதில் கட்சி, அரசு, வங்கிகள், தொழில்துறை முதலியவற்றின் பிரதிநிதிகள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். பாசிசத்தின் இந்த மாமன்றம் பாசிசத்துடன் பிணைந்துள்ள இத்தாலியப் பூர்ஷுவா வர்க்கத்தின் தலையாய குழுக்களை ஸ்தாபனரீதியாக உருவகப்படுத்துகிறது எனலாம். இங்கிருந்துதான் இயக்கம் தனது அதிகாரத்தைப் பெறுகிறது. இயக்ககத்திலிருந்து அந்த அதிகாரம் உள்ளூர் இயக்ககங்களுக்கும் அடிமட்டத்திலுள்ள பாசிஸ்டு அமைப்புகளின் தலைவர்களுக்கும் பிரிந்து செல்லுகிறது.

(தொடரும்)

அடிக்குறிப்பு :

கியாசோமோ மாட்டியோட்டி (Giacomo Matteotti).

10. கியாசோமோ மாட்டியோட்டி (1885-1924) சீர்திருத்தவாத யூனிடரி சோஷலிஸ்டு கட்சியின் செயலாளர். அந்த ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் ஏற்பட்ட பலாத்காரத்தையும் தில்லுமுல்லுகளையும் கண்டித்து 1924 மே 30-ல் பிரிதிநிதிகள் சபையில் பேசியதற்காக ஜூன் 10-ம் தேதி ஒரு பாசிசக் கும்பலால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

மாட்டியோட்டியின் மறைவு – ஆகஸ்ட் மத்தியில் வரை அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை – நாடெங்கும் பலமான ஆத்திர அலையையும் கலகத்தையும் ஏற்படுத்திற்று. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தன; எதிர்க்கட்சிகளின் குழு அவென்டைனில் கூடியது. போர்க்குணம் படைத்த இத்தாலிய கம்யூனிஸ்டுக் கட்சி அப்போது ஆட்டம் கண்டு கொண்டிருந்த முசோலினியின் ஆட்சியைக் கவிழ்க்க பொதுஜனப் போராட்டத்திற்கும் பொது வேலை நிறுத்தத்திற்கும் அறைகூவல் விடுத்தது.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

நூல் அறிமுகம் : உலகமயமாக்கலும் தமிழக விவசாயிகள் மீதான தாக்குதலும்

வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு விலையில்லை; வருமானமில்லை; உண்ண உணவும், குடிக்க தண்ணீருமில்லாமல் ஏழை, மத்திய விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வு அஸ்தமித்துக் கொண்டுள்ளது. மொத்த சமூகத்திற்கு உணவு படைக்கும் உழவர் பெருமக்களின் பட்டினிச் சாவுகள் தற்கொலைகள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. இரண்டாம் உலக யுத்தத்தின் போதும், கொடுமையான வங்க பஞ்சத்தின்போதும் ஒரு கிராமப்புற மனிதனுக்கு கிடைத்த ஒரு நாள் சராசரி உணவு அளவைவிடவும், நடப்பு ஆண்டுகளில் குறைவான உணவு கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்திய விடுதலைக்குப் பின் கடந்த 10 ஆண்டுகளில்தான் முதன்முறையாக உணவுப் பொருள் உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது சாதாரண விஷயமல்ல…

தேசத்தின் இத்தகைய நிலைக்கு என்ன காரணம் என  விளக்கம் கேட்டால், ‘வானம் பொய்த்து, வரலாறு காணாத வறட்சி தாண்டவமாடுகிறது’ என மத்திய மாநில ஆட்சியாளர்கள் வாய்க்கூசாமல் சரடுவிடுகின்றனர். மொத்த நெருக்கடியும் வறட்சியால்தான் என முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கின்றனர். ஆனால், வறட்சிக்கு முந்தைய ஆண்டுகளிலும் இதே நிலைதான் நீடித்தது என்பதை முழுமையாக மறந்துவிடுகிறார்கள் அல்லது மறைத்துவிடுகிறார்கள்.

உலகமயம், தாராளமயம் என்பதே நமது ஆட்சியாளர்களின் தாரக மந்திரமாக இருந்து வருகிறது. உலக வங்கியும், உலக வர்த்தக நிறுவனமும் எழுதித் தயாரித்த இக்கொள்கைகளையே மத்திய அரசும் தமிழக அரசும் போட்டி போட்டுக்கொண்டு அமுலாக்குகின்றன…

கடந்த 10-க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக அமுலாக்கப்படும் இக்கொள்கைகளின் மோசமான விளைவுகளே இந்திய கிராமப்புற மக்கள் அனுபவிக்கும் வேதனைகளாகும். அடுத்தடுத்து வந்துள்ள வறட்சி இவ்வேதனைகளை மேலும் அதிகப்படுத்தியுள்ளது என்பதே உண்மை… (நூலின் முன்னுரையிலிருந்து…)

இந்தக் கொள்கையின் பிரதான அம்சங்கள் என்ன?

1. இடுபொருட்கள் விலையிலோ, விளைபொருட்கள் விலையிலோ அரசு தலையிடாது.
2. விவசாயத்துறையில் நீர்ப்பாசனம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு அரசு மூலதனம் படிப்படியாகக் குறைக்கப்படும்.
3. மின்சாரம், விதைகள், உரம், பூச்சி மருந்து ஆகிய எந்தப் பொருளுக்கும் அரசு மானியங்கள் அடியோடு ஒழிக்கப்படும் அல்லது பெருமளவு வெட்டப்படும்.
4. வெளிநாட்டுப் பொருட்களின் தங்கு தடையற்ற இறக்குமதி அனுமதிக்கப்படும்.

மத்திய பி.ஜே.பி. அரசு 2000-ம் ஆண்டிலும் 2001-ம் ஆண்டிலும், மொத்தம் 1429 பொருட்கள் எந்தத் தடையுமின்றி இறக்குமதி செய்யலாம் என்று சட்டம் இயற்றியது. இதில் 854 பொருட்கள் விவசாயம் சார்ந்த பொருட்கள். உலக வங்கி மற்றும் உலக வர்த்தக நிறுவன நிபந்தனைகளின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் இது. இதில் விஷேசம் என்னவென்றால் 2004-ம் ஆண்டுக்குள் இந்தத் தடைநீக்கம் அமலாக்கப்பட வேண்டும் என்பது நிபந்தனை. ஆனால், முன்கூட்டியே அமலாக்கி, தனது எஜமான விசுவாசத்தைக் காட்டி கொண்டது, மத்திய அரசு. இதன் விளைவு என்ன?… (நூலிலிருந்து பக்.12)

படிக்க :
விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ?
சிறப்புக் கட்டுரை : விவசாய நெருக்கடிக்குத் தீர்வு எந்தப் பாதையில் ?

சுருங்கச் சொன்னால், சோறு, குடிநீர், மின்சாரம், போக்குவரத்து ஆகிய அத்தியாவசியத் தேவை, எதுவாய் இருந்தாலும், அதனை அளிக்கும் பொறுப்பு அரசுக்கு இல்லை. அனைத்தையும் சந்தையே தீர்மானிக்கும். அந்த சந்தையின் விதிகளை உலகில் கொழுத்த நாடான அமெரிக்க ஏகாதிபத்தியம் தீர்மானிக்கும் என்பதுதான், உலகமயத்தின் உண்மையான பொருள்…

உலகமயமாக்கலின் நிபந்தனை அடிப்படையில் இந்திய அரசு, அத்தியாவசிய தேவைகள் உற்பத்தி மற்றும் விநியோகத்திலிருந்து சிறுக சிறுக சுழன்று கொண்டு வருகிறது என்று விவரங்கள் தெரிவிக்கின்றன…

இதே நிலைதான் விவசாயிகளுக்கு விவசாயத்திற்கென கொடுக்கப்பட்டு வந்த கடன் விசயத்திலும் தொடர்கிறது. அரசு வங்கிகள், மற்றும் கூட்டுறவு ஸ்தாபனங்கள் மூலம் இன்று விவசாயிகளின் கடன்களில் 25 சதமானமே அளிக்கப்படுகிறது. மீதம் 75 சதமானக் கடன் விவசாயிகள் தனியாரிடம், மற்றும் தனியார் நிறுவனங்களில்தான் பெறுகிறார்கள். இந்த கந்துவட்டிக் கடன்களுக்கு வசூலிக்கப்படும் பயங்கரமான வட்டி, சமீபத்தில் நாடு தழுவிய அளவில் நடைபெற்ற விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் என்கிறது. ஆந்திர விவசாயிகள் தற்கொலை பற்றி பரிசீலித்த ஆய்வறிக்கைகள். இந்த அரசுக் கடனும் கிராமப்புறத்தில் வலுத்தவர்களுக்கே பெரும்பாலும் கிடைக்கிறது என்பதும், ஏழை விவசாயிகளுக்கு  பெயரளவுக்கே கிடைக்கிறது என்கிற உண்மையும் கவனிக்கத்தக்கது…

மத்திய – மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளின் காரணமாக அதிகம் பாதிக்கப்படும் பகுதி விவசாயத் தொழிலாளர்கள் ஆகும். தலித், ஆதிவாசி மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதியில் இருந்துவரும் இந்தத் தொழிலாளர்களின் நிலை இன்று வாழ்வின் விளிம்பிற்கே சென்றுவிட்டது என்பது உண்மை. நிலம் மற்றும் ரேஷன் பிரச்சினைகளில் இவர்கள் எப்படி கடும் பாதிப்புக்குள்ளாக்கப்படுகிறார்கள் என்று பார்த்தோம் தவறான கொள்கைகளின் விளைவாக விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது…

குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லை; குந்துவதற்கு ஒழுகாத குடிசையில்லை; வியாதிக்கு மருந்தில்லை; குழந்தைகளுக்கு கல்வி இல்லை; என அனைத்து வகைகளிலும் நிராகரிக்கப்பட்ட இவர்களின் பலர் சாதீய ஒடுக்குமுறைக் கொடுமைகளிலும் தாக்கப்பட்டு, நிற்கும் கொடுமை கண்டு கொந்தளிக்காதவர்கள் மனிதர்களே இல்லை… (நூலிலிருந்து பக்.29-30)

நூல் : உலகமயமாக்கலும் தமிழக விவசாயிகள் மீதான தாக்குதலும்
ஆசிரியர் : கே. வரதராஜன்

வெளியீடு : தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,
தமிழ்நாடு மாநிலக் குழுவுடன் இணைந்து பாரதி புத்தகாலயம்,
2, குயவர் வீதி, ஜோன்ஸ் சாலை, சைதாப்பேட்டை, சென்னை – 600 015.
தொலைபேசி எண் : 044 – 2433 2424.
மின்னஞ்சல் : info@tamizhbooks.com

பக்கங்கள்: 32
விலை: ரூ 5.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சிந்திக்கும் குழந்தைகளைப் பார்ப்பதே மகிழ்ச்சி !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 06

சிந்திக்கும் மனிதனைப் பார்ப்பதே மகிழ்ச்சி

“குழந்தைகளே, எனக்கு ஆறு முக்கோணங்கள் தெரிகின்றன.”

“அவை முக்கோணங்கள் அல்ல சதுரங்கள்” என்று ஒரு சில குரல்கள் ஒலிக்கின்றன.

“ஆமாம், ஆமாம், சதுரங்கள். என்னைத் திருத்தியதற்கு நன்றி. கவனமாகப் பாருங்கள், அங்கே எவ்வளவு சதுரங்கள் உள்ளன? ஆறா? ஏழா?”

“ஆறு!” என்று சிலர் அவசரமாகக் கூறுகின்றனர்.

“ஏழு!” என்று இன்னும் சிலர் கத்துகிறார்கள்.

ஏன் ஆறு வயதுக் குழந்தைகளின் நாக்கு இப்படி சிந்தனையை முந்துகிறது? மற்றவர்கள் சிந்திக்க இடையூறாக இவர்கள் தம் பதிலை உரக்கச் சொல்வதில் மட்டும் விஷயம் இல்லை. சாதாரணமாக நடைமுறையில் ஆசிரியர்கள் பாடவேளைகளின் போது வரும் இப்படிப்பட்ட கூச்சல்களை எளிய வழிகளில் கட்டுப்படுத்தி விடுவார்கள்: கட்டுப்பாட்டை மீறியதற்காக குழந்தைகளைக் கண்டிப்பார்கள், கை உயர்த்தவும் கேட்கும் வரை காத்திருக்கவும் சொல்லித் தருவார்கள்.

ஆனால் இதனால் என்ன மாறுகிறது? பதிலின் உட்பொருள் அடையப்படும் பொழுது இது நல்ல வழி. குழந்தை தன் பதிலை யோசித்து, சரிபார்த்து, வார்த்தைகளைக் கண்டுபிடித்து, பின் கையை உயர்த்திக் கூப்பிடும் வரை அமைதியாகக் காத்திருப்பான். ஆனால் பிரச்சினை என்னவெனில் குழந்தையால் அமைதியாகக் காத்திருக்க இயலாது, விஷயத்தை இன்னமும் முழுமையாக அறிந்துணரவில்லை, ஆனால் அதற்குள்ளாகவே மற்றவர்களை முந்திக்கொண்டு பதில் சொல்ல அவசரப்படுகிறான்.

பல நேரங்களில் நான் கேள்வி கேட்பதற்காக வாயைத் திறந்ததுமே குழந்தைகளின் கரங்கள் உயரும். “நான் என்ன கேட்கப் போகிறேன் என்றே உங்களுக்குத் தெரியாதே” என்று நான் ஆச்சரியப்படுவேன். அனேகமாக அவர்களுக்குப் பதில் சொல்வதுதான் முக்கியமே தவிர, என்ன கேள்வி, பதில் சரியா என்பதெல்லாம் அவ்வளவு முக்கியமல்ல.

அவர்கள் ஆசிரியரின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்ல எப்போதும் “தயார்”. அவர்களுடைய மூளை நாக்கிற்கு “இடம் மாறியது” போன்றும், எல்லா சிக்கலான கேள்விகளுக்கும் பதில்கள் ஏற்கெனவே “தயார்” போன்றும் அவை நாக்கின் நுனியில் உள்ளன போன்றும் தோன்றும். இதோ, அவர்கள், பதில்கள் தவறு என்பதைப் பற்றிச் சிந்திக்காமலேயே “ஆறு”, “ஏழு” என்று கத்துகின்றனர். சிந்திக்கவில்லை, ஆனால் பதில் சொல்கின்றனர், சொல்ல அவசரப்படுகின்றனர்.

ஒருவேளை தம் ஆசிரியருடன் கலந்து பழக முயலுகின்றார்களோ? மற்றவர்களிடமிருந்து தனித்துத் தம்மை வெளிப்படுத்த ஒருவேளை விரும்புகின்றார்களோ? அல்லது சிந்திக்க வேண்டுமென அவர்களுக்குத் தெரியாதோ, அல்லது எப்படி சிந்திப்பதெனத் தெரியாதோ? இவர்களுடைய நடவடிக்கைகளின் திடீர் எழுச்சிகள் ஒரு புறமிருக்க இவர்களுடைய யோசனையற்ற கூச்சல்களுக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

எனவே, நான் இக்கூச்சல்களை வெறுமனே கட்டுப்படுத்த வேண்டியதில்லை. குழந்தைகள் சரியான பதிலைச் சொல்லும் போது, உண்மையைக் கண்டறிந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் போது இவை அவ்வளவு பயங்கரமானவையல்ல.

ஒருவன் உண்மையைக் கண்டறிந்ததும் இதை மற்றவர்களுக்குச் சொல்ல அவசரப்படுவது இயல்பே. ஏதாவது ஒரு விஷயத்தில் முதன்முதலாகக் கண்டுணரவும் இதற்காக மகிழ்ச்சியடையவும் உரிமையுண்டு. சரி, குழந்தைகள் திடீரென எதையாவது புரிந்து கொண்டதும், உண்மை “பிடிக்கப்பட்டதும்” அல்லது கண்டுபிடிக்கப்பட இருக்கையில் கையை உயர்த்தியபடி எனது பொறுமையான அழைப்பிற்காக அவர்கள் அமைதியாக உட்கார்ந்திருக்கும்படி எப்படி செய்வது? “குழந்தைகளே, கூச்சல் போடாதீர்கள், என்னைக் கூப்பிடாதீர்கள், சத்தம் போடாதீர்கள், அமைதியாக உட்காருங்கள்” என்று அவர்களிடம் எப்படிச் சொல்வது? எல்லோரும் பதில் சொல்ல விரும்பும் போது முதலாவதாக நான் (உதாரணமாக) தாத்தோவிற்கு பதில் சொல்ல வாய்ப்பளித்தால், அதன் மூலம் உண்மையைக் கண்டுபிடித்ததில் தாத்தோவிற்கு முதல் இடத்தை செயற்கையாக அளிக்கவில்லையா? ஒவ்வொருவரும் “கொலம்பசாக” முடியும்.

அப்படியிருக்கையில் எனது நடவடிக்கையின் மூலம் நான் தேர்ந்தெடுக்கும் ஒருவனை “கொலம்பசாக்குகிறேன்”. இது நியாயமா? இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லோரை யுமே ‘கொலம்பசாக்கவே” நான் விரும்புகிறேன். நான் வகுப்பறையின் நடுவில் நின்று கொண்டு, எல்லோரும் ஒரே குரலில் பதில் சொல்லும் வாய்ப்பைத் தருகிறேன். அப் போது எல்லோருக்கும் திருப்தி.

படிக்க:
மோடியின் வெற்றிக்கு அடிகோலிய அரசியல் பாமரத்தனம் !
’ நீட் ’ தேர்வு – ’ ரிசல்ட் ’ கதைகள் !

எனவே, கூச்சல்களை அடக்க வேண்டியதில்லை, யோசிக்கப்படாத பதில்களுக்குத்தான் முடிவு கட்ட வேண்டும். இதை நளினமாகச் செய்ய வேண்டும். “ யோசியுங்கள், யோசியுங்கள்” என்று நான் குழந்தைகளுக்குச் சொல்வது உதவி புரியுமா? எப்படி யோசிப்பது என்று அவர்களுக்கு நன்கு சொல்லித் தராவிடில், உண்மையை அறியும் போக்கு தனியாக முன் நிற்பதைக் காட்டிலும் முக்கியமானதாகும் படி அவர்களுடன் நான் கலந்து பழகாவிடில் இது சாத்தியமில்லை .

இதை எப்படிச் செய்வது?

எல்லோர் முன்னும் அடிக்கடி வாய் விட்டு யோசித்து நடந்து கொள்வேன்; இதன் மூலம் எப்படி யோசிப்பது, செயல்படுவது என்று நடைமுறையில் காட்டுவேன்.

அவர்களிடம் விசேஷக் கேள்விகளைக் கேட்பேன். நன்கு சிந்திக்காமல் இவற்றிற்கு பதில் சொல்ல முடியாது. தொடர்ச்சியான மூளை நடவடிக்கைகளைத் திட்டமிட அவர்களுக்கு உதவுவேன்.

அவர்கள் சுதந்திரமாக விவாதிக்க, நிரூபிக்க, மறுக்க, சந்தேகிக்கத் தேவையான சூழ்நிலைகளை ஏற்படுத்துவேன்.

யோசிக்கவும் சிந்தனையில் பதில்களை முடிவு செய்யவும் அவர்களை பழக்கப்படுத்துவேன். அப்போது, இவற்றிற்குப் பின் தான் பதில் சொல்லும் பழக்கம் வரும்.

நன்கு சிந்திக்க, யோசிக்க, “அவசரப்பட்டு பேசாமலிருக்க” ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ள நாட்டத்தை பலப்படுத்துவேன்.

இப்போது “ஆறு”, “ஏழு” என்ற கூச்சல்களின் மீது நான் கவனம் செலுத்தவில்லை. எனது கருத்தை சரிபார்ப்பதில் இறங்குகிறேன். எனக்குள் முணுமுணுத்தபடியே படத்தில் உள்ள சதுரங்களை எண்ணுகிறேன். நான் செய்வதையே குழந்தைகளும் திரும்பச் செய்கின்றனர்.  நான் இன்னமும் சதுரங்களை எண்ணிக் கொண்டிருக்க, பலர் ஏற்கெனவே சரியாக எண்ணிவிட்டனர்:

“ஆறல்ல, ஐந்து சதுரங்கள் தான்.”

“ நான்கு சிறிய சதுரங்களும் ஒரு பெரிய சதுரமும்.”

“நீங்கள் ஏழு சதுரங்கள் என்று சொன்னீர்கள், அங்கு ஐந்து தான் உள்ளன.”

சில நிமிடங்களுக்கு முன் லேலா நன்கு சிந்திக்காமல் “ஏழு சதுரங்கள்” என்று கத்தியதைக் கேட்டேன்.

“லேலா, அங்கு ஐந்து சதுரங்கள் தான் உள்ளன என்று உன்னால் நிரூபிக்க இயலுமா? ஒரு வேளை, மூக்குக் கண்ணாடி இல்லாததால் எனக்குச் சரியாகத் தெரியவில்லையோ, அங்கு ஏழு சதுரங்கள் உள்ளதாக எனக்குப்படுகிறதோ?”

லேலா, தான் “ஏழு சதுரங்கள்” என்று கத்தியதையே மறந்து விட்டாள். இப்போது அவள் சரியாக எண்ணினாள். ஓடி வந்து எல்லாவற்றையும் காட்டுகிறாள்.

“ஆம், நான் சரியாகப் பார்க்கவில்லை. நன்றி. சரி, அங்கு ஐந்து சதுரங்கள் உள்ளன?…”

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

மோடியின் வெற்றிக்கு அடிகோலிய அரசியல் பாமரத்தனம் !

ந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் மட்டும் தோற்றுப்போகவில்லை. கடந்த ஐந்தாண்டு கால மோடி ஆட்சியில் மக்கள் மீது தொடுக்கப்பட்ட பொருளாதாரத் தாக்குதல்களும் மற்ற பிற அடக்குமுறைகளும் அவர்களை மோடிக்கு எதிராக வாக்களிக்க வைக்கும் என்றும் மக்கள் தேர்தலில் பா.ஜ.க.வைத் தோற்கடிப்பார்கள் என்றும் ஜனநாயக சக்திகள் பலரும் கொண்டிருந்த எதிர்பார்ப்பும்தான் தோற்றுப்போனது.

இந்தத் தேர்தலில் மோடியின் பிரதாபங்களைக் குறித்துப் பேசுவது மட்டுமே பிரச்சாரம் என்றவாறு அமைந்திருந்தது பா.ஜ.க.-வின் தேர்தல் பிரச்சாரம். இதன் காரணமாக விவசாய நசிவு மட்டுமல்ல, இந்திய மக்கள் கடந்த ஐந்தாண்டுகளில் சந்தித்த வாழ்வாதாரப் பிரச்சினைகள் அனைத்தும் திட்டமிட்ட வகையில் பின்னுக்குத் தள்ளப்பட்டன

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்தியப் பிரதேசத்தில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின்பொழுது, மந்த்சௌர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மீதுதான் பா.ஜ.க. அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. ஆனால், இத்தேர்தலில் மந்த்சௌர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் சுதிர் குப்தா காங்கிரசைத் தோற்கடித்து மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார். அம்மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடந்த ஜபல்பூர், சாகர், ரத்லம் தொகுதிகளையும் பா.ஜ.க.-தான் கைப்பற்றியிருக்கிறது.

மகாராஷ்டிராவின் திந்தோரி தொகுதியில் இருந்துதான் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த விவசாயிகள், பழங்குடியினரின் மும்பய்ப் பேரணி தொடங்கியது. எனினும், இத்தொகுதியிலும் பா.ஜ.க.தான் வெற்றி பெற்றிருக்கிறது.

இத்தொகுதிகள் மட்டுமின்றி, விவசாயிகளின் போராட்டம் நடந்த இராசஸ்தானின் கோட்டா, புந்தி, ஜலவார் தொகுதிகளிலும்; மகாராஷ்டிராவின் வார்தா, கோந்தியா, அகோலா தொகுதிகளிலும், கரும்பு விவசாயிகள் ஆதித்ய நாத் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய உ.பி.யின் கைரானா தொகுதியிலும் பா.ஜ.க.தான் வெற்றி பெற்றிருக்கிறது.

ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த விவசாயிகளுள் 52 சதவீதத்தினரும், பிற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியில் 44 சதவீத விவசாயிகளும், தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த விவசாயிகளுள் 34 சதவீதத்தினரும், பழங்குடியின விவசாயிகளுள் 41 சதவீதத்தினரும் பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களித்திருப்பதாக இந்து குழுமம் – லோக் நிதி இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. (இந்து, மே 28, பக்.9)

நரேந்திர மோடி கடந்த ஐந்தாண்டுகளில் விவசாயிகளின் பிரச்சினையைக் காது கொடுத்துக்கூடக் கேட்டதில்லை. டெல்லியில் அரை நிர்வாணக் கோலத்தில் போராடிய தமிழக விவசாயிகளைச் சந்திக்க மறுத்த மோடி, நடிகை பிரியங்கா சோப்ராவைச் சந்தித்து அளவளாவியது நாடெங்கும் கடும் கண்டனத்திற்குள்ளானது. எனினும், சராசரியாக 40 சதவீத விவசாயிகள் பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களித்தற்குக் காரணம், தேர்தலுக்கு முன்பாக அறிவிக்கப்பட்ட ரூ.6,000 விவசாய நிதியுதவி, பாலகோட் தாக்குதல் குறித்த பா.ஜ.க.வின் பிரச்சாரம், மோடி மீதான தனிப்பட்ட ஈர்ப்பு, மாநில அரசுகளின் மீதான அதிருப்தி உள்ளிட்டுப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

மேலும், கடந்த மோடியின் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட இலவச எரிவாயு அடுப்புத் திட்டம், கிராமப்புற மின் இணைப்புத் திட்டம், கிராமப்புறங்களில் கழிவறைகள் கட்டிக் கொடுக்கும் திட்டம், மருத்துவக் காப்பீடு திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி அளிக்கும் திட்டம் ஆகியவை சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு கிராமப்புற ஏழைகள் மத்தியில் மோடிக்கு ஆதரவான மனோநிலையை உருவாக்கியிருப்பதாகக் கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

படிக்க :
♦ சத்தீஸ்கர் : சேமிப்புக் கிடங்குகளான ஸ்வச் பாரத் கழிப்பறைகள் !
♦ தேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா ? இந்தியாவின் வெற்றியா ?

கடந்த ஐந்தாண்டு கால மோடியின் ஆட்சியில் 20,000 கிராமங்கள்தான் மின்மயமாக்கப்பட்டன. அதற்கு முந்தைய ஆட்சிகளில் 6.3 இலட்சம் கிராமங்கள் வரை மின்மயமாக்கப்பட்டிருந்தன. ஆனால், பா.ஜ.க.வோ, மோடியின் ஆட்சியில்தான் இந்தியக் கிராமங்கள் மின்மயமாக்கப்பட்டதாக அண்டப் புளுகைப் பிரச்சாரம் செய்தது.

இலவச எரிவாயுத் திட்டம் என்பது உண்மையில் இலவசமே கிடையாது. இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு மைய அரசு மானியம் அளிப்பதில்லை. கடன்தான் அளிக்கிறது. இத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட ஏழைக் குடும்பப் பெண்கள் மீண்டும் விறகு அடுப்புக்கே திரும்பிவிட்டனர் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன.

மீண்டும் விறகடுப்புக்கே திரும்பிச் செல்லும் உத்திரப்பிரதேச பெண்கள் (மாதிரிப் படம்)

பாலகோட் மீது இந்திய விமானப் படை நடத்திய தாக்குதல் தோல்வியடைந்ததை  சர்வதேச ஊடகங்கள் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருந்தும், “அது யாருமே செய்யாத சாதனை” எனப் பீற்றிக் கொண்டார், மோடி.

மோடி உறுதியானவர், பாலகோட்டில் “எதிரியின் வீடு புகுந்து” அடித்தவர், அவர் பிரதமரான பின்னால்தான் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு ஒரு கவுரவம் வந்திருக்கிறது, அவர் ஊழலற்றவர், அவருக்கு குடும்பம் இல்லை, மோடியோடு ஒப்பிடத்தக்க தலைவர் யாரும் எதிர்க்கட்சிகளில் இல்லை என்ற கருத்து இடைவிடாத பிரச்சாரத்தின் மூலம் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டு விட்டது.

இப்பிரச்சாரத்திற்கு மட்டும் ஏறத்தாழ 5,600 கோடி ரூபாய் அரசுப் பணம் செலவிடப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறார், காங்கிரசு கட்சியைச் சேர்ந்த சசிதரூர். மோடி நிறைவேற்றாத வாக்குறுதிகளைச் சுட்டிக்காட்டினாலும், அவற்றை நிறைவேற்றக் கூடியவர் மோடிதான் என்று பலர் கூறியிருக்கின்றனர்.

தேர்தல் பரப்புரையைப் பொருத்தவரை, 2014-இல் மோடி அளித்த வாக்குறுதிகளான 15 இலட்சம் ரூபாய், 2 கோடிப் பேருக்கு வேலை, விவசாய விளைபொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலை ஆகியவற்றில் ஒன்றைக்கூட மோடி நிறைவேற்றவில்லை என்பதையும்; ரஃபேல் ஊழலையும் அம்பலப்படுத்தி “சவுக்கிதார் சோர் ஹை” என்று மேடைதோறும் பிரச்சாரம் செய்தார் ராகுல் காந்தி.

ராகுல் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் மோடி பதிலளிக்கவில்லை என்பது மட்டுமல்ல, 2014- முழங்கிய விகாஸ் (முன்னேற்றம்) என்ற வார்த்தையைக்கூடப் பயன்படுத்தவில்லை. மாறாக, புல்வாமா தாக்குதலை வைத்து தேசவெறி, மதவெறியைத் தூண்டினார். “மோடி எதிர்ப்பு ஒன்றுதான் எதிர்க்கட்சிகள் அனைவரின் கொள்கை” என்றார். “அனைவரும் ஊழல் கட்சிகள், ராகுல் ராஜா வீட்டு வாரிசு, நான் கீழிருந்து உழைத்து முன்னேறிய செயல்வீரன்” என்று தன்னைக் காட்டிக் கொண்டார்.

எதிர்க்கட்சிகளைப் பற்றிய நம்பிக்கையோ, மதிப்போ மக்களுக்கு இல்லை என்ற எதிர்மறைக் காரணமும் மோடிக்குச் சாதக மாகியிருக்கிறது. தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை தி.மு.க.வுக்குச் சாதகமாக அமைந்தது. வட மாநிலங்களிலோ, எதிர்க்கட்சிகள் மீதான இந்த அவநம்பிக்கை பா.ஜ.க வுக்குச் சாதகமான வாக்குகளாக மாறியிருக்கிறது.

அம்பானி, அதானிகளின் எடுபிடியாகச் செயல்பட்டு வரும் மோடி, தன்னை ஏழை, நடுத்தர மக்களின் பிரதிநிதியாகச் சித்தரித்துக் கொண்டதை நம்பும் அளவுக்கு அரசியல் பாமரத்தனம் மக்களைப் பீடித்திருந்ததையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

மக்கள் மந்த புத்தி உள்ளவர்களாக, பகுத்தறிந்து பார்க்கும் திறன் அற்றவர்களாக இருக்க வேண்டும் என்றுதான் பாசிஸ்டுகள் விரும்புகிறார்கள். அது மட்டுமின்றி, மக்களை அறிவில்லாதவர்களாக மாற்றுவதற்கென்றே அவர்கள் திட்டமிட்டு வேலை செய்கிறார்கள். அதற்கான நிறுவனங்களையும் அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். குறிப்பாக, “முன்னேற”த் துடிக்கும் “இந்து” இளைஞர்களிடம் மோடி பற்றிய பிரமை கடவுள் நம்பிக்கையைவிட மேலோங்கி இருப்பதாகத் தேர்தலுக்குப் பிந்தைய கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த அரசியல் பாமரத்தனம்தான் மோடி ஆட்சியின் தீமைகள் அனைத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, சாதி, மத, தேசியப் பெருமிதத்தின் அடிப்படையிலோ அல்லது வெற்று நம்பிக்கையின் அடிப்படையிலோ மோடிக்கு வாக்களிக்கும் மனோநிலையைப் பெரும்பாலான வாக்காளர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பாமரத்தனம்தான் மோடி ஆட்சியின் அலங்கோலங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு, அவரைச் சகலகலா வல்லவனாகப் பார்க்கும் அறியாமையின் அடிப்படையாகவும்  இருக்கிறது.

அன்பு

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

 

மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம் !

பா.ஜ.க. வட இந்திய மாநிலங்களில் சராசரியாக 50%-க்கு மேல் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதனைக் காட்டிச் சாதி கடந்த இந்து அடையாளத்துக்கு வாக்காளர்களைக் கொண்டுவருவதில் வெற்றிபெற்று விட்டதாக பா.ஜ.க. கூறிக்கொள்வது சற்று மிகையானது என்றாலும், அது முற்றிலும் நிராகரிக்கத்தக்க கூற்றும் அல்ல.

இது  இந்தத் தேர்தல் முடிவின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். பாபர் மசூதி இடிப்பின் முன்னும் பின்னும் “ராமன் எதிர் முஸ்லிம்கள்” என்ற கோணத்தில் மக்களின் பக்தியைப் பயன்படுத்தி, மதவெறியைத் தூண்டி பா.ஜ.க. வாக்குகளை அறுவடை செய்தது. அதைவிட இந்து பெரும்பான்மையின் இன்றைய மனநிலைதான் மிகவும் ஆபத்தானது.

கடந்த 5 ஆண்டு மோடியின் ஆட்சிக் காலத்தில் வட மாநிலங்கள் அனைத்திலும் முஸ்லீம்களுக்கு எதிரான எண்ணற்ற தாக்குதல்கள், கொலைகள் நடந்திருக்கின்றன. பால் வியாபாரி பெஹ்லுகான் பசுக்குண்டர்களால் இராஜஸ்தானில் கொல்லப்பட்டுள்ளார். மாட்டுக்கறி வைத்திருந்ததாக அக்லக் (உ.பி.) கொல்லப்பட்டிருக்கிறார். அவரது கொலை வழக்கைப் புலன் விசாரணை செய்த காவல் ஆய்வாளர் சுபோத்குமார் இந்து வெறியர்களால் கொல்லப்பட்டுள்ளார்.

இந்து மதவெறிக் குண்டர்களால் கொல்லப்பட்ட (இடமிருந்து) பெஹ்லு கான், முகம்மது அக்லக் மற்றும் பதின் வயது ஜுனைத் கான்.

லவ் ஜிகாத் என்று பொய்க்குற்றத்தின் பேரில் முஸ்லீம்களுக்கு எதிராக முசாஃபர்நகர் கலவரம் நடந்திருக்கிறது. இரயிலில் உட்கார இடம் தரவில்லை என்பதற்காக ஜுனைத் என்ற இளைஞன் குத்திக் கொல்லப்பட்டிருக்கிறான். இவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே!

இந்த நிகழ்வுகள் வட இந்தியாவின் இந்துப் பெரும்பான்மையினர் மீது ஏற்படுத்திய தாக்கம் என்ன? இத்தகைய தாக்குதல்கள் இந்துப் பெரும்பான்மையினர் மத்தியில் சகஜமாக்கப்பட்டிருக்கின்றன. பலருக்குச் சிறுபான்மை மக்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் பற்றிய அக்கறை இல்லை. பலருக்கும் பா.ஜ.க. என்பது இந்துவெறிக் கட்சி என்ற கருத்து இல்லை.

இவற்றை எதிர்த்துப் பேசுபவர்கள் சில அறிவுத்துறையினர் மற்றும் புரட்சியாளர்கள் என்ற அளவிலேயே உள்ளது. மற்ற கட்சிகளோ, மக்களோ இவற்றை எதிர்ப்பதில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், முஸ்லீம்கள் இரண்டாம் தர குடிமக்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை பெரும்பான்மை சமூகம் ஒரு பிரச்சினையாகவே கருதவில்லை. இந்து ராஷ்டிரம் என்று சங்கப் பரிவாரத்தின் மொழியில் சொல்லாவிட்டாலும், இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையினர் என்பதால் இது “இந்து நாடுதான்” என்ற கருத்து பொதுக் கருத்தாகவே இருக்கிறது.

படிக்க :
♦ மேற்கு வங்கம் : தொடர்கிறது காவிக் குண்டர்களின் ‘ஜெய் ஸ்ரீராம்’ தாக்குதல்கள் !
♦ எங்க சாமி கருப்பனும் சுடலைமாடனும்தான் ! ஜெய் ஸ்ரீராம் கிடையாது | #NoToJaiShriRam

சிறுபான்மை மக்கள் மீதான வன்முறையைச் சகஜமாக எடுத்துக் கொள்ளும் மனநிலைக்கு, “சாதி ஒடுக்குமுறை குறித்துக் கடுகளவும் குற்றவுணர்வு கொள்ளாமலிருக்கும் சாதி ஆதிக்க உளவியல்” ஒரு முக்கியமான அடிப்படையாக அமைந்திருக்கிறது. இருந்த போதிலும், இந்த மாநிலங்கள் எதிலும் பார்ப்பன இந்து மதம் ஒருபோதும் கருத்தியல்ரீதியாக எதிர்க்கப்படவில்லை என்பது இன்று உருவாகியிருக்கும் இந்த நிலைமைக்கு முக்கியப் பின்புலமாக இருக்கிறது.

அது மட்டுமல்ல, லிபரல்கள் என்று சொல்லப்படுவோரிடமும் சரி, முற்போக்காளர்கள், வலது, இடது கம்யூனிஸ்டுகள் ஆகியோரிடமும் சரி பார்ப்பனிய எதிர்ப்பு, இந்து – இந்தி – இந்தியா எதிர்ப்பு என்ற கண்ணோட்டம் இல்லை. பார்ப்பனியம் என்பது தேசிய இன, மொழி உரிமைகளுக்கு எதிரானது என்ற புரிதலும் இல்லை.

மாறாக, “இந்து மதம் ஜனநாயகப் பூர்வமானது, பன்முகத் தன்மை கொண்டது, ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் இந்துத்துவம் என்பதுதான் ஒற்றைப் பண்பாடை வலியுறுத்தும் பாசிசத் தன்மை கொண்டது” என்ற கருத்தையே காங்கிரசு முதல் போலி கம்யூனிஸ்டுகள் மற்றும் லிபரல் அறிவுத்துறையினர் வரையிலான அனைவரும் பேசுகின்றனர். காந்தியத்தின் பெயரால் பார்ப்பனியத்தை நியாயப்படுத்தும் இந்தப் போக்கு ஒரு வரலாற்றுப் புரட்டு என்பது மட்டுமல்ல, நிகழ்காலத்திய சமூக எதார்த்தத்துக்கும் எதிரானது.

இந்து மதம் எனப்படும் பார்ப்பன மதத்திற்குத் தரப்படும் இந்த அங்கீகாரத்தைச் சங்கப் பரிவாரம் மகிழ்ச்சியுடன் வழிமொழிகிறது. “இந்துமதம் தன் இயல்பிலேயே ஜனநாயகப் பூர்வமானது, மற்ற மதங்களுடன் சகவாழ்வு நடத்துவது, அதன் காரணமாகத்தான் இந்தியா ஜனநாயக நாடாகவே இருக்கிறது. இந்துக்களின் இந்தத் தாராள மனோபாவம்தான் பிற மதத்தினரின் அடாவடித்தனத்துக்குக் காரணமாக இருக்கிறது” என்கிறது சங்கப் பரிவாரத்தின் பிரச்சாரம்.

நானிம் இந்துதான் என நிரூபிக்கும் முகமாக, ம.பி. சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது அம்மாநிலத்திலுள்ள உஜ்ஜைன் மகாகாளீஸ்வர் போவிலில் வழிபாடு நடத்திய ராகுல் காந்தி. (கோப்புப் படம்)

“முஸ்லீம்களுக்கு அவர்களுக்குரிய இடத்தை மோடிதான் காட்டியிருக்கிறார்” என்று 2002 குஜராத் படுகொலைக்குப் பின்னர் குஜராத்தின் இந்துப் பெரும்பான்மை கூறிய கருத்து மேற்சொன்ன கண்ணோட்டத்திலிருந்துதான் வருகிறது. இன்று வட இந்திய இந்துப் பெரும்பான்மையின் மனோபாவத்தில் இக்கருத்து குறிப்பிடத்தக்க செல்வாக்கு செலுத்துகிறது எனத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய ஆய்வுகள் கூறுகின்றன.

“மண்டலை வைத்து கமண்டலை முறியடிக்க முடியும்”, “சாதி அமைப்பு முறைக்குச் சித்தாந்தரீதியில் நியாயம் கற்பிக்கும் பார்ப்பனியத்தை, சாதியைப் பயன்படுத்தியே முறியடித்துவிட முடியும்” என்று வாதிட்ட “சமூகநீதி” கட்சிகளின் தோல்வியையும் உ.பி., பிகார் உள்ளிட்ட பல மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு ஆகியவற்றையும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளிடையேயான பிளவையும் தனக்குச் சாதகமாக பா.ஜ.க.தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பார்ப்பனியத்தை வைத்துப் பார்ப்பனியத்தை முறியடிக்க முடியாது என்ற பாடத்தையும் இந்தத் தேர்தல் முடிவு கற்றுக் கொடுத்திருக்கிறது.

இந்து அடையாளத்தை இந்திய தேசியத்துடன் பிணைப்பதிலும் பாரதிய ஜனதா வெற்றி கண்டிருக்கிறது. தேசத்தின் உட்கிடையாக இந்து மதத்தை காட்டுவதன் மூலம் இந்து மதத்தை எதிர்ப்பவர்கள் தேசவிரோதிகள் என்றும், தேசத்தின் காவலனான மோடியை எதிர்ப்பவர்களும் தேச விரோதிகள் என்றும் இதனை பா.ஜ.க. நீட்டிக்கிறது. இங்ஙனம், “மதம் – தேசம்  கட்சி – தலைவன்” ஆகியவற்றை ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாத வண்ணம் பார்ப்பன பாசிசம் இணைத்திருக்கிறது.

வடகிழக்கு மாநிலங்களில் வங்க தேசத்திலிருந்து குடியேறியவர்கள் குறித்த பிரச்சினையில் “இந்து என்ற வரையறைக்குள் வருகின்றவர்களுக்கு மட்டும்தான் இந்தியாவில் குடியுரிமை தரப்படும்” என்று அமித்ஷா பேசியிருப்பது, “யூதர்களுக்கான நாடு இசுரேல்” என்பதைப்போல “இந்துக்களின் நாடு இந்தியா” என்ற புதிய வரையறையை உருவாக்கும் இந்து ராஷ்டிரத்துக்கான முன்னோட்டமாகும்.

“மதச்சார்பின்மை என்ற முகத்திரையை அணிந்து கொள்ளும் தைரியம் இந்தமுறை எதிர்க்கட்சிகள் யாருக்கும் இல்லை” என்று மோடி தனது வெற்றி உரையில் பேசியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மோடி சொன்னது உண்மைதான். மதச்சார்பின்மை என்ற வார்த்தையைக் கூட எதிர்க்கட்சிகள் பயன்படுத்தவில்லை. வெறுப்பு அரசியல் கூடாது, பன்முகத்தன்மையைப் பாதுகாக்க வேண்டும் என்று முடிந்தவரை மொன்னையான வார்த்தைகளில்தான் காங்கிரசு முதல் வலது, இடது கம்யூனிஸ்டுகள் வரையிலான அனைவரும் பேசினர்.

வாக்காளர்களின் இந்து மனோபாவத்தை தாஜா செய்வதற்காகச் சட்ட மன்றத் தேர்தலின் போது ராகுல் கோயில் கோயிலாகச் சென்றார். கோசாலை அமைப்போம் என்று வாக்குறுதி கொடுத்தார். காங்கிரசு வேட்பாளர்கள் ஏகப்பட்ட சாமியார்களை விழுந்து வணங்கினர். வேள்விகள் நடத்தினர்.

எதிர்க்கட்சிகள் இவ்வாறு சரணடைந்து விட்ட நிலையில், பா.ஜ.க. அடுத்த தாக்குதல் நிலைக்குச் சென்றது. மாலேகான் குண்டுவெடிப்பின் முக்கியக் குற்றவாளியும், ஊபா சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுத் தற்போது பிணையில் வெளியே வந்திருப்பவருமான பிரக்யா சிங் தாகூர் என்ற பயங்கரவாதியை, காங்கிரசு முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங்கிற்கு எதிராக போபால் தொகுதியின் வேட்பாளராக நிறுத்தியது.

பிரக்யா சிங் தாக்கூர், கிரிராஜ் சிங், சாக்‌ஷி மகாராஜ், ஆனந்த் குமார் ஹெக்டே மற்றும் பிரதாப் சந்திர சாரங்கி.

“இந்து மதத்தை இழிவுபடுத்தும் சதிக்கு எதிராகவும், ஒரு பெண் சாமியாரை, ஒரு தேசபக்தையைச் சிறையில் வைத்துச் சட்டவிரோதமாகச் சித்திரவதை செய்தவர்களுக்கு எதிராகவும் தான் நடத்துகின்ற போராட்டம்” என்று தேர்தல் பிரச்சாரம் செய்தார் பிரக்யா சிங். (சித்திரவதை குறித்து அவர் அளித்த புகாரை பொய்ப்புகார் என்று தேசிய மனித உரிமைக் கமிசன் 2014-இலேயே நிராகரித்துவிட்டது) பிறகு, கோட்சேவைத் தேசபக்தன் என்றார். தன்னைக் கைது செய்த ஹேமந்த் கர்கரே கொல்லப்படுவதற்கு காரணமே தன்னுடைய சாபம்தான் என்றார். பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்றதற்காகத் தான் பெருமைப்படுவதாகப் பேசினார். இத்தனை மதவெறிப் பேச்சுகளுக்கும் பிறகு ம.பியின் தலைநகரான போபாலில் 3.5 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சாக்ஷி மகராஜ் என்ற சாமியார் உ.பி. மாநிலம் உன்னாவ் தொகுதியின் வேட்பாளர். பாபர் மசூதி இடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர். இதுவன்றி 33 கிரிமினல் வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன. 2011-இல் ஒரு கும்பல் வல்லுறவு குற்றத்தில் கைது செய்யப்பட்டு, போதிய சாட்சி இல்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டவர். ஒரு கொலை வழக்கு நிலுவையில் இருக்கிறது. இவரும் கோட்சேவைத் தேசபக்தர் என்று புகழ்ந்தவர். இவர் 4 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கிரிராஜ் சிங் மத்திய அமைச்சராக இருந்தவர். பீகார் மாநிலம் பெகுசராயில் கன்னையா குமாருக்கு எதிராக நிறுத்தப்பட்டார். “தேசியக் கொடியில் இருக்கும் பச்சை நிறம் தேசத்துக்கே அவமானம்”, “முஸ்லீம்களின் கல்லறைகளுக்கு மட்டும் எதற்கு இவ்வளவு இடம்”, “மோடியை ஆதரிக்காதவனெல்லாம் பாகிஸ்தானுக்குப் போகட்டும்”, “வந்தே மாதரம் சொல்ல மறுப்பவனை வேட்பாளராக நிற்கவே அனுமதிக்கக்கூடாது” – என்றெல்லாம் மதவெறிப் பிரச்சாரம் செய்த கிரிராஜ்சிங், 4 இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் கன்னையா குமாரைத் தோற்கடித்தார்.

படிக்க :
♦ முசுலீம் பெண்களைக் கும்பல் வல்லுறவு செய்யுங்கள் : பாஜக தலைவியின் அறைகூவல் !
♦ Reason : இந்துத்துவ கும்பலின் கொலைவெறியை அம்பலப்படுத்தும் ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படம் !

ஆனந்த் குமார் ஹெக்டே, மத்திய அமைச்சர். கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா தொகுதி வேட்பாளர். இஸ்லாம் என்றொரு மதம் இருக்கும் வரை உலகத்தில் அமைதி இருக்காது என்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதற்காக வழக்கைச் சந்திப்பவர். ஜனவரி 2018 -இல் தலித் போராட்டக்காரர்களை “குரைக்கும் நாய்கள்” என்று பேசியவர். ஜனவரி 2019 தாஜ்மகால் என்பது தேஜோ மகாலயா என்ற சிவன் கோயிலாகும் என்றும் அதனை மீட்க வேண்டும் என்றும் பேசியவர். 2014 -இல் இதே தொகுதியில் 1.4 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹெக்டே, இந்தத் தேர்தலில் 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

இவையனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல, ஸ்டேன்ஸ் பாதிரியாரை எரித்துக் கொன்ற கொடூரம் நிகழ்ந்தபோது, அதனைச் செய்த பஜ்ரங் தள் அமைப்பின் தலைவராக இருந்த பிரதாப் சந்திர சாரங்கி, இப்போது மத்திய அமைச்சராக்கப்பட்டிருக்கிறார்.

இவையனைத்தும் இந்து பயங்கரவாதத்தையே மைய நீரோட்டமாக மாற்றுவதற்கு மோடி – அமித் ஷா கும்பல் மேற்கொண்டு வரும் முயற்சிக்குச் சில சான்றுகள். இந்தப் பயங்கரவாதிகள் அனைவரும் 3 இலட்சம், 4 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றிருக்கும் வெற்றி எதற்குச் சான்று?

இந்துத்துவ பயங்கரவாதம் வட இந்திய சமூகத்தின் மைய நீரோட்டமாக மாறிவருவதற்குச் சான்று. மோடியின் தேர்தல் வெற்றியை விடவும் இதுவே நமது கவலைக்குரியது.

சூரியன்

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

 

மின் கட்டணம் : ஆணையங்களுக்கே ஆணையம் அமைக்கும் மோடி அரசு !

அருண் கார்த்திக்
மோடி அரசு இதுவரை வரலாற்றில் இல்லாத அளவு வல்லமை பெற்ற அரசு. இந்த வல்லமையை வைத்து அது என்ன செய்யத் துடிக்கிறது தெரியுமா? மின்சார கட்டணம் நிர்ணயிப்பதில் மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமையை பிடுங்கி, மக்கள் பிரதிநிதிகளின் எந்தவித குறுக்கீடும் இல்லாத பொருளாதார நிபுணர்கள் மட்டுமே கொண்ட, ஆணையங்களிடம் தாரை வார்க்கத் துடிக்கிறது.

ஏன் அவ்வாறு துடிக்கிறது தெரியுமா? மக்கள் பிரதிநிதிகள் அடுத்த முறை ஓட்டுக் கேட்க மக்களிடம் செல்ல வேண்டும் என்பதனால் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த விரும்புவதில்லையாம். அதனால் மக்களிடம் ஓட்டுக் கேட்க செல்ல தேவையில்லாத நிபுணர்களிடம் மின்சாரக் கட்டணம் நிர்ணயிக்கும் உரிமையை கொடுத்துவிட்டால் அவர்கள் கட்டணத்தை எளிதில் உயர்த்தி விடுவார்கள். மின்சார கட்டணத்தை உயர்த்த இந்த அளவு சிரத்தை எடுக்கிறது நமது நாட்டுப்பற்றுடைய மோடி அரசாங்கம்.

மின்சாரக் கட்டணம் பற்றி விவாதிப்பதற்கு முன் அந்தத் துறையின் சமீபத்திய வரலாற்றையாவது நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 1991-ல் புதிய பொருளாதாரக் கொள்கை அமலுக்கு வருவதற்கு முன் மக்களுக்குத் தேவையான அடிப்படை துறைகள் அனைத்துமே அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன. புதிய பொருளாதாரக் கொள்கை அமலுக்கு வந்தபின் தண்ணீர் வழங்குவதிலிருந்து, தொலைத் தொடர்பில் இருந்து, மின்சாரம் வழங்குவதில் இருந்து, அனைத்து முக்கியமான துறைகளும், அடிப்படையான துறைகளும், கொஞ்சம் கொஞ்சமாக தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது. இதில் காங்கிரஸ் பி.ஜே.பி. என எந்த வேறுபாடும் இல்லாமல், அனைத்துக் கட்சிகளுமே இந்தக் கொள்கையை அமல்படுத்தி வந்தனர்.

மின்சாரத் துறையை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க 2003-ம் ஆண்டு மின்சாரச் சட்டம் (electricity act, 2003) என்ற ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் அமுலுக்கு வரும் வரையில் மின்சாரம் சம்பந்தமான அனைத்து வேலைகளையும் அரசு மட்டுமே செய்து வந்தது. மின்சார உற்பத்தி, உற்பத்தியான மின்சாரத்தை கொண்டு செல்லுதல், அந்த மின்சாரத்தை விநியோகம் செய்தல் என அனைத்தையும் அரசே செய்தது. அனைத்து மாநில அரசுகளிலும் ஒரு மின்சாரத் துறை அல்லது வாரியம் இருந்தது. மத்திய அரசுக்குச் சொந்தமான மின்சார உற்பத்தி நிலையங்களும் இருந்தன.

இந்த மின்சாரச் சட்டம் இரண்டு முக்கிய வாதங்களின் அடிப்படையில் இயற்றப்பட்டது. முதல் வாதம், சுதந்திரம் கிடைத்து இவ்வளவு ஆண்டுகள் ஆன பிறகும் அரசால் அனைத்து மக்களுக்கும் மின்சாரம் வழங்க முடியவில்லை. அவ்வாறு வழங்க வேண்டும் என்றால் நிறைய முதலீடுகள் செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு முதலீடு செய்ய அரசிடம் பணம் இல்லை. இதற்கு ஒரே தீர்வு தனியார் முதலீடுகளை மின்சாரத்துறையில் ஊக்குவிப்பது தான்.

இரண்டாவது வாதம், ஓட்டுவங்கி அரசியலினால் அரசியல்வாதிகள் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதே இல்லை. கட்டணம் மிகக்குறைவாக இருப்பதால் இந்தத் துறையில் இலாபமே இல்லை. இலாபம் கிடைக்கவில்லை என்றால் தனியார் முதலீடு இந்த துறைக்கு வராது. ஆகவே இந்தத் துறையை இலாபம் ஈட்டும் துறையாக மாற்ற வேண்டும். அப்பொழுதுதான் தனியார் முதலீடுகள் வரும், அனைத்து மக்களுக்கும் மின்சாரம் வழங்கவும் முடியும். இந்த இரண்டு வாதங்களையும் அடிப்படையாகக் கொண்டே இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஆக, மின்சாரச் சட்டம் 2003-ன் முக்கிய நோக்கம் மின்சாரத் துறையில் தனியார் பங்களிப்பை அதிகரிப்பது. இதற்காகவே, இந்தச் சட்டம் மின்சாரத்துறையை – மின்சார உற்பத்தி, அதை கொண்டு செல்லுதல், வினியோகிப்பது என 3 பிரிவுகளாகப் பிரித்தது. இதில் எந்தப் பிரிவில் வேண்டுமானாலும் தனியார் நிறுவனங்கள் செயல்படலாம் என்று சட்டம் சொன்னது. இதன் பிறகுதான் இவ்வளவு மின்சார உற்பத்தி நிலையங்கள் தனியாரால் தொடங்கப்பட்டன.

படிக்க :
கார்ப்பரேட் கம்பெனி இலாபமே மின்வாரியத்தின் நட்டம்!
கல்வி உரிமையை பறிக்க வரும் இந்திய உயர்கல்வி ஆணையம் !

இந்தச் சட்டம் செய்த இன்னொரு முக்கியமான விஷயம் மின்சாரக் கட்டணத்தின் மீது அரசுக்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கியது. மின்சாரக் கட்டணத்தை முடிவு செய்யும் அதிகாரம் அரசிடம் இருந்தால் ஓட்டு வங்கி காரணத்திற்காக அரசியல்வாதிகள் மின்சார கட்டணத்தை உயர்த்தவே மாட்டார்கள் என்று ஒரு வாதம் வைக்கப்பட்டது. கட்டணம் அதிகரிக்கவில்லை என்றால் முதலீடு செய்யும் தனியாருக்கு இலாபம் கிடைக்காது. இதற்காக இந்தச் சட்டம் சொன்ன தீர்வு – மின்சார கட்டணத்தை தீர்மானிக்கும் அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் இருந்து பிடுங்கி ஓட்டு வாங்க வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் இல்லாத ஒரு அமைப்பிடம் கொடுப்பது. இதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புதான் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (electricity regulatory commission).

இந்த ஆணையத்தில் பொருளாதார நிபுணர்களும் மின்சாரத் துறை நிபுணர்களும் மட்டுமே இருப்பார்கள். சட்டப்படி ஒவ்வொரு ஆண்டும் மின்சார விநியோகம் செய்யும் அரசு நிறுவனம் அதனிடம் இருக்கும் அனைத்து தகவல்களையும் இந்த ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். என்ன விலைக்கு மின்சாரம் வாங்கப்படுகிறது, விநியோகிக்க எவ்வளவு செலவாகிறது, ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு, ஒவ்வொரு வகையான வாடிக்கையாளருக்கும் என்ன கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படுகிறது என அனைத்துத் தகவல்களையும் தாக்கல் செய்ய வேண்டும். இந்தத் தகவல்களை வைத்து இந்த ஆணையம் கணக்கிட்டு என்ன விலையில் எந்தவிதமான நுகர்வோருக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கும்.

எடுத்துக்காட்டாக மின்சார வாரியம் மின்சாரத்தை சராசரியாக ஒரு யூனிட்டுக்கு நான்கு ரூபாய் செலவு செய்து வாங்குகிறது என்றால், அதற்குக் குறைவான கட்டணத்தில் அந்த மின்சாரத்தை விற்க ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்காது. விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் குறைந்த விலையில் அல்லது இலவசமாக மின்சாரம் வழங்க வேண்டும் என்று அரசு விரும்பினால் அதற்கு ஆகும் செலவை மின்சாரம் விநியோகிக்கும் நிறுவனத்துக்கு அரசு கொடுக்க வேண்டும் என்று ஆணையம் கூறும். அதாவது, நமது மொழியில் சொல்ல வேண்டும் என்றால், மக்களால் அந்த விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க முடியுமா இல்லையா என்பதைப்பற்றி எல்லாம் ஆணையம் கவலைப்படாது. பொதுவாக மின்சாரத்துறை இலாபத்தில் செல்கிறதா என்பதை மட்டும் உறுதி செய்யும். இந்த நோக்கத்தில்தான் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டது.

இவ்வாறு அமைத்து செயல்படுவதன் மூலம் கடும் நட்டத்தில் இயங்கிக் கொண்டு இருக்கும் மின்சாரத்துறை இலாபத்தை நோக்கி திரும்பும் என்று சட்டத்தை இயற்றியவர்களும் கொள்கைகளை முடிவு செய்தவர்களும் நம்பினார்கள்.

ஆனால், இப்போது சட்டம் இயற்றி சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன பிறகும், மின்சாரத்துறை இலாபத்தில் இயங்கவில்லை. மாறாக, அந்தத் துறையின் நஷ்டங்கள் அதிகமாகியுள்ளன. இலாபத்தை உறுதி செய்ய ஒழுங்குமுறை ஆணையம் இருந்தும் எவ்வாறு இப்படி நடக்கிறது என்பதற்கான காரணத்தையும் இப்போது கண்டுபிடித்துள்ளார்கள்.

இந்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்பது ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு ஆணையம் உள்ளது. இந்த ஆணையங்களின் உறுப்பினர்கள் என்னதான் பொருளாதார நிபுணர்களாகவும், ஓட்டு வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லாதவர்களாகவும் இருந்தாலும் இந்த உறுப்பினர்களை நியமிப்பது சம்பந்தப்பட்ட மாநில அரசுகள்தான். ஆளும் அரசின் ஓட்டு வங்கியை பாதிக்கும் வண்ணம் இந்த உறுப்பினர்கள் செயல்பட்டார்கள் என்றால் அவர்களை அரசுகள் உடனே நீக்கிவிட்டு ‘ஒழுங்காக’ செயல்படுபவர்களை நியமித்துவிடும்.

அதாவது, இந்த ஆணையமும் மின்சார கட்டணத்தை அதிகம் உயர்த்தாதபடி அழுத்தத்தை மாநில அரசால் கொடுக்க முடியும், கொடுத்துக் கொண்டு இருக்கிறது. இதனால்தான் மின்சார வாரியம் கடும் நஷ்டத்திலும், கடும் கடன் சுமையிலும் இருந்தாலும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மின்சாரக் கட்டணம் என்பது கடந்த சில ஆண்டுகளாக உயர்த்தப்படாமலேயே உள்ளது. அது மட்டுமல்ல, பல்வேறு விதமான இலவச மின்சார திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இன்னும் சில மாநிலங்களிலும் கடந்த சில ஆண்டுகளாக மின்சார கட்டணம் என்பது உயர்த்தப்படவில்லை. பல மாநிலங்களின் மின்சார வாரியங்கள் பல ஆயிரம் கோடிகள் கடன் சுமையில் உள்ளன. மின்சாரக் கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பதுதான் இந்தக் கடனுக்குக் காரணம் என வலதுசாரி பொருளாதார நிபுணர்கள் கூறி வருகிறார்கள். தனியார் மின்சார உற்பத்தியாளர்கள் அதிகம் இலாபம் சம்பாதிப்பதால் அல்லது அதிக விலையில் உற்பத்தி செய்வதால் நஷ்டம் ஏற்படும் என்று இந்த பொருளாதார நிபுணர்கள் சிந்திப்பது கூட இல்லை.

எது எப்படியோ, இந்த மின்சார வாரியங்களின் கடன் சுமையை குறைத்தே தீரவேண்டும் என்ற முடிவுடன் மோடி அரசாங்கம் ‘உதை’ (UDAY) என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது. அந்தத் திட்டமும் மாநில நலன்களுக்கு எதிரான திட்டம்தான் என்பது வேறு செய்தி. அந்தத் திட்டமும் மோடி அரசின் மற்ற திட்டங்களை போல ‘ஃப்ளாப்’ ஆகி விட்டது என்பதுதான் முக்கியமான செய்தி. ஒரு திட்டம் ‘ஃப்ளாப்’ ஆனால் விட்டுவிடக்கூடிய அரசா மோடிஜி அரசு? மின்சார வாரியங்களின் கடனை தீர்க்கும் ஒரு புத்தம் புதிய திட்டத்துடன் வந்துள்ளது மோடி அரசு 2.0.

தேர்தலுக்குப் பின் பதவி ஏற்ற மோடி அரசு, ஒரு புதிய சட்ட வரைவை தயாரித்துள்ளது. அந்த வரைவின்படி புதிய மின்சார ஆணையங்கள் அமைக்கப்பட உள்ளன. இப்போது உள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் ஒழுங்காக செயல்படுகின்றனவா என்று கண்காணிப்பதுதான் இந்த புதிய ஆணையங்களின் வேலை. அதாவது, ‘ஆணையத்திற்கு ஆணையம்’ என்று சொல்லலாம். இது சாதாரண விஷயம் அல்ல. தற்போது உள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களின் உறுப்பினர்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் நியமித்து வருகின்றன. இவர்கள் கூறும் புதிய ஆணையத்தின் உறுப்பினர்களை மத்திய அரசு நியமிக்கும். ஆக மற்ற துறைகளில் நடப்பதைப் போல மின்சாரத் துறையிலும் மாநில அரசுக்கு இருக்கும் அதிகாரங்களை மறைமுகமாகப் பிடுங்க மத்திய அரசு இந்தச் சட்டத்தை கொண்டு வருகிறது. இந்த புதிய ஆணையம் எந்த விதத்திலும் சம்பந்தப்பட்ட மக்களுக்கு கட்டுப்பட்டதாக இருக்கப்போவது இல்லை. முன்பே சொன்னது போல அவர்களுடைய ஒரே நோக்கம் மின்சாரத் துறையை இலாபம் ஈட்டும் துறையாக மாற்றுவதுதான். கட்டணத்தை அதிகரித்தால், மக்களால் அந்த கட்டணத்தை செலுத்த முடியுமா, செலுத்துவதால் அவர்களுக்கு வரும் சிரமம் என்ன, செலுத்த முடியாத விளிம்பு நிலை மக்கள் என்ன செய்வார்கள், என்பதெல்லாம் அந்த ஆணையத்திற்கு கவலையில்லை. கவலைப்படத் தேவையில்லை! ஏனென்றால், அவர்கள் மக்களிடம் ஓட்டுக் கேட்டு செல்லத் தேவையில்லை.

இதில் கொடுமை என்னவென்றால் முன்பெல்லாம் மக்களின் நலனுக்காகவே இந்த சட்டங்களும் ஆணையங்களும் உருவாக்கப்படுகின்றன என்று பெயரளவிலேனும் சொல்லி வந்தார்கள். ஆனால், இப்போது அது கூட இல்லை. மின்சாரக் கட்டணத்தை உயர்த்தத்தான் இந்த புதிய சட்ட வரைவு, புதிய ஆணையங்கள் என மோடி அரசு வெளிப்படையாகவே கூறுகிறது.

இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு விஷயமும் உள்ளது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு, அதில் மக்கள் ஓட்டளித்து அரசாங்கங்களை தேர்வு செய்கின்றனர். அரசாங்கங்கள் மக்களுக்காக திட்டங்களையும் கொள்கைகளையும் வகுக்கின்றது என்றுதான் சொல்லப்படுகின்றது. ஒவ்வொரு முறை தேர்தல் நடக்கும் போதும் எங்களுக்கு வாக்களித்தால் நாங்கள் இதை மாற்றி விடுவோம் அதை மாற்றி விடுவோம் என்று அனைத்து தேர்தல் கட்சிகளும் சொல்வது வழக்கமாக உள்ளது.

ஆனால் உண்மை என்னவென்றால், அரசாங்கங்களுக்கு இருக்கும் அதிகாரங்களை ஏற்கெனவே சட்டங்கள் இயற்றி இந்த மின்சார ஆணையங்களைப் போன்ற ஆணையங்களுக்கு தாரைவார்த்து விட்டார்கள். நீங்கள் எந்த துறையை எடுத்தாலும் அரசியல் குறுக்கீடு, அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பங்கேற்பு, எதுவுமே இல்லாத ஆணையங்களை பார்க்க முடியும்.

படிக்க :
மேற்கு வங்கம் : தொடர்கிறது காவிக் குண்டர்களின் ‘ஜெய் ஸ்ரீராம்’ தாக்குதல்கள் !
மலை முழுங்கி கார்ப்பரேட் திருடர்களைக் காப்பாற்றும் ரிசர்வ் வங்கி !

எடுத்துக்காட்டாக, தொலைத் தொடர்புக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI), இன்சூரன்ஸ் துறைக்கு ஒரு ஒழுங்கு முறை ஆணையம் (IRDAI), பங்குச் சந்தைக்கு SEBI, உயர்கல்விக்கு ஒரு ஆணையம் கொண்டு வருவதாக சொல்கிறார்கள் (HEERA). இந்த ஆணையங்கள் உள்ள துறைகள் அனைத்திலும் இந்த ஆணையங்களை மீறி அரசாங்கங்களால் எளிதில் முடிவெடுக்க முடியாது. அதற்கு எடுத்துக்காட்டுதான் மின்சார ஒழுங்குமுறை ஆணையம். ஆகையால், ஓட்டு போட்டு அரசுகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் நாம் எந்தவிதமான காரியங்களைச் சாதிக்க முடியும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

மோடி அரசை பொருத்தவரையில் அவர்கள் அனைத்துத் துறைகளிலும் ஒரே விஷயத்தைத்தான் செய்கிறார்கள். அனைத்து மக்களுக்கும் மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்யப் போகிறோம் என்று வெளியில் சொல்வார்கள். ஆனால், மின்சாரக் கட்டணத்தை அதிகப்படுத்த சட்டம் கொண்டு வருவார்கள். இந்த சட்டத்தை நிறைவேற்ற ‘பாரத் மாதா கி ஜே’, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ போன்ற ஆயுதங்களை உபயோகப்படுத்துவார்கள்.

ஆக, இந்த அரசு அமைப்பு என்பதே கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாததாக மாற்றப்பட்டு வருகிறது. இதில் இங்கு கொஞ்சம் அங்கு கொஞ்சம் மாற்றம் செய்து பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்து விடலாம் என்று நாம் நம்பினால் அது நாம் இந்த அமைப்பைப் புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. இதற்கு ஒரே தீர்வு மக்களின் கையில் அதிகாரங்கள் இருப்பதுதான்!

செய்தி ஆதாரம்: economictimes

அருண் கார்த்திக்

ஆபாசத்தை ஆண்டவன் திருவிளையாடல் என்று கூறிக்கொள்ள அறிவு இடந்தரவில்லை !

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 09

”இந்துக்களுக்குள் எந்தக் காரணத்தாலாவது மனக்கசப்பு இருந்தால் அதை நமக்குள் சமாதானமாகத் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, ஒரு வகுப்பார் தாங்கள் இந்துக்களே அல்ல என்று முஸ்லீம்களோடு சேர்ந்து ஒத்துழைப்பதா?” என்று சாஸ்திரியார் கேட்கிறார்.

இந்துக்களுக்குள் தகராறு என்ற தத்துவம் மறைந்து வெகு நாட்களாகி விட்டன! “நானும் இந்து தானே, என்னை ஏன் கொடுமைப்படுத்துகிறீர்? என்னை ஏன் தாழ்ந்த ஜாதி என்று கூறுகிறீர்?” என்று கைகூப்பிக் கேட்ட போது, நெஞ்சம் திறக்கவில்லை! பிறகே நாம் யோசித்தோம். ஒரு சிறு கூட்டம் நம்மை இங்ஙனம் கொடுமைப்படுத்தக் காரணம் என்ன என்ற உண்மை விளங்கிற்று. இது இனப்போராட்டம் என்பது தெரிந்தது. அவர்கள் ஆரியர், நாம் திராவிடர்! அதே ஆராய்ச்சியே, முஸ்லிம்கள் திராவிட இனம், இஸ்லாமிய மார்க்கம் என்ற உண்மையை உரைத்தது. ஆகவே திராவிட இஸ்லாமியக் கூட்டுப்படை கிளம்பிற்று. சாஸ்திரியார் கூறுவது போல், திராவிட நாட்டிலிருந்து ஆரியரை ஓட்ட அல்ல ; ஆரியத்தை ஓட்ட! அதற்கு முஸ்லீம்களுடன் ஒத்துழைப்பதா? என்கிறார் சாஸ்திரியார். ஆம்! அமெரியிடம் ஒத்துழைக்கிறீர் நீர். அதை மறக்க வேண்டாமென்று சாஸ்திரியாருக்குக் கூறுகிறோம். ஆங்கிலேயரும் ஆரியரும் ஒரே இனம். இனத்தோடு இனம் சேருகிறது. திராவிடரும் – இஸ்லாமியரும் ஒரே இனம்! இனத்தோடு இனம் சேருகிறது!

பெரியார் இராமசாமி நாயக்கர், பாகிஸ்தானத்துக்குட்பட்டு வாழ்ந்தாலும் வாழலாமே ஒழிய, ஆரியருடன் வாழக்கூடாது எனக் கோவை மாநாட்டில் உரைத்தார் என்று சாஸ்திரியார் சோகிக்கிறார். உண்மைதான்! பெரியார் அங்ஙனம்தான் உரைத்தார். இனம் இனத்தோடு சேரும் என்ற நியதியை எடுத்துரைத்தார்.

”இது நடக்காத காரியம்” என்றுரைக்கிறார் சாஸ்திரியார். நடக்காத காரியமானால், அதன் பொருட்டு சாஸ்திரியார், சவர்க்கார் ஜவாளி பாட , வரதர் மிருதங்கம் கொட்டத் தாசர்கள் தாளமிட, ஆரிய நாட்டியமாடியிருப்பாரா?

”பாகிஸ்தானம் எப்படி வெறுங்கனவோ, அப்படியே திராவிடஸ்தானமும் கனவுதான்” என்று கூறி, மனச் சாந்தி பெறுகிறார் சாஸ்திரியார்.

பாகிஸ்தான், திராவிடஸ்தான் கிளர்ச்சி வெறும் கனவு என்பது உண்மையானால், மதுரை மாநாட்டுக்கு அத்தனை பணச்செலவு ஆகியிருக்காது!

கனவு காண்பது யார்? என்பதைக் காலம் காட்டட்டும். அதுவரை சாஸ்திரியார் அமெரி அளித்த மகா மந்திரத்தை உச்சாடனம் செய்து கொண்டிருக்கட்டும்!

தங்களை ‘இந்துக்கள்’ அல்ல என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனரல்லாதார் மீது பாய வேண்டும் என்று பற்களை நறநறவெனக் கடிக்கிறார். பல அவதாரமெடுத்த அரசியல் ஆமை டாக்டர் வரதராஜுலு நாயுடுகாரு! அவர் இப்போது இந்துக்களைப் படை திரட்டுகிறாராம். ஏன்? முஸ்லீம்களின்  ஆதிக்கம் வளரவொட்டாது தடுக்கலாம்; முஸ்லீம்கள் பாகிஸ்தான் கேட்பதையும் திராவிடர் திராவிடநாடு கேட்பதையும் தடுக்கலாம் என்று!

டாக்டர் வரதராஜுலு நாயுடு.

அபாரமான யோசனைதான்! வீரமான உறுமல்தான்! ஆனால், இதற்கு டாக்டர் வரதராஜுலு, மக்களை ஏன் வலையில் சிக்க வைக்க வேண்டும்? பாற்கடல் மீது பள்ளி கொண்டவர்! பக்தர் துயரைத் தீர்க்க வந்தவர் பத்மநாபா! பரந்தாமா! என்று ஆரம்பித்து ஒரு மூச்சு அர்ச்சித்து விட்டால் போதாதா? முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள், கின்னரர், கிம்புருடர், கந்தர்வர், இந்திரன், சந்திரன், பிரமன், வீரபத்திரன், முருகன், விநாயகன், சிவன், விஷ்ணு மற்றும் உள்ள இந்துக் கடவுள்கள் தம் குடும்ப சகிதமாகப் புறப்பட்டு வந்து விடுவார்களே! இதைவிட்டு ஊருக்குக் கூட்டம் ஏன்? அறிக்கைகள் எதற்கு? வடநாடு தென்நாடு வட்டமிடுவது எதற்கு? என்று கேட்கிறோம்.

அப்படி வட்டமிட்டாலும் காசி விஸ்வநாதர் காலடி தொழுது தொடர்ந்து மற்றத் ‘திவ்ய க்ஷேத்திரங்களை’ தரிசித்து விட்டு இராமேஸ்வரத்தில் மூழ்கி எழுந்து ‘’இராம நாமமே கற்கண்டு! அதுவே எங்கள் வெடிகுண்டு” என்று பஜனை செய்துவிட்டால், மலைபோல் வரும் துன்பமும் பனிபோல் போகுமே!

இந்துமதக் கற்பனைகளில் டாக்டருக்கு ஆர்வம் இருப்பதால்தான், தாமோர் இந்து என்று மீசை மேல் கைபோட எண்ணுகிறார்! மீசை இல்லை. ஆகவே டாக்டர் மூஞ்சேயிடம் முறையிடுகிறார். அவர் தமது தாடியை உருவுகிறார்! நாம் திராவிடர்; இந்து புராணத்தின் ஆபாசத்தை அலசிப் பார்த்துப் பார்த்து, நமக்கு அருவருப்புத் தட்டிவிட்டது. வெளியுலகில் உள்ள நாகரிக மக்கள் நகைக்கக்கூடிய புராணப் புளுகுகளை,  நம் மத நூல்கள் என்று கூறிக்கொள்ள மனம் இடம் தரவில்லை. ஆபாசத்தை ஆண்டவன் திருவிளையாடல் என்று கூறிக்கொள்ள, அறிவு இடந்தரவில்லை. டாக்டர் நாயுடுவுக்கு சர்வமும் இன்று சர்க்கரையாக இருக்கிறது.

படிக்க:
தொழிலாளர் வாழ்க்கை : ஒரு பருந்துப் பார்வை !
இந்தியா : உலகளவில் பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடு !

ஆப்பிரிக்கா நாட்டிலே ஒருவிதமான மக்கள் இருக்கிறார்கள், அவர்கள் கழுத்திலே மண்டை ஓடுகளை மணி ஆரமாக போட்டுக்கொண்டு இருப்பார்கள். மாடு கன்றுகளைக் கண்டால் மண்டியிட்டுத் தொழுவார்கள். கூடப் பிறந்தவரைக் கொன்று சாமிக்குப் படைப்பார்கள், கூத்தாடுவார்கள், குடிப்பார்கள் என்று கூறிவிட்டு அந்த இனத்தைச் சேர்ந்தவர் தாம் நீங்கள் என்று நம்மிடமாகட்டும் உங்களிடமாகட்டும் ஓர் ஆப்பிரிக்க வாசியோ, அல்லது இங்குள்ள வேறு எவரோ சொன்னால் சொல்பவரின் பற்கள் கீழே உதிர்ந்து விழுமா? விழாதா?

நாலுதலைச் சாமிகள், மூன்று கண் சாமிகள், மூன்றுதலைச் சாமிகள், ஆயிரம் கண்சாமி, ஆறுதலைச்சாமி, ஆனைமுகச்சாமி, ஆளிவாய்ச்சாமி, பருந்தேறும் சாமி, காளை ஏறும் கடவுள், காக்கை மீது பறக்கும் கடவுள், தலைமீது தையலைத் தாங்கி நிற்கும் தெய்வம், ரிஷி பத்தினிகளிடம் ரஸமனுபவிக்க நடு நிசியில் போகும் தெய்வம் என்று புராண அட்டவணைகளிலே உள்ளனவே! நாம் இந்து என்று கூறிக்கொண்டால், இவர்களை நமது தெய்வங்கள் என்று ஒப்புக்கொண்டு தொழ வேண்டுமே, இந்தச் செய்தியைக் கேட்டால் உலக நாகரிக மக்கள் நம்மை நீக்ரோக்களை விடக் கேவலமானவர்கள் என்று கேலி செய்வார்களே! இந்தக் கண்றாவிக்கு என்ன செய்வது? இத்தகைய ஆபாசத்தை நம் தலையில் தூக்கிப் போட்டுக்கொள்ள, நமக்கு மனம் எப்படித் துணியும்? ஆகவேதான், நாம் இந்து அல்லவென்று கூறுகிறோம்.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

நான் உனக்கு சளைக்க மாட்டேன் அண்ணே ! கட்டாயம் பறப்பேன் !

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 8-அ

“அவர், அதுதான் வில்லியம்ஸ், விமானி அல்லவே” என்று சொல்லிவிட்டுச் சுவர் பக்கம் திரும்பிக் கொண்டான் அலெக்ஸேய்.

எனினும் அவன் “மனப்பூட்டைத் திறக்கும் முயற்சிகளை கமிஸார் கைவிடவில்லை. ஒரு நாள் அலெக்ஸேய் வழக்கம் போன்று எது எப்படிப் போனால் என்ன என்ற உணர்வு மறத்த நிலையில் இருந்தபோது கமிஸாரின் இடிக்குரல் முழங்குவது அவன் காதில் பட்டது.

“அலெக்ஸேய், இதோ பார். இங்கே உன்னைப் பற்றி எழுதியிருக்கிறது.”

இதற்குள் ஸ்தெபான் இவனாவிச் சஞ்சிகையை மெரேஸ்யெவிடம் கொண்டு கொடுத்தார். சிறு கட்டுரை ஒன்று அதில் குறியிட்டுக் காட்டப்பட்டிருந்தது. அலெக்ஸேய் அந்தக் கட்டுரை மீது விரைவாகக் கண்ணோட்டினான். முதல் உலக யுத்த காலத்திய ருஷ்ய விமானிகள் பற்றியது அந்தக் கட்டுரை. சஞ்சிகையின் முதல் பக்கத்திலிருந்து அலெக்ஸேயை நோக்கியது அறிமுகமற்ற இளம் இராணுவ அதிகாரி ஒருவனது முகம். அவனது சிறுமீசை மேல் நோக்கி முறுக்கி விடப்பட்டிருந்தது. காதுவரை இழுத்துவிடப் பட்டிருந்த விமானி தொப்பி மீது வெள்ளைத் தொப்பிச் சூட்டு திகழ்ந்தது.

“படி, படி, உனக்காகவேதான்” என்று வற்புறுத்தினார் கமிஸார்.

மெரேஸ்யெவ் படித்தான். ருஷ்ய இராணுவ விமானி லெப்டினன்ட் வலெரியான் அர்க்காதியெவிச் கார்ப்போவிச் என்பவனைப் பற்றிக் கட்டுரையில் விவரிக்கப் பட்டிருந்தது. பகைவர் முனையிடங்களுக்கு உயரே பறக்கையில் லெப்டினன்ட் கார்ப்போவிச் ஜெர்மானியச் சிதறு குண்டினால் காலில் காயமடைந்தான். அடிபட்டுச் சிதைந்த காலுடன் தனது “பர்மான்” விமானத்தைத் திருப்பி ஒட்டிப் போர்முனை வரிசையின் மேலாகச் சொந்தப் படையினர் இருந்த இடத்தில் அவன் விமானத்தை இறக்கிவிட்டான். அவன் பாதம் வெட்டி அகற்றப்பட்டுவிட்டது. எனினும் அந்த இளம் அதிகாரி இராணுவத்திலிருந்து விலக விரும்பவில்லை. தானே உருவமைத்த போலிக்காலை அவன் புனைந்தான். நெடுநாட்கள் பிடிவாதமாக உடற்பயிற்சி செய்தான், போலிக்காலுடன் நடந்தும் வேலை செய்தும் பழகினான். விளைவாக யுத்த முடிவுக்குள் மீண்டும் இராணுவத்துக்குள் திரும்பி விட்டான். இராணுவ விமானிகள் கல்லூரியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றினான். அதோடு, கட்டுரையில் குறித்தபடி, “சில வேளைகளில் தன் விமானத்தை ஓட்டிச் செல்லும் அபாயத்தையும் கூட மேற்கொண்டான்.” இராணுவ அதிகாரிக்கு உரிய “கியோர்கிய்” பதக்கம் அவனுக்கு வழங்கப்பட்டது, ருஷ்ய விமானப் படையில் தொடர்ந்து பணியாற்றினான். முடிவில் ஒரு விபத்தில் உயிர் துறந்தான்.

இந்தக் கட்டுரையை ஒரு தடவை, இரண்டு தடவைகள் , மூன்று தடவைகள் படித்தான். படத்தில் இருந்த ஒடிசலான இளம் அதிகாரி ஓரளவு இறுக்கத்துடன், ஆனால் துணிவு ததும்பப் புன்னகை செய்தான். அவனது களைத்த முகத்தில் சித்தவுறுதி தென்பட்டது. வார்டில் இருந்தவர்கள் எல்லோரும் பேசாமல் அலெக்ஸேயை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

“படித்தாயா?” என்று தந்திரத்துடன் வினவினார் கமிஸார். (அலெக்ஸேய் ஒன்றும் பேசவில்லை. இன்னமும் வரிகள் மீது கண்ணோட்டிக் கொண்டிருந்தான் அவன்) “ஊம், என்ன சொல்கிறாய்?”

“ஆனால் அவனுக்கு ஒரு பாதம் மட்டுந்தானே இல்லை!”

“நீ சோவியத் குடிமகன் ஆயிற்றே.”

“அவன் பறந்தது ‘பர்மன்’ விமானத்தில். அதுவும் ஒரு விமானமா? வெறும் சக்கடா அல்லவா அது! அதில் பறப்பதற்கு என்ன? அதைச் செலுத்துவதற்கு இலாவகமோ விரைவோ தேவையே இல்லை.”

ஆனால் நீ சோவியத் குடிமகன் ஆயிற்றே” என்று வலியுறுத்தினார் கமிஸார்.

சோவியத் குடிமகன்” என்று இயந்திரம் போலத் திருப்பிச் சொன்னான் அலெக்ஸேய். கட்டுரையிலிருந்து அவன் இன்னமும் பார்வையை அகற்றவில்லை. அப்புறம் அவனுடைய வெளிறிய முகம் உள்ளிலிருந்து பரவிய ஏதோ செம்மையால் ஒளிர்ந்தது. வியப்பும் மகிழ்வும் பொங்கும் விழிகளுடன் எல்லோரையும் பார்த்தான்.

படிக்க:
திராவிட மலர்ச்சியைத் தடுக்க தாமதம் ஏற்படக் கூடுமே தவிர தடையேற்படாது !
காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !

அன்று இரவு அலெக்ஸேய் கண்களை மூடவே இல்லை. மறுபடி மறுபடி பத்திரிக்கையை எடுத்து விடிவிளக்கு வெளிச்சத்தில் லெப்டினன்டின் புன்னகைக்கும் முகத்தை நோக்கினான். “உனக்குக் கஷ்டமாக இருந்தது, ஆயினும் நீ சமாளித்து விட்டாய். எனக்கு பதின்மடங்கு அதிகக் கடினமாக இருக்கும். ஆனாலும் நானும் பின்தங்கிவிட மாட்டேன், நீயே பார்ப்பாய்.” – இவ்வாறு எண்ணமிட்டான் அலெக்ஸேய்.

இரவுக்கு நடுவில் கமிஸார் திடீரென ஓசை அடங்கிப் போனார்.. அலெக்ஸேய் சற்றே எழுந்து பார்த்தான். கமிஸார் வெளிறிப் போய், அமைதியாகப் படுத்திருந்தார். அவர் மூச்சு விடவில்லை என்பது தெரிந்தது. அலெக்ஸேய் மணியை எடுத்து வெறி கொண்டவன் போல அடித்தான். க்ளாவ்தியா மிஹாய்லவ்னா திறந்த தலையும் தொளதொளத்த முகமும் அவிழ்ந்த பின்னலுமாக ஓடி வந்தாள். சில நிமிடங்களுக்குள் உள்ளுறை மருத்துவர் அழைக்கப்பட்டார். அவர் நாடி பிடித்துப் பார்த்தார், கற்பூரத் தைலத்தை ஊசி போட்டு ஏற்றினார், ஆக்ஸிஜன் குழாயை வாயில் செருகினார். இந்தக் கெடுபிடி ஒரு மணி நேரம் போல நீடித்தது. சமயங்களில் எல்லாம் வீணாகக் கூடத் தோன்றியது. முடிவில் கமிஸார் விழிகளைத் திறந்தார், சோர்வுடன், க்ளாவ்தியா மிஹாய்லவ்னாவைப் பார்த்து முறுவலித்தார்.

“மன்னிக்க வேண்டும், உங்களைக் கலவரப்படுத்தி விட்டேன்.” என்று தணிந்த குரலில் மொழிந்தார்….

உள்ளுறை மருத்துவர் போய்விட்டார். அவருடைய ஜோடுகளின் ஒலி ஆளோடியின் கோடியில் சென்று ஓய்ந்து விட்டது. அறைத்தாதிகள் அவரவர் வார்டுக்குப் போய் விட்டார்கள். க்ளாவ்தியா மிஹாய்லவ்னா மட்டுமே கமிஸாரின் கட்டில் மீது ஓரத்தில் உட்கார்ந்திருந்தாள். நோயாளிகள் தூங்கி விட்டார்கள். ஆனால் மெரேஸ்யெவ் கண்களை மூடியவாறு உறங்காமல் படுத்திருந்தான். விமானத்தின் கால் விசைகளுடன் வார்களால் பொருத்தப்படக் கூடிய பொய்க் கால்களைப் பற்றிச் சிந்தித்து கொண்டிருந்தான் அவன். விமானப் பயிற்சி கழகத்தில் பயிற்சி ஆசிரியனாக இருந்த உள்நாட்டுப் போர் காலத்தைச் சேர்ந்த முதிர்ந்த விமானி கூறிய சேதி அவன் நினைவுக்கு வந்தது. குட்டைக் காலனான ஒரு விமானி பெடல்களுடன் மரக் கட்டைகளை கட்டி இணைத்துக் கொண்டதாக அவன் சொன்னான்.

“நான் உனக்கு சளைக்க மாட்டேன், அண்ணே” என்று படத்திலிருந்த கார்ப்போவிச்சுக்கு அலெக்ஸேய் உறுதி கூறினான். “பறப்பேன், கட்டாயம் பறப்பேன்!” என்ற சொற்கள் அவனது மூளையில் ஒலித்துத் தூக்கத்தை விரட்டிவிட்டன. கண்களை மூடியவாறு அவன் அமைதியாகப் படுத்திருந்தான். கனவில் புன்னகைத்தபடி அவன் ஆழ்ந்து உறங்குவது போலப் பார்ப்பவர்களுக்குத் தோன்றியிருக்கும்.

அப்போது ஓர் உரையாடல் அவன் காதுகளில் விழுந்தது. பின்னர் வாழ்க்கையின் கடினமான கணங்களில் இந்த உரையாடலை அவன் பலமுறை நினைவுபடுத்திக் கொண்டான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

’ நீட் ’ தேர்வு – ’ ரிசல்ட் ’ கதைகள் !

”நீட் ரிசல்ட் வந்தாச்சி, தமிழினி 654 மார்க் வாங்கியிருக்காளாம்”

”டேய், சங்கீதா பேசறேண்டா. யோகேஷ் 215 மார்க் வாங்கியிருக்கான். கொஞ்சம் வீட்டுக்கு வாயேன்”

“அந்தப் பொண்ணை பார்க்கவே கொஞ்சம் பரிதாபமாத் தாங்க இருக்கு. முன்னூத்தி இருபது மார்க்காம். நேத்தி பூரா ஒரே அழுகை”

முதலிரண்டு தகவல்கள் தொலைபேசியிலும் கடைசி தகவல் நேரிலும் சொல்லப்பட்டது. நீட் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து தெரிந்தவர்கள், உறவினர்கள் வட்டாரத்தில் மருத்துவ படிப்புக் கனவுகளோடு தேர்வெழுதியவர்கள் அரக்கப் பரக்க ஏதேனும் ஒரு கல்லூரியில் இடம் பிடிக்க அலைந்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரின் பின்னும் ஒரு கதை உள்ளது.

***

தமிழினி :

நண்பரின் மூத்த அண்ணன் மகள். இந்த முறை 654 மார்க் வாங்கியிருக்கும் தமிழினிக்கு இது மூன்றாவது நீட் தேர்வு. மூன்று தடவைகளுக்கு மேல் முயற்சி எடுப்பது சாத்தியமில்லை என்பதால் கடந்த ஓராண்டாக இரவு பகலாக படித்து வந்தாள். இந்தாண்டு தேர்வுக்கு சரியாக பத்து நாட்களுக்கு முன் தமிழினியின் தாயார் இறந்து விட்டார்.

தமிழினியின் தாயார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக கர்பப்பை புற்று நோயால் அவதியுற்று வந்தார். பத்தாண்டுகளுக்கு முன் முதன் முறையாக புற்று இருப்பது கண்டறியப்பட்டபோது கர்பப்பை அகற்றப்பட்டது. கடுமையான கீமோதெரபி சிகிச்சைகளைத் தாங்கிக் கொண்டு மீண்டு எழ அவருக்கு ஓராண்டுக்கு மேல் ஆனது. பின்னர் ஐந்தாண்டுகளுக்கு முன் இரண்டாவது தாக்குதல். மீண்டும் கீமோ. இரண்டாவது தாக்குதலில் மிகுந்த போராட்டங்களுக்குப் பின் மீண்டு வந்தவரை மீண்டும் மூன்றாவது முறையாக ஓராண்டுக்கு முன் தாக்கியது புற்று நோய்.

இரண்டாவது முறை தாக்குதலில் இருந்து தப்பிய பின் வாழ்க்கையை ஓரேயடியாக வெறுத்துப் போன தமிழினியின் தாய் இறுதி முறையாக சில அறிகுறிகள் தென்பட்ட போது யாரிடமும் சொல்லவில்லை. நோய் முற்றி ஒரு வழியாக செத்துப் போனாலும் பரவாயில்லை கீமோ எடுத்துக் கொள்ள முடியாது என இருந்து விட்டார். ஆறு மாதங்களுக்கு முன் புற்று உடலின் பிற உறுப்புகளுக்கும் பரவிய பின்னர்தான் மருத்துவமனைக்குச் சென்றனர். இம்முறை புற்று மூன்றாம் நிலைக்குச் சென்று விட்டது. தமிழினியின் நீட் தேர்வுக்கு சரியாக பத்து நாட்களுக்கு முன் அவரது தாய் அங்கையர்கண்ணி இறந்து போனார்.

தமிழினி அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் படித்தாள். பன்னிரெண்டாம் வகுப்பில் 94 சதவீதம் மதிப்பெண்கள். தாயின் நோயை அருகில் இருந்து பார்த்தவள் என்பதால் மருத்துவப் படிப்பை லட்சியமாகக் கொண்டிருந்தாள். நடுத்தர வர்க்கக் குடும்பம் என்றாலும் பெரிய குடும்பம். அங்காளி பங்காளிகள் என சேர்த்தால் பெரும் கூட்டமே சேரும்.

தமிழினி முதலிரண்டு முறை நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் எடுக்கவில்லை என்றாலும் அந்தக் குடும்பமும் உறவினர்களும் அவளுக்குப் பின் நின்றது. ஒவ்வொருவதும் ஐம்பதும் நூறுமாக கொடுத்து சென்னைக்கு அனுப்பி அங்கே உறவினர் வீட்டில் தங்கவைத்து படிக்க வைத்தனர். இப்போது நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதோடு பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கான தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாள்.

தமிழினிக்கு சென்ற வாரம் தொலைபேசினேன், “ரெண்டு வருசம் வீணாப் போச்சி அண்ணே” என்றாள். ஆனால் அதைச் சொல்லும் போது குரலில் துக்கம் ஏதும் தெரியவில்லை.

***

யோகேஷ் :

“எனக்கு இங்கே கெடைக்கலேன்னா மொரீஷியஸ் அனுப்புங்க. இல்லேன்னா இன்னொரு வருசம் ட்ரை பண்ணி பாக்கறேன். ஆனா வேற எதுவும் படிக்க முடியாது. படிச்சா இதான். இல்லேன்னா இல்ல” நான் அருளானந்தம் வீட்டுக்குப் போன போது யோகேஷ் தொண்டை புடைக்க கத்திக் கொண்டிருந்தான். அருளானந்தம் பரிதாபமாக சோபாவில் உட்கார்ந்து முறைத்துக் கொண்டிருந்தார்.

அருளானந்தம் அடிமட்டத்தில் இருந்து உழைத்து முன்னேறியவர். சித்தாளாகத் துவங்கி, மேசனாக, மேஸ்திரியாக உயர்ந்து இப்போது காண்டிராக்டராக இருக்கிறார். எப்போதும் நான்கைந்து கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருக்கும். எப்படியாவது தனது ஒரே மகனை கட்டிடப் பொறியாளராக்கி தான் பார்த்துப் பார்த்து உருவாக்கிய சாம்ராஜ்ஜியத்தை அவனிடம் கொடுத்து விட வேண்டும் எனக் கனவு கண்டு கொண்டிருந்தார்.

படிக்க:
♦ நீட் தேர்வின் வெற்றியும் தோற்கடிக்கப்பட்ட சமூக நீதியும் !
♦ நீட் : தமிழக மாணவர்களை குற்றவாளிகளாக கருதும் மோடி அரசு !

“அப்பா, எவனைப் பார்த்தாலும் பி.ஈ படிக்கிறான். நானும் பி.ஈ படிச்சா எல்லாவனும் என்னைப் பார்த்து சிரிப்பான்” எனப் பேசிப் பேசி அப்பாவின் மனதைக் கரைத்தான் யோகேஷ்.

யோகேஷ் இரண்டாவது முயற்சியாக நீட் எழுதினான். முதல் முறையாக சென்ற ஆண்டு எழுதி பெயில் ஆகி விட்டான். அதன் பின் புகழ் பெற்ற ஆகாஷ் அகாடமியில் 1.5 லட்சம் கட்டி கடந்த ஓராண்டாக படித்து வந்தான். அவனது அகாடமியிலேயே இதுதான் குறைந்த மார்க் என அருளின் மனைவி (என் கல்லூரித் தோழி) தலையில் அடித்துக் கொண்டாள்.

“ரமேசு, நீயாவது வந்து அவனை எப்படியாச்சும் பேசி பி.ஈ படிக்க ஒத்துக்க வையேண்டா. இந்த தறுதலைய நினைச்சி அருளுக்கு ஒரே பிரசர். இப்ப தொழிலும் முன்னப் போல இல்ல. ரொம்ப டவுனாகிடிச்சி. அதுவும் இதுவுமா சேர்ந்து அருளு நைட்டெல்லாம் தூங்கறதே இல்ல” சங்கீதா எனக்குத் தொலைபேசியில் பேசி வீட்டுக்கு அழைத்திருந்தாள். எப்படியாவது பேசி யோகேஷை சரிக்கட்டி விடு என தொலைபேசியில் கேட்டிருந்தாள். எனக்கு யோகேஷைத் தெரியும். அவனை சம்மதிக்க வைப்பது அத்தனை சுலபம் இல்லை என்றும் தெரியும். இருந்தாலும் தோழிக்காக சென்றேன்.

“அங்கிள், உங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்ல. தேவையில்லாம ஏன் தலையிடறீங்க? நீங்க எங்கம்மாவோட பிரண்டுன்னா அவங்களோட உங்க பஞ்சாயத்த வச்சிக்கங்க. தேவையில்லாத என் கிட்ட வேணாம்” நான் முதல் வரி பேசுவதற்கு முன்பே யோகேஷ் பொரிந்தான்.

”டேய், கொஞ்சம் பேச விடேண்டா?” என்றேன்.

“நீங்க என்ன பேசுவீங்கன்னு தெரியும். எங்கப்பா இவ்ளோ சம்பாதிக்கிறாங்க இல்ல. நான் மட்டும் தானே பையன்? எனக்கு செலவு செய்ய ஏன் கசக்குது? என்னா ஒரு…. ஒரு கோடி செலவாகுமா? வேணும்னா நான் படிச்சி ஒரே வருசத்துல சம்பாதிச்சி கொடுத்திடறேன். தரச் சொல்லுங்க” என்றவன் அவன் அறைக்குச் சென்று படீரென கதவை அறைந்து சாத்திக் கொண்டான். உள்ளே ஜஸ்டின் பீய்பரின் அலறல் கேட்கத் துவங்கவும் அருளைக் கூப்பிட்டுக் கொண்டு வெளியே வந்தேன்.

இருவருமாக பக்கத்து தேனீர் கடைக்கு வந்து ஆளுக்கொரு தேனீர் சொல்லி விட்டு காத்திருந்தோம். அவரே முதலில் பேச ஆரம்பித்தார்.

“எப்படியும் சீட்டு கிடைச்சிரும்னு சொல்றாங்க”

“எப்படிங்க கிடைக்கும்? இப்ப யோகேஷோட ரேங்க்கு 5 லட்சத்துக்கு மேல. எப்படிப் பார்த்தாலும் ஒரு லட்சம் சீட்டு தானே இருக்கும்? அப்புறம் எப்படி கிடைக்கும்னு நம்பறீங்க?”

“இல்லைங்க, கவர்ன்மெண்ட்ல கிடைக்காது. பிரைவேட்ல கவர்மெண்ட்டுக்கு ஒதுக்கியிருக்க சீட்டுகளுக்கும் கிடைக்காது. ஆனா டீம்டு காலேஜுகள்லயும் பிரைவேட்லயே மேனேஜ்மெண்ட் கோட்டாவுல இருக்கிற என்.ஆர்.ஐ ரிட்டர்ன் சீட்டுகளும் கிடைக்க வாய்ப்பிருக்கு. மாப் அப் ரவுண்ட்ல கிடைக்கலாம்னு சொல்றாங்க” என்றார் அருள்.

“சரி, அங்கேயும் இருக்கிற குறைந்த சீட்டுகளுக்கு நல்ல போட்டி இருக்குமில்லே? நிறைய செலவாகுமே?” சமீபத்தில் அருள் வாங்கிப் போட்ட இடம் ஒன்று கோர்ட் வழக்கில் மாட்டிக் கொண்டதில் பெரிய தொகை ஒன்று மாட்டிக் கொண்டிருந்தது. இப்போது சில லட்சங்கள் எடுப்பதே சிக்கல் என்பது எனக்குத் தெரியும்.

“வாஸ்தவம் தான். வருசத்துக்கே முப்பத்தஞ்சி வரலாம்னு சொல்றாங்க. அதிலயும் மூன்று வருட பீசையும் ஒரே தவணையா கட்டச் சொல்றாங்க”

“எப்படி சமாளிப்பீங்க?”

“எதுனா நிலத்தை விற்க வேண்டியதுதான்… இப்ப நம்ம அவசரத்தைப் பார்த்து ரொம்பவே விலையைக் குறைச்சு கேட்கிறாங்க”

“சரிங்க, இதுக்கு பேசாம யோகேஷ் மண்டைல ஒரு தட்டு தட்டி சிவில் படிக்க சொல்ல வேண்டியது தானே?”

“இல்லைங்க. அவன் பிறந்ததிலேர்ந்து கேட்டது எதையும் நான் மறுத்ததில்லே. இப்ப நான் எதுனா சொல்லப் போயி அவன் எதுனா முடிவெடுத்திட்டா? பேப்பர்ல வேற நிறைய பார்க்கிறோம் இல்ல?”

தேனீர் முடிந்து எழுந்தோம்.

***

அந்தப் பெண் (தர்ஷினி)  :

தர்ஷினி எங்கள் ஊர்தான். எங்கள் ஊரிலேயே இருக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தாள். அவள் அப்பா சுந்தரவேல் எனக்கு தூரத்து முறையில் அண்ணன் வேண்டும். சுந்தரத்திற்கு பக்கத்தில் உலோக உருக்காலை ஒன்றில் வேலை; ஈய உலைக்களத்தின் ஆபரேட்டர்.

கடந்த இருபதாண்டுகளாக ஈய உலைக்களத்தில் வேலை பார்த்ததில் அவரது தோல் முழுவதும் பாதிக்கப்பட்டு ஒரு வகையான சொரியாசிஸ் போல் வந்து விட்டது. கை கால்கள் எல்லாம் மீன் செதில்கள் போல் வெள்ளை நிறத்தில் திப்பி திப்பியாக இருக்கும். சென்ற ஆண்டு வேலைக்குச் சென்ற இடத்தில் மயங்கி விழுந்து விட்டார். இரத்த வாந்தியும் எடுத்திருக்கிறார்.

அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பரிசோதித்துப் பார்த்ததில் இரத்தத்தில் ஈயத் துகள்கள் இருப்பதாகவும் அதிகபட்சம் சில ஆண்டுகள் தான் ஆயுள் என்றும் சொல்லி இருக்கிறார்கள். தர்ஷினி அப்போது பதினோராம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதியிருந்த சமயம். பத்தாம் வகுப்பில் 90 சதவீதம் வாங்கியிருந்த தர்ஷினிக்கு இயல்பாகவே பதினோராம் வகுப்பில் முதல் வகுப்பு கொடுத்திருந்தனர். எதாவது ஒரு பட்டம் பெற்றுக் கொண்டு டீச்சர் ட்ரைனிங் சேர வேண்டும் என்கிற விருப்பத்தில் இருந்த தர்ஷினி அப்பாவின் நோயைக் குறித்து அறிந்த பின் மருத்துவராவது என முடிவு செய்தாள்.

கடந்த ஓராண்டாக மிகக் கடுமையாக நீட்டுக்கு படித்து வந்தாள். தனியார் நிறுவனத்தில் பணம் கட்டிப் படிக்க வசதியில்லை. இரவு பகலாகப் படித்து 320 மதிப்பெண் எடுத்திருந்தாள். இந்த மதிப்பெண்ணுக்கு அரசு கல்லூரியில் இடம் கிடைக்காது. தனியார் கல்லூரியில் அரசுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கைகளிலும் இடம் கிடைக்காது. தனியார் கல்லூரியின் நிர்வாகக் கோட்டா அல்லது நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் கிடைக்கலாம். எப்படியும் வருடத்திற்கு 12 லட்சம் வரை செலவாகலாம். தர்ஷினி மருத்துவ படிப்புக் கனவைக் கைவிடும் முடிவை எடுத்திருப்பதாகச் சொன்னார்கள். வெளியூர் சென்று விட்டு மூன்று வாரம் கழித்துதான் அவளைப் பார்க்கச் சென்றேன்.

“என்ன படிக்கப் போறே தர்ஷி..”

“நர்சிங்குக்கு அப்ளை பண்ணிருக்கேன் சித்தப்பா” அவள் முகத்தில் மெலிதான சோகம் தவிர பெரிய துக்கம் ஏதும் இல்லை.

“வருத்தமா இல்லையா தர்ஷி?..”

“எனக்கென்ன சித்தப்பா… அப்பாவுக்கு முடியாம போனா நானே பார்த்துக்கனும்னு நினைச்சேன். அவங்க கைய பாத்தீங்களா? வேற யாரும் அக்கறையா பார்த்துக்க மாட்டாங்க. இப்ப என்ன? டாக்டரா இல்லாட்டி, நர்சா இருந்து பார்த்துக்கப் போறேன். அவ்ளோ தானே?” சிரித்தாள்.

“சரிம்மா, நல்லா படி” உச்சியில் தட்டிக் கொடுத்து விட்டுக் கிளம்பினேன்.

வசீகரன்

குட்கா – போதை வஸ்துக்களை பறிமுதல் செய்த விழுப்புரம் மக்கள் அதிகாரம் !

பெங்களூரிலிருந்து – விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் பகுதிக்கு குட்கா, பான்மசாலா, போதை சாக்லேட் போன்ற போதை வஸ்துக்கள் தொடர்ந்து கடத்தி வரப்படுகிறது.

இவை அனைத்தும் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட போதை பொருள்கள். எனினும் இவை பெங்களூரிலிருந்து தினம்தோறும் சாதாரணமாக அரசு பேருந்திலேயே கடத்திவரப்படுகின்றன. இப்படி கடத்தி வரப்படுவது குறித்து பலமுறை போலீசுக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சம்பவ இடத்திற்குப் போலீசு வருவதும் இல்லை, மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவுமில்லை.

பேருந்தில் கடத்திவரப்பட்ட போதைப் பொருட்கள்.

ஆகையால் இரு மாதங்களுக்கு முன் நேரடியாக குட்கா, பான்மசாலா, போதை சாக்லேட் போன்றவற்றைக் கொண்டுவந்த நபரை, மூட்டையுடன் பிடித்து வைத்து போலீசு நிலையத்திற்கு தகவல் கொடுத்தும் ‘காவலர்கள்’ யாரும் வரவில்லை.

பிறகு அந்த போதைப் பொருள் ஆசாமி, ஒரு ஆட்டோவை வரவைத்து ஏறிச் சென்றுவிட்டார். அவ்வாறு அவர் தப்பிச் சென்றவுடன், எந்த ஆட்டோவில் எடுத்து செல்கிறார்கள் என்பதையும், ஆட்டோ எண்ணுடன் போலீசு நிலையத்தில் தகவல் கொடுத்தும் ‘காவலர்கள்’ அந்த நபரைப் பிடிக்கவில்லை..

படிக்க:
ஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை ! குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி !
♦ மாணவர்களுக்கு உடனே லேப்டாப் வழங்கு ! விழுப்புரம் பு.மா.இ.மு கலெக்டர் அலுவலக முற்றுகை !

இந்த நிலையில் கடந்த ஞாயிறு (30.06.2019) அன்று இரண்டு மூட்டை குட்கா, பான்மசாலா, போதை சாக்லேட் ஆகியவை பெங்களுரு பேருந்தில் கடத்திவரப்பட்டுள்ளது.

பேருந்து நிலையம் சென்ற மக்கள் அதிகாரம் தோழரக்ள், அம்மூட்டைகளை பேருந்து நிலையத்திலேயே பிரித்து, மக்கள் மத்தியில் கிழே கொட்டி அம்பலப்படுத்திவிட்டு போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். அதன் பிறகு இரண்டு போலிசார் அங்கு சென்று இரண்டு மூட்டை குட்கா, பான்மசாலா, போதை சாக்லேட் ஆகியவற்றைக் கைப்பற்றினர். பேருந்தில் யாருக்காக அந்த போதை வஸ்துக்கள் அனுப்பி வைக்கப்பட்டதோ, அந்த நபரைப் பிடித்து சிறையில் அடைத்துள்ளது போலீசு.

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் மக்கள் அதிகாரம் தோழர்கள்.

இதுபோன்று தொடர்ந்து கடத்திவரும் குட்கா, பான்மசாலா ,போதை சாக்லேட் போன்ற போதை பொருட்களால் பள்ளி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், போதை பழக்கத்திற்கு தள்ளபடுகிறார்கள். இதனால் இந்த தலைமுறையே சீரழிக்கப்படுகிறது ஆகவே இந்த போதைபொருள் கடத்திவருவதை தடுக்க வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதிகார வர்க்கம் இதைத் தடுக்கிறதோ இல்லையோ, அதிகாரவர்க்கத்துக்கும் கிரிமினல் கும்பல்களுக்கு இருக்கும் இரகசியக் கூட்டை மக்கள் அதிகாரம், மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்படுத்தும்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம் மண்டலம்.