Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 215

உத்தரப்பிரதேசம் : இந்து ராஷ்டிரத்திற்குள் ‘சாத்தியமான மாற்று’ இல்லை !

“காவி – கார்ப்பரேட் பாசிச அபாயத்தை முறியடிப்பதற்கான ஒரேவழி, பரந்துபட்ட உழைக்கும் மக்களையும் ஜனநாயக சக்திகளையும் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமையின் கீழ் அணிதிரட்டிப் போராடுவது ஒன்றுதான்” என்று நாம் சொல்கிறோம். ஆனால் பாசிச அபாயத்தை உணர்ந்தாலும் தற்போதைக்கு பா.ஜ.க.வை அதிகாரத்திலிருந்து கீழிறக்கி, அதற்கெதிராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் ஒரு கட்சியை ஆட்சியில் அமர்த்துவதுதான் உடனடியாக ஆகக்கூடிய ‘சாத்தியமான மாற்று’ என்று சிலர் சொல்லிவருகிறார்கள். ஒரு புரட்சிகர கட்சியின் அரசியல் தலைமையில் வெகுமக்களை அணிதிரட்டுவது ‘அசாத்தியம்’ என்பதுதான் அவர்களின் உளக் கருத்து என்றபோதும் மக்களை அணிதிரட்டுவதற்கான ஒரு ‘சுவாசிக்கும் அவகாசமாக’ அப்படியொரு ‘சாத்தியமான மாற்று’ தேவை என்று பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.

‘புரட்சியாளர்கள்’ என்று தங்களை கூறிக்கொள்ளும் இவர்கள், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது “தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும்.. வாக்களிக்க வேண்டும்” என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் பிரச்சாரம் செய்தார்கள். பா.ஜ.க.வை வெறுக்கும் தமிழக மக்களின் ஓட்டுக்களை அறுவடை செய்வதற்காக தி.மு.க.வும் பா.ஜ.க.விற்கு எதிரான கட்சியாக தன்னை முன்னிறுத்திக் கொண்டு சமூக நீதி, மாநில உரிமை, மொழி உரிமை என முழங்கியதானது அப்‘புரட்சியாளர்களின்’ பிரச்சாரத்திற்கு தோதாக அமைந்தது.

உண்மையில் தமிழகத்திற்கே உரிய களநிலைமைதான் தி.மு.க.வின் முற்போக்கு பிரச்சாரத்திற்கு அடித்தளமாக அமைந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் தமிழகத்திற்கு எதிர்நிலை உதாரணமாக, இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக மாறியுள்ள உத்தரப் பிரதேசத்தின் தேர்தல் கூத்துகளோ ‘பாசிசத்திற்கு எதிராக போராட தற்போதைக்கு ஒரு சாத்தியமான மாற்று’ எனும் மாயையை கலைப்பதாகவும் புரட்சிகர கட்சியின் தலைமையே ஒரே மாற்று என்பதை உணர்த்தும் சாட்சியமாகவும் இருக்கிறது.

000

ரவுடி சாமியார் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரப்பிரதேசம் இன்னும் சில மாதங்களில் தேர்தலைச் சந்திக்க தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்துராஷ்டிரத்தின் அடையாளமாக அயோத்தியில் ராமர் கோயில், கோமாதாக்களுக்கென தனி ஆம்புலன்ஸ் சேவை, ஊர்களின் பெயர்கள் இந்துத்துவமயமாக்கம் என காவி மணம் கமழ்கிறது உத்தரப் பிரதேசத்தில்.

முஸ்லீம்களை குறிவைக்கும் மதமாற்றத் தடைச்சட்டம், தலித்துக்கள் மீதான சாதிவெறித் தாக்குதல்கள், கொரோனா கால சுகாதார நெருக்கடியால் கங்கைக் கரையில் மிதந்த பிணங்கள், போராடும் மக்கள் மீது சர்வசாதாரணமாக ஏவப்படும் ஊபா கொடுஞ்சட்டம், லக்கிம்பூர் – கேரியில் நிகழ்த்தப்பட்ட விவசாயிகள் படுகொலை என யோகி அரசு எத்தனை கொடூரங்களில் ஈடுபட்டபோதும் அடுத்த தேர்தலிலும் பா.ஜ.க.தான் வெல்லும் என தற்போதுவரை வெளிவந்துள்ள தேர்தல் கணிப்புகள் சொல்கின்றன. பல ஆண்டுகளாக காவிக் கும்பலால் இந்துத்துவ அரசியலில் பண்படுத்தப்பட்ட நிலமல்லவா உத்தரப் பிரதேசம்! எனவே இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லைதான்.

இதே காரணத்திற்காகத்தான் தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு எதிராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் கட்சிகளைப் போலல்லாமல் உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க.விற்கு எதிராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் காங்கிரஸ் உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகள் எதுவும் அதன் காவிக் கொள்கையை எதிர்த்து மூச்சுகூட விடுவதில்லை.

இவர்கள் காவி அரசியலை எதிர்ப்பவர்களில்லை என்பது பழையநிலை; பா.ஜ.க.வை எதிர்ப்பதாகச் சொல்லி களம் காண்பவர்களே, அதன் ‘இந்து அரசியலை’ தன்வயப்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தற்போது முதிர்ச்சிபெற்றுவரும் புதிய எதார்த்தம். ஆம், அடுத்த ஆண்டுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துக் கொண்டிருக்கின்றன. பா.ஜ.க.வை எதிர்த்து காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் போட்டியிடுகின்றன. பிரச்சாரங்களின் உள்ளடக்கமோ பா.ஜ.க.வின் ‘இந்து’ அரசியல் VS பா.ஜ.க. எதிர்ப்பு ‘இந்து’ அரசியல் என்பதாக உள்ளது. ‘சாத்தியமான மாற்று’ என்று எவையும் நம் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை புலப்படவில்லை.

பிரியங்காவின் அஸ்திரம் : கவர்ச்சிவாதம் + ‘இந்து’ அடையாளம்

தேர்தலில் பெண்களுக்கு 40 சதவிகித இடஒதுக்கீடு, மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன், ஸ்கூட்டர், பெண்களுக்கு பேருந்துகளில் இலவசப் பயணம் என பிரஷாந்த் கிஷோர் வகுத்துக் கொடுக்கும் கவர்ச்சிவாத வாக்குறுதிகளை முன்னிறுத்தி, பெண்களின் ஓட்டுக்களைக் குறிவைத்து களமிறங்கியிருக்கிறார் பிரியங்கா. எனினும் உ.பி.யில் வெற்றிபெற வேண்டுமானால் அதுமட்டும் போதாது எனத் தெரிந்துவைத்திருக்கும் பிரியங்கா, தனது போலி மதச்சார்பின்மையையும் கூட தூக்கி எறிந்துவிட்டு தன்னை தீவிரமாக ‘இந்து’ அடையாளத்துடன் இணைத்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த அக்டோபர் மாதம் மோடியின் வாரணாசி தொகுதியில் உள்ள காசி விஸ்வநாதரையும் துர்க்கையையும் வழிபட்ட பிரியங்கா, “விவசாயிகளுக்கான நீதி” (கிசான் நியாய்) என்ற பெயரில் தனது கட்சி ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டமொன்றில், நெற்றியில் குங்குமத் திலகமிட்டு கழுத்தில் ருத்ராக்ஷ மாலையுடன் ‘தெய்வகாடாக்‌ஷமாக’ காட்சியளித்தார். பிரியங்கா மட்டுமல்ல, அங்கு மேடையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் பெருந்தலைகளின் நெற்றி அனைத்தும் அன்று வண்ணமயமாகத்தானிருந்தது.

பொதுக்கூட்டம் தொடங்கியதும் மேடையிலிருந்த பிரியங்கா, சதீஷ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் “ஹர் ஹர் மஹாதேவ்” என ஓங்காரமாக முழங்கினார்கள். பிரியங்கா பேசத் தொடங்கும் முன், தாம் நவராத்திரி விரதமிருப்பதாகச் சொல்லி துர்கா சப்தசதியிலிருந்து “யாதேவி சர்வ பூதேஷூ” என்ற ஸ்லோகத்தை உச்சாடனம் செய்துவிட்டு ‘ஜெய் மாதா தி’ என ஓங்காரமாக முழங்குகிறார். கூட்டத்திலுள்ளவர்களையும் முழங்கச்சொல்கிறார். இது காங்கிரசின் கூட்டம்தானா, இல்லை சங்க பரிவாரத்தினரின் கூட்டமா என்று இனம் காண முடியாத அளவுக்கு அக்காட்சி அமைந்திருந்தது.

இராமர் கோயில் அறக்கட்டளை சார்பாக நிலம் வாங்கியதில் மோசடி நடந்த விவகாரத்தை மற்ற கட்சிகளைவிட காங்கிரஸ் பெரிய அளவில் விவாதப் பொருளாக்கியது. “கடவுள் இராமரின் பெயரைச் சொல்லி பா.ஜ.க.வால் எப்படி இவ்வளவு பெரிய ஊழலைச் செய்ய முடிகிறது” என காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜிவாலா ஆதங்கப்பட்டார். கடந்த ஜூன் மாதம் உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி, “கொரோனா தொற்றுக் காலத்தில் மற்ற எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்வதற்கு அனுமதிக்கும்போது, ஏன் அமர்நாத் யாத்திரைக்கு அனுமதிக்கக் கூடாது. நம்பிக்கைகள் ஏன் ஏமாற்றமடைய வேண்டும்” என்று ‘இந்துக்களுக்காக’ குரல் எழுப்பினார். ஊரடங்கு விதிகள் காரணமாக தி.மு.க. அரசு கோயிலைத் திறப்பதற்கு தடை விதித்திருந்தபோது, தமிழக பா.ஜ.க. இந்துக் கோயில்களைத் திறக்க வேண்டும் என ஆர்பாட்டங்கள் நடத்தியது, அதன் மூலம் தி.மு.க. எதிர்ப்பில் ‘இந்து’ அணிதிரட்டலை மேற்கொண்டது. அதைப் போல பா.ஜ.க. எதிர்ப்பு ‘இந்து’ அணிதிரட்டலுக்கான ஒரு வாய்வீச்சுதான் அது.

மாயாவதியின் ‘தலித் – பார்பனக் கூட்டணி 2.0’

“தலித் பிரச்சினையை தலித் மக்களால் மட்டுமே உணர முடியும். தலித்துக்களுக்குத் தலித்துகள்தான் தலைமை தாங்க வேண்டும். தலித்துகளே, பிற கட்சிகளில் சேராதீர்கள்; பிற ஆதிக்க சாதியினரை எமது கட்சியில் சேர்க்கவே மாட்டோம்” என்றெல்லாம் ஆரம்பக் காலத்தில் அடையாள அரசியல் சவடாலடித்துவந்த பகுஜன் சமாஜ் கட்சி, உ.பி.யின் ஓட்டுப் பொறுக்கி அரசியல் களத்தில் மூழ்கி ஞானம் பெற்றபோது பச்சையான பார்ப்பன பாதந்தாங்கி கட்சியாக இழிந்துபோனது.
தேர்தலில் வெல்ல வேண்டுமென்றால், தலித்துகளின் 23 சதவிகித ஓட்டுகள் மட்டுமே நமக்கு போதாது. உ.பி.-யின் மக்கள் தொகையில் 13 சதவிகிதம் வரையுள்ள பார்ப்பனர்களின் ஓட்டுகளைப் பெற்றால் சுலபமாக ஆட்சியைப் பிடிக்கலாம் என கணக்கு போட்ட மாயாவதி, அதற்குத் தகுந்தாற்போல் எடுத்த புது அவதாரம்தான் ‘தலித்-பார்ப்பனக் கூட்டணி’. எங்கள் கட்சி தலித்துகளுக்கான கட்சி மட்டுமில்லை, ஏழை பார்ப்பனர்களுக்கான கட்சியும்தான் என்று தாளம் மாறியது பகுஜன் சமாஜ் கட்சி. பார்ப்பனர்களுக்கும் ஆதிக்க சாதியினருக்கும் அக்கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இடம்தந்தது.

இவ்வாறு தனது அடையாளத்தை மறுவார்ப்பு செய்துகொண்டு பார்ப்பனர்களே ‘தமக்கான கட்சி’ என்று போற்றுமளவிற்கு செயல்பட்டதால் 2007 ஆம் ஆண்டு மாயாவதி உ.பி.யின் முதல் ‘தலித்’ முதலமைச்சரானார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உ.பி. சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ‘தலித்-பார்ப்பனக் கூட்டணி’ பிரச்சாரத்தை கையிலெடுத்திருக்கிறார் மாயாவதி. இதற்காக தனது பிரச்சாரத்தை ஜூலை மாதமே தொடங்கிவிட்டது பகுஜன் சமாஜ் கட்சி.

முதல்கட்டமாக பார்ப்பனர்களை கவர்வதற்காக, ‘பிராமண சம்மேளனம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாநாடுகளை நடத்துவதற்கு திட்டமிட்டார்கள். சாதி பெயரில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களை நடத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் தடைவிதித்திருப்பதால் அம்மாநாட்டின் பெயரை ‘ஞானம் பெற்ற வகுப்பினரை கவுரவிக்கும் கருத்தரங்கு’ (Seminar in honor of the enlightened class) என மாற்றி நடத்தியிருக்கிறார்கள். அயோத்தியில் நடந்த முதல் மாநாட்டின் சிறப்பு விருந்தினர் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா என்ற பார்ப்பனர். கூட்டத்திற்கு சில மணிநேரம் தாமதமாக வந்த சதீஷ் சந்திர மிஸ்ரா, தாம் ராம்லல்லாவுக்கும் ஹனுமான்கடிக்கும் சென்றுவந்ததாக கூறினார்.

பின்னர், இக்கூட்டத்தில் பேசிய மிஸ்ரா, பார்ப்பனர்களின் ‘முக்கிய பிரச்சினைகள்’ குறித்து விவாதித்தார். “ராமர் கோயிலுக்காக கடந்த 30 ஆண்டுகளாக வசூலிக்கப்பட்ட பணத்திற்கு என்ன கணக்கு? ஓராண்டாகிவிட்டது இன்னும் அஸ்திவாரம்கூடப் போடப்படவில்லை, கோயிலைக் கட்டுவார்களா இல்லையா என்பதே கேள்வியாக இருக்கிறது” என்று ஆத்திரப்பட்ட அவர், உ.பி.யின் மிகப்பெரிய தாதாவாக வலம்வந்த விகாஸ்துபே (இவன் பார்ப்பன சாதியைச் சேர்ந்தவன்) என்கவுண்டரைச் சுட்டிக்காட்டி, கடந்த நான்காண்டு காலத்தில் பல பிராமணர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் உ.பி. அரசின் கீழ் ‘பிராமணர்கள் மீதான கொடுமைகள்’ அதிகரித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். எனவே பா.ஜ.க.விற்கு மாற்றாக பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரிக்கும்படியும் “மாநிலத்தில் 13 சதவிகிதமுள்ள பிராமணர்கள் 23 சதவிகிதமுள்ள தலித்துகளுடன் இணைந்தால் வெற்றி நிச்சயம்” என்றும் பிளந்துகட்டினார்.

இந்தியாவிலேயே உத்திரப்பிரதேசத்தில்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது, சாதிவெறித் தாக்குதல்கள்; படுகொலைகள்; பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்கள் அதிகம் நடப்பதாக சமீபத்தில் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் அறிக்கை விவரம் காட்டியது. அப்படிப்பட்ட ஒரு மாநிலத்தில் இருந்துகொண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்படும் கொடூரங்களுக்கு எதிராக போராடாத பகுஜன் சமாஜ் கட்சி, பார்ப்பனர் ஓட்டைப் பொறுக்குவதற்காக ரவுடி விகாஸ்துபேவுக்கு நீதிகேட்கிறது. மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள் என தலித்துகள் கொல்லப்படும்போது பசுப் பாதுகாப்பு கொட்டகையில் பசுக்கள் ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை என்று வருத்தப்படுகிறது.

‘நாங்களும் இந்துதான்’ என்று வண்டியில் ஏறும் அகிலேஷ் யாதவ்

உத்தரப் பிரதேசத்தில் எதிர்க்கட்சியாக உள்ள சமாஜ்வாதி கட்சியின் வாங்குவங்கி அடித்தளமாக இருப்பது யாதவ்கள் மற்றும் முஸ்லீம்கள்தான். அதனாலேயே பா.ஜ.க. தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியையும் அகிலேஷ் யாதவையும் கடுமையாக தாக்கி வருகிறது. “முஸ்லீம்களின் ஓட்டுக்களை வாங்குவதற்காக அகிலேஷ் மதம் மாறினாலும் மாறுவார்” என்று சாடினார் யோகி ஆதித்யநாத். இப்படியே தாம் தாக்கப்பட்டால் இந்து யாதவ்களின் ஓட்டுக்களையும் இழந்துவிடுவோமோ (அஹிர்கள் என்றழைக்கப்படும் யாதவ் சாதியினரின் ஒரு உட்பிரிவை ஆர்.எஸ்.எஸ். தன் செல்வாக்கிற்கு கொண்டுவந்துவிட்டது) என்று அஞ்சிய அகிலேஷ் ‘நாங்களும் இந்துதான்’ என்று வலிந்து காட்டிவருகிறார்.

“கடவுள் இராமர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர். நாங்கள் இராமர் மற்றும் கிருஷ்ணரின் பக்தர்கள்” என்று கூறிய அகிலேஷ் யாதவ், பிப்ரவரி மாதம் முதலே அயோத்தி, சித்திரகூடம், ஃபருகாபாத் என கோயில் கோயிலாக சுற்ற ஆரம்பித்துவிட்டார். அவ்வாறு தாம் சென்று வழிபடும் இடங்கள், சாதுக்களிடம் ஆசீர்வாதம் பெறுவது போன்றவற்றை புகைப்படங்களெடுத்து டிவிட்டரில் பதிவிட்டார். “உண்மையான இராமராஜ்ஜியத்தை உருவாக்குவதற்காக நாங்கள் வெற்றிபெற்றால், கோயில்களிலிடமிருந்து வசூலிக்கப்படும் நகராட்சி வரிகளை தள்ளுபடி செய்வோம்” என வாக்குறுதியளித்திருக்கிறார்.

‘இந்து’ அடையாளத்தோடு சாதி அரசியலையும் சேர்த்து கையாளுகிறது சமாஜ்வாதி கட்சி. தாங்கள் ஆட்சி செய்தபோது, விஸ்வகர்மா ஜெயந்தியை விடுமுறை நாளாக அறிவித்திருந்த நிலையில், தற்போதைய யோகி அரசு அதை வாபஸ் பெற்றதன் மூலம் ஒட்டுமொத்த விஸ்வகர்மா சமூகத்தையும் அவமதித்துவிட்டதாக சாடிய அகிலேஷ் யாதவ் தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விஷ்வகர்மா ஜெயந்தி நாளை மீண்டும் விடுமுறையாக அறிவிப்போம் என்றும் கோமதி நதிக்கரையில் விஸ்வகர்மாவுக்கு பிரம்மாண்டமான கோயில் கட்டப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாளன்று அம்பேத்கர் பிறந்தநாள் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் ‘தலித் தீபாவளி’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டிருக்கிறது.

ஆம் ஆத்மி: ஆளும் வர்க்கங்களுக்கு வாய்த்த ஸ்டெப்னி, ஆர்.எஸ்.எஸ்.க்கு வாய்த்த மற்றொரு அரசியல் கருவி!

மற்ற கட்சிகளெல்லாம் உத்தரப்பிரதேச தேர்தலில் வெற்றிபெறுவதற்கான ஒரு உத்தி என்ற முறையில் ‘இந்து’ அரசியலோடு சங்கமமாகத் தொடங்கின என்றால், “ஊழல் ஒழிப்பு, வேர்மட்ட ஜனநாயகம்” என்றெல்லாம் பேசி ஆட்சிக்கு வந்த கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, தன்னை உணர்வுப் பூர்வமாகவே இந்துத்துவ அரசியலோடு கரைத்துக் கொண்டு, இந்துத்துவத்தின் மற்றுமொரு அரசியல் பிரிவாகவே உருமாறிக் கொண்டு வருகிறது. பா.ஜ.க.வை எதிர்த்து உத்தரப் பிரதேசம், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தனித்துப் போட்டியிடும் இக்கட்சி, அங்கு மட்டுமல்லாமல் தான் ஆட்சி புரியும் டெல்லியிலும் கூட பா.ஜ.க.வின் ‘மதவாதம்-தேசியவாதம்’ என்ற இருமுனை ஆயுதத்தை புதிய பாணியில் பயன்படுத்துகிறது.

அயோத்தியில் கட்டப்பட்டுவரும் இராமர் கோயிலுக்கு சென்றுவந்த கெஜ்ரிவால், இனி டெல்லிவாசிகள் அயோத்திக்கு வந்து வழிபடுவதற்கான செலவை அரசே ஏற்கும் என அறிவித்திருக்கிறார். கடந்த தீபாவளியின் போது இராமனை வழிபடுவதற்காக டெல்லியில் அயோத்தியில் கட்டப்படும் வடிவிலான தற்காலிக இராமர் கோயில் ஒன்றை நிறுவிய கெஜ்ரிவால், தம் மனைவி, அமைச்சர்கள் புடைசூழ கோலாகலமான ஆன்மீக வழிபாட்டில் ஈடுபட்டார். ஒரு கட்சியாகவும் அரசாங்கமாகவும் சட்டப்படி பெயரளவிற்காகவாவது மதச்சார்பின்மையை கடைபிடிக்க வேண்டும் என்பது பொதுவிதியாக இருக்கும் நிலையில், கெஜ்ரிவாலின் இந்த கூத்து ஆம் ஆத்மி கட்சியை இன்னொரு பா.ஜ.க.வாகவே காட்சிப்படுத்தியது.

அவரின் இந்த திடீர் இராம பக்தி, கோயில் கோயிலாக சுற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை ஒட்டி ஆம் ஆத்மி ‘மென்மையான’ இந்துத்துவத்தைக் கடைபிடிக்கிறது என்ற விமர்சனம் எழுந்தபோது, “நான் ஒரு ‘இந்து’. நான் இராமர் கோயிலுக்கும் போவேன் அனுமன் கோயிலுக்கும் போவேன், இதில் யாருக்கு என்ன பிரச்சினை” என்று பொங்கினார். மேலும் “மென்மையான இந்துத்துவம் என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை, நான் இந்த நாட்டின் 130 கோடி மக்களை ஒன்றிணைக்க விரும்புகிறேன். ஒரு மனிதனை இன்னொரு மனிதனுடன் இணைக்க விரும்புகிறேன். இதுதான் இந்துத்துவா.. இந்துத்துவா ஒன்றுபடுத்துகிறது, இந்துத்துவா உடையாது” என்று ஆர்.எஸ்.எஸ்.இன் இலக்கணத்தை அச்சுபிசகாமல் ஒப்பித்தார்.
“நாங்கள்தான் உண்மையான இந்துத்துவா” என்று காவி நீரோட்டத்தோடு தான் கலந்துவிட்டதை பகிரங்கப்படுத்திய கெஜ்ரிவால், பா.ஜ.க.வின் “தேசபக்தி” ஃபார்முலாவையும் விட்டுவைக்கவில்லை. டெல்லியிலுள்ள மாணவர்களுக்கு ‘தேச உணர்வை’ வளர்க்கும் விதமாக, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தனிப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆம் ஆத்மி அரசு. அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்நோக்கியிருக்கிற உத்தரகாண்டில் தங்களது முதல்வர் வேட்பாளராக, இராணுவத்தில் கர்னலாக பணியாற்றிய அஜய் கோத்தியாலை முன்னிருத்தியிருக்கிறார்கள். உத்தரகாண்டில் ஆட்சியைப் பிடித்தால், அம்மாநிலத்தை ‘இந்துக்களின் ஆன்மிகத் தலைநகராக்குவோம்’ என்று அறிவிப்பு விடுத்திருக்கிறார் கெஜ்ரிவால்.

உத்தரப்பிரதேசத்தில் தங்களது தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக, கடந்த செப்டம்பர் மாதம் அயோத்தியில் திரியங்கா (மூவர்ணக் கொடி) யாத்திரை என்ற பெயரில் தேசியக்கொடியோடு ஊர்வலம் போனது ஆம் ஆத்மி கட்சி. இந்நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்த ஒருநாள் முன்பே வந்த டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோதியா மற்றும் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சஞ்ஜய் சிங் ஆகியோர் ராம ஜென்ம பூமியையும் ஹனுமன் கிராந்தியையும் தரிசித்துவிட்டு, சரயு நதியில் தலைமுழுகி பக்தியோடு ஹனுமன் சாலிசா பாடினார்கள்.

பகுஜன் சமாஜ் கட்சி எப்படி உ.பி.யில் 13 சதவிகிதமுள்ள பார்ப்பனர்களின் ஓட்டுக்களை பொறுக்குவதற்கு ‘ஞானம் பெற்ற வகுப்பினரை கவுரவிக்கும் மாநாட்டை’ நடத்தியதோ அதேபோல, ஆம் ஆத்மி கட்சியும் ‘சாணக்ய விசார் சம்மேளனம்’ என்ற பெயரில் நடத்தியுள்ளது.

தொகுப்பாக பார்க்கும்போது மற்ற கட்சிகளைவிட ஆம் ஆத்மி பேசும் இந்துத்துவ அரசியல் நேரடியாக காவி பாசிசத்துடன் நெருக்கமுடையது. 2019 ஆம் ஆண்டு டெல்லியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பயங்கரவாத பாசிசத் தாக்குதல்கள் அரங்கேறியபோது, அமைதியாக அதை ஆதரித்து வேடிக்கைப் பார்த்தவர்தான் கெஜ்ரிவால். சென்ற அக்டோபர் மாதம் பஞ்சாபில் விவசாயிகளுடனான கூட்டமொன்றில் கலந்துகொண்ட கெஜ்ரிவாலிடம், “காஷ்மீரின் 370-ஆவது சிறப்புச் சட்டத்தை இரத்து செய்திருக்கும் மோடியின் நடவடிக்கையைப் பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று ஒரு விவசாயி கேள்வி எழுப்பியபோது, “இது ‘அரசியல் கேள்வி’, வேறு எதாவது இருந்தால் கேளுங்கள்” என்று சொல்லிக் கூட்டத்தை முடித்துக் கொண்டு கிளம்பியிருக்கிறார்.

ஆம் ஆத்மியின் இந்தப் போக்கை விமர்சிக்கும் லிபரல்கள், அவரை ‘பா.ஜ.க.வின் பி டீம்’ என்கின்றனர். ஆம் ஆத்மி பா.ஜ.க.வின் பி டீம் என்று சொல்வதைவிட ஆளும் வர்க்கங்களின் பி டீம் என்று சொல்வதுதான் பொருத்தமானது. மோடி அரசின் பொருளாதாரத் தாக்குதல்களால் கிளர்ந்தெழும் உழைக்கும் மக்கள் நாளுக்குநாள் பா.ஜ.க.வின் மீது அதிருப்தியையும் ஆத்திரத்தையும் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் அதன் சித்தாந்தமான இந்துத்துவத்தின் மீதோ, தேசவெறியின் மீதோ அல்ல.. இச்சூழலில் பா.ஜ.க.வின் செல்வாக்கு சரிந்தால் அதே ‘இந்துத்துவம்-தேசவெறியைப்’ பேசி வெகுமக்களைக் கவரக்கூடிய ஒரு கட்சியாக உருமாற வாய்ப்புள்ள ஆம் ஆத்மியை ஆளும் வர்க்கங்கள் தத்தெடுத்துக் கொள்ளும். சுருக்கமாகச் சொன்னால் பா.ஜ.க. என்ற டயர் பஞ்சரானால் வேறொன்றை மாற்றிக் கொள்வதற்கான ஸ்டெப்னியாக (Stepney) ஆளும் வர்க்கங்களுக்கு வாய்த்திருக்கிறது ஆம் ஆத்மி.

மேலும் ஆர்.எஸ்.எஸ். என்ற பாசிசப் படை, பா.ஜ.க. என்ற கட்சியை மட்டும் பயன்படுத்தித்தான் இந்துராஷ்டிரத்தை அடையவேண்டுமென்பதில்லை. ஆர்.எஸ்.எஸ்.க்கு பா.ஜ.க. ஒரு கருவி மட்டுமே. பா.ஜ.க. அல்லாத வேறொரு கட்சியையும் கூட ஆர்.எஸ்.எஸ். தங்கள் அரசியல் கருவியாக பயன்படுத்திக் கொள்ளமுடியும். அது, இந்திய நாட்டில் நூறாண்டுகால வேர்களைக் கொண்டிருக்கிறது. எந்தக் கட்சியையும் தனது கருத்துருவாக்கத்துக்கு பணிய வைக்கக் கூடியது என்கிறார் சி.பி.ஐ.(எம்.எல்) ரெட் ஸ்டாரைச் சேர்ந்த தோழர் பி.ஜே.ஜேம்ஸ். (நவ தாராளவாதம் மற்றும் நவ பாசிசம்: ஒரு இடதுசாரி பார்வை – என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆற்றிய உரை)

படிக்க :

ரூ. 10,72,000 கோடி : மோடியின் ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன் !

மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் அணைப் பாதுகாப்பு மசோதா !

இந்துராஷ்டிர அபாயத்தை எதிர்கொள்வதெப்படி?

பார்ப்பன இந்துமதவெறி பாசிசம் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வேரூன்றி வளருகிறதோ, அந்த அளவிற்கு ‘சாத்தியமான மாற்று’களெல்லாம் மறைந்துகொண்டிருக்கின்றன. ஒன்று, பாசிச சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லை, பாட்டாளி வர்க்கக் கட்சியின் தலைமையில் உழைக்கும் மக்களைத் அணிதிரட்டி மோத வேண்டும். இவை இரண்டிற்கும் இடையிலான இடைக்கட்டம் – சுவாசிப்பதற்கான அவகாசம் – எதுவுமில்லை. இதுதான் எதிர்வரும் உத்தரப்பிரதேசத் தேர்தல் நமக்கு உணர்த்தும் உண்மை.

பா.ஜ.க.விற்கு எதிராக தமிழகத்தில் தி.மு.க.வை ஆதரிக்கச் சொன்னவர்கள், தற்போது உத்தரப்பிரதேசத்தில் எந்தக் கட்சியை ஆதரிக்கலாமென சொல்ல முடியுமா? தமிழக அளவில் தி.மு.க. ‘சாத்தியமான மாற்றென்றால்’, இந்திய அளவில் சாத்தியமான மாற்று எது? காங்கிரசு என்று சொல்வார்களானால், கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் சி.பி.எம்.ஐயும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் எதிர்க்க வேண்டுமா? ஆனால் அங்கெல்லாம் மாநில அளவில் உள்ள நிலையை கவனித்தால் சி.பி.எம்.-உம் திரிணாமுல் காங்கிரசும் தானே மாற்றாகத் தெரிகிறது. எனவே இது மக்களைத் திரட்டுவதில் நம்பிக்கையில்லாத அவநம்பிக்கை வாதம் என்பதோடு படுகுழப்பமான வாதமுமாகும்.

காவி – கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்த்து முறியடிப்பதோ, இல்லை அதற்காகப் போராடும் சக்திகளுக்கு துணை செய்வதோ காங்கிரசு, தி.மு.க. உள்ளிட்ட எந்த ஓட்டுக் கட்சிக்கும் நோக்கமல்ல. ஓட்டுப் பொறுக்கி ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதும் அதனைப் பயன்படுத்திக் கொண்டு சுரண்டிக் கொழுப்பதும்தான் நோக்கம். அதற்கு மக்களுடைய ஆதரவைப் பெறும் ஓரே காரணத்திற்காக தங்கள் பிரச்சாரங்களையும் கொள்கைகளையும் வடிவமைத்துக் கொள்கிறார்கள். தமிழகத்தின் பா.ஜ.க. எதிர்ப்புணர்வு தி.மு.க.வுக்கு சமூக நீதியைக் கொடுத்தது. உத்திரப்பிரதேசத்தின் இந்துமதவெறி மேற்சொன்ன கட்சிகளை இந்துத்துவத்தோடு சங்கமிக்கச் செய்திருக்கிறது.

பாசிச எதிர்ப்பு போராட்டத்தில் தீர்மானகரமான அம்சம் எதுவெனில், யார் மக்களை அரசியல்படுத்துவது என்பதுதான். பாட்டாளி வர்க்க அரசியிலின் கீழ் பரந்துபட்ட உழைக்கும் மக்களை நாம் மக்களை அணிதிரட்டப்போகிறோமா, இல்லை இந்துத்துவ அரசியலின் கீழ் எதிரி அணிதிரட்டப்போகிறானா என்பதுதான் விவகாரமேயன்றி ‘சாத்தியமான மாற்று’ என்ற பெயரில் ஆளும்வர்க்க கட்சிகளுக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதல்ல.

 செவ்வந்தி

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் : யாருடைய நலனுக்கானது ?

ந்திய நகரங்களில் எழும்பி நிற்கும் வானுயர்ந்த கட்டிடங்கள் நமது நாட்டின் வளர்ச்சிப் பாதையை காண்பிக்கின்றன என்று மோடி அரசு மார்தட்டிக் கொள்கிறது. முன்னோர்கள் கூறியதுபோல் “ஒரு வீட்டின் அழகை அவன் வீட்டின் முன்புறம் பாக்காதே! கொள்ளைப்புறம் பார்” என்பது போல இந்தியாவின் வளர்ச்சியை முன்பக்கம் வானுயர்ந்து நிற்கும் கட்டிடங்களைக் கொண்டு பார்க்க முடியாது. பின்பக்கமுள்ள சேரிகளின் உண்மை நிலையை வைத்துத் தான் பார்க்கவேண்டும். அதன் பரிமாணம் வேறொன்றாக உள்ளது.
பெரும்பணக்காரர்கள் வானுயர்ந்த கட்டிடங்களில் கொண்டாட்ட நிலையில் இருக்கும்போது, ஏழை மக்களோ ‘ஒருவேளை சோத்துக்கும், குந்தி இருக்க ஒரு குடிசைக்க்கும்கூட வழி இல்லாத நிலையில் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
அப்துல் கலாம் 2020-ல் இந்தியா வல்லரசாக இளைஞர்களை கனவு காணச் சொன்னார். இன்றைக்கோ கனவுகள் அனைத்தும் பொய்த்துப்போய் ஓட்டைவிழுந்த குடிசையில் சோறு கிடைக்காமல், கல்வி, வேலைவாய்ப்பு இல்லாமல் பல கோடி இளைஞர்களை நிர்க்கதியாக்கபட்டதே நடைமுறை எதார்த்த உண்மை. நம்மால் கனவு மட்டுமே காணமுடியும். முதலாளிகள் ஏற்கெனவே கூறுவதுபோல ‘ஏழை மக்கள் பூமிக்கு தேவை இல்லாதவர்கள்’ என்பதை உண்மையாக்க 2019-ல் ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தை கொண்டுவந்து ஏழை மக்களின் குடியிருப்புகளை – சேரிகளை நகரத்தில் இருந்து அப்புறபடுத்திக்கொண்டிருக்கிறது, அரசு.
படிக்க :
PM-CARES : பிரதமரின் கொரோனா நிவாரண நிதி மர்மங்கள் – சில கேள்விகள்
பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம் : கார்ப்பரேட்டுகளுக்கு நேரடி மானியம் !
ஏதோ மக்கள் நலனுக்காக அரசால் கொண்டுவரப்படும் திட்டங்கள் போலத் தோன்றும் பல திட்டங்கள் ஆளும்வர்க்க நலனுக்கான திட்டங்களாவே உள்ளன. அத்தகையதொரு கவர்ச்சிகரமான மாய சிலந்திவலைத் திட்டம்தான் ஏழைகளுக்கான வீடு கட்டிதரும், “பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டம்” (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா).
பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் :
காங்கிரஸ் ஆட்சி ஏழை மக்களுக்கு வீடுகட்டி தரப்போவதாக 1985-1986-ல் “இந்திரா ஆவாஷ் யோஜனா” என்ற திட்டதை கொண்டு வந்தது. 2015-ல் பாசிச பாஜக ஆட்சியில் இத்திட்டதில் சிறிது மாற்றத்தை கொண்டுவந்தது. அரசால் மானியமாக கொடுக்கப்பட்ட தொகை 1,20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் 2019 வரை 83.63 லட்சம் வீடுகளுக்கு  ஒப்புதல் வழங்கபட்டு, 26.08 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கபட்டுள்ளன என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கான மொத்த தொகையான ரூ.4,95,838 கோடியில், தற்போது வரை 5144.5 கோடி மத்திய அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2022க்குள் 2 கோடி வீடுகள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது. இத்திட்டதுக்கான தொகையில் மத்திய, மாநில அரசுகள் பங்கீடு செய்கின்றன அவை.
2019-2020 வரை ரூ.1,20,000-ஐ மானியமாக வழங்கிய அரசு, 2021-2022 ஆண்டு 1,70,000 ரூபாயாக உயர்த்தியது. அரசு கொடுக்கும் இந்த தொகை நான்கு கட்டங்களாக வங்கிகணக்கில் போடப்படுகிறது. இதற்கான வீட்டின் அளவு 269 சதுர அடிக்கு மேல் இருக்கலாமென கூறியுள்ளது. கழிவறைக்கான தொகையாக 12,000 ரூபாயும் கொடுக்கப்படுகிறது. ஒரு சதுர அடிக்கு ரூ.1500 செலவாகும் என்று வைத்து கொண்டாலும் ஒரு வீட்டை கட்டி முடிக்க (269×1500= 4,03500) 4,035,000 ரூபாய் செலவாகும். இதிலிருந்து ஒரு கேள்வி எழலாம், இப்போழுது உள்ள சிமெண்ட், கம்பி, மணல், இதர பொருட்கள் விலை ஏற்றம் இருந்தாலும் ஏழை மக்கள் ஏன் இத்திட்டத்தின் ‘பயனாளி’ ஆகிறார்கள் என்று?
மக்கள் இத்திட்டத்தை விரும்ப காரணம்?
இத் திட்டம் முதலில் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ள, வாழ்நாள் லட்சியங்களில் ஒன்றான, “சொந்த வீடு வேண்டும்” என்ற ஆசையை இலக்காக்கி தமது வலையில் ஆளும் வர்க்கம் விழ வைக்கிறது. இதை புரியாமல் அரசு கொடுக்கும் அற்ப தொகையை வைத்து வீடு கட்டிவிடலாம் என்று நினைத்து, “நாமும் இறப்பதற்குள் நல்ல வீட்டில் வாழ்ந்து விடலாம்” என்ற கனவில் வீட்டை கட்ட ஆரம்பிக்கும் போதுதான் உண்மை நிலை தெரிய வருகிறது. இத்திட்டம் நமக்கு ‘மயிரை கட்டி மலையை இழுப்பது போன்றது’ என்பதை புரிந்துக்கொள்கிறார்கள்.
அரசின் இச்செயல் சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தில் “ஒருவரை ஏமாற்றுவதற்கு அவனிடம் கருணையை எதிர்பார்க்க கூடாது, அவரது ஆசையை தூண்ட வேண்டும்” வரும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. வீடு கட்ட ஆரம்பித்த பிறகு ஏற்படும் பிரச்சினைகள் மக்களை கல்லை கட்டி கிணற்றில் தள்ளுவது போன்றதாகவே உள்ளது.
வழிபறி கொள்ளையர்கள்:
வீடு கட்டத் தொடங்கிய பிறகு அரசு அதிகாரியான கட்டிட பொறியாளர் அல்லது மேற்பார்வையாளர் (overseer) வந்து பார்வை இடுவார். அவருக்கு கப்பம் கட்டினால்தான் நமது வங்கிகணக்கில் தொகை போடப்படும். அப்படி ஒவ்வொருமுறை வங்கிக் கணக்கில் பணம் போடும்போதும் ‘மேற்படி’ செய்ய வேண்டியதை முறைப்படி செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் லோக்கல் அரசியல்வாதிகள், கணினி இயக்குபவர் என லஞ்சம் வாங்குபவர்களின் கணக்கு நீண்டுகொண்டே போகும். பஞ்சாயத்து தலைவர் போன்றோர் தன்னுடைய போலி கணக்கில் வீடு வாங்கி, தன்னுடைய வீட்டை விரிவுபடுத்துவதும் இன்னொரு பக்கம் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.
கடனில் சிக்கவைக்கப்படும் மக்கள்:
வீடுகட்ட தொடங்கும் மக்கள் இதற்காக குடும்ப உறுப்பினர்கள் உட்பட முழு உழைப்பையும் கொட்டினாலும், தப்பித்தவறி வீட்டில் மீதமிருக்கும் நகைகளை விற்றாலும் வீட்டைக் கட்டி முடிக்க இயலவில்லை. அதற்காக கடன் வாங்குகின்றனர், வங்கிக் கடன், நுண் கடன், கந்து வட்டிக் கடன் என எல்லா கடன்களையும் வாங்கிவிட்டு, வீட்டையும் கட்டி முடிக்க முடியாமல், வாங்கிய கடனையும் கட்ட முடியாமல் மன உளைச்சலில் சிலபேர் தற்கொலை செய்கின்றனர். எத்தனை கொடூரம் இது? தற்போதுள்ள நிலையில்லாத வேலையும், குறைந்த அற்ப கூலியும், அவர்களின் அன்றாடம் தேவைகளுக்கே போதவில்லை. கடனை அடைக்க மீண்டும், மீண்டும் கடன் வாங்குவது என்று புதைச்சேற்றில் சிக்கவைக்கப்படுகிறார்கள். இதனால் குடும்பத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள், மன உளைச்சல்கள் வேறு.
வீட்டை கட்டி முடித்தாலும் நிம்மதி இழந்த வாழ்க்கை :
தொடர்ந்து வீட்டுக்காக கடன் வாங்குவாதல் ஏழை மாணவர்கள் முதலில் விடுமுறை நாட்களிலும் பிறகு பள்ளி, கல்லூரிக்கு விடுப்பு எடுத்து, வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வீட்டில் யாருக்கேனும் உடல்நிலை பிரச்சினை ஏற்பட்டால், அதுவும் கடுமையான நோய் ஏற்பட்டால், குடும்பமே ஸ்தம்பித்து விடுகிறது. பாதி கட்டி முடிக்கப்படாமல் காட்சியளிக்கும் வீடோ, நான்கு சுவர்களோ, ஒவ்வொரு கணமும் வேதனையில் ஆழ்த்துகிறது. வீடு கட்டி முடிக்க 3-லிருந்து 5 ஆண்டுகள் ஆகின்றன. இவற்றையும் மீறி கட்டி முடிக்கபட்டாலும் கடன் சுமைலிருந்து மீளமுடியாமல் நிம்மதியை இழக்க வைக்கிறது.
இத்திட்டம் கிராமங்களை வளர்ச்சி பாதையில் கொண்டு விட்டதா?
இத்திட்டதின் மூலம் கூரை வீடுகள் ஒழிக்கப்படும் என்று காவி – கார்ப்பரேட் பாசிச மோடி அரசு கூறுகிறது. உண்மைதான் உண்மையாகவே கூரைகள் அழிந்து வருகின்றன. ஆனால் கான்கிரீட் வீட்டுக்கு பதிலாக தார்பாய் வீடுகளாக மாறிவருகின்றன. விவசாயம் அழிவு, வேலையின்மை காரணமாக அன்றாடம் கூலியைக்கூட ஈட்ட முடியாமல், வாங்கும் சக்தி குறைந்து அன்றாடம் வாழ்க்கையை நகர்த்தவே முடியாத நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர்.
வீட்டின் கூரை மாற்ற ரூ.10,000 வரை செலவு ஆகும் என்பதால் அவ்வளவு தொகை செலவிடமுடியாமல், அதற்கு மாற்றாக தார்பாயை தேர்ந்தெடுத்து உள்ளனர். இதன் விலையோ ரூ.2,000 ஆகும். இரண்டுமே குறைந்தது ஒரிரு ஆண்டுகள் உழைக்கும் என்பதால் தார்பாயி மூலம் கூரையை மறைக்க வேண்டியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
கிராமங்களின் நிலை இது என்றால் நகரங்களில் ஏழை மக்களின் நிலை வெறும் தகரக் கொட்டகையாக மாறிவருகிறது. தார்பாய், தகரம் இரண்டிலேயும் வெயில் காலங்களில் வீட்டிற்குள் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு  வெப்பம் அதிகமாக இருக்கும். தார்பாய் வீடுகளில் மழைக்காலங்களில் தரையில் ஓதம் (ஈரம்) ஏறும் என்று கூறுகின்றனர். இவ்வாறு நகர, கிராம ஏழை மக்கள் வாழவே முடியாத நிலையில் நிற்கின்றனர்.
இத்திட்டத்தின் பின்புலம்:
1970-ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்தம் காரணமாக ஒவ்வொரு நாட்டிலும், வல்லரசு நாடுகளின் வலியுறுத்தலுக்கு இணங்க, அந்நாடுகளின் அரசால் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதில் ஒன்று தான் 1985-1986-ல் கொண்டுவரப்பட்ட இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டம்.
மீண்டும் 2008-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் மீள முடியாத சிக்கலில் மாட்டிக்கொண்டது. இதனால் பல்வேறு துறைகள் திவால் நிலைக்கு சென்றன. இதில் கட்டுமான துறைகள் மட்டும் தப்புமா என்ன?  இந்நெருக்கடியில் இருந்து மீள முடியாமல் முதலாளித்துவம் அழுகி நாறிக்கொண்டு இருக்கிறது. இதன் விளைவாக 2010-ல் இருந்து கட்டுமானத் துறையை மீட்டெடுக்க பல்வேறு திட்டங்களை அரசு கொண்டுவந்தது. இதில் ஏழைகளுக்கான வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தின் நிதியை அதிகப்படுத்துதல் மூலம் அதிக வீடு கட்ட அனுமதி வழங்கியது.
காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் குறைவான எண்ணிக்கையில் அனுமதி கொடுக்கப்பட்டது, பிஜேபி மோடி அரசு 2016-ல் திட்டதின் பெயரை மாற்றி “பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா” என்று வீடுகளின் எண்ணிக்கையையும்  நிதியையும் அதிகரித்து செயல்படுத்தி வருகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிகமான உற்பத்தியாலும், மக்களின் உழைப்பை அதிகமாக சுரண்டியதாலும் மக்களின் வாங்கும் சக்தி குறைந்தது. இதனால் கட்டுமான பொருட்களை தயாரிக்கும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் ஏற்பட்டது. இதனை மீட்டெடுக்க கொண்டுவரப்பட்டதே இத்திட்டம்.
மக்களின் வரி பணத்தில் அம்பானி, ஆதானி, டால்மியா, டாடா தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் கொட்டிக் கொடுக்கிறது மோடி அரசு. அன்றாடம் உழைக்கும் மக்களின் உழைப்பையும், பணத்தையும் அவர்கள் சேமித்து வைத்து இருக்கும் அற்ப பணத்தையும், நகைகளையும் பிடுங்கி பெருமுதலாளிகளுக்குக் கொடுக்கின்றது.
பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களையும் அவற்றின் நலனுக்காக செயல்படும் காவிக் கும்பலையும் வீழ்த்த மக்கள் அமைப்பாய் திரள்வதே இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
படிக்க :
ஜன் தன் யோஜனா – திருட வாரான் வீட்டு கஜானா!
ஜார்கண்ட் : தொடரும் இந்திய அரசின் பட்டினிப் படுகொலைகள் !
மோடியின் வழியில் ஸ்டாலின் :
தமிழக அரசு 2031க்குள் தமிழகத்தை “குடிசையில்லாத மாநிலமாக” மாற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஏழை மக்களுக்கு 9.53 லட்சம் வீடுகள் கட்டித்தரப்போவதாக அறிவித்துள்ளது. வேளாண்மைக்குப் பிறகு அதிக வேலை வாய்ப்பை அளிப்பதும் மற்றும் அதிக வருவாய் ஈட்டிக்கொடுப்பதுமான கட்டுமானத்துறையை மேம்படுத்தப்போவதாகவும், முதல்கட்டமாக 6.2 லட்சம் மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்போவதாக கூறியுள்ளது.
மோடியும் ஸ்டாலினும் கார்ப்பரேட் நலனுக்கான கொள்கையையே நடைமுறைப்படுத்தி வருகின்றனர் என்பது நாம் அறிந்ததே. எனினும் பாஜக கும்பல் ஆளும் வர்க்கத்தின் “ஆகப் பிற்போக்கான” பிரிவை பிரதிநிதித்துவப் படுத்துகிறது. திமுக போன்ற கட்சிகள் ஆளும் வர்க்கத்தின் இன்னொரு பிரிவை பிரதிநிதித்துவ படுத்துகின்றனவா, ஒருவேளை அவ்வாறு பிரதிநிதித்துவபடுத்தி வளர்ந்து வரும்போது ஆளும் வர்க்கத்தினரிடம் எந்தளவுக்கு முரண்பாடு வெடிக்கும், இவை பாசிசத்தை எதிர்ப்பதற்கான ஐக்கிய முன்னணியில் இணையும் ஆளும் வர்க்கத்தின் இன்னொரு பிரிவாக இருக்குமா என்பதற்கு வரும்காலம்தான் பதிலளிக்கும்.
எது எப்படி இருந்தாலும், பாசிசத்தின் அடிநாதமாக இருக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு ஒன்றிய மோடி அரசும், தமிழ்நாட்டின் ஸ்டாலின் அரசும் செய்துவரும் கார்ப்பரேட் சேவையை அம்பலப்படுத்துவதை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும்.
கந்தசாமி

தொழிலாளர்களின் உணவில் பாரபட்சம் காட்டும் அசோக் லேலண்ட் || புஜதொமு கண்டனம்

ஒசூர் – அசோக் லேலண்ட் யூனிட் 1,யூனிட் 2 நிர்வாகமே!
உணவில் பாரபட்சம் காட்டாதே!
காண்ட்ராக்ட், CL , செக்யூரிட்டி, லாஜிஸ்டிக், அப்ரண்டீஸ் தொழிலாளர்களுக்கு தரமான, சரிவிகித, ஒரே மாதிரியான, சமமான சாப்பாடு வழங்கு!

அசோக் லேலண்ட் -ல் பணிபுரியும் நிரந்தர, CL, காண்ட்ராக்ட், செக்யூரிட்டிகள், லாஜிஸ்டிக் தொழிலாளர்களே!

70 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட அசோக் லேலண்ட் நிறுவனத்தில் நாம் அனைவரும் இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைத்து வருகிறோம். நமது உழைப்பில் பல ஆயிரம் கோடி இலாபம் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. ஆனால், நமது ஆலை நிர்வாகமோ தொழிலாளர்களுக்கு கேண்டீனில் வழங்கப்படும் மதிய உணவில் பெரும் அநீதி இழைத்து வருகின்றது. நாம் எல்லோரும் ஒரே ஆலையில் பணிபுரிந்து வந்தாலும் இங்கு நிரந்தரத் தொழிலாளர்களுக்கு ஒரு மாதிரியும் காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு ஒரு மாதிரியும் பாரபட்சமான வகையில் உணவு வழங்கப்படுகிறது. நிரந்தரத் தொழிலாளர்களுக்கு சப்பாத்தி, முட்டை, தயிர், வெரைட்டி ரைஸ் எனவும் காண்ட்ராக்ட், செக்யூரிட்டி மற்றும் லாஜிஸ்டிக் தொழிலாளர்களுக்கு வெறும் சாதமும் சாம்பாரும் பெயரளவிற்கு ஒரு கூட்டு மட்டும் வழங்கப்படுகிறது. அதுவும் அளவு சாப்பாடு தான். நிரந்தரத் தொழிலாளர்களுக்கு சாம்பார் கெட்டியாகவும் காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சாம்பார் தண்ணீரை போலவும் இருக்கிறது.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு வழங்குவதாக காரணம் சொல்லி சாம்பாரில் போடப்படும் மொத்த காய்களையும் வடித்தெடுத்து விடுகிறார்கள். அதனால் CL, காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது சாம்பாரா? ரசமா? என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு புது மாதிரியாக இருக்கிறது.

CL, காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் என்ன வேற்றுகிரகவாசிகளா? அவர்கள் தொழிலாளர் வர்க்கத்தின் அங்கமில்லையா? அவர்களும் நம் சொந்தபந்தங்கள்தான். நம் உறவினர் அல்லது நம் நண்பர்களின் பிள்ளைகள்தானே? அவர்களின் வியர்வையிலும் ரத்தத்திலும்தான் அசோக் லேலண்ட் நிறுவனம் இத்தனை வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.

படிக்க :

ஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் !

ரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம் !

இதுநாள் வரை தொழிலாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு வந்தவர்களை திடீரென்று டேபிளில் அமரவிடாமல் சிறிதும் மரியாதையின்றி விரட்டியடிக்கிறது நிர்வாகம். நிரந்தரத் தொழிலாளர்கள் தங்களது சாப்பாட்டை காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் டேபிளில் இருந்து குற்றவாளிகளைப் போல் துரத்தி, அவர்களை அவமானப்படுத்துகிறது.

ஒப்பீட்டளவில் அதிகாரிகளை விட மிக, மிகக் குறைவான கூலிக்கு வேலை செய்யும் CL, காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் சிறிது நேரம் ஓய்வெடுக்கவோ, உட்காரவோ விடாமல் வேலை வாங்கும் அதிகாரிகள், என்றாவது இந்த தொழிலாளர்கள் காலை டிபன் சாப்பிட்டர்களா? மதிய உணவு கிடைத்ததா? வயிறார சாப்பிட்டார்களா? ஆரோக்கியமான உணவுச் சூழல் உள்ளதா என்று விசாரித்திருக்கிறார்களா? தேவைப்படும் அளவிற்கு கேட்டு வாங்கி சாப்பிடும் உரிமை அவர்களுக்கு ஏன் இல்லை? இலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் இந்த கார்ப்பரேட் அதிகாரிகளுக்கு உண்மையில் மனிதத்தன்மை என்ற ஒன்று இருக்கிறதா?

மெட்டீரியல் முவ்மெண்ட், லோடிங் – அன்லோடிங், மெசின் கிளீனிங், ஷாப்களை சுத்தம் செய்வது, கழிவறை கிளினிங் செய்வது உள்ளிட்ட பாதுகாப்பு பணிகள் என எண்ணற்ற, கடுமையான வேலைகளை காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் செய்கிறார்கள். இங்கு அவர்களின்றி உற்பத்தியில் ஒரு அணுவும் அசையாது. ஆனால், அவர்களுக்கு நல்ல தரமான உணவு வழங்காமல் தாழ்த்தப்பட்ட மக்களாகவே நடத்துகிறது,நிர்வாகம்.

கடந்த ஓராண்டாக டிவிஎஸ் லாஜிஸ்டிக்கில் பெண்களும் பணிபுரிந்து வருகிறார்கள். பெண்களை சமைப்பதற்காகவே பிறவி எடுத்தவர்கள் போல நாம் நடத்துகிறோம். வீட்டில் நமக்கு வகை, வகையாக சமைத்துப் போடுவதிலேயே தங்களது பாதி வாழ்நாளை அவர்கள் செலவழிக்கின்றனர். அப்படிப்பட்ட பெண்களுக்கு நமது ஆலையில் வெறும் சாதமும் சாம்பாரும் மட்டும்தான் வழங்கப்படுகிறது. அந்த உப்பு சப்பில்லாத சாப்பாட்டை அவர்கள் ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் ‘சாப்பிட்டுவிட்டு’ வெறுப்புடன் வெளியேறி விடுகிறார்கள். இந்த லட்சணத்தில் நிர்வாகம் லாஜிஸ்டிக் பெண்களை அழைத்து மார்ச் 8 தேதி மகளிர் தினத்தை நடத்துகின்றது. பெண்களுக்கு நல்ல தரமான சாப்பாடு கூட கொடுக்க வக்கில்லாத நிர்வாகத்திற்கு, அவர்களை அழைத்து மகளிர் தினத்தைக் கொண்டாட வைப்பதற்கு என்ன யோக்கிதை இருக்கிறது?

தொழிலாளர்களை கொடும் உழைப்புச் சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்குகின்ற TVS நிர்வாகம் கூட அனைவரையும் வரிசையில் அமர்த்தி, சமமான உணவு வழங்குகிறது. யுனிட்-2வில் உச்சபட்டமாக ஜாதிக்கு ஒரு பந்தி என்பது போல காண்ட்ராட் தொழிலாளர்களுக்கு தனி கேண்டீன் கட்டி ஒதுக்கிவிட்டது. அற்பக்கூலி பெறுவதால் படித்த CL, அப்ரண்டீஸ் தொழிலாளர்கள் நைட் சிப்ட்டில் வேலை பார்த்துவிட்டு தூங்கி எழுந்து காலை டிபன் கூட சாப்பிடாமல் நேரடியாக மதிய உணவு சாப்பிட்டு 4.30pm சிப்ட்டிற்கு வருகின்றனர். பசியுடன் 8.30pm வரை வேலையில் ஈடுபடுகின்றனர். இது மிகப்பெரிய துயரமாகும். இதயமுள்ள மனிதர்கள் எதிர்த்து நிற்பார்கள். இதில் நமது நிர்வாகமோ துளியும் மனசாட்சியின்றி நடந்து கொள்கிறது.

ஆலையில் செக்யூரிட்டிகள் 12 மணி நேரம் இரவு பகலாக கண்விழித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் பிரதான உணவு சப்பாத்திதான். ஆனால் அவர்களுக்கும் சப்பாத்தி வழங்கப்படுவதில்லை.

நிரந்தரத் தொழிலாளர்கள், காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் : கூலி மட்டும்தான் வித்தியாசம். அடக்குமுறையும் அடிமைத்தனமும் ஒன்றுதான் !

சுமார் பத்தாண்டுகளுக்கு முன் அசோக் லேலண்ட் தொழிலாளர்கள் சங்கம், “காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கும் கேண்டீனில் உணவு வழங்க நிர்வாகத்திடம் பேசி முடித்துவிட்டதாக” அறிவித்தது. சில மாதங்கள் CLகள் மட்டும் சமத்துவமாக நடத்தப்பட்டார்கள். ஆனால், இன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் நல்ல தரமான, சரிவிகித, ஒரே மாதிரியான, சமமான உணவு வழங்காமல் நிர்வாகம் வஞ்சகம் செய்கிறது. சர்வதேச அளவில் தரம், மைக்ரோசெண்டில் உற்பத்திக்கொள்கை வகுத்துள்ள நிர்வாகம் உழைப்போரின் உணவுக் கொள்கையில் ஆய்வுகளின்றி, நேர்மையின்றி நடந்துகொள்கிறது. சரிவிகித சத்தான உணவு வழங்கப்படாததால் நிரந்தத் தொழிலாளர்கள் 45 வயதுக்கு மேல் ஆரோக்கிய வாழ்வு பறிக்கப்பட்டு நடைபிணமாக்கப்படுகிறார்கள்.

இது வெறும் சாப்பாடு பிரச்சனை மட்டுல்ல. வேலையில், சம்பளத்தில், உடையில், என தொழிலாளர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்திய நிர்வாகம், உணவில் கூட வித்தியாசத்தை புகுத்தி நவீன அடிமைத்தனத்தைக் கட்டமைக்கிறது!

நிரந்தரத் தொழிலாளி, CL, காண்ட்ராக்ட், செக்யூரிட்டிகள், அப்ரண்டீஸ் என ஒவ்வொரு வேலைப் பிரிவினரையும் தனித்தனி சாதியாகவே நிர்வாகம் பராமரித்து வருகிறது என்பதை தொழிலாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நிரந்தர வேலை உரிமைக்காக போராட வேண்டிய இன்றைய காலச் சூழ்நிலையில் சாப்பாட்டிற்காக போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இது தொழிலாளர் வர்க்கத்திற்கே அவமானம். அதேநேரத்தில் தொழிலாளர்களுக்கு சமமான உணவைக் கூட வழங்காத கார்ப்பரேட் நிறுவனமான நமது அசோக் லேலண்ட் நிர்வாகம் இதற்காக மிகுந்த வெட்கப்படவேண்டும்!

அசோக் லேலண்ட் சங்கங்களே!

ஒரே ஆலைக்குள் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உணவும் கேன்டீனும் வேறு, வேறு என்ற பாகுபாட்டை நீக்கு!

காண்ட்ராக்ட், CL, அப்ரண்டீஸ், செக்யூரிட்டிகள், லாஜிஸ்டிக் தொழிலாளர்களுக்கு சரிவிகித சத்தான, தரமான, சமமான உணவை வழங்க நிர்வாகத்திடம் பேசி முடி!

அசோக் லேலாண்ட் நிர்வாகங்களே!

அனைவருக்கும் சமமான, சரிவிகித சத்தான உணவை வழங்கு!
உணவில் பாரபட்சம் காட்டாதே!
மனிதர்களை மனிதர்களாக நடத்து!

தொழிலாளர்களே!

நிர்வாகம் நம்மீது திணிக்கும் அடக்குமுறைகளை எதிர்த்து, பேசத் தயங்கினால், உரிமைகளுக்காகப் போராட மறுத்தால், நாளை தினம் நாம் சிந்திப்பதையே மறந்துவிடுவோம்!

பிறகு, அடிமைத்தனத்தையே நமது வாழ்க்கையாக மாற்றிவிடுவார்கள்! நமக்காகப் போராட எந்த அவதாரங்களும் மண்ணில் உதிக்கப் போவதில்லை.

புராண, இதிகாச அவதாரங்கள் கூட உயர்சாதி ஆதிக்கத்தையும் மக்களிடையே அடிமைத்தனத்தையும்தான் போதிக்கின்றன.

எனவே, நமது உரிமைகளுக்காக டில்லி விவசாயிகளை போல நாம்தான் ஒன்றிணைந்து போராட வேண்டும்!

பு.ஜ.தொ.மு – பிரச்சாரக் குழு, ஒசூர்
தொடர்புக்கு: 97880 11784

பாத பூஜை எனும் சமூக இழிவை வெறுத்து ஒதுக்குவோம் | கருத்துப்படம்

மீன் விற்கும் பெண்மணி ஒருவரை பேருந்தில் ஏற்ற மறுத்த ஓட்டுனர், நடத்துனர் மீது தமிழ்நாடு முதல் அமைச்சர் நடவடிக்கை எடுத்தது குறித்து கடந்த வாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

கடந்த மாதத்தில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கோவில் அன்னதானத்தில் அவர்களுக்கு அனுமதி மறுத்தது, அவர்களுக்கு பேருந்தை நிறுத்தாமல் சென்றது குறித்து சமூக ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் அவரை நேரில் சந்தித்து அவருடன் அமர்ந்து கோவில் அன்னதானத்தில் உணவருந்தினார்.

சாதிய ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட குறவர், இருளர் இன மக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவு உழைக்கும் மக்கள், பொதுச் சமூகத்தின் மனதில் ஊற வைக்கப்பட்ட பார்ப்பனிய சிந்தனையால் அன்றாடம் இழிவுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதில் உழைக்கும் வர்க்கமான பேருந்து ஓட்டுனர், நடத்துனர்களும் விதிவிலக்கல்ல.

இப்படி ஆட்சியிலிருப்பவர்களும், தவறிழைத்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களின் காலைக் கழுவுவதாலோ, உடனமர்ந்து உணவருந்துவதாலோ இந்த இழிநிலையை சரி செய்ய முடியாது. சாதியத்தைக் காப்பாற்றும் சனாதனப் படிநிலையையும், சுரண்டல் அரசமைப்பையும் தகர்த்தெறிய வேண்டும். அதற்கு பெருவாரியான உழைக்கும் மக்களை சாதிய மனப்பான்மையிலிருந்து விடுவிக்கும் ஜனநாயகத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

கருத்துப்படம் : வேலன்

மும்பை : தண்ணீரின்றி தவிக்கும் நகர உழைக்கும் மக்கள் | படக்கட்டுரை

0
மிகவும் சிக்கலான குழாய்களின் மூலம், கிரேட்டர் மும்பையின் முனிசிபல் கார்ப்பரேஷன் சுமார் 15 மில்லியன் குடிமக்கள் பயன்படுத்தும் வகையில் தினசரி 4 பில்லியன் லிட்டர் குடிநீரை மும்பை நகரத்திற்கு வழங்குகிறது.
தொழில்நுட்ப ரீதியாக அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக நகரத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் போதுமான தண்ணீர் (வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட) சேவை நிலை அளவுகோலின்படி தினசரி 135 லிட்டர் பூர்த்தி செய்யும் நிலை உள்ளது.
உயர்தட்டு குடிமக்களுக்கு கார்ப்பரேசன் அதிக மானிய கொடுத்து 1000 லிட்டருக்கு ரூ.5 என்ற  விலையில் விற்கிறது. ஒரு உயர்ந்த சமுதாயத்தில் வாழும் ஒரு குடிமகன் தினசரி தன் நுகர்வுக்கு 240 லிட்டர் வரை தண்ணீரை பெறுகிறார். மறுபுறம் முறைசாரா குடியேற்றங்களில் உள்ள குடிமக்கள் (சேரிகளில் அங்கீகரிக்கப்படாத மக்கள்) தண்ணீருக்காக ரூ.40 முதல் ரூ.120 வரை அதிகமாக பணம் செலுத்துகிறார்கள்; அவர்களுக்கு ஒரு நாளைக்கு 20 லிட்டர் மட்டுமே  கிடைக்கிறது.
வரலாற்று ரீதியாக ‘மேல்சாதி இந்துக்கள்’, சாதி ஏணியின் அடித்தட்டு மக்களுக்கு தண்ணீர் மறுப்பது இந்தியாவில் ஒரு தொடர் கதையாக இருந்து வருகிறது. ஹைட்ராலிக் சிட்டி என்ற நூலில் ஆசிரியரான நிகில் ஆனந்த், குடிமக்களாக இருக்க தகுதியானவர்கள் மற்றும் பெருநகரத்தில் முறைசாரா முறையில் குடியேறியவர்கள் இடையே இன்று வரை நீர் பகிர்ந்தளிப்பதில் நிலவும் பாகுபாட்டைப் விளக்குகிறார்.
1995-ல் பம்பாய் ‘மும்பை’ஆனது, மேலும் மக்கள் நகரத்திற்கு இடம்பெயர்வதைத் தடுக்க, 1995-க்குப் பிறகு அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களில் வசிப்பவர்களுக்கு தண்ணீர் வழங்கக் கூடாது என்று அரசு சுற்றறிக்கை வெளியிட்டது. இந்த மனிதாபிமானமற்ற கொள்கையை பானி ஹக் சமிதி உள்ளிட்ட சிவில் அமைப்புகள் மற்றும் குடிமக்கள் உயர்நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர்.
படிக்க :
பாலஸ்தீனயர்களுக்கு எதிராக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் || படக்கட்டுரை
மும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை !
டிசம்பர் 15, 2014-ல் பம்பாய் உயர்நீதிமன்றம் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு எதிராக தீர்ப்பளித்தது. “தண்ணீர் பெறும் உரிமை இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் வாழும் உரிமையின் ஒருங்கிணைந்த பகுதியாகும்” என்று கூறியது. மேலும், பல குடும்பங்கள் குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாகவும், ‘அறிவிக்கப்பட்ட’ சேரிகளின் கட்-ஆஃப் தேதியை ஜனவரி 1995 முதல் ஜனவரி 2000 வரை நீட்டிக்கவும் இந்த தீர்ப்பு கூறியது.
ஆனால், தீர்ப்பு இருந்தபோதிலும் எந்த மாற்றங்களும் இதுவரை செய்யபடவில்லை.
கொரோனா காலங்கள் அடித்தட்டு மக்கள் சுகாதாரமற்ற தண்ணீரை பயன்படுத்துவதினால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டனர். உயர்தட்டு குடிமக்களுக்கு குறைந்த விலையில் அதிக தண்ணீரும், அடித்தட்டும் மக்களுக்கு அதிக விலையில் குறைந்த தண்ணீரும் வழங்குவதென்பது சாதிய ஒடுக்குமுறையாகும். உயிர்வாழும் அடிப்படை உரிமைக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்படும் மும்பை முனிசிபாலிட்டி கார்ப்பரேசனுக்கு எதிராக மும்பை நகர உழைக்கும் மக்கள் போராட வேண்டும்.
பல முறைசாரா குடியிருப்புகளில் இது போன்ற பிளாஸ்டிக் பைகளில் உள்ள தண்ணீர் ரூ.2-3க்கு விற்கப்படுகிறது.
தெற்கு மும்பையில் உள்ள கீதா நகரின் முறைசாரா குடியேற்றத்தில் இந்து கடவுளான சிவனின் வரைபடம் தண்ணீர் இல்லாத காலி கேன்கள் இருக்கும் இடத்தில் வரையப்பட்டுள்ளது.
கீதா நகர் (தெற்கு மும்பை) குடியிருப்பாளர்கள் தங்கள் துணிகளை துவைக்க தண்ணீர் மிகவும் குறைவான நீரோடையை நம்பியுள்ளார்கள்.
தெற்கு மும்பையில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட குடியிருப்பில் உள்ளூர் பிளமர்களின் கூட்டு முயற்சியில் அமைக்கப்பட்ட மிதக்கும் குழாய்கள் இங்கே காணப்படுகிறது.
கொரோனா காலத்தின் போது சமூக விலகல் விதிமுறைகளின் காரணாமாக காத்திருக்கும் நேரம் அதிகரித்ததால், முறைசாரா குடியேற்றங்களில் தண்ணீர் ஒதுக்கீட்டின் அளவு மற்றும் வரிசையில் அவர்களிடையே அடிக்கடி சண்டைகள் நிகழ்ந்தன.
சித்தார்த் நகரில் (மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதி) வசிப்பவர் ஒருவர் 20 லிட்டர் தண்ணீரை எடுத்து செல்கிறார். இது மும்பை முனிசிபல் கார்ப்பரேசன் வழங்கிய வாரத்திற்கான குடும்ப தேவைக்கான தண்ணீரில் பாதி அளவே, கூடுதல் தண்ணீருக்கு பகுதியில் உள்ள சொசைட்டியால் தண்ணீர் வழங்கப்படவில்லை. அதிக விலைக்கு தனியார் சப்ளையர்களை நம்பியிருக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
அந்தேரி மேற்கில் உள்ள சித்தார்த் நகரைச் சேர்ந்த தையல்காரரான ஜெய் மதி, சட்டப்பூர்வ வழிமுறைகள் மூலம் தனது மக்களுக்கு தண்ணீர் இணைப்பைப் பெற்றுத் தர தொடந்து முயன்று வருகிறார். அவரது விண்ணப்பத்தின் ஒரு பகுதியாக முனிசிபாலிட்டியிடம் தண்ணீர் கோரிய 3 ஆண்டுகளா போராட்டத்தின் ஆவணங்களை காட்டுகிறார். இன்னும் சித்தார்த் நகருக்கு சட்டப்பூர்வ குடிநீர் இணைப்பு கிடைக்கவில்லை.
கௌலா புந்தர் (முறைசாரா தொழில்துறை பகுதி) என்ற தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியில், அங்கீகரிக்கப்பட்ட விலையை விட 40 மடங்குக்கு மேல் தண்ணீர் விற்கப்படுகிறது. இங்கே படத்தில் பகுதி மக்கள் தஙக்ள் காலை வழக்கத்தை செய்கிறார்கள்.
பல முறைசாரா குடியேற்றங்களில் (அவற்றில் பாதிபகுதிகள் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படாதவை), பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் அனைத்துத் தேவைகளுகும் தினசரி 50 லிட்டருக்கும் குறைவாகவே (உலக சுகாதார அமைப்பால் கட்டளையிட குறைந்தபட்சத் தொகைக்குக் கீழே) பெறுகிறார்கள்.
முனிசிபல் கார்ப்பரேசன் விண்ணப்பப்படி தண்ணீர் இணைப்புக்கு 5 குடும்பங்கள் கூட்டாக விண்ணப்பிக்க வேண்டும். படத்தில், GTB நகரில் (மத்திய மும்பை) வசிப்பவர்கள் உள்ளூர் வார்டு அலுவலகத்திற்கு வெளியே புதிய தண்ணீர் இணைப்புக்காக 7 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர்.
ஆனந்த், (14 வயது) என்ற வீடற்ற சிறுவனால், இலவசப் பள்ளிப்படைப்பைத் தொடர முடியவில்லை. போரிவலியில் (நகரின் வடக்கே) உள்ள எக்ஸார் நுல்லாவில் பாயும் ஓர் ஓடையில் மிகவும் குறைவான கசிவுத்தண்ணீரில் இருந்து ஒரு டம்பாவில் தண்ணீர் நிரப்புவதற்கு ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக செலவிடுகிறான்.
பொதுவாக பெண்கள்தான் தண்ணீர் சேகரிப்பு மற்றும் வீட்டு உபயோகத்திற்கான சுமையை சுமக்க வேண்டும். மும்பையின் லோயர் பரேல் பகுதியில் எடுக்கப்பட்ட படம்.
ரயில்வேக்கு சொந்தமான நிலங்களில் வசிக்கும் அடித்தட்டு மக்கள் தேசிய தொழில் வகைப்பாடு (National Occupational Classification – NOC) பெற முடியாததால் சட்டப்பூர்வ குடிநீர் இணைப்புகளுக்கு தகுதியாற்றவர்களாக உள்ளார்கள். படம் : மேற்கு ரயில் பாதையில் தினமும் 7 தண்டவாளங்களைக் கடந்து, தண்ணீர் கசிவில் இருந்து தண்ணீரை நிரப்பும் ஒரு பெண்.
இந்த பிரம்மாண்ட கட்டிடங்களின் ஒவ்வொரு அறையிலும் அதிக மானிய விலையில் (1000 லிட்டருக்கு ரூ.5.40) வரம்பற்ற நீர் விநியோகம் செய்யப்படுவதால், தண்ணீர் கிடைக்காத அடித்தட்டு மக்கள் அதிகவிலை கொடுத்து குறைவான தண்ணீரை பெறுகிறார்கள் என்பதை வசதியுள்ள குடிமக்கள் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது.

சந்துரு
செய்தி ஆதாரம் : த வயர்
புகைப்படங்கள் : சூரஜ் கத்ரா புகைப்படக் கலைஞர் மும்பை

விஸ்வநாத் பிரதாப் சிங் என்றொரு மீட்பர் | முரளிதரன் காசி விஸ்வநாதன்

வி.பி. சிங் குறித்து புதிய புத்தகம்
ந்தியாவின் பிரதமராக மிகக் குறுகிய காலமே இருந்தாலும், நாட்டின் பிற்படுத்தப்பட்டோர் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டவர் இந்தியாவின் ஏழாவது பிரதமரான விஸ்வநாத் பிரதாப் சிங்.
அலகாபாதில் தையா சமஸ்தானத்தில் பிறந்து அதைவிட பெரிய சமஸ்தானமான மண்டா சமஸ்தானத்திற்கு தத்துக்கொடுக்கப்பட்டவர்.
மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியதே வி.பி. சிங்கின் பரவலான சாதனையாக அறியப்பட்டாலும், இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களை மன்மோகன் சிங்கிற்கு முன்பே துவக்கியவர். ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் 1984 முதல் 1987வரை நிதியமைச்சராக இருந்தபோது ‘லைசன்ஸ் ராஜ்’ஐ உடைத்து, பொருளாதார சீர்திருத்தங்களைத் துவங்கியவர் வி.பி. சிங்தான்.
இந்தியாவின் ஏழாவது பிரதமர், மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தி கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்டோரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர், பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்தத் துவங்கியவர், இந்திய அரசியலில் நேர்மையின் சின்னமாக விளங்கியவர் என வி.பி. சிங் பல வகைகளில் போற்றப்பட்டாலும் அவரைப் பற்றிய முழுமையான ஆங்கில நூல்கள் ஏதும் கிடையாது.
படிக்க :
உ.பி : பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பா.ஜ.க வென்றது எப்படி? || முரளிதரன் காசி விஸ்வநாதன்
டெக்ஸாமெத்தாசோன் : கொரோனா சிகிச்சையில் ஒரு முன்னேற்றம் !
G.S. Bhargava தொகுத்த Perestroika in India: V.P. Singh’s Prime Ministership என்ற ஒரே ஒரு புத்தகம் மட்டுமே பகுதியளவில் அவரது பங்களிப்பைப் பற்றிப் பேசுகிறது. இந்த நிலையில்தான் தேபாஷிஷ் முகர்ஜி எழுதிய The Disruptor: How Vishwanath Pratap Singh Shook India புத்தகம் வெளிவந்திருக்கிறது.
டிசம்பர் 5-ம் தேதிதான் புத்தகம் அதிகாரபூர்வமாக வெளியாகிறது என்றாலும் அமேசானில் இப்போதே விற்பனைக்குக் கிடைக்கிறது.
இந்தப் புத்தகத்தில், இந்திய அரசியலில் வி.பி. சிங்கின் பாத்திரத்தை துல்லியமாக மதிப்பிட முயல்கிறார் தேபாஷிஷ். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் வி.பி. சிங்கின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தாலும், இந்தியாவில் அவரது உருவம் பொறித்த தபால்தலைகூட கிடையாது. அவரது பெயரில் நகரங்களோ, பெரிய சாலைகளோ கிடையாது, குறிப்பிடத்தக்க வகையில் புத்தகங்களோ கிடையாது என வருந்துகிறார் அவர். புத்தகம் கிடையாது என்ற குறையைத் தீர்க்கவே இந்தப் புத்தகத்தை தான் எழுதியதாகக் குறிப்பிடுகிறார் அவர்.
வி.பி.சிங்கின் அரசியலால் பயனடைந்த லாலு பிரசாத் யாதவோ, முலாயம் சிங் யாதவை அவரது நினைவைப் போற்ற ஏதும் செய்யவில்லை என்றும் குறிப்பிடுகிறார். ஆனால், தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் வி.பி. சிங் பெயரில் தெருக்கள், சாலைகள் உண்டு! சமீபத்தில் அவரது பிறந்த நாள் வந்தபோது, வி.பி. சிங்கிற்கு தமிழ்நாட்டில் சிலை வைக்க வேண்டுமென்ற கோரிக்கையை சூர்யா சேவியர் எழுப்பியிருந்தார் என்ன நடக்கிறதென பார்க்கலாம்.
ஆனால், அதற்கு முன்பாக இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். பல அரிய புகைப்படங்களும் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன.
000
விஸ்வநாத் பிரதாப் சிங் என்றொரு மீட்பர்
குறுகிய காலமே இந்தியாவின் பிரதமராக இருந்த வி.பி. சிங், இந்தியாவின் முக்கியமான பிரதமர்களில் ஒருவர். அவர் அமல்படுத்திய இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டதாகக் கருதும் யாரும் அவரை நினைவுகூர மாட்டார்கள். ஆனால், அதுவரை வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் அவரது பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் அவரை நினைவுகூர்வது அவசியம்.
போர் நடக்கும்போதோ, வேறு இக்கட்டான சூழல்களிலோ வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை விமானம் மூலம் தாய்நாடு அழைத்துவர அரசு பெருந்தொகையான பணத்தை வசூலித்து வருகிறது. ஆனால், 1990ல் வளைகுடா யுத்தம் நடந்தபோது குவைத்திலிருந்து ஒரு லட்சத்து 11 ஆயிரம் பேர் இந்தியாவுக்கு மீட்டுவரப்பட்டனர். அப்போது யாரிடமும் பணமும் வாங்கப்படவில்லை.
அந்தத் தருணத்தில் என்ன நடந்தது என்பது குறித்து அப்போதைய பிரதமர் வி.பி. சிங்கின் மீடியா ஆலோசகராக இருந்த பிரேம் ஷங்கர் ஜா விரிவாக எழுதியிருக்கிறார்.
வளைகுடா யுத்தம் நடந்தபோது குவைத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் இந்தியர்கள் பணியாற்றிவந்தார்கள். அந்தத் தருணத்தில் இந்தியாவின் பொருளாதார நிலை மிக மோசமாக இருந்தது.
இந்தியர்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது என சதாம் ஹுசைன் வாக்குறுதி அளித்தாலும் பெரும்பாலான இந்தியர்கள் நாடு திரும்பவே விரும்பினார்கள். ஆனால், அந்தத் தருணத்தில் குவைத்திலிருந்தே இந்தியாவுக்கு அவர்களை அழைத்துவர வழியில்லை. ஆகவே இந்தியர்களை பஸ்ராவிலிருந்து 1120 கி.மீ தூரம் தரைவழியே அம்மான் வரை அழைத்துவந்து, அங்கிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவர சதாமிடம் ஒப்புதல் பெறப்பட்டது.
அப்போது ஏர் இந்தியாவிடம் சில 747 ரக விமானங்களே இருந்தன. அவை அனைத்தையும் வர்த்தக சேவையிலிருந்து விலக்கி, இந்தப் பணியில் ஈடுபடுத்த பிரதமர் வி.பி. சிங் நினைக்கவில்லை. ஆகவே இந்தியன் ஏர்லைன்ஸ் அப்போதுதான் வாங்கியிருந்த ஏர்பஸ் ஏ 320-களை பயன்படுத்த முடிவுசெய்தார்.
இந்தியன் ஏர்லைன்ஸ் வாங்கியிருந்த இரண்டு ஏர்பஸ்களில் ஒன்று விபத்துக்குள்ளாகியிருந்தது. மீதமிருந்த ஒரு விமானம் வர்த்தக சேவையிலிருந்து விலக்கப்பட்டிருந்தது. அந்த விமானத்தை இந்த சேவையில் இறக்கினார் வி.பி. சிங்.
அந்த விமானம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தினமும் 16-18 மணி நேரம் என்ற ரீதியில் தொடர்ந்து பறந்தது. மொத்தம் 488 தடவைகள். 1,11,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டனர். இப்போதுவரை, உலகில் எந்த ஒரு நாடும் இவ்வளவு பெரிய அளவில் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டதில்லை.
இந்த நடவடிக்கையில் பில்லியன் டாலர்கள் வரை செலவானது. அப்போது அன்னியச் செலாவணியே இல்லாத காரணத்தால், 55 டன் தங்கத்தை அடகுவைக்க முடிவெடுக்கப்பட்டிருந்தது.
மற்றொரு நெருக்கடியும் ஏற்பட்டிருந்தது.
குவைத்தை ஈராக் ஆக்கிரமித்தது 1990 ஆகஸ்ட் 2-ம் தேதி. அப்போது வி.பி. சிங் அரசு ஒரு மைனாரிட்டி அரசு. அவருக்குக் கிடைத்த உளவுத் தகவல்களின்படி, அத்வானி நடத்திவந்த ரத யாத்திரை அக்டோபர் 30-ம் தேதி முடிந்த பிறகு, அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொள்ள பா.ஜ.க. முடிவெடுத்திருந்தது.
என்ன நல்லது செய்தாலும் இதில் எதுவும் மாறப்போவதில்லை என்பது அவருக்குத் தெரியும். இருந்தபோதும் இந்தியர்களை மீட்பது இந்தியாவின் கடமை என அவர் நம்பினார். அந்த மீட்பு நடவடிக்கைக்கு மாட்டிக் கொண்டிருப்பவர்களிடம் பணம் கேட்பது என்ற கேள்வியே எழவில்லை.
கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு திடீரென அமல்படுத்தப்பட்டபோது, நாடு முழுவதும் கோடிக் கணக்கானவர்கள் நடந்தது குறித்து அரசு பேசாமல் இருந்ததோடு ஒப்பிட்டுப் பார்த்தால், வி.பி. சிங் செய்ததன் பிரம்மாண்டம் புரியும்.
ஆனால், இப்படி வெளிநாடுகளில் சிக்கியிருவர்களை மட்டுமல்ல, ஜாதி, சமூக அமைப்பின் காரணமாக வாய்ப்புகள் வழங்கப்படாமல், மறுக்கப்பட்டிருந்த பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி, கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கையையும் மீட்டார் வி.பி. சிங்.
இந்திய அரசியலில் காணாமல் போயிருந்த தார்மீகம் சார்ந்த, அறம் சார்ந்த அரசியலை மீண்டும் உயிர்ப்பித்தவர் வி.பி. சிங். போஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ரூ. 60 கோடி லஞ்சமாகப் பெற்றதாக ராஜீவை உலுக்கியெடுத்தார். இந்த விவகாரமே வி.பி. சிங்கிற்கு பிரதமர் பதவியைப் பிடித்துத் தந்தது. மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்றுக்கொண்டது அவரது மற்றொரு சாதனை.
அவரது இந்த நடவடிக்கை வட இந்திய அரசியலின் முகத்தையே மாற்றியமைத்து. வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டியதுதான் என்று நமக்கு சர்வ சாதாரணமாகத்தான் தோன்றுகிறது.
ஆனால், வட இந்தியாவில் வாழ்பவர்களுக்கு அப்படித் தோன்றுவதில்லை. தமிழராக இருந்து வட இந்தியாவில் வாழ்ந்தாலும் இதே எண்ணம்தான் இருக்கும். அப்படியிருக்கையில் 80-களின் இறுதியில் கடும் எதிர்ப்புக்கு இடையில் இந்த அறிக்கையை ஏற்றார் வி.பி. சிங்.
பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த கோடிக்கணக்கானவர்கள் அரசுப் பணிகளில் சேர்ந்தார்கள்.
படிக்க :
குஜராத் மாடல் : குவியும் கொரோனா மரணங்கள் !
கொரோனா நோயாளிகளை தற்போது குணப்படுத்தும் மருத்துவர்கள் நீட் தேர்வு எழுதியவர்களா ?
நாட்டைத் துண்டுபோடும் நோக்கத்தோடு அத்வானி ரத யாத்திரையைத் நடத்தியபோது, அவரைக் கைது செய்து தடுத்து நிறுத்தினார் வி.பி. சிங். அதற்குப் பிறகு தன் ஆட்சி நிலைக்காது என்று தெரிந்தும் இதைச் செய்தார்.
நிதி அமைச்சராக இருந்தபோது தீருபாய் அம்பானியையும் அமிதாப் பச்சனையும் ஆட்டி வைத்தது, சம்பல் பகுதியில் நடந்த கொள்ளைகளுக்குப் பொறுப்பேற்று உத்தரப் பிரதேச முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது, பொற்கோவிலில் ராணுவம் நுழைந்த நடவடிக்கைக்காக இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் மன்னிப்புக் கேட்டது, இந்திய அமைதி காக்கும் படையை இலங்கையிலிருந்து திரும்ப அழைத்தது போன்றவை அவருடைய பிற குறிப்பிடத்தக்க செயல்கள்.
பொதுத் தேர்தலை தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார் வி.பி. சிங். இதில் தி.மு.க.வுக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லையென்றாலும் அமைச்சரவையில் சேர வேண்டுமென வற்புறுத்தி, சேர்த்துக்கொண்டார் வி.பி. சிங்.
1996-ல் பிரதமர் பதவி தேடி வந்தபோது, அதை மறுத்தது மற்றொரு புத்திசாலித்தனமான, சரியான நடவடிக்கை. படுக்கையில் விழும்வரை பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த வி.பி. சிங், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இருந்தாலும் மக்கள் போராட்டங்களிலிருந்து கிளைத்தெழுந்த ஒரு தலைவனாகவே தன் கடைசி நாட்கள் வரை இருந்தார் வி.பி. சிங்.
முகநூலில் : K Muralidharan
disclaimer

நூல் விமர்சனம் : நான் நிகழ்த்திய மோதல் கொலை | ராமச்சந்திரன் நாயர் | எஸ்.காமராஜ்

மத்துவ சமூக அமைப்பை இந்த மண்ணில் மலர்விக்க, எண்ணற்ற புரட்சிப் போராளிகள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். அரச பயங்கரவாதத்தின் கொடும் கரங்களால் என்கவுண்டர் என்ற பெயரில் துப்பாக்கி ரவைகளை நெஞ்சில் ஏந்தி, சிறைக் கொட்டடியில் சித்திரவதைக்கு ஆளாகி வீர மரணத்தை தழுவியுள்ளனர்.
ஈடு இணையற்ற அந்த மாவீரர்களின் கடந்தகால தியாக வரலாற்றை நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டியுள்ளது. சொந்த வாழ்க்கையின் சுக போகங்களை உதறித் தள்ளிவிட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக உரிமை முழக்கமிட்டு, குரலற்ற மக்களின் குரலாய் களமாடிய மாவீரன், ஆதிக்க சக்திகளை குலைநடுங்க வைத்த போராளி, அடிமை விலங்கு ஒடிக்க ஆர்த்தெழுந்து போராடிய அடலேறு, தமது வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்த உண்மையான பொதுவுடமை புரட்சியாளர் தோழர் வர்கீஸ்.
போலீசுத்துறை உயர் அதிகாரிகளின் நிர்ப்பந்தத்தால், உத்தரவால் புரட்சியாளர் வர்கீஸ் அவர்களை சுட்டுக் கொன்ற போலீஸ் ராமச்சந்திரன் நாயர் அவர்களின் ஒப்புதல் வாக்குமூலம் “நான் நிகழ்த்திய மோதல் கொலை” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.
படிக்க :
நூல் அறிமுகம் : சாதி எனும் பெரும் தொற்று – தொடரும் விவாதங்கள் | மு.சங்கையா | எஸ்.காமராஜ்
நூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்
மக்களுக்காக போராடிய ஒரு மாவீரனை சுட்டுக்கொல்ல நேர்ந்தது குறித்து ராமச்சந்திரன் நாயரின் மனசாட்சி அவரை உலுக்குகிறது. வேலை பறிபோய் விடுமோ என்ற அச்சத்தால், சொந்த வாழ்க்கையின் மீதுள்ள நாட்டத்தால் இத்தனை ஆண்டுகாலம் மூடிமறைத்த உண்மைகளை ராமச்சந்திரன் நாயரால் வெகு காலம் மறைத்து வைக்க முடியவில்லை.
1970 பிப்ரவரி 18-ம் தேதி மாலையில் நடந்த இந்த அக்கிரம கொடுங்கோன்மை பற்றிய ஒப்புதல் வாக்குமூலம் ராமச்சந்திரன் நாயர் அளித்த பிறகுதான் 30 ஆண்டுகளுக்கு முன்பு வயநாட்டில் நிகழ்ந்த உண்மைகளை உலகம் அறிந்து கொண்டது. என்னை கொலை செய்ய வைத்தார்கள். நான் அதை செய்ய நேர்ந்தது. இந்த பாரத்தை 30 ஆண்டுகளாக நான் சுமந்து திரிந்தேன். இந்த உண்மையை வெளி உலகிற்கு சொல்லியாக வேண்டும் என்று ராமச்சந்திரன் நாயரின் ஆற்றாமையும் குற்ற உணர்வும் இந்த வாக்குமூலத்தை அளிக்க வைத்துள்ளது.
வசந்தத்தின் இடிமுழக்கம் நக்சல்பாரி எழுச்சியின் விளைவாக மேற்கு வங்கத்தில் உருக்கொண்ட புரட்சிப்புயல் இந்திய துணைக் கண்டம் முழுவதும் சூறாவளி போல் சுழன்று அடித்தது. கேரளத்தில் புரட்சிகர இயக்கம் உருப்பெற்று வளர்ந்த வரலாற்றை இந்த நூலின் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.
போலீசால் படுகொலை செய்யப்பட்ட தோழர் வர்கீஸ்
வயநாடு என்பது ஆதிவாசி மக்களுக்கு சொந்தமான நிலப்பகுதி. கேரள வரலாற்றில் பழசி ராஜாவின் படைப்பிரிவுகளில் அங்கம் வகித்தவர்கள் குரும்பர் போன்ற ஆதிவாசிகள் தான்; ஆனால் அந்த உழைக்கும் மக்களுக்கு ஒரு சென்ட் நிலம் கூட சொந்தமாக இல்லை. அனைத்து நிலங்களும், வளங்களும் ஜமீன்தார்களுக்கும், குத்தகை கம்பெனிகளுக்கும் வந்தேறிய நிலப்பிரபுக்களுக்கும் தனி உரிமையாக இருந்தது.
ஆதிவாசி மக்களை கால்நடைகளைக் போல் அறுவடைக் காலம் முடிந்ததும் அவர்களை சந்தைக்கு கொண்டு போய் விற்பனை செய்வார்கள். ஆதிவாசிகளை விற்பனை செய்யும் ஒரு அடிமை சந்தை இருந்தது. உயிரும் உணர்வும் உள்ள அந்த எளிய மக்களை பண்ட  மாற்று முறையில் ஆதிவாசி அடிமைகளை விற்பனை செய்யும்முறை சுதந்திர இந்தியாவிலும் தொடர்ந்தது.
அடிமை வர்க்கத்தினர் தங்களது விடியலுக்கு நக்சல்பாரி புரட்சி பாதையை அவர்கள் தேர்வு செய்தது பற்றி யார் எப்படி குறை சொல்ல முடியும்? ஆதிவாசி மக்களுக்கு தோழர் வர்கீஸ் மகானாக தென்பட்டார், தங்களை அடிமைத்தளையில் இருந்து மீட்க வந்த பெருமகனாக ஆராதனை செய்தனர். புரட்சியின் நோக்கங்களை உயிரை விட மேலாகவும்  சொந்த விருப்பு வெறுப்புகளை விட மக்களின் விருப்பங்களை உயர்வாகவும் மதித்து செயல்பட்ட ஒரு மாபெரும் புரட்சியாளர் வர்கீஸ் அவர்களை தனது கையால் சுட்டுக்கொன்ற வேதனை போலீஸ் ராமச்சந்திரன் நாயர்-ஐ வாட்டுகிறது.
1971-ம் ஆண்டு நக்சல்பாரி புரட்சியாளர்களின் அனல் தெறிக்கும் செயல்பாட்டு களமாக மேற்கு வங்கம் விளங்கியது. கொல்கத்தா நகர் முழுக்க ஆயுதம் தாங்கிய போலீசுப்படை நிறைந்திருந்தது. ஏராளமானோர் போலீசுத்துறையின் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகினர். காங்கிரஸ் கருங்காலி கும்பல் கொடுத்த பட்டியலின் அடிப்படையில் துடிப்பான இளைஞர்கள் அடுக்கடுக்காக கைது செய்யப்பட்டனர். எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் பெற்றோர்களின் எதிரிலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். குரூரமான விசாரணைகளுக்கு பிறகு ஏராளமான இளைஞர்களை கொன்றுவிட்டனர்.
1972-ம் ஆண்டின் மத்திய காலகட்டத்தில் சாரு மஜூம்தார் போலீசுத்துறையின் பிடியில் அகப்பட்டார். அந்த மெலிந்த உடலும் அந்த கம்பீரமும் என் மனதில் பதிந்து போனது. ஒருநாள் அந்த வீர மகனை கொன்றதாக எங்களுக்குத் தெரியவந்தது. அந்தப் பூதவுடலை பார்க்கவும் எங்களை அனுமதிக்கவில்லை. விஷம் செலுத்தி அந்த வீர மகனை கொன்றதாக பிறகு தெரியவந்தது. மார்க்சிஸ்ட் கட்சியும் மேற்கு வங்கத்தை ஆண்டுகொண்டிருந்த முதலாளித்துவ கட்சியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தான் என்று தனது அனுபவங்களை இந்த நூலில் ராமச்சந்திரன் நாயர் பதிவு செய்துள்ளார்.
சிவராமன் என்கின்ற கருங்காலி தோழர் வர்கீஸ் அவர்களை நம்பவைத்து காட்டிக்கொடுத்துவிடுகிறான். “மேற்கு வங்கத்துக்கு போய் அங்கு நடக்கிற போராட்டங்களில் கலந்துவிட்டு திரும்பி வந்தபிறகு இயக்கத்தை சீர்படுத்தி போராட்டத்தை தொடரலாம் என்று திட்டம் போட்டு இருந்தேன். இன்று இரவு வண்டி ஏறனும் என்று முடிவு செய்து இருந்தேன். சிவராமன் எங்களுக்கு பணம் தர வேண்டி இருக்கு அவனிடம் பணம் கேட்டு இருந்தேன். வேலைக்குப் போய்விட்டு வந்து தரேன் அதுவரைக்கும் வேணும்னா படுத்துக்கங்கன்னு சொல்லி கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு போனான். இப்படி சதி வேலை செய்வான் நான் எதிர்பார்க்கவில்லை” என்று தோழர் வர்க்கீஸ் சொன்னதை இந்நூலில் ராமச்சந்திரன் நாயர் குறிப்பிடுகிறார்.
“உங்களில் ஒருத்தர் தான் என்னைக் கொல்ல போறீங்க. நான் சொன்னதை மறந்துடாதீங்க. எனக்கு முழக்கம் போடுவதற்கான வாய்ப்பை தர வேண்டும். தேவையே இல்லாம எதுக்கு சார் பொழுதை போகிறீர்கள், நான் எதுவும் சொல்ல மாட்டேன் என்கிற விஷயம் உங்களுக்கும் தெரியும், நீங்கள் என்னை கொலை செய்து விடுவீர்கள் என்ற உண்மை எனக்கும் தெரியும். இந்த ஒருவருக்கு பதிலாக ஆயிரம் ஆயிரம் வர்கீஸ் உருவாகுவார்கள். இந்தக் காலக் கட்டத்தில் தவிர்க்க முடியாத தேவை இதுதான்.” என்று போலீசிடம் கூறுகிறார் வர்க்கீஸ்
டி.ஐ.ஜி. விஜயன் அவன்கிட்ட எதையும் கேட்க வேண்டாம், விட்டுவிடலாம் என சொல்வது கேட்டது. இவனைக் கொன்று விடுவதாக முடிவு பண்ணியிருக்கோம் உங்களில் யார் இவனை சுட்டுக் கொள்ளப் போகிறீர்கள்? யாரும் எதுவும் பேசவில்லை தயாராக இருப்பவர்கள் கை தூக்குங்க மற்ற 3 பேர்களும் தயங்கிக் கொண்டே கைகளை தூக்கினார்கள். நான் கண்டு கொள்ளாமல் இருந்தேன். உன்னால் முடியாதா என்று என்னைப் பார்த்து கேள்வி கேட்டார்.
இவனை நாங்க உயிரோட அல்லவா பிடிச்சோம்; இவன் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை; இவனை நீதிமன்றத்தில் அல்லவா ஆஜர்படுத்த வேண்டும் என்றேன் நான். “அதை முடிவு பண்றது? நீயா?” டி.எஸ்.பி. லட்சுமணா சொன்னார். “இதை நீதான் செய்யணும் இல்லேன்னா நக்சலைட்டுகள் நடந்த மோதலில் ஒரு கான்ஸ்டபிள் கொல்லப்படலாம்.” கடுமையான சொற்களைக் கேட்டதும் நான் நடுங்கிப்போனேன் அந்த ஒரு நிமிடம் நான் கோழை ஆனேன்; நானே கொன்னுடுறேன் குரல் உயர்த்தி சொன்னேன்.
அந்த மாவீரனுக்கு மனதால் விடைகொடுத்து நாவால் சூ என ஓசை எழுப்பினேன். துப்பாக்கியின் விசையை சுண்டினேன் குண்டு சீறிப் பாய்ந்தது மிகச்சரியாக இடதுபுற நெஞ்சில் குண்டு பாய்ந்த ஓசையைக் கடந்து வர்கீஸ் இடமிருந்து சத்தம் முழங்கியது மாவோ ஐக்கியம் ஜிந்தாபாத்! புரட்சி வெல்லட்டும்!
அந்த இடியோசை போன்ற முழக்கத்தை கேட்ட போலீசுத்துறையினர் இந்த இடத்திலிருந்து சற்று பின்வாங்கினார்கள். எனது 34 வருட போலீசுத்துறை வாழ்க்கையில் இதுபோல் அஞ்சாநெஞ்சம் கொண்ட வீரனை நான் சந்தித்ததே இல்ல. அந்த மாவீரனின் இறுதி நிமிடங்கள் பற்றி எழுதுவதற்கு, ஆறாம் வகுப்பு படித்த எனக்கு வார்த்தைகள் இல்லை.” இவ்வாறுதான் மரணத்தை வென்ற அந்த மாவீரனை பற்றி போலீஸ் ராமச்சந்திரன் நாயர் குறிப்பிடுகிறார். ஈடு இணையற்ற அந்த வீரத் தியாகியின், அந்த இளம் புரட்சியாளரின் வீரமரணத்தை எண்ணிப் பார்க்கும்போது நம் நெஞ்சம் விம்முகிறது.
எனது வாழ்க்கையில் முதன் முதலாக நான் செய்த ஒரே ஒரு நல்ல விஷயம் தோழர் வர்கீஸ் அவர்களைக் கொலை செய்த பாதகச் செயல் குறித்த உண்மையை வெளி உலகிற்கு தெரிவித்தது தான். 33 வருடங்கள் காக்கி சீருடையில் வாழ்ந்த ராமச்சந்திரன் நாயர் போலீசுத்துறையின் அட்டூழியங்கள் – அநியாயங்கள் – காக்கி உடையின் அரசியல் என்னவென்பதை வெளிப்படையாக சொல்கிறார்.
படிக்க :
தோழர் வர்கீஸ் படுகொலை தீர்ப்பு: தாமதமான நீதி…
புதிய ஜனநாயகம் டிசம்பர் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து இன்றுவரை போலீசுத்துறை ஆளும் வர்க்கத்தின் ஏவல் துறையாக, ஈவு இரக்கமற்ற கூலிப்படையாக, கொடுங்கோலர்களாக அதன் தன்மை மாறாமல் இன்றுவரை செயல்பட்டு வருகிறது. நிகழ்காலத்தில் நடைபெற்று வரும் மோதல் கொலைகளும் சாத்தான்குளம் பெனிக்ஸ் ஜெயராஜ் லாக்கப் மரணங்களும், நாகாலாந்தில் அப்பாவி பொதுமக்கள் 14 பேரை சுட்டுக்கொன்ற நிகழ்கால கொடூரமும் இரத்த சாட்சிகளாக நம் கண்முன் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த நூலில்தான் போலீசுத்துறையில் பணியாற்றியபோது கிடைத்த பல்வேறு அனுபவங்களை உள்ளதை உள்ளபடியே ராமச்சந்திரன் நாயர் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார். குளச்சல் யூசுப் சிறப்பான முறையில் தமிழ் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
மக்களுக்காக உழைத்தவர்களின் மரணம் மலையை விட கனமானது என்றார் மாவோ. ஈடு இணையற்ற இளம் புரட்சியாளர் வர்கீஸ் அவர்களின் நினைவு யுகம் யுகமாக நிலைத்திருக்கும். அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் எதிரான போராட்டக்களத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்த பொதுவுடமைப் போராளிகளின் தியாகமும் வீரமும் சமத்துவ சமூக அமைப்புக்கு போராடும் அனைவருக்கும் உரமூட்டும் உத்வேகம் அளிக்கும். கடந்த காலத்தில் நடந்த நிகழ்வை சொல்லும் இந்த நூல் நிகழ்கால போராட்டத்திற்கும் அவசியமானதாகும். சமூக மாற்றத்தை நேசிக்கும் இளம் தலைமுறையினர்  அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய நூல்.
நூல் ஆசிரியர் : ராமச்சந்திரன் நாயர்
தமிழாக்கம் : குளச்சல் யூசுப்
வெளியீடு : களம் வெளியீடு
8, மருத்துவமனை சாலை, சின்ன போரூர்
சென்னை – 600116
விலை : 160
நூல் அறிமுகம் : எஸ்.காமராஜ்

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2021 மின்னிதழ் !

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

டிசம்பர் மாத மின் இதழ் கோரும் நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜி−பே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம். அஞ்சல் மூலம் இதழ் கோருகின்ற வாசகர்கள், எமது அலுவலக எண்ணிற்கு ஜி−பே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்−ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்−அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஜி−பே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.20

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

டிசம்பர் மாத இதழில் வெளியான கட்டுரைகள் குறித்த விவரம் அறிய : இங்கே அழுத்தவும்

– நிர்வாகி.

வேளாண் சட்டங்கள் வாபஸ் : மோடியை பணியவைத்த விவசாயிகள் போராட்டம்!

காவி – கார்ப்பரேட் பாசிச அபாயத்தை முறியடிப்பது என்ற கடமை இந்திய உழைக்கும் மக்களின் தோளில் சுமத்தப்பட்டுள்ள சூழலில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய மாபெரும் போராட்டத்தின் விளைவாக, மோடி அரசு அச்சட்டங்களை பின்வாங்கியிருப்பதானது உறுதியான மக்கள் திரள் போராட்டங்களின் மூலமே பாசிஸ்டுகளை மண்டியிடச் செய்ய முடியும் என்பதற்கு சாட்சியாகவும் நம்பிக்கையளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது.
சீக்கியர்களின் முதல் குருவான குருநானக் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட கடந்த நவம்பர் 19 அன்று திடீரென்று தொலைக்காட்சியில் தோன்றிய மோடி, “வேளாண் சட்டங்களின் நலனை ஒருதரப்பு விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. எனவே வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுகிறோம்” என்று அறிவித்தார். ஒட்டுமொத்த விவசாயிகளின் ஆதரவு இருந்தும் ‘ஒருதரப்பு’ விவசாயிகளின் போராட்டத்தை மதித்து ஜனநாயகப் பண்போடு இறங்கி வந்துள்ளாராம் மோடி. ‘குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்று நடிக்கிறார் மோடி.
வேளாண் சட்டங்களின் புனித நோக்கத்தை எங்களால் ‘புரியவைக்க முடியவில்லை’ என்று சொல்கிறார் மோடி. விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கி அம்பானி, அதானிக்கு விவசாயிகளை அடிமையாக்குவதுதான் வேளாண் சட்டங்களின் நோக்கம் என்பதை நன்கு புரிந்துகொண்டதோடு, இந்நோக்கத்தை அமல்படுத்த முனைந்தால் தங்களது எதிர்வினை எப்படி இருக்கும் என்பதை மோடிக்கும் அவரது எஜமானர்களான அம்பானி, அதானிக்கும் விவசாயிகள் புரியவைத்துவிட்டனர். இந்த உண்மையை மோடியால்தான் ‘ஒப்புக்கொள்ள’ முடியவில்லை.
படிக்க :
மோடி விவசாயிகளுக்கு புரியவைக்க முயற்சித்த போது… || கருத்துப்படம்
விவசாயிகள் போராட்டம் வெற்றி : சாதனையும் கற்றுக்கொள்ள வேண்டியவையும்!
விவசாயிகள் போராட்டத்தின் மகத்துவம்
“காங்கிரஸ் தூண்டிவிடும் போராட்டம்”, “காலிஸ்தானிகள் போராடுகிறார்கள்”, “மாவோயிஸ்டு பின்னணி” – போன்ற நச்சுப் பிரச்சாரங்களில் ஈடுபடுவதன் மூலம் இப்போராட்டத்தை ஆரம்பத்திலேயே தனிமைப்படுத்தி ஒடுக்கிவிடலாம் என நினைத்த காவிகளின் கனவை வெடிவைத்து தகர்ப்பதைப் போல அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களின் பேராதரவைப் பெற்று முன்னேறியதிலும் காவி – கார்ப்பரேட்டுகளை கதிகலங்கச் செய்யும் போர்குணமிக்க போராட்ட வழிமுறைகளைக் கையாண்டதிலும்தான் விவசாயிகள் போராட்டத்தின் மகத்துவம் உள்ளது.
டெல்லி முற்றுகைப் போராட்டத்திற்கு முன்பு பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் தொடங்கிய போதே, இது ஆதிக்க சாதி ஜாட்களின் போராட்டம், பணக்கார விவசாயிகளின் போராட்டம் என பிரச்சாரம் செய்தது ஆர்.எஸ்.எஸ். காவி கும்பல். இதன் மூலம் தாழ்த்தப்பட்ட நிலமற்ற கூலி விவசாயிகளையும் சிறு – குறு விவசாயிகளையும் போராடுபவர்களுக்கு எதிர்நிலைப்படுத்த காவிக்கும்பல் முயன்றபோதும் அப்பொய்ப் பிரச்சாரங்களைப் புறக்கணித்துவிட்டு தலித் கூலி விவசாயிகளும், சிறு – குறு விவசாயிகளும் போராட்ட முன்னணியில் தங்களை உறுதியாகப் பிணைத்துக் கொண்டார்கள்.
“டெல்லிச் சலோ” போராட்டம் தொடங்கியபோது அகில இந்திய அளவில் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து தொழிலாளி வர்க்கமும் போராடியது. விவசாயிகளும் தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர், தங்கள் போராட்டக் கோரிக்கைகளுடன் மற்றவர்களுடையதையும் இணைத்துக் கொண்டார்கள். தொழிலாளர் – விவசாயி வர்க்கங்களின் ஒற்றுமையாக அது அமைந்து.
அமெரிக்க பாடகி ரெஹானா, ஸ்வீடன் சூழலியல் செயல்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க், நோம் சோம்ஸ்கி உள்ளிட்டு உலகம் முழுக்க உள்ள முக்கிய பிரபலங்கள், செயல்பாட்டாளர்கள், லிபரல் – முற்போக்கு அறிவுஜீவிகள் என குட்டி முதலாளித்துவப் பிரிவினரின் ஆதரவையும் பெற்றது.
000
அனைத்து மாநிலங்களிலுமுள்ள விவசாயிகள் சங்கத்தை “அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு” (AIKSCC) என்ற ஒரு பொதுஅமைப்பின் மூலம் இணைத்து நாடெங்கும் விவசாயிகள் ஒற்றுமையைக் கட்டியமைக்க முயற்சித்த அதே வேளையில், மோடி அரசை எதிர்த்த அவர்களின் போராட்ட வடிவங்களும் மிகவும் கூர்மையாகவும் நாம் கற்றுக் கொள்ளும் வகையிலும் இருந்தது.
விவசாயிகள் முன்னெடுத்த, ரிலையன்ஸ் ஜியோ சிம் எரிப்புப் போராட்டம், ஜியோ செல்போன் கோபுரங்களைத் தாக்கியது, ரிலையன்ஸ் கடைகளின் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டங்கள், அதானி பொருட்கள் புறக்கணிப்பு ஆகிய போராட்ட நடவடிக்கைகள், யாருடைய நலனுக்காக இந்த விவசாயச் சட்டங்கள் மோடி அரசால் கொண்டுவரப்பட்டதோ, அவர்களுக்கே (அம்பானி – அதானி உள்ளிட்ட முதலாளிகளுக்கு) நேரடியாக எச்சரிக்கைவிடும் வகையில் அமைந்தது.
மேலும், பா.ஜ.க. அலுவலங்களை முற்றுகையிட்டு போராடுதல், பொதுநிகழ்ச்சிக்கு வரும் பா.ஜ.க. தலைவர்களை விரட்டியடித்தல், அக்கட்சியில் உறுப்பினர்களாக இருப்பவர்களை ஊர் விலக்கம் செய்தல் என விவசாயிகள் மேற்கொண்ட போராட்ட வடிவங்கள், பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு ஜாட் விவசாயிகள் மத்தியிலிருந்த செல்வாக்கை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடிங்கி எறிந்தன.
அடுத்ததாக, போராடும் விவசாயிகளை ஒருங்கிணைக்கும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு (AIKSCC), விவசாயிகள் போராட்டம் வேளாண் சட்டங்களை எதிர்ப்பதாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தது; மோடி அரசுக்கெதிராக போராடுகின்ற பிற உழைக்கும் மக்களின் போராட்டங்களுடன் விவசாயிகள் போராட்டத்தை இணைக்கவில்லை; ஆரம்பத்தில் அவ்வாறு பிற மக்கள் போராட்டங்களோடு இணைத்தாலும் வளர்ச்சிப்போக்கில் அவற்றைக் கைவிடத்தொடங்கியது இந்த முக்கிய பலவீனமான அம்சம் இருந்தபோதிலும் விவசாயிகள் மேற்கொண்ட போராட்ட வடிவங்கள், அவர்களுக்கு கிடைத்த மக்கள் ஆதரவு போன்றவற்றால் மோடி அரசுக்கு ஏற்பட்ட புறநிலை நெருக்கடியே இச்சட்டங்கள் பின்வாங்கப்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.
‘செயல்திறனற்றவர்’: மோடியை கோபித்துக் கொள்ளும் கார்ப்பரேட்டுகள்
ஓராண்டு காலம் தனது கார்ப்பரேட் எஜமானர்களுக்காக விவசாயிகளை கடுமையாக அடக்கி ஒடுக்கி பணியவைக்க முயற்சித்த மோடி, திடீரென்று இப்படி பின்வாங்கியிருப்பது கார்ப்பரேட்டுகளுக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான ஃப்ர்ஸ்ட் போஸ்ட் செய்தி இணையதளத்தில் “பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றது ஏன் அரசியல் ரீதியாக தீங்கு விளைவிக்கக்கூடியது மற்றும் தர்க்கரீதியாக அநியாயமானது – என்பதற்கான ஐந்து காரணங்கள்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள கட்டுரை கார்ப்பரேட்டுகளுக்கு மோடி மீது ஏற்பட்டிருக்கும் மனக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறது.
“இது பிரதமரின் மிக மோசமான முடிவு. அவர் செயல்திறன் குறைந்தவராகவும், பலவீனமானவராகவும், பயனற்றவராகவும் காணப்படுகிறார். மேலும் இந்தியாவின் விவசாயத் துறையை சக்திவாய்ந்த நிலப்பிரபுத்துவ குலாக்குகளின் பிடியில் இருந்து விடுவிக்கும் ஆற்றலைக் கொண்ட ஒரு முக்கிய பொருளாதார மறுசீரமைப்பைச் செய்வதற்கான பொன்னான வாய்ப்பை இழந்துவிட்டார்.”
“அவர் (மோடி) உறுதியை வெளிப்படுத்தி, தனது நிலைப்பாட்டை அமல்படுத்திருந்தால், இந்தியாவின் சீர்திருத்தவாதி என்ற அவரது பிம்பத்தை மேலும் மெருகூட்டியிருப்பதோடு விவசாயப் பொருளாதாரத்தை விடுவித்து, 1991-களின் பொருளாதார சீர்திருத்தங்களைப் போன்ற நடவடிக்கைகளை விவசாயத் துறையில் செயல்படுத்தியிருப்பார்” – என்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்ற மோடியை கடிந்துகொள்ளும் கட்டுரையாளர், தேர்தல் நோக்கத்திற்காகத்தான் இச்சட்டங்கள் பின்வாங்கப்பட்டிருக்கிறது என்றால், அது எப்படி பார்க்கப்பட வேண்டும் என்று அடுத்து சொல்கிறார்.
“நாடாளுமன்றத்தின் கீழவையில் 300 இடங்களுக்கு மேல் உள்ள ஒரு கட்சி, ஆட்சி பறிபோய்விடும் என்ற ஒருசிலரின் அச்சத்தால் நாட்டிற்கு சந்தேகத்திற்கு இடமின்றி நன்மை பயக்கும் நோக்கங்களை அடைய முடியவில்லை என்றால், ஜனநாயக அரசியல் அமைப்பு அபகரிக்கப்பட்டிருப்பது என்பது தெளிவாகிறது.”
‘ஜனநாயகம்’ அபகரிக்கப்பட்டிருக்கிறதாம். ‘நாட்டிற்கு’ எனும் சொல்லை ‘முதலாளிகளாகிய எங்களுக்கு’ என்றும் ‘ஜனநாயகம்’ என்பதை ‘முதலாளிகளின் விருப்பம்’ என்றும் மாற்றி வாசித்தால் இன்னும் இதைக் கூர்மையாகப் புரிந்துகொள்ளலாம்.
எல்லாவற்றிற்கும் உச்சமாக, விவசாயிகளின் போராட்டத்திற்கு அஞ்சி, இப்படி பின்வாங்குவதால் ஏற்படும் ‘ஆபத்து’ குறித்து சொல்லும் கட்டுரையாளர் “எதிர்ப்பாளர்களுக்கு இது ஒரு சாத்தியமான கருவியை அளிக்கிறது. எல்லாவற்றையும் தெருக்களில் தீர்த்து வைக்க வேண்டும் என்றால், தேர்தல் வெற்றிகளால் என்ன பயன்?” என்று அச்சமுறுகிறார்.
“எல்லா பிரச்சினைகளுக்கும் களத்தில் இறங்கிப் போராடுவதுதான் தீர்வு என்று சொல்பவர்கள் எதார்த்தம் புரியாதவர்கள். தேர்தலையும் ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும்” – என்று சொல்பவர்களின் கூற்றை எதிர்நிலையில் கேலிசெய்கிறது அம்பானியின் ஃப்ர்ஸ்ட் போஸ்ட்.
பின்வாங்கலுக்குத் தேர்தல் மட்டும்தான் காரணமா?
எங்கள் அரசு விவசாயிகளின் கோரிக்கைக்கு மதிப்பளித்துதான் இச்சட்டங்களை திரும்பப் பெற்றிருக்கிறது. ஐந்து மாநிலத் தேர்தலுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பா.ஜ.க.வினர் கூறிவருகின்றனர். ஆனால், மோடி ஒரு தேர்ந்த அரசியல்வாதியைப் போல (statesman-like) முடிவெடுத்திருப்பதாக இம்முடிவை வரவேற்றிருக்கிறார் அமித்ஷா.
பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நெருங்க உள்ள நிலையில், அதை மனதில் வைத்துதான் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றிருப்பதாக பா.ஜ.க. எதிர்பாளர்கள் அனைவரும் கூறுகிறார்கள். பாசிச அபாயத்தை முறியடிப்பதற்கு ‘தேர்தலும் ஒரு கருவி’ என்று பேசுபவர்கள், “பா.ஜ.க. தனது இந்துராஷ்டிர நிகழ்ச்சிநிரலை அமல்படுத்துவதற்கு, மத்தியில் ஆட்சி இருந்தால் மட்டும் போதாது. மாநிலத்திலும் ஆட்சியைப் பிடிப்பதன் மூலமாக அனைத்து மாநிலங்களிலும் தனது திட்டத்தை எதிர்ப்பே இல்லாமல் செயல்படுத்த முடியும்” என்று கூறுகிறார்கள்.
ஆம், அது உண்மைதான். அந்த வகையில், பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற முடியாவிட்டாலும் தனது இந்துராஷ்டிரத் திட்டத்தின் சோதனைக் களமாக உள்ள உத்தரப்பிரதேசத்தில் தனது தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தியாக வேண்டிய நிலையில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் உள்ளது. ஆனால் தேர்தல் நோக்கத்திலிருந்து மட்டுமே பின்வாங்கியிருக்கிறார்கள் என்பது ஒரு அம்ச காரணம் மட்டுமே. மேலும் அது அவர்களின் இரண்டாம்பட்சக் கவலையும் கூட.
எனில் முதன்மையானது எது? பாசிசக் கட்சியான ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. தனது மக்கள் அடித்தளத்தை இழந்துகொண்டுவருகிறது என்பதுதான் அது. இதுகுறித்துதான் அவர்கள் அதிகம் கவலையடைகிறார்கள்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தீவிரமாக நடைபெற்ற பஞ்சாப், அரியானா, இராஜஸ்தான், உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதி ஆகியவற்றில் இதுநாள் வரை ஆர்.எஸ்.எஸ். உருவாக்கி வைத்திருந்த இந்துத்துவ முனைவாக்கம் (hindutva polarization) சிதைந்துகொண்டு வருகிறது. இப்பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்.க்கு அடித்தளமாக இருந்த பெரும்பான்மை ஜாட் விவசாயிகளை வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் ஜனநாயகப்படுத்தியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த விவசாயக் கூலிகளும் இதுநாள்வரை அவர்களை சாதிரீதியாக ஒடுக்கிவந்த ஜாட்களும் ஒன்றுசேர்ந்து போராடியிருக்கிறார்கள்.
முசாபர்நகர் கலவரத்தால் மூர்க்கமாக இந்துத்துவ அரசியல்படுத்தப்பட்டிருந்த மேற்கு உத்தரப்பிரதேச ஜாட்கள் தற்போது முஸ்லீம்களுடன் சுமூகமான உறவைக் கொண்டிருக்கிறார்கள். வேளாண் சட்டத்திற்கெதிராக விவசாயிகள் நடத்திய மகா பஞ்சாயத்தில் முஸ்லீம் தலைவர்கள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். தாங்கள் இதுநாள் வரை பா.ஜ.க.வை ஆதரித்து தவறு செய்துவிட்டதாக அங்கு பேசிய முஸ்லீம் தலைவரிடம் கூட்டத்திலேயே பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார் ஒரு ஜாட் விவசாயத்தலைவர்.
ஜாட் vs தலித்துகள்; இந்து vs முஸ்லிம் என்பது தகர்த்தெறியப்பட்டு உழைக்கும் வர்க்கமாக ஒன்றுதிரண்டிருக்கிறார்கள் இம்மாநில மக்கள். இதுதான் பாசிஸ்டுகளை அச்சுறுத்தியிருக்கிறது.
காவி – கார்ப்பரேட் பாசிசம் தேர்தலின் மூலமாக ஆட்சியைக் கைப்பற்றுவது மட்டுமே அது தனது எல்லா நிகழ்ச்சிநிரலையும் அமல்படுத்துவதற்கு போதுமானதல்ல. உழைக்கும் வர்க்க விரோத, ஜனநாயக விரோத பாசிச திட்டங்களை மேலிருந்து அமல்படுத்தும்போது கீழிருந்து தேசவெறி, மதவெறியால் மக்களை துருவப்படுத்தும்போதுதான் அத்திட்டங்களை நியாயப்படுத்தி செயல்படுத்த முடியும். தன்னையும் தனது திட்டங்களையும் எதிர்ப்பவர்களை ‘தேசத் துரோகி’, ‘இந்து விரோதி’ என்று வசைபாடுவதன் பின்னால் ஒளிந்துகொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும். அது தகர்ந்து போவதுதான் ஆர்.எஸ்.எஸ்.-க்கு தற்போது முக்கியப் பிரச்சினை.
வேளாண் சட்டங்கள் விசயத்தில் “அரசுக்கு எதிரான நீண்டகாலப் போராட்டம் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களிடையேயான பிளைவை அதிகரித்துவிடுமோ என்று நாங்கள் அஞ்சுகிறோம்” என்று ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள் தெரிவிப்பதாக மோடி வேளாண் சட்டங்களைப் பின்வாங்கியதற்கான அடுத்த நாள் (20.11.2021) வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையொன்று கூறுகிறது.
எனவே, இந்த பின்வாங்கல் என்பது சங்கபரிவாரக் கும்பல் மீண்டும் அம்மாநிலங்களில் புகுந்து தனக்கான மக்கள் அடித்தளத்தை உருவாக்கிக் கொள்வதற்காக, அவர்களுக்கு அவர்களே கொடுத்துக் கொண்ட ‘சுவாசிப்பதற்கான அவகாசம்’… நமக்கல்ல!
படிக்க :
விவசாயிகள் மீதான மோடியின் ஒடுக்குமுறையை உலகம் மறக்காது || கருத்துப்படங்கள் !
சிங்கு படுகொலை : விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சி !
விவசாய சங்கத் தலைவர்களின் மீது ஏவப்பட்ட தேசப் பாதுகாப்புச் சட்டம், சாலையில் முட்கம்பிகளை புதைத்தது, அரியானாவில் விவசாயிகளின் மண்டையைப் பிளந்தது, உ.பி. லக்கிம்பூர் – கேரி படுகொலைகள் என ஓராண்டு காலம் கடும் பாசிச ஒடுக்குமுறைகளைக் கையாண்டு இச்சட்டங்களை எப்படியாவது அமல்படுத்தியே தீர வேண்டும் என உறுதியாக இருந்த பா.ஜ.க. அரசு, மறுகாலனியாக்க கொள்கையின் முக்கிய அங்கமான வேளாண்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் திட்டத்தை எளிதில் கைவிட்டுவிடாது.
மண்டி முறை, குறைந்தபட்ச ஆதாரவிலை போன்றவற்றை ஒழித்துக்கட்டும் வேலையை மோடி அரசு சட்டத்திற்கு அப்பாற்பட்டும் செய்யும். எனவேதான் குறைந்தபட்ச ஆதாரவிலைக்கு சட்ட உத்தரவாதம் கொண்டுவரவேண்டும் என்று போராடுகிறார்கள் விவசாயிகள். மேலும் வேளாண் வர்த்தக உள்கட்டமைப்பு திட்டம், வேளாண் உற்பத்தியாளர் சங்கம் (FPO), மின்னணு உழவர் சந்தை (eNAM) என விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கும் மோடி அரசின் திட்டங்கள் பலவழிகளில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. எனவே தற்போது மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றிருப்பதென்பது ஒரு ‘தொடக்கநிலை வெற்றி’ மட்டுமே.
எனினும், பாசிச மோடி அரசை பணியவைத்த ஒரு மக்கள்திரள் போராட்டத்தின் முன்னேற்றம் என்ற வகையில் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை களத்தில் மோதி வீழ்த்துவதற்கு முன்நிற்கும் புரட்சிகர – ஜனநாயக சக்திகளுக்கு இது ஊக்கமளிப்பதாகும். இந்த ஊக்கத்தோடு இறுதி வெற்றிவரை போரிடுவோம்!
(குறிப்பு : புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2021 இதழ் அச்சுப் பிரதியாக வெளிவந்திருக்கிறது. இதழை வாங்குவதற்கு 94446 32561 தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !)

பாகிஸ்தானின் பஜ்ரங்தள் : ‘தெஹ்ரிக்-இ-லப்பைக் பாகிஸ்தான்’ கட்சி | கருத்துப்படம்

ஸ்லாமிய மதவெறியர்களால் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பிரியந்தா குமாரா தியவதனா (40).
கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கையைப் சேர்ந்த பிரியாந்தா குமாரா பாகிஸ்தானில், தான் வேலைப்பார்க்கும் தொழிற்சாலையின் சுவற்றின் மீது ஒட்டப்பட்ட சுவரொட்டியை கிழித்ததாக வதந்தி பரப்பப்பட்டுள்ளது. இந்த வதந்தியை காரணமாக வைத்து பாகிஸ்தானில் உள்ள மத தீவிரவாத கட்சியான ‘தெஹ்ரிக்-இ-லப்பைக் பாகிஸ்தான்’ Tehreek-e-Labbaik Pakistan (TLP) என்ற கட்சியை சேர்ந்தவர்கள், குமாரா-வை கொடூரமாக தாக்கி எலும்புகளை முறித்து, எரித்துக் கொன்றுள்ளனர். அவரது உடல் 99 சதவிதம் தீக்கிரையாகிவிட்டது. பிரேத பரிசோதனை முடிவுகள் இன்னும் கொடூரத்தை வெளிபடுத்துகிறது. அவரின் எஞ்சிய உடல் பாகங்கள் இலங்கை தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பாக இதுவரை 113 பேர் கைது மற்றும் 800 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இந்த கொலைபாதக செயல் நமக்கு உ.பி – குஜராத்தில் நடக்கும் கும்பல் படுகொலைகளை நினைவூட்டவில்லையா? எந்த நாடாக இருந்தாலும் மத தீவிரவத கும்பல்களிடம் மனிதநேயம் இருப்பது சாத்தியமில்லை.
கருத்துப்படம் : வேலன்

புதிய ஜனநாயகம் டிசம்பர் – 2021 அச்சு இதழ் !

அன்பார்ந்த வாசகத் தோழர்களே!
ன்றைய காவி – கார்ப்பரேட் பாசிச சூழலை அம்பலப்படுத்தியும், பாசிச கும்பலின் நடவடிக்கைகளை நடைமுறையில் முறியடிக்க வேண்டிய முக்கியத்துவம் குறித்தும் தொடர்ச்சியாக எமது இதழில் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறோம்.
இப்பாசிச சூழலில், உழைக்கும் மக்கள் மத்தியிலும், ஜனநாயக சக்திகளின் மத்தியிலும் புரட்சிகர அரசியலை பரவலாகவும், வேகமாகவும் கொண்டு செல்ல வேண்டிய தேவை உள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியை நிறைவேற்ற, கடும் நிதி நெருக்கடிக்கு இடையில்தான் இதழைக் கொண்டு வருகிறோம் என்பதை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறோம்.
நிதி நெருக்கடியை ஈடு செய்ய எமது தோழர்கள் சந்தா சேகரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உழைக்கும் மக்களின் விடுதலையை நேசிக்கக் கூடிய ஒவ்வொருவரும், சந்தா மற்றும் நன்கொடை கொடுத்து புதிய ஜனநாயகம் இதழுக்கு தோள் கொடுக்குமாறு தோழமையுடன் வேண்டுகிறோம்.
ஜனவரி மாதம் முதல் புதுப்பிக்கப்பட்ட மற்றும் புதிய சந்தாரர்களுக்கு மட்டும் புத்தகம் அனுப்பி வைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே, ஏற்கெனவே சந்தா செலுத்தி ஆதரித்துவரும் தோழர்கள், வாசகர்கள் தமது சந்தாவைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சந்தா பற்றிய விவரம் :
  • ஓராண்டு சந்தா- ரூ.240
  • இரண்டாண்டு சந்தா- ரூ.480
  • ஐந்தாண்டு சந்தா- ரூ.1,200
000
வாசகத் தோழர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். ‘புதிய ஜனநாயகம்’ இதழில் இடம்பெறும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டுவருவது என தீர்மானித்துள்ளோம். அவை மின்னூல் வடிவத்திலும், அச்சு இதழாகவும் இம்மாதமே உங்கள் கைகளில் தவழக் காத்திருக்கிறது. இதன் விலை அதிகபட்சம் ரூ.50 வரை இருக்கலாம். வாசகத் தோழர்கள் தங்களுக்குத் தேவையான இதழை முகவர்கள் மூலமாகவோ அல்லது நேரடியாக புதிய ஜனநாயகம் அலுவலக முகவரி அல்லது தொடர்பு எண்ணிற்குத் தொடர்பு கொண்டோ பெற்றுக் கொள்ளலாம்.
தோழமையுடன்,
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.
***
புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2021 இதழ் அச்சுப் பிரதியாக வெளிவந்திருக்கிறது. இதழை வாங்குவதற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !
தொடர்பு விவரங்கள் :
தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 = மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561
வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :
  • தலையங்கம்: வேளாண் சட்டங்கள் வாபஸ் : மோடியை பணியவைத்த விவசாயிகள் போராட்டம்!
  • உத்தரப் பிரதேசம் : இந்துராஷ்டிரத்திற்குள் ‘சாத்தியமான மாற்று’ இல்லை!
  • எல்லைப் பாதுகாப்புப் படை விரிவாக்கம் : தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் அரங்கேறும் இராணுவ சர்வாதிகாரம் !
  • காஷ்மீரில் தொடரும் ஒடுக்குமுறைகளும், அமித்ஷாவின் பொய்யுரைகளும்!
  • நாடெங்கும் உரத் தட்டுப்பாடு : விவசாயிகளை வஞ்சிக்கும் மோடி அரசு!
  • சென்னையின் துயரம் : யார் காரணம்?
  • கிளாஸ்கோ பருவநிலை மாநாடு (COP26) : முதலாளித்துவ அரசுகளின் மற்றுமொரு அரட்டை மடம்!
  • தைவான் : அமெரிக்க, சீன உலக மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய மையம்!

Money Heist : நம் எதிர்ப்புணர்வை மடைமாற்றும் வடிகால் !

ணி ஹெய்ஸ்ட் (Money Heist) இணையத் தொடரின் (Web Series) இறுதிப் பாகமான 5-வது சீசனின் இரண்டாவது பாகத்தின் வெளியீட்டிற்காக (டிசம்பர் 3) காத்திருக்கிறீர்களா ?
நெட்பிளிக்ஸ் OTT தளத்தின் மூலம் உலகெங்கும் ஒளிபரப்பாகும் இந்தத் தொடர் துவக்கத்தில் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிடப்பட்டாலும், உலகம் முழுவதும் அதற்கு ரசிகர் கூட்டம் பெருகவே தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது.
கோடிக்கணக்கான ரசிகர்கள் இதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர், வெளியிடப்பட்டவுடன் இரவோட இரவாக அனைத்துப் பாகங்களையும் பார்த்துவிட்டுதான் மறுவேலை பார்க்கின்றனர். நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் இளைஞர்களும் மாணவர்களும் “பெல்லா சாவ்” என்கிற ஸ்பானிஷ் பாடலை உச்சரிப்பு வரவில்லையென்றாலும், அதன் அர்த்தம் புரியவில்லை என்றாலும், சக நண்பர்களிடமிருந்து தனிமைப்பட்டு விடுவோமோ என்ற ‘அச்சத்தில்’ மெனக்கெட்டு மனப்பாடம் செய்கின்றனர். குறைந்தபட்சம் வார்த்தைகளின்றி முணுமுணுக்கின்றனர்.
இதிலென்ன புதுவிசயமென நினைக்கலாம். ஹாலிவுட் படங்கள் கூட ‘பெருத்த வரவேற்புடன்’ வெளியிடப்படவில்லையா? அதற்கும் உலகம் முழுக்க ரசிகர்கள் கூட்டம் இருப்பதில்லையா என்று கூடக் கேட்கலாம். ஆனால், அவற்றிற்கும் இதற்கும் ஒரு வேறுபாடு உண்டு.
படிக்க :
ஓ.டி.டி., சமூக ஊடகங்கள், மின்னணு செய்தி ஊடகங்களை முடக்கத் துடிக்கும் மோடி !
நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் !
இந்தத் தொடர், வெறுமனே வியாபாரரீதியாக ஹிட் கொடுக்கும் படங்கள் போல அல்லாமல், ‘இயல்பாக’ பிரபலமாகி பலரின் ரசனையையும் அதாவது தேசம், இனம், மொழி கடந்து உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் உள்ள பலரின் கவனத்தையும் தன் பக்கம் கவர்ந்திழுத்துள்ளது.
இத்தொடர் எவ்வாறு தேசங்களைக் கடந்து அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்து வெற்றி ஈட்டியது என்பதையும், அது சுரண்டலுக்கு எதிரான நமது உணர்வை எந்தத் திசையை நோக்கித் திருப்பிவிடுகிறது என்பதையும்தான் நாம் பரிசீலிக்க வேண்டியது இருக்கிறது.
முதலில், கதைச் சுருக்கத்தைப் பார்த்து விடுவோம்.
பல்துறை ஆற்றல் மற்றும் வெவ்வேறு தனித் திறமைகள் கொண்ட ஒரு குழு, பல ஆண்டுகள் திட்டமிட்டு, அக்குழுவுக்கு பல மாதங்கள் பயிற்சி அளித்து ஒரு கொள்ளையை நடத்தி முடிக்க வழிகாட்டும் ஒரு ‘புரோஃபஸர்’. இவர்கள்தான் படத்தின் ‘நாயகர்கள்’
ஸ்பெயினின் பணம் அச்சடிக்கும் வங்கியான “ராயல் மின்ட்”டில் அக்குழு நுழைந்து, அங்குள்ளவர்களை பணயக் கைதியாக பிடித்து, தங்களுடைய ‘சிவப்பு’ நிற சீருடை மற்றும் ‘டாலி’ முகமூடியை பணயகைதிகளுக்கும் அணிவித்து, கொள்ளைக் கும்பலான தங்களுக்கும் பணய கைதிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லாத வகையில் போலீசுத்துறையை குழப்புவதே அக்குழுவின் திட்டம்.
பணயக்கைதிகள் சிலரிடம் ஆசைவார்த்தை காட்டியும், அச்சுறுத்தியும், தங்களுக்கு தேவையான பணத்தை அச்சடிக்க வைத்து, போலீசுத்துறையின் கண்ணில் மண்ணைத் தூவி பணத்துடன் தப்பிக்கிறது.
இரண்டாவது முறை, “பேங்க் ஆஃப் ஸ்பெயின்”-ல் நுழைந்து, அங்குள்ள பெருமதிப்பிலான தங்கக் கட்டிகளை உருக்கி கடத்துகிறது. இதை அனைத்தையும் வெளியில் இருந்து இயக்குகிறார் இக்குழுவின் தலைவர் புரோஃபஸர். அதி நவீன தொழில்நுட்பமும், பிளான் பி, பிளான் சி என்று அதிரடியான, அறிவுப்பூர்வமான வியூகங்கள் மூலம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவதும்தான்  ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.
இத்தொடர் பெருவாரியான மக்களை தன்வசம் கவர்ந்திழுத்ததற்கான பிற காரணங்களான திரைக்கதை, பின்னணி இசை, கதையில் திருப்பங்கள், சுவாரசியங்கள் போன்ற பல்வேறு நுணுக்கங்களை அலசி ஆராய விமர்சகர்களும் நிபுணர்களும் நிறைந்துள்ளதாலும், நமது விமர்சனத்தின் நோக்கம் அவை இல்லை என்பதாலும், நாம் ‘கவனிக்க’ வேண்டிய விசயத்தில் மட்டும் கவனத்தைச் செலுத்துவோம்.
இத்தொடரில் வரும் கொள்ளைக் குழுவில் உள்ளவர்கள் மிகவும் சாதாரணமான, பல்வேறு துயரமான வாழ்க்கைப் பின்னணியைக் கொண்டவர்கள். அவர்களில் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், தந்தை மகன் உறவு, காதல், சகோதர நேசம், தாய்-மகள் பாசம் உள்ளிட்ட உணர்வுகள் கதையோடு ஒன்றிவருகின்றன. இவற்றின் காரணமாகவே இந்தக் கொள்ளைக் கும்பலில் உள்ள கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் ‘காண்போரின்’ குடும்ப நபர்களில் ஒருவராக எளிதில் மாறிவிடுகின்றனர். அவர்களில் யாரேனும் இறந்தால், துன்பப்பட்டால் தம் குடும்ப உறுப்பினரின் இழப்பைபோல் கண்ணீர் விடும் அளவுக்கு ரசிகர்களை ஒன்றிவிட வைத்துவிடுகின்றனர்.
கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்களது உண்மை அடையாளத்தை மறைத்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளும் டோக்கியோ, பெர்லின், மாஸ்கோ போன்ற நாடுகளின் தலைநகரங்களின் பெயர்கள் நமக்கு ஏற்கெனவே பரீட்சயமானதாக இருப்பதால், இவர்களும் நமக்கு ‘பரீட்சயமானவர்களாக’ நெருங்கிவிடுகின்றனர்.
இக்குழுவின் தலைவராக வரும் புரோஃபஸர் கதாபாத்திரம், நமது பக்கத்து வீட்டில், நமது நண்பர்களில் ஒருவரைப் போன்ற எளிமையான தோற்றத்தையும், பண்பையும் உள்ளவராகக் காட்டப்படுகிறார். கதாநாயகன் என்றால் அதீத ஆற்றல், வீர சாகசம், சூப்பர் ஹீரோ போன்று இல்லாமல், நம்மில் ஒருவர், அறிவாற்றலுடன், உணர்வுடன் செயல்பட்டால் எப்படி இருக்குமோ அத்தகைய தன்மையில் இந்தக் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே கதாநாயகனும் விரைவில் ‘நம்மில்’ ஒருவராக மாறிவிடுகிறார். இன்னும் சொல்லப்போனால் இத்தொடரைப் பார்க்கும் ரசிகர் ‘புரொஃபசராக’வே மாறிவிடுகிறார்.
இவை அனைத்தையும் விட இவர்கள் கொள்ளையடிப்பதற்கான ‘தர்க்க நியாயத்தை’, மக்களிடமுள்ள இந்த சமூக கட்டமைப்பின் மீதான எதிர்ப்பு உணர்வின் பிரதிபலிப்பாக வடிவமைத்துள்ளனர்.
பழைய ராபின்ஹூட் கதைகளில், கொள்ளையடித்து,  சுரண்டப்படும் ஏழைகளுக்குத் தானமாக வழங்கும் ஹீரோ சுரண்டப்படும் வர்க்கத்தினரின் ஆதர்ச நாயகரானார். அங்கு எதிரிகள் தனிநபர்களாகக் (பணக்காரர்களாக) காட்டப்பட்டனர்.
உலகம் முழுவதும் ஏகாதிபத்தியங்களின் சுரண்டல் கொடூரமான முறையில் பகிரங்கமாக அரங்கேறிவரும் இன்றைய காலகட்டத்தில், எதிரிகளாக கார்ப்பரேட்டுகளை பெருவாரியான மக்கள் அடையாளம் கண்டு கொண்டுள்ளனர். கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இருக்கும் அரசுகள் மக்கள் மீது தொடுத்துவரும் ஒடுக்குமுறைகளுக்கு  எதிராகவும், கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகவும் போராடிவருகின்றனர்.
அத்தகைய கார்ப்பரேட்டுகளை மக்கள் பணத்தில் மஞ்சள் குளிக்க வைக்கும் அரசின் மீதான மக்களின் கோபத்தை தனக்குச் சாதகமாக மடைமாற்றிக் கொண்டு இந்தத் தொடரின் கதையை வெற்றியடையச் செய்திருக்கிறது படக்குழு.
உதாரணமாக இத் தொடரிலிருந்து சிலவற்றைப் பார்க்கலாம்.
  1. முதல் கதையில் புரோஃபஸர், பெண் போலீசு அதிகாரியிடம் மாட்டிக்கொள்வார். அப்பொழுது தங்களது கொள்ளைக்கான தர்க்க நியாயத்தை அவரிடம் அடுக்குவார்.
    “நாங்கள் கொள்ளைக்காரர்களா? நாங்கள் செய்வதை மற்றவர்கள் செய்யும்போது அவர்களை நீங்கள் கொள்ளைக்காரர்கள் என்று அழைக்கவில்லையே. ஐரோப்பிய மத்திய வங்கி 2011-ல் 171 பில்லியன் யூரோக்களை அச்சடித்தது, 2012-ல் 185 பில்லியன், 2013-ல் 145 பில்லியன் யூரோக்கள். அந்தப் பணம் எங்கே போனது தெரியுமா? அச்சடிக்கப்பட்டு நேரிடையாக பணக்காரர்களின் பாக்கெட்டுக்கு சென்றது. ஐரோப்பிய மத்திய வங்கியை யாராவது கொள்ளைக்காரன் என்று அழைத்தீர்களா? அவர்கள் அதை “Liquidity injection” என்று அழைத்தனர். ஆனால், அது பணப்புழக்கத்தை ஏற்படுத்தவில்லை.
    நாங்கள் யாருடைய பணத்தையும் திருடவில்லை, யாரையும் கொல்லவில்லை, வெற்று காகிதங்களை, நாங்களே அச்சடித்து பணமாக்கி, பணப்புழக்கத்தை ஏற்படுத்துகிறோம், நாங்கள் இந்த சமூகத்தால் பாதிப்படைந்த சாதாரணமானவர்கள்”
    என்கிற விதத்தில் பேசும் வசனம் முதல் கொள்ளைக் கதையில் வருகிறது.  சமூகத்திலிருந்து அரசுடன் சேர்ந்து கார்ப்பரேட்டுகள் அடிக்கும் கொள்ளையை அம்பலப்படுத்துவதன் மூலம், தார்மீக ரீதியாகவே ‘நாயகர்களுக்கு’ (கொள்ளையர்களுக்கு) ஆதரவான மனநிலையை உருவாக்கிவிடுகிறது.
  2. இந்த கொள்ளை கும்பலிலிருந்த ஒருவரை போலீசுத்துறை சத்தமின்றி கைது செய்து ரகசியமான இடத்தில் வைத்து கொடூரமாக சித்தரவதை செய்கிறது. அந்த நபரைக் காப்பதற்காகவும், பழி வாங்குவதற்காகவும், அவர்களுக்கு தாங்கள் யார் என்பதைக் காட்டுவதற்காகவும் ஸ்பெயினின் ரிசர்வ் வங்கியிலுள்ள தங்கத்தைக் கொள்ளையடிக்க திட்டமிடுகின்றனர்.
    அதற்கான நியாயத்தை,
    “நாம் தற்பொழுது தங்கத்தை கொள்ளையடிக்கப் போகிறோம், இந்த முறை பணத்துக்காக அல்ல ! நாம் யார் என்பதை அவர்களுக்கு தெரிய வைப்பதற்காக !, நமது நிலைபாட்டை சொல்வதற்காக !, நம்மில் ஒருவரை கடத்தி சட்ட விரோதமாக டார்ச்சர் செய்வது, நம்மை போருக்கு அழைப்பதற்கு சமம்! நாம் அநீதியான அவர்களின் கட்டமைப்பை (System) எதிர்த்து புரட்சி செய்யப்போகிறோம்!”
    என்கிற விதத்தில் புரட்சி, போராட்டம் என்று வீரவசனம் பேசுகிறார் புரொஃபசர்.
கொள்ளையில் பங்குபெறும் நபர்களை இந்த சமூகத்தால் பாதிக்கப்பட்டவர்களாகவும், சாதாரண மக்களில் ஒருவராக காட்டுவதும், சமூகத்தில் வெவ்வேறு அளவுகளில் ஆளும் வர்க்கத்தின் மீது மக்களுக்கு இருக்கும் கோபத்தையும், அரசு மற்றும் கட்டமைப்பின் மீதான அதிருப்தியையும் பயன்படுத்தி தங்களின் கொள்ளைக்கு நியாயம் கற்பிக்கின்றனர். யாரையும் தனிப்பட்ட வில்லனாகக் காட்டாமல் இந்த சமூக அமைப்பையே வில்லனாகக் காட்டுகின்றனர்.
இன்று உலகம் முழுக்க பல்வேறு நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி விழிபிதுங்கி நிற்கின்றன. மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது. வறுமை, வேலையின்மை, பசி, எதிர்காலத்தின் மீதான அவநம்பிக்கை ஆகியவை உலகம் முழுவதும் அதிகரித்து வருகின்றன.
இவற்றில் இருந்து தப்பிக்க ஆளும் வர்க்கங்கள் தமது பாசிச ஆட்சிகளை கட்டவிழ்த்து விடுகின்றன. இது ஒரு பொதுப் போக்காகவே உலகம் முழுவதும் வளர்ந்து வருகிறது. இவற்றிற்கு எதிரான போராட்டங்களும், எதிர்ப்புணர்வும் அதிகரித்து வருகின்றன. பாசிசம் சர்வதேசமயமாகி வருவதும், அதற்கு எதிரான போராட்ட உணர்வுகள் சர்வதேச அரங்கில் எழுந்து வருவதும் அரங்கேறி வருகிறது. இந்த உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக உள்ள இத்தொடரும், அது தோற்றுவிக்கும் உணர்வும் பலரை ஈர்த்ததும் வியப்பேதுமில்லை.
ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பாக படம் எடுத்திருப்பது சரிதானே, இதில் என்ன பிரச்சினை இருக்கிறது என்ற கேள்வி இயல்பாக எழலாம்.
சமூக எதார்த்தங்களில் நீடிக்கும் மக்களின் நீங்காத மனக்குறைகளை காட்சிப்படுத்தி – இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் தமக்கு (முதலாளித்துவ வர்க்கத்துக்கு) எதிரான மனக்குமுறல்களையும் காட்சிப்படுத்தி – காசாக்கும் கலையில் கார்ப்பரேட்டுகள் பெரும் வித்தகர்கள்தான். ஆனால் இந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை மட்டும் அவர்கள் மிகத் தெளிவாக தங்களுக்குப் பாதகமில்லாத வகையில் முன் வைக்கிறார்கள்.
நமது எதிர்ப்புணர்வை கதையின்  நாயகனின் பாத்திரத்தில் வடித்து தீர்வை தனிநபர் சாகசங்களாகவும், கொள்ளை, சீர்குலைவு நடவடிக்கை போன்ற உதிரித்தனமான செயல்பாடுகளாகவும் காட்டி நமது எதிர்ப்புணர்விற்கு ஒரு வடிகாலைக் காட்டிவிடுகின்றனர்.
இத்தகைய தனிநபர் சாகசவாதத் தீர்வுகளை படத்தில் அமர்ந்து ரசிக்கும்போது அந்தக் கதாநாயகனாகவோ அல்லது கதாநாயகர்களாகவோ மாறிக் கொள்ளும் ரசிக மனம், எதார்த்தத்தில் அத்தகைய சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தின் போது, அத்தகைய தனிநபர்களின் அல்லது அராஜகக் கும்பல்களின் வருகைக்காக ஏங்குகிறது.
கார்ப்பரேட் -அரசு கூட்டுக் கொள்ளைகளைப் பற்றிப் பேசும் இத்தகைய ஹாலிவுட் படங்களும் சீரிஸ்களும் அதற்கு எதிரான நடவடிக்கைகளாக மக்களைத் திரட்டுவதைப் பற்றியோ பெருந்திரள் போராட்டங்கள் எழுவதைப் பற்றியோ பேசுவதில்லை – காட்டுவதில்லை. அவர்களது நோக்கம் நம் மனதில் கொட்டிக்கிடக்கும் உணர்ச்சிகளுக்கும், மனக் கொந்தளிப்புகளுக்கும் வடிகால் அமைத்துக் கொடுத்து அதனை மடைமாற்றிவிடுவதுதான்.
இதற்காக அவர்கள், முந்தைய காலப் புரட்சியின் அடையாளங்களைப் பேசுகிறார்கள், பயன்படுத்துகிறார்கள். அதில் நாமும் கொஞ்சம் சொக்கித்தான் போகிறோம். யாருமே பேசாததை இவர்களாவது பேசுகிறார்களே என நம் மனம் நமக்குச் சமாதானம் சொல்லிக்கொள்கிறது.
இந்த மனி ஹெய்ஸ்ட் தொடரிலும் கூட “பெல்லா சாவ்” என்ற இத்தாலிய புரட்சிப் பாடல் தொடர் முழுவதும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பெல்லா சாவ் என்ற பாடல் இத்தாலியில் 19-ம் நூற்றாண்டில் பெரும் பண்ணைகளால் கொடூரமாக சுரண்டப்பட்ட விவசாயிகள் மற்றும் பெண்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட அநீதி மற்றும் சுரண்டலை எதிர்த்துப் பாடியது.
பிறகு, இதேபாடல் 1920 – 1940 சமயத்தில் இத்தாலியில் முசோலினியின் பாசிச அடக்குமுறையை எதிர்த்து, அப்பாடலின் சில வரிகள் மாற்றியமைக்கப்பட்டு போராளிகளால் பாசிச எதிர்ப்புப் பாடலாகப் பாடப்பட்டது. அதன் பிறகு பல்வேறு நாடுகளில் பாசிச எதிர்ப்புக்காக இப்பாடல் பயன்படுத்தப்பட்டது.
இந்தப் படத்தில் ஒரு கொள்ளையை நடத்திவிட்டு அதன் வெற்றியைக் கொண்டாடுவதற்கு கொள்ளையர்கள் பாடும் பாடலாக பாடப்படுகிறது. இக்கட்டுரையின் துவக்கத்தில் சொல்லப்பட்ட காரணங்களால், நாம் அவர்களை நமக்கு நெருக்கமானவர்களாகக் கருதுகையில், பாசிச எதிர்ப்புப் பாடல் வெறுமனே வெற்றியைக் கொண்டாடும் பாடலாக சுருங்கியிருப்பது நம் புத்திக்கு உரைப்பதில்லை.
மக்களின் உழைப்பை, உணர்வை சுரண்டி கொழுப்பதையும் தாண்டி, மக்களின் எதிர்ப்பு உணர்வையும், தமக்கு ஆபத்தில்லாத வகையில் மடைமாற்றுவதோடு அதனைக் காசாக்கும் ‘கலை’யிலும் அடுத்த கட்டத்தை நோக்கி கார்ப்பரேட்டுகள் பயணிக்கின்றனர் என்பதற்கு எடுப்பான தோற்றமாக உள்ளது இத்தொடர்.
படிக்க :
Stateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்
ஜனநாயக மறுப்பு : இணைய தடை மற்றும் நிறுத்தத்தில் இந்தியா முதலிடம் !
இத்தகைய மாயைகளிலிருந்து மீள்வதற்கு என்ன வழி ?
ஆளும் வர்க்கத்தின் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்கள், புரட்சிகள் சமூகத்தில் எதார்த்தமாக மாறும்போது, இத்தகைய கற்பனைகளை ரசிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இல்லாமல் போகும்.
டெல்லியையும் ஆளும் பாசிச கும்பலையும் உலுக்கிய விவசாயிகளின் பெருந்திரள் போராட்டம், கார்பப்ரேட்டுகளின் கொள்ளைக்கு ஒரு மரண அடியைக் கொடுத்திருக்கிறது. இத்தகைய வர்க்கரீதியான அணிதிரட்டல்கள், குறிப்பாக புரட்சிகர வர்க்கமான தொழிலாளி வர்க்கம் (மாதக் கூலிக்கும், தினக்கூலிக்கும்  தனது உழைப்பை விற்கும் ‘கிக்’ தொழிலாளர்கள் முதல் ஐடி ஊழியர்கள் வரை) தன்னை அமைப்பாக திரட்டிக்கொண்டு, ஆளும் வர்க்கத்தின் சுரண்டல், பாசிச அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராட வேண்டும். குறைந்தபட்சமாக இத்தகைய போராட்டங்களில் அக்கறை கொண்டு  தம்மாலான அனைத்து பங்களிப்பையும் செய்யும் போதுதான் இத்தகைய கற்பனாவாத, அராஜகக் கும்பல்களின் சாகசங்கள் நம் மனதில் இருந்து அந்நியப்பட்டு அம்பலமாகும்.
அப்பொழுதுதான், யாதார்த்தில் இருந்து பிறக்கும் கலையில், தங்களை அடையாளம் காணத் தொடங்குவோம். அது நடக்காத வரை, கார்ப்பரேட்டுகள் தமது உணர்வை சுரண்டுவதில் இருந்தும், அச்சுரண்டலுக்கு தமது உணர்வை ‘பறிக்கொடுப்பதில்’ இருந்தும் மீளவே முடியாது !

கந்தசாமி

பெண்கள் முழுக் கால்ச்சட்டை (பேண்ட்) அணிந்த போராட்ட வரலாறு | சிந்துஜா

பெண்கள் வேலைக்கோ அல்லது வெளியில் செல்லும்போதோ அணிவதற்கு வசதியாக இருக்கும் காரணத்திற்காக முழுக் கால்சட்டை (பேண்ட்) அணிந்து சென்றால் அபராதமும் தண்டனையும் விதிக்கப்படும் என்றால் ஏற்றுக் கொள்வீர்களா?
என்ன? பேண்ட் அணிந்தால் அபாரதமா?
இந்தக் கேள்வியை இன்று ஆச்சரியமாகக் கேட்கிறோம். ஆனால், நீண்ட காலத்திற்கு முன்பு இது ஆச்சரியப்படும் விசயம் அல்ல. லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டினால் எப்படி அபராதம் என்பது இன்று இயல்பானதோ அப்படித்தான் அன்று பெண்கள் கால்சட்டை அணிந்து வெளியே சென்றால் அபராதம் விதிக்கப்பட்டது. எங்கு தெரியுமா ?
முன்னேறிய நாடு என பீற்றிக் கொள்ளப்படும் அமெரிக்காவில் 1938-ம் ஆண்டு வரை பெண்கள் பேண்ட் அணிந்ததற்காக அபராதமும், சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு வரை பிரான்சில் “ஆண்களைப்போல உடை” அணிவது சட்டநுட்ப ரீதியாக சட்டவிரோதமானதே. (ஆனால் நடைமுறையில் அவ்விதிகள் அமல்படுத்தப்படவில்லை). எனவே, ஆடை சமத்துவத்திற்காக, பெண்கள் தங்களது வசதிக்காக உடை அணியப் போராடிய பெண்களைக் கௌரவிக்க சிறிதுநேரம் ஒதுக்குவோம்.
வரலாற்றுப் போக்கில், கால்சட்டைகள் பல பெயர்களில் – ஸ்லாக்ஸ் (Slacks), கால் சட்டை (Trousers), பாண்டலூன்கள் (Pantaloons), ப்ரீச்சர்கள் (Breechers) மற்றும் நிக்கர் போக்கர்ஸ் (Knickerbokers) – அடையாளப்படுத்தப் பட்டிருக்கின்றன.
கால்சட்டை (பேண்ட்) முதலில் தோன்றியதன் காரணம் அதன் வசதிதான். அதனால்தான் அது இன்னமும் நடைமுறையில் நீடித்துக் கொண்டிருக்கிறது. கால்சட்டைகள், கால்களைப் பாதுகாப்பதோடு அல்லாமல் அணிந்திருப்பவர் தனது வேலையை தங்குதடையின்றி செய்ய உதவுகிறது.
தொழில் வளர்ச்சி ஏற்பட்ட பின்னர், பெண்கள் பணிக்குச் செல்லும் காலகட்டத்தில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற இடங்களில் உள்ள பெண்களுக்கு ஆடை சுதந்திரம் என்பது மிகவும் முக்கியமானதாக இருந்தது. பணிபுரியும் பெண்களுக்கு வேலைக்கு வசதியான ஆடையாக பேண்ட் இருந்தது. அதை அணிவதற்கு இருந்த கட்டுப்பாடுகள், அவர்களது அதிகாரம், சமத்துவத்துக்கு எதிராகவும், உடல், சமூக மற்றும் தார்மீக ரீதியான கட்டுப்பாடுகளாகவும் இருந்தது.
படிக்க :
ரவிக்கையின் ‘பாரம்பரியமும்’ சாதிய வர்க்க பாகுபாட்டு வரலாறும் | சிந்துஜா
நைட்டி : தேசங்கள் கடந்த பெண்களின் பொது உடை || சிந்துஜா
கால் சட்டை அணிந்த பழங்கால பெண்கள்
பண்டைய சீனாவில் உழைக்கும் பிரிவு ஆண்களும், பெண்களும் பொதுவாக கால்சட்டை அல்லது லெக்கின்ஸ் போன்ற கால்சட்டைகள் அணிந்தனர் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். பண்டைய கிரேக்க கலாச்சாரத்தில், கி.மு. 400-களின் பிற்பகுதியில் வர்ணம் பூசப்பட்ட மண்பாண்டங்களின் மீது பெண் போர் வீரர்கள் கால்ச்சட்டை அணிந்திருப்பதைப் போன்ற சித்திரங்களைக் காண முடிகிறது.
பண்டைய கிரேக்கத்திற்கு அருகிலுள்ள ஆரம்பகால நாடோடிகள், கரையோர மக்கள் மற்றும் சித்தியன்ஸ் (Scythians) பழங்குடியினர் போன்றவர்கள் பொதுவான உடையாக பேண்ட் இருந்திருக்கிறது. சித்தியன்ஸ் என்பது பண்டைய நாடோடி பழங்குடியினரின் குழுவாகும். தற்போதைய தெற்கு சைபீரியா பகுதியில் அன்று அவர்கள் வாழ்ந்தனர். அதன் பிறகு கி.மு. 900 முதல் கி.மு. 200 வரை அவர்களின் கலாச்சாரம் செழித்தது; அந்த நேரத்தில் அவர்கள் தங்கள் செல்வாக்கை மத்திய ஆசியா முழுவதும் நிறுவி சீனாவின் வடக்குக் கருங்கடல் பகுதி வரை விரிவுபடுத்தினர்.
படம் 1 : 3,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதரால் குதிரைசவாரி செய்ய பயன்பட்ட முதல் பேண்ட் ; படம் 2 : பண்டைய கிரேக்க அட்டிக் ஒயிட்-கிரவுண்ட் அலபாஸ்ட்ரான் Attic white-ground alabastron, c.), கிமு 470, பிரிட்டிஷ் அருங்காட்சியகம், லண்டன்
இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட கால்ச்சட்டைகளின் பழமையான ஜோடி, கி.மு. 1200 முதல் கி.மு. 900-க்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது. மேற்கு சீனாவின் டர்ஃபான் சோலைக்கு (Turfan oasis) அருகில் உள்ள யாங்காய் கல்லறையில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டதில் M21 மற்றும் M157 கல்லறைகளில் கம்பளி கால் சட்டையின் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை கி.மு. 13 மற்றும் 10-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என ரேடியோ கார்பன் டேட்டிங் மூலம் தெரியவருகிறது. இது சித்தியன்ஸ் நாகரிகத்திற்கு முந்தையது எனவும் மேய்ச்சல் நகர்வால் (Mobile pastoralism) கிழக்கு மத்திய ஆசியாவில் பரவிருக்கலாம் எனவும் தொல்லியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1700-களில் ஹன்னா ஸ்னெல் (Hannah Snell) போன்ற மிக பிரபலமான பெண்கள் உட்பட பல கடற்சிப்பாய்கள் கால்சட்டை அணிந்து தங்களது அடையாளங்களை மறைத்து ஆண்களுடன் அவர்கள் போரிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. வெகு காலத்திற்குப் பிறகு, கி.பி. 1861 முதல் கி.பி. 1865 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க உள்நாட்டுப் போரில் பங்கேற்ற பெண்கள் கால்சட்டை அணிவிக்கப்பட்டு ஆண்களாக காட்சிப்படுத்தப்பட்டனர்.
படம் : க்ரினோலின் வரலாறு, விக்டோரியன் பேஷன் ஆடை.The History of Crinoline, the Victorian fashion garment.
வரலாற்று ரீதியாக, அமெரிக்காவில் பெண்களின் ஆடைகள் அனைத்தும் உடல் கட்டமைப்பை வெளிக் காட்டுவதிலும், அவர்களைக் கட்டுப்படுத்துவதிலுமே இருந்ததால், பெண்கள் எந்தவித செயல்பாடுகளுடனும் தொடர்பற்றவர்களாக இருத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
கோர்செட்டுகள் (corsets), கிரினோலின்கள் (crinolines) மற்றும் எஃகு வளையங்களை (steel hoops) பற்றி நினைத்துப் பாருங்கள்.  நாகரிக ஆடைகளாக பெண்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆடைகள் முற்றிலும் ஆபத்தானவை. பெண்களுக்காக உருவாக்கப்பட்ட  கோர்செட்டுகள் இடுப்பு வளைவுகளில் இறுக்கமாக இருக்கும். கிரினோலின்கள் மேலும் அதிக எரிச்சலை உண்டாக்கும். பெண்களின் கிரினோலின்கள் தீப்பிடித்தால் அவற்றை அகற்ற முடியாதபடி, பல அடுக்குகளுடன் ஓரங்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இப்படித்தான் பெண்களை முடக்கிவைக்கும் விதமான ஆடைகளே அமெரிக்காவில் பிரதானமாக வலம்வந்தன.
1850 – 1920
1850-களின் மத்தியில், பெண்கள் உரிமை ஆர்வலர்கள் பலர் பிரபலமடைந்தனர். அமெலியா ஜென்க்ஸ் ப்ளூமர் (Amelia Jenks Bloomer) எனும் பெண்ணியவாதி தனது செய்தித்தாளில் ஆடையின் சுதந்திரத்தையும் வசதியையும் ஊக்குவித்து எழுதியுள்ளார்.
படம்1 : பால் பொய்ரெட் வடிவமைப்புகள் Paul Poiret’s designs படம் 2: மார்லின் டீட்ரிச் Marlene Dietrich
அமெலியா ப்ளூமர், தி லில்லி (The Lily) என்ற மாதமிருமுறை  பத்திரிகையை வெளியிட்டார். இதில், நிதானம் (Temperance) மற்றும் பெண்களின் பிரச்சினைகள் (women issues) குறித்த தனது கருத்துக்களை எழுதி வந்தார்.  அதோடு பெண்ணியவாதி மற்றும் வாக்குரிமையாளரான எலிசபெத் கேடி ஸ்டாண்டனும் (Elizabeth Cady Stanton) தி லில்லிக்கு கட்டுரைகளை எழுத தொடங்கினார். .
அமெலியா ப்ளூமர் தனது காலத்தில் வழக்கத்தில் இருந்த, பாரம்பரிய பாணி ஆடைகளைக் காட்டிலும் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் அற்ற ஒரு ஆடை பாணியை ஆதரித்தார். கோர்செட்டுகள், உள் பாவாடைகள் மற்றும் தரை நீளப் பாவாடைகளை கேள்விக்கு உட்படுத்தினார். பெண்கள், தனது அன்றாட உடல் செயல்பாடுகளில் ஈடுபடவும், உடற்பயிற்சி செய்யவும் ஏற்ற சௌகரியமான ஆடையையே தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும் என்ற இவரின் குரல் முக்கியமானது.
எலிசபெத் ஸ்மித் மில்லர் (Elizabeth Smith Miller), கால்சட்டை அணிந்த முதல் நவீன பெண்மணியாகக் கருதப்படுகிறார். மில்லர் வாக்குரிமை பெற்றவர். 1800-களில் அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையைப் பெற உதவுவதே அவரது குறிக்கோளாக இருந்தது.
ஆடை சீர்திருத்தம் ஆரம்பக் காலப் பெண்களின் உரிமை ஆர்வலர்களிடையே (women’s rights activists) குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்தது. அன்றைய நாகரிகம் எனச் சொல்லப்பட்ட கட்டுப்பாடான ஆடைகளை பெண்கள் அணியவேண்டும் என்ற வரையறைக்கு எதிரான கிளர்ச்சி உருவானது. இது ஒரு நடைமுறை தேவையாகவும் சமூக சீர்திருத்தத்தின் மைய புள்ளியாகவும் இருந்தது. “புளூமர்” ஆடையை பெண்கள் உரிமைகள் இயக்கத்தின் பெரும்பாலான தலைவர்கள் சில காலம் அணிந்திருந்தனர். அது பலமுறை மாற்றப்பட்டது. இறுதியில், அவற்றின் மீதான விமர்சனத்திற்கு பிரபலமான பத்திரிகைகள் கவனம் செலுத்தியதால், அது கைவிடப்பட்டது.
நியூயார்க் பொது நூலகத்தின் எலிசபெத் ஸ்மித் மில்லர் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட, ஆடை சுதந்திரம் குறித்த அவரது விளக்கம் பின்வருமாறு :
“I am asked to give a statement of my experience in adopting wearing, and abandoning the short skirt.”; “’The question is no longer how do you look, but woman, how do you feel?”
”உடைகள் அணிவது மற்றும் குட்டைப்பாவாடைகளைக் கைவிடுவது ஆகியவை குறித்த எனது பார்வையைக் கூறுமாறு கேட்கின்றனர்.”; “பெண்களே, கேள்வி நீங்கள் எப்படிக் காட்சியளிக்கிறீர்கள் என்பது பற்றியல்ல ! ஆனால். நீங்கள்  எவ்வாறு உணர்கிறீர்கள்? என்பதைப் பற்றியது” என்றார்.
1851-ல் ஒரு நாள் தோட்டத்தில் வேலை செய்யும் போது, தனது துருக்கிய பாணி பேண்ட்-ஐ முதலில் உருவாக்கியதாகக் கூறுகிறார், எலிசபெத் மில்லர். அவை பாவாடையின் கீழ் கணுக்காலில் குறுகி, அணிந்திருந்த நீண்ட பேக்கி பேண்ட்டுகள்.
இந்த ஆரம்பகாலக் காலுறைகள் ‘விக்டோரியன்’ உடையில் எதிர்பார்க்கப்படும் ‘கண்ணியத்தைப்’ பாதுகாக்கும் அதேவேளையில் பெண்களுக்கு அதிக சுதந்திரத்தை வழங்குவதற்கு ஏற்ற வகையிலும்  வடிவமைக்கப்பட்டுள்ளன. மில்லர் இந்த பாணியிலான கால்சட்டையை அறிமுகப்படுத்திய பிறகு அவர், இவ்வகை கால்சட்டையை தனது உறவினரான எலிசபெத் கேடிஸ்டாண்டனுடன் பகிர்ந்து கொண்டார். பின்னர் அவர் தனது அண்டைவீட்டாரான அமெலியா ஜென்க்ஸ் ப்ளூமருடன் பகிர்ந்து கொண்டார்.
முக்கிய ஊடகங்களில் இவர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். அக்காலகட்டத்தில் பெண்கள் உரிமை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்ட பெண்கள் பெரும்பாலானோர் கால்ச்சட்டை அணிந்திருந்தனர்..
மில்லர் தனது நடவடிக்கைகளால் கவனத்தைப் பெற்றார் என்றாலும்கூட கால் சட்டை அணிந்த முதல் நவீன மேற்கத்திய பெண் ஃபேனி ரைட் (Fanny Wright) என்பவரே ஆவார்.
படம் : ஃபிரான்சஸ் கிளேட்டன் உள்நாட்டுப் போரில் போரிடுவதற்காக தன்னை “பிரான்ஸ் கிளாலின்” போல் மாறுவேடமிட்டுக் கொண்டார். (காங்கிரஸ் நூலகம்)
ஃபேனி ரைட் ஒரு ஸ்காட்லாந்துப் பெண். அவர் 1825-ல் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். அவர் ஒரு எழுத்தாளர், பெண்ணியவாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதியாக அறியப்படுகிறார். ரைட், ஃப்ரீ இன்க்வைரர் (Free Inquirer) என்ற செய்தித்தாளின் இணை நிறுவனர் ஆவார். அவர் சமூகத்தைப் பற்றிய தனது கருத்துக்களை அதில் பகிர்ந்து கொண்டார்.
1820-களில் அவரது இளம்வயதில் ரைட், நியூ ஹார்மனி என்ற சோசலிச கம்யூனில் வாழ்ந்தார். அங்கு அவர் தளர்வான ரவிக்கைகள் மற்றும் முழங்கால்கள் வெட்டப்பட்ட ஆடைகளுடன் கணுக்கால் நீளமுள்ள பாண்டலூன்களை அணிந்தார்.
ரைட், மில்லர் மற்றும் ப்ளூமர் போன்ற பெண்கள் பெண்களின் உரிமைகளுக்காக தமது வலுவான கருத்துக்களால், சமத்துவ இயக்கத்தை முன்னெடுத்தனர். இருப்பினும், பெண்கள் கால்சட்டை அணிந்திருப்பது, பல ஆண்டுகளாக சர்ச்சைக்குரியதாகவே இருந்தது.
19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சைக்கிள் உலகம் முழுக்க பிரபலமடைய தொடங்கியது. அப்போது அங்கு பெண்கள் சைக்கிள் ஓட்டத் தடை செய்யப்பட்டு இருந்தது. அதுவும் அது பெண்ணின் உடல் சார்ந்த இலக்கணமாக மதப் போதனைகளாக வரையறுக்கப்பட்டிருந்தது. அதிலும் மதப்போதனையில் சைக்கிள் பற்றி பல இடங்களில் “Bicycle run for Satan”  “the bicycle is the devil’s advocate agent morally and physically ” என கூறப்பட்டது. அதாவது, “சைக்கிள் சைத்தானுக்கான வாகனம்”, “தார்மீகரீதியிலும், எதார்த்தத்திலும் சைக்கிள் ஒரு எதிர்நிலை சக்தி” என்று கூறப்பட்டது.
இதில் இன்னொரு விஷயம் மேலும் பெண்களைக் கேலிக் கூத்தாக்கிறது. திருமணமான பெண்கள் குறிப்பாக தாய்மை விரும்பும் பெண்கள் சைக்கிள் ஓட்டக் கூடாது என்பது போன்ற கட்டுக்கதைகளையும் மத நிறுவனங்கள் பரப்பின.  இப்படியாக பெண்கள் கைக்கு சைக்கிள் சென்றால் அவர்களை கட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்பதில் மதகுருமார்கள் தெளிவாக இருந்தனர்.
ஆண்களுக்கான வகையில்  இடைக்கம்பியுடன் வடிவமைக்கபப்ட்ட சைக்கிளை பெண்கள் ஓட்டுவதற்குத் தடையாக அவர்களது உடை இருந்தது. பாவாடை வகையிலான உடைகள் சைக்கிளை ஓட்டுவதற்குத் தடையாக இருந்தன. இதனைத் தகர்த்தெறியும் வகையில் ஆடைப் புரட்சி (Rational Dress Reform) சைக்கிள் ஓட்டுவதற்கு ஏற்ற உடையை பெண்களுக்கு வழங்கியது. முழுக் கால்ச்சட்டையின் வரவு பெண்களுக்கு சைக்கிளைப் பயன்படுத்து வாய்ப்பை வழங்கியது. அதன் மூலம் அவர்களை சுதந்திரமாக உணரச் செய்தது.
1911-ஆம் ஆண்டில், பால் பொய்ரெட் (Paul Poiret) என்ற ஒரு பிரெஞ்சு ஆடை வடிவமைப்பாளர், “ஜூப் குலோட் (jupe culotte)” என்ற ஆடையை அறிமுகப்படுத்தினார். 1918-ல், லெவி ஸ்ட்ராஸ் (Levi Strauss) என்பவர் ஃப்ரீடம் – ஆல்ஸ் (Freedom-Alls) என்ற ஆடையை உருவாக்கினார்.
முதலாம் உலகப் போரிலிருந்து பெண்களுக்கு தனது ஆடை சுதந்திரத்தை தேர்ந்தெடுக்க உரிமை இருந்தது. இந்த நடைமுறை உலகில் வெற்றியும் பெற்றது. 1920-களில், லெவி ஸ்ட்ராஸ் (Levi Strauss) பெண்களுக்கு தனித் தனியாக கால் சட்டைகளை அறிமுகப்படுத்தினார்.
1930 – 1970
1930-களில், மார்லின் டீட்ரிச் (Marlene Dietrich) மற்றும் கேத்தரின் ஹெப்பர்ன் (Katharine Hepburn) போன்ற திரை நட்சத்திரங்கள் பெண்கள் பேண்ட் அணிவதை யதார்த்தமாக்க முயன்றனர். இருந்தும் கூட, சமூகம் அதை ஏற்றுக்கொள்வதில் இருந்து வெகுதொலைவில் இருந்தது. இரண்டாம் உலகப்போரின் போது பணிபுரியும் பெண்கள் உடுத்திய கால்சட்டை உடை, பின்னர்  ஃபேஷனாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1950-களில் கால்ச்சட்டை இயக்கம் (trouser movement) மீண்டும் தனது அடையாளங்களை இழக்கத் தொடங்கியது. கிறிஸ்டியன் டியரின் (Christian Dior’s) நிறுவனம் ‘நியூலுக் (New Look)’ என்ற பெயரில் பெண்களுக்கான பாவாடைகளை மீண்டும் பிரபலப்படுத்தியது. அதன்பின் பெண்கள் இந்த ஆடம்பரமான ஆடையை நோக்கி செல்லத் தொடங்கினர். அதன் விளைவாக இளம் பெண்களிடம் இருந்த பேண்ட், பழைய நாகரிகமாக (Old Fashion) மாறியது.
இன்று கால்ச்சட்டை அணியும் பெண்கள், அதை இயல்பானதாகப் பார்க்கின்றனர். ஆனால் இயல்பைத் தாண்டி கால்ச்சட்டை அணிவது என்பது பெண்ணுக்கான அதிகாரம், சக்தி, இன்னும் சொல்லப்போனால் அது ஒரு அரசியல். நாம் ஒரு உடை என்ற வகையில் கால்ச்சட்டையை அணிவதை விட நாம் எதற்காக அணிகின்றோம், எதற்காகக் கொண்டாடுகிறோம் என்பதில்தான் நமது புரிதல் மட்டம் அடங்கியிருக்கிறது. இங்கு ஆணின் ஆடை மிடுக்குத்தனம், மரியாதை, தைரியம் ஆகியவற்றின் அடையாளமாகக் காட்டப்படுகிறது.
பெண்களுக்கான கலாச்சார உடைகளாகக் கூறப்படுபவை அவர்களின் செயல்பாட்டை ஒடுக்குபவைகளாக இருக்கின்றன.
படிக்க :
பிரா அணிவதும் அணியாததும் யாருடைய பிரச்சினை ? || சிந்துஜா
புடவை கடந்து வந்த பாதையும் அது சார்ந்த போராட்டங்களும் ! || சிந்துஜா
அடுத்தமுறை, பெண்கள் பேண்ட் அணியும்போது நினைவில் கொள்ள வேண்டியது, இதற்காக இங்கு எத்தனைப் பெண்கள் போராடி இருக்கிறார்கள் என்பதையும் அவர்களது போராட்டத்தையும் ஆகும். அடிப்படை உரிமையான ஆடையை அணிந்ததற்காக கைது செய்யப்படுவது, இன்று கேலிக்குரியதாகத் தெரியலாம். ஆனால், வரலாற்றில் அவ்வளவு சாதாரணமாக இந்த பேண்ட் நம்மிடம் வந்துவிடவில்லை.
ஆடைகள் என்பது நம்மை நாம் எப்படிப் பார்க்கிறோம், உலகம் நம்மை எப்படிப் பார்க்க வேண்டும், நமக்கு எந்த அளவிற்கு வசதியாக இருக்கிறது என்பதன் வெளிப்பாடாக வேண்டும். எனவே, அடுத்தமுறை நீங்கள் ஒரு ஜோடி பேண்ட்டை அணியும் போது, அதன் முக்கியத்துவத்தையும், தனித்தன்மையும் கருத்தில் கொள்ளுங்கள். அதனை அணியும் உரிமைக்காக போராடிய பல பெண் போராளிகளை நினைவில்கொள்ளுங்கள்..
சிந்துஜா
சமூக ஆர்வலர்
disclaimer

பிரிட்டிஷால் உருவாக்கப்பட்ட கங்காணி பதவியே ஆளுநர் பதவி !

1
மிழ்நாட்டின் ஆளுநர் R.N.ரவி, தமிழக அரசு செயல்பாட்டில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறார் என்ற சர்ச்சைகள் அன்றாடம் எழுகின்றன. மாநிலத்திற்கு புதிதாக பதவியேற்கும் ஆளுநரை மரியாதை நிமித்தமாக மாநில முதலமைச்சர் நேரில் சந்திப்பது வழமையானது.
ஆளுநருக்கு மாநில அரசிடமிருந்து விவரங்கள் ஏதேனும் தேவையெனில் முதலமைச்சரிடம் கேட்டு பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அப்படிச் செய்யாமல் மாநில அரசின் தலைமை செயலரையும், போலீசுத்துறை டிஜிபி-யையும் நேரில் அழைத்துப் பேசியிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு மட்டுமே கட்டுப்பட வேண்டியவர்களை, நேரடியாக தனிப்பட்ட முறையில் நேரில் அழைத்துப் பேசுவது வழமைக்கு மாறானது. ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.
அழைத்துப் பேசியது அல்லாமல் தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிக்கை தரும்படி தலைமை செயலரிடம் கோரியதும், அவரும் அவருடைய பங்கிற்கு முதலமைச்சரிடம் கலந்து ஆலோசிக்காமல் ஒவ்வொரு துறை அரசு செயலரிடமும் அவரவர் துறை குறித்து அறிக்கையை தயாராக வைத்திருக்கும்படி உத்தரவுகளை அனுப்பியிருந்தார்.
அதேபோல் ஆளுநர் டிஜிபி-யை அழைத்து பேசிய பிறகு ரவுடிகள் கைது – ஆயுதங்கள் பறிப்பு என்ற ஆரவாரங்களை அரங்கேற்றினார் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான அண்ணாத்துரை, ஆட்டுக்குத் தாடியும் மாநிலத்துக்கு ஆளுநரும் தேவையில்லை என்று விமர்சித்தவர். கடந்த ஐந்தாண்டுகளில் அடிமை எடப்பாடி அரசு ஆட்சியதிகாரத்தில் இருந்தபோது தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் மாநில அரசு நிர்வாகத்திற்குள் தலையை நுழைத்ததைக் கண்டித்து போராட்டம் நடத்தியது அன்று எதிர்க்கட்சியாக இருந்த திமுக.
படிக்க :
ஆர்.என். ரவி : தமிழ்நாட்டைச் சுற்றிவளைத்துள்ள நச்சுப் பாம்பு !
சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் உரை – கருத்துக் கணிப்பு
ஆளுநர் சென்ற இடங்களில் எல்லாம், எதிர்க்கட்சிகள் நேரடியான எதிர்ப்பும் ஆர்ப்பாட்டங்களும் பண்ணியதைக் கண்டு ஆத்திரமடைந்த பன்வாரிலால் புரோகித், “ஆளுநரை வேலை செய்யவிடாமல் தடுத்தால் ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்” என்று ஆத்திரமும், அதிகாரத் திமிரும் தலைக்கேறியதன் விளைவாகக் கதறினார்.
ஆனால் இன்று ஆர்.என். இரவியின் நடவடிக்கைகளுக்கு ஆளும்கட்சியான திமுக என்ன எதிர்வினை ஆற்றியுள்ளது ?
யார் இந்த ஆளுநர்?
கவர்னர் (ஆளுநர்), வைசிராய் பதவிகள் ஆங்கிலேய காலனிய அரசால் உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியாவில் 1935-ஆம் ஆண்டில் இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டத்தின்கீழ் மாகாண ஆட்சியினைக் கண்காணிக்க ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். உழைக்கும் வர்க்கத்தை ஒட்டப் பிழிந்து எடுக்க எஸ்டேட்டுகளில் பணிக்கு நியமிக்கப்பட்டவர்கள் தான் கங்காணிகள். அவ்வகையில் மாநில ஆட்சியைக் கண்காணிக்க 1947-ஆம் ஆண்டு அதிகார மாற்றம் நடைபெற்ற பிறகு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ‘கங்காணி’ பதவி முறையை ஒழித்துக் கட்டியிருக்க வேண்டும்.
அக்காலகட்டத்தில், ஆளுநர் பதவி குறித்து அரசியல் நிர்ணய சபையில் கடும் விவாதங்கள் நடந்தன. விவாதங்களின் அடிப்படையில் இரண்டு வரைவுகள் முன்வைக்கப்பட்டன. ஒன்று, ஆளுநர் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற வரைவு. இது ஒரு மாநிலத்தில் இரு முதலமைச்சர்களை உருவாக்கிவிடும் என்று இவ்வரைவு நிராகரிக்கப்பட்டது.
மேலும், ஆளுநருக்கான வேட்பாளர் பட்டியல் ஒன்றை சட்டமன்ற ஒப்புதலுடன் குடியரசுத்தலைவர் தேர்வுக்கு அனுப்புவது என்ற மற்றொரு வரைவும் மாநிலத்தில் ஆளும் கட்சியின் ஆதரவாளர் தான் ஆளுநராக வரமுடியும் என்ற வரைவும் முன் வைக்கப்பட்டது. ஆனால், இதில் மாநிலத்தில் பிரிவினைவாதம் வளர்வதற்கான  வாய்ப்புள்ளதால், இவ்வரைவும் நிராகரிக்கப்பட்டது.
இதற்குக் காரணம், இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைச்சாலையில் இருந்து ஏதேனும் தேசிய இனம் தனது விடுதலையைத் தேடி பிரிந்துவிடும் என்ற அச்சம்தான். இதனால் மாநிலத்துக்கு நெருக்கமான ஒருவரை அந்த மாநிலத்தில் ஆளுநராக நியமிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். மேலும், ஆளுநர்கள் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் மாநில / மாகாண பிரிவினை உணர்ச்சியும் குறுகிய மாநில / மாகாண உணர்வுகளையும் ஊக்கப்படுத்திவிடும். ஆகையால், மாநிலத்திற்கு தொடர்பு இல்லாத ஒருவரையே நியமிக்க வேண்டுமென்பதில் நேரு உறுதியாக இருந்தார்.
இதனடிப்படையில் ஒன்றிய ஆளும் கட்சி கைக்காட்டும் நபரை ஆளுநராக குடியரசு தலைவர் நியமிக்க வேண்டும் என்பதையும், அனைத்து மாநிலங்களிலும் ஒன்றிய அரசின் அதிகாரம் நிலை நாட்டப்பட வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டது. ஆனால், ஆளுநர் நியமனத்தில் மாநில அரசுடன் கலந்தாலோசித்து ஆளுநரை நியமிக்க வேண்டும் என்ற மத்திய – மாநில உறவுகள் குறித்த ஆணையங்களின் பரிந்துரை காலங்காலமாக உதாசீனப்படுத்தப் பட்டுள்ளது.
ஒன்றிய அரசு கைக்காட்டும் நபர் குடியரசு தலைவரால் மாநில அரசின் கங்காணியாக ஆளுநர் என்ற பெயரில் நியமிக்கப்படுவார். இதிலிருந்தே அவர் யாருக்கு விசுவாசமாக இருப்பார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. இதனடிப்படையில்தான் மோடி பிரதமரானவுடன் நான்கு மாநிலங்களின் ஆளுநர்களை – எம்.கே. நாராயணன் (மேற்குவங்கம்), இஹ் வனி குமார் (நாகாலாந்து), பி.எல். ஜோஷி (உ.பி), சேகர் தத்தா (சத்தீஷ்கர்) – கட்டாயப்படுத்தி விலகவைத்தார். குஜராத் ஆளுநர் கம்லா பெனிவுர் மிசோரம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார்.
ஒன்றிய அரசின் கங்காணிகளான ஆளுநர்களின் பிரதான வேலை, பதவிப் பிரமாணம் செய்து வைப்பதுதான். அமைச்சர்கள், நீதிபதிகள், முக்கிய அதிகாரிகள், வாரிய தலைவர்கள் உள்ளிட்டோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதும், மாநிலங்களைப் பற்றி மத்திய அரசுக்கு  aறிக்கை அனுப்புவது, மாநில நலன் கருதி எடுக்கப்படும் முடிவுகள், மத்திய அரசுக்கு விரும்பத்தகாததாக  இருந்தால் அவற்றுக்கு முட்டுக்கட்டை போடுவது இதுதான் ஆளுநரின் பணி. இந்த வேலை செய்பவருக்கு ஆடம்பர மாளிகை எதற்கு? சொகுசு வாழ்க்கை எதற்கு? இதற்காக கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணம் செலவழிப்பது எதற்கு?
ஆளுநர் மாளிகைகள் ஆடம்பரங்களில், வீண் செலவுகளில் கொழுத்துப் போய்க் கிடக்கின்றன. நேருவின் சகோதரியாகிய விஜயலட்சுமி, மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராக சிறிது காலம்  பணியாற்றி, பின்னர் அப்பதவியைத் துறந்தார். “ஆளுநர் பதவியே பயனற்றது. அரசமைப்பு சட்டத்திலிருந்தே ஆளுநர் பதவியை நீக்கிவிட வேண்டும்” என்று தன் விலகலுக்குப் பிறகு கூறினார்.
இதன்படி, மாநிலத்திற்கு ஆளுநர் தேவையில்லை என்பதை நடைமுறைப்படுத்தினால் ஒரு ஊதாரியான கங்காணிச் செலவு மிச்சப்படும். அந்தப் பணத்தை வளரும் தொழில்களுக்கு ஆக்கபூர்வமாக பயன்படுத்தினால் வேலைவாய்ப்பும் சமூகத்தில் வாங்கும் சக்தியும் பெருகும்.
ஆளுநரின் அதிகார மீறலும் அவர் மாநிலங்களில் கங்காணி வேலை பார்ப்பதும் இன்று மட்டுமா நடக்கிறது? இல்லை காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்தேதான் நடந்து வருகிறது. தனக்கு சாதகமான நபரை ஆளுநராக குடியரசுத் தலைவர் மூலம் நியமிப்பது, அவர் மூலம் மாநிலத்தின் செயல்பாட்டை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது காலங்காலமாக நடக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இன்றைய சூழல் வழக்கமான காலகட்டத்தைப் போன்றது அல்ல.
ஒட்டுமொத்த மாநிலங்களையும் தனது பாசிச வளையத்திற்குள் கொண்டு வருவதற்கு தமிழ்நாட்டிலும் ஆளுநரைக் கொண்டு தனது பாசிச நோக்கங்களுக்கு முரணான நடவடிக்கைகளை தடுத்திருக்கிறது ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசு.
நீட் தேர்விலிருந்து விலக்கு, 7 பேர் விடுதலை, விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள், மசோதாக்களின் மீது கருத்துக்கள் கூறாமல் காலவரையின்றி தள்ளிப்போடுவது, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் கிடப்பில் போடுவது; இதன்மூலம் தீர்மானங்களை மசோதாக்களை நீர்த்துப்போக வைத்து மாநில அரசிற்கு நெருக்கடியை உருவாக்குவது என ஆளுநர் மூலம் ஒன்றிய அரசு மாநில அரசின் உரிமைகளில் தலையிட்ட சம்பவங்கள் ஏராளம்.
பாசிச பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பல், தமிழக அரசால் நிராகரிக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையை ’இல்லம் தேடி கல்வி’ போன்ற திட்டங்கள் மூலம் படிப்படியாக அரங்கேற்றுவது, இக்கல்வியில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களையும்  உறுப்பினர்களையும் புகுத்துவதன் மூலம் பிஞ்சு மனதில் பார்ப்பனிய – மதவெறி நஞ்சை விதைப்பது என ஒரு புறத்தில் பாசிச நஞ்சை அடித்தளத்தில் விதைத்துக் கொண்டிருக்கையில், அதற்குச் சாதகமாக மேல்தளத்தில் ஆளுநரையும் மாநில அரசின் உயர் அதிகாரிகளையும் வைத்து காய்நகர்த்துகிறது.
மேலும், தற்போது ஆர்.என். ரவியின் மூலம் பாஜக மேற்கொள்ளும் நகர்வுகள் மிகவும் முக்கியமானவையாகப் பார்க்க வேண்டியவை. தமிழகத்தில் இல்லாத நெருக்கடியை இருப்பது போலக் காட்டுவது, சட்டம் ஒழுங்கு கெட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதும், இலஞ்ச ஊழல் பெருகியதைப் போன்ற அறிக்கையை பெறுவது  என ஆட்சியைக் கலைப்பதற்கோ அல்லது ஆட்சியைக் கலைப்பதாக மிரட்டி தொடைநடுங்கி திமுக அரசின் காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்கோ தேவையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதி தான், இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்ட, ஆளுநரின் தலைமைச் செயலர், டி.ஜி.பி சந்திப்புகள்.
டெல்லியில் அம்மாநில முதல்வருக்கு தொல்லை கொடுத்து, அம்மாநில அதிகாரிகளைச் செயல்படவிடாமல், டெல்லி மாநில அரசை முடக்கியதைப் போலவே தமிழ்நாட்டிற்கு தொல்லைகள் கொடுப்பது, மறைமுக சதிகளை அரங்கேற்றுவது, அடக்குமுறைகளை அரங்கேற்றி தங்களது நோக்கத்தை நிறைவேற்றுவது என்பது ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிஸ்ட்டுகளுக்கு கைவந்த கலை. இதற்குப் பொருத்தமாகத்தான் முன்னாள் உளவுத்துறை அதிகாரியான R.N.ரவி யை தமிழ்நாட்டின் ஆளுநராக நியமித்திருக்கிறது மோடி கும்பல்.
படிக்க :
சூரப்பாவை இடைநீக்கம் செய்வாரா தமிழக ஆளுநர் ?
ஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் !
நம் நாட்டில் யார் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களுக்கே இல்லாத – அதாவது ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும் மக்களுக்கே இல்லாத – ஆட்சியைக் கலைக்கும் அதிகாரத்தை இந்தக் கங்காணித் தொழிலுக்காக நியமிக்கப்பட்ட ஆளுநருக்கு வழங்கியிருக்கிறது அரசியல் சாசனச் சட்டம். இந்த நடைமுறை ஒழிக்கப்படும் வரை, மாநில மக்களின் உணர்வுகளும், தேவைகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் நிறைவேற்றப்படுவது சாத்தியமில்லை.
சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, மோடி நடத்திய சட்டமன்ற சபாநாயகர்களின் கூட்டத்தில் கலந்து கொள்கையில், மாநில அரசின் தீர்மானங்களின் மீது ஆளுநர் முடிவெடுப்பதற்கு கால வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எல்லாம் ஒரு போதும் பலனளிக்காது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் எடுக்கப்பட்ட முடிவை யாரோ நியமித்த ஒரு கங்காணி நிறுத்தி வைப்பதற்கு அனுமதிக்க முடியாது என்ற போர்க்குரலை எழுப்புவதுதான் அவசியமானது. அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதுதான் அவசியமானது!

கதிரவன்

கிராம தெய்வங்களைப் பற்றிய கதைப்பாடல்கள் || நா. வானமாமலை

0
தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை -இறுதிப்  பாகம்
முதல் பாகம்…………………………………………………………………………………………முந்தைய பாகம்
நா. வானமாமலை
தெய்வம் பற்றிய கதைப் பாடல்கள்

னி கதைப்பாடல்களில் பாமர தெய்வங்களைப் பற்றிய வில்லுப் பாடல்களும். அம்மானைகளும் அடங்கும். வில்லுப் பாட்டுகள் நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்னும் பாடப்படுகின்றன. அவற்றில் சொல்லப்படும் கதை பாமரர் வணங்கும் தெய்வங்களின் வரலாறுகளே. இவற்றை இருவகையாகப் பிரிக்கலாம்.

பெண் தெய்வங்களைப் பற்றிய கதைகள் பழமையானவை. மாடன் முதலிய தேவர்களைப்பற்றிய கதைகள் இடைக்காலத்தவை. திரு.கி.வா.ஜகந்நாதன் அவர்கள் ‘அலையோசை’ என்ற நாட்டுப்பாடல் திரட்டில் பாமரர் வணங்கும் தெய்வங்களின் அட்டவணையொன்று கொடுத்துள்ளார்கள். அவற்றுள் வேதக் கடவுளரை நீக்கிவிட்டால் 60 தெய்வங்கள் இருக்கின்றன, இத்தெய்வங்கள் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகின்றன.

தேவியரில் பெரும்பாலானவை மூர்க்க தேவதைகளே, பரட்டைத்தலை, கொட்டை விழி, கோரப்பற்கள் முதலிய அசுர அம்சங்கள் எல்லாத் தேவதைகளுக்கும் பொதுவானவை. இவை பெண்ணாதிக்கச் சமுதாயத்தின் எச்சமாக நிற்கின்றன. இவற்றுள் முத்தாரம்மன், குமரி, செல்லி முதலிய தேவியர் தென்பாண்டி நாட்டில் பிரபலமானவை. இவை மணம் புரிந்துகொள்ளாத தேவியர், இவற்றை பயத்தோடு தான் மக்கள் வழிபட்டனர். இவை தமக்குக் கொடுக்க வேண்டியதைப் பக்தர்கள் தராவிட்டால் பெருந்துன்பம் விளைவிக்கக் கூடியவை என்று நம்பினார்கள்.

படிக்க :

நூல் அறிமுகம் : வேதாந்தத்தின் கலாசார அரசியல்

நூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்

‘யஷி’ என்று சமண மதத்தவரது சாந்த தேவதை, பாமர மக்களின் இசக்கியாக மாறிவிட்டது. காளி, மாரி முதலியன வங்கத்திலிருந்தும், கர்நாடகத்திலிருந்தும் – பண்பாட்டுக் தொடர்பின் காரணமாக இங்குக் குடியேறியவை. சக்கம்மாள், ராஜ கம்பள நாயக்கர்களது தெய்வம், கொத்து பல்லாரியிலிருந்து அவர்கள் வருகிற காலத்தில் அதனையும் கூடவே கொண்டு வந்து விட்டார்கள்.

தேவியரில் பல வேதக் கடவுளரோடு இணைப்புப் பெற்று விட்டன. காளி தனியாகவே வணங்கப்பட்டது. அது சைவ சமயத்தில் பார்வதியோடு சேர்ந்து ஒரு அம்சமாகி விட்டது. பெரும்பாலும் பழமையான தேவதைகள் சிவனது மனைவிகளாக மாறிவிட்டன. ஆயினும் சிவன், விஷ்ணு கோயில்கள் இல்லாத சிறு சிறு கிராமங்களிலும் ஒரு தேவியின் கோயில் இருக்கும். இக்கோயிலுக்குச் சிறப்பான நாட்களில் கொடை கொடுப்பார்கள். நவராத்திரியின் போது திருவிழாவும் நடைபெறும். சிறு கோயில்களில் ஒரு நாள் மட்டுமே கொடை நடைபெறும்.

பாமர மக்கள் தேவி கோயில்களுக்கு வாசல் காவலர்கள் என்று மாடன் முதலிய தெய்வங்களை வணங்குகிறார்கள். ஆரம்பகாலத்தில் மாடன் முதலிய தெய்வங்களுக்கு உருவம் இல்லை. செங்கல்லால் கட்டப்பட்ட தூண் ஒன்றுதான் அத்தெய்வத்தைக் குறிக்கும். மாடன் முதலிய தெய்வங்கள், போரிலோ, கலகத்திலோ, அல்லது சதிக்குள்ளாகியோ உயிர் விட்டவர்களது நினைவுச் சின்னங்களே.

சின்னத்தம்பிக்கு, திருக்குறுங்குடி, பாப்பாங்குடி ஆகிய இடங்களில் கோயில்கள் இருக்கின்றன. அவை தனிக் கோயில்கள் அல்ல; பிற கோயில்களைச் சார்ந்தே இருக்கும், சுடலை மாடனுக்கு ஊர்தோறும் பல கோயில்கள் உண்டு. அவற்றில் உருவச் சிலைகள் இல்லை. சில தெய்வங்களுக்கு உருவச் சிலைகள் இருக்கின்றன. கருப்பசாமி, சங்கிலி பூதத்தான், முத்துப்பட்டன் ஆகிய தெய்வங்களுக்குச் சிலைகள் உள்ளன. இவை பிற்காலத்தில் ஏற்பட்டவை.

மாடன் போன்ற தெய்வங்கள் சில குடும்பங்களுக்குக் குலதெய்வமாக இருக்கும். ஒன்று தெய்வமாகக் கருதப்படுகிற அம்மனிதனது வழிவந்தவர்களுக்கு அவன் குலதெய்வமாக இருக்கலாம். அல்லது அவனைக் கொன்றவர்களுக்குக் குலதெய்வமாக இருக்கலாம்.

இவையாவும் பயத்தினால் வணங்கப்படும் தெய்வங்களே. வேதக் கடவுளரில் சிவன், நாராயணன் முதலியோரைப் பாமர மக்கள் வணங்குவது உண்டு. எனினும் அவர்கள் வீர சைவர்களோ, வீர வைணவர்களோ அல்ல. லக்ஷ்மி, சரஸ்வதி முதலிய தேவியர்களை அவர்கள் வணங்குவது அபூர்வம். முருக வணக்கம் பழங்காலம் முதல் தமிழ்நாட்டில் நிலவி வந்தது. இன்று உருவமில்லாமல் வேலினை மட்டும் பாமர மக்கள் வணங்குகிறார்கள். அது ஆயுத வணக்கமாக இருக்கலாம்.

பௌத்த சமணச் சிறு தேவதைகளும் அம்மதங்கள் அழிந்த பின்னர், பாமரர் வணக்கத்திற்குரியனவையாயின. ஆனால் அவை உருமாறி, இந்துமத தெய்வங்களோடு ஒன்றி விட்டன. இவற்றுள் ஒன்று விநாயகர். இப்பெயர் புத்தருடைய பெயர்களுள் ஒன்று வேசாந்தர ஜாதகத்தில் புத்தர் யானைப் பிறவியெடுத்தார் என்ற கதை கூறப்பட்டுள்ளது. எனவே புத்தர் பீடங்களிலிருந்த சிலைகளை அகற்றிவிட்டு பிற்காலத்தார் யானைமுகக் கடவுளை வைத்து விட்டனர். அவை அரசமரத்தடியில் இருப்பதும் இக்கூற்றை மெய்பிக்கும் சான்று.

சாஸ்தா’ சிறு தெய்வங்களுக்குள் உயர்ந்தவராகக் கருதப்படுகிறார். இவர் சிவனுக்கும் மோகினி உருவத்திலிருந்த திருமாலுக்கும் பிறந்தவர். சாத்தன் என்ற பெயரும் புத்தர் பெயர்களுள் ஒன்று. பிற்காலத்தில் புத்தனும், இந்துத் தெய்வங்களுள் ஒன்றாகக் கலந்தபோது சாஸ்தாவுக்குப் பல ஊர்களில் கோயில்கள் தோன்றின. அவர் சாந்த தெய்வம்.

பாமரர் தெய்வங்கள் அதீத சக்தியுடையனவாவென்று அவர்களால் கருதப்படவில்லை. மனிதனை விடச் சிறிது அதிகமான சக்தியுடையவை. அவ்வளவுதான். அவை புராணங்களில் சொல்லுவது போல சத்திய லோகம், கைலாசம், வைகுண்டம் முதலியவற்றில் வாழ்வன அல்ல. இவ்வுலகிலேயே, கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் இயற்கைச் சக்திகளைப் போன்றவையே. அவை மனிதர் உடலுள் நுழைந்து பேசும் என்றும் மக்கள் நம்பினார்கள். இதனால் வஞ்சகர்களால் ஏமாற்றவும் பட்டார்கள்.

சமூக நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள், புராணக் கதைகள் இவைபற்றி உழைக்கும் மக்களின் கருத்துக்களின் வரலாறு முழுவதையும் நாட்டுக் கதைப் பாடல் பற்றிய ஆராய்ச்சி நமக்குத் தெளிவாக்கும். ஆனால் இக்கதைப் பாடல்களைக் குறித்த ஆராய்ச்சி எதுவும் இதுவரை தமிழ்நாட்டில் தொடங்கவில்லை. இவற்றை ஆராயாமல் தமிழ் நாட்டு மக்களின் பண்பாட்டு வரலாற்றை ஆராய முடியாது. இக் கதைப்பாடல்கள் ஆயிரக் கணக்கில் கிடைக்கின்றன. இவற்றின் ஆராய்ச்சியின் மூலம் நமது நாட்டு மக்களின் பண்பாட்டு வரலாற்றை சுமார் கி.பி.1330 முதல் கி.பி.1801 வரை ஆராய முடியும். இம் முயற்சிகளை தமிழறிஞர்கள் மேற்கொள்ள வேண்டும். இப்பணி பொதுப் பணியாகையால், ஆராய்ச்சிக் கழகங்களும், தமிழ்நாடு அரசினரும் இதற்கு உதவ வேண்டும்.

இந்நாட்டுப் பாடல்களின் மூலம் நாம் அறிந்துகொள்வன

1. நாட்டுப்புற மக்கள், வரலாற்றை எவ்வாறு நோக்குகிறார்கள்? வரலாற்று வீரர்களைப் பற்றி அவர்களுடைய சிந்தனை என்ன?
2. சமூகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர்கள் உயர்வாகக் கருதுவது எதனை? இழிவாகக் கருதுவது எதனை?
3. அவர்களுடைய நம்பிக்கைகள், துன்பங்கள் இன்பங்கள் இவை யாவை?
4. புராணங்களில் அவர்களுக்கு விருப்பமானவை எவை? அவற்றில் எத்தகைய மாறுதல்கள் அவர்கள் கருத்துக்களுக்கு உகந்தது?
5. அவர்கள் உருவாக்கியுள்ள பண்பாட்டையும், அதைச் சீரழிக்கும் முயற்சிக்கு அவர்கள் தெரிவிக்கும் எதிர்ப்பையும், இக்கதைகளில் நாம் காண்கிறோம்.

நம் நாட்டு மக்களின் பண்பாட்டு வரலாற்றை நாம் மதிப்பிட, நமது இலக்கியம், கலைகள் நாம் வளர்த்துள்ள பழக்க வழக்கங்கள் இவற்றோடு நாட்டுக் கதைப் பாடல்களையும் ஒரு பகுதியாகக் கொள்ள வேண்டும்.

(முற்றும்)
« முந்தைய பாகம்
தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்