Thursday, June 26, 2025
முகப்பு பதிவு பக்கம் 224

கோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் !

மிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் தடையை மீறி வேல் யாத்திரை என்ற பெயரில் பாஜக செய்யும் அடாவடித் தனத்தை கண்டித்தும், இதற்கு துணைபோகும் தமிழக அரசு மற்றும் போலிசைக் கண்டித்தும், கோவையில் 21.11.2020 அன்று மாலை 4 மணிக்கு போலீசு ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைப்பெற்றது.

இந்த போராட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தோழர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கினார். இந்த முற்றுகைப் போராட்டத்தில்  மக்கள் அதிகாரம், விசிக உள்ளிட்ட 18 அமைப்புகள் கலந்து கொண்டன. மக்கள் அதிகாரம் கோவைப் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜன் உள்ளிட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பினரை போலீசு கைது செய்தது. பின்னர் சிறிது நேரம் கழித்து அனைவரையும் விடுவித்தது.

படங்கள்:

தகவல் :
மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
94889 02202

நவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் ! அணிதிரள்வோம் || அசுரன் பாடல் !!

தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு தொழில்முனைவோர், சிறு வணிகர்கள் என அனைவரிடமிருந்தும் பறிக்கப்படும் உரிமைகளை மீட்க, அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்கும் இந்த பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்று ஆதரவு தாரீர் !

நம் உரிமைகளை வென்றெடுக்க வர்க்கமாய் திரள்வதுதான் ஒரே வழி !

அணிதிரள்வோம் ! இழந்த உரிமைகளை வென்றெடுப்போம் !

வீடியோ ஆக்கம் : வினவு
பாடல் : நன்றி  :- அசுரன் படக் குழுவினர்

 

இழந்த உரிமைகள் மீட்க வீதியில் இறங்குவோம் || தோழர் விஜயகுமார் உரை !

0

கொரோனாவை ஒட்டி பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது இப்படி ஒரு வேலை நிறுத்தம் நம் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்று முதலாளிகளும் அரசு ஒரே குரலில் பேசுகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் இப்படி ஒரு வேலை நிறுத்தம் அவசியமா ? ஏற்கெனவே வேலையிழப்பு காரணமாக தொழிலாளர்களுக்கு வருமானம் இல்லாத சூழலில் ஒருநாள் வேலைநிறுத்தத்தின் காரணமாக அவர்களுக்கு இழப்பு ஏற்படாதா ?

நாடு முழுவதும் தொழிலாளிகள், விவசாயிகள், சிறுவணிகர்கள், சிறு தொழில் முனைவோர், மாணவர்கள்  என அனைவரின் வாழ்வாதாரங்களே பறிபோகும் நிலையை இந்தக் கொரோனா சூழலைப் பயன்படுத்தி பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றியதன் மூலம் உண்டாக்கியிருக்கிறது மோடி அரசு.

மொத்த வாழ்வாதாரத்திற்கு முன்னால் ஒருநாள் சம்பளம் பொருட்டல்லவே ! போராடிப் பெற்ற நம் உரிமைகளைப் பறித்து நம்மை நடைபிணங்களாக்கத் துடிக்கும் மோடி அரசின் மக்கள் விரோத சட்டங்கள் மற்றும் கார்ப்பரேட் ஆதரவு செயல்பாடுகளை அம்பலப்படுத்தி, நவம்பர் 26 அன்று, நம் உரிமை மீட்க வீதியில் ஒன்றிணைந்து போராட அறைகூவல் விடுக்கிறார் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் விஜயகுமார் !

பாருங்கள் ! பகிருங்கள் !!

கோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி !

னோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை இரண்டாம் ஆண்டு ஆங்கிலத் துறை மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டிருந்த  எழுத்தாளர் அருந்ததி ராயின் ‘தோழர்களுடன் நடைபயணம்’ என்ற புத்தகம் பாடதிட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ABVP மற்றும் வேறுசிலரிடமிருந்து வந்த புகார்களின் அடிப்படையில் இந்தப் புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இப்புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து  நீக்கப்பட்டத்திற்கு பலதரப்புகளிலிருந்தும் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.

பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. பிச்சுமணி பிரண்ட்லைன் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் “…. இது போன்ற சர்ச்சைக்குள்ளான மற்றும் ஆட்சேபிக்கதக்க புத்தகத்தின் வாயிலாக நாம் மாணவர்களை தவறாக வழிநடத்தக்கூடாது……” என்கிறார். “….அருந்ததி ராயின் மற்ற புத்தகங்களும்  பாடத்திட்டதிலிருந்து நீக்கப்படும்….” எனக் கூறியுள்ளார். ABVP மற்றும் RSS-BJP-ன் ஆதரவாளர்களோ, இந்த புத்தகம் இந்திய ராணுவத்தைப் பற்றி தவறானக் கண்ணோட்டத்தை மாணவர்களிடம் விதைக்கிறது என்றும் நாட்டின் நலன்களுக்கே எதிரானது என்றும் மாவோயிசக் கருத்துக்களை பரப்புகிறது என்றும் தொலைக்காட்சி விவாதங்களில் பதறுகின்றனர். இவரகள் யாரும் இந்த புத்தகத்தினை முழுமையாக வாசிக்கவில்லை என்பது  இவர்களது வாதங்களில் இருந்தே தெரிகிறது.

படிக்க :
♦ அருந்ததிராய் நூல் நீக்கம் : கருத்துக்களைக் கண்டு அஞ்சும் சங்க பரிவாரம் !
♦ அருந்ததி ராய் : மக்களை சிரிக்க சொல்வது கிரிமினல் குற்றமா ?

மேலும் அருந்ததிராயின் புத்தகம் உள்நோக்கம் கொண்டது என்றும் ஒரு குறிப்பிட்ட கருத்தியலை மாணவர்களிடம் திணிக்கும் முயற்சியென்றும் RSS-BJP  கூறுகிறது. அப்படியானால் குஜராத் பள்ளி பாடத்தில் வேத-புராணக் கதைகளை தனி பாடமாக சொல்லித் தருவதற்கும், அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையை கட்டாயப் பாடமாக்கியதற்கும் கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம் காட்டாயம் என்றதற்கும் NCERT பாட புத்தகத்திலிருந்து சாதி-வர்ணம் பற்றிய பகுதிகளை நீக்கியதற்கும் உள்நோக்கம் இல்லையா? பார்ப்பனியக் கருத்துக்களை பன்முக இந்தியாவின் மீது திணிப்பதின் மூலம் இந்துராஷ்ட்ரா-விற்கான பொதுகருத்தை உருவாக்க வேண்டுமென்ற திட்டத்தோடு செயல்படும் இவர்கள் ஆதிவாசி மக்களின் துயரங்களைக் கூறும் அருந்ததி ராயின் புத்தகத்தை கருத்தியல் திணிப்பு என்று குறைகூறுவது மிகவும் நகைப்பிற்குறியது.

துணைவேந்தரோ அல்லது RSS-BJP கும்பலோ பதறுகின்ற அளவிற்கு இது ஒன்றும் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட புத்தகம் அல்ல. பல சமூக அறிவியல் அறிஞர்களால் அங்கீகரிக்கப்பட்ட புத்தகமும் கூட. இந்த சர்ச்சைக்கு பிறகு இதன் e-copy ஏறத்தாழ பத்து லட்சம் பிரதிகள் பதிவிரக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் இரண்டாம் பதிப்பு வெளிவர உள்ளதாகவும் கூறுகின்றனர். வகுப்பறையில் வெறும் 20 மாணவர்கள் மட்டுமே படித்துகொண்டிருந்த புத்தக்கத்தை தற்போது லட்சக்கணக்கானோரிடம் கொண்டு சென்றுள்ளனர் சங்கிகள்.

***

2000-ம் ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை வளர்ச்சி என்ற போர்வையில் கொண்டுவந்தது மத்திய அரசு. அதில் மிக முக்கியமானது கனிம வளங்களை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்பது என்ற முடிவு. கனிமவளங்கள் மத்திய இந்திய மாநிலங்களான சார்கண்ட், சட்டீஸ்கர், ஒரிசா, மேற்குவங்கம் அகிய பகுதிளில் மிக அதிகம். இதனை கொள்ளையடிப்பதற்காக இம்மாநிலங்களின் காடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஆதிவாசிக் கிராமங்களை விரட்டுவதற்காக பல சட்டவிரோதமான வேலைகளை அரசின் மறைமுக உதவியுடன் போலீஸ் அரங்கேற்றியது.

சல்வாஜூடும் கலைப்பு: உச்ச நீதிமன்றத்தின் கோணல் பார்வை!நூற்றுக்கணக்கான ஆதிவாசி கிராமங்களை எரித்தது, பல நூறு ஆதிவாசி மக்களை மவோயிஸ்ட் என்று சொல்லி கொன்றது, நூற்றுக்கணக்கான ஆதிவாசி பெண்களை பாலியல் வன்முறை மற்றும் கொலை செய்தது, கிராம மக்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்தது என போலீசும் இராணுவத் துணைப்படையும் செய்த அட்டுழியங்களின் பட்டியல் மிக நீளமானது. இதற்காகவே ஆதிவாசி இளைஞர்களைக் கொண்டு சல்வா ஜூடும் மற்றும் கோயா கமாண்டோ என்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இவர்களின் மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைளையும் கண்டித்த உச்சநீதி மன்றம் இவ்விரு அமைப்புகளையும் கலைக்க மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றமே ஒப்புக்கொண்ட உண்மையை மாணவர்கள் தெரிந்து கொண்டால்தான் என்ன?

கார்ப்பரேட்களின் நலன்களுக்காக போலீசு மற்றும் துணை ராணுவப்படைகளால் துன்புறுத்தப்பட்டு தங்களுடைய சொந்த கிராமங்களிலிருந்து விரட்டப்பட்ட ஆதிவாசி மக்களினுடைய துயரங்களின் தொகுப்பே இந்நூல். சமூக அறிவியல் துறையில் மதிக்கதக்க ஆய்வு இதழான Economic and Political Weekly இந்த புத்தகத்தை பற்றிக் கூறும் போது “இது பெரிய கார்ப்பரேட்டுகளின் நலன்கள், இந்திய அரசு மற்றும் போலீசின் காட்டுமிராண்டித்தனம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பை அம்பலப்படுத்துகிறது” என்று எழுதி இருந்தது.  கார்ப்பரேட்களின் பாதுகாவலாக இருக்கும் RSS-BJP கூட்டம், அவர்களுடைய நலன்களுக்காக போலீஸ் உதவியுடன் மக்கள் கொல்லப்படுவதை அம்பலப்படுத்துவதைக் கண்டு பதறுகிறார்கள். இதனை அம்பலப்படுத்துபவர்களை தேசவிரோதிகள் என்று முத்திரைக் குத்துகிறார்கள். இதனை திசைத் திருப்ப மக்களிடமோ தேச வெறியையும் சாதி-மத வெறியையும் வேத-புராணக் குப்பைகளையும் பரப்புகின்றனர்.

*******

வகுப்பறை என்பது பல்வேறு கருத்துகளையும் சித்தாந்தங்களையும் விவாதம் செய்யக்கூடிய இடம். இது போன்ற விவாதங்களில் இருந்தே சமூக அறிவைப்பெற முடியும். இதிலிருந்தே புதிய சிந்தனைகளும் உருவாகும். ஆனால் இங்கோ என்ன படிக்க வேண்டும் என்பதை சங்க பரிவாரங்கள் கட்டளையிடுகின்றனர். அதை கல்லூரி நிர்வாகம் தன்னுடைய முதன்மைப் பணியாகச் செய்துமுடிக்கிறது. இந்தியா முழுவதும் இது போன்ற வேலைகளை ஒருங்கிணைந்த முறையில் ABVP செய்து வருகிறது.

கடந்த மாதம் கோவா மாநிலத்திலுள்ள தனியார் சட்டக் கல்லூரியில்(VM Salgaocar College of Law) பணிபுரியும் உதவிப் பேராசிரியரான சில்பா சிங் மீது ABVP யினர் கல்லூரி நிர்வாகத்தில் புகார் அளித்தனர். அப்புகாரில், பேரா. சில்பா சிங் தன்னுடைய அரசியல் அறிவியல் வகுப்பில் மனுஸ்மிருதி, ரோகித் வெமுலா, தாபோல்கர், கல்புர்கி, மாட்டுக் கறி ஆகியவற்றைப் பற்றி பேசியதாகவும் இவை இந்து மதத்திற்கு எதிராக உள்ளதாகவும் பேரா. சில்பா சிங் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தது.

ABVP-ன் நடவடிக்கைக்கு கல்லூரி பேராசிரியர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் வரவே பேரா. சில்பா சிங் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது. ஆனால் இங்கோ அருந்ததி ராய் புத்தகம் நீக்கப்பட்டதிற்கு ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களிடமிருந்து சிறு சலசலப்புக் கூட வரவில்லை (ஒரு சில பேராசிரியர்களைத் தவிர).  சில தினங்களுக்கு முன்பு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் துணைவேந்தரை சந்தித்து நீக்கப்பட்ட புத்தகத்தை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

படிக்க :
♦ ஜே.என்.யூ : ஏ.பி.வி.பி. குண்டர்கள் வெறியாட்டம் ! கொலைவெறி தாக்குதல்கள் !
♦ பேராசிரியரை காலில் விழவைத்த ஏ.பி.வி.பி. குண்டர்கள் !

வகுப்பறைகள் காவிகளின் மனம் நோகாதப்படி பாடம் நடத்த வேண்டிய ‘புனிதத் தளமாக’ மாற்றப்பட்டுவருகிறது. டெல்லி பல்கலைக்கழக பாடத்திலிருந்து இராமாயணம் பற்றிய கட்டுரையை நீக்கியது, உயர்கல்வி பாடத் திட்டங்களில் வேத-புராணக் கதைகளை கட்டாய பாடமாக்கியது, உயர்கல்வியின் அனைத்து மட்டங்களிலும் RSS – BJP ஆதரவாளர்களையே (பேராசிரியர்கள், துணை வேந்தர்கள் உட்பட) பணியமர்த்தி இந்துத்துவ-கார்ப்பரேட் திட்டங்களை அமல்படுத்துவது, இந்திய வரலாற்றை இந்துத்துவா திட்டத்திற்கேற்றவாறு திருத்தி எழுதுவது, கல்லூரி / பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர் தலைவர்களையும் முற்போக்கு பேராசிரியர்களையும் மிரட்டுவது அல்லது பொய் வழக்குகளின் மூலம் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்வது என சங்கப்பரிவாரங்களின் செயல்திட்டங்கள் விரிவடைந்து கொண்டே செல்கின்றன.

பள்ளி/கல்லூரிகளை தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது அவற்றை தங்களுடைய பாசிசக் கருத்துக்களை பரப்புவதற்கான தளமாக பயன்படுத்துவது என்பது பாசிஸ்டுகளின் செயல் வடிவங்களில் மிகவும் முக்கியமானதாகும். இதனை அதிகாரத்தின் உதவியோடு ஒருங்கிணைந்த முறையில் கடந்த ஆறு ஆண்டுகளாக RSS – BJP கூட்டம் செய்து வருகிறது. எழுத்தாளர் அருந்ததி ராய்-ன் புத்தகத்தை நீக்கியதும் இதன் தொடர்ச்சியே.  இதனை முறியடிப்பதும் அறிவியல் கண்ணோட்டத்தை மக்களிடம் கொண்டு செல்வதுமே ஆசிரியர்கள் பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் முன்னுள்ள உடனடிச் சமூகக் கடமையாகும்.

ராஜன்
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு
தொடர்பு : ccce.eduall@gmail.com
ஆதாரம் : The Wire, Frontline, The Wire

நவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு

2020, நவம்பர் – 26 : அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம் !

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,
வருகின்ற நவம்பர் 26-ம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. மோடி அரசின் தொடர்ச்சியான மக்கள் விரோத நடவடிக்கைகளே இந்தப் போராட்டத்திற்கான அறைகூவலாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

குறிப்பாக, மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, கார்ப்பரேட் முதலாளிகளது லாபத்தை அதிகரிக்கும் வேலைகளை மட்டுமே செய்து வருகிறது. கொரோனா நெருக்கடியால் பிழைப்பில்லாமல் மக்கள் அல்லல்பட்டு வரும் சூழலிலும், முதலாளிகளது சொத்து மதிப்பு 17% அதிகரித்துள்ளது. சந்தைப் போட்டி, விலை குறைப்பு, விளம்பரங்கள் மூலம் விற்பனையை அதிகரித்து லாபத்தை உயர்த்துவது என்ற நிலை காலாவதியாகிவிட்டது. தொழிற்சாலை உற்பத்தி குறைந்த கொரோனா பொது முடக்க நிலையிலும் முதலாளிகளது லாபம் உயர்கிறது. அதற்கேற்ற வகையில் தான் மோடி அரசு சட்டங்களை வடிவமைத்து வருகிறது.

படிக்க :
♦ தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா : ஒரு பார்வை | பா. விஜயகுமார்
♦ காவிரி – மின்சாரம் – தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தப் பார்க்கும் மோடி அரசு !

தொழிலாளர் சட்டத் திருத்தங்களும் அதனடிப்படையில் தான் செய்யப்படுகிறது. ஏற்கெனவே இருக்கின்ற 44 தொழிலாளர் நலச் சட்டங்களும் தொழில் நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை மட்டும் வரையறுக்கவில்லை. தொழில் நிறுவனங்கள் அவற்றைக் கடைப்பிடிக்கத் தவறும்பட்சத்தில், ஆலை நிர்வாகம் மீது விதிக்கப்பட வேண்டிய தண்டனைகள், அபராதங்கள் குறித்தும் அவற்றில் கூறப்பட்டிருக்கிறது. இதனுடன் இச்சட்டங்களின் அமலாக்கம் குறித்துக்  கண்காணிக்கவும், தொழிலாளி தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக முறையிடும்போது அதனை விசாரிப்பதற்கு முறையாக இயங்கக்கூடிய கண்காணிப்பு மற்றும் விசாரணை அமைப்புகளையும் அவற்றின் அதிகாரங்களையும் வரையறுத்திருக்கிறது. ஏட்டளவில் மட்டுமே உள்ள இச்சட்ட விதிகளை கூட கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக திருத்தி தனது கார்ப்பரேட் சேவையை நிருபிக்கிறது மோடி அரசு.

தொழிலாளர் சட்டத் திருத்தம் பற்றிய தொழிற்சங்கங்களின் கருத்தை ஒரு பேச்சுக்குக் கூட கேட்கவில்லை. அரசின் தொழிலாளர் துறை அதிகாரிகளின் பரிந்துரைகள் கூட ஏற்கப்படாமல் குப்பைக் காகிதமாக்கிவிட்டு, ஒவ்வொரு திருத்தத்தையும் கார்ப்பரேட்டுக்களின் கையசைவுக்கு ஏற்றபடி மாற்றியுள்ளது மோடி கும்பல்.  இனி, தொழிலாளர்களுக்கென காகிதத்தில் உள்ள சட்டங்களைக் கூட பேசக் கூடாது, தொழிலாளர்கள் சங்கம் அமைத்து அமைப்பாகத் திரளக் கூடாது, பணிக்காலத்தில் குறைந்தபட்ச ஊதியம் கிடையாது, பணி மூப்புக்குப் பிறகான வயதான காலத்தில் ஓய்வூதியம், பணிக்கொடை என எதுவும் கேட்கக்கூடாது என்பதை சட்டரீதியாகவே நிலைநாட்டியுள்ளது.

மறுபுறம், தொழிற்சங்கம் அமைப்பது, கூட்டுப்பேர உரிமை, அதற்கான சட்டப்பூர்வ தொழிலாளர் நடவடிக்கைகளை ஒடுக்கும் வகையில் வேலைநிறுத்த உரிமையை அடியோடு ஒழித்துவிட்டது. தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர் மீதான தண்டனை நடவடிக்கைகளைக் கடுமையாக்கியுள்ளது. இவற்றை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, நாடாளுமன்றத்தில் உள்ள தனது பெரும்பான்மை பலத்தின் மூலம் அவசர சட்டங்களாகக் கொண்டு வந்து விவாதங்கள் ஏதுமின்றி நிறைவேற்றி விட்டது.

தொழிலாளர் உரிமையை ஒழித்துக் கட்டி தொழிற்துறைக் கார்ப்பரேட்டுக்களுக்கு முதல்சுற்று வேலையை முடித்த மோடி அரசு, வேளாண் சட்டத் திருத்தங்கள் மூலம் விவசாயிகளின் உரிமைகளை ஒழித்து, விவசாயத்தில் கார்ப்பரேட்டுக்களைப் புகுத்த இரண்டாம் சுற்று வேலையைத் துவங்கியுள்ளது. இந்தியா விவசாய நாடாக இருந்தும், விவசாயிகள் பெரும்பான்மையாக இருந்தும் விவசாயத் தொழில் லாபமீட்டும் தொழிலாக இல்லை. இதற்கு அரசின் விவசாயக் கொள்கைகளும், விவசாயச் சட்டங்களும் தான் காரணம். தற்போது இத்துறையில் கார்ப்பரேட்டுக்கள் ஈடுபட உள்ளதால், அவர்களுக்கு ஏற்ற வகையில்தான் திருத்தங்களைச் செய்துள்ளது மோடி அரசு.

அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம், விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம், விவசாயிகளுக்கு (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) விலை உத்திரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவை சட்டம் ஆகியவை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் எனவும், இந்த மசோதாக்களின் விதிகள், ‘விவசாய விளை பொருட்களில் தடையற்ற வர்த்தகத்தை அனுமதிப்பதோடு, விவசாயிகள் தங்களது விருப்பப்படி தனியார் முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்’ எனவும் கூறுகிறது. எனவே, விவசாயிகள் ‘முன்னை’ விட அதிகம் பயனடைவார்கள் எனவும் அரசு கூறுகிறது.

ஆனால், அரசாங்கத்தின் வாக்குறுதிகளை விவசாயிகள் யாரும் நம்பவில்லை. சந்தையை நிர்ணயிக்கும் முதலாளிகளிடம் பேரம் பேசும் திறன் விவசாயிகளிடம் இல்லை. சாகுபடி செய்ததை சேமித்து வைக்கும் அடிப்படை கட்டமைப்பு வசதியுமில்லை. சேமித்து வைத்து விற்பனை செய்யும்வரை விவசாயிகளை கடன் தொல்லை விட்டுவைப்பதில்லை. கார்ப்பரேட் தயவில்தான் விவசாயிகள் வாழவேண்டிய நிலை இருக்கும். பாஜக அரசால் கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய வேளாண் சட்டங்கள் இந்த நிலைமையை இன்னும் மோசமாக்கவே செய்யும். இதனை அனுபவித்து வரும் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்டு நாடு முழுவதும் பரந்துபட்ட அளவில் விவசாயிகள் இந்த வேளாண் மசோதாக்களை எதிர்த்து போராடி வருகின்றனர்.

கிராமப்புறங்கள் வரை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் அரசு கொள்முதல் செய்த நிலை படிப்படியாக ஒழிக்கப்பட்டுவிட்டது. தற்போது உள்ள அரசின் மூலமான கொள்முதலும் படிப்படியாக குறைந்து வருகிறது. அல்லது வியாபாரிகள் – அரசு அதிகாரிகளின் கூட்டுச்சதி மூலம், அரசின் கொள்முதல் தடுத்து மண்டி வியாபாரிகளின் கொள்ளைக்கு திருப்பப்படுகிறது.

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் இருக்கும் போதே அரசு கொள்முதல் உறுதிசெய்யப்படாத பயிர்களை திறந்தவெளி சந்தையில் குறைந்த விலைக்கு விற்று விவசாயிகள் நட்டமடைகின்றர். அதனால், தாங்கள் கண்ணும் கருத்துமாக வளர்த்த காய்கறிகளை வீதியில் கொட்டுவது, வயலிலேயே பயிர்களை எரிப்பது, அதன் மீதே உழுது அழிப்பது என பெற்ற பிள்ளையையே கொல்லும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். பிள்ளையைக் கொல்ல முடியாதவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

விதை, உற்பத்தி முதல் கொள்முதல் வரை, விவசாயம் மொத்தமும் கார்ப்பரேட்டுக்களின் கையில் போனால், தொழிலாளர்களைப் போலவே விவசாயிகளும் அவர்களுக்கு நவீன கொத்தடிமைகளாக மாற்றப்பட்டு விடுவர். மோடி அரசின் தொழிலாளர் மற்றும் வேளாண் சட்ட திருத்தங்கள் தொழிலாளி – விவசாயிகளுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சனை அல்ல. உணவு உண்ணும் ஒவ்வொரு மனிதனின் பிரச்சனை.

மனிதனின் உயிர் வாழ்வுக்கு ஆதாரமான உணவுப் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் கார்ப்பரேட்டுக்களின் கையில் போகும். கார்ப்பரேட்டுக்கள் வைப்பது தான் விலையாக இருக்கும். எந்த விலையாக இருந்தாலும் வாங்க முடிந்தவர்கள் மட்டுமே அதை சாப்பிட்டு உயிர் வாழ முடியும். ஏழைகளாக இருக்கும் பெரும்பான்மை அடித்தட்டு உழைக்கும் மக்கள் செத்து மடிய வேண்டியது தான்.

இவற்றை எல்லாம் மறைக்க இந்திய – சீன எல்லைப் பிரச்சினை, ராமன் கோவில், கந்த சஷ்டி கவசம், வேல் யாத்திரை என இடத்திற்கு ஏற்ற வகையில் மக்களின் மத உணர்வையும், தேசிய வெறியையும் தூண்டி விட்டு திசை திருப்பி வருகிறது ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல். இதை எதிர்ப்பவர்களையும், கேள்வி கேட்பவர்களையும் மிரட்டுவது, கொலை செய்வது, ஊபா போன்ற கொடிய சட்டங்களைக் கொண்டு ஒடுக்குவது தனது பாசிச நடவடிக்கைகளை ஏவி வருகிறது.

எனவே, உழைக்கும் மக்களுக்கு ஒட்டுமொத்த எதிரியாக நம் முன் நிற்பது மோடி என்ற தனிநபர் அல்ல. மாறாக, மோடியை இயக்கும் ஆர்.எஸ்.எஸ். காவி சித்தாந்தமும், கார்ப்பரேட் அரசியலும் இணைந்த கார்ப்பரேட் காவி பாசிசம் தான். இந்த கார்ப்பரேட் – காவி பாசிசத்தை ஒட்டு மொத்தமாக வீழ்த்த, நவம்பர் 26 – அகில இந்திய வேலை நிறுத்தத்தை, அரசியல் போராட்டமாக மாற்றுவோம் !

* ஆலைகளையும், வயல்களையும் விட்டு வீதியில் இறங்குவோம் !
* மீண்டும் ஒரு டெல்லிக்கட்டைத் துவக்குவோம் !

இவண்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தமிழ்நாடு – புதுவை.
தொடர்புக்கு : 94444 42374

நம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி குறித்த பார்வை (BNT162b2 தடுப்பூசி)

நேற்றைய பொழுது முகநூல் தொடங்கி ட்விட்டர் மற்றும் ஏனைய பல இணைய தளங்களில் “ஃபைசர்(Pfizer) மற்றும் பயோஎன்டெக் ( BioNTech) கண்டறிந்துள்ள தடுப்பூசி 90% சிறப்பாக வேலை செய்கிறது” என்ற செய்தியைக் காண முடிந்தது
ஃபைசர் என்பது அமெரிக்காவில் இருந்து இயங்கும் உலகின் மிக முக்கிய மருந்து ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிறுவனமாகும். BioNtech என்பது ஜெர்மனியில் இருந்து இயங்கும் மருத்துவத்துறையில் உயிர் தொழில்நுட்பத்தை புகுத்தி அதனைக் கொண்டு ஆராய்ச்சிகள் செய்து புதிதாக மருந்துகள் தீர்வுகளைக் கண்டறியும் நிறுவனமாகும்.

அப்படியே ஒரு நூற்றாண்டு பின்னோக்கிப் பார்த்தால் இவை இரண்டும் முதல் உலகப்போரின் எதிரி நாடுகள். இரண்டாம் உலகப்போரிலும் அதே நிலை தான்.
ஆனால் இன்று அறிவியல் மற்றும் பெருந்தொற்றுக்கு எதிராக புதிதாக ஒன்றைக்கண்டறிய வேண்டும் என்ற வேட்கை இரண்டு நாடுகளையும் ஒன்றிணைத்திருப்பது சிறப்பு.

💉அவர்கள் கண்டறிந்துள்ள தடுப்பூசி எந்த வகையைச் சேர்ந்தது??
இவர்கள் கண்டறிந்துள்ள தடுப்பூசி mRNA வகையைச் சேர்ந்த தடுப்பூசியாகும்.

💉 அது என்ன mRNA தடுப்பூசி?
எந்திரன் படத்தில் எப்படி ஒரு சிட்டி ரோபோ பல சிட்டிகளை உருவாக்க ரெட் சிப் உபயோகப்பட்டதோ அதைப்போல ஒரு வைரஸ் தன்னைப்போன்ற பல வைரஸ் பிரதிகளை உருவாக்க mRNA ( messenger RNA) தேவை.

கொரோனா விசயத்தில் அது ஒரு RNA வைரஸ். அது மனித உடலுக்குள் சென்று அங்குள்ள செல்களினுள் அதன் mRNA மூலம் பிரதிகளை உருவாக்கி தொற்றை ஏற்படுத்துகின்றன.

இதே தொழில் நுட்பத்தைத்தான் இந்த வகை தடுப்பூசிகளும் கடைபிடிக்கின்றன. ஆனால் வைரஸில் இருந்து mRNA மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு அதிலும் குறிப்பிட்ட மூலக்கூறை மட்டுமே இந்த தடுப்பூசி பயன்படுத்துவதால் தடுப்பூசி போடுவதால் தொற்று ஏற்படும் அபாயம் (vaccine associated/induced infection) மிக மிக குறைவு. மேலும் தேவையற்ற விரும்பத்தகாத நிகழ்வுகளும் இதில் குறைவாக இருக்கும்.
எனவே இவ்வகை புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வெகு விரைவாக தடுப்பூசிகளை தயாரிக்க முடியும்.

படிக்க :
♦ கொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்
♦ கொரோனா வைரஸ் குறித்த மூடநம்பிக்கைகளும் ! உண்மைகளும் !

💉 ஃபைசர்- பயோஎன்டெக் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசியின் சாதக பாதகங்கள் என்ன ???
ஃபைசர் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறியிருப்பதாவது
“இந்த தடுப்பூசி 90% திறனுடன் கொரோனாவை தடுக்கிறது; இது மருத்துவ அறிவியலுக்கு சிறந்த நாளாகும்” என்று அறிவித்துள்ளது.

ஆனால் இது இந்த தடுப்பூசி கொண்டு நடந்து வரும் மூன்றாம் கட்ட பரிசோதனையின் ( phase III trial) இறுதி முடிவன்று. இது ஒரு இடைப்பட்ட முடிவாகும். ( Interim result)
அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில், அர்ஜெண்டினா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி ஆகிய ஆறு நாடுகளில் 43,500 தன்னார்வலர்கள் கலந்து கொண்டிருக்கும் இந்த ஆய்வில் முதல் தடுப்பூசி அதற்கடுத்து மூன்று வார இடைவெளியில் மற்றொரு முறை தடுப்பூசி போடப்பட்டு அதற்கடுத்த ஏழு நாட்களில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு சக்தி உண்டாகியிருப்பதாக ஃபைசர் நிறுவனம் கூறியுள்ளது.

இருப்பினும் இந்த முடிவு கொரோனா தொற்று உண்டான முதல் 94 தன்னார்வலர்களின் தன்மையை மட்டுமே வைத்து கூறப்பட்டிருப்பதால் நாம் முழு முடிவு வரும் வரை காத்திருப்பதில் தவறில்லை. மேலும் ஃபைசர் நிறுவனம் கூறும்பொழுது ” இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த முழுத்தகவல்கள் நவம்பர் மூன்றாவது வாரத்தில் தனக்கு கிடைக்கும். அதன் பிறகு அமெரிக்காவில் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகத்தின் முன் அனுமதியை நாட வேண்டும். பிறகு தடுப்பூசியை பெருமளவு உற்பத்தி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளது.

இதற்கு முன் ஆகஸ்ட் 2020, இந்த தடுப்பூசியைக் கொண்டு 195 பேரிடம் செய்யப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் (Phase I clinical trial) இருபத்தோரு நாள் இடைவெளியில் வழங்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளுள். இறுதி தடுப்பூசி வழங்கப்பட்ட ஏழு நாட்களுக்குப் பிறகு 18-55 வயதுக்குட்பட்ட தன்னார்வலர்களுள் இயற்கையாக கொரோனா தொற்று அடைந்தவர்களை விட 3.8 மடங்கு அதிகமாக கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பதும் 65-85 வயதுக்குட்பட்டவர்களுள் இயற்கையாக தொற்று அடைந்தவர்களை விட 1.6 மடங்கு அதிகம் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பதாகவும் தடுப்பூசி வழங்கப்பட்டவர்களுள் 20% பேருக்கு சாதாரண காய்ச்சல் ஏற்பட்டதாகவும் ஆய்வு முடிவில் தெரிவித்திருந்தது.

💉 இந்த தடுப்பூசியின் ப்ராக்டிகல் சிக்கல்கள் என்ன???
இந்த தடுப்பூசியி்ல் RNA எனும் மெல்லிய மரபணுக்கூறுகள் இருப்பதால் இவற்றை அதி உறை குளிர்( Ultra freezing cold environment ) சூழ்நிலையில் பாதுகாக்க வேண்டும்
மைனஸ் 80 டிகிரி செல்சியஸ் குளிரில் வைத்திருந்தால் ஆறு மாத காலம் வீரியத்துடன் இருக்கும் மைனஸ் 20 டிகிரிக்கு குறைந்தால் பதினைந்து நாட்கள் மட்டுமே வீரியத்துடன் இருக்கும்.( மைனஸ் இருபது டிகிரி என்பது நமது ஃப்ரிட்ஜில் இருக்கும் டீப் ஃப்ரீசரில் நிலவும் குளிர்). 2 முதல் 8 டிகிரியில் ஐந்து நாட்கள் மட்டுமே வீரியத்துடன் இருக்கும். (இது நமது ஃப்ரிட்ஜில் நிலவும் குளிர்). இந்த எட்டு டிகிரிக்கு மேல் சில நிமிடங்கள் இருந்தாலும் தடுப்பூசி வீரியத்தை இழந்து விடும்.

இது குறித்து அமெரிக்காவின் புகழ்பெற்ற மேயோ மருத்துவமனையின் முக்கிய மருத்துவர் கருத்து தெரிவிக்கும் போது “இத்தகைய உறை குளிரில் மைனஸ் எண்பது டிகிரியில் வாக்சினை பராமரிக்கும் வசதி இங்கு மேயோவில் கூட கிடையாது. இங்கே இல்லை எனும் போது அமெரிக்காவில் வேறு எங்கும் இருக்க வாய்ப்பில்லை” என்கிறார்.

இந்த தடுப்பூசியை கண்டறிவது சவால் என்றால் அதை முறையாக பராமரித்து உற்பத்தி செய்யும் இடத்தில் இருந்து அதை உபயோகப்படுத்தும் இடம் வரை வீரியத்தை இழக்காமல் கொண்டு சேர்ப்பது வளர்ந்த வல்லரசு நாடுகளான அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளுக்கே பெரிய சவாலாக அமையக் காத்திருக்கின்றன.

💉 இந்த தடுப்பூசி எப்போது வெகுஜனப் புழக்கத்துக்கு வரும் ???
தற்போது மிக குறைந்த அளவிலேயே இந்த தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. FDA அனுமதி பெற்றவுடன் இந்த வருட இறுதிக்குள் 5 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய இயலும்.

அடுத்த வருட இறுதிக்குள் 103 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க இயலும் என்று ஃபைசர் நிறுவனம் கூறியுள்ளது. ஒருவருக்கு இரண்டு ஊசிகள் தேவை என்பதால் இந்த வருட இறுதிக்குள் இரண்டரை கோடி பேருக்கு மட்டுமே இந்த தடுப்பூசி கிடைக்கும்.
இப்போதே பிரிட்டன் – மூன்று கோடி தடுப்பூசிகளை ஆர்டர் செய்து காத்திருக்கிறது. அமெரிக்காவில் இந்த தடுப்பூசியி்ன் விலை $19.50 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொழுது அதன் விலை இன்னும் சற்று அதிகமாகும். ஒரு தடுப்பூசியின் விலை ₹1500 முதல் ₹2000 வரை இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. இந்த தடுப்பூசி அடுத்த வருடத்தின் மத்தியில் அல்லது கடைசியில் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு கிடைக்கலாம். அதற்குள் வேறு சில விலை குறைந்த, எளிதாக பாதுகாக்க முடிந்த தடுப்பூசிகள் நமக்கு கிடைத்திருக்கக்கூடும்.

இப்போதைக்கு அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகளில் வாழும் மருத்துத்துறை ஊழியர்கள், வயது முதிர்ந்தோர், பணம் படைத்தோர் இவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.

⛔மைனஸ் எண்பது டிகிரி உறை குளிரில் பராமரிப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள்
⛔இந்தியா போன்ற பெரிய நாட்டுக்குத் தேவையான உற்பத்தி அதனை இறக்குமதி செய்தல் மற்றும் அதனால் ஏறும் விலை, இவை இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க இயலாது.

இந்தியாவின் மிகப்பெரிய மக்கள் தொகைக்கு எளிதில் கிடைக்கும் விலையில் அரசாங்கங்கள் எளிதில் வாங்கி மக்களுக்கு இலவசமாக கொடுக்கும் வகையில் எளிதான முறையில் பாதுகாப்பு செய்யும் வசதிகளுடன் இருக்கும் தடுப்பூசிகளே நம் நாட்டில் வெற்றி பெறும் என்று நினைக்கிறேன்.

எனினும் மருத்துவ அறிவியல் மற்றும் உயிர் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு இத்தனை வேகமாக ஒரு பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசியைக் கண்டறிந்துள்ள ஃபைசர் மற்றும் ப்யோ என்டெக் நிறுவனத்துக்கும் பூங்கொத்துகள்.

0-0-0

கொரோனா தடுப்பூசி குறித்த அப்டேட்

அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோடெக் நிறுவனமும் இணைந்து கண்டறிந்துள்ள மெசஞ்சர் RNA தொழில்நுட்பத்தை வைத்து உருவான தடுப்பூசி குறித்து சில நாட்களுக்கு முன்னர் எழுதியிருந்தேன்

மூன்றாம் கட்ட Phase III பரீட்சையை முறையாகக் கடந்து அதிகாரப்பூர்வமாக முடிவுகளை வெளியிட்டுள்ள உலகின் முதல் கொரோனாவுக்கான தடுப்பூசி என்ற பெயரை இந்த வேக்சின் பெற்றுள்ளது.

இந்த தடுப்பூசியின் பெயர் BNT162b2. ஜூலை 27-ம் தேதி ஆரம்பித்த இந்த சோதனையில் நவம்பர் 13-ம் தேதி வரை 41,135 பேருக்கு முதல் டோஸ் அதற்குப்பிறகு மூன்று வார இடைவெளியில் மற்றொரு டோஸ் வழங்கப்பட்டுள்ளது .

வேக்சின் வழங்கப்பட்டவர்கள் ஒரு குழுவிலும் . இவர்கள் VACCINE GROUP என்று அழைக்கழ்படுவர்; வேக்சின் வழங்கப்படாதவர்கள் மற்றொரு குழுவிலும் இருப்பர். இவர்கள் PLACEBO GROUP என்று அழைக்கப்படுவர்.

இவர்களை கடந்த ஜூலையில் இருந்து தொடர்ந்து கண்காணித்து வந்ததில் 170 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அந்த 170 பேர்களில் 162 பேர் வேக்சின் போடப்படாத PLACEBO GROUP ஐச் சேர்ந்தவர்கள்; 8 பேர் மட்டுமே வேக்சின் வழங்கப்பட்ட VACCINE GROUPஐச் சேர்ந்தவர்கள்.

படிக்க :
♦ தடுப்பூசிகள் உண்மையிலேயே நோய்களைத் தடுக்கின்றனவா ?
♦ தடுப்பூசி மருந்து தனியாருக்கு – பிஞ்சுக் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வக்கிரம்

இதன் மூலம் இந்த தடுப்பூசி 95% சிறப்பாக கொரோனா தொற்றைத் தடுத்துள்ளது என்பதை அறியமுடிகிறது. மேலும் கொரோனா தொற்று அடைந்தவர்களில் 10 பேர் தீவிர கொரோனா தொற்றுக்கு உள்ளாயினர். அவர்களுள் 9 பேர் வேக்சின் வழங்கப்படாத குழுவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மட்டுமே வேக்சின் வழங்கப்பட்ட குழுவைச் சேர்ந்தவர்.

65 வயதுக்கு மேற்பட்டவரிடம் தொற்று ஏற்படாமல் தடுத்ததில் 94% மார்க் வாங்கி பாஸாகி இருக்கிறது இந்த தடுப்பூசி. தடுப்பூசியின் நோய் தடுக்கும் திறன் ஓகே. பாதுகாப்பில் எப்படி என்ற கேள்விக்கான விடை இதோ ..

தடுப்பூசி வழங்கப்பட்ட 8000 பேரிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தில்
அரிதி பெரும்பான்மை மக்களுக்கு தடுப்பூசி எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தவில்லை என்றும் இரண்டாம் தடுப்பூசி வழங்கப்பட்ட சில நாட்களுக்கு 3.8% பேருக்கு உடல் சோர்வு (Fatique) 2% பேருக்கு தலைவலி இருந்துள்ளது. இளையோரை விட முதியோருக்கு இந்த பக்கவிளைவுகளும் குறைவான அளவிலேயே நிகழ்ந்துள்ளன.

இந்த தடுப்பூசி வழங்கப்பட்டவர்கள் இன்னும் இரண்டு வருடம் தொடர்ந்து கண்காணிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசியின் முக்கியமான பின்னடைவாக கருதப்படுவது, மைனஸ் எழுபது டிகிரி செல்சியஸ் குளிரில் இந்த வேக்சினை பாதுகாக்க வேண்டும்.

இருப்பினும் ஃபைசர் நிறுவனம் உறை பனி நிரப்பப்பட்ட கொள்கலன்களில் இந்த வேக்சினை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் அசகாய சூரப்பணியை ஏற்று செய்யும் திறன் அதனிடம் இருப்பதாகக் கூறுகிறது.

ஃபைசர் நிறுவனம் இந்த ஆய்வறிக்கையை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுக் கழகத்திடம் சமர்பித்து அவசர கால முன் அனுமதி பெற்ற பிறகு அந்த தடுப்பூசியை அதிகமாக உற்பத்தி செய்து விநியோகம் செய்ய முடியும். நவீன மருத்துவ அறிவியல் பெருந்தொற்றுக்கு எதிராக செயல்படும் விதம் உண்மையில் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. தொடர்ந்திருப்போம்

Dr.A.B. ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

disclaimer

உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் || நவம்பர் 26

அனைவரும் பங்கேற்று வரலாறு படைப்போம் !
மக்கள் உழைப்பையும் நாட்டின் வளங்களையும் சூறையாடும் கார்ப்பரேட் -காவி பாசத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம் !

அன்பார்ந்த தொழிலாளர்களே!

விலைமதிக்க இயலாத இரயில்வே குத்தகைக்கு, BSNL, LIC பொதுத்துறை பங்குகள் விற்பனை, மொத்தமாக தொழிலாளர் சட்டங்கள் திருத்தம், புதிய வேளாண் சட்டங்கள், புதிய கல்விக் கொள்கை, சுற்றுசூழல் திருத்தச் சட்டம், ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாக கிரிமினல் சட்டங்களில் திருத்தங்கள் என கொரானா நெருக்கடியிலே தினமொரு திருத்தங்கள் செய்து மொத்த நாட்டு மக்களையும் அடக்கி, ஒடுக்கி மக்களின் பல நூறாண்டு உழைப்பையும் நாட்டின் வளங்களையும் கார்ப்பரேட்களுக்கு தாரை வார்த்துக்கொண்டிருகிறது, காவி பாசிஸ்டுகளின் தலைமையிலான மத்திய அரசு.

தொழிலாளர்கள் சட்டங்கள் திருத்தம்: இதன் மூலம் பணிநிரந்தரமில்லாமல் அற்பக் கூலிக்கு வரம்பில்லாமல் உழைப்பை சுரண்டுவதை உத்திரவாதம் செய்கிறது. நீம், FTE, அப்ரண்டீஸ், காண்ட்ராக்ட் என தொழிலாளர்களின் உழைப்பை சுரண்ட பல திட்டங்கள் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

படிக்க :
♦ நவம்பர் 26 : தொழிற்சங்கங்களின் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் !
♦ அர்னாப் கோஷ்வாமி கைது : சிவசேனா கொடுத்த ஷாக் !!

புதிய வேளாண் சட்டங்கள் : கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயத்தில் ஈடுபடுவதற்கு வசதியாகவும் சிறு – குறு விவசாயிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லவும் வழிவகுக்கிறது. நாட்டின் சந்தைவாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்த முடியும் எனக் கூறும் அரசு 74 ஆண்டுகளில் அதனை ஏன் செய்யவில்லை என்ற மக்களின் கேள்வியிலிருந்தே விவசாயிகள் பக்கம் அரசு இல்லை என்பது விளங்கிவிடும். விளைபொருளுக்கு பொருத்தமான விலை வழங்காமல் சந்தைவாய்ப்பு என அரசு கூறுவது நட்டாற்றில் விவசாயிகளை இறக்கிவிடுவதாகும்.

பொதுத்துறைகள் தனியார்மயம் : மக்களின் வரிப்பணத்தில் கட்டியெழுப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் என்ற பெயரில் கார்ப்பரேட் சூறையாடலுக்கு திறந்துவிடப்படுகிறது. பல லட்சம் கோடி மதிப்புள்ள 74 ஆண்டுகளில் வளர்க்கப்பட்ட பொதுத்துறைகள் அற்பத்தொகைக்கு குத்தகை, பங்கு விற்பனை என்பது உலகிலேயே மிகப்பெரிய ஊழல், மோசடி என்றால் மிகையில்லை.

சுற்றுசூழல் திருத்தச் சட்டங்கள் (ElA) : இயற்கை வளங்களை கார்ப்பரேட் கம்பெனிகள் சூறையாடுவதில் இருக்கககூடிய கட்டுப்பாடுகளை நீக்கி நாட்டை பாலைவனமாக்கவும் மக்கள் கேள்வி கேட்கும் உரிமையையும் பறித்துவிடுகிறது.

புதிய கல்விக் கொள்கை (NEP) : 3, 5, 8, 10, 11, 12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் என வடிகட்டுவதும் பள்ளியிலே தொழிற்கல்வி என்பது மாணவர்களின் கல்வி உரிமையை பறித்து குறைந்த கூலிக்கு வேலையாட்களை தயார்படுத்தவே எத்தணிப்பதாகும்.

கிரிமினல் சட்டங்களில் திருத்தம் : இந்த அரசு கார்ப்பரேட் கொள்ளை துணைபோகிறது, மற்றொரு கிழக்கிந்திய கம்பெனியாட்சி என்று யாரேனும் விமர்ச்சித்தால் விசாரணையின்றி, பிணை கூட இல்லாமல் சிறையிலடைக்கவே சட்டதிருத்தங்கள் நடக்கின்றது.

அயோத்தியில் ராமர் கோவில், 3 ஆயிரம் கோடியில் படேலுக்கு சிலை என இந்த ஆட்சி ஏதோ இந்துக்களின் நலனுக்கான ஆட்சி என்று ஒரு தோற்றத்தை உருவாக்கப்படுகிறது. மத்தியில் ஆளும் பாஜக மோடி தலைமையிலான ஆட்சி தொடங்கியதிலிருந்து பணமதிப்பு நீக்கம், GST வரிக்கொள்கை முதல் புதிய வேளாண் சட்ட திருத்தங்கள் வரை இந்நாட்டில் ஆகப் பெரும்பான்மையான இந்துக்களை நாடோடிகளாக மாற்றியிருக்கிறது. இன்றளவில் சிறு-குறு தொழில்முனைவோர், விவசாயிகளை தற்கொலைக்கும் தள்ளியிருக்கிறது. இந்நாட்டின் பெரும்பான்மை இந்து மக்களையே காவு கேட்கும் இந்த ஆட்சியை நீடிப்பதற்கான காரணம் என்ன கேள்வியிலிருந்து தான் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை அரசியல் போராட்டமாக மாற்றி அமைக்கமுடியும்.

அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் மூன்றாம் உலக நாடுகளை கொள்ளையடிக்க கொண்டு வந்ததுதான் புதிய தாராளவாதக் கொள்கையாகும். இது தற்போது காட், காட்ஸ் ஒப்பந்தங்கள் மூலம் இந்தியா உட்பட பல நாடுகளை சூறையாடிக்கொண்டிருக்கிறது.

இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ அதிக உற்பத்தி, குறைந்த கூலி கொள்கையால் மக்கள் வாங்கும் சக்தியை இழந்ததால் சர்வதேச அரங்கில் வீழ்ந்து கிடக்கும் முதலாளித்துவத்தை மீட்கவும் ஈடுகட்டுவதற்காகவும் சர்வதேச நிதி மூலதன ஆதிக்கம் கும்பல் கொடுக்கும் அழுத்தங்களுக்கு ஏற்ப அதாவது, குச்சியின் அசைவுக்கு ஆடும் குரங்கைப் போல மத்தியில் ஆளும் BJP ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. ஒருவேளை சர்வதேச கார்ப்பரேட் கொள்ளைக்கு உட்பட்டு ஆட்சி நடத்த வில்லை எனில் BJP ஆட்சி செய்ய இயலாது. கோடிக்கணக்கான இந்து மக்கள் பாதிக்கப்பட்டாலும் சர்வதேச நிதி மூலதன ஆதிக்கம் கும்பலுக்கு கொள்ளையடிக்க வசதியாக விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் , இயற்கைவளங்கள், பொதுத்துறைகள் தொடர்புடைய சட்டங்களை எல்லாம் திருத்திக் கொண்டிருக்கிறது, BJP தலைமையிலான மத்திய அரசு.

மற்றொரு பக்கம், BJP தனது கார்ப்பரேட் சேவையை மறைக்கவும் மக்களை திசை திருப்பவும் குடியுரிமை சட்ட திருத்தம், பாகிஸ்தான் தீவிரவாதம், சீனா ஊடுருவல், முஸ்லிம், கிறிஸ்தவர்கள் அன்னியக் கைக்கூலிகள், வங்கதேச அகதிகள் ஊடுருவல் என்று பல வழிகளில் ஆட்சியை தக்கவைக்க மக்களிடையே விரோத மனப்பான்மையையும், முரண்பாட்டையும் விசவிதைகளையும் திணித்துக் கொண்டிருக்கிறது.

உள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை!

உதாரணமாக : இந்த புதிய தாராளவாதக் கொள்கை அமல்படுத்திய பிறகு இந்த நாட்டின் ஆறு, ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. நகரங்கள் குப்பை மேடாக மாறிக்கொண்டிருக்கிறது. குடிநீர் கூட விலை கொடுத்து வாங்கவேண்டும் என்ற கட்டாயம் வந்துள்ளது. மேலும் இந்தப் பொருளாதாரக் கொள்கை அடுத்த 25 ஆண்டுகள் நீடித்தால் இந் நாட்டு மக்கள் உணவுக்கும் சுகாதாரத்திற்கும் அல்லாடும் நிலைமை வந்து நிற்கும். உள்நாட்டு வளங்கள் சூறையாடப்பட்டு ஏற்படும் பற்றாக்குறைக்கு உள்நாட்டுக் குழப்பங்கள் தான் ஏற்படும். பார்ப்பன ஆர்எஸ்எஸ் பிஜேபி தலைமையானது இந்த நாட்டு மக்களின் பிரச்சனையை தீர்க்க ஒருபோதும் தயாராக இருக்காது. காரணம் என்னவென்றால் மனுதர்ம விதிகளின்படி உழைக்கும் மக்கள் (சூத்திரன்) பட்டினியில் உள்நாட்டிலே அகதியாக அலைவதில் அவர்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. வடமாநில மக்கள் 10 கோடி பேர் அலைவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு தானே ஆட்சி செய்து வருகிறார்கள் .

மேலும், ஒக்கி புயல், கஜா புயலுக்கு BJP தலைமையிலான அரசு தமிழக மக்களைக் காப்பாற்ற தேவையான எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. அதுபோல தற்போது மழை வெள்ளத்தால் நெருக்கடி ஆகும்பொழுது மக்களை உதவ இந்த அரசு தயாராக இல்லை.

கொரானா வைரஸ் : மருத்துவம், சுகாதாரத்துறைக்கு பல ஆயிரம் கோடி ஒதுக்கினாலும் போதிய ஆய்வுகள் குறித்த விவரங்கள் இல்லாமல் கைதட்டவும் விளக்கேற்றவும் சொன்னதன் மூலம் அம்பலப்பட்டது, மோடி தலைமையிலான மத்திய அரசு. மற்றொரு பக்கம் கார்ப்பரேட் கம்பெனிகள் பல ஆயிரம் தொழிலாளர்கள் வைத்துக்கொண்டு ஆலைகளை இயக்கி கொள்ளையடிக்கவும் நிபந்தனைகளை தளர்த்திவிட்டிருகிறது. இது மொத்ததில் தோல்வியடைந்து, அம்பலப்பட்டு எதிர்நிலைக்கு சென்றுவிட்ட அதிகார கட்டமைப்பாகும்.

இது கார்ப்பரேட் நலனுக்கான அரசு என்பது அம்பலமாகிவிட்டது !
பொதுமக்கள் நலனில் அக்கரையில்லை என்பதும் தெளிவாகிவிட்டது !

தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், சிறு-குறு தொழில்முனைவோர் என அனைவரும் பங்கேற்போம்!
நாட்டின் சட்டங்கள், திட்டங்கள் வகுப்பதில் மக்களுக்கு அதிகாரம் வேண்டுமென முழங்குவோம்!
மக்களையும் நாட்டையும் சூறையாடும் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை முறியடிக்க அணிதிரள்வோம் !

மத்திய அரசே!
💥 மக்கள் விரோத சட்ட திருத்தங்களை திணிக்காதே!
💥கார்ப்பரேட் கொள்ளைக்கு இயற்கை வளங்களையும் பொதுத்துறைகளையும் திறந்துவிடாதே!
💥 மக்களின் வாழும் உரிமைகளை பறிக்காதே!

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு : 97880 11784

உட்கட்சிப் போராட்டம் கட்சியைக் கலைப்பதற்கல்ல ! இறுகப் பிடிக்கவே || லியூ ஷோசி

உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 10

பாகம் – 9

V. உட்கட்சிப் போராட்டம் நடத்துவது எப்படி?

தோழர்களே! இப்பொழுது பிரச்சினை மிகத் தெளிவாயிருக்கிறது. உட்கட்சிப் போராட்டத்தை சரியாகவும் பொருத்தமாகவும் நடத்துவது எப்படி என்பதே பிரச்சினை.

இந்த பிரச்சினையில், சோவியத் யூனியன், இன்னும் இதர பல நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நிரம்ப அனுபவமிருக்கிறது; சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அப்படியேதான். லெனினும் ஸ்டாலினும் பல கட்டளைகள் விடுத்திருந்தனர்; நமது கட்சியின் மத்தியக் கமிட்டியும் அதேமாதிரி செய்திருக்கிறது. இந்த அனுபவங்களையும், கட்டளைகளையும் நமது தோழர்கள் கவனமாக கற்றறிய வேண்டும்; கட்சியைக் கட்டுவது பற்றிய பிரச்சினைக்கு வரும் பொழுது அவை விவாதிக்கப்படும். இன்று நான் அவற்றை எடுத்துக் கொள்ளப் போவதில்லை.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சிப் போராட்ட அனுபவத்தின் அடிப்படையில் கீழ்க்கண்ட விசயங்களை தோழர்களின் கவனத்திற்கு இன்று நான் கொண்டு வருகிறேன்.

முதலாவதாக, உட்கட்சிப் போராட்டம் மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்ததும், பொறுப்புமிக்கதுமான விசயம் என்று தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்; மிகக் கண்டிப்பானதும், பொறுப்புமிக்கதுமான, மனோபாவத்துடன் நாம் அதை நடத்த வேண்டும்: அதை எப்பொழுதுமே அஜாக்கிரதையாக நடத்தக் கூடாது. உட்கட்சிப் போராட்டம் நடத்துவதில், முதலாவதாக கட்சியின் சரியான கொள்கையை, கட்சியின் நலனுக்கு பாடுபடும் தன்னலமற்ற நிலை, இன்னும் சிறந்த வேலை செய்தால் மற்ற தோழர்கள் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்வதற்கும் உதவி புரியவும், பிரச்சினைகளைப் பற்றி மேலும் சிறந்த போதம் பெறுவதற்கும் ஆன கொள்கையை பரிபூரணமாக அமல் நடத்த வேண்டும். முறைப்படுத்திய ஆராய்ச்சி, கல்வி முதலியவற்றின் மூலம் தாமே விசயங்களை பற்றியும், பிரச்சினைகளைப் பற்றியும் தெளிவு பெற வேண்டும். அதே சமயத்தில், முறைப்படுத்திய, நன்கு தயாரிக்கப்பட்ட, நன்கு வழிகாட்டப்பட்ட உட்கட்சி போராட்டங்களை நாம் நடத்த வேண்டும்.

முதலாவதாக, தான் சரியான கொள்கையை கடைப்பிடித்தால் மட்டும்தான், மற்றவர்களின் தவறுகளைத் திருத்த முடியும் என்பதை தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தான் சரியாக நடந்து கொள்வதின் மூலம்தான் மற்றவர்களின் தவறான நடத்தையைத் திருத்த முடியும். “மற்றவர்களை திருத்துவதற்கு முன்பு முதலில் ஒருவர் தன்னைத் திருத்திக் கொள்ளவேண்டும் என்பது” முதுமொழி.

தான் ஊசலாடாமல் இருந்தால்தான் ஊசலாடுபவர்கள், ஊசலாட்டத்திலிருந்து மீள்வதற்கு உதவ முடியும்.

தான் சரியான கோட்பாடுகள், தத்துவம் கொண்டு, கவசமிட்டிருந்தால்தான், மற்றவர்களுடைய தவறான கோட்பாடுகளையும் தத்துவங்களையும் திருத்த முடியும்.

தனக்கு கோட்பாட்டுப் பிரச்சினைகளில் தெளிவான போதமிருந்தால்தான், மற்றவர் குழப்பத்தைத் தெளிவுபடுத்த உதவ முடியும். குறிப்பான பிரச்சினைகளில் நிறைய யதார்த்தமான புள்ளி விவரங்களை தான் சேகரித்திருந்தால், அந்த பிரச்சினைகளை முறைப்படுத்தி கற்றறிந்திருந்தால்தான் மற்ற தோழர்களுக்கும், கட்சிக்கும் உதவிகரமாக இருக்க முடியும்.

ஒரு தோழர் இதைச் செய்யத் தவறினால் முதலிடத்தில் அவரே சரியான கொள்கையை கைக் கொள்ளத் தயாராயில்லையென்றால், சரியான கோட்பாடுகளை கசடறக் கற்றறியவில்லையென்றால், கோட்பாட்டின்படி யதார்த்த நிலைமையை அவர் பரிசீலனை செய்யவில்லையென்றால், முறைப்படுத்தி பிரச்சினைகளை ஆராய்ந்தறியவில்லையென்றால் அல்லது அவருக்கு ஏதும் விசேஷ குறைபாடு இருந்தாலும் சில விசயங்களைப்பற்றி அவருக்கே போதிய அளவுக்கு தெளிவு இல்லாவிட்டாலும், உட்கட்சிப் போராட்டத்தில் பிறரிடமுள்ள தவறை திருத்த முடியாது. இவையெல்லாம் இருந்தும், மண்டைக் கனத்துடன் போராட்டத்தை நடத்துவதில் பிடிவாதம் பிடிப்பார்களானால், முடிவாக அது தவறில்தான் கொண்டு சேர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்.

எதார்த்தமான அசைக்கமுடியாத விசயங்கள் மட்டுமே, நடைமுறையில் பரிசோதிக்கப்பட்ட அனுபவம் மட்டுமே, உண்மை மட்டுமே எல்லாவற்றையும் வெல்லும்.

நமது சுயவிமர்சனமும், உட்கட்சிப் போராட்டமும், கட்சியின் அமைப்பும், ஒருமைப்பாடு, கட்டுப்பாடு, கௌரவம் முதலியவற்றிற்கு தீங்கு தேடுவதற்கோ அல்லது அதன் வேலைக்கு இடுக்கண் தேடுவதற்கோ நடத்தப்படுவதன்று. அதற்கு மாறாக கட்சி அமைப்பையும் ஒருமைப்பாட்டையும் பலப்படுத்தவும், அதன் கட்டுப்பாட்டையும் கௌரவத்தையும் உயர்த்தவும், அதன் வேலையைத் துரிதப்படுத்தவும்தான் அவை நடத்தப்படுகின்றன. ஆதலின் உட்கட்சிப் போராட்டம் தன்னிச்சையான போக்கிலே போகவும் அதிதீவிர ஜனநாயக வாதத்திற்கு கொண்டு செல்லவும் விடக்கூடாது; கட்சிக்குள் குடும்பத் தலைவன் தோரணையும் சரி, அதிதீவிர ஜனநாயக வாதமும் சரி இரண்டுக்குமே இடமில்லை. கட்சிக்குள் நிலவும் அசாதாரண நிலைமையின் இரண்டு அதி தீவிர பிரதிபலிப்புகள் இவை.

கட்சியின்பாலும், புரட்சியின்பாலும் மாபெரும் பொறுப்புணர்ச்சியுடன் உட்கட்சிப் போராட்டம் நடத்தப்படவேண்டும்.

இரண்டாவதாக, உட்கட்சிப் போராட்டம் அடிப்படையில், கட்சிக்குள் மாறுபட்ட சித்தாந்தம், கோட்பாடுகளுக்குள் நிகழும் போராட்டமாகும். கட்சியில் வேறுபட்ட சித்தாந்தங்கள், கோட்பாடுகளுக்குள் எழும் எதிர்ப்பை அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது. சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தமாக தெளிவான வரையறுப்பு வகுப்பது இன்றியமையாத அவசியங்கொண்டதாகும். ஆனால் அமைப்பு, போராட்ட வடிவம், பேசும் தோரணை, விமர்சிக்கும் விதம் முதலிய விசயங்களில் கூடுமான வரையில் எதிர்ப்பை குறைத்துக் கொள்ள வேண்டும்; விசயங்களை அமைதியான முறையில் வாதம் செய்யவும் விவாதிக்கவும் தன்னாலியன்ற வரை முயல வேண்டும். அமைப்பு நடவடிக்கைகள் எடுக்காமலிருக்க, அமைப்பு முடிவுகள் எடுக்காமலிருக்க ஆனமட்டும் முயல வேண்டும்.

உட்கட்சிப் போராட்டம் நடத்துவதில், சித்தாந்தத்திலும், கோட்பாட்டிலும் ஐக்கியம் ஏற்படுத்த நாணயமான, மனம்திறந்த உருப்படியான, ஆராய்ச்சி பூர்வ மனோபாவம் காட்டுவதற்கு தோழர்கள் முயலவேண்டும். வேறு வழியில்லை என்ற சந்தர்ப்பங்களில்தான், அத்தியாவசியம் என்று கருதும் பொழுதுதான், நாம் போர்க்குணமிக்க போராட்ட வடிவங்களை கடைப்பிடிக்கக் கூடும்: அமைப்பு நடவடிக்கைகளை அமல் நடத்தலாம். எல்லா கட்சி அமைப்புகளுமே, குறிப்பிட்ட வரையறைக்குள் திருந்தாமல் தவறு செய்து வரும் ஒரு கட்சி அங்கத்தினர் மீது அமைப்பு முடிவு எடுப்பதற்கு பரிபூரண உரிமை உண்டு. குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் கட்சிக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுப்பதும், அமைப்பு நடவடிக்கைகளை அமல் நடத்துவதும் முற்றிலும அவசியமாகிறது. ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் பேதா பேதம் பார்க்காமலும், தன்னிச்சையாகவும் அமல்படுத்தக் கூடாது.

கட்சி அமைப்புகள் தோழர்களுக்கு மிதமிஞ்சிய தண்டனை விதிப்பதனால் மட்டுமே கட்சிக் கட்டுப்பாடு நிலைநாட்டக் கூடியதன்று. கட்சிக் கட்டுப்பாடு, கட்சி ஐக்கியம் முதலியவற்றை நிலைநாட்டுவதென்பது பிரதானமாக தோழர்களை தண்டிப்பதில் அடங்கியிருக்கவில்லை. (இந்த முறையில்தான் அவை நிலைநாட்டப்பட வேண்டுமெனில்,  கட்சியில் நெருக்கடியிருக்கிறது என்பதையே அது காட்டும்). அதற்குப் பதிலாக அது சித்தாந்த ரீதியாகவும், கோட்பாடு பூர்வமாகவும் உள்ள யதார்த்த ஒற்றுமையிலும், பெருவாரியான கட்சி அங்கத்தினர்கள் உணர்விலும் அடங்கியிருக்கிறது. இறுதியாக நாம் சித்தாந்தம் பற்றியும், கோட்பாடு பற்றியும் முற்றிலும் தெளிவு பெற்று விட்டோமானால், அவசியம் ஏற்படும் பொழுது அமைப்பு முடிவுகள் எடுப்பதென்பது நமக்கு வெகு சுலபமாகும். கட்சி அங்கத்தினரை நீக்குவதற்கும், தானாக கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பதற்கும் ஒரு நிமிடம் கூட பிடிக்காது.

மாறுபட்ட சித்தாந்தங்கள், கோட்பாடுகள் சம்பந்தமாக தோழர்கள் காட்டும் பிடிவாதம், எதிர்ப்பு, முன்வைக்கும் வாதங்கள் முதலியன கட்சி அமைப்பிற்கும், பெரும்பான்மைக்கு, மேல்கமிட்டிக்கு கீழ்படிவதிலிருந்து பிரிக்க முடியாதவையாகும். இல்லையென்றால் கட்சி ஐக்கியம், நடைமுறை ஒற்றுமை ஆகிய எதுவுமே இருக்கமுடியாது. தோழர்கள் கோட்பாட்டிற்கு பிடிவாதம் பிடிப்பதினால், எப்பொழுதுமே கட்சியை அமைப்பு ரீதியாக எதிர்க்கவோ, பெரும்பான்மையையும் உயர்மட்ட தோழர்களையும் மீறவோ, சுயேச்சையான நடவடிக்கைகளில் இறங்கவோ கூடாது. அது கட்சியின் அடிப்படை கட்டுப்பாட்டை மீறும் செயலாகும்.

உட்கட்சிப் போராட்டம் நடத்துவதற்கு நாம் கைக்கொள்ள வேண்டிய சரியான முறை பின்வருமாறு:

கோட்பாடு, சித்தாந்தங்கள் சம்பந்தப்பட்ட வரையில் போராடும் பொழுது போர்க்குணம் இருக்க வேண்டும்; அமைப்பு, போராட்ட வடிவம் சம்பந்தப்பட்டமட்டில் போர்க்குணம் எவ்வளவுக்கு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கு குறைவாக இருக்க வேண்டும். பல தோழர்கள் தவறு செய்வதற்கு காரணமென்னவென்றால், ஒரு புறத்தில் சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தமாக போராட்டமோ, தெளிவாக வரையறுக்கப்பட்ட வேறுபாடோ இருப்பதில்லை; மறுபுறத்தில் அமைப்பு, போராட்ட வடிவம் சம்பந்தமாகவும் மிதமிஞ்சிய போராட்டம் நடக்கிறது. தொண்டைத் தண்ணீர் வற்றும் வரை விவாதிக்கின்றனர்; ஒருவருக்கொருவர் முகங்கொடுத்துப் பேச முடியாமற் போகும் அளவிற்கு சண்டையிடுகின்றனர். அவர்களுக்குள் பெரும் வெறுப்பு தோன்றிற்று; ஆனால் அதிலுள்ள விரோதம் என்னவென்றால் அவர்களுக்குள் சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தமாக தெட்டத் தெளிவாக வரையறுப்பு எதுவுமேயில்லை.

மூன்றாவதாக கட்சி, அமைப்பு அல்லது தோழர்கள் வேலை பற்றி செய்யப்படும் விமர்சனம் பொருத்தமானதாகவும், சீராக அமைந்ததாகவும் இருக்க வேண்டும். போல்ஷ்விக் சுயவிமர்சனம், போல்ஷ்விக் அளவுகோலுக்குத் தக்கபடிதான் நடத்தப்படும். மிதமிஞ்சிய விமர்சனம், மற்றவர் குற்றங்குறைகளை மிகைப்படுத்திக் கூறுவது, பேதாபேதமின்றி திட்டுவது எல்லாம் தவறானது. உட்கட்சிப் போராட்டம் எவ்வளவு கடுமையாக இருக்கிறதோ அவ்வளவு உயர்ந்தது என்று அர்த்தமல்ல; அதற்கு மாறாக உட்கட்சிப் போராட்டம் முறையான வரம்புக்குள் நடத்தப்பட வேண்டும். பொருத்தமான அளவுக்குத்தான் நடத்த வேண்டும். அளவுக்கு மிஞ்சுவதும் சரி, குறைவதும் சரி, இரண்டுமே விரும்பதக்கதல்ல.

மற்றவர்களுடைய குற்றத்தைச் சுட்டிக்காட்டும் பொழுதும் விமர்சிக்கும் பொழுதும், தோழர்கள் கேந்திரமான விசயங்களை கிரகித்துக் கொண்டு , முக்கியமான பிரச்சினைகளை வலியுறுத்த வேண்டும். பிரச்சினைகளை மற்றவர்களுக்கு தோழர்கள் முறைப்படியும் தெளிவுடனும் விளக்க வேண்டும். அவ்வகையிலேயே பிரச்சினைகளைத் தீர்க்கலாம். மற்றவர்களுடைய பல்வேறு தவறுகளையும் உண்மையாகத் தோன்றுகிற விசயங்களையும் தோழர்கள் இங்கு ஒன்று அங்கு ஒன்றுமாக எடுத்து கூறி, அவர்களை சும்மா அம்பலப்படுத்தக் கூடாது. நீங்கள் வேண்டுமென்றே குற்றங்கள் காண்கிறீர்கள், தாக்குகிறீர்கள், அடி கொடுக்கிறர்கள் என்று மற்றவர்கள் எண்ணுவதற்கும் இடமளிக்கும்.

ஒரு தோழரை சீர்தூக்கி பார்க்கும் பொழுதும், விமர்சிக்கும் பொழுதும், அவருடைய குற்றங்குறைகளை மட்டும், ஏதோ அவ்வளவு தான் என்பது போல் சுட்டிக்காட்டக்  கூடாது. அவருடைய சாதனைகளுக்கும், பாராட்டுவதற்குரிய கலைகளுக்கும், நல்ல குணாம்சங்களுக்கும், அவருடைய கருத்துக்களில் சரியான கருத்துக்களுக்கும் கூட மதிப்பு கொடுக்க வேண்டும். அவருடைய கருத்தில் ஒரு பகுதி, அது மிகச் சிறிய பகுதியேயாயினும் கூட சரியானதாயிருந்தால் அதை அவருக்குச் சுட்டிக் காட்ட வேண்டும். அதைச் சொல்லாமல் இருக்கக்கூடாது. அவ்வாறு செய்தால்தான், அவரைப் பற்றி பூரணமான நிர்ணயிப்பும் விமர்சனமும் செய்ய முடியும்; தன்னை அபிவிருத்தி செய்து கொள்வதற்கு உதவமுடியும்; அவருக்கு உணர்த்த முடியும்.

உட்கட்சிப் போராட்டத்தில் நாம் கைக்கொள்ள வேண்டிய முறை இதுதான்; “அளவுக்கு மிஞ்சுதல், குறைதல்” முறைக்கு மாறாக பொருத்தமான விமர்சனம்; பொருத்தமான மனோபாவம் பொருத்தமான வரைமுறையைக் கைக்கொள்ளுவதாகும்.

(தொடரும்)

பி.எஸ்.என்.எல் சூறையாடப்பட்ட வரலாறு | சி.கே. மதிவாணன்

பொதுத்துறை நிறுவனங்களை விற்றுத் திண்ணும் மோடி அரசின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்துகிறார் தேசிய தொலைத் தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் சி.கே மதிவாணன்.

கடந்த 17.11.2020 அன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வெள்ளையன் ஒருங்கிணைப்பின் கீழ் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், பி.எஸ்.என்.எல் – என்.எஃப்.டி.ஈ (BSNL – NFTE) அமைப்பின் தலைவர் சி.கே. மதிவாணன் தற்போது தொலைதொடர்பு நிறுவனங்களை மத்திய அரசு எவ்வகையில் கபளீகரம் செய்து வருகிறது என்பதை அம்பலப்படுத்தி பேசினார்.

பாருங்கள் ! பகிருங்கள் !

இன்றைய பாசிச நிலை குறித்து மோடியின் முன்னாள் பக்தர் !

தை உன்னால் புரிந்துக்கொள்ள முடியாது, நீ இன்னும் சிறுவன்தான். அதனால் உன் வேலையை பார்”, நான் சிறுவயதிலிருந்தே கேட்டு வளர்ந்த சொற்றொடர்கள். இவை பெரும்பாலும் அரசியல் அல்லது மதம் சார்ந்த உரையாடல்களின்போது வெளிவரும். மதமும் அரசியலும் நமது வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவை.

நான் பள்ளிக்கூடத்தில் படித்த உன்னதமான உலகத்தைப் போன்றுதான், உண்மையான நமது உலகமும் இருக்குமென நினைத்து வளர்ந்தேன். வட்டார, மாநில, மத்திய அரசுகள், சுமூகமாக இயங்கி கொண்டிருப்பதாகவும், அது புத்தகத்தின்படி மக்களுக்காக இயங்குவதாகவும் நம்பினேன்.

அது உண்மையென்று நான் எவ்வளவு நம்பினேன் தெரியுமா!

இரண்டாம் முறை மன்மோகன் சிங் பிரதமரான போதுதான் மெய்-உலக அரசியலுக்கான அறிமுகம் எனக்கு கிடைத்தது. எனது பெற்றோர்கள், தாத்தா, பாட்டி, அத்தை, மாமா ஆகியோர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நடந்த பல்வேறு மோசடிகளைப் பற்றி பேசியது எனக்கு நினைவில் இருக்கிறது.

உன்னதமான அரசியல் குறித்த எனது எண்ணக் குமிழி வெடித்த தருணம் அதுதான். அப்போதிலிருந்து அரசியலைப் பற்றி யார் எதைப் பேசினாலும் கவனிக்க ஆரம்பித்தேன். அப்போது சுற்றிலும் ஒருமித்த கருத்துதான் வெளிவந்தது – அது, காங்கிரஸ் ஊழல் அரசியல்வாதிகள் நிறைந்த கட்சி, மன்மோகன் சிங் ஒரு காந்தி குடும்பக் கைப்பாவையே என்பது போன்ற கருத்துகள்தான் அவை.

இந்த கூற்றின் உண்மைத் தன்மையைக் குறித்து எனக்கு எந்த சந்தேகமும் ஏற்படாத அளவிற்கு இதனை நான் பல நேரங்களில் பல இடங்களில் கேட்டிருக்கிறேன்.. கேள்விகளுக்கு அப்பாற்பட்ட நேர்மை கொண்ட மனிதர் என்று தற்போது நான் நம்பும் சிலர் மீது எனக்கு அந்த சமயத்தில் மரியாதையே இல்லை! ஏனெனில் என்னால் அந்த அளவிற்குத் தான் விசயங்களைப் பார்க்கமுடிந்தது.

‘எல்லா அரசியல்வாதிகளும் ஊழலில் ஊறிப்போயிருந்தால், நம் நாட்டிற்கு யார்தான் தலைவராக வருவார்?’ என்று எனது தாயிடம் நான் கேட்டது இன்றும் நினைவில் இருக்கிறது.

இந்தியாவின் அரசியல் போக்கையே மாற்றிய தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் கவர்ந்திழுக்கும் பேச்சினூடாக நம் அனைவருக்கும் இதற்கான பதில் வந்தது. நரேந்திர மோடியின் அபார வெற்றிக்கு மிகப்பெரிய பங்களிப்பு செலுத்தியதில் ஒன்று அவரது பேச்சுத்திறன்தான் என்பதை நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். இது ராகுல் காந்தியிடம் இல்லை.

நம்மைக் கவர்ந்திழுக்க அவர் பயன்படுத்திய அழகான வார்த்தைகளாலும், அவரது வசீகரத்தாலும் நாம் அனைவரும் கவர்ந்து இழுக்கப்பட்டோம். அவர் நம்மை நண்பர்களே, சகோதர சகோதரிகளே என்றுதான் அழைத்தார். அவர் நம்பகமானவர்தான் என்றும் அவரது பேச்சைக் கேட்டு பின்பற்றினால் நாம் விரும்பும் அனைத்தும் நமக்கு கிடைக்குமெனவும் அவர் நம்மை உணரவைத்தார்.

கிரேக்கப் புராணங்களில், ”தங்களது கவர்ச்சிகரமான பாடல், இசையால் ‘மாலுமிகளைக் கவர்ந்திழுத்து கப்பலை விபத்துக்குள்ளாக்கும் சைரன் என்ற ஆபத்தான உயிரினத்தையே நமது பிரதமர் தற்போது எனக்கு நினைவுபடுத்துகிறார்.

“ஆப் கி பார், மோடி சர்க்கார்” என்ற சொல்லை அனைவரின் உதடும் உச்சரித்தது. இறுதியாக “அச்சே தின்” (நல்ல நாளுக்காக) முழு இந்தியாவும் காத்திருந்தது. ஒருமுறை பள்ளியில் நடந்த கட்டுரை போட்டியில், அரசியலுடன் துளியும் சம்பந்தமில்லாத ஒரு தலைப்பில் எனது கட்டுரையின் இறுதியில் “ஆப் கி பார், மோடி சர்க்கார்” என்ற வாசகத்தை எழுதினேன். (பரிசு வெல்வதற்கு எந்த ஒருவகையிலும் அது உதவி புரியவில்லை)

தேசத்தின்மீது மோடி ஏற்படுத்திய விளைவு இதுவே.

♦♦♦

படிக்க :
♦ சுயசார்பு இந்தியா : மோடியின் மற்றொரு பித்தலாட்டம் !
மோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான் !

மே 26, 2014 அன்று நரேந்திர மோடி நமது நாட்டின் பிரதமராக பதவியேற்றபோது, நம் நாட்டின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் வெற்றிகளில் ஒன்றின் பின்னணியில் அது புதியதொரு யுகத்திற்குக் கட்டியம் கூறியது. ஆறு ஆண்டுகளுக்கு பிறகும் இன்னமும் மீட்கப்பட முடியாத அளவிற்கு காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக ஒழித்துக்கட்டப்பட்டது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் புதிய தலைவரிடமிருந்து சிறந்த விஷயங்களை உலகம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது.

அந்த சிறுவன், ஏமாற்றமடைந்தானா?

முதல் பதவி காலம் சர்ச்சையில் சிக்கியது, அப்போதும் அவரைப் பின்தொடர்ந்த பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மாறவில்லை. உண்மையில் அது அதிகரித்தது. அதே நேரத்தில் எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி மற்றும் தலித்துகள் போன்ற சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடும் அதிகரித்தது. குறிப்பாக முஸ்லீம்கள் குறி வைக்கப்பட்டனர்.

மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையால், நாட்டிலுள்ள முஸ்லீம் குடிமக்களை கும்பல் படுகொலை செய்வது அதிகரித்தது.  இந்தியாவை பாஜக எந்த திசை நோக்கி நகர்த்தி செல்கிறதென என்னை உட்பட அவரது (மோடி) ஆதரவாளர்கள் சிலர் கேள்வி கேட்கத் தொடங்கிய முதல் தருணம் இதுதான். மத நம்பிக்கைகள் ஒருபுறம் இருக்க, தனியொரு பிரிவினர் எதிர்க்கும் ஒரே காரணத்திற்காக, மக்கள் என்ன சாப்பிட வேண்டும் – சாப்பிடக் கூடாதென ஆணையிடுவது ஜனநாயக விரோதமானது. மாட்டிறைச்சிக்கு தடை விதித்தது, வன்முறை மற்றும் இன கலவரங்கள் அதிகரிப்பதற்கே வித்திட்டது. 2015 முதல் 2019 செப்டம்பர் மாதங்களுக்கிடையில் கும்பல் படுகொலையில் 113 பேர் கொல்லப்பட்டனர் என்பதனை 2019-ஆம் ஆண்டில் குயிண்ட் இணையத்தளம் வெளியிட்டது.

மோடியும், பாஜகவும் ஜிங்கோயிசம் (Jingoism)  மற்றும் பின்புலம் தொடர்பான மற்றும் சம்பந்தமற்ற கேள்விகள் (Whataboutery) மூலம் வெகுஜனங்களை அணிதிரட்டவும், ஓட்டு வங்கியைப் பராமரிக்கவும் செய்தனர். ஜிங்கோயிசம் என்பது “தேசிய நலன்களை பாதுகாப்பதற்கான அடாவடி கொள்கைகளின் வடிவத்திலான தீவிர தேசியவாதமாகும். அதே, ஒரு குற்றச்சாட்டை அல்லது மாற்று கருத்தை, எதிர் குற்றச்சாட்டு அல்லது தொடர்பில்லாத விஷயங்கள் மூலம் திசைத்திருப்பும் நுட்பமே  ‘Whataboutery’. (வாட்டபோட்டரி – வடக்கு அயர்லாந்து பிரச்சினைகளின் அரசியல் விவாதத்தின் போது முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. இஸ்ரேலிய-பாலஸ்தீன மோதல்களின் தோற்றம் பற்றிய விவாதங்களிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்டது).

இந்த சூழ்ச்சி முறையுடன், ஆளும் கட்சி பயன்படுத்த விரும்பும் மற்றொரு உத்தி ‘நாம்’ எதிர் ‘அவர்கள்’ என்பதுதான். உங்களையும் உங்களது சித்தாந்தத்தையும் மக்கள் பின்பற்றுவதற்கான விரைவான ஒரே வழி ஒரு பொதுவான எதிரிக்கு எதிராக மக்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பதாகும். அப்படியொரு எதிரி இல்லையென்றால், மக்கள்தொகையில் ஒரு பகுதியினரை அரக்கர்களாக்கி அவர்களை “தேச நலனின்” எதிரிகளாக சித்தரிப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது.

இன்று பல இந்தியர்களுக்கு முக்கிய எதிரி, இடதுசாரிகள் மற்றும் தாராளவாதிகள் தான். அவர்களுக்கு கடந்த 2014 ஆண்டிலிருந்து ஆயிரம் புனைப்பெயர்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆட்டு மந்தை மனநிலை, பழமைவாத வலதுசாரிகளின் குருட்டு நம்பிக்கைக்கு இணங்காத, தலைவரை கேள்வி கேட்கும் தைரியம் உள்ளவர்கள் எவரும் தேச விரோதி என போற்றப்படுவர். கொலை மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்களால் தூற்றப்பட்டனர். பின்னர் பாகிஸ்தான் அல்லது சீனாவிற்கு செல்லுமாறு மிரட்டப்பட்டனர்.

பாஜக-வின் இந்துராஷ்டிரிய சித்தாந்தம் மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கையும் (RSS) எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அசிங்கப்படுத்தப்பட்டனர், மிரட்டப்பட்டனர், கைது செய்யப்பட்டனர், கடுமையாகத் தாக்கப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர். அப்பேர்ப்பட்ட குற்றவாளிகளை இந்த அரசாங்கம் ஆதரவளித்து பாதுகாத்து வருகிறது. அவர்களில் சிலரை சம்பளப் பட்டியலில் கூட வைத்திருக்கிறது. தங்களது பேச்சுரிமையையும், அடிப்படை பகுத்தறிவு சிந்தனையையும் பயன்படுத்தி நம் நாட்டின் பிரதமரை கேள்வி கேட்பவர்களைத் தேடி அச்சுறுத்துகிறது பாஜகவின் ஐ.டி. பிரிவு.

இப்போது நான் எழுதும் இந்த கட்டுரை வெளியானதும் என்மீது கட்டவீழ்த்துவிடப்படும் வெறுப்பினை வியப்புடன் எதிர்பார்க்கிறேன்.

அரசாங்கத்தின் மிகப்பெரிய தவறு, அது உந்தித்தள்ளும் வெறுப்புப் பிரச்சாரமோ, மற்றவர்களையும் அதனை முன்னெடுக்க கற்றுக் கொடுப்பதோ அல்லது நமது தொண்டைக்குழியில் இந்துத்துவாவை திணிக்கப்படுவதோ அல்ல. என்னை பொறுத்தவரை, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை அமைதி வழியில் எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீதான கொடூரத் தாக்குதலையே அரசாங்கம் செய்த மிகப் பெரிய தவறென நான் நினைக்கிறேன்.

ஜாமியா மிலியா, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு கல்வி நிலையங்களில் நடந்த வன்முறை சம்பவங்கள், ஐக்கிய முற்போக்கு கூட்டணியை கவிழ்ப்பதற்கு முக்கியப் பங்களிப்பு செய்த அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தைப் போன்ற மிகப்பெரிய போராட்ட இயக்கத்தைத் தூண்டுவதற்கு உதவின.

இவ்விவகாரங்கள் பல இடங்களுக்கு விரைவாக பகிரப்பட்டன. இது இந்தியாவின் அடித்தளத்தை உருவாக்கும் நிறுவனங்களை முறையாக அழிக்க செயல்பட்டுவரும் ஒரு தலைவர் அல்லது ஒரு கட்சியின் மீது தாங்கள் வைத்திருந்த விசுவாசத்தை மறுபரிசீலனை செய்ய பலருக்கும் வழிவகுத்தது.

படிக்க :
♦ பயங்கரவாதிகளுக்கு உதவிய தேவேந்தர் சிங்கிற்குப் பிணை : இதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி !
♦ ஜாமியா பல்கலை மாணவர்கள் மீது இந்துத்துவக் கிரிமினல் துப்பாக்கிச் சூடு ! ஒரு மாணவர் படுகாயம் !

தேசிய பாரம்பரியத்தைக் கண்டு பெருமைப்படுவதாகக் கூறிக்கொள்ளும் இந்த தலைவர்தான், பகத்சிங் போன்ற சுதந்திரப் போராளிகள் செய்ததைப் போல செய்ய துணிந்தவர்களையும், அதிகாரத்தில் இருப்பவர்களைக் கேள்வி கேட்பவர்களை சிறையிலடைக்க சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம்(ஊபா) போன்ற கடுமையான சட்டங்களைப் பயன்படுத்துபவர்.

பிரதமரின் விசிறியாக இருப்பவர்கள் அமர்ந்து கவனிக்க – கொரோனா போன்ற பெருந்தொற்று சமயத்திலும்கூட பெண் செயற்பாட்டாளரை அவர் கர்ப்பிணி என்றும் பாராமல், ஜாமீன் மறுத்து சிறையில் அடைத்ததில் இருந்து, பட்டப்பகலில் டெல்லி போலீசார் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஆயுதங்களை வைத்து கலவரம் செய்த கலவரக்காரர்களை விடுவித்தது போன்ற – எண்ணற்ற சம்பவங்கள் பல உள்ளன.

இவை அனைத்தும் நம் நாட்டில் நடந்து வரும் தவறுகளையும், முழு அமைப்பும் நிர்வாகமும் எவ்வாறு உடைக்கப்படுகின்றன என்பதற்கான அறிகுறியாகும். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் இதனை அக்கறையின்மையுடன் பார்த்து வருகிறோம். “பக்ரே கி அம்மா”வில் (Bakre Ki Amma) கவுரவ் காட் மிகச் சரியாக சித்தரித்துள்ளதைப்  போல நாம் மற்றவர்களின் துன்பங்களைக் கண்டும் காணாத உணர்ச்சியற்றவர்கள் ஆகிவிட்டோம்.

அரசாங்கத்திற்கு எதிராக கோபம் அதிகரித்து வரும் நிலையிலும், பாஜக ஆட்சியை ஆதரிக்கும் (எனது குடும்ப உறுப்பினர்கள் உட்பட) பலர் இருக்கத்தான் செய்கின்றனர். அத்தகையவர்கள் தொடுக்கும் பொதுவான வாதங்கள் ரிஷிமூலம் தேடி கேள்விகேட்கும் வழிமுறைகளிலும் சம்பந்தமற்றவைகளைக் கோர்த்துக் கேள்வி கேட்பதிலும் உள்ளன. குறிப்பாக ‘காங்கிரஸ் பல ஆண்டுகளாக சிறுபான்மையினரை ஆதரித்து வந்தது. அப்படியிருக்க பாஜக ஏன் பெரும்பான்மையினரை ஆதரிக்கக் கூடாது?’ என கூச்சலிடுகின்றனர்.

ஒரு தவறான செயலுக்கு எதிரான மற்றொரு தவறான செயல் என்றும் சரியானதாக மாறாது, எந்தவொரு சமூகத்திலும் சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும். காங்கிரசின் திருப்திப்படுத்தும் அரசியலுக்காக வெறுத்த அதே மக்கள்தான், இப்போது பாஜக-வை நேசிக்கிறார்கள். பல தசாப்தங்களாக காங்கிரஸ் செய்துவரும் தவறுகளை தற்போது பாஜக மீண்டும் மீண்டும் பெரிய அளவில் செய்து வருவது தவறுகளை சரி செய்யாது.

ஒருபுறம், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தன்னையும் தனது கொள்கைகளையும்  எதிர்த்து கறுப்புக் கொடியும், கோஷங்களையும் எழுப்பியவர்களிடம், “நீங்கள் சொல்வதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால், அதைச் சொல்வதற்கான உங்களது உரிமையை நான் மரணிக்கும் வரை பாதுகாப்பேன்” என்று கூறினார். ஆனால் மறுபுறம், தற்போதைய பிரதமரோ, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கருத்து வேறுபாடுகளை நசுக்கவும், அரசாங்கத்தையும் தனது கொள்கையையும் கேள்விக் கேட்கும் அனைவரையும் அச்சுறுத்தி ஒடுக்கி வருகிறார்.

பெரும் தொற்றுநோய் மீதான அரசின் மோசமான நிர்வாகத்திலிருந்து தொடங்க வேண்டாம், ‘கோடி மீடியா’ (Godi Media) (மக்களின் முக்கியமான பிரச்சினையிலிருந்து அவர்களை திசைத்திருப்ப பாஜக செய்யும் உத்திகளில் ஒன்று), சீனா நேபாளத்துடன் அதிகரித்துவரும் எல்லைப் பதட்டங்கள், பல்லாண்டுகளாக போலீசின் வெறிதனத்திற்கெதிராக போராடி வரும் செயற்பாட்டாளர்களை சிறையில் அடைத்ததில் இருந்து இது தொடங்குகிறது.

துளியளவேனும் உங்களிடம் இரக்கமிருந்தால், கடந்த காலத்தில் கற்பிக்கப்பட்ட ஒரு சார்புத் தன்மையை திரும்பிப் பார்க்க விரும்பினால், நமது நாட்டில் நடக்கும் அட்டூழியங்களின் பட்டியல் முடிவுறாமல் நீண்டுக்கொண்டே போவதை பார்ப்பீர்கள்.

உங்களில் அரசியலற்றவர்களாக இருப்பவர்களுக்கு, நீங்களும் பிரச்சினையின் ஒரு பகுதிதான். நீங்கள் நீதிக்காகப் போராடுபவர்களுடன் இல்லை, அநீதியை ஏற்படுத்துபவர்கள் பக்கம் இருக்கிறீர்கள். இந்தப் போராட்டத்தில் நடுநிலை வகிக்க எந்த வழியும் இல்லை. இந்தப் போராட்டம் சமத்துவத்திற்காக மட்டுமல்ல, நமது நாட்டில் கட்டியெழுப்பப்பட்ட ஜனநாயகக் கொள்கைகளைப் பாதுகாப்பதற்காவும்தான்.


கட்டுரையாளர் : நமீத் பாண்டே
தமிழாக்கம் : வெண்பா
செய்தி ஆதாரம் : The Wire

“ஸ்வாட்டிங்” : சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் அமெரிக்க இராணுவம்!

இன்றைய அமெரிக்காவில் வலதுசாரி மாற்று (Alt-Right) அமைப்பினரை எரிச்சலூட்டினால், நீங்கள் அதிரடி இராணுவக் குழுவின் அச்சுறுத்தலுக்கு ஆளாவீர்கள்!

(07-11-2020 தேதியிட்ட தி இந்து (ஆங்கிலம்) நாளேட்டில், “Annoy the Alt-Right in the U.S. today, and you could get ‘swatted” என்ற தலைப்பில் விநாயக் சதுர்வேதி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

★★★

அமெரிக்காவில் “ஸ்வாட்டிங்” (SWATTING) என்பது ஒரு புதிய டிஜிட்டல் காலத்திய குற்றமாகும். இதில் ஒரு அநாமதேய தொலைபேசி அழைப்பாளர், ஒரு போலி வன்முறைக் குற்றத்தைப்  பற்றி போலீசில் புகார் செய்கிறார் என்றால், உடனே ஒரு சிறப்பு ஆயுதந்தரித்த தந்திரோபாயக் குழு ஸ்வாட் ( Special Weapons and Tactics team – SWAT ) என அழைக்கப்படும் இராணுவமயமாக்கப்பட்ட பிரிவின் வருகையை அது வெளிப்படுத்தும்.

ரு வாரங்களுக்கு முன்பு எனது 84 வயதான தந்தையுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, ஷெரிப் (sheriff – அமெரிக்க உள்ளாட்சிப் பகுதி ஒன்றின் சட்ட அமலாக்க அதிகாரி) என்று கூறிக்கொண்டு வேறொரு தொலைபேசி வழியாக யாரோ ஒருவர் அழைப்பதாகவும், இயல்புக்கு மாறான கேள்விகளைக் கேட்கிறார் என்றும் கூறினார். அந்த எண் ‘தனியார் அழைப்பாளர்’ என்று தொலைபேசியில் பட்டியலிடப்பட்டதால், இது ஒரு குறும்புத்தனமான அழைப்பு என்று எனது தந்தை கருதியிருக்கிறார். பின்னர், “வீட்டுக்கு வெளியே நிறைய போலீசார் உள்ளனர்” என்று பின்னணியில் எனது தாயார் சொல்வதைக் கேட்டேன்.

எனது தந்தை என்னைத் திரும்ப அழைப்பதாகக் கூறிவிட்டு, வீட்டின் முன் பக்கக் கதவைத் திறந்ததும், தாழ்வாரத்தில் பல அதிரடி இராணுவக் குழுவினர் அவரை நோக்கி அதிநவீன ஆயுதங்களுடன் கதவருகே நிற்பதைக் கண்டார். அவர் அந்த நேரத்தில் கதவைத் திறந்திருக்காவிட்டால், அதிரடி இராணுவக் குழுவினர் கதவை உடைத்திருக்கக் கூடும்.

எனது தாயார் ஒரு நபரை கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை யாரோ ஒருவர் கண்டதாக, ஷெரிப் அலுவலகத்திற்கு “ஜூம்” தொலைபேசி அழைப்பில் ஒரு செய்தி வந்ததாம்.  அதைத் தொடர்ந்து ஸ்வாட் குழுவின் அதிகாரிகள் எனது வீட்டைச் சோதனையிட்டார்கள். பின்னர், அவர்களுக்கு வந்தது ஒரு தவறான தகவல் என்பதை உணர்ந்தார்கள்.

எனது பெற்றோர் ‘குற்றவாளிகளாகிவிட்டார்கள்’. ஸ்வாட்டிங் என்பது அமெரிக்காவில் ஒரு புதிய டிஜிட்டல் காலத்தியக் குற்றமாகும். இதில் ஒரு அநாமதேய அழைப்பாளர் ஒரு போலி வன்முறைக் குற்றத்தைப் பற்றி போலீசில் புகார் அளிக்கிறார் என்றால், உடனே, சிறப்பு ஆயுதந்தரித்த தந்திரோபாயக் குழு (ஸ்வாட்) என அழைக்கப்படும் இராணுவமயமாக்கப்பட்ட குழுவினது வருகையை அது வெளிப்படுத்துகிறது.

இந்தக் குறிப்பிட்ட அநாமதேய தொலைபேசி அழைப்பானது, ஐரோப்பாவின் பிரான்சிலுள்ள இன்டர்போல் (INTERPOL) தலைமையகத்துக்கு அனுப்பப்பட்டதாகவும், பின்னர் இன்டர்போல் போலீசார், மாநில நெடுஞ்சாலை ரோந்துப் பணிப் போலீசாரைத் தொடர்பு கொண்டதாகவும், அவர்கள் ஷெரிப் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டதாகவும் அங்கிருந்த போலீசு துணையதிகாரி ஒருவர் எனது பெற்றோரிடம் விளக்கியுள்ளார். உண்மை என்னவென்றால், எனது தாயாரின் பெயரும் சரியான வீட்டு முகவரியும் அவர்களுக்கு எப்படிக் கிடைத்தது என்று அரைகுறையாகக்கூட அவர்களுக்குச் சொல்லத் தெரியவில்லை.

ஆரம்ப இலக்குகள்

ஆன்லைன் ஆபாச விளையாட்டுக் (கேமிங்) கலாச்சாரத்தை விமர்சிக்கும் பெண்ணியவாதிகளும், மாற்று ஆன்லைன் விளையாட்டுகளை உருவாக்கி மேம்படுத்தும் பெண்களுமே ஆரம்ப காலத்தில் “ஸ்வாட்டிங்”கால் பாதிக்கப்பட்டவர்களில் சிலராவர். ஆனால் இந்த நிகழ்ச்சிப் போக்கானது, எனது தாயாரைப் போல மூத்த குடிமக்கள் உள்ளிட்டு, யாரையும் குற்றவாளிகள் என்று குறிவைப்பதாக வளர்ந்துவிட்டது.

அமெரிக்கப் புலனாய்வுத்துறையின் (F.B.I. -எஃப்.பி.ஐ.) கூற்றுப்படி, 2008-ஆம் ஆண்டில் அரசாங்கம் இந்த நிகழ்ச்சிப் போக்கை அதிகாரப் பூர்வமாகக் கண்காணிக்கத் தொடங்கியதிலிருந்து அமெரிக்காவில் ஸ்வாட்டிங் வழக்குகளின் எண்ணிக்கை வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது. இப்போது 1,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

எனது தாயார் ஏன் தனிச்சிறப்பாகக் குறிவைக்கப்பட்டார் என்பது இன்னமும் எனக்குப் புரியவில்லை.

எனது பெற்றோர் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியானது, வெள்ளை நிறவெறி மேலாதிக்கக் குழுக்களின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. எங்கள் பள்ளி ஆசிரியர் ஒருவர், அவர் உறுப்பினராக உள்ள நவ-நாஜி அமைப்பின் செய்தி மடலை எங்கள் வகுப்பில் காட்டிய நிகழ்வு எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது.

ஸ்வாட்டிங் என்பது வலதுசாரி மாற்று (Alt-Right) அமைப்பினரால் அண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்படும் தந்திரமாகும். (வலதுசாரி உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் சட்ட அமலாக்க நிறுவனங்களில் சேருவதற்கு இது உதவப் போவதில்லை.) புலம்பெயர்ந்தோர் மீதான எதிர்ப்பு உணர்வுகள், வெள்ளை இனவெறி ஆகியவற்றின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இப்பகுதியில் அவற்றுக்கு ஏதேனும் தொடர்புகள் உள்ளதா என்று நான் யோசிக்க ஆரம்பித்தேன்.

படிக்க :
♦ அமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை !

♦ கருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா !

தொழில்நுட்ப அரங்கில் பணியாற்றும் ஒரு நண்பருடன் நான் இதைப் பற்றி விவாதித்தபோது, ஆன்லைன் விளையாட்டுகளின் பெண்ணிய வடிவமைப்பாளரான கரோலின் சிண்டர்ஸ்-இன் கட்டுரையை நான் படிக்க வேண்டும் என்று அவர் கூறினார். அதன்படி, “அந்த நேரத்தில் இணையம் எனது தாயாரின் வீட்டிற்கு ஒரு ஸ்வாட் குழுவை அனுப்பியது” – என்ற தலைப்பில், 2015-இல் கரோலின் சிண்டர்ஸ் எழுதிய கட்டுரையை நான் படித்தேன்.

எனது நண்பர் ஏன் அதை பரிந்துரைத்தார் என்று உடனடியாக எனக்குப் புரிந்தது. சிண்டர்ஸ்-இன் தாயார் என்பதைத் தவிர, இந்த விவரங்கள் மிகவும் ஒத்ததாக இருக்கின்றன. ஒரு வன்முறைக் குற்றம் நடந்துள்ளதாகவும், அப்பகுதியில் மக்கள் பணயக் கைதிகளாக்கப்பட்டுள்ள நிலைமை உள்ளதாகவும் ஒரு தொலைபேசி அழைப்பாளர் கூறியிருக்கிறார். அத்தொலைபேசி அழைப்பாளர் உள்ளூர் போலீசைத் தொடர்பு கொண்டார்; ஆனால், எனது அம்மாவின் விசயத்தில் அது இன்டர்போல் போலீசைத் தொடர்பு கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. விளைவு ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. அதாவது, ஒரு ஸ்வாட் குழு அவர்களின் வீடுகளுக்கு வந்தது.

ஸ்வாட்டிங் சம்பவத்திற்கு சற்று முன்பு, இணையவழி விளையாட்டுக் (கேமிங்) கலாச்சாரத்தில் நிலவும் ஆணாதிக்க – பெண்ணின வெறுப்பாளர்கள் பற்றி அவர் கட்டுரை எழுதியபோது, இணைய வழியாகத் தொல்லைதரும் பிரச்சாரத்தால் அவர் பாதிக்கப்பட்டார். எனது விசயத்தில், இது இன்னுமொரு ஒத்திசைவாக இருந்தது.

ஏனெனில், இந்த ஆண்டின் தொடக்கத்தில், நானும் இத்தகைய இணையவழி அநாமதேய துன்புறுத்தலுக்கு ஆளானேன். இதைப் பற்றி நான் ஒரு போலீசு புலனாய்வாளரிடம் பேசியபோது, என்னைக் குறிவைத்து தாக்க விரும்பும் யாரையாவது எனக்குத் தெரியுமா என்று போலீசார் கேட்டார்கள்.

இதுவொருபுறமிருக்க, எனது பெற்றோர் அச்சுறுத்தப்பட்டு தொல்லைக்கு ஆளாவதென்பது இப்போது முதன்முறையாக நடப்பதல்ல. 1991-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நான் பட்டதாரி மாணவனாக இருந்தபோது, எனது பெற்றோருக்கு அநாமதேய தொலைபேசி அழைப்புகள் வந்தன. இந்து தேசியவாதம் தொடர்பான தலைப்புகளில் நான் கட்டுரை எழுதுவதை நிறுத்துமாறு அந்த அழைப்புகள் கூறின.

மிக அண்மைக் காலங்களில்கூட, எனது எழுத்துக்கள் காரணமாக எனது பெற்றோருக்குத் தொடர்ந்து அநாமதேய தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த இந்துத்துவ அமைப்பின் தலைவர் ஒருவர் எனது குடும்பம் – அதாவது, எனது பெற்றோர், எனது மாமியார், மாமனார் என்று நீட்டிக்கப்பட்ட எனது குடும்பம் – குறித்து விசாரணை நடத்தியதாக என்னிடம் கூறினார். பின்னர், அவர் தனது அமைப்பின் கருப்புப் பட்டியலில் ஒருங்கே திரட்டி வைத்துள்ள அறிஞர்களின் விவரத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அவர்களின் குறிக்கோளானது, மார்க்சியம், பெண்ணியம், கீழ்நிலை மக்கள், விமர்சனக் கோட்பாடுகள் – ஆகியவற்றைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வோருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதாகும். ஆனால், அடிப்படையில் இவை எனக்கு ஆர்வமுள்ள துறைகளாகும்.

எங்கும் விரவியுள்ள டிஜிட்டல் தொழில்நுட்பமானது, உலகின் எந்தவொரு போலீசு நிறுவனத்திற்கும் அநாமதேயத் தொலைபேசி அழைப்புகளை அனுமதிக்கிறது. அது, ஒரு போலீசு நடவடிக்கையைத் தொடங்குவதை எளிதாக்குகிறது. சமீபத்திய பத்தாண்டுகளில், சட்ட அமலாக்கத்தின் இராணுவமயமாக்கல்தான் ஸ்வாட் குழுக்கள் என்பதும், சந்தேகத்திற்கு இடமில்லாத நபர்களின் வீட்டு வாசல்களில் இந்த ஸ்வாட் குழுவானது அடுத்த சில நிமிடங்களில் வந்து நின்று அச்சுறுத்தும் என்பதும், இந்த அநாமதேயத் தொலைபேசி அழைப்பாளர்களுக்குத் தெரியும்.

போலீசுத் துறையானது முடுக்கிவிடப்படும்போது, போலீசுக்கு தெரிந்தது ஒரு வழி மட்டும் தான். இந்த அநாமதேய அழைப்பாளர்களுக்கு போலீசாரை எவ்வாறு தூண்டுவது என்பதும் தெரியும்.

ஸ்வாட்டிங் நடவடிக்கையானது, சில சமயங்களில் அப்பாவி நபர்களைக் கொல்வதற்கு வழி வகுக்கிறது என்பதை இந்த அநாமதேய தொலைபேசி அழைப்பாளர்கள் முழுமையாக அறிந்தவர்கள்தான். இருப்பினும், இந்த அநாமதேய தொலைபேசி அழைப்புகள் குறிப்பிடுவது போல யாராவது உண்மையிலேயே சுட்டுக் கொல்லப்படாவிட்டால், சட்ட அமலாக்க நிறுவனங்களின் மேலதிக விசாரணைக்கு இத்தகைய ஸ்வாட்டிங் தொலைபேசி அழைப்புகளுக்கு முன்னுரிமை தருவதில்லை என்பதையும் அவர்கள் அறிவார்கள். பெரும்பாலும் இத்தகைய ஸ்வாட் அதிரடி குழுவின் நடவடிக்கைகள் மரணங்களை விளைவிப்பதில்லை. எனவே, அநாமதேய அழைப்பாளர்களைப் பொறுத்தவரை மிரட்டலுக்கும் துன்புறுத்தலுக்குமான ஒரு சிறந்த வடிவம் ஸ்வாட்டிங் ஆகும்.

தற்போதைய ஸ்வாட்டிங் அல்லது அதற்கு முந்தைய துன்புறுத்தல்களானது, எனது எழுத்துக்களுடன் தொடர்புடையவை என்பதற்கு நேரடி ஆதாரங்கள் இல்லை என்பதை நான் முழுமையாக அறிவேன். இதேபோன்ற ஆதாரங்கள் சிண்டர்ஸ் விவகாரத்திலும் இல்லை. எனினும், எல்லாவற்றுக்கும் மேலான பிரச்சினை இதுதான்.

அமெரிக்காவில் போலீசுத் துறைகளுடன் பணிபுரியும் ஒரு இணையப் பாதுகாப்பு நிபுணரை நான் தொடர்பு கொண்டபோது, இதுவரை நடந்த அனைத்து விவரங்களையும் அவரிடம் நான் தெரிவித்த போது அவர் கவனமாகக் கேட்டுக் கொண்டார். எங்களது உரையாடலின் போது, மேலதிக தகவல்கள் அல்லது வழிவகைகளுக்காக தனது தரவுத்தளங்கள் வாயிலாக அவர் தேடினார். நன்கு திட்டமிடப்பட்டதும், இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களும் உள்ளிட்டு, ஆன்லைன் ட்ரோலிங்-கும் எழுத்தாளர்களுக்கு எதிரான வன்முறை அச்சுறுத்தல்களும் இப்போது அன்றாட நிகழ்வுகளாக இருக்கின்றன என்பதை அவர் எனக்கு நினைவூட்டினார்.

ஆனால் ஸ்வாட்டிங் என்பது வேறுபட்டதொரு உத்தரவின் விரிவாக்கம் ஆகும். அதற்கு வழிவகுத்திருக்கக்கூடிய வேறு ஏதேனும் சாத்தியப்பாடுகளைப் பற்றி விவரிக்குமாறு அவர் என்னிடம் கேட்டார். எனக்கு நேர்ந்த ஸ்வாட்டிங் சம்பவத்திற்குப் பின்னர் மட்டுமே, நான் கருத்தில் கொள்ளத் தொடங்கிய இதர பிற தற்செயலான நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன என்பதை நான் சுட்டிக் காட்டினேன்.

பேய்த்தனமாகத் தொல்லை கொடுத்தல் (Spectral harassment)

அறிவுத்துறையைச் சார்ந்தவரும் இந்துத்துவாவின் நிறுவனர்களில் ஒருவருமான வி.டி. சாவர்க்கர் (விநாயக் தாமோதர் சாவர்க்கர்) குறித்து 2019-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சோசலிசப் பத்திரிகையான ஜேகோபின் (Jacobin)-னுக்கு நான் ஒரு நேர்காணல் கொடுத்தேன் என்று அப்போது அவரிடம் விளக்கினேன்.

ஒருவர் இந்துவாக இருப்பதற்கான சாவர்க்கரின் வாதத்தில், வன்முறை என்பது மையப் பொருளாக உள்ளது என்று நான் அந்த நேர்காணலில் குறிப்பிட்டிருந்தேன். எனது வாதத்தை முன்வைத்து இந்திய ஊடகங்களும் நாளேடுகளின் கட்டுரைகளும் விவாதிக்கும் அளவுக்கு ஓரளவுக்கு இந்த நேர்காணல் கவனத்தைப் பெற்றது. அதன் பிறகு மிகக் குறுகிய காலத்திலேயே, எனக்கு முதலாவது அநாமதேய இணைய துன்புறுத்தல் நிகழ்வானது தொடங்கியது.

“வன்முறையே இந்து நயநாகரிகம்” (“violence as Hindu civility”) எனும் சாவர்க்கரின் விளக்கம் குறித்து கோட்பாட்டளவிலான ஒரு கட்டுரையை நான் வெளியிட்ட பின்னர், இந்த ஸ்வாட்டிங் விவகாரம் தொடங்கியது. இதே தலைப்பில் ஒரு நேர்காணலை இடதுசாரி இணையப் பத்திரிகையான கவுன்டர் கரண்ட்ஸ்(Countercurrents)-க்கு அளித்தேன். அதைத் தொடர்ந்து, மீண்டும் இந்தியாவில் சில கருத்துரையாளர்கள் தேசிய பத்திரிகைகளில் இதைப் பற்றி எழுதினர்.

இந்த நேர்காணல்களைப் பற்றி நான் குறிப்பிட்டவுடன், அந்த இணையப் பாதுகாப்பு நிபுணர் அவற்றைத் தொடர்பில்லாத நிகழ்வுகள் என நிராகரிப்பார் என்று நான் கருதினேன். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. அவரது மதிப்பீட்டின்படி, “இது சீரற்றதாக இருப்பதற்கு, பெரும் எண்ணிக்கையிலான தரவு அம்சங்கள் உள்ளன.” அதேவேளையில், நான் ஒரு சர்ச்சைக்குரிய அரசியல் நபரான சாவர்க்கரைப் பற்றி எழுதுகிறேன் என்பதையோ, இந்த ஒத்திசைவான தற்செயல் நிகழ்வுகளையோ பொதுவில் ஒரு இணையப் பாதுகாப்பு நிபுணர் தனது முதன்மையான பணியில் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ள மாட்டார் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

படிக்க :
♦தன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் !

♦ சாவர்க்கர், இரு தேசக் கோட்பாடு மற்றும் இந்துத்துவா | ராம் புனியானி

முகமற்ற, பெயரில்லாத, கண்ணுக்குத் தெரியாத குற்றவாளிகளால் தொடங்கப்பட்ட இந்த நிகழ்வுகளுக்கு ஒரு பேய்த்தனமான இயல்பு உள்ளது. வெறுமனே தொல்லைப்படுத்தும் இத்தகைய செயல்கள், இன்றைய அமெரிக்காவில் நிச்சயமாக சாத்தியமானதுதான்.

ஒருவேளை, சாவர்க்கரை இந்திய தேசத்தின் “Ghost father” என்று நான் அடையாளம் காட்டியதன் விளைவுகளாக இவை இருக்கலாம்.

ஆயினும்கூட, தனிப்பட்ட முறையில் எனக்கு இது புரியாத புதிராக இருக்கிறது. சாவர்க்கருடைய சீடர்களில் ஒருவரால் எனக்கு பெயரிடப்பட்டதை எனது பெற்றோர் மூலம் அறிந்த பிறகு, அந்த நாள் முதல் நான் சாவர்க்கர் மீது ஆர்வம் காட்டினேன். அந்தச் சீடர், நூற்றுக்கணக்கான இதர ஆண் குழந்தைகளுக்கும் இதே பெயரைச் சூட்டியுள்ளார்.

சாவர்க்கரின் படைப்புகளை நான் ஆழ்ந்த அக்கறையுடன் பாவிக்கிறேன். ஏனெனில், அவர் 20-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான இந்திய அரசியல் சிந்தனையாளர்களில் ஒருவராக இருந்தார். சாவர்க்கரின் கருத்துக்களுடன் அடிப்படையிலேயே உடன்படவில்லை என்றாலும், இன்றைய இந்தியாவிலுள்ள மக்கள் சாவர்க்கரைப் படிக்க வேண்டும் என்று நான் வாதிட்டேன். அதன் பிறகுதான் நாம் முழுமையாக இந்துத்துவாவை விளக்க இயலும். அவர் செல்வாக்குச் செலுத்தி, வடிவமைக்கவும் உதவி செய்த இந்தியா என்ற கருத்தாக்கத்தையும் விளக்க இயலும்.

முடிவாக, இத்தகைய தொல்லைப்படுத்தலானது, கண்ணுக்குத் தெரியாத வலதுசாரிகளது  கைவரிசையின் தடயங்களைக் கொண்டிருக்கிறது. இந்த வலதுசாரிகள் அறிவார்ந்த விவாதத்தில் ஒருபோதும் ஆர்வம் காட்டாமாட்டார்கள்.

★★★

 சொற்பொருள் விளக்கம்:

  • Alt-Right என்பது Alternative Right என்பதன் சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிறது. வலதுசாரி மாற்று என்ற இந்த இயக்கம், அமெரிக்காவின் அதிதீவிர வலதுசாரி மற்றும் வெள்ளை நிறவெறி தேசியவாதத்துடன் தொடர்புடைய இயக்கமாகும்.
  • இண்டர்போல் – INTERPOL – International Criminal Police Organization – உலகின் மிகப் பெரிய போலீசு அமைப்பான இதில் 194 நாடுகள் இணைந்துள்ளன. நாடு கடந்த குற்றங்கள், பயங்கரவாதம், இணையவழிக் குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், ஆபாசப் படமெடுத்துப் பரப்புதல், போதை மருந்து கடத்தல், அரசியல் ஊழல் குற்றங்கள், வங்கி – பங்குச்சந்தைக் குற்றங்கள், காப்புரிமைச் சட்ட மீறல் முதலானவற்றைக் கண்காணித்து தடுக்கும் பணியில் அங்கம் வகிக்கும் நாடுகளுடன் இந்த அமைப்பு ஒத்துழைத்து ஒருங்கிணைக்கும்.
  • ஆன்லைன் ட்ரோலிங் – இணையத்தின் வழியாக உள்நோக்கத்துடன் ஒருவரை அல்லது குழுவை இழிவுபடுத்துவது, எரிச்சலூட்டுவது, அச்சுறுத்துவது, ஆத்திரமூட்டுவது, நையாண்டி செய்வது.

கட்டுரையாளரைப் பற்றி…

விநாயக் சதுர்வேதி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இர்வின் கல்லூரியில் வரலாற்றுத்துறை இணை பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவர், வி.டி. சாவர்க்கரின் அறிவுசார் வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார்.

✼ ★ ✼


கட்டுரையாளர் : விநாயக் சதுர்வேதி
தமிழாக்கம் : நவீன்குமார்
செய்தி ஆதாரம் : The Hindu

இந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் ! எங்களுக்கில்ல..

சென்னை – சைதை மார்க்கெட் வியாபாரிகளிடம் ஒரு நேரடி ரிப்போர்ட் –  பாகம் 1

கொரோனா பெருந்தொற்று, ஊரடங்கு, வேலையிழப்பு என பல இன்னல்களோடு இந்த தீபாவளியை சந்தித்திருக்கின்றனர் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர். ஊரடங்கால் வேலையிழப்பு மட்டுமல்லாமல், சிறு தொழில்கள், ஆட்டோ சவாரி ஆகியவற்றில் ஏற்பட்ட நலிவு ஆகியவை இந்த தீபாவளியை கலையிழந்த தீபாவளியாக்கியிருக்கிறது.

சென்னை சைதாப்பேட்டை, கலைஞர் கருணாநிதி பொன் விழா வளைவிற்குள் உள்ள மார்க்கெட் பகுதி சிறுவியாபாரிகள், தங்களின் தீபாவளி வியாபார அனுபவத்தை நம்மிடம் பகிர்கிறார்கள்

வெங்கடேசன், வயது 58 – காய்கறி வியாபாரி

கொரானாவால் 70% வியாபாரம் கெடையாது. ஜனங்க அங்கங்க காய்கறி வாங்கிக்கிறாங்க யாரும் மார்க்கெட்டுக்கு வர்றது கிடையாது. போன தீபாவளிக்கு 15,000 – 20,000 ரூபாய்க்கு வியாபாரம் பண்ணேன். இந்தவாட்டி 2,000 – 3,000-க்கு தான் வியாபாரமாச்சு. சரக்கும் அதிகமா எடுக்குறது கெடையாது. விக்கவிக்க ஒரு மூட்டை ரெண்டு மூட்டைன்னு எடுக்குறதுதான். முன்னலாம் 5 மூட்டை 6 மூட்டைன்னு எடுத்துட்டு வருவேன். இப்போ ஒரு மூட்டை விக்கிறதுக்கே ஒரு வாரம் ஆயிடுது.  இந்த மார்க்கெட்டுல ஞாயித்துக்கிழமைன்னா நிக்க முடியாத அளவுக்கு ஜனங்க வரும். அப்போ ஒரு நாளைக்கு மூவாயிரம் நாலாயிரத்துக்கு சரக்கு விக்கும். இப்போ எப்படி இருக்குன்னு பாருங்க.

கடையில ஒரு ஆள வேலைக்கு வைச்சோம்னா 500 ரூவா சம்பளம் கொடுக்கனும். வியாபாரம் நல்லா போச்சுனாதான வருமானம் வரும், அதுல இருந்து கடையாளுக்கு சம்பளம் கொடுக்க முடியும். வியாபாரம் இல்லன்னா என்ன பண்ண முடியும்?

0o0o0

சுரேஷ், வயது 45 – தெருவோர துணிக்கடை வைத்திருப்பவர்

இந்த தீபாவளி ரொம்ப மோசம்மா. கொழந்தைகளுக்கு ஒரு நல்லதையும் வாங்கி கொடுக்கல. 20-25 வருஷமா இந்த வியாபாரம் பண்ணிட்டுவர்றோம். இந்த கொரானா வந்து எங்க பொழப்ப கெடுத்திருச்சி. வீட்டுல இருந்த நக நட்டு வித்துதான் வயித்த கழுவிகிட்டு இருந்தோம். லாக்டவுன் முடிஞ்சி இப்போ மழக்காலம் வந்திருச்சு. வாரத்துக்கு ஒருநாளு தான் கடைய போடமுடியுது. முன்னல்லாம் தீபாவளிக்கு 20,000 ரூவாக்கு சரக்கு வாங்கிப்போடுவோம்; 10,000-க்கு விக்கும். இப்போ ரெண்டாயிரம் மூவாயிரம் கெடைக்கிறதே கஷ்டமாயிருக்கு.

0o0o0

சாரதி, வயது 53 – காய்கறி வியாபாரி

வண்டி ஒன்னு கருப்பு பிளக்ஸ் போட்டு மூடியிருக்கு பாரு.. அது என்னோட கடதான். மூடி ஒன்றரை மாசமாகுது. பொழப்பில்லாம உட்காந்துட்டு இருக்கேன். கொரானா வந்ததுலருந்து எந்தப் பண்டிகையும் இல்ல. (அடகுக் கடையையும், நகைக் கடையையும் சுட்டிக்காட்டி) இவனுங்களுக்குதான் கொண்டாட்டமே! ரெண்டு மூணு வருஷம் பொறுத்துக்கூட இந்த பொருள (நகை) விக்கலாம். ஆனா தக்காளிய இன்னிக்கு வாங்கி மறுநாளு விக்கமுடியுமா? இதான் நிலம.

போன மாசமே சிறுகுறு தொழிலாளிகளுக்கு பணத்த போடுறன்னு சொன்னாங்க. இதுவரைக்கு எந்த பேங்குல கொடுத்துருக்காங்க? தெருவோர வியாபாரிகளுக்கு கவர்மெண்டு கைக்குடுத்தாதான் ஓரளவுக்கு நடுத்தர மக்கள் சமாளிக்க முடியும். சிறு வியாபாரிகளுக்கு லோன் குடுக்குறன்னு சொல்றானுங்க பேங்குல போயி கேட்டா அப்படியொரு ஸ்கீமே இல்லன்றா. பணம் இருக்குறவனுக்கு கோடிக்கணக்குல கடன குடுக்குறான். அவன் பணத்த கட்டாம ஓடிடுறான். கடன் வாங்குற பெரிய பணக்காரனுங்கதான் ஏமாத்துறான்; நடுத்தர மக்கள் யாரும் ஏமாத்தமாட்டான். ஏமாத்துறவன எங்க புடிக்கிறாங்க. நடுத்தர மக்களா இருந்தா அதிகாரிகளுக்கு கொஞ்சம் பயப்புடுவாங்க.

கொரோனா காலத்துல குடுத்த கடன கேட்கக்கூடாதுன்னு அரசாங்கம் சொல்லுச்சி. ஆனா இங்க இன்னம்மா நடக்குது? வட்டியோட சேர்த்து மொத்தமா கொள்ளையடிக்கிறாங்க. வயித்தெரிச்சலா இருக்கு.

0o0o0

பூபால், வயது 45 – பழக்கடை வியாபாரி

போனவாட்டி தீபாவளில நல்லா வியாபாரம் ஆச்சு, இந்தவாட்டி கம்மிதான். முன்னாடிலாம் ஞாயித்துக்கிழமைல நல்ல வியாபாரமாகும். இப்போ சுத்தமா இல்ல. பண்டிகை டைம்லலா இந்த இடத்துல நிக்கவே முடியாது. இப்போ பாருங்க வெறிச்சோடி கெடக்கு. ரோட்டுல கடை வச்சிருக்குறவங்களுக்கு எல்லாம் நிவாரணம் கிடைக்கல. பெரிய கடை வச்சிருக்குறவங்களுக்குதான் நிவாரணம்லாம்.

0o0o0

ஸ்ரீதர், வயது 52 – துணிக்கடை முதலாளி

கொரோனாவால வியாபாரம் இல்ல. எங்களோட வியாபாரம்லா மிடில் கிளாஸ் – லோ கிளாஸ் மக்கள நம்பித்தான் இருக்குது. மக்களுக்கு வருமானம் இருந்தாதான துணிய எடுக்க வருவாங்க. அவங்கவங்க சாப்பாடுக்கே வழியில்ல இதுல துணியெடுக்குறதா முக்கியம்? ஜி.எஸ்.டி-ல பாதி வியாபாரம் போச்சு. கொரோனா வந்து முழுசா போச்சு. பஜாருக்கு வர ஜனங்க, வந்து பாத்துட்டு துணிய வாங்க கடைக்குள்ள வரமாட்றாங்க. ரெகுலர் கஸ்டமர் இருக்குறதுனால தான் இங்க உக்காந்துட்டு இருக்கோம். இல்லன்னா எங்களுக்கு இங்க வேலையே கிடையாது.

***


வினவு புகைப்பட செய்தியாளர்கள்

 

INI – CET : 11 கல்லூரிகளுக்கு நீட் விலக்கு – தமிழகத்துக்குக் கிடையாதா ?

1

எம்.டி., எம்.எஸ். உள்ளிட்ட மருத்துவக் கல்வி மேற்படிப்புக்கான நீட் -பி.ஜி. தேர்வில் இருந்து மத்திய அரசின் கீழ் இயங்கும் 11 கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளித்து, அவற்றுக்கு மட்டும் தனியாக INI – CET (Institute of National Importance – Combined Entrance Test ) எனும் சிறப்பு நுழைவுத்தேர்வை அறிவித்துள்ளது மத்திய அரசு.

கடந்த நவம்பர் 16 அன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் 11 மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு ”தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள்” என்ற அடிப்படையில் தனியான நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

டெல்லி, போபால், புவனேஷ்வர், ஜோத்பூர், நாக்பூர், பாட்னா, ரிஷிகேஷ், ராய்ப்பூர் ஆகிய நகரங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள், பாண்டிச்சேரி ஜிப்மர், சண்டிகர் பி.ஜி.ஐ.எம்.எர். மருத்துவக் கல்லூரி, பெங்களூரு நிம்ஹான்ஸ் ஆகிய மருத்துவக் கல்லூரிகள் தான் இந்த “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள்”

படிக்க :
♦ நீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் !
♦ கொரோனா நோயாளிகளை தற்போது குணப்படுத்தும் மருத்துவர்கள் நீட் தேர்வு எழுதியவர்களா ?

இந்தக் கல்லூரிகளுக்கான சேர்க்கைக்கு போட்டியிடும் மாணவர்கள் கடந்த ஆண்டு வரை நடைமுறையில் இருந்த நீட்-பி.ஜி தேர்வுகளை இனி எழுத வேண்டியதில்லை. இந்த “தனிச்சிறப்புக்” கல்லூரிகளுக்கு என ஏற்பாடு செய்யப்படும் இந்த பொதுவான நுழைவுத்தேர்வை எழுதி அதில் தேறினால்தான் இக்கல்லூரிகளில் சேர அனுமதிக்கப்படுவர்.

இந்தப் புதிய நுழைவுத் தேர்வுமுறை மாணவர்களுக்கு பெரும் சுமையாகும். இதற்கு முன்னால், நீட் – பி.ஜி தேர்வு மட்டும் எழுதினால் போதும். இதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இந்தக் கல்லூரிகளில் ஏதேனும் ஒரு கல்லூரியில் சேர முடியும். ஆனால் தற்போது இந்த 11 கல்லூரிகளில் சேர விருப்பமுள்ளவர்கள் “இனி-செட்” தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டிய சூழலில், ஒருவேளை இக்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்காத பட்சத்தில் பிற மருத்துவக் கல்லூரிகளில் சேர, நீட் – பிஜியும் எழுதவேண்டும். இது மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு பெரும் மன சுமையாக அமையும்.

மருத்துவக் கல்வியில் தமிழகம் பின்பற்றி வந்த இட ஒதுக்கீடுகளை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் சாதித்த மத்திய அரசு, தற்போது இந்த  “தனிச்சிறப்பான கல்லூரிகளில்” எம்.பி.பி.எஸ். படித்த மாணவர்களுக்கு ”இனி-செட்” நுழைவுத் தேர்வில் உள் ஒதுக்கீடு வழங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த புதிய தேர்வுமுறை குறித்துப் பேசியுள்ள சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத், மத்திய அரசு கூறும்  “தேசிய முக்கியத்துவம்  வாய்ந்த” கல்லூரிகளின் தர நிர்ணயம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய மருத்துவக் கொள்கை-2017-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்தியா முழுவதும் மொத்தம் 11 கல்லூரிகள்தான் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. அத்தகைய கல்லூரிகளில் பெரும்பாலானவை மாநில அரசுகளின் கீழ் வரும் மருத்துவக் கல்லூரிகள்தான். அப்படியிருக்கையில் எந்த அடிப்படையைக் கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது? எந்த அடிப்படையில் மாநில அரசின் கீழ் உள்ள சிறந்த கல்லூரிகளுக்கு அந்த  அந்தஸ்த்து வழங்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் மருத்துவர் இரவீந்திரநாத் .

தரமான தேர்வுமுறை என்று முட்டுக்கொடுக்கப்பட்ட நீட் தேர்வுமுறையிலிருந்து  “தனிச்சிறப்புத் தகுதி கொண்ட கல்வி நிறுவனங்களுக்கு”  விலக்கு அளிக்க முடியும்போது, நீட் தேர்விலிருந்து தமிழகம் உள்ளிட்ட குறிப்பான மாநில அரசுகள் கேட்ட நீட் தேர்வு விலக்கை வழங்க முடியாதா ?

இவர்கள் குறிப்பிடும் “தனிச்சிறப்பான” மருத்துவமனைகளும், மருத்துவக் கல்லூரிகளும் செய்திருக்கும் சாதனைகளை விட மருத்துவத்துறை ஆய்விலும், சிறப்பான மருத்துவம் வழங்குவதிலும்  சாதனை படைத்த தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய இச்சமயத்தில், எடப்பாடியோ “இனி செட்” தேர்வில் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் தேர்வு மையம் ஒதுக்குமாறு மோடியிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறார்.

நீட் தேர்வு முறைக்கு “தரமானது”, “தனிச்சிறப்பானது” என இதுவரை முட்டுக் கொடுத்த கூட்டம் இப்போது  பதிலளிக்கப் போவதில்லை.  நீட் தேர்வு மாநில உரிமைகளையும், போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டையும் பறிப்பதற்கானதுதான் என்பது அந்தக் கூட்டத்திற்கு நன்றாகவே தெரியும்.

நயவஞ்சகமாக நம் கல்வி உரிமைகளை பறிக்கும் மத்திய மோடி மற்றும் தமிழக அடிமை எடப்பாடி அரசுகளுக்கு எதிராக ”நீட்டையும் புதிய கல்விக் கொள்கையையும் ஒழித்துக்கட்டு” எனும் குரல் வீதிகளில் ஒலிக்கும் போதுதான் இக்கும்பலின் கொட்டம் அடங்கும் !


சரண்
செய்தி ஆதாரம் :
தினகரன்

கொரோனா காலத்தில் “அள்ளிக் கொடுத்த” பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பு உயர்வு !

நாடு தழுவிய கொரோனா ஊரடங்கின், முதல் நான்கு மாத காலத்தில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை), உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்தையும் தாண்டி இந்திய கோடிசுவரர்கள் சொத்து மதிப்பு மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது.

UBS மற்றும் PWC வெளியிட்டுள்ள 2020-ன் Billionaires Insights அறிக்கையின் படி, ஏப்ரல் முதல் ஜூலை வரை இந்திய கோடிசுவரர்களின் நிகர சொத்து மதிப்பு 35% அதிகரித்து 423 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.

2009 முதல் ஜூலை 31, 2020 வரை  இந்திய கோடிசுவரர்களின் நிகர சொத்து மதிப்பு  90% அதிகரித்துள்ளது. இதில் அமெரிக்கா, சீனா , ஜெர்மனி , ரஷ்யா மற்றும் பிரான்ஸை தொடர்ந்து உலகளவில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. இந்திய கோடிசுவரர்களின் சொத்து மதிப்பு ரஷ்யாவின் கோடிசுவரர்களை விட வேகமாக அதிகரித்துள்ளதாக UBS – PwC அறிக்கை கூறுகிறது. அவ்வறிக்கையின் படி 2009-ல் இருந்து இன்றுவரை ரசிய கோடிசுவரர்களின் சொத்து மதிப்பு  80% அதிகரித்துள்ளது.

படிக்க :
♦ பணக்காரர்கள் எப்படி உலகப் பணக்காரர்கள் ஆனார்கள் ?
♦ பிரச்சினை ஏழைகளின் வயிறா பணக்காரர்களின் வாயா ?

Forbes வெளியிட்ட 2020-ன் India Rich List படி, இந்தியாவின் பெரும்பணக்காரரான முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு கடந்த ஒருவருடத்தில்  73 % உயர்ந்து,  கிட்டத்தட்ட 89 பில்லியன் (₹6.52 லட்சம் கோடி) டாலர்களை எட்டியுள்ளது. இது இவருக்கு அடுத்த இடத்தில் உள்ள கெளதம் அதானியை ($25.2 பில்லியன்) விட மூன்று மடங்கு அதிகம். இதனால் தொடர்ந்து 13-வது வருடமாக, முகேஷ் அம்பானி இந்தியாவின் பெரும்பணக்காரராக இருக்கிறார். இவர்களை தொடர்ந்து  HCL நிறுவனர் ஷிவ் நாடார், தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் Serum Institute of India நிறுவனர் சைரஸ் பூனாவாலா, Biocon நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜும்தார் ஷா ஆகியோரும் அந்த பட்டியலில் உள்ளனர்.

Bloomberg Billionaires Index-ன் படி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானிதான் உலகளவில் 10 பெரும் பணக்காரர்களின் பட்டியலிலுள்ள ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த ஒரே நபர்.

இந்தியா மோசமான பொருளாதார மந்த நிலையை நோக்கி செல்லும் வேளையில்,  முரண்பாடாக “ஒரு சில பில்லியனர்களின் சொத்து மதிப்பு மட்டுமே சென்ற ஆண்டை விட இந்த ஆண்டில் குறைந்துள்ளது” என்று Forbes தனது அறிக்கையில் கூறியுள்ளது. இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது, மக்கள் தொகையில் 1% இருக்கும்  இந்திய பெரும் பணக்காரர்கள் நாட்டின் மொத்த சொத்து மதிப்பில் 42.5% வைத்திருக்கின்றனர். ஆனால் அடிமட்டத்திலுள்ள 50% மக்களிடம் வெறும் 2.8 % சொத்துக்கள் தான் உள்ளது என Oxfam report-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, மக்கள் தொகையில் 10 % இருக்கும் பெரும்பணக்காரர்களிடம், நாட்டின் மொத்த செல்வத்தில் 74.3 % இருக்கும் நிலையில், 90% மக்களிடம் 25.7% மட்டுமே உள்ளது.

“அம்பானியின் நிறுவனங்கள் (குறிப்பாக ஜியோ) வளர்ந்துள்ளதால், அம்பானியின் தனிப்பட்ட சொத்துகளும் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது” என்று JNU பல்கலைகழகத்தின் Centre of Economic Studies and Planning – ன் தலைவர் ஜெயதி கோஷ் கூறியுள்ளார்.

₹1000 கோடிக்கும் அதிகமாக சொத்துக்கள் வைத்துள்ள செல்வந்தர்களின்  பட்டியலை ஆகஸ்டு 31, 2020 அன்று The Hurun India வெளியிட்டது. அம்பானி, இந்துஜா சகோதரர்கள்(SP இந்துஜா மற்றும் அவரின் மூன்று சகோதரர்கள்) – இவர்களின் மொத்த சொத்து மதிப்பு ₹ 1.43 லட்சம் கோடி, HCL ஷிவ் நாடார் (₹ 1.41 லட்சம் கோடி), ஆகியோர் பெயர்களும் 824 பெரும்பணக்கார இந்தியர்களின் பட்டியலில் உள்ளது.

2019-ல் $140 பில்லியன் (₹10.29 லட்சம் கோடி ) ஆக இருந்த இந்த 828 நபர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, 2020-ல் $821 பில்லியன் ( ₹ 60.59 லட்சம் கோடி ) உயர்ந்துள்ளது. இதில் பெரும்பங்கு, ரிலையன்ஸ் நிறுவன பங்குகளின் விலையேற்றத்தால்  உருவானது.

கோவிட்-19 நிவாரணங்களுக்காக இந்தியாவின் 9 பில்லியனர்கள் 541 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இது உலகளவில் வழங்கப்பட்ட நன்கொடைகளில், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியானது என்று  “BloombergQuint” கூறுகிறது.

முகேஷ் அம்பானியின் RIL நிறுவனம் ₹500 கோடியை PM CARES-க்கும், தலா ₹ 5 கோடியை மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்தின் CM FUNDS-க்கும் வழங்கியுள்ளது. இதனை தவிர்த்து,  RIL, மும்பையிலுள்ள Seven Hills மருத்துவமனையின் கொரோனா  பிரிவுக்கு நூறு படுக்கைகள் வழங்கியுள்ளது.

படிக்க :
♦ முதலாளித்துவத்தின் அழிவுப்பாதையை வெளிக்கொணர்ந்த கொரோனா – நோம் சாம்ஸ்கி
♦ கொரோனா : தூய்மைப் பணியாளர்களின் துயரம் ! தோழர் சீனுவாசலு நேர்காணல் !

Forbes வெளியிட்டுள்ள அறிக்கையின் படி விப்ரோ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜி, கோவிட்- 19 நிவாரணமாக $132 மில்லியன் வழங்கியுள்ளார். இதன் மூலம் ஜாக் டோர்சே மற்றும் பில் கேட்ஸ்க்கு அடுத்து மூன்றாவது பெரிய நன்கொடையாளராக ஆகியுள்ளார்.

உலகளவில் பில்லியனர்கள் $7.2 பில்லியன் டாலரை கொரோனா வைரஸ் நிவாரணமாக வழங்கியுள்ளனர். சுவிஸ் வங்கியின் UBS வெளியிட்ட அறிக்கை படி , உலகளவில் மொத்த பில்லியனர்களின் சொத்து மதிப்பு 2017-ன் இறுதியில் $8.9 டிரில்லியனாக இருந்தது ஜூலை 2020-ல் $10.2 டிரில்லியனாக அதிகரித்துள்ளது. 2017-ல் 2,158 ஆக இருந்த பில்லியனர்களின் எண்ணிக்கை தற்போது 2,189 என அதிகரித்துள்ளது.

USB-ன் Global family office department- ன் தலைவர் ஜோசப் ஸ்டாட்லர் “கோவிட் -19 நெருக்கடி சூழலிலும்  கோடிசுவரர்கள் மிகவும் நன்றாக செயல்பட்டு இருக்கிறார்கள். அதாவது இந்த நெருக்கடி சூழலில்  இருந்து வெறுமனெ மீண்டு எழுவது மட்டுமின்றி பங்கு சந்தையில் ஏற்பட்ட உயர்வால் அவர்கள் மேலெழுந்தும் இருக்கிறார்கள்.

UBS அறிக்கையின் படி “பெரும்பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாவது முதலாளித்துவம் எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்படவில்லை என்பதற்கான அறிகுறி” என்று High Pay Centre- ன் executive director – ஆன Luke Hilyard , Guardian பத்திரிகையில் கூறியுள்ளார்.

0o0o0


தமிழாக்கம் : தேவா  
நன்றி :
The Wire

குறிப்பு :
பெரும்பணக்காரர்கள் கொரோனாவில் ஏழைகளுக்கு அள்ளிக்கொடுக்கும் தாராளபிரபுக்களாக நம் முன்னே வலம் வருகிறார்கள். அவர்கள் அள்ளி வீசும் பணம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் நமக்குக் காட்டுகின்றன. யாரிடமிருந்து எடுத்து யாருக்குக் கொடுக்கப்படுகிறது என்பதிலிருந்துதான் இது யாருக்கான அரசு என்பதைப் புரிந்து கொள்ள முடியும் !

ரசியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டிய மார்க்ஸ் எங்கெல்ஸ் || தோழர் லெனின்

1

பிரெடரிக் எங்கெல்ஸ் : பாகம் – 5 (இறுதி)

பாகம் 4 : விஞ்ஞான சோசலிசத்தை வளர்த்தெடுத்த உயிர் நண்பர்கள்

1848-1849-ம் ஆண்டுகளில் நடைபெற்ற இயக்கத்துக்குப் பிறகு நாடு கடத்தப்பட்ட காலத்தில் மார்க்சும் எங்கெல்சும் விஞ்ஞானத்தைப் பயில்வதோடு நின்றுவிடவில்லை. 1864-ல் மார்க்ஸ் ”சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தை நிறுவினார். அதைப் பத்தாண்டுக் காலத்துக்கு அவர் தலைமை வகித்து நடத்தினார். அதன் விவகாரங்களில் எங்கெல்சும் தீவிரமாகப் பங்கு கொண்டார். மார்க்சின் கருத்துப்படி அந்தச் சர்வதேச சங்கம் எல்லா நாட்டுப் பாட்டாளிகளையும் ஒன்றுபடுத்தியது; தொழிலாளர் இயக்கத்தை வளர்த்ததில் அது ஆற்றிய பணி பிரம்மாண்டமான முக்கியத்துவம் கொண்டது. 1870-80-ம் ஆண்டுகளில் அந்தச் சங்கம் மூடப்பட்ட பின்னரும் கூட மார்க்சும் எங்கெல்சும் ஆற்றிய, ஒற்றுமை ஏற்படுத்தும் பணி முடிந்துவிடவில்லை . மாறாக, தொழிலாளர் இயக்கத்தின் அறிவுத்துறைத் தலைவர்கள் என்ற வகையிலே அவர்களின் முக்கியத்துவம், இயக்கம் இடையறாது எந்த அளவுக்கு வளர்ந்ததோ அந்த அளவுக்கு மேலும் மேலும் வளர்ந்தது.

மார்க்ஸ் மறைந்த பிறகு எங்கெல்ஸ் தனியே நின்று ஐரோப்பிய சோசலிஸ்டுகளின் ஆலோசகராகவும் தலைவராகவும் விளங்கினார். ஜெர்மன் அரசாங்கத்தின் அடக்குமுறை இருந்தபோதிலும் வேகமாக இடையறாது மேன்மேலும் வலுவடைந்த ஜெர்மன் சோசலிஸ்டுகளும், அதே போல் தமது முதல் நடவடிக்கைகளைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து எடைபோட்டுத் தீரவேண்டியிருந்த ஸ்பெயின், ருமேனியா, ரசியா போன்ற பிற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் அவரது ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் நாடினர். வயது முதிர்ந்த எங்கெல்சின் வளமான அறிவு அனுபவக் களஞ்சியத்தை அவர்கள் எல்லோரும் பயன்படுத்தினர்.

படிக்க :
♦ மொங்கோலியா : எழுத்தறிவித்தவன் கம்யூனிஸ்ட் ஆவான் !
♦ பாட்டாளி வர்க்கமும் பாட்டாளி வர்க்கக் கட்சியும் ! | ஜே. வி. ஸ்டாலின்

மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருக்கும் ரசிய மொழி தெரியும்; ரசிய நூல்களைப் படித்தார்கள். இருவருமே ரசிய விசயத்தில் உற்சாகத்துடன் அக்கறை காட்டி வந்தார்கள், ரசியப் புரட்சி இயக்கத்தை அனுதாபத்துடன் கவனித்து வந்தார்கள், ரசியப் புரட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள். சோசலிஸ்டுகளாக ஆவதற்குமுன் அவ்விருவரும் ஜனநாயகவாதிகளாக இருந்தவர்கள். எனவே, அரசியல் கொடுங்கோன்மையின்மீது பகைமை கொள்ளும் ஜனநாயக உணர்ச்சி அவ்விருவரிடமும் மிகவும் பலமாக இருந்தது. இந்த நேரடியான அரசியல் உணர்ச்சியும் அரசியல் கொடுங்கோன்மைக்கும் பொருளாதார ஒடுக்குமுறைக்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றிய ஆழ்ந்த தத்துவரீதியான அறிவும், அதோடு வாழ்க்கையில் அவர்கள் பெற்றிருந்த வளமிக்க அனுபவமும் சேர்ந்து மார்க்சையும் எங்கெல்சையும் குறிப்பாக அரசியல் வழியில் அசாதாரண நுண்ணுணர்வுடன் செயல்படுவோராக்கின. அதனால்தான், மிகப் பலம்வாய்ந்த ஜாரிஸ்ட் அரசாங்கத்தை எதிர்த்து விரல்விட்டு எண்ணத்தக்க ஒருசில ரசியப் புரட்சியாளர்கள் நடத்திய வீரமிக்க போராட்டம் இவ்விரு முதிர்ந்த அனுபவம் வாய்ந்த புரட்சியாளர்களின் இதயத்திலே அனுதாபமிக்க எதிரொலியைக் கிளப்பியது.

மறுபுறத்தில், கானல் நீர் போன்ற பொருளாதார அனுகூலங்களை உத்தேசித்து, ரசிய சோசலிஸ்டுகளின் மிக உடனடியான, முக்கியமான இலட்சியமாகிய அரசியல் சுதந்திரம் போராடிப் பெறுவது எனும் இலட்சியத்தைக் கைவிட்டு விலகிச் செல்லும் போக்கு அவர்களுக்குச் சந்தேகங்களை உண்டாக்கியது இயல்புதான்; அது சமுதாயப் புரட்சி என்ற மகத்தான இலட்சியத்துக்கு நேரடியாகத் துரோகம் புரிவதாகும் என்றுகூட அவர்கள் கருதினார்கள்.

எங்கெல்ஸ்

’பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை பாட்டாளி வர்க்கத்தின் பணியாகவே இருக்க வேண்டும்’ என்று மார்க்சும் எங்கெல்சும் இடையறாது போதித்து வந்தார்கள். மேலும் பாட்டாளி வர்க்கம் தனது பொருளாதார விடுதலைக்குப் போராட வேண்டுமென்றால் தனக்கென்று சில அரசியல் உரிமைகளைப் பெற வேண்டும். தவிரவும், ரசியாவில் ஏற்படும் அரசியல் புரட்சி மேற்கு ஐரோப்பியத் தொழிலாளர் இயக்கத்துக்கும் பிரம்மாண்டமான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மார்க்கம் எங்கெல்சும் தெளிவாகக் கண்டார்கள்.

யதேச்சாதிகார ரசியா ஐரோப்பியப் பிற்போக்குக்கெல்லாம் எப்போதும் ஓர் அரணாக இருந்து வந்தது. 1870-ல் நடந்த போர் ஜெர்மனிக்கும் பிரான்சுக்குமிடையே நீண்ட காலத்துக்குப் பிணக்கு ஏற்படுத்திவிட்டது. அந்தப் போரின் விளைவாக ரசியா ஒரு மிக அனுகூலமான சர்வதேச நிலையை வகித்து வந்தது. அதனால் பிற்போக்கான சக்தி என்ற வகையில் யதேச்சாதிகார ரசியாவின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கவே செய்தது. சுதந்திரமான ரசியாதான், போலிஷ் மக்களையும், ஃபின்னிஷ் மக்களையும், ஜெர்மானியர்களையும், ஆர்மீனியர்களையும், பிற சிறிய இனத்தவர்களையும் ஒடுக்க வேண்டிய தேவையில்லாத ரசியாதான், அல்லது பிரான்சையும் ஜெர்மனியையும் பரஸ்பரம் சண்டையிட்டுக் கொள்ளும்படி எப்பொழுதும் தூண்டிக் கொண்டிருக்க வேண்டிய தேவை இல்லாத ரசியாதான், நவீன ஐரோப்பா தன்னை போர்ச் சுமைகளிலிருந்து விடுவித்துக் கொள்வதைச் சாத்தியமாக்கும், ஐரோப்பாவிலுள்ள எல்லாப் பிற்போக்கு அம்சங்களையும் பலவீனப்படுத்தும், ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கத்தின் சக்தியை அதிகரிக்கச் செய்யும். எனவே தான், மேற்கத்திய தொழிலாளர் இயக்கத்தின் வெற்றிக்காக ரசியாவில் அரசியல் சுதந்திரம் நிலைநாட்டப்படுவதை எங்கெல்ஸ் ஆர்வத்துடன் விரும்பினார். அவரது மறைவால் ரசியப் புரட்சியாளர்கள் தமது மிகச் சிறந்த நண்பரை இழந்துவிட்டனர்.

பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் போராட்ட வீரரும் ஆசானும் ஆகிய பிரெடெரிக் எங்கெல்சின் நினைவு என்றென்றும் பசுமையாய் நிலைத்திடுக !

(முற்றும்)

வி.ஐ.லெனின்
(1895 இலையுதிர் காலத்தில் எழுதப் பெற்றது. 1896-ல் “ரபோத்னிக்” (உழைப்பாளி) என்ற திரட்டு, எண் 1-2-ல் முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்டது)