Monday, June 29, 2026
முகப்பு பதிவு பக்கம் 224

மாப்பிளா கிளர்ச்சியைக் கண்டு காவிக்கும்பல் அஞ்சுவது ஏன் ? || மு இக்பால் அகமது தொடர்

மாப்பிளா கிளர்ச்சி – வரலாறு – பாகம் 1
1836 தொடங்கி 1921 வரை 85 வருடங்களாக நீடித்த கிளர்ச்சி அது.
இறுதியாக, 1921 ஆகஸ்ட் மாதத்தில் 22 வட்டாரங்களில் சுமார் 10 லட்சம் மக்கள் பங்கேற்ற மாபெரும் கிளர்ச்சியில், சுமார் 10,000 பேர் மரணமுற்றனர். கொடிய அந்தமான் சிறையில் மட்டும் 3,000 பேர் கொல்லப்பட்டனர். 42 பேருக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு ஆயுள்தண்டனை விதித்தது.
Conrod Wood என்னும் ஆங்கிலேயர் தன் ஆய்வுக்காக எழுதிய தொகுப்பை, பின்னர் the moplah rebellion and it’s Genesis என்று நூலாக வெளியிட்டார். மாப்பிளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும் என்று தமிழில் நான் மொழிபெயர்த்தேன், அலைகள் வெளியீட்டக பதிப்பு, 2007.
100 ஆண்டுகள் கடந்த நிலையில், கிளர்ச்சியை மையமாகக் கொண்டு கேரளாவில் சில திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருவதாக அறிகின்றோம். பிரிட்டிஷார் + ஜென்மிகள் எனப்படும் இந்து மத உயர்சாதி நிலப்பிரபுக்கள் என்ற அதிகார வர்க்க கெடுபிடிக் கூட்டணிக்கு எதிராக மாப்பிளா முஸ்லிம்கள் நடத்திய நீண்ட போராட்டம் அது. 1919-க்குப் பின் கிலாபத் இயக்கம், காங்கிரஸ் இயக்கம் ஆகியவற்றின் தலையீடு, இப்போராட்டத்தில் என்ன செய்தது என்பதும் கூடவே வாசிக்கப்பட வேண்டியது. ஒருபுறம் இக்கிளர்ச்சியை தேசபக்தப் போராடம் என்று ஒருசாராரும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான மதப்பிரச்சனையே இதன் மையம் என்று மறுசாராரும் வெவ்வேறு நிலைகளில் நின்று வாதிடுகின்றனர். 1980-களில் வெளியான 1921 என்ற மலையாள திரைப்படம், மாப்பிளா கிளர்ச்சியை மையமாக கொண்டதுதான்.
படிக்க :
நாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால் அகமது
கொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது
கான்ராட் உட் தன் நூலின் முடிவுரையில் இப்படித்தான் சொல்கின்றார்:
1921-22 மாப்பிளா கிளர்ச்சி, தெற்கு மலபார் மாப்பிளா சமூக மக்களின் வரலாற்றில் ஒரு மிகப்பெரும் திருப்புமுனை எனலாம். 1792-ல் கிழக்கிந்திய கம்பெனி வடிவில் முதல் முறையாக பிரிட்டிஷ் நிர்வாகம் நிறுவப்பட்ட நாள் தொடங்கி, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகவும், அதன் ஆதரவோடு வளர்ந்த ஜென்மி ஆதிக்க சக்திகளுக்கு எதிராகவும் மாப்பிளா சமூக மக்கள் தொடர்ந்து நீண்ட பல ஆண்டுகளாகத் தமது எதிர்ப்பை கலகங்கள் மூலம் அறிவித்தபடியே இருந்துள்ளார்கள். தொடந்த போராட்டங்களின் இறுதி வடிவமாகவே, தீவிர மண்டலத்தை தம் ஆட்சியின் கீழ்க் கொண்டுவரும் முயற்சியாகவே 1921-22 மாப்பிளா ஆயுதம் தாங்கிய போராட்டம் வெடித்தது. ஒட்டுமொத்தமாகச் சொல்ல வேண்டுமெனில், தெற்கு உட்புற மலபாரின் பாதிக்கப்பட்ட இசுலாமிய சமூகத்தின் எழுச்சியாகத்தான் 1921-22ஆம் ஆண்டில் நடந்த மாப்பிளா கிளர்ச்சியை வரையறுக்க முடியும்.
000
இரயில் எண் 77, சரக்குப்பெட்டி எண் 1711
கோழிக்கோட்டிலிருந்து புறப்பட்ட இரயில் அது. கிளர்ச்சியின் மையமாகயிருந்த திரூருக்கு 1921 நவம்பர் 19-ஆம் தேதியன்று மாலை 6.45 மணிக்கு இரயில் வந்து சேர்கின்றது. மூடப்பட்ட சரக்கு இரயில் பெட்டி ஒன்றில் நூற்றுக்கும் மேற்பட்ட மாப்பிளா முஸ்லிம்களும் 3 இந்துக்களும் அடைக்கப்பட்டார்கள், வெளிப்புறம் தாழிடப்பட்டது. அந்த ரயிலுடன் இணைக்கப்பட்டது.
ஆடு, மாடுகளை கொண்டு செல்வதற்கான பெட்டி அது. தவிர புதிதாக பெயிண்ட் பூசப்பட்டிருந்ததால் சிறு துவாரங்களும் அடைக்கப்பட்டு காற்றுப் புகாத பெட்டி ஆனது. இவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள், வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள். ஹெட் கான்ஸ்டபிள் ஓ.கோபாலன் நாயரும் 5 கான்ஸ்டபிள்களும் அடுத்த பெட்டியில் பயணிக்க, சார்ஜெண்ட் A.H.ஆண்ட்ரூஸ் என்பவர் என்ஜினுக்கு அடுத்து இருந்த இரண்டாவது வகுப்பு பெட்டியில் பயணிக்கின்றார்.
சங்கிகளின் நெருக்குதலின் காரணமாக திரூர் இரயில் நிலையத்திலிருந்து இரயில்வே நிர்வாகத்தால் அழிக்கப்பட்ட மாப்ளா போராட்டத்தின் போது நடைபெற்ற இரயில் படுகொலைச் சம்பவத்தை சித்தரிக்கும் சுவர் சித்திரம்
வழி நெடுகிலும் உள்ளே இருந்தவர்கள் காற்றுக்கும் குடிநீருக்கும் கதறி கூச்சல் இட்டுள்ளார்கள். பெட்டியின் கதவை தட்டி திறக்க போராடியுள்ளார்கள். சோரனூரில் அரை மணி நேரமும் ஒலவகோட்டில் 15 நிமிடங்களும் இரயில் நின்றபோது அவர்களின் கதறல் இந்த போலீஸ்காரர்களுக்கு கேட்கவே செய்தது. தவிர பின்னர் நடத்தப்பட்ட விசாரணையின்போது சாட்சியம் அளித்த பொதுமக்கள் பலர், இரயில் சென்ற வழிநெடுக உள்ளே அடைக்கப்பட்டவர்களின் கூச்சலையும் கதறலையும் கேட்டதாக சொன்னார்கள்.
முக்கியமாக, இரவு 12.30 மணிக்கு போதனூருக்கு இரயில் வந்து சேர்ந்தபோது அதே ரயிலில் பயணித்த மஞ்சேரி ராம ஐயர் என்பவர், இறங்கி வந்து சத்தம்போட்டு பெட்டியின் கதவை திறக்கச் செய்தார். கதவு திறக்கப்பட்டது. உள்ளே அடைக்கப்பட்ட அனைவரும் மயக்கமுற்றுக் கிடந்தார்கள். 56 பேர் ஏற்கனவே இறந்துவிட்டார்கள். உடனடியாக இறந்தவர்கள் 6 பேர். 13 பேரை கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு எடுத்து சென்றார்கள். 25 பேரை மத்திய சிறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். 13 பேரில் 8 பேர் பின்னர் இறந்தார்கள். ஆக மொத்தம் 70 பேர் இறந்தார்கள். கோயம்புத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவரின் பெயர் T.ராமன்.
மெட்ராஸ் அரசு இதற்காக ஒரு விசாரணை கமிசனை அமைத்தது. விசாரணையின் முடிவில், 30.8.1922-ம் தேதியன்று அரசு பின்வரும் ஆணையை வெளியிட்டது:
“கைதிகளைக் கொண்டு செல்லும் அவசரத் தேவைக்காக ஒரு சரக்குப்பெட்டியை பயன்படுத்தியதை தவறு என்று சொல்ல முடியாது, மனிதாபிமானம் அற்ற செயல் என்றும் சொல்ல முடியாது. சார்ஜெண்ட் ஆண்ட்ரூஸ், 5 போலீஸ் ஆகியோர் மீது விசாரணை நடத்த வேண்டும்” என இந்திய அரசு, மெட்ராஸ் அரசுக்கு உத்தரவிட்டது. இறுதியில், அனைவரும் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டார்கள்.
உயிரிழந்த 70 பேர்களின் குடும்பத்துக்கு, தலா ரூ.300 கருணைத்தொகை வழங்கப்பட்டது. (ஆணை எண் 290, 1.4.1922)
000
இரயில்பெட்டி கொடூரமரண நிகழ்வின் 93-வது நினைவு தினம் மலப்புரத்தில் திரூருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் 2014 நவம்பர் 20-ஆம் தேதியன்று கடைப்பிடிக்கப்பட்டது. குறுவம்பலம் என்பது அக்கிராமம். இரயில்பெட்டியில் அடைக்கப்பட்டு இறந்தவர்களில் 41 பேர் இக்கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் திருமணம் ஆகாத இளைஞர்கள்.
“கிளர்ச்சியின்போது இக்கிராமத்தின் இளைஞர்கள் மிகப்பெரும் பங்காற்றியதாக முதியவர்கள் கூறுகின்றனர். மிக சமீப காலம் வரையிலும் கூட கிளர்ச்சியில் குறுவம்பலம் கிராமத்தின் பங்கு பற்றி கிராம மக்களுக்கும் வரலாற்று அறிஞர்களுக்கும் கூட தெரியாமலேதான் இருந்தது. இது குறித்து மேலும் பல ஆய்வுகளை செய்ய வேண்டியது அவசியம்” என்று சலீம் குறுவம்பலம் கூறுகிறார். இவர் 2014-ல் மலப்புரம் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர். குறுவம்பலம் கிராமத்தில் இரயில்பெட்டி தியாகிகளுக்கு நினைவுச் சின்னம் அமைப்பதில் முன்னின்றவர்.
வரலாற்றறிஞர் KKN குருப், “இரயில்பெட்டி கொடூர நிகழ்வு குறித்தும் மலபாரில் கிளர்ச்சியின்போது நிகழ்ந்த அனைத்தையும் அரசு முற்றாக ஆய்வு செய்ய வேண்டும்” என்றார். வரலாற்றறிஞர் எம்.கங்காதரன், “இரயில்பெட்டி கொடூர நிகழ்வுதான் மலபாரில் பிரிட்டிஷ் ஆட்சி நடத்திய மிகப்பெரிய கொடுமை என்று சொல்லிவிட முடியாது, சுமார் 200 மாப்பிளா இளைஞர்களை அவர்களின் வீடுகளுக்குள் இருந்து வெளியே இழுத்து வந்து அவர்களின் குடும்பத்தார் கண்ணெதிரிலேயே பிரிட்டிஷார் சுட்டுக்கொன்ற சம்பவம் 1921, அக்டோபர் மாதத்தில் நடந்தது” என்று சொல்கின்றார்.
000
1971-ல் சி.அச்சுதமேனன் முதல்வராக இருந்த இடதுசாரிகள் அரசு, மாப்பிளா கிளர்ச்சியை இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக அங்கீகாரம் செய்தது, கிளர்ச்சியில் பங்கு பெற்று வாழ்ந்து வந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கியது. மாப்பிளா கிளர்ச்சி, பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் என்று பத்து வருடங்களுக்குப் பிறகு ஒன்றிய அரசும் அங்கீகாரம் அளித்து. கிளர்ச்சியில் பங்கு பெற்று வாழ்ந்து வந்தவர்களுக்கும், கிளர்ச்சியில் உயிர் இழந்தவர்களின் வாரிசுகளுக்கும் பல உதவிகளை அறிவித்தது.
திரூர் இரயில் நிலையத்தில் இரயில்பெட்டி மரணங்களை சித்தரிக்கும் சித்திரம் அழிக்கப்பட்ட வரலாறு:
திரூர் இரயில் நிலையத்தின் சுவரில் இரயில்பெட்டி கொடூரத்தில் மரணமுற்ற தியாகிகளை நினைவூட்டும் சித்திரம் இரயில்வே நிர்வாகத்தால் வரையப்பட்டது. குட்டிபுரம் என்ற ஊரை சேர்ந்த ஓவியர் பிரேமன் சித்திரத்தை வரைந்தார். 2018, நவம்பர் மாதத்தில் உள்ளூர் பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பல் இச்சித்திரத்தை அழிக்க வேண்டும் என இரயில்வே நிர்வாகத்தை வற்புறுத்தியதால் அச்சித்திரம் அழிக்கப்பட்டது.
வரலாற்றில் இருந்து நீக்கப்படும் மாப்பிளா கிளர்ச்சி தியாகிகள் வரலாறு :
கேரள அரசு 1960-களில், மாப்பிளா கிளர்ச்சியாளர்களை விடுதலைப் போராட்ட தியாகிகள் என அங்கீகரித்து தியாகிகள் பட்டியலில் சேர்த்தது. அப்போராட்டம் விவசாயிகள் புரட்சி என்றும் அடையாளப்படுத்தப்பட்டது.
இப்போது, இந்திய வரலாற்று ஆய்வுக்குழுமத்தின் மூன்று பேர் குழு ஒன்று, இரயில்பெட்டி கொடூரத்தில் மரணமுற்றோர், பிற கிளர்ச்சி தலைவர்கள் ஆகியோரை விடுதலைப் போராட்ட தியாகிகள் என அங்கீகரிக்க அவசியம் இல்லை என்று முடிவு செய்துள்ளது. Dictionary of Martyrs : India’s freedom struggle 1857-1947 என்ற நூலின் ஐந்தாவது பாகத்தில் இருந்து 387 மாப்பிளா தியாகிகளின் பெயர்களை நீக்குவது என்று முடிவு செய்துள்ளது. அதில், அலி முசலியார், வரியம்குன்னத் அஹமது ஹாஜி, அவரது இரண்டு சகோதரர்கள் ஆகியோர் பெயரும் அடக்கம்.
படிக்க :
ஏகாதிபத்திய எதிர்ப்பு நினைவுச் சின்னங்களைக் கண்டு மோடி அரசு அஞ்சுவது ஏன் ?
ஆனந்த் தெல்டும்டேவைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது ? || விஜய தாரணிஸ்
குழுமத்தின் ஒரு உறுப்பினரான C.I.ஐசக் என்பவர், “மாப்பிளாகளின் நடவடிக்கைகள் ஏறத்தாழ அனைத்துமே மத அடிப்படையிலானவை. அவர்கள் இந்து மதத்தினருக்கு எதிரானவர்கள், அவர்களின் செயற்பாடுகள் மத சகிப்பின்மையின் அடிப்படையிலானவை. இரயில்பெட்டி நிகழ்வில் இறந்தவர்களில் பலர், கிலாபத் கொடியேற்றியவர்கள், கிலாபத் நீதிமன்றம் அமைத்தவர்கள், கிலாபத் அரசை நிறுவியவர்கள். உயிரிழந்த பல மாப்பிளாக்கள், விசாரணை கைதிகளாக இருந்தபோது காலரா போன்ற நோய்களாலும், இயற்கையாகவும் இறந்தவர்கள் என்பதால் அவர்களை தியாகிகள் என்று அங்கீகரிக்க முடியாது” என்று சொல்கின்றார்.
2021, ஆகஸ்ட் 19-ஆம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராம் மாதவ் என்பவர், 1921 மாப்பிளா கிளர்ச்சி ஆனது, இந்தியாவில் அறியப்பட்ட முதல் “தாலிபான் சிந்தனை” என்று பேசினார். கேரளாவின் இடதுசாரி அரசு, இதை மறைத்து அக்கிளர்ச்சியை கம்யூனிஸ்ட் புரட்சியாக சித்தரிக்க முயல்கின்றது என்றும் பேசினார்.
இதன் பின்னர்தான் ICHR அப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது.
(தொடரும்)

பாகம் 2 – மாப்பிளா கிளர்ச்சி : படுகொலைகளை அரங்கேற்றிய பிரிட்டிஷ் அரசு !


முகநூலில் : மு இக்பால் அகமது

வினவு குறிப்பு :
முகநூலில் தோழர் மு. இக்பால் அகமது எழுதிய 8 பாகத் தொடரை, நான்கு பாகங்களாக மாற்றி இங்கு தொடராக வெளியிடுகிறோம். நன்றி !!

disclaimer

‘‘திராவிட மாடல்’’ ஆட்சி : கார்ப்பரேட் சேவை ! காவியுடன் சமரசம் !!

மிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு பரவலாக ஒரு பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. மற்ற கட்சிகளைப்போல இல்லாமல், தி.மு.க-வானது கொள்கை வழிப்பட்ட அரசியலை முன்வைப்பதாகவும், திராவிடம் − சமூக நீதிதான் தி.மு.க-வின் கொள்கை என்பதாகவும் பேசப்படுகிறது. தனியார்மயம் − தாராளமயம் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு அனைத்தையும் வாரிக் கொடுக்கும் மோடியின் ‘‘குஜராத் மாடலுக்கு’’ எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் − என அனைத்து தரப்பு மக்களையும் முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும் பாதையாக ‘‘திராவிட மாடல்’’ இருப்பதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.
‘‘தமிழகத்தில் அனைத்துச் சமூகங்களையும், அனைத்து மாவட்டங்களையும், அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சிதான் தி.மு.க−வின் ‘திராவிட மாடல்’… ‘‘தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல; சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு − ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், கருணாநிதியும் காண விரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பொருளாதார வளர்ச்சிக் குழு கூட்டத்தில் பேசியுள்ளார்.
படிக்க :
தூய்மைப் பணியாளர்கள் : எடப்பாடியின் துரோகத்தைத் தொடரும் ஸ்டாலின் !
நாசகர கிடெக்ஸ் நிறுவனத்துக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் திமுக அரசு !
ஆட்சிக்கு வந்தவுடன் ஆவின் பால் விலைக் குறைப்பு, பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் (சாதாரணப் பேருந்துகளில்) இலவச பயணம், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவக் காப்பீட்டு அட்டை மூலம் இலவசமாக கொரோனா சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளலாம் − என ஐந்து திட்டங்களை முதல் கோப்பிலேயே கையெழுத்திட்டுச் செயல்படுத்தியுள்ளது, தி.மு.க. அரசு.
இத்துடன் மு.க.ஸ்டாலினைத் தலைவராகக் கொண்டு மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு ஒன்றையும் தி.மு.க அரசு உருவாக்கியுள்ளது. இதன் துணைத் தலைவராக, பா.ஜ.க விமர்சகராகவும் பொதுவில் திராவிட இயக்க ஆதரவாளரகவும் அறியப்பட்ட பேராசிரியர் ஜெரஞ்சன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவில் அங்கம் வகிக்கும் பேராசிரியர் ஜெயரஞ்சன், சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், முனைவர் நர்த்தகி நடராஜ் மற்றும் சித்த மருத்துவர் கு.சிவராமன்.
முக்கியமாக இந்தக் குழுவில், சித்த மருத்துவர் கு.சிவராமன், முனைவர் நர்த்தகி நடராஜ், பேராசிரியர்கள் ராம.சீனுவாசன், ம.விஜயபாஸ்கர், சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மு.தீனபந்து, எம்.எல்.ஏ.வாகிய டி.ஆர்.பி. ராஜா, தொழிலதிபர் மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ.அமலோற்பவநாதன் போன்ற சமூக அக்கறை கொண்ட அறிவாளிப் பிரிவினர் இடம் பெற்றிருப்பதால், தி.மு.க அரசு முற்போக்கு பாதையில் நடைபோடுவதாக நகர்ப்புற படிப்பாளிகள் பாராட்டி வருகின்றனர்.
இதுமட்டுமின்றி, முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் குழுவில் பொருளாதார நிபுணர்களான ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மோடி அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், முன்னாள் நிதித்துறை செயலாளர் எஸ்.நாரயணன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் எஸ்தர் டப்ளோ, ராஞ்சி பல்கலைக் கழக பேராசிரியான ஜீன் ட்ரெஸ் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
தி.மு.க அரசின் இந்த நடவடிக்கையை, ‘‘தி எக்கானமிஸ்ட்’’ என்ற பிரபலமான ஆங்கிலப் பத்திரிக்கையானது, ‘‘உலகப் புகழ் பெற்ற ஐந்து சூப்பர் ஸ்டார் பொருளாதார அறிஞர்களைத் தமது ஆலோசகர்களாக நியமித்ததன் மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார்’’ என்றும், ‘‘திராவிடன் ஸ்டாலின்’’ என்றும் பாராட்டியுள்ளது.
முக்கியமாக, மோடி அரசின் சில நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் பழிவாங்கப்பட்ட ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன் போன்றவர்கள், கார்ப்பரேட்டுகள் நலனைவிட மக்கள் நலனை முன்னிறுத்தும் பொருளாதார அறிஞர்கள் என்று ஊடகங்கள் பாராட்டுகின்றன. இதன் தொடர்ச்சியாக தி.மு.க அரசு முன்வைத்த இடைக்கால நிதிநிலை அறிக்கையை (ஆறு மாதங்களுக்கானவை) ‘‘திராவிட மாடல் வளர்ச்சி’’, ‘‘பொற்கால ஆட்சி’’ என்று திராவிட இயக்கப் பத்திரிகைகள் புகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறெல்லாம் போற்றிப் புகழப்படும் தி.மு.க அரசின் கொள்கைகளும் திட்டங்களும் உண்மையில் பொற்கால ஆட்சிக்குள் நம்மை கொண்டு செல்லுமா என்பதே நாம் கவனிக்க வேண்டிய விசயம்.
ஸ்டாலினின் பொருளாதார ஆலோசகர்களான ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன் போன்றவர்கள், உண்மையில் புதிய தாராளவாதத்தின் தேர்ந்த அறிஞர்களாவர். இவர்கள் ஏகாதிபத்திய நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவமும் கொண்டவர்கள். ஏகாதிபத்தியச் சேவையில் சிறந்து விளங்கியதால்தான் இவர்கள் முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்களால் மெச்சிப் புகழப்படுகிறார்கள்.
முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் உள்ள ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மோடி அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், நோபல் பரிவு பெற்ற அமெரிக்கப்பொருளாதார நிபுணர் எஸ்தர் டப்ளோ, முன்னாள் நிதித்துறை செயலாளர் எஸ்.நாராயணன், ராஞ்சி பல்கலைக் கழக பேராசிரியாரான ஜீன் ட்ரெஸ்.
2014−ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபோது, நிர்மலா சீதாராமன் முன்னிறுத்தப்பட்டு நிதியமைச்சராக்கப்பட்ட அதேபாணியில்தான், இன்று பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனும் தேர்தல் நேரத்தில் முன்னிறுத்தப்பட்டு திடீரென நிதி அமைச்சராக்கப்பட்டுள்ளார். இவர், லேமன் பிரதர்ஸ், ஆஃப்ஷோர் கேபிடல் மார்க்கெட்ஸ், சிங்கப்பூரில் ஸ்டாண்டர்ட் − சார்ட்டட் வங்கி ஆகியவற்றில் முக்கியமான பொறுப்புகளை வகித்துள்ளார் என்று கூறி ஊடகங்கள் பெருமைப்பட்டுக் கொள்கின்றன. ஆம்! இந்த நிறுவனங்கள் அனைத்தும் உலக அளவில் ஆதிக்கத்தில் இருக்கின்ற ஏகாதிபத்திய நிறுவனங்கள். இந்த ஏகாதிபத்திய நிறுவனங்களுக்குச் சேவை செய்து நற்சான்றிதழ் வாங்கிய இவர்தான், மக்களுக்கு சேவை செய்வதற்கு திட்டமிட்டுக் கொடுப்பார் என்று நம்மை நம்பச் சொல்கிறார்கள்.
இன்று தி.மு.க-வில் முன்னணியில் இருக்கும் தயாநிதிமாறன், கலாநிதிமாறன், ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு, துரைமுருகன் போன்ற பல தலைவர்கள் பல்லாயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர்களான கார்ப்பரேட் முதலாளிகளாக இருக்கின்றனர். இவர்களது வாரிசுகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கல்வியைப் பயின்று வளர்ந்தவர்கள். இந்த இரண்டாம் தலைமுறையினர் இன்று தி.மு.க-வில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதனால்தான் தி.மு.க-வின் அணுகுமுறை அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களின் உத்தியைப் போலவே அமைந்துள்ளதை யாவரும் உணர முடியும்.
தி.மு.க அரசின் கார்ப்பரேட் பாணியில் மேற்கொள்ளப்படும் ஆட்சியானது, நிர்வாகத்தில் செய்துள்ள ஒரு விசயத்தை மட்டும் இங்கே கவனத்திற்கு கொண்டு வருகிறோம். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அனைத்து துறைகளின் உயரதிகாரிகள், துறைத் தலைவர்கள் மாற்றப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இறையன்பு, உதயசந்திரன் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுத்ததை மட்டும்தான் பலரும் கவனித்துள்ளனர். அதேவேளையில், கீழ்நிலையில் இருந்து பதவி உயர்வு பெற்று உயர் பதவிகளுக்கு வரும் முறையை தி.மு.க அரசு முற்றிலுமாகக் கைவிட்டு, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே அதிகாரிகளாகவும் துறைத் தலைவர்களாகவும் நியமித்துள்ளது.
தி.மு.க அரசின் இந்த அணுகுமுறைக்கு அரசு ஊழியர் சங்கங்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. மக்களுடன் தொடர்புடைய அதிகாரிகள் உயர் பதவிகளுக்கு செல்வதன் அவசியத்தை அவை வலியுறுத்தியுள்ளன. தி.மு.க அரசின் இந்த அணுகுமுறையால் அரசு ஊழியர்கள் மீது அடக்குமுறை மேலும் அதிகரிக்கும் என்றும், மக்கள் பிரச்சினைகள், நடைமுறை அறிவு போன்றவை புறக்கணிக்கப்படுவதால் குழப்பங்கள் விளையும் என்றும் தெரிவித்துள்ளன.
000
பா.ஜ.க தலைமையிலான பாசிச மோடி அரசின் பகிரங்கமான கார்ப்பரேட் சேவைகளுக்கும், ‘‘மனித முகம் கொண்ட புதிய தாராளவாதம்’’ என்று பேசும் காங்கிரசு, அனைவரையும் உள்ளடக்கிய ‘‘திராவிட மாடல்’’ வளர்ச்சி என்று பேசும் தி.மு.க போன்ற கட்சிகளுக்குக்கும் இடையில் உள்ள வேறுபாடு ஒன்று மட்டும்தான். மக்கள் நலத் திட்டங்கள் என்பதை முற்றாகவே உதறிவிட்டு அப்பட்டமான கார்ப்பரேட் கொள்ளையை அமல்படுத்துவதுதான் மோடி அரசின் கொள்கை என்றால், சோளப்பொரிகளைப் போல பெயரளவிலான சில மக்கள் நலத்திட்டங்களை அறிவித்துவிட்டு, அதன்மூலம் தோற்றுவிக்கப்படும் கவர்ச்சிக்குப்பின் முடிந்த அளவு கார்ப்பரேட் கொள்ளையை மக்களின் எதிர்ப்பில்லாமல் நடைமுறைப்படுத்த முயலுவதுதான் காங்கிரசு − தி.மு.க உள்ளிட்ட எதிர்த்தரப்பு அரசுகளின் கொள்கையாகும்.
1990−களில் தனியார் − தாராளமயம் − உலகமயம் எனும் மறுகாலனியக் கொள்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்தது முதல் எல்லா ஓட்டுக் கட்சிகளும் கொள்கை − கோட்பாடு என்பதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டன. தங்களது பிழைப்புக்கு எந்த இடையூறும் வராமல் கமிஷனடிப்பதும் கல்லா கட்டுவதும்தான் எல்லா ஓட்டுக் கட்சிகளுடைய ஒரே கொள்கையாக மாறிப்போயுள்ளது.
கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, உணவு, குடிநீர் உள்ளிட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை நிறைவேற்றிக் கொடுப்பதையெல்லாம் அரசு தன் பணியாக மேற்கொள்ளக் கூடாது; அனைத்தையும் சந்தைக்கு திறந்துவிட்டுவிட்டு, பொதுத்துறைகளைத் தனியாருக்கு தாரைவார்த்துவிட்டு, வெறும் நிர்வாக வேலைகளை மட்டும் பார்க்க வேண்டும்; போலீசு − இராணுவம் − அதிகார வர்க்கத்தை வைத்துக்கொண்டு சட்டம் − ஒழுங்கைப் பராமரிப்பது மட்டுமே அரசினுடைய வேலையாக இருக்க வேண்டும் − என்று ஆணையிடுகின்றன, உலக வங்கியும் உலக வர்த்தகக் கழகமும். இதைத்தான் ‘‘குறைந்த அரசு – நிறைந்த நிர்வாகம்’’ என்று புதிய தாராளவாதிகள் சிலாகித்துப் பேசுகின்றனர்.
காங்கிரசோ, பா.ஜ.க.வோ – அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ எந்தக் கட்சியாக இருந்தாலும் இந்த பாதையில்தான் அவர்கள் செல்கிறார்கள்; இந்தப் பாதையில் மட்டுமே அவர்களால் செல்ல முடியும் என்பதுதான் விதி. ஆகவே இதிலிருந்து தி.மு.க-வை விலக்கிவைத்துவிட்டுச் சிந்திப்பதே வேடிக்கையான ஒன்றாகும்.
ஆவின் பாலை விலைக் குறைப்பு, பெட்ரோல் − டீசல் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பயணம் போன்ற அறிவிப்புகள் மக்கள் நலத் திட்டங்களைப் போலத் தோன்றலாம். ஆனால், கொள்கை − கோட்பாடு அற்றுப்போன ஓட்டுக் கட்சிகளுக்கு மக்களின் ஓட்டுக்களை கவர்ந்து ஆட்சியதிகாரத்தை பிடிக்க இதுபோன்ற கவர்ச்சி − இலவசத் திட்டங்களை அறிவிக்க வேண்டியிருப்பது ஒரு அவசியத் தேவையாக இருக்கிறது.
ஜெயலலிதா ஆட்சியில் ’புரட்சி’த் தலைவி அம்மா விலையில்லா ஆடு−மாடு வழங்கும் திட்டம், விலையில்லா மிக்சி − கிரைண்டர் வழங்கும் திட்டம், விலையில்லாத நூறு யூனிட் மின்சாரத் திட்டம் போன்ற திட்டங்கள் கொண்டுவரப்படவில்லையா? ஏன், 2014−ல் ஆட்சியில் அமர்ந்த மோடி அரசு கூட கழிவறை கட்ட மானியம், முத்ரா கடன் திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 போன்ற திட்டங்களைக் கொண்டுவரவில்லையா? – இவையெல்லாம் எந்தளவுக்கு நடைமுறையில் மக்களுக்கு பலனளித்தன என்பது வேறு விவகாரம்.
இவைகளெல்லாம் ஓட்டு அறுவடைக்காக கொடுக்கப்படும் ‘‘கவர்ச்சிவாத’’ அறிவிப்புகளே. அனைவருக்கும் தரமான கல்வி, அனைவருக்கும் தகுதிக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம், தரமான மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை இக்கவர்ச்சித் திட்டங்கள் எந்த வகையிலும் ஈடேற்றவில்லை என்பதுதான் வரலாறு.
கல்வியிலும் மருத்துவத்திலும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களைப் புகுத்திவிட்டு, தனியார் பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித இட ஒதுக்கீடு, தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்துக் கொள்ள இலவச மருத்துவக் காப்பீடு திட்டம் போன்றவற்றையும் அமல்படுத்துகின்றன, இந்த ஓட்டுக் கட்சிகள். இவையெல்லாம், உழைக்கும் மக்களைக் கல்வியிலும் மருத்துவத்திலும் தனியார்மயத்தை ஏற்றுக்கொள்ள வைக்கும் வஞ்சகத் திட்டங்கள் என்றுதானே சொல்ல வேண்டும்?
இவ்வாறு, தமிழகத்தில் சில கவர்ச்சிவாத சமூக நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதைக் காட்டியும், பா.ஜ.க-வும் காங்கிரசும் ஆட்சி செய்த பின்தங்கிய வட மாநிலங்களுடன் ஒப்பீடு செய்தும், இது திராவிட இயக்கங்களின் சாதனை என்று சிலர் மெச்சிப் புகழ்கின்றனர். குஜராத்தைப் பாருங்கள், உ.பி-யைப் பாருங்கள், தமிழகமும் கேரளமும் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது என்று உங்களுக்குப் புரியும் என்று சிலர் கூறுகின்றனர்.
பிரபல முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்களையும் நிபுணர்களையும் தனது ஆலோசகர்களாகக் கொண்டு கார்ப்பரேட் சேவை செய்ய கிளம்பி உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டும் ‘தி எக்னாமிஸ்ட்’ பத்திரிகை.
இவ்வாறு ஒப்பீடு செய்து தங்களை நியாயப்படுத்திக் கொள்வது என்பது ஒருவகை தாழ்வு மனப்பான்மையே. இவர்கள் யாரும் 30 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக மக்களின் வாழ்க்கைத் தரத்துடன் இன்றைய வாழ்க்கைத் தரத்தை ஒப்பிட்டுப் பேசுவதற்குத் தயாராக இல்லை.
தனியார் பள்ளிகளில் நடக்கும் படுகொலைகளும், ஆரம்ப சுகாதார நிலையம் முதல் தலைமை மருத்துவமனை வரை அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதும், டெங்கு நோய் மரணங்களைத் திட்டமிட்டு அரசே மறைத்ததும், தருமபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகள் கொத்துக் கொத்தாக இறந்துபோனதும் போன்ற பல அவலங்கள், ஆட்சியில் இருக்கும் கட்சிகளின் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறுகள் என்று கருத முடியுமா? வாழ வழியற்றுப்போய், பிழைப்புக்காக நாடோடியாக அலைந்து, தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டு குடும்ப அட்டைதாரருக்கு விலையில்லா அரிசி வழங்க வேண்டியிருப்பதும், அம்மா உணவகங்களும் தமிழக அவலநிலையின் சாட்சியங்கள். இவையெல்லாம் கழகங்களின் ‘பொற்கால’ ஆட்சிகளது விளைவுகள்.
‘‘நீங்கள் தி.மு.க-விடம் சோசலிசத்தை எதிர்ப்பார்க்காதீர்கள்’’ என்று சிலர் அறிவுரை கூறுகின்றனர். எனில், அனைத்து மக்களுக்குமான அரசு, பொற்கால ஆட்சி, திராவிட ஆட்சி என்று தி.மு.க-வும் அதனை ஆதரிப்பவர்களும் பேசுவது எதற்காக?
‘‘இன்று நமது நாட்டில் ஆர்.எஸ்.எஸ் − பா.ஜ.க தலைமையிலான காவி – கார்ப்பரேட் பாசிசம்தான் மக்களின் முதல் எதிரி; இந்த எதிரியை வீழ்த்த சாத்தியமான அனைத்து சக்திகள், கட்சிகளுடன் ஒன்றிணைந்து போராட வேண்டும்; தமிழகத்தில் தி.மு.க-தான் பெரிய கட்சி; இது ஓரளவிற்கு பா.ஜ.க-வை எதிர்க்கிறது; ஆகையால், தி.மு.க ஆட்சிக்கு வரவேண்டும்” − என்று பேசியவர்கள் பலரும், இன்று தி.மு.க-வின் யோக்கியதையைக் குறித்து பேச முன்வருவதில்லை.
எல்லா ஓட்டுக் கட்சிகளைப்போல தி.மு.க-வும் இலஞ்ச − ஊழல் முறைகேடுகளுக்கு உட்பட்டதுதான்; குடும்ப அரசியல், சாதி அரசியல், காசு கொடுத்து ஓட்டு வாங்குவது, கவர்ச்சி அரசியல், பிழைப்புவாதம், கார்ப்பரேட் சேவை − என அனைத்தும் தி.மு.க-விடம் மலிந்து கிடக்கின்றன. டாஸ்மாக் விவகாரம் முதல் ஸ்டெர்லைட் வரை அனைத்திலும் தி.மு.க சந்தர்ப்பவாதமாகவும் தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிராகவும்தான் செயல்படுகிறது.
கார்ப்பரேட் பாணியிலான நேர்த்தியான சமூக உணர்திறன், புதிய முலாம் பூசப்படும் அதே பழைய கவர்ச்சிவாதம் (சமூக நீதி, நலத்திட்டங்கள்), ஊடக செல்வாக்கு ஆகியவற்றின் மூலம் சமூகத்தின் முன்னால் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வது, பொதுச்சொத்தைக் கார்ப்பரேட்டுகளுக்கு வாரிக்கொடுப்பது, வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட் சுரண்டலையும் கொள்ளையையும் நியாயப்படுத்துவது, தனது கட்சிக்காரர்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் முறையான சலுகைகளையும் வாய்ப்புகளையும் வழங்குவற்கான ஏற்பாடு செய்வது என்பதுதான் தி.மு.க-வின் ‘பொற்கால’ ஆட்சி 2.0.
பாசிசத்தை எதிர்க்கும் விசயத்தில், தி.மு.க-வுடன் ஐக்கிய முன்னணி அமைப்பதும் கூட்டணி அமைப்பதும் ஒருபக்கம் இருக்கட்டும். பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியிலோ, கூட்டணியிலோ அங்கம் வகிக்கும் கட்சியை விமர்சிக்கவே கூடாது என்பது என்ன வகையான அணுகுமுறை என்பதை தி.மு.க ஆட்சியை வலிந்து ஆதரிப்பவர்கள்தான் விளக்க வேண்டும்.
படிக்க :
திமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்
‘சிங்காரச் சென்னை’ : ஆர்.கே நகர் வீடுகளை இடித்த திமுக அரசு !
காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் சாத்தியமான அனைத்து கட்சிகளுடன் ஐக்கியத்தை உருவாக்கிக் கொள்வதென்பது அவசியத் தேவையாகும். அதேவேளையில், பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் சமரசமாகச் செல்லும் கட்சிகளின் சந்தர்ப்பவாதத்தையும் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும் அம்பலப்படுத்த வேண்டும். இதுதான் ஜனநாயக பூர்வமான ஐக்கிய முன்னணியை அமைப்பதற்கான முன்தேவையாகும்.
பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்கின்ற கட்சிகளின் சந்தர்ப்பவாதங்கள், ஊழல்கள், முறைகேடுகள், அராஜக செயல்பாடுகளைத் தனது அடித்தளமாக அமைத்துக் கொண்டுதான் பாசிசம் அரங்கேறுகிறது என்பது அரிச்சுவடியாகும். இந்த உண்மையை மறந்துவிட்டு, தி.மு.க-விற்கு விமர்சனமற்ற, நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதென்பது தி.மு.க-விற்கும் கார்ப்பரேட் கொள்ளைக்கும் காவி பாசிசத்துக்கும் உழைக்கும் மக்களை அடிமைப்படுத்துவதாகும்; புரட்சிகர ஜனநாயக சக்திகள் தங்களது முன்முயற்சியைக் கைவிடுவதாகும்.

சந்திரசேகர்

பழமைவாத எண்ணங்களை மாற்றிக் கொள்வீர் || தோழர் மாவோ

0
பாகம் 1 : புத்தக வழிபாட்டை எதிர்ப்போம் || தோழர் மாவோ
பாகம் 2
5. வர்க்க சக்திகள் பற்றி சரியான மதிப்பீட்டிற்கு வருவதும், மேலும் போராட்டத்திற்கான சரியான உத்திகளை வகுப்பதுமே சமூக மற்றும் பொருளாதார பரிசீலனையின் நோக்கம்
மூக மற்றும் பொருளாதார நிலைமைகளை ஏன் பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு கீழ்க்கண்டதுதான். நமது பதில், அனைத்து சமூக வர்க்கங்களே, நமது பரிசீலனையின் நோக்கங்கள் பிளவுபட்ட சமூகம் பற்றி அல்ல.
அண்மைக் காலமாக, செம்படையின் நான்காவது படையில் இருக்கும் தோழர்கள் தீவிர ஆய்வுப் பணிக்கு3 பொதுவான கவனம் செலுத்தி வருகின்றனர்; ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் வழிமுறைகள் தவறானவை. ஒரு மளிகைக் கடைக்காரரின் கணக்கு வழக்கு போன்று அவர்களது விசாரணையின் விளைவு அற்பமாக அமைகிறது, அல்லது மலை உச்சியிலிருந்து மக்கள் தொகை மிகுந்த ஒரு மாநகரத்தைக் காணும் தொலைவுப் பார்வை போல் இருக்கிறது, அல்லது நகரத்திற்கு வரும் நாட்டுப்புறத்தான் கேட்கும் விநோதக் கதைகள் போல் இருக்கின்றன. இது போன்ற பரிசீலனைகளால் சிறிதும் பயனில்லை; அவை நமது முக்கிய நோக்கத்தை நிறைவேற்றா. பல்வேறு சமூக வர்க்கங்களின் பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளைப் பற்றி அறிவதுதான் நமது முக்கிய நோக்கம்.
நமது பரிசீலனையின் முடிவு ஒவ்வொரு வர்க்கத்தின் தற்போதைய சூழ்நிலையை படம் பிடிப்பதாகவும் அவற்றின் வளர்ச்சியின் ஏற்ற இறக்கங்களை சித்தரிப்பதாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக, விவசாயத் துறையின் உள்ளடக்கம் பற்றி நாம் பரிசீலனை செய்யும்போது, குத்தகை உறவை ஒட்டி வகைப்படுத்தப்பட்டுள்ள உடைமைக்கார விவசாயிகள், அரை உடைமைக்கார விவசாயிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் ஆகியோரின் எண்ணிக்கையை மட்டும் அறிந்தால் போதாது; வர்க்கத்தின் அடிப்படையிலும், பொருளாதார படிநிலையின் அடிப்படையிலும் வகைப்படுத்தப்பட்ட பணக்கார விவசாயிகள், நடுத்தர விவசாயிகள் மற்றும் ஏழை விவசாயிகளின் எண்ணிக்கையையும் அறிய வேண்டும்.
படிக்க :
ஒரு தலைப்பட்சமான பார்வை தீர்வு தராது | தோழர் மாவோ
கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ !
வணிகர்களின் உள்ளடக்கம் பற்றி பரிசீலனை செய்யும்போது, தானியம், துணி, மூலிகைகள் என்று ஒவ்வொரு வணிகத்திலும் ஈடுபடுவோர் பற்றி மற்றும் அறிந்தால் போதாது; குறிப்பாக சிறு வணிகர்கள், நடுத்தர வணிகர்கள் மற்றும் பெரும் வணிகர்களின் எண்ணிக்கையை அறிய வேண்டும். ஒவ்வொரு வணிகத்தின் நிலையை மட்டும் பரிசீலனை செய்தால் போதாது; குறிப்பாக அவற்றுக்குள் நிலவும் வர்க்க உறவு முறையையும் பரிசீலனை செய்ய வேண்டும். வெவ்வேறு வர்த்தகங்களுக்கிடையே உள்ள உறவுமுறையை மட்டும் ஆய்வு செய்தால் போதாது; குறிப்பாக வெவ்வேறு வர்க்கங்களிடையே நிலவும் உறவு நிலையையும் பரிசீலனை செய்ய வேண்டும்.
வேறுபட்ட சமூக வர்க்கங்களைப் பகுத்தாய்வு செய்வதே நமது தீவிர ஆய்வின் முதன்மையான வழிமுறையாக இருக்க வேண்டும். வர்க்க சக்திகளின் சரியான மதிப்பீட்டிற்கு வரும் பொருட்டு, வர்க்கங்களுக்கிடையேயான உறவு நிலையைப் புரிந்து கொள்வதே நமது பரிசீலனையின் இறுதி நோக்கமாக இருக்க வேண்டும். பிறகு, புரட்சிகர போராட்டத்தில் முக்கிய சக்தி எது, நமது கூட்டாளிகளாக வென்றெடுக்கப்பட வேண்டிய வர்க்கம் எது, தூக்கியெறியப்பட வேண்டிய வர்க்கம் எது என்று விவரித்து சரியான வியூகம் வகுக்க வேண்டும். இதுதான் நமது ஒரே முக்கிய நோக்கமாகும்.
பரிசீலனை தேவைப்படும் சமூக வர்க்கங்கள் எவை? அவையாவன :
தொழிற்துறை பாட்டாளிகள், கைவினைத் தொழிலாளர்கள், பண்ணைத் தொழிலாளிகள், ஏழை விவசாயிகள், நகரத்து ஏழைகள், உதிரிப் பாட்டாளிகள், தேர்ந்த கைவினைஞர்கள், சிறு வணிகர்கள், நடுத்தர விவசாயிகள், பணக்கார விவசாயிகள், நிலச்சுவான்தார்கள் வணிக முதலாளிகள், தொழிற்துறை முதலாளிகள்.
நமது பரிசீலனையில் இந்த வர்க்கங்கள் அல்லது சமூக படி நிலைகள் பற்றி கவனம் செலுத்த வேண்டும். நாம் பணியாற்றும் தளங்களில் தொழிற் துறை பாட்டாளிகள், தொழிற்துறை முதலாளிகள் மட்டுமே இடம்பெறவில்லை; மற்ற வர்க்கத்தினரையும் தொடர்ந்து நமது பணிகளுக்கிடையே சந்தித்து வருகறோம். இந்த அனைத்து வர்க்கங்கள் மற்றும் அதன் சக படிநிலைகள் தொடர்பானவைதான் நமது போராட்ட உத்திகள்.
நகரங்களைப் புறக்கணித்து கிராமப்புறப் பணிகளுக்குத் தேவைக்கு அதிகமான அழுத்தம் அளித்தது நமது கடந்த கால பாரிசீலனையின் கடுமையான குறைபாடாகும். அதனால் பல தோழர்கள் நகர ஏழைகள் மற்றும் வணிக முதலாளிகள் பற்றி நமது உத்திகள் பற்றி மேலெழுந்தவாரியாகவும், தெளிவின்றியும் அறிந்துள்ளனர். மலைகளை விட்டு இறங்கி சமவெளிக்கு நாம் வருவதற்குப் போராட்டத்தின் வளர்ச்சி உதவியுள்ளது.4 உடல் ரீதியாக நாம் மலையிலிருந்து இறங்கியிருப்பினும், மனதளவில் நாம் இன்னும் மலையின் மீதே இருக்கிறோம். நாம் நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறம் இரண்டையுமே புரிந்துகொள்ள வேண்டும். இல்லாவிடில், புரட்சிகர போராட்டத்திற்குத் தேவையானவற்றை தருவதற்கு நம்மால் இயலாமல் போகும்.
0-0-0
6. சீனத் தோழர்கள் சீனாவின் நிலைமைகளைப் புரிந்து கொள்வதிலிருந்தே சீன புரட்சிகர போராட்டத்தின் வெற்றி சார்ந்துள்ளது.
ஜனநாயக கட்டம் மூலம் பொதுவுடைமையை அடைவதே நமது போராட்டத்தின் நோக்கமாகும். நிலஉடைமை வர்க்கம், ஏகாதிபத்தியம் மற்றும் கோமின்டாங் ஆட்சியாளர்களை தூக்கி யெறியும் பொருட்டு உழைக்கும் வர்க்கத்தினரை வென்றெடுத்து, உழவர் பெருந்திரளையும், நகர்ப்புற ஏழைகளையும் எழுச்சியுறச் செய்யும் ஜனநாயகப் புரட்சியை முழுமையடையச் செய்வதே இந்தக் கடமையின் முதல் அடியாகும். இந்தப் போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் அடுத்த அடியாக சோசலிசப் புரட்சி தொடர்ந்து நடத்தப்படும். இந்த மகத்தான புரட்சிகர கடமையை நிறைவேற்றுவது எளிதானதோ, எளிமையானதோ இல்லை. பாட்டாளி வர்க்க கட்சியின் சரியான மற்றும் உறுதியான உத்திகளை சார்ந்தே இப்புரட்சிகர கடமை வெற்றிபெறும்.
போராட்டத்தின் உத்திகள் தவறானதாகவோ, உறுதியற்றதாகவோ, தடுமாற்றம் உடையதாகவோ இருந்தால், புரட்சி நிச்சயம் தற்காலிகத் தோல்வியை சந்திக்கும். முதலாளித்துவக் கட்சிகளும் தங்களது போராட்ட உத்திகளை அடிக் கடி தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். உழைக்கும் வர்க்கத்தை தவறாக வழி நடத்தி கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிடமிருந்து விலக வைக்க சீர்திருத்த திட்டங்களை எப்படிப் பரப்புவது என்றும், ஏழை உழவர்களின் எழுச்சிகளை நசுக்கி பணக்கார விவசாயிகளை எப்படிப் பிடிப்பது என்றும், புரட்சிகர போராட்டங்களை அடக்க ஆயுகம் தரித்த குற்றவாளிக் கும்பல்களை எப்படி திரட்டுவது என்றும் பரிசீலித்துக் கொண்டு வருகிறார்கள்.
வர்க்கப் போராட்டம் தீவிரமாக அதிகரித்து, நெருக்கமான வட்டாரங்களில் நடக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், அவற்றின் வெற்றிக்குத் தங்களது சொந்தக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் சரியான, உறுதியான உத்திகளையே முழுவதுமாக பாட் டாளி வர்க்கம் சார்ந்திருக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் சரியான, பின்வாங்காத போராட்ட உத்திகளை அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் சிலரால் எந்தச் சூழ்நிலையிலும் உருவாக்க முடியாது. அவை மக்கள் பெருந்திரள் போராட்டங்களிடையே அதாவது உண்மையான அனுபவத்தின் மூலம் உருவாகின்றன. எனவே, நாம் எப்போதும் சமூக நிலைமைகளை ஆய்வு செய்து, எதார்த்தமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
வளைந்து கொடுக்காத, பழமைவாத, சடங்குப் பூர்வமான, ஆதாரமின்றி நம்பிக்கைவாதிகளாக இருக்கும் தோழர்கள், தற்போதைய போராட்ட உத்தி சரியானது என்றும், கட்சியின் ஆறாவது தேசிய காங்கிரசின் ஆவணங்களின் புத்தகம்5 நிலைத்த வெற்றியை உத்தரவாதப்படுத்தும் என்றும், நிரூபித்து நிறுவப்பட்ட வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலமே நாம் வெற்றி பெற்றுவிடலாம் என்றும் எண்ணுகின்றனர். இந்த எண்ணங்கள் முற்றிலும் தவறானவை.
படிக்க :
விஞ்ஞான சோசலிசத்தை வளர்த்தெடுத்த உயிர் நண்பர்கள் || தோழர் லெனின்
எங்கெல்ஸ் 200 : நாம் ஏன் எங்கெல்ஸை பயில வேண்டும் | தோழர் லெனின்
கம்யூனிஸ்ட்டுகள் போராட்டங்கள் மூலம் சாதகமான புதிய சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என்ற கருத்தோடு எந்த விதத்திலும் ஒத்துப் போகாததாக இருக்கிறது; அவை முழுவதும் பழமைவாத வழிமுறையை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. அவற்றை முழுமையாக கைவிடாவிடில், இந்த வழிமுறை புரட்சிக்கு மாபெரும் இழப்பை ஏற்படுத்தும்; இது தோழர்களுக்கே பெருங்கேடு விளைவிக்கும். நிலைமைகள் தற்போது இருப்பது போலவே இருப்பதில் திருப்தி கொண்டுள்ள, எதனையும் முழுமையாகப் புரிந்துகொள்ள முயலாத, ஆதாரமின்றி நம்பிக்கை கொண்டுள்ளவர்களாக, சில தோழர்கள் செம்படையில் இருக்கிறார்கள் என்பது வெளிப்படை.
இதுதான் பாட்டாளி வர்க்கத் தன்மைஎன்ற பொய்யை அவர்கள் பரப்புகிறார்கள். அவர்கள் ஒரு அடிகூட நகராது, பரிசீலனை செய்ய மக்களிடம் செல்லாது, முழுமையாக உண்டு, தங்கள் அலுவலகத்திலேயே சிறுதுயில் கொண்டு, நாள் முழுவதும் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் எப்போது வாயைத் திறந்தாலும், அவர்களது வெற்றுரைகள் மக்களை சோர்வடையச் செய்கின்றன. இந்தத் தோழர்களைத் தட்டியெழுப்ப, நமது குரல்களை உயர்த்தி, அவர்களிடம் கூச்சலிட வேண்டும்:
* தாமதமின்றி உங்களுடைய பழமைவாத எண்ணங்களை மாற்றிக் கொள்வீர்!
* முற்போக்கான போர் குணம் வாய்ந்த கம்யூனிச கருத்துக்களின் மூலம் அவற்றை மாற்றுவீர்!
* போராட்டத்தில் ஈடுபடுவீர்!
* மக்களிடையே சென்று, உண்மைகளை பரிசீலனை செய்வீர் !
(தொடரும்)
குறிப்புகள் :
3. பரிசீலனையை மாசே – துங் எப்போதும் அதிக அழுத்தத்துடன் வலியுறுத்தினார். சமூகப் பரிசீலனையை மிக முக்கியமான கடமைப் பணியாகவும் தலைமைப் பணிக்கான கொள்கைகளை விவரிப்பதற்கான அடிப்படையாகவும் கருதினார். தோழர் மாசே-துங்கின் முன்முயற்சியால் செம்படையின் நான்காவது படையில் பரிசீலனைப் பணி படிப்படியாக வளர்க்கப்பட்டது. பணியின் வழக்கமான பகுதியாக சமூகப் பரிசீலனை இருக்க வேண்டும் என்று வரையறுத்திருந்தார். பெருந்திரள் போராட்டங்களின் நிலைமை, பிற்போக்கானவர்களின் நிலைமை, மக்களின் பொருளாதார வாழ்வு மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் ஒவ்வொரு வர்க்கத்தினருக்கும் சொந்தமாக இருந்த நிலங்களின் அளவு ஆகிய இனங்கள் அடங்கிய விரிவான படிவங்களை செம்படையின் அரசியல் துறை தயாரித்திருந்தது. செம்படை சென்ற இடத்திலெல்லாம், அந்தப் பகுதியின் வர்க்கச் சூழ்நிலைகளைப் பற்றி முதலில் நன்கு தெரிந்து கொண்டது. பிறகு பெருந்திரள் மக்களின் தேவைக்கு ஏற்ற முழக்கங்களை உருவாக்கியது.
4. இங்கே “மலைகள்” என்பது கியாங்சி மற்றும் ஹூனான் மாகாணங்களின் எல்லைப் பகுதியில் இருந்த சிங்காங் மலைப் பகுதியாகும்; ”சமவெளி” என்பது தெற்கு கியாங்சி மற்றும் மேற்கு ஃபியுகியன் பகுதிகளில் இருப்பதை குறிப்பதாகும். இரு மிகப்பெரிய புரட்சித் தளங்களை அமைக்கும் பொருட்டு, ஜனவரி 1929-ல் சிங்காங் மலையிலிருந்து தெற்கு கியாங்சி மேற்கு ஃபியுகியன் பகுதிகளுக்கு தோழர் மா சே – துங் செம்படையின் நான்காவது அணியின் பிரதானப் படையை அழைத்துச் சென்றார்.
5. ஜூலை 1928-ல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆறாவது காங்கிரசில்,
அரசியல் தீர்மானங்கள், உழவர்களின் பிரச்சனை குறித்த தீர்மானங்கள், நிலப் பிரச்சனைகள், அரசியல் அதிகாரத்தை நிறுவுதல், மற்றும் ஏனைய பொருட்கள் பற்றிய தீர்மானங்களை உள்ளடக்கியது “ஆவணங்களின் புத்தகம்” ஆகும். செம்படையில் இருந்த கட்சி அமைப்புகளுக்கும், கட்சியின் தள அமைப்புகளுக்கும் விநியோகிக்கும் பொருட்டு இந்தத் தீர்மானங்களை புத்தக வடிவில் செம்படையின் நான்காவது அணியின் முன்னணிக் குழு 1929-ம் ஆண்டு துவக்கத்தில் வெளியிட்டது.
நூல் : மாவோ – தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் – தொகுதி 6
கிடைக்குமிடம் : அலைகள் வெளியீட்டகம்
தொடர்புக்கு : 98417 75112

பாசிச மோடி அரசுக்கு எதிராக வளர்ந்துவரும் போராட்டங்கள் !

ங்கள் மீது நடத்தப்படும் சுரண்டலையும் உரிமைப் பறிப்புகளையும் எப்போதும் இந்திய உழைக்கும் மக்கள் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை தற்போது நம் கண்முன்னே காண்கிறோம்.
விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், மீனவர்கள், அறிவுத்துறையினர், பெண்கள் − என அனைத்து தரப்பினரும் காவி – கார்ப்பரேட் பாசிச மோடி அரசின் மக்கள் விரோதத் திட்டங்களுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டங்கள் காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான போராட்டங்களாக ஒன்றிணைத்து வளர்த்தெடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
பஞ்சாப் − அரியானாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டமானது, ஆர்ப்பாட்டம், சாலைமறியல், ஜியோ சிம் எரிப்பு, பா.ஜ.க. அலுவலகங்கள் முற்றுகை − என நாளுக்கு நாள் வளர்ந்து நவம்பர் 26−ம் தேதியன்று தொடங்கிய ‘‘டெல்லி முற்றுகை’’ப் போராட்டம் 11 மாதங்களைக் கடந்தும் உறுதியாக நடந்து வருகிறது. இன்றுவரை 500−க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டக் களத்திலேயே இறந்துள்ளனர்; பல ஆயிரம் பேர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
படிக்க
ஊதிய நிலுவையையும் ஊதிய உயர்வையும் வழங்கு : ஆஷா தொழிலாளர்கள் போராட்டம் !
திமுக அரசே வேலை கொடு : சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் !
மோடி அரசைப் பணிய வைக்காமல் சொந்த மாநிலத்திற்கு திரும்புவதில்லை என்ற உறுதியோடு போராடிவரும் விவசாயிகள், ‘‘போராட்டங்களை வாழ்க்கையின் ஒரு அங்கமாக்கிக் கொள்வோம்’’ என்று முழங்கி வருகின்றனர். இந்நிலையில், சென்ற ஆகஸ்டு மாதத்தில் தாழ்த்தப்பட்ட கூலி விவாயிகள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நிலம் உள்ளிட்ட தங்களது அடிப்படை கோரிக்கைகளுக்காகவும் டெல்லி முற்றுகைப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் பஞ்சாபில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
மின்சாரச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து மின் உற்பத்தி, மின் வினியோகம் − என ஒட்டுமொத்த மின் துறையையும் கார்ப்பரேட்டுக்கு நேர்ந்துவிடத் துடிக்கும் மோடி அரசை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் 3 முதல் 5−ம் தேதி வரை இந்தியா முழுவதிலும் 15 லட்சம் மின் ஊழியர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதனையடுத்து ஆகஸ்ட் 10−ம் தேதி இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மின் ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டமாக இந்தப் போராட்டம் வளர்ந்துள்ளது.
punjab farmers protest for kashmirமின்துறை தனியார்மயமாக்கம் என்பது விவசாயிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா மின்சாரம், மக்களுக்கு வழங்கப்படும் மானிய விலையிலான மின்சாரம் அனைத்தையும் ஒழித்துக் கட்டிவிடும். மின்துறை தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டால் பெட்ரோல்−டீசல் விலை உயர்வு போல, கார்ப்பரேட்டுகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கட்டணத்தை அதிகரித்து மக்கள் தலையை மொட்டையடிப்பார்கள். இதை முன்னுணர்ந்து போராடி வருகிறார்கள் மின்துறை ஊழியர்கள்.
மேடைதோறும் தேசப் பாதுகாப்பு குறித்து கூச்சலிடும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, நாட்டின் ஒட்டுமொத்த இராணுவப் பாதுகாப்புத் தளவாடத் தொழிற்சாலைகள் அனைத்தையும் தனியாருக்குத் தாரைவார்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே பல தொழிற்சாலைகளின் முக்கிய ஆயுத உற்பத்தியை நிறுத்தியுள்ளது. தற்போது பல்வேறு நிறுவனங்களை ஒரே பொதுத்துறை நிறுவனமாகக் கொண்டுவந்து, பின்னர் அதனை தனியார்மயமாக்கும் திட்டத்தோடு செயல்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள 41 இராணுவத் தளவாடத் தொழிற்சாலைகளைச் சேர்ந்த சுமார் 90,000 தொழிலாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இத்தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காகவே, அத்தியாவசியப் பாதுகாப்புச் சேவை அவசரச் சட்டத்தை மோடி அரசு கொண்டுவந்துள்ளது. இதன்படி, தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறிப் போராடினால், பிணையில் வெளிவர முடியாத வகையில் ஓராண்டு சிறைத் தண்டனை, பத்தாயிரம் ரூபாய் அபராதம், போராட்டத்தைத் தூண்டினால் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். இக்கொடுஞ்சட்டத்திற்கு எதிராக ஜூலை 23−ம் தேதி நாடுதழுவிய தொழிற்சங்க வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. இக்கொடூரச் சட்டமானது, தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்களைக் கண்டு மோடி அரசு அஞ்சி நடுங்குவதையே நிரூபித்துக் காட்டுகிறது.
சாகர்மாலா திட்டம் என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள கடற்கரைகளையெல்லாம் கார்ப்பரேட்டுகளுக்கு பட்டாபோட்டு கொடுக்க தயாராகிவரும் மோடி அரசு, தற்போது மீனவர்களை கடலிலிருந்தே விரட்டியடிக்கும் வகையிலும், மீன்பிடித் தொழில் தொடங்கி கடல் வளங்கள் அனைத்தையும் கார்ப்பரேட் சூறையாடலுக்குத் திறந்துவிடவும் கடல் மீன்வள மசோதாவைக் கொண்டுவந்துள்ளது. 12 நாட்டிகல் கடல்மைலுக்கு மேல் ஆழ்கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாது என்று சொல்லும் இச்சட்டம், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத்து ஆழ்கடலை கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்களமாக மாற்றிக் கொடுக்கிறது.
மோடி அரசின் இச்சட்டத்தை எதிர்த்து தமிழக, புதுச்சேரி கடலோரக் கிராமங்களில் திரளான மீனவர்கள் தமது குடும்பத்துடன் போராடியதோடு, தங்கள் படகுகளில் கருப்புக் கொடியைக் கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். முத்தாய்ப்பாக, இராமேஸ்வரத்தில் 50,000−க்கும் மேற்பட்ட மீனவர்கள் திரெண்டெழுந்து போராடி, மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களின் வங்கிச் சேமிப்புகளான பல லட்சம் கோடி ரூபாய்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தொழிற்கடன்களாக அள்ளிக் கொடுத்துவரும் மோடி அரசு, கடனைத் திருப்பிக் கட்டாத முதலாளிகளுக்கு ‘‘வாராக்கடன்’’, ‘‘ஹேர்கட்’’ என்ற பெயரில் அக்கடனை தள்ளுபடியும் செய்து வருகிறது. கார்ப்பரேட்டுகளுக்கு கொட்டிக்கொடுத்தே கஜானவை திவாலாக்கிவிட்டு தற்போது, அரசிடம் பணம் இல்லையென பொதுத்துறை நிறுவனங்களை தவணை முறையில் தனியாருக்கு விற்றுக் கொண்டிருக்கிறது.
இம்முறை இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கப் போவதாக அறிவித்துள்ளது. 15 இலட்சம் வங்கி ஊழியர்கள் இதற்கெதிரான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மேலும், அரசின் மிகப்பெரிய காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி.யை கொஞ்சம் கொஞ்சமாகத் தனியாருக்கு தாரைவார்க்கும் மோடி அரசுக்கு எதிராக அத்துறையில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
படிக்க :
ஏழைகளுக்கும் நடுத்தரவர்க்கத்திற்கும் இனி மின்சாரமும் எட்டாக்கனிதான் !
மீன் வளத்தையும் மீனவர்களையும் அழிக்க வரும் கடல் மீன்வள மசோதா !
காலங்காலமாக வரதட்சணைக் கொடுமைகளால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட இந்தியப் பெண்களின் துயரக் கதைகள் எண்ணிலடங்காதது. பணத்தையும் கொடுத்து பெண்ணையும் அடிமையாக அனுப்புவதை திருமண மற்றும் குடும்ப அமைப்பு முறையாகவே வைத்துள்ளது, ஆணாதிக்க − பார்ப்பனிய சமுதாயக் கட்டமைப்பு.
கேராளாவில் சுசித்ரா, அர்ச்சனா, விஸ்மயா ஆகிய இளம் பெண்கள் தொடர்ச்சியாக வரதட்சணைக் கொடுமைகளால் தற்’கொலை’ செய்துகொண்டுள்ளதைத் தொடர்ந்து, ‘‘பெண்கள் விற்பனைக்கு அல்ல’’, என்றும் ‘‘வரதட்சனை தரமுடியாது’’ என்றும் சமூக வலைதளங்களில் கேரளப் பெண்கள் முழங்கினர். கேரளாவெங்கும் இந்தப் போராட்டம் உழைக்கும் மக்களின் பெருத்த ஆதரவைப் பெற்றுள்ளது.
இவை மட்டுமல்லாது, பழங்குடி மக்களின் உரிமைப் போராளியான பாதிரியார் ஸ்டான் சுவாமி, ‘‘ஊபா” சட்டத்தின் கீழ் மோடி அரசால் கைது செய்யப்பட்டு, சிறையில் மாண்டு போனதைத் தொடர்ந்து, ‘‘ஊபா” சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டங்கள், பெட்ரோல் − டீசல் விலை உயர்வுக்கெதிரான போராட்டங்கள், காண்ட்ராக்ட் மயப்படுத்தலை எதிர்த்து சென்னை தூய்மைப் பணியாளர்கள் நடத்திய போராட்டங்கள் − என நாடு முழுவதும் உழைக்கும் மக்களின் போராட்டங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன.
சிறுபொறி பெருங்காட்டுத் தீயாகப் பற்றிப் படர்வதைப் போல, சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகும் உழைக்கும் மக்களின் இந்த தன்னெழுச்சியான போராட்டங்கள், நாளை காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான ஒன்றிணைந்த பெருந்திரள் எழுச்சியாக மாறும்; அந்நாள் வெகுதூரம் இல்லை.

மதி

காவி பாசிசத்துடன் சமரசம் செய்துகொள்ளும் தி.மு.க அரசு !

மிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் − பா.ஜ.க-வின் பாசிச போக்கை எதிர்த்து கருத்திலும் களத்திலும் போராடிவந்த பெரியாரிய அமைப்புகள், தாழ்த்தப்பட்டோர் − சிறுபான்மையினர் அமைப்புகள், சி.பி.ஐ − சி.பி.எம் உள்ளிட்ட தேர்தல் கம்யூனிஸ்டுகள், மே 17 இயக்கம் மற்றும் சில மா−லெ குழுக்கள் உட்பட அரசியல் அமைப்புகள், தி.மு.க-வின் தேர்தல் வெற்றிக்காக பெரிய அளவில் பிரச்சாரம் செய்தனர். தி.மு.க வெற்றி பெற்றதும், திராவிட ஆட்சி மலர்ந்து விட்டது என்று பிரச்சாரமும் செய்தனர். ஆனால், தி.மு.க-வோ பார்ப்பன எதிர்ப்பைக் கொண்ட தமிழகத்தின் மரபுக்கு மாறாக, காவியுடன் சமரசப் போக்கையே கடைபிடித்து வருகிறது.
ஆட்சிக்கு வந்தால் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ‘‘நீட்’’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவோம்; நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றது, தி.மு.க. ஆனால், ஆட்சியைப் பிடித்த பிறகு, ஏ.கே.ராஜன் தலைமையில் ‘‘நீட்’’ தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதனை ஆராய ஆய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டது தி.மு.க அரசு. அதுமட்டுமின்றி, நீட் தேர்வை ரத்து செய்ய ‘‘முடிந்த வரை முயற்சிப்போம்’’ என்றுதான் சொன்னோம் என்று அந்தர்பல்டி அடித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.
படிக்க :
திமுக அரசு பட்ஜெட்டும் அரசுப் பள்ளிகளின் நிலைமையும் || சிறப்புக் கட்டுரை
திமுக அரசே வேலை கொடு : சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் !
ஏழு தமிழர் விடுதலை விவகாரத்தில், இந்த விசயம் எனது வரம்புக்கு அப்பாற்பட்டது என்று கைகழுவினார் தமிழக ஆளுநர். ஆனால் தி.மு.க அரசோ, பேரறிவாளனுக்கு ஒரு மாத பரோல் வழங்குவதைத் தொடர்ந்து நீட்டித்து வருகிறதே தவிர, ஏழுவரை விடுதலை செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஏழு பேர் விடுதலை செய்வது தொடர்பான தமிழக சட்டமன்றத் தீர்மானத்தின் மீது குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் எனச் சொல்கிறார், தமிழக ஆளுநர். அந்த ‘குடியரசு’த் தலைவருக்கு நிர்பந்தம் கொடுத்து ஏழு பேரை விடுதலை செய்வதற்கு பதிலாக, தமிழக சட்டமன்றத்தின் 100−ம் ஆண்டு விழாவிற்கு அந்தக் ‘குடியரசு’த் தலைவரை வரவழைத்துக் கௌரவித்தது, தி.மு.க அரசு.
தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசானது எந்த அணையையும் கட்டக்கூடாது என காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் தெளிவுபடுத்திய பின்னும், எந்த எதிர்ப்பு வந்தாலும் அணையைக் கட்டியே தீருவோம் என்று கொக்கரிக்கிறது, கர்நாடக பா.ஜ.க அரசு. அணை கட்டுவதற்கான விரிவான அறிக்கை தர கர்நாடகாவிற்கு உத்தரவிட்ட ஒன்றிய அரசு, தமிழகத்திடம் ‘‘சட்டப்படி எல்லாம் நடக்கும்’’ என்கிறது.
ஆர்.எஸ்.எஸ்-ன் சேவாபாரதி அமைப்பின் சார்பில் கொரோனா சிகிச்சை மையத்தைத் தொடங்கி வைத்து “பாரத மாதா” படத்திற்கு மலர்தூவி வணங்கிய அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ்.
கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதை மாநிலங்களின் தலையில் கட்டிவிட்டு ஒதுங்கிக் கொண்ட பாசிச மோடி அரசு, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகை, வரி வருவாய் உள்ளிட்டவற்றை பிரித்துக் கொடுக்காமல் ஏமாற்றியது. குறிப்பாக, தமிழகத்துக்கு ஜி.எஸ்.டி வரி வருவாயாக வழங்கப்பட வேண்டிய தொகை மட்டும் ரூ.20,033 கோடி. இந்தத் தொகையை ஒன்றிய அரசிடமிருந்து பெறுவதற்காக, அ.தி.மு.க எடப்பாடி பாணியில், ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதுவது, நேரில் சென்று ‘வலியுறுத்துவது’ ஆகிய சடங்குத்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டார், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
000
மோடி அரசின் மாநில உரிமைப் பறிப்புகளுக்கு எதிரான போராட்டத்தில் மட்டுமல்ல; ஆர்.எஸ்.எஸ் − பா.ஜ.க-வின் இந்துத்துவ சித்தாந்தத்தோடு சமரசம் செய்து கொண்டுள்ளதோடு, தமிழகத்தில் அதன் வளர்ச்சிக்கு ஒத்திசைவாக நடந்து கொள்வதாகவும் தி.மு.க ஆட்சி அமைந்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலைப் பரவலின்போது, ‘‘கொரோனா தடுப்புப் பணியை மக்கள் இயக்கமாக மாற்றுவோம்’’ என்று அறிவித்த தி.மு.க அரசு, கொரோனா தடுப்புப் பணிகளை பல்வேறு தன்னார்வக் குழுக்களை இணைத்துக் கொண்டு மேற்கொள்வதன் மூலம் தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவருவது என்ற திட்டத்தை முன்வைத்தது. அதற்காக சில குறிப்பிடத்தக்க தன்னார்வக் குழுக்களுக்கு மட்டுமே அனுமதியளித்தது. அதில் ஆர்.எஸ்.எஸ்-ன் சேவா பாரதி என்ற அமைப்பையும் அழைத்திருந்தது.
தமிழகத்தில் சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை−மகன் இருவரையும் கொடூரமாகப் படுகொலை செய்த ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸில் இருந்தவர்கள் சேவா பாரதியை சேர்ந்தவர்களே. இந்த சேவா பாரதி அமைப்பின் சார்பில் திருப்பூரில் தொடங்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தைத்தான் தி.மு.க செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்து, அங்கு வைத்திருந்த “பாரதமாதா” படத்திற்கு மலர்தூவி வணங்கியுள்ளார்கள். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்கு பாதையமைத்துக் கொடுக்கும் வேலையை தி.மு.க-வே தலைமையேற்று செய்து கொடுத்துள்ளது என்பதனைத்தான் இச்சம்பவங்கள் நமக்கு காட்டுகின்றன.
மண்டைக்காடு கலவரத்தை முன்னின்று நடத்திய எம்.ஆர். காந்தி என்ற எம்.எல்.ஏ. கிறித்துவ சிறுபான்மை மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டிவிடுவதையே நோக்கமாக கொண்டு செயல்படும் ஆர்.எஸ்.எஸ். வெறியர். கன்னியாகுமரியில் ஒரு தேவாலயத்தைப் புதுப்பிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்த இந்து மதவெறியனின் புகாரின் பேரில், கன்னியாகுமரியைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை போலீசு கைது செய்து சிறையில் அடைத்தது.
இந்துவெறியன் அளித்த பொய்ப்புகாரின் பேரில் போலீசாரால் கைது செய்யப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கலைஞர் ஆய்வு மையம் சார்பில் ‘‘வேதஷக்தி வர்மக் கலையும் பண்பாட்டுப் பின்புலமும்’’ என்ற தலைப்பில் கடந்த 16−ஆம் தேதி கருத்தரங்கம் ஒன்று நடந்துள்ளது. வேதம் − தற்காப்புக்கலை என்று இந்துத்துவ சித்தாந்தத்தினை மறைமுகமாக புகுத்துகிற நடவடிக்கை இது என்று பலரும் விமர்ச்சித்தனர். தற்போது இதுபோல இந்துத்துவ கருத்துக்களை மறைமுகமாகத் திணிக்கக் கூடிய கருத்தரங்கங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன. இப்பல்கலைக்கழகத்தின் மீது தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மதுரைக்கு வருவதையொட்டி அவர் செல்லும் வழியில் சாலைகளைச் செப்பனிடுவது, தெரு விளக்குகளை சீர்படுத்துவது, குப்பைகளை அகற்றுவற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தனக்கு கீழுள்ள அதிகாரிகளுக்கு மதுரை மாநாகராட்சி ஆணையர் சுற்றறிக்கை அனுப்பிய விசயத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை கூட, சமூக வலைதளங்களில் தமிழ் மக்கள் தெரிவித்த எதிர்வினையின் விளைவே.
000
பா.ஜ.க எதிர்ப்புணர்வை முதலீடாகக் கொண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க, தான் எந்தச் சூழலில் ஆட்சிக்கு வந்துள்ளோம் என்பதனை உணர்ந்தே இருக்கிறது. ஆகவேதான் பெரியார் வழி, அண்ணா வழி என்றும், திராவிட மாடல், சமூக நீதி அரசியல் என்றும் கூறிக்கொள்வதன் மூலம் தன்னுடைய ஆதரவு தளத்தை அப்படியே தக்கவைத்துக் கொள்ளவும், அதை விரிவுபடுத்தவும் விரும்புகிறது. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க ஆணை பிறப்பித்தது, அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் போன்ற திட்டங்களை இப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.
படிக்க :
ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் நிகழ்ச்சிநிரலுக்கு பின் செல்லும் திமுக || மக்கள் அதிகாரம்
திமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்
இன்னொரு பக்கம் தி.மு.க-வினை ஒழித்துக் கட்டும் நோக்கத்தில், ‘‘தி.மு.க இந்துக்களின் எதிரி’’ என்று பா.ஜ.க பிரச்சாரம் செய்துவருவதை எண்ணி தி.மு.க அச்சம் கொள்கிறது. தங்களை இந்துக்களின் நண்பர்களாகக் காட்டிக்கொள்ள காவி பயங்கரவாதிகளுடன் சமரசமாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களிடம் நன்மதிப்பைப் பெற்றுவிடலாம் என்று கருதுகிறது.
தி.மு.க-வின் இந்த சமரசவாத அணுகுமுறைகளை அம்பலப்படுத்தி முறியடிக்காமல், காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற முடியாது.


பால்ராஜ்

பின்னி ஆலைத் தொழிலாளர் போராட்டம் : வரலாறு கற்பிக்கும் பாடம் !

0
B&C – பின்னி  – பங்கிங்காம் மற்றும் கர்னாட்டிக் என்ற நூற்பாலை 1876-ல் சென்னை பெரம்பூரில் ஆங்கிலேய முதலாளியால் துவங்கப்பட்டது. 1968 வரை தனியார் முதலாளியால் நடத்தப்பட்டு வந்த இவாலை 1969-ல் ஒன்றிய அரசுக்கும் பின்பு தனியாருக்கும் மாறியது. தொடர்ந்து நடத்த முடியாது என்று 1996-ல் மூடப்பட்டது.
துவங்கப்பட்ட நாள் முதல் குறிப்பாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் அன்றாட 10, 12 மணி நேர உழைப்பால், அவர்கள் சிந்திய ரத்தத்தால் உருவான இவ்வாலையின் பலகோடி சொத்துக்கள் அனைத்தும் தனியார் உடமையாக மாறிவிட்டன. இவ்வாலை தனியாருக்கு தாரைவார்க்கப்படாமல் இருந்திருந்தால் இச்சொத்துகள் அனைத்தும் இன்று அரசு சொத்தாக நீடித்திருக்கும்.
ஆலை இயங்கியதற்கான சுவடே இல்லாமல் அடுக்கு மாடி குடியிருப்புகளாக இன்று மாறி வருவதோடு இதன்மூலம் ரியல் எஸ்டேட் முதலாளிகளும் கொழுத்து வருகின்றனர். இவ்வாலையின் இவ்வளவு மதிப்புள்ள சொத்துக்களை உருவாக்கிய உழைப்பாளிகளின் வாழ்க்கை உருகுலைந்ததோடு, அவர்கள் பட்ட கஷ்டங்களும், துன்பங்களும், இறப்புகளும் சொல்லிமாளாது. இன்னும் இதற்காக உழைப்பை சிந்திய தொழிலாளர்களும் அவர்களுடைய வாரிசுகளும் குடிசைகளில்தான் வாழ்கின்றார்கள். ஆலை மூடப்பட்டபோது வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட கொடுமையை சென்னையின் ஜாலியன் வாலாபாக் என்றே சொல்லலாம்.
படிக்க :
அம்பானியின் ஜியோவுக்கு பின்னிருக்கும் ரகசியம் : நான்காம் தொழிற்புரட்சி !
பின்னி தொழிலாளிக்கு நட்ட ஈடு முப்பதாயிரம் ரூபாய்
இதை ஏன் இன்று பேச வேண்டும்?
இதை இன்று பேசுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இவ்வாலை 19-ம் நூற்றாண்டு இறுதியில் நாடோடியாக சென்னை கடற்கரையில் காலடி வைத்த ஜான் பின்னி என்ற வணிகனால் 1876-ல் B&C என்ற பின்னி கம்பெனி 254 ஏக்கரில் உருவாக்கப்பட்டது.
பக்கிங்காம் மற்றும் கர்னாட்டிக் என்ற பெயரில் இயங்கி வந்த இவ்வாலையானது, இருவகை உற்பத்தியைச் செய்தது. ஒன்று நூற்பு மற்றொன்று நெசவு.
இதில், இராணுவம் – இதர அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் தேவையான சீருடைகளை தரமான வகையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்பட்டதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதற்கான மின்சாரத் தேவையை இவ்வாலையே உற்பத்தி செய்து கொண்டதோடு, மீதமுள்ளதை தனியாருக்கும், அரசுக்கும் விற்றது.
நீராவி இயந்திரங்களோடு துவங்கப்பட்ட இந்த ஆலை, மின்சார இயந்திரங்களையும் மின்சார ஒளி வசதிகளையும் பயன்படுத்தி உற்பத்தியை அதிகப்படுத்தியது. இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டாலும், தொழிலாளர்களின் வேலை நேரம் குறையவில்லை. தொழிலாளர்களின் உழைப்பு கடுமையாகச் சுரண்டப்பட்டது. ஆலை நிர்வாகத்தின் இலாபம் பெறுகியது. இதை கார்ல் மார்க்சின் வார்த்தையில் சொல்வதென்றால் இந்த இலாபம் அனைத்தும் தொழிலாளர்களிடமிருந்து திருடப்பட்ட உழைப்பு.
தொழிலாளர்களின் கூலியும் உயரவில்லை. வேலையும் கடுமையானது. தினமும் 11 மணி நேரம் ஓய்வில்லாமல் உழைத்ததன் விளைவு, அவர்களது வாழ்வும் கவலைக்கிடமானது. பணிச்சுமை மற்றும் கொடுங்கோன்மை தாங்காமல் இக்கொடுமைதாளாமல் அன்று இருந்த வெள்ளை மேலாளர்களை தொழிலாளர்கள் தாக்கிய வரலாறும் உண்டு.
ஆலையைச் சுற்றி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த குடியிருப்புகள் வாழ்வதற்கே தகுதியற்றவைகளாக இருந்தன.
இவ்வாலைத் தொழிலாளர்கள் வர்க்கமாக அணிதிரளாமல் சாதிகளாகப் பிரிந்து வாழ்ந்தனர். இதையே இவர்களை பின்பு பிரித்தாளுவதற்கு ஆலை நிர்வாகம் பயன்படுத்திக் கொண்டது.
சில வருடங்களுக்கு பிறகு அதிக நேரம் உழைப்பு சுரண்டுவதற்கு ஏதுவாகவும், எந்த நேரத்திலும் வெளியேற்றப்படலாம் என்ற நிபந்தனையோடும் குறைந்த வசதிகளுடனான வீடுகளை தொழிலாளர்களுக்கு கட்டிக் கொடுத்தது பின்னி ஆலை நிர்வாகம்.
தொழிலாளர்கள், எந்த நேரத்திலும் வெளியேற்றப்படலாம் என்ற சரத்து அன்றைய வெள்ளையன் ஆட்சியிலும் தொடர்ந்தது. இன்றைய கொள்ளையன் ஆட்சியிலும் தொடர்கிறது. இந்தியாவில் நடந்த பல்வேறு அகில இந்திய ரயில்வே தொழிலாளர்களின் போராட்டத்தின்போதும், இரயில்வே தொழிலாளர்கள் அவர்கள் தங்கியிருந்த குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டதே இதற்கான சான்று. தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபடாமல் தடுப்பதற்கான துருப்புச் சீட்டாக குடியிருப்புகளைப் பயன்படுத்தியது ஆலை நிர்வாகம்.
1918-ம் ஆண்டு ஏப்ரலில் இவ்வாலையில் மெட்ராஸ் லேபர் யூனியன் என்ற பெயரில் தொழிற்சங்கம் துவங்கப்பட்டது. சொந்தம் செய்யாததை சங்கம் செய்யும் என்பதற்கான சான்றாக தொழிலாளர்களின் அவல நிலையைப்போக்க கூலி உயர்வுக்கானப் போராட்டத்தை அவ்வப்போது நடத்தி வந்தது.
இதை தொடர்ந்து 1920-ல் மற்ற நூற்பாலைகளில் மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.26 கூலியாக தரப்படுகிறது. பின்னி ஆலையில் ரூ.20 மட்டுமே தரப்படுகிறது. மேலும், பயிற்சி இல்லாத தொழிலாளர்களுக்கு தினம் 14 அனா (1அனா – 6 பைசா என்ற வகையில்) தினக் கூலியாகத் தரப்படுகிறது. மற்ற ஆலைகளுக்கு தரப்படும் கூலியின் அளவிற்கு கூலியை உயர்த்தித் தரும்படியும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூலியை உயர்த்தி தரும்படியும் நிர்வாகத்திடம் தொழிற்சங்க தலைவர்கள் வாதாடினர்.
முதலாளித்துவ வர்க்கத்திற்கே உரிய வக்கிர புத்தியானது, மற்ற ஆலைகளைவிட தங்கள்தான் அதிக கூலி தருவதாக அபாண்டமாகப் பொய் பேசியதோடு, கூலி அதிகம் கொடுத்தால், கையில் இருக்கும் காசு கரையும் வரை அவர்கள் வேலைக்கு வரமாட்டார்கள் எனக் கூறி தொழிலாளர்களின் உழைப்பை – அவர்களின் வாழ்வை – இழிவுப்படுத்தியது. இன்று வரை முதலாளித்துவமும் அதன் அடிவருடிகளும் இதைத்தானே சம்பள / கூலி உயர்வு போராட்டங்களில்  தொழிலாளர்கள் ஈடுபடும்போது கூறிவருகின்றனர்.
இவ்வேலை நிறுத்தத்தின்போது நிர்வாகத்தின் அடியாளான போலீசு துப்பாக்கியால் சுட்டதில் இருவர் பலியாகினர். அதையும் தாண்டி பின்வாங்காமல் இறுதிவரை போராட்டத்தை உறுதியுடன் நடத்தியதன் விளைவு, கருணை அடிப்படையில் கல்வி, மருத்துவம் போன்றவைகளுக்கு உதவித் தொகையும், ஒழுங்காக வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உதவித் தொகையும் தருவதாக கூறியது நிர்வாகம். அதே நேரத்தில் இப்போராட்டத்தை ஒடுக்கிய போலீசுக்கு பரிசு வழங்கப்போவதாகவும் அறிவித்தது. இதன்மூலம் நிர்வாகம் அரசு என்பது எங்களின் அடியாள் படை என்பதை நிரூபித்துவிட்டது.
1920 வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பிறகும் கூலி உயர்வு என்பது கானல் நீரானது. ஆனால், வேலை நிறுத்ததின்போது பெரும்பங்காற்றிய நடேசன் என்ற தொழிலாளி பழிவாங்கப்பட்டார். இதை எதிர்த்து தொழிலாளர்கள் அனைவரும் இயந்திரங்களை இயக்குவதை நிறுத்திவிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் தங்களுக்குள் கலந்துபேசி ஆலை மேலாளரை கூட்டமாக சென்று சந்திதனர். இதை கண்டு அரண்டுபோன மேலாளர் சுடுவதற்கு துப்பாக்கியை உயர்த்தினான். இதை உடனே ஒரு தொழிலாளி பறித்துவிட்டார். இந்தப் பிரச்சினை பெரியதாகி கதவடைப்பு வரை சென்றது.
இதை பயன்படுத்தி உள்ளிருப்பு வேலை நிறுத்ததை முறியடிக்கவும், தொழிற்சங்கத்தை ஒழிக்கவும், இதற்கு காரணமாக இருந்த தொழிற்சங்க தலைவரான திரு.வி.க-வும் தொழிலாளியான நடேசன் உட்பட 13 பேர்கள்தான் என்று குற்றச்சாட்டை வைத்து இவ்வேலைநிறுத்தம் தனக்கு நட்டம் ஏற்பட்டுவிட்டது.
எனவே ரூ.80 ஆயிரம் இழப்பீடு தர வேண்டும் என்று வழக்கு தொடுத்தது. அன்று தொழிசங்க சட்டம் எதுவும் இல்லாததால் வழக்கு நீதிமன்ற விசாரணைக்குச் சென்றது.
வேலை நிறுத்தம் முடியும் வரை இவர்கள் அனைவரும் தொழிலாளர்கள் கூட்டத்தில் பேசக் கூடாது எனத் தடையும் விதித்தது. ஆனால், தொழிலாளர்கள் தங்களாகவே முன்முயற்சியுடன் கூட்டங்களை தொடர்ந்து நடத்தினர். போராட்டம் தொய்வு அடையாமல் தொடர்ந்து நடைபெற தொழிலாளர்கள் அனைவரும் தொழிற்சங்க நிதியால் பராமரிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் தொழிற்சங்க தலைவர்களின் ஒருவனான வாடியா என்பவர் அன்னி பெசண்ட் அம்மையாருடன் பின்னி நிர்வாகத்தை கமுக்கமாக சந்தித்து இழப்பீட்டு வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்ற நிபந்தனையோடு வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். தொழிலாளர் மத்தியில் இதை தொழிலாளர் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகக் கூறி விளக்கி விட்டு வெளிநாடுக்கு தப்பிச் சென்றுவிட்டான். வாடியாவும் பின்னி நிர்வாகமும் ஒப்புக் கொண்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சரத்துகளும்  நிபந்தனைகளும் நியு இந்தியா என்ற நாளேட்டில் வெளியிடப்பட்டன. தொழிலாளர் கூட்டத்தில் வாடியா விளக்கியதற்கும் இதற்கு பாரிய வேறுபாடுகள் இருந்தன. இதை உணர்ந்த தொழிலாளர்கள், வாடியா தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதை உணர்ந்தனர்.
வாடியாவின் துரோகத்தால் 1921 ஜனவரியில் முடிவுக்கு வந்தது வேலை நிறுத்தம். துரோகத்தால் வீழ்த்தப்பட்டதை உணர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் 1921 பிப் முதல் மே வரை சிறு சிறு வேலை நிறுத்தத்தை மேற்கொண்டனர். சிறு துளி பெருவெள்ளம் என்பதைப் போல இந்த சிறு சிறு துளிப்போராட்டங்கள் பெரும் போராட்டமாக வெடிப்பதற்குக் காரணமாக அமைந்தன.
1921 மே மாதத்தில் கர்னாட்டிக் ஆலையின் நாற்பாலை தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். இவர்களுக்கு ஆதரவாக பங்கிங்காம் ஆலைத் தொழிலாளர்களும் இறங்க, அது பெரும் போராட்டமாக தீவிரமடைந்தது. அன்றைய ஆங்கிலேயே அரசு அப்போராட்டத்தை கொடூரமாக ஒடுக்கத் தொடங்கியது.
இதை துணிகரமாக தொழிலாளர்கள் எதிர்கொண்ட சூழலில் நிர்வாகம் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு ஆதிதிராவிடர் பிரிவைச் சார்ந்த தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் இருந்து பின்வாங்க வைத்தது. இதற்கு கோடரிக் கொம்பாக குடியரசு கட்சியைச் சார்ந்த M.C. ராஜா என்பவர் செயல்பட்டார்.
இதனூடே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்தது பின்னி நிர்வாகம். இதைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்களும் 1921 ஜூன் 18 அன்று, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கூடியது போல கடற்கரையில் கூடி பின்னி தொழிலாளர்கள் போராட்டத்தை ஆதரித்தனர். மேலும் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அரசுக்கு கடிதங்கள் எழுதும் போராட்டத்தையும் நடத்தினர்.
இதற்கிடையில், ஆகஸ்ட் 26 அன்று நிர்வாகத்தின் பிரித்தாலும் சூழ்ச்சிக்கு பலியாகி வேலைக்கு சென்ற ஆதிதிராவிட தொழிலாளர்கள் மீது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட இதர சாதிய தொழிலாளர்கள் தாக்குதல் நடத்தினர். அவர்களின் குடியிருப்புகளை தாக்கியதோடு, குடிசைகளுக்கும் தீவைத்தனர்.
நிர்வாக சூழ்ச்சிக்கும் அரசின் அடக்குமுறைக்கும் எதிராக வர்க்கமாக ஒன்று திரண்டு போராட வேண்டிய தொழிலாளர்கள் சாதி ரீதியாக பிளவுபடுத்தி அவர்களுக்குள்ளாகவே மோதலை ஏற்படுத்தியது ஆலை நிர்வாகம். தொழிலாளர்களிடையேயான சாதிய ரீதியிலான இந்த மோதல், போலீசுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. தொழிலாளர்கள் மீது கடுமையான தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டு வழக்குகள் போட்டு போராட்டத்தை முடக்கியது.
இவை அனைத்தும் தொழிலாளர் போராட்டங்களின் அனுபவங்களில் உள்ள நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்களை படிப்பினையாகத் தருகின்றன. இன்றும் தொழிலாளி வர்க்கத்திற்கான சங்கங்களிலும் சாதியரீதியிலான, கட்சி ரீதியிலான பிரிவினைகள் மூலம் இதே வகையான நரித்தனத்தை அமல்படுத்திக் கொண்டிருக்கின்றது முதலாளித்துவ வர்க்கம்.
பின்னி ஆலை வேலை நிறுத்தம் போல, 1908-ல் தொழிற்சங்கம் இல்லாத நிலையில் தூத்துக்குடியில் ஆங்கிலேயர் நடத்திய கோரல் மில்லிலும் போராட்டம் நடந்தது. இதற்குத் தலைமை தாங்கி வழி நடத்திய ஏகாதிப்பத்திய எதிர்ப்பு போராளி வ.உ.சி அவர்கள், சிவாவின் துணையுடன் ஊதிய உயர்வு, வார விடுமுறை இதர கோரிக்கைகளை உள்ளடக்கி வேலை நிறுத்தத்தை முன்னெடுத்தனர்.
படிக்க :
மாருதி தொழிலாளிகள் 13 பேருக்கு வாழ்நாள் சிறை – அவசரச் செய்தி
இதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் !
இப்போராட்டத்தை ஆலைத் தொழிலாளர்களோடு மட்டும் நிறுத்தாமல் மக்கள் போராட்டமாக மாற்றியமைத்தார்கள். இதன் விளைவாக ஆங்கிலேயே மேலாளர்களையும் நிர்வாகிகளையும் வீதிகளில் நடமாட முடியாமல் மக்கள் தாக்கினர். சமூக புறக்கணிப்பையும் செய்தனர். இவர்களுக்கு கைக் கூலியாக இருந்த உள்ளூர் பேர்வழிகளுக்கு பொருட்களை எதுவும் வாங்க முடியாத, ஏன் முடிவெட்டி, சவரம் செய்து கொள்ள முடியாத அளவிற்கு சமூகப் புறக்கணிப்பை செய்தனர். இதனால் அரண்டுப்போன நிர்வாகம் 50% ஊதிய உயர்வையும், வேலை நேரத்தில் உணவருந்தும் நேரத்தை சேர்த்தும், விடுமுறைகளையும் அறிவித்தது. தொழிலாளர்களின் போராட்டத்தை வர்க்கரீதியாக ஒருங்கிணைத்ததுடன், மக்களுடன் இணைந்த மக்கள் திரள் போராட்டமாக வளர்த்தெடுத்தன் விளைவாக அங்கு வெற்றியை சாதிக்க முடிந்தது.
அன்று ஆங்கிலேயே கும்பல் – இன்று அதானி அம்பானி கார்ப்பரேட் கும்பல். அன்றும் இன்றும் இவர்களுக்கு அடியாள் படையாக இருந்து சேவை செய்கிறது அரசு. இன்று அதானி அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பலுக்கு காவி பாசிசக் கும்பலும் சேவகம் புரிந்து வருகிறது.
இந்தச் சுரண்டலுக்கு எதிராக தொழிலாளர்கள் வர்க்கரீதியாக அணிதிரண்டு அதை தொடர்ச்சியான இடைவிடாத மக்கள் போராட்டங்களாக வழிநடத்திச் செல்வதன் வாயிலாக மட்டுமே தீர்வைக் காண முடியும்.

கதிரவன்

தமிழ் கண்டதோர் வையை, பொருநை || வி. இ. குகநாதன்

ண்மைக் காலமாகத் தமிழர் நாகரிகங்கள் தொடர்பாகப் பல்வேறு தொல்லியல் முடிவுகள் வெளிவந்து இன்ப அதிர்வுகளை ஏற்படுத்திய வண்ணமுள்ளன. அந்த வகையில் மிக அண்மையில் `பொருநை` அகழ்வாய்வு பற்றிய முடிவுகளும் வந்துள்ளன. இன்னமும் சொல்லப்போனால் தமிழ்நாட்டிலுள்ள ஆற்றங்கரைகள் எதனை அகழ்ந்தாலும் அங்கு நாகரிக எச்சங்கள் காணப்படும் என்றளவான ஒரு நிலை காணப்படுகின்றது. இந்த வகையில் முதலில் தமிழர் நிலத்திலுள்ள ஆறுகளைப் பார்ப்போம்.
பாரதியார் பாடிய பாடலொன்று தமிழர் ஆறுகளை எமக்குப் படம் பிடித்துக் காட்டும். இப்போது அப் பாடலினைப் பார்ப்போம்.
‘காவிரி, தென்பெண்ணை, பாலாறு தமிழ்
கண்டதோர் வையை, பொருநை நதி – என
மேவிய ஆறுகள் பலவோட – திரு
மேனி செழித்த தமிழ்நாடு’
என்று பாரதியார் பாடியுள்ளார்.

படிக்க :

கிறங்கடிக்கும் கீழடி : வி.இ.குகநாதன்

தமிழர் திருநாள் : விழுங்கக் காத்திருக்கும் காவிகள் ! | வி.இ.குகநாதன்

இங்குள்ள ஆறுகளின் தமிழ்ப் பெயர்களே ஒரு அறிவுசார்ந்த பெயரிடல் மரபாகவே காணப்படுகின்றது. `காவிரி` (காவேரி அல்ல) என்ற சொல்லில், `கா` என்றால் சோலை, இந்த ஆறு செல்லுமிடங்களிலெல்லாம் (மரச்)சோலையினை விரித்துச் செல்வதால், அப் பெயர் பெறும். இந்தக் காவிரி ஆறு நொய்யல் ஆற்றுடன் கலக்கும் இடத்தில்தான் கொடுமணல் உள்ளது. இந்தக் கொடுமணலே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் `கொடுமணம்` எனும் ஊராகும்.
இத்தகைய கொடுமணல் அகழ்வாய்வு பல நாகரிக எச்சங்களை ஏற்கனவே வெளிக்கொண்டு வந்திருந்தன. `தென்பெண்ணை` , `பாலாறு` ஆகிய ஆறுகள் இன்றும் அதே பெயரிலேயேயுள்ளன. `வையை` எனப்படுவதே இன்றைய வைகை ஆறாகும். `வையை` என்பது மனதிலிடுதல் என்ற பொருளில் வரும் {வை=இடு, வைய்+அ=வைய =மனிதிலிடு (வைதல்)} . இந்த `வையை ` எனும் சொல்லும் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது.
“வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின்
பொய்யா யாணர் மையற் கோமான்”   – புறநானாறு 71: 10-11.
மேற்குறித்த வையை ஆறு இன்று வைகை என அழைக்கப்படுகின்றது. இந்த வைகைக்கரையிலேயே கீழடி, அகரம், கொந்தகை ஆகிய இடங்கள் அமைந்துள்ளன. இந்தக் கீழடி 4-ம் கட்ட அகழ்வாய்வு முடிவுகள் பற்றி ஏற்கெனவே `கிறங்கடிக்கும் கீழடி` என்ற தலைப்பில் வினவில் ஒரு கட்டுரையாகப் பார்த்துள்ளோம்.
இப்போது ஏழாம் கட்ட ஆய்வும் முடிவுறும் நிலையிலுள்ளது. மேலுள்ள பாரதியார் பாடலில் `பொருநை` எனக் குறிப்பிடப்படுவது இன்று தாமிரபரணி என அழைக்கப்படும் ஆறாகும். பொருநை என்பதே இதன் தமிழ்ப் பெயராகும். `பொருநை` என்பது ஒப்பில்லாப் பெருமை என்ற பொருள் பெறும் என முனைவர் இரவி சங்கர் விளக்குகின்றார் {பொரு= பொருந்துதல்/ ஒப்புமை . பொருநை = ஒப்பில்லாப் பெருமை}. இன்னமும் சொன்னால், தண்பொருநை என்பதே இன்றைய தாமிரபரணியாகும் (தண்மை = குளிர்மை) .
அதே போன்று `ஆன்பொருநை` என்ற பெயரில் மற்றொரு ஆறுமுண்டு, அதுவே இன்று அமராவதி எனப்படுகின்றது. இந்த `ஆன்பொருநை` ஆற்றின் கரையிலேயே `பொருந்தல்` என்ற சங்ககால ஊரின் எச்சங்கள் அகழ்வாய்வில் வெளிவந்திருந்தன. இந்தப் பொருந்தல் அகழ்வாய்வில் கிடைத்த நெல்மணிகளையுடைய கலன் ஒன்றில் `வய்ர` என்ற தமிழி எழுத்துகள் பொறித்த சான்று கிடைத்தமையும்; அந்த நெல்மணிகள் கதிரலை கரிமக் காலக் கணிப்பில் பொ.ஆ.மு 490 எனத் தெரிய வந்தது (BCE490, AMS dating by Beta analytic, USA); கீழடி ஆய்வுகள் வெளிவருவதற்கு முன்னரே தமிழி எழுத்தானது அசோகர் பிராமியினை விடப் பழமையானது என்பதற்கான சான்றாக அமைந்தது. இப்போது பொருநை எனப் பொதுவாக அழைக்கப்படும் தண்பொருநை ஆற்றங்கரை நாகரிகத்தினை விரிவாகப் பார்ப்போம்.
பொருநை நாகரிகம்
சிவகளை, கொற்கை, ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு முடிவுகளை, தமிழ்நாடு அரசானது `பொருநை` நாகரிகம் என்ற பெயரில் வெளியிட்டிருந்தது. அதில் பொருநை ஆற்றங்கரையோர ஆதிச்சநல்லூருக்கருகில் சிவகளை பறம்புப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி ஒன்றிலிருந்து நெல்மணிகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த முதுமக்கள் தாழியிலிருந்த `உமி நீக்கப்பட்ட நெல்லினை` கரிமம் நீக்கிப் பார்த்த போது, அதன் வயது ஏறக்குறைய 3176 ஆண்டுகள் (2021+1155=3176) , அதாவது பொருநை ஆற்றங்கரை நாகரிகம் ஆகக் குறைந்தது பொ.ஆ.மு 1155 (BCE 1155 ) இனைச் சேர்ந்தது எனத் தெரிய வந்துள்ளது. இந்தக் காலக்கணிப்பு அனைத்துலக நடைமுறைகளுக்கேற்ப கரிமச் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது (AMS dating by Beta analytic, USA). இதனையடுத்தே தொல்லியல் அறிஞர் கா.ராஜனும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் `இந்திய வரலாறு இனித் தமிழ்நாட்டிலிருந்தே எழுதப்பட வேண்டும்` எனக் கூறியிருந்தார்கள்.
இத்தகைய தண்பொருநை ஆற்றினை புறநானூறு 11-வது பாடல் குறிப்பிடுகின்றது.
“அரி மயிர்த் திரள் முன்கை
வால் இழை, மட மங்கையர்
வரி மணற் புனை பாவைக்குக்
குலவுச் சினைப் பூக் கொய்து
தண் பொருநைப் புனல் பாயும்
விண் பொருபுகழ், விறல்வஞ்சிப்
பாடல் சான்ற விறல்வேந் தனும்மே
வெப் புடைய அரண் கடந்து,
துப்புறுவர் புறம்பெற் றிசினே:
புறம் பொற்ற வய வேந்தன்
மறம் பாடிய பாடினி யும்மே,
ஏர் உடைய விழுக் கழஞ்சின்,
சீர் உடைய இழை பெற்றிசினே!
இழை பெற்ற பாடி னிக்குக்
குரல் புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே.
என ஆங்கு,
ஒள்அழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே.”
– புறநானூறு
பொருள் : தண்பொருநை ஆறு பாயும் வஞ்சி எனும் நகரானது வானளாவிய புகழும் வெற்றியுமுடைய நகராகும். பொருநை ஆற்று மணலில் பெண்கள் பாவை (பொம்மை) செய்தும், பூப்பந்து எறிந்தும் விளையாடுவர். பாலை பாடிய பெருங்கோ பெரும் வீரன். இவன் புறங்கண்ட வீரச் செருக்கினைப் பாடினாள் ஒரு பாடினி. இதற்காகப் பாடினிக்கு அவன் அணிகலன்களைப் பரிசளித்தான்.
இப் பாடலில் கூறப்பட்டது போன்ற பெண் உருவப் பொம்மைகளும், தங்கத்திலான பொருட்களும் அகழ்வாய்வில் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
கம்பரும் தண்பொருநை பற்றிப் பின்னரான காலப்பகுதியில் பாடுகின்றார்.
“பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும்
திரு நதி பின்பு ஒழிய, நாகக்
கன்று வளர் தடஞ் சாரல் மயேந்திர மா
நெடு வரையும், கடலும், காண்டிர்”.
பொருள் : பொருநை என்னும் அழகிய ஆறும் பிற்பட்டுப் போக, யானைக் கன்றுகள் வாழ்ந்து நிற்கும், பெரிய தாழ்வரைகளையுடைய மகேந்திரம் என்னும் பெரிய மலையையும் தென் கடலையும் காண்பீர்கள்.
அசோகரின் கல்வெட்டுகளில் ஒன்றான `கிர்நார் கல்வெட்டு`(Girnar or Revatak Pravata ) என்ற பிராகிரத மொழிக் கல்வெட்டில் இதே `பொருநை` எனும் தூய தமிழ்ப் பெயரானது ` தாம்பபண்ணி` எனக் குறிபிடப்பட்டுள்ளது (கல்வெட்டுக் காலம் BCE 273-BCE 232 ). இந்தத் தாம்பபண்ணி இலங்கையினைக் குறிப்பதாகத் தவறாக முன்னர் கருதியமையுமுண்டு. தாமிரபரணி என்ற பெயர் எவ்வாறு ஏற்பட்டது என வேறுபட்ட கருத்துகளுண்டு (தாமிரம்- செப்பு கலந்த தண்ணீர், இலங்கையிலிருந்து வந்த தம்பபண்ணி -Thambapanni என்பதன் திரிபு, தண்பொருநை என்பதன் பிராகிரத மொழிப் பலுக்கல்). எது எவ்வாறாயினும் `தாமிரபரணி` என்ற சொல்லினை விடத் `தண்பொருநை` / `பொருநை` என்ற பழந் தமிழ்ப் பெயரினையே நாம் பயன்படுத்துவோம்; அதுவே எமக்கு ஒப்பில்லாப் பெருமையாக அமையும்.
இந்த ஆற்றங்கரையிலுள்ள ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழியும் கிடைத்திருந்தது. அதே போன்று எலும்புகளுடனான முதுமக்கள் தாழிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை பற்றிய குறிப்புகள் பல பழந் தமிழ் இலக்கியங்களில் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் முதுமக்கள் தாழியில் நெல்லையும் வைத்துப் புதைக்கும் பழக்கத்தினையும் அகழ்வாய்வுகள் வெளிக் கொண்டு வந்திருந்தன.
வாய்க்கு அரிசி போடுதல் / அரிசியிடுதல் என இன்றும் சா வீடுகளில் கடைப்பிடிக்கப்படும் சடங்கு இந்த மரபின் தொடர்ச்சியாகவிருக்கலாம். நகரத்தார் நடுவே இன்றும் காணப்படும் `பச்சை குத்திப் பாய் சுருட்டல்` எனும் சடங்கும் இதன் எச்சமேயாகும். இதன்போது குத்தாணியில் பச்சை நெல்லினைப் போட்டுக் குத்தி, உமி நீக்கி அதனை வெள்ளைத் துணியில் உடலத்துடன் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வர் (இங்கு முதுமக்கள் தாழியில் கிடைத்ததும் இத்தகைய உமி நீக்கிய நெல்லே). இதே போன்று இன்று மங்கல விழாக்களில் மட்டும் பயன்படுத்தப்படும் `நிறைநாழி` (நெல் நிரம்பிய கலன்) என்ற சடங்கு இறப்பு வீடுகளிலும் சில இடங்களில் பயன்படுத்தப்படுவதாக உரையொன்றில் பேரா.க.நெடுஞ்செழியன் குறிப்பிட்டிருந்தார் {`தமிழ் அருங்காட்சியகம் இலண்டன் ` ஏற்பாடு செய்திருந்த `தமிழர்களிடையே ஆசீவகம்` என்ற தலைப்பிலான உரையில் குறிப்பிடப்பட்ட செய்தி, சரி பார்க்கப்பட வேண்டியது}.

படிக்க :

சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள் !

சிந்து சமவெளி மக்களின் பிரதான உணவு மாட்டுக் கறியாம் || ஆய்வில் உறுதி

இச் செய்தி உண்மையாயின் அதுவும் ஒரு மரபுத் தொடர்ச்சியாகவே கருதப்படும்.
இந்தப் பொருநை நாகரிகம் வெளிக்கொண்டு வந்த கண்டுபிடிப்புகளையும், அதன் விளக்கங்களையும் விரிவாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள `பொருநை ஆற்றங்கரை நாகரிகம்` என்ற கையேட்டில் காணலாம். (இக் கட்டுரையின் இறுதிப் பகுதியில் இணைப்புள்ளது).
இப்போது வைகைக்கரை நாகரிகத்துடன் (கீழடி…) பொருநை ஆற்றங்கரை நாகரிகமும் தமிழர் கண்ட இரு பெரு நாகரிகங்களாகவுள்ளன. மீண்டும் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாரதியாரின் பாடல் வரிகளைப் பார்ப்போம். இங்கு பாரதியார் தமிழ் ஆறுகளைச் சொல்லி வருகின்றார். அப்போது காவிரி, தென்பெண்ணை, பாலாறு என வரிசையாகச் சொல்லி வந்தவர் அவ்விடத்தில் நிறுத்தி, ” தமிழ் கண்டதோர் வையை, பொருநை” என்பார். ஆம் தமிழர் கண்ட நாகரிகங்கள் அவைதான் (வைகை, பொருநை). என்ன பொருத்தமான வரிகள் !
குறிப்பு : ’பொருநை ஆற்றங்கரை நாகரிகம்’ தமிழ்நாடு அரசின் கையேட்டினைக் காணக் கீழுள்ள இணைப்பினைச் சொடுக்குக.

வி. இ. குகநாதன்

disclaimer

ஏகாதிபத்திய எதிர்ப்பு நினைவுச் சின்னங்களைக் கண்டு மோடி அரசு அஞ்சுவது ஏன் ?

பார்ப்பன பாசிச கும்பல் ஒற்றுமையின் சின்னமான
ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை அழிப்பதை அனுமதிப்பதா?

ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை போராளிகளின் தியாகத்தையும் நாட்டுப்பற்றையும் வெளிப்படுத்தும் வகையில் இல்லாமல் கேளிக்கைக்கான இடமாக மாற்றியமைத்திருக்கிறது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு. இப்படி தியாகிகளின் நினைவிடத்தை ஒழித்துக் கட்ட பாசிச அரசு துணிந்து முயற்சிப்பதற்கு என்ன காரணம் என்பதை இந்தப் பாசிசக் கும்பலின் பின்னணியை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது இந்த நடவடிக்கையில் ஓர் உள்நோக்கம் உள்ளதைக் காண முடியும்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆர்.எஸ்.எஸ்-ன் இலக்கியங்கள், இதழ்கள் எங்குமே இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் பற்றி ஒரு வரி கூடக் கிடையாது. 1700-களின் இறுதியிலும், 1800களின் துவக்கத்திலும் நடந்த தென்னக தீபகற்ப விடுதலை போராட்டத்திற்குப் பின் 1857-ல் நடந்த நாடு தழுவிய விடுதலைப் போராட்டத்தில் சாதி, மதம், இனம் கடந்து மக்கள் ஒன்றுபட்டு எழுந்து நின்று போராடினர். இந்த விடுதலைப் போருக்குப் பின் அப்படி மக்கள் சாதி, மதம், இனம் கடந்து ஒன்றுபட்டு நின்று போராடியது ஜாலியன் வாலாபாக் போராட்டத்தில்தான்!

1919, ஏப்ரல் 13-ஆம் தேதியன்று ஆள்தூக்கி கருப்புச் சட்டமான ரவுலட் சட்டத்திற்கு எதிராக போராடிய தமது தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிராக ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் மக்கள் தமது குடும்பத்துடன் கூடினார்கள்! அமைதியான வழியில் கூடிய மக்களின் மீது மிருகத்தனமான ஒரு நரவேட்டை நடத்தப்பட்டு, ரத்தச் சகதியில் மூழ்கடிக்கப்பட்டனர். ஆங்கிலேயர்களின் காட்டுமிராண்டித்தனமான இந்தப் படுகொலைகளுக்கு எதிராக, அன்றைக்கு உலகமே கடும் கண்டனம் தெரிவித்தது. வேறுவழியின்றி ஆங்கிலேய அரசு, ‘ஹண்டர்’ என்ற ஒரு நீதிபதியின் தலைமையில் ஒரு விசாரணைக் கமிசன் அமைத்தது.

படிக்க :

ஜாலியன் வாலாபாக் நினைவிடம் : கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?

ஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் !

படுகொலையான மக்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு ம்மேலே என்றாலும், அரசு இந்த எண்ணிக்கையை ஏற்க மறுத்து, விசாரணை கமிசன் மூலமாக 381 பேர்தான் இறந்தார்கள் என பொய்க்கணக்கு காட்டியது. அதேநேரம் இறந்தவர்கள் பற்றிய முழு விவரங்களையும் இந்த கமிசன் பட்டியலிட்டது. அடையாளம் காணப்பட்டவர்கள் 376 பேர்கள்தான். இந்த 376 பேரில் 220 பேர் இந்துக்கள், 90 பேர் சீக்கியர்கள், 66 பேர் இசுலாமியர்கள். இதுபோதாதா சங்கி கும்பலின் வெறுப்பிற்கு? இந்த பட்டியலில் இன்னொரு சிறப்பம்சமும் உள்ளது. இறந்தவர்களில் வணிகர், வழக்கறிஞர், பத்திரிக்கையாளர், இலக்கியவாதி, அரசு ஊழியர், அறிவுத் துறையினர் என பல்வேறு பிரிவினர் இருந்தனர்.

இரும்பு வேலை செய்பவர், துணி துவைப்பவர், நெசவாளர், முடி திருத்துபவர், தினக் கூலிகள், கம்பளம் பின்னுபவர், கொத்தனார், செருப்புத் தைப்பவர், துப்பரவுப் பணியாளர் என எல்லா வர்க்கத்தினரும் உண்டு. பெண்களும் குழந்தைகளும் கூட இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஒரு ஆறு மாத கைக்குழந்தையும் கொல்லப்பட்டவர்கள் பட்டியலில் அடக்கம்.

எல்லா சாதியைச் சேர்ந்தவர்களும் வேறுபாடு பார்க்காமல் இந்த போராட்டத்தில் பங்கேற்றதை கமிசனின் அறிக்கை உறுதிப்படுத்துகிறது. சங்கி கும்பலால் தேசத் துரோகிகள் என தூற்றப்படும் 14 காஷ்மீர் இசுலாமியர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று வீரமரணம் அடைந்துள்ளனர் என கமிசன் அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பார்ப்பன பாசித்திற்கு எதிரானதாக உள்ள சாதி – மதம் கடந்த மக்களின் இந்த ஒற்றுமையை இவர்கள் எப்படி அனுமதிப்பார்கள்? மென்மையான இந்துத்துவாவைக் கடைப்பிடிக்கும் காங்கிரசும் இவர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல என்பதை கீழ்வரும் விவரங்கள் அம்பலப்படுத்துகிறது.

இந்த படுகொலையின்போது இன்னுயிரை ஈந்த தியாகிகளின் குடும்பத்தினர் மட்டுமின்றி படுகாயமடைந்து உயிர் பிழைத்தவர்களின் குடும்பத்தினர் தங்களுக்கு தியாகிகள் பென்சனும், அரசின் சில சலுகைகளும் வேண்டும் என இன்னும் போராடிக் கொண்டுள்ளனர்.

ஆனால், இவர்களின் இந்தக் கோரிக்கையை ‘சுதந்திர’ அரசோ, இன்றைய ஆட்சியாளர்களோ இன்று வரையும் கண்டு கொள்ளவில்லை என்பதுதான் கொடுமை. நாட்டின் விடுதலைக்குப் போராடிய குடும்பத்தினரின் கோரிக்கைகளைப் புறக்கணித்துள்ளனர். ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை தியாகிகளின் குழு’ என்ற அமைப்பு பிரிட்டன் பிரதமருக்கு, ‘இங்கிலாந்து தங்களின் இழப்பிற்கு நட்டஈடு தர வேண்டும்’ என கடிதம் எழுதியது! என்னவொரு ’சுதந்திரம்’! இந்திய ஆட்சியாளர்களை விட கொலைகாரன் கருணையுள்ளவனாகத் தெரிவதனால்தான் இந்த கோரிக்கை என்றால் இதைவிட கொடூரமும் பேரவலமும் வேறு என்ன இருக்க முடியும்?

இந்தக் கொடூரப் படுகொலைக்கான சூத்திரதாரி அன்றைக்கு பஞ்சாப் லெப்டினண்ட் கவர்னராக இருந்த மைக்கேல் ஓ’ டயர் என்பவன்தான். இந்த டயரை கொல்லாமல் விடமாட்டேன் என ஒருவர் சபதமெடுத்தார். அவர் உத்தம் சிங் என்ற இளைஞர். ஏழை தலித் குடும்பத்தில் பிறந்து அனாதையான இவர் இதற்காக 21 ஆண்டுகள் காத்திருந்து பலி தீர்த்தார். ஏனெனில், இந்தக் கொடூரக் கொலைகளைக் கண்ணெதிரே கண்டு கடும் கோபம் கொண்டுதான் சபதமெடுத்தார். தனது சபதம் முடிக்க அவர் பட்ட துயரங்கள் தனிக்கதை.

பல தடைகளைக் கடந்து இங்கிலாந்து சென்று, 1940, மார்ச் 13-ம் தேதி, லண்டனில் உள்ள காக்ஸ்டன் ஹாலில் மைக்கேல் ஓ’ டயரை சுட்டுக் கொன்றார். அவரைக் கைது செய்து நீதிமன்றம் கொண்டு சென்றபோது, தனது பெயரை முகமது சிங் ஆசாத் என்று கூறினார். இந்து, இசுலாமியர், சீக்கியரின் ஒற்றுமையே பிரிட்டிஷ் அரசைத் தூக்கி எறியும் என்பது அவரது உறுதியான முடிவு.

உத்தம்சிங் என்கிற ராம் முகம்மது சிங் ஆசாத்

மரண தண்டனைக்குப் பின் நீதிமன்றத்தில் அவர் கூறியது: “மரண தண்டனை பற்றி எனக்குக் கவலையில்லை. நாட்டின் விடுதலைக்குப் போராடுகிறேன். மகிழ்ச்சியுடன் சாவை எதிர் கொள்வேன். நான் இறந்தால் ஆயிரமாயிரம் இளைஞர்கள் எனது இடத்தில் நின்று போராடுவார்கள்! ஆங்கிலேய ஏகாதிபத்தியம் அடித்து நொறுக்கப்பட்டு விரட்டியடிக்கப்படும். ஆங்கிலேய மக்கள் மீது எனக்கு எந்தப் பகையுமில்லை! இங்கிலாந்து தொழிலாளர்கள் மீது எனக்கு மிகுந்த அனுதாபம் உண்டு. நான் ஏகாதிபத்திய அரசுக்கு எதிரானவன். பிரிட்டன் ஏகாதிபத்தியம் ஒழிக!”.

உத்தம்சிங்கின் இந்தக் குரல் ஏகாதிபத்தியங்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் தாசனாக வேலைபார்க்கும் மோடி அரசுக்கு அச்சுறுத்தியதாலோ என்னவோ உத்தம் சிங்கின் சிலையையும்  மாற்றியுள்ளது மோடி கும்பல். அவரது கைகளில் துப்பாக்கி ஏந்தியிருப்பது போல இருந்த சிலையை துப்பாக்கியில்லாமல் மாற்றியமைத்திருக்கிறது பாசிச கும்பல்.

குறிப்பாக உத்தம் சிங் வர்க்க அரசியல் பேசும் கெதார் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் மோடி அரசு அவரைக் கண்டு அஞ்சுவதற்கு முக்கியக் காரணம்.

படிக்க :

மாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்

பகத்சிங் – சோசலிசப் புரட்சியாளனா தீவிர தேசியவாதியா ?

ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கொடூர சட்டங்களை விட ஆக மிகக் கொடிய சட்டங்களை பார்ப்பன பாசிச இந்துத்துவா ஆட்சியாளர்கள் இயற்றுகின்றனர். கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விடாப்பிடியாகப் போராடி வரும் பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் இந்த பார்ப்பன பாசிச கும்பலுக்கு ஆத்திரமூட்டுகிறது. அதனால்தான் போலீசை ஏவி விவசாயிகளின் மண்டையைப் பிளக்கிறது. பேச்சு வார்த்தைகளுக்கு வர மறுக்கிறது!

இத்தகைய வரலாற்று நினைவிடங்கள் மற்றும் தியாகிகளை வரலாற்றில் இருந்து ஒழித்துக் கட்டுவதற்காகவே இத்தகைய மாற்றங்களைச் செய்து வருகிறது மோடி அரசு. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் வரலாற்றைத் திரிப்பதற்கான முயற்சிகளில் இதுவும் ஒன்று. இதனை நாம் உடனடியாக முறியடித்தாக வேண்டும் !


நாகராசு

காலனியாதிக்க எதிர்ப்புப் போராளி வ.உ.சி 150-வது பிறந்தநாள் || ம.க.இ.க பிரச்சாரம்

♦ “காலனியாதிக்க எதிர்ப்பு போராளி, மக்கள் தலைவர், தொழிலாளர்களின் தோழர், சுதேசி முன்னோடி, செக்கிழுத்த செம்மல் வ.உ.சி யின் 150-வது பிறந்த நாளை உயர்த்தி பிடிப்போம்” ♦ “கார்ப்பரேட்- காவி பாசிசத்தை முறியடிப்போம்” ♦ என்கிற முழக்கத்தின்கீழ் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி மதுரை மாநகரத்தில் தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

மதுரை, அனுப்பானடி பஸ் நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் 5 இடங்களில் காலை முதல் துண்டு பிரசுரம் விநியோகித்து தெருப்பிரச்சாரம் செய்யப்பட்டது.
அப்பகுதி மக்களிடம் துண்டுபிரசுரம் விநியோகம் செய்யும் போது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

படிக்க :

வ.உ.சி : ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியின் 150-வது பிறந்தநாள் || விலையில்லா மின்னிதழ்

ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு : தொடருகிறது விடுதலைப் போராட்டம் !

குறிப்பாக, வ.உ.சி, மருது சகோதரர்கள் போன்றவர்களை சாதிய தலைவர்களாக சம்பந்தப்பட்ட சமூகத்தினர் ஒருசிலர் பார்ப்பதும் இக்கலாச்சாரத்தை அரசே திட்டமிட்டு உட்புகுத்துவதையும் விமர்சித்தனர். மேலும் உங்களைப் போன்ற அமைப்பினர்தான் அத்தலைவர்களின் வரலாற்றை சரியாக பிரச்சாரம் செய்கிறீர்கள் என்றனர்.

நமது தோழர்கள் தெருப்பிரச்சாரத்தில் உரையாற்றும் போது, வ.உ.சி.யை மக்களின் தலைவராகவும், ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பு போராளியாகவும் அவர் வாழ்ந்ததை விளக்கியும் பிரச்சாரம் செய்தனர். அதே நேரத்தில் அப்பகுதியில் சாதியின் அடிப்படையில் ஒரு குழுவினர் வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர். இந்த இரண்டு நிகழ்வையும் மக்கள் ஒப்பிட்டு பார்க்கும் விதமாக பிரச்சாரம் அமைந்தது. மேலும் பெரியாரிய சிந்தனையாளர் ஒருவர் இப்பிரச்சாரத்தை சரியான காலகட்டத்தில் நடத்துகிறீர்கள் என வரவேற்று நமது தோழர்களை உற்சாகப்படுத்தினார்.

மதுரை அவனியாபுரம் மந்தை பகுதியிலும் மூன்று இடங்களில் செப்டம்பர் 5 அன்று மாலை 5மணி முதல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த ஓட்டுனர்கள், தொழிலாளர்கள், பிற உழைக்கும் மக்கள், மாற்றுக் கட்சியினர் ஆர்வமுடன் வாங்கி கவனமாகப் பார்த்தார்கள்.

அதில் நாம் மக்களுக்காகப் போராடிய தலைவர்கள் மக்கள் தலைவராக பார்க்கவேண்டும், சாதித் தலைவராக பார்க்க கூடாது என்பதை வலியுறுத்தி பிரச்சாரம் செய்ததை மக்களும் ஆமோதித்தனர். அதில் ஒரு ஆட்டோ தொழிலாளி நீங்கள் சொல்லும் அத்தனை பிரச்சனையும் உள்ளது அதை தீர்ப்பதற்கு தீர்வு என்ன என்று வினவினார்.

வ.உ.சி வழியில் நின்று அன்னிய மறுகாலனியாக்க கொள்கையை முறியடிக்கப் போராடுவதோடு, அதனை தீவிரமாக அமல்படுத்தும் கார்ப்பரேட் காவி பாசிசக் கும்பலை விரட்டியடிப்பதும் தான் தீர்வு என்றும் தொடர்ந்து விவாதிப்போம் என்றும் கூறி தோழர்கள் விடைபெற்றனர்.

தகவல்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மாநில ஒருங்கிணைப்பு குழு,
தமிழ்நாடு,
+91 97916 53200.

புத்தக வழிபாட்டை எதிர்ப்போம் || தோழர் மாவோ

0

தோழர் மாவோ உலக பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக சிந்திப்பதை நிறுத்தி இன்றுடன் 45-ம் ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. முதலாளித்துவ சுரண்டல் உலகின் அனைத்து மூலைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. உலகம் முழுவதும் பொதுவுடைமை இயக்கங்கள் சிதறுண்டு கிடக்கின்றன.

புரட்சியை முன்னெடுத்துச் சென்று முதலாளித்துவ சுரண்டலை ஒழித்துக் கட்டி கம்யூனிசத்தை நோக்கி சமூகத்தைக் கொண்டு செல்ல, ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களைத் தாங்களே பரிசீலித்து, தவறுகளை சீர்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் என்பது பொதுவாக சொல்லப்படும் வாசகமாகிவிட்ட நிலையில், பரிசீலனையை எப்படிச் செய்ய வேண்டும், எப்படி செய்யக் கூடாது என்பதை மிகவும் எளிமையாக விளக்கியிருக்கிறார் தோழர் மாவோ.

1930-ம் ஆண்டு எழுதப்பட்ட “புத்தக வழிபாட்டை எதிர்ப்போம்” எனும் அவரது படைப்பு ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் படித்து கிரகித்து தனது வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டிய விஞ்ஞான வழிமுறையாகும். அந்தக் கட்டுரையை இரண்டு பகுதிகளாக இங்கே தருகிறோம்

– வினவு

0O0

புத்தக வழிபாட்டை எதிர்ப்போம்

1. பரிசீலனை இல்லையெனில், பேசுவதற்கான உரிமை இல்லை

ஒரு பிரச்சனையை நீங்கள் பரிசீலனை செய்யாவிடில், அதன் மீது பேசுவதற்கான உரிமையை இழக்கிறீர்கள். இது மிகவும் கடுமையானதாக இல்லையா? சிறிதும் கிடையாது. ஒரு பிரச்சனையையும், அதன் இன்றைய அனுபவங்களையும், அதன் கடந்த கால வரலாற்றையும் நீங்கள் ஆராய்ந்து பார்க்காவிட்டால், அதன் அத்தியாவசிய அம்சங்களைப் பற்றி நீங்கள் அறியாவிட்டால் அது சந்தேகக்திற்கு இடமின்றி அபத்தமானது.

அபத்தமாகப் பேசுவது எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது என்பது அனைவரும் அறிந்ததே. அதைப் பற்றி பேசுவதற்கான உரிமையை உங்களுக்கு மறுப்பது எப்படி அநியாயமானதாகும்? சில தோழர்கள் தங்களது கண்களை மூடிக் கொண்டு, அபத்தமாகப் பேசுகிறார்கள். ஒரு பொதுவுடைமைவாதிக்கு அது அவமானம். ஒரு பொதுவுடைமைவாதி எவ்வாறு தன் கண்களை மூடிக்கொண்டு, அபத்தமாய் பேசமுடியும்?

அது சரிப்படாது! அது சரிப்படாது! நீங்கள் பரிசீலனை செய்ய வேண்டும்! நீங்கள் அபத்தமாய் பேசக்கூடாது!

படிக்க :

கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ

கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ !

2. ஒரு பிரச்சனையை பரிசீலனை செய்வது அதனைத் தீர்த்து வைப்பதற்கே !

உங்களால் ஒரு பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லையா? நல்லது, உடனடியாக அதன் இன்றைய அனுபவங்களையும் அதன் கடந்த கால வரலாற்றையும் பரிசீலனை செய்யுங்கள்! பிரச்சனையை முழுமையாக பரிசீலனை செய்து விட்டால், அதனை எவ்வாறு தீர்ப்பது என்று அறிவீர்கள். முடிவுகள் எப்போதும் பரிசீலனைக்கு பின்பே வரும் – பரிசீலனைக்கு முன்பு வராது.

ஒரு முட்டாள்தான் தனியாகவோ மற்றவர்களுடன் இணைந்தோ பரிசீலனை செய்யாமல், தீர்வு காணவும்” ”ஒரு கருத்தை உருவாக்கவும்’ மூளையைக் கசக்கிக் கொள்வான். பயனுள்ள தீர்வுக்கோ, ஒரு நல்ல கருத்துக்கோ இது இட்டுச் செல்லாது என்று வலியுறுத்திக் கூற வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அவன் தவறான முடிவிற்கும், தவறான கருத்திற்கும் வருவான் என்பது நிச்சயம்.

ஆய்வுப் பணிகளைச் செய்யும் தோழர்கள் கொஞ்சம் இல்லை, கொரில்லா தலைவர்களும், புதிதாக வந்திருக்கும் ஊழியர்களும் கூட ஒன்றை மேலோட்டமாகப் பார்த்து விட்டு, அதனைப் பற்றி குறைந்த விவரங்களையே தெரிந்து கொண்டு, ஒரு இடத்திற்கு வந்த உடனேயே அதனைக் கண்டித்து, அதனைக் குறைகூறி அரசியல் பிரகடனங்களை வெளியிடுகின்றனர்.

அத்தகைய அபத்தமான உணர்ச்சிகரமான பேச்சுகள் உண்மையில் வெறுக்கத்தக்கன. இவர்கள் விசயங்களை குழப்புவது நிச்சயம். அவர்கள் மக்களின் நம்பிக்கையை இழந்து, எந்தப் பிரச்சனையையும் தீர்ப்பதற்கான திறனற்றவர்கள் என்று நிரூபித்து விடுவார்கள்.

கடினமான பிரச்சனைகளை சந்திக்கும்போது, தலைமைப் பொறுப்பில் இருக்கும் பலர் பிரச்சனைகளைத் தீர்க்க இயலாது பெருமூச்சுவிடுகின்றனர். அவர்கள் பொறுமை இழக்கின்றனர். ”தங்களுக்குத் திறமை இல்லை; இந்த வேலையை செய்ய முடியாது” என்று காரணம் காட்டி, இடமாற்றம் கோருவார்கள். இது கோழைகளின் வார்த்தைகள்.

உங்களது இரு கால்களாலும் இயங்கிக் கொண்டே இருங்கள். தங்கள் பொறுப்பில் இருக்கும் பிரிவினை சுற்றி வாருங்கள். மேலும், கன்ஃபூசியஸ் செய்தது போல ”எல்லாவற்றை பற்றியும் தீர விசாரியுங்கள்”1 அப்போது உங்களது திறமைகள் எவ்வளவுதான் குறைவாக இருந்தாலும், உங்களால் பிரச்சனைகளை தீர்க்க முடியும். ஆய்வுக்காக நீங்கள் வாயிலைக் கடந்து வெளியேறும்போது உங்கள் தலை காலியாக இருக்கலாம். நீங்கள் திரும்பும்போது ஒருபோதும் தலை காலியாக இல்லாமல், பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான அனைத்து விவரங்களும் அதில் இருக்கும். இவ்வாறுதான் பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன.

நீங்கள் வெளியில் சென்றுதான் ஆக வேண்டுமா? அவசியமில்லை. கடினமான பிரச்சனை என்று தாங்கள் கருதுவது பற்றி தல நிலைமைகளை அறியும் பொருட்டும், தற்போது அது என்ன நிலையில் இருக்கிறது என்று அறியும் பொருட்டும், நிலைமைகளை நன்கறிந்த மனிதர்களோடு உண்மையறியும் கூட்டம் கூட்டலாம். பிறகு, உங்களது கடினமான பிரச்சனையை எளிதாகத் தீர்க்கலாம்.

நீண்ட பேறு காலத்தை பரிசீலனையோடும், பிறப்பு நாளை பிரச்சனையைத் தீர்க்கும் நாளோடும் ஒப்பிடலாம். ஒரு பிரச்சனையை பரிசீலனை செய்வது என்பது உண்மையில் அதனைத் தீர்ப்பதற்குத் தான்.

படிக்க :

லெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் !

லெனின் முன் வைத்த புதுப்பாணியிலான கட்சி !

3. புத்தக வழிபாட்டை எதிர்ப்போம்

கலாச்சார ரீதியாகப் பின்தங்கியுள்ள சீன உழவர்களின் மனப்போக்கின்படி, ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள அனைத்துமே சரியானவை. விநோதமாக, விவாதங்களின்போது அது புத்தகத்தில் எங்கு எழுதப்பட்டுள்ளது என்று காட்டுங்கள்” என்று எப்போதும் கேட்பவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் கூட பலர் இருக்கின்றனர்.

உயர்மட்ட தலைமையின் கட்டளை சரியாக இருப்பதாகக் கூறுவது, ‘அது உயர்மட்ட தலைமையிடமிருந்து வருகிறது’ என்பதற்காக, அல்ல; ஆனால், போராட்டத்தின் அக மற்றும் புறச் சூழலுக்கு அதன் உள்ளடக்கம் ஒத்துப் போவதாக இருப்பதாலேயே அவற்றை ஏற்கிறோம்.

கட்டளைகள் மேலிடத்திலிருந்து வருகின்றன என்பதற்காக அவற்றைப் பற்றி விவாதிக்காமலும், உண்மை நிலையின் பின்னணியில் அவற்றை ஆராயாமலும் சடங்குப்பூர்வமான போக்கில் அவற்றை ஏற்பது மிகவும் தவறு. கட்சியின் நிலைபாடுகளும், உத்திகளும் மக்களிடம் ஆழமாய் ஏன் வேர்விடவில்லை என்பதற்கு, இந்த சடங்குத்தனம் செய்யும் கெடுதலே காரணம்.

மேலிடத்தின் கட்டளையை கண்களை மூடிக் கொண்டு, எந்தக் கருத்து மாறுபாடுமின்றி செயல்படுத்துவது, உண்மையில் அதனை நிறைவேற்றுவதாய் இருக்காது. அது அந்தக் கட்டளையை சாதுர்யமாக எதிர்ப்பதும், கவிழ்ப்பதுமாகும்.

புத்தகத்திலிருந்து மட்டும் சமூக விஞ்ஞானத்தை கற்கும் வழிமுறை அவ்வாறே மிகவும் அபாயகரமானது; அது எதிர்ப்புரட்சியின் பாதைக்கு இட்டுச் செல்லும். சமூக விஞ்ஞானத்தை கற்பதில் புத்தகங்களோடு தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்ட சீன பொதுவுடைமைவாதிகளின் முழுக் குழுவும் எதிர்ப் புரட்சியாளர்களாக மாறிய உண்மையே இதற்குத் தெளிவான நிரூபணமாக இருக்கிறது.

மார்க்சியம் சரியானது என்று நாம் கூறுவது, மார்க்ஸ் ஒரு “தீர்க்கதரிசி” என்பதனால் அல்ல; நமது போராட்டத்திலும், நடைமுறையிலும் அவரது கோட்பாடுகள் உண்மையென நிரூபிக்கப்பட்டதால் மட்டுமே அவ்வாறு கூறுகிறோம். நமது போராட்டங்களில் நமக்கு மார்க்சியம் தேவைப்படுகிறது. நாம் அவரது கோட்பாடுகளை ஏற்கும்போது, “”தீர்க்க தரிசனம்” என்ற புதிரான கருத்தோட்டமான சடங்குத்தனம் நமது மனத்தில் ஒருபோதும் நுழைவதில்லை.

மார்க்சிய நூல்களைப் படித்த பலர் ஓடுகாலிகளாக மாறிவிட்ட நிலையில், படிப்பறிவற்ற தொழிலாளிகள் மார்க்சியத்தை நன்கு கிரகித்துக் கொள்வதை நாம் அடிக்கடி காண்கிறோம். நாம் மார்க்சிய நூல்களை நிச்சயம் படிக்க வேண்டும்; ஆனால் இந்தப் படிப்பு நமது தேசத்தின் உண்மையான எதார்த்த நிலைமையோடு ஒருங்கிணைக்கப்பட வேண்டும். நமக்கு புத்தகங்கள் தேவை. ஆனால் உண்மை சூழ்நிலையிலிருந்து விலகி நிற்கும் புத்தக வழிபாட்டை நாம் வெற்றிகொள்ள வேண்டும்.

புத்தக வழிபாட்டை நாம் எப்படி வெற்றி கொள்ள முடியும்? – எதார்த்த நிலையை பரிசீலனை செய்வதுதான் ஒரே வழி.

படிக்க :

கட்சித் தலைமை பற்றிய பிரச்சினைகள் || தோழர் ஸ்டாலின்

நமது பலம், மக்களோடு கலந்திருப்பதே! | தோழர் ஸ்டாலின்

4. எதார்த்த நிலைமையை சரியாக ஆய்வு செய்யாவிடில், வர்க்க சக்திகளை அகநிலையாக மதிப்பீடு செய்வதும் வேலைக்கான அகநிலைவாத வழிகாட்டலும் தோன்றி வலது சந்தர்ப்பவாதமாகவோ இடது சாகசவாதமாகவோ சீரழியும்

இந்த முடிவை நீங்கள் சந்தேகிக்கிறீர்களா? இதனை ஏற்றுக் கொள்ள உண்மைகள் உங்களை நிர்ப்பந்திக்கும். எந்த பரிசீலனையும் செய்யாமல், அரசியல் சூழ்நிலையை மதிப்பீடு செய்யவோ, ஒரு போராட்டத்தை வழிநடத்தவோ முயன்று பாருங்கள், அத்தகைய மதிப்பீடும் வழிகாட்டுதலும் அடிப்படையற்றதாகவும், அகநிலை வாதமாகவும் இருக்கிறதா? இல்லையா? என்பதை காண்பீர்கள். அது சந்தர்ப்பவாதத்திற்கோ, சாகசவாதத்திற்கோ இட்டுச் செல்கிறதா, இல்லையா என்று அறிவீர்கள். நிச்சயமாய் அது அப்படித்தான் இருக்கும். நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு கவனமாக திட்டமிடத் தவறியது இதற்குக் காரணம் அல்ல; செம்படை கொரில்லாக் குழுவில் அடிக்கடி நிகழ்வது போல, குறிப்பான சமூகச் சூழ்நிலைகளை கவனமாக ஆய்வு செய்யாமல், திட்டங்களை தீட்டுவதே காரணம்.

லி கியுயி2 வகையான அலுவலர்கள் மனிதர்களை அவர்களது தவறுகளுக்காக தண்டிக்கும்போது பாரபட்சம் காட்டுவதில்லை. விளைவாக, அவர்கள் அநியாயமாக நடத்தப்பட்டு விட்டதாக தவறிழைத்தவர்கள் கருதுகின்றனர்; பல சச்சரவுகள் ஏற்படுகின்றன; தலைவர்கள் அனைத்து கவுரவங்களையும் இழக்கின்றனர். செம்படையில் இது அடிக்கடி நிகழ்வதில்லையா?

நாம் அகநிலைவாதத்தை துடைத்தெறிய வேண்டும். நாம் மக்களை வென்றெடுப்பதிலும், எதிரிகளை வீழ்த்துவதிலும் வெற்றி அடைவதற்கு முன்பாக அனைத்து சந்தர்ப்பவாத, சாகசவாத தவறுகளுக்கு எதிராக கவனமாக இருக்க வேண்டும். இலட்சியமயத்தை துடைத்தெறிய உள்ள ஒரே வழி, முயற்சிகளை மேற்கொண்டு, உண்மைச் சூழ்நிலையை பரிசீலனை செய்வதே ஆகும்.

(தொடரும்)

பாகம் 2 : பழமைவாத எண்ணங்களை மாற்றிக் கொள்வீர் || தோழர் மாவோ

குறிப்புகள் :

1. கன்ஃபூசியஸ்ஸின் இலக்கியத் துணுக்குகள் நூல் III ஐ காண்க. “பாயி : “மூதாதையர்களின் ஆலயத்தில், கன்ஃபூஷியஸ் நுழைந்தபோது, அவர் எல்லாவற்றையும் விசாரித்தார்.

2. வடக்கு ஷங் வம்சத்தின் இறுதி ஆண்டுகளில் (960-1127) நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம் பற்றி விவரித்த “சுயி ஹூ சுவான்” (மார்ஸ் பெஸ்ளின் கதாநாயகர்கள்) என்ற பிரபல சீன நாவலின் நாயகன் லி-கியூ ஆவார். அவர் எளிமையானவர்ர்; வெளிப்படையானவர்; விவசாயிகளின் புரட்சி நோக்கத்திற்கு முகவும் விசுவாசமானவர். ஆனால் முரட்டுத்தனமானவர்; சாதுர்யமானவர் அல்ல.

நூல் : மாவோ – தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் – தொகுதி 6
கிடைக்குமிடம் : அலைகள் வெளியீட்டகம்
தொடர்புக்கு : 98417 75112

பெரு : ‘சோஷலிஸ்டு’ கட்சியின் வெற்றி ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது அல்ல !

பெரு நாட்டில் ‘சோஷலிஸ்டு’க் கட்சியின் வெற்றி : இது, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வெற்றியா?
லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு−வில் ஒரு நீண்ட இழுபறிக்கு பிறகு ‘‘சுதந்திர பெரு’’ என்ற இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த பெட்ரோ காஸ்டிலோ, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அந்நாட்டின் அதிபராகியுள்ளார்.
இது, ‘‘தேர்தல் மோசடி’’ மூலம் அடைந்த வெற்றி என்றும், ‘‘சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து ஜனநாயகத்தை நிலைநாட்டப்போவதாக’’வும் அமெரிக்க வல்லரசு கூப்பாடு போடுகிறது. இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள், படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தங்களது பொம்மை அரசை நிறுவிக் கொள்வதன் மூலம், கனிம வளங்கள் நிறைந்த லத்தீன் அமெரிக்க கண்டத்து நாடுகளைத் தனது ஆதிக்கத்தின்கீழ் வைத்துக் கொண்டிருந்த அமெரிக்காவுக்கு, இந்த தேர்தல் வெற்றி ஒரு சரிவாகவே அமைந்துள்ளது.
படிக்க :
தென் அமெரிக்காவில் தோன்றிய அடிமைகளின் சுதந்திர தேசம் !!
நூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட் ஜின்
அதேசமயம், கடந்த 30 ஆண்டுகளாக புதிய தாராளவாதக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்திய வலதுசாரிக் கட்சிகளின் ஆட்சிக்கு பிறகு, தற்போது முதன்முறையாக புதிய தாராளவாதக் கொள்கைகளைக் கடுமையாக எதிர்த்துப் பேசுகின்ற சுதந்திர பெரு கட்சி வெற்றி பெற்றிருப்பது, அனைவராலும் முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
கனிம வளங்கள் நிறைந்த நாடாக பெரு இருந்தபோதிலும், அந்நாட்டின் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட இல்லாமல் உழைக்கும் மக்கள் அவலத்தில் உழல்கின்றனர். மேலும், கொரோனா பெருந்தொற்றால் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்த நாடுகளில் ஒன்றுதான் பெரு. ஏறத்தாழ 3.5 கோடி மக்கள் தொகையைக் கொண்ட அந்நாட்டில், இரண்டு லட்சம் பேர் மாண்டு போயுள்ளனர்.
சுரங்கங்கள் உள்ளிட்ட நாட்டின் வளங்கள் அனைத்தும் உள்நாட்டு − பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள காரணத்தால், அந்நாட்டில் ஒரு சதவிகிதம் பேர் குபேரர்களாகவும், நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்கள் வறுமையிலும் உள்ளனர். ஊழல் மலிந்த அரசியல்வாதிகளைக் கொண்டுள்ள பெரு−வில், கடந்த ஐந்தாண்டுகளில் நான்கு அதிபர்கள் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு தங்களது பதவிகளை இழந்துள்ளனர். கடைசி ஏழு அதிபர்களில், ஐந்து பேர் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆலன் கார்சியா என்ற முன்னாள் அதிபர் சிறையிடப்படுவதற்கு முன்னர் பயந்துபோய் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், அதிபர் பிரான்சிஸ்கோ சகஸ்தியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், எட்டு வேட்பாளர்கள் அதிபர் பதவிக்காகப் போட்டியிட்டனர். இருந்தபோதிலும், பாப்புலர் ஃபோர்ஸ் கட்சியின் இளம் பெண் வேட்பாளர் கெய்கோ புஜிமோரி என்பவருக்கும், சுதந்திர பெரு கட்சியின் பெட்ரோ காஸ்டிலோ என்பவருக்கும் இடையில்தான் தீவிரமான போட்டி நிலவியது.
பாப்புலர் ஃபோர்ஸ் என்பது, அமெரிக்க விசுவாச வலதுசாரிக் கட்சியாகும். இதன் தலைவரும் முன்னாள் அதிபருமான ஆல்பெர்டோ புஜிமோரி, அமெரிக்காவின் கைப்பாவையாகச் செயல்பட்டு புதிய தாராளவாதக் கொள்கைகளைத் தீவிரமாக அமலாக்கியவர். இவர் காலத்தில்தான் பெரு−வின் அரசியல் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. தற்போது, இவர் ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் உள்ளார். இவரது மகள்தான் கெய்கோ புஜிமோரி.
2008−ஆம் ஆண்டில் மார்க்சியவாதி என்று அறியப்படும் விளாதிமிர் செரோன் ரொஜாஸ் என்பவரால் சுதந்திர பெரு கட்சி தொடங்கப்பட்டது. தற்போது இவர், இக்கட்சியின் செயலாளராக உள்ளார். இக்கட்சியானது, பெரு−வின் மீது ஏகாதிபத்தியங்களால் திணிக்கப்பட்ட புதிய தாராளவாதக் கொள்கைகளைக் கடுமையாக எதிர்கின்ற கட்சியாகவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு − சோசலிசக் கொள்கைகளை முன்வைக்கின்ற கட்சியாகவும் பொதுவில் அறியப்படுகிறது. உண்மையில், ஏகாதிபத்திய ஆதிக்கத்துக்கும் கார்ப்பரேட் கொள்ளைக்கும் சேவை செய்கின்ற பெரு−வின் அரசுக் கட்டமைப்பைத் தூக்கி எறிவதை தனது இலட்சியமாகக் கொள்ளாமல், அக்கட்டமைப்புக்குள்ளேயே தீர்வைத்தேடும் போலி சோசலிசக் கட்சியாகவே சுதந்திர பெரு கட்சி உள்ளது.
இக்கட்சியால் முன்னிறுத்தப்பட்ட வேட்பாளரான கேஸ்டிலோ, ஒரு சோசலிஸ்ட் அல்ல. ஆசிரியர் சங்கத் தலைவரான இவர், நீண்டகாலம் ‘‘சாத்திய பெரு’’ என்ற தாராளவாதக் கட்சியில் இருந்தவர். இத்தேர்தலில் சுதந்திர பெரு கட்சியின் வேட்பாளராக நிற்கும் வரை, இவர் பெரு அரசியல் களத்தில் அதிகம் அறியப்படாத நபராகவே இருந்தார்.
கல்வியறிவின்மையை ஒழிப்பதாகக் கூறி கேஸ்டிலோவின் தேர்தல் பிரச்சாரம்
இத்தேர்தலில் தன்னை ஒரு விவசாயியாகவும் கிராமப்புற ஆசிரியராகவுமே முன்னிறுத்திக் கொண்டு இவர் பிரச்சாரம் செய்தார். பெரு விவசாயிகளின் பாரம்பரிய நீளமான தொப்பியையும் செருப்பையும் அணிந்துகொண்டு தன்னை தனித்துவமாக அடையாளப்படுத்திக் கொண்டார். இதன் காரணமாகவே, கிராமப்புற விவசாயிகளின் ஓட்டுக்களைப் பெருமளவில் இவரால் கவர முடிந்தது.
‘‘கடந்த கால் நூற்றாண்டுகால ஆட்சிகளின் ஊழல் பாரம்பரியத்திற்கு முடிவு கட்டுவேன்’’, ‘‘வறுமைமையையும் கல்வியறிவின்மையையும் ஒழிப்பேன்’’, ‘‘பெருவின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிற சுரங்களைத் தேசிய உடைமையாக்குவேன்’’ − என்றெல்லாம் அவர் தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார்.
இவரது தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமானதாக கருதப்படுவது, புதிய அரசியல் சாசனம் பற்றியதாகும். 1993−ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் சட்டமானது புதிய தாரளவாதக் கொள்கைகளுக்கு இசைவானதாக இருப்பதாகவும், தான் ஆட்சிக்கு வந்தால் புதிய அரசியல் நிர்ணயசபைக்கான தேர்தல் நடத்தி, அதன்மூலம் புதிய அரசியல் சட்டத்தை வகுக்கப்போவதாகவும் கூறிய காஸ்டிலோவின் பிரச்சாரம் பெரு நாட்டின் உழைக்கும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ‘‘புதிய அரசியல் சாசனம் அல்லது மரணம்’’ என முழங்கினார்கள், ‘‘சுதந்திர பெரு’’ கட்சியினர்.
எதிர்த்தரப்பு பாப்புலர் ஃபோர்ஸ் கட்சியின் வேட்பாளர் கெய்கோ புஜிமோரி, ‘‘கம்யூனிஸ்டு அபாயத்திலிருந்து அரசியல் சட்டத்தைப் பாதுகாப்போம்’’, ‘‘பெரு−வை வெனிசுலாவாக மாற்ற அனுமதிக்க மாட்டோம்’’ முதலான முழங்கங்களை பெட்ரோ காஸ்டிலோவுக்கு எதிராக முன்வைத்தார். மேலும், 1980−களில் பெரு−வில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆயுதக் கிளர்ச்சியை நடத்திய ‘‘ஒளிரும் பாதை’’ என்ற சாகசவாத மார்க்சிய − லெனினியக் குழுவினரோடு தொடர்புடையவர்தான் காஸ்டிலோ என்று பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டார்.
‘சோசலிஸ்டுக்’ கட்சியின் கேஸ்டிலோ (இடது) எதிர்க் கட்சியின் அதிபர் வேட்பாளர் கெய்கோ புஜிமோரி
இவற்றைத் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது சாடிய கேஸ்டிலோ, தான் ஒரு கம்யூனிஸ்டு அல்ல என்று வெளிப்படையாகவே சொல்லிக் கொண்டார். தன்னைத் தூய கத்தோலிக்க கிறித்தவராகக் காட்டிக் கொண்டார்.
காஸ்டிலோ ஆட்சிக்கு வந்தால் பணக்காரர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்துவிடுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் பிரச்சாரங்களை மேற்கொண்டபோது, ‘‘அது சுத்தப்பொய், நான் சொல்வதெல்லாம் பொருளாதாரத்தை ஒழுங்கமைப்பதைப் பற்றித்தான்; அந்நிய தொழில் நிறுவனங்களின் இலாபத்தில் 70 சதவிகிதத்தை உள்நாட்டிலேயே முதலீடு செய்ய வைப்பேன்; ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 20 சதவிகிதத்தைக் கல்வியையும் மருத்துவத்தையும் மேம்படுத்துவதற்குப் பயன்படுத்துவேன்’’ என்று தெளிவாகவே கூறினார், காஸ்டிலோ. ‘‘பணக்கார நாட்டில் ஏழை இருக்கக் கூடாது’’ என்பதே அவரது பிரபலமான முழக்கமான இருந்தது.
கிராமப்புறப் பகுதியான அண்டேயனில் அதிகபட்சமாக 2 இலட்சம் வாக்குகளைப் பெற்ற காஸ்டிலோ, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கெய்கோ புஜிமோரியை 44,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து தேர்தலில் வென்றார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்க பாசிஸ்டு டிரம்ப்பைப் போலவே, காஸ்டிலோவின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி தேர்தல் குழுவினரிடம் முறையிட்டார் புஜிமோரி. வாக்குகளைத் திருடி வெற்றி பெற்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டினார்.
தோல்வியை ஒப்புக்கொள்ளாத புஜிமோரி, தேர்தல் முடிவுகள் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்றார். லத்தீன் அமெரிக்கக் கண்டத்து தேர்தல் குழுவினரும் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்திய நிலையில், ‘‘சர்வதேச விசாரணை’’ என்ற பெயரில் புஜிமோரி கோரியது தனது எஜமானான அமெரிக்காவைக் கட்டப் பஞ்சாயத்திற்கு அழைக்கத்தான் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. அமெரிக்க நாடுகளின் அமைப்பு (ஓ.ஏ.எஸ். − Organisation of American States) – என்ற கட்டப் பஞ்சாயத்து அமைப்பிற்கு அவர் வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். அமெரிக்கா என்ன விரும்புகிறதோ, அதை குறிப்பறிந்து செய்வதுதான் இவ்வமைப்பின் வேலை.
கடந்த 2019 பொலிவிய தேர்தலில் இவா மொரேலஸ் என்ற சோசலிஸ்டுக் கட்சி வேட்பாளர் அதிபராக வெற்றிபெற்றபோது, அங்கு தலையிட்ட ஒ.ஏ.எஸ், அவ்வெற்றி செல்லாது என எவ்வித ஆதாரமும் இன்றித் தீர்ப்பளித்து. இதன்மூலம் அந்நாட்டில் ஒரு இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
தன் கட்சியினரை வைத்து பெரு நாடு முழுக்க காஸ்டிலோவுக்கு எதிரான போராட்டங்களை நடத்தினார் புஜிமோரி. இதனால் ஒரு மாதத்திற்கும் மேலாக தேர்தல் முடிவுகள் இழுத்தடிக்கப்பட்டன. புஜிமோரியின் குற்றச்சாட்டில் எவ்வித முகாந்திரமும் இல்லாத காரணத்தால், இவற்றை பெரு தேர்தல் குழு ஏற்றுக்கொள்ளவில்லை. ஜூலை 19−ஆம் தேதி தேர்தல் முடிவுகளை உறுதிப்படுத்தியது, தேர்தல் குழு. கடைசியாக, ஜூலை 28−ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார், பெட்ரோ காஸ்டிலோ.
மொத்தம் 130 இருக்கைகள் உள்ள பெரு காங்கிரசில், எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. 37 இருக்கைகளை மட்டுமே கேஸ்டிலோவின் சுந்திர பெரு கட்சி வென்றுள்ள நிலையில், 5 இருக்கைகளில் வென்ற பெரு ஒற்றுமைக்கான கட்சியின் (together for peru) கூட்டணியுடன் 42 இடங்களை தக்கவைத்து சிறுபான்மை அரசாங்கமாக பொறுப்பேற்றுள்ளது. எதிர்கட்சியான பாப்புலர் ஃபோர்ஸ் கட்சி 24 இடங்களைப் பெற்று வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. இதர இடங்களைப் பெற்ற கட்சிகளும் வலதுசாரிக் கட்சிகளாகவே உள்ளன.
பெரு−வைப் பொறுத்தவரை முன்னர் வெற்றிபெற்ற வலதுசாரிக் கட்சி வேட்பாளர்கள் அனைவருமே அங்கிருக்கும் முன்னாள் இராணுவத் தலைவர்கள் மற்றும் கார்ப்பரேட் மேட்டுக்குடியினரின் ஆதரவோடுதான் பெரு காங்கிரசை அலங்கரித்துள்ளனர். அதாவது, ஆளும் வர்க்கங்கள், அதிகார வர்க்கங்களின் ஆதரவில்லாமல் அவர்களால் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்ததில்லை. தற்போது பொறுப்பேற்றுள்ள காஸ்டிலோ மட்டும்தான் இதற்கு விதிவிலக்கானவராக இருக்கிறார்.
இடதுசாரிகளின் வெற்றியை எதிர்த்து வலதுசாரிகளின் ஆர்ப்பாட்டம்
எதிர்கட்சியிலிருக்கும் பிரதிநிதிகளில் முன்னாள் இராணுவத் தலைவர்களும் இருக்கின்றனர். அவர்கள் எவரும் காஸ்டிலோவின் தேர்தல் வெற்றியை ஏற்க மறுக்கின்றனர். காங்கிரசில் 79 இருக்கைகளைக் கொண்டு பலம் வாய்ந்த எதிர்க் கட்சிகளாக வலதுசாரிகள் இருப்பதால், காஸ்டிலோவின் அரசாங்கம் எந்தச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவந்தாலும், அவற்றை நிறைவேற்றுவது கடினமாகவே இருக்கும்.
மேலும், பெருவின் அரசியலமைப்பிலேயே ‘‘தார்மீக ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ திறனற்ற ஒரு அதிபரை காங்கிரஸ் பதவி நீக்கலாம்’’ என்ற 19−ஆம் நூற்றாண்டின் பழைய விதியொன்று உள்ளது. இதை காஸ்டிலோவிற்கு எதிராக வலதுசாரிகள் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்பும் உள்ளது.
இது ஒருபுறமிருக்க, பதவியேற்ற பின்னர் சுரங்கங்களைத் தேசியமயமாக்குவது உள்ளிட்டு, தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி காஸ்டிலோ இப்போது வாயே திறப்பதில்லை. இதனை முதலாளித்துவ ஊடகங்களே அம்பலப்படுத்துகின்றன. சுதந்திர பெரு கட்சியின் செயலாளரான செரோன் ரொஜாஸ், ‘‘தேர்தல் வாக்குறுதிகளை காஸ்டிலோ மதித்து நடக்க வேண்டும்’’ என்று தனது கட்சியின் சார்பில் அதிபராகியுள்ள காஸ்டிலோவுக்கு உபதேசித்துக் கொண்டிருக்கிறார்.
பெரு நாட்டை முதலாளித்துவ − ஏகாதிபத்தியச் சூறையாடலிலிருந்து விடுவிக்க விரும்புகிற ஒரு சோசலிசக் கட்சி, சொல்லிலும் செயலிலும் புரட்சிகரமானதாக இருக்க வேண்டும். அமெரிக்க மேலாதிக்கத்தையும் பெரு நாட்டின் கார்ப்பரேட் மேட்டுக்குடி வர்க்கங்களையும் ராணுவக் கும்பலையும் வீழ்த்தி, உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். அமெரிக்காவின் மறுகாலனியாதிக்கத்தைக் கட்டிக்காக்கும் அரசு எந்திரத்தைத் தகர்த்தெறியும் வகையில், அமெரிக்காவின் பொய்கள், ஆட்சிக் கவிழ்ப்புச் சதிகள், படுகொலைகளை முறியடிக்கும் வகையில், சொந்தமாக மக்கள் படையைக் கொண்டிருக்கவும் வேண்டும். அதன்மூலம் மட்டுமே உழைக்கும் மக்களுக்கான புதியதொரு அரசு எந்திரத்தை நிறுவி, ஏகாதிபத்தியச் சூறையாடலையும் கார்ப்பரேட் கும்பலின் ஆதிக்கத்தையும் வீழ்த்த முடியும்.
படிக்க :
பொலிவியா ஆட்சிக் கவிழ்ப்பு : அமெரிக்காவின் நாட்டாமை !
சிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் !
ஆனால், பெரு நாட்டின் சோசலிஸ்டுகள் அமெரிக்காவின் மேலாதிக்கத்தையும் கார்ப்பரேட் சூறையாடலையும் கட்டிக் காக்கும் வகையில் அமைந்துள்ள தற்போதைய பெரு நாட்டின் அரசுக் கட்டமைப்பிற்குள்ளேயே தீர்வைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் வெற்றியின் மூலம் இதைச் சாதித்து விட முடியும் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், தேர்தல் வெற்றியின் மூலம் அமெரிக்க ஆதிக்கத்தையும் கார்ப்பரேட் கொள்ளையையும் ஒருக்காலும் வீழ்த்த முடியாது என்பதை பெரு−வின் அண்டை நாடான சிலி நாட்டின் ரத்தம் தோய்ந்த வரலாறு நிரூபித்துக் காட்டியுள்ளது. இதிலிருந்து படிப்பினைகளைப் பெறாமல், இன்னமும் கானலை நீரென நம்பியோடும் பெரு நாட்டின் சோசலிஸ்டுகளின் நடவடிக்கைகளானது, அந்நாட்டின் உழைக்கும் மக்களுக்கு வேதனைமிக்க இன்னுமொரு துயரக் கதையைத்தான் சொல்லப்போகிறது.


டேவிட்

பெண்களின் சட்டைகளில் பொத்தான்கள் இடதுபுறத்தில் இருப்பது ஏன் ?

பெண்கள் சட்டையில் பொத்தான்கள் இடதுபுறத்திலும்
ஆண்கள் சட்டையில் வலதுபுறத்திலும் இருப்பது ஏன்?
ண்கள் மற்றும் பெண்களின் சட்டைகளைத் துவைக்கும் போதோ அல்லது இஸ்திரி செய்யும் போதோ, பெண்களின் சட்டையில் பொத்தான்கள் இடது பக்கத்தில் இருப்பதை  கவனித்திருக்கலாம். (சில சட்டைகளில் விதிவிலக்காக அமைந்திருக்கும்) அது ஏன் என்று கேள்விக்கு பதில் நாம் யோசித்து கூட இருக்க மாட்டோம். ஆனால் அதன் பின்னிருக்கும் கதைகள் பெண்கள் மீதான வரலாற்று ரீதியான ஒடுக்குமுறைகளைப் பதிவு செய்கின்றன.
நீண்ட காலத்திற்கு முன்பிலிருந்து, சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை, உடைகள் எவ்வாறு வடிவமைக்கபட வேண்டும் என்பதை பாலினம்தான் தீர்மானித்தது. சமீபத்தில்தான் யுனிசெக்ஸ் ஃபேஷன் (Unisex Fashion) மற்றும் பரிணாம வளர்ச்சியுடன், ஆண்களும் பெண்களும் தங்கள் ஆடைகளை தாங்களே தேர்ந்தெடுக்கும்படியான சூழலும் உரிமையும் உள்ளது. இனி பெண்களுக்கு பாவாடை, சேலை மற்றும் ஆண்களுக்கு பேன்ட், வேட்டி என்பது போன்று ஆடைகளை வைத்து ஒருவரின் பாலினத்தை தீர்மானிக்க முடியாது. அனைவருக்கும் பொதுவானதான உடைகள் தற்போது வரத் துவங்கியுள்ளன. இருப்பினும், ஜீன்ஸ் பேண்ட்களில் சிறிய பாக்கெட்டுகள் மூலமாகவும், சட்டைகளில் இடது பக்க பொத்தான்கள் அமைப்பது மூலமாகவும் பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுவது இன்னும் தொடர்கிறது.
படிக்க :
புடவை கடந்து வந்த பாதையும் அது சார்ந்த போராட்டங்களும் ! || சிந்துஜா
பாவாடை பெண்களுக்கே உரிய உடையா ? || சிந்துஜா
நீங்கள் ஒருபோதும் கவனித்தது இல்லை என்றால், பெண்களின் சட்டைகளில் பொத்தான்கள் இடதுபுறத்திலும் ஆண்களுக்கு வலதுபுறத்திலும் இருப்பதை கவனியுங்கள். சரி, இதன் வரலாற்றை சற்றி பின்னோக்கிச் சென்று பார்க்கலாம். பொத்தான்கள் 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உடைகளில் வடிவமைக்கப்பட்டன. அப்போதுதான் பொரும்பாலான புதிய தொழில்நுட்பங்களும் உருவாக்கப்பட்டது. அப்போதும் பொத்தான்கள் எல்லோருடைய ஆடையிலும் இடம் பிடிக்கவில்லை. ஏனென்றால் அதன் விலை கூடுதலாக இருந்திருக்கிறது.
அந்த காலத்தில் நவீன ஆடைகள் பெரும்பாலும் உயர்த்தட்டு மக்களுக்குரியது என்று இருந்தது. அவற்றில் பெண்கள் பல அடுக்குகள் கொண்ட ஆடைகளையே பயன்படுத்தினர்.  மறுமலர்ச்சி மற்றும் விக்டோரியன் சகாப்தத்தில் பெண்களின் ஆடைகள் பெரும்பாலும் ஆண்களை விட மிகவும் கடினமானதாகவும், விரிவானதாகவும் இருந்தன – பெட்டிகோட்கள், கோர்செட்டுகள் மற்றும் பெரிய பாவாடைகள் என பயன்படுத்தப்பட்டன. அப்போதெல்லாம் பெண்களுக்கு அவர்களின் பணிப்பெண்களே ஆடையை உடுத்தி விட்டனர். அப்படி அணிவிக்கப்படும் ஆடைகளில்  பொத்தான்களை பூட்டுவதற்கு பணிப் பெண்களுக்கு இலகுவாக இருக்க வேண்டும் என்பதற்காக இடது புறத்தில் பொத்தான்கள் தைக்கப்பட்டது என்றொரு கருத்துண்டு.
நாம் பொரும்பாலான மக்கள் வலது கை பழக்கம் உள்ளவர்கள் பெண்கள் பொதுவாக குழந்தைகளை இடது கைகளில் வைத்திருப்பார்கள், இடதுபுறத்தில் பொத்தான்களை வைப்பதன் மூலம் இலகுவாக பொத்தானை திறந்து தாய்ப்பால் கொடுக்க முடியும் என்று கருத்தும் இதற்குப் பின்னணியில் நிலவுகிறது.
இவை எல்லாம் இது குறித்துக் கூறப்படும் அனுமானங்கள்தான். ஆனால், ஃபேஷன் வரலாற்று இணையப் பதிவர் ஒருவர் மேற்கூறிய கருத்துக்கள் குறித்துக் குறிப்பிடுகையில் 17, 18-ம் நூற்றாண்டுகள் வரையிலும் மேட்டுக்குடி ஆண்களும் வேலைக்காரார்களைக் கொண்டுதான் ஆடை அணிந்திருப்பார்கள். 18-ம் நூற்றாண்டு வரை பெண்களின் ஆடைகளில் பொத்தான்கள் அரிதாகவே இருந்தன. 1860-க்குப் பிறகுதான் பெண்களுக்கான உடைகளில் பொத்தான்கள் இடதுபுறத்தில் தோன்றத் தொடங்கியது.
சிந்திக்க வேண்டிய முக்கிய விசயம் என்வென்றால், உயர் வர்க்க கனவான்கள், தங்களது வேலைக்காரர்களின் வசதிக்காக தங்களின் ஆடையில் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்பது ஏற்கத் தக்கதாக இல்லையே !
ஆண்கள் சட்டையில் பொத்தான்கள் வலது புறத்தில் தைக்கப்பட்ட தன் காரணம் அவர்கள் போர்க்களத்திலும், ராணுவத்திலும் ஆயதங்களை கையாள வலது கையே பயன்படுத்தினர். அப்படி கையாளுவதற்கு வசதியாக சட்டையில் வலதுபுறத்தில் பொத்தான்கள் வடிவமைத்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இது இந்த அனுபவத்திலிருந்து வந்திருக்கலாம் என்கின்றனர்.
ஆனால், இந்த செளகரியம் பெண்களுக்கு ஏன் கிடைக்கவில்லை ? என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை.  நீடிக்கிறது.
மற்றொரு கருத்தாக்கம் நெப்போலியனை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பிரெஞ்சு பேரரசர் நெப்போலியன் போனபார்ட்டின், சட்டைப் பொத்தான்களுக்கு இடையே தனது வலது  கையை உள்நுழைத்து நிற்கும் புகைப்படப் ‘போஸ்’ (Pose) ஒன்று பிரபலமானது. இதனை தனது அடையாளப்பூர்வமான புகைப்படப் போஸாக அவர் வைத்திருந்தார். பல பெண்களும் நெப்போலியன் போனபார்ட்டை கிண்டல் செய்யும் வகையில் தமது வலது கையை தமது ஆடைகளின் பொத்தான்களுக்கு இடையே நுழைத்து போஸ் கொடுத்துள்ளனர். அதனை அறிந்த நெப்போலியன் போனபார்ட் பெண்களின் சட்டைகளில் உள்ள பொத்தான்களை ஆண்களுக்கு எதிர் பக்கத்தில் வைக்கும்படி உத்தரவிட்டார். அப்படி செய்தால் பெண்கள் தம்மைப் போலவே வலது கையை பொத்தான்களுக்கு இடையே நுழைந்த்துப் போஸ் கொடுத்து தம்மை கிண்டல் செய்ய முடியாது என்றூ கருதி இந்த உத்தரவிட்டுள்ளார். இதுவும் ஒரு கருத்தாக்கம்தான்.
அதையும் கடந்து ஓரு விஷயம் என்வென்றால், அப்போதெல்லாம் குதிரை சவாரி செய்யும்போது பெண்கள் வலப்புற பக்கவாட்டில் அமர்ந்து சவாரி செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது. பெண்கள் குதிரை சவாரி செய்யும்போது காற்று அவர்களில் மேல் பாய்வதை குறைத்து துணியை விலக விடாமல் தடுக்க இடதுபுறத்தில் பொத்தான்கள் பயன்படுத்தப்பட்டதும் ஓரு காரணம் என்கிறார்கள்.
ஆடையில் பாலின சமத்துவம்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பாலியல் வல்லுநர் ஹாவ்லாக் எல்லிஸ் எழுதுகிறார் ஆண் மற்றும் பெண்: இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பாலியல் கதாபாத்திரங்களின் ஆய்வு (1894-ல் வெளியிடப்பட்டது), பெண்களின் ஆடைகள் வலமிருந்து இடமாக பொத்தான் இருப்பது பெண்களின் “வலிமை மற்றும் வேகத்தை குறைப்பதாக இருந்திருக்கக் கூடும்” என்கிறார். எனவே, ஆண்களை விட பெண்கள் தாழ்வானவர்கள் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார். பெண்கள் ஆடையில் உள்ள சிரமங்களால் பல கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேர்ந்தது.
பெண்களின் ஆடைகள் விடுதலையை வெளிப்படுத்தத் தொடங்கியதும், ஆண்களின் ஆடைகளிலிருந்து (எ.கா:பேன்ட்) புதிய விசயங்கள் பெண்களின் ஆடைகளுக்கும் வந்தன. உற்பத்தியாளர்கள் இடதுபுறத்தில் உள்ள பொத்தான்களை ஆண்கள் மற்றும் பெண்களின் ஆடைகளை வேறுபடுத்துவதற்கான ஒரு நடைமுறையாகப் பராமரித்தனர் என்று மற்றொரு கோட்பாடு வலியுறுத்துகிறது.
படிக்க :
நாகரிக வளர்ச்சியும் ஆடைகளின் வரலாறும் !!
ஜீன்ஸ் : ஆடையின் வரலாறும் – பொதிந்துள்ள உழைப்பின் வரலாறும் !
பெண்களின் சட்டையில் உள்ள இடதுபக்க பொத்தான்கள் பாலின பாகுப்பாட்டின் ஓரு அடையாளம். அடக்குமுறைகள் காலங்காலமாக பெண்களின் ஆடையிலும் தொடர்கிறது என்றால் மிகையாகாது. ஆனால், இன்று காலம் மாறி வருகிறது. அதன் ஒரு வடிவமாக பெரிய நிறுவனங்கள் யூனிசெக்ஸ் உடைகளை கையில் எடுத்திருக்கின்றன. அவை, ஆண்களைபோன்றே சட்டையில் பொத்தான்கள் வலதுபக்கத்தில் வைக்க உந்துகிறது. இதுபோன்ற முன்னெடுப்புகள் கட்டாயம் ஆடையில் சமத்துவத்தை நோக்கி பயணிக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.
மினசோட்டா ஆடை வடிவமைப்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிம் ஜான்சன் இது குறித்துக் கூறுகையில் “பாலினங்களுக்கிடையில் பாகுபாட்டை நாம் தொடரும் வரை அது நம் ஆடையிலும் தொடரும்” என்கிறார். உண்மையான வார்த்தைகள் இவை. சமூகத்தில் நிலவும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் நீங்கும் வரை, ஆடைகளில் இத்தகைய பாகுபாடுகளும் கட்டுப்பாடுகளும் சமூக எதார்த்தமாக நீடிக்கவே செய்யும் !!
சிந்துஜா
சமூக ஆர்வலர்
disclaimer

ராபியா சைஃபி பாலியல் வன்கொலை : பார்ப்பனிய ஆணாதிக்க அதிகார வர்க்கத்தின் வெறியாட்டம் !

ரண்டு மார்பகங்களும் துண்டிக்கப்பட்டுள்ளன! பிறப்புறுப்பு குத்திக் கீறப்பட்டுள்ளது..! கழுத்து கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டு தொங்கும் நிலையில்..!
நெஞ்சில் ஆழமான துளையிட்ட ஓட்டை…! உடல் முழுவதும் ஐம்பதுக்கும் மேற்பட்ட வெட்டுக்கள் மற்றும் குத்தப்பட்ட காயங்கள்….!
அவள் இறப்பதற்கு சற்று முன்பு நான்கு பேருக்கும் அதிகமானோர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். ஒரு மனித உடல் தாங்க முடியாத அளவிற்கு வேதனை. அசையக் கூட முடியாமல் அவள் இறுதியில் இறந்து விடுகிறாள்.
மேற்கண்ட அதிர்ச்சியூட்டும் வரிகள் திரைப்படம் அல்லது நாவலின் பகுதிகள் அல்ல. குப்பை பொறுக்கியும் வீட்டு வேலை செய்தும் கிடைத்த பணத்தில் ஒரு தாயால் காவல்துறை அதிகாரியாக உருவான அவரது மகள், அவள் வேலைக்குச் சென்ற நான்கு மாதங்களுக்குப் பிறகு தான் வேலை பார்க்கும் இடத்தில் நடக்கும் தவறுகளுக்கு துணை போகாததன் காரணத்தால் மனிதத்தையும் மனசாட்சியையும் குப்பைத் தொட்டியில் வீசிய நமது ஜனநாயக நாட்டின் மக்கள் ஊழியர்களால் தண்டிக்கப்பட்டாள்.
படிக்க :
ஆசிபா : நீதி கேட்கும் பாலிவுட் நடிகைகளை மிரட்டும் பா.ஜ.க இணைய கும்பல்
ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !
அவள் பெயர் ராபியா ஷைஃபி. வயது 21. கொல்லப்பட்டது – ஆகஸ்ட் 26. டெல்லி லஜ்பத் நகர் மாவட்ட மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் சிவில் பாதுகாப்பு அதிகாரி.
நிர்பயா வழக்கை விட கொடிய குற்றம். ஆனால், அனைத்து இந்திய ஊடகங்களும் தகவல்களை மறைத்தன. வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஊடகங்கள் செய்தி வெளியிடவில்லை. சமூக ஊடகங்களில் ஹேஷ்டேக் இல்லை. யாரும் மெழுகுவர்த்தி ஏந்தவில்லை. தெரிந்தவர்கள் கூட சொல்லவில்லை. ஆனால் இது போன்ற ஒன்று நடந்திருக்கிறது.
கேட்டால் தலை வெடித்துவிடும், உடல் தளர்ந்து விடும் ஒரு பெரும் கொடூரத்தை சில கொடூரர்கள், நர வேட்டைக்காரர்கள் ஒரு பெண்ணின் மீது, ஒரு பாவப்பட்ட தாயின் மகளின் மீது செய்துள்ளனர்.
ஆகஸ்ட் 26 இரவு, ராபியாவைப் காணவில்லை என்றவுடன், ​​அவளது குடும்பத்தினர் அவளது சக ஊழியர்கள் உட்பட பலரை அழைத்தார்கள். சிறிது நேரம் கழித்து ஒரு சக ஊழியர் அவளது அம்மாவை அழைக்கிறார். அழைப்பு பதிவு செய்யவில்லை என்பதை ஆரம்பத்தில் உறுதி செய்த பிறகு, அவர் சில விஷயங்களை கூறியுள்ளார். ராபியாவை அவருடன் பணிபுரியும் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்படுவாள் என்று கூறியுள்ளார்.
அவரது மேலதிகாரியின் தொலைபேசி எண்ணைக் கேட்டபோது, ​​அந்த சக ஊழியர் கொடுக்க மறுத்ததுடன், அவரும் கண்காணிப்பில் இருப்பதாகக் கூறி தொலைபேசியை துண்டித்துவிட்டார்.
பின்னர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற ராபியா குடும்பத்தினரை உட்காரச் கூடச் சொல்லாமல் வழக்கை முன்னதாகவே பதிவு செய்து விட்டோம். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துவிட்டோம் என்று கூறி அவர்களது வாக்குமூலத்தை கூட பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அவரது தந்தை சமித் அகமது கூறுகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு இரகசிய அறை இருப்பது தனது மகளுக்குத் தெரியும் என்றும் லஞ்சப் பணமாக தினமும் ரூ. 3-4 லட்சம் வருவதாக ராபியா கூறியுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த தகவலை அறிந்ததனால் தான் ராபியா கொல்லப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
அவளது அலுவலகத்தில் நடந்த ஊழல் குறித்து அவள் பலரிடம் புகார் அளித்துள்ளதாகவும், அவள் பணியில் சேருவதற்கு முன்னால் ஊழல் தடுப்பு பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர். இறுதியில் ஹரியானாவிலிருந்து ராபியாவின் உடல் மீட்கப்பட்டது.
டெல்லியில் ராபியா என்ற போலீஸ் அதிகாரி ஒரு சிலரால் கடத்தப்பட்டு, கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உறுப்புகள் ஒவ்வொன்றாக சிதைக்கப்பட்டன என்பதை நாடு அறிய பல நாட்களானது என்பது மட்டுமின்றி, இங்கேயுள்ள அரசும் சட்டவியல் அமைப்புகளும் தலைவர்களும் முக்கிய ஊடகங்களும் நடந்த கொடுமைகளை அறிந்திருந்தும், அமைதியாக இருக்கிறார்கள். இது வகுப்புவாதம் நிரம்பிய வஞ்சனையாகும்.
ஒரு பெண்ணுக்கு எதிராக மட்டுமல்ல, ஒரு சமூகத்திற்கு, இந்த நாட்டிற்கு, இங்கே உள்ள நீதி நெறிமுறைகளுக்கு, அனைத்துவிதமான சட்ட முறைமைகளுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுடனான தொடர்ச்சியான அமைதி.
ஒவ்வொரு நாளும் டஜன் கணக்கான தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் இடைவிடாமல் தாக்கப்படுகையில், அவர்களின் பெண் மக்கள் தொடர்ந்து வேட்டையாடப்படும் நாட்டில் நாம் சில பிராமணிய கண்ணீருக்காக மட்டுமே மெழுகுவர்த்திகளை ஏந்துவோம். சில குடும்பங்களுக்கு மட்டுமே நீதியை பெற்றுத் தருவோம்.
படிக்க :
கர்நாடக பாஜக – ஒரு பாலியல் குற்றக் கும்பல் !
யோகி ஆட்சியில் உ.பி : பாலியல் வன்முறையின் தலைநகரம் !
அந்த குடும்பங்களுக்காக மட்டும் கட்டமைக்கப்பட்ட சனாதன பொது புத்தியின்,
உணர்வின் ஊடாக நாம் புலம்பலாம். பசுவை தேசிய விலங்காக ஆக்குவது பற்றி நாம் இன்னும் விவாதிக்கலாம். சங்கிகளுடன் அவர்களது மனோநிலையுடன் அவர்களது அடிமைகளாக சேவகம் செய்யும் ஊடகங்கள் வாந்தி எடுக்கும் செய்தியை அப்படியே விழுங்கலாம். சட்ட அமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு அதிகாரிக்கே இது போன்ற மோசமான நிலை ஏற்பட்டிருப்பது பயத்தை உருவாக்குகிறது.
அதுவும் தலைநகரில்! நமது நாடு ஜனநாயகத்தில் இருந்து தடம் புரண்டுவிட்டது.
ஊழல் / பண மோசடி மையமாக மாறிய இந்த நாட்டிலிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது. தன் தாய்நாட்டிற்காக வேலை செய்ய தயாரான, தன் வேலையில் நேர்மையாக இருந்த ஒரு பெண்ணின் கொடூர கொலைக்குப் பிறகும் நாம் மீண்டும் அமைதியாக இருக்கிறோம்.
வேட்டைக்காரர்களுக்கு எல்லைகள் இல்லை என்பதை நாம் உணர வேண்டும். அவர்கள் இரைகளை மட்டுமே பின் தொடர்கிறார்கள். டெல்லியில் இருந்து நமது பகுதிகள் அதிக தூரம் இல்லை. நமக்காகவும்தான் அந்த பெண் கொடூரமாக கொல்லப்பட்டாள்.
மக்களைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டவர்கள் அவர்களுடன் இருந்த ஒருவரையே கொடூரமாக கொன்றுள்ளனர்! ராபியா ஷைஃபி, ஒரு போலீஸ் அதிகாரி. இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்காகவும் தன் உயிரைக் கொடுத்துள்ளார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு பெண்ணின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு, அவளது மேலதிகாரிகளின் கொலை வெறியால் இல்லாமல் போனது, பல ஆசைகள் கொண்ட ஒரு பெண். ஒரு மகள். ஒரு குடும்பம். வெட்கித் தலை குனிகிறோம்.
முகநூலில் : முருகன் திருப்பதி
disclaimer

காஷ்மீர் சிறப்பு உரிமை ரத்து – இரண்டு ஆண்டு நிறைவு : துளிர்விடுகிறது விடுதலை முழக்கம் !

டந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்த மோடி தலைமையிலான காவி பாசிச கும்பல், தனது இந்துராஷ்டிரக் கனவை நிறைவேற்றும் விதமாக மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் முதலாவதும், முக்கியமானதும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370 மற்றும் காஷ்மீரிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கும் பிரிவு 35A ஆகியவற்றை ரத்து செய்ததாகும்.
இந்தச் சிறப்புச் சட்டம் நீக்கம் என்பது குறைந்தபட்ச ஜனநாயக நடவடிக்கைகளைக் கூட மேற்கொள்ளாமல், நாடு முழுவதும் இராணுவத்தை நிறுத்தி, காஷ்மீரில் ஊரடங்கை அறிவித்து, இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை ரத்து செய்து, எதிர்ப்புகளை ஒடுக்கி ஒரு இராணுவ நடவடிக்கைபோல் அமல்படுத்தப்பட்ட பாசிச நடவடிக்கையாகும். காஷ்மீரின் சிறப்புச் சட்டத்தை நீக்கியதோடு அம்மாநிலத்தை ஜம்மு − காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகத் துண்டாடியது, பாசிச மோடி அரசு.
காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவது, முன்னேற்றுவது என்ற வகையில்தான் காஷ்மீரின் சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டதாகவும், இதன் மூலம் ஜம்மு − காஷ்மீர் மற்றும் லடாக்கில் புதிய வரலாறு தொடங்கப்பட்டுள்ளதாகவும், இப்பாசிச நடவடிக்கையை நியாயப்படுத்தினார், பிரதமர் மோடி. தற்போது, சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில், ‘‘ஜம்மு − காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு புதிய வரலாற்றுக் கட்டத்திற்குள் பீடுநடை போடுகிறது’’ என்ற தலைப்பில் 2 ஆண்டுகால சாதனைகளை விளக்கி 76 பக்க வெளியீட்டைக் கொண்டு வந்துள்ளது, மோடி அரசு.

படிக்க :

காஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை

காஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை !

பொய்யையும் புரட்டையுமே வாழ்வாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க கும்பல், இந்த வெளியீட்டிலும் ஜம்மு − காஷ்மீரில், மருத்துவம், சுற்றுலா, கல்வி, விளையாட்டு மற்றும் சொத்து உரிமைகள் ஆகியவற்றில் சாதனை நிகழ்த்தியுள்ளதாக, பொய்களையே சாதனைகளாக சுயதம்பட்டம் அடித்துக் கொள்கிறது. ஆனால், ஜம்மு − காஷ்மீரின் உண்மை நிலையோ நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. ஜம்மு − காஷ்மீரின் உண்மை நிலையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது, ஜம்மு − காஷ்மீர் மனித உரிமைகளுக்கான அரங்கம் (Forum for Human Rights in Jammu Kashmir).
000
காஷ்மீருக்கான சிறப்புச் சட்டம் நீக்கப்பட்ட பிறகு, இரண்டாண்டுகளாக தடுப்புக் காவல்களும், பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கான தடையும் (144) தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. வீட்டிலிருந்து வெளியில் செல்பவர்களுக்கு என்ன நடக்கும் எந்த உத்திரவாதமற்ற சூழல்தான் அங்கு நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, காஷ்மீர் மாநிலமே திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாறியிருக்கிறது.
பொது ஊரடங்கை நீட்டிப்பதோடு, அரசு ஊழியர்கள் உட்பட, காஷ்மீர் மக்களின் மீதான கண்காணிப்பையும் அதிகரித்துள்ளது, மோடி அரசு. சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்க சிறப்பு பணிப்படை (Special Task Force) உருவாக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க கும்பல்களுக்கு, மோடி அரசை விமர்சிப்பதும் அம்பலப்பட்டுத்துவதுமே ‘தேச விரோத’ செயல்கள்தான். அதன்படி, காஷ்மீரில் தேச விரோதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டார்கள் என்று 18 அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காஷ்மீரின் உள்ளூர் ஊடகங்கள் மிகப்பெரும் அடக்குமுறைக்கும் போலீசின் மிரட்டலுக்கும் உள்ளாகியிருக்கின்றன. செய்திகள் யாவும் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனரகத்தின் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே வெளியிடப்படுகின்றன. காஷ்மீரின் உண்மைமை நிலையை வெளிக்கொண்டு வரும் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் மற்றும் ஊபா போன்ற கருப்புச் சட்டங்களால் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாய் உள்ளன.
கடந்த 2019−இல், பெண் பத்திரிக்கையாளர்கள் உட்பட 2,300−க்கும் மேற்பட்டோர் ஊபா சட்டத்தால் கைது செய்யப்பட்டனர். இதில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் இன்னமும் சிறையில்தான் உள்ளனர். காஷ்மீரில், பத்திரிக்கையாளராக இருப்பது பெரும் சவாலானதாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதாகவும் மாறியுள்ளது.
மேலும், 2019−இல் சிறப்புச் சட்டத்தை நீக்கும்போது கைது செய்யப்பட்டவர்களில், சிறுவர்கள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என ஆயிரத்துக்கும் அதிகமானோர் இன்னமும் சிறையில் உள்ளனர். ஆட்கொணர்வு மனு, பிணை கோரும் மனு மற்றும் விரைவான வழக்கு விசாரணை போன்ற சட்ட உரிமைகளும் மறுக்கப்படுகிறது. காஷ்மீர் மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தலில் வைப்பதற்கான வழிமுறையாக இவற்றைக் கையாண்டு வருகிறது, பாசிச மோடி அரசு.
இணையதள வசதி, அத்தியாவசியமாகியுள்ள இன்றைய சூழலில், ஜம்மு − காஷ்மீரில் இரண்டாண்டுகளாக இணையதள சேவையும் பகுதியளவிற்குதான் வழங்கப்படுகிறது. அதிலும் இராணுவச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டால் இணையதள வசதி முடக்கப்படுவது இயல்பான நடைமுறையாக உள்ளது. இதனால், காஷ்மீர் மக்களுக்கு வீடே சிறையறையாக மாறியுள்ளது என்றால் அது மிகையாகாது.
ஏனெனில், பொது ஊரடங்கால் வெளியில் செல்லவும் முடியாது; இணையதள சேவையும் முடக்கப்படுவதால் உலக நடப்பிலிருந்து துண்டிக்கப்பட்டு சிறையிலிருக்கும் நிலைதான் காஷ்மீரிகளுக்கு. வீடே சிறையாக உள்ள அம்மக்களின் நிலைமை நம் நெஞ்சை உலுக்குகிறது.
மேலும், காஷ்மீரிலும் கொரோனா பெருந்தொற்றால் ஆன்லைன் வகுப்புகள்தான் நடைபெறுகின்றன. இணையதள வசதி முடக்கப்படுவதாலும், 4ஜி தொலைத்தொடர்புச் சேவை கிடைக்காததாலும் வகுப்புகள் நடத்தவோ, பங்கேற்கவோ முடியாத நிலைமைதான் அங்குள்ளது.
நாடு முழுவதும் அரசியல்வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்களை பெகசாஸ் உளவு செயலி மூலம் ஒன்றிய அரசு உளவு பார்த்தது போல், காஷ்மீரிலும், 2017 முதல் 2019−ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளார்கள என 25−க்கும் மேற்பட்டோரை இந்தச் செயலி மூலம் மோடி அரசு உளவு பார்த்துள்ள உண்மையானது, தடவியல் சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தற்போது தாலிபான்கள் ஆப்கானில் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பதால், இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற பீதியூட்டி, காஷ்மீர் மக்களின் மீதான அடக்குமுறையை இன்னும் அதிகரிக்கத் துடிக்கிறது மோடி அரசு.
காஷ்மீரின் சிறப்புச் சட்ட நீக்கமானது ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க காவி கும்பலின் இந்துராஷ்டிரக் கனவுக்கானது மட்டுமல்ல, அது கார்ப்பரேட் கும்பலின் நலனுக்கானதுமாகும். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய பிரிவு 370−ஐ மோடி அரசு நீக்கியதோடு, காஷ்மீரிகளுக்கு மட்டும் காஷ்மீரில் நிலங்கள், வேலைவாய்ப்பு மற்றும் சொத்துகள் வாங்குவதற்கான உரிமை மற்றும் சலுகைகளை வழங்கிய பிரிவு 35A−யையும் நீக்கியுள்ளது.
இச்சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டவுடன், ‘‘காஷ்மீரில் இனி இந்தியர்கள் சொத்துக்கள் வாங்கத் தடையில்லை’’ என கூப்பாடு போட்டன ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க காவி கும்பல்கள். சிறப்புச் சட்டம் நீக்கப்பட்ட இரண்டாண்டுகளில், காஷ்மீரில் நடைமுறையில் இருந்த 12 சட்டங்களை ரத்து செய்துள்ளது, யூனியன் பிரதேச அரசு.
அவற்றில் முக்கியமான ஒன்றுதான், 1950−இல் ஷேக் அப்துல்லா ஆட்சியில், கொண்டுவரப்பட்ட் பெரும் பண்ணைகள் ஒழிப்புச் சட்டமாகும் (Big Landed Estaes Abolition Act). இச்சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு வரை காஷ்மீரின் நிலங்கள் பெரும் பண்ணையார்களுக்கும் நிலப்பிரபுக்களுக்கும்தான் சொந்தமாக இருந்தது. ஆனால், இச்சட்டம் கொண்டுவரப்பட்டு, அமல்படுத்தப்பட்ட இரண்டாண்டுகளில், அதாவது 1952−க்குள் காஷ்மீரில் சுமார் 7 லட்சம் நிலமற்ற கூலி − ஏழை விவசாயிகளுக்கு நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. இதில், சுமார் 2,50,000 தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்து விவசாயிகளும் நிலவுரிமை பெற்றனர். முஸ்லீம்களின் ஆட்சி இந்துக்களுக்கு எதிரானது என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வரலாற்றைத் திரித்துப் புரட்டும் ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க கும்பலின் யோக்கியதையை இதன்மூலம் புரிந்து கொள்ள முடியும்.
தற்போது இந்த பெரும் பண்ணை ஒழிப்புச் சட்டத்தை ரத்து செய்ததிலிருந்து, சட்ட விரோத நில ஆக்கிரமிப்புகள் நடைபெறுவதாகவும், வழக்குகள் பதிவாகி வருவதாகவும் செய்திகள் வருகின்றன. மேலும் நாடோடி பழங்குடிகள், தங்கள் வாழ்விடத்திலிருந்து வனத்துறையினரால் விரட்டப்படுவதும் அரேங்கேறி வருகிறது.
மோடி சொல்லும் வளர்ச்சி என்பது அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சி என்பதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. மோடியின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு, மீத்தேன், சாகர் மாலா, பாரத் மாலா, எட்டுவழிச்சாலை, மோட்டார் வாகன திருத்தச் சட்டம், கடல் வள மசோதா, நீட் மற்றும் புதிய கல்விக் கொள்கை என அனைத்தும் கார்ப்பரேட் நலனுக்காகனவைதான். அந்த வழியில்தான் இப்போது ஜம்மு − காஷ்மீரில் பெரும்பண்ணைகள் ஒழிப்புச் சட்ட நீக்கமும் அரங்கேற்றப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு சட்டத்தையும், சலுகைகளையும் ரத்து செய்ததன் மூலம், காஷ்மீரில் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இனி சொத்து வாங்க முடியும் என்ற காவி கும்பலின் கூப்பாட்டையும் பொருத்திப் பார்த்தால் இதன் பலன் யாருக்கானது என்று புரியும்.
காஷ்மீரின் வளங்களை பன்னாட்டு கார்ப்பரேட் முதலைகள் சூறையாடுவதற்காகவும். இஸ்லாமிய மக்களை சொந்த மண்ணில் இரண்டாம்தர குடிமக்களாக்கி தனது அகண்ட பாரத கனவை நிறைவேற்றிக் கொள்ளவும்தான் ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க காவி கும்பல்களால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, துண்டாடப்பட்டது. கடந்த இரண்டாண்டுகளில் இப்பாசிச கும்பல் காஷ்மீரை தனது கார்ப்பரேட் − காவி பாசிசத்தின் முதலாவது காலனியாக − அடிமைப் பிரதேசமாக்கியுள்ளது.
000
2019−இல் பாசிச நடவடிக்கையின் மூலம் காஷ்மீரின் சிறப்புச் சட்டத்தை நீக்கியபோது, ஒருங்கிணைந்த காஷ்மீரின் லடாக் பகுதிகளிலும் ராணுவத்தைக் குவிப்பது, அரசியல் தலைவர்களை வீட்டுக் காவலில் வைப்பது என்ற வகையில் லடாக் பிராந்தியமும் அடக்குமுறைக்குள்ளானது.
2019−இல், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, கார்கில் மற்றும் லே ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கி, லடாக் தனியொரு யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டது. அப்பொழுது, சிறப்புச் சட்ட நீக்கம் மற்றும் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டதை எதிர்த்து முஸ்லீம்கள் அதிகமுள்ள கார்கில் பிராந்தியம் போராட்டக் களமாகியது. புத்த மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள, லே பிராந்தியமோ யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டதை வரவேற்று மகிழ்ச்சிக் கோலம் பூண்டது. ஆனால், இந்த மகிழ்ச்சி, அடுத்த சில நாட்களிலேயே வற்றிப்போனது.
கடந்த இரண்டாண்டுகளில், ஜம்மு − காஷ்மீரைப் போலவே லடாக்கில் உள்ள நிலங்களின் மீதான உரிமை மற்றும் வேலை வாய்ப்பு ஆகிய சட்டபூர்வமான இரண்டு உரிமைகளும் அம்மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன. லடாக் யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டாலும், அரசு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. ஒருங்கிணைந்த காஷ்மீரின் ஒரு பகுதியாக இருக்கும்போது, இப்பகுதிவாழ் மக்கள் காஷ்மீரின் அரசு வேலைவாய்ப்புகளில் பங்குபெற முடிந்தது. இப்போது, தனி யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டதால் வேலைவாய்ப்பும் பறிபோயுள்ளது.
லடாக்கில் 97 சதவிகிதத்துக்கு மேலானோர் பழங்குடியினராவர். 1990−லிருந்து கார்கில் மற்றும் லே−விற்கு தனித்தனியாக பழங்குடியினரது மலை மேம்பாட்டுக் கவுன்சில் (Hill Developement Council) என்ற சுயாட்சி அதிகார அமைப்பு இயங்கி வந்தது. இக்கவுன்சிலுக்கான தேர்தல் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்கள் இக்கவுன்சிலின் ஆலோசகர்களாக இருந்து வந்தனர். இந்த ஆலோசகர்கள், தங்கள் தொகுதிக்கான தேவைகளையும் அதற்கான செலவுகளையும் முன்வைத்து நிறைவைற்றும் அதிகாரம் கொண்டவர்களாக இருந்தனர்.

படிக்க :

ஜாலியன் வாலாபாக் நினைவிடம் : கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?

ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நாட்குறிப்புகள் !

ஆனால், லடாக் பிராந்தியம் யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்ட பிறகு, மைய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல், மலை மேம்பாட்டுக் கவுன்சிலின் ஆலோசகர்கள் தங்கள் தொகுதிக்கென சல்லிக் காசு கூட ஒதுக்க முடியாது. இவ்வாறாக, கடந்த இரண்டாண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறிப் போயுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், லடாக் பழங்குடியினப் பகுதிகளின் சுயாட்சி உரிமையும் பாதுகாப்பும் அதிகாரமும் மோடி அரசால் பறிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழல்தான், 2019−க்கு முன்பு வரை “லடாக்கை யூனியன் பிரதேசமாகப் பிரிக்க வேண்டும், லடாக்கை அரசியல் சட்டத்தின் அட்டவணை பட்டியல் 6−இல் இணைக்க வேண்டும்” என்று கோரிவந்த லே மாவட்ட மக்களை, கார்கில் மாவட்ட மக்களுடன் இணைந்து மாநில அந்தஸ்து வேண்டும் என்று குரலெழுப்ப வைத்துள்ளது. மத வேறுபாடுகளைக் கடந்து, கார்கில் ஜனநாயகக் கூட்டணியும் (KDA − Kargil democratic alliance), லே மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 6−வது பட்டியலுக்கான மக்கள் இயக்கத்தின் உயர்நிலைக் குழுவும் (ABPMSS) மாநில அந்தஸ்து வேண்டுமென்ற பொது கோரிக்கைக்காக இணைந்து போராடி வருகின்றன.
மோடி அரசின் துரோகத்தை எதிர்த்து, லே பிராந்தியத்தின் பா.ஜ.க. தலைவரான செர்ரிங் டோர்ஜீ, அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பா.ஜ.க.வின் முன்னாள் எம்.பி.யாகிய துப்ஸ்தன் ச்சீவாங், தேசிய மாநாட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் திக்சே ரின்போச்சே, லடாக் பிராந்திய காங்கிரசுத் தலைவர் நவாங் ரிக்சின் ஜோரா, முன்னாள் பா.ஜ.க. தலைவரும் அமைச்சருமான செர்ரிங் டோர்ஜீ முதலான பிரமுகர்கள் இந்த இயக்கத்தைத் தலைமை தாங்கி நடத்தி வருகின்றனர். ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்குப் பின்னர் கார்கில் மற்றும் லே பிராந்திய மக்கள் தங்களது உரிமைக்காக ஐக்கியப்பட்டுள்ளனர். பா.ஜ.க. கட்சியானது இப்பிராந்தியத்தில் தனிமைப்பட்டுப் போயுள்ளது.
லடாக்கில் பற்றிய இச்சிறு பொறியானது, அடக்குமுறைகளாலும், இயற்கைவளச் சூறையாடலாலும் சின்னபின்னமாகியுள்ள பனிமலை சூழ்ந்த காஷ்மீர் மாநிலத்தை மீண்டும் எரிமலையாக வெடித்தெழச் செய்யும் என்பதற்கான அறிகுறியாகும். லடாக் மக்களின் நியாயவுரிமைக்காகவும், ஜம்மு − காஷ்மீரின் அடக்குமுறைக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டியது, பாசிசத்தை எதிர்க்கின்ற, வீழ்த்தத் துடிக்கின்ற நம் அனைவரின் கடமையாகும்.


அப்பு

நொறுங்கும் நாடாளுமன்ற ஜனநாயகம் அரங்கேறும் பாசிச சர்வாதிகாரம் !

த்தாலியில் 1924−இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முசோலினியின் பாசிஸ்ட் கட்சி தலைமையில் உருவான தேசிய கூட்டணி அறுதிப் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியைப் பிடித்த பின்னர், அரசியல் கொலைகள், கும்பல் வன்முறைகள் முதலான சட்டவிரோதமான செயல்பாடுகளைச் செய்துகொண்டே, சட்டங்களைத் திருத்தி ஒரு போலீசு ராஜ்ஜியத்தை உருவாக்குவது, அரசு நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் பாசிஸ்டுகளை புகுத்துவது − என சட்டபூர்வ மற்றும் சட்டவிரோத வழிமுறைகளை இணைத்துக் கொண்டுதான் பாசிச சர்வாதிகாரம் நிறுவப்பட்டது. அவற்றுள் “நாடாளுமன்றத்திற்கு கட்டுப்படாத” பிரதமரை உருவாக்கியது குறிப்பிடத்தக்க அம்சம்.
இத்தாலியின் வரலாறு, தற்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் நிலைமைகளுக்கு ஒப்பானதாகவே இருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் நிகழ்வுகள் அனைத்தும் பாசிசம் வேகமாக அரங்கேறி வருவதை நமக்கு எச்சரிக்கவும் செய்கிறது.
000
மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து மக்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரிப்பதும், நாடாளுமன்றத்தில் அவற்றைப் பற்றி விவாதிப்பதற்கான நேரமும் சூழலும் குறைவதுமான இரண்டு போக்குகளும் அதிகரித்து வந்தன. கொரோனா தொற்று நோய் பரவத் தொடங்கிய பின்னர், இவ்விரு போக்குகளும் மேலும் தீவிரமடைந்தன.
படிக்க :
இதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் ?
கார்ப்பரேட் நலத் திட்டங்கள் : மக்கள் மீதான மோடி அரசின் பொருளாதார யுத்தம் !
குறிப்பாக, கொரோனா இரண்டாம் அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட கொத்துக் கொத்தான மரணங்கள், கங்கைக் கரையை நிறைத்த பிணங்கள், சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா, பாரத் பயோடெக் − என்ற மோடிக்கு நெருக்கமான இரண்டு நிறுவனங்கள் கொள்ளை லாபமடிப்பதற்காகவே கொண்டுவரப்பட்ட தடுப்பூசிக் கொள்கை, அவர்களுக்கு மட்டுமே ஏகபோக அனுமதி, கொரோனா தொற்று அதிகரித்து வந்த சூழலில் உத்திரப்பிரதேசம், குஜராத், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் மோடி − அமித்ஷா கும்பல் ஆயிரக்கணக்கனோரைக் கொண்டு நடத்திய தேர்தல் பொதுக்கூட்டங்கள் − பிரச்சாரங்கள் ஆகியவையெல்லாம் நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்புகளை உருவாக்கின.
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி வரி நிலுவைகளை வழங்காமல் ஏமாற்றி வருவது, இந்திய − சீன எல்லைப் பிரச்சனை, காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென்ற கோரிக்கை, அம்பலப்பட்டு நாறிய ரஃபேல் ஊழல், விண்ணை முட்டும் பெட்ரோல் − டீசல் விலை உயர்வு, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தொடரும் விவசாயிகள் போராட்டம் போன்ற எதையும் மோடி அரசு பொருட்படுத்தவில்லை. மேக்கேதாட்டில் அணை கட்டும் கர்நாடகாவின் அடாவடி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களிலும் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காணாத மோடி அரசின் அலட்சியப்போக்கானது, இனியும் இந்த ஆட்சியைச் சகித்துக் கொள்ள முடியாத நிலைமைக்கு நாட்டு மக்கள் அனைவரையும் தள்ளியது.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்கள், வேலை இழப்புகள் போன்ற அனைத்திலும் மோடி அரசு பொய்யான விவரங்களை அள்ளி வீசியது. கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்யும் வகையில் மக்கள் விரோத சட்டத் திருத்தங்களையும் மேற்கொண்டு வந்தது. இவற்றிற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை உழைக்கும் மக்கள் நடத்தி வந்தனர்.
நாட்டில் நடந்துவரும் இந்த அசாதாரணமான நிலைமைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகளால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தன. விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சனைகள் ஒருபுறம் குவிந்து கொண்டிருக்க, இன்னொருபுறம் நாடாளுமன்றக் கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்பதில்லை என்பதும், மற்றொருபுறம் நாடாளுமன்றக் கூட்டங்களில் விவாதங்கள் நடப்பது குறைந்து வருவதென்பதும் தொடர்ந்தது.
சென்ற 2020−ம் ஆண்டில் கொரோனா முதல் அலை உருவாகியதையடுத்து, பட்ஜெட் கூட்டத் தொடர் பாதியிலேயே முடித்துக் கொள்ளப்பட்டது. குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டது. மழைக்காலக் கூட்டத் தொடரிலும் அவையின் நேரம் குறைக்கப்பட்டுவிட்டது. இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரும் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. மேலும், ஆளுங்கட்சியின் அராஜகமான செயல்பாடுகளாலும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதாலும் நாட்டையும் மக்களையும் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகள் விவாதிக்கப்படவில்லை. ஆகவே, இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலாவது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எதிர்பார்ப்பும் எதிர்கட்சிகள் மற்றும் முதலாளித்துவ ஊடகங்கள் மத்தியில் அதிகரித்து வந்தது.
இந்த சூழலில்தான் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஜூலை 19−ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 13−ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
000
நாடாளுமன்றத்தில் கேள்விகளை அனுமதித்து முறையாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் முறையிட்ட நிலையில், இரு அவை உறுப்பினர்களையும் ‘‘நாடாளுமன்றத்திற்கு வெளியே’’ கூட்டி பிரதமர் உரையாற்றுவார்; அதில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததையொட்டி அதைக் கைவிட்டது மோடி அரசு.
இந்நிலையில், முதல்நாள் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அன்றைய நாள் மாலையில், இசுரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் ‘‘பெகாசஸ் ஸ்பைவேர்’’ என்ற செயலி மூலம் மோடி அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், சமூக செயல்பாட்டாளர்கள் − என இந்தியாவைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேரை உளவு பார்த்த விவகாரம் வெளிவரத் தொடங்கியது.
மோடி அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை உடனுக்குடன் அறிந்துகொண்டு, மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதும் அம்பலமானது. எதிர்க்கட்சிகளின் ஃபோனை ஒட்டுக்கேட்கும் விவகாரம் என்பது புதிய விசயமல்ல. இதற்கு முன்னர் காங்கிரசு ஆட்சியிலும் நடந்தவைதான். நவீன தொழில்நுட்பம் வளர்ந்ததை அடுத்து செல்ஃபோன் வழியாக எதிர்க்கட்சிகளையும், தனது அரசை விமர்சிப்பவர்களையும் துல்லியமாக உளவு பார்த்துள்ளது பா.ஜ.க அரசு. புதிய விசயம் என்னவென்றால், இதுவரை சொந்த நாட்டு மக்களை அந்தந்த நாட்டு அரசுகளே உளவு பார்த்துதான் வரலாறு. ‘தேச பக்தி’யை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கும் பா.ஜ.க-வோ அந்நியக் கம்பெனி மூலம் சொந்த நாட்டு மக்களை உளவு பார்த்து, ‘தேச பக்தி’யில் புதிய உச்சத்தைத் தொட்டுவிட்டது.
விவாதங்கள் நடத்தாமல் நாடாளுமன்றத்தைச் செயலிழக்கச் செய்வதை தனது மரபாகவே கொண்டுள்ள பா.ஜ.க-வுக்கும் பிழைப்புவாத எதிர்க்கட்சிகளுக்கும் இந்த பெகாசஸ் பிரச்சனை நல்வாய்ப்பாக அமைந்துவிட்டது. ஜூலை 20−ம் தேதி முதல் பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தபோதிலும், அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். இதைக்காட்டி, ‘‘பாருங்கள், எதிர்கட்சிகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தை இழிபடுத்துகிறார்கள்’’ என்று நரித்தனமாகப் பிரச்சாரம் செய்து தன்னை ஜனநாயகக் காவலனாகக் காட்டிக் கொண்டது, பா.ஜ.க.
அரசின் மீதான விமர்சனங்களை விவாதிக்க அனுமதி மறுப்பது, எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுவதற்கு அனுமதி மறுப்பது, ‘‘கூச்சல் போடுகிறார்கள்’’ என்று சொல்லி எதிர்க்கட்சியினரை அவையிலிருந்து வெளியேற்றுவது, எதிர்க்கட்சிகளின் கருத்துகளை விவாதக் குறிப்பில் இருந்து நீக்குவது, தொடர்ந்து அவையை ஒத்திவைப்பது, பிரதமரும் உள்துறை அமைச்சரும் அவைக்கு வராமல் நாடாளுமன்றத்தை அவமதிப்பது − என பாசிஸ்டு கட்சிக்கே உரித்தான வகையில் நாடாளுமன்றத்தை நடத்தியது பா.ஜ.க.
திரிணாமுல் காங்கிரசு எம்.பி−க்கள் ஐந்து பேரை நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்தது, விவாதிக்கும் உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து தொடர்ந்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகளை ‘‘நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை’’க் கெடுத்துவிட்டார்கள், ‘‘நாடாளுமன்றத்தின் மாண்பு’’ பறிபோய்விட்டது என்று குறை கூறியது, மாநிலங்களவையின் சபாநாகர் வெங்கையா நாயுடு நாடாளுமன்றத்திலேயே கண்ணீர் விட்டு அழுதது − என நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கியது மட்டுமல்ல; கேள்வி கேட்கும் அடிப்படை உரிமையையே கேலிக்கூத்தாக்கி எதிர்க்கட்சிகளை எள்ளி நகையாடியது மோடி − அமித்ஷா கும்பல்.
அத்தனை அயோக்கியத்தனங்களையும் அராஜகங்களையும் தானே செய்துவிட்டு, இறுதியில், நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற வேண்டிய இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென நாடாளுமன்றக் கூட்டத் தொடரை முடித்துவிட்டதாக மோடி அரசு அறிவித்தது.
இந்திய ஜனநாயகத்தில் இன்னமும் நிலவுவதாகச் சொல்லப்படும் நாடாளுமன்ற ‘விவாதச் சுதந்திரமும்’ நிராகரிக்கப்பட்டுவிட்டதன் மூலம் ‘‘ஜனநாயகம் செத்துவிட்டது’’ என்று சொல்லி எதிர்க்கட்சிகள் புலம்புவதைத் தவிர வேறெதுவும் செய்ய இயலாமல் முடங்கிவிட்டன. இந்நிலையில், நாடாளுமன்றத்தைவிட்டு வெளியேற மறுத்து தர்ணா போராட்டத்தில் இறங்கிய எதிர்க்கட்சிகளை நாடாளுமன்ற அவைக் காவலர்களைக் கொண்டு வெளியேற்றாமல், வெளியாட்களைக் கொண்டு வெளியேற்றி, எதிர்க்கட்சிகளையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் மேலும் கேலிக்குரியதாக்கியது, மோடி அரசு.
படிக்க :
பெகாசஸ் : ‘ஜனநாயகக்’ கட்டமைப்பை உளவு பார்க்கும் இந்து ராஷ்டிரம் !!
பெகாசஸ் : இந்தியாவில் யாரெல்லாம் உளவு பார்க்கப்பட்டார்கள் ?
இறுதிவரை, தாங்கள் எழுப்பிய எந்தப் பிரச்சனையையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க இயலாத எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து டெல்லியில் பேரணி சென்ற அவலக் காட்சி நடந்தேறியது. இந்த பேரணியில், ‘‘நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நிறைவடைந்துவிட்டது; ஆனால், நாட்டிலுள்ள 60 சதவிகித மக்களின் நலன்களுக்காக இந்தக் கூட்டத் தொடர் நடைபெறவில்லை; நாடாளுமன்றத்திற்குள் பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை; இதன் மூலமாக மிகப்பெரும் ஜனநாயகப் படுகொலையை மத்திய அரசு நடத்தியுள்ளது’’ என்று காங்கிரசு கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஒப்பாரி வைத்தார்.
‘‘இந்த நாடு தங்களைக் கைவிட்டுவிட்டது என்ற உண்மையை எதிர்க்கட்சிகளால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை. இக்கூட்டத் தொடரில், தெருக்களிலிருந்து நாடாளுமன்றத்துக்கு அராஜகத்தைக் கொண்டுவருவதே எதிர்க்கட்சிகளின் ஒரே செயல்திட்டமாக இருந்தது’’, ‘‘மழைக்காலக் கூட்டத் தொடரில் நடந்த சம்பவங்களுக்காக நாட்டு மக்களிடம் எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார் பா.ஜ.க-வைச் சேர்ந்த பியூஸ் கோயல். மத்திய அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவைச் சந்தித்து, எதிர்க்கட்சிகள் மீது புகார் கொடுத்த நாடகமும் அரங்கேறியது.
தற்போது நாடாளுமன்றத்தில் நடந்து முடிந்த இந்த ‘ஜனநாயகப் படுகொலை’யை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழக சட்டமன்றக் கூட்டங்களை, 110 விதியின் கீழ் அறிக்கை வாசிக்கும் கூட்டமாகவும் ஜெயலலிதாவின் புகழ்பாடும் கூட்டமாகவும் மாற்றப்பட்டிருந்த வரலாறை நமக்கு நினைவுபடுத்துகிறது.
000
அரசாங்கத்தின் செயல்பாடுகள் மீதான விவாதம் மற்றும் சட்டமியற்றுதல் ஆகிய இரண்டு கடமைகள் நாடாளுமன்றத்திற்குரிய சில முக்கிய கடமைகளாகும். இவற்றில் முதல் கடமையாகிய அரசாங்கத்தின் செயல்பாடுகளை விவாதிக்க அனுமதிக்கப்படவில்லை; அதேசமயம், நாடாளுமன்றக் குழுக்களின் கருத்துகளோ, விமர்சனங்களோ, சோதனையோ இல்லாமலேயே நடப்புக் கூட்டத்தொடரில் 19 மசோதாக்கள் அவசரமாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
சாராசரியாக ஒவ்வொரு சட்ட மசோதாவும் 34 நிமிடங்களில் விவாதங்களே இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளன. முக்கியமாக, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலகங்களைப் பற்றிய புதிய திவால் சட்டத் திருத்த மசோதா 2021 (Insolvency and Bankruptcy Code (Amendment) Bill, 2021) ஐந்தே நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மோசடி ஜனநாயகத்தை, ‘‘இந்தியா − செயல்படாத நாடாளுமன்றத்தைக் கொண்டுள்ள நாடாளுமன்ற ஜனநாயகம்’’ என்று முதலாளித்துவ ஊடகங்களே எள்ளி நகையாடுகின்றன. உச்சநீதிமன்ற நீதிபதியோ, ‘‘விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் இயற்றப்படுவது நாட்டிற்கு நல்லதல்ல’’ என்று புலம்பியிருக்கிறார். ‘‘மோடி − அமித்ஷா−வின் கொடூர அரசாங்கம்’’, ‘‘பாசிசம்’’ என்று குற்றஞ்சாட்டுகிறார் திரிணாமுல் காங்கிரசின் எம்.பி ஒருவர்.
நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் சட்டங்கள், திட்டங்களை விவாதத்தின் மூலம் பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்தியே நிறைவேற்ற வேண்டும் என்ற அரசியல் சாசனத்தின் அடிப்படையில்தான் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் இயங்கி வருகிறது. ஆனால், அப்படிப்பட்டதொரு நிகழ்வே இல்லையென்றால், இது ஜனநாயகமா என்று கேள்வி எழுப்புகின்றனர், சில அறிவுத்துறையினர்.
இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று நேர்ந்துள்ள இந்தப் பரிதாபகரமான நிலைமையைக் கண்டு வேதனையடையும் சிலர், சரியான கட்சி ஆட்சிக்கு வந்தால் இதனை மீட்டுவிடலாம் என்று கனவும் காண்கிறார்கள். ‘‘அரசியல் சாசனத்தைக் காப்போம், ஜனநாயகத்தைக் காப்போம்” என்றும் முழங்குகிறார்கள். ஆனால், இது செத்தவன் கையில் வெற்றிலையைக் கொடுத்த கதைதான்.
000
முதலாளித்துவ நாடாளுமன்றத்தை ‘‘அரட்டை மடம்’’ என்று கேலி செய்வார் லெனின். ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு விமர்சிக்கவும் விவாதிக்கவும் கூட வாய்ப்புத் தராமல், தான் வகுத்துக் கொண்ட விதியின்படியே கூட இயங்க முடியாமல், அனைத்தையும் அவிழ்த்துவிட்ட அம்மண நிலைக்குச் சென்றுவிட்டது, இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம். 1992−ல் தனியார்மயம் − தாராளமயம் − உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கம் நடைமுறைக்கு வரும் முன்னர் நாடாளுமன்றத்தில் அடிதடிகளும் வேட்டிகளை கிழித்த கதைகளும் ஏராளமாக நடந்துள்ளன. முந்தைய காலங்களில், தங்களது பிழைப்புவாத நோக்கங்களுக்காகவும் ஆளுங்கட்சியினரின் சர்வாதிகாரப் போக்கினாலும் நாடாளுமன்ற அராஜகங்கள் அரங்கேறி வந்தன. ஆனால், தனியார்மய − தாராளமயமாக்கலுக்குப் பின்னர் நடந்துவரும் நாடாளுமன்ற அராஜகங்களுக்கு ஒரு தனி இயல்பு உள்ளது.
தனியார்மய − தாராளமயம் என்பது வெறும் பொருளாதார ஆதிக்க கொள்கை மட்டுமல்ல; அரசியல், சமுதாயம், பண்பாடு − என அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துவதற்கான கொள்கையுமாகும். இந்த மறுகாலனியாதிக்கக் கொள்கை தன்னளவிலேயே ஆகப் பிற்போக்கான, ஆக மிகக் கொடுங்கோன்மையான பாசிசத் தன்மை கொண்டது. இந்த கொள்கை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதே ‘‘மக்கள் நல அரசு’’ என்ற பெயரில் திரைமறைவில் நடந்துவந்த ஆளும் வர்க்கச் சேவைக்கு பதிலாக, நேரடியான கார்ப்பரேட் பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்காகத்தான்; அதற்குத் தடையாக உள்ள அனைத்து பழைய பெயரளவிலான ஜனநாயக நடைமுறைகளையும் ஒழித்துக் கட்டுவதுதான். இந்தப்போக்கு 1990−களிலேயே தொடங்கிவிட்டது.
கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர், சாலை, இருப்பிடம் போன்ற எந்த அடிப்படை உரிமைகளையும் உழைக்கும் மக்களுக்கு ஏற்படுத்தித் தருவது அரசின் பொறுப்பல்ல; மக்கள் நலத் திட்டங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் படிப்படியாக வெட்டப்பட வேண்டும்; முதலாளிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்ற லைசன்ஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியத்தை ஒழித்துக்கட்டி, உள்நாட்டு − பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கும் புரோக்கர்களாக மட்டுமே அரசாங்கம் செயல்பட வேண்டும் என்பதுதான் மறுகாலனியாதிக்கத்தின் கொள்கை.
இதனடிப்படையில், புதிய கல்விக் கொள்கை, ஜி.எஸ்.டி., தேசிய நீர்க்கொள்கை, தேசிய சுற்றுச்சூழல் சட்டத் திருத்தம், தொழிலாளர் சட்டத் திருத்தம், மூன்று வேளாண் சட்டங்கள், நீட் தேர்வு, புதிய மருத்துவக் கொள்கை, டி.ஏன்.ஏ சட்டத் திருத்தம், ஊ.பா போன்ற கருப்புச் சட்டங்கள், ஆதார், பண மதிப்பிழப்பு நடவடிக்கை − என பா.ஜ.க அரசும், அதற்கு முந்தைய காங்கிரசு அரசும் கொண்டுவந்த சட்டங்கள் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை அனைத்து துறைகளிலும் நிறுவுவதாகவும், அரசியல் சாசனம் மக்களுக்கும் மாநில அரசுகளுக்கும் வழங்கி வந்த உரிமைகள் அனைத்தையும் பறிக்கும் நடவடிக்கைகளாகவுமே அமைந்துள்ளன.
மத்திய அரசு நினைத்தால் மாநில அரசுகளின் உரிமைகளை ஒழித்துக் கட்டமுடியும் என்பதையும், சொல்லிக்கொள்ளப்படும் ‘‘கூட்டாட்சி தத்துவம்’’ என்பது ஒரு வெங்காயமும் இல்லை என்பதையும் இந்த நிகழ்வுகள் நமக்கு உணர்த்தின.
முப்படை தளபதிகளும் கூட்டுச்சேர முடியாது, இது இந்திய ஜனநாயகத்தின் சிறப்பு என்றெல்லாம் தாராளவாதிகள் பெருமை பீற்றிக் கொண்டனர். ஆனால், முப்படைகளையும் இணைத்து இராணுவ ஜெனரல் என்ற ஒரு புதிய அதிகாரத்தை மோடி அரசு உருவாக்கியபோது இவர்கள் வாயடைத்து போனார்கள்.
இதுமட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்தைத் திட்டமிடும் தேசிய திட்டக் கமிஷன் கலைக்கப்பட்டு தனியார்மய − தாரளமய − உலகமயக் கொள்கைகளை நேரடியாகவே நடைமுறைப்படுத்துவதற்கான நிதி ஆயோக் நிறுவப்பட்டது. நாட்டின் பொருளாதார நிலைமையைத் துல்லியமாக அறிந்து கொள்ளும் புள்ளியல் துறை செயலிழக்கப்பட்டு ஒழிக்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்றத்திற்கு இருந்த பல அதிகாரங்கள் கார்ப்பரேட் அதிபர்களையும் அதிகாரிகளையும் கொண்ட ஆணையங்களுக்கும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் பங்கிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பெட்ரோல் − டீசல் விலையைத் தீர்மானிப்பது முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலையை நிர்ணயிப்பது வரை அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களால் அன்றாடம் மேற்கொள்ளப்படுகின்றன. எந்தத் தொழிலுக்கான விதிமுறைகளையும் இனி கார்ப்பரேட்டுகளே வகுத்துக் கொள்ளும் வகையில் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் எல்லாம் பறிக்கப்பட்டு, ஆணையங்களிடம் வழங்கப்பட்டுவிட்டன.
இந்த ஆணையங்களை அதிகாரிகள், கார்ப்பரேட் நிறுவன அதிபர்கள் கொண்ட ஒரு கும்பல் கட்டுப்படுத்துகின்றன. இந்த ஆணையங்களின் தலைவர்களைப் பிரதமரின் அலுவலகம் கட்டுப்படுத்துகின்றது. இவற்றின் அதிகாரத்தில் நாடாளுமன்றமோ, இந்த நாட்டின் நீதிமன்றமோ தலையிடமுடியாத வகையில் கிட்டத்தட்ட வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஒரு பாசிச அரசு உருவாகி வருகிறது.
தன்னாட்சி கொண்ட நிறுவனங்கள் என்று சொல்லப்பட்ட தேர்தல் கமிசன், ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ, உயர் கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் முக்கியமான அதிகாரங்கள் பறிக்கப்பட்டுவிட்டன. ஒன்றிய அரசு நினைத்தால் எந்த நேரத்திலும் ரிசர்வ் வங்கியின் நிதியை எடுத்துக் கொள்ளலாம் என்ற அளவிற்கு இன்று நிலைமை மாறியுள்ளது. தேர்தல் கமிசனோ, மோடி அரசுக்கு ஐந்தாம் படையாகவே வேலை செய்கிறது. இவை மட்டுமின்றி, உயர்கல்வி நிறுவனங்கள், அரசின் கலாச்சார நிறுவனங்கள், தணிக்கை நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் விசுவாசிகள் திட்டமிட்டே நுழைக்கப்பட்டுள்ளனர்.
படிக்க :
விரைவில் சி.ஏ.ஏ. சட்டங்களை அமல்படுத்தப் போவதாக அமித்ஷா பேச்சு
பொது சுகாதாரக் கட்டமைப்பை ஒழிக்கும் மோடி அரசின் கார்ப்பரேட் கொள்கை !
மொத்தத்தில், பீற்றிக்கொள்ளப்பட்ட இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அனைத்து அங்கங்களும் வெட்டிச் சிதைக்கப்பட்டுவிட்டன. அதன் உச்சமாக நாடாளுமன்ற ‘‘விமர்சன சுதந்திரம்’’ அடைந்திருக்கும் பரிதாப நிலையைத்தான் மேலே விளக்கியுள்ளோம்.
இறுதியாக, உளுத்துப்போன குட்டிச்சுவராக காட்சியளிக்கும் இந்த நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடையாளமாக உள்ள கட்டிடத்தையும் மோடி − அமித்ஷா கும்பல் விட்டுவைப்பதாக இல்லை. இந்தப் பழைய கட்டிடத்திற்கு பதிலாக, ரூ.20,000 கோடி செலவில் சென்ட்ரல் விஸ்தா என்ற புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டியமைத்து வருகிறது.
1925−ம் ஆண்டில் உருவான ஆர்.எஸ்.எஸ்−ன் நூற்றாண்டு நெருங்கி வருகிறது. அயோத்தியில் கட்டப்படும் இராமர் கோவிலுக்கான பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்து ராஷ்டிரத்தின் அங்கமாக புதிய நாடாளுமன்றக் கட்டிடமும் அமையும் என்று நாம் எதிர்பார்க்கலாம். அதுவே, இந்துராஷ்டிரம் தொடங்குவதை அறிவிப்பதாகவும் அமையலாம் !

புதிய ஜனநாயகம்