Thursday, June 26, 2025
முகப்பு பதிவு பக்கம் 225

கோட்பாட்டில் ஊன்றி நிற்போம் ! கோட்பாடற்றவற்றை விட்டுக்கொடுப்போம் !

உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 9

பாகம் – 8

கோட்பாடு என்றால் என்ன ?

தத்துவத்தின் கோணத்திலிருந்து மட்டுமே அதை அணுகுவதென்றால், விசயங்களின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் பொது விதியே, கோட்பாடு என பொருள்படும். குறிப்பிட்ட விசயங்களை குறிப்பிட்ட வளர்ச்சி விதிகள் நிர்ணயிக்கின்றன. ஒரே மாதிரியான விசயங்கள் ஒட்டு மொத்தத்தில் ஒரே விதமான வளர்ச்சி விதிகளால்தான் நிர்ணயிக்கப்படுகின்றன;

கோட்பாடு என்னும் விசயத்தை நாங்கள் எப்படி பொருள்படுத்துகிறோம் என்றால், விசயங்களின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் பொதுவான விதிகளின் அடிப்படையில் பிரச்சினைகளை அணுகவும் ஆராயவும் நாம் கையாளும் முறையென்று அணுகுகிறோம். பிரச்சினைகளின் பரிசீலனை, ஆராய்ச்சி ஆகியவற்றை நிர்ணயிக்கும் பொது விதி தவறாக இருக்குமேயானால், நமது நிலை, கண்ணோட்டம், முறை முதலியன தவறாக இருக்குமேயானால், பிரச்சினையை பரிசீலிப்பதிலும், ஆராய்வதிலும் பிழை நிச்சயம் ஏற்படத்தான் செய்யும். சில பிரச்சினைகளின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் விதிகளை நாம் தவறாகப் புரிந்து கொண்டோமேயானால், பின் அந்தப் பிரச்சினையை ஆராய்வதற்கு நாம் கையாளும் முறையும் நிச்சயம் தவறாகத்தானிருக்கும். அதனால் நாம் கோட்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சினையை லேசாக மதிப்பிடக்கூடாது. கோட்பாட்டில் பிழை ஏற்படுமானால், பின் தனிப்பட்ட தவறுகள் மட்டுமின்றி, முறைப்படி, தீராத தன்மை கொண்ட, தொடர்ச்சியாகப் பல நடைமுறை பிரச்சினைகளை பாதிக்கும் தவறுகள் நேரும்.

கோட்பாடு சம்பந்தப்படாத நிகழ்கால கொள்கை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என்ன? முற்றிலும் நடைமுறை தன்மைபடைத்த பிரச்சினைகள் என்ன?

இந்த பிரச்சினைகள் பெரும்பாலும் தனிப்பட்ட பிரச்சினைகளாக, தினசரி அலுவல் அன்றாட வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஆகும். உதாரணமாக, மக்களைத் திரட்டுவது, அமைப்பு ரீதியாக ஒன்றுபடுத்துவது என்பது கோட்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சினை; இதில் நமக்குள் யாருக்கும் வேறுபாடில்லை; மக்களைத் திரட்டுவது, அமைப்பு ரீதியாகச் ஒன்றுபடுத்துவது என்னும் பணியில் விசேச கவனம் செலுத்தப்பட வேண்டும். பொதுமக்கள் அமைப்புகள் அதற்கு தலைமை கொடுக்க வேண்டும். இத்தகைய பணியில் இராணுவமும் உதவிபுரிய வேண்டும்; தனது பங்கை செலுத்த வேண்டும்; இவை எல்லாம் கோட்பாடு சம்பந்தமான பிரச்சினைகள்; இதில் நமக்குள் யாருக்கும் அபிப்பிராய பேதமில்லை; அதாவது கோட்பாடு சம்பந்தமாக நமக்குள் மாறுபாடான அபிப்பிராயபேதமில்லை.

ஆனால் சில தோழர்கள் மக்கள் போக்குவரத்து படையும், இராணுவத்தின் மக்கள் போக்குவரத்து இலாகாவும் தற்காலிகமாக கலைக்கப்பட வேண்டுமென்றும், அவர்கள் பொதுமக்கள் அமைப்புகளில் வேலை செய்வதற்கு அனுப்பப்பட வேண்டுமென்றும் அபிப்பிராயங் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில தோழர்கள் மக்கள் போக்குவரத்து கோஷ்டி கலைக்கப்படக் கூடாது என்று கருத்துக் கொண்டிருக்கிறார்கள்; சில தோழர்கள் ஒரு பொதுமக்கள் அமைப்பு நான்கு இலாக்காக்களாகப் பிரிக்கப்பட வேண்டுமென்று யோசனை கூறுகிறார்கள்; மற்றவர்கள் அதை ஐந்தாகப் பிரிக்க வேண்டுமென்கிறார்கள். இந்தப் பிரச்சினைகள் எல்லாம் முற்றிலும் நடைமுறைத் தன்மை படைத்த பிரச்சினைகளேயாகும். அவை ஒன்றும் கோட்பாடு சம்பந்தமான பிரச்சினையன்று.

இன்னுமொரு உதாரணம்: இன்று எதிரியின் பின்னணியில், நமது எதிர்ப்பு யுத்தத்தின் போர்த்தந்திரக் கோட்பாடு, பிரிந்த கொரில்லா யுத்த போர்த்தந்திரமாகும். இந்த விசயத்தில் நமக்குள் அபிப்பிராய வேறுபாடு இல்லையென்றால், அதன் பொருள் போர்த்தந்திரம் பற்றிய கோட்பாட்டில் நமக்குள் அபிப்பிராய பேதமில்லை என்பதேயாகும். ஒரு குறிப்பிட்ட தளபதி, நிலைமையின் நிர்ப்பந்தத்தினால் உந்தப்பட்டு, அல்லது சாதகமான விசேஷ வாய்ப்புகள் காரணமாக அணிவகுத்த யுத்தபோர் நடத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம்; அது வெற்றி அடையலாம் அல்லது தோல்வியிலும் முடியலாம். இது தனிப்பட்ட நடைமுறை பிரச்சினை; இதற்கும் கோட்பாடு பிரச்சினைக்கும் சம்பந்தம் ஒன்றுமில்லை; இம்மாதிரி நடத்தப்படும் போர்கள் ஓரிரண்டு தவறாகவே இருந்தபோதிலும்; இத்தவறுகள் அப்பொழுதும் தனிப்பட்ட தவறுகளேயாகும்;

தளபதி, எதிரியின் அணிகளுக்குப் பின்னால் அணி வகுத்த யுத்தம் நடத்த வேண்டுமென்பதை ஒரு கோட்பாடாகக் கொள்ளாத வரையில் அது தனிப்பட்ட தவறுதானாகும். ஒருவேளை குறிப்பான ஒரு நிலையின் காரணமாக, நன்றாக போராடவும் கூடும். அதனால் இம்மாதிரியான தனிப்பட்ட, முற்றிலும் நடைமுறைத் தன்மை கொண்ட பிரச்சினைகளில் நாம், நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று அடம்பிடித்துக் கொண்டும் ஒரு முடிவில்லாத முறையில் வாதித்துக் கொண்டும் இருக்கக் கூடாது.

மற்றொரு உதாரணம் : நமது ராணுவம், இன்றுள்ள தயாரிப்புடன் விரோதியின் பலமான ஸ்தானங்களையும், பிரதான நகரங்களையும் கோட்பாட்டின்படியே தாக்கக்கூடாது. இந்த கோட்பாடு பற்றி நமக்கு மாறுபட்ட அபிப்பிராயங்கள் இல்லையென்றால் விசேஷ நிலைமையை உத்தேசித்து அல்லது விசேஷ அவசியத்தினால் ஒரு முன்னேறிய தாக்குதல் தொடுத்தாலும், எதிரியின் ஒரு ஸ்தானத்தையோ அல்லது நகரத்தையோ கைப்பற்றினாலும், அது கோட்பாடு சம்பந்தப்படாத தனிப்பட்ட நடைமுறை பிரச்சினையேயாகும்.

ஆயினும் இந்த பலமான ஸ்தானத்தை, அந்த நகரத்தை பிடித்து விட்டோம், ஆதலின் விரோதியின் எல்லா பலம் பொருந்திய ஸ்தானங்களையும், நகரங்களையும் உடனே தாக்கத் தொடங்குவோம் என்றால், இங்கு கோட்பாட்டு பிரச்சினை எழுகிறது. உள்நாட்டு யுத்தகால கட்டத்தில் பெரிய நகரங்களின் மீது தாக்குதல்கள் தொடுக்க வேண்டுமென்று நமது தோழர்கள் சிலர் வாதித்தார்கள்; சில பெரிய நகரங்களை தாக்கும்படி செஞ்சேனையை கட்டளையிட்டார்கள்; இத்தகைய நடைமுறைப் பிரச்சினைகள் கோட்பாடு சம்பந்தப்பட்டதாகும்; ஏனெனில் பெரிய நகரங்களை செஞ்சேனை தாக்க வேண்டு மென்னும் கோட்பாட்டில் உள்ள பிடிப்பினால் உந்தப்பட்டுத்தான் பெரிய நகரங்களைத் தாக்கியுள்ளனர். கோட்பாடு சம்பந்தப்பட்ட இத்தகைய நடைமுறைப் பிரச்சினையில், கோட்பாடு சம்பந்தமாக நாம் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. கோட்பாட்டில் இன்னும் பெரிய நகரங்கள் மீது முன்னேறி தாக்குதல்கள் தொடுக்க கூடாது என்றுதான் நிற்க வேண்டும்.

ஸ்தூலமான நடைமுறைப் பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் பல்வேறு பரிகாரங்கள் இருக்கும். ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் போவதற்கு பெரும்பாலும் யதார்த்தத்தில் சாத்தியமான பல்வேறு பாதைகளிருக்கும். இந்தப் பரிகாரங்களும், பாதைகளும், அந்த சமயத்தில் நம்மை எதிர்நோக்கும் நிலைமைக்குத் தக்கவாறு ஒவ்வொன்றும் அதனதன் சாதகபாதக அம்சங்களைக் கொண்டிருக்கும். சில வழிகளும், பாதைகளும் நமக்கு மிகவும் சாதகமாக இருக்கக் கூடும்; ஆனால் அதே சமயத்தில் அபாயம் நிறைந்ததாயிருக்கும். அதனால் பாதுகாப்பை உத்தேசித்து அதைக் காட்டிலும் குறைந்த அளவுக்கே சாதகமாகவுள்ள வழியையோ, அல்லது பாதையையோ நாம் பின்பற்றுவது உசிதமாக இருக்கும்.

அதனால் இத்தகைய ஸ்தூலமான, முற்றிலும் நடைமுறைத் தன்மை கொண்ட பிரச்சினைகளில், மாறுபட்ட அபிப்பிராயங்கள் எழுந்தால், அவ்வபிப்பிராயங்கள் கோட்பாடு சம்பந்தப்பட்டவையல்லாத வரையில், சமரசம் செய்து கொள்வதற்கும், விட்டுக் கொடுப்பதற்கும், மற்றவர்களுடைய அபிப்பிராயத்தை ஏற்றுக் கொள்வதற்கும் நம்மாலியன்றளவுக்கு முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். “சமரசம் செய்து கொள்வதில் உன் ஆற்றலைக் காட்டு ” அப்பொழுது பிரச்சினைகள் சுமுகமாக முடியும்; பிரச்சினைகள் உடனுக்குடன் தீரும். நாம் எப்பொழுதுமே நமது அபிப்பிராயத்தையே வலியுறுத்திக் கொண்டிருக்கக் கூடாது; மற்றவர்களையே விட்டுக் கொடுக்கும்படியும். இணங்கும் படியும் நமது அபிப்பிராயப்படியே காரியங்களைச் செய்யும்படியும் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அப்படிச் செய்தால் பிரச்சினைகள் தீருவதை காலதாமதப்படுத்தியவர்களாவோம்; வேலையின் முன்னேற்றத்தை தடை செய்தவர்களாவோம்; சச்சரவுகளை வலுக்கச் செய்வோம்; கட்சிக்குள் வீண் வம்பளக்கும் போக்கை பலப்படுத்தியவர்களாவோம்; தோழர்களுக்குள் ஒற்றுமைக்கு இடைஞ்சல் செய்தவர்களாவோம். அதனால்தான் முற்றிலும் நடைமுறை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் மாறுபட்ட அபிப்பிராயங் கொண்ட கட்சி அங்கத்தினர்களுடன் சாத்தியமான எல்லா வகையிலும் சமரசம் செய்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது, கோட்பாடு சம்பந்தமில்லாத நிகழ்கால கொள்கை சம்பந்தப்பட்ட கொள்கைப் பிரச்சினைகள் என்ன என்பதும், முற்றிலும் நடைமுறை சம்பந்தமான பிரச்சினைகள் என்ன என்பதும் நமக்குத் தெரியும்; அவை போராட்டத்தின் குறிக்கோள், அக்குறிக்கோளை எய்துவதற்கு உகந்த போராட்ட வடிவம், போர்த்தந்திரம், செயல்தந்திரம், நமது பொதுவான நிலை, குறிப்பான பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட நிலை முதலியவற்றுடன் சம்பந்தப்படாதவை. மேலே கூறியுள்ள உதாரணங்கள் இவ்வகைப்பட்ட பிரச்சினைகளாகும்.

இனி இதுவரை சொன்னதைத் தொகுத்துக் கூறுவோம். கட்சி, தொழிலாளி வர்க்கம் ஆகியவற்றிற்கான போராட்ட நலனை மனதிற்கொண்டே சகல பிரச்சினைகளிலும் ஈடுபட வேண்டுமென்பது நமக்கு வழிகாட்டும் பொதுக் கோட்பாடு. இந்தப் பொதுக் கோட்பாட்டிற்கு எல்லாம் உட்படுத்த வேண்டும். இந்தப் பொதுக் கோட்பாட்டிற்கு முரணான எந்தக் கண்ணோட்டமும், அபிப்பிராயமும், செயலும் எதிர்க்கப்பட வேண்டும். பல்வேறு கோட்பாடுகளும், பெரிய கோட்பாடுகள் எனவும், சிறிய கோட்பாடுகள் எனவும் பாகுபாடு செய்யப்பட்டுள்ளன. பகுதி முழுமைக்குட்பட்டது;

உடனடி அவசியம், நீண்டகால அவசியத்திற்கு உட்பட்டது சிறிய கோட்பாடுகள், பெரிய கோட்பாடுகளுக்கு உட்பட்டவை என்பதே விதி. கோட்பாடு சம்பந்தமான விசயங்களில் எழும் வேற்றுமை விசயத்தில் ஒத்துப் போவது, சமரசம் செய்து கொள்வது என்பதற்கு இடமேயில்லை; ஒருமைப்பாடு ஏற்படுவதற்கு அப்பிரச்சினைகளை பரிபூரணமாக விவாதிக்க வேண்டும். ஆயினும் கோட்பாடு சம்பந்தப்படாத எல்லா பிரச்சினைகளிலும் விடாப்பிடியாக விட்டுக் கொடுக்காமலும் ஒத்துப் போகாமலும் இருக்கக் கூடாது; ரொம்பவும் வன்மையாகப் போராடவும் வாதிக்கவும் கூடாது; இல்லாவிடில் நமது வேலை தடைபடும். ஐக்கியம் சீர்குலையும்.

உட்கட்சிப் போராட்டத்தில் தன்னுடைய அரசியல் கொள்கை “சரியானதாக” இருக்கும் வரையில், சில அமைப்பு தவறுகளை அவர் செய்தால் அதனால் ஒன்றுமில்லை. அல்லது அது இரண்டாந்தர முக்கியத்துவம் கொண்டது தான் என்று ஒரு தோழர் சொல்வதை நான் ஒருமுறை கேள்விப்பட்டேன். அதனால் உட்கட்சிப் போராட்டத்தில் அமைப்புக் கட்டுப்பாட்டிற்கு ஒவ்வாத பல்வேறு வழிகளிலும் தனது எதிரிகளை எதிர்த்துப் போராடுவதற்கு அனுமதியுண்டு என்று அவர் அபிப்பிராயப்படுகிறார். இத்தகைய வாதமும், கண்ணோட்டமும் தவறானது என்று சொல்லத் தேவையில்லை. ஏனெனில் சரியான அரசியல் கொள்கையும், சரியான அமைப்புக் கொள்கையும் ஒன்றுக்கொன்று முரணானது என்று அவர் கருதுகிறார். கட்சிக்குள் ஒழுங்கையும் அமைப்பையும் சீர்குலைப்பது, கோட்பாடு விசயத்தில் பெருந்தவறு இழைப்பதாகும் என்று அவருக்குத் தெரியவில்லை. விசேஷமாக இன்று அது பெருந்தவறாகும். கட்சிக்குள் உள்ள ஐக்கியத்தையும், ஒருமைப்பாட்டையும் பலவீனப்படுத்துவதென்பது எதிரிக்குச் செய்யும் சிறந்த சேவையாகும்; கட்சியின், தொழிலாளி வர்க்கத்தின் நலன்களுக்கு மிகப்பெருந் தீங்கிழைப்பதாகும்; கோட்பாடு சம்பந்தப்பட்ட வேறு எத்தவறைக் காட்டிலும் கடுமையான தவறு செய்ததாகும்.

கோட்பாடு சம்பந்தப்பட்ட இந்த விசயத்திலும் சரி வேறு பல பிரச்சினைகளிலும் சரி, குறிப்பிட்ட காலத்தில் பல்வேறு கோட்பாடு பிரச்சினைகள் கட்சியின் நலனை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்கிற அடிப்படையில் ஒப்பிட்டும், பாகுபாடு படுத்தியும் பார்ப்பதற்கும் தோழர்கள் கூடுமான வரையில் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். பெரிய கோட்பாட்டிற்கு சிறிய கோட்பாடு உட்பட வேண்டும், முழுமைக்கு பகுதி உட்பட வேண்டும். என்னும் விதிப்படி எந்த கோட்பாடுகள் சம்பந்தமாக அடம் பிடிக்கக் கூடாது; தற்காலிகமாக விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும், எந்தக் கோட்பாடு பிரச்சினைகளில் உறுதிகாட்ட வேண்டுமென்றும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்றும் நாம் முடிவு செய்வோம்.

உட்கட்சி ஒருமைப்பாட்டையும், ஐக்கியத்தையும் நிலை நிறுத்துவதற்காக, இந்த அளவுக்கு முக்கியத்துவமோ அல்லது அவசரமோ இல்லாத கோட்பாட்டுப் பிரச்சினைகள் சம்பந்தமாக மாறுபட்ட அபிப்பிராயங் கொண்ட, கட்சியில் உள்ள மற்றவர்களுடன் சில சமயங்களில் தற்காலிகமான  சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கும். அம்மாதிரியான கோட்பாட்டுப் பிரச்சினைகளை தற்காலிகமாக நாம் கிளப்பக்கூடாது. அதன் மீது ஓயாமல் விவாதம் நடத்திக் கொண்டிருக்கக் கூடாது. அதற்குப்பதிலாக அந்தச் சமயத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அவசர பிரச்சினைகளை நாம் வலியுறுத்த வேண்டும். இது கோட்பாட்டில் சமரசம் செய்து கொண்டதாகாது; நடுவாந்திரப் பாதையாகாது; யதார்த்த செயலில் செய்து கொண்ட சமரசமாகும். மெஜாரிட்டி முடிவுக்கு பணிவதேயாகும்.

மேலே கூறியுள்ளவை கட்சிக்குள் உள்ள கோட்பாடற்ற போராட்ட பிரச்சினைகளாகும். உட்கட்சி கோட்பாடற்ற போராட்டமும், யாந்திரீகமான, மிதமிஞ்சிய போராட்டமும் எதிலிருந்து வருகிறது? அதன் தோற்றுவாய்கள் என்ன? பின்வருவனவற்றிலிருந்து அவை உதிக்கின்றன:

முதலாவதாக, கட்சிக்குள் நமது தோழர்களின் தத்துவப் பயிற்சி பொதுவாக மிகக்குறைவாக இருக்கிறது; பலவிதங்களில் அவர்களது அனுபவம் போதுமானதாக இல்லை. நீண்ட காலத்திற்கு பூரா கட்சியின் மத்தியமும், தலைமையும் யதார்த்தத்தில் உருப்பெற வேயில்லை; இன்று வரை பல்வேறு ஸ்தலங்களில் வெகு சில தலைமைகளும், மத்தியங்களும்தான் உருப்பெற்று இருக்கின்றன.

இரண்டாவதாக, கட்சிக்குள் நிறைய குட்டி பூர்ஷ்வா நபர்கள் இருக்கிறார்கள். குட்டி பூர்ஷ்வாவின் வெறி, ஆவேசம், விவசாய குட்டி பூர்ஷ்வாவின் பழிதீர்க்கும் மனோபாவம் முதலியன உட்கட்சிப் போராட்டத்தை பாதித்துக் கொண்டேதானிருக்கின்றன.

மூன்றாவதாக, கட்சிக்குள் நிலவும் ஜனநாயக வாழ்வு அசாதரணமாயிருக்கிறது. பிரச்சினைகளை ஒருவரோடு ஒருவர் யதார்த்த நோக்குடன் விவாதிக்கும் முறை இன்னும் நிலைநாட்டப்படவில்லை; முரட்டுத்தனமாகவும், தன்மனப் பார்வையுடனும் பிரச்சினைகளை ஆராயும், முடிவுகட்டும் முறை பெருமளவுக்கு இன்னும் இருந்து வருகிறது.

நான்காவதாக, சந்தர்ப்பவாதிகள் கட்சிக்குள் ஊடுருவி விட்டார்கள்; நம் தோழர்களில் ஒரு பகுதியினர் உள்ளத்தில் ஒரு சந்தர்ப்பவாத மனோபாவப் போக்கு இருந்து வருகிறது; தாங்கள் எவ்வளவு நல்ல முறையில் “போல்ஷ்விக் ஆகியுள்ளார்” என்பதைக் காட்டுவதற்காக, வலதுசாரியைக் காட்டிலும் “இடதுசாரி” மேலானது என்று எண்ணிக்கொண்டு அவர்கள் பெரும்பாலும் வேண்டுமென்றே “இடதுசாரி”யாக இருப்பதற்கு முயலுகின்றனர். தங்கள் சொந்த கௌரவத்தை உயர்த்தும் பொருட்டுமற்றவர்களைத் தாக்குகிறார்கள்.

ஐந்தாவது ட்ராட்ஸ்கிய துரோகிகளும் எதிர்புரட்சிக்காரர்களும் கட்சிக்குள் ரகசியமாக நுழைந்து விட்டார்கள்; உட்கட்சிப் போராட்டத்தை பயன்படுத்திக் கொண்டு கட்சியை சீர்குலைக்கப் பார்க்கின்றனர். பெரும்பாலும் இந்த ட்ராட்ஸ்கிய துரோகிகள், கட்சிக்கொடியின் மறைவில் சில தோழர்களை வேண்டுமென்றே தாக்குகின்றனர். அதன் பிறகு ஒரு ட்ராட்ஸ்கிய துரோகி தாக்கப்பட்ட தோழரைத் தொடர்பு கொள்வதற்கும், தங்கள் கோஷ்டியில் ஒரு ஒற்றனாக அவரை இழுப்பதற்கும், அனுப்பப்படுவான்.

உட்கட்சிப் போராட்டத்தில் காணப்படும் திரிபுகளின் தோற்றுவாய்கள் இத்தகையவை.

ஆரம்பத்திலிருந்தே நமது கட்சியில் தீவிர சுய விமர்சனமும் , உட்கட்சிப் போராட்டமும் இருந்து வந்திருக்கிறது இது முற்றிலும் அவசியமானது; ரொம்ப நல்லதும் கூட. நமது உட்கட்சிப் போராட்டத்தில் ரொம்ப விசயங்கள் சரியாகவும் பொருத்தமாகவும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதனால் நமது கட்சி, உட்கட்சிப் போராட்டத்தில் பலதும் சாதித்திருக்கிறது; கட்சியின் தத்துவப் பயிற்சி நிலையையும் ஓரளவுக்கு உயர்த்தியிருக்கிறோம். இந்த சுயவிமர்சனங்களும், உட்கட்சிப் போராட்டங்களும்தான் நமது கட்சியை முன்னேற்றப் பாதையில் உந்திச் செல்லும் சக்தியாக விளங்குகின்றன என்பதை மறுக்க முடியாது. கட்சிக்கு அவை இன்றியமையாதவை.

ஆயினும் நமது கட்சியின் நீண்ட சரித்திரப் பூர்வமான வளர்ச்சியில் கடந்தகால உட்கட்சிப் போராட்டம் முறையாக நடத்தப்படவில்லை என்பதையும் மறுக்க முடியாது. அதன் விளைவாக உட்கட்சிப் போராட்டம் பெருஞ்சேதம் உண்டாக்கிற்று. அதனால் இன்று நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், கடந்த கால தவறிலிருந்து நாம் பலன் பெற வேண்டும்; வீணாக நாம் பெரும்நஷ்டம் அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கடந்த கால உட்கட்சிப் போராட்டத்தின் சரித்திரப் பூர்வமான படிப்பினைகளை கற்றறிவதன் மூலம் கட்சியின் மகத்தான முன்னேற்றத்தை நாடவேண்டும்.

உட்கட்சிப் போராட்டத்தில் கூடுதலான சாதனைகளைப் பெறுவதற்கும், குறைந்த நஷ்டத்தில் கட்சியின் அதிகபட்ச முன்னேற்றத்தை சாதிப்பதற்கும் நிற்பதே நிகழ்காலத்திலும் எதிர் காலத்திற்கும் உட்கட்சிப் போராட்டக் கொள்கையாகும். சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் சரித்திரப் பூர்வமான உட்கட்சிப் போராட்டப் படிப்பினைகளை கற்றறிவதன் மூலம் நாம் அதை வகுத்து வைக்கவேண்டும். இதற்கு கடந்தகால உட்கட்சிப் போராட்டத்தில் காணும் பல்வேறு திரிபுகளையும் தவறுகளையும் அறவே சரிப்படுத்தியாக வேண்டும்; உட்கட்சிப் போராட்டத்தை முறையாகவும் பலன் தரும் முறையிலும் நடத்தவேண்டும்.

(தொடரும்)

சூரப்பாவை இடைநீக்கம் செய்வாரா தமிழக ஆளுநர் ?

ண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு வலுவடைந்து, அவர் மீது விசாரணைக் கமிசன் அமைக்கப்பட்ட பின்னரும் கூட அவரை  அதே பதவியில் நீடிக்கச் செய்து அழகுபார்க்கிறது தமிழக அரசு.  எதிர்க்கட்சிகளின் கண்டனம் மற்றும் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவிவரும் #TNgovtDismiss_Surappa டிரெண்டிங்கும் இணைந்து தாக்கம் செலுத்திய பின்னர்தான், விதிமுறைப்படி சூரப்பா இடைநீக்கம் செய்யப்படுவார் என அறிவித்திருக்கிறார் உயர்கல்வி அமைச்சர் அன்பழகன்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த 2018-ம் ஆண்டு சூரப்பா நியமிக்கப்பட்டது முதல், இன்றுவரையில்  மோடி அரசின் கல்வி கார்ப்பரேட்மய காவிமய அஜெண்டாவுக்கு ஏற்ற வகையில் செவ்வனே செயல்பட்டுவந்தார்.

திறமையான பல்வேறு தமிழக பேராசிரியர்களும், கல்வியாளர்களும் இருக்கையில் கர்நாடகாவில் இருந்து ஏன் சூரப்பாவைக் கொண்டுவர வேண்டும் என எதிர்கட்சிகளும் கல்வியாளர்களும் அச்சமயத்தில் கேள்வி எழுப்பினர். அதற்கு அவரது “திறமையையும்”, “நேர்மையையும்” பாராட்டித் துதிபாடி கவர்னர் மாளிகையே அறிக்கை வெளியிட்டது. அந்த அளவிற்கு மத்திய அரசிற்கு நெருக்கமானவர் சூரப்பா .

அந்த ”நேர்மையான”, ”திறமையான” சூரப்பா தான் ரூ. 280 கோடி அளவிலான லஞ்ச, ஊழலில் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாக தற்போது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

அண்ணா பல்கலையின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கான உபகரணங்கள் வாங்குவதில் சுமார் 200 கோடி ஊழல் செய்திருப்பதாக, கடந்த பிப்ரவரி மாதமே வந்த புகாரைக் கடந்த 9 மாதங்களாக கிடப்பில் போட்டுவிட்டு, தற்போது திடீரென விசாரணைக் கமிசன் அமைத்துள்ளது எடப்பாடி அரசு.

மேலும், அண்ணா பல்கலைக்கு தற்காலிக ஆசிரியர் பணிக்கான பேராசிரியர் நியமனத்தில், ஒரு பணி நியமனத்துக்கு ரூ. 13 இலட்சம் முதல் ரூ.15 இலட்சம் வரை நிர்ணயித்து, மொத்தமாக ரூ. 80 கோடி வரை லஞ்சப் பணம் கைமாறியிருப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இந்த இலஞ்சப் புகாரில் அண்ணா பல்கலையின் துணைவேந்தர் சூரப்பா மற்றும் துணை இயக்குனர் சக்திநாதன் ஆகிய இருவரும் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது தமிழக அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், சூரப்பா தனது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி, தனது மகளை அண்ணா  பல்கலைக்கழகத்தில் கவுரவ விரிவுரையாளராக நியமனம் செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைத்து விசாரிக்கவிருப்பதாகத் தெரிவித்தது எடப்பாடி அரசு.

லஞ்ச ஊழல் விவகாரத்தில் விசாரணைக்கு உள்ளாகும் நபர் அதிகாரத்தில் நீடித்தால், விசாரணை நேர்மையாக நடைபெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே.    ஆனாலும் சூரப்பாவையோ, சக்தி நாதனையோ அதே பதவியில் அமர்த்தி அழகுபார்த்துக் கொண்டிருந்தது எடப்பாடி அரசு.

படிக்க :
♦ பொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் !
♦ அண்ணா பல்கலைக்கழகம் : உயர் சிறப்புத் தகுதியா ? மாநில உரிமை பறிப்பா ? | EBook Download

இதனைக் கண்டித்து திமுக, சிபிஐ, விசிக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அனைத்தும் கண்டன அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் சூரப்பாவை பதவி நீக்கம் செய் ( #TNgovtDismiss_Surappa ) என வலைஞர்கள் ட்ரெண்டிங் செய்யத் துவங்கிவிட்டனர்.

புறச்சூழலில் இப்படி ஒரு நெருக்கடி வரத் துவங்கியதும்தான் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சூரப்பா மீதான நடவடிக்கை குறித்து வாய் திறந்துள்ளார். “விதிகளுக்கு உட்பட்டு அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார் அன்பழகன். அதாவது ஆளுநர் இடைநீக்க உத்தரவுக்கு ஒப்புதல் அளித்தால்தான் இடைநீக்கம் செய்ய முடியும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் அன்பழகன்.

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மிகவும் திமிரோடு பதிலளித்துள்ளார் சூரப்பா. தன் மீதான ஊழல் புகார் குறித்துப் பதிலளிக்கையில், இவ்வளவு பெரிய தொகைக்கு அவர்கள் எங்கிருந்து வந்தடைந்தனர் என்பது தெரியவில்லை என்றும், தமிழக அரசின் விசாரணை குறித்துக் கவலை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது மகளுக்கு அண்ணா பல்கலையில் கவுரவ விரிவுரையாளர் பணி வழங்கியது தொடர்பான குற்றச்சாட்டு குறித்துப் பேசுகையில், தனது மகளின் சேவை அண்ணா பல்கலைக்குத் தேவை என்பதால்தான் பதவியில் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், “ பணி நியமனங்களுக்கு பணம் வாங்கியிருந்தால் ஆதாரத்தை காட்டட்டும்” என்றும், ”என் மீதான புகார்கள் எனக்கே ஆச்சரியம் தருகின்றன. எனது பதவிக்காலத்தில் நேர்மையை கடைபிடித்துள்ளேன்” என்றும் தெரிவித்துள்ளார் சூரப்பா.

சூரப்பா ஒருவேளை நேர்மையாளராக இருந்திருக்கலாம், ஆனால் யாருக்கு நேர்மையாக இருந்தார் என்பதுதான் கேள்வி ?

பஞ்சாப் ஐ.ஐ.டியில் இயக்குனராகப் பணியாற்றிய காலத்தில் சூரப்பா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஐ.ஐ.டி-க்கான புதிய கட்டிடங்கள் கட்ட ஒதுக்கப்பட்ட ரூ. 750 கோடியை முதல் ஐந்தாண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டு, கடைசி ஆண்டில் செய்ததன் காரணமாக அந்தக் கட்டுமானச் செலவு ரூ.1958 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதற்கு அன்றைய இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் கண்டனம் தெரிவித்திருப்பதாகவும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சூரப்பாவின் நியமனத்தின் போதே தெரிவித்துள்ளார்.

மேலும் பிற ஆராய்ச்சி நிறுவனங்களின் கண்டுபிடிப்பை தமது கண்டுபிடிப்பாகக் காட்டியது உள்ளிட்ட பல்வேறு குற்றசாட்டுகள் சூரப்பா மீது இருந்ததை  ராமதாஸ் சுட்டிக் காட்டியிருந்தார்.

ரூ. 750 கோடி செலவில் முடிக்க வேண்டியதை 1958 கோடிக்கு உயர்த்தியதன் பின்னணியில் என்ன நேர்மை இருந்திருக்க முடியும் ? ஒருவேளை சூரப்பா இப்போது கேட்பது போல அப்போதும் “ஆதாரம் இருந்தால் காட்டமுடியுமா?” என்று கேட்டு தனது நேர்மையை “காப்பாற்றியிருக்கலாம்” !

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், அண்ணா பல்கலை ஆசிரியர் கூட்டமைப்பு முதல்வரின் தனிப் பிரிவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சூரப்பா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறது.

கொரோனாவை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகளை ரத்து செய்துள்ள சூழலில், தேர்வுக் கட்டணமாக ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்ய உத்தரவிட்டிருக்கிறார் சூரப்பா. ஆய்வே நடத்தாமல் 8000 ஆய்வு மாணவர்களிடமிருந்து செமஸ்டர்கட்டணம் வசூலித்ததாகவும் சூரப்பாவைக் குற்றம்சாட்டியிருக்கிறது ஆசிரியர் கூட்டமைப்பு.

படிக்க :
♦ அண்ணா பல்கலை : மாணவர்களின் படிப்பை பாழாக்கும் புதிய தேர்வு முறையை இரத்து செய் !
♦ அண்ணா பல்கலையின் மோசடிப் பட்டம் : ஆளுநர் அலுவலக முற்றுகை !

அதே போல, உயர் சிறப்புத் தகுதி கொண்ட கல்வி நிறுவனமாக, அண்ணா பல்கலையை உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ள விவகாரத்தில்,  தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் சூரப்பா. அக்கடித்தில், மாநில அரசினுடைய நிதிப் பங்கீடு இல்லாமலேயே தம்மால் ஐந்தாண்டுகளில் ரூ.1500 கோடி திரட்ட முடியும் என்றும், அண்ணா பல்கலைக்கு உயர் சிறப்புத் தகுதி வழங்கும்படியும் எழுதியுள்ளார்.

ஒரு மாநில அரசால் உருவாக்கப்பட்டு, அதன் கீழ் செயல்பட்டுவரும் ஒரு பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகத்தின், தலையெழுத்தை எங்கிருந்தோ கொண்டுவரப்பட்டு நியமிக்கப்பட்ட ஒரு துணைவேந்தர் தன்னிச்சையாக முடிவு செய்கிறார் என்றால், அதற்குக் கண்டிப்பாக பின்னணியில் ஒரு சித்தாந்தமும், நோக்கமும் இருக்க வேண்டும்.

மாநில அரசின் நிதியில்லாமல், அண்ணா பல்கலையின் நிதியை தாமாகத் திரட்டுவது என்றால், சூரப்பாவால் நோட்டு அச்சடித்தா விட முடியும் ? மாணவர்களிடமிருந்து கல்விக்கட்டணமாகத்தான் கறக்க முடியும். கல்விக் கட்டணத்தை உயர்த்துவதன் மூலம், அண்ணா பல்கலைக்கழகம் போன்ற உயர் சிறப்புக் கல்விநிறுவனத்தில் இனி சாதாரண ஏழை, நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்களை சேரவிடாமல் தடுப்பதுதான் இதன் பின்னணியில் இருக்கின்ற காரணம்.

மத்தியில் ஆளும் மோடி – சங்க பரிவாரக் கும்பல் தமது தனியார்மயமாக்க – பார்ப்பனிய செயல்திட்டங்களை நிறைவேற்றுவதற்கான சரியான நபர்களைக் கண்டறிந்து, கல்வி, கலாச்சாரம், வரலாறு, அறிவியல் ஆகிய அனைத்தையும் கட்டுப்படுத்தும் பொறுப்புகளில் அவர்களை நியமித்து வருகிறது. ஒட்டுமொத்த நாட்டின் வளங்களையும், சந்தையையும், கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுப்பதற்காகவும், பார்ப்பனிய சனாதனத்தை கல்வியில் உள்நுழைக்கவும் சிறப்பாக செயல்படக் கூடிய “செயல்வீரர்களை” தட்டிக் கொடுத்து ஊக்கமளித்து தனது நோக்கத்தை நிறைவேற்றுவதை நோக்கி முன் செல்லுகிறது பாஜக அரசு.

சங்கபரிவாரத்தின் அத்தகைய ஒரு செயல்வீரர்தான் ‘சூரப்பா’. பொறியியல் கல்லூரி பாடத்திட்டத்தில் பகவத் கீதையைக் கொண்டுவந்ததிலேயே நம் அனைவருக்கும் அது தெரியவந்துவிட்டது. இந்நிலையில், அந்த செயல்வீரரை இடைநீக்கம் செய்ய தமிழக அரசு கேட்டதுமே, பாஜகவின் கைத்தடியாகச் செயல்படும் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனுமதியளித்துவிடுவாரா ?

“சூரப்பாவை பதவி நீக்கு” #TNgovtDismiss_Surappa என சமூகவலைத்தளங்களில் செய்யப்படும் டிரெண்டிங், தமிழக அரசை வேண்டுமானால் அசைக்கலாம், சூரப்பாவை நீக்கு என வீதியில் இறங்கி டிரெண்டிங் செய்யும்போது மட்டுமே சங்க பரிவார “புரோகித்துகளை” அசைத்துப் பார்க்க முடியும்.

கர்ணன்

நெல்லை முத்தூட் ஃபைனான்ஸ் மோசடி ! பணிய வைத்த போராட்டம் !

நெல்லை மாவட்டம் விளாகம் பகுதியைச் சேர்ந்த விவசாயி செம்புக் குட்டி. தனது மனைவியின் பெயரில் டவுன் தெற்கு ரத வீதியில் உள்ள முத்தூட் ஃபைனான்ஸ் கிளையில், நகைகளை அடகு வைத்து கடன் பெற்றிருந்தார். அதற்குரிய அசலையும் வட்டியையும் எந்த ஒரு தாமதமில்லாமல் முறையாக கட்டியும் வந்தார்.

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கடந்த ஜனவரி 20-ம் தேதி அவரது மனைவி காலமாகிவிட்டார். உடனே இந்தத் தகவலை தனது மூத்த மகன் வேல்முருகன் மூலம் பைனான்ஸ் அலுவலகத்திற்கு நேரில் வந்தும் தகவல் தெரிவித்திருந்தார். அப்போதே ”கடனுக்கான அசலையும், வட்டியையும் செலுத்தி விடுகிறேன். அதன்பின்பு வாரிசு சான்றிதழ் போன்ற ஆவணங்களை கொடுத்துவிட்டு, நகைகளை பெற்றுக் கொள்கிறேன்” என்றும் வேல்முருகன் கூறியுள்ளார். அந்தச் சமயத்திலேயே கடனுக்கான அசல் தொகையில் ரூபாய் ஒரு லட்சம் செலுத்திவிட்டும் வந்துள்ளார் வேல்முருகன்.

அதன் தொடர்ச்சியாக இரண்டு மாதங்களுக்கு அசலும் வட்டியும் செலுத்தி வந்துள்ளார். பின் கொரோனா ஊரடங்குக் காலத்தில் ஆன்லைன் மூலமாக அசல் வட்டியை செலுத்த முயற்சித்தபோது, சேவை முடக்கப்பட்டு இருந்தது. ஊரடங்கு முடிந்த பின்பும் இதே நிலை தொடர்ந்ததால், நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகில் இருந்த முத்தூட் பைனான்ஸ் கிளையை அணுகி அசலையும் வட்டியையும் செலுத்த முயற்சித்துள்ளார். அங்கும் “System” அனுமதிக்கவில்லை. காரணம் கேட்டபோது customer death என்று lock செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இது குறித்து முன்கூட்டியே எந்த தகவலையும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தெரிவிக்கவில்லை.

படிக்க :
♦ கடன் நெருக்கடி தரும் நிறுவனங்களுக்கு எதிராக களமிறங்கிய திருச்சி மக்கள் !
♦ பொதுத்துறை வங்கிகளை தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளை கொள்ளையிட களமிறங்கும் மோடி அரசு !

பின் மறுநாள் வேல்முருகன் அவர்கள் டவுன் முத்தூட் மேனேஜர் ஞானசேகரனை சந்தித்து விபரம் கூறியுள்ளார். அதற்கு மேனேஜர் ஞானசேகரன் ஹெட் ஆபீஸில் பேசி குறைகளை நிவர்த்தி செய்வதாக கூறி உள்ளார்.

”நகை கடனுக்கான தொகையை செலுத்த நாங்கள் தயாராகத்தான் உள்ளோம். உங்கள் பக்கம்தான் பிழை. எனவே லாக்டவுன் முடிகிற வரை வட்டி தொகையை கழிக்க வேண்டும்” என்று வேல்முருகன் கூறியுள்ளார். அதற்கும் மேனேஜர் ஞானசேகரன் ஹெட் ஆபீஸில் பேசித்தான் முடிவு செய்யமுடியும் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து இதுகுறித்து பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து தொடர்பு கொண்டு பேச முயற்சித்தும் பலமுறை ஃபோன் எடுக்காமல் மேனேஜர் அலட்சியப்படுத்தி உள்ளார். பின்னர் வேல்முருகன் நேரில் சந்தித்து பேசியபோது, மேனேஜர் ஞானசேகரன் “நீங்கள் Legal document சமர்ப்பிக்கும் வரை அசலை செலுத்த முடியாது. ஆனால் வட்டி மட்டும் ஏறிக்கொண்டே இருக்கும் என்று ஈவிரக்கமின்றி பேசியுள்ளார். இதுதானே இவர்கள் ஏழை மக்களையும் நடுத்தர மக்களையும் ஏமாற்றும் உத்தி.

பாதிக்கப்பட்ட தரப்பு அதே லாக்டவுன் சமயத்தில் கட்டிய அசல் தொகை ஒரு லட்சத்தை வாங்கிக் கொள்வதற்கு எந்த ரூல்சும் தடையாக இல்லை. அதையும் கணக்கில் ஏற்றாமல் ஏமாற்றி, பழைய தொகையின் அடிப்படையிலேயே வட்டியைப் போட்டு வந்துள்ளார்கள். எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

வலது : நெல்லை டவுனில் உள்ள முத்துட் ஃபைனாஸ் அலுவலகம்
இடது : அலுவலகத்தின் முன் அமைப்புகள் போராட்டம்

வேல்முருகன் அவர்களின் பெரியம்மா (வயதானவர்) முத்தூட் பைனான்சுக்கு சென்று மேனேஜரிடம் வாரிசு சான்றிதழ் தாமதமாவது குறித்து பேசியபோது, மேனேஜர் எகத்தாளமாக “எல்லோருக்கும் வாரிசு சான்றிதழ் கிடைக்கிறது உங்களுக்கு மட்டும் கிடைக்கலையா” என்று இறந்த துயரத்தை கூட பொருட்படுத்தாமல் இழிவுபடுத்தியுள்ளார்.

தொடர்ந்து முத்தூட் பைனான்ஸ் மேலதிகாரிகளிடம் பேசியும் எந்த பயனும் இல்லை. போனை எடுக்காமல் அலட்சியப்படுத்தி உள்ளனர். வட்டி மட்டும் ஏறிக்கொண்டே வந்துள்ளது. உண்மையான கணக்கின்படி வெறும் 23 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் மட்டுமே வட்டி கட்ட வேண்டிய நிலையில் ரூபாய் 95 ஆயிரம் வரை தாண்டியுள்ளதாகப் பேரிடியை இறக்கி உள்ளனர்.

ஆறு மாதமாக அலைந்த அந்த குடும்பம் மன உளைச்சலுக்கு ஆளானது. இந்நிலையில்தான் வேல்முருகன் அவர்கள் நமது அமைப்புகளை நாடினார். உடனடியாக முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தை அம்பலப்படுத்தியும், மேனேஜர் ஞானசேகரனை கைது செய்யக்கோரியும் நெல்லை நகர்ப்புற பகுதி முழுவதும் சுவரொட்டி ஒட்டினோம். 12.11.2020 அன்று முத்தூட் பைனான்ஸை முற்றுகையிடுவது எனவும் (மக்கள் அதிகாரம், தமிழர் உரிமை மீட்புக் களம், திராவிடத் தமிழர் கட்சி, பூர்விக தமிழர் கட்சி) ஆகிய அமைப்புகள் அறிவித்தோம்.

பதறியடித்து 11.11.2020 அன்று இரவு வேல்முருகன் அவர்களுக்கு போன் செய்து “நேரில் வாருங்கள் கணக்கை சரி பார்த்து முடித்து விடலாம்” என்று மழுப்பி உள்ளார். அதற்கு வேல்முருகன் ஒத்துக் கொள்ளவில்லை. இப்போது எங்கிருந்து மேனேஜருக்கு ஞானம் பிறந்தது ?

அடுத்த நாள் நாம் முற்றுகை இடுவதற்கு முன்பே பிரச்சனையின் தீவிரத்தை புரிந்துகொண்ட போலீசு, முத்தூட் மேனேஜரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றது. அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் முழுக்க முழுக்க முத்தூட் பைனான்ஸின் பித்தலாட்டம் என்ன என்பது அம்பலமானது. குடும்பத்தினரும் அமைப்புகளும் கொடுத்த நெருக்கடியால் மேல் அதிகாரிகள் மேலும் மூன்று பேர் வரவழைக்கப்பட்டனர். தவறை மறைக்க முடியாமல் மழுப்பலாக பதிலளித்தனர். கார்ப்பரேட் Law படிதான், ரிசர்வ் பேங்க் விதிமுறைகளின்படிதான் செயல்படுவதாக உண்மையையும் உடைத்தனர்.

படிக்க :
♦ கந்து வட்டி கொடுமைக்கு தமிழகமே பலி!
♦ மக்களை மதிக்காத வங்கி அதிகாரி : ஒரு அரசு வங்கி அனுபவப் பகிர்வு !

உண்மையில் இந்த கிரிமினல் கும்பலை பாதுகாக்கும் வகையிலேயே ரிசர்வ் பேங்க் விதிமுறைகளை வகுத்துள்ளது. வசமாக அகப்பட்டுக் கொண்ட நிலையில் இரண்டு நாட்களில் கணக்கை சரி பார்த்து நகைகளை ஒப்படைப்பதாக கூறியுள்ளனர். ஆறு மாதமாக அலைந்து திரிந்துக் கேட்டபோது வராத புத்தி, போராட்டத்தில் இறங்கிய பின்புதான் வருகிறது என்பதை உழைக்கும் மக்களும் பாதிக்கப்படுகின்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

இது போன்ற நிறுவனங்களால் ஏமாற்றப்படுவது தெரிந்தும் எத்தனையோ பேர் சகித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இதுதான் உண்மை. நாம் நமக்குள் ஒற்றுமையை ஏற்படுத்திக்கொண்டு வீதியில் இறங்காமல், தட்டிக் கேட்காமல் எந்தத் தீர்வும் இல்லை.

மக்களின் உழைப்பில் உருவான செல்வங்களையெல்லாம் தனியாருக்கு அரசு தாரைவார்ப்பது போல், நிதித்துறையையும் ஒப்படைத்ததன் கொடூரமான விளைவுகள்தான் இது. முத்தூட் பைனான்ஸ், மணப்புரம் பைனான்ஸ், பஜாஜ் பைனான்ஸ் போன்ற எண்ணற்ற ஒட்டுண்ணி, அட்டைகள் எல்லாம் இதனால் உருவானவையே. இன்று கோடானு கோடி ஏழை நடுத்தர மக்களின் வறுமையைப் பயன்படுத்திக்கொண்டு இரத்தத்தை உறிஞ்சி கொழுத்துக் கொண்டிருக்கின்றன. தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது, அதிகார வர்க்கத்தின் துணையோடு தப்பித்துக்கொள்ள முடியும் என்ற திமிர்தான் இதற்கெல்லாம் காரணம்.

மக்களின் வாழ்க்கையை அழிக்கும் தனியார்மயக் கொள்கைகளை, புதிய தாராளவாதக் கொள்கையை, இந்த கார்ப்பரேட் கும்பலைப் பாதுகாக்கும் அரசை எதிர்த்துப் போராடாமல் நமது துயரங்களுக்கு முடிவில்லை.

போராட்டக் களத்தில்…
மக்கள் அதிகாரம்
தமிழர் உரிமை மீட்புக் களம்
திராவிடத் தமிழர் கட்சி
பூர்வீகத் தமிழர் கட்சி


தகவல் :
மக்கள் அதிகாரம் – நெல்லை
தொடர்புக்கு :- 9385353605

தன்னை முன்னிறுத்திப் போராடுவது கோட்பாடற்ற போராட்டமே !

உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 8

பாகம் – 7

IV. கட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டம்

தோழர்களே! இப்பொழுது உட்கட்சிப் போராட்டத்தில் மற்றொரு திரிபை  – கட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டத்தை – விவாதிக்கப் போகிறேன். இத்தகைய போக்கு குறிப்பாகவும் மோசமான அளவிலும் சீனக் கட்சியில் நிலவுகிறது. அந்நிய நாட்டுக் கட்சிகளில் “வீண் வம்பளக்கும் போக்கு”  இருந்து வந்த போதிலும், சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியிலிருப்பது போன்று அங்குள்ள நிலைமை அவ்வளவு மோசமாக இருப்பதாக நான் எண்ணவில்லை. ஆதலால் இத்தகைய போக்கு பற்றி நமது தோழர்கள் பரிபூரணமாக உணரும்படியாகச் செய்ய வேண்டும்; அதை சமாளிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும், இல்லையெனில் கட்சியின் ஐக்கியத்திற்கும் வேலைக்கும் பெரும் இடைஞ்சல் ஏற்படும்.

கட்சிக்குள் கோட்பாடற்ற தகராறுகள், போராட்டங்கள் எவை?

கீழ்க்காணும் தகராறுகளும், போராட்டங்களும் கோட்பாடற்றவை என்ற கருத்தைக் கொண்டிருக்கிறேன். அதாவது அவை  நமது கட்சி, தொழிலாளி வர்க்கம் ஆகியவற்றின் புரட்சிகரமான நலன்களை பிரதி நிதித்துவப்படுத்தும் பொதுவானநிலை கோட்பாடு முதலியவற்றிலிருந்து மாறுபடுவதாகும்.

முதலாவதாக, சில தோழர்கள் கட்சி நிலையிலிருந்தோ அல்லது கட்சி முழுமையின் நலனை அடிப்படையாகக் கொண்டோ பிரச்சினைகளைக் கிளப்புவதோ, மற்ற தோழர்களை எதிர்த்தல் அல்லது போராட்டங்களை நடத்துவதோ இல்லை; தனது தனிப்பட்ட நலனையோ அல்லது கோஷ்டியின் நலனையோ கண்ணோட்டத்தில் கொண்டே பிரச்சினைகளை கிளப்பவும், மற்ற தோழர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தவும் செய்கின்றனர். அதாவது உட்கட்சி போராட்டம் நடத்துவதில் அவர்கள் நிலை சரியானதில்லை. அதனால், பிரச்சினைப் பற்றி அவர்கள் கண்ணோட்டம், கொள்கை, வழிகளை, அவை தங்களுக்கும் ஒருசில நபர்களுக்கும் உபயோககரமாக இருக்கும் வரையில் ஆதரிப்பார்கள். அதற்காக வாதாடவும் செய்வார்கள். குறிப்பிட்ட நடவடிக்கைகள் தங்களுக்கோ அல்லது அந்த ஒருசில நபருக்கோ அனுகூலமாகவில்லை என்றால், அவற்றை எதிர்ப்பார்கள்; நிராகரித்து விடுவார்கள். அத்தகைய நடவடிக்கைகள் கட்சிக்கு, அல்லது புரட்சிக்கு பயன் தரத்தக்கவையா என்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. அப்படியில்லையென்றால் அத்தகைய நடவடிக்கைகளை இரண்டாந்தர முக்கியத்துவங் கொண்டவையாக ஒருபுறம் தள்ளிவிடுகின்றனர். ஆகவே இவர்கள் எதிர்ப்பதும் சரி, ஆதரிப்பதும் சரி, முற்றிலும் கோட்பாடற்றவையே; கட்சி, புரட்சி முதலியவற்றின் கோட்பாடுகளிலிருந்து விலகியதேயாகும். வேறு வார்த்தைகளில் சொன்னால், அவர்கள் கோட்பாடு கட்சியின், புரட்சியின் கோட்பாடு அல்ல; அவர்கள் சொந்த நலனுக்கான கோட்பாடுகள். ஒவ்வொருவரும் தன்னுடைய சொந்த நலனையே தனது கோட்பாடாகக் கொண்டு விட்டால், பின் அவரது நலனும் கோட்பாடும் மற்றவர்களுடைய நலன் கோட்பாடு முதலியவற்றுடன் நிச்சயம் மோதத்தான் செய்யும்; ஒருவரோடு ஒருவர் சண்டையிடத்தான் செய்வார்கள்.

உதாரணமாக, நீங்கள் உங்களுக்குள் ஒருவரோடு ஒருவர் பணியாட்கள், குதிரைகள், உணவு, துணி, வைத்திய வசதி, பதவி உயர்வு முதலியவை சம்பந்தமாக சண்டையிட்டுக் கொண்டீர்கள் அல்லது போராடினீர்கள். இத்தகைய விசயங்கள் தனிப்பட்ட, கோட்பாடற்ற விசயப் பகுதியில் சேரும். பணியாட்கள், உணவு, துணி, வைத்திய வசதி முதலியனவற்றை கட்சி பயனடையும் வகையில் விநியோகிப்பதற்கு பொது விதிகள் பற்றி, தோழர்கள் ஆலோசனை கூறுவதில்லை; கட்சி அல்லது பள்ளிக்கூடம் இந்த கோட்பாடுகளை அமல் நடத்த வேண்டும் என்று கேட்பதில்லை; ஆனால் அவர்களது கேள்விகள் பின்வருமாறு அமைகின்றன:-  “எனக்கு அவர்கள் ஏன் ஒரு பணியாள் அல்லது குதிரை கொடுக்கக்கூடாது? எனக்கு ஏன் அவர்கள் வைத்திய வசதி கொடுக்கக்கூடாது? என்னை ஏன் அவர்கள் உயர்த்தக்கூடாது? எனக்கு ஏன் அவர்கள் உணவும், உடையும் கொடுக்கக்கூடாது?” எல்லாம் “என்னை”ச் சுற்றித்தான் எழுகிறது; “நான்” என்ற நிலையிலிருந்துதான் எல்லாம் தோன்றுகின்றன; இந்த ரீதியில் தகராறுகள் கிளப்பப்பட்டு கட்சிக்குள் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதனால் தனிப்பட்ட முறையில் திருப்தியடைந்திருந்தால், மற்றபடி விசயங்கள் முறையற்ற முறையில் அமைந்திருந்தாலும் அதைப் பற்றி அவர்கள் சிறிதேனும் கவலைப்பட்டுக் கொள்வதில்லை. இது ஒரு வகையான கோட்பாடற்ற போராட்டமாகும்.

மற்றொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம், சில தோழர்கள் ஊதாரித்தனத்தை எதிர்க்கின்றனர். சில தோழர்கள் கட்சியின் நலனை அடிப்படையாகக் கொண்டு, கட்சி நிலையில் நின்று ஊதாரித்தனத்தை எதிர்க்கின்றனர். அவர்கள் எளிய வாழ்க்கைக் கோட்பாட்டையும் ஊதாரித்தனத்திற்கு உள்ள பல திருஷ்டாந்தங்களையும் எடுத்துக்காட்டி, விமர்சித்து, அதை அவர்கள் எதிர்க்கிறார்கள்; சிக்கனத்திற்கு சில யோசனைகள் சமர்ப்பித்து அதை அமல் நடத்தும்படி கட்சியைக் கேட்கின்றனர். இது சரியானது.

ஆனால் இன்னும் சில தோழர்கள் கட்சியின் நலனை அடிப்படையாகக் கொண்டு, கட்சியின் நிலையில் நின்று ஊதாரித்தனத்தை எதிர்ப்பதில்லை. இவர்கள் கிளப்பும் கேள்விகள் பின் வருமாறு:

“சிலர் எவ்வளவு பணம் விரயம் செய்திருக்கின்றனர்; சிலருக்கு இவ்வளவு நல்ல உணவு கிடைத்துள்ளது ; சிலருக்கு இவ்வளவு நல்ல உடை இருக்கிறது; சிலருக்கு…  அப்படியானால் அது மாதிரி நான் ஏன் சாப்பிடக்கூடாது? அம்மாதிரி பணம் செலவிடக்கூடாது? அம்மாதிரி உடை அணிந்து கொள்ளக்கூடாது? பழம் பெருச்சாளியாவதற்கு போதிய வருடங்கள் எனக்கு ஆகவில்லை என்பதினாலா? அல்லது நான் கட்சிக்கு ஒரு சேவையும் செய்யவில்லை என்பதினாலா?” ஆதலால் அவர் ஊதாரித்தன எதிர்ப்பு என்ற கோஷத்திற்காக நின்று போராடுகிறார். மற்றவர்களைப் போல் பணத்தை வீண் விரயம் செய்வதற்கு தனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதுதான் இதற்கு காரணம். இதுவும் ஒருவகையான கோட்பாடற்ற போராட்டமாகும்.

இன்னுமொரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்களேன்! கிழக்கு ஏன்வேயில் அரசாங்க சிப்பந்திகளுக்கு குறைவான சம்பளம் கொடுக்கப்பட்டது.* ஆகவே சில தோழர்கள் சம்பளம் கிடைக்கும் என்ற எண்ணத்தைக் கொண்டு அரசாங்க அமைப்புகளில் வேலை செய்வதற்கு அனுப்பப்படும்படியாக கேட்டுக் கொண்டார்கள்; அவர்கள் போவதற்கு அனுமதிக்கப்படாத பொழுது, அரசாங்க சிப்பந்திகள் சம்பளம் பெறுவதை எதிர்க்கும் கோஷத்தின் பேரில் அவர்கள் போராட்டம் துவக்கினார்கள். மேலும் அரசாங்க சிப்பந்திகளின் வாழ்க்கை அலவன்ஸ்களை நிர்ணயிப்பது எங்ஙனம் என்பதற்கு கோட்பாடு சம்பந்தமான யோசனைகள் கொடுக்கவோ, அவற்றை விவாதிக்கவோ இல்லை. இதுவும் ஒருவகை கோட்பாடற்ற போராட்டமாகும்.

இரண்டாவதாக, சில தோழர்கள் கட்சிக்குள் தகராறுகளை கிளப்பிவிட்டு போராட்டம் நடத்துகிறார்கள்; ஆனால் அது கட்சி விவகாரங்களை அபிவிருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டிருப்பதில்லை. அதற்கு மாறாக அவற்றை இன்னும் படுமோசமாக்குவதற்குதான் செய்கின்றனர்; அல்லது அந்தரங்க நோக்கத்துடன் செய்கின்றனர். அத்தகைய நோக்கம் தவறானதாகும். இதுவும் கோட்பாடற்ற போராட்டமாகும். உதாரணமாக முக்கியமானவர் என்று எண்ணப்பட வேண்டுமென்பதற்கு, சொந்த அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, கௌரவத்தை விட்டுக் கொடுக்காமலிருப்பதற்கு, ஏன்? மற்றவர்களை பழி தீர்த்துக் கொள்வதற்குகூட, சில தோழர்கள் நிலைமை, அப்பொழுதுள்ள சுற்றுச்சார்பு முதலியவைகளை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் கட்சிக்குள் மற்ற தோழர்களை எதிர்த்து அவர்கள் வேலைகளையும், திட்டங்களையும் கட்சிக்குள் ஒழுங்கு, ஒற்றுமை முதலியவற்றையும் சீர்குலைத்துக் கொண்டு, தகராறுகளை கிளப்பி விட்டு, போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுவும் இதே கோட்பாடற்ற பகுதியைத்தான் சேரும்.

மூன்றாவதாக, சில தோழர்கள் ஏதாவது ஒன்றை அமல் நடத்த வேண்டுமென்றோ அல்லது கைவிட வேண்டுமென்றோ கட்சியைக் கேட்டுக் கொண்டு, கோட்பாடுகள் அடிப்படையில் பிரச்சினைகளை கிளப்புவதில்லை; ஆனால் தனிப்பட்ட இதய சலனங்கள், விருப்பு வெறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு பிரச்சினைகளை எழுப்புகிறார்கள், போராட்டங்களை நடத்துகிறார்கள். அவர்கள் ஆட்களை ஏசுகிறார்கள்; அவர்கள் மீது வெறி கொள்கிறார்கள்; ஏனெனில் அவர்கள் ஒரு விநாடி மனதிருப்தியடையவும், மன வருத்தத்தையும், குரோதத்தையும் கொட்டிக்கொள்ளவும் விரும்புகின்றனர். இதுவும் ஒரு வகையான கோட்பாடற்ற போராட்டமாகும். இன்னும் சில தோழர்கள் உண்டு; இவர்களுக்கு தங்களுக்குள்ள குறைவான அனுபவத்தினாலும், குறைவான தத்துவ பயிற்சியினாலும் கோட்பாடுகளின் அடிப்படையில் பிரச்சினைகளை கிளப்பவும், விவாதிக்கவும் முடியாமற் போகிறது. இவர்கள் பொதுக் கோட்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு பதிலாக தனித்து நிற்கும் துண்டு துக்காணியான, அறவே நடைமுறை சம்பந்தமற்ற பிரச்சினைகளிலும் கோட்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலும், கோட்பாடு சம்பந்தமில்லாத நிகழ்காலக் கொள்கை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலும் மற்ற தோழர்களுடன் ஒருக்காலமும் தீராத தகராறுகளில் ஈடுபடுகின்றனர். ஆதலால் இதுவும் ஒருவகை கோட்பாடற்ற போராட்டமாகும். அதை பிடிவாதம் பிடிக்கக்கூடாது.

உதாரணமாக, சில போராட்டங்கள், சில காரியங்கள் சில போராட்ட வடிவங்கள், சில அமைப்பு முறைகள் முதலியன பற்றி சில தோழர்கள் மாறுபாடான அபிப்பிராயங்கள் கொண்டுள்ளனர். இவர்கள் தான் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்று நிலைநாட்டுகின்றனர். பொதுவான போர்த்தந்திர, செயல்தந்திர கோட்பாடுகளையும், பொதுவான நடைமுறைக் கொள்கையையும் போராட்டம், ஸ்தாபனம் ஆகியவற்றின் அமைப்புகள் பற்றிய பொதுவான கருத்துக்களையும் கொஞ்சம் கூட சம்பந்தப்படுத்திக் கொள்ளாமலே முடிவில்லாமல் வாதாடுவார்கள். அவர்களுடைய பிரச்சினைகள் தவறான முறையில் கிளப்பப்பட்டிருக்கிறது. ஆதலின் வழக்கமாகவே சரியான முடிவுக்கு வருவது சாத்தியமில்லை. இல்லையெனில் மாறுபட்ட அபிப்பிராயங்களுள் ஏதாவது ஒன்றாவது சரியாக இருக்க வேண்டும். பிரயோஜனமில்லாத வீண்பேச்சுத்தான் பெரும்பாலும் ஏற்படும் பலன்.

நான்காவதாக, உட்கட்சிப் போராட்டம் வகுத்தளிக்கப்பட்டுள்ள அமைப்பு முறைகளை அனுஷ்டிக்காமல், நியாய, அநியாய வழி எதுவானாலும் பரவாயில்லை என்று நடத்தப்படுகிறது. இதன் திருஷ்டாந்தங்கள் ஆவன :- கட்சிக்குள் கோட்பாடில்லா முறைகளில் தோழர்களை தன் பக்கத்திற்கு இழுத்துக் கொள்வது அல்லது எதிர்த்துத் தாக்குவது; தொல்லைகளைக் தூண்டிவிடுவது அதன் மூலம் தோழர்களுக்குள் பிளவுகள்  உண்டாக்குவது; மற்ற தோழர்களுக்கு எதிராக சதி செய்து அவர்களுக்கு வலை விரித்து வைப்பது; ஒருவர் முன்னிலையில் ஒன்றும் சொல்லாமல் போன பிறகு அவர்களுக்கு பின்னாலிருந்து பேசுவது; கட்சியை பொறுப்பின்றி விமர்சனம் செய்வது; வம்பளப்பது; வதந்திகளைப் பரப்புவதில் ஈடுபடுவது; பொய் சொல்வது; பிற தோழர்களை அவதூறு செய்வது முதலியன.

மேலே கூறப்பட்டுள்ள போராட்டங்கள் கோட்பாடில்லாத போராட்டங்கள். இதுவன்றி கோட்பாடான போராட்டத்தில் சில கோட்பாடற்ற போராட்ட அம்சங்களைக் கலக்கவும், கோட்பாடான போராட்டக் கொடியின் கீழ் கோட்பாடற்ற போராட்டங்களை நடத்தவும் செய்கின்ற சில தோழர்கள் உண்டு. இன்னும் சிலருக்கு, குறிப்பிட்ட ஒரு நபருக்கும், மற்றவருக்குமிடையேயுள்ள தகராறு பற்றி இருவருக்குமிடையேயுள்ள அசாதாரண உறவு நிலையில்தான் விசேச அக்கறையே ஒழிய அச்சச்சரவின் சாராம்சம் என்ன என்பதில் அக்கறை கிடையாது.

படிக்க :
♦ உட்கட்சிப் போராட்டத்தின் 3 முக்கியத் திரிபுகள் || லியூ ஷோசி
♦ தனிநபர் மீதான தாக்குதல், உட்கட்சிப் போராட்டமாகாது || லியூ ஷோசி

கட்சிக்குள் நிகழும் இத்தகைய கோட்பாடில்லாத போராட்டங்கள் அனைத்தும் நல்லதன்று; கட்சிக்கு தீங்கிழைக்கக் கூடியவை.

தோழர்கள் கேட்கக்கூடும்; கோட்பாடு என்றால் என்ன என்று? கோட்பாடு சம்பந்தப்படாத, முற்றிலும் நடைமுறைத் தன்மை படைத்த பிரச்சினைகள் என்பவை எவை? நிகழ்கால கொள்கை சம்பந்தமான பிரச்சினை என்பது எது? எந்தப் பிரச்சினை சம்பந்தமாகவும் நான் ஏன் கொள்கையையே உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொள்ளக் கூடாது? என்னுடன் மாறுபாடாக கருத்துக் கொண்டவர்களுடன் சாத்தியமான சகல வழிகளிலும் நான் ஏன் சமரசமாகப் போக வேண்டும்?

தோழர்களே! உண்மையிலேயே தெளிவுபடுத்தப்பட வேண்டிய விசயங்கள் இவை.

———-

* ஜப்பானிய எதிர்ப்பு யுத்தகாலத்தில் விடுதலைப் பிரதேசங்களிலிருந்து அரசாங்க சிப்பந்திகளுக்கு சகல அன்றாட தேவைகளும் கொடுக்கப்பட்டு வந்தன. சொந்த சில்லறை செலவுக்குக் கொடுக்கும் பணம்போக அவர்களுக்கு சம்பளம் என்று  ஒன்றும் கிடையாது.

– ஆசிரியர் குறிப்பு

நவம்பர் 26 : நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் வெல்லட்டும் || மக்கள் அதிகாரம்

PP Letter head

13.11.2020

பத்திரிகைச் செய்தி

ங்கம் சேரக்கூடாது, தொழிற்சாலைக்கு எதிராகப் போராடக்கூடாது, சம்பள உயர்வு கேட்கக் கூடாது, போனஸ் கிடையாது, நிரந்த வேலைக்கு உத்திரவாதம் கிடையாது, ஓய்வூதியம் தர முடியாது, ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு, தொழிற்சங்க உரிமை பறிப்பு, தொழிற்சங்க அங்கீகாரத்தைச் சிதைப்பது, குறைந்தபட்ச ஊதியத்திற்கு குந்தகம் விளைவிப்பது என பல்வேறு தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக்கி கார்ப்பரேட்டுகளுக்கு உதவும் வகையில்தான் இந்த தொழிலாளர் நல சட்ட திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தி, கொத்தடிமை முறையிலான சட்டங்களை இயற்றி வருகிறது பாஜக அரசு. ஏட்டளவிலாவது இருந்த 44 தொழிலாளர் நலச் சட்டங்களில், 15 சட்டங்களை ரத்து செய்து விட்டு, மீதமுள்ள 29 சட்டங்களை 4 தொகுப்புகளாக்கி, தொழிலாளர் உரிமை, நலன், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் பறிக்கத் திட்டமிட்டுள்ளது.

முதலாளித்துவ சுரண்டலுக்காக தனியார்மயம் தாராளமயத்தின் மூலம் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுகின்றன. தொழிலாளர் நல சட்டங்களும் வேளாண் சட்டங்களும் கல்விக் கொள்கைகளும் மாற்றியமைக்கப்படுகின்றன. அரிசி, நெல், கோதுமை, காய்கறி முதல் பெட்ரோல் வரை அனைத்து பொருட்களின் விலையும் ஏறிக்கொண்டே இருக்கிறது. எனவே தனியார்மய தாராளமய உலகமய கொள்கைகளுக்கு எதிரான இந்தப் போராட்டம் வெல்லட்டும்.

அகில இந்திய தொழிற் சங்கங்களின் இந்தப் போராட்டத்தை மக்கள் அதிகாரம் ஆதரிக்கிறது. மேலும் இந்தப் போராட்டங்களில் தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தோழமையுடன்


வெற்றிவேல் செழியன்
மாநில ஒருங்கிணைப்பாளர் – மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு மற்றும் புதுவை
9962366321

சங்கிகள் அட்டகாசம் தாங்கலயே வேலவா | மக்கள் அதிகாரம் பாடல் !

வேல் யாத்திரை எனும் பெயரில் ஒரு கலவர யாத்திரையைக் கையில் எடுத்துக் கொண்டு எப்படியாவது இந்துமதவெறியைத் தூண்டி தமிழகத்தை மற்றுமொரு குஜராத்தாக மாற்றும் திட்டத்தோடு வலம் வருகிறது சங்கப் பரிவாரக் கும்பல்.

ஒருபுறத்தில் உழைக்கும் மக்கள் போராடிப் பெற்ற உரிமைகளையெல்லாம் கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி சட்டதிருத்தங்கள் மூலம் ரத்து செய்து கொண்டிருக்கும் பாஜக – சங்க பரிவாரக் கும்பல், மற்றொரு புறத்தில் கலவரம், ஆட்கடத்தல்,  பாலியல் வன்முறை, கொலை உள்ளிட்ட மக்கள் விரோதச் செயல்களிலும் ஈடுபட்டுவருகிறது.

‘தமிழ்க் கடவுள்’ முருகனைக் காப்போம் என்ற பெயரில், தமிழர்களின் கடவுள் நம்பிக்கையை தனது இந்துத்துவக் கொள்கைக்கு ஏற்ப வளைக்க எத்தனித்துத் தான் இந்த வேல் யாத்திரையை தொடங்கியிருக்கிறது தமிழக பாஜக.

இதனை மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டலம் தோழர்கள் இயற்றிப் பாடியிருக்கும் இந்தப் பாடல் அம்பலப்படுத்துகிறது !

பாருங்கள் ! பகிருங்கள் !

விஞ்ஞான சோசலிசத்தை வளர்த்தெடுத்த உயிர் நண்பர்கள் || தோழர் லெனின்

0

பிரெடரிக் எங்கெல்ஸ் : பாகம் – 4

பாகம் 3 : ஒரு கம்யூனிஸ்ட்டாக பரிணமித்த இளம் எங்கெல்ஸ்

முதன் முதலாக பிரான்சில் தோன்றி, பின்னர் மற்ற மேலைய ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவிய 1848-ம் ஆண்டுப் புரட்சி மார்க்சையும் எங்கெல்சையும் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பி வரச் செய்தது. இங்கே, ரைனிஷ் பிரஷ்யாவில், கொலோன் நகரிலிருந்து வெளிவந்த ஜனநாயகத் தன்மையுள்ள Die Neue Rheinische Zeitung என்ற பத்திரிகையை அவர்கள் தங்கள் பொறுப்பில் எடுத்து நடத்தினார்கள். ரைனிஷ் பிரஷ்யாவில் எல்லாப் புரட்சிகர ஜனநாயக வேட்கைகளின் இதயமாக, ஆன்மாவாக இவ்விரு நண்பர்களும் விளங்கினர்.

மக்களின், சுதந்திரத்தின் நலன்களைப் பாதுகாத்து அவர்கள் பிற்போக்குச் சக்திகளைக் கடைசிவரை எதிர்த்துப் போராடினர்; பிற்போக்குச் சக்திகளின் கை மேலோங்கியது என்பது நாமறிந்த சங்கதிதான். Die Neue Rheinische Zeitung தடை செய்யப்பட்டது. நாடு கடத்தப்பட்ட காலத்தில் தமது பிரஷ்யக் குடியுரிமையை இழந்துவிட்டிருந்த மார்க்ஸ் பிரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆயுதந்தாங்கிய மக்கள் எழுச்சியில் எங்கெல்ஸ் பங்கு கொண்டார், சுதந்திரத்துக்காக மூன்று முனைகளில் போர் புரிந்தார். கலகக்காரர்கள் தோல்வியுற்ற பிறகு சுவிட்சர்லாந்து வழியே லண்டனுக்கு வந்து சேர்ந்தார்.

மார்க்சும் அங்கேயே குடியமைத்துக் கொண்டார். எங்கெல்ஸ் மீண்டும் ஒரு குமாஸ்தா ஆகிவிட்டார். கொஞ்ச காலம் கழித்து, தாம் 1840-1850-ம் ஆண்டுகளில் வேலை பார்த்த அதே மான்செஸ்டர் வர்த்தக நிலையத்திலேயே பங்குதாரராக ஆனார். 1870 வரை அவர் மான்செஸ்டரிலேயே வாழ்ந்து வர, மார்க்ஸ் லண்டனில் வாழ்ந்து வந்தார்.

படிக்க :
♦ அறிவாளிகளின் அந்தரங்கம் – லெனின்
♦ கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா?

இருந்தபோதிலும் அவ்விருவரும் பரஸ்பரம் உற்சாகம் பொங்கும் அறிவுத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதை அது தடுக்கவில்லை அநேகமாக தினந்தோறும் ஒருவருக்கொருவர் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கடிதப் போக்குவரத்து மூலம் இவ்விரு நண்பர்களும் தங்கள் கருத்துக்களையும் கண்டுபிடிப்புகளையும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டார்கள், விஞ்ஞான சோசலிசத்தை வகுத்துக் கொடுப்பதில் இணைந்து பணிபுரிவதைத் தொடர்ந்தார்கள். 1870-ம் ஆண்டில் எங்கெல்ஸ் லண்டனுக்கு வந்து அங்கேயே தங்கிவிட்டார்.

கடும் உழைப்பு நிறைந்த அவர்களுடைய பொதுவான அறிவுத்துறை வாழ்க்கை 1883-ம் ஆண்டு வரை நீடித்தது. 1883-ம் ஆண்டில் மார்க்ஸ் காலமானார். மார்க்ஸ் பங்குக்கு இந்தப் பொதுவான அறிவுத்துறை வாழ்க்கையின் பலன் மூலதனம் என்ற நூலாகும்; நமது சகாப்தத்திலேயே அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய நூல்கள் யாவற்றிலும் தலைசிறந்த நூல் இதுதான்.

எங்கெல்சைப் பொறுத்தமட்டில் அதன் பலன் பல பெரிய, சிறிய நூல்கள் எழுதியதுதான். முதலாளித்துவப் பொருளாதாரத்தின் சிக்கல் நிறைந்த தோற்றங்களைப் பற்றிய பகுப்பாராய்ச்சியிலே மார்க்ஸ் ஈடுபட்டார். எங்கெல்ஸ் எளிய நடையில் எழுதிய நூல்களில், அடிக்கடி எதிர்வாதங்களைச் சந்திக்கிழுத்துத் தாக்கும் நூல்களில் வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டத்தையும் மார்க்சின் பொருளாதாரத் தத்துவத்தையும் செயல்படுத்திய வழியிலே, மிகப் பொதுவான விஞ்ஞானப் பிரச்சினைகளையும், பல வகைப்பட்ட சென்றகால, நிகழ்கால நிகழ்ச்சிகளையும் விளக்கினார்.

எங்கெல்சின் இந்நூல்களில் பின்வருவனவற்றைக் குறிப்பிடுவோம்: டூரிங்குக்கு மறுப்பாக எழுதிய வாதவடிவம் கொண்ட நூல் (இந்நூலில் தத்துவஞானம், இயற்கை விஞ்ஞானம். சமுதாய விஞ்ஞானங்கள் ஆகிய துறைகள் சம்பந்தப்பட்ட மாபெரும் பிரச்சினைகள் ஆராயப் பட்டுள்ளன); குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூல் (இது ரசிய மொழியில் பெயர்க்கப்பட்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் வெளியிடப்பட்டது. மொழிபெயர்ப்பின் மூன்றாம் பதிப்பு 1895-ல் வெளிவந்தது); லுட்விக் ஃபாயர்பாஹ் என்ற நூல் (இதன் ரசிய மொழிபெயர்ப்பு கி.பிளெஹானவ் குறிப்புகளுடன் ஜெனிவாவில் 1892-ல் வெளிவந்தது); ரசிய அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை பற்றிய ஒரு கட்டுரை (ஜெனீவாவில் வெளிவந்த Der Sozial-demokrat) ”சமூக ஜனநாயகவாதி” என்ற பத்திரிகையின் 1, 2 இதழ்களில் ரசிய மொழியில் பெயர்க்கப்பட்டது); குடியிருப்புப் பிரச்சினையைப் பற்றிய சில குறிப்பிடத்தக்க கட்டுரைகள்; கடைசியாக, ரசியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி எழுதப்பட்ட இரண்டு சிறிய, ஆனால் மதிப்பு மிகுந்த கட்டுரைகள் (ரசியாவைப் பற்றி பிரெடெரிக் எங்கெல்ஸ் என்ற நூல், ரசிய மொழியில் வேரா ஸசூலிச் பெயர்த்தது, ஜெனீவா, 1894).

மூலதனத்தைப் பற்றிய தமது விரிவான வேலையை முடிக்குமுன்னர் மார்க்ஸ் காலமானார். இருந்தாலும், நகல் குறிப்புகள் வடிவத்தில் அது ஏற்கெனவே எழுதி முடிக்கப்பட்டிருந்தது. தமது நண்பர் மறைந்த பிறகு மூலதனத்தின் இரண்டாவது, மூன்றாவது தொகுதிகளைத் தயாரித்து வெளியிடும் சிரமமிக்க வேலையை எங்கெல்ஸ் மேற்கொண்டார். அதன் இரண்டாம் தொகுதியை 1885-ம் ஆண்டிலும், மூன்றாம் தொகுதியை 1894-ம் ஆண்டிலும் அவர் வெளியிட்டார் (அவரது மரணம் நான்காம் தொகுதியைத் தயாரிப்பதைத் தடுத்துவிட்டது). இவ்விரு தொகுதிகள் விசயத்தில் எங்கெல்ஸ் அபாரமாக உழைக்க வேண்டியிருந்தது. மூலதனத்தின் இரண்டாவது, மூன்றாவது தொகுதிகளை வெளியிட்டதன் மூலம் எங்கெல்ஸ் தமது நண்பராகிய மேதைக்கு மாண்புமிக்க நினைவுச் சின்னம் நிறுவினார்; அந்த நினைவுச் சின்னத்தில் தம்மையறியாமலேயே தமது பெயரையும் அழியாத வகையில் பொறித்துவிட்டார் என்று ஆஸ்திரிய சமூக – ஜனநாயகவாதி ஆட்லெர் குறிப்பிட்டது மிகவும் சரி.

உண்மையிலே மூலதனத்தின் இவ்விரு தொகுதிகளும் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருடைய பணியேயாகும். மனதையுருக்கும் நட்பைக் குறித்துப் பல உதாரணங்கள் காட்டும் பழங்கதைகள் உண்டு. ஐரோப்பியப் பாட்டாளி வர்க்கம் தனது விஞ்ஞானத்தைப் படைத்தவர்கள் இரண்டு அறிஞர்கள், இரண்டு போராட்ட வீரர்கள், அவர்களிடையே நிலவிய உறவு முன்னோர்கள் மனித நட்பு பற்றி எழுதியுள்ள நெஞ்சையள்ளும் கதைகளையெல்லாம் மிஞ்சக் கூடியதாயிருந்தது என்று சொல்லிக் கொள்ளலாம். எங்கெல்ஸ் எப்பொழுதுமே – மொத்தத்தில், நியாயமாகத்தான் – மார்க்சுக்கு முதன்மை கொடுத்தார். பழைய நண்பர் ஒருவருக்கு எழுதுகையில் ‘மார்க்ஸ் வாழ்ந்திருந்த காலத்தில் நான் அவருக்குப் பக்கவாத்தியம் வாசித்துக் கொண்டிருந்தவன்தான்” என்று எங்கெல்ஸ் குறிப்பிட்டார்.

மார்க்ஸ் உயிரோடிருக்கும்போது அவர்மீது எங்கெல்ஸ் வைத்திருந்த பாசத்துக்கும், மறைந்த மார்க்சின் நினைவு பற்றி அவர் வைத்திருந்த புனித மதிப்புக்கும் எல்லையே கிடையாது. இந்தக் கடின சித்தமுள்ள போராட்ட வீரருக்கு, கட்டுப்பாடு மிகுந்த சிந்தனையாளருக்குள், ஆழ்ந்த அன்பு செலுத்தும் இதயம் இருந்தது.

(தொடரும்)

கட்சியை மிரட்டும் ‘தோழர்கள்’ ! || லியூ ஷோசி

உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 7

பாகம் – 6

இயந்திரகதியான, மிதமிஞ்சிய உட்கட்சிப் போராட்டத்தின் வடிவங்கள் :

நான்காவதாக, கட்சிக்குள் உள்ள போராட்ட முறைகளும், கட்சிக்கு வெளியே உள்ள போராட்ட முறைகளும் கலக்கப்படுகின்றன. சில தோழர்கள் உட்கட்சிப் போராட்ட முறைகளை இயக்க மறுப்பியல் ரீதியான கட்சியல்லாத பொதுமக்கள் அமைப்புகளில் கையாளுகின்றனர்; கட்சியில் சேராத ஊழியர்கள் பொதுமக்களுடன் போராட்டம் நடத்தும் பொழுது உட்கட்சி போராட்ட முறைகளை உபயோகப்படுத்துகின்றனர். இதற்கு நேர்மாறாக சில தோழர்கள் கட்சிக்கு வெளியில் உபயோகப்படுத்தும் போராட்ட முறைகளை விரோதியிடத்திலும் அந்நிய நபர்களிடத்திலும் உபயோகப்படுத்தும் போராட்ட முறைகளை கட்சிக்குள் இருக்கும் தோழர்கள் சம்பந்தமாக போராட்டம் நிகழ்த்தும்போது உபயோகிக்கின்றனர்.

விரோதியையும் அந்நிய நபர்களையும் எதிர்ப்பதற்கு கைக்கொள்ளும் நடவடிக்கைகளை கட்சிக்குள் இருக்கும் தோழர்களை நடத்துவதில் உபயோகப்படுத்துகின்றனர். எல்லாவித ஆத்திரமூட்டல், பகை, சதி அனைத்தையும் அனுஷ்டிக்கின்றனர். கண்காணித்தல், கைது செய்தல், விசாரணை நடத்துவது, சிறைப்படுத்துவது முதலான சகலவித நிர்வாக நடவடிக்கைகளையும் உட்கட்சிப் போராட்டத்தில் அவர்கள் பிரயோகிக்கின்றனர். உதாரணமாக, துரோகிகளை வேட்டையாடுவதென்னும் “இடதுசாரி”த் தவறை இழைத்த தோழர்கள் அத்தவறு செய்வதற்குக் காரணம், கட்சிக்குள் நடக்கும் போராட்டத்திற்கும் கட்சிக்கு வெளியே நடக்கும் போராட்டத்திற்கும் இடையில் தெளிவான வரையறுப்பு வைத்துக் கொள்ளாததுதான். கட்சிக்குள் நிகழ்த்தும் சித்தாந்தப் போராட்டத்தையும் துரோகிகளை வேட்டையாடும் இயக்கத்தையும் போட்டுக் குழப்புகின்றனர். பெரும்பாலும் இவர்கள் கட்சிக்குள் பதுங்கிக் கொண்டிருக்கும் ஒற்றர்களாக இருக்கின்றனர். ஆனால் ஒளிந்து கொண்டிருக்கும் இந்த ஒற்றர்களை எதிர்த்து நடத்தும் போராட்டத்திற்கு விசயங்களை ஆதாரமாகக் கொண்டு நிற்க வேண்டும்; அவர்களை தோலுரித்துக் காட்டி, கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; தவறு செய்த கட்சி அங்கத்தினர்கள் கற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் நடத்தும் போராட்டத்திலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது; இவையிரண்டுக்கும் இடையில் தெளிவான வரையறுப்பு செய்யப்பட வேண்டும். கட்சிக்குள் நடத்தும் போராட்டமும், கட்சிக்கு வெளியே நடத்தும் போராட்டமும், ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்பு கொண்டவைதான், ஆனாலும் அவற்றின் போராட்ட முறையும் வடிவமும் வேறுபட்டதாகத்தானிருக்க வேண்டும்.

இன்னும் சில தோழர்கள் இருக்கின்றனர் (உண்மையில் இவர்களை இதற்கு மேலும் தோழர்கள் என்று அழைக்க முடியாது). இவர்கள் உட்கட்சிப் போராட்டம் நடத்துவதற்கும், கட்சியை பயமுறுத்துவதற்கும், கட்சிக்கு வெளியிலுள்ள சக்திகளை உபயோகப்படுத்தவும், பகிரங்கமாகவே அச்சக்திகளைச் சார்ந்து நிற்கவும் செய்கின்றனர். உதாரணமாக, அவர்களுடைய அரைகுறை சாதனைகளையும், துருப்புக்களையும், துப்பாக்கிகளையும், பொதுமக்கள் மத்தியில் கொண்டுள்ள செல்வாக்கையும் ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த சில பகுதிகளுடன் தங்களுக்குள்ள உறவையும் வைத்துக் கொண்டு சிலர் கட்சியையும், மேல் கமிட்டிகளையும் எதிர்த்துப் போராட்டம் நடத்துகின்றனர்.

மேல் கமிட்டிகளையும், கட்சியையும் தங்கள் கோரிக்கைகளையும் அபிப்பிராயங்களையும் ஒப்புக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கின்றனர்; கட்சியின்பால் சுயேச்சை மனோபாவம் காட்டுகின்றனர்; கட்சியிலிருந்து விடுபட்டுள்ள தங்கள் சுயேச்சை நிலையை பிரகடனப்படுத்துகின்றனர்; அல்லது கட்சிக்கு வெளியிலுள்ள பத்திரிக்கைகள் சஞ்சிகைகள் பல்வேறு மகாநாடுகள், முதலியனவற்றை பூர்ஷ்வாவுக்கும் விரோதிக்கும் சொந்தமானவற்றைக்கூட, மேல் கமிட்டியின் மீதும் சில தோழர்கள், ஊழியர்கள் மீதும் போராட்டம் நடத்துவதற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். இது தவறு என்று சொல்லத் தேவையில்லை; இன்னொரு கோஷ்டி நபர்கள் கட்சியின் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு பொதுமக்களை பலவந்தப்படுத்தி அடக்கி ஒடுக்கி ஆதிக்கஞ் செலுத்தவும், கட்சிக்கு வெளியிலுள்ள நபர்களை பயமுறுத்தி, தண்டவரி வசூலிப்பதும் எவ்வளவு கடுமையான தவறோ அதேபோல் இதுவும் கடுமையான தவறாகும். இந்தப் பேர்வழிகள் கட்சிக்கு எதிராக கட்சிக்கு சம்பந்தப்படாத கண்ணோட்டத்துடன் போராடுகின்றனர். ஆதலின் அவர்கள் பெயரளவில் கம்யூனிஸ்டுகளாக இருந்து வந்தபோதிலும், கட்சிக் கண்ணோட்டத்தில் அறவே வேறுபட்டு போய்விட்டனர்; கட்சியின் விரோதிகள் ஆகிவிட்டனர்.

ஐந்தாவதாக, நமது கட்சியில் பல பிரச்சினைகள் கூட்டங்களில் அல்லது கூட்டங்கள் மூலம் முடிவாகின்றன. இது நல்லது. ஆனால் பல அமைப்புகளில், தயாரிப்பின்றி, முன் பரிசீலனையோ ஆராய்ச்சியோ ஏதுமின்றி பல கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு பலவேறுபாடான அபிப்பிராயங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. கூட்டத்தில் அடிக்கடி சச்சரவுகளும் நிகழுகின்றன. எல்லாக் கூட்டங்களிலும், ஒவ்வொரு முறையும் முன்னணிப் பங்கு வகிப்பவர்களினாலேயே முடிவுகள் எடுக்கப்பட்டு வருவதினால், அத்தகைய கூட்டங்களில் செய்யப்படும் முடிவுகள் கட்சியை கட்டுப்படுத்தும் தீர்மானங்களுக்கு சமமாவதினால், பெரும்பாலும் பல தவறுகள் நேர்கின்றன. சில கூட்டங்களில் வாக்குவாதம் இறுதியாக போதனாசிரியர், கட்சி கிளையின் காரியதரிசி அல்லது வேறு ஏதாவது பொறுப்புள்ள, தோழரின் முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதை நான் கவனித்திருக்கிறேன்; ஆனால் பொறுப்பு வாய்ந்த தோழருக்கே அவ்விசயத்தில் ஒன்றுமே நிச்சயமில்லை; அந்த பிரச்சினை பற்றி அவரே முற்றிலும் குழம்பிப் போயிருப்பார். அந்த பிரச்சினையின் அவசர அவசியமான காரணத்தினால் எப்படியும் அவர் ஒரு முடிவு எடுத்தாக வேண்டியிருக்கிறது! இல்லையெனில் இனி மேற்கொண்டு அவர் பொறுப்பு வகிக்கும் தோழராக இருக்க முடியாது. இந்த பொறுப்புள்ள தோழர் ஒரு முடிவு எடுக்க வேண்டியிருந்தது; சில விசயங்களில் மிகவும் தத்தளிக்க வேண்டியிருந்தது. உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டிற்று. அவர் அவசரத்தில் முடிவு எடுத்தார்; அவர் முடிவு கட்டுப்படுத்தும் தீர்மானத்திற்கு சமானம்.

இந்த முடிவுப்படி விசயங்கள் தீர்மானிக்கப்பட்டன; ஆனால் பல தவறுகள் நிச்சயம் நேரும் என்று சொல்லத் தேவையில்லை. சில தோழர்கள் ஒரு பிரச்சினையைப் பற்றி முடிவு எடுப்பதற்கு தெரியவில்லையென்றால், தங்களுக்குத் தெரியாது என்றும், பிரச்சினையைப் பற்றி ஆலோசிப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அல்லது பிரச்சினையை மேல் கமிட்டியின் ஆலோசனைக்கு அனுப்புவதற்கும் அவகாசம் வேண்டும் என்றும் சொல்லத் தயாராயில்லை. ஆயினும் வறட்டு கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கும்; தங்கள் பதவிகளைக் காத்துக் கொள்ளவும், ஏற்கனவே  தங்களுக்கே எல்லாம் தெரிந்தது போல இவர்கள் பாசாங்கு செய்கின்றனர். போகிற போக்கில் ஒரு முடிவு செய்கிறார்கள்; பெரும்பாலும் அது தவறாக இருக்கிறது; இம்மாதிரி விசயங்களும் திருத்தப்பட வேண்டும்.

சகல பிரச்சினைகளையும் அணுகும் பொழுது எல்லா தோழருக்கும், கீழ்க்கண்ட மனோபாவம் இருத்தல் வேண்டும். ‘உனக்கு ஒருவிசயம் தெரிந்தால், எனக்குத் தெரியும் என்று சொல்; உனக்குத் தெரியவில்லையென்றால் தெரியாது என்று சொல்; “அதைவிட்டு ” உண்மையிலேயே தெரியாத விசயத்தை தெரிந்ததாகச் சொல்லிக் கொள்ளுதல் கூடாது. கட்சிக்குள் இருக்கும் பிரச்சினைகளை இஷ்டப்படி தீர்க்க முடியாது. எல்லா கூட்டங்களும் முடிவுகளுக்கு வரவேண்டும். ஆனால் முடிவு  செய்ய முடியாத விசயங்கள் அல்லது இன்னும் சந்தேகமாயிருக்கும் பிரச்சினைகள், அல்லது இனியும் தெளிவுபடுத்தப்படாத விசயங்கள் பற்றி அலட்சியமாக முடிவு எடுக்கப்படக் கூடாது. ஒருவருக்கு நன்றாகத் தெரிந்த விசயங்களைப் பற்றியே முடிவு எடுக்கப்படவேண்டும். ஒருவருக்குத் தெரியாத விசயத்தை மேலும் ஆலோசிப்பதற்கு என்று தள்ளி வைத்துக் கொள்ளலாம்; அல்லது மேல் கமிட்டியின் ஆலோசனைக்கு அனுப்பப்படலாம். ஒரு கூட்டத்தில் உருவாகும் முடிவு, அவசியம் அந்தக் கூட்டத்திற்கு ஆஜரான மிகவும் பொறுப்பு வாய்ந்த தோழரால்தான் செய்யப்பட வேண்டுமென்று இல்லை; அறிக்கை வாசிப்பவர், விவாதத்திற்கு பின்னர் முடிவுகளை வகுக்கலாம்; இந்தத் தோழர் செய்யும் முடிவு கட்டுப்படுத்தும் தீர்மானத்திற்கு சமானமாக இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை; கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு இந்தத் தோழர் வந்த முடிவுக்கு மாறாக இருக்க முடியும்; இதுதான் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்)யிலும் காணப்படும் வேலை முறை.

மேலே குறிப்பிட்டவை , இயக்க மறுப்பியல் வகைப்பட்ட, மிதமிஞ்சிய உட்கட்சிப் போராட்டத்தின் முக்கியமான சிலபிரதிபலிப்புகளாகும்.

மேலே நான் கூறியுள்ளவை சில, படு மோசமான பிரதிபலிப்புகளில் ஒரு சில உதாரணங்களே. அதனால் கடந்தகால உட்கட்சிப் போராட்டமும், நிகழ்கால உட்கட்சிப் போராட்டமும் எங்கும் இதே மாதிரியிருக்கிறது என்று அர்த்தமில்லை. ஆனால் அத்தகைய உட்கட்சி போராட்ட வடிவங்கள் எதார்த்தத்தில் இருந்து வருகின்றன; சில காலகட்டங்களில் கட்சியில் மேலோங்கி பிரதான உட்கட்சி போராட்ட வடிவமாகவும் ஆயிற்று.

இந்த தவறான, பொருத்தமற்ற உட்கட்சி போராட்ட வடிவங்கள் கட்சிக்குள் எத்தகைய விளைவுகளை உண்டாக்கியுள்ளன? அவை கீழ்க்காணும் மோசமான விளைவுகளை உண்டாக்கியுள்ளன.

முதலாவதாக, அவை கட்சிக்குள் “குடும்பத் தலைவன் தோரணை” ஆதிக்கத்திற்கு ஊக்கமளிக்கிறது. இத்தகைய உட்கட்சிப் போராட்டங்களினால், தனிப்பட்ட தலைவர்களும், தலைமை கமிட்டிகளும், கட்சி அங்கத்தினர்கள் பேசுவதற்கும், விமர்சனம் செய்வதற்கும்கூட அஞ்சும்படியான அளவிற்கு அவர்களை அடக்கி வருகின்றனர். இவ்வாறு கட்சிக்குள் ஒரு தனிநபர் அல்லது ஒரு சில நபர்கள் இஷ்டப்படி நடந்து கொள்ளும் தோரணையை வளர்க்கிறது.

இரண்டாவதாக, இதற்கு நேர்மாறாக, கட்சிக்குள் அதீத ஜனநாயகவாதப்போக்கும், தாராளவாதமும் வளர்வதற்கு, உதவியுள்ளன. சாதாரண காலத்தில் பல கட்சி அங்கத்தினர்கள் மனம் விட்டு பேசவோ, அல்லது விமர்சிக்கவோ மாட்டார்கள்; மேலெழுந்தவாரியாக கட்சியில் சமாதானமும், ஐக்கியமும் நிலவும். ஆனால் முரண்பாடுகளை மறைக்கமுடியாத நிலைமை வரும்பொழுது நிலைமை நெருக்கடியாகும் பொழுது, குற்றங்கள் வெளிப்படுத்தப்படும் பொழுது இவர்கள் கடுமையான விமர்சனம் செய்யவும் போராடவும் இறங்கி விடுவார்கள்; இது கட்சிக்குள் பகை, பிளவு அமைப்பு சீர்குலைவு முதலியவற்றிற்குக் கொண்டு விடுகிறது; இவற்றை குணப்படுத்துவதென்பது துர்பலம்; கட்சிக்குள் இது “குடும்பத் தலைவன் தோரணையின்” மறுபக்கமாகும்.

மூன்றாவதாக, ஜனநாயக மத்தியத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சி வாழ்க்கையை முறைப்படி அமைப்பதை அவை தடுத்து விட்டன. இதன் விளைவாக கட்சிக்குள் ஜனநாயக வாழ்க்கை ஒழுங்கற்றும், அசாதாரணமாகவும், அறவே இல்லாமலும் இருந்து வருகிறது.

படிக்க :
♦ அருந்ததிராய் நூல் நீக்கம் : கருத்துக்களைக் கண்டு அஞ்சும் சங்க பரிவாரம் !
♦ கம்யூனிஸ்ட் கட்சியில் தவறை மறைப்பது நோயை மறைப்பதற்குச் சமம் ! | லியூ ஷோசி

நான்காவதாக, அவை கட்சி அங்கத்தினர்களின் ஊக்கம், முன்கை எடுக்கும் குணம், ஆக்கல் சக்தி வளர்வதைத் தடுத்து, கட்சியின்பாலும், அவர்கள் வேலையின்பாலும் காட்டும் பொறுப்புணர்ச்சியைக் குறைத்துள்ளது ; இதனால் சில தோழர்கள் உற்சாகத்துடன் பொறுப்புகளை மேற்கொள்ளவோ, அல்லது சுதந்திரமான கரங்களுடன் வேலை செய்யவோ, சிருஷ்டிக்கவோ துணிவதில்லை. இது தோழர்கள் நிலைமைகளையும், பிரச்சினைகளையும் கவனமாக ஆலோசிக்கவோ, ஆராயவோ கவலைப்பட்டுக் கொள்ளாத நிலைமையில் கொண்டுவிட்டிருக்கிறது; தங்கள் வேலையை சிரத்தையின்றி அலட்சியமாக செய்து வரும், மற்றவர்கள் கூறும் வார்த்தைகளை வெறுமனே எதிரொலிக்கும் வேலை முறையை வளர்ப்பதில் கொண்டு விட்டிருக்கிறது.

ஐந்தாவதாக, அவை கட்சிக்குள் குறுங்குழுவாதத்தையும் கோட்பாடற்ற கோஷ்டிச் சண்டைகளையும் வளர்ப்பதற்கு உதவியுள்ளது . கட்சிக்குள் விமர்சனத்தையும், போராட்டத்தையும் கண்டு அஞ்சும் மனப்பாங்கை உண்டாக்கியுள்ளது; சில தோழர்களிடத்தில் “தானுண்டு தன்வேலையுண்டு” என்ற வைதீக மனப்போக்கையும் “எந்த அளவுக்கு குறைந்த வேலையோ அந்த அளவுக்கு விசேஷம்”  என்ற மனப்பான்மையையும் வளர்க்கிறது.

ஆறாவதாக, அவை ட்ராட்ஸ்கீய ஒற்றர்களுக்கும், எதிர்புரட்சிக்காரர்களுக்கும் கட்சியை சீர்குலைப்பதற்கு அரிய வாய்ப்பை அளித்திருக்கிறது; நமது கட்சியைத் தாக்குவதற்கு எதிர்ப்புரட்சிக்கு அதிக சாக்குகளைக் கொடுத்திருக்கிறது. ட்ராட்ஸ்கீய ஒற்றர்கள் கட்சியை சீர் குலைப்பது, தாக்குண்டு கட்சி மீது அதிருப்திப்பட்ட நபர்களை தன்பக்கம் இழுத்துக் கொள்வது முதலான நடவடிக்கைகளை நடத்திக்கொண்டு செல்வதற்கு கட்சிக்குள் இருக்கும் முரண்பாடுகளையும், முறை நழுவிய எந்தவிதமான உட்கட்சிப் போராட்டத்தையும் குறிப்பாக பயன்படுத்திக் கொள்கின்றனர். சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து நடத்தும் போராட்டத்தை, பிரச்சாரம் செய்வதற்கும் ஆத்திரமூட்டுதலுக்கும், கட்சிக்கு வெளியிலுள்ள அனுதாபிகளையும் கட்சிக்குள் உள்ள உறுதியற்ற நபர்களையும், பகை வளர்க்கும் கொள்கையை நிறைவேற்றுமாறும், கட்சிக்குள் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் சீர்குலைக்குமாறும் கவர்வதற்கும் பயன்படுத்திக்கொள்கிறது.

இந்த மேலே கூறியுள்ள தீய விளைவுகள் கட்சிக்குள் நேர்ந்துள்ளன; சில இன்னும் அகற்றப்படவில்லை.

இத்தகைய இயந்திரரீதியான, மிதமிஞ்சிய உட்கட்சிப் போராட்ட வடிவங்கள் நீண்ட காலத்திற்கு கட்சி வாழ்க்கையில் அசாதாரண நிலையை சிருஷ்டித்துள்ளது. கட்சிக்குப் பெருஞ் சேதமும் விளைவித்துள்ளது. நமது கட்சியின் தலைமை தாங்கும் மேல் கமிட்டிகளில் இது திருத்தப்பட்டிருந்த போதிலும், கட்சி முழுவதையும் எடுத்துக் கொண்டால் இன்று அது பிரதான போராட்ட வடிவமாக இல்லாதிருந்த போதிலும், நடுத்தர, கீழ்த்தர மட்டங்களிலுள்ள சில அமைப்புகளிலும், சில தனிப்பட்ட அமைப்புகளிலும் இந்த போராட்ட வடிவங்கள் இன்னமும் திருத்தப்படவில்லை. பல்வேறு அளவில் பரந்து இருந்து வருகிறது. இதன் விளைவாக இந்த அமைப்புகளில் வாழ்க்கை அசாதாரணமாக இருக்கிறது. அதனால் இந்த திரிபு விசயத்தில் கவனம் செலுத்தும்படி அறைகூவ வேண்டும். அப்பொழுதுதான் நமது அமைப்பிலிருந்து இவற்றை அறவே அகற்றலாம்; நமது தோழர்கள் திரும்பவும் அதே தவறுகளை செய்யாதிருப்பார்கள்; சரியாகவும், ஒரே நிதானமாகவும் கட்சிக்குள் சித்தாந்தப் போராட்டத்தை நடத்தி, கட்சியை முன்னுக்குக் கொண்டு செல்லுவார்கள்.

(தொடரும்)

வேளாண் சட்டத் திருத்தம் : சந்தை ஒரு பிணம் தின்னும் கழுகு !

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் பஞ்சாப் மாநில விவசாயிகளுக்கு, இந்த சர்ச்சைக்குரிய சட்டங்களை திரும்பப் பெறும்படி வைத்த கோரிக்கையில் உறுதியாக நிற்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் அரசு கொள்முதல் உறுதிசெய்யப்படாத பயிர்களை திறந்தவெளி சந்தையில் குறைந்த விலைக்கு விற்பதைத் தவிர விவசாயிகளுக்கு வேறு வழியில்லை.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் என்பது, உறுதியான வருமானம் கொடுக்காத பயிர்களைப் பொறுத்தவரையில், நிலைமையை இன்னும் மோசமாக்குவதாகவே இருக்குமென விவசாயிகள் அஞ்சுகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில், நெல்லும் கோதுமையும் 100% அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் மக்காச்சோளம் போன்ற பயிர்களின் விசயத்தில் இந்த நிலையில்லை. வருடா வருடம் அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கிறது. ஆனால், அரசு தரப்பிலிருந்து போதுமான அளவு கொள்முதல் செய்யப்படுவதில்லை. இதன்விளைவாக, சந்தை சக்திகளே விலைகளை தீர்மானிப்பதாக இருக்கிறது. பெரும்பாலும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு குறைவானதாகவே சந்தை விலை இருக்கிறது. சாகுபடி செய்யப்பட்ட பயிர்களில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விலை இன்னும் குறைந்துவிடும்.

கடந்த ஜீலை மாதத்தில் வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம், மக்காச்சோளம் ஒரு குவிண்டாலுக்கு ரூபாய் 1,850 என நிர்ணயித்தது. ஆனால், அக்டோபர் மாதத்தில் உள்ளூர் மண்டிகளில் மக்காச்சோளம் ஒரு குவிண்டால் ரூ.800-க்கு மட்டுமே விற்கப்பட்டது. இதற்கு ஈரப்பதம் அதிகமாக இருப்பதுதான் காரணமென வர்த்தகர்கள் கூறுகிறார்கள். அதற்கடுத்த வாரங்களில் விலை சிறிது முன்னேற்றமடைந்தாலும் குறைந்தபட்ச ஆதாரவிலையான ரூ.1,850-க்கு அருகில் கூட வரவில்லை.

படிக்க :
♦ பிகார் : வேளாண் மசோதாவுக்கு ரத்த சாட்சியாக நிற்கும் விவசாயிகள் !
♦ விவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …

பஞ்பாப் மாநில, வேளாண் துறை இயக்குனர், ராஜேஷ் வசிஷ்ட் கூறுகையில், “பிகார், ஆந்திரா, கிழக்கு உத்தர பிரதேசம் ஆகிய இடங்களில் இருந்து மக்காச்சோளம் பஞ்சாப் மாநிலத்திற்குள் கொண்டுவரப்படுவதால், பஞ்சாப் மாநில மண்டிகளில் விலை குறைந்திருக்கிறது. சென்ற ஆண்டு, வெள்ளம் காரணமாக பிற மாநிலங்களில் இருந்து மக்காச்சோளம் அதிகம் வராததால், நல்ல விலை கிடைத்தது”.

கொரோனா பெருந்தொற்று காரணமாக, கோழி, கால்நடைப் பண்ணைகளுக்கு தேவையான தீவனங்களின் கிராக்கி குறைந்ததால், அதற்கு பரவலாக பயன்படுத்தப்பட்ட மக்காச்சோளத்தின் விலையும் சரிந்தது. இப்போது கோழி, கால்நடைப் பண்ணைத் தீவனங்களுக்கான கிராக்கி அதிகரிப்பதால், இனிவரும் காலத்தில் விலையில் முன்னேற்றம் ஏற்படலாம்.

18 ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் விதைத்த விவசாயிகள், தங்கள் சாகுபடியை, விலை குறைந்த நேரங்களில் சேமித்து வைத்து, விலை உயரும்போது விற்கிறார்கள். ஆனால், அனைத்து விவசாயிகளுக்கும் இப்படி சேமித்து வைத்து விற்கும் அளவுக்கு வசதியில்லை. நிதிநிலை நெருக்கடி மற்றும் பெரிதாகி வரும் கடன் தொல்லைகள் காரணமாக, பெரும்பாலான விவசாயிகளின் உடனடியான அக்கறையெல்லாம் தாங்கள் சாகுபடி செய்த பயிரை விற்று, வரும் பணத்தை பெற்றுக்கொண்டு அடுத்த விளைச்சலுக்கு தயாராவதுதான்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்கள், ”விவசாயிகள் தங்கள் விளைச்சலை சேமித்து வைத்து, வேறு மண்டிகளுக்கு எடுத்துச்சென்று விற்று நல்ல வருமானம் பெறலாம்” என்கிறார்கள். ஆனால், விவசாயிகளுக்கு அதற்குத் தேவையான எந்த வசதிகளும் இல்லை.

நாடெங்கும் நடக்கும் விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசு ஒரு குவிண்டால் பருத்திக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.5,725 என நிர்ணயித்திருக்கிறது. ஆனால், கடந்த அக்டோபர் மாதம், உள்ளூர் மண்டிகளில் விவசாயிகள் பருத்தியை ஒரு குவிண்டாலுக்கு ரூபாய்.4,000-க்கு தான் விற்றிருக்கிறார்கள். பதிந்தா என்னும் இடத்தில் உள்ள இந்திய பருத்திக் கழகத்தின் வெளியே விவசாய சங்கங்கள் போராட்டங்கள் நடத்திய பிறகே விலை உயர்த்தப்பட்டது.  10 ஆண்டுகளுக்கு முன்பு, இதே பதிந்தா பகுதியில் பருத்தி ஒரு குவிண்டால் ரூ.8,000-க்கும் மேலாக விற்கப்பட்டது என விவசாயி ஒருவர் சொல்கிறார்.

“மற்ற தொழில்களில் எல்லாம் வருமானம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஆனால், விவசாயத்தில் மட்டும் மிகுந்த உறுதியற்றநிலை இருக்கிறது. எங்கள் இடுபொருட்களுக்கான செலவுகள் உயர்ந்துவிட்டது. பருத்தி பிடுங்கும் வேலையாட்களுக்கான செலவும் இப்போது அதிகமாக உள்ளது. ஆனால், வருமானம் எங்கே? குறைந்தபட்ச ஆதார விலையும் போதுமானதாக இல்லை” என விவசாயிகள் புலம்புகிறார்கள்.

பாஸ்மதி அரிசி சாகுபடி செய்யும் விவசாயிகளின் நிலையும் இதுதான். இது குறித்து தரன்தரன் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திரஜித் எனும் விவசாயி தி வயர் இணையதளத்திடம் பேசுகையில், “1509 ரக பாஸ்மதி அரிசி சென்ற ஆண்டு ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,300 – ரூ.2,500 வரை விற்றது. ஆனால், இப்போது ரு.1,600-க்கும் குறைவாகத்தான் சந்தை விலை இருக்கிறது. அதேபோல், 1121 ரக பாஸ்மதி அரிசிக்கு சென்ற வருடம் ரூ.3,200 – 3,300 வரை விலை இருந்தது. ஆனால், இப்போது 2,500 – 2,700 ரூபாய்க்குள் தான் விலை இருக்கிறது.” என்று கூறினார். மேலும் தனியார் முகவர்களின் கூட்டமைப்பு, தந்திரமாக உத்தர பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் இருந்து பாஸ்மதியை வாங்கி, உள்ளூர் மண்டிகளில் விலைகளை குறைப்பதாகவும் கூறுகிறார் இந்திரஜித்.

ஊரக மற்றும் தொழிற்துறை மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் முனைவர் R.S.குமன் கூறுகையில், “மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் 23 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கிறது. ஆனால் நெல், கோதுமை, சில அளவிலான பருத்தியை தவிர மற்ற பயிர்களுக்கு உறுதி செய்யப்பட்ட அரசு கொள்முதல் கிடையாது. இது விவசாயிகளை சந்தை சக்திகளின் பிடியில் விட்டுவிடுகிறது”.

“சந்தை என்பது கொடையாளன் அல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும். சந்தை லாபத்திற்காக மட்டுமே இயங்குகிறது. அதற்கு விவசாயிகளின் வருமானத்தின் மீதெல்லாம் அக்கறையில்லை. பொருளாதாரத்தின் அடிப்படை விதியாக தேவையும், வழங்கலும்தான் (Demand and Supply) இருக்கின்றன. அவைதான் சந்தை விலையை தீர்மானிக்கிறது. பல நேரங்களில் இது செயற்கையாக உருவாக்கப்படுகிறது. உதாரணமாக, வெங்காய விலை ரூ.80-ஐ தொட்டுவிட்டது. இதற்குக் காரணம், தேவை உயர்ந்தது அல்ல. வெங்காயத்தை பதுக்கி வைப்பதன் மூலம் செயற்கையாக உருவாக்கப்பட்ட வழங்கல் நெருக்கடியும்தான் காரணம்.

படிக்க :
♦ முருக பக்தர்களே ! வேல் யாத்திரை அழைக்கிறது! வீதியிலிறங்கி கேள்வி எழுப்புவோம் !!
♦ ஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு !

குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கப்பட்டாலும், அரசாங்கம் நெல், கோதுமை தவிர்த்த மற்ற பயிர்களுக்கு நல்ல வருமானத்தை உறுதி செய்யவில்லை என்றால் திறந்தவெளி சந்தையின் கொள்கைகளால் வழிநடத்தப்படும் இந்த சூழலில் விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை எப்படி அரசாங்கத்தால் உறுதிசெய்ய முடியும்?

இதைத்தான் இந்த புதிய வேளாண் சட்டங்கள், வேளாண் உற்பத்தி சந்தை குழுவையும், குறைந்தபட்ச ஆதார விலையையும் பலவீனப்படுத்துவதன் மூலம் செய்கிறது. தனது உணவு தானிய இருப்பை குறைத்துக்கொள்ளுமாறு உலக வர்த்தகக் கழகம் இந்தியா மீது அழுத்தம் கொடுத்து வருகிறது. இது நடந்தால், நெல், கோதுமையில் அரசு கொள்முதல் என்பது மிகப்பெரிய அளவில் சரிந்துவிடும்” என்கிறார்.

BKU – Ekta Ugrahan என்னும் அமைப்பின் செயலாளர் சுக்தேவ் கோக்ரி, கூறுகையில், “விவசாயம் தனியார்களின் கைகளுக்கு செல்லும் போதெல்லாம், விவசாயிகள் நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படுகிறார்கள். ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், விவசாயிகளிடம் பெரிய அளவில் நிலம் கையிருப்பில் இருந்தும், தங்கள் விளைச்சலுக்கு கட்டுபடியாகாத வருமானத்தால், தங்களையே நிலைநிறுத்திக்கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். அந்நிய நாடுகளில் 2% மக்கள்தான் விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள். ஆனால், இங்கே இந்தியாவில் 60% மக்கள் விவசாயத்தை நம்பிதான் இருக்கிறார்கள். இந்தியாவில் சிறிய அளவிலான நிலத்தை வைத்திருக்கும் விவசாயிகளால் எப்படி வாழ முடியும்?” என கேட்கிறார்.

“சந்தை சக்திகளின் கருணையில் விவசாயம் விடப்படும் போது, விவசாயிகளின் நலன்கள் பெரிதும் சமரசப்படுத்தப்படுகிறது” என்று கனடா பிரதமர், ஜஸ்டின் ட்ரூடோ கூறுகிறார்.

வேளாண் வல்லுநர், தேவேந்திர் சர்மா, “சுதந்திர சந்தை என்பது உலகில் எங்குமே வேலை செய்யவில்லை. இங்கே மட்டும் எப்படி அது வேலை செய்யும்? சுதந்திர வர்த்தகத்தின் பொருளாதாரம் முழுவதும், ஏழை மக்களை சுரண்டுவதோடுதான் பிணைக்கப்பட்டிருக்கிறது” என்கிறார்.

”அரசாங்கம் வேண்டுமென்றே விவசாயத்துறையை நிதிநிலை ரீதியாக நிலையற்றதாக்குவதே, இந்த பொருளாதார சீர்த்திருத்தங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கத்தான். இது பின்னர், விவசாயத்தில் ஈடுபடும் மக்களை குறைத்து, அவர்களை நகரங்களில் இருக்கும் தொழிற்கூடங்களிலும், சேவைத்துறையிலும் பணியாற்றும் மலிவு விலை தொழிலாளர்களாக மாற்றுகிறது”.

பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்

இந்த கொள்கைகளின் விளைவு கொரோனா பெருந்தொற்று காலத்தில் அப்பட்டமாக அம்பலப்பட்டுவிட்டது. ஊரடங்கின் இரண்டாவது நாளே, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் கிராமங்களுக்கு புலம்பெயர்ந்தார்கள். இது இந்த பொருளாதார வடிவமைப்பு ஏழைகளுக்கு பயனற்றதாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பஞ்சாப் மாநிலத்தில் மக்காச்சோளம் பயிரிடும் நிலப்பரப்பின் அளவு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அரசாங்கமும் விவசாயிகளை மக்காச்சோளம் விளைவிக்கச் சொல்லி வருகிறது. ஆனால், குறைந்தபட்ச ஆதார விலையில் அதை கொள்முதல் செய்வதையோ, தனியார் முகவர்களின் கொள்முதலை ஒழுங்கமைப்பதையோ செய்யாமல் ஏமாற்றுகிறது. குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யப்படும் என்ற உறுதியில்லாமல், ஏன் விவசாயிகள் நெல்லுக்கு பதிலாக மக்காச்சோளத்தை விளைவிக்கவேண்டும்?

மூத்த பத்திரிக்கையாளர், கமீர் சிங் கூறுகையில், “பொது விநியோக அமைப்பின் கீழ் அரசாங்கம் பருப்புவகைகளை விநியோகம் செய்கிறது. அதை ஏன் அந்த மாநில விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யக்கூடாது?” என வினவுகிறார்.

இந்த ஒட்டுமொத்த சித்திரமும் நமக்கு காட்டுவது என்னவென்றால், குறைந்தபட்ச ஆதார விலையே சந்தை பொருளாதாரத்தை மையாக கொண்டுதான் நிர்ணயிக்கப்படுகிறது. அப்படி குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கப்பட்டாலும், அரசு கொள்முதலும், ஒழுக்குமுறை விற்பனைக்கூடங்களும் இல்லாத பட்சத்தில், விவசாயிகள் சந்தை சக்திகளின் பிடியில்தான் விடப்படுகிறார்கள். சந்தை சக்திகளிடம் பேரம் பேசும் திறன் விவசாயிகளிடம் இல்லை. சாகுபடி செய்ததை சேமித்து வைக்கும் அடிப்படை கட்டமைப்பு வசதியுமில்லை. சேமித்து வைத்து விற்பனை செய்யும்வரை விவசாயிகளை கடன் தொல்லை விட்டுவைப்பதில்லை. சந்தை சக்திகளின் ஆதிக்கத்தால், கார்ப்ரேட் தரகர்களின் கை எப்போதும் ஓங்கியே இருக்கிறது. அவர்கள் தயவில்தான் விவசாயிகள் வாழவேண்டிய நிலையிருக்கிறது. பாஜக அரசால் கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த புதிய வேளாண் சட்டங்கள் இந்த நிலைமையை இன்னும் மோசமாக்கவே செய்யும் என்பதற்கு பஞ்சாப் மாநிலத்தின் விவசாயம் ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறது. அதனால்தான் அவர்கள் இந்த சட்டங்களை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

சீனிச்சாமி
செய்தி ஆதாரம் : The Wire

நவம்பர் புரட்சிநாள் விழா : சோசலிசமே மாற்று || உரைகள்

சென்னை – திருவள்ளூர் மேற்கு மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமையில் பட்டாபிராமில் நவம்பர் 7 அன்று மாலை 6 மணியளவில் நவம்பர் புரட்சி நாள் விழா கொண்டாடப்பட்டது !!

பு.ஜ.தொ.மு திருவள்ளூர் மேற்கு மாவட்டப் பொருளாளர் தோழர் மு.சரவணன் வரவேற்புரையாற்றினார்.

திருவள்ளூர் (மேற்கு) மாவட்டத்தின் தலைவர் தோழர் ம.சரவணன் கூட்டத்துக்கு தலைமையேற்று உரையாற்றினார். தனது உரையில், “நாம் ஏன் நவம்பர் 7 ரசிய சோசலிசப் புரட்சி நாளை நினைவுகூர வேண்டும்?” என்பதை விளக்கிப்பேசினார்.

உழைக்கும் மக்கள் அதிகாரத்திற்கு வந்த நாள், வரலாற்றில் முதல் முறையாக யாரும் பார்த்திராத வகையில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான அரசாங்கம் உருவானது. அதேபோல் நாமும் நமது நாட்டில் புரட்சி நடத்த அணிதிரள வேண்டியது மிகவும் அவசியம். ஏழை, உழைக்கும் மக்களுக்கான அரசாங்கத்தை கட்டியமைக்க அனைவரும் இணைந்துப் போராடுவோம் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்“ என அறைகூவல் விடுத்தார்.

இறுதியாக திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் துணைத் தலைவர் தோழர் ச.மகேஷ்குமார் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

பாருங்கள் ! பகிருங்கள்!!

தனிநபர் மீதான தாக்குதல், உட்கட்சிப் போராட்டமாகாது || லியூ ஷோசி

உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 6

பாகம் – 5

இயந்திரகதியான, மிதமிஞ்சிய உட்கட்சிப் போராட்டத்தின் வடிவங்கள் என்ன? அவை பின்வருமாறு:

முதலாவதாக, ஸ்தல கட்சி அமைப்புகளிலும் இராணுவத்திலுள்ள கட்சி அமைப்புகளிலும் “போராட்டக் கூட்டங்கள்” என்று சொல்லப்படும் கூட்டங்கள் ஒழுங்காக நடந்தேறுகின்றன. அரசாங்க அமைப்புகள், பொதுஜன அமைப்புகள் போன்ற கட்சி சார்பற்ற அமைப்புகளிலும் “போராட்டக் கூட்டங்கள்” ஒழுங்காக நடத்தப்படுகின்றன. முன்கூட்டியே அந்த போராட்டக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. செய்த வேலையை சீர்தூக்கிப் பார்க்கும் பிரதான நோக்கத்துடன் அவை நடத்தப்படுவதில்லை. சில தனிப்பட்ட நபர்களைத் தாக்கும் நோக்கத்துடன் அவை நடத்தப்படுகின்றன.

“விவாதத்திற்குரிய விசயத்தை”க் குறித்து போராட்டத்தை நிகழ்த்துவதற்கு பதிலாக, போராட்டம் “ஆளுக்கு விரோதமாக”த் திருப்பப்படுகிறது; வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், இந்த போராட்டம் பிரதானமாக சில தவறான சித்தாந்தத்தையோ, கோட்பாட்டையோ எதிர்த்து நடத்தப்படவில்லை. குறிப்பிட்ட தனி நபரை எதிர்த்து நடத்தப்படுகிறது.. “ஒரு சாங்கை எதிர்த்தோ அல்லது லீயை எதிர்த்தோ நடத்தப்படும் போராட்டம்” என்று சொல்லப்படும் போராட்டம் தவறு செய்த குறிப்பிட்ட ஒரு தோழரைத் தாக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும்.

சாராம்சத்தில் “போராட்டக் கூட்டம்” ஒரு குறிப்பிட்ட தோழருக்கு எதிரான விசாரணைக் கூட்டம். இது பிரச்சினைகளை சித்தாந்த பூர்வமாக தீர்க்கும் இலட்சியத்தை பிரதானமாகக் கொண்டிருக்கவில்லை; சில பிரச்சினைகளை அமைப்புபூர்வமாகத் தீர்ப்பதை இலட்சியமாகக் கொண்டிருக்கிறது; தொந்தரவு கொடுப்பவர்களை, மாறுபட்ட அபிப்பிராயங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பவர்களை (அம்மாதிரியான அபிப்பிராயங்கள் அவசியம் தவறாகத்தானிருக்க வேண்டுமென்றில்லை) விரட்டி ஒடுக்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. மேலும், ஒவ்வொரு “போராட்டக் கூட்டத்திலும்”, தவறாமல் எந்தத் தனிநபர்கள் மீது போராட்டம் நடத்தப்பட்டதோ அவர்களில் பெருவாரியானவர் பற்றி அமைப்பு ரீதியான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இத்தகைய போராட்ட முறைகள் தவறானவை என்று சொல்லாமலே விளங்கும். அது ஏன் சரியானதில்லை?

முதலாவதாக, “போராட்டக் கூட்டம்” என்ற பதமே தவறானது. அதற்கு அர்த்தமேயில்லை ; “போராட்டக் கூட்டங்கள்” என்று சொல்லப்படுபவை இருப்பதினால், “போராட்டமில்லாத கூட்டங்களும்” இருக்கின்றனவா? சில கூட்டங்கள் குறிப்பாக போராட்டம் நடத்துவதற்காக இருக்கின்றனவென்றும் போராட்டம் நடத்தப்படாத வேறு கூட்டங்கள் இருக்கின்றன என்றும் நாம் கருதுவோமானால் அது சித்தாந்த ரீதியாக பெருங்குழப்பத்தை விளைவிக்கும். பல தோழர்கள் போராட்டத்தின் பரிபூரண தன்மையையும், அனைத்தையும் அணைத்து நிற்கும் குணத்தையும் புரிந்து கொள்ளவில்லை என்பதைத்தான் இது இங்கு நிரூபிக்கிறது. இயக்க மறுப்பியல் முறையில் கல்வியையும், போராட்டத்தையும் பிரித்துப் பார்க்கின்றனர்.

உட்கட்சிப் போராட்டத்தின் நோக்கம் கட்சியையும் பிழைகள் செய்த தோழர்களையும் போதிப்பதாகும். ஆதலின் கட்சிப் போராட்டம் என்பதுவே கட்சிக்குள் ஒருவிதமான இன்றியமையாத போதனையாகும்; கட்சிக்குள் கல்வி என்பதும் ஒரு உட்கட்சிப் போராட்டமாகும். மற்றதுடன் ஒப்பிடுங்கால், மிக நிதானமான போராட்டமாகும். அதனால் கல்வியும் போராட்டமும் தனித் தனியாக பார்க்கக் கூடியவையன்று; போராட்டம் என்பது ஒருவிதக் கல்வி; கல்வி என்பது ஒருவிதப் போராட்டம்; அவ்விரண்டையும் இயக்க மறுப்பியல் ரீதியாக பிரிப்பது என்பது தவறு.

மேலும் அத்தகைய “போராட்டக் கூட்டங்கள்” கட்சிக்குள் உள்ள குறுங்குழுவாதத்தின் மிக வெளிப்படையான பிரதிபலிப்பாகும். ஊழியர்களையும், தோழர்களையும் தாக்கும் தவறான கொள்கையின் பிரதிபலிப்புமாகும். தவறு செய்த தோழர்களுக்கு உதவி செய்து, போதித்து, பாதுகாப்பதற்கு பதிலாக, எந்த தோழர்களைக் குறித்து போராட்டம் நடத்தப்படுகிறதோ அந்த தோழர்களைத் தாக்குவதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது. பிரதானமாக தனிநபரை எதிர்த்துப் போராடும் நோக்கங் கொண்டது. அதே சமயத்தில் சித்தாந்தத் துறையிலுள்ள முரண்பாடுகளும், வேற்றுமைகளும் அலட்சியப்படுத்தப்படுகின்றன.

ஆகவே இத்தகைய “போராட்டக் கூட்டங்கள்” கட்சிக்குள் சித்தாந்த ரீதியிலும், அரசியல் ரீதியிலும், அமைப்பு ரீதியிலும், நடைமுறையிலும் ஐக்கியத்தை உறுதிப்படுத்துவதற்கு பெரும்பாலும் தவறுகின்றன. அதற்கு நேர்மாறாக, சித்தாந்தம், அரசியல், அமைப்பு சம்பந்தமான விசயங்களிலும், நடைமுறையிலும் உள்ள வேறுபாடுகளை பெரும்பாலும் அதிகரிக்கின்றது; கட்சிக்குள் வேற்றுமையையும் கோட்பாடற்ற தகராறுகளையும் அதிகப் படுத்துகிறது; இத்தகைய “போராட்டக் கூட்டங்களை” கட்சியல்லாத மற்ற அமைப்புகளில் நடத்துவது என்பது இதிலும் தவறானது.

இரண்டாவதாக, இயக்கமறுப்பியல் வகைப்பட்ட, மிதமிஞ்சிய உட்கட்சி போராட்டம் கீழ்க்கண்ட வழிகளிலும் பிரதிபலிக்கின்றது. உட்கட்சிப் போராட்டம் எவ்வளவுக்கெவ்வளவு கடுமையாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அது மேலானது என்று சில தோழர்கள் அபிப்பிராயங் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு பிரச்சினை எவ்வளவு கடுமையாகக் கிளப்பப்படுகிறதோ அவ்வளவுக்கு அது சிறப்பானது, எவ்வளவுக்கு அதிகமாக குற்றங்குறை கூறுகிறார்களோ அவ்வளவுக்கு அது சிறப்பானது; எவ்வளவு தடபுடலான பதங்களை உபயோகிக்கிறார்களோ அவ்வளவுக்கு அது சிறப்பானது; விமர்சனம் எவ்வளவு ஏசுகிறார்களோ அவ்வளவுக்கு அது சிறப்பானது; எவ்வளவுக்கு கடுமையாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அது சிறப்பானது; எவ்வளவுக்கு முகம் தொங்கவிட்டுக் கொள்கிறோமோ அவ்வளவுக்கு நல்லது; எவ்வளவுக்கு பற்களை கடகடவென்று நெரிக்கின்றோமோ அவ்வளவுக்கு சிறந்தது. இந்தமாதிரி நடந்து கொண்டால், “புரட்சிக்காரர்கள் எவ்வளவு புரட்சிகரமாக இருக்கவேண்டுமோ அவ்வளவுக்கு புரட்சிகரமாக இருப்பதாக” தங்களைப்பற்றி கருதிக் கொள்கின்றனர். உட்கட்சிப் பற்றியோ, நிதானம் பற்றியோ கவலைப்படுவதில்லை; பொருத்தமான எல்லையுடன் நிற்பதில்லை. எந்தவிதமான கட்டுப்பாடுமில்லாமல் போராட்டத்தை நடத்துகின்றனர். இது முற்றிலும் தவறானது என்பது வெள்ளிடைமலை.

மூன்றாவதாக, உட்கட்சிப் போராட்டம் சாராம்சத்தில் சித்தாந்தப் போராட்டம் என்பதை இன்னும் சில தோழர்கள் புரிந்து கொள்வதில்லை. சித்தாந்த ஐக்கியத்தை சாதிப்பதின் மூலம்தான் கட்சிக்குள் ஐக்கியத்தை நிலை நாட்டவும், அரசியல் ரீதியிலும், அமைப்பு ரீதியிலும், நடைமுறையிலும் பலப்படுத்தவும் முடியும் என்றும், பிரச்சினைகளை அமைப்பு, நடைமுறை சம்பந்தமான கோணத்திலிருந்து தீர்ப்பதற்கு முன்பு, சித்தாந்தம், கோட்பாடு ஆகிய கோணங்களிலிருந்து தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை.

ஆயினும் ஒற்றுமையை உருவாக்குவதும், பிரச்சினைகளை சித்தாந்த ரீதியிலும் கோட்பாடுகளின் அடிப்படையிலும் தீர்ப்பதும், மற்றவர்களின் சித்தாந்தத்தை சீர்திருத்துவதும், நெடுநாளாக மற்றவர்கள் கொண்டுள்ள கோட்பாடுகள், கண்ணோட்டம் தவறான அபிப்ராயங்கள் முதலியவற்றை திருத்துவதும் சுலபமான காரியமல்ல. சும்மா சில வார்த்தைகளில் இதைச் செய்துவிட முடியாது; வெறும் “போராட்டக் கூட்டத்தின்” மூலமும் செய்துவிட முடியாது. தான்தோன்றித் தனமான வழிகளினாலோ அல்லது கட்டாய நடவடிக்கைகளினாலோ மட்டும் அதை சாதித்துவிட முடியாது; பொறுமை மிக்க போதனைகளின் மூலமும், கல்வியின் வாயிலாகவும், பல்வேறு விதமான சிக்கல் நிறைந்த போராட்டங்கள் மூலமாகவும், புரட்சியில் நீண்டகால கல்வி, போராட்டம், செயல்முறை மூலமாகவும்தான் இது கைகூடும், உட்கட்சிப் போராட்டத்தின் இந்த சாராம்சத்தை இந்த ஒளியில் சில தோழர்கள் புரிந்து கொள்வதில்லை. ஆனால் அதற்கு பதிலாக உட்கட்சிப் போராட்டத்தை சிறுமைப்படுத்தவும், யாந்திரீகப்படுத்தவும், கொச்சைப்படுத்தவும் செய்கின்றனர்.

உட்கட்சிப் போராட்டம் என்றால் இது அமைப்பு அல்லது அமைப்பு சம்பந்தப்பட்ட விசயத்திலுள்ள ஒரு முரண்பாடாகக் கருதுகின்றனர்; அல்லது அதை சண்டையிடுவதாக, ஏசுவதாக, சச்சரவிடுவதாக அல்லது குஸ்திபோடுவதாக எண்ணுகின்றனர். உண்மையான ஒற்றுமைக்காக அவர்கள் முயலுவதில்லை. பிரச்சினைகளை கோட்பாடுகள் சித்தாந்தத்தின் அடிப்படையில் தீர்ப்பதில்லை. கட்சிக்குள் சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தமான வேறுபாடுகளை அவ்வளவு எளிய இயந்திரகதியான, கொச்சையான வழிகளில் தீர்க்க முடியும் என்று அவர்கள் எண்ணுகின்றனர். இது முற்றிலும் தவறானது என்று சொல்லத் தேவையில்லை.

இந்தத் தோழர்கள் சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தப்பட்ட வேறுபாடுகளை கட்சிக்குள் நிவர்த்திப்பதின் மூலமாகவும் சில தவறான போக்குகளையும் வளர்ச்சிகளையும் திருத்துவதின் மூலமும் கட்சிக்குள் ஒற்றுமையை உருவாக்குவதோ அல்லது பாதுகாப்பதோ இல்லை. அதற்கு நேர்மாறாக கட்சிக்குள் வெறும் அமைப்பு வழிகளில் மட்டும், அல்லது தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள், தாக்குதல் கொள்கை, கட்சி அங்கத்தினர்கள் சம்பந்தப்பட்ட மட்டில் தண்டனை முறை முதலியன மூலம் ஒற்றுமையை உருவாக்கவும், பாதுகாக்கவும் முயலுகின்றனர். இதன் விளைவாக பல்வேறு தவறான, மிதமிஞ்சிய உட்கட்சிப் போராட்டங்கள் எழுகின்றன. ஆதலால் கோட்பாடு, சித்தாந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் தோழர்களை ஜாக்கிரதையாகவும் கருணையுடனும் போதிப்பதற்குப்பதிலாக, தோழர்களை சாதாரண அமைப்பு வழிகளை கைக்கொள்வதின் மூலம், எதிரான முறைகள், நிர்வாக நடவடிக்கைகள் முதலியவற்றைக் கடைப்பிடிப்பதின் மூலம் தோழர்களை ஒடுக்கவும், மிரட்டவும் செய்கின்றனர்.

இவர்கள் தோழர்களைப்  பற்றி தாறுமாறான அமைப்பு முடிவுகளுக்கு வருகின்றனர். அமைப்பு ரீதியான தண்டனைகளையும் தோழர்களுக்கு வழங்குகின்றனர். மேலும் சட்டத்திற்கு முன்பு எல்லோரும் சமம் என்னும் பூர்ஷ்வா கண்ணோட்டத்தை வைத்துக் கொண்டு கட்சிக்குள் தோழர்களை நிர்தாட்சண்யமாக தண்டிக்கின்றனர்; அதாவது குற்றம் செய்தவர்கள் எத்தகைய கட்சி அங்கத்தினர்கள், இவர்கள் தங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டோ அல்லது திருத்திக் கொண்டோ இருக்கிறார்களா என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கட்சி அமைப்பு விதிகளில் வரையறுத்துள்ள மிகக் கடுமையான தண்டனையை வழங்குகின்றனர். இந்த வழியில் கட்சிக்குள் தண்டனைமுறை நுழைக்கப்படுகிறது. வேலையை துவக்குவதற்கும், முன்கொண்டு செல்வதற்கும் போராட்டங்கள் நடத்தும் வழியை அவர்கள் அடிக்கடி கையாளுகின்றனர். “போராட்ட இலக்குகளை” (கட்சிக்குள் உள்ள தோழர்களை) வேண்டுமென்றே தேடுகின்றனர். அவர்களை சந்தர்ப்பவாதத்தின் பிரதிநிதிகள் என்று எதிர்த்துப் போராட்டம் நடத்துகின்றனர். இந்த ஒரு தோழரையோ அல்லது அந்த ஒரு சில தோழர்களையோ “நாயை பயமுறுத்துவதற்காக வான்கோழியைக் கொன்ற கதை” என்று வழங்கும் சீனப்பழமொழியைப் போன்று மற்ற கட்சி ஊழியர்கள் கடுமையாகப் பாடுபடவும், பணியை பூர்த்தி செய்யும் பொருட்டும் அவர்கள் தியாகம் செய்கின்றனர்; அல்லது தாக்குகின்றனர், போராட்ட இலக்குகளின் குறைபாடுகள் குற்றங்கள் பற்றி அவர்கள் வேண்டுமென்றே தகவல் சேகரித்து, இயக்க மறுப்பியல் வகையிலும், துண்டு துக்காணியாகவும், அவ்வளவு பொருட்படுத்தக் கூடாத வார்த்தைகளையும் செயல்களையும் குறித்துக் கொள்கின்றனர்.

அத்தகைய குறைபாடுகளையும் தவறுகளையும், பொருட்படுத்தத்தகாத அவரது மொழிகளையும், செயல்களையும் தனிமையில் பார்த்து, இவையனைத்தும் அத்தோழரின் முழுத்தன்மையையும் பிரதி நிதித்துவப் படுத்துவதாகக் கருதுகின்றனர். இந்தத் தோழரின் தனிப்பட்ட குறைகளையும், குற்றங்களையும் பெரிதுபடுத்தி, கட்சித் தோழர்களிடையில் இத்தோழரைப் பற்றி மிகவும் மோசமான அபிப்ராயத்தை உண்டாக்கி, இந்தத் தோழரை எதிர்த்துப் போராடுவதில் சந்தர்ப்பவாதமுறையில் வெறுப்பு ஊட்டுகிறார்கள். பிறகு யார் வேண்டுமானாலும் “செத்த புலியை அடிக்கலாம்”. சில தோழர்கள் மீது வஞ்சம் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்னும் மனோபாவம் வளரத் தொடங்குகிறது. இந்தத் தோழரின் சகல குறைகளையும், பிழைகளையும் அவர்கள் அம்பலப்படுத்துகின்றனர்; இந்தக் குறைகளையும், குற்றங்களையும் தன்னிஷ்டப்படி கோட்பாடு மட்டத்திற்கு உயர்த்துகின்றனர்.

அவர்கள் சில கட்டுக்கதைகளையுங்கூட புனைந்து விடுகின்றனர்; தன் மன சந்தேகத்தையும், முற்றிலும் ஆதாரமற்ற வதந்திகளையும் ஆதாரமாகக் கொண்டு அத்தோழர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். அவர் மூளை குழம்பும் வரை விட மாட்டார்கள். இவ்வளவும் செய்துவிட்டு, தாக்கப்பட்ட தோழர் தன் நிலையை எடுத்து வாதிப்பதற்கு அனுமதிப்பதென்றால் அப்பொழுதும் கூட மனம் வருவதில்லை. அவர் வாதிட்டால் தனது குற்றங்களை வேண்டு மென்றே நியாயப் படுத்துவதாகவோ அல்லது பல நிபந்தனைகளுடன் ஒப்புக்கொள்வதாகவோ அவர் மீது குற்றஞ்சாட்டுவார்கள். பிறகு அவர் மீது மேலும் பாணம் எய்துவர். தாக்கப்படும் தோழர் பணிந்து நடக்கும் நிபந்தனையின் பேரில் தனது சொந்த அபிப்ராயத்தை வைத்துக் கொள்ள அனுமதிப்பதில்லை. மேல்கமிட்டிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்வதற்கும் அனுமதிப்பதில்லை. அங்கேயே அவர் தனது தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள்.

தாக்கப்படும் தோழர் தனது தவறுகளை பூராவும் ஒப்புக் கொண்டுவிட்டால், சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தமான பிரச்சினை தீர்க்கப்பட்டதா என்பதைப் பற்றி கவலைப்பட்டுக் கொள்வதில்லை. ஆகவேதான் கட்சிக்குள் போராட்டத்தில் சில தோழர்கள் அவர்கள் செய்த குற்றங்களைக் காட்டிலும் அதிக குற்றங்களை ஒப்புக்கொள்ளும் சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. தாக்குதலைத் தவிர்ப்பதற்காக எல்லா குற்றச்சாட்டுகளையுமே  ஒப்புக்கொண்டுவிடுவது மேல் என்று அவர்கள் எண்ணினர். எல்லாப்  பிழைகளையும் அவர்கள் ஒப்புக் கொண்டு விட்டபோதிலும், இன்னும் அவர்களுக்கு அது என்னதான் சமாசாரம் என்றே தெரியாது. இத்தகைய போராட்ட முறைகள் உண்மைக்காக நிமிர்ந்து நிற்கும் கம்யூனிஸ்டு உறுதியை  வளர்க்காது என்று இங்கு நிரூபணமாகிறது.

(தொடரும்)

ஒரு கம்யூனிஸ்ட்டாக பரிணமித்த இளம் எங்கெல்ஸ் || தோழர் லெனின்

0

பிரெடரிக் எங்கெல்ஸ் : பாகம் – 3

பாகம் 2 : தத்துவஞானத்தை ஹெகலிடமிருந்து துவங்கிய எங்கெல்ஸ்

ங்கெல்சுக்கு முன்பே மிகப் பலர் பாட்டாளி வர்க்கத்தின் துன்ப துயரங்களை வர்ணித்து, அதற்கு உதவி புரிய வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்லியுள்ளனர். பாட்டாளி வர்க்கம் துன்ப துயரங்களை அனுபவிக்கும் வர்க்கம் மட்டுமல்ல, உண்மையிலே பாட்டாளி வர்க்கத்தின் வெட்கக் கேடான பொருளாதார நிலைமை தடுக்க முடியாத வகையில் அதை முன்தள்ளிச் செல்கிறது, தனது இறுதி விடுதலைக்காகப் போராடும்படி நிர்ப்பந்திக்கிறது என்று எங்கெல்ஸ்தான் முதன்முதலாகச் சொன்னவர். மேலும், போராடும் பாட்டாளி வர்க்கம் தன் கையையே தனக்குதவியாகக் கொள்ளும். தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் இயக்கம் தங்களது விமோசனம் சோசலிசத்தில் மட்டுமே உள்ளது என்று தொழிலாளர்கள் அறியும் நிலைக்குத் தவிர்க்க முடியாதபடி கொண்டுபோய்விடும்.

மறுபக்கத்தில், தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் போராட்டத்தின் இலட்சியமாக ஆகும் போதுதான் சோசலிசம் ஒரு சக்தியாக ஆகும். இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை பற்றிய எங்கெல்ஸ் நூலிலுள்ள பிரதான கருத்துக்கள் இவைதான். சிந்தனையுள்ள, போராடிக் கொண்டிருக்கிற பாட்டாளிகள் எல்லோரும் இந்தக் கருத்துக்களை இப்போது ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தக் காலத்தில் அவை முழுக்க முழுக்கப் புதியனவாயிருந்தன. சிந்தனையைக் கவரும் நடையில் எழுதப்பட்ட இந்நூலில் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் பற்றி … எங்கெல்ஸ்
♦ பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்

பிரிட்டிஷ் பாட்டாளி வர்க்கத்தின் துன்ப துயரங்களைப் பற்றிய முற்றிலும் உண்மையான, அதிர்ச்சி உண்டாக்கத்தக்க சித்திரங்கள் இந்நூலிலே நிறைந்துள்ளன. இந்த நூல் முதலாளித்துவ அமைப்பின் மீதும் முதலாளி வர்க்கத்தின் மீதும் மிகப் பயங்கரமான குற்றச்சாட்டாக விளங்கியது. மக்களின் மனத்தில் அது பசுமரத்தாணிபோல் பதிந்தது. எங்கெல்சின் நூல் நவீனகாலப் பாட்டாளி வர்க்கத்தின் நிலைமையைப் பற்றிய மிகச் சிறந்த சித்திரத்தை வழங்குகிறது என்று இதிலிருந்து எங்கும் மேற்கோள் காட்டத் தொடங்கினார்கள். உண்மையிலே பார்த்தால், 1845-ம் ஆண்டுக்கு முன்னரும் சரி, பின்னரும் சரி, தொழிலாளி வர்க்கத்தின் துன்பதுயரங்களைப் பற்றி இவ்வளவு வியக்கத்தக்க உண்மையான சித்திரம் வெளிவந்தது கிடையாது.

இங்கிலாந்துக்கு வந்த பிறகுதான் எங்கெல்ஸ் சோசலிஸ்டு ஆனார். அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கத்தின் தலைவர்களுடன் மான்செஸ்டரில் எங்கெல்ஸ் தொடர்பு கொண்டார்; பிரிட்டிஷ் சோசலிசப் பத்திரிகைகளில் எழுதத் துவங்கினார். 1844-ம் ஆண்டில், ஜெர்மனிக்குத் திரும்பிவரும் வழியில், பாரிஸ் நகரில் அவர் மார்க்சைச் சந்தித்துப் பழகினார். மார்க்சுடன் ஏற்கெனவே அவர் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண்டிருந்தவர்தான். பாரிசில் பிரெஞ்சு சோசலிஸ்டுகளின், பிரெஞ்சு வாழ்க்கையின் செல்வாக்கின்கீழ் மார்க்சும் சோசலிஸ்டு ஆகிவிட்டார்.

இங்கே அவ்விரு நண்பர்களும் சேர்ந்து புனிதக் குடும்பம் அல்லது விமர்சன வகைப்பட்ட விமர்சனத்தின் விமர்சனம் என்று தலைப்பிட்ட ஒரு நூலை எழுதினார்கள். இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்ற நூல் வெளியாவதற்கு ஒரு வருடத்துக்கு முன்பே இது வெளிவந்தது. இதன் பெரும் பகுதியை மார்க்ஸ்தாம் எழுதினார். இந்நூலில் புரட்சிகரமான பொருள்முதல்வாத சோசலிசத்தின் அடிப்படைகள் – அதன் முதன்மையான கருத்துக்களை மேலே விளக்கிச் சொல்லியிருக்கிறோம் – சொற்பமான அடங்கியுள்ளன. ”புனிதக் குடும்பம்” என்பது தத்துவஞானிகளான பௌவர் சகோதரர்களையும், அவர்களைப் பின்பற்றியோரையும் குறிக்கும் கேலிப் பெயராகும்.

எல்லா வகையான யதார்த்தத்திற்கும் அப்பாற்பட்ட, கட்சிகளுக்கும் அரசியலுக்கும் அப்பாற்பட்ட ஒரு விமர்சனத்தை இந்தக் கனவான்கள் பிரச்சாரம் செய்தார்கள். எல்லாவிதமான நடைமுறை நடவடிக்கைகளையும் அது நிராகரித்தது; நம்மைச் சூழ்ந்துள்ள உலகையும், அதில் நடந்துவரும் நிகழ்ச்சிகளையும் பற்றி அந்த விமர்சனம் வெறுமே ”விமர்சன” கண்கொண்டு பார்ப்பதோடு நின்று விட்டது. இந்தக் கனவான்கள் – பௌவர் சகோதரர்கள் – பாட்டாளி வர்க்கம் விமர்சனப் பார்வையற்ற கும்பல் என்று இழிவுபடுத்தினார்கள். சுத்த அபத்தமான, தீங்கு விளைவிக்கக் கூடிய இந்தப் போக்கை மார்க்சும் எங்கெல்சும் தீவிரமாக எதிர்த்தார்கள்.

ஆளும் வர்க்கங்களாலும் அரசாலும் மிதித்து நசுக்கப்பட்டு வரும் தொழிலாளி என்ற அசல் மனிதப் பிறவியின் சார்பாக வீண் சிந்தனை அல்ல, மேம்பட்ட சமுதாய அமைப்பு முறைக்காகப் போராட்டம் நடத்த வேண்டும் என்று மார்க்சும் எங்கெல்சும் கோரினார்கள். இந்தப் போராட்டத்தை நடத்துவதில் அக்கறை கொண்டுள்ள சக்தியாக, இந்தப் போராட்டத்தை நடத்துவதற்குத் திறன் பெற்றுள்ள சக்தியாக, பாட்டாளி வர்க்கத்தை அவர்கள் கருதினார்கள் என்பதில் ஐயமில்லை. புனிதக் குடும்பம் வெளிவருவதற்கு முன்பே, மார்க்சும் ரூகேயும் நடத்திய Deutsch-Franzosische Jahrbicher என்ற பத்திரிகையில் அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனவுரைக்கு ஒரு நகல் என்ற தொடரை எங்கெல்ஸ் வெளியிட்டார்.

அக்கட்டுரைகளில் தனிச்சொத்தின் ஆதிக்கத்தால் ஏற்பட்டுத் தீரும் விளைவுகள் என்ற முறையில், நவீன காலப் பொருளாதார அமைப்பு முறையின் முதன்மையான தோற்றங்களை சோசலிச நோக்குநிலையிலிருந்து பரிசீலித்தார். அரசியல் பொருளாதாரத்தைப் பயில்வதென்று மார்க்ஸ் முடிவு செய்ததற்கு அவர் எங்கெல்சுடன் தொடர்பு கொண்டிருந்தது ஒரு காரணம் என்பதில் சந்தேகமேயில்லை. அரசியல் பொருளாதாரம் என்ற விஞ்ஞானத் துறையில் மார்க்ஸ் அசல் புரட்சியையே உண்டாக்கிவிட்டார்.

1845-லிருந்து 1847 வரை எங்கெல்ஸ் பிரஸ்ஸெல்சிலும் பாரிசிலும் வாழ்ந்தார். விஞ்ஞானப் பயிற்சியோடு கூடவே பிரஸ்ஸெல்ஸ், பாரிஸ் நகரங்களிலுள்ள ஜெர்மன் தொழிலாளர்களிடையே நடைமுறை நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார். இங்கே இரகசியமாயிருந்த ஜெர்மன் கம்யூனிஸ்டுகளின் லீக்” என்ற நிறுவனத்துடன் மார்க்சும் எங்கெல்சும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் வரையறுத்து விவரித்துள்ள சோசலிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கும்படி அந்த லீக் அவர்களைப் பணித்தது. இவ்வழியேதான் மார்க்சும் எங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை என்ற புகழ்பெற்ற நூல் 1848-ல் வெளிவந்தது. இந்தச் சிறு பிரசுரம் மிகப்பெரிய நூல் தொகுதிகளுக்குச் சமமானது. அதன் உணர்ச்சி நாகரிக உலகில் ஒழுங்கமைப்பு பெற்று அணிதிரண்டு போராடி வரும் பாட்டாளி வர்க்கம் முழுவதையும் இன்றைக்கும்கூட ஊக்குவித்து இயக்கிச் செல்கிறது.

(தொடரும்)

நவம்பர் 26 : தொழிற்சங்கங்களின் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் !

கொரோனா தொற்றைப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்தி வருகிறது பாஜக. நாம் போராடி பெற்ற உரிமைகள் அனைத்தும் நம் கண் முன்னே பறிக்கப்படுகிறது. அந்த வரிசையில் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் செய்து தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளையும் பறித்து வருகிறது பாஜக.

பாஜக அரசு கொண்டு வரும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்களும் கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் இத்தகைய தொழிலாளர் விரோதச் சட்டங்களை எதிர்த்து இந்தியத் தொழிற்சங்க மையங்களின் சார்பில் வருகின்ற 26.11.2020 அன்று மாபெரும் பொது வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாளிகளின் லாபவெறிக்கு தீனி போட்டு பன்னாட்டு மூலதனத்தை ஈர்ப்பதையே நோக்கமாக் கொண்டு தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தி, கொத்தடிமை முறையிலான சட்டங்களை இயற்றிவருகிறது பாஜக அரசு. ஏட்டளவிலாவது இருந்த 44 தொழிலாளர் நலச் சட்டங்களில், 15 சட்டங்களை ரத்து செய்து விட்டு, மீதமுள்ள 29 சட்டங்களை 4 தொகுப்புகளாக்கி, தொழிலாளர் உரிமை, நலன், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் பறிக்கத் திட்டமிட்டுள்ளது.

படிக்க :
♦ தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா : ஒரு பார்வை | பா. விஜயகுமார்

♦ ஜனவரி 8 – பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம் !

சங்கம் சேரக்கூடாது, தொழிற்சாலைக்கு எதிராகப் போராடக்கூடாது, சம்பள உயர்வுக் கேட்கக் கூடாது, போனஸ் கிடையாது, நிரந்த வேலைக்கு உத்திரவாதம் கிடையாது, ஓய்வூதியம் தர முடியாது, ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு, தொழிற்சங்க உரிமை பறிப்பு, தொழிற்சங்க அங்கீகாரத்தைச் சிதைப்பது, குறைந்தபட்ச ஊதியத்திற்கு குந்தகம் விளைவிப்பது என பல்வேறு தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக தொழிற்சாலைகள் அரசின் உதவியுடன் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இதனை கார்ப்பரேட்டுகள் சட்டரீதியாகவே செய்வதற்கு உகந்த வகையில்தான் சட்ட திருத்தங்களை மேற்கொண்டுள்ளது மோடி அரசு.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற கொள்கைகளின் அடிப்படையில் அனைத்து அரசுத் துறைகளையும் தனியாருக்கு தாரைவார்ப்பது, தொழிலாளர் நலச்சட்டத்தை திருத்துவது, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாக்களை அமல்படுத்துவது, கல்வி, மருத்துவம், போக்குவரத்து தனியார்மயம், இயற்கை வளங்கள் சூறையாடப்படுதல் ஆகியவை அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தனியார்மயம் தாராளமயத்தின் விளைவாகத்தான் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பு, ஏழைகளுக்கு கல்வி மற்றும் மருத்துவம் கிடைக்காமல் போவது ஆகியவை நடைபெறுகின்றன.

எனவே நவம்பர் 26 அன்று நடைபெறவிருக்கும், நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை தொழிலாளர்களின் தனிப்பட்ட பிரச்சினையாக பார்க்க முடியாது. தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படும் நம் ஒவ்வொருவருடைய பிரச்சினையும்தான்.

இந்த போராட்டத்தில் அகில இந்திய சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சம்மேளனம் (சிஐடியு), புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி (புஜதொமு), தொமுச, இந்தியத் தொழிற்சங்கக் கவுன்சில் (ஏஐசிசிடியு), ஐஎன்டியுசி, இந்திய சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தேசிய சம்மேளனம், போக்குவரத்து மஸ்தூர் யூனியன் (டிஎம்யு-டிஎஸ்), தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், பெஸ்ட் தொழிலாளர் யூனியன், தமிழ் மாநில பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனம் ஆகிய சங்கங்கள் பங்கேற்கின்றன. மேலும், திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் இந்தப் பொது வேலைநிறுத்தத்தை ஆதரித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.

மக்கள் விரோத சட்டங்களை இயற்றி அமல்படுத்தும் பாசிச பாஜக அரசுக்கு எதிராக அனைவரும் களத்தில் இறங்குவோம்.


சந்துரு
நன்றி :
தீக்கதிர் (09-11-2020)

மூத்த செயல்பாட்டாளர்கள் மீது வலதுசாரிகள் குறிவைப்பது ஏன் ?

4

டந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் எல்கர் பரிஷத் வழக்கில் கைதான, 81 வயது செயல்பாட்டாளரும் கவிஞருமான வரவர ராவ், சிறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் வயோதிகம் காரணமாக சுயமாக முடிவுகள் எடுக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் வைரஸ் தொற்று சிகிச்சைக்கு முழுமையான சிகிச்சை அளிக்காமல் மீண்டும் அவரை சிறைக்கு அனுப்பியது மனித உரிமை மீறல் எனவும் அவருடைய குடும்பம் நீதிமன்றம் சென்றது. பல முறை அவருடைய பிணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், குறைந்தபட்ச கரிசனத்தோடுகூட சிகிச்சை கோரும் மனுவை நீதிமன்றம் அணுகவில்லை. வழக்கு விசாரணைக்கு வருவதே இழுத்தடிக்கப்பட்டிருக்கிறது.

இதே வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் பழங்குடியின செயல்பாட்டாளர் 83 வயதான ஸ்டான் சுவாமி கைது செய்யப்பட்டுள்ளார். வயோதிகம் காரணமாக பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ள தன்னால் ஒரு கோப்பை நீரைக்கூட நடுக்கம் இல்லாமல் பிடித்து, குடிக்க முடியாது எனக் கூறி, நீரை உறிஞ்சி குடிக்க ஸ்டிரா பயன்படுத்த அனுமதிக்குமாறு நீதிமன்றம் சென்றார். கொடூர குற்றங்கள் புரிந்தோருக்கும் மனித உரிமை உள்ளதாகக்கூறும் ஜனநாயகத்தின் கீழ் இயங்கும் நீதிமன்றம், குற்றச்சாட்டின் கைதான பழங்குடிகளுக்காக உழைத்த, சமூகத்தில் மதிப்பிற்குரிய ஒரு மனிதருக்கு ஸ்டிரா வழங்கும் வழக்கைக்கூட விசாரிக்க முனையவில்லை. 20 நாட்களுக்கு அந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வயோதிக செயல்பாட்டாளர்களைக் கண்டு இந்த பாசிச அரசு ஏன் அச்சம் கொள்கிறது? இதன் மூலம் அரசு உணர்த்தவிரும்பும் செய்தி என்ன என்பதைக் கூறுகிறது ஜே என் யூ பல்கலைககழக பேராசிரியர் அஜய் குடவர்த்தி எழுதிய இந்தக் கட்டுரை.

======

படிக்க :
♦ சமூக செயற்பாட்டாளர்கள் கைது : ஆர்.எஸ்.எஸ்-ன் சதிப் பின்னணி என்ன ?
♦ செயற்பாட்டாளர்களை சிறையில் நீர் பருகக் கூட விடாமல் துன்புறுத்தும் மோடி அரசு !

காத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, அவர் ஒரு பலவீனமான மனிதராகவும்  ஏமாற்றமடைந்தவராகவும் இருந்தார்; மேலும் தேசிய அரசியலில் இருந்து விலகியிருந்தார்.  78 வயதில்,  தனது வாழ்நாள் முழுவதும் அகிம்சையைப் பற்றி அயராது பேசியவருக்கு வன்முறை மூலமாக மரணம் நிகழ்ந்தது பரிதாபத்திற்குரியது.  ஆனால் இப்போது அது மட்டுமே நிகழவில்லை என்பது தெரிகிறது; ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்குப் பிறகு, அதை எதிரொலிக்கும் தொடர் நிகழ்வுகளை இப்போது நாம் காண்கிறோம்.

இது கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் மற்றும் கல்புர்கி ஆகியோரின் கொலைகளுடன் தொடங்கியது – அவர்கள் அனைவருமே தங்களுடைய 70 வயதுகளில் இருந்தனர். சமீபத்தில் 80 வயதுகளில் உள்ள வரவர ராவ் மற்றும் இப்போது ஸ்டான் சுவாமி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள வலதுசாரிகளின் அமைதியான ஆனால் தெளிவான வயதுவாதம், அவர்கள் வாழ்க்கையையும் நிஹிலிசத்தையும் (அறமற்ற தன்மையையும்) பாதிக்கப்படக்கூடியவர்களாக கருதத்தக்கவர்களின்  மீதான வெறுப்பையும் எப்படி பார்க்கிறார்கள் என்பதற்கான முக்கிய தடயங்களை வைத்திருக்கிறது. 80 -89 வயது வரையானவர்களின் மீதான தொடர்ச்சியான கொலைகள் மற்றும் கைதுகள் விளக்குவது என்ன, அவர்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

வேட்டையாடும் அரசு

மூத்த, வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட செயல்பாட்டாளர்கள் எவ்வாறு அழைத்துச் செல்லப்படுகிறார்கள், அது என்ன தோற்றத்தை உருவாக்குகிறது என்பதற்கு கலவையான காரணிகள் இருப்பதாகத் தெரிகிறது. இது இரக்கமற்ற தன்மையையும் பொறுப்பற்ற தன்மையையும் உடனடியாக  வெளிக்காட்டுகிறது. ஒரு காலத்தில் சக்திவாய்ந்த மேடைப் பேச்சாளராக அறியப்பட்ட வரவர ராவ் சரியான சொற்களைக் கண்டுபிடிக்க சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்; யானையைப் போன்ற நினைவுத்திறன் கொண்டவர், தனது சொந்த குடும்பத்தை அடையாளம் காணமுடியாமல் இருக்கிறார்.

மன அழுத்தத்தால் தூண்டப்படும் அனைத்து அறிகுறிகளும் வயோதிகத்துடன் வருகின்றன. ஆனால் அவருக்கு தொடர்ச்சியாக பிணை வழங்காமல் மறுப்பதும் அவரை மீண்டும் சிறையிலேயே வைத்திருப்பதற்கான சூழ்ச்சிகளும் “கதையை” முடிப்பதற்கான போர் என்பதைப் புரிந்து கொள்வதற்கான செய்தியாகும்.

இது ஒரு வேட்டையாடும் கலாச்சாரத்தை குறிக்கிறது, அங்கு ஒருவர் வெற்றியாளராகவோ அல்லது முறியடிக்கப்பட்டவராகவோ இருக்கலாம். மூத்தவர்களைக் குறிவைப்பது என்பது வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் காப்பாற்றப்படாவிட்டால் மீதமுள்ளவர்கள் தப்பிக்க முடியாது என்ற இறுதித் தீர்ப்பு நாள் (பேரழிவு நாள் – Doomsday) குறித்த உணர்வைக் கொடுப்பதாகும்.

‘உற்பத்தியில் ஈடுபடாத உடல்களுக்கு’ இடமும் பொறுமையும் கிட்டத்தட்ட இல்லாத வலுவான தேசம் என்கிற கருத்தாக்கத்தையும் இது எதிரொலிப்பதாகத் தெரிகிறது. யூதர்களை மட்டுமல்லாது, மாற்றுத்திறனாளிகளாக இருந்த வெள்ளையின ஜெர்மன் குழந்தைகளையும் குறிவைத்து விசவாயு அறைகளில் அடைத்த நாசி ஆட்சியின் நினைவுகளை இது மீண்டும் கொண்டு வருகிறது. இது சந்தை மற்றும் தேசத்தின் ஒரு வகையான ‘திறன்வாதத்தைக்’ குறிக்கிறது. ஒருவர் ‘பயன்பாட்டில்’ இல்லாவிட்டால், உற்பத்தி செய்யாவிட்டால், அவர்களை தூக்கியெறிவது அறமற்ற செயலல்ல என்பதை சொல்கிறது.

முன்னேற்றத்தை நோக்கும் இளம் மற்றும்  திறன் கொண்ட தேசத்திற்கு எதிராக இது நிற்பதாக தோற்ற அளவில் தெரிகிறது. இயல்பாகவே மூத்த மற்றும் வயதானவர்கள் உயர்த்திப் பிடிக்கும் மதிப்புகள் மற்றும் சித்தாந்தங்கள் காலாவதியானவை மற்றும் பொருத்தமற்றவை என்பதையும் சித்திரமாக இது குறிக்கிறது. சுருங்கி வரும் உடல்கள், மறைந்துபோகும் யோசனைகள் மற்றும் தலைகீழான மதிப்பு அமைப்பு குறித்த குறியிடப்பட்ட செய்தியை தெரிவிப்பதற்கான வார்ப்புருக்களாக மாறியுள்ளன.

ஸ்டான் சுவாமியின் சமீபத்திய வீடியோ உடல் பிரச்சினைகளைப் பற்றி புகார் அளித்தாலும், பழங்குடியினருக்காக போராடுவதில் அவர் நின்ற மதிப்பீடுகளுக்கு உறுதியுடன் இருப்பதும், பயமற்ற அர்ப்பணிப்பின் செய்தியை அனுப்பக்கூடும். ஆனால் அவர்களுக்கு ஓய்வு தேவை என்பதையும் பேரப்பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடவும் நிகழ்ந்தவற்றை அசை போடவும் தவிர்க்க முடியாததற்கு காத்திருக்கவும் வேண்டிய நேரத்தில் அவர்கள் தங்களை நீட்டிக்கிறார்கள் என்பதையும் இது குறிக்கலாம்.

இந்து தத்துவத்தில், இது உலக நோக்கங்களை கைவிடுவதைக் குறிக்கும் வனப்பிரஸ்தா மற்றும் சன்யாசாவை நோக்கிச் செல்லும் வயதைக் குறிக்கிறது. இது பிரதமர் நரேந்திர மோடி குகையில் தியானிப்பதையும், தேர்தல் முடிவுகளுக்கு இடையில் தனிமையில் நடந்து செல்வதையும், மாநில அல்லது மத்திய அரசாங்கங்களில் நிர்வாக பதவிகளை வகிக்க 75 வயது அதிகபட்ச வயது என அறிவிப்பதோடு தொடர்புடையதாகும். அவர் வயதான தலைவர்களை புதிதாகத் உருவாக்கப்பட்ட மார்கதர்ஷக் மண்டலுக்கு (வழிகாட்டும் குழு) மாற்றினார்.

இந்து வாழ்க்கை முறையின் கலாச்சார குறியீடுகளின்படி, மூத்தவர்களை வெளியேற்றுதல் சமூகத்தில் குறைந்த எதிர்ப்பையும் போராட்டத்தையும் சந்திக்கும் என வலதுசாரிகள் நம்புகிறார்கள். இது அதிக பயம் மற்றும் குறைந்த எதிர்ப்பிற்கான வாய்ப்பை உருவாக்குகிறது. அவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் உண்மையிலேயே எஞ்சியுள்ளன, சமூகம் மன்னிக்கும், மேலும் மிகைப்படுத்தல்களை இன்னும் எளிதாக மறந்துவிடக்கூடும் என்ற கணக்கீட்டுப் பட்டகத்தின் மூலம் இது காணப்படுகிறது.

அரசியல் அறமற்ற தன்மை

இளைஞர்களின் கைதுகள் சமுதாயத்தை தூண்டும் ஒரு எதிர்ப்பைக் கொண்டுவருகின்றன. மூத்தவர்களை சிறையில் அடைப்பது, வாழ்க்கையின் பொருளையும் நோக்கத்தையும் நம்மைப் சிந்தித்துப் பார்க்கச் செய்கிறது. நாம் அதை குறைவாகவே செயலுடன் தொடர்புபடுத்துகிறோம்.

இது அறமற்ற உணர்வைக் கொண்டுவருகிறது; மரணத்தின் தவிர்க்க முடியாத தன்மை மற்றும் துன்பத்தின் பயனற்ற தன்மையை நமக்கு நினைவூட்டுகிறது. “முக்தி பவன்” திரைப்படத்தில் நமக்கு நினைவூட்டுவது போல மற்ற உலக சந்தோசங்களுக்கான நேரத்தை இது நமக்கு நினைவூட்டுகிறது. உண்மையில், மத தத்துவத்தின் பெரும்பகுதிகளில், மரணம் என்பது மோட்சம், இது வெற்று உடலுக்கான ஒரு வகையான விடுதலையாகும், மேலும் இது வருத்தப்பட வேண்டிய ஒன்றல்ல, மிகக் குறைவான எதிர்ப்புக்குரியது.

படிக்க :
♦ பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை !
♦ கவுரி லங்கேஷ் , கல்புர்கி படுகொலை : ரப்பர் தோட்டத்தில் பயிற்சி எடுத்த சனாதன் சன்ஸ்தா !

பாதிக்கப்படக் கூடியதன்மையின் ஆழமான உணர்வோடு கூடிய தனிமையின் உணர்வையும் வயோதிகம் நமக்கு நினைவூட்டுகிறது. ஒருவரின் பாதுகாப்பு, கவனிப்பு மற்றும் கூட்டு நலனின் மகிழ்ச்சி குறித்து திட்டமிட நமக்கு நினைவூட்டுகிறது. மேலும், வீரமான செயல்பாட்டுக்கான விலை, உங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல வயதான உடலுக்கான அடிப்படைத் தேவைகளையும் இழக்கக்கூடும் என்பதை திட்டமிடுவதன் அவசியத்தை இது நமக்கு நினைவூட்டுகிறது.

இது உள்ளார்ந்த பாதுகாப்பின்மையை உருவாக்கும் உளவியலில் ஆழமான வேர்களைக் கொண்டிருக்கக் கூடும்; மறைந்திருக்கும் மற்றும் இருள்கொண்ட நமது தன்மை குடிகொண்டிருக்கும் தளங்களை வலதுசாரிகள் கவனத்தோடு குறிவைக்கிறார்கள்.

இனவாத கலவரத்தின் போது விஷம் கலந்த பால் விற்கப்படுவதாக வதந்திகள் எவ்வாறு பரவுகின்றன என்பதை உளவியல் பகுப்பாளர் சுதிர் கக்கர் குறிப்பிடுகிறார். பால் ஒரு ஆதிகால தாய்வழி பாதுகாப்பின் அடையாளத்தைக் குறிக்கிறது. இது மறைந்திருக்கும் அச்சங்கள் மற்றும் பாதுகாப்பின்மை மற்றும் வன்முறைக்கான ஆதிகால உள்ளுணர்வைத் தூண்டும். மூத்தோர்களையும் வயதானவர்களையும் கொல்வதன் மூலமும் கைது செய்வதன் மூலமும்,  தனது சொந்த சமுதாயத்தின் மீது ஒரு உளவியல் போரை வலதுசாரிகள் இலக்காக கொண்டிருக்கிறார்கள்.

ஷாகின் பாகில் கூடிய தாதிக்களை அடையாளப்படுத்தும் பில்கிஸ் பானோ புதிய நம்பிக்கையாக பார்க்கப்படுவதற்கும் ஈர்க்கப்படுவதற்கும் இது ஒரு சக்திவாய்ந்த முரணாக உள்ளது. அவருடைய வயது, மகிழ்ச்சி அன்பு மற்றும் குறும்பு ஆகியவற்றைத் தூண்டுகிறது. இது மதம் மற்றும் இடத்தின் சமூக எல்லைகளை மீறுகிறது. டைம் பத்திரிகை 2020-ம் ஆண்டின் 100 ‘மிகவும் செல்வாக்கு மிக்க’ நபர்களின் பட்டியலில் அவரும் உள்ளார்.

வாழ்க்கை இயங்கியல் வழியாக நகர்கிறது, தற்போதைய ஆட்சி வயதின் அடிப்பகுதியைப் பார்க்கும்போது, ஷாகின் பாகின் மூத்தோர்கள் மார்க் ட்வைன் ஒருமுறை பிரபலமாக கூறியதை நமக்கு நினைவூட்டுகிறார்கள்: ‘வயது என்பது ஒரு விசயத்தை குறித்த மனதின் பிரச்சினையே. நீங்கள் கவலைப்படாவிட்டால், அது ஒரு பொருட்டல்ல. ‘ வயது வாழ்க்கையின் இலகுவான பக்கத்தைக் கொண்டு வருகிறது, மேலும் வாழ்க்கையை சந்தேகத்துடன் எடுத்துக் கொள்வதையும், ஒருவரின் உடனடி நலனிற்கு அப்பாற்பட்ட காரணங்களுக்காக நிற்பதையும் நினைவூட்டுகிறது. இரட்சிப்பு மற்றும் சுதந்திரத்தின் இந்த வயதான வீரர்களின் வாழ்க்கையை கொண்டாடுவதோடு, தற்போதைய இழிந்த காட்சிகளை கூட்டு எதிர்ப்பு தலைகீழாகப் புரட்டிப் போட வேண்டும்.

அஜய் குடவர்த்தி

தமிழாக்கம் : கலைமதி
நன்றி: The Wire

 

பிகார் : வேளாண் மசோதாவுக்கு ரத்த சாட்சியாக நிற்கும் விவசாயிகள் !

“விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நாட்டின் எந்தமூலையில் இருக்கும் வர்த்தகரிடமும் விற்கலாம்; விவசாயிகளின் பேரம் பேசும் சக்தி அதிகரிக்கும்” என்று சமீபத்தில் கொண்டுவரப்பட்ட வேளாண் உற்பத்திப் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம் குறித்து பாஜக உள்ளிட்ட கார்ப்பரேட் ஆதரவு தரப்பு கூறி வருகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கான இலாபம் அதிகரிக்கும் என்றும் கூறி வருகிறது. இது அப்பட்டமான பொய் என்பதை பீகார் விவசாயிகளின் நிலைமை நிருபிக்கிறது.

குறைந்தபட்ச ஆதாரவிலை, வேளாண் உற்பத்தி சந்தைக் குழு (APMC), அரசின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இதெல்லாம் இல்லாமல் போனால் விவசாயிகளின் நிலைமை என்னவாகும் என்பதை பீகாரிலிருந்து  பாஞ்சாபிற்கு நெல் கடத்தப்படும் சம்பவங்கள் அம்பலப்படுத்துகின்றன.

சமீபத்தில் பிகார், உத்திர பிரதேசம், ஆகிய மாநிலங்களில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு நெல் கடத்தப்படும் மோசடி நடப்பதாக பஞ்சாப் போலீசு கூறுகிறது. பஞ்சாப் மாநிலத்தின் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறையின் முதன்மைச் செயலாளர், K.A.P.சின்கா இது குறித்துக் கூறுகையில், இதுவரை 69 முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், மோசடி (Section 420), குற்றவியல் சதி (Section 120-B) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்.

படிக்க :
♦ வெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி !
♦ உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் வேளாண் சந்தை சீர்திருத்தங்கள் !

இதுபற்றி குறிப்பிடும் போலீசு ஆய்வாளர் குர்மீத் சிங் “ இந்த மோசடி பஞ்சாப், பிகார், உத்திர பிரதேச மாநிலங்களில் உள்ள வர்த்தகர்கள், தரகர்கள், மில் முதலாளிகளின் தலையீடு இல்லாமல் நடந்திருக்க முடியாது” என்கிறார். பஞ்சாப் மாநில, உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை இயக்குனர், மித்ரா கூறுகையில்,இதுவரை 128 லாரிகளும், 11 டிராலிகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தின் எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது”, என்கிறார்.

“பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளின் ஓட்டுநர்கள் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தின் படி,  பஞ்சாப் மண்டிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்ட நெல் மூட்டைகள், பிகார், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ரூ. 800-க்கும் குறைவான விலையில் வாங்கப்பட்டது. அதை பஞ்சாபில் குறைந்தபட்ச ஆதார விலையான 1,868 ரூபாய்க்கு விற்று லாபம் ஈட்டுகிறார்கள். பஞ்சாப் மாநில அரசின் முறையான  கொள்முதல் அமைப்பை தங்களுக்கு சாதகமாக அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்” என்கிறார் மித்ரா.

பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளில் சுமார் 2,500 டன் நெல் இருந்ததாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதன் விலை தேராயமாக ரூ. 5 கோடி வரை இருக்கும். ஆனால், இந்த முறைகேடான வர்த்தகம் மிகப்பெரிய அளவில் நடந்திருக்கிறது என்பது பஞ்சாப் மாநிலத்தின் மொத்த சாகுபடியையும், மொத்த கொள்முதலையும் கணக்கில் கொண்டு பார்த்தால் தெரிந்துவிடும்.

பிடிபட்ட கடத்தல் லாரிகள்

பஞ்சாப் வேளாண் துறையின் தரவுகளின் படி, 2019-2020-ம் ஆண்டுக்கான, மதிப்பிடப்பட்ட நெல் சாகுபடி 150 லட்சம் டன். ஆனால், இந்திய உணவுக் கழகத்தின் பொது மேலாளர் சுமீத் பன்சல், “மொத்த நெல் கொள்முதலின் அளவு 162 லட்சம் டன்” என்கிறார். அதாவது, கிட்டத்தட்ட 12 லட்சம் டன் நெல் வேறு எங்கோ இருந்து கொண்டுவரப்பட்டிருக்கிறது.

சமீபத்தில், பாட்டியாலாவில் ஒரு மேலாளருக்கும், வர்த்தகர்க்கும் இடையில் நடந்த வாட்சப் (whatsapp) உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், “வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கிய நெல்லை, பஞ்சாப் மாநில மண்டிகளில் குறைந்தபட்ச ஆதார விலையான ரூ. 1,868-க்கு விற்க அனுமதித்தால் தனக்கு எவ்வளவு லஞ்சம் கிடைக்கும்?” என்று பேரம் பேசியது அம்பலமானது. அந்த மேலாளர் இப்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஒரு குவிண்டாலுக்கு ரூ. 200 – 300 வரை லாபம் நிர்ணயித்து, தரகர்கள் நெல்லை குறைந்த விலைக்கு பிகாரில் வாங்குகிறார்கள். போக்குவரத்துக்கு ரூ.200 வரை செலவு போக மீதி லாபத்தை பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் இடைத்தரகர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.

பஞ்சாப் மாநிலத்தில் முறையான மண்டி அமைப்பு இருக்கிறது. பிகார் போன்ற மாநிலங்களில் கொள்முதல் முறையாக நடைபெறுவதில்லை. அப்படி நடக்கும் கொள்முதலுக்கான பணமும் உடனடியாக விவசாயிகளுக்கு வந்து சேர்வதில்லை.

“மத்திய அரசு நிர்ணயித்திருக்கும் குறைந்த பட்ச ஆதார விலைக்கு நெல்லை யார் வாங்குவார்கள்? எங்கள் விளைச்சலை எங்கே கொண்டு செல்வது? நெல் அறுவடை செய்யப்பட்டு தயாராக இருக்கும் போது யாரும் கண்டுகொள்வதில்லை. விவசாயிகள் எங்கே போவார்கள்? இந்த உதவியற்றநிலை தங்கள் விளைச்சலை இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு விற்க விவசாயிகளை நிர்பந்திக்கிறது”, என்று பிகார் மாநில சிறு விவசாயிகள் சங்கத்தலைவர், B.N.சிங் தெரிவிக்கிறார்.

ராஷ்டிரிய கிசான் சபாவின் தலைவர், ரமஷிஷ் ராய் இது குறித்துக் கூறுகையில், “14 ஆண்டுகளுக்கு முன்பு 2006-ல் பிகார் அரசு, விவசாயிகளை தாராளமயப்படுத்துவதாக சொல்லி வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவை (Agriculture Produce Market Committee(APMC)) ஒழித்தது. ஆனால், இது விவசாயிகளை இடைத்தரகர்களின் பிடியில் விட்டுவிட்டது. இந்த இடைத்தரகர்கள்தான் விவசாயிகளுக்கு வரவேண்டிய கொஞ்ச நஞ்ச லாபத்தையும் பறித்துக் கொள்கிறார்கள்” என்கிறார்.

வேளாண் உற்பத்தி சந்தைக் குழு (APMC), என்பது விவசாயிகளின் விளைச்சலை மலிவான விலைக்கு விற்க நிர்பந்திக்கும் இடைத்தரகர்கள், முதலாளிகளிடம் இருந்து விவசாயிகளை பாதுக்காக்க கொண்டுவரப்பட்டது. அரசு கொள்முதல் செய்யாத போதும், APMC குறைந்தபட்ச ஆதார விலையின் அடிப்படையில் விளைபொருட்களை விற்பதற்கான களமாக இருக்கிறது.

படிக்க :
♦ எனது படிப்பு குடும்பத்திற்கு பாரமாக இருக்கிறது ! தற்கொலைதான் ஒரே போக்கிடம் !
♦ செயற்பாட்டாளர்களை சிறையில் நீர் பருகக் கூட விடாமல் துன்புறுத்தும் மோடி அரசு !

வேளாண் உற்பத்தி சந்தைக் குழு (APMC), ஒழிக்கப்படும் போது, இடைத்தரகர்களை நம்பி இருக்கவேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகிறார்கள். குறைந்தபட்ச ஆதார விலையை இடைத்தரகர்கள் மதிப்பதில்லை. லாபம் ஒன்றே நோக்கமாக இருக்கும் அவர்களுக்கு விவசாயிகளின் வாழ்க்கைநிலை பற்றிய அக்கறை சிறிதும் இருப்பதில்லை.

அரசு கொள்முதலும் இல்லை, வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவும் இல்லை, என்றான போது, விளைபொருட்களுக்கான விலை உத்தரவாதம் ஒன்றுமில்லை. இது விவசாயிகளை கையறுநிலைக்கு இட்டுச்செல்கிறது. அவர்களை விவசாயத்தில் இருந்தே வெளியேறும்படி செய்கிறது. அப்படி, விவசாயத்தை விட்டு வெளியேறியவர்கள் தான் இன்று பெரும்பாலும் புலம்பெயர் தொழிலாளர்களாக இருக்கிறார்கள்.

விவசாய வல்லுநர் தேவேந்திர சர்மா கூறுகையில், “பிகார் மாநிலத்தில் வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவை, ஒழிக்காமல் இருந்திருந்தால் பிகார் இந்தியாவின் மலிவு விலை தொழிலாளர்களின் கூடாரமாக மாறாமல் இருந்திருக்கும்” என்கிறார். சுதந்திரச் சந்தை என்பது விவசாயிகளுக்கு நியாயமான விலையை கொடுக்காது என்பதற்கு பிகார் ஒரு சிறந்த உதாரணம்.

கார்ப்பரேட்டுகளைப் பொறுத்தவரையில் இது ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் விவகாரம். விளைபொருட்களை அடிமாட்டு விலைக்கு வாங்குவது, விவசாயிகளை விவசாயத்தில் இருந்து விரட்டுவது, குறைந்த கூலிக்குத் தேவையான ரிசர்வ் பட்டாளங்களை உருவாக்குவது என மூலதனத்தின் ஆட்சிக்கு சாதகமான நிலைமைகளையே இந்த வேளாண் உற்பத்திப் பொருட்கள் வணிக ஊக்குவிப்புச் சட்டம் உருவாக்கவிருக்கிறது.

வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவை ஒழித்தால் நிறைய தனியார் மூலதனம் கிடைக்கும். தனியார் நிறுவனங்கள், பெரிய மண்டிகளை கட்டுவார்கள், விளைச்சலுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று போலியான, சாத்தியமற்ற ஆருடங்களைச் சொல்லி ஏய்த்து வருகிறது கார்ப்பரேட் ஆதரவுக் கும்பல். ஆனால், அது சந்தையை ஒரு சிலரின் ஏகபோகமாக மாற்றி விவசாயிகளை சுரண்டுவதற்குதான் இட்டுச்செல்லும் என்பதை பிகார் விவசாயிகளின் நிலைமை சுட்டிக் காட்டுகிறது.

இப்படி கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் விவசாயிகளை சந்தை சக்திகள் ஒட்டச் சுரண்டுவது நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், அதை சட்டப்பூர்வமாக்கும் வேலையையும், சிறு சிறு தரகர்களை ஒழித்துவிட்டு கார்ப்பரேட் தரகர்களைக் கொண்டு வரும் வேலையையும் தான் வேளாண் சட்டத்திருத்தங்களின் மூலம் பாஜக செய்யத் துடிக்கிறது.

இன்றைய பிகார் விவசாயிகள் அடிமாட்டுக் கூலிக்குப் பணி செய்யும் நாடோடிகளாக மாற்றப்பட்டிருப்பதே அதற்குச் சான்று !


சீனிச்சாமி
செய்தி ஆதாரம் :
The Wire