Sunday, May 25, 2025
முகப்பு பதிவு பக்கம் 335

தேர்தல் மாற்றங்கள் தொழிலாளர்களின் நிலையை மாற்றிவிடுமா | சே. வாஞ்சிநாதன்

நிரந்தரத் தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டும் NEEM & FTE திட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்! கூலி அடிமைமுறையைத் தீவிரப்படுத்தும் கார்ப்பரேட் காட்டாட்சியை (GATT) தூக்கியெறிவோம்! என்ற முழக்கத்தின் கீழ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் கும்மிடிப்பூண்டியில் 133-வது, மேநாள் பேரணி – பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இப்பொதுக்கூட்டத்தில், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன்  பங்கேற்று உரையாற்றினர். அவர் தனது உரையில், நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோன்று எவ்வித உரிமைகளும் அற்ற நிலைக்கு தொழிலாளி வர்க்கம் தள்ளப்பட்டிருப்பதையும்; தொழிலாளர்கள் என்றில்லை விவசாயிகள், நெசவாளிகள், சிறுதொழில் செய்வோர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிரிவைச் சேர்ந்த உழைக்கும் மக்களின் வாழ்வுரிமைகள் பறிக்கப்பட்டிருப்பதையும் எடுத்துரைத்தார். நினைத்துப் பார்க்கவியலாத அளவுக்கு பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருகியிருப்பதையும் சுட்டிக்காட்டிய அவர், இந்த ஏற்றத்தாழ்வுகளை எந்தச் சட்டத்தைக் கொண்டு நீக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். தேர்தல் அரசியலில் முன்னூறுக்கும் ஐநூறுக்கும் ஜனநாயகம் விலை பேசப்படுவதையும் எள்ளி நகையாடியதோடு, தேர்தல் மாற்றங்கள் தொழிலாளர்களின் நிலையை மாற்றிவிடுமா? என்றக் கேள்வியையும் முன்வைத்தார் அவர்.

அவரது முழுமையான உரையைக் காண…

பாருங்கள்! பகிருங்கள்!!

சென்னை மெட்ரோ : பணிப்பாதுகாப்பு இல்லை ! பயணம் மட்டும் பாதுகாப்பாக இருக்குமா ?

வேலை வாய்ப்பில் வறட்சி நிலவும் ஒரு தேசத்தில் கிடைத்த வேலையை எப்படியாவது தக்க வைத்துக் கொள்வது பெரும் போராட்டமாகி வருகிறது. நிர்வாகத்தின் அடக்குமுறைகள், அவமானங்கள் அனைத்தையும் எதிர்கொண்டு அடங்கிக் கிடந்தாலும் அந்த வேலையும் இனி இல்லை எனும் ஒரு நிலையை வந்தடைந்திருகிறார்கள் சென்னை மெட்ரோ ரயில் பணியாளர்கள். அதுதான் தவிர்க்கவியலாமல் அவர்களை போராட்டத்தில் பயணிக்க வைத்திருக்கிறது.

வளர்ச்சி -வேலைவாய்ப்பு என்ற கோஷத்தை முன் வைத்து 10.06.2009 அன்று ரூ.19,058 கோடியில் தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 59% நிதியை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனமும் (Japan International Cooporation Agency – JICA) மத்திய அரசு 20%, மாநில அரசு 21% நிதியையும் வழங்கின. இதற்காக 2000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.  சென்னையில் வாழ்ந்த பல்வேறு குடிசைவாசிகள், வணிக வளாகங்கள், நடுத்தர மக்களின் குடியிருப்புகளை விழுங்கிவிட்டு பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது சென்னை மெட்ரோ ரயில். தற்போது அதன் நிரந்தரப் பணியாளர்களையும் விழுங்கத் துடிக்கிறது மெட்ரோ நிர்வாகம்.

மெட்ரோ பணியாளர்கள் 8 பேரை சட்டவிரோதமாக நீக்கியிருக்கிறது. மேலும் நிரந்தர பணியாளர்கள் 250 பேரை தூக்கியெறிய துடித்துக் கொண்டிருக்கிருக்கிறது.  இந்த வேலை நீக்கத்தை எதிர்த்து கடந்த 27.04.2019 அன்று கால வரையறையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து போராடினார்கள் மெட்ரோ பணியாளர்கள்.

மெட்ரோ ஊழியர்களின் போராட்டம் ஏன்?

கடந்த 2013 –ம் ஆண்டு முதல் கட்டமாக 750 பேர் வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவித்தார்கள். அதன் அடிப்படையில் ஒரு இலட்சத்திற்கும் மேலானோர் ஆன்லைனில் விண்ணப்பித்து தேர்வு எழுதினர். அதில் 322 பேரை தேர்வு செய்து 250 பேரை மட்டும் வேலைக்கு அமர்த்தினார்கள். மீதமிருப்போரை தேவைப்பட்டால் எடுத்துக் கொள்வோம் என்று காத்திருப்போர் பட்டியலில் வைத்தார்கள்.

அப்பொழுதே தங்களுக்கு வேலை வழங்கப்படாததை எதிர்த்து 72 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். இந்த வழக்கில் 2014 இறுதியில் மீதமிருப்பவர்களை பணிக்கு அமர்த்தாமல் புதிய அறிவிப்புகள் எதுவும் வெளியிடக் கூடாது என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது நீதிமன்றம்.

ஆனால், கடந்த 2016 முதல் மெல்ல மெல்ல ஒப்பந்தப் பணியாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது மெட்ரோ நிர்வாகம். ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளே வர ஆரம்பித்ததும் நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த படித்தொகை தருவதை நிறுத்தி விட்டிருக்கிறார்கள். 7 வது ஊதிய உயர்வு கமிசனின் சம்பள உயர்வும் இல்லை. மாறாக வாங்கிய சம்பளத்தையும் குறைத்து விட்டார்கள். பதவி உயர்வும் இல்லை. இப்படியாக கொத்தடிமை முறையிலான உழைப்புச் சுரண்டலைத் தீவிரப்படுத்தியது நிர்வாகம்.

கோயம்பேடு மெட்ரோ தலைமையகத்தின் முன்பு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் தொழிற்சங்க நிர்வாகிகள் – கோப்புப் படம்.

“தொடர்ந்து ரயிலை இயக்குபவர்களையும் ஒப்பந்த முறையில் எடுக்க ஆரம்பித்தார்கள்.” இதற்கெதிராக ஜுலை 2018-ல் மெட்ரோ ஊழியர்களின் போராட்டம் தொடங்குகிறது. “எங்கள் போராட்டத்தினால் பயணிகள் பாதிக்கப்படக் கூடாது என்று சுழற்சி முறையில் போராட்டத்தை தொடர்ந்தோம். அதாவது இரண்டாவது ஷிஃப்ட் பணியாளர்கள் முதல் ஷிஃப்டிலும், முதல் ஷிஃப்டை முடித்தவர்கள் இரண்டாவது ஷிஃப்டிலும் என்று தொடர்ச்சியாக 15 நாட்கள் நடந்த இந்தப் போராட்டத்தில் நிர்வாகம் இறங்கி வந்து உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுகிறோம். ஆனால் ஒப்பந்த முறையில் ஆட்கள் எடுப்பதைப் பற்றி பேசக் கூடாது என்றார்கள். ஒப்பந்த முறையால் தமிழக இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று எதிர்த்தோம். இதனால் நாங்கள் தொடர்ந்து பழி வாங்கப்பட்டோம்” என்கிறார்கள் பணியாளர்கள்.

படிக்க:
தொழிலாளர் பிரச்சினை : சங்கமாகத் திரண்டால் மட்டும் போதுமா ?
♦ சென்னை மெட்ரோ : நவீன ரயிலை இயக்கும் தொழிலாளிகளின் அவல நிலை !

ஒரு மாதமாகியும் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. ஆனால் ஒடுக்குறை மட்டும் தொடர்ந்தது. இதற்கெதிராக சங்கம் தொடங்கி போராடலாம் என முடிவெடுத்து கடந்த 2018 அக்டோபர் 30-ல் சங்கத்தை பதிவு செய்து  சி.ஐ.டி.யு மற்றும் சதர்ன் ரயில்வேயின் டி.ஆர்.இ.யூ-வோடு இணைத்துக் கொண்டோம். பின்னர் எங்களின் 21 அம்ச கோரிக்கையை எழுதி நிர்வாகத்திடமும், தொழிலாளர் நலத்துறையிடமும் கொடுத்தோம்.

இந்த காலகட்டத்தில் மெட்ரோ வேலைகளில் முழுவதும் ஒப்பந்தப் பணியாளர்கள் நிரம்பி விட்டார்கள். ரயில் ஓட்டுநர்கள், ட்ராக் பராமரிப்பு, பவர் சப்ளை, ஹவுஸ் கீப்பிங் என அனைத்து துறைகளிலும் ஒப்பந்தப் பணியாளர்கள். இந்த ஒப்பந்த நிறுவனங்கள் எல்லாம் அதிகாரிகளின் பினாமிகள். ஆந்திரா, கர்நாடகாவைச் சேர்ந்த நிறுவனங்கள் இவை.

டெண்டர் கொடுக்கும் முறையே இந்நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும். உதாரணமாக, ரயில் ஓட்டுநருக்கு முன் அனுபவம் இருக்க வேண்டும், ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனத்திற்கும் அனுபவம் இருக்க வேண்டும் என்பது விதி. இதனை மாற்றி மெட்ரோவில் எந்த வேலை பார்த்தாலும், எந்த டெண்டர் எடுத்திருந்தாலும் பரவாயில்லை என்று அறிவித்தார்கள்.

பெங்களூரில் ஹவுஸ்கீப்பிங் டெண்டர் எடுத்த BVG india limited என்ற நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டது. முதல் டெண்டர் அறிவிப்பில் மெட்ரோவில் ரயிலை இயக்கும் நிறுவனம் வேண்டும் என்று விளம்பரம் கொடுத்ததும் கியாளிஸ் என்ற சர்வதேச நிறுவனம் உள்ளே வந்தது. இதனை தடுக்க இம்மாதிரி முறைகேடாக மாற்றி ஒதுக்குகிறார்கள். இது 2016 -ல் நடந்தது.  இதுகுறித்து ஆர்.டி.ஐ போட்டால் எந்த தகவலும் வரவில்லை.

இந்த முறைகேடான டெண்டரால் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் ஊழல் அதிகாரிகளால் வீணாகிறது. இன்னொரு பக்கம் நம்முடைய மக்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைகளும் பறிக்கப்படுகிறது. இதற்காகவா வீட்டை இழந்தோம். நிலத்தை இழந்தோம். பத்து ஆண்டுகளாக டிராபிக்கில் சிக்கித் தவித்தோம். எல்லாம் நமக்கு வேலை கிடைக்கும், வேலைக்கு சுலபமாக ரயிலில் செல்லலாம் என்று நினைத்தோம். ஆனால் அப்படித்தான் இருக்கிறதா என்றால் இல்லை.

டெல்லி மெட்ரோவில் மினிமம் டிக்கெட் ரூ.6 அதிகபட்சம் 34 ரூபாய். இங்கு மினிமம் ரூ. 10 அதிகபட்சம் ரூ.70 என்று பிடுங்குகிறார்கள். இந்தியாவில் எந்த மெட்ரோவிலும் இப்படி ஒரு கட்டணம் இல்லை. இவர்களுடைய நோக்கம் சேவை இல்லை. மெட்ரோ என்ற ப்ராஜெக்ட் எடுத்து அதன் மூலம் இவர்கள் பாக்கெட்டை நிரப்பிக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

முறைகேடான டெண்டர் மூலம் முதலில் பராமரிப்பு, இரண்டாவது ரயிலை இயக்குவது ஆகியவற்றை இந்நிறுவனங்களுக்கு ஒப்படைத்து விட்டார்கள். இப்போது மூன்றாவது நிலையக் கட்டுப்பாடு டெண்டர். அதில் அண்டர் கிரவுண்ட் ஸ்டேசன் ஆபத்து நிறைந்தது. எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இதனை நிர்வகிக்க இரண்டு ஆண்டுகள் பயிற்சி கொடுப்பார்கள். தீ விபத்து, லிஃப்டில் மாட்டிக் கொண்டவர்களை எவ்வாறு மீட்பது, ரயில் திடீரென நின்றால் என்ன செய்வது என்று எல்லா வகையிலும் பயிற்சி பெற்றவர்களை எடுத்து விட்டு எந்த பயிற்சியும் இல்லாத நபர்களை ஒப்பந்த முறையில் நியமித்து இருக்கிறார்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நிலையக் கட்டுப்பாட்டிற்கு எந்த டெண்டரும் அறிவிக்கவில்லை. முழுக்க முழுக்க சட்டவிரோதமாக நடந்தவைதான். ஓப்பன் டெண்டர் விட்டு ஆட்களை எடுத்தால் ஊழியர்கள் கேள்வி கேட்போம். அதைவிட பெரிய பிரச்சனை, 2013-ல் செலக்ட் ஆன காத்திருப்பு பட்டியலில் உள்ள நபர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற தீர்ப்பு  ஓப்பன் டெண்டருக்கு பிரச்சனையாக உள்ளது.

அதைவிட முக்கியம் இதே காலகடத்தில் மெட்ரோவில் ஜூனியர் எஞ்சினியருக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதுவே கடைசி அறிவிப்பு. இந்த சூழலில் பாதிக்கப்பட்ட அந்த நபர்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடி “எங்களுக்கு வேலை வழங்காமல் புதியதாக ஆட்களை எடுக்கக் கூடாது என்ற தீர்ப்பு உள்ளபோது வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். இது நீதிமன்ற அவமதிப்பு என்று வழக்கு போடுகிறார்கள்.  இதனை விசாரித்த நீதிபதி சத்திய நாராயணன் பென்ச் இவர்களுக்கு உடனடியாக வேலை கொடுக்க வேண்டும் இல்லையென்றால் உங்களை கைது செய்ய வேண்டிய நிலை வரும்” என்று மெட்ரோவிற்கு கண்டனம் தெரிவிக்கிறது.

மெட்ரோ சார்பாக “எங்களுக்கு இப்போதைக்கு ஆட்கள் தேவைப்படவில்லை. வேண்டுமானால் அடுத்த கட்ட மெட்ரோவிற்கு எடுத்துக் கொள்கிறோம்” என்று சொன்னது. இதனை மனதில் கொண்டுதான் ஓப்பன் டெண்டர் கொடுக்கவில்லை.

ஏற்கனவே டெண்டர் எடுத்த BVG india limited மற்றும் KCIC (Karnataka commercial and industrial corporation)  ஆகிய இந்த இரண்டு கம்பெனிகளும் அதிகாரிகளுடைய பினாமி கம்பனி. இதனைக் கொண்டு ஒன்றரை ஆண்டுகள் ஓட்டிவிட்டார்கள்.

இப்போது இந்த நிலைய கட்டுப்பாடு வேலைக்கு டெண்டர் விட்டால் தகுதியான கம்பெனி போட்டிக்கு வந்து விடும், பல்வேறு நடைமுறை சிக்கல் இருப்பதால்,  டெண்டர் விடாமல் மறைமுகமாக கே.சி.ஐ.சி கம்பெனிக்கு கொட்டேசன் கொடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29 தேதி 17 ஸ்டேசனுக்கு அனுமதி கொடுத்து விட்டார்கள்.

இதன் பின்னர் இந்த 17 நிலையங்களிலும் யாரும் போகக் கூடாது. அந்த நிலையங்களுக்கு கே.சி.ஐ.சி கம்பெனியில் இருந்து ஆட்களை நியமித்துக் கொள்வார்கள் என்று சொன்னார்கள். இதற்கு ஒரு ஆளுக்கு ரூ.68,000 தருவதாகச் சொல்லி ஆர்டர் காப்பியும் கொடுத்து விட்டார்கள். இந்த ஆர்டர் காப்பி யூனியன் கைக்கு கிடைத்து விட்டது

இதே வேலையை செய்ய நிரந்தர ஊழியர்கள் நாங்கள் ரூ.28,000 பெறுகிறோம். ஆனால் தனியாருக்கு ரூ.68,000 தருவதாக சொல்கிறார்கள். ஆனால், ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் வெறும் ரூ.18,000. அப்படியெனில் ரூ.50,000 எங்கே செல்கிறது?.

ஏற்கனவே மெட்ரோவில் பயணிக்க ஆட்கள் இல்லாமல் தள்ளாடும் சூழலில் ரூ.68,000 சம்பளம் கொடுப்பது யாரை வாழவைக்க? இதில் பல கோடிகள் வரை ஊழல் நடப்பதாக ஐயத்தை ஏற்படுத்துகிறது. இதைப்பற்றி ஊடகங்களும் வாயைத் திறக்கவில்லை.

இதனை எதிர்த்து சி.ஐ.டி.யூ சங்கத்தலைவர் தோழர் சௌந்தராஜன், “நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்படும் வகையில் தாங்கள் அவுட் சோர்சிங் முறையில் ஆட்களை எடுப்பதாக தெரிய வருகிறது. இதனை பரிசீலிக்குமாறு கேட்டு கடிதம் எழுதுகிறார்.

அதேபோல் இந்த கே.சி.ஐ.சி நிறுவனத்திற்கும் ஒரு கடிதம் எழுதுகிறார். “நீங்கள் டெண்டரே எடுக்காமல் மறைமுகமாக ஆட்களை நியமிக்க முயற்சி செய்கிறீர்கள். ஆனால் நீங்கள் நியமிக்க இருக்கும் வேலைக்கு ஏற்கனவே செலக்ட் ஆகி 40 பேர் வெளியில் இருக்கிறார்கள். உயர் நீதிமன்ற உத்தரவும் இருக்கிறது. எனவே நீங்கள் மேன் பவர் சப்ளை செய்வது தவறு” என்று எழுதுகிறார்.

இந்த கடிதம் நிர்வாகத்திற்கும், டெண்டர் எடுத்த கம்பெனிக்கும் சென்ற பிறகு ஆத்திரம் தலைக்கேறி ஊழியர்களை பழி வாங்கும் நோக்கத்தோடு சம்பள குறைப்பு, ஷிஃப்டு டைம் மாற்றம், எட்டு மணி நேர வேலை 14 மணி நேரம் மாற்றம், விடுப்பு இல்லை, எதற்கெடுத்தாலும் ஒழுங்கு நடவடிக்கை. அதேபோல் பெண் தொழிலாளர்களை 4 மணிக்கு வர சொல்லி பழி வாங்கினார்கள். அவர்களுக்கு வாகன வசதி எதுவும் செய்து தரப்படவில்லை. இன்னும் சொல்ல முடியாத அளவிற்கு பழி வாங்கும் போக்கை மேற்கொண்டது நிர்வாகம். எப்படி பி.எஸ்.என்.எல். என்ற மாபெரும் நிர்வாகம் தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்த ஊழியர்கள் வேட்டையாடப்பட்டார்களோ அதேதான் இங்கும் நடக்கிறது.

இதற்கு காரணம் யூனியன்தான் என்று பொறுப்பில் இருந்த 8 பேரை டிசம்பர் 3-ம் தேதி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்கள். மேலும் “நீங்கள் சி.எம்.ஆர்.எல். பற்றி தவறாக வெளியில் சொல்லி இருக்கிறீர்கள்” என்று போலியான விசாரணை நடத்துகிறார்கள். யூனியன் ஆரம்பிப்பதற்கு முன்னர் சம்பளத்துக்காக போராடியவர்கள் இன்று ஊழலை எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதுதான் இவர்கள் பழி வாங்கும் நடவடிக்கைக்கு காரணம். இவர்களுடைய நோக்கம் எப்படியாவது யூனியனை காலி செய்ய வேண்டும். நிர்வாக முறைகேடுகளுக்கு எதிராக கேள்வி எழுப்புவோரை அச்சுறுத்த வேண்டும் என்பதுதான்.

படிக்க:
சென்னை மெட்ரோ ரயிலின் வியர்வை மணம் !
♦ நீட் கொடுமைகள் 2019 : இன்னும் எவற்றையெல்லாம் சகித்துக் கொள்ளப் போகிறோம் ?

இந்த சஸ்பென்டை எதிர்த்து தொழிலாளர் நலத்துறையை அணுகி தொழிற்தாவா கொடுக்கிறோம். இதேசமயத்தில் உயர் நீதிமன்றத்தில் “இந்த சஸ்பெண்ட் செல்லாது. இதனை ஸ்குவாஷ் செய்யுங்கள்” என்று வழக்கு போடுகிறோம். தொழிலாளர் நலத்துறை பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறார்கள். இந்த பேச்சுவார்த்தை ஜனவரியில் தொடங்கி ஏப்ரல் வரை ஐந்து கட்ட பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. தொழிலாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு நிலுவையில் இருக்கும்போது யார் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சட்டம் இருக்கிறது. இதனை தொழிலாளர் துறை ஆணையர் திரு. ஜானகிராமன் ஒவ்வொரு முறையும் பேச்சு வார்த்தையின்போது மெட்ரோ நிர்வாகத்திடம் வலியுறுத்தினார்.

ஆனால் நிர்வாகமோ “எங்களுக்கென்று தனியாக சட்டம் வைத்திருக்கிறோம்” என்று சொல்லியது. அதனையும் தொழிலாளர் துறை ஆணையர் கண்டித்திருக்கிறார்.  அதனை எல்லாம் மீறி ஏப்ரல் 26 ம் தேதி 8 பேரையும் டிஸ்மிஸ் செய்தது நிர்வாகம்.

டிஸ்மிஸ் செய்தி அறிந்த தொழிலாளர்கள் 8 பேரும் இயக்குனரை பார்க்க செல்கிறார்கள். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சரியாக இரண்டு மணிக்கு அமைதியான முறையில் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கி மாலை ஐந்து மணி வரை தொடர்கிறது. 6 மணியாகியும் மெட்ரோ இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் வெளியில் வரவில்லை.

அதற்குள் பணியில் இருந்த அனைத்து ஊழியர்களும் வந்து விட்டார்கள். போராட்டத்திற்கு வந்த சில ஊழியர்களை வரவிடாமல் தடுத்த அதிகாரிகள் இரண்டு ஊழியர்களை கடுமையாகத் தாக்கி கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார்கள். அதனையும் மீறி ஊழியர்கள் அனைவரும் வரவே போராட்டம் தீவிரமடைந்தது.

இதற்கு காரணம் யாருக்கும் பணிப்பாதுகாப்பு இல்லை என்பதுதான். ஏற்கனவே அனைத்து வேலைகளும் ஒப்பந்த முறையாகிவிட்ட நிலையில், நிரந்தரப் பணியாளர்கள் இருப்பது நிலையக் கட்டுப்பாடு பணி மட்டும் தான். அதனையும் தனியாருக்கு விட வேண்டுமானால் இருப்பவர்களை வெளியேற்றினால்தான் சாத்தியம். அதனால்தான் “எங்களிடம் உபரியாக 130 ஊழியர்கள் இருக்கிறார்கள்” என்று தமிழக அரசுக்கு கடிதம் எழுதுகிறது மெட்ரோ.

இதுகுறித்து அதிகாரிகளை கேட்டால், “வெளியில் வேலைக்கு போங்க. உங்களை யாரும் சி.எம்.ஆர்.எல் -லில் இருங்க என்று சொல்லவே இல்லையே” என்று திமிராக பேசுகிறார்கள். இதுதான் நிரந்தர ஊழியர்களை போராட்டத்தை நோக்கி தள்ளி விட்டது.

கடந்த 30-ம் தேதி குறளகத்தில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் நடந்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில் தொழிலாளர் துறை அலுவலர் “டிஸ்மிஸ் செய்தது தவறு. அவர்களை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும்” என்கிறார். ஆனால் நிர்வாகம் சேர்க்க முடியாது என்று மறுக்கவே அடுத்த நாள் மீண்டும் பேச்சு வார்த்தை தொடர்ந்தது. அதில் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று நிர்வாகம் ஒப்புக்கொண்டதால் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றிருக்கிறார்கள்.

தனியார்மயம் புகுத்தப்பட்ட பிறகு யாருக்கும் வேலை நிரந்தரம் இல்லை என்பதுதான் விதி. அரசு-தனியார் கூட்டு முதலீட்டில் தொடங்கப்பட்ட மெட்ரோ மட்டும் தப்புமா என்ன? தொடங்கவிருக்கும் இரண்டாம் கட்ட மெட்ரோவிற்கு சுமார் ரூ.69,180 கோடி என்று மதிப்பிட்டு இருக்கிறார்கள். நிரந்தர பணியாளர்கள் எடுக்கும் திட்டமே இல்லை. எல்லாமே ஒப்பந்தம். அதற்கான முன்னோட்டமே தற்போது தொழிலாளர்கள் மீது ஏவப்படும் அடக்குமுறை!

பணிப்பாதுகாப்பு இல்லாத மெட்ரோ ரயில் திட்டத்தில் பயணப் பாதுகாப்பு மட்டும் இருக்குமா என்ன? அனைத்தும் ஒப்பந்த தொழிலாளர்களைக் கொண்டு வேலைகள் நடக்கும் போது இந்த உயர்திறன், எச்சரிக்கை தேவைப்படும் பணிகள் எந்த அளவு அபாயத்தில் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தின் மற்றுமொரு ஊழல் மற்றும் சுரண்டல் திட்டத்திற்கு மெட்ரோவும் ஒரு சான்று!

– வினவு செய்தியாளர்.

நூல் அறிமுகம் : உரைகல் | தொ பரமசிவன்

‘உரைகல்’ என்ற இந்த நூலில் பேராசிரியர் தொ.ப. அவர்கள் வெவ்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகள், மதிப்பீடுகள், அணிந்துரைகள், பேட்டிகள், உரைகள் ஆகியவை தொகுக்கப்பட்டுள்ளன. அழகான நடையில் சிறியசிறிய சொற்றொடர்களில் கடினமான கருத்துக்களைப் புரிந்துகொள்ளும்படி விளக்குவது பேராசிரியரின் வழக்கம். இந்த நூலும் அவ்வாறே உள்ளது.

பேராசிரியர் தொ.ப. அவர்களுடன் உரையாடும்போது வரலாற்றுச் செய்திகள், தொல்லியல் கண்டுபிடிப்புகள், நாட்டார் வழக்காற்றியல் தரவுகள், பழந்தமிழ் இலக்கிய மேற்கோள்கள், தற்கால இலக்கியச் சிந்தனைகள், மொழியியல் கருத்துக்கள், தாம் களஆய்வு மேற்கொண்ட அனுபவங்கள் போன்றவற்றை அவர் இயல்பாகச் சொல்வதைப் பல காலகட்டங்களில் நான் கண்டிருக்கிறேன். அவருடைய எழுத்துக்களும் அவ்வாறே நம்மோடு உரையாடுவதுபோலவே அமைந்துள்ளன. குழப்பம் ஏதும் விளைவிக்காது சொல்வதைப் பிறருக்கு விளங்கும்படிச் சொல்ல வேண்டும் என்ற அக்கறையோடு கூறப்படுபவை அவை. தம்முடைய மேதாவிலாசத்தைப் பிறருக்குப் பறைசாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எப்போதும் இருந்ததில்லை. இந்த நூலைப் படிப்பாரும் அதனை நன்கு உணரலாம்.

… தொ.ப. அவர்களுக்கு நாட்டார் வழக்காற்றியல் புலம் மீது தனித்த அக்கறையும் மரியாதையும் உண்டு. அவருடைய நூல்களில் மக்களிடையே வழக்கிலுள்ள சொற்கள், உறவு முறைகள், பழக்கவழக்கங்கள், நாட்டார் சமய நடவடிக்கைகள், நாட்டார் தெய்வங்கள் ஆகியவை குறித்த கட்டுரைகள் பல. இந்த நூலில் ‘சடங்கு’ குறித்து ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது. பட்டம் கட்டுதல், புனித எண்கள் குறித்த சடங்குச் சொல்லாடல்கள், சடங்கின்போது ஒரு சொல்லைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல், சூலுற்ற பெண்ணுக்கு மடிநிரப்பும் சடங்கு செய்தல், காதணி விழாவில் காதரிசி வழங்குதல், பூப்புச் சடங்கில் தீட்டுக் கழிப்பு போன்றவை பற்றிய குறிப்புக்கள் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ளன. திராவிடச் சாதிகளில் இன்னும் வழக்கிலுள்ள சடங்கு நடவடிக்கைகளை ஆய்வு செய்வோருக்கு இக்கட்டுரை தரும் தகவல்கள் முக்கியமானவை. ‘பேரக் குழந்தைகள் குறித்த கட்டுரையில் பேரன், பேத்தி என்ற சொற்களின் பொருண்மைகள், நம்பிக்கை, சடங்குகள், கேலி செய்யும் உரிமை போன்றவற்றைச் சுவையாகச் சொல்வதோடு நிகழ்காலத்தில் குழந்தைகள் தாத்தா பாட்டியிடமிருந்து அந்நியப்பட்டுவிட்டதையும் சுட்டிக் காட்டுகிறார் பேராசிரியர். (நூலின் அணிந்துரையிலிருந்து)

மரபு – புதுமை என்கிற இரண்டு சொற்கள் அடிக்கடிப் பேசப்படுகிற சொற்கள். இன்றைக்கு நாம் எங்கே நின்று கொண்டிருக்கிறோம்? நம்முடைய நாடு எங்கே நின்று கொண்டிருக்கிறது? இந்த நாட்டினுடைய பெருவாரியான மக்களின் ஆசைகள் – கோபங்கள் – ஏக்கங்கள் – தாகங்கள் நம்பிக்கைகள் – கனவுகள் இவைகளெல்லாம் என்னென்ன? என்பதெல்லாம் பற்றி உங்களுக்குத் திட்டவட்டமான கருத்துக்கள் இருக்குமென்று நினைக்கிறேன்.

பன்னாட்டு மூலதனமுடைய பெரிய நிறுவனங்கள் இந்தியாவுக்குள் இறங்கி இருக்கின்றன. எந்த தேசத்திலே உப்பெடுப்பதற்காக காந்தியடிகள் பெரிய போராட்டத்தை நடத்தினாரோ அந்த தேசத்தில் அதே மாநிலமாகிய குஜராத்தில் உப்பெடுத்து விற்பதற்காக கார்கில் இண்டியா என்ற வெள்ளைக்காரக் கம்பெனியை கூட்டி வந்தார்கள். உப்பெடுப்பதற்கு 50,000 ஏக்கர் நிலத்தைக் கொடுத்தார்கள். உப்புச்சத்தியாக்கிரகம் ஒரு வரலாற்றுக் காரியமாகப் பேசப்படுகிற தேசத்தில், உப்பெடுக்க மறுபடியும் அவனைக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். நாட்டின் நிலைமையைச் சொல்ல இன்றைக்கு இது ஒன்று போதும். இன்னொன்றையும் சொல்ல வேண்டும். அதே குஜராத் மாநிலத்தில் 50,000 மக்கள் திரண்டு எழுந்து நிலத்தைக் கொடுக்கக் கூடாது என்று போராடினார்கள். அரசாங்கம் எல்லாவிதப் பாதுகாப்பும் கொடுத்தபிறகும் கூட கார்கில் இண்டியா நிறுவனம் உப்பெடுக்கிற தொழிற்சாலையை நம்மால் நடத்த முடியாது என்று விட்டுவிட்டுப் போய்விட்டது. அதுவும் இன்றைய இந்தியாதான்.

சரி. மரபு என்கிற செய்தியைப் பற்றிப் பேசுவோம். மரபு என்று சொன்னவுடன் ராஜா, ராணி, கோட்டைகள் வேகமாக வந்து கொண்டிருக்கிற குதிரைகள் என்று எல்லோரும் ஏதோ ஒரு பழைய காலத்தை நினைக்கக் கூடாது. மரபு என்பது வழிவழியாக வருகிற ஒரு வழக்கம். ஆனால் அது வெறும் வழக்கம் அல்ல. அந்த வழக்கம் உருவாக பல ஆண்டுகாலம் ஆகி இருக்கின்றது. மரபுகள் உருவாக பல நூற்றாண்டு காலம் ஆகி இருக்கின்றது. மரபுகள் பேணப்பட வேண்டியன என்கிற கருத்து நம்முடைய அறிஞர்களால் 2000 ஆண்டுகளுக்கு முன்பே வைக்கப்பட்டிருக்கிறது.  (நூலிலிருந்து பக். 86 – 87)

சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்று சொல்வார்கள். சயின்ஸ் என்றால் என்ன? டெக்னாலஜி என்றால் என்ன? விஞ்ஞானத் தொழில் நுட்பம் அவ்வளவுதான். ஆர்க்கிமிடிஸ் மிதத்தல் விதியை கண்டுபிடிக்கும் முன்பே மனிதன் படகைக் கண்டுபிடித்துவிட்டான். ரோமானியக் கலங்கள் பூம்பூகார் துறைமுகத்தில் வந்து நின்றாயிற்று. அது டெக்னாலஜி. மிதத்தல் விதியைக் கண்டுபிடித்தது சயின்ஸ். பாரம்பரியமான அறிவுத் தொகுதி முழுக்க தொழில்நுட்ப ரீதியாக அமைந்தது. அதனால் காலிலே புண்ணானதும் மருந்தை அரைத்துக் கட்டினால் அம்மருந்து பயனளிக்காமல் போவதில்லை. பக்க விளைவுகளையும் உண்டாக்காது. ஏனென்றால் அது பல்லாயிரக்கணக்கான முறை சோதனை செய்யப்பட்டது.

ஆனால் விஞ்ஞானக் கோட்பாடுகள் அடுத்த ஐந்தாண்டில் மற்றொரு விஞ்ஞானியால் நிராகரிக்கப்படுகிறது. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த விஞ்ஞானத்தை நம் தலையில் கட்டினான். என்ன நடந்தது? ஏன் எதற்கு என கேள்வியில்லாமல் பாரம்பரிய மரபுகள் எல்லாவற்றையும் நிராகரித்தோம். பண்பாட்டின் சல்லிவேர்கள் அறுந்து போயின. அறுந்து போகப் போக வேரிலே சிக்கல் ஏற்பட்டது. வேரில் புழு தாக்கினால் அது கொழுந்தில் தெரியும். வேரிலே வெக்கை கட்டியதால் மேலேயிருக்கும் முடி வாடுகிறது. நம்முடையே குழந்தைகளிடத்திலே இளைஞர்களிடத்திலே இளம் பெண்களிடத்திலே மாறுதல் ஏற்படுகிறது. பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வெவ்வேறு பிராண்ட் சோப்பை மாற்றச் சொல்கிறார்கள். வெவ்வேறு பிராண்ட் என்றாலும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்துஸ்தான் லீவர், கோத்ரேஜ் அண்ட் பாயிஸ் என எல்லாம் ஒரே இடத்திலிருந்து வரும். (நூலிலிருந்து பக்.91-92)

சீர்திருத்தம் என்பதே மரபை மீறிய புதுமைதான். ஊறிப்போன விசயத்தை முதலில் உடைத்தது சித்தர்களின் ககலகமரபும் ராமனுஜர் மரபும் ராமானுஜர் மரபு மென்மையானது. ஆனால் ஆழமான வேர்களைக் கொண்டது. இவர்கள் இரண்டு பேரும் பெற்ற வெற்றி சிறியது. ஆனால் வரலாற்றில் அவற்றின் பாதிப்பு இருந்தது. மறு நூற்றாண்டிலே நம் மரபிலே ஒரு விபத்து நடந்தது. மலிக்காபூர் வடக்கே இருந்து படையோடு வந்து விட்டான். சிறிய குடிசையில் தீவிபத்து என்றால் தெருவின் மனநிலையே மாறிவிடும். யார் வீட்டிற்குள்ளும் யாரும் புகுந்து தண்ணீர் எடுப்பர். அதுபோல மலிக்காபூர் வந்ததும் சித்தர்களின் கலக மரபு விரிவடையாமல் நின்றுவிட்டது. அந்த நெருப்பின் மீது இந்த நெருப்பு தண்ணீராக வந்து விழுந்தது.

படிக்க:
செயற்கை நுண்ணறிவு : அறிவியல் உலகில் அறம் சார்ந்த கேள்விகள் !
நீட் கொடுமைகள் 2019 : இன்னும் எவற்றையெல்லாம் சகித்துக் கொள்ளப் போகிறோம் ?

திட்டமிட்ட தீர்க்கமான வெற்றியினை மரபுகளை நிராகரிப்பதில் பெற்றவர் தந்தை பெரியார் ஒருவர்தான். நிராகரிக்கப்பட வேண்டிய மரபுகளை நிராகரிப்பதில் பெரிய வெற்றியை பெரியார்தான் பெற்றார். பிரசன்ஸ் ஆப் திங்ஸ் என்பது போல ஆப்சன்ஸ் ஆப் திங்ஸ் என்பதையும் பார்க்க வேண்டும். உண்மையைப் போல இன்மையும் ஆய்வுக்குரிய விசயம். சிறுபான்மை மக்களுக்கு பெரியாரின் அருமை பெரியாரின் இறப்புக்குப் பின் தான் தெரிந்தது. பெரியார் இருந்தபோது பெரியாரின் பணியின் வீச்சினை உணரவில்லை. பெரியார் இறந்த பிறகுதான் தமிழ்நாட்டில் சிறுபான்மையினருக்கு ஏற்பட்ட உணர்வு நெருக்கடிகள் இவ்வளவு காலம் நம்மைக் காப்பாற்றியது, அரசியல் சட்டம் அல்ல. பெரியாரும் அவரது சிந்தனைகளும்தான் என்பதை உணர்ந்தார்கள். சித்தர்களில் சிலர்தான் கடவுளை நிராகரித்தார்கள். ராமனுஜர் கடவுளை நிராகரிக்கவில்லை. பெரியார் ஒருவர்தான் விஞ்ஞானப்பூர்வமாக துணிச்சலாக கடவுளை நிராகரித்தார். (நூலிலிருந்து பக். 94 – 95)

நூல்:உரைகல்
ஆசிரியர்: தொ.பரமசிவன்

வெளியீடு: கலப்பை பதிப்பகம்,
9/10, முதல் தளம், இரண்டாம் தெரு,
திருநகர், வடபழனி, சென்னை – 600 026.
மின்னஞ்சல் : kalappai.in@gmail.com

பக்கங்கள்: 144
விலை: ரூ 130.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: udumalai| puthinambooks

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

கீழைக்காற்று விற்பனையகத்தின் புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

செயற்கை நுண்ணறிவு : அறிவியல் உலகில் அறம் சார்ந்த கேள்விகள் !

0

செயற்கை நுண்ணறிவு குறித்து நடந்து வரும் ஆராய்ச்சிகள் எந்தளவுக்கு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறதோ அதே அளவுக்கு புதிய கேள்விகளையும், அறம் சார்ந்த ஊசலாட்டங்களையும் ஏற்படுத்துகின்றது. செயற்கை நுண்ணறிதிறன் தன் வளர்ச்சியின் ஊடாக தன்னுணர்வு சார்ந்த முடிவெடுக்கும் ஆற்றலை மெல்ல மெல்ல அடைந்து வருகின்றது. கூகிள், பேஸ்புக், ஐபிஎம் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் இந்த திசையிலான ஆராய்ச்சிகளுக்கு ஏராளமாக செலவிட்டு வருகின்றது. எதிர்காலத்தில் மனிதப் பண்புகள் கொண்ட இயந்திரங்கள் (Humanoids) தன்னுணர்வுடன் முடிவெடுக்கும் ஆற்றலை அடையும் திசையில் ஆராய்ச்சிகள் முன்னேறி வருகின்றன. அதற்கு முன், நாய் பூனை போன்ற பிராணிகளுக்கு ஒப்பான தன்னுணர்வு கொண்ட எந்திரங்கள் செயல்பாட்டுக்கு வரும் சாத்தியங்களும் அதிகரித்துள்ளன.

செயற்கை நுண்ணறிவு என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும், அதனுள் மூன்று பிரிவுகள் உள்ளன. ”துணைபுரியும் நுண்ணறிவு” (Assisted intelligence) – மிக எளிதான தானிமயமாக்கும் (Automation) போக்கு. தொழிற்சாலைகளில், ஐடி துறைகளில் இன்னபிற பணியிடங்களில் மனிதர்களை ஈடுபடுத்தும் ஒரே விதமான செயல்களை இயந்திரங்களைக் கொண்டு மாற்றீடு செய்வது. விரிவாக்கப்பட்ட நுண்ணறிவு (Augmented intelligence) – இது மனிதர்கள் உள்ளீடு செய்யும் தரவுகள் மற்றும் மனிதர்களின் செயல்பாடுகளில் இருந்து கற்பது போன்றவற்றின் மூலம் ஒரு முடிவை எடுக்கும் திறன் கொண்டது. தானிமயமாக்கப்பட்ட நுண்ணறிவு (Autonomous intelligence) – இங்கே மனிதர்களின் இடையீடு தேவையில்லை; தானிமயமான கார் மற்றும் மனித இயந்திரங்கள் இதற்கான உதாரணம்.

இம்மூன்று துறைகளிலும் நடந்து வரும் ஆராய்ச்சிகள் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு தன்னுணர்வுடன் முடிவெடுக்கும் ஆற்றலை செயற்கை நுண்ணறிவு பெறும் நிலையை – அதாவது செயற்கை மூளை என்கிற நிலையை – நோக்கி நகர்ந்து வருகின்றது. உள்ளீடு செய்யப்பட்ட மற்றும் திரட்டப்பட்ட மின்தரவுகளை ஆழ்நிலைக் கற்றலுக்கு உட்படுத்துவது (Deep learning), இயந்திரக் கற்றல் முறையின் மூலம் ஆராய்வது (Machine Learning) போன்ற தொழில்நுட்ப உத்திகளின் மூலம் செயற்கை நுண்ணறிவு சுயேச்சையான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு உயர்ந்து வருகிறது. நிதி நிறுவனங்களில் இந்த முறை தற்போது அமல்படுத்தப்பட்டும் வருகின்றது.

படிக்க:
ஸ்லீப்பர் செல் சங்கிகளின் நஞ்சு பரப்புத் தளமாகும் வாட்சப் குழுக்கள் !
சாதி வெறியை ஊதிவிடும் தேவராட்டம்

அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகத்திலிருந்து சுமார் 320 மில்லியன் அமெரிக்கர்களின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்த மின் தரவுகளை செயற்கை நுண்ணறிதிறன் கொண்டு ஆய்வு செய்த ப்ரைஸ் வாட்டர் கூப்பர் என்கிற நிறுவனம், அதன் மூலம் வாடிக்கையாளர் செயல்பாடுகள், சிந்தனைப் போக்கு, ஆளுமை, முடிவெடுக்கும் முறைமை (pattern) போன்றவை குறித்த வரைபடம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் அமெரிக்க நிதி நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர் குறித்து எம்மாதியான முடிவை எடுக்கலாம் என்கிற பரிந்துரையை வழங்குகின்றது. போலவே, ஓட்டுனர் இல்லா தானியங்கி மகிழ்வுந்துகள் மேலை நாடுகளில் சிறிய அளவுகளில் பயன்பாட்டுக்கு வந்து விட்டன. இவற்றை மேலும் அன்றாடப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன. மருத்துவ ஆலோசனை, சட்ட ஆலோசனை என இதுகாறும் மனிதர்கள் மட்டுமே செய்யக் கூடிய வேலைகள் எனக் கருதப்பட்ட பல வேலைகளில் தற்போது இயந்திரங்கள் அமர்வது சாத்தியமே என்கிற நிலை எட்டப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் இந்த வளர்ச்சிப் போக்குகள் அனைத்தும் மிக விரைவில் தன்னுணர்வு கொண்ட மனித இயந்திரங்களின் பயன்பாடு சாத்தியமே என்பதற்கு கட்டியம் கூறுகின்றன. தன்னுணர்வு (Cognition) என்பதைக் குறித்த ஆராய்சிகளுக்கு உளவியல், உயிரியல், உடலியல், நரம்பியல் துறைகளில் நடந்து வரும் ஆய்வு முடிவுகள் மேலும் செறிவூட்டுகின்றன. மனித மூளையின் தன்னுணர்வு எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதைக் குறித்த ஆராய்ச்சிகளுக்கே செயற்கை நுண்ணறிதிறன் பயன்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது உயிரியல் துறையிலும் கணினித் துறையிலும் நடக்கும் ஆராய்ச்சிகள் ஒன்றை ஒன்று செழுமைப்படுத்தி முன்னேறிக் கொண்டிருக்கின்றன. இதன் மூலம் எட்டப்படும் ஒவ்வொரு மைல்கல்கள் ஒவ்வொன்றும் மனித மூளையைக் குறித்த புதிய புரிதல்களை ஏற்படுத்துவதோடு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அடைய வேண்டிய புதிய இலக்கையும் நிர்ணயிக்கின்றன.

மனித மூளையானது ஒரு குறிப்பிட்ட பிரச்சினை அல்லது சிக்கலுக்கான முடிவை தர்க்கப்பூர்வமாக சிந்திப்பதன் மூலமும், விவரங்களைப் பகுத்தாராய்வதன் மூலமும் எடுக்கின்றது. இதற்கு அடிப்படை தரவுகள். தரவுகளை ஒப்பீடு செய்வதன் மூலம் (inductive reasoning) அல்லது பொருந்தாதவற்றைக் கழிப்பதன் மூலம் (deductive reasoning) ஒரு குறிப்பான சூழலுக்கு ஒரு குறிப்பான முடிவை எடுக்கிறது. அவ்வாறு எடுக்கப்படும் முடிவுகள் கால தேச வர்த்தமானங்களுக்கும், குறிப்பான சமூக பொருளாதார சூழலுக்கும் தொடர்புடையதாகவும் வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியில் ஒரு மனித மூளையின் கற்றல் திறனுக்கு உட்பட்டதாகவும் இருக்கும். எவ்வாறாயினும், மூளையின் தன்னுணர்வானது ஒரு குறிப்பிட்ட முடிவை எடுப்பதற்கு மிக ஆதாரமானது தரவுகள் அல்லது விவரங்கள். மனித மூளையின் செயல்பாடுகள் குறித்து நவீன அறிவியலுக்கு ஏற்றபட்டு வரும் புதிய புரிதல்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் துறையில் நடக்கும் ஆய்வுகளை அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர்த்திச் சென்றுள்ளது. இதன் விளைவாகவே சுயேச்சையான தன்னறிவு கொண்ட மனித இயந்திரங்கள் நடைமுறைப் பயன்பாட்டுக்கு வரும் நாள் தொலைவில் இல்லை என்கிறார்கள் இத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள்.

இப்போது ஒரு அறம் சார்ந்த கேள்வியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சுயமாய் சிந்திக்க முடிந்த, தன்னுணர்வு கொண்ட, பகுத்தறியும் ஆற்றல் கொண்ட, ”ஒன்றை” அஃறிணையாய்க் கருதுவதா உயர்திணையாய்க் கருதுவதா என்கிற கேள்வி எழுகின்றது. செயற்கை நுண்ணறிதிறனின் அடுத்த கட்டம் விலங்குகளின் தன்னுணர்வுக்கு ஒப்பான நிலையை அடையும் என்கிற போது, விலங்குகளுக்கென்று வகுக்கப்பட்டுள்ள சட்ட நெறிமுறைகளையும், உரிமைகளையும் இயந்திர மனிதர்களுக்கும் பொருத்துவதா என்கிற விவாதம் அறிவியல் தொழில்நுட்ப உலகில் எழுந்துள்ளது.

மேற்குலகில் உள்ள சட்டங்களின் படி முதுகெலும்புள்ள விலங்குகள் (vertebrate animals) உயிராபத்து கொண்ட பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்படுவதற்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. அதே போல் உயிரியலின் நரம்பியல் துறையில் மனித மூளையின் திசுக்களைக் கொண்டு நடத்தப்படும் ஆராய்ச்சிகளும் கடும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. சுயேட்சையாய் சிந்திக்கும் ஆற்றலும் தன்னுணர்வும் கொண்ட தனியொரு உருப்பொருள் (entity) என்கிற விளக்கத்திற்கு இயந்திய மனிதர்கள் வெகு விரைவில் பொருந்தக் கூடும்.

மகிழ்ச்சி, துயரம், ஏக்கம், வியப்பு, காதல், கருணை, அச்சம், கோபம், வீரம் போன்ற உணர்வுகளற்ற, வலி போன்ற உணர்ச்சிகளற்ற ஒரு ”ஜடம்” என்ன தான் தன்னுணர்வோடு முடிவுகள் எடுத்தாலும், சுயேட்சையாய் சிந்திக்கத் தெரிந்திருந்தாலும், இறுதியில் ”அது” வெறும் இயந்திரம் தானே என்கிற ஒரு தர்க்கமும் முன் வைக்கப்படுகின்றது. ஆனால், இங்கே ஒரு சிக்கலான கேள்வியும் எழுகின்றது. அவ்வாறான உணர்வுகளும், உணர்ச்சிகளும் கொண்ட ”ஒன்றை” உருவாக்கியிருக்கிறோம் என்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது? “அதுவாகவே” சொல்ல வேண்டும் – அல்லது தனது உரிமைக்காகவும், தனக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காகவும் குரல் எழுப்ப வேண்டும்; அடிப்படையில் “தான்” என்கிற சுயத்தை பிரகடனப்படுத்த (Manifest) தெரிந்திருக்க வேண்டும். ஆனால், ஒரு விலங்கை ஒத்த தன்னுணர்வு கொண்ட இயந்திர மனிதனால் அவ்வாறான பிரகடனகப்படுத்தல் சாத்தியமா?

இந்த கேள்வியை நவீன அறிவியல் தீர்க்காத வேறு சில கேள்விகள் மேலும் சிக்கலாக்குகின்றன. உதாரணமாக உள்ளுணர்வு அல்லது பிரக்ஞை (consciousness) குறித்த ஒரு அறுதியான முடிவை நவீன அறிவியல் இன்னும் எட்டவில்லை. இதில் சற்றே நெகிழ்வாக (லிபரல்) சிந்திக்க கூடிய தரப்பினர் ஒரு விளக்கத்தை வைக்கிறார்கள். அதாவது, தரவுகளைக் கையாள்வதில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முறைமையை நெறிப்படுத்தப்பட்ட கவனக்கட்டுப்பாட்டுடன் கையாண்டு நீண்டகாலத் திட்டமிடலுக்கான ஆற்றல் கொண்டிருப்பது உள்ளுணர்வுக்கான ஒரு இலக்கணம் என்கிறார்கள் (guided attentional capacities and long-term action-planning). இந்த ஒழுங்கமைக்கப்பட்ட முறைமை எனப்படுவது ஒரு குறிப்பிட்ட விவரத்தை அது நிலவும் புறநிலைக்கு தக்கபடி புரிந்து கொள்வது என்கிறார்கள்.

இதே கேள்விக்கு பழைமைவாத தரப்பு வேறு ஒரு விளக்கத்தை முன்வைக்கிறார்கள். உள்ளுணர்வுக்கு சில குறிப்பான உயிரியல் தன்மைகள் இருக்க வேண்டும்; விலங்கினங்களில் காணப்படுவதை ஒத்த கட்டுமானத்தோடு கூடிய மூளை இருக்க வேண்டும். பழமைவாத தரப்பினரின் விளக்கத்தை ஏற்பதாக இருந்தால் செயற்கை மூளை என்பது உடனடி சாத்தியம் கிடையாது – ஆனால், லிபரல் தரப்பினரின் விளக்கத்தை நவீன அறிவியல் உறுதிப்படுத்தும் பட்சத்தில் ஏறத்தாழ இயந்திர மனிதர்கள் அந்த நிலையை அடையும் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மனிதனைப் போன்றே உணர்வுப் பூர்வமாகவும், உணர்ச்சிகரமாகவும், தர்க்கரீதியிலும், தரவுகளின் அடிப்படையில் முடிவெடுக்கும் ஆற்றலை ஒரு இயந்திரம் பெறுவது – அதாவது இயந்திரம் முழுமையான ”மனித” நிலையை அடைவதற்கான வளர்ச்சிப் போக்கு மேலும் பல சிக்கலான கேள்விகளையும் எழுப்புகின்றன. உதாரணமாக தனது இருப்புக்காகவும், பெருக்கத்திற்காகவும் ”அவை” மனிதர்களோடு முரண்படும் நிலை ஏற்படுமா? இந்த முரண்பாடு இறுதியில் பூமி யாருக்கானது என்கிற திசையை நோக்கிச் செல்லுமா?

படிக்க:
செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – புதிய கலாச்சாரம் சிறப்பு வெளியீடு
ஆதார் : பார்ப்பனியத்தின் டிஜிட்டல் பாசிசம் !

இதை ஒட்டி ஹாலிவுட் திரைப்பட பாணியில் ஏராளமான சதிக் கோட்பாடுகளை மேற்குலக ”ஹீலர் கோஷ்டிகள்” உருவாக்கி வருகின்றனர். எனினும், நவீன அறிவியலின் பாய்ச்சலான முன்னேற்றம் இதுகாறும் அஞ்ஞானத்தில் இருளில் பதுங்கியிருந்த “மர்மங்களை” பகல் வெளிச்சத்திற்கு இழுத்து வந்துள்ளது; செயற்கை நுண்ணறிவு என்பது அறிவியலின் வளர்ந்து வரும் அம்சம் என்பதையும், இது முன்னேறும் வேகத்தையும் கணக்கில் கொண்டு பார்த்தால் வெகு விரைவில் எஞ்சியுள்ள “அமானுஷ்யங்களுக்கும்” விடை கிடைக்கும் என உறுதியாக நம்பலாம்.

சாக்கியன்

மேலும் படிக்க: AIs should have the same ethical protections as animals

வெண்பனி நடுவில் என்ன ஆனாலும் முன்னே செல்ல வேண்டும் !

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 11

வ்வாறு அவன் இன்னும் ஒரு நாளோ, இரண்டு அல்லது மூன்று நாட்களோ தவழ்ந்து சென்றான். நேரக் கணக்கு அவனுக்குத் தப்பிவிட்டது. தன்னுணர்வற்ற பிரையாசைகளின் கோவையில் எல்லாம் ஒன்று கலந்துவிட்டன. சிற்சில வேளைகளில் உறக்க மயக்கமோ மறதியோ எதுவோ ஒன்று அவனை ஆட்கொண்டுவிடும். சென்ற வண்ணமாகவே உறக்கத்தில் ஆழ்ந்து விடுவான். ஆனால், அந்த மறதி நிலையிலும் அவன் தொடர்ந்து மெதுவாகத் தவழ்ந்து சென்று கொண்டே இருந்தான். ஏதேனும் மரத்திலோ புதரிலோ மோதிக் கொண்டோலோ, உருகிய பனி நீரில் முகங்குப்புற விழுந்தாலோ தான் அவன் இயக்கம் நிற்கும். அவனைக் கிழக்கு நோக்கி ஈர்த்த சக்தி அத்துணை வலியதாக இருந்தது. அவனுடைய சித்தவுறுதி அனைத்தும், தெளிவற்ற அவனது எண்ணங்கள் யாவும் ஒரேயொரு சிறு புள்ளியில் குவிமனைப்படுத்தப் பட்டிருந்தன. தவழ வேண்டும், இயங்க வேண்டும், என்ன நேர்ந்தாலும் சரியே, முன்னே செல்ல வேண்டும் என்பதே அது.

வெண்பனிக்கு அடியில் வளர்ந்திருந்த பெர்ரிப் பழங்களை அவன் உணவாகக் கொண்டான். பாசியை வாயிலிட்டுக் குதப்பினான். ஒரு முறை பெரிய எறும்பு புற்று அவனுக்கு எதிர்ப்பட்டது. மழை நீரால் வாரி விடப்பட்டுக் கழுவப்பட்ட ஒரு சீரான தீனிப் புல், அது காட்டில் உயர்ந்து நின்றது. எறும்புகள் இன்னும் பனிக்கால உறக்கத்திலிருந்து எழவில்லை. எனவே அவற்றின் புற்று உயிரற்றது போலக் காணப்பட்டது. அலெக்ஸேய் அந்த பொருபொருத்த படப்பைக்குள் கையை விட்டான். அவன் அதை வெளியில் எடுத்த போது அவனுடைய கையில் எறும்புகள் அப்பியிருந்தன. அவற்றை உலர்ந்த வறண்ட வாயில், போதையூட்டும் கடும் புளிப்புள்ள எறும்புச் சாற்றின் சுவையை இன்பத்துடன் அனுபவித்தவாறு தின்னலானான் அலெக்ஸேய். மறுபடி மறுபடி எறும்புப் புற்றுக்குள் அவன் கையை விட்டான். எதிர்பாராத இந்த தாக்குதலால் விழிப்பூட்டப் பெற்றுப் புற்று முழுவதும் கடைசியில் உயிர்த்தெழுந்தது.

அலெக்ஸேயின் கையையும் உதட்டையும் நாக்கையும் அவை கடித்தன. விமானி உடைக்குள் புகுந்து அவனுடைய உடலைக் கடித்துப் பிடுங்கின. ஆனால், அவனுக்கோ, அந்தக் கடிகள் உவப்பாகக் கூட இருந்தன.

சிற்றுயிர்கள் கடும் சீற்றத்துடன் தற்காத்துப் போராடின. அலெக்ஸேயின் கையையும் உதட்டையும் நாக்கையும் அவை கடித்தன. விமானி உடைக்குள் புகுந்து அவனுடைய உடலைக் கடித்துப் பிடுங்கின. ஆனால், அவனுக்கோ, அந்தக் கடிகள் உவப்பாகக் கூட இருந்தன. எறும்புச் சாற்றின் காரமான சுவை அவனுக்கு உற்சாகம் ஊட்டிற்று. தாகம் எடுத்தது. மேடுகளுக்கு நடுவே பழுப்புக் காட்டு நீர் தேங்கிய குட்டை ஒன்றைக் கண்டு அதன் புறம் குனிந்தான் அலெக்ஸேய். குனிந்தவன், சடாலென்று பின்னே சாய்ந்தான். கரிய நீர்க் கண்ணாடியிலிருந்து நீல வானின் பின்புலத்தில் அவனை நோக்கியது பயங்கரமான, பழக்கமற்ற முகம். கருந்தோலால் இழுத்துப் போர்த்த மண்டையோடு போன்றிருந்தது அது. ஏற்கனவே சுருளத் தொடங்கிவிட்ட அலங்கோலமான கட்டை மயிர்கள் அதில் மண்டியிருந்தன. கருங் குழிகளிலிருந்து உறுத்துப் பார்த்தன பெரிய, உருண்டையான, வெறியுடன் பளிச்சிடும் விழிகள். சிடுக்கிட்ட தலைமுடிகள் சடைசடையாக நெற்றி மீது விழுந்தன.

“இது நானாக இருக்க முடியுமா?” என்று எண்ணினான் அலெக்ஸேய். மறுபடி நீருக்கு மேலாகக் குனிய அஞ்சி, தண்ணீர் பருகாமல் வெண்பனியைத் தின்றுவிட்டுக் கிழக்கு நோக்கித் தவழ்ந்து சென்றான். கிழக்கோ, முன்போன்ற சக்தி மிக்க காந்தத்தால் அவனைக் கவர்ந்து இழுத்தது.

வெடிகுண்டால் ஏற்பட்ட ஒரு பெரிய பள்ளம் வெடிப்பினால் வெளியேற்றப்பட்ட மஞ்சள் மணலால் அரண் செய்யப்பட்டிருந்தது. அந்தப் பள்ளத்தில் இரவைக் கழிக்க ஊர்ந்து சென்றான் அலெக்ஸேய். பள்ளத்தின் அடித்தளத்தில் நிசப்தமாகவும் வசதியாகவும் இருந்தது. காற்று அதற்குள் வீசியடிக்கவில்லை. கீழ்நோக்கிச் சரிந்த மணலின் சரசரப்பு மட்டுமே காற்று வீச்சுக்கு அடையாளமாக இருந்தது. விண்மீன்களோ, கீழிருந்து பார்ப்பதற்கு அசாதாரண ஒளியுள்ளவையாகக் காணப்பட்டன. அவைத் தலைக்கு மேலே சிறிதே உயரத்தில் தொங்குவது போலவும் பைன் மரத்தின் ஊசியிலை அடர்ந்த கிளை, பளிச்சிடும் இந்தத் தீப்பொறிகளைத் துணியால் ஓயாமல் துடைத்துக் கொண்டிருக்கும் கை போலவும் பிரமை ஏற்பட்டது. காலையாகும் முன் குளிர் அதிகரித்தது. ஈர உறை பனி மரங்கள் மீது தொங்கிக் கொண்டிருந்தது. காற்று திசை மாறி வடக்கேயிருந்து வீசத் தொடங்கவே, இந்த உறைபனிக் கட்டியாகி இறுகி விட்டது.

இந்த இரவில் அலெக்ஸேய் என்ன காரணத்தினாலோ ஒரு போதும் இல்லாத அளவு பலவீனம் அடைந்துவிட்டான். பைன் மரப்பட்டைச் சேமிப்பு அவன் சட்டைக்கிடையில் இருந்தது. எனினும் அதைச் சுவைக்கக்கூட அவன் முற்படவில்லை. இரவில் உடல் தரையோடு ஒட்டிக்கொண்டுவிட்டது போல மிக்க சிரமப்பட்டு அதை நகர்த்தினான். விமான உடையிலும் தாடை மீசைகளிலும் உறைந்து கெட்டியாயிருந்தப் பனிக்கட்டித் துணுக்குகளைத் தட்டிப் போக்காமலே பள்ளத்தின் சுவற்றைப் பற்றி ஏறத் தொடங்கினான். ஆனால், இரவில் பனிக்கட்டிப் படிந்து இருந்த மணல் மீது அவன் கைகள் சக்தியின்றி வழுகின. தொற்றி ஏறி வெளிச் செல்ல அவன் மீண்டும் மீண்டும் வழுகிப் பள்ளத்தின் அடித்தளத்தில் சரிந்தான். தடவைக்குத் தடவை அவனுடைய முயற்சிகள் பலவீனம் அடைந்து கொண்டு போயின. வேறொருவர் உதவி இன்றித் தன்னால் வெளியேற முடியாது என்று முடிவில் அவனுக்கு நிச்சயப்பட்டுவிட்டது. அவன் துணுக்குற்றான். இந்த எண்ணம் அவனை வழுக்குச் சுவர் மேல் மீண்டும் தொற்றியேறத் தூண்டியது. கைகளை சில தடவைகள் மட்டுமே எடுத்து வைத்தவன், திராணியற்று, சோர்ந்து வழுக்கி விழுந்துவிட்டான்.

“அவ்வளவுதான்! இனி எல்லாம் ஒன்றுதான்!”

பள்ளத்தின் அடித்தளத்தில் சுருண்டு முடங்கினான் அவன். சித்தவுறுதியைக் குறைத்து அதைச் செயலற்று ஆக்கும் பயங்கர அமைதியை உடல் முழுவதிலும் உணர்ந்தான். சோர்ந்த கையசைப் பால் சட்டைப் பையிலிருந்து கசங்கிய கடிதங்களை எடுத்தான். ஆனால், அவற்றைப் படிக்க அவனுக்கு வலுவில்லை. பல்நிற உடை அணிந்துப் பூத்துக்குலுங்கும் புல் தரையில் உட்கார்ந்திருந்த இளம் பெண்ணின் நிழற்படத்தை செல்லோபேன் காகிதச் சுற்றிலிருந்து வெளியே எடுத்தான். ஆழ்ந்த ஏக்கத்துடன் முறுவலித்து அவளிடம் வினவினான்:

“கடைசிப் பிரிவு சொல்லிக் கொள்ள வேண்டியதுதானா?” திடீரென அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. போட்டோவும் கையுமாக அப்படியே கல்லாய் சமைந்து விட்டான். காட்டுக்கு மேலே வெகு உயரே, குளிர்மையான, ஈரிப்புள்ள காற்றில் எங்கோயோ தனக்குப் பழக்கமான ஒலி கேட்பதுப் போல அவனுக்குத் தோன்றியது.

மயங்கி ஈர்த்த உறக்க நிலையிலிருந்து அக்கணமே அவன் விழிப்படைந்தான். அந்த ஓசையில் சிறப்பானது எதுவும் இல்லை. கட்டிப்பனிப் படிந்த மர முடிகளின் ஒரு சீரான சலசலப்பிலிருந்து விலங்கின் நுண்ணுணர்வு உள்ள செவிகள் கூட அதை வேறு பிரித்து அறிய முடிந்திராது – அவ்வளவு மந்தமாக இருந்தது அவ்வொலி. ஆனால், அலெக்ஸேயா, அதிகத் துலக்கமாக அதைச் செவிமடுத்தான். தனிப்பட்ட சீழ்க்கை ஒலிகளைக் கொண்டு தான் ஒரு காலத்தில் ஓட்டியது போன்ற சோவியத் சண்டை விமானம் பறக்கிறது என்று அவன் சரியாக ஊகித் துணர்ந்தான்.

விமான எஞ்சினின் கடகடப்பு அருகே விமானம் காற்றில் திரும்பு கையில் அவ்வொலி சில வேளைகளில் சீழ்க்கையாகவும் சில வேளைகளில் முனகலாகவும் மாறியது. முடிவில் சாம்பல் நிற வானில் வெகு உயரே புலப்பட்டது மெதுவாக இயங்கும் மிகச் சிறிய சிலுவை வடிவம். மேகங்களின் சாம்பல் புகைப்படலத்தில் ஒன்றி மறைவதும் பின்பு அதிலிருந்து வெளியே நீந்துவதுப் போலப் பறப்பதுமாக இருந்தது அது. அதனுடைய இறக்கையில் செந்நட்சத்திரங்கள் தென்பட்டன. அதோ அலெக்ஸேயின் தலைக்கு நேர் மேலே, தனது தட்டைப் பகுதிகளில் வெயிலொளியில் பளிச்சிட அது ஒரு கரண வளைவு வந்தது, பின்னர் திரும்பி, வந்த திசையில் மீண்டும் செல்லலாயிற்று. விரைவில் அதன் கடகடப்பு கட்டிப்பனி படிந்துக் காற்றில் மெல்லென முழங்கிய காட்டு மரக்கிளைகளின் ஓசையில் மூழ்கி அடங்கிப் போயிற்று. எனினும் அதன் மெல்லிய சீழ்கையொலி தனக்குக் கேட்பது போல அலெக்ஸேய்க்கு நெடுநேரம் வரை தோன்றிக் கொண்டிருந்தது.

உறைந்த மணலை நகங்களால் பறண்டி, படிகள் அமைப்பதில் முனைந்தான். அவன் நகங்கள் பிய்ந்து போயின. விரல்களில் இரத்தம் கசிந்தது. எனினும் அவன் கட்டாரியாலும் நகங்களாலும் முன்னிலும் விடாப்பிடியாக வேலையைத் தொடர்ந்தான்.

தான் விமானி அறையில் இருப்பதாக எண்ணிக் கொண்டான். ஒருவன் சிகரெட் புகையை இழுத்துவிடக்கூடப் போதாத ஒரு கண நேரத்தில் அவன் தனது காட்டு விமான நிலையத்தை அடைந்திருப்பான். பறந்தவன் யாராயிருக்கும்? ஒருவேளை அந்திரெய் தெக்தியாரென்கோ காலை வேவு பார்த்திருப்பதற்கு வந்திருப்பானோ? பகை விமானம் எதிர்படலாம் என்ற மறைமுக நம்பிக்கைக் காரணமாக வேவுப் பறப்பின் போது வெகு உயரே செல்வது அந்திரெய்க்கு விருப்பமானது… அந்திரெய் தெக்தியாரென்கோ… விமானம்… தோழமை மிக்க இளைஞர்கள்…

புது ஆற்றல் தனக்குள் ஊறிப் பெருகுவதை உணர்ந்தான் அலெக்ஸேய். உறையிலிருந்து கட்டாரியை எடுத்து நொய்ந்த, வலுவற்ற அடிகளால் பனிக்கட்டிப் புறணியை வெட்டி அகற்றினான். உறைந்த மணலை நகங்களால் பறண்டி, படிகள் அமைப்பதில் முனைந்தான். அவன் நகங்கள் பிய்ந்து போயின. விரல்களில் இரத்தம் கசிந்தது. எனினும் அவன் கட்டாரியாலும் நகங்களாலும் முன்னிலும் விடாப்பிடியாக வேலையைத் தொடர்ந்தான். அப்புறம் இந்தக் குழிப் படிகள் மேல் முழங்கால்களையும் கைகளையும் ஆதரவாக வைத்துக் கொண்டு அவன் மெதுவாக ஏறத் தொடங்கினான். அரண்சுவர் வரை எட்ட அவனுக்கு வாய்த்துவிட்டது. இன்னும் ஒரு மூச்சு முயன்றால் அரண்சுவர் மேல் படுத்து வெளியே உருண்டுவிடலாம். ஆனால், கால்கள் வழுக்கவே, வலியுண்டாகும்படி முகத்தால் கட்டிப் பனி மீது இடித்தவாறு அவன் கீழே சரிந்துவிட்டான். அவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால், விமான எஞ்சினின் கடகடப்பு இன்னும் அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. இன்னொரு தடவை தொற்றியேற முயன்று மீண்டும் வழுக்கி விழுந்தான். அப்போது தன் வேலையை விமர்சன நோக்குடன் கவனித்துப் பார்த்து, படிகளை இன்னும் ஆழமாக்கினான். மேல் படிகளின் விளிம்புகளை முன்னிலும் கூர்படுத்தினான். பிறகு, வலுக்குறைந்து கொண்டு போன உடலின் சக்தியை எல்லாம் ஜாக்கிரதையாக ஒரு முனைப்படுத்தி மீண்டும் தவழ்ந்து ஏறினான்.

மிக்க சிரமத்துடன் அவன் மணல் அரண் சுவரின் குறுக்காக மறுபுறம் விழுந்து, தன் செயலின்றியே உருண்டான். பின்பு விமானம் பறந்து சென்ற திக்கில் தவழ்ந்து முன்னேறினான். மூடுபனியை விரட்டி, கட்டிப் பனிப் படிகத் துண்டுகளில் மின்னியவாறு அந்தத் திசையிலிருந்து காட்டின் மேலே எழுந்தது ஞாயிறு.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

ஸ்லீப்பர் செல் சங்கிகளின் நஞ்சு பரப்புத் தளமாகும் வாட்சப் குழுக்கள் !

2

ங்கள் தெருவைச் சேர்ந்த நண்பன் ஒருவன்தான் அந்த வாட்சப் குழுமத்தின் நிர்வாகி. எங்கள் தெருவைச் சேர்ந்த நண்பர்கள், தெரிந்தவர்கள் என நூற்றுச் சொச்சம் பேரைக் கொண்டு அந்த குழுமத்தை அவனும், எங்களுக்குப் பொதுவான நண்பர்கள் சிலருமாக துவங்கி சுமார் ஓராண்டுக்கும் மேல் ஆகிறது. ஆரம்பத்தில் தண்ணீர் வரும் நாள் நேரத்தை பகிர்வது, தெரு விளக்கு எரியாமல் இருப்பது, வெவ்வேறு ஊர்களில் இருக்கும் நண்பர்களை குசலம் விசாரித்துக் கொள்வது என சென்று கொண்டிருந்த குழுமத்தின் செயல்பாடுகள், ஒரு கட்டத்தில் மெல்ல மாறத் துவங்கியது.

எப்போதென்று சரியாக நினைவில்லை.. ஆனால், ஒரு சந்தர்ப்பத்தில் “கும்மியடிப்பதால் உடல் நலனுக்கு உண்டாகும் நன்மைகள்”, “கோலம் போடுவதைக் கண்டுபிடித்ததன் மூலம் சிறு உயிர்களுக்கும் உணவிட்ட நம் முன்னோர்களின் தயாள குணம்”, “வெள்ளிக் கிழமை விரதம் இருப்பது எப்படி கேன்சர் குணமாகும்” என்பன போன்ற தகவல்கள் வரத் துவங்கின. அதே குழுமத்தில் சில திமுக, பெரியாரிய நண்பர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்; போலவே எனக்குத் தெரிந்த பா.ஜ.க ஆதரவாளர்களும் இருக்கிறார்கள்.

“அதெப்படி கும்மியடிப்பது நரம்பு மண்டலத்திற்கு புத்துயிர் ஊட்டும், சுத்த கேணத்தனமாக இருக்கிறதே”, “எறும்புக்கு சோறு போட்டீங்க சரி, எலிக்கு என்ன போட்டீங்க” என பெரியாரிய நண்பர்கள் மெல்ல முணுமுணுக்கத் துவங்கினர். தெருவைச் சேர்ந்த பழைய பஞ்சாங்கங்கள் பதிலுக்கு களத்தில் இறங்கினர். “என்ன தம்பி, எல்லாத்திலேயும் விதண்டாவாதமா பேசனுமா? நம்ம பெரியவங்க எதுனா சொன்னா அதில ஒரு அர்த்தம் இருக்கும். நல்லத எடுத்துக்கிட்டு கெட்டத தள்ளிட்டு போயிட்டே இரு. இங்கே வந்தும் கட்சி சார்பா பேசாதீங்க” என அறிவுரைகள் வரத் துவங்கின.

கொஞ்சம் வாதாடிப் பார்த்து விட்டு ”இந்தப் பெரிசுங்களோட மல்லுக்கட்டுவது வேலைக்கு ஆகாது” என முடிவு செய்து நாங்கள் அடங்கிக் கொண்டோம். அதன் பின் “திருநள்ளாறு – சனீஸ்வரன் – செயற்கைக்கோள்” பாணியிலான புருடாக்கள் வருவது மெல்ல அதிகரித்தது. அந்தந்த சூழலுக்கு தகுந்தபடியான அரசியல் பதிவுகளும் வருவதுண்டு. எட்டு வழிச் சாலை எதிர்ப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு… இப்படி. இதன் அக்கம் பக்கமாகவே – “எட்டு வழிச் சாலை காண்டிராக்டால் பலன் பெற்ற மு.க ஸ்டாலின்”, “ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஊடுருவிய நக்சலைட்டு தீவிரவாதிகள்”, “மீத்தேன் எடுப்பதைத் தடுப்பதன் மூலம் பாகிஸ்தானுக்கு என்ன ஆதாயம்” என்பன போன்ற பதிவுகளும் வரும் – இது பா.ஜ.க ஆதரவாளர்கள் தரப்பில் இருந்து.

பாஜக ஆதரவு பதிவு போடும் ஒருவர் சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி ஸ்டெர்லைட்டை எதிர்ப்பார், மீத்தேன் திட்டத்தை எதிர்ப்பார், எட்டுவழிச்சாலையையும் எதிர்ப்பார்.. அந்த எதிர்ப்போடு சேர்த்து குறிப்பிட்ட மக்கள் விரோத வளர்ச்சித் திட்டங்களோடு அதை எதிர்த்துப் போராடும் திமுக, இடதுசாரிகள் உள்ளிட்டவர்களை இணைக்கும் விதமான பதிவுகளையும் போடுவார். நேரடியாக மோடி எதிர்ப்பு சூழல் நிலவும் போது அந்த எதிர்ப்பு எப்படி பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கு ஆதரவான சக்திகளின் தூண்டுதல் என்பதை விளக்கும் சதிக்கோட்பாடுகளையும் பகிர்வார்.

படிக்க:
சாதி வெறியை ஊதிவிடும் தேவராட்டம்
மழை வேண்டி யாகம் நடத்த வேண்டுமாம் ! அறநிலையத்துறை ஆணையருக்கு ம.க.இ.க. கண்டனம் !

தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் – இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து – அந்த வாட்சப் குழுமம் முழுக்க முழுக்க சங்கி பிரச்சாரத் தளமாக மாறியது. ”மோடி என்கிற தனித்து நிற்கும் தியாகியை சுற்றிலும் வட்டமிடும் வல்லூறுகள்” குறித்தும், நக்சலைட்டு தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் திமுகவுக்கும் இருக்கும் “கள்ள உறவு” குறித்த அலசல்களும் வரத் துவங்கியது இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து தான். இது போன்ற பதிவுகள் இடுவது பத்துக்கும் குறைவான பாஜக ஆதரவாளர்கள் தான் என்றாலும், பெரும்பான்மையானோர் பார்வையாளர்களாக அந்தப் பதிவுகளை தங்கள் மூளைக்குள் இறக்கிக் கொள்ள ஆரம்பித்தனர். விளைவு? 950 ஓட்டுக்கள் கொண்ட எங்கள் வார்டில் இந்த முறை சிலர் “ரகசியமாக” தாமரை கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. இத்தனை ஆண்டுகளில் எங்கள் வார்டில் ஒரு ஓட்டு கூட தாமரைக்கு விழுந்ததாக சரித்திரமே இல்லை.

இந்துத்துவம் நமது கற்பனைக்கு எட்டாத அளவுகளில் நம் சமூகத்தின் வேர்மட்ட அளவில் ஊடுருவியுள்ளது. நாம் வெளியே காணும் மோடி எதிர்ப்பு என்பது அப்படியே இந்துத்துவத்திற்கு எதிரான எதிர்ப்பாக இல்லை – அது மோடி என்கிற தனிநபரின் மீதான ”கும்பல் மனோபாவ” வெறுப்பின் வெளிப்பாடு தான். நாளை மோடிக்கு பதிலாக அதே கட்சியில் இருந்து வேறொரு மீட்பர் முன்னிறுத்தப்படும் போது அக்கட்சியின் இன்றைய பாவங்கள் கழுவப்பட்டு அந்த மீட்பர் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான ஒரு கருத்தியல்ரீதியிலான ”செயற்களம்” (Eco system) உருவாகியுள்ளது. இதற்கு சமூக வலைத்தளங்கள் வெகுவாக பயன்பட்டுள்ளது – குறிப்பாக வாட்சப்.

♠ ♠ ♠

லகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் பொய் செய்திகள் மற்றும் வதந்திகளைப் பரவுவதற்கும், இதன் மூலம் கும்பல் கொலைகள் நடப்பது, தேர்தல் முடிவுகளே கூட மாறுவது போன்ற சூழ்நிலை ஏற்படுவதற்கும் நவீன இணையத் தொழில்நுட்பத்தையும் சமூக வலைத்தளங்களையும் காரணங்களாக சுட்டுகின்றன. இதில் ஒரு வெட்கக்கேடான முரண்பாடு உள்ளது. விசயம் என்னவென்றால், அரசாங்க அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஆளும் கட்சிகளே தங்களுடைய தேர்தல் வெற்றிக்காக திட்டமிட்ட ரீதியில் எதிர்கட்சிகளின் மேல் அவதூறு பரப்ப இதே சமூக வலைத்தளங்களைத் தான் நம்பியிருக்கின்றன. இதைப் போலவே எதிர்கட்சிகளும் சமூக வலைத்தளங்களை நம்பியிருக்கின்றன.

இன்னும் ஒருபடி மேலே போய், பல்வேறு நாட்டு ஆளும் கட்சிகளுக்கு பொருளாதார அரங்கில் தாம் சந்தித்த தோல்விகளை மறைக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. அதிகரித்து வரும் வேலை வாய்ப்பின்மை, வேலை இழப்புகள், பெயரளவிலான தொழிலாளர் உரிமைகளும், சமூக நலத் திட்டங்களும் பறிக்கப்படுவது, பணிப் பாதுகாப்பின்மை, பொதுவான ஒரு சந்தைத் தேக்கம், உற்பத்தி தேக்கம் என சர்வதேச அளவில் பொருளாதார கட்டமைப்பு நிலைகுலைந்து போயுள்ளது. இதன் தாக்கம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. சில நாடுகளில் வெளிப்படையான தொழிலாளர் போராட்டங்களாகவும், மக்கள் போராட்டங்களாகவும் வெடித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நெருக்கடியின் தருணத்திலிருந்து தப்பிக்க பல்வேறு நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் அதீத தேசிய வெறியை தூண்டி விடுகின்றன. இதன் விளைவாக இந்தியாவில் மோடியைப் போல் பல நாடுகளில் வலதுசாரி சக்திகள் வளர்ந்து வருகின்றன. இவர்கள் முன் வைக்கும் அதீத தேசிய வெறி, இனவெறி, மொழி வெறி போன்றவைகளுக்கு அந்தந்த சூழலுக்கும், கலாச்சாரத்திற்கும், அரசியல் வரலாற்றிற்கும் பொருத்தமான “எதிரிகளை” கட்டமைத்துள்ளனர்; இந்தியாவில் சிறுபான்மையினர், கம்யூனிஸ்டுகள் மற்றும் இதர ஜனநாயக முற்போக்கு சக்திகள். இவ்வாறு கட்டமைக்கப்பட்ட “எதிரிகளுக்கு” எதிரான கிசுகிசுக்களையும் வதந்திகளையும் பரப்புவதற்கு வாட்சப் போன்ற சமூக ஊடகங்களையே ஆளும் வர்க்கங்கள் சார்ந்துள்ளன.

ஒருபக்கம் ஆட்சியதிகாரத்தில் இருப்பதால் ஒரு சமூக ஒழுங்கை நிலைநாட்டுவதான போலித் தோரணையில் சமூக வலைத்தளங்களை கண்டிப்பது, சட்டரீதியான கட்டுப்பாட்டுக்கு உட்படுத்துவதாக மிரட்டுவது, கண்காணிப்பது என செயல்படும் அதே நேரம் இன்னொரு பக்கம் அதே தளங்களைக் கொண்டு நஞ்சை விதைக்கும் வேலையையும் செய்கின்றனர். இந்தப் பின்னணியில் இந்தியாவின் மோடி அரசு சமீபத்தில் வாட்சப் / பேஸ்புக் நிறுவனத்தின் முதலாளி மார்க் ஸூக்கர்பெர்க்கிற்கு சம்மன் அனுப்பியதையும், டிவிட்டரின் முதலாளி ஜாக்கை பா.ஜ.க அமைச்சர்களே கண்டித்ததையும் நினைவுபடுத்தி பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.

எனில், கும்பல் கொலைகளுக்கும் கலவரங்களுக்கும் வித்திடும் வதந்திகளை வெளியிடும் சமூக ஊடகங்கள் கேள்விக்கு அப்பாற்பட்டவையா? அந்த செயல்பாடுகளை லிபரல்கள் சொல்லும் “கருத்து சுதந்திரம்” என்கிற போர்வையில் அனுமதித்து விட வேண்டியது தானா?

இல்லை. வதந்திகள் மற்றும் பொய்ச் செய்திகள் பரவுவதற்கான ஊடகம் என்கிற பொறுப்பை அவர்கள் சுமக்க வேண்டும் என்பதும், அவற்றின் விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதே சரி. எனினும், இது போன்ற வதந்திகளை உருவாக்குபவர்களும் – அப்படி உருவாக்குபவர்களுக்கு உகந்த சூழல் (Eco System) சமூகத்தில் நிலவுவதற்கு காரணமானவர்களும் முதன்மைக் குற்றவாளிகள் என்பதை மறந்து விடக்கூடாது. கத்தியை வில்லனாக காட்டி கொலையாளி தப்பிப்பதைப் போல் வாட்சப்பை காரணமாக காட்டி பசு குண்டர்களை சுதந்திரமாக நடமாட அனுமதிக்க முடியாது.

சமூக வலைத்தளங்களின் வரவு வதந்திகளின் பரவலை எளிதாக்கியிருக்கிறது என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை வதந்திகள் சமூக வலைத்தளங்களின் வரவுக்கு முன்பே வேறு வேறு வடிவங்களில் பரவி வந்தன என்பதும்தான். இணையம் தற்போது ஒரு பாதுகாப்பான முகமூடியை வழங்கியுள்ளது. யார் எதைச் சொன்னது என்பதை கண்டுபிடிப்பதை சிக்கலாக்கி இருக்கிறது.

♠ ♠ ♠

ந்தியாவில் மட்டும் இன்றைய தேதியில் சுமார் 22 கோடி பேர் வாட்சப் செயலியைப் பயன்படுத்துகின்றனர். சில கோடி அளவிலான வாட்சப் குழுமங்கள் செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலும் ஒருவரது கைபேசியின் தொடர்புப் பட்டியலில் உள்ள – அறிமுகமான – நபர்களிடமிருந்தே செய்திகள் பகிரப்படுகின்றது என்பதால் வாட்சப்பில் உலாவும் பதிவுகளின் நம்பகத்தன்மை மற்ற சமூக ஊடகங்களை விட அதிகம். பாஜக அரசு போலிச் செய்திகளுக்கு எதிராக ”நடவடிக்கை” எடுக்கப் போவதாக பூச்சாண்டி காட்டியதை அடுத்து வாட்சப் தற்போது சில தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஒருவர் பார்வேர்ட் செய்யும் தகவல்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது, பார்வேர்ட் செய்யப்பட்ட தகவல்களின் தலைப்பில் அதைக் குறிப்பது போன்ற நடவடிக்கைகளை அந்நிறுவனம் எடுத்தாலும் அவை வதந்திகள் பரவும் வேகத்தை கட்டுப்படுத்துவதில்லை. இந்தியா மற்றும் வேறு சில நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ளும் தகவல்களின் உள்ளடக்கத்தை அரசின் புலனாய்வு நிறுவனங்கள் கண்காணிக்க வாட்சப் அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை அந்நிறுவனம் நிராகரித்துள்ளது. இவ்வாறு தனிநபர்களுக்கு இடையிலான உரையாடல்கள் மற்றும் செய்திப் பரிமாற்றங்கள் மறையாக்கம் (encrypt) செய்யப்பட்டிருப்பதால் தாமே படிக்க முடியாது என்று அந்நிறுவனம் கூறுகின்றது.

அவ்வாறான கண்காணிப்பை பாஜக போன்ற ஒரு கட்சிக்கு வழங்கினால் திருடனிடமே சாவியைக் கொடுத்தது போல் ஆகி விடும் என்பது வேறு விசயம். இதற்கு மாற்றாக தங்களது செயலியை எப்படி பயன்படுத்துவது என்பதைக் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மேற்கத்திய நாடுகளில் – குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் – வாட்சப் செய்திப் பரிமாற்றத்திற்கான ஒரு செயலியாகவே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதைப் பயன்படுத்தி வதந்திகளைப் பரப்புவது, அரசுக்கு ஆதரவாக பொதுக் கருத்தை கட்டமைப்பது, தேசிய வெறியூட்டுவது அந்தச் சமூகங்களில் நடப்பதில்லை.

இந்தியாவைப் பொருத்தவரை பொதுவில் சமூக ஊடகங்களும் – குறிப்பாக வாட்சப் செயலியும் கேடான நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படும் போக்கிற்கு சில காரணங்கள் உள்ளன.

படிக்க:
மக்களைக் கொல்லும் வாட்சப் வதந்திகளின் முன்னோடி பாரதிய ஜனதா !
பானுகோம்ஸ், சுமன் சி ராமன், ட்ரோல்கள் : மோடியின் சைபர் சேனாவில் 2 கோடி வேலை வாய்ப்பு !

முதலாவதாக, வாட்சப் செயலியைப் பாவிப்பவர்களின் எண்ணிக்கை பிரம்மாண்டமாக இருப்பதுடன் அசுரத்தனமான வேகத்தில் வளர்ந்து வருகின்றது. அந்த தளத்தில் எம்மாதிரியான வதந்திகள் பரவுகின்றது, யார் எதற்காக வதந்தியைப் பரப்புகின்றனர், எத்தனை குழுமங்கள் இருக்கின்றன என்பதைக் கண்காணிக்கவோ கட்டுப்படுத்தவோ போதுமான தொழில் நுட்ப அறிவு கொண்ட போலீசார் இல்லை. அப்படியே இருந்தாலும், வதந்தி ஆளும் வர்க்கத்திற்கு அல்லது கட்சிக்கு சாதகமான வதந்தியை கட்டுப்படுத்தவோ, அப்படி பரப்புபவர்களை கைது செய்யவோ திராணியற்றதாகவே போலீசு துறை அதன் அஸ்திவாரத்திலிருந்து வரலாற்று ரீதியில் ”வளர்க்கப்பட்டுள்ளது”.

இரண்டாவதாக, வாட்சப் குறிப்பான சிந்தனை கொண்டவர்கள் இயல்பாக ஒன்றிணைந்து கொள்ளும் வாய்ப்பை வழங்குகின்றது. உதாரணமாக ஒரு ஊரின் அல்லது பிராந்தியத்தின் செல்வாக்கான சாதியைச் சேர்ந்த சாதிவெறியர்கள் தங்களுக்குள் ஒரு குழுவாக சேர்ந்து கொள்ள முடியும். அந்தக் குழுமத்திற்குள் தலித்துகளைப் பற்றியோ அல்லது பிற சிறுபான்மையினரைப் பற்றியோ ஒரு வதந்தியை எளிதாக பரிமாறிக் கொள்ள முடியும். அப்படி பகிரப்படும் தகவல்கள் அதே குழுமத்திற்குள் ஒரு சுற்று சுற்றி வரும் போது மேலும் மெருகேறி அதே போன்ற மற்றொரு குழுமத்திற்குச் செல்லும். தகவல்கள் மட்டும் “மெருகேறு”வதில்லை – அதை வாசிப்பவர்களின் சிந்தனைப் போக்கும் மேலும் வன்மமாக மாறுகின்றது.

மூன்றாவதாக, பரப்பப்படும் வதந்திகள் பெரும்பாலும் ஒருவிதமான பொதுபுத்தியில் இருந்து கட்டமைகின்றது. இந்தப் பொதுபுத்தி என்பது பார்ப்பனிய ஆன்மாவினுடையது. ”தலித்துகள் சுத்தமாக இருக்க மாட்டார்கள்”, “குல்லா வைத்து தாடி வைத்த இசுலாமியன் நம்பத் தகுந்தவன் அல்ல” “கிறிஸ்தவர்கள் நயவஞ்சகமானவர்கள்” “பாகிஸ்தான் எதிரி நாடு” “கம்யூனிசம் என்பது சீன சதி” – இது இந்திய பார்ப்பனிய சமூகத்தின் பொது உளவியலில் மிக எளிதில் எடுபடக் கூடிய விசயங்கள். உதாரணமாக – “தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் பெட்ரோல் வளம் உள்ளது. அதை எடுக்கத் துவங்கினால் இந்தியா வல்லரசாவதை தடுக்க முடியாது. அப்படி பெட்ரோல் எடுத்தால் சவூதிக்கு மரண அடி நிச்சயம். இந்தியா வல்லரசாவதைத் தடுப்பதில் சீனாவுக்கு அக்கறை. எனவே சவூதி இசுலாமிய ஜிகாதிகளுக்கும், சீனா இந்திய கம்யூனிஸ்டுகளுக்கு காசு கொடுத்து பெட்ரோல் எடுப்பதை தடுக்க போராட்டத்தை தூண்டி விடுகின்றன” என்கிற ஒரு வதந்தி பார்ப்பனிய உளவியல் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்திருக்கும் பொதுப் புத்திக்கு மிக நெருக்கமானது – உவப்பானது.

நான்காவதாக, பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும் தோற்றுப் போயிருக்கின்றன ஆளும் வர்க்கங்கள். பொருளாதார அரங்கின் இந்த நெருக்கடி அரசுக் கட்டமைப்பை கடும் நெருக்கடிக்குள் தள்ளி விட்டுள்ளது. போலீசு, நீதித்துறை, நிர்வாகத்துறை, இராணுவம் உள்ளிட்ட புனிதப் பசுக்களின் மேல் தோல் உரிந்து அதன் உள் இத்தனை காலமாக மறைந்திருந்த கழுதை அம்பலமாகி நிற்கிறது. மக்களோடான ஒரு நேரடி முரண்பாட்டை தவிர்க்க அவர்களை எந்நேரமும் பதற்றத்தில் வைத்திருக்க வேண்டியது ஆளும் வர்க்கங்களுக்கு தேவையாக இருக்கிறது – அந்த தேவைக்குப் பொருத்தமான வகையில் சமூக வலைத்தள தொழில்நுட்பங்கள் இருக்கும்போது அதைக் கட்டுப்படுத்தும் நோக்கம் அரசுக்கு ஏற்படாமல் இருப்பது ஆச்சர்யத்துக்குரியதல்ல.

♠ ♠ ♠

மது காலத்தில் சமூக ஊடகங்களிலேயே கருவாகி, உருவாகி, வாழ்ந்து, வளர்ந்து, கடைசியில் செத்துப் போன “அரசியல் இயக்கங்களை” நாம் அறிவோம். மட்டுமின்றி “ஒரு நபர் கட்சிகள்” “சில நபர் இயக்கங்கள்” “முற்போக்கு செயல்பாட்டாளர்கள்” ஏராளமானோரை பேஸ்புக் பெற்றுப் போட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இவர்கள் பிறந்து கொண்டே இருக்கின்றனர். இது போன்ற போலிகள் உருவாகின்றனர் என்பதாலேயே சமூக வலைத்தளங்களை நாம் நிராகரிக்க வேண்டுமா? அல்லது, சமூக வலைத்தளங்களின் மொத்த சாரமும், ஆன்மாவும் இவ்வளவுதானா?

நவீன இணையத் தொழில்நுட்பங்கள் தம்மளவிலேயே சாத்தான்கள் அல்ல. ஆனால், குறிப்பான சமூக -பொருளாதார மற்றும் வரலாற்றுப் பின்னணி கொண்ட இந்தியா போன்ற ஒரு நாட்டில் அவை குறிப்பிடத்தகுந்த அளவுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. நாம் கத்தியை குறை சொல்வதில் காட்டும் முனைப்பை அதன் பிடி யாரிடம் உள்ளது என்பதைக் கவனிப்பதில் காட்ட மறுக்கிறோம்.

வாட்சப்பையும் பேஸ்புக்கையும் தடை செய்து விட்டால் அவற்றின் இடத்தை வேறு ஒரு செயலி பிடித்துக் கொள்ளும்; தடை செய்யப்பட்டவற்றின் பணிகளை புதிய செயலிகள் மாற்றீடு செய்யும். வால் வீதி ஆக்கிரமிப்புப் போராட்டங்களின் போதும், அப்போது லண்டன் பாரீஸ் போன்ற ஐரோப்பிய நகரங்களில் நடந்த தொழிலாளர்களின் ஆக்கிரமிப்புப் போராட்டங்களின் போதும், ஜல்லிக்கட்டுக்காக மெரீனாவில் நடந்த போராட்டத்தின் போதும் இதே சமூக வலைத்தளங்கள் வேறு மாதிரியான பங்காற்றியதை நாம் பார்த்திருக்கிறோம். இதே சமூக வலைத்தளங்களில் நடந்த எதிர்ப்பியக்கங்கள் ஒரு பௌதீக வடிவத்தை எடுத்தபோது சர்வ வல்லமை பொருந்திய ஐம்பத்தாறு இஞ்சி மார்பழகன் ஒரு திருடனைப் போல் சுவற்றை உடைத்துக் கொண்டு ஓடியதையும் பார்த்திருக்கிறோம்.

இப்போதைக்கு கத்தியின் முனை நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது – அதன் பிடியை நாம் கட்டுப்பாட்டுக்குள் எடுக்கும்போது நிலைமைகள் முற்றிலுமாக வேறாக இருக்கும். சமூக மாற்றம் என்கிற குறிப்பான நோக்கத்திற்காக மக்களின் பொது உளவியல் ஓர்மையடையும் சூழல் மெய் உலகில் ஏற்படும் போது மெய் நிகர் உலகின் கருவிகள் மக்களுக்கே சேவை செய்யும். அப்படி ஒரு நிலையை உண்டாக்கும் பொறுப்பு நம் முன் உள்ளது.

சாக்கியன்

மோடி : அடிமைகளின் மகாராஜா ! மகாராஜாக்களின் அடிமை !! புதிய கலாச்சாரம் மின்னிதழ்

லகெங்கும் குண்டு வெடிப்பை நிகழ்த்தி மக்களைக் கொல்பவர்களில் அரசு பயங்கரவாதிகளும், தனிநபர் பயங்கரவாதிகளும் இருக்கின்றனர். எனினும் ஒரு ஜனநாயக நாட்டில் அத்தகைய பயங்கரவாதி அங்கீகரிக்கப்படுகிறார் என்றால் என்ன சொல்வது?

மாலேக்கான் குண்டுவெடிப்பை நிகழ்த்திய கும்பலின் முதன்மைக் குற்றவாளி பிரக்யா சிங். அவரை போபால் மக்களவைத் தேர்தல் வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது பாஜக. இந்தியாவை இந்துராஷ்டிரமாக பிரகடனம் செய்யும் சங்கபரிவாரங்களின் நிகழ்ச்சி நிரலில் இது ஒரு மைல் கல். எனினும் இந்தப் பயங்கரவாதத்தை நாட்டின் எந்த ஜனநாயக அமைப்பும் தடுக்கவில்லை, தடுக்க முனைபவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்.

உத்திரப்பிரதேசத்தில் காவி ரவுடி சாமியார் யோகி ஆதித்யநாத்தின் ரவுடித் தனங்கள் மாநில முதல்வர் என்ற பெயரில் நடந்து வருகிறது. பிரதமர் மோடியும் செல்லுமிடமெல்லாம் இந்துமதவெறியை நேரடியாகவே பேசுகிறார். பாஜகவின் தேர்தல் அறிக்கை பகிரங்கமாகவே காஷ்மீரை ஒடுக்குவது, ராமர் கோவில் கட்டுவது, குடிமக்கள் பதிவேடு என்று அச்சுறுத்துகின்றது.

மோடியை ஒரு மக்கள் தலைவராக அரசு நிறுவனங்கள் – தொலைக்காட்சிகள் மட்டுமல்ல தனியார் கார்ப்பரேட் ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள், தரகு முதலாளிகள் அனைவரும் வலிந்து முன்னிறுத்துகின்றனர். இந்தப் பிம்பத்தின் அருகதை என்ன? மோடியை ஆதரிக்கும் சமூகப் பிரிவினரின் யோக்கியதை என்ன ? காவி – கார்ப்பரேட் பாசிசத்தின் ஆதாயத்தை அடையும் இப்பிரிவினரின் சமூக உளவியல் தான் நாட்டின் பொதுப்புத்தியை கட்டியமைக்க முனைகிறது.

ஆர்.எஸ்.எஸ். முன்னின்று நடத்திய கலவரங்கள் தொடர்பான எண்ணற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மோடி ஆட்சியமைத்த பிறகு விடுவிக்கப்படுகின்றனர். புல்வாமா தாக்குதலை வைத்து தேசிய வெறியைக் கிளப்பி ஆதாயம் அடைய முனைகிறது பாஜக. கல்லூரிகளோ, சமூக வலைத்தளங்களோ மோடியை எதிர்க்கும் எவரும் சங்கிகள் முன்னே மண்டியிட்டாக வேண்டுமென்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மறுத்தால் வழக்கு, சிறை!

பாசிசத்தை நோக்கி நாட்டை வழிநடுத்தும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக – மோடி அரசின் சமீபத்திய குற்றங்களை ஆவணப்படுத்துகிறது இந்தத் தொகுப்பு! தமிழகம் இந்துமதவெறியர்களை ஏற்கவில்லை என்றாலும் இந்தி பேசும் மாநிலங்களில் நிலைமை நேரெதிராக இருக்கிறது. தேர்தல் முடிவுகளைத் தாண்டி சங்க பரிவாரத்தை வீழ்த்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது இந்தத் தொகுப்பு!

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

***

மோடி : அடிமைகளின் மகாராஜா ! மகாராஜாக்களின் அடிமை !!  – புதிய கலாச்சாரம் மே 2019 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்துங்கள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

அச்சுநூல் அல்லது மின்னூல் வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

மின்னிதழுக்கான பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சுநூலுக்கான பணம் அனுப்பிய பிறகு தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக இதழ் அனுப்பி வைக்கப்படும்.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

” மோடி : அடிமைகளின் மகாராஜா ! மகாராஜாக்களின் அடிமை !! “ நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  • மோடி விளம்பர அரிப்பும்… அதிகாரக் கொழுப்பும் !
  • பாஜக வேட்பாளராகக் களமிறங்கும் பயங்கரவாதி பிரக்யா சிங் !
  • மோடி ஆதரவாளர்கள் எப்படி உருவாகிறார்கள் ?
  • பாஜகவின் மத வெறிப் பிரச்சாரத்தில் மண்ணள்ளிப் போட்ட சர்ஃப் எக்செல் விளம்பரம் !
  • முசுலீம் + கிறிஸ்தவக் கலப்புதான் ராகுல்காந்தி என்கிறார் பாஜக அமைச்சர் !
  • மோடி ஆட்சியில் வேலையில்லை என்று சொன்ன முசுலீம் மாணவரைத் தாக்கிய பாஜக கும்பல்
  • கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் !
  • புல்வாமா தாக்குதல் முதல் அபிநந்தன் விடுதலை வரை மோடி என்ன செய்தார் ?
  • பாஜக-வுக்கு எதிராகக் கருத்திட்ட பேராசிரியரை மண்டியிடச் செய்த ஏபிவிபி குண்டர்கள் !
  • மராட்டியம் : இயக்குனர் அமோல் பாலேக்கரை இடைமறித்த பாஜக அடிவருடிகள் !
  • காஷ்மீரி மருத்துவரை பாகிஸ்தானுக்கு போகச் சொல்லும் காவிகள் !
  • ‘உயர் சாதி ‘ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு : மோடி அமைச்சரவை ஒப்புதல் !
  • பாஜக மீது ஏன் இவ்வளவு கோபம் ?
  • அரசியல் சட்ட ஒழுக்கமும் இந்திய தனித்துவமும் !
  • பாஜக ஆட்சியில் ஒரு மதக் கலவரம்கூட கிடையாது: புருடா விடும் அமித்ஷா !
  • மங்காத்தா முதல் மோடி வரை நமக்கு சொல்வது ஒன்றுதான் : “எதுவும் தவறில்லை ”
  • குருகிராம் தாக்குதல் : மோடியின் புதிய இந்தியாவின் புதிய நீதி !
  • இந்திய சாதி ஒடுக்குமுறை வரலாற்றை பாடநூல்களிலிருந்து நீக்கும் மோடி அரசு!
  • மீண்டும் ஒரு மோடி ஆட்சியை இந்த நாடு தாங்காது !

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

 

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டுச் சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.

வங்கி விவரங்கள் :
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

____________

புதிய கலாச்சாரத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

பொள்ளாச்சி
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

 

சாதி உங்களுக்கு என்ன செய்தது ?

சாதி உங்களுக்கு என்ன செய்தது ?

பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தொலைவு 3,84,400 கி.மீ. அங்கு மனிதர்கள் சென்றுவந்துவிட்டனர். ஊருக்கும் சேரிக்குமான தொலைவு, அதிகபட்சம் அரை கி.மீ-தான். ஆனால், இன்னமும் ஊர்க் கிணற்றுத் தண்ணீர், சேரி வந்து சேரவில்லை. ஊரைக் காக்கும் கடவுளின் தேர், பல்லாயிரம் ஆண்டுகளாக அசைந்து நகர்ந்தாலும், சேரிக்கு வர சாமிக்கும் வழி தெரியவில்லை. அண்மைக் காலமாக, சாதியத் தாக்குதல்கள் மிக மோசமாக அதிகரித்து வருகின்றன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்மம், மற்ற ஆதிக்கச் சாதியினரிடையே திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியில் ராதாகிருஷ்ணன் என்றால், அனைவரும் அறிவார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கழுகுமலை நகரச் செயலாளர், சிறு தீப்பெட்டி உற்பத்தி சங்கத் தலைவர், பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர்… என்கிற 65 வயதான ராதாகிருஷ்ணன் இந்தப் பகுதியில் மக்களின் மதிப்பைப் பெற்றவர். அவரது சொந்த கிராமம் வேலாயுதபுரத்தில் சுமார் 100 ரெட்டியார் குடும்பங்களும், சுமார் 60 அருந்ததியர் குடும்பங்களும் வசிக்கின்றன. சாதிய அடுக்கின் அடிநிலையில் அழுத்தப்பட்டிருக்கும் அருந்ததியர்கள் மீது, ரெட்டியார் சாதியினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர்.

ஊருக்குள் செருப்புப் போட்டுக்கொண்டு போகக் கூடாது, வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நடக்கக் கூடாது, துண்டு போடக் கூடாது, வாகனங்களை ஓட்டிச் செல்லக் கூடாது, பேருந்தில் இடம் இருந்தாலும் தங்களுக்கு முன்பு நின்றுகொண்டுதான் வர வேண்டும். ரேஷன் கடையில் தாங்கள் பொருள் வாங்கிய பிறகுதான் அருந்ததியர்கள் வாங்க வேண்டும்… என்று பல கட்டுப்பாடுகள். அவை மீறப்படும்போது எல்லாம் தாக்குதல் நடக்கும்.

”வேலாயுதபுரத்தில் அருந்ததியர் குடும்பங்களை ஊரின் பிரதான பகுதியிலிருந்து தனிமைப்படுத்தும் நோக்கத்தில், ஊருக்கும் சேரிக்கும் இடையில் தடுப்பு வேலி ஒன்று அமைத்தார்கள். உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் போல, அது தீண்டாமை வேலி. அதை அகற்ற வேண்டி போராட்டங்கள் நடந்த நிலையில், கருப்பசாமி என்கிற அருந்ததிய இளைஞர், கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலைக்கு இப்போது வரை குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை” என்கிறார் கோவில்பட்டி சி.பி.எம் நகரச் செயலாளர் சீனிவாசன்.

அந்தச் சமயத்தில் நடந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக அந்தத் தீண்டாமை வேலி அகற்றப்பட்டது. இப்படி ஆறேழு ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த சாதி பிரச்னையில், ஆரம்பத்தில் அருந்ததியர்களுக்கு மறைமுக ஆதரவு அளித்து வந்த ராதாகிருஷ்ணன், கருப்பசாமியின் கொலைக்குப் பிறகு வெளிப்படையாக அதைக் கண்டித்தார். ஆனால், அந்த ஊரில் அவர் மட்டுமே கம்யூனிஸ்ட். அவருடைய ஒற்றைக்குரல் எடுபடவில்லை.

இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு வேலாயுதபுரத்தில் ஊர்க் கூட்டம். ‘ஊர்’ என்றால் அது ஆதிக்கச் சாதியைத்தான் குறிக்கும். அதன்படி கூடிய ரெட்டியார்கள், கருப்பசாமி கொலை வழக்குச் செலவை ஊர் பொதுப்பணத்தில் இருந்து பகிர்ந்துகொள்வது தொடர்பாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்போதைக்கு முகத்துக்கு நேராக அவருக்குப் பெரிய எதிர்ப்பு எழவில்லை. அதன் பிறகு, ‘உங்கள் தோட்டத்தின் வழியே அருந்ததியர்களை நடக்கவிடக் கூடாது’ என்று ஊர் மக்கள் சேர்ந்து வலியுறுத்தியுள்ளனர். ‘அப்படி எல்லாம் செய்ய முடியாது. நீங்களும் நடந்து செல்லுங்கள். அவர்களும் நடந்து செல்லட்டும்’ என்று அவர் சொல்லிவிட்டார். இதுதான் கடைசியாக நடந்த பிரச்னை. அதன் பிறகு ராதாகிருஷ்ணன் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாகத்தான் கிடந்தார்.

படிக்க :
♦ சாதி வெறியை ஊதிவிடும் தேவராட்டம்
♦ தருமபுரி: தலித் மக்களை சூறையாடிய வன்னிய சாதிவெறி!

‘கொலைப்பழி எப்படியும் அருந்ததியர்கள் மீதுதான் விழும்’ என்பது அவர்களின் கணக்கு. ஆனால், சம்பவத்தின்போது ராதாகிருஷ்ணனுடன் இருந்த ஒருவர் தப்பித்துவிட்டதால் கொலையாளிகள் யார் என்பது தெரிந்துவிட்டது. வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த ஐந்து பேரில் ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் இரண்டு பேர் என்பது இன்னும் கொடுமை. இப்போது ராதா கிருஷ்ணனின் மகன், மகள்கள், மனைவி… என மொத்தக் குடும்பமும் கடும் மன உளைச்சலிலும், உயிர் பயத்திலும் இருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசக்கூட அஞ்சுகின்றனர். வட இந்தியாவின் ‘காஃப்’ பஞ்சாயத்துகளைப்போல, ஊர் கூடி, பேசி, திட்டமிட்டு ராதாகிருஷ்ணனைக் கொலை செய்திருக்கிறார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திவ்யா – இளவரசன் காதல் பிரச்னையைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியைத் தீ வைத்து எரித்தார்கள். மொத்த ஊரும் எரிந்து கரிக்கட்டையானது. ஒருசில மாதங்களில் கடலூர் மாவட்டம் பாச்சாரப் பாளையத்தில் தலித் குடியிருப்புக்குத் தீ வைத்து எரித்து எட்டு வீடுகள் நாசமாக்கப்பட்டன. பிறகு, மரக்காணத்தில் தலித் குடியிருப்புக்குத் தீ வைக்கப்பட்டது. 11 வீடுகளைத் தீ தின்றது.

பெரியகுளம் அருகே மேல்மங்களம் கிராமத்தில் அருந்ததியர் பையனுக்கும், அம்பலக்காரர் பொண்ணுக்கும் காதல். இரு மாதங்களுக்கு முன்பு இருவரும் ஊரைவிட்டு ஓடிவிட்டனர். உடனே ஊரில் வசிக்கும் மற்ற ஆதிக்கச் சாதியினரும் ஒன்றிணைந்து, தலித் குடியிருப்புக்குத் தீ வைத்துக் கொளுத்தினார்கள். இதில் 10 -க்கும் மேற்பட்ட வீடுகள் எரித்து நாசமாக்கப்பட்டன.

தேர்தலுக்கு ‘திருமங்கலம் ஃபார்முலா’ போல, இப்போது தலித் மக்களை அடக்கி ஒடுக்க ஆதிக்கச் சாதியினர் கையில் எடுத்திருப்பது ‘தருமபுரி ஃபார்முலா’. மொத்த ஊரையும் எரித்து நாசமாக்கி, தலித்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து, அடுத்த வேளை உணவுக்குத் தங்களிடமே கையேந்தவைக்கும் குரூரம் இது. ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற உயர்ந்த தத்துவத்தை, தலித்களை ஒடுக்கும் மிகக் கேவலமான நோக்கத்துக்காகப் பின்பற்றி, மற்ற ஆதிக்கச் சாதியினர் ஒன்று சேர்ந்துகொள்கின்றனர்.

”இது தலித் மக்களின் எழுச்சிக் காலம். கடந்த 10 ஆண்டுகளாக தலித்கள் தங்களின் கடுமையான உழைப்பின் மூலமும், கல்வியின் மூலமும் பொருளாதாரத்தில் மேல் எழுந்து வருகின்றனர். இது மற்ற சாதியினரின் கண்களை உறுத்துகிறது. காலங்காலமாக தனக்கு கை கட்டி அடிமை சேவகம் செய்தவர்கள் தங்கள் கண் முன்னாலேயே வசதியாக வாழ்வதையும், வாகனங்களில் செல்வதையும், ஜீன்ஸும், கூலிங்கிளாஸும் அணிவதையும்… அவர்களால் பொறுக்க முடியவில்லை. ஏதாவது ஒரு சிறு பிரச்னை வரும்போது, அதையே காரணமாக வைத்து மொத்த வன்மத்தையும் தீர்த்துக்கொள்கின்றனர்” என்கிறார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்.

தலித்களுக்குச் சொந்த நிலம் இல்லாத சூழலில், தங்கள் உழைப்பினால் சிறுகச் சிறுக சேர்த்த வீடும் வாசலும் எரிந்து சாம்பலாகிவிட்டால், அது அவர்களை ஒரு தலைமுறை பின்னோக்கிக் கொண்டுசென்றுவிடும்.

கடந்த ஓர் ஆண்டில் குளித்தலை காவல் நிலைய எல்லையில் மட்டும் மொத்தம் ஐந்து தலித் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி, ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி… என்ற வரிசையில் நான்கு வயது பெண் குழந்தைகூட இருக்கிறது. அந்தச் சின்னஞ்சிறு தளிர்களைச் சீரழிக்கும் குரூர மனநிலையை இவர்களுக்கு அளிப்பது எது?

தலித் வீட்டில் ஒரு டம்ளர் தண்ணீர் வாங்கிக் குடித்தால் தங்கள் சாதி கௌரவத்துக்கு இழுக்கு எனக் கருதும் இவர்களின் கால்கள், காம அரிப்பு எடுத்தால் காலனிக்குத்தான் நடக்கின்றன. இது குளித்தலையின் கதை மட்டும்தான் என்றால், மாநிலம் முழுக்க உள்ள யதார்த்தத்தின் பிரமாண்டத்தை எண்ணிப் பாருங்கள். சாதி இழிவுடன் சேர்த்து, ஆண் வக்கிரத்தின் அபாயத்தையும் இந்தப் பெண்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

படிக்க :
♦ நந்தினியைக் கொன்ற இந்து முன்னணி – ஆவணப்படம்
♦ பரமக்குடி துப்பாக்கி சூடு: HRPC நேரடி அறிக்கை!

”இத்தனை ஆண்டுகள் நாம் பெற்ற கல்வி, நம்மை எந்த வகையிலும் பண்பாடு உள்ளவர்களாக மாற்றவில்லை என்பதன் சாட்சியமே இப்படியான சம்பவங்கள். சாதிவெறி நடவடிக்கைகளில் ஈடுபடும் பலர், படித்தவர்களாக இருக்கின்றனர். அதுதான் இன்னும் அச்சத்தைத் தருகிறது. இந்தச் சூழலை மாற்ற நாம் உடனடியாகக் கல்வியில் தலைகீழ் மாற்றங்களைக் கொண்டுவந்தாக வேண்டும். தன் சொந்த வீட்டில் சாதி பார்க்கப்படுவதை எதிர்த்துப் பேசும் மனநிலை உடைய மாணவர்களை உருவாக்க வேண்டும். அதற்கு ஏற்ற ஆசிரியர்கள், வகுப்பறைகளைக் கொண்டுவர வேண்டும். நாம் உண்மையில் மிகப் பெரிய சமூகச் சிக்கலின் விளிம்பில் நிற்கிறோம். இதைப் புரிந்துகொண்டு தொடர்ந்து செயலாற்றினால், அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பிறகேனும் இந்த நிலையைக் கொஞ்சம் மாற்றலாம். அரசு, சமூக இயக்கங்கள், கட்சிகள் அனைவரும் இத்தகைய கல்வி மாற்றத்துக்காகத் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்” என்கிறார் ச.தமிழ்ச்செல்வன்.

சாதிப் பற்று கொண்டோர் சிந்திக்க வேண்டியது என்னவெனில், அது எந்தச் சாதி வெறியாக இருந்தாலும் அது தன் சொந்த சாதியின் ஏழைகளுக்கும் எதிராகத்தான் இருக்கும் நிதர்சனத்தை.

தி.நகர் துணிக்கடைகளில், சொற்பக் கூலிக்கு ஒரு நாளைக்கு 15 மணி நேரம் உழைப்பை உறிஞ்சுவதற்குத்தான் சாதி பயன்படுகிறது. சொந்த சாதியின் ஏழைகளுக்கு வேலைவாய்ப்புத் தருவதாக இதைச் சொல்ல முடியுமா? வறுமையை வஞ்சகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் காரியவாதம் அல்லவா அது?

7 தலித்துக்களைக் கொன்ற ஜெயாவின் சாதிவெறிப் போலீசு! -கடந்த ஆண்டு முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் பெரும் வன்முறை நடந்தது. அதில் காயம்பட்டோரை புகழ்பெற்ற தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அந்த மருத்துவமனை உரிமையாளரும் அடிபட்டவர்களும் ஒரே சாதிதான். ஆனால், ‘பணம் கட்டாமல் மருத்துவம் கிடையாது’ என்று கறாராகக் கைவிரித்துவிட்டனர்.

தன் சொந்த சாதியில் உள்ள ஏழை மக்களை அழைத்து வந்து, ஜவுளிக் கடைகளிலும் முறுக்குக் கம்பெனிகளிலும் குறைந்த கூலிக்கு உழைப்பை உறிஞ்சுவது யார்? சாதிக்காரன் நடத்தும் கல்லூரி என்பதற்காக, உங்கள் பிள்ளைக்கு நன்கொடை வாங்காமல் ஸீட் தருவார்களா? ஒரே ஒரு எல்.கே.ஜி ஸீட் இலவசமாகப் பெற்றுவிடுங்கள் பார்ப்போம். செத்தால் மாலையுடன் வரும் சாதி சங்கம், வாழ வழி இல்லாமல் ரோட்டில் நிற்கும்போது, பச்சைத் தண்ணீர்கூடத் தருவது இல்லை. சாதியால் பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள, உலக அறிவு தேவை இல்லை. தங்கள் சொந்த வாழ்க்கை அனுபவங்களைச் சற்றுத் திரும்பிப் பார்த்தாலே புரிந்துகொள்ளலாம். ஒருவேளை தொடர்ந்து சாதிவெறியோடுதான் இருப்பீர்கள் என்றால், உங்களுக்கு மிஞ்சப்போவது தலைக்கு ஒரு வழக்கும்… நிம்மதியற்ற வாழ்க்கையும்தான்!

நன்றி : முகநூலில் – பாரதி தம்பி 2014, ஜூலை 10 அன்று விகடன் பத்திரிகையில் வெளியான கட்டுரை.

இங்க எவன் நல்லா இருக்கான் ? | சென்னை மக்கள் நேர்காணல்

ம் சக மனிதர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? தங்களது பணி நிலைமை, ஓய்வு, பொழுதுபோக்கு, வருமானம், வருங்காலம் இவை குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் ? வினவு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு விடையளிக்கிறார்கள் சென்னை மக்கள் !

பாருங்கள் ! பகிருங்கள் !


இதையும் பாருங்க…

மாட்டுக்கறி விக்கக் கூடாதுன்னா இங்க பெரிய போராட்டமே நடக்கும் | சென்னை பீஃப் பிரியர்கள்

படிக்க:
சாதி வெறியை ஊதிவிடும் தேவராட்டம்
தொழிலாளர் பிரச்சினை : சங்கமாகத் திரண்டால் மட்டும் போதுமா ?

அறியப்படாத தமிழ் ஆளுமை செம்பூர் வித்துவான் வீ. ஆறுமுகம்

தமிழ் ஆளுமை செம்பூர் வித்துவான் “வீ.ஆறுமுகம் சேர்வை” | பொ.வேல்சாமி

ண்பர்களே….

பொ.வேல்சாமி
நீண்டகால வரலாற்றைக் கொண்ட தமிழ் இலக்கியப் பரப்பில் மிகச்சிறந்த அறிஞர்கள் பலரும் அறியப்படாதவர்களாக மறந்தும் மறைக்கப்பட்டும் போயினர். இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கோமளபுரம் இராஜகோபாலபிள்ளை, கொன்றைமாநகரம் சண்முகசுந்தர முதலியார், மன்னார்குடி சோமசுந்தரம் பிள்ளை, மதுரை ஜில்லா செம்பூர் வித்துவான் வீ.ஆறுமுகம் சேர்வை போன்ற பல தமிழ் அறிஞர்களும் இந்த நிலைக்கு ஆளாகியிருக்கின்றனர்.

1915 தொடக்கம் 1935 காலகட்டங்களில் தமிழகத்தின் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவராக ஆறுமுகம் சேர்வை பெயர் பெற்றிருந்தார். இவர் நாலடியாருக்கும் நளவெண்பாவுக்கும் எழுதிய விரிவுரை மிகவும் சிறப்பானவை. இவர் பதிப்பித்து விளக்கவுரை எழுதிய (1920) தண்டியலங்காரம் நூலை அப்படியே எடுத்து வேறு ஒருவர் பெயர் போட்டு (கொ.இராமலிங்கத் தம்பிரான்) சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டதாக இலக்கணப் பேராசிரியர் கு.சுந்தரமூர்த்தி தன்னுடைய தண்டியலங்காரப் பதிப்பின் முன்னுரையில் குறிப்பிடுகின்றார்.

நரிவிருத்தம், கபிலரகவல் போன்ற நூல்களுக்கு சிறந்த உரை எழுதியதுடன் சீவகசிந்தாமணி நூலை உரைநடையில் எழுதியிருக்கிறார். இத்துடன் வேறு பல நூல்களையும் இயற்றியிருக்கிறார் என்று தெரிகிறது. இவர் அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற பல்வேறு அறிஞர்களின் விவாதங்களில் பங்கு பெற்றவர். திரு.வி.க., சக்கரவர்த்தி நயினார், கா.ர.கோவிந்தராஜ முதலியார் போன்ற அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த பல்வேறு ஆளுமைகளுடன் தொடர்புக் கொண்டவராகவும் அறியப்படுகிறார்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

பழந்தமிழ் இலக்கியம் சிறப்படைந்ததற்கு முக்கியமான காரணம் ஜைன சமயம் சார்ந்த புலவர்களின் பெரும் பணியே என்ற கருத்து இவரிடம் வலுவாக நிலைபெற்றிருந்தது. இந்தக் காரணத்தாலேயே இவர் சைவ புலவர்களால் ஓரங்கட்டப்பட்டதாகக் கருத இடமுள்ளது.

மதுரை – மேலூர் சாலையில் உள்ள தெற்குத் தெரு என்ற ஊருக்கு பக்கத்தில் உள்ளது செம்பூர். இன்றும் அவருடைய நெருங்கிய உறவினர்களும் அவரைப் பற்றி அறிந்தவர்களும் அங்கு வசிப்பதாக அறிந்தேன். இவருடைய வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியை அவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கின்றேன். அவர் காலத்தில் வாழ்ந்த தமிழறிஞர்கள் சிலர் இவருடைய புலமை சார்ந்த வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய குறிப்புகள் சிலவற்றை எழுதியுள்ளனர். இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்தால் இவருடைய வரலாறு ஓரளவு தெளிவாகப் புலப்படும் என்று கருதுகிறேன்.

*****

செம்பூர் வித்துவான் ஆறுமுகம் சேர்வையின் வாழ்க்கைக் குறிப்புகள் – 1913 இல் எழுதியவர் பெரும் பேராசிரியர் கா.ர.கோவிந்தராஜ முதலியார்.

ண்பர்களே…..

செம்பூர் வித்துவான் ஆறுமுகம் சேர்வையின் வாழ்க்கைக் குறிப்புகளை 20 -ம் நூற்றாண்டின் முன் பகுதியில் பெரும்புகழ்பெற்ற அறிஞர்களின் ஆசிரியரும் “வீரசோழியம்“ “தொல்காப்பிய பாயிர விருத்தி“ “சூத்திர விருத்தி“ “இறையனார் களவியல்“ போன்ற நூல்களை மிக அற்புதமான விளக்கங்களுடன் செம்மையாக பதிப்பித்த பேராசிரியர் கா.ர.கோவிந்தராஜ முதலியார் எழுதியுள்ளார்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

அவருடைய அந்தக் குறிப்புகள் சீவக சிந்தாமணி வசனம் பாகம் 1 என்ற நூலின் முன்னுரையாக 9 பக்கங்களில் அமைந்துள்ளது. அந்த நூலை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ள வசதியாக இணைப்பைக் கொடுத்துள்ளேன்.

தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் …

நன்றி : முகநூலில் பொ. வேல்சாமி

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.

குழந்தைகளின் குறும்புகளுக்கு நாம் ஏன் எதிர்ப்பாய் இருக்கின்றோம் ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 04

பாடங்களுக்கு இடையிலான நேரத்தை – எப்படிப் பயன்படுத்துவது?

மது முதல் இடைவேளை பத்து நிமிடங்கள் நீடிக்கும். பின் 30 நிமிடங்கள், 10 நிமிடங்களுக்கு இன்னும் இரண்டு இடைவேளைகள் உண்டு. மொத்தம் 50 நிமிடங்கள்.

பாடங்களுக்கு இடையிலான இடைவேளை சம்பந்தமாக ஆசிரியரியலில் பிரச்சினை எதுவும் இருக்கிறதா? இல்லை, பிரச்சினை எதுவும் கிடையாது. பள்ளி நடைமுறையிலும் இப்படிப்பட்ட பிரச்சினை எதுவும் கிடையாது. பாடவேளைகளுக்கு இடையிலான இச்சிறு இடைவேளைகளை எப்படி ஒழுங்கமைப்பது என்பது பற்றி ஆசிரியர்கள் எந்த ஆசிரியர் ஆலோசனைக் கூட்டத்திலாவது தீவிரமாக விவாதித்ததாக நான் கேள்விப்பட்டதேயில்லை. இந்த இடைவேளைகளின் போது குழந்தைகள் அங்குமிங்கும் முரட்டுத்தனமாக ஓடிக் கை கால்களை உடைத்துக் கொள்ளாமலும், எதையும் பாழ்படுத்தாமலும், சண்டை போடாமலும், ஒருவர் காலை ஒருவர் வாரிவிடாமலும், சிறுவர்கள் சிறுமியரை கலாட்டா செய்யாமலும் பார்த்துக் கொள்ள ஒருவரை ஏற்பாடு செய்வது தவிர வேறெந்த பிரச்சினையும் இதில் இல்லாதது ஒருவேளை இதற்குக் காரணமாக இருக்கலாம்.

பள்ளியின் சார்பாக ஒரு மேற்பார்வையாளர் கையில் சிவப்புப் பட்டையைக் கட்டிக் கொண்டு ஒழுங்கு முறையைக் கவனித்துக் கொள்கிறார். இவரைப் பார்த்ததும், குழந்தைகள் இடைவெளியில் கால்பந்தாட்டம் விளையாடுவதை நிறுத்திப் பேசாமல் செல்கின்றனர். பள்ளி இடைவெளிகளில் விதிமுறைகளை மீறுபவர்கள் வகுப்புப் பொறுப்பாசிரியரிடம், தலைமையாளரிடம் அல்லது பள்ளி இயக்குநரிடம் அனுப்பப்படுவார்கள். குழந்தைகளுக்கு இந்தப் பள்ளி விதிமுறைகள் தெரியும். எனவே, இவற்றை மீறி, பெரியவர்களின் கோபத்தையும் திட்டுக்களையும் பெற அவர்கள் துணிவதில்லை .

பள்ளியில் மிகச் சிறந்த ஒழுங்குமுறையும் கடுமையான கண்டிப்பும் நிலவுவதாகப் பெரியவர்கள் கூறுவார்கள். ஆனால் இவையனைத்தும் குழந்தை வளர்ப்பில் வெறும் சம்பிரதாயங்கள் மட்டுமே. சிவப்பு கைப்பட்டையை உடைய மேற்பார்வையாளர் மட்டும் இல்லாவிடில் குழந்தைகள் தம் சக்திகளை முற்றிலும் வேறுவிதமாக ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்தியிருப்பார்கள் என்பதை மட்டும் இவர்கள் கூற மாட்டார்கள். என்றாலும்கூட கடும் கட்டுப்பாடு நிலவும் போதும், யாருக்கும் தெரியாமல் குறும்புகள் செய்யும் குழந்தைகள் இருக்கத்தான் செய்கின்றனர்.

”ஓ!” என்று கத்தியபடியே ஒரு சிறுமி மேற்பார்வையாளரிடம் ஓடி வருகிறாள். “நீனா பித்ரோவ்னா, குழாயிலிருந்து யாரோ என்னைச் சுட்டார்கள்” என்று தன் கன்னத்தில் விழுந்த, கசங்கிய காகிதத் துண்டைக் காட்டுகிறாள். கன்னம் வலிக்கிறது. மேற்பார்வையாளர் கவனமாக சுற்றும் முற்றும் பார்க்கிறார். சிறுவர் சிறுமியர் அடங்கிய குழு ஒன்று அவரைக் கடந்து செல்கிறது. அப்போது அதே போன்ற கசங்கிய காகிதத் துண்டு நீனா பித்ரோவ்னாவின் இடது கன்னத்தின் மீதே விழுகிறது. அவர் சிறுவர் சிறுமியரை நிறுத்திக் கேட்கிறார்: ”யார் இதைச் செய்தது? யார் எறிந்தது?” யாராவது பதில் சொல்வார்களா என்ன! இக்காரியத்தைச் செய்த குறும்புக்காரச் சிறுவனோ இன்று மட்டுமல்ல, நாளையும் கூட தன் ”வீரத்தைப்” பற்றித் தம்பட்டம் அடித்துக் கொள்வான்.

இடைவேளைகளின்போது பெரிய, சிறிய குழந்தைகள் அனைவருக்கும் வெறுமனே இடைவெளிகளில் நடப்பது மட்டும் போதாது, வேறு ஏதாவது செய்யவும் வேண்டும். குழந்தைகள் தமது உடல் பலத்தையும் மூளையையும் சுவாரசியமாகப் பயன்படுத்தி தம் அறிதல் ஆர்வங்களைப் பூர்த்தி செய்து கொள்ளவல்ல எதுவும் சுற்றிலும் இல்லாவிடில் என்ன செய்வது? ஏதோ முழு ஒழுங்கு நிலவுவதாக பாவனை செய்தபடியே குழந்தைகள் தம் குறும்புகளை இவ்வளவு திறமையாக மூடி மறைப்பதைக் கண்டு கோபம் கொள்ளாதீர்கள். உங்களை நோக்கி எறியப்பட்ட காகிதத் துண்டுகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் யார் இதைச் செய்தது என்று ஒருவரும் சொல்ல மாட்டார்கள்.

குறும்புக்காரக் குழந்தைகள் உற்சாகமானவர்கள்; சோம்பலற்றவர்கள், ஒளிவுமறைவற்றவர்கள், இவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது. பின்னவர்கள் உற்சாகமாக ஓடியாட, தற்காப்பில் ஈடுபட குறும்புக்காரக் குழந்தைகள் உதவுகின்றனர்.

“உணர்வுப் பூர்வமான கட்டுப்பாடு” என்று சொல்ல நாம் விரும்புகின்றோம். இதற்கு என்ன பொருள்? குழந்தைகள், சமூகக் கோரிக்கைகளை முழுமையாகப் புரிந்து கொண்டு தம் சக்தியை அடக்க வேண்டுமா என்ன? அதுவும் அவர்கள் நமது அறிவுரைகளின் மூலம் இதை கிரகிக்கின்றனர் – எது நல்லது? எது தவறானது? குறும்புகள் செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்பதைக் குழந்தைகள் நன்கு உணர்ந்து இதற்காக அஞ்ச வேண்டுமா? இத்தகைய உணர்வுப் “பாலங்கள்” உண்மையிலேயே குழந்தைகளைத் தவிர்க்க இயலாத தோல்விகளிலிருந்து காப்பாற்றுகின்றன. கண்டிப்பான தடைகள் அவசியம் தேவைப்படும் சந்தர்ப்பங்களும் நிச்சயமாக இருக்கின்றன. தேவையானது உணர்வை விட வலிமையானதாக இருந்தால், அமைதியாக இருக்கக் குழந்தையால் முடியாவிடில், குழந்தைக்கு இதில் விருப்பம் இல்லாவிடில், குறும்பு செய்யாமல் இருக்க முடியாவிடில் என்ன செய்வது?

இப்படிப்பட்ட அமைதியான, எல்லாவற்றிலும் சாந்தமான, என் கண்களைப் பார்த்ததும் எதை செய்யக் கூடாதோ அதைச் செய்ய அஞ்சும் குழந்தைகளுடன் கலந்து பழக எனக்கு விருப்பமில்லை. குழந்தைகளின் குறும்புகளும் சேட்டை செய்யும் குழந்தைகளும் இல்லாமல் உண்மையான ஆசிரியரியலை உருவாக்க முடியாது. இவை ஆசிரியரியலின் சிந்தனையை முன்னுக்குத் தள்ளுகின்றன, ஆசிரியர்கள் ஆக்கப் பூர்வமாக சிந்தித்து, புதிய அம்சங்களையும் ஆசிரியரியலின் துணிவையும் வெளிப்படுத்துமாறு செய்கின்றன. சுய உணர்வுள்ள, முதிர்ச்சியடைந்த குழந்தைகளுடன் கலந்து பழகுவது எவ்வளவு சலிப்பைத் தரும் தெரியுமா? நான் முதலில் இப்படிப்பட்ட குழந்தைகளை குறும்பு செய்யுமாறு, அங்குமிங்கும் ஓடித் திரியுமாறு தூண்டி விட்டுப் பின்னர் அவர்களைப் பயிற்றுவிக்கும் வழிகளைத் தேடுவேன்.

படிக்க:
சாதி வெறியை ஊதிவிடும் தேவராட்டம்
பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் : கடுமையான சட்டங்கள் மூலம் தடுத்து விட முடியுமா ?

குழந்தைகளின் குறும்புகளுக்கு நாம் ஏன் எதிர்ப்பாய் இருக்கின்றோம்? பெரியவர்கள் ஏன் இவற்றை ஏதோ குற்றங்களாக, உணர்வுப்பூர்வமான கட்டுப்பாடு மீறப்பட்டதாகப் பார்க்கின்றனர்? குறும்பு என்றால் என்ன, இந்தக் குறும்புக்காரர்கள் யார் என்று நமக்கு நன்றாகத் தெரியாததுதான் இதற்குக் காரணமென எனக்குத் தோன்றுகிறது. குறும்புகள் மற்றும் குறும்புக்காரர்களின் மனநிலை சம்பந்தமான நூல்களை நான் எவ்வளவு விருப்பத்தோடு படிப்பேன் தெரியுமா! ஆனால் இப்படிப்பட்ட நூல்கள் இல்லையே!

குழந்தைகளின் குறும்பு நமது அமைதியைக் குலைக்கிறது, குழந்தை வளர்ப்பில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது, ஆசிரியரியல் வழிகளால் இவற்றைப் பல நேரங்களில் தீர்க்க முடியாது, நாம் தடைகளை, கட்டுப்பாடுகளை நாடுகின்றோம்.

குறும்புக்காரக் குழந்தைகள் உற்சாகமானவர்கள்; சோம்பலற்றவர்கள், ஒளிவுமறைவற்றவர்கள், இவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது. பின்னவர்கள் உற்சாகமாக ஓடியாட, தற்காப்பில் ஈடுபட குறும்புக்காரக் குழந்தைகள் உதவுகின்றனர்.

குறும்புக்காரக் குழந்தைகள் அறிவுக் கூர்மை உடையவர்கள், நுண்ணறிவு வாய்ந்தவர்கள், எந்த ஒரு எதிர்பாரா சந்தர்ப்பத்திலும் இவர்கள் தம் திறமைகளைப் பயன்படுத்தி, அதன் மூலம் நிலவரத்தையும் உறவுகளையும் மறுமதிப்பீடு செய்யும் அவசியத்திற்குப் பெரியவர்களை ஆளாக்குவார்கள்.

குறும்புக்காரக் குழந்தைகளிடம் சுய வளர்ச்சி, சுய இயக்க உணர்வுகள் அதிகமாக இருக்கும்; தம் தனிப்பட்ட திறமைகளின் வளர்ச்சி பற்றிய ஆசிரியர்களின் தவறான கணிப்புகளை இவர்கள் தம்முள்ளேயே ஈடு கட்டிக் கொள்கின்றனர்.

குறும்புக்காரக் குழந்தைகள் நகைச்சுவையுணர்வு மிக்கவர்கள், விளையாட்டுத்தனமற்றதில் இவர்கள் சிரிப்பைப் பார்ப்பார்கள், கவனக் குறைவானவர்களை அசாதாரணமான ஒரு நிலைக்குத் தள்ளி வேடிக்கை பார்ப்பார்கள்; இவர்கள் தமக்கு மட்டுமின்றி, தம்மைச் சுற்றியுள்ளவர்களின் மத்தியில் நகைச்சுவையுணர்வு மிக்கவர்களுக்கும் நல்ல மன நிலையையும் சிரிப்பையும் தருவார்கள்.

குறும்புக்காரக் குழந்தைகள் நன்கு கலந்து பழகக் கூடியவர்கள், ஏனெனில் தம் குறும்புகளில் யாரையெல்லாம் ஈடுபடுத்த முடியுமோ அவர்களுடன் கலந்து பழகும் போது தான் குறும்புகள் பிறக்கின்றன.

குறும்புக்காரக் குழந்தைகள் அறிவுக் கூர்மை உடையவர்கள், நுண்ணறிவு வாய்ந்தவர்கள், எந்த ஒரு எதிர்பாரா சந்தர்ப்பத்திலும் இவர்கள் தம் திறமைகளைப் பயன்படுத்தி, அதன் மூலம் நிலவரத்தையும் உறவுகளையும் மறுமதிப்பீடு செய்யும் அவசியத்திற்குப் பெரியவர்களை ஆளாக்குவார்கள்.

குறும்புக்காரக் குழந்தைகள் செயல் முனைப்பான கற்பனையாளர்கள், இவர்கள் சுற்றியுள்ளவற்றை சுயமாக அறியவும் மாற்றியமைக்கவும் விழைகின்றனர்.

குழந்தைகளின் குறும்புகள்-வாழ்க்கையின் மீது இவர்களுக்குள்ள நேயத்தின் வெளிப்பாடு, மகிழ்ச்சியின் பாலுள்ள நாட்டம், இவர்களுடைய மூளைத் திறமைகள் மற்றும் உடல் பலத்தின் இணைப்பு.

குறும்புக்காரக் குழந்தைகள் உண்மையான குழந்தைகள், இவர்கள் ஆசிரியர்களின் சிந்தனை, ஆசிரியரியலின் ஆராய்ச்சிப் பொருள்.

குறும்புக்காரர்களைத் தண்டிக்கலாம், ஆனால் ஊக்குவிக்க வேண்டியதும் அவசியம்.

எனவே தான் குறும்புக்காரர்களை நான் விரும்புகிறேன். இவர்கள் என்னுடைய ஆசிரியர் திறமையை இடையறாது வளர்க்கின்றனர், சுய வளர்ச்சிக்கு வழிகோலுகின்றனர்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

தமிழகத்தை குலுக்கிய மே தினம் ! செய்தி – படங்கள் ! பாகம் 2

“நிரந்தர தொழிலாளர் முறையை ஒழித்து கட்டும் NEEM – FTE
திட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்! கூலி அடிமை முறையை தீவிரப்படுத்தும் கார்ப்பரேட் காட்டாட்சியை தூக்கியெறிவோம்!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் நடத்தப்பட்ட மே தின நிகழ்வுகளின் தொகுப்பு.

*****

திருவள்ளூர்…

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் 01.05.2019 மேநாளில் கிளை – இணைப்பு சங்கத் தொழிலாளர்களை திரட்டி கொடியேற்றி, ஆலைவாயில் கூட்டங்கள் நடத்தப்பட்டது.

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கொரிய பன்னாட்டு நிறுவனமான தூசன் (DOOSAN) தொழிற்சாலை, நெமிலிச்சேரி அருகில் உள்ள டி.ஐ. மெட்டல் தொழிலாளர் சங்கம் மற்றும் ஆவடியில் உள்ள TPI – IBP பொதுத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றில் பு.ஜ.தொ.மு.வின் மாநிலப் பொருளாளர் மற்றும் அவ்வாலைகளின் சிறப்பு தலைவர் தோழர் பா.விஜயகுமார் சங்கத்தின் கொடியேற்றினார். பின்னர், அங்கு நடைபெற்ற ஆலைவாயில் கூட்டங்களில் மத்திய – மாநில அரசின் தொழிலாளர் விரோத கொள்கையை அம்பலப்படுத்தியும், மேநாள் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தி, அவர்கள் காட்டிய போராட்ட பாதையில் போராட வேண்டும் என உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இதனைத் தொடர்ந்து, சென்னை – மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட – புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஆகிய அமைப்புகள் இணைந்து மேநாள் பேரணி – ஆர்ப்பாட்டத்தை ஆவடி பகுதியில் நடத்தினர்.

நிரந்தர தொழிலாளர் முறையை ஒழித்து கட்டும் NEEM – FTE திட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்! கூலி அடிமை முறையை தீவிரப்படுத்தும் கார்ப்பரேட் காட்டாட்சியை தூக்கியெறிவோம்! என்ற முழக்கத்தின் கீழ் இந்தப் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பேரணி மாலை 4.30 மணியளவில் ஆவடி, மார்க்கெட் பகுதியில் இருந்து தொடங்கிய பேரணிக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் தோழர் ம.சரவணன் தலைமைதாங்கினார். அவர்தனது தலைமை உரையில், இன்றைய அரசியல் சூழலில் தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிமைகள், சட்டங்கள் எல்லாம் கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்காக சட்டப்பூர்வமாக திருத்தப்பட்டு வருகிறது. இதனை முறியடிக்க தொழிலாளி வர்க்கம் ஓரணியில் திரண்டு எதிர்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்தி பேசினார்.

ஆவடி, மார்க்கெட் பகுதியில் இருந்த சிறுகடை மற்றும் தரைக்கடை வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், பேருந்துக்காக காத்திருந்த பயணிகள், குடியிருப்பு பகுதி மக்கள் ஆகியோர் பெருத்த ஆரவாரத்துடன் ஆதரித்தனர். விண்ணதிரும் முழக்கங்களுடன், இசை சமர் குழுவினரின் ஆடலுடன் கூடிய பறையிசையுடன் வந்த பேரணியில் தொழிலாளர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், சகோதர அமைப்பை சேர்ந்த தோழர்கள் என 300 பேருடன் ஆவடி – பூவிருந்தவல்லி சாலை மற்றும் அவுசிங்போர்டு வழியாக, நகராட்சி அலுவலகம் அருகில் முடிவுற்றது.

பேரணியில் போடப்பட்ட அரசியல் முழக்கங்கள் மற்றும் பதாகைகள் மக்கள் மத்தியில் கார்ப்பரேட் காட்டாட்சியை அம்பலப்படுத்தும் வகையில் இருந்தது.

ஆவடி, நகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொருளாளர் தோழர் மு.சரவணன் தலைமை தாங்கினார். தலைமையுரையில் தொழிலாளி வர்க்கத்தின் மீது மோடி அரசு NEEM – FTE என்ற திட்டங்களை புகுத்தி கொத்து குண்டுகளை போட்டு நிரந்தர வேலைமுறையை ஒழிக்க நினைக்கிறது. இதனை தொழிலாளி வர்க்கம் அனுமதிக்க முடியாது, மேதின தியாகிகளின் வீரம் செரிந்த போராட்டப் பாதையில் திரண்டு போராட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னை நகர செயலாளர் தோழர் சாரதி பேசும் போது எப்படி தொழிலாளர் மீதான தாக்குதலை மோடி அரசு செய்து வருகிறதோ? அதேபோல் தான் மாணவர்களின் கல்வி உரிமையை பறிப்பது மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த கல்வித் துறையை கார்ப்பரேட்களுக்கு தாரைவார்க்க முடிவு செய்துள்ளது என்றும், சென்னையில் பல்கலைக் கழகம் திவாலானதாக அறிவிக்கிறது, அரசு பல்கலைக் கழகங்களை தனியாருக்கு விற்றுவிட்டு, தனியார் கல்வி வியாபாரிகள் மூலம் அடிப்படை கல்வி முதல் உயர்கல்வி வரை கடை சரக்காக்கும் வேலையை செய்து வருகிறது மோடி அரசு! இதனை முறியடிக்க தொழிலாளர்கள் – மாணவர்கள் இணைந்து போராட வேண்டிய தேவை உள்ளது என பேசினார்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் முகிலன் மேநாள் உரையாற்றினார். அவர் தனது உரையில், NEEM – FTE திட்டங்களின் மூலம் தொழிலாளர்கள் நிரந்தர வேலைமுறையை முற்றிலும் ஒழித்துக்கட்டும் திட்டம் என்பதையும், 1926 தொழிற்சங்க சட்டம் அமலில் உள்ள நாட்டில் சங்கம் ஆரம்பித்தார்கள் என்ற காரணத்திற்காக 8 மெட்ரோ ரயில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2014- வரை லாபகரமாக இயங்கிய BSNL-யை முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்திற்காக ஒழித்துக்கட்ட முடிவெடுத்துள்ளது மோடி அரசு!

ஆவடி பகுதியில் உள்ள படைஉடை தொழிற்சாலை (OCF) மூட முடிவெடுத்துள்ளனர். ஆனால் நாம் நமது இருசக்கர வாகனத்தில் (DEFENCE) என்று ஸ்டிக்கர் போட்டுக் கொண்டு போகிறோம், நாட்டின் பாதுகாப்பு துறையை சேர்ந்த தொழிலாளர்களுக்கு கூட வேலைக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளனர், இதற்கு எதிராக நாம் ஒன்றினைந்து போராட வேண்டாமா?

இந்த மேநாளில் கார்ப்பரேட் காட்டாட்சியால் பாதிக்கப்பட்ட தொழிலாளர் – விவசாயி – மாணவர் – இளைஞர் – சிறு, குறு தொழில் முனைவோர்- சிறுவணிகர் ஆகிய வர்க்கங்களை இணைத்து போராடுவதே தீர்வு என்றும், தனித்தனியே நடத்தும் போராட்டங்களால் தீர்வு கிடைக்காது என்பதை வலியுறுத்தி உரையாற்றினார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட இனைச் செயலாளர் தோழர் லட்சுமணன் நன்றியுரையாற்றினார். பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் மேநாள் பேரணி – ஆர்ப்பாட்டம் முடிவுற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம்.

*****

ஓசூர்

சூரில் செயல்பட்டுவரும் புரட்சிகர அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக, ஒசூர் ரயில்நிலையம் அருகே எழுச்சிமிகு மே தின ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மே 1 மாலை 5.00 மணிக்கு நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இவ்வமைப்பை சேர்ந்த தோழர் இ.கோ. வெங்கடேசன் தலைமைத் தாங்கினார். விண்ணதிர முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டத்தை துவக்கிவைத்து தனது தலைமை உரையின் வாயிலாக மேதின வரலாறு குறித்து அறிமுகத்தை விளக்கிப்பேசினார்.

அதன்பிறகு, ஒசூர் பகுதியின் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் சங்கர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தருமபுரி மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு, மக்கள் அதிகார அமைப்பின் தருமபுரி மண்டல அமைப்பாளர் தோழர் கோபி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பாகலூர் பகுதி பொறுப்பாளர் தோழர் இரவிச்சந்திரன் நன்றியுரையாற்றினார்.

தோழர் சங்கர் தனது உரையில் காண்ட்ராக்ட், சி. எல், மற்றும் பயிற்சித் தொழிலாளர்களின் அவல நிலைமையை படம்பிடித்துக்காட்டி இதற்கு காரணமான கார்ப்பரேட் கம்பெனிகளின் சூழ்ச்சியையும் இதற்கு துணைநிற்கும் அரசையும் விரிவாக அம்பலப்படுத்திப்பேசினார்.

தோழர் அன்பு தனது உரையில், இந்த சமூகம் இயங்குவதற்கு அடிப்படையாக உள்ள தொழிலாளி வர்க்கத்தை நன்றியோடு நினைவுகூர்ந்து அவர்களின் அவல நிலையை புள்ளிவிவரங்களுடன் விவரித்து அம்பலப்படுத்திப் பேசினார். குறிப்பாக, பொறியியல் பட்டதாரிகள் போன்ற உயர் படிப்பு படித்த முன்னாள் மாணவர்கள் தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களில் காண்ட்ராக்ட், சி.எல் மற்றும் பயிற்சித் தொழிலாளர்களாக பணிபுரிந்தும் உணவகங்களில் எடுபிடி வேலைகளை செய்துகொண்டும் அடிமை நிலையில் வாழ்ந்துவரும் அவலத்தை புள்ளிவிவரங்களோடு அம்பலப்படுத்தி தற்போதைய மாணவ சமூகத்தை எச்சரிக்கை செய்து நாட்டுப்பற்றுக்கொள்ளும்படி அறைகூவி அழைத்துப்பேசினார்.

தோழர் கோபி தனது உரையில், மேதினத்தை ஒரு விழாவாக கொண்டாடுவது என்பது முதலாளிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் ஏற்புடையதாக இருக்கிறது. அதனைத்தான் பரந்துபட்ட தொழிலாளர்களின் எதிரிகள் விரும்புகின்றனர். ஒரு ஆயுதபூஜை நிகழ்வைப்போல நடத்தச்சொல்லி பெரும்பாலான தொழிற்சங்கங்கள் ஆலை நிர்வாகங்களால் நிர்பந்திக்கப்பட்டு அதற்கு தொழிற்சங்கங்கள் பலியாகிப்போய்கிடக்கின்ற இந்த சூழலில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி போன்ற புரட்சிகர தொழிற்சங்கங்கள் போராட்ட நாளாக அறிவித்து தற்போது ஒசூரில் ஆர்ப்பாட்டமாக நடத்தப்படுகின்ற இந்த நிகழ்வை வாழ்த்தி தனது உரையை தொடங்கிப்பேசினார்.

கார்ப்பரேட் முதலாளிகளின் நீம், எஃப்.டி.இ முறையிலான நவீன சுரண்டல் கொள்கை என்பது வெள்ளைக்காரன் ஆட்சியில் தொழிலாளர்களை சுரண்ட கொண்டுவந்த சட்டங்களின் நவீன வடிவ மறுபதிப்பே என்பதை தோலுரித்துப்பேசினார். அதற்கு அடுத்து நமது நாட்டில் நம் கண்ணெதிரே நடந்த வீரம் செறிந்த மாருதி தொழிலாளர்களின் போராட்டம், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தூத்துக்குடி மக்களின் போராட்ட அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டதுடன் அந்த போராட்டங்களின் போது அரசும், கார்ப்பரேட் முதலாளிகளும் எப்படி போராடும் மக்களுக்கு எதிராக கைக்கோர்த்துக்கொண்டிருந்தனர் என்பதை அம்பலப்படுத்திப்பேசினார்.

இந்த நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக உள்ள சில நேர்மையான நீதிபதிகளுக்கே பாதுகாப்பில்லை. கார்ப்பரேட் காவிப்பாசிசம் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, கோடிக்கால் பூதங்களான தொழிலாளர்கள் தனித்தனியே தங்களது கோரிக்கைகளுக்காக மட்டுமே போராடுவது என்ற போக்கை கைவிட்டு. பிற உழைக்கும் அனைத்துப் பிரிவு மக்களிடமும் இணைந்து அந்தப் போராட்டங்களுக்கு தலைமைத்தாங்கி தொடர்ந்துப் போராடினால்தான் தற்போது அச்சுறுத்தலாக உள்ள கார்ப்பரேட் – காவிப் பாசிசத்தை இந்த மண்ணிலிருந்தே துடைத்தொழிக்கமுடியும் வேறுகுறுக்குவழி ஏதுமில்லை என்பதை தீர்வாக முன்வைத்து அந்தவகையில் அமைப்பாக திரண்டெழுவீர் என்றவகையில் அறைகூவி அழைத்துப்பேசினார்.

படிக்க:
தொழிலாளர் பிரச்சினை : சங்கமாகத் திரண்டால் மட்டும் போதுமா ?
தமிழகத்தைக் குலுக்கிய மே தினம் ! | செய்தி – படங்கள் !!

திரளான மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை இறுதிவரை ஆர்வமுடன் பார்த்து ஆதரித்துச்சென்றனர். குறிப்பாக ஆட்டோ தொழிலாளர்கள், பேருந்துப் பயணிகள், சிறுகடை வியாபாரிகள் என பெரும்பாலோர் ஆர்வமுடன் கவனித்துச்சென்றனர்.

நடந்து முடிந்த இவ்வார்ப்பாட்டத்திற்கு முன்னதாக இதனையொட்டி ஆயிரக்கணக்கில் துண்டறிக்கைகள் அச்சிட்டு ஆலைவாயில்களில் விநியோகித்தும், வீடுகளில், தொழிலாளர்களின் குடியிருப்புகளில், தெருமுனைகளில் மற்றும் பேருந்துகளில் பரவலாக விநியோகித்தும் பிரச்சாரம் செய்திருந்தனர். நூற்றுக்கணக்கில் சுவரொட்டிகளை ஒட்டியும் பிரச்சாரம் செய்திருந்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
ஒசூர். தொடர்புக்கு : 97880 11784.

*****

மதுரை

மே நாளை முன்னிட்டு மதுரையில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக பேரணி – ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பேரணி – ஆர்ப்பாட்ட நிகழ்வுக்கு மதுரை மாவட்ட ம.க.இ.க அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் தலைமைதாங்கினார். பேரணியை மக்கள் அதிகாரம் அமைப்பின் மதுரை மண்டல ஒருங்கிணப்பாளர் தோழர் குருசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.

மதுரை ஒத்தக்கடைப் பகுதியில் தொடங்கி நடந்த இப்பேரணி நரசிம்மன் சாலையை வந்தடைந்ததும், ஆர்ப்பாட்டமாக நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பு.மா.இ.மு தோழர் சினேகா, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் அமைப்பின் தோழர் லயனல் அந்தோனி ராஜ் மற்றும் சிவகங்கை பகுதி மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் நாகராஜ் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள், தோழர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை.

சாதி வெறியை ஊதிவிடும் தேவராட்டம்

ச்சம் தரும் அளவுக்கு தமிழக இளைஞர்களிடையே வளர்ந்து நிற்கிறது சாதி வெறி. குறிப்பாக பதின்ம வயது இளைஞர்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் தெறிக்கவிடும் ரத்தமும், வீசியெறியும் அரிவாள்களும் நம்மை பயம்கொள்ள வைக்கின்றன.

பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முந்தைய கிராமத்தின் சாதி அடர்த்தி, இப்போது பன்மடங்கு கெட்டிப்பட்டிருக்கிறது. குறிப்பாக இளைஞர்களிடையே சாதியை வெளிப்படுத்திக்கொள்வதில் இருந்த வெட்கமும் கூச்சமும் விடைபெற்று, அது ஒரு பெருமிதம் தரும் நடவடிக்கையாக உருமாறிக் கொண்டிருக்கிறது. முளைக்காத மீசையை தடவி விட்டுக்கொண்டு இல்லாத எதிரிக்கு சவால் விடுகிறார்கள். தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், திருச்சி, நாகப்பட்டினம் பகுதிகளில் இதன் நேரடி சாட்சிகளைக் காண முடியும்.

டிக்-டாக் செயலிகளில் சாதிவெறி பேசும் இளைஞர்கள்.

அஜித் பிறந்த நாளாக இருந்தாலும், அக்கா மகள் பூப்பு நீராட்டு விழாவாக இருந்தாலும் தத்தமது சாதிப் பெயரோடு முச்சந்தியில் ப்ளெக்ஸ் வைக்கிறார்கள். ஒரு சாதிக்காரன் இப்படி ஃப்ளெக்ஸ் வைத்தால், ‘அப்ப நாம மட்டும் என்ன தக்காளி தொக்கா?’ என்று இன்னொரு சாதிக்கார சிறுவர்களும் ப்ளெக்ஸ் வைக்கிறார்கள். நடு ரோட்டில் போஸ்டர் அடித்து தங்கள் பிள்ளைகள் சாதியை அறிவித்துக்கொள்வது குறித்து இந்த சிறுவர்கள் / இளைஞர்களின் பெற்றோர்களுக்கு எந்த தடையும் இருப்பதில்லை. எப்படி இருக்கும்? அவர்களுக்கு பணம் கொடுப்பதே இந்தப் பெற்றோர்கள்தானே? மேலும், பல கிராமங்களில் சாதி உணர்வுடன் ஒன்றிணைவதை ஒரு சமூகப் பங்களிப்பு என்ற வகையில் வியாக்கியானப்படுத்துகின்றனர். ‘எல்லாரும் சொந்த வேலையைப் பார்த்துக்கிட்டு போனா ஊரை பார்க்கிறது யார்?’ என்ற கேள்வியில் வெளிப்படும் ‘ஊர்’ என்பது எல்லோரையும் உள்ளடக்கியது அல்ல.

கிராமத்து இளைஞர்கள், கல்வியின் வழியே வேலைவாய்ப்பைப் பெற்று வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் பணிபுரிகின்றனர். இவர்கள் வாட்ஸ் அப் குழுக்களின் வழியே ஒன்றிணைந்து தத்தமது கிராமங்களுக்கு நற்பணிகள் செய்ய முயற்சிக்கின்றனர். அந்த கிராமத்து பள்ளிக்கூடத்தில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசளிப்பது, சிலருக்கு கல்லூரி கல்விக் கட்டணம் செலுத்துவது என்பதாக இது இருக்கிறது. இதற்காக கைக்காசை செலவழிக்கின்றனர் என்றாலும், பெரும்பாலும் இந்த உதவியின் இலக்கு அவர்களின் சொந்த சாதியினர் மட்டுமே. உண்மையிலேயே அதிகபட்ச உதவி தேவைப்படக்கூடிய ஒடுக்கப்பட்ட சாதி மாணவர்கள் இவர்களின் பயனாளிகள் பட்டியலில் இருப்பதில்லை. அப்படியே ஓரிரு இடங்களில் வழங்கினாலும் கூட, அதை தங்களின் பெருந்தன்மைப் பட்டியலில் மறக்காமல் இணைத்துக்கொள்கின்றனர். இத்தகையோர் செய்யக்கூடிய நற்பணி என ஏதேனும் இருக்குமானால், அது சாதிவெறியின் திரட்சியைத் தடுப்பதுதான். அது எங்கும் நிகழ்வதில்லை.

படிக்க:
♦ சுந்தரபாண்டியன்: உசிலம்பட்டி வழக்கா, தேவர் சாதி அழுக்கா?
♦ தமிழகம்: ஆதிக்க சாதிவெறித்தனத்தின் புதிய பரிமாணங்கள்!

மதுரை, இராமநாதபுரம் பகுதி பள்ளிக்கூடங்களில் சில ஆண்டுகளுக்கு முன்பு, சில குறிப்பிட்ட சாதிகளை சேர்ந்த மாணவர்கள், ஆளுக்கு ஒரு வண்ணத்தில் கயிறு கட்டிக்கொள்ளத் தொடங்கினார்கள். கயிறைப் பார்த்தே சாதியைக் கண்டுபிடித்துவிடும் அதிநவீனத் தொழில்நுட்பம். இந்த சாதிக் கயிறு இப்போது தஞ்சாவூர், நாகை மாவட்டங்கள் வரையிலும் வந்துவிட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்புவரை, பசும்பொன் முத்துராமலிங்கத்தின் புகைப்படங்களைக் கூட திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் காண முடியாது. இந்தப் பெயரே அங்குள்ளவர்களுக்கு பரிச்சயம் இல்லை. ஆனால் இன்று ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி தென்படுகிறது. தங்களை மாபெரும் ஆண்ட சாதியின் அங்கத்தினர்களாக நிறுவிக்கொள்ள துடிக்கின்றனர்.

எப்படி நிறுவுவது? அதற்குத்தான் இந்து மதம் ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறதே… உனக்கும் கீழுள்ள சாதியை தூக்கிப்போட்டு மிதி. அப்படி ஒடுக்குவதை பரம்பரை அனுபவ பாத்தியதை வழியிலான மரபுரிமையாக பெற்றுள்ள இவர்கள், அதை ஓர் அனிச்சை செயலாகவே மேற்கொள்கின்றனர். ஓர் ஊரில் இருக்கும் பத்து சாதிகளில் தன் சாதி மட்டும் எப்படி மேலானது என்று நிறுவுவதற்கு, போலியான ஆண்ட சாதி கட்டுக்கதைகளைத் தவிர இவர்களுக்கு எதுவுமில்லை. இதனால், ஒடுக்கப்பட்ட மக்களை யார் அதிகம் துன்புறுத்துவது என்பதன் வழியே யார் பெரிய சாதி என்று காட்டிக்கொள்கின்றனர்.

இவர்களுக்கு ஓர் அண்மைக்கால வெற்றிகரமான முன்மாதிரியாக இருப்பவர் மருத்துவர் ராமதாஸ். நாய்க்கன்கொட்டாய் வன்முறையை முன்வைத்து பா.ம.க. சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டாலும் கூட அது சமூக யதார்த்தத்தில் எதிர்மறை முன்னுதாரணத்தை உருவாக்கியிருக்கிறது. ’வன்னியரை பாரு… எப்படி கெத்தா இருக்கான், நம்மளும் அதேபோல இருக்கணும்’ என்று இதை ஒரு peer pressure-ஆக, எதிர் நிலையில் இருந்து உள்வாங்கிக்கொண்டு தலித் ஒடுக்குமுறையில் தீவிரம் செலுத்துகின்றனர். பொன்னமராவதி ஆடியோவும், பொன்பரப்பி தாக்குதலும் ஊடக கவனம் பெற்றதால் வெளியில் தெரிகின்றன. ஆனால், இத்தகைய எண்ணற்ற ஒடுக்குமுறைத் தாக்குதல்கள் மிக அதிகமாக தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேற்பரப்பில் வெளிப்படுவதை விட உள்ளே நிலவும் கொந்தளிப்பு அதிகம்.

படிக்க:
தொழிலாளர் பிரச்சினை : சங்கமாகத் திரண்டால் மட்டும் போதுமா ?
தமிழகத்தைக் குலுக்கிய மே தினம் ! | செய்தி – படங்கள் !!

கடந்த 20 ஆண்டுகளாக விவசாயம் என்பது முற்றிலும் லாபமற்ற, நிச்சயமற்ற தொழிலாக மாறிவிட்டது. அதை நம்பியிருந்த தொழிலாளர்கள் நகர்ப்புறம் சார்ந்த வெவ்வேறு உதிரித் தொழில்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். கூடுதலாக, படிப்பின் வழியே பெற்றுள்ள கணிசமான வேலைவாய்ப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த, கண்களால் காணத்தக்க பொருளாதார மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இதே சமகாலத்தில், மேல் உதட்டில் முளைத்த நான்கு மயிரைத் தடவிக்கொண்டு ஊர்ச் சாவடியில் சாதிப் பெருமை பேசிக்கொண்டிருந்தவர்களின் பெருமிதத்துக்கு அடிக் கட்டுமானமாக இருந்த விவசாயம் கண்ணெதிரே சரிந்தது. மிகக் குறைந்த நிலம் இருப்பினும் அல்லது நிலமே இல்லை எனினும் அவர்களிடம் இழப்பதற்கு சாதிப் பெருமிதம் இருந்தது. கோவணத்துக்கு வழியின்றி அம்மணமாக நின்றாலும் சாதியை எப்படி விட முடியும்?

தன்னை சார்ந்திருக்க வேண்டிய நிலையில் இருந்து ஒரு ஒடுக்கப்பட்டவன் விலகிச் செல்கிறான் என்ற யதார்த்தம் இவர்களின் மனதைக் குடைகிறது. கல்வி, வேலைவாய்ப்பின் வழியே ஓர் ஒடுக்கப்பட்டவன் பெரும் வசதிகள் இவர்களின் கண்களை உறுத்துகிறது; வயிறு எரியச் செய்கிறது. அதனால்தான் பெரும்பான்மையான தாக்குதல்களில், தலித்களின் வீடுகளும், வண்டி வாகனங்களும், பொருட்களும் சேதப்படுத்தப்படுகின்றன. அதன் வழியே இவர்கள் குரூரமான திருப்தி அடைகின்றனர். ஏதேனும் ஒரு கிராமத்து தலித் தெருவின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதன் ripple effect அந்த வட்டாரம் முழுவதும் இரு தரப்பிலும் எதிரொலிக்கிறது. அதாவது ஒடுக்கும் தரப்பு அதில் இருந்து உற்சாகம் பெறுகிறது. ஒடுக்கப்படும் தரப்பு, மேலும் அச்சம் கொண்டு ஒடுங்கிப்போகிறது.

படிக்க:
♦ ஷேக்கினா : கத்தோலிக்க திருச்சபை லீலைகளை மறைக்கும் திரைச்சீலை !
♦ பசும்பொன் தேவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

இந்தப் பின்னணியில் ’தேவராட்டம்’ போன்ற திரைப்படங்கள் மிக பாரதூரமான பாதிப்பை சமூக தளத்தில் ஏற்படுத்துகின்றன. தன் முன்னிருக்கும் சமூக- பொருளாதார சிக்கலுக்கான காரணத்தை கண்டறிந்து தீர்க்க வழி தெரியாத இளைஞர்கள், சாதியிடம் சரணடைகின்றனர். அவர்களின் கைகளில் இத்தகைய திரைப்படங்கள் ஒரு அரிவாளை போல கொடுக்கப்படுகிறது. பேசலாமா, கூடாதா என்ற தயக்கத்தில் இருப்பவனை இது பேச வைக்கிறது. திட்டு, திட்டாக இருக்கும் சாதி உணர்ச்சியை திரட்டித் தருகிறது. அவன் இந்தத் திரைப்படத்தை வைத்துக்கொண்டு இன்னும் பத்து பேரை வம்பிழுப்பான். இன்னும் பத்து பேருக்கு சவால் விட்டு டிக்டாக் வீடியோ போடுவான். எந்த ஊரிலாவது நாலு பேர் வெட்டிக்கொண்டு சாவார்கள். இயக்குனருக்கு அதைப்பற்றி என்ன கவலை? அவர் மயிராட்டம், மட்டையாட்டம் என்று அடுத்த ஆட்டத்தை எடுக்க கிளம்பிவிடுவார்.

இதுபோன்ற அருவருப்பான சாதிவெறி தலைப்புகளுக்கு சென்ஸார் போர்டு எப்படி அந்த காலத்தில் இருந்து இப்போது வரை அனுமதி தருகிறது? இதேபோல ஒவ்வொரு சாதியின் பெயரோடும் திரைப்படங்கள் உருவாகி வந்தால், அது உருவாக்கும் பாதிப்பு இன்னும் ஒரு நூற்றாண்டுக்கேனும் தொடரக்கூடும். ஒரு தலித் குடியிருப்பை அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்தால் அதன் பொருள் என்ன? அவர்கள் இரு தலைமுறைகளாக உழைத்து சேர்த்த செல்வம் கரிக்கட்டையாகிவிட்டது என்று பொருள். தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு இருந்ததைப் போல, சாதிப் பெயரோடு தலைப்பிட்டால் அப்படத்துக்கு தடை விதிக்கப்பட வேண்டும்.

நன்றி :
முகநூலில் பாரதி தம்பி

Trust WHO ஆவணப்படம் : உலக சுகாதார நிறுவனத்தின் மறுபக்கம் !

0

லக சுகாதார நிறுவனத்தின் நடவடிக்கைகளின் பின்னால் மறைந்துள்ள நோக்கங்களையும், அதனைக் கட்டுப்படுத்தும் உண்மையான சக்திகளையும் குறித்ததொரு புலனாய்வு ஆவணப்படம்.

(இந்த ஆவணப்படம் இணையத்தில் கிடைக்கப் பெறுவதில்லை)

உலக சுகாதார நிறுவனம், கடந்த 1948-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. எங்கும் எல்லோருக்கும் சுகாதாரமான எதிர்காலம் கட்டமைக்கப்படவேண்டும் என்ற இலக்கோடு உருவாக்கப்பட்டது இந்நிறுவனம்.

சுவிச்சர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனிவா-வில் தனது தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தில் தற்போது சுமார் 7000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். உலகம் முழுவதிலும் 6 மண்டல அலுவலகங்களையும் 150 நாடுகளில் அலுவலகங்களையும், கொண்டுள்ளது இவ்வமைப்பு. மேலும், ஐக்கிய நாடுகள் சபைக்கு ஏற்றவகையிலான ஒழுங்குமுறை விதிகளை ஏற்றுக் கொண்ட 194 -க்கும் மேற்பட்ட நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.

படிக்க:
♦ பில்கேட்ஸ் பவுண்டேஷன் : அதிர்ச்சியூட்டும் உண்மைகள் !
♦ SICKO – மைக்கேல் மூரின் ஆவணப்படம்

புகைப்பிடித்தலின் பாதிப்பாக இருக்கட்டும், பன்றிக் காய்ச்சல் பாதிப்பாக இருக்கட்டும் அல்லது ஒரு அணு விபத்தாக இருக்கட்டும், நாம் அறிவுரைக்காகவோ அல்லது ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையைத் தீர்க்கவோ சார்ந்திருக்கும் ஒரே அமைப்பு உலக சுகாதார நிறுவனம் மட்டும்தான். ஆனால், அது நம்பத்தகுந்ததாக இருக்கிறதா? உலக சுகாதார நிறுவனம் தனது பரிந்துரைகளை எவ்வாறு முடிவெடுக்கிறது? அந்தப் பரிந்துரைகள் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தவை?

உலகளாவிய சுகாதார விவகாரங்களை பாரபட்சமின்றி கையாளும் அதன் திறனின் மீதான நம்பிக்கை, உலக சுகாதார நிறுவனத்தின் தொடக்க காலங்களில் இருந்ததைப் போல இப்போது உறுதியாக இல்லை. இந்நிறுவனத்திற்கான நிதி மற்றும் அதில் பங்களிப்பு செலுத்தும், தனிப்பட்டவர்களின் ஆதிக்கம் குறித்த கவலையும், கடந்த 1950-களிலிருந்தே இருந்து வருகிறது.

ஆவணப்படத்தின் முன்னோட்டம் (ட்ரெய்லர்)

இக்காலகட்டங்களில் எவ்வித செயல்பாடுகளும் இல்லாத சில ஆண்டுகளுக்குப் பின்னர், புகையிலை தொழில்துறையின் முக்கிய நிறுவனங்களுடனான இந்நிறுவனத்தின் உறவு வெளிச்சத்துக்கு வந்தது.

“புகையிலை தொழில்துறையினர், சில நிறுவனங்களை உருவாக்கி, அதில் தமது நிலைப்பாட்டை முன் வைக்கக் கூடிய அறிவியலாளர்களை பணிக்கு அமர்த்தினர். மேலும் தமது பெயர் எங்கும் வெளிவராதபடிக்கு அவர்கள் பார்த்துக் கொண்டனர். அந்த நிறுவனங்கள் உண்மையில் புகையிலை தொழில்துறையின் நலனை பிரதிநிதித்துவப் படுத்துகின்றனவோ என நீங்கள் சந்தேகிக்கக் கூடாது என்பதற்காகவே அவர்கள் தங்கள் பெயர் வெளியே வராதபடி செய்தனர்.” என்கிறார் ‘சுவிச்சர்லாந்தின் சுகாதாரம்’ என்ற அமைப்பின் முன்னாள் செயலாளர் தாமஸ் செல்ட்னர்.

இந்த நிறுவனங்களில் இருக்கும் அறிவியலாளர்களும், முக்கியப் புள்ளிகளும், பெரும் புகையிலை ஜாம்பவான்களுடனும், உலக சுகாதார நிறுவனத்தினுடனும் ஒரே சமயத்தில் தொடர்பை வைத்துள்ளனர். இதற்கு ஒரு உதாரணத்தையும் பார்க்கலாம்.

புகையிலை (எதிர்ப்பு) இயக்கம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசகராக பணியாற்றிய விச(முறி)வியல்துறை நிபுணர் ஒருவர், பன்னாட்டு புகையிலை மற்றும் சிகரெட் தயாரிப்பு நிறுவனமான பிலிப் மோரிஸ் நிறுவனத்தால் நிதி பங்களிப்பு செய்யப்படும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது பலதரப்பட்ட தொடர்புகள் அம்பலமான பின்னும், அவர் உலக சுகாதார நிறுவனத்தில் ஆலோசகராகத் தொடர்ந்தார்.

அதன் பின்னரும் இதுபோன்ற நிறுவனங்கள், தங்களது திட்டமிட்ட நலனுக்காக உலக சுகாதார நிறுவனத்துடன் இயற்கை நியதிக்கு எதிரான உறவுகளைக் கொண்டிருந்த பல்வேறு தருணங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல்களின் உச்சத்தில்தான் நிகழ்ந்திருக்கின்றன.

முழு ஆவணப்படத்தை பணம் செலுத்திப் பார்க்க : TrustWHO

இதுபோன்ற தொடர்புகளுல் ஒன்றுதான், மருந்து தயாரிப்பு நிறுவனங்களான க்ளாக்சோ, நோவார்டிஸ் ஆகிய நிறுவனங்கள், உலக சுகாதார நிறுவனம், பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட நாடுகள் ஆகிய முத்தரப்பிற்கும் இடையிலான தொடர்பு. இந்நாடுகள் நோவார்ட்டிஸ், க்ளாக்சோ ஆகிய நிறுவனங்களில் இருந்து பன்றிக் காய்ச்சல் மருந்துகளைப் பெறுவதற்குத்தான் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தன.

கடந்த 2009-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தொற்று அபாய எச்சரிக்கைதான், இத்தகைய ஒப்பந்தங்கள் போடப்படுவதற்கான தூண்டுதல் புள்ளியாக இருந்தது.

அந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதற்கு அடுத்த முதல் மூன்றுமாத காலத்தில், பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய மருந்து நிறுவனம், வருடாந்திர கூடுதல் லாபமாக 1.95 பில்லியன் டாலரை ஈட்டியது. ஆனால் பன்றிக் காய்ச்சல், அதற்குக் கொடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கையின் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஜெர்மனியில் மொத்தம் 258 பேர் இந்தக் காய்ச்சலுக்கு பலியாகினர். இது சாதாரணக் காய்ச்சலால் ஏற்படும் பலியைவிட வெகு அதிகமாக இல்லை.

உலக சுகாதார நிறுவனம், பன்றிக் காய்ச்சலுக்காக அதீத முன்னெச்சரிக்கையாக இருந்து, சுமார் 18 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கியதாக பழிசுமத்தப்பட்டது. “பன்றிக்காய்ச்சல் பரவும் சமயத்தில், நான் உலக சுகாதார மையத்தின் பொது சுகாதாரத் துறை, மருந்து மற்றும் அறிவுசார் சொத்துடைமைப் பிரிவின் பொதுச் செயலாளராக இருந்தேன். அங்கிருக்கும் யாரும் பன்றிக் காய்ச்சல் குறித்து அச்சப்படவில்லை” என்கிறார் ஜெர்மன் வெலஸ்க்யஸ். இவர் தற்போது பசுமை பருவநிலை நிதியம் எனும் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

“எனக்குத் தெரிந்து உலக சுகாதார நிறுவனத்தில், அதன் பொது இயக்குனர் உள்ளிட்டு  அங்கு பணியாற்றும் யாரும் பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு ஊசி போட்டுக் கொண்டதில்லை. இது குறித்து அதன் பொது இயக்குனரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, தனக்கு நேரமில்லை என்றும், பிறிதொரு நேரத்தில் அந்த தடுப்பு மருந்தை போட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார் அந்தப் பெண்மணி.” என்கிறார் வெலஸ்க்யஸ்

ஐரோப்பிய கவுன்சிலின் முன்னாள் பிரதிநிதி வோல்ஃப்கேங் வோடார்க், இத்தகைய உறுதியற்ற மற்றும் உண்மை மறைக்கப்பட்ட சூழ்நிலைமைகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்கிறார். உலக சுகாதார நிறுவனத்தினர், நிதி திரட்டலுக்குக் கைமாறாக குறிப்பான நிலைமைகளின் யதார்த்தத்திற்கு அடிக்கடி பாராமுகமாய் இருந்து விடுகின்றனர் என்கிறார்.

“உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் இவ்விவகாரங்கள் குறித்து எதுவும் அறியாதவர்களாக இருக்கின்றனர். அவர்கள் அறிவியலாளர்களைத்தான் சார்ந்திருக்க வேண்டும். அனைத்து அறிவியலாளர்களும் பல்வேறு நாடுகளாலும், உலக சுகாதார நிறுவனத்திற்கு நிதி அளிக்கும் அமைப்புகளாலும் நியமிக்கப்படுபவர்களே. அவர்களில் பெரும்பாலானவர்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆதாயம் தரும் முடிவுகளையும், அவர்களுக்கு ஆதரவான ஆலோசனைகளையுமே வழங்கிவந்தனர்” என்கிறார் வோடார்க்.

படிக்க:
♦ எபோலா வைரசால் வேட்டையாடப்படும் ஆப்ரிக்கா !
♦ பன்றிக் காய்ச்சல்: முதலாளிகளின் பயங்கரவாதத்தை முகமூடிகள் தடுக்குமா?

பல ஆண்டுகளாக, உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகள் சபை, குறிப்பான வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு மத்தியிலான உறவில் இது போன்ற நிலைமைகளே வளர்ந்து வருகின்றன. செர்னோபில் பேரழிவு உட்பட நடக்கக்கூடாத, மோசமான சூழ்நிலைமைகளிலும் இத்தகைய போக்கு வளர்ந்துள்ளது.

அணு உலை வெடிப்பின் காரணமாகவும், அதற்குப் பிந்தைய விளைவுகளின் காரணமாகவும் நேரடியாக ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கையைக் குறைத்ததாக உலக சுகாதார நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது. சர்வதேச அணுசக்தி முகமையுடன் இந்நிறுவனம் நெருக்கமாகப் பணியாற்றி வந்ததும், அப்போது உறுதியாகத் தெரிந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் குடையின் கீழ் “அமைதிக்கான அணுக்கள்” முகமை என்றுதான் முதன்முதலில் சர்வதேச அணுசக்தி முகமை உறுவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு நிறுவனங்களும், – ஒன்று உலக சுகாதாரத்திற்காகவும், மற்றொன்று ‘பாதுகாப்பான’ அணு சக்தி பயன்பாட்டிற்காகவும் என – ஒட்டுமொத்தமாக இரு வேறு நோக்கங்களைக் கொண்டதாக இருக்கும் அதே வேளையில், செர்னோபில்லில் மட்டுமல்லாது, புகுஷிமாவிலும் அதனால் ஏற்பட்ட இழப்பின் அளவு குறைவாகக் காட்டியது உலக சுகாதார நிறுவனம்.

உலக சுகாதார நிறுவனத்தினுள் எவ்வாறு தொழிலக லாபிக்கள் உள் நுழைகின்றனர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவது மட்டுமல்லாமல், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பேணிக் காக்க இந்நிறுவனத்தை நம்ப முடியுமா ? என்ற கேள்வியையும் எழுப்புகிறது இந்த ஆவணப்படம்.


தமிழாக்கம் : நந்தன்
நன்றி : அல்ஜசீரா 

உலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் !

0
துருக்கி தொழிலாளர் கட்சி உறுப்பினர்கள், அதிபர் எர்டோகன் மேற்கொண்டு வரும் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து போராட்டம் நடத்துகின்றனர்.

பேறு காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு, குறைந்தபட்ச கூலி உயர்வு மற்றும் பணிச்சுமை குறைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே தினத்தன்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற போராட்டங்களின் தொகுப்பு ..

உலகெங்கும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கி மே தினம் என்றழைக்கப்படும் அகில உலகத் தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் நாளில் போராட்டங்கள், பேரணி என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

ஹாங்காங் நகரப் பேருந்து ஓட்டுனர்களும், குடும்பப் பணிப் பெண்களும் வாரம் ஒன்றுக்கு 44 மணி நேர வேலை உத்திரவாதத்தை வலியுறுத்தி பேரணி ஒன்றை நடத்தினர். வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் பேறு காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு மற்றும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பிலிப்பைன்ஸ் தொழிலாளர்கள் குறைந்த பட்ச ஊதிய உயர்வை வலியுறுத்தி பேரணி நடத்தினர்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : மே தின வரலாறு !
♦ ஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள் | கலையரசன்

இவற்றில் சில அமைதியாகவும், சில வன்முறையிலும் முடிந்தன. துருக்கி, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் கலவரத் தடுப்பு போலீசார் போராட்டக்காரர்களுடன் மோதலில் ஈடுபட்டு, நூற்றுக்கணக்கானவர்களைக் கைது செய்துள்ளனர்.

இன்று நாம் அனுபவிக்கும் சலுகைகளான எட்டு மணிநேர வேலை, ஓய்வு, விடுமுறை போன்றவை, நூறு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களின் விளைவுகள் என்பது பலருக்குத் தெரியாது. சிக்காகோ நகரில், இரத்தம் சிந்திப் போராடிய தொழிலாளர்கள் தங்களது உரிமைகளைப் பெற்ற நாள்தான் மே தினம்.

சிக்காக்கோ நகரில், ஹே மார்க்கெட் சதுக்கத்தில் கூடிய (May 4, 1886) அமெரிக்க தொழிலாளர்கள், எட்டு மணி நேர வேலை வேண்டுமென போராடினார்கள். அன்றைய நாட்களில், தொழிலாளர்கள் தினசரி பதினைந்து மணிநேரம் வேலை செய்வது சர்வசாதாரணமானது.

எட்டு மணிநேர வேலை செய்யும் உரிமை கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், சமாதானக் கொடியான வெள்ளைக் கொடி ஏந்திச் சென்றார்கள். அன்று நடந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பல தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். குண்டடிபட்ட தொழிலாளர்களின் உடலில் இருந்து வடிந்தோடிய இரத்தம், வெள்ளைக் கொடியை சிவப்பாக்கியது. அன்றிலிருந்து, செங்கொடியானது உலகம் முழுவதும் வாழும் உழைக்கும் மக்களின் கொடியானது. மே 1, உலகத் தொழிலாளர்களின் தினமாக பிரகடனம் செய்யப்பட்டது.

தைவான் தலைநகர் தாய்பே-யில் ’அதிக விடுமுறை நாட்களும், சமூகப் பாதுகாப்பையும் உறுதி செய்’ என்ற முழக்கத்துடன் மே தினத்தில் போராடும் தொழிலாளர்கள்

கிர்கிஸ்தானிய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் தோழர்கள் லெனின், ஸ்டாலின் ஆகியோரின் உருவப்படங்களை ஏந்தி முழுக்கமிட்டபடி ஊர்வலம் செல்கின்றனர்

இத்தாலியின் தூரின் நகரத் தெருக்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உணவு விநியோக வாகன ஓட்டுனர்கள். ”ஆர்டருக்கான கமிசன் என்பதை மாற்றி, குறைந்தபட்ச மணிநேர ஊதியத்தை உத்திரவாதப்படுத்து” என்ற முழக்கத்துடன் போராடியவர்களைத் தடியடி நடத்திக் கலைக்கும் போலீசு

வங்கதேச பெண் ஆயத்த ஆடை தொழிலாளர்களின் மே தினப் போராட்டம்.  “சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு கொடு, பெண் தொழிலாளர்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்திடு” என்று முழக்கமிடும் பெண்கள்

பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரில் போலீசின் கண்ணீர்ப் புகை குண்டு தாக்குதலை எதிர்கொள்ளும் விதமாக கண்ணாடியும் முகமூடியும் அணிந்து போராடும் தொழிலாளர்கள். பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கொண்டுவந்துள்ள தொழிலாளருக்கெதிரான திட்டங்களைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கத்தில் அமைதிப்பேரணியில் ஈடுபட்ட தொழிற்சங்க உறுப்பினர்கள். அரசுக்கெதிராக முழக்கமெழுப்பிய நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்

சம்பள உயர்வு கேட்டு ஊர்வலம் நடத்தும் இந்தோனேசியத் தொழிலாளி வர்க்கத்தை, முன்னேறிச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி வைத்துள்ள போலீசு

பிரெஞ்சு நாட்டு மஞ்சள் ஆடைப் போராட்டக்குழுவினர் தலைநகர் பாரீசில் உள்ள தடுப்பரண் ஒன்றை எரித்துள்ளனர்.  அந்நாட்டு அரசுக்கெதிராக கடந்த பல மாதங்களாகவே தீவிரப் போராட்டத்தில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

துருக்கி தொழிலாளர் கட்சி உறுப்பினர்கள், அதிபர் எர்டோகன் மேற்கொண்டு வரும் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து போராட்டம் நடத்துகின்றனர்.

அல்ஜீரியத் தலைநகரில் அரசுக்கெதிரான முழுக்கங்களை எழுப்பும் தொழிலாளி வர்க்கம். ஆசிரியர்கள், சுரங்கப் பணியாளர்கள் மற்றும் ஆலைத் தொழிலாளர்கள் ஒன்றாகச் சேர்ந்து வேலையின்மையை ஒழித்து மக்களை வறுமை நிலையிலிருந்து மீட்க வேண்டும் என்று போராடுகின்றனர்.

நாங்கள் அடிமைகள் அல்ல; தொழிலாளர்கள் என ஹாங்காங்-கில் பதாகைகளை ஏந்தி நிற்கும் தொழிலாளி வர்க்கம்

கட்டுமானத் துறையில் நிலவிவரும் கடும்போக்கைக் கண்டித்தும், தற்காலிக ஊழியர்களுக்கும் சமவிகித ஊதியம் வேண்டும் என்றும் சியோல் நகரத்தில் போராடும் தென்கொரிய தொழிலாளி வர்க்கம்

பிலிப்பைன்ஸ் அதிபரின் கொடும்பாவியை எரிக்கும் தொழிலாளி. குறைந்தபட்ச ஊதிய உயர்வு அளிக்கக் கோரியும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு தக்க மரியாதை தரப்பட  வேண்டுமென்பதும் இத்தொழிலாளர்களின் மேதினக் கோரிக்கை

மே தினத்தன்று பாலஸ்தீனிய நகரம் காசாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராகப் பேரணி நடத்திப் போராடும் மக்கள். அமெரிக்காவால் அளிக்கப்பட்டு வந்த நிவாரண நிதி, டிரம்ப்பின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டால் இரத்து செய்யப்பட்டுவிட்டதைத் தொடர்ந்து அங்கு பணியாற்றி வந்த ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவின் பொருளாதார மந்தநிலைக்கு எதிர்வினையாகவும், சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் நைஜீரிய தொழிலாளர்கள் நடத்திய பேரணி…

இலண்டன் மே தினப் பேரணியில்  கலந்து கொண்ட ஒரு பெண், வண்ணப் புகையை வெளிப்படுத்தி தனது வர்க்க ஒற்றுமையை பறைசாற்றுகிறார்.


தமிழாக்கம் : வரதன்
நன்றி : vox

 

 

 


இதையும் பாருங்க …