மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் புத்தளம் சேரக்குழி பிரதேசத்தில் கொழும்பு குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக, புத்தளம் பிரதேச மக்கள் பெப் 13,14,15-ம் திகதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் சில மர்ம கொள்கலன்கள் குப்பை போடப்படுவதற்காக கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடத்திற்கு வந்திருக்கிறது.
கொழும்பு குப்பைகள் மட்டுமல்லாமல், சிங்கப்பூருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி சிங்கப்பூர் உட்பட இன்னும் 62 நாடுகளின் மருத்துவ மற்றும் இலத்திரனிய கழிவுகளை புத்தளம் களப்பிற்கு 200 M தூரத்தில் களஞ்சியப்படுத்த இருப்பதாக பிரதேசவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
புத்தளத்தைக் காப்போம் – இலங்கையில் தொடரும் போராட்டங்கள் !
கட்டுமானப்பணிகள் நடைபெற்ற போதே, சிறிய மழை ஒன்றிற்கு அந்த இடத்திலிருந்து சேற்றுத் தண்ணீர் வழிந்தோடி களப்பு பிரதேச கடல் செந்நிறமாக காட்சியளித்தது.
இந்த கழிவு நீர் வழிந்தோடி களப்பில் கலந்தால், இதனால் ஏற்படும் விபரீதங்களை இட்டு அப்பிரதேச மக்கள் பெரும் பீதியடைந்திருக்கிறார்கள்.
*இலங்கையின் இரண்டாவது பெரிய உப்பளத்தை கொண்டிருக்கும் புத்தளம் களப்பு பிரதேசமானது மீன்பிடி, இறால் வளர்ப்பு என சுமார் 5000 குடும்பங்கள் வேலையிழந்து அநாதரவாக வேண்டிய நிலை ஏற்படலாம்.
*சிங்கப்பூர் ஓர் உலக சந்தை. மருத்துவமும் அங்கே வியாபாரச் சந்தையே. உலகெங்கிலுமிருந்து அறுவை சிகிச்சை உட்பட நவீன மருத்துவத்திற்காக சிங்கப்பூர் வரும் மக்களின் தொகை அதிகம். அந்த மருத்துவ கழிவுகளை களப்பை அண்டிய பிரதேசங்களில் தேக்கி வைப்பதானது புத்தளத்திற்கு மட்டுமல்லாமல் முழு இலங்கைவாழ் மக்களினதும் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் ஆகும்.
*உலகெங்கிலுமுள்ள விசித்திர நோய்களுக்கான கிருமிகளை மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக இலங்கைக்கு இறக்குமதி செய்கிறார்.
இதனால் களப்பு பிரதேசத்திலுள்ள மீன்கள் தொற்றுக்குள்ளாகும். உப்பளங்கள் நஞ்சாகும். இவை முழு இலங்கையினரதும் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாகும்.
* ஏற்கனவே , நுரைச்சோலை அனல் மின் நிலையம் காரணமாக கற்பிட்டி , நுரைசோலை பெண்களின் உடலில் மெர்க்குரி எனும் நஞ்சினால் பாதிக்கப்ட்டிருப்பதாக சமீபத்திய ஆய்வொன்று உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்த நஞ்சினால் கருச்சிதைவுகள் அதிகளவில் நடைபெறுவதாகவும் முன்னெப்போதையும் விட புற்றுநோய் , சுவாச நோய்கள், கருச்சிதைவுகள் அதிகரித்திருப்பதாகவும் பிரதேசவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
*இவ்வாறான நிலைமையில் அமைச்சர் சம்பிக ரணவக பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் , கொழும்பில் முஸ்லீம் மக்களே வியாபார நோக்கத்திற்காக அதிகம் வாழுகின்றனர். அப்படியிருந்தும் புத்தளம் மக்கள் இந்த குப்பை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று இனவாதம் கக்கும் விதத்தில் பேசியிருந்தார்.
* சமீபத்தில் புத்தளம் பிரதேச ஆர்ப்பாட்டத்தில் இனவாதத்திற்கு தூபம் போடும் விதமாக சிலர் சம்பிக வின் புகைப்படம் தாங்கிய பதாகைக்கு செருப்பால் அடித்தும் உதைத்தும் காணொளி ஒன்றை பதிவேற்றியிருந்தனர். அது ஊடகவியலாளர் இர்பான் என்பவரின் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு cleanputtalam உட்பட 26 பேரினால் பகிரப்பட்டிருக்கிறது. மேலும் புத்தளத்தான்டா என்று சிறுபிள்ளைத்தனமான ஹீரோயிச வீடியோக்களும் பகிரப்படுகின்றன.
படையெடுக்கும் கண்டெய்னர் லாரிகள்
1 of 3
*குப்பை கொண்டுவரும் கண்ட்ரைனர்களை கொளுத்துவோம் என்று பலர் பதிவேற்றுகின்றனர். இவ்வாறான சிறுபிள்ளைத்தனமாக கோசங்கள் புத்தளம் முஸ்லீம்களை மேலும் தனிமைப்படுத்தி இது அந்தப் பிரதேசத்திற்கான பிரச்சினை என்பதாக காட்டமட்டுமே துணை போகும்.
*மேலும் புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் சமீபத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்டிருப்பதுடன் இணைத்து போராட்டத்தில் ஈடுபடும் சாதாரண இஸ்லாமிய சிவில் சமூகத்தை தீவிரவாதிகளாக கட்டமைக்கும் அபாயத்தை போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டியது மிக அத்தியாவசியமானதாகும். முஸ்லீம்களை தீவிரவாதிகளாக்கி போராட்டத்தை தனிமைப்படுத்த இந்த திட்டத்தை முன்னெடுப்பவர்கள் முனையலாம், அப்படி நடந்தால் அது புத்தளம் பிரதேச மக்களுக்கு மட்டுமல்லாமல் இலங்கையிலுள்ள முஸ்லீம் சமூகத்தின் இருப்பிற்கு அச்சுறுத்தலாகும்.
*முஸ்லீம் புத்திஜீவிகள் , சமூக ஆர்வலர்கள் இந்த அபாயத்தை கருத்தில் கொண்டு தமது போராட்ட நடவடிக்கைகளின் நியாயத்தையும் அது முழு இலங்கைக்குமான் ஆபத்து என்பதையும் சிங்கள மக்களிடம் கொண்டு செல்வதும் அவர்களின் துணையுடன் இந்த நோக்கங்களை வென்றெடுக்க போராடுவதும்தான் இந்த போராட்டத்தை வெற்றிகொள்ள உதவுமே ஒழிய , சிறுபிள்ளைத்தனமான இவ்வாறான நடவடிக்கைகள் புத்தளம் மக்களை தனிமைப்படுத்திவிடும் அபாயத்தை உணருங்கள்.
*முழு இலங்கை மக்களின் இருப்பிற்கும் ஆரோக்கியத்திற்கும் எதிரான இந்த குப்பை திட்டத்தை நிறுத்த நாம் அனைவரும் ஒன்றிணைவோம். #CleanPuttalam
வேலைவாய்ப்புகள் குறித்து திருவாளர் மோடியிடம் ஒருமுறை கேட்கப்பட்ட போது, “பக்கோடா விற்றுப் பிழைப்பதற்கென்ன…” என்று கேட்டார். சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பேட்டியளித்த தமிழிசையிடம் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுவது குறித்து கேட்ட போது, தங்களுடைய அரசு லட்சக்கணக்கானவர்களுக்கு முத்ரா கடனுதவித் திட்டத்தின் அடிப்படையில் கடன் வழங்கி எல்லோரையும் முதலாளிகளாகவே ஆக்கி விட்டோம் என்றார். தமிழிசையின் கூற்றுப்படி இன்றைக்கு நாட்டில் எல்லோருமே முதலாளிகள் – ஜனநாயகத்தில் எல்லோரும் மன்னர்கள் ஆகிவிடுவதைப் போல மோடி எல்லோரையும் முதலாளிகள் ஆக்கி விட்டாராம்.
மோடியின் இந்தியா பல விதங்களில் வேறுபட்டது. வேலைவாய்ப்பின்மை நிலவுவதை எப்படி அறிந்து கொள்வீர்கள்? புள்ளியியல் துறை வெளியிடும் தரவுகளைக் கொண்டு. புள்ளியியல் துறை சமீபத்தில் வெளியிட்ட விவரங்கள் மோடிக்கு உவப்பானதாக இல்லாத காரணத்தால் அத்துறையின் உயரதிகாரிகள் இருவர் பதவி விலகினர்.
மோடி வாக்களித்த கோடிக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் எங்கே என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பிய போது “வேலைகள் உருவாகியுள்ளன – ஆனால், அதை விளக்கும் புள்ளி விவரங்கள் தான் இல்லை” என வினோதமான ஒரு விளக்கத்தை முன்வைத்த்து நிதி ஆயோக்.
எனினும், த வயர் இணையதளத்தில் வெளியான இந்தக் கட்டுரை அரசு வெளியிட்டுள்ள பிற புள்ளி விவரங்களைக் கொண்டு உண்மையை கண்டறிய முயல்கிறது. தொழிலாளர் துறையின் 2015-16 ஆண்டுக்கான அறிக்கை மற்றும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (Centre for Monitoring of the Indian Economy (CMIE)) போன்ற அமைப்புகள் நடத்திய கள ஆய்வு முடிவுகள் மற்றும், தொழிலாளர் வைப்பு நிதியம் வெளிட்டுள்ள விவரங்கள் மற்றும் முத்ரா கடன் தொடர்பாக கிடைக்கும் தகவல்களைக் கொண்டு வேலை வாய்ப்பு நிலவரத்தை ஆராய்கிறது இந்தக் கட்டுரை. மேலும், சமீபத்தில் மத்திய புள்ளியியல் துறை எடுத்த தேசிய மாதிரி சர்வேயின் அறிக்கையில் இருந்து அதிகாரப்பூர்வமற்ற முறையில் கசிந்த தகவல்களையும் கட்டுரையாளர் பயன்படுத்திக் கொள்கிறார்.
தேசிய மாதிரி சர்வேயின் படி, 1977-78 ஆண்டில் இருந்து 2011-12 -ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வேலை வாய்ப்பின்மை 2.6 சதவீதத்தை கடந்ததில்லை. ஆனால், 2017-18 காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மை 6.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. பள்ளிக் கல்வி முடிந்து கல்லூரிகளில் சேரும் (Gross Enrollment Ratio) கடந்த 2010 -ம் ஆண்டில் இருந்து 2016 -ம் ஆண்டு வரையிலான ஆறாண்டு காலத்தில் 90 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு போதிய அளவுக்கு வேலைவாய்ப்புகள் கிட்டவில்லை என்கிறது தேசிய மாதிரி சர்வே.
மேலும் பட்டப்படிப்பு முடித்த பின் வேலை தேடி அலுத்துப் போனவர்கள் சில ஆண்டுகள் கழித்து வேலை தேடும் முயற்சியையே நிறுத்தி விட்டார்கள் என்கிறது தேசிய மாதிரி சர்வேயின் முடிவுகள். இதன் காரணமாக வேலைகளுக்கு போட்டியிடுவோரின் சதவீதம் 2004-05 ஆண்டில் 43 சதவீதமாக இருந்து, 2017-18 ஆண்டில் 36.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது, படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த அதே காலகட்டத்தில், வேலை கிடைக்காமல் விரக்தியில் வேலை தேடும் முயற்சியைக் கைவிட்டவர்களின் எண்ணிக்கையோ கிடுகிடுவென அதிகரித்துள்ளது. படித்த பட்டதாரிகளை விட படிக்காதவர்கள், கூலித் தொழிலாளிகள், விவசாயக் கூலிகள் உள்ளிட்ட பிரிவினர் மேலும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது மேற்படி சர்வேயின்படி தெரிய வந்துள்ளது.
ஒருபக்கம் கோடிக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை தமது அரசு உருவாக்கியிருப்பதாகவும், அதை விளக்கிச் சொல்வதற்கு போதுமான புள்ளிவிவரங்கள் இல்லை என்று பாஜக பரிவாரங்கள் கூசாமல் பச்சையாக புளுகி வருகின்றனர்.
இன்னொரு பக்கமோ, பதினைந்து வயதைக் கடந்தவர்களில் படிக்காதவர்கள், வேலையில் இல்லாதவர்கள் மற்றும் வேலைக்கான பயிற்சியிலும் இல்லாதவர்கள் (NEET – not in education, employment or training) எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதே போல் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை வளர்ச்சியும் கடந்த பல வருடங்களாக 12 கோடி என்கிற அளவிலேயே தேங்கி நிற்கிறது. 2011-12 காலப் பகுதிக்குப் பின் ஆண்டு தோறும் உருவாகும் புதிய வேலைவாய்ப்புகள் சராசரியாக 24 லட்சம். எனினும் இதே காலப்பகுதியில் புதிதாக வேலைச் சந்தைக்குள் நுழைபவர்களின் எண்ணிக்கையோ பல மடங்கு அதிகம்.
வேலை வாய்ப்பில்லாதோரின் எண்ணிக்கை 2011-12 -க்கு முன் ஒரு கோடியில் இருந்து அதன் பின் ஒருகோடியே அறுபத்தைந்து லட்சமாக அதிகரித்துள்ளது – இந்த எண்ணிக்கையானது வருடந்தோரும் வேலையில்லாதோர் பட்டாளத்தில் புதிதாக சேர்பவர்களுடையது என்பதைக் கணக்கில் கொண்டால் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் சுமார் 8 கோடி பேர் வேலையற்றோர் பட்டியலில் இணைந்துள்ளனர் என்பது தெரிய வருகின்றது.
இதில் நாம் கவனிக்கத்தக்க மற்றொரு செய்தியும் உள்ளது. அதாவது, 2004-05ல் இருந்து 2011-12 காலப் பகுதி வரை விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை வருடம் தோரும் வீழ்ச்சியடைந்துள்ளது – அதாவது கிராமப்புற சிறு விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள் நகர்புறங்களுக்கு இடம் பெயர்ந்து சேவைத் துறைகளில் தொழிலாளிகளாகச் சேர்ந்துள்ளனர். அந்தக் காலப்பகுதியில் 15-29 வயதுப் பிரிவினைச் சேர்ந்தவர்கள் விவசாயத் துறை வேலைகளில் ஈடுபடுவது 8.68 கோடியில் இருந்து 6.09 கோடியாக சரிந்துள்ளது. ஆனால் 2011-12க்குப் பின், 8.48 கோடியாக அதிகரித்துள்ளது.
அதாவது விவசாயத்தில் பிழைக்க முடியாது என்கிற நிலையில் நகர்புறங்களுக்கு வந்த கூலி விவசாயிகள் மற்றும் சிறு குறு விவசாயிகள், இங்கும் வேலை நெருக்கடி தோன்றியதால் மீண்டும் வேறு வழியின்றி கிராமங்களுக்குத் திரும்பியுள்ளனர்.
அதே சமயத்தில் 2011-12 காலப் பகுதியில் 5.89 கோடியாக இருந்த உற்பத்தித் துறை வேலைகள் 2015-16 ஆண்டுகளில் 4.83 கோடியாக சரிந்துள்ளது. அதாவது 1.06 கோடியாக உற்பத்தித் துறை வேலைகள் அப்படியே ஆவியாகியுள்ளது. உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை வங்கிக் கடன்கள் பெறுவதில் சுணக்கம், உற்பத்தி சரிவு உள்ளிட்ட பிற புள்ளி விவரங்களும் உறுதிப் படுத்துகின்றன. இப்போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது – உற்பத்தித் துறை வீழ்ச்சியடைந்துள்ள அதே காலகட்டத்தில் தான் பதினைந்து வயதுக்கு மேற்பட்ட, கல்வியை முடித்த, வேலையில் இல்லாத பயிற்சியில் இல்லாதவர்களின் (NEET) எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது (2017-18 ஆண்டு வாக்கில் இவர்களின் எண்ணிக்கை 11.56 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்படுகின்றது).
இந்த விவரங்கள் அனைத்தும் “கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை” என்பதை தெளிவாக காட்டுகின்றன. வேலையற்றோர் பட்டாளத்தின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மறுபுறம் சிறு அளவிலான கலவரங்களும், சாதி, மத, இன பேதங்களும் அதிகரித்து வருகின்றன.
தனது கையாலாகாத் தனத்தால் உருவாகியுள்ள வேலையற்றோரின் பெரும் பட்டாளத்தை தனது கேடான பாசிச நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முனைகிறது இந்துத்துவ கும்பல். வேலையின்மைக்கு இந்த பாசிஸ்டுகளே காரணம் என்பதை பரந்துபட்ட மக்களிடம் எடுத்துச் செல்வதும், இந்துத்துவ கும்பலை மக்களிடம் அம்பலடுத்துவதும் உடனடிக் கடமைகளாக நம் முன் நிற்கின்றன.
கோவில்பட்டியைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் ஆதி, சரவணன், கணேசன், சந்தன குமார், கருப்பசாமி ஆகியோரை கடந்த 14.02.19 அன்று அதிகாலை 1.30 மணியளவில் சட்ட விரோதமாக கடத்திக் கொண்டு போனது இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான இருபதுக்கும் மேற்பட்ட போலீசைக் கொண்ட டீம். அதிகாலை நேரத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்துக் கொண்டிருந்த தம்மை நோக்கிக் குரைத்த நாய்களை சட்டை செய்யாமல் கடத்திச் செல்வதில் குறியாக இருந்தனர் போலீசார்.
காரணம் கேட்ட போது தோழர் கணேசனைத் தவிர மற்ற அனைவருக்கும் சொல்லப்பட்ட காரணம், டி.எஸ்.பி உங்களோடு பேச வேண்டும் என்கிறார் என்பதுதான். கணேசன் வீட்டுக்குள் புகுந்த போலீசாரிடம் அவர் சம்மன் அனுப்பினீர்களா? வாரண்ட் இருக்கிறதா? என போலீசாரிடம் தமக்கு அரசியல் சாசனம் சட்டப்படி வழங்கியுள்ள உரிமைகளைக் கேட்டார். அதற்கு சட்டத்தை மதிக்கிற போலீசு, “உம்மேல ஒரு பொம்பள கேஸ் கொடுத்திருக்கா. வா ஸ்டேசனுக்கு” என்று அடித்து இழுத்துச் சென்றனர்.
வலிப்பு நோயால் உடல் நலிவுற்று மருத்துவம் எடுத்துக் கொண்டிருந்த தோழர் சரவணனை போலீசு கடத்திய போது, அவரது மருந்துகளைக் கூட எடுத்துவர அனுமதிக்கவில்லை. எப்போது வேண்டுமானாலும் வலிப்பு வரலாம் என்ற நிலையில், நாக்கு கடிபடாமல் இருக்க பற்களுக்கு இடையில் சிறு துண்டை (துணியை) வைத்துக் கொண்டால் காயம் படாமல் இருக்கும் என்று அதை எடுத்துவரக் கேட்ட போது அதை மறுத்தார் ஆய்வாளர் ராமகிருஷ்ணன். அச்சிறு துண்டு அளவில் கூட அவரிடம் மனிதாபிமானம் இல்லை. சரவணனின் மனைவி அவருக்கு உடம்பு சரியில்லை என்றபோது கூட நக்கலாக நாங்க பாத்துக்கிறோம் என்றார் அவர்.
போலீசின் அராஜகத்தை அனுபவத்தின் மூலம் கண்ட அவர் மனைவி உடனே கோபமாக, “நீங்க என்னத்த பார்ப்பீங்கன்னு எனக்குத் தெரியாது?. உங்க லட்சணத்தைத்தான் நான் பார்த்தேனே. இத மாதிரித்தான் விசாரிச்சுட்டு அனுப்பிடறோம்ன்னு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்ததுக்கு அப்புறமா கூட்டிட்டு போனீங்க. என்.எஸ்.ஏ-வுல போட்டீங்க. நாலு மாசம் கழிச்சுத்தான் வந்தாங்க. உங்கள நம்பி அனுப்ப முடியாது” என சரவணன் கையைப் பிடித்துக் கொண்டார். என்ன நீ ஓவரா பேசுற எனக் கூறி இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் அவரை தள்ளி விட்டார். வீட்டுக்குள்ளிருந்து மெயின் கேட்டிற்கு சரவணனை இழுத்து வந்த போலீசு இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் பூட்டப்பட்டிருந்த மெயின் கேட்டில் நிறுத்தி ஏறி வெளியே குதி என்றார். நாமறிந்து திருடன் மட்டுமே சுவரேறி குதிப்பான். போலீசு என்று சொல்லிக் கொள்ளும் இவர்களுக்கும் ஏன் அவ்வாறு தோன்றுகிறது ?
ஏறிக் குதிக்க மறுத்திருக்கிறார் சரவணன். சாவி கொண்டு வந்து திறந்தபின் வண்டியில் ஏற்றிக் கொண்டு போனார்கள். பின்னாலேயே அவரது மனைவி மருந்து பாட்டில்கள் செருப்பு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு ஓடி வந்தார்.
போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டரிடம், “நான் இப்போதுதான் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ச் ஆகியிருக்கிறேன். மருந்து எடுத்துக் கொள்ளவில்லையானால் எனக்கு வலிப்பு வந்து விடும்” என்று சரவணன் கூற, “எந்தப் பக்கம் வரும்” என்று இஸ்பெக்டர் கேட்டார். “வலது பக்கம் வரும்” என்று சரவணன் கூற, “எனக்கு இடது பக்கம் வரும், போய் உக்காரு” என்று நக்கலாகவும் திமிராகவும் கூறியிருக்கிறார். தொழில்முறை கொலைகாரனுக்குக் கூட கொஞ்சம் இரக்கம் இருக்கும். பாசிஸ்டுகளுக்கு அடியாள் வேலை பார்க்கும் இந்த அதிகார வர்க்க போலீசுக்கு அது இருக்காது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆனது. சரவணன் மனைவியின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் மருந்து அவரிடம் சேர்ந்தது.
தோழர் ஆதி கால் ஒடிந்து சிகிச்சைக்குப் பிறகு சரியாக நடக்க முடியாமல் இருப்பவர். டி.எஸ்.பி யை காலையில் வந்து பார்க்கிறேன். கால் வலியால் தற்போது என்னால் வர முடியாது எனக் கூறிய போது, கட்டாயம் இப்போதே வர வேண்டும் எனக் கூறி, நடக்க முடியாத அவரை இழுத்துக் கொண்டு போனது போலீசு.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பெயர் விலாசத்தை பதிவு செய்து கொண்டு ஐவரையும் வண்டியில் ஏற்றிக் கொண்டார்கள். எங்கே எனக் கேட்ட போது மேற்கு காவல் நிலையம் என்று போலீசு சொன்னது. ஆனால் வண்டி அதையும் தாண்டிச் சென்றது. அப்போது நாலாட்டின் புதூர் என்றது. மேற்கு காவல்நிலையம் என்று கூறிவிட்டு ஏன் நாலாட்டின் புதூர் அழைத்துச் செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு மௌனமே பதிலாக கிடைத்தது. நாலாட்டின்புதூர் காவல்நிலையத்துக்கு சென்று வெளி கேட்டை பூட்டி விட்டு உள்ளே சென்று உறங்கியது போலீசு. குளிரும் கொசுக்கடியும் ஐவரையும் உறங்க விடவில்லை.
காலை 10 மணிக்கு இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வந்து அவரது அறைக்குள் சென்றார். ஒரு பென்ச் போடப்பட்டு ஐவரும் அதில் அமர வைக்கப்பட்டனர். டீ வந்தது பிஸ்கட் கொண்டு வராததற்கு கான்ஸ்டபிளைக் கடிந்து கொண்டார். டீ குடிங்க என்று அனுசரணையாகக் கூறினார்.
“அதுக்காக எங்களை ஏன் நைட் 1.30 மணிக்கு இழுத்துட்டு வந்தீங்க”
“இழுத்துக்கிட்டு வரல அழைச்சிக்கிட்டு வந்தோம்.”
“அழைச்சிக்கிட்டு வற்றவங்க தான் கதவை உடைச்சிக்கொண்டு வருவாங்களா? சட்டையை கிழிப்பாங்களா? அடிப்பாங்களா? மருந்து எடுக்கக் கூட விடல சின்ன டவல் கூட எடுக்க விடல”
“உதாரணத்துக்கு துப்பாக்கிச் சூடு நடத்துறதுக்கு சில விதிமுறைகள் இருக்குன்னு சட்டம் சொல்லுது. ஆனால் தேவைப்பட்டால் அந்த விதிமுறைகளை மீறலாம்னு சட்டமே சொல்லுது.” என்று அவருடைய புதுமையான சட்ட விளக்கத்தை சொல்லிக் கொண்டிருக்கும் போது டி.எஸ்.பி ஜெபராஜ் உள்ளே வந்தார். வந்து ஒவ்வொருவர் முகத்தையும் பார்த்துக் கொண்டார். பெயரையும் செய்யும் வேலையையும் கேட்டுக் கொண்டார்.
“நீங்க யாரு, எப்படி இருப்பீங்கன்னு எனக்குத் தெரியாது. அதான் உங்களை நேரில் பார்த்து பேசலாம்னு வரச் சொன்னேன். பாருங்க என்னோட சர்வீஸ்ல பிளாக் மார்க் ஒண்ணும் கிடையாது. ஆனா இப்போ உங்களால வந்திடுச்சு. ஏன் மக்கள் அதிகாரத்துல இருக்கிறவங்க மேல கேஸ் போடமாட்டேங்குறீங்கன்னு மேலே இருந்து என்னைக் கேக்குறாங்க”
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து என்.எஸ்.ஏ-வில் கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள்
“கேஸ் போடலையா? வழக்கு போட்டு, சிறைக்கு போயிருக்கோம். என்.எஸ்.ஏ போட்டிருக்கீங்க.”
“அது வேற. மே 22-க்கு தூத்துக்குடிக்கு கோவில்பட்டியில இருந்துதான் ஆள திரட்டிட்டு போயிருக்கீங்க”
“சார்.. ஸ்டெர்லைட் போராட்டம் மக்கள் அதிகாரத்தின் போராட்டம் இல்லை. அது தூத்துக்குடி மக்களின் போராட்டம். நாங்க அதுல கலந்துகிட்டோம். கால்ல அடிபடாம இருந்திருந்தா நான் முன்னாடி போய் அன்னைக்கே செத்திருப்பேன்.”
“ஃபாக்டரி இல்லாம நாடு எப்படி முன்னேறும். உதாரணத்துக்கு டிராக்டர் இல்லாம இப்போ உழுதா எல்லோருக்கும் சோறு கெடைக்குமா?”
“சார், இயந்திரங்களுக்கோ தொழிற்சாலைகளுக்கோ நாங்க எதிரி இல்லை. ஒரு முதலாளி லாபம் சம்பாதிக்க ஒரு லட்சம் பேரை சாகடிக்கிறானே, அந்த கார்ப்பரேட் முதலாளிகளைத்தான் எதிர்க்கிறோம். மக்களோடு நிற்கிறோம்.”
“இப்போ நான் சேலன்ச் பண்றேன். எத்தனை பேரு கோவில்பட்டியில உங்க பின்னாடி வர்றான்னு பார்க்கிறேன். உங்கள தூங்க விடாம ’காப்பாத்துங்க காப்பாத்துங்க’ன்னு உங்க பின்னாலேயே சுத்திட்டிருக்காங்களா?”
“சார், எங்க அஞ்சு பேர நம்பி கோவில்பட்டியில் பத்துபேரு கூட வரமாட்டாங்கன்னு சொல்றீங்க. அப்புறம் தூத்துக்குடியில் எப்படி ஒரு அம்பது தோழர்கள் பின்னாடி தூத்துக்குடியில ஒரு லட்சம் பேர் வந்தாங்கன்னு சொன்னீங்க, நீங்கதான் அதுக்கு காரணம்னு எங்கள சொன்னீங்க ?”
“இல்லை, நான் சொல்லல.”
“யார் சொன்னது?”
“அப்படி ஒரு கருத்து இருக்குது.”
“யாரு அந்தக் கருத்த பரப்புறா?”
“பாருங்க, எல்லோரும் சுப்ரீம் கோர்ட்டுக்கு கீழதான். சட்டத்துக்கு கீழதான். இன்னைக்கு யாரு ஆட்சில இருக்காங்களோ அவங்கதான் சட்டத்தை போடுறாங்க. அதனால் அவங்களுக்கு, அவங்க உத்தரவுக்கு கீழ்படிய வேண்டிய கடமை எங்களுக்கு இருக்குது. தனிப்பட்ட முறையில உங்களோட எந்தப் பகையும் எனக்கு இல்லை. எனக்கு மேல இருந்து பிரஷர்.”
“சார், ஒன்னு சொல்றோம். இந்த சீட்டுல இப்ப எஸ்.பி. முரளி ரம்பா உட்கார்ந்திருந்தாலும் இதைத்தான் சொல்லியிருப்பாரு. மேலே இருந்து மேல இருந்துன்னு சொன்னா அதத்தான் நாங்க சொல்றோம். மேல இருக்குறது கார்பரேட் காவி பாசிசக் கூட்டணி. அங்க இருந்து உத்தரவு வருது. நீங்க உங்க அதிகாரத்தை பயன்படுத்தி ஒடுக்கப் பார்க்குறீங்க.”
“மருந்து கூட எடுத்துக்க விடாம இந்த இன்ஸ்பெக்டர்தான் நைட்டு பிடிச்சு இழுத்துக்கிட்டு வந்தாரு.”
“ஓ, நான் பொறுப்பேத்துக்கிட்டு சாரி கேக்கிறேன்.”
போன் ஒலித்தது.. பேசி விட்டு வைத்தார்.
“எஸ்பி தான் பேசுறார். எப்பவும் 10 மணிக்கு மேலதான் பேசுவார் இன்னைக்கு 7.30 மணிக்கே அடிச்சுட்டார். ஸ்பீக்கர்ல போட்டிருப்பேன், நாகரீகமா இருக்காதுன்னுதான் போடல. என்னாச்சுன்னு கேட்டார். சொன்னேன். நான் விட்றலாம்னு தான் பார்த்தேன். அவர்தான் செக்சன் 110 போடச் சொல்றாரு. இப்பவாவது புரிஞ்சிக்கிட்டீங்களா.. மேல இருந்து பிரஷர்னு.
“நா இங்கே வந்ததுல இருந்து, பல ரவுடிகள் கிட்ட பேசுறேன். சிபிஐ, சிபிஎம் கிட்ட பேசியிருக்கிறேன். அவங்கல்லாம் அப்படியே மேலோட்டமா பேசுறாங்க. நீங்கதான் உணர்ச்சிவசப்படுறீங்க.”
“உணர்ச்சிவசப் படல சார். நாங்க கொலை பண்ணல, கொள்ளையடிக்கல, யார் தாலியையும் அக்கல, கந்து வட்டிக்கு விடல, மாமூல் வாங்கல, புரோக்கர் வேலை பார்க்கல, சாராயம் காய்ச்சல, விபச்சாரம் பண்ணல, மக்களுக்காக நேர்மையா நிக்கிறோம். தொடர்ந்து நிப்போம்.”
நைச்சியமாய் பேசி அழைத்து வந்து மிரட்டிய சம்பவங்கள் உண்டு. ஆனால் கட்டாயப்படுத்திக் கூட்டி வந்து நைச்சியமாய் பேசி வளைக்கப் பார்ப்பது வரலாற்றில் இதுவே முதல்முறை. இதில் மிரட்டலும் உள்ளே பொதிந்திருப்பதை உணர முடிகிறது. சட்ட விரோதமாக கஸ்டடியில் அடைத்து வைத்து நைச்சியமாய் பேசுவது. ரகரகமாய் புதுப்புது பெயர்களை வைத்துக் கொண்டு மக்களை சாகடிக்கும் மோடி எடப்பாடி கும்பலின் திட்டங்களுக்கும், மேற்படி சதி திட்டத்திற்கும் வேறுபாடில்லை. மக்களோடு தொடர்ந்து நிற்பவர்களை எந்த சதித்தனமும் வீழ்த்த முடியாது. மேற்படி தோழர்கள் ஐவரும் இன்னும் நெஞ்சுரத்துடன் பணிகளைத் தொடர்கின்றனர். காவி கார்பரேட் பாசிச அதிகாரத்தால் மக்கள் அதிகாரத்தை வீழ்த்த முடியாது.
இன்று வேலை கிடைக்குமா என்ற ஏக்கத்தோடும் எதிர்பார்ப்போடும் சாலையோரத்தில் காத்திருக்கிறார்கள் ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளர்கள்.
காலை 8 மணி. இருபதுக்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் சென்னை, கிண்டி மடுவங்கரை பாலத்திற்கு அருகில் உட்கார்ந்திருக்கிறார்கள். அருகில் சென்றதும், நம்மை நோக்கி மெல்ல நகர்ந்து வருகிறார்கள். என்ன வேலை சார் என்று அரைகுறை தமிழில் ஒரு குரல். பெயர் ரஜேஷ். அவரிடம் பேச்சு கொடுத்தோம்.
ரஜேஷ் (வலதுபக்கம் உள்ளவர்)
“நான் இங்கே வந்து 8 வருஷம் ஆச்சு சார்… இவங்களெல்லாம் (அருகில் உள்ளவர்களைக் காட்டி) 1 வருஷந்தான் ஆகுது. எங்கள மாதிரி கிட்டதட்ட 300, 400 பேரு இந்த ஏரியாவுல உள்ள மெஸ்ல தங்கி இருக்காங்க. (ஒடிசாக்காரர்கள் தாங்கள் தங்கியிருக்கும் இடத்தை மெஸ் என்றுதான் அழைக்கிறார்கள்) எங்க மாநிலக்காரர் ஒருவர் ஒரு இடத்த வாடகைக்கு எடுத்து எங்களுக்காகவே மெஸ் நடத்தி வருகிறார். அங்கேயே நாங்களும் தங்கிக்குவோம். தங்குறதுக்கும் ஒருவேளை சாப்பாட்டுக்கும் வாரத்துக்கு 500 ரூபா. வேலைக்கு யாரும் கூப்பிடாதப்ப, காலையில 10 மணிக்கே சொல்லிட்டோமுன்ன பகல் சாப்பாடும் கொடுப்பாங்க.
500 ரூபாய்க்கு சாப்பாடும் தங்குறதுக்கு இடமுமான்னு ஆச்சர்யப்படாதீங்க. இங்கே உள்ள பணக்காரங்க நெறைய பேரு ரேசன் அரிசி வாங்குறதில்ல. அவங்களோட கார்டுக்கு அரிசி வாங்கி தமிழ்காரங்க விக்கிறாங்க. கிலோ 4, 5 ரூபாதான். அப்புறம் என்ன, ஒரு ரூம்லேயே 10, 12 பேர் தங்கிப்போம், இது போதாதா!
இங்க இருக்க மாதிரி எங்க ஊர்ல தொழில் எதுவுமில்ல. அரிசி, பருப்பு… இப்படி விவசாயம் மட்டும்தான் செய்யிறோம். அப்படி விவசாயம் பாக்க எங்களுக்கு நிலமும் ஏதுமில்ல. எங்கேயாவது போயி பொழைக்கலாமுன்னுதான் இங்கே வந்திருக்கோம்.
கம்பெனி வேலை, வீட்டு வேலைகளுக்கு லோடிங், அன்லோடிங், அப்புறம் ஹெல்பர் வேலைகளுக்கு போவோம். வேலைக்கு ஏத்த மாதிரி 400 ரூபாயிலிருந்து 600 ரூபாய் வரைக்கும் சம்பளம் கிடைக்கும். எந்த வேலைக்கு கூட்டிகிட்டு போறாங்களோ அத முடிக்கிறதுக்குத்தான் இந்த சம்பளம். நாள் கணக்கோ மணி கணக்கோ பார்க்க முடியாது. எங்க ஊர்ல இதுகூட கிடையாது.
ஒரு நாளு 600 ரூபா கூலி பேசி ஒருத்தர் வேலைக்குக் கூட்டி போனாரு. வேலை முடிச்ச பிறகு சம்பளம் கேட்டா, 400 ரூபாய எடுத்து நீட்டினாரு. 600 ரூபா தர்றதா பேசினீங்களே என்று சொன்னதுதான், “போடா… ***மவனேன்னு” (அதை மட்டும் தெளிவாகப் பேசுகிறார்) கெட்ட கெட்ட வார்த்தைகளால திட்டி அடிக்க வந்தாரு. பொழைக்க வந்த இடத்துல சண்டையா போட முடியும். கொடுத்தத வாங்கிட்டு வந்துட்டேன்.
வருஷத்துக்கு ரெண்டு தடவதான் ஊருக்கு போகமுடியும். கொஞ்ச நாளுகூட அங்கே இருக்க முடியாது, தமிழ்நாட்டுக்கே திரும்பி வந்து விடுவோம். வீட்டுக்கு பணம் அனுப்பனுமுன்னா, சேத்துவச்ச பணத்த, கூட வேலை செய்யும் ஒருவரிடம் கொடுப்போம். ஊரில் இருக்கும் அவரோட சொந்தக்காரர் ஆயிரத்துக்கு 20 ரூபாய் கமிஷன் எடுத்துகிட்டு எங்க வீட்டிற்கே கொண்டு போயி கொடுத்துவிடுவார். முன்ன எல்லாம் 50 ரூபாயாயிருந்த இந்த கமிஷன், நெட் ஒர்க் டீம் அதிகமா ஆனதுனால இப்ப 20 ரூபாயா கொறைஞ்சிருச்சு என்றார்.”
ரஜேஷிடம் பேசிக்கொண்டே அவர்கள் தங்கியிருக்கும் இடத்தை அடைந்தோம். பகல் 10.30 மணி. அந்த சிறிய அறையில் பத்துக்கும் மேற்பட்டோர் நெருக்கியடித்துப் படுத்திருக்கிறார்கள். அன்று அவர்களுக்கு வேலையில்லை.
அங்கிருந்து திரும்பி வரும்போது, எங்களையே கவனித்துக் கொண்டிருந்த வேன் ஓட்டுநர் கூறினார்: “இன்ன வேலைன்னு இல்ல சார்! இவங்கள கூட்டிப் போயி எந்த வேலைய வேணுமுன்னாலும் வாங்கிக்கலாம்; கிட்னியை எடுத்துகிட்டு விட்டாக்கூட கேக்க நாதியில்லை…” என்றார்.
அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டோம், காட்சிகள் மறைந்துவிட்டது. ஆனாலும், எங்கேயோ ஓரிடத்தில், ஐந்தாறு தொழிலாளிகள் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போதெல்லாம், வேன் ஓட்டுநரின் அந்த மெல்லிய வார்த்தைகள் பேரிரைச்சலை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது.
அடக்குமுறைதான் ஜனநாயகமா? கார்ப்பரேட், காவி பாசிசம் எதிர்த்து நில் ! என்ற முழக்கத்தில் 23-02-2019 சனிக்கிழமை மாலை 4-00 மணிக்கு திருச்சி உழவர் சந்தை திடலில் நடக்க இருந்த மாநாட்டிற்கு திருச்சி மாநகர காவல்துறை வழக்கம் போல் தனது அதிகார சட்ட வரம்புகளை மீறி கருத்துரிமையை மறுத்தது. போலீசாரின் உத்தரவிற்கு எதிராக மக்கள் அதிகாரம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு 13-02-2019 அன்று போலீசாரின் உத்தரவை ரத்து செய்து மாநாட்டிற்கு அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று (15-02-2019) திருச்சி காவல்துறை ஆணையரிடம் தீர்ப்பு நகலை கொடுத்து மாநாட்டிற்கு அனுமதி வழங்கக் கோரினோம். காவல்துறையும் அனுமதி வழங்குகிறோம் எனக் கூறியுள்ளது.
தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் தோழர்கள் பொது மக்கள் ஆதரவுடன் மாநாட்டிற்கு அழைப்பு கொடுத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் காவல்துறையினர் பொய் வழக்கு போடுவது, பிரச்சாரத்தை தடுப்பது, மாநாடு போஸ்டரை கிழிப்பது என செய்து வருகின்றனர். கருத்துரிமையைத் தடுக்கும், நீதிமன்ற உத்தரவை மீறும், அத்தகைய காவல்துறையினர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
தோழமையுடன்,
வழக்கறிஞர். சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.
“கார்ப்பரேட் காவி பாசிசம் – எதிர்த்து நில்!” என்ற முழக்கத்தை முன்வைத்து, 2019 பிப் 23 சனிக்கிழமையன்று திருச்சியில் மாநாடு நடத்த உள்ளோம். அனைத்திந்திய அளவில் எழுத்தாளர்கள், அறிஞர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்.தாங்கள் நண்பர்கள், மற்றும் குடும்பத்தினரோடு மாநாட்டிற்கு வருகை தரவேண்டும் என உரிமையுடன் அழைக்கிறோம்.
ஏற்கெனவே, மக்கள் அதிகாரம் சார்பில் நடத்தப்பட்ட “மூடு டாஸ்மாக்கை” மற்றும் “விவசாயியை வாழவிடு” ஆகிய இரு மாநாடுகளுக்கும் நன்கொடையும் ஆலோசனைகளும் அளித்தது மட்டுமின்றி, பலர் நேரிலும் வருகை தந்து ஆதரவு அளித்துள்ளீர்கள். தொடர்ந்து எமது நடவடிக்கைகளுக்கும் போராட்டங்களுக்கும் ஆதரவளித்து வருகிறீர்கள். இந்த மாநாட்டிற்கும் உங்கள் பேராதரவை எதிர்நோக்குகிறோம்.
இன்றைக்கு அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை விமரிசிப்பவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டம் போன்ற கொடிய சட்டங்களின் கீழ் கைது செய்வதும், அமைதி வழியில் போராடுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும் தமிழகத்தில் சகஜமாகி வருகிறது. ஸ்டெர்லைட், மின்கோபுரம் அமைத்தல், எட்டுவழிச்சாலை, ஹைட்ரோ கார்பன், சாகர்மாலா ஆகிய கார்ப்பரேட் நலத்திட்டங்களை யார் எதிர்த்தாலும் அவர்கள் மீது தேசத்துரோகி இந்து விரோதி என பாஜக வினர் முத்திரை குத்துகின்றனர். உடனே, போலீசு அவர்கள் மீது பாய்கிறது. துண்டறிக்கை, ஓவியம், பாடல், வாட்ஸ் அப் என எந்த வடிவத்தில் பார்ப்பன பாசிஸ்டுகளை விமரிசித்தாலும், அவர்கள் போலீசின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுகிறார்கள்.
அரசமைப்பு சட்டத்தை திருத்தாமலேயே இந்து ராஷ்டிரத்தை நிறுவுகின்ற திசையில் வெகு வேகமாக சென்று கொண்டிருக்கிறது மோடி அரசு. எல்லா துறைகளிலும் மாநிலத்தின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன. சி.பி.ஐ., ஆர்.பி.ஐ., சி.ஏ.ஜி., சி.வி.சி. முதல் இராணுவம், போலீசு, நீதித்துறை வரையிலான அனைத்து நிறுவனங்களும் ஆர்.எஸ்.எஸ். ஆல் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. அரசு எந்திரமே பாசிசத் தன்மை கொண்டதாக மாற்றப்பட்டு வருகின்றது. நாடு முழுவதும் பசுக்குண்டர்கள் முதல் சனாதன் சன்ஸ்தா வரையிலான பலவகையான பாசிசக் கொலைப்படைகள் பெருகியிருக்கின்றன. முஸ்லீம்களுக்கும் தலித் மக்களுக்கும் எதிரான கொலைவெறித் தாக்குதல்கள் சகஜமானவையாக மாறி வருகின்றன.
2019 தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்தாலும் அரசமைப்பிலும் சமூக சூழலிலும் காவி பாசிசம் ஏற்படுத்தியிருக்கும் மேற்சொன்ன அபாயகரமான மாற்றங்கள் அகன்றுவிடப் போவதில்லை. ஏனென்றால், பன்னாட்டு நிறுவனங்களும் கார்ப்பரேட்டுகளும் காவி பாசிசத்திற்கு பக்கபலமாக இருக்கின்றன. இந்தப் புரிதலை மக்களுக்கு ஏற்படுத்துவதற்கான ஒரு தொடக்கமாகவே இம்மாநாட்டை நடத்துகிறோம்.
எமது மாநாடுகளுக்கும் போராட்டங்களுக்குமான நிதியை உண்டியல் ஏந்தி சாதாரண மக்களிடமிருந்து திரட்டுவதே எமது வழக்கமான நடைமுறை. ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று மொத்த நிதியையும் அவ்வாறு திரட்டுவதற்குரிய கால அவகாசம் தற்போது எமக்கு இல்லை. நெடிய நீதிமன்ற போராட்டத்திற்குப் பிறகு இந்த மாநாட்டுக்கான அனுமதியைப் பெற்றிருக்கிறோம். குறுகிய கால அவகாசத்தில் இம்மாநாட்டை நடத்தவேண்டியிருப்பதால், உங்கள் ஆதரவையும் நன்கொடையையும் பெரிதும் எதிர்பார்க்கிறோம்.
மாநாட்டு நிதி அனுப்ப வேண்டிய முகவரி:
C. VETRIVEL CHEZHIYAN, SB A/C NO:62432032779, STATE BANK OF INDIA, POZHICHALUR BRANCH, CHENNAI. IFSC: SBIN0021334
நன்றி !
தோழமையுடன்,
வழக்கறிஞர்.சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.
தொடர்புக்கு: 99623 66321
ஊடங்களில் பெரிதாகப் பேசப்படும் சேலம் ஆட்சியர் ரோகிணி சமூக வலைத்தளத்தைப் பொறுத்தவரை ஒரு கோமாளி போலச் சித்தரிக்கப்படுகிறார். அவர் எங்குச் சென்றாலும் தன்னுடன் ஒரு புகைப்படக் கலைஞர், கூடவே நான்கு ஐந்து அதிகாரிகள், வேடிக்கை பார்க்க சில மக்கள் என ஒரு விளம்பர பிரியையாக வலம் வருகிறார்.
சேலம் ஆட்சியர் ரோகிணி
இப்படி இருக்கும் ரோகிணி உண்மையில் இந்த விளம்பரத்தோடு நிற்கிறாரா என்று கேட்டால், இல்லை என்பதுதான் உண்மை. உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தால் போதும் என்ற ஒரு சொலவடை தமிழில் உள்ளது.
மக்களின் பாதுகாவலர் போலத் தன்னை வெளிக்காட்டி கொள்ளும் ரோகிணி, உண்மையில் விஷம் கக்கும் பாம்பு என்பதுதான் நிதர்சனம். சமீபத்தில் ஜாக்டோ ஜியோ போராட்டம் நடைபெற்றது அனைவரும் அறிந்த செய்தி. அதில் ஆசிரியர்களுடன் சேர்ந்து சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடிகள் என்று பல அமைப்புகளும் கலந்து கொண்டன.
மற்ற மாவட்டங்களில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை அங்கன்வாடி மற்றும் சத்துணவு பிரிவில் இருந்து ஒருவர் கூடக் கலந்து கொள்ளவில்லை. காரணம், ஆட்சியரிடம் இருந்து இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மிரட்டல். போராட்டத்தில் கலந்து கொண்டால் வேலையை விட்டு நீக்கப்படுவீர் என்ற வகையில் மிரட்டல் சென்று உள்ளது.
ஆனால் ஆசிரியர்களுக்கு இந்த மிரட்டல் செல்லவில்லை, காரணம் ஆசிரியர்களிடம் இந்த மிரட்டல் செல்லுபடி ஆகாது என்பதும், அதே நேரத்தில் தனக்கு எதிராகத் திரும்பும் என்பதும் ரோகிணிக்கு நன்றாகத் தெரியும். மற்றபடி, அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள் உறுதியாக இந்த மிரட்டலுக்குப் பணிவார்கள், காரணம் இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், அது மட்டுமல்லாது இவர்களுக்குக் கொடுக்கப்படும் மிகக் குறைந்த ஊதியம் கூட அவர்களின் குடும்பத்திற்கு மிகவும் இன்றியமையாதது. இங்குக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அரசமைப்புச் சட்டம் கொடுக்கும் போராடும் உரிமையை ஒரு மாவட்ட ஆட்சியரால் எளிதாகத் தட்டி பறித்து விட முடியும் என்ற நிலையில்தான் நமது ஜனநாயகம் உள்ளது.
கோப்புப் படம்
இத்தோடு இந்த விசியம் நின்று விடவில்லை. இன்றைய தினம்வரை அங்கன்வாடி பணியாளர்களுக்கு இந்த மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்கள் கூறிய தகவல்படி போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து ஊழியர் அமைப்புகளுக்கும் ஊதியம் கொடுக்கப்படவில்லை.
போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று மிரட்ட தெரிந்த ரோகிணிக்கு, பணியாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஊதியத்தை வாங்கித் தரும் துப்பு இல்லை. அதிகாரத்தில் தாழ்ந்தவனை எட்டி உதைப்பதும், அதிகாரம் மிக்கவனின் காலை நக்கி பிழைப்பதும்தான் ஜனநாயகம்!!
“யாத்திரிகன் க்ருபயா க்யான் தீஜியே, காடி நம்பர் …” ரயில்வேயின் இந்த இந்தி மொழி அறிவிப்பு, எப்போதும் இல்லாத ஒரு பதட்டத்தை இம்முறை ஏற்படுத்தியது.
காரணம், புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் ஒரு பகல் நேர பயணம் செல்ல வேண்டியிருந்தது.
“ரயில் வட மாநிலத்தில் இருந்து வருவதால் பெரும்பாலும் இந்திக்காரங்கதான் வருவாங்க. உனக்கு மொழி புரியாது. பிஸ்கெட் குடுத்தாங்க, சாக்லேட் குடுத்தாங்கன்னு வாங்கக் கூடாது. குழந்தைய பத்திரமா பாத்துக்கனும்…….” வீட்டில் சொன்ன எச்சரிக்கையால் மனதுக்குள் பதட்டம் என்றாலும் முகத்தில் வெளிக்காட்டாமல் ரயிலேறினேன்.
இருக்கை இருக்கும் இடம் வரும் வரை ரயிலுக்குள் எந்த தமிழ் வார்த்தையும் காதில் விழவில்லை. என் எதிர் இருக்கையில் முப்பது வயது மதிக்கத்தக்க பெண்னை பார்த்ததும் மனதுக்குள் பரவசம். நம் பக்கத்து கிராமத்து முகமாக இருந்ததால் ஏற்பட்ட பரவசம். “நீங்க எங்க போறிங்க” என கேட்டு உறுதிபடுத்திக் கொள்ளலாம் என்றால் அதற்கே வாய்ப்பில்லை என அந்தப் பெண் ஏதோ போட்டித் தேர்வுக்காக தீவிரமாக படித்தபடி குனிந்த தலை நிமிராமல் இருந்தாள்.
பக்கவாட்டு இருக்கையில் நடுத்தர வயதைக் கடந்த இந்திக்கார கணவன் மனைவி. மற்ற இருக்கைகளில் ஆளில்லை. ஆட்கள் இன்னும் வரவில்லையா? அல்லது இதர இந்திக்காரர்கள் தண்ணீர் பிடிக்க உணவு வாங்க இறங்கி இருப்பார்களா? யோசனையோடு அடுத்து வருபவர் தமிழாக இருக்கவேண்டுமென காத்திருந்தேன்.
அடுத்து அறுபது வயதைக் கடந்த ஒரு பெரியம்மா வந்தார். படித்த நகரத்து முகச்சாயல், வாட்டசாட்டமான உருவம், வடநாட்டு கலர் தோற்றத்தை வைத்து புரிந்து கொள்ள முடியவில்லை. “நீங்க எங்க போறீங்கன்னு கேட்டா, “பேட்டா தமிழ் நஹி மாலும்” இப்படி ஏதாவது சொல்லிவிட்டால்? பிறகு தானாகவே தெரிந்து கொள்ளும் வாய்ப்பு வருமென்று, வாயிலிருந்த வார்த்தைய தொண்டைக் குழிக்குள் புதைத்து விட்டேன்.
அடுத்து நாலைந்து இந்தி மொழி ஆண்கள் வந்தாங்க. வந்தவங்க குருப் 1 பொண்ணுகிட்ட “இது எங்க இருக்கை” என்றனர் இந்தியில். அந்த பொண்ணு எதுவும் பேசாமல் செல் பேசியில் இருக்கும் டிக்கெட்டை எடுத்து காட்டினாள். “எங்க போன்லையும் இதே நம்பர்தான் காட்டுது இது எங்க இருக்கைதான்” என்று அவர்களும் போனைக் காட்ட சலசலப்பு ஏற்பட்டது.
“கொங்கு தமிழ்ல பேசினாலே குழம்பி போயிடுவோம் இதுல இந்தி வேறா. நல்ல வேளை இந்த பிரச்சனை நமக்கு வரல.” என்று பெருமூச்சு விட்டேன்.
“அய்யய்யோ உங்களுக்கு இங்கிலீஸ் தெரியாதா? எனக்கு இந்தி தெரியாது. வீட்டுக்காரர் ரிசர்வேசன் செஞ்சுட்டு அவரு வரல. டிக்கெட்ட கேன்சலும் பண்ணல. எனக்கு ரெண்டு சீட்டு இருக்கு.” என்றார் அந்த பெண். இடையில் புகுந்தார் அருகில் இருந்த பெரியம்மா. தமிழிலும் இந்தியிலும் மாறி மாறி பேசி பிரச்சனையை தீர்த்து வைத்தார்.
இந்திக்காரர்கள் மொத்தம் 68 இருக்கை பதிவு செய்ததால் வந்த குழப்பம் என்பதை பிறகு தமிழில் தெளிவாக விளக்கினார்.
“நன்றிம்மா, ரெண்டு மொழியும் தரவா பேசறீங்க எது உங்க மொழி எது கத்துகிட்ட மொழி“ என்று வினா எழுப்பினார் போட்டித் தேர்வு பெண்.
தன் கணவரின் இராணுவ பணிக்காக பீகாரில் பல வருடம் வாழ்ந்த அனுபவம், அதன் வழி இந்தி கற்றதை பகிர்ந்து கொண்டார், அந்த அம்மா. அனுபவ நினைவுகளோடு ஆழமாகச் செல்வதற்குள் கணவன் மனைவி இரு குழந்தைகளுடன் ஒரு முஸ்லீம் குடும்பத்தினர் எங்கள் பெட்டிக்கு வந்தனர்.
குழந்தைகளுடன் அவர்கள் அமர்ந்ததைப் பார்த்ததும் நம் குழந்தைக்கு விளையாட ஆள் கிடைத்த சந்தோசம் எனக்கு. ஆனால், வந்தவர்கள் இது நமது இருக்கை என்ற உரிமையுடன் உட்கார்ந்ததாகத் தோன்றவில்லை. அதனால் “உங்க சீட்டு நம்பர் எத்தனங்க” என்றேன்.
“தக்கல்ல ட்ரைபண்ணேன் கிடைக்கல. அவசியமா ஒரு விசேசத்துக்கு போகனும் ஓப்பன் டிக்கெட்டு எடுத்து அன்ரிசர்வுல ஏறிட்டேன். விடுமுறை அதிலும் பள்ளி விடுமுறை வேற… கூட்டத்துல குழந்தைங்கள வச்சுகிட்டு நிக்க கூட முடியல. டீடியாரு வந்தா சொல்லிக்கலான்னு வந்துட்டேன். கைக்கொழந்தைய வச்சுட்டு இவங்களுக்கு (மனைவி) உட்கார எடம் கிடைச்சா போதும். நானு வாசப்படி பக்கம் நின்னுப்பேன்” என்று தயங்கியபடி பேசினார் அந்த முஸ்லீம் நண்பர்.
“அய்யோ பாவமே! நீங்க உக்காருங்க பாத்துக்கலாம்” நம்பிக்கை ஊட்டினார் பெரியம்மா. “எங்கிட்ட ஒரு சீட்டு சும்மாதான் இருக்கு அதை நீங்க எடுத்துக்கலாம் கவலைப்படாதீங்க” ஆறுதல் சொன்னாள் போட்டித் தேர்வு பெண். “வாடா மேல் சீட்டுக்கு போவோம்” என் குழந்தையை கூப்பிட்டான் அப்துல்லா என்ற அந்தக் குழந்தை. இரண்டு மணிநேர இடைவெளிக்குள் எஸ் 5 ரயில் பெட்டி இனிதே ஒரு கூட்டுக் குடும்பமானது.
காலை உணவு சாப்பிட நினைத்தேன். “எனக்கு நம்ம சாப்பாடு வேண்டாம்” என் குழந்தை வழக்கம் போல் அடம் பிடித்தது. கணப்பொழுதில் இட்லி, சப்பாத்தி, லெமன் சாதம் என்று அணைவர் பையிலிருந்த உணவும் வெளி வந்தது. “இதை சாப்பிடு தம்பி” என என் குழந்தைக்கு உபசரிப்பு பலமானது. போட்டித் தேர்வு பெண் கொண்டு வந்த லெமன் சாதத்துக்கு என் குழந்தை முன்னுரிமை தந்தது.
அனைவரும் என் குழந்தையை தம்பி என்றும் வாடா போடா என்றும் கூப்பிட்டார்கள். ஒரு கட்டத்தில் “இது பொம்பளப் பிள்ளை” என்று சொல்ல வேண்டிய தேவை வந்தது. எங்க போனாலும் இது ஒரு பிரச்சினை எனக்கு!
“நெசமாவா சொல்றீங்க.” “அட அப்டியா” ஆளுக்கொரு விதமாக வியப்பை வெளிக் காட்டினர். “காதுல கழுத்துல எதுவுமில்லை. பையன் மாதிரி கிராப்பு வெட்டி ஃபேண்ட் சட்டை போட்ருக்கு. பொட்டு கூட இல்ல. பேரும் ஆணா பெண்ணான்னு தெரியல. எத வச்சு நாங்க பொம்பளன்னு நெனைக்க முடியும்” சந்தோசம் கலந்த ஆச்சர்ய வினா அனைவருக்கும்.
குறைவாகப் பேசி படிப்பில் அதிக கவனமாக இருந்த போட்டி தேர்வுக்கு ஆச்சர்யம் கொஞ்சம் கூடுதலாக இருந்தது. “ குழந்தையோட பேரு ஒரு மாரியாருக்கே! திராவிடம் பேசுவாங்களே, அவங்களா நீங்க” என்றாள். “நாங்க திராவிட இனம்தான் ஆனால் சர்வதேசியவாதி அதனால வெளிநாட்டு பேரு வச்சோம்” என்றேன். “தப்பா எடுத்துக்காதிங்க அவங்கதான் இப்படி திராவிடமணி திராவிச்சுடர்னு புதுசா புதுசா ஏதோ பேரு வைப்பாங்க” என்றாள்.
“பெரியாரு திராவிடம் பேசினாரு. அதனால தி.க.–காரவங்க இது போல தமிழ்ல பேரு வைப்பாங்க. இவங்க வேற ஏதோ பேரு வச்சுருக்காங்க.” என்றார் பெரியம்மா. “பெரியாரு, திராவிடம், தமிழ் எப்படிம்மா உங்களுக்கு அறிமுகம்!” என்றேன்.
தந்தை பெரியார் காலத்தில் இயக்க வேலைகள் செய்தவராம் அவர் மாமனார். அவருக்கு தஞ்சை சொந்த ஊராம். “பெரியார் கூடல்லாம் எங்க மாமனார் இருந்துருக்காரு” என்பதை பெருமையாகச் சொன்னார்.
“நான் கல்யாணமாயி வந்த புதுசில சாமிக்கி விளக்குப் போட்டேன்னா இந்த எண்ணெய ரெண்டு நாளைக்கி தாளிக்கலாம்பாரு. அதிகாலையில கோலம் போட்டேன்னா, லட்சுமி வராது ஜலதோசம்தான் வரும்பாரு. எனக்கு அழுகதான் வரும். ஆனா, எங்க வீட்டுக்காரு செத்து 12 வருசமாச்சு இன்னமும் என் நெத்தி பொட்ட அழிக்காம இருக்கேன்னா எங்க மாமனாரு தான் காரணம்.” ஆர்வத்துடன் கேட்கும் போது “ஐ.டி.கார்டு குடுங்க” என்றார் கரகரப்பான குரலில் டீடியார்.
பவ்யமாக எழுந்த முஸ்லீம் நண்பரை குறுக்கு விசாரணை செய்தார். மூணு மணி நேரமா இந்த பெட்டியில பயணம் செய்ததே தவறு என கண்டித்தார். அபராதம் கட்ட நேரும் என்றார். பிறகு காத்திருங்கள் பார்க்கலாம் என இறங்கினார். இறுதியாக “லேடிஸ் இருக்கட்டும் நீங்க பாத்ரூம் பக்கம் நின்னுக்கங்க” என்று அனுசரணையாக பேசினார்.
டிக்கெட் பரிசோதகர் அடுத்த பெட்டிக்கு போனதும் மீண்டும் சபை கூடியது. முஸ்லீம் நண்பர் அனைவருக்கும் கொய்யாபழம் வாங்கி கொடுத்தார். “அப்பா நானும் இவனும் மேல போயி படுத்துக்கட்டுமா” என்றான் அப்துல்லா. “டேய் தம்பி இது பொம்பள பிள்ள……” இடைமறித்தார் அவனது தந்தை. பிறகு “பையன்னு அவன் மனசுல பதிஞ்சிருச்சு. அப்பிடியே இருக்கட்டும் குழந்தைங்கதானே” என்றார்.
“நீங்க பேசுறத பாத்தா கம்யூனிஸ்டு போலத் தெரியுது” என்றார் முஸ்லீம் நண்பர்.
நான் வாய்திறக்ககும் முன் “கம்யூனிஸ்டு திராவிடம் என்ன வித்தியாசம்” வினவினார் போட்டித் தேர்வு. “கம்யூனிஸ்டுன்னா எல்லாம் பொதுவுடமையா இருக்கனும்பாங்க” என்று விளக்கம் கொடுத்தார் அப்துல்லாவின் தந்தை.
அதிர்ச்சியானாள் போட்டித் தேர்வு. “அப்ப எங்க வருமான வரி டிப்பார்ட்மெண்ட்டே இருக்காதே. என்னோட வேலைக்கி உலை வைக்கிறவங்களா நீங்க”. வானம் பார்த்த பூமியான புதுக்கோட்டை பகுதி கிராமத்தில் பிறந்து அரசு பள்ளியில் படித்து மாடு மேய்க்கும் இடத்தில் கூட குருப்-2 வுக்கு படித்து வாங்கிய வேலையாம் அவளுக்கு. பதட்டம் இருக்கத்தானே செய்யும்.
“கம்யூனிஸ்ட்டு ஆட்சிக்கு வந்தா உங்க திறமைக்கி இதவிட நல்ல வேலை தருவாங்க” என்றதைக் கேட்டதும் வெட்கப்பட்டு சிரித்தாள்.
இப்படியாக பயணம் மாலை பொழுதை நெருங்கி விட்டது. சுவாரஸ்யமான பேச்சுக்கு நடுவில் இந்திக்கார தம்பதிகள் சாப்பாடு என்னை ஈர்த்தது. “இந்திக்காரங்க சாப்பாடு கலர்ஃபுல்லா இருக்கே எப்படிம்மா” பெரியம்மாவிடம் கேள்வி தொடங்கியது.
“நம்ம ஊர்ல சாப்பாட்டுக்கு நெல்லு மூட்ட மூட்டையா வச்சுருக்காப்போல அவங்க உருளைக்கிழங்கும் வெங்காயமும் மூட்டையா எறக்குவாங்க. சத்துமாவு, கோதுமைமாவு, உருளை, வெங்காயம் இதை சுத்திதான் சாப்பாடு இருக்கும். பொரிக்கிறது வறுக்குறதுன்னு பெரும்பாலும் எண்ணையில முக்கித்தான் சாப்பிடுவாங்க. சமோசா செய்வாங்க பாருங்க…..”
இடையில் “சாயா டீ, சாயா டீ” என்ற விற்பனை சத்தம் சமோசா கதையை பாதியில் நிறுத்தியது.
“டீ வேணுமாம்மா” பெரியம்மா குரல் போட்டித் தேர்வு பெண்ணின் காதில் விழவில்லை. “என்ன யோசனை” மீண்டும் உசிப்பினார்.
“வேலைக்காக 8 மாத குழந்தையை கிராமத்துல மாமியார்ட்ட விட்டுட்டு நானும் கணவரும் 500 மைலுக்கு அந்தண்ட இருக்கோம். நாளைக்கி ஒரு தேர்வு எழுத ஊருக்கு போறேன். நானு வீடு போறதுக்குள்ள ராத்திரி ஆகிடும் எம்பிள்ள தூங்கிருவான். காலையில நான் கிளம்பும் போதும் தூங்குவான் நான் வந்ததே அவனுக்குத் தெரியாது” அவள் மட்டுமல்ல அனைவரும் கலங்கினர்.
“வருந்தாதம்மா! போன் பண்ணு, இப்பயே குழந்தைய நல்லா தொட்டியில போட்டு ஆட்டி தூங்க வைக்கச் சொல்லு. ரெண்டு மணி நேரத்துல நீ போயிடுவெ அப்ப முழுச்சுரப் போறான். ஆசைதீர நீனும் ஒம்மகனும் விளையாடுங்க” பெரியம்மா சொன்ன ஆறுதலால் கலங்கிய முகமனைத்திலும் புன்முறுவல்.
அந்த பகல்நேரப் பயணத்திலிருந்து எனக்கு விடைபெறும் நேரம் வந்து விட்டது. என் குழந்தை அப்துல்லாவிடம் விசேசமாக விடைபெற்றாள். போட்டித் தேர்வு பெண்ணிடம் அடுத்த முறை வரும் போது இதே மாறி நிறைய லெமன் சாதம் எடுத்துனு வரணும் என்றாள். பெட்டியில் அனைவரும் சிரித்தார்கள்.
இப்படி ஒரு சங்கமச் சிரிப்பு தமிழகத்தில் மட்டுமே இருக்குமோ என்னமோ ?
தொழிலாளர்கள் தொழிலாளிகளின் பிரச்சனைகளைப் பற்றி மட்டும் பேச வேண்டும், கட்சிகளைப் பற்றியும் மதங்களைப் பற்றியும் பேசத் தேவையில்லை என்ற கருத்து சரிதானா? தொழிலாளர் வர்க்க அரசியல் என்பது எது? தொழிற்சங்கத்தில் அரசியல் கட்சிகளையும் பிற்போக்கு சக்திகளையும் பற்றிப் பேசினால் ஒற்றுமையும், நோக்கமும் சீர்குலைந்து விடும் என்பது எவ்வளவு உண்மை? தொழிலாளர் வர்க்க இயக்கத்தில் இந்த விஷயங்களில் அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்று இருக்க முடியுமா?
» தொழிலாளி வர்க்கத்துக்கு என்று ஒரு அரசியல் இருக்கிறதா?
இந்தக் கேள்விகளை பரிசீலிப்போம்.
» தொழிலாளர்களுக்கான பொதுவான பிரச்சினைகள் என்ன?
• வேலையை விட்டு அனுப்பப்படுதல்
• ரேட்டிங் குறைத்து போட்டு சம்பள வெட்டு முதலான பணியிட அச்சுறுத்தல்கள்
• அதிக நேரம் வேலை வாங்குதல், வீட்டில் போயும் வேலை செய்ய வேண்டியிருப்பது, விடுமுறை நாட்களிலும் அலுவலகம் அழைப்பது
இவைகளைத்தான் பெரும்பாலானோர் பிரச்சினைகளாக பார்க்கின்றனர். மற்றொரு பக்கம் இந்தப் பிரச்சனைகளுக்கு எதிராக போராடுவதற்கான உரிமைகள் பறிக்கப்படுவது பற்றி பெரும்பாலானோர் அக்கறை செலுத்துவதில்லை. இதிலிருந்து நமது விடையை துவங்குவோம்.
மேலே சொன்ன பிரச்சினைகளுக்கெல்லாம் யார் காரணம் என்று தொழிலாளிகளிடம் கேட்டால் பெரும்பாலானோர் தங்களுக்கு மேலே இருக்கும் உயரதிகாரியை கையை காட்டுவார்கள். மேலோட்டமாக பார்க்கும் பொழுது இது உண்மை போலத் தோன்றும். ஆனால், இது உண்மை அல்ல. தொழிலாளர்களின் உடனடி உயர் அதிகாரிகளின் பங்கு என்பது மிகமிக சொற்பமானது தான்.
உதாரணமாக, நமது வீட்டின் அருகில் இருக்கும் ஒரு மளிகைக் கடையை பார்ப்போம். அதன் உரிமையாளர் தனது பிள்ளைகளை படிக்க வைப்பதற்காக திட்டமிடுவார். அடுத்த ஆண்டு கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்பதற்காக முன்னரே பணம் சேர்க்க ஆரம்பித்து விடுவார். பொருட்களை வாங்குமிடத்தில் அடித்துப் பேசி விலையை குறைத்து வாங்குவார். விற்கும் இடத்தில் ஏற்கனவே விற்பனை செய்த விலையை விட கொஞ்சம் அதிகப்படுத்துவார். வேலை நேரத்தை அதிகம் ஆக்குவார். செலவினங்களை குறைக்க முயற்சி செய்வார். இதிலெல்லாம் போதவில்லை என்றால் கடனாக வாங்குவார். அதற்காக ஒரு திட்டமிட்டு இயங்கத் துவங்குகிறார். அவரது கடையில் வேலை செய்யும் உதவியாளர்களை இன்னும் தீவிரமாக, இன்னும் அதிக நேரம் உழைக்க வைப்பார்.
அதுபோலவே பெருநிறுவனங்களும் தங்களுக்கான ஒரு திட்டம் தீட்டுகின்றன. உயர் அதிகாரிகளுக்கான ஊதியம், போனஸ், பங்குதாரர்களுக்கு பங்கு ஈவுத்தொகை, புதிய முதலீடு, போட்டி நிறுவனத்தை முந்துவது, புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பது என்று ஒரு திட்டம் இருக்கும். அதற்கு ஏற்றாற்போல ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் ஒரு திட்டம் போடுவார்கள். அந்தத் திட்டம்தான் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் வாழ்க்கையை அல்லது தலையெழுத்தை முடிவு செய்யும் ‘பிரம்மச் சுவடி’.
மளிகைக்கடை நடத்துபவர் தனது உடலை வருத்தி உழைப்பை அதிகமாக்குவதை, தனது செலவினங்களைக் குறைப்பதை முதன்மைப்படுத்துவார். பெருநிறுவனங்களின் உயரதிகாரிகளோ, முதலாளிகளோ தங்களை வருத்துவது, தமது செலவினங்களைக் குறைப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மாறாக ஊழியர்களைக் குறைப்பது, குறைந்த விலைக்கு புதிய புராஜெக்டுகள் எடுப்பது, அதற்காக செலவினங்களைக் குறைப்பது என்று தனது ஊழியர்களின் தலையில்தான் கைவைப்பார். இதற்கென்றே பிரத்யேகமாக, கௌரவமான பெயரில் “காஸ்ட் கட்டிங்” என்று ஒரு டீமையும் நியமித்து கட்டளையிடுவார். இந்தக் கட்டளைதான் தொழிலாளிகளின் தலையெழுத்தாக எழுதப்படுகிறது. தொழிலாளிகள் இவற்றை எதிர்க்காத வரையில் எந்தத் தடையுமின்றி முதலாளிகள் சுரண்டுவார்கள்.
பெரும்பாலானோர் தனிப்பட்ட முறையில் தாங்கள் பாதிக்கப்பட்ட பிறகுதான் சங்கத்தை அணுகுகிறார்கள். ஐ.டி துறையில் அவ்வாறு தொழிற்சங்கமாக அணிதிரள்வது கூட கடந்த ஒரு சில ஆண்டுகளில்தான் தொடங்கியிருக்கிறது.
இந்தக் கட்டத்தைத் தாண்டி பல ஆயிரம் ஊழியர்கள் சங்கமாக திரண்டவுடன் என்ன நடக்கும்? இது பிற துறைகளில் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது.
தொழிலாளிகள் பரவலாக சங்கமாக திரண்டு எதிர்க்கத் துவங்கியவுடன் முதலாளிகள் தங்களது மறுபக்கத்தை காட்டுவார்கள். தொழிலாளர் சட்டங்களையே திருத்த வைப்பார்கள். தமக்கு சேவை செய்யும், தம்மிடம் நிதி வாங்கி பிழைக்கும் அரசியல் கட்சிகள் வழியாகச் அதைச் செய்வார்கள்.
நமது நாட்டைப் பொறுத்தவரை பணியிலிருக்கும் கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பது, அதிகாரிகளை விலைக்கு வாங்குவது, ஓய்வுபெற்ற அதிகாரிகளை பதவிகளில் அமர்த்தி சட்டத்திலிருக்கும் ஓட்டைக்கு ஏற்ப விதிகளை வகுப்பது, மிரட்டுவது என்று கார்ப்பரேட்டுகள் அரசு எந்திரத்தை ஆட்டிப் படைக்கிறார்கள். அடுத்தகட்டமாக உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகளின் ஆலோசனைக்கிணங்க ஆளும் கட்சியின் உதவியுடன் புதிய சட்டங்களையே இயற்றுகிறார்கள், பழைய சட்டங்களைத் தமக்கு சாதகமாகத் திருத்துகிறார்கள். அவற்றுக்கு உதாரணம்தான் தற்போது நாம் பார்க்கும் NEEM, FTE போன்றவற்றுக்கான சட்ட திருத்தங்கள்.
இத்தகைய சட்டத் திருத்தங்கள் மூலம் தற்போது நாம் நிறுவனங்களுக்கு உள்ளே அனுபவிக்கும் சட்டவிரோதமான பிரச்சினைகள் வெளியிலிருந்து சட்டப்பூர்வமாக்கப் படுகின்றது.
இதில் நீதிமன்றங்கள் எப்படி தலையிடுகின்றன. ஒரு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி இவ்வாறு சொல்கிறார், “போராட்டங்கள் நடத்தினால் அந்நிய முதலீட்டாளர்கள் எவ்வாறு வருவார்கள்? வேலைவாய்ப்பு எவ்வாறு உருவாகும்” என்று. அதாவது சொந்த நாட்டு தொழிலாளர்களின் வாழ்க்கைப் பிரச்சினையை விட அந்நிய முதலீட்டாளர்கள் ஓடிவிடுவார்கள் என்பதுதான் நீதிமன்றத்தின் கவலையாகவும் உள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்கும் போது கார்ப்பரேட் கட்சிகளைப்பற்றி, அதிகார துஷ் பிரயோகங்கள், லஞ்ச லாவண்யங்கள், நீதித்துறை ஊழல்கள் பற்றியெல்லாம் பேசக்கூடாது என்பது நமது பிரச்சினைக்கான பிறப்பிடத்தை காணக் கூடாது என்று சொல்வதாகாதா? எனவே, நமது பணியிடங்களில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் உள்ளுக்குள்ளேயே மட்டும் உருவாகி வளர்ந்து வருவதல்ல, அரசின் உதவியுடன் வெளியிலிருந்தும் திணிக்கப்படுகிறது. எனவே கட்சிகள், அதிகாரிகள், நீதிமன்றம் உள்ளிட்டவைகள் பற்றியும் நாம் பேசியாக வேண்டும். அது தவிர்க்கவே முடியாதது.
இதை ஏற்றுக்கொள்பவர்கள் கூட மதங்கள், சாதிகள் பற்றி பேசுவது தேவையில்லை என்று நினைக்கிறார்கள்.
மக்கள் கோவில் குளங்களுக்குச் செல்வது நீண்டகால பழக்கவழக்கமாக உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் பிரச்சினைகளை கொட்டும் இடமாக கோவில்கள் இருக்கின்றன. அவ்வாறு சென்று பிரச்சினைகளைக் கொட்டுவது தனிப்பட்ட முறையில் கொஞ்சம் மனநிம்மதியை தருவதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பாருங்கள் பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டேதான் வந்துள்ளது. இது என் நம்பிக்கை என்று கூறுபவர்கள் உங்களது நம்பிக்கையை கொஞ்சம் உண்மையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். நாம் அனுபவிக்கும் சமூகநலத் திட்டங்கள் எதுவும் எந்தக் கோவில் வழிபாட்டாலும் வந்தவையல்ல. அனைத்தும் போராட்டங்களின் ஊடாக வந்தவைதான். தொழிற்சங்க சட்டங்கள் கூட பல ஆயிரம் தொழிலாளிகள் போராடியதால் வந்ததுதான். அதுபோல நாம் ஒற்றுமையாக போராடினால் வெற்றிபெற முடியும் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
நமது நாட்டைப் பொறுத்தவரையில் ஒற்றுமை என்பது இன்னமும் மோசமானதாக உள்ளது. கோவிலுக்குச் செல்வது மட்டுமல்ல, ஜோசியம் பார்ப்பது, விரதமிருப்பது, மொட்டையடிப்பது என்று மூடப்பழக்க வழக்கங்கள் அதிகமாக உள்ளது. நம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும் பிரச்சினையை ஒற்றுமையாக எதிர்கொள்வதை தடுத்து தனித்தனியாக செல்லச் செய்கிறது.
நமது நாடு முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளிகளது பி.எஃப். பணத்தைப் பற்றி மத்திய அரசு தொழிலாளர் விரோத முடிவெடுத்த சமயம் அதை முறியடித்து நமக்கும் சேர்த்துப் போராடியது பெங்களூர் ஆயத்த ஆடைத் தொழிலாளிகள் தான். ஆனால், நாம் அவர்களை மறந்துவிட்டு கோவில்குளங்களுக்குச் செல்கிறோம். இதுபோன்ற ஒற்றுமையின்மையை மதங்களும் சாதிகளும் மூடப்பழக்கங்களும் உருவாக்கி வளர்த்துவருகிறது.
முதலாளிகளைக் கவனியுங்கள், அவர்களுக்குள் ஏராளமான ஏற்றத்தாழ்வுகள், போட்டிகள், மத நம்பிக்கைகள் இருந்தாலும் அதை எல்லாம் நம்பி இருந்துவிடுவதில்லை. ஒடுக்கவும், சுரண்டவும் ஒன்றாக நிற்கிறார்கள், கூட்டமைப்புகள் ஏற்படுத்திக் கொள்கிறார்கள், உலகளாவிய முதலாளிகளுடன் இணைந்து மாநாடுகள் நடத்துகிறார்கள், அரசுகளை தங்களது நலனுக்கு ஏற்ற கொள்கைகளை அமல்படுத்த பணியவைக்கிறார்கள்.
தொழிலாளிகள் அனைவருக்குமான பொதுவான பிரச்சினைகளை எதிர்கொள்ள தடையாய் இருக்கும் எதையும் புரிந்துகொள்ளாதவரை தொழிலாளிகள் மேலும் மேலும் சுரண்டப்படுவது மட்டுமல்ல, இருக்கும் கொஞ்சநஞ்ச உரிமைகளையும் பறிகொடுத்துக்கொண்டேதான் இருப்போம்.
“அதெல்லாம் சும்மா சொல்லாதீங்க, நீங்களும் எவ்வளவோ பேராட்டங்களை நடத்துகிறீர்கள். ஆனால், என்ன மாற்றத்தைக் கொண்டுவந்துவிட்டீர்கள்?” என்று சிலர் நினைக்கலாம். உண்மைதான், பெரிதாக எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லைதான். ஏன் முடியவில்லை? என்று சிந்தியுங்கள்.
தைப்பூசம், அழகர் ஆத்துல இறங்குவது, புத்தாண்டு கிறிஸ்துமஸ் காலங்களில் சர்ச்சில், பக்ரீத் போன்ற பண்டிகைகளின் போது மசூதிகளில் இருக்கும் கூட்டத்தைப் பாருங்கள். அதேநேரம் நமது வாழ்க்கையையும் எதிர்கால சந்ததியினரையும், சுற்றுச் சூழலையும் பாதிக்கும் பிரச்சினைகளுக்கான போராட்டங்களைப் பாருங்கள். அங்கு கூடுவோர் யாரும் என்ன சாதித்துவிட்டோம் என்று கேட்டுக்கொண்டு நிற்பதில்லை. மாறாக, கோவில் குளங்களில் தஞ்சம் புகுந்தவர்கள்தான் என்ன சாதித்துவிட்டீர்கள் என்று கேட்கிறார்கள். இதற்கு வெட்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு சங்கத்தையும் நடத்துபவர்கள், வெகு சிலர்தான். அவர்களுக்குத் தோள்கொடுக்கக் கூடத் தயங்குவதும், நமக்கு ஏதாவது தேவை வந்தால் சென்று ஒட்டிக்கொள்ளலாம் என்றும் நினைப்பது எந்தவிதத்தில் நியாயம். “அய்யோ அப்படியெல்லாம் இல்லை, நிறைய வேலை இருக்கிறது, நேரமே இல்லை”யென்று ஓர் சப்பைக் கட்டு கட்டலாம். பாவம், பொது விசயங்களுக்காக களத்திலிறங்கி பணியாற்றுபவர்களுக்கு குடும்பமோ, வேறு வேலையோ இல்லையா என்ன? போராடிவிட்டு ஏ.சி. ஓட்டலில் ரூம் எடுத்து ஓய்வெடுக்கச் சென்றுவிடுவார்கள் என்று நினைத்தால் அது உங்கள் தவறு. அவர்களுக்கு இருக்கும் நேரம் உங்களுக்கு இல்லை என்றால் அனைவருக்கும் 24 மணி நேரம் தான் என்பதை கொஞ்சம் சிந்திச்சுப் பாருங்கள்.
ஆகவே, நாம் பேசாமல் மௌனமாயிருந்தால், விலகிச் சென்றால் விட்டு ஒதுங்கிவிடாது எதார்த்தம். மேலும் மேலும் படுத்தி எடுத்துவிடும். அதை எதிர்த்து முறியடிப்பதில்தான் மனித இனத்தின் தனிச்சிறப்பே அடங்கியுள்ளது. ஒற்றுமைக்குத் தடையாய் இருக்கும் எதையும் உடைத்தெறியாதவரை விடிவில்லை.
அலகாபாத் கும்பமேளா : நாகா சாமியார் என்ற பெயரில் நிர்வாண ஆசாமிகள் ! சனாதன தர்மத்தைக் காக்க சிரத்தை வெட்டவும் தயார் !
அலகாபாத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் இந்தியா முழுவதும் உள்ள நிர்வாண சாமியார்கள் குழுமியிருக்கிறார்கள். இவர்களுக்கென கங்கைக் கரையில் பல ஏக்கரில் இடம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது. யமுனை ஆற்றின் புதிய பாலத்தில் தொடங்கி கங்கையின் சாஸ்திரி பாலம், ரயில்வே பாலம் அதனையும் தாண்டி சில கிலோ மீட்டருக்கு இவர்களுக்காகவே குடில்கள் உள்ளன. இந்த கரைகளில் தங்கும் இடங்கள், கடைகள் என பல இருந்தாலும் 60% இடம் இந்த சாமியார்களுக்குத்தான். இதில் கார்ப்பரேட் சாமியார்களும் உண்டு.
அனைத்தையும் “துறந்த நிர்வாண” சாமியார்கள்தான் என்றாலும் புதிய புதிய பெயர்களில், கெட்டப்புகளில் வந்து குவிந்திருக்கிறார்கள். யாரேனும் ஒரு சாமியார் பெயரைச் சொல்லி அங்கு காவலுக்கு இருக்கும் போலீசிடம் கேட்டால், “இங்கு மொத்தம் 22 செக்டார் உள்ளது. நீங்கள் கேட்கும் சாமியார் எந்த செக்டார்” என்று நம்மையே திருப்பி கேட்கிறார்கள். அந்தளவிற்கு ஆயிரக்கணக்கில் வந்து குவிந்திருக்கிறார்கள்.
1 of 2
அங்கிருக்கும் பொதுமக்களைக் கேட்டால், “பொதுவாக காசி, வாரணாசிக்கெல்லாம் கூட போயிருக்கோம், ஆனா அங்கெல்லாம் இவ்ளோ சாமியார்களை பார்த்ததில்ல. இவங்கலெல்லாம் யார் எங்கிருந்து வந்திருக்காங்க.. உண்மையான சாமியார்களா இல்லையான்னுகூட தெரியவில்லை” என்று ஆச்சரியத்தோடு சொல்கிறார்கள்.
ஓரளவிற்கு முற்போக்கு பேசக்கூடிய தமிழகத்திலேயே நித்தி, ஜக்கி போன்ற சாமியார்களின் அட்டூழியம் தாங்க முடியவில்லை, எனில் வட இந்திய சாமியார்களைப் பற்றி சொல்லவா வேண்டும்? கங்கையும் யமுனையும் சர்வ நாசம்!
நிர்வாண சாமியார்கள் ஏரியாவிற்குள் நுழைந்தால் மூக்கைத் துளைக்கும் கஞ்சா வாடை. பார்க்கும் சாமியார்கள் எல்லோரும் கஞ்சா சிமிலியை வாயில் வைத்து இழுத்துக் கொண்டிருந்தார்கள். உடல் முழுவதும் எரிக்கப்பட்ட மரக்கட்டையின் சாம்பலை எடுத்துப் பூசிக்கொண்டு பார்க்கவே விகாரமாக காட்சியளித்தனர். பல சாமியார்களின் கூடாரம் பக்தர்கள் இன்றி காலியாக இருந்தன. ஒரு சில சாமியார்களிடம் பேண்ட்-சர்ட் அணிந்த நாகரீக மனிதர்கள், சாமியார்களின் முன்னே மண்டியிட்டு ஆசி வாங்கிக் கொண்டு இருந்தார்கள்.
சில சாமியார்கள் கூட்டாக அமர்ந்து எதையோ பேசிக்கொண்டு ஒரேயொரு கஞ்சா பைப்பை வைத்து கொண்டு மாற்றி மாற்றி அடித்துக் கொண்டிருந்தனர். ஒருவர், வரும் போகும் பக்தர்களை எல்லாம் அவராகவே கூப்பிட்டு ஆசி வழங்கி காசு போடச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தார். அவரிடம் ஐக்கியமானால் கஞ்சாவும் கிடைக்கும்!
வரிசையாக ஆடை இல்லாமல் நிர்வாணமாக அமர்ந்திருந்த சாமியார்களின் தோற்றமே ஒருவித பீதியை உண்டாக்கியது. அவர்களை நெருங்கவே தயக்கமாக இருந்த நிலையில், ஒரு நிர்வாண சாமியாரின் பேனரின்…… கீழ் புகையும் யாக குண்டத்தின் அருகில் காவி உடையுடன், சிக்கு பிடித்து……. அடைபடிந்த ஜடாமுடியுடன் அமர்ந்திருந்தார் ஒரு சாமியார்.
அவரிடம் அறிமுகமாகி…. இங்க இருக்க கலாச்சாரம் பத்தி எதுவும் தெரியாது. அதான் தெரிஞ்சிக்க வந்தோம் என்றதும்…… எங்களை ஒரு ஓரமாக உட்கார வைத்துவிட்டு , “என்ன தெரிஞ்சிக்கனும் கேளுங்க” என்ற தொனியில் பார்த்தார்.
“இங்கு பல பாபாக்கள் இருக்கிறார்களே, அவர்களைப் போல் நீங்களும் நாகா பாபா-வா?”
ஆம். என் பெயர் ஜமிந்தியா மெஹந்த் பாபா – லைட்டு கிரி” என்றார் கரகரத்த குரலில்.
“சனாதன தர்மத்தைக் காக்க சுக்ராச்சாரியாரால் உருவாக்கப்பட்டவர்கள் தான் நாகாக்கள். நாங்கள் சுக்ராச்சாரியர் பரம்பரையில் இருந்து வந்தவர்கள். அனைத்தையும் துறந்து வாழ்பவர்கள். கடவுள் இந்த உயிருக்காக கொடுத்த ஆடை என்பது சரீரம்… இந்த தோல் மட்டும்தான். அதற்குப்பின் இந்த சாம்பல் இவைதான் உண்மையான ஆடை. அதனால்தான் நாங்கள் உடை ஏதும் அணிவதில்லை. அதைத் தாண்டி நான் இப்போது போட்டிருக்கும் ஆடை என்பது மனிதர்களால் செய்யப்பட்டவை; அவை உண்மை இல்லை. இது போலி ஆடை” என்றார்.
“சரி உங்களைப் போல மாறுவதற்கு என்ன செய்யனும், தமிழகத்திலும்கூட மடங்கள் உள்ளது அங்கு துறவரம் மேற்கொள்ள தீக்சை தருவார்கள்…. நாகாக்களுக்கு அப்படி எதாவது இருக்கா?”
தலையசைத்துக்கொண்டே ம்ம்… நாகா சாதுவாக மாற முதலில் தேவையானது சேவைதான். குருவுக்கு செய்ய வேண்டிய சேவை; அதுதான் முதல். அதன் பின்னர் அகாடா (அகாரா) வில் தங்கி அங்கேயே இருந்து வேலைகளைச் செய்ய வேண்டும், சமைப்பது, இடத்தை சுத்தம் செய்வது, பாபாக்களுக்கு உதவி செய்வது இவற்றை செய்ய வேண்டும்.
அதன்பின்னர் பூஜைகள், யாகங்கள், ஆரத்தி போன்றவற்றுக்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். அப்போது செய்யும் சடங்குகள் இவற்றை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். அதில் ஏதும் சந்தேகங்கள் என்றால் கேட்க வேண்டும். அதையெல்லாம் சரிவர கற்றுக் கொண்டபின்னர் நாகா பாபாவாக மாற ஒரு நாற்பது, ஐம்பதாயிரம் செலவு செய்ய வேண்டும், அதன்பிறகே அவருக்கு நாகா என்ற சான்றிதழ் வழங்கப்படும்.
“என்ன..! பணம் செலவாகுமா….? சான்றிதழ்… அரசாங்கம் ஏதும் தருமா..?
“ஆமாம்! செலவு ஆகத்தான் செய்யும். அரசாங்கம் எதுவும் தராது. நாங்கள்தான் சான்றிதழ் தருகிறோம்” என்று சொல்லிவிட்டு ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தார்.
“சரி… கடவுள்தான் எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கிறார் என்கிறார்களே…. அப்புறம் ஏன் சன்னியாசம்…?”
வாயில் இருந்த புகையை வெளியேற்றிவிட்டு….. “நீங்க சொல்லுவது சரிதான், எல்லா இடத்திலும் பகவான் இருக்கிறான். ஆனால், நாம் கடவுளை அடையனும் என்றால் அதுக்கு எந்த தொந்தரவும் இருக்கக்கூடாதுன்னுதான் தனித்தனி இடம் பண்ணி வெச்சிருக்கோம்… நீங்களே சொல்லுங்க, வீட்டுல மனைவி குழந்தைகள் எல்லாம் தொந்தரவு செய்யும் போது நாம முழு மனசா கடவுளப்பத்தி நினைக்க முடியுமா?
“நீங்க எந்த வயசுல இங்க வந்து சேர்ந்தீங்க…?”
எனக்கு 12 – 13 வயசு இருக்கும் அப்ப வந்து இங்க சேர்ந்தேன். அப்புறம்தான் பாபாவா மாறினேன். எனது தாய் தந்தை அனைவரையும் பிரிந்து வந்துவிட்டேன். இங்கு எனது குருவுக்கு சேவை செய்து, அதன் பின்னர் அனைத்து சம்பிரதாயங்களும் தெரிந்து கொண்டு மாறினேன். ஒருமுறை பாபாவாக மாறிய பின் எங்களுக்கு இந்த உலகத்துடன் எந்த பந்தமும் இல்லை. எங்களுக்கு எந்த சுகமும் – துக்கமும் இல்லை. சொல்லப் போனால் துக்கம் மட்டும்தான். எங்கள் வாழ்க்கையில் கடவுளை அடைவது மட்டும்தான் சுகம்.
“நீங்க உங்க வாழ்க்கையில இவ்ளோ கஷ்டப்படுறீங்க, பல கார்ப்பரேட் சாமியார்கள் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பாபாராம்தேவ்லாம் சொத்து சுகமுன்னு இருக்கிறாங்களே… இவங்கள பத்தி என்ன நினைக்கிறீங்க…?
ம்ஹும்…. பெரிய பெரிய பாபாக்கள்-ன்னு சொல்லுறாங்களே அவங்க எல்லாம் ஏமாத்து பேர்வழிகள், குண்டர்கள், லுச்சா பசங்க இப்படி வச்சி இருக்கானுங்களே அது எப்புடி சரியா இருக்கும்..? இப்ப வந்து ஒருத்தன் என்கிட்ட பணம் கொடுத்து தப்பு செய்யச் சொன்னா அவன்கிட்ட வாங்க மாட்டேன். அடிச்சி துரத்துவேன். நாங்க யாருக்கும் பயப்பட மாட்டோம்.
ஒரு ஏளனமான சிரிப்பை உதிர்த்துவிட்டு….. “போலீசா.. எங்கள யாரும் எதுவும் செய்ய முடியாது.. நாங்க யாருக்கும் கட்டுப்பட மாட்டோம். எந்த பயமும் எங்களுக்கு கிடையாது. எல்லா இடத்துக்கும் போவோம், திரிசூலம், தல்வார் (வாள்) இது எல்லாம் அக்காடாவுல இருக்கும். யாரும் எங்ககிட்ட பிரச்சினைக்கு வரமாட்டார்கள். எந்த கேசும் எங்க மேல போட முடியாது.
1 of 2
“ஓ.. நாகா பாபாவுக்கு இவ்வளவு செல்வாக்கா.. யார் வேணுமுன்னாலும் பாபா-வா மாறமுடியுமா? அதுக்கு வயசு ஏதாவது தடை இருக்கா…?”
அதெல்லாம் கிடையாது.. யார் வேணுமுன்னாலும் ஆகலாம். சின்ன வயசுல இருந்து சாகற வயசுல இருக்குறவங்க வரைக்கும், பாபா-வாக மாற முடியும்.
“சரி எல்லா சாதியும் ஆகமுடியுமா…?”
ஆம்! பிராமண, சத்ரிய, பனியா (வைசியர்கள்) என யார் வேண்டுமானாலும் ஆகலாம் எல்லா சாதியினரும் இங்க அகாடாவுல இருக்காங்க எல்லா சாதிகளும் நாகாவா மாறலாம். ஆனா, ஹரிஜன் (தலித்துக்கள்) மட்டும் பாபா – வா மாறமுடியாது.
“அப்படின்னா பிராமணன் தான் உயர்ந்தவனா..?”
“எல்லாருக்கும் குரு பிராமணன், பிராமணர்களுக்கு குரு சன்னியாசிகள்.. நாங்கள் எல்லாரும் சன்னியாசிகள்” என்றார்.
“நன்றி….! புறப்படுகிறோம்…. என்றதும் நெற்றியில் விபூதியை பூசிவிட்டு தட்டை எடுத்து நீட்டினார்.
பூ வேறு… புஷ்பம் வேறு அல்ல. என்பதைப்போல, சனாதன தர்மம் வேறு… வருணாசிர தர்மம் வேறு அல்ல என்பது புரிந்தது! திரிவேணி சங்கமம் முழுவதும் இந்த சாமியார்கள் ஆக்கிரமித்திருந்தார்கள். அங்கே சாமியார் என்பதே ஒரு பெரும் தொழில் போல நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு சாமியாரைச் சுற்றியும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், சீடர்கள், உதவியாளர்கள் எனப் பலர் இருந்தனர். ஆசீர்வாதம் வாங்க வேண்டுமென்றால் ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லை என்று மறுக்க முடியாது. மக்களைப் பொறுத்தவரை பசுமாட்டை தொட்டுக் கும்பிடும் அனிச்சைச் செயல் போல இந்த சாமியார்களை வணங்கி திருநீறு பெறுகின்றனர்.
இன்னொரு புறம் மக்கள் சொல்வது போல கும்பமேளா கலக்செனுக்காக பலர் அப்போது மட்டும் சாமியார் டூட்டி பார்க்கவும் செய்கின்றனர். அந்த நாட்களில் நீங்கள் நிர்வாணமாக இருப்பதெனத் துணிந்தால் பெரும் சில்லறையை புரட்ட முடியும். மறுபுறம் கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்களில் வாழும் சாமியார்கள் தனி உலகம். இவர்களைக் கண்டு பொதுசமூகம் அஞ்சுகிறது. போலீசும் எதற்கு பிரச்சினை என்று இவர்களை கண்டு கொள்வதில்லை. இவர்கள் எங்கு சென்றாலும் முதல் உரிமை, சலுகை கோருகிறார்கள். பாஜக-வின் இந்துத்துவத்திற்கு இந்த சாமியார்கள் ஏதோ ஒரு வகையில் மதம், வருணாசிரமம், பண்பாடு என்று பயன்படுகிறார்கள். அதனால் அரசும் இவர்களுக்கென்று பெரும் ஏற்பாடுகளையும், செலவையும் செய்து வருகிறது.
விரும்பாதவரையும் இந்து எனும் வேலிக்குள் அடைத்து வைத்து, சொந்த மதத்துக்காரனையே சூத்திரன், நீ கேவலமான பிறவி கீழ்சாதி, தொடாதே, பார்க்காதே, படிக்காதே என இழிவுபடுத்தும் ஒரே மதம், பார்ப்பன இந்து மதம். இந்துவாக தங்களைக் கருதிக் கொள்ளும் ஒவ்வொருவரும் இந்த மதத்தில் தங்களது நிலை என்ன? இந்த மதத்தின் தத்துவம்தான் என்ன? என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
வரலாறு தெரிந்தவரால்தான் வரலாறு படைக்க முடியும் என்ற டாக்டர் அம்பேத்கரின் ஆழ்ந்த உழைப்பில் படைக்கப்பட்டதுதான் “இந்து மதத் தத்துவம்” (நூல்). மக்களை நல்வழிப் படுத்துவதற்கானது எனக் கூறிக்கொள்ளும் மதத்திற்கான எந்த யோக்கியதையும் இன்றி நால்வகை வருணம் நாலாயிரம் சாதி என மக்களை பிளவுபடுத்தி உழைக்கும் மக்களை இழிவுபடுத்துவதுதான் இந்து மதத்தத்துவம் என்பதை சமூக வரலாற்று, பொருளியல், அரசியல் கோணங்களில் ஆய்வு செய்து விளக்குவதுடன் ஆரிய வேதங்கள், மனுஸ்மிருதிகள், பகவத்கீதை உபகதைகள் வழி ஆதாரத்துடன் நிறுவி இது ஒரு மதமே அல்ல; அடக்குமுறை, ஆதிக்க கருத்தியல் என்றும், இதைத் தூக்கி எறியாமல், சகோதரத்துவ சமத்துவ வாழ்வு சாத்தியமில்லை எனவும் எச்சரிக்கிறார். அனைத்து மதங்களுமே அதன் இருப்பிலே ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவிகளாகத்தான் இருக்கின்றன.
பார்ப்பன இந்து மதமோ அதன் இயல்பிலேயே பிறப்பின் அடிப்படையில் உழைக்கின்ற மக்களை சாதிய அடுக்குமுறையாலும், அடக்குமுறையாலும், ஆதிக்கம் செலுத்துவது என்று முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு இயற்கைக் கூட்டாளியாக அமைகிறது. தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்று மக்களை மூலதனத்தால் ஒடுக்கும் மறுகாலனியத்திற்கு தோதான தத்துவம் பார்ப்பனியம் என்பதால் இந்துத்துவத்தை எதிர்ப்பது என்பது மறுகாலனியத்திற்கு தோதான தத்துவம் பார்ப்பனியம் என்பதால் இந்துத்துவத்தை எதிர்ப்பது என்பது மறுகாலனியாக்க எதிர்ப்போடு தொடர்புள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சமூகமாற்றத்தை வேண்டும் டாக்டர் அம்பேத்கரின் கருத்துக்களை நடைமுறைபடுத்தும் வகையில் இந்த நூலை பரவலாக்குவது நம் ஒவ்வொருவரின் சமூகக் கடைமையாகும். படியுங்கள்; பரப்புங்கள் ! ( நூலின் பதிப்புரையிலிருந்து…)
“…சாதியமைப்பை விவரித்த முன்னோடி என்ற நிலையில் மனு சாதிகள் எப்படி தோன்றின என்பதையும் கூறுகிறார். எனவே, மனு கூறும் சாதியமைப்பின் தோற்றம்தான் என்ன? இதற்கான அவரது விளக்கம் மிக எளிமையானது. நாற்பெரும் வருணங்களைத் தவிர்த்த மீதி சாதிகள் கீழானவை. நாற்பெரும் மூலச் சாதிகளைச் சேர்ந்த ஆண், பெண்களின் கூடா ஒழுக்கத்திலிருந்து உருவானவையே இந்த சாதிகள். நாற்பெரும் மூலச் சாதிகளைச் சார்ந்த ஆண், பெண்களிடையே நிலவிய பரவலான ஒழுக்கக்கேடுகளும் நடத்தைப் பிறழ்வுகளும் எண்ணற்ற சாதிகள் உருவாக வழிவகுத்தன; இத்தகைய சாதி, மக்கள் பல்லாயிரக்கணக்கில் பெருகக் காரணமாயின. நாற்பெருஞ் சாதி ஆடவர் – பெண்டிரின்பால் எத்தகைய பழியைச் சுமத்துகிறோம் என்பதைச் சிறிதேனும் பொருட்படுத்தாமலேயே அவர்கள் ஒழுக்கத்தின்பால் குற்றஞ் சுமத்துகிறார் மனு. குறிப்பாக, சண்டாளர் எனப்பட்ட தீண்டப்படாத சாதி மக்கள் பிராமணப் பெண்ணுக்கும், சூத்திரம் ஆடவனுக்கும் பிறந்த மக்கள். இதன்படி பார்க்கும்போது சண்டாளர்கள் எண்ணற்றவர்களாக இருப்பதால், ஒவ்வொரு சூத்திர பிராமணப் பெண்ணும் ஒழுக்கங்கெட்டவளாக, பரத்தையாக இருந்திருக்க வேண்டும் என்றாகிறது. இதேபோல் ஒவ்வொரு சூத்திர ஆடவனும் சோரம் போனவனாக இருந்திருக்க வேண்டும். ஒழுக்கக் கட்டுப்பாட்டுக்குள் யாருமே இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, மனு பல்வேறு சாதிகளின் தோற்றத்துக்குக் கூறும் மதிகேடான பழி சுமத்தல் வரலாற்றுண்மைகளைத் திரித்துக் கூறலாகவே அமைகிறது.” (நூலின் பின் அட்டையிலிருந்து…)
… இந்துச் சாதி அமைப்பால் சமுதாயத்துக்கு மிகுந்த பயனுள்ளதென கூறும் இந்துக்கள் பலரை அறிவேன். ஆகவே, இதனை ஒட்டு மொத்தமாக ஒதுக்கிவிட விரும்பவில்லை. அவர்கள் இந்த முறையினை மனு புத்திசாலித்தனமாக உருவாக்கியதோடு புனிதமானதாகவும் ஆக்கியுள்ளார் எனப் பாராட்டுகின்றனர். சாதியைப் பார்ப்பதனாலேயே இத்தகைய நோக்கு உருவாகிறது. அவற்றை ஒட்டு மொத்தமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சாதியால் பெறப்படுகின்ற சமுதாயப் பயன் அல்லது பயனின்மையைச் சாதியின் தனித்தனித் தன்மைகளை ஒன்றாகச் சேர்த்துப் பார்த்துத்தான் கணிக்க வேண்டும். சிக்கலை இவ்வகையில், எதிர்கொண்டால், பின்வரும் முடிவுகள் புலப்படும்.
(1) தொழிலாளரைச் சாதி பிரிக்கிறது
(2) சாதி, வேலையில் ஈடுபாடு கொள்வதிலிருந்து பிரிந்து வருகின்றது
(3) சாதி, உடலுழைப்பில் இருந்து புத்திசாலித்தனத்தைப் பிரிக்கின்றது
(4) சாதி, அடிப்படை ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதைத் தடுத்து ஊக்கம் அற்றவனாக்கிவிடுகின்றது
(5) சாதி, ஒருவரோடொருவர் இணைந்து பழகுவதைத் தடுக்கின்றது.
சாதி முறை தொழிலை மட்டும் பிரிப்பதாக இல்லை; அது தொழிலாளரையும் பிரித்து விடுகின்றது. சமூகத்துக்கு தொழில் பாகுபாடு தேவைதான். ஆனால், எந்த நாகரிகச் சமூகத்திலும் தொழில் பகுப்போடு, தொழிலாளர்களைச் சேரமுடியாதபடி பிரிவுகளாக, இயற்கைக்குப் புறம்பாகப் பிரிப்பதைக்காண முடியாது. சாதிமுறை தொழிலாளர் பிரிவு மட்டும் அல்ல. அது தொழிற்பகுப்பில் இருந்து மாறுபட்டது. சாதி முறை ஒன்றுக்குமேல் ஒன்றாய் அடுக்கு அடுக்காக உயர்வு தாழ்வுகளை வகுக்கும் தொழிலாளர்களின் அமைப்புமுறை. வேறெந்த நாட்டிலும் தொழில் பகுப்புடன் தொழிலாளர்களிடையில் வித்தியாசங்கள் இல்லை. சாதி முறைக்கு எதிராக மூன்றாவதாக இன்னொரு விமர்சனமும் உள்ளது. இந்த தொழில் பகுப்பு தானாக வந்ததல்ல; பிரிவுகள் இயல்பான பணி ஈடுபாட்டால் வந்தவையும் அல்ல. தனிப்பட்டவரின் திறமையின்மையை வளர்த்து, தானே தன் தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு செய்யும் அளவிற்கு உருவாக்க ஒவ்வொருவரின் தனித்திறமையையும் சமூகத் திறனையும் வளர்க்க வேண்டும்.
ஒருவர் பெற்றுள்ள அடிப்படைப் பயிற்சியைப் பொறுத்ததாக இல்லாமல் பெற்றோரின் சமூக அந்தஸ்தை வைத்தே ஒவ்வொருவருக்கும் வேலை தரும் வாய்ப்புள்ளதால் சாதி முறையில் அடிப்படைத் திறன் கொள்கையை மீறுகிறார்கள். இன்னொரு நோக்கில் பார்த்தால், சாதி முறையின் விளைவான இந்த அடுக்கு முறை ஆபத்தானது ஆகிறது. இதனால் தொழில் எப்போதும் நிலையாய் நிற்பதில்லை விரைவான, தலைகீழ் நிலையை அடைகிறது. இத்தகைய மாற்றங்களால் எவரும் தம் தொழிலை எளிதில் மாற்றிக் கொள்ளும் நிலையில் இருக்க வேண்டும். மாறுகின்ற சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு மாற்றிக் கொள்ளும் நிலையில் இல்லாவிட்டால் அவனால் வயிற்றைக் கழுவ முடியாது.
சாதி அமைப்பில் ஓர் இந்து, நிறைய ஆட்கள் தேவைப்படுகின்ற வேலைக்கு மாற்றிக் கொள்ள நினைத்தாலும் அந்தத் தொழில் அல்லது அந்த வேலை தன்னுடைய பரம்பரைத் தொழிலாக இல்லாவிட்டால் அதைச் செய்யமாட்டார். ஓர் இந்து பட்டினி கிடந்தாலும் கிடப்பாரே ஒழிய தன் சாதிக்கு உரியது அல்லாத தொழிலைச் செய்ய மாட்டார். இதற்கு மூலகாரணம் சாதி முறைதான். (நூலிருந்து பக் 86-87)
நூல்:அம்பேத்கர் இந்துமதத் தத்துவம் ஆசிரியர்: அம்பேத்கர்
வெளியீடு:புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, 110/63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 600 024 தொலைபேசி:94448 34519
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு :
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி : 99623 90277
பிப்ரவரி 14 காதலர் தினம் என்றாலே காவிகளுக்கு கடுப்பாகி விடுகிறது. வருடா வருடம் காதலர் தினத்தன்று இவர்கள் செய்யும் அட்டூழியம் சொல்லில் அடங்காது. இந்த வருடமும் சங்கி மங்கிகளின் அட்டூழியம் தொடர்கிறது. “காதல் இந்திய கலாச்சாரத்துக்கு எதிரானது. ஜோடியாக திரியும் காதலர்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்போம்” என்று மிரட்டி வருகின்றனர். காதலர் தினம் அல்லாத நாட்களில் இவர்கள் லவ் ஜிகாத் என்ற பெயரில் காதலர்களையும், குறிப்பாக காதலிக்கும் முஸ்லீம்களையும் குறிவைக்கின்றனர்.
இவர்களுக்கு போட்டியாக ஆடியோ பிஜே புகழ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக காதலை விபச்சாரத்துடன் ஒப்பிட்டு தங்கள் வெறுப்பை உமிழ்ந்துள்ளார்கள். இந்த விஷயத்தில் இரண்டு கும்பலுக்கும் வேறுபாடு இல்லை. ஆனால், காவிகள் சொல்லும் “கலாச்சாரம்” பெரும்பான்மையின் பெயரால் வருவதால் அது நாட்டு மக்களின் நிம்மதியை குலைக்கிறது.
1 of 3
இந்து முன்னணிக்கு இது கழிசடை தினமாம்!
காதலே விபச்சாரம் என்கிறது குவைத்தில் இருக்கும் தவ்ஹீத் கிளை!
சென்னை தவ்ஹீத் கொஞ்சம் நாகரீகமாய் சீரழிவு தினமா? சிந்திப்பீர் என்கிறது!
சாதிகளைப் பாதுகாக்கும் அகமண முறையை பாதுகாக்க காதல் கூடாது என்பார்கள். மீறி காதலித்தால் கட்டி வைத்து எரிப்பார்கள். பெண்களை தாய், மாதா, புனிதம் என்பார்கள். ஆனால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை துளியும் வெட்கமின்றி நியாயப்படுத்துவார்கள். கோயில் கருவறையில் எட்டு வயது சிறுமி ஆசிபாவை வைத்து குதறுவார்கள். குற்றவாளிகளுக்கு ஆதரவாக போராடவும் செய்வார்கள். இதுதான் இவர்கள் போற்றும் கலாச்சாரம். சங்க பரிவாரங்களின் காதல் எதிர்ப்பு காட்டுமிராண்டித்தனத்தைப் பற்றி சென்னையின் பெசன்ட் நகர் கடற்கரை, செம்மொழி பூங்கா ஆகிய இடங்களுக்கு வந்திருந்த இளைஞர்களிடம் கேட்டுப் பார்த்தோம். அவர்களில் சில காதலர்கள் உண்டு. என்ன கூறுகிறார்கள் பார்ப்போம்.
பர்வத் அகமத், (பீகாரை பூர்வீகமாகக் கொண்டவர்)
“படித்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். திருவொற்றியூர்ல இருக்கேன்.. இந்த மாதிரியான கேள்வியெல்லாம் யாராவது என்கிட்ட கேப்பாங்களான்னுதான் வெயிட் பன்னிகிட்டிருந்தேன். காதல் என்பது நம்முடைய பிரைவசி. இது சுதந்திர நாடு என்பதால் எல்லோருக்கும் காதலிக்க உரிமை இருக்கிறது. நாங்களும் இண்டர் காஸ்ட் மேர்ரேஜ் தான் பன்ன போறோம். வீட்ல எந்த எதிர்ப்பும் இல்ல. ஆனா, ஆர்.எஸ்.எஸ். – காரங்க எதிர்க்கிறாங்க.
இவ்வளவு பேசுறாங்களே அந்த ராமனே – சீதையை காதலிச்சிதான் கல்யாணம் பன்னிக்கிட்டாரு. கிருஷ்ணர் ஒரு ப்ளே பாய் தான். இதுக்கு என்ன சொல்வாங்க… ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணியைப் பொருத்த வரைக்கும் இந்தமாதிரி எதையாவது பண்ணிகிட்டு இருந்தாதான் அவர்கள் இருப்பதாகவே மக்களுக்கு தெரியும். இல்லைன்னா அவங்க இருக்கிற இடமே தெரியாம போயிடும். காதல் எதிர்ப்புன்ற பேர்ல விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். இதை விட்டா இவர்களுக்கு வேறு வழியும் இல்லை.
என்கிட்ட வந்து சொன்னா அது உங்க வேலை இல்லைன்னு சொல்லுவேன். அவங்க எப்படி எனக்கு கல்யாணம் பண்ணி வெக்க முடியும்? அது அவுங்க வேலயே இல்ல… எனக்கு திருமணம் பண்ணி வக்கிறதுக்கு எங்க பெற்றோர்கள் இருக்காங்க. என்னோட குடும்பம் சார்ந்தது. அதனால என் திருமணத்தப் பத்தி என்னோட குடும்பத்தினர் தான் கவலைப்படனும். இவர்கள் இல்லை.
அதேமாதிரி இவர்கள் சொல்லுறது இங்க செல்லாது. நார்த் இண்டியாவுல வேணும்னா இவுங்க படம் ஓடும். இது சவுத் இந்தியா. இங்க கல்வியறிவு இருக்கு. வட இந்தியாவுல கல்வியறிவு இல்ல. அதனால வட இந்திய பெற்றோர்கள் இவங்களுக்கு சப்போர்ட் பன்றாங்க. தமிழ்நாட்ல அது முடியாது. அதனால நான் தமிழை நேசிக்கிறேன்.
» தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஹத்தும் இதை எதிர்க்குறாங்களே…?
நான் சார்ந்த இனமாக இருந்தாலும் இதை எதிர்க்கிறேன். யார் செய்தாலும் தவறுதான்.
ஹாசன்.
இப்படி எதிர்க்குறாங்கன்னு நீங்க சொல்லிதான் தெரியும். அந்த காலத்துலயே லவ் இருந்துட்டுதான் வருது. இப்ப அதை ஒன்னும் செய்ய முடியாது.
» இது இந்திய கலாச்சாரத்தை கெடுக்கும்னு சொல்றாங்களே….?
அப்படின்னா…. “நான் ஒரு ஆண்டி இந்தியன்-னு வெச்சுக்கங்களேன்”
கமல், (புகைப்படம் தவிர்த்தார்).
காதல், தப்பான கண்ணோட்டத்தில் பார்த்தால் அது தவறாகத்தான் தெரியும். நாங்க காதலிக்கிறதே கல்யாணம் பண்ணிக்கத்தான். இவர்கள் யார் எங்களுக்கு கல்யாணம் பண்ணி வக்க? ஒருவேளை எங்ககிட்ட வந்து அப்படி சொன்னா எங்க வீட்ல வந்து பேசி முடிங்கன்னுதான் சொல்லுவேன். இவனுங்க எல்லாம் இதை ஒரு பாப்புலாரிட்டிக்குத்தான் செய்யிறானுங்க. மத்தபடி வேற எந்த நோக்கமும் இல்ல. எல்லாம் அரசியல்தான்.
காலித், (புகைப்படம் தவிர்த்தார்).
அவுங்க காலத்துல மட்டும் லவ் பண்ணாமலா இருந்தாங்க. அப்பல்லாம் ஆட்டம் போட்டுட்டு இப்ப வயசான காலத்துல நீதி நியாயம்னு பேசினா எப்படி? இது என்னோட தனிப்பட்ட வாழ்க்கை. எனக்கு சுதந்திரம் இருக்கு. எங்க வீட்ல சொல்லிட்டோம். எந்த எதிர்ப்பும் இல்ல. நானும் ஒரு முசுலீம்தான். எங்க ஆளுங்களே காதலிச்சா விபச்சாரத்துக்கு சமம்னு சொல்லுறத ஏத்துக்க முடியாது.
நிதிஷ், விஷ்ணு, (எம்.ஜி.ஆர். கல்லூரி மாணவர்கள், செம்மொழி பூங்கா).
(இடமிருந்து இரண்டாவது) நிதிஷ் மற்றும் விஷ்ணு நண்பர்களுடன்.
லவ்வர் இருக்கவனுக்கு ஜாலி.. இல்லாதவனுக்கு பொறாமை’ண்ணா…. காதல்-ங்கிறது செம்ம ஃபீல்… அது வேற லெவல்…. அதெல்லாம் இப்படி எதிர்க்கிறவனுங்களுக்கு தெரியாது. நான் கோ-எஜுகேட்லதான் படிக்கிறேன். எல்லாம் ஆல்ரெடி கமிடட். எங்களுக்குத்தான் இன்னும் செட் ஆகல. அதுக்குதான் பார்க் – பார்க்கா சுத்திட்டு இருக்கோம். சீக்கிறத்துல செட் ஆகிடும் ப்ரோ.
காதலர்கள் ஒன்னா இருக்கும்போது தொந்தரவு பண்றவங்கள அடிச்சி விரட்டனும். பசங்க கொஞ்சம் பயப்படுறாங்க. அதுக்கு காரணம், கூட இருக்குற பொண்ணுக்கு பாதிப்பாகிடுமோன்னு யோசிக்கிறாங்க. இல்லன்னா இந்த மாதிரி ஆளுங்கள ஓட விட்டுடுவாங்க. எங்ககிட்ட வந்து அந்த மாதிரி பண்ணா அதுதான் நடக்கும். காதல எதிர்க்கிறவன் எல்லாம் சாதி வெறியனாத்தான் இருப்பான். அதனால தான் பி.ஜே.பி. எதிர்க்குது. அந்த கட்சியில இருக்கவன் எல்லாம் சாதி வெறியனுங்கதான்.
மணிகண்டன்.
லவ் ஒன்னும் இந்த காலத்துல வந்ததில்லயே… அந்த காலத்துலயும் லவ் எல்லாம் இருந்துச்சில்ல. காதலிக்கிறதே ஒருத்தரை ஒருத்தர் பார்த்து பேசி அவங்களோட பலம் – பலவீனம் என்னன்னு தெரிஞ்சிக்கிட்டு, அதுக்கேத்த மாதிரி விட்டு கொடுத்து பிரச்சன வராம பாத்துக்குவோம். இதுவே வீட்டுல பார்த்து கல்யாணம் பண்ணா அவங்கள புரிஞ்சிக்கவே சில காலம் ஆகும். ரெண்டு பேரோட கேரக்டரும் ஒத்து வராதபோது அது பிரச்சனையாகிடும். பேசி தீர்த்துகிறதுக்குள்ள அது குடும்ப சண்டையா மாறிடும். இந்து மக்கள் கட்சி போன்ற கட்சிங்க, லவ் பன்றத வேணாம்னு சொல்றதெல்லாம் சரியில்லாதது. போலிசுல கம்ப்ளையண்ட் பண்ணா பொண்ணுக்கு பிரச்சனையாகும். வேற வேலை இல்லன்னு இதெல்லாம் பண்ணிகிட்டு இருக்காங்க. அதனால, கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்றவங்கள அடிக்கிறத விட்டா வேற என்ன பண்ண முடியும்?
நேர்காணல், படங்கள்: வினவு செய்தியாளர்கள்
இதையும் பாருங்க !
நீங்க காதலிக்கிறீங்களா ? காதல் – பார்வைகள் பத்து !
ஒருவழியாக வாசந்தியின் ‘ஜெயலலிதா’ புத்தகத்தைப் படித்துவிட்டேன். முன்பே சொன்னதுபோல் ‘தமிழில் இவ்வளவு மோசமான மொழிநடை கொண்ட புத்தகத்தை இதுவரை படித்ததில்லை’ என்ற எண்ணம் மறுபடி உறுதிப்பட்டது.
ஜெயலலிதா தன் இறுதிக்காலத்தில் தன் உடல்நலத்தைப் பேணவில்லை. சர்க்கரை வியாதி இருந்தாலும் இனிப்புகள் சாப்பிடுவதை நிறுத்தவில்லை. அவர் உடல்நிலை மோசமானதற்கான காரணங்கள் இவை. இதைப் பலரும் சொல்லியிருக்கிறார்கள். இதை வாசந்தி எப்படி எழுதியிருக்கிறார் தெரியுமா?
‘மற்றவர்களை அடக்கமுடிந்த அவர், தன் உடம்பின் வக்கிரங்களை அடக்கவில்லை’.
நல்லவேளையாக, இந்தப் புத்தகம் வருவதற்குள் ஜெயலலிதா மறைந்துவிட்டார். ஆங்கிலப் புத்தகத்துக்காவது வழக்குத்தான் போட்டார். இந்தப் புத்தகம் மட்டும் கண்ணில் பட்டிருந்தால், ஜெயலலிதா சுபாவத்துக்கு நடப்பதே வேறு. அ.தி.மு.க.-வினருக்குப் புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை என்பதால் பிரச்னையில்லை,
கேவலமான மொழிநடை, தப்புத்தப்பான தகவல்கள், ஜெயலலிதாவை எதிர்த்தவர்களை எல்லாம் ‘ஆணாதிக்கவாதிகள்’, ‘பிராமணத் துவேஷிகள்’ என்று சித்திரிக்கும் பார்ப்பனச் சார்பு ஆகியவை நிரம்பிய புத்தகம் இது. உலகத்தில் பெண்ணியம் எது எதற்கோ பயன்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும்தான் அது ஜெயலலிதாவின் ஆணவத்தையும் பாசிச மனநிலையையும் நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.
‘வாக்காளர்களுக்குப் பணமும் பிரியாணியும் கொடுக்கும் பழக்கத்தைக் கொண்டுவந்தவர் ஜானகி ராமச்சந்திரன்’ என்கிறார் வாசந்தி. ‘கனிமொழியின் அரசியல் வருகைக்குப் பிறகுதான் தி.மு.க.வுக்கு அறிவுஜீவிகளிடம் ஓரளவு ஏற்பு கிடைத்தது’ என்று சலபதி எழுதியிருக்கிறாராம். இப்படிப்பட்ட புதிய கண்டுபிடிப்பாளர்களை உருவாக்குவதற்காக காலச்சுவடுக்கு இந்த ஆண்டாவது அறிவியலுக்கான நோபல் பரிசு வழங்கவேண்டும்.
அடுத்து வாசந்தி எழுதும் கலைஞர் புத்தகத்தைப் படித்துவிட்டு, இரு புத்தகங்கள் குறித்து நிச்சயம் விரிவாக எழுதுவேன்.
காதல் என்ற ஒற்றை வார்த்தைகளுக்கு எங்கும் எதிலும் பொருள் சொல்லப்படவில்லை. காதல் எங்கோ இருக்கிற பொருளும் அல்ல. ஆனால், அதை பேசாத சங்க இலக்கியமும் இல்லை, சரித்திரமும் இல்லை. அப்படி என்ன காதல் பேசுகிறது. காதல் என்பது இருவர் சம்பத்தப்பட்ட விஷயம் என்பதாலேயே இது மனங்களின் அந்தரங்கம் என்பதாலேயே காதலை நம் முன்னோர்கள் அகம் என்றார்கள். அகம் என்பது உள் என்று பொருள்.
காதலை நுட்பமும் ஆழமும் கூடிய உணர்வாகப் பார்த்தவர்கள் நாம். இதை எழுத்தாளர் பிரபஞ்சன் தமது கட்டுரைகளில் மிக அழகாக எடுத்துக் காட்டியிருப்பார். காதலை மறைபொருள் என்று நினைத்தோம். மலரினும் மெல்லியது காதல் என்று நெறிப்படுத்தினோம். காதலும் காமமும் ஒன்றாக கலந்து பேசுகிறது. ஒரு பெண்ணும் ஆணும் காதலிக்க மரத்தடி நிழலுக்கு சென்று சேர்கிறார்கள். அவள் அந்த மரத்தடி வேண்டாம். அங்கு போகலாம் என்று தூரத்தில் உள்ள மரநிழலைக் காட்டுகிறாள். ஏன் என்று அவன் கேட்கிறான். இவள் பதில் கூறினாள், “ஒரு நாள் விளையாடும் போது அம்மா குரல் கேட்க, அவசரமாய்ப் புன்னைக் காய்களைத் திரட்டிக்கொண்டு வீட்டுக்கு ஓடினேன். அப்போது மண்ணிலே தங்கிப்போன ஒரு புன்னை, அன்றிரவு பெய்த மழையால் முளைத்துவிட்டது. அம்மா எனக்கு ஊட்டும் அன்பு அனைத்தையும் புன்னை செடிக்கும் ஊட்டினேன். புன்னை மரமாயிற்று, நானும் வளர்ந்தேன். நானும் புன்னை மரமும் தங்கைகள் ஆனோம். நான் இந்தப் புன்னையைத் தங்கையாகவே நினைத்து வந்தேன். அந்த மரநிழலில் காதலிக்க முடியுமா? தங்கையின் முன்னாலே எப்படிக் காதலிப்பது ?”
இப்படி காதலையும் காதலர்களையும் அந்தரங்கத்தையும் மறை பொருளையும் அப்படி காப்பாற்றியவர்கள் நாம். தமிழில் ஆதி இலக்கியத்தில் சரிபாதிக்கு மேலாக அக இலக்கியங்கள் என்று பொதுவாக ஓர் உண்மையை முன்வைகிறது. காதலை கசிந்து உருகுகிற நம் மூதாதையரைப் பாருங்கள். சங்க இலக்கியம் தொட்டு நிலவுக்குள் ஊறி, ஊறி காதல் நம்மை தித்திக்க வைக்கிறது. இதில் உணர்வுகளும் உண்மைகளும் மட்டுமே மூத்தது. அதில் காதல் மாத்திரம், இன்னும் இளைமையாகவே இருக்கிறது. இதை குறுந்தொகையில்
என்ற உணர்வுகள் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் நமக்குள் கேட்கிறது. குறுந்தொகை தொடங்கி எல்லா இலக்கியங்களும் பேசிகொண்டே இருக்கின்றன. இப்படி, காதலை மனித மனத்தை வடிவமைப்பதில் மண்ணுக்கும் இயற்கைச் சூழ்நிலைக்கும் உரிய இடத்தை சங்க இலக்கியம் வரையறுத்திருக்கிறது.
காதல் வெறும் உடலுறவு அல்லவே. ஆனால், உடலும் சேர்ந்தே காதல். பெண் மற்றும் ஆணின் விரல்கள் தீண்டுதலில் தீண்டுபவை விரல்கள் அல்ல. மாறாக, ஒரு இனத்தின் நாகரிகம் தன்னைத் தானே ஸ்பரிசித்துக் கொள்கிறது என்பதே பொருள்.
பெண்ணின் உலகம் ஆணை நம்பியும் அவன் அன்பை எதிர்பார்த்தே இருந்தது என்பதையும் கூடிய புரிதலோடேயே அந்தப் பழைய இலக்கியத்தை அணுக வேண்டும். அவை உன்னதமானவை அல்ல; மாறாக, அந்தக் காலத்தை உண்மையாக நாடகியமாகச் சொல்பவை. காதல் உலகத்தில் ஆண் ஒரு முதலாளியைப் போல, போலீஸ்காரனைப் போல நடந்துகொள்ளும் போது காதல் துளிர்ப்பதில்லை. காதல் அந்த மனிதரின் விடுதலை கூர் உணர்வில் தோன்றும் இயற்கை விழைவு. இந்த சமுகம் காதலை புரிந்து கொள்ளும் சமூகமாக இல்லை. இந்திய ஜனத்தொகையில் பெருபான்மையோர் வன்புணர்ச்சியில் பிறந்தவர்கள். ஏனெனில் சகாவான பெண் சம்பந்தப்பட்டு தாயாவதில்லை. இந்த தேசத்தில் காதல் தொழிலில் சமபங்கு ஆற்றாத பெண் காதலியாகக் கருதப் படலாமோ எனில் மட்டாள். மாறாக அவள் சுரண்டப்படும் மற்றுமொரு தொழிலாளியே ஆவாள்.
அடுத்தது அழகு. காதல் அழகோடு இணைத்து பேசப்படுகையில் ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையில் அழகு என்பதே ஒன்றில்லை. அழகில்லாதது என்பதும் ஒன்று இல்லை. எது இயல்பாக இருக்கிறதோ அது அழகு. எது இயல்புக்கு விரோதமாக இருக்கிறதோ அது ஆபாசம்.
அழகு பற்றி ஒரு ரஷ்ய எழுத்தாளர் அருமையான கதை ஒன்று தந்துள்ளார். போர்க்களத்தில் பீரங்கியால் தாக்கப்பட்ட, ஒரு வீரனின் முகமே சிதைந்து போகிறது. 18 மாத சிகிச்சைக்குப் பிறகு அவன் உயிர் பெறுகிறான். அவன் முகமே அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. குரலும் மாறிவிடுகிறது. அவன் விடுமுறையில் தாய் தந்தையை பார்க்கப் போகிறான்.
கதவைத் தட்டுகிறான். கதவைத் திறந்த அம்மா, யாருப்பா நீ என்கிறாள். அவன் மகனின் நண்பன் என்கிறான் மகன். அம்மா அப்பாவிடம் அவர்களின் மகனின் வீரம் பற்றி அவனே சொல்கிறான். மறுநாள் திரும்பும் முன், அந்த மகனின் சினேகிதியைப் பற்றி விசாரிக்கிறான். இராணுவ முகாமுக்குத் திரும்புகிறான். அவன் தாயிடமிருந்து ஒரு கடிதம் வந்து இருந்தது. அதில் “மகனே, உன் நண்பன் ஒருவன் வந்து நம் வீட்டில் தங்கியிருந்தான். எனக்கென்னவோ வந்தவன் நீ தான் என்று தோன்றுகிறது. உண்மையை எழுது என்று எழுதிருந்தாள். மகன் உண்மையை எழுத தாயும், சினேகிதியும் இராணுவ முகாமிற்கு வருகிறார்கள்.
‘ஏண்டா என்னிடம் பொய் சொன்னே?’
‘இந்த கோரமுகத்தை என்னாலேயே சகிக்க முடியவில்லையே. உனக்கு எப்படி பிடிக்கும் என்று தான்.’ இப்போது தானடா உனக்காக நான் பெருமைப்படுகிறேன். என் மகன் தாயகத்துக்காகப் போராடிய வீரன் அல்லவா? அதுதானடா என் பெருமை.
“சினேகிதியைப் பார்த்து அவன் கேட்கிறான். இப்போதும் இந்த முகத்தை நீ விரும்புவாயா?” “முட்டாள்’’ என்று அவன் முகத்தில் முத்தமிட்டபடியே சொல்கிறாள் இப்போதுதானடா நான் உன்னைக் காதலிக்கிறேன்.
“புரிதலில்
புரிந்துணர்வு ஒப்பந்தமே
காதல்
அதில்
நெடுந்தூரப் பயணம்
திருமணம்
அதில்
அவன் அவனுமாய்
அவள் அவளுமாய்
ஒன்றாக பயணம் செய்யின்
அதுவே பயணத்தின் இலக்கு”
காதல் எங்கோ இருக்கிற பொருள் அல்ல. அது நம்மிடம் தான் இருக்கிறது. நாம் ஆணோ, பெண்ணோ ! நமக்களிக்கப்பட்ட தொழிலை நேசிப்போமெனில் நாம் வீரர்கள், அறிஞர்கள், அழகர்கள், மொத்தமாக மக்கள். நாம்தான் காதலிக்கப்படுவோம். ஆதலினால் காதல் செய்வீர் !
– சிந்துஜா, சமூக ஆர்வலர்
இதையும் பாருங்க !
நீங்க காதலிக்கிறீங்களா ? காதல் – பார்வைகள் பத்து !