Tuesday, June 17, 2025
முகப்பு பதிவு பக்கம் 125

ஏ.பி.வி.பி குண்டர்களால் அச்சுறுத்தப்படும் பல்கலைக்கழகங்கள்!

டந்த 12 ஆம் தேதியன்று ஒடிசா மாநிலத்தில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் “இந்திய அரசலமைப்பு சட்டமும் ஜனநாயகமும்” (Indian Constitution & Education) என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

இக்கருத்தரங்கம் ஒடிசா மாநிலத்தில் செயல்படும் “சிட்டிசன்ஸ் மன்றம்” (Citizens Forum) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரதீப் நாயக் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள், குடிமை சமூக அமைப்பினர், கல்வியாளர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டிலிருந்து மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பிரீட்டோ, கணேசன் ஆகிய இருவர் இதில் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கத்தில் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சுராஜித் மஜும்தார் துவக்க உரையாற்றினார். அவர் இந்திய அரசமைப்பு சட்டத்தின் முக்கிய சாராம்சங்களை மையப்படுத்தி பேசிக் கொண்டிருந்த பொழுது. அக்கூட்டத்தில் இருந்த ஒருவர் பேராசிரியர் பேசுவதற்கு குறுக்கீடு செய்து கொண்டிருந்தார். உடனே அவரிடம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரதீப் கேள்வி கேட்பதற்கு என்று நேரம் ஒதுக்கப்படும் நீங்கள் அப்பொழுது உங்கள் கேள்வியை கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் அவர் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கூச்சலிட்டு கொண்டிருந்திருக்கிறார்.

மேலும் இருவர் அவருடன் சேர்ந்து பேராசிரியர் சுராஜித் பேசிக் கொண்டிருந்த மேடையை நோக்கி வந்து பல்கலைக்கழகங்களில் இது போன்று கூட்டங்கள் நடத்தக் கூடாது என்று மிரட்டி இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் தாங்கள் ஆர்.எஸ்.எஸ் இன் மாணவர் படையான ஏ.பி.வி.பி (ABVP) நிர்வாகி என்றும் கூறியிருக்கிறனர்.


படிக்க: கல்வி நிறுவனங்களில் அதிகரித்துவரும் ஏபிவிபி குண்டர்களின் அடாவடித்தனம்!


சிட்டிசன்ஸ் மன்றத்தின் நிர்வாகி பிரதீப் மற்றும் விரிவுரையாளர் சுரேந்திரா ஜெனா ஆகிய இருவரையும் ஏ.பி.வி.பி குண்டர்கள் கடுமையாக தாக்கி இருக்கிறார்கள் இதை தடுக்கச் சென்ற மனித உரிமை செயல்பாட்டாளர் வழக்கறிஞர் பிரீட்டோவையும் தாக்கி இருக்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏ.பி.வி.பி யின் குண்டர்கள் நடத்திய தாக்குதல்களை மனித உரிமை செயல்பாட்டாளர் கணேசன் அவர்கள் தனது செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார் இதைப் பார்த்த ஏ.பி.வி.பி குண்டர்கள் அவரது செல்போனை பிடுங்கி அவரை தாக்க துரத்தி சென்றிருக்கின்றனர்.

***

இதற்கு முன்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12 – ஆம் தேதி ஐஐடி பாம்பே-வில் (IIT-B) இடதுசாரி இயக்கங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற இருந்தது

அக்கருத்தரங்கத்தில் “நவீன இந்தியாவில் இடதுசாரிகளின் கலாச்சாரங்கள்” (Cultures of the Political Left in Modern India) என்ற தலைப்பில் டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இரு நாள் கருத்தரங்கு நடைபெற இருந்தது. இது உலகத் தர பல்கலைக்கழக குழுவிடம் (Institute of Eminence Cell) நிதி பெற்று நடத்தப்பட இருந்தது – அதாவது இந்திய அரசின் நிதி கொண்டு நடத்தப்பட இருந்தது.

இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஆய்வு மாணவர்களும் மூத்த பேராசிரியர்களும் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள இருந்தனர்.

இக்கருத்தரங்கையொட்டி 150 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன; அதில் 15 தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. அதில், மார்க்சிய – லெனினியத்திற்கும் நாட்டுப்புற கலாச்சாரத்திற்கும் உள்ள உறவு, 1889 ஆம் ஆண்டில் துப்புரவு தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தில் ஜோதிபா பூலே-வின் செய்தித்தாளின் பங்கு போன்ற தலைப்புகள் இடம் பெற்றிருந்தன.

ஆனால் இக்கருத்தரங்கம் ரத்து செய்யப்பட்டது என்ற அறிவிப்பு டிசம்பர் 11 அன்று வெளிவந்தது.

இக்கருத்தரங்கம் ரத்து செய்யப்பட்டதை குறித்து கேட்ட பொழுது கருத்து கூறிய ஐஐடி பாம்பேவின் இயக்குனர் “உலகத் தர பல்கலைக்கழக நிதியிலிருந்து இக்கருத்தரங்குக்கு நிதி அளிக்க முடியாது. இதன் தலைப்பு அதற்கு உட்பட்டதில்லை” என்று கூறினார். உலகத் தர பல்கலைக்கழகம் (Institute of Eminence) என்பது பல்கலைக்கழக மானியக் குழுவால் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் பொதுத்துறை கல்வி நிறுவனங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.1000 கோடி வழங்கப்படும்.

சட்ட உரிமைகள் கண்காணிப்பகம் (Legal Rights Observatory – LRO) என்ற வலதுசாரி கூட்டமைப்பு இந்த கருத்தரங்கை கடுமையாக விமர்சனம் செய்து, இதை ரத்து செய்யுமாறு கோரியிருந்தது.

அந்த அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானையும் டேக் (tag) செய்து, “ஐஐடி-க்கள் என்பன தொழில்நுட்ப கல்விக்கும் ஆராய்ச்சிக்குமானவை. இடதுசாரி / கம்யூனிச சித்தாந்தங்களுக்கு நிதியை வீணாக்குவது ஒரு கிரிமினல் குற்றமாகும். இது கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” என்று பதிவிட்டது.


படிக்க: ஐஐடி பாம்பே: இடதுசாரி இயக்கங்கள் குறித்த கருத்தரங்கு திடீர் ரத்து!


ஐஐடி பாம்பேவில் இப்படி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவது இது முதல் முறையல்ல.குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது, அது தொடர்பான கருத்தரங்கு நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், கருத்தரங்கின் தலைப்பிலிருந்து என்.ஆர்.சி (NRC) என்ற வார்த்தையை நீக்கிய பிறகு அனுமதி வழங்கப்பட்டது.

2014-ஆம் ஆண்டுக்கு பிறகு பல முறை இது போன்ற நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 2015 ஆம் ஆண்டில், “காஷ்மீர்: இந்திய தேசியத்தின் இருண்ட பக்கம்” (Kashmir: The Blind Side of Indian Nationalism) என்ற விரிவுரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதேபோல, 2019 ஆம் ஆண்டில் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சரத்து 370 ரத்து’ (காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து) குறித்தான விவாதத்திற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், மாணவர்கள் அந்த விவாதத்தை பூங்காவில் நடத்திக் கொண்டனர்.

***

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் “இந்தியா: மோடி மீதான கேள்வி” என்ற ஆவணப்படத்தை மாணவர்கள் திரையிட இருந்த போது பல்கலைக்கழக நிர்வாகம் மின்தடை செய்து ஆவணப்படத்தை திரையிடவிடாமல் செய்தது. ஆனால் மாணவர்கள் அதையும் மீறி தன்னுடைய செல்போனிலும் மடிக்கணினியிலும் அவ்வாவணப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆர்.எஸ்.எஸ்-யின் மாணவ குண்டர்படையான ஏ.பி.வி.பி மாணவர்கள் மீது கற்களை எறிந்து வன்முறை வெறியாட்டத்தை நடத்தியது.

இன்றைய மாணவர்களும் நாளைய இளைஞர்களும் பல விஷயங்களையும் அரசியலையும் கற்றுக் கொள்ளும் இடம் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள்தான்.

ஆனால் இன்றைக்கு மாணவர்கள் அரசு கொண்டுவரும் திட்டங்களையும், நடவடிக்கைகளையும் குறித்து விவாதங்களை முன்னெடுத்தாலோ அல்லது கருத்தரங்குகளை நடத்தினாலோ அதற்கு தடை விதிக்கப்படுகிறது. அதைமீறி மாணவர்கள் நிகழ்வுகளை நடத்தினால் ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி போன்ற கலவரக்காரர்களால் தாக்கப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது.

இன்னும் எத்தனை நாள்தான் ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி போன்ற குண்டர்களிடம் அடி வாங்கிக் கொண்டிருக்கப் போகிறோம்!

மாணவர்களே! இளைஞர்களே! அமைதி காத்தது போதும்; வாருங்கள் அமைப்பாய்த் திரள்வோம்!

இன்பா

பிபிசி வருமான வரித்துறை ஆய்வு: ஊடகங்களை முடக்க எத்தனிக்கும் பாசிஸ்டுகள்!

0

நேற்று (பிப்ரவரி 14) பிபிசி ஊடகத்தின் தில்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு (survey) நடத்தினர்.‌ வரி ஏய்ப்பு புகார் காரணமாக வருமான வரித்துறை இயக்குநா் உத்தரவின் அடிப்படையில், பிபிசி துணை நிறுவனங்களின் சா்வதேச வரி விவகாரங்கள் தொடா்பாக இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டாம் நாளாக இன்றும் வருமான வரித்துறையின் ஆய்வு தொடர்கிறது.

வருமான வரித்துறையின் ஆய்வின்போது, ஊழியர்களின் செல்போன்கள், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் கடவுச்சொற்களையும் பெற்றுக்கொண்டனர். இது குறித்து வெளியே பேசக் கூடாது என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.

கடந்த 2002-ஆம் ஆண்டில் சங்க பரிவார கும்பலால் நடத்தப்பட்ட குஜராத் படுகொலை குறித்த ஆவணப் படத்தை பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான பிபிசி கடந்த ஜனவரி மாதத்தில் வெளியிட்டது. “இந்தியா: மோடி மீதான கேள்வி” என்ற தலைப்பில் இரண்டு பாகங்களைக் கொண்டிருந்தது அந்த ஆவணப்படம். இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி தான் காரணம் என்பதை அது அம்பலப்படுத்தியது. குஜராத் கலவர வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று மோடி உள்ளிட்டோரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருந்த நிலையில் இந்த ஆவணப்படம் வெளியானது.

கடந்த ஜனவரி 21-அன்று, இந்த ஆவணப்படத்தை வெளியிட யூ-டியூப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தது மத்திய அரசு. ஆனால், மாணவர் அமைப்புகள் தடையை மீறி கல்லூரி – பல்கலைக்கழகங்களில் இந்த ஆவணப்படத்தை திரையிட்டனர். போலீசைக் கொண்டு பாசிச மோடி அரசு பல இடங்களில் இதை தடுக்கவும் செய்தது. இந்த ஆவணப்படம் பல்வேறு ஜனநாயக சக்திகளாலும் எதிர்க்கட்சிகளாலும் பொது இடங்களில் மக்களுக்கு திரையிடப்பட்டது. சில மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும் இது திரையிடப்பட்டது (தமிழ்நாட்டில் வி.சி.க செய்ததைப் போல).


படிக்க: “இந்தியா: மோடி மீதான கேள்வி” ஆவணப்படம்: மீண்டும் அம்பலமாகும் பாசிச மோடி!


இந்த ஆவணப்படத்தை வெளியிட்டதால் பிபிசி-ஐ தடை செய்ய வேண்டும் என்று ஹிந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அம்மனுவை தள்ளுபடி செய்து விட்டது.

இதைத்தொடர்ந்து, பிபிசி-யின் ஆவணப்படத்திற்கு எதிர்வினையாகவே தற்போது இந்த வருமான வரித்துறை ஆய்வு‌ நடைபெற்றுள்ளது. இது பத்திரிக்கை சுதந்திரத்தை வெளிப்படையாக நசுக்குவதாகும். எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட தனது ஏவல் நாயான வருமான வரித்துறையை, தற்போது ஊடகங்களை ஒடுக்கவும் பயன்படுத்துகிறார்கள். மோடி அரசின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ், சி.பி.எம், சி.பி.ஐ, ஆம் ஆத்மி, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கண்டித்துள்ளன. எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா (Editors Guild of India) அமைப்பும் மோடி அரசின் இந்த நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்துள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டில் பத்திரிகைச் சுதந்திரத்தில் 142-வது இடத்திலிருந்த இந்தியா, 2022-ஆம் ஆண்டில் 150-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. 2014 – 2020 காலகட்டத்தில் 135 பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தியாவில் 35 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மோடி அரசின் செயல்பாட்டையும் பாசிச கொள்கைகளையும் விமர்சிக்கும் ஊடகங்களை வருமான வரித்துறையைக் கொண்டு தாக்குவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே நியூஸ் கிளிக் (NewsClick), தைனிக் பாஸ்கர் (Dainik Bhaskar) போன்ற ஊடக நிறுவனங்கள் மோடி அரசின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.


படிக்க: ஜனநாயக ஊடகங்களின் குரல்வளையை நெறிக்கும் பாசிஸ்ட்டுகள்!


இதேபோல, 1970-களில் பாசிஸ்ட் இந்திரா காந்தி ஆட்சியில் கல்கத்தா (Calcutta) மற்றும் ஃபேந்தம் இந்தியா (Phantom India) என இரண்டு ஆவணப்படங்களை ஒளிபரப்பியதால் பிபிசி-க்கு தடை விதிக்கப்பட்டது. 1975-ஆம் ஆண்டில், எமர்ஜென்சி விதிமுறைகளுக்கு உட்படாத ஊடகங்களை தடை செய்தபோதும் பிபிசி-யும் தடைசெய்யப்பட்டது.

பாசிஸ்டுகள் ஒருபோதும் தங்களுக்கு எதிரான கருத்துகளை விரும்புவதில்லை. தங்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிடும் ஊடகங்களை மிரட்டிப் பணிய வைப்பார்கள் அல்லது தடை செய்வார்கள். சில சமயம், கார்ப்பரேட் முதலாளிகளைக் கொண்டு விலைக்கு வாங்கியும் விடுகிறார்கள்; அதானி என்.டி.டி.வி-ஐ (NDTV) வாங்கியதைப்போல. இப்போக்கின் நீட்சியே பிபிசி மீதான இந்த தாக்குதலும்!

பொம்மி

கவர்ச்சி முகமூடி அணிந்துவரும் கார்ப்பரேட் ஆதிக்கம்!

மிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் ‘வளர்ச்சித் திட்டங்கள்’ என்ற பெயரில், “வானவில் மன்றம்”, “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” போன்ற திட்டங்கள் புதிதாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மறைமுகமாக புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களைப் புகுத்துவது, கல்வித் துறையை கார்ப்பரேட்மயமாக்குவது ஆகியவற்றின் ஒருபகுதியாகவே இத்திட்டங்கள் அமைந்திருக்கின்றன.

ஏழை மாணவர்களுக்கு நவீன கல்வியைக் கொண்டு சேர்க்கும் வகையில், சமூகநீதித் திட்டங்களாக இவற்றைப் பாராட்டுகின்றன தி.மு.க. ஆதரவு ஊடகங்கள்; “திராவிட மாடல் அரசின் சாதனைகள்” என்று இத்திட்டங்களைப் பாராட்டுகிறார்கள் திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள். “வாரிசு அரசியல்”, “சட்டம் ஒழுங்கு சரியில்லை”, “வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” என்று வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் தி.மு.க.வைத் தாக்கிவரும் பா.ஜ.க, “தி.மு.க கல்வித்துறையில் அறிமுகப்படுத்திவரும் புதுப்புது திட்டங்களெல்லாம் புதிய கல்விக் கொள்கையிலேயே உள்ளன, ஆனால் அதை மறைத்துவிட்டு தாங்கள் புதிதாக அமல்படுத்தும் திட்டங்களைப்போல நடைமுறைப்படுத்துகிறார்கள்” என்று குற்றஞ்சாட்டுகிறது.

கார்ப்பரேட் கொள்ளை, கல்வி தனியார்மயத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் சி.பி.ஐ., சி.பி.எம். போன்ற பா.ஜ.க. எதிர்ப்புக் கட்சிகள்கூட இந்த விசயத்தில் அடக்கி வாசிக்கின்றன.

ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசு புதிய கல்விக் கொள்கையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி, கல்வியைக் காவிமயமாக்கி வருகிறது. ஏழை மாணவ-மாணவிகளின் கல்வி உரிமையைப் பறிப்பதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இச்சூழலில், கேள்விக்கிடமற்ற முறையில் தமிழக பள்ளிக் கல்வித் துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மாற்றங்களைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியமாக உள்ளது.

’வானவில் மன்றம்’: வண்ணம்பூசிவரும் கார்ப்பரேட்மயம்!

அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், கணிதம் மற்றும் அறிவியலில் புதியவற்றை அறிந்துகொள்ள எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கவும் “வானவில் மன்றம்” உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது தமிழக அரசு. இம்மன்றத்தின் அடிப்படை முழக்கம் “எங்கும் அறிவியல், யாவும் கணிதம்” என்பதாகும். அறிவியல் மற்றும் கணித பாடங்களை செய்முறைகளின் மூலம் கற்றுத்தரும் இத்திட்டம் ஆறு முதல் எட்டாம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு செயல்படுத்தப்படுகிறது.

சுமார் 25 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 13,210 அரசுப் பள்ளிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இத்திட்டத்திற்குத் தேவையான உபகரணங்களை வாங்குவதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் 1,200 ரூபாய் வீதம் 1.58 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏழாண்டுகளுக்கு முன்பே, அரசுப்பள்ளிகளுக்கு அறிமுகமான ‘ஸ்டெம்’ (STEM – science technology and engineering mathematics) திட்டம்தான் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஸ்டெம் திட்டத்தில் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதத்தை அப்பள்ளி ஆசிரியர்களே சொல்லிக் கொடுப்பர். ‘புதிதாக’ அறிமுகப்படுத்தியுள்ள வானவில் மன்றத்தின் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் பின்னணி கொண்ட என்.ஜி.ஓ அமைப்புகள், கருத்தாளர்கள்’ என்ற பெயரில் பள்ளிக்குள் நுழைக்கப்படுகின்றனர். முதற்கட்டமாக, 710 கருத்தாளர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.


படிக்க: தி.மு.க.வின் கார்ப்பரேட் பாணியிலான கவர்ச்சிவாத அரசியல் !


அரசுப் பள்ளிகளில் திறமையான அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும்போது, கார்ப்பரேட் சார்புடைய ஊழியர்களைப் பள்ளிக்குள் நுழைப்பதன் நோக்கம் என்ன என்ற கேள்வியைக் கல்வியாளர்கள் பலரும் எழுப்பியுள்ளனர். மேலும், கருத்தாளர்களாக வருபவர்களுடைய கல்வித்தகுதி என்ன? ஆசிரியருக்குரிய தகுதிக்கு அங்கீகரிக்கப்பட்டவர்களா? என்பது போன்ற எந்த விவரங்களையும் அரசு வெளியிடவில்லை. இதன்மூலம், எந்தக் கல்வித் தகுதியும் இல்லாதவர்களை கருத்தாளர்களாக அரசுப் பள்ளிகளில் நுழைத்து மாணவர்களுக்கு வகுப்பெடுப்பதற்கான வழிவகையைத் தமிழக அரசு செய்து கொடுத்துள்ளது.

இந்த கருத்தாளர்களும் எந்த கார்ப்பரேட் நிறுவனங்களிலிருந்து வருகிறார்கள் என்ற புள்ளிவிவரங்களும் வெளியிடப்படவில்லை. “ஆஹா குரு”, “பரிக்ஷன்”, “எய்ட் இந்தியா” மற்றும் “சுடர்” போன்ற அமைப்புகளின் அடையாளக் குறிகள் (லோகோ) தான் வானவில் மன்ற செயல்திட்ட முகப்பில் இடம்பெற்றுள்ளதாக அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உமாமகேஸ்வரி குற்றம் சாட்டுகிறார்.

அதுமட்டுமல்லாமல், இத்திட்டத்தின்படி, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளால் ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் அமைக்கப்படும் குழுக்களில் இக்கருத்தாளர்களும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இடம்பெறுகிறார்கள்.

மக்களைச் சுரண்டி கோடிகளைக் குவிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழியர்கள்தான் ‘லாபநோக்கமில்லாமல்’ அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சேவை செய்ய முன்வந்துள்ளார்களா?

கிராமப்புற பகுதிகளில் இயங்குகிற பல்வேறு அரசுப் பள்ளிகளில் கணித மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதும், இதனால் மாணவர்கள் சிரமத்தை அனுபவிப்பதும் நமக்குத் தெரியும். கல்விமீது அக்கறையுள்ள தமிழக அரசு, ஆசிரியர் நியமனங்களைப் பற்றிப் பேசாமலிருப்பது, ‘இனி அறிவியலையும் கணிதத்தையும் வானவில் திட்ட வகுப்புகளிலேயே படித்துக் கொள்ளுங்கள்’ எனச் சொல்லாமல் சொல்வதா?

மொத்தத்தில், “வானவில் மன்றம்” என்பது, அரசுப் பள்ளியில் போதிய ஆசிரியர்களை ஒதுக்காமல், பெற்றோர் ஆசிரியர் கழகங்களின் மூலமாக உள்ளூர் படித்த இளைஞர்களைக் கொண்டு மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தப் பணியைப் போன்ற ஒரு நடவடிக்கை அல்ல. மாறாக, இது, அரசுப் பள்ளிகளில் அயல்பணி (அவுட்சோர்ஸ்) முறையில் மாணவர்களுக்கு பாடங்களைக் கற்பிக்கும் முயற்சியாகும்!

நம்ம ஸ்கூல்”: ஏலம் கேட்பவர்கள் கேட்கலாம்!

தமிழகத்தில் உள்ள 37,000 அரசுப் பள்ளிகளில், பலவற்றில் கழிவறை, ஆய்வகங்கள் உள்ளிட்டு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இதனை தனியார் பங்களிப்புடன் நிவர்த்தி செய்யத் தொடங்கப்பட்டத் திட்டம்தான் தமிழக அரசு அறிவித்துள்ள “நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்”. சமூக அக்கறைக் கொண்ட தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளின் பங்களிப்புடன் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற முன்மொழிதல்கள் யாவும் புதிய கல்விக் கொள்கையிலேயே உள்ளன; நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் என்பது அதனை அமல்படுத்தும் வடிவமே.

தனியார் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ள எந்தவொரு அரசுப் பள்ளியையும் தத்தெடுக்கலாம்; நூலகம், ஆய்வகம், கழிப்பிடம், சுற்றுச்சுவர் போன்ற பல்வேறு கட்டுமான வசதிகளை ஏற்படுத்தித் தரலாம்; முன்னாள் மாணவர்கள் மற்றும் மக்களில் எந்த பிரிவினர் வேண்டுமானாலும் எந்தவொரு அரசுப்பள்ளிக்கும் நிதியுதவி அளிக்கலாம்; கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய சமூகப் பொறுப்பு நிதியை (CSR – corporate social responsibility) பள்ளிக் கூடங்களுக்கு நிதியுதவியாக அளிக்கலாம் – இவற்றின்மூலம் அரசுப் பள்ளிகளுக்கான செலவினங்கள் முழுவதையும் அரசே ஈடுசெய்ய வேண்டுமென்று எதிர்பார்க்காமல், தனியார் பங்களிப்பை அனுமதிப்பதன்மூலம் பள்ளிக்கட்டமைப்பை வலுப்படுத்தலாம் என்கிறது தமிழக அரசு.


படிக்க: கல்வித் தொலைக்காட்சியில் சங்கி நியமனம்! ஆர்.எஸ்.எஸ்-க்கு அடிமட்ட வேலை பார்க்கிறதா திமுக?


இத்திட்டம் தொடங்கப்பட்ட ஒரே நாளில் 50 கோடி ரூபாய் வரை நன்கொடையாக வந்துள்ளதாக அரசு அறிவித்து மகிழ்ச்சிக் கொள்கிறது. நன்கொடைகளை ஒருங்கிணைப்பதற்காக “நம்ம ஸ்கூல்” என்ற பெயரில் இணையதளமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் தமிழ்நாட்டில் உள்ள 37,000 பள்ளிக்கூடங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன; ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கும் எம்மாதிரியான தேவைகள் இருக்கின்றன என்பதும் பட்டியலிடப்பட்டுள்ளது. போதிய ஆசிரியர்கள் இன்மை, சேதமடைந்த கட்டிடங்கள், கழிப்பிட வசதியின்மை என தமிழக அரசுப்பள்ளிகளின் அவலநிலையை தொகுப்பாக அறியத்தரும் வகையில் இந்த இணையதளம் உள்ளது. இந்த அவலநிலைக்கு யார் பொறுப்பு?

பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்ந்து குறைக்கப்படுவது, அரசியல்வாதிகள்-அதிகார வர்க்கத்தின் ஊழல்-முறைகேடுகள், அலட்சியம் போன்றவைதான் இந்நிலைக்கான முதன்மைக் காரணங்களாகும். சரி இவற்றை ஒருபக்கம் ஒதுக்கிவிடுவோம்; இந்த தனியார் பங்களிப்புத் திட்டம், அரசின் கல்வித்துறை ஒதுக்கீடுகளுக்கான நிதி ஆதாரத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் ஒருங்கிணைக்கப்படுகிறதா என்றால் இல்லை?

கொரோனா பேரிடரைச் சந்தித்தபோது, தனியார் மற்றும் தொழில்நிறுவனங்களின் பங்களிப்புகளை தனது பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கச் சொல்லித்தானே ஒன்றிய, மாநில அரசுகள் கோரின. அப்படியிருக்கையில், பள்ளிக்கட்டமைப்பை வலுப்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் இத்திட்டத்தில் அரசின் பாத்திரம் கைகழுவப்பட்டு, “யார் வேண்டுமானால் பள்ளிக்கூடங்களைத் தத்தெடுத்து பராமரிக்கலாம்” என்று சொல்வதன் பொருள் என்ன?

நிவாரணப் பணி என்பது வேறு, சேவைத்துறை என்பது வேறல்லவா! பசுத்தோல் போர்த்திய புலியாக, அரசுப் பள்ளிகளை கார்ப்பரேட் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுசெல்வதற்கான சதிச்செயலே இத்திட்டம் என்று நாம் குற்றஞ்சாட்டுகிறோம்!

தமிழகத்தில் ஏற்கெனவே கட்டமைப்பு வசதிகள் குறைபாடுடைய நூற்றுக்கணக்கான பள்ளிகள், அங்கு பணிபுரியும் சமூக அக்கறை கொண்ட ஆசிரியர்களின் முன்முயற்சியாலே செயல்பட்டு வருகின்றன; முன்னாள் மாணவர்கள் மற்றும் அப்பள்ளியைச் சுற்றியுள்ள மக்களிடம் இருந்து சிறுசிறு உதவிகளைப் பெற்றும், சில இடங்களில் உள்ளூர் கார்ப்பரேட் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். நிதியைப் பெற்றும் இயங்கிவருகின்றன. இதையே நிறுவனமயமாக்கி கல்வித்துறையை கார்ப்பரேட்டுகளிடம் நேரடியாகவோ அல்லது பினாமிகளான என்.ஜி.ஓ.க்களிடமோ ஒப்படைத்துவிட்டு அரசானது கல்வித்துறையிலிருந்து முற்றாக கை கழுவிக் கொள்வதுதான் இத்திட்டத்தின் நோக்கம்!

டிஜிட்டல் கார்ப்பரேட் மயமாக்கத்தின் பிடியில் பள்ளிக்கல்வி!

கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர் செயற்பாட்டாளர்கள் மத்தியில் இத்திட்டம் ‘அரசு கல்வி கொடுப்பதிலிருந்து விலகும் நடவடிக்கை’ என விமர்சிக்கப்படுகிறது; இது மிகச் சரியான விமர்சனமாகும்; அதேநேரம் இத்திட்டங்கள், கார்ப்பரேட் ஆதிக்கத்தை கல்வித்துறைக்குள் நுழைப்பதற்கான சதி என்ற இன்னொரு அம்சத்தை நாம் அழுத்தமாகவும் விரிவாகவும் பேச வேண்டும்.

தமிழக அரசின் மேற்கண்ட இரு திட்டங்களும் தேசியக் கல்விக் கொள்கையுடன் தொடர்புடையவை என்பது தனியான விசயங்கள் அல்ல. அரசின் இந்நடவடிக்கைகளை கல்வித்துறையில் மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்படுவதன் தொடர்ச்சியாகவே நாம் பார்க்க வேண்டும். இந்தியாவில் 1990-களுக்குப் பிறகு, எல்லா துறைகளிலும் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன. மாவட்ட தொடக்கக் கல்வி இயக்கம், அனைவருக்கும் கல்வி இயக்கம், பெற்றோர் ஆசிரியர் கழகம் போன்றத் திட்டங்கள் எல்லாம் பள்ளிக் கல்வித்துறையில் என்.ஜி.ஓ.களின் ஆதிக்கத்தையும் அதன் வழியாக உலக வங்கியின் உத்தரவுகளையும் நடைமுறைப்படுத்துவதாக இருந்தன.

பள்ளிகளில் சுற்றுச்சுவர், நூலகம், கழிப்பறை, ஆய்வகங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் அரசுப் பள்ளிகளைப் புறக்கணிப்பது, தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்கள் வேலைவாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கும்போது, பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது போன்றவையெல்லாம் இக்கொள்கைகளின் தொடர்ச்சியே.

என்.ஜி.ஓ.க்களின் ஆதிக்கத்தை அதிகரிப்பது, கல்வி வழங்குவதில் இருந்து அரசு ஒதுங்கிக் கொள்வது, கல்வியை தனியார்-கார்ப்பரேட் கொள்ளைக்கானதாக மாற்றியமைப்பது என பல்வேறு கூறுகளைக் கொண்டு கல்வித் தனியார்மயத்தை ‘அடுத்தக் கட்டத்திற்கு’க் கொண்டுசெல்ல உருவாக்கப்பட்டதுதான் புதிய கல்விக் கொள்கை 2020; கல்வியில் நேரடியாக கார்ப்பரேட் (பொதுவில் தனியார்மயமல்ல) ஆதிக்கத்தை நிறுவுவதே, இங்கு அடுத்த கட்டமாகும். இந்த கொள்கைகளைத்தான் கவர்ச்சிவாத முகமூடி அணிவித்து நடைமுறைப்படுத்துகிறது தி.மு.க அரசு.

000

கல்வித்துறையில் கார்ப்பரேட் ஆதிக்கம் நிலைநாட்டப்படும் போக்கைப் பற்றி ஒரு சித்திரத்திற்கு (Outline) வரவேண்டுமானால், இன்றைய ஏகாதிபத்திய உற்பத்தி மற்றும் வினியோகக் கட்டமைப்பை புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பிட்ட பிராண்டுக்குச் சொந்தமான கார்ப்பரேட் நிறுவனம், தனது வணிகப் பொருளை முழுவதுமாக ஒரே தொழிற்சாலைக்குள் உற்பத்தி செய்வதில்லை.

ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கான செயல்முறையை பல்வேறு தனித்தனி வேலைகளாகப் பிரித்து, ஒவ்வொரு வேலைகளையும் தனித்தனி துறைகளாக்கி (தனிச்சிறப்புமயமாக்கல் – Specialization), அவற்றை அயல்பணி (அவுட்சோர்ஸிங்) மூலம் செய்துமுடிப்பதே கார்ப்பரேட் மயமாக்கப்பட்ட உற்பத்தி முறையாகும்.

அரசுப் பள்ளிகளை முறையாக பராமரிக்காமல் மக்களை தனியார் பள்ளிகளை நோக்கி தள்ளுவதற்கும், கல்வித்துறையை பல துறைகளாகப் பிரித்து கார்ப்பரேட்மயமாக்குவதற்கும் வேறுபாடுகள் உள்ளன. இவை இரண்டும் கல்வியை வியாபாரமயமாக்கும் (Commercialization) போக்கின் இருவேறு அங்கங்களாகும்; முன்னேறிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகளாகும்.

000

பள்ளிக் கல்வியில் டிஜிட்டல்மயமாக்கத்தை கவனிப்போம். பாடப் புத்தகங்களை நவீனப்படுத்துவது என்ற பெயரில் கியூ.ஆர்.குறியீடுகள் கொடுக்கப்படுகின்றன. ஆண்ட்ராய்டு ஃபோனைப் பயன்படுத்தத் தெரிந்த மாணவர்கள், பெற்றோர்கள் அதனைப் பயன்படுத்தி பாடம் தொடர்பான கூடுதல் விளக்கங்களை இணையத்தில் காட்சி வடிவமாகத் தெரிந்து கொள்கின்றனர். இதன்மூலம் ஒரு பாடத்தைப் புரிந்துகொள்வதில் கூடுதல் விளக்கம் கிடைப்பதானாலும், காட்சியாகப் பார்க்கும்போது மாணவர்களின் மனதில் பதிவை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாலும், இதனை நாம் வரவேற்கிறோம்.

மேலும் ஆன்லைன் வகுப்புகள், கல்வித் தொலைக்காட்சி போன்ற பலவும் கல்வி புகட்டுவதில் அமலாகிக் கொண்டிருக்கும் டிஜிட்டல்மயமாகும். இப்போது, “வானவில் மன்றம்” மூலம் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களை ஆர்வமூட்டும் வகையில் நடத்துவது என்ற பெயரில் டிஜிட்டல் வடிவக் கல்வி பின்பற்றப்படலாம். கல்வி புகட்டுவதில் ஆசிரியர்களுக்கு துணையாகவும் தற்காலிகமானதாகவும் இருந்த டிஜிட்டல் வடிவக் கல்வி, தற்போது தனித்துறையாகப் பரிணமித்துவருகிறது. இதற்கு உள்ளேயே கியூ.ஆர்.குறியீடுகள், ஆன்லைன் வகுப்புகளுக்கான செயலிகள், தொலைக்காட்சி சானல்கள் என பல வடிவங்கள் உள்ளன.

பள்ளிப்பாடங்களை டிஜிட்டல் வழியில் நடத்துவதற்கு நாளை வானவில் திட்டத்தின்வழியே உள்நுழைக்கப் பட்டிருக்கும் ‘ஆஹா குரு’ (நீட், ஜே.ஈ.ஈ தேர்வுகளுக்கு ஆன்லைன் பயிற்சியளிக்கும் கார்ப்பரேட் நிறுவனம்) போன்ற நிறுவனங்களுடன் அரசு உடன்படிக்கை செய்துகொள்ளலாம். இது ஊகமல்ல, இணையவழிக் கல்வியை ஊக்குவிப்பதை புதிய கல்விக் கொள்கையே வலியுறுத்துகிறது. பல்கலைக்கழக மானியக்குழுவானது, கலவைமுறைக் கற்றல் (Blended Education) என்ற பெயரில் கட்டாயமாக 40 சதவிகிதம் வகுப்புகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பிய நிகழ்வை, இந்த இடத்தில் இணைத்துப் பார்க்க வேண்டும். கல்வி புகட்டுவதில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தைக் கொண்டுவருவதற்கே இந்த டிஜிட்டல் திணிப்பு!

000

ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல், சொற்ப இடங்களை மட்டும் ஒப்பந்த (அவுட்சோர்ஸ்) அடிப்படையில் நியமித்துவருகிறது அரசு. நாளை இந்த ஒப்பந்தப் பணிகளிலும் கார்ப்பரேட் ஆதிக்கம் நிலைநாட்டப்படப்போகிறது. அரசுத்துறையில் ஒப்பந்த ஊழியர்களை நிரப்ப வெளிமுகமைகளை (ஏஜென்சிகள்) நாடலாம் என்பது அண்மையில் தமிழக அரசால் கொண்டுவரப்பட்டு, எதிர்ப்பின் காரணமாக திரும்பப் பெறப்பட்ட அரசாணை 115-ன் சாரம். தற்போது அது பின்வாங்கப்பட்டாலும் நடைமுறையில் அவை அமலாகப்போகின்றன.

கடந்த மே மாதம் “தமிழ்நாடு கல்வி பெலோஷிப்” என்ற பெயரில், பி.எட் படிப்பு முடித்த கிராமப்புற இளைஞர்களுக்கு உதவித்தொகை அடிப்படையில் அரசுப்பள்ளிகளில் வேலைவாய்ப்பு வழங்கும் சிறப்புத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அரசுப் பள்ளிகளை வலுப்படுத்துதல், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளித்தல் என்ற இரட்டை இலக்குகளை நிறைவேற்றப்போகும் மாபெரும் சமூகநீதித் திட்டம் என்று விளம்பரப் படுத்தப்பட்டது.


படிக்க: 2,381 அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் மூடல் : தனியார் பள்ளிகளை வளர்க்க திமுக அரசு செய்யும் சதி!


அண்மைய செய்தி என்ன தெரியுமா? பள்ளிக் கல்வித்துறை “மதி பவுண்டேஷன்” என்ற கார்ப்பரேட் பின்னணி கொண்ட என்.ஜி.ஓ அமைப்பின் வழியாக இந்த உதவித்தொகை பெறும் தன்னார்வலர்களை நியமிக்கப் போகிறார்களாம். அவர்களுக்கான மாத உதவித்தொகை ரூபாய் 40,000 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுநாள்வரை அரசே நேரடியாக நியமித்த கவுரவ விரிவுரையாளர்கள், தற்காலிக ஆசிரியர்களுக்கு அதிகபட்சம் பிச்சைக் காசாக ரூபாய் 10,000 முதல் 15,000களை மட்டுமே வீசியெறிந்த அரசு; என்.ஜி.ஓ தன்னார்வலர்களுக்கு எடுத்த எடுப்பில் 40,000 ரூபாய் சம்பளம் வழங்குகிறது.

தகுதியும் திறமையும் உள்ள, ஆசிரியர் தகுத்தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு ஆண்டுக்கணகாகப் பணி ஆணை வழங்காமல் இழுத்தடித்துவரும் அரசு, இப்போது எவ்விதம் தகுதியும் சோதனையும் இல்லாமல் சிறப்பு ஊழியர்கள் என்ற பெயரில் என்.ஜி.ஒ.க்களின் மூலம் ஆசிரியர்களை நியமிக்கிறது! அயல்பணி (அவுட்சோர்ஸ்) போன்ற இத்திட்டத்தின்மூலம் தற்போது ஒரு என்.ஜி.ஓ., மக்கள் பணத்தைக் கோடிகோடியாக கொள்ளையடிக்கப் போகிறது; அரசு ஆசிரியர் பணி ஒழித்துக்கட்டப்படப் போகிறது.

மறுகாலனியாக்கத்தில், எங்கே சமூகநீதி?

தற்போதைய கல்விமுறையானது மனப்பாடக் கல்வியாகச் சுருங்கி வெகுகாலமாகிவிட்டது. தனியார் மெட்ரிக் பள்ளிகள், பிராய்லர் கோழிகளை உற்பத்தி செய்வதைப் போல மாணவர்களை சுயசிந்தனை அற்றவர்களாகவும் படித்தல்-ஒப்புவித்தல் என்பதை மட்டுமே செய்யும் இயந்திரங்களாகவும் சுயநலப் பிராணிகளாகவும் மாற்றி வருகின்றன.

அரசுப் பள்ளிகளில்கூட விளையாட்டு நேரம், நீதிபோதனை போன்ற நேரங்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டுவிட்டன.  பள்ளி இறுதியாண்டு தேர்வு, பொதுத்தேர்வு, உயர்கல்விகளுக்கான நுழைவுத் தேர்வுகள் மாணவர்களை கல்வியில் இருந்து பிரித்து அவர்களை திறனற்றவர்களாக முத்திரைக் குத்தி இழிவுப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர்கள் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கையோ இவற்றை மேலும் தீவிரப்படுத்துகின்றன.

இச்சூழலில், அண்மைக் காலமாக ஆன்லைன் கல்விப் புகுத்தப்பட்ட பின்னர், மாணவர்கள் மத்தியில் பாலியல் சீரழிவுகள் அதிகரித்துள்ளன. பல மாணவிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக சமூக ஆய்வாளர்களும் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழக அரசின் செயல்பாடுகள் காரணமாக, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதாக கல்வி அமைச்சர் தெரிவிக்கிறார். ஆனால், உண்மை அதுவல்ல. கொரோனா ஊரடங்குக்கு பின்னர், தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க வசதியில்லாத பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகினர். ஆனால், அதே காலகட்டத்தில் பல இலட்சம் மாணவர்கள் கல்வியிலிருந்தே வெளியேறியுள்ளனர். தற்போது அரசுப் பள்ளிகளில் படிக்கும் பல மாணவர்கள், கொரோனா ஊரடங்கு காலங்களில் குடும்பப் பராமரிப்புக்காக வேலைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் குறைந்துள்ளது.

எதார்த்தம் இவ்வாறிருக்க, டிஜிட்டல்மயமாக்கம், கார்ப்பரேட்மயமாக்கம் என்பது ஏழை மாணவர்களை கல்வியில் இருந்து முற்றிலும் வெளியேற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளாகும்; சமுதாயத்தின் பெரும் பிரிவு மக்களை, எதிர்கால சந்ததியினரை கல்வியில்லாமல் ஒழிக்கும் இந்த நடவடிக்கைகள், மனுதர்மத்தை போதிக்கும் சாதி ஏற்றத்தாழ்வுகளை நேரடியாக ஆதரிக்கவில்லை எனினும், இவை சமூக ஏற்றத்தாழ்வுகளை மேலும் தீவிரப்படுத்துபவையே. சமூகத்தின் ஒரு பிரிவு மக்களை நிரந்தரமாக கல்வியில் இருந்து ஒதுக்கி வைக்கும் நவீன பார்ப்பனிய பயங்கரவாதத் தாக்குதல்களே!

திராவிட மாடலின் மெய்ப்பொருள்!

தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து மேற்கொள்ளும் பல்வேறு திட்டங்கள் உழைக்கும் மக்களின் அடிப்படை உரிமைகளை மறைமுகமாகப் பறிக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. மின்சார இணைப்புடன் ஆதாரை இணைப்பது, அரசுத் துறைகளில் அயல்பணி முறையில் ஊழியர்களை நியமிப்பது, அரசு அலுவலகங்களில் ஆவணங்களை டிஜிட்டல்மயமாக்குவது போன்றவை அனைத்தும் கார்ப்பரேட் மயமாக்குவதற்காகவே. இவை, காவி பாசிசத்திற்கும் வழிவகையாகவும் அமைகின்றன.

புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., அதை மறைமுகமாக அமல்படுத்துகிறது. தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை 80 சதவிகிதம் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டதாக ஆசிரியர் உமா மகேஸ்வரி குற்றஞ்சாட்டுகிறார். இந்தியாவில் எந்தவொரு மாநிலத்தையும்விட, தமிழகத்தில் தீவிரமாக புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டுகிறது ‘அகில இந்தியக் கல்விப் பாதுகாப்புக் கமிட்டி’யின் அறிக்கை. இந்நிலையில், தி.மு.க தலைமையிலான அரசு, மாநிலக் கல்விக்கொள்கையை வகுக்கக் குழு அமைத்துள்ளதாகக் கூறுகிறது; அதன் முடிவுகள் எப்படி இருக்கப் போகிறது என்பது தற்போதைய நடவடிக்கைகளே வெட்ட வெளிச்சமாகக் காட்டுகின்றன.

தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளும் திராவிட இயக்கங்களும் இவற்றையெல்லாம் எதிர்ப்பதில்லை. மாறாக, வாழ்த்தி வரவேற்கின்றன. சான்றாக, “வானவில் மன்ற”த் திட்டத்தை திராவிட விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், “பகவத் கீதை, சோதிடம், வேத-புராண சாஸ்திரங்கள் அனைத்தும் பாடங்களாக்கப்பட்டு மாணவர்களுடைய பிஞ்சுநெஞ்சில் நஞ்சு விதைக்கப்பட்டு வருகிறது; மாற்றாக, அறிவியல் மனப்பான்மை வளர்க்க வேண்டும் என்று குரல் கொடுக்கிற ஒரே அரசு திராவிட மாடல் அரசுதான்” என்று கூறியுள்ளார். ஆனால் கல்வித்துறையை கார்ப்பரேட் மயமாக்குவதுதான் திராவிட மாடலா? அல்லது சமூகநீதியா?

புதிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தித் திணிப்பு, வரலாற்றை தங்களுக்கு சாதகமாகத் திருத்தி எழுதுதல், பாடத்திட்டங்களில் புராணக் குப்பைகளைத் திணித்தல் போன்ற கல்வித்துறையை காவிமயமாக்கும் நடவடிக்கைகளை மட்டும்தான் சமூகநீதி பேசுவோர் எதிர்க்கின்றனர். கல்வித்துறையை கார்ப்பரேட் மயமாக்குவதைப் பற்றி இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.

தி.மு.க. அரசின் சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு போன்ற மக்கள் விரோத திட்டங்கள் ஒவ்வொன்றையும் பா.ஜ.க. கும்பலானது எதிர்க்கும்போது, கல்வித்துறையில் அமல்படுத்தப்படும் இத்திட்டங்களைப் பற்றி மட்டும் ஏன் வாய்திறக்கவில்லை. ஏனென்றால், பா.ஜ.க. கும்பலின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளோடு அவை ஒத்துப்போவதுதான் காரணம்.

’வளர்ச்சி’ என்ற பெயரில் நாட்டை அம்பானி – அதானி போன்ற பார்ப்பன, பனியா, மார்வாடி, குஜராத்தி, சிந்தி சாதிப் பின்னணி வடபுலத்து கார்ப்பரேட் கும்பலுக்கு பா.ஜ.க. திறந்துவிடுகிறது எனில், தி.மு.க.வோ தமிழக, தென்னிந்திய கார்ப்பரேட்டுகளுக்குத் திறந்துவிடுகிறது; திராவிட மாடலுக்கு இதான் மெய்யான பொருள்!

தங்கம்

1985 சென்னை துப்பாக்கிச்சூடு | வழக்குரைஞர் லிங்கன் நேர்காணல்

1970-களின் இறுதியில், உலக வங்கி நகர கட்டமைப்புகளுக்காக நிதி அளிக்கத் தொடங்கியிருந்தது. உலக வங்கி தேர்ந்தெடுத்திருந்த நகரங்களின் பட்டியலில் சென்னையும் இடம்பெற்றிருந்தது. 1973-ம் ஆண்டு, உலக வங்கியின் ஒரு குழு, சென்னை, கல்கத்தா முதலான இந்திய நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பெரும் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு ஏற்ற இடமாக சென்னை இருக்கும் எனத் தேர்வு செய்திருந்தது.

முதல் மெட்ராஸ் நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் (Madras Urban Development Project – I) என்ற பெயரில் உலக வங்கியின் நிதியுதவி சென்னையை வந்தடையத் தொடங்கியது. 1977-ம் ஆண்டு, 62 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாக அளித்தது உலக வங்கி. இரண்டாவது மெட்ராஸ் நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் 1980 முதல் 1988 வரை, உலக வங்கியால் தமிழ்நாடு அரசுக்கு 42 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனாக வழங்கப்பட்டன. சென்னையின் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் இந்த நிதியைக் கொண்டு மாற்றியமைக்கப்பட்டன.

இந்தக் காலகட்டத்தில் சென்னை முழுவதும் குடிசைப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் காலிசெய்யப்பட்டு, நகரத்துக்கு வெளியே குடி வைக்கப்பட்டனர். 1985-ம் ஆண்டு, மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தை எம்.ஜி.ஆர் தலைமையிலான தமிழக அரசு அறிவித்தது. அரசின் மொழியில், மெரினா கடற்கரையை அழகுபடுத்துவது என்பதற்கு, பாரம்பர்ய மீனவர்களைக் கடற்கரையைவிட்டு அப்புறப்படுவது என்று பொருள்.

நன்றி: விகடன்

***

எம்.ஜி.ஆர் அரசாங்கம் எவ்வாறு மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டம் எனும் பெயரில் மீனவர்களை அப்புறப்படுத்த முயன்றது என்பது குறித்தும் அதற்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்தும் வழக்குரைஞர் லிங்கன் அவர்கள் விரிவாக அளித்த நேர்காணலை வினவு செய்திப்பிரிவின் சார்பாக தொகுத்து வெளியிடுகிறோம். (வழக்குரைஞர் லிங்கன் அவர்கள் புயலைக் கிளப்பும் ஒக்கிப்புயல் விவாதங்கள்!, மீனவர்களும் அரசியல் பிரதிநிதித்துவமும் முதலான மீனவர் பிரச்சினைகள் குறித்த புத்தகங்களை எழுதியுள்ளார்)

மெரினா கடற்கரையை அழகு படுத்துவதாக 1985-ஆம் ஆண்டு இறுதியில் எம்.ஜி.ஆர் அரசு முடிவு செய்தது. அண்ணா சதுக்கம் முதல் கலங்கரைவிளக்கம் வரையுள்ள பகுதிகளில் கட்டுமரங்களை நிறுத்தவோ வலைகளை காய வைக்கவோ அனுமதிக்கப் போவதில்லை என்று முடிவு செய்தது.

1985-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மீனவர்கள் கட்டுமரங்கள் மற்றும் படகுகளை கடற்கரையில் நிறுத்தக்கூடாது, வலைகளை உலரவைக்கக்கூடாது என்று அரசாங்கம் திடீரென்று அறிவிக்கின்றது. இந்த முடிவின் அடிப்படையில் 1985-ஆம் ஆண்டு நவம்பர் 3-அன்று கட்டுமரங்களை, வலைகளை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பது குறித்து ஒரு  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அப்போதைய தலைமை செயலாளர் டி.வி.அந்தோணி மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கட்டுமரங்களையும் வலைகளையும் எப்படி அப்புறப்படுத்தலாம் என்று திட்டமிடப்பட்டது.

மறுநாள் காலை நவம்பர் 4-ஆம் தேதியன்று அதிகாலை 4 மணியளவில்  சீரணி அரங்குக்கும் கலங்கரை விளக்கத்திற்கும் இடையே உள்ள கட்டுமரங்களை அப்புறப்படுத்தினர். சீரணி, ஓளவையார் சிலை, ஐஸ் ஹவுஸ் ஆகிய பகுதிகளில் மாட்டாங்குப்பம், நடுக்குப்பம்,  அயோத்தியா குப்பம்  முதலிய பகுதிகளைச் சேர்ந்த கட்டுமரங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், அங்கு இருந்த படகுகளை அப்புறப்படுத்த 10,000 போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். போலீசு மூலம் 150 லாரிகளின் உதவியோடு கட்டுமரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

அன்று மாலை 4 மணிக்கு அயோத்தியா குப்பத்தில் மீனவர்கள் கூட்டம் நடத்தி போராட்டம் நடத்த முடிவெடுத்தனர். அதற்கு மறுநாள், அதாவது நவம்பர் 5-ஆம் தேதியன்று காலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகமான சென்னை எழிலகத்தில் மீனவர்கள் கட்டுமரத்தை திருப்பி தர வேண்டியும், மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டியும் கொட்டும் மழையில் உண்ணாவிரத போராட்டத்தில்  ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டம்  நடந்துக்கொண்டிருக்கும் வேளையில் மீனவர் சார்பாக மண்டல் குழுவில் தலைவர் சி.சுப்ரமணியம் ரிட் மனுவை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு அனுப்பினர். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, அவ்வழக்கை நீதிபதி  மோகனுக்கு ஒதுக்கினார். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டபின்பு வழக்கை நீதிமன்ற அமர்வுக்கு மாற்றப்பட்டது.


படிக்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவு கொடுத்தது யார்?


நவம்பர் 6-ஆம் தேதி அன்று சென்னை தலைமை செயலக அலுவலகத்தில் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் மனு கொடுக்க ஊர்வலமாக மீனவர்கள் சென்றபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதனையெடுத்து, காந்தி சிலை அருகே உண்ணாவிரதம் மேற்கொண்டபோது அன்னம்மாள் என்ற பெண்மணி உயிரிழக்கிறார். அந்த உண்ணாவிரத போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரான கருணாநிதி கலந்துகொள்கிறார். படகுகளைத் திருப்பித்தரவில்லை என்றால் நவம்பர் 8-அன்று எதிர்க்கட்சிகளோடு கூட்டம் நடத்தி போராட்டத்தை அறிவிக்க உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

நவம்பர் 7-ஆம் தேதி அயோத்தியாகுப்பத்தில் இருந்து மீனவர்கள் ஊர்வலமாக சென்றனர். அவர்கள், சென்னை பல்கலைக்கழகத்தின் அருகில் வந்துக்கொண்டிருந்த போது காவல்துறை தடுக்கிறது. தடுப்பை மீறி வழக்கு விசாரணை நடத்த தாமதம் செய்யும் உயர்நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். வழக்கு மதியம் 12 மணிவரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதற்கான காரணமாக விசாரிக்க வேண்டிய தலைமை நீதிபதி விடுமுறை மற்றும் அரசு எதிர் மனுத்தாக்கல் செய்ததுள்ளது ஆகியவை முன்வைக்கப்பட்டன. ஆர்ப்பாட்டம் கோட்டையை நோக்கி திரும்பியபோது மீனவர் கோதண்டராமன் மண்ணணெய் ஊற்றி தீக்குளித்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நவம்பர் 9-ஆம் தேதியன்று உயிரிழந்தார்.

சுமார் நான்கு மணி நேரம் கொட்டும் மழையில் கட்டுமரத்தை திருப்பி தரக்கோரியும்,கோதாண்டராமன் மறைவுக்காகவும்  மீனவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்தை அகில இந்திய மீனவர் சங்கத்தின் தலைவர் சுப்ரமணியம் தலைமையேற்று நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு இடையில், மீனவர் சார்பாக நவம்பர் 13-ஆம் தேதியன்று  பிரதமரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. அதன்பிறகு அகில இந்திய மீனவர் சங்கத்தின் பொது செயலாளர் காளப்பன் தந்தியின் மூலம் ரிட் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிக்கு அனுப்பினர். அந்த ரிட் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.


படிக்க: தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படையினரை கைது செய்து தண்டனை வழங்குக! மக்கள் அதிகாரம்


நவம்பர் 5-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நவம்பர் 14-அன்று நீதிபதிகள் டி.என் தங்கவேலு மற்றும் நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மீனவர் சார்பாக வழக்கறிஞர் பி.ஆர்.செல்வராஜ் மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் எம்.ஆர்.காந்தியும், அரசு தரப்பு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தியும் ஆஜராகினர்; ஆனால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதற்கிடையில் இரண்டு வாரம் அமைதியாக இருந்த சூழலில்  டிசம்பர் 4-ஆவது தேதி புதன்கிழமை நடுக்குப்பம், மெரினா காவல்நிலையம், காமராஜர் சாலை, குடிசை மாற்று வாரியம் ஆகிய இடங்களில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. போலீசார் 17 ரவுண்டு சுட்டனர். அதில் சேகர், அயோத்திக்குப்பத்தை சேர்ந்த துலுக்காணம், சேகர், மனோகர், நொச்சிக்குப்பத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை என ஐந்து மீனவர்கள் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர்; 19 பேர் காயமடைந்தனர். மீனவர்கள் மீது 8 வழக்குகள் பதியப்பட்டு 41 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் நடந்த அதே நாளில்தான் உச்சநீதிமன்றத்தில் சின்னப்ப ரெட்டி-பாலகிருஷ்ண ஏராடி-காலித் அடங்கிய அமர்வு கட்டுமரங்களை மீனவர்களிடம் ஓப்படைப்பதற்கும், முன்பு போல் மீன் பிடிக்க அனுமதிப்பதற்கும் இடைக்கால உத்தரவை வழங்கியது.

டிசம்பர் 5-ஆம் தேதி அன்று வழங்கப்பட்ட மற்றொரு தீர்ப்பில் மீனவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட கட்டுமரங்கள், வல்லங்கள், வலைகளை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்ற துணைபதிவளாரின் மேற்பார்வையில் அது நடக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சென்னை மாவட்ட ஆட்சியர், உயர்நீதிமன்ற துணைபதிவளார் முன்னிலையில் மீனவர்களிடம் அவர்களுடைய வலைகள், வல்லங்கள், கட்டுமரங்கள் ஒப்படைக்கப்பட்டன.

டிசம்பர் 6 அன்று துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆரம்பாக்கம், எண்ணூர், பழவேற்காடு, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் மக்கள் கறுப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். டிசம்பர் 7 அன்று துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடலை மாட்டுவண்டியில் வைத்து இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது.

டிசம்பர் 9-ஆம் தேதி அன்று தஞ்சை, நாகை மாவட்டங்களில் துப்பாக்கி சூட்டை கண்டித்து முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அதே நாளில்  திருவல்லிக்கேணியில் தோழமை கட்சிகளுடன் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. டிசம்பர் 10 அன்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை நீட்டித்தது.

கலங்கரைவிளக்கம் பகுதிக்கு பாதுகாப்பு வழங்கவேண்டி புறக்காவல் நிலையம் (outpost) அமைக்கத்தான் முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக அங்கு காவல் நிலையமே (police station) அமைக்கப்படுகிறது. துணை ஆணையராக இருந்த தேவாரம் துப்பாக்கிச் சூட்டிற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக ஆணையராக நியமிக்கப்படுகிறார். மெரினாவை அழகுபடுத்தும் திட்டத்தை எதிர்க்கும் மக்களை ஒடுக்கவே அங்கு காவல் நிலையம் அமைத்திருக்கிறார்கள் என்பது பின்னர்தான் புரியவருகிறது. துப்பாக்கி சூடு மீனவர்களை கடலில் இருந்து அந்நியப்படுத்தியது.

– வழக்குரைஞர் லிங்கன்

***

மீனவ நண்பனாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடைபெற்ற இந்த கோரசம்பவம் மீனவர்கள் மத்தியில் ஒரு ஆறாவடுவாக இன்றுவரை நீடிக்கிறது.

அதானி முதலாளி கிடையாது பயங்கரவாதி | தோழர் மருது | வீடியோ

குஜராத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு தீர்ப்பு வந்தது.உலகத்தில் இந்த மாதிரி தீர்ப்பையெல்லாம் இவர்களினால்தான் சொல்ல முடியும்.பசுவை ஒருவர் கடத்தினார் என்பதற்காக அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியிருக்கிறார்கள் நீதிபதிகள். ஆனால் பில்கிஸ் பானு என்கிற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வன்புணர்வு செய்த பார்ப்பன இந்துமத வெறியர்கள் அனைவரையும் விடுதலை செய்தபோது எதையும் கிள்ளி போடாத நீதிமன்றம் தற்போது மாட்டை கடத்தினால் ஆயுள் தண்டனை என்று கூறுகிறது.அப்படி அரசியலமைப்பு சட்டம் மாற்றி அமைக்கப்பட்டுவருகிறது.இப்படி எல்லாத் துறையும் முழுங்கிவிட்ட இந்த ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி காவி கும்பல் தற்பொழுது நீதித்துறையும் விளங்கிக் கொண்டிருக்கிறது.

நாட்டின் பிரச்சனை என்பது என்ன விலைவாசி உயர்வு நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருக்கிறது.
ஆனால் அதற்கு எதிராக பேசமால்,பசு மாட்டை கட்டி பிடிக்க சொல்கிறார்கள். பசுமாட்டை மட்டும் கட்டி பிடிக்க சொல்லும் இவர்கள் எருமை மாட்டை கட்டிப்பிடிக்க சொல்வார்களா? எருமை மாடு மட்டும் என்ன கேவலமா? பசு மாட்டை எங்களுடைய பயன்பாட்டிற்கும் உணவுக்காகவும் பயன்படுத்துகிறோமே தவிர கடவுள் நம்பிகை,புனிதமாக கூறுகிற ஆரிய பார்ப்பணிய கலாச்சாரத்திற்காக நாங்கள் பின்பற்றுவது இல்லை. இந்துராஷ்டிரத்தை நிறுவ அதற்கேற்றார் போல் இன்னொரு மாற்று பண்பாட்டை நம் தலையில் கட்டுகிறார்கள்.சொல்லப்போனால் இடது பக்கம் இருந்த ஒன்றை வலது பக்கம் நோக்கி சுற்ற நினைக்கிறார்கள்.இப்படி ஒவ்வொன்றாக மாற்றி அவர்கள் நினைக்கும் இந்துராஷ்டிரம் அமைவதற்கு ஏதுவான எல்லா சித்தாந்தங்களையும் மாற்றி அமைப்பார்கள்.ஏற்கனவே கல்வியை காவிமயப்படுத்தி கொண்டிருக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி தற்பொழுது நம்முடைய பண்பாட்டிலும் காவிமயத்தை பூசி வருகிறது. நம்முடைய பண்பாட்டிற்கு எதிரானது பார்ப்பனிய பண்பாடு. அப்படிப்பட்ட பிற்போக்கான பண்பாட்டை இங்கு விதைக்க துடிக்கிறார்கள் காவி கும்பல்கள்.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஜனநாயக ஊடகங்களின் குரல்வளையை நெறிக்கும் பாசிஸ்ட்டுகள்!

காவி பாசிஸ்டுகளின் கார்ப்பரேட் சேவையையும், சங்கப் பரிவாரக் கும்பல் வன்முறைகளையும் அம்பலப்படுத்துகிற ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சுதந்திர ஊடகங்கள்தான் (Freelance Media – சமூக அக்கறைக் கொண்டவர்களால் நடத்தப்படும் ஊடகங்கள்) காவி பாசிஸ்டுகளின் இலக்காகியிருக்கின்றன.

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலில் இந்துராஷ்டிர மாடலாக உள்ள உத்தரப்பிரதேசம்தான் இந்திய அளவில் முதலிடத்தில் இருக்கிறது. உலகளவில் ஊடக சுதந்திரக் குறியீட்டில் 180 நாடுகளின் பட்டியலில், கடந்த 2021 ஆம் ஆண்டில் 142-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 150-வது இடத்திற்கு சென்றிருக்கிறது என்கிறது “எல்லைகளில்லா பத்திரிகையாளர்கள்” (Reporters without Borders) என்ற அமைப்பின் அறிக்கை.

கொலைகள்… கைதுகள்… மிரட்டல்கள்

காவி பாசிஸ்ட்டுகளுக்கு  எதிராக போராடினால் ‘புல்டோசரை’யும், எழுதினால் கைதுகள்-வழக்குகளையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதே பாசிஸ்டுகள் உருவாக்கியிருக்கும் புதிய இயல்புநிலை.

கடந்த 2020-ஆம் ஆண்டு, உத்தரப்பிரதேசம் ஹத்ராஸில் தாழ்த்தப்பட்ட பெண் ஒருவர் தாக்கூர் ஆதிக்க சாதி குண்டர்களால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, நாக்கறுக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட அப்பெண்ணின் உடலைக்கூட அப்பெண்ணின் பெற்றோர்களிடம் ஒப்படைக்காமல், இரவோடு இரவாக போலீசே எரித்துக் கொன்ற கொடூரம் இந்தியாவையே உலுக்கியது. இக்கொலை குறித்து உண்மைகளை வெளிக்கொணர உ.பி.க்குச் சென்ற கேரளாவைச் சேர்ந்த சித்திக் கப்பான் என்கிற மலையாள இணையதளப் பத்திரிகையாளரை ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்து இரண்டு ஆண்டுகள் சிறை வைத்தது யோகி ஆதித்யநாத் அரசு. நீண்ட சட்டப்போராட்டம் மற்றும் களப்போராட்டங்களுக்குப் பின்னர்தான் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஹத்ராஸ் கொடூரம் நடந்த அதே நாளில், அப்பெண்ணின் உறவினர்களைப் பேட்டிக்கொண்டு கொலை தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வந்தார் “இந்தியா டுடே” வார இதழின் பத்திரிகையாளர் தனுஸ்ரீ பாண்டே. கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரனிடம் உ.பி அரசு தங்களை அச்சுறுத்துவதாகக் கூறும்படி தனுஸ்ரீ பயிற்சியளித்தார் என்று பத்திரிகையாளர் தனுஸ்ரீக்கு எதிராக அவதூறைப் பரப்பியது, காவி கும்பல். இதனைத் தொடர்ந்து தனுஸ்ரீ இந்தியா டுடே பத்திரிகையிலிருந்து விலகிவிட்டார்.

தனுஸ்ரீ இந்தியா டுடே பத்திரிகையில் இருந்து விலகியது தொடர்பாக ஆங்கில மாத இதழான “தி கேரவன்” கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அக்கட்டுரையில், பா.ஜ.க.வுக்கு எதிராக செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் இந்தியா டுடே பத்திரிகையிலிருந்து ஓரங்கட்டப்படுகின்றனர், இறுதியில் அவர்கள் வெளியேற்றப்படுகின்றனர் என்று குறிப்பிடுகிறது. இந்தியா டுடே பத்திரிகையே பா.ஜ.க. ஆதரவு பத்திரிகை என்றும், அந்தவகையில்தான் தனுஸ்ரீயும் அப்பத்திரிகையில் இருந்து ‘விலகும்’ நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.


படிக்க: கிட்டத்தட்ட 88% இந்திய ஊடகங்களின் தலைமைப் பதவிகள் உயர்சாதியினரின் கைகளில் உள்ளது!


இவை மட்டுமல்ல, உ.பி.யில் காவி கும்பல்களின் ஊழல்களையும் அரசு நிர்வாகத்தின் முறைகேடுகளையும் அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்கள் யோகி ஆதித்யநாத் அரசினால் நரவேட்டையாடப்பட்டுள்ளனர். உ.பி.யில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவாக வழங்கப்படும் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு கொடுக்கப்படும் அவலத்தை வெளியிட்டதற்காக பஸ்வான் ஜெய்ஸ்வால் என்ற உள்ளூர் பத்திரிகையாளரைக் கொடூரமாகத் தாக்கியிருக்கிறது உ.பி. போலீசு. சாராய மாஃபியா கும்பல்களின் ஊழலை அம்பலப்படுத்தியதற்காக ஸ்ரீவஸ்தவா என்ற பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சந்தோஷ் ஜெய்ஸ்வால் என்ற மற்றொரு பத்திரிக்கையாளர், ஆரம்பப் பள்ளிக் குழந்தைகள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்வதை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் உ.பி. அரசின் நிர்வாக சீர்கேடுகளை அம்பலப்படுத்தியத்திற்காக ஸ்க்ரோல் (Scroll) இணையதளத்தின் பத்திரிகையாளர் சுப்ரியா சர்மா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேற்கண்ட நிகழ்வுகள் சில சான்றுகளே. 2017 முதல் 2022 வரையிலான யோகியின் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில், 12 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; 48 பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்; 66 பத்திரிகையாளர்கள் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன என்கிறது, பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான குழுவின் அறிக்கை.

பெண் பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதனால், பல பத்திரிகையாளர்கள் அவர்களது துறையைவிட்டே ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கர்நாடகாவின் புகழ்பெற்ற பெண் பத்திரிகையாளரான கவுரி லங்கேஷ் படுகொலையே இதற்குச் சான்று.

பத்திரிகையாளர்களைக் கொலை செய்வது, கைது செய்வது ஒருபுறம் என்றால், சுதந்திர ஊடகங்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பது என்பதும் சாதாரண நிகழ்வாகியிருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் “தி வயர்” இணையதளத்தில் அமெரிக்க “மெட்டா” நிறுவனத்திற்கும் பா.ஜ.க.விற்கும் தொடர்பு இருப்பதாக (பேஸ்புக், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனம்) கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அக்கட்டுரையில், பா.ஜ.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவரான அமித் மாள்வியாவிக்கு ‘கிராஸ் செக்’ (Cross check) முறையின் மூலம் சில சலுகைகள் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படும் பா.ஜ.க-விற்கு எதிரான கருத்துகளை அமித் நீக்க முடியும் என்று அக்கட்டுரையில் எழுதப்பட்டிருக்கிறது.


படிக்க: புதிய தொழில்நுட்ப வரைவு விதிகள்: அறிவிக்கப்படாத எமர்ஜென்சி!


“மெட்டா” குறித்து வெளியிடப்பட்ட இக்கட்டுரை உறுதியான தகவல் ஆதாரங்களின் அடிப்படையில்தான் எழுதப்பட்டது என்று முதலில் கூறினாலும், பிறகு அந்த ஆதாரம் உண்மையானதல்ல என்று அறிந்தவுடன் தனது தவறுக்கு மன்னிப்புக் கோரியது “தி வயர்” இணையதளம்.

எனினும், தன்மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக டெல்லி காவல் நிலையத்தில் அந்த இணையதளத்தின் ஆசிரியர்களான சித்தார்த் வரதராஜன், சித்தார்த் பாட்டியா, எம்.கே. வேணு, துணை ஆசிரியர் ஜான்வி சென் உள்ளிட்டோர் மீது புகாரளித்திருக்கிறார் அமித். இந்தப் புகாரை முகாந்திரமாகக் கொண்டு “தி வயர்” இணையதளப் பத்திரிகையாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தியது போலீசு.

இதுமட்டுமின்றி, அமித்ஷா மகன் ஜெய்ஷாவின் சொத்து குவிப்பு குறித்து செய்தி வெளியிட்டதற்காகவும், டெல்லி விவசாயிகள் பேரணியின் போது உயிரிழந்த நவ்ரீத் சிங்கின் குடும்பத்தினரின் கருத்துகளை வெளியிட்டதற்காகவும் “தி வயர்” இணையதளத்தின் மீது வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு காவி பாசிச கும்பல்களின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் பத்திரிகைகள், பத்திரிகையாளர்களை முற்றிலுமாக முடக்கும் வகையில், பொய் வழக்குகளைப் போடுவது, சிறையில் அடைப்பது, காவி குண்டர்கள், போலீசை ஏவித் தாக்குவது, கொல்வது என பலவகைகளில் நெருக்கடிகள் கொடுத்து ஒடுக்கி வருகிறது காவி கும்பல்.

என்.டி.டிவி-யை விழுங்கிய அதானி

பத்திரிகை துறையில் காவி பாசிஸ்டுகளின் தாக்குதல் ஒரு முக்கியமான விசயம், என்.டி.டி.வி என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தை, அந்த நிறுவனத்திற்குத் தெரியாமலேயே சட்டவிரோதமாக அதானி கும்பல் வாங்கிய நிகழ்வாகும்.

இந்திய அளவில் இந்தி மொழியில் மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைத் தோலுரிக்கும் செய்தி நிறுவனம்தான் என்.டி.டி.வி. என்றழைக்கப்படும் “புதுடெல்லி  தொலைக்காட்சி” நிறுவனமாகும். பத்திரிகையாளர்களான பிரனாய் ராய் மற்றும் ராதிகாராய் இருவரும் ஆர்.ஆர்.பி.ஆர். ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் கீழ் என்.டி.டிவியைத் துவங்கினர். கடந்த 2008 ஆம் ஆண்டு விஸ்வபிரதான் கமர்சியல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் ரூ. 403 கோடி பத்தாண்டுகளில் திருப்பித் தருவதாக கடன்வாங்கியது ஆர்.ஆர்.பி.ஆர். ஹோல்டிங்ஸ். ஆனால், கடனைக் கட்ட முடியாததால் என்.டி.டிவியின் 29.8 சதவீத பங்குகள் விஸ்வபிரதான் நிறுவனத்துக்குச் சொந்தமானது.

விஸ்வபிரதான் நிறுவனத்தை அதானி குழுமம் 2012-இல் வாங்கியது. இதனால், விஸ்வபிராதானுக்குச் சொந்தமான என்.டி.டிவியின் பங்குகள் அதானி குழுமத்திற்கு சொந்தமானது. ஆனால், ஆர்.ஆர்.பி.ஆர். ஹோல்டிங்ஸ் நிறுவனர்களோ, விஸ்வபிரதான் நிறுவனத்தின் பங்குகள் அதானி குழுமத்திற்கு விற்பது குறித்து எவ்வித தகவல்களும் தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும், இது முறைகேடான கையகப்படுத்துதல் என்றும் குற்றஞ்சாட்டினர்.

இவ்வாறு முறைகேடான முறையில் அதானி குழுமம் என்.டி.டிவி-யை கையகப்படுத்தியிருக்கும்போதே, திறந்த சந்தையில் என்.டி.டிவியின் இதர பங்குகளை வாங்குவதற்கு அதானி குழுமத்திற்கு அனுமதியளித்திருக்கிறது இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி. நவம்பர் 23-ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 5-ஆம் தேதி வரை திறந்த சந்தையில் என்.டி.டிவி பங்குகளை வாங்கியதன் மூலம் 37.44 சதவீத பங்குகளைக் கைப்பற்றியது. பிரனாய் மற்றும் ராதிகா ஆகியோர் தங்களிடமிருந்த பங்குகளில் 27.26 சதவீதத்தை விற்றதன் மூலம், என்.டி.டிவி நிறுவனத்தில் 55 சதவீதப் பங்குகளைப் பெற்று அதிக பங்குகளைக் கொண்ட தனி நிறுவனமாக மாறியிருக்கிறது அதானி குழுமம்.

என்.டி.டிவி, என்.டி.டிவி இந்தியா, என்.டி.டிவி 24×7 ஆகிய நிறுவனங்கள் அதானி வசமாகியிருக்கின்றன. என்.டி.டிவி நிறுவனர்கள் மீது பண மோசடி விசாரணை, இந்தியாவிலிருந்து வெளியேற தடை போன்றவற்றின் மூலம் ஒன்றிய அரசு அச்சுறுத்தியே பங்குகளை விற்க வைத்திருப்பதாக செய்தி வெளியிட்டிருக்கிறது “அல் ஜசீரா” என்கிற சர்வதேச செய்தி நிறுவனம்.


படிக்க: டிஜிட்டல் செய்தி ஊடகங்களை ஒடுக்கத் துடிக்கும் மோடி அரசு!


இதனால், என்.டி.டிவி இயக்குநர் குழுவிலிருந்து ராதிகா மற்றும் பிரனாய் விலகியிருக்கின்றனர். அதானி குழுமத்திற்கு என்.டி.டிவி கைமாறிய உடன் என்.டி.டிவியின் விவாத நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவரும், ஆசியாவின் நோபல் பரிசு என்றழைக்கப்படும் “‘ரமொன் மகசேசே” விருதைப் பெற்றவருமான ரவீஷ் குமார், என்.டி.டிவி-யிலிருந்து விலகியிருக்கிறார். தன்னுடைய விலகல் குறித்து “ஃபாரீன் பாலிசி” (Foreign Policy) என்கிற செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “பெட்ரோல் விலை உயர்வும், வேலையில்லாத் திண்டாட்டமும் தலைவிரித்தாடும் சூழலில் மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்காமல் ஜெர்மனி அல்லது ஜப்பானில் என்ன நடக்கிறது என்று விவாதிக்க முடியுமா?” என்று கொந்தளித்திருக்கிறார். ஒன்றிய அரசின் கொள்கைகளை விமர்சித்ததால்தான் என்.டி.டிவியை பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறது அதானி குழுமம்.

இந்தியாவில் உள்ள 400 செய்திச் சேனல்கள் மற்றும் 10,000 செய்தித்தாள்களில் பெரும்பாலானவை அரசு – ஆளும் வர்க்கங்கள் கக்குவதையே செய்தியாக வெளியிடுகின்றன. மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்படுவது பற்றியோ, சொந்த நாட்டின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது பற்றியோ எவ்வித உறுத்தலுமின்றி போராடும் மக்களை வளர்ச்சிக்கு எதிரானவர்களாக சித்தரிக்கின்ற ஊடகங்கள்தான் அரசின் செல்லப்பிள்ளையாக இருக்கின்றன. ரவீஸ் வார்த்தையில் சொல்வதானால் “கோதி” (Godi- lapdog – வளர்ப்பு நாய்) மீடியாக்களாக இருக்கின்றன.

ஒட்டுமொத்த செய்தி ஊடகங்களும் காவிகளுக்கு சேவை செய்கிற சூழலில், மக்கள் பிரச்சினை வெளிக்கொண்டுவருகிற, விவாதிக்கிற சுதந்திர ஊடகங்களின் முக்கியத்துவம் முன்பை விட அதிகரித்துள்ளது. காவி பாசிஸ்டுகளை சுதந்திர ஊடகங்கள் அம்பலப்படுத்துவதால் தங்களின் ஊதிப் பெருக்கப்பட்ட வளர்ச்சி பிம்பம் மக்கள் மத்தியில் உடைப்படுவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, அதனால்தான் தங்களை விமர்சிக்கும் ஊடகங்கள், பத்திரிகையாளர்களின் குரல்வளையை நெறிக்கின்றனர் பாசிஸ்டுகள்.

பல்வேறு வகைகளில் அடக்குமுறைகளைச் செலுத்துவதன் மூலம், சமூக ஊடகங்கள் மற்றும் சுதந்திர ஊடகங்களை முடக்க எத்தனிக்கிறது பாசிச கும்பல். இதற்கெதிராக, ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள் தங்கள் கருத்துரிமை எழுத்துரிமையை நிலைநாட்ட ஒன்றிணைந்து போராட வேண்டியுள்ளது. இத்தகைய ஊடகவியலாளர்களுக்கு ஆதரவாக புரட்சிகர ஜனநாயக சக்திகளும், மக்களும் கைகோர்க்க வேண்டிய தருணமிது.

அப்பு

அயலி (Ayali): திரை விமர்சனம் (Movie Review) | தோழர் அமிர்தா வீடியோ

யலி என்ற இணைய தொடர் பெண்களின் பிரச்சினைகளை பல்வேறு கோணங்களில் வெளிக்காட்டுகிறது. குறிப்பாக பெண்களுடைய மாதவிடாய் என்பது ஒரு இயற்கையாக நடக்கக்கூடிய ஒரு விஷயம். ஆனால் அதை ஒரு தீட்டாக மாற்றி அதன் மூலம் அவர்களை அடிமைப்படுத்த பல சாஸ்திர,‌ சம்பிரதாயங்களை திணித்து வருகின்றனர். அண்மையில் கேரள நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தும் இன்றுவரை பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் போகமுடியாத சூழ்நிலையே உள்ளது. சில நாள்களுக்கு முன்பு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தீட்டு என்பது மனிதர்கள் உருவாக்கியது அது கடவுளால் உருவாக்கப்பட்டது இல்லை; ஆண் பெண் சமம் என்ற கருத்தை பொதுவெளியில் பேசினார். அதற்கு பிற்போக்கு சிந்தனை கொண்ட சங்கிகள் பலரும் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக ஆணும் பெண்ணும் சமமா நாங்கள் மேல் ஆடை இல்லாமல் வெளியே வருவோம் நீங்கள் அப்படி செய்வீர்களா என மிகவும் கீழ்த்தனமாக ஐஸ்வர்யா ராஜேஷின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த காவி கும்பல் எப்படி பெண்களை இழிவா பார்க்கிறார்கள். சனாதனத்தை பெண்கள் மீது எப்படி திணிக்க முயல்கிறார்கள் என்பது வெளிப்படையாகவே நமக்கு தெரிகிறது அந்த நேரங்களில் இம் மாதிரி வலைத்தொடர்கள் வந்தது வரவேற்கத்தக்க விஷயம். சமகாலத்தில் பெண் விடுதலை குறித்தும் பெண் கல்வி குறித்தும், பெண்கள் மீது திணிக்கப்படக்கூடிய இந்த மாதிரியான பழைய பிற்போக்கான விஷயங்களை சமூகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுவது அவசியமாகிறது.

இந்த 21ம் நூற்றாண்டின் இன்றைக்கும் பெண்களை இரண்டாம் பட்சமாகவும் பெண் கல்வி பயில்வது சொந்தமாக வேலைக்கு செல்வதையோ ஆபாசமாக பேசக்கூடிய நபர்களான சங்கராச்சாரியாராக இருக்கட்டும் எஸ்.வி.சேகராக இருக்கட்டும் இந்த பார்ப்பன காவி கும்பல்கள்தான் இந்த 21ம் நூற்றாண்டில் நாம் பேசக்கூடிய குரங்கு கூட்டம். இந்த இணைய தொடர் என்பது கிராமம், நகரம் என அனைத்து பகுதிகளிலும் திரையிட வேண்டியது சமகாலத்தைய அவசியமாகும்.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

வடகிழக்கு: பழங்குடியினரிடையே திட்டமிட்டு மத முனைவாக்கத்தை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ்!

0

நாகலாந்து மற்றும் மேகாலயாவில்  கிறித்துவர்களாக மதம் மாறிய   பழங்குடியினரை பட்டியல்  பழங்குடியின  பிரிவிலிருந்து நீக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்பான ஜனஜாதி தர்ம-சம்ஸ்கிருதி சுரக்ஷா மஞ்ச் (JDSSM) கூறியுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகலாந்தில் பெரும்பான்மையாக பழங்குடியின மக்கள்  வசித்து வருகின்றனர். மேகாலயாவில்  32 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். அதில் 85 சதவீதத்திற்கும் அதிகமானோர் கிறிஸ்தவர்கள். அவர்களில் 8.50 லட்சம் பேர் கத்தோலிக்கர்கள்.  நாகாலாந்தில்  20 லட்சம் மக்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் கிறிஸ்தவத்தை  பின்பற்றுகின்றனர். இரு மாநிலங்களிலும் உள்ள பெரும்பாலான மக்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்பான  ஜனஜாதி தர்ம சமஸ்கிருதி சுரசஷா மஞ்ச்  கிறித்துவராக மதம் மாறிய பட்டியல் பழங்குடியினருக்கு சலுகைகள் தரக்கூடாது என்றும் அவர்களை அப்பிரிவிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

மேலும், பிப்ரவரி 12-அன்று ஒரு லட்சம் பேரை திரட்டி  “சல்லோ டிஸ்பூர்” (Challo Dispur) என்ற பெயரில் ஆர்ப்பாட்டத்தை நடத்த இருப்பதாகவும் அறிவித்திருந்தது. இந்திய அரசியலைப்பு சட்டத்தின் 342 பிரிவு பட்டியலின மக்கள் பிரிவிலிருந்து பட்டியல் பழங்குடிகளை சேர்க்கவோ அல்லது நீக்கவோ வழிவகை செய்கிறது. எனவே கிறித்துவர்களாக மதம் மாறிய பழங்குடியினரை பட்டியல்  பழங்குடியின  பிரிவிலிருந்து நீக்க வேண்டும் என்பதற்கான திருத்தத்தை  ஜனாதிபதி முர்முவுக்கும், மோடிக்கும் அனுப்பி வைக்க இவ்வமைப்பு திட்டமிட்டுள்ளது.


படிக்க: சத்தீஸ்கர்: கிறிஸ்தவ பழங்குடிகள் மீது வன்முறையை ஏவும் ஆர்.எஸ்.எஸ்!


இதுகுறித்து ஜே.டி.எஸ்.எஸ்.எம்-இன் உறுப்பினரான பினுத் கும்பங்  பேசுகையில், “கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் போன்ற அந்நிய மதங்களை ஏற்றுக்கொண்டவர்கள் இரட்டிப்பு நன்மைகளைப் பெறுகிறார்கள். அவர்கள் சிறுபான்மையினராக பலன்களைப் பெற்றுக் கொண்டு தங்கள் குழந்தைகளை கிறிஸ்தவப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். ஆனால் பட்டியலினத்தவருக்கான உதவித்தொகை, வேலைகள், பதவி உயர்வு போன்றவற்றை எடுத்துக்கொள்கிறார்கள்” என்று கூறினார்.மேலும், “அதுமட்டுமின்றி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிடுகின்றனர். தங்கள் பாரம்பரியத்தை பாதுகாக்க கடுமையாகப் போராடும் பட்டியல் பழங்குடிகளின் உரிமைகளை அவர்கள் பறிக்கின்றனர்” என்றவாறெல்லாம் கிறிஸ்துவ பழங்குடியினர் மீது மதவெறி வெறுப்பை கக்கினார்.

அதே போல், ஜே.டி.எஸ்.எஸ்.எம்  அமைப்பின் தலைவரான பாகிராம் போரோ கூறுகையில், “எங்களுடைய அமைப்பின் நோக்கம் இந்தியாவில்  இருக்கின்ற பழங்குடியின மக்களின்   கலாச்சாரத்தையும்,   பழக்கவழக்கங்களையும், சடங்குகளையும் அவர்கள் பேசும் மொழியையும் பாதுகாக்க வேண்டியதாகிறது. பழங்குடியின மக்கள் அந்நிய மதங்களை நோக்கி நகரமால் தடுப்பதற்கும், மதம் மாறுவதை எதிர்த்து ஒவ்வொரு மாவட்டங்களிலும்  கிருத்துவர்களுக்கு எதிராக  பிரச்சாரம் செய்ய வேண்டும். இதன் மூலம்  பட்டியல் பழங்குடியின மக்களிடம் கிறித்துவ வெறுப்பை பேசுவதன் மூலம் நம்முடைய அமைப்பிற்கு  ஆதரவை நிலைநாட்ட முடியும்” என்று நேரடியாக பேசினார். மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சத்தீஸ்கரில் கிறித்துவ பழங்குடியினரின் மதமாற்றத்திற்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்தியதும் இதே ஜே.டி.எஸ்.எஸ்.எம் அமைப்பு தான்.

கிறித்துவர்களாக மதம் மாறிய பழங்குடியினரை பட்டியல்  பழங்குடியின  பிரிவிலிருந்து நீக்க வேண்டும் என்ற சங்க பரிவாரங்களின் கோரிக்கையானது  புதிதல்ல. பல மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகள் இந்தவகை பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன. கடந்த 2021-ஆம் ஆண்டு பா.ஜ.க-வின் பெமா காண்டு முதல்வராக உள்ள வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் பட்டியல் பழங்குடியினர் பிரிவிலிருந்து அபோர் பழங்குடியினரை நீக்கிய மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


படிக்க: ம.பி : பசு குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்ட இரண்டு பழங்குடியினர் !


சிறுபான்மையினருக்கு எதிராக கலவரத்தை அரங்கேற்றுவதன் மூலம்  மக்களை பிளவு படுத்தி தனக்கான மக்கள் அடித்தளத்தை உருவாக்கி வருகிறது ஆர்.எஸ்.எஸ். அது நாட்டில் இஸ்லாமியர்கள்-இந்துக்கள் என்ற வடிவத்தில் செய்யப்படுகிறது. அதையே காட்டி கிறிஸ்துவ பழங்குடியினர் பிற பழங்குடியினர் என்ற வடிவத்தில் பிளவை ஏற்படுத்தி பிற பழங்குடியின மக்களை தனக்கான அடித்தளமாக மாற்றி வருகிறது ஆர்.எஸ்.எஸ். இதனை பல்வேறு கிளை அமைப்புகளை உருவாக்குவதன் மூலம் நிறைவேற்றி வருகிறது. எனவே, பழங்குடி மக்கள் மத்தியில் இவர்களை அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.

ரோகித் வெமுலா

‘பெரு’வின் தேவை : இளஞ்சிவப்பு அல்ல, புரட்சிப் பேரலை!

தென்னமெரிக்க நாடான பெருவில், கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிப் பெற்று ‘சுதந்திர பெரு’ என்ற ‘இடதுசாரி கட்சி’யைச் சேர்ந்த பெட்ரோ கேஸ்டிலோ அதிபரானார். இவரது வெற்றியை உலகம் முழுவதும் உள்ள கம்யூனிசத் திரிபுவாதிகள் பெரிதும் போற்றி வரவேற்றனர். தற்போது பெரு அதிபர் பெட்ரோவின் துரோக ஆட்சியும் அவருக்கு எதிரான ஆட்சிக் கவிழ்ப்பும் ‘இளஞ்சிவப்பு அலை’யின் உண்மை முகத்தை மீண்டும் ஒருமுறை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

‘சட்டப்பூர்வ’ ஆட்சிக் கவிழ்ப்பு

பெட்ரோ கேஸ்டிலோ அதிபரான 18 மாதங்களில் அவர் மீதும் அவரது அரசாங்க அமைச்சர்கள் மீதும் ஊழல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதிபர் பெட்ரோவுக்கு எதிராக ஊழல் புகார் குறித்து பெரு காங்கிரஸ் (நாடாளுமன்றம்) டிசம்பர் 7-ஆம் தேதி கூடி விவாதிக்க தீர்மானித்திருந்தது. பெட்ரோவுக்கு எதிராக காங்கிரஸ் மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கை என்பது முதல்முறை நடப்பதல்ல; இதற்கு முன்னர் இதே ஊழல் குற்றச்சாட்டின்கீழ் பெட்ரோவை பதவிநீக்கம் செய்ய காங்கிரஸ் இரண்டு முறை முயற்சித்தது. ஆனால், பெரும்பான்மை வாக்கு கிடைக்காததால் அவரது பதவி நீக்கம் சற்று தள்ளிப்போனது.

இம்முறை ஆட்சியைத் தக்கவைத்து கொள்ள காங்கிரஸ் கூடுவதற்கு முன்னரே தொலைக்காட்சி ஊடகத்தில் காட்சியளித்த பெட்ரோ, “அவசரகால சட்டத்தைக் கொண்டு காங்கிரசைக் கலைத்துவிட்டு, புதிய தேர்தலை நடத்தப் போவதாக” அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

ஏற்கனவே, பெட்ரோவின் ஆட்சியைக் கலைக்க காத்துக்கொண்டிருந்த வலதுசாரிகள் பெரும்பான்மைக் கொண்ட பெரு காங்கிரசுக்கு இதுவொரு நல்வாய்ப்பாக அமைந்துவிட்டது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட காங்கிரஸ், “அரசாங்கத்திற்கு எதிராக பெட்ரோ கேஸ்டிலோ சதி செய்ததாக” குற்றஞ்சாட்டி அதிபர் பதவியில் இருந்து நீக்கியதோடு, கைது செய்து சிறையிலும் அடைக்க உத்தரவிட்டது. மேலும், ‘நிரந்தர தார்மீக திறமையற்றவர்’ என்ற அடிப்படையில் காங்கிரஸில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 130-க்கு 101 என்று பெட்ரோவுக்கு எதிராக வாக்குப் பதிவானது.

சூழல் தனக்கு எதிராக இருப்பதைப் புரிந்து கொண்ட பெட்ரோ, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மெக்சிகோ, அர்ஜென்டீனா நாடுகளின் தூதரகத்தை அடைய முயன்றபோது அவரது பாதுகாப்பு அதிகாரிகளாலேயே கைது செய்யப்பட்டார். பெரு இராணுவம், போலீசுதுறை மட்டுமல்ல துணை அதிபர் உள்ளிட்ட பெட்ரோவின் சொந்த அமைச்சரவை உறுப்பினர்களே பெட்ரோவுக்கு எதிரணியில் நின்றனர்.


படிக்க: சிறிதெனினும், சிவப்பு இவர்களை அச்சுறுத்துகிறது!


பெட்ரோவை அதிபர் பதவியில் இருந்து நீக்கிய உடன், அவரது அரசாங்கத்தில் துணை அதிபராக இருந்த டினா பொலுவார்டே என்பவரை அதிபராக நிறுத்தியதன் மூலம் இதனை ‘சட்டப்பூர்வ’ ஆட்சிக் கவிழ்ப்பாக காட்டி, மக்களின் எதிர்ப்பினை திசைத்திருப்பலாம் என்று எண்ணிருந்தது பெரு காங்கிரஸ். ஆனால், தேர்ந்தெடுத்த அதிபரின் பதவியைப் பறித்ததோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத புதிய அதிபரை நியமித்த பெரு காங்கிரஸ்மீது கடும் கோபமடைந்த மக்கள், “பெட்ரோவை விடுதலை செய்; புதிய அதிபரை பதவி நீக்கு. காங்கிரசைக் கலைக்கவேண்டும்; மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பெரு தலைநகர் லிமா, அரேகுய்பா, ட்ரூஜில்லோ உள்ளிட்ட பல பகுதிகளில் இரண்டு வாரத்திற்கு மேலாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொலுவார்டேவுக்கு பெரு வலதுசாரிகள், அமெரிக்க ஆதரவு

பெட்ரோவின் அதிபர் பதவி பறிக்கப்பட்ட இரண்டு மணிநேரத்திற்குள்ளேயே, துணை அதிபராக இருந்த டினா பொலுவார்டே என்பவரை அதிபராக்கியது பெரு காங்கிரஸ். ஊழலுக்கு எதிராகவும் நாட்டை முன்னோக்கி எடுத்து செல்லவும் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க பொலுவார்டே அழைப்பு விடுத்ததற்கு தனது முழு ஆதரவையும் அளிப்பதாகத் தெரிவித்திருக்கிறார் தேர்தலில் பெட்ரோவை எதிர்த்து நின்றவரும் “பாப்புலர் ஃபோர்ஸ்” என்ற வலதுசாரி கட்சியைச் சேர்ந்தவருமான கெய்கோ புஜிமோரி.

டினா பொலுவார்டே அதிபரானதையும் தேசிய ஒற்றுமைக்கான அவர் விடுத்திருக்கும் அழைப்பையும் வரவேற்றுள்ளது அமெரிக்க நாடுகளின் அமைப்பு (Organisation of American States (OAS)). “ஜனநாயகம், அமைதி, அமைப்புமுறைகள் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அதிகாரப்பூர்வ ஆதரவு அளிப்பதாக” தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தேவையை குறிப்பறிந்து செய்து முடிக்கக்கூடிய இந்த ஓ.ஏ.எஸ். அமைப்பு அளித்திருக்கும் இத்தகைய ஆதரவு என்பது பெட்ரோ பதவி நீக்கப்பட்டத்தையும் பொலுவார்டே நியமிக்கப்பட்டதையும் அமெரிக்கா ஆதரிக்கிறது என்பதையே குறிக்கிறது.

பெட்ரோவின் சாயம் வெளுத்தது

பெட்ரோ அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்றிருந்தாலும் 79 இடங்களைப் பெற்ற வலதுசாரிகளை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறது பெரு காங்கிரஸ். தற்போது நடந்திருக்கும் ஆட்சிக் கவிழ்ப்புக்கு முன்னரும் பெட்ரோ மீதும் அவரின் அமைச்சர்கள் மீதும் ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த காங்கிரஸ் இரண்டு முறை அதிபர் பதவியில் இருந்து நீக்கவும் முயன்றது.

பெரு காங்கிரசில் எதிர்ப்பு இருந்த அதேநேரம் சொந்த கட்சிக்குள்ளும் பெட்ரோவுக்கு எதிரான மனநிலை வளர்ந்து வந்தது. பெட்ரோ அதிபராக பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் ஐந்து பிரதமர்கள் தங்களது பதவியினை ராஜினாமா செய்தனர். அதேபோல், தான் நிராகரித்த பிரதமரை பெட்ரோ நியமித்ததால், தான் வகித்த கூடுதல் மந்திரி பதவியை இரண்டு வாரத்திலேயே ராஜினாமா செய்தவர்தான் தற்பொது அதிபராக பதவியேற்றிருக்கும் டினா பொலுவார்டே. காங்கிரசை கலைப்பது குறித்த பெட்ரோவின் அறிவிப்பு வெளியானதும் முற்றிலும் எதிரணியில் நின்றார் பொலுவார்டே.

அமைச்சரவையில் நிலவிய கருத்து முரண்பாடுகளாலும், வலதுசாரி மற்றும் அமெரிக்காவின் கைப்பாவையாக விலைபேசப்பட்ட சொந்த உறுப்பினர்களாலும் தனது அமைச்சரவையிலேயே எதிர்ப்பு வளர்ந்து, பலமிழந்து வந்த பெட்ரோ, மக்கள் மத்தியிலும் ஆதரவினை இழந்துவந்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தான் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அதிபரான பின்னர் வாயே திறக்கவில்லை என்பது மக்களின் ஆதரவினை இழக்க முக்கிய காரணமாக அமைந்தது.

பெட்ரோவின் முகத்திரை கிழிய வெகு நாட்கள் பிடிக்கவில்லை. பெட்ரோவின் முதல் பிரதமர், எரிவாயு துறையை தேசியமயமாக்குவதாக உறுதியளித்தபோது, “அத்தகைய திட்டம் எதுவும் இல்லை” என மறுத்தார் அதிபர் பெட்ரோ. இரண்டாவது, பிரதமர் மிர்தா வாஸ்குவஸ், “தனியாருக்கு சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளிச் சுரங்கங்கள் மூடப்படும்” என அறிவித்தவுடன் வட, தென் அமெரிக்க நாடுகளில் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுவரும் பிரிட்டனைச் சேர்ந்த ஹோச்ஸ்ஷைல்டு (Hochschild) என்ற தனியார் நிறுவனம் 25 சதவிகித பங்கு மதிப்பை இழந்தது.


படிக்க: சிலியின் வசந்தம் !


பிரதமரின் இத்தகைய அறிவிப்பு வெளியான ஒருசில நாட்களிலேயே, “சுரங்கங்களை மூடும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை; சட்ட வழிகளில் நடத்தப்படும் சுரங்க நிறுவனங்களின் உரிமங்கள் நீட்டிக்கப்படும்” என தனது ஏகாதிபத்திய விசுவாசத்தைக் காட்டினார். இதன்மூலம் தனது ஆட்சியை தற்காலிகமாக தக்கவைக்கப் பயன்படுத்திக் கொண்டார். பெட்ரோவின் அறிவிப்புக்கு முன்னர்தான் “சுரங்கங்கள் பாதுகாப்பான சுற்றுச்சூழல் தரத்தின் கீழ் செயல்படும்” என்று தெரிவித்திருந்தது ஹோச்ஷைல்டு நிறுவனம்.

பெட்ரோ ஆட்சியிலும் தங்களது வாழ்வாதாரத்தில் ஏதும் மாற்ற மேற்படாமல் மேலும் பாதிக்கப்பட்டு குமுறிக் கொண்டிருந்த மக்கள் வீதியில் திரண்டனர். சென்ற ஆண்டு மார்ச் – ஏப்ரல் மாதங்களில் பல நாட்கள் நடந்தப் போராட்டங்களில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

ஆம், “இளஞ்சிவப்பு அலை”யின் வெற்றியால் தனியார்மயக் கொள்கையை ஒழிக்கமுடியாது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பது மட்டுமல்ல, “இளஞ்சிவப்பு” வீரரான பெட்ரோ கேஸ்டிலோ அந்த நேர்மையுடையவரும் அல்ல என்பதைதான் அவரது நடவடிக்கைகளும் அதற்கு எதிரான மக்களின் போராட்டங்களும் உணர்த்துகின்றன.

அமெரிக்காவிடம் சரணடைந்த பிழைப்புவாதி பெட்ரோ

பொதுவாக, தான் வகுத்துக் கொண்ட கொள்கையையும் மக்கள் நலத் திட்டங்களையும் நிலவுகின்ற அரசு கட்டமைப்புக்குள் செயற்படுத்த முடியாமல் திணறும்; தாங்கள் ஏற்றுகொண்ட கொள்கைகளுக்கு உண்மையாக செயல்படுத்த முயன்று எதிரிகளால் கொல்லப்பட்ட தலைவர்கள் பலரை “இளஞ்சிவப்பு அலை” பார்த்துள்ளது. ஆனால், இத்தகைய பட்டியலில் பெட்ரோவின் பெயரை ஒருபோதும் சேர்க்க முடியாது.

தனக்கு எதிராக வளர்ந்து வரும் மக்கள் போராட்டங்கள் ஒருபக்கம். நிலைக்குலைந்திருக்கும் அமைச்சரவை, ஆட்சியைக் கவிழ்க்க கழுகுபோல் அமெரிக்க ஆதரவோடு காத்துக்கொண்டிருக்கும் பெரு காங்கிரஸ் ஆகியவை மற்றொரு பக்கம். இம்மூன்று கத்திகளுக்கு இடையில் சிக்கியிருக்கும் பெட்ரோ இறுதியாக தனது ஆட்சியினை தக்கவைத்துக் கொள்ள புகலிடம் தேடி சென்றது அமெரிக்காவிடம்.

தனக்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு அச்சுறுத்தல் வளர்ந்து வருவதை எதிர்கொள்ளவும் பெரு ஜனநாயகத்தை பாதுகாக்கவும் தனக்கு உதவுமாறு கடந்த அக்டோபர் மாதம், அமெரிக்க கட்டப் பஞ்சாயத்து அமைப்பான ஓ.ஏ.எஸ்-சை நாடினார் பிழைப்புவாதி பெட்ரோ. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள ஓ.ஏ.எஸ்-சை நாடிய போது, பெருவின் அரசியல் நிலைமையை ஆய்வு செய்ய தனது உயர்மட்டக் குழுவை பெருவுக்கு அனுப்பிய ஓ.ஏ.எஸ், பெருவின் ஜனநாயக நிறுவனங்கள் ஆபத்தில் உள்ளதாகவும் ஸ்திரத்தன்மையின்மையால் பெரு நாட்டை நிர்வகிப்பதும் அவசர பிரச்சினையில் தலையிடுவதும் கடினம் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்ததன் மூலம் பெட்ரோவை கைகழுவிவிட்டது.

அதன் பின்னர் நெருக்கடி முற்றி முட்டுசந்தில் நின்ற பெட்ரோ தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள மேற்கொண்ட சமீபத்திய நடவடிக்கைதான் காங்கிரசை கலைத்து அவசர தேர்தலுக்கான அறைகூவலாகும்.

மக்கள் படும் துன்ப துயரங்களையும் மக்களிடையே நிலவிய ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வையும் கவர்ச்சிகரமான முழக்கங்களை முன்வைத்து வாக்குகளாக மாற்றி வெற்றிப் பெற்று அதிபரான பெட்ரோ, தனியார்மயக் கொள்கைகளை அமல்படுத்தியதோடு அமெரிக்க ஏகாதிபத்தியத்திடமே சரணாகதி அடைத்திருப்பது அப்பட்டமான பிழைப்புவாதம், பச்சை துரோகமாகும்.

தற்போது அவரது ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராகவும் பெட்ரோ சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிராகவும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் திரண்டி போராடி வருகின்றனர். இதில் 34-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டு பலர் படுகாயமுற்றிருக்கின்றனர். இதற்குக் காரணம், மக்களிடம் அடங்காது கொழுந்துவிட்டு எரியும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு – ஜனநாயக உணர்வின் வெளிப்பாடுகளாகும்.


படிக்க:பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ளவே துருக்கியின் ஸ்வீடன் எதிர்ப்பு!


தங்களை ஆண்ட வலதுசாரிகளின் ஆட்சியில் அனுபவித்த துன்பதுயரங்கள் பெட்ரோ ஆட்சியிலாவது மாறாதா என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். பெட்ரோ மக்களின் அந்த எதிர்பார்ப்புக்கு துரோகமிழைத்தாலும், ஏகாதிபத்திய அடிவருடி வலதுசாரிகளுக்கு பெட்ரோவை கைது செய்ய அருகதை இல்லை என்பதே மக்கள் போராட்டங்களின் வெளிப்பாடாகும். மக்களின் இந்த நம்பிக்கைக்கு சிறிதும் அருகதையில்லாதவர்தான் இந்த பெட்ரோ.

அதுதான் அமெரிக்காவிடம் பெட்ரோ சராணாகதியடைந்துவிட்டாரே பிறகு ஏன் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டது என கேள்வி எழலாம். “தனியார்மயத்தை ஒழிப்பேன், அரசுடைமையாக்குவேன்” என்று பேச்சளவிலும்கூட இருக்கக்கூடாது என்பதே அமெரிக்க மேலாதிக்கத்தின் எண்ணம்.

டினா பொலுவார்டேவுக்கு பெருவின் வலதுசாரி கட்சிகளும் அமெரிக்காவும் ஆதரவு அளித்திருப்பதன் காரணம் என்னவென்றால், தான் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்புக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுப்பதற்காகவும் தனது கைப்பாவையாக அரசை மாற்றுவதற்காகதான். தேவையில்லையென்றால் பொலுவார்டேவை மாற்றி தனது ஆதரவாளர்களை அதிபராக்கவும் சிறந்த வழி இதுவே. 2026-ஆம் ஆண்டு வரை இருந்த அதிபர் பதவி காலத்தை குறைத்து 2024 ஆண்டில் தேர்தல் நடத்தப்போவதாக பெரு காங்கிரஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது புதிய அதிபர் நியமனத்தை எதிர்த்து வளர்ந்துவரும் மக்கள் போராட்டத்தின் வீரியத்தினை தணிக்கதான்.

எனவே, ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கொண்ட மக்களை இப்போலி இளஞ்சிவப்பு பாதைக்கு வெளியே புரட்சிப்பாதையில் அணிதிரட்ட, மக்கள் அடித்தளம் கொண்ட புரட்சிக்கரக் கட்சியைக் கட்டியமைப்பதுதான் பெரு மக்களுக்கு மட்டுமல்ல ‘இளஞ்சிவப்பு அலை’ மாயையில் கட்டுண்டு கிடக்கும் தென்னமெரிக்க நாடுகளின் மக்களுக்கு அவசர அவசிய தேவையாக உள்ளது.

வெண்பா

மோடி உரை: பாசிச பாராளுமன்றம்! | தோழர் அமிர்தா வீடியோ

மோடி என்கிற பிம்பம் வீழ்த்தப்பட அழிக்கப்பட முடியாத ஒரு பிம்பமாக வளர்ந்து நிற்கிறது. ராஜ்யசபா கூட்டத்தில் கிட்டத்தட்ட 1¾ மணி நேரம் பேசிய மோடி, எதிர்க்கட்சிகள் அதானி பற்றி பேசக் கோரி உரக்க அமலிகளில் ஈடுபட்ட போதும் கூட “நான் இந்த நாட்டுக்காகத் தான் இருக்கின்றேன்; எனக்கு குடும்பமே இல்லை” என்று பாசிஸ்டுகள் பேசக்கூடிய தொணியில் பொய்யாக பேசினார். கேள்விக்கு நேர்மையாக பதில் சொல்வது என்பது அவரது அகராதியிலேயே கிடையாது. பொய் சொல்வது, கேள்வி கேட்பவர்களுடைய தகுதி என்ன என்று மாற்றி பேசுவது, இதன் மூலமாக தன்னை தக்க வைத்துக் கொள்வது; இதுதான் மோடியின் வழக்கம். அதானியின் நண்பரா நீங்கள் என்று கேட்டால், தேசநலன் என்று பேசுவது; அல்லது பொதுவான ஒரு எதிரியை முன்னிறுத்தி தன்னை தற்காத்துக் கொள்வது என்பது அவருடைய நடைமுறை.

இந்த அரசியலமைப்பு சட்டத்திற்குள்ளேயே நின்று அதை பாதுகாப்பதன் மூலமாக பி.ஜே.பி-ஆர்.எஸ்.எஸ் கும்பலை அழித்துவிட முடியும் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கிறார்கள். இந்த அரசியலமைப்பை வைத்துக்கொண்டே, சட்டத்தை வைத்துக் கொண்டே இந்திராஷ்டத்தை அமைத்துவிட முடியும் என்பதுதான் 8 ஆண்டுகால பி.ஜே.பி ஆட்சியின் அனுபவம். இதை பாதுகாப்பதன் மூலமாக அவர்களை ஒருபோதும் வீழ்த்த முடியாது.

எதிர்க்கட்சிகளின் மௌனம் என்பதுதான் இன்று ஒரு அவலமாக இருக்கிறது. ஜனநாயக சக்திகளாகிய நாம் ஒரு அணியில் திரள வேண்டியிருக்கிறது. பாசிசத்திற்கு மாற்றாக பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை கட்டியமைப்பதற்கான திட்டங்களை முன்வைப்பதன் மூலமே அவர்களை வீழ்த்த முடியும்.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கொலீஜிய பரிந்துரைகளை தணிக்கை செய்யும் பாசிச மோடி அரசு!

0

டந்த ஜனவரி 17-ஆம் தேதி அன்று உச்சநீதிமன்ற கொலீஜியம் வழக்கறிஞர் லெக்‌ஷ்மனா விக்டோரியா கௌரி என்பவரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்தது. விக்டோரியா கௌரியின் பா.ஜ.க தொடர்பை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு வழக்கறிஞர்கள் இந்த பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய வெறுப்பு கொண்ட ஒருவரை கொலீஜியம் எவ்வாறு பரிந்துரைத்தது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த விடோரியா கௌரி, செப்டம்பர் 2020 முதல் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றி வந்தவர். உதவி சொலிசிட்டர் ஜெனரலாக பதவியேற்றதற்கு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பாகத்தான் பா.ஜ.க-வின் கட்சி உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டதாக அவரே கூறியிருக்கிறார்.

2019-ஆம் ஆண்டு ஆகஸ்டில் பா.ஜ.க-வில் இணைந்த விக்டோரியா கௌரி, சுமார் ஒரு வருட காலம் அக்கட்சி உறுப்பினராக இருந்தார். தனது ட்விட்டர் பக்கத்தில் “சௌகிதார் விக்டோரியா கௌரி” என தனது பெயரை வைத்திருந்தார். மேலும் அவர் பா.ஜ.க மகிளா மோர்ச்சாவின் தேசிய பொதுச் செயலாளராகவும் செயல்பட்டுள்ளார். அவரது ட்விட்டர் டைம்லைனில் (timeline) பெரும்பாலும் மோடி மற்றும் அமித் ஷாவின் பதிவுகளின் ரீடுவீட்கள் (retweets) இடம்பெற்றுள்ளன. மாணவப் பருவத்திலேயே அவர் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2018-ஆம் ஆண்டில் ஒரு நேர்காணலில் “பச்சை பயங்கரவாதமாக இஸ்லாம் இருப்பதைப் போல, கிறிஸ்தவம் வெள்ளை பயங்கரவாதமாக இருக்கிறது” என்று கௌரி கூறியுள்ளார். மேலும், இந்த இரு சமூகங்களும் “லவ் ஜிஹாதில்” ஈடுபடுவதாகவும் அவர் கூறியிருக்கிறார். முஸ்லீம் ஆண்கள் இந்துப் பெண்களை இஸ்லாத்திற்கு மதம் மாற்றுவதற்காகத் தான் காதலிக்கிறார்கள் என்பது இந்துத்துவா குழுக்களால் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு சதிக் கோட்பாடு. மேலும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்கு கிறிஸ்தவம் அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


படிக்க: பாசிசத்தைப் பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம் !


அவரை நீதிபதியாக உயர்த்துவதற்கு ஆட்சேபனை தெரிவித்து 21 சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற கொலீஜியத்திற்கு பிப்ரவரி 1-அன்று கடிதம் எழுதினர். ஆனால் அதே சமயத்தில், மதுரையை சேர்ந்த 50-ற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கௌரிக்கு ஆதரவாக பிப்ரவரி 3-அன்று  குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய அவலமும் அரங்கேறியது.

இதற்கிடையில், கௌரியின் நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால்  உச்சநீதிமன்றம் அம்மனுவை தள்ளுபடி செய்தது. குறிப்பாக நீதிபதி கவாய், “நானே மாணவனாக இருந்தபோது அரசியல் கட்சி தொடர்பில் இருந்திருக்கிறேன். ஆனால், நீதி வழங்கும்போது சார்பு இருக்கக் கூடாது” என்று தனது கருத்தை பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து பிப்ரவரி 7-அன்று விக்டோரியா கௌரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார்.

முதலில், உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட உள்ளவர்களின் பெயர்கள், அந்த உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியால் அந்நீதிமன்றத்தின் இரண்டு மூத்த நீதிபதிகளுடன் கலந்தாலோசித்த பிறகு  பரிந்துரைக்கப்படும். அந்தப் பெயர்கள் மாநில முதல்வர் மற்றும் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர், அந்தப் பெயர்களையும் முதலமைச்சரின் கருத்துக்களையும் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு ஆளுநர் அனுப்பி வைப்பார். உளவுத்துறையை (Intelligence Bureau) பயன்படுத்தி அவர்களின் பின்னணி சரிபார்க்கப்படும். சட்ட அமைச்சகம் இந்தத் தகவலை இந்தியாவின் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கும். அவர் உச்ச நீதிமன்றத்தில் உள்ள இரண்டு மூத்த நீதிபதிகளைக் கலந்தாலோசித்து பரிந்துரையை முடிவு செய்வார். இவ்வாறு தான் கௌரியின் பரிந்துரையும் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இவர்களில் யார் கண்களுக்குமே விக்டோரியா கௌரி ஆர்.எஸ்.எஸ்-பாஜக தொடர்பு கொண்டவர் என்பது புலப்படவில்லை போலும்! தற்போது உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள அவர் அடுத்த 13 ஆண்டுகளுக்கு நீதிபதியாக பதவி வகிப்பார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு கொலிஜியத்தால் பரிந்துரை செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் சவுரப் கிர்பால், ஜான் சத்யன் மற்றும் சோமசேகரன் சுந்தரேசன் ஆகிய மூன்று உயர் நீதிமன்ற நியமனங்களை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. அதற்கான காரணத்தை ஜனவரி 19, 2023 அன்று கொலிஜியம் வெளியிட்டது.

அதில், சவுரப் கிர்பால் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் மற்றும் அவரது துணை சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்று காரணம் கூறி அவரின் நியமனத்தை அரசு திருப்பி அனுப்பியுள்ளது.

பிப்ரவரி 16, 2022 அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பரிந்துரைக்கப்பட்டார் ஜான் சத்யன். அவர் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து இரண்டு சமூக ஊடகப் பதிவுகளை வெளியிட்டுள்ளதாக உளவுத்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதனை அடுத்து ஜான் சத்தியனின் நியமனமும் திருப்பி அனுப்பப்பட்டது.

ஒரு பதிவில், சத்யன் மோடியை விமர்சித்து தி குவின்ட்-இல் (The Quint) வெளியான ஒரு கட்டுரையைப் பகிர்ந்துள்ளார். இன்னொரு பதிவு, 2017-ல் நீட் (NEET) தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவைப் பற்றியது. அந்தப் பதிவில் “அரசியல் துரோகத்தால் செய்யப்பட்ட கொலை” என்று குறிப்பிட்டு இருந்ததாகவும் “தேசத்தின் அவமானம்” (shame of you India) என்ற டேக்-ஐ (tag) கொண்டிருந்ததாகவும் உளவுத்துறை கூறியது.


படிக்க: ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பற்றாக்குறை | வழக்குகள் தேக்கம் !


பம்பாய் உயர் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட சுந்தரேசன் அரசின் முக்கியமான கொள்கைகள், முன்முயற்சிகள், நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ள பல விடயங்கள் குறித்து சமூக ஊடகங்களில் கருத்து கூறியிருப்பதால் அவர் ஒருபக்க சார்புடையவர் என்ற அடிப்படையில் அவரின் பரிந்துரையை திருப்பி அனுப்பியுள்ளதாக அரசு கூறியிருக்கிறது.

அரசையும் உளவுத்துறையும் பொறுத்தவரை பா.ஜ.க-வின் மகளிர் அணியான பா.ஜ.க மகிளா மோர்ச்சாவின் தேசிய பொதுச் செயலாளராக இருந்த விக்டோரியா கௌரி அரசியல் சார்பு உடையவர் அல்ல. வழக்கறிஞர்களாக இருந்தபோது, மோடியை விமர்சனம் செய்த ஜான் சத்யனும் அரசின் கொள்கைகளை கேள்வி எழுப்பிய சுந்தரேசனும் தான் அரசியல் சார்புடையவர்களாக பாசிச மோடி அரசின் கண்களுக்குத் தெரிகிறார்கள். எதிர் குரல்களை விரும்பாதது தான் இந்துராஷ்டிர நீதி என்பதற்கு இது ஒரு துலக்கமான சான்று.

பொம்மி

ஹிண்டன்பர்க் அறிக்கை: அதானியை பற்றி வாய்திறக்காத மோடி அரசு! | தோழர் பரசுராமன் வீடியோ

ன்பான உழைக்கும் மக்களே! தொழிலாளர்களே! தோழர்களே! அமெரிக்காவைச் சார்ந்த ஹின்டன்பர்க் (Hindenburg) ஆய்வு நிறுவனம் அதானி குழுமம் குறித்து வெளியிட்ட ஒரு அறிக்கையின் மூலமாக உலகில் மூன்றாவது பணக்காரராக இருந்த அதானி என்றைக்கு ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். ₹10 இலட்சம் கோடி சொத்து மதிப்பு என்று காட்டியிருந்த அதானி குழுமம் இன்றைக்கு ₹2.40 இலட்சம் கோடி மதிப்பை இழந்து இருக்கிறது.

எதனால் இந்த இழப்பு ஏற்பட்டிருக்கிறது? கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹின்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமத்தை ஆய்வு செய்ததாகவும், அதனுடைய பங்கு மதிப்புகள் ஊதிப் பெருக்கப்பட்டதாகவும், அதனுடைய நிறுவனங்கள் பல போலியானதாகவும், அவருடைய குடும்ப உறுப்பினர்களை கொண்டு ஏற்படுத்தப்பட்டதாகவும், இந்த பங்குச்சந்தை விதிகளுக்கு புறம்பாக பெருவாரியான பங்குகளை அவர்களே வைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறியது. 70 சதவிகித பங்குகள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற விதியை மீறி 80 – 90 சதவிகித பங்குகளை அவர்களே வைத்துக்கொண்டு எஞ்சி இருக்கக்கூடிய 10 – 20 சதவிகித பங்குகளை எல்.ஐ.சி போன்ற அரசு நிறுவனங்களை வாங்க வைத்து ஊதிப் பெருக்கியிருக்கிறார்கள். ஹின்டன்பர்க் நிறுவனம் 88 கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2023 | மின்னிதழ்

ன்பார்ந்த வாசகத் தோழர்களே,

பிப்ரவரி – 2023 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜி−பே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ. 20

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

♦ தலையங்கம்: ‘இந்துராஷ்டிரம்’ அதானிகளின் தேசம்!
♦ “ஒரே நாடு”! ஒன்றுகலக்காத “தமிழ்நாடு”!
♦ ஆக்ஸ்ஃபாம் அறிக்கை: இதோ மோடியின் ‘புதிய இந்தியா’!
♦ மலத்தைவிடக் கொடியது சாதிய அரசு!
♦ பேய் நாடாள்கிறது! சாத்திரங்கள் பிணந்தின்ன வேண்டாமா?
♦ திரிபுரா மாடல் தேர்தல் வன்முறை: பாசிஸ்டுகள் கற்றுத்தரும் பாடம் என்ன?
♦ சத்தீஸ்கர்: கிறிஸ்தவப் பழங்குடியின மக்கள்மீது பெருகி வரும் காவி பாசிசத் தாக்குதல்கள்!
♦ புதைந்து வரும் ஜோஷிமத் நகரம்! ‘வளர்ச்சி’யின் பெயரால் நடத்தப்படும் பேரழிவு!
♦ மக்களை வாட்டும் பொருளாதார நெருக்கடி: நேற்று – இலங்கை, இன்று – பாகிஸ்தான்!
♦ தொலைத்தொடர்பு மசோதா 2022: பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான நடவடிக்கை!

தூய்மை பணியாளர்களை சுரண்டும் கிரிஸ்டல் நிறுவனமும் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகமும்!

தூய்மை பணியாளர்கள் மீது கிரிஸ்டல் (Krystal) தனியார் நிறுவனம் மற்றும் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் இணைந்து நடத்தும் உழைப்பு சுரண்டல்!

கோவை மாவட்டம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஈ.எஸ்.ஐ அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கிரிஸ்டல் நிறுவனத்திற்கு கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.

9.02.2023 அன்று மருத்துவமனை வளாகத்திற்குள் மாநகராட்சி நிர்ணயித்த ஊதியத்தை வழங்கவும், பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் ஒடுக்கு முறைக்கு எதிராகவும் மூன்றாவது  நாளாக இரவு, பகலாக போராடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் தூய்மை பணியாளர்களுக்கான புதிய ஊதிய பட்டியல் மாவட்ட ஆட்சியர் சார்பில் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. அதில், தூய்மை பணியாளர்களுக்கு 721 ரூபாய் ஊதியமாக கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அதன்பின் வழங்காமல் இருந்ததை அடுத்து, அக்டோபர் மாதம் மாவட்ட ஆட்சியர், மருத்துவமனை முதல்வர் ஆகியோரின் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு 721 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து, அதற்கான ஆணையையும் மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார்.

ஆனால், பணியாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு 420 ரூபாய் மட்டும் வழங்கிவிட்டு 721 ரூபாய் வழங்கியுள்ளதாக அரசுக்கு கணக்கு காண்பித்துள்ளனர். கோவை அரசு மருத்துவமனை சமூக நீதி தூய்மை பணியாளர் சங்க தலைவர் கவிதா அவர்கள் கல்லூரி முதல்வர் நிர்மலாவிடம் “எங்களுக்கு கொடுத்த ஆணையின்படி ஊதியத்தை வழங்க வேண்டும்” என்று கேட்டுள்ளார். அதற்கு, கல்லூரி முதல்வர் “நீங்கள் என்ன அரசு ஊழியர்களா உங்களுக்கு இவ்வளவு ஊதியம் கொடுக்க”, பின், மாவட்ட ஆட்சியர் கொடுத்த ஆணையையும் கொடுத்துப் பேசும்போதும்  “அப்படியெல்லாம் கொடுக்க உங்களுக்கு எந்த ஒரு உத்தரவும் வரவில்லை” என்று கூறியுள்ளார்.

படிக்க: சேலம் ஆதிக்க சாதி வெறியனின் ஆபாச பேச்சு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையில் “மருத்துவமனை முதல்வரும், மாவட்ட ஆட்சித் தலைவரும் ஒன்றாக தான் இருந்தனர். இப்போது அந்த அரசாணை தெரியாதது போல் எங்களிடம் கேள்வி கேட்கிறார்” என்கிறார் கவிதா அவர்கள்.

இதனை ஒப்பந்த நிறுவனமான கிரிஸ்டல் (Krystal) நிறுவனத்திடம் கூறியதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. “இவர்கள் யாரும் நமக்காக குரல் கொடுக்க மாட்டார்கள், நமக்கான அடிப்படை வசதிகளை செய்து தரமாட்டார்கள் நாமே போராடி பெற்றுக் கொள்வோம் என்று இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறோம்” என்று கூறி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை  நடத்தி வருகின்றனர்.

***

தூய்மை பணியாளர்கள் பேசும் போது, “நாங்கள் பணிக்கு சேர்ந்தது இரண்டு வேலைகளுக்கு மட்டுமே, ஆனால் முதல்வரோ எங்களை பல்வேறு வேலைகளில் ஈடுபட வைக்கிறார். குறிப்பாக நாங்கள் ஹவுஸ் கீப்பிங் பணி செய்யவே வந்துள்ளோம். ஆனால், மருத்துவமனை முதல்வர் நிர்மலா எங்களை அசிஸ்டன்ட் வேலை, கழிவுகளை அல்லும் வேலை, வெவ்வேறு தளங்களில் உள்ள மருத்துவர்களிடம் கையெழுத்து வாங்குவது என எங்களது பணி நேரம் முடிந்த பின்பும் இந்த வேலைகளை செய்ய நிர்பந்திக்கிறார்” என்கின்றனர்.

அதுமட்டுமின்றி, “படித்த மருத்துவர்கள் பயோ மெடிக்கல் வேஷ்டை போடுவதில்லை. கையுறை மற்றும் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தபடும் கழிவுகள் போடும் இடத்தில் ஊசிகளை ஒரே பெட்டியில் உடைத்துப் போட்டு விடுகின்றனர். நாங்கள் மறுநாள் அந்த குப்பைகளை கைகளால் சுத்தம் செய்யும்போது அது எங்கள் கைகளில் காயத்தை ஏற்படுத்துகிறது”. இதனால் கடந்த மாதம், “சாமிநாதன் என்ற தொழிலாளிக்கு விரலில் நீடில் குத்தியது அதை நீக்கும் போது அவருக்கு ஏற்பட்ட வலி எங்கள் கண்களால் காண முடிந்தது”.

இதனை முறையாக மருத்துவர்களிடம் சென்று கூறினால் “நீங்கள் அந்தப் பணிக்கு தானே வந்தீர்கள் என்று எங்களை இழிவாக பேசுகின்றனர்”.

படிக்க: இறையூர் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: விசாரணை என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களை துன்புறுத்தாதே! | மக்கள் அதிகாரம்

“உடல் உபாதைகள் மற்றும் குளிப்பதற்கு வழங்கியுள்ள அறையில் குடிநீர் குழாய் முறையாக இல்லை, அந்தக் கழிவறைக்கு நாங்கள் சென்று வந்தால் அனைத்து விதமான நோய்களும் வந்துவிடும்”.

கொடுக்கப்பட்ட அறை உணவு அருந்த முடியாத துர்நாற்றம் வீசும் நிலையிலே இருக்கிறது. ஆனால், “இன்று வரை நாங்கள் அங்கு தான் அமர்ந்து சாப்பிடுகிறோம். அப்படி ஒரு நாள் உணவு அருந்தி கொண்டிருக்கும்போது அந்த வழியாக வந்த  மூர்த்தி  (கல்லூரி நிர்வாகி) உங்களை யாரு இங்க உட்கார்ந்து சாப்பிட சொன்னது, நீங்கெல்லாம் ரோட்ல போய் உட்கார்ந்து சாப்பிடுங்க” என்று கூறியுள்ளார். அதற்கு தூய்மை பணியாளர்கள் “நீங்கள் முதலில் அங்கு அமர்ந்து சாப்பிட்டு காமிங்க பின்பு நாங்கள் அங்கு சாப்பிடுகிறோம்” என்று கூறி அதிகார திமிருக்கு செருப்படி கொடுத்துள்ளனர்.

“நாங்கள் பணிக்கு போகும் நேரம் காலை 7 மணி. ஆனால் பணி முடிந்து வீடு செல்வது என்பது எந்த ஒரு நேரம் வரம்பின்றி வேலையில் ஈடுபடுகிறோம்”.

“பலமுறை நிர்வாகத்திடமும், ஒப்பந்ததாரர் நிறுவனத்திடமும் கூறியும் எந்தவொரு கோரிக்கையும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. இது எங்களை மனதளவில் பாதிப்படையை செய்துள்ளது. எனவே இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படவில்லை என்றால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம்” என்று கூறுகின்றனர்.

***

இப்போராட்டத்தை, சீர்குலைக்கும் வகையில் வட மாநில தொழிலாளர்களைக் கொண்டு பணியை தொடர கிரிஸ்டல் நிறுவனம் அழைத்து வந்து பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இதை கேள்விக்கேட்ட போராடும் தூய்மை பணியாளர்களை “நீங்கள் அனைவரும் சேர்ந்து வட மாநிலத் தொழிலாளர்களை தாக்கியுள்ளீர்கள், உங்களை கைது செய்வோம் மண்டபம் தயாராக உள்ளது” என்று போராட்டத்தை கலைக்க முயற்சித்து போலீசை குவித்து மிரட்டியுள்ளனர்.

“மருத்துவமனைக்கு உள்ளே அமர்ந்து போராடக்கூடாது உங்கள் நிறுவனத்தில் போய் போராடுங்கள்” என்று பெண் போலீஸ் அதிகாரிகள் மிரட்டியுள்ளனர். அதற்கு, “நாங்கள் இந்த மருத்துவமனையில் தான் வேலை செய்கிறோம். அப்படி சொல்லி தான் எங்களை Krystal நிறுவனம் பணியமர்த்தியுள்ளது. எனவே நாங்கள் இங்கு அமர்ந்து தான் போராடுவோம். மும்பைக்குச் சென்று அல்ல” என்று அனைவரும் கேள்வி கேட்டவுடன் அந்தப் பெண் போலீஸ் அதிகாரி அங்கிருந்து சென்றிருக்கிறார்.

இப்படி அவர்களிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கும்போது கிரிஸ்டல் நிறுவனத்தின்  மேலாளர் தினேஷ், கவிதா அவர்களை “ஏ கவிதா இங்க வா” என்று ஒருமையில் அழைத்தார். அவர்களிடம் கேட்கும் போது “எப்போதும் இப்படித்தான் எங்களை அழைக்கின்றனர், இவர்கள் மட்டுமல்ல இங்கு இருக்கும் படித்த மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என அனைவரும் எங்களை மனிதனாக கூட மதிப்பதில்லை” என்று வேதனையோடு கூறுகின்றனர்.

***

இவையெல்லாம் ஏதோ கோவை அரசு மருத்துவமனைகளில் மட்டும் நடக்கும் அவலமல்ல. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளின் அவலநிலையும் இதுதான். இந்த அரசு தனியார்மய கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. இதுதான் தூய்மை பணியாளர்களின் அவலநிலைக்கு முக்கிய காரணம்.

பல்வேறு துறைகளில் ஒப்பந்த அடிப்படையிலான பணிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அனைத்தும் தனியாருக்கே வழங்குவோம் என்று இந்த அரசு கட்டமைப்பு முதலாளித்துவ உழைப்பு சுரண்டலுக்கு ஆதராவாக நிற்கிறது.

உழைப்பு சுரண்டலுக்கு எதிராக அனைத்து தூய்மை பணியாளர்களையும் களப்போராட்டத்தில் ஒன்று சேர்க்கிறது முதலாளித்துவ விசக்கிருமி. அதை சுத்தம் செய்வது தான் நாம் அனைவரின் கடமையாகும்.

மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்.
94889 02202

இணையவழி கல்வி உதவித் தொகை விண்ணப்பம்: பாதிக்கப்படும் ஆதிராவிடர்-பழங்குடி மாணவர்கள்!

இணையவழி என்று மாணவர்களை வஞ்சிக்காமல் மாணவர்களிடம் விண்ணப்பத்தை நேரடியாக  பெற்று உதவி தொகையை வழங்கிடு!

ரசு கலைக் கல்லூரியில் படிக்கும் ஆதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக  வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பத்தை இந்த முறை இணையவழியில்  பூர்த்தி செய்ய அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனால் இணையவழியில் எப்படி விண்ணப்பங்கள் பூர்த்தி செய்வது, அதற்கு என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்ற வழிகாட்டுதலை  இதுவரை அரசும் கல்லூரி நிர்வாகமும் மாணவர்களுக்கு வழங்கவில்லை. அதற்கான இணைய வசதிகளும் அரசு கல்லூரிகளில்  கிடையாது.

ஒவ்வொரு ஆண்டும் ஆதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு 4000 முதல் 8000 வரை கல்வி உதவித் தொகையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு 1000 முதல் 2000 வரை கல்வி உதவித் தொகையும்  அரசு சார்பில் மாணவர்களின் வங்கி கணக்கில்  செலுத்தப்பட்டு வருகிறது.  ஆனால் இந்த ஆண்டு அதற்கான விண்ணப்பத்தை ஜனவரி மாதம்   மாணவர்களிடம் கொடுத்து கைகளால் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஒவ்வொரு துறையின் வகுப்பு  ஆசிரியரும் ஜனவரி இறுதியில் வாங்கி கொண்டனர்.

ஆனால் தீடிரென்று  பிப்ரவரி 1 தேதி எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல்  இதுவரை கைகளால் பூர்த்தி செய்யப்பட்ட  கல்வி உதவி தொகைக்கான விண்ணப்பத்தை இணைவழியில் மீண்டும் பதிவு செய்ய வேண்டுமென அரசு சார்பில் சுற்றறிக்கை கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டது.  விண்ணப்பத்தை பதிவு செய்து முடிக்க வேண்டிய காலக்கெடுவும், பிப்பிரவரி 1 முதல் 15 வரை, நிர்ணைத்துள்ளது அரசு.

ஆனால் இதுவரையிலும் இணைவழியில் கல்வி உதவி தொகைக்கான விண்ணப்பத்தை பதிவு செய்த அனுபவம் இல்லாத மாணவர்களுக்கு இது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.

படிக்க: கேரளா: திரைப்பட கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

அரசு சார்பில் இணையவழியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முதலில் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் தேவைப்படுகிறது. ஆதார் கார்டு எண் போட்டவுடன் அந்த தொலைபேசி எண்ணிற்கு வரும்   OTP யை பயன்படுத்தி அடுத்தகட்ட  விண்ணப்பத்திற்குள் செல்ல முடியும். ஆனால் ஆதார் கார்டு எடுத்த தருணத்தில் பெரும்பாலான மக்களிடம் தொலைபேசி கிடையாது. அப்பா இல்லையென்றால் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் தொலைபேசி எண் தான் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதால் முதல் பக்கம் விண்ணப்பத்தை கூட பூர்த்தி செய்ய முடியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர். எல்லா மாணவர்களும் ஒரே நேரத்தில் விண்ணப்பம் பூர்த்தி செய்ய அரசு வழங்கப்பட்ட‌ இணைப்பிற்குள் செல்வதால் தொடர்ச்சியாக இணையவழி பிரச்சினைகளும் வந்து கொண்டிகிறது. TN யுடன் தொடங்கும் புதிய  வருமானவரி சான்றிதழும், கணினி வழியாக பெறப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சாதி சான்றிதழ்களும் அரசு வழங்கிய இணைப்பில் குறிப்பிட்ட தேதிக்குள் பதிவேற்றப்பட வேண்டும். ஆனால் அதிகப்படியாக மாணவர்கள் அட்டை வடிவிலான சான்றிதழ் தான் வைத்துள்ளனர் இதனால் எதன் அடிப்படையில் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறதோ அந்த முக்கிய ஆவணத்தை கூட  மாணவர்களால் பதிவேற்றம் செய்ய முடியவில்லை.

இணையவழியில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய சொல்லிய அரசை  கண்டித்தும் கால நீட்டிப்பு செய்ய வலியுறுத்தியும் 6-2-2022 அன்று திருவாரூர் திரு.வி.க கலை கல்லூரியிலும், 7-2-2023 நன்னிலம் அரசு கல்லூரியிலும், 8-2-2023 திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரியிலும் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்த உதவித் தொகையை பெறக்கூடிய மாணவர்களில் பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புற மாணவர்கள், இவர்கள் இதுவரை  இதுபோன்ற இணையவழிகளை பயன்படுத்தியது கிடையாது அதை பற்றி வழிகாட்டுதலையும் அரசு வழங்காமல் இருக்கிறது. இந்த கல்வி உதவி தொகை மூலம் தான்  ஒரளவு தன்னுடைய கல்லூரி கட்டணத்தையும், தேர்வு செலவுகளையும், போக்குவரத்து செலவுகளையும் மாணவர்கள் சமாளித்து வருகின்றனர். ஆனால் அதை தடுப்பதற்கு அரசு இணையவழி என்ற முறையை கொண்டுவந்துள்ளது.   100 ரூபாய் செலவு செய்து கணினி ‌மையத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய அளவிற்கு மாணவர்கள் யாரும்  தயாராக இல்லை. 100 ரூபாய் செலவாகும் என்பதால் அந்த விண்ணப்பங்களை பதிவு செய்யாமல் மாணவர்கள் விட்டு விடுகின்றனர்.

படிக்க: பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் போராட்டம்! பாராமுகம் காட்டிவரும் தமிழக அரசு!

முந்தைய ஆண்டுகளில் கைகளால்  விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நிர்வாகத்தில் நேரடியாக கொடுத்திருந்த போதும் சில மாணவர்களுக்கு இன்றுவரை உதவி தொகை வராமல் இருக்கிறது.  இப்படி இருக்கையில் இணையவழி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பினால் வங்கி கணக்கோடு ஆதார் எண் இணையவில்லை, வாங்கி கணக்கோடு பயன்படுத்தும் தொலைபேசி எண் இணையவில்லை, வருமானவரி சான்றிதழில் சரியாக பதிவேறவில்லை என‌‌ நொண்டி சாக்கு களை எல்லாம் சொல்லி கல்வி உதவி தொகையை நிறுத்தும் வேலையில் இப்போது அரசு இறங்கியுள்ளது.

ஏன் வங்கி கணக்கில் பணம் ஏறவில்லை என‌ கேள்வி எழுப்பி அதை அடுத்தகட்டமாக நகர்த்திச் செல்ல தொடர்ச்சியாக அலை‌ய வேண்டி‌ இருப்பதால்  கிராமப்புற மாணவர்களும் அதை விரும்புவதில்லை.

எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல்  அதற்கான பயிற்சி இல்லாத மாணவர்களிடம் தீடீரென்று இப்படி இணையவழியில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய சொல்லுவதானது மாணவர்களை வஞ்சிக்கும் போக்காகும். மாணவர்களிடமே கல்வி உதவி தொகையின் மீது வெறுப்பை ஏற்படுத்தி அடுத்தடுத்த ஆண்டு இந்த கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்; தற்போது விண்ணப்பிக்காமல் இருப்பதே நல்லது என்ற‌ மனநிலையை மாணவர்கள் மத்தியில் உருவாக்கி வருகிறது அரசு. இப்படி எல்லா மாணவர்களும் சோர்வுற்று யாரும் விண்ணப்பம் பதிவு செய்யாமல் இருந்தால் இந்த கல்வி உதவி தொகை முழுவதும் நிறுத்தும் வேலையை அரசு திட்டம் போட்டு செய்து வருகிறது.

வழக்கம் போல் இந்த ஆண்டும்‌ மாணவர்களால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‌நேரடியாக வாங்கி அதை சரிபார்த்து கல்வி உதவி தொகையை மாணவர்களுக்கு அரசு வழங்கிட வேண்டும்.

பாவெல் கார்க்கி