Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 124

தலையங்கம்: கோழைகளின் வீராவேசம்!

நெல்லை நாங்குநேரியில் சின்னதுரை என்ற தலித் மாணவனை வீடுபுகுந்து மறவர் சாதியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் சரமாரியாக வெட்டிப்போட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தலித் மக்கள் மீது நடந்துவரும் தாக்குதல்களில் இது ஒரு சம்பவம் மட்டுமே.

ஜூலை 27, ராதாபுரம் முத்தையா ஆணவப் படுகொலை; ஆகஸ்டு 4, சேரன்மகாதேவி பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் முருகானந்தம், பிரதீப் மீது தாக்குதல்; இதே நாளில் சிறீவைகுண்டம் முறுக்கு வியாபாரி செந்தில்நாதன் படுகொலை; ஆகஸ்டு 9, நாங்குநேரி பள்ளி மாணவர் சின்னதுரை மீது கொலைவெறித்தாக்குதல்; ஆகஸ்டு 14, பாளையங்கோட்டை கீழநத்தம் ஊராட்சி மன்ற உறுப்பினர் ராஜாமணி படுகொலை; ஆகஸ்டு 15, தென்காசி கடையம் ஒன்றியம் துப்பாக்குடி தலித் மக்கள் மீதான கொலைவெறித்தாக்குதல்; ஆகஸ்டு 15, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே லசிமிபுரத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத் என்ற மாணவர் மீது கொலைவெறித்தாக்குதல்; ஆகஸ்டு 23, அம்பாசமுத்திரம் பெரியகுளத்தைச் சேர்ந்த ராமசுப்பு மீது கொலைவெறித்தாக்குதல்; இதே மாதத்தில், திருவைகுண்டம் செய்துங்கநல்லூர் அருகே திருவிழாவின்போது தலித் மக்கள்மீது தாக்குதல், மீனாட்சிபட்டி கிராமத்தில் இம்மானுவேல் சேகரன், சுந்தரலிங்கம் படங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்ச; கிருஷ்ணாபுரம் பார்வதிநாதன் மீது கொலைவெறித்தாக்குதல் என தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் நாள்தோறும் நடந்தேறியுள்ளன.

மொத்தத்தில், தென் தமிழ்நாடு ஆதிக்க சாதிவெறியர்களின் கூடாரமாகக் காட்சியளிக்கிறது. இத்தாக்குதல்கள் பெரும்பாலும் தலித் மக்களால் ஆதிக்கச் சாதியினருக்கு பொருளாதார ரீதியாக எந்த பாதிப்புகளும் இல்லாத நிலையில் நடைபெறும் தாக்குதல்களாகும்; தங்களது சுயசாதிப் பெருமைக்காவும் அரசியல் ஆதிக்கத்திற்காகவுமே சிறுசிறு கும்பல்களால் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.


படிக்க: தலித்துகள் – சிறுபான்மையினர் மீது பெருகிவரும் தாக்குதல்கள்: தீர்வு என்ன?


பெரும்பாலான சம்பவங்கள் மாணவர்களை மையப்படுத்தி இருக்கின்றன. சின்னதுரை நன்கு படிக்கும் மாணவன் என்பதுதான் அவன் மீதான தாக்குதலுக்குக் காரணம். தலித் மக்கள் மீதான சாதி ஆதிக்கத்தை ஏற்க மறுத்ததன் எதிர்விளைவே இந்த ஆதிக்கச் சாதிவெறித் தாக்குதல்கள். ஆம், இது கோழைகளின் வீராவேசமாகும்!

ஆதிக்கச் சாதி பெருமை பேசும் போதையானது, அந்த வீராவேசத்தை வெளிப்படுத்தும் இரையில்லாமல் அடங்காது. ஆதிக்கச்சாதிக் கட்சிகள், அமைப்புகளின் வெறியூட்டும் பேச்சுக்கள், நடவடிக்கைகள் அதன் இலக்குகளான தலித்துக்களை நோக்கி சென்று கொண்டிருப்பதையே இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன.

பெரும்பாலான இந்த ஆதிக்கச்சாதிக் கட்சிகள், அமைப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.விற்குப் பங்குள்ளது. எனவே, இன்று தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள் நாளை இனப்படுகொலைகளாக, பெண்கள், கிறித்தவர்கள் – இஸ்லாமியர்கள், ஜனநாயக சக்திகள் மீதான வன்முறைகளாக வளரும். தமிழ்நாடு மணிப்பூராக மாறும்!

ஆகையால், ஆதிக்கச்சாதிக் கட்சிகள், சங்கங்கள், ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார அமைப்புகளைத் தடைசெய்ய வலியுறுத்தியும், அனைத்து சாதிக் கூலிப்படையினரைக் கைது செய்து சிறையில் அடைக்கவும் சாதிவெறியூட்டும் சமூக ஊடகப் பிரச்சாரங்களைத் தடை செய்யவும் நாம் போராட வேண்டும்.


தலையங்கம்,
புதிய ஜனநாயகம்
செப்டம்பர் 2023

“தி காஷ்மீர் வாலா” சுதந்திர ஊடகம் முடக்கம்: கருத்துச் சுதந்திரத்தின் மீதான மோடி அரசின் கொலைவெறித் தாக்குதல்!

0

காஷ்மீரின் ஸ்ரீநகரைத் தளமாகக் கொண்ட ”தி காஷ்மீர் வாலா” என்னும் சுதந்திர செய்தி ஊடகத்தின் வலைத்தளம் மற்றும் சமூக ஊடக கணக்குகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி பாசிச மோடி அரசால் முடக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 19 அன்று தங்கள் வலைத்தளத்தை அணுக (access) முயன்ற அந்நிறுவனத்தினர் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சர்வர் வழங்குநரிடம் (server provider) இது குறித்து விசாரித்த போது, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் கீழ் காஷ்மீர் வாலா வலைத்தளத்தை முடக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 5 இலட்சம் பின்தொடர்பவர்களை (followers) கொண்ட காஷ்மீர் வாலாவின் முகநூல் பக்கமும் முடக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் ட்விட்டர் (தற்போது ”எக்ஸ்”) கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. சட்டப்பூர்வ கோரிக்கைக்கு இணங்க முடக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் நிறுவனம் கூறுகிறது.

இந்த பாசிச நடவடிக்கை குறித்து ஆகஸ்ட் 20 அன்று அறிக்கையொன்றை வெளியிட்ட காஷ்மீர் வாலா, “இது ஜம்மு-காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரத்தின் மீது விழுந்த மற்றுமொரு சம்மட்டி அடி” என்று கூறியுள்ளது.


படிக்க: காஷ்மீர் வாலா பத்திரிகையாளர் அப்துல் ஆலா கைது !


மேலும், ”ஸ்ரீநகரில் உள்ள எங்கள் அலுவலகத்தை காலி செய்யுமாறு நில உரிமையாளர் நோட்டீஸ் வழங்கியிருந்தார். நாங்கள் அலுவலகத்தை காலி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தோம். இவ்வேளையில் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”காஷ்மீர் வாலாவின் கதை காஷ்மீர் பகுதியில் பத்திரிகை சுதந்திரத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி பற்றிய கதையாகும். கடந்த 18 மாதங்களில், எங்கள் வாசகர்களான உங்களைத் தவிர அனைத்தையும் இழந்துவிட்டோம். காஷ்மீர் வாலாவை 12 ஆண்டுகளாக ஆர்வத்துடன் படித்து ஆதரவளித்த இலட்சக்கணக்கான வாசகர்களுக்கு நன்றி” என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

காஷ்மீர் வாலா ஆசிரியரான ஃபஹத் ஷா (Fahad Shah) கடந்த 18 மாதங்களாக சிறையில் உள்ளார். கடந்த ஆண்டு (2022) பிப்ரவரி 4 அன்று, பயங்கரவாதத்தை கௌரவப்படுத்தியதாகவும், போலி செய்திகளைப் பரப்பியதாகவும், வன்முறையைத் தூண்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு ஷா போலீசால் கைது செய்யப்பட்டார்.

ஃபஹத் ஷா நான்கு மாதங்களில் ஐந்து முறை கைது செய்யப்பட்டார். கொடூரமான ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் மூன்று எஃப்.ஐ.ஆர்-களும் ஜம்மு காஷ்மீர் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு எஃப்.ஐ.ஆர்-ம் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் பொது பாதுகாப்புச் சட்டம் என்பது ஊபா சட்டத்தைப் போன்றதொரு ஆள்தூக்கிச் சட்டமாகும். தனிநபர்களை விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் அடைத்து வைக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.

முன்னதாக, காஷ்மீர் வாலாவில் பயிற்சி நிருபராகப் பணியாற்றிய சஜாத் குல் (Sajad Gul), பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உத்தரபிரதேசத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஸ்ரீநகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தங்கள் உறவினர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து ஒரு குடும்பம் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. அந்தக் காணொளியை வெளியிட்டதற்காக குல் ஜனவரி 5, 2022 அன்று கைது செய்யப்பட்டார்.


படிக்க: தி கேரவன் பத்திரிகையாளருக்கு கொலை மிரட்டல் விடும் காஷ்மீர் போலீசு !


காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரம் எந்த அளவிற்கு நசுக்கப்படுகிறது என்பதற்கு காஷ்மீர் வாலா மீதான ஒடுக்குமுறைகளே சான்று. நவம்பர் 6, 2011 அன்று “அடிமைத்தனத்தின் தளைகள் உடைந்துவிடும்” (The shackles of slavery will break) என்ற கட்டுரை காஷ்மீர் வாலா வலைத்தளத்தில் வெளியானது. இக்கட்டுரை வெளியாகிக் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆன பின்பு, இதை எழுதிய காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவர் அப்துல் ஆலா ஃபாசிலி (Abdul Aala Fazili) ஏப்ரல் 17, 2022 அன்று கைது செய்யப்பட்டார்.

பிப்ரவரி 2022-இல் ஆசிரியர் ஃபஹத் ஷா கைது செய்யப்பட்டது முதல் தற்காலிக ஆசிரியராக யஷ்ராஜ் சர்மா (Yashraj Sharma) பணியாற்றி வருகிறார். மேற்குறிப்பிட்ட கட்டுரை காரணமாக பதியப்பட்ட வழக்கு தொடர்பான சில கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறு யஷ்ராஜ் சர்மாவுக்கு சம்மன் வழங்கப்பட்டது. அதாவது, 2011-அம் ஆண்டு வெளியான கட்டுரை குறித்து 2022-ஆம் ஆண்டில் ஆசிரியாக இருப்பவரிடம் விசாரிக்கப் போகிறார்களாம். இதில் வேடிக்கை என்னவென்றால், அக்கட்டுரை வெளியான போது சர்மாவுக்கு வயது 12 தான் என்பதே.

இத்தகைய கொடூரத் தாக்குதல்களை பாசிஸ்டுகளால் எவ்வாறு நிகழ்த்த முடிகிறது? இந்த பாசிச நடவடிக்கைகள் சட்டவிரோதமானவையா?

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69ஏ ’இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு, சர்வதேச உறவுகள், பொது ஒழுங்கு’ என்ற பெயரில் இணையத்தின் மீது முழுக்கட்டுப்பாட்டை அரசிற்கு வழங்குகிறது. இந்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு அனைத்து வலைத்தளங்களையும் சமூக ஊடகங்களையும் கட்டுப்படுத்த முடியும்; தேவைப்பட்டால் தடைசெய்யவும் முடியும். பிரிவு 69ஏ அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது அல்ல. ஏனெனில், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19(2) பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதை அனுமதிக்கிறது.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69ஏ மற்றும் அதன் சட்டவிதிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த 2015-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் சட்டப் பிரிவு 69ஏ வழங்கும் அதிகாரத்தை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அரசுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டது.

2019-ஆம் ஆண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்தைத் தொடர்ந்து காஷ்மீர் மக்கள் மீதான பாசிச மோடி அரசின் ஒடுக்குமுறை தீவிரமடைந்துள்ளது. இந்த நடவடிக்கைகளை அம்பலப்படுத்திய காரணத்தால் தான் காஷ்மீர் வாலா தற்போது முடக்கப்பட்டுள்ளது. இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், காஷ்மீர் வாலா மீதான இந்த பாசிச தாக்குதல் சட்ட விரோதமாக நடத்தப்படவில்லை; இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டே நடத்தப்பட்டுள்ளது என்பதைத் தான்.

பொம்மி

மோடியின் கிரீஸ் பயணம்: எல்லாம் அதானிக்காக!

மோடி ஆட்சியில் எல்லாம் அதானிமயம்!

டந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி பிரதமர் மோடி கிரீஸ் நாட்டிற்குச் சென்றார். இதை வரலாற்று நிகழ்வு, 40 ஆண்டுகளுக்குப் பிறகு கிரீஸ் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என ஊடகங்கள் போற்றிப் பாடின.

ஆனால் மோடியின் இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணம் அதானிக்கு கரசேவை செய்யத்தான் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

கிரீஸ் நாட்டின் கவாலா, வாலோஸ், அலெக்ஸாண்ட்ரூபோலி ஆகிய துறைமுகங்களில் தன்னுடைய நெருங்கிய நண்பரான “அதானி” முதலீடு செய்ய, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸிடம் மோடி ஆர்வம் காட்டி பேசியதாக கிரேக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கத்திற்காகவும் இலங்கையில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்காகவும் அதானியின் ஏஜெண்டாக செயல்பட்ட மோடி, தற்போது மீண்டும் கிரீஸ் நாட்டின் துறைமுகங்களுக்காக அதானியின் ஏஜெண்டாக செயல்பட்டுள்ளார்.

100 நாட்களுக்கு மேலாகியும் மணிப்பூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காத பாசிச மோடி, அதானியின் சொத்து மதிப்பை அதிகரிப்பதற்காக கிரீஸ் நாட்டிற்குச் சென்று தன்னுடைய விசுவாசத்தை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

புதிய ஜனநாயகம்

சி.ஏ.ஜி அறிக்கையின் மூலம் அம்பலமான மோடி அரசின் மெகா ஊழல்கள்! | தோழர் அமிர்தா | தோழர் புவன்

சி.ஏ.ஜி அறிக்கையின் மூலம் அம்பலமான மோடி அரசின் மெகா ஊழல்கள்! | தோழர் அமிர்தா | தோழர் புவன்

கழன்றது முகமூடி | பாகம் 2

கழன்றது முகமூடி:
பாசிசக் கும்பலின் தோல்வி முகமும்
பாசிச எதிர்ப்பு சக்திகளின் செயலூக்கமிக்கப் போராட்டமும்!

(பகுதி 2)

புரட்சிகர அமைப்புகள், கட்சிகள் என்று கருதப்படுகின்ற பெரும்பாலான அமைப்புகள், பா.ஜ.க.விற்கு எதிரான ஆளும் வர்க்கக் கட்சிகளை ஆதரித்து பாசிசத்திற்கு எதிராக மூச்சுவிடும் அவகாசத்தைப் பெற வேண்டும்; அதனால், தமிழ்நாட்டில் தி.மு.க.வையும் அகில இந்திய அளவில் காங்கிரசையும் ஆதரிப்பதுதான் இந்த தருணத்தின் புரட்சிகர நடவடிக்கை என்று கூறுகின்றன. தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியைக் கூட சில புரட்சிகர இயக்கங்கள் ஆதரிக்கின்றன.

ஒரு சில அமைப்புகள் இந்த ஆளும்வர்க்க சரணாகதி பாதையையே நேரடியாக முன்வைக்காமல் மறைமுகமாக முன்வைக்கின்றனர். பாசிசத்திற்கு எதிரான ஒரு மாற்றுத்திட்டத்தை முன்வைக்காமல், “பா.ஜ.க.வை தோற்கடிப்போம்”, “அரசியல் அமைப்புச் சட்டத்தைக் காப்போம்”, “ஜனநாயகத்தைக் காப்போம்” என்று முழங்குகின்றனர்.

இப்போக்குகள் அனைத்தும், புரட்சிகரமான திசைவழியில் மக்களைத் திரட்டுவதன் மீதும் பாசிசத்தை முறியடிப்பதன் மீதும் நம்பிக்கை இழந்ததன் விளைவாகும். இவர்கள் ஒவ்வொருவரும் அவரவரது நிலைப்பாடுகளுக்கேற்ப மார்க்சிய ஆசான்களின் மேற்கோள்களை இழுத்து வளைத்தும், சுருக்கி வெட்டியும் எடுத்துக்காட்டி தங்களது நிலைப்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்கின்றனர்.

நிலவுவது நாடாளுமன்ற போலி ஜனநாயகக் கட்டமைப்புதான், இந்தக் கட்டமைப்புக்குள் தீர்வு இல்லை என்று ஒப்புக்கொண்டாலும் தேர்தலில் ஆளும் வர்க்கக் கட்சிகளை ஆதரிப்பதும், பாசிசத்திற்கு எதிராக அனைத்து அரங்கங்களிலும் ஊக்கமாகப் போராட வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு ஆனால் தேர்தல் நேரத்தில் ஒதுங்கி இருப்பதும் இரண்டுமே சந்தர்ப்பவாதமான அணுகுமுறைகளே.

இன்னும் முக்கியமாக, புரட்சிகர அமைப்பு என்று சொல்லிக்கொள்ளும் சில அமைப்புகள் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி என்பது ஆளும் வர்க்கக் கட்சிகளில் ஒரு பிரிவினருடன் இணைந்து செயல்படுவதைக் குறிப்பதாகவும், ஆகையால், சில நிபந்தனைகளுடன் ஆளும் வர்க்கக் கட்சிகளை ஆதரித்து தேர்தலில் நிற்க வேண்டும் என்றும் கூறுகின்றன.

அண்மையில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், “எழு கர்நாடகா” என்ற இயக்கமானது, பல்வேறு அமைப்புகள், என்.ஜி.ஓ.க்களை தங்களுடன் இணைத்துக் கொண்டு தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக பிரச்சாரம் செய்தது மட்டுமின்றி, காங்கிரஸ், சில இடங்களில் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களை மக்கள் முன்னிலையில் முன்னிறுத்தி, மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக அவர்களது வாயால் உறுதிமொழி அளிக்க வைத்து ஆதரவளித்தன.


படிக்க: கழன்றது முகமூடி | பகுதி 1


இன்றைய சூழலில், பா.ஜ.க.விற்கு எதிரான எந்த ஒரு ஆளும் வர்க்கக் கட்சியும் புரட்சிகர இயக்கங்களுடன் ஐக்கிய முன்னணி, கூட்டு நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று கருதுவதும், புரட்சிகர இயக்கத்தின் பாசிச எதிர்ப்பு திட்டத்தை ஆளும் வர்க்கக் கட்சிகளுடன் விவாதம் நடத்தி அத்திட்டத்தின் அடிப்படையில் ஆளும் வர்க்கக் கட்சிகளுடன் ஒன்றுபடுவதாகக் கூறுவதும் அப்பட்டமான ஆளும்வர்க்கச் சரணாகதிப் போக்காகும்.

இவ்வாறெல்லாம் விமர்சனங்களைச் செய்யும்போது, “தேர்தலில் மக்களுக்கு என்ன வழிகாட்டப் போகிறீர்கள்” என்று புரட்சிகர அமைப்புகளைப் பார்த்து கேட்கின்றனர். பா.ஜ.க. பாசிசக் கட்சி என்றால், பா.ஜ.க.வை எதிர்க்கின்ற கட்சிகளை ஆதரிப்பதுதான் சரியான நிலைப்பாடாகும். அதற்காக தேர்தலில் பங்கேற்பதுதான் தற்போதைய சூழலில் புரட்சிகர அமைப்பின் கடமையாகும் என்று கூறுகின்றனர். எந்தவகையிலோ, பாசிசத்தை வீழ்த்துவதாக சொல்வது தேர்தலில் யாருக்கு ஓட்டுப்போடுவது என்ற கேள்வியுடன் தொடர்புபடுத்திக் கேட்கப்படுகிறது.

இவ்வாறான அணுகுமுறைகள் எல்லாம், பாசிசத்தை வீழ்த்துவது குறித்த அடிப்படையான கடமையையே கைவிட்டு ஆளும் வர்க்கங்களுக்குப் பின்னே ஓடி ஒளிந்து கொள்வதாகும். அதாவது, நடப்பது நாடாளுமன்ற போலி ஜனநாயகம், இதன் மூலமாக பாசிசத்தை வீழ்த்த முடியாது என்ற நிலைப்பாட்டையும், பாசிசத்திற்கு எதிராக புரட்சிகர அமைப்புகளின் தலைமையில் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியைக் கட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் கைவிட்டுவிட்டதாகும்.

தேர்தலில் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமை என்பதைப் போன்ற பல்வகையான பிரச்சாரங்களெல்லாம் ஆளும் வர்க்கங்களின் அப்பட்டமான ஏமாற்று வித்தைகளாகும். பாசிசம் வந்துவிட்டது, அதனால், தேர்தலில் பங்கேற்று பாசிச பா.ஜ.க.விற்கு எதிராக களத்தில் நிற்கும் ஆளும் வர்க்கக் கட்சிகளை ஆதரித்தே தீரவேண்டும் என்பதும் இதனைப் போன்ற ஒரு அணுகுமுறையாகும்.

ஒருவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்பது என்பது புரட்சிகர கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்லும் பிரச்சார வடிவம் என்று கருதும் புரட்சிகர அமைப்புகள், தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால், அவை பெறுவது சொற்பமான வாக்குகளே எனினும், அது பாசிச சக்திகளுக்கு எதிரானதாக அமைவதைவிட, பா.ஜ.க.விற்கு எதிரான வாக்குகளைப் பிரிப்பதன் மூலம், பா.ஜ.க.விற்கு பி டீம் வேலைசெய்வதாக அமைந்துவிடும். அல்லது தனித்து நிற்காமல் எதிர்க்கட்சிகளை ஆதரிக்கலாம் என்று கருதினால், இவ்வமைப்புகளின் புரட்சிகர கருத்துகளை மக்களிடம் பிரச்சாரம் செய்ய முடியாது.

எவ்வாறாயினும், புரட்சிகர அமைப்புகள் பலவீனமாக இருக்கும் இன்றைய சூழலில், தேர்தலில் பங்கேற்று பாசிசத்திற்கு எதிராக செயல்படுவது என்பது பாசிசத்தை வீழ்த்துவதை நோக்கி முன்னேறுவதைவிட பின்னடைவதற்கே வழிவகுக்கும்.

பரந்துவிரிந்த மக்கள் அடித்தளம் கொண்ட கட்சியின் அவசியம்

ஆகையால், புரட்சிகர அமைப்புகள் பலவீனமாக இருக்கும் இன்றைய சூழலில், பாசிசத்தை வீழ்த்த மேற்கொள்ளவேண்டிய முதன்மையான நடவடிக்கை, புரட்சிகர அமைப்புகளின் மக்கள் அடித்தளத்தை விரிவுப்படுத்துவதுதான். இதன் மூலமாகத்தான், பாசிசத்திற்கு எதிரான உறுதியான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியும்.

பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளுடன் கூட்டமைப்போ, மக்கள் முன்னணியோ அல்லது ஆளும் வர்க்கத்தின் ஒருபிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளும் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியோ எதுவாக இருந்தாலும் அவை புரட்சிகர அமைப்புகளின் பலத்தின் அளவைப் பொறுத்தே அமைந்துள்ளன. மக்கள் அடித்தளம் என்ற பலத்தைக் கொண்டுதான், ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கு நிர்பந்தம் கொடுத்து தமது புரட்சிகர நிலைப்பாட்டை ஏற்கவைக்க முடியும்.

தமது உரிமைகளை முதலாளிகளிடம் பேரம் பேசி பணியவைக்க தொழிலாளர்கள் ஒற்றுமையாகவும் தொழிற்சங்கம் பலமாகவும் இருப்பது அடிப்படையான தேவை என்று சாதாரண தொழிலாளர்களுக்குத் தெரிந்த எளிய உண்மை, நாட்டின் நூற்றுக்கணக்கான ‘புரட்சிகர’ அமைப்புகளுக்குத் தெரியாமல் போனதுதான் இன்றைய எதார்த்தமாக உள்ளது.

இன்னும் சொல்லப்போனால், புரட்சிகர அமைப்புகள் எதுவாக இருந்தாலும், மக்கள் அடித்தளத்தை அதிகரிக்க அதிகரிக்க, புரட்சிகர சக்திகளின் பலவீனமான நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு பலமான நிலைமையை நோக்கி முன்னேறும். அதுதான், புரட்சிகர கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்வதில் வீச்சை ஏற்படுத்தும்.

பாசிசத்திற்கு எதிராக மக்கள் எழுச்சி உருவாகாத சூழலில், தேர்தலில் பங்கேற்பது என்பது ஒரு பிரச்சார வடிவம் – தொழிலாளர் வர்க்கத்தை புரட்சிக்குத் தயார்ப்படுத்தும் வடிவம் என்று கருதுகின்ற கட்சிகள்கூட, பரந்துவிரிந்த மக்கள் அடித்தளம் கொண்ட கட்சியாக இருக்கும் போதுதான், தேர்தலில் பங்கேற்று செயலூக்கமான வகையில் முன்னேற முடியும்.

பாசிசத்தை முறியடிப்பதும் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசின் தேவையும்

1947 ஆகஸ்டு 15-இல் இந்தியாவில் நடந்த அதிகார மாற்றத்திற்கு முன்பே, இன்றைய அரசியல் அமைப்புக்கான அடித்தளத்தை வெள்ளை ஏகாதிபத்தியவாதிகள் ஏற்படுத்தினார்கள். அவர்கள் இந்தியாவை அடக்கி ஒடுக்குவதற்கு உருவாக்கிய அரசியல் அமைப்புமுறை (இரட்டையாட்சி முறை), அதிகார வர்க்க அமைப்புகளான இராணுவம், போலீசு, நீதிமன்றம் உள்ளிட்ட அரசுக் கட்டமைப்பின் அனைத்து அங்கங்களும் 1947-க்குப் பின்னர் சிற்சில மாற்றங்களைச் செய்து பயன்படுத்தப்பட்டன. வெள்ளை ஏகாதிபத்தியவாதிகளால் இயற்றப்பட்ட பல சட்டங்களை இன்றளவும் அப்படியே பயன்படுத்தி வருவதையும் நாம் காண முடியும்.

இந்த போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பு என்பது அதன் இயல்பிலேயே மக்கள் விரோதத் தன்மையுடன் தான் கட்டியமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல், அனைவருக்கும் வாக்களிக்கும் முறை என்பதைத் தாண்டி இந்த அரசியல் அமைப்பு முறையில் மக்களுக்கு எந்த ஜனநாயகமும் இல்லை.

இது அதன் இயல்பிலேயே போலித்தனமானது என்பதற்கு சில முதன்மையான அம்சங்களைக் கூறலாம். முதலாவதாக, தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் எவ்வளவு தவறுகள் செய்தாலும் மக்கள் விரோதமாக செயல்பட்டாலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினாலும் அக்கட்சிகளை, மக்கள் பிரதிநிதிகளைத் திருப்பி அழைக்கும் உரிமை மக்களுக்கு வழங்கப்படவில்லை.

இரண்டாவதாக, சட்டமியற்றும் மன்றங்களாக மக்கள் பிரதிநிதிகளின் அமைப்புகள் இருக்கின்றன. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளுக்கு இல்லை. அதிகார வர்க்க அமைப்புகளான சிவில் நிர்வாக அமைப்புகள், போலீசு, இராணுவம், நீதித்துறைகள்தான் அச்சட்டங்களையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் அதிகாரம் கொண்டவையாக இருக்கின்றன. இதுதான், மக்கள் பிரதிநிதித்துவ மன்றங்களை (நாடாளுமன்றம், சட்டமன்றங்கள், உள்ளூராட்சி மன்றங்களை) நாடக மேடையாக ஆக்குகின்றன.


படிக்க: பாசிசத்தை அரசியலமைப்பிற்கு உட்படுத்துங்கள்! – சந்திரசூட்


மூன்றாவதாக, தற்போது நிலவுகின்ற இந்த அதிகார வர்க்க அமைப்பு மக்கள் விரோத முறையில் பயிற்றுவித்து வளர்க்கப்படுகிறது. பணபலம், சாதி, மத உறவுகள், அதிகார வர்க்கத்திடம் நெருக்கம், தனித்திறன் போன்றவற்றை மட்டுமே கொண்ட வகையில் இது கட்டியமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மக்களால் கண்காணிக்கவும் தேர்ந்தெடுக்கவும் படுவதில்லை என்பதுதான் இவர்களது அதிகாரத் திமிருக்குக் காரணமாக உள்ளது. இந்த தனிவகைப்பட்ட அதிகார வர்க்க அமைப்புதான் மக்களை வரிகளின் மூலமாகக் கொள்ளையடிக்கும் இரண்டாவது சுரண்டல் அமைப்பாக இருக்கிறது.

1992-களுக்குப் பின்னர் நமது நாட்டில் கொண்டுவரப்பட்ட, ஏகாதிபத்தியங்கள் ஏழை நாடுகளைக் கொள்ளையடிப்பதற்கும் தங்களுக்குள் உலகை பங்கீடு செய்து கொள்வதற்கும் உருவாக்கப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் அவற்றின் இயல்பிலேயே மக்கள் விரோதத் தன்மை கொண்டவைகளாகவும் பாசிசத் தன்மை கொண்டவைகளாகவும் இருக்கின்றன.

இவை இந்திய அரசியல் அமைப்புக்கு இருக்கும் போலி ஜனநாயக முகமூடிகளான பெயரளவிலான ஜனநாயகக் கூறுகளை எல்லாம் அழித்து, அப்பட்டமான கார்ப்பரேட் சர்வாதிகார ஆட்சியை திணிப்பதாக அமைந்துள்ளன.

இந்தப் போலி ஜனநாயக அரசியல் அமைப்பும், தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்கப் பாசிசக் கொள்கையும்தான் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. போன்ற பாசிசக் கட்சிகள் வளர்ந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி இருப்பதற்கும், பாசிசத்தை அரங்கேற்றுவதற்கும் காரணமாகும்.

இந்தப் போலி ஜனநாயக அரசியல் அமைப்பில் இருக்கும் பெயரளவிலான ஜனநாயக அம்சங்களை நீக்கி காவி மயமாக்குவதைத்தான், காலனியாதிக்க மரபுகளை நீக்குவதாகவும் தேசப் பெருமிதத்தை நிலைநாட்டுவதாகவும், “காங்கிரஸ் இல்லாத இந்தியா” என்றும் இன்னும் பல்வேறு வகைகளிலும் மோடி-அமித்ஷா கும்பல் குறிப்பிடுகிறது.

குரல் வாக்கெடுப்புகளின் மூலமே நாடாளுமன்றத்தில் சட்டமசோதாக்களை நிறைவேற்றிக் கொள்ளுதல், ஆளுநர்கள் மூலம் இணையாட்சியை நடத்துதல், ஒன்றியத்தின் வரம்பற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநிலங்களின் பெயரளவிலான உரிமைகளையும் பறித்தல், சுயேட்சையான நிறுவனங்கள் என்று சொல்லிக்கொள்ளப்படுகின்ற ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம், சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றிலெல்லாம் தன்னுடைய பாசிசப் படையினரை நுழைத்து அனைத்துக் கட்டுமானங்களையும் கைப்பற்றுதல், அவற்றை தன்னுடைய பாசிச நோக்கங்களுக்கு ஊழியம் செய்யும் அமைப்புகளாக மாற்றி வைத்திருத்தல், ஓட்டுக்கட்சிகளின் பிழைப்புவாதத்தைப் பயன்படுத்தி ஆட்சிக் கவிழ்ப்புச் சதிகளில் ஈடுபடுதல் – என ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் மேற்கொண்டுவரும் பலநூறு வழிகளிலான பாசிச நடவடிக்கைகளுக்கும் ஆதாரம் இந்த போலி ஜனநாயகக் கட்டமைப்பும், அதன் சீரழிவும்தான்.

ஆகையால், இந்த நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தை மீட்பதன் மூலம் பாசிசத்தை முறியடிக்க முடியாது. இந்த நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தின் வழியாகத்தான் பாசிசம் வளர்ந்து வந்துள்ளது என்பதால், இந்த நாடாளுமன்ற ‘மாண்பு’களை மீட்கப்போவதாகக் கூறுவது காவி பாசிச சக்திகளுக்கே சாதகமாக அமையும்.

ஆகையால், பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்ற மாற்றுக் கட்டமைப்பை நிறுவுவதற்காக பரந்துபட்ட உழைக்கும் மக்களையும், பாசிச எதிர்ப்பு சக்திகளையும் தட்டியெழுப்புவதே, இன்று புரட்சிகர அமைப்புகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறையாகும்.

000

இந்த பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசானது, முதலாவதாக, தற்போது இருக்கும் இரட்டையாட்சி முறை ஒழிக்கப்பட்டு, தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளுக்கே அனைத்து அதிகாரங்களும் வழங்கும் அமைப்பாக இருக்கும். இரண்டாவதாக, அதிகார வர்க்கம் ஒழிக்கப்பட்டு, சட்டமியற்றும் கடமையும் அதனை நடைமுறைப்படுத்தும் கடமையும் ஒருங்கே மக்கள் பிரதிநிதிகளுக்கே வழங்கும். மூன்றாவதாக, தனிவகையாக இருக்கும் அதிகார வர்க்க அமைப்பு, போலீசு கலைக்கப்பட்டு, அதிகாரத்தில் மக்கள் பங்கேற்கும் வகையில் மாற்றியமைக்கப்படும்.

இந்த அடிப்படை அம்சங்களைக் கொண்ட பாசிச எதிர்ப்பு ஜனநாயக் குடியரசில், சாதிவெறி மதவெறிக் கட்சிகள் தடை செய்யப்படும். மதம் அரசியலில் இருந்து முற்றாகப் பிரிக்கப்படும். காவிமயமாக்கப்பட்ட அனைத்துக் கூறுகளும் மறு ஒழுங்கமைக்கப்படும். அம்பானி, அதானி, வேதாந்தா, மிட்டல் உள்ளிட்ட மார்வாடி, குஜராத்தி, சிந்தி, பார்ப்பன, பனியா பின்னணி கொண்ட ஆக கேடுகெட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.

இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்களுக்கு எதிரான அனைத்து கார்ப்பரேட் திட்டங்களும் திரும்பப் பெறப்படும், இவை தொடர்பான அனைத்து சட்டங்களும் இரத்து செய்யப்படும்.

ஊபா போன்ற கருப்புச் சட்டங்கள் இரத்து செய்யப்படும். அனைத்து அரசியல் கைதிகளும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படுவார்கள்.

அனைத்து தேசிய இனங்களுக்கும் பிரிந்து போவதுடன் கூடிய சுயநிர்ணய உரிமை வழங்கப்படும். தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கையைக் கைவிட்டு தற்சார்புக் கொள்கை பின்பற்றப்படும். நாட்டை இராணுவமயமாக்கும் போக்கைக் கைவிட்டு, அனைத்து மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவது முதன்மையாக்கப்படும். இருப்பிடம், கல்வி, சுகாதாரம் போன்ற அனைத்து அடிப்படை உரிமைகளும் அனைவருக்கும் சமமாக வழங்கப்படும்.

இவ்வாறான ஒரு பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசிற்கான திட்டத்தை பரந்துவிரிந்த மக்களிடம் கொண்டு சென்று, இதனை உருவாக்குவதற்கான மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்பதே இன்றுள்ள முதன்மையான பணியாகும்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் செயலூக்கமான முறையில் தலையிடுவது

தற்போது நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவது அரசியல் அரங்கில் எந்த அளவிற்கு அவசியமானதோ, அந்த அளவிற்கு உழைக்கும் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதும் அவசியமானதாகும்.

பாசிச பா.ஜ.க. தோல்வி முகத்தில் இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரக் கும்பல் மக்கள் மத்தியில் பெருத்த அடித்தளத்தைக் கொண்டுள்ளது. இதனால், இந்த கும்பல் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தாலும் எதிர்க்கட்சிகள் இடையே இருக்கும் ஒற்றுமையின்மை, கார்ப்பரேட் நலன்சார்ந்த மக்கள் விரோதத் திட்டங்களுக்கு மக்களிடம் இருக்கும் எதிர்ப்பு, எதிர்க்கட்சிகளின் ஊழல்-முறைகேடுகள் ஆகியவற்றை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும். மேலும், மதக்கலவரங்களைத் தூண்டிவிடும். இவ்வாறாக, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி பாசிசத்தை நிலைநாட்டவே செய்யும்.

அதேவேளையில், எதிர்க்கட்சிகள் கார்ப்பரேட் வர்க்கக் கட்சிகளாக இருப்பதால், மக்களிடம் இருக்கும் பா.ஜ.க. எதிர்ப்புணர்வை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மீண்டும் கார்ப்பரேட் ஆட்சியை மக்கள் மீது திணிப்பதற்கான முயற்சிகளைதான் மேற்கொள்வார்கள். பா.ஜ.க.வின் இந்துத்துவ செயல்பாடுகளுடன் சமரசமான போக்கையே மேற்கொள்வார்கள். அந்தவகையில், எதிர்க்கட்சிகளின் இப்போக்கிற்கு இடம் கொடுக்காமல், பாசிச எதிர்ப்பு ஜனநாயகத் திட்டங்களை மக்களிடம் வீச்சாகக் கொண்டுசென்று அவற்றை நிறைவேற்றுவதற்கான ஒரு மக்கள் எழுச்சிக்கு மக்களைத் தயார்படுத்த வேண்டும். இதுதான், மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நிர்பந்தத்தை எதிர்க்கட்சிகளுக்கும் ஏற்படுத்தும்.

“ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வைத் தடை செய்ய வேண்டும்!”

“ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வால், இந்த அரசுக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள எல்லா பாசிச மறுஒழுங்கு நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட வேண்டும்!”

“பாசிசம் மீண்டெழாத வகையிலும் மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை வழங்கும் வகையிலும் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்ற மாற்றுக் கட்டமைப்புக்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்!”

இக்கோரிக்கைகளை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் விவாதப் பொருளாக்குவதே, பாசிச எதிர்ப்பு சக்திகளின் செயலூக்கமான போராட்டமாக இருக்க முடியும்.

புரட்சிகர சக்திகளாக இருப்பவர்கள் இன்று எவ்வளவு பலவீனமாக இருந்தபோதும், தமது சக்திக்கு உட்பட்டு பாசிசத்திற்கு எதிராக அரசியல் அரங்கில் தமது ஊக்கமான பங்களிப்பை வழங்கியே தீரவேண்டும். இதன் மூலமாகத்தான் பரந்துபட்ட உழைக்கும் மக்களையும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளையும் புரட்சிகர திசைவழியில் உந்தித் தள்ள முடியும்.

மாறாக, ஆளும்வர்க்கக் கட்சிகளுக்கு பூத் ஏஜண்டாக பணியாற்றுவதுதான் பாசிசத்தை முறியடிக்கும் ‘சாத்தியமான வழி’ என்று கருதினால், அதைக் காட்டிலும் மோசமான தற்கொலைப் பாதை வேறெதுவும் இல்லை!


பால்ராஜ்

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்

ED உதவி இயக்குநர் மீது CBI வழக்கு!

செய்தி: லால் கொள்கை முறைகேடு வழக்கிலிருந்து தப்பிக்க, சாராய முதலாளி அமன் தீப் தால், அமலாக்கத்துறை உதவி இயக்குநருக்கு ஐந்து கோடி லஞ்சம்; அமலாக்கத்துறை மீது சி.பி.ஐ வழக்கு

எதிர்க்கட்சிகள் ஊழல் பண்றதால அமலாக்கத்துறை ரெய்டு உடுதாம்.. இப்போ அமலாக்கத்துறையே இலஞ்சம் வாங்கிக் கையும் களவுமா சிக்கியிருக்கானே யாருப்பா ரெய்டு உடுறது…

ஒருபக்கம் மோடி அரசோட 7.5 லட்சம் கோடி ஊழலை சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்திருச்சு, இப்போ அமலாக்கத்துறையும் அம்பலப்பட்டு நாறுது.

இதுக்கு மேலேயும் ஊழல் இல்லா சர்க்கார், உத்தமர் மோடின்னு தெனாவட்டா பதிவு போட்டுட்டு சுத்துற சங்கிகள என்ன செய்யுறதுன்னு நாட்டு மக்கள்தான் முடிவு பண்ணனும்!

புதிய ஜனநாயகம்
29.08.2023

பாசிசத்தை அரசியலமைப்பிற்கு உட்படுத்துங்கள்! – சந்திரசூட்

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து:
பாசிசத்தை அரசியலமைப்பிற்கு உட்படுத்துங்கள்! – சந்திரசூட்

திக்கற்றவர்களுக்கு தெய்வம்தான் துணை’ என்பதுபோல, ‘நீதிமன்றங்கள்தான் பாதிக்கப்பட்ட மக்களின் கடைசி புகலிடம்’ என்று பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பிற்குப் பிறகும் சிலரால் கருதப்படுகிறது. ஆளும் அரசாங்கங்கள், அதிகாரவர்க்கம், போலீசு என அரசமைப்பின் பல்வேறு அங்கங்களும் தாங்கள் வரையறுத்துக் கொண்ட கொள்கைகளுக்கே கூட உட்படாமல், தோற்று திவாலாகி எதிர்நிலை சக்திகளாக மாறிப்போய் பெரும்பான்மை மக்களிடம் நம்பிக்கையிழந்த நிலையில், “நீதிமன்றத்திற்குச் சென்றால் நியாயம் கிடைக்கும்” என்ற ஒரு மாயையை ஆளும்வர்க்க சிந்தாந்தவாதிகள் மக்கள்மீது திணித்து வருகிறார்கள்.

ஆனால், பாசிச பா.ஜ.க.வின் ஆட்சியில் பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகள், பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு முதல் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு வரை, ‘நீதிமன்றங்கள் கடைசி புகலிடம்’ என்ற அந்த மாயையும் மறைந்துவிட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் பாசிசக் கொடுங்கோலோட்சியிலிருந்து இளைப்பாறுதல் தேடுபவர்களுக்கு ‘நம்பிக்கை நட்சத்திர’மாகக் காட்டப்பட்டார். பல்வேறு வழக்குகளில், அவர் ஒன்றிய மோடி அரசை நோக்கி எழுப்பிய கேள்விகள், அளித்த தீர்ப்புகள் ஜனநாயக சக்திகளால் பாராட்டப்பட்டன.

எனினும் நீதிபதி சந்திரசூட்டை நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதிக் கொண்டிருந்த யாரேனும் காஷ்மீர் சிறப்புச் சட்டம் நீக்கம் தொடர்பான விசாரணையில் நேற்று (28.08.2023) அவர் கூறிய கருத்துக்களைக் கவனித்திருந்தால் நிச்சயம் வெறுப்படைந்திருப்பார்கள். அமர்வுக்கு தலைமைவகிப்பது துஷார் மேத்தாவா, சந்திரசூட்டா என்ற குழப்பமும் நிச்சயம் ஏற்பட்டிருக்கும்.

ஏனெனில், காஷ்மீர் சிறப்புச் சட்டம் நீக்கம் பற்றிய விசாரணையின் தொடக்கக் கட்டத்திலேயே, அது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்பது போன்ற கருத்துக்களை சந்திரசூட் வெளிப்படுத்துகிறார். ஒன்றிய அரசை நோக்கி அவர் எழுப்பிய மையமான கேள்வி, “சிறப்புச் சட்ட நீக்கம் தொடர்பான விவகாரம் அரசியலமைப்பின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு உட்பட்டுதானே நடந்துள்ளது?” என்பதுதான்.


படிக்க: காஷ்மீர் சிறப்பு உரிமை ரத்து – இரண்டு ஆண்டு நிறைவு : துளிர்விடுகிறது விடுதலை முழக்கம் !


நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் இவ்வழக்கு விசாரணைக்கு வருவதால், எப்படியாவது காஷ்மீர் மக்களின் தன்னுரிமையை உத்தரவாதப்படுத்தும் 370 மற்றும் 35A சட்டப்பிரிவுகளை மீட்டுக் கொண்டுவந்துவிட முடியும் என்று கருதிக் கொண்டிருந்தவர்கள் பலரை, இந்தக் கேள்வி நிச்சயம் திடுக்கிடச் செய்திருக்கும்.

இச்சட்டங்கள் நீக்கப்பட்டதே “ஒரு பாசிச நடவடிக்கை” என்பதுதான் காஷ்மீரின் தன்னுரிமையை ஆதரிக்கின்ற ஜனநாயக சக்திகளின் கருத்து. கொரோனா பெருந்தொற்றின் போது தடாலடியாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கைப் போல, இது வழிமுறை தொடர்பான பிரச்சினையல்ல. ஆனால், சந்திரசூட்டோ ‘சட்டத்திற்கு உட்பட்டு நடந்துள்ளதா?’ என்று கேட்கிறார். அது எப்படிச் சரியாக இருக்கும். இதுதான் நாம் ஆராய வேண்டிய இடம்.

அதுமட்டுமல்ல, காஷ்மீர் பூர்வ குடிகளுக்கு தனிச்சிறப்பான உரிமைகளை வழங்கிவந்த 35A சட்டப் பிரிவை, “அரசியலைமைப்புச் சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் வழங்கக் கூடிய அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது” என்று கருத்து தெரிவித்துள்ளார் சந்திரசூட்.


படிக்க: காஷ்மீரில் தொடரும் ஒடுக்குமுறைகளும், அமித்ஷாவின் பொய்யுரைகளும் !


35A சட்டப்பிரிவு, காஷ்மீர் பூர்வகுடிகளுக்கு மாநிலத்தின் வேலைவாய்ப்புகளில் சிறப்பு இடஒதுக்கீடு வழங்குகிறது; மேலும் காஷ்மீரின் நிலம் உள்ளிட்ட சொத்துக்களை காஷ்மீரிகள் அல்லாதவர்களுக்கு விற்கக் கூடாது என்கிறது. காஷ்மீரின் விவசாய நிலங்களை விவசாயமல்லாத தொழிலுக்காக காஷ்மீரிகளே கூட வாங்க முடியாது. பொதுவாக அந்நியர்களுக்கு மட்டும் தடை என்பது பச்சைப் பொய். இந்த உரிமையானது இந்தியாவுக்கு அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படாத காலத்திலேயே, காஷ்மீரில் மன்னராட்சிக்கு எதிராக அந்த தேசிய இன உழைக்கும் மக்கள் போராடியதால் பெறப்பட்டதாகும்.

ஆனால், காஷ்மீர் மக்களின் தன்னுரிமையை பாதுகாக்கக் கூடிய இதுபோன்ற சட்டப்பிரிவுகள், அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் மூலதன வேட்டைக்கு தடையாக இருக்கிறது என்பதுதான் பா.ஜ.க. கும்பலுக்கு இருந்த உறுத்தல். அதனால்தான், “ஐயோ இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உள்ள, இச்சட்டங்களை ஒழிக்க வேண்டும்”, “சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும்” என்று கூப்பாடு போட்டார்கள்.

இந்த நோக்கத்தில், அச்சட்டத்தை விமர்சிக்கவில்லை என்றாலும், ‘மேதகு’ சந்திரசூட்டும் அச்சட்டம் ஒழித்துக்கட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உடன்படுகிறார்.

சந்திரசூட்டின் இந்த கருத்துக்குப் பின், “ஆமாம்… இச்சட்டம் ரத்துசெய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் பல்வேறு ‘வளர்ச்சி’த் திட்டங்களை ஒன்றிய அரசு கொண்டுவந்திருக்கிறது” என்று சுருதி சேர்க்கிறார், ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞரான துஷார் மேத்தா.

அடுத்தது, “காஷ்மீரின் சட்டமன்றத்தைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்துவதற்கு முன்பு, குடியரசுத் தலைவரை வைத்து சம்மந்தபட்ட சட்டமன்றப் பிரநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டீர்களா, அப்படிச் செய்யவில்லை எனில் அது சட்டப் பிரிவு 3க்கு எதிரானது” என்கிறார் சந்திரசூட்.

அதற்கு “இல்லை அந்த அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது”, “அது ஒரு சிறப்பு நடவடிக்கை” என்று நியாயவாதம் பேசுகிறார், துஷார் மேத்தா.

ஆக மொத்தத்தில், இந்த வழக்கு எப்படி முடித்துவைக்கப்பட இருக்கிறது என்பது, இப்போதே தெரிந்துவிட்டது. நமக்கு எழும் கேள்வி ஒன்றுதான், சந்திரசூட் ஏன் இந்த விசயத்தில் ஒன்றிய அரசுக்கு சாதகமாகச் செயல்படுகிறார்?

மக்களின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளாக இருக்கட்டும், பாசிசத் திட்டங்களாக இருக்கட்டும் – அதை ‘சட்டம் அனுமதிக்கும் வழிகளில் செய்யுங்கள்’, ‘சட்டத்தை மீறி எதையும் செய்ய வேண்டாம்’ என்பதில்தான் சந்திரசூட் நிற்கிறார்.

காஷ்மீர் மக்களின் தன்னுரிமையை பறிப்பது, காஷ்மீர் மக்களுக்கும் அம்மக்களின் தன்னுரிமைக் கோரிக்கையை ஆதரிக்கக் கூடிய பிற தேசிய இன உழைக்கும் மக்களுக்கும்தான் பிரச்சினை. அரசியலமைப்புச் சட்டம், இதுகுறித்தெல்லாம் கவலைப்படுதில்லை என்பதைதான், சந்திரசூட் தனது கருத்துக்களின் மூலம் வெளிப்படுத்துகிறார். ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு எதிராக, “அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம்” என்ற முழக்கமும் சந்திரசூட்டைப் போலத்தான் என்பது சொல்லாமலே விளங்கும்.

தனது இயல்பிலேயே சர்வாதிகாரமான போலி ஜனநாயகத்தை மீண்டும் அதன் பழைய நிலைக்குக் கொண்டுவருவதை விரும்பாமல், அனைத்து தேசிய இனங்களின் தன்னுரிமையை அங்கீகரிக்கக் கூடிய பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக போராடுவதே தீர்வு!


வாசு

தலித்துகள் – சிறுபான்மையினர் மீது பெருகிவரும் தாக்குதல்கள்: தீர்வு என்ன?

வ்வொரு நாளும் தலித்துகள், மத – இனச் சிறுபான்மையினர், பெண்கள் மீதான தாக்குதல்கள் காவி பாசிசக் கும்பலின் ஆசியுடன் பெருகிக் கொண்டே வருகின்றன. இதன் அண்மையச் சான்றுதான், மணிப்பூர் குக்கி பழங்குடிகள் மீதான தொடர் தாக்குதலும், குக்கி பழங்குடிப் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட கூட்டுப் பாலியல் வன்முறையும்.

இது தொடர்பான காணொளி கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் வெளியாகி நாட்டையே அதிர வைத்தது. அந்தக் காணொளியில், கிட்டத்தட்ட எழுநூறு மேய்தி இனவெறி கொண்ட ஆண்கள், இரண்டு குக்கி இனப் பெண்களை, ஆடைகள் களையப்பட்ட நிலையில் அவர்களின் அந்தரங்க உறுப்புகளை சீண்டித் துன்புறுத்திக் கொண்டே இழுத்து வருகின்றனர். வயல்வெளிகளில் வைத்து அப்பெண்களை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதோடு, இதைத் தடுக்க முயன்ற இளம்பெண்ணின் தந்தையையும் சகோதரனையும் சுட்டுக் கொலை செய்து விட்டனர் இனவெறியர்கள். மே நான்காம் நாள் நடந்த இந்தக் கொடூரத்தை நாடு அறிந்துகொள்ள சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாகியிருக்கிறது. காரணம், மணிப்பூரை ஆளும் பா.ஜ.க அரசு இணையத்தைத் தடை செய்து வைத்திருந்தது.

மணிப்பூர் மட்டுமின்றி நாடெங்கும் இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்து நடப்பதும், அவற்றில் சில சமூக ஊடகங்களில் வெளியாவதும், வெளியான சில நாட்களுக்கு நமது கோபத்தை வெளிப்படுத்துவதும், பிறகு அடுத்தச் சம்பவம் – அதற்குக் கண்டனம் தெரிவிப்பது என்றவாறு நாட்கள் நகர்வதுமாக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிசக் கும்பல் நாட்டின் நிலைமையையே மாற்றி வருகிறது.

இதற்கு உதாரணமாக பின்வரும் சில சம்பவங்களைக் குறிப்பிட முடியும்.

  • ஜூலை 22 ஆம் தேதி, மத்தியப் பிரதேசத்தின் சத்தர்ப்பூர் மாவட்டம், பிகௌரா எனும் கிராமத்தில், வடிகால் கட்டும் பணியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த அஹிர்வார் என்பவர் ஈடுபட்டிருந்தார். பணியிடத்திற்கு அருகில் குளித்துக் கொண்டிருந்த ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ராம்கிரிபால் படேல் என்பவனை கிரீஸ் கைகளோடு அஹிர்வார் தொட்டுவிட்டார் என்பதற்காக, அஹிர்வாரின் தலையிலும் முகத்திலும் மனிதக் கழிவைக் கொட்டியுள்ளான் சாதிவெறியன் ராம்கிரிபால்.இப்பிரச்சினை குறித்து பஞ்சாயத்தில் புகார் அளித்துள்ளார் அஹிர்வார். ஆனால், ஆதிக்கச் சாதிவெறியன் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காத பஞ்சாயத்து, பாதிப்புக்குள்ளாகி புகார் தெரிவித்த அஹிர்வாருக்கு 600 ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது.
  • ஜூலை 5 ஆம் தேதி, இதே மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில், பா.ஜ.க.வைச் சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்பவன் வாயில் சிகரெட்டை வைத்துக் கொண்டு, திமிரோடு பழங்குடியின இளைஞரின் முகத்தில் சிறுநீர் கழித்தான். அப்பாவியான அந்த இளைஞர் அவமானத்தில் கூனிக்குறுகி போய் உட்கார்ந்திருந்தார். இந்த நிகழ்வு நாடெங்கும் கோபாவேசத்தைத் தூண்டியது. அந்த பா.ஜ.க.காரனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன.மக்களின் கோபத்தைத் தணிக்க மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், பாதிக்கப்பட்ட இளைஞரிடம் மன்னிப்பு கேட்டு அவரது காலைக் கழுவியதாக ஒரு காணொளி வெளியிடப்பட்டது. ஆனால் பா.ஜ.க. முதல்வர் சவுகான், இதில் ஆள்மாற்றாட்டம் செய்து வேறொரு நபரின் கால்களைக் கழுவியது அம்பலமாகி நாடே காறி உமிழ்ந்தது.இந்நிகழ்வு நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு மத்தியப் பிரதேசத்தில், காரில் கடத்தப்பட்ட முஸ்லிம் ஒருவரை சரமாரியாக தாக்கிய இந்து மதவெறியர்கள், அவரை நிர்பந்தம் செய்து தங்களின் காலை நக்க வைத்துள்ளனர்.
  • ஜூலை 8 ஆம் தேதி, ராஜஸ்தானில் டீ அருந்த கடைக்குச் சென்ற முஸ்லிம் இளைஞர் ஒருவரை சூழ்ந்து கொண்ட இந்துமதவெறி குண்டர்கள், “ஜெய் ஸ்ரீராம்” என சொல்லச் சொல்லி ஆபாசமாகத் திட்டியுள்ளனர். அன்று தப்பித்து வந்த முஸ்லிம் இளைஞர் மீண்டும் அந்தக் கடைக்குச் சென்றபோது அதே கும்பலிடம் சிக்கிக்கொண்டார். முஸ்லிம் இளைஞரைச் சூழ்ந்த இந்துமதவெறிக் குண்டர்கள் கம்பி, கட்டை உள்ளிட்டவற்றைக் கொண்டு தாக்கியதில் அவரின் மண்டை உடைந்தது. மோசமான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தாலும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
  • இதேபோல் சில நாட்களுக்கு முன்பு, உத்தரப்பிரதேசத்தில் திருட்டு வழக்கில் இந்துமதவெறிக் கும்பலால் போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட தன் மகன், எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை, ஏன் அவனைப் பிடித்துக் கொடுத்தீர்கள் என தட்டிக்கேட்ட வயதான முஸ்லிம் ஒருவரை சூழ்ந்து, அவரை மரத்தில் கட்டிவைத்து “ஜெய் ஸ்ரீராம்” என முழங்கச் சொல்லி தாக்கி சித்திரவதை செய்தது இந்து மதவெறிக் கும்பல். வலி தாங்கமுடியாமல் அவர் படும் வேதனைகளைக் கண்டு வாய்விட்டுச் சிரித்தது அக்கும்பல்.
  • ஜூன் 1 ஆம் தேதி, மஹாராஷ்டிரத்தில் திருமண ஊர்வலம் ஒன்றில் ஆதிக்க சாதிவெறி இளைஞர்கள் கத்தி, கோடாரி, வாள்களை ஏந்தி களிவெறியாட்டமிட்டனர். ஊர்வலம் அந்தக் கிராமத்தின் பிரதான வீதியொன்றை அடைந்தபோது, அங்கு தனது தாய்க்கு உணவு வாங்க வந்த 25 வயதான தலித் இளைஞர் அக்ஷய் பலராவ், தன் சகோதரருடன் அங்கிருந்த மளிகைக்கடை ஒன்றுக்குள் சென்றார். கடைக்குள் அக்ஷய் நுழைந்தது ஊர்வலத்தில் இருந்த ஆதிக்கச்சாதி வெறியர்களின் கண்களில் பட, அந்த சகோதரர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. கத்தியால் பலமுறை குத்தப்பட்டதால் நிலைகுலைந்து கீழே விழுந்த அக்ஷய் அப்போதே இறந்துவிட்டார். ஆனால் அதன் பின்னும் வெறி தணியாத அக்கும்பல் உயிரற்ற அக்ஷயின் குரல்வளையைக் கால்களால் மிதித்து ஆபாசமாகக் கூச்சலிட்டது.அம்பேத்கர் பிறந்த நாளினை நினைவு கூர்ந்து, கிராமத்தின் பிரதான வீதியில் ஊர்வலத்தை நடத்த அக்ஷய் திட்டமிட்டதே, இந்த ஆதிக்கசாதியினரின் வெறிச் செயலுக்குக் காரணம்.

படிக்க: ஆதிக்கசாதி வெறியர்களின் கொட்டத்தை அடக்குவோம்!


மேற்சொன்ன இந்த நிகழ்வுகள் எல்லாம் ஊடகங்களில் வெளியானவை மட்டுமே. ஆனால், தலித்துகளுக்கும், மத – இனச் சிறுபான்மையின மக்களுக்கும் இந்நிலை அன்றாட வாழ்க்கையாக இருக்கிறது. எப்படியாவது இந்த சாதி – மதவெறி பிடித்த கும்பல்களின் கண்களில் படாமல் அன்றைய நாளைக் கடத்திவிட வேண்டும் என்பதே வாழ்க்கையா? இவர்களின் பகல்கள் கூட எத்துணை அச்சுறுத்தக் கூடியதாக இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது.

இதுபோன்று பயங்கரமான சம்பவங்கள் நாள்தோறும் ஏராளமாக நடந்து கொண்டேதான் இருக்கின்றன. இவற்றில் வெளியுலகின் கவனத்தில் வரக்கூடிய சில விஷயங்களுக்கு மட்டுமே சமூக வலைதளங்களில் குரல் கொடுக்கப்பட்டு வருகிறது. அதைவிடப் பெரியதொரு சம்பவம் வெளியே தெரிய வரும்போது முன்பிருந்த விஷயம் மறக்கடிக்கப்பட்டு புதிய சம்பவம் பேசுபொருளாக மாறுகிறது.

இதுபோன்று ஒவ்வொரு நாளும் நாம் என்ன பேச வேண்டும் என்பதையும், ஒடுக்கப்பட்ட – சிறுபான்மை மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையும் தீர்மானிப்பதே பாசிசக் கும்பலின் நிகழ்ச்சி நிரலாக இருந்து வருகிறது. ஆசிஃபா என்ற குழந்தை ஒரு வாரத்திற்கும் மேலாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டபோது நாடே கொதித்தெழுந்தது. ஆனால், அதன்பிறகும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறையவில்லை; மாறாக, ஹத்ராஸ், உன்னாவ், மணிப்பூர் என அடுத்தடுத்து சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.

இப்போது நாடெங்கும் சாதி – மதவெறியர்களால் நிகழ்த்தப்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், தலித்துகள், முஸ்லிம்கள், இதர சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் ஆகிய அனைத்தும் தற்செயல் நிகழ்வுகள் அல்ல. காவி பாசிஸ்டுகள் அமைக்க விரும்பும் இந்துராஷ்டிரத்தில் அன்றாடம் நிகழப்போகும் சம்பவங்களின் முன்னோட்டம்தான்.

பாசிசக் கொடுமைகளுக்கு முடிவு எப்போது?

பா.ஜ.க.வின் பாசிசப் போக்கை எதிர்ப்பதற்காக ஒன்றிணைந்து நிற்பதாகக் கூறும் எதிர்க்கட்சிகள் இவற்றிற்கெல்லாம் ஆற்றும் எதிர்வினை என்ன? “மோடி ஏன் மணிப்பூருக்கு வரவில்லை”, “மணிப்பூர் குறித்து ஏன் இன்னும் பேசவில்லை?” என்று கேள்வியெழுப்பிக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு கேள்வி எழுப்புவதில் தவறில்லை, ஆனால் மோடி வாயைத் திறந்துவிட்டால் இதற்கெல்லாம் முடிவு வந்துவிடும் என்று நாம் கருதமுடியுமா? இந்தக் கொலைவெறித் தாக்குதல்களின் ஆணிவேரே மோடியை முன்னிறுத்தும் பாசிசக் கும்பல்தான் என்பது இவர்களுக்கெல்லாம் தெரியாதா?

அதிகாரவர்க்கத்தின் துணை இல்லாமல்தான் இவை நடக்கின்றன என்று எதிர்க்கட்சிகள் இன்னும் நம்பிக்கொண்டு இருக்கிறார்களா? மணிப்பூரில் இரண்டு பழங்குடிப் பெண்களையும் மேய்தி இனவெறி கும்பலிடம் ஒப்படைத்ததே மணிப்பூர் போலீசுதானே? நீதிமன்றம், போலீசு, இராணுவம், அதிகார அமைப்புகள் என்று அரசுக் கட்டமைப்பு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அடியாட்கள் ஊடுருவி இருக்கின்றனரே, இவர்களை என்ன செய்வது? இதை மாற்றுவதற்கு எதிர்க்கட்சிகளிடம் என்ன மாற்றுத் திட்டம் இருக்கிறது?

இவற்றிற்கெல்லாம் தீர்வாக எதிர்க்கட்சிகள் முன்வைப்பது ஒரே விசயம்தான். அது, 2024-தேர்தலில் பி.ஜே.பி.யை, மோடியை வீழ்த்திவிட்டால் இதற்கெல்லாம் விடிவு வந்துவிடும் என்பதுதான். ஆளும்வர்க்கக் கட்சிகள் வெறும் பி.ஜே.பி எதிர்ப்பு என்ற நிலையிலிருந்து இவ்வாறு பேசுவது அவர்களது வரம்பு. ஆனால் பாசிச எதிர்ப்பாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இதை அப்படியே உழைக்கும் மக்களுக்கும் கடத்துவதுதான் ஆபத்தானது. இதற்குக் காரணம், அவர்களது அரசியல் பாமரத்தனமல்ல, தமது சந்தர்ப்பவாதத்தை, சரணாகதிப் பாதையை அவர்கள் மூடிமறைத்துக் கொள்கிறார்கள். காவி பாசிசத்தை, கார்ப்பரேட் சுரண்டலை முறியடிக்க இவர்களிடம் எந்த மாற்றுத் திட்டமும் இல்லை. அவற்றை முன்வைக்கும் விருப்பமும் இல்லை.


படிக்க: ஆதிக்கச் சாதி வெறியர்களை சமூகப் புறக்கணிப்பு செய்வோம் | தோழர் ரவி


பாசிசக் கும்பல் உழைக்கும் மக்கள்மீது மேற்கொண்டுவரும் அத்தனை அநீதிகளையும், அதற்கெதிரான மக்களின் கோபாவேசத்தையும் பாசிச எதிர்ப்பு என்ற பெயரால் ஆளும்வர்க்கக் கட்சிகளின் ஓட்டுவங்கியாக மாற்றுவதே அவர்களது திருப்பணி!

காவி-கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராகத் தனித்தனியான தீர்வுகள் இல்லை. இந்தக் கட்டமைப்பு முழுவதுமே தலித்துகளுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் எதிராகத்தான் செயல்படுகிறது. இதனை தூக்கியெறிந்துவிட்டு சாதிவெறி, மதவெறி, இனவெறியை முன்வைத்துச் செயல்படுகின்ற அமைப்புகளை தடைசெய்யும் வகையிலான ஜனநாயகக் கட்டமைப்புக்காக – பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக போராடுவது மட்டுமே தீர்வு! இந்த மாற்றை உரக்க ஒலிப்பதும், மக்களை திரட்டுவதுமே புரட்சிகர சக்திகளின் தலையாய பணி.


வெண்பா

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்

அக்கலாம்பட்டி: சுடுகாடு இல்லாமல் ஒடுக்கப்படும் அருந்ததிய மக்கள்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட கிராமப்பகுதி அக்கலாம்பட்டி. இப்பகுதியில் ஆதிக்கசாதியினரான கவுண்டர்களும், பட்டியலின அருந்ததியர் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். கவுண்டர்களைப் பொறுத்தவரை நிலவுடமையாளர்களாக, குறிப்பாக பெரும்பாலும் 10 ஏக்கருக்கு மேல் நிலம் கொண்ட விவசாயிகளாக இருக்கின்றனர். அருந்ததியர் சமூக மக்களோ இவர்களைச் சார்ந்து விவசாயக் கூலிகளாக வேலை செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் பண்ணையடிமைகளாக வேலை பார்த்து வந்த நிலைமாறி அன்றாட விவசாயக் கூலிக்கும், நாமகிரிப்பேட்டையில் உள்ள ஜவ்வரிசி மில்களுக்கும் சென்று வேலை பார்த்து வருகின்றனர்.

நிலவிற்கு சந்திரயான் விண்கலம் அனுப்பியதாக பெருமை பீற்றிக் கொண்டிருக்கும் இந்நாட்டில்தான் அக்கலாம்பட்டி தாழ்த்தப்பட்ட அருந்ததிய மக்களுக்கு பிணத்தைப் புதைப்பதற்கு சுடுகாடு இல்லை. ஆதிக்க சாதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் மயானப் பகுதியை ஆக்கிரமித்து அதை சட்டவிரோதமாக விவசாய நிலமாகப் பயன்படுத்தி வருகிறார். இதனால் ரோட்டின் ஓரம் ஒதுக்குப்புறமாக பத்துக்குப் பத்து இடத்தில்தான் இறந்தவர்களைப் புதைக்கின்ற அவலநிலை பல பத்தாண்டுகளாக தொடர்கிறது.

அதாவது, கவுண்டர் சாதியைச் சார்ந்த சரவணன் என்பவரின் நிலத்திற்கு அருகில் அரசு புறம்போக்கு நிலம் 17 சென்ட் உள்ளது. இந்நிலத்தைத்தான் சரவணன் ஆக்கிரமித்து அதில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலம்தான் அருந்ததிய மக்களின் மயானத்திற்குரிய பகுதியாகும். 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்த இடத்தில் அரசு மயானம் அமைக்க முயற்சி எடுத்தபோது அதை ஆதிக்க சாதி கவுண்டர்களும், அவர்களுக்கு துணையாக அதிமுக கட்சியைச் சார்ந்தவர்களும் சேர்ந்து மயானம் அமைப்பதை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதே சமயத்தில் இந்த புறம்போக்கு நிலப்பகுதியில் அருந்ததிய மக்கள் இறந்தவரின் பிணத்தை அடக்கம் செய்ய முயற்சித்த போது அதை தடுத்து நிறுத்தியுள்ளார் சரவணனின் தந்தை கருப்பண்ணன். அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் பாதிக்கப்பட்ட அருந்ததிய மக்களையே குற்றவாளியாக்கி அவர்களிடம் தண்டத்தொகை (குத்தம்) பெற்றுள்ளனர் ஆதிக்க சாதியினர்.


படிக்க: மதுரை: திருமோகூர் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்கச் சாதி வெறியர்கள் தாக்குதல் | நேரடி ரிப்போர்ட்


இதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கவுண்டர் சாதியினர் மொத்தமாக ஒன்று சேர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மயானம் கிடைக்க விடமாட்டோம் என்று சவால் விட்டுள்ளனர். அப்பகுதி கவுண்டர் சாதியினர் பெரும்பாலும் அதிமுக-வில் பொறுப்புகளில் இருந்துள்ளதால் அதிமுக ஆட்சி முழுவதும் கவுண்டர் சாதியினருக்கு ஆதரவாகவே செயல்பட்டுள்ளனர். இதனால் தாழ்த்தப்பட்ட அருந்ததிய மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மறியல் உள்ளிட்டு பல போராட்டங்களை பாதிக்கப்பட்ட அருந்ததிய மக்கள் நடத்தி வந்துள்ளனர்.  போராட்டத்தின் நிர்ப்பந்தம் காரணமாக சமூக நலத்துறையில் இருந்து அதிகாரிகள் வந்து பார்த்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஆதிக்கசாதி நபரான சரவணனின் நிலத்தில் இருந்து புறம்போக்கு நிலம் 17 சென்ட் அல்லாமல் மேலும் 33 சென்ட்-ஐ எடுத்துக் கொள்ள அரசால் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சரவணனின் தந்தை வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அருந்ததிய மக்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்துள்ளது.

அதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்திற்கு வழக்கை கொண்டு சென்றுள்ளார் சரவணன். மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சர்வையர் இந்த புறம்போக்கு நிலத்தை அளக்க வந்தபோது தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதாகக் கூறி சர்வையரை திருப்பி அனுப்பியுள்ளார் சரவணன்.

இந்த தீர்ப்பு தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வட்டாட்சியர் அனுப்பிய குறிப்பாணையில் ஆக்கிரமிக்கப்பட்ட மயானப்பகுதிக்கான சர்வே எண் 102/1F1 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தீர்ப்பில் சர்வே எண் 113/4 என வேறொன்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் குளறுபடி உள்ளதை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

இன்னொரு பக்கம் 1991-இல் மயானத்துக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிலத்துக்கு சதுர முட்டு (அரசின் உத்தரவின் பேரில் நிலத்தை அளந்து குறிப்பிட்ட நிலப்பகுதியை சுற்றிலும் கற்களை நட்டு வைத்து விடுவது) அடித்த பின்பும், அதையும் மீறி சட்டவிரோதமாக அந்நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளார் சரவணன். அதற்கு பின்பு வந்த ராசிபுரம் தாசில்தார்கள் பலரும் லஞ்சம் வாங்கிக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


படிக்க: நெல்லையில் தொடரும் சாதிய படுகொலைகள்!


குறிப்பாக சமூக நலத்துறையைச் சார்ந்த வருவாய் அலுவலரான பாலசுப்பிரமணி (இவர் ஓய்வு பெற்றுவிட்டார்) என்பவர்தான் ஆதிக்கசாதியினருக்கு மிகவும் சாதகமாக இருந்து வேலை செய்தார் என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த பிரச்சினை நடந்து கொண்டிருக்கும் போதே ஊருக்கு அருகில் இருக்கும் ஏரியில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் 85 சென்ட்-இல் இருந்து மயானத்துக்கு இடம் ஒதுக்க கோரியுள்ளனர் பாதிக்கப்பட்ட மக்கள். இதையும் கவுண்டர் சாதியைச் சார்ந்த 3 குடும்பத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ள காரணத்தால் அங்கேயும் மயானத்துக்கான இடத்தை எடுக்க முடியாமல் போயுள்ளது. இதிலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் ஆதிக்கசாதியினருக்கு சாதகமாகவே செயல்பட்டுள்ளனர்.

சமூக நலத்துறை, கலெக்டர் அலுவலகம், முன்சீப், இம்மாவட்டத்தைச் சேர்ந்த திமுக அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை திமுக எம்பி இராஜேஷ்குமார் என அனைவரிடமும் மனு கொடுத்து போராட்டங்களை முன்னெடுத்த பிறகும் கூட மயான உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டுள்ளது.

சுடுகாடு மட்டுமல்ல, மக்கள் குடியிருப்பதற்கான இடத்தையும் பெறுவதற்கு இப்பகுதி ஆதிக்கசாதியினர் தடையாக இருந்து வந்துள்ளனர். அருந்ததிய மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் வீடுகள் கட்டிக் கொள்வதற்காக அரசால் புறம்போக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசால் ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆதிக்கசாதியைச் சேர்ந்த நபர் தனது நிலம் என்று ஏமாற்றி அருந்ததிய மக்களிடமே அதிகாரிகளின் துணையோடு ஏமாற்றி விற்றுள்ளார். அதிகாரிகள் ஆதிக்கசாதியினருக்கு சாதகமாக நடந்து கொண்டு செயல்பட்டதே தங்களுக்கான உரிமை கிடைக்கப் பெறாததற்கு முதன்மைக் காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.

சுடுகாடு மட்டுமல்ல, அக்கலாம்பட்டி பகுதி  அருந்ததிய மக்களுக்கு வீட்டுமனை, குடிநீர் என எந்த அடிப்படை வசதியையும் முறையாக செய்து கொடுக்காமல் அரசு புறக்கணித்து வரும் அவலம் நீடிக்கிறது.

எந்த ஒரு பிரச்சினையிலும் எக்காலத்திலும் அதிகார வர்க்கம் தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக துணை நின்றதில்லை என்பதே வரலாறு. இடைவிடாத போராட்டங்களின் மூலமாகத்தான் தங்களுக்கான குறைந்தபட்ச உரிமைகளைக் கூட தாழ்த்தப்பட்ட மக்களால் பெற முடிகிறது. குறிப்பாக கொங்கு மண்டலப் பகுதியில் வாழும் அருந்ததிய மக்களின் நிலை மிக மோசமானதாகவே இருக்கிறது.

பார்ப்பனிய சாதி ஏற்றத்தாழ்வைப் பாதுகாக்கும் அதிகார வர்க்கத்திடமிருந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளும், சுயமரியாதையும் எப்படிக் கிடைக்கும்?

எக்காலத்திலும் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறி விடக்கூடாது என்ற எண்ணத்தில் அவர்களுக்கான உரிமையை ஆதிக்கசாதியினரும், அதிகாரிகளும் மறுத்து வருகின்றனர். ஆனாலும் தங்களின் உரிமையைப் பெறும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றும் உறுதியாகக் கூறுகின்றனர் அக்கலாம்பட்டி கிராம அருந்ததிய மக்கள். அவர்களுக்கு துணை நிற்க வேண்டியது ஜனநாயகத்தை விரும்புவோர் அனைவரின் கடமையாகும்.


வினவு செய்தியாளர்

பொது சிவில் சட்டம், அறிவிப்பு: இந்துத்துவத்தின் பிரம்மாஸ்திரமா? புஸ்வானமா?

ன்றிய சட்ட ஆணையம் இந்தியா முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள் என அனைவரும் கருத்து தெரிவிக்கலாம் என்று கடந்த ஜூன் 14 அன்று அறிவித்தது. இந்த அறிவிப்பை காவிக் கும்பல் மற்றும் அவர்களின் சில அடிமைகளைத் தவிர பல்வேறு கட்சியினரும், இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் 27-ல் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடந்த பொதுக்கூட்டத்தில், “ஒரு குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு ஒரு சட்டம், இன்னொரு உறுப்பினருக்கு வேறொரு சட்டம் என்று இருவேறு விதிமுறைகளின் கீழ் இருந்தால் அந்த குடும்பம் முறையாகச் செயல்பட முடியுமா? அதேபோல, ஒரு நாடு எப்படி வெவ்வேறுவிதமான சட்டங்களின் கீழ் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்ல முடியும்? நாட்டு மக்கள் அனைவரும் சமம் என அரசியல் சாசனம் கூறுவதால், நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம். ஆனால் பொது சிவில் சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் தவறான கருத்துக்களைப் பரப்பி, மக்களைத் தூண்டிவிடுகின்றனர்” என்று பேசினார் பிரதமர் மோடி.

மோடியின் இந்தப் பேச்சுக்கும் பொது சிவில் சட்டத்திற்கும் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, சீக்கியர்கள், பழங்குடிகள், கிறித்தவர்கள் மற்றும் இந்துக்களின் பல்வேறு பிரிவினரும்கூட பொது சிவில் சட்டத்தை எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக, பா.ஜ.க.வின் சில கூட்டணிக் கட்சிகளிடமிருந்தும் கூட எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

மேகாலயா முதல்வரும், பா.ஜ.க கூட்டணியில் அங்கம்வகிக்கும் தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான கான்ராட் சங்மா, “வடகிழக்கு ஒரு தனித்துவமான கலாச்சாரம் மற்றும் சமூக அமைப்பைக் கொண்டது. நாங்கள் அப்படியே இருக்க விரும்புகிறோம். உதாரணமாக நாங்கள் தாய்வழிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதுவே எங்களுக்கான பலமாகவும் கலாச்சாரமாகவும் இருந்து வருகிறது. தற்போது அதனை மாற்ற முடியாது. பன்முகத் தன்மையே நமது கலாச்சாரம்; அதுவே நமது பலம். தற்போதைய சூழலில் பொது சிவில் சட்டம் இந்தியச் சிந்தனைக்கு எதிரானது” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.


படிக்க: பொது சிவில் சட்டம் : பாசிஸ்டுகளின் அடுத்தக்கட்ட அரசியல் ஆயுதம் !


மேகாலயா மட்டுமின்றி, மிசோரம் மற்றும் நாகாலாந்தும் கூட இச்சட்டத்தை எதிர்க்கின்றன. நாகாலாந்தில், ஆளும் பா.ஜ.க கூட்டணியில் உள்ள தேசிய ஜனநாயக முன்னேற்றக் கட்சித் தலைவரான சிங்வாங் கோன்யாக், “நாங்கள் பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ளமாட்டோம். நாகாலாந்தைப் பொறுத்தவரை, இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 371 (அ)-வால் நாங்கள் பாதுகாக்கப்படுகிறோம். ஒருவேளை, நாடாளுமன்றத்தில் நிறைவேறினாலும், நாகாலாந்து சட்டமன்றத்தில் அமலாக அனுமதிக்கமாட்டோம்” என்று இந்தியா டுடே பத்திரிகைக்குப் பேட்டியளித்திருக்கிறார்.

ஏனெனில், ஒன்றிய அரசு அமல்படுத்தும் எந்தச் சட்டங்களும் நாகாலாந்து, மிசோரம் போன்ற மாநிலச் சட்டமன்றங்களில் விவாதிக்கப்பட்ட பிறகே அமலாகும். ஏற்கனவே பொது சிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நாகாலாந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பொது சிவில் சட்டத்திலிருந்து கிறித்தவர்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் விலக்களிக்க வேண்டும் என்று நாகாலாந்து முதல்வர் நெய்பியூ ரியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். கிறித்தவர்களுக்கும், சில பகுதி பழங்குடியினருக்கும் பொது சிவில் சட்டத்திலிருந்து விலக்களிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னிடம் உறுதியளித்திருப்பதாக தெரிவித்துள்ளார் நாகாலாந்து அமைச்சர் கே.ஜி.கென்யே.

பொது சிவில் சட்டத்தை எதிர்க்கின்ற கட்சிகளை, “வாக்கு பசிக்காக இஸ்லாமியர்களை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன” என்று இழிவுபடுத்துகிறார் மோடி. ஆனால், உண்மை என்ன? நாடு முழுவதற்கும், அனைத்து தரப்பினருக்கும் பொது சிவில் சட்டம் என்று பேசினாலும், கிறித்தவர்கள், பழங்குடிகள், சீக்கியர்கள் அதிகம் உள்ள வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பஞ்சாபில் எதிர்ப்பை சந்திக்க நேரும் என்பதற்காகவே இந்த பிரிவு மக்களுக்கு பொது சிவில் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க முடிவு செய்திருக்கிறது மோடி-அமித்ஷா கும்பல். இந்த முடிவானது, அவர்கள் கொண்டுவரத் துடிக்கிற “பொது” சிவில் சட்டத்தின் சொல்லிக் கொள்ளப்படும் நியாயவாதத்தையே கேள்விக்குள்ளாக்கிவிடுகிறது.


படிக்க: பொது இந்துச் சட்டமே இல்லை பிறகு எதற்கு பொது சிவில் சட்டம் ?


பொது சிவில் சட்டத்தை நாடு முழுக்க அமல்படுத்த முடியாது என்று அம்பலமாகியுள்ள இந்த உண்மையைத்தான், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பல்பீர் சிங் சௌகான் தலைமையிலான 21-வது சட்ட ஆணையம் கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவித்தது. கடந்த 2018-ஆம் ஆண்டில், குடும்பச் சட்டங்கள் சீர்திருத்தம் என்ற பெயரில் பொது சிவில் சட்டம் குறித்து கருத்துக் கேட்டது, அன்றைய சட்ட ஆணையம். அது குறித்த, ஆலோசனைகளைக் கட்டுரையாகவும் வெளியிட்டிருந்தது.

அதில், “இந்தக் காலகட்டத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடியாது அல்லது விரும்பத்தக்கதும் அல்ல. மேலும் வேறுபாடுகள் இருப்பது பாகுபாட்டைக் குறிப்பதல்ல, ஆனால் அது ஒரு வலுவான ஜனநாயகத்தைக் குறிக்கிறது. கலாச்சார ரீதியாக வேறுபட்ட மக்களின் வேறுபாடுகளை பொதுவான சட்டத்தின் மூலம் அங்கீகரிப்பது என்பதை பெரும்பாலான நாடுகள் முன்னெடுக்கின்றன, இது பலவீனமான மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் பிரிவினருக்கு அநீதியாக இருக்கும்” என்று தனது நிலைப்பாட்டைத் தெரிவித்திருந்தது.

ஒரு இஸ்லாமிய எதிர்ப்புப் பூச்சாண்டி!

நாடு முழுவதிலும் எழுந்து வரும் எதிர்ப்புகள், கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்புகள் காரணமாக, காஷ்மீரின் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கியது போலவோ அல்லது குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது போலவோ, பொது சிவில் சட்டத்தை தடாலடியாக நிறைவேற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது காவி பாசிசக் கும்பல்.

பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது பாசிசக் கும்பல் தான் நிகழ்ச்சிநிரலில் வைத்திருக்கும் திட்டம்தான் என்றாலும், பா.ஜ.க. கும்பல் தோல்விமுகம் அடைந்திருக்கும் இன்றைய அரசியல் சூழலில் பெரும்பான்மை மக்களிடம் ஆதரவு இல்லாத நிலையிலும் இஸ்லாமிய எதிர்ப்புப் பூச்சாண்டி ஒன்றுக்காகவே பொது சிவில் சட்டத்தை இப்போது விவாதப் பொருளுக்கு கொண்டுவந்திருக்கிறது பாசிசக் கும்பல்.

அதனால்தான், பொது சிவில் சட்டம் என்று தாங்கள் என்ன கொண்டுவரப் போகிறோம் என்பதை வெளிப்படையாக வரைவறிக்கையாக மக்கள் முன் வைக்காமலேயே சட்ட ஆணையத்தை தனது கைப்பாவையாக்கிக் கொண்டு பொத்தாம் பொதுவாக கருத்து கேட்கிறது பா.ஜ.க. அரசு. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 44 மற்றும் ஷா பானு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல்களை எடுத்துக்காட்டி, “இஸ்லாமியப் பெண்களுக்கு சமத்துவம் வேண்டும்”, “நீதி வேண்டும்”, அதற்காகத்தான் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறது இக்கும்பல்.

“நான்கு பெண்களைத் திருமணம் செய்துகொள்ளலாம் என்று நினைக்கிற சிலர் இந்தியாவில் இருக்கிறார்கள். அது அவர்களின் எண்ணம். ஆனால் நான் சொல்கிறேன், இனி அவர்கள் நான்கு திருமணம் செய்துகொள்ள முடியாது. அந்த நாள் முடியப்போகிறது. அத்தகைய நாள் வெகுதொலைவில் இல்லை. இந்தியாவில் பொது சிவில் சட்டம் வரப்போகிறது. இந்தியாவை உண்மையான மதச்சார்பற்ற நாடாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க காவி பாசிஸ்டுகளின் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம் பொதுவில் நாடுதழுவிய அளவில் எதிர்க்கப்பட்டாலும், காவிக் கும்பல் செல்வாக்காக உள்ள உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற பசு வளைய மாநிலங்களில் இந்த இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரம் வாக்கு வங்கியை உத்திரவாதப்படுத்தும். இக்காரணத்திற்காகவே தற்போது இதை விவாதப் பொருளாக்கியுள்ளது காவிக் கும்பல்.

ஆக மொத்தத்தில், இந்துராஷ்டிர நிகழ்ச்சிநிரலில் இருக்கும், ஒரே நாடு, ஒரே கலாச்சாரத்தைத் திணிக்கும் பொது சிவில் சட்டமானது தற்போது இந்துத்துவத்தின் பிரம்மாஸ்திரமாக நம் முன் பாய்ந்து அச்சுறுத்தவில்லை. அது 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக கையிலெடுக்கப்பட்டுள்ள இஸ்லாமிய எதிர்ப்புப் பூச்சாண்டி, வெற்று புஸ்வானம்!


அப்பு

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்

கார்ப்பரேட்டுகளுக்காக இணைந்த திமுக – ஆர்.என்.ரவி | தோழர் மருது

நில ஒருங்கிணைப்பு சட்டத்திற்கு ஆர்.என்.ரவி ஒப்புதல் | ஈஷா அறக்கட்டளை – சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

முசாஃபர்நகர் முஸ்லீம் மாணவர் மீதான தாக்குதல்: பாசிசம் வேரூன்றியிருப்பதன் சமிக்ஞை

0

த்தரப்பிரதேசத்தின் முசாஃபர்நகர் நகரிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள குப்பாபூர் (Kubbapur) கிராமத்தில் நேஹா பப்ளிக் பள்ளி (Neha Public School) அமைந்துள்ளது. இப்பள்ளியில் இந்து மற்றும் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

நேற்று (ஆகஸ்ட் 25) இப்பள்ளியைச் சேர்ந்த 7 வயது முஸ்லீம் மாணவர் ஒருவரை கன்னத்தில் அறையுமாறு ஆசிரியர் திரிப்தா தியாகி (Tripta Tyagi) மாணவர்களுக்கு உத்தரவிட்ட கொடூரமான காணொளி ஒன்று வெளியானது. அது காண்போர் அனைவரின் நெஞ்சையும் பதைபதைக்க வைத்தது. ஆகஸ்ட் 24 அன்று இந்த சம்பவம் நடந்ததாக பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் கூறியதிலிருந்து அறிய முடிகிறது.

40 விநாடிகள் ஓடும் அந்த காணொளியில், அழுதுகொண்டு நிற்கும் அந்த மாணவரை மற்ற மாணவர்கள் பலர் அரைகின்றனர். ஒருகட்டத்தில் அம்மாணவரைக் கடுமையாக அடிக்காததற்காக ஆசிரியர் அடித்துவிட்டுச் சென்ற மாணவர் ஒருவரைத் திட்டுகிறார்.


படிக்க: முசாஃபர் நகரில் மோடி – ஆர்.எஸ்.எஸ்-ன் உண்மை முகம்


”அனைத்து முஸ்லீம் மாணவர்களும் வெளியேற வேண்டும் என்று நான் ஏற்கெனவே கூறியுள்ளேன்” என்று ஆசிரியர் திரிப்தா தியாகி கூறுவதை அந்தக் காணொளியில் கேட்க முடிகிறது.

”நீங்கள் சொல்வது சரிதான்; கல்வியே பாழடைகிறது” என்று ஒரு ஆண் குரல் பின்னணியில் ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. அவர் அந்த ஆசிரியரின் நடவடிக்கைக்கு உடந்தையாக இருப்பதைக் காண முடிகிறது.

இதுகுறித்து அவரது தாய் ரூபினா கூறுகையில், “நேற்று எனது மகன் அழுது கொண்டே வீட்டுக்கு வந்தான். நாங்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வீட்டுப்பாடம் முடிக்காததற்காக ஆசிரியர் அவனைத் தண்டித்திருக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் அந்தக் காணொளியைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தோம். குழந்தைகளை இப்படியா நடத்துவார்கள்?” என்றார்.

அவரது தந்தை முகமது இர்ஷாத் ”என் மகன் பாடங்களை மனப்பாடம் செய்யவில்லை என்று கூறி ஆசிரியர் தனது செயல்களை நியாயப்படுத்துகிறார். என் மகன் படிப்பில் கெட்டிக்காரன். டியூஷன் கூடச் செல்கிறான். ஆசிரியர் ஏன் அவரை இப்படி நடத்தினார் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆசிரியர் வெறுப்பு நிறைந்தவராக இருக்கிறார்” என்று கூறினார்.

நாட்டில் முஸ்லீம்களுக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பின் விளைவாகத் தான் தனது மகன் மோசமாக நடத்தப்பட்டதாக இர்ஷாத் கூறினார். இர்ஷாத்தின் கூற்று முற்றிலும் சரியானது என்பதை இக்காணொளியில் உள்ள ஆசிரியரின் கருத்துகள் நமக்கு உணர்த்துகின்றன.

சில நாட்களுக்கு முன்பு, இர்ஷாத்தின் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவரையும் இதேபோல் இந்த ஆசிரியர் நடத்தியுள்ளார் என்பதைத் தற்போது அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வாசிரியரைக் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று தற்போது அனைவரும் கோரிவருகின்றனர்.


படிக்க: முசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை !


மாணவரின் தந்தை இர்ஷாத், ”இனி ஒருபோதும் தனது மாணவர்களை மோசமாக நடத்தப் போவதில்லை என்று அந்த ஆசிரியர் கூறியுள்ளார். ஆனால் இத்தகைய சூழலில் எனது மகன் கல்வி கற்று வளர்வதை நான் விரும்பவில்லை. அவனை நாங்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்போகிறோம்” என்று கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மக்கள்தொகையில் 20 சதவிகிதத்தினர் முஸ்லீம்கள். காவி பயங்கரவாதம் தலைவிரித்தாடும் அம்மாநிலத்தில் மாணவரிடையே மத நல்லிணக்கத்தைப் போதிப்பதே ஒரு ஆசிரியரின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். ஆனால் இந்த ஆசிரியரோ மதவெறியை உமிழக் கற்றுக்கொடுக்கிறார்.

இந்துத்துவ சித்தாந்தத்திற்கு ஆட்பட்ட ஒருவரால் முஸ்லீம் மாணவர்களை எப்படி சமமாக நடத்த முடியும். அவர் மாணவர்களுக்கு எதைக் கற்றுக்கொடுப்பார்? முஸ்லீம்களை கும்பல் படுகொலை செய்வதைத்தான் கற்றுக்கொடுப்பார்.

சமூகத்தில் பகைமையையும் வெறுப்பையும் இயல்பாகக் கருதும் ஒரு தலைமுறை வளர்ந்து வருகிறது. நாம் பாசிசமயமாகி வரும் ஒரு சமூகத்தில் தான் வாழ்ந்து வருகிறோம் என்பதை இந்தக் காணொளி நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

பாசிசத்தை நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்க விட்டால், இந்த ஆசிரியரைப் போல இன்னும் பலர் தோன்றுவார்கள். பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சிறுபான்மை முஸ்லீம் மக்களைத் தொடர்ந்து எதிர்மறை வெளிச்சத்தில் வைத்திருப்பதன் மூலம் மத முனைவாக்கத்தை கூர்மைப்படுத்த முயல்கிறது; தனக்கான அடித்தளத்தை பெரிதாக்கிக்கொள்ளப் பார்க்கிறது. இந்த அபாயத்தைத் தடுத்து நிறுத்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலை சமூகத்தில் இருந்து வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்.


பொம்மி

ஆளுநர் ரவி ஒரு குற்றவாளி! | தோழர் வெற்றிவேல்செழியன்

ஆளுநர் ரவி ஒரு குற்றவாளி! | தோழர் வெற்றிவேல்செழியன்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

சந்திராயன் 3 ஏவப்பட்டதற்கு பின் இருக்கும் அரசியல் என்ன? | தோழர் சிவா

சந்திராயன் 3 ஏவப்பட்டதற்கு பின் இருக்கும் அரசியல் என்ன? | தோழர் சிவா

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

வனம், கனிமப் பாதுகாப்பு சட்டத் திருத்தங்கள்: கார்ப்பரேட் கொள்ளையின் முகமூடி!

ங்களது காடுகள், வாழ்வாதாரம் பறிக்கப்படும் நிலைமைக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் மணிப்பூர் குக்கி பழங்குடிகள். அம்மக்கள் மீது காவி பாசிசக் கும்பல் ஆசியுடன் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரி வருகிறார்கள். மோடி அரசு இது குறித்து விவாதிக்க மறுத்து நாடாளுமன்றத்தை முடக்கி வந்த அதே நேரத்தில்தான், மணிப்பூர் பழங்குடிகளின் அச்சத்தை உண்மையாக்கும் வகையில், காடுகளை அழித்து பழங்குடிகளை விரட்டும் “வனப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா – 2023” என்ற நாசகர சட்டத் திருத்தத்தை ஜூலை 26 அன்று மக்களவையில் நிறைவேற்றியிருக்கிறது. வனம், பழங்குடிகள் மற்றும் கனிம வளங்கள் தொடர்பாக கடந்த ஓராண்டில் மோடி அரசு செய்திருக்கும் மூன்றாவது சட்டத் திருத்தம் இது.

வழக்கம் போல குறுக்கு வழி!

கடந்த மார்ச் மாதம் வனப் பாதுகாப்பு சட்டம் 1980-ல் சில திருத்தங்களை மேற்கொண்டு வனப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா 2023-ஐ மக்களவையில் தாக்கல் செய்தது, மோடி அரசு. எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக மசோதாவை நிறைவேற்ற முடியாமல், பரிசீலித்து கருத்துகளைக் கூறுவதற்காக நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு அனுப்பியுள்ளது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்களை, அந்தந்தத் துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் பரிசீலித்து கருத்துகளைக் கூறுவதுதான், சட்டப்பூர்வமான வழிமுறை. அதன்படி, இந்த மசோதா அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் வனம் சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கே அனுப்பப்பட்டிருக்க வேண்டும்; அந்தக் குழுதான் மக்களிடம் கருத்துகளைக் கேட்டு மசோதா மீதான பரிந்துரைகளை வழங்க வேண்டும்.

இந்த நிலைக்குழுவுக்கு காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஜெய்ராம் ரமேஷ் தலைவராக இருப்பதால், மசோதாவை சட்ட விதிகளுக்குப் புறம்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு அனுப்பியுள்ளது ஒன்றிய அரசு. நாடாளுமன்றக் கூட்டுக்குழுவானது பா.ஜ.க.வைச் சார்ந்த ராஜேந்திர அகர்வால் தலைமையில் பா.ஜ.க எம்.பிக்களை பெரும்பான்மை உறுப்பினர்களாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. அக்குழுவோ, பிற அரசியல் கட்சிகள், அமைப்புகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் ஆகியோர் மசோதா மீது தெரிவித்த கருத்துகளையும் எதிர்ப்புகளையும் முற்றிலும் நிராகரித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய பரிந்துரை செய்தது.

ஜூலை 26 அன்று, இம்மசோதா மக்களவையில் பெயரளவிலான சொற்ப நேர விவாதத்திற்குப் பின் குரல் வாக்கெடுப்பு மூலம் தடாலடியாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நடப்பிலிருக்கும் சட்ட முறைகளை மீறி இவ்வளவு அயோக்கியத்தனமாக நிறைவேற்ற வேண்டிய தேவை என்ன? இச்சட்டத்திருத்தத்தில் மோடி அரசு இவ்வளவு அக்கறை காட்டுவது ஏன்?

வனப் பாதுகாப்பல்ல, வன அழிப்பு!

2030 ஆம் ஆண்டிற்குள் தற்போது இருப்பதை விட கூடுதலாக 2.5 முதல் 3 பில்லியன் டன்கள் அளவுக்கு கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் இலக்கை நிறைவேற்றவும், நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்காக காடுகளின் பரப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் சட்டத்தின் எல்லைகளை விரிவுபடுத்தி திருத்தங்களை மேற்கொள்வதாக இத்திருத்தத்தின் முன்னுரையில் கூறுகிறது மோடி அரசு.

அதாவது கேழ்வரகில் நெய் வடிகிறதாம், நம்புபவர்கள் வழித்துக் கொள்ளலாமாம்!

மோடி அரசின் இந்தக் கூற்று எந்த அளவுக்கு மோசடியானது என்பதை, வனப் பாதுகாப்பு சட்டத்தில் அரசு மேற்கொண்டுள்ள திருத்தங்களே அம்பலப்படுத்துகின்றன. வனத்தைப் பாதுகாக்கப் புறப்பட்டுள்ள மோடி அரசு, வன அழிப்பையே நோக்கமாகக் கொண்டிருப்பதை சில குறிப்பிட்ட திருத்தங்களையும் அவற்றின் விளைவுகளையும் தொகுத்துப் பார்ப்பதன் மூலம் அறிய முடியும்.


படிக்க: காப்புக்காடுகளை ஒழித்துக் கட்ட எத்தனிக்கும் திமுக அரசு!


1980 அக்டோபர் 25 அல்லது அதற்குப் பிறகு வனம் – காடு என்று அரசாங்கப் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்ட நிலங்களுக்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும். இதன் மூலம் இன்னும் வனம் – காடு என அறிவிக்கப்பட வேண்டிய ஏராளமான நிலப்பகுதிகள் அனைத்தும் பிற பயன்பாடுகளுக்குக் கையகப்படுத்திக் கொள்ள முடியும். அங்கு வசிக்கும் மக்களை பழங்குடியினர் இல்லை என்று பட்டியலில் இருந்தும் நீக்கவும் முடியும்.

1996 டிசம்பர் 12-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக ஒரு நிலப்பகுதி (வனம்-காடு) வனம் சாராத நோக்கத்துடன் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தால், அது அப்படியே தொடரும். இதன் மூலம், ஏற்கெனவே காடுகளைக் குத்தகைக்கு எடுத்துள்ள நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள் தமது கொள்ளையைத் தொடர முடியும். அவை மீண்டும் காடு – வனம் என்ற வரம்புக்குள் வராமலேயே போய்விடும்.

1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாதுகாக்கப்பட்ட காடுகளுக்குள் (வனத்திற்குள்) உள்ள தோட்டங்கள் மற்றும் காடுகளாகப் பதிவு செய்யப்பட்ட நிலங்களில் உள்ள தோட்டங்கள் மட்டுமே இச்சட்டத்தின் விதிகளின்படி உள்ளடக்கப்படும்; மற்ற அனைத்து தோட்டங்களும் இனி காடுகளாக இருக்காது; அவற்றை வேறு எந்த நோக்கத்திற்காகவும் திருப்பிவிடப்படலாம்; அவை காடுகள் அல்லாத நடவடிக்கைகளுக்குத் திருப்பிவிடப்படலாம் அல்லது நிலத்தின் மீது உரிமையுள்ள எந்தவொரு நிறுவனத்தாலும் ஈடுசெய்யப்பட்ட காடு வளர்ப்பிற்காக (Compensatory afforestation) வழங்கப்படலாம். இதன் மூலம் வேறொரு இடத்தில் மரம் வளர்ப்பதாகக் கணக்கு காட்டி வனத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்.

அதாவது, இன்னும் பல இலட்சம் ஏக்கர் வனப்பகுதிகளை, காடுகளை வனம் என்ற வரையறைக்குள் கொண்டு வராத நிலையில், அவை ஏற்கெனவே இருக்கும் நிலையில் – அதாவது வனம் அல்லாத பகுதி என்ற வகையிலேயே – பயன்படுத்திக் கொள்ள சட்டப்பூர்வ அனுமதி கொடுத்திருக்கிறது மோடி அரசு.

மேலும், “தேசிய முக்கியத்துவம்”, “பாதுகாப்பு” என்ற பெயரில் எல்லைப் பகுதிகளில் 100 கி.மீ தூரத்துக்குள் உள்ள வனப் பகுதிகளுக்கு விதிவிலக்கு அளிப்பதன் மூலம் இமயத்தின் அடிவாரம் மற்றும் வடகிழக்கில் ஏராளமான வனப் பகுதிகளை இராணுவப் பயன்பாடு என்ற பெயரில் கைப்பற்றி, கார்ப்பரேட் சூறையாடலுக்கு திறந்துவிடும் சூழலை உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக வடகிழக்கில், உள்ளூர் மக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏராளமான வனப்பகுதிகள் இதில் அடங்கும். இத்தகைய கேடான நோக்கத்தை எதிர்த்துத்தான் மணிப்பூர் குக்கி பழங்குடிகள் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சட்டத் திருத்தம் மூலம் ஏற்படுத்தும் பாதிப்புகளை உணர்ந்து இமாச்சல் உள்ளிட்டு பல்வேறு எல்லைப்பகுதி மாநில அரசுகளும், மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகள் விரும்பும் சாகர்மாலா, பாரத்மாலா பரியோஜனா போன்ற கட்டுமானத் திட்டங்களையும், நிலக்கரி, தங்கம் உள்ளிட்ட ஏராளமான கனிமவளங்களை வெட்டியெடுக்கும் சுரங்க அகழ்வு போன்ற பேரழிவுத் திட்டங்களையும் “தேச முக்கியத்துவம்” வாய்ந்த திட்டங்கள் எனக் கூறி அமல்படுத்துவதே மோடி அரசின் நோக்கம்.


படிக்க: அமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் !


இத்தகைய மக்கள் விரோத கார்ப்பரேட் திட்டங்களை செயல்படுத்துவதற்கு காடுகளைச் சார்ந்து வாழும் பழங்குடி மக்கள் தடையாக இருப்பார்கள் என்று முன் அனுமானித்து, வன உரிமைச் சட்டம் 2006, பஞ்சாயத்து ராஜ் ஆகிய சட்டங்கள் பழங்குடி மக்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களை இச்சட்டத் திருத்தம் மூலம் பறித்துள்ளது மோடி அரசு.

வன உரிமைச் சட்டம், பஞ்சாயத்து ராஜ் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருக்கும்போதே, கடந்த மூன்றாண்டுகளில் சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநிலத்திலுள்ள பழங்குடி கிராமங்கள் மீது, நான்கு முறை ஆளில்லா ட்ரோன்கள் மூலம் குண்டுகளை வீசித் தாக்கியிருக்கிறது மோடி அரசு. இனி, இத்தகைய சட்டவிரோதத் தாக்குதலை சட்டப்பூர்வமாக நடத்த முடியும். அதாவது, சட்டத் திருத்தத்திற்கு முன் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி நிறைவேற்றிக் கொண்ட மோடி அரசு, தற்போது தனது பாசிச நடவடிக்கைகளை சட்டத்தின் பெயராலேயே முன்னெடுக்க முடியும்.

சட்டத்திருத்தங்கள்: கார்ப்பரேட் சேவகத்தின் தொடர்கதை!

இந்தியாவின் காடுகளுக்கு அடியில் புதைந்து கிடக்கும் நிலக்கரி, தங்கம் உள்ளிட்ட கனிமங்களையும் இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் ஆகியவற்றையும் கார்ப்பரேட் கும்பல்கள் கொள்ளையடிப்பதற்கு ஒன்றிய அரசு துணை நிற்பதும், பழங்குடி மக்களை விரட்டுவதும் 2004 – 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே நடந்தவைதான். அவற்றை இன்னும் தீவிரமாக்கும் நோக்கிலேயே மோடியை பிரதமராகக் கொண்டு வந்தனர் கார்ப்பரேட் முதலாளிகள். அவரது தீவிரக் கார்ப்பரேட் சேவையின் ஓர் அங்கமே இந்தச் சட்டத் திருத்தம்.

2014-இல் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர முயற்சி செய்து தோல்வியடைந்தது மோடி அரசு. ஆனாலும், விடாப்பிடியாக அதை இரண்டு முறை அவசரச் சட்டமாக நடைமுறைப்படுத்தியது. அதற்கு அனுமதியளித்தவர் காங்கிரசால் நியமிக்கப்பட்ட அன்றைய குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி.

அதன் பிறகு, காடுகளைக் களவாடிக் கொள்வதற்கும், பழங்குடிகளை விரட்டவும் மோடி அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. இதற்கேற்ப தொடர்ச்சியாக சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் வன விலங்கு (பாதுகாப்பு) திருத்த மசோதா 2022, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2023, வனப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா 2023 ஆகியவற்றை நிறைவேற்றியிருக்கிறது.

இவையனைத்துக்கும் பின்னால் பெரும் கனிம – சுரங்கக் கார்ப்பரேட்டுகளின் நலன்களே ஒளிந்திருக்கின்றன என்பதை அண்மை நிகழ்வுகள் பலவும் உறுதிசெய்து வருகின்றன. கடந்த பிப்ரவரியில், ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் அளவிலான லித்தியம் இருப்பும், அதன் பிறகு, இந்தியாவின் தேவையில் 80 சதவிகிதத்தை பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு லித்தியம் இருப்பை ராஜஸ்தானில் கண்டறிந்துள்ளதாகவும் மோடி அரசு அறிவித்தது.

இது மட்டுமின்றி, மத்திய நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சுரங்க அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட “இந்தியாவுக்கான அரியவகைத் தனிமங்கள்” குறித்த நாட்டின் முதல் அறிக்கையை கடந்த ஜூன் 28 அன்று வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், இந்தியாவில் 30 அரியவகைத் தனிமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, கடந்த சில ஆண்டுகளாக உலகின் எந்தெந்த நாடுகளில் அரியவகைத் தனிமங்கள் புதைந்திருக்கின்றன என்பதைக் கண்டறிய தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். எதிர்காலத்தில் இத்தனிமங்களின் அவசியத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் நன்கு உணர்ந்து இருப்பதே அதற்குக் காரணமாகும். பிப்ரவரி மாதத்தில் வெளியான அமெரிக்க அரசாங்க அறிக்கை ஒன்று “உலகம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை நாடிச் செல்லும் போது, அடுத்த பல பத்தாண்டுகளில் மின்சார வாகன மின்கலன்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் மற்றும் கிராஃபைட் தனிமங்களுக்கான தேவை, தற்போது தேவையான அளவை விட 4,000 சதவிகிதம் அதிகரிக்கும்” எனக் கூறுகிறது.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்காவிற்கு மோடி சென்றபோது, அந்நாட்டின் தலைமையில் ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற 12 நாடுகளைக் கொண்ட கனிமப் பாதுகாப்புக் கூட்டாண்மையில் (Minerals Security Partnership) இந்தியாவையும் இணைத்துள்ளார். அரியவகைத் தனிமங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் சீனாவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தவே இக்கூட்டாண்மை உருவாக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு தரவுகளின் படி, அரியவகைத் தனிமங்களின் உலகளாவிய உற்பத்தியில் 60 சதவிகிதத்தைக் கைப்பற்றி வைத்திருந்தது சீனா. அரியவகைத் தனிமங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கான சீன – அமெரிக்க ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான போட்டாபோட்டியின் வெளிப்பாடே, கனிமப் பாதுகாப்புக் கூட்டாண்மை. இக்கூட்டாண்மையில் இந்தியாவை இணைத்துள்ளதன் மூலம் அமெரிக்காவுக்கான தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் மோடி.

சுரங்கத்துறையிலும் அதானிமயம்!

இந்தியாவில் லித்தியம் கண்டறியப்பட்ட பிறகு, மின்சார வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமாகத் திகழும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் இந்தியா வந்ததும், மோடி அமெரிக்கா சென்றபோது மஸ்க்கை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது. “இந்தியாவின் எதிர்காலம் குறித்து நம்ப முடியாத உற்சாகத்துடன் இருப்பதாகவும்” “டெஸ்லா விரைவில் இந்தியாவிற்கு வரும்” என்றும் மஸ்க் கூறியிருப்பதன் பின்னணியில் லித்தியம்தான் இருக்கிறது.

அரியவகைத் தனிமங்களைச் சூறையாட அமெரிக்க கார்ப்பரேட் முதலாளியான எலான் மஸ்க்கிற்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதோடு மட்டும் மோடியின் சேவை முடிந்து விடவில்லை. அவரது நெருங்கிய நண்பரான அதானிக்கும் இதில் பங்கு வைக்க முயன்று வருகிறார்.

இந்தியாவில் சூரிய மின் தகடுகள் மூலம் ஏறக்குறைய ஆறு ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்குக் கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட ஒரே மிகப்பெரிய நிறுவனம் அதானி குழுமம்தான். சூரிய மின் தகடுகளை உற்பத்தி செய்வதற்கு ஆர்சனிக், காலியம், ஜெர்மானியம், இண்டியம், டெல்லூரியம் ஆகிய அரியவகைத் தனிமங்கள் இன்றியமையாதவை ஆகும்.

ஏற்கெனவே, இந்தியாவில் அதிகப்படியான நிலக்கரிச் சுரங்கங்களைக் கையகப்படுத்தியிருப்பது அதானி குழுமம்தான். மோடி அரசு தொடர்ச்சியாக பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் உள்ள நிலக்கரி சுரங்கங்களை முறைகேடாகவும் அடிமாட்டு விலைக்குத் தாரை வார்த்து வருவதும் அதானி நிறுவனத்திற்குதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அரியவகைத் தனிமங்களை வெட்டியெடுக்கும் ஒப்பந்தமும் அதானி நிறுவனத்திற்கு வழங்கவே மோடி அரசு விரும்பும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அண்மையில், லித்தியம் உள்ளிட்ட ஆறு அரியவகைத் தனிமங்களை வெட்டி எடுப்பதற்கான சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட, தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் வகையில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1957-ல் திருத்தங்களை மேற்கொள்ள ஒன்றிய அமைச்சரவை அவசரகதியில் ஒப்புதல் வழங்கியுள்ளதில் அதானியின் நலன் இல்லை என மறுக்க முடியாது. எனவே எலான் மஸ்க்கும், அதானியும் கூட்டுசேர்ந்து அரியவகைத் தனிமங்களைச் சூறையாடும் நிலை உருவாகலாம்.

2070 ஆம் ஆண்டுக்குள் “பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு”’ என்ற இலக்கை அடைய இந்தியா உறுதி கொண்டிருப்பதால், வனப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்படுவதாக மசோதாவின் முன்னுரையில் தெரிவித்துள்ளது மோடி அரசு. லித்தியம் உள்ளிட்ட அரியவகைத் தனிமங்களைச் சுரண்டியே பசுமை எரிசக்தியை உருவாக்க முடியும் என்றும், அத்தகைய வளர்ச்சிக்காக காடுகளை அழிப்பதில் தவறில்லை என்றும் கூட நாளைக்கு மோடி விளக்கமளிக்கலாம்.

மோடி அரசு மக்களுக்கு விரோதமானது; கார்ப்பரேட்டுகளுக்கே சேவை செய்கிறது; அதற்காக மக்கள் மீது பாசிச அடக்குமுறையை ஏவிவிடுகிறது என்று சொல்லும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இத்தகைய கார்ப்பரேட் ஆதரவு சட்டத் திருத்தங்களுக்கு மாற்றாக எதை முன்வைக்கப் போகிறார்கள்?  இதுவரை நடந்துள்ள சட்டத் திருத்தங்களை நீக்குவது பற்றி ஏன் வாய் திறக்கவில்லை? மோடி சொல்லும் வளர்ச்சி கார்ப்பரேட் மோசடி என்றால், எதிர்க்கட்சிகள் எத்தகைய வளர்ச்சிக்கான வாக்குறுதியைக் கொடுக்கப் போகிறார்கள்? 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாசிஸ்ட் மோடி வெல்லக்கூடாது என்பவர்கள் மீண்டும் 2014 ஆம் ஆண்டின் கார்ப்பரேட் சேவைக்குத் திரும்பிச் செல்வார்களா அல்லது மக்களுக்கான சேவையை முன்னெடுப்பார்களா? நிச்சயம் மக்களுக்குப் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.


அமீர்

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்