Sunday, June 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 228

உ.பி. பாலியல் வன்கொலை : ராம ராஜ்ஜியத்தின் முன்னோட்டம் || தோழர் அமிர்தா – மக்கள் அதிகாரம் !

த்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராசில் தலித் இளம்பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அம்மாநில அரசின் அனைத்து உறுப்புகளும் பாலியல் வன்கொலை செய்த தாக்கூர் சாதிக் கிரிமினல்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டது.

இந்தச் சம்பவத்தையும், இது போன்ற சம்பவங்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிகமாக நடப்பதற்கான காரணமாக இந்துத்துவ சிந்தனையில் ஊறிப் போயுள்ள பார்ப்பனிய ஆணாதிக்க வெறியையும் அம்பலப்படுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் அமிர்தா உரையாற்றுகிறார்.

பாருங்கள் ! பகிருங்கள் !

பு.ஜ.தொ.மு மாநில நிர்வாகக் குழு பதவி விலக்கம் !

பத்திரிகை செய்தி

தேதி: 06.10.2020

மது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (பு.ஜ.தொ.மு.) சங்கம், பிற தொழிற்சங்க அமைப்புக்களின் செயல்பாட்டில் இருந்து, மாறுபட்டு, புரட்சிகர அரசியலை, தொழிலாளி வர்க்கத்திற்கு கற்றுக் கொடுப்பது, அதன் மூலம், சமூக அரசியல் மாற்றத்திற்கு தொழிலாளி வர்க்கத்தை அணி திரட்டும் அரசியல் கடமையை நிறைவேற்றும் வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. தொழிற்சங்க ரீதியாக முதலாளி வர்க்கத்திடம் எவ்வித சமரசமின்றி, போராடி வருவதோடு, அரசியல் ரீதியில் தொழிலாளி வர்க்க எதிரிகளை அம்பலப்படுத்தி, பல்வேறு அரசியல் முன்னெடுப்புக்களையும் நடத்தி வருகிறது. தொழிலாளி வர்க்கம் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான எவ்வித நடவடிக்கைகளையும், அம்மக்கள் நலன் சார்ந்து நின்று போராடுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

இப்படிப்பட்ட சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த தோழர். சுப. தங்கராசு, பெல் சொசைட்டி மூலம் பெல் தொழிலாளர்களுக்கு வீடு கட்டித் தருவதற்காக, அனாதீன நிலத்தை வாங்குவதில், ஊழல், முறைகேடுகளில் ஈடுபட்டார் என்பது அவர் மீதான விசாரணையில் நிரூபிக்கப்பட்டு, அதற்காக அவரை பு.ஜ.தொ.மு. சங்கத்தின் அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் நிரந்தர நீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், புரட்சிகர இலட்சியத்தை நோக்கி இயங்கும் எந்த அமைப்பும் தமது அமைப்பில் நிலவும், சரி தவறுகள் பற்றிய பரிசீலணையை, கறாராகக் கையாண்டு சுப.தங்கராசு அவர்களை சொசைட்டி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அதை சோதித்திருக்க வேண்டும். அதை துவக்கத்திலேயே தடுத்திருக்க வேண்டும்.

மாநிலக் குழு அவ்வாறான பரிசீலணை நடவடிக்கைகளை முறையாக கையாளாததன் விளைவால் இந்த பெரும் தவறு நிகழ்ந்திருக்கிறது என்பதை மாநில நிர்வாகக் குழு ஏற்கிறது. அது தான் இன்று எமது தொழிற்சங்க அமைப்பின் மீதான களங்கத்திற்கும், அவநம்பிக்கைக்கும் காரணமாக அமைந்திருக்கிறது. சுப. தங்கராசு செய்தது சாதாரண தவறாகப் பார்க்க முடியாது. அது மன்னிக்க முடியாத குற்றமாகும். அப்படிப்பட்ட மன்னிக்க முடியாத குற்றத்திற்கு மாநில நிர்வாகக் குழுவே முக்கிய பொறுப்பு என எமது மாநில செயற்குழு கடும் விமர்சனமாகச் சுட்டிக் காட்டியதை மாநில நிர்வாகக் குழுவும் மனதார ஏற்கிறது.

இத்தவறை செய்த மாநில நிர்வாகக் குழு ஒட்டு மொத்தமாக தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். அதற்குத் தண்டனையாக, மாநில நிர்வாகக் குழு தோழர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு, தகுதி இறக்கம் செய்யப்பட வேண்டும் என்ற மாநில செயற்குழுவின் முடிவையும் ஏற்கிறது. அதன் படி, ஒட்டு மொத்த மாநில நிர்வாகக் குழு தோழர்களும் பதவி விலக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் தேர்வு, வருகின்ற 31.12.2020 – க்குள் மாவட்ட  / மாநில மாநாடுகளை நடத்தி தேர்வு செய்யப்படுவர். புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் வரை, தற்காலிக தலைமைக் குழுவாக செயல்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு

த.பழனிசாமி
தலைமைக்குழு சார்பாக
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
தமிழ்நாடு – புதுவை


தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
தமிழ்நாடு – புதுச்சேரி.
தொடர்புக்கு: 944444 2374

மக்கள் அதிகாரம் செயற்குழு கூட்டம் : உறுப்பினர் தகுதியிலிருந்து த. கணேசன், காளியப்பன் நீக்கம் !

 

நாள்: 06-10-2020

பத்திரிகை செய்தி

க்டோபர் 6, 2020 அன்று சென்னையில் மக்கள் அதிகாரத்தின் மாநில செயற்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் கூடி கீழ்கண்ட முடிவுகளை எடுத்துள்ளோம்.

அமைப்பு விரோத, சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் மாநிலப் பொருளாளர் காளியப்பன் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர் த.கணேசன், அனைத்து பொறுப்புகளில் இருந்தும், மக்கள் அதிகாரத்தின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் நீக்கப்படுகின்றனர். அவர்களுடன் மக்கள் அதிகாரத்தின் உறுப்பினர்கள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைமைக் குழுவில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வழக்கறிஞர் சி.ராஜு கருத்து வேறுபாடு காரணமாக, மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தும், தலைமைக் குழு மற்றும் செயற்குழுவில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார். தலைமைக் குழு உறுப்பினர் தோழர் சுரேசு சக்தி முருகன், வேறு பணிகள் காரணமாக தலைமைக் குழு மற்றும் செயற்குழுவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதே போன்று கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு, விழுப்புரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன், திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் ஆகியோர் அவர்கள் வகித்த மண்டல ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளில் இருந்தும், செயற்குழுவில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகின்றனர்.

தலைமைக் குழுவின் புதிய உறுப்பினர்களாக தோழர்கள் வெற்றிவேல் செழியன், மருது, குருசாமி, முத்துகுமார் மற்றும் சாந்தகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநில ஒருங்கிணைப்பாளராக தோழர் வெற்றிவேல் செழியன், மாநிலப் பொருளாளராக தோழர் குருசாமி, மாநில செய்தித் தொடர்பாளராக தோழர் மருது என தேர்வு செய்யப்பட்டனர். மக்கள் அதிகாரத்தின் அனைத்து உறுப்பினர்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ள தலைமைக் குழுவின் கீழ் வழக்கம் போல் இயங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தமிழகம் மற்றும் புதுவை மக்களும், அனைத்து சனநாயக சக்திகளும் மக்கள் அதிகாரத்தின் அரசியல்-அமைப்பு செயல்பாடுகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு வேண்டுகிறோம்.

தோழமையுடன்,
வெற்றிவேல் செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு-புதுவை

இன்றைய உத்தரப் பிரதேசம் தான் நாளைய ராம ராஜ்ஜியம் !

0

செப்டம்பர் 14-ம் நாள். அந்த தலித் குடும்பம் தீவனப் புல் அறுக்க வயலுக்குச் சென்றிருந்தது. சற்று நேரத்தில், அறுத்த சேகரித்த புல்லை வீட்டில் உள்ள கால்நடைகளுக்குப் போட எடுத்துச் சென்றுவிட்டார். தாய் ஒரு இடத்திலும் மகள் ஒரு இடத்திலும் புல் சேகரித்தார்கள். போதுமான புல்லை சேகரித்தப்பின், வீடு திரும்ப மகளை அழைத்தார் அந்தத் தாய். ஆனால், பதில் குரல் ஏதும் வரவில்லை. சுற்றிலும் தேடினார்; மகளைக் காணவில்லை. சுமார் நூறு மீட்டர் தொலைவில் புல் அறுக்கச் சென்ற மகள் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.

தனக்கு என்ன நேர்ந்தது என்பதைச் சொல்லக்கூட அந்தப் பெண்ணால் இயலவில்லை. ஏனெனில் அவருடைய நாக்கு அறுபட்டிருந்தது. அணிந்திருந்த துப்பட்டாவை அவருடைய கழுத்தில் கட்டி இழுத்து வரப்பட்டு அங்கே கிடத்தப்பட்டிருந்தார். அவருடைய கழுத்து கிட்டத்தட்ட உடைக்கப்பட்டிருந்தது. அவருடைய முதுகெலும்பு உடைக்கப்பட்டிருந்தது. தன் மகளின் நிலையைக் கண்டு நிலை குலைந்துபோன தாயின் காதில், சந்தீப் என்ற பெயர் மட்டும் முனகலாக ஒலித்தது.  அந்த கிராமத்தில் தாக்கூர் சாதி வெறி பிடித்த குடிகார கிரிமினலின் பெயர் அது.

தன் மகள் நான்கு தாக்கூர் சாதி வெறி கிரிமினல்களால் கொடூர வன்கொடுமைக்கு ஆளாக்கப்படிருப்பதை அறிந்துகொண்டார் அந்தத் தாய்.தன் மகளை காப்பாற்றுவதுதான் முதல் கடமை என மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது அந்த தலித் குடும்பம். கிட்டத்தட்ட 12 நாட்கள் கொடூர துயரத்துடன் போராடிய அந்தப் பெண், கடந்த செவ்வாய் (29-09-2020) அன்று உயிரிழந்தார்.

இந்தக் கொடூரம் நடந்தேறியது ராமனின் ராஜ்ஜியமாக பீற்றிக் கொள்ளப்படும் உத்தர பிரதேசத்தில். ராம ராஜ்ஜியம் என முறைப்படி அறிவிக்கப்படவில்லை என்றாலும், அப்படி சொல்ல முடியாது என்பதற்கு எந்த விசயமும் இல்லை என்பதால் ராம ராஜ்ஜியம் என்றே சொல்லலாம். ராம ராஜ்ஜியத்தில் நிகழ்ந்தது என்பதாலோ என்னவோ எந்தவொரு ‘இந்திய’ மைய ஊடகத்திலும் அந்தப் பெண் இறக்கும்வரை அது பேசுபொருளாகவில்லை.

படிக்க :
♦ தமிழகத்தை கலவரக் காடாக்கிய இந்து முன்னணி ராமகோபாலன் மரணம் !
♦ பிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா ?

பாலிவுட்டின் போதை புகை மண்டலத்தில் யாரெல்லாம் மயங்கிக் கிடந்தார்கள் என வாட்ஸ் அப் பில் புலனாய்ந்து கொண்டிருந்தன அந்த ஊடகங்கள். “இந்தியாவின் மகள்களாக” யாருமில்லா விமான நிலையத்தில் ஒய் பிளஸ் பாதுகாப்பில் கங்கணா போன்ற பெண்கள் ‘ஜான்சிராணி’களாக வலம் வந்துகொண்டிருக்கும் நேரத்தில், தலித் பெண்ணின் நாக்கை வெட்டி, முதுகெலும்பை உடைத்து, அவரை வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கயவர்கள் மீது புகார் பதியவும்கூட முடியவில்லை.

சாதியும் வர்க்கமும் பொறுக்கிகளை பாதுகாக்கும் என்பதே ராம ராஜ்ஜியத்தில் எழுதப்பட்டிருக்கும் விதி என்பதால், கண் துடைப்பாக வழக்குப் பதியவே அந்தக் குடும்பம் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

அந்தப் பெண் இறந்த பின்னர், ராம ராஜ்ஜியத்தின் தளபதியாக உள்ள ஆதித்யநாத்தின் போலீசு அதிகாரி, அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என்றார். அடிக்கும்போது வலி தாங்காமல் நாக்கைக் கடித்துக்கொண்டு தானே நாக்கை துண்டித்துக்கொண்டதாக இறந்த பெண்ணின் மீதே பழிபோட்டார். தாக்கூர் குடும்பத்துக்கும் தலித் குடும்பத்துக்கும் முன்பகை இருந்ததாகவும் அதனாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்கூட ஆதித்யநாத்தின் ஏவலாளிகள் சொன்னார்கள்.

ஏ.பி.வி.பி மாணவர் பங்கேற்புடன் எரிக்கப்படும் மனுஸ்மிருதி
மாணவர்களால் எரிக்கப்படும் மனுஸ்மிருதி

பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதால் நான்கு தாக்கூர் பொறுக்கிகளின் பெயர் தெரிந்தது, அதனால், வெறும் தாக்குதல் மட்டும் நடந்திருப்பதை போலீசு ஒப்புக்கொண்டிருக்கிறது. இல்லையெனில், புல் அறுக்கச் சென்ற பெண் தன்னைத்தானே அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார் என்றும்கூட சொல்லக்கூடும். ஏனெனில் ராம ராஜ்ஜியத்தில் அனைத்து குற்றங்களுக்கும் பெண்களே பொறுப்பு.

“பாரம்பரியம் ஒரு சிதைந்த மரத்தைப் போல பெண்களை உலர்த்துகிறது,
அங்கு அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவிட வேண்டும்,
அங்கு அவர்கள் வேறொருவரின் கரும் நிழலின் கீழ் வாழ வேண்டும்.
அத்தகைய நாட்டில் பெண்கள் இன்னும் அடிமைகளாகவே இருக்கிறார்கள்.
ஒரு பெண்ணாகப் பிறப்பது ஒரு குற்றம்,
ஒரு பெண்ணாகப் பிறப்பது ஒரு குற்றம்

 – ஹிரா பன்சோட் என்ற மராத்திய தலித் பெண் கவிஞரின் வரிகள் இவை. பாரம்பரிய என்ற இடத்தில் ராம ராஜ்ஜியம் என இட்டு நிரப்பிக்கொள்ளுங்கள்.  ராம ராஜ்ஜியத்தின் ஆதார பிரதிகள் அனைத்தும் பெண்களை, குறிப்பாக விளிம்பு நிலை பெண்களை உணர்வற்ற ஒரு பொருளாகவே பெண்களைக் கருதுகின்றன.

மனுஸ்மிருதி இப்படி சொல்கிறது: ‘ஒரு பெண், தனது வாழ்க்கையில் எந்த நிலையிலும், சுதந்திரமாக இருக்க தகுதியற்றவள் – அவள் திருமணம் செய்து கொள்ளும் வரை தந்தை அவளைக் காத்துக்கொள்ள வேண்டும், இளமையில் கணவன், மற்றும் வயதான வயதில் மகன். (பிரிவு I, வசனம் 9.3).

‘உயர்சாதி’ பெண், ‘தாழ்ந்த’ சாதி ஆணை மனதாலும் தீண்டக்கூடாது. ஆனால், ‘உயர்சாதி’ ஆண், ‘கீழ்சாதி’ பெண்களை வன்புணர்வு செய்துவிட்டு, நீரில் மூழ்கி எழுந்துவிட வேண்டும். ‘கீழ்சாதி’ பெண்ணை தொட்ட தீட்டு கழிந்துவிடுமாம். ராம ராஜ்ஜியத்தின் புனித நூல்கள் இப்படி விதி எழுதி வைத்திருக்கின்றன.

ஆயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இந்த விதியை பின்பற்றும் புதல்வர்கள் பெயரளவில் ‘ஜனநாயகம்’ என சொல்லிக்கொள்ளும் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். சாதியும் அது அளித்திருக்கும் மேலாதிக்கமும் அவர்களை கொடும் குற்றங்களிலிருந்து தப்ப வைத்துக்கொண்டிருக்கிறது.

படிக்க :
♦ “கற்பழிப்பா” ? பாலியல் வல்லுறவா ? || வி.இ.குகநாதன்
♦ ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !

2006-ம் ஆண்டு மராட்டிய மாநிலம் கயர்லாஞ்சியில் நிகழ்ந்த இழிபுகழ்பெற்ற கொடூரத்தில் ஆதிக்க சாதியினரின் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக நின்ற போட்மாங்கே குடும்பம் என்ன ஆனது? பையாலால் போட்மாங்கே மனைவி, மகள் இருவரும் ஊரார் முன் நிர்வாணமாக்கபட்டனர். இரண்டு மகனையும் அடித்தே கொன்றனர். 17 வயது மகளை சாதி வெறி கும்பல் வல்லுறவு கொண்டது. அந்தச் சிறுமி இறந்த பிறகும் அவரை வன்புணர்ந்தது அந்தக் கும்பல். மனைவி, மகள், மகன்கள் ஊரார் முன் அடித்துக்கொல்லப்பட்ட நிலையில், போட்மாங்கே மட்டும் உயிர்பிழைத்தார். நீதி கிடைத்ததா? மனுஸ்மிருதி நீதியாக உள்ள நாட்டில் தலித்துகள் மீதான கொடுமைகள் இயல்பானவை என நீதிமன்றத்துக்குத் தெரியும்.

1992-ம் ஆண்டு குழந்தை திருமணங்களை எதிர்த்து நின்ற பன்வாரி தேவி, ஆதிக்க சாதி வெறியர்களால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.   தலித் பெண்கள், பழங்குடி இன பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பெரும்பாலான குற்றங்களில் ஆதிக்கசாதிவெறி முதன்மையான கருவியாக உள்ளது. அதை புனிதப்படுத்துபவையாக ராம ராஜ்ஜியத்தின் மனுஸ்மிருதிகளும் புராணங்களும் உள்ளன.

இந்திய சமூகத்தின் அடிகட்டுமானம் மனுஸ்மிருதிகளின் மீது எழுப்பப்பட்டிருக்கும் நிலையில், புத்துணர்வுடன் அமைக்கப்பட்டிருக்கும் ராம ராஜ்ஜியத்தில் தினந்தோறும் ஆதிக்க சாதி ஆண்களின் கைகளால் விளிம்பு நிலை பெண்கள் உடைத்து எறியப்படுகிறார்கள். புல் அறுக்கச் சென்று ஆதிக்கசாதி பொறுக்கிகளால் உடைத்து எறியப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்தப் பெண், ஊரின் ஒதுக்குப்புறமாக புல் அடர்ந்த இடத்தில் குடும்பத்தினருக்கும்கூட தெரியாமல் அவசர அவசரமாக எரியூட்டப்படுகிறார்.  பெண்களிலும்கூட,  தான் நீதியைக் கூட பெற முடியாத சாதியைச் சேர்ந்த ஒரு பெண் என்பதை அவர் அறிந்திருக்கக்கூடும். ராமனின் ராஜ்ஜியத்தில் அநீதியே, நீதி.


அனிதா

நன்றி: த வயர்
, என்டீடிவி

கம்யூனிஸ்ட் கட்சியில் விசுவாசமும் கூட்டுத் தலைமையும் !

கட்சித் தலைமை பற்றிய பிரச்சினைகள்

– தோழர் ஸ்டாலின்

முந்தைய பாகம் : 1

பாகம் – 2

ஆ) விசுவாசமும் கூட்டுத் தலைமையும்

புகாரின் நமது கட்சியின் மத்தியக் குழுவின்பால் கொண்டுள்ள மனப்போக்கில் கட்சி உறுப்பினர்களில் மிகவும் “விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராகவும்” ”விசுவாசமாகவும்” இருப்பவர்களில் ஒருவராவார் என்று இங்கு ரைகோவ் நமக்கு உறுதியளித்துள்ளார்.

நான் அதைச் சந்தேகிக்க நினைக்கிறேன். ரைகோவின் சொற்களை நம்ப முடியாது. நமக்குப் பொருண்மைகள் தேவை. ரைகோவால் அந்தப் பொருண்மைகளை வழங்க முடியவில்லை.

எடுத்துக்காட்டாக, டிராட்ஸ்கியர்களுடன் தொடர்புடைய காமனேவ் குழுவுடன் திரைமறைவில் புகாரின் நடத்திய பேச்சுவார்த்தைகள்; ஓர் உட்கட்சிக் குழுக் கூட்டணியை நிறுவுவது குறித்த பேச்சுவார்த்தைகள்; மத்தியக் குழுவின் கொள்கையை மாற்றுவது குறித்த, அரசியல் தலைமைக் குழுவின் உள்ளடக்கத்தை மாற்றுவது குறித்த, தானியக் கொள்முதல் நெருக்கடியை மத்தியக் குழுவைத் தாக்குவதற்குப் பயன்படுத்திக்கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகள் போன்ற பொருண்மைகளை எடுத்துக்கொள்வோம். எழுகின்ற கேள்வி: தனது மத்தியக் குழுவின்பால் புகாரின் கொண்டுள்ள “விசுவாசமான” ”விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட” அணுகுமுறை எங்கே?

அதற்கு மாறாக, அத்தகைய நடத்தை அவரது மத்தியக்குழுவுக்கு, அவரது கட்சிக்கு, அரசியல் தலைமைக் குழுவின் ஓர் உறுப்பினர் என்ற வகையிலும், எந்த ஒரு விசுவாசத்தையும் மீறிய செயல் ஆகாதா? இது மத்தியக் குழுவுக்கு விசுவாசமாக இருப்பது என்று குறிப்பிடப்பட்டால், ஒருவர் மத்தியக் குழுவுக்குத் துரோகமிழைப்பதற்கு என்ன பெயர் வைப்பது?

படிக்க:
♦ கட்சியிலிருக்கும் வலதுசாரி ‘பிக்பாக்கெட்’டுகளிடம் எச்சரிக்கை தேவை !
♦ கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ !

புகாரின் விசுவாசத்தைப் பற்றியும் நேர்மையைப் பற்றியும் பேச விரும்புகிறார், ஆனால் அவர் அவரது மத்தியக் குழுவுக்கு எதிராக டிராட்ஸ்கியர்களுடன் இரகசியப் பேச்சுவார்த்தை நடத்துகிற போது, மேலும் அதன் மூலம் அவரது மத்தியக் குழுவுக்குத் துரோகமிழைக்கிறபோது, அவரது மத்தியக் குழுவுக்கான விசுவாசத்தின் அடிப்படைத் தேவைகளை மிகவும் நேர்மையற்ற விதத்தில் அவர் மீறிக் கொண்டிருக்கிறாரா இல்லையா என்பதை அவரது மனச்சாட்சியைக் கேட்டு, ஏன் ஆய்வு செய்து பார்க்க முயற்சி செய்யக்கூடாது?

கட்சியின் மத்தியக் குழுவில் கூட்டுத்தலைமை இல்லாமல் இருக்கிறது என்பது பற்றி புகாரின் இங்கு பேசினார். மேலும் மத்தியக் குழுவின் அரசியல் தலைமைக் குழுவின் பெரும்பான்மையால் கூட்டுத் தலைமையின் தேவைகள் மீறப்படுகின்றன என்று நம்மிடம் உறுதியாகக் கூறினார்.

உண்மையில், நமது முழு அமர்வுக் கூட்டம் அனைத்தையும் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. புகாரினின் இந்த வெட்கமற்ற பாசாங்குக் கூற்றைக்கூட அதனால் சகித்துக்கொள்ள முடியும். ஆனால் மத்தியக் குழுவின் பெரும்பான்மைக்கு எதிராக முழு அமர்வுக் கூட்டத்தில் இந்த மாதிரி துணிவுடன் பேசுவதற்கு ஒருவர் வெட்க உணர்வு அனைத்தையும் உதறித் தள்ளியிருக்க வேண்டும்.

உண்மையில், அரசின் தலைமைப் பொறுப்பை வைத்திருக்கிற மத்தியக் குழுவின் பெரும்பான்மை அதன் சக்திகள் அனைத்தையும் அதை முன்னேற்றிச் செல்வதற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறபோது, இந்தக் கடினமான பணியில் புகாரின் குழுவிடம் ஆதரவுக்கரம் அளிக்குமாறு வலியுறுத்திக்கொண்டிருக்கும்போது, அதேநேரத்தில் புகாரின் குழு மத்தியக் குழுவுக்கு ஆதரவுக் கரம் நீட்டாமல், அதற்கு மாறாக அதன் வழியில் இடையூறாக இருந்து கொண்டு, அதன் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறபோது, விலகுவதாக அச்சுறுத்திக்கொண்டு, நமது கட்சியின் மத்தியக் குழுவுக்கு எதிராக, கட்சியின் எதிரிகளுடன், டிராட்ஸ்கியர்களுடன், உடன்பாட்டுக்கு வருகிறபோது, நாம் கூட்டுத் தலைமையைப் பற்றி எப்படிப் பேசமுடியும்?

உண்மையில், புகாரின் கட்சிக்கு எதிராக டிராட்ஸ்கியர்களுடன் ஒரு கூட்டணியை அமைத்துக்கொண்டிருக்கிறார், அவரது மத்தியக் குழுவுக்குத் துரோகம் இழைத்துக்கொண்டிருக்கிறார், நமது கட்சியின் மத்தியக் குழு கூட்டுத் தலைமையை நடைமுறைப்படுத்துவதற்கு விரும்பவில்லை, விரும்ப மாட்டார் என்பதை பாசாங்குக்காரர்கள் தவிர வேறு யாரால் மறுக்க முடியும்?

புகாரின் மத்தியக் குழுவில் கூட்டுத் தலைமை பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோதிலும், மத்தியக் குழுவின் பெரும்பான்மை மீது அவர் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கிறார், அவரது வஞ்சக நடத்தையை மறைக்கும் நோக்கத்துடன் அவர் அவ்வாறு செய்துகொண்டிருக்கிறார் என்பதை குருடர்களைத் தவிர வேறு யாரால் காணாமல் இருக்க முடியும்?

நமது கட்சியின் மத்தியக் குழு தொடர்பாக விசுவாசம் மற்றும் கூட்டுத் தலைமையின் அடிப்படைத் தேவைகளைப் புகாரின் மீறுவது இது முதல் முறையல்ல என்பதைக் குறித்துக்கொள்ள வேண்டும். வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகளை நமது கட்சி அறிந்திருக்கிறது. லெனின் வாழ்நாளிலேயே, பிரெஸ்ட் சமாதானக் காலகட்டத்தில், சமாதானம் குறித்த பிரச்சினையில் சிறுபான்மையாக இருந்த புகாரின் நமது கட்சியின் எதிரிகளாக இருந்த இடதுசாரி சோசலிசப் புரட்சியாளர்களிடம் விரைந்து சென்று, அவர்களுடன் திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். மேலும் லெனினுக்கும் மத்தியக் குழுவுக்கும் எதிராக அவர்களுடன் ஒரு கூட்டணியை நிறுவுவதற்கு முயற்சி செய்தார். இடதுசாரி சோசலிசப் புரட்சியாளர்களுடன் அந்த நேரத்தில் அவர் என்ன வகையான உடன்பாட்டை எட்டுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார் என்பது, துரதிர்ஷ்டவசமாக நமக்கு இன்னும் தெரியவில்லை.

ஆனால் இடதுசாரி சோசலிசப் புரட்சியாளர்கள் அந்த நேரத்தில் லெனினை சிறைபிடிக்கவும், ஒரு சோவியத் எதிர்ப்பு ஆட்சிக் கவிழ்ப்புக்கும் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர் என்பதும் நமக்குத் தெரியவில்லை. ஆனால், இடதுசாரி சோசலிசப் புரட்சியாளர்களிடம் விரைந்து சென்று அவர்களுடன் சேர்ந்து மத்தியக் குழுவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருந்த அதேநேரத்தில் புகாரின் இப்போது அவர் செய்து கொண்டிருப்பதைப் போலவே கூட்டுத் தலைமையின் தேவை பற்றி உரத்துக் குரல் எழுப்புவதைத் தொடர்ந்து வந்தார் என்பதுதான் மிகவும் வியக்கத்தக்க விடயம் ஆகும்.

லெனின் வாழ்நாளிலேயே, நமது கட்சியின் மாஸ்கோ பிராந்தியக் குழுவில் பெரும்பான்மையையும், “இடதுசாரிக்” கம்யூனிஸ்டுக் குழுவின் ஆதரவையும் பெற்றிருந்தார். அவர் கட்சியின் மத்தியக் குழுவின் நம்பிக்கையின்மையைத் தெரிவிக்குமாறும், அதன் முடிவுகளுக்குக் கீழ்ப்படிய மறுக்குமாறும், நமது கட்சியைப் பிளவுபடுத்தும் கேள்விகளை எழுப்புமாறும் கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார் என்பது நமது கட்சியின் வரலாற்றில் நிகழ்ந்ததாகும். பிரெஸ்ட் சமாதானக் காலகட்டத்தின்போதுதான், பிரெஸ்ட்  சமாதானத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது அவசியம் என்று மத்தியக் குழு முடிவு செய்திருந்தது.

புகாரினின் விசுவாசம் மற்றும் கூட்டுத் தலைமையின் தன்மை இப்படித்தான் இருக்கிறது.

கூட்டுப் பணியின் தேவை பற்றி இங்கு ரைகோவ் பேசினார். அதேநேரத்தில் அவரும் அவரது நண்பர்களும் கூட்டுப் பணிக்கு ஆதரவாக இருந்ததாகவும், அதற்குமாறாக அரசியல் தலைமைக் குழுவின் பெரும்பான்மை அதற்கு எதிராக இருந்ததாகவும் கூறி, அரசியல் தலைமைக் குழுவின் பெரும்பான்மை மீது குற்றம் சாட்டினார். இருப்பினும் ரைகோவால் அவரது கூற்றுக்கு ஆதரவாக ஒரே ஓர் உண்மைச் செய்தியைக் கூட எடுத்துக்காட்ட இயலவில்லை.

படிக்க :
♦ பு. மா. இ. மு. அமைப்பிலிருந்து த. கணேசன் நீக்கம் | பத்திரிகை செய்தி
♦ சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் !

ரைகோவின் இந்தக் கட்டுக்கதையை அம்பலப்படுத்துவதற்காக, ஒரு சில பொருண்மைகளை நான் இங்கு எடுத்துக்கூறுகிறேன். அவை  ரைகோவ் கூட்டுப் பணியை எப்படி மேற்கொள்கிறார் என்பதை உங்களுக்குக் காட்டும்.

முதல் எடுத்துக்காட்டு. அமெரிக்காவுக்கு தங்கம் ஏற்றுமதி செய்தது பற்றிய கதையை நீங்கள் கேட்டிருப்பீர்கள். மக்கள் கமிசார்களின் பேரவை அல்லது மத்தியக் குழுவின் முடிவுப்படி, அல்லது மத்தியக் குழுவின் ஒப்புதலுடன், அல்லது அதற்குத் தெரிந்தவாறு அமெரிக்காவுக்குத் தங்கம் கப்பலில் ஏற்றப்பட்டிருக்கும் என்று உங்களில் பலர் நம்பலாம். ஆனால் அது உண்மையல்ல, தோழர்களே. இந்த விடயத்தில் மத்தியக் குழுவுக்கோ மக்கள் கமிசார்களின் பேரவைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை. மத்தியக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் தங்கம் ஏற்றுமதி செய்யக் கூடாது என்று ஒரு விதி இருந்தது. அப்படியானால் அந்த ஏற்றுமதிக்கு அனுமதியளித்தது யார்? அந்தத் தங்க ஏற்றுமதி ரைகோவின் உதவியாளர்களில் ஒருவரால், ரைகோவுக்குத் தெரிந்து, அவரது ஒப்புதலுடன் அனுமதி அளிக்கப்பட்டது என்று தெரிய வருகிறது.

இதுதான் கூட்டுப் பணியா?

இரண்டாவது எடுத்துக்காட்டு. இது அமெரிக்காவில் தனியார் வங்கிகளில் ஒன்றுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்புடையதாகும். அந்த வங்கியின் சொத்துகள் அக்டோபர் புரட்சிக்குப் பிறகு நாட்டுடமை ஆக்கப்பட்டது, அது இப்போது அதன் இழப்புகளுக்கு இழப்பீடு கோரிக்கொண்டிருக்கிறது. நமது அரசு வங்கியின் அதிகாரி ஒருவர் அந்த வங்கியுடன் இழப்பீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று மத்தியக் குழுவுக்குத் தெரிய வந்துள்ளது.

லெனின்

தனியார் கோரிக்கைக்குத் தீர்வு அளிப்பது மிகவும் முக்கியமான பிரச்சினை என்பதும், அது பிரிக்க முடியாதவாறு நமது அயலுறவுக் கொள்கையுடன் தொடர்புடையது என்பதும் உங்களுக்குத் தெரியும். இந்தப் பேச்சுவார்த்தைகள் மக்கள் கமிசார்களின் பேரவை அல்லது மத்தியக் குழுவின் ஒப்புதலுடன் நடத்தப்பட்டன என்று ஒருவர் நினைக்கலாம். இருப்பினும் அப்படி நிகழவில்லை, தோழர்களே. மத்தியக் குழுவுக்கும் மக்கள் கமிசார்களின் பேரவைக்கும் இந்த விடயத்தில் எந்தத் தொடர்பும் இல்லை. அதைத் தொடர்ந்து, இந்தப் பேச்சுவார்த்தைகளைப் பற்றித் தெரிந்து கொண்டு, மத்தியக் குழு அவற்றைத் தடுத்து நிறுத்த முடிவு செய்தது. ஆனால் எழுகின்ற கேள்வி: இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு அனுமதியளித்தது யார்? ரைகோவின் ஒப்புதலுடன் அதற்கு அனுமதியளித்திருந்தது தெரிய வருகிறது.

இதுதான் கூட்டுப் பணியா?

மூன்றாவது எடுத்துக்காட்டு. இது குலாக்குகளுக்கும் நடுத்தர விவசாயிகளுக்கும் வேளாண் இயந்திரங்கள் வழங்குவது தொடர்பானதாகும். ரசிய – சோவியத் சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசின் எகோசோவிற்கு, ரைகோவின் உதவியாளர்களில் ஒருவர் ர.சோ.சோ.கூ.கு. தொடர்பான விடயங்களுக்காகத் தலைமை தாங்கினார். அது நடுத்தர விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வழங்குவதைக் குறைக்கவும், விவசாய வர்க்கத்தின் உயர் அடுக்கினருக்கு அதாவது குலாக்குகளுக்கு இயந்திரங்கள் வழங்குவதை அதிகரிக்கவும் முடிவு செய்தது. ரசிய – சோவியத் சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசின் எகோசோவின் இந்தக் கட்சி விரோத, சோவியத் ஆட்சி விரோத முடிவின் பிரதி இங்கு தரப்படுகிறது:

கசாக் மற்றும் பஷ்கிர் சோவியத் சோசலிசக் குடியரசுகள் சைபீரியா மற்றும் கீழ் வால்கா ஆட்சிப்பகுதிகள், நடு வால்கா, யூரல்கள் பிராந்தியங்கள் ஆகியவற்றில், இந்தப் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பண்ணை இயந்திரங்கள் மட்டும் கருவிகளின் விகிதாச்சார விற்பனை விவசாய வர்க்கத்தினரின் உயர் அடுக்கினருக்கு 20 விழுக்காடு அதிகரிக்கப்பட வேண்டும், மேலும் நடுத்தர வர்க்கத்தினருக்கு 30 விழுக்காடு குறைக்கப்பட வேண்டும்.”

இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? கட்சியானது குலாக்குகளுக்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிற நேரத்தில், குலாக்குகளுக்கு எதிராக ஏழை மற்றும் நடுத்தர விவசாய மக்கள் திரளை அமைப்பாக்கிக் கொண்டிருக்கிற நேரத்தில், ர.சோ.சோ.கூ.கு வின் எகோசோ நடுத்தர விவசாயிகளுக்குப் பண்ணை இயந்திரங்கள் வழங்கும் அளவைக் குறைக்கவும், விவசாய வர்க்கத்தினரின் உயர் அடுக்கினருக்கு வழங்கும் அளவினை அதிகரிக்கவும் ஒரு முடிவை மேற்கொள்கிறது.

மேலும் இது ஒரு லெனினிய, கம்யூனிசக் கொள்கை என்று தெரிவிக்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, இந்த நிகழ்ச்சி பற்றி மத்தியக் குழு தெரிந்து கொண்ட போது, அது எகோசோவின் முடிவைச் செல்லாததாக அறிவித்தது. ஆனால் இந்த சோவியத் விரோத முடிவுக்கு அனுமதியளித்தது யார்? ரைகோவின் உதவியாளர்களில் ஒருவரால் ரைகோவுக்குத் தெரிந்து அவரது ஒப்புதலுடன் அதற்கு அனுமதியளிக்கப்பட்டது.

இதுதான் கூட்டுப் பணியா?

ரைகோவும் அவரது உதவியாளர்களும் எந்த அளவுக்கு கூட்டுப் பணியை நடைமுறைப் படுத்துகிறார்கள் என்பதற்கு இந்த எடுத்துக்காட்டுகள் போதுமானவை என்று நான் நம்புகிறேன்.

(தொடரும்)

நூல் : ஸ்டாலின் தொகுப்பு நூல் 12
கிடைக்குமிடம் :
அலைகள் வெளியீட்டகம்
5/1 ஏ, இரண்டாவது தெரு, நடேசன் நகர், இராமாபுரம்,
சென்னை – 600 089
தொடர்புக்கு : 98417 75112

கட்சித் தலைமை பற்றிய பிரச்சினைகள் || தோழர் ஸ்டாலின்

கட்சித் தலைமை பற்றிய பிரச்சினைகள்

– தோழர் ஸ்டாலின்

கட்சியின் பொது திசைவழியை மடைமாற்றி கட்சிக்குள்ளேயே கட்சிக்கு எதிரான குழு அமைத்து செயல்படும் வலது சந்தர்ப்பவாதத்தை தோழர் ஸ்டாலின் அம்பலப்படுத்துகிறார்.

கட்சியின் பொதுத் திசைவழிக்கு எதிரான போக்கை கம்யூனிஸ்ட் கட்சிக்குள் புகாரின் தலைமையிலான வலதுசாரிக் கும்பல் மறைமுகமாக கொண்டுவருகிறது. புகாரின் குழுவின் இத்தகையப் போக்கு குறித்து விவாதிப்பதற்கு மத்தியக் குழு மற்றும் மத்தியக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் முழு அமர்வு கூடுகிறது. அதில் தோழர் ஸ்டாலின், புகாரின் கும்பலின் வலதுசாரி போக்கை கீழ்கண்ட மூன்று தலைப்புகளில் அம்பலப்படுத்துகிறார். 

அ) புகாரின் குழுவின் குழுவாதம்
ஆ) விசுவாசமும் கூட்டுத் தலைமையும்
இ) வலது விலகலுக்கு எதிரான போராட்டம்

கட்சியின் நன்மைக்காக என்ற பெயரிலும், ஜனநாயகம் என்ற பெயரிலும் கமுக்கமாக கட்சிக்குள் கொண்டுவரப்படும் வலதுசாரிப் போக்கின் தன்மை குறித்து இதன் மூலம் புரிந்துகொள்ள முடியும்.

– வினவு

0o0o0

கோட்பாட்டு அரங்கிலும், கம்யூனிஸ்டு அகிலத்தின் கொள்கை அரங்கிலும், நமது கட்சியின் உட்கட்சிக் கொள்கை அரங்கிலும் நமது கருத்து வேறுபாடுகள் தொடர்பான முதன்மையான பிரச்சினைகள் அனைத்தையும் இவ்விதமாக நாம் மதிப்பீடு செய்துள்ளோம். இதுவரை சொல்லப்பட்டதிலிருந்து ஒரே திசைவழி இருப்பது பற்றிய ரைகோவின் அறிக்கை உண்மையான நிலைமைகளுக்குப் பொருந்திப் போகாது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதுவரை சொல்லப்பட்டதிலிருந்து உண்மையில் நமக்கு இரண்டு திசைவழிகள் இருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒரு வழி கட்சியின் பொது திசை வழி. அதாவது, நமது கட்சியின் புரட்சிகர லெனினிய வழியாகும். இன்னொரு வழி புகாரின் குழுவின் வழியாகும்.

படிக்க :
♦ கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ !
♦ தன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்

பகுதியளவுக்குப் புகாரின் குழுவின் அணிகளில் நம்பமுடியாத குழப்பமான கருத்துகள் இருப்பதாலும், பகுதியளவுக்கு இந்த இரண்டாவது வழி கட்சியில் சிறிதும் முக்கியத்துவமற்றதாக இருப்பதாலும் இந்த இரண்டாவது வழி இன்னும் முழுமையாகக் கெட்டிப்படவில்லை, அது தன்னை ஏதாவதொரு வழியில் மறைத்துக்கொள்ள முயற்சி செய்கிறது. இருந்தபோதிலும், நீங்கள் பார்த்தபடி, இந்த வழி நிலவுகிறது. மேலும் அது கட்சி வழியிலிருந்து தனித்த ஒரு வழியாக நிலவுகிறது. நமது கொள்கையின் அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் கட்சியின் பொதுவழிக்கு எதிரான ஒரு வழியாக நிலவுகிறது. இந்த இரண்டாவது வழி வலது விலகல் வழியாகும்.

இப்போது நாம் கட்சித் தலைமை குறித்த பிரச்சினைக்குச் செல்வோம்.

அ) புகாரின் குழுவின் குழுவாதம்

நமது கட்சிக்குள் எந்த எதிர்ப்பும் இல்லை என்றும், புகாரின் குழு ஓர் எதிர்ப்புக் குழு அல்ல என்றும் புகாரின் கூறினார். அது உண்மையல்ல, தோழர்களே. புகாரின் குழுவில் ஒரு புதிய எதிர்ப்பு அடங்கியுள்ளது என்பதை முழு அமர்வுக் கூட்டத்தில் நடந்த விவாதம் மிகவும் தெளிவாகக் காட்டியது. இந்தக் குழுவின் எதிர்ப்பு வேலையில் கட்சி வழியைத் திருத்தும் முயற்சிகள் இருக்கின்றன; அது கட்சி வழியைத் திருத்தி, கட்சி வழிக்குப் பதிலாக வேறொரு வழியைக் கொண்டு வருவதற்கான அடித்தளத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது, அது வலது விலகல் வழியைத் தவிர வேறு எந்த வழியாகவும் இருக்க முடியாது.

மூவர் குழு ஓர் உட்கட்சிக் குழுவாக அமையாது என்று கூறினார். அது உண்மையல்ல, தோழர்களே. புகாரின் குழுவுக்கு ஓர் உட்கட்சிக் குழுவுக்கான அனைத்துப் பண்புகளும் இருக்கின்றன. அதற்குக் கொள்கை இருக்கிறது, உட்கட்சிக் குழுவுக்கான இரகசியம் இருக்கிறது, விலகிச் செல்லும் கொள்கை இருக்கிறது, மத்தியக் குழுவுக்கு எதிராக அமைப்பாக்கப்பட்ட போராட்டம் இருக்கிறது. வேறு என்ன தேவை? புகாரின் குழுவின் உட்கட்சிக் குழுவியத்தைப் பற்றிய உண்மையை, அது தானாகத் தெரியும் நிலையில் ஏன் மறைக்க வேண்டும்? மத்தியக் குழு மற்றும் மத்தியக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் முழு அமர்வுக் கூட்டம் கூடியதற்கான காரணமே கருத்துவேறுபாடுகள் பற்றிய அனைத்து உண்மையையும் இங்கு சொல்வதற்குத்தான். புகாரின் குழு ஓர் உட்கட்சிக் குழு என்பதுதான் உண்மை. மேலும் அது வெறுமனே ஓர் உட்கட்சிக் குழு மட்டுமல்ல, மாறாக, நமது கட்சியில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு அனைத்து உட்கட்சிக் குழுக்களிலும் மிகுந்த வெறுப்புணர்வு கொண்டதும் அற்பமானதும் ஆகும் என்று  நான் கூறுவேன்.

அது இப்போது அதன் உட்கட்சிக் குழு குறிக்கோள்களுக்கு, அட்ஜாரியா இடையூறுகளைப் போன்ற ஒரு முக்கியத்துவமற்றதும் அற்பமானதுமான விவகாரத்தைப் பயன்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்ற உண்மையிலிருந்து அது சான்றாகத் தெரிகிறது. உண்மையில், அட்ஜாரியாவில் ”கலகம்” என்று அழைக்கப்பட்டதை கிரான்ஸ்டாட் கலகத்துடன் ஒப்பிடக் கூடிய அளவுக்கு இருக்குமா? அட்ஜாரியாவில் ”கலகம்” என்று அழைக்கப்பட்டதுடன் இதை ஒப்பிடுகையில் அது கடலில் ஒரு துளி கூட இல்லை என்று நான் நம்புகிறேன்.

கிரான்ஸ்டாட்டில் நிகழ்ந்த தீவிரமான கலகத்தை டிராட்ஸ்கியர்கள் அல்லது ஜினோவியேவியர்கள் மத்தியக் குழுவை, கட்சியை, எதிர்த்துப் போராடுவதற்குப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொண்ட நிகழ்வுகள் ஏதாவது இருந்தனவா? அத்தகைய நிகழ்வுகள் எவையும் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் தோழர்களே. அதற்கு மாறாக, அந்தத் தீவிரமான கலகத்தின்போது, நமது கட்சியில் இருந்த எதிர்ப்புக் குழுக்கள் அதை நசுக்குவதில் கட்சிக்கு உதவின. மேலும் அதைக் கட்சிக்கு எதிராகப் பயன்படுத்துவதற்குத் துணியவில்லை .

நல்லது, புகாரின் குழு இப்போது எப்படிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது? அது அட்ஜாரியாவில் நடந்த மிகமிகச் சிறிய “கலகத்தை” கட்சிக்கு எதிராகப் பயன்படுத்திக்கொள்வதற்கு மிகவும் அற்பமானதும் மிகவும் தாக்குதல்தன்மை கொண்டதுமான முறையில் முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு உங்களிடம் ஏற்கெனவே சான்று இருந்தது. இது உட்கட்சிக் குழு குருட்டுத்தனத்தின் மற்றும் உட்கட்சிச் சிதைவின் மோசமான அளவி இல்லையென்றால் வேறு என்ன?

முதலாளித்துவ நாடுகளுடன் பொது எல்லைகளைக் கொண்ட நமது எல்லைப் பகுதிகளில் எந்தத் தொல்லைகளும் ஏற்படக் கூடாது என்று நம்மிடம் கோரப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்ததாகும். நமது சமுதாயத்தின் அனைத்து வர்க்கங்களையும், ஏழைகளையும் பணக்காரர்களையும், தொழிலாளர்களையும் முதலாளிகளையும் திருப்திப்படுத்தக்கூடிய ஒரு கொள்கையை நடைமுறைப் படுத்துவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும் என்று நம்மிடம் கோரப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதும் தெளிவாகத் தெரிந்ததாகும். அதிருப்தியுற்ற சக்திகள் எவையும் இருக்கக் கூடாது என்று நம்மிடம் கோரப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதும் தெளிவாகும். புகாரின் குழுவில் உள்ள இந்தத் தோழர்களுக்குப் புத்தி கெட்டுப் போய்விட்டதா?

நமது நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் முதலாளித்துவ உலகிற்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்களாகிய நம்மிடம், நமது நாட்டில் அதிருப்தியுற்ற சக்திகள் எவையும் இருக்கக் கூடாது என்றும், நம்முடன் பகைமைகளில் நிகழும் எந்தத் தொல்லைகளும் இருக்கக் கூடாது என்றும் எவராவது கோர முடியுமா?

சர்வதேச மூலதனம் நமது எல்லைப் பகுதிகளில் அதிருப்தியுற்ற சக்திகளை சோவியத் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒருங்கிணைக்கும் அதன் முயற்சிகள் அனைத்தையும் பயன்படுத்தவில்லை எனில், வேறு என்ன நோக்கத்திற்காக முதலாளித்துவச் சுற்றி வளைப்பு அங்கு இருக்கிறது? மூளையற்ற தாராளவாதிகள் தவிர அத்தகைய சில நேரங்களில் மனிதர்களிடம் வகைமாதிரியான தாராளவாதக் குருட்டுத்தனத்தையும் குறுகியமனம் கொண்ட தன்மையையும் உருவாக்கிட முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லையா?

(தொடரும்)

நூல் : ஸ்டாலின் தொகுப்பு நூல் 12
கிடைக்குமிடம் :
அலைகள் வெளியீட்டகம்
5/1 ஏ, இரண்டாவது தெரு, நடேசன் நகர், இராமாபுரம்,
சென்னை – 600 089
தொடர்ப்புக்கு : 98417 75112

“ரேப்பிஸ்டு”களுக்காக போராடும் மனுவின் வாரிசுகள் || ஹத்ராஸ் பாலியல் வன்கொலை அவலம் !

0

த்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸைச் சேர்ந்த பட்டியலின பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனிக்காமல் உயிரிழந்தார். இந்த நிகழ்வு உ.பியை ஆளும் சாமியார் ஆதித்யநாத்துக்கு, இந்தியாவை ஆளும் மோடி உள்ளிட்ட சங் பரிவாரங்களைத் தவிர அனைவரையும் கொந்தளிக்கச் செய்துள்ளது. சாட்சியங்களை அழிக்கும் வகையில், அவசர அவசரமாக உயிரிழந்த பெண்ணின் உடலை ஆதித்யநாத் அரசு எரித்துவிட்டது. ராம ராஜ்ஜியத்தின் புனிதம் சிதைந்துவிடவில்லை என்பதைக் காட்டும் விதமாக, ஹத்ராஸ் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அந்த மாநில அரசு.

உ.பி. பாஜக அரசின் பொய் அறிக்கையை உண்மை என நிரூபிக்கும் வகையில், பாஜக செய்தி தொடர்பாளர் அமித் மால்வியா, பாதிக்கப்பட்ட வெட்டி – ஒட்டப்பட்ட வீடியோக்களை ஆதாரங்களாக பரப்பினார். இப்படி மூன்று வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

இந்த வீடியோக்களில் பாதிக்கப்பட்ட பெண் பேசியுள்ளதை எழுத்து வடிவில் தந்துள்ள த வயர் இணையதளம். பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிடுவதை சட்டம் தடைசெய்துள்ளதால், அதிகாரப்பூர்வ செயல்முறை மூலம் அவரது பெற்றோர் அல்லது உறவினர்களின் ஒப்புதல் இல்லாமல், அந்த வீடியோக்களை சட்டப்பூர்வமாக ஊடகங்களால் காட்ட முடியாது.  ஆனால் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்ற  ஆதித்யநாத் அரசாங்கத்தின்  அதிகாரப்பூர்வ கூற்று மற்றும்  உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் ‘நர்கோ பகுப்பாய்வு’க்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எவ்வளவு அய்யோகித்தனமானது என்பதை அந்த ஆதாரங்கள் காட்டுகின்றன.

படிக்க :
♦ ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !
♦ “கற்பழிப்பா” ? பாலியல் வல்லுறவா ? || வி.இ.குகநாதன்

இந்த வீடியோக்களை யார் படம்பிடித்தார்கள் அல்லது எங்கு, எப்போது உருவாக்கப்பட்டது என்பது தெரியவில்லை. குற்றம் நடந்த நாளில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதைப் பற்றி அந்தப் பெண் பேசவில்லை என்ற ‘கருத்தை ’ உருவாக்க  உலவ விடப்பட்டுள்ள மூன்று வீடியோக்களில் இரண்டு வீடியோக்களை பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ட்விட்டரில் வெளியிட்டிருந்தாலும்,  ஹத்ராஸ் பெண்ணின் வாக்குமூலமும் வீடியோ உரையாடலும் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்பதை உணர்த்துகின்றன . மூன்றாவது வீடியோ, பின்நாளில் மருத்துவமனை அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர் விவரிக்கும் குற்றத்தின் தன்மை குறித்தும் அதில் சந்தேகம் எழவில்லை.

செப்டம்பர் 22-ம் தேதி அந்த பெண், மாஜிஸ்திரேட் முன் மரண வாக்குமூலம் அளித்தார்.  அதில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், நான்கு ஆண்களை தாக்குதல் நடத்தியவர்கள் என அடையாளம் காட்டியதாகவும் கூறினார். உ.பி. காவல்துறை அந்த அறிக்கையை குறைத்துக் காட்ட முயலும்வகையில், அவர்  காவல்நிலையம் சென்ற செப்டம்பர் 14-ம் தேதி தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குறிப்பிடவில்லை என்கிறது. இரண்டு வீடியோ ஆதாரங்கள் – செப்டம்பர் 14 அன்று சந்த்பா காவல் நிலையம் மற்றும் ஹத்ராஸில் உள்ள ஒரு உள்ளூர் கிளினிக்கில் எடுக்கப்பட்ட வீடியோவில் உ.பி. போலீசின் கூற்று முற்றிலும் முரணானதாக காட்டுகிறது.

வீடியோக்கள் திடீரெனத் தொடங்கி முடிவடைகின்றன என்பதும் இவை அந்தப் பெண் சொன்னவற்றின் ஒரு பகுதி, முழுமையான பதிவுகள் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் வீடியோக்கள் தன்னிச்சையாக சுருக்கப்பட்டிருந்தாலும் அல்லது திருத்தப்பட்டிருந்தாலும் கூட,  பாலியல் பலாத்காரத்தைப் பற்றி பேசியது மற்றும் தாக்குதல் நடத்தியவர்களில் சிலரின் பெயர்களை காவல் நிலையத்திலும் மருத்துவமனையிலும் அந்தப் பெண் சொன்னதை தெளிவாக உறுதிப்படுத்துகின்றன.  பாலியல் வன்முறை வழக்கில் செய்யப்பட்ட கட்டாய தடயவியல் பரிசோதனை கிடைக்கவில்லை. செப்டம்பர் 22 வரை இது நடத்தப்பட்டது –  அதாவது குற்றம் நடந்த எட்டு நாட்களுக்குப் பிறகு – அந்த நேரத்தில் ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியங்கள் பூஜ்ஜியமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. விந்தணு ஆதாரங்களை பாலியல் வன்முறைக்கு பிறகான ஒன்றிரண்டு நாட்களில் மட்டுமே பெற முடியும். மேலும், பாலியல் வன்முறை வழக்குகளில் விந்தணு ஆதாரம் கட்டாயமும் இல்லை.

பாஜகவின் அமித் மால்வியா வெளியிட்ட வெட்டி ஒட்டப்பட்ட முதல் வீடியோவில் அந்தப் பெண்ணிடம் யார் உன்னுடைய கழுத்தை நெறித்தார்கள் எனக் கேட்கப்படுகிறது. அவர், வலியுடன் துடித்துக்கொண்டே, ‘அவன் என்னை கட்டாயப்படுத்தினான், அவனை தடுத்தேன்’ என்கிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹத்ராஸ் இளம்பெண்

‘அவன் ஏன் உன் கழுத்தை நெறித்தான்?’
இந்த முறை சற்று தெளிவான குரலில், ‘அவன் என்மீது அழுத்திய போது, நான் தடுத்ததால்’
‘எதை வைத்து கழுத்தை நெறித்தான்?’
‘அவன் கைகளால்.’
‘வேறு எங்கெல்லாம் அடிபட்டிருக்கிறது? எனக் கேட்கிறது ஆண் குரல்
‘கழுத்து, தொண்டை…’ என சொல்லும்போது அவருடைய வலியை வீடியோ உணர்த்துகிறது.

அப்போது நாக்கை காட்டு என தாய் சொல்கிறார், பெண் நாக்கை நீட்டுகிறார்.

இரண்டாவது வீடியோவில், பாதிக்கப்பட்ட பெண் ‘சந்தீப் இதைச் செய்தான்’ என சொல்கிறார். ஏன் இதைச் செய்தான் எனக் கேட்கும்போது, நாங்கள் புல் சேகரிக்கப்போயிருந்தோம்…அப்போது அவன் என்னை அங்கு கொண்டு சென்றான். அவன் என்னிடம் கட்டாயப்படுத்தினான். நான் மறுத்தேன். என் கழுத்தை நெறித்தான்’ என்கிறார். ஏற்கனவே உங்களுக்கிடையே பிரச்சினை இருந்ததா என்ற கேள்விக்கு ஆம் என பதில் சொல்கிறார் அந்தப் பெண்.

மூன்றாவது வீடியோ அலிகர், ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எடுக்கப்பட்டது. அந்தப் பெண் கழுத்து பட்டை ஒன்றை அணிந்திருப்பது, வெண்டிலேடர் போன்ற ஒன்றை முகத்தில் அணிந்திருப்பதும் தெரிகிறது. எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது தெரியவில்லை.

பாதிக்கப்பட்டபெண் ‘மேலும் ஒரு முறை’ என்கிறார். ஆண் குரல், ‘அவர்கள் மேலும் ஒரு முறை உன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்களா?’ எனக் கேட்கிறது.

‘ஆமாம்… அந்த சகோதரர்கள்’ என்கிறார். அதோடு அந்த வீடியோ முடிகிறது.

நியூஸ் லாண்ட்ரி இணையதளத்துக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் அளித்த பேட்டியில், தன் மகள் உடலில் உடையின்றி ரத்த வெள்ளத்தில் கிடந்தது குறித்தும், அவருடைய பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வடிந்துகொண்டிருந்தது குறித்து கூறுகிறார்.

பாஜக அரசு எவ்வளவுதான் மூடி மறைக்கப்பார்த்தாலும் இது அப்பட்டமான பாலியல் வன்கொடுமை என்பது உறுதியாகியுள்ள நிலையில், கொஞ்சம்கூட குற்றவுணர்வு இல்லாமல் பாஜக தலைமையில் சங் பரிவார கும்பல், ஆதிக்கசாதி வெறிகும்பலுக்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கிறது. காஷ்மீர் ஆசிபா ரேப்பிஸ்டுகளுக்காக போராட்டம் நடத்திய இழிபுகழ் பாரம்பரியத்தில் வந்தவர்கள் என நிரூபிக்கும் வகையில் உலகமே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக நிற்கும்போது, ‘குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு’ நீதிகேட்டு முன்னாள் பாஜக எம்.எல்.ஏ தலைமையில் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.

படிக்க :
♦ மாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி !
♦ தொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் !

பாதிக்கப்பட்ட குடும்பத்தை யாரும் அணுகிவிடக்கூடாது என்பதற்காக ஹத்ராஸில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதெல்லாம் மற்றவர்களுக்குத்தான், சங் பரிவாரங்களுக்கு இல்லை. உள்ளூர் பாஜக தலைவரும் முன்னாள் ஹத்ராஸ் எம்.எல்.ஏவுமான ராஜ்வீர் பல்வான் ஏற்பாடு செய்திருந்த இந்தப் ‘போராட்டத்தில்’ பஜ்ரங்தளம், ஆர்.எஸ்.எஸ், கர்ணி சேனா, சில சாதி அமைப்புகள் பங்கேற்றன. கைதான ஆதிக்கசாதி கும்பலின் குடும்பத்தினர் உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்டோர் பாஜக பிரமுகர் வீட்டின் முன் கூடி ‘நீதி’ கேட்டு ‘போராடி’யுள்ளனர்.

அப்போது அவர் பேசியது, ஆதித்யநாத் பரிந்துரைத்துள்ள சிபிஐ விசாரணை முடிவு எப்படி இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. “உண்மை விசாரணையில் வெளிவரும். ஹத்ராஸில் இத்தகைய கொடூரமான வன்கொடுமை நடந்ததாக பொய்யாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணையில் இந்த சம்பவம் குறித்த உண்மை வெளிப்படும். அதே நேரத்தில், பாதிக்கப்பட்டவரின் குடும்பம் போதைப்பொருள் பகுப்பாய்வு அல்லது பொய்-கண்டறிதல் சோதனையை எடுக்க மறுப்பது குறித்தும் அவர் ‘கவலை’ தெரிவித்தார்.

‘ரேப்’ஐ கொண்டாடும் மனுவின் புதல்வர்கள் அல்லவா? ரேப்பிஸ்டுகளுக்காகத்தான் போராடுவார்கள்.  என் மகள் கொடூரமாக வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறாள் எனக் கூறினார், அவர்களை போதைப்பொருள் பரிசோதனை செய்யச்சொல்வார்கள். ‘புல் அறுக்கும்போது தடுக்கி விழுந்து, பெண்ணின் முதுகெலும்பு உடைந்தது, நாக்கு தானாகவே வெட்டிக்கொண்டது’ என ராம ராஜ்ஜியத்தின் சிபிஐ அறிக்கை வெளியாகும்.

கலைமதி

நன்றி : த வயர், நியூஸ் லாண்ட்ரி

“கற்பழிப்பா” ? பாலியல் வல்லுறவா ? || வி.இ.குகநாதன்

ன்று  திரும்பிய பக்கம் எங்கும் பாலியல் வன்புணர்வுச் செய்திகளே இந்திய ஊடகங்களில் நிறைந்திருக்கின்றன. Rape என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லாக `கற்பழிப்பு` எனும் சொல் பல ஊடகங்களால் பயன்படுத்தபடும் போக்கு இன்றும்  காணப்படுகின்றது.

உண்மையில் Rape  என்பதன் பொருள் `சட்டத்திற்குப் புறம்பான புணர்வு` {unlawful sexual intercourse   }   என்பதேயாகும்.  எனவே கற்பழிப்பு என்ற சொல் இங்கு பொருந்தாதது மட்டுமல்ல, அது பாதிக்கப்பட்டவரையே மீண்டும் ஒரு முறை பாதிப்பது போலுள்ளது  . எடுத்துக்காட்டாக:  பாலியல் வல்லுறவுக்குள்ளான ஒரு பெண்ணை “கற்பழிக்கப்பட்டவள்” எனவும்,  குற்றம் புரிந்த ஆணை அழைக்கும் போது “கற்பழித்தவன்” எனவும் அழைக்கின்றோம் எனக் கொண்டால்;  இங்கு இரு சொல்லாடல்களும் குறிப்பது பெண்ணின் கற்பு(?) அழிந்தது பற்றியதேயாகும்.  மேலும் பின்வரும் இரு செய்திகளைப் பாருங்கள்.

  1. `மூன்று வயதுச் சிறுமி கற்பழிக்கப்பட்டுக் கொலை`
  2. `பசு மாட்டைக் கற்பழித்த கயவன் கைது`
    {அடையாளங்களை மறைப்பதற்காக செய்தித் தலைப்புகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன}

இங்கு முதலாவது செய்தியில் உலகினையே சரிவரப் புரிந்து கொள்ள முடியாத குழந்தைக்கு இத் தலைப்புப் பொருந்துமா! இரண்டாவது செய்தியில் பசு மாட்டுக்குக் கூட கற்பு வந்துவிட்டது. இங்கு மட்டுமல்ல, எந்தவொரு பாலியல் வல்லுறவினைக் குறிக்கவும் `கற்பழிப்பு` என்ற சொல் பொருந்தாது.

இதனை விளங்கிக் கொள்வதற்கு,  கற்பு என்ற தமிழ்ச் சொல்லின் பொருளினை விளங்கிக் கொள்ள வேண்டும்.

படிக்க :
♦ தெய்வம் தொழாஅள் : பெண்ணடிமைத்தனமா ? பார்ப்பனிய எதிர்ப்புக் குரலா ? – வி.இ. குகநாதன்
♦ திருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்

 கற்பு என்றால் என்ன?

கற்பு என்பது உடல் சார்ந்ததா அல்லது உள்ளம் சார்ந்ததா என்ற வாதம் பல காலமாக இருந்து வருகின்றது.  கற்பு என்ற சொல் தொல்காப்பியத்திலேயே இடம் பெற்றுள்ளது.

“கற்பெனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன், கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”
: (தொல்காப்பியம் கற்பியல் 140)

கற்பெனப்படுவது உடலியல் புணர்ச்சிக்காக ஆணையும் பெண்ணையும் பெரியோர் ஒருவருக்கொருவர் கொடுப்பதாகக் கொள்ளலாம்.  தொல்காப்பியத்தின் மிகப் பழைய உரையாசிரியராகிய  இளம்பூரணர் தன்னுடைய விளக்கத்தில், “கற்பு என்பது – மகளிர்க்கு மாந்தர் மாட்டு நிகழும் மன நிகழ்ச்சி. அதுவும் மனத்தான் உணரக் கிடந்தது.” என்று கூறுகின்றார்.

எனவே தொல்காப்பியத்தின் படியே கற்பு என்பது மனதோடு தொடர்புடையதேயன்றி, உடலுடன் தொடர்புடையதல்ல எனத் தெளிவாகின்றது.  இதே சொல்லுக்கு அடுத்து  பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் உரை எழுதிய  நச்சினார்கினியர் “கற்பாவது : தன் கணவனைத் தெய்வமென்று உணர்வதொரு மேற்கோள்.” என்று பொருள் எழுதுகிறார். பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரான இந்த உரை விளக்கத்திலும், கற்பு உடலுடன் தொடர்பு படவில்லை.  கற்பு என்ற சொல்லுக்குத் தொல்காப்பியம் கொடுக்கும் விளக்கத்தினை முழுமையாக அறிய, `களவு` என்ற சொல்லுக்குத் தொல்காப்பியம் என்ன விளக்கம் கொடுக்கின்றது எனப் பார்க்க வேண்டும்.

“காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும்
பாங்கொடு தழாஅலுந் போழியிற் புணர்வுமென்று
ஆங்கநால் வகையினும் அடைந்த சார்வொடு
மறையென மொழிதன் மறையோர் ஆறே”
: (செய்யுளியல், 178)

மேலுள்ள பாடலில் இயற்கையான புணர்ச்சியாக களவொழுக்கமே கூறப்படுகின்றது. எனவே இத்தகைய குடும்ப அமைப்புக்குப் புறம்பான ஒரு ஒழுக்கத்திலிருந்து, குடும்ப முறைக்கு மாறும் ஒரு செயல்முறையின் போதே `கற்பு` என்ற சொல் முதன் முதலில் தோன்றுகின்றது.

வேர்ச்சொல் விளக்கம் :-

கற்பு என்ற சொல்லுக்கான வேர்ச்சொல் `கல்` (படி =learn) என்ற தொழிற் பெயரேயாகும் .  இன்னொரு வகையில், கற்பு என்ற சொல்லினை `கற்றதைப் பின்பற்று` என்றும் சொல்லலாம். அதாவது பெரியோர்கள் கற்பித்தபடி குடும்பம் நடத்தக் கற்றுக்கொள்வதே கற்பு எனலாம்.  பின்வரும் கம்ப ராமாயணப் பாடலினைப் பாருங்கள்.

‘பெறுவதன்முன், உயிர் பிரிதல் காண்டியால்
மறுவறு கற்பினில் வையம் யாவையும்
அறுவதி னாயிரம் ஆண்டும், ஆண்டவன்
இறுவது கண்டு, அவற்கு இரங்கல் வேண்டுமோ?”
: {கம்பரா. கிளைகண். 72}.

இங்கு `மறுவறு கற்பினில்` என்பதன் பொருள் `குற்றமற்ற கல்வி கேள்விகளால்` என்றே பொருள் கொள்ளப்படுகிறது.  எனவே கற்பு என்பது குடும்ப வாழ்க்கை முறையினைக் கற்றுக் கொள்ளும் ஒரு ஒழுக்கமே என்பது தெளிவாகின்றது.

குடும்பம் என்ற அமைப்பு முறை மனிதனின் வளர்ச்சிப் பாதையில் ஒரு மைல்கல் என்பது எவ்வளவு உண்மையோ, அதேயளவு உண்மை யாதெனில் இந்த அமைப்பு முறை பெண்களின் சமத்துவத்தினைப் பாதித்தது என்பதுமாகும். எனவேதான் பிற்காலத்தில் கற்பு பற்றிய அறிவுரைகள் யாவுமே பெருமளவுக்குப் பெண்களை நோக்கியே இருந்தது. அதே வேளை பெண்களுக்குக் குழந்தைகளைப் பேணுவதில் குடும்ப முறை ஓரளவுக்கு உதவியாகவுமிருந்தது, ஏனெனில் குடும்ப அமைப்புத் தோன்ற முன்னர் குழந்தைகளைப் பேணும் பொறுப்பு முற்று முழுதாகப் பெண்களையே சார்ந்து இருந்தது (பொருள் சார்ந்த பொறுப்பும் பெண்களையே சார்ந்து இருந்தது). இந்த நிலையில் குடும்ப அமைப்பு முறையினை ஏற்படுத்துவதில் பெண்களின் விருப்பம் ஒப்பீட்டு ரீதியில் ஆண்களைக் காட்டிலும்  அதிகமாகவிருந்தது {இதனைப் பல சங்க காலப் பாடல்களில் காணலாம்}. இதனாலேயே பின்வரும் குறள் உட்படப் பல குறள்களில் பெண்களுக்கே `கற்பு`  வலியுறுத்தப்படுகின்றது.

“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்”
-(குறள் 54)

இந்த குடும்ப அமைப்பு முறையே பிற்பட்ட இடைக் காலத்தில் வைதீக மதக் கொள்கைகளுடன் இணைந்து பெண்களின் கல்வி, பொருளியல் உரிமைகளைப் பறித்து வீட்டிற்குள் முடக்கியது.

படிக்க :
♦ ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !
♦ தமிழகத்தை கலவரக் காடாக்கிய இந்து முன்னணி ராமகோபாலன் மரணம் !

கற்பு என்பதற்கு இடைக்கால ஔவையார் கொன்றை வேந்தனில் சிறப்பான விளக்கத்தினை வழங்கியிருந்தார் {இந்த ஔவை சங்ககாலப் புலவரான ஔவையிலிருந்து வேறுபட்டவர்}.

“கற்பெனப்படுவது சொல் திறம்பாமை”
{கற்பு எனப்படுவது யாதெனில் முன் பின் முரண்படாது வாக்கு மாறாது நடந்து கொள்ளுதலாகும்}

இதற்கு அடுத்த வரியான   ” காவல் தானே பாவையர்க்கு அழகு`”என்ற வரி கூட, கொடுத்த `சொற்களைக் காவல் காப்பது பெண்களுக்கு  அழகு` என்ற பொருளிலேயே இடம்  பெறுகின்றது.

எனவேதான் பழந்தமிழ் நூல்கள் எதுவுமே கற்பு என்பதனையும் கன்னித்தன்மை இழத்தல் என்பதனையும் எங்குமே தொடர்புபடுத்தவில்லை என அடித்துக் கூறலாம்.  மிகவும் பிற்பட்ட காலத்திலேயே இவ்வாறு கற்பினைப் பெண்களின் உடலுடன் தொடர்புபடுத்தி, ஆணாதிக்க சமூகம் புரளி கிளப்பிவிட்டது.  இதனை முறியடிக்கவே பாரதியார் பின்வரும் பாடலினைப் பாடியிருப்பார்.

“கற்பு நிலை என்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்”
(பெண்கள் விடுதலைக்கும்மி, செய்யுள் : 5)

முடிவுரை :-

கற்பு என்ற சொல்லானது மனதுடன் தொடர்புடையதேயன்றி, உடலுடன் தொடர்புடையதன்று. எனவே கற்பழிப்பு என்றால் குறித்த ஆளினால் தனக்குத் தானே மேற்கொள்ள முடியுமே தவிரப் பிறரால் அது முடியாது ; ஏனெனில் கற்பு மனதிலேயே உண்டு.  எனவே பிறரால் மேற்கொள்ளப்படும் வன்புணர்வினை;  பாலியல் வல்லுறவு / வன்புணர்வு / பாலியல் வன்முறை போன்ற சொற்களால் அழைக்க வேண்டுமே தவிர, `கற்பழிப்பு` என்ற சொல்லால் அன்று. இது மொழி சார்ந்த வேண்டுகோள் மட்டுமன்றி, சமூக அறம் சார்ந்த வேண்டுகோளுமாகும்.

வி.இ.குகநாதன்

disclaimer

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியிலிருந்து சுப. தங்கராசு நீக்கம் !

பத்திரிகைச் செய்தி

தேதி: 02.10.2020

மிழகம் மற்றும் புதுவையில் தொழிலாளர்களின் அரசியல் விடுதலைக்காக செயல்படும் எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் (பு.ஜ.தொ.மு.) தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளராக இருந்த தோழர். சுப. தங்கராசு, அவர் பணிபுரிந்த பெல் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வாங்கித் தருவதற்காக அமைக்கப்பட்ட சொசைட்டியின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வந்தார்.

அந்த சொசைட்டிக்குத் தேவையான வீட்டுமனைகளுக்காக நிலம் வாங்குவதில், சொசைட்டி பணத்தை கையாடல் செய்துவிட்டதாக சொசைட்டி உறுப்பினர்களான பெல் தொழிலாளர்கள் மூலம் கடந்த 2019 அக்டோபரில் புகார் வந்ததை அடுத்து, புகாரின் உண்மை நிலை கண்டறிய 2019 நவம்பரில் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு மூலம் விசாரணை நடத்தப்பட்டு, அந்தப் புகார் உண்மை என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த விசாரணை முடிவின் அடிப்படையில் அவருக்கு குற்றப்பத்திரிக்கை கொடுத்து, அதற்கான அவரது விளக்கங்கள் 2020 ஜனவரி மாதம் பெறப்பட்டது. அவர் மீதான நடவடிக்கை பற்றி விவாதிக்கப்பட இருந்த நிலையில், நிலமோசடி தொடர்பான கட்டுரை 29.07.2020 தேதியிட்ட நக்கீரன் இதழில் வெளிவந்தது.

அதே நாளில் பு.ஜ.தொ.மு. மாநில நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் சுப. தங்கராசு அவர்களை பு.ஜ.தொ.மு. சங்கத்தின் சிறப்பு உறுப்பினர் தகுதியில் இருந்தும், பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் இடைநீக்கம் செய்வது என முடிவெடுக்கப்பட்டது. அந்த முடிவை அன்றைய தினமே மாநில செயற்குழு உறுப்பினர்கள் மட்டம் வரை தெரிவிக்கப்பட்டுபதோடு, கடந்த 07.08.2020 அன்று பத்திரிக்கை செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

எமது சங்கத்தின் அமைப்பு விதிகளின்படி, இப்பிரச்சினையில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மாநில செயற்குழுவிற்கே உள்ளது என்பதால், தோழர் சுப. தங்கராசு மீதான புகார் தொடர்பாக மாநில செயற்குழுக் கூட்டம் கடந்த 27.09.2020 நடத்தப்பட்டது. மாநில செயற்குழு முடிவின் படி, தோழர். சுப. தங்கராசு அவர்கள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சிறப்பு உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும், பு.ஜ.தொ.மு. சங்கத்திலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார். இனி, பு.ஜ.தொ.மு. அமைப்பிற்கும், சுப. தங்கராசு அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

படிக்க :
♦ கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடப்பட்ட வங்கிகள் | தோழர் விஜயகுமார் உரை
♦ கார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் ! பு.ஜ.தொ.மு அரங்கக்கூட்டம்

எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொழிற்சங்கம், மற்ற கட்சி சார்பான சங்கங்கள், தனிநபர் சங்கங்கள், பிற அமைப்பு சார்ந்த சங்கங்களுக்கு மத்தியில், புரட்சிகர அரசியலைப் பிரச்சாரம் செய்து வந்ததுடன், புதிய ஜனநாயகப் புரட்சிக்கு மக்களைத் திரட்டும் அரசியல் சங்கமாகவும், தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலமாகவும் தனித்த அடையாளத்துடன் செயல்பட்டு வரும் சங்கம் என்பதை, அதில் பயணிக்கும் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, அச்சங்கம் செயல்படும் பகுதி மக்களுக்கும், புரட்சிகர அரசியலையும், மாற்று அரசியல் கருத்துக்களையும் உற்று நோக்கும் பலருக்கும் தெரியும்.

குறிப்பாக, மார்க்சிய – லெனினிய – மாவோ சிந்தனைகளை ஏற்றுக் கொண்டு மக்களுக்காக அர்ப்பணிப்பு, தியாகத்துடனும் தொழிலாளர் வர்க்க விடுதலையை முன்னெடுக்கும் புரட்சிகர தொழிற்சங்க அமைப்பின் தலைமைப் பொறுப்பில், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்ட வேண்டிய தோழர், கூலி விவசாயிகளுக்குச் சேர வேண்டிய அனாதீன நிலத்தை பட்டாவாக மாற்ற முயற்சித்தது, இதற்காக லஞ்ச – ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டது கடும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

தொழிற்சங்கம் என்பது தொழிலாளர்களுக்கு புரட்சிகர அரசியலைக் கற்றுத் தருவதற்கான பயிற்சிப் பட்டறை என்ற கூற்றை எமது செயல்திட்டமாகக் கொண்டு செயல்பட்டு வரும் புரட்சிகர சங்கத்தில், முதலாளிகள், நிர்வாக அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றவர்களின் குற்றங்களை மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் விரோதமானது என்று, எதிரி வர்க்க முறையில் பரிசீலிப்பது போல, சொந்த அமைப்பிலும், எந்தப் பொறுப்பில் இருந்தாலும் அவர்களின் தவறுகளுக்கு எதிரான போராட்டத்தில் எவ்வித சமரசமும் இன்றி செயல்படுவோம் என்று உறுதி ஏற்கிறோம். எல்லாக் காலத்திலும், மக்கள் பக்கம் நின்று தவறுகளை எதிர்த்து முன்னேறுவோம் என்பதை உறுதியுடன் கூறிக் கொள்கிறோம்.

இப்படிக்கு,

(த. பழனிச்சாமி) தலைமைக்குழு,
பு.ஜ.தொ .மு., தமிழ்நாடு – புதுச்சேரி.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
தமிழ்நாடு – புதுச்சேரி.
தொடர்புக்கு: 944444 2374.

ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !

1

த்தரப் பிரதேச மாநிலம், ஹதராஸ் மாவட்டத்தில், கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தலித் இளம்பெண் சிகிச்சை பலனின்றி கடந்த 29-ம் தேதியன்று மருத்துவமனையில் உயிரிழந்தார். கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வரும் முன்னரே, அவரது உடலை பெற்றோர்களின் அனுமதியின்றி நள்ளிரவில் அவசர அவசரமாக எரித்துள்ளது யோகியின் போலீசுத்துறை. அதன் மூலம் மறு பிரேத பரிசோதனை செய்வதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்துவிட்டது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹதராஸ் மாவட்டத்தில், கடந்த செப்டெம்பர் 14-ம் தேதி தலித் சமூகத்தைச் சேர்ந்த பத்தொன்பது வயது இளம்பெண்ணும் அவரது தாயும் கால்நடைகளுக்குப் புல் வெட்டச் சென்றுள்ளனர். அந்த இளம்பெண்ணின் தாயார் புல் வெட்ட சிறிது தூரத்துக்கு அப்பால் சென்றிருந்த சமயத்தில் அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த தாக்கூர் சாதிக் கிரிமினல்களான சந்தீப், ரவி, ராமு மற்றும் லவ்குஷ் ஆகிய நான்குபேரும் அந்த இளம்பெண்ணை இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

படிக்க:
♦ தமிழகத்தை கலவரக் காடாக்கிய இந்து முன்னணி ராமகோபாலன் மரணம் !
♦  ‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு !

அதன் பின்னர், அந்தப் பெண்ணின் கை கால்களை உடைத்து, நாக்கை அறுத்துள்ளனர். அந்தப் பெண்ணின் முதுகெலும்பு உடைக்கப்பட்டிருந்தது. அவர்கள் அப்பெண்ணை கழுத்தை நெறித்துக் கொல்ல முயன்றிருக்கின்றனர். பின்னர் தனது மகளைத் தேடி வந்த தாயார், ரத்த வெள்ளத்தில் தனது மகளைப் பார்த்ததும் பதறியடித்து அருகிலுள்ள அலிகார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அந்த பெண்ணை பரிசோதித்த அலிகர் மருத்துவமனை மருத்துவர்களின் அறிக்கை, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாலும், அதனை உறுதி செய்ய மாதிரிகளை தடயவியல் ஆய்வகத்துக்கு மாதிரிகளை அனுப்பியிருப்பதாகவும் தெரிவிக்கிறது.  உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்பெண்ணை டெல்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இளம்பெண் பாலியல் பலாத்காரம் நடந்தது குறித்தும், கடுமையாக தாக்கப்பட்டது குறித்தும் போலீசு நிலையத்தில் புகாரளித்தும் யோகியின் கிரிமினல் போலீசு, முதல் நான்கு நாட்களாக கிரிமினல்கள் யாரையும் கைது செய்யவில்லை.

ஹதராஸ் : நள்ளிரவில் எரியூட்டும் போலீசு

ஹதராஸ் இளம்பெண் இறந்ததைத் தொடர்ந்து குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்காத போலீசைக் கண்டித்து அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார், சமாதானம் செய்து அவர்களை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். அப்பெண்ணின் உடலை அவரது குடும்பத்தினர் யாரும் பார்க்க முடியாத வகையில் அவர்களை தடுத்துவிட்டு, நள்ளிரவில் அவசர அவசரமாக அவரது உடலை தகனம் செய்திருக்கிறது போலீசு.

உடல் எரியூட்டப்பட்ட மறுநாள் வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பாலியல் வல்லுறவு நடக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்போது புரிகிறதா – போலீசு அவசர அவசரமாக அந்த இளம்பெண்ணின் உடலை தகனம் செய்ததன் பின்னணி !

இக்கொடூர சம்பவம் நடைபெற்ற கிராமத்தில் மொத்தமுள்ள 600 குடும்பங்களில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தாக்கூர் சாதியைச் சேந்தவர்கள். அடுத்ததாக சுமார் 100 குடும்பங்கள் பார்ப்பனர்கள். மீதமுள்ளவர்களில் வெறும் 15 குடும்பத்தினர் தான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

குற்றவாளிகளில் முக்கியமானவனான சந்தீப் என்பவன் கடந்த ஆறு ஏழு மாதங்களாகவே, தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக போலீசிடம் அளித்த தனது வாக்குமூலத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் தெரிவித்திருக்கிறார். ஆதிக்க சாதியான தாக்கூர் சாதியைச் சேர்ந்த சந்தீப்பின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சாதிய வன்மத்தின் அடிப்படையில் தாக்கியது குறித்த வழக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னரே பதியப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.

ஆதிக்க சாதிக் கிரிமினல்கள் தங்களது சாதியத் திமிரையும் வன்மத்தையும் வெளிப்படுத்தும் ஒரு ஆயுதமாகவே பாலியல் வன்முறையைப் பயன்படுத்துகின்றனர். ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் தன்னை மீறிச் செல்கையில், அவர்களை முடக்குவதற்கு இவர்கள் பயன்படுத்தும் இரு முக்கிய ஆயுதங்கள், ஒன்று அவர்களது வாழ்வாதாரத்தைச் சூறையாடுவது. மற்றொன்று அவர்களை சமூகரீதியில் ‘தலைகுனிய’ வைக்கச் செய்வது. இந்த இரண்டாவது வழிமுறையில் அவர்கள் தலித் சமூகப் பெண்களின் மீதான பாலியல் வன்முறையை ஒரு முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர்.

படிக்க :
♦ நந்தினியை குதறிய இந்து முன்னணி மணிகண்டன் – நேரடி ரிப்போர்ட்
♦ ‘உயர்’ சாதிக்காரரின் பைக்கை தொட்ட தலித் மீது கொலைவெறித் தாக்குதல் !

தேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பில் மிகவும் மோசமான நிலையில் இருப்பது உத்தரப்பிரதேசம் தான். கடந்த 2018-ம் ஆண்டு இந்தியாவில் நிகழ்ந்த, பதிவு செய்யப்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மொத்தம் 3,78,277. அதில் உத்திரப் பிரதேசத்தில் நடந்தது மட்டும் சுமார் 59,445 குற்றங்கள்.

இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தபடிதான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. கடந்த 2016-ம் ஆண்டு 3,22,929-ஆக பதிவாகியிருந்த பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், 2018-ம் ஆண்டில் 3,78,277-ஆக உயர்ந்துள்ளது. இதுதான் மோடியின் “பேட்டி பச்சாவ்”-ன் இலட்சணம்.

ஆங்காங்கே நடக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு மோடி என்ன செய்வார், யோகி என்ன செய்வார், அரசு என்ன செய்ய முடியும் என்ற அங்கலாய்ப்புகள் பலவிதமாக ஒலிக்கின்றன. வக்கிரமான சாதிய பாலியல் கொலைவெறித் தாக்குதல்களை மனதாரக் கண்டித்தாலும், அதற்கு அரசு என்னதான் செய்யமுடியும் என்ற கேள்வியை எழுப்பிவிட்டு பலரும் கண்டும் காணாமல் போய்விடுகின்றனர். பலரும் இது தனிநபர் சார்ந்த பிரச்சினையாகவே சுருக்கிப் பார்க்கின்றனர்.

இது ஒருபுறமென்றால், ஆதிக்க சாதி, பார்ப்பன சாதியைச் சேர்ந்த உயர்தட்டுப் பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளுக்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தில் நூறில் ஒரு பங்கு கூட தலித் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களுக்குக் கொடுப்பதில்லை. பாலியல் வன்முறைகளுக்கு எதிரான மக்களின் எழுச்சிக்கு ஊடகங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

கருத்துப்படம் : சந்தீப் அத்வர்யூ., டைம்ஸ் ஆஃப் இந்தியா

‘நிர்பயா’ எனும் மருத்துவ மாணவி கொடூரமாகச் சிதைக்கப்பட்ட போது நாடு முழுவதும் பெருவாரியானவர்கள் கொந்தளித்தனர். அதற்குச் சற்றும் குறைவில்லாத அளவுக்குக் கொடூரமாக ஒரு தலித் பெண் சிதைக்கப்பட்டு உயிரிழந்திருக்கையில் அது சமூகத்தில் வெகு குறைவான அளவிற்கே தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் ஊடகங்களுக்கு ஒரு பங்கு இருந்தாலும், பெருவாரியான மக்களிடம் இருக்கும் இந்தச் சிந்தனைப் போக்கின் அடிப்படை என்ன ?

இந்தியாவில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு பார்ப்பனிய ஆணாதிக்கச் சமூகமாக நீடித்திருக்கும் இந்திய நிலைமையும், சினிமா, தொலைக்காட்சி ஊடகங்கள் என அனைத்திலும் பெண்களை நுகர்வுப் பண்டங்களாகக் காட்டுகின்ற சீரழிவு நுகர்வுக் கலாச்சாரமும் முக்கியக் காரணங்களாக அமைகின்றன. தலித் மக்கள் மீதான தமது சாதிய வன்மத்தை வெளிப்படுத்தும் ஆயுதமாக பாலியல் வன்முறை பயன்படுத்தப்படுகிறது.

மத்தியில் ஆளும் மோடி கும்பலும், உ.பி-யில் ஆளும் யோகி கும்பலும், ஒரே இந்துத்துவக் குட்டையில் ஊறிய மட்டைகள் தான். சங்கபரிவாரக் கும்பல் நாடு முழுவதும் பார்ப்பனியத்தைப் பாதுகாப்பதன் மூலம், சமூகத்தில் ஊறிக் கிடக்கும் பார்ப்பனிய ஆணாதிக்கத்தை அனைத்து வகைகளிலும் ஊக்கமூட்டி வளர்க்கிறது. பெண்களை பண்டமாகப் பார்க்கும் நுகர்வுக் கலாச்சாரமும் ஊட்டமளிக்கப்படுகிறது.

இவற்றின் விளைவுதான் இந்தியாவில் இந்துத்துவ சனாதனம் அழுத்தமாக பின்பற்றப்படும் அனைத்து இடங்களிலும், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரிக்கின்றன. இதையே தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் அறிக்கை நமக்கு பிரதிபலிக்கிறது !

பார்ப்பன ஆணாதிக்க சமூகம், தனது சாதிய ஒடுக்குமுறைக்கான ஒரு ஆயுதமாக பாலியல் வன்முறையைப் பயன்படுத்துவதன் வெளிப்பாடுதான் தலித் இளம்பெண்கள் உள்ளக்கப்படும் இத்தகைய பாலியல் வன்கொலைகள் !


சரண்

செய்தி ஆதாரம் :
இந்தியன் எக்ஸ்பிரஸ், தி வயர்

(திருத்தம் : போலீசு குற்றவாளிகளைக் கைது செய்யாமல் இழுத்தடித்த நாட்களின் எண்ணிக்கை அக்டோபர் 2 – 22:00 மணியளவில் திருத்தப்பட்டது. தவறுக்கு வருந்துகிறோம்)

கட்சியிலிருக்கும் வலதுசாரி ‘பிக்பாக்கெட்’டுகளிடம் எச்சரிக்கை தேவை !

0

எட்டாவது மத்தியக் குழுவின் பதினொன்றாவது பிளீனக் கூட்டத்தின் நிறைவு விழாவில் ஆற்றிய உரை(ஆகஸ்டு 12, 1966)

முந்தைய பகுதிக்கு

பாகம் – 2

4. மாபெரும் பாட்டாளிவர்க்க கலாச்சாரப் புரட்சியில் மக்களுக்கு உள்ள ஒரே வழி தம்மைத் தாமே விடுதலை செய்து கொள்வதுதான்; இதைத் தவிர வேறு ஏதாவது சொந்த வழிகளைக் கண்டுபிடித்து இயங்கலாம் என்ற அணுகுமுறை கூடவே கூடாது.

மக்களை நம்புங்கள், அவர்களைச் சார்ந்திருங்கள், அவர்களது முயற்சிகளுக்கு மதிப்புக் கொடுங்கள். அச்சத்தை தூக்கி எறியுங்கள். குழப்பம் கண்டு அஞ்சாதீர்கள். தலைவர் மாவோ அடிக்கடி கூறுவார், “புரட்சி என்பது ரொம்பவும் பக்குவப்பட்டதாகவோ, அன்புடனோ, கருணையுடனோ, கட்டுப்படுத்தப்பட்டதாகவோ, பெருந்தன்மையுடையதாகவோ இருக்க முடியாது”. இந்த மகத்தான புரட்சிகர இயக்கத்தில் மக்கள் தமக்குத்தாமே கற்பித்துக் கொள்வார்களாக, சரியானது எது, தவறானது எது என்பதைப் பிரித்துப் பார்க்கக் கற்றுக்கொள்வார்களாக, சரியான வழியில் செயல்படுவதற்கும் தவறான வழியில் செயல்படுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்வார்களாக.

விசயங்களை விவாதிக்க கொட்டை எழுத்து சுவரொட்டிகளையும் மகத்தான விவாதங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், இவ்வழியில்தான் மக்கள் சரியான பார்வையைப் புரிந்துகொள்ள முடியும், தவறான பார்வைகளை விமர்சனம் செய்ய முடியும், பேய்களையும், பூதங்களையும் அம்பலப்படுத்த முடியும். இந்த வழியில்தான் போராட்டத்தின் போக்கில் மக்கள் தமது அரசியல் உணர்வை மேலும் உயர்த்திக் கொள்ள முடியும், தமது தகுதி திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும், சரி எது தவறு எது என்பதைப் புரிந்து கொள்ளவும் நமக்கும் எதிரிக்கும் இடையேயான கோட்டை வரையறுக்கவும் முடியும்.

5. நமது எதிரிகள் யார்? நமது நண்பர்கள் யார்? புரட்சிக்கு முதலும் முக்கியமும் ஆன கேள்வி இது. மாபெரும் கலாச்சாரப் புரட்சிக்கும் இதுவே முதலும் முக்கியமும் ஆன கேள்வி ஆகும்.

இடதுசாரிகளைக் கண்டுபிடிப்பதிலும் அவர்களை வளர்த்து வலுப்படுத்துவதிலும் கட்சித் தலைமை திறம்பட செயல்பட வேண்டும், புரட்சிகர இடதுசாரிகளை உறுதியுடன் சார்ந்திருக்க வேண்டும். கலாச்சாரப் புரட்சி இயக்கத்தின்போது மிக மோசமான பிற்போக்கு வலதுசாரிகளை முற்றிலுமாகத் தனிமைப்படுத்தவும், நடுநிலையாளர்களை வென்றெடுக்கவும், ஆகப் பெரும்பான்மையினரோடு ஒன்றுபட்டிருக்கவும் இதுவே ஒரே வழி,  இந்த வழியில் செல்வதன் மூலமே இந்த இயக்கத்தின் முடிவில் மக்கள் திரளின் 95 விழுக்காட்டினருக்கும் அதிகமானோரை நாம் ஒன்றுபடுத்த முடியும்.

கையளவே இருக்கின்ற அதிதீவிர பிற்போக்கு முதலாளித்துவ வலதுசாரிகளையும் எதிர்ப்புரட்சி தீவிரவாதிகளையும் தாக்கும் பொருட்டு அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டுங்கள், கட்சிக்கும் சோசலிசத்துக்கும் மாசேதுங் சிந்தனைகளுக்கும் எதிரான அவர்களது குற்றங்கள் அனைத்தையும் முற்றிலுமாக அம்பலப்படுத்தி விமர்சனம் செய்து இயன்ற வரையில் அவர்களைத் தனிமைப்படுத்துங்கள். இன்றைய இயக்கத்தின் முக்கிய இலக்கே கட்சிக்குள் இருந்து கொண்டு அதிகாரத்தையும் கைப்பற்றி முதலாளித்துவப் பாதையைக் கையிலெடுத்த சக்திகள்தான்.

கட்சி விரோத, சோசலிச விரோத வலதுசாரிகளுக்கும், கட்சியையும் சோசலிசத்தையும் ஆதரிக்கின்ற ஆனால் சில தவறான செயல்களைச் செய்தவர்கள் அல்லது தவறான விசயங்களைப் பேசியவர்கள், தவறான கட்டுரைகளை எழுதியவர்களுக்கும் இடையேயான வேறுபாட்டைப் பிரித்தறிவதில் மிகுந்த கவனம் தேவை. பிற்போக்கு முதலாளித்துவ அறிவுஜீவி சர்வாதிகாரிகளுக்கும் வெறும் முதலாளித்துவ சிந்தனைகளை மட்டுமே கொண்டிருக்கின்ற சாமானிய மக்களுக்கும் இடையேயான வேறுபாட்டைப் பிரித்தறிவதில் மிகுந்த கவனம் தேவை.

படிக்க :
♦ நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும் ! திரிபுவாதம் வீழ்த்தப்படட்டும் !
♦ சோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ

6. இரண்டு வெவ்வேறான முரண்பாடுகளுக்கிடையேயான சரியான வேறுபாட்டைப் பிரித்தறிவதில் கவனம் தேவை: மக்களுக்கிடையே நிலவும் முரண்பாடு, நமக்கும் எதிரிக்கும் இடையே நிலவும் முரண்பாடு. மக்களுக்கிடையே நிலவும் முரண்பாட்டை நமக்கும் எதிரிக்கும் இடையே ஆன முரண்பாடாக மாற்றி விடக்கூடாது; அதுபோலவே நமக்கும் எதிரிக்கும் இடையே நிலவும் முரண்பாட்டை மக்களுக்கிடையே நிலவும் முரண்பாடாகவும் அடையாளம் கண்டுவிடக் கூடாது. மக்களுக்கிடையே பல்வேறுவிதமான கருத்துகள் நிலவுவது சாதாரணமான ஒன்றே. வெவ்வேறு கருத்துகளுக்கிடையேயான மோதல்கள் தவிர்க்க முடியாதவை மட்டுமின்றி தேவையும்கூட, அதனால் நன்மைதான்.

வழக்கமான முழு அளவிலான விவாதங்களின் விளைவாக நல்லது எது, சரியானது எது, தவறானது எது என்பதைப் புரிந்து கொள்வார்கள், காலப்போக்கில் ஒருமித்த முடிவுக்கு வருவார்கள். விவாதங்களை எவ்வாறு செய்ய வேண்டும்? இருக்கின்ற சூழ்நிலையைப் புரிந்து கொள்வது, நிலைமைக்கான காரணங்களை விளக்குவது, சரியான தீர்வுகளை முன்வைத்து நியாயப்படுத்துவது, கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ளவர்கள் சிறுபான்மையாக இருந்தாலும் அவர்கள் மீது கருத்துகளைத் திணிக்கின்ற எந்த முயற்சியையும் அனுமதிக்க முடியாது. சிறுபான்மையோரைப் பாதுகாக்க வேண்டும், ஏனெனில் சில நேரங்களில் சிறுபான்மையோர் கூறுவதிலும் உண்மை இருக்கின்றது. சிறுபான்மையோர் தவறான கருத்துகளை உடையவர்கள் என்றாலும்கூட அவர்களுக்குத் தமது கருத்துகளைப் பதிவு செய்யவும் விவாதிக்கவும் உரிமை உள்ளது.

ஒரு விவாதம் நடக்கின்றதெனில் அது சரியான காரணங்கள் சான்றுகளுடன் நடக்க வேண்டும், பலவந்தமாகவோ கூட்டுச்சதியாலோ நடக்கக் கூடாது.

விவாதங்களின்போது ஒரு புரட்சியாளன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? சரியான முறையில் சிந்தித்து அதை வெளிப்படுத்த வேண்டும், சிந்திப்பதில் துணிவு, பேசுவதில் துணிவு, செயலாற்றுவதில் துணிவு என்ற கம்யூனிஸ்ட் உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். புரட்சியாளர்களின் மையமான சிந்தனை எப்போதுமே ஒன்றுபோலத்தான் இருக்கின்றது என்பதால் அவர்கள் மையப்பொருளிலிருந்து விலகி இதரப் பிரச்சினைகளை முடிவின்றி விவாதிப்பதைத் தவிர்க்க வேண்டும், ஒற்றுமையைக் கட்டுவதே முக்கியம் என்பதால் இந்த அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.

7. சில பள்ளிகள், கிளைகள், கலாச்சாரப் புரட்சிப் பணிக் குழுக்களில் உள்ள சில பொறுப்பாளர்கள், தமக்கு எதிராகக் கொட்டை எழுத்துச் சுவரொட்டிகளை வைத்த சாமான்ய மக்களை எதிர்த்துத் தாக்கும் வேலையில் இறங்கியுள்ளார்கள். இவர்கள் பின்வரும் முழக்கங்களை பரப்பும் அளவுக்குச் சென்றுள்ளார்கள்: ‘கிளையின் அல்லது பணிக்குழுவின் தலைவர்களுக்கு எதிராகச் செல்வது என்பது கட்சியின் மத்தியக்குழுவை எதிர்ப்பது, கட்சியையும் சோசலிசத்தையும் எதிர்ப்பது, அது ஒரு எதிர்ப்புரட்சி நடவடிக்கை’. அவர்களது இந்த அணுகுமுறையானது உண்மையான புரட்சியாளர்களின் மீது அவர்கள் தாக்குதல் நடத்துவார்கள் என்பதைத்தான் தெளிவாக்குகின்றது. இது சார்புத்தன்மையில் நிகழ்ந்த தவறு, திட்டத்தில் நிகழ்ந்த தவறு, ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மோசமான அளவுக்கு தவறான தத்துவார்த்த சிந்தனை கொண்டவர்கள் பலரும், குறிப்பாக கட்சி விரோத, சோசலிச விரோத வலதுசாரி சக்திகள் மக்கள் இயக்கத்தில் நிகழ்ந்துவிட்ட சில குறைபாடுகளையும் தவறுகளையும் தமக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு வதந்திகளையும் பொய்யையும் பரப்புகின்றார்கள், கலவரத்தில் ஈடுபடுகின்றார்கள், மக்களில் சிலரைத் திட்டமிட்டே ‘எதிர்ப்புரட்சியாளர்’கள் என முத்திரைக் குத்துகின்றார்கள். இத்தகைய ‘பிக் பாக்கெட்’டுகள் குறித்து நாம் எச்சரிக்கையாக இருப்பதும், அவர்களது தந்திரங்களை விரைவிலேயே அம்பலப்படுத்துவதும் அவசியம்.

இயக்கத்தை நடத்திக்கொண்டு செல்லும்போது, கொலை, கலகம், விசம் கொடுத்துக் கொன்றது, அரசு இரகசியங்களை சேதப்படுத்தியது, திருடியது போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட எதிர்ப்புரட்சியாளர்கள் மீது சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இயக்கத்தின் போக்கில் எழுகின்ற பிரச்சனைகளின் காரணத்தால் பல்கலைக்கழகம், கல்லூரி, நடுநிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி மாணவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படக் கூடாது. இப்போராட்டத்தின் லட்சியத்தை திசை திருப்பும் முயற்சியாக மக்களே மக்களுக்கு எதிராக, மாணவர்களே மாணவர்களுக்கு எதிராகப் போராடுமாறு தூண்டுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது. வெளிப்படையாகத் தெரிந்த வலதுசாரிகள் மீதும்கூட அவரவர் செய்த குற்றங்களின் அடிப்படையில்தான் இயக்கத்தின் பிற்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்படும்.

8. ஊழியர்களைப் பொதுவாக நான்கு விதமாகப் பிரிக்கலாம்.

1) நல்லவர்கள்.
2) ஒப்பீட்டளவில் நல்லவர்கள்
3) மோசமான தவறுகளைச் செய்திருந்தாலும் கட்சிக்கு எதிராகவோ சோசலிச விரோத வலதுசாரிகளாகவோ மாறாதவர்கள்.
4) குறைந்த எண்ணிக்கையிலான கட்சிக்கு எதிரான, சோசலிச விரோத வலதுசாரிகள்.

சாதாரண சூழ்நிலைகளில் முதலிரண்டு வகையினர்தான் (நல்லவர்களும் ஒப்பீட்டளவில் நல்லவர்களும்) மிகப் பெரும்பான்மையினராக இருப்பார்கள்.

கட்சி விரோதிகளையும் சோசலிச விரோத வலதுசாரிகளையும் முற்றாக அம்பலப்படுத்த வேண்டும், வலுவாகத் தாக்க வேண்டும், அவர்களது மரியாதையைக் குலைக்க வேண்டும், ஆதிக்கத்தைத் தகர்க்க வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் தங்களைத் திருத்திக்கொள்வதற்கான வழியையும் செய்ய வேண்டும்.

9. மகத்தான பாட்டாளி வர்க்க கலாச்சாரப் புரட்சியின் போக்கில் பல புதிய விசயங்கள் பிறக்கத் தொடங்கியுள்ளன. பல பள்ளிகளிலும் கிளைகளிலும் மக்களால் தொடங்கப்பட்டுள்ள கலாச்சாரப் புரட்சிக் குழுக்களும் பிற அமைப்புகளும் புதிதாகப் பிறந்தவை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.

இக்கலாச்சாரப் புரட்சிக் குழுக்கள், பேராயம் ஆகியவை அனைத்தும் அமைப்பின் மிக அற்புதமான புதிய வடிவங்களாகும், இதன் மூலம் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையின்கீழ் மக்கள் தமக்குத் தாமே கற்றுக் கொள்கின்றார்கள். இவ்வடிவங்கள் கட்சியை மக்களுடன் மேலும் நெருக்கமாக்கும் சிறந்த பாலங்களாகும். அவை பாட்டாளி வர்க்கக் கலாச்சாரப் புரட்சியின் அதிகாரத்தின் அங்கங்கள்.

அனைத்து சுரண்டல் வர்க்கங்களும் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக விட்டுச் சென்றுள்ள பழைய சிந்தனைகள், கலாச்சாரம், பழக்க வழக்கங்களுக்கு எதிராக பாட்டாளி வர்க்கம் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம் இயற்கையிலேயே மிகமிக நீண்ட காலத்துக்கு நீடிக்கும் ஒரு போராட்டமாகும்.

எனவே கலாச்சாரப் புரட்சிக் குழுக்களும், பேராயங்களும் வெறும் தற்காலிக அமைப்புகளாக இருக்க முடியாது, அவை நிலையான மக்கள் அமைப்புகளாகவே இருக்க வேண்டும். அவை கல்லூரிகள், பள்ளிகள், அரசு மற்றும் பிற அமைப்புகளுக்கு மட்டுமின்றி பொதுவாகவே தொழிற்சாலைகள், சுரங்கங்கள், பிற வணிக நிறுவனங்கள், நகர்ப்புற மாவட்டங்கள், கிராமங்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தும்.

பாரிஸ் கம்யூனைப் போன்றதொரு பொதுத்தேர்தல் முறையை நிறுவ வேண்டியது அவசியமாக உள்ளது, இதன்மூலம் கலாச்சாரப் புரட்சிக் குழுக்களுக்கு உறுப்பினர்களைத் தேர்வுசெய்ய முடியும், புரட்சிகர மக்கள் திரளால் முழுமையாக விவாதிக்கப்பட்டபின் வேட்பாளர் பட்டியல் முன்வைக்கப்பட வேண்டும், பொது மக்கள் இப்பட்டியல்களை மீண்டும் மீண்டும் விவாதித்த பின்னர் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

படிக்க :
♦ பிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா ?
♦ மாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி !

கலாச்சாரப் புரட்சிகரக் குழுக்களின் உறுப்பினர்களையும் கலாச்சாரப் புரட்சிகரப் பேராயங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் எந்நேரத்திலும் விமர்சிக்கும் உரிமை பொது மக்களுக்கு உண்டு. இந்த உறுப்பினர்களும், பிரதிநிதிகளும் திறமையற்றவர்கள் என்று கண்டறியப்பட்டால் அவர்களது இடத்தில் தேர்தல் மூலம் புதியவர்களை நியமிக்கலாம், அல்லது மக்களின் விவாதத்துக்குப் பின்னர் அவர்களைத் திரும்பப் பெறலாம்.

கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் உள்ள கலாச்சாரப் புரட்சிக் குழுக்களிலும் பேராயங்களிலும் புரட்சிகர மாணவர்களின் பிரதிநிதிகள் பிரதானமாக இடம் பெற்றிருக்க வேண்டும். அதே நேரத்தில் புரட்சிகர ஆசிரியர் – தொழிலாளர்களின் பிரதிநிதிகளும் இடம் பெறவேண்டும்.

10. மாபெரும் பாட்டாளி வர்க்கக் கலாச்சாரப் புரட்சியில் செய்ய வேண்டிய முக்கியமான வேலை எதுவெனில் பழைய கல்வித் திட்டங்களையும் பழைய கோட்பாடுகளையும் கற்பிப்பு முறைகளையும் சீர் செய்வதாகும்.

நமது பள்ளிக்கூடங்கள் முதலாளித்துவ அறிவு ஜீவிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன, மாபெரும் கலாச்சாரப் புரட்சி இந்த நிலையை மாற்ற வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளிலும் தோழர் மாசேதுங் முன்வைத்த கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். பாட்டாளி வர்க்க அரசியலைக் கற்பிக்கின்ற, உற்பத்தியைத் தருகின்ற உழைப்புடன் இணைந்த கல்வி – இவையே அக்கல்விக் கொள்கையாகும். அறவொழுக்கமும் அறிவும் உடல் நலமும் வளர்ச்சி பெறும் வகையில் அமையும் இக்கல்வித் திட்டத்தால் அவர்கள் பின்னாளில் சோசலிசச் சிந்தனையும் கலாச்சாரமும் அமைந்த உழைப்பாளர்களாக மிளிர்வார்கள்.

பள்ளிக் கல்வியின் கால அளவு குறைக்கப்பட வேண்டும். பாடப் பிரிவுகள் குறைக்கப்பட வேண்டும், மேன்மையாக்கப்பட வேண்டும். பாடப் புத்தகங்கள் முற்றாக சீரமைக்கப்பட வேண்டும், சில பாடங்கள் சிக்கலாக இருக்கின்றன. இவற்றை எளிமையாக்க வேண்டும். மாணவர்களின் தலையாய வேலை என்பது கற்பதுதான், ஆனாலும் அவர்கள் மற்ற விசயங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, அவர்கள் கல்வி கற்றுக் கொண்டே தொழிற்சாலைகளிலும் வேலை செய்யலாம், விவசாயத்தையும், இராணுவ சேவையையும் கற்றுக் கொள்ளலாம், கலாச்சாரப் புரட்சியின் போராட்டங்களில் பங்குபெற்று முதலாளி வர்க்கத்தை விமர்சனம் செய்யும் பணியையும் செய்யலாம்.

11. கலாச்சாரப் புரட்சி என்னும் மக்கள் இயக்கத்தின் போக்கில் முதலாளித்துவ நிலப் பிரபுத்துவக் கோட்பாட்டின் மீதான விமர்சனமானது பாட்டாளி வர்க்க உலகப் பார்வை, மார்க்சிய – லெனினியத் தத்துவம், மாசேதுங்கின் சிந்தனைகள் ஆகியவற்றைப் பரப்புவதோடு ஒன்றிணைந்து செல்ல வேண்டும்.

கட்சிக்குள் ஊடுருவிவிட்ட அப்பட்டமான முதலாளி வர்க்கப் பிரதிநிதிகளையும், அப்பட்டமான பிற்போக்கு முதலாளித்துவ கல்விசார் ‘அதிகார மட்டங்’களையும் விமர்சிக்கும் வகையில் விமர்சனங்களை ஒருங்கிணைக்க வேண்டும்; தத்துவம், வரலாறு, அரசியல் பொருளாதாரம், கல்வி ஆகிய தளங்களிலும், கலை இலக்கியப் படைப்புக்களிலும், கோட்பாடுகளிலும், இயற்கை விஞ்ஞானம் மற்றும் பிற துறைகளின் கோட்பாடுகளிலும் இருக்கின்ற பிற்போக்குவாதச் சிந்தனைகளை விமர்சிப்பதும் இதில் அடங்கும்.

குறிப்பிட்ட ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு பத்திரிக்கைகளில் விமர்சிப்பது என்பது தொடர்புடைய கட்சிக் குழுவின் விவாதத்திற்குப் பிறகே முடிவு செய்யப்பட வேண்டும். தேவைப்படும் நேரங்களில் மேல்மட்டத்தின் ஒப்புதலுக்குப் பிறகே செய்யப்பட வேண்டும்.

12. விஞ்ஞானிகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், சாதாரணத் தொழிலாளர்கள் ஆகியோர் தேசபக்த உணர்வுடன், கடும் உழைப்பாளிகளாக இருக்கும் வரையிலும், கட்சிக்கும் சோசலிசத்துக்கும் எதிராகச் செல்லாத வரையிலும், அந்நிய நாடுகளுடன் தகாத வகையில் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளாத வரையிலும் தற்போது நடந்து கொண்டிருக்கும் இயக்கத்தில் ‘ஒற்றுமை, விமர்சனம், ஒற்றுமை’ என்ற கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடிப்போம். தமது துறைகளில் பயன்தரு பங்களிப்பைச் செலுத்திய விஞ்ஞானிகள், அறிவியல் – தொழில்நுட்பாளர்களைப் பராமரிப்பதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். அவர்களது உலகப் பார்வையையும், பணிக் கலாச்சாரத்தையும் படிப்படியாக மாற்றிக்கொள்ளும் வண்ணம் அவர்களுக்கு உதவ வேண்டும்.

13. பெரிய, நடுத்தர நகரங்களில் உள்ள கட்சி மற்றும் அரசின் கலாச்சார – கல்விக் கிளைகள், முன்னணி அரங்கங்கள் ஆகியவை தற்போதைய பாட்டாளி வர்க்கக் கலாச்சாரப் புரட்சியில் முக்கியத்துவம் பெறுகின்றன.

மாபெரும் கலாச்சாரப் புரட்சியானது நகரங்களிலும், கிராமப்புறங்களிலும், சோசலிசக் கல்வி இயக்கத்தை மேலும் செழுமையுறச் செய்துள்ளது. அதனை மேலும் ஒருபடி உயர்த்தியுள்ளது. இவ்விரண்டு இயக்கங்களும் நெருக்கமாக ஒருங்கிணைந்து இயங்குவதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும். பல்வேறு பிரதேசங்களும் துறைகளும் தத்தம் பகுதியிலுள்ள தனிப்பட்ட சூழ்நிலைகளுக்கேற்ப இத்தகைய முயற்சிகளில் இறங்கலாம்.

கிராமப்புறங்களிலும் நகரங்களிலுள்ள வணிகத் தலங்களிலும் இப்போது நடந்து கொண்டிருக்கின்ற சோசலிசக் கல்வி இயக்கமானது ஏற்கெனவே இத்தகைய வேலைகள் எங்கெல்லாம் செம்மையாக நடந்து கொண்டிருக்கின்றனவோ அவற்றை பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும், ஆனால் அத்தகைய வேலைகளோடு சேர்ந்து இயங்க வேண்டும். எனினும் இன்றைய மாபெரும் பாட்டாளி வர்க்கக் கலாச்சாரப் புரட்சியின் போக்கில் எழுகின்ற கேள்விகள் அனைத்தையும் தகுந்த நேரத்தில் மக்கள்முன் வைத்து விவாதிக்க வேண்டும், அதன் மூலம் பாட்டாளி வர்க்கத் தத்துவத்தை மேலும் தீர்மானகரமாக முன்னெடுத்துச் செல்லவும் முதலாளித்துவத் தத்துவத்தை ஒழித்துக் கட்டவும் முடியும்.

சில இடங்களில் இம்மாபெரும் பாட்டாளி வர்க்க கலாச்சாரப் புரட்சியானது அங்கங்கே நடந்து கொண்டிருக்கின்ற சோசலிசக் கல்வி இயக்கத்துக்கு மேலும் வலுச் சேர்க்கவும், அரசியல், தத்துவம், அமைப்பு, பொருளாதாரம் ஆகிய தளங்களில் தூய்மைப்படுத்தவும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தப்படுகின்றது. உள்ளூர்கட்சிக் கிளைகள் இது தேவை எனக் கருதும் இடங்களில் இவ்வாறு செய்து கொள்ளலாம்.

14. மாபெரும் பாட்டாளி வர்க்கக் கலாச்சாரப் புரட்சியின் இலட்சியம் என்ன மக்களின் தத்துவத்தை புரட்சிகரமாக்குவதும் அதன் மூலம் உழைப்பின் அனைத்து தளங்களிலும் மகத்தான, விரைவான, மேலான, அதிகமான பொருளாதாரப் பலன்களை அடைவதுமே ஆகும். பொதுமக்கள் திரளை முழுமையாகக் கிளர்ச்சியுறச் செய்து தகுந்த ஏற்பாடுகளையும் செய்து விட்டால் கலாச்சாரப் புரட்சியையும் உற்பத்தியையும் ஒரு சேரவும் ஒன்று மற்றதைப் பாதிக்காமலும் நடத்தி விட முடியும், கூடவே நமது எல்லா வேலைகளிலும் உச்சக்கட்டத் தரத்தையும் உறுதி செய்ய முடியும்.

மாபெரும் கலாச்சாரப் புரட்சியானது நமது நாட்டின் சமூக உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான மாபெரும் உந்து சக்தியாகும். அப்படியிருக்க, உற்பத்தி வளர்ச்சிக்கு எதிராக மாபெரும் கலாச்சாரப் புரட்சியை முன்னிறுத்துவது தவறு.

15. மத்தியக் குழுவின் இராணுவக் கமிசன், மக்கள் விடுதலை இராணுவத்தின் பொது அரசியல்துறை ஆகியவற்றின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில்தான் இராணுவத்தில் கலாச்சாரப் புரட்சி, சோசலிசக் கல்வி இயக்கம் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

16. மாபெரும் பாட்டாளி வர்க்கக் கலாச்சாரப் புரட்சியில் மாசேதுங் சிந்தனை எனும் மகத்தான செம்பதாகையை உயர்த்திப் பிடிப்பதும் பாட்டாளிவர்க்க அரசியலின் பாதையில் செல்வதும் தவிர்க்க முடியாதது, அவசியமானது. பாட்டாளிகள், விவசாயிகள், படைவீரர்கள், ஊழியர்கள், அறிவுஜீவிகள் மத்தியில் ஆக்கப்பூர்வக் கல்வி இயக்கத்தையும் தலைவர் மாசேதுங்கின் படைப்புகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும், கலாச்சாரப் புரட்சியைச் செயல்படுத்துவதற்கான வழிகாட்டியாக மாசேதுங்கின் சிந்தனைகளையே எடுத்துச் செல்ல வேண்டும்.

படிக்க :
♦ கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ !
♦ கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ

சிக்கலான இம்மாபெரும் கலாச்சாரப் புரட்சியில் கட்சியின் அனைத்து மட்டங்களிலும் உள்ள குழுக்கள் யாவும் தலைவர் மாவோவின் படைப்புகளையும், சிந்தனைகளையும் அதிகமான நேர்மையுடனும் ஆக்கப்பூர்வமான வழியிலும் பயில வேண்டும், நடைமுறைப்படுத்த வேண்டும். குறிப்பாக கலாச்சாரப் புரட்சி குறித்தும் கட்சியின் தலைமைப் பாத்திர முறைகள் குறித்தும் தலைவர் மாவோ எழுதிய படைப்புகளை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். உதாரணமாக, புதிய ஜனநாயகம் குறித்து”, ”யெனான் கலை – இலக்கியக் கழகத்தில் ஆற்றிய உரை”, “மக்களிடையே உள்ள முரண்பாடுகளைச் சரியாக கையாளுதல் குறித்து”, “பிரச்சாரப் பணிகள் குறித்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் ஆற்றிய உரை’, “தலைமைப் பாத்திர முறைகள் குறித்த சில கேள்விகள்”, “ஆட்சிக் குழுக்களின் வேலை முறைகள்” ஆகியவற்றைக் கூறலாம்.

கடந்த காலங்களில் தலைவர் மாவோ கட்சியினருக்கு வலியுறுத்திய ‘மக்களிடமிருந்து மக்களுக்கு’ என்ற திட்டத்தையும், ஆசிரியராக ஆகும்முன் மாணவராக இருங்கள்’ என்ற கோட்பாட்டையும் கட்சியின் அனைத்து மட்டங்களிலும் உள்ள குழுக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். கட்சிக் குழுக்கள் பாரபட்சமாகவும் குறுகிய பார்வையுடன் இருப்பதையும் தவிர்க்க முயல வேண்டும். அவர்கள் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை வளர்க்க வேண்டும், நுண்புலப் பொருளியல்வாதத்தையும், புலமையியல் வாதத்தையும் எதிர்க்க வேண்டும்.

தோழர் மாசேதுங்கின் தலைமையில் அமைந்த மத்தியக் குழுவின் தலைமையின் கீழ் மாபெரும் பாட்டாளி வர்க்கக் கலாச்சாரப் புரட்சி மிகச் சிறப்பான வெற்றி அடைவது உறுதி.

(முற்றும்)

சீனப் புரட்சி 71-ம் ஆண்டு || கட்சிக்கு தேவை : ஒற்றுமை – விமர்சனம் – ஒற்றுமை

0

சீனப் புரட்சி வெற்றிகரமாக நடைபெற்று மக்கள் சீனக் குடியரசு அமைக்கப்பட்டு எழுபத்தியோரு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. கட்சி, கம்யூனிசம் எல்லாம் வேலைக்கு ஆகாது என்று நேரடியாக மறுக்கக் கூடியவர்களும், மறைமுகமாக காய் நகர்த்துபவர்களும் மலிந்துகிடக்கும் சமூகச் சூழலில், உலகம் முழுவதும் நடைபெற்ற புரட்சிகள் பின்னடைவுக்குள்ளானதன் அடிப்படையை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழலில் இருக்கிறோம்.

பாட்டாளி வர்க்கப் புரட்சியை நடத்துவதற்கு ஒரு கட்சி எவ்வளவு அவசியமோ, அந்த அளவிற்கு அந்தக் கட்சியும் மக்களுக்கு கடப்பாடு உடையதாக இருக்க வேண்டும்.  அவ்வப்போது தமது தவறுகளைப் பரிசீலித்து, சுயவிம்ர்சனத்தோடு பகிரங்கமாக அம்பலப்படுத்திக் கொண்டு தம்மை சீர் செய்து கொண்டிருக்கையில்தான் அந்தக் கட்சி மக்களோடு ஐக்கியப்பட்டு இருக்க முடியும்; புரட்சியை முன்னெடுத்துச் செல்ல முடியும். அப்படி ஒரு கட்சி தன்னை தகவமைத்துக் கொள்வதற்கான போராட்டத்தை தன்னுள்ளே தொடர்ந்து நடத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

அதனை தோழர் மாவோ தொடர்ந்து செய்துவந்தார். கலாச்சாரப் புரட்சியின் காலகட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் பதினோறாவது காங்கிரஸ் கூட்டத்தின் நிறைவு விழாவில் தோழர் மாவோ ஆற்றிய  உரையும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், இத்தருணத்தில் புரட்சிகரச் செயல்பாட்டாளர்களுக்கு அவசியம் படிக்க வேண்டியவையாக இருக்கின்றன.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், பல கோடி மக்களின் உறுதிமிக்க போராட்டத்தால் சாத்தியமாக்கப்பட்ட சீனப் புரட்சியின் அனுபவங்களை நெஞ்சில் ஏந்துவோம். புதிய ஜனநாயக அரசைக் கட்டமைக்கக் களமிறங்குவோம் !

வினவு

எட்டாவது மத்தியக் குழுவின் பதினொன்றாவது பிளீனக் கூட்டத்தின் நிறைவு விழாவில் ஆற்றிய உரை
(ஆகஸ்டு 12, 1966)
பாகம் – 1

(ஆதாரம்: “மா சே துங் சிந்தனைகள் நீடூழி வாழ்க” என்னும் செங்காவலர் வெளியீடு)

ன்பதாவது மாநாட்டுக்காக நாம் சில வேலைகளைச் செய்ய வேண்டும் என நான் கருதுகின்றேன். ஒன்பதாவது மாநாட்டை எப்போது நடத்த வேண்டும் என்று முடிவெடுக்க நாம் ஆயத்தமாக வேண்டும். அடுத்த இரண்டு வருடங்கள் கழிந்தால் எட்டாவது காங்கிரசின் இரண்டாவது அமர்வு முடிந்து பத்தாண்டுகள் ஓடியிருக்கும். பல வருடங்கள் ஓடிவிட்டன. ஒன்பதாவது காங்கிரஸ் நடத்தியே தீரவேண்டும், அடுத்த வருடத்தில் தகுந்த நேரத்தில் நடத்த வேண்டும். அதற்காக நாம் இப்போதே ஆயத்தமாக வேண்டும். அதற்கான ஆயத்த வேலைகளைச் செய்யும் பொறுப்பை அரசியல் தலைமைக்குழுவுக்கும் அதன் நிலைக்குழுவுக்கும் கொடுத்துவிட வேண்டும் என நான் முன்மொழியலாமா?

இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் சரியானவையா தவறானவையா என்பதை எதிர்காலம் காட்டும்1. ஆனாலும், நாம் எடுத்துள்ள முடிவுகளை மக்கள் வரவேற்பதாகவே தெரிகின்றது. உதாரணமாக மத்தியக்குழு எடுத்த முக்கியமான முடிவுகளில் ஒன்று மாபெரும் கலாச்சாரப் புரட்சியைப் பற்றியது. மாணவர்கள் புரட்சிகர ஆசிரியர்களின் பரந்துவிரிந்த திரள் நம்மை ஆதரிக்கின்றது, கடந்த காலத்தின் கொள்கைகளை எதிர்க்கின்றது. கடந்தகாலக் கொள்கைகளை எதிர்ப்பதென்ற அவர்கள் நிலையை ஒட்டித்தான் நாம் முடிவுகளை எடுத்தோம். ஆனால் இந்த முடிவுகளை நடைமுறைப்படுத்த முடியுமா என்பது முற்றிலும் பல்வேறு மட்டங்களிலும் உள்ள தலைவர்களின் நடவடிக்கையைப் பொறுத்ததே இன்று இங்கே இருக்கின்ற தலைவர்களும் இல்லாத தலைவர்களும்கூட இதில் அடங்குவார்கள்.

மக்களைச் சார்ந்திருக்க வேண்டும் என்ற கேள்வியையேகூட உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளுங்கள். பொதுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்பது ஒன்று. பொதுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது மற்றொன்று. நமது தீர்மானங்களில் எழுதப்பட்ட அனைத்தையும் நமது கட்சிக் குழுக்களும் நமது தோழர்கள் அனைவரும் அப்படியே நடைமுறைப்படுத்துவார்கள் என்று எப்போதும் முடிவு செய்ய வேண்டாம். அவற்றை நடைமுறைப்படுத்த விரும்பாத சிலர் எப்போதும் இருக்கின்றார்கள். கடந்த காலத்தைவிட இப்போது நிலைமை நன்றாகவே இருக்கின்றது. ஏனெனில் கடந்தகாலத்தில் நாம் இப்படி வெளிப்படையாக முடிவுகளை எடுத்ததில்லை. இன்னும் சொன்னால் இந்த முடிவுகளை நடைமுறைப்படுத்த அமைப்புரீதியான உத்தரவாதமும் இப்போது உண்டு. நமது அமைப்பில் இப்போது சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அரசியல் தலைமைக்குழுவின் முழுமையான மற்றும் மாற்று உறுப்பினர் தகுதியிலும், தலைமைச் செயலகத்திலும், நிலைக்குழுவின் உறுப்பினர் தகுதியிலும் செய்யப்பட்டுள்ள சீரமைப்புக்கள், மத்தியக் குழுவின் முடிவுகளையும் அறிக்கையையும் நடைமுறைப்படுத்துவதை உத்தரவாதம் செய்துள்ளன.

தவறு செய்த தோழர்கள் தமது தவறுகளைத் திருத்திக்கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். அவர்கள் தமது தவறுகளை திருத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். அவர்கள் தவறு செய்துவிட்டார்கள் என்ற முடிவுக்கு நீங்கள் முதலில் வந்துவிட்டு அதன்பின் அவர்கள் தமது தவற்றைத் திருத்திக்கொள்ள வாய்ப்பளிக்க மறுக்கும்போக்கு கூடாது. ‘தவறுகளை முதலில் தண்டிப்போம். ஏனெனில் அவை மீண்டும் நடக்கக் கூடாது; நோயாளியைக் காப்பாற்ற வேண்டும், எனவே அவரைக் குணப்படுத்துவோம்’, ‘முதலில் கவனிப்போம், பின் உதவி செய்வோம்’, ‘ஒற்றுமை – விமர்சனம் – ஒற்றுமை’ – இதுதான் நமது கொள்கை. கட்சிக்கு வெளியே நாம் ஒரு கட்சியை வைத்துள்ளோமா? வைத்திருப்பதாகத்தான் நான் நினைக்கின்றேன், கட்சிக்குள் கோஷ்டிகள் இருப்பதாகவும் நான் கருதுகின்றேன். க்வோமின்டாங்கை நாம் விமர்சிக்கின்றோம், ஆனால் க்வோமின்டாங் இவ்வாறு கூறுகின்றது: “கட்சிக்கு வெளியே இன்னொரு கட்சி கூடாது, கட்சிக்குள்ளே கோஷ்டிகள் கூடாது”. சிலரோ இப்படிக் கூறுகின்றார்கள்: “கட்சிக்கு வெளியே இன்னொரு கட்சி கூடாது என்பது சர்வாதிகாரம்; கோஷ்டிகள் இல்லாமல் இருப்பதோ முட்டாள்தனம்”. இது நமக்கும் பொருந்தும். நமது கட்சிக்குள் கோஷ்டிகள் இல்லை என்று நீங்கள் கூறலாம், ஆனால் இருக்கின்றன.

உதாரணமாக மக்கள் இயக்கங்களைக் குறித்த அணுகுமுறையைப் பொறுத்தவரை இரண்டு கோஷ்டிகள் உள்ளன. எந்த கோஷ்டி பெரும்பான்மை, எது சிறுபான்மை என்பதுதான் கேள்வியே. நாம் இந்தக் கூட்டத்தை இன்னும் சில மாதங்களுக்குப் பிறகு நடத்தியிருப்போமெனில் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும். எனவே இப்போது இந்தக் கூட்டம் நடந்தது நல்ல விசயமே. இது பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புகள்

1. சீனக்கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழுவின் பதினொன்றாவது பிளீனத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – பதினாறு அம்சங்கள்:

(1) இப்போது மலர்ந்துள்ள இந்த மகத்தான பாட்டாளிவர்க்கக் கலாச்சாரப் புரட்சியானது மக்களது ஆன்மாவைத் தொட்டுள்ள ஒரு மகத்தான புரட்சியாகும் – நமது தேசத்தின் சோசலிசப் புரட்சியில் ஒரு புதிய கட்டத்தை இப்புரட்சி கொண்டு வந்துள்ளது, அது மேலும் ஆழமான பரந்து விரிந்த கட்டமாகும். கட்சியின் எட்டாவது மத்தியக்குழுவின் பத்தாவது பிளீனக் கூட்டத்தில் தோழர் மாசேதுங் கூறினார்: ஓர் அரசியல் சக்தியை வீழ்த்த வேண்டுமாயின், எல்லாவற்றிற்கும் முதலாக பொதுக்கருத்தை உருவாக்க வேண்டியது எப்போதும் அவசியம், தத்துவார்த்த தளத்தில் வேலை செய்ய வேண்டியதும் அவசியம்.

இது புரட்சிகர வர்க்கத்துக்கு மட்டுமல்ல, எதிர்ப்புரட்சி வர்க்கத்துக்கும் பொருந்தும். தோழர் மாசேதுங்கின் இந்தக் கோட்பாடு நடைமுறையில் முற்றிலும் சரியானதே என்று மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. முதலாளிவர்க்கம் தூக்கியெறியப்பட்டு விட்டது, ஆனால் அது இப்போதும் மீண்டு வந்துவிட எல்லா முயற்சிகளையும் செய்கின்றது – அது சுரண்டல் வர்க்கத்தின் பழைய சித்தாந்தங்களையும் கலாச்சார பழக்க வழக்கங்களையும் பயன்படுத்தி சாமான்ய மக்களை சிதைக்கவும், அவர்களது சிந்தனையை வசப்படுத்தவும் முயல்கின்றது. பாட்டாளிவர்க்கம் இதற்கு நேரெதிரான வேலைகளைச் செய்ய வேண்டும். தத்துவார்த்த தளத்தில் முதலாளி வர்க்கத்துடன் நேருக்கு நேராக மோதி ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ள வேண்டும், ஒட்டுமொத்த சமூகத்தின் சித்தாந்தப் பார்வையை மாற்றும் வண்ணம் பாட்டாளிவர்க்கத்தின் புதிய சித்தாந்தங்களையும் கலாச்சாரப் பழக்கவழக்கங்களையும் பயன்படுத்த வேண்டும். இன்றைய நிலையில் நமது லட்சியம் என்பது அதிகாரத்தில் இருந்து கொண்டு முதலாளித்துவப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ள நபர்களுக்கு எதிராகப் போராடுவது, அவர்களை ஒழிப்பது; பிற்போக்கு முதலாளித்துவ அறிவுசார ‘அதிகாரங்களையும் முதலாளித்துவம் உள்ளிட்ட அனைத்து சுரண்டல் வர்க்கங்களின் தத்துவங்களையும் விமர்சித்து அவற்றை வீழ்த்துவது சோசலிசப் பொருளாதாரத் தளத்துக்குப் பொருந்தி வராத கல்வி, கலை இலக்கியம் போன்றவை உள்ளிட்ட மேற்கட்டுமானத்தின் அங்கங்களை சீர்படுத்துவது, இவ்வாறு செய்வதன்மூலம் சோசலிச அமைப்பை வலுப்படுத்தி வளர்ச்சிப்பெற வழிசெய்வது.

(2) இம்மாபெரும் கலாச்சாரப் புரட்சியின் முக்கிய சக்தியாக இருப்பது தொழிலாளி, விவசாயி, படைவீரர்கள், புரட்சிகர அறிவுஜீவிகள், புரட்சிகர ஊழியர்கள் உள்ளிட்ட மக்கள் திரளே. இதற்கு முன் நாம் பார்த்திராத மிகப்பெரும் புரட்சிகர இளைஞர்கூட்டம் இப்போது துணிச்சல் பெற்று முன்வந்துள்ளது. இவர்கள் செயல்பாட்டில் தீவிரம் உள்ளவர்கள், மதிநுட்பம் வாய்ந்தவர்கள். கொட்டை எழுத்துச் சுவரொட்டிகள், மாபெரும் விவாதங்கள் மூலம் இவர்கள் விசயங்களை வெளிப்படையாக விவாதிக்கின்றார்கள், முற்றிலும் விமர்சித்து அம்பலமாக்குகின்றார்கள், வெளிப்படையாகவும் மறைந்தும் இருக்கின்ற முதலாளி வர்க்கத்தின்மீது தீவிரமான தாக்குதலைத் தொடுக்கின்றார்கள். இத்தகைய ஒரு மகத்தான புரட்சி இயக்கத்தில் அவர்களிடையே கூடவோ குறையவோ சில குறைபாடுகள் இருப்பது தவிர்க்க இயலாத ஒன்று. ஆனாலும் அவர்களது தலையாய புரட்சிகர உணர்வானது தொடக்கத்திலிருந்தே சரியாகவே இருக்கின்றது. மாபெரும் பாட்டாளி வர்க்க கலாச்சாரப் புரட்சியின் மைய நீரோட்டமாக இருப்பது இதுவே. மாபெரும் பாட்டாளி வர்க்க கலாச்சாரப் புரட்சி தொடர்ந்து முன்னேறிச் செல்லவேண்டிய முக்கிய திசையும் இதுதான்.

கலாச்சாரப் புரட்சியும் ஒரு புரட்சிதான் என்பதால் அது எதிர்ப்பை எதிர்கொள்ளும் என்பது தவிர்க்க இயலாதது. எதிர்ப்பவர்கள் யார்? முக்கியமாக கட்சிக்குள் ஊடுருவி அதிகாரத்தையும் கைப்பற்றி முதலாளித்துவப் பாதையில் செல்பவர்கள்தான் அவர்கள். சமூகப் பழக்கங்களின் பழைய சக்திகளிடமிருந்தும் எதிர்ப்பு வருகின்றது. இன்றைய நிலைமையில் இந்த எதிர்ப்பு மிக உறுதியாகவும் வலுவாகவும் உள்ளது. ஆனாலும் என்ன, மாபெரும் பாட்டாளி வர்க்க கலாச்சாரப் புரட்சி தடை செய்ய முடியாத ஒரு பொதுவான இயக்கமாகும். மக்கள் முழுமையாக கிளர்ந்தெழும்போது இந்த எதிர்ப்புகளெல்லாம் விரைந்து தூளாகும் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

எதிர்ப்பு மிக வலுவாக உள்ளதால் போராட்டத்தில் தோல்விகளும், மீண்டும் மீண்டும் தோல்விகளும்கூட நேரிடும். இதில் கெடுதல் ஒன்றுமில்லை. இது பாட்டாளி வர்க்கத்தையும் பிற உழைக்கும் மக்களையும், குறிப்பாக புதிய தலைமுறையை மேலும் உறுதியாக்கும்; அவர்களுக்குப் பாடம் கற்பிக்கும், அனுபவங்களைத் தரும்; புரட்சிகரப் பாதை என்பது சிரமமற்ற நேர்பாதை அல்ல, அது வளைந்து செல்லும் பாதை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள உதவும்.

(3) கட்சித் தலைமை மக்கள் திரளை எழுச்சி பெறச் செய்யும் வேலையை துணிச்சலுடன் செய்வதைப் பொறுத்துத்தான் இம்மாபெரும் கலாச்சாரப் புரட்சியின் விளைவு என்ன என்பது தீர்மானிக்கப்படும். கட்சி அமைப்புகளின் பல்வேறு மட்டங்களும் கலாச்சாரப் புரட்சிக்குத் தந்துள்ள தலைமைப் பாத்திரத்தைப் பொறுத்தவரை இப்போது நான்கு வெவ்வேறான சூழ்நிலைகள் நிலவுகின்றன:

(அ) கட்சி அமைப்புகளின் பொறுப்பிலுள்ளவர்கள் இயக்கத்தின் முன்னணிப் படையாக இருக்கின்றார்கள். மக்களைக் கிளர்ந்தெழச் செய்யும் வேலையைத் துணிவுடன் செய்கின்றார்கள். துணிச்சலுக்கே அவர்கள் இப்போது முதலிடம் கொடுக்கின்றார்கள், அவர்கள் அச்சமில்லாத கம்யூனிஸ்ட் போராளிகள், தலைவர் மாவோவின் மாணவர்கள். கொட்டை எழுத்துச் சுவரொட்டிகளையும் மாபெரும் விவாதங்களையும் அவர்கள் ஆதரிக்கின்றார்கள். பேய்கள், பூதங்கள் அனைத்தையும் அம்பலப்படுத்துமாறும், பொறுப்பிலுள்ளவர்களின் குறைகள், தவறுகளை விமர்சிக்குமாறும் மக்களை உற்சாகப்படுத்துகின்றார்கள். பாட்டாளிவர்க்க அரசியலை முன்னிறுத்தியதும் மாசேதுங் சிந்தனைகளை முன்னெடுத்துச் சென்றதும்தான் இத்தகைய சரியான தலைமை உருவாவதற்குக் காரணம்.

(ஆ) பல கிளைகளின் பொறுப்பாளர்கள் இந்த மகத்தான போராட்டத்தில் தலைமைப் பாத்திரத்தின் பொறுப்பை மிகவும் மோசமாகவே புரிந்து கொள்வார்கள்; அவர்களது தலைமையோ கடமையுணர்வு, திறமை ஆகியவற்றுக்கு வெகுதொலைவில் உள்ளது. அவர்கள் தங்களது தகுதியின்மையை உணர்ந்துள்ளார்கள். தாங்கள் பலவீனமான நிலையில் இருப்பதைத் தெரிந்துள்ளார்கள், அச்சத்துக்கே அவர்கள் முதலிடம் கொடுக்கின்றார்கள், காலத்துக்கு ஒவ்வாத வழிகள், கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கின்றார்கள், பழைய நடைமுறைகளிலிருந்து உடைத்துக் கொண்டு வரவும் முன்னேறவும் அவர்களுக்கு ஆர்வமில்லை. புதிய மாற்றங்களையோ மக்களின் புரட்சிகர உணர்வையோ இவர்கள் உணர்ந்தாரில்லை, விளைவாக இவர்களது தலைமை யதார்த்த நிலைமைக்கு வெகுதூரம் பின்னால் உள்ளது, மக்களிடமிருந்து வெகுதூரம் பின்தங்கியுள்ளது.

(இ) சில கிளைகளின் பொறுப்பாளர்கள் கடந்த காலத்தில் பலவகையிலும் தவறு செய்தவர்கள், இவர்கள் அஞ்சி நடுங்குகின்றார்கள், மக்கள் தங்களை அடையாளம் கண்டு அம்பலப்படுத்துவார்கள் என அஞ்சுகின்றார்கள். உண்மை என்னவெனில் இவர்கள் நேர்மையான வகையில் சுயவிமர்சனத்தில் ஈடுபட்டால், மக்களின் விமர்சனத்தை ஏற்றுக் கொண்டால், கட்சியும் மக்களும் அவர்களது தவறுகளை மன்னிப்பார்கள். ஆனால் இந்தப் பொறுப்பாளர்களோ இவை எதையும் செய்யமாட்டார்கள், மாறாக தொடர்ந்து தவறு செய்வார்கள், மக்கள் இயக்கத்துக்கு தடைகளாக மாறுவார்கள்.

(ஈ) கட்சிக்குள் ஊடுருவி முதலாளித்துவப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ள நபர்களால் சில கட்சிக் கிளைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த நபர்கள் மக்கள் தங்களை அம்பலப்படுத்தி விடுவார்கள் என பயங்கரமாகப் பயப்படுகின்றவர்கள், இதனால் மக்கள் இயக்கத்தை அடக்குவதற்கான அனைத்துக் காரணங்களையும் தேடிக்கொண்டே இருக்கின்றார்கள். தாக்குதலுக்கான இலக்குகளை மாற்றுவது, கறுப்பை வெள்ளையாக்குவது போன்ற தந்திரங்களில் இறங்கி இயக்கத்தை படுகுழியில் தள்ள முயல்கின்றார்கள்.

தாங்கள் முற்றாகத் தனிமைப்படுத்தப்படுவதை உணரும் போதும் முன்னைப்போல எதிர்ப்புரட்சி வேலைகளில் ஈடுபட முடியாமல் போகும்போதும் தங்கள் சதிவேலைகளை மேலும் தீவிரப்படுத்துவார்கள், மக்களை முதுகில் குத்துவார்கள், வதந்திகளைப் பரப்புவார்கள், புரட்சிக்கும் எதிர்ப்புரட்சிக்கும் உள்ள வேறுபாட்டை இயன்ற வகைகளிலெல்லாம் இருட்டடிப்பு செய்வார்கள் இவை அனைத்தும் புரட்சியாளர்களைத் தாக்குவதற்காகவே. கட்சியின் அனைத்து மட்டங்களிலும் உள்ள கட்சிக் குழுக்களை மத்தியக்குழு வற்புறுத்துவது என்ன?

சரியான தலைமைப் பொறுப்புக்கான பாத்திரத்தை வகிப்பதை விடாமுயற்சியுடன் தொடர்வது, துணிச்சலுக்கே முதலிடம் கொடுப்பது, துணிச்சலுடன் மக்களை கிளர்ச்சியுறச் செய்வது, பலவீனமும் திறமையின்மையும் நிலவும் இடங்களில் அவற்றை மாற்றுவது, தவறு செய்த தோழர்கள், ஆனால் தவறுகளைத் திருத்திக்கொண்டு மனஅழுத்தங்களிலிருந்து விடுபட நினைக்கும் தோழர்களை ஊக்கப்படுத்துவது, அதிகாரத்தின் முக்கியப் பொறுப்புகளில் இருந்துகொண்டு முதலாளித்துவப் பாதையைத் தேர்ந்தெடுத்தவர்களை பதவி நீக்கம் செய்வது, இதன்மூலம் பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர்கள் இத்தகைய தலைமைப் பொறுப்புகளை மீண்டும் கைப்பற்ற வழிசெய்வது – இவற்றைத்தான் செவ்வனே செய்ய வேண்டும்.

(தொடரும்)

தமிழகத்தை கலவரக் காடாக்கிய இந்து முன்னணி ராமகோபாலன் மரணம் !

1

ஆர்.எஸ்.எஸ்.-இன் தமிழக உருவமான இந்து முன்னணியை தமிழகத்தில் உருவாக்கியவரும், தமிழகத்தில் கட்டப் பஞ்சாயத்து கிரிமினல்களுக்கும், ரவுடிக் கும்பல்களுக்கும் தனது அமைப்பில் அரசியல் அடைக்கலம் கொடுத்தவருமான ராமகோபாலன் கடந்த 30-09-2020 அன்று கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்திருக்கிறார்.

தமிழகத்தில் 1980-ம் ஆண்டு மீனாட்சிபுரத்தில் தலித் மக்கள் மீதான ஆதிக்க சாதிவெறியர்களின் தாக்குதல்களைத் தொடர்ந்து அம்மக்கள் இசுலாமிய மதத்திற்கு மாறவிருப்பதாக அறிவித்தனர். அபோது அங்கு ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ஆதரவாக நின்று கொண்டு ஒடுக்கப்பட்ட தலித் மக்களை நைச்சியமாக சமாதானம் ஆர்.எஸ்.எஸ் முயற்சித்தது.

தமிழகத்தில் கம்யூனிச இயக்கங்களும், திராவிட இயக்கங்களும் உருவாக்கி வைத்திருந்த பார்ப்பன எதிர்ப்பு மரபை மீறி இங்கு தனது ஆதிக்கத்தை செலுத்த முடியாத ஆர்.எஸ்.எஸ். கும்பல், வெவ்வெறு வகைகளில் தனது கால்களைப் பரப்ப முயற்சித்தது.

படிக்க :
♦ கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ
♦ தன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்

அந்த முயற்சியின் ஒரு பகுதியாக தமிழகத்துக்கு ஏற்ற வகையில் தமிழ் பெயரில் உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்புதான் இந்து முன்னணி. 1940-கள் முதல் ஆர்.எஸ்.எஸ்.இல் தீவிரமாகச் செயல்பட்டுவந்த இராம. கோபாலன் 1980-ம் ஆண்டில் இந்து முன்னணியை உருவாக்கினார்.

இந்து முன்னணி உருவாக்கப்பட்ட பின்னர், அந்தப் பெயரிலேயே தமிழகத்தில் பல இடங்களில் கலவரங்களை  முன்னின்று நடத்தியது ஆர்.எஸ்.எஸ். கும்பல். 1982-ல் ராமநாதபுரம், மண்டைக்காடு ஆகிய பகுதிகளில் பல்வேறு கலவரங்களை முன்னின்று நடத்தியது.

மண்டைக்காட்டில் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான சிறு சிறு முரண்பாட்டையும் அங்கிருந்தே ஊதிப் பெருக்கி அங்கு அதுவரை உடன்பிறப்பாய் பழகிவந்த இந்து – கிறிஸ்தவ மக்களிடையே பெரும் கலவரமாய் உருவாக்கியது. 90-களின் இறுதியில் நடந்த கோவை கலவரத்திற்கு முக்கிய மூளையாக இருந்து செயல்பட்டது இந்து முன்னணிக் கும்பல்தான்.

மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்திய சிறீரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தையொட்டி வெளியிடப்பட்ட பிரசுரத்தின் முகப்பு.

1993-ம் ஆண்டு ம.க.இ.க. தலைமையில் திருவரங்கம் கோவில் கருவறை நுழைவுப் போராட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிராமம் கிராமமாக கூட்டம் போட்டு,  “நக்சல்கள் பிடியில் நமது இந்து கோவில்கள் சென்று விடும். இந்துக்களாகிய நாம் இதனைத் தடுக்க வேண்டும்” என்றெல்லாம் பிரச்சாரம் செய்தது இந்து முன்னணி.

ம.க.இ.க-விற்கு பாகிஸ்தானில் இருந்து ரூபாய் 90 இலட்சம் பணம் கைமாறியதாக அவதூறு பரப்பியது இந்து முன்னணி கும்பல். அதையெல்லாம் மீறி ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களின் ஆதரவுடன் கருவறையில் நுழைந்து இந்தக் கும்பலின் முகத்தில் கரியைப் பூசினர் தோழர்கள்.

நாடு முழுவதும் இந்து பெரும்பான்மைவாதத்தைக் கட்டமைக்க ஆர்.எஸ்.எஸ். தாம் மேற்கொண்ட மதக் கலவரங்களை தமிழகத்தில் அரங்கேற்ற முயற்சித்தது இந்து முன்னணி. அதில் கணிசமான வெற்றியும் பெற்றது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை பெரும் இயக்கமாக எடுத்துச் சென்று, தமிழகம் முழுவதும் இந்து முசுலீம் கலவரத்தைத் தூண்டியது இந்து முன்னணி. பிள்ளையார் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது இசுலாமியர்கள் செல்லும் பகுதி வழியாக எடுத்துச் செல்வது, இசுலாமிய மதத்திற்கு எதிராக கோசமிடுவது போன்ற வேலைகளின் மூலமாக இந்து – முசுலீம் மக்களிடையே பரஸ்பர வெறுப்பை விதைத்தது.

கடந்த 2010-ம் ஆண்டு அர்ச்சகர் பயிற்சி பெற்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ‘இந்து’ மாணவர்களுக்கு அர்ச்சகர் பணி  வழங்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் மதுரை பட்டர்கள் வழக்குப் பதிவு செய்த சமயத்தில், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, கருவறை நுழைவுப் போராட்டத்தின் பிதாமகனாகிய தந்தை பெரியாரின் பிறந்தநாள் அன்று அவரது சிலைக்கு மாலையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன் அவர்களைக் கடுமையாகத் தாக்கியது இந்து முன்னணிக் கும்பல். போராடியவர்கள் யாரும் முசுலீம் அல்லது கிறிஸ்தவ மாணவர்கள் அல்ல; அனைவரும் இந்துக்கள்தான்.  இந்துக் கோவிலின் கருவறைக்குள் நுழைய ‘இந்து’ முறைப்படி சமஸ்கிருத மற்றும் தமிழ் மந்திரங்களையும் கற்றறிந்த ‘இந்து’ மாணவர்களை ‘இந்து முன்னணி’ ஏன் தாக்க வேண்டும் ? யார் இந்துக்கள் என்பதும் யாருக்காக இந்த “இந்து முன்னணி” என்பதும் அன்று பல்லிளித்தது.

படிக்க :
♦ முத்துப்பேட்டையில் இந்துமுன்னணி கலவரம்
♦ அரியலூர் தலித் சிறுமியை படுகொலை செய்த இந்து முன்னணி செயலாளர்

இத்தகைய சனாதன ‘இந்து’ கொள்கைகளுக்காக இந்தக் கிரிமினல் கும்பலுடன் இணைவதற்கு எந்த ‘இந்து பக்தர்களும்’ தயாராக இல்லாத நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளின் புகலிடமாக இந்து முன்னணி செயல்பட்டது.

அத்தகைய ரவுடிகளின் புகலிடத்தில், முன்விரோதம், கள்ளக் காதல், கடன் தொல்லை, ரியல் எஸ்டேட் தகாராறு ஆகியவற்றிற்காக படுகொலைகளும், தற்கொலைகளும் நிகழ்வது இயல்புதானே. அத்தகைய படுகொலைகளை, ‘இந்து’த் தலைவர்கள் மீதான தாக்குதலாகக் காட்டி பல்வேறு கலவரங்களை கடந்த பத்தாண்டுகளில் நடத்தியுள்ளது. இதற்கு “பிரியாணி அண்டா” இழிபுகழ் கோவைக் கலவரமே சாட்சி.

அதுமட்டுமல்ல, 2017-ம் ஆண்டு தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அரியலூரில் தலித் சிறுமி நந்தினி மீதான கொடூரமாக பாலியல் வன்முறை மற்றும் கொலை கிரிமினல் இந்து முன்னணியின் செயலாளர்தான். இது குறித்து விரிவாக துப்புதுலக்கி அம்பலப்படுத்தியது வினவு.

♦ நந்தினியை குதறிய இந்து முன்னணி மணிகண்டன் – நேரடி ரிப்போர்ட்
♦ நந்தினியைக் கொன்ற இந்துமுன்னணியின் பின்னணி – நேரடி ரிப்போர்ட் 2

தமிழகத்தில் மதக் கலவரத்தைத் தூண்டி பலரது வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் அழித்ததோடு மட்டுமல்லாமல், இந்து – கிறிஸ்தவ – முசுலீம் மக்களுக்கிடையேயான ஒற்றுமையை சீர்குலைத்ததில் இந்து முன்னணியின் பங்கு முதன்மையானது. அத்தகைய அமைப்பின் நிறுவனர் இறந்ததில் நமக்கும் வருத்தம் தான்.

அன்னார் தமிழகத்தில் நடத்திய கலவரங்களுக்கு, மக்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் முன்னர் நிரந்தர பெயில் வாங்கி தப்பித்துக் கொண்டாரே என்பது தான் நமது வருத்தம் எல்லாம் !

சரண்

கோயம்பேடு சிறு வியாபாரிகளின் நிலை என்ன ? | காணொலி

கொரோனா பிரச்சினையை ஒட்டி கடந்த மே மாதம் 4-ம் தேதி முதல் சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. இதன் காரணமாக பெரிய, சிறு, குறு வியாபாரிகள் மட்டுமல்லாமல் இதனைச் சார்ந்து இருந்த கூலித் தொழிலாளர்கள், இழுவண்டி தொழிலாளர்கள் என அனைவரும் வருமானமின்றி போகும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த திருமழிசையில் பெரு வியாபாரிகளுக்கு மட்டும் கடைகளை ஏற்பாடு செய்து கொடுத்தது எடப்பாடி அரசு. இதனால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட சிறுவியாபாரிகளுக்கு, மீண்டும் கோயம்பேடு திறக்கப்படும் என்ற செய்தி சிறிதளவு நம்பிக்கையை ஏற்படுத்தியது.

ஆனால் அந்த நம்பிக்கையை வெடி வைத்துத் தகர்க்கும் விதமாக 2400, 1200 மற்றும் 600 சதுர அடி கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருக்கிறது எடப்பாடி அரசு. 300, 150 சதுர அடி கடைகளுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

கோயம்பேடு மார்க்கெட்டால் நேரடியாக பயன்பெறும் கூலித் தொழிலாளர்கள் மட்டுமே சுமார் 20,000 பேர் இருக்கும் நிலையில் அவர்கள் வாழ்க்கை கேள்விக்குள்ளாகி இருக்கிறது.  இது குறித்து கோயம்பேடு சிறு வியாபாரிகள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் கருத்து என்ன ?

பாருங்கள் ! பகிருங்கள் !

கங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா

1

சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் பாலிவுட்டின் ‘ஆண்டைகளுக்கு’ எதிராக கலகக் குரல் எழுப்பிய அதே கங்கணா ரணாவத் தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான பாஜகவின் அரசியலையும் அப்பட்டமாக ஏற்கிறார்.  இதன் பின்னணி என்ன என்பது குறித்து ஒரு பார்வையை அளித்திருக்கிறார், சமூக செயற்பாட்டாளர் காஞ்சா அய்லையா.

இடைநிலை சாதிகளிலிருந்து வந்த ஆதித்யநாத்தும், கங்கணாவும் இந்துத்துவ சக்திகளின் அடியாட்களாக மாறியுள்ளதையும் அவர்கள் பின்னால் பெரும்பான்மை சமூகம் திரளும் ஆபத்திருப்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார் காஞ்சா அய்லய்யா கூறுகிறார்.

0o0o0

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையும், சிவசேனா அரசாங்கத்திற்கு எதிரான கங்கனா ரணாவத்தின் கிளர்ச்சியும், பாலிவுட்டின் போதைப்பொருள் கலாச்சாரம் என்று அழைக்கப்படுவதும் வெறும் அரசியல் மட்டுமல்ல –  அது ஆழமான சாதிய பரிமாணங்களையும் கொண்டுள்ளது. இந்திய ஊடகங்கள், குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் இந்த கேள்வியைத் தவிர்க்க முயற்சிக்கின்றன அல்லது அவை இவ்விவகாரங்களை புறக்கணிப்பவையாக இருக்கின்றன

கங்கனா, சுஷாந்த்சிங், ரியா

சத்திரிய சமூகத்தைச் சேர்ந்த சுஷாந்த்தும் கங்கனாவும் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்கள். பாலிவுட், பிற பிராந்திய மொழித் திரைப்படத் தொழில்களைப் போலல்லாமல், பிராமணர்கள், பனியாக்கள், கயஸ்தாக்கள், காத்ரிகள் மற்றும் முல்லாக்களின் பழமைவாத கட்டுப்பாடுகளிலிருந்து வெளியேறிய ஒரு சில முஸ்லீம்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.

வரலாற்று ரீதியாக ஆளும் வர்ணமான சத்திரியர்கள், சுதந்திரத்திற்குப் பிறகு, நவீன, ஆங்கிலம் பேசும் மேற்கத்திய மயமாக்கப்பட்ட சமூகமாக உருவாகவில்லை. இந்த சமூகம் மிக சமீபத்திய காலம் வரை மிகவும் பழமைவாதத்துடன் இருந்தது. பாலிவுட் படிப்படியாக ஆங்கில படித்த, மேற்கத்திய முதலாளித்துவ கலாச்சாரத்துடன் – இந்தி மற்றும் ஆங்கிலம் என – இருமொழி பேசும் எழுதும் நபர்களைக் கொண்ட நவீன துறையாக வளர்ந்தது.

ஆரம்பத்தில் இருந்தே, இந்தி திரையுலகம் பல பொழுதுபோக்கு மற்றும் திரைப்பட தயாரிப்பு வடிவங்களில் ஹாலிவுட்டைப் பார்த்து அதை அப்படியே இங்கும் பின்பற்றியது. சந்தைப்படுத்துதற்குரிய நல்லதொரு காரணியான நவீனத்துவத்தின் பாசாங்குகளைக் கொண்டிருந்தாலும் கூட, அதன் மையத்தில் அது மிகவும் பிற்போக்குத்தனமாகவே உள்ளது. தயாரிப்பாளர்கள் பல்வேறு பின்னணிகளிலிருந்து வந்தாலும், பெரும்பாலான முதன்மை நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மேற்கத்திய தாக்கத்தைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆரம்பத்தில் இருந்தே வெளிநாட்டில் பிறந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடிகர்களாகவும் தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் வாய்ப்புகளைத் திறக்கப்பட்டிருந்தன. இந்தக் காரணிகள் அனைத்தும் அதற்கு ஒரு உலகளாவிய பரிமாணத்தைக் கொடுத்தன.

தேசியவாத இயக்கத்தின் போதும் அதற்குப் பின்னரும் பார்ப்பனர்கள், பனியாக்கள், கயஸ்தாக்கள் மற்றும் காத்ரிகள் சீர்திருத்தப் பட்டதால் திரையுலகிற்குள் விரைவாக நுழைந்தனர். 2014 இல் ஆர்.எஸ்.எஸ் / பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், தொழில்துறையில் ஒரு கலாச்சார மோதல் நிலவுகிறது. தவிர்க்கவியலாத வகையில் எதிர்வரப் போகும் நிலைமையை உணர்ந்து அவர்களில் சிலர் இந்துத்துவ சார்பு நிலைப்பாட்டை அழுத்தமாக எடுத்தனர். பாலிவுட் கலாச்சாரம் எப்போதும் இந்துத்துவ கலாச்சார பெரியண்ணன்தனத்துடன் முரண்பட்டதாகவே உள்ளது. இருப்பினும், இன்னும் பலரும் வகுப்புவாதம், மத பழமைவாதம் மற்றும் கலாச்சார பெரியண்ணன்தனத்துடன் இயைவது இல்லை.

சத்திரியர்கள் தங்கள் நிலப்பிரபுத்துவ இந்து கலாச்சாரத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததால், இந்தத் தொழிற்துறைக்கு வெளியே இருந்தனர். இன்றும் கூட, வேறு எந்த இருபிறப்பாளர் சமூகத்தின் பெண்களையும் விட அவர்களின் பெண்கள்தான் அதிகமாக ஆண்களால் கட்டுப்படுத்தப்படுகின்றனர்.

இருபிறப்பாளர் சாதிகளான பார்ப்பன, பனியா, கயஸ்தா மற்றும் காத்ரி ஆகியவற்றைப் போல் அல்லாமல், சத்திரியர்கள் ஆங்கில வழிக் கல்வியைப் பயில தயங்கியபோது தங்கள் சமூக பீடத்திலிருந்து கீழிறங்கினர். இது அவர்களின் அரசியல் வாய்ப்புகளையும் பாதித்தது.

படிக்க :
♦ நான் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பிலிருந்து விலகியது ஏன் ? ஜெய் கோலியாவின் அனுபவம்
♦ இராமர் கோவில் : மூலக்கதை ஆர்.எஸ்.எஸ்.  திரைக்கதை தொல்லியல் துறை !

பார்ப்பனர்கள் ஆங்கில வழிக் கல்வியைப் பெற்று பயனடைந்தனர் – ராஜா ராம்மோகன் ராய் முதல் பண்டிட் ஜவஹர்லால் நேரு, அடல் பிஹாரி வாஜ்பாய் வரை (இடையில், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மொரார்ஜி தேசாய் மற்றும் பி.வி. நரசிம்ம ராவ்) – டெல்லியில் பார்ப்பன ஆதிக்கம் வெளிப்படையாகவே தெரிந்தது. பனியாக்களில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி முதல் ராம் மனோகர் லோஹியா, நரேந்திர மோடி (ஓபிசி சான்றிதழுடன்) வரை வெளிப்பட்டார்கள். ஆங்கிலக் கல்வியிலும் அவர்களின் தொழில்துறை மூலதனக் குவிப்பிலும் தங்களது வேர்களைக் கொண்டுள்ளனர். (மோடி ஆங்கிலம் படித்தவர் அல்ல என்றாலும், ஏகபோக பனியா மூலதனத்தின் அவரது ஆதரவு தளம் இணையற்றது).  சுபாஸ் சந்திரபோஸ் முதல் ராஜேந்திர பிரசாத், ஜெயபிரகாஷ் நாராயண் , லால் பகதூர் சாஸ்த்ரி, ஜோதி பாசு வரை கயாஸ்தா சமூகத்திலிருந்து வந்தனர். சில அரசியல் சூழ்நிலைகள் காரணமாக நாட்டின் பிரதமர்களாக ஆன இந்தர் குமார் குஜ்ரால் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் காத்ரி பின்னணியைச் சேர்ந்தவர்கள்.

நன்கு அறியப்பட்ட அரசியல்வாதிகளான வி.பி. சிங், சந்திர சேகர் ஆகியோர் பிரதமர்களானபோது, அவர்கள் இருவரையும் ஊடகங்கள் விரும்பவில்லை. சவுதாரி சரண் சிங் (ஜாட்) மற்றும் எச்.டி.தேவேகவுடா (ஒக்கலிகா) ஆகியோர் சூத்திர பிரதமர்களாக இருந்தனர். அவர்களுக்கும்  நல்ல வசதியோ, நல்ல ஆங்கிலக் கல்வியோ கிடைக்கப்பெறவில்லை. அந்த நிலையில் இருந்து, அவர்கள் கிராமப்புற விவசாய பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தினர். இந்நிலைமையின் ஒரு பகுதியாகவே, பாலிவுட்டில் அதிகமான சூத்திரர்களும் தலித்துகளும் உயர் மட்ட வேலைகளில் இல்லை.

இதில் ஆர்வமூட்டக்கூடியது என்னவென்றால், வி.பி.சிங் மற்றும் சந்திர சேகர் இருவரும் ஏழைகளுக்கு ஆதரவானவர்களாகவும் சிங்கின் ஓபிசி / எஸ்சி / எஸ்டி சார்பு நிலை நன்கு அறியப்பட்டதாகும். அவர்கள் சத்திரியர்களின் தலைவர்கள் அல்ல.

ராமர் கோயில் பிரச்சினையை தனது துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவதன் மூலம் யோகி ஆதித்யநாத் ஒரு சத்திரிய பின்னணியில் இருந்து உருவாகிவரும் வரை, அவர்களில் வலுவான தலைவர் அங்கு இல்லை. யோகி, தனது இந்துத்துவ உடையில் ஒரு துறவியாக (பார்ப்பனர்கள் எதிர்த்த விஸ்வாமித்ரரைப் போலவே), இந்துத்துவப் படைகளின் தளபதி நிலையை அடைந்தார். உ.பி.யில் சத்திரியர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் இடையிலான மோதலுக்கு ஒரு உதாரணம் அண்மையில் ஒரு ‘என்கவுண்டரில்’ ரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டதில் காண முடிந்தது.

பாலிவுட்டில் சாதி ஆதிக்கம் ! நன்றி : யூத் கி ஆவாஸ்

ஒரு சமூகமாக சத்திரியர்கள் இப்போது தங்களை ஒழுங்கமைத்துக் கொள்வதன் மூலம், பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து முன்னேறிச் செல்கிறார்கள். அவர்கள் ஒரு ஸ்ரீ ராஜ்புத் கர்ணி சேனாவை உருவாக்கியுள்ளனர், இது பத்மாவத் படத்திற்கு எதிராக பெருமளவில் எதிர்ப்புத் தெரிவித்தது, இதில் தீபிகா படுகோனே (ஒரு சரஸ்வத் பார்ப்பனர்) நடித்தார். இப்போது கங்கனாவை ‘பாதுகாக்க’, அவருக்கு வழங்கப்பட்ட மத்திய போலீஸ் பாதுகாப்புக்கு மேலாக,  கர்ணி சேனாவும் யோகியின் ஆதரவோடு மும்பைக்கு வந்துள்ளது. கங்கனா ரணாவத் சிவசேனாவுக்கு எதிராக பாஜக சார்பு நிலைப்பாட்டை எடுப்பதைப் பயனுள்ளதாகக் கருதுகிறார். (உத்தவ் தாக்கரேயின் குடும்பம் சந்திரசேன கயஸ்த பிரபு குலத்தைச் சேர்ந்தது என்றாலும், இக்கட்சிக்கு மராட்டியர்கள் மற்றும் ஓபிசிக்களின் ஆதரவு உள்ளது.)

கங்கனா, தனது ஆரம்ப ஆண்டுகளில், ஆங்கிலத்தில் சரளமின்மை மற்றும் அவரது சிறு நகர பின்புலம் காரணமாக பாலிவுட்டில் களத்திலிருக்க முடியாது என கூறியிருந்தார். ஆனால் இப்போதும் களத்திலிருக்கிறார். இப்போது அவர் வங்காள பார்ப்பனப் பெண்ணான ரியா சக்ரவர்த்தியுடன்  சண்டையிடக்கூடிய, ஜெயா பச்சன் (பிறப்பால் ஒரு பார்ப்பனர், ஒரு கயஸ்தாவை மணந்தவர்) போன்ற வலிமையானவர்களையும் தாக்கக் கூடிய ஒரு கட்டத்தை அடைந்துவிட்டார்.

கங்கனா ஒரு வலுவான இந்துத்துவ தேசியவாத அடையாளத்துடன், காங்கிரஸ் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அவர் சிவசேனாவை ‘சோனியா சேனா’ என வர்ணித்தார்.

2019-ம் ஆண்டு அவரது மணிகர்னிகா திரைப்படத்தில், ஜான்சியின் ராணி லட்சுமிபாய் வேடத்தில் கங்கணா நடித்துள்ளார். ஒரு இணை இயக்குநராக, வரலாற்றுச் சிறப்புமிக்க லட்சுமிபாயை சத்திரிய பெண்களின் சீர்திருத்த மற்றும் பெண்ணிய முன்மாதிரியாக கங்கனாவால் சிதைக்க முடிந்தது. லட்சுமிபாய் ஒரு பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், அவர் திருமணத்தால் சத்திரியரானார், கங்கனா புத்திசாலித்தனமாக அதை தனது சித்தரிப்பில் பயன்படுத்தினார்.

தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா (ஒரு காத்ரி) ஆகியோரின் குடும்பங்கள், தங்கள் மகள்களை அவர்கள் விரும்பும் எந்தவொரு தொழிலையும் மேற்கொள்ள ஊக்குவித்தது போலல்லாமல், மாடலிங் மற்றும் சினிமாவுக்கான  முயற்சியை கங்கணா குடும்பத்தினர் எதிர்த்தனர். படுகோன் அல்லது சோப்ரா அல்லது ஐஸ்வர்யா ராய் மற்றும் ஷில்பா ஷெட்டி (பன்ட் சமூகத்தில் நன்கு படித்த பிரிவைச் சேர்ந்தவர்கள்) ஆகியோரின் குடும்பத்தைப் போல மேற்கத்திய வாழ்க்கை முறைகளுக்கு கங்கனாவின் குடும்பத்தினர் பழக்கப்படவில்லை.

நவீனமான எதையும் மிகுந்த விரோதத்துடன் எதிர்த்த ஆளும் வர்க்கங்களாக இருந்த வரலாற்றைக் கொண்டுள்ள ஒரு சமூகத்திலிருந்து கங்கணா ரணாவத் வந்தவர். பிற இருபிறப்பாளர்கள் மற்றும் முஸ்லீம்களைப் போலல்லாமல், சத்திரியர்களுக்கு பாலிவுட்டில் பெரிய முதலீடுகள் இல்லை. அவரது தைரியம் அவரது தற்போதைய அரசியல் நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. யோகி ஆதித்யநாத் இப்போது மும்பையின் முக்கியத்துவத்தை குறைக்க உ.பி.யில் ஒரு திரைப்பட நகரத்தை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளார். கங்கணாவும் தேசிய (இந்தி) திரைப்படத்துறையாக உள்ள பாலிவுட்டின் ஏகபோகத்தை குறைக்க விரும்புகிறார். இந்துத்துவ – தேசியவாத யோசனையுடன் முழு திரையுலகிற்குமான ஒரே திரைப்படத்துறை என்பதற்காக ஏற்கெனவே போடப்பட்ட திட்டத்தின் வழிப்பாதை வரைபடம்தான் இது. இது அவர்களின் ‘ஒரு நாடு ஒரு கலாச்சார தேசியவாதம்’ திட்டத்தின் ஒரு பகுதியாகும். கங்கனா இதற்கு சரியாக பொருந்துகிறார்.

படிக்க :
♦ சோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா !
♦ எல்கார் பரிஷத் வழக்கு : மாவோயிஸ்ட் பட்டம் கட்டி செயல்பாட்டாளர்களை முடக்கும் பா.ஜ.க!

கங்கனா ஒரு முழு சமூகத்தின் ஆதரவுடன் வளர்ந்து வரும் கதாநாயகி மற்றும் தயாரிப்பாளர் ஆவார். முழு சத்திரிய சமூகமும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் வருத்தமடைந்துள்ளது, மேலும் இது ரியா சக்ரவர்த்தியை குடைவதன் மூலம் அவரது மரணத்தை விசாரிக்க மத்திய அரசை கட்டாயப்படுத்தியது. ரியா சக்கரவர்த்தி வங்காளத்தைச் சேர்ந்த ஒரு பிராமணர் என்பதால் துன்புறுத்தப்படுகிறார் என மீண்டும், காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அவருக்கு பாராளுமன்றத்தில் ஆதரவளித்தார். கங்கனாவும் ஜெயா பச்சனைத் தாக்கியதால், விஷயங்கள் மேலும் மேலும் வெளிச்சமின்றி இருண்டன.

சத்திரியர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் வலுவான ஆதரவாளர்கள். ஏனெனில் அந்த அமைப்பின் பார்ப்பனர் அல்லாத ஒரே தலைவரான ராஜேந்திர சிங் (ராஜு பையா), ஒரு சத்திரியர். அவருடைய பொறுப்புக் காலத்தில்தான் ராம் ஜன்மபூமி கோயில் பிரச்சினை மீண்டும் எடுக்கப்பட்டது. தமது நிறுவனக் கட்டமைப்பில் ஆர்.எஸ்.எஸ்ஸால் சத்திரியர்களை புறக்கணிக்க முடியாது. அவர்கள் தங்கள் இருப்பை உணர ஆரம்பித்துள்ளனர். கங்கனா சினிமாவில் மட்டும் கண்காணிக்கப்பட வேண்டிய நபரல்ல, அரசியலிலும் தான்.

இருப்பினும், தற்போது வரை நவீனத்துவம் மற்றும் ஆங்கில வழி கல்வி ஆகியவற்றிற்குக் பரிச்சியம் என்ற அடிப்படையில் இருபிறப்பாளர் சமூகத்துடன் பலவீனமான கண்ணியாக இருக்கின்றனர். வரலாற்று ரீதியாக அவர்கள் பெருமளவில் இறைச்சி உண்பவர்கள் என்றாலும், அவர்களில் சிலர் ஆர்.எஸ்.எஸ்ஸின் உணவு கலாச்சாரத்தில் பொருந்த, சைவ உணவு பழக்கத்திற்கு மாறுகிறார்கள்.  ஆர்வமூட்டும்வகையில், பார்ப்பனர்களும் பனியாக்களும் இறைச்சி உண்பவர்களாக மாறும்  திரைக் கலாச்சாரத்தில் கங்கனா சைவமாக மாறியதாகக் கூறப்படுகிறது.

சுஷாந்த் ராஜ்புத்தின் அகால தற்கொலையும் கங்கனா ரணாவத் ஒரு சண்டையிடும் கதாநாயகியானதும் வலதுசாரி ஊடகங்களை அந்த சமூகத்தின் மீது அதிக கவனம் செலுத்த வைக்கின்றன. உத்தரபிரதேசத்தில், விகாஸ் துபே என்கவுண்டருக்குப் பின்னர் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஆதரவுடன் பார்ப்பனர்கள் பருஷுராமரை முன்னிறுத்த முயன்றனர். இப்போது எங்கும் கங்கனா இருக்கிறார்.

யோகி ஆதித்யநாத் கடந்த காலங்களில் வேறு எந்த சமூகத்தையும் போல அல்லாமல் சத்திரிய சமூகத்தை ஒருங்கிணைத்துள்ளார். கங்கனாவின் எழுச்சி இருபிறப்பாளர்கள் முகாமில் உள்ள பழைய மேலாதிக்க சமூகங்களுக்கு பாலிவுட் தொழில்துறையிலும் மற்ற துறைகளிலும் சத்திரியர்கள் விடுக்கும் சவாலாகவே பார்க்கலாம்.

கட்டுரையாளர் : காஞ்சா அய்லய்யா
தமிழாக்கம் : கலைமதி
நன்றி : தி வயர்