Sunday, June 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 229

நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும் ! திரிபுவாதம் வீழ்த்தப்படட்டும் !

0

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார வேலை பற்றிய தேசிய மாநாட்டுரை
(1957, மார்ச் 12)
பாகம் – 5 ( இறுதிப் பாகம்)

முந்தைய பாகங்கள் >> 1 2 3 4

ழாவதாக, “அகலத் திறப்பதா?” அல்லது “கட்டுப்படுத்துவதா?” என்பதாகும்.

இது கொள்கை பற்றிய ஒரு பிரச்சினை. ”நூறு மலர்கள் மலரட்டும், நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும்” என்பது ஒரு அடிப்படைக் கொள்கை மாத்திரமல்ல, ஒரு நீண்டகாலக் கொள்கையும் ஆகும். இது வெறும் தற்காலிகக் கொள்கை அல்ல. இந்த விவாதத்தின் போது தோழர்கள் ”கட்டுப்படுத்துவ”தற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இந்தக் கருத்து ஒரு சரியான கருத்து என நான் கருதுகின்றேன். கட்சி மத்தியக் கமிட்டியும் நாம் “அகலத் திறக்க” வேண்டும், “கட்டுப்படுத்த”க் கூடாது என்று கருதுகின்றது.

நமது நாட்டை வழிநடத்துவதில் இரண்டு மாற்றுமுறைகளை, வேறு வார்த்தைகளில் சொன்னால் இரண்டு மாற்றுக் கொள்கைகளை, அதாவது “அகலத் திறப்பது” அல்லது “கட்டுப்படுத்துவது” என்ற கொள்கைகளைக் கடைப்பிடிக்க முடியும். ”அகலத் திறப்பது” என்பது அனைவரும் பேசவும் விமர்சனம் செய்யவும் விவாதிக்கவும் துணிவு பெறுவதற்காக, அவர்களைச் சுதந்திரமாகத் தமது அபிப்பிராயங்களைத் தெரிவிக்க விடுவது என்று அர்த்தம்; தவறான கருத்துக்களுக்கும் எந்தவிதமான நச்சுக் களைகளுக்கும் அஞ்சாமல் இருப்பது என்று அர்த்தம்; விமர்சனம் எதிர் விமர்சனம் இரண்டுக்கும் சுதந்திரம் கொடுத்து, பல்வேறு கருத்துக்களையுடைய மக்கள் மத்தியில் விவாதத்தையும் விமர்சனத்தையும் ஊக்கப்படுத்துவது என்று அர்த்தம். தவறான கருத்துக்களை அடக்குவது அல்ல, மாறாக அவர்களுக்கு நியாயங்காட்டி விளக்குவதன் மூலம் நம்பிக்கை ஊட்டுவது என்று அர்த்தம்.

”கட்டுப்படுத்துவது” என்றால், வேறுபட்ட அபிப்பிராயங்களைத் தெரிவிக்காமல், தவறான கருத்துக்களைக் கூறவிடாமல் மக்களைத் தடுப்பது, அப்படிச் செய்தால் அவர்களை ‘ ‘ஒரே அடியில் முடித்துவிடுவது” என்று அர்த்தம்.  இது முரண்பாடுகளைத் தீர்ப்பதற்குப் பதில் அவற்றை உக்கிரமாக்கும். ”அகலத் திறப்பது’ ‘, ‘ ‘கட்டுப்படுத்துவது” என்ற இரண்டு கொள்கைகளில் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் முன்னதைத் தேர்ந்தெடுக்கின்றோம். காரணம், நமது நாட்டை ஸ்திரப்படுத்தி நமது கலாச்சாரத்தை விருத்தி செய்வதற்குத் துணை செய்யும் கொள்கை அது.

படிக்க :
♦ ஒரு தலைப்பட்சமான பார்வை தீர்வு தராது | தோழர் மாவோ
♦ சோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ

நாம் “அகலத் திறப்பது” என்ற கொள்கையை உபயோகித்து லட்சோப லட்சம் அறிவுஜீவிகளையும் ஐக்கியப்படுத்தி, அவர்களுடைய இன்றைய நோக்கை மாற்றத் தயாராக இருக்கின்றோம். நான் மேலே குறிப்பிட்டது போல, நமது நாட்டிலுள்ள அறிவுஜீவிகளில் ஏகப்பெரும்பான்மையோர் முன்னேற்றம் அடைய, தம்மைத் தாமே புனருருவாக்க விரும்புகின்றனர்; அவர்கள் தம்மைத் தாமே புனருருவாக்கும் ஆற்றலும் உடையவர்கள். இது சம்பந்தமாக நாம் கடைப்பிடிக்கும் கொள்கை பெரியதொரு பாத்திரத்தை வகிக்கும்.

அறிவுஜீவிகளின் பிரச்சினை என்பது, எல்லாவற்றுக்கும் மேலாக சித்தாந்தம் தழுவிய ஒரு பிரச்சினையாகும். சித்தாந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முரட்டுத்தனமான அதிகார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தீங்கு விளைவிக்குமேயன்றித் துணை செய்யாது. அறிவுஜீவிகளைப் புனருருவாக்குவது, சிறப்பாக அவர்களுடைய உலக நோக்கை மாற்றுவது என்பது நீண்ட காலம் நடைபெற வேண்டியதோர் போக்காகும். சித்தாந்தப் புனருருவாக்கம் நீடித்த, பொறுமையான, பிரயாசையான வேலையை உள்ளடக்கியது என்பதை நமது தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வாழ்வில் பல தசாப்தங்களாக உருவாக்கப்பட்டு வந்த மக்களின் சித்தாந்தத்தை ஒருசில விரிவுரைகள் ஆற்றுவதன் மூலம் அல்லது ஒருசில கூட்டங்கள் கூட்டுவதன் மூலம் மாற்ற முயற்சிக்கக் கூடாது. அவர்களை நம்பச் செய்யும் ஒரே ஒரு வழி இணங்கச் செய்வதன்றிப் பலவந்தப்படுத்துவதல்ல. பலவந்தப்படுத்துவதன் மூலம் ஒருபோதும் நம்பச் செய்ய முடியாது. பலாத்காரத்தின் மூலம் அவர்களை நம்பச் செய்ய முயல்வது ஒருபோதும் வேலை செய்யாது.

எதிரியைச் சமாளிக்கும் பொழுது இத்தகைய முறை அனுமதிக்கக் கூடியது; ஆனால் தோழர்களுடன் அல்லது நண்பர்களுடன் பழகும் பொழுது இது முற் றிலும் அனுமதிக்கப்படக் கூடாது. பிறருக்கு நம்பிக்கை ஊட்டுவது எப்படி என்று நமக்குத் தெரியாவிட்டால், யாது செய்வது? அப்படியென்றால் நாம் படிக்க வேண்டும். விவாதத்தின் மூலமும் நியாயங்காட்டி விளக்குவதன் மூலமும் நாம் தவறான கருத்துக்களை வெற்றி கொள்ளப் படிக்க வேண்டும்.

”நூறு மலர்கள் மலரட்டும்” என்பது கலைகளை விருத்தி செய்யும் ஒரு வழி; ‘‘நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும்” என்பது விஞ்ஞானத்தை விருத்தி செய்யும் ஒரு வழி. இக்கொள்கை விஞ்ஞானத்தையும் கலைகளையும் விருத்தி செய்யும் ஒரு சிறந்த முறை மாத்திரமல்ல, இதன் பிரயோகத்தை விரிவாக்கினால் , அது நமது வேலை முழுவதையும் செய்வதற்குரிய ஒரு சிறந்த முறையுமாகும்.

அது நமது பிழைகளைக் குறைப்பதற்குத் துணை செய்யும். நமக்குப் புரியாத விசயங்கள் பல இருக்கின்றன. எனவே நாம் அவற்றைச் சமாளிக்க முடியாமல் இருக்கின்றோம். ஆனால் விவாதம், போராட்டம் ஆகியவற்றின் மூலம் நாம் அவற்றைப் புரிந்து அவற்றைச் சமாளிப்பது எப்படி என்பதை அறிந்து கொள்வோம். உண்மை என்பது பல்வேறு கருத்துக்களுக்கிடையில் நடைபெறும் விவாதத்தின் மூலம் வளர்கின்றது. நச்சுக் களைகள், மார்க்சிய – எதிர்ப்புக் கருத்துக்கள் எல்லாவற்றையும் பொறுத்தவரையில் கூட, இந்த முறை கைக்கொள்ளப்படக் கூடியது. ஏனென்றால் மார்க்சியம் அவற்றுக்கு எதிரான போராட்டத்தில் வளர்ச்சியடையும். இது எதிரானவற்றின் போராட்டத்தின் மூலம் காணும் , வளர்ச்சி, இயங்கியலுக்கு இசைவான வளர்ச்சி.

உண்மை, நன்மை, அழகு ஆகியவை பற்றி மக்கள் காலாதிகாலமாக விவாதித்து வரவில்லையா? பொய்மை, தீமை, அசிங்கம் ஆகியவை அவற்றிற்கு எதிரானவை ஆகும். முன்னவையால் பின்னவை இல்லாமல் இருக்க முடியாது. உண்மை பொய்மைக்கு எதிராக இருக்கின்றது. இயற்கையில் போல சமுதாயத்திலும் முழுமையானவை ஒவ்வொன்றும் தவிர்க்கமுடியாதபடி பல்வேறு பகுதிகளாகப் பிரிகின்றன; ஸ்தூலமான வெவ்வேறு சூழ்நிலைகளில் உள்ளடக்கத்திலும் உருவத்திலும் மாத்திரம் அவை வேறுபட்டு விளங்குகின்றன.

தவறும் அசிங்கமும் என்றென்றும் உள்ள தோற்றப்பாடுகள். சரி – பிழை, நன்மை – தீமை, அழகு – அசிங்கம் போன்ற எதிரானவையும் என்றென்றும் இருக்கவே செய்யும். நறுமலர்கள் நச்சுக் களைகளைப் பொறுத்தவரையிலும் இது உண்மையாகும். அவற்றுக்கிடையிலுள்ள உறவு என்பது எதிரானவற்றின் ஐக்கியமும் போராட்டமும் தழுவிய ஒன்று. ஒப்பிட்டுப் பார்க்கும் பண்பு இல்லாவிட்டால் வேறுபாடு என்பது இருக்க முடியாது. வேறுபாடும் போராட்டமும் இல்லாவிட்டால் வளர்ச்சி என்பதும் இருக்காது.

உண்மை பொய்மைக்கு எதிரான அதன் போராட்டத்தில் வளர்கின்றது. இவ்வாறுதான் மார்க்சியம் வளர்கின்றது. மார்க்சியம் பூர்ஷுவா, குட்டி பூர்ஷுவா வர்க்க சித்தாந்தத்துக்கு எதிரான போராட்டத்தில் வளர்கிறது; இத்தகைய போராட்டத்தின்மூலம்தான் அது வளரமுடியும்.

நாம் “அகலத் திறப்பது” என்ற கொள்கைக்காக நிற்கிறோம். இன்றுவரையில் இது குறைவாகக் காணப்படுகிறதேயன்றி, கூடுதலாகக் காணப்படவில்லை. நாம் அகலத் திறப்பதற்கு அஞ்சக் கூடாது; அன்றி, விமர்சனத்துக்கோ நச்சுக் களைகளுக்கோ கூட அஞ்சக்கூடாது. மார்க்சியம் என்பது விஞ்ஞானரீதியான உண்மை. அது விமர்சனத்துக்கு அஞ்சாது; அதை விமர்சனத்தால் தோற்கடிக்க முடியாது. கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் அரசாங்கம் ஆகியவற்றைப் பொறுத்தவரையிலும் இது உண்மையாகும். அவை விமர்சனத்துக்கு அஞ்சமாட்டா; அவற்றை விமர்சனத்தால் தோற்கடிக்க முடியாது.

பிழையான சில விசயங்கள் எப்பொழுதும் இருக்கவே செய்யும். அதுபற்றி அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. சமீபத்தில் சில பூதங்களும் பிசாசுகளும் அரங்கில் காட்சியளித்தன. இதைக் கண்டு சில தோழர்கள் பெரிதும் கவலைப்பட்டார்கள். எனது கருத்தில் இவை சில இருப்பதால் ஒன்றும் நேர்ந்துவிடாது. ஒருசில தசாப்தங்களில் இத்தகைய பூதங்களும் பிசாசுகளும் அரங்கிலிருந்து முற்றாக மறைந்துவிடும். அப்பொழுது அவற்றைப் பார்க்க விரும்பினாலும்கூட நீங்கள் பார்க்க முடியாது.

படிக்க :
♦ நீதித்துறையை விமர்சிக்க அனைத்து குடிமக்களுக்கும் உரிமை உண்டு !
♦ மாமேதை லெனின் : அறிவாளிகளின் அந்தரங்கம் || லெனின் – தலைவர்! தோழர்! மனிதர்!

நாம் சரியானவற்றை வளர்த்துப் பிழையானவற்றை எதிர்க்க வேண்டும். ஆனால் தவறான விசயங்களுடன் மக்கள் தொடர்பு கொண்டால் நாம் அதற்கு அஞ்சக்கூடாது. விபரீதமான தீய விசயங்கள், தவறான கருத்துகள் ஆகியவற்றுடன் எவ்வித தொடர்பும் கொள்ளக் கூடாது என்று மக்களைத் தடைசெய்கின்ற அல்லது அரங்கிலுள்ள பூதங்கள் பிசாசுகளைப் பார்க்கக் கூடாது என்று அவர்களைத் தடுக்கின்ற நிர்வாக உத்தரவுகளைச் சும்மா பிறப்பித்தால் எவ்விதப் பிரச்சினையும் தீர்ந்துவிடாது. உண்மையில் அத்தகைய விசயங்களைப் பரப்ப வேண்டும் என்று நான் வாதாடவில்லை.

“அவற்றில் சில இருப்பதால் ஒன்றும் நேர்ந்து விடாது” என்று மாத்திரமே நான் கூறுகின்றேன். குறிப்பிட்ட சில தவறான விசயங்கள் இருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை; இதை ஒட்டி அஞ்சுவதற்கும் எவ்வித காரணமும் இல்லை. அது உண்மையில் மக்கள் அவற்றை எதிர்த்து மேலும் நன்றாகப் போராடக் கற்றுக்கொள்வதற்குத் துணை செய்யும். பெரும் புயல்களுக்குக்கூட அஞ்ச வேண்டியதில்லை. பெரும் புயல்களுக்கு ஊடாகத்தான் மனித சமுதாயம் முன்னேறுகின்றது.

நமது நாட்டில் பூர்ஷுவா வர்க்க, குட்டி பூர்ஷுவா வர்க்க சித்தாந்தமும், மார்க்சிய – எதிர்ப்புச் சித்தாந்தமும் இன்னும் நீண்டகாலம் நிலைத்திருக்கும். நமது நாட்டில் சோசலிச அமைப்பு அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்டு விட்டது. உற்பத்தி சாதனங்களின் உடைமைமுறை மாற்றத்திலும் நாம் அடிப்படை வெற்றி ஈட்டியுள்ளோம். ஆனால், அரசியல், சித்தாந்த முன்னணிகளில் நாம் இன்னும் பூரண வெற்றி பெறவில்லை. சித்தாந்தத் துறையில், பாட்டாளி வர்க்கத்துக்கும் பூர்ஷுவா வர்க்கத்துக்கும் இடையில் நடைபெறும் போராட்டத்தில் ‘எது வெல்லும்’ என்ற பிரச்சினை உண்மையில் இன்னும் தீர்க்கப்படவில்லை.

பூர்ஷுவா வர்க்க, குட்டி பூர்ஷுவா வர்க்க சித்தாந்தத்துக்கு எதிராக நாம் இன்னும் ஒரு நீடித்த போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கின்றது. இதைப் புரிந்து கொள்ளாமல், சித்தாந்தப் போராட்டத்தைக் கைவிடுவது தவறு. தவறான கருத்துகள் எல்லாம், நச்சுக் களைகள் எல்லாம், பூதங்கள் பிசாசுகள் எல்லாம் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட வேண்டும். அவை தம்மிஷ்டப்படி தலைவிரித்தாடுவதை அனுமதிக்கக் கூடாது. இருந்தும், விமர்சனம் என்பது நியாயம் நிறைந்ததாக, ஆராய்ந்து விளக்குவதாக, நம்பிக்கை ஊட்டுவதாக இருக்க வேண்டும்; கரடுமுரடானதாக, அதிகாரத்துவமுடையதாக, நிலையியலானதாக, அல்லது வரட்டுவாதமாக இருக்கக் கூடாது.

நீண்டகாலமாக மக்கள் வரட்டுவாதத்தை எதிர்த்துக் கூடுதலான விமர்சனத்தை நடத்தி வருகின்றார்கள். இது செய்ய வேண்டியதே. ஆனால் திரிபுவாதத்தை விமர்சனம் செய்ய அவர்கள் அடிக்கடி தவறி விடுகின்றனர். வரட்டு வாதம், திரிபுவாதம் இரண்டும் மார்க்சியத்துக்கு விரோதமானவை. மார்க்சியம் நிச்சயம் முன்னேறி வளரும். அனுஷ்டானத்தின் (நடைமுறையின்) வளர்ச்சியுடன் அதுவும் நிச்சயம் வளரும். அது முன்னேறாமல் தேங்கி நிற்க முடியாது. அது ஸ்தம்பித்து, மாறாத நிலையில் நின்றால், அது உயிரற்றதாகிவிடும்.

இருந்தும், மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை அத்துமீறக் கூடாது. அத்துமீறினால், தவறுகள் இழைக்கப்படும். ஒரு நிலையியல் கண்ணோட்டத்திலிருந்து மார்க்சியத்தை அணுகுவதும், அதை ஏதும் விறைப்பான ஒன்றாகக் கருதுவதும் வரட்டுவாதம் ஆகும்.

மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நிராகரித்தால், அதன் சர்வவியாபக உண்மையை நிராகரித்தால், அது திரிபுவாதம் ஆகும். திரிபுவாதம் என்பது பூர்ஷுவா வர்க்க சித்தாந்தத்தின் ஒரு வடிவம்.

சோசலிசத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் இடையிலுள்ள வேற்றுமைகளை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கும் பூர்ஷுவா வர்க்க சர்வாதிகாரத்துக்கும் இடையிலுள்ள வேற்றுமைகளை, திரிபுவாதிகள் மறுக்கின்றனர். அவர்கள் வக்காலத்து வாங்குவது உண்மையில் முதலாளித்துவ மார்க்கமன்றி, சோசலிச மார்க்கமல்ல. இன்றைய நிலைமைகளில் திரிபுவாதம் என்பது வரட்டுவாதத்திலும் பார்க்க ஆபத்தானது. இன்று சித்தாந்தத் துறையில் நமது முக்கியமான கடமைகளில் ஒன்று திரிபுவாதத்துக்கு எதிரான விமர்சனத்தை மலரச் செய்வதாகும்.

திருத்தல்வாதத்திற்கு எதிராக லெனின் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு

எட்டாவதாகவும், கடைசியாகவும், மாகாணங்கள், மாநகரங்கள், சுயாட்சிப் பிரதேசங்கள் ஆகியவற்றின் கட்சிக் கமிட்டிகள் சித்தாந்தம் பற்றிய இப்பிரச்சினையை இறுகப்பற்ற வேண்டும்.

இங்கு சமூகமாயுள்ள தோழர்கள் சிலர் நான் தொட வேண்டும் என்று விரும்பிய பிரச்சினை இது. பல இடங்களில் கட்சிக் கமிட்டிகள் சித்தாந்தம் பற்றிய பிரச்சினையை இன்னும் இறுகப் பற்றவில்லை, அல்லது இவ்விசயத்தில் மிகக் குறைவாகவே செய்துள்ளன. இதற்குரிய பிரதான காரணம் அவை பரபரப்பாக வேலையில் ஈடுபட்டுள்ளன என்பதாகும். ஆனால் அவை இப்பிரச்சினையை இறுகப்பற்ற வேண்டும். “இறுகப் பற்றுவது” என்றால் அதை நிகழ்ச்சிநிரலில் வைத்து ஆராய வேண்டும் என்று நான் கருதுகின்றேன்.

முன்னைய புரட்சிக் காலங்களுக்கு இயல்பான பெருமளவில் நிகழ்ந்த கொந்தளிக்கும் வெகுஜன வர்க்கப் போராட்டங்கள் அடிப்படையில் முடிவடைந்துவிட்டாலும் வர்க்கப் போராட்டம், பிரதானமாக அரசியல் சித்தாந்த முன்னணிகளில் நடைபெறும் வர்க்கப் போராட்டம் இன்னும் இருக்கின்றது. இது மிகக் கூர்மையாகவும் நடைபெறுகின்றது. சித்தாந்தம் பற்றிய பிரச்சினை இன்று மிக முக்கியமான பிரச்சினையாகிவிட்டது.

எல்லாப் பாகங்களிலுமுள்ள கட்சிக் கமிட்டிகளின் முதற் காரியதரிசிகள் தாமே இந்தப் பிரச்சினையை இறுகப்பற்ற வேண் டும். இப்பிரச்சினையில் அவர்கள் பாரதூரமான கவனம் செலுத்தி, இதை நன்கு ஆராய்ந்தால்தான் இதைச் சரியான முறையில் தீர்க்க முடியும். நாம் இன்று கூட்டிய மாநாடு போல எல்லாப் பிரதேசங்களும் பிரச்சார வேலை பற்றிய மாநாடுகளைக் கூட்டி ஸ்தலச் சித்தாந்த வேலை பற்றியும் சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்சினைகள் பற்றியும் விவாதிக்க வேண்டும். இத்தகைய கூட்டங்களில் கட்சித் தோழர்கள் மாத்திரமல்ல கட்சிக்கு வெளியிலுள்ள மக்களும் இன்னும் வேறுபட்ட அபிப்பிராயங்களைக் கொண்ட மக்களும்கூடக் கலந்துகொள்ள வேண்டும். இன்றைய மாநாட்டின் அனுபவம் நிரூபித்துள்ளது போல இவை அனைத்தும் நன்மை செய்யுமே அன்றித் தீமை செய்ய மாட்டா .

(முற்றும்)

ஒரு தலைப்பட்சமான பார்வை தீர்வு தராது | தோழர் மாவோ

1

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார வேலை பற்றிய தேசிய மாநாட்டுரை
(1957, மார்ச் 12)
பாகம் – 4

முந்தைய பாகங்கள் >> 1 2 3

ஆறாவதாக ஒருதலைப்பட்சப் போக்குப் பற்றிய பிரச்சினை.

ஒருதலைப்பட்சப் போக்கு என்றால் விசயங்களை ஒரு திக்கில் பார்ப்பது; அதாவது பிரச்சினைகளை நிலையியல் முறையில் அணுகுவது என்று அர்த்தமாகும். நமது வேலையை மதிப்பிடும்போது, ஒவ்வொரு விசயத்திலும் எல்லாம் சாதகமானது அல்லது எல்லாம் பாதகமானது என்று கருதுவது ஒருதலைப்பட்சப் போக்காகும். கம்யூனிஸ்ட் கட்சியிலும் இப்படிச் செய்யும் நபர்கள் குறைவல்ல; கட்சிக்கு வெளியிலும் பலர் இருக்கின்றனர்.

எல்லாவற்றையும் சாதகமானது என்று கருதுவதென்றால், நன்மையை மாத்திரம் பார்த்து, தீமையைப் பார்க்கத் தவறுவது, பாராட்டை மட்டும் ஏற்று, விமர்சனத்தைச் சகிக்கத் தவறுவது ஆகும். ஒவ்வொரு அம்சத்திலும் நமது வேலை சிறந்தது என்று கதைப்பது உண்மைக்குப் பொருந்தியதல்ல. ஒவ்வொன்றும் சிறந்தது என்பது உண்மையல்ல; குறைபாடுகளும் தவறுகளும் இன்னும் இருக்கின்றன. ஆனால் எல்லாம் தீயவை என்பதும் உண்மையல்ல. அதுவும் சான்றுகளுக்கு மாறானது.

இங்கு நாம் விசயங்களை ஸ்தூலமாக ஆராய வேண்டும். எல்லாவற்றையும் நிராகரிப்பதன் அர்த்தம், எவ்வித ஆராய்வும் இல்லாமல், ஒன்றும் நன்றாகச் செய்யப்படவில்லை, மாபெரும் சோசலிச நிர்மாண இலட்சியம், பல பத்துக் கோடி மக்கள் பங்கு பற்றும் இந்த மகத்தான போராட்டம் எல்லாம் ஒரே குழறுபடி, இதில் பாராட்டக் கூடியது ஒன்றுமே இல்லை என்று எண்ணுவதாகும்.

படிக்க :
♦ பாரதியார் பல்கலை : NEP கலந்தாய்வுக் கூட்டம் எனும் பெயரில் கண்துடைப்பு !
♦  ‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு !

இத்தகைய கருத்துகள் உடையவர்களுக்கும், சோசலிச அமைப்புமீது பகைமையுடையவர்களுக்கும் இடையில் ஒரு வித்தியாசம் இருந்த போதிலும், இந்தக் கருத்துக்கள் மிகத் தவறானவை, தீங்கு விளைப்பவை. இவை மக்களை ஊக்கம் இழக்க மாத்திரம் செய்யும். எனவே, நமது வேலையை மதிப்பிடும் போது, எல்லாம் சாதகமானவை என்ற கண்ணோட்டத்திலிருந்து மதிப்பீடு செய்வது, எல்லாம் பாதகமானவை என்ற கண்ணோட்டத்திலிருந்து மதிப்பீடு செய்வது இரண்டும் தவறானவை.

பிரச்சினைகளை அணுகும் போது இத்தகைய ஒருதலைப்பட்சப் போக்கை மேற்கொள்ளும் நபர்களை நாம் விமர்சனம் செய்ய வேண்டும். அவர்களை விமர்சனம் செய்யும் போது, நாம் உண்மையில் “கடந்தகாலத் தவறுகளிலிருந்து படிப்பினை பெற்று எதிர்காலத்தில் தவறுகளைத் தவிர்ப்பது, நோயாளியைக் காப்பாற்ற நோய்க்குச் சிகிச்சை அளிப்பது” என்ற கோட்பாட்டின் பிரகாரம் நடந்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

சீர்செய் இயக்கம் ஒன்று நடைபெறவிருப்பதால், ஒவ்வொருவரும் தமது அபிப்பிராயங்களைத் தெரிவிக்குமாறு கேட்கப்படவிருப்பதால், ஒருதலைப்பட்சப் போக்கு என்பது தவிர்க்க முடியாதது, எனவே ஒருதலைப்பட்சப் போக்கை இல்லாமற் செய்ய விரும்பும் போது, மக்கள் வாய்திறந்து பேசுவதை நீங்கள் உண்மையில் விரும்பவில்லைபோற் தோன்றுகின்றது என்று சிலர் கூறுகின்றனர். இந்தக் கூற்று சரியா?

இயற்கையில் எல்லாரும் ஒரு தலைப்பட்சப் போக்கை முற்றுமுழுதாகத் தவிர்ப்பது என்பது கஷ்டமானது. மக்கள் எப்பொழுதும் தமது சொந்த அனுபவத்தின் பிரகாரம் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றைக் கையாண்டு தமது கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்; சில சமயங்களில் அவர்கள் தவிர்க்கமுடியாதபடி சிறிது ஒருதலைப்பட்சப் போக்கைக் காட்டுகின்றார்கள். இருந்தும் தமது ஒருதலைப்பட்சப் போக்கைப் படிப்படியாக வெற்றி கொண்டு, ஒப்பீட்டு வகையில் பிரச்சினைகளைப் பன்முகங்களிலிருந்தும் பார்க்குமாறு நாம் அவர்களைக் கேட்கக் கூடாதா?

அப்படிக் கேட்க வேண்டும் என்று நான் கருதுகின்றேன். நாளுக்கு நாள் ஆண்டுக்கு ஆண்டு, மென்மேலும் அதிகப்படியான மக்கள் ஒப்பீட்டு வகையில் பிரச்சினைகளைப் பன்முகங்களிலிருந்தும் பார்க்க வேண்டும் என்று கோராவிட்டால், நாம் ஸ்தம்பித்துவிடுவோம்; நாம் ஒருதலைப் பட்சப் போக்கை அங்கீகரித்துச் சீர்செய் இயக்கத்தின் நோக்கம் முழுவதற்கும் முரண்பட்டவர்கள் ஆவோம். ஒருதலைப்பட்சப் போக்கு என்பது இயங்கியலை அத்துமீறுவதாகும்.

நாம் இயங்கியலைப் படிப்படியாகப் பரப்ப விரும்புகின்றோம். விஞ்ஞானரீதியான இயங்கியல் முறையின் உபயோகத்தைப் படிப்படியாகக் கற்றுக் கொள்ளும்படி நாம் எல்லாரையும் கேட்க விரும்புகின்றோம். இன்று பிரசுரமாகும் கட்டுரைகளில் சில மிகப் பகட்டானவை; ஆனால் உள்ளடக்கமோ பிரச்சினை பற்றிய ஆராய்வோ நியாயங் காட்டி விளக்கும் திறனோ சிறிதேனும் இல்லாதவை; அவை நம்பிக்கை ஊட்டுவனவாக இல்லை. அத்தகைய கட்டுரைகள் படிப்படியாகக் குறைய வேண்டும்.

கட்டுரை ஒன்றை எழுதும் போது, ”நான் எவ்வளவு விவேகி” என்று ஒருவர் சர்வசதா சிந்தித்துக் கொண்டிருக்கக் கூடாது; பதிலுக்குத் தமது வாசகர்களைத் தமக்கு முற்றிலும் சமமானவர்கள் என்று கருத வேண்டும். நீங்கள் நீண்ட காலம் புரட்சியில் இருந்திருக்கலாம். இருந்தும் நீங்கள் சொல்வது தவறாக இருந்தால் மக்கள் உங்களை மறுத்துரைப்பார்கள். நீங்கள் எவ்வளவுக்கு வித்துவத் தன்மை காட்டுகிறீர்களோ, அவ்வளவுக்கு அதை விரும்பும் மக்களும் குறைவாக இருப்பர். உங்கள் கட்டுரைகளை வாசிப்பதில் மக்களின் அக்கறையும் குறைந்துகொண்டு போகும். நமது வேலையை நாம் நேர்மையாகச் செய்ய வேண்டும். விசயங்களை ஸ்தூலமாக ஆராய வேண்டும். நம்பிக்கையூட்டும் கட்டுரைகளை எழுதவேண்டும். நடித்துப் பாவனை காட்டி மக்களை மலைக்க வைக்கக் கூடாது.

ஒரு சிறிய வியாசத்தில் ஒருதலைப்பட்சப் போக்கு தவிர்க்க முடியாதது; அதே வேளையில் நீண்ட கட்டுரையில் அதைத் தவிர்க்க முடியும் என்று சிலர் கூறுகின்றனர். ஒரு சிறிய வியாசம் எப்பொழுதும் ஒருதலைப்பட்சப் போக்கு உடையதாக இருக்க வேண்டுமா? நான் குறிப்பிட்டது போல, ஒருதலைப்பட்சப் போக்கைத் தவிர்ப்பது வழக்கத்தில் கடினம். அது ஓரளவு நுழைந்துவிட்டால் அதில் ஏதும் அஞ்சுவதற்கில்லை. முழுமையாகப்  பன்முகங்களிலிருந்தும் பிரச்சினைகளை நோக்க வேண்டும் என்று எல்லாரையும் கோரினால் விமர்சனம் தடைப்பட்டுவிடும். எனினும் ஒப்பீட்டு வகையில் பிரச்சினைகளைப் பன்முகங்களிலிருந்தும் பார்க்க முயல வேண்டும், சிறு வியாசங்கள் உட்பட சிறிய பெரிய கட்டுரைகள் இரண்டிலும் ஒருதலைப்பட்சப் போக்கைத் தவிர்க்கப் பாடுபட வேண்டும் என்று  நாம் எல்லாரையும் கேட்டுக்கொள்ள வேண்டும்.

சில நூறு வார்த்தைகள் அல்லது ஆயிரம் முதல் இரண்டாயிரம் வார்த்தைகள் கொண்ட வியாசத்தில் ஒரு விசயத்தை ஆராய்வது சாத்தியமா? என்று சிலர் வாதாடுகின்றனர்.  ஏன் முடியாது? என்று நான் கேட்கிறேன். லூ ஸுன் அப்படிச் செய்யவில்லையா? ஆராய்வு முறையே இயங்கியல் முறை என்பது. ஆராய்வு என்றால் விசயங்களிலுள்ள முரண்பாடுகளை ஆராய்வதாகும். வாழ்வு பற்றிய அன்னியோன்னியமான அறிவில்லாவிட்டால், சம்பந்தப்பட்ட முரண்பாடுகள் பற்றிய உண்மையான விளக்கம் இல்லாவிட்டால், சரியான ஆராய்வு என்பது சாத்தியமாகாது.

லூ ஸுன்னின் பிற்காலக் கட்டுரைகள் மிக ஆழமானவை, சக்தி வாய்ந்தவை. இன்னும் ஒருதலைப்பட்சப் போக்கிலிருந்து விடுதலை பெற்றுள்ளன. காரணம், அப்பொழுது அவர் இயங்கியலைக் கிரகித்துவிட்டார். லெனினுடைய சில கட்டுரைகளையும் சிறு வியாசங்கள் என்று கூறலாம். அவை நையாண்டியும் குத்தலும் நிறைந்தவை. ஆனால் ஒருதலைப்பட்சப் போக்குடையவை அல்ல. ஏறக்குறைய  லூ ஸுன்னின் வியாசங்கள் எல்லாம் எதிரிக்கு எதிராக எழுதப்பட்டவை.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : அராஜகவாதமா ? சோசலிசமா ? | தோழர் ஸ்டாலின்
♦ சோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ

லெனினின் வியாசங்கள் சில எதிரிக்கும், வேறு சில தோழர்களுக்கும் எதிராக எழுதப்பட்டவை. மக்கள் அணிகளில் காணப்படும் தவறுகளுக்கும் குறைபாடுகளுக்கும் எதிராக லூ ஸுன்னின் கட்டுரைகள் போன்றவற்றை உபயோகிக்க முடியுமா? முடியும் என்று நான் எண்ணுகின்றேன். இயற்கையாகவே எதிரிக்கும் நமக்குமிடையில் நாம் ஒரு வேறுபாடு செய்து கொள்ள வேண்டும். தோழர்கள் மீது ஒரு பகை நிலைப்பாட்டை மேற்கொண்டு எதிரிகளை நடத்துவது போல் அவர்களை நடத்தக் கூடாது.

நாம் மக்களின் இலட்சியத்தைப் பாதுகாத்து, அவர்களுடைய அரசியல் உணர்வை உயர்த்தும் பேரார்வத்துடன் பேச வேண்டும்; நம்முடைய அணுகுமுறையில் எள்ளி நகையாடுதலோ தாக்குதலோ இருக்கக் கூடாது. ஒருவர் எழுதத் துணியாவிட்டால் யாது செய்வது? அவர்களிடம் ஏதும் விசயம் இருந்தாலும், பிறரைப் புண்படுத்தவும், தாம் விமர்சனம் செய்யப்படவும் அஞ்சுவதால், அவர்கள் எழுதத் துணியவில்லை என்று சிலர் கூறுகின்றனர். இத்தகைய கவலைகளை ஒருபுறம் ஒதுக்கிவிட முடியும் என்று நான் எண்ணுகின்றேன்.

நமது அரசாங்கம் ஒரு ஜனநாயக மக்கள் அரசாங்கம். மக்களுக்குத் தொண்டு செய்ய எழுதுவதற்கு இசைவான ஒரு சூழ்நிலையை அது அளிக்கின்றது. நூறு மலர்கள் மலரட்டும், நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும்” என்ற கொள்கை விஞ்ஞானமும் கலைகளும் செழித்து வளர்வதற்குக் கூடுதலான உத்தரவாதத்தை வழங்குகின்றது. நீங்கள் சொல்வது சரியாக இருந்தால், நீங்கள் விமர்சனத்துக்கு அஞ்சவேண்டியதில்லை. விவாதத்தின் மூலம் உங்களுடைய சரியான கருத்துக்களை நீங்கள் மேலும் விளக்க முடியும்.

நீங்கள் சொல்வது பிழையாக இருந்தால், உங்களுடைய பிழைகளை நீங்கள் திருத்துவதற்கு விமர்சனம் உதவி செய்யும். அதில் ஒன்றும் தீமை இல்லை. நமது சமுதாயத்தில் போராட்ட எழுச்சிமிக்க புரட்சிகர விமர்சனமும் எதிர் விமர்சனமும் முரண்பாடுகளை வெளிப்படுத்தி, தீர்வு காணவும், விஞ்ஞானத்தையும் கலைகளையும் விருத்தி செய்யவும், நமது வேலை முழுவதிலும் வெற்றியை உத்தரவாதம் செய்யவும் உபயோகிக்கப்படும் சிறந்த முறையாகும்.

 (தொடரும்)

பகத் சிங் பிறந்தநாள் விழா : திருச்சி, கடலூர் புமாஇமு கூட்டம் !

0

திருச்சி :

திருச்சி காஜா பேட்டையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி பகத்சிங்கின் பிறந்தநாள் விழா 28-09-2020 அன்று கொண்டாடப்பட்டது.

* வேளாண் திருத்த சட்டம், தொழிலாளர் நல சட்ட திருத்தம், புதிய கல்விக் கொள்கை, மின்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் சட்டத்திருத்தம் என நாட்டையே கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிடுகிறது கார்ப்பரேட் காவலன் மோடி அரசு !
* CAA,NRC,NPR யை அமல்படுத்தி இந்து ராஷ்டிரத்தை உருவாக்கத் துடிக்கிறது RSS – BJP பார்ப்பன பாசிச கும்பல் !
* நாட்டை மறுகாலணியாக்கும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை முறியடிக்க, பகத்சிங் பாதையில் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம் !

ஆகிய முழக்கங்களை முன் வைத்து நடத்தப்பட்ட இந்த விழாவில் முதல் நிகழ்வாக தோழர் பகத்சிங் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

திருச்சி மாவட்ட புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் அமைப்பாளரான தோழர் பிரிதிவ் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். தனது தலைமை உரையில், பகத்சிங் பிறந்தநாளை நாம் கொண்டாட வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினார். மேலும் பேசுகையில், வேளாண் திருத்த சட்டம், தொழிலாளர் நல சட்ட திருத்தம், புதிய கல்விக் கொள்கை, மின்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் சட்டத்திருத்தம் என நாட்டையே கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிடுகிறது மோடி அரசு. CAA,NRC,NPR யை அமல்படுத்தி இந்து ராஷ்டிரத்தை உருவாக்கத் துடிக்கிறது RSS – BJP பார்ப்பன பாசிச கும்பல்.
நாட்டை மறுகாலனியாக்கும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை முறியடிக்க, பகத்சிங் பாதையில் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம் என விளக்கிப் பேசினார் .

இந்த நிகழ்வில் காஜாப் பேட்டை பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர். பகத் சிங் பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருச்சி.
தொடர்புக்கு :
9943 176 246

000

கடலூர் – கோ. பூவனூர் :

கடலூர் மாவட்டம், கோ.பூவனூர் பகுதியில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி மாவீரன் பகத்சிங் பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தலைமை:
தோழர் கார்த்திக்

கண்டன உரை:
தோழர் கணேஷ் பாபு

நன்றி உரை:
தோழர் அர்ஜுன்

இதில் கிராம மாணவர்கள், இளைஞர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங்கின் போராட்ட வரலாறு குறித்து பேசப்பட்டது.
இதோடு நீட், புதிய கல்விக் கொள்கை, புதிய விவசாய மசோதா, புதிய மின்சார மசோதா புதிய தொழிலாளர் மசோதா புதிய சுற்றுச்சூழல் சட்டம் ஆகிய அவசர சட்டங்களுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தகவல்:
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி.
கடலூர்.

தொடர்புக்கு:
97888 08110

பகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை !

ன்று தோழர் பகத்சிங்கின் 114-வது பிறந்தநாள் ! மனித குலம் தன் மீதான அனைத்து விதமான சுரண்டலிலிருந்து விடுதலை பெற்று மீண்டெழுவதற்கான ஒரே தீர்வு சோசலிசம்தான் என்று அறுதியிட்டுக் கூறிய மாவீரன் பகத் சிங் ! நாட்டை அடிமையாக்கி மக்களின் உழைப்பை வரிகள் மூலம் ஒட்டச் சுரண்டிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் பகத் சிங் !

பகத் சிங்கும் பல்வேறு புரட்சியாளர்களும் இணைந்து செயலாற்றிய இந்திய புரட்சிகர அமைப்பை நிறுவியவர்களுல் ஒருவர் சசிந்திர நாத் சன்யாலால். ஹிந்துஸ்தான் ரிபப்ளிக்கன் அசோசியேசன் (Hindustan Republican Association) என்ற அந்த புரட்சிகர அமைப்பின் முன்னணியாளர்கள் வெள்ளை அரசாங்கத்தால் வேட்டையாடப் பட்ட பின்னர், சந்திரசேகர் ஆசாத், பகத்சிங் முதலானோர் வெள்ளையாதிக்கத்தை தூக்கியெறியும் புரட்சிகரப் பணியில் இறங்கினர். இந்த அமைப்பின் செயல்பாடுகளை, காந்தி உள்ளிட்ட மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்த ‘பெருந்தலைவர்களின்’ கண்டனக் குரல்களால் முடக்க முடியவில்லை.

படிக்க :
♦ நான் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பிலிருந்து விலகியது ஏன் ? ஜெய் கோலியாவின் அனுபவம்
♦ நான் இந்து என்பதால் இந்துத்துவாவை ஏற்க முடியாது : நயன்தாரா செகல்

“இந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேசன்” என இந்த அமைப்பின் பெயரில் சோசலிசத்தையும் இணைத்து பிரிட்டிஷ் ஆதிக்கத்தை முறியடிப்பதோடு மட்டுமல்லாமல் புதிய சோசலிசக் குடியரசை உருவாக்குவதையும் தமது இலட்சியமாகக் கொண்டு செயல்படத் துவங்கினர். இந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேசன் அமைப்பு துவக்கப்பட்ட போது, 1924-ம் ஆண்டு டிசம்பர் 31 அன்று நள்ளிரவிலிருந்து  மறுநாள் 1925-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி விடிகாலைக்குள் வட இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் விநியோகிக்கப்பட்டது இந்தக் கட்சி அறிக்கை.

இந்தக் கட்சி அறிக்கையில் ** குறியீடு செய்யப்பட்டுள்ள பத்தியைத் தவிர அனைத்து அம்சங்களையும் பகத்சிங் ஏற்றுக் கொண்டார். அந்த குறிப்பான பத்தியில் ஏன் தமக்கு உடன்பாடில்லை என்பதை தனது “நான் ஏன் நாத்திகன்” என்ற கட்டுரையில் தெளிவாக விளக்கியுள்ளார் பகத் சிங்  ! பகத் சிங்கின் 114-வது பிறந்த நாளான இன்று அவரது நினைவை நெஞ்சில் ஏந்துவோம் ! அவரது கனவான ஒரு சமதர்ம அரசை கட்டியமைப்போம் !

000

இந்திய புரட்சிகரக் கட்சிப் பத்திரிக்கை*
ஜனவரி 1, 1925

தொகுதி -1
(நேர்மையான இந்தியன் ஒவ்வொருவரும் இதனை முழுமையாகப் படிக்கவும், தனது நண்பர்கள் மத்தியில் சுற்றுக்கு விடவும் வேண்டும்).

இந்திய புரட்சிகரக் கட்சி அறிக்கை

புதிய நட்சத்திரம் ஒன்று உதிப்பதற்கு அமைதியற்ற நிலை அவசியம்” ஒரு புதிய உயிரின் பிறப்பு, வலியோடும் வேதனையோடும் இணைந்ததே. இந்தியாவும் இன்று ஒரு புதிய பிறப்பெடுத்துக் கொண்டிருக்கிறது. அதன் தவிர்க்க முடியாத விளைவாகிய அமைதியற்ற நிலையையும் வேதனையையும் இப்போது கடந்து கொண்டிருக்கிறது. எல்லா முன்கணிப்புகளும் – பயனற்றவையென நிரூபணமாகவிருக்கும் வேளையில் அறிவாளிகளும் பலசாலிகளும் மிக எளியவர்களாலும் பலவீனமானவர்களாலும் தடுமாற்றமுறப் போகும் வேளையில், மாபெரும் பேரரசுகள் நொறுங்கி விழவும் புதிய தேசங்கள் உதித்தெழவும் போகின்ற வேளையில், இந்தியர்கள் தங்களுக்கென ஒதுக்கிவைக்கப்பட்ட பங்கை ஆற்றுவார்கள். அவர்கள் தங்களுக்கே உரிய அனைத்து புகழொளியாலும் பெருஞ்சிறப்பாலும் மனித குலத்தையே வியப்பில் ஆழ்த்துவார்கள்.

உலகத்தை அதன் அடி ஆழத்தில் இருந்து உலுக்கிக் கொண்டிருக்கும் இந்தப் புதிய சக்தி – திரை மறைவில் அற்புதங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்தப் புதிய எழுச்சி, இந்தியாவின் இளைஞர்களிடத்திலும் வெளிப்படுகிறது. அது, அறிவாளிகளாலும் படித்தவர்களாலும் இகழ்ச்சியாகக் கருதி புறக்கணிக்கப்பட்டதும் – ஒருசில பைத்தியக்காரர்களின் காட்டுமிராண்டிக் கனவு என்று வர்ணிக்கப்பட்டதுமான ஒரு இயக்கத்தின் வடிவத்தை எடுத்துள்ளது. இளம் இந்தியாவின் புரட்சிகர இயக்கமே கவனித்தற்குரிய அந்த இயக்கமாகும்.

இப்புரட்சிகர இயக்கமானது, பலவீனமானவர்களை குலைநடுங்கச் செய்கிறது. உடல் உறுதியும் ஆரோக்கியமும் உள்ளவர்களுக்கோ எழுச்சியூட்டுகிறது. ஆனால் தன்னலப் பெருக்குடைய அறிவாளிகளையும் படிப்பாளிகளையும் திகைப்படையச் செய்கிறது. வசந்தத்தின் வருகையை எவ்வாறு ஒருபோதும் தடுத்து விட முடியாதோ, அவ்வாறே இந்த இயக்கத்தையும் ஒருபோதும் அழித்துவிட முடியாது. அது எதற்காக உருவெடுத்ததோ அந்த அரசியல் செயல் திட்டத்தை அது நிறைவேற்றும் வரைக்கும் அது ஒருபோதும் அழியாது. கொடுங்கோலர்கள் அதை ஒடுக்குவார்கள். அவநம்பிக்கையுடையவர்கள் அதை பழித்துரைப்பார்கள். குழப்பமுற்றவர்கள் பலரறிய அதை கண்டனம் செய்வார்கள். ஆனால் சிந்தனைகளையும் கொள்கைகளையும் வாள் வலிமையால் ஒருபோதும் அழித்துவிட முடியாது. உள்ளத்தின் அடி ஆழத்தில் இருந்து பிறந்த உன்னதமான உணர்ச்சிகளை ஒருபோதும் புறக்கணிக்கவோ பழித்துரைக்கவோ முடியாது.

தேசத்தில் பிறந்திருக்கும் புத்துயிரின் வெளிப்பாடே இந்தப் புரட்சிகர இயக்கம். இவ்வுயிரை கண்டனம் செய்வது என்பது, ஒருவர் தனது சொந்த அறிவையே கண்டனம் செய்வதாகும்.

இருபது ஆண்டுகால ஈவிரக்கமற்ற அடக்கு முறையால் இதனை அழித்துவிட முடியவில்லை. புகழ் பெற்ற மக்கள் தலைவர்களின் பழி தூற்றல்களால், புண்படுத்தும் கண்டனங்களால் இந்த இயக்கத்தின் நிலையான வளர்ச்சியை தடுத்துவிட முடியவில்லை. இந்த இயக்கம் முன்பிருந்ததைக் காட்டிலும் இன்று பலம் வாய்ந்ததாக இருக்கிறது. இப்புரட்சிக்கரச் கட்சியின் வெற்றிவாய்ப்புகள் இப்போது இருப்பதைப் போல் முன்னெப்போதும் இவ்வளவு பிரகாசமாய் இருந்ததில்லை எதிர்காலம் உறுதி செய்யப்பட்டதாய் இருக்கிறது.

எந்தவொரு இந்தியனும், அந்நிய ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை கண்டிப்பதற்காக வேண்டி, இப்புரட்சிகரக் கட்சியின் இருப்பை மறுதலிக்காமல் இருக்கட்டும். இந்தியாவை ஆள்வதற்கு அந்நியர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே அவர்கள் கண்டனம் செய்யப்பட வேண்டும். இந்த நாட்டை விட்டே துரத்தப்பட வேண்டும். அவர்கள் ஏதோவொரு குறிப்பிட்ட வன்முறைச்செயல் அல்லது குற்றம் செய்து விட்டார்கள் என்பதற்காக அல்ல. இவையெல்லாம் அந்நிய ஆட்சியின் இயல்பான விளைவுகளே. இந்த அந்நிய ஆட்சி கட்டாயம் ஒழிக்கப்பட வேண்டும். இந்தியாவை ஆள்வதற்கு வாள் வலிமையின் நியாயத்தைத் தவிர வேறெந்த நியாயமும் அவர்களுக்கு இல்லை . ஆகவே புரட்சிகரக் கட்சியும் கூர்வாளைக் கையிலெடுக்க நேர்ந்தது. ஆனால் புரட்சிகரக் கட்சியின் கூர்வாளோ அதன் நுனியில் கொள்கைகளையும் தாங்கி நிற்கிறது.

அமைப்புரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட, ஆயுதப் புரட்சி ஒன்றின் மூலம், இந்திய ஐக்கிய மாநிலங்களின் கூட்டாட்சிக் குடியரசை (Federal Rebublic of United States of India) நிறுவுவதே அரசியல் அரங்கில் புரட்சிகரக் கட்சியின் உடனடி நோக்கமாகும். இக்குடியரசின் இறுதி அரசியலமைப்பானது, இந்திய மக்கள் பிரதிநிதிகள், தங்களது முடிவுகளை செயல்படுத்துவதற்கான அதிகாரத்தைப் பெற்றிருக்கும் வேளையில் வடிவமைக்கப்பட்டு அறிவிக்கப்படும். ஆனால், பொதுவாக்குரிமையும், மனிதன் மனிதனால் சுரண்டப்படுவதை சாத்தியமானதாக்கும் எல்லாவிதமான அமைப்பு முறைகளையும் இல்லாதொழிப்பதுமே இக்குடியரசின் அடிப்படைக் கொள்கைகளாக இருக்கும்.

படிக்க :
♦  ‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு !
♦ சோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா !

உதாரணத்திற்கு, ரயில்வேக்கள் மற்றும் பிற போக்குவரத்துத் தகவல் தொடர்பு சாதனங்கள், சுரங்கங்கள் மற்றும் உருக்கு, கப்பல் உற்பத்தி போன்ற மிகப்பெரிய தொழிற்சாலைகள் ஆகிய அனைத்தும் தேசவுடைமையாக்கப்படும். இக்குடியரசில், வாக்காளர்கள் விரும்பினால் தங்களது பிரதிநிதிகளை திரும்பப் பெற்றுக் கொள்ளும் உரிமையினையும் அவர்கள் பெற்றிருப்பார்கள். அவ்வாறு இல்லையெனில் ஜனநாயகம் என்பது ஒரு கேலிக்கூத்து ஆகிவிடும். இக்குடியரசில், நிர்வாகத் துறையினரைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் தேவையேற்பட்டால் அவர்களை இடமாற்றம் செய்யும் அதிகாரத்தையும் சட்டமன்றம் பெற்றிருக்கும்.

வெவ்வேறு தேசங்களின் வேறுபட்ட நலன்களை மதிப்பதன் மூலமும் அவற்றிற்கு உத்தரவாதமளிப்பதன் மூலமும் உலகில் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதே இக்கட்சியின் இறுதி இலக்கு. எனவே, புரட்சிகரக் கட்சி ஒரு தேசியக் கட்சி அல்ல. மாறாக, அதன் உள்ளுணர்வில் அது சர்வதேசியக் கட்சியாகும். இது, வெவ்வேறு தேசங்கள் மற்றும் அரசுகளுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்குமேயொழிய, அவற்றிற்கிடையிலான போட்டியை அல்ல. இதைப் பொறுத்தவரை புகழோங்கியிருந்த கடந்த காலத்தின் மகா இந்திய ரிஷிகளின் அடிச்சுவட்டையும் நவீன காலத்தில் போல்ஷ்விக் ரஷ்யாவின் அடிச்சுவட்டையும் கட்சி பின்பற்றும். மனிதகுலத்தின் நன்மை என்பது இந்தியப் புரட்சியாளர்களுக்கு பயனற்ற சொல்லோ வெற்றுச் சொல்லோ அல்ல. ஆனால் பலவீனமானவர்களால், கோழைகளால், அதிகாரமற்றவர்களால் தங்களுக்கும் நன்மை செய்ய முடியாது ; மனிதகுலத்திற்கும் நன்மை செய்ய முடியாது.

மதவாதப் பிரச்சனையைப் பொறுத்தவரை, மற்ற மதத்தினரின் நலன்களோடு எவ்விதத்திலும் முரண்படாத வரையிலும் பல்வேறு மதத்தினர் கோரும் எல்லா உரிமைகளையும் கொடுக்க வேண்டுமென்று புரட்சிகரக் கட்சி சிந்திக்கிறது. அதுவே மிகக் குறுகிய எதிர்காலத்தில் வெவ்வேறு மதத்தினரிடையே மனப்பூர்வமான, ஓருயிர் போன்ற ஒற்றுமைக்கு இறுதியாக இட்டுச் செல்லும்.

பொருளாதார மற்றும் சமூக நல அரசியல் அரங்கில் கட்சியானது, எத்தனை பெரிய அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு கூட்டுறவு உணர்வைப் பேணி வளர்க்கும். தனியார் மற்றும் ஒருங்கு திரட்டப்படாத வியாபார நிறுவனங்களுக்குப் பதிலாக கட்சியானது கூட்டுறவு சங்கத்திற்கு ஆக்க மளிக்கும்.

ஆன்மீக அரங்கில் கட்சியானது, புறக்கணிக்கப்படுவதற்கும் இழிவாக நினைக்கப்படுவதற்கும் இந்த உலகம் ஒரு மாயையோ கற்பிதமோ அல்ல; மாறாக அது அனைத்து அதிகாரங்கள், அனைத்து ஞானம் மற்றும் அனைத்து அழகின் முழுமுதல் மூல ஆதாரமாக விளங்கும் தனித்தன்மை வாய்ந்த ஒரு ஆன்மாவின் வெளிப்பாடு எனும் உண்மையை நிலைநாட்டுவதையும் பரப்புவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும்.**

புரட்சிகரக் கட்சியானது, தனக்கென சொந்தமான கொள்கையினையும் செயல் திட்டத்தையும் கொண்டுள்ளது. வெளிப்படையாகத் தெரிந்த காரணங்களுக்காக கட்சி தனது இரகசியங்கள் அனைத்தையும் வெளியிட முடியாது. ஆனால் நமது சொந்த மக்களைக் காட்டிலும் அரசாங்கத்திற்கு அதிகம் தெரிந்திருக்கக் கூடும் என்பது உறுதி செய்யப்படும்போது, கட்சியின் திட்டம் மற்றும் செயல்முறைகளைப் பற்றி எவ்வித தயக்கமும் இன்றி பொதுமக்களுக்கும் தெரிவிக்கப்படும்.

இப்புரட்சிகரக் கட்சியானது காங்கிரசுடனும் அதன் வெவ்வேறு கட்சிகளுடனும், எப்போது சாத்தியமோ அப்போது ஒத்துழைப்பு; எங்கே தேவையோ அங்கே விலகிச் செல்லுதல் என்ற கொள்கையை கடைப்பிடிக்கிறது. ஆனால் இக்கட்சி, இந்நாட்டில் நடைபெறும் அரசியலமைப்பு சார்ந்த போராட்டங்கள் அனைத்தையும் வெறுப்போடும் ஏளனத்தோடுமே பார்க்கிறது. அரசியலமைப்பே இல்லாத இடத்தில், அரசியலமைப்பு சார்ந்த வழிமுறைகளின் மூலம் இந்தியாவின் கடைத்தேற்றம் சாத்தியம் எனச் சொல்வது ஒரு கேலிக்கூத்து.

சமாதானபூர்வமான, சட்டப்பூர்வமான வழிமுறைகளின் மூலம் இந்தியாவின் அரசியல் சுதந்திரத்தைப் பெற்றுவிட முடியும் என்று சொல்வது ஒரு சுய ஏமாற்று வேலை. தன்னுடைய வசதிக்கேற்ப சமாதானத்தை முறிப்பதில் தீர்மானகரமாக எதிரி இருக்கும்போது, ஒரு தரப்பினர் மட்டும் ‘என்ன ஆனாலும் சமாதானத்தை கைவிடக்கூடாது’ என தனக்குத் தானே உறுதியெடுத்துக் கொள்ளும் போது, “சட்டப்பூர்வமான” எனும் நேர்த்திமிக்க சொற்றொடர் தனது கவர்ச்சி, முக்கியத்துவம் அனைத்தையுமே இழந்துவிடுகிறது.

படிக்க :
♦ கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ
♦ சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் !

அந்நிய நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை பெற்ற முழுமையான சுயாட்சியினையே இந்தியா விரும்புகிறது என்று தெளிவான வார்த்தைகளில் சொல்வதற்கு நமது மக்கள் தலைவர்கள் தயங்குகின்றனர். அவர்கள், மாபெரும் கொள்கைகளால் பெறப்படும் உந்துதல் மூலமாகவே தேசங்கள் பிறக்கின்றன என்ற உண்மையை அறியாதவர்களாக இருக்கின்றனர். முழுமையான சுயாட்சி எனும் உணர்வை ஏற்றுக் கொள்ளத் தயங்கும் ஆன்மீகக் கொள்கையானது, வெளித் தோற்றத்தில் மாண்புமிக்கதாகத் தோன்றினாலும் அதனை ஆன்மீகம் என்று அழைப்பது கடினமே. மிகத் தெளிவான வார்த்தைகளில் உண்மையைச் சொல்வதற்கும், கொள்கை என்று பெயர் சொல்லத் தகுதியான கொள்கை ஒன்றை இத்தேசத்தின் முன் வைப்பதற்கும் வேண்டிய தருணம் இப்போது வந்துள்ளது.

எங்களது கொள்கை, அமைப்பு ரீதியிலானதொரு வழியில் மனிதகுலத்திற்கு சேவை செய்வது. ஆனால், அடிமைத்தளை அல்லது அடிமைத்தனத்தின் கீழ் இந்தியா இருக்கும் வரையிலும் – அது பிரிட்டிஷ் இந்தியாவாக இருக்கும் வரையிலும் – இந்தியாவால் இக்கொள்கைக்கு செயல்வடிவம் கொடுக்க முடியாது. இக்கொள்கைக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டுமானால் இந்தியா, தனித்த, சுதந்திரமான நாடாக இருக்க வேண்டும். இச்சுதந்திரத்தை, சமாதானபூர்வமானதும் அரசியலமைப்பு சார்ந்ததுமான வழிமுறைகளின் மூலம் ஒருபோதும் பெற முடியாது. பிரிட்டிஷ் இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் சட்டங்கள் இந்தியர்களால் உருவாக்கப்பட்டவையுமல்ல; அவற்றின் மீது இந்தியர்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் கிடையாது என்பதை ஒரு குழந்தை கூட புரிந்து கொள்ள முடியும். பிரிட்டிஷ் சட்டங்கள் மற்றும் அரசியலமைப்பின் மூலமாக, பிரிட்டிஷ் இந்தியாவை, ஒரு இந்திய ஐக்கிய மாநிலங்களின் கூட்டாட்சிக் குடியரசாக ஒருபோதும் மாற்ற முடியாது.

இளம் இந்தியர்களே, உங்களது கனவுகளை உதறித் தள்ளுங்கள். துணிவான இதயத்துடன் யதார்த்தங்களை எதிர்கொள்ளுங்கள். போராட்டங்களையும் துன்பங்களையும் தியாகங்களையும் தவிர்க்காதீர்கள். தவிர்க்க முடியாதது எதுவானாலும் அது வந்தே தீரும். இனிமேலும் தவறாக வழிகாட்டப்பட்டவர்களாக இருக்காதீர்கள். அமைதியையும் நீடித்த சமாதானத்தையும், சமாதானப்பூர்வமான, சட்டப் பூர்வமான வழிமுறைகளின் மூலம் உங்களால் அடையவே முடியாது. மாபெரும் ஆங்கில எழுத்தாளராகிய திரு. ராபர்ட்சனின் பின்வரும் நினைவிற் கொள்ளத்தக்க வார்த்தைகள் இந்தியாவின் அறிவாளிகளை மேலும் அறிவாளிகளாக ஆக்கக்கூடும்:

  • “(ஐரிஷ் மக்களை) கொடுமையின் மூலம் அடக்கி வைக்க இங்கிலாந்தால் முடியுமேயொழிய; நீதி மற்றும் பரந்த மனப்பான்மைக்கு உள்ளே நின்று அதனால் வாதம் செய்ய முடியாது எனும் உயிர் இரகசியத்தை பிரிட்டிஷாரின் வாக்குமூலங்கள் எவருக்குக் காண்பித்ததோ, அந்த ஐரிஷ் தலைவர்கள் மற்றும் ப்ராட்டஸ்டன்ட் தலைவர்களின் சாதனைதான் சீர்திருத்தத்திற்கான இந்த இயக்கமும் செயல் திட்டமும்” (ஹானோவர்களின் கீழ் ஆங்கில மக்கள் (English under the Hanoverians) பக்கம். 197).

இந்திய மக்கள் தலைவர்களோ இன்னமும் இந்த உயிர் இரகசியத்தை அறியாதவர்களாகவே இருக்கின்றனர். இல்லாவிட்டால் அவர்கள் அறிவிலிகளாகவே இருப்பதற்குத் தேவையான அளவிற்கு முட்டாள்தனமான அறிவாளிகளாக இருக்கின்றனர்.

ஆயுத பலத்தின் மூலம் இந்தியாவை மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கையில் பற்றுக் கொண்டிருப்பது முட்டாள்தனமானது என்று இந்தியாவிலுள்ள அறிவாளிகள் சொல்கின்றனர். ஆனால், உலகிலுள்ள மொத்த மனித இனத்தில் ஐந்தில் ஒரு பங்காக இருக்கும் இந்திய மக்களை, விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய ஆங்கிலேயர்களால், ஆயுதபலத்தைக் கொண்டு அடிமைப்படுத்தி வைத்திருக்க முடியும் என்பதும் அதற்குச் சமமான அல்லது இன்னும் அதிகமான முட்டாள்தனமே என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர். விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய ஆங்கிலேயர்கள், இந்தியாவை ஒரு நூற்றாண்டு ஆண்டார்கள் என்ற வரலாற்று உண்மையின் நம்பகத்தன்மை குறித்தே வருங்கால சந்ததியினர் சந்தேகம் கொள்வர். அவர்களுக்கு இது நினைத்துப் பார்க்கவே முடியாததாக இருக்கும்.

பயங்கரவாதம் மற்றும் அனார்க்கிஸம் பற்றி இன்னும் ஒருசில வார்த்தைகள். இந்த இரண்டு வார்த்தைகளும் இந்தியாவில் இன்று மிகுந்த தீங்கு விளைவிக்கக் கூடிய பங்கை ஆற்றிக் கொண்டிருக்கின்றன. எங்கெல்லாம் புரட்சியைப் பற்றி ஏதேனும் குறிப்பிட வேண்டியது வருகிறதோ அங்கெல்லாம் இவ்வார்த்தைகள் மாறாமல் தவறான அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகின்றன. ஏனென்றால், இந்தப் பெயர்களுக்குப் பின்னால் புரட்சியாளர்களை பழித்துரைப்பது மிகவும் வசதியானதாக இருக்கிறது. இந்தியப் புரட்சியாளர்கள், பயங்கரவாதிகளோ அனார்க்கிஸ்டுகளோ அல்ல. அவர்கள் நாட்டில் குழப்பம் விளைவிப்பதை ஒருபோதும் இலக்காகக் கொண்டவர்களில்லை. எனவே அவர்களை அனார்க்கிஸ்டுகள் என்று அழைப்பது ஒருபோதும் பொருத்தமானது அல்ல. பயங்கரவாதம் ஒருபோதும் அவர்களின் நோக்கமல்ல. எனவே அவர்களை பயங்கரவாதிகள் என்றும் அழைக்க முடியாது.

பயங்கரவாதம் மட்டுமே இந்தியாவின் சுதந்திரத்தைக் கொண்டுவந்துவிடும் என்று அவர்கள் நம்பவில்லை. பதிலடி கொடுப்பதற்கு பயனுள்ளதொரு வழிமுறையாக அவ்வப்போது பயங்கரவாதத்தைக் கையிலெடுக்கக் கூடும் என்ற போதிலும், பயங்கரவாதம் என்பதற்காகவே பயங்கரவாதத்தை அவர்கள் விரும்பவில்லை. அந்நியர்கள் வெற்றிகரமாக இந்திய மக்களை அச்சுறுத்தி வைத்திருக்க முடிந்திருப்பதன் காரணத்தினாலேயே தற்போதைய அரசாங்கம் நிலைத்திருக்கிறது. இந்திய மக்கள், தங்களது ஆங்கில எஜமானர்களை நேசிக்கவில்லை. ஆங்கிலேயர்கள் இங்கிருப்பதை அவர்கள் விரும்பவில்லை. ஆனால் பிரிட்டிஷாரைப் பார்த்து அவர்கள் பயந்து நடுங்கும் காரணத்தினால் அவர்களுக்கு உதவி செய்கின்றனர். இந்த பயம்தான், இந்தியர்களை புரட்சியாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டவிடாமல் தடுக்கின்றதேயொழிய; அவர்களை நேசிக்கவில்லை என்பதனால் அல்ல.

அதிகாரப்பூர்வ பயங்கரவாதம் (அரசு பயங்கரவாதம்) கட்டாயமாக எதிர் – பயங்கரவாதத்தின் மூலம் எதிர்கொள்ளப்பட வேண்டும். இன்று நமது சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும் முற்றிலும் நிராதரவானதொரு உணர்வே ஊடுறுவிப் பரவியுள்ளது. சமுதாயத்தில் இருக்க வேண்டிய சரியான உணர்வுகளை மீட்டெடுப்பதற்குரிய பயனுள்ளதொரு வழிமுறை பயங்கரவாதமே. அத்தகைய உணர்வுகள் இல்லையென்றால் முன்னேற்றம் கடினமானதாகவே இருக்கும். அது மட்டுமின்றி, ஆங்கில எஜமானர்களும் அவர்களால் கூலிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் கைக்கூலிகளும் இடையூறுகள் ஏதுமின்றி, வரம்புகளின்றி தாங்கள் விரும்பியதைச் செய்வதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. சாத்தியமான அனைத்து இடைஞ்சல்களையும் தடைகளையும் ஏற்படுத்த வேண்டும். பயங்கரவாதம் சர்வதேச முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. ஏனெனில் பயங்கரவாத மற்றும் புரட்சிகர நடவடிக்கைகளின் மூலம் இங்கிலாந்தின் ஜென்ம விரோதிகள் அனைவரையும் ஒருமிக்க இந்தியாவை நோக்கித் திருப்பலாம்.

அந்நிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளால் தங்களது சகோதரிகளுக்கும் தாய்மார்களுக்கும் இழைக்கப்படும் கொடுஞ்செயல்களின் மூலம் புரட்சியாளர்களின் உணர்ச்சிகள் தூண்டிவிடப்படுகின்றன. இருந்த போதிலும் தற்போதைய இயக்கத்தில் எவ்வித பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என்று புரட்சிகரக் கட்சியானது வேண்டுமென்றே தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டுள்ளது. ஏனென்றால் கடைசி அடியைக் கொடுப்பதற்கான தருணத்திற்காக புரட்சிகரக் கட்சி காத்துக் கொண்டிருக்கிறது.

ஆனால், சூழ்நிலையின் தேவை கோரும் போது, கட்சியானது, எவ்விதத் தயக்கமும் இன்றி பயங்கரவாத நடவடிக்கைகளில் துணிந்து ஈடுபடும். அப்போது, அந்நிய ஆட்சியாளர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் அதிகாரிகள் மற்றும் தனிநபர்கள் – அவர்கள் இந்தியனாகவோ ஐரோப்பியனாகவோ இருந்தாலும் சரி, உயர்ந்தவனாகவோ தாழ்ந்தவனாகவோ இருந்தாலும் சரி அவர்கள் ஒவ்வொருவரும் உயிர்வாழ்வதே சகித்துக் கொண்டிருக்க முடியாததாக ஆகிவிடும். ஆனால் அப்போதும் கூட, பயங்கரவாதம் என்பது தங்களின் நோக்கமல்ல என்பதை கட்சி ஒருபோதும் மறக்காது.

தாய்நாட்டின் அரசியல் மற்றும் சமூக விடுதலைக்காக தங்களின் ஆற்றல் முழுவதையும் அர்ப்பணிக்க சித்தமாய் இருக்கும் சுயநலமற்ற, அர்ப்பணிப்பு மனம் கொண்ட தொண்டர்களின் படை ஒன்றை அமைப்பதற்கு கட்சியானது இடைவிடாது முயற்சி செய்யும்.

தேசங்களின் உருவாக்கம் என்பது, தங்களது சொந்த வசதிகள் அல்லது நலன்ககளைக் காட்டிலும், தங்களது சொந்த உயிர்கள் அல்லது தங்களால் நேசிக்கப்படுபவர்களின் உயிர்களைக் காட்டிலும், தங்களது நாட்டைப் பற்றிய எண்ணத்திலேயே அதிக கவனம் செலுத்தக்கூடிய – பெயர் அறியப்படாத ஆயிரமாயிரம் ஆண்கள் மற்றும் பெண்களின் தியாகங்களையே வேண்டுகிறது என்பதை அவர்கள் எப்போதும் நினைவிற் கொண்டிருப்பர்.

(ஒப்பம்) வி.கே.,
தலைவர்,
மத்தியக்கமிட்டி, இந்தியப் புரட்சிகரக் கட்சி.

0-0-0-0

*ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோஷியேசன் (HRA) -ன் இக்கட்சி அறிக்கை 1924-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சசிந்த்ர நாத் சன்யாலால் எழுதப்பட்டது. இக்கட்சி அறிக்கை 1924 டிசம்பர் 31-க்கும் 1925 ஜனவரி 1-ம் நாளுக்கும் இடைப்பட்ட இரவில் ஏறத்தாழ வடஇந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் வினியோகிக்கப்பட்டது என்று சிவவர்மா எழுதுகிறார்.
ஆதாரம்: ‘தியாகி பகத்சிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்’ – சிவவர்மா, 1986 வெளியீடு.

** இந்தப் பத்தியில் சொல்லப்பட்டுள்ள விசயங்களில் தனக்கு உடன்பாடு துளியும் இல்லை என்பதை பகத்சிங் “நான் ஏன் நாத்திகன்” கட்டுரையில் தெளிவுபடுத்துகிறார்.

நூல் : கேளாத செவிகள் கேட்கட்டும் …
தொகுப்பும் தமிழும் : த. சிவக்குமார்
வெளியீட்டகம் : நெம்புகோல் பதிப்பகம்

பாரதியார் பல்கலை : NEP கலந்தாய்வுக் கூட்டம் எனும் பெயரில் கண்துடைப்பு !

பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த செப்டெம்பர்  24 அன்று மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களை ஒருங்கிணைத்து நடத்தப்பட வேண்டிய தேசிய கல்வி கொள்கை கலந்தாய்வு கூட்டம் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நடந்துள்ளது. இந்த விவகாரத்தில், கடைசி நேரத்தில் செய்தி அறிந்து பங்கேற்க நினைத்த மாணவர்களுக்கும் zoom link கொடுக்கப்படவில்லை. அவசரம் அவசரமாக யாருக்கும் தெரியாமல் இதை பல்கலைகழகம் நடத்தி உள்ளது.

படிக்க :
♦ பாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் !
♦ கோவை பாரதியார் பல்கலைகழக ஊழல் ! நேரடி கள ஆய்வு

இந்த செயல், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அரங்கேறியுள்ளது என்றும், இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் மாணவர்கள் பதிவு செய்து உள்ளனர். இது குறித்து மாணவர்கள் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
காணொலி :

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத் சிங் பிறந்தநாள் கூட்டம் | பு.மா.இ.மு. விழா !

0

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி மாவீரன் பகத் சிங்கின் 114 – வது பிறந்தநாள் !

டலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், பெரியகுப்பம் கிராமத்தில்
புமாஇமு தோழர். மணிகண்டன் தலைமையில் நடந்தது. இதில் கிராம மாணவர்கள், இளைஞர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங்கின் போராட்ட வரலாறு பேசப்பட்டது. இதோடு நீட், புதிய கல்விக் கொள்கை, விவசாய மசோதா, மின்சார மசோதா என பாசிச மோடி அரசால் அவசர அவசரமாக போடப்பட்ட அனைத்து சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்.
ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிராக உள்ள RSS-BJP கும்பலை விரட்ட நாம் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

டலூர் மாவட்டம், கோ.பூவனூர் பகுதியில் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணியின் உறுப்பினர் தோழர். கார்த்தி அவர்களின் தலைமையில் அரசு பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் கோ.பூவனூர் கிராம மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

தகவல்:
தோழர். மணியரசன் (மாவட்ட செயலாளர்)
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி. – கடலூர்.
தொடர்புக்கு : 97888 08110

000

படிக்க :
♦ தோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே !
♦ தூக்கிலிடப்படும்போது கையில் கீதையை வைத்திருந்தாரா பகத் சிங் ?

டலூரில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி தோழர் பகத்சிங்கின் 114- வது பிறந்த நாள் விழா !

கடலூர், பெரியார் சிலை அருகே ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி மாவீரன் பகத்சிங்கின் 114-ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பகத்சிங் இந்திய விடுதலைப் போரில் பங்கெடுத்த வரலாறு மற்றும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை புரட்சிகரமாக எதிர்கொண்ட வரலாறு பற்றி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர்கள் உணர்வுபூர்வமாக உரையாற்றினர்.

தலைமை :
தோழர்.வெங்கடேசன், உறுப்பினர், புமாஇமு.

சிறப்புரை :
தோழர். வெண்புறாகுமார் (ஒருங்கிணைப்பாளர்), அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு.

தோழர்.பாலு (மண்டல ஒருங்கிணைப்பாளர்), மக்கள் அதிகாரம்.

இறுதியாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தகவல்:
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம்-97888 08110

000

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங் – 113 – வது பிறந்தநாள்!

மாணவர்களே! இளைஞர்களே!!

# அதிகரிக்கும் வேலையின்மைக்கு முடிவுகட்டுவோம்!
# மாணவர்களை படுகொலை செய்யும் நீட் தேர்வை ஒழித்துக்கட்டுவோம்!
# இந்து ராஷ்டிரத்திற்கான புதிய கல்விக் கொள்கையை முறியடிப்போம்!
# அவசர சட்டங்கள் மூலம் நாட்டை பாசிசமயமாக்கும் RSS-BJP கும்பலை நாட்டை விட்டே விரட்டியடிப்போம்!

– ஆகிய முழக்கங்களின் அடிப்படையில் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் இன்று 28-09-2020 காலை புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி சார்ப்பாக கொடி ஏற்றி பகத்சிங் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்த பிறந்தநாள் விழா கூட்டத்திற்கு புமாஇமு மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் பாலன் தலைமை தாங்கினார்.

மக்கள் அதிகாரம் பென்னாகரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் சிவா, பு.மா.இ.மு. தருமபுரி மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு, ஆகியோர் இன்றைய சூழலில் ஏன் பகத்சிங் பாதையை முன்னெடுக்க வேண்டும் என்பதனை விளக்கியும், திருச்சியில் ஆர்எஸ்எஸ்- பிஜேபி கும்பலால் பெரியார் சிலை அவமதிப்புக்குள்ளாக்கப்பட்டதை கண்டித்தும் பேசினார்கள். அதனை தொடர்ந்து பு.மா.இ.மு. மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் சத்தியநாதன் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தருமபுரி மாவட்டம்.

விவசாயி விரோத சட்டங்களை ரத்து செய் ! சென்னை, கடலூர், விருதை, விழுப்புரம், சீர்காழி, சேத்தியாத்தோப்பு ஆர்ப்பாட்டம் !

மோடி அரசே! உழவர்களின் வாழ்வை சூறையாடும் கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களைத் திரும்பப் பெறு!

ண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 (The Essential Commodities Amendment Act 2020), விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020(Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act 2020) மற்றும் விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 (The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Act 2020) ஆகியவை உழவர்களின் வாழ்வை சூறையாடிக் கார்ப்பரேட்களை வளர்த்துவிடக் கூடியவை. இச்சட்டங்களுக்கு எதிராக நாடெங்கும் உள்ள உழவர்கள் போராடி வருகின்றனர்.
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தின்கீழ் வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு, பயறு வகைகள், எண்ணை வித்துக்கள் ஆகிய விளைபொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

இப்பொருட்களை கிடங்குகளில் இருப்பு வைத்துக்கொள்வதற்கான கட்டுப்பாடுகளை இச்சட்டம் விலக்கிக்கொண்டுள்ளது. இந்திய உணவுக் கழகத்திடம் இருப்பில் உள்ள தானியங்களை தனியார் நிறுவனங்கள் எளிமையாக வாங்கவும்,இஷ்டம் போல சேமித்துவைத்துக் கொள்வதற்கும் வழிசெய்கிறது. இத்திருத்த சட்டம் இந்திய உணவுக் கழகத்தின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கிவிட்டதோடு நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்க உள்ளது.

வரும்காலத்தில் வியாபாரிகளிடம் நேரடியாக தானியங்களை கொள்முதல் செய்து செயற்கையான உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தி தேவைப்படும்போது பொருட்களை அதிக விலைக்கு பெருநிறுவனங்கள் விற்பதற்கான வாய்ப்பை இத்திருத்தம் சட்டபூர்வமாக்குகிறது. இனி எதிர்காலத்தில் இந்திய உணவுக் கழகத்தின் செயல்பாட்டையும் ரேசன் விநியோக கட்டமைப்பையும் இந்த திருத்த மசோதா பலவீனப்படுத்தி ஒழிப்பதற்கு வகை செய்கிறது.

படிக்க :
♦ ‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு !
♦ சோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா !

முன்னதாக இந்திய பொருளாதார ஆய்வறிக்கையிலே பொது ரேசன் விநியோக அமைப்பிற்கு மாற்றாக வங்கி கணக்கில் பணம் போடவேண்டும் என ஆலோசனை கூறப்பட்ட நிலையிலே இந்த திருத்தச் சட்டம், பொது விநியோக கட்டமைப்பை ஒழிப்பதை முன்னறிவிப்பதாக உள்ளது.

விவசாய விளைபொருள் வியாபார சட்டத்தின் மூலமாக விவசாயிகள் தங்களது வேளாண் உற்பத்தி பொருளை மண்டிகளுக்கு வெளியே நாட்டில் எங்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம் எனவும்,இடைத்தரகர்களை இச்சட்டத்தின் மூலமாக ஒழித்துவிட்டதாகவும் பிரதமர் கூறுகிறார்.ஆனால் நடைமுறையிலே வேளாண் விளைபொருள் சந்தைக் கழகத்தையும்(APMC) விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறையையும் ஒழிப்பதன் மூலமாக விவசாயிகளையே மோடி ஒழிக்கிறார்.

விலை உத்தரவாதம், விவசாய சேவைகள் ஒப்பந்த சட்டம் விவசாயிகளுக்கும் கொள்முதலாளர்களுக்குமான நாடு தழுவிய ஓர் “ஒப்பந்த பண்ணையம்” முறையை அமலாக்குகிறது.

கடந்த 2018-ம் ஆண்டில் ஒப்பந்தப் பண்ணையம் தொடர்பாக மத்திய அரசு ,மாநில அரசுகளுக்கு “மாதிரி” ஒப்பந்த பண்ணைய சட்டத்தை சுற்றுக்கு அனுப்பியிருந்தன.இந்த மாதிரி சட்டத்தின் அடிப்படையிலே இந்தியாவிலே முதல் மாநிலமாக `தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்தப்பண்ணையம் மற்றும் சேவைகள் சட்டம்- 2019′ என்ற சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. கரும்பு போன்ற பணப் பயிர்கள் மற்றும் இறைச்சிக் கோழி, ஈமுக் கோழி போன்ற கால்நடை விற்பனைகளை ஒப்பந்த அடிப்படையிலே வியாபாரிகளுக்கு பல சாதகங்களை இந்த சட்டம் வழங்கியது. வேளாண் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக இந்த சட்டம் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது எனவும், விவசாயிகள் நேரடியாக உற்பத்திப் பொருள்களை விற்றுக் கொள்ளலாம் எனவும் தமிழக வேளாண்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி பேட்டியளித்தார்.

நாடெங்கும் நடக்கும் விவசாயிகள் போராட்டம்

தற்போது ,இந்த சட்டத்திருத்தம் மூலமாக, நாடு தழுவிய அளவில் ஒரு ஒப்பந்த பண்ணையசட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனடிப்படையில்
வியாபாரி/கொள்முதலாளா் /உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் விவசாயிகள் விலை,தரம்,காலக் கெடு உள்ளிட்ட அம்சங்களை எழுத்துப் பூர்வமாக ஒப்பந்தம் செய்து கொள்வார்கள்.

ஒப்பந்த காலம் ஓராண்டு முதல் ஐந்தாண்டுகள் வரை மாநில வேளாண் துறை அதிகார அமைப்பின் கண்காணிப்பில் இந்த ஒப்பந்தம் போடப்படும். ஒப்பந்த சாகுபடி முறையால் விவசாயிகளுக்கு பல நன்மைகள் உள்ளதாக மத்திய மாநில அரசுகளால் திரும்பத் திரும்ப கூறப்படுகின்றன.ஆனால் நடைமுறையில் இந்த ஒப்பந்தங்களால் விவசாயிகளுக்கு எந்த நன்மையையும் இல்லை என்பதற்கு தமிழகத்தில் கரும்பு சாகுபடியில் நடந்துவரும் ஒப்பந்த விவசாயமே சாட்சி. சிறுகுறு உழவர்களைக் கிட்டத்தட்ட கார்ப்பரேட்களின் பண்ணையடிமைகளாக மாற்றிவிடும் இந்தச் சட்டம்.
உலக வர்த்தக கழகத்தின் அடிமையாக மாறிப்போன இந்திய நாடாளுமன்றம் இந்திய உழவர்களைப் பலிபீடத்தில் ஏற்றத் துணிந்ததை அறிவிக்கும் சட்டங்கள் இவை.
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுத்ததன் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனுதவியை இல்லாதொழிப்பது, மின்சாரத் திருத்தச் சட்டத்தின் மூலம் இலவச மின்சாரத்திற்கு முடிவுகட்டுவது என உழவர்களை உழவுத் தொழிலைவிட்டு விரட்டியடித்து கார்ப்பரேட் விவசாயத்திற்கு கதவைத் திறந்துவிடுகிறார் மோடி.

இதனாலேயே, நாடெங்கும் உள்ள விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்திய உணவுக் கழகத்தை செயலற்றதாக்கி ரேசன் கடைகளை மூடி பொதுவிநியோக முறையை ஒழித்துக்கட்டக்கூடிய இச்சட்டங்கள் உழவர்களை மட்டுமின்றி பெரும்பாலான ஏழை,எளிய மக்களுக்கும் எதிரானதாகும். இவற்றை திரும்பப்பெறக் கோரும் போராட்டத்தில் விவசாயிகளோடு துணை நின்று கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்த தமிழகமெங்கும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

கடந்த செப்டெம்பர் 25-ம் தேதியன்று நாடுமுழுவதும் விவசாய சங்கத்தினர் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம், அதன் தோழமை அமைப்புகள் மற்றும் பல்வேறு முற்போக்கு, ஜனநாயக அமைப்புகள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை :

செப்டெம்பர் 25-ம் தேதி காலை 11 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்திய உணவுக் கழகம் அருகில் உழவர்களின் உரிமையை அடகுவைக்க கூடிய கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தை தமிழ்த்தேச மக்கள் முன்னணி, மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தின. இவ்வார்ப்பாட்டம் தமிழ்த்தேச மக்கள் முன்னணியைச் சேர்ந்த தோழர் செந்தில் தலைமையில் நடைபெற்றது. மக்கள் அதிகாரம் சார்பாக தோழர் அமிர்தா மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னனி சார்பாக தோழர் குமரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் தோழர்கள் கைது செய்யப்பட்ட மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் போலீசு தோழர்களை விடுவித்தது.

தகவல் :
மக்கள் அதிகாரம், சென்னை

கடலூர், சீர்காழி, விருதாச்சலம், சேத்தியாத்தோப்பு :

டலூர் மண்டலம் மக்கள் அதிகாரம் சார்பில் மோடி அரசின் புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நான்கு இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

காலை பத்து முப்பது மணிக்கு கடலூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் சக்திவேல் தலைமையிலும் விருத்தாச்சலம் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் தலைமையிலும் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் ரவி தலைமையிலும் காந்தி சிலை அருகில் சேத்தியாத்தோப்பு பகுதி ஒருங்கிணைப்பாளர் பாலு மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் மணியரசன், மணிகண்டன் ஆகியோர் தலைமையிலும் மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிபிஎம். சிபிஐ மற்றும் தமிழ்நாடு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி. மா-லெ மக்கள் விடுதலை. திமுக. விசிக திராவிடர் விடுதலைக் கழகம். உள்ளிட்ட அமைப்புகளும் கலந்து கொண்டனர் .

கடலூர் :

விருதை, சீர்காழி, சேத்தியாத்தோப்பு :

தகவல் :
து. பாலு
மண்டல ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம் – கடலூர்.

விழுப்புரம் :

நாடு தழுவிய விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து விழுப்புரம் மண்டலம், மக்கள் அதிகாரம், சிபிஎம், சிபிஐ கட்சிகள் மற்றும் இதர அமைப்புகள், விவசாய சங்கங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் விவசாயிகளுக்கு விரோதமான சட்டத்தை நிறைவேற்றிய பாஜக அரசையும் அதற்குத் துணை நின்ற அதிமுக அரசையும் கண்டித்து முழக்கமிட்டவாரு சாலை மறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துத் தோழர்களையும் போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் விடுவித்தனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்
விழுப்புரம்

 ‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு !

3

‘இந்தியக் கலாச்சாரத்தை’ ஆய்வு செய்ய  மத்திய அரசு சிறப்புக் குழு ஒன்றை அமைத்தது குறித்து வரலாற்றாய்வாளர்கள் முதல் எடப்பாடி பழனிச்சாமி வரை பலரும் தங்களது வருத்தங்களையும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர். ”இந்திய கலாச்சாரத்தை” மோடி அரசு ஆய்வு செய்ய அப்படி என்ன அவசியம் வந்துவிட்டது ?

கடந்த செப்டெம்பர் 14-ம் தேதி மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் படேல், நாடாளுமன்றத்தில் “இந்தியக் கலாச்சார” தோற்றுவாய் பற்றி 12,000 ஆண்டுகள் வரை பின்னோக்கிச் சென்று ஆய்வு செய்ய இருப்பதாகவும், அதற்கென தனியாக ஒரு நிபுணர் குழு அமைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அந்த நிபுணர் குழுவில் இடம் பெற்றிருப்பவர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டன. அதில் தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியர்களோ, வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களோ இல்லை என்றும் முழுக்க முழுக்க வட இந்தியாவைச் சேர்ந்த ‘சாஷ்திரிகள்’தான் இருக்கிறார்கள் என்றும் பலரும் குறைபட்டிருக்கிறார்கள்.

படிக்க :
♦ திருக்குறளைத் திரிக்க முனையும் பார்ப்பனியம் : பரிமேலழகர் முதல் நாகசாமி வரை | வி.இ. குகநாதன்
♦ சிறப்புக் கட்டுரை : பார்ப்பனியம் – சமத்துவத்தின் முதல் எதிரி !

அந்தக் குறைகளின் பின்னணியைப் பார்ப்பதற்கு முன்னர், மத்திய அரசின் கலாச்சார ஆய்வு குறித்த அறிவிப்பிலேயே சில கேள்விகள் எழுகின்றன. முதலாவதாக, ‘இந்தியக் கலாச்சாரம்’ குறித்து ஆய்வு செய்யப்போவதாகக் கூறப்படுகிறது.

இந்தியா என்ற வரையறையுடன் கூடிய ஒரு நிலப்பரப்பு ஒரே நாடாக குறிப்பிடப்படுவது கடந்த 200- 300 ஆண்டுகளுக்குள்ளாகத் தான். அதற்கு முன்னர், அது தனித்தனி ராஜ்ஜியங்களாகவே அறியப்பட்டது. இன்றும்கூட அது பல்வேறு இன, மொழி மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட கூட்டமைப்பாகவே இருக்கிறது. இதில் எதை “இந்தியக் கலாச்சாரமாக” எடுத்துக் கொண்டு ஆராயப் போகிறது இந்திய அரசு ?

அடுத்ததாக 12,000 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்று இந்தியக் கலாச்சாரத்தை ஆராய இருப்பதகாவும் தெரிவிக்கிறது அமைச்சரின் அறிவிப்பு. உலகளவில் மிகவும் பழமை வாய்ந்ததாக தொல்லியல் மற்றும் மானுடவியல் நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்ட நாகரீகங்களே அதிகபட்சமாக 5500 ஆண்டுகளுக்குள் இருந்தவையே. ஆனால் ‘இந்தியா’ என்றழைக்கப்படும் நிலப்பகுதியில், 12000 ஆண்டுகளுக்கு முன்னர் – அதாவது நாகரீகங்கள் தோன்றுவதற்கும் முன்னர் – ‘ஒரு’ கலாச்சாரமோ அல்லது அதற்கான தோற்றுவாயோ இருந்ததாகவும், அதைக் கண்டறியத் தான் ஆய்வுக் குழு போட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறது மத்திய அரசு.

12,000 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகங்கள் குறித்த எந்த ஒரு ஆதாரமும் இல்லாத சூழலில், பிரிட்டிஷாரால் ‘இந்தியா’ என அடையாளப்படுத்தப்பட்ட ஒரு நிலப்பரப்பில் ‘ஒற்றை’ நாகரீகத்தைத் தேடி ஆய்வு செய்யும் திறமை சங்க பரிவாரக் கும்பலுக்கு மட்டும்தான் உண்டு.

மோடி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், இல்லாத சரசுவதி நதியைக் கண்டுபிடிக்க மத்திய அரசு மற்றும் ராஜஸ்தான், அரியானா அரசுகள் நூற்றுக் கணக்கான கோடிகளை செலவழித்தன. கடந்த 2015-ம் ஆண்டு மத்திய மோடி அரசிடம் இருந்து பத்மபூஷன் விருதுபெற்ற கே.எஸ். வால்தியா, 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சரஸ்வதி இருந்ததற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும், அந்த நதி சுமார் 4000 கிலோமீட்டர் தூரத்திற்குப் பாய்ந்ததாகவும், அதில் 1000 கிலோமீட்டர் பாகிஸ்தானில் இருந்ததாகவும் 3000 கிமீட்டர் இந்தியாவில் பாய்ந்ததாகவும் குறிப்பிட்டார். “இது யாராலும் மறுக்க முடியாதது” என அப்போதைய நீர்வளத்துறை அமைச்சரும் ‘பாபர் மசூதி இடிப்பில்’ இழிபுகழ் பெற்றவருமான உமா பாரதி தெரிவித்தார். இந்தக் கட்டுக்கதைகளை அறிவியல்பூர்வமாக பல ஆராய்ச்சியாளர்கள் மறுத்துள்ளனர்.

சரசுவதி நதி எனும் வேத கால புராணப் புளுகு, எப்படி வால்தியா கமிட்டியால் வரலாறாக மாற்றப்பட்டதோ, அதே போலத்தான் புராணப் புளுகுகளை 12,000 ஆண்டுகளுக்கு முந்தைய கலாச்சாரமாக, வரலாறாக இந்திய அரசு அமைத்திருக்கும் இந்த ஆய்வுக் குழுவால் மாற்றப்படும் வாய்ப்பு இருக்கிறது.

சரஸ்வதி நதியை தேடிய தருணத்தில்

சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முந்தைய நாகரீகமான கீழடி நாகரிகத்தை தொல்லியல் ஆதாரத்துடன் கீழடி அகழ்வாய்வு மையம் நிரூபித்த பின்னரும் ஆய்வை தொடர்ந்து மேற்கொள்ளாமல் தள்ளி வைத்த பாஜக அரசுக்கு உண்மையான இந்திய வரலாற்றைத் தேடும் ஆர்வம் இருப்பதாக நம்பமுடியுமா ?

சங்கிகள் நிறுவ விரும்பும் ‘வரலாற்றிற்கு’ தொல்பொருள் ஆய்வுகளும் ஆதாரங்களும் அவசியம் இல்லை. பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவாரக் கும்பல் நிறுவ விரும்பும் ‘வரலாறு’ என்பது ‘இந்து – சமஸ்கிருதம் – இந்தியா’ என்பதுதான். தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தாலும் இதற்கு ஆதாரம் கிடைக்கப் போவது இல்லை. அதனால்தான் தக்கான பீடபூமியைத் தாண்டி யாரும் அந்த ஆய்வுக் குழுவில் இணைக்கப்பட வில்லை.

ஒருவேளை எடப்பாடி கேட்டுக் கொண்டதற்கிணங்க மோடி அரசு, ஒரு தமிழரையேனும் அந்த ஆய்வுக் குழுவில் இணைத்துக் கொள்ளுமானால், “திருக்குறள் என்பது சாஸ்திரங்களிலிருந்து எடுத்தியம்பப்பட்ட நூல்” என்று ‘ஆய்வு’ அறிக்கை அளித்த ‘பத்மபூஷன்’ நாகசாமி போன்றவர்களைத் தான் நியமிக்கும் !

ஆகவே, இந்த ஆய்வுக் குழு பிற்காலத்தில் சமர்ப்பிக்கவிருக்கும் இறுதி ஆய்வறிக்கையின் சாராம்சத்தை முன் கூட்டியே படிக்க விரும்புபவர்கள் புராணப் புளுகுகளையும் – “ஒரே நாடு – ஒரே மொழி – ஒரே கலாச்சாரம் – அது இந்துக் கலாச்சாரம்” என்ற முழக்கத்தையும் திரும்பத் திரும்ப படித்துப் பார்த்துக் கொள்ளலாம் !

அதிசயிக்காதீர்கள் ! காவி பாசிச ஆட்சியில், “இனி எல்லாமே இப்படித்தான்”.

நந்தன்

விவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு! சிதம்பரத்தில் சாலை மறியல் !

விவசாய விரோத சட்டத்தை திரும்பப் பெறு ! சிதம்பரத்தில் விவசாய சங்கங்கள் சாலை மறியல் போராட்டம் !

த்தியில் அமைந்துள்ள பாசிச மோடி அரசு ஒட்டுமொத்த மக்களுக்கு எதிராக தொடர்ச்சியான அவசர சட்டங்களை அமல்படுத்தி கொண்டு வருகிறது.
இதில் நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லக்கூடிய, பெரும்பாலான மக்கள் உழைப்பில் ஈடுபடுகின்ற விவசாயத்தை கார்ப்பரேட் கையில் ஒப்படைக்க கூடிய வகையிலும், கார்ப்பரேட்டுகளின் அடிமையாக விவசாயிகளை மாற்றக்கூடிய வகையிலும் புதிய மூன்று சட்ட மசோதாக்களை பாராளுமன்ற விதிகளுக்கு எதிராக குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றி இருக்கிறது, பாசிச மோடி அரசு.

இச்சட்டத்தை அமல்படுத்த, பாராளுமன்றத்தில் அது நிறைவேற்றப்பட்டதில் இருந்து இந்தியா முழுமைக்கும் உள்ள விவசாய சங்கங்கள், விவசாயிகள் கொதித்தெழுந்து தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று (25/9/2020) தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பில் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் தமிழகம் முழுக்க பல்வேறு விவசாயிகள் கைதாகியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக சிதம்பரத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI),விடுதலை சிறுத்தை கட்சி, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள், கட்சியைச் சார்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பாசிச மோடி அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பியும், பெருந்திரளாக கலந்து கொண்டு கைதாகியுள்ளனர்.

தகவல்:
மக்கள் அதிகாரம் கடலூர்

கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ !

0

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார வேலை பற்றிய தேசிய மாநாட்டுரை
(1957, மார்ச் 12)
பாகம் – 3

முந்தைய பாகங்கள் >>  1 2

ஐந்தாவதாக, சீர்செய் இயக்கம் :

சீர்செய் இயக்கம் என்பது ஒருவருடைய சிந்தனாமுறையைச் சீர்செய்வது, வேலை நடையைச் சீர்செய்வது என்று அர்த்தப்படும். ஜப்பானிய எதிர்ப்பு யுத்தத்தின் போதும், விடுதலை யுத்தத்தின் போதும், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட ஆரம்ப நாட்களிலும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய் இயக்கங்கள் நடத்தப்பட்டன.2 இன்று கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி இன்னொரு சீர்செய் இயக்கத்தைக் கட்சிக்குள் இவ்வாண்டு முதல் நடத்துவதாகத் தீர்மானித்துள்ளது. கட்சிக்கு வெளியிலுள்ள மக்கள் இதில் கலந்து கொள்ளலாம்; அல்லது விரும்பாவிட்டால் கலந்து கொள்ளாமல் விடலாம். இந்தச் சீர்செய் இயக்கத்தில் பிரதான விசயம் ஒருவருடைய சிந்தனாமுறையிலும் வேலைநடையிலும் காணும் மூன்று தவறுகளை, அதாவது, மானசீகவாதம், அதிகாரத்துவம், கோஷ்டிவாதம் ஆகியவற்றை விமர்சனம் செய்வதாகும்.

ஜப்பானிய எதிர்ப்பு யுத்தத்தின் போது நடந்தது போல இன்றைய முறை யாதெனில் முதலில் ஒருசில தஸ்தாவேஜுகளைப் படித்து, பின்னர் இத்தகைய படிப்பின் அடிப்படையில் ஒருவர் தனது சிந்தனையையும் வேலையையும் பரிசீலனை செய்து, விமர்சனம், சுயவிமர்சனம் செய்வதன் மூலம் குறைபாடுகளையும் தவறுகளையும் அம்பலப்படுத்திச் சரியானவற்றையும் சிறந்தவற்றையும் வளர்க்க வேண்டும் என்பதாகும்.

சீர்செய் இயக்கத்தில் ஒருபுறம், நாம் கண்டிப்பாக இருந்து, நமது தவறுகளையும் குறைபாடுகளையும் மேலோட்டமாக இல்லாமல் பாரதூரமாக விமர்சனம், சுயவிமர்சனம் செய்து, அவற்றைத் திருத்த வேண்டும்; மறுபுறம், நாம் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளாமல், கடந்த காலத் தவறுகளிலிருந்து படிப்பினை பெற்று எதிர்காலத்தில் தவறுகளைத் தவிர்ப்பது, நோயாளியைக் காப்பாற்ற நோய்க்குச் சிகிச்சை அளிப்பது” என்ற கோட்பாட்டைப் பின்பற்ற வேண்டும். ஒரே அடியில் ஆட்களை முடித்துவிடுவது” என்ற முறையை நாம் எதிர்க்க வேண்டும்.

படிக்க :
♦ கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ
♦ தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !

நமது கட்சி ஒரு மகத்தான கட்சி, புகழ்மிக்க கட்சி, பிசகற்ற கட்சி. இது அங்கீகரிக்கப்படவேண்டிய ஒரு உண்மை. ஆனால் நம்மிடம் இன்னும் குறைபாடுகள் உண்டு. இதுவும் அங்கீகரிக்கப்பட வேண்டிய ஒரு உண்மையாகும். நாம் எல்லாவற்றையும் அங்கீகரிக்கக் கூடாது; சரியானவற்றை மாத்திரம் அங்கீகரிக்க வேண்டும். அதே வேளையில் நாம் எல்லாவற்றையும் நிராகரிக்கக் கூடாது; பிழையானவற்றை மாத்திரம் நிராகரிக்க வேண்டும். நமது வேலையில் பிரதான அம்சம் நமது சாதனைகள். ஆனால் அதில் இன்னும் பல குறைபாடுகளும் தவறுகளும் இருக்கின்றன. எனவேதான் நாம் ஒரு சீர்செய் இயக்கத்தை நடத்த வேண்டியிருக்கின்றது.

நமது சொந்த மானசீகவாதம், அதிகாரத்துவம், கோஷ்டிவாதம் ஆகியவற்றை நாம் விமர்சனம் செய்தால் நமது கட்சியின் புகழுக்கு மாசு ஏற்படுமா?

இல்லை என்று நான் எண்ணுகின்றேன். மாறாக, அது நமது கட்சியின் புகழை அதிகரிக்கச் செய்வதற்குத் துணை செய்யும். ஜப்பானிய எதிர்ப்பு யுத்தத்தின் போது நடந்த சீர்செய் இயக்கம் இதை நிரூபித்துள்ளது. அது நமது கட்சியின் புகழை, நமது கட்சி உறுப்பினர்களின் புகழை, நமது அனுபவமிக்க முதிய ஊழியர்களின் புகழை வளர்த்தது. புதிய ஊழியர்கள் பெரும் முன்னேற்றம் அடைவதற்கும் அது துணை செய்தது.

கம்யூனிஸ்ட் கட்சி, கோமிந்தாங் இரண்டில் விமர்சனத்துக்கு அஞ்சுவது யாது? கோமிந்தாங் ஆகும். அது விமர்சனத்தைத் தடைசெய்தது. ஆனால் அது இறுதித் தோல்வியிலிருந்து கோமிந்தாங்கைக் காப்பாற்றவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனத்துக்கு அஞ்சுவதில்லை. காரணம், நாம் மார்க்சிஸ்டுகள்; உண்மை நம் பக்கத்தில் இருக்கின்றது; அடிப்படை மக்கள், தொழிலாளரும் விவசாயிகளும் நம் பக்கத்தில் இருக்கின்றனர்.

நாம் வழக்கமாகக் கூறுவது போல், சீர்செய் இயக்கம் என்பது “சர்வவியாபகமான ஒரு மார்க்சியக் கல்வி இயக்கம்”.3 சீர்செய்வது என்றால் கட்சி முழுவதும் விமர்சனம், சுயவிமர்சனம் இவற்றின் மூலம் மார்க்சியத்தைக் கற்பது என்று அர்த்தம். இந்தச் சீர்செய் இயக்கத்தின் போக்கில், நாம் மார்க்சியம் பற்றிக் கூடுதலாகப் படிப்பது நிச்சயம்.

தலைமையைப் பொறுத்தவரையில், சீனாவின் மாற்றமும் நிர்மாணமும் நம்மைச் சார்ந்திருக்கின்றன. நமது சிந்தனாமுறையையும் வேலை நடையையும் நாம் சீர்செய்ததும், நமது வேலையில் நாம் மேலும் முன்முயற்சி உடையவர்களாய் மேலும் ஆற்றல் பெற்று, மேலும் நன்றாக வேலை செய்வோம். பரந்துபட்ட மக்களுக்கும் சோசலிச லட்சியத்துக்கும் முழுமனதோடு சேவை செய்கின்ற, மாற்றங்களைக் கொண்டுவர உறுதி பூண்டுள்ள மக்கள் பலர் நமது நாட்டுக்குத் தேவை.

கம்யூனிஸ்டுகளாகிய நாம் எல்லாரும் இத்தகையவர்களாக இருக்க வேண்டும். பழைய சீனாவில் சீர்திருத்தம் பற்றிப் பேசுவதே ஒரு குற்றம்; இது பற்றிப் பேசுவோர் சிரச்சேதம் செய்யப்படலாம்; அல்லது சிறையில் அடைக்கப்படலாம். இருந்தும் பலவிதமான கஷ்டங்கள் மத்தியிலும் ஒன்றுக்கும் அஞ்சாது நூல்களும், பத்திரிகைகளும் வெளி யிட்டு மக்களுக்குப் போதித்து அவர்களை ஸ்தாபனரீதியாக அணிதிரட்டி விட்டுக் கொடுக்காது போராட்டங்களை நடத்திய திடசித்தம் வாய்ந்த சீர்திருத்தவாதிகளும் அன்று இருந்தார்கள்.

மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம் நமது நாட்டுப் பொருளாதார, கலாச்சாரத் துறைகளின் துரித வளர்ச்சிக்கு வழிகோலியுள்ளது. நமது அரசு ஸ்தாபிக்கப்பட்டு ஒருசில ஆண்டுகளே சென்றுள்ளன. இருந்தும் பொருளாதாரம், கலாச்சாரம், கல்வி, விஞ்ஞானம் ஆகியவை முன் காணாத அளவில் செழித்து வளர்வதை மக்கள் ஏற்கனவே காண முடிகின்றது. நவ சீனாவைக் கட்டி வளர்ப்பதில் கம்யூனிஸ்டுகளாகிய நாம் எந்தவிதமான கஷ்டத்துக்கும் அஞ்ச மாட்டோம். ஆனால் இதை நாம் நாமாகவே நிறைவேற்ற முடியாது. சோசலிச கம்யூனிஸத் திசையில் நமது சமுதாயத்தின் மாற்றத்துக்கும் நிர்மாணத்துக்குமாக நம்முடன் சேர்ந்து அஞ்சாது போரிடக் கூடிய, உன்னத லட்சியங்களை உடைய, கட்சிக்கு வெளியில் உள்ள மக்கள் பெரும் தொகையில் நமக்குத் தேவை.

பல பத்துக் கோடிச் சீன மக்களுக்கும் சிறந்த ஒரு வாழ்வை உத்தரவாதம் செய்வதும், பொருளாதாரத்திலும், கலாச்சாரத்திலும் பின்தங்கிய நமது நாட்டைச் சுபிட்சமும், பலமும், உயர்ந்த கலாச்சாரத் தரமும் உடைய ஒரு நாடாக மாற்றுவதும் ஒரு கடினமான கடமையாகும். இந்தக் கடமைக்கு மேலும் திறமையாகத் தோள் கொடுத்து, உன்னத லட்சியங்களால் உந்தப்பட்டு, சீர்திருத்தங்களை நிறைவேற்றும் திடசித்தமுடைய, கட்சிக்கு வெளியேயுள்ள எல்லாருடனும் நன்றாய் வேலை செய்யக் கூடியவர்கள் ஆக வேண்டுமானால், நாம் இன்று மாத்திரமல்ல, எதிர்காலத்திலும் சீர்செய் இயக்கங்களை நடத்த வேண்டும்; இடைவிடாது தவறானவை எல்லாவற்றையும் நம்மிடமிருந்து நீக்க வேண்டும்.

பூரணமான பொருள்முதல்வாதிகள் அச்சமற்றவர்கள். நமது சகபோராளிகள் எல்லாரும் துணிகரமாகத் தமது பொறுப்புகளுக்குத் தோள் கொடுப்பர்; கஷ்டங்கள் எல்லாவற்றையும் வெற்றி கொள்வர்; பின்னடைவுகளுக்கோ அல்லது ஏளனங்களுக்கோ அஞ்ச மாட்டார்கள்; கம்யூனிஸ்டுகளாகிய எங்களை விமர்சனம் செய்வதற்கும், தமது ஆலோசனைகளைக் கொடுப்பதற்கும் அஞ்ச மாட்டார்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

ஆயிரம் வெட்டுகளுக்கும் அஞ்சாத ஒருவன்தான் சக்கரவர்த்தியைக் குதிரையிலிருந்து இழுத்து வீழ்த்தும் துணிவுடையவன்” — இதுவே சோசலிசத்தையும் கம்யூனிஸத்தையும் கட்டிவளர்க்கும் நமது போராட்டத்திற்குத் தேவையான தளராத உணர்வு. கம்யூனிஸ்டுகளாகிய நம்மைப் பொறுத்தவரையில், ஒத்துழைப்பவர்களுக்கு உதவியான சூழ்நிலைகளை நாம் சிருஷ்டிக்க வேண்டும். நமது பொதுவேலையில் அவர்களுடன் தோழமையான நல்ல உறவுகளை ஸ்தாபிக்க வேண்டும். நமது பொதுப் போராட்டத்தில் அவர்களுடன் ஐக்கியப்பட வேண்டும்.

(தொடரும்)

குறிப்புகள் :

2. ஜப்பானிய-எதிர்ப்பு யுத்தத்தின் போது நடந்த சீர்செய் இயக்கம் என்பது, 1942-ம் ஆண்டு, யென்ஆனிலும் இதர ஜப்பானிய-எதிர்ப்புத் தளப்பிரதேசங்களிலும் உள்ள கட்சி ஸ்தாபனங்களில் மானசீகவாதம், கோஷ்டிவாதம், கட்சியின் புளித்துப்போன எழுத்துமுறை ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்காக நடத்தப்பட்ட பெரும் சீர்செய் இயக்கமாகும். விடுதலை யுத்தத்தின் போது நடந்த சீர்செய் இயக்கம் என்பது, 1948-ம் ஆண்டு, விடுதலைப் பிரதேசங்களின் கட்சி ஸ்தாபனங்களில் நிலச் சீர்திருத்த இயக்கத்துடன் இணைத்து, பரந்த அளவில் நடத்தப்பட்ட கட்சிச் சீர்செய்தலாகும். சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட ஆரம்ப நாட்களில் நடந்த சீர்செய் இயக்கம் என்பது, தேசவிசால வெற்றி பெற்ற பின், 1950-ம் ஆண்டில் கட்சி முழுவதிலும் நடத்தப்பட்ட சீர்செய் இயக்கமாகும். அதன் நோக்கம் பெருந்தொகையான புதிய கட்சி உறுப்பினர்களுக்குப் போதனையளித்து, அவர்களது தூய்மையற்ற சித்தாந்தங்களை மாற்றுவதும், முதிர்ந்த கட்சி உறுப்பினர் மத்தியில் வெற்றியினால் வளரத் தொடங்கிய இறுமாப்பு, சுயதிருப்தி ஆகியவற்றையும் ஆணையிடும் வேலை நடையையும் சமாளிப்பதும் ஆகும்.

3. “தேர்ந்தெடுக்கப்பட்ட மாஒ சேதுங் படைப்புகள்” பகுதி 3-ல் ”ராணுவத்தில் சுய தேவைக்கான உற்பத்தி பற்றியும், மாபெரும் சீர்செய் இயக்கம், உற்பத்தி இயக்கம் இவற்றின் முக்கியத்துவம் பற்றியும்” என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

வேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் ! நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

மோடி அரசின் வேளாண் திருத்தச் சட்டத்தை கண்டித்து இன்று (25.9.20) இந்தியா முழுவதும் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து திருநெல்வேலி மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் கிராமத்தில் இளைஞர்கள், மாணவர்கள் பங்களிப்போடு எழுச்சிகரமாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக தோழர்கள் பேரணியாக அங்கிருந்து பிரதான சாலைக்கு வந்து விவசாய மசோதாக்களைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

படிக்க :
♦ அறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன ? | தோழர் மாவோ
♦ கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ

விவசாய சீர்திருத்தச் சட்டங்கள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதோடு, மக்களின் அத்தியாவசியத் தேவையான உணவு தானியங்களை கார்ப்பரேட்டுகளின் பிடியில் சிக்க வைத்திருக்கிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான கட்டுப்பாடு அரசாங்கத்தின் கையில் இருக்கும் போதே, பட்டினிச் சாவுகள் தலைவிரித்தாடிடும் சூழலில் இனி கார்ப்பரேட்டுகளின் கைக்குச் சென்றால், கொத்துக் கொத்தாக பட்டினிச் சாவுகள்தான் இந்தியாவெங்கும்  நடக்கும்.

விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்துவந்த குறைந்த பட்ச விலை முறையை கை கழுவும் விதமாக விவசாயிகள் கார்பரேட்டுகளுடன் நேரடியாக பேரம் நடத்திக் கொள்ளும் வகையில் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது மோடி அரசு.

இத்தகைய மக்கள் விரோத சட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் தோழர் கின்ஷன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் உரிமை மீட்பு களம் தோழர் லெனின் கென்னடி, திராவிடத் தமிழர் கட்சி தோழர்கள் தோழர் கதிரவன், தோழர் ஒண்டி வீரன் முருகேசன், தோழர் திருக்குமரன், தோழர் வேல்ராஜ், தோழர் இளமாறன் கோபால், பூர்வீகத் தமிழர் கட்சி தோழர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. வேளாண் திருத்தச் சட்டத்தை வீழ்த்தும் வரை விவசாயிகளைத் திரட்டி போராட்டம் தொடரும் என்பதை ஆர்ப்பாட்டத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல் :
மக்கள் அதிகாரம், நெல்லை – தூத்துக்குடி

இன்சுலின் ஊசி நல்லதா? கெட்டதா? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

ரு நீரிழிவு நோயாளிக்கு நீரிழிவு ஏன் ஏற்படுகிறது என்பதை முதலில் அறிந்தால் இன்சுலின் ஊசி ஏன் பரிந்துரைக்கப்படுகிறது என்பதை விளங்க முடியும்.

நீரிழிவு என்பது நோய் என்ற நிலையில் இருந்து அது ஒரு பன்முக காரணிகள் கொண்ட குறைபாடு என்ற நிலையில் வைத்துப்பார்க்கப்படுகிறது. it’s a deficiency.

அதாவது நம் உடல் ஊட்டச்சத்துகளை கிரகித்துக்கொள்ளும் தன்மையில் ஏற்படும் குளறுபடி அல்லது குறைபாட்டை நாம் பொதுப்பெயராக “நீரிழிவு” என்று அழைக்கிறோம். Diabetes is a complex disorder with which our body becomes deficient in handling nutrients from food in a right way.

ஒரு நார்மல் மனிதன் அவன் உண்ணும் உணவில் மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட் இருந்தால் அது ரத்தத்தில் க்ளூகோசை கலக்கும். ரத்தத்தில் இருக்கும் க்ளூகோசை கணையத்தில் இருக்கும் பீட்டா செல்கள் உணரும். உணர்ந்த அடுத்த சில நாழிகைகளில் “இன்சுலினை” ரத்தத்தில் கலக்கும்.

இன்சுலினின் வேலை க்ளூகோசை உடலில் இருக்கும் செல்கள் அனைத்திற்கும் சென்று பசித்திருக்கும் சேய்களுக்கு அன்னை உணவு புகட்டுவது போல பசித்திருக்கும் செல்களுக்கு உணவு ஊட்டும்.

படிக்க :
♦ டைப் – 1 நீரிழிவும் அதற்கான அருமருந்தும் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 
♦ கருக்கலைப்பு – குடும்பக் கட்டுப்பாடு : ஆண்கள் மனநிலை என்ன ? | மருத்துவர் அனுரத்னா

மிஞ்சிய உணவை ( க்ளூகோசை) கல்லீரலில் க்ளைகோஜெனாகவும்  தோலுக்கு அடியே ட்ரைகிளிசரைட் எனும் கொழுப்பாகவும் சேமிக்க உதவும். இது பஞ்ச காலத்தில் ஏற்படும் பட்டினிகளின் போது உதவும் என்பதற்காக நமது உடலின் ஏற்பாடு.

நாம் உண்ணும் உணவில் இருக்கும் கொழுப்பு( Fat ) மற்றும் புரதம் (protein) போன்றவை ரத்தத்தில் கலக்கும் போது முறையே ஃபேட்டி அமிலங்களாகவும் அமினோ அமிலங்களாகவும் மாறும். அப்போதும் இன்சுலின் சுரக்கும்.

ஃபேட்டி அமிலங்களையும் அமினோ அமிலங்களையும் நமது உடலின் கட்டுமானப்பணிகளுக்கு உபயோகிக்கும் முக்கிய வேலை இன்சுலினுடையது. அதனால் அதை “கட்டுமான மீளுருவாக்க ஹார்மோன்” என்று அழைக்கிறோம். Anabolic harmone.

மேலும் நமது உடலில் புரதத்தை சேமித்து வைத்திருக்கும் தசைகளும், கொழுப்பும் கரையாமல் இருக்க இன்சுலின் அவசியமாகிறது. இன்சுலின் கொழுப்பு கரைவதை தடுக்கிறது. இதில் இருந்து நமக்கு புரிந்திருக்கும் “இன்சுலின்” என்பது நமக்கு மிகவும் தேவையான அத்தியாவசியமான ஹார்மோன் என்று.

இந்த ஹார்மோன் பிறப்பில் இருந்தே சிலருக்கு முற்றிலுமாக அல்லது  போதுமான அளவு சுரக்காது . இவர்கள் டைப் ஒன்று நீரிழிவு (TYPE I)  உள்ளவர்கள் என்று அறியப்படுகிறார்கள். இவர்களுக்கு இன்சுலின் சுரப்பு சுத்தமாக இல்லாததால் நாம் கட்டாயம் வெளியில் இருந்து இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

எக்காரணம் கொண்டும் யார் கூறினாலும் இன்சுலின் ஊசியை டைப் ஒன்று நீரிழிவு நோயாளிகள் நிறுத்திவிடக்கூடாது. அவ்வாறு நிறுத்தினால் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் அபாயகரமான நிலைக்கு ஏறிவிடும். மேலும் இன்சுலின் இல்லாததால் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து ரத்தத்தில் கீடோன்கள்  ஏறிவிடும்.

நமது செல்களுக்கு க்ளூகோசை ஊட்டவும் இன்சுலின் இல்லை. புதிதாக உருவாகும் கீடோன்களை சாப்பிட்டும் பழக்கமில்லை. ஆதலால் ஒரே சமயத்தில் க்ளூகோசும் கீடோன்களும் அபாய அளவை தாண்டி கோமா நிலைக்கு அழைத்துச்செல்லும். இதை Diabetic Ketoacidotic coma என்கிறோம். பல நேரங்களில் மரணம் சம்பவிக்கும். எனவே டைப் ஒன்று நீரிழிவு நோயாளிக்கு கட்டாயம் இன்சுலினை மறுக்கக் கூடாது.

இப்போது பெரும்பான்மையான டைப் 2 நீரிழிவு நோயாளிகள் கதைக்கு வருவோம்.

டைப் டூ (2) நீரிழிவு எப்படி வருகிறது ?

பொதுவாக முப்பது வயது முதல் ஐம்பது வயதிற்குட்பட்ட காலத்தில் தான் அதிகபட்சமான டைப் டூ நீரிழிவு நோயாளிகள் கண்டறியப்படுகின்றன. எனவே என்னைப் பொறுத்த வரை நான் டைப் டூ நீரிழிவை “இயந்திர தேய்மான நோயாகவே பார்க்கிறேன்”

நமது உடல் ஒரு இயந்திரம் என்றால் அது இயங்க தேவையான எரிபொருளை விடுத்து வேறொரு எரிபொருளில் இயக்குவதால் ஏற்படும் தேய்மானம் தான் நீரிழிவு நோய் என்பது எனது கருத்து.

படிக்க :
♦ சோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா !
♦ மாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி !

மருத்துவ விஞ்ஞானம் டைப் டூ டயாபடிஸ்க்கு முதல் காரணமாக “ஜீன்கள்” எனும் பிறவிக்குறைபாட்டை குறிக்கிறது. அடுத்த காரணங்களாக, அதிக கலோரி உணவு, அதிக உடல்  எடை, குறைந்த உடல் பயிற்சி, அதீத மன அழுத்தம் / உளைச்சல் போன்றவற்றை கூறுகிறது.

நிச்சயம் ஜீன்களின் தாக்கத்தை மறுப்பதற்கில்லை. நம்மால் பெரிதாக மாற்ற இயலாத ஒரு காரணியாக ஜீன்கள் இருக்கின்றன. இதை Non modifiable risk factor என்கிறோம். ஆனால் நம்மால் மாற்ற முடிந்த Modifiable risk factorகளில் முதன்மையாக நான் கருதுவது “உணவு”.

டைப் டூ நீரிழிவு நோயாளிக்கு ஏன் ரத்த சர்க்கரை அளவுகள் அதிகமாகின்றன?

  1. அவரது கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சரிவர ரத்த க்ளூகோஸ் அளவுகளை கிரகிக்க முடியாமல் போவது. இதனால் உணவு சாப்பிட்டபின் ஏறும் சர்க்கரைக்கு ஏற்றாற் போல் இன்சுலின் சுரப்பு இருக்காது.
  2. நமது உடலில் உள்ள அத்தனை செல்களிலும் இன்சுலினை இணங்கண்டு கொள்ள ஏதுவாக Insulin receptor கள் இருக்கும். இவற்றின் அளவுகள் செயல்களில் குறைவதால் கணையத்தால் சுரக்கப்பட்ட இன்சுலின் செல்களில் சரியாக வேலை செய்யாது இதை Insulin resistance என்போம்.

எனவே ஒரு சமயத்தில் இன்சுலினும் குறைவாக சுரந்து , சுரக்கப்பட்ட கொஞ்சூண்டு இன்சுலினும் சரியாக வேலை செய்யாமல் போவதால் ஏற்படுவதே டைப் டூ டயாபடிஸ்.

இப்போது இன்சுலின் ஊசி ஏன் பரிந்துரை செய்யப்படுகிறது? என்ற கேள்விக்கு மீண்டும் வருவோம்

ஒரு சராசரி தமிழருக்கு 40 வயதில் நீரிழிவு கண்டறியப்படுகிறது. அவருக்கு பீட்டா செல்கள் நன்றாக வேலை செய்கின்றன. இன்சுலின் சுரப்பு அளவும் நன்றாக இருக்கிறது. ஆனால் சுரக்கப்பட்ட இன்சுலின் மட்டும் சரியாக வேலை செய்ய மாட்டேன் என்கிறது. ஆகவே முதலில் இன்சுலினை முறையாக வேலை செய்ய வைக்கும் மாத்திரை மட்டும் தரப்படும்.

ஆனால் நம்மவர் அதிக மாவுச்சத்து உள்ள உணவுகளை தினமும் சாப்பிடுகிறார். டீயில் சீனியை நிறுத்தவில்லை. ஆகவே சுகர் கண்ட்ரோல் ஆகவில்லை.

காரணம், இப்போது பீட்டா செல்கள் வேலை செய்வதில் சுணக்கம் காட்டுவதால் உணவு சாப்பிட்டவுடனேயே சுரக்க வேண்டிய இன்சுலின் அளவுகள் குறைகின்றன. இதை சரி செய்ய பீட்டா செல்களை தூண்டி இன்சுலினை சுரக்கச்செய்யும் மாத்திரைகள் சேர்க்கப்படுகின்றன. கொஞ்ச காலம் சுகர் கண்ட்ரோல் ஆகிறது.

ஆனால் சில வருடங்கள் கழித்து மீண்டும் ரத்த சர்க்கரை அளவுகள் சரியாக இல்லை. காரணம் இப்போது பீட்டா செல்கள் கிட்டத்தட்ட தங்களது இன்சுலின் சுரப்பை நிறுத்தி விட்டன. பீட்டா செல்கள் முழுவதும் அழிந்தும் போய் விடும் நிலையும் உண்டு. இதை Type 2 ->TYPE 1 என்று அழைக்கிறோம்.

அதாவது டைப் டூ நீரிழிவில் இருந்து டைப் ஒன்று நோயாளியாக மாறிவிட்டார் என்று அர்த்தம் . இப்போது இவருக்கு கணையத்தில் இருந்து இன்சுலினே சுரக்காது. ஆகவே இன்சுலினை வேலை செய்ய வைக்கும் மாத்திரைகளும் வேலைக்கு ஆகாது. இன்சுலினை சுரக்க வைக்கும் மாத்திரைகளும் வேலைக்கு ஆகாது.

இந்த நிலையில் தான் நம் அருமருந்தான இன்சுலின் ஊசிகள் போடப்படுகின்றன. இன்சுலின் ஏன் மாத்திரையாக இல்லாமல் ஊசியாக இருக்கிறது?

இன்சுலின் என்பது புரதமாக இருப்பதால் மாத்திரையாக போட்டால் நமது ஜீரண மண்டலம் அதை செரிமானம் செய்து  விடும். பலன் இருக்காது. ஆகவே தான் தோலுக்கு அடியில் போடும்  ஊசியாக இன்சுலின் கிடைக்கிறது. ஆகவே, இன்சுலின் ஒருவருக்கு பரிந்துரை செய்யப்படுகிறது என்றால் இனிமேல் அவருக்கு உடலில் சுரக்க இன்சுலின் இல்லை  என்று அர்த்தம்.

நமது வீட்டு சூழலையே எடுத்துக்கொள்வோம். முப்பது வருடங்களுக்கு முன்பு வரை கூட பல வீடுகளில் கிணறுகள் இருந்தன. அதில் சில அடிகளில் தண்ணீர் கிடைத்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வீடுகள் அதிகமாகவே தண்ணீர் தேவையும் அதிகமாக அதிகமாக ஆள்துளை கிணறுகள் போட்டு உறிஞ்சி எடுத்தோம்.  இப்போது ஆள்துளை கிணறுகளிலேயே காற்று தான் வருகிறது. உடனே நாம் தண்ணீரை கேன்களிலும் வண்டிகளிலும் வாங்குகிறோம் .

இதே நிலை தான் இன்சுலினுக்கும். மாவுச்சத்து அதிகமாக உண்டதால் நீரிழிவு வந்தது. உடனே மாவுச்சத்தை குறைக்கவில்லை. மாறாக அதிக மாவுச்சத்து உண்ணும் பழக்கத்திலேயே இருந்தோம். நாளாக நாளாக மாத்திரைகள் வேலை செய்யாமல் இன்சுலின் தேவைப்படும் சூழலுக்கு ஆளாகிறோம். இதுவன்றியும் சில அசாதாரண சூழ்நிலைகளில் நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி தேவைப்படும்.

அவை,
♠ கடும் நோய் தொற்று
♠ விபத்தில் மோசமான காயம்
♠ அறுவை சிகிச்சை
♠ ஸ்டிராய்டு மருந்து உபயோகிக்கும் போது
♠ கர்ப்பிணிகள்

மேற்சொன்ன இடங்களில் நீரிழிவு மாத்திரைகளுடனோ அல்லது தனியாகவோ இன்சுலின் ஊசி உபயோகிக்கப்படும். மேற்சொன்ன இடங்கள் அனைத்திலும் நம் உடலால் முறையாக இன்சுலின் சுரந்து சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க இயலாது அல்லது உடல் கட்டுமானப் பணிகளை சரிவர செய்ய இயலாது. எனவே இன்சுலின் கட்டாயம் தேவைப்படுகிறது.

படிக்க:
♦ தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !
♦ நூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்

இப்போது இந்த கட்டுரையின் கடைசி மற்றும் முக்கிய பகுதிக்கு வருவோம். ஒருமுறை போட ஆரம்பித்த இன்சுலின் ஊசியை  டைப் டூ டயாபடிஸ் நோயாளி வாழ்நாள் முழுவதும் நிறுத்த முடியாதா???

இன்சுலின் உங்களுக்கு எதனால் பரிந்துரை செய்யப்பட்டது என்பதை அறிந்துமா இந்த கேள்விக்கு பதில் தெரியவில்லை.

நீங்கள் உங்கள் உணவில் மாவுச்சத்தின் அளவை தினமும் 40 கிராமிற்கு உள்ளாக குறைத்தால் உங்கள் கணையம் சுரக்கும் குறைந்த இன்சுலினே போதுமானதாக இருக்கும் நிலை ஏற்படலாம்.

சில நேரங்களில் முற்றிலும் பீட்டா செல்கள் இறந்து விட்டிருந்தால், ஏற்கனவே போடப்பட்டு வந்த இன்சுலின் அளவுகளை விடவும் குறைந்த அளவே போதும் என்ற நிலை வரலாம்.

எனது அனுபவத்தில் பல டைப் டூ நீரிழிவு  நோயாளிகள், குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறைக்கு மாறி இன்சுலினை நிறுத்தி மாத்திரைகளுக்கு மாறிய கதைகளை கண்டுள்ளேன். பலருக்கு பேலியோ உணவு முறைக்கு மாறியும் கூட இன்சுலின் தொடர்ந்து தேவைப்படுகிறது அதையும் காண்கிறோம்.

தேவைக்கு ஏற்ப இன்சுலின் வழங்கப்படும். குறைக்கப்படும். நிறுத்தப்படும். அந்த முடிவை மருத்துவரிடம் விட்டு விடுங்கள். இன்சுலின் ஊசி நல்லதா ? கெட்டதா ? என்ற கேள்விக்கான பதில் – நிச்சயம் அது நன்மை செய்வது தான்.

அதிக மாவுச்சத்து அதனால் டைப் டூ நீரிழிவை பெற்று   இன்சுலின் சுரக்காத நிலைக்கு சென்ற மக்களுக்கும், பிறவி குறைபாடாக டைப் ஒன்று நீரிழிவை பெற்ற மக்களுக்கும் இன்சுலின் நிச்சயம் அமிர்தம் தான்.

இன்சுலினால் தினமும் பல கோடி உயிர்கள் காக்கப்படுகின்றன.

நன்றி : ஃபேஸ்புக்கில்Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

சோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா !

0

வெங்காயம், உருளைக் கிழங்கு, தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், ஆகியவற்றை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்க வகை செய்யும், “அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) சட்ட மசோதா – 2020″-ஐ மோடி அரசு மாநிலங்களவையில் நிறைவேற்றியுள்ளது.

கடந்த வாரத்தில் இரண்டு விவசாய திருத்தச் சட்ட மசோதாக்களைக் கண்டித்து எதிர்ப்புத் தெரிவித்த 8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, கடந்த செவ்வாய்க் கிழமை (22-09-2020) அன்று காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் வெளிநடப்பு செய்தனர். அந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) சட்ட மசோதா – 2020-ஐ மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றிக் கொண்டது மத்தியில் ஆளும் பாஜக அரசு.

கோடிக்கணக்கான மக்களின் உணவிலும், விவசாயிகளின் வாழ்விலும் மண்ணள்ளிப் போடும் இத்தகைய சட்டத்தை எதிர்க்கட்சிகள் இல்லாத நேரத்தில் கமுக்கமாக நிறைவேற்றியிருக்கிறது பாஜக. மறைந்திருந்து தாக்குவதையே அறமாகக் கொண்ட ராமனை உயர்த்திப் பிடிக்கும் பாஜக கும்பலிடம் இதை விட வேறு என்ன நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியும்?

படிக்க :
♦ கார்ப்பரேட் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் புதிய விதை மசோதா !
♦ ஒப்பந்த சாகுபடிச் சட்டம் : விவசாயிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் பொறி !

தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய், வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவை அனைத்தும் இந்திய அரசினால் அத்தியாவசியப் பொருட்களாக பட்டியலிடப்பட்டிருந்தன. மக்களின் அடிப்படை உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் இந்த அடிப்படை உணவு வகைகள் அத்தியாவசிய பொருட்களாக 1955 முதல் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாகத்தான் இந்தப் பொருட்கள் பெருமளவில் பதுக்கப்படாமலும், இவற்றின் விலை வரம்புமீறிப் போகாமலும் இருந்து வந்தது. பஞ்சம், விளைச்சல் குறைவு போன்ற காலகட்டங்களில் மட்டுமே இவற்றின் விலை உயர்ந்தது. மற்றபடி பதுக்கலின் காரணமாக விலை உயர்வு ஏற்படாமல் தடுக்க ஏற்கெனவே இருந்த அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் வழிவகை செய்தது. இதன் மூலம் இந்தப் பொருட்களை பதுக்கும் வியாபாரிகளைக் கடுமையாக தண்டிக்க வழிவகை செய்தது.

இந்தச் சட்ட மசோதா குறித்துப் பேசிய மத்திய நுகர்வோர் விவகார, உணவு மற்றும் பொது விநியோக துணை இணை அமைச்சர் தன்வே ராவ்சாஹிப் தாதாராவ் குறிப்பிடுகையில், தற்போது நாடு உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளதால் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து இவற்றை தற்போது நீக்கியுள்ளதாகவும், தேசியப் பேரிடர்கள், போர், விலைவாசி உயர்வுடன் கூடிய பஞ்சம், போன்ற விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டும் அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்க வரம்பு விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதாவது உற்பத்தியில் தன்னிறைவு பெறாததால் ஒரு பொருளை அத்தியாவசியப் பொருள் பட்டியலில் இவ்வளவு நாட்கள் வைத்திருந்ததாக புதியதொரு விளக்கத்தை அளிக்கிறார். அத்தியாவசியப் பொருட்கள் என்பவை ஒரு நாட்டில் வாழும் மக்களுக்கு உறுதி செய்தளிக்கப்பட வேண்டிய – உயிர்வாழ அவசியமான பொருட்களே ஆகும். மக்கள் வாழ அவசியமான உணவுப் பொருட்களை எவ்வித பதுக்கலும் இல்லாமல் தங்குதடையின்றி குறைந்த விலையில் கிடைக்கச் செய்யவே உணவு தானியப் பொருட்களும், எண்ணெய் வித்துக்களும் அத்தியாவசியப் பொருட்களாக அறிவிக்கப்பட்டன. ஆகவே உற்பத்தி தன்னிறைவு பெறுவதற்கும் ஒரு பொருள் அத்தியாவசியப் பொருளா இல்லையா எனத் தீர்மானிப்பதற்கும் எந்த  ஒரு சம்பந்தமும் இல்லை.

எனில் இந்தச் சட்ட திருத்தத்தின் உண்மையான நோக்கம் என்ன ? அதையும் மத்திய இணை அமைச்சரே மேற்பூச்சாக விளக்குகிறார். ‘‘இதுவரை இருப்பு வைக்க தடை இருந்ததால், அவை விவசாய உள்கட்டமைப்பில் முதலீடுகளை தடுத்தன. இந்த தடை நீக்கப்படுவதன் மூலம், விவசாய துறையில் தனியார் துறைகள், வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கு வழிவகுக்கும்.” என்கிறார்.

விவசாய உட்கட்டமைப்பில் தனியார், வெளிநாட்டு முதலீடுகளுக்கு இந்த அத்தியாவசிய பொருட்கள் சட்டம் தடையாக இருந்துள்ளது. உதாரணத்திற்கு, வட இந்தியாவின் பெருவாரியான உழைக்கும் மக்கள் உருளைக் கிழங்கை அதிகமான அளவில் உட்கொள்கின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் இவ்வளவு நாள் உருளைக் கிழங்கு இருப்பதால், இதன் விலை பெருமளவில் ஏறவில்லை. அதற்கு முக்கியக் காரணம், பெரும் நிறுவனங்களோ, வியாபாரிகளோ உருளைக் கிழங்கை வாங்கி பதுக்கி, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி விலையை ஏற்றி விற்பனை செய்ய முடியாது. தற்போது அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து உருளைக் கிழங்கு நீக்கப்படும் சூழலில், கார்ப்பரேட்டுகளின் பதுக்கல் காரணமாக இதன் விலை கடுமையாக உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது.

ஆனால் அமைச்சரோ, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டத்தின் மூலம் இவற்றை கார்ப்பரேட் வேளாண் வர்த்தக நிறுவனங்கள் அதிக அளவில் வாங்குவதற்கான வாய்ப்பு இருப்பதால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் அரசின் உறுதிமொழி இலக்கை எட்ட உதவுவதுடன், எளிதாக வர்த்தகம் புரிய வழி வகுக்கும் என்று கூறியிருக்கிறார் அமைச்சர்.

படிக்க :
♦ லெனின் முன் வைத்த புதுப்பாணியிலான கட்சி !
♦ புரட்சிக்குப் போதுமானதாக கட்சி நிறுவனம் இருக்க வேண்டும் ! | லெனின்

இந்தச் சட்ட திருத்த மசோதாவோடு, மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகளில் விவசாயிகளுக்களுக்கான (அதிகாரமளித்தல் & பாதுகாப்பு)  ஒப்பந்த மசோதா மூலம் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்வதில் இனி அரசு தலையிடாத பட்சத்தில், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கோரும் அடிமாட்டு விலைக்கு விளை பொருட்களை விற்பதைத் தவிர விவசாயிகளுக்கு வேறு வழியில்லை. இந்நிலையில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கம் நிறைவேறும் என்று அமைச்சர் கூறுவது வக்கிரத்தின் உச்சம். இந்த விவசாய மசோதாக்கள் சட்டமாக்கப்பட்ட பிறகு விவசாயிகளின் தற்கொலைகள் இரட்டிப்பாவதற்கான அபாயம்தான் இருக்கிறதே ஒழிய வருமானம் இரட்டிபாகப் போவதில்லை.

பல ஆண்டுகளாகவே, வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை அரசு நிர்ணயிக்கும் முறையை மாற்றுமாறு உலக வர்த்தகக் கழகம் தொடர்ந்து நிர்பந்தித்து வந்ததையும், கடந்த ஜனவரி மாதம் முதல் முகேஷ் அம்பானியும், கவுதம் அதானியும் விவசாய மற்றும் உணவுப் பொருள் விற்பனைத்துறையில் நுழைந்திருப்பதையும் இணைத்தே தற்போது கொண்டுவந்திருக்கும் மூன்று விவசாய மசோதாக்களைப் பார்க்க வேண்டும்.

நாட்டின் அனைத்துத் துறைகளிலும் தங்களது சுரண்டலை தங்குதடையின்றி நடைமுறைப்படுத்தி வரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், அந்நிய நிதியாதிக்க நிறுவனங்களுக்கும் கண்ணை உறுத்திக் கொண்டிருந்த விவசாயத்துறையையும், உணவுப் பொருள் மொத்த மற்றும் சில்லரை விற்பனைத் துறையையும் இந்த மசோதாக்கள் மூலம்  அள்ளிக் கொடுத்திருக்கிறது இந்த மசோதா. உணவுப் பொருள் விற்பனையில் அனுமதிக்கப்படும் இத்தகைய கார்ப்பரேட் கொள்ளையை இன்றே தடுக்கத் தவறினால், இதன் விளைவாக ஏற்படவிருக்கும் விலைவாசி உயர்வின் காரணமாக பசியாலும் பட்டினியாலும் பெருவாரியான மக்கள் சாகும் நிலையை விரைவில் கண்கூடாகக் காணவிருக்கிறோம் என்பது திண்ணம் !


சரண்

 

அறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன ? | தோழர் மாவோ

2

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார வேலை பற்றிய தேசிய மாநாட்டுரை
(1957, மார்ச் 12)
பாகம் – 2

முதல்பாகம் >>

மூன்றாவதாக, அறிவுஜீவிகளைப் புனருருவாக்கும் பிரச்சினை :

மது நாடு கலாச்சாரரீதியில் வளர்ச்சியடையாத ஒரு நாடு. எம்முடைய நாடு போன்ற ஒரு விசாலமான நாட்டுக்கு ஐம்பது லட்சம் அறிவுஜீவிகள் மிகச் சிலரே ஆவர். அறிவுஜீவிகள் இல்லாவிட்டால் நமது வேலைகளை நன்றாகச் செய்ய முடியாது. எனவே அவர்களுடன் ஐக்கியப்படுவதற்கு நாம் நன்றாக உழைக்க வேண்டும். சோசலிசச் சமுதாயம் பிரதானமாகத் தொழிலாளர், விவசாயிகள், அறிவுஜீவிகள் என்ற மூன்று பகுதியினரைக் கொண்ட சமுதாயம்.

அறிவுஜீவிகள் என்போர் மூளை உழைப்பாளர்கள். அவர்களுடைய வேலை மக்களுக்கு, அதாவது தொழிலாளர், விவசாயிகளுக்குச் சேவை செய்வதாகும். பெரும்பான்மையான அறிவுஜீவிகளைப் பொறுத்தவரையில், அவர்கள் பழைய சீனாவுக்குச் சேவை செய்தது போல் நவ சீனாவுக்கும், பூர்ஷுவா வர்க்கத்துக்குச் சேவை செய்தது போல் பாட்டாளி வர்க்கத்துக்கும் சேவை செய்ய முடியும்.

அறிவுஜீவிகள் பழைய சீனாவுக்குச் சேவை செய்த காலத்தில் இடதுசாரிகள் எதிர்த்தனர்; மத்திய பகுதியினர் ஊசலாடினர்; வலதுசாரிகள் மட்டும் உறுதியாக நின்றனர். இன்று நவ சீனாவுக்குச் சேவை செய்யும் போது இந்த நிலைமை எதிர்மாறாக உள்ளது. இடதுசாரிகள் உறுதியாக நிற்கின்றனர்; மத்திய பகுதியினர் ஊசலாடுகின்றனர் (புதிய சமுதாயத்தில் இந்த ஊசலாட்டம் பழைய சீனாவில் கண்டதிலும் பார்க்க வேறுபட்டது); வலதுசாரிகள் எதிர்க்கின்றனர். இன்னும் அறிவுஜீவிகள் போதகாசிரியர்கள் ஆவர். நமது பத்திரிகைகள் மக்களுக்குத் தினம் தினம் போதிக்கின்றன. நமது எழுத்தாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், தொழில் நுட்ப ஊழியர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் எல்லாரும் மாணவர்களுக்குப் போதிக்கின்றனர், மக்களுக்குப் போதிக்கின்றனர்.

படிக்க :
♦ மாமேதை லெனின் : அறிவாளிகளின் அந்தரங்கம் || லெனின் – தலைவர்! தோழர்! மனிதர்!
♦ சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் !

போதனையாளர்களாகவும் ஆசிரியர்களாகவும் உள்ள அவர்கள் முதலில் போதிக்கப்பட வேண்டும். சமுதாய அமைப்பில் பெரும் மாற்றம் நிகழும் இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரையில் இது மேலும் உண்மையாகும். கடந்த சில ஆண்டுகளில் அவர்கள் ஓரளவு மார்க்சியக் கல்வி பெற்றிருக்கின்றார்கள். சிலர் மிகக் கஷ்டப்பட்டுப் படித்துப் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆனால் பெரும்பான்மையினர் தமது பூர்ஷுவா வர்க்க உலகநோக்கை முற்றாக நீக்கி, பாட்டாளி வர்க்க உலகநோக்கைப் பெறுவதற்கு இன்னும் நீண்டதூரம் செல்ல வேண்டும். சில நபர்கள் ஒருசில மார்க்சிய நூல்களைப் படித்ததும், தம்மைப் பெரும் படிப்பாளிகளாக எண்ணிக் கொள்கின்றனர்.

ஆனால் அவர்கள் வாசித்தது ஆழமாகப் புகுந்து, அவர்களுடைய உள்ளங்களில் பதியவில்லை; அதை எப்படி உபயோகிப்பது என்று அவர்கள் அறியாது இருக்கின்றனர். அவர்களுடைய வர்க்க உணர்வுகளும் பழைய உணர்வுகளாகவே இருக்கின்றன. வேறு சிலர் மிகத் தற்பெருமை பிடித்து, சில சொற்றொடர்களைப் படித்துவிட்டு, தம்மைப் பயங்கரமானவர்களாகக் கருதி, பெரும் இறுமாப்பு அடைகின்றனர். ஆனால் புயல் ஒன்று அடிக்கும் போதெல்லாம் அவர்கள் தொழிலாளர்கள் பெரும்பான்மையான விவசாயிகள் ஆகியோரின் நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்ட ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.

தொழிலாளர்களும் விவசாயிகளும் உறுதியாக நிற்கும் அதே வேளையில் அவர்கள் ஈடாடுகின்றனர். தொழிலாளர்களும் விவசாயிகளும் நேர்மையாக இருக்கும் அதேவேளையில் அவர்கள் தெளிவின்றி நிற்கின்றனர். எனவே பிறருக்குப் போதனை அளிப்பவர்கள் இனிமேல் போதனை பெறத் தேவையில்லை, படிக்கத் தேவையில்லை, அல்லது சோசலிசப் புனருருவாக்கம் என்பது பிறரை – நிலப்பிரபுக்கள், முதலாளிகள், தனி உற்பத்தியாளர்கள் ஆகியோரை – புனருருவாக்குவது அன்றி அறிவுஜீவிகளை அல்ல என்று எண்ணுவது பிழையாகும்.

அறிவுஜீவிகளுக்கும் புனருருவாக்கம் அவசியம். தமது அடிப்படை நிலைப்பாட்டை மாற்றாதவர்கள் மாத்திரமல்ல, எல்லோரும் படித்துத் தம்மைத் தாமே புனருருவாக்கிக் கொள்ள வேண்டும். நான் ‘‘எல்லோரும்” என்று குறிப்பிடுவது இங்குள்ள எங்களையும் உள்ளடக்கியதாகும்.

நிலைமைகள் சர்வசதாவும் மாறிக்கொண்டிருக்கின்றன. நமது சிந்தனையைப் புதிய நிலைமைகளுக்கு இசைவாக்க வேண்டுமானால், நாம் படிக்கவேண்டும். மார்க்சியத்தை ஒப்பீட்டு வகையில் நன்கு கிரகித்து, தமது பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டில் உறுதியாய் நிற்பவர்கள் கூட படித்துக் கொண்டே இருக்க வேண்டும்; புதியவற்றைக் கிரகித்துக் கொள்ள வேண்டும்; புதிய பிரச்சினைகளை ஆராய வேண்டும். தமது மனங்களிலுள்ள அசுத்தமானவற்றை நீக்கிக் கொண்டாலொழிய, அறிவுஜீவிகள் பிறருக்குப் போதனையளிக்கும் கடமையை மேற்கொள்ள முடியாது.

உண்மையில் போதிக்கும் அதே வேளையில் நாம் படிக்க வேண்டும். ஆசிரியர்களாக இருக்கும் அதே வேளையில் மாணவர்களாக இருக்க வேண்டும். சிறந்த ஆசிரியனாக இருக்க வேண்டுமென்றால் முதலில் சிறந்த மாணவனாக இருக்க வேண்டும். புத்தகங்களிலிருந்து மட்டும் படிக்க முடியாத பல விசயங்கள் இருக்கின்றன. அவற்றை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களிடமிருந்து, தொழிலாளர்களிடமிருந்து, வறிய கீழ் மத்திய விவசாயிகளிடமிருந்து, பாடசாலைகளில் மாணவர்களிடமிருந்து, தாம் படிப்பிப்பவர்களிடமிருந்து ஒருவர் படிக்க வேண்டும்.

நமது அறிவுஜீவிகளில் பெரும்பான்மையினர் படிக்க விரும்புகின்றனர் என்று நான் கருதுகின்றேன். அவர்கள் சுயமாக விரும்பிப் படிக்கும் அடிப்படையில் அவர்களுக்கு மனப்பூர்வமாகவும் தகுதியான முறையிலும் உதவி அளிப்பது நமது கடமை. அவர்களைப் படிக்கும்படி நாம் நிர்ப்பந்திக்கவோ பலவந்தப்படுத்தவோ கூடாது.

நான்காவதாக, பரந்துபட்ட தொழிலாளர் விவசாயிகளுடன் அறிவுஜீவிகள் ஒன்றிணையும் பிரச்சினை.

பரந்துபட்ட தொழிலாளர் விவசாயிகளுக்குத் தொண்டு செய்வது அறிவுஜீவிகளின் கடமையாக இருப்பதால், அவர்கள் முதன் முதலாகத் தொழிலாளர் விவசாயிகள் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். அவர்களுடைய வாழ்வு, வேலை, கருத்துகளுக்குப் பரிச்சயப்பட வேண்டும். பொதுமக்கள் மத்தியில் செல்லுமாறு, தொழிற்சாலைகளுக்கும் கிராமங்களுக்கும் செல்லுமாறு நாம் அறிவுஜீவிகளுக்கு ஊக்கமளிக்கிறோம். உங்களுடைய வாழ்வு பூராவும் நீங்கள் ஒரு தொழிலாளியை அல்லது ஒரு விவசாயியைச் சந்திக்காமல் இருந்தால் அது நல்லதல்ல. நமது அரசாங்க இயக்குனர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள், விஞ்ஞான ஆராய்ச்சி ஊழியர்கள் எல்லாரும் கிடைக்கும் சந்தர்ப்பம் ஒவ்வொன்றையும் பயன்படுத்தி, தொழிலாளர் விவசாயிகளுடன் நெருங்கிப் பழக வேண்டும்.

சிலருக்குச் சுற்றிப் பார்வையிட மாத்திரம் தொழிற்சாலைகளுக்கு அல்லது கிராமங்களுக்குச் செல்ல முடியும். இதை “குதிரையில் இருந்தவாறே மலர்களைப் பார்ப்பது” என்று சொல்லலாம். ஒன்றும் செய்யாமல் இருப்பதிலும் பார்க்க இது சிறந்தது. வேறு சிலர் அங்கு சில மாதங்கள் தங்கியிருந்து, பரிசீலனைகள் நடத்தி, நண்பர்களைத் தேடிக்கொள்ள முடியும். இதை “குதிரையிலிருந்து இறங்கி மலர்களைப் பார்ப்பது” என்று சொல்லலாம். இன்னும் சிலர் ஒரு நீண்ட காலம், அதாவது, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் அல்லது அதற்குக் கூடிய காலம் அங்கு தங்கி வாழ முடியும். இதை “குடியேறுவது” என்று கூறலாம்.

படிக்க:
♦ தொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் !
♦ நீதித்துறையை விமர்சிக்க அனைத்து குடிமக்களுக்கும் உரிமை உண்டு !

அறிவுஜீவிகள் சிலர், உதாரணமாகத் தொழிற்சாலைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்களும் நாட்டுப் புறத்திலுள்ள விவசாய நுட்ப ஊழியர்களும் கிராமியக் கல்லூரி ஆசிரியர்களும் தொழிலாளர் விவசாயிகள் மத்தியிலேயே வாழ்கின்றனர். அவர்கள் தமது வேலையை நன்றாகச் செய்து தொழிலாளர் விவசாயிகளுடன் தம்மை இணைக்க வேண்டும். தொழிலாளர் விவசாயிகளுடன் நெருக்கமாக இணைவதை உண்மையில் ஒரு பழக்கமாக்கக் கூடிய ஒரு சூழ்நிலையை நாம் சிருஷ்டிக்க வேண்டும்.

வேறு வார்த்தைகளில் சொன்னால் அப்படிச் செய்யும் பெருந்தொகையான அறிவுஜீவிகள் நம்மிடம் இருக்க வேண்டும். அறிவுஜீவிகள் எல்லாரும் அப்படிச் செய்ய மாட்டார்கள். ஏதோ ஒரு காரணத்தால் சிலர் தொழிலாளர் விவசாயிகள் மத்தியில் செல்ல முடியாமல் இருக்கின்றனர். ஆனால் இயன்ற அளவு கூடுதலான அறிவுஜீவிகள் அங்கு செல்வர் என நம்புகின்றோம். அவர்கள் எல்லாரும் ஒரே காலத்தில் செல்லமுடியாது. ஆனால் வெவ்வேறு காலங்களில் குழுக்களாகப் பிரிந்து செல்ல முடியும்.

நாம் யென்ஆனில் இருந்த பழைய நாட்களில் தொழிலாளர் விவசாயிகளுடன் நேரடித் தொடர்பு கொள்ளப் அறிவுஜீவிகளுக்கு உதவியளிக்கப்பட்டது. அப்போது யென்ஆனில் இருந்த அறிவுஜீவிகளில் பலர் குழம்பிய சிந்தையுடையவர்களாக இருந்ததோடு பலவிதமான விந்தையான நியாயங்களுடன் வெளிப்பட்டார்கள். நாம் ஒரு கருத்தரங்கு கூட்டி, மக்கள் மத்தியில் செல்லும்படி அவர்களுக்கு அறிவுரை கூறினோம். பின்னர் பலர் சென்றனர். விளைவுகளும் மிக நன்றாக இருந்தன.

ஒரு அறிவுஜீவியின் புத்தக அறிவு அனுஷ்டானத்துடன் (நடைமுறையுடன்) இணைக்கப்பட்டால் ஒழிய அது பூரண அறிவு ஆகாது; அல்லது சிறிதும் பூரணமற்றதாக இருக்கும். பிரதானமாகப் புத்தகங்களை வாசிப்பதன் மூலம்தான் அறிவுஜீவிகள் நமது முன்னோரின் அனுபவத்தைப் பெறுகின்றனர். புத்தகங்களை வாசிப்பது உண்மையில் தேவையானது; ஆனால் அதனால் மட்டும் பிரச்சினைகள் தீர்ந்துவிடமாட்டா. அவர்கள் உண்மையான நிலையை ஆராய வேண்டும். அனுஷ்டான அனுபவத்தையும் ஸ்தூலமான மூலப் பொருட்களையும் ஆராய வேண்டும். தொழிலாளர் விவசாயிகளுடன் நட்புறவு கொள்ள வேண்டும்.

தொழிலாளர் விவசாயிகளுடன் நட்புக் கொள்வது லேசான காரியமல்ல. இன்று பலர் தொழிற்சாலைகளுக்கு அல்லது கிராமங்களுக்கு சென்றபோதிலுங்கூட, சிலரில்தான் நல்ல விளைவுகள் காணப்பட்டன; ஏனையோரில் அப்படி அல்ல. இங்குள்ள பிரச்சினை யாதெனில், ஒருவருடைய நிலைப்பாடு அல்லது மனோபாவம், அதாவது ஒருவருடைய உலகநோக்கு ஆகும்.

”நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும்” என்று நாம் கூறுகின்றோம். ஒவ்வொரு அறிவுத்துறையிலும் பலவிதமான கருத்துகளும் போக்குகளும் இருக்கலாம். இருந்தும், உலகநோக்கைப் பொறுத்தவரையில் அடிப்படையில் இன்று பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டம் பூர்ஷுவா வர்க்கக் கண்ணோட்டம் என இரண்டு கருத்துக்கள் மாத்திரமே இருக்கின்றன. அக்கண்ணோட்டம் ஒன்றில் இது அல்லது அதாக, பாட்டாளி வர்க்க உலகநோக்கு அல்லது பூர்ஷுவா வர்க்க உலகநோக்காகவே இருக்கும். கம்யூனிஸ உலக நோக்கென்பது பாட்டாளி வர்க்கத்தின் உலக நோக்கேயன்றி வேறு எந்த வர்க்கத்தினது உலகநோக்கும் அல்ல.

எமது இன்றைய அறிவுஜீவிகளில் பெரும்பாலோர் பழைய சமுதாயத்திலிருந்து, உழைப்பாளி மக்களல்லாதவர்களின் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். தொழிலாளர் விவசாயிகள் குடும்பங்களிலிருந்து வந்தவர்களில் சிலர்கூட இன்னும் பூர்ஷுவா வர்க்கப் அறிவுஜீவிகளாகவே இருக்கின்றனர். காரணம் விடுதலைக்கு முன் அவர்கள் பெற்ற கல்வி பூர்ஷுவா வர்க்கக் கல்வியாயிருப்பதும் அவர்களுடைய உலகநோக்கு அடிப்படையில் பூர்ஷுவா வர்க்க உலகநோக்காயிருப்பதுமாகும். அவர்கள் பழைய உலக நோக்கை ஒழித்துப் பாட்டாளி வர்க்க உலகநோக்கை ஸ்தாபிக்காவிட்டால் தமது கண்ணோட்டம், நிலைப்பாடு, உணர்வு ஆகியவற்றில் அவர்கள் தொழிலாளர் விவசாயிகளிலிருந்து வேறுபட்டவர்களாக, அவர்களுடன் ஒன்றிணைய முடியாதவர்களாகவே இருப்பார்கள்.

தொழிலாளர் விவசாயிகள் தமது இதயங்களை அவர்களுக்குத் திறந்து காட்ட மாட்டார்கள். அறிவுஜீவிகள் தொழிலாளர் விவசாயிகளுடன் இரண்டறக் கலந்து, அவர்களுடன் நட்புக்கொண்டால்தான், நூல்களிலிருந்து அவர்கள் படித்த மார்க்சியம் உண்மையில் அவர்களுக்குரிய ஒன்றாக மாறமுடியும்.

மார்க்சியத்தை ஒருவர் உண்மையில் கிரகித்துக் கொள்ள வேண்டுமானால், அவர் அதை நூல்களிலிருந்து மாத்திரமல்ல, பிரதானமாக வர்க்கப் போராட்டத்தின் மூலமும், அனுஷ்டான (நடைமுறை) வேலை, பரந்துபட்ட தொழிலாளர் விவசாயிகளுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமும் படிக்க வேண்டும்.

மார்க்சிய நூல்கள் சிலவற்றைப்  படிப்பதோடு, நமது அறிவுஜீவிகள் பரந்துபட்ட தொழிலாளர் விவசாயிகளுடன் கொள்ளும் நெருங்கிய தொடர்புகள் மூலமும், தமது சொந்த அனுஷ்டான வேலை மூலமும் சிறிது விளக்கம் பெறும்போது, நாம் எல்லாரும் ஒரே பாஷையைப் பேசுவது சாத்தியம்; தேசபக்தி என்ற பொதுப் பாஷையையும், சோசலிச அமைப்பு என்ற பொதுப் பாஷையையும் பேசுவது மாத்திரமல்ல, கம்யூனிஸ உலகநோக்கு என்ற பொதுப் பாஷையைக் கூடப் பேசுவது சாத்தியம். இப்படி ஏற்பட்டால், நாம் எல்லாரும் இன்னும் நன்றாக வேலை செய்வது நிச்சயம்.

(தொடரும்)

மக்கள் விரோத விவசாய சட்டங்களை வீழ்த்த வீதியில் இறங்குவோம் !

கோடானுகோடி விவசாயிகளின் வாழ்க்கையை அழித்து கார்ப்பரேட் கொள்ளைக் கும்பலை கொழிக்க வைக்கும் வேளாண் திருத்த சட்டங்களை கிழித்தெறிவோம் !

ன்பார்ந்த விவசாயிகளே ! உழைக்கும் மக்களே !

நாம் மிகப்பெரும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம். பாசிச பி.ஜே.பி அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள விவசாயம் தொடர்பான சட்டத்திருத்தங்கள், நமது நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தையும், விவசாயிகளையும் அடியோடு அழிப்பதற்கு, அவர்களை ஓட்டாண்டிகளாக ஆக்குவதற்கு திட்டமிட்டு கொண்டு வரப்பட்டுள்ளன.

♠ அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திருத்தம்
♠ வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம்
♠ விவசாயிகளுக்கான விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப் பாதுகாப்பு அவசரச் சட்டம்

மேற்கண்ட சட்டத்திருத்தங்களின் பெயர்களை பார்க்கும் போது, தேனொழுகுவது போல் இருக்கும். கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால்தான் இது விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் நஞ்சு என்பது தெரியும்.

அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திருத்தம் :

இது 1955-ல் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் மீதான திருத்தம் ஆகும். அதாவது உணவு பொருட்களை பதுக்குதல் மற்றும் செயற்கையாக விலை உயர்த்துவதை தடுக்கும் அந்தச் சட்டத்தில்தான் திருத்தம் கொண்டுவரப்படுகிறது.

இதனடிப்படையில் வெங்காயம், உருளைக்கிழங்கு, சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துக்கள், தானியங்கள், பயிறு வகைகளுக்கு இச்சட்டத்திருத்தம் விலக்களிக்கிறது.

இதனால் மேற்கண்ட பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயரும் வாய்ப்புள்ளது. ஏனெனில் இனி இவையனைத்தும் கார்ப்பரேட் கம்பெனிகளின் குடோன்களில்தான் பாதுகாக்கப்பட்டு இருக்கும்.

இவையனைத்துமே அன்றாட உணவு சார்ந்த பொருட்கள் ஆகும். நாடு முழுவதும் பலகோடி மக்கள் வறுமையிலும், வாங்கும் சக்தி இல்லாமலும் வாடுகின்றனர். இச்சட்டத் திருத்தத்தின் மூலம் இந்தியா முழுவதும் கொத்து கொத்தாக பட்டினியால் சாகும் அபாயம் ஏற்படும்.

படிக்க:
♦ கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ
♦ சோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ

வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம் :

இது மாநில அரசுகளின் அதிகாரத்தை அடியோடு பறிக்கிறது. தமிழக விவசாயிகள் காஷ்மீர் வரை சென்று நேரடியாக கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விற்றுக் கொள்ளலாமாம். அங்கு உரிய விலை கிடைப்பதை கண்காணித்து அரசு உத்திவாதப் படுத்துமாம். யாரிடம் கதை சொல்கிறார்கள்?

தற்போது அரசே உள்ளூரில் கொள்முதல் செய்து உரிய விலை கொடுப்பது என்ற நிர்வாக முறையுள்ள போதே அதை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், வியாபார மாஃபியாக்களும் தங்களுக்கு சாதகமாக வளைத்துக் கொண்டு கொள்ளையடித்து வருகின்றனர்.

இனி அடிமாட்டு விலைக்குத்தான் விவசாயிகளின் விலை பொருட்களை முதலாளிகள் வாங்குவார்கள். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போன கதையை நம்மிடம் சொல்கிறார்கள்.

இனி வேளாண் விளை பொருட்களை கொள்முதல் செய்வதிலிருந்து இந்திய அரசு, மாநில அரசுகள் ஒதுங்கிக் கொள்ளும். கார்ப்பரேட் கொள்ளையர்கள் மட்டுமே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வார்கள். இந்திய உணவு கழகம் மூடப்படும். அப்புறம் ரேசன் கடைகளுக்கு என்ன வேலை ? இழுத்துப்பூட்டி திண்டுக்கல் பூட்டை போட்டுவிடுவார்கள்.

கார்ப்பரேட் முதலாளிகள் சந்தையில் வைப்பதுதான் விலை. அதன்பிறகு எந்தக் கொம்பனாலும் கொத்துக் கொத்தான பட்டினிச் சாவுகளை தடுத்து நிறுத்த முடியாது. இது கற்பனை அல்ல. ஆப்பிரிக்க நாடுகளைப் பாருங்கள்.

விவசாயிகளுக்கான விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப்பாதுகாப்பு அவசரச் சட்டம் :

ஏற்கனவே 24 வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை மைய அரசால் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் சேமிப்பில் இருப்பது அரிசி, கோதுமை மட்டுமே. அதுவும் அதானி போன்ற முதலாளிகளிடம் இருப்பதை விட குறைவாகவே உள்ளது.

காய்கறிகளுக்கு உரிய விலை நிர்ணயிக்காத அரசைக் கண்டித்து விவசயிகள் நடத்திய போராட்டம் !

எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான கமிட்டி, 50% இலாபம் கிடைக்கும் வகையில் விலை நிர்ணயம் அரசு செய்ய வேண்டும் என்று கூறியது. உண்மையில் நடப்பது என்ன ? தமிழக விவசாயிகள் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2400 தர வேண்டும் என்று கோரிவரும் நிலையில் அரசோ ரூ.1888 நிர்ணயித்துள்ளது. வெளிச் சந்தையிலும் ஆதார விலைக்கெல்லாம் யாரும் எடுப்பதில்லை.

அரசே நேரடியாக அதிகாரம் செலுத்தும் போதே ஆயிரம் குளறுபடிகளும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது எனும் போது, இச்சட்டத்திருத்தமானது தனியார் முதலாளிகள் விலையை நிர்ணயிப்பதற்கு முழுச் சுதந்திரம் வழங்குகிறது. அரசு இனி குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிக்காது. சந்தையில் முதலாளிகள் தீர்மானிக்கும் விலைக்கு விவசாயிகள் இனி விற்றாக வேண்டும். இது விவசாயத்தை விட்டு விவசாயிகளை பிடுங்கி எறிவதன்றி வேறென்ன?

இனி கார்ப்பரேட் கொள்ளையர்களே ஒட்டுமொத்த இந்திய விவசாயத்தையும் தீர்மானிப்பார்கள். சிறு, குறு நடுத்தர விவசாயிகள் சுயசார்பை இழந்து கார்ப்பரேட் நிறுவனங்களின் குத்தகை விவசாயிகளாக மாறுவார்கள். மத்திய காலப் பண்ணையார்களின் இடத்தில் இனி கார்ப்பரேட் முதலாளிகளும், பன்னாட்டு உணவு கழகங்களும் ஓட்டுமொத்த விவசாயிகளையும் சுரண்டிக் கொழுப்பார்கள்.

படிக்க :
♦ விவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் ! மக்கள் அதிகாரம் அறைகூவல் !
♦ 144 தடை உத்தரவை நீக்கு ! விருதையில் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் !!

தீர்வு என்ன?

இது விவசாயிகள் பிரச்சனை மட்டுமல்ல, உணவு உண்ணும் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் பிரச்சனை. வாழ்விழந்து வீதிக்கு வந்துவிட்ட விவசாயிகளும், வறுமையால் வாடும் கோடானுகோடி உழைக்கும் மக்களும் போராட்டக்களத்தில் இறங்கினால் அவர்களை ஒடுக்குவதற்கான வேலையை மட்டுமே இனி பாசிஸ்டுகள் செய்வார்கள். கார்ப்பரேட் – காவி பாசிசம் தலைவிரித்தாடும்.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் கும்பலின் இலாபவெறிக்கான கொள்கைகள்தான் விவசாயிகளுக்கு மட்டுமல்ல நாட்டின் ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக இருக்கிறது. கார்ப்பரேட் காவி பாசிசமானது தனியார்மயம் – தாராளமயம் – உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளின் மீதுதான் கட்டப்பட்டுள்ளது.

தேர்தல் அரசியலுக்கு வெளியே இந்த மறுகாலனியாதிக்க பொருளாதார கொள்கைகளை ஒழித்துக்கட்டுவதற்கான, கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கான மாபெரும் போர்க்குணமிக்க மக்கள்திரள் போராட்டங்களை கட்டியமைப்பதுதான் நாட்டைக் காப்பாற்றுவதற்கான ஒரே தீர்வு!

அதுவே உண்மையான தேசப்பற்று! அமைப்பாய் ஒன்றிணைவோம்! வீதியில் இறங்குவோம்!

இவண்

மக்கள் அதிகாரம்
திருநெல்வேலி-தூத்துக்குடி
தொடர்புக்கு : 93853 53605