Sunday, June 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 230

பிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா ?

1

செப்டம்பர் 21, 1995 அன்று, சரியாக கால் நூற்றாண்டுக்கு முன்னர், உலகம் முழுவதும் உள்ள பிள்ளையார் சிலைகள் தங்கள் பக்தர்கள் வழங்கிய பாலைக் குடிக்கத் தொடங்கின.

நேபாளத்தில், மன்னர் பிரேந்திரா பிள்ளையார் பால் குடித்ததைப் பார்த்த அனுபவத்தால் சிலிர்த்தார். இந்தியாவில், விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) தலைவர்களும் மக்களும் தங்கள் ஆசிரமங்களிலும் கோயில்களிலும் சிவசக்தி (தெய்வீக ஆற்றல்) வருகையை விதந்தோதினர். பல இடங்களில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அலுவலகங்களில் குறைந்த வருகையே பதிவானது. சந்தைகள் மூடப்பட்டன. பஞ்சாபில் வீரர்கள் இராணுவப் பயிற்சியை நிறுத்தியதாக தி இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டது. டெல்லி மற்றும் மும்பை பங்குச் சந்தைகள் மூடப்பட்டன. திடீரென பால் பற்றாக்குறை ஏற்பட்டது, இதன் காரணமாக பல இடங்களில் உள்ள சிலைகள் பால் பவுடரிலிருந்து தயாரிக்கப்பட்ட பாலை குடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

வெகுமக்களிடையே ஒருவித மயக்கம் இருந்தது.

இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்களில் அடுத்த நாள் தலைப்புச் செய்திகள் இவ்வாறு இருந்தன: “பால் அதிசயம்” இந்தியாவை ஸ்தம்பிக்க வைத்தது (பிபிசி); இந்து உலகம் 24 மணி நேர அதிசயத்தால் பிரிக்கப்பட்டுள்ளது (இண்டிபென்டன்ட் இங்கிலாந்து);  கற்றலுக்கான கடவுள் பால் குடிக்கிறாரா? (நியூயார்க் டைம்ஸ்); இந்தியாவின் கடவுளர்கள் தங்கள் விசுவாசிகளை சிறு அதிசயத்தைக் கொண்டு கறக்கின்றன (கார்டியன்);  இந்து கடவுளின் மர்ம தாகத்தை மேரிலாண்ட் கண்டது (வாஷிங்டன் போஸ்ட்); உலகளாவிய இந்துக்களை ஒரு அதிசயம் வியக்கச் செய்கிறது; சிலைகள் பால் குடிப்பதை கடவுளின் செயல் என்று பலர் நம்புகிறார்கள் (லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்); சிவசக்தி இந்தியாவை திகைக்க வைக்கிறது (தி ஏசியன் ஏஜ்); சிலைகள் பால் குடிப்பது தூய அறிவியல் (தி இந்தியன் எக்ஸ்பிரஸ்).

இந்தியாவின் மிகச்சிறந்த அதிசய செய்தி தனது தடத்தைப் பதித்தது.

படிக்க:
♦ பிள்ளையார் சிலையும் போதை ஆசாமியும் !
♦ இந்து முன்னணி பிள்ளையார்களுடன் நேருக்கு நேர் !

நம்பிக்கை vs  பொறுப்பு

25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் (செப். 21, 1995), நகர்ப்புற இந்தியா முழுவதிலும் உள்ள நடுத்தர வர்க்க குடியிருப்புகளில் உள்ள குடும்பங்கள் அதிகாலையில் இருந்து அருகிலுள்ள பிள்ளையார் கோயில்களுக்கு விரைந்து செல்லத் தொடங்கின. மறுநாள் டைம்ஸ் ஆஃப் இந்தியா நடத்திய ஒரு ஆய்வில், மும்பை மக்கள்தொகையில் 55%, டெல்லியின் மக்கள் தொகையில் 63% மற்றும் கல்கத்தாவின் 67% மக்கள் (கொல்கத்தா கணக்கு அதிகாரப்பூர்வமானதல்ல) பால் குடிக்கும் அதிசயத்தை நம்புவதாகக் கூறினர். காலை நடைப்பயிற்சி செல்பவர்களும் பாலகங்களிலிருந்து திரும்பி வருபவர்களும் இந்த செய்தியை வீட்டிற்கு கொண்டு வந்தனர். பிள்ளையார் சிலைகளுக்கு பாலுடன் உணவளித்தவர்கள் நிறைவுபெற்ற உணர்வுடன் திரும்பி வந்தனர். ‘நீங்கள் கரண்டியை கடவுளின் வாய்க்கு நகர்த்தி மெதுவாக சாய்த்து விடுங்கள். பால் மெதுவாக மறைந்துவிடும்’ என்றார்கள். பக்தருக்கு இது உண்மையின் தருணம். கடவுள் இருக்கிறார், உங்களுக்கு முன்னால் இருக்கிறார். இது தெய்வீக ஆனந்தத்தை அனுபவிக்கவும் முயற்சிக்கவும் மற்றவர்களைத் தூண்டியது. சடங்கு செய்ய வயதானவர்களும் நோயுற்றவர்களும் கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆனாலும், கொண்டாடும் மனநிலை இல்லை. மாய உணர்வூட்டும் மனநிலையே இருந்தது. படபடப்பு மற்றும் அமைதியின்மையின் உணர்வு இருந்தது. இந்த அசாதாரண நிகழ்வு ஒரு பெரிய தெய்வீக தலையீட்டின் அடையாளம் என்று விசுவாசிகள் நம்பினர். ஆனால், அது எவ்வளவு காலம் நீடிக்கும்? வி.எச்.பி தலைவர் ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர் ஊடக அலுவலகங்களுக்கு தொலைநகல்களை அனுப்பினார்; அது இந்து மதத்திற்கு ஒரு புதிய சகாப்தத்தை அறிவித்ததாகக் கூறியது. சிலை வழிபாட்டை இழிவுபடுத்துபவர்களை சிவசக்தி அடிபணிய வைக்கும் என்று கோயில் பண்டிதர்கள் எச்சரித்தனர். தர்மத்தை மறு ஒழுங்குபடுத்த புதிய அவதாரத்தின் வருகையின் தொடக்கத்தைக் குறிக்கும் என்று சிலர் கணித்தனர். பெங்களூரைச் சேர்ந்த ஒரு பிரபலமான ‘சாமியார்’ சிவசக்தி மிகவும் சக்திவாய்ந்ததாக மாறக்கூடும் என்று எச்சரித்தார். நாள் முன்னேற, உணர்ச்சிவசப்பட்ட விசுவாசிகள் கூட்டு பிரார்த்தனை பாராயணங்களை நடத்தி, வீட்டில் விளக்குகளை ஏற்றி வைத்தனர்.

பால் குடித்த பிள்ளையார்கள்

இருப்பினும், மாலை நெருங்க நெருங்க சூழல் மாறத் தொடங்கியது. அறிவியலாளர்களிடமும் பகுத்தறிவாளர்களிடமும் இந்த அதிசயத்திற்கு விளக்கங்கள் இருந்தன. இதை முதலில் மதிப்பிட்டது கணித ஆய்வு நிறுவனத்தின் டி.ஜெயராமன். இந்த நிகழ்வு பரப்பிழுவிசை (Surface tension) மற்றும் நுண்துளை விளைவு (Capillary Action) நடவடிக்கையால் நிகழ்ந்தது என அவர் காட்டினார். சிபான் கோட்பாடு எவ்வாறு செயல்படுகிறது என்பதை காட்சிகள் மூலம் விளக்க அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வு கவுன்சிலின் அறிவியலாளர்கள் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களால் அழைக்கப்பட்டனர். அந்த நேரத்தில் மத்திய தொழில்நுட்ப அமைச்சர் ஒரு மூத்த அறிவியலாளரை இந்த நிகழ்வை ஆய்வு செய்ய அறிவுறுத்தினார். சிலை மீது வைக்கப்படும் பால் எவ்வாறு பீடத்தில் சேகரிக்கப்பட்டு, பள்ளத்தில் பாய்கிறது என்பதை இந்திய பகுத்தறிவாளர் சங்கத் தலைவர் சனல் எடமருகு சிலைகளை நெருக்கமாகக்  காண்பித்தார்; மற்றொரு அறிவியலாளர் கூறுகையில், ஒரிசா கல்லால் செய்யப்பட்டதை விட மகாபலிபுரம் கல்லால் செய்யப்பட்ட சிலைகள் பாலை எளிதில் ஏற்றுக்கொண்டன என்றார். இந்தியா டுடே உளவியலாளர் உதயன் படேலை மேற்கோள் காட்டி: “பால் காணாமல் போன அந்த கணத்தில் மனம் செயல்படுவதை நிறுத்தியது” என்றது.

இருப்பினும், சிலை பாலை இழுத்துக்கொள்வதைப் பக்தர்கள் பார்க்கவில்லை; அது மாலைகள் மற்றும் பூக்களுக்கு அடியில் மறைந்திருந்தது.

பால் அதிசயத்திற்கு மற்றொரு விதை பொருள் இருந்தது. சமகால ஊடகங்கள் முக்கியமான சூழ்நிலையைக் கையாண்ட முன்மாதிரியான முறையை இது எடுத்துக்காட்டுகிறது. சமநிலை உணர்வு மற்றும் மிகவும் சமூக பொறுப்பு இருந்தது. ஜீ நியூஸ் கூட இந்த நிகழ்வின் பின்னால் உள்ள அறிவியலை வலியுறுத்தியது. இன்று போலல்லாமல், துறைசார் அறிவியலாளர்கள் கல்வி சுதந்திரத்தை அனுபவித்தனர், மேலும் ஊடகங்கள் கட்டுப்பாடும் காரணமும் நல்லொழுக்கங்கள் என்று நம்பின. ஊடக உரிமையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமலாக்க இயக்குநரக சோதனைகள் மற்றும் பிரதமர் அலுவலகத்தால் நிர்பந்திக்கப்படுவதில் இருந்து விடுபட்டனர். அலுவல்பூர்வ விவரிப்பு இல்லாததால் சமகால ஊடகங்கள் அதிசயத்தின் மாறுபட்ட பரிமாணங்களை முன்வைக்க உதவின.

படிக்க :
♦ கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ
♦ சோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ

இதற்கிடையில், இந்துத்துவ திட்டம் அதன் சொந்த அணிகளில் இருந்து சவால்களை எதிர்கொண்டது. புகழ்பெற்ற மும்பை கணபதி கோயிலில் 20 ஆண்டுகளாக அர்ச்சகராக உள்ள உமேஷ் பட் என்பவரை இந்தியா டுடே மேற்கோளிட்டுள்ளது: “இது என் கோயிலின் சிலையுடன் நடக்கவில்லை. ஆனால் மக்கள் வந்தபோது, ​​என்னால் கோயிலைப் பூட்ட முடியவில்லை.”

மத்திய மும்பையின் சித்திவிநாயகக் கோயிலின் அறங்காவலர் மோகன்தாஸ் மல்யா கூறினார்: “மதியம் 12.30 மணிக்குப் பிறகு தெய்வம் பால் எடுக்க மறுத்துவிட்டது.” மும்பையிலிருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள தில்வாடாவில் உள்ள பிரபலமான கணபதி கோயிலில் உள்ள சிலை இன்னும் குறைவாகவே ஒத்துழைத்தது.

இதற்காக, வி.எச்.பியின் சாமியார்களின் ஒரு விளக்கம் இருந்தது: தெய்வங்கள் உள்ளூர் நாஸ்திக்குகள் (நாத்திகர்கள்; இந்த விஷயத்தில், அவிசுவாசிகள்) மீது கோபத்தை வெளிப்படுத்தினர்.

டெல்லி பங்குச் சந்தையில் ஒரு பிள்ளையார் படம் பங்குச் சந்தை முதலீட்டாளர்களும் வாடிக்கையாளர்கள் வழங்கும் பாலை குடிக்க மறுத்துவிட்டது. பகதூர் ஷா ஜாபர் மார்க்கில் இருந்த பீரே லால் பவனுக்குப் பின்னால் அமைந்த சன்னதியில் உள்ள பிள்ளையார் சிலை பழம் மற்றும் கரும்புச் சாற்றை பால் போல எளிதில் குடித்தது. ஒரு வாரம் கழித்து, செப்டம்பர் 27 அன்று, தி ஸ்டேட்ஸ்மேன் சிங்கப்பூரில் உள்ள கன்னி மேரியின் சிலையும் பாலை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தது. செப்டம்பர் 28 ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸில் மும்பையில் இருந்து வந்த ஒரு செய்தியில், காந்தி சிலைக்கு உள்ளூர்வாசிகள் மது கொடுத்தபோது, அது உடனடியாக அருந்தியதாகக் கூறியதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டது.  உத்தரபிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தொழிலாளர்கள் அம்பேத்கர் மற்றும் புத்தரின் சிலைகளுக்கு பால் கொடுக்கத் தொடங்கிய நேரத்தில், எதிர் கதைகளும் செயல்பாட்டில் இருந்தன என்பது தெளிவாகத் தெரிந்தது. இவ்வாறு ஒரு வாரத்திற்குள், ஒரு தெய்வீக அதிசயமாகத் தொடங்கியது நகைச்சுவையாக முடிந்தது.

சங்க பரிவார் உள்ளே புகுதல்

அப்போது, சிபிஐ வழக்குகளில் சிக்கியிருந்த ‘சாமியார்’ சந்திரசாமி, பால் அதிசயம் குறித்து உரிமை கோர முயன்றார். தனது டெல்லி ஆசிரமத்திலிருந்து, அவர் UNI-டம்   “இது தெய்வீக அற்புதங்களின் ஆரம்பம் மட்டுமே.” என்றார். ஆனால் சிலர் அவரை தீவிரமாக எடுத்துக் கொண்டனர். “எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல்” வார இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், மினா சுவாமிநாதன், ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் மட்டுமே அத்தகைய நடவடிக்கையை துல்லியமாக மேற்கொள்ளும் திறன் கொண்டிருப்பதைக் கண்டறிந்தார். டெல்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு அருகிலுள்ள ஜான்டேவலன் பூங்காவில் உள்ள ஒரு கோயில் இந்த அதிசயத்தின் மையமாக இருந்தது என்று அப்போதைய நரசிம்மராவ் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த சீதாராம் கேசரி உளவு அறிக்கைகளை மேற்கோள் காட்டினார்.  மக்களவைத் தேர்தலில் தவறான வதந்திகளை பரப்புவதன் மூலம் வாக்குகளைப் பெறுவதற்கான பாஜக-வின் சூழ்ச்சி இது என அவர் கூறினார்.

“இந்து மதம் இன்று” இதழ் விவரித்துள்ளபடியான இந்துத்துவ பார்வையின் படி, டெல்லியைச் சேர்ந்த ஒருவரின் கனவில் விநாயகருக்கு தாகம் எடுத்தது. அவர் ஜாண்டேவலன் கோயிலின் பூசாரியை எழுப்பியதைத் தொடர்ந்து அதிசயம் நடந்தது. அருகிலுள்ள பிர்லா மந்திர் பூசாரி, நள்ளிரவில் கோயில் மணிகள் ஒலிப்பது கேட்டதும் அண்டை வீட்டாரிடம் தெரிவித்தார்.

இப்போது பிரபலமான பரிவார் வலைபின்னல்கள் செயல்பாடுகளைக் கையில் எடுத்துக் கொள்ளத் தொடங்கின. தொலைபேசி அழைப்புகள் உலகின் குறுக்கும் நெடுக்குமாகப் போகத் தொடங்கின. அக்டோபர் 1-ம் தேதி வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில், அமெரிக்காவில் வசிக்கும் ஒரு என்.ஆர்.ஐ, அந்த நாளில் மட்டும் இந்தியாவிலிருந்து தொடர்ச்சியாக ஆறு அழைப்புகளைப் பெற்றதாகக் கூறியது.

அனுமன் கண்களில் வடிந்த கண்ணீர்

அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள கோயில்கள்தான் பால் குடிக்கும் அதிசயத்தை முதன் முதலில் அனுபவித்தது என்றால் அது அப்படி இருக்கும்? பல இந்தியர்கள் தங்கள் என்.ஆர்.ஐ நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து இதை முதலில் கேள்விப்பட்டதாகக் கூறினர்.  ஏனென்றால், இந்திய நேரப்படி அதிகாலை 3 மணியளவில், அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள அவர்களது உறவினர் மாலை சடங்குகளுக்காக தங்கள் கோயில்களைத் திறக்கவிருந்தனர். அந்த வகையில் என்.ஆர்.ஐ பக்தர்கள் தங்கள் இந்திய சகோதரர்கள் செய்வதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே பாலூட்டத் தொடங்கினர். ஆர்.எஸ்.எஸ் பரிவார், தங்களுடன் தொடர்புடைய பதிவுசெய்த அமைப்பான ‘பிஜேபியின் வெளிநாட்டு நண்பர்கள்’ என்ற வலையமைப்பைப் பயன்படுத்தியது. ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் ஆசிரமங்கள் பல வி.எச்.பி. உடன் தொடர்புடையவை, வெளிநாடுகளில் ஏராளமான பக்தர்களைக் கொண்டுள்ளன. உலகெங்கிலும் இந்த ‘அற்புதத்தை’ விரைவாக பரப்புவதில் அவை முக்கிய பங்கு வகித்தன.

கெடுவாய்ப்பாக பரிவாரைப் பொறுத்தவரை, பால் குடிக்கும் வித்தை ஒரு தோல்வியாக முடிந்தது. 1980-களின் நடுப்பகுதியில் ராமாயணம் மற்றும் மகாபாரத தொலைக்காட்சி சீரியல்கள், அயோத்தி கிளர்ச்சி மற்றும் ஷா பானோ வழக்கு போன்று, இந்து நம்பிக்கையை பலப்படுத்துவதற்கான ஒரு அடித்தளமாக இது வடிவமைக்கப்பட்டது. இந்த அதிசயம் இந்து ஆன்மாவின் மீது நீடித்த முத்திரையை பதிக்கும் என்று அவர்கள் நம்பியிருந்தார்கள். வி.எச்.பி தலைவர்கள் வி.எச். டால்மியா மற்றும் கிரிராஜ் கிஷோர் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஆண்டு சடங்காக இருக்க விரும்பினர். செப்டம்பர் 21-ம் தேதி கோயில்களிலும் வீடுகளிலும் விளக்கு ஏற்றி விரதம் கடைப்பிடிக்க வேண்டும் என்ற பரிந்துரையும் இருந்தது. இருப்பினும், மற்ற சிலைகளும் பால் குடிப்பதாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டபோது, சிவசக்தியின் ஒளிவட்டம் அதன் பிரகாசத்தை இழந்தது.

பாஜக தலைவர்களும் வி.எச்.பி திட்டத்தை சாதாரணமானதாகவே எடுத்துக்கொண்டனர். அவர்கள் அதை ஒரு பயனுள்ள தேர்தல் தளமாக எடுத்துக்கொள்ளவில்லை. நரசிம்மராவ் அரசாங்கத்திற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளைத் தூண்டிவிட்டு பாஜக ஏற்கெனவே வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையில் இருந்தது. ஆனால் 1996 தேர்தலுக்குப் பிறகு பாஜக பெரும்பான்மை குறைந்ததால், மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவை திரட்ட வாஜ்பாய் நினைத்தார். இது இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை மென்மையாக முன்னெடுக்க வைத்தது. அதனால்தான் அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் எல்.கே. அத்வானி ஆகியோர் பால் அதிசயம் குறித்து கருத்து தெரிவிப்பதைத் தவிர்த்தனர். முரளி மனோகர் ஜோஷி ஒரு இயற்பியலாளராக, நுண்துளை வினையே காரணம் என்று கூறினார். பால் தாக்கரே இதை ஒரு ‘ஏமாற்று’ என்று அழைத்தார்.

இவ்வகையில் தான் பெரும் இந்துத்துவத் திட்டம் ஒன்றுமில்லாமல் போனது. 1995-க்குப் பிறகு,  ஆகஸ்ட் 2006, ஜனவரி 2008 மற்றும் செப்டம்பர் 2010-ல் என மேலும் மூன்று பால் அற்புதங்கள் பதிவாகியுள்ளன. மார்ச் 2017-ல், அலகாபாத்தில் மீர்கஞ்சில் ஒரு அனுமன் சிலை கண்ணீர் சிந்தியது, அச்சுறுத்தும் முன் அனுமானங்களுக்கு அடிகோலியது. ஆனால் பின்னர் சிலைக்கு பயன்படுத்தப்பட்ட செந்நிற வர்ணத்தில் மெர்குரியல் அமிலம் கலந்திருந்ததால்தான் கண்ணீர் வந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கட்டுரையாளர் : பி.ராமன் , அரசியல் ஆய்வாளர்.
தமிழாக்கம் : அனிதா
நன்றி: த வயர்

 

கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ

0

உட்கட்சி ஒற்றுமையில் ஓர் இயங்கியல் அணுகும் முறை
தோழர் மாவோ
(நவம்பர் 18, 1957)


1957-ல் மாஸ்கோவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகளின் கூட்டத்தில் தோழர் மாவோ நிகழ்த்திய சிறப்புரை. மா சேதுங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் 5-ம் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டது.


 

அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் !

ற்றுமை என்ற பிரச்சினையைப் பொறுத்தவரையில், அணுகும் முறையைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொரு தோழரிடமும் அவர் பாதகமான ஒருவராக இல்லாமலிருந்தால், அல்லது நாச வேலைக்காரராக இல்லாமலிருந்தால், அவரோடு ஒன்றுபடுவது என்பதுதான் நமது அணுகும் முறையாக இருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். நிலையியல் (இயக்க மறுப்பியல்) அணுகும் முறையை அல்ல; ஓர் இயங்கியல் அணுகும் முறையை நாம் அவர்பால் கடைப்பிடிக்க வேண்டும்.

இயங்கியல் அணுகும் முறை என்றால் என்ன?

எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்ப்பது, தவறு செய்து விட்டார் என்ற காரணத்தினால் மட்டும் ஒருவரை முற்றாகப் புறக்கணிக்காமல், எல்லா மனிதர்களும் தவறு செய்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்வது என்பதுதான் இதன் பொருள். “தவறு செய்யாத தனி ஒரு மனிதர்கூட இவ்வுலகில் இல்லை” என்று லெனின் ஒருமுறை கூறினார். ஒவ்வொருவருக்கும் ஆதரவு தேவை. தகுதியுள்ள ஒருவருக்கும் மற்ற மூன்று பேர்களுடைய உதவி தேவை. ஒரு வேலிக்கு மூன்று கால்களின் ஆதரவு தேவை. மிக மிக அழகாக இருக்கும் தாமரை மலர் எழுந்து தன் அழகை எடுத்துக்காட்ட அதன் இலைகளில் பசுமை தேவை. இவைகள் சீனப் பழமொழிகள்.

மற்றொரு சீனப் பழமொழி கூறுவது என்னவெனில், மூன்று செருப்புத் தைப்பவர்கள், அவர்களின் அறிவை ஒன்றிணைத்தபோது பேராற்றல் மிக்க பெருந்திறமைசாலியான ‘சுக்கேலி’யானுக்குச் சமமாகிவிடுகிறார்கள். ‘சுக்கேலியான்’ ஒருபோதும் முழுமையானவராகி விடமுடியாது. அவருக்கு அவருக்கே உரிய எல்லைகள் உண்டு. நம்முடைய பன்னிரெண்டு நாடுகளின் இந்தப் பிரகடனத்தைப் பாருங்கள். நாம் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது என்று ஒவ்வொரு நகலாகப் பரிசீலித்தோம். இன்னும் அதை மெருகுக் கூட்டிப் பூர்த்தி செய்யவில்லை. கடவுளைப் போன்று எங்கும் நிறைந்தவனாகவும் எல்லாம் வல்லவனாகவும் இருக்கிறேன் என்று யார் ஒருவர் தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டாலும் அது வெறும் இறுமாப்பென்றே நான் நினைக்கிறேன்.

எனவே தவறு செய்த ஒரு தோழரின்பால் எத்தகைய அணுகும் முறையை நாம் மேற்கொள்ள வேண்டும்? நாம் ஒரு நிலையியல் (இயக்க மறுப்பியல்) அணுகும் முறையைக் கடைப்பிடிக்காமல் இயங்கியல் அணுகும் முறையைக் கடைப்பிடித்து ஆராய்ந்து அறிபவர்களாக இருக்க வேண்டும்.

எங்களுடைய கட்சி ஒருமுறை நிலையியல், வறட்டுத் தத்துவவாதத்தில் புதைந்தது. அதற்குப் பிடிக்காதவர்கள் யார் இருந்தாலும் அவர்களை முழுமையாக ஒழித்துக்கட்டியது. பிறகு நாங்கள் வறட்டு தத்துவவாதத்தைத் துடைத்தெறிந்தோம். இயங்கியலை மேலும் சிறிது கற்றுக் கொள்ளத் தொடங்கினோம்.

எதிர்மறைகளின் ஒற்றுமை என்பது இயங்கியலின் அடிப்படைக் கோட்பாடு. இந்தக் கோட்பாட்டின்படி தவறுகள் செய்த ஒரு தோழரை நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் முதலில் அவரிடமுள்ள தவறுகளை அவரிடமிருந்து களைந்தெறிய ஒரு போராட்டத்தை நடத்த வேண்டும். இரண்டாவதாக அவருக்கு உதவியும் செய்ய வேண்டும். முதல்நிலை போராட்டம்; இரண்டாவது நிலை உதவி, அவருடைய தவறுகளைத் திருத்துவதற்கு அவருக்கு உதவி செய்வது. இதனால் அவருக்கு ஒரு வழி கிடைக்கும் என்ற நல்லெண்ணத்திலிருந்து நாம் தொடங்க வேண்டும்.

இருப்பினும் வேறு வகையான நபர்களைச் சந்திக்கும் முறை வேறானது. ரஷ்யாவைச் சேர்ந்த டிராட்ஸ்கி, சீனாவைச் சேர்ந்த சென்டு ஷியூ, செங் கோ-டோ, காவோ – காங் போன்ற நபர்களிடம் உதவி செய்யும் அணுகும் முறையைக் கடைபிடிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் திருத்தப்பட முடியாதவர்கள்.

இத்தோடு ஹிட்லர், சியாங் கே ஷேக், ஜார் போன்ற தனி நபர்களும் இருக்கிறார்கள். அவர்களும் அதேபோன்று திருத்தப்பட முடியாதவர்கள். அவர்களைத் தூக்கியெறிய வேண்டும். ஏனென்றால் அவர்களும் நாமும் ஒருவருக்கொருவர் முற்றாக வெவ்வேறானவர்கள். இந்த அர்த்தத்தில் அவர்களுடைய இயல்பில் ஒரு அம்சம் மட்டும்தான் இருக்கிறது. இரண்டு அம்சங்கள் இல்லை.

இறுதியாக ஆராய்ந்தால் ஏகாதிபத்தியத்தையும் முதலாளித்துவத்தையும் பொறுத்தவரையில் கூட இதுதான் உண்மை. இவைகள் இறுதியில் சோசலிச அமைப்பால் மாற்றியமைக்கப்படுவது நிச்சயம். இதே வரையறை தத்துவத்திற்கும் பொருந்தும். கருத்துமுதல்வாதத்தை நீக்கி பொருள்முதல்வாதம் நிலைபெறுவதும், ஆத்திகத்தை நீக்கி நாத்திகம் நிலைபெறுவதும் நடந்தே தீரும். இங்கு நாம் யுத்த தந்திரரீதியான, முழுமையான கண்ணோட்டத்திலான குறிக்கோளைப் பற்றித்தான் பேசுகிறோம். ஆனால், செயல்தந்திர ரீதியான (பகுதி நிலையிலான) கட்டங்களின் பிரச்சினை வேறுபட்டது. இந்தக் கட்டங்களில் சமரசங்கள் செய்து கொள்ளலாம்.

கொரியாவில் 38-வது அட்சரேகையின் மீது அமெரிக்கர்களுடன் நாம் சமரசம் செய்து கொள்ளவில்லையா? வியட்நாமில் ஃபிரான்சுடன் சமரசம் நிகழவில்லையா? ஒவ்வொரு செயல்தந்திரக் கட்டத்திலும் சமரசங்கள் செய்து கொள்வதிலும் போராட்டங்கள் நடத்துவதிலும் சிறந்தவர்களாக விளங்குவது அவசியம்.

நாம் இப்பொழுது தோழர்களுக்கிடையிலான உறவுகளைப் பார்ப்போம். தங்களுக்கிடையில் தப்பபிப்பிராயங்கள் உள்ள இடங்களில் தோழர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நான் ஆலோசனை கூறுவேன். ஒருக்கால் கம்யூனிஸ்ட் கட்சியில் வந்து விட்டாலே அவர்கள் எல்லாம் வேறுபாடுகளும், தப்பபிப்பிராயங்களும் இல்லாத முனிவர்களாகி விடுகிறார்கள்; கட்சி என்பது ஆராய்ந்து பார்க்க வேண்டிய ஒன்றல்ல; அதாவது, அது ஒன்றேயானதாகவும் சீரானதாகவும் இருக்கிறது. எனவே பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவையில்லை என்றெல்லாம் சிலர் நினைப்பதாகத் தெரிகிறது.

கட்சிக்குள் உள்ளவர்கள் 100 சதவீதம் மார்க்சியவாதிகளாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். உண்மையில் எல்லா அளவுகளிலுமான மார்க்சியவாதிகளும் இருக்கிறார்கள். 100 சதவிகிதம், 90, 80, 70, 60 அல்லது 50 சதவிகித மார்க்சியவாதிகளாக இருப்பவர்களும் இருக்கிறார்கள். சிலர் 10 அல்லது 20 சதவிகிதம் மட்டுமே மார்க்சியவாதிகளாக இருக்கிறார்கள்.

நாம் இரண்டு பேர்களோ அல்லது அதற்கு மேற்பட்டோ ஒரு சிறிய அறையில் ஒன்றுசேர்ந்து பேச முடியாதா? ஒற்றுமைக்கான விருப்பத்திலிருந்து துவங்கி ஒருவருக்கொருவர் உதவி செய்வது என்ற உணர்வோடு நாம் பேச்சுவார்த்தை நடத்த முடியாதா?

கம்யூனிஸ்ட் அணிகளுக்குள்ளான பேச்சுவார்த்தையைத்தான் நான் குறிப்பிடுகிறேன், ஏகாதிபத்தியங்களோடு உள்ள பேச்சுவார்த்தையை அல்ல. (அவர்களோடும் நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று இருப்பினும்கூட) நான் ஒரு எடுத்துக்காட்டைத் தருகிறேன். நமது பன்னிரெண்டு நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கவில்லையா?

60-க்கு மேற்பட்ட கட்சிகளும்கூட பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறினால் மார்க்சிய – லெனினிய கோட்பாடுகளுக்குச் சேதம் ஏற்படாமல் இருந்தால், மற்றவர்களிடமிருந்து நாம் ஏற்றுக் கொள்ளத்தக்க சில கருத்துக்களை ஏற்றுக் கொண்டு கைவிடத்தக்க நமது சொந்தக் கருத்துக்கள் சிலவற்றைக் கைவிடுகிறோம்.

எனவே தவறுகள் செய்த ஒரு தோழரைக் கையாள்வதற்கு நமக்கு இரண்டு கரங்கள் இருக்கின்றன. ஒருகரம் அவரோடு போராடுவதற்கு; மற்றொரு கரம் அவரோடு ஒன்றுபடுவதற்கு. போராட்டத்தின் நோக்கம் மார்க்சியக் கோட்பாடுகளை நிலைநிறுத்துவது. இதன் பொருள் கோட்பாடு தழுவியவராக இருப்பது; இது ஒரு கரம், மற்றொரு கரம் அவருடன் ஒன்றுபடுவதற்கானது. ஒற்றுமையின் நோக்கம், அவருக்கு ஒரு வழியைத் தருவது; அவரோடு சமரசம் செய்து கொள்வது; இதன் பொருள் நெளிவு சுளிவானவராக இருப்பது. கோட்பாட்டோடு நெளிவு சுளிவை ஒன்றிணைப்பது என்பது ஒரு மார்க்சிய லெனினியக் கோட்பாடு; இது எதிர்மறையின் ஒற்றுமையாகும்.

எத்தகைய உலகத்திலும் குறிப்பாக வர்க்க சமுதாயத்தில் முரண்பாடுகள் மிகுந்திருக்கின்றன. சோசலிச சமுதாயத்தில் முரண்பாடுகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் இது பிரச்சினையைத் தவறான வழியில் முன்வைப்பதாகும் என்று நான் கருதுகிறேன். முரண்பாடுகளைக் கண்டுபிடிக்க வேண்டுமென்பதல்ல பிரச்சினை. அங்கு முரண்பாடுகள் மிகுந்திருக்கின்றன என்பதுதான் பிரச்சினை. முரண்பாடுகள் இல்லாத இடமே இல்லை; ஆராய்ந்து அறியப்பட முடியாத எந்த நபருமே இல்லை. அவரை ஆராய்ந்து அறிய முடியாது என நினைப்பது நிலையியல் பார்வையைக் கொண்டது. பாருங்கள்! ஒரு அணு என்பது சிக்கலான எதிர்மறைகளின் ஒற்றுமைகளைக் கொண்டது. இதில் இரண்டு எதிர்மறைகளின் ஒற்றுமை இருக்கின்றது.

அவை மூலக்கருவும் எலெக்ட்ரான்களும் ஆகும். ஒரு மூலக்கருவில் மேலும் ஒரு எதிர்மறைகளின் ஒற்றுமை இருக்கின்றது. அது புரோட்டான்களும் நியூட்ரான்களும் ஆகும். புரோட்டானைப் பற்றிக் கூறினால் புரோட்டான்களும் எதிர் புரோட்டான்களும் இருக்கின்றன. நியூட்ரானைப் பொருத்தவரையில் நியூட்ரான்களும் எதிர் நியூட்ரான்களும் உள்ளன. சுருங்கக் கூறினால் எதிர்மறைகளின் ஒற்றுமை எங்கும் நிலவுகிறது. எதிர்மறைகளின் ஒற்றுமையைப் பற்றிய கோட்பாட்டை அதாவது இயங்கியலை, பரவலாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும். இயங்கியல், தத்துவஞானிகளின் குறுகிய வட்டத்திலிருந்து வெளியேறி பரந்துபட்ட மக்களிடம் செல்ல வேண்டும் என்று நான் கூறுவேன். கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் குழுக்களிலும் மையக்குழுக்களின் விரிவுபடுத்தப்பட்ட கூட்டங்களிலும் கட்சிக் கமிட்டிகளின் எல்லா மட்டங்களிலும் இந்தப் பிரச்சினையை விவாதிக்க வேண்டும் என்று நான் ஆலோசனை கூறுகிறேன்.

படிக்க:
♦ சோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ
♦ பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்

நமது கட்சிக் கிளைச் செயலாளர்கள் கிளைக் கூட்டங்களுக்கான அறிக்கைகளைத் தயார் செய்யும் பொழுது அவர்கள் தங்களுடைய குறிப்புப் புத்தகங்களில் இரண்டு விஷயங்களை எழுதியிருக்க வேண்டும்; முதலாவது சாதனைகள், இரண்டாவது குறைபாடுகள். அப்படிச் செய்யும் பொழுதுதான் அவர்கள் இயங்கியலை அறிந்திருக்கிறார்கள் என்பது உண்மையாகும்.

ஒன்று இரண்டாகப் பிரிகிறது – இதுவே சர்வ வியாபகமான (எங்கும், எதிலும், எப்பொழுதும் நிகழும்) நிகழ்ச்சி. இதுவே இயங்கியல்.

 

திருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் !

செப்டம்பர் 17 அன்று, தந்தைப் பெரியாரின் 142 -வது பிறந்தநாளை “பாசிச எதிர்ப்பு நாளாக” முன்னிறுத்தி திருவாரூரை சேர்ந்த மக்கள் அதிகாரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி, பகுஜன் சமாஜ், மாற்றத்திற்கான மக்கள் களம், அனைத்து மக்கள் நீதிக்கட்சி, விடுதலை தமிழ்புலிகள் கட்சி, மே 17 இயக்கம் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய “ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு” சார்பாக இருசக்கரப் பேரணி நடத்தப்பட்டது.

பெரியார் முதலில் கடவுள் மறுப்பு இயக்கத்தை தொடங்கிய ஊரான கண்கொடுத்தவனிதம் என்ற கிராமத்தில் இருந்து பேரணி தொடங்கியது. அப்பகுதியில் திராவிட கழகம் சார்பாக பெரியார் பிறந்தநாளுக்கு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை வேண்டுமென்ற  திமிர்த்தனமாக மறைத்து ‘மோடியின் பிறந்த நாள்’ சுவரொட்டியை ஒட்டியிருந்தனர்.

இதை கண்டித்து ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பினர் மற்றும் தி.க-வினருடன், பாஜக தவிர்த்த அனைத்து ஓட்டுக் கட்சியினரும் பொதுமக்களும் என நூற்றுக்கணக்கில் திரண்டனர். பா.ஜ.க.-வின் ஒன்றிய துணை செயலாளரை வரவழைத்து மக்கள் முன்னால் மோடியின் சுவரொட்டியை தன் கையாலேயே கிழிக்க வைத்து, “இனிமேல் இப்படி தவறு செய்ய மாட்டோம்” என்று மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றார். பேரணி குளிக்கரை, தேவர்கண்ட நல்லூர், வேலங்குடி, புலிவலம், கிடாரங்கொண்டான், அடியக்கமங்கலம், திருவாரூர் நகரம், பவித்தர மாணிக்கம், காட்டூர், நன்னிலம், சன்னாநல்லூர் வழியாக முடிகொண்டான் ஊரில் முடிவுற்றது.

தந்தை பெரியாரின் சிலைக்கு மாலையிட்டு பெரியாருக்கு மரியாதை செலுத்தி முழக்கமிடப்பட்டது. பாசிச கும்பலின் வெறியாட்டத்தை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் ஒன்றிணைந்தால் முறியடிக்க முடியும் என்பதை அனைவருக்கும் உணர்த்தியதாக இந்த நிகழ்வு அமைந்தது.

தகவல் :
மக்கள் அதிகாரம், திருவாரூர்.
தொடர்புக்கு : 8220716242.

சோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ

0

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார வேலை பற்றிய தேசிய மாநாட்டுரை
(1957, மார்ச் 12)

தோழர்களே !

நமது மாநாடு1 நன்றாக நடைபெற்று வருகின்றது. மாநாட்டின்போது பல பிரச்சினைகள் எழுப்பப்பட்டுள்ளன. நாம் பல விசயங்களைப் பற்றிப் படித்துள்ளோம். தோழர்கள் இங்கு விவாதித்த பிரச்சினைகள் பற்றி நான் இப்பொழுது சில குறிப்புகள் கூற விரும்புகின்றேன்.

பெரும் சமுதாய மாற்றம் ஒன்று நிகழும் காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம். சீன சமுதாயம் நீண்டகாலமாகப் பெரும் மாற்றங்களுக்கூடாகச் சென்று கொண்டிருக்கின்றது. ஜப்பானிய எதிர்ப்பு யுத்தம் இப்பெரும் மாற்றத்தின் ஒரு காலகட்டம், விடுதலை யுத்தம் இன்னொன்று. ஆனால் இன்றைய மாற்றம் முந்தியவற்றிலும் பார்க்க இயல்பில் மேலும் ஆழமான ஒன்றாகும். இன்று நாம் சோசலிசத்தை நிர்மாணித்துக் கொண்டிருக்கின்றோம். சோசலிச மாற்றத்துக்கான இந்த இயக்கத்தில் பல பத்துக் கோடி மக்கள் பங்குபற்றுகின்றார்கள். நாடு முழுவதும் வர்க்க உறவுகள் மாறிக் கொண்டிருக்கின்றன.

தோழர் மாவோ

விவசாயத்திலும் கைத்தொழிற்துறையிலும் உள்ள குட்டி பூர்ஷுவா வர்க்கமும் தொழில் வர்த்தகத் துறைகளிலுள்ள பூர்ஷுவா வர்க்கமும் ஒரு மாற்றத்துக்கூடாகச் சென்றுள்ளன. சமுதாய பொருளாதார அமைப்பு முறை மாற்றம் அடைந்துவிட்டது. தனியார் பொருளாதாரம் கூட்டுப் பொருளாதாரமாக மாற்றப்பட்டு விட்டது. முதலாளித்துவத் தனியுடைமை முறை சோசலிசப் பொது உடைமையாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இத்தகைய பெரும் மாற்றங்கள் மக்களின் மனதில் பிரதிபலிப்பது இயற்கையே. மனிதனின் சமுதாய வாழ்வு அவனுடைய உணர்வு நிலையை நிர்ணயிக்கின்றது.

நமது சமுதாய அமைப்பில் காணும் இந்தப் பெரும் மாற்றங்கள் பற்றி வெவ்வேறு வர்க்கங்கள், வர்க்கத் தட்டுகள், சமுதாயக் குழுக்கள் மத்தியில் வெவ்வேறு பிரதிபலிப்புகள் காணப்படுகின்றன. சீனாவைப் பொறுத்தவரையில் சோசலிசமே அதற்குரிய ஒரேயொரு வழி என்பதை யதார்த்த வாழ்வு ஊர்ஜிதம் செய்ததன் காரணமாகப் பரந்துபட்ட மக்கள் இந்த மாற்றங்களை ஆர்வத்துடன் ஆதரிக்கின்றனர். பழைய சமுதாய அமைப்பைத் தூக்கி எறிந்து ஒரு புதிய சமுதாய அமைப்பை அதாவது சோசலிச அமைப்பை ஸ்தாபிப்பது ஒரு பெரும் போராட்டம், சமுதாய அமைப்பிலும் மக்கள் ஒருவரோடு ஒருவர் கொள்ளும் உறவுகளிலும் ஒரு பெரும் மாற்றம் ஆகும்.

நிலைமை அடிப்படையில் சிறப்பாக இருக்கின்றது என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டும். இருப்பினும் புதிய சமுதாய அமைப்பு மிக அண்மையில்தான் ஸ்தாபிக்கப்பட்டது. அது ஸ்திரப்படுவதற்கு இன்னும் காலம் தேவை. ஒரு புதிய அமைப்பு ஸ்தாபிக்கப்பட்ட அதே கணத்தில் பூரணமாக ஸ்திரப்படுத்தப்பட முடியும் என்று ஒருபோதும் எண்ணிவிடக் கூடாது. ஏனென்றால், அது அசாத்தியம். அது படிப்படியாகத்தான் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும். இறுதியில் அதை ஸ்திரப்படுத்த வேண்டுமானால், நாட்டின் சோசலிசத் தொழில்மயமாக்கத்தை நிறைவேற்ற வேண்டும்; பொருளாதாரத் துறையில் சோசலிசப் புரட்சியை உறுதியாக நடத்த வேண்டும்; இன்னும் அரசியல், சித்தாந்த முன்னணிகளில் இடைவிடாது கடினமான சோசலிசப் புரட்சிப் போராட்டங்களையும், சோசலிசக் கல்வியையும் நடத்த வேண்டும்.

இவை தவிர, பல்வேறு சர்வதேசியச் சூழ்நிலைகளும் இதற்கு இசைவாக இருக்க வேண்டும். சீனாவில் சோசலிச அமைப்பை ஸ்திரப்படுத்தும் போராட்டம், சோசலிசமா, முதலாளித்துவமா ‘எது வெல்லும்’ என்பதைத் தீர்மானிக்கும் போராட்டம், இன்னும் ஒரு நீண்ட வரலாற்றுக் காலகட்டம் வரை நடந்து கொண்டே இருக்கும். ஆனால் புதிய சோசலிச அமைப்பு முறை ஸ்திரப்படுத்தப்படுவது நிச்சயம் என்பதை நாம் எல்லாரும் உணர்ந்து கொள்ள வேண்டும். நவீன தொழில் துறை, நவீன விவசாயம், நவீன விஞ்ஞானம், கலாச்சாரம் ஆகியவற்றை உடைய ஒரு சோசலிச நாட்டை நாம் நிச்சயம் கட்டியமைப்போம். இது நான் குறிப்பிட விரும்பும் முதலாவது விசயமாகும்.

படிக்க:
♦ பாட்டாளி வர்க்கமும் பாட்டாளி வர்க்கக் கட்சியும் ! | ஜே. வி. ஸ்டாலின்
♦ பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்

இரண்டாவதாக, நமது நாட்டின் அறிவுஜீவிகள் சம்பந்தப்பட்ட நிலைமையை ஆராய்வோம்.

சீனாவிலுள்ள அறிவுஜீவிகளின் தொகை பற்றி ஒரு சரியான புள்ளி விபரம் கிடையாது. உயர்தர அறிவுஜீவிகள் சாதாரண அறிவுஜீவிகள் உட்பட, பல்வேறு வகைப்பட்ட அறிவுஜீவிகளும் சுமார் ஐம்பது லட்சம் பேர் இருக்கலாம் என மதிப்பிடப்படுகின்றது. இந்த ஐம்பது லட்சம் பேரில் ஏகப் பெரும்பான்மையானவர்கள் தேசபக்தியுடையவர்கள்; நமது மக்கள் குடியரசை நேசிக்கின்றனர்; மக்களுக்கும் சோசலிச நாட்டுக்கும் சேவை செய்ய விரும்புகின்றனர். ஒரு சிறு தொகையினர் சோசலிச அமைப்பை அவ்வளவு விரும்பவில்லை; சந்தோசப்படவுமில்லை.

சோசலிசம் பற்றி அவர்கள் இன்னும் சந்தேகம் உடையவர்களாக இருக்கின்றனர். ஆனால் ஏகாதிபத்தியத்தை எதிர்நோக்கும் நிலையில் அவர்கள் தேசபக்தர்களாக விளங்குகின்றனர். நமது நாட்டின் மீது பகைமை பாராட்டும் அறிவுஜீவிகளின் தொகை மிகச் சிறியது. அவர்கள் நமது பாட்டாளி வர்க்க சர்வாதிகார நாட்டை விரும்பாமல், பழைய சமுதாயத்துக்காக ஏங்கித் துடிக்கின்றனர். சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் அவர்கள் தொல்லைகளைத் தூண்டி, கம்யூனிஸ்ட் கட்சியைத் தூக்கியெறிந்து, பழைய சீனாவை மீட்க எத்தனிக்கின்றனர். பாட்டாளி வர்க்க, பூர்ஷுவா வர்க்க மார்க்கங்களிலும், சோசலிச, முதலாளித்துவ பாதைகளிலும் அவர்கள் பின்னையவற்றிலேயே பிடிவாதமாக நிற்கின்றனர். உண்மையில் இந்தப் பாதை சாத்தியமானதல்ல. எனவே அவர்கள் ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம், அதிகார முதலாளித்துவம் ஆகியவற்றிடம் சரணடையத் தயாராய் இருக்கின்றனர்.

அரசியல் வட்டாரங்கள், தொழில், வர்த்தகத்துறைகள், கலாச்சார, கல்வித்துறைகள், விஞ்ஞான, தொழில் நுட்பத்துறைகள், மத வட்டாரங்கள் எல்லாவற்றிலும் இத்தகைய நபர்கள் காணப்படுகின்றனர். அவர்கள் கடைகோடி பிற்போக்குவாதிகளாவர். ஐம்பது லட்சம் அறிவுஜீவிகளில் அவர்களின் தொகை 1 அல்லது 2 அல்லது 3 வீதம் மாத்திரமே. மொத்தம் ஐம்பது லட்சத்தில் ஏகப்பெரும்பான்மையானவர்கள், அல்லது 90 வீதத்துக்கு மேலானவர்கள் சோசலிச அமைப்பைப் பல்வேறு அளவில் ஆதரிக்கின்றனர். அவர்களில் பலர் சோசலிசத்தின் கீழ் வேலை செய்வது எப்படி, பல புதிய பிரச்சினைகளைப் புரிந்து கொள்வது, கையாள்வது, தீர்ப்பது எப்படி என்பதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லை.

மார்க்சியம் பற்றி இந்த ஐம்பது லட்சம் அறிவுஜீவிகளும் கொள்ளும் மனோபாவத்தைப் பொறுத்தவரையில், கம்யூனிஸ்டுகளும் கட்சிக்கு வெளியிலுள்ள ஆதரவாளர்களும் அடங்கிய சுமார் 10 வீதத்துக்கு மேலானவர்கள் மார்க்சிசத்துடன் ஓரளவு பரிச்சயம் உடையவர்கள், ஒரு உறுதியான நிலைப்பாட்டில் – பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டில் – நிற்கின்றனர் என்று கூறலாம். மொத்தம் ஐம்பது லட்சம் பேர் மத்தியில் அவர்கள் சிறுபான்மையினராக இருக்கின்றனர். ஆனால் மையக்கருவாக, ஒரு பலம் வாய்ந்த சக்தியாக விளங்குகின்றனர்.

பெரும்பான்மையானவர்கள் மார்க்சியத்தைப்  படிக்க விரும்புகின்றனர். ஏற்கெனவே சிறிது படித்தும் உள்ளனர். ஆனால் அவர்கள் அதனுடன் இன்னும் பரிச்சயம் பெறவில்லை. அவர்களில் சிலருக்கு இன்னும் சந்தேகங்கள் இருக்கின்றன. அவர்களுடைய நிலைப்பாடு இன்னும் உறுதியானதாகவில்லை. அவர்கள் நெருக்கடிக் காலங்களில் ஊசலாடுகின்றனர். ஐம்பது லட்சம் அறிவுஜீவிகளில் பெரும்பான்மையாக விளங்கும் இந்தப் பகுதியினர் ஒரு இடைநிலைக் கட்டத்தில் இன்னும் இருக்கின்றனர். மார்க்சியத்தைப் பலமாக எதிர்ப்பவர்கள் அல்லது அதன்மீது பகைமை பாராட்டுபவர்கள் மிகச் சிறிய தொகையினரே ஆவர். சிலர் வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், உண்மையில் மார்க்சியத்துக்கு உடன்பாடானவர்கள் அல்லர். இத்தகைய நபர்கள் நீண்ட காலம் இருக்கவே செய்வர். உடன்பாடின்றி இருப்பதற்கு அவர்களை நாம் அனுமதிக்க வேண்டும்.

படிக்க :
♦ மாமேதை லெனின் : அறிவாளிகளின் அந்தரங்கம் || லெனின் – தலைவர்! தோழர்! மனிதர்!
♦ தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !

உதாரணத்திற்கு, கருத்துமுதல்வாதிகள் சிலரை எடுப்போம். அவர்கள் சோசலிசத்தின் அரசியல், பொருளாதார அமைப்பை ஆதரிக்கலாம். ஆனால் மார்க்சிய உலகநோக்கை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மத வட்டாரங்களிலுள்ள தேச பக்தர்களைப் பொறுத்தவரையிலும் இது உண்மையாகும். அவர்கள் ஈசுரவாதிகள். நாம் நாஸ்திகர்கள். மார்க்சிய உலகநோக்கை ஏற்றுக் கொள்ளும்படி நாம் அவர்களை நிர்ப்பந்திக்க முடியாது. சுருங்கச் சொன்னால், மார்க்சியம் பற்றி ஐம்பது லட்சம் அறிவுஜீவிகளும் கொள்ளும் மனோபாவத்தைப்  பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்: மார்க்சியத்தை ஆதரிப்பவர்கள், அதனுடன் ஓரளவு பரிச்சயம் உடையவர்கள் சிறுபான்மையினரே ஆவர். மார்க்சியத்தை எதிர்ப்பவர்களும் ஒரு சிறுபான்மையினரே ஆவர். பெரும்பான்மையினர் மார்க்சியத்தை ஆதரிக்கின்றனர், ஆனால் அதனுடன் பரிச்சயம் பெறவில்லை. அதைப் பல்வேறு அளவில் ஆதரிக்கின்றனர். இங்கு அவர்கள் எடுக்கும் நிலைப்பாடுகளும் உறுதியானது, ஊசலாட்டமானது, பகைமையானது என மூன்று வகையாக இருக்கின்றன. இந்த நிலைமை நீண்ட காலம் தொடர்ந்து இருக்கும் என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். இந்த உண்மையை நாம் அங்கீகரிக்கத் தவறினால், நாம் பிறருக்குப் பெரும் கோரிக்கையை முன்வைக்கும் அதேவேளையில், நமக்குச் சிறு கடமைகளை மாத்திரமே முன்வைத்தவர்கள் ஆவோம்.

பிரச்சார வேலையிலுள்ள நமது தோழர்கள் மார்க்சியத்தைப் பரப்பும் கடமை உடையவர்கள். இது சுயமாக மக்கள் அங்கீகரிக்கும் முறையில் படிப்படியாகவும் நன்றாகவும் செய்யப்பட வேண்டும். மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளும்படி நாம் மக்களை நிர்ப்பந்திக்க முடியாது. அவர்களுக்கு அறிவுறுத்த மாத்திரம் நம்மால் முடியும். சில ஐந்தாண்டுத் திட்டக் காலகட்டங்களின் போக்கில் நமது அறிவுஜீவிகளில் கணிசமான தொகையினர் மார்க்சியத்தை அங்கீகரித்துத் தமது வேலை வாழ்வு ஆகியவற்றின் நடைமுறை மூலம், வர்க்கப் போராட்டம், உற்பத்தி, விஞ்ஞான நடவடிக்கை ஆகியவற்றின் நடைமுறை மூலம் அதை ஓரளவு நன்கு கிரகித்துக் கொண்டால் அது உண்மையில் சிறப்பானது. இதுதான் நடக்கும் என்று நாம் நம்புகின்றோம்.

(தொடரும்)

குறிப்புகள் :

  1. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார வேலை பற்றிய தேசிய மாநாடு, கட்சி மத்திய கமிட்டியால் 1957, மார்ச் 6-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை பீக்கிங்கில் நடத்தப்பட்டது. மத்திய, மாகாண (அல்லது மாநகர) மட்டங்களிலுள்ள கட்சியின் பிரச்சார, கலாச்சார, கல்வி பகுதிகளின் 380-க்கு மேலான தலைமை ஊழியர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். அதோடு, விஞ்ஞானம், கல்வி, இலக்கியம், கலை, பத்திரிகை, பிரசுரம் முதலிய பல்வேறு பகுதிகளிலும் நிறுவனங்களிலுமிருந்து வந்த கட்சிக்கு வெளியிலுள்ள 100-க்கு மேலானோரும் இம்மாநாட்டுக்கு வரவழைக்கப்பட்டனர்.

ஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் !

1

தை நினைத்துப் பாருங்கள்.

ஒரு நாள், உங்கள் வீட்டு வாசலில் அழைப்பு மணி ஒலிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு உங்கள் நகரம்  அல்லது கிராமத்தில் ஏற்பட்ட சில போராட்டம் குறித்து உங்களுடன் பேச வேண்டும் என்று கூறும் ஒரு சில காவல்துறை அதிகாரிகளை வாசலில் நிற்கிறார்கள். சட்டத்தை மதிக்கும் குடிமகனாக இருப்பதால், நீங்கள் காவல்துறையினருடன் உள்ளூர் காவல் நிலையத்துக்குச் செல்கிறீர்கள்.

நிகழ்வின்போது, நீங்கள் இருந்த இடத்தைப் பற்றிய அவர்களின் கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கிறீர்கள், ஒரு கடுமையான சட்டம் என நீங்கள் நம்புவதற்கு எதிரான போராட்டங்களில் நீங்கள் எவ்வாறு பங்கேற்றீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்கிறீர்கள் அல்லது ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதற்காக நீங்கள் செய்யும் வேலையை விளக்குகிறீர்கள். உங்களிடம் எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் காணப்படவில்லை, உங்கள் வங்கி மற்றும் தொலைபேசி பதிவுகள் எந்தவொரு தவறான நடவடிக்கையிலும் உங்களுடைய தொடர்பை காட்டவில்லை.

ஆனபோதும், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967 இன் கீழ் நீங்கள் ஒரு குற்றத்தைச் செய்துள்ளீர்கள் என நம்புவதாகக் கூறும் காவல்துறையினரால் நீங்கள் கைது செய்யப்பட்டுள்ளீர்கள். பயங்கரவாத நடவடிக்கைகளைத் திட்டமிடுவதிலும், செயல்படுத்துவதிலும் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள் என்றும், அதற்கு ஆதாரங்கள் உள்ளன என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இந்த ஆதாரம் உங்களுக்கு வழங்கப்படவில்லை.

படிக்க:
♦ பாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி ! – லெனின்
♦ கட்டுக்கோப்பான கட்சியா ? கதம்பக்கூட்டா ? | ஜே. வி. ஸ்டாலின்

காவல்துறையினர் உங்களை காவலில் வைத்த பிறகு, நீங்கள் பிணைக்கு விண்ணப்பிக்கிறீர்கள். இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த விவகாரம் வரும்போது, நீங்கள் பாகிஸ்தான் உயர் ஆணையகம் மற்றும் சீனாவைச் சேர்ந்த உளவாளிகளுடன் தொடர்பு கொண்டிருந்தீர்கள் என்பதையும், நீங்கள் பயங்கரவாத நடவடிக்கைக்கு நிதியளிக்கும் ஹவாலாவின் மையமாக இருந்தீர்கள் என்பதையும் காட்டும் ஒரு குற்றச்சாட்டு ஆவணம் இருப்பதாக காவல்துறை தெரிவிக்கிறது.

‘குற்றச்சாட்டு ஆவணம்’ என்பது தட்டச்சு செய்யப்பட்ட (கையால் எழுதப்படாத) தகவலுடன் கூடிய ஒரு தாள், இது பெயர் அல்லது உங்கள் வங்கிக் கணக்கு, அல்லது நீங்கள் தொடர்பு கொண்டதாகக் கூறப்படும் உளவாளிகள் எவரையும் குறிப்பிடவில்லை, ஆனால் ஒரு சீரற்ற எழுத்துக்களில் இருந்த ஒருவர் ஹவாலா நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறுகிறது.

முழு சதித்திட்டத்திலும் உங்கள் பங்கை வெளிப்படுத்தும் சாட்சிகள் வழங்கிய வாக்குமூல ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக காவல்துறை கூறுகிறது. சாட்சிகளின் வாக்குமூலங்களின் நகல்களை நீங்கள் கேட்கிறீர்கள்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 161 ன் கீழ் காவல்துறையினர் சில வாக்குமூல அறிக்கைகளை வழங்குகிறார்கள், அவை அனைத்தும் ஒரே விதமாக எழுதப்பட்டும் எழுத்துப் பிழைகளும்கூட ஒரே விதமாக இருக்கிறது. மேலும் உங்களுக்கு எதிராக எந்தவொரு குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளையும் அது கொண்டிருக்கவில்லை, அல்லது உங்களுக்கு எதிராக என்ன ஆதாரங்கள் மீட்கப்பட்டன என்பதையும் கூறவில்லை. இந்த அறிக்கைகள் அனுமதிக்க முடியாத சான்றுகள் என்று நீங்கள் சுட்டிக்காட்டுகிறீர்கள், மேலும் நீங்கள் எந்த விதத்திலும் குற்றவாளி என்பதைக் கூட அவை காட்டவில்லை என சுட்டிக்காட்டுகிறீர்கள்.

சிஆர்பிசி-யின் பிரிவு 164-ன் கீழ் குற்றவியல் நடுவர் முன் சாட்சிகளால் பதிவு செய்யப்பட்ட அறிக்கைகள் தங்களிடம் உள்ளன, அவை ஏற்றுக்கொள்ளக்கூடிய சான்றுகள் என அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அந்த சாட்சி வாக்குமூலங்களை நீங்கள் அணுக முடியாது, ஏனெனில் அவர்கள் சாட்சிகளைப் பாதுகாக்க வேண்டும். சாட்சிகளை அடையாளம் காண முடியாது என்பதை உறுதி செய்வதற்காக காவல்துறையினர் அறிக்கைகளைத் திருத்தியதில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்று கூறுகிறீர்கள். அவர்கள் மறுக்கிறார்கள், பின்னர் அவற்றை நீதிபதியிடம் கூட வழங்க வேண்டாம் அல்லது உங்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் இந்த வாக்குமூலங்களை குறிப்பிட வேண்டாம் என அவர்கள் முடிவு செய்கிறார்கள்.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவல்துறையினரைக் கேட்கிறார், அவர்கள் அவருக்கு வழங்கியதைப் பார்க்கிறார், உங்கள் பிணை விண்ணப்பத்தை மறுக்கிறார், உங்களுக்கு பிணை வழங்க சட்டம் அனுமதிக்காது என்று கூறுகிறார். உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் முறையீடுகள் நிராகரிக்கப்படுகின்றன.

காவல்துறையினர் புதிதாக ஒருவரைக் கைதுசெய்த ஆறு மாதங்களுக்கு ஒருமுறை புதிய துணை குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்வதால், உங்கள் வழக்கு விசாரணை தொடங்கப்படாமலேயே நீங்கள் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, உங்கள் வழக்கு விசாரணை நடைபெறுகிறது. குற்றச்சாட்டுக்குரிய ஆவணம் பொருத்தமற்றதாக தெரிய வருகிறது. பிரிவு 161-ன் கீழ் உள்ள அறிக்கைகள் அனுமதிக்க முடியாத சான்றுகள். பிரிவு 164 வாக்குமூல அறிக்கை அளித்தவர்கள் உங்களை ஒருபோதும் குறிப்பிடவில்லை என்பதும் தெரிய வருகிறது.

ஒரு இந்திய சிறைச்சாலையின் புகழ்பெற்ற விருந்தோம்பலில் ஐந்து ஆண்டுகள் (விசாரணை முடிந்தவுடன்) கழித்த பிறகு, நீங்கள் வெளியே வருகிறீர்கள். உங்கள் வேலை பாழாகிவிட்டது, உங்கள் உறவுகள் முறிந்தன.

மேலும், உங்களுக்கு எதிரான வழக்கு தவறானதாகவும் உங்களுக்கு தீங்கிழைக்கும் நோக்கத்துக்காக போடப்பட்டதாக தெரிய வந்தாலும், நீங்கள் எதிர்க்கொண்ட எந்தவொரு துன்பத்துக்கும் இழப்பீட்டை நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது.

அருமையானதாக தோன்றுகிறது, இல்லையா?

இவை அனைத்தும் மேலே சற்று மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றலாம், ஆனால் இந்தியாவில் தொடுக்கப்படும் உபா (UAPA) தொடர்புடைய வழக்குகளின் முகத்தில் அறையும் உண்மை நிலவரம் இது.

காலவரிசையை  நம்பவில்லையா? பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேளுங்கள், அவர்கள் மீது நடந்து வரும் வழக்கில் இதுபோன்ற ஆதாரங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்கள்(அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்). அது மட்டுமல்லாமல், இதேபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு பலர் விடுவிக்கப்பட்டனர் அல்லது கடந்த காலத்தில்  (நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது அதற்கு மேற்பட்டு சிறைகம்பிகளுக்கு உள்ளே இருந்த பிறகு) வெளியேற்றப்பட்டனர்.

படிக்க :
♦ எல்கார் பரிஷத் வழக்கு : மாவோயிஸ்ட் பட்டம் கட்டி செயல்பாட்டாளர்களை முடக்கும் பா.ஜ.க!
♦ பாகிஸ்தானின் புதிய அரசியல் வரைபடம் !

ஆதாரங்களைப் பற்றிய காஃப்காதனமான விஷயங்களை நம்பவில்லையா? நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடாத ஒரு பெயரான ஜாபூர் அஹ்மத் ஷா வட்டாலியிடம் கேளுங்கள், ஆனால் இது சட்டத்தின் கல்லில் எழுதப்பட்டுள்ளதால், இது அனைத்தையும் சாத்தியமாக்குகிறது.

UAPA வழக்குகள், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பொருந்தக்கூடிய அனைத்து தீவிரத்தன்மையுடனும், ஜோடிக்கப்பட்டவையாக இருப்பதை நம்பவில்லையா? விடுவிக்கப்பட்ட அல்லது வழக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட 67 விழுக்காடு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவரிடம் கேளுங்கள்.

எனவே, கற்பனையானதாகவும் நம்பமுடியாததாகவும் இருக்கலாம், மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிறிய கற்பனையானது உண்மையில் UAPA சட்டம் மக்களை விசாரணையில்லாமல் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்க அனுமதித்த விதத்தை அடித்தளமாகக் கொண்டது. தீர்வு எதுவாக இருந்தாலும் இது அவர்களுக்கு தண்டனை தரும் செயல்முறையாக இருந்தது.

ஒருவேளை மிகவும் நம்பமுடியாத வகையில், UAPA வழக்குகளின் உண்மைதன்மை என்பது காவல்துறையினர் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியதன் விளைவாகவோ அல்லது கீழ் நீதிமன்றங்கள் அதை தவறாகப் புரிந்துகொள்வதன் விளைவாகவோ இல்லை.

ஒரு நபருக்கு எதிராக நியாயமான ஆதாரங்கள் எதுவும் இல்லாதபோது கூட பிணை மறுக்கும் இந்த திறன் UAPA க்கு உள்ளது. மேலும் இது அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் இந்திய உச்சநீதிமன்றத்தால் சட்டத்தின் சரியான விளக்கமாக அமைக்கப்பட்டுள்ளது.

உமர் காலித்தை இது என்ன செய்யும்?

சரி, சட்டத்திற்கு உமர் காலித் உடன் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் நீங்கள் அவரை நேசிக்கிறீர்களோ அல்லது அவரை வெறுக்கிறீர்களோ அல்லது அவரைப் பற்றி அலட்சியமாக இருந்தாலும், டெல்லி கலவரத்தின் பின்னணியில் உள்ள சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதாகக் கூறி உமர் காலித் UAPA வழக்கின் கீழ் டெல்லி காவல்துறையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட பின்னர், அவர் வழக்கின் பார்வை உள்ளது.

அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் அல்லது அவர்கள் இறுதியில் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டாலும், உமர் காலித்தின் வழக்கு, அவரைப் போன்ற ஒரு முழு அரசியல் போராட்டக்காரர்களை வரவிருக்கும் ஆண்டுகளில் சிறையில் அடைக்க உபா எவ்வாறு பயன்படும் என்பதைப் பார்க்க ஒரு பயனுள்ள ஆய்வாக இருக்கும் .

செப்டம்பர் 16, புதன்கிழமை, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு தனது 17,000 பக்க குற்றப்பத்திரிகையை டெல்லி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த மிகப்பெரிய குற்றப்பத்திரிகை உமர் காலித் உட்பட சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை. அதற்காக, அடுத்தடுத்த மாதங்களில் துணை குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படும்.

நவம்பர் 2018-ல் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பீமா கோரேகான் வழக்கைப் போலவே, இந்த வழக்கில் விசாரணையை நாம் நீண்ட காலத்துக்குப் பார்க்கப் போவதில்லை என்பதை இது தெளிவுபடுத்தும். ஆனால் விசாரணை இன்னும் தொலைதூர கனவுதான் . அந்த வழக்கில் ஒவ்வொரு முறையும் அதிகமான செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்படும்போது, செப்டம்பர் மாதத்தில் நடந்ததைப் போலவே, காவல்துறையினர் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்ய அதிக நேரம் பெறுகிறார்கள், விசாரணை தொடங்குவதை தாமதப்படுத்துகிறார்கள்.

எஃப்.ஐ.ஆர் 59  பதிவுசெய்யப்பட்ட பல மாதங்களுக்குப் பின் உமர் காலித் கைது செய்யப்பட்டிருக்கிறார், இது இங்கேயும் அதேபோன்ற அணுகுமுறை பின்பற்றப்படுவதைக் குறிக்கிறது. காவல்துறையினரால் உமர் காலித்திற்கு எதிரான சான்றுகள் பற்றி நமக்குத் தெரிந்தவை, வாக்குமூலம் மற்றும் சாட்சி அறிக்கைகள், அமெரிக்க அதிபர் வருகை தருவதை யாரும் அறிவதற்கு முன்பே அவர் டொனால்ட் டிரம்ப்பின் வருகையை சீர்குலைக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தார் என கூறுவதும், மக்கள் வன்முறைக்கு இலக்காகிவிடக்கூடாது என அவர் வெளிப்படையாக பேசியதும்தான்.

ஒருவேளை இறுதியில் துணை குற்றப்பத்திரிகைகள் இன்னும் ஏதையாவது சேர்க்கலாம்.

அப்படியிருக்க  – எஃப்.ஐ.ஆர் 59-ல் குற்றம் சாட்டப்பட்ட மற்ற அனைவரையும் போல உமர் காலித் (மனிதாபிமான அடிப்படையில் பிணை பெற்ற சஃபூரா சர்கரைத் தவிர) – பல ஆண்டுகளாக சிறையில் சிக்கித் தவிக்கப்போவது ஏன்?

பதில் UAPA-ன் பிரிவு 43D (5) இல் பொதிந்துள்ளது.

வழக்கமான கிரிமினல் வழக்குகளில், பிணை விதிமுறையாக உள்ளது. விசாரணைக்கு முந்தைய சிறை விதிவிலக்காக இருக்கும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாங்கள் ஒத்துழைக்கிறார்கள் என்பதைக் காட்ட முடியுமானால், குற்றம் சாட்டப்பட்ட குற்றத்தை மீண்டும் செய்ய வாய்ப்பில்லை,  தப்பிக்கவோ அல்லது சாட்சிகளை அச்சுறுத்தவோ போவதில்லை அல்லது சாட்சியங்களை சேதப்படுத்தவோ முடியாது என தெரிய வரும்போது- பிணை வழங்க முடியாத குற்றங்கள் என்று அழைக்கப்பட்டாலும் கூட அவர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்க முடியும்.

எவ்வாறாயினும், உபாவின் பிரிவு 43 டி (5), உபா(பயங்கரவாதம் மற்றும் ஒரு பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தது)வின் அத்தியாயங்கள் IV மற்றும் VI இன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு, வழக்கு நாட்குறிப்பு மற்றும் போலீசு அறிக்கையை ஆராய்ந்த பின்னர், ‘அத்தகைய நபருக்கு எதிரான குற்றச்சாட்டு முதன்மையானது என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன என்று கருதும்பட்சத்தில்’ பிணையில் நீதிமன்றம் விடுவிக்காது.

உபாவின் கீழ் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிரான உண்மையான ஆதாரங்களைப் பொருட்படுத்தாமல், பிணை பெறுவதற்கான தடையாக காவல்துறையும் என்ஐஏவும் பல ஆண்டுகளாக கருதுகின்றன. 2008 ஆம் ஆண்டில் உபாவில் இந்த விதி சேர்க்கப்பட்டதிலிருந்து பல ஆண்டுகளாக, விசாரணை நீதிமன்றங்களும், ‘குற்றச்சாட்டின் முகாந்திரம்’ என்ற வார்த்தையின் பயன்பாட்டின் காரணமாக இதை விதிமுறையாகப் பார்க்கின்றன.

படிக்க :
♦ சென்னை டாஸ்மாக் திறப்பு : மக்கள் பணத்தை கல்லா கட்டும் எடப்பாடி அரசு !
♦ 101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆத்மநிர்பாரா ? கார்ப்பரேட் நிர்பாரா ?

எவ்வாறாயினும், 2018-ம் ஆண்டில், என்ஐஏ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜாகூர் அஹ்மத் ஷா வட்டாலி, அவருக்கு எதிரான மேலோட்டமான ஆதாரங்களால் பிணை பெற முயன்ற வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்தது .

உபாவின் பிரிவு 43 டி (5)-ன் அடிப்படையில் விசாரணை நீதிமன்றம் அவருக்கு பிணை மறுத்துவிட்டது. ஆனால் டெல்லி உயர்நீதிமன்றம், ஆதாரங்களின் தன்மையைப் பொறுத்தவரை, வட்டாலிக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் முகாந்திரத்தில் “நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை” என்று கண்டறிந்தது.

உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்றாகும், இது அத்தகைய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்ட அதிக சுமையை ஒப்புக் கொண்டது, மேலும் உபாவில் எப்படி பிணை பெற இயலாது என்பதையும் ஒப்புக் கொண்டது. ஒருவரை சிறையில் தள்ளுவதை விட, குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான வழக்கின் நியாயத்தை மதிப்பீடு செய்ய நீதிமன்றங்கள் கோருவதன் மூலம் இது ஒரு நியாயமான உணர்வை ஊக்குவித்தது, ஏனெனில் காவல்துறை அவர்களை குற்றவாளிகள் என்று கூறி சில சீரற்ற ஆவணங்களின் மூலம்  சிறையில் அடைத்தது.

பின்னர் ஏப்ரல் 2019-ல், உச்ச நீதிமன்றம் அவற்றையெல்லாம் நீக்கியது. உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர், டெல்லி உயர்நீதிமன்றத்தின் பிணை வழங்கும் அணுகுமுறையை  ’பொருத்தமற்றதாக’ பார்த்தார். விசாரணையால் வழங்கப்பட்ட பொருளை முழுவதுமாக நீதிமன்றம் பார்ப்பதைவிட, வழக்கில் முகாந்திரம் இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும் எனக் கூறப்பட்டது.

எனவே உச்சநீதிமன்றம் உங்களுக்கு எதிராக காவல்துறையிடம் என்ன இருக்கிறது என்பது முக்கியமல்ல, உபா பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு ஆளானால் நீங்கள் பிணை பெற முடியாது. ஆதாரங்கள் புனையப்பட்டதாகத் தோன்றினால் அதற்கு ஒரு பொருட்டல்ல (பீமா கோரேகான் வழக்கில் சில விஷயங்கள் குறித்து நீதிபதி டி.ஒய் சந்திரசூட் கண்டுபிடித்தது போல). உங்களுக்கு எதிராக ஆதாரங்களை உண்மையில் பயன்படுத்த முடியாவிட்டாலும் அது ஒரு பொருட்டல்ல. சான்றுகள் முற்றிலும் பொருத்தமற்றவை என்றால் அது ஒரு பொருட்டல்ல.

நீங்கள் குற்றத்துடன் இணைந்திருப்பதைக் காட்டுகிறது என்று காவல்துறை சொன்னால்,  நீங்கள் சிறையில் சிக்கிக் கொண்டாலும், என்ன நடக்கிறது என்பதை நீதிமன்றத்தால் தெளிவாகக் காண முடிந்தாலும்..

அதனால்தான், டெல்லி கலவரங்கள் குறித்து டெல்லி காவல்துறை விசாரணையை பொருட்படுத்தாமல், சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மட்டுமே வன்முறையைத் தூண்டுவதாக குற்றம் சாட்டப்படுகிறார்கள் என்ற உண்மையைப் பொருட்படுத்தாமல், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான மிகவும் சந்தேகத்திற்குரிய ஆதாரங்களைப் பொருட்படுத்தாமல், உமர் காலித் உள்ளிட்டோர் சிறைக் கம்பிகளுக்கு பின்னால் ஒரு நீண்ட காலத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் எந்தக் குற்றமும் செய்யவில்லை எனத் தெரிந்தாலும் டெல்லி காவல்துறையின் விசாரணை பக்கச்சார்பானது என்றும் தெரிந்தாலும்கூட அவர்கள் நீண்ட காலம் சிறையில் கழிக்க வேண்டியிருக்கும்.

அதில் இங்குள்ள உயர்ந்த  நீதிமன்றத்தின் ஒப்புதல் முத்திரை இருக்கும்.

கட்டுரை: வகாசா சச்தேவ்
தமிழாக்கம் : அனிதா
நன்றி:
த க்விண்ட்

144 தடை உத்தரவை நீக்கு ! விருதையில் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் !!

க்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கின்ற வகையில்  144 தடை உத்தரவு இருக்கிறது. இதனை முழுமையாக நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 19/09/2020 அன்று விருத்தாசலம், பாலக்கரையில் தோழர்.முருகானந்தம் ( விருதை மக்கள் அதிகாரம் வட்டார ஒருங்கிணைப்பாளர்) அவர்களின் தலைமையில் அனைத்துக் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கண்டன உரை :

தோழர். கோகுல கிரிஸ்டீபன், (மாவட்ட செயலாளர் -இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி) ஆற்றிய கண்டன உரையில், மோடி அரசு கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க இந்த உத்தரவு பிறப்பிக்கவில்லை பிஜேபியின் ஆதரவு சட்டங்களை நடைமுறைப்படுத்த 144 தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்தியா முழுமைக்கும் அனைத்து  உத்தரவுகளும் தளர்வு  செய்யப்பட்டாலும் 144 இன்றும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதனால் மக்களுடைய உரிமையை மீட்கக் கூடிய வகையில் இல்லாத சூழலை நீடிக்கிறது என்றார்.

படிக்க :
♦ விவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் ! மக்கள் அதிகாரம் அறைகூவல் !
♦ ஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

தோழர். ராஜசேகர், (வட்ட செயலாளர் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.) பேசுகையில், பாசிச மோடி அரசு மக்கள் மீது துளியளவும் அக்கறை இல்லை. கார்ப்பரேட் முதலாளிகளை பாதுகாக்க வேண்டும் அவர்களின் சொத்து மதிப்பை உயர்த்த வேண்டும் என்று பாசிச வெறியோடு உழைக்கும் மக்கள் மீது அதிகாரத்தை கட்டமைக்கிறது. இதனை அனைவரும் எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டும் என்றார்.

தோழர்.மணியரசன், (மாவட்ட செயலாளர், புரட்சிகர மாணவர்-  இளைஞர் முன்னணி) பேசுகையில், நோய் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கவே பொது முடக்கம் என்பதை உலக நாடுகள் அனைத்தும் அறிவித்து மக்களை பெரும் நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும் என தனியார் மருத்துவமனைகள் கூட அரசுடமையாக்கி மருத்துவ எமர்ஜென்சியை அறிவித்தனர்.

ஆனால் இந்தியாவிலோ அதற்குத் தலைகீழான நிலை எந்த தனியார் மருத்துவமனையும் அரசுடமையாக்க படவில்லை ஆனால் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக இந்த 144 தடை உத்தரவை பயன்படுத்திக்கொண்டு மின்சார சட்டம், சுற்றுச்சூழல் சட்டம், புதிய கல்விக் கொள்கை, தொழிலாளர் நலச் சட்டம், கார்ப்பரேட் முதலாளிகளின் கடன் தள்ளுபடி என்று இந்திய மக்களுக்கு எதிரான பல்வேறு நாசகார திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனை எதிர்த்து நிற்க பாசிசத்தை முறியடிக்க முற்போக்கு, ஜனநாயக சக்திகள் புரட்சிகர பாதையிலே ஒன்றுபட வேண்டும் என்று பேசினார்.

தோழர்.மணிவாசகம் (ஆய்வு மாணவர், அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்) பேசுகையில், கொரோனா பெரும் நோய்த் தொற்றினால் காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை ஆகிய நிறுவனங்களில் உள்ள அரசு அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். சாதாரண உழைக்கும் மக்கள் ஆயிரக்கணக்கில் பலியாகியுள்ளார். இதில் இருந்து மக்களை காப்பாற்ற எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத பாசிச மோடி அரசு முதலாளிகளை பாதுகாக்கக் கூடிய வகையில் பல்வேறு நாசகார சட்டங்களை கொண்டு வருகிறது இதனை நாம் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள்,அனைத்து கட்சியினர் ஒன்று பட்டு போராடவேண்டும் என்று பேசினார்.

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழர்.பாலாஜி (மக்கள் அதிகாரம் பகுதி ஒருங்கிணைப்பாளர், கோ.பூவனூர்), தோழர். அருள் (பகுதி ஒருங்கிணைப்பாளர், கம்மாபுரம்), தோழர். தனசேகர் (பகுதி ஒருங்கிணைப்பாளர், விஜயமாநகரம்), தோழர்.ஆடியபாதம், (பகுதி ஒருங்கிணைப்பாளர், ஊமங்கலம்), தோழர்.அருள்முருகன் (பகுதி ஒருங்கிணைப்பாளர், ஆலிச்சிகுடி) மற்றும் தோழர்கள் மணிகண்டன், பூங்குழலி, முருகன், அர்ஜுன், அசோக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தகவல்:
மக்கள் அதிகாரம் – விருத்தாச்சலம்

தொடர்புக்கு:
97912 86994

விவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் ! மக்கள் அதிகாரம் அறைகூவல் !

21.09.2020

பத்திரிகை செய்தி

கார்ப்பரேட்டுகளிடம் விவசாயிகளை அடிமைப்படுத்தும் பாஜக மோடியின் சட்டங்களை முறியடிப்போம் !
விவசாயிகளை காக்க செப்.25 அன்று தமிழக வீதிகளை போராட்டக் களமாக்குவோம் !

பா.ஜ.க மோடி அரசு செப்டம்பர்.17 அன்று மக்களைவையில் விவசாயிகளின் உற்பத்தி மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா {Farmer’s Produce Trade and Commerce (Promotion and Facilitation) Bill, 2020}, விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகளில் விவசாயிகளுக்களுக்கான (அதிகாரமளித்தல் & பாதுகாப்பு)  ஒப்பந்த மசோதா {Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Bill, 2020}, அத்தியாவசிய  பொருட்கள் (திருத்த) மசோதா 2020 {Essential Commodities (Amendment) Bill, 2020} என மூன்று சட்ட மசோதாக்களை நிறைவேற்றி உள்ளது. இவ்வாரத்தில் மாநிலங்களவையிலும் நிறைவேற்றி உடனே நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில் தீவிரம் காட்டுகின்றது.

இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் விவசாயிகள் என்ன பயிர் செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், என்ன விலை என்பதை சட்டப்படியே தனியார் கொள்முதல் நிறுவனங்கள் முடிவு செய்யும். விவசாயிகளிடம் அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து விளைப் பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டியதில்லை. அரிசி, பருப்பு எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளை போன்ற அத்தியாவசிய உணவு பொருட்களின் மீதான அரசின் விலைக் கண்காணிப்பு மற்றும் கட்டுபாடு நடைமுறையில் விலக்கப்பட்டு, தனியார் நிறுவனங்கள் எந்த அளவிலும் பதுக்கி  விலையேற்றி மக்களை கொள்ளையடிக்க வழி செய்யும். அரசு கொள்முதல்  நிறுத்தப்படுவதால் ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதும் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்படும்.

படிக்க :
♦ தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !
♦ மாமேதை லெனின் : அறிவாளிகளின் அந்தரங்கம் || லெனின் – தலைவர்! தோழர்! மனிதர்!

இந்தியாவின் விவசாயம், உணவு உற்பத்தி, விநியோகம் என அனைத்திலும் அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்களாகிய கார்கில், மாண்சான்டோ, வால்மார்ட், பெப்சி, அய்டிசி மற்றும் இந்திய கார்ப்பரேட்களான ரிலையன்ஸ், நெஸ்லே, பார்லி போன்றவற்றின் ஏகபோக ஆதிக்கத்தின் கீழ் கொண்டு போகும் நோக்கத்தில் இச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மொத்தத்தில் விவசாயிகளை அவர்களின் நிலங்களோடு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமையாக்கும் அக்கிரமமானச் சட்டங்கள் இவை.

விற்பனை சந்தையில் கூட்டு பேர வலிமையற்ற சிறு, குறு, நடுத்தர விவசாயிகள், பகாசூர நிறுவனங்களுடன் விலை பேரம் பேசச் சொல்லும் மாபெரும் உரிமைகளை வழங்குவதாக இச்சட்டங்களை போற்றுகிறார்கள் சங்கிகள். தமிழகத்தின் கடைக்கோடி விவசாயியும் காஸ்மீரம் வரை சென்று தான் விளைவித்த பொருட்களை விற்கும் அளப்பெறும் வாய்ப்பினை ‘ஒரே தேசம், ஒரே சந்தை’ என்பதன் மூலம் பெற முடியும் என்கிறார்கள்.

ஆனால் பாஜ.க அரசுக்கு எதிராக பஞ்சாப், அரியானா விவசாயிகள்  வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள். இந்தியாவெங்கும் விவசாயிகள் போராட்டம் பரவுகிறது. மக்களின் எதிர்ப்பை கண்டு அஞ்சி பாஜகவின் கூட்டணி கட்சியான அகாலிதளத்தின் சார்பாக மத்திய அமைச்சரைவையில் பதவி வகித்த கவுர் பாதல், இந்த சட்டங்களை கண்டித்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜகவின் அடிமை அதிமுக கட்சியினரோ சட்டங்களை ஆதரித்து வெற்றி பெற செய்ததோடு, அவை விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என கதைவிடுகின்றனர். விவசாயத் துறையில், உணவு பாதுகாப்பில் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதற்கு அப்பட்டமாக சேவகமும் செய்கின்றனர்.

மின்சார சட்டத் திருத்தத்தின் மூலமாக மின்சாரத்தை முழுமையான விற்பனைப் பொருளாக மாற்றி விவசாயத்திற்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட போகின்றது. தொழிலாளர் உரிமைகளை பறிக்கின்ற சட்டங்கள் அடுத்து நிறைவேற்றப்பட உள்ளன. சுற்றுச்சூழல் சட்டங்கள் திருத்தப்படுகின்றன. தனித்தனி சட்டங்களை எதிர்ப்பதை தாண்டி இவற்றின் மூலமான தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகளுக்கு எதிராகவும், நாட்டை மறுகாலனியாக்கும் காட் ஒப்பந்தம், பன்னாட்டு விவசாய ஒப்பந்தங்கள், உலக வர்த்தக கழகம் ஆகியவற்றில் இருந்து இந்தியா வெளியேறவும் போராட வேண்டியுள்ளது. கார்ப்பரேட் சுரண்டலுக்கான நடவடிக்கைகளை மூர்க்கமாக செயல்படுத்தும் காவி பாசிச ஆட்சி அதிகாரத்தை வீழ்த்த வேண்டும். உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது என்பார்கள்; ஏழை குடியானவனின் வயிற்றில் அடிக்க சட்டங்கள் போடுகிறார்கள். இனியும் அனுமதிக்கக் கூடாது.

விவசாயிகளுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் எதிரான இந்த சட்டங்களை எதிர்த்து விவசாய சங்கங்கள் வருகிற செப்.25 அன்று நாடு தழுவிய பந்த் நடத்த அனைவருக்கும் அறைகூவல் விடுத்துள்ளது. தமிழகத்திலும் பல்வேறு கட்சிகள் பந்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. மக்கள் அதிகாரம் இதனை ஆதரிப்பதுடன், செப்டம்பர் 25 அன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்பது என முடிவு செய்துள்ளது. இச்சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும் வகையில் போராட்டங்கள் நடைபெற, விவசாயிகளும், தமிழக மக்களும் செப்.25 வெள்ளிக்கிழமை அன்று பெருமளவில் வீதிக்கு வந்து போராடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுடன்,
வழக்கறிஞர்.சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு-புதுவை

கருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு ? | வா. ரங்கநாதன்

பெரியார் சாதித் தீண்டாமைக்கு எதிராக தொடர்ந்து போராடினார். கோவில்கள் இருக்கும் தெருவுக்குள் கூட பார்ப்பனரல்லாதவர்கள் போக அனுமதி இல்லாத சூழலில் அனைத்து சாதியினரும் கருவறை வரை செல்ல உரிமை உண்டு எனப் போராடியவர் பெரியார்.

பெரியாரின் 70 ஆண்டுகால சமூக சீர்திருத்தப் பணியின் பலன் தான் இன்று தமிழகம் வட இந்தியா அளவிற்கு மதவெறியிலும், சாதிய ஒடுக்குமுறையிலும் இழிநிலையை அடையவில்லை. பெரியாரின் தொடர்ச்சியாக அண்ணா, கலைஞர் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் சட்டரீதியாக தீண்டாமையின் பல்வேறு வடிவங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

படிக்க:
♦ நீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் !
♦ இந்தியா – பாகிஸ்தான் : தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை !

ஆனால் அப்படி இயற்றப்பட்ட சட்டங்களையும், நடைமுறையில் செயல்படுத்த விடாமல் தடுக்கும் பணியை பார்ப்பனியம் இன்றுவரை செய்து வருகிறது. அப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றுதான். பார்ப்பனர் அல்லாதவர்கள் கோவில் கருவறைக்குள் சென்றால் தீட்டுபட்டுவிடும் என அர்ச்சகர் பணியை பிற சாதியினருக்குக் கொடுக்க மறுக்கப்படுவது. பல ஆண்டுகளாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் போராடி வருகின்ற்னர். ஆனாலும் இன்று வரை அவர்களுக்கு எந்தப் பணி நியமனமும் செய்யப்படவில்லை.

பெரியாரின் பாரம்பரியத்தில் வந்ததாக சொல்லிக் கொள்ளும் அதிமுக அரசு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமையைப் பெற்றுத்தருமா ? வினவுகிறார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா. ரங்கநாதன். அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் சார்பாக, பின்வரும் கோரிக்கைகளை இந்தக் காணொலியில் முன்வைக்கிறார்.

  • பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அதிமுக அரசு அகற்றுமா?
  • கருவறை தீண்டாமை ஒழிக்கப்படுமா?
  • தமிழகத்தில் பெரிய கோவில்களில் இடஒதுக்கீடு அடிப்படையில் எங்களுக்கு பணிநியமனம் வழங்கு!
  • தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் கோவில்களில் சைவ, வைணவ பயிற்சி நிலையங்களை உடனே திற !

காணொளியை பாருங்கள் ! பகிருங்கள் !!

ஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகாவுக்கு உட்பட்ட பாகலூருக்கு அருகிலுள்ளது பெளத்தூர் கிராமம். அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1500 மாணவர்களுக்கு மேல் படிக்க வேண்டிய பள்ளியில் தற்போது சுமார் 700-க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர்.

இதற்குக் காரணம், இந்தப் பள்ளியை முறையாக பராமரிக்கப்படாததால் பாழடைந்த கட்டிடம் போல் காட்சி அளிக்கிறது. மேலும் இங்கு புதர்கள் மண்டி கிடக்கின்றன. சுற்றுச்சுவர் மிகவும் உயரம் குறைவாக இருப்பதால் மாணவர்கள் சுவர் ஏறி குதித்துச் செல்கின்றனர். கழிப்பறை வசதிகள் மிக மோசமான நிலையில் உள்ளது. இதனை கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் பாகலூர் சர்க்கிளில் நடைபெற்றது.

17.9.2020 மாலை 4 மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரத்தின் பாகலூர் பகுதி அமைப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். அந்த அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவரின் தந்தை திரு அரிஸ்பாபு என்பவர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தனது கண்டனங்களை பதிவு செய்தார். தோழர் சொன்னப்பா(IYF), திரு ராமசாமி (விவசாயிகள் சங்கம்), தோழர் ஜெயராம் (மக்கள் அதிகாரம்), தோழர் பரசுராமன் (புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி) ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக தோழர் ராமசாமி (மக்கள் அதிகாரம்) நன்றியுரையாற்றினார்.

தகவல் :
மக்கள் அதிகாரம், ஓசூர்

பெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் ! திருச்சி – மதுரையில் ஆர்ப்பாட்டம் !

0

திருச்சி :

“தந்தை பெரியார் அவர்களின் 142-வது பிறந்த நாளை பார்ப்பன இந்து மதவெறி பாசிச  எதிர்ப்பு நாளாக கடைபிடிப்போம்!

பன்முகத் தன்மையை அழித்து இந்தி-இந்து-இந்தியாவை உருவாக்கத் துடிக்கும் RSS பா.ஜ.க கும்பலை வேரறுப்போம்!

நீட், இந்தி-சமஸ்கிருத திணிப்பு, புதியக் கல்விக் கொள்கை, GST என மாநில உரிமைகளைப் பறிக்கும் மோடி, பாசிக கும்பலை வீழ்த்துவோம்!”

என்ற முழக்கத்தை முன் வைத்து மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக் தொழிலாளர் முன்னணி ஆகிய மூன்று புரட்சிகர அமைப்புகளும் ஒருங்கிணைந்து திருச்சியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெரியார் பிறந்தநாளான 17.09.2020 அன்று காலை 10 மணி அளவில் சோனா மீனா தியேட்டர் அருகே குடும்பங்களுடன் ஒன்று கூடி குழந்தைகளுக்கு பெரியார் அவர்களின் முகமூடி அணிவித்தும், பெரியவர்கள் அனைவரும் செஞ்சட்டைகள் அணிந்து அதில் பெரியார் கூறிய வாசகங்களை ஒட்டி தாரை தப்பட்டையுடன் விண்ணதிர முழக்கமிட்டவாறு 100-க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்று மத்திய பேருந்து நிலையத்திலுள்ள தந்தை பெரியார் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

படிக்க:
♦ பெரியார் 142 : நீட் – NEP-2020 மனுநீதி திட்டங்களை திரும்பப் பெறு ! நெல்லை மக்கள் அதிகாரம் !
♦ பெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா ? கருவறை தீண்டாமை ஒழியுமா ?

இந்நிகழ்ச்சிக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா தலைமை தாங்கினார். இதில் ம.க.இ.க கலைக்குழு, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள், மக்கள் அதிகாரம், திராவிடர் விடுதலைக் கழகம், ஜனநாயக சமூக நலக்கூட்டமைப்பு, மக்கள் உரிமை மீட்பு இயக்கம் ஆகிய அமைப்புகளின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அவற்றை சார்ந்த தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. சிலை முன்பாகவே அமர வைத்து அனைவருக்கும் மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது. இந்த மாட்டுக்கறியை வடநாட்டில் பொது வெளியில் சாப்பிட்டால் அவர்களது உயிர்கள் இந்து மத வெறியர்களால் பறிக்கப்படுகிறது. இங்கு நாம் பிரச்சனைகள் இல்லாமல் பொது வெளியில் சாப்பிடுகிறோம் என்றால் அதற்கு காரணம் தந்தை பெரியார்தான் என தோழர்.ஜீவா அறைகூவல் விடுத்து அனைவருக்கும் மாட்டுக்கறி பிரியாணியை வழங்கினார். ம.க.இ.க கலைக்குழு சார்பாக பெரியாரைப்பற்றி தோழர்.லதா பாடல்களை பாடினார்.

பிறகு கூட்டத்தை கலைக்க வந்த போலீசிடம் தோழர்கள் பெரியார் நமக்கு பெற்று தந்த உரிமைகளைப் பற்றி பேசினர். இன்று பிரதமர் மோடிக்கு பிறந்த நாளை விமர்சையாக பா.ஜ.கவினர் கொண்டாடும் போது மக்களுக்காக அரும்பாடுபட்ட தந்தை பெரியாருக்காக நாங்கள் ஏன் விமர்சையாக பிறந்த நாளை  கொண்டாடக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு முதல் நாள் இரவு சுவரொட்டி ஒட்டச் சென்ற சில தோழர்களிடம் தந்தை பெரியாரின் பிறந்த நாள் சுவரொட்டியை ஒட்ட விடாமல் காவல்துறையினர் மொத்தமாக பறிமுதல் செய்ததை கண்டித்து அத்தனை  சுவரொட்டியையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும், கடுமையாக நடந்து கொண்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டவாறு பெரியார் சிலை முன்பு தோழர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசு உயர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். காவல் நிலையம் வந்து புகார் கொடுக்கக் கோரியும், சுவரொட்டியை தந்து விடுவதாகவும் கூறியதை அடுத்து தர்ணா போராட்டத்தை முடித்துக் கொண்டு கோர்ட் அருகே உள்ள செசன்ஸ் போலீசுநிலையத்தில் புகார் மனு கொடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசு அதிகாரிகள் கூறியதை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பேரணியாக வந்தது, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தது, முழக்கங்கள் இட்டது, இனிப்புகள் வழங்கியது, பெரியாரைப்பற்றி பாடல்கள் பாடியது, மாட்டுக்கறி பிரியாணி வழங்கியது, ஊடகத்தினருக்கு பேட்டி கொடுத்தது, காவல்துறையினரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டது என தொடந்து நடந்த இந்நிகழ்வுகளில் தோழர்களின் போராட்டகுணத்தை கண்டு  அப்பகுதியில் மக்களிடம் உற்சாகத்தையும் பெரியார் சிலைக்கு மாலை போட வந்த அரசியல் கட்சியினரிடம் வியப்பையும் ஏற்படுத்தியது.

தகவல் : ம.க.இ.க., திருச்சி.

0 | 0 | 0

 மதுரை :

ந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாளை யொட்டி, மதுரை மாவட்ட மக்கள் கலை இலக்கியக் கழகம்,  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

“நீட் மற்றும் குலக் கல்வியை திணிக்கும் புதிய தேசிய கல்வி கொள்கை ஆகியவற்றை விரட்டியடிக்க கார்ப்பரேட் காவி பாசிசத்தை  வீழ்த்த பெரியார் பாதையில் அணிதிரள்வோம்” என்ற முழக்கத்தை முன்வைத்து மதுரை அவுட் போஸ்ட்டில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கம்  எழுப்பினர்.

இந்நிகழ்வில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் சினேகா, பெண்களின் தற்போதைய நிலைமையைப் பற்றியும் கல்வி கார்ப்பரேட்மயமாகுதல் மற்றும் காவி மயமாகுதல் பற்றியும் தற்போதைய பாசிச சூழல் குறித்தும் விளக்கி சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் திராவிடர் விடுதலைக் கழகம், திராவிடர் கழகம், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் உள்ளிட்ட முற்போக்கு இயக்கங்களும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சாதி ஆதிக்க காவி பாசிசத்தை முறியடிக்க சூளுரைத்தனர். இந்த நிகழ்வில் சிறுவர்கள், பெண்கள், மாணவர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

தகவல் : புமாஇமு, மதுரை

யு.பி.எஸ்.சி (UPSC) ஜிகாத்தா ? யு.பி.எஸ்.சி கரசேவையா ?

1

ண்மையில் யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சுதர்சன் டிவி நியூஸ் என்ற காவி ஆதரவு ஊடகத்தில் ‘பிந்தாஸ் போல்’ என்ற நிகழ்ச்சியில், ‘யு.பி.எஸ். சி ஜிகாத்’ என்ற சதித்திட்டத்தை வெளிக்கொண்டு வரப்போவதாக அறைகூவல் விடுக்கப்பட்டது.

ஆட்சிப் பணி அதிகாரத்தில் ஊடுருவும் பொருட்டு முஸ்லீம்கள் உருவாக்கி செயல்படுத்திக்கொண்டிருக்கும் சதித்திட்டமே ‘யு.பி.எஸ்.சி ஜிகாத்’ என நிறுவுவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். ஏற்கனவே மிக மோசமான முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரத்துக்கு இழிபுகழ் பெற்றது சுதர்சன் டிவி நியூஸ்.  ஆட்சி அதிகாரத்தில் உள்ள எஜமானர்களின் காலைப் பிடிப்பதில் யார் அதிக விசுவாசத்துடன் இருக்கிறார் என்ற போட்டியில் அர்னாப் கோஸ்வாமி, ரவிசங்கர் கோஷ்டிக்கு போட்டியாக, சுதர்சன் டிவியின் சுரேஷ் சவான்கே இறங்கியிருக்கிறார். அதன் விளைவாக உருவானதே யு.பி.எஸ்.சி ஜிகாத்.

சுதர்சன் டிவியின் விஷம பிரச்சாரத்தில் முஸ்லீம் போட்டியாளர்களின் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளதாக கூறப்பட்டு, பொய்யான தரவுகள் பகிரப்பட்டன. 2009-ம் ஆண்டு ஷா ஃபைசல் என்ற காஷ்மீரி இளைஞர் ஆட்சிப் பணி தேர்வில் வெற்றி பெற்றதிலிருந்து, அதிலிருந்து உந்துதல் பெற்ற முஸ்லீம் இளைஞர்கள் பலர் ஆட்சிப் பணி தேர்வில் அடுத்தடுத்த ஆண்டுகளில் பங்கேற்கத் தொடங்கினார். ஒவ்வொரு ஆண்டும் 30 முதல் 35 வரையான எண்ணிக்கையில் ஆட்சிப்பணி தேர்வில் முஸ்லீம்கள் தேர்வு பெற்றனர்.

படிக்க:
♦ நீதித்துறையை விமர்சிக்க அனைத்து குடிமக்களுக்கும் உரிமை உண்டு !
♦ இந்தியா – பாகிஸ்தான் : தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை !

மக்கள் தொகையில் 30 விழுக்காடு உள்ள முஸ்லீம்கள் ஆட்சிப் பணி அதிகாரிகளாக வெறும் 3 விழுக்காட்டினர் மட்டுமே பணிபுரியும் சூழலில், மிகப் பெரும் சதித்திட்டத்தை கண்டுபிடித்ததாக சுதர்சன் டிவி, இந்த உண்மையான புள்ளி விவரங்களை மறைத்து விஷமப் பிரச்சாரத்தை நான்கு பகுதிகள் வரை ஒளிபரப்பியது. ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் முஸ்லீம் யு.பி.எஸ்.பி ஜிகாதிகளை உருவாக்குவதாக, சுதர்சன் டிவி கூவியது. உண்மையில் 2019-ஆம் ஆண்டு ஆட்சிப் பணிக்கு ஜாமியாவில் பயிற்சி பெற்றவர்களில் 16 பேர் முஸ்லீம்கள், 14 பேர் இந்துக்கள். எனவே, இந்த நிகழ்ச்சியின் நோக்கம் முற்றும் முழுதாக முஸ்லீம்களுக்கு எதிரானதாக இருந்த காரணத்தால் இந்த அவதூறு நிகழ்ச்சியை தடை செய்யக் கோரி வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு  எதிரான மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா மற்றும் கே.எம். ஜோசப் நிகழ்ச்சியின் தொனி மற்றும் நோக்கம் குறித்து  கடும் கருத்துக்களை வெளியிட்டனர்.  நிகழ்ச்சியின் டீஸர் ஆகஸ்ட் 27 அன்று வெளியாகி சமூக ஊடகங்களில் சீற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நீதிமன்றம் சென்ற விஷம பிரச்சாரம், வழக்கறிஞர்கள், அமர்வு மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோருக்கு இடையில் முன்னும் பின்னுமாக ஊடகங்கள் குறித்த அடிப்படையான கேள்விகள், பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஊடக நடத்தைகளை கட்டுப்படுத்தும் காரணிகள் ஆகியவற்றைத் தொட்டது.

“ஒரு சமூகத்தை இழிவுபடுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் அரசியலமைப்பு உரிமைகளின் பாதுகாவலரான இந்த நீதிமன்றத்தால் மிகுந்த வெறுப்புடன் பார்க்கப் பட வேண்டும்” என அமர்வு கூறியுள்ளது.

சுரேஷ் சவாங்கே

இந்த நிகழ்ச்சியின் டீசரில், ‘அரசு சேவையில் முஸ்லீம்கள் ஊடுருவுவதற்கான சதித்திட்டத்தை’ இந்த நிகழ்ச்சி வெளியிடும் என சேனலின் தலைவர் சுரேஷ் சாவன்கே தெரிவித்திருந்தார். செப்டம்பர் 11 அன்று, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நிகழ்ச்சியை ஒளிபரப்ப அனுமதித்தது. அதே நாளில், , ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பவிடாமல் நிறுத்திய நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் ஒளிபரப்பை நிறுத்த மறுத்துவிட்டது.

உச்சநீதிமன்றம் இந்த நிகழ்ச்சியை “வெறித்தனமானது” எனக் கூறியதுடன், ஊடகங்களில் சுய கட்டுப்பாட்டுக்கு சில வழிமுறைகள் இருக்க வேண்டும் என்றது.

“முஸ்லீம்கள் ஆட்சிப் பணியில் ஊடுருவியுள்ளதாகக் கூறும் இந்த நிகழ்ச்சியின் பொருள் எவ்வளவு தெளிவற்றதாக உள்ளது என்பதைப் பாருங்கள், இது யுபிஎஸ்சியின் தேர்வுகளை எந்தவொரு உண்மை அடிப்படையுமின்றி முன் வைக்கிறது?” என அமர்வு கூறியது.

“இத்தகைய நயவஞ்சக குற்றச்சாட்டுகள் யுபிஎஸ்சி தேர்வுகளை கேள்விக்குறிக்கு உள்ளாக்கி உள்ளன. யுபிஎஸ்சி மீது அவமதிப்பு உண்டாக்கப்பட்டுள்ளது. எந்தவொரு உண்மை அடிப்படையுமின்றி இத்தகைய குற்றச்சாட்டுகள், இதை எவ்வாறு அனுமதிக்க முடியும்? சுதந்திர சமூகத்தில் இத்தகைய நிகழ்ச்சிகளை அனுமதிக்க முடியுமா? ” என அமர்வு கேட்டது.

படிக்க :
♦ எல்கார் பரிஷத் வழக்கு : மாவோயிஸ்ட் பட்டம் கட்டி செயல்பாட்டாளர்களை முடக்கும் பா.ஜ.க!
♦ தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !

பாஜக அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா மேல் நீதிமன்றத்தில் பத்திரிகையாளரின் சுதந்திரம் மிக உயர்ந்தது என்றும் எந்தவொரு ஜனநாயகத்திற்கும் “பத்திரிகைகளை கட்டுப்படுத்துவது” பேரழிவு தரும் என்றும் விசம பிரச்சாரத்தை ‘பத்திரிகை சுதந்திரமாக’ நிறுவப் பார்த்தார்.

இதற்கு, நீதிபதி ஜோசப் எந்த சுதந்திரமும் முழுமையானது அல்ல என்று குறிப்பிட்டார்.

சுதர்சன் டிவியில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான்,  இந்த நிகழ்ச்சி ‘தேசிய பாதுகாப்பு குறித்த ஒரு புலன் விசாரணை’ என அமர்வு முன் முழு பொய்யை அவிழ்த்து விட்டார்.

“உங்கள் கட்சிக்காரர் தேசத்திற்கு ஒரு அவதூறு செய்கிறார். மேலும் இந்தியாவை மாறுபட்ட கலாச்சாரத்தின் உருகும் புள்ளியாக அவர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். உங்கள் கட்சிக்காரர் தனது சுதந்திரத்தை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்” என அமர்வு திவானிடம் கூறியது.

வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, அமர்வு “நாங்கள் ஊடகங்களில் ஒருவித தணிக்கை செய்ய பரிந்துரைக்கவில்லை, ஆனால் ஊடகங்களில் ஒருவித சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும்” என கூறியது.

“பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் 19-வது பிரிவுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அரசுகள் அத்தகைய வழிகாட்டுதல்களை விதிக்கும் என்று நாங்கள் கூறவில்லை” எனக் கூறிய அமர்வு, டிவி சேனல்களின் வருவாய் மாதிரியும் அவற்றின் உரிமையாளர் முறைகளும் இணையதளத்தில் பொது களத்தில் வைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அவதானித்தது.

“ஊடகத்தின் உரிமை குடிமக்கள் சார்பாக மட்டுமே உள்ளது, இது ஊடகங்களின் பிரத்யேக உரிமை அல்ல” எனக் கூறி. “அச்சு ஊடகங்களைவிட மின்னணு ஊடகங்கள் மிகவும் சக்திவாய்ந்ததாகிவிட்டன, மேலும் ஒளிபரப்புக்கு முந்தைய தடைக்கு நாங்கள் ஆதரவளிக்கவில்லை.” என்றது அமர்வு.

விசாரணையின் போது, சில ஊடக நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் குற்றவியல் விசாரணையை அமர்வு குறிப்பிட்டது. “ஊடகவியலாளர்கள் செயல்படும்போது, அவர்கள் நியாயமான கருத்துக்கு உரிமை உண்டு. குற்றவியல் விசாரணையைப் பாருங்கள், ஊடகங்கள் பெரும்பாலும் விசாரணையின் ஒரு பகுதியை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளன” என அது கூறியது.

சங்கல்ப் – காவி யூ.பி.எஸ்.சி. பயிற்சி மையம்

அமர்வு சுதர்சன் டிவி வழக்கறிஞர் திவானிடம், “உங்கள் கட்சிக்காரரிடமிருந்து ஒருவித கட்டுப்பாட்டை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” எனக் கூறியது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அனூப் ஜி. சவுத்ரி, தில்லி உயர் நீதிமன்றம் இந்த விஷயத்தை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் குறிப்பிட்டுள்ளதாகவும், ஆனால் அமைச்சகம் நியாயமான உத்தரவை பிறப்பிக்கவில்லை என்றும் கூறினார்.

அமைச்சகம் ஒளிபரப்பை அனுமதித்தது, மறுபக்கத்தை அது கேட்கவில்லை என்றும், ஒளிபரப்பு விதிகளை பின்பற்றுகிறோம் என்று சேனலின் அறிக்கையை எடுத்துக் கொண்டதாகவும் அவர் கூறினார். ஆகஸ்ட் 28-ம் தேதி, சுதர்சன் டிவியில் ஒளிபரப்பப்படுவதற்கு முன் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த நிகழ்ச்சி தொடர்பான குறைகளை எழுப்பிய வழக்கறிஞர் ஃபைரோஸ் இக்பால் கான் தாக்கல் செய்த மனு மீது அரசு, இந்திய பத்திரிகை கவுன்சில், செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் மற்றும் சுதர்சன் செய்திகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க பிரச்சினைகளை இந்த மனு எழுப்பியுள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்த நிகழ்ச்சியின் நான்கு பகுதிகள் ஒளிபரப்பப்பட்ட பின்னர், விழித்துக்கொண்ட நீதிமன்றம் நிகழ்ச்சியின் நோக்கம் “முஸ்லிம்களை இழிவுபடுத்துவதாகும்” என்று முதன்மைக் கருத்தை அவதானித்த பின்னர்,  “யுபிஎஸ்சி ஜிகாத்” சதித்திட்டத்தை வெளியிடுவதாக உறுதியளித்த  “பிந்தாஸ் போல்” நிகழ்ச்சியின் மீதமுள்ள பகுதிகளை ஒளிபரப்புவதை உச்ச நீதிமன்றம் தடுத்துள்ளது.

சிறுபான்மையினர் தங்களுடைய குறைந்தபட்ச உரிமைகளை பெறுவதற்காக கல்விக்கூடங்களையோ, பயிற்சிக்கூடங்களையோ நடத்துவது ‘ஜிகாதி’யாக காவி ஊடகங்கள் விசம பிரச்சாரம் செய்கின்றன. உண்மையில், ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் தங்களுடைய சித்தாந்தவாதிகளை திணிக்கு பணியை திட்டமிட்டே செய்துவருவது இந்துத்துவ காவிகள் என்பது ஆதாரத்துடன் பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

த பிரிண்ட் தளத்தில் வெளியான கட்டுரை, 1968 முதல் வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய சங்கல்ப் அகாடமியில் இந்த ஆண்டு மட்டும் 759 ஆட்சிப் பணி தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  இந்த பயிற்சி மையத்தின் ஒவ்வொரு ஆண்டு விழாவின்போதும் உள்துறை அமைச்சர் அமித் ஷா முதல் ஆர்.எஸ்.எஸ். முக்கிய பிரமுகர்கள் வரை பங்கேற்று பேசுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ் உடனான இணக்கத்தை தன்னுடைய இணைய பக்கத்திலும் காட்டுகிறது இந்த அகாடமி.

உண்மையில், பாசிசத்தை நடைமுறைப்படுத்தும் பணியை ஏற்பதற்காக பயிற்சி அளிக்கப்படும் இந்த யு.பி.எஸ்.சி காவிகள் குறித்து எந்த வெகுஜென ஊடகமும் கேள்வி எழுப்ப முன்வராது. அப்படி வந்தாலும் ஊடக சுதந்திரம் குறித்து மிக விரிவாக பேசிய உச்சநீதிமன்றம் டீசரைக்கூட வெளியிட விட்டிருக்காது.


கலைமதி

நன்றி:
த வயர், த பிரிண்ட்

 

பெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா ? கருவறை தீண்டாமை ஒழியுமா ?

பத்திரிகை செய்தி

நாள்:17.09.2020

ந்தை பெரியார் இந்தியாவில் சாதிய ஏற்றத் தாழ்வுகள் சட்டப் பாதுகாப்புடனும், சாத்திரப் பாதுகாப்புடனும் நிலைநிறுத்தப்படுகிறது என்று திண்ணமாக எண்ணியதன் விளைவாகவே, சாதியொழிப்பிற்குச் சட்ட மாற்றங்களும், சாத்திர நம்பிக்கை உடைப்பும் தேவை என்று தீவிரக் களப்பணியாற்றினார். அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு என்று கூறப்பட்டிருக்கிறதே தவிர, சாதி ஒழிப்பு, சாதிப் படிநிலைகள் ஒழிப்பு கூறப்படவில்லை என்றும், சமூகமாற்றம், சமதர்மம் என்பது சாதிகளை ஒழித்தால் தான் நிகழும் என்றும் கருதிய பெரியார், அரசியல் அமைப்பின் 25 மற்றும் 26 ஆவது மதப்பாதுகாப்புப் பிரிவுகளைக் கடுமையாக எதிர்த்தார்.

அந்தச் சட்டப் பிரிவுகளுக்காக இந்திய அரசியல் சட்டத்தினை எரிக்கவும் செய்தார். தந்தை பெரியார் அவர்கள் 1957-ல் சட்ட எரிப்புப் போராட்டம் அறிவிக்கும்வரை , இந்தியாவில் சட்டத்தினைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்பது குறித்துச் சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

படிக்க :
♦ நீதித்துறையை விமர்சிக்க அனைத்து குடிமக்களுக்கும் உரிமை உண்டு !
♦ சென்னை டாஸ்மாக் திறப்பு : மக்கள் பணத்தை கல்லா கட்டும் எடப்பாடி அரசு !

கடவுள் இல்லை என்று தன் வாழ்நாள் முழுவதும் பரப்புரை செய்த பெரியார் நடத்திய கோவில் நுழைவுப் போராட்டங்களும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று நடத்திய போராட்டங்களும் சாதியொழிப்புத் தளத்திலிருந்து நடத்தப்பட்டவை. சாதியப் படிநிலைகள் காக்கப்படும் கருவறைகளில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று ஒலித்தது பெரியாரின் குரல்.

இறைவன் முன்னால் அனைவரும் சமம் என அனைத்து சமயங்களும் போதித்தாலும் குறிப்பிட்ட சமூகத்தவர்கள் மட்டுமே கருவறையில் நுழைந்து பூஜை செய்ய முடியும் என்ற நிலை காலங்காலமாக இருந்து வருகிறது.

கடந்த 28-2-2007 அன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் பயிற்சிக்கான சேர்க்கை விண்ணப்பப் படிவும் வெளியானதும் திருவண்ணாமலை கோயிலில் 600 பேர் விண்ணப்பித்தனர். மூன்று நாட்கள் நேர்காணல் நடைபெற்றது. 40 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டனர். அதுபோல் மதுரை திருச்செந்தூர், பழனி ஆகிய கோயில்களில் 1000-க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு 120 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள்.

திருவரங்கம், சென்னை பார்த்தசாரதி கோயில்களில் 500-க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு 80 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். இறுதியில் 206 பேர் மட்டும் ஒன்றரை ஆண்டு காலம் அர்ச்சகர் பயிற்சியை நிறைவு செய்தனர்.ஆனால்
கடவுளைத் தொட்டு வழிபாடு செய்யவேண்டும் என்ற மாணவர்களின் எண்ணம் இன்னும் நிறைவேறவில்லை.

இத்தகைய திறன் படைத்த மாணவர்களுக்கு இன்றுவரை ஆகமக் கோவில்களில் பணிநியமனம் வழங்கப்படவில்லை. குறிப்பாக மதுரை மீனாட்சியம்மன், பழனி, திருச்செந்தூர் முருகன், சிறீரங்கம் ரெங்கநாதன், மயிலை கபாலீசுவரர் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் பணிநியமனம் எப்படி செய்யப்படுகிறது? என்பது மிகவும் இரகசியமாகவே உள்ளது. பரம்பரை வழி அர்ச்சகர் உரிமை சட்டப்படி ஒழிக்கப்பட்டு, அதனைப் பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் உறுதி செய்தபின்பும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 100% தமிழகத்தின் பெரிய கோவில்களில் அர்ச்சகர்களாக உள்ளனர்.

இவர்கள் நியமனம், வெளிப்படையான அறிவிப்பு, முறையான தேர்வு இன்றி நடைபெற்று வருகிறது. அர்ச்சகர் என்பது அரசுப் பணி. அனைத்து அரசுப் பணிகளும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே நியமிக்கப்பட வேண்டும்.ஆனால், சட்டம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் செல்லாத இடமாக ஆகமக் கோயில்கள் உள்ளன.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என தமிழக அரசு 2006 –ல் கொண்டு வந்த அரசாணைக்கு எதிரான வழக்கு 2015-ஆம் ஆண்டு தமிழக அரசின் அரசாணை செல்லும், குறிப்பிட்டு கோயில்கள் பணி நியமனம் குறித்து முடிவு செய்யலாம், ஆனால் பிறப்பின் அடிப்படையில் பணிநியமனம் கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு வந்தது. ஆனால் ஆகமப்படி அர்ச்சகர் நியமனமா? அரசியல் சட்டப்படி அர்ச்சகர் நியமனமா? என்பதில் தெளிவு இல்லை. திராவிட இயக்கத்தின் வழிவந்ததாய் சொல்லும் தமிழக அரசு 2015 உச்சநீதிமன்ற தீர்ப்பின் சட்டத்தன்மை குறித்து இன்றுவரை கருத்துச் சொல்லவில்லை.

அதனால் பயிற்சி முடித்த அர்ச்சக மாணவர்களுக்கு இன்றுவரை பணி நியமனம் வழங்கப்படாமல் உள்ளது.தமிழகம் முழுவதும் சைவத்திலும், வைணவத்திலும் பாடல் பெற்ற பிரபலமான பல நூறு பொதுக் கோவில்கள் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.அர்ச்சகர் பணி காலியிடங்களும் அதிகம் உள்ளது. இந்துமதத்தில் அனைவரும் சமம், பிறப்பால் உயர்வு – தாழ்வு இல்லை. கருவறையில் உள்ள சாதி – தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்து சாதி அர்ச்சகர் பணி என்று தந்தை பெரியார் சொன்னார்.தந்தை பெரியார் வழிவந்த திராவிட இயக்கமாய் தன்னை சொல்லிக் கொள்ளும் எடப்பாடி அரசு தீர்ப்பு வந்தும் நான்கு ஆண்டுகளாய் மவுனம் காக்கிறது.

சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றம் “தீட்டு என்ற அடிப்படையில் பெண்களை ஒதுக்குவதும் தீண்டாமைதான் – எனவே அது குற்றம்” என்றது. ஆனால் தமிழகத்தில் கடந்த பல நூற்றாண்டுகளாகத் தொடரும் கருவறை தீண்டாமை அரசியல் சட்ட ஆட்சி வந்தபின்பும் நீடிக்கிறது. தந்தை பெரியார் பிறந்த நாளிலாவது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், தமிழக முதல்வர் ஆகியோர் தங்கள் நிலைப்பாடுகளை தெரிவிக்க வேண்டும்.உடனே,இந்து அறநிலையத் துறையின் கீழான முக்கிய கோவில்களில் உள்ள காலியிடங்களில் அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி முடித்த 203 மாணவர்களுக்கு, இந்துசமய அறநிலையத்துறை பணிநியமனம் வழங்க வேண்டும்.

எந்தக் காரணமும் இன்றி மூடப்பட்ட அனைத்து சாதி மாணவர்களுக்கான சைவ – வைணவ அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் திறந்து அர்ச்சகர் பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து சாதி அர்ச்சகர் பணி என்பது வெறும் வேலைவாய்ப்பு தொடர்பானது மட்டுமல்ல! இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள உயர்ந்த கருத்தாக்கங்களான குடிமக்கள் அனைவருக்கும் சமத்துவம், சமவாய்ப்பு, சமூக நீதி,தனி மனித மாண்பு காத்தல் போன்ற அடிப்படை உரிமைகள் தொடர்பானது; கருவறைத் தீண்டாமையை ஒழிப்பது.

எனவே தந்தை பெரியாரின் 142-வது பிறந்த நாளில் கருவறை தீண்டாமையை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அர்ச்சகர் பள்ளியில் ஆகமம் கற்று, தீட்சை பெற்ற 203 மாணவர்களுக்கும் ஆகமக் கோயில்களில் பணி நியமனம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் வரலாறு உங்களை மன்னிக்காது..

இவண்

வழக்கறிஞர் வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
(PEOPLE’S RIGHT PROTECTION CENTRE – TAMILNADU)

வா.ரங்கநாதன்,
தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு
(TAMILNADU ASSOCIATION FOR TRAINED ARCHAKAS)

#கருவறையில்_தீண்டாமை #SaveTemplesFromBrahmanism #HBDPeriyar #பெரியார்

பெரியார் 142 : நீட் – NEP-2020 மனுநீதி திட்டங்களை திரும்பப் பெறு ! நெல்லை மக்கள் அதிகாரம் !

ந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாளை ஒட்டி, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக நெல்லை மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் கிராமத்தில் பகுதி இளைஞர்கள் ஒன்று திரண்டு பெரியாரின் நினைவேந்தினர்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவைப் பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், குலக் கல்வி முறை உள்ளிட்ட மனுதர்ம ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கான அம்சங்களைக் கொண்ட தேசிய கல்விக் கொள்கையை தடை செய்யக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
நெல்லை

தன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்

0

லகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மக்கள் எழுச்சிகள் நட்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் சில எழுச்சிகள் ஏகாதிபத்தியங்களால் தீனி போட்டு வளர்க்கப்படும் என்.ஜி.ஓ-க்களால் நடத்தப்பட்டாலும், பல இடங்களில் அரசின் ஒடுக்குமுறைக்கும், சுரண்டலுக்கு எதிரான மக்கள் எழுச்சிகளாகவே தன்னியல்பாக நடக்கின்றன. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் துவங்கி உலகம் முழுவதும் பற்றியெறிந்த போராட்டங்கள் தான்.

ஆளும் வர்க்கத்தின் சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தன்னியல்பாக எழுச்சி கொள்ளும் மக்களை தற்கால அரசியல், சமூக அமைப்புமுறை முழுவதற்கும் தமது நலன்களுக்கும் இடையே சமரசப்படுத்த முடியாத பகைமை இருப்பதை உணரச் செய்வது என்பது ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே உணர்வுப் பூர்வமாக செய்ய முடியும். இந்த சமூக அமைப்புமுறை குறித்த சமூக விஞ்ஞானப் பார்வையையும் உணர்வையும் பெருந்திரளான மக்களிடம் ஏற்படுத்தும் போது மட்டுமே, இந்த எழுச்சிகள் ஒரு முழுமையான விஞ்ஞானப் பூர்வமான சமூக மாற்றத்தை நோக்கிச் செல்லும்.

ரசியாவில் தன்னியல்பான எழுச்சிகளின் பின்னால் வால்பிடித்துச் சென்ற பொருளாதாரவாதிகளுக்கு தோழர் லெனின் தனது “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலில் பதிலளித்துள்ளார். அன்றைய சமூக ஜனநாயகவாதிகளிடம் இருந்த, “தன்னியல்பான எழுச்சிகளை வழிபடும் போக்கை” கண்டித்து அவர் எழுதியுள்ள பகுதியை இங்கே தருகிறோம் !

– வினவு

மக்களின் தன்னியல்பும் – சமூக-ஜனநாயகவாதிகளின் உணர்வும்

 அ. தன்னியல்பான எழுச்சியின் தொடக்கம் 

 1890-களின் மத்தியிலே மார்க்ஸியத்தின் தத்துவங்களில் எவ்வளவு முழுமையாக ருஷ்யாவின் படித்த இளைஞர்கள் சிந்தனையைப் புதைத்திருந்தார்கள் என்று முந்தைய அத்தியாயத்தில் சுட்டிக்காட்டினோம். அதே காலத்தில் 1896-ல் நடந்த புகழ்பெற்ற செயின்ட் பீட்டர்ஸ்புர்க் தொழிற்போரைத் தொடர்ந்து வந்த வேலை நிறுத்தங்கள் அதேபோன்ற பொதுவான தன்மையைப் பெற்றன. அவை ருஷ்யா முழுவதிலும் பரவி, புதிதாக விழிப்புற்றுவரும் மக்கள் இயக்கத்தின் ஆழத்தைத் தெளிவாகக் காட்டின. ஆகவே, நாம் ”தன்னியல்பான அம்சத்தைப்” பற்றிப் பேசுவதானால் இந்த வேலை நிறுத்த இயக்கத்தைத்தான் தன்னியல்பானதாக முதலில் கருதவேண்டும். ஆனால் தன்னியல்பில் எத்தனையோ வகை உண்டு.

ருஷ்யாவில் 1870-களிலும் 1860-களிலும் (19-ம் நூற்றாண்டின் முற்பாதியிலுங்கூட) வேலை நிறுத்தங்கள் நடந்தன; அவற்றைத் தொடர்ந்து ”தன்னியல்பாக” இயந்திரங்களை உடைப்பது போன்றவையும் நடந்தன. இந்தக் “கலவரங்களோடு” ஒப்பிட்டால் 1890-களின் வேலை நிறுத்தங்களைக்கூட ”உணர்வுப் பூர்வமானவையாக” வர்ணிக்கக் கூடும், அந்த அளவுக்கு அவை அக்காலத்தில் பாட்டாளி வர்க்க இயக்கம் சாதித்த முன்னேற்றத்தைக் குறிக்கின்றன. ”தன்னியல்பான அம்சம்” என்பது கருவடிவத்திலே இருக்கும் உணர்வைக் காட்டுவது தவிர வேறில்லை என்று இது புலப்படுத்துகிறது.

படிக்க :
♦ பாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி ! – லெனின்
♦ கட்சியில் நிலவும் தேர்ச்சிநயமின்மையை சீர் செய்வது எப்படி ?

ஆதிநிலைக் கலவரங்களுங்கூட ஓரளவுக்கு உணர்வு விழிப்படைவதை வெளியிடுகிறது. தொழிலாளிகள் தம்மை ஒடுக்கிவருகிற அமைப்புமுறை நிலையானது என்கிற நீடூழிக்கால நம்பிக்கையை இழந்துவந்தார்கள், அதிகாரிகளுக்கு அடிமைபோல் பணிந்து போவதைத் திட்டவட்டமாகக் கைவிட்டுக் கூட்டான எதிர்ப்பின் அவசியத்தை – புரிந்து கொள்ளத் தொடங்கினார்கள் என்று சொல்ல மாட்டேன் – உணர்ந்துகொள்ளத் தொடங்கினார்கள். ஆனபோதிலும், இவை – போராட்டத்தின் இயல்பிலே இருந்ததைவிட நிராசையையும் வஞ்சம் தீர்க்கும் உணர்ச்சியையும் வெளியிடும் வெடிப்புகளின் இயல்பிலே இருந்தன.

1890-களின் வேலை நிறுத்தங்கள் எவ்வளவோ பெரிதான உணர்வின் மின்வெட்டுகளை வெளிப்படுத்தின. திட்டவட்டமான கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன, சரியான நேரம் பார்த்து வேலை நிறுத்தம் துவங்கப்பட்டது, வேறு இடங்களிலிருந்து அறியப்பெற்ற வழக்குகளும் எடுத்துக்காட்டுகளும் விவாதிக்கப்பட்டன என்றவாறு. கலவரங்கள் வெறுமே ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்ப்பாக இருந்தன. ஆனால் முறைமையுள்ள வேலை நிறுத்தங்கள் கரு வடிவத்திலுள்ள, கரு வடிவத்தில் மட்டுமே உள்ள, வர்க்கப் போராட்டத்தைக் காட்டின. தம்மளவில் இவ்வேலை நிறுத்தங்கள் வெறுமே தொழிற்சங்கப் போராட்டங்களே, இன்னமும் சமூக-ஜனநாயகப் போராட்டங்களாக இல்லை. அவை தொழிலாளிகள் முதலாளிகளிடையே மூண்டு வரும் பகைமைகளைக் குறித்தன; ஆனால் தற்கால அரசியல், சமூக அமைப்புமுறை முழுவதற்கும் தமது நலன்களுக்கும் இடையேயுள்ள சமரசப்படுத்தமுடியாத பகைமை இருப்பதைத் தொழிலாளிகள் உணர்ந்திருக்கவில்லை, உணரமுடியவுமில்லை – அதாவது, அவர்களின் உணர்வு இன்னமும் சமூக ஜனநாயகவாத உணர்வாக இல்லை. இந்த அர்த்தத்திலே, 1890-களின் – வேலை நிறுத்தங்களை ”கலவரங்களோடு” ஒப்பிடும்போது மாபெரும் முன்னேற்றத்தைக் குறித்த போதிலும் வெறுமே ஒரு தன்னியல்பான இயக்கமாகவே இருந்துவிட்டன.

பீட்டர்ஸ்புர்க் ஆலைத் தொழிலாளர்கள் போராட்டம்

தொழிலாளிகளிடையே சமூக-ஜனநாயகவாத உணர்வு இருந்திருக்க முடியாது என்று சொன்னோம். அது வெளியிலிருந்துதான் அவர்களுக்குக் கொண்டுவரப்படவேண்டும். பாட்டாளி வர்க்கம் தனது சொந்த முயற்சிகள் மூலமாகத் தொழிற்சங்க உணர்வு மட்டுமே–அதாவது, தொழிற்சங்கங்களில் ஒன்றுபடுவது, முதலாளிகளை எதிர்த்துப் போராடுவது, அவசியமான தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்த முயல்வது, முதலியவற்றின் அவசியத்தைப் பற்றிய துணிபு மட்டுமே வளர்த்துக்கொள்ள முடிகிறது என்று எல்லா நாடுகளின் வரலாறும் புலப்படுத்துகிறது.1*

ஆனால் சோஷலிஸத்தின் தத்துவம் மெய்யறிவுவகைப்பட்ட, வரலாறுவழிப்பட்ட, பொருளாதார வகைப்பட்ட தத்துவங்களிலிருந்து வளர்ந்ததாகும்; சொத்துள்ள வர்க்கங்களின் பிரதிநிதிகள், அறிவுஜீவிகள், அவற்றை வகுத்து விளக்கினர். நவீன விஞ்ஞான சோஷலிஸத்தின் மூலவர்களான மார்க்ஸும் எங்கெல்ஸும் முதலாளி வர்க்கப் போக்கான படிப்பாளிப் பகுதியினரைச் சேர்ந்தவர்கள். அதேபோல், ருஷ்யாவில், பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தன்னியல்பான வளர்ச்சியோடன்றி முற்றிலும் சுதந்தரமாகவே சமூக-ஜனநாயகவாதத்தின் தத்துவார்த்த சித்தாந்தம் உதித்தது; புரட்சிகரமான சோஷலிஸ்டுப் படிப்பாளிப்பகுதியினரிடையே ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சியின் ஒரு இயல்பான, தவிர்க்க வியலாத விளைவாக அது உதித்தது. விவாதத்திலிருக்கும் காலப்பகுதியான 1890-களின் நடுவில் இந்தச் சித்தாந்தம் ”உழைப்பாளர் விடுதலைக்” குழுவின் முழுதும் வரையறுக்கப்பட்ட வேலைத்திட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியதோடல்லாமல் ருஷ்யாவில் பெரும்பான்மையான புரட்சிகரமான இளைஞர்களைத் தன் பக்கம் ஏற்கெனவே கவர்ந்திருந்தது.

எனவே, உழைக்கும் மக்களின் தன்னியல்பான விழிப்பும், அவர்கள் உணர்வுப்பூர்வமான வாழ்க்கைக்கும் உணர்வு பூர்வமான போராட்டத்துக்கும் விழித்தெழுதலும், சமூக-ஜனநாயகத் தத்துவத்தை ஆயுதமாகப்பூண்டு தொழிலாளர் பக்கம் வரத் துடிக்கும் புரட்சிகரமான ஓர் இளைஞர் கூட்டமும் ஒருங்கே இருந்தன. இது சம்பந்தமாக, அடிக்கடி மறக்கப்படுகிற (ஒப்பு நோக்கில் அரிதாக அறியப்பட்டுள்ள) ஒரு விஷயத்தைக் கூறுவது குறிப்பாக முக்கியமாகும் : அதாவது அக்காலப்பகுதியின்  முந்திய சமூக-ஜனநாயகவாதிகள் ஆர்வத்தோடு பொருளாதாரக் கிளர்ச்சி நடத்தி வந்தார்கள் என்றபோதிலும் (அன்று கையெழுத்துப்படியிலேயே இருந்து வந்த கிளர்ச்சி பற்றி எனும் சிறு நூலில் இருக்கும் உண்மையிலே பயனுள்ள குறிப்புகள் இந்த நடவடிக்கைக்கு வழிகாட்டி வந்தன) அது ஒன்றே தமது பணி என்று அவர்கள் கருத வில்லை.

படிக்க :
♦ தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !
♦ பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்த மார்க்சிய மூல நூல்கள் | அறிமுகம்

மாறாக, துவக்கத்திலிருந்தே பொதுவாக மிகவும் தொலைவீச்சுள்ள வரலாற்றுப் பணிகளையும், குறிப்பாக எதேச்சாதிகாரத்தை வீழ்த்தும் பணியையும் ருஷ்ய சமூக ஜனநாயகவாதத்துக்குக் கொடுத்திருந்தார்கள். இப்படித்தான், 1895 இறுதியில், செயின்ட் பீட்டர்ஸ்புர்க் சமூக-ஜனநாயகவாதிகளின் குழு (இது “பாட்டாளி வர்க்க விடுதலைக்கான போராட்டக் குழுவை”2* – நிறுவியது) ரபோச்சியே தேலோ என்கிற பெயர் கொண்ட பத்திரிகையின் முதல் இதழைத் தயாரித்தது. அவ்விதழ் அச்சேறத் தயாராயிருந்த சமயத்தில் 1895 டிசம்பர் 8-ம் நாள் இரவில் அக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான அனதோலி அலெக்ஸேயெவிச் வானேயிவ் 3* வீட்டை போலீஸார் சோதனையிட்டு அதைக் கைப்பற்றினர். எனவே ரபோச்சியே தேலோவின் முதல் இதழ் உலகத்தைத் தரிசிக்கும் பேறு பெற்றிருக்கவேயில்லை. இவ்விதழின் தலையங்கக் கட்டுரை (ஒரு வேளை முப்பதாண்டுகள் கழித்து யாராவது ஒரு ருஸ்காயா ஸ்டரினா4* இதை போலீஸ் பிரிவின் நூற்காப்பிடத்தில் தேடியெடுக்கலாம்)

ருஷ்யாவில் பாட்டாளிவர்க்கத்தின் வரலாற்றுப் பணிகளை உருவரை செய்து அரசியல் சுதந்தரம் சாதித்துக் கொள்வதைத் தலைமையில் வைத்தது. அவ்விதழில் ‘நமது அமைச்சர்கள் எதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்?” என்கிற தலைப்புள்ள கட்டுரையும் இருந்தது; அது துவக்க நிலைக் கல்விக் குழுக்களைப் போலீஸ் நசுக்குவதைப் பற்றியதாகும். மேலும், செயின்ட் பீட்டர்ஸ்புர்க்கிலிருந்தும் ருஷ்யாவின் வேறு சில பகுதிகளிலிருந்தும் வந்த கொஞ்சம் கடிதப் போக்குவரத்தும் (எடுத்துக்காட்டாக, யாரஸ்லாவல் மாநிலத்தில் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டது5* பற்றி ஒரு கடிதம்) இருந்தது. இதுவே 1890-களின் ருஷ்ய சமூக – ஜனநாயகவாதிகளின் ‘முதல் முயற்சி”.

என் நினைப்பு தவறில்லை என்றால் அது வெறுமே ஒரு உள்ளூர்ப் பத்திரிகையாகவோ, ”பொருளாதாரவாத’ பத்திரிகையாகவோ இருக்கவில்லை; எதேச்சாதிகாரத்தை எதிர்க்கும் புரட்சி இயக்கத்தோடு வேலை நிறுத்த இயக்கத்தை ஒன்று படுத்துவதையும் சீர்திருத்த எதிர்ப்புள்ள பிற்போக்கான கொள்கையால் ஒடுக்கப்படும் அனைவரையும் சமூக-ஜன நாயகவாதத்தின் பக்கம் கொண்டுவந்து விடுவதையும் குறிக்கோளாக வைத்திருந்தது. அக்காலத்திய இயக்கத்தின் நிலையைப்பற்றிக் கடுகளவேனும் அறிந்திருந்த யாரும் சந்தேகிக்க முடியாது.

லெனின்

தலைநகரின் தொழிலாளர்களும் புரட்சிகரமான படிப்பாளிப்பகுதியினரும் ஆர்வத்தோடு இப்பத்திரிகையை வரவேற்றிருப்பார்கள், விரிவான விற்பனை கிடைத்திருக்கும் என்று. அந்த முயற்சியின் தோல்வி வெறுமே காட்டியது இதுதான்: அக்காலத்திய சமூக-ஜனநாயகவாதிகளுக்குப் புரட்சிகரமான அனுபவமும் நடைமுறைப் பயிற்சியும் இல்லாத காரணத்தால் அவர்கள் அன்றைய உடனடித் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமற்போயினர். செயின்ட் பீட்டர்ஸ்புர்க் ரபோச்சி லிஸ்டோக்6* விஷயத்திலும், குறிப்பாக ரபோச்சயா கஸேத்தா, 1898 வசந்தகாலத்திலே நிறுவப்பெற்ற ருஷ்யச் சமூக-ஜன நாயகவாதத் தொழிலாளர் கட்சியின் அறிக்கை7* ஆகியவற்றின் விஷயத்திலும் இதையே சொல்லித் தீரவேண்டும்.

இந்த ஆயத்தமின்மைக்காக அக்காலத்திய சமூக-ஜனநாயகவாதிகளைப் பழிக்கக் கனவிலும் நினைக்க மாட்டோம், உண்மைதான். ஆனால் அந்த இயக்கத்தின் அனுபவத்திலிருந்து பயன்பெறும் பொருட்டும் அதிலிருந்து நடைமுறைக்கான படிப்பினைகளை எடுத்துக்கொள்ளும் பொருட்டும் அந்தந்தக் குறைபாட்டுக்குரிய காரணங்களையும் குறிபொருளையும் நாம் முழு நிறைவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, 1895-98 காலப்பகுதியிலே தீவிரமாகப் பணியாற்றிவந்த சமூக-ஜனநாயகவாதிகளில் ஒரு பகுதியினர் (ஒருக்கால் பெரும்பான்மையினராகவும் இருக்கலாம்) அக்காலத்திலேயே, “தன்னியல்பான” இயக்கத்தின் துவக்கத்திலேயே, ஒரு மிக விரிவான வேலைத்திட்டத்தையும் செயல் துடிப்புள்ள தாக்குமுறைக் கொள்கையையும் முன்வைப்பது சாத்தியம் என்று நியாயமாகவே கருதினார்கள் என்கிற விஷயத்தை நிலை நாட்டுவது மிக முக்கியம்.8*

புரட்சியாளர்களில் பெரும்பான்மையினருக்குப் பயிற்சியின்மை முற்றும் இயல்பான நிகழ்வுத்தோற்றமே, அது எந்தக் குறிப்பான அச்சங்களையும் எழுப்பியிருக்கமுடியாது. பணிகளைச் சரிவர வரையறுத்தவுடன், அவற்றை நிறைவேற்றத் திரும்பத்திரும்ப முயல்வதற்கான சக்தி மட்டும் இருந்திருந்தால், தற்காலிகமான தோல்விகள் அரைகுறையான துரதிர்ஷ்டங்களே. புரட்சி அனுபவமும் அமைப்புத் திறனும் பெறக்கூடிய விஷயங்களே, — அவற்றைப் பெறுவதற்கு விருப்பம் இருந்தால் போதும், குறைபாடுகளைக் கண்டு கொண்டால் போதும்; புரட்சிகரமான நடவடிக்கையில், குறைபாடுகளைக் கண்டு கொள்வதே அவற்றைப் போக்கிக்கொள்வதில் பாதிக்குமேல் வந்து விடுவதாகும்.

ஆனால், இந்த உணர்வு மங்கத் தொடங்கிய போது (மேலே குறிப்பிட்ட குழுக்களின் உறுப்பினர்களிடையே இவ்வுணர்வு கொழுந்துவிட்டபடியே இருந்தது), குறைகளை நிறைகளாகக் கருதத் தயாராயுள்ள, தன்னியல்பின் முன் தாம் அடிமைபோல் பணிந்து கெஞ்சுவதற்கு ஒரு தத்துவார்த்த அடிப்படையைப் புனைவதற்குக் கூடி முயல்கிற, பேர்வழிகளும்–சமூக-ஜனநாயகவாதப் பத்திரிகைகளும் கூட தோன்றியபோது, அரைகுறையான துரதிர்ஷ்டமாக இருந்தது முழு துரதிர்ஷ்டமாகிவிட்டது. இந்தப் போக்கிலிருந்து முடிவுகள் எடுக்கும் தருணம் வந்துவிட்டது; இதன் உள்ளடக்கம் ”பொருளாதாரவாதம்” என்று பிழையாகவும் மிகக் குறுகலாகவும் இனங்குறிக்கப்படுகிறது.

*_*_*_*

குறிப்புகள் :

1* சிலர் நினைக்கிற மாதிரி, தொழிற்சங்கவாதம் ”அரசியலை” முற்றாக விலக்குகிறதில்லை. தொழிற்சங்கங்கள் எப்போதுமே கொஞ்சம் அரசியல் (ஆனால் சமூக-ஜனநாயகவாத வகைப்பட்டதல்ல) கிளர்ச்சியும் போராட்டமும் நடத்திவந்துள்ளன. தொழிற்சங்க அரசியலுக்கும் சமூக-ஜனநாயகவாத அரசியலுக்கும் உள்ள வேற்றுமையை அடுத்த அத்தியாயத்தில் கவனிப்போம்.

2* ”பாட்டாளி வர்க்க விடுதலைக்கான போராட்டக் குழு”  – 1895 இலையுதிர்காலத்தில் செயின்ட் பீட்டர்ஸ்புர்க் நகரத்தில் நிறுவப்பெற்ற ஒரு சட்டவிரோதமான அமைப்பு. வி. இ. லெனின், அ. அ. வானேயிவ், பி. க. ஸபரோழெட்ஸ், கி. ம. கிரிழிழனோவ் ஸ்கி, ந. க. குருப்ஸ்கயா, யூ. ஓ. மார்த்தவ் முதலியோர் இதை நிறுவினர். ”போராட்டக் குழு” சுமார் இருபது மார்க்ஸியத் தொழிலாளர் வட்டங்களை இணைத்திருந்தது. அதன் பணிகள் அனைத்தும் மத்தியத்துவம், கண்டிப்பான கட்டுப்பாடு கோட்பாடுகளை ஆதாரமாகக் கொண்டு நடந்தன. பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக நடக்கும் தொழிலாளர் போராட்டத்தையும் ஜாராட்சியை எதிர்த்து நடக்கும் அரசியல் போராட்டத்தையும் இணைத்த வகையிலே அது தொழிலாளி வர்க்க இயக்கத்தை வழிநடத்தி வந்தது . லெனின் சொன்னதுபோல, இக்குழு தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகரமான கட்சிக்குக் கருவாக இருந்தது.

1895 டிஸம்பரில், லெனினையும் பிற “போராட்டக் குழுத்” தலைவர்களையும் ஜார் அரசாங்கம் சிறைப்படுத்தி சைபிரியாவுக்கு நாடுகடத்தியது. “பொருளாதாரவாதக் ”கருத்துக்களை ஆதரித்துப் பேசிய ‘இளைஞர்கள்” என்று சொல்லப்பட்டவர்கள் வசம் குழுத் தலைமை சிக்கியது.

3* அ. அ. வானேயிவ் காசநோயால் 1899-ல் கிழக்கு சைபீரியாவில் காலமானார்; நாடு கடத்தப்படுமுன் சிறையில் தனிக்கொட்டடியில் வைக்கப்பட்டிருந்தபோது இந்நோய்க்கு ஆளானார். எனவே தான் மேற்சொன்ன செய்தியை வெளியிடலாம் என்று நினைத்தோம். அந்தச் செய்தி உண்மையே என்று உத்தரவாதமளிக்கிறோம், ஏனெனில் அ. அ. வானேயி வுடன் நெருங்கி நேரடியாகப் பழகிவந்த நபர்களிடமிருந்து கிடைக்கிற செய்தி அது.

4*  “ருஸ்காயா ஸ்டரினா” (ருஷ்யப் பழங்காலம்) – வரலாற்று விஷயங்களைக் கவனிக்கும் மாதப் பத்திரிகை. 1870 முதல் 1918 வரை செயின்ட் பீட்டர்ஸ்புர்க்கில் வெளியிடப்பட்டது. ருஷ்ய அரசுக்கலை, பண்பாடு ஆகிய துறைகளில் முக்கியமானவர்களின் நினைவுகள், நாட்குறிப்பேடுகள், குறிப்புகள், கடிதங்கள் ஆகியவற்றையும் பல்வேறு வரலாற்று ஆவணங்களையும் பெரிதும் (கவனித்து) அதில் வெளியிடப்பட்டன.

5* 1895 ஏப்ரல் 27 (மே 9)-ல் யாரஸ்லாவல் நகரிலிருந்த ஒரு பெரிய நெசவாலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் படுகொலை செய்யப்பட்டதை இது குறிப்பிடுகிறது. ஆலை நிர்வாகம் புகுத்திய புதிய கூலி விகிதங்கள் கூலியைக் குறைத்ததால் 4000-க்கு மேலான தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்தனர். வேலை நிறுத்தம் கொடியமுறையில் நசுக்கப்பட்டது.  இவ்வேலை நிறுத்தத்தைப் பற்றி லெனின் ஒரு கட்டுரை எழுதினார், ஆனால் அது இன்னும் கிடைக்கவில்லை.

6* ”பீட்டர்ஸ்புர்க் ரபோச்சி லிஸ்டோக்” (செயின்ட் பீட்டர்ஸ்புர்க் தொழிலாளர் பத்திரிகை) -”செயின்ட் பீட்டர்ஸ்புர்க் தொழிலாளி வர்க்க விடுதலைப் போராட்டக் குழுவின்” பத்திரிகை. இரண்டு இதழ்கள் வெளிவந்தன; முதல் இதழ் ருஷ்யாவில் 1897 பிப்ரவரியிலும் (ஜனவரி என்று போடப்பட்டிருந்தது), இரண்டாம் இதழ் ஜினீவாவில் 1897 செப்டம்பரிலும் வெளியிடப்பட்டன.

7* முதலாம் ரு. ச. ஜ. தொ. கட்சிக் காங்கிரஸின் ஆணைக்கிணங்கவும் ரு. ச. ஜ. தொ. க. மத்தியக் குழுவின் சார்பாகவும் 1898-ல் வெளியிடப்பட்ட “ருஷ்ய சமூக-ஜனநாயக வாதத் தொழிலாளர் கட்சியின் அறிக்கையை” இது குறிக்கிறது. அரசியல் சுதந்தரத்துக்காகவும் யதேச்சாதிகாரமுறையைத் தூக்கியெறிவதற்காகவும் போராடுவதை ருஷ்ய சமூக-ஜனநாயகவாதத்தின் முதன்மையான பணியாக இவ்வறிக்கை வகுத்துத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் பொதுப் பணிகளுடன் அரசியல் போராட்டத்தை இணைத்தது.

8* “1890-களின் இறுதியாண்டுகளிலே இருந்த சமூக-ஜனநாயகவாதிகளின் நடவடிக்கைகள் பால் பகைமைக் கண்ணோட்டத்தை இஸ்க்ரா எடுத்துக்கொள்கிறதிலே, சிறு கோரிக்கைகளுக்கான போராட்டத்தைத் தவிர வேறு வேலை செய்வதற்கான நிலைமைகள் அக்காலத்தில் இல்லாதிருந்ததை அது புறக்கணிக்கிறது” என்று பொருளாதாரவாதிகள்” தமது “ருஷ்ய சமூக-ஜன நாயகவாதப் பத்திரிகைகளுக்கு எழுதிய கடிதத்தில் (இஸ்க்ரா , இதழ் 12) கூறுகின்றனர். “நிலைமைகள் இல்லை” எனும் வன்கூற்று உண்மைக்கு நேர் மாறானது என்று மேலே சொன்ன விஷயங்கள் காட்டுகின்றன. 1890-களின் இறுதியில் மட்டுமின்றி மத்தியிலுங்கூட சிறு கோரிக்கைகளுக்கான போராட்டத்தைத் தவிர வேறு வேலை செய்வதற்கான எல்லா நிலைமைகளும் – தலைவர்களின் போதிய பயிற்சி நீங்கலாக மற்றெல்லா நிலைமைகளும் இருந்தன, சித்தாந்திகளும் தலைவர்களுமாகிய நமக்குப் போதிய பயிற்சி இருக்கவில்லை என்று மனந்திறந்து ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக – “நிலைமைகள் இல்லை” என்பதின் மீது, எந்தச் சித்தாந்தியாலும் இயக்கத்தைத் திசை திருப்பிவிட முடியாத பாதையை நிர்ணயிக்கிற பொருளாயத சூழ்நிலையின் பாதிப்பின் மீது, முற்றாகப் பழி சுமத்திவிட “பொருளாதாரவாதிகள் முயல்கிறார்கள். இது தன்னியல்பின் முன் அடிமைபோல் பணிந்து கெஞ்சுவது தவிர வேறென்ன”, சித்தாந்திகள் தமது சொந்த குறைபாடுகளின் மீது மோகம் கொண்டிருப்பது தவிர வேறென்ன?

(தொடரும்)

நூல் : என்ன செய்ய வேண்டும்?
ஆசிரியர் : லெனின்
பக்கம் : 312
விலை : 180.00
வெளியீடு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிடைக்குமிடம் : கீழைக்காற்று (73959 37703)

தந்தை பெரியார் 142-வது பிறந்த நாள் : கடலூர் புமாஇமு மரியாதை !

0
பெரியாரின் 142 வது பிறந்தநாள் ! கடலூர் பு.மா.இ.மு. மாலை அணிவிப்பு நிகழ்வு !!

 

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 142 வது பிறந்தநாளை முன்னிறுத்தி விருத்தாசலம் திரு. கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் உள்ள பெரியாரின் சிலைக்கு புமாஇமு தோழர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மாலை அணிவிக்கும் நிகழ்வு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாவட்டச் செயலாளர் தோழர் மணியரசன் தலைமையில் நடந்தது.

இந்த மாலை அணிவிப்பு நிகழ்வில் சமூக நீதிப் போராளியான தந்தை பெரியார் முன்னெடுத்த போராட்டங்கள் சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவு இயக்கம், பெண்களுக்கு சம உரிமை,கல்வி பயிலும் உரிமை, கடவுள் மறுப்புக் கொள்கை,கோயில் நுழைவு போராட்டம், இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றின் வரலாறு குறித்து பேசப்பட்டது.

மேலும், இன்று மீண்டும் மனுதர்ம ஆட்சி நடந்து கொண்டிருக்கும் சூழலில், பார்ப்பனியத்தை எதிர்க்கும் வகையில் தனது இறுதி நாள் வரை போராடிய தந்தை பெரியாரின் வரலாற்றை இளைய சமூகம் படிக்க வேண்டும். மருத்துவம் படிக்கும் உரிமையை பறிக்க வந்த நீட் தேர்வால் தொடரும் மாணவர் படுகொலைகள், மூன்றாம் வகுப்பிலே பொது தேர்வு வைத்து குலத் தொழிலுக்கு அனுப்பும் புதிய கல்வி கொள்கை ஆகியவற்றை நாம் எதிர்க்க வேண்டும்.

இதனைச் செய்ய நாம் பெரியாரின் கருத்துக்களை இளையதலைமுறை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அப்படி செய்தால் ஒழிய இந்த பார்ப்பன பாசிச கும்பலை அதிகாரத்திலிருந்து விரட்டியடிக்க முடியாது என்ற வகையில் கண்டன உரையும், கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

இதில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவர் தோழர் மணிவாசகம் பார்ப்பனப் பாசிசத்துக்கு எதிராக கண்டன உரை ஆற்றினார். புமாஇமு உறுப்பினர்கள் தோழர் மணிகண்டன்,சுகதேவ், இளங்கோ ஆகியோரும் மக்கள் அதிகாரம் அமைப்பின் கோ பூவனூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலாஜி மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.


தகவல்:
புரட்சிகர மாணவர்-  இளைஞர் முன்னணி.
கடலூர்.
தொடர்புக்கு: 97888 08110