Sunday, June 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 231

நீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் !

4

நீட் தோல்வியால் தற்கொலை செய்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளித்தால் அது தற்கொலைகளை ஊக்குவிக்குமாம். இந்த  “அற்புதமான” சமூக விஞ்ஞானக் கண்டுபிடிப்பை தெரிவித்திருப்பது வேறு யாரும் அல்ல, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்தான்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (13-09-2020) அன்று நீட் தேர்வுகள் நடக்கவுள்ள நிலையில், அதற்கு முந்தைய நாளான 12-09-2020 அன்று மட்டும் தமிழகத்தில் ஒரே நாளில் மதுரையைச் சேர்ந்த ஜோதிஸ்ரீ துர்கா, தருமபுரியைச் சேர்ந்த ஆதித்யா, திருச்செங்கோட்டைச் சேர்ந்த மோதிலால் ஆகிய மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அதற்கு முந்தைய வாரத்தில் அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் எனும் மாணவர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

படிக்க:
♦ நீட் தேர்வு மோசடி : தேசியமயமாக்கப்படும் வியாபம் !
♦ நீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி

இதில் மாணவி ஜோதிஸ்ரீ துர்கா இரண்டாவது முறையாக நீட் தேர்வுக்கு முயற்சித்திருக்கிறார். மாணவர்கள் ஆதித்யா மற்றும் மோதிலால் ஆகியோர் மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதவிருந்தனர்.  தேர்வு நெருங்கும் நிலையில் மீண்டும் ஒருமுறை தோல்வியைத் தழுவ நேரிட்டால், பணம் கட்டி நீட் பயிற்சி பெற்றது அனைத்தும் வீணாகிவிடும் என்ற அச்சத்தின் காரணமாக இந்த மூன்று மாணவர்களும் தற்கொலை செய்திருக்கக்கூடும்.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை (14.09.2020) அன்று வழக்கறிஞர் சூர்யபிரகாஷ் என்பவர் நீட் தற்கொலைகள் தொடர்பாக முறையீட்டு மனு ஒன்றை நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் தாக்கல் செய்தார். இந்த மனுவில், நீட் தற்கொலைகள் குறித்து உயர்நீதிமன்றம் கொடுத்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத தமிழக அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும் என்று முறையிட்டிருக்கிறார்.

இந்த வழிகாட்டுதல்களை நீதிபதி என். கிருபாகரன் தலைமையிலான அமர்வு மாணவி கிருத்திகா கடந்த 2018-ம் ஆண்டு நீட் தொடர்பாக தொடுத்த வழக்கில் உத்தரவிட்டிருந்தது. அதில் நீட் தேர்வு காரணமாக நடைபெறும் தற்கொலைகளை தடுக்க தமிழக அரசு, தேர்வுக்கு முன்னரே மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிப்பது, பயத்தைப் போக்கும் வகையில் அவர்களுக்கு உளவியல் கவுன்சிலிங் அளிப்பது போன்றவற்றை ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது உயர்நீதிமன்றம்.

தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள் ஆதித்யா, ஜோதிஸ்ரீ துர்கா, மோதிலால்

அந்த உத்தரவை சுட்டிக் காட்டி, தமிழக அரசு அந்த வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றியிருந்தால், கடந்த வாரத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட நால்வரையும் காப்பாற்றியிருக்கலாம் என்றும் அதன் காரணமாக தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது முறையீட்டு மனுவில் வழக்கறிஞர் சூரியபிரகாஷ் குறிப்பிட்டிருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் வேல்முருகன் ஆகியோர், இந்த மனுவை அங்கீகரித்து தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க அனுமதி வழங்கியுள்ளனர்.

மேலும் இது குறித்துக் கருத்து கூறிய நீதிபதிகள், “நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதும், பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதும் அந்த தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல் ஆகிவிடும்” என்று தெரிவித்துள்ளனர்.

எனில், கடந்த சனிக்கிழமை 3 மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்டது, குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பும், இழப்பீடும் தரும் அரசாங்கத்தின் ‘ஊக்க’ நடவடிக்கைக்கு ஆசைப்பட்டு தானா? அல்லது பொதுவான தேர்வு குறித்த அச்சத்தாலா? அல்லது நீட் தேர்வுப் பயிற்சிக்காக தமது தாய் தந்தையர் அரும்பாடுபட்டு சம்பாதித்த பணத்தை பயிற்சி மையங்களுக்கு கொட்டி அழுததற்கு பலன் கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தினாலா ?

பொதுவான தேர்வு குறித்த அச்சம் என்றால், இந்த மாணவர்கள் 12-ம் வகுப்பு தேர்விலேயே அந்த முடிவை எடுத்திருக்க முடியும். பொதுவான தேர்வு குறித்த அச்சம் கொண்டவர்களும் கூட தேர்வில் தோல்வியுறும் சமயத்தில்தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

படிக்க :
♦ மாமேதை லெனின் : அறிவாளிகளின் அந்தரங்கம் || லெனின் – தலைவர்! தோழர்! மனிதர்!
♦ தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !

கல்வித் துறையில் தமிழகத்தின் முன்னேறிய நிலைமை, சாதாரண நடுத்தரவர்க்கப் பின்னணி கொண்டவர்களும் மருத்துவர் ஆவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதன் காரணமாகத்தான் இங்கு மாணவர்கள் மருத்துவராகும் கனவு காணமுடிகிறது. ஏற்கெனவே இருந்த 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் முறை சாதாரண அரசுப் பள்ளி மாணவர்களையும் கூட மருத்துவர்களாக்கி அழகு பார்த்தது.

இந்திய அளவில் தமிழகம்தான் மருத்துவத்திற்குப் பெயர் பெற்ற மாநிலமாக இருக்கிறது. சென்னை இந்தியாவின் மருத்துவத் தலைநகராக விளங்குகிறது. உலகின் தலைசிறந்த மருத்துவ வல்லுனர்களை உருவாக்கியிருக்கிறது தமிழகம். காரணம் தமிழகத்தில் இருக்கும் அதிகமான மருத்துவக் கல்லூரிகளும், சாதாரண மக்களின் பிள்ளைகளும் எவ்வித நுழைவுத் தேர்வும் இன்றி, பள்ளிப் படிப்பில் சிறந்து விளங்கினாலேயே மருத்துவராக முடியும் என்ற நிலைதான்.

ஆனால் நீட் தேர்வுமுறை அடிமை எடப்பாடி அரசின் உதவியோடு தமிழகத்தில் புகுத்தப்பட்ட பின்னர், நீட் பயிற்சி வகுப்புகள் என்ற பெயரில் ஆண்டுக்கு 1.5 இலட்சம் முதல் 4 இலட்சம் வரை கட்டணங்களைப் பெற்றுக் கொண்டு நீட் தேர்வுக்கு மாணவர்களைத் ‘தயாரிக்கும்’ தனியார் பயிற்சிக்கூடங்களுக்கு படியளக்கும் ‘திறன்’ கொண்டோரின் பிள்ளைகள் மட்டுமே மருத்துவராவது குறித்து கனவு கூட காண முடியும்.

2019-ம் வருட நீட் பலி : மாணவி ரிதுஸ்ரீ (இடது) மற்றும் மாணவி வைஸ்யா.

தமிழகத்தில் தமது பிள்ளைகளின் மருத்துவராகும் கனவை நனவாக்க கடனை வாங்கியேனும் நீட் பயிற்சி மையங்களுக்கு அனுப்பிவைக்கும் நடுத்தரவர்க்கத்தினரின் பிள்ளைகளின் மனநிலை தேர்வுக்கு முன்னர் என்னவாக இருக்கும் ? அதுவும் முதல் முறை தோல்வியடைந்து இரண்டாவது முறையோ, மூன்றாவது முறையோ முயற்சிக்கும் மாணவர்களின் மனநிலை என்னவாக இருக்கும் ?

தமது தாய் தந்தையர் தம் கண் எதிரே அரும்பாடுபட்டு சிறுகச் சிறுக சேமித்தும், கடன் வாங்கியும் கட்டிய பயிற்சிக் கட்டணத்தின் பிரம்மாண்டமும், அதன் மீது தமக்கிருக்கும் தார்மீகக் கடமையும் மனதில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். கொரோனா சூழலில் குடும்பங்களில் ஏற்படும் பொருளாதார நெருக்கடி அவர்களது மனநிலையில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இப்படிப்பட்ட தாக்கத்தின் விளைவாக நிகழ்ந்த (தற்)கொலைகளுக்கு அரசாங்கத்தின் இழப்பீடு வழங்கப்படுவது நீதிபதிகளுக்கு வெறும் ஊக்குவிப்பாகத் தெரிகிறது. எனில், இழப்பீடு எனும் பெயரில் அரசு கொடுக்கும் பிச்சைக்காசைப் பெறுவதற்குத்தான் மருத்துவராகும் துடிப்பு கொண்ட அந்த இளம் குருத்துக்கள் தங்களை மாய்த்துக் கொண்டனரா ?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் ஜென்டில்மேன் படத்தில் ‘மெரிட்டில்’ வந்த தனது மகன் அர்ஜுனுக்குக் கிடைக்க வேண்டிய மருத்துவக் கல்வி வாய்ப்பு ’கோட்டா’ சீட் காரணமாக குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குச் சென்றதும் தனது மகனுக்கு மெடிக்கல் சீட் கிடைக்க பணம் ஏற்பாடு செய்ய, பணியில் இருக்கும் போதே தற்கொலை செய்து கொள்வார் மனோரமா.

அந்தப் படத்தில் மனோரமாவின் மரணத்தின் மூலமாக ‘கோட்டா’ சீட்டுகளின் மீதான (அதனால் பயன்பெற்ற) பொது ஜனங்களின் வெறுப்பை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கச்சிதமாக விதைத்தார் சங்கர். ஒரு ஏழை சத்துணவுக்கூடப் பணியாளர் தனது பிள்ளையைப் படிக்க வைக்க பணம் வேண்டி தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளும் காட்சிதான் படம் பார்த்த அனைவரின் மனதிலும் சங்கரின் மனுதர்மக் கருத்துக்களை எடுத்துச் சென்ற வாகனம்.

அனிதா முதல் ஒவ்வொரு ஆண்டும் நீட் தொடர்பாக தமிழகத்தில் நிகழும் தற்கொலைகள் அனைத்துமே, ‘நீட்’ எனும் மனுநீதிக்கு எதிரான கருத்தியலை தமிழக மக்களின் மனங்களுக்குள் எடுத்துச் செல்லும் வாகனமாக இருக்கிறது.  இது சங்கரின் ‘மாய உலகக்’ காட்சிகளில் உருவாக்கப்பட்டதல்ல. தமிழகத்தின் கையாலாகா அவல நிலையால் உண்டான எதார்த்தம்.

இந்த (தற்)கொலைகளின் தாக்கம் நீட் எனும் மனுநீதிக்கு எதிராக எந்தக் கருத்தியலையும் மக்கள் மனதில் கொண்டு சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் நீட் மரணங்களை இழப்பீட்டிற்காக நடக்கும் தற்கொலைகளாக சித்தரிக்கிறார்கள் நீதியரசர்கள் ! அதனால்தான் இச்செய்தியை முதல்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது இந்து தமிழ் திசை !

நந்தன்

செய்தி ஆதாரம் :
இந்து தமிழ் திசை நாளிதழ் (15-09-2020)

NEP 2020 : என்னவாகும் உயர்கல்வி ? | சசிகாந்த் செந்தில் உரை | CCCE

தேசியக் கல்விக் கொள்கை 2020 – என்னவாகும் உயர்கல்வி? என்ற தலைப்பில் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்த இணையவழி கூட்டத்தில் திரு சசிகாந்த் செந்தில் உரையாற்றினார்.

தனது உரையில், தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை மற்றும் சமஸ்கிருத திணிப்பு குறித்த விவாதங்கள் பரவலாக நடந்துவருகின்றன. அதேவேளையில் கல்விக் கொள்கையில் உள்ள முக்கியமான வேறு சிலவற்றையும் நாம் பேசவேண்டும். இக்கொள்கை பின்வரும் மூன்று விசயங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

1. வணிகமயமாக்கல்
2. அதிகார மையப்படுத்துதல்
3. காவிமயமாக்கல்.

இவர்கள் கல்வியை புதிய தாராளவாதக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் பார்க்கிறார்கள். எந்த ஒரு பாசிச அரசும் தன் மக்களைக் கட்டுப்படுத்துவதற்கு முதலில் தாக்குதல் தொடுப்பது கல்வியில் தான். அதையே தான் தற்போது பாஜக-வும் இந்த கல்விக் கொள்கையின் வாயிலாக செய்கிறது என்று பேசினார்.

மேலும் உயர்கல்வியில் கல்விகொள்கை முன்வைக்கும் பரிந்துரைகளைப் பற்றியும் அதன் விளைவுகளைப் பற்றியும் திரு சசிகாந்த் செந்தில் விளக்கியுள்ளார். அவரது உரையை முழுமையாகக் காண :

காணொலி :

பாருங்கள் ! பகிருங்கள் !

பாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி ! – லெனின்

0

அமைப்பு வேலையின் செயல்பரப்பு – பாகம் 2

<< முந்தைய பாகம்

னித் தேர்ச்சியின் அவசியத்தை எவ்வளவோ நேர்த்தியுடன் வர்ணித்த அதே B-Vதான் நாம் மேற்கோள்காட்டிய வாதத்தின் இரண்டாம் பகுதியில் அதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுகிறார் என்று கருதுகிறோம். தொழிலாளி வர்க்கப் புரட்சியாளர்களின் எண்ணிக்கை போதாதென்கிறார். இது முற்றிலும் உண்மை. இன்று சமூக -ஜனநாயகவாதத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குரிய காரணங்கள் பற்றியும், எனவே அந்நெருக்கடியை அகற்றுவதற்கு வேண்டிய சாதனங்களைப் பற்றியும் நாம் கொண்டுள்ள கருத்தை “ஒரு நெருங்கிய நோக்கரின் மதிப்புமிக்க தகவல்” முற்றாக உறுதிப்படுத்துகிறதை மீண்டும் வலியுறுத்துகிறோம். பொதுவாகவே புரட்சியாளர்கள் தன்னியல்பாய் விழிப்புற்று வரும் மக்கள் திரளுக்குப் பின்னடைந்து வருகிறார்கள் என்பது மட்டுமல்ல; தொழிலாளர் – புரட்சியாளர்களுங்கூட தன்னியல்பாய் விழிப்புற்று வரும் தொழிலாளி வர்க்க மக்கள் திரளுக்குப் பின்னடைந்து வருகிறார்கள்.

தொழிலாளர்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளைப் பற்றிய விவாதத்தில் மிக அடிக்கடி நம்மிடம் கூறப்படும் “பள்ளியாசிரியத்தனங்களின்” முட்டாள்தனத்தை மட்டுமின்றி அவற்றின் அரசியல் பிற்போக்குத் தன்மையையும் “நடைமுறைப்” பார்வையிலே இந்த உண்மை தெளிவான சான்றுடன் உறுதிப்படுத்துகிறது. இந்த உண்மை நிரூபிக்கிறதாவது: நமது முதன்மையான முக்கியமான கடமை தொழிலாளி வர்க்கப் புரட்சியாளர்களைப் பயிற்றுவிக்க உதவுவதே. இவர்கள் கட்சி நடவடிக்கை விசயத்தில் அறிவுஜீவிகளிடையே இருந்து வரும் புரட்சியாளர்களுக்குச் சமமாக இருப்பார்கள் (‘‘கட்சி நடவடிக்கை விசயத்தில்” எனும் சொற்களை வலியுறுத்துகிறோம். ஏனெனில் மற்ற விசயங்களில் அறிவுஜீவிகளின் தரத்திற்குத் தொழிலாளிகளை உயர்த்துவது அவசியமாயினுங்கூட அது அவ்வளவு சுலபமோ அவசரத் தேவையோ அல்ல).

எனவே தொழிலாளிகளைப் புரட்சியாளர்களின் தரத்திற்கு உயர்த்துவதில் முதன்மையான கவனம் செலுத்தவே “பொருளாதாரவாதிகள்” செய்ய விரும்புவது போல் ” உழைக்கும் மக்களின்” தரத்திற்கோ, ஸ்வபோதா செய்ய விரும்புவது போல், “சராசரித் தொழிலாளியின்” தரத்திற்கோ இறங்குவது நம் பணி அல்லவே அல்ல. (ஸ்வபோதா அவ்வாறு செய்ய விரும்புவதிலே பொருளாதாரவாதப் ”பள்ளியாசிரியத்தனங்களின்” இரண்டாம் படிவத் தரத்திற்கு ஏறுகிறது). தொழிலாளர்களுக்கு எளிதாகப் புரியக் கூடிய இலக்கியம் வேண்டும்; குறிப்பாகப் பிற்பட்ட தொழிலாளர்களுக்கு மிக எளிதாகப் புரியக்கூடிய (ஆனால் கொச்சைப்படுக்கப் படாத) இலக்கியம் வேண்டும் என்பதை நான் மறுக்கவே இல்லை. ஆனால் அரசியல், அமைப்புத்துறை பற்றிய பிரச்சினைகளோடு பள்ளியாசிரியத்தனங்களை இடைவிடாது போட்டுக் குழப்புவது தான் எனக்கு எரிச்சலூட்டுகிறது.

படிக்க:
♦ புரட்சிக்குப் போதுமானதாக கட்சி நிறுவனம் இருக்க வேண்டும் ! | லெனின்
♦ பொதுவுடைமைக் கட்சியின் பத்திரிகை எவ்வாறு இருக்க வேண்டும்?

”சராசரி தொழிலாளி”யைப் பற்றி இவ்வளவு கவலை தெரிவிக்கும் பெருமான்களே, தொழிலாளி வர்க்க அரசியலைப் பற்றியும், தொழிலாளி வர்க்க அமைப்பைப் பற்றியும் விவாதிக்கும் போது நீங்கள் தொழிலாளிகளை புத்தி சொல்லி அடக்க விரும்புவதால் உண்மையிலேயே அவர்களை அவமதிக்கிறீர்கள். முக்கியமான விசயங்களை வினைத்திட்ப முறையிலே பேசுங்கள்; பள்ளியாசிரியத்தனங்கள் ஆசிரியர்களோடு நிற்கட்டும், அரசியல்வாதிகளுக்கும் அமைப்பாளர்களுக்கும் அது வேண்டாம்! படிப்பாளிப் பகுதியினர் இடையே கூட முன்னிலை நபர்கள், “சராசரி நபர்கள்”, “மக்கள் திரள்” இல்லையா? படிப்பாளிப் பகுதியினருக்கும் எளிதாகப் புரியக் கூடிய இலக்கியத்தின் தேவையை ஒவ்வொருவரும் அங்கீகரிக்கவில்லையா? அவ்வகை இலக்கியம் எழுதப்படவில்லையா? கல்லூரி அல்லது உயர்நிலைப் பள்ளி மாணவர்களைத் திரட்டியமைப்பது பற்றிய கட்டுரையில் ஒருவர் ஏதோ ஒரு புதிய கண்டுபிடிப்பு செய்தவர் போல் முதன்முதலில் “சராசரி மாணவர்கள்” கொண்ட அமைப்பு அவசியம், என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு இருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். அந்த ஆசிரியர் கேலி செய்யப்படுவார். அது சரியாகவும் இருக்கும். அமைப்பு பற்றி உங்களுக்குக் கருத்துக்கள் ஏதேனுமிருந்தால் கொடுங்கள், யார் “சராசரி”, யார் “சராசரி”க்கு மேலே அல்லது கீழே என்பதை நாங்களே முடிவு செய்து கொள்கிறோம் என்று அவரிடம் சொல்வார்கள்.

ஆனால் அமைப்பு பற்றி உங்களுக்கு சொந்தத்தில் கருத்துக்கள் எதுவும் இல்லையென்றால் மக்கள் திரள்” சார்பிலும் ”சராசரி நபர்கள்” சார்பிலும் நீங்கள் எடுத்துக் கொள்ளும் சிரமங்கள் அனைத்தும் வெறுமே அலுப்பூட்டுவதாயிருக்கும். “அரசியல்”, “அமைப்பு” சம்பந்தமான இந்தப் பிரச்சினைகள் தம்மளவில் எவ்வளவோ முக்கியத்துவமுடையவை ஆதலால் அவற்றை செயல்திட்பமுடைய வழியிலே அல்லாது வேறெந்த வழியிலும் கவனிக்க முடியாது. நாம் தொழிலாளிகளைப் (பல்கலைக்கழக மாணவர்களையும், பள்ளி மாணவர்களையும்) பயிற்றுவிக்க முடியும்; பயிற்றுவிக்க வேண்டும். அவ்விதம் செய்வதால் அவர்களோடு இந்தப் பிரச்சினைகளை விவாதிக்க நமக்கு முடியக் கூடும். ஆனால் இந்தப் பிரச்சினைகளை நீங்கள் கிளப்பத் தொடங்குகிறீர்கள் என்றால் அவற்றிற்கு உண்மையான பதில்கள் நீங்கள் கொடுத்தாக வேண்டும்; ”சராசரி நபர்கள்” என்றோ , “மக்கள் திரள்” என்றோ சொல்லிக் கொண்டு பின்வாங்கக் கூடாது; குறும்புத்தனமான குறிப்புரைகளோடும் வெறும் சொற்றொடர்களோடும் விசயத்தை முடித்து விட முயற்சிக்கக் கூடாது.”1*

அதேபோல் தொழிலாளி – புரட்சியாளனும் தன் பணியைச் செய்வதற்கு முற்றாகத் தயார்படுத்திக் கொள்வதற்கு ஒரு முழுநேரப் புரட்சியாளனாக ஆகித் தீரவேண்டும். எனவே, தொழிற்சாலையிலே தொழிலாளி பதினொன்றரை மணிநேரம் செலவழிப்பதனால் (கிளர்ச்சி தவிர) மற்றெல்லா புரட்சி வேலைகளும் “அறிவுஜீவிகளைக் கொண்ட ஒரு சின்னஞ்சிறு குழுவின் மேலேதான் முக்கியமாக விழுவது அவசியமாகித் தீரவேண்டும்” என்று B-v சொல்வது தவறு. இந்த நிலைமை வெறும் “அவசியத்தினின்று” விளைவதல்ல. அது விளையக் காரணம் நாம் பின்தங்கியிருப்பதுதான். நாம் ஒவ்வொரு திறமையுள்ள தொழிலாளியும் ஒரு முழுநேரக் கிளர்ச்சினாகவும், அமைப்பாளனாகவும், பிரச்சாரகனாகவும், இலக்கிய விநியோகஸ்தனாகவும், மற்றபடியும் ஆவதற்கு உதவ வேண்டிய நமக்குள்ள கடமையை நாம் உணரவில்லை என்பதுதான். இவ்விசயத்தில் முற்றிலும் வெட்கக்கேடான முறையில் நம் சக்தியை வீணடிக்கிறோம். பேணிக்காக்க வேண்டியதை, தனிக் கவனிப்போடு வழங்கப்பட வேண்டியதைச் சிக்கனத்தோடு சேமித்து வைக்கும் திறமை நம்மிடம் இல்லை.

ஜெர்மானியர்களைப் பாருங்கள். அவர்களிடம் நம்மை விட நூறு மடங்குச் சக்திகள் உண்டு என்றபோதிலும் ”சராசரி” நிலையிலுள்ள அணிகளிடையே இருந்து உண்மையிலேயே திறமையுள்ள கிளர்ச்சியாளர் முதலானோர் அடிக்கடி மேலுக்குக் கொண்டு வரப்படுவதில்லை என்று மிக நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே ஒவ்வொரு திறமையுள்ள தொழிலாளியும் தன் ஆற்றல்களை முழுமையாக வளர்த்துக் கொள்ளவும் செயல்படுத்தவும் இடமளிக்கக்கூடிய நிலைமைகளில் அவனை வைத்திட உடனுக்குடன் முயல்கின்றனர்; அவன் ஒரு முழுநேரக் கிளர்ச்சியாளன் ஆக்கப்படுகிறான்; தனது நடவடிக்கைக்கான நிலைக் களத்தை விரிவுபடுத்திக் கொள்ளும்படி, ஒரு தொழிற்சாலையிலிருந்து அது சம்பந்தப்பட்ட தொழில் முழுவதற்கும் பரப்பிக் கொள்ளும்படி, ஒரு தனி ஊரிலிருந்து நாடு முழுவதற்கும் பரப்பிக் கொள்ளும்படி ஊக்குவிக்கப்படுகிறான். அவன் தன் தொழிலில் அனுபவமும் நயத்திறமும் பெறுகிறான்; பார்வையை விரிவாக்கிக் கொள்கிறான்; அறிவைப் பெருக்கிக் கொள்கிறான்; வேற்று வட்டாரங்களையும், மாற்றுக் கட்சிகளையும் சேர்ந்த அரசியல் தலைவர்களை நெருங்கிய நிலையில் கவனிக்கிறான்; அவர்கள் தரத்திற்கு உயர முயற்சிக்கிறான்; தொழிலாளி வர்க்கச் சூழலைப் பற்றிய அறிவையும் சோசலிஸ்டுத் துணிபுகளின் புது மலர்ச்சியையும் தொழிற்திறனுடன் தன்னுள் இணைத்துக் கொள்ள முயல்கிறான். இது இல்லையேல் நேர்த்தியான பயிற்சிபெற்ற தனது பகைவர்களை எதிர்த்துத் தொழிலாளி வர்க்கம் விடாப்பிடியான போராட்டம் நடத்த முடியாது. இவ்வொரே வழியிலேதான் உழைப்பாளி மக்கள் பேபெல், ஆவுயெர் போன்ற தலைவர்களை உண்டாக்கித் தருகின்றனர். ஆனால் அரசியல் வகையிலே சுதந்திரமாக உள்ள ஒரு நாட்டில் பெருமளவுக்குத் தன்னாலே நிகழக்கூடிய இது ரசியாவில் நம் அமைப்புகளால் முறைமையுடன் செய்யப்பட வேண்டும். சிறிதளவேனும் ஆற்றலுள்ளவனாகவும் “முன்னுக்கு வரக் கூடியவனாகவுமுள்ள” தொழிலாளி – கிளர்ச்சியாளனைத் தொழிற்சாலையில் பதினொரு மணிநேரம் வேலை செய்யும்படி விட்டு வைக்கக்கூடாது. அவனைக் கட்சி காத்துப் பேணிவரும்படி நாம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

உரியகாலத்தில் அவன் தலைமறைவாகச் சென்றுவிடுவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். அவன் வேலை செய்யும் இடத்தை மாற்றிக் கொள்ளவும் ஏற்பாடு செய்யவேண்டும். அப்பொழுதுதான் அவன் தன் அனுபவத்தைப் பெருக்கிக் கொள்வான்; பார்வையை விரிவாக்கிக் கொள்வான்; போலீசு உளவாளிகளை எதிர்க்கும் போராட்டத்தில் குறைந்தபட்சம் ஒரு சில ஆண்டுகளுக்காயினும் சமாளித்து நிற்பான். தொழிலாளி வர்க்க மக்கள் திரளின் இயக்கத்தின் தன்னியல்பான எழுச்சி மேன்மேலும் அகன்றும் ஆழ்ந்தும் வர வர அம்மக்கள் திரள் தன்னிடையே இருந்து மேன்மேலும் அதிகரித்த எண்ணிக்கையில் ஆற்றலுள்ள கிளர்ச்சியாளர்களை மேலுக்குக் கொண்டு வருவதோடல்லாமல் ஆற்றல்மிக்க அமைப்பாளர்களையும், பிரச்சாரகர்களையும், (மிகச் சிறந்த அர்த்தத்தில்) ”நடைமுறை ஊழியர்களையும்” மேலுக்குக் கொண்டு வருகின்றது. (நம் அறிவுஜீவிகளிடையே நடைமுறை ஊழியர்கள் மிகவும் குறைவாகத் தான் இருக்கிறார்கள். ரசிய பாணியில், நம் அறிவுஜீவிகளில் பெரும்பாலோர் தம் பழக்கவழக்கங்களில் கொஞ்சம் கவனமற்றவர்களாகவும் மந்தமாகவும் இருக்கிறார்கள்).

படிக்க:
♦ பிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்குத் தலைமையேற்பதும் !
♦ பொதுவுடைமைக் கட்சியில் வேலைகளை சோதித்தறிவது எப்படி ?

விரிவான தயாரிப்புக்கு ஆளாகி உருப்பெற்ற, தனிச்சிறப்பான பயிற்சி பெற்ற தொழிலாளி – புரட்சியாளர்களின் (“சேவையின் எல்லாக் கிளைகளையும் சேர்ந்த” புரட்சியாளர்களும் இதில் அடங்குவர்) சக்திகள் நமக்கு கிடைக்கிறபொழுது உலகத்தில் எந்த அரசியல் போலீசாரும் அச்சக்திகளை எதிர்த்துச் சமாளிக்க முடியாமற் போகும். ஏனெனில் புரட்சிக்கு முழுக்க முழுக்க அர்ப்பணித்துக் கொண்டுள்ள இச்சக்திகள் மிக விரைவான தொழிலாளர் மக்கள் திரளின் எல்லையில்லா நம்பிக்கைக்குப் பாத்திரமாயிருப்பார்கள். தொழிலாளர்களுக்கும் ”அறிவுஜீவிகளுக்கும்” பொதுவானதாக விளங்கும் முழுநேரப் புரட்சியாளனாக்கும் பயிற்சிக்குரிய இந்தப் பாதையில் தொழிலாளர்கள் செல்லும்படி ‘ஊக்கிவிடச் செயலாற்றுவது” மிகக் குறைவாக இருப்பதற்கான பழி நேரடியாக நம்மையே சேரும். தொழிலாளர் திரள், “சராசரித் தொழிலாளர்கள்” என்றெல்லாம் சொல்லப்படுபவர்களுக்கு “எட்டக் கூடியதாய் இருப்பது” எது என்பது பற்றி நாம் ஆற்றும் அசட்டுத்தனமான சொற்பொழிவுகளால் மிக அடிக்கடி அவர்களைப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் பழியும் நேராக நம்மையே சேரும்.

மற்றவை போல் இவ்விசயத்திலும் நம் அமைப்புத் துறைப் பணி குறுகிய செயல் எல்லை கொண்டிருப்பதற்குக் காரணம் நாம் நம் தத்துவங்களையும், நம் அரசியல் பணிகளையும் ஒரு குறுகிய செயற்களத்தில் கட்டுப்படுத்தி விடுவதே (”பொருளாதாரவாதிகளில் மிகப் பெரும்பான்மையோரும் நடைமுறை வேலைகளில் கற்றுக் குட்டிகளாக இருப்பவர்களில் மிகப் பெரும்பான்மையோரும் இதைப் பார்க்கிறதில்லை), இதில் ஐயமே இல்லை. தன்னியல்பிற்கு அடிபணிவதானது மக்கள்திரளுக்கு எட்டக்கூடியதாய் உள்ளதற்கு அப்பால் ஓர் அடியேனும் எடுத்து வைக்காதபடி பீதியை உண்டாக்குகிறது போலும். மக்கள் திரளின் உடனடியான நேரடியான தேவைகளைக் கவனித்துக் கொள்வதற்கு அப்பால் வெகுதூரம் மேலே சென்று விடுவோமோ என்கிற பீதியை உண்டாக்குகிறது போலும். பெருமான்களே, பயப்படாதீர்கள், அமைப்பு மட்டத்தில் நாம் மிக மிகத் தாழ்ந்து உள்ளதால் அளவுக்கு மிஞ்சிய உயரத்திற்கு நாம் ஏறிவிட முடியும் என்கிற கருத்தே அபத்தமானது என்பதை நினைவில் வையுங்கள்!

குறிப்பு :
1*
ஸ்வபோதா இதழ் 1, பக்கம் 66-இல் “அமைப்பு” என்ற கட்டுரையில் கூறுவதாவது : ”தொழிலாளர் படையின் கனமிக்க நடை ரசிய ‘உழைப்பாளர்கள்’ சார்பில் முன் வைக்கப்படும் எல்லாக் கோரிக்கைகளையும் பலப்படுத்தும்” – உழைப்பாளர்கள் என்கிற சொல்லைக் தடித்த எழுத்தில் போடுங்கள், உண்மையாக! மேலும், ஆசிரியர் கூவுகிறார்: “எனக்குப் படிப்பாளிப் பகுதியினர்பால் சிறிதேனும் பகை இல்லை, ஆனால்”… (ஆனால் இந்தச் சொல்லுக்குப் பொருள் “நெற்றிக்கு மேலே காதுகள் உயர வளர்வதேயில்லை’ என்று ஷெட்ரின் மொழிபெயர்த்தார்!) – “ஆனால் யாராவது ஒருவன் என்னிடம் வந்து அழகும் கவர்ச்சியும் மிக்க வார்த்தைகள் பேசி அவற்றின் (தன்னுடைய?) அழகுக்காகவும் மற்ற பண்பு நலன்களுக்காகவும் அவற்றை ஏற்கவேண்டும் என்று கோரினால் எனக்கு எப்போதும் பயங்கரமான எரிச்சல் வருகிறது’ என்று (பக்கம் 62), உண்மைதான், எனக்கும் கூட “எப்போதும் பயங்கரமான எரிச்சல் வருகிறது.”

(தொடரும்)

நூல் : என்ன செய்ய வேண்டும்?
ஆசிரியர் : லெனின்
பக்கம் : 312
விலை : 180.00
வெளியீடு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிடைக்குமிடம் : கீழைக்காற்று (73959 37703)

கட்சியில் நிலவும் தேர்ச்சிநயமின்மையை சீர் செய்வது எப்படி ?

0

சிய பொருளாதாரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு புரட்சியை சாதிக்கவல்ல சமூக-ஜனநாயகக் கட்சியை (கம்யூனிஸ்ட் கட்சியை) கட்டுவது குறித்த சித்தாந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக 1902-ம் ஆண்டு “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலை எழுதுகிறார் லெனின்.

இந்நூலில் “பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையும் புரட்சியாளர்களின் அமைப்பும்” எனும் தலைப்பின் கீழ் வரும் “அமைப்பு வேலையின் செயல் பரப்பு” எனும் உட்தலைப்பில் தொழில்முறைப் புரட்சியாளர்களைக் கொண்ட ஒரு அமைப்பு, தேர்ச்சி நயமின்மை எனும் பிரச்சினையிலிருந்து எவ்வாறு மீண்டு வரமுடியுமென்பதையும், தேர்ச்சிநயமிக்கவரை ஒரு புரட்சிகர அமைப்பு எப்படி உருவாக்க முடியுமென்பதையும், அத்தகையவர்களை எப்படி தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியுமென்பதையும் விவரிக்கிறார் லெனின்.

  • வினவு

***

அமைப்பு வேலையின் செயல்பரப்பு

“செயலாற்றத் தகுதியுள்ள புரட்சிச் சக்திகள் போதாதிருப்பதை செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் மட்டுமின்றி ரசியாவெங்கும் உணர்ந்திருக்கிறார்கள்” என்பது பற்றி B-v சொல்லக் கேட்டிருக்கிறோம். இவ்விசயத்தை அநேகமாக யாரும் மறுக்க மாட்டார்கள். ஆனால், இதை எப்படி விளக்குவது என்பதே கேள்வி. B-V எழுதுகிறார்:

“இந்நிகழ்ச்சித் தோற்றத்திற்குரிய வரலாற்றுக் காரணங்களை நாம் விளக்கப் புகவில்லை . நீடித்த அரசியல் பிற்போக்காலும், சென்றகால, நிகழ்காலப் பொருளாதார மாற்றங்களால் ஏற்பட்ட பிளவாலும் மனமுடைந்து போன ஒரு சமுதாயம், புரட்சி வேலைக்குத் தகுதியுள்ள மிகச் சில நபர்களையே தன் மத்தியிலிருந்து மேலுக்குக் கொண்டு வருகிறது. புரட்சிகரமான ஊழியர்களைத் தொழிலாளி வர்க்கம் உண்டாக்கித் தரத்தான் செய்கிறது. அவர்கள் சட்டவிரோதமான அமைப்புகளின் அணிகளை ஓரளவுக்குப் பெருக்குகிறார்கள், ஆனால் இப்படிப்பட்ட புரட்சியாளர்களின் தொகை காலத்தின் தேவைகளுக்குப் போதாமலிருக்கிறது என்று மட்டும் சொல்லி வைக்கிறோம்.

படிக்க :
♦ புரட்சிக்குப் போதுமானதாக கட்சி நிறுவனம் இருக்க வேண்டும் ! | லெனின்
♦ மாமேதை லெனின் : அறிவாளிகளின் அந்தரங்கம் || லெனின் – தலைவர்! தோழர்! மனிதர்!

மேலும், அப்படி இருக்கக் காரணம்: தொழிலாளி நாள் தோறும் தொழிற்சாலையில் பதினொன்றரை மணிநேரம் செலவழிக்கிறான். எனவே, முக்கியமாய், அவன் ஒரு கிளர்ச்சியாளனாக மட்டுமே பணியாற்ற முடியும். ஆனால், பிரச்சாரம், அமைப்புத் துறை, சட்டவிரோதமான இலக்கியத்தைச் சேர்ப்பிப்பது, பிரதியெடுப்பது, துண்டுப் பிரசுரங்களை வெளியிடுவது முதலிய கடமைகள் அவசியமாகவே வெகு சில அறிவுஜீவிகள் மீதுதான் முக்கியமாக விழவேண்டியுள்ளது” (ரபோச்சியே தேலோ, இதழ் 6, பக்கங்கள் 38-39).

பல அம்சங்களில் நாம் B-v யுடன் உடன்படவில்லை . குறிப்பாக, நாம் வலியுறுத்தியுள்ளவையுடன் உடன்படவில்லை. இவை தெளிவாகக் காட்டுவதாவது: நமது தேர்ச்சி நயமின்மை குறித்து (சிந்திக்கும் ஒவ்வொருவரையும் போலவே) மலவே) B-V அலுத்துக் கொண்டாலும் இந்த சகிக்கவொண்ணாத நிலைமையிலிருந்து மீளும் வழியை அவரால் கண்டு கொள்ள முடியவில்லை. காரணம்,  ”பொருளாதாரவாதம்’ அவரை அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கிறது.  உண்மை என்னவென்றால், “இலட்சியத்துக்கு”த் தகுதியுள்ள மிகப் பல நபர்களைச் சமுதாயம் உண்டாக்கித் தருகிறது. நாம்தான் அவர்கள் அனைவரையும் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இருக்கிறோம்.

இவ்விசயத்தில் நம் இயக்கத்தின் நெருக்கடியான, பரிணமிப்பு நிலைக்குரிய கட்டத்தைப் பின்வருமாறு வரையறுக்கலாம். அதாவது, ஊழியர்களே இல்லை – எனினும் ஊழியர்கள் திரள் திரளாக இருக்கவே செய்கிறார்கள். ஊழியர்கள் திரள் திரளாக இருக்கக் காரணம், ஆண்டு தோறும் தொழிலாளி வர்க்கமும் மேன்மேலும் வேறுபட்ட சமுதாயப் பிரிவுகளும் தம்மிடையேயிருந்து அதிகரித்துவரும் எண்ணிக்கையில் அதிருப்தியடைந்த நபர்களை உண்டாக்கியவாறு இருக்கிறது. இவர்கள் கண்டனம் தெரிவிக்க விரும்புகிறார்கள், எதேச்சதிகார ஆட்சி முறையை எதிர்த்து நடக்கிற போராட்டத்தில் தம்மாலான உதவியனைத்தும் அளித்திடத் தயாராயிருக்கிறார்கள். இந்த எதேச்சாதிகார ஆட்சிமுறையைச் சகிக்க முடியாது என்பதை எல்லோரும் அங்கீகரிக்கவில்லையாயினும் மேன்மேலும் அதிகமான மக்கள் திரள் தீவிரமாக உள்ளூர உணர்ந்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் நம்மிடம் ஊழியர்கள் இல்லாதிருக்கக் காரணம், மிகமிக அற்பமான சக்திகளையும் உள்ளிட்ட எல்லாச் சக்திகளையும் பயன்படுத்தும் வகையில் விரிவாயும், அதேநேரத்தில் சமச்சீராகவும், இசைவாகவும் வேலையை ஒழுங்குபடுத்திச் சித்தம் செய்ய திறமையுள்ள தலைவர்கள், அரசியல் தலைவர்கள், ஆற்றல் மக்க அமைப்பாளர்கள் நம்மிடம் இல்லை. ”புரட்சிகரமான அமைப்புகளின் வளர்ச்சியும், பெருக்கமும்” தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பின்னடைந்திருப்பது மட்டுமல்ல (இதை    B-v கூட ஒப்புக் கொள்கிறார்), எல்லா மக்கட் பிரிவுகளிடையேயுமுள்ள பொதுவான ஜனநாயக இயக்கத்தின் வளர்ச்சிக்கும் பின்னடைந்திருக்கிறது. (தமது முடிவுக்கு இணைப்பாக உள்ளதாக B-V இதைப் பெரும்பாலும் கருதக்கூடும் என்று போகிற போக்கில் சொல்லிவைப்போம்).

படிக்க :
♦ பாட்டாளி வர்க்கமும் பாட்டாளி வர்க்கக் கட்சியும் ! | ஜே. வி. ஸ்டாலின்
♦ லெனின் முன் வைத்த புதுப்பாணியிலான கட்சி !

இயக்கத்தின் தன்னியல்பான அடிப்படையின் விரிவுடன் ஒப்பிடுகையில் புரட்சி வேலையின் செயல்பரப்பு மிகக் குறுகியதாக உள்ளது. “முதலாளிகளுக்கும், அரசாங்கத்துக்கும் எதிரான பொருளாதாரப் போராட்டம்” எனும் படுமோசான தத்துவம் இதை வேலிபோட்டு மிகவும் குறுக்கிவிட்டுள்ளது. ஆனால், தற்சமயம் அரசியல் கிளர்ச்சியாளர்கள் மட்டுமல்லாமல் சமூக – ஜனநாயகவாத அமைப்பாளர்களும் “மக்களைச் சேர்ந்த எல்லா வர்க்கங்களிடையேயும் சென்று” தீரவேண்டும்1*.

சமூக ஜனநாயகவாதிகள் தம் அமைப்புத்துறை வேலையைச் சேர்ந்த ஆயிரத்தொன்று சிறுசிறு செயற்கூறுகளை மிகவும் வேறுபட்ட வர்க்கங்களின் தனித்தனி பிரதிநிதிகளிடையே வினியோகிக்க முடிகிறதைப் பற்றி ஒரு நடைமுறை ஊழியனுக்கும் ஐயமிராது. நம் தொழில் நுணுக்கத்தின் மிக மோசமான குறைபாடுகளில் தனித் தேர்ச்சியின்மையும் ஒன்றாகும். இதைப் பற்றி B-V நியாயமாகவே கசப்புடன் குறைப்பட்டுக் கொள்கிறார்.  நம் பொது இலட்சியப்பணியில் ஒவ்வொரு தனித்தனி “செயற்கூறும்” எவ்வளவுக்கெவ்வளவு சிறியதாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அப்படிப்பட்ட செயற்கூறுகளைச் செய்து முடிக்கத் திறமையுள்ள நபர்கள் அதிகமாகக் கிடைப்பார்கள் (இவர்களில் பெரும்பாலோர் முழுநேரப் புரட்சியாளர்களாகும் திறமை சிறிதேனும் இராதவர்களே). அவ்வளவுக்கவ்வளவு போலீசுக்கும் இந்த ”நுணுக்கப் பிரிவு ஊழியர்கள்” அனைவரையும் “பிடிப்பது” அதிகக் கடினமாயிருக்கும். ”பாதுகாப்பிற்காக” அரசாங்கம் செலவழிப்பதை நியாயப்படுத்தும் அளவிற்கு ஒரு சில்லறை விவகாரத்திற்காகக் கைது செய்து “வழக்கு” ஜோடிப்பதும் அதிகக் கடினமாகி விடும்.

நமக்கு உதவி செய்யத் தயாராக இருக்கும் நபர்களின் எண்ணிக்கையைப் பொருத்தவரை, சென்ற ஐந்தாண்டு வாக்கில் நிகழ்ந்துள்ள மாபெரும் மாற்றத்தை முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டிருக்கிறோம். மறுபுறத்தில், இந்தச் சின்னஞ்சிறு கூறுகளை ஒரு முழுமையாக ஒன்றுபடுத்துவதற்கும், இயக்கத்தின் செயற்கூறுகளைப் பிரிக்கும் அதேநேரத்தில் இயக்கத்தையே உடைத்தெறியாமல் இருப்பதற்கும், இந்தச் சின்னஞ்சிறு செயற்கூறுகளை நிறைவேற்றி வரும் நபர்கள் தாங்கள் செய்யும் வேலை அவசியமானதென்றும், முக்கியமானதென்றும் உறுதியான நம்பிக்கை ஊட்டுவதற்கும் (இந்த நம்பிக்கை இல்லையேல் அவர்கள் என்றைக்கும் வேலை செய்யமாட்டார்கள்)2* புடம் போட்ட புரட்சியாளர்களைக் கொண்ட வலுவான அமைப்பு இருத்தல் அவசியம்.

லெனின்இவ்வகை அமைப்பு எவ்வளவுக்கெவ்வளவு இரகசியமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு மேலாகக் கட்சியின் மீதுள்ள நம்பிக்கை பலமாகவும். பரவலாகவும் இருக்கும். போர்க்காலத்தில், நம் சொந்த இராணுவம் தன் பலத்தில் நம்பிக்கைக் கொள்ளச் செய்வது மட்டுமின்றி அந்த பலத்தைப் பற்றி எதிரிக்கும், எல்லா நடுநிலைச் சக்திகளுக்கும் உறுதியாக உணர்த்துவதும் மிக மிக முக்கியம். நேசமுள்ள நடுநிலை சில சமயம் விவகாரத்தையே தீர்மானிக்கக் கூடியதாய் இருக்கும்; இதை நாம் அறிவோம்.

உறுதியான தத்துவார்த்த அடிப்படையில் கட்டப்பட்டும், சமூக-ஜனநாயகவாதப் பத்திரிக்கை ஒன்று வைத்துக் கொண்டும் இருக்கிற இவ்வகை அமைப்பு இருக்குமேயானால், இயக்கத்தின்பால் ஈர்க்கப்படும் எண்ணற்ற ”அந்நிய நபர்கள்” இயக்கத்தைத் தடம் புரளச் செய்வார்கள் எனும் பயம் நமக்கு ஏற்படக் காரணமிராது. (மாறாக, தேர்ச்சி நயமின்மை நிலவும் இந்தக் காலத்திலேதான் பல சமூக-ஜனநாயகவாதிகள் “Credo” பால் சாய்வதையும் வெறுமே தங்களைச் சமூக-ஜனநாயகவாதிகள் என்று கற்பனை செய்து கொள்வதையும் காண்கிறோம்.) சுருங்கச் சொன்னால், தனித் தேர்ச்சி மையப்படுத்தலின் அவசியத்தை முன்னுணர்கிறது. அதே நேரத்தில் அதை நிச்சயமாகக் கோருகிறது.

குறிப்புகள் :

1*  இப்படித்தான், சந்தேகமின்றி அண்மையில் இராணுவ சேவை புரிகிற நபர்களிடையே ஜனநாயக உணர்ச்சி மீண்டும் தோன்றியுள்ளதைக் காண்கிறோம்; தொழிலாளிகள், மாணவர்கள் போன்ற “பகைவர்களுடன்” முன்னைவிட அடிக்கடி நடக்கிற தெருப்போராட்டங்களினால் ஓரளவுக்கு ஏற்பட்ட விளைவு இது. நம்மிடமுள்ள சக்திகள் இடங்கொடுக்கும் அளவுக்கு விரைவிலே நாம் படைவீரர்களிடையேயும், அதிகாரிகளிடையேயும் கிளர்ச்சியும், பிரச்சாரமும் செய்வதிலும், நம் கட்சியுடன் இணைப்புள்ள “இராணுவ அமைப்புகளைப்” படைப்பதிலும் தவறாமல் மிகத் தீவிரமாகக் கவனம் செலுத்தவேண்டும்.

 2* ஒரு தொழிற்சாலைக் கண்காணிப்பாளரைப் பற்றி ஒரு தோழர் ஒரு சமயம் சொன்னது என் நினைவுக்கு வருகிறது. அந்தக் கண்காணிப்பாளர் சமூக-ஜனநாயகவாதிகளுக்கு உதவ விரும்பினார். உதவவும் செய்தார். ஆனால் தான் கொடுக்கும் “தகவல்” பொருத்தமான புரட்சி மைய அமைப்பிடம் போய்ச் சேர்ந்ததா? எந்த அளவுக்கு உண்மையிலே தன் உதவி தேவைப்படுகிறது? தன் அற்பசொற்பமான சேவைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்குச் சாத்தியப்பாடுகள் என்ன? என்பது பற்றித் தனக்கு ஒன்றுமே தெரியவில்லை என்று கசப்புடன் குறை தெரிவித்தார்.

இதுபோன்ற பல உதாரணங்களை ஒவ்வொரு நடைமுறை ஊழியரும் கொடுக்க முடியும் என்பது உண்மை . நமது பக்குவமின்மையால் நாம் துணைச் சக்திகளை இழந்ததை இவை காட்டுகின்றன. இந்தச் சேவை ஒவ்வொன்றும் தன்னளவில் ”சிறியது’ ஆயினும் மொத்தத்தில் பார்க்கையில் விலைமதிக்கொணாதது. தொழிற்சாலைகளிலுள்ள அலுவலகப் பணியாளர்களும் அலுவலர்களும் மட்டுமல்லாமல், அஞ்சல், இரயில்வே, தீர்வைத் துறைகளிலும், பிரபு வம்சத்தினர், பாதிரிமார் இடையேயும், போலீசு, அரசவைத் துறைகளையும் உள்ளிட்ட எல்லா வாழ்க்கைத் துறைகளிலும் அலுவலகப் பணியாளர்களும், அலுவலர்களும் நமக்கு இந்தச் சிறிய சேவைகளை அளிக்க முடியும்; அளிப்பார்கள்!

நம்மிடம் உண்மையான கட்சி இருந்தால், புரட்சியாளர்களைக் கொண்ட உண்மையான செயல்துடிப்புள்ள அமைப்பு இருந்தால், இந்தத் துணையாட்கள்” ஒவ்வொருவரிடமும் தகுதிக்கு அப்பாற்பட்ட காரியங்களைச் செய்யக் கொடுக்கமாட்டோம்; நம் “சட்டவிரோத நிலையின்” மையத்திற்கு எப்போதும் அவர்களைக் கொண்டுவர துடிக்க மாட்டோம். மாறாக, அவர்களைப் பத்திரமாகச் சேமித்து வைப்போம். குறிப்பாக இப்படிப்பட்ட வேலைகளுக்கென்று நபர்களைப் பயிற்றுவிக்கவும் செய்வோம். ”குறுகியகால” புரட்சியாளர்களாக இருப்பதைவிட ஏதாவது அதிகாரபூர்வமான பதவியை வகித்துவரும் நிலையில் பல மாணவர்கள் உதவியாளர்களாக எவ்வளவோ அதிகமாகச் சேவை செய்யக் கூடியவர்களாக இருக்க முடியும். எனினும், உறுதியாக நிலை நாட்டப்பட்டுத் தீவிரமாகப் பணியாற்றும் சக்திகளைக் கொண்டு இருக்கிற அமைப்புக்கு மட்டுமே இப்படிப்பட்ட செயல்தந்திரங்களைச் செயல்படுத்தும் உரிமையிருக்கும்.

(தொடரும்)

நூல் : என்ன செய்ய வேண்டும்?
ஆசிரியர் : லெனின்
பக்கம் : 312
விலை : 180.00
வெளியீடு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிடைக்குமிடம் : கீழைக்காற்று (73959 37703)

நீட் தேர்வை ரத்து செய் ! திருச்சி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

ழை மாணவர்களின் கல்வியை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய் !
மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய் !
தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றி நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்காதே !

நீட் தேர்வின் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். நீட் தேர்வு என்பது நவீன கால மனுநீதியே என்பதை அம்பலப்படுத்தும் வகையில், இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தட்சணையாக ஏகலைவனின் கட்டை விரலை துரோணாச்சாரி வெட்டிக் கேட்டு அவன் திறனை முடக்கியது போல, இன்று கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை வெட்டி எறியவே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. அப்படி தமது மருத்துவக் கனவு வெட்டியெறியப்பட்டதன் காரணமாகவே பல மாணவர்கள் மனமொடிந்து தற்கொலையை நோக்கிச் செல்கின்றன. நவீன மனுநீதியான இந்த நீட் தேர்வை உடனடியாக தடுத்து நிறுத்தாவிடில் இன்னும் பல உயிர்களை நாம் இழக்க வேண்டிய சூழலே ஏற்படும்.

நீட் தற்கொலைகளுக்குக் காரணமான மத்திய மாநில அரசுகளின் இந்த அராஜகப் போக்கைக் கண்டித்து நீட் தேர்வை முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி மக்கள் அதிகாரம் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் தலைமையில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா மற்றும் ம.க.இ.க புரட்சிகர கலைக் குழுவைச் சேர்ந்த தோழர் லதா, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தோழர் ப்ரீத்திவ், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தோழர் சுந்தர்ராஜ் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் கமலக்கண்ணன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் தோழர் புதியவன், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தோழர் கனகராசு, மக்கள் உரிமை மீட்பு இயக்கத்தின் நிறுவனர் தோழர் பஷீர், மக்கள் உரிமைக் கூட்டணி, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஐயா சின்னதுரை, தமிழ் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் ரமணா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டப் பொருளாளர் தோழர் சந்தான மொழி, ரெட் பிளாக் கட்சியின் தோழர் ஏசி ராமலிங்கம், மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர் ராஜா, ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு அமைப்பின் தோழர்கள், நண்பர்கள் பெருந்திரளாகக் கூடி திருச்சியில் இன்று 13.09.2020 காலை 11.30 மணியளவில் பாலக்கரை பிரபாத் தியேட்டர் அருகில் ஆர்ப்பாட்டம் செய்து மறியலில் ஈடுபட்டனர்.

பிறகு தோழர்கள் அனைவரும் நீட் தேர்வின் அபாயத்தை விளக்கிப் பேசினார்கள். நீட் தேர்வுக்கு முடிவு கட்டும் வரை தமிழகம் முழுவதும் எமது அமைப்புகள் மற்றும் முற்போக்கு,ஜனநாயக அமைப்புகளின் போராட்டம் தொடரும் என அறைகூவல் விடுத்தனர். இறுதியாக தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்கு வந்திருந்த அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
திருச்சி – 94454 75157

சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் !

மார்ட்டோவின் கருத்துப்படி, நமது கட்சி என்பது நமது கட்சித்திட்டம் மற்றும் இன்ன பிறவற்றை ஏற்றுக் கொண்ட தனிப்பட்ட ”சமூக-ஜனநாயகவாதிகள்” மற்றும் உள்ளூர் அமைப்புகளின் கதம்பத் திரளே தவிர அது ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பு அல்ல என்பது தெளிவாகிறது. ஆனால் நமது கட்சி ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பாக இல்லையென்றால் அது ஒரு கோட்டையாகத் திகழ முடியாது.

அதாவது கட்சியின் கதவுகள் சோதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் திறந்து அனுமதி வழங்காது. கட்சி என்பது ஒரு கோட்டையாக இல்லாமல் கட்சி மீது அனுதாபம் உள்ள ஒவ்வொரு அனுதாபியும் சுதந்திரமாகக் கலந்து கொள்ளும் விருந்துக் கூடமாக இருக்க வேண்டும் என்பதையே மார்ட்டோவ் சூத்திரம் தெளிவுபடுத்துகிறது. ஒரு சிறு அறிவு, அதற்கு இணையான அளவு அனுதாபம், கொஞ்சம் நிதி ஆதரவு ஆகிய இவை உங்களிடம் இருந்தால் – உங்களை ஒரு கட்சி உறுப்பினர் என்று கணக்கில் எடுத்துக்கொள்ள முழு உரிமையும் உள்ளது.

படிக்க:
♦ தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !
♦ நூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்

பீதியுற்று இருக்கும் “கட்சி உறுப்பினர்களுக்கு” மார்ட்டோவ் அவர்கள் உற்சாகம் தருவதற்கு – நமது கோட்பாடுகளைக் கவனிக்காதீர்கள் என்று கூச்சலிடுகிறார். கட்சி உறுப்பினர்கள் என்பவர்கள் கட்சி அமைப்புகள் ஏதாவது ஒன்றில் இருந்து கொண்டு கட்சியின் நோக்கங்களுக்குத் தனது நோக்கத்தை கீழ்ப்படுத்த வேண்டும் என்று சொல்லும் நபர்களை கவனிக்காதீர்கள் என்கிறார்.

முதல் முறையாக இந்நிபந்தனைகளை ஒரு மனிதன் ஏற்பது சிரமமானதாகும்; கட்சியின் நோக்கங்களுக்கு ஒருவரது நோக்கத்தை கீழ்ப்படுத்துவது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல! மேலும், இரண்டாவதாக, நான் எனது விளக்கத்தில் ஏற்கெனவே கூறியபடி, இப்படியெல்லாம் சொல்லுவோரின் கருத்து தவறானது என்ற காரணத்தால் கனவான்களே நீங்கள் விருந்து கூடத்துக்கு வாரீர் என்று மார்ட்டோவ் கூக்குரலிடுகிறார்.! சால பேராசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கட்சியின் நோக்கங்களுக்குத் தமது நோக்கத்தைக் கீழ்ப்படுத்த விரும்பாததற்கு வருந்துபவராக மார்ட்டோவ் தோன்றுகிறார்.

எனவேதான் அவர் நமது கட்சிக் கோட்டையில் ஓர் உடைப்பை உருவாக்கி அதன் வழியாக இந்த மேன்மைமிகு கனவான்களை கட்சிக்குள் கடத்திக் கொண்டுவர முயற்சிக்கிறார். பாட்டாளி வர்க்கத்தினரின் வர்க்க உணர்வின் மீது ஆயிரக்கணக்கான எதிரிகள் தாக்குதல் தொடுக்கும் இச்சமயத்தில்தான் அவர் கட்சியின் கதவுகளை சந்தர்ப்பவாதத்துக்குத் திறந்து வைக்கிறார்!

ஆனால் அதுவே முழுமை அல்ல. மார்ட்டோவின் நம்பகமற்ற சூத்திரமானது சந்தர்ப்பவாதம் நமது கட்சிக்குள் மற்றொரு பக்கத்தில் இருந்து எழுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளதையே இங்கு நாம் குறித்துக் கொள்ள வேண்டும்.

நாம் அறிந்தவாறு, மார்ட்டோவின் சூத்திரமானது, கட்சித் திட்டத்தை ஏற்பது பற்றி மட்டுமே விவரிக்கிறது, செயலுத்திகள் மற்றும் அமைப்பு விதிகள் பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை. ஆயினும், திட்டத்தைப் பற்றிய ஒன்றுபட்ட நிலைப்பாடுகளை விட அமைப்பு விதிகள் மற்றும் செயலுத்தி நிலைப்பாடுகளின் ஒற்றுமை, என்பன தலையாயவை அல்ல என்று சொல்ல முடியாது. தோழர் லெனினின் சூத்திரத்தில் கூட இதைப்பற்றி ஒன்றும் சொல்லப்பட வில்லை என்று கூட நம்மிடம் சொல்வார்கள்.

உண்மைதான், ஆனால் தோழர் லெனினின் சூத்திரத்தில் அதைப்பற்றி சொல்வதற்குத் தேவை எதுவும் இல்லை. கட்சி அமைப்பு ஒன்றில் செயல்படும் ஒரு நபர் கட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, கட்சியுடன் ஒத்திசைந்து போராடும் போது கட்சியின் செயலுத்திகள் மற்றும் அமைப்பு விதிகளை அன்றி வேறு எந்த செயலுத்திகளையும், அமைப்பு விதிகளையும் கடைபிடிக்க முடியாது என்பது வெளிப்படையானது இல்லையா? ஆனால், கட்சித் திட்டத்தை ஏற்றுக் கொண்ட “ஒரு கட்சி உறுப்பினர்” மறுபுறம் ‘கட்சி அமைப்பு’ எதிலும் இணைந்து இல்லாதபோது நாம் என்ன சொல்லமுடியும்?

இவ்வாறான ஒரு ”உறுப்பினரின் செயலுத்திகளும், அமைப்பு விதிகளும் கட்சி வகுத்தபடிதான் இருக்குமேயன்றி வேறு வகையில் இருக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம் உள்ளது? மார்ட்டோவின் சூத்திரம் இதைத்தான் விளக்கத் தவறுகிறது! மார்ட்டோவ் சூத்திரத்தின் விளைவால் நமக்கு விந்தையான ஒரு ”கட்சி” கிடைக்கிறது, அதன் ‘உறுப்பினர்கள் அதே திட்டத்தை ஏற்றுக் கொண்டிருப்பார்கள் (அதுவும் கேள்விக்குரியதே!) ஆனால் தமது செயலுத்தி மற்றும் அமைப்பு விதிகள் தொடர்பான கொள்கைகளில் வேறுபட்டிருப்பார்கள் என்னே ஒரு முன்மாதிரியான வகை! எந்த வகையில் நமது கட்சி ஒரு விருந்து கூடத்திலிருந்து வேறுபட்டு உள்ளது?

நாம் கேட்க விரும்பும் ஒரே கேள்வி: இரண்டாவது கட்சிப் பேராயம் நம்மிடம் ஒப்படைத்த சித்தாந்த மத்தியத்துவத்தையும் நடைமுறை மத்தியத்துவத்தையும் நாம் என்ன செய்வது? மார்ட்டோவின் சூத்திரத்தில் இருந்து அது முற்றிலும் முரண்பட்ட நிலையில் உள்ளதையும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும். ஒருவேளை எதைத் தாக்கியெறிவது என்ற வாய்ப்பு வழங்கப்படுமெனில் ஐயமின்றி மார்ட்டோவின் சூத்திரத்தை தூக்கியெறிய வேண்டும் என்பதே மிகச் சரியானதாக இருக்கும்.

படிக்க:
♦ நூல் அறிமுகம் : அராஜகவாதமா ? சோசலிசமா ? | தோழர் ஸ்டாலின்
♦ பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்த மார்க்சிய மூல நூல்கள் | அறிமுகம்

அந்த அளவிற்கு தோழர் லெனினின் சூத்திரத்துக்கு எதிராக மார்ட்டோவின் சூத்திரம் முட்டாள்தனமானதாக உள்ளது என்கிறோம்!

மார்ட்டோவின் சூத்திரத்தை ஏற்று, முடிவு எடுத்து இரண்டாவது கட்சிப் பேராயம் மாபெரும் தவறிழைத்து விட்டதாகவே நாங்கள் கருதுகிறோம். மூன்றாவது கட்சிப் பேராயமானது இத்தவறை சரிசெய்யும் வகையில் தோழர் லெனினின் சூத்திரத்தை ஏற்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மீண்டும் ஒருமுறை சுருக்கமாகச் சொல்கிறோம்: பாட்டாளி வர்க்கப் படை அரங்கில் நுழைந்துவிட்டது. ஒவ்வொரு இராணுவமும் தனக்கான முன்னணிப்படையைப் பெற்றிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இப்பாட்டாளி வர்க்கப் படையும் ஒரு முன்னணிப் படையைப் பெற்றிருக்க வேண்டும். இதனால் ரசிய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சி எனும் பாட்டாளிவர்க்கத் தலைவர்களின் குழு தோன்றுகிறது.

ஓர் உறுதிவாய்ந்த இராணுவத்தின் முன்னணிப் படையாக உள்ள இக்கட்சியானது முதலில் தனக்கானத் திட்டம், செயலுத்திகள் மற்றும் அமைப்புவிதிகளைக் கொண்டு தன்னை ஆயுதபாணியாக்கிக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக இக்கட்சி ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாகவும் திகழ வேண்டும். ரசிய சமூக-ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் என யாரை அழைக்க முடியும்? என்ற கேள்விக்கு: எவர் ஒருவர் இக்கட்சியின் திட்டத்தை ஏற்றுக்கொண்டு, கட்சிக்கு நிதி ஆதரவு வழங்கி, கட்சியின் அமைப்புகள் ஒன்றில் செயல்படுகிறாரோ அவரே கட்சி உறுப்பினர் என்று இக்கட்சி ஒரே விடையை அளிக்க முடியும்.

இந்த ஐயத்துக்கிடமற்ற உண்மையைத்தான் தோழர் லெனின் தனது மிகச்சிறந்த சூத்திரத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

புரோலிடேரியடிஸ் இப்ர்ட்சோலா (பாட்டாளி வர்க்கப் போராட்டம்) எண் 8
ஜனவரி 1, 1905
கையெழுத்திடப்படவில்லை.
ஜார்ஜிய மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

தொடர் கதையாகும் நீட் மரணங்கள் ! மதுரை ஆர்ப்பாட்டம் !

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மதுரையில், நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

கடந்த 12.09.2020 அன்று ஜோதி ஸ்ரீ, ஆதித்யா, மோத்திலால் என 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இந்த கொரோனா நெருக்கடியிலும்
நீட் தேர்வை திட்டமிட்டபடி மத்திய, மாநில அரசும் நடத்துகிறது‌. இதைக் கண்டித்தும் இனிமேலும் நீட் மரணங்கள் நடக்கக்கூடாது நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும், என்றும் நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் திராவிடர் விடுதலைக் கழகம், பெரியார் விடுதலை கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மே17, திராவிடர் கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி, மக்கள் கலை – இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரம், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், போன்ற அனைத்து முற்போக்கு இயக்கங்களும் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் மரணமடைந்த மாணவர்களுக்கு நீதி வேண்டும் என்றும் முழக்கம் எழுப்பப்பட்டது. இந்தப் போராட்டத்தை தடுப்பதற்கு வந்த போலீசாரோடு, வாக்குவாதம் ஏற்பட்ட சூழலில் தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

தகவல்:
நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு,
மதுரை.

தருமபுரி : தோழர்கள் அப்பு பாலன் நினைவேந்தல் !

செப்டம்பர் 12, 2020 தியாகிகள் தினத்தை முன்னிட்டு தருமபுரி நாயக்கன்கொட்டாய் பகுதியில் உள்ள அப்பு, பாலன் சிலைகளுக்கு மாலை அணிவித்து கொடியேற்றி, நினைவேந்தல் கடைபிடிக்கப்பட்டது.

வசந்தத்தின் இடி முழக்கமாக 1967-ம் ஆண்டு இந்தியா முழுவதும் நக்சல்பாரி அரசியல் எழுச்சி பெற்று ஆளும் வர்க்கத்தை அலறச் செய்த சமயத்தில் தமிழகத்தின் நக்சல்பாரி அரசியலைக் கட்டியமைத்தவர்கள் தோழர்கள் அப்புவும் பாலனும் தான்.

தோழர் அப்பு ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் கோவைப் பகுதியின் தொழிற்சங்கத் தலைவராகத் திகழ்ந்தார். நக்சல்பாரி இயக்கம் உருவான போது, தமிழகத்தில் நக்சல்பாரி இயத்திற்குத் தலைமை ஏற்றவர். 1970-ம் ஆண்டு அவரைக் கைது செய்த போலீசால் படுகொலை செய்யப்பட்டார்.

தோழர் பாலன், மார்க்சிய லெனினிய இயக்கத்தை தமிழகத்தில் வீச்சாக எடுத்துச் சென்றவர். தர்மபுரி பகுதியில் மக்களை ஒடுக்கிவந்த நிலக் கிழார்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். 1980-ம் ஆண்டு பாசிச எம்.ஜி.ஆர்.-ன் ஆட்சியில் தமிழக போலீசால் கைது செய்யப்பட்டு செப்டம்பர் 12 அன்று தோழர் பாலனும் படுகொலை செய்யப்பட்டார்.

தோழர்கள் அப்பு, பாலன்

ஆளும்வர்க்கத்தை அச்சத்திற்குள்ளாக்கும் அளவிற்கு மக்கள் செல்வாக்கு கொண்ட நக்சல்பாரி தலைவர்களின் நினைவுநாள் தியாகியர் தினமாக நினைவுகூரப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதியன்று தர்மபுரி நாயக்கன் கொட்டாய் பகுதியில் உள்ள தோழர்கள் அப்பு, பாலன் சிலைக்கு மாலை அணிவித்து நினைவேந்தல் கடைபிடிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நக்சல்பாரி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மக்கள் அதிகாரம் தோழர்கள் பாடியை பாடல் வரிகளின் ஒரு பகுதி..

… சாதிக் கொடுமை பண்ணைக் கொடுமை தலை விரித்தாடிடும்
தருமபுரி வட ஆற்காடு வயல்வெளியும் கிராமமும்..
எங்கள் அப்பு பாலன் பெயரைச் சொன்னால் போதும்..
ஆளும் வர்க்கத்தின் குலை நடுங்கிப் போகும்…

ஆல மரங்கள் சாய்ந்ததடா ..
அழுத கண்கள் சொல்லி மாளதடா..

கோடானுகோடி மக்களுக்காக குருதி சிந்திய தோழர்களே !
வர்க்கப் போராட்ட பாதையிலே மீண்டும் புதைந்திட்ட வித்துக்களே !
வீர வணக்கங்களே ! வீர வணக்கங்களே !

இதில் திரளாக கலந்துகொண்ட மக்கள் அதிகாரம், மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி, இனங்களின் இறையாண்மைக்கான மாணவர் இயக்கம், இ. பொ. க(மாலெ) விடுதலை, இ.பொ.க. (மாலெ), தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி போன்ற அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள், மக்கள் என பலரும் திரளாகக் கலந்துகொண்டனர்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்.

நீதித்துறையை விமர்சிக்க அனைத்து குடிமக்களுக்கும் உரிமை உண்டு !

3

பேச்சு, கருத்துச் சுதந்திரத்துடன் பெரும் மதிப்பை கொண்டவர்களிடையே உற்சாகமான உணர்வு காணப்படுகிறது. இது நமது நாட்டின் ஜனநாயக வரலாற்றில் ‘பிரசாந்த் பூஷண் தருணம்’ என்று அழைக்கப்படுவதால் உந்தப்பட்டதாகும்.

பூஷனுக்கு எதிரான குற்றவியல் அவமதிப்பு குற்றச்சாட்டை உச்சநீதிமன்றத்தால் நியாயப்படுத்த முடியவில்லை என குடிமக்கள் கருதுகின்றனர்.

‘மக்களின் ஆட்சியை, மக்களுக்காக மக்களால்’ நிறுவுவதற்கான அரசியலமைப்பை ‘மக்களாகிய நாம், நமக்குக் கொடுத்தோம்’ என்பதை பெருமையுடன் நினைவு கூர்கிறோம் என்ற உணர்வு இருக்கிறது.

சிறிது நேரம் இடைநிறுத்தி, இந்த காவியப் போருக்கு அப்பாற்பட்ட அடிப்படைகளைப் பார்ப்போம். சிலர் இதை கோலியாத்துக்கு (பெரும் அரக்கனுக்கு) எதிரான டேவிட்டின் (தீரமிகு சிறுவனின்) போர் என்று அழைக்கிறார்கள்.

நான் மரியாதையுடன் அதில் உடன்படவில்லை. பிரஷாந்த் சட்டத் துறையில் ஒரு டேவிட் ஆவார், அவர் நீதிமன்றங்களில் பல போர்களில் தனது உயரத்தையும் சிறப்பையும் நிலைநாட்டியுள்ளார். அவரது பெயர் நாடு முழுவதும் நன்கு அறியப்பட்டதாகும். பேச்சு சுதந்திரத்திற்கான தடை மீது அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் இது அனைத்து குடிமக்களுக்கும் நேரடியாக அதிகாரமாக மொழிபெயர்க்கப்படாது.

நீதிமன்றங்களின் திருப்தியற்ற செயல்பாடுகள் குறித்து தங்கள் கருத்துக்களைக் கூறும் குடிமக்கள் மீது, நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் முடக்க வைக்கும் என்பதை நம்மில் பலர் சரியாக சுட்டிக்காட்டியுள்ளோம்.

பல நாடுகளில், நீதிமன்றங்கள் விமர்சனங்களை முன்னேற்றத்துக்குரியதாக எடுத்துக்கொள்கின்றன; குற்றவியல் அவமதிப்பு அதிகாரங்களை அரிதாகவே பயன்படுத்துகின்றன. 2016-17 ஆம் ஆண்டில், உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் சேர்ந்து 169 வழக்குகளை விசாரித்தன். இங்கிலாந்தில், கடந்த நூற்றாண்டில் ‘நீதிமன்றத்தை அவதூறு செய்வது’ தொடர்பாக ஒரே ஒரு வழக்கு மட்டுமே இருந்தது.

படிக்க:
கட்டுக்கோப்பான கட்சியா ? கதம்பக்கூட்டா ? | ஜே. வி. ஸ்டாலின்
பிரசாந்த் பூஷனையும், டிவிட்டரையும் மிரட்டும் உச்சநீதிமன்றம் !

பிரிவு 2 (சி) குற்றவியல் அவமதிப்பை இவ்வாறு வரையறுக்கிறது :

“(சி) குற்றவியல் அவமதிப்பு என்பது எந்தவொரு விஷயத்தையும் வெளியிடுவது (சொற்களால், பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட, அல்லது சமிக்ஞைகளால், அல்லது புலப்படும் பிரதிநிதித்துவத்தால், அல்லது வேறுவிதமாக) அல்லது வேறு எந்த செயலையும் செய்வது.

(i) எந்தவொரு நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் அவதூறு செய்வது அல்லது அவதூறு செய்ய முனைவது, அல்லது குறைப்பது அல்லது குறைக்க முனைவது; அல்லது

(ii) எந்தவொரு நீதித்துறை நடவடிக்கைகளின் சரியான போக்கில் தப்பெண்ணங்கள் உருவாக்குவது, அல்லது தலையிட முனைவது; அல்லது

(iii) வேறு எந்த வகையிலும் நீதியின் நிர்வாகத்தில் தலையிடுவது அல்லது தலையிட முனைவது, அல்லது தடுப்பது அல்லது தடுக்க முனைவது ”

அவமதிப்பு சட்டத்தின் பிரிவு 2 (சி) 2018 ஆம் ஆண்டில் “நீதிமன்றத்தின் அவமதிப்பு என நீதிமன்றத்தின் தீர்ப்புகள் / தீர்ப்பை வேண்டுமென்றே கீழ்ப்படியாமை” என்பதற்கு மட்டுமே கட்டுப்படுத்த வேண்டுமா என இந்திய அரசு, சட்ட ஆணையத்திற்கு ஒரு குறிப்பை வெளியிட்டது என்பது சுவாரஸ்யமானது. துரதிர்ஷ்டவசமாக அதன் அறிக்கை எண் 274 இல் இவ்வாறு கூறி இந்த ஆலோசனையுடன் உடன்படவில்லை:

“மேலும், அவமதிப்பு கூறுகளுக்கு எதிராக தொடர்ந்து தடுப்பு தேவைப்படுவதால்,‘உத்தரவுகளை வேண்டுமென்றே கீழ்ப்படியாமை / நீதிமன்றத்தின் தீர்ப்பை ’மட்டுமே உள்ளடக்குவதற்கான அவமதிப்பு வரம்பைக் குறைப்பது விரும்பத்தகாததாகத் தெரிகிறது. விதி வரம்பில் மிகவும் குறுகிவிட்டால், பாதிப்பிலும் தாக்கம் குறையும். அவமதிப்பு சட்டத்தில் இத்தகைய மாற்றம் நீதிமன்றங்கள், அவற்றின் அதிகாரம் மற்றும் செயல்பாடுகள் மீதான மரியாதை அல்லது பயத்தை குறைக்கக்கூடும்; மேலும், இது நீதிமன்றங்களை வேண்டுமென்றே மறுப்பது, அவதூறு செய்வது போன்ற நிகழ்வுகளில் விரும்பத்தகாத அதிகரிப்புக்கு வழிவகுக்கும் வாய்ப்பும் உள்ளது.”

நிந்தனை என்பதை கடவுள் அல்லது மதத்தை அவமதிப்பதை காட்டுவதாக அனைத்து அகராதிகளும் அங்கீகரிக்கின்றன.

இப்போது மூன்று இணை அரசு ஊழியர்களை ஒரு உதாரணமாகப் பார்ப்போம், குடிமக்களுக்கான தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதற்காக அவர்களுக்குத் தேவையான மரியாதை மற்றும் பாதுகாப்பின் கொள்கையை சோதிப்போம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், காவல்துறை மற்றும் நீதிபதிகளை வைத்து இந்தக் கொள்கைகளை சோதிப்போம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மிக உயர்ந்த நியாயத்தன்மையைக் கொண்டுள்ளனர், ஏனெனில் அவர்கள் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் குடிமக்களின் நேரடி ஒப்புதலுக்கு உட்படுவார்கள். குடிமக்களிடமிருந்து மரியாதைக்குரிய கட்டளையை அவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று வாதிடலாம், அது இல்லாமல் அவர்கள் வடிவமைக்கும் சட்டங்கள் மதிக்கப்படாது. அவை கொள்கைகளை வடிவமைக்கின்றன, இந்த கொள்கைகள் தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு அரசியல் மற்றும் நிதி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவர்கள் கற்பனை செய்யக்கூடிய ஒவ்வொரு இடத்திலும் நேரத்திலும் மக்களை நேரடியாக எதிர்கொள்ள வேண்டும், மேலும் அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அல்லது விமர்சனங்களுக்கு எதிரான பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால், அவர்களால் அவர்களின் செயல்பாடுகளை நிறைவேற்ற முடியாது.

சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய ஒரு காவலரை இப்போது சித்தரிப்போம். அவர் மீண்டும் குடிமக்களை எதிர்கொள்கிறார் – கோபமடைந்த அல்லது மோசமான கும்பல்களும் கூட – சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து அழுக்குகள் மற்றும் கொடூரங்களுக்கிடையில் செயல்பட வேண்டும். குடிமக்கள் அவரை மதிக்கவில்லை என்றால் – அல்லது அவர் ஊழல் நிறைந்தவர் மற்றும் அவரே ஒரு குற்றவாளி என்று நம்பினால் – அவர் தனது சட்ட நடைமுறையாக்கல் செயல்பாட்டை பொதுமக்களுக்கு வழங்க முடியுமா?

மறுபுறம், ஒரு நீதிபதி ஒரு மூடிய மற்றும் பாதுகாக்கப்பட்ட சூழலில் அமர்ந்து சட்டத்தை நிலைநிறுத்துவதாகக் கூறப்படும் நீதியை வழங்குகிறார். அவர் மிகவும் பாதுகாப்பாகவும் பாதுகாப்பான சூழலிலும் இருக்கிறார்; வசதியாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்து தனது செயல்பாடுகளை தனது சொந்த வேகத்தில் செய்கிறார்.

ஆனாலும்கூட, பிரபுக்களுக்கு குற்றவியல் அவமதிப்பு விதிகளின் கதகதப்பான பாதுகாப்பு தேவை என்று வாதிடப்படுகிறது.

சட்ட ஆணைய அறிக்கையை புறக்கணிக்கவும், சட்ட ஆணையத்திற்கு அதன் குறிப்பின்படி சட்டத்தை திருத்தவும் அரசாங்கத்தை நிர்பந்திக்க, குடிமக்கள் இந்த மாபெரும் பிரசாந்த் பூஷண் தருணத்தைப் பயன்படுத்த வேண்டும். இந்த வாய்ப்பை நாம் இழந்தால், சாதாரண குடிமக்களின் பேச்சு சுதந்திரம் தடைசெய்யப்படும்.

சாமானியர்களுக்காகப் பேசும்போது, பிரஷாந்த் பூஷண் போன்ற ஒரு சட்ட ஜாம்பவானுக்கு மட்டுமே நீதித்துறையை விமர்சிக்கும் உரிமை இருக்கும் சூழ்நிலையை நாம் அறியாமல் உருவாக்கியிருப்போம். இது ஜனநாயகத்திற்கான அவரது துணிச்சலான, தைரியமான நிலைப்பாட்டின் பொருத்தமான விளைவாக இருக்காது. குடிமக்களின் உரிமைகளை மேம்படுத்த இந்த தருணத்தை நாம் கைப்பற்ற வேண்டும்.


கட்டுரையாளர் : சைலேஷ் காந்தி, முன்னாள் மத்திய தகவல் ஆணையர்.

மொழிபெயர்ப்பு :  கலைமதி
நன்றி: த வயர்.

நூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்

சீனப் புரட்சி இன்னும் தொடர்கிறதா?

பதில்: “இல்லை ” என்பதே.

ஒவ்வொரு புரட்சிக்கும் ஒரு எதிர்ப்புரட்சி உண்டு, அந்த நேரத்தில் அதனை இடதுசாரியிடமிருந்து வலதுசாரி கைப்பற்றுகிறது. புதிய கண்டுபிடிப்பாளர்கள், பழமைவாதிகளிடம் தோற்கிறார்கள், புரட்சி மறுநிர்மாணத்துக்கு வழி விடுகிறது. சீனாவில் எதிர்ப்புரட்சி 1978-ல் பதினோறாவது மத்தியக் குழுவின் மூன்றாவது கட்டத்தில் நிகழ்ந்தது. அதில் டெங் சியாவோ பிங்கும் லியூ கோஷ்டியில் தப்பித்த மற்றவர்களும் ஆதிக்கம் செலுத்திக் கொள்கைகளை மாற்றி “சீர்திருத்தத்தைத்” துவங்கினர். இது உழைக்கும் வர்க்க அதிகாரத்திலிருந்து முதலாளித்துவ அதிகாரத்துக்கும், உழைக்கும் வர்க்க அரசியலிலிருந்து முதலாளித்துவ அரசியலுக்கும், சோசலிசப் பாதையிலிருந்து முதலாளித்துவப் பாதைக்கும் மாறுவதை அடையாளப்படுத்தியது. அந்தக் கட்டத்தில் சீனா தனது வண்ணத்தை மாற்றிக் கொண்டது. அப்போதிலிருந்து புதிய தலைவர்கள் சீன மக்கள் முப்பது ஆண்டுகளாக கடும் முயற்சியால் கட்டிய சோசலிசக் கட்டுமானத்தையும், சோசலிசப் பொருளாதார அடிப்படையையும் கலைக்கத் துவங்கினார்கள்.

ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் அதிகாரத்தில்தானே இருந்ததென நீங்கள் கேட்கலாம்.

உண்மைதான். ஆனால் 1949-ல் சோசலிசத்தைக் கட்டுவதற்காக முன்வந்த அதே கட்சியல்ல அது. மேலும் குறிப்பாகக் கூறினால், 1949-ல் சோசலிசத்தைக் கட்ட முன்வந்த அதே தலைவர்களால் கட்சி தலைமை தாங்கப்படவில்லை.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் ஒரே தலைமையுடன் இருந்ததில்லை. ஜனநாயகப் புரட்சியானது அனைத்து முற்போக்கு சக்திகளையும் இணைத்தது – ஏராளமான விவசாயிகளையும், தொழிலாளர்களையும் இணைத்தது மட்டுமல்ல, பல தேசிய முதலாளிகள் (கோமின்டாங்கில் ஆதிக்கம் செலுத்திய அதிகாரிகளுடனோ, நிலப்பிரபுக்களுடனோ தொடர்பற்ற முதலாளிகள்) பெரும்பாலான அறிவுஜீவிகள், பூர்ஷ்வாக்கள் பக்கம் அதிகம் சாய்ந்தோரையும் கூட இணைத்தது. இந்தக் குழுக்களும், வர்க்கங்களும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக அணி திரண்டனர். அவர்களில் பலர் தனி நபர்கள் என்ற முறையில் கட்சியில் இணைந்தனர். தீவிரமான நிலையிலிருந்த தேசப்போரைத் தொடர்ந்த உள்நாட்டுப் போர்க் காலத்தில், சீனாவிலிருந்து ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களை விரட்டவும், கிராமப்புறத்தில் நிலப்பிரபுக்களிடமிருந்து நிலங்களைக் கைப்பற்றவுமான கேள்விகளில் மாவோவால் ஒரு ஒத்தக் கருத்தை எட்ட முடிந்தது. ஆனால் பணிகள் வெற்றி பெற்றதும், ஒத்தக் கருத்தானது அந்த வெற்றி தகரும் வாய்ப்பை உருவாக்கியது.

எங்கு வழி தவறியது என்பதைப் புரிந்து கொள்ள சிறிது வரலாற்றைப் பார்க்க வேண்டியுள்ளது.

மாவோ சீனப் புரட்சியின் முதல் கட்டத்தை ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை ஒழித்து பல்வேறு தேசிய பூர்ஷ்வாக்களின் அதிகாரத்தைக் கொண்டு வந்த பழைய ஜனநாய்கப் புரட்சிகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக புதிய ஜனநாயகம் என்றழைத்தார். இருபதாம் நூற்றாண்டில் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்காவின் குறைவான வளர்ச்சி பெற்ற நாடுகள் ஏகாதிபத்திய சக்திகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு ஜனநாயகமோ, சோசலிசமோ, முதலாளித்துவமோ, பாட்டாளி வர்க்கமோ, எந்தப் புரட்சியையும் சகித்துக் கொள்ளாததால் ‘புதிய’ என்பது தேவையென மாவோ கூறினார். சீனாவின் தேசிய முதலாளிகள் ஏகாதிபத்திய விரோதிகளாக இருந்தாலும், மிகவும் பலவீனமாகவும், ஊசலாட்டக்காரர்களாகவும், மக்கள் எழுச்சிமீது பயம் கொண்டவர்களாகவும் இருந்ததை வரலாறு காட்டுகிறது. அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் வலுவுடைய விவசாயிகளுக்கு ஆயுதமளிப்பதைப் பற்றிச் சொல்லவே வேண்டாம், அது மக்களைத் திரட்டக்கூட பயந்தது.

எனவே, உள்ளீடாக புரட்சிகரத் தலைமை தவறுதலாக தானாகவே கம்யூனிஸ்ட் கட்சியிடம் எழுந்தது. சர்வதேச அளவில் அப்போது சோசலிசத்தைக் கட்ட முயன்ற சோவியத் யூனியன் மற்றும் உலகத் தொழிலாளர் இயக்கத்தின் இடதுசாரிப் பிரிவு ஆகியவற்றின் ஆதரவை மட்டுமே பெற்றது. இந்த இணைப்புடன், சீனாவில் ஏகாதிபத்தியத் தலையீட்டைத் தகர்த்தெறிவதும், உள்நாட்டு நிலப்பிரபுத்துவத்தைக் தூக்கியெறிவதும் முதலாளித்துவத்துக்கு வழிவகுக்கவே செய்யாது. வெற்றியுடன் பாட்டாளி வர்க்கம்தான் அதிகாரத்துக்கு வருமே தவிர முதலாளித்துவமல்ல. கம்யூனிஸ்ட் தலைமையின் கீழ் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் முற்போக்கு அறிவுஜீவிகளின் கூட்டுடன் சோசலிசத்தைத்தான் கட்டுவார்கள், முதலாளித்துவத்தையல்ல. மேலும் இத்தகைய ஒரு எதிர்காலம்தான் வெற்றிக்குத் தேவையான கோடிக்கணக்கானோரின் தியாகத்தை ஊக்குவிக்கும். ஒரு முதலாளிக்குப் பதில் இன்னொருவரையும், நிலப்பிரபுக்களுக்குப் பதில் முதலாளிகளையும் அமர்த்தும் நோக்கத்துடனான எந்த நீண்ட போராட்டத்திலும் சீன மக்கள் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள மாட்டார்கள்.

நிகழ்ச்சிகள் நிகழத் துவங்கியதும், ஏறத்தாழ அனைத்து கம்யூனிஸ்டுகளும் இந்தக் கொள்கைக்கு உதட்டளவில் சேவை செய்தாலும், லியூ ஷாவோ -சியையும், டெங் சியாவோ பிங்கையும் சுற்றியிருந்த பெரிய மூத்த தலைவர்கள் பலரும் அதனுடன் உண்மையில் ஒத்துப் போகவில்லை. இந்தக் குழுவினர் நீண்டகால “புதிய ஜனநாயகக்” கலப்புப் பொருளாதாரத்தை ஆதரித்தனர். அப்போது அரசு, கூட்டுறவு, கூட்டு முயற்சிகளுடன் சேர்ந்து தனியார் முதலாளித்துவத்தின் வேகமான வளர்ச்சியை ஊக்கப்படுத்த அனைத்தும் செய்யப்படும். அதே சமயம் விவசாயிகள் தாம் புதிதாகப் பெற்ற தனியார் நிலத்தில் தமது கலப்பைகளுடன் தனி உழவர்களாக அமர்ந்து விடுவார்கள். ஒவ்வொருவருமே அவர்களது இலாபத்துக்கும், நஷ்டத்துக்கும் பொறுப்பாவர்.

படிக்க:
பாட்டாளி வர்க்கமும் பாட்டாளி வர்க்கக் கட்சியும் ! | ஜே. வி. ஸ்டாலின்
விடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் ! | படக்கட்டுரை

“எப்பொழுது ஒவ்வொரு விவசாயியிடமும் ஒரு கழுதை, ஒரு வண்டி, ஒரு கலப்பை இருக்குமோ அப்போதுதான் சோசலிசம் பற்றி பேசும் காலமாக இருக்கும்” என்று லியூ ஷாவோ-சி கூறினார்.

இவ்வாறாக கட்சி இரு கோஷ்டிகளாக, ஒவ்வொன்றும் தனது நிகழ்ச்சி நிரலுடன், உடைந்தது. நிகழ்வுப் போக்கில் எந்தக் கோஷ்டி, எந்த நிகழ்ச்சி நிரல் வெற்றி பெறுமென்பதை நிர்ணயிக்க நீண்ட போர் துவங்கியது. அனைத்து முனைகளிலும் சோசலிச மாற்றங்களை எதிர்கொண்ட முதலாளித்துவ சக்திகள் எதிர்த்தன, இழுத்தடித்தன, கொள்கையைத் திரித்தன, விஷயங்கள் நடப்பதைத் தாமதப்படுத்த முயற்சிகளை திசை திருப்பின. இது வேலை செய்யவில்லை என்றாலும், அவர்கள் கூட்டுமுறைகளையும், மக்கள் இயக்கங்களையும் வெறித்தனமான எல்லைகளுக்கு இட்டுச் சென்றனர். அவற்றை மிகவும் அவமதித்து பலவீனப்படுத்தி அவை உள்ளிருந்தே ஆபத்தை எதிர்நோக்குமாறு செய்தனர். ஒரு தொடர் வடிவமான வலதுசாரித் தடையுடன் மாறி மாறி வந்த இடது தீவிரவாதத் தகர்ப்பும் புதிய உற்பத்தி உறவுகளையோ, எந்தப் புதிய சமூக வடிவமைப்பையோ, அல்லது எந்தப் புதிய கோட்பாட்டையோ உறுதிப்படுத்த – சோசலிசத்தைக் கட்டுபவர்களுக்கு மிகவும் கஷ்டமான நிலையை உண்டாக்கியது. 1949க்குப் பிறகு முப்பதாண்டுகளுக்கு சோசலிசத்தை உருவாக்கவும், வளர்த்தெடுக்கவும், உறுதிப்படுத்தவும் முயன்றவர்கள் பெரும்பாலான சமயங்களில் அதனைத் தடுக்கவும், காட்டிக் கொடுக்கவும், தகர்க்கவும் முயன்ற முதலாளித்துவ மாற்றை முன் வைத்தவர்களின் கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது.

இந்தக் காலம் முழுவதும் சோசலிசத்தைக் கட்டியவர்கள் செய்த பல தவறுகளை எதிர்ப்பாளர்கள் கையிலெடுத்துக் கொண்டு அவர்களை சங்கடப்படுத்தவும் வியப்பிலாழ்த்தவும் செய்தனர். இங்கு வலியுறுத்திக் கூறப்பட வேண்டியது என்னவென்றால், மாவோவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் எந்த நேரத்திலும் எளிதாக முயற்சிகள் எடுக்கவும், அவற்றை ஆழப்படுத்தி உறுதிப்படுத்தவும், தவறுகளிலிருந்து கற்கவும், முன்னேறவும் சுதந்திரம் கிடைக்கவில்லை. ஒவ்வொரு அடியிலும் அவர்கள் பழக்கவழக்கம், பாரம்பரியம் ஆகியவற்றின் தடையை மட்டுமல்ல, பெரிய, வலுவான கட்சிக் கோஷ்டியின் உறுதியான எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டியிருந்தது. “வர்க்கப் போராட்டத்தை எப்போதும் மறக்காதீர்கள்” என்பது மாவோவின் வெற்றுக் கோஷமல்ல. அடிப்படைக் கொள்கை மீது சமூக வர்க்கங்களின் கடுமையான மோதல் இந்தக் காலகட்டம் முழுவதும் பரவியிருந்தது. இன்று வரை அந்தப் போராட்டம் தொடர்கிறது.

மாவோ உயிரோடு இருந்தவரை சோசலிச சக்திகளும், சோசலிச முயற்சியும்தான் பெரும்பாலான சமயங்களில் மேலோங்கியிருந்தன. மாவோவின் இறப்புக்குப் பிறகு ஊழிக்காலம் ஏற்பட்டது. சக்திகளின் சமன்பாடு எதிர்ப்பாளர்கள் பக்கம் சாய்ந்தது. டெங் ஒரு இராணுவக் கலகத்தை நிகழ்த்தி மாவோவின் வாரிசான ஹுவா குவாஃபெங்கைக் கவிழ்த்தார். பிறகு பெரும் பின்னேற்றத்துக்குத் தலைமை தாங்கினார். (பக்கம் : 161 – 165)

நூல் : சீனா: ஒரு முடிவுறாத போர்
ஆசிரியர் : வில்லியம் ஹின்டன்

வெளியீடு : அலைகள் வெளியீட்டகம்
5/1எ. இரண்டாவது தெரு, நடேசன் நகர், இராமாபுரம், சென்னை – 600 089.
கைபேசி: 9841775112

பக்கங்கள்: 212
விலை: ரூ. 150.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

கட்டுக்கோப்பான கட்சியா ? கதம்பக்கூட்டா ? | ஜே. வி. ஸ்டாலின்

பாட்டாளி வர்க்கமும் பாட்டாளி வர்க்கக் கட்சியும் ! – பாகம் 2

முந்தைய பாகத்துக்கு >>

னிப்பட்ட காற்றடைத்த பைகளின் கதம்பக்கூட்டாக இல்லாமல் நமது கட்சியானது தலைவர்களின் அமைப்பாக செயல்பட்டு, தனது மையக்குழு மூலமாகப் பாட்டாளி வர்க்கப் படையை முன்னோக்கி வழிநடத்துமானால் மேலே சொன்ன அனைத்தையும் விளக்கத் தேவையில்லை.

அடுத்ததாக உள்ளதையும் குறித்துக் கொள்ள வேண்டும். இதுநாள் வரை நமது கட்சியானது தன் மீது அனுதாபம் கொண்டுள்ள யாரையும் எடுத்துக்கொள்ள அணியமாக உள்ள ஒரு விருந்தோம்பல் தன்மை வாய்ந்தத் தந்தைவழி ஆதிக்கக் குடும்பத்தை ஒத்திருந்தது. ஆனால் தற்போது நமது கட்சியோ தனது தந்தைவழி ஆதிக்கக் கூறைத் தூக்கியெறிந்து, ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பாகவும், அனைத்து அம்சங்களிலும் ஒரு கோட்டையாகவும் மாறியுள்ளது. இக்கோட்டையின் கதவுகள் மதிப்பானவர்கள் யாரோ அவர்களுக்கு மட்டுமே திறக்கப்படுகிறது என்பது நமக்கு முக்கியக்துவம் வாய்ந்ததாகும்.

பாட்டாளி வர்க்கத்தின், வர்க்க உணர்வை “தொழிற்சங்கவாதம்”, தேசியவாதம், மதவாதம் மற்றும் இதுபோன்றவற்றால் கறைப்படுத்த எதேச்சதிகாரம் முயற்சித்த போது மற்றொரு புறம் தாராளவாத அறிவுஜீவிகள் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்தை ஒழித்துக்கட்டி தமது பாதுகாப்புக்கு உட்பட்ட நிலைக்கு அவர்களைக் கொண்டுவர தொடர்ந்து முயற்சித்தனர். – அச்சமயத்தில் நாம் நமது கட்சியானது ஒரு கோட்டையைப் போல, சோதிக்கப் பட்டவர்களுக்கு மட்டும்தான் தனது கதவைத் திறந்து ஏற்றுக் கொள்ளும் தன்மையுடன் திகழ்ந்தது என்பதை எப்போதும் மறக்காமல் நினைவிற்கொண்டு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

நாம் கட்சி உறுப்பினராவதற்கு இன்றியமையாத இரண்டு நிபந்தனைகளை (கட்சித்திட்டத்தை ஏற்பது மற்றும் கட்சி அமைப்பு ஒன்றில் செயல்படுவது) உறுதிப்படுத்துகிறோம். இதனுடன் மூன்றாவது நிபந்தனையாக அத்தகைய கட்சி உறுப்பினர் கட்சிக்கு நிதி ஆதரவு வழங்க வேண்டும் என்பதைச் சேர்த்துக் கொண்டால், பின்பு கட்சி உறுப்பினர் என்ற பட்டத்துக்கான உரிமையை ஒருவருக்குக் கொடுக்கும் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ததாகிவிடும்.

எனவே, ரசிய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் ஓர் உறுப்பினர் என்பவர் இக்கட்சியின் திட்டத்தை ஏற்றுக் கொள்பவராகவும், கட்சிக்கு நிதி ஆதரவு வழங்குபவராகவும், கட்சி அமைப்பு ஒன்றில் செயல்படுபவராகவும் இருக்க வேண்டும். தோழர் லெனின்(1) எழுதிய கட்சி விதிகளின் முதல் பத்தி இவ்வாறாக வகுக்கப்பட்டுள்ளது.

தோழர் லெனினுடன் மார்ட்டோவ்.

நமது கட்சியானது ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பேயன்றி, தனிநபர்களின் கதம்பக்கூட்டு அல்ல என்ற கொள்கையில் இருந்து இச்சூத்திரம் முழுமையாக முகிழ்த்துள்ளதை நீங்கள் காணலாம். இதில்தான் இச்சூத்திரத்தின் தலை சிறந்தத் தன்மை உள்ளது.

ஆனால் சில தோழர்களோ லெனினின் இச்சூத்திரம் ‘குறுகியதாகவும்’, ‘வசதியற்றதாகவும்’ உள்ளதென்றுச் சொல்லி நிராகரிக்கின்றனர். பின்பு அவர்கள் தாம் முன்மொழியும் சூத்திரம் குறுகியதாகவும் இல்லாமல், வசதியற்றதாகவும் இல்லாமல் சரியானதாக இருக்கும் என்றும் நம்பிக் கொள்ளச் சொல்கின்றனர். நாம் இங்கு ‘மார்ட்டோவ்’(2) அவர்களின் சூத்திரத்தை குறிப்பிடுகிறோம். அதை தற்போது பகுத்தாய்வோம்.

“இரசிய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் உறுப்பினர் என்பவர் அதன் திட்டத்தை ஏற்பவராகவும், கட்சிக்கு நிதி ஆதரவு வழங்குபவராகவும், அதன் அமைப்புகள் ஒன்றின் வழிகாட்டுதலின்கீழ் கட்சிக்கு முறையாகத் தனிப்பட்ட உதவி வழங்குபவராகவும் இருக்க வேண்டும்” என்பதே மார்ட்டோவ் அவர்களின் சூத்திரமாகும். இச்சூத்திரமானது கட்சி உறுப்பினராக இருப்பதற்கான மூன்றாவது அத்தியாவசியமான நிபந்தனையாக இருக்கும், கட்சி உறுப்பினர்கள் கட்சி அமைப்புகள் ஒன்றில் செயல்படவேண்டும் என்பதைத் தவிர்த்துவிட்டு இருப்பதையும் நீங்கள் காணலாம்.

தெளிவானதாகவும் இன்றியமையாததாகவும் உள்ள இந்நிபந்தனையை மார்ட்டோவ் மேம்போக்கானதாகக் கருதுகிறார் என்று தோன்றுகிறது. அவர் தனது சூத்திரத்தில், “கட்சி அமைப்புகள் ஒன்றின் வழிகாட்டுதலின் கீழாகத் தனிப்பட்ட உதவி” என்று தெளிவற்றதாகவும் இரண்டகமாகவும் பொருள்தரும் சொற்களைப் போட்டுள்ளார். எந்த கட்சி அமைப்பிலும் இல்லாமலே ஒருவர் கட்சி உறுப்பினராக இருக்க முடியும், (நிச்சயமாகவே ஓர் அருமையான ‘கட்சிதான்’ ) மேலும் கட்சியின் விருப்பத்துக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்ற எண்ணமும் இன்றி (நிச்சயமாகவே அருமையான “கட்சிக் கட்டுப்பாடுதான்” ) இருக்கலாம் எனத் தோன்றுகிறது. சரிதான். இவ்வாறு கட்சி அமைப்பு எதிலும் இல்லாத நபர்களை, அதிலும் கட்சிக் கட்டுப்பாட்டுக்குப் பணிந்து செல்லும் கட்டுப்பாடு பற்றிய சிந்தனையே இல்லாத நபர்களை கட்சியால் எவ்வாறு “முறையாக” இயக்க முடியும்?

படிக்க:
தேசிய கல்விக் கொள்கை – 2020 : என்னவாகும் உயர்கல்வி ? | இணைய வழிக் கூட்டம்
தொழில்துறைப் புரட்சி | பொருளாதாரம் கற்போம் – 62

மார்ட்டோவ் சூத்திரத்தின் அடிப்படையிலான கட்சி விதிகளின் முதலாவது பத்தியை இதே கேள்விதான் நொறுக்கித்தள்ளுகிறது. லெனினது சூத்திரமோ இதே கேள்விக்கு சிறந்த முறையில் விடையளிக்கிறது. கட்சி உறுப்பினராக ஒருவர் வரவேண்டுமெனில் மூன்றாவதாக தவிர்க்க முடியாத நிபந்தனையாக அவர் கட்சி அமைப்பு ஒன்றில் செயல்பட வேண்டும் என்று தெளிவாகவும் தனிச்சிறப்பான பாணியிலும் வரையறுக்கிறார்.

தெளிவற்றதாகவும் பொருளற்றச் சூத்திரமாகவும் உள்ள “கட்சி அமைப்புகள் ஒன்றின் வழிகாட்டுதல் கீழ் தனிப்பட்ட உதவி” என்ற மார்ட்டோவின் சூத்திரத்தை நாம் அனைவரும் தூக்கியெறிய வேண்டும். இந்நிபந்தனை நீக்கப்பட்ட பின்பு, மார்ட்டோவில் இரு நிபந்தனைகள் மட்டுமே எஞ்சியுள்ளன (திட்டத்தை ஏற்பது மற்றும் நிதி ஆதரவு). ஆனால் ஒவ்வொரு வெற்றுவாய் வீரரும் கட்சித் திட்டத்தை ஏற்றுக் கொண்டு நிதி ஆதரவு வழங்க முடியும் என்பதால் இந்நிபந்தனைகள் தாமே முற்றுமுழுதாக மதிப்பற்றவையாக உள்ளன. ஆனால் அது ஒருவருக்கு சாதாரணமாகக் கட்சி உறுப்பினர் தகுதியை வழங்கிவிடாது.

நாம் இதை ஒரு ‘வசதியான’ சூத்திரம் என்றே சொல்ல வேண்டும்!

கட்சித் திட்டத்தை வெறுமனே ஏற்றுக் கொண்டு உண்மையான கட்சி உறுப்பினர்களால் சும்மா இருக்க முடியாது, ஆனால் அவர்கள் தாம் ஏற்றுக் கொண்ட திட்டத்தை அமல்படுத்தத் தவிர்க்காமல் தீவிர முயற்சியெடுக்க வேண்டும் என்றே நாங்கள் சொல்கிறோம். நீங்கள் மிகவும் கெடுபிடியானவர்களாக உள்ளீர்கள், ஏனெனில் ஒரு கட்சி உறுப்பினர் தான் ஏற்றுக் கொண்ட கட்சித் திட்டத்தை அமல்படுத்துவது ஒன்றும் அவசியமானதல்ல என்றும் அவர் கட்சிக்கு நிதி ஆதரவு வழங்க விருப்பமாக உள்ளதைப் போன்று ஏதோ ஒன்றை செய்கிறார் என்றும் மார்ட்டோவ் விடை அளிக்கிறார். மார்ட்டோவ் சில ‘சமூக-ஜனநாயகவாத’ காற்றடைத்தப் பைகளுக்குப் பரிவு காட்டி, கட்சியின் கதவுகளை அவர்களுக்காக மூட விரும்பாமல் உள்ளதாகக் தோன்றுகிறது.

மேலும் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்றால் போராட்டம் என்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது எனும்போது ஒற்றுமையின்றி போராடுவது சாத்தியமற்றது என்கிறோம். எனவே, ஒவ்வொரு வருங்கால உறுப்பினரும் கட்சி அமைப்பு ஒன்றில் இணைந்து, கட்சியின் நோக்கங்களுடன் தனது நோக்கத்தை ஒன்று கலக்க வேண்டும். இவ்வாறு கட்சியுடன் ஒத்திசைவான முறையில் செயல்பட்டுப் போராடும் பாட்டாளி வர்க்கப்படையை வழிநடத்த வேண்டும். அதாவது, ஒவ்வொரு வருங்கால உறுப்பினரும் ஒரு மையப்படுத்தப்பட்டக் கட்சியின் நன்குக் கட்டியமைக்கப்பட்ட படைப்பிரிவில் தன்னை அமைப்பாக்கிக் கொள்ள வேண்டும். இதற்கு மார்ட்டோவ் இவ்வாறு விடையளிக்கிறார்: நன்கு கட்டியமைக்கபட்ட படைப்பிரிவில் கட்சி உறுப்பினர்கள் அமைப்பாவது மிக அத்தியாவசியமானது இல்லை; தனித்தனியே போராடுவதே போதுமானது.

நாங்கள் கேட்கிறோம், அப்படியென்றால் நமது கட்சி என்பது என்ன? திடீரென்று தோன்றும் தனிநபர்களின் கதம்பக் கூட்டா அல்லது தலைவர்களைக் கொண்ட கட்டுக்கோப்பான அமைப்பா? ஒருவேளை அது தலைவர்களின் அமைப்பாக இருந்தால், அதைச் சாராதவரையும், மேலும், அதன் விளைவாக, அதன் கட்டுப்பாட்டுக்குப் பணிந்து செயல்படுவது தனது கட்டுப்பாடான கடமை என்ற அக்கறையில்லாதவரையும் எவ்வாறு அதன் உறுப்பினராகக் கருத முடியும்? கட்சி என்பது ஒரு அமைப்பு அல்ல, அல்லது அதைவிட, அக்கட்சி என்பது ஓர் அமைப்பாக்கப்படாத அமைப்பு (நிச்சயமாகவே! நேர்த்தியான “மத்தியத்துவம்”) என்று மார்ட்டோவ் விடையளிக்கிறார்!

( தொடரும் )

அடிக்குறிப்புகள் :

(1) லெனின், புரட்சிகர சமூக-ஜனநாயகத்தின் தலைசிறந்த கோட்பாட்டாளரும், நடைமுறைத் தலைவரும் ஆவார்.
(2) மார்ட்டோவ் ‘இஸ்க்ரா’ பத்திரிக்கை ஆசிரியர்களில் ஒருவர்.

***

நூல் : ஜே. வி. ஸ்டாலின் படைப்புகள், தொகுதி ஒன்று
வெளியீடு : அலைகள் வெளியீட்டகம்.
விலை : ரூ. 450/-
கிடைக்குமிடம் :
5/1 ஏ, இரண்டாவது தெரு,
நடேசன் நகர், இராமாபுரம்,
சென்னை – 600 089.
தொடர்பு : 98417 75112.

தேசிய கல்விக் கொள்கை – 2020 : என்னவாகும் உயர்கல்வி ? | இணைய வழிக் கூட்டம்

தேசிய கல்விக் கொள்கை – 2020 : என்னவாகும் உயர்கல்வி ? | இணைய வழிக் கூட்டம்

நாள் : 12.09.2020, சனிக்கிழமை மாலை 4:00 மணி.
Zoom Meeting ID : 853 3799 7969

தலைமை :
பேராசிரியர் வீ. அரசு
மேனாள் தமிழ்த்துறைத் தலைவர்,
ஒருங்கிணைப்பாளர், CCCE, சென்னை.

சிறப்புரை :
திரு. சசிகாந்த் செந்தில்
முன்னாள் IAS அதிகாரி.

தகவல் :
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, சென்னை.
(Coordination Committee for Common Education)
தொடர்புக்கு : 94443 80211 | 94431 59058

பாட்டாளி வர்க்கமும் பாட்டாளி வர்க்கக் கட்சியும் ! | ஜே. வி. ஸ்டாலின்

பாட்டாளி வர்க்கமும் பாட்டாளி வர்க்கக் கட்சியும் !
(கட்சி விதிகளைப் பற்றிய முதல் பத்திக்கு உரியவை)

‘பிரிக்க முடியாத ஒரே ரசியா’ என்று மக்கள் துணிச்சலாகப் பறைசாற்றிய காலம் போய்விட்டது. நீண்டகாலத்துக்கு முன்பே ரசியாவானது பாட்டாளிகளும் முதலாளிகளும் என்று இரு எதிரெதிரான வர்க்கங்களாகப் பிளவுபட்டு விட்டதால் ‘பிரிக்கமுடியாத ஒரே ரசியா’ என்று ஒன்றுமில்லை என்பது ஒரு குழந்தைக்குக்கூட தெரியும். தற்போது இந்த இரு வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டத்தை அச்சாகக் கொண்டே நமது சமகால வாழ்வு சுழல்கிறது என்பது ஒன்றும் யாருக்கும் தெரியாத ரகசியமும் இல்லை.

இருந்தபோதிலும், நம்மால் சமீப காலம் வரை இவை அனைத்தையும் காண்பது கடினமானதாக இருந்தது. தனிப்பட்ட குழுக்கள் மட்டும், நாட்டின் பல பாகங்களிலும் உள்ள தனிப்பட்ட நகரங்களில் போராடியதால், நாம் இதுவரை போராட்ட அரங்கில் தனிப்பட்ட குழுக்களை மட்டும் சந்தித்தோம். எனவேதான் நம்மால் சமீப காலம் வரை இக்காரணத்தினால் இதைக் காண்பது கடினமாக உள்ளது. மேலும் வர்க்கங்களாகப் பாட்டாளிகளும் முதலாளிகளும் உள்ளதை அவ்வளவு எளிதாக உற்றுப்பார்த்து அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் தற்போதோ நகரங்களும் கிராமங்களும், பாட்டாளிகளின் பல்வேறு குழுக்களும் கைகோர்த்து உள்ளார்கள், கூட்டுப் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் வேலை நிறுத்தங்களும் வெடித்து வெளிப்பட்டுள்ளதோடு – நமக்கு முன்பாக இரு ரசியாக்களின், – முதலாளித்துவ ரசியாவுக்கும் பாட்டாளிகளின் ரசியாவுக்கும் இடையிலான போராட்டத்தின் சிறப்பான காட்சி வெளிப்பட்டுள்ளது. போராட்ட அரங்கில் இரு பெரிய இராணுவங்களும் – முதலாளிகளின் இராணுவமும், பாட்டாளிகளின் இராணுவங்களும் – நுழைந்து இருக்கின்றன, நமது சமூக வாழ்வு முழுவதையும் இந்த இரு இராணுவங்களுக்கும் இடையிலான போராட்டம் தழுவியுள்ளது.

தலைவர்களின்றி ஒரு இராணுவம் செயல்பட முடியாது என்ற காரணத்தாலும், ஒவ்வொரு இராணுவத்துக்கும் ஒரு முன்னணிப்படை அதன் முன்பு அணிவகுத்துச் சென்று அதன் பாதையை ஒளியூட்ட வேண்டும் என்ற காரணத்தாலும், இந்த இரு இராணுவங்களுக்கும் ஏற்புடைய தலைவர்களின் குழுக்கள், அதாவது வழக்கமாக அழைக்கப்படும் வகையில் ஏற்புடைய கட்சிகள் தோன்ற வேண்டும் என்பதில் ஐயத்துக்கிடமில்லை.

படிக்க:
தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !
சீர்திருத்தவாதத் தலைவர்களை அம்பலப்படுத்துவது எப்படி ?

இவ்வாறு படத்தில் பின்வருமாறு காட்சி வெளிப்படுகிறது; ஒரு புறத்தில் முதலாளிகளின் இராணுவம் தாராளவாதக் கட்சி தலைமையில் உள்ளது; மறுபுறத்தில் சமூக-ஜனநாயகக் கட்சிய தலைமை தாங்கப்படும் பாட்டாளிகளின் இராணுவம் உள்ளது. ஒவ்வொரு இராணுவமும் தனது வர்க்கப் போராட்டத்தில் சொந்தக் கட்சியால் வழிநடத்தப்படுகிறது. (1)

இவை அனைத்தையும் நாம் பாட்டாளி வர்க்கத்தையும். பாட்டாளி வர்க்கக் கட்சியையும் ஒப்பிடும் தேவைக்காக குறிப்பிடுகிறோம். இவ்வாறு கட்சியின் பொதுவான தனிச்சிறப்புகளை விரிவாகத் தெளிவுபடுத்துகிறோம்.

மேலே சொன்னதில் இருந்து பாட்டாளி வர்க்கக் கட்சியானது தலைவர்களின் போராட்டக்குழுவாக இருப்பது போதிய அளவிற்கு தெளிவாயிருக்கும். தலைவர்களின் போராட்டக்குழுவாக விளங்கும் பாட்டாளி வர்க்கக் கட்சியானது முதலாவதாக, முக்கியத்துவம் வாய்ந்த வகையில் பாட்டாளி வர்க்கத்தினரைவிட உறுப்பினர் எண்ணிக்கையில் மிகவும் குறைவானது, இரண்டாவதாக, பாட்டாளி வர்க்கத்தைவிட அனுபவத்திலும், புரிதலிலும் மேம்பட்டு இருக்க வேண்டும், மூன்றாவதாக, அது ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாக இருக்க வேண்டும்.

முதலாளித்துவ அமைப்புமுறை நிலவும் வரை, தவிர்க்க முடியாதவாறு மக்களிடம் வறுமையும், பின்தங்கிய நிலையும் நிலைபெற்று, பாட்டாளிவர்க்கம் முழுதும் தேவைப்படும் அளவிற்கு வர்க்க உணர்வு பெற முடியாது என்பது எமது கருத்தாகும். எனவே இதன் விளைவாக வர்க்க உணர்வு பெற்ற தலைவர்களின் குழு பாட்டாளி வர்க்கப் படைக்கு சோசலிச உணர்ச்சிப் பெறுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது தெட்டத்தெளிவாக விளங்கும் என்பதால் இதற்கு சான்று தேவையில்லை என்பது எமது கருத்தாகும். போராடும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு தலைமையளிக்க புறப்பட்டுள்ள ஒரு கட்சியானது தனி நபர்களின் கதம்பக்கூட்டாக இல்லாமல், மத்தியத்துவப்பட்ட அமைப்பாக கட்டுக்கோப்பாக இருப்பதன் வாயிலாக அதன் செயல்பாடுகள் ஒரு தனித் திட்டத்திற்கேற்ப இருக்க முடியும் என்பது தெளிவாகும். இவையே நமது கட்சியின் பொதுவான தோற்றம் குறித்த விளக்கமாகும்.

இவற்றை மனத்தில் பதித்துக் கொண்டு நாம் முக்கியமான பிரச்சனைக்கு செல்ல வேண்டும்: நாம் ஒரு கட்சி உறுப்பினர் என்று யாரை அழைக்க முடியும்? இப்பிரச்சனையைத் துல்லியமாகக் கையாளும் வகையில் கட்சி விதிகளின் முதல் பத்தி உள்ளதே, அதுதான் தற்போதைய கட்டுரையின் பொருளாகும். எனவே, இதில் உள்ள கருத்து வேறுபாட்டினைப் பற்றி ஆராய்வோம்.

இரசிய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் உறுப்பினர் என்று நாம் பின்பு யாரை அழைக்க முடியும் – அதாவது கட்சி உறுப்பினரின் கடமைகள் என்ன?

நமது கட்சி ஒரு சமூக – ஜனநாயகக் கட்சியாகும். அவ்வாறெனில் இதற்கு என்று ஒரு சொந்தத் திட்டம் (இயக்கத்தின் உடனடியான மற்றும் இறுதியான இலக்குகள்) அதன் சொந்த செயலுத்திகள் (போராட்ட முறைகள்) மற்றும் அதன் சொந்த அமைப்புக் கொள்கை (அமைப்பு வடிவம்) ஆகியவை இருக்கும் என்பதே இதன் பொருளாகும். திட்டத்தில் ஒற்றுமை, செயலுத்தி ரீதியான பார்வையிலும் அமைப்பு ரீதியான பார்வையிலும் உள்ள ஒற்றுமை ஆகியனவற்றின் அடிப்படையில்தான் நமது கட்சி கட்டியமைக்கப்பட்டிருக்கிறது. நமது கட்சி உறுப்பினர்களை ஒரே மத்தியத்துவப்பட்டக் கட்சியில் ஒன்றுபடுத்துவதற்குத் திட்டம், செயலுத்தி மற்றும் அமைப்பு குறித்த பார்வை ஆகியவற்றால் மட்டுமே முடியும்.

படிக்க:
தொழில்துறைப் புரட்சி | பொருளாதாரம் கற்போம் – 62
லெனினும் கம்யூனிஸ்ட் அகிலமும் !

ஒருவேளை இவற்றில் ஒற்றுமை குலைந்தால், கட்சி சிதறும். எனவே கட்சியின் திட்டம், செயலுத்தி மற்றும் அமைப்பு விதிகளை ஏற்கும் ஒருவரை மட்டுமே கட்சி உறுப்பினர் என்று சொல்லமுடியும். இவற்றைப் போதிய அளவிற்கு கற்று முழுமையாக ஏற்பவரே கட்சியின் அணிகளில் இருக்க முடியும், இவ்வாறு இதன் மூலம் பாட்டாளி வர்க்கப் படைத் தலைவர்களின் அணிவரிசையிலும் இருக்க முடியும்.

ஆனால் ஒரு கட்சி உறுப்பினர் வெறுமனே கட்சியின் திட்டம், செயலுத்திகள் மற்றும் அமைப்பு விதிகளை ஏற்பது மட்டும் போதுமானதா? இவ்வாறான ஒரு நபரை பாட்டாளி வர்க்கப் படையின் ஒரு உண்மையான தலைவர் என்று கருத முடியுமா? நிச்சயமாக இல்லை ! முதலில் கட்சியின் திட்டம், செயலுத்திகள் மற்றும் அமைப்பு உடனடியாக ஏற்றுக் கொள்ளும் காற்றடைத்தப் பைகளைப் போன்ற ஏராளமான நபர்கள் இவ்வுலகில் உள்ளனர் என்பதையும் ஆனால் அவர்களால் காற்றடைத்தப் பைகளாக இருப்பதை தவிர வேறொன்றும் செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் ஒவ்வொருவரும் அறிந்துள்ளனர். ஒரு கட்சி உறுப்பினர் (அதாவது பாட்டாளி வர்க்கப் படைத் தலைவர்) என்று ஒரு காற்றடைத்தப் பையை அழைப்பதே கட்சியின் புனிதத் தன்மையை கெடுக்கும் சொல்லாகும்! மேலும், நமது கட்சி ஒன்றும் தத்துவப் பள்ளியோ அல்லது மதப்பிரிவோ அல்ல. நமது கட்சி போரிடும் கட்சியாக இருக்கிறதல்லவா? எனவே அது அவ்வாறு உள்ளபோது சொல்லளவில் கட்சியின் திட்டம், செயலுத்திகள் மற்றும் அமைப்ப விதிகளை ஏற்பதில் இருந்து அது நிறைவுறாது என்பது தெளிவாகிறதில்லையா? மேலும் அது தனது உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்ட கண்ணோட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஐயத்துக்கு இடமின்றி கோரிக்கை வைக்கும் இல்லையா? எனவே, யாரெல்லாம் நமது கட்சியின் உறுப்பினராக வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்கள் நமது கட்சியின் திட்டம், செயலுத்திகள் மற்றும் அமைப்பு விதிகளை வெறுமனே ஏற்பதை விடுத்து அவற்றை உருப்படியான விளைவு ஏற்படுத்தும் வகையில் அமல்படுத்தத் தொடங்க வேண்டும்.

ஒரு கட்சி உறுப்பினர் கட்சியின் கொள்கைகளை அமல்படுத்துவது என்பதன் பொருள் என்ன? கட்சியின் கொள்கைகளை அவர் எப்போது அமல்படுத்த முடியும்? அவர் ஒட்டுமொத்த கட்சியுடன் அணிவகுத்துச் செல்லும்போது, பாட்டாளி வர்க்கப் படையின் தலைமையில் அவர் போரிடும் போது மட்டுமே அமல்படுத்த முடியும். தனிமையில் உள்ள சிதறுண்ட தனிநபர்களைக்கொண்டு இப்போராட்டத்தை நடத்த முடியுமா? நிச்சயமாக முடியாது! மாறாக, மக்கள் முதலில் ஒன்றுபட்ட அமைப்பான பின்பே களத்திற்குச் செல்கிறார்கள். ஒருவேளை இவ்வாறு நடைபெறாவிடில் அனைத்துப் போராட்டமும் பயனற்றதாகும். ஒரு கட்டுக்கோப்பான அமைப்பில் கட்சி உறுப்பினர்கள் ஒன்றுபடும்போது மட்டுமே அவர்களால் போரிடமுடியும், கட்சியின் கொள்கைகளை அமல்படுத்த முடியும் என்பது தெளிவாகிறது. கட்சி உறுப்பினர்கள் ஒன்றுபடும் அமைப்பானது எந்தளவிற்குக் கட்டுக்கோப்பாக உள்ளதோ, அந்தளவிற்கு அவர்களால் சிறப்பாகப் போரிடமுடியும், மற்றும் இதன் விளைவாக அவர்களால் கட்சியின் திட்டம், செயலுத்திகள் அமைப்புக் கொள்கைகளை மேலும் அதிகமாக அமல்படுத்த முடியும். தனிநபர்களின் கதம்பத் திரள் அல்ல அது ஒரு தலைவர்களின் அமைப்பு என்று நமது கட்சியை எந்தக் காரணமுமின்றி சாதாரணமாக சொல்லப் படவில்லை. மேலும், கட்சியானது தலைவர்களின் அமைப்பாக இருப்பதால் இவ்வமைப்பில் செயல்படுபவர்கள்தான் இக்கட்சியின், இவ்வமைப்பின் உறுப்பினர்களாகக் கருதப்பட முடியும் என்பதோடு இவர்கள் விருப்பங்களைக் கட்சியின் விருப்பங்களோடு இணைப்பதைத் தமது கடமையாகக் கருதவேண்டும் என்பது ஐயத்துக்கிடமில்லாததாகும். மேலும், கட்சி உறுப்பினர்களாகக் கருதப்படுபவர் கட்சியுடன் இசைவாகச் செயல்படவேண்டும் என்பதும் ஐயத்துக்கிடமற்ற உண்மையாகும்.

எனவே, ஒருவர் கட்சி உறுப்பினராக வரவேண்டுமாயின் கட்சித் திட்டம், செயலுத்திகள் மற்றும் அமைப்புக் கொள்கைகளை அமல்படுத்த வேண்டும்; கட்சியின் கொள்கைகளை அமல்படுத்த வேண்டுமாயின் ஒருவர் அதற்காகப் போராட வேண்டும். மேலும் இக்கொள்கைகளுக்காகப் போராடுவதற்கு ஒருவர் கட்சி அமைப்பில் கட்சியுடன் ஒத்திசைந்து வேலை செய்ய வேண்டும். ஒருவர் கட்சி உறுப்பினராக ஆவதற்கு கட்சி அமைப்புகள் ஏதாவது ஒன்றில் இணைந்து செயல்படவேண்டும் என்பது தெளிவாகிறது.(2) கட்சியின் அமைப்புகள் ஒன்றில் நாம் இணையும் போதுதான், நாம் கட்சியின் நலன்களுடன் நமது சொந்த நலன்களை இணைத்தவர்களாவோம். இதன் விளைவாக நாம் பாட்டாளி வர்க்கப் படையின் உண்மையான தலைவர்களாகவும் ஆகிறோம்.

( தொடரும் )

அடிக்குறிப்புகள் :

(1) ரசியாவில் உள்ள இதரக் கட்சிகளை நாம் இங்கு குறிப்பிடவில்லை . ஏனெனில் நாம் விவாதத்தில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் கேள்விகளில் அவற்றைத் தொடர்புப்படுத்த தேவை எழவில்லை.

(2) எப்படி ஒவ்வொரு சிக்கலான உயிரியும் கணக்கற்ற எளிய உயிரிகளால் உருவாகியிருக்கிறதோ, அதைப் போன்றுதான் சிக்கலானதும், பொதுவானதுமாக உள்ள அமைப்பான நமது கட்சியும் எண்ணற்ற மாவட்ட மற்றும் உள்ளூர் அமைப்புகளால் கட்சி அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. அவை யாவும் கட்சிப் போராட்டம் அல்லது மையக்குழுவின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. நீங்கள் பார்த்தவாறு குழுக்களை மட்டும் கட்சி அமைப்புகள் என்று சொல்வதில்லை. இவ்வமைப்புகளின் செயல்பாடுகளுக்கு ஒரு தனித் திட்டத்திற்கேற்ப வழிகாட்டி இயக்குவதற்கு ஒரு மையக்குழு உள்ளது. இதன் மூலமாக இந்த உள்ளூர் கட்சி அமைப்புகள் யாவும் ஒரே, பெரிய மையப்படுத்தப்பட்ட அமைப்பாக உருவாகிறன்றன.

***

நூல் : ஜே. வி. ஸ்டாலின் படைப்புகள், தொகுதி ஒன்று
வெளியீடு : அலைகள் வெளியீட்டகம்.
விலை : ரூ. 450/-
கிடைக்குமிடம் :
5/1 ஏ, இரண்டாவது தெரு,
நடேசன் நகர், இராமாபுரம்,
சென்னை – 600 089.
தொடர்பு : 98417 75112.

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய் ! புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு !! கடலூர் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்

1

டலூரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக மஞ்சக்குப்பம் கார் ஸ்டண்ட் அருகில் 09.09.2020 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்

  • நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்!
  • பல்கலைக்கழக மற்றும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்!
  • புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு புமாஇமு உறுப்பினர் தோழர் பூங்குழலி தலைமை தாங்கினார். பொது நல இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் வெண்புறா குமார் துவக்கவுரையாற்றினார். புமாஇமு உறுப்பினர் தோழர் வெங்கடேசன் மற்றும் புமாஇமு மாவட்ட செயலாளர் தோழர் மணியரசன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். இறுதியாக புமாஇமு தோழர் பால்ராஜ் நன்றியுரையாற்றினார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தோழர் பூங்குழலி தனது தலைமயுரையில், “மருத்துவம் படிப்பதற்கு ஐந்து ஆண்டுகள் ஏற்கனவே இருக்கிறது இதில் வகுப்பு, தேர்வு என்ற அடிப்படையில் இல்லாமல் இறுதி ஆண்டு பயிற்சி எடுத்த பிறகு ஒருவர் மருத்துவர் ஆக முடியும் இவ்வாறு இருக்கையில் பள்ளி படிப்பை வைத்து ஒரு தகுதி தேர்வு என்பது மருத்துவரை எப்படி உருவாக்க முடியும்? இந்த தேர்வு என்பதே எழை எளிய மாணவர்களின் மருத்துவ கல்வியை பறிக்கின்ற செயல் அனிதா முதல் கரீஷ்மா வரை பல்வேறு எழை மாணவர்களை படுகொலை செய்து வருகிறது. இப்படி பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஏழை எளிய மாணவர்களின் கல்விக் கனவை பறித்து காசு உள்ளவனுக்கு கல்வி என்று மனுதர்ம கொள்கையை கொண்டு வரும் புதிய கல்வி கொள்கையை ரத்து செய்யவேண்டும். கொரோனா பெரும் தொற்று அதிகமாகும் காலத்தில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை நடத்த கூடாது” என்ற அடிப்படையில் தலைமை உரை பேசினார்.

அவரைத் தொடர்ந்து தோழர் வெண்புறா குமார் பேசுகையில், “தமிழகத்தை அழிக்கின்ற வகையில் மோடி அரசு பல்வேறு திட்டங்களை அமுல் படுத்தி வருகின்றது. இதற்கு இங்கு இருக்கும் சில கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகிறது. புதிய கல்வி கொள்கையில் 3,5,8 பொது தேர்வு என்பது மாணவர்களின் கல்வியை பாதிக்கிறது. நமது உரிமைகளை மீட்க சின்ன சின்ன போராட்டங்கள் என்பது தீர்வு ஆகாது. ஜல்லிக்கட்டு போன்ற போராட்டம் தான் தீர்வு! அது போன்ற போராட்டத்தை கட்டியமைக்க வேண்டும்.” என்று கண்டன உரையாற்றினார்.

படிக்க:
விடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் ! | படக்கட்டுரை
தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !

அதற்கடுத்தபடியாக தோழர் வெங்கடேசன் பேசுகையில், “இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களையும், பல மொழி பேசும் மக்களையும் கொண்ட ஒரு நாடு. இங்கு ஒரே தேசியம் என்று சொல்வது அராஜக போக்கு. இப்படி இருக்கும் போது இதில் ஒரே கல்வி கொள்கை, ஒரே மொழி என்று சொல்வது ஒரு பாசிச போக்கு! இந்த கல்விக் கொள்கையில் அறிவியலின் பெயரில் புராண இதிகாச குப்பைகளும், அறிவியலுக்கு எதிரான கதைகளும் திணிக்கப்படுகிறது. இதை முறியடிக்க நாம் ஒன்றிணைத்து போராட வேண்டும்.” என்று பேசினார்.

தோழர் மணியரசன் தனது கண்டன உரையில், “கொரோனா பெரும் நோய் தொற்று இருக்கும் போது இறுதி ஆண்டு தேர்வை ரத்து செய்ய வேண்டும். மருத்துவ கல்வியை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஏழை எளிய மாணவர்களின் கல்வியை பறிக்கும் புதிய கல்வி கொள்கையை ரத்து செய்யவேண்டும்” என்ற அடிப்படையில் பேசினார்.

இறுதியாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தோழர் பால்ராஜ் நன்றி கூறி நிகழ்ச்சியை முடித்துவைத்தார்.

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம்
தொடர்புக்கு : 97888 08110.

விடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் ! | படக்கட்டுரை

0

பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து லெபனான் விடுபட்ட நாளின் 100-வது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் விதமாகவும், மக்கள் மீது அக்கறையற்ற லெபனான் அரசாளும் வர்க்கத்தினரை எதிர்க்கும் விதமாகவும் கடந்த செப்டெம்பர் 1-ம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரட்டில் உள்ள நாடாளுமன்றத்தின் முன்னால் போராட்டம் நடத்த லெபனான் மக்கள் ஒன்றுகூடினர்.

கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி, பெய்ரட் துறைமுகத்தில் பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் தேக்கி வைக்கப்பட்ட அமோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் 190 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். 3 லட்சத்திற்கும் அதிகமானோர் வீடிழந்தனர்.

இது மக்களின் பாதுகாப்பைப் பற்றி கண்டுகொள்ளாத அரசியல்வாதிகளால் தான் நிகழ்த்தப்பட்டது எனக் குற்றம்சாட்டி லெபனான் மக்கள் போராடி வருகின்றனர். இப்போராட்டத்தின் ஒரு கட்டமாகத்தான் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம். ஒரு நுழைவாயில் வழியாக நாடாளுமன்ற வளாகத்தினுள் நுழைந்த போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை குண்டு வீசி கலைத்தது போலீசு. போராட்டக்காரர்கள் மீது தாக்குதலும் தொடுத்தது. மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த இராணுவ வாகனத்தையும் உதவிக்கு அழைத்தது போலீசு.

லெபனான் உருவாகி 100-ம் ஆண்டைக் குறிக்கும் விதமாகவும், அரசாளும் பிரிவினருக்கு எதிராக போராடவும், தியாகிகள் சதுக்கத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் !

போலீசின் இந்த நடவடிக்கைகளை செயல்பாட்டாளர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளனர். போராட்டக்காரர்கள், மக்களை நிந்தித்த தலைவர்கள் இல்லாத ஒரு புதிய லெபனானிற்கு அறைகூவல் விடுத்தும், பிரெஞ்சிலிருந்து விடுதலை பெற்ற 100-ம் ஆண்டு விழாவை ஒட்டி அங்கு வருகை புரிந்த பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரானிடம், தற்போதைய லெபனான் அரசுடன் ஒத்துழைக்கக் கூடாது என வலியுறுத்தியும் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

விபத்து நடந்த பெய்ரட் துறைமுகத்திற்கு அருகில் உள்ள தியாகிகள் சதுக்கத்தில், போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகளை மேடையேறி முன் வைத்தனர். மதச் சார்பற்ற அரசு, பலன் தரத்தக்க பொருளாதாரம் ஆகியவையே அவர்களது முக்கியக் கோரிக்கைகளாகும்.

லெபனான் கொடிகளை ஏந்தி, ஊழல் அரசியல்வாதிகளை கண்டித்துக் கொண்டே, பழைய தோல்வியடைந்த அரசியல் அதிகாரப் பகிர்வு முறைக்கு முடிவு கட்டி புதிய மதச்சார்பற்ற அரசு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்

“ (விடுதலைக்குப் பின்னான) இந்த முதல் நூற்றாண்டு, போர்கள், அந்நிய ஆக்கிரமிப்பு, வறுமை, ஊழல், இடப்பெயர்வு, பிரிவினைவாத பிளவுகள் மற்றும் தற்போதைய துறைமுக வெடிவிபத்து ஆகியவற்றால் நிறைந்துள்ளது. இந்த அமைப்பை அவசரமாக சரி செய்ய வேண்டியது இருக்கிறது” என்று தெரிவிக்கிறார் 21 வயது துறைமுகப் பணியாளர் ஓமர்.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள், பெய்ரட்டின் பாராளுமன்ற சதுக்கத்திற்கு அருகில் நடத்திய போராட்டத்தில் முழக்கமிடுகின்றனர்.

போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினரை எதிர்கொள்ளும் போராட்டக்காரர்கள் !

ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்து 190 பேர் மரணமடைந்து, 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீடற்றவர்களானதற்குக் காரணமான பெய்ரட் துறைமுக வெடிப்பு சம்பவத்திற்குப் பின்னர் இரண்டாவது முறையாக பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரோனின் லெபனான் வருகையும் இந்தப் போராட்டங்களோடு தற்செயலாக ஒரே சமயத்தில் நிகழ்ந்துள்ளது.

லெபனானின் வெகுவாகப் பாதுகாக்கப்பட்ட பாராளுமன்ற வளாகத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள எஃகு சுற்றுச் சுவற்றின் மிது உலோக சட்டகங்களைப் பயன்படுத்தி ஏறும் போராட்டக்காரர்கள்.

பெய்ரட் போராட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் வீசப்பட்ட கண்ணீர்ப் புகை குண்டுகளை பாட்மிட்டன் மட்டையால் திருப்பியடிக்கும் போராட்டக்காரர்.

பாராளுமன்ற சதுக்கத்துக்கு அருகே அரசாங்கத்திற்கெதிரான போராட்டக்காரர்களுடன் கலவர தடுப்பு போலீசு, மோதலில் ஈடுபட்டுள்ளது.

ஒரு போராட்டக்காரர் கலவர தடுப்புப் போலீசின் மீது கற்களை வீசுகிறார்

கூட்டத்தை சமாளிக்க ஒரு இராணுவ வாகனம் வரவழைக்கப்பட்டது.

தமிழாக்கம் : நந்தன்

நன்றி :
அல்ஜசீரா