Saturday, June 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 232

தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !

செப்டெம்பர் 9, 2020 – தோழர் மாவோவின் 44-வது நினைவு தினம் இன்று. மார்க்சியத்தின் அடிப்படைகளை இறுகப் பற்றிக் கொண்டு ஜனநாயக மத்தியத்துவம், விமர்சனம் – சுயவிமர்சனம் ஆகிய பெரும் ஆயுதங்களைக் கொண்டு இடது, வலது சந்தர்ப்பவாதங்களுக்கு எதிராகப் போராடி புரட்சியை சாதிக்கவல்ல எஃகுறுதிமிக்க ஒரு கட்சியைக் கட்டியமைத்தார் லெனின். விளைவு – ரசியாவில் சோசலிசப் புரட்சி நடந்தது.

உலகின் முதல் சோசலிச நாடான ரசியா, தோழர் ஸ்டாலினின் தலைமையில் ஏகாதிபத்தியங்களின் நேரடியான மற்றும் மறைமுக தாக்குதல்களை ஒருபக்கம் எதிர்கொண்டு, மறுபுறத்தில் கட்சிக்குள் எழுந்த திருத்தல்வாத, வலது சந்தர்ப்பவாத  சித்தாந்தங்களையும் எதிர்கொண்டு அவற்றுக்கு எதிராகப் போராடியது.  இந்தப் போராட்டங்களின் அனுபவங்களையும், மார்க்சிய லெனினிய சிந்தனைகளையும் வரித்துக் கொண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியை போல்ஷ்விக் மயமாகக் கட்டியமைத்தார் தோழர் மாவோ.

சீனாவின் சமூகப் பொருளாதார அரசியல் பின்னணியில், சீன மக்களின் பண்பாட்டு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு கட்சி ஸ்தாபனத்தில் வரும் பிரச்சினைகள், கட்சிக்குள் நிலவும் தவறான போக்குகள், ஊழியர்களுக்கும்  தலைவர்களுக்கும் இடையிலான சிக்கல்கள் ஆகியவற்றை பகுத்தாய்ந்து அவற்றைக் கலைவதற்கான வழிமுறைகளை தோழர் மாவோ முன் வைத்தார்.

கட்சியில் நிகழும் பிளவுகள், குழப்பங்கள் உள்ளிட்ட எதுவும் ஒரிரு நாட்களில் தோன்றிவிடுவதில்லை. அவை வலது இடது சந்தர்ப்பவாதப் போக்கு மெது மெதுவாக  கட்சிக்குள் வேரூன்றி வளர்ந்து, ஒரு சமயத்தில் வெடிக்கும்போதுதான் கட்சியில் பிளவுகளும் குழப்பங்களும் விளைகின்றன. அதனைத் தவிர்ப்பதற்கு இருக்கும் ஒரே வழிமுறை எப்போதும் கறாராக தாராளவாதத்திற்கு எதிராக போர் தொடுப்பதும், விமர்சன சுயவிமர்சன முறையைப் பின்பற்றுவதும்தான்!

மேல்கமிட்டியோ, கீழ் கமிட்டியோ எதுவாக இருந்தாலும், மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் இருந்து தோழர்களின் திசைவிலகலைக் கண்டதும், அதனோடு எக்காரணம் கொண்டும் சமரசம் மேற்கொள்ளாமல், அதற்கு எதிராகக் கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டும் என்பதை பின்வரும் கட்டுரையில் விவரிக்கிறார் தோழர் மாவோ !

தாராளவாதத்திற்கு எதிராக அணிதிரண்டு அதனை எதிர்த்து முறியடிப்போம் !
தோழர் மாவோவின் சிந்தனையை எங்கும் எப்போதும்  உயர்த்திப்பிடிப்போம் !!

– வினவு

***

தாராளவாதத்தை எதிர்த்துப் போரிடுக !

நாம் ஊக்கமான சித்தாந்தப் போராட்டத்துக்காக நிற்கிறோம். காரணம், அது கட்சிக்குள்ளும் புரட்சிகர ஸ்தாபனங்களுக்குள்ளும் ஐக்கியத்தை உருவாக்கவும் அவற்றைப் போராடத் தகுதியுள்ளவைகளாக்கவுமான ஆயுதமாக மாற்றவும் உதவுகிறது. ஒவ்வொரு கம்யூனிஸ்டும், புரட்சிவாதியும் இந்த ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் தாராளவாதம், சித்தாந்தப் போராட்டத்தை மறுத்து, கோட்பாடற்ற சமாதானத்துக்காக நிற்கிறது. இதன் விளைவாக உலுத்துப் போன பண்பற்ற மனோபாவம் தோன்றி, கட்சியிலும் புரட்சிகர ஸ்தாபனங்களிலும் உள்ள சில அமைப்புகளையும் தனி நபர்களையும் அரசியல் ரீதியில் சீரழிக்கிறது.

தாராளவாதம், பல்வேறு வழிகளில் வெளிப்படுகின்றது. ஒருவர் தவறிழைத்துவிட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தும், நீண்டகாலம் பழகியவர், சக ஊரவர், சக மாணவர், நெருங்கிய நண்பர், அன்பிற்குரியவர், பழைய சக ஊழியர் அல்லது பழைய கீழ்ப்பணியாளர் என்ற காரணத்தால் அவருடன் கோட்பாடு ரீதியில் வாதிடுவதற்கு மாறாக, சமாதானத்துக்காகவும் நட்புக்காகவும் விஷயங்களை நழுவவிடுவது அல்லது, சுற்றிலும் நெருக்கம் நீடிக்க வேண்டி முழுமையான தீர்வு காண்பதற்கு பதில் லேசாகத் தொட்டுவிடுவது இதன் விளைவாக ஸ்தாபனத்துக்கும் தனி நபருக்கும் தீங்கு விளைவிக்கப்படுகின்றது. இது தாராளவாதத்தின் முதலாவது வகை.

ஸ்தாபனத்துக்குத் தனது யோசனைகளை ஊக்கமாக முன் வைப்பதற்குப் பதிலாக முதுகுக்குப் பின் பொறுப்பற்ற விமர்சனத்தில் ஈடுபடுவது நபர்களது முகங்களுக்கும் முன் ஒன்றும் சொல்லாமல், அவர்களது முதுகுகளுக்குப் பின் வம்பளப்பது, கூட்டத்தில் ஒன்றும் பேசாமல் அது முடிந்த பின் வம்பளப்பது, கூட்டு வாழ்வுக் கோட்பாடுகளைச் சற்றும் பொருட்படுத்தாமல், தனது சொந்த விருப்பப்படி நடப்பது – இது இரண்டாவது வகை.

படிக்க:
நூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்
லெனின் முன் வைத்த புதுப்பாணியிலான கட்சி !

தன்னைப் பாதிக்காத விஷயங்களை அலமாரியில் வைத்துவிடுவது தெளிவாகத் தவறானவை என்று தெரிந்தவை பற்றி, இயன்ற அளவு சொற்பமாகப் பேசுவது, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தனது குறைபாடுகளைக் கண்டு விமர்சிப்பார்களே என்று அதிலிருந்து தப்புவதற்காகவும் எச்சரிக்கையாக இருந்துவிடுவது – இது மூன்றாவது வகை

கட்டளைகளுக்குப் (முடிவுகளுக்கு) பணிந்து ஒழுகாமல் தனது சொந்தக் கருத்துகளுக்கு எல்லாவற்றுக்கும் மேலான இடத்தைத் தருவது; ஸ்தாபனத்திலிருந்து விசேஷ சலுகை கோருவது; ஆனால் அதன் கட்டுப்பாட்டை நிராகரிப்பது – இது நாலாவது வகை.

ஐக்கியத்துக்காக அல்லது முன்னேற்றத்துக்காக அல்லது வேலையைச் சிறப்பாகச் செய்வதற்காக, தவறான கருத்துக்களை எதிர்த்துப் போராட்டங்களிலும் விவாதங்களிலும் ஈடுபடுவது என்பதற்குப் பதிலாக தனிநபர் தாக்குதல் தொடுப்பது; சண்டை சச்சரவுகள் செய்வது; சொந்தக் குரோதங்களைக் கொட்டித் தீர்ப்பது; அல்லது பழி வாங்குவது – இது ஐந்தாவது வகை.

தவறான கருத்துக்களைக் கேட்டதும் அவற்றை மறுத்துரைப்பதில்லை. எதிர்ப் புரட்சிவாதிகளது கூற்றுகளைக் கேட்டாலும் அதனைக் கட்சிக்குத் தெரிவிப்பதில்லை; மாறாக ஒன்றும் நடக்காதது போல அவற்றை அமைதியாகக் கேட்டு சகித்துக் கொள்வது இது ஆறாவது வகை.

மக்கள் மத்தியில் இருந்தும் கிளர்ச்சிப் பிரச்சாரம் செய்யாமல் இருப்பது அல்லது சொற்பொழிவுகள் ஆற்றாமல் இருப்பது – அவர்கள் மத்தியில் பரிசீலனைகளும் விசாரணைகளும் நடத்தாமல் இருப்பது – மக்களிடம் பாராமுகமாகவும், அவர்களது இன்ப துன்பங்களில் கவலை இல்லாமலும், தான் ஒரு கம்யூனிஸ்ட் என்பதை மறந்து கம்யூனிஸ்ட் அல்லாதவரைப் போல் நடந்து கொள்வது – இது ஏழாவது வகை.

மக்களின் நலன்களுக்கு ஒருவர் தீங்கு விளைவிக்கக் கண்டும், ஆத்திரமடையாமல் அவருக்கு அறிவுரை கூறாமல் அல்லது அவரைத் தடுக்காமல் அல்லது அவருடன் நியாயம் கூறி வாதிடாமல், தொடர்ந்து அப்படிச் செய்ய அவரை அனுமதிப்பது – இது எட்டாவது வகை.

வரையறையான திட்டமில்லாமல், திசையில்லாமல் அரைமனதுடன் வேலை செய்வது, அக்கறையின்றி ஏனோ தானோ என்று வேலை செய்வது, ‘பூசாரியாக இருக்கும் வரை மணியடித்துக் கொண்டிருப்போம்’ என்று செயல்படுவது – இது ஒன்பதாவது வகை.

புரட்சிக்குத் தான் பெரும் சேவை செய்வதாகக் கருதிக் கொண்டு, தான் பெரும் அனுபவசாலி என்று பெருமைப்பட்டுக் கொள்வது, பெரிய பணிகளுக்குத் தகுதியில்லாமல் இருந்து கொண்டே சிறிய பணிகளை அவமதிப்பது – வேலையில் அசட்டையாகவும், படிப்பில் அக்கறையில்லாமலும் இருப்பது – இது பத்தாவது வகை.

தனது சொந்தத் தவறுகளை அறிந்திருந்தும், அவற்றைத் திருத்த எவ்வித முயற்சியும் செய்யாமல் தன்னைப் பொறுத்துத் தாராளவாதத்தை மேற்கொள்ளுதல் – இது பதினோராவது வகை.

நாம் மேலும் கூறிக்கொண்டே போகலாம். ஆனால், இந்தப் பதினொன்றுமே பிரதானமானவை. இவை அனைத்தும் தாராளவாதத்தின் வெளிப்பாடுகள்.

புரட்சிகர அமைப்புகளில் தாராளவாதம் என்பது பெருந்தீங்கு விளைவிக்கும் அது ஒற்றுமையை அரித்துத் தின்னும்; ஒருமைப்பாட்டுக்கு குழி பறிக்கும்; வேலையில் ஊக்கமின்மையை ஏற்படுத்தும்; வேற்றுமையை விதைக்கும். இது புரட்சிகர அணிகளில் உள்ள கட்டுக்கோப்பான ஸ்தாபன அமைப்பையும், கண்டிப்பான கட்டுப்பாட்டையும் அழித்துவிடும்; கொள்கைகள் முழுமையாக அமல் நடத்தப்படுவதைத் தடுக்கும்; கட்சியின் தலைமையில் உள்ள மக்களிடமிருந்து கட்சி ஸ்தாபனங்களைப் பிரித்துவிடும். இது மிகவும் தீமையான ஒரு போக்காகும்.

படிக்க:
♦ மாமேதை லெனின் : அறிவாளிகளின் அந்தரங்கம் || லெனின் – தலைவர்! தோழர்! மனிதர்!
♦ சீர்திருத்தவாதத் தலைவர்களை அம்பலப்படுத்துவது எப்படி ?

தாராளவாதம் என்பது குட்டி பூர்ஷ்வா வர்க்கத்தின் சுயநல உணர்விலிருந்து தோன்றுகிறது. அது தனிநபர் நலன்களை முதலாவது இடத்திலும், புரட்சியின் நலன்களை இரண்டாவது இடத்திலும் வைக்கின்றது. இதனால் சிந்தாந்த ரீதியிலும், அரசியல் ரீதியிலும், ஸ்தாபன ரீதியிலும் தாராளவாதம் தோன்றுகிறது.

தாராளவாதிகள் மார்க்சியக் கோட்பாடுகளைப் பொதுப்படையான வறட்டுச் சூத்திரங்களாகக் கருதுகின்றனர். அவர்கள் மார்க்சியத்தை அங்கீகரிக்கின்றனர்; ஆனால் அதனை அனுஷ்டிக்க அல்லது முழுமையாக அனுஷ்டிக்கத் தயாராக இல்லை; தங்களது தாராளவாதத்துக்குப் பதிலாக அதன் இடத்தில் மார்க்சியத்தை வைக்க அவர்கள் தயாராக இல்லை.

அந்த நபர்களிடம் மார்க்சியமும் இருக்கிறது; அதே வேளையில் தாராளவாதமும் இருக்கிறது. அவர்கள் மார்க்சியம் பேசுகின்றனர்; ஆனால் தாராளவாதத்தை அனுஷ்டிக்கின்றனர். பிறருக்கு மார்க்சியத்தையும் தங்களுக்கு தாராளவாதத்தையும் பிரயோகிக்கின்றனர். அவர்கள் இரண்டு விதமான சரக்குகளையும் இருப்பில் வைத்துக் கொண்டு இரண்டுக்கும் உபயோகம் காண்கின்றனர். இப்படித்தான் சில நபர்களின் மூளைகள் வேலை செய்கின்றன.

தாராளவாதம் என்பது சந்தர்ப்பவாதத்தின் ஒரு வெளிப்பாடு, மார்க்சியத்திற்கு அது அடிப்படையில் முரண்பாடானது. இது ஊக்கமற்ற (செயலற்ற) தன்மை உடையது. யதார்த்தத்தில் எதிரிக்கு உதவும் விளைவு கொண்டது. எனவேதான் அது நம் மத்தியில் இருப்பதை எதிரி வரவேற்கிறான். அதன் இயல்பு இப்படி இருப்பதால் புரட்சி அணிகளில் அதற்கு இடமே இருக்கக்கூடாது. செயலூக்கமற்ற தாராளவாதத்தை வெல்ல மார்க்சியத்தின் செயலூக்கமுள்ள உணர்வையும் உபயோகிக்க வேண்டும். ஒரு கம்யூனிஸ்ட் ஒளிவு மறைவில்லாது பேசுபவராக, விசுவாசமுள்ளவராக செயலூக்கம் உள்ளவராக இருக்க வேண்டும். புரட்சியின் நலன்களைத் தனது சொந்த உயிரைவிட மேலானதாகக் கருத வேண்டும். தனது தனிநபர் நலன்களைப் புரட்சியின் நலன்களுக்கு உட்படுத்த வேண்டும்.

எங்கும், எப்போதும் அவர் சரியான கோட்பாடுகளின் வழி ஒழுகி எல்லாத் தவறான கருத்துகளுக்கும் செயல்களுக்கும் எதிராகச் சலியாத போராட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு கட்சியின் கூட்டு வாழ்வை ஸ்திரப்படுத்தி, கட்சிக்கும் பொது மக்களுக்கும் இடையில் உள்ள தொடர்புகளைப் பலப்படுத்த வேண்டும். அவர் எந்த ஒரு தனிநபரைக் காட்டிலும் கட்சியிலும் மக்களிடத்திலும் கூடுதலான அக்கறையும், தன்னைவிடப் பிறர் மீது கூடுதலான அக்கறையும் செலுத்த வேண்டும். இப்படிச் செய்தால்தான் அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்று கருதப்பட முடியும்.

விசுவாசமான, நேர்மையான, செயலூக்கம் உள்ள உறுதியான கம்யூனிஸ்டுகள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று, நம்மிடையேயுள்ள சிலரது காட்டு தாராளவாதப் போக்குகளை எதிர்த்து (திருத்தி) அவர்களைச் சரியான திசையில் இட்டுச் செல்ல வேண்டும். சித்தாந்த முனையில் உள்ள நமது கடமைகளில் இதுவும் ஒன்றாகும்.

000

நூல் : தலைமை தாங்கும் வழிமுறைகள் – மாசேதுங்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ. 10
கிடைக்குமிடம் :
பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை
சென்னை-018
தொடர்பு : 044- 24332424, 24332924

நூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்

குறுங்குழு வாதம் பற்றி

கட்சியின் வேலை முறையினைச் சீர் செய்க” என்பதிலிருந்து (மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், தொகுதி 3)

“குறுங்குழுவாத சிக்கல் குறித்து இப்போது பேசுவோம்.”

ருபது ஆண்டுகளாக உருக்காக வார்க்கப்பட்ட நம் கட்சியில் குறுங்குழு வாதம் ஆதிக்கம் செலுத்துவது என்பது இனிமேல் இல்லை . கட்சியின் உள் மற்றும் வெளி உறவுகளில் குறுங்குழு வாதத்தின் மிச்ச சொச்சங்கள் இன்றும் காணக்கிடக்கின்றன. கட்சியின் உள்ளே நிலவும் குறுங்குழுவாதப் போக்குகளானவை கட்சித் தோழர்களை விலக்கி வைத்து ஒற்றுமைக்கும் இணைவுக்கும் தடையாக உள்ளது. கட்சியின் வெளி உறவில் நிலவும் குறுங்குழுவாதப் போக்குகளானவை, கட்சியை வெகுமக்களோடு இணைக்கும் – கட்சியின் வேலைக்குத் தடையாக உள்ளது. இதனை வேரறுப்பதன் மூலம்தான், நமது கட்சித் தோழர்களிடையே இணைப்பை ஏற்படுத்துவது, மக்களை ஒன்றுபடுத்துவது என்ற தன் மாபெரும் கடமையில் தடையற்ற முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.

“உட்கட்சியில் நிலவும் குறுங்குழுவாத மிச்ச சொச்சங்கள் என்ன? பின்வருவன அவைகளில் முக்கியமானவை:

“முதலில் “சுதந்திர” நிலையை வலியுறுத்துவது. சில தோழர்கள் முழுமையைப் புறக்கணித்து, பகுதி நலனைக் கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் எப்போதுமே தங்கள் பொறுப்பில் உள்ள வேலைகளுக்குத் தேவையற்ற முக்கியத்துவம் கொடுக்கின்றனர். தமது சொந்தப் பகுதிநலன்களுக்கு, முழு நலன்களையும் எப்போதும் அடிபணிய வைக்கின்றனர். அவர்கள் கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தைப் புரிந்து கொள்ளவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜன நாயகம் மட்டுமல்ல, அதைக்காட்டிலும் மத்தியத்துவம் அவசியமென்பதை அறிந்து கொள்ளவில்லை. சிறுபான்மையினர் பெரும்பான்மையினருக்கும் , கீழ்மட்டம் மேல்மட்டத்திற்கும், பகுதி முழுமைக்கும், அனைத்து ஊழியர்கள் மத்தியக் குழுவுக்கும் கட்டுப்பட்டு நடக்கும் ஜனநாயக மத்தியத்துவ அமைப்பை மறந்து விட்டார்கள். காங்-குவாட்டா மையக்குழுவில் தனது “சுதந்திர” நிலையை வலியுறுத்துவதன் மூலம் கட்சிக்குத் தனது துரோகத்தனத்தை உறுதிப்படுத்திக் கொண்டு கோமிங்டாங் ஏஜண்டாக மாறினர். இப்போது நாம் விவாதித்து வரும் குறுங்குழுவாதம் அபாயகரமான ஒன்றாக இல்லாதபோதும், இதற்கு எதிராகக் கவனம் செலுத்தப்பட வேண்டும். முழுமையின் நலன்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கட்சித் தோழர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு கட்சி ஊழியரும், ஒவ்வொரு அறிவிப்பும், ஒவ்வொரு நடவடிக்கையும் கட்சியின் முழு நலன் என்ற நோக்கில் இருந்து தொடர வேண்டும். இந்தக் கொள்கையை மீறுவது என்பது முற்றிலும் அனுமதிக்க முடியாத ஒன்று.

இந்த வகையான சுதந்திர நிலையை வலியுறுத்துபவர்கள், தனக்கு முதலிடம் என்ற கொள்கையில் பற்றுக்கொண்டு கட்சி, தனி நபர் உறவு குறித்துச் சிக்கலில் பொதுவாகத் தவறிழைக்கிறார்கள். பேச்சளவில் கட்சிக்கு மரியாதை கொடுத்துப் பேசிய போதிலும் நடைமுறையில் தன்னை முதன்மைபடுத்தி, கட்சியை இரண்டாம் நிலைக்குத் தள்ளுகிறார்கள். இவர்களின் நோக்கம் என்ன? இவர்கள் புகழ், நல்ல அந்தஸ்து, பிரபல்யம் என்ற நோக்கத்திற்காக உள்ளனர். ஒரு வேலைப் பிரிவின் பொறுப்பு அவர்களுக்கு வைக்கப்படும் போதெல்லாம் தங்கள் “சுதந்திர” நிலை குறித்து வலியுறுத்துகிறார் கள். இந்த நோக்கத்தில் சில நபர்களை உள்ளுக்குள் இழுக்கிறார்கள். மற்றவர்களை வெளியில் தள்ளுகிறார்கள். தற்பெருமை, முகஸ்துதி செய்து கவர்வது பேன்றவற்றைத் தோழர்களிடையே செய்கிறார்கள். இதன் மூலம் முதலாளித்துவக் கட்சியின் கொச்சை நடைமுறைகளை கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் இறக்குமதி செய்கிறார்கள். அவர்களின் பொறுப்பற்ற தன்மைதான் அவர்களை வருத்தும் நிலைக்கு உள்ளாக்குகிறது. நாம் நேர்மையோடு செயல்பட வேண்டும் என நம்புகிறேன். ஏனெனில் நேர்மையான செயல் இல்லாமல் உலகின் எந்த ஒன்றுடனும் இணைவது என்பது முழுக்க முழுக்கச் சாத்திய மில்லை.

“நேர்மையான நபர்கள் யார்? மார்க்ஸ், ஏங்கெல்ஸ், இலெனின், ஸ்டாலின் ஆகியோர் நேர்மையானவர்கள். அறிவியலாளர்கள் நேர்மையானவர்கள். நேர்மையற்ற நபர்கள் யார்? ட்ராட்ஸ்கி, புகாரின், சென் டீயு-சீ, சாங் கோ-டா இவர்கள் முழுக்க முழுக்க நேர்மையற்ற நபர்கள். குழு அல்லது தனிநபர் அடிப்படையில் “சுதந்திர” நிலையை வலியுறுத்துபவர்கள் கூட நேர்மையற்ற நபர்கள்தான். தந்திரமான நபர்களும் தங்களை மதிப்பு மிக்கவர்களாக, புத்திசாலிகளாக அலங்காரப்படுத்திக் கொண்டு தங்கள் வேலைகளில் அறிவியல் அணுகுமுறை கொண்டிராத அனைத்து நபர்களும், உண்மையில் ரொம்பவும் அயோக்கியர்கள். அவர்கள் எந்த நன்மைக்கும் உதவுவதில்லை . நமது கட்சிப் பள்ளியில் உள்ள மாணவர்கள் இந்தச் சிக்கலில் கவனம் செலுத்த வேண்டும். நாம் ஒரு மையப்படுத்தப்பட்ட ஒற்றுமையான கட்சியைக் கட்டியமைத்து, கொள்கையற்ற குழுச் சண்டைகள் அனைத்தையும் முழுமையாகத் துடைத்தெறிய வேண்டும். தனிநபர்வாதத்தையும், சந்தர்ப்பவாதத்தையும் எதிர்ப்பதன் மூலம் நமது கட்சி முழுவதையும் ஒரு பொது இலட்சியத்திற்காக நடைபோட, போரிடத் தயார்படுத்த வேண்டும். (பக்கம் 30-32)

நூல் : நமது படிப்பை சீர்செய்வோம்
ஆசிரியர் : மா சே துங்

வெளியீடு : புது மலர்

பக்கங்கள்: 64
விலை: ரூ. 25.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

எல்கார் பரிஷத் வழக்கு : மாவோயிஸ்ட் பட்டம் கட்டி செயல்பாட்டாளர்களை முடக்கும் பா.ஜ.க!

1

ல்கார் பரிஷத் வழக்கு விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமை (NIA) கபீர் கலா மஞ்ச் என்ற புரட்சிகர கலைக் குழுவினைச் சேர்ந்த இருவரைக் கைது செய்துள்ளது. மேலும் விசாரணைக்கு நேரில் மும்பைக்கு வந்து ஆஜராகக் கூறி இரண்டு பேராசிரியர்கள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் என மூவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து செயல்பட்டு வரும் கபீர் கலா மஞ்ச் என்ற புரட்சிகர கலைக்குழுவைச் சேர்ந்த கோர்கே மற்றும் கைச்சோர் ஆகிய இருவரை நேற்று (07-09-2020) கைது செய்திருக்கிறது என்.ஐ.ஏ. ஒரு வாரத்திற்கு முன்னரே விசாரணைக்காக அவர்களை அழைத்த என்.ஐ.ஏ அதிகாரிகள், விசாரணையின் போது ”தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும் அந்த தவறுக்காக மன்னிக்குமாறும்” கோரிக்கை எழுதிக் கொடுக்குமாறும்  வலியுறுத்தியதாக அவர்கள் இருவரும் கடந்த செப்டெம்பர் 5-ம் தேதியன்று ஒரு காணொளி பதிவு வெளியிட்டுள்ளனர்.

என்.ஐ.ஏ.-வின் இந்த மிரட்டலுக்கு அஞ்சவில்லை என்றும், மன்னிப்புக் கேட்க தாம் சாவர்க்கரின் வாரிசுகள் இல்லை – அம்பேத்கரின் பிள்ளைகள் என்றும் அதில் கூறியுள்ளனர். போலி ஒப்புதல் கொடுக்க மறுத்ததன் காரணமாக, தாம் கைது செய்யப்படலாம் என்றும் தெரிவித்திருக்கின்றனர். அதே போல நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆங்கிலம் மற்றும் அந்நிய மொழிகள் பல்கலைக்கழகத்தில் (EFLU) பணிபுரியும் பேராசிரியர் சத்திய நாராயணா, கொல்கத்தாவில் இருக்கும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் உதவிப் பேராசிரியரான பார்த்தசாரதி ரே மற்றும் ‘தி இந்து’ பத்திரிகையைச் சேர்ந்த பத்திரிகையாளர் கே.வி.குர்மநாத் ஆகியோருக்கும் எல்கார் பரிஷத் மாநாடு தொடர்பான விசாரணைக்காக மும்பைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது என்.ஐ.ஏ.

தற்போது விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்டுள்ளவர்களில் சத்யநாராயணாவும், குர்மநாத்தும் எல்கார் பரிஷத் வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள, செயற்பாட்டாளர் வரவர ராவின் மருமகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க:
எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு !
பீமா கொரேகான் : டெல்லி பல்கலை பேராசிரியர் வீட்டில் போலீசு அடாவடி சோதனை !

ஜனவரி 2018-ல் துவங்கப்பட்ட இந்த வழக்கில் இதுவரை அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கும் பல்வேறு சமூக செயற்பாட்டாளர்களையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோருக்கும் எல்கர் பரிஷத் மாநாட்டுக்கும் சம்பந்தமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆகஸ்ட் 2018-ல் வரவர ராவின் மருமகன்களான சத்யநாராயணா மற்றும் குர்மாநாத் ஆகியோரின் வீடுகளில் அப்போது வழக்கை நடத்தி வந்த புனே போலீசு தேடுதல் நடத்தியது. அந்த தேடுதலில் அவரது வீட்டை கபளீகரம் செய்தது மட்டுமின்றி அவரது ஆய்வு மற்றும் வெளியிடக் காத்திருக்கும் புதிய நூல் உள்ளிட்டவற்றின் தரவுகளைக் கொண்ட கணிணியைக் கைப்பற்றிச் சென்றது போலீசு. தேடுதலுக்கு வந்த போலீசு, சத்யநாராயணாவை தலித் என்று அடையாளப்படுத்தி பேசியதோடு, அவரது துணைவி பாவனாவிடம் “நீங்கள் ஒரு பிராமணர், உங்கள் கணவர் ஒரு தலித், நீங்கள் ஏன் பாரம்பரியத்தை கடைபிடிப்பதில்லை? திருமணமான பெண்கள் அணியும் பாரம்பரிய அணிகலன்களை ஏன் அணிவதில்லை?” என்றெல்லாம் கேள்வி கேட்டிருக்கிறது. குர்மநாத்தின் வீட்டிலும் இத்தையை தேடுதலும் கைப்பற்றல்களும் அரங்கேறின.

பார்த்தசாரதி ரே, சத்யநாராயணன் மற்றும் கே.வி. குமார்நாத். (இடமிருந்து வலமாக)

கொரோனா சூழலில் மும்பைக்கு இவர்களை வரவழைத்துள்ளது என்.ஐ.ஏ. இது ஒரு துன்புறுத்தல் வழிமுறை என்கிறார் பார்த்தசாரதி ரே. இவர் குடிமையியல் உரிமைச் செயற்பாட்டாளர். மேலும் அவர் இடதுசாரி பத்திரிகையான “சன்ஹதி”-யின் நிறுவனர்களில் ஒருவர். உயிரி தொழில்நுட்பப் பேராசிரியரான ரே, கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கும் அறிவியலாளர் குழுமத்தைச் சேர்ந்தவர். மேற்குவங்கத்திலிருக்கும் நாடியா மாவட்டத்தில் கொரோனா தடுப்பு வசதிகள் மேற்கொள்ளும் வேலைகளில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தகது.

பார்த்தசாரதிக்கு ஏற்கெனவே தொலைபேசி மூலம் விசாரணைக்கு என்.ஐ.ஏ விடுத்த அழைப்பை முறையான சம்மன் அனுப்பாத காரணத்தால் நிராகரித்திருந்த சூழலில் தற்போது சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு பல்வேறு பத்திரிகையாளர்கள், சமூகச் செயற்பாட்டளர்களின் கணிணியில் ‘மால்வேர்’ எனப்படும் ஒற்று பார்க்கும் செயலிகள் மூலம் வேவு பார்க்கப்படுவதை அம்னெஸ்டி இண்டர்நேசனல் அமைப்பு வெளிக் கொண்டுவந்தது. அப்படி வேவு பார்க்கப்பட்ட செயற்பாட்டாளர்களில் பார்த்தசாரதி ரே-வும் ஒருவர்.

“எல்கார் பரிஷத் வழக்கு குறித்து பத்திரிகையில் வாசிக்கும் முன்பு வரை அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்னை துன்புறுத்துவதற்காகவே போடப்பட்ட வழக்கு இது” என்கிறார் பார்த்தசாரதி ரே

சாட்சிகளாக விசாரிப்பதற்காகவே அழைப்பதாக மூவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தாலும், அப்படி சாட்சிகளாக விசாரிக்க அழைக்கப்பட்ட டெல்லி பல்கலைப் பேராசிரியர் ஹனிபாபு பின்னர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எல்கார் பரிஷத் வழக்கில் இதுவரை 14 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். 9 பேர் புனே போலீசாலும், இந்த ஆண்டு என்.ஐ.ஏ இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பின்னர் மேலும் 5 பேர் என்.ஐ.ஏ.-வாலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதல்சுற்று கைதுகள் கடந்த ஜூலை 2018-ம் ஆண்டில் துவங்கியது. அந்த சமயத்தில் மும்பையைச் சேர்ந்த தலித் செயற்பாட்டாளர் சுதிர் தவாலே, நாக்பூரைச் சேர்ந்த ஊபா சட்ட நிபுணரும் வழக்கறிஞருமான சுரேந்திரா காட்லிங், இடப்பெயர்வு பிரச்சினைகளுக்காக போராடும் செயற்பாட்டாளரான மஹேஷ் ரவுத், நாக்பூர் பல்கலைக்கழகப் பேராசிரியர் சோமா சென், சிறைக் கைதிகள் உரிமைச் செயற்பாட்டாளரான ரோனா வில்சன் ஆகியோரைக் கைது செய்தது புனே போலீசு.

அடுத்தகட்டமாக ஆகஸ்ட் 2018-ல் வழக்கறிஞர் அருண் ஃபெரைரா, வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், புரட்சிகர எழுத்தாளர் வரவர ராவ் மற்றும் வெர்னான் கன்சால்வேஸ் ஆகியோரை புனே போலீசு கைது செய்தது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கல்வியாளர் ஆனந்த் தெல்டும்டே மற்றும் பத்திரிகையாளர் கவுதம் நவ்லகா ஆகியோரையும் ஜூலை மாதத்தில் ஹானிபாபுவையும் கைது செய்தது என்.ஐ.ஏ. அதன் பின்னர் நேற்று கபீர் கலா மஞ்சை சேர்ந்த இருவரை கைது செய்திருக்கிறது.

இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த புனே போலீசு, கைது செய்யபட்டவர்கள் அனைவருக்கும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர்களது உதவியைப் பெற்றுதான் எல்கார் பரிஷத் மாநாட்டை ஏற்பாடு செய்ததாகவும் குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தது.

2019 பிப்ரவரியில் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த புனே போலீசு அதில் மாவோயிஸ்ட் தலைவர் கணபதிதான் எல்கர் பரிஷத் மாநாட்டை ஏற்பாடு செய்ததில் முக்கியப் பங்காற்றியவர் எனக் குற்றம்சாட்டியிருந்தது. அடுத்ததாக தாக்கல் செய்யவிருக்கும் கூடுதல் குற்றப்பத்திரிகையில் வரவர ராவ் மற்றும் கவுதம் நவல்காவையும் இணைத்து தாக்கல் செய்யவுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் நடந்த எல்கார் பரிஷத் மாநாட்டை வைத்துக் கொண்டு அனைத்து சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஜனநாயகவாதிகளையும் மாவோயிஸ்ட் முத்திரை குத்தி முடக்கப் பார்க்கிறது பாஜக-வின் அடியாளான என்.ஐ.ஏ.. மேலும் அறிவுத்துறையைச் சேர்ந்தவர்களை மிரட்டும் விதமாக விசாரணைக்கு அழைப்பதையும், தமக்கு அடிபணியாத அறிவுத் துறையினரை மாவோயிஸ்ட் என முத்திரை குத்தி சிறையிலடைப்பதையும் நடைமுறைத் தந்திரமாக கையாண்டு வருகிறது என்.ஐ.ஏ. !

நந்தன்

செய்தி ஆதாரம் :

லெனினும் கம்யூனிஸ்ட் அகிலமும் !

மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி – மாரிஸ் கார்ன்ஃபோர்த்
பாகம் 5

ஈ. கம்யூனிஸ்ட் அகிலம்

லெனினும் கம்யூனிஸ்ட் அகிலமும்

பிப்ரவரி புரட்சிக்குப் பின் ரசியா திரும்பிய லெனின் ஏப்ரல் 1917-ல் வெளியிட்ட “நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்” என்ற பிரசுரத்தில் சர்வதேச இயக்கத்தில் நிலவிய மூன்று வகைப் போக்குகளை இனம் பிரித்துக் காட்டினார். அவ்வகைப் போக்குகள் கொண்டவர்களாக இவர்கள் உலகப் போரில் தங்கள் பக்க ஏகாதிபத்தியங்களுடன் கை கோர்த்துக் கொண்டனர். நடுநிலைவாதிகள் மேற்படி நபர்களுடன் ஒத்துப்போனவர்கள். மூன்றாவதாக, மெய்யான சர்வதேசியவாதிகள், இவர்கள் ஏகாதிபத்தியப் போரை முழுமூச்சாக எதிர்த்தனர். லெனின், மூன்றாவது பிரிவினர், இரண்டாம் அகிலத்திலிருந்து வெளியேறி புதிய அகிலத்தை தோற்றுவித்து, சந்தர்ப்பவாதத்திலிருந்து முற்றிலும் துண்டித்துக் கொண்டு, பாட்டாளி வர்க்கத்தை புரட்சிகர மார்க்சிய அடிப்படையில் ஒன்றிணைக்க வேண்டுமென அறை கூவினார்.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் முதல் பேரவை 1919 வசந்தத்தில் நடந்தது. அதன் முடிவில் “மூன்றாம் அகிலமும் வரலாற்றில் அதன் இடமும்” என்ற பிரசுரத்தை வெளியிட்ட லெனின், முதல் அகிலம் சர்வதேசிய அளவில் சோசலிசத்திற்காகப் பாட்டாளி வர்க்கம் போராட வேண்டியதற்கான அடிப்படைகளைத் தந்தது; இரண்டாவது அகிலம் இந்த இயக்கத்தை பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்தியது; மூன்றாம் அகிலம் தன்னிலிருந்து சந்தர்ப்பவாதத்தை வெளியேற்றி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் அவசியத்தை அங்கீகரித்ததன் மூலம் புதிய சகாப்தத்தைத் தோற்றுவித்து உள்ளது என்று சுட்டிக் காட்டினார்.

கம்யூனிஸ்ட் அகிலத்திற்கான லெனினது பங்களிப்புகள் அனைத்திலும் சந்தர்ப்பவாதத்தையும், குட்டி முதலாளித்துவ இடதுசாரிப்போக்கையும் அது மக்களிடமிருந்து கம்யூனிஸ்டுகளைத் தனிமைப்பட்டுப் போகச் செய்வதாகையால் எதிர்த்துப் போராட வேண்டியதை வலியுறுத்துகிறார். (பார்க்க: லெனின் இடதுசாரிக் கம்யூனிசம் ஒரு இளம் பருவக் கோளாறு)

மூன்றாம் அகிலத்தின் பணிகள் (1919 ஜூலை) என்ற பிரசுரத்தில் மிக முக்கியத் தேவைகளாக கீழ்க்கண்டவற்றைச் சுட்டிக் காட்டுகிறார்:

  1. சீர்திருத்தத்துக்கும் புரட்சிக்கும் இடையிலான வேறுபாட்டை திட்டவட்டமாக விளக்குதல். அதே வேளையில் சீர்திருத்தங்கள், முதலாளித்துவ நாடாளுமன்றங்களில் பங்கேற்பது ஆகியவற்றை நிராகரிக்காது இருப்பது.
  2. சட்டபூர்வ – சட்ட விரோத வேலைகளை இணைப்பது.
  3. தொழிலாளர் இயக்கத்திலிருந்து சந்தர்ப்பவாதிகளை வெளியேற்றப் பணிபுரிவது.
  4. காலனிய விடுதலைக்கான புரட்சிப் போராட்டங்களுக்காகத் துணை புரிவது.
  5. புரட்சிகர முழக்கங்களினால் எதிர்புரட்சிகரச் செயல்களை மூடி மறைக்க முயல்பவர்களை அம்பலப்படுத்துவது.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது பேரவையின் (1920) போது லெனின் “கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது பேரவையின் அடிப்படை கடமைகள்” பற்றிய படிவத்தைத் தயாரித்தார்.

அதில் சோசலிசத்தில் வெற்றிக்கான தேவைகளாக

  1. சுரண்டுபவர்களைத் தூக்கியெறிவது, ஒடுக்குவது;
  2. கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமைக்குத் தொழிலாளர்களை வென்றெடுப்பது; தொழிலாளி வர்க்கத்தின் வாழ்விலிருந்து கட்சியைத் தனியாகப் பிரிக்க முடியாத அளவுக்கு மாற்றுவது;
  3. ஊசலாட்டப் பிரிவுகளை நடுநிலைப்படுத்துவது – ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றார்.

மேலும், கம்யூனிஸ்டுகள் இந்த நிலைமைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தங்கள் பிரதான எதிரிகள் சந்தர்ப்பவாதிகள்தான் என்பதை உணர வேண்டும் என வலியுறுத்துகிறார்.

படிக்க:
இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதத்துக்கெதிரான போராட்டம் !
பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்

இரண்டாவது பேரவையில் “சர்வதேசிய நிலைமைகளும், கம்யூனிஸ்ட் அகிலத்தின் அடிப்படைப் பணிகளும்” என்ற அறிக்கையில் போருக்குப் பிந்திய அரசியல், பொருளாதார நிலைமைகளை விரிவாக ஆராய்கிறார்.

இதே காங்கிரசில் “கம்யூனிஸ்ட் அகிலத்தில் இணைவதற்கான நிபந்தனைகளை” லெனின் வரையறுத்தார். இந்த உரையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கும் சீர்திருத்தவாதக் கோட்பாடான அதிகாரத்தை வெல்வது என்பதற்குமிடையிலான வேறுபாடுகளை விளக்கினார்.

இதைப் போன்றே “விவசாயப் பிரச்சினை பற்றிய ஆய்வுகள்”, “தேசிய, காலனிய பிரச்சினை பற்றிய ஆய்வுகள்” ஆகியவற்றையும் படைத்தளித்தார். இதில் முன்னது விவசாயி வர்க்கத்துடனான கூட்டினை விளக்குகிறது.

“கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம்” என்ற உரையில் பிரிட்டிஷ் பிரதிநிதிகளான டானர், மெக் க்லேன் (Tanner, Mc Claine) ஆகியோருக்கு பதிலளிக்கையில் உணர்வுபூர்வமான புரட்சிகரச் சிறுபான்மை மக்களை வழிநடத்தும் வண்ணம் கட்சியைக் கட்ட வேண்டும் என்றார். மேலும் பிரிட்டிஷ் பொதுவுடைமைக் கட்சியை தொழிலாளர் கட்சியுடன் இணைப்பது பற்றிய பிரச்சினையையும் அவர்களுக்கு விளக்கினார்.

இதே சமயத்தில் எழுதிய “சுதந்திரம் பற்றிய போலிப் பேச்சுகள்” என்ற கட்டுரையிலும் சந்தர்ப்பவாதத்தை நிராகரிக்க வேண்டியது பற்றிக் கூறுகிறார். “கம்யூனிஸ்ட் அகிலத்தின் போர்த்தந்திரங்களை ஆதரித்து” என்ற உரையிலும் (1921) கட்சி மக்களின் மனங்களை வெல்ல வேண்டும். அதாவது, பெரும்பான்மை தொழிலாளி வர்க்கத்தை வெல்லவேண்டும். இந்தப் பெரும்பான்மை வெல்லப்படாவிடில் சோசலிசத்தின் வெற்றி சாத்தியமில்லை எனக் குறிப்பிடுகிறார்.

இக்கருத்தையே “ஜெர்மன் கம்யூனிஸ்டுகளுக்கு எழுதிய கடிதத்”திலும் திரும்பக் கூறுகிறார்.

(முற்றும்)

நூல் : மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி
ஆசிரியர் :
மாரிஸ் கார்ன்ஃபோர்த்

வெளியீடு : கீழைக்காற்று.
பக்கங்கள் : 272
விலை : ரூ. 150.00

இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதத்துக்கெதிரான போராட்டம் !

மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி – மாரிஸ் கார்ன்ஃபோர்த்
பாகம் 4

இ. இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதத்துக்கெதிரான போராட்டம்

லெனின்: தொழிலாளி வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதமும் அதன் வேர்களும் என்பது பற்றி

லெனின் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதத்தின் இயல்புகள் மற்றும் அதன் காரணங்கள் பற்றிய தனது அடிப்படை ஆய்வை “ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சகட்ட வளர்ச்சி” என்னும் நூலில் தொகுப்பாகவும், பல்வேறு சிறு பிரசுரங்களிலும் தருகிறார்.

“வரலாற்றில் காரல் மார்க்சின் போதனைகளுக்கு விதிக்கப்பட்ட வருங்காலம்” என்னும் நூலில் (1913) லெனின் தொழிலாளி வர்க்க இயக்கம் இதுவரை மூன்று கட்டங்களைக் கடந்து வந்துள்ளது என்று காட்டினார். முதற்கட்டம் புரட்சிகர எழுச்சிகளின் காலம், 1848 புரட்சிகளில் இருந்து 1871 பாரீஸ் கம்யூன் வரையிலானது, இந்தக் காலப் பகுதியிலேயே பல சுதந்திர தொழிலாளி வர்க்கக் கட்சிகள் முதன் முதலில் தோன்றின. இரண்டாம் கட்டம் 1905 ரஷ்யப் புரட்சி வரையிலானது. “அமைதியான” வளர்ச்சி நிலவிய காலம். இக்காலகட்டத்தில் தொழிலாளி வர்க்க கட்சிகள் வலிமையுற்று, தங்கள் சொந்தக் கட்சி இதழ்களை நடத்தியும், முதலாளியப் பாராளுமன்றத்தை பயன்படுத்தக் கற்றும் உள்ளன. ஆனால் இக்கட்டத்திலேயே சந்தர்ப்பவாதம் “சமூக அமைதி” எனப் பேசிக்கொண்டு, வர்க்கப் போராட்டத்தை நிராகரித்து இயக்கத்துக்குள் புகுந்தது. கடைசிப் பகுதியாக 1905-க்குப் பிற்பட்ட காலம், புதிய பிரச்சினைகள் முளைத்துள்ள இக்கட்டத்தில் சந்தர்ப்பவாதத்தை கட்சியிலிருந்து துரத்தியடித்து புரட்சிகர மார்க்சியத்தின் வெற்றியைப் பாதுகாக்க வேண்டி இருந்தது.

இந்நூலுக்கு முன்பே மார்க்சியமும் திருத்தல்வாதமும் (1908) என்ற நூலில் திருத்தல்வாதத்தை லெனின் ஆய்கிறார். தங்களை மார்க்சியவாதிகள் என்றழைத்துக் கொண்டே மார்க்சிய அடிப்படைகளைத் திருத்துகின்ற சந்தர்ப்பவாதிகளின் தத்துவமே திருத்தல்வாதம். திருத்தல்வாதிகள் இயக்க இயல் பொருள்முதல்வாதத்துக்குப் பதிலாக முதலாளித்துவ தத்துவத்தின் “மிகப் புதிய விஷயங்களை” சார்ந்திருப்பதைக் காட்டினார். குறிப்பாக முதலாளித்துவ அரசியல் பொருளாதாரவாதிகளின் நவீன தத்துவங்களைக் கையிலெடுத்துக் கொண்டு மார்க்சியத்தைத் “திருத்த” குறிப்பாக மார்க்சின் “மதிப்பு” பற்றிய கோட்பாட்டை, முதலாளித்துவ நெருக்கடிகளின் தவிர்க்க இயலாத தன்மையைத் திருத்த முயன்றனர். ஜனநாயகமும் பொதுமக்கள் வாக்குரிமையும் வர்க்கப் போராட்டத்தின் அடிப்படைகளை அகற்றி விட்டன என்று அவர்கள் உறுதியாகச் சொன்னார்கள்.

திருத்தல்வாதம் சோசலிச லட்சியங்களைக் கைவிட்டு “பாட்டாளி வர்க்க அடிப்படை நலன்களை கற்பனையான அல்லது நிஜமான பொருளாதார நலன்களுக்காக தியாகம் செய்துவிடும்” அளவுக்கு சரிந்தது. பாட்டாளி வர்க்க இயக்கத்தில் இது குட்டி முதலாளித்துவ போக்கைப் பிரதிபலித்தது.

“ஐரோப்பிய தொழிலாளர் இயக்கத்தில் கருத்து வேற்றுமைகள்” (1910) என்னும் நூலில் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் புலப்படும் மார்க்சிய – விரோதப் போக்குகள் தற்செயலானவை அல்ல, மாறாக, அனைத்து முதலாளித்துவ நாடுகளின் பொருளாதார வளர்ச்சியின் தன்மையைப் பொறுத்தது என்று குறிப்பிடுகிறார். ருஷ்ய சமூக ஜனநாயகவாத இயக்கத்தில் சீர்த்திருத்தவாதக் கருத்துக்களின் தாக்கத்தை முதலாளித்துவப் பிரச்சாரத்துடன் தொடர்புபடுத்துகிறார் லெனின். சோசலிசத்திற்கு எதிராக நேரடியாகப் போராடாமல் முதலாளித்துவம் சீரான, துண்டு துண்டுச் சீர்திருத்தங்களை முன்வைக்கக் கற்றுக் கொண்டு உள்ளது எனக் கூறுகின்றனர். இது முதலாளித்துவத்திற்கு ஒட்டுப் போட முனைவது ஆகும்; அவர்கள் அத்தகைய பிரச்சாரத்தைப் பயன்படுத்தி பாட்டாளி வர்க்கத்தைப் பிளவுபடுத்தி வலுவிழக்கச் செய்ய முயலுகிறார்கள்; முதலாளிவர்க்க ஆட்சியை தக்கவைக்கப் பார்க்கிறார்கள். இப்பிரச்சாரம் சீர்திருத்தவாத சித்தாந்தங்கள் வாயிலாக தொழிலாளி வர்க்க இயக்கத்தில் வெளிப்பட ஆரம்பித்து விட்டது – புரட்சிக்குப் பதிலாக சீர்திருத்தங்களை அது முன் வைக்கிறது. (இக் கட்டுரை, ருஷ்யத் தொழிலாளர்கள் ஒருபோதும் புரட்சிப் பாதையை எக்காரணம் முன்னிட்டும் தேர்ந்தெடுக்கக் கூடவே கூடாது என்று பிரச்சாரம் செய்த சீர்திருத்தவாத சோசலிஸ்டுகளைப் பற்றிய பெருந்திரளான விவரங்களுடன் கூடிய வாதத்தை உள்ளடக்கியதாகும்.)

ஏகாதிபத்தியமும் சோசலிசத்தில் பிளவும் (1916) என்ற நூலில் தொழிலாளர் வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதம் நிலவுவதற்கும் அதன் வலிமைக்கும் அடிப்படைக் காரணங்களைத் தொகுத்து லெனின் உரைக்கிறார். ஏகாதிபத்தியத்தின் உயர்விகித லாபங்கள் தொழிலாளி வர்க்கத்தின் மேல்தட்டுக்கு லஞ்சம் அளிக்கவும், ஊழல்படுத்தவும் பயன்படுத்துகின்றன. இதன் விளைவாகப் பூர்ஷ்வா தொழிலாளர் கட்சி எல்லா ஏகாதிபத்திய நாடுகளிலும் தலை எடுத்தது.

படிக்க:
மதுரை – கரூர் : நீட் தேர்வை ரத்து செய் ! அண்ணா பல்கலைக் கழக கட்டணக் கொள்ளைக்கு முடிவுகட்டு !! பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்
பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்

குறிப்பாக பிரிட்டனை ஆய்கின்ற லெனின், அங்கு சந்தர்ப்பவாதம், முறையான ஏகாதிபத்தியம் தோன்றுவதற்குப் பல பத்தாண்டுகளின் முன்பே பிறந்து விட்டதாகக் கூறுகிறார். தொழில்துறையில் தனியாதிக்கமும் (Industrial Monopoly) ஏகாதிபத்தியத்துக்கு முந்தைய முதலாளித்துவ வளர்ச்சியிலேயே அது பிடித்திருந்த செழிப்பான காலனிய நாடுகளும் அவர்களுக்கு உயர் லாபங்களைத் தோற்றுவித்தன. இது ஏகாதிபத்தியத் தோற்றத்தின் முன்பே நிகழ்ந்த போதும் தன்னுள் சில ஏகாதிபத்திய இயல்புகளைக் கொண்டிருந்தது.

இதே கருத்தை லெனின் தனது “இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சி” (1915) என்னும் கட்டுரையிலும் கையாள்கிறார். இதில் சந்தர்ப்பவாதம் என்றால் என்ன என்று வரையறுக்கிறார். அதாவது “சிறுபான்மையினரின் தற்காலிக நலன்களின் பொருட்டு பெருந்திரளான தொழிலாளர்களின் நலன்களை தியாகம் செய்து விடுவது” எனப் பொருளாகும். வேறு விதமாகச் சொல்வதானால் “தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பிரிவு பெருந்திரளான தொழிலாளி வர்க்கத்திற்கு எதிராக கூட்டு சேர்வது” ஆகும்.

முதலாளிகள் தொழிலாளிகளுக்கிடையில் ஒரு பிரிவுக்கு மட்டும் சலுகை அளிப்பதன் மூலம் அவர்களுக்கிடையில் தகுதிபெற்ற தொழிலாளர் “தட்டு” ஒன்றை ஏற்படுத்த முடிகிறது என்பதால் சந்தர்ப்பவாதம் தோன்றவும் வலிமையடையவும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் “பழக்கங்களின் வலிமை, ஒப்பீட்டளவில் அமைதியான வளர்ச்சிப் போக்குக்குப் பழகிப் போவது, தேசியத் தன்னியல்புப் போக்கு (Prejudice) கூரிய பிளவுகளுக்கு அஞ்சுவது, நம்பிக்கையின்மை முதலியவற்றால் சந்தர்ப்பவாதம் வலிமையடைகிறது என்கிறார் லெனின்.

இரண்டாம் அகிலத்தின் தலைவர்களின் சந்தர்ப்பவாதம் 1914-இல் அவர்கள் தத்தம் ஏகாதிபத்தியங்களோடு கைகோர்த்துக் கொள்வதாக முடிந்தது. ஏகாதிபத்தியப் போருக்குத் துணைபோன அவர்களது வாதங்களைக் கிழிக்கிறார் லெனின். சந்தர்ப்பவாதத் தலைவர்களைப் பொறுத்தவரையில் “சொல்லில் சோசலிசம் நடைமுறையில் பூர்ஷ்வாக்களோடு ஒவ்வொரு முக்கியப் பிரச்சினையிலும் கைகோர்த்து கட்சியிலிருந்து வெளித்தள்ளப்பட வேண்டிய நபர்கள் இவர்கள்” என்று தனது கட்டுரையை லெனின் முடிக்கிறார்.19

லெனின்: போரைப் பற்றி

பாட்டாளி வர்க்கத்தின், போர் குறித்த நிலைப்பாடு பற்றிய அடிப்படைப் போதனைகள் லெனினால் முதல் உலகப்போரின் போது வகுத்தளிக்கப்பட்டன. அவ்வடிப்படைக் கோட்பாடுகள் போல்ஷ்விக் கட்சி வரலாறு அத்தியாயம் 6-ஆம் பிரிவில் தொகுக்கப்பட்டுள்ளன.

லெனின்: சோசலிசமும் போரும் (1915) என்னும் தமது நூலில் நியாயமான நியாயமற்ற 20 போர்களுக்கிடையிலான வேறுபாட்டை வரையறுக்கிறார். தொழிலாளி வர்க்கம் நியாயமற்ற ஏகாதிபத்தியப் போர் மீது எவ்வகை நிலைப்பாட்டை வைத்திருக்க வேண்டும் என்பது பற்றிய மார்க்சியப் போதனைகளின் தொகுப்பாக இந்நூல் உள்ளது.

லெனின் 1914-இல் எழுந்த போர் இரண்டு ஏகாதிபத்திய முகாம்களுக்கிடையிலான நியாயமற்ற போர் என்று காட்டுகிறார். இத்தகைய போர்களில் அந்த அந்த நாடுகளின் தொழிலாளி வர்க்கங்கள் தத்தம் ஏகாதிபத்தியங்களை எதிர்க்க வேண்டும். “ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப் போராக” மாற்ற முயல வேண்டும்.

லெனின் – ஏகாதிபத்திய யுத்தங்கள் மூளும்போதும் நியாயமான சமாதானம் ஏகாதிபத்திய அரசுகளைத் தூக்கியெறியாமல் எட்டக் கூடியது அல்ல என்று காட்டுவதன் மூலம், சமாதானவாதிகளும், தாராளவாதிகளும் போர்களின் போது பரப்பும் “சமாதானம்” பற்றிய அரூபமான (Abstract) முழக்கம் போலித்தனமான ஏமாற்று வேலை என்று நிறுவுகிறார்.

இரண்டாம் அகிலத்தின் “சோசலிஸ்டுகள்’’ போருக்காதரவு அளித்தது சோசலிசத்தையே நேரடியாகக் காட்டிக் கொடுத்தது ஆகும் என்கிறார் லெனின். அவர்களின் கொள்கையை குறிக்க சமூகவெறி (Social Chavunism) என்ற சொல்லை உருவாக்கினார். சமூக வெறி என்பது நியாயமற்ற போரில் தங்கள் தாய் நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறிய சோசலிஸ்டுகள் என்று தம்மை அழைத்துக் கொள்பவர்களின் வாதம். சந்தர்ப்பவாதம், சமூக வெறி (Social Chavunism) இரண்டுடனும் சர்வதேசிய அளவில் தொடர்புகளை முறித்துக் கொண்டு மூன்றாம் அகிலம் புரட்சிகர அடிப்படையில் தொடங்கப்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

ஏகாதிபத்தியப் போர் பற்றிய மார்க்சியப் பார்வையை மீண்டும் போர் பற்றி 1917 மே மாதம் தனது பேச்சில் விளக்குகிறார். மீண்டும் நியாயமான, நியாயமற்ற போர்களுக்கிடையிலான வேறுபாட்டை யுணர்த்தி விட்டு, “நாம் எப்பொழுதும் எவ்வர்க்கம் போரை எந்த நோக்கத்திற்காக நடத்துகிறது என்று பார்க்க வேண்டும்” என விளக்குகிறார்.

மற்ற கட்டுரைகளில் உலகப் போரை ஒட்டி யெழுந்த சில சிறப்பான பிரச்சினைகளை ஆய்கிறார்.

“ஐக்கிய ஐரோப்பிய நாடுகள் என்ற முழக்கம்” (1915) என்ற நூலில் தொழிலாளர்கள் இப்படிப்பட்ட முழக்கத்தை ஆதரிக்க முடியாது என்கிறார். ஏகாதிபத்திய சக்திகள் அதிகாரத்தில் உள்ள வரை “ஐக்கிய ஐரோப்பிய நாடுகள் என்பது காலனிகளை, கொள்ளைகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு ஒப்பந்தமே, சோசலிசத்தை கூட்டாக நசுக்கும் ஒரு முகாந்திரமே” என்கிறார்.

சோசலிசம் அதன் வளர்ச்சிப் போக்கில் “உலக ஐக்கிய நாடுகளை” உருவாக்கும். ஆனால் இது இன்றைய நடைமுறைக் குறிக்கோள் அல்ல என்கிறார். சோசலிசத்தின் வெற்றி பல்வேறு நாடுகளிலோ அல்லது ஒரே ஒரு நாட்டிலோ சாத்தியமானதுதான். (இதன் காரணம் முதலாளித்துவத்தின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சிதான்)21 இந்த நாடு அல்லது நாடுகள் பிற முதலாளித்துவ நாடுகள் சூழ்ந்திருக்கும் போதும் நீண்ட காலம் சோசலிசத்தின் மையங்களாக விளங்கவும் முடியும்.

படிக்க:
லெனின் முன் வைத்த புதுப்பாணியிலான கட்சி !
கொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் ! | பொருளாதார அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன் காணொளி

லெனின், தொழிலாளர்களும் சமாதானவாதமும் (பாசிபிசமும்) என்ற நூலில் முழுமையான ஆயுத ஒழிப்பு என்னும் பாசிபிச முழக்கத்தை அம்பலப்படுத்துகிறார். முதலாளித்துவச் சூழலில் அது சாத்தியமற்றது. எனவே அதற்காக பிரச்சாரம் செய்வது உண்மையில் மெய்யான புரட்சிகரப் போராட்டங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்குமிடையிலான பிரச்சினைகளிலிருந்து நழுவுவதற்கானது.

நசுக்கப்படுகிறவர்கள் சமாதானவாதிகள் ஆக முடியாது. மாறாக ஆயுதங்களைக் கையாளவும், அவற்றை நசுக்குபவர்களுக்கெதிராகத் திருப்பவும் தயாராக தொழிலாளி வர்க்கம் இருக்க வேண்டும். ஆயுதங்களைப் பயன்படுத்தாது நசுக்கப்படுவதற்கும் சம்மதிப்பவர்கள் அடிமைகளாக நடத்தப்பட தகுதியானவர்கள்தான். நாம் பாசிபிஸ்டுகளாக இருக்க முடியாது. ஏனெனில் நாம் நியாயமான போர்கள் இருப்பதை ஏற்கிறோம். நசுக்கப்படுபவர்கள் நசுக்குகிறவர்களுக்கு எதிராக நடத்துவதே நியாயமான போர்களாகும்.

இதே கருத்தை 1916-ல் எழுதிய “பாட்டாளி வர்க்கப் புரட்சியின் போர்த்திட்டம்” என்னும் நூலில் கையாள்கிறார். இதன் முதல் பகுதியில் சோசலிஸ்டுகள் எல்லாப் போர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. அவர்கள் அப்படி இருக்கவும் முடியாது என்று விளக்குகிறார். ஏனெனில் நசுக்கப்பட்டவர்கள் விடுதலைக்காகப் போராடுகிறார்கள். உள்நாட்டுப் போர்கள் நடக்கின்றன; சோசலிசத்தைக் கட்டியமைத்த பின் ஏகாதிபத்தியத் தாக்குதலுக்கெதிரே தற்பாதுகாப்புக்காகப் போராடி ஆக வேண்டி வரலாம். நசுக்கப்படுபவர்கள் விடுதலைக்காகப் போராடத் தயாராக இருக்க வேண்டும். சோசலிச நாட்டின் மக்கள் தங்கள் தாய்நாட்டைக் காக்கப் போர் நடத்த போராடவே வேண்டும்.

இந்த நூலின் பிற்பகுதிகளில் லெனின் ராணுவப் பயிற்சி, ஆயுதங்கள் மற்றும் அவற்றைப் பயன்படுத்துவது பற்றிய பாட்டாளி வர்க்க நிலைப்பாடுகளை எடுத்துரைக்கிறார்.

லெனின்: பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கம் பற்றி

லெனினும் பிரிட்டனும் என்ற நூலில் லெனின் பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கம் பற்றித் தமது பல்வேறு படைப்புகளில் குறிப்பிட்டவற்றை உள்ளடக்கி உள்ளது. அந்நூலில் லெனின் காட்டுபவை:

மார்க்சும் எங்கெல்சும் பிரிட்டனின் சுதந்திரமான தொழிலாளி வர்க்க இயக்கத்தினைக் கட்டியமைப்பதன் முக்கியத்துவத்தை எப்படி வலியுறுத்தி வந்தனர் 24 என்பதைக் குறிப்பிடுகின்றார். அவர்களின் அணுகுமுறை, மார்க்சியம், சோசலிசத்தையும் வெகுஜன தொழிலாளர் இயக்கத்தையும் ஒன்றிணைத்த தத்துவம் என்ற கோட்பாட்டிற்கு உதாரணமாகத் திகழ்கிறது. மார்க்சும் எங்கெல்சும் பழைய சமூக ஜனநாயகவாதக் கூட்டமைப்பு (Social Democratic Federation) என்னும் அமைப்பு பிரிட்டனில் கையாண்ட குறுங்குழுவாதப் போக்கை, தன்னை வெகுஜன இயக்கத்திலிருந்தே தனிமைப்படுத்திக் கொண்டு இருந்த போதும் வரட்டுத்தனமான “தனித்தன்மை”யைப் பற்றி பேசியதை வன்மையாகக் கண்டனம் செய்தனர்.

சோசலிஸ்டுகள் “தங்கள் குறுகிய குறுங்குழுவாதப் போக்கினைத் தூக்கியெறிந்து தொழிலாளர் இயக்கத்தில் இணைய வேண்டும்” என்று மார்க்சும் எங்கெல்சும் வலியுறுத்தினர். அதேசமயம் தொழிலாளர் இயக்கத்தில் சந்தர்ப்பவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தையும் இயக்கத்திற்கு புரட்சிகரத் தத்துவம் ஒன்றின் அவசியத்தையும் வலியுறுத்தினார்கள்.

கொள்கை ஒன்றுக்குப் போராட வேண்டியது எவ்வளவு முக்கியமானது என்பதை லெனின் வலியுறுத்துகிறார். தொழிலாளர் கட்சியின் தொடக்கமே “ஒருவகையில் உண்மையில் உணர்வுள்ள பாட்டாளி வர்க்க நிறுவனங்கள் வர்க்கக் கொள்கைக்கும், சோசலிசத் தொழிலாளர் கட்சி நோக்கியும் எடுத்து வைத்திருக்கும் முதல் கட்டம் ஆகும்” எனக் குறிப்பிடுகிறார். ஆனால் 1918-ல் தொழிலாளர் கட்சி பற்றிக் குறிப்பிட்டபோது “இது தொழிலாளர்களை உள்ளடக்கி உள்ளபோதும் எதிர்ப்புரட்சிக்காரர்களால் தலைமை தாங்கப்படுகிறது” என்று கூறுகிறார்.

பிரிட்டனில் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றினைக் கட்ட வேண்டிய தேவையையும் அது தொழிலாளர் கட்சியோடு உறவு கோர வேண்டியதையும் காட்டுகிறார்.25

(தொடரும்)

குறிப்புகள்

  1. பார்க்க, லெனின், மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்க கூறுகளும்.
  2. பார்க்க, லெனின், நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் பாத்திரம்.
  3. பார்க்க, மார்க்சு, பிரான்சில் உள்நாட்டுப் போர்.
  4. பார்க்க, லெனின், ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம்.
  5. பார்க்க, ஸ்டாலின், லெனினியத்தின் அடிப்படைகள், முதல் அமெரிக்கத் தொழிலாளர் பிரதிநிதிகளுக்கு அளித்த பேட்டி.
  6. பார்க்க, லெனின், நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள், ஏப்ரல் மாநாடு.
  7. பார்க்க, எங்கெல்சு, பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கம், மற்றும் மார்க்சு – எங்கெல்சு கடிதங்கள்.
  8. பார்க்க, லெனின், பொதுவுடைமைக் கட்சியின் பாத்திரம்.

நூல் : மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி
ஆசிரியர் :
மாரிஸ் கார்ன்ஃபோர்த்

வெளியீடு : கீழைக்காற்று.
பக்கங்கள் : 272
விலை : ரூ. 150.00

மதுரை – கரூர் : நீட் தேர்வை ரத்து செய் ! அண்ணா பல்கலைக் கழக கட்டணக் கொள்ளைக்கு முடிவுகட்டு !! பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்

2
  • அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து!!
  • நீட் தேர்வு ரத்து செய்!!
  • கல்லூரி பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வை ரத்து செய்!!

என்ற முழக்கங்களை முன்வைத்து மதுரை ஆட்சியர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகில் 04.09.2020 அன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பு.மா.இ.மு மாவட்ட அமைப்பாளர் தோழர் ரவி அவர்கள் தலைமை ஏற்றார்.

அதைத் தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகம் தோழர் திலீபன் செந்தில் அவர்கள் பேசுகையில் “ஜனநாயகம் சமூக நீதியை அழித்து குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் குலக்கல்வியை நடைமுறை படுத்தக்கூடிய தேசிய கல்விக் கொள்கையை அமுல் படுத்துகிறார்கள். நீதிமன்றம் திறக்காத சூழலில் கல்லூரியை திறந்து தேர்வை மட்டும் நடத்துவது எப்படி சரியாக அமையும்?” என்று கேள்வி எழுப்பினார்.

அத்தோடு “பெருந்தொற்று காலகட்டத்தில் இப்படி தேர்வு நடத்துவது கண்டிக்கத்தக்கது இந்த நாட்டிற்கே எதிரியாகி உள்ள இந்துத்துவா-  பாஜக கும்பலை, ஜனநாயக சக்திகள் அனைவரும் சேர்ந்து விரட்டும் நாள் எந்நாளோ அதுவே விடுதலை நாள்!” என்று தனது கண்டன உரையை பதிவு செய்தார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அடுத்ததாக மக்கள் அதிகாரம் தோழர் ராஜ்குமார் பேசுகையில் நீட், JEE தேர்வுகள் ஒத்தி வைப்பது குறித்து உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தவுடன் நீட் தற்கொலைகள் தொடர்கதையாகிறது மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிறது இது அனைத்திற்கும் என்ன செய்வது என்று கேட்கும் பட்சத்தில் மோடி ‘பொம்மைகள்’ குறித்து ஆங்கிலத்தில் பேசி வருகிறார், இந்த விஷயத்தில் ஆட்சியாளர்களின் நிலைப்பாடு என்ன? என்பதை நாம் உற்று நோக்க வேண்டும்.

கட்டணத்தை கட்ட சொல்லி அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களின் கழுத்தில் கத்தி வைக்காத குறையாக மிரட்டுகிறது. இது அநீதியானது அத்தோடு, இதற்குமுன் தேர்வு மறுகூட்டல் முறைகேடு நடந்துள்ளது. இது அனைத்தும் இந்த கல்வி கட்டமைப்பே எப்படி சிக்கலில் உள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது. அதனை தொடர்ந்து அனைத்து கல்வி நிறுவனங்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் துணைவேந்தர் நியமனம் அனைத்திலும் அரசின் கைக்கூலிகளை நியமிப்பது என்பது அபாயத்திற்கு உரியது. அத்தோடு பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அடித்தட்டு மாணவர்கள் எப்படி கல்வி கட்டணம் செலுத்த முடியும்? ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பயங்கரவாதிகளிடமிருந்து மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் தலைமைக்கு கல்வியை கொண்டு வர வேண்டும் என்றும் அப்பொழுதுதான் கல்வியை மீட்டெடுக்க முடியும் என்றும் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

அடுத்ததாக தமிழ் புலிகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் தோழர் விஜயகுமார் பேசுகையில் “நீட் தேர்வு என்பதே ஏழை-எளிய மாணவர்களை மருத்துவ படிப்பில் இருந்து வெளியேற்றவும், CBSE பாடத்திட்டத்தை அனைத்து மாநிலத்திலும் அனைத்து மாணவர்களிடமும் பொதுத் தேர்வாக திணிக்கிறது. இதுவே அனிதாவின் இறப்புக்கு காரணம். திட்டமிட்டு கல்வியில் மாநில மொழியை அழிக்கிறது மத்திய அரசு. அதேபோல் வேலை இழப்பு, சிறு வயதிலேயே வேலைக்கு அனுப்புவது என்று குலக் கல்வியை அமுல்படுத்துவதற்கு துடிக்கிறது. இதை அனைத்தையும் சமூக ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.” என்று வலியுறுத்தி கண்டன உரையை பதிவு செய்தார்.

படிக்க:
நீட் தேர்வுக்கு எதிராக ! கடலூர் ஜெய் பீம் பாடசாலை மாணவர்கள் போராட்டம் !!
கொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் ! | பொருளாதார அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன் காணொளி

அதனைத் தொடர்ந்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் ஆனந்த் அவர்கள் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார் அதில் “நீட் தேர்வின் தொடர் தற்கொலைகள், அத்தோடு அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டண கொள்ளை மாணவர்களை மிரட்டும் வகையில் உள்ளதை கண்டித்தும், இதற்கு முன்னதாக மறுகூட்டலில் நடந்த முறைகேடு பற்றியும் அண்ணா பல்கலைகழகத்தின் மாணவர்கள் மீதான நிலைப்பாடு என்ன..” என்பதை அம்பலப்படுத்தி பேட்டி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் தோழர் ராமலிங்கம் RSS-னுடைய நீண்டகாலத் திட்டமான குறிப்பாக மாணவர்கள் மத்தியில் அவர்களின் இந்துத்துவ கொள்கையை அமல்படுத்துவது, தமிழ் மொழியின் மீது ஆதிக்கம் செலுத்துவது, பொதுத்தேர்வு.. அதனூடாக விளைகின்ற தற்கொலைகள், இன்று கல்வி நிறுவனங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்து, அதன் விளைவாக இந்த அண்ணா பல்கலைக் கழகத்தின் கட்டணக் கொள்ளையை தான் பார்க்கவேண்டும் என்றும், ஆன்லைன் கல்வி ஆண்ட்ராய்டு மொபைல், போன்ற பிரச்சனைகள் மாணவர்கள் பெற்றோர்களின் மன அழுத்தம், இந்த ஒட்டுமொத்த நெருக்கடி சூழலையும் அம்பலப்படுத்தி அத்தோடு இதை எதிர்த்து கேள்வி கேட்கின்ற அறிவுஜீவிகள் மீதான தாக்குதலை கண்டித்தும் தனது கண்டன உரையைப் பதிவு செய்தார்.

இறுதியாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் ஆனந்த், ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரை ஆற்றிய தோழர்கள், தோழமை அமைப்புகள், மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றி முடித்தார்.

தகவல் :
மாணவர் இளைஞர் முன்னணி,
மதுரை.

***

நீட் தேர்வை ரத்து செய் ! என்ற முழக்கத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பு 4 தேதியன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது.

கரூரில் எமது அமைப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தாந்தோணி மலை காவல் நிலையத்தில் அனுமதி கோரியிருந்தோம். கரூரில் ஊரடங்கு காலகட்டத்திலும் பிற அமைப்புகளுக்கு “ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளுங்கள், ஆனால் வழக்குப் போடுவோம்..!” என காவல்துறை பிற அமைப்புகளை ஆர்ப்பாட்டங்கள் நடத்த விடுகிறார்கள்.

ஆனால் தொடர்ச்சியாகவே எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பு நடத்தும் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி கொடுப்பது கிடையாது. குறிப்பாக சென்ற ஆண்டு நவம்பர் 7 அன்று நமது அமைப்பு தாந்தோணி மலையில் கொடிக்கம்பம் வைக்க அனுமதி கேட்டிருந்தோம். அதற்கு அனுமதி மறுத்து “திண்டுக்கல் மெயின் ரோடு என்பதாலும், நகராட்சி அலுவலகம் உள்ளது என்பதாலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்…” என்று சொல்லிக்கொண்டு அனுமதி மறுத்தது.

ஆனால் ஒரு சில நாட்களிலேயே அதே இடத்தில் அதிமுகவுக்கு கொடிக்கம்பம் வைத்து பெரிய அளவில் எம்ஜிஆருக்கு மேடை போட்டு மைக்செட் வைத்து கூட்டம் நடத்தினார்கள் அதே இடத்தில் பல்வேறு கட்சிகள் கொடிக்கம்பம் வைத்துள்ளார்கள். இது எமது அமைப்பை ஒடுக்கும், கருத்து சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கை. எங்கு கூட்டம் நடத்த வேண்டும், என்ன பேச வேண்டும், என்ன பேச கூடாது, என்பதை தாந்தோணி மலை காவல் நிலையம் தான் முடிவு செய்வார்களாம் இதுதான் ஜனநாயகமா? இதனை கண்டித்து நேற்று காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 9 மாணவர்கள் முற்றுகையிட்டனர் !

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அங்கேயும் உள்ளே செல்ல கூடாது, வாயிலேயே மனுவைக் கொடுத்து விட்டு செல்லுங்கள், என்று வரம்பு மீறி அதிகாரம் நீண்டது இரண்டு பேர் மட்டும் தான் செல்ல வேண்டும், முழக்கம் போடக்கூடாது என்று அடுக்கடுக்காக அடக்குமுறை செலுத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை, கலெக்டர் பார்க்க அனுமதி இல்லை ரோட்டில் நிற்க நடக்க கூட அனுமதி இல்லையா?,என்று காவல்துறையை எதிர்த்து நின்று போராடி உள்ளே சென்று துணை ஆட்சியரிடம், மனு கொடுத்தோம்.

  • நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்!
  • அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கூடாது! கட்டணத்தை உயர்த்தக்கூடாது!

என்ற கோரிக்கைகளை முன்வைத்தோம். நமது போராட்டங்களுக்கு அனுமதி மறுக்க காவல்துறை சொல்லும் காரணம், “நீங்கள் தனியான கண்காணிப்புக்குள் இருக்கக்கூடிய குழுக்கள்…” இதனால் உங்களுக்கு அனுமதி கிடையாது என்பதுதான்.

பாசிசம் நம்மைச் சூழும் போது அவ நம்பிக்கை நம்மை சூழும் போது அதையெல்லாம் கிழித்துக்கொண்டு, பற்றவைக்கும் நெருப்பாக என்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்த தயாராக இருக்கும் அவர்கள் எங்கு அனுமதி மறுத்தார்கள் அங்கேயே துளிர்விட்டு முளைப்போம்…

தகவல் :
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
கரூர்.

கொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் ! | பொருளாதார அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன் காணொளி

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் தற்போது அமல்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் அனைவரது மனதிலும் எழும் கேள்வி “பொருளாதாரம் என்ன நிலைமையில் உள்ளது” என்பதுதான். பலரும் பல்வேறு பதில்களை, அவர்களது சார்பு நிலைக்கேற்ப பதிலளித்து வருகின்றனர்.

இந்திய நிதியமைச்சர் ‘எல்லாம் கடவுள் செயல்’ என்று பதிலளிக்கிறார். ஆனால் நிலைமை என்னவோ எதிர்மறை (நெகட்டிவ்) வளர்ச்சியில் தான் சென்று கொண்டிருக்கிறது. இதனை பற்றியும், மேலும் இச்சூழலை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு EIA – 2020, புதிய கல்விக் கொள்கை என்ற மக்கள் விரோத திருத்தங்களைச் செய்வதை நியாயப் படுத்துகிறது பாஜக அரசு. இவற்றை தனக்கெ உரிய எளிமையான நடையில் விளக்குகிறார் பொருளாதார அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன். இக்காணொளியைப் பாருங்கள்… பகிருங்கள்…

நன்றி : தமிழ் கேள்வி.

லெனின் முன் வைத்த புதுப்பாணியிலான கட்சி !

மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி – மாரிஸ் கார்ன்ஃபோர்த்
பாகம் 3

ஆ. புதுப்பாணிக் கட்சி

லெனின்: கட்சி அமைப்புக் கோட்பாடுகள், யுத்த, போர்த் தந்திரங்கள் பற்றி
லெனின்: என்ன செய்ய வேண்டும்?

”என்ன செய்ய வேண்டும்?” பாட்டாளி வர்க்கக் கட்சியின் கடமைகள் பற்றிய மார்க்சிய அடிப்படையிலான புரிதலுக்கான மிக முக்கிய நூல். எந்தச் சூழ்நிலையில் அந்த நூல் எழுதப்பட்டது என்பதை அறியவும், அதன் முக்கியக் கருத்துக்களைப் புரிந்து கொள்ளவும் மார்க்சிய மாணவர் போல்ஷ்விக் கட்சி வரலாற்றில் முதல் அத்தியாயத்தில் 5-ஆம் பிரிவு, இரண்டாம் அத்தியாயத்தில் 2-ஆம் பிரிவு முதலியவற்றைப் படிக்க வேண்டும்.

“என்ன செய்ய வேண்டும்” ருஷ்யப் பாட்டாளி வர்க்கக் கட்சி தொடங்கிய பின் தொழிலாளிகளின் பொருளாதாரப் போராட்டங்களில் மட்டுமே ஈடுபட வேண்டும், அரசியல் பிரச்சினைகளை விடவும் வயிற்றுப் பிரச்சினைக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கற்பிக்க முயன்றவர்களுக்கெதிராக எழுதப்பட்ட நூல். இந்த வகைப் போக்கில் சந்தர்ப்பவாதத்தின் உட்கரு உள்ளது என்பதையும், வர்க்க சமரசத்தை கட்சிக்குள் கொண்டுவரும் என்பதையும் லெனின் கண்டுகொண்டார்.

“பொருளாதாரவாதிகள்” என அழைக்கப்பட்டவர்கள் கட்சிக்குள் “விமரிசன சுதந்திரத்தை”க் கோரியும், லெனினுடையவை “குறுகிய அரசியல் பார்வை” எனத் தாக்கியும், தங்கள் பிரச்சாரத்தை தொடங்கினர். லெனின், அவர்கள் கோருகின்ற “விமரிசன சுதந்திரம்” உண்மையில் மார்க்சியத்திற்கு பதில் முதலாளித்துவக் கருத்துக்களைத் தழுவுவதற்கு வேண்டும் சுதந்திரம் என்பதையும், முதலாளித்துவ வாதிகளுடன் சமரசத்திற்கான பாதையைத் திறந்துவிடும் என்பதையும் காட்டுகிறார். “சரிதான், பொருளாதாரவாதிகளுக்கு வர்க்க சமரசப் பாதையைத் தழுவும் சுதந்திரம் உண்டு, ஆனால் கட்சியையும் சேர்த்து இழுக்காதீர்கள்” என்று கேலியாகச் சொல்கிறார் லெனின்.

தொழிலாளி வர்க்க இயக்கத்தை பொருளாதாரப் போராட்டத்திற்கு மட்டும் சுருக்குவது என்பது அரசியல் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு, தொழிலாளர்களை என்றென்றைக்கும் கூலி அடிமை முறையோடு பிணைப்பது என்று பொருளாகிறது என்கிறார் லெனின். பொருளாதாரவாதிகள் மோசமான நிலைகளுக்கெதிராக தொழிலாளிகள் தன்னெழுச்சியாகத் திரண்டெழுவதைச் சார்ந்து இருந்தனர். இப்போக்கை, லெனின், தலைமை தாங்குவதற்குப் பதில் மக்களின் பின்னே செல்லும் வால்வாதம் (குவோஸ்திசம்) என்றழைக்கிறார். பாட்டாளி வர்க்க இயக்கத்தில் தன்னெழுச்சியான பொருளாதாரப் போராட்டங்களினால் மட்டும் தன்னெழுச்சியாக அரசியல் அறிவு வந்து விடாது என்கிறார் லெனின். அரசியல் அறிவு, புரட்சிகரத் தத்துவம் பாட்டாளி வர்க்க இயக்கத்தினுட் புகுத்தப்பட வேண்டும். பொருளாதாரவாதிகள் தத்துவத்தின் பங்கைச் சிறிதாக்கினர். ஆனால் “புரட்சிகரத் தத்துவம் இல்லையேல் நிச்சயம் புரட்சிகர இயக்கமும் இல்லை.”8

படிக்க:
நீட் தேர்வுக்கு எதிராக ! கடலூர் ஜெய் பீம் பாடசாலை மாணவர்கள் போராட்டம் !!
பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்

பாட்டாளி வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதக் கருத்துக்களின், திட்டங்களின் வேர், தத்துவத்தின் பங்கைச் சுருக்கி, தன்னெழுச்சியான இயக்கத்தைச் சார்ந்திருப்பதில் இருக்கிறது என லெனின் காட்டுகிறார்.

“என்ன செய்ய வேண்டும்” எவ்வாறு பொருளாதாரப் போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தையும் இணைக்க வேண்டும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. பாட்டாளி வர்க்க அரசியல் போராட்டங்கள் “தொழிற்சங்க அரசியலை” விடவும் விரிவானவை. வர்க்க தொழிலாளிகள் “பல்வேறு வர்க்கங்களின் இடையிலான உறவுகள்” குறித்து அக்கறை கொள்ள வேண்டும். எதிர்ப்புரட்சியின் எல்லா வெளிப்பாடுகளையும் எதிர்த்துப் போராட வேண்டும் ஒடுக்குமுறைக்கும் எதிராக போராட வேண்டும். பொருளாதாரப் போராட்டத்தை மட்டுமே உயர்த்திப் பிடிப்பதன் மூலம் பொருளாதாரவாதிகள் சீர்திருத்தவாதம், சந்தர்ப்பவாதத்தினுள் ஆழ்கிறார்கள். சீர்திருத்தங்களுக்கான போராட்டங்களும் விடுதலைக்கான சோசலிசத்திற்கான போராட்டங்களாக மாற்றப்பட வேண்டும்.

லெனின்: ஓரடி முன்னே ஈரடி பின்னே
(One Step Forward Two Steps Back)

கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனக் கோட்பாடுகளைப் புரிந்து கொள்ள இந்நூல் மிக முக்கியமானதாகும். 1904-இல் ருஷ்ய சமூக ஜனநாயகவாதத் தொழிலாளர் கட்சியின் இரண்டாம் காங்கிரசைத் தொடர்ந்து எழுதப்பட்டது. இந்தக் காங்கிரசில்தான் போல்ஷ்விக் – மென்ஷ்விக் பிளவு வெளிப்படையாகக் கட்சிக்குள் தெரிந்தது.

இந்நூலைப் புரிந்து கொள்ளவும் இதன் பின்னணியைப் புரிந்து கொள்ளவும் போல்ஷ்விக் கட்சி வரலாற்றின் இரண்டாம் அத்தியாயத்தின் 3, 4 பிரிவுகளைப் படிக்க வேண்டும். 1903-இல் ருஷ்ய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் இரண்டாம் காங்கிரசில் இருவகைப் போக்குகளாக, புரட்சிகரப் போக்கும், சந்தர்ப்பவாதமும் வெளிப்படையாக உணரப்பட்டது. காங்கிரசில் கட்சித் திட்டத்தை ஏற்றுக் கொண்ட பிறகு அதன் விதிகளை ஏற்பதில் பிரச்சினை ஏற்பட்டது. லெனினும் அவரது ஆதரவாளர்களும் கட்சியில் உறுப்பினராக மூன்று தகுதிகளை முன் வைத்தனர்.

அவை:

(i) கட்சித் திட்டத்தை ஏற்பது
(ii) கட்சிக்குச் செலுத்த வேண்டிய தொகையைத் தருவது.
(iii) கட்சி உறுப்பொன்றில் இருப்பது.

அவரது எதிர்ப்பாளர்கள் 3-ஆம் விதி கூடாது என்றனர்.

இக்காங்கிரசின் முடிவில் லெனினின் ஆதரவாளர்கள் கட்சி மத்தியக் கமிட்டியிலும், கட்சி இதழான ‘இஸ்க்ரா’ ஆசிரியர் குழுவிலும் பெரும்பான்மை பெற்றனர். எனவேதான் அவர்கள் பெரும்பான்மை எனப் பொருள்படும் போல்சவிக்குகள் என்ற பெயரால் அழைக்கப்பட்டனர். சிறுபான்மை எனப் பொருள்படும் மென்ஷ்விக் என்ற பெயர் லெனினின் எதிர்ப்பாளர்களுக்கானது. ஆனால் பின்பு மென்ஷ்விக்குகள் இஸ்க்ராவைக் கைப்பற்றினர். கட்சிக்கு எதிரே அது மிகவும் “இறுகிப்” போய் உள்ளது எனத் தாக்கத் தொடங்கினர். கட்சியின் முடிவுகளை தனிநபர் மீறும் “சுதந்திரத்தை” அவர்கள் கோரினர். சந்தர்ப்பவாதிகள் கட்சி விதிகளின் மீதான தாக்குதலை இப்படித் தொடங்கினர்.

லெனின், கட்சி அமைப்பைப் பலவீனப்படுத்தும் இம்முயற்சி பெரிய அரசியல் விஷயங்களில் சந்தர்ப்பவாதத் திட்டங்களைத் திணிக்கும் முன்முயற்சி என்று கண்டுகொண்டார். “ஓரடி முன்னே ஈரடிகள் பின்னே” நூலில் 2-ஆம் காங்கிரசின் அனைத்து நடைமுறைகளையும், ஓட்டுக்களையும் ஆய்ந்து கட்சியில் இரு பிரிவுகள் உள்ளதைக் காட்டினார். புரட்சிகரப் பிரிவு, சந்தர்ப்பவாதப் பிரிவு என்ற இரண்டுமே அவை. இந்த நூலில் மத்தியப்படுத்தப்பட்ட ஒழுங்கமைந்த கட்சி பாட்டாளி வர்க்கத்தின் தேவை9 என்பதை லெனின் தெளிவாகக் காட்டுகிறார்.

லெனின்: இடதுசாரிக் கம்யூனிசம் ஒரு இளம்பருவக் கோளாறு

இடதுசாரிக் கம்யூனிசம் ஒரு இளம்பருவக் கோளாறு, கம்யூனிஸ்ட் கட்சியின் யுத்த தந்திரம், போர்த்தந்திரம், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை மக்கள் கட்சியைக் கட்டுவது பற்றிய ஒரு கையேடு எனலாம். 1920-இல் கம்யூனிஸ்ட் அகிலத்தின் 2-வது காங்கிரசின்போது பல நாட்டு கம்யூனிஸ்டுகள் இணைந்து “இடது” தவறுகளைத் திருத்த எழுதப்பட்டது.

லெனின் ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் போல்ஷ்விக்குகளின் அனுபவங்களை உலகக் கம்யூனிச இயக்கத்திற்கு வழிகாட்டுவதற்குத் தொகுத்தார்.

போல்ஷ்விக் கட்சி சந்தர்ப்பவாதத்தை மட்டுமே எதிர்த்து உறுதியும் வலிமையும் பெறவில்லை; மாறாக கட்சியில் நிலவிய, குட்டி முதலாளித்துவ இடதுசாரிப் போக்கையும் எதிர்த்துப் போராடியே எஃகுறுதி போன்ற வலிமை பெற்றது.

இந்த நூலின் தலையாய போதனைகள்:

  1. தலைவர்கள், கட்சி, வர்க்கம், மக்கள் இடையிலான சரியான உறவுகளைப் பராமரிக்க மத்தியப்படுத்தப்பட்ட ஒழுங்குமிக்க கட்சியின் அவசியத்தை கட்சித் தலைமையின் அவசியத்தை அவர் உணர்த்துகிறார். தலைவர்களுக்கெதிராக மக்கள் இருப்பதை எதிர்ப்பதாக பேசும் உறுதிமிக்க “இடதுசாரி”களின் அபாயத்தைக் குறிப்பிடுகிறார். அத்தகைய இடதுசாரிப் பேச்சு கட்சியை, கட்சிக் கட்டுப்பாட்டை நிராகரிக்கும் போக்குக்கு இட்டுச் செல்கிறது. மேலும் அது பாட்டாளி வர்க்கத்தை முதலாளிகளுக்காக நிராயுதபாணியாக்கும் செயல் என லெனின் காட்டுகிறார். இத்தகைய போக்கு பாட்டாளி வர்க்கத்தினின்று எழுவதில்லை. ஏனெனில் கட்சியின் அவசியத்தை அது உணர்ந்துள்ளது; மாறாகக் குட்டி முதலாளிகளிடமிருந்து எழுகிறது என்கிறார்.10நமது பணி பெரும் முதலாளிகளை வீழ்த்துவது மட்டுமல்ல கூடவே, (அதைவிடக் கடினமான) சிறு உற்பத்தியாளர்களை மறு ஒழுங்கமைப்பதும், மறு கல்வியளிப்பதும் என்கிறார். இதற்கு நெடிய, கடின போராட்டம், பழைய அமைப்பின் மரபுகள், சக்திகளுக்கெதிரே நடத்தப்பட வேண்டும். அதைச் செய்ய மத்தியப்படுத்தப்பட்ட கட்டுப்பாடான கட்சியாலேயே முடியும்.11 மேலும் லெனின் எவ்வாறு இடதுசாரிப் போக்குகள் “தூண்டி விடுகிற ஏஜெண்டுகள்” கையில் போய் செயல்படுகிறது என்பதையும் காட்டுகிறார்.

படிக்க:
பாசிசத்தை ஆதரித்து நிற்கும் ஃபேஸ்புக் !
பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்த மார்க்சிய மூல நூல்கள் | அறிமுகம்

  1. லெனின் ஒரு “வெகுஜனக் கட்சியின்” அவசியத்தைக் காட்டுகிறார். கட்சியை மட்டுமல்ல மக்களையும் தலைமை தாங்குவதே நமது பணி என்கிறார். பல்லாயிரக்கணக்கான மக்களை செயலுக்கு இட்டுச் செல்வது என்பதே அதன் பொருள். கட்சி எங்கெல்லாம் வெகுஜனங்கள் உண்டோ அங்கெல்லாம் பணிபுரிவது கட்சிக்கு அவசியம், எங்கும் ஊடுருவுவது, மக்களை எழுச்சியூட்டிப் போராட்டத்திற்கு இழுப்பது அவசியமானது என்கிறார் லெனின்.இதன் தொடர்பாக தொழிற்சங்கங்களில் வேலை எவ்வளவு அவசியமானது என்பதை வலியுறுத்துகிறார். தொழிற்சங்கங்கள் “எதிர்ப்புரட்சிகரமானவை” என்ற பெயரில் அவற்றில் வேலை செய்யாது இருப்பது பெருந்திரளான மக்களை ஒருசில எதிர்ப்புரட்சித் தலைவர்கள் கையில் விட்டுவிடுவது என்று பொருள்.12 எங்கெல்லாம் பெருந்திரளான மக்கள் உண்டோ அங்கெல்லாம் அவர்களின் வளர்ச்சி நிலைக்கேற்ப பணிபுரிய வேண்டும். செயற்கையான “இடதுசாரி” முழக்கங்களை முன்வைத்து விட்டு நம்மை வேலியிட்டுக் கொள்ளக் கூடாது என்கிறார்.
  1. கட்சி எல்லா தொழிலாளர் போராட்டங்களின் எல்லா வடிவங்களையும் கற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சட்டவிரோத நிலைமைகள் நிலவுமேயானால் சட்டபூர்வ – சட்டவிரோத வடிவங்களை இணைக்கக் கற்க வேண்டும். குறிப்பாக, பாராளுமன்றப் போராட்டங்களை நடத்தி மக்களுக்குக் கற்பிக்க, எழுச்சியூட்ட, தெளிவேற்படுத்தத் தேர்ச்சி பெற வேண்டும். தேர்தல்களில் பங்கேற்பது, பூர்ஷ்வா பாராளுமன்றத்தில் போராடுவதன் மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.13கட்சி ஒரு போராட்ட வடிவத்திலிருந்து மற்றொன்றுக்கு மாறுவதற்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். தனது தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளவும், சுய விமர்சனத்திற்கும் பழக வேண்டும்.14 அப்படி இல்லையென்றால், அது வெகுஜனக் கட்சியன்று; ஒருசில அறிவு ஜீவிகளின் கட்சிதான் என்கிறார்.
  1. லெனின், இடதுசாரிகள் முன்வைக்கும் “சமரசமில்லை” என்ற முழக்கத்தைக் கேலி செய்கிறார். நாம் பிற கட்சிகளோடு எவ்வாறு சமரச உடன்பாடுகளை எட்டுவது என்று கற்க வேண்டும். இப்போர்த்தந்திரத்தை பயன்படுத்துவது தொழிலாளர்களின் போராடி வெல்லும் திறமையை உயர்த்தும்வண்ணம் மட்டுமே இருக்க வேண்டும்; தாழ்த்தக் கூடாது. சாத்தியப்பட்ட ஒவ்வொரு கூட்டாளியையும் வெல்ல வேண்டும். எதிரியின் அணிகளின் ஒவ்வொரு உட்பிரிவையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானது15 என்கிறார்.மேலும் எதிரியின் வலைக்குள் சிக்காமல் தப்பிக்கவும் தெரிய வேண்டும் – எதிரிக்கு சாதகமான வேளையில் மோதலைத் தவிர்க்கவும் வெளிப்படையாக பாதகமாகத் தெரியும் போராட்டங்களைத் தவிர்க்கவும் தெரிய வேண்டும்.9-ஆம் அத்தியாயத்தில் லெனின் பிரிட்டன் பற்றி ஆய்கிறார். லேபர் பிரிவுக்கும் டோரி பிரிவுக்கும் இடையில் ஒற்றுமைக்கான போர்த்தந்திரத்தைக் காட்டுகிறார். அந்த ஒற்றுமை பிரிட்டிஷ் கம்யூனிஸ்டுகள் மக்களுடைய கவனத்தை ஈர்த்து அவர்களைப் பயிற்றுவிக்கவும், வலதுசாரி ஆதிக்கத்தின் முடிவைத் துரிதப்படுத்தவும் உதவும் என்கிறார்.16 பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு சரியான பாதையை, சரியான அணுகுமுறை வடிவத்தை ஒவ்வொரு நாட்டுக் கம்யூனிஸ்டுகளும் கண்டுபிடிக்க வேண்டும் என்று காட்டுகிறார். நாம் அனைத்துக்கும் பொதுவான விதி என்று எதையும் முன் வைக்க முடியாது. அதேவேளையில் கம்யூனிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் தேசிய, தேசிய அரசு வேறுபாடுகளுக்கேற்ப சரியாகப் பொருத்துவது அவசியம். பாட்டாளி வர்க்கப் புரட்சியின் இடைநிலைக்கட்ட அல்லது அணுகுமுறை வடிவங்களைக் கண்டுபிடிப்பதில் கவனம் ஒன்றுகுவிக்கப்பட வேண்டும்17 என்கிறார். இதன் பொருள் மக்களை புரட்சிகரப் போராட்டப் பாதைக்கு ஈர்க்கும் சரியான பாதையைக் கண்டுபிடிப்பது ஆகும்.

இதன் தொடர்பாக எவ்வாறு சோசலிசப் புரட்சியை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வது என்பதை லெனின் விளக்கிச் செல்கிறார்.

(தொடரும்)

குறிப்புகள்

8 – 9. பார்க்க, ஸ்டாலின், லெனினியத்தின் அடிப்படைகள்.
10. பார்க்க, லெனின், என்ன செய்ய வேண்டும், ஓரடி முன்னே, ஈரடி பின்னே
11. பார்க்க, லெனின், மக்கள் ஏய்க்கப்படுவது.
12. பார்க்க, லெனின், கம்யூனிஸ்டு அகிலத்தின் அடிப்படைக் கடமைகள் பற்றிய ஆய்வு, கம்யூனிஸ்டு அகிலத்தின் போர்த்தந்திரங்களுக்கு ஆதரவாக, ஜெர்மானியப் பொதுவுடைமையாளர்களுக்கு கடிதம்.
13. பார்க்க, லெனின், மூன்றாம் அகிலத்தின் கடமைகள்.
14. பார்க்க, சோ.யூ.பொ.க.(போ)யின் வரலாறு முடிவுரை; ஸ்டாலின், சோ.யூ.பொ.க.(போ)யின் 15-வது பேரவைக்கான அறிக்கை .
15. பார்க்க, ஸ்டாலின், லெனினியத்தின் அடிப்படைகள்.
16. பார்க்க, லெனினும் பிரிட்டனும், லெனின், பொதுவுடைமைக் கட்சியின் பாத்திரம்.
17. பார்க்க, லெனின், அரசும் புரட்சியும்.

நூல் : மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி
ஆசிரியர் :
மாரிஸ் கார்ன்ஃபோர்த்

வெளியீடு : கீழைக்காற்று.
பக்கங்கள் : 272
விலை : ரூ. 150.00

நீட் தேர்வுக்கு எதிராக ! கடலூர் ஜெய் பீம் பாடசாலை மாணவர்கள் போராட்டம் !!

0

நீட் தேர்வுக்கு எதிராக ! கடலூர் ஜெய் பீம் பாடசாலை மாணவர்கள் போராட்டம் !!

டலூர் மாவட்டம், முகதரியாங்குப்பம் கிராமத்தில் இயங்கி வரும் “ஜெய் பீம்” இரவு நேர பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள் மற்றும் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த தோழர்களும் 03.09.2020 அன்று  கீழ்க்கண்ட கோரிக்கைகளான

  • மருத்துவ மாணவர்களை படுகொலை செய்யும் நீட் தேர்வுக்கு எதிராகவும் !
  • பெரும்பான்மை மக்களுக்கு எதிராக உள்ள புதிய கல்வி கொள்கை முழுவதையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் !

என்ற கோரிக்கையை வலியுறுத்தி இணையவழி போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்திற்கு தோழர் பிரம்மதேவன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பு.மா.இ.மு உறுப்பினர்கள் தோழர் பால்ராஜ் , தோழர் மணிகண்டன் மற்றும் புமாஇமு மாவட்ட செயலாளர் தோழர் மணியரசன்  ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தோழர் பிரம்மதேவன் தனது தலைமையுரையில், “புதிய கல்விக் கொள்கையில் ஏழை எளிய, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, மாணவர்கள் மேற்கல்வி பெற முடியாத வகையில் 3,5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு. கலை – அறிவியல் படிப்பில் சேர வேண்டுமானால் நீட் தேர்வை போன்ற நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்தால் தான் கல்லூரியில் பயில முடியும் என்ற நிலை இருக்கிறது. இதனை ரத்து செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.” என்று பேசினார்.

அவரைத் தொடர்ந்து தோழர் பால்ராஜ் பேசுகையில் “மாணவி அனிதா மருத்துவராக வேண்டும் என்பது அவரது கனவு. அவரது தாய் முறையான மருத்துவ வசதி இல்லாமல் இறந்து போனதைத் தொடர்ந்து, அந்த நிலை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது அனைவருக்கும் மருத்துவ சேவை செய்ய வேண்டும், என்ற எண்ணம் கொண்டு போராடி படித்த மாணவி அனிதாவை மத்திய, மாநில அரசுகள், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என அனைத்தும் திட்டமிட்டு படுகொலை செய்துள்ளது.

இதன் தொடர்ச்சிதான் இன்று புதுக்கோட்டை மாணவி ஹரிஷ்மா தற்கொலை? நுழைவுத் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்தால்தான் அது நமக்கான கல்வியாக இருக்கும் இல்லையேல் அக்கல்வி காசு உள்ளவனுக்கு மட்டுமே நிரந்தரம்.” என பேசினார்.

படிக்க:
பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்
நீட் தேர்வை ரத்து செய் ! கடலூர் புமாஇமு ஆர்ப்பாட்டம் !!

இறுதியாக தோழர் மணியரசன் தனது கண்டன உரையில், “கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னதாக NLC- நிர்வாகம் தனது இரண்டாம் கட்ட வேலையாக 40 கிராமங்களை அப்புறப்படுத்த கூடிய வேலையை முன்னெடுத்தது. அதற்கு எதிராக அனைத்து கட்சியினர், கிராம இளைஞர்கள், பொதுமக்கள் எப்படி நாம் ஒற்றுமையாக இருந்து போராடி தடை பெற்றிருக்கிறோமோ. அதைவிட பேராபத்து தான் நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை! இதற்கும் நாம் கிராமம் கிராமமாக இதன் பாதிப்புகளை எடுத்துச்சொல்லி ஒற்றுமையாக நின்று போராடி வெற்றி பெற வேண்டும்.” என பேசினார்.

இந்த இணையவழி போராட்டத்தில் மாணவர்கள் இளைஞர்கள் கிராம பொதுமக்கள்
மோடி- எடப்பாடி அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தகவல் :
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
கடலூர். தொடர்புக்கு : 97888 08110.

நீட் தேர்வை ரத்து செய் ! கடலூர் புமாஇமு ஆர்ப்பாட்டம் !!

0

டலூர் மாவட்டம் கோ.பூவனூர் பகுதியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் பகுதி இளைஞர்கள் சார்பாக மாணவி அனிதாவிற்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நீட் தேர்வில் மத்திய அரசு முதல் மாநில அரசு வரை, உச்ச நீதிமன்றம் முதல் உயர் நீதிமன்றம் வரை இதுவரை இழைத்துவரும் அநீதிகளையும், RSS – BJP யின் வன்மத்தையும் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

மேலும் தோழர்கள் தமிழகத்திற்கு நீட் தேர்வால் ஏற்பட்ட இழப்புகள் பற்றி நினைவேந்தல் உரையில் விளக்கி பேசினர். இதற்கு தோழர் கார்த்திக் தலைமை வகித்தார். தோழர் கணேஷ்மற்றும் தோழர் பால்ராஜ் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். இறுதியாக தோழர் அர்ஜுன் நன்றி உரையாற்றினார்.

இதில் பெருந்திரளாக இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
கடலூர். தொடர்புக்கு : 97888 08110.

படிக்க:
பாசிசத்தை ஆதரித்து நிற்கும் ஃபேஸ்புக் !
♦ நீட் ஆள்மாறாட்டம் மட்டுமல்ல , நீட் தேர்வே மோசடி ! சிதம்பரம் RSYF கருத்தரங்கம்

***

நீட் தேர்வை ரத்து செய் ! கடலூர் புமாஇமு கண்டன ஆர்ப்பாட்டம் !!

டலூர் மாவட்டம், விருத்தாசலம், பாலக்கரையில் 02.09.2020 அன்று மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பின்வருமாறு:

  • நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
  • கொரோனா – பல்கலைக்கழகங்கள் திறக்கவிலை கட்டணம் எதற்கு?
    அண்ணா பல்கலைக்கழக கட்டணக் கொள்ளையை நிறுத்து!
  • கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வை ரத்து செய்!
  • புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும் !

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இவ்வார்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் தோழர். மணியரசன் தலைமை தாங்கினார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இதில் தோழர் மணிவாசகம், தோழர் பால்ராஜ் மற்றும் புமாஇமு உறுப்பினர்கள் பூங்குழலி, மணிகண்டன், கணேஷ், அர்ஜுன் மற்றும் பலர் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ கல்வி உரிமை பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் மாணவி அனிதாவைப் போல தொடர்ந்து தற்கொலைகள் அதிகரித்து கொண்டே வருகிறது.

மேலும் அண்ணா பல்கலைக்கழகம் கொரோனா பெரும் நோயினால் 5- மாதம் மூடி கிடந்த நிலையில் “மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை கட்ட வேண்டும், அப்படி இல்லை எனில் பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்கள் நீக்கப்படுவார்கள்.” என பகிரங்க மிரட்டல் விடுகிறது. இவற்றையெல்லாம் அம்பலப்படுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தகவல் :
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
கடலூர். தொடர்புக்கு : 97888 08110.

டேவிட் ரிக்கார்டோ : தொழில், வர்த்தகத் தத்துவாசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 61

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 61

அத்தியாயம் பன்னிரண்டு | டேவிட் ரிக்கார்டோ: தொழில், வர்த்தகத் தத்துவாசிரியர்

அ.அனிக்கின்

1799-ம் வருடத்தில் லண்டனிலுள்ள பங்குச் சந்தையைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் பாத் என்ற இடத்திலுள்ள வெந்நீர் ஊற்றுக்களில் குளித்து ஆரோக்கியமடைவதற்காகத் தன் மனைவியோடு அங்கே வந்து தங்கியிருந்தார். ஒரு நாள் அங்கேயிருந்த பொது நூலகத்துக்குச் சென்ற பொழுது ஆடம் ஸ்மித் எழுதிய நாடுகளின் செல்வம் என்ற புத்தகம் அவருடைய கண்களில் தட்டுப்பட்டது. அதை எடுத்துப் புரட்டினார்; அந்தப் புத்தகம் சுவாரசியமானதாகத் தோன்றவே அதைத் தன்னுடைய அறைக்குக் கொடுத்துவிடுமாறு கேட்டுக் கொண்டார். டேவிட் ரிக் கார்டோ இப்படி தன் கவனத்தை அரசியல் பொருளாதாரத்தை நோக்கித் திருப்பினார்.

இந்த சம்பவத்தை ரிக்கார்டோவே சொல்லியிருக்கிறார். எனினும் நியூட்டனையும் ஆப்பிள் பழத்தையும், ஜேம்ஸ் வாட் டையும் வெந்நீர்க் கொதிகலத்தையும் பற்றிச் சொல்லப் படுகின்ற கதைகளைப் போன்றதே இதுவும். அவர் கல்வி அறிவுடையவராதலால் ஆடம் ஸ்மித்தின் புத்தகத்தைப் பற்றி அவருக்கு முன்பே நன்கு தெரிந்திருக்கும். இதற்கு முன்பே ரிக்கார்டோ பொருளாதாரத்தைப் பற்றி விரிவான செய்முறை அறிவைப் பெற்றிருந்தார்; சூக்குமமாக சிந்திக்கின்ற திறமையும் அவரிடம் ஓரளவுக்கு இருந்தது. ஏனென்றால் அவர் விஞ்ஞானங்களில் அக்கறை கொண்டிருந்தார். எனினும் பாத் ஆரோக்கிய ஸ்தலத்திலிருந்த நூலகம் அவருக்கு ஒரு தூண்டுதலாக இருந்திருக்கலாம்.

ரிக்கார்டோ பணத்தைத் திரட்டுவதில் தொடர்ந்து ஈடுபட்டார்; ஓய்வுநேரத்தில் கனிப்பொருள் இயலைப் படித்தார். எனினும் இப்பொழுது அவருடைய செயல், அவர் ஆர்வத்தோடு ஈடுபட்ட காரியம் அரசியல் பொருளாதார ஆராய்ச்சியே. எத்தகைய சுயநல நோக்கமும் இல்லாமல், பணத்துக்காகவோ, தொழில் முறையில் வெற்றி அல்லது புகழுக்காகவோ இல்லாமல் விஞ்ஞானத்தை ஆர்வத்தோடு ஆராய்ச்சி செய்தது, தொடர்ச்சியாகவும் பற்றற்ற முறையிலும் உண்மையைத் தேடியது ரிக்கார்டோவின் சிறப்புக்களில் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

அரசியல் பொருளாதாரத்தை ஆராய்வது அவருக்கு ஒரு அகத் தேவையாக, அங்ககத் தேவையாக இருந்தது; தற்சிந்தனையும் உயிர்க்களையும் நிறைந்த அவருடைய ஆளுமையை எடுத்துக் கூறக் கூடிய தர்க்கரீதியான வழியாக இருந்தது. ரிக்கார்டோ அடக்கமான பண்புகளைக் கொண்டவர்; அரசியல் பொருளாதாரம் என்ற விஞ்ஞானத்தில் தன்னுடைய ஈடுபாடு பொழுது போக்கானதே என்று வாழ்நாள் முழுவதும் கருதினார். ஆனால் இந்தப் பொழுது போக்குவாதிதான் இங்கிலாந்தின் மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தைப் படைக்கும் பணியைப் பூர்த்தி செய்தார்.

ரிக்கார்டோ செய்த மாபெரும் சேவை விஞ்ஞான ரீதியான பொருளாதார ஆராய்ச்சி முறைகளை வகுத்துக் கொடுத்ததாகும். அவருடைய சமகாலத்தவர்கள், ரிக்கார்டோவின் பேனா முனையிலிருந்து உருவாகியிருக்கின்ற ”அரசியல் பொருளாதாரம் என்ற புதிய விஞ்ஞானத்தைப்” பற்றிப் பேசினார்கள்; அவர்கள் சொன்னது ஓரளவுக்குச் சரியே. அவருடைய நூல்களில் அரசியல் பொருளாதாரம் சமூகத்தின் பொருளாதார அடிப்படையைப் பற்றிய அறிவின் அமைப்பு என்ற வகையில் முதன் முறையாக விஞ்ஞானத்தின் கூறுகளைப் பெற்றது.

சமூகத்தின் பொருளாயதச் செல்வத்தின் வளர்ச்சிக்கு உற்பத்தி, வினியோகத்தின் மிகவும் சாதகமான (உசிதமான) சமூக நிலைமைகள் எவை என்ற கேள்வி எப்போதும் பொருளியலாளர்களின் கவனத்தைப் பெற்று வந்திருக்கிறது. இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்கு ரிக்கார்டோ முயற்சி செய்தார். இந்தப் பிரச்சினை யைப் பற்றி அவர் தெரிவித்த பல கருத்துக்கள் இன்றைக் கும் கூட முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கின்றன. ரிக்கார் டோவின் தத்துவக் கருத்துக்களின் முக்கியமான கூறு அவற்றின் ஒருமைவாதமே, அதாவது பொருளாதார யதார்த்தத்தின் பல்வேறு விவரங்கள் அனைத்தையும் பற்றிய விஞ்ஞான ரீதியான பொருள் விளக்கத்துக்கு அடிப்படையாக அமைகின்ற ஒரே பொதுக் கருதுகோளைக் கொண்டிருக்கிறது. தனக்கு முன்பிருந்த மாபெரும் மேதையான ஆடம் ஸ்மித் தைப் பின்பற்றி ரிக்கார்டோ பொருளாதாரத்தைப் பல் கூட்டான அமைப்பு என்ற வகையில் ஆராய்வதற்கும் அதன் சமநிலை பற்றிய அடிப்படையான நிபந்தனைகளை வரையறுப் பதற்கும் முயற்சி செய்தார்.

படிக்க:
இந்தியா – பாகிஸ்தான் : தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை !
நூல் அறிமுகம் : அராஜகவாதமா ? சோசலிசமா ? | தோழர் ஸ்டாலின்

பொருளாதாரத்தில் புற நிலையான விதிகள் இருக்கின்றன, இந்த விதிகள் நடைமுறைப் போக்குகளாக இயங்குவதை உறுதிப்படுத்துகின்ற இயந்திர அமைப்புகள் அதில் இருக்கின்றன என்ற அவருடைய நம் பிக்கையோடு இது இணைக்கப்பட்டிருந்தது. “சுய ஒழுங்கமைப்புச் செயல் முறைமை” என்ற பிரச்சினை பொருளாதாரத்தில் தத்துவ ரீதியிலும் செய்முறையிலும் அதன் முக்கியத்துவத்தை இன்னும் வகிக்கிறது. ரிக்கார்டோவின் நூல்கள் பணச் செலாவணியும் கடன் வசதியும், சர்வதேசப் பொருளாதார உறவுகள், வரி விதிப்பு போன்ற ஸ்தூலமான பொருளாதாரத் துறைகளின் வளர்ச்சியில் கணிசமான பாத்திரத்தை வகித்திருக்கின்றன. நில வாரம், சர்வ தேச உழைப்புப் பிரிவினை ஆகியவற்றைப் பற்றி ரிக்கார்டோ வெளியிட்ட கருத்துக்கள் பொருளாதாரச் சிந்தனை என்னும் கருவூலத்தின் பகுதியாகிவிட்டன. அவர் அறிவாழமிக்க தத்துவாசிரியர்; அதே சமயத்தில் தன் காலத்தையும் நாட்டையும் சேர்ந்த பொருளாதாரப் பிரச்சினைகளில் அவர் நெருக்கமாக சம்பந்தப்பட்டிருந்தார். பொருளாதார, சமூகப் பிரச்சினைகளில் அவர் நுணுக்கமான வாதத்திறமையையும் கட்டுரை வன்மையையும் கொண்டிருந்தார். ரிக்கார்டோ பின்பற்றிய விஞ்ஞான நேர்மை எனப்படும் மேன்மையான கோட்பாடுகள் இன்றும் நம்மால் போற்றப் படக்கூடியவை, நாம் பின்பற்றுகின்ற தகுதி உடையவை.

அவர் வாழ்ந்த காலத்தில் பொருளியலாளர் என்ற தொழில் இன்னும் தோன்றவில்லை; அப்படிப்பட்ட காலத் தில் கூட விஞ்ஞானத்தில் அவர் கடைப்பிடித்த பாதை குறிப்பிடத்தக்கதாகவும் அவருடைய சமகாலத்தவர்களின் போற்றுதலைப் பெறுகின்ற வகையிலும் இருந்தது. அவருடைய சீடர்களில் ஒருவர் 1821ம் வருடத்தில் பின்வருமாறு எழுதினார்: ”ஒரு ஆங்கிலேயர்-அவர் கல்விக் கூடங்களின் உள் அறைகளில் வசிக்கவில்லை, வர்த்தகச் சமூகக் கவலைகளால் எப்போதும் துன்பமடைந்து கொண்டிருந்தவர் ஐரோப்பாவிலுள்ள எல்லாப் பல்கலைக்கழகங்களும் ஒரு நூற்றாண்டுக் காலச் சிந்தனைக்குப் பிறகும் துரும்பளவு கூட சாதிக்க முடியாததை அவர் செய்து முடித்தாரென்றால் அது சாதாரண விஷயமல்ல”(1)

 

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) M. Blaug, Ricardian Economics. A Historical Study (New Haven, 1958, p. V) என்ற புத்தகத்தில் காட்டப்படும் மேற்கோள்.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்த மார்க்சிய மூல நூல்கள் | அறிமுகம்

மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி – மாரிஸ் கார்ன்ஃபோர்த்

ங்கிலாந்தைச் சேர்ந்த தோழர் மாரிஸ் கார்ன்ஃபோர்த், “மார்க்சிய மூல நூல்களுக்கான வாசகர் வழிகாட்டி” என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்நூலில் மார்க்சிய லெனினியத்தை எப்படிக் கற்பது என்பதையும், அரசியல்- பொருளாதார- சித்தாந்தப் பிரச்சினைகளை மார்க்சிய லெனினியத்தின் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்ப்பதற்கான வழிமுறையை மார்க்சிய மூல நூல்களில் இருந்து எப்படி கற்றுக்கொள்வது என்பதைப் பற்றியும் விரிவாக விளக்குகிறார்.

இந்த நூலில் “பாட்டாளி வர்க்கக் கட்சி” என்ற தலைப்பில் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை மார்க்சிய ஆசான்களின் நூலில் இருந்து எப்படி கற்றுக் கொள்வது என்பதை விளக்கியிருக்கிறார். ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியின் முக்கியத்துவம் மற்றும் தன்மைகளை மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் உள்ளிட்ட மார்க்சிய ஆசான்களின் நூல்களில் இருந்து எடுத்துக்காட்டி, அந்நூல்கள் குறித்து அறிமுகப்படுத்துகிறார்.

இந்நூலின் ஒரு அத்தியாயமான “பாட்டாளி வர்க்கக் கட்சி” என்ற பகுதியை மட்டும் தொடராக இங்கு வெளியிடுகிறோம். இந்த நூல் கீழைக்காற்று வெளியிட்டகத்தில் கிடைக்கும். வாங்கிப் படித்துப் பயன்பெறவும் !

வினவு

பாட்டாளி வர்க்கக் கட்சி

முன்னுரை

மார்க்சியம், பாட்டாளி வர்க்கம் தனக்கென்று ஒரு கட்சியின்றி முதலாளித்துவத்தைத் தோற்கடிக்கவோ, அதிகாரத்தை வெல்லவோ, சோசலிசத்தைக் கட்டியமைக்கவோ முடியவே முடியாது என்று கற்பிக்கிறது.

மார்க்சும் எங்கெல்சும் சுதந்திரமான பாட்டாளி வர்க்கக் கட்சியின் தேவையை எல்லாவற்றிற்கும் மேலாக வலியுறுத்தி வந்தனர். முதலாம் அகிலத்தில் அவர்களால் வகுக்கப்பட்ட விதி ஒன்று “தனக்கென்று தனித்தன்மையுடைய ஒரு கட்சியை, உடைமையாளர்களது பழைய கட்சிகளனைத்திற்கும் எதிராக கட்டியமைத்தாலன்றி ஒருபோதும் ஒரு வர்க்கமாகச் செயல்பட முடியாது” என்கிறது.

மார்க்சிய நூல்களுக்கு வழிகாட்டிமார்க்சும், எங்கெல்சும் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தோற்ற காலத்தில் எழுதி வந்தவர்கள். அவர்களது பார்வை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பின்வருமாறு தொகுக்கப்படுகிறது. கம்யூனிஸ்டுகள் பிற பாட்டாளி வர்க்கக் கட்சிகளுக்கெதிராக ஒரு கட்சியைக் கட்டவில்லை. மாறாக, அவர்கள் ஒரு பொது அரசியல் திட்டத்தின் அடிப்படையில் பாட்டாளி வர்க்கத்தை ஒன்று திரட்டி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்திற்காக முனைகிறார்கள்.

மார்க்சும் எங்கெல்சும் கட்சிக்குள் முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவக் கருத்துக்கள், கோட்பாடுகளை கடத்தி வர முனைவதை அதை ஒரு வர்க்க சமரசப் போக்கிற்கு உட்படுத்துவதை விடாப்பிடியாக எதிர்த்தனர். கட்சியைப் புரட்சிகர மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில் நிறுவவும், அவற்றிற்கு தொழிலாளி வர்க்க நிறுவனங்களை வென்றெடுக்கவும் முயன்றனர். இதுதான் அவர்களின் அரசியல் செயற்பாடாக இருந்தது. மேலும் அவர்கள் பாட்டாளி வர்க்கம் எவ்வகைப் போக்கை பிற வர்க்கங்களின் மீது கடைப்பிடிக்க வேண்டும் என்பதை குறிப்பாக விவசாயி வர்க்கத்தை, பாட்டாளி வர்க்கத்தின் மிக முக்கியத் துணைவர்களாகக் கருதி வரையறுப்பதில் கவனம் செலுத்தினர்.

லெனின் போல்சுவிக் கட்சியை ஏகாதிபத்திய சகாப்தத் தொடக்கத்தில் கட்டினார். மேற்கத்திய நாடுகளின் சோசலிசக் கட்சிகளின் “அமைதியான” வளர்ச்சி கொண்ட பல பத்தாண்டுகளின் முடிவில் சந்தர்ப்பவாதப் போக்குகள் தலைவிரித்தாடின. அகிலத்தின் ஒட்டு மொத்த செயற்பாட்டையும் பரிசோதித்துச் சரி செய்வதும் சந்தர்ப்பவாதத்தை முற்றாக நிராகரிப்பதும் மிக முக்கியத் தேவையானது. போல்சுவிக் கட்சியை அவர் புதிய வகையானதாக முதலாளித்துவத்தை எதிர்த்த பாட்டாளி வர்க்கத்தை ஒன்றிணைத்துத் தலைமை தாங்குவதாகக் கட்டியமைத்தார். இக்கட்சி ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டை, சுய ஒழுங்கை உள்ளடக்கி, புரட்சிகர மார்க்சிய கோட்பாடுகளின் அடிப்படையிலானதாய் அக்கோட்பாடுகளைப் பயன்படுத்தி, முன்னெடுத்துச் செல்லக்கூடியதாய் இருந்தது.

அப்படிப்பட்ட கட்சி புரட்சிகர தத்துவ அடிப்படையிலமைந்து பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படைப்பிரிவாய் அதிகாரத்தை வெல்ல, சோசலிசத்தைக் கட்டியமைக்க, தொழிலாளி வர்க்க இயக்கங்களை ஈர்த்து, வழி நடத்தி, தலைமை தாங்கிச் செல்வதால், பாட்டாளி வர்க்கத்தின் மிக உயர்ந்த அமைப்பு வடிவமாக இருக்கிறது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கான ஒரு கருவியாக உள்ளது. ஒற்றுமையை, ஒழுங்கைக் காப்பதாக, எந்த குழுப்போக்கும் அதன் ஒற்றுமையைக் சிதைந்துவிடாது இருக்கும்படி காக்கிறது. தானே சந்தர்ப்பவாதிகளை வெளித்தள்ளி தூய்மை அடைகிறது. போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தனது கொள்கையை எந்த எதிரிக்கு மரண அடி கொடுப்பது என்பதை நிர்ணயிப்பதாக தாக்குதல் திசைவழியை அமைத்துக் கொள்கிறது. அனைத்து கூட்டாளி வர்க்கங்களையும் இந்த எதிரிக்கு எதிரான போராட்டத்தில் சாத்தியமான எல்லா நட்பு சக்திகளையும் ஒன்றிணைக்கிறது.

படிக்க:
நூல் அறிமுகம் : அராஜகவாதமா ? சோசலிசமா ? | தோழர் ஸ்டாலின்
மாமேதை லெனின் : அறிவாளிகளின் அந்தரங்கம் || லெனின் – தலைவர்! தோழர்! மனிதர்!

போல்சுவிக் கட்சி பாட்டாளி வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதத்திற்கெதிரான புரட்சிகர மார்க்சியத்தின் போராட்டத்தில் பிறந்தது. அதன் திட்டங்களும், அமைப்புக் கோட்பாடுகளும், தொழிலாளிகள் பொருளாதாரக் கோரிக்கைகளுக்கு போராட வேண்டும் என்னும் “பொருளாதாரவாதத்”திற்கெதிரானதாக அமைந்தது. அவர்களோடு கட்சியில் வர்க்கக் கூட்டிணைப்புக் கோட்பாடுகளைப் புகுத்தி அமைப்பைப் பலவீனப்படுத்தி ஒற்றுமையைக் குலைக்க முயன்ற மென்ஷ்விக்குகளுக்கு எதிரானதாக, கட்சியை மக்களிடமிருந்தே பிரித்து, நட்புச் சக்திகளை நிராகரித்து, போராட்டத்தின் வளர்ச்சிக்கட்ட அடிப்படையிலான கோட்பாட்டுக்குப் பதிலாக “வெற்றுப் புரட்சிகர” வாய்வீச்சில் இறங்கிய “இடதுசாரி”களுக்கெதிரானதாக இருந்தது.

லெனின் இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதத் தலைவர்களை எதிர்த்து அம்பலப்படுத்தி வந்தார். இத்தலைவர்கள் 1914-18-ல் ஏகாதிபத்தியப் போரில் அகிலத்தையே காட்டிக் கொடுத்தவர்கள். லெனின் நியாயமான, நியாயமற்ற போர்களுக்கிடையிலான வேறுபாட்டை விளக்கி போரைப் பற்றிய பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டை உருவாக்கினார்.

லெனினது போதனைகள், புதிய பாணி கட்சியைக் கட்ட கம்யூனிஸ்டுக் கட்சிகளால் ஏற்கப்பட்டு ஸ்டாலினால் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டன.

இந்தப் பகுதியில் நாம் மார்க்சு, எங்கெல்சு, லெனினின் கட்சியைப் பற்றி சிறப்பாக அதன் பங்கு, அமைப்பு, கொள்கை குறித்த படைப்புகளில் என்ன சொல்கிறார்கள் என்று கவனம் செலுத்துவோம்.

ஆனால் மார்க்சிய – லெனினியக் கோட்பாடுகளின் முழுமையே வழிகாட்டும் தத்துவமாகவும், பாட்டாளி வர்க்கத்தின் போரில், போர்த்தந்திர வரையறுப்பாகவும் அமைகின்றது.

இந்நூலின் இரண்டாம் பகுதியில் ஏற்கெனவே கட்சியைப் பற்றிய அடிப்படை விசயங்கள் விளக்கப்பட்டுள்ளன. இப்பிரச்சினை குறித்து, முதலில் மாணவர்கள் போல்சுவிக் கட்சி வரலாறு, லெனினியத்தின் அடிப்படைகள் 1, 8 அத்தியாயங்கள், கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை ஆகியவற்றைக் கற்க வேண்டும்.

அதன்பின் லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்?”, “இடதுசாரிக் கம்யூனிசம் ஒரு இளம்பருவக் கோளாறு” என்னும் இரு நூல்களும் மிக அவசியமானவை. இவற்றோடு “ஓரடி முன்னே இரண்டடி பின்னே” என்ற நூலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஸ்டாலினின் 17,18-ம் சோவியத் ரசியக் கம்யூனிஸ்டுக் கட்சி காங்கிரசில் தந்த அறிக்கைகள் முக்கியமாகப் படிக்க வேண்டியவை.

இதற்குப் பின் ‘மாணவர்’ இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதத்தைப் பற்றி லெனின் எழுதியவற்றைப் படிக்க வேண்டும். (இந்தப் பகுதிகள் லெனினும், பிரிட்டனும் என்ற நூலிலும், மார்க்சு – எங்கெல்சு – மார்க்சியம் என்ற நூலிலும் லெனின் தேர்வு நூல்களிலும் உள்ளன). பாட்டாளி வர்க்கம் ஏகாதிபத்தியப் போரைப் பற்றிக் கொண்டிருக்கும் நிலைப்பாடு என்ன என்பதற்கு சோசலிசமும் போரும், போரும் தொழிலாளர்களும் என்ற நூல்களையும் இறுதியாக கம்யூனிஸ்ட் அகிலத்தை தோற்றுவிக்க அதன் வேலைகள் குறித்து லெனின் எழுதியவையும் படிக்கப்பட வேண்டும்.

மார்க்சிய மாணவர் தம் தொடக்க கட்டத்தில் லெனினும் ஸ்டாலினும் கட்சியைப் பற்றி எழுதியுள்ளவற்றைப் படித்த பின் மார்க்சு எங்கெல்சு எழுதியவற்றைப் படித்தால் அவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும். அவை அனைத்தும் (பிரிட்டன் பற்றிய எங்கெல்சின் கட்டுரைகள் தவிர) சிறிய நூல்கள் தான் மார்க்சு எங்கெல்சு தேர்வு நூல்களின் இரு தொகுதிகளில் அடங்கியுள்ளன.

கட்சி பற்றிப் படிக்க வேண்டிய இந்தக் கட்டுரைகளை நான்கு தலைப்புகளில் பின்வருமாறு கொடுக்கிறோம்.

(i) மார்க்சு – எங்கெல்சு கட்சி பற்றிக் கூறியது
(ii) லெனினும் புதுப்பாணியிலான கட்சியும்
(iii) இரண்டாம் அகிலத்தில் சந்தர்ப்பவாதத்துக்கெதிரான போராட்டம்.
(iv) கம்யூனிஸ்ட் அகிலம்.

(தொடரும்)

நூல் : மார்க்சிய மூல நூள்களுக்கு வாசகர் வழிகாட்டி
ஆசிரியர் :
மாரிஸ் கார்ன்ஃபோர்த்

வெளியீடு : கீழைக்காற்று.
பக்கங்கள் : 272
விலை : ரூ. 150.00

இந்தியா – பாகிஸ்தான் : தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை !

0

பாகிஸ்தானின் புதிய அரசியல் வரைபடம் (MAP) : இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கத் திமிருக்கு ஓர் எதிர்வினை ! – பாகம் – 02

சர் கிரீக் விவகாரம் என்பது என்ன?

சர் கிரீக் (பிரிட்டிஷ் பிரதிநிதியின் பெயரால் குறிப்பிடப்படுகிறது) என்பது சிந்து நதியின் கழிமுகப் பகுதியாகும். “பான் கங்கா” என்று குறிப்பிடப்படும் இது, இந்தியாவின் கட்ச் வளைகுடாவுக்கும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்துக்கும் இடையில் அரபிக் கடலை ஒட்டியுள்ள 96 கி.மீ. நீளமுள்ள திட்டுத்திட்டான சதுப்பு நிலப் பகுதியாகும். இந்தச் சதுப்பு நிலப் பகுதிகளுக்கிடையிலான சிந்து நதியின் கழிமுகப் பகுதிக்கும் அரபிக் கடலுக்கும் இடைப்பட்ட நீர்ப்பாதையானது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினையாக இன்னமும் தொடர்ந்து நீடிக்கிறது.

இப்பகுதியின் கடலையொட்டிய நீர்ப்பாதையை வரையறுப்பதில் அப்போதையைப் பிரிட்டிஷ் காலனிய ஆளுகைக்குட்பட்ட சிந்து மாகாணத்துக்கும், பிரிட்டிஷ் காலனியாட்சிக்குக் கப்பம் கட்டிக் கொண்டிருந்த கட்ச் மன்னராட்சிக்கும் இடையே தாவா ஏற்பட்டது. 1914-ஆம் ஆண்டில் சிந்து மாகாண அரசாங்கம், கட்ச் அரசர் ராவ் மகராஜ்-உடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் 9,10-வது அம்சங்களின்படி இப்பகுதிகள் மொத்தமும் பாகிஸ்தானுக்கே சொந்தமானது என்று பாகிஸ்தான் அரசு வாதிடுகிறது. ஆனால், 1908-இலிருந்து பிரிட்டிஷ் காலனியாட்சியின் கீழ் இருந்த சிந்து மாகாணத்துக்கும் கட்ச் அரசருக்கும் இடையே தாவா எழுந்தபோது, அன்றைய காலனிய பம்பாய் மாகாண நிர்வாகத்தின் கீழ்தான் இவ்விரு பகுதிகளும் இருந்துள்ளன. சிந்து மாகாணம் 1936-இல்தான் பம்பாய் மாகாணத்திலிருந்து தனியாகப் பிரிட்டிஷாரால் பிரிக்கப்பட்டது. எனவே, சிந்து மாகாணம் கட்ச் அரசருடன் 1914-இல் போட்டுக் கொண்ட ஒப்பந்தம் செல்லத்தக்கதல்ல என்று இந்தியா வாதிடுகிறது.

கஜார் கீரீக், பாகிஸ்தானின் பகுதியாக உள்ளது. கோரி கிரீக், இந்தியாவின் பகுதியாக உள்ளது. இடையிலுள்ள சர் கிரீக் பகுதியிலுள்ள கடற்கழியைச் சமமாகப் பங்கிடாமல், ஒருதலைப்பட்சமாக இந்தியாவுக்குச் சாதகமாக வரையறுக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, இக்கடற்கழி பகுதியை மறுவரையறை செய்ய வேண்டுமென்று பாகிஸ்தான் தொடர்ந்து கோரி வந்தது. இந்தியாவோ இக்கடற்கழி பகுதி முழுமையும் இந்தியாவுக்குச் சொந்தமானது என்று வாதிட்டது. இந்நிலையில், 90 சதவீதப் பகுதி இந்தியாவுக்கும் 10 சதவீதப் பகுதி பாகிஸ்தானுக்குமாக சர் கிரீக் கடற்கழி எல்லையைப் பிரித்து, 1968-இல் சர்வதேச தீர்ப்பாயம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

படிக்க:
அண்ணாமலை : வெறும் சங்கியிலிருந்து அதிகாரப்பூர்வ சங்கியான கதை!
காஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை

இருப்பினும், இத்தீர்மானத்தை இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு தரப்பும் ஏற்கவில்லை. 1997-இலிருந்து 2012 வரை 12 முறை இரு நாடுகளுக்குமிடையே இதுபற்றிப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ள போதிலும், எந்த முன்னேற்றமும் இல்லை. மீண்டும் இதைப் பற்றி சர்வதேச தீர்ப்பாயத்திடம் முறையிடலாம் என்று பாகிஸ்தான் முன்வைத்த கோரிக்கையை இந்தியா ஏற்கவில்லை. இந்திய – பாகிஸ்தான் இருதரப்பு எல்லைப் பிரச்சினையில் மூன்றாவது தரப்பு தலையிடக் கூடாது என்று சிம்லா ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளதைக் காட்டி இந்தியா இதை ஏற்க மறுக்கிறது.

இச்சதுப்பு நிலப் பகுதிகளில் எண்ணெய், எரிவாயு முதலான வளங்கள் கடலுக்கடியில் இருப்பதால் சர் கிரீக் பகுதியைக் கைப்பற்றுவதற்கு இரு நாடுகளும் முயற்சிக்கின்றன. மேலும், சிந்து நதி அரபிக் கடலில் கலக்கும் இந்தக் கடற்கழி பகுதியானது, மிகப் பெரிய மீன் பிடி வயலாகவும் உள்ளது. இதனால், இரு நாடுகளுக்குமிடையே எந்தப் பகுதியில் யார் மீன் பிடிப்பது என்பதில் தகராறுகளும், மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கைது செய்து சிறையிடுவதும் தொடர்கிறது.

தற்போது பாகிஸ்தான் வெளியிட்டுள்ள புதிய அரசியல் வரைபடமானது, சர் கிரீக் நீர்ப்பாதையை இரு தரப்புக்கும் ஏறத்தாழ சமமானதாகப் பிரித்துக் காட்டியுள்ளது.

***

ற்போது இந்தியா, தன்னிச்சையாகவும் பிராந்திய மேலாதிக்கத் திமிரோடும் பாகிஸ்தான் பிடியிலுள்ள காஷ்மீர் மற்றும் கில்ஜித் – பல்டிஸ்தான் பகுதிகளை இந்தியாவுடன் இணைத்து வரைபடத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்வினையாக, பாகிஸ்தானும் ஜம்மு – காஷ்மீர், லடாக் பிராந்தியங்களைத் தனது நாட்டின் உரிமையுள்ள பிராந்தியங்களாகக் காட்டி புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது. இதுவும் போதாதென்று, ஜுனாகத் பிராந்தியத்தையும் பாகிஸ்தானின் ஆதிபத்திய உரிமையுள்ள பகுதியாகக் காட்டியிருக்கிறது.

பாகிஸ்தான், உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவுக்கு விசுவாசமான நாடுதான். இந்தியாவின் பிராந்திய மேலாத்திக்கத்தின் கீழுள்ள நாடுதான். இருப்பினும், அமெரிக்க வல்லரசுக்கும் சீனாவுக்குமிடையே நிலவும் பனிப்போர்ச் சூழலில், சீனாவுடன் பொருளாதாரக் கூட்டுக்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளதைச் சாதகமாக்கிக் கொண்டு, அரசியல் ரீதியில் இந்தியாவின் மேலாதிக்கத் திமிரை எதிர்க்க முனைந்துள்ளது. அந்நாடு, இப்போது காஷ்மீரின் சுயநிர்ணய உரிமையைப் பற்றிச் சவடால் அடிக்கிறது. இந்தியா மீது தீவிரவாதக் குழுக்களின் தாக்குதல்கள் நடந்தால், அதற்கு எமது நாடு பொறுப்பல்ல என்று இந்தியாவைக் குற்றம் சாட்டுகிறது.

காலாபாணி பகுதியை இந்தியா தனது ஆதிபத்திய உரிமையுள்ள பகுதியாக புதிய வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளதை எதிர்த்து நேபாள மக்கள் போராடியதைப் போல, ஆசாத் காஷ்மீரிலோ, கில்ஜித் – பல்டிஸ்தான் பகுதியிலோ அப்பகுதிவாழ் மக்கள் எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை அல்லது பாகிஸ்தான் அரசு இவற்றை அனுமதிக்கவில்லை. இந்தியா உரிமை கோரும் காலாபாணி – லிபுலேக் – லிம்பியாதுரா பகுதியை தனது நாட்டின் பகுதியாக அதிகாரபூர்வமாகப் புதிய வரைபடத்தில் காட்டியுள்ள நேபாளம், இதனை முறைப்படி அறிவிப்புச் செய்யுமாறு ஐ.நா. மன்றத்திடம் கோரியுள்ளதைப் போல, பாகிஸ்தான் செய்யவுமில்லை.

இந்தியாவை உலக அரங்கில் அரசியல் ரீதியாகவும் அரசு தந்திர ரீதியாகவும் அம்பலப்படுத்தி, தனிமைப்படுத்த பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள முயற்சியின் வெளிப்பாடுதான், இப்புதிய அரசியல் வரைபடம். இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான மோதலின் வெளிப்பாடுதான் இப்புதிய அரசியல் வரைபடங்கள்.

இஸ்லாமியக் குடியரசாக அறிவித்துக் கொண்டு மதவாத காட்டுமிராண்டித்தனத்திலும், ராணுவ கும்பலின் சர்வாதிகாரத்திலும் ஊறித் திளைக்கும் பாகிஸ்தான், இத்தகைய எதிர்ப்புகள் மூலம் குறுகிய மதவெறி, தேசியவெறியையும் போர் வெறியையும் கிளறிவிட்டு, உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிக்கிறது. மறுபுறம், உள்நாட்டில் இந்திய அரசும் அண்டைநாடுகளுக்கு எதிராக ‘தேசபக்தி’ எனும் பெயரில் போர் வெறியைத் தூண்டி, தனது தோல்விகளை மறைத்து, கார்ப்பரேட் மற்றும் ஏகாதிபத்திய எஜமானர்களுக்கு சேவைபுரிகிறது.

( முற்றும் )

– புதியவன்

நூல் அறிமுகம் : அராஜகவாதமா ? சோசலிசமா ? | தோழர் ஸ்டாலின்

ர்க்கப் போராட்டம்தான், சமகாலத்திய சமூக வாழ்வின் அச்சாணியான விசயமாகும். இந்தப் போராட்டத்தின் வளர்ச்சியில், ஒவ்வொரு வர்க்கமும் தனது சொந்த சித்தாந்தத்தால் வழிகாட்டப்படுகிறது. முதலாளித்துவ வர்க்கம் தனக்கென ஒரு சித்தாந்தத்தைக் கொண்டுள்ளது. இந்த சித்தாந்தம் தாராளவாதம் என்று அழைக்கப்படுகிறது. இது போலவே, பாட்டாளி வர்க்கமும் தனக்கென பிரபலமானதொரு சித்தாந்தத்தைக் கொண்டுள்ளது. இது சோசலிசம் என்று அழைக்கப்படுகிறது.

தாராளவாதத்தை, ஏதோ முழுநிறைவான ஒன்று என்றும் பகுக்கப்பட முடியாதது என்றும் கருதக்கூடாது. இது வெவ்வேறு முதலாளித்துவ தட்டுகளின் தேவைகளுக்குப் பொருந்தும்படி பல்வேறு போக்குளாக உட்பிரிவுகளாக்கப்பட்டுள்ளது.

இதேபோல, சோசலிசமும் முழுநிறைவான ஒன்றாகவோ பகுக்கப்பட முடியாத ஒன்றாகவோ இல்லை. இதிலும் கூட வெவ்வேறு போக்குகள் இருக்கின்றன.

நாம் இங்கு தாராளவாதத்தை பரிசீலிக்கவில்லை. அதை வேறொரு சந்தர்ப்பத்தில் நாம் பரிசீலிப்பதே மேலானது. இப்போது, சோசலிசம் மற்றும் அதன் வெவ்வேறு போக்குகளும் குறித்து வாசகருக்கு விளக்குவதையே நாம் இப்போது விரும்புகிறோம். தொழிலாளிகள் இதில் கூடுதலாக ஆர்வம் காட்டுவார்கள் என்றும் நாம் நினைக்கிறோம்.

சோசலிசமானது மூன்று பிரதானப் போக்குகளாகப் பிரிந்துள்ளது. அவை சீர்திருத்தவாதம், அராஜகவாதம், மார்க்சியம் ஆகியவையாகும்.

பெர்ன்ஸ்டின் வகையறாக்கள் சீர்திருத்தவாதத்தை உயர்த்திப் பிடிக்கின்றனர். சோசலிசம் ஒரு தொலைதூர இலட்சியமே ஒழிய, வேறொன்றுமல்ல என்று இவர்கள் கருதுகின்றனர். அமைதியான வழிமுறைகளிலேயே சோசலிசத்தை அடைவதில் அவர்கள் குறியாக உள்ளனர். சீர்திருத்தவாதமானது, வர்க்கப் போராட்டத்தை ஆதரித்து வாதிடாமல், வர்க்க சமரசத்துக்காக நிற்கிறது. இது நாளுக்கு நாள் கெட்டழுகிக் கொண்டும், சோசலிசத்தின் எல்லா அடையாளங்களையும் இழந்து கொண்டும் இருக்கிறது. சோசலிசத்தைப் பற்றி வரையறுக்கும் இந்தக் கட்டுரைகளில், இதைப் பரிசீலனை செய்வது மொத்தத்தில் தேவையற்றது என்பது நமது கருத்தாகும்.

ஆனால், மார்க்சியத்தையும் அராஜகவாதத்தையும் பொறுத்தவரையில் விசயம் முற்றிலும் வேறானது. ஏனென்றால், இவை இரண்டுமே இப்போதைக்கு சோசலிசப் போக்குகளாக அங்கீகரிக்கப்படுகின்றன; இவ்விரு போக்குகளும், பாட்டாளி வர்க்கத்தின் முன்பு தம்முடையதே உண்மையான சோசலிசத் தத்துவம் என்று முன்னிலைப்படுத்த படாதபாடு படுகின்றன. இவ்விரு போக்குகளை ஆய்வதும் ஒப்பிட்டுப் பார்ப்பதும் வாசகர்களுக்குக் கூடுதலான ஆர்வத்துக்கு உரியதாக இருக்கும் என்பது நிச்சயம்.

படிக்க:
பாகிஸ்தானின் புதிய அரசியல் வரைபடம் !
ஆகஸ்ட் 30 : உலக காணாமலடிக்கப்பட்டோர் தினம் ! தஞ்சை ஆர்ப்பாட்டம் !

“அராஜகவாதம்” என்ற சொல்லைக் கேட்ட அக்கணமே, வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டு, “நேரத்தை ஏன் வீணடிக்க வேண்டும்? இதைப்பற்றிப் பேசுவதே பயனற்றது” என்று ஆணவத்துடன் கூறும் இரகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல நாங்கள். இத்தகைய மட்டரகமான “விமர்சனம்” கண்ணியமற்றது என்றும் பயனற்றது என்றும் நாங்கள் நினைக்கிறோம்.

அராஜகவாதிகளின் “பின்னால் ஆட்கள் ஒன்றும் அதிகமில்லை : ஆகவே, அவர்களால் அபாயம் ஏதுமில்லை” என்று நினைத்து தம்மைத்தாமே ஆறுதல்படுத்திக் கொள்ளும் இரகத்தைச் சேர்ந்தவர்களும் அல்ல நாங்கள். இன்றைக்கு அதிகமான அல்லது குறைவான “மக்கள் செல்வாக்கு” யாருக்கு உள்ளது என்பதல்ல பிரச்சினை; ஆனால் யாருடைய தத்துவத்தின் சாரம் சரியானது என்பதே பிரச்சினை. அராஜகவாதிகளின் “தத்துவம்” உண்மையை வெளிப்படுத்துமானால், அவர்கள் தமக்கென ஒரு பாதையை நிச்சயம் அமைத்துக் கொள்வார்கள் என்பதும், பரந்துபட்ட மக்களை தம்மைச் சூழ்ந்து அணிதிரட்டிக் கொள்வார்கள் என்பதும் சொல்லாமலே விளங்கக்கூடிய விசயம்தான். இருப்பினும், அவர்களுடைய தத்துவம் உண்மை ஆதாரம் அற்றதாகவும், பொய்யான அடிப்படைகளின் (அஸ்திவாரம்) மீது கட்டப்பட்டதாகவும் இருக்குமானால், அந்தத் தத்துவம் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாமலும் அந்தரத்தில் தொங்குவதாகவும் இருக்கும். ஆகையால், அராஜகவாதத்தின் ஆதாரமற்ற தன்மை நிரூபிக்கப்பட்டாக வேண்டும்.

மார்க்சியமும் அராஜகவாதமும் ஒரே வகைப்பட்ட கோட்பாடுகளின் அடிப்படையைக் கொண்டுள்ளதாகவும், அவற்றுக்கு இடையிலான வேறுபாடுகள் செயல்தந்திரங்கள் தொடர்பானவை மட்டுமே என்றும் சிலர் நம்புகின்றனர். இவ்விரு போக்குகளுக்கு இடையில் எத்தகைய வேறுபாட்டையும் கண்டறிய முடியாது என்றும் இவர்கள் கருதுகின்றனர். இது மாபெரும் தவறு, மார்க்சியத்தின் உண்மையான எதிரிகள் அராஜகவாதிகள் என்று நாங்கள் நம்புகிறோம்.

இதற்கேற்ப உண்மையான எதிரிகளுக்கு எதிராக, உண்மையிலேயே கடுமையான போராட்டம் நடத்தப்பட்டே தீரவேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். ஆகவே, அராஜகவாதிகளின் தத்துவத்தை ஆரம்பம் முதல் முடிவு வரை பரிசீலிக்க வேண்டும் என்றும், அவர்களின் எல்லா தத்துவக்கூறுகளையும் சீர்தூக்கி மதிப்பிடுவது அவசியத் தேவை என்றும் நாங்கள் கருதுகிறோம். (பக்கம் 7 – 9)

***

முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதும் சோசலிசத்தைக் கட்டியமைப்பதுமான தனது திட்டத்தை உணர்வுபூர்வமாக நிறைவேற்றுவதற்கு பாட்டாளி வர்க்கம் என்ன செய்ய வேண்டும்? எந்தப் பாதையை மேற்கொள்ள வேண்டும்? – இதற்கான விடை மிகத் தெளிவானது.

முதலாளித்துவ வர்க்கத்துடன் சமாதானம் செய்து கொள்வதன் மூலம், பாட்டாளி வர்க்கம் சோசலிசத்தை அடைவதைச் சாதிக்க முடியாது. தவறாமல் போராட்டப் பாதையை அது மேற்கொள்ள வேண்டும்; இந்தப் போராட்டம் வர்க்கப் போராட்டமாகவே இருந்தாக வேண்டும்; முதலாளித்துவ வர்க்கம் முழுவதற்கும் எதிராக, பாட்டாளி வர்க்கம் முழுவதும் தொடுக்கும் போராட்டமாக அது இருக்க வேண்டும். ஒரு பக்கம் முதலாளித்துவ வர்க்கமும் அதன் முதலாளித்துவமும்! அல்லது இன்னொரு பக்கத்தில் பாட்டாளி வர்க்கமும் அதன் சோசலிசமும் ! இரண்டில் எது என்ற கேள்வியை பாட்டாளி வர்க்கம் எப்போதும் முன் வைக்க வேண்டும். இதுதான், பாட்டாளி வர்க்கத்தினுடைய நடவடிக்கைகளின் அடிப்படையாக, அதனுடைய வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையாக தவறாமல் இருக்க வேண்டும்.

இருப்பினும், பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டம் எண்ணற்ற வடிவங்களை மேற்கொள்கிறது. எடுத்துக்காட்டாக, வேலை நிறுத்தம் என்பது வர்க்கப் போராட்டமே. அது பகுதியளவிலான வேலைநிறுத்தமாக இருந்தாலும் சரி, அல்லது, பொது வேலைநிறுத்தமாக இருந்தாலும் சரி, இரண்டுக்குமே இது பொருந்தும். இதுதவிர, புறக்கணிப்புகள், உற்பத்தியைச் சீர்குலைத்தல் ஆகியனவும் சந்தேகத்துக்கிடமின்றி வர்க்கப் போராட்டங்களேயாகும்.

பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் – இவையும் வர்க்கப் போராட்டமே. பொது மக்கள் பிரதிநிதித்துவ அவைகளில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வர்க்கப் போராட்ட நடவடிக்கைகளே. அந்த அவைகள் தேசிய நாடாளுமன்றங்களாக இருந்தாலும் சரி, அல்லது, உள்ளூராட்சி மன்றங்களாக இருந்தாலும் சரி, இதில் ஒன்றும் வேறுபாடு இல்லை. இவை அனைத்துமே ஒரே வர்க்கப் போராட்டத்தின் வெவ்வேறான வடிவங்களே ஒழிய வேறல்ல. பாட்டாளி வர்க்கத்துக்கு, அதனுடைய வர்க்கப் போராட்டத்தில், எந்த வடிவிலான போராட்டம் மேலதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் பரிசீலிக்கப் போவது இல்லை. பாட்டாளி வர்க்கமானது தனது வர்க்க உணர்வையும் அமைப்பு ரீதியிலான பலத்தையும் அதிகமாக்கிக் கொள்வதற்கான சாதனம் என்ற முறையில், காலத்துக்கும் இடத்துக்கும் பொருத்தமாக, ஒவ்வொன்றும் பாட்டாளி வர்க்கத்துக்கு அவசியமாகிறது என்பதையே நாம் கவனித்தாக வேண்டும்.

உயிர்வாழ காற்று எவ்வளவு அவசியமாகத் தேவைப்படுகிறதோ, அதே போல பாட்டாளி வர்க்கத்திற்கு வர்க்க உணர்வும் அமைப்புரீதியிலான பலமும் தேவைப்படுகிறது. இருப்பினும் இன்னொன்றையும் கவனித்தாக வேண்டும். பாட்டாளி வர்க்கத்தைப் பொறுத்தவரையில், இந்தப் போராட்ட வடிவங்கள் அனைத்துமே வெறும் தயாரிப்புக்கான போராட்ட வடிவங்களே.

இருந்த போதிலும் எந்த தனிப்பட்டதொரு போராட்ட வடிவத்தையும் எடுத்துக்கொண்டு பார்த்தால், இவற்றில் எந்த ஒரு வடிவமும், முதலாளித்துவ வர்க்கத்தை அடித்து நொறுக்குவதற்கான தீர்மானகரமான வழிமுறைச் சாதனமாக பாட்டாளி வர்க்கத்துக்கு இருக்காது. பொது வேலை நிறுத்தத்தால் மட்டுமே, முதலாளித்துவத்தை அடித்து நொறுக்கிவிட முடியாது. முதலாளித்துவத்தை அடித்து நொறுக்குவதற்கான சூழ்நிலைகளில் அவசியமான ஒரு சிலவற்றை வேண்டுமானால், பொது வேலை நிறுத்தமானது உருவாக்க முடியும். நாடாளுமன்ற நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டு, பாட்டாளி வர்க்கமானது, முதலாளித்துவத்தை தூக்கியெறிந்துவிட முடியும் என்று நினைத்துப் பார்க்க முடியாது. முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கு அவசியமான நிலைமைகளில் சிலவற்றை மட்டுமே நாடாளுமன்ற நடவடிக்கைகள் மூலம் தயாரிக்க முடியும்.

அப்படியானால், எந்த தீர்மானகரமான சாதனத்தைக் கொண்டு, பாட்டாளி வர்க்கமானது, முதலாளித்துவக் கட்டைமைவைத் தூக்கியெறியும்? (பக்கம் 64-66)

நூல் : அராஜகவாதமா? சோசலிசமா?
ஆசிரியர் : ஸ்டாலின்

வெளியீடு : கீழைக்காற்று.

பக்கங்கள்: 96
விலை: ரூ. 45.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

பாகிஸ்தானின் புதிய அரசியல் வரைபடம் !

பாகிஸ்தானின் புதிய அரசியல் வரைபடம் (MAP) : இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கத் திமிருக்கு ஓர் எதிர்வினை ! – பாகம் – 01

காலாபாணி பகுதியைத் தனக்குச் சொந்தமான பகுதியாக இந்தியா புதிய அரசியல் வரைபடத்தில் (மேப்) வெளியிட்டதை எதிர்த்து இந்தியாவின் அண்டை நாடான நேபாளம், தனது நாட்டின் புதிய அரசியல் வரைபடத்தை ஏற்கெனவே கடந்த 2020 மே 20-ம் தேதியன்று வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதியன்று பாகிஸ்தானின் புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டுள்ளார். ஜம்மு – காஷ்மீரின் சிறப்புத் தகுதியை கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி இந்திய அரசு நீக்கியதன் ஓராண்டு நிறைவடைவதால், இந்த முடிவை அறிவித்துள்ளதாகப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இது, “அரசியல் அடிமுட்டாள்தனம்”, “இத்தகைய முடிவுகள் சட்டபூர்வத் தகுதியையோ, சர்வதேச அருகதையையோ கொண்டிருக்கவில்லை” என்று இந்திய அரசு பாகிஸ்தானின் இந்தப் புதிய அரசியல் வரைபடத்துக்கு மறுப்புத் தெரிவித்துள்ளது.

கடந்த 2019 ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதியளிக்கும் 370-வது சட்டப் பிரிவை நீக்கி, அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2019 நவம்பர் 2-ஆம் தேதியன்று இந்திய அரசு புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டது. அதில், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரப் பகுதிகளை ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்துடன் – அதாவது, இந்தியாவுடன் – இணைத்துக் காட்டியது. மேலும், பாகிஸ்தானின் நிர்வாகத்தின் கீழுள்ள கில்ஜித் – பல்டிஸ்தான் பகுதிகளையும் லடாக் யூனியன் பிரதேசத்துடன் – அதாவது, இந்தியாவுடன் – இணைத்துக் காட்டியது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலே, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புத் தகுதி நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவடையும் தருணத்தில், ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒருநாள் முன்னதாக, 2020 ஆகஸ்ட் 4 -ஆம் தேதியன்று தனது நாட்டின் புதிய அரசியல் வரைபடத்தை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது. இந்த வரைபடத்தில், இந்தியா தனது ஆதிபத்திய உரிமையாகக் காட்டிக் கொள்ளும் ஜம்மு – காஷ்மீர், ஆசாத் காஷ்மீர், கில்ஜித் – பல்டிஸ்தான், லடாக் ஆகிய பகுதிகள் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஜம்மு – காஷ்மீர் பகுதியை “இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதி” என்று இந்த வரைபடம் குறிப்பிடுகிறது. இது தவிர, ஜுனாகத், சர் கிரீக் ஆகிய பகுதிகளையும் பாகிஸ்தான் தனது ஆதிபத்திய உரிமையுள்ள பகுதியாகக் குறிப்பிட்டுள்ளது.

படிக்க:
மாமேதை லெனின் : அறிவாளிகளின் அந்தரங்கம் || லெனின் – தலைவர்! தோழர்! மனிதர்!
ஸ்டெர்லைட் தீர்ப்பு : மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ! | தோழர் ராஜூ உரை

காஷ்மீர் விவகாரம் என்ன என்பதைப் பற்றியும், 370-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டதைப் பற்றியும், தற்போது ஜம்மு – காஷ்மீர், லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளதைப் பற்றியும் வாசகர்கள் ஏற்கெனவே அறிந்ததுதான். இருப்பினும், தற்போதைய பாகிஸ்தானின் அரசியல் வரைபடத்தில் ஜுனாகத், சர் கிரீக் ஆகிய பகுதிகள் பாகிஸ்தானுக்குச் சொந்தமானவையாகக் காட்டப்பட்டிருக்கிறது. தற்போது இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள ஒரு மாவட்டமான ஜுனாகத் பகுதியை, பாகிஸ்தான் தனது நாட்டின் ஆதிபத்திய உரிமையுள்ள பகுதியாக, தனது வரைபடத்தில் ஏன் காட்ட வேண்டும்?

ஜுனாகத் விவகாரம் என்பது என்ன?

ஜுனாகத் என்பது, அன்றைய பிரிட்டிஷ் காலனியாட்சிக்குக் கப்பம் கட்டிக் கொண்டிருந்த 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது, தற்போதைய குஜராத் மாநிலத்தின் தென்கோடி முனையில் – கத்திவார் பிராந்தியத்தில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 200 ஆண்டுகளாக முஸ்லிம் நவாப்களின் கீழ் இச்சமஸ்தானம் இருந்தது. இருப்பினும், இச்சமஸ்தானத்தில் பெரும்பான்மையினர் இந்துக்களாவார்கள். கஜினி முகம்மதுவால் பலமுறை படையெடுத்துச் சூறையாடப்பட்ட பிரபல சோமநாதர் கோயில், ஜூனாகத் பகுதியில்தான் உள்ளது.

போலி சுதந்திரத்தின் போது, பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்குக் கட்டுப்பட்டுக் கப்பம் கட்டிக் கொண்டிருந்த சமஸ்தானங்கள், இந்தியாவுடன் அல்லது பாகிஸ்தானுடன் இணையலாம்; அல்லது தனி நாடாக நீடிக்கலாம் என்று முடிவாகியது. இதன்படி, ஜூனாகத்தின் நவாப்-ஆக இருந்த மூன்றாவது முகம்மது மகாபட்கான் ரசூல்கான் ஜி, இச்சமஸ்தானத்தைப் பாகிஸ்தானுடன் இணைக்கத் தீர்மானித்தார். அன்றைய பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் கடைசி வைஸ்ராயாக இருந்த மவுண்ட்பேட்டன் கூறிய ஆலோசனையை – அதாவது, பாகிஸ்தானை ஒட்டியுள்ள சமஸ்தானமாக இருந்தால் அதனுடன் இணையலாம்; ஆனால், ஜுனாகத் சமஸ்தானமானது மூன்று பக்கமும் இந்தியாவுடன் இணைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுடன் இணைவது பொருத்தமானதாக இருக்காது என்ற ஆலோசனையை – அவர் நிராகரித்தார். செப்டம்பர் 15, 1947 அன்று பாகிஸ்தானுடன் இச்சமஸ்தானத்தை ஜூனாகத் நவாப் இணைத்தார்.

போலி சுதந்திரத்துக்குப் பின்னர் உருவான இந்திய அரசானது, ஜுனாகத் சமஸ்தானத்தைப் பாகிஸ்தானுடன் இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. ஜுனாகத்துக்கும் பாகிஸ்தானுக்கும் நேரடி தரைவழி இணைப்பு இல்லை; ஒரே வழி, கடல் வழி மட்டும்தான் என்பதால், பூகோள ரீதியாகவும் இது பொருத்தமான முடிவு அல்ல என்று இந்திய ஆட்சியாளர்கள் நைச்சியமாக வாதிட்டனர்.

பாகிஸ்தானின் தேசத்தந்தையாகச் சித்தரிக்கப்படும் முகம்மது அலி ஜின்னா, இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே நாடாக இணைந்திருக்க இயலாது என்று வாதிட்டதால், அதைக் காட்டி பெரும்பான்மை இந்துக்களாக உள்ள ஜூனாகத் பகுதியானது, இந்துக்கள் நிறைந்துள்ள இந்தியாவுடன்தான் சேர வேண்டும் என்று இந்திய அரசு நியாயவாதம் பேசியது. இந்த வாதப்படி பார்த்தால், ஜம்மு – காஷ்மீர் பிராந்தியமானது பாகிஸ்தானுடன்தான் இணைந்திருக்க வேண்டும். அங்கு முஸ்லிம்கள்தான் பெரும்பான்மையினர். ஆனால், காஷ்மீரின் மன்னர் ஹரிசிங் இந்து மன்னர் என்பதால், அவர் விரும்பியபடி இந்தியாவுடன் காஷ்மீர் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டது.

இந்நேரத்தில், இச்சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் குறுநில மன்னர்களாக இருந்த பாபாரிவாத் மன்னரும், மங்க்ரோல் ஷேக்கும் இந்திய அரசின் தூண்டுதலால், தங்களுக்கு ஜுனாகத் சமஸ்தானத்திலிருந்து விடுதலை வேண்டும் என்றும், தங்கள் பகுதிகளை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்றும் கோரினர். இதைச் சாதகமாக்கிக் கொண்டு, அப்போதைய இந்திய அமைச்சர் வி.பி. மேனன், ஜுனாகத் நவாப்-இடம் இந்தியாவுடன் இணைந்துவிடுமாறும், இல்லையேல் விபரீத விளைவுகள் ஏற்படும் என்றும் அச்சுறுத்தினார். மறுபுறம், பாகிஸ்தானுடன் இணைந்தால் ஜுனாகத்திலும் சௌராஷ்டிரா பிராந்தியத்திலும் மதவெறிக் கலவரங்கள் மூளும் என்று அப்போதைய உள்துறை அமைச்சரான வல்லபாய் பட்டேல் ஜுனாகத் சமஸ்தான நவாப்-ஐ எச்சரித்தார். இருப்பினும், இவற்றுக்குப் பணியாமல், பாகிஸ்தானுடன் ஜுனாகத்தை இணைப்பதாக நவாப் அறிவித்தார்.

ஜுனாகத் நவாப்-இன் முடிவைத் தொடர்ந்து, அப்போதைய இந்திய அமைச்சர் வி.பி.மேனனின் ஆலோசனைப்படி, இந்தியாவின் தேசத்தந்தையாகச் சித்தரிக்கப்படும் காந்தியின் பங்காளி வாரிசான சாமல்தாஸ் காந்தி, இந்திய அரசின் துணையுடன் 1947 செப்டம்பரில் பம்பாயில் ஜுனாகத்துக்கான இடைக்கால அரசை உருவாக்கினார். இந்த இடைக்கால அரசானது, இப்பகுதிவாழ் மக்களது விருப்பத்தின் தன்னெழுச்சியான வெளிப்பாடு என்று பாகிஸ்தான் அரசுக்கு இந்தியாவின் முதலாவது பிரதமரான நேரு கடிதம் எழுதினார்.

பின்னர் இந்திய அரசின் ஏற்பாட்டின்படி, இந்த இடைக்கால அரசானது, ஜுனாகத் சமஸ்தானப் பகுதிகளை அதிரடியாகக் கைப்பற்றிக் கொண்டு, சில இடங்களில் சூறையாடல் வன்முறைகளையும் ஏவியது. இத்தகைய அராஜகங்களைத் தடுத்து நிறுத்த நேரு அரசு முன்வரவேண்டும் என்று அப்போதைய பாகிஸ்தான் அரசு வேண்டுகோள் விடுத்தது. இருப்பினும், இந்த இடைக்கால அரசுக்கு இந்திய அரசு எவ்வகையிலும் உதவிகள் செய்யவில்லை என்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நேரு அரசு கூசாமல் புளுகியது.

மங்க்ரோல், பாபாரிவாத் ஆகிய குறுநில மன்னர்களின் பிரதேசங்கள் இந்தியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. ஜுனாகத்தை இந்தியத் துருப்புகள் முற்றுகையிட்டன. நவாப் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்திக்கும் வகையில், இந்திய அரசானது அந்த சமஸ்தானத்துக்குச் சரக்குப் போக்குவரத்து, அஞ்சல், விமானத் தொடர்பு முதலானவற்றைத் துண்டித்ததோடு, விறகு முதலான எரிபொருட்களுக்கும் தடை விதித்தது. ஜுனாகத் பகுதியில் கொலைகள், கற்பழிப்புகள், சூறையாடல்கள் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டன. பல முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குத் தப்பியோடினர். ஜுனாகத் மக்களுக்கும் இந்தியப் படைகளுக்குமிடையே மோதல்கள் தொடர்ந்த நிலையில், ஜுனாகத் நவாப் அக்டோபர் 26 அன்று குடும்பத்தோடு பாகிஸ்தானிலுள்ள கராச்சிக்குத் தப்பியோடி, அங்கு ஒரு இடைக்கால அரசை அமைத்துக் கொண்டார்.

பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கான், நவம்பர் 10,1947 அன்று நேரு அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், உங்கள் அரசானது ஜுனாகத் நிர்வாகத்தை ஏற்று நடத்துவதும், இந்தியத் துருப்புகளை அனுப்புவதும் பாகிஸ்தானுக்கே தெரியாமல், அதன் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்பட்டுள்ள செயலாகும். இது, அனைத்துலகச் சட்டத்திற்கு எதிரானதோடு, பாகிஸ்தானின் பிராந்தியத்தை அத்துமீறிக் கைப்பற்றும் செயலாகும் என்று சாடினார்.

படிக்க:
கருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா !
ஊரும் அடங்கிடுச்சி, ஊரடங்கும் நீண்டுருச்சி.. | மக்கள் அதிகாரம் பாடல் !

முறைப்படி யார் உரிமை பெற்ற ஆட்சியாளரோ அவரிடம் அதிகாரத்தை ஒப்படைத்து, அதன் பிறகு கருத்துக் கணிப்புத் தேர்தலை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கோரியது. கருத்துக் கணிப்புத் தேர்தலுக்கு முன்பாக, இந்தியப் படைகளை முற்றாக விலக்கிக் கொள்ள வேண்டுமென நிபந்தனை விதித்தது. ஆனால், இந்தியா இதனை ஏற்க மறுத்தது.

வல்லபாய் பட்டேலின் வாழ்க்கை வரலாறு (a Biography of Vallabhbhai Patel (1875–1950)) எனும் நூலை எழுதியுள்ள காந்தியின் பேரனாகிய ராஜ்மோகன் காந்தி, இதைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசு இச்சமஸ்தானத்தின் நிர்வாகப் பொறுப்பேற்று, பிப்ரவரி 20,1948-இல் கருத்துக் கணிப்புத் தேர்தலை நடத்தியது. ஆனால் எந்தவொரு சர்வதேசப் பார்வையாளரும் இத்தேர்தலைக் கண்காணிக்கவில்லை. இத்தேர்தலில் 99.95 சதவீதத்தினர் இந்தியாவுடன் இணைவதற்கு வாக்களித்தனர். சமஸ்தான நிர்வாகிகளுக்கும் மக்களுக்கும் பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து நிர்பந்தத்தை ஏற்படுத்தியும், இந்துக்களை இந்தியாவுடன் இணைய வேண்டுமெனப் பல்வேறு வழிகளில் ஆசைகாட்டியும் இந்தத் தேர்தல் நாடகம் நடத்தப்பட்டது. ஜனநாயக முறைப்படியும், சட்டபூர்வமாகவும் ஜுனாகத் சமஸ்தானப் பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதாக இந்திய அரசு அறிவித்தது.

இதற்கெதிராக ஐ.நா. மன்றத்தில் 1948-ல் பாகிஸ்தான் அரசு ஜுனாகத் விவகாரத்தை முன்வைத்தது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலானது, தனது சிறப்புக் கமிசன் (குழு) மூலம் காஷ்மீர் விவகாரத்துடன் சேர்த்து ஜுனாகத் விவகாரத்தையும் பரிசீலிக்குமாறு உத்தரவிட்டது. இருப்பினும், காஷ்மீர் விவகாரமானது முக்கியத்துவம் பெற்றதாக மாறிவிட்டதால், ஜுனாகத் விவகாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இன்னமும் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் ஜுனாகத் விவகாரம் தீர்க்கப்படாத விவகாரமாகவே நீடிக்கிறது.

பிரிட்டிஷ் காலனியாக இருந்த காலத்திலேயே, இந்திய ஆளும் வர்க்கங்கள் அகண்ட பாரதக் கனவுடன், தெற்காசியாவில் ஏகாதிபத்திய விசுவாச துணை வல்லரசாக வளர்வது என்ற நோக்கத்துடன்தான் செயல்பட்டன. 1940-களிலிருந்தே பிரிட்டனுடன் சேர்ந்து காஷ்மீர், நேபாளம், பூடான், சிக்கிம், வடகிழக்கு எல்லைப்புற மாநிலங்களைத் தமது பாரம்பரிய உரிமையாகக் காட்டி, அப்பகுதிகளை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளும் அகண்ட பாரத நோக்கத்துடன்தான் இயங்கின. 1947-க்குப் பின்னர், கம்யூனிச எதிர்ப்பும், ஏகாதிபத்திய வல்லரசுகளுக்குத் தொண்டூழியம் செய்து தெற்காசியப் பிராந்தியத்தில் மேலாதிக்கம் செய்யும் நோக்கத்தைக் கொண்டதாக, புதிய இந்திய அரசினுடைய வெளியுறவுக் கொள்கை அமைந்தது. அதிகார மாற்றத்திற்குப் பின்னர், இந்தியாவில் பல்வேறு சமஸ்தானங்கள் எவ்வாறு நைச்சியமாகவும், அச்சுறுத்தியும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டனவோ, அதேபோலத்தான் ஜுனாகத் சமஸ்தானமும் இந்தியாவுடன் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டது.

தெலுங்கான மக்கள் போராட்டத்தைக் காரணம் காட்டி அச்சுறுத்தியும், இந்திய அரசின் உயர் பதவிகள் தருவதாக ஆசைகாட்டியும், இந்தியப் படைகளைக் கொண்டு முற்றுகையிட்டு எச்சரித்தும் ஐதராபாத் சமஸ்தானம் எவ்வாறு இந்தியாவுடன் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டதோ, அதேபோலத்தான் ஜுனாகத்திலும் நடந்தது. ஒரு வேறுபாடு என்னவென்றால், ஜுனாகத்தில் கருத்துக் கணிப்புத் தேர்தல் நாடகம் நடத்தப்பட்டு, ஆகப் பெரும்பான்மை மக்களின் முடிவுப்படி சட்டபூர்வமாக இந்தச் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்படுவதாக ஜனநாயக நாடகம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது.

ஜுனாகத் பிராந்தியமானது இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பின்னர், அன்றைய பம்பாய் மாகாணத்தின் ஒரு பகுதியான சௌராஷ்டிரா மாகாணத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 1956 நவம்பர் முதல் நாள் வரை இருந்தது. 1960-இல் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது, குஜராத் தனி மாநிலமாகவும், பம்பாயைத் தலைநகராகக் கொண்ட மகாராஷ்டிரா தனி மாநிலமாகவும் மாறின. தற்போது ஜுனாகத், குஜராத்தின் சௌராஷ்டிரா பிராந்தியத்தின் ஒரு முக்கிய மாவட்டமாக அமைந்துள்ளது.

– தொடரும்

புதியவன்