Sunday, November 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 344

நீட் தற்கொலைகள் : தீர்வு என்ன? | மக்கள் அதிகாரம்

பத்திரிகைச் செய்தி

 நாள் : 06.06.2019

நீட் தேர்வால் தொடரும் தற்கொலைகள் தீர்வு என்ன?

னிதா மரணத்தின் துயரமே மறையாத நிலையில் நீட் தேர்வினை எழுதி அதில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் அல்லது தேர்வாகாததால் 3 மாணவிகள் தமிழகத்தில் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.

தன்னையே தீ வைத்துக்கொண்டு எரித்த பட்டுக்கோட்டை மீன் வியாபாரியின் மகள் வைஸ்யா என்ற மாணவியின் உணர்வுகள் எப்படிப்பட்டவை? அவரின் கனவு, ஆசைகள்  எப்படிப்பட்டதாக இருக்கும்? மருத்துவராக வேண்டும் என்ற கனவு மண்ணாய்ப் போனதே என்ற விரக்தி அவர்களை தற்கொலைக்கு தூண்டியிருக்கிறது என்றால் அதற்கு யார் காரணம்? தற்கொலைக்கு தூண்டுவது தண்டனைக்குரிய குற்றம் என்கிறது சட்டம்.  தற்கொலைகளுக்கு காரணமான மத்திய மாநில அரசுகள் தண்டிக்கப்பட வேண்டாமா?

இந்த வருட நீட் பலி : மாணவிகள் ரிதுஸ்ரீ (இடது) மற்றும் மாணவி வைஸ்யா.

தமிழக மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட மருத்துவக்கல்லூரிகளின் இடங்கள் தமிழ் மாணவர்களுக்குத் தகுதி இல்லை என்று மறுக்கப்பட்டு பணம் படைத்தவர்களுக்கு கொடுக்கப்படுகின்றன. இரு ஆண்டுகளுக்கு முன்னர் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற சட்டசபை தீர்மானம்  குடியரசுத்தலைவரின் அலுவலகத்தில் தூங்கிக்கொண்டு இருக்கிறது என்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லிக்கொள்ளும் சட்டசபைக்கு எந்த மதிப்பும் இல்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.

12-ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் எல்லாம் வீண், நுழைவுத்தேர்வின் அடிப்படையில் எடுக்கும் மதிப்பெண்களே மருத்துவராகும் தகுதியை தீர்மானிக்கும் என்ற, நீட் தேர்வே பெரும்பான்மை மாணவர்களை மருத்துவப்படிப்பில் இருந்து துரத்துவதையே நோக்கமாகக் கொண்டது.

பல லட்சங்கள் இல்லாமல் நுழைவுத்தேர்வில் சேர்வதே சாத்தியமில்லை. சாதாரண, எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவருக்கு மருத்துவராக வேண்டும் என்ற எண்ணம் இனி அறவே வரக்கூடாது என்பதுதான் மோடி அரசின் திட்டம்.

துப்பட்டா போடக்கூடாது, முழுக்கை சட்டைப்போடக்கூடாது, கம்மல் போடக்கூடாது என்று அனைத்தையும் அவிழ்த்துப்பார்க்கும் கொடூரத்தை ஏற்றுக்கொண்டு “வேறென்ன செய்ய முடியும்?” என்று அமைதியாக நாம் இருக்கும் வரை, இப்படிப்பட்ட படுகொலைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். மொத்தக் கல்வியே இன்றைக்கு கார்ப்பரேட்டுகளுக்காக தாரைவார்க்கப்பட்டு சாதிக்கு ஒரு நீதி, குலக்கல்வித் திட்டம், இந்தித்திணிப்பு என காவிமயமாக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

படிக்க:
♦ நீட் கொடுமைகள் 2019 : இன்னும் எவற்றையெல்லாம் சகித்துக் கொள்ளப் போகிறோம் ?
♦ தமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி

இது ஏதோ கல்வித்துறையில் மட்டுமல்ல; மீத்தேன், ஹைட்ரோகார்பன், கெயில் என திட்டமிட்டு தமிழினத்தை ஒழிப்பதற்கான மோடி அரசின் திட்டங்களில் ஒன்றாகத்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டு மாணவர்களை பலிவாங்கிக் கொண்டு இருக்கிறது.

அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் மருத்துவக்கல்வி பாரபட்சமின்றி கிடைக்க, நீட் தேர்வு இரத்து செய்யப்பட வேண்டும். நீட்-க்காக இனி எந்த உயிர்ப்பலியும் தமிழகத்தில் நிகழக்கூடாது.  நீட் உள்ளிட்ட தமிழகத்தின் மீதான அடக்குமுறைகளை இரண்டில் ஒன்று பார்ப்போம் ! அடக்குமுறைகள் வென்றதாக வரலாறில்லை!


மக்கள் அதிகாரம்
தொடர்புக்கு : 99623 66321

குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியை வரைகின்றனர் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 13

80-ம் ஆண்டுகளின் போக்கு

செப்டெம்பர் முதல் தேதி, எனது ஆறு வயதுக் குழந்தைகளின் முதல் பள்ளி நாள் பழையதாகி விட்டது. நாளை குழந்தைகளுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சிந்திக்க எனக்கு உதவாமல் இது என்னை விட்டு அகலாது.

எனது ஆறு வயதுக் குழந்தைகள் எப்படிப்பட்டவர்கள்? (இவர்களில் பலருக்கு ஆறு வயதாக இன்னமும் 2-3 மாதங்கள் உள்ளன என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்).

நான் அவர்கள் வரைந்த படங்களைப் பார்க்கிறேன், அவர்கள் எழுதிய சொற்களையும் வாக்கியங்களையும் படிக்கிறேன்.

சாதாரணப் படங்கள். பெரும் பிறவித் திறமையை வெளிப்படுத்தும் படங்களை அவற்றின் இடையே நான் காணவில்லை. ஆனால், இவற்றின் சாரம் என்னைக் கவர்ந்தது. குழந்தைகள் என்ன வரைகின்றார்கள்? விண்கப்பல்கள், விண்வெளி வலவர்கள், விமானங்கள், கார்கள், உயரமான வீடுகள், பள்ளிக்கூடம், சர்க்கஸ் காட்சிகள், விலங்கியல் பூங்காவில் உலாவும் காட்சி, மலைகள், காடுகள், புல்வெளிகள், மலர்கள், அம்மா, விழாக்கள், விளையாடும் குழந்தைகள், பலூன்கள், மனித உருவங்கள், விலங்குகள், பெரும் சூரியன் ஆகியவற்றை அவர்கள் வரைகின்றனர்.

சுருங்கச் சொன்னால் அவர்கள் மகிழ்ச்சியை வரைகின்றனர், தாங்கள் உலகத்தை எப்படிப் பார்க்கின்றனர் என்று அவற்றில் காட்டுகின்றனர். ஒருவன், ஒளிக் கற்றைகளுடன் கூடிய புன்சிரிப்பைச் சிந்தும் பெரும் வட்டத்தை வரைந்து, அதற்கு ஒரு நூலையும் வரைந்திருந்தான். ஒரு சிறுவன் அதைப் பிடித்துக் கொண்டிருக்கிறான். சிறுவன் ஓடிய படியே அதை இழுத்துச் செல்கிறான். “நான் சூரியனைப் பிடித்து விட்டேன்” என்று விளக்கினான் அந்த “ஓவியன்”. மற்றப் படங்களில் “இது டாங்கி”, “நிலா”, “நான் விளையாடுகிறேன்”, “என் அம்மா“, “பள்ளிக்கூடம்”, “எங்கள் வீட்டின் பின்புறம்”, “என் தம்பி”, “காளான்” என்று எழுதப்பட்டிருந்தது.

படங்களின் கீழ் உள்ள சொற்கள், வாக்கியங்கள், எண்களை என் நோட்டுப் புத்தகத்தில் குறித்துக் கொள்கிறேன் இருவரைத் தவிர எல்லாக் குழந்தைகளுக்கும் தம் பெயர்களையும் வெவ்வேறு சொற்கள், வாக்கியங்களையும் எழுதத் தெரிந்திருந்தது. “எனக்குப் படிக்கவும் எழுதவும் தெரியும், என் அப்பா சொல்லித் தந்தார்” என்று தேன்கோ எழுதினான். “நான் ஏற்கெனவே ஒரு புத்தகத்தைப் படித்து விட்டேன்” என்று தேயா எழுதினாள். மாக்தா கீழ்க்காணும் பல கணக்குகளை எழுதியிருந்தாள்: 10+5=15, 100-90= 10, 100+100 =200…..

பார்த்தீர்களா, எப்படிப்பட்ட அசாதாரணமான குழந்தைகள். 80-ம் ஆண்டுகளின் போக்கு! ஏன் இவர்கள் எழுத்துகள், நூல்கள், எண்கள் மீது இப்படி அக்கறை காட்டுகின்றனர்? கண்ணாமூச்சி விளையாட்டோ வேறு விளையாட்டோ விளையாடலாம், தாண்டிக் குதித்துக் கொண்டிருக்கலாம். ”இங்கு என்ன எழுதியுள்ளது?”, “இது என்ன எழுத்து?” என்று தொலைக்காட்சிப் படங்களின் தலைப்பு எழுத்துகளையும் தெருக்களில் தென்படும் பலகைகளில் உள்ளவற்றையும் சுட்டிக்காட்டி ஏன் இவர்கள் தம் தாய், தந்தை, தாத்தா, பாட்டிகளைக் கேள்வி கேட்டுத் துளைக்கின்றனர்? பத்திரிகையில் உள்ள தமக்குத் தெரியாத எழுத்துகளைக் கண்டுபிடிப்பதில் ஏன் இவர்கள் இப்படி கஷ்டப்படுகின்றனர்? ஐந்து வயதான குழந்தைகள், ஏன் நான்கு வயதான குழந்தைகள் கூடப் படிக்க முயலுகின்றனர். இதைச் சொல்லித்தருமாறு அவர்கள் தம் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்துகின்றனர். தமது சைக்கிள்கள், கார் பொம்மைகள், மற்ற விளையாட்டுப் பொருட்களை மறந்துவிட்டு இவர்களே அடிக்கடி பரஸ்பரம் எழுத்துகள், எண்களைச் சொல்லித் தருகின்றனர். இந்த ஆறு வயதுக் குழந்தைகள் புதியவற்றை அறிந்து கொள்ளும் நாட்டத்தோடு மட்டுமின்றி குறிப்பிட்ட அளவு ஞானத்தோடும் (இது பள்ளிப் பாடத்திட்டத்தில் அடங்கியுள்ளது) வகுப்பறைக்கு வந்துள்ளனர்.

படிக்க:
மீண்டும் கும்பல் வன்முறைகளைத் தொடங்கிய இந்துத்துவ கும்பல் !
4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். !

பல குழந்தைகளுக்கு எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியும் என்பது குறித்து ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவிப்பதை நான் அடிக்கடி கேட்டிருக்கிறேன். இப்போது என்ன செய்வது?” என்று கூட அவர்கள் குறைப்பட்டுக் கொண்டனர். “படிக்கவும் எழுதவும் கணக்குப் போடவும் வீட்டில் குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டாம், ஏனெனில் இவர்கள் இதையே வகுப்பறையிலும் படிக்க வேண்டி வருவதால் பாடவேளையின் போது இவர்களுக்குச் சலிப்பேற்படும்” என்று ஒரு பத்திரிகையில் ஆசிரியை ஒருவர் பெற்றோர்களுக்கு அறைகூவல் விடுத்ததைக்கூட நான் பார்த்தேன்.

ஆனால் பெற்றோர்கள் விசேஷப் பாடத்திட்டத்தின்படி தம் குழந்தைகளுக்கு ஒன்றும் சொல்லித் தருவதில்லையே. குழந்தைகளே தமது “ஏன்”, “எப்படி”, “இது என்ன?”, “இப்படியிருந்தால்” போன்ற கேள்விகள் மூலம் தமது கல்வியைப் பெறுகின்றனர். வீட்டில் குழந்தைக்கு எழுதப் படிக்கச் சொல்லித் தராமலிருக்குமாறு கோருவதில் பொருளில்லை என்று எனக்குப்படுகிறது. ஏனெனில் இன்றைய குழந்தையின் அறிந்துணரும் நாட்டத்தை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. முக்கியமானது என்னவெனில், இப்படித் தடை செய்ய வேண்டியது அவசியமா? இது குழந்தையின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்குமே.

ஒரு வகுப்பில் குழந்தைகள் வெவ்வேறான ஞான மட்டங்களில் இருக்கும்போது ஆசிரியரின் பணி நிச்சயமாகக் கடினமாகும். ஏனெனில் “பூஜ்ஜியத்திலிருந்து கல்வி துவங்கும்போது தயாராக உள்ள முறை இச்சந்தர்ப்பங்களில் எடுபடாது. கல்வி முறையை மாற்றியமைக்க வேண்டிவரும். சில சமயங்களில் ஒன்றிற்குப் பதிலாக இன்னொன்றைக் கூடப் பயன்படுத்த நேரிடும். நடைமுறையில் இது, ஆசிரியர் தன் முறையியல் கோட்பாடுகளை மாற்றுவதைக் குறிக்கும். சில சமயங்களில் ஆசிரியருக்கே உரித்தான தன் சொந்த சடத்துவத்திற்கெதிராகப் போராடுவதைக் குறிக்கும்; சில ஆசிரியர்கள் வழக்கமான கல்வி முறைகளை மாற்றுவதன் தீமைகள் குறித்து வாய் வீச்சுக்களின் மூலம் இதைத் திறமையாக மூடி மறைப்பார்கள். ”ஆம், சில சந்தர்ப்பங்களில் ஒரு சில ஆசிரியர்களின் செயலற்ற மந்த நிலை மற்ற ஆசிரியர்களின் படைப்பாற்றலை மழுங்கடிக்கச் செய்கிறது. புதியவற்றை நாடும் ஆசிரியர்களைக் கட்டிப்போடுகிறது”. ஒரு விந்தையான நிலை ஏற்படுகிறது: ஆக்கபூர்வமான அணுகுமுறையற்ற ஒரு ஆசிரியர் தன் மாணவர்களைச் சோம்பேறிகளெனக் கூறுகிறார். மிக மோசமாகப் பாடம் நடத்தும் ஆசிரியர் (இதற்கு அவருக்கு பூஜ்ஜியம் மார்க்குதான் போடலாம்) தன் மாணவர்களுக்கு இப்பாடத்தில் பூஜ்ஜியம் மார்க்கு போடுகிறார்.

குடும்பம், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான நர்சரிப் பள்ளிகள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்கள், திரைப்படம், விளையாட்டுப் பொருட்கள், மனிதர்கள், நமது நவீன வாழ்க்கை எல்லாம் சேர்ந்துதான் இன்று என் முன் உட்கார்ந்துள்ள இந்த அசாதாரணக் குழந்தைகளை உருவாக்கியுள்ளன. பள்ளிக்கு வந்த போது இவர்களில் பலருக்குப் படிக்கவும் எழுதவும் கூட்டவும் கழிக்கவும் வகுக்கவும் பெருக்கவும் (பத்து வரைக்கும் மட்டுமல்ல அதற்கு மேலும் கூட) தெரியும். இன்று இவர்கள் தம் வளர்ச்சியாலும் “கல்வியறிவாலும்” என்னைப் பன்முறை வியப்பில் ஆழ்த்தினர். என்னால் இவர்களை ஒன்றுமறியாத சிறுவர்களாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஆறு வயதுக் குழந்தைகள் உள்ள மற்ற பல வகுப்புகளைப் போன்றே என் வகுப்பிலும் வெவ்வேறு திறமைகளையும் வெவ்வேறு மட்ட ஞானத்தையும் உடைய குழந்தைகள் நிறைந்திருக்கட்டும். தனிப்பட்ட அணுகுமுறைக் கோட்பாடு என் வகுப்புகளில் எடுபடவில்லையெனில் ஏன் போதனை முறை இக்கோட்பாடு குறித்து இவ்வளவு பெருமிதம் கொள்கிறது?

அதே சமயம், ஆறு வயதுக் குழந்தைகள் பள்ளிக்கு வந்துள்ளார்கள் என்றால், இவர்கள் பள்ளிக்கு வரும் முன்னரே புதியவற்றை அறியும் நாட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்றால், இவர்கள் மற்ற எல்லாவற்றையும் மறந்து விட்டு முழுப் பொறுப்போடு பாடம் படிப்பதில் ஈடுபடுவார்கள் என்று நான் நினைக்கிறேனா? நான் இப்படி நினைத்தால், குழந்தைகளின் உண்மையான வாழ்விலிருந்து தள்ளி நிற்கும் ஒரு எளிய ஆசிரியனாக அல்லவா இருப்பேன்! எனது வேலையின் சிக்கலே எதுவெனில், அவர்களின் ஞானம் எப்படிப்பட்டதாயிருந்தாலும் அவர்கள் குழந்தைகளாகத்தான் இருப்பார்கள், அவர்களுக்கு விளையாட்டுதான் வாழ்வின் உட்பொருள் என்பதாகும்.

ஒருமுறை ஒரு ஐந்து வயதுச் சிறுமியை அவளுக்கு எவ்வளவு “கல்வியறிவு” உள்ளது என்று சோதித்துப் பார்ப்பதற்காக என்னிடம் கூட்டி வந்தனர். அச்சிறுமி நன்றாகப் படித்தாள், பல கதைகளைப் படித்திருந்தாள், தன் மனப் பதிவுகளை அவளால் எழுத்து வடிவில் வடிக்க முடிந்தது. கடிகாரத்தில் மணி பார்த்துச் சொன்னாள். வகுத்தாள், பெருக்கினாள், மூளை வளர்ச்சியை நிர்ணயிக்கும் பல சிக்கலான சோதனைகளில் நன்கு தேறினாள். நான் அவளைப் போகச் சொல்லிவிட்டு, பெற்றோர்களுடன் பேசத் துவங்கியதுமே அவள் மேசையின் அடியில் புகுந்து கொண்டு எங்களைப் பார்த்து நாய்க்குட்டியைப் போல் குரைக்க ஆரம்பித்தாள்.

பள்ளிப் பாடங்கள் நான்கு, ஐந்து, ஆறு ஏன் ஏழு – எட்டு வயதுக் குழந்தைகளின் இயல்பை அடியோடு மாற்றுவதில்லை. அதாவது, குழந்தைப்பருவம் என்றழைக்கப்படுவதிலிருந்து இவர்களைப் பிரிப்பதில்லை. கருத்தாழமுள்ள விஷயங்களைத் தெரிந்திருப்பதாலும், மேன்மேலும் இவற்றை அறிந்து கொள்ள முயலுவதாலும் மட்டுமே குழந்தை பொறுப்புள்ளவனாகி விடுவதில்லை. ஆறு வயதுக் குழந்தைகளுக்கு எனது கட்டளைகள், தடைகள், அறைகூவல்களைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும், நீண்ட நேரம் அவர்களால் பாடம் படிக்க முடியாது, ஒரே மாதிரியான நிலை அவர்களுக்கு விரைவிலேயே சலிப்பேற்படுத்தும் …..

இன்று என் வகுப்பில் எப்படியிருந்தது? குழந்தைகள் களைத்து விட்டனர். அவர்களுக்குச் சலிப்பாயுள்ளது என்பதை இரண்டு முறை உணர்ந்தேன். இன்னமும் குறைவான பாடவேளைகளைப் பற்றி நான் யோசித்துப் பார்க்க வேண்டுமோ! ஒவ்வொரு பாடவேளையிலும் 15 நிமிடங்கள் பாடம் நடத்தினால் போதுமோ? ஒரு நாளில் எட்டு சிறு பாடவேளைகள். இல்லை, தாய்மொழி, கணிதம், ருஷ்ய மொழி வகுப்புகளை மட்டும் இப்படிப் பிரிப்பது நல்லது. வரைதல், பாட்டு வகுப்பு, உடற்பயிற்சி வகுப்புகளை விட இவற்றிற்குப் பெரும் மூளை உழைப்பு தேவைப்படும். தாய் மொழிப் பாடம் 15 நிமிடங்கள் நடந்ததும் வகுப்பு மணியடிக்கும். பின் வகுப்பை விட்டு வெளியே போகாமலேயே 5 நிமிடங்கள் ஓய்வு. எஞ்சிய 15 நிமிடங்களை கணிதத்திற்கு ஒதுக்குவோம். நாளை இப்படிச் செய்து பார்க்க வேண்டும்….

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

தமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி

புதிய கல்விக் கொள்கை (2019) என்ற பெயரில் கல்வியை தனியார் முதலாளிகளின் கையில் ஒப்படைப்பதுடன், முழுக்க முழுக்க காவிமயமாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது பாஜக அரசு.

ஒரே நாடு, ஒரே மொழி என்ற கொள்கையைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். – பாஜக, புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

ஏற்கெனவே இந்தி எதிர்ப்பு மனநிலை கொண்ட தமிழகம், மத்திய அரசின் இந்த நகர்வுக்குக் கடுமையான எதிர்வினை ஆற்றியது. அதனைத் தொடர்ந்து கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களும் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தன.

இரண்டே நாட்களில், இந்தி கட்டாயமல்ல என்று தனது வரைவு அறிக்கையில் மாற்றம் செய்து வெளியிட்டது மத்திய அரசு. மத்திய அரசின் இந்தி திணிப்பைக் குறித்து சென்னை மக்களிடம் கருத்துக் கேட்க வினவு குழுவினர் சென்றனர்.
மக்கள் என்ன சொல்கிறார்கள் ?

பாருங்கள் ! பகிருங்கள் !

கேள்வி பதில் : தியானம் – தேர்தல் – காவி விளம்பரம் !

கேள்வி: // தற்போது தொலைக்காட்சிகளில் வருகிற அனைத்து விளம்பரங்களிலும் ஏதாவது ஒரு வகையில் காவி நிறம் இடம் பெற்றிருப்பது பற்றி …? //

– எஸ். செல்வராஜன்


விளம்பரங்களில் காவி நிறம் இடம்பெற்றிருப்பது குறித்து நாங்கள் அறிந்திருக்கவில்லை. நீங்கள் சொல்வது உண்மையானால் பாஜக-வின் செல்வாக்கு வட இந்திய மாநிலங்களில் அதிகரித்திருப்பதன் படி பொருத்தமானதுதான். சமீபத்தில் அலகாபாத்தில் நடந்த அர்த் கும்பமேளாவிலேயே நிறைய பன்னாட்டு – இந்நாட்டு நிறுவனங்கள் தமது விளம்பரங்கள் மற்றும் காட்சி நிலையங்களை வைத்திருந்தன. அவற்றில் காவி நீக்கமற நிறைந்திருந்தது உண்மைதான். தற்போது 12-வது வகுப்பு பாடத்திட்டத்தில் பாரதியாருக்கு காவி முண்டாசு கட்டியதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. பாரதியார் எப்போது காவி அணிந்தார் என்பது ஒருபுறமிருக்க அவரது சனாதனதர்ம ஆதரவு கருத்துக்களின்படி அவரை அப்படி காட்டுகிறார்கள். தமிழ்நாட்டு பாடத்திட்டத்திலேயே இப்படி என்றால் மத்திய அரசின் பாடத்திட்டங்கள் குறித்து சொல்லவே வேண்டாம்.

பார்ப்பனியத்தின் செல்வாக்கு அதிகமுள்ள பசு வளைய மாநிலங்களில் காவி வண்ணம் பல்வேறு வகைகளில் செல்வாக்கு செலுத்துகிறது. தமிழகத்தில் இருந்து வடக்கே செல்லும் ஒரு ரயிலில் நீங்கள் காவி உடை தரித்து, திருநீறு பூசி பயணிப்பதாக இருந்தால் எங்கேயும் பயணச்சீட்டு எடுக்க வேண்டியதில்லை. பயணச்சீட்டு பரிசோதகர் கேட்கமாட்டார் என்பதோடு சக பயணிகளும் ஏதாவது தின்பதற்கு கொடுப்பதோடு, நிதியுதவியும் செய்வார்கள். காஞ்சிபுரத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட இல்லாமல் காவி கெட்டப்பில் நீங்கள் காசி வரை பயணிக்கலாம். அக்ஷய திரிதியை என்றொரு பார்ப்பனப் பண்டிகையை நகை நிறுவனங்கள் சந்தைப்படுத்தியது போல காவி பல்வேறு வகைகளில் சந்தைப்படுத்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தேவையாக இருக்கிறது. பாபா ராம்தேவின் மூலிகை பற்பசைக்கு போட்டியாக கோல்கேட் நிறுவனமே வேதசக்தி என்று மூலிகை பற்பசையை சந்தையில் இறக்கியிருக்கிறது. எனில் காவி நிறம் இல்லாமல் விளம்பரங்கள் எப்படி இருக்க முடியும்?

♦ ♦ ♦

கேள்வி: // காவி பாசிச அபாயத்தை தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் முறியடிக்க முடியுமா? இல்லையெனில் பாசிசம் ஜனநாயக சக்திகளை ஒழித்து விடாதா? //

– வி. வெங்கடகிருஷ்ணன்

அன்புள்ள வெங்கடகிருஷ்ணன்,

தேர்தல் முடிவுக்கு  முன்பாக இந்தக் கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். தேர்தல் முடிவுகளே உங்களுக்கு பதிலை அளித்திருக்கும். அதாவது வாக்களிப்பதன் மூலம் காவி பாசிச அபாயத்தை முறியடித்துவிட முடியாது. ஏனெனில் கணிசமான மக்கள் பார்ப்பனிய பண்பாட்டு செல்வாக்கில் சிக்கியிருக்கிறார்கள். அதை பாஜக – சங்க பரிவாரங்கள் இன்னும் ஊதிப் பெருக்கி வருகின்றன. சித்தாந்த ரீதியாக காவிப் பக்கம் அணிதிரட்டப்பட்டிருக்கும் மக்களை மீட்பதற்கு தேர்தல் பாதை உதவாது. எதிர்க்கட்சியான காங்கிரசு கூட பசு வளையம் எனப்படும் இந்தி பேசும் மாநிலங்களில் மிதவாத இந்துத்துவாவின் முகத்தையே காட்டியது. பிரக்யா சிங் தாகூர் எனப்படும் பயங்கரவாதி போட்டியிட்டு வென்ற போபால் தொகுதியில் காங்கிரசு சார்பாக திக்விஜய் சிங் போட்டியிட்டு தோற்றார். தேர்தலில் இவரும் அனேக சந்நியாசிகளை அழைத்து யாகம் செய்தார். தானும் காவி பக்தன் என்று காட்டிக் கொண்டார்.

தேர்தல் பரப்புரையில் மோடி அரசு கடந்த ஐந்தாண்டுகளில் நடத்திய பசுவின் பெயராலான கொலைகள், இதர சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள், உனா போன்ற தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து ராகுல் காந்தி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ரஃபேல் ஊழலை பேசத்துணிந்த ராகுலுக்கு அக்லக் குறித்தோ பெஹ்லுகான் குறித்தோ பேச ஏன் தைரியமில்லை? இந்து வாக்குகளை இழந்து விடுவோம் என்று இவர்கள் பாஜகவின் அணுகுமுறைக்கு வலுவேற்படுத்துகிறார்கள். எனவே தேர்தல் பாதைக்கு அப்பாற்பட்டு இந்துத்துவ பயங்கரவாதத்தை நாம் எப்படி முறியடிப்பது என்பது குறித்து ஆலோசிப்பதே சாலச்சிறந்தது.

♦ ♦ ♦

கேள்வி: // இந்த 5 ஆண்டு மோடி ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளின் பட்டியல் தர முடியுமா ? //

– ராஜா

அன்புள்ள ராஜா,

வினவு தளத்தில் மோடி ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடந்த கொடுமைகள் குறித்து விரிவான பதிவுகள், கட்டுரைகள், செய்திகள் உள்ளன. தேடிப் படியுங்கள்.

மோடி, இந்துத்துவா, பாஜக, மாட்டுக்கறி, தலித், பார்ப்பனியம், பாசிசம், ஆர்.எஸ்.எஸ் போன்ற குறிச்சொற்களை தேடுதல் பெட்டியில் போட்டு தேடிப் பாருங்கள். எண்ணிறந்த கட்டுரைகள் உங்களுக்கு கிடைக்கும்.

♦ ♦ ♦

கேள்வி: // மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

தியானம் என்பது உண்மையா ? புத்தர் போதித்த விபாசனா , ஓஷோவின் விழிப்புணர்வு , ரமண மஹரிஷி , பாபாஜியின் கிரியா யோகம் மூலம் நிப்பாணம் அடைய முடியுமா ? அல்லது மனதின் கற்பனையா? வெகு நாட்களாக தியானம் செய்து வருகிறேன். ஆனால் என்னால் எந்த ஒரு நிலையும் அடைய முடியவில்லை . நான் சரியான பாதையை தேர்வு செய்ய ,தங்களிடம் அறிவியல் ரீதியான பதிலை எதிர்பார்க்கிறேன்? நன்றி//

– எ.ரவிச்சந்திரன்

அன்புள்ள ரவிச்சந்திரன்,

தியானம் குறித்த சிறப்பான அறிவியல் விளக்கத்தை கீழ்க்கண்ட கட்டுரையில் வாசிக்கலாம்.

சாமியார் கம்பேனி பிரைவேட் லிமிடெட்!

அந்தக் கட்டுரையில் இருந்து சில பகுதிகள்:

ஆன்மீக “அமைதியும்’ அறிவியல் உண்மையும்!

உண்மையில் பக்தர்கள் தங்களது வாழ்க்கைப் பிரச்சினைகளை மேற்கண்ட சாமியார்களின் விதவிதமான முறைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள முடியுமா? பலராலும் பூடகமாக வியந்தோதப்படும் ஆன்மீகத்தின் பொருள் என்ன? பல்வேறு முறைகளில் பயிற்சி செய்யப்படும் யோகா முறை ஒரு மனிதனுக்கு நிம்மதியைத் தருமா? நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்ட சாமியார்களின் உரைகளில் சீடர்களுக்கு தெளிவு பிறக்க வாய்ப்புள்ளதா?

“மனதைக் கட்டுப்படுத்துதல், கட்டுப்படுத்தினால் இறுதியில் பேரானந்தம்’ என்பது ஆன்மீகம் என்பதற்கு இவர்கள் தரும் இலக்கணம். மனதையே ஆன்மா, ஜீவன், உடலுக்கும் உயிருக்கும் அப்பாற்பட்டது என்றெல்லாம் கற்பித்துக் கொள்கிறார்கள். இத்தகைய அரூபமான விளக்கத்தில் உண்மையோ, பொருளோ இல்லை. அறிவியல்பூர்வமாக மனது என்பது மூளையின் செயல்பாடுகளில் ஒன்று. அதே சமயம் அதற்கென்று தனித்துவமான இடமும் உண்டு. ஆனால் அது தனியாய் பிறந்து வளர்ந்து செயல்படுவதில்லை. மனிதனின் உடற்கூறியலைக் கொண்டு குழந்தையின் மூளை இயல்பாக மனித மூளையாக உருவாகியிருந்தாலும் ஆரம்பத்தில் அது தன்மையில் விலங்குகளின் மூளையைப் போன்று சாதாரணமாகவே இருக்கிறது. புற உலகோடு கொண்டுள்ள தொடர்பால் மட்டுமே அது மனித மூளையின் செயல்பாட்டைப் பெறுகிறது.

உடலுக்கு வெளியே சுயேச்சையாக இயங்கிக் கொண்டிருக்கும் இயற்கையை, சமூகத்தை, முழு உலகைப் புரிந்து கொள்வதாலும், தொடர்பு கொண்டு வினையாற்றுவதன் வாயிலாகவும்தான் தனித்துவத்தைப் பெறுகிறது மனித மனம். சூழ்நிலையும், வாழ்நிலையும்தான் மனதின் அகத்தை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. உணர்ச்சிகளாலும், அறிவுத்திறனாலும், மனிதர்கள் வேறுபடுவதன் காரணமும் இதுதான்.

மனதின் தோற்றமும், இருப்பும், செயல்பாடும் இவையென்றால் அதனால் உருவாகும் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு? மனதின் பிரச்சினை என்பது மனிதனின் பிரச்சினை; மனிதனின் பிரச்சினை என்பது அவன் வாழ்வதற்காகப் புற உலகோடு கொண்டுள்ள தவிர்க்கமுடியாத உறவினால் ஏற்படும் பிரச்சினை. இத்தகைய பிரச்சினைகளினால் மனிதனிடம் இரண்டுவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒன்று உடல் ரீதியானது. இரண்டாவது கருத்து ரீதியானது. இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தும் பிரிந்தும் வினையாற்றுகின்றன.

உடல் ரீதியாக ஏற்படும் பிரச்சினைகளில் மூளையும், அதனால் பாதிக்கப்படும் ஏனைய உடல் அங்கங்களும் அடக்கம். கருத்து ரீதியான பிரச்சினைகளை அவ்வளவு சுலபமாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஒரு குறிப்பிட்ட சமூக உறவில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் மனிதன், பிரச்சினை வரும்போது சமூகத்தில் தனது இடம் குறித்த குழப்பமும், பயமும், அடைகிறான். இது முற்றும் போது சமூகத்தோடு முரண்படத் துவங்குகிறான். முரண்படுதலின் வீரியத்திற்கேற்ப அவனது சமூக வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

படிக்க:
♦ கேள்வி பதில் : ஸ்டெர்லைட் – தேர்தல் – பறையிசை !
♦ கேள்வி பதில் : வணிக ஊடகத்தில் இருந்து கொண்டு மக்களுக்கு பணியாற்ற முடியாதா ?

ஆக மனிதனது உடல் நலமும் அல்லது மூளை நலமும், சிந்தனை முறையும் ஒத்திசைந்து இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பொருள். ஆயினும் வர்க்க சமூகத்தில் இந்த ஒத்திசைவு குலைவது தவிர்க்க இயலாதது. வர்க்கப் பிளவுகளையும் நிச்சயமற்ற தன்மையையும் அதிகரிக்கும் இன்றைய உலகமயமாக்க காலம், மக்கள் ஆன்மீகத்தை நோக்கி ஓடுவதையும், சாமியார்கள் வாழ்க வளமுடன், வாழுவதே கலையென்று ஆடுவதையும் சாத்தியமாக்கியிருக்கிறது. இருப்பினும் மன நலன் மற்றும் சமூக நலன் இரண்டையும் சீரடையச் செய்வதற்குரிய பொருத்தமான மருந்துகள் சாமியார்கள் மற்றும் அவர்களது யோக முறைகளில் நிச்சயம் இல்லை. ஏன்?

வாழ்க்கைப் பிரச்சினைகளால் மனிதனும், மனதும் பாதிக்கப்படுகின்றனர் என்றால் மூளை பாதிக்கப்படுகிறது என்பதே சரி. கோபம், அச்சம், சலிப்பு, சோர்வு, விரக்தி, சோகம், பதட்டம், படபடப்பு, மன அழுத்தம், போன்றவை எல்லோருக்கும் எப்போதாவது ஏற்படக்கூடிய உணர்ச்சிகள். குறிப்பிட்ட காரணங்களால் இவை அடிக்கடி ஏற்பட்டு நாளடைவில் தொடர்ந்து நீடித்தால் மனம் மெல்லமெல்லச் சிதைவது நடக்கிறது. மனச் சிதைவின் விளைவால் மூளையில் உள்ள உயிர்ம வேதியல் சக்திகளின் சமநிலை குலைகிறது. இதன் தொடர் விளைவால் பல உடல் பிரச்சினைகளும், வாழ்க்கை மீதான விரக்தியும் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வென்ன?

மூளை இழந்து விட்ட சக்திகளை திரும்பப் பெறுவதன் மூலமே, புண்ணான மூளையையும் மனதையும் நேர் செய்ய முடியும். அதை மனித உடலையும், நோய்க்கூறுகளையும் அறிவியல் பூர்வமாக கற்றுக்கொண்ட ஒரு உளவியல் மருத்துவரால்தான் கண்டுபிடித்துக் குணமாக்க முடியும். மாறாக, தியானம் செய்வதன் மூலமாக, மூளை இழந்த பௌதீக ரீதியான சக்திகளைப் பெறமுடியாது.

ஏனெனில், இது வெறும் கருத்துப் பிரச்சினையல்ல. உடல் நோய்வாய்ப்படுவது என்பது பொருளின் பிரச்சினை. பொருளுக்கு கருத்து மருந்தல்ல. எளிமையாகச் சொல்வதாக இருந்தால் தலைவலி, காய்ச்சல், வயிற்று வலி, எலும்பு முறிவு, மற்றும் எளிதில் குணப்படுத்த இயலாத எய்ட்ஸ் முதலான நோய்களுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்ளுகிறோம். இதை தியானம் செய்வதால் தீர்க்கமுடியாது. மனம் அல்லது மூளையின் பிரச்சினைகளும் அப்படித்தான்.

இருப்பினும், மனம் நோய்வாய்ப்படுவதற்கும், உடல் நோய்வாய்ப்படுவதற்கும் வேறுபாடு உண்டு. உணவின்மை, சத்துக்குறைவான உணவு, சுகாதரச் சீர்கேடுகள், நுண்கிருமிகள் முதலியவற்றால் உடல் நோய்வாய்ப்படுகிறது. ஆனால் மூளையோ, வாழ்க்கைப் பிரச்சினைகளால் குறிப்பிட்ட கருத்து நிலைக்கு தொடர்ந்து ஆட்படுவதால் சக்தியை இழந்து நோய்வாய்ப்படுகிறது.

சாமியார் கம்பேனி பிரைவேட் லிமிடெட் !இத்தகைய பலவீனமான மூளையால் உடலின் சமநிலை குலைந்து ஏனைய உடல் பாகங்களும் பாதிப்படைந்து, செயல்பாடு சீர்கேடு அடைகின்றது. பாதிப்படையும் மனதிற்குப் பின்னே இத்தனை உண்மைகள் இருக்கும் போது, சாமியார்கள் அடிமுட்டாள்தனமாக “குணப்படுத்துவேன்’ என்று திமிராகப் பேசுவது அயோக்கியத்தனம். நியாயமாக இவர்களை போலி மருத்துவர்கள் என்று கைது செய்து உள்ளே தள்ளுவதே சரி.

யோகா போன்ற முறைகளால் நோயைக் குணப்படுத்தமுடியும் என்பதுதான் மூட நம்பிக்கையே தவிர தன்னளவில் அவை ஒரு உடற் பயிற்சிக்குரிய நன்மையைக் கொண்டிருக்கின்றன. உடற்பயிற்சியால் ஒரு மனிதனின் உடல் நலம் பொதுவில் ஆரோக்கியமாக இருக்கும் என்பது உண்மைதான். இருப்பினும் இந்த ஆரோக்கியம் வெறும் உடற்பயிற்சியால் மட்டும் வந்து விடுவதில்லை. அது ஊட்டச் சத்து, சுகாதாரம், போதுமான ஓய்வு, உறக்கம் போன்றவையுடன் தொடர்புள்ளது. சுருக்கமாகச் சொன்னால் வசதி அல்லது வர்க்கம் சம்பந்தப்பட்டது.

அடுத்து, தியானம் என்பது மனம், அதாவது மூளையின் ஒரு பகுதிக்கு அல்லது செயல்பாட்டிற்குச் செய்யப்படும் பயிற்சியாகும். தியானத்தின் மூலம் மட்டுமல்ல, ஒரு நல்ல இசையைக் கேட்பதிலோ, ஒரு குழந்தையைக் கொஞ்சுவதிலோ, இயற்கைக் காட்சியுடன் ஒன்றுவதிலோ கூட மனம் பயிற்சியையும் ஓய்வையும் பெறமுடியும். இவை ஒவ்வொருவரின் விருப்பம், இரசனை, பண்பு, வாழ்க்கையைப் பொறுத்தது. ஆயினும் அழுத்திச் செல்லும் வாழ்க்கையின் இடைவெளிகளில் பலருக்கு இவை சாத்தியப்படுவதில்லை. அதனால் பிரச்சினை வரும்போது ஓய்வு பெறாத மனம் விரைவில் துவண்டு விடுகிறது.

மனதிற்கு அப்படிச் சிறப்பாகப் பயிற்சியையும், ஓய்வையும் தந்திருப்பவர்களுக்குக் கூட வாழ்க்கைப் பிரச்சினைகளால் மனது பாதிக்கப்படுவது நடக்கும். இதிலிருந்து மீள்வதற்கு மருத்துவமே பெருமளவுக்கு உதவும் என்பதையும் தியானம் உதவாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேபோல, மனதைச் சிதைத்து வதைக்கும் வாழ்க்கைப் பிரச்சினைகளால் நோயுற்ற ஒரு மனிதனை எல்லா உளவியல் மருத்துவர்களாலும் குணமாக்கி விட முடியாது. “நான்’ எனப்படும் தன்னிலையை வைத்து வாழும் மனிதனின் அடிப்படை, உண்மையில் “நாம்’ எனும் சமூக மையத்தில்தான் சுழல்கிறது. அந்த மையம் மனிதர்களது விருப்பு, வெறுப்பின்படி அமைந்ததல்ல; அது சமூக உறவுகளால் பின்னப்பட்ட ஒரு நிர்ப்பந்தம். இந்த நிர்ப்பந்தத்தின் அழுத்தம் பல இன்னல்களை ஏற்படுத்துகிறது. இதனைப் புரிந்துகொள்ளும் சமூக அறிவியல் கண்ணோட்டம் கொண்ட ஒரு உளவியல் மருத்துவரால்தான் இந்த நோயின் காரணத்தையே புரிந்து கொள்ள இயலும்.

***

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

அறிஞர் அண்ணாவின் “ ஆரிய மாயை ! “ – புதிய தொடர்

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 01

பார்ப்பனியக் கொடுங்கோன்மையைத் தோலுறிக்கும் அறிஞர் அண்ணாவின் படைப்புகளை வெளியிடும் முயற்சியாக “சந்திரமோகன்” (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்) நாடகத்தை வினவு தளத்தில் வெளியிட்டோம். இத்தொடருக்கு தங்களது பெருவாரியான ஆதரவை வாசகர்கள் வழங்கினர். அந்நாடகத் தொடர் முடிவடைந்ததும், பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தும் ஆயுதக் கிடங்காக வீற்றிருக்கும் “ஆரிய மாயை” எனும் நூலை இன்று முதல் தொடராக வெளியிடுகிறோம். ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழக்கிழமையன்று ஆரிய மாயை தொடர் வெளிவரும். தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ! – வினவு

முன்னுரை :

“ஆரிய மாயை” எனும் இச்சிறு நூல், நான் பல சமயங்களிலே எழுதிய கட்டுரைகளைத் தொகுத்தும், இன எழுச்சிக்குப் பாடுபடும் ஆற்றலறிஞர்களின் ஆராய்ச்சியுரைகளைத் திரட்டியும் வெளியிடப்படுகிறது. மேற்கோள்கள் பல தரப்பட்டுள்ளன. (படிக்க மட்டுமேயன்றிப் பிறருக்கு விசய விளக்கமாற்றவும், சந்தேகங்களைப் போக்கவும், மாற்றாரின் எதிர்ப்புரைகளுக்கு மறுப்புரை தரவும் இந்நூல் பெரிதும் பயன்படும் என்று கருதுகிறேன். பேச்சாளருக்குப் பேருபகாரியாக இந்நூல் இருக்கும்.)

சி. என். அண்ணாதுரை

ஆரிய மாயை

பேராசைப் பெருந்தகையே போற்றி!
பேச நா இரண்டுடையாய் போற்றி!
தந்திர மூர்த்தி போற்றி!
தாசர் தம் தலைவா போற்றி!
வஞ்சக வேந்தே போற்றி!
வன்கண நாதா போற்றி!
கொடுமைக் குணாளா போற்றி!
கோழையே போற்றி! போற்றி!
பயங்கொள்ளிப் பரமா போற்றி!
படுமோசம் புரிவாய்போற்றி!
சிண்டு முடிந்திடுவோய் போற்றி!
சிரித்திடு நரியே போற்றி!
ஒட்டுவித்தை கற்றோய் போற்றி!
உயர் அநீதி உணர்வோய் போற்றி!
எம் இனம் கெடுத்தோய் போற்றி!
ஈடில்லாக் கேடே போற்றி!
இரை, இதோ போற்றி! போற்றி!
ஏத்தினேன் போற்றி! போற்றி!

இந்தப் போற்றித் திருப்பா, புதுமையானதாக இருக்கிறதே! இதன் பொருள் விளங்கவில்லையே! பேராசையும் வஞ்சகமும், பிறவுமான கேடு பயக்கும் குணமுடையோரைப்  போற்றுவது மடைமையன்றோ? ஒழித்திட வேண்டியதைத் தொழுதிடுவது அறிவுடையாகுமா? தேளைத் தேவனென்றும், பாம்பைப் பரமனென்றும், நரியை நாதனே என்றும், புலியை புண்ணியவானென்றும், பித்தருங் கூறாரே! நீயோ நயவஞ்சகரை – நா இரண்டுடையாரை, நாவார வாழ்த்துகிறாயே போற்றி! போற்றி! என்று, இது என்ன பரதா? என்று கேட்பர், அன்பர் . அடியேன் அறைவதல்ல ஐயன்மீர் ! நமது இனத்திலே உள்ளனரே… விரிந்த மனப்பான்மையும், பரந்த பாசமும், கனிந்த உள்ளமும், கருணை வெள்ளமுங் கொண்ட ‘சற்சூத்திரர்கள்’ – அவர்கள் சதாகாலமும், ஆரியரைப் போற்றி வாழுகிறார்களல்லவா? அவர்கள் போற்றித் தொழுதிடும் ‘பூசுரரின்’ திருக்கலியாண குணங்களை அறிந்தோர் எடுத்துரைத்துள்ளனர். அடியேனுடைய வேலை ; அவற்றைத் தொகுத்துப் பார்ப்பன பக்தர்கள் நடத்தும் ‘போற்றி போற்றி’ யுடன் இணைத்து, அவசரத்திலே அகவலாக்கி உம்மிடம் தந்ததுதான்! நான் ஆரியரைப் போற்றவுமில்லை, போற்றிடக் கூறவுமில்லை. அதுபோலவே நான் அவர்களை ஏசவும் இல்லை; ஏசிடும்படி உங்களை ஏவிடவும் இல்லை. பிறர் கூறிய ஏசலை எடுத்துக் கூறுகிறேன்.

அக்ரகாரத்தை அனுதினமும் அர்ச்சிக்கும் அன்பர்கள் ‘ஏண்டா பரதா! எக்காரணம் பற்றி, எந்த ஆதாரத்தின் மீது நீ பூதேவரை நயவஞ்சகரென்று நாத்தடுமாறாது கூறுகிறாய், படுமோசக்காரா என்று பதற்றம் பேசுகிறாய், பலப்பல கூறி ஏசுகிறாய், பாப் மூட்டையைச் சுமக்கிறாய், பாவி நீ ரெளரவாதி நரகத்தில் உழலுவாய், போ’ என்று சபிப்பர். உங்களுக்குக் கூறுகிறேன்; தூற்றலல்ல, நான் தொகுத்திட்ட இப்பா; பன்னெடு நாட்களுக்கு முன்பு படம் பிடித்தார் ஓர் பரங்கி. அதனை நான் இன்று வெளியிடுகிறேன். சரக்கு நம்முடையதல்ல! இல்லாததை எடுத்துக் காட்டிக் கூறுவதுமல்ல! மீண்டுமொரு முறை இப்போதே போற்றிப் பாசுரத்தைப் படியுங்கள். படித்தீர்களா? சரி, இதோ பாருங்கள், சில ஆங்கிலச் சொற்கள்!

Avarice, Ambition, Cunning, Wily, Doubletongued Service, Insinuating, Injustice, Fraud, Dishonest, Oppression, Intrigue.

இனி, இந்த ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழில் என்ன பொருள் என்பதை அகராதியின் உதவி கொண்டு பாருங்கள். பிறகு, நான் தீட்டிய போற்றிப் பாசுரம் சரியா, மிகைப்படுத்தினேனா, தவறா? என்பது பற்றி யோசியுங்கள்.

தோழர்களே! இத்தகைய பதங்களால் ஆரியரை அர்ச்சித்திருக்கிறார். ‘ஆபிடியூபா’ எனும் அறிஞர். இன்றல்ல நேற்றல்ல; டாக்டர் நாயரின் முரசு கேட்டல்ல; வகுப்புவாத நச்சரவு கடித்ததாலல்ல; கண்ணாரக் கண்டதைக் கருத்தார உணர்ந்து, நாவார உரைத்தார். 1807-இல்

“Hindu Manners Customs and Ceremonies” என்ற நூல் Abbe J. A. Dubois என்பவரால், 1807-ஆம் ஆண்டு வெளியிடப் பட்டது. அதிலே பார்ப்பனரை அவர் இவ்வண்ணம் அர்ச்சித் திருக்கிறார்! ஆரிய இன இயல்பை , மிகத் தெளிவாகத் தீட்டியிருக்கிறார். இவ்வித இயல்புடைய இனத்தைத்தான் இன்றும் தமிழரிற் பலர் தொழுது வருகின்றனர்; உயர் ஜாதி என்று உரைக்கின்றனர். ‘சாமி’ என்று சாற்றுகின்றனர். என்னே அவர்தம் நிலை.

ஆபி டியூபா, பிரெஞ்சுப் பாதிரி. இங்குச் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர், தாம் கண்டறிந்த உண்மையை எழுதி வைத்தார். அதிலே, பார்ப்பனரின் பண்பு பற்றி அவர் வருணிக்கையிலே, அவர் பிரயோகித்துள்ள பதங்களையே நான் போற்றிப் பாசுரமாக்கிக் காட்டினேன். ‘அவர்  தீட்டியுள்ளது தவறானது ; காமாலைக் கருத்துடையவர் அவர்’ என்று யாரும் கூறிடவும் முடியாது. ஈடில்லாத “இந்து” பத்திரிகை, ஆபி டியூபாவின் நூலுக்கு மதிப்புரை தந்திருக்கிறது. அது மட்டுமா? அன்று அப்பாதிரியார் கூறிய அதே நிலையிலேயே இங்கு மக்கள் இன்றும் உள்ளனர் என்றும் “இந்து” எழுதிற்று.

ஆரியரில் யாரோ ஓர் அயோக்கியனை, என்றோ ஒரு நாள் அந்த வெளிநாட்டுக்காரன் கண்டுவிட்டுப் பொதுப்படையாகப் புகல்வது மடமையன்றோ? எந்நாட்டிலும், எந்த இனத்திலும் அயோக்கியர்கள் சிலர் இருப்பர்; அதற்காக அந்த இனமே அத்தகைய இயல்புடையது என்று இயம்பலாமா? இது முறையா, அழகா? என்று கேட்பர் சிலர்! முறையாகாது என்று நான் மும்முறை கூறுகிறேன். அழகல்ல என்று ஆறு தடவை வேண்டுமாயினும் சொல்கிறேன். ஓர் ஆளின் கெட்ட குணத்தை ஆதாரமாகக் கொண்டு, அந்த ஆள் எந்த இனத்தவரோ, அந்த இனத்தையே அக்குற்றச்சாட்டுக்கு உள்ளாக்குவது மடமைதான்.

மாயாவேதம் பேசும் சங்கராச்சாரிகள், பொற்பல்லக்கில் சவாரி செய்வது இன்றும்தானே நடக்கிறது! வேதாந்தமும் விரக்தியும், விருந்தும், வைபவமுமாகக் காட்சியளிப்பதைக் காணவில்லையா?

ஆனால், ஆபி  டியூபா, முப்பது ஆண்டுகள் இங்கு உலவினார்; நாடு முழுவதும் சுற்றினார்; மக்களின் அன்றாட வாழ்க்கையினைக் கூர்ந்து கவனித்தார். ஆரிய இனத்தின் இயல்பினை, உள்ளது உள்ளவாறு கண்ட பிறகே, ஏட்டில் எழுதினார்.

சரி, ஆபி டியூபா பிரெஞ்சுப் பாதிரி; அவர் பிரான்சு மொழியிலே எழுதியிருப்பார். அதை ஆங்கிலமாக்கியவர் கயிறு திரித்திருக்கக் கூடாதோ? என்று சாகசச் சித்தர்கள் கேட்பர். ஆபி  டியூபாவின் பிரெஞ்சு நூலை, ஆங்கிலமாக்கியவர்கள் H.K. பூன் சாம்ப் என்னும் ஆங்கிலர்தாம். ஆனால், அதனை மேற்பார்வை செய்தவரோ, C.V.முனுசாமி ஐயர் எனும் பூசுரரே!

தவறு இருப்பின், அவரா சும்மா இருப்பார்? ஆகவே ஆபி டியூபா, ஆரியரை நன்கு அறிந்தே இங்ஙனம் அர்ச்சித்திருக்கிறார். ஆரிய மாயையில் அவர் சிக்கிச் சொக்காத காரணத்தால், உள்ளது உள்ளபடி தீட்டிட முடிந்தது. அர்ச்சனை கிடக்கட்டும் அன்பர்களே! அவர் தீட்டியுள்ள வாசகக் கருத்துக்கள் சிலவற்றினைக் கேளீர்!

படிக்க:
தமிழ்நாடு மாதிரி குஜராத் இல்லக்கா ! சரிதாவின் வாக்குமூலம் !
ஊர்க்குளங்கள் அழியுது ! வயல்கள் மீன் வளர்ப்பு குளங்களா மாறுது !

”பேராசை என்பது அந்தப் பார்ப்பன இனத்தவர் ஒவ்வொருவருக்கும் இயல்பு. எனவே, அவர்கள் வேதாந்திகள் போன்ற விரக்தி நிலையில் வாழ முடிவதில்லை!”

இது ஆபி டியூபாவின் வாசகம். இன்றும் இதிலே முழு உண்மை இருத்தலை உலகு அறியும். மாயாவேதம் பேசும் சங்கராச்சாரிகள், பொற்பல்லக்கில் சவாரி செய்வது இன்றும்தானே நடக்கிறது! வேதாந்தமும் விரக்தியும், விருந்தும், வைபவமுமாகக் காட்சியளிப்பதைக் காணவில்லையா? இதைத்தான் ஆபி  டியூபா அன்றே கூறினார்.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

அடுத்த பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

தமிழ்நாடு மாதிரி குஜராத் இல்லக்கா ! சரிதாவின் வாக்குமூலம் !

வார வேலை நாட்களில், திருமால்பூர் ரயிலும் என்னோட நண்பன்தான். வேலை நாட்களில் அந்த நண்பனோடுதான் தினசரி பயணம். செங்கல்பட்டில் இரவு 8 மணிக்கு காஞ்சிபுரம் – திருமால்பூர் ரயிலில் உட்கார இடம் கிடைப்பதெல்லாம் அரிது. அன்று எப்படியோ, ஒரு ஓரமாக நெரிசலில் நிற்கக்கூடிய பாக்கியம் எனக்கு கிடைத்தது. என் பக்கத்தில் நின்றிருந்தவர் பேச ஆரம்பித்தார்.

”இந்த ரயில் எப்பவும் இப்படித்தானா? ஒரே கூட்டமா, நிக்கக்கூட இடம்விடமாட்றாங்க? மூணு வயசுக் கொழந்தயக்கூட உட்காரச் சொல்ல மாட்றாங்க…… ரொம்ப மோசம்…” என்றார்.

இன்னிக்கு எவ்ளவோ பரவாயில்ல…. இதவிட மோசமா உள்ள நிற்கவே முடியாத அளவுக்கு கூட்டம் இருக்கும்… உட்கார்ந்துட்டு இருக்கவங்களும் ஆயிரத்தெட்டு பிரச்சனையில வர்றாங்க, அவங்க நமக்கு இடம் கொடுத்து உட்கார வைப்பாங்கனு எதிர்ப்பார்க்கக்கூடாது. நாமளே இடத்தை உருவாக்கிக்கணும். தயவா கேட்டு உட்கார்ந்திடணும்..”னு சொன்னேன்.

பொதுவா அந்த ரயிலில் வழக்கமா போறவங்க முகம் நமக்கு தெரிஞ்சிடும். புதுசா வர்றவங்க தயங்குறதுலயே கண்டுப்பிடிச்சிடலாம்.

செங்கல்பட்டு – பாலூர் ஸ்டேஷன் வந்ததும் நின்ற இடத்திலிருந்து கீழே உட்கார்ந்தேன். பக்கத்தில் ஒரு குரல், வழக்கமா பார்க்காத முகம். “அக்கா, இங்க உக்கார்ந்துகிடட்டுமா?” திரும்பிப் பார்த்தேன்..

”இதெல்லாம் கேட்டுக்கினு இருக்ககூடாது டக்குனு உட்கார்ந்திடணும்” என்றேன். சிரித்தார்…

எல்லாரும் தேர்தலில், ஓட்டுப் போட்டதைப்பத்தி பேசிட்டுருந்தோம். எப்படித்தான் மோடி ஜெயிச்சாரோ தெரியலயே? நம்ம தமிழ்நாட்டுக்காரங்க சரியாத்தானே ஓட்டுப்போட்டுருக்கோம்…. வட இந்தியாவுலதான் தப்பு பண்ணிட்டாங்க… னு ரொம்ப கவலையாக பேசினோம்.

படிக்க:
♦ குஜராத்தில் சிக்கிய நான்-வெஜ் பிராமின் !
♦ பிள்ளைய பெத்துட்டு வாழ்க்கைய வெறுத்து ஓட முடியுமா ?

பக்கத்தில் உட்கார்ந்தவர். மெதுவாக என்னிடம் “எல்லாரும் கம்பெனிக்கு போய்ட்டு வர்றீங்களா?” என்றார்.

“இல்ல.. இல்ல… எல்லாரும் ஒவ்வொரு இடத்துல வேலை பாக்கறவங்க; தனியார் கம்பெனி சிலர், ஆஸ்பிட்டல், கோர்ட், செகரடேரியேட்னு எல்லா வேலைக்கு போறவங்களும் இருக்காங்க” என்றேன்.

“சரி, நீங்க எங்க போய்ட்டு வர்றீங்க..” என்றேன்.

“குஜராத்” என்றார்.

“என்னது… வேலை செய்ய அவ்வளவு தூரமா? குஜராத்தா?” என்று அதிர்ச்சியானேன்.

“இல்ல…. இல்ல…. எங்க சொந்த ஊரே குஜராத் தான்” என்றார்.

“அப்படியா? எப்படி தமிழ் இவ்ளோ சரளமா பேசறீங்க…. ஆளப் பாத்தா குஜராத்தி மாதிரி தெரியல, தமிழ்ப் பொண்ணு மாதிரி.. எப்படி? உடை, மொழி எதுலயும் கண்டுபிடிக்க முடியலயே, உன் பொண்ணும் தமிழ் பொண்ணு மாதிரியே இருக்கா… எப்படி..?” என்று ஆர்வமானேன்

“8 வருசத்துக்கு முன்னாடி எங்க வீட்டுக்காரு இங்க வேலை தேடி வந்தாரு…. தனியார் கம்பெனியில வேலை. வந்த ஒரு வருசத்துல என்னையும் கூட்டிட்டு வந்துட்டாரு. அப்பத்துல இருந்து நானும் இங்கத்தான் இருக்கேன், அதனால தமிழ் நல்லா பேசுவேன். கூலி வேலைக்கும் போயிருக்கேன்” என்றார்.

“பேரு?”

“சரிதா…”

“இப்ப எதுக்கு குஜராத் போய்ட்டு வர்றீங்க….”

“சொந்தக்காரங்களப் பார்த்துட்டு, வீட்டுக்காரரோட சர்டிபிகேட் ஒண்ணு எடுத்துட்டுவர.. போயிட்டு வர்றோம்.”

“பிரதமர், மோடியோட ஊர் குஜராத் தானே? உங்களுக்கு முதலமைச்சாரா இருந்துருக்காரு, இப்ப பிரதமாராவும் இருக்காரு… ஏன் அந்த ஊர்லய இருந்து வேல செய்து பொழைக்க முடியலயா?” என்றேன்

“நிஜமாவே, தமிழ்நாடு மாதிரி குஜராத் இல்லக்கா. இங்க இருக்கற வசதி, வேலை, மனுசங்க அங்க இல்ல… அங்க எந்த வேலையும் இல்ல.….

புடவைக்கு சமிக்கி, பூ டிசைன் போட்ற வேலை செய்வேன்…. அப்போ டெய்லி 30 ரூபாத்தான் கூலி தருவாங்க….. அதுக்கே, வேலை செய்யறவங்க வீட்டுக்குள்ள போகக்கூடாது…. ரொம்ப கட்டுப்பாடா இருப்பாங்க…  இதுதான் இந்தியா, எல்லா இடத்துலயும் இப்பிடித்தான் இருக்கும்னு நினைச்சேன்.

ஆனா, தமிழ்நாடு சூப்பர்க்கா! எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…! இங்க, எங்க வீட்டுக்காரு தனியா இருக்கும்போது யாரும் அவருகிட்ட பழகலயாம், நான் வந்ததுக்கப்புறம் எல்லாரும் நல்லா பழகுறாங்க…. யாரும் இங்க, ‘வீட்டுக்குள்ள வராதேனு’ சொல்லறது இல்ல.

நானும், சென்னை – படப்பையில இருக்குற பீர் கம்பெனியில வேலைப் பார்த்தேன். ரெண்டு கொழந்தைங்களும் இங்கத்தான் டெலிவரி ஆச்சு…. அப்ப, இங்க இருக்கவங்கதான் பாத்துட்டாங்க…..  இப்ப காஞ்சிபுரம் பக்கத்தல வெம்பாக்கத்துல வாடகைக்கு இருக்கோம். ரொம்ப நல்லா இருக்கோம்க்கா. குஜராத்துல அவ்ளோ கஷ்டப்பட்டோம்” என்றார்.

என் பக்கத்திலிருந்தவர்… “ஆமா.. குஜராத்துல, மோடிக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைச்சிட்டு இங்க வந்து நல்லா இருப்பீங்க…..! முதல்ல உங்கள காலி பண்ணி உங்க ஊருக்கு பேக் பண்ணணும்.! இங்க வந்து செட்டிலாயிட்டு பேல்பூரி; பஞ்சு மிட்டாய்; ஜஸ் எல்லாம் வித்து பொழச்சிட்டு அங்கப்போய் மோடிக்கு ஓட்டு போட்டுட்டு வருவீங்க… முதல்ல உங்கள உங்க ஊருக்கே தொரத்துனாத்தான் மோடியோட வில்லத்தனம் புரியும்” என்றார்.

அதற்கு, சிரித்தவாறே பதிலளித்தார் சரிதா;

“இந்த வாட்டி நான் ஓட்டு போடலக்கா, கார்டு இல்லக்கா…

அங்கயும் நரேந்தர மோடிக்கு கிராமத்துல ஆதரவு வயசானவங்க, எங்க மாமியார்; மாமனார்; மாடி வீடு வெச்சிருக்கரவங்களுக்குத்தான் அவர பிடிக்கும். ஏன்னா சாமி, பகவான் மேல அவ்ளோ பக்தியானவங்க… அவர பகவானா பாக்குறாங்க! குடிசைல வாழறவங்களுக்கும், எங்கள மாதிரி கூலி வேலை செய்யறவங்களுக்கு மோடிய புடிக்காது..

“ஆனா ஒரு விஷயத்துல எனக்கு நரேந்தர மோடி பிடிக்கும்..” என்றார்.

“ஏன்?”

“குஜராத்துல வேல இல்ல, ரொம்ப கஷ்டம்.. ன்றதாலத்தானே நாங்க தமிழ்நாடு வந்தோம். அவருதானே எங்கள எங்க ஊரவிட்டு இங்க, அனுப்பினாரு…. இப்ப, எனக்கு தமிழ் தெரியும்… இங்க இருக்கவங்க சொந்தக்காரங்க மாரி ஆயிட்டாங்க. எங்க பொண்ணுங்களும் குஜராத்தி, தமிழ் இங்கிலீஷ்னு படிக்கறாங்க, எங்க பொண்ணு தமிழ்லதான் நிறைய மார்க்கு வாங்கும் 90-க்கு மேல வாங்குது… இதுக்கெல்லாம் காரணம் நரேந்தர மோடிதான்!” என்றார்.

அதற்கு, முருகன் கோயிலுக்கு போயிட்டு வரும் செல்வி, என்பவர்…

“ஒண்ணு மோடிய பிடிக்கணும், இல்ல தமிழ்நாட்ட பிடிக்கணும், தமிழ்நாட்டுக்கு மோடிய பிடிக்காது. மோடிக்கு தமிழ்நாட்ட பிடிக்காது. இது எங்க நிலம…” என்றார் அவர்.

“உங்க பொண்ணு பேர் என்ன?”

“மொத பொண்ணு காவ்யா, ரெண்டாவது திவ்யா…”

“உங்க குஜராத்துல வைக்கிற பேரு மாதிரி இல்லயே?”

“ஆமா..ங்க்கா, தமில்நாட்டுல இருக்கோம் குழந்தைகளுக்கு, நாம தமிழ் பேருதான் வைக்கணும்னு அவங்கப்பா சொல்லிட்டாரு…

ரேஷன் கார்டுக்கூட எங்களுக்கு வாடகை வீடு விட்டவங்க வாங்கிக் குடுத்தாங்க…. இருந்தாலும் இந்த வாட்டி எலக்க்ஷனுக்கு ஓட்டுப்போடல…  ஓட்டர் கார்டு இல்ல, அதுவும் இங்கேயே வாங்கித்தறேனு சொல்லியிருக்காங்க…” என்றார்.

படிக்க:
♦ சந்தி சிரிக்கும் குஜராத் மாடல் வளர்ச்சி !
♦ “The Hour of Lynching” – ரக்பர்கான் படுகொலையை மறக்கக் கூடாது !

மேலும் “இங்க, நாங்க….வேலை செஞ்சு நல்லா சாப்பட்டுக்கினு….. எங்க பொண்ணுங்கள இங்கிலீஷ் மீடியம் படிக்க வைச்சிக்கினு நல்லா இருக்கோம். காரணம் தமிழ்நாடு வந்ததாலத்தான். அதனாலே தமிழ்நாடு பிடிக்கும், தமிழ்நாட்டுக்கு அனுப்பி வெச்ச நரேந்தர மோடியும் பிடிக்கும்.

குஜராத்துல இவ்ளோ வசதி, வேலை எல்லாம் இல்லக்கா…. எங்க அம்மா, அப்பா, மாமா, மாமி அவங்கள இங்க வரச் சொன்னா வரமாட்டாங்க…. வயசானாவங்க, ஆனா….. தம்பி, மச்சினனை கூட்டிப்போக சொல்றாங்க, மெதுவா அவங்களும் இங்க வந்துடுவாங்க….

இங்க எல்லாம் ரொம்ப சூப்பருக்கா…. குஜராத்து ரொம்ப மோசம்….. ட்ரேயினுலக்கூட ஜன்னல்ல, டாப்புலலாம் போவாங்க… சுத்தமே இருக்காது. அங்க…நிம்மதியா மூச்சுக்கூட விட முடியாது. இப்ப அப்படித்தான் மூணு நாளா அந்த டிரெயின்ல வந்தேன்” என்றார்.

“என்ன சாப்பிட்டீங்க… மூணு நாளா ?”

“சாப்பாத்திதான்… சாப்புடுறீங்களா… இன்னும் இருக்கு…” என்றார்.

“என்னாது, மூணு நாளுக்கு முன்ன சுட்ட சாப்பாத்தி இன்னும் இருக்கா?  நீ சொன்னதேப்போதும்…. எங்கிட்ட ஜில் வாட்டர் இருக்கு வேணுமா?” என்றேன்.

“ஆ… எப்படிக்கா? ஜில் வாட்டர்…”னு ஆச்சர்யத்தோட வாங்கிக் குடித்துவிட்டு தன், மகளுக்கும் கொடுத்தார். ரொம்ப தேங்க்ஸ்க்கா…. தமிழ் நாட்டுல எல்லாரும் நல்லா பேசுறீங்க, பழகுறீங்க..” என்றார்.

‘அதானே மோடிக்கு பிரச்சனை?’ என்று நினைத்தேன்…

“வெம்பாக்கம் போக எந்த ஸ்டேஷன் இறங்கணும்?” என்றார்.

“காஞ்சிபுரம் பழைய ரயில்வே ஸ்டேஷன் இறங்கி, ஷேர் ஆட்டோல பஸ்ஸ்டாண்டு…போயி…”

“அங்க இருந்து எனக்கு தெரியும்கா…” என்றார்.

அவர், இறங்கி… மறையும்வரை  எனக்கு, பை சொல்லி மறைந்தார்.

குஜராத் மாடல் வளர்ச்சி அது இதுன்னு ஐஞ்சு வருசமா எத்தனை ரீல் விட்டு பேசுனாங்க.. ஆனா கூட வர்ற ஒரு குஜராத் பொண்ணுகிட்ட இருந்தே இப்பிடி உண்மை வெளிவந்தா நேருல போய் பாத்தா அந்த ஊரு எப்படி இருக்கும்?

காமாட்சி

உடலழகன் போட்டி | அ முத்துலிங்கம்

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
 உடலழகன் போட்டிக்கு போவதென்பது முடிவாகிவிட்டது. இதற்கு முன்னர் நான் அப்படியான ஒரு போட்டியை பார்க்க எங்கேயும் போனதில்லை. பிரச்சினை என்னவென்றால் நான் ரொறொன்ரோவில் இருந்தேன், போட்டி 350 கி.மீட்டர் தூரத்திலிருந்த ஒட்டாவாவில் நடந்தது. நான் மனைவியிடம் போட்டி எத்தனை மணிக்கு ஆரம்பம் என்று கேட்டேன். அவர் ‘காலை ஒன்பது மணி, பழைய நேரம் பத்து மணி’ என்றார்.

ஒக்டோபர் மாதத்து கடைசியில் கனடாவில் நேரத்தை ஒரு மணித்தியாலம் பின்னுக்கு தள்ளி வைப்பார்கள். அது என் மனைவியை பெரும் குழப்பத்தில் ஆழ்த்திவிடும். எப்பொழுது நேரம் சொன்னாலும் புதிய நேரத்தையும் பழைய நேரத்தையும் சேர்த்தே சொல்வார். கடந்தவாரம்தான் நேரத்தை மாற்றியிருந்தார்கள். ஆனால் மனைவி ஒரு மாதத்துக்கு தொடர்ந்து நேரத்தை இப்படித்தான் சொல்வார். ‘இப்பொழுது 7 மணி, பழைய நேரம் 8 மணி.’

நாங்கள் இவ்வளவு தூரம் பயணம்செய்து போட்டியை பார்க்க தீர்மானித்ததற்கு காரணம் ஓர் ஈழத்துக்காரர் இம்முறை போட்டியில் கலந்து கொள்கிறார் என்பதுதான். அவருக்கு வயது 35. உடலழகன் போட்டியில் கலந்துகொள்ளும் ஆர்வம் அவருக்கு கிடையாது. எல்லோரையும்போல தானும் தன்பாடுமாக அவ்வப்போது உடற்பயிற்சி நிலையத்துக்கு போய் வந்தார்.

அங்கே ஒருநாள் கோயிலுக்கு நேர்ந்ததுபோல கட்டுக்கோப்பாக உடம்பை வளர்த்திருந்த ஒரு வெள்ளைக்காரரைச் சந்தித்தார். அவர் ‘ஆசியாக்காரர்களுக்கு சும்மா உடற்பயிற்சி நிலையத்துக்கு வந்து போக மட்டுமே தெரியும். ஒரு போட்டிகளிலும் கலந்துகொள்ள மாட்டார்கள்’ என்று போகிறபோக்கில் சொல்லிவிட்டார். அப்படி அவர் ஏளனமாகப் பேசியது ஈழத்துக்காரருக்கு மனதை உறுத்தி, எப்படியும் போட்டியில் கலந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது. ஆனால் என்ன செய்யவேண்டும் என்பது மட்டும் தெரியவில்லை.

ஐந்து தடவை கனடா தேசிய சாம்பியனாக வெற்றி பெற்ற ம்போயோ எட்வேர்ட்ஸ்

ஐந்து தடவை கனடா தேசிய சாம்பியனாக வெற்றி பெற்ற ம்போயோ எட்வேர்ட்ஸ் என்பவரை பயிற்சிக்காக ஈழத்துக்காரர் அணுகினார். அவர் இவருடைய குச்சிபோன்ற உடம்பை ஒரு கணம் ஏற இறங்கப் பார்த்துவிட்டு மறுத்துவிட்டார். இவர் விடவில்லை, தொடர்ந்து தனக்கு தெரிந்த மாதிரி பயிற்சிகள் செய்துவந்தார். ஒரு வருடம் கழித்து எட்வேர்ட்ஸை அணுகியபோது மறுபடியும் மறுத்தார். இவருடைய விடா முயற்சியை தொடர்ந்து கவனித்த சாம்பியன் கடைசியில் ஒருநாள் தானாகவே பயிற்சி தருவதற்கு சம்மதித்தார். ஆனால் சில நிபந்தனைகள் இருந்தன. பயிற்சிக்காலம் முழுவதும் மாச்சத்து உணவு கிடையாது. உப்பு, சர்க்கரை இல்லை. போட்டிக்கு முன்னர் 36 மணிநேரம் தண்ணீர் குடிக்கக்கூடாது. உடற்பயிற்சிக்காரர்களுக்காக  விசேடமாகத் தயாரிக்கப்படும் உணவை மட்டுமே உட்கொள்ளவேண்டும்.

ஐந்து வருடமாக தொடர்ந்து பயிற்சி எடுத்து போட்டியில் பங்குபற்றுகிறார். அதை பார்க்கத்தான் நானும் மனைவியும் ஒரு நண்பருமாக ஒட்டாவா புறப்பட்டிருந்தோம். உடல் அழகன் போட்டி நடக்கும் அரங்கத்துக்கு போய்ச் சேர்ந்தபோது ஒரு புது இடத்துக்கு வந்துவிட்டதுபோல இருந்தது. அந்த வகையான கூட்டத்தை நான் முன்னர் கனடாவில் கண்டது கிடையாது.

ஆண்களும் பெண்களும் முற்றிலும் வித்தியாசமானவர்களாக தோற்றமளித்தார்கள். ஆறடி உயரமாக வலுவான தேகத்தில், உடம்போடு ஒட்டிப்பிடிக்கும் டீசேர்ட் அணிந்து புஜங்கள் உருளும் உடம்போடு ஆண்கள் காணப்பட்டார்கள். வந்திருந்த பெண்களில் வயது முதிர்ந்த பெண்கள் அபூர்வம். அநேகமானவர்கள் தசைநார்கள் திரண்டு இளமையாக காணப்பட்ட பெண்கள். எங்கள் மகிழ்ச்சியை இரண்டு மடங்காக்கும் ஒரு தகவல் அப்போது கிடைத்தது. உடல் அழகன் போட்டியுடன் உடல் அழகிப் போட்டியும் அதே மேடையில் நடைபெறுமாம்.

டிக்கட் கொடுக்கும் இடத்தில் நிரையாக நின்றார்கள். நான் ஏற்கனவே தொலைபேசியில் என் பெயரை முன்பதிவு செய்திருந்தேன். எனக்கு முன்னால் ஒருத்தர் மேசையில் இரண்டு கைகளையும் ஊன்றிக்கொண்டு டிக்கட் கொடுக்கும் பெண்மணியிடம் ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருடைய கைகள் திரண்டு ஒரு குழந்தையின் தொடைகள்போல வெளியே தள்ளிக்கொண்டு நின்றன. அவருடைய பின்பக்க காட்சியை பார்த்துக்கொண்டு வரிசை வெகுநேரம் நின்ற பிறகு டிக்கட் பெண் என்னிடம் திரும்பினார். நான் பெயரைச் சொன்னேன். கனடா வந்து இத்தனை வருடங்களாகியும் என் பெயரைச் சொன்னவுடன் புரிந்துகொண்டு டிக்கட்டுகளை தந்தது இதுவே முதல் தடவை.

படிக்க:
நான் சிறுவனாக இருந்தபோது … குழந்தைகளின் நினைவுகள் !
♦ உகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் !

அரங்கம் நிறைந்திருந்தது. பன்னிரண்டு நடுவர்கள் முன்னால் உட்கார்ந்திருந்தார்கள். முதலில் பெண்கள் போட்டி. அறிவிப்பாளர் பெயரைச் சொல்ல பெண்கள் நடந்து வந்து மேடையின் நடுவில்  தங்கள் அங்கங்களை பரிசீலனைக்காக நிறுத்தினார்கள். இரண்டு முக்கோணங்கள் தொடுத்த  மார்புக்கச்சும், ஒரு முக்கோண இடைக்கச்சும் அணிந்திருந்ததால் அவர்களுடைய எல்லா அங்கங்களும் துலக்கமாகத் தெரிந்தன. இந்தப் பெண்களின் கைகளும் கால்களும் மெலிந்து தசைநார்கள் இறுகிக் கிடந்தன. விலா எலும்புகள் அத்தனையும் தள்ளிக்கொண்டு நின்றதில் கொழுப்பைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. உடம்பில் எந்த பகுதியிலும் வரிகளோ சுருக்கங்களோ இல்லாமல் வயிறு மடிப்பு மடிப்பாக இறுகி சிலேட் பலகைபோல தட்டையாக காட்சியளித்தது.  நடுவர்கள் இடது தொடை, வலது புஜம், வயிறு, முதுகு என்று அங்கங்களைச் சொல்லச் சொல்ல அவர்கள் அந்தந்த அங்கங்களின் திரட்சியையும், தசை மடிப்பையும் காட்டினார்கள்.

அதில் ஒரு பெண்ணை மறக்கமுடியாது. உயரமாக தங்கமுடி புரள குதிரைபோல டக்டக்கென்று நடந்துவந்தாள். அவளைப் பார்த்ததும் அவளுடைய தசைநார்களுக்கும் எலும்புகளுக்குமிடையில் பெரும் சண்டை நடைபெறுவது தெரிந்தது. போட்டி தொடங்க முன்னரே என்னிடமிருந்த அத்தனை புள்ளிகளையும் அந்தப் பெண்ணுக்கே வழங்கினேன். நடுவர்கள் முதுகு என்றார்கள். அவள் இடதுகையால் முதுகில் வழிந்து கிடந்த பொன்முடியை தூக்கி நிறுத்திக்கொண்டு தன் வலது பக்க முதுகு தசைகளை மட்டும் இறுக்கிக் காட்டினாள். பிறகு டக்கென்று ஒரு சத்தம் கேட்டது. இடது பக்க தசைநார்களை மட்டும் இறுக்கிக் காட்டினாள். இன்னொரு டக் சத்தம். இரண்டு காந்தங்கள் ஒட்டிக்கொள்வதுபோல இரண்டு பக்க முதுகும் ஒட்டிக்கொண்டது. சபையினரின் கைதட்டல் எழுந்தது. நாங்கள் எதிர்பார்த்ததுபோல அவளுக்கே முதலிடம் கிடைத்தது.

ஆண்கள் போட்டிக்காக நாங்கள் காத்துக்கொண்டிருந்தபோது என் கைபேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதைப் படித்துப் பார்த்த நான் திடுக்கிட்டேன். போட்டியில் பங்குபற்றும் ஈழத்துக்காரர் அனுப்பியிருந்தார். ‘அவசர உதவி தேவை.  மேடைக்கு வரவும்.’ அவர் முதல் நாளே வந்துவிட்டார். போட்டியாளர்கள் எல்லோரும் பொய் கண்டுபிடிக்கும் கருவி சோதனையில் பாஸாக வேண்டும். அதில் தோல்வியுற்றால் அவர்களுடைய ரத்தத்தில் போதைப்பொருள் சேர்ந்துள்ளதா என்பதை பரிசீலித்துப் பார்ப்பார்கள். ஏதோ பிரச்சினையென்று  நெஞ்சில் பயம் ஏறியது.

என்னுடன் பயணித்த நண்பர் இளவயதுக்காரர்;  உயரமாய் வாட்டசாட்டமாய்  இருப்பார். அவரை மேடைக்குப்போய் பார்த்துவர அனுப்பினேன். சிறிது நேரத்தில் அவர் சிரித்துக்கொண்டே திரும்பினார். போட்டியாளர்கள் முழு உடம்பையும் மழித்து, ஒருவித கறுப்பு எண்ணெயை பூசி போட்டியில் கலந்துகொள்வார்கள். அந்த எண்ணெய் தேய்த்துவிட வேண்டியவர் வரவில்லை. எண்ணெய் பூசினால்தான் தசைநார் மடிப்புகள் மேடை ஒளியில் துல்லியமாகத் தெரியும். நண்பர் அந்த வேலையைத்தான் தனக்கு தெரிந்த அளவுக்கு செய்துமுடித்துவிட்டு திரும்பியிருந்தார்.

எனக்குப் பக்கத்தில் பயில்வான்போல தோற்றமுள்ள ஒருவர் உட்கார்ந்து பெண் போட்டியாளர்களை உரக்கக் கூவி அவ்வப்போது உற்சாகப்படுத்தியதுமல்லாமல் ‘இன்னும் கொஞ்சம் நடுவுக்கு நகர், பின் பக்கத்தைக் காட்டு, காலை முன்னுக்கு மடி, புஜங்களை மேடையை நோக்கி திருப்பு’ என்று கத்திக்கொண்டே இருந்தார்.  இவர் ஒரு பிரபல பயிற்சியாளர் என்பதை நான் பின்னால் அறிந்துகொண்டேன்.

காந்தத்தைப்போல முதுகை ஒட்டவைத்த பெண், போட்டி முடிந்த பின்னர் சபையினுள் நுழைந்தார். அவர் போட்டிக்கு தரித்த முக்கோண உடைக்கு மேலே முன்பக்கம் பூட்டாத மேலங்கி ஒன்றை அணிந்திருந்தார். பயிற்சியாளரை நெருங்கியதும் அவர் அந்தப் பெண்ணின் இரண்டு கொலரையும் பிடித்து இழுத்து உதட்டில் முத்தம் கொடுத்தார். பின்னர் அதைத் தொடர்வதற்காகவோ என்னவோ இருவரும் அவசரமாக வெளியேறினார்கள்.

ஆண்களுக்கான போட்டி தொடங்கியபோது அது முற்றிலும் வேறு விதமான காட்சியாக அமைந்தது. அவர்கள் மல்லர்கள் நடந்துவருவதுபோல கால்களை அகலமாக வைத்து மேடையில் தோன்றினார்கள். அவர்களுடைய தொடைகள் பலாக்காய்கள் காய்த்ததுபோல தொங்கின. புஜங்கள் தனித்தனியாக உயிர் பெற்றது போல சும்மா நடக்கும்போதே திரண்டு திரண்டு உருண்டன. கைகளை மடக்குவதும், கால்களை சுழட்டுவதும், வயிற்று தசைகளை ஓடவிடுவதும், முதுகை புத்தகத்தை திறப்பதுபோல அகலிப்பதுமாக பலவிதமான வித்தைகளை ஒவ்வொருவரும் சளைக்காமல் செய்து காட்டினார்கள்.

நடுவர்கள் இதற்கெல்லாம் மயங்கிவிடுபவர்கள் அல்ல. அவர்கள் தசைநார்களின் பருமனையோ அவை உருளும் லாவகத்தையோ கணக்கில் எடுப்பவர்களாகத் தெரியவில்லை. ஒரு உடம்பில் தசைநார்கள் சரியான விகிதத்தில் விருத்தியாகி இருக்கின்றனவா என்பதை கவனித்தார்கள். 5′ 5″ உயரமான ஓர் ஆணின் எடை 160 றாத்தலாக இருக்கவேண்டும். அதற்குமேலான ஒவ்வொரு அங்குல உயரத்துக்கும் எடை 5 றாத்தல் கூடவேண்டுமென்பது விதி. தசைநார்கள் உடம்பு முழுக்க சீராக விருத்தியடைந்திருக்கிறதா என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டார்கள். சிலருக்கு கைகள் வளர்ச்சியடைந்திருக்கும் ஆனால் அதே அளவுக்கு முதுகு தசைகள் வளர்ச்சியடைந்திருக்காது. மனித உடம்பில் 640 தசைநார் முறுக்குகள் இடது பக்கம் 320, வலது பக்கம் 320 என்று இருக்கும். இதிலே ஆகக்கூடிய தசைநார்களை சீராகவும் முழுமையாகவும் பெருக்கியிருக்கிறார்களா என்பதைத்தான் நடுவர்கள் பரிசீலிப்பார்கள். அத்துடன் அவற்றை ஒருவர் கவர்ச்சியாக வெளிப்படுத்தும் திறமை பெற்றவராயும் இருத்தல் அவசியம்.

போட்டியில் பங்குபற்றிய அத்தனைபேரும் வெள்ளைக்காரர்கள். இரண்டே இரண்டு கறுப்பு இனத்தவர். ஒரேயொரு தமிழர். போட்டியாளர் ஒவ்வொருவரும் மேடையில் தோன்றும்போது பெரும் கூச்சல் எழும். அவருடைய பயிற்சியாளர், நண்பர்கள், உறவினர்கள் என்று ஒரு கூட்டம் இருக்கும்.

ஈழத்துக்காரர் மேடையை நோக்கி கணுக்கால் வெள்ளத்தில் நடப்பதுபோல அசைந்து அசைந்து வந்தபோது மூன்றே மூன்று குரல்கள் எழும்பின. அது எங்களுடையதுதான். நடுவர்கள் உத்திரவுப்படி அவர் மேடையில் சுழன்று சுழன்று தேகத்தில் ஐந்து வருடங்களாக பாடுபட்டு வளர்த்துப் பழக்கிய தசை மடிப்புகளையும், திரட்சிகளையும் பல நிலைகளில் பல கோணங்களில் காட்டினார். கறுப்பு எண்ணெயில், மேடையில் பிரகாசித்த குவிய விளக்குகளின் ஒளியில், நண்பரின் தசைக் கட்டங்கள் எல்லாம் நல்லாய் கூராக்கிய கத்திபோல பளிச்சுப் பளிச்சென்று ஒளிவிட்டன. ஆறுதசைக் கட்டம், எட்டு தசைக்கட்டம் என்றெல்லாம் பேசுகிறார்கள். அங்கே மேடையில்  அவை எல்லாம் மிகச் சாதாரணமாகத் தோன்றின.

தேசிய விருதுபெற்ற பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்றதாலோ என்னவோ ஈழத்துக்காரரின் அசைவுகள் கச்சிதமாக மேடையில் வெளிப்பட்டன. ஒரு கட்டத்தில் இப்படியெல்லாம் மனித உடலில் சாத்தியமா என்று வியக்கத் தோன்றியது. நடுவர்கள் நெஞ்சை அகலிக்கச் சொன்னார்கள். இவர் நெஞ்சை விரித்ததும் ஒரு வண்ணத்துப்பூச்சி இரண்டு செட்டைகளையும் விரித்ததுபோல அவருடைய மார்பு இரண்டு மடங்காகப் பெருகியது. சபையினர் ஒருகணம் பிரமித்துப் போனது அப்பட்டமாகத் தெரிந்தது.

படிக்க:
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை !
♦ நீங்கள் எத்தனை பேரைக் கொன்றீர்கள் ? எழுத்தாளர் அ.முத்துலிங்கம்

தன்னுடைய முறைக்காக இவர் மேடைக்கு வெளியே காத்திருந்தபோது மற்ற போட்டியாளர்கள் இவரை துச்சமாக மதித்தனர்; மனரீதியாக கலைக்க முயன்றனர். ஒருவர் இவர் புஜத்தின் பருமனை ஆராய்ந்துவிட்டு அது இன்னும் முழுமையாக முதிர்ச்சியடையவில்லை என்றார். இன்னொருவர் கண்ணாடியின் முன் நின்று தன் கைகளை மடக்குவதும், நெஞ்சை அகலிப்பதும், கால்களை பக்கவாட்டில் சுழட்டுவதுமாக தன் பிம்பத்தில் தானே மயங்குவதுபோல நின்றார். எல்லாம் இவரை பயங்காட்டும் முயற்சிதான். நண்பர் ஒன்றையும் சட்டை செய்யாமல் தன் முறைக்காக காத்திருந்தார். இவையெல்லாம் அவர் பின்னால் சொல்லி தெரிந்துகொண்டது.

முதல் சுற்று முடிந்து இரண்டாவது சுற்று தொடங்கியபோது இன்னும் சுவாரஸ்யமாக அமைந்தது. ஒவ்வொரு போட்டியாளருக்கும் மேடையில் ஒரு நிமிடம் அளிக்கப்பட்டது. அவர் தேர்வுசெய்த ஒரு பாடலுக்கு, நடன அசைவுகள் மூலம் தன் அங்கத்திலுள்ள அத்தனை தசைநார்களையும் இசைக்கேற்ப முறுக்கிக் காட்டவேண்டும். இரண்டாவது சுற்றில் ஈழத்துக்காரருக்கு நிறையக் கைதட்டல் கிடைத்தது. நடுவர்கள் முடிவை அறிவித்தார்கள். கிழக்கு ஒன்ராறியோ உடலழகன் போட்டியில் ஈழத்துக்காரர் இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை செய்திருந்தார்.

வெற்றிபெற்ற மூன்று பேரும் மேடையில் நின்று படம் பிடித்துக்கொண்டபோது  அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிச் சிரித்ததை அவதானித்தேன். பின்னால் அது என்னவென்று ஈழத்துக்காரரை விசாரித்தபோது பக்கத்தில் நின்றவர் தனக்கு மயக்கமாகி வருகிறதென்றும் தான் விழுந்தால் தன்னை தாங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் சொன்னார். அதற்கு ஈழத்துக்காரர் என்ன பதிலிறுத்தார் என்று கேட்டேன். ‘எனக்கும் மயக்கம் வருகிறது. நான் விழுந்தால் நீங்கள் பிடியுங்கள்’ என்று தான் அவரிடம் சொன்னதாகக் கூறினார். இந்த மேடைகளில் மயங்கி விழுவது பலமுறை நடந்திருக்கிறது. சராசரி மனித உடம்பில் கொழுப்பு 20 வீதம் இருக்கும். உடலழகன் போட்டியாளர்கள் கொழுப்பு சத்தை நாலு வீதத்துக்கு குறைத்துவிடுவார்கள். சத்து வீதம் அதற்கு கீழே போனால் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும்.

போட்டி முடிந்த பின்னர் ஈழத்துக்காரரை மேடைக்கு பின்னால் சென்று சந்தித்தோம். உடைமாற்றி மிகச் சாதாரணமாகத் தோற்றமளித்தார். அரை மணித்தியாலத்திற்கு முன்னர் திரும்பியும் பாராதவர்கள் இப்பொழுது அவரை சூழ்ந்து வாழ்த்தினார்கள். நான் அவரைக் கட்டிப்பிடித்து என் மகிழ்ச்சியை காட்டினேன். ஓர் இரும்புச் சிலையை கட்டிக்கொண்டதுபோல இருந்தது. ஒருவருக்குச் சொல்லவேண்டிய ஆகச் சிறந்த வாழ்த்து புறநானூறில் வருகிறது. ‘என்னுடைய வாழ்நாளும் சேர்த்து நீ வாழவேண்டும்.’ அதற்கு முற்றிலும் தகுதியானவராக அவர் அப்போது எனக்கு தோன்றினார்.

‘தனிமையான போராட்டத்தில் உங்கள் எதிராளிகளை வெல்வீர்கள்’ என்றேன். அவர் ‘இந்தப் போராட்டம் என் எதிராளியை வெல்வதற்கு அல்ல. என் உடம்பை வெல்வதற்கு’ என்றார்.

வெற்றியை கொண்டாட உணவகத்துக்கு போகலாம் என்று தீர்மானித்தோம். யானை போன வழி பாதை என்பார்கள். உணவகத்தை நோக்கி அவர் நடந்தார். அங்கே உண்டான பாதையில் நாங்கள் பின்னால் சென்றோம். கடந்த 18 மாத காலமாக அவர் பயிற்சியாளர் வகுத்த உணவுப் பட்டியல் பிரகாரம் உணவருந்தினார். உப்புச் சேர்க்காத, சர்க்கரை கலக்காத, ஊட்டச்சத்து நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட உணவு. கடந்த 36 மணிநேரமாக அவர் சொட்டு நீர் பருகவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு அன்றுதான் முதன்முறையாக அவர் சாதாரண உணவை உட்கொண்டார். உணவுத் தட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரவர அவர் உணவை ருசித்து ருசித்து சாப்பிட்ட காட்சி மறக்கமுடியாதது.

எங்களைச் சுற்றி அந்த உணவகத்தில் போட்டியாளர்களும் நடுவர்களும் வென்றவர்களும் தோற்றவர்களும் இரண்டு கைகளாலும் நிறுத்தாமல் சத்தமெழுப்பியபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். பரிசாரகி சன்னமான உடை தரித்து, மீன் வலை காலுறையில் பெரிய பெரிய உணவு தட்டங்களை குடைபோல தலைக்குமேல் தூக்கியபடி விரைந்தாள். குருவிக்கூட்டிலிருந்து தலை நீட்டும் குஞ்சுபோல அவள் வெண்கழுத்து பின்னே நீண்டு சாய்ந்திருந்தது. அமெரிக்க கொடி வரைந்த ரீசேர்ட் அணிந்த ஒருத்தர் மேசையை தட்டி பல உணவுகளுக்கு ஆணை கொடுத்தார். பயில்வான்களும் அவர்கள் காதலிகளுமாக உணவகம் நிரம்பியிருந்தது. அடிக்கடி இரண்டு பாம்புகள் முத்தமிடுவதுபோல முன்னால் வளைந்து முத்தமிட்டுக்கொண்டார்கள். அடுத்த நாள் விடியாமல் போகக்கூடும் என்பதுபோல அவசரமாக அத்தனை தட்டங்களையும் அந்தக் கூட்டம் தின்று தீர்த்தது.

‘உங்களை எள்ளலாகப் பேசிய வெள்ளைக்காரருக்கு நீங்கள் பாடம் படிப்பித்துவிட்டீர்கள். இனிமேல் என்ன செய்வதாக உத்தேசம்?’ என்று கேட்டேன். அவர் பதில் கூறாமல் நீண்டநேரம் யோசித்தார். முகத்தில் தாடை எலும்புகள் எங்கே தொடங்கி எங்கே முடிகின்றன என்பது துலக்கமாகத் தெரிந்தது. முள் சரியான இடத்துக்கு வந்ததும் ரேடியோ பாடுவதுபோல அவர் பதில் சொல்லத் தொடங்கினார். திடீரென்று பேசினாலும் ஏற்கெனவே சிந்தித்ததையே சொன்னார் என்று நினைக்கிறேன். ‘எள்ளலாகப் பேசியவரின் கதை முடிந்துவிட்டது. இனிமேல்தான் என்னுடைய கதை ஆரம்பமாகிறது’ என்றார்.

‘போட்டி மனநிறைவை தந்ததா?’ என்றேன். அவர் ‘இது ஒரு மோசமான போட்டி. டென்னிஸ் போலவோ, கொல்ஃப் போலவோ இன்னொருவருடன் சேர்ந்து ஆடும் ஆட்டம் அல்ல.  3-4 மணிநேரம் தினமும் உடற்பயிற்சி செய்து தயாரிக்கவேண்டும். அந்த நேரத்தை என் குடும்பதினரிடம் இருந்துதான் நான் திருடினேன். கட்டுப்பாடான உணவுப் பழக்கம்; மிக மிகத் தனிமையான உழைப்பு. பல நேரங்களில் உங்கள் மீதும், உலகத்தின் மீதும் வெறுப்பு ஏற்படும். உடலை வருத்திப் பிழிந்து கிடைத்த வெற்றிதான் இது’ என்றார்.

எனக்கு பேராசிரியர் ரோபர்ட் கேர்ன்ஸ் நினைவுக்கு வந்தார். அவர் கண்டுபிடித்த கார் கண்ணாடி துடைப்பானை ஃபோர்ட் கார் கம்பனி திருடிவிடுகிறது. பேராசிரியர்,  ஃபோர்ட் கம்பனிமீது வழக்கு தொடுத்து 12 வருடங்களாக நீதிக்காக போராடுகிறார். அவருக்கு வேலை பறிபோகிறது; மனைவி பிள்ளைகள் அவரை விட்டு விலகுகிறார்கள். நண்பர்கள் உதாசீனம் செய்கிறார்கள். அப்படியும் விடாமல் தனித்து நின்று போராடி பேராசிரியர் வெல்கிறார். ‘தனிமையான போராட்டத்தில் உங்கள் எதிராளிகளை வெல்வீர்கள்’ என்றேன். அவர் ‘இந்தப் போராட்டம் என் எதிராளியை வெல்வதற்கு அல்ல. என் உடம்பை வெல்வதற்கு’ என்றார்.

பகீரதன் விவேகானந்

நாங்கள் விடைபெற்றுக்கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டோம். பனிக்காலம் தொடங்கிவிட்டாலும் சில மரங்கள் தங்கள் கடைசி இலைகளை உதிர்த்துக் கொண்டிருந்தன. கனடாவின் 143 வருட சரித்திரத்தில் முதன்முதலாக ஓர் ஈழத்தமிழர் உடலழகன் போட்டியில் பங்குபற்றியதுமல்லாமல் இரண்டாவது இடத்தையும் வென்றிருந்தார். அவர் பெயர் பகீரதன் விவேகானந்.

ஒரு மேப்பிள் இலை உதிர்ந்ததுபோல, ஒரு குறுக்கெழுத்துப் புதிர் பூர்த்தியானதுபோல, ஒரு வீதி விளக்கு சிவப்பிலிருந்து பச்சைக்கு மாறியதுபோல இந்தச் சம்பவம் மிகச் சாதாரணமாக மறக்கப்பட்டுவிடும்.

கனடாவில் வெளியாகும் 9 தமிழ் பத்திரிகைகளில் ஒன்றுகூட இதுபற்றி எழுதப்போவதில்லை. நடைமுறையில் இருக்கும் உச்சபட்ச வேக விதிகளை புறக்கணித்து எங்கள் கார் இடையில் ஓர் இடமும் நிற்காமல் ஓடியது. நாங்கள்  ரொறொன்ரோ வந்து சேர்ந்தபோது இரவு நேரம் 11.00 மணி. பழைய நேரம் 12.00 மணி.

அ. முத்துலிங்கம்

எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு :
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

கால்களை அறுத்து அகற்றுவதை விடச் சாவே மேல் …

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 2

‘கர்னல்கள் வார்டு’ என அழைக்கப்பட்ட வார்டு ஒப்பு நோக்கில் சிறிய அறைதான். பிளாச்சுத் தரையில் பதிந்திருந்த கரும்பழுப்புத் தடங்களைக் கொண்டு போருக்கு முன் அதில் இரண்டு மஞ்சங்களும் இரண்டு சிறு மேஜைகளும் நடுவே ஒரு பெரிய மேஜையும் இருந்தன என்று அனுமானிக்க முடிந்தது. இப்போது அறையில் நான்கு கட்டில்கள் இருந்தன. ஒன்றில் தலையோடு காலாகப் பட்டித்துணி கட்டப்பட்டு, துணியால் சுருட்டப்பட்ட புதிதாய்ப் பிறந்த குழந்தை போலக் காணப்பட்ட காயமடைந்த வீரன். அவன் எப்போதும் நிமிர்ந்து படுத்து, பட்டித்துணிகளின் ஊடாக விட்டத்தை அசைவற்ற உணர்வற்ற விழிகளால் வெறித்தே நோக்கிக்கொண்டிருந்தான். அலெக்ஸேயின் கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த மற்றொரு கட்டிலில் படுத்திருந்தவர் துடியான ஆள். அம்மைத்தழும்புள்ள அவரது திரைத்த முகம் படைவீரத் தோற்றம் கொண்டிருந்தது. அரும்பு மீசை வெளேரென்று நரைத்திருந்தது. பிறருக்கு உதவும் சுபாவமுள்ள கலகலப்பான மனிதர் அவர்.

மருத்துவமனையில் ஆட்கள் விரைவில் பழகிவிடுவார்கள். அம்மைத் தழும்புக்காரர் சைபீரியாவாசி; அரசாங்கப் பண்ணைத் தலைவராக இருந்தவர், போர்த் தொழிலில் ஸ்னைப்பர் எனப்படும் குறிதவறாது சுடும் மறைமுகத் தாக்குவீரர்; வெற்றிகரமான தாக்குவீரர் என்ற விவரங்களை எல்லாம் அலெக்ஸேய் மாலை நேரத்துக்குள் தெரிந்து கொண்டுவிட்டான். அந்த மனிதர் “சோவியத் யூனியனின் வீரர்” என்ற பட்டம் பெற்றவர். தமது குலப்பெயரைக் கூறியதுமே அலெக்ஸேய் அவருடைய எளிய உருவத்தை ஆவலுடன் நோக்கினான். அந்த நாட்களில் இப்பெயர் இராணுவத்தில் விரிவாகப் பிரபலமாயிருந்தது. பெரிய செய்தித் தாள்கள் இவரைப் பற்றித் தலையங்கங்கள் கூட எழுதியிருந்தன. மருத்துவமனையில் யாவரும் – மருத்துவத்தாதிகளும் மருத்துவர்களும் வஸீலிய் வஸீலியெவிச்சுமே கூட – அவரை ஸ்தெபான் இவானவிச் என்று மரியாதையுடன் அழைத்தார்கள்.

பட்டித்துணிக் கட்டுகளுடன் கிடந்த நான்காவது ஆள் நாள் பூராவும் தன்னைப் பற்றி ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை. பொதுவாகவே அவன் வாய்மூடி மெளனியாக இருந்தான். ஆனால், உலக நடப்பை எல்லாம் அறிந்த ஸ்தெபான் இவான்விச் அவனுடைய வரலாற்றை அலெக்ஸேய்க்குக் கொஞ்சங்கொஞ்சமாக விவரித்தார். இவன் பெயர் கிரிகோரிவ் க்வோஸ்தயேவ். அவன் டாங்கிப் படை லெப்டினென்ட், அவனும் “சோவியத் யூனியனின் வீரன்” என்ற பட்டம் பெற்றவன். டாங்கிப் பயிற்சிக் கல்லூரியிலிருந்து நேரே இராணுவத்துக்கு வந்திருந்தான்.

போர் தொடங்கிய நாள் முதலே சண்டையில் பங்கு கொண்டான். பெலஸ்தோக் என்னும் இடத்தின் அருகே நடந்த புகழ் பெற்ற டாங்கிப் போரில் தனது டாங்கியை இழந்துவிட்டான். அக்கணமே அவன் கமாண்டரை இழந்த மற்றொரு டாங்கியில் ஏறிக் கொண்டு, டிவிஷனின் எஞ்சிய டாங்கிகளுடன் பகைவரைத் தாக்கி, மீன்ஸ்க் நகரை நோக்கிப் பின்வாங்கிய சோவியத் படைகளுக்குக் காப்பு அளித்தான். பூக் ஆற்றின் கரையில் நடந்த போரில் அவன் இரண்டாவது டாங்கியையும் பறி கொடுத்து விட்டான், தானும் காயமடைந்தான். எனினும், மற்றொரு டாங்கியில் ஏறிக் கொண்டு கொல்லப்பட்ட கமாண்டரின் இடத்தில் டாங்கிக் கம்பெனியின் தலைமையை ஏற்றான். பிறகு ஜெர்மானியரின் பின்புலத்தைச் சேர்ந்து மூன்று டாங்கிகள் கொண்ட இயங்கும் படைப்பிரிவை அமைத்து ஜெர்மானியரின் பின்புலத்துக்குள் வெகுதூரம் புகுந்து சென்று வண்டித் தொடர்களையும் படையணிகளையும் தாக்கியவாறு சுற்றித் திரிந்தான்.

அவன் பிறந்த இடம் தரகபூஷ் என்ற நகர்புறத்தில் இருந்தது. சோவியத் தகவல் நிலையத்தின் வாயிலாக டாங்கி வீரர்கள் ஒழுங்காகக் கேட்டு வந்தார்கள். போர்முனை தனது சொந்த ஊர் வரை சென்றுவிட்டது என்பதை அந்த செய்தி அறிக்கைகள் மூலம் க்வோஸ்தயேவ் தெரிந்து கொண்டதும் அவனால் தாங்க முடியவில்லை. தனது மூன்று டாங்கிகளையும் வெடிவைத்து தகர்த்துவிட்டு எஞ்சியிருந்த எட்டு படைவீரர்களுடன் காடுகள் வழியே ஊரை நோக்கி நடந்தான்.

போர் தொடங்குவதற்கு சற்று முன் அவன் தன் ஊரை அடைந்தான். கிராமப் பள்ளி ஆசிரியையான அவன் தாய் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தாள். முதிய விவசாய நிபுணரும் உழைப்பாளிப் பிரநிதிகளின் மாவட்ட சோவியத் உறுப்பினருமான அவனுடைய தந்தை மகனை இராணுவத்திலிருந்து திரும்பும்படி அழைத்திருந்தார்.

ஊரை நெருங்குகையில் க்லோஸ்தியேவ் தனது வீட்டையும் பழைய காட்சிகளையும் நினைவுபடுத்திக் கொண்டான். அவனது உயரமற்ற மரவீடு பள்ளியின் அருகே இருந்தது. சிறுகூடான மெலிந்த மேனியளான அவனது தாய் பழைய சோபாவில் ஒன்றும் ஏலாத நிலையில் படுத்திருப்பாள். தகப்பனார் பழைய மோஸ்தரில் தைத்த டஸ்ஸோர் பட்டுக் கோட்டு அணிந்து, நோயாளியின் சோபா அருகே அமர்ந்து கவலையுடன் இருமியவாறு நரைத்த தாடியை உருவிக்கொண்டிருப்பார். சிறுமிகளான மூன்று தங்கைகள் சிறு கூடான மேனிகளும் சமாள நிறமுமாக அம்மாவையே உரித்து வைத்தாற் போல் இருப்பார்கள். கிராம உதவி மருத்துவப் பெண் ஷேன்யாவையும் அவன் நினைவுக்கூர்ந்தான். அவள் நீல விழியாள். ஒடிசலாக இருப்பாள். ரெயில் நிலையம் வரை வண்டியில் வந்து அவனை வழியனுப்பினாள் அவள். தினந்தோறும் அவளுக்குக் கடிதம் எழுதுவதாக அவன் வாக்களித்தான்…

இப்போது ஊரில் க்யோஸ்தியேவ் கண்ட காட்சி மிகத் துயர் நிறைந்த அனுமானங்களை விடப் பயங்கரமாக இருந்தது. வீட்டையோ கிராமத்தையோ அவன் காணவில்லை. எரிந்து கரிந்த அழிபாடுகளின் இடையே தத்திக் குதிப்பதும் முணுமுணுப்பதுமாகவும் ஓரளவு மூளை புரண்டும் இருந்த ஒரு கிழவியிடமிருந்து கிராமத்தில் நடந்தவற்றை கேட்டுத் தெரிந்து கொண்டான் க்யோஸ்தியேவ்.

புகையினால் அவர்களுக்கு மூச்சுத் திணறியது. பழுக்கக் காய்ந்த கவசமூடி அவர்களைப் பொசுக்கியது. அவர்களுடைய உடைகள் எரிந்து கருகின. ஆயினும் அவர்கள் விடாது போரிட்டார்கள்.

ஜெர்மானியர் நெருங்கிவந்த சமயத்தில் பள்ளி ஆசிரியையின் உடல்நிலை மிகவும் மோசமாயிருந்ததால் அவளை வெளியே இட்டுச் செல்லவும் முடியாமல் கிராமத்திலேயே விடவும் மனமின்றி விவசாய நிபுணரும் புதல்விகளும் தயங்கிக் கொண்டிருந்தார்களாம். உழைப்பாளிப் பிரதிநிதிகளின் மாவட்ட சோவியத் உறுப்பினருடைய குடும்பம் கிராமத்தில் தங்கியிருப்பதை ஹிட்லர் படையினர் தெரிந்து கொண்டார்களாம். குடும்பத்தினரைப் பிடித்து வீட்டின் பக்கத்திலிருந்த பிர்ச் மரத்தில் அன்று இரவே தூக்கு போட்டுவிட்டு வீட்டை எரித்துவிட்டார்களாம். க்யோஸ்தியேவ் குடும்பத்தினருக்காக வேண்டிக்கொள்ளும் பொருட்டு ஷேன்யா தலைமை ஜெர்மான் அதிகாரியிடம் போனாளாம். அவள் வெகு நெரம் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் ஜெர்மன் அதிகாரி அவளைத் தன் ஆசைக்கிழத்தி ஆக்கிக்கொள்ள முயன்றதாகவும் ஜனங்கள் பேசிக்கொண்டார்களாம்.

உண்மையில் என்ன நடந்தது என்பது கிழவிக்குத் தெரியாதாம். அதிகாரி தங்கியிருந்த வீட்டிலிருந்து ஷேன்யாவின் பிணம் மறு நாள் வெளியே கொண்டுவரப்பட்டதாம். இரண்டு நாட்கள் ஆற்றின் அருகே கிடந்ததாம்.

கிழவி கூறியதைக் கேட்ட க்யோஸ்தியேவ் ஒரு வார்த்தை பேசவில்லை, ஒரு சொட்டுக் கண்ணீர் விடவில்லை.

ஜூன் மாதக்கடைசியில், ஜெனரல் கோனெவின் சேனை மேற்குப் போர்முனையில் தாக்கு நடத்திய சமயத்தில், கிரிகோரிய் க்யோஸ்தியேவ் தனது படைவீரர்களுடன் ஜெர்மன் முனையைப் பிளந்து ஊடுருவி விட்டான். ஆகஸ்டு மாதம் அவனுக்கு புதிய டாங்கி, புகழ்பெற்ற “டி-34” ரக டாங்கி, தரப்பட்டது. குளிர் காலத்துக்குள் அவன் “அளவு மீறிய” மனிதன் என்று பெயர் வாங்கிவிட்டான். அவனைப் பற்றிக் கதைகள் சொல்லப்பட்டன, பத்திரிக்கைகள் எழுதின. இவை நம்ப முடியாதவையாகத் தோன்றின என்றாலும் உண்மையில் நிகழ்ந்திருந்தன.

உதாரணமாக அவன் ஒரு முறை வேவு பார்க்க அனுப்பப்பட்டான். இரவில் ஜெர்மானியக் காப்பரண்களின் ஊடாகத் தனது டாங்கியில் முழு வேகத்துடன் புகுந்து, சுரங்க வெடிகள் புதைக்கப் பட்டிருந்த திடலை விபத்தின்றிக் கடந்து, ஜெர்மானியர் வசமிருந்த நகருக்குள் குண்டுகளைப் பொழிந்து பீதியைக் கிளப்பியவாறு தாக்கி நுழைந்தான். செஞ்சேனைப் பிரிவுகள் அந்நகரை அரை வளைவில் இறுக்கிக் கொண்டிருந்தன. கயோஸ்தியேவ் ஜெர்மானியரைக் கதி கலங்க அடித்தவாறு நகரை ஊடுருவி, மறுகோடியில் இருந்த சோவியத் படைகளைச் சேர்ந்துவிட்டான். இன்னொரு தடவை, ஜெர்மானியப் பின்புலத்தில் பதுங்குக்கிடங்கிலிருந்து திடீரெனப் பாய்ந்து குதிரை வண்டித் தொடர் மீது டாங்கியை மோதிப் பட்டைச் சக்கரங்களால் நொறுக்கித் துவைத்துவிட்டான்.

குளிர்காலத்தில் ஒரு சிறு டாங்கிப் பிரிவுக்குத் தலைமை ஏற்று, ஷெவ் நகரின் அருகில் அரண் செய்யப்பட்ட கிராமத்தின் காவற்படையை அவன் தாக்கினான். வெளிப் புறத்திலேயே, தற்காப்புப் பகுதியை டாங்கிகள் கடக்கும்போது திரவ எரிபொருள் குப்பி ஒன்று அவனது டாங்கிக்குள் படாரென்று வெடித்தது. புகை மண்டிய, மூச்சு முட்டச் செய்யும் தழல், டாங்கியைச் சூழ்ந்து மூடியது. ஆனால், டாங்கி வீரர்கள் தொடர்ந்து போரிட்டார்கள். க்யோஸ்தியேவும் முற்றுகையைப் பிளந்து தன்னுடன் வெளியேறியவர்களிலிருந்து அவன் பொறுக்கி எடுத்திருந்த துணைவீரர்களும் பெட்ரோல் தொட்டியோ குண்டுகளோ வெடிப்பதனால் தாங்கள் எக்கணமும் சாக நேரிடும் என்பதை அறிந்திருந்தார்கள்.

புகையினால் அவர்களுக்கு மூச்சுத் திணறியது. பழுக்கக் காய்ந்த கவசமூடி அவர்களைப் பொசுக்கியது. அவர்களுடைய உடைகள் எரிந்து கருகின. ஆயினும் அவர்கள் விடாது போரிட்டார்கள். டாங்கியின் பட்டைச் சக்கரங்கள் அருகே வெடித்த கனத்த குண்டு டாங்கியைக் குப்புறக் கவிழ்த்து விட்டது. வெடிப்பு அலை காரணமாக வெடியால் கிளத்தப்பட்ட மணலும் வெண்பனியும் காரணமாகவோ டாங்கியில் எரிந்த தழல் அணைந்துவிட்டது. உடம்பெல்லாம் எரிந்து அழன்ற நிலையில் க்யோஸ்தியேவ் டாங்கியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டான். கொல்லப்பட்ட பீரங்கி வீரன் அருகே, அவன் இடத்தை தான் ஏற்றுக் கொண்டு டாங்கியின் பீரங்கிமேடையில் உட்கார்ந்திருந்தான்….

அவன் மருத்துவமனைக்கு வந்து ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே அவன் இத்தனை நாட்களாக ஊசலாடிக் கொண்டிருந்தான். உடல்நிலை சீர்படும் என்ற நம்பிக்கையே அவனுக்கு இல்லை, எதிலும் அக்கறையோ ஆர்வமோ இல்லை. சில வேளைகளில் நாள் பூராவும் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் இருந்துவிடுவான்.

படுகாயம் அடைந்தவர்களின் உலகம் வழக்கமாக வார்டின் நான்கு சுவர்களுக்குள் அடங்கிவிடும். தவிரவும் படுகாயமுற்றவனுக்கு அலுப்பூட்டும்படி மெதுவாக நகரும் மருத்துவமனை நாட்களை முற்றாக எப்போதும் நிறைத்திருப்பது, அவனுடைய எண்ணங்களைத் தன்னுடன் பிணித்திருப்பது அவனது காயம்தான். இந்தக் காயம், வீக்கம் அல்லது அங்க முறிவைப் பற்றி எண்ணியவாறே அவன் உறங்குகிறான், கனவில் இவற்றையே காண்கிறான், கண்விழித்ததுமே வீக்கம் குறைந்து விட்டதா, சிவப்பு நிறம் போய்விட்டதா, காய்ச்சல் அதிகமாகி இருக்கின்றதா தணிந்துவிட்டதா என்று அறியப் பதைபதைப்புடன் முற்படுகிறான். இரவின் நிசப்தத்தில் கூர்ந்து கவனிக்கும் காது ஒவ்வொரு சரசரப்பையும் பன்மடங்காகப் பெருக்கிக்கொள்வது போலவே இங்கே தனது உடல் நலக்கேடு பற்றிய ஒரு முனைப்பான தியானம் காயங்களை இன்னும் வேதனை தருபவை ஆக்கிற்று. மிகத்திண்மையும் மனவுறுதியும் உள்ளவர்களைக்கூட, போரில் சாவைக் கலங்காமல் நேரிட்டு நோக்கியவர்களைக்கூட, தலைமை மருத்துவரின் குரலில் ஒலிக்கும் சின்னஞ்சிறு வேறுபாடுகளைக் கூடத் திகிலுடன் உற்றுக் கேட்கும்படியும், நோயின் போக்கு பற்றி வஸீலிய் வஸீலியெச்சின் கருத்தை அவரது முகத் தோற்றத்தைக் கொண்டு ஊகிக்க பதைக்கும் நெஞ்சுடன் முயலவும் அது கட்டாயப்படுத்தியது.

தன் மனம் படும் பாட்டை மெரேஸ்யெவ் கவனத்துடன் மறைத்தான். மருத்துவர்களின் உரையாடலில் தனக்கு அக்கறை இல்லை போலக் காட்டிக் கொண்டான். எனினும் மின்னோட்டம் பாய்ச்சுவதற்காகக் கால் கட்டுகள் அவிழ்க்கப்பட்ட ஒவ்வொரு தடவையும் துரோகத் தன்மை கொண்ட கருஞ்சிவப்பு நிறமும் புறவடிகளில் வர வர மேலே மேலே ஏறி வருவதைக் கண்டு, அச்சத்தால் அவன் கண்கள் பரக்க விழிக்கும்.

முதிய படகோட்டி அர்க்காஷா மாமா போல நொண்டியாகக் கட்டைக் கால்களுடன் காலந்தள்ள வேண்டிவருமோ? ஆற்றில் குளிப்பதற்கு, அவரைப் போலவே கட்டைக் கால்களைக் கழற்றிக் கரையில் வைத்துவிட்டுக் குரங்கு போலக் கைகளை ஊன்றி நகர்ந்து நீரில் விழ வேண்டியிருக்குமோ?..

அவனுடைய சுபாவத்தில் நிம்மதியின்மையும் ஏக்கமும் நிறைந்து விட்டன. கண்டிப்பான, கொஞ்சங் கொஞ்சமாக அதிகரித்த சிறந்த மருத்துவமனை உணவு அவனுடைய சக்தியை விரைவாக முன்னிலைக்குக் கொண்டுவந்துவிட்டது என்பது உண்மையே. கட்டுகளை மாற்றும் போதும் கதிர்வீச்சுச் சிகிச்சை அளிக்கும் போதும் அவனுடைய நொய்ந்த உடலைக் கண்டு பயிற்சி மருத்துவ யுவதிகள் முன்போல அரண்டு விழிப்பதில்லை.

ஆனால், அவன் உடம்பு எவ்வளவு விரைவாக வலுவடைந்ததோ அவ்வளவு விரைவாக அவனுடைய கால்கள் மோசமாகிக் கொண்டு போயின. சிவப்பு நிறம் புறவடிகளைக் கடந்து கணுக்கால்கள் வழியே மேலே பரவியது. விரல்கள் முற்றிலும் உணர்வு இழந்துவிட்டன. மருத்துவர்கள் அவற்றை ஊசிகளால் குத்தினார்கள். இந்த ஊசிகள் உடம்புக்குள் நுழைந்தன, எனினும் அலெக்ஸேய்க்கு வலியை உண்டாகவில்லை. வீக்கம் பரவுவதை ‘முற்றுகை’ என்ற விந்தைப் பெயரால் அழைக்கப்பட்ட புது முறையால் மருத்துவர்கள் தடுத்துவிட்டார்கள். ஆனால், வலி அதிகரித்தது. அது தாங்கவே முடியாதது ஆகிவிட்டது. பகலில் அலெக்ஸேய் தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு சத்தமில்லாமல் படுத்திருப்பான். இரவில் வார்டு மருத்துவத்தாதி க்ளாவ்தியா மிஹாய்லவ்னா அவனுக்கு மோர்பியா இஞ்செக்ஷன் கொடுப்பாள்.

மருத்துவர்களின் உரையாடல்களில் ”அறுத்து அகற்றி விடுதல்” என்ற சொற்றொடர் மிக அடிக்கடி கேட்கலாயிற்று. வஸிலிய் வஸிலியெவ்ச் சில வேளைகளில் அலெக்ஸேயின் கட்டில் அருகே நின்று, “என்ன, ஊர்வான், வலிக்கிறதோ? வெட்டி எடுத்து விடுவோமா, ஊம்? ‘சரக்’ – தீர்ந்தது காரியம் என்பார்.”

அலெக்ஸேயின் உடல் முழுவதும் உறைந்து குறுகிவிடும். வாய்விட்டுக் கத்தாமல் இருப்பதற்காகப் பற்களை இறுக்கிக் கொண்டு அவன் தலையை அசைக்க மட்டும் செய்வான்.

“நல்லது, துன்பப்படு துன்பப்படு, உன் பாடு. இதோ அதையும் செய்து பார்ப்போம்” என்று கோபத்துடன் முணுமுணுத்துப் புதிய சிகிச்சை முறையைக் குறிப்பார் தலைமை மருத்துவர்.

வார்டிலிருந்து அவர் சென்றதும் கதவு சாத்தப்படும், ஆளோடியில் மருத்துவர்களது காலடிச் சத்தம் அடங்கிவிடும், அலெக்ஸேயோ மூடிய விழிகளுடன் படுத்தவாறே “கால்கள், கால்கள், என் கால்கள்…” என்று எண்ணமிடுவான். கால்களை இழந்துவிட நேருமோ? தன் ஊர் கமீஷினில் இருக்கும் முதிய படகோட்டி அர்க்காஷா மாமா போல நொண்டியாகக் கட்டைக் கால்களுடன் காலந்தள்ள வேண்டிவருமோ? ஆற்றில் குளிப்பதற்கு, அவரைப் போலவே கட்டைக் கால்களைக் கழற்றிக் கரையில் வைத்துவிட்டுக் குரங்கு போலக் கைகளை ஊன்றி நகர்ந்து நீரில் விழ வேண்டியிருக்குமோ?..

இந்த மனத் துன்பம் வேறு ஒரு நிலைமை காரணமாக இன்னும் அதிகமாயிற்று. மருத்துவமனையில் சேர்ந்த முதல் நாளே அவனுக்குக் கமீஷினிலிருந்து சில கடிதங்கள் கிடைத்தன. தாயாரின் முக்கோண மடிப்புக் கடிதங்கள் பொதுவாகத் தாயாரின் எல்லாக் கடிதங்களையும் போலவே சுருக்கமாக இருந்தன. அவற்றில் பாதிக்குமேல் உறவினர்களின் வணக்கங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. வீட்டில் எல்லாம் கடவுள் அருளால் நலம் என்றும், அலெக்ஸேய் தாயாரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றும் தேறுதல் அளிக்கும் உறுதி சொற்கள் எழுதப்பட்டிருந்தன. மறுபாதியில், தன்னை ஜாக்கிரதையாகப் பேணிக்கொள்ளும்படியும், குளிர் தாக்க இடங்கொடுக்காமல் இருக்கும்படியும், கால்களை நனைத்துக் கொள்ளாமல் இருக்கும் படியும், அபாயமான இடங்களுக்குப் போகாதிருக்கும் படியும் பகைவனின் துரோகம் பற்றி எச்சரிக்கையாக இருக்கும்படியும் அலெக்ஸேயிடம் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

மாணவர்கள் போன்று கொட்டை கொட்டையான உருண்டை எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த நீல உறைகளில் தொழிற்சாலைக் கல்லூரியில் அலெக்ஸேயுடன் படித்த மாணவியின் கடிதங்கள் இருந்தன. அவள் பெயர் ஓல்கா. கமீஷினில் உள்ள மரத் தொழிற்சாலையில் தொழில்நுட்ப நிபுணியாக அவள் இப்போது வேலை செய்து வந்தாள். புத்திளமைப் பருவத்தில் அலெக்ஸேயும் இதே தொழிற்சாலையில் உலோகக் கடைச்சற்காரனாக வேலைப் பார்த்திருந்தான். இந்த யுவதி பிள்ளைப்பருவத் தோழி மட்டும் அல்ல. அவளுடைய கடிதங்களும் அசாதரணமானவையாக, தனிச் சிறப்பு உள்ளவையாக இருந்தன. அலெக்ஸேய் அவற்றைப் பல தடவை படித்தான். மறுபடி மறுபடி அவற்றைக் கவனமாகப் படித்து, மிக மிகச் சாதாரணமான வரிகளில் தனக்கே முழுமையாக விளங்காத, களி நிறைந்த, உள்ளர்த்தத்தைத் தேடுவான்.

அதிகாரி தங்கியிருந்த வீட்டிலிருந்து ஷேன்யாவின் பிணம் மறுநாள் வெளியே கொண்டுவரப்பட்டதாம். இரண்டு நாட்கள் ஆற்றின் அருகே கிடந்ததாம். கிழவி கூறியதைக் கேட்ட க்யோஸ்தியேவ் ஒரு வார்த்தை பேசவில்லை, ஒரு சொட்டுக் கண்ணீர் விடவில்லை.

தனக்கு வேலை ஒரேயடியாக நெரிவாகவும், அப்போது இரவில் உறங்குவதற்குக் கூடத் தான் வீட்டுக்குப் போவதில்லை என்றும், நேரத்தை வீணாக்காமல் இருக்கும் பொருட்டு அலுவலகத்திலேயே உறங்கி விடுவதாகவும், தனது தொழிற்சாலையை இப்பொழுது அலெக்ஸேயால் அடையாளமே கண்டுகொள்ள முடியாது என்றும் தற்போது தொழிற்சாலையில் என்ன உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை அறிந்தால் அவன் பிரமித்துப் போய், சந்தோஷ மிகுதியால் வெறி கொண்டுவிடுவான் என்றும் எழுதியிருந்தாள் ஓல்கா.

தனக்கு ஓய்வு நாட்கள் மாதத்துக்கு ஒரு தடவைக்கு மேல் கிடைப்பதில்லை என்றும் அந்த நாட்களில் அவனுடைய தாயாரைப் போய்ப் பார்ப்பதாகவும், அலெக்ஸேயின் அண்ணன்மாரிடமிருந்து ஒரு தகவலும் இல்லை என்றும் எனவே முதிய தாயின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், தாயாரின் வாழ்க்கை கடினமாக இருக்கிறது என்றும், சமீபத்தில் அவள் அடிக்கடி நோய்வாய்படுவதாகவும் ஓல்கா நடுவில் குறித்திருந்தாள். தாயாருக்கு மிக நிறைய எழுதும்படியும் கெட்ட செய்திகளால் அவளைக் கலவரப்படுத்தாமல் இருக்கும்படியும் ஏனெனில், இப்போது தாயின் ஒரே நம்பிக்கையாக இருப்பவன் அவன்தான் என்றும் அவள் அலெக்ஸேயைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

படிக்க:
பழங்குடிகளின் நிலம் , மொழி , பண்பாட்டைக் காக்கும் நக்சல்கள் !
மாட்டிறைச்சியின் பெயரால் காவி குண்டர் படையின் வெறியாட்டம் தொடங்கியது !

ஆகவே, மருத்துவர்களின் பேச்சில் “அறுத்து அகற்றி விடுதல்” என்ற சொற்கள் அடிக்கடி அடிபடத் தொடங்கவே அவன் திகில் அடைந்தான். நொண்டியாக அவன் ஊருக்கு எப்படிப் போவான்? தனது கட்டைக்கால்களை ஓல்காவுக்கு எப்படிக் காட்டுவான்? போர் முனையில் புதல்வர்களையும் பறிகொடுத்துவிட்டு, கடைசி மகனான அலெக்ஸேயை எதிர்பார்க்கும் தாயாருக்கு அவன் எப்படி அதிர்ச்சி உண்டாக்குவான்?

“அறுத்து அகற்றுவதா? இல்லை, அது மட்டும் வேண்டாம். இதை விடச் சாவே மேல்… எத்தகைய கொடூரமான, முள்ளாய் தைக்கும் சொல்! அறுத்து அகற்றுதல்! கூடவே கூடாது. இது மட்டும் நடக்கவிடக்கூடாது!” என எண்ணிக் கொண்டான் அலெக்ஸேய். சற்று பொறுத்திருப்பது என்று தீர்மானித்து, தான் செளகரியமாக வாழ்வதாகவும், போர் நெருக்கடி அற்ற பகுதிக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் தாயாருக்கும் ஓல்காவுக்கும் எழுதினான். முகவரி மாற்றத்துக்கு காரணம் கற்பிப்பதற்காக, உண்மைபோல் தோன்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் பின்புலத்தில் பணியாற்றுவதாகவும் விசேஷப் பொறுப்பு ஒன்றை நிறைவேற்றுவதாகவும், இங்கே இன்னும் நீண்ட காலம் இருக்க வேண்டும் போல் தோன்றுவதாகவும் தெரிவித்தான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

கேள்வி பதில் : பெர்முடா முக்கோணம் மர்மம் உண்மையா ?

கேள்வி: //பெர்முடா முக்கோணம் பற்றி? இதன் மர்மம் ஏதோ அங்க திரும்பி வரமுடியாது சொல்லுறங்க? இதை பற்றி விரிவாக உங்களுது பதிலுக்காக காத்திருக்கிறேன்…//

– பா.அருண்


அன்புள்ள அருண்,

பெர்முடா முக்கோணம் அல்லது நரகத்தின் முக்கோணம் என்று அழைக்கப்படும் இப்பகுதி வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்கு பகுதியில் உள்ளது. இங்கே எண்ணிறந்த விமானங்களும் கப்பல்களும் மர்மமான முறையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மறைந்து போனதாகக் கூறப்படுகிறது. கூறப்படுகிறது என்பதிலிருந்தே அதற்கு ஆதாரப்பூர்வமான தகவல்கள் இல்லை என்பதும் உண்மை. ஏனெனில் இப்பகுதியில் அப்படி மர்மமான முறையில் கப்பல்களும் விமானங்களும் மறைந்து போனதாக எந்தவிதமான அதிகாரப்பூர்வ செய்திகளும் தெரிவிக்கவில்லை. விபத்துக்கள் எனப்படுபவை என்ன காரணத்தால் நடக்கின்றன என தெரியும் சம்பவங்களாகும். மர்மம் என்றால் என்ன காரணம் என்று தெரியாது. பெர்முடா முக்கோணத்தில் அப்படி மர்மமான காரணங்கள் எவையும் வரலாற்றில் பதிந்திருக்கவில்லை.

பெர்முடா முக்கோணம் என்ற இந்தப் பகுதி மிகவும் அதிக அளவு கப்பல் மற்றும் விமான போக்குவரத்து நடக்கும் பகுதியாகும். இவ்வழி மூலமாக அமெரிக்கா ஐரோப்பா மற்றும் கரீபியன் தீவுகளில் இருக்கும் துறைமுகங்களுக்கு கப்பல்கள் செல்கின்றன. கூடவே விமானங்களும் பறக்கின்றன.

பொதுப்புத்தியின் படி இங்கே அசாதாரணமான நடவடிக்கைகளின் மூலமாக விபத்துக்கள் ஏற்பட்டு கப்பல்களும் விமானங்களும் மறைந்து போவதாக நம்பப்படுகிறது. ஆனால் ஆவணப்படுத்தப்பட்ட தரவுகள் எவையும் இந்த அசாதாரணமான நம்பிக்கைகளை மறுக்கின்றன. அனேகமாக இவை தப்பும் தவறுமாக பதிவு செய்யப்பட்டதோடு மறைந்து போன சில எழுத்தாளர்களின் உபயத்தால் உருவாக்கப்பட்ட மூட நம்பிக்கைகளாகும்.

1964இல் வின்சென்ட் காடிஸ் என்ற எழுத்தாளர் நம்மூர் தினமலர் போன்ற மலிவான பத்திரிகையான அர்கோசி-இல் (Vincent Gaddis wrote in the pulp magazine Argosy)  இந்த பெர்முடா முக்கோணத்தைப் பற்றி எல்லைகளோடு வரையறுக்கிறார். அவருக்குப் பிறகு பல எழுத்தாளர்கள் இந்த முக்கோணத்தின் பரப்பளவு குறித்து பல்வேறு அளவுகளைத் தருகிறார்கள். அவை 5 லட்சம் சதுர மைல் முதல் 15 லட்சம் சதுர மைல் வரை வேறுபடுகிறது.

1950 முதல் பல்வேறு எழுத்தாளர்கள் அமெரிக்கப் பத்திரிகைகளில் பெர்முடா முக்கோணத்தில் மறைந்து போன விமானங்கள் கப்பல்களை பற்றி பல்வேறு கதைகளை அடித்து விட்டிருருக்கிறார்கள். அப்படி சில ஹாலிவுட் படங்களும் வந்திருக்கின்றன. ஆனால் இவை எதற்கும் ஆதாரம் இல்லை.

லாரன்ஸ் டேவிட் குஷி (Lawrence David Kusche, author of The Bermuda Triangle Mystery: Solved (1975) )என்ற எழுத்தாளர் பெர்முடா முக்கோண மர்மம் தீர்க்கப்பட்டது என்ற நூலை 1975-ல் எழுதியிருக்கிறார். இவர் இந்த மூடநம்பிக்கை குறித்து பல்வேறு தரவுகளை மறுக்கிறார். அவரது வாதத்தின்படி இப்பகுதியில் மறைந்துபோன கப்பல்களும் விமானங்களும் மிகைப்படுத்தப்பட்டவை. ஒப்பீட்டு ரீதியாக இவற்றை விட அதிகமான எண்ணிக்கையில் உலகின் பல்வேறு கடல் பகுதிகளில் விமானங்களும் கப்பல்களும் மறைந்து போயிருக்கின்றன. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் மலேசிய விமானம் இந்தியப் பெருங்கடலில் மறைந்து போனதைக் குறிப்பிடலாம். தற்போது அருணாச்சல் பிரதேசத்தில் (ஜூன் 2019) இந்திய விமானப்படையின் ஏ.என் 32 வகை சரக்கு விமானம் மறைந்து போயிருக்கிறது. அதை இன்று வரை தேடி வருகிறார்கள்.

பொதுவில் கடல் பகுதிகளின் பரப்பளவு என்பது மிகவும் பிரம்மாண்டமானது என்பதால் அங்கே விபத்திற்குள்ளாகும் விமானங்கள், கப்பல்களை கண்டுபிடிப்பது என்பது கடற்கரையில் குண்டூசி தேடும் செயலுக்கு நிகரானது என்றால் அது மிகையில்லை. சில விபத்துக்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. சில கண்டுபிடிக்க முடிவதில்லை.

பெர்முடா முக்கோணம் இருக்கும் அந்தக் கடல் பகுதி வெப்ப மண்டல சூறாவளிகள் அதிகம் வீசும் இடத்தில் இருப்பதால் நடைபெற்ற விபத்துக்கள் எவையும் மர்மமானவை அல்ல. புயலில் சிக்கி பல விபத்துக்கள் நடக்கின்றன.

மேலும் 2013-ம் ஆண்டில்  World Wide Fund for Nature எனும் தன்னார்வ அமைப்பின் மூலமாக உலகில் அதிக விபத்துக்கள் ஏற்படும் பத்து அபாயகரமான கடல் வழித்தடங்களில் பெர்முடா முக்கோணம் இல்லை.

அமெரிக்காவைப் பொறுத்தவரை பல்வேறு மூடநம்பிக்கைகள் அவை மதம் என்ற முறையிலும் அமானுஷ்யம் என்ற முறையிலும் நிறைய செல்வாக்குடன் இருக்கின்றன. வெளி கிரகத்திலிருந்து வந்த உயிர்கள் என்ற கதை குறித்து பல்வேறு நூல்கள், வீடியோக்கள் உள்ளன. அதே போன்று பனி மனிதன், கடுங்கோட்பாட்டுவாத கிறித்தவ பிரிவுகள் என பல மூட நம்பிக்கைகள் இருக்கின்றன.

அமெரிக்கா முன்னேறிய நாடாக இருந்தாலும் இத்தகைய மூடநம்பிக்கைகள் விடயத்திலும் முதல் நாடாக இருக்கிறது. நம்மூர் ஹீலர் பாஸ்கர், பாரி சாலன் வகையறாக்களின் குருநாதர்கள் பலர் அங்கேதான் குறுநில மன்னர்கள் போல ஆட்சி செலுத்தி வருகின்றனர். அவை வணிகத்திற்காக செய்யப்படும் மலிவான நடவடிக்கைகளே அன்றி அறிவுப்பூர்வமானவை அல்ல.

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

ஊர்க்குளங்கள் அழியுது ! வயல்கள் மீன் வளர்ப்பு குளங்களா மாறுது !

1

“டண்டண்டண்…… ஊர் மக்களுக்கு ஒரு அறிவிப்பு. இதனால் தெரிவிப்பது என்னென்னா ஊர் பொது குளத்துல தண்ணி வத்திப் போனதால நாளைக்கி பொது மீன்பிடிப்பு செய்யலாமுன்னு ஊர் முடிவெடுத்துருக்கு. மீன் புடிக்கிற ஊர் பொதுமக்கள் காத்தாலயே குளக்கரைக்கி வந்துரனு….ம் டண்டண்டண்……”

முப்பது வருசத்துக்கு முன்ன கிராமப்புற கோடைத் திருவிழா காலம் முடிஞ்சதும் இப்புடி ஒரு மீன்பிடி தண்டோரா சத்தம் கேக்கும். இந்த சத்தத்த கேட்டா ஊர் பொடுசுங்க அப்புடியே… குதூகலிக்கும். பெருசுங்க எல்லாம் மீனப் புடிச்சுட்டு கரையேறுனதும், உயிர் தப்புன மீனுங்க துள்ள, வெய்யிலுக்கு சூடு தாங்காமெ சேத்துல கெடந்து முண்டும். பசங்க அப்புடியே பொசுக்குன்னு சேத்துல பாஞ்சு, விழுந்து பொறண்டு, விறால்குட்டிய புடிச்ச வீரனா ஒடம்பு முழுக்க சேறோட பல்லு மட்டும் பளிச்சுன்னு தெரிய எந்திரிச்சு நிப்பாங்க.

கிராமங்களில் நடைபெரும் மீன்பிடி திருவிழா (மாதிரிப் படம்)

கிராமத்து ஏரி குளமெல்லாம் ஒன்னு ஊருக்கு சொந்தமா இருக்கும், இல்ல கோயிலுக்கு சொந்தமா இருக்கும். ஏரிப் பாசன வசதிக்கும் குளம் கோயில் பக்தருங்க தேவைக்கானதா இருந்துச்சு. ஆடு, மாடு, மனுசங்க குளிக்க, தொவைக்க அத்தனையும் இதுலதான் அடங்கும்.

ஊர் பொதுவான இந்த நீர்நிலைகள ஊரு மக்களே பராமரிச்சு ஆத்துல தண்ணி வந்ததும் இட்டு நெரப்பி வைப்பாங்க. அதுல வளரும் மீன, தண்ணி வத்துன கோடை காலத்துல கிராமத்து மக்கள் பொதுவுல புடிச்சுப்பாங்க. இதுபோல பொது நீர்நிலைக்கு எந்த பங்கமும் வராம பாதுகாக்க கிராமங்கள்ள தனி சட்டதிட்டமே இருக்கும். ஊருக்கூரு வரைமுறைங்க மாறுபடுமே தவிர தண்ணிக்கான தனி கவுரவம் இருக்கத்தான் செஞ்சது.

இந்த நிலைமாறி குளங்கள ஏலமிட்டு அந்தக் காச கோயில் வரவுசெலவுக்கு சேத்துக்கிட்டாங்க. ஊர் பொதுக்குளம் தனிநபர் கையில போனதும் பிறகு வளர்ப்பு மீன் முறை உருவானது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், மன்னார்குடி போன்ற டெல்டா பகுதியில தண்ணி பாயாத தரிசு நிலத்துல பண்ணை குட்டை அமைக்க அரசு, மானிய கடனுதவி செஞ்சு மீன் வளர்ப்ப ஊக்குவிச்சது.

படிக்க:
காவிரி டெல்டா – துயரம் துரத்தும் நிலம் | வில்லவன்
♦ ஓபசமுத்திரம் கிராம மக்களின் இறால் பண்ணை அழிப்பு போராட்டம் !

காவிரி தண்ணி தட்டுப்பாடு ஏற்பட்ட 20 வருசத்துக்கு முன்ன நஞ்சை நிலத்துலயும் குளம் வெட்ட ஆரம்பிச்சாங்க விவசாயிங்க. கடைமடை வரை தலக்குப்புற தண்ணி பாஞ்ச டெல்டா பகுதி விவசாய நிலத்துக்கு மத்தியில புதுசு புதுசா குளங்களும் உருவாச்சு. ஒரு விவசாயத்துக்கு மத்தியில இன்னோரு ஊடுபயிர் விவசாயம் செய்றாப்போல நாலாப் பக்கமும் நடவு; நடுவுல மீனுங்கற கணக்குல நன்னீர் மீன் வளர்ப்பு உருவானது.

மானியத்துல பண்ணை குட்டை மீன் வளர்ப்பு அதிக லாபம், அப்புடி… இப்புடின்னு உசுப்பேத்தி விவசாயி மனசுல ஒரமேத்திச்சு வேளாண்மைத்துறை. ஆத்துல தண்ணி ஒரு வருசம் வந்தா மறு வருசம் வர்ல. வர்ர தண்ணியும் பயிரு பருவம் வரும்போது பாத்து பல்ல இளிச்சுடும். அணையப் போட்டு ஆத்த அடச்சுருவாங்க. அல்லோலப்பட்ட விவசாயிங்க சிலபேரு பரவாயில்லன்னு நெனச்சு மெல்ல எறங்குனதுதான் மீன் வளர்ப்புக் குளம்.

ஆத்துல வர்ற தண்ணிய பயன்படுத்தி குளத்துல விட்டு நெரப்பி மீன் வளப்பாங்க. கரையில தென்னமரமும், பரங்கி பூசணின்னு ஊடு பயிரும் போட்டாங்க. அங்கொன்னும் இங்கொன்னுமா தோண்டுன குளம் பொறவு பெருவாரியா வெட்ட தொடங்குனதும் இப்ப அதோட எண்ணிக்கை வியப்படைய வைக்கிது.

இன்னைக்கி கிராமங்கள்ள பாத்தோம்ன்னா கோடை, அக்கினி வெய்யிலு காலத்துல குளம் வத்திப்னப்ப வாராவாரம் கேட்ட மீன்பிடி தண்டோரா சத்தம் இப்ப இல்லை. ஊருக்கும் கோயிலுக்கும் சொந்தமாயிருந்த குளங்களப் போல சொந்த நிலத்துல விவசாயிங்களே குளம் வெட்ட ஆரம்பிச்சதும் லாபம் மட்டுமே நோக்கமாயிடுச்சு.

வயல்களுக்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ள மீன்வளர்ப்பு குளங்கள் (மாதிரிப் படம்)

குளத்துத் தண்ணி எடுத்து தைப்பொங்கல் வைக்கிற வழக்கத்த வச்சுருந்த கிராமத்து ஜனம், இன்னைக்கி கால் நனைக்க பயப்படுது. அந்த அளவு தண்ணி தரங்கெட்டு போயிடுச்சு. பிராய்லர் கோழிபோல மீனு பெருசா வரனும்னு மாட்டு சாணிய வண்டி வண்டியா கொட்றாங்க. மாட்டுக்கு போடும் புண்ணாக்கு தவிடோட சேத்து ரேசன் அரிசிய தெனமும் பொங்கி போட்றாங்க. ஆத்து நீருல வரும் ஆத்து மீனு முட்டைங்கள அழிக்க ரசாயன உரம் போடுறாங்க.

இதெல்லாம் போக மீனுக்கு என்னமோ ஊசியே போட்றாங்க. குளமுன்னா கரையோரமெல்லாம் கொடியும், கோரையும், நாணலும், பாசியும் படந்துருந்தத பாத்துருப்போம். இன்னைக்கி தாங்கா முடியாத ரசாயனத்தால தண்ணி தரங்கெட்டுப்போயி தங்கமாட்டம் மின்னுது. இதுக்கு விவசாயிய மட்டும் குத்தஞ்சொல்ல முடியாது. பசுமை புரட்சின்னு சொல்லி அவங்கள இப்படி ஆச காட்டி பழக்கினது இந்த அரசுதான்.

பசியாத்தும் விவசாயிங்க தண்ணி தட்டுப்பாட்டுல கூட அரும்பாடு பட்டு ராப்பகலா வேலசெஞ்சு வெளைய வைக்கிற வெள்ளாமைக்கி சரியான விலை தரமாட்டேங்கிறாங்க. ஒன்னுக்குப் பாதி விளையிறதையும் ஈரப்பதம், கலப்பு, கருக்கான்னு சரியான நேரத்துல எடுக்காமெ அலக்கழிக்கிறாங்க. எப்படியாவது முன்னேற மாட்டமா..ங்குற நிலையில விவசாயி இந்த மீன் வளர்ப்புக்கு போகவேண்டியிருக்கு.

ஒரு கிராமத்து மனிதனோட வாழ்க்கையும், விளையாட்டும், சந்தோசமும் நீர்நிலை இல்லாம இருந்துருக்கவே முடியாது. வெளியூருக்கார வியாபாரிங்க சுமைய நிறுத்தி வச்சுட்டு வெய்யிலுக்கு விழுந்து குளிச்சுட்டு இளைப்பாறிட்டுதான் போவாங்க. தடுக்கி விழுந்தா தண்ணி இருந்த ஊருல வயக்காட்டுக்கு ஒதுங்கப் போகனுன்னா கூட கையில சொம்போட போற அவலத்த என்னன்னு சொல்ல.

ஒரு குளக்கரையில கிராமத்து முழு சமூக அமைப்பையே பாத்துரலாம். ஒரு படித்துறையில சலவைத் தொழிலாளி குடும்பமா தொழில் செய்வாரு; முடி வெட்றவரு கிண்ணத்துல தண்ணியோட கத்தியும் கையுமா ஆலமரத்தடியில உக்காந்துருப்பாரு; மறுபக்க களத்து மேட்டு கரையில வெளஞ்ச நெல்ல வண்டியில ஏத்தும் ஆண்ட சாதியும்; அறுப்புக்கான கூலியில படி நெல்லு கூட கெடைக்காதான்னு பண்ணையாளும் காத்துருப்பாங்க.

பக்கத்துலேயே தற்காலிக குடிசையில பஞ்சம் பொழைக்க வந்த கழைக்கூத்தாடி; கொட்டாங்குச்சி நெல்லுக்கு ஒரு ஐஸ்சு குடுக்க தயாரா நிக்கும் ஐஸ்க்காரரு. ஒட்டமுடியாத ஒத்துமையோட ஒன்னா கூடிநிக்கும் சமத்துவப்புரம் போல கிராமத்து குளத்துக்கரையில அத்தன சாதி – வர்க்க பிரிவையும் ஒன்னா பாக்கலாம். வேறுபட்ட சாதி எல்லாம் ஒன்னுபட்டு நிக்க வேண்டிருந்தது விவசாயத்துக்காக.

படிக்க:
சோழ நாடு சேர நாடு பாண்டிய நாடு வட மாநிலங்கள் சங்கமிக்கும் அம்மா உணவகம்
♦ “The Hour of Lynching” – ரக்பர்கான் படுகொலையை மறக்கக் கூடாது !

இன்னைக்கு சேவைச்சாதி மக்கள் தன்மானத்தோட நகரத்துக்கு போயி வாழ ஆரம்பிச்சாட்டங்க. சாதியோட இறுக்கம் கொஞ்சம் தளர்ந்துருச்சுன்னு கூட சொல்லலாம். அப்டிப் பாத்தா குளத்தோட இருந்த சாதி சடங்கு சம்பிரதாயங்களுக்கு இப்ப தண்ணி இல்லாததால வழியில்லாமப் போச்சு. ஆனா எல்லா கிராமத்து மக்ககிட்டயும் ஊர் குளத்த பத்தி விசாரிச்சிங்கன்னா அனைத்து சாதி மக்களும் அதோட அருமை பெருமையை சொல்லி புலம்புவாங்க. பொதுக்குளம் இல்லாம வாழ்க்கை இல்லை.

வறண்டு வற்றிப் போன மீன் வளர்ப்பு குளம் (படம் – சரசம்மா)

விவசாயத்த சக உயிரா நெனச்சு பாதுகாத்த விவசாயிக்கி எப்படி இப்படி வயல்ல மீன் வளர்க்க மனசு வரும். இராப்பகலா வயல்ல கெடந்து குடும்பமா வேல செஞ்சாலும் வீட்டுல நின்ன ஒரு ஜோடி உழவு மாட்ட சந்தையில வித்துட்டுதான் மகளோட மகப்பேறு செலவு பாக்க வேண்டியிருக்கும் ஒரு விவசாயியால.

எதத் தின்னா பித்து தெளியும்னு இருக்கவங்களுக்கு நிலம் குளமா மாறும்போது தண்ணி தட்டுப்பாட்டுக்கு ஏதுவான ஒன்னா தெரிஞ்சது.

கடந்த இருபது வருசமா விவசாயத்துல ஏற்பட்ட அழிவால கிராமத்துல பாதி பேரு வேற.. வேற தொழில தேடி நகரத்துப் பக்கம் போயிட்டாங்க. மிச்சமிருக்கவங்க நிக்கவும் முடியாம, நிலத்த விட்டுட்டு ஓடவும் முடியாம பாவப்பட்ட விவசாயத்த தன்மானமா நெனச்சு பல்ல கடிச்சுட்டு செய்றாங்க.

மழையும், காவிரியும் கைவிரிச்சிருச்சதும் விவசாயம் எப்புடி ஆழ்துளை கிணத்த நம்பி நடக்குதோ அதே போல, இப்ப மீன் வளர்ப்பு குளமும் ஆழ்துளை கிணத்த நம்பிதான் இருக்கு. நிலத்தடி நீரெடுத்துதான் குளத்துல இட்டு நெரப்புறாங்க. இந்த வசதி இல்லாத சிறு விவசாயிங்க வெட்டுன குளமெல்லாம் பயனற்றதா மாறுது. கிட்டதட்ட இறால் பண்ணை நிலமதான். பிள்ளையாரு பிடிக்கப் போயி குரங்கு வந்த கதையாருக்கு, விவசாயிங்க பாடு.

உள்மாவட்ட மக்களுக்கு கடல் மீனை விட ஆத்து மீனுதான் பிடிக்கும். அதுவும் மீனு உசுரோட இருந்தாத்தான் வாங்கவே செய்வாங்க. ஆழ்கடல்ல பிடிக்கிற சத்தான மீன்கள் ஐஸ்ல வெச்சுத்தான் கரை திரும்பும். சிம்லாவுல பறிக்கிற ஆப்பிள் நம்ம சந்தைக்கு வந்து சேர பல நாள் ஆகும். இதையெல்லாம் தெரியாம ஃபிரஷ்ஷா வாங்குறோம்கிற விவசாயிகளோட தப்பான பழக்கம் ஆட்டுக்கறி வாங்குற மாதிரி மீனுலயும் வந்துருச்சு. ஒரு புறம் கடல் மீனுங்களுக்கு உள்நாட்டு சந்தை இல்லாம ஏற்றுமதியாக, மறுபுறம் விவசாயத்தை காவு கொடுத்துட்டு நன்னீர் மீன் பண்ணைங்க வந்து போச்சு.

டெல்டாவுல இனி பொங்கல்ங்குற விவசாயப் பண்டிகைக்கு தேவையே இல்லாத நிலை வந்துருமோன்னு பயமாயிருக்கு!

சரசம்மா

விவசாய வருவாய்  இரட்டிப்பு வாக்குறுதி : மோடியின் அண்டப் புளுகுகள் !

விவசாயிகளின் வருவாயை 2022 – 23-க்குள் இரட்டிப்பாக மாற்றுவோம் என்று தனது தொடர்ச்சியான பொய் முழக்கத்தின் மூலம் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. தனது கடந்த ஆட்சியிலிருந்து விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்காமல் தனக்கு ஓய்வு இல்லை என்று மோடி முதல் பாரதிய ஜனதாக் கட்சி முழுவதும் ஒரு பொய்யுரையை, விவசாயத்தில் வளர்ச்சி நடைபெற்றுக் கொண்டிருப்பது போல பரப்பி வருகிறார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பாரதிய ஜனதாவின் ஆட்சியில் விவசாயத்தில் ஏற்பட்ட நலிவு, விவசாயிகளின் தற்கொலை, தாங்கொணாத் துயரம், விளைபொருட்களுக்கு   குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லாமை, விவசாயிகளின் கடன் சுமை , விளைபொருள் நாசம், விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறுவது என்று  பல துயரங்கள் விவசாயிகளின் போராட்டத்தை எழுச்சியுறச் செய்தன.

சென்ற வருடத்தில் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள்,  நாசிக்கிலிருந்து மும்பை நோக்கி நடைபெற்ற விவசாயிகளின் எழுச்சி மிகு பேரணி  போன்றவை தனது ஆட்சியின் போது பாரதிய ஜனதா அரசு விவசாயிகளையும் விவசாயத்தையும் எவ்வாறு வஞ்சித்து வந்தது என்பதற்கு சாட்சியாக இருக்கிறது.

தன்னுடைய அரசு விவசாயத்திற்கு நல்ல பல திட்டங்கள் கொண்டு வந்திருப்பதாகவும், இன்னும் சில ஆண்டுகளில் விவசாயிகள் இரட்டிப்பு வருவாய் பெறுவதற்கான திட்டங்கள் அனைத்தும் செயல் வடிவம் பெற்றுக் கொண்டிருப்பது போலவும் ஒரு தோற்றத்தை 2019 தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் மூலம்  உருவாக்குகியது பாரதிய ஜனதா.

பா.ஜ.க அரசு தனது கடந்த 2014 தேர்தல் அறிக்கையில் கூறிய விவசாய திட்டங்களில்  ஒன்று கூட விவசாயிகளுக்கு நல்ல மாற்றத்தை உருவாக்கக் கூடியதாக இல்லை. அவர்களை தற்கொலைச் சாவுக்கு தள்ளக்கூடியதாகத் தான் இருந்தது.

விவசாயிகளுக்கு விளைபொருட்களின் விளைச்சலுக்கு ஆகும் செலவிலிருந்து 1.5 மடங்கு அதிகமாக வருவாய், விவசாய சந்தை சீரமைப்பு மாற்றங்கள், கொள்முதல் நிறுவனங்களை திறனுள்ளவையாக மாற்றுதல்,  உணவு உற்பத்தியை திறம்பட ஊக்குவித்தல் என்பவை போன்ற திட்டங்கள்  விவசாயிகள் வாழ்வில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவரப் போவதாக கூறி தன் ஐந்து வருட ஆட்சியில் மக்களை ஏமாற்றி விட்டு, விவசாயிகளின் வாழ்க்கையில் இரண்டாம்  கருப்பு அத்தியாயம் எழுத மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கிறது பா.ஜ.க.

பாரதிய ஜனதா தனது 2014 தேர்தல் வாக்குறுதியாக பல விவசாய திட்டங்களை  மக்களுக்கு கூறியவைற்றையும், அத்திட்டங்களின் தற்போதையை நிலைமையையும் பார்போம். இந்த திட்டங்கள் விவசாயிகளுக்கு எந்த ஒரு பலனையும் தராமல்,  அவர்களை மேலும் அதிக சுமையில் விழச் செய்வதாகத்தான் இருந்தது.

பாஜக தேர்தல் அறிக்கை :

1. விவசாயம்தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பொறி இயந்திரம் போன்றது. அதிகமான வேலைவாய்ப்பு தரும் விவசாயத்திற்கு பாரதிய ஜனதா அரசு, விவசாய வளர்ச்சியை மேம்படுத்துவது, விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பு, கிராமப் பொருளாதாரத்தை உயர்த்துவது போன்றவற்றில் அதிக முக்கியத்துவம் தருகிறது.

தற்போதைய நிலைமை :

பாரதிய ஜனதா கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றுதான், விவசாயிகளின் வருவாயை 2022 -23 க்குள்  இரட்டிப்பு ஆக்குவது. விவசாய மற்றும் கிராமப்புற தேசிய வங்கி இதை எவ்வாறு நிறைவேற்றப் போகிறது என்பதை 2016 -ல் வெளியிட்டது. நிதி ஆயோக் இதற்காக திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.

ஆனால் உண்மை நிலவரம் வேறாக இருக்கிறது. கடந்த பதினான்கு ஆண்டுகளில், 2018 கடைசி காலாண்டில்தான் (அக்டோபர் – டிசம்பர் 2018 -ல்)  விவசாய வருவாய் மிகவும் குறைவாக  வெறும் 2.04% தான் இருந்ததாக  இந்தியன் எக்ஸ்பிரஸ்  மார்ச் 2019 அறிக்கை கூறுகிறது.

பா.ஜ.க, பிரதான் மந்திரி கிசான் சம்மன் சித்கி என்ற திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ஆறாயிரம் ரூபாயை – மூன்று தவணையாக,   இரண்டு ஏக்கர் வரை பெற்றுள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறது.  இது விவசாயத்தில் அரசு முதலீட்டை, பாரிய அளவு குறைத்து விட்டு, பி.எம். கிசான், பி.எம். கிசான் பென்சன் யோஜனா என்று முதலீடுகளை மடைமாற்றி நாட்டு மக்களை ஏமாற்றி வரும் அயோக்கித்தனமாகும்.

பாஜக தேர்தல் அறிக்கை :

  1. விவசாயத்திலும் , கிராமப்புற மேம்பாட்டிலும் பொது முதலீடுகளை அதிகப்படுத்துதல் :

தற்போதைய நிலைமை:

அரசு முதலீடுகள் கடந்த 1980 – 81-ல் 43.2% இருந்தது. ஆனால் 2015 – 17-ல் 18.8%-ஆக வீழ்ச்சியடைந்து இருக்கிறது. விவசாயத்தில் தனியார் முதலீடுகள் 2015 – 17-ல் 82%-ஆக இருக்கிறது

நன்றி : From plate to plough: Fielding the right incentives- March 18,2019 Indian Expres

விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தி 2011-12 ல் அதிகமாக 18.2% இருந்தது. இது 2015-17 காலத்தில் 13.8% க்கு சரிந்துள்ளது. கடந்த 5 வருடங்களில் விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 % சரிந்துள்ளது.

இப்படி விவசாய உற்பத்தியும், அரசு முதலீடுகளும் நாளுக்கு நாள் குறைவாக இருக்கும்போது விவசாயிகளின் வருமானம் எவ்வாறு அதிகமாகும்?

பாஜக தேர்தல் அறிக்கை :

  1. உற்பத்தி செலவில் இருந்து கூடுதலாக 50% இலாபத்தை விவசாய விளைபொருட்களுக்கு பாரதிய ஜனதா உத்திரவாதப்படுத்தும். இதை குறைந்த விலையுள்ள விவசாய உள்ளீடுகள்  மற்றும் கடன் வழங்குதல், அதிக மகசூல் கொடுக்கும் விதைகளை வழங்குதல் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத சட்டத்தை இணைப்பதன் மூலம் விவசாயத்திற்கு மேற்கொள்ளும் வருவாய் அதிகரிப்பு நடவடிக்கையாகும்.

தற்போதைய நிலைமை:

கடந்த 2018-19 பட்ஜெட் தாக்கலின் போது விளைபொருட்களுக்கான குறைந்தப்பட்ச ஆதரவு விலையானது (Minimum support Price- MSP) விவசாய உற்பத்தி செலவிலிருந்து ஒன்றரை மடங்கு அதிகரிக்கப்படும்  என அருண்ஜெட்லி அறிவித்தார். ஆனால் மத்திய அரசு விளைபொருட்களுக்கான குறைந்தப்பட்ச ஆதரவு விலையை ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு ஜீலை 2018-ல்தான் அறிவித்தது.

படிக்க:
விவசாயம் சார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் சாத்தியமானவையா ?
♦ அரியானாவில் திருட்டுத்தனமாக பயிரிடப்படும் பி.டி. கத்திரிக்காய் !

விவசாய செலவு மற்றும் விலைகள் ஆணையம்  மூன்று வெவ்வேறு வரையறைகளை விளைப் பொருட்களுக்கான குறைந்தப்பட்ச ஆதரவு விலைக்காக வகுத்துள்ளது.

  1. விவசாய உற்பத்திக்கான செலவு (A2 )
  2. விவசாய உற்பத்திக்கான செலவு + குடும்ப உறுப்பினர்கள் உழைப்பு மதிப்பு (A2+FL)
  3. விரிவான செலவு (Comprehensive Cost -C2) நில வாடகை, விவசாயி தான் பெற்றுள்ள சொந்த நிலத்திற்கான வட்டி மற்றும் விவசாயத்திற்காக போடப்படும் மொத்த செலவிற்கான வட்டி.

சுருக்கமாக  C2 > A2+FL> A2 ஆகும்.

குறைந்தபட்ச ஆதரவு விலையானது சுவாமிநாதன் கமிசன்,  விவசாய உற்பத்திக்கான விரிவான செலவை (C2) உள்ளடக்கி இருக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் பாரதிய ஜனதா  இதைப் பின்பற்றுவதில்லை. பா.ஜ.க அரசு விரிவான செலவை ஒதுக்கி விட்டு விளைப் பொருட்களுக்கான குறைந்தப்பட்ச ஆதரவு விலையை (A2 +FL) மட்டும் கொண்டு நிர்ணயிக்கிறது. இது விவசாயிகளை ஏமாற்றும் பித்தலாட்டம். இந்த அடிப்படையில் விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை எவ்வாறு விவசாயிகளுக்கு கிடைக்கும்?

பாஜக தேர்தல் அறிக்கை :

  1. குறைந்த நீர் நுகர்வு நீர்ப்பாசன நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் & ஊக்குவித்தல், நீர் வளங்களை சரியான பயன்பாட்டுக்கு பயன்படுத்துதல் :

தற்போதைய நிலைமை:

பிரதான் மந்திரி க்ரிசி சிஞ்சாயி யோஜனா என்ற திட்டம், கடந்த 2015-ம் ஆண்டு நிறுவப்பட்டது. ஒட்டுமொத்தமாக பாசனப் பரப்புகளின் எண்ணிக்கையை, நீர் மேலாண்மையை பயன்படுத்தி அதிகரிப்பது  என்பதன் அடிப்படையில் மாநில அரசுகளோடு சேர்ந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஆனால் இந்த  நிகர பாசன பரப்பளவு வெறும் ஐந்து மாநிலங்களில் இருந்து 78% பெறப்படுகிறது. அந்த மாநிலப் பாசனப் பரப்புகளின் எண்ணிக்கையைக் கொண்டுதான் பிரதான்  மந்திரி க்ரிசி சிஞ்சாயி யோஜனா திட்டம் தன்னுடைய இலக்கை 2015 முதல் அடைந்து வருவதாக இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.

பாஜக தேர்தல் அறிக்கை :

  1. மண்ணின் தரத்திற்கு ஏற்ப பயிர்களை அறிமுகப்படுத்துதல் & நகரும் மண் பரிசோதனை ஆய்வகங்களை அமைத்தல் (Mobile soil testing Lab)

தற்போதைய நிலைமை :

மண்வள அடையாள அட்டை 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் படி விவசாயிகளின் நிலங்களின் மண்ணின் தரம் பரிசோதிக்கப்பட்டு விவசாயிகள் எந்த உரங்களை வாங்க வேண்டும், எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்பதை விவசாயிகளின் மண் வள அடையாள அட்டைக் கொண்டு தெரிவிக்கப்படும்.

ஆனால் ஒரு அடையாள அட்டையானது சராசரியாக  2.5 ஹெக்டர் பாசனப் பரப்பளவிற்கும் 10 ஹெக்டர் பாசனமில்லாத பரப்பளவிற்கும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு விவசாயிகளும் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பை பெற்றிருக்கிறார்கள். அதனால் இந்த மண் அடையாள அட்டை விவசாயிகளுக்கு ஏற்பதுடையதாக இல்லை. ஒவ்வொரு 2.5 ஹெக்டர் பாசனப் பரப்பளவிலும் வெவ்வேறு பயிர்கள் விளைவிக்கப்படுகிறது. இதனால் மண்ணின் தரமும் மாறுபடுகிறது.

மேலும் உரங்களின் அளவு கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கும்போது அது பயிர் விளைச்சலை பாதிக்கும் என்பதால் இதை விவசாயிகள் ஏற்க மறுக்கிறார்கள். மேலும் தொடர்ச்சியான மண் பரிசோதனைகள் நடத்துவதற்கு மண் பரிசோதனைக் கூடங்கள் இல்லை.

பாஜக தேர்தல் அறிக்கை :

  1. பூச்சி மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு திட்டங்களை மறுசீரமைத்தல் :

தற்போதைய நிலைமை :

கொடிய பூச்சி மருந்துகளை பயிர்களுக்கு தெளிக்கும் போது சுவாசித்ததனால் 2017 -ல் மகாராட்டிராவில் பல பருத்தி விவசாயிகள் இறந்தனர். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்  போதே வர்மா கமிட்டி என்ற கமிட்டி பூச்சிக் கொல்லி மருந்துகளை ஆய்வு செய்வதற்காக பரிந்துரைக்கப்பட்டது.

வர்மா கமிட்டியின் விசாரணையில் 99 பூச்சிக்கொல்லிகளில் 66 பூச்சிகொல்லிகள் பிறநாடுகளில் தடைசெய்யப்பட்டவை என்று தெரிவித்தது. ஆனால் பா.ஜ.க அரசு, வர்மா கமிட்டியின் ஆலோசனைகளை மதிப்பிடுவதற்காக மார்ச் 2017-ல் வேறொரு கமிட்டியைப் பரித்துரைத்தது. இந்தக் கமிட்டியின் தலைவர் ஜீலை 2017-ல் தன் அறிக்கையை சமர்ப்பிக்காமல் ஓய்வுப் பெற்றதனால், வேறொரு புதிய கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்தப் புதிய கமிட்டி வெறும் 18 பூச்சிக்கொல்லிகளை தடை செய்தது. இந்தத்  தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லிகள் இறந்த விவசாயிகள்  பயன்படுத்தியது அல்ல.

பாஜக தேர்தல் அறிக்கை :

  1. உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை செயல்படுத்துதல் மற்றும் ஊக்கப்படுத்துதல் என்பது இதுநாள் வரை ஒரு வாய்ச்சவடாலாகத் தான் இருந்து வந்திருக்கிறது. உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை வளையங்களை அமைப்பதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல வருவாயும், வேலை வாய்ப்பும் உருவாக்கித் தரப்படும். இந்த தொழிற்சாலைகள் அதிக ஏற்றுமதி தரத்துடன் செயல்படுத்தப்படும்.

தற்போதைய நிலைமை :

விவசாய ஏற்றுமதிக் கொள்கையானது, உணவு பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதிக்காக ஒரு புதிய கொள்கையை டிசம்பர் 2018-ல் விவாதித்தது. இது இன்று வரை வாய்ச்சவலாடாகத் தான் இருக்கிறது.

பாஜக தேர்தல் அறிக்கை :

  1. ஆர்கானிக் வேளாண்மைப் பண்ணைகள் & உர மையங்களை அமைத்தல் :

தற்போதைய நிலைமை :

இந்த ஆர்கானிக் பண்ணைகளின் விளைப்பொருட்களின் விலை  சராசரி இந்தியருக்கு எட்டாக்கனியாக உள்ளது. மேலும் சந்தைகளின் எண்ணிக்கை பரவலாக ஏற்படவே இல்லை. மேலும் உற்பத்திக்கான செலவும் அதிகமாக உள்ளது.

பாஜக தேர்தல் அறிக்கை :

  1. எதிர்பாராத இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு ஒரு பண்ணை காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்துதல்:

தற்போதைய நிலைமை :

பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனா, ஏற்கனவே நிலவும் காப்பீட்டு திட்டங்களை அப்புறப்படுத்தி விட்டு புதியதாக வந்து  உட்கார்ந்தது.. தனியார் நிறுவனங்களை பயிர் காப்பீட்டு  சந்தையில் அனுமதித்ததுதான் இதன் சாதனை. பயிர் காப்பீட்டு சந்தையில் தனியார் நிறுவனங்களின் ஏகபோகத்தை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு மண்டலத்திலும் ஒவ்வொரு தனியார் நிறுவனங்களை அனுமதித்து அந்நிறுவனங்களுக்குள் போட்டி இல்லாமல் பார்த்துக் கொள்கிறது பா.ஜ.க.

படிக்க:
விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ? புதிய ஜனநாயகம் ஜனவரி 2019
♦ மான்சாண்டோ : பருத்தி விவசாயத்தைச் சுற்றி வளைத்திருக்கும் மலைப்பாம்பு !

பாஜக தேர்தல் அறிக்கை :

  1. கிராமப்புற கடன் வசதிகளை விரிவுப்படுத்துதல் மற்றும் பலப்படுத்துதல்:

தற்போதைய நிலைமை :

கிராமப்புறங்களில் அரசு வங்கி கிளைகளின் எண்ணிக்கை குறைந்து, கந்து வட்டிகாரர்களின் எண்ணிக்கை தான் அதிகரித்து வருகிறது. வணிக வங்கிகள், பிராந்திய கிராம வங்கிகள் தன்னுடைய இலக்கை அடைய முடிந்த போதிலும், கூட்டுறவு வங்கிகள் 96.4% தான் அடைய முடிந்தது. கந்து வட்டி மாபியாக்கள் கையில் சிக்கி விவசாயிகளின் தற்கொலைகள்தான் அதிகரித்து வருகின்றன.

பாஜக தேர்தல் அறிக்கை :

  1. வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டியை சீரமைத்தல்:

தற்போதைய நிலைமை :

விவசாய அமைச்சகம் APMC சட்டத்தை உருவாக்கியது. ஆனால் இது மாநிலங்களுக்கு இடையான வர்த்தகம் ஒரே சந்தை வரி என்று உருவாக்கப்பட்டது. ஆனால் மாநில அரசுகளால் தொடங்கப்படாமல் இருக்கிறது.

பாஜக தேர்தல் அறிக்கை :

  1. பிராந்திய விவசாய தொலைக்காட்சி சேனல்களை அமைத்தல்:

தற்போதைய நிலைமை :

பிராந்திய மொழிகளுக்கு என்று எந்த ஒரு விவசாய தொலைக்காட்சி சேனல்களும் இது வரை உருவாக்கப்படவில்லை.

பாஜக தேர்தல் அறிக்கை :

13. கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்புக்கு அதிக முன்னுரிமை அளித்தல்:

தற்போதைய நிலைமை :

கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு என்று நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை . ஊரக  வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ஏற்படும் பற்றாக்குறை, மாநிலங்களின் தலையில் சுமத்தப்படுகிறது.

பாஜக தேர்தல் அறிக்கை :

14. மரபணு மாற்றப்பட்ட உணவுகள் மண், மனிதர்கள், அதன் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு அறிவியல் ரீதியான பரிசோதனைக்கு பின்தான் அனுமதிக்கப்படும்:

தற்போதைய நிலைமை :

சுகாதார அமைச்சர்  ஜே.பி.நாட்டாவே மரபணு மாற்றப்பட்ட GM சோயாவும், GM கடுகு எண்னெயும் இறக்குமதி செய்யப்பட்டன என்று டிசம்பர் 2017 பாராளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

பாஜக தேர்தல் அறிக்கை :

15. ஒரே தேசிய விவசாய சந்தையை உருவாக்குதல் :

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு ஒரு விவசாய சந்தையை ஏப்ரல் 2016-ல் தொடங்கப்பட்டது. ஆனால் இதில் நாட்டிலுள்ள 22,000 சந்தைகளில் 585தான் இணைந்தன. மாநிலங்களுக்குள்ளான E-NAM என்பது ஜனவரி 2019-ல்தான் ஆரம்பமாயின.

விவசாய விளைபொருட்களை சேமித்து வைப்பதற்கு  மாநிலங்களுக்குள் சேமிப்புக் கிடங்கு உருவாக்கப்படும் என்ற திட்டம் எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பதை  தக்காளி விவசாயிகளும், உருளை விவசாயிகளும், பால் விவசாயிகளும் தங்கள் விளைப் பொருட்களை வீதியில் கொட்டி பா.ஜ.க -விற்கு புரிய வைத்துள்ளனர்.

இப்படி பா.ஜ.க கொண்டுவந்த விவசாயத் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு எந்த விதத்திலும் பயன்தரத்தக்க விதத்தில் இல்லை. மக்களை ‘கிலுகிலுப்பைக்காரன்’ போல ஏமாற்றி வருகிறது.

தனது 2019 தேர்தல் அறிக்கையில், சுமார் இருபத்து ஐந்து லட்சம் கோடி வேளாண் துறையில் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக முதலீடு செய்ய உறுதியளிப்பதாகக்  கூறுகிறது பா.ஜ.க. இதில் நைச்சியமாக அரசு முதலீடு என்ற பதத்தை தவிர்த்து இருக்கிறது. பித்தலாட்ட தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் பா.ஜ.க விவசாய திட்டங்கள்  பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகத்திற்கு வழிவகுக்கும்  திட்டங்களாக இருக்கிறது. அது  விவசாயிகளுக்கு துயரங்களைத்தான் பயிர் செய்ய வழிவகுக்கின்றன.

தேர்தல் வாக்குறுதிகள் போல இந்திய தேர்தலும் ஒரு பித்தலாட்டம் என்பதை எங்கள் விவசாய வர்க்கம், பா.ஜ.க ஏற்படுத்தும் விவசாய துயரத் திட்டங்கள் மூலம் புரிந்துக் கொள்ளும். அப்போது எமது வீரஞ்செறிந்த விவசாய வர்க்கம் பாராளுமன்ற வீதிகளில் நிற்காது! பாராளுமன்ற வாயிலில் நிற்கும்!

பரணிதரன்

செய்தி ஆதாரம் :
BJP 2014 Manifesto check : Has the Modi government come good on its promises to farmers?
NDA 2.0’s Big Rural Challenge Will be Doubling Farmers’Income by 2022
‘5 states account for 78% of progress in micro-irrigation’
Fertiliser subsidy reform plan linked to soil health cards of farms – But it did not work
India finally bans 18 toxic pesticidies – but still leaves out several dangerous ones

சென்னைக்குத் தேவைப்படும் தண்ணீருக்காக பாலைவனமாக்கப்படும் கிராமங்கள் !

மிழகம் முழுவதும் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் மக்களை நிலைகுலையச் செய்திருக்கிறது. முக்கியமாக தலைநகரமான சென்னையில் அதன் தாக்கம் அதிகரித்திருப்பதை தினந்தோறும் அனுபவித்து வருகிறார்கள்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. கடந்த ஆண்டு 4 ஏரிகளிலும் 3,872 மில்லியன் கன அடியாக இருந்த நீர் இன்று வெறும் 261 மில்லியன் கனஅடியாக குறைந்துவிட்டது. சென்னைக்கு தினமும் 854 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. ‘மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்’. தண்ணீர் தட்டுப்பாட்டால் தற்போது 400 மில்லியன் லிட்டர் குடிநீர்தான் வினியோகிக்கப்படுகிறது.

வீராணம் ஏரியில் இருந்து வரும் குடிநீர், கடல் குடிநீர், கல்குவாரியில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர், விவசாய கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீர் ஆகியவற்றை லாரிகள் மூலம் வினியோகம் செய்து வருகின்றனர்.

(படம் – வினவு செய்தியாளர்)

கடும் வறட்சியால் ஆழ்துளை கிணறுகளும் வறண்டு வருவதால் எப்போது வேண்டுமானாலும் அவை நின்று விடும் அபாயம் சூழ்ந்திருக்கிறது. இப்பொழுதே லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீர் வருவதில்லை. அப்படியே வந்தாலும் 1 லாரிக்கு 500 காலி குடங்களுடன் பெண்கள் சூழ்ந்துவிடுகின்றனர்.

சென்னையில் 900 லாரிகள் மூலம் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடைகள் தண்ணீர் வினியோகிக்கப்படுவதாக சொன்னாலும் பல்வேறு பகுதிகளில் லாரி தண்ணீர் கிடைப்பதில்லை என்று மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

படிக்க:
திருப்பூர் தண்ணீர் பஞ்சத்திற்கு யார் காரணம் ? நேரடி ரிப்போர்ட்
♦ தமிழக தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு காரணம் யார் ?

குடிப்பதற்கு தண்ணீரின்றி ‘கேன் வாட்டர்’ வாங்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், ‘கேன் வாட்டர்’ விநியோகிப்பவர்களும் விலையை ஏற்றிவிட்டதாக தெரிவிக்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறையின் விளைவு, பால் உள்ளிட்ட பொருட்களின் விலையும் ஏறக்கூடிய அபாய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். சென்னை நகருக்குள் 1 நாள் விட்டு 1 நாள் ஓரளவு தண்ணீர் கிடைத்தாலும் தண்ணீர் பஞ்சம் முழுவதுமாக தீர்ந்தபாடு இல்லை.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஏனெனில் சென்னைக்கான தண்ணீர் தேவை மிகவும் பெரியது. தற்போது விநியோகிக்கப்படும் தண்ணீரானது ‘யானைப் பசிக்கு சோளப்பொரியை போடுவது’போல் இருக்கிறது. தனியார் தண்ணீர் வியாபாரம் சென்னையில் கொடிகட்டிப் பறக்கிறது. 24 ஆயிரம் லிட்டர் தண்ணீர் லாரியில் இருந்து மினி தண்ணீர் பாட்டில் வரை சிட்டிக்குள் குவிகிறது. இருப்பினும் எத்தனை நாளைக்கு பணம் கொடுத்து தண்ணீர் வாங்க முடியும்? ஏற்கனவே இருக்கும் பொருளாதார நெருக்கடியில் இது கூடுதல் சுமையாகிறது. தண்ணீர் வசதியுடன் கூடிய வீட்டில் வாடகையும் உயர்வதால் சென்னை மக்கள் பலரும் புறநகரை நோக்கி படையெடுக்கும் அவலத்தை சந்திக்கிறார்கள்.

சென்னை புறநகர் பகுதிகளில் தண்ணீர் பிரச்சனை இல்லையா?

செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகளில் இருந்துதான் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருகிறார்கள். ஆனால் அப்பகுதி மக்கள் தற்போது குடிக்க ஒரு குடம் தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். கடல் போல் பரந்து விரிந்து இருந்த செம்பரம்பாக்கம் ஏரி தற்போது வறண்டு பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.

முன்னொரு காலத்தில் விளைந்த நிலம் இப்போது சீர் கெட்டு நிற்கும் அவலநிலை. இடம் -பாரதி நகர் (படம் – வினவு செய்தியாளர்)

செம்பரம்பாக்கம் ஏரியின் வடிகால் பகுதியான தண்டலம், பாரதிநகர் தொடங்கி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் சுற்றுசுவர்வரை வாழை, நெல் விளைந்த நன்செய் நிலங்கள் இப்போது தேசிய நெடுஞ்சாலையாகவும் அடுக்குமாடி கான்கிரீட் காடுகளாகவும் உருமாறிவிட்டன. இங்கே கூலி விவசாயிகளாக இருந்தவர்கள் இப்போது தனியார் கம்பெனிகளில் கீழ்மட்ட வேலைகளில் வாரக் கூலிகளாக காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் இவர்கள், குடிக்க தண்ணீர் கேட்டு போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

தனியார் தண்ணீர் கம்பெனிகளின் வருகையால் பாதிக்கப்பட்ட பாரதி நகரைச் சேர்ந்த; ஊர் பெரியவரான வேலாயுதம் சொல்கிறார். “இதோ மூன்று அடி அகல சாக்கடையாக சுருங்கிப் போய் இருக்கும் இந்த வாய்க்காலில்தான் செம்பரம்பாக்கம் ஏரி நீர் 15-க்கு 15 அடி அகலத்திற்கு நீர் கரை புரண்டு ஓடும். அது மட்டுமல்ல எங்கள் பசங்களும் இதில் குளித்து விளையாடினார்கள். இப்போது எல்லாம் கனவு போலிருக்கிறது.

ஊர் பெரியவர் ஐயா வேலாயுதம் (வலது)

எங்கள் வீட்டு கிணறு தரையிலிருந்து 3 அடி ஆழத்தில் நீரை கையாலேயே அள்ளினோம். ஆனால் இப்போது அப்படி இல்லை. எப்போது இந்த பகுதியில் பைபாஸ் போட்டார்களோ அப்போதே விவசாயம் முதற்கொண்டு எல்லாத்தையும் இழந்துவிட்டோம். சுற்றி அடுக்குமாடி குடியிருப்புகள் வந்த பிறகு தனியார் தண்ணீர் கம்பனிகள் இங்கு மூலைக்கு மூலை கிளம்பிவிட்டன. பத்தடிக்கு ஒரு தண்ணீர் எடுக்கும் கம்பனிகள் பெருகிவிட்டது.

இன்று எங்களை சுற்றி இரண்டு கிலோ மீட்டர் சுற்றுக்குள் மட்டும் 10-க்கும் மேற்பட்ட தண்ணீர் கம்பெனிகள் இயங்குகின்றன. 24 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கண்டெய்னர் லாரிகள் இரவு பகல் என 24 மணிநேரமும் தண்ணீரை உறிஞ்சி பாலைவனமாக  மாற்றிவிட்டார்கள்.

நீரை உரிஞ்சும் தனியார் தண்ணீர் நிறுவனங்கள் :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டுமல்ல. ஹோட்டல்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்யாண மண்டபங்கள் என எல்லா இடங்களுக்கும் தண்ணீரை அனுப்புகிறார்கள். இதனால் ஒவ்வொரு கிராமத்திலும் நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்திற்கு சென்று விட்டது.

”இப்போது ஊரில் இருக்கும் பொதுக் கிணற்றிலும் நீர் வற்றியதால் தெருக் குழாயில் தண்ணீர் வருவதில்லை. முதலில் குடிப்பதற்கு மட்டும் கேன் தண்ணீர் வாங்கிய நாங்கள் துவைப்பதற்கும் தண்ணீர் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விட்டோம்.

கூலி வேலைக்கு போகும் பெண்களும், ஆண்களும் குளிக்க கூட வழியின்றி வேலைக்கு செல்கிறார்கள். சோறு இல்லை என்றாலும் தினமும் குளித்து முடித்து சுத்தமாக இருக்கும் நாங்கள் இப்போது வியர்வை நாற்றத்தில் இருந்து கொண்டிருக்கிறோம்.

படிக்க:
பெருங்குடி : விஷவாயு தாக்கி மூவர் பலி – PRPC அறிக்கை !
♦ ஒரு குடம் தண்ணிக்கு ஓராயிரம் பேர்கிட்ட வசவு வாங்கறதா இருக்கு !

எங்க ஊரில் உள்ள தண்ணீர் பிரச்சனையை தீர்க்க மனுவாக எழுதி அதிகாரிகளிடம் கொடுத்தோம். அதிகாரிகள் எங்கள் பிரச்சினையை ஏதும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. எனவே எல்லோரும் ஒன்று சேர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்த ஒரு மணிநேரத்தில் அதிகாரிகளும் போலீசும் வந்து சமாதானமாக போகச் சொன்னார்கள்.

நாங்களோ தண்ணீரை கொள்ளையடிக்கும் நிறுவனங்களுக்கு பூட்டு போடாமல் இங்கிருந்து கிளம்ப மாட்டோம் என்று உறுதியாக இருந்ததால், அதிகாரிகள் வேறுவழியின்றி தண்ணீர் கம்பெனியை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவு போட்டு நிறுத்தியிருக்கிறார்கள்.

தண்ணீர் கம்பெனி மூடிய இரண்டாம் நாளே எங்கள் தெரு குழாய்களில் தண்ணீர் வருகிறது. கடந்த இரண்டு வாரமாகத்தான் பழையபடி வீட்டில் எல்லோரும் நிம்மதியாக இருக்கிறோம். வீட்டுப் பெண்களும் தண்ணீர் பஞ்சம் தீர்ந்த சந்தோஷத்தில் கூலி வேலைக்கு நேரத்திற்கு போகிறார்கள்.

இந்த நிம்மதியை இனிமேலும் நாங்கள் இழக்க மாட்டோம். அந்த தண்ணீர் கம்பெனிகளை திறக்கச் சொல்லி கோர்ட்டு உத்தரவு போட்டாலும் அதனை திறக்க விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்கிறார் பெரியவர் வேலாயுதம்.

வினவு களச் செய்தியாளர்கள்

பெட்டியின் சோகக் கதை ! | பொருளாதாரம் கற்போம் – 21

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 21

காலமும் மனிதனும் – பாகம் 2
அ.அனிக்கின்

பெட்டி தனக்கு எதிராக அரசவையிலும் அயர்லாந்தின் ஆளுநர்களோடும் நீதிமன்றங்களோடும் சதிச்செயல்களில் ஈடுபட்ட எதிரிகளைப் பற்றியே அதிகமாக எரிச்சலடைந்தார். அவர் தமது கடைசி இருபது வருடங்களில் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களில் கசப்புமிக்க குற்றச்சாட்டுகளையும் எரிச்சலான ஏமாற்றங்களையும் அதிகமாக எழுதியிருக்கிறார்.

சில சமயங்களில் அவர் சின்னப் புத்தி உடையவராக, அற்பமான விஷயங்களைப் பற்றிப் புகார் செய்பவராக, வசவுகளைப் பொழிபவராக இருக்கிறார். ஆனால் சீக்கிரமே அவருடைய இயல்பான நம்பிக்கையும் நகைச்சுவையும் அவரை ஆட்கொள்கிறது. அவர் உடனே திட்டங்களைத் தயாரிக்கிறார், அறிக்கைகளைச் சமர்ப்பிக்கிறார். மறுபடியும் தோல்வியைத் தழுவுகிறார்.

1660-ம் வருடத்திலிருந்தே லண்டனில் பாதி நேரம் அயர்லாந்தில் பாதி நேரம் என்ற வகையில் அவருடைய வாழ்க்கை கழிந்தது. 1685-ம் வருடத்தில்தான் அவர் தன்னுடைய குடும்பத்தோடு லண்டனுக்குப் போனார். அவருடைய உடைமைகளையும் – இவற்றில் ஐம்பத்து மூன்று பெட்டிகளில் அவர் வைத்திருந்த ஆவணங்கள் மிக முக்கியமானவை – தன்னோடு பத்திரமாகக் கொண்டு போனார். அந்த வருடத்தில் இரண்டாம் சார்ல்ஸ் இறந்து விட்டதால் இரண்டாம் ஜேம்ஸ் அரசரானார். புதிய அரசர் பெட்டியோடு சுமுகமாக இருப்பது போலத் தோன்றியது; வயோதிகரான பெட்டி புது வேகத்தோடு தயாரித்துக் கொடுத்த திட்டங்களை அவர் கருணையோடு பெற்றுக் கொண்டார். ஆனால் இது வெறும் மாயத்தோற்றம் என்பது சீக்கிரமே தெளிவாகியது.

இரண்டாம் ஜேம்ஸ்

1687-ம் வருடத்தில் பெட்டி காலில் அதிகமான வலியினால் பாதிக்கப்பட்டார். பிறகு உள்ளே கட்டி ஏற்பட்டு அழுகிப் போயிருப்பது தெரிந்தது. இதன் காரணமாக அந்த வருடம் டிசம்பர் மாதத்தில் அவர் மரணமடைந்தார். அவருடைய சொந்த ஊராகிய ரோம்ஸியில் அவர் உடல் புதைக்கப்பட்டது .

பெட்டி தன்னுடைய நெருங்கிய நண்பரான சர் இராபர்ட் சவுத்வெல்லுக்கு எழுதிய கடைசிக் கடிதங்கள் அதிகமாக அக்கறை காட்டக் கூடியனவாக இருக்கின்றன. அவர் தன்னுடைய மரணத்துக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு இவற்றை எழுதியிருந்தார். இக்கடிதங்களில் சுயநலம், அற்பமான விவகாரங்கள், தனிப்பட்ட ஆசைகள் ஆகியவற்றால் பாதிக்கப்படாத பெட்டியின் நம்பிக்கைகளைக் காண்கிறோம். பெட்டி தன் குடும்ப விவகாரங்களை கவனிக்காமல் வாழ்க்கைக்குச் சிறிது கூட சம்பந்தமில்லாதவற்றில் நேரத்தைக் கழிப்பதை சவுத்வெல் லேசாகக் கடிந்து கொண்டார் (இந்தச் சமயத்தில் பெட்டி பாதி குருடாகிப் போன நோயாளியாக இருந்தார். ஆனால் சமீபத்தில் நியூட்டன் எழுதிய இயற்கைத் தத்துவஞானத்தின் கணித அடிப்படைகள் என்ற புத்தகத்தைப் படித்துக் காட்டச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தார்).

இந்தக் கடிதங்களிலும் சர் வில்லியமின் இயல்பான தன்மையைப் பார்க்கிறோம். தன்னுடைய மூத்த மகன் சார்ல்ஸ் அந்தப் புத்தகத்தைப் புரிந்து கொண்டால் 200 பவுன் கொடுப்பதாகச் சொல்கிறார். அவர் தன்னுடைய குழந்தைகளை அதிகமாக நேசித்தார்; அவர்கள் எப்படி வளர வேண்டுமென்பதில் அதிகமான அக்கறை காட்டினார். அவர்களைப் பற்றி பெட்டி பின் வருமாறு எழுதினார்: ”என் மகளுக்கு அதிகமான செல்வத்தைக் கொடுத்து விட்டுப் போக வேண்டுமென்பதற்காக நான் வியர்வை சிந்தப் பாடுபட மாட்டேன்; சோம்பேறித் தேனீக்களுக்கு நான் தேனாக இருக்கப் போவதில்லை. என் மகன், அவன் அதிகமாக நேசிக்கின்ற மனைவியின் சொத்துக்களுக்குள்ளாகவே வாழ்க்கை நடத்த வேண்டுமென்று விரும்புகிறேன்.” வாழ்க்கையின் இலட்சியத்தைப் பற்றிப் பின்வருமாறு எழுதுகிறார்: ”… இப்படிப் பலனில்லாத உழைப்பில் நான் தொடர்ந்து ஈடுபடுவது ஏன் என்று நீங்கள் கேட்கலாம்… இவை எனக்கு ஆனந்தத்தைத் தருகின்ற பணிகள்; பகுத்தறிவைப் பயன்படுத்தி நன்கு ஆராய்ச்சி செய்வது மிக உயர்வானது; அது தேவதைகளுக் குரியது …” (1)

சர் வில்லியம் பெட்டியின் சமகாலத்தவர்களிடம் அவர் மூன்று வகையான பெயர் பெற்றிருந்தார். முதலாவதாக, புலமைமிக்க அறிஞர், எழுத்தாளர் என்றும்; இரண்டாவதாக, சோர்வில்லாத திட்டம் தயாரிக்கிறவர், கற்பனைக் காட்சியாளர் என்றும்; மூன்றாவதாக, கபடமான சூழ்ச்சிக்காரர், பேராசைக்காரர், தன்னுடைய நோக்கம் நிறைவேறுவதற்காக எந்த வழியையும் பின்பற்றக் கூடியவர் என்றும் அவரை வர்ணித்தார்கள். மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்ட பெயர், அயர்லாந்தில் நிலங்களை அளந்த காலத்திலிருந்து அவர் மரணமடைகிற வரை அவரைப் பின் தொடர்ந்தது. அதற்கு ஆதாரமில்லை என்றும் சொல்ல முடியாது.

படிக்க:
முதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்
♦ பிரான்ஸ் : ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்ட ஆடுகள் !

பெட்டியின் வாழ்க்கையின் பின்பாதியை சொத்துக்களுக்கு அதிபதியாகவும் சாமர்த்தியமான வியாபாரியாகவும் இருந்த ஒருவரின் வாழ்க்கை வரலாறு என்ற முறையில் இப்பொழுது பார்ப்போம்.

1656 – 57ம் வருடங்கள் அவருடைய வாழ்க்கையின் திருப்புமுனையாகும். கீழ் மட்டத்தில் அறிவுஜீவியாக இருந்த ஒருவர் லாப வேட்டைக்காரராக, வீர சாகஸக்காரராக மாறி, கடைசியில் செல்வம் படைத்த நிலவுடைமையாளரானார். இந்த மாற்றம் லண்டனிலும் ஆக்ஸ்போர்டிலும் விஞ்ஞானிகளான அவருடைய நண்பர்களுக்கு மகிழ்ச்சி இல்லாத வகையில் ஆச்சரியத்தைக் கொடுத்தது.

அவர்களுடைய எதிர்ப்பு பெட்டியின் நிதானத்தைக் குலைத்தது; அவருக்கு வேதனையைக் கொடுத்தது. பாயில் என்ற விஞ்ஞானியின் கருத்துக்களை அவர் அதிகமாக மதித்தபடியால், தயவு செய்து அவசரப்பட்டு முடிவு செய்ய வேண்டாம், என்ன நடந்தது என்பதை நேரில் விளக்கிக் கூறுவதற்கு வாய்ப்புக் கொடுங்கள் என்று அவருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தார். பிற்காலத்தில் இந்த மனஸ்தாபம் ஓரளவுக்கு மாறிவிட்டதென்றாலும் அதன் சுவடுகள் இருந்தன.

மறுவருகைக்குப் பிறகு தான் அபகரித்த நிலங்களைத் தன்னிடமே வைத்துக் கொள்வதற்காகப் பெட்டி மிகவும் தீவிரமாக முயற்சி செய்ய நேரிட்டது. முந்திய நிலவுடைமையாளர்களில் சிலர் புது அரசாங்கத்திடம் செல்வாக்குடையவர்களாக இருந்ததனால் நிலங்களைத் திரும்பப் பெறுவதற்கு எல்லா முயற்சிகளையும் செய்தார்கள். பெட்டி இந்தப் போராட்டத்தில் ஆத்திரத்தோடு தீவிரமாக ஈடுபட்டார்; தமது நேரத்தையும் திறமையையும் இதில் அதிகமாகச் செலவிட்டார். பல பகுதிகளிலும் சிதறிக்கிடந்த தம்முடைய நிலங்களைத் தக்க வைப்பதில் அவர் மொத்தத்தில் வெற்றியடைந்தார்; ஆனால் வழக்குகளுக்கு முடிவேயில்லாமல் அவர் பெருந்துன்பத்துக்கு ஆளானார்.

இவை மட்டுமல்ல. பெட்டி தன்னுடைய கோட்பாடுகளுக்கு மாறாகவும் நண்பர்களின் ஆலோசனைகளுக்கு விரோதமாகவும் ஒரு புதிய காரியத்தில் ஈடுபட்டார். அவர் “வரி வேட்டைக்காரர்கள்” கோஷ்டியில் சேர்ந்தார். இவர்கள் பெரும் பணக்காரர்கள், அரசாங்கத்திடம் பணத்தைக் கொடுத்து வரி விதிக்கும் உரிமையை விலைக்கு வாங்கி, அதைக் கொண்டு அதிகமான வரி விதித்துப் பணத்தை அறுவடை செய்பவர்கள். பெட்டி தம்முடைய புத்தகங்களில் இந்த முறையானது தொழில் முயற்சியையும் உற்பத்தியையும் நசுக்கி விடுகிறது என்று கண்டித்து எழுதியிருக்கிறார்; இதில் ஈடுபடுபவர்களை கொள்ளைக்காரர்கள், இரத்தத்தை உறிஞ்சுபவர்கள் என்று பகிரங்கமாகத் திட்டியிருக்கிறார்.

எனினும் அவர் இப்பொழுது அவர்களோடு கூட்டுச் சேர்ந்தார், தன் பங்குத் தொகையையும் கட்டினார்! வெகு சீக்கிரத்தில் அவருக்கும் அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது: அவரால் கொடுத்த பணத்தைத் திரும்ப வாங்க முடியவில்லை. எனவே வழக்குத் தொடர்ந்தார். அவர் இதுவரை ஈடுபட்டிருந்த வழக்குகளில் இதுதான் அதிகக் கசப்பானது, பொருளற்றது. இந்த வழக்கில் அவர் நன்றாகச் சிக்கிக் கொண்ட பொழுது நண்பர்கள் அவருக்காக வருத்தப்பட்டார்கள்; விரோதிகள் பழி வாங்கிவிட்டோம் என்று ஆனந்தப்பட்டார்கள்.

1677-ம் வருடத்தில் நீதிமன்றத்தை அவமதித்ததாக அவர் குறைவான காலத்துக்கு சிறையிலடைக்கப்பட்டார். அவர் அரசாங்கத்தில் பெரிய பதவிக்காக நெடுங்காலமாகப் பாடுபட்டு வந்திருக்கிறார். இனி மேல் அத்தகைய பதவி கிடைப்பதற்கான கடைசி வாய்ப்புக்களையும் இத்தகைய பழிகளினால் அவர் இழந்தார். அவருடைய திட்டங்களை நிறைவேற்றுவதற்காக அவர் விரும்பிய பதவி மறுக்கப்பட்டது.

சொத்துக்களின் அதிபதி சொத்துக்களுக்கு அடிமையானார், பெட்டி தம்முடைய கடிதங்களில் ஒன்றில் காற்றுக்கு எதிர்த் திசையில் படகைச் செலுத்தி ஓய்ந்து போன ஒரு அடிமைக்குத் தன்னை ஒப்பிடுகிறார். பணம், வாரம், வரி வேட்டை என்ற மோசமான உலகத்தில் தன்னுடைய ஆற்றலையும் சக்தியையும் செலவிட்டு ஓய்ந்து போன ஒரு திறமைசாலியின் சோகக்கதை – முதலாளித்துவ சோகக்கதை இது.

அவருடைய சமகாலத்தவர்கள் இந்த சோகக்கதையை உணர்ந்தார்கள் – ஆனால் அதைப் பற்றி வேறு வகையான முடிவுக்கு வந்தார்கள் என்பது இயற்கையே. பெட்டியின் மகத்தான திறமைகளுக்கும் அரசியலிலும் அரசாங்கத்திலும் அவருக்குக் கிடைத்த குறைவான வெற்றிகளுக்கும் உள்ள வேறுபாட்டை நினைத்து ஆச்சரியமடைந்தார்கள். அரசு விவகாரங்களைப் பற்றி இவரைக் காட்டிலும் சிறப்பான அறிவுடைய வேறொரு நபரைக் கற்பனை செய்யக் கூட முடியாது என்று ஜான் எவெலின் எழுதினார். ”நாட்டின் உற்பத்திகளை மேற்பார்வையிடுவதற்கும் வர்த்தகத்தைப் பெருக்குவதற்கும் உலகம் பூராவிலும் இவருக்குச் சமமாக யாரும் கிடையாது. நான் அரசனாக இருந்தால், இவரைக் குறைந்தபட்சம் என்னுடைய இரண்டாவது அமைச்சராகவாவது வைத்துக் கொள்வேன்.”

படிக்க:
மூலதனத்தின் தத்துவஞானம் : பாட்டாளி வர்க்கம் ஒரு வலிமையான தத்துவ ஆயுதத்தைப் பெறுகிறது !
♦ இதோ இவள்தான் பாவெல் விலாசவின் தாய் !

எனினும் கடற்படைத் தலைமையகத்தில் ஒரு சாதாரணமான பதவிக்கு மேல் வேறு எதுவும் பெட்டிக்குக் கிடைக்கவில்லை …..

தன்னுடைய மூளையையும் சக்தியையும் கசக்கிப் பிழிந்த அன்றாட வேலைகளின் அற்பமான தன்மையைப் பெட்டி ஒருபோதும் பார்க்காதிருக்கவில்லை. அவர் சில சமயங்களில் தன்னையே கிண்டல் செய்து சிரித்துக் கொண்டார். ஆனால் அந்த நச்சுச் சுழலை விட்டு வெளியே வருவதற்கு அவரால் முடியவில்லை. அவருடைய எழுத்துக்களில் இருக்கும் மணிச்சுருக்கம் பாராட்டுக்குரியது; மேலும் அது அவருடைய இயல்பைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. அதே சமயத்தில் அவர் மற்ற விஷயங்களில் அதிகமான கவனம் செலுத்தியதன் விளைவு அது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

1682-ம் வருடத்தில், ஆங்கில நாணயங்களை மறுபடியும் அச்சுப் பதிப்பது பற்றி ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் சம்பந்தமாக ஒரு சிறு பிரசுரத்தை பணத்தைப் பற்றி சில தகவல்கள் என்ற தலைப்பில் வெளியிட்டார். அதில் முப்பத்திரண்டு கேள்விகளும் அவற்றுக்குச் சுருக்கமான பதில்களும் அடங்கியிருக்கின்றன. பணத்தைப் பற்றிய விஞ்ஞானத் தத்துவத்தின் இரும்புச் சட்டம், இதனைத் தாங்கி நிற்கும் அமைப்பு என்று இந்தப் பிரசுரத்தைச் சொல்லலாம். அதன் விரிவுகள், விவரங்கள், விளக்கங்கள், பல்வேறு பகுதிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் இடையே பிரிவுகள் ஆகிய மற்ற பொருள்களைச் சேர்த்துப் பூசிக் கட்டிடத்தை அமைக்க வேண்டும்.

இந்தக் குறிப்புகள் ஹாலிபாக்ஸ் பிரபுவுக்காக எழுதப்பட்டவை; பெட்டியின் வாழ்நாளில் இவை வெளியிடப்படவில்லை. இந்த அடக்கமான குறிப்புகளைப் பற்றி மார்க்ஸ், ”தட்டுத் தடங்கலின்றி எழுதி முடிக்கப்பட்ட புத்தகம்… ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்று கூடச் சொல்லலாம். அவருடைய மற்ற புத்தகங்களில் காணப்படுகின்ற வாணிப ஊக்கக் கொள்கையின் கடைசிச் சுவடுகள் கூட, இப்புத்தகத்தில் முழுமையாக மறைந்து விட்டன. உருவத்திலும் உள்ளடக்கத்திலும் இந்தச் சிறிய நூல் ஒரு உண்மையான கலைப் பொருள்”…(2) என்று குறிப்பிட்டார்.

பெட்டி உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தைத் தன்னுடைய கருத்து நிலையாக ஏற்றுக் கொண்டு, பணத்தை எக்காலத்துக்கும் உரிய சம்மதிப்பு என்ற பணியை நிறைவேற்றுகின்ற விசேஷமான பண்டமாகக் கருதுகிறார். எல்லாப் பண்டங்களையும் போல அதன் மதிப்பும் உழைப்பினால் உருவாக்கப்படுகிறது; விலையுயர்ந்த உலோகங்களை வெட்டி எடுப்பதில் செலவழிக்கப்படுகின்ற உழைப்பின் அளவைக் கொண்டு அதன் பரிவர்த்தனை மதிப்பு அளவுரீதியாக நிர்ணயிக்கப்படுகிறது.

செலாவணிக்குத் தேவையான பணத்தின் அளவு பண வர்த்தகத்தின் மொத்தத் தொகையினால் – அதாவது கடைசி நிலையில் கைவரப்பெற்ற பண்டங்களின் அளவு, அவற்றின் விலைகள், பல்வேறு நடவடிக்கைகளிலும் பண அளவுகளின் செலாவணி வேகவீதம் (செலாவணியின் வேகம்) ஆகியவற்றால் – நிர்ணயிக்கப்படுகிறது. முழு மதிப்புடைய பணத்தின் ஒரு பகுதிக்கு வங்கியினால் வெளியிடப்படும் காகிதப் பணத்தை உபயோகப்படுத்தலாம்.

இதற்குப் பின் வந்த இரண்டு நூற்றாண்டுகளிலும் பணம், கடன் ஆகியவற்றைப் பற்றிய தத்துவம் இந்தப் பிரசுரத்திலும் (வேறு சில புத்தகங்களிலும்) பெட்டி எழுதிய கருத்துக்களின் சுற்றுவட்டத்துக்குள்ளாகவே பெருமளவுக்கு வளர்ச்சியடைந்தது அல்லது இந்தக் கருத்துக்களோடு நடத்தப்பட்ட வாதங்களில் வளர்ச்சியடைந்தது.

பெட்டி இந்தச் சிறிய பிரசுரத்தில் தம் கருத்துக்களை மணிச்சுருக்கமாகவும், திருத்தமுறாத நிலையிலும் எழுதியிருந்தார். எனினும் அவர் தத்துவச் சிந்தனையில் எத்தகைய ஆற்றலைக் கொண்டிருந்தார் என்பதை இந்தப் பிரசுரம் எடுத்துக்காட்டுகிறது. அவர் அதிகமாகச் சாதித்திருக்க முடியும்; அதில் ஒரு சிறு பகுதியைத்தான் அவர் செய்து முடித்தார். இப்படிப் பல பேர்களைப் பற்றிச் சொல்ல முடியும் என்றாலும், பெட்டியைப் பொறுத்தவரையில் இது குறிப்பான பொருத்தத்தையும் முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கிறது.

 

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) E. Strauss, Sir William Petty. London, 1954, pp. 168-170.
(2) பி. எங்கெல்ஸ், டூரிங்குக்கு மறுப்பு, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1979, பக்கங்கள் 402-403 பார்க்க.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 198

பாசிசம் தோன்றுவதற்கான அடித்தளம் எது ?

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | பாகம் – 6

டோக்ளியாட்டி

பாசிச சித்தாந்தம் என்ற மற்றொரு பிரச்சினையை நாம் இப்பொழுது காண்போம். இப்போராட்டத்தில் அது எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது?

இந்தச் சித்தாந்தத்தை நாம் ஆய்வு செய்யும்பொழுது நாம் காண்பதென்ன? அனைத்தையும் காண்கிறோம். அது, ஒரு கதம்பக் கூட்டு. ஒரு வெறித்தனமான தேசியவாதத் தத்துவம் என்பது அனைத்து இடங்களிலும் அனைத்துப் பாசிச இயக்கங்களுக்கும் ஒரு பொதுவான அம்சமாகும். இத்தாலியைக் குறித்து மிக அதிகமாகப் பேச வேண்டிய தேவை இல்லை. இந்த அம்சம் ஜெர்மனியில் இதைவிட பலமானது. ஏனென்றால், ஜெர்மனி யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட நாடு. மேலும் அங்கு தேசியவாத அம்சம் மக்களைத் திரட்டுவதற்கு எதையும் செய்யத் தயாராக உள்ளது என்பதாகும்.

இந்த அம்சம் ஒருபுறமிருக்க, இதர மூலங்களிலிருந்து பெறப்பட்ட ஏராளமான கூறுகளும் உள்ளன. இத்தகைய மூலங்களுக்கு உதாரணமாகச் சொல்வதென்றால் சமூக ஜனநாயகத்தைக் குறிப்பிடலாம். எடுத்துக்காட்டாக வர்க்கக் கூட்டு என்ற கோட்பாட்டை அடித்தளமாகக் கொண்டுள்ள கூட்டாண்மைத் தத்துவமானது பாசிசம் கண்டுபிடித்ததல்ல. மாறாக அது சமூக ஜனநாயகம் கண்டுபிடித்ததாகும். ஆனால், சமூக ஜனநாயகத்திலிருந்து வராத வேறு அம்சங்களும் இன்னும் அங்கே உள்ளன.

கியுஸ்டிஸியா இலிபர்டா (Giustizia e liberta)

உதாரணத்திற்குச் சொல்வதென்றால் முதலாளித்துவக் கண்ணோட்டத்தைக் கூறலாம். இது அனைத்து பாசிசங்களுக்கும் பொதுவானதல்ல. ஆனால், இத்தாலிய, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு பாசிசங்களில் இது காணப்படக்கூடியது. இந்தக் கண்ணோட்டத்தின்படி ஏகாதிபத்தியமானது சிதைந்து விட்டது. அது முற்றிலும் ஒழித்துக் கட்டப்பட வேண்டும். அதே நேரத்தில் உண்மையான முதலாளித்துவப் பொருளாதாரம் என்பது ஆரம்ப காலகட்டத்தைச் சேர்ந்தது. எனவே ஆரம்ப கட்டத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். இந்தப் பொதுக் கருத்தை நீங்கள் பல ஜனநாயக நீரோட்டங்களில் காணமுடியும். உதாரணமாக கியுஸ்டிஸியா இலிபர்டா5 எனும் இயக்கத்தில் இதைக் காணலாம். இது சமூக-ஜனநாயக தத்துவமல்ல; மாறாக, சோசலிசத்தை நோக்கி வேகமாகச் செல்லும் உலகை, பழைய நிலைக்கே திருப்பிவிட நினைக்கும் குட்டி பூர்ஷுவாக்களின் முயற்சியை வெளிப்படுத்தும் சாகசவாத தத்துவமாகும்.

இத்தாலியிலும் ஜெர்மனியிலும் பாசிச சித்தாந்தத்தில் புதிய கோட்பாடுகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. இத்தாலியில் முதலாளித்துவத்தின் ஸ்தாபன வடிவத்தைப் பின்பற்றி அந்த முதலாளித்துவத்திற்கு அப்பாலும் செல்வது பற்றி பேசப்பட்டு வருகிறது. இங்கு சமூக-ஜனநாயக அம்சம் மீண்டும் தலைதூக்குகிறது. ஆனால் அவையும் (திட்டமிடுதல் போன்றவை) கம்யூனிசத்திலிருந்து திருடப்பட்டதேயாகும்.

பாசிச தத்துவமானது பல்வேறு கதம்பக் கூறுகளைத் தன்னுள் கொண்டுள்ளது. இதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்தச் சித்தாந்தம் எந்த நோக்கத்திற்காகச் செயல்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள இது உதவுகிறது. மேலும் உழைக்கும் வெகுஜனப் பகுதியினர் மீது சர்வாதிகாரத்தைத் திணிப்பதற்கான போராட்டத்தில் பலதரப்பட்ட கோஷ்டிகளை இணைப்பதற்கும், இதன்பொருட்டு ஒரு பரந்த இயக்கத்தை உருவாக்குவதற்கும் இது பயன்படுகிறது. பாசிச சித்தாந்தம் இத்தகைய சக்திகளை ஒன்றாகப் பிணைப்பதற்கான ஒரு கருவியாக அமைந்துள்ளது.

இந்தச் சித்தாந்தத்தின் ஒரு பகுதி – தேசியவாதப் பகுதி – நேரடியாகவே பூர்ஷுவா வர்க்கத்துக்குத் தொண்டு செய்கிறது; மற்றொரு பகுதி ஒரு பிணைப்பாகச் செயல்படுகிறது.

பச்சோந்தியைப் போன்று தோற்றமளிக்கக் கூடியது பாசிச தத்துவத்தை விட வேறெதுவும் இருக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டைக் கூறி பாசிசம் எய்த விரும்பும் குறிக்கோள்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் பாசிச சித்தாந்தத்தை மதிப்பிடாதீர்கள்.

பாசிச சித்தாந்தம் மிக உறுதியான, முழுமையான, ஒரே சீரான சித்தாந்தம் என்று கருதும் போக்கிற்கெதிராக உங்களை எச்சரிக்கிறேன். பச்சோந்தியைப் போன்று தோற்றமளிக்கக் கூடியது பாசிச தத்துவத்தை விட வேறெதுவும் இருக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டைக் கூறி பாசிசம் எய்த விரும்பும் குறிக்கோள்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் பாசிச சித்தாந்தத்தை மதிப்பிடாதீர்கள்.

பாசிசத்தின் அடிப்படையான கொள்கை வழி உக்கிரமான, வெறித்தனமான தேசியவாதமும் சமூக ஜனநாயகத்துடன் ஒத்த தன்மை கொண்டிருப்பதுமாகும், ஏன் இந்த ஒத்த தன்மை? ஏனென்றால் சமூக – ஜனநாயக சித்தாந்தமும் கூட ஒரு குட்டி பூர்ஷுவா சித்தாந்தமாகும். அதாவது குட்டி பூர்ஷுவா உள்ளடக்கம் இவ்விரு தத்துவங்களுக்கும் பொதுவானது. ஆனால், இந்த ஒத்த தன்மை என்பது பல்வேறு நாடுகளில் பல்வேறு சமயங்களில், பல்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

அடுத்த பாடத்திற்கான அடிப்படை வேலையை நாம் விரைவாகச் செய்வோம். இத்தாலியில் எவ்வாறு ஒரு குறிப்பிட்ட சமயத்தில் பாசிச சர்வாதிகாரத்தை நிலைநாட்டும் பிரச்சினை தோன்றியது? அந்தப் பிற்போக்கு இயக்கம் எவ்வாறு உருவாக்கப்பட்டது? இதுதான் நமது அடுத்த பாடத்திற்கான கருப்பொருள்.

ஆரம்ப கட்டத்திற்கு மீண்டும் செல்வோம். ஒருபுறத்தில் புரட்சிகர நெருக்கடி அங்கே இருந்தது. பூர்ஷுவா வர்க்கத்தினரால் பழைய முறைகளில் ஆள இயலவில்லை. பொதுவான அதிருப்தியும், தொழிலாளி வர்க்கத்தின் தாக்குதலும், அரசியல் வேலை நிறுத்தங்கள், பொது வேலை நிறுத்தங்கள் போன்றவையும் சேர்ந்து ஓர் இக்கட்டான நிலைமை நிலவிற்று. சுருக்கமாகச் சொன்னால் யுத்த பிற்கால காலகட்டத்தில், ஆழமான புரட்சிகர நெருக்கடியில் நாம் இருந்தோம்.

கியோலிட்டியினுடைய “சீர்திருத்தவாதக்” கொள்கையை அம்பலப்படுத்தும் கேலிச்சித்திரம். (கோப்புப் படம்)

ஒரு விஷயம் குறிப்பாக தெளிவாகத் தெரிந்தது. இத்தாலிய ஆளும் வர்க்கம் பழைய கொள்கையை, அதாவது 1912-ம் ஆண்டு வரை கடைப்பிடிக்கப்பட்ட கியோலிட்டியினுடைய “சீர்திருத்தவாதக்” 6  கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது சாத்தியமற்றதாகி விட்டது. சீர்திருத்தவாதிகள் அதிகாரத்திலிருந்ததால் இது சீர்திருத்தவாதக் கொள்கையாகி விடவில்லை. மாறாக, நாடாளுமன்ற ஆட்சி என்ற பெயரால் முதலாளித்துவ சர்வாதிகாரத்தைத் தொடர்ந்து வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டு சில குழுக்களுக்குச் சலுகைகள் அளிக்கும் கொள்கையாகவே அது இருந்தது.

இந்தக் கொள்கை யுத்தத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் நிலைத்திருக்கவில்லை. ஏனென்றால் தொழிலாளிகள் மற்றும் விவசாய மக்கள் பகுதியினர் அதற்கெதிராக கிளர்ந்தெழுந்தனர்.

யுத்தப் பிற்காலத்தில் இரண்டு பிரதான நிகழ்ச்சிப் போக்குகள் கவனத்திற்குரியவையாகும். ஒன்று, இத்தாலிய சோசலிஸ்டுக் கட்சியின் மாபெரும் வளர்ச்சியை இவ்வகையில் முக்கியமாகக் குறிப்பிடலாம். இக்கட்சியில் இலட்சக்கணக்கான உறுப்பினர்கள் இருந்தனர். பத்து இலட்சக்கணக்கான வாக்காளர்கள் இவர்களுக்கு ஆதரவாக இருந்தனர்; இரண்டு, விவசாயிகளிடையே மிகுந்த விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தது; ஆனால், அவர்கள் பிளவுபட்டு பல்வேறு கட்சிகளில் இணைந்திருந்தனர். பாப்புலர் கட்சி7 விவசாயிகள் கட்சியாகும். அதே நேரத்தில் விவசாயிகளின் இயக்கங்களையும், தெற்கில் நிலம் கைப்பற்றப்பட்டது போன்றவற்றையும் நாம் காண்கிறோம்.

தொழிலாளிகளும் விவசாயிகளும் தாக்குதலைத் தொடங்குகிறார்கள். அவர்களுடைய அணி உருவெடுக்க ஆரம்பிக்கிறது. தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் ஒன்றுபட்ட தாக்குதலை யுத்தத்திற்குப் பிந்தைய இத்தாலியில் மிக முன்னேறிய வடிவங்களில் காண முடியும். நாடாளுமன்ற ஆட்சி வடிவங்களின் முடிவுக்கு அது கட்டியங் கூறுகிறது.

பூர்ஷுவா வர்க்கத்தினர் நாடாளுமன்ற முறையை ஒழித்துக்கட்ட வேண்டியிருந்தது. அதிருப்தி என்பது தொழிலாளிகளிடம் மட்டுமல்ல, குட்டி பூர்ஷுவா பகுதியினரிடமும் பரவியிருந்தது. குட்டி பூர்ஷுவா முன்னாள் ராணுவத்தினர்கள் மற்றும் இதரர்களின் இயக்கங்கள் உருவெடுத்தன. பூர்ஷுவா வர்க்கத்தினரும் குட்டி பூர்ஷுவா பகுதியினரும் நடப்பிலுள்ள அரசாங்கத்தை இனியும் சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை: அவர்கள் அதை மாற்ற விரும்பினர்.

இத்தகைய அடித்தளத்திலிருந்துதான் பாசிசம் உதயமாகி எழுகிறது.

அடிக்குறிப்புகள் :

5. கியூஸ்டிஷியா லிபர்டா, கார்லோ ரோசெல்லி, எமிலியோ லுஸ்ஸு, ரிக்கார்டோ பயவர் ஆகியோராலும் மத்தியதர வர்க்க அறிவாளிகளாலும் 1929-ல் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு பாசிச- எதிர்ப்பு இயக்கம்: மதசார்பின்மை, தன்னார்வ சேவை குடியரசு தன்மை, தீவிரவாதம் முதலியவை இவ்வியக்கத்தின் கோட்பாடுகள். அதன் வேலைத்திட்டம் குடியரசு தன்மை கொண்ட அரசாங்கம், பிராந்திய தன்னாட்சி, அதிகாரவர்க்க அமைப்பில் சீர்திருத்தம், கலப்பு பொருளாதாரம் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. 1942-ல் இயக்கத்தின் மையக்குழு செயல்கட்சியை அமைத்தது. பாசிசத்திற்கும் நாசிசத்துக்கும் எதிரான ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஒரு முக்கிய பங்கை ஆற்றியபின் அது தன்னை 1947-ல் கலைத்துக் கொண்டது.

6. கியோவான்னி சியோலிட்டி (1842-1928) 1892-93, 1906-09, 1911-14, 1920-21 ஆண்டுகளில் பிரதம மந்திரியாக இருந்தார். இந்த நூற்றாண்டு துவக்கத்திற்குப்பின் இத்தாலிய அரசியலில் மிகப் பிரபலமான புள்ளியாக இருந்தார். அல்குனி டெமி டெல்லா குயிஸ்டியோனி என்ற முற்றுப்பெறாத தமது கட்டுரையில் கிராம்ஸி கியோலிட்டியின் முன்னேற்றத்தைப் பற்றியும் அவரது உள்நாட்டுக் கொள்கையின் அடிப்படை பற்றியும் மிகத் தெளிவான, துல்லியமான பரிசீலனையை அளித்துள்ளார்.

கியோவான்னி சியோலிட்டி (Giovanni Giolitti)

ரத்தக்களறியான 1890-1900 ஆண்டுகளுக்குப் பின், முற்றிலும் ஒதுங்கி நிற்கும், முற்றிலும் பலாத்காரம், முற்றிலும் சர்வாதிகாரம் – இவற்றை பூர்ஷுவாக்கள் கைவிடவேண்டியிருந்தது. தெற்கேயுள்ள விவசாயிகளும் வடக்கேயுள்ள தொழிலாளிகளும் ஒரே சமயத்தில் – ஒன்றிணைந்து செயல்படாவிடினும் – கலகத்தில் எழுந்தனர்; புதிய நூற்றாண்டில் ஆளும் வர்க்கம் புதிய கொள்கையை துவக்கியது – அதாவது, வர்க்க கூட்டணிகள், வர்க்க அரசியல் அணி, பூர்ஷுவா ஜனநாயகம், அது இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்: கிராமப்புற ஜனநாயகமா – அதாவது தெற்கத்திய விவசாயிகளுடன் கூட்டணியா அல்லது சுதந்திரமான வியாபாரம், வயது வந்தோருக்கு வாக்குரிமை, நிர்வாகம் கீழ்மட்டத்திற்கு அதிகாரம் வழங்குதல், உற்பத்திச் சரக்குகளுக்கு குறைந்த விலைகள் ஆகியவையா? அல்லது வயது வந்தோர் வாக்குரிமை இல்லாமல் ஒரு முதலாளித்துவ – விவசாயி அணி, சுங்கவரி பாதுகாப்பு, மையப்படுத்தப்பட்ட அரசு (விவசாயிகள் மீது, குறிப்பாகத் தெற்கிலும் தீவுகளிலும் உள்ளவர்கள் மீது, பூர்ஷுவா ஆட்சியின் வெளிப்பாடு) ஊதியம், தொழிலாளர் உரிமைகள் பற்றிய சீர்திருத்தவாதக் கொள்கை. அது இரண்டாவது தீர்வைத் தேர்ந்தெடுத்தது. பூர்ஷுவாக்களின் ஆட்சியை கியோலிட்டி உருவகப்படுத்தினார். அன்டோனியோ கிராம்ஸி, ஸ்கிரிட்டி பாலிடிசி (எடிப்போரி ரீயுனிட்டி, ரோம், 1967)

1919 அக்டோபர் 19-ம் தேதி டிரோனேரோவில் கியோலிட்டி ஆற்றிய உரை இத்தாலியின் யுத்தபிற்கால நெருக்கடியை தீர்ப்பதற்கான மிக முற்போக்கான பூர்ஷுவாத் திட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது. கியோலிட்டி யுத்தத்தில் இத்தாலி தலையிட்டதை விமர்சித்தார். 1914-15 ஆண்டுகளில் அவர் எடுத்த நடுநிலைமை கொள்கையை நினைவுபடுத்தினார் (கியோலிட்டியை “ஒரு தோல்வி  மனப்பான்மை கொண்ட தேசத்துரோகி” என்ற தேசியவாதிகளின் குற்றச்சாட்டை பற்றி டோக்ளியாட்டி அப்பொழுது குறிப்பிட்டது) யுத்தப் பிரகடனம் செய்ய அரசருக்கும் மந்திரி சபைக்கும் உள்ள உரிமையை எடுத்துவிட்டு அந்த உரிமையை நாடாளுமன்றத்துக்கு வழங்க, கார்ல் ஆல்பர்டின் அரசியல் சட்டத்தின் 5-வது ஷரத்தை திருத்த வேண்டுமென்று கூறினார். படிப்படியான வருமானவரி, சொத்துரிமை வரி திட்டத்தைக் கொண்டு வருவதாகவும் நிறுவனங்களின் பங்குகள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்றார். நீர் மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கு அரசின் தலையீடு சாத்தியம் என்று தனியார் தொழில்களைப் பயமுறுத்தினார். வெளிநாட்டு வர்த்தகத்தின் மீது அரசின் கட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதை முன்வைத்தார். அரசின் அடித்தளத்தை விரிவுபடுத்தி லிபரல் ஜனநாயகக் கட்டுக்கோப்பிற்குள் பூர்ஷுவாக்களின் பொருளாதார அரசியல் அதிகாரத்தை பாதுகாக்கும் திட்டத்திற்கு டிரோனேரோவின் அவரது உரை உருக்கொடுக்கிறது. இதன்மூலம் புரட்சிகர இயக்கத்தின் முன்னேற்றத்தை கூர்மழுங்கச் செய்ய முடியும் என்று கருதினார். எனினும் 1920-ல், மீண்டும் கியோலிட்டி பிரதம மந்திரியாக இருந்தபோது, நிலைமை ஏற்கெனவே மாறியிருந்தது. வளர்ந்து வரும் பாசிஸ்டு இயக்கம், புரட்சிகர இயக்கத்திற்கு மட்டுமின்றி அவர் பாதுகாக்க விரும்பிய லிபரல் அரசுக்கும் ஒரு ஆபத்தை ஏற்படுத்தியதை இந்த வயது முதிர்ந்த ராஜ தந்திரியால் கண்டு கொள்ள முடியவில்லை. தொழிலாளர் இயக்கத்திற்கு எதிர்சக்தியாக ஸ்குவாட்ரிஸ்மோவை பயன்படுத்த கியோலிட்டி முயன்றார். 1921 தேர்தலில் அவர் அமைத்த தேர்தல் கூட்டணியில் பாசிஸ்டுகளைச் சேர்த்துக் கொண்டதன் மூலம் அவர்களுக்கு நாடாளுமன்றத்தின் கதவுகளைத் திறந்து விட்டார்.

7. பாப்புலர் கட்சி இன்றைய கிறிஸ்துவ ஜனநாயக கட்சியின் முன்னோடியான இது வாட்டிகனுடைய தீவிர ஆதரவுடன் ஸ்தாபிக்கப்பட்டது. 1919-லும் 1921-லும் நடந்த தேர்தல்களில் அது இரண்டாவது மிகப் பெரிய கட்சியாக ஆயிற்று. விவசாயிகளிடையே ஒரு வெகுஜன தளத்தை வளர்த்துக் கொண்டு, ஒருபுறம் தாராளத் தன்மைக்கும் மறுபுறம் சோஷலிசத்துக்கும் கத்தோலிக்கப் பிரதிபலிப்பாக பாப்புலரிசம் தோன்றியது. புத்தத்திற்கு பின் சோஷலிஸ்டு முன்னேற்றத்தை தடுத்து நிறுத்துவதற்காக தோன்றிய பழமை விரும்பும் இக்கட்சி பரம்பரையான தாராளக் கொள்கையைக் கொண்ட அரசுக்கு அதன் எதிர்ப்பில் நடைமுறையில் “சீர்குலைவு” சக்தியாக இருந்தது, அதன் தலைவர் லியூகி ஒரு பாசிச- எதிர்ப்பாளராக இருந்தும், வாட்டிகனின் நிர்ப்பந்தம் காரணமாக ஆட்சியைப் பற்றி ஓர் ஐயப்பாடான நிலையை கட்சி எடுத்தது. மாட்டியோட்டி நெருக்கடிக்குபின் 1925-26-ல் மற்ற எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து இதுவும் நசுக்கப்பட்டது.

(தொடரும்)

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

NGK : செல்வராகவன் – சூர்யா கூட்டணி Hangover-ல் ஒரு அரசியல் படம் !

2

டப்பாடிகள் ஆளும் காலத்தில் கமலஹாசன்களுக்கு அரசியலில் குதிக்கும் தைரியம் வந்திருக்கிறது அல்லவா! போலவே செல்வராகவன்களுக்கும் அரசியல் படம் பண்ண ஒரு மூடு வந்திருக்கிறது.

பேண்ட் டீ-ஷர்ட்டில் தோள்பை சகிதம் விவசாயம் பார்க்கிறார் சூர்யா. ஒரு மழைக்காலத்தில் களத்துமேட்டில் பணியாற்றிவிட்டு கக்கூஸ் குழாய் வழியாக வீட்டு மாடிக்கு வருகிறார். என்ன இருந்தாலும் குடும்பம் என்று ஒன்று இருக்கிறதே, இப்படியா நேரம் காலம் பார்க்காமல் விவசாயம் பார்ப்பது என்று தாய் கோபத்துடன் அமர்ந்திருக்கிறார். தாரமோ காதல் பொங்க காத்திருக்கிறார். தாயின் முன்னாலேயே இருவரும் குச்சி ஐஸை மாறி மாறி சப்பி தமது அன்னியோன்யத்தை காட்டுகிறார்கள். தமிழ் சினிமாவில் இத்தகைய காவியக் காதல் காட்சியை இதற்கு முன் எந்தக் கொம்பனும் காட்டியதில்லை என்பது மட்டும் சத்தியம்.

தாமதமாக வந்ததை தாயிடம் விளக்கும் போதுதான் தெரிகிறது சூர்யா ஒரு இயற்கை விவசாயியாம். அதாவது ஆர்கானிக் விவசாயமாம். எம் டெக் படித்து விட்டு அதிக ஊதிய வேலையை தியாகம் செய்து இயற்கை விவசாயம் செய்கிறாராம் அவர். காவிரியில் நீரில்லை, கஜா புயலால் வாழ்வில்லை, வெள்ளாமைக்கு விலையில்லை என்று அல்லும் பகலும் விவசாயத்தோடு மல்லுக் கட்டும் விவசாயிகளை இதற்கு மேல் பரிகாசம் செய்யும் தைரியம் செல்வராகவனிடம் இருக்கவே செய்கிறது.

படுக்கையில் கணவனின் மண்வாசனையை மோந்து பார்க்கிறாராம் சாய் பல்லவி. உச்சி வெயிலில் கருத்துச் சுருங்கிய முதுகில் தேங்காய் எண்ணெய் போட்டு தேய்த்து வலியை குறைக்கும் விவசாயிகள் நாட்டில் இப்படி ஒரு ரொமான்ஸ் ஃபேன்டசியாக காட்டுகிறார் இயக்குநர். சூர்யாவைப் பார்த்து அவரது ஊரில் – திருவில்லிபுத்தூராம் – ஐநூறு இளைஞர்கள் இயற்கை விவசாயம் பார்க்கிறார்களாம். அனேகமாக பசுமை விகடன் வியாபாரத்திற்கு இந்தப் படம் ஒரு நல்ல விளம்பரப் படமாக இருக்கும்.

இயற்கை விவசாயமோ இல்லை பூச்சி கொல்லி மருந்து – உரம் போடும் செயற்கை விவசாயமோ அனைத்தும் குடும்ப வாரிசுகள் பட்டணத்தில் பணியாற்றி அனுப்பும் பணத்தில் அப்படி இப்படி என்று ஓடிக் கொண்டிருக்கிறது. அதிலும் ஆயிரெத்தெட்டு பிரச்சினைகள். விவசாயிகளின் பிரச்சினைகளை உள்ளது உள்ளபடி காட்டாவிட்டாலும் அதை இப்படியா நல்லதொரு ஹார்லிக்ஸ் குடும்பமாக காட்டுவது? மாட்டுக்கால் சூப்பில் மால்டோவா கலந்து குடித்தால் எவ்வளவு கொடுமையாக இருக்கும்?

படிக்க:
♦ சூப்பர் டீலக்ஸ் : அரதப் பழசான அத்வைதம் | திரை விமர்சனம்
♦ சிறப்புக் கட்டுரை : விகடனுக்கு மட்டும் விவசாயத்தில் இலாபம் ஏன் ?

ஐ.டி துறையிலும் இன்னபிற சேவைத் துறையிலும் ஐந்து, ஆறு இலக்க சம்பளம் வாங்கும் பிரிவினரிடம் சில நிலத்தரகர்கள் உசிலம்பட்டி அருகே பண்ணை விவசாயம், ஒரு குடும்பத்தை அங்கே பணியில் அமர்த்தி தென்னை, பலா, மா, நெல், புல் என்று வளர்த்தால் வருடத்திற்கு இத்தனை இலட்சம் நிச்சயம் என்று ஆர்ட்பேப்பரில் அடித்த மாதிரிகளைக் காட்டுகிறார்கள். இந்த ஆர்ட் பேப்பரில் ஏற்கனவே நிலம் வாங்கிய முன்னோடிகள் தான் கெட்ட மந்தி வனத்தைக் கெடுத்த கதையாக பக்கத்து இருக்கைக்காரர்களையும் கெடுத்து மார்கெட் செய்கிறார்கள். இறுதியில் ஐ.டி துறையினர் பலர் சைடு பிசினசாக விவசாயம் பார்க்கிறார்கள். வருடம் ஒரு முறையோ இல்லை இரு முறையோ அந்த பண்ணை விவசாயத்தை நேரில் பார்த்து இரவில் அருகாமை லாட்ஜில் கனவு கண்டு விட்டு சென்னை திரும்புவார்கள் இந்த ‘விவசாயிகள்’.

அதைத்தான் செல்வராகவன் கஷ்டப்பட்டு கதை விவாதத்தில் கண்டு கொண்டு இரக்கமே இல்லாமல் நம்மிடமும் சொல்கிறார். பனங்கருப்பட்டியை ஆர்கானிக் பொருள் என்று ஒரு ஆர்கானிக் கடையில் வாங்கி நாம் மட்டும் சுத்த பத்தமாக சுகாதரமாக வாழ்கிறோம் என்று நம்பும் நடுத்தர வர்க்கம் இருக்கும் வரை இந்தக் கதைகள் எடுபடாமலா போய்விடும். சரி, எந்த ஊரில் பனைமரத்திற்கு ஊரம் போடுகிறார்கள்?

இயற்கை விவசாயத்தோடு ஊர் சமூகநலப் பணிகளையும் பார்க்கிறாராம் சூர்யா. இந்தக் காட்சிகளெல்லாம் படத்துக்கு முன்னர் வரும் எடப்பாடி அரசின் விளம்பரம் போலவும், இல்லை அந்தக் காலத்து விசுப் படங்கள் போலவும் பார்வையாளர்களைக் குதறுகிறது. இதுவே படமாக இருப்பதால் “சீக்கிரம் படத்தைப் போடுப்பா” என்று ஆபரேட்டரிடம் சொல்ல முடியவில்லை என்பது ஒரு சோகம்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இறந்து போன அரசு ஊழியர்களின் வாரிசுகள் வேலை வேண்டி விண்ணப்பங்களோடு காத்திருக்கிறார்கள். ஆர்கானிக் விவசாயம் பார்க்கும் சூர்யாவுக்கு இந்த காத்திருத்தலின் வலியோ அதன் பின்னணியோ தெரியவில்லை. அந்த அளவுக்கு பொது அறிவு அவரிடம் வற்றிப் போய் இருக்கிறது. எம்.எல்.ஏ -வின் உதவியாளரும் சூர்யாவின் நண்பருமான குமார் இதெல்லாம் ஒரு மேட்டரா என்று ஒரு கவுன்சிலரின் உதவியோடு வேலை வாங்கிக் கொடுக்கிறார். அப்போதுதான் சூர்யாவிடம் “ஒரு கவுன்சிலருக்கே இவ்வளவு பவர் என்றால்…….” என்றொரு ஒரு பல்ப் எரிகிறது.

பிறகு அவர் எம்.எல்.ஏ இளவரசனிடம் வேலைக்கு சேர்ந்து கட்சியில் இணைகிறார். இந்தக் கட்சி தி.மு.க போலவும், ஆளும் கட்சி அதிமுக போலவும் உணர்த்தப்படுகிறது. எம்.எல்.ஏ இளவரசன் சூர்யாவை எடுபிடி வேலைகளைச் செய்யச் சொல்கிறார். கதையின் நாயகனும், எம்.டெக் இளைஞருமான சூர்யா ஆரம்பத்தில் கையறு நிலையில் இருந்தாலும் விரைவிலேயே இதெல்லாம் செஞ்சால்தால் அரசியலில் ஒரு ஆளாக முடியும் என்று அமாவாசை போல சர்ரென்று ஏணியில் ஏறுகிறார்.

இதைத் தூக்கலாக காட்ட வேண்டும் என்பதற்காக எம்.எல்.ஏ-வின் கழிப்பறையை மாநகராட்சி கழிப்பறையை விட படு மோசமாகக் காட்டுகிறார்கள். எந்த எம்.எல்.ஏ இப்படி ஒரு மோசமான கழிப்பறையில் கழிக்கிறார் என்று தெரியவில்லை. பிறகு கட்சித் தலைவர், தலைவரது ஐ.டி -விங் தலைவர் வானதி ஆகியோரிடம் அறிமுகமாகிறார் சூர்யா. அவரது செல்வாக்கு அதிகரிப்பது கண்டு எதிர்க்கட்சி தலைவராக பொன்வண்ணன் மட்டுமல்ல ஆளும் கட்சி முதல்வரும் திகைக்கிறார்கள். அவரைக் கொல்ல முயற்சிக்கிறார்கள். இறுதியில் அனைத்தையும் வென்று அடுத்து வரும் தேர்தலில் 90 சீட்டுக்களை வென்ற சூர்யா அதற்கடுத்த தேர்தலில் முதல்வராக ஆகியிருப்பார். அதை வேறு பாகம் 2 என்று எடுத்துக் கொல்வார்களா தெரியவில்லை.

படிக்க:
♦ “The Hour of Lynching” – ரக்பர்கான் படுகொலையை மறக்கக் கூடாது !
♦ கொடி திரைவிமர்சனம் : கன்டெய்னர் காலத்தில் ஒரு கவுன்சிலர் கடி !

இடையில் ஐ.டி விங் வானதியோடு ஃபாரினில் ஒரு டூயட்டும் போடுகிறார் சூர்யா. மண் வாசனையை மோந்து பார்த்த மனைவி சாய்பல்லவி இந்த சென்ட் வாசனையை வைத்து ஒரு படு சோகம் கொள்கிறார். இந்த நேரங்களில் சூர்யா எப்படி சமாளிக்கிறார் என்பதை சிவாஜி கணேசன் கூட தத்ரூபமாக நடித்திருக்க முடியாது. அப்படி ஒரு நடிப்பு. ஐ.டி விங்கிற்கும், ஆர்கானிக் விவசாயத்திற்கும் உறவு ஏற்பட்டதா இல்லையா என்பதை நாம் கண்டு பிடிக்க முடியாத அளவு இந்தக் காட்சிகளை ஒரு கனவான் போல கொண்டு செல்கிறார் இயக்குநர். ஒரு கனவுப் பாட்டு வேண்டும் அதில் வானதி குட்டைப் பாவாடையுடன் ஆட வேண்டும் என்பதற்காக யோசித்திருப்பார்கள் போலும். போகட்டும்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, ரத்தம், வன்முறை இன்னபிற டெம்பிளேட்டுக்களோடு 20 வருடங்களுக்கு முன் வந்த தெலுங்குப்படம் கூட செல்வராகவன் படத்தை விட நிச்சயம் மேம்பட்டதாக இருக்கும். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் இன்னபிற செல்வராகவன் படங்களில் வரும் கதாபாத்திரங்களின் அதீத உணர்ச்சிகள், அக்கப்போர்கள் இங்கும் படுத்தி எடுக்கின்றன. சூர்யா முறைப்பது, பேசுவது, உறுமுவது, உள்ளொன்று வைத்து புறமொன்று நடப்பது என்று காட்சிக்கு காட்சி குழப்புகிறார். பார்வையாளர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று உறுதியாக நம்பும் ஒரு இயக்குநர்தான் இத்தகைய அபத்தங்களை ‘அழகென்று’ எடுக்க முடியும்.

கட்சிகளின் குறுக்கு வழிமுறைகளில் போனால்தான் ஆளாக முடியும் என்று எதிர்மறை பாத்திரமாய் சூர்யா மாறுகிறாரா, மாறவில்லையா என்னதான் சொல்ல வருகிறார் என்று ஏகப்பட்ட குழப்பத்தோடு பார்வையாளர்கள் அதிர்ச்சியில் அதாவது இதெல்லாம் ஒரு கதையா இல்லை வதையா என்று உறைந்து போகிறார்கள். எந்தக் காட்சிக்கும் ஒரு உச்சு, ஒரு கைதட்டல், ஒரு ஆர்ப்பாட்டம் எதுவுமில்லை.

இந்தப் படத்திற்கு தோழர் ஒருவரோடு டிக்கெட் எடுக்கும் போது தியேட்டர் ஊழியர் பால்கனியா, முதல் வகுப்பா என்று கேட்ட போது – இரண்டின் வேறு பாடு வெறும் பத்து ரூபாய்தான் – முதல் வகுப்பே கொடுங்கள் பால்கனி சென்றால் ஜனங்களைப் பார்க்க முடியாது என்றார் அந்தத் தோழர். உண்மைதான், படம் பார்க்க வந்தோர் முப்பதைத் தாண்டாது. இவ்வளவிற்கும் படம் வெளியாகி நான்கைந்து நாட்கள் கூட ஆகவில்லை.

அரசியல் கட்சிகள் – அரசியல்வாதிகள் பற்றி அந்தக்கால ஆனந்த விகடன் ஜோக்குகளையே ஒரு ஹாரர் பாணியில் கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி அச்சுறுத்துகிறது இந்தப்படம். எந்தக் காட்சியிலும், பாத்திரத்திலும், கதையோட்டத்திலும் நம்பகத்தன்மையோ இல்லை நியாயப்படுத்தலோ எந்த எழவுமில்லை. விடலைப் பருவ சேட்டைகளை படமெடுக்கத் தெரிந்த செல்வராகவன் எடப்பாடி ஆள்வதால் இப்படி ஒரு அரசியல் படுமெடுக்க தனக்குத் தெரியும் என்று நம்பியிருக்கிறார். அந்த நம்புதலுக்கு சூர்யாவாடு சேர்த்து முதலீடு செய்ய அம்பானியின் ரிலையன்ஸ் முடிவு செய்திருக்கிறது. படத்தின் பட்ஜெட் 75 கோடி ரூபாயாம். ஒரு மாபெரும்  கழிப்பறை செட், ஒரு மாபெரும் சந்தை செட், ஒரு மாபெரும் பொதுக்கூட்ட செட் போன்றவைகளைக் கழித்தால் கூட இந்தக் கருமாந்திரத்திற்கு 75 கோடி ரூபாயும், அந்த கருமாந்திரத்தைக் காண நாம் நூறு ரூபாய் செலவழித்ததையும் மன்னிக்கவே முடியாது.

ஹாலிவுட்டின் “ஹேங்கோவர்” (Hangover) படங்களைப் பார்த்திருப்பீர்கள். கும்பலாய் சரக்கடித்து விட்டால் நடக்கும் முக்திநிலை முட்டாள்தனங்கள்தான் அந்த வார்த்தையின் பொருள். ஆங்கிலப் படத்தில் அதைக் காமடியாகச் சொல்லியிருப்பார்கள். என்ஜிகே படத்தில் அது ‘சீரியஸாக’ வருகிறது. சீரியஸான விசயம் கும்பல் குடி மனநிலையில் உருவானால் அது எந்த உணர்ச்சிகளுக்கும் அப்பாற்பட்ட ‘விடுதலை’ நிலை அடையும். “நந்த கோபால் குமரன்” படத்தின் படைப்பாளிகள் கதை விவாதத்தில் இப்படி ஹேங்ஓவராக திரைக்கதையை கிண்டி கிழங்கெடுத்திருக்கிறார்கள் போலும். படைப்பாளிகள் என்று பன்மையில் சொன்னாலும் படையின் தளபதி இயக்குநர் செல்வராகவன்தான்.

வெறுத்துப் போய் படம் பார்க்க போகலாம் என்றால் அதற்கு கூட இந்தப் படம் தகுதியில்லை. மீறிச் சென்றால் ‘யாம் பெற்ற இன்பத்தை நீங்களும் பெறலாம்’, வாழ்த்துக்கள்!


மதன்