Wednesday, June 25, 2025
முகப்பு பதிவு பக்கம் 221

குஜராத் மாடல் : விவசாயிகளின் டெல்லி சலோவில் குஜராத் பங்கேற்காத பின்னணி ?

வேளாண் சட்டத்திருத்தங்களை எதிர்த்து டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்வதில் இருந்து குஜராத் விவசாயிகளை தடுத்து நிறுத்தும் வகையில் பல்வேறு ஒடுக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது மோடி அரசு.

கடந்த டிசம்பர் 6 அன்று மோடி பிறந்த மண்ணாகிய குஜராத்தைச் சேர்ந்த பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த பல்பாய் அம்பாலியா, யாக்கூப் குராஜி, ஜயேஷ் பட்டேல் மற்றும் பல்வேறு தலைவர்கள் ஒன்றிணைத்து, குஜராத் கிசான் சங்கர்ஷ் சமிதியை உருவாக்கியுள்ளனர். இக்கூட்டத்தில் டெல்லி சலோ போராட்டத்தில் கலந்துகொண்டு தங்களது ஆதரவைத் தெரிவிக்கத் திட்டமிட்டனர்.

கிட்டத்தட்ட அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் தலைவர்களையும் வீட்டுக்காவலில் வைத்துள்ளது குஜராத் மாநில அரசு. இந்தப் போராட்டத்தில் பங்கேற்க குஜராத் விவசாயிகளும் விரும்புவதாகவும், மாநில அரசு அதனைத் தடுப்பதாகவும் தி வயர் இணையதளத்திடம் தெரிவித்துள்ளார் அம்பாலியா.

படிக்க :
♦ இந்திய தேசிய ஜோதியில் தமிழகம் கலக்க மறுப்பதேன்?
♦ விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை !

குஜராத் விவசாய சங்கத் தலைவர்களின் அழைப்புகள், வாட்சப் போன்றவற்றை போலீசு தொடர்ச்சியாக கண்காணித்து வருவதாகவும், அவர்களை சந்திக்க வருபவர்களையும் கண்காணிப்பதாகவும் தி வயர் இணையதளத்திடம் ஒரு பிரபல விவசாய சங்கத் தலைவர் தெரிவித்திருக்கிறார்,

கடந்த டிசம்பர் 11 அன்று டெல்லி போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற தன்னை போலீசு கைது செய்து எவ்வித அடிப்படைக் குற்றச்சாட்டும் இல்லாமல், அன்று இரவு முழுக்க சிறையில் அடைத்து வைத்தது என்கிறார், மற்றொரு விவசாயிகள் சங்கத் தலைவரான யாக்கப் குராஜி.

அவரை விடுவிக்கக் கோரி பிற விவசாயிகள் போராடத் துவங்கிய பின்னர், அவரது குடும்பத்தினரை அழைத்து கேள்விகளால் துளைத்துள்ளனர். பின்னர் மறுநாள் காலையில்தான் அவரை விடுவித்தது போலீசு.

கடந்த 15-ம் தேதி குஜராத்தின் கட்ச் பகுதியில் பெரிய மின் உற்பத்தி நிலையத் துவக்க விழாவில் பேசிய மோடி, இந்திய அரசாங்கம் விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர்களது பிரச்சினைகளை கவனிக்கும் என்றும் கூறி, தேசம் ஒரு வரலாற்று முன்னெடுப்பை எடுக்கும் சமயத்தில் எதிர்க்கட்சிகள், விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

இது குறித்து விவசாய சங்கத் தலைவர் அம்பாலியாவுடன் பேசியது கீழே சுருக்கித் தரப்பட்டுள்ளது.

முதலில், போலீசின் கண்ணில் சிக்காமல் எப்படித் தப்பினீர்கள் ?

டிசம்பர் 6 அன்று அகமதாபாத்தில் குஜராத் கிசான் சங்கர்ஷ் சமிதி என்ற பெயரில் நடைபெற்ற எங்களது சந்திப்பை குஜராத் அரசு எப்படியோ கண்டுபிடித்து விட்டது. அந்த சந்திப்பில் “கிசான் சம்சாத்” நிகழ்ச்சியை டிசம்பர் 11 அன்று நடத்த வேண்டும் என அறிவித்திருந்தோம்.

அந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன்னர், குஜராத் அரசாங்கத்திடம் அனுமதி கேட்டிருந்தோம். ஆனால் அனுமதியளிக்கப்படவில்லை. எங்களது திட்டம் கிசான் சன்சத் நிகழ்ச்சியை நடத்திவிட்டு அங்கிருந்து 2000 விவசாயிகளும் தொழிலாளர்களும் பேரணியாக டெல்லி நோக்கிச் செல்வதுதான். விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி மட்டும் பேச திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அரசாங்கம் எங்களுக்கு அனுமதி தரவில்லை.

இவை அனைத்துக்கும் மேலாக, போலீசு, அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்களையும் ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்யத் துவங்கியது.

இது தெரிந்தவுடன், நான் துவாரகாவில் இருக்கு எனது வீட்டிலிருந்து கிளம்பி, ஜுனாகர் பகுதிக்கு சென்றுவிட்டேன். எனது அலைபேசியை அணைத்து விட்டேன்., ஜுனாகர் பகுதிக்குச் சென்ற உடன் சிறிது நேரம் எனது போனை ஆன் செய்தேன். அதையும் உடனடியாகக் கண்டுபிடித்து தொடர்ச்சியாக என்ன அழைத்தது போலீசு. அங்கிருந்து செல்லக் கூடாது என்றும் என்னிடம் கூறியது.

ஆனால் நான் எனது தொலைபேசியை அணைத்துவிட்டேன். எனக்கு போலீசு எவ்வழியே என்னைப் பிடிக்க வருவார்கள் என்பது தெரியுமாதலால் அதற்கு எதிர்த் திசைஇல் பயணித்தேன். கட்ச்-க்கு சென்று அங்கிருந்து காந்திநகர் சென்றேன். போலீசு என்னைத் தேடிக் கொண்டிருந்த சமயத்தில் அங்கிருந்து நான் தப்பி வந்துவிட்டேன்.

குஜராத்திலிருந்து ’தப்பி’ வந்து சிங்கு எல்லையில் போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள்!

ஜுனாகரில் மாறுவேடம் அணிய முடிவெடுத்தேன். எனது முடியை மாற்றிக் கொண்டேன். பாரம்பரியமான வேட்டியையே நான் அணிவேன். ஆனால் இரண்டு ஜீன்ஸ் மற்றும் சட்டைகளை வாங்கி அவற்றை அணிந்து கொண்டேன். எனது காரை மற்றொருவருக்குக் கொடுத்துவிட்டு, நான் மற்றொரு காரை மாற்றிக் கொண்டேன். டிசம்பர் 12 அன்று உதய்பூரை அடைந்தேன்.

அதே போல, தஹ்யாபாய் கஜேரா மற்றொரு விவசாய சங்கத் தலைவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். போலீசு அவரது வீட்டு முன்வாசலில் இருக்கையில், தனது மகனின் உதவியுடன் பின்வாசல் வழியாகத் தப்பிவிட்டார். அவரது மகன் அவரை அருகில் உள்ள பேருந்துநிலையத்தில் விரைவாக க் கொண்டு சென்று இறக்கிவிட்டுள்ளார். அங்கிருந்து உதய்பூருக்கு ரகசியமாக பேருந்து ஏறி வந்தார் தஹ்யாபாய்.

குஜராத்தில் 16 விவசாய சங்கத் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். போலீசின் துரத்தலைத் தாண்டி வருவதற்கான பலம் அனைவரிடமும் இதேபோல கிடையாது. எங்களில் வெகு சிலரால் மட்டுமே இப்படிச் செய்ய முடிந்தது. எங்களைத் தவிர இதுவரை வெளியேற முடிந்தவர்கள் சுமார் 150 பேர் குஜராத்தை விட்டு வெளிவர முடிந்திருக்கிறது. எங்களில் சிலர் டெல்லி – ஜெய்ப்பூர் எல்லையில் இருக்கிறோம்; வேறு சிலர் சிங்கு எல்லையில் இருக்கிறார்கள்.

குஜராத விவசாயிகள் எப்போதிருந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள்?

குஜராத் விவசயிகள் முதல் நாளிலிருந்தே இந்த சட்டங்களுக்கு எதிராக ஒன்றிணைந்து வருகின்றனர். அது வரைவாக இருக்கையிலும் அதனை நாங்கள் கண்டித்தோம். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையும் கண்டித்தோம். ஆனால் எங்களில் யாரும் எங்களது கண்டங்களை ஒன்றிணைந்து அறிவிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.

விவசாய சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுப்பதற்கு முந்தைய நாளில், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கக் கூடாது என குஜராத் வியாபாரிகளுக்கு அறிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து 144 தடையுத்தரவை பிறப்பித்தது குஜராத் அரசு. இவையனைத்தும் ஒரு அச்சமிக்க சூழலை உருவாக்குவதற்காகவே போடப்பட்டது.

குஜராத் அரசு ஏன் நீங்கள் டெல்லி போராட்டக் களத்திற்குச் செல்வதை விரும்பவில்லை

அவர்கள் கொண்டுள்ள மிகப்பெரிய அச்சம் என்னவென்பதைக் கூறுகிறேன். அவர்கள் இயற்றிய புதிய சட்டங்களை அவர்கள் எந்த அளவிற்குப் புகழ்ந்து போற்றுகிறார்கள் என்பதைப் பாருங்கள். அவர்கள் கிராமங்களில் உள்ள மக்களைச் சந்தித்து அவர்களிடம் இச்சட்டங்களை ஏற்கச் செய்ய முயற்சிக்கிறார்கள். தற்போது இந்தச் சட்டங்கள் பாராட்டப்படுவது போலவே சில ஆண்டுகளுக்கு முன்னர், பயிர் காப்பீட்டு திட்டத்தை அவர்கள் கொண்டுவந்த போதும் அச்சட்டத்தையும் புகழ்ந்து போற்றினார்கள்.

ஆனால் இன்று குஜராத்தில், அந்த மொத்த திட்டமும் மிகப்பெரிய தோல்வி என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.

காப்பீட்டு நிறுவனங்களும் அரசாங்கமும் ஊழல்மிக்கவை இந்தத் திட்டம் பிரதமந்திரியின் கனவுத்திட்டம் என்று வேறு அழைக்கப்பட்டது. பின்னர் ஏன் அது குஜராத்தில் நிறுத்திவைக்கப்பட்டது? நாங்கள் இதையெல்லாம் டெல்லி சங்கமத்தில் பேசுவோம். அதனால்தான் நாங்கள் அங்கு செல்வதை அவர்கள் விரும்பவில்லை. நாங்கள் அங்கு சென்று பேசினால் உண்மையான குஜராத் மாடல் அனைவருக்கும் அம்பலப்பட்டு போகும்.  

படிக்க :
♦ ரஜினி ரசிகர்களே ! இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை !
♦ கமல்ஹாசன் – சூரப்பாவின் #நேர்மை, #திறமை, #அஞ்சாமை !!

குஜராத்தில் இருந்து எத்தனை விவசாயிகள், டெல்லி எல்லையில் நடக்கும் போராட்டத்தில் இணைந்து கொள்ள இருக்கிறார்கள்?  

மேலும் சுமார் 200 பேர் தற்போது கிளம்பி டெல்லிக்கு வருகிறார்கள். அவர்களும் நான் ரகசியமாக கிளம்பியதைப் போல கிளம்புவார்கள். இப்போதைய நிலையில் குஜராத்தில் நீங்கள் டெல்லிக்குப் போகிறேன் என்று கூட சொல்ல முடியாது. குஜராத்தில் இருந்து வெளியேறிய பின்னர் தான் நீங்கள் இது குறித்திப் பேச முடியும். இதுதான் குஜராத் மாடல். எங்களது அனைத்து தொலைபேசிகளும், வாட்சப் உடையாடல்களும், எங்களது வாகனங்களும், அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன.

இன்று (15-12-2020) பிரதம மந்திரி கட்ச் பகுதியில் உள்ள விவசாயிகளைச் சந்திக்கிறாரே, அவர்களை சந்தித்து அவர்களது பயத்தைப் போக்குவதற்குச் சந்திக்கிறாரா ?    

கடந்த 2002-ம் ஆண்டுக்குப் பிறகு, கட்ச் பகுதி வர்த்தகத்துக்குச் சுதந்திரமான இடமாக மாறியது. இச்சமயத்தில், பல சர்தார்கள் கட்ச் பகுதிக்கு வியாபாரம் செய்ய வந்தார்கள். கட்ச் பகுதியில் உள்ள சர்தார்கள் அனைவரும் வர்த்தகர்களே தவிர விவசாயிகள் அல்ல. கட்ச் பகுதியிம் மண் விவசாயம் செய்யும் அளவிற்கு வளமான மண் அல்ல.

பாஜகவின் நடைமுறைத் தந்திரம் எப்போதுமே, தங்களது மொழியைப் பேசும் நபர்களிடம் பேசுவதுதான். அவர்கள் சந்திக்கும் விவசாயிகள் அதைச் செயுவார்கள். அதற்காக பாஜகவில் உறுப்பினர்களாகவும் ஆதரவாளர்களாகவும் விவசாயிகள் இல்லை என்ரு ஆகிவிடாது. பாஜகவிலும் அவர்களது கட்சியின் சித்தாந்தத்தை நம்பும் விவசாயிகள் இருக்கிறார்கள்.

கட்டுரையாளர் : பவன்ஜோத் கவுர்  

தமிழாக்கம் : கர்ணன்
நன்றி : The Wire

கேஸ் சிலிண்டர் – பெட்ரோல் – டீசல் விலை உயர்வும் – அம்பானிகளின் சொத்து மதிப்பு உயர்வும் !!

0

ரிவாயு சிலிண்டர் விலை நேற்று (15-12-2020) ரூ. 50 ஏற்றப்பட்டிருக்கிறது. டிசம்பர் மாதத்திலேயே இது இரண்டாவது முறை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் வரை ரூ. 610 -ஆக இருந்த எரிவாயு சிலிண்டர் விலை, டிசம்பர் மாதம் 2-ம் தேதி ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.660 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் ரூ. 50-ஐ உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு.

இனி எரிவாயு சிலிண்டர் வாங்க வேண்டுமெனில் சுளையாக ரூ.710-ஐ எடுத்து வைக்க வேண்டும். ரூ.100 உயர்வு என்பது நடுத்தரவர்க்கத்திற்கு பெரும் மாற்றமாகத் தெரிய வாய்ப்பில்லை என்றாலும், சாதாரண மக்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

எரிவாயு விலை உயர்வு ஒருபுறமிருக்க ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட ரூ.90-ஐ நெருங்கிவிட்டது பெட்ரோல் விலை. பெட்ரோல் விலை, டீசல் விலை உயர்வு நேரடியாக நடுத்தரவர்க்கத்தினரைப் பாதிக்கும் அதேவேளையில், விலைவாசி உயர்வு மூலம் சகல வர்க்கத்தினருக்குமான பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.

படிக்க :
♦ பெட்ரோல் விலை உயர்வு : இனியும் பொறுக்க முடியாது !
♦ இயற்கை எரிவாயு : அம்பானி கொள்ளைக்கு அமைச்சரவை அனுமதி !

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், ஆளும் அரசாங்கம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு சில பைசாக்கள் உயர்த்தினாலும், நாடெங்கும் நடைபெறும் போராட்டங்கள், இன்று அன்றாடம் விலை உயர்வு நடைபெறும் போது நடக்கவில்லையே ஏன் ?

எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 10 கூடினாலும், பெருவாரியானவர்களுக்கு அது மிகப்பெரும் பாதிப்பாகத் தெரிந்துவந்த நிலையில் ஒரே மாதத்தில் விலை 100 ரூபாய் அதிகரிக்கப்பட்ட பிறகும் வெறும் முனங்கல்களோடு கடந்து போகிறதே ஏன்?

ஏனெனில் இவை அனைத்தும் நமக்கு இயல்பாக்கப் பட்டிருக்கின்றன. இந்த இயல்பாக்கல் என்பது பாஜகவின் ஆட்சிக் காலத்தில் கையாளப்படும்  நடைமுறையல்ல. மாறாக காங்கிரஸ் காலத்திலிருந்தே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகும்.

பெட்ரோல், டீசல் விற்பனை ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கொண்டுள்ள முக்கியமான பாத்திரத்தைக் கருதிதான், பெட்ரோல், டீசல் விலையின் மீதான மத்திய அரசின் கட்டுப்பாடும், மானியமும் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக நாடெங்கும் சரக்குப் போக்குவரத்தையும், உற்பத்தியையும் அதிகரிக்கவும், விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைத்திருப்பதையும் உறுதிப்படுத்தவே இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

கேஸ் விலை உயர்வைக் கண்டித்து 2014-ம் ஆண்டில் நடைபெற்ற போராட்டம் – கோப்புப்படம்

அதன் பின்னர், தனியார்மயம், தாராளமயம், உலகமய கொள்கைகளின்படி இதனை சந்தையின் கட்டுப்பாட்டில், அதாவது பெட்ரோல் டீசல் சுத்திகரிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் பெருமுதலாளிகளின் கட்டுப்பாட்டில் விட்டது காங்கிரஸ் கட்சி.

கல்வி, மருத்துவம், அத்தியாவசிய பொருட்கள் என அனைத்துத் துறைகளையும் –  சேவைத் துறையிலிருந்து இலாபம்சார்ந்த துறையாக – அரசின் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்ட துறையாக மாற்றி சந்தையின் கைகளில் விடவேண்டும் என்பதுதான், தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளின் அடிப்படை.

இந்த வகையில் மானிய விலையில் விற்கப்பட்டு வந்த பெட்ரொல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு சிலிண்டர் துவங்கி ரேசன் பொருட்கள் வரை அனைத்துக்கும் அளிக்கப்பட்டு வரும் மானியத்தை படிப்படியாக நிறுத்தி ஒளித்துக்கட்டும் வேலையை கடந்த காங்கிரஸ் ஆட்சியும், தற்போது மோடி ஆட்சியும் சிரமேற்கொண்டு செய்து வருகின்றன.

இதற்கான அடித்தளமிட்ட திட்டங்கள்தான் ஆதார் மற்றும் ஜன்தன் யோஜனா. அனைவருக்கும் வங்கிக் கணக்கு, உங்கள் பணம் உங்கள் கையில் என்ற வகையில், மானிய விலையில் கொடுக்கப்படும் எரிவாயு சிலிண்டர், ரேசன் பொருட்கள், ஆகியவற்றை முழு விலை கொடுத்துவிட்டு வாங்கினால், உங்களது வங்கிக் கணக்கிற்கு மானியத்திற்கான தொகை வந்துவிடும்.. இடைத்தரகர்கள், அரசு அதிகாரிகள் தொல்லை கிடையாது என்றெல்லாம் விளம்பரம் செய்தும், ஆதார் இல்லையெனில் ரேசன் பொருட்கள் கிடையாது என மிரட்டியும், மானிய ஒழிப்பை படிப்படியாக நடைமுறைப்படுத்தின காங்கிரஸ் மற்றும் பாஜக அரசாங்கங்கள்.

மக்களை முதலில் சந்தை விலை கொடுத்து வாங்கச் செய்வது – அதாவது சந்தை விலைக்கு வாங்குவதற்கு மக்களின் சிந்தனையை பழக்கப்படுத்துவது – என்பதை வெற்றிகரமாகச் செய்து முடித்த பிறகு, வங்கியில் போடப்படும் மானியத்தையும் படிப்படியாக ஒழித்துக் கட்டுவது என்ற வகையில் உலகவங்கி, உலக வர்த்தகக் கழகம் ஆகியவற்றின் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது பாஜக.

தற்போதைய விலை உயர்வை மிகத் தெளிவாக “மானியமில்லா” எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு எனப் போடுவதன் மூலம், மானியமுள்ள எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இல்லாதது போன்ற தோற்றத்தை அரசும் ஊடகங்களும் ஏற்படுத்துகின்றன.

நடைமுறையில் மானியமுள்ள எரிவாயு சிலிண்டர்களை வாங்குபவர்கள், மானியமில்லா  எரிவாயு சிலிண்டருக்கான விலையைக் கொடுத்துதான் வாங்க வேண்டும். அப்படி வாங்கிய பின்னர் மானியத்தொகையை அரசு அவர்களது வங்கிக் கணக்கில் திருப்பிச் செலுத்திவிடும் என்று சொல்லப்பட்டது. அதற்காகத்தான் ஆதாரோடு எரிவாயு இணைப்பு பெறுவது இணைக்கப்பட்டது. ஆனால் எதார்த்தத்தில் என்ன நடக்கிறது ?

கடந்த மாதத் துவக்கத்தில்  610 ரூபாய் கொடுத்து வாங்கிய ஒரு நடுத்தரவர்க்கத்தவருக்கு அவரது அக்கவுண்டில் அரசால் போடப்பட்ட மானியத்தொகை ரூ. 23.95. அவர் இந்த மாதம் இரண்டாம் வாரத்தில் ரூ. 660 கொடுத்து வாங்கிய சிலிண்டருக்கும் அவருக்கு வங்கியில் அரசால் போடப்பட்ட மானியத் தொகை ரூ.23.95.  இதுதான் மானிய விலை சிலிண்டரின் இலட்சணம்.

மானியமில்லா சிலிண்டருக்கும், மானிய விலை சிலிண்டருக்கும் உள்ள விலை வித்தியாசம் ரூ. 23.95. மானியமில்லா சிலிண்டரின் விலை உயரும் ஆனால் மானியம் மட்டும் உயராது. இதுதான் எதார்த்தம். இங்கே மானியம் என்று எதுவும் அளிக்கப்படவில்லை; படிப்படியாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பெட்ரோல் விலை, டீசல் விலையைப் பற்றி சொல்லவே தேவையில்லை. சர்வதேச சந்தையில் ஏறினாலும், இறங்கினாலும்  உள்ளூர் சந்தையில் ஏறுவது மட்டுமே பிரதானமாக நடக்கிறது.

படிக்க :
♦ ரேசன் மானியம் இரத்து – மறுகாலனியாக்கத்தின் கோர முகம்
♦ உணவு மானியம் : வாரி வழங்குகிறதா இந்திய அரசு ?

தொழில் வளர்ச்சிக்காகவும், விலைவாசி கட்டுப்பாட்டுக்காகவும், மக்கள் நலனை குறைந்தபட்சமாகப் பாதுகாப்பதற்கும் கொண்டுவரப்பட்ட மானியத்தை இலவசம் என்பது போலவும், இழிவானதாகவும் சித்தரித்து ஒரு பொதுக்கருத்தை உருவாக்குவதிலும், மக்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் அனைத்தும் அரசுக்கு ஏற்படும் சுமைகள் என்பது போலவும் திட்டமிட்டு ஒரு சித்திரத்தை ஆளும் வர்க்கம் உருவாக்கியது.

அதன் விளைவுதான்,  பாஜகவின் முந்தைய ஆட்சிக்காலத்தில்,  எரிவாயு சிலிண்டர் மானியத்தை தாமாக முன்வந்து கைவிடும்படி மோடி கேட்டுக்கொண்டதற்கிணங்க, பல்வேறு நடுத்தரவர்க்க “கனவான்கள்” தாமாக முன்வந்து கைவிட்டனர். பாவம் அடிமட்ட ஏழையான அம்பானி கூட தனக்குக் கொடுக்கப்பட்ட மானியத்தை கைவிட்டார் தெரியுமா ?

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கம் கார்ப்பரேட்டுகளுக்குக் கொடுக்கும் மானியங்கள் அனைத்தும், வளர்ச்சிக்கானவையாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

பெட்ரோல் விலை – டீசல் விலை உயர்வு, எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு , ரேசன் கடை மானியம் ரத்து ஆகியவை சிறு தொழில் முனைவோர், சிறு வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்களின் வாழ்வை படிப்படியாக முடக்குகின்றன. அவர்களை வாழமுடியாத நிலைக்குத் தள்ளுகின்றன.

இவை அனைத்தும் படிப்படியாக, நமக்கு இயல்பானதாக, மாற்றப்பட்டு அமல்படுத்தப்படும் போது எவ்வித எதிர்ப்பும் இன்றி மேற்கண்ட வர்க்கப் பிரிவினர் வறுமைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்த மானியங்கள் ஒழிக்கப்படுவதன் மூலமும், அரசாங்கத்தால் அதிகரிக்கப்படும் பெட்ரோல் டீசல் கலால் வரிகள், ஜி.எஸ்.டி. வரிகள் மூலமும் கிடைக்கும் பணத்தால் ஆதாயம் அடையப் போவது ஆத்மநிர்பார் மூலமும் இன்னபிற அரசு மானியங்கள் மூலமும், வரிவிலக்குகள் மூலமும் பயனடையும் கார்ப்பரேட்டுகள் தான்.

இப்போது புரிகிறதா ? வறுமைக் குறியீட்டில் இந்தியா ஆப்பிரிக்க நாடுகளுக்கு அருகாமையில் இருக்கும் அதே நிலையில், அம்பானிகளும் அதானிகளும் செல்வச் செழிப்பில் அமெரிக்காவிற்குப் போட்டியாக இருப்பதன் ரகசியம் என்னவென்று ?

சரண்

எது அபாயகரமானது? கரோனாவா, ஆர்.எஸ்.எஸ்.−இன் அவதூறா?

முழு ஊரடங்கு, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு எனக் கடந்த ஏழெட்டு மாதங்களில் விதவிதமான ஊரடங்குகளை இந்திய மக்கள் அனுபவிக்க நேர்ந்த பிறகும் கரோனா நோய்த் தொற்றை மத்திய, மாநில அரசுகளால் முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. நவம்பர் மாத மத்தியில் இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88 இலட்சத்தைத் தாண்டியும் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இந்நோய்த் தொற்று சமூகப் பரவல் நிலையை எட்டிவிட்டதா என்ற கேள்விக்கு இதுவரை இந்திய அரசு எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. அதேசமயத்தில் இந்நோய்த் தொற்று மிகத் தீவிரமாகப் பரவிவந்த மாதங்களில்கூட, இந்தியாவில் இந்நோய்த் தொற்று சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை என்றுதான் மட்டையடியாகக் கூறி வந்தன மத்திய, மாநில அரசுகள்.

அதேசமயத்தில், இந்நோய்த் தொற்றின் பரவும் வேகம் அதிகரிக்கத் தொடங்கிய ஏப்ரல், மே மாதங்களில், அப்பரவலுக்குக் காரணம், ‘‘கரோனா ஜிகாத்’’ என்றொரு கண்டுபிடிப்பை அவிழ்த்துவிட்டன சங்கப் பரிவார அமைப்புகள். சங்கிகள் முஸ்லிம் வெறுப்பு திரியைப் பற்ற வைத்தவுடன், அதற்குக் கை, கால், மூக்கு வைத்து எழுதத் தொடங்கின ஆர்.எஸ்.எஸ். சார்பு ஊடகங்கள். குறிப்பாக, தமிழகத்தில் தினமணியும், தினமலரும் சங்கிகளே தோற்றுப்போகும் வண்ணம் கரோனா பரவலை முஸ்லிம்களோடு தொடர்புபடுத்தி எழுதின. ‘‘இதை (கரோனா பரவலை) மதப் பிரச்சினை ஆக்கக்கூடாதெனக் கூறி அடக்கி வாசிக்க முயலுவது ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் இழைக்கும் துரோகம்’’ என ‘‘மன்னிக்க முடியாத குற்றம்!’’ எனத் தலைப்பிட்டுத் தலையங்கமே தீட்டியது, தினமணி. (தினமணி, 04.04.2020)

தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் டெல்லி அரசால் வெளியேற்றப்படும் காட்சி.

இந்திய முஸ்லிம்கள் மீது இப்படியொரு அபாண்டமான பழியைச் சுமத்துவதற்கு சங்கிகளுக்கும் தினமலம்களுக்கும் கையில் கிடைத்த சாக்கு, தலைநகர் டெல்லி−நிஜாமுதின் பகுதியில் மார்ச் 13 முதல் 15−ம் தேதி வரை நடந்த தப்லீக் ஜமாஅத் அமைப்பினரின் மாநாடு.

முஸ்லிம் மதம் சார்ந்த இம்மாநாடு அரசுக்குத் தெரியாமல் சட்டவிரோதமாக நடந்த மாநாடு அல்ல. இம்மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் மட்டுமின்றி, பல்வேறு முஸ்லிம் நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் வந்து கலந்துகொள்வார்கள் என்பதும் அரசுக்குத் தெரியும். அப்படி வந்தவர்களுக்கு விசா அளித்து, விமான நிலையத்திலேயே கரோனா பரிசோதனை நடத்தி முடித்து அம்மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதி அளித்ததும் மைய அரசுதான். மேலும், மாநாடு முடிந்த பிறகு, மாநாட்டுப் பிரதிநிதிகள் முஸ்லிம்கள் மத்தியில் மதப் பிரச்சாரம் செய்வதற்காக இந்தியாவெங்கும் பயணிப்பார்கள் என்பதும் மைய அரசிற்குத் தெரியும்.

இம்மாநாட்டின் ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்குவதற்கு முன்பே, அதாவது ஜனவரி மாதத்தின் இறுதியிலேயே கரோனா உலக அளவில் பரவக்கூடிய எச்சரிக்கையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துவிட்டது. அதற்கடுத்த பிப்ரவரி மாதத்திலேயே எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரசு கட்சியின் ராகுல் காந்தி கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்திலேயே கேள்வி எழுப்பினார். இம்மாநாட்டை அனுமதிப்பது குறித்து முடிவெடுப்பதற்கு மோடி அரசிற்குப் போதிய கால அவகாசம் இருந்தும், மாநாடு குறித்து மட்டுமின்றி, இந்தியாவில் கரோனா பரவலைத் தடுப்பதற்கு எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் அவரது அரசு எடுக்கவில்லை. குறிப்பாக, கரோனா நோய்க் கிருமியை இறக்குமதி செய்யும் அபாயம் கொண்ட சர்வதேச விமானப் போக்குவரத்துகூட மார்ச் 23 அன்றுதான் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

மோடி அரசு இப்படி அலட்சியமாக இருந்ததற்கு வேறு காரணங்கள் உண்டு. குறிப்பாக, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மத்தியப் பிரதேச காங்கிரசு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கும், தனது தனிப்பட்ட புகழுக்காக அமெரிக்க அதிபர் டிரம்பை அழைத்து வந்து குஜராத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு விழா நடத்துவதற்கும்தான் முன்னுரிமை கொடுத்து வந்தது மோடி அரசு.

இம்மாநாடு தொடங்கிய நாளன்றுதான் இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும் விழாக்கள், விளையாட்டுப் போட்டிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. மாநாட்டின் நிறைவு நாளன்றுதான் இத்தடையுத்தரவு ஐம்பதுக்கும் மேற்பட்டோர் விழாக்களில் கலந்துகொள்ளக்கூடாது எனத் திருத்தப்பட்டது. அதற்கடுத்த பத்து நாட்களில் மக்கள் ஊரடங்கு, நாடு தழுவிய ஊரடங்கு, பொதுப் போக்குவரத்துக்குத் தடை என மக்களின் நடமாட்டம் முற்றிலுமாக முடக்கப்பட்டது. இந்தப் பத்து நாட்களில் மாநாட்டில் கலந்துகொண்ட பலர் தமது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றனர். மாநாடு நடந்த பள்ளிவாசலிலேயே தங்கியருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊரடங்கின் காரணமாகத் தமது சொந்த ஊருக்கும், நாட்டுக்கும் திரும்பிச் செல்ல முடியாத இக்கட்டில் சிக்கிக் கொண்டனர்.

கரோனா பரவத் தொடங்கிய சமயத்தில் (பிப்.21) உள்நாட்டு மற்றும் சர்வதேச ‘இந்துக்கள்’ பல்லாயிரக்கணக்கில் பங்கேற்ற ஜக்கியின் மகா சிவராத்திரி கூத்து.

இம்மாநாட்டில் கலந்துகொண்டு சொந்த ஊருக்குத் திரும்பிய முஸ்லிம்களுள் பலருக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும்; மசூதியிலேயே தங்க நேரிட்ட பலருக்கும் கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டதற்கு இந்தப் பின்னணிதான் காரணம். இதில் தனக்கு எந்தவொரு பொறுப்பும் இல்லை எனக் கையைக் கழுவிவிட்டு, முழுப் பழியையும் முஸ்லிம்கள் மீது போட்டது மைய அரசு. தனது தவறுக்கு யாரையாவது பலிகிடா ஆக்க வேண்டும் என்ற தந்திரத்தையும் தாண்டி, மோடி அரசின் முஸ்லிம் வெறுப்பு அரசியல்தான், கரோனா ஜிகாத் என்ற இந்த அவதூறுக்கு அடிப்படையாகும்.

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகுதான் உ.பி. முதல்வர் ஆதித்யநாத், தனது படை பரிவாரங்கள் சூழ அயோத்திக்கு வந்து ராமர் சிலையை இடமாற்றும் வைபவத்தில் கலந்துகொண்டார். இந்தியாவில் கரோனா அறிகுறி கொண்ட நோயாளிகள் கண்டறியப்பட்ட சமயத்தில்தான், பிப்ரவரி 21 அன்று ஆர்.எஸ்.எஸ்.க்கு நெருக்கமான கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ் பல்லாயிரக்கணக்கான இந்துக்களையும் வெளிநாட்டவர்களையும் திரட்டிவந்து மகா சிவராத்திரி களியாட்டத்தை நடத்தினார். மாதா அமிர்தானந்தமயி மடத்தினர் மார்ச் 13 அன்று அமிர்தபுரியில் நூற்றுக்கணக்கானரைத் திரட்டி சன்னியாசம் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.  ம.பி. காங்கிரசு அரசைக் கவிழ்த்த வெற்றியை நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் கொண்டாடினார் பா.ஜ.க. தலைவர் சிவராஜ் சிங் சௌஹான். இந்த நிகழ்வுகளையெல்லாம் கண்டுகொள்ளாத ஆர்.எஸ்.எஸ்.−ம், தேசிய ஊடகங்களும் தப்லீக் ஜமாஅத் மாநாட்டின் மீது மட்டும் பழியைப் போடுவதற்குக் காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

கரோனா பரவலுக்கும் தப்லீக் ஜமாஅத் மாநாட்டிற்கும் முடிச்சுப் போட்டு, இந்திய முஸ்லிம்களைச் சமூகப் புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்ற தீவிரத்தோடு ஆர்.எஸ்.எஸ். அவதூறுப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டதென்றால், அம்மாநாட்டில் கலந்துகொண்ட முஸ்லிம்கள் மருத்துவர்களுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்கள், மருத்துவ ஊழியர்களைத் தாக்குகிறார்கள் எனத் தம் பங்குக்கு பா.ஜ.க. அரசுகள் முஸ்லிம்கள் மீது பழிபோட்டன. தனிப்பட்டவர்கள் செய்திருக்கக்கூடிய தவறுகள் இந்திய முஸ்லிம்கள் மீதான களங்கமாக மாற்றப்பட்டன.

மேலும், அம்மாநாட்டில் கலந்துகொண்ட உள்நாட்டு முஸ்லிம்கள் மற்றும் வெளிநாட்டு முஸ்லிம்கள் மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டம், வெளிநாட்டவர் சட்டம் மற்றும் பேரழிவு மேலாண்மைச் சட்டம் உள்ளிட்டுப் பல்வேறு கிரிமினல் சட்டங்களின் கீழ் பல மாநிலங்களில் 209 வழக்குகள் தொடுக்கப்பட்டன. தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு தனிமைச் சிகிச்சையில் இருந்துவந்த ஆறு முஸ்லிம்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது, உ.பி. அரசு. தப்லீக் ஜமாஅத் தலைவர் மௌலானா முகம்மது ஸாத் மீது கொலைக் குற்றமாகாத மரண வழக்கு (culbable homicide)ப் பதிவு செய்யப்பட்டது. தப்லீக் அலுவலகங்கள் வருமான வரித்துறையினரால் சோதனையிடப்பட்டன. இவற்றின் மூலம் ஆர்.எஸ்.எஸ்.−இன் அவதூறுகளுக்குச் சட்டபூர்வத் தகுதியை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்திக் கொடுத்தன.

தப்லீக் மாநாடு நடைபெற்ற நிஜாமுதீன் பகுதியிலிருந்து வரும் முஸ்லிம்கள் மீது கிருமி நாசினி தெளித்து விலங்குகளைப் போல நடத்திய மாநகராட்சி ஊழியர்கள்.

இந்த அவதூறுகளும், பழி தூற்றலும், வழக்குகளும் இந்திய முஸ்லிம்களுக்குப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தின. குறிப்பாக, உ.பி. மீரட் நகரிலுள்ள வாலண்டிஸ் புற்றுநோய் மருத்துவமனை முஸ்லிம் நோயாளிகளுக்கு மட்டும் கரோனா பரிசோதனையைக் கட்டாயமாக்கி, விளம்பரம் வெளியிட்டது. காரணம், முஸ்லிம்களை கரோனா குண்டுகள் என ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்ட அவதூறு பிரச்சாரம். இதேபோன்று இராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு தனியார் மருத்துவமனை முஸ்லிம் நோயாளிகளுக்கு வாட்ஸ் அப் வழியாக மருத்துவ ஆலோசனை கொடுக்க மறுத்தது. இம்மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு இமாச்சலப் பிரதேசத்திலுள்ள தனது கிராமத்திற்குத் திரும்பிய ஒரு முஸ்லிம் தன்னார்வலர் இந்த அவதூறுகளின் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார். இவை, பானைச் சோற்றுக்குப் பதம் போன்றவை.

மேலும், தப்லீக் ஜமாஅத் பயங்கரவாத அமைப்பென்றும், அதில் கலந்துகொண்டவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகள் என்றும், உலகின் பல்வேறு இடங்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் தப்லீக் ஜமாஅத்திற்கும் தொடர்பிருக்கிறது என்றும், இந்துக்களை மதம் மாற்றும் நோக்கத்தோடுதான் இம்மாநாடு நடத்தப்பட்டிருக்கிறது என்றும் இந்த அவதூறு பிரச்சாரம் அருவெறுக்கத்தக்க அளவில் உச்சத்தைத் தொட்டது.

தினசரிகள், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட பொது ஊடகங்களிலும்; முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பரப்பப்பட்ட இந்த அவதூறுகளின், பல்வேறு மாநிலங்களிலும் தொடுக்கப்பட்ட வழக்குகளின் இன்றைய நிலை என்ன?

தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்துகொண்ட 29 வெளிநாட்டவர்கள் மற்றும் இந்திய நாட்டைச் சேர்ந்த ஆறு முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்து வந்த மும்பய் உயர்நீதி மன்றத்தின் அவுரங்காபாத் கிளை, அவர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்துவிட்டதோடு, ‘‘அரசியல்ரீதியில் இயங்கும் அரசாங்கம் பெருந்தோற்றோ, பேரழிவோ ஏற்படும் காலங்களில் பலிகிடாக்களைத் தேடுகிறது. இந்த வெளிநாட்டவர்கள் அத்தகைய பலிகிடா ஆக்கப்பட்டதற்கான வாய்ப்பிருப்பதைச் சூழ்நிலைகள் மூலம் அறிய முடிகிறது’’ எனத் தனது உத்தரவில் குறிப்பிட்டது.

நீதிபதி டி.வி. நளவாடே.

இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளுள் ஒருவரான நீதிபதி டி.வி. நளவாடே, ‘‘இந்த வெளிநாட்டு முஸ்லிம்கள்தான் இந்தியாவில் கரோனா பரவியதற்குக் காரணம் என்றொரு பிரச்சாரத்தை அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் நடத்த முயன்றிருப்பது, அவர்களை மதரீதியாகத் துன்புறுத்தும் கொடுமையாகும்’’ எனக் குறிப்பிட்டதோடு, ‘‘தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்துகொண்ட அனைவர் மீதும் வழக்குப் போடும் இந்த முடிவானது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக விடப்பட்டிருக்கும் மறைமுகமான எச்சரிக்கையாகும்’’ என இவ்வழக்கின் பின்னுள்ள மோடி அரசின் நோக்கத்தையும் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

‘‘இந்த வழக்குகள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய இந்திய முஸ்லிம்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. மேலும், இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக எதற்காகவும் எந்தவொரு வடிவிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் விதத்திலேயே இந்த வழக்குகள் புனையப்பட்டுள்ளன’’ என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார், நீதிபதி டி.வி.நளவாடே.

இவ்வழக்கை விசாரித்த அமர்வைச் சேர்ந்த மற்றொரு நீதிபதி ஸேவ்லிகர் நீதிபதி டி.வி.நளவாடேயின் இந்தக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், தீர்ப்பின் செயல்பாட்டுப் பகுதியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

‘‘தப்லீக் ஜமாஅத் அமைப்பு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த தனிப்பிரிவு அல்ல. அம்மதத்தைச் சீர்படுத்தும் நோக்கில் இயங்கிவரும் இயக்கம்’’ எனக் குறிப்பிட்டுள்ள அந்த உத்தரவு, ‘‘வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தாலும்கூட, அம்மாநாட்டில் கலந்துகொண்ட எந்தவொரு தன்னார்வலரும் மாற்று மதத்தினரை முஸ்லிம் மதத்திற்கு மாற்றும் நோக்கில் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை’’ எனத் தெரிவித்து, தப்லீக் ஜமாஅத் மீது புனையப்பட்ட மத மாற்றம் குற்றச்சாட்டை ரத்து செய்துவிட்டது.

ஜம்முவில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவதேவி கோவிலுக்கு வழிபடுவதற்காக வந்த இந்துக்கள் திடீர் ஊரடங்கின் காரணமாகத் தமது ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் அக்கோவிலிலேயே தங்கிவிட்டதைக் கண்ணியமாகக் குறிப்பிட்ட ஊடகங்கள், தப்லீக் மாநாட்டிற்கு வந்த வெளிநாட்டு முஸ்லிம்கள் தமது சொந்த நாட்டிற்குத் திரும்ப முடியாமல் பல்வேறு மசூதிகளில் தங்கியிருந்ததை, மசூதிகளில் வெளிநாட்டு முஸ்லிம்கள் பதுங்கியிருப்பதாகவும் ஒளிந்திருப்பதாகவும் குறிப்பிட்டு அவதூறு செய்தன. அதனை மறுத்திருக்கும் இந்தத் தீர்ப்பு, ‘‘அரசியல் சாசனச் சட்டத்தின் பிரிவுகள் 25, 20, மற்றும் 21−இன்படி, சட்டப்படியான விசா பெற்று இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்குத் தமது மதக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்யும் உரிமை உண்டு’’ எனக் குறிப்பிட்டுள்ளது.

மும்பய் உயர்நீதி மன்றம் மட்டுமல்ல, இது போன்றதொரு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், ‘‘தப்லீக் மாநாட்டில் கலந்துகொள்ள வந்த வெளிநாட்டு முஸ்லிம்களைச் சிறைப்படுத்தியது அநீதியானது’’ எனக் குறிப்பிட்டதோடு, ‘‘இந்தியாவில் கரோனா பரவலுக்கு அவர்கள் காரணமல்ல’’ எனத் தீர்ப்பு அளித்திருக்கிறது.

படிக்க :
♦ கொரோனா பீதி : பார்ப்பன பாசிஸ்டுகளின் தாக்குதல் இலக்கு இசுலாமிய மக்கள்!
♦ முஸ்லீம்கள் மீதான தாக்குதலைத் தடுக்கச் சட்டம் : குஜராத் முசுலீம்களின் எதிர்பார்ப்பு

கர்நாடகா உயர்நீதி மன்றம் ஒன்பது வெளிநாட்டு முஸ்லிம்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்திருக்கிறது. தம் மீதான கிரிமினல் குற்றச்சாட்டுக்களை எதிர்த்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்த 44 வெளிநாட்டு முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் பூர்வாங்க ஆதாரமில்லை எனக் கூறித் தள்ளுபடி செய்துவிட்டது அந்நீதிமன்றம்.

மும்பய், சென்னை, டெல்லி, கர்நாடகா உயர்நீதி மன்றங்கள் அளித்திருக்கும் இத்தீர்ப்புகள் கரோனா பரவலை முகாந்திரமாகக் கொண்டு ஆர்.எஸ்.எஸ்., அதன் கைத்தடி ஊடகங்கள் மற்றும் மோடி அரசு ஆகியவை இணைந்து முஸ்லிம்கள் மீது ஓர் அவதூறுப் பிரச்சாரத்தை நடத்தியுள்ளன என்பதை நிரூபித்திருக்கும் அதேசமயம், மதரீதியான அவதூறையும், அடக்குமுறைகளையும் (persecution) ஏவிவிட்ட அக்கும்பல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க எந்தவொரு நீதிமன்றமும் பரிந்துரைக்கவில்லை. முஸ்லிம்களுக்கு நீதி கிடைத்திருக்கலாம், ஆனால், குற்றவாளிகளுக்குச் சலுகை காட்டப்பட்டிருக்கிறது என்பதும்தான் உண்மை.

பின்குறிப்பு :

கரோனா பரவல் மற்றும் காற்று மாசுபாடு ஆகியவை காரணமாக இந்த ஆண்டு தீபாவளி நாளன்று டெல்லி உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் காலையில் ஒரு மணி நேரம், இரவில் ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க, அதுவும் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த உத்தரவுகளெல்லாம் தீபாவளி நாளன்று கழிப்பறை காகிதமாகின. இந்துக்களின் இந்த அலட்சியம், பொறுப்பற்றதனம் குறித்து தினமணியோ, தினமலரோ மன்னிக்க முடியாத குற்றம் எனத் தலையங்கம் தீட்ட முன்வருமா? அப்படி யாராவது எழுதினால், அவர்களை ஆர்.எஸ்.எஸ். கும்பல் சும்மாவிட்டுவிடுமா?

அறிவுமதி

நூல் விமர்சனம் : உழைக்கும் மக்களின் முன்னணிப் படை || ஏ. ஷா சின் | காமராஜ்

பாட்டாளி வர்க்கக் கட்சியை பற்றியும், அதன் அமைப்பு கோட்பாடுகளை பற்றியும் தெளிவான சித்திரத்தை இந்நூல் நமக்கு வழங்குகிறது.

அரசியல் கட்சி என்றால் என்ன?  என்ற முதல் கட்டுரையிலிருந்து, உட்கட்சி செயல்பாடுகளின் வழிகாட்டுதல்கள் வரை 7 தலைப்புகளில்,  கட்சி அமைப்பைப் பற்றி ஒரு சிறந்த பார்வை கொண்ட வழிகாட்டுதல்கள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன.

புராதன பொதுவுடமை சமூகம் சிதறுண்டு போன காலம் முதல் மனிதகுல வரலாற்றில் வர்க்கங்களின் போராட்டம் என்பது நிரந்தர நிகழ்ச்சி நிரலாக இருந்து வருகிறது. வர்க்கங்களாக பிளவுபட்டுள்ள,  சமூக அமைப்பில் ஒன்றுக்கொன்று எதிரான வர்க்கங்கள் மோதிக்கொள்வது, வர்க்கப் போராட்டம்  அரசியல்  போராட்டமாக மாறுவது தவிர்க்க இயலாதது. இத்தகைய வர்க்கப் போராட்டங்கள் கூர்மை அடைந்து புரட்சிகரமான சமுதாய மாற்றத்தில் முடிந்துள்ளது.

புரட்சிகரமான கட்சியானது தொழிலாளர்கள் அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்கு எல்லா வகைகளிலும் தயார் செய்வதாகும்,  பாட்டாளி வர்க்க கட்சி புரட்சியை நடத்த போதுமான வீரம்,  திடம் ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கும். மக்களுடன் இணைந்து அவர்களுக்கு முன்னால் நிற்கும் முன்னணிப் படையாக செயல்படும். அது சர்வதேச கட்சியாக செயல்படும்.

வர்க்கப் போராட்டத்தின் விளைவும் வெளிப்பாடும்தான் அரசியல் கட்சிகளின் தோற்றம். ஒரு வர்க்கத்தில் உள்ள செயல்திறன் உள்ள பிரதிநிதிகள் உணர்வுபூர்வமாக கூடி, கோட்பாட்டின் அடிப்படையில் கொள்கைகளையும் இலட்சியங்களை வென்று, சமூக மாற்றத்தை புரட்சியின் மூலம் சாதிப்பதற்காக கட்சி உருவாக்கப்படுகிறது. வர்க்கங்களின் விரிவான லட்சிய ரீதியான போராட்டங்கள் அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்படுகின்றன.

மார்க்ஸ், ஏங்கெல்ஸ், ஆகியோரின் தத்துவ வெளிச்சத்தில் அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து  சர்வதேச, ரஷிய தொழிலாளர் இயக்கங்களின் அனுபவங்களை கணக்கில் கொண்டு புரட்சிகரமான தொழிலாளர் கட்சிக்கு மாபெரும் தலைவர் லெனின் ஆக்கபூர்வமான வடிவத்தைக் கொடுத்தார்.

புரட்சிகரமான கட்சியானது தொழிலாளர்கள் அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்கு எல்லா வகைகளிலும் தயார் செய்வதாகும்,  பாட்டாளி வர்க்க கட்சி புரட்சியை நடத்த போதுமான செயல்திட்டமும் அதற்கான நடைமுறையும் கொண்டதாக இருக்கும். மக்களுடன் இணைந்து அவர்களுக்கு முன்னால் நிற்கும் முன்னணிப் படையாக செயல்படும். அது சர்வதேச கட்சியாக செயல்படும்.

அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்கான போராட்டத்திற்கு, அமைப்பு என்பதைத் தவிர பாட்டாளி வர்க்கத்துக்கு வேறு எந்த ஆயுதமும் இல்லை என்றார் லெனின்.

கட்சி என்பது ஒரு வர்க்கத்தின் அரசியல் ரீதியான உணர்வு பெற்ற வளர்ச்சியடைந்த பிரிவாகும், பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை ஆகும். முன்னணி படையின் வலிமை, அதில் உள்ளவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகமானதாகும் என்று திட்டவட்டமாக வரையறுத்தார் லெனின்.

சந்தர்ப்பவாத சக்திகளால் மாசுபட்டு விடுவதைவிட புரட்சிகர கட்சிக்கு ஆபத்தானது வேறு எதுவும் இல்லை.

“உழைக்கும் மக்களுக்கு அவர்களுக்கென ஒரு கட்சி தேவையா?” என்ற  கட்டுரை ஸ்தாபன கோட்பாடு பற்றி தெளிவான  புரிதலை உருவாக்குகிறது. மார்க்சும் எங்கெல்சும் பாட்டாளி வர்க்கத்திற்கு சுதந்திரமான கட்சி தேவை என்பதை வலியுறுத்தி வந்துள்ளனர். பாட்டாளி வர்க்கம் தனது வரலாற்றுக் கடமையை ஆற்ற வேண்டுமானால் பாட்டாளி வர்க்கத்துக்கு ஒரு கட்சி தேவை  என்பதை புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.

தேவையான அரசியல் தலைமை வானிலிருந்து விழுவதில்லை, அல்லது எவரும் தானமாக அளிப்பது இல்லை,  முதலாளித்துவ வர்க்கத்தை சமாளிக்க வேண்டுமானால் பாட்டாளி வர்க்கம் அரசியல் தலைவர்களை உருவாக்கிக் கொண்டு தேவையான பயிற்சியை அளிக்க வேண்டும். அத்தகைய தலைமை எந்த விதத்திலும் முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு குறைந்ததாக இருந்துவிடக்கூடாது என்று லெனின் கூறுகிறார்.

கட்சியின் ஒற்றுமை நிலவுவதற்கு திட்டம் மற்றும் தந்திரோபாயங்கள் ஆகியவற்றில் உடன்பாடு அவசியமாகும், தத்துவார்த்த ஒற்றுமை மட்டும் கட்சி போர்க்குணத்துடன் செயல்பட போதாது. அமைப்புரீதியான ஒற்றுமை அவசியமானது.

புதிய கட்சி எவரை உறுப்பினராக சேர்க்கும்? என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரை,  ஊழியர்களின் கட்டமைப்பு வாழ்க்கையைப் பற்றி தெளிவான பார்வையை நமக்கு வழங்குகிறது. நம்மை நாமே முன்னணிப் படை என்று சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது, மற்றவர்கள் நம்மை முன்னணிப் படை என சொல்லும் வகையில் நமது நடவடிக்கை அமைய வேண்டும். நாம் முன்னே செல்வதை மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.

சந்தர்ப்பவாத சக்திகளால் மாசுபட்டு விடுவதைவிட புரட்சிகர கட்சிக்கு ஆபத்தானது வேறு எதுவும் இல்லை. தோல்விகள், பின்னடைவுகள், தவறுகள், உழைக்கும் மக்கள் கட்சியின் குறைபாடுகள் ஆகிய தீங்குகள்  எதனால் ஏற்படுகின்றன? கட்சி கட்டுக்கோப்பு இல்லாமல் இருப்பதும், மார்க்சிய லெனினிய சிந்தனையின் மீது உறுதியான நம்பிக்கையற்றவர்கள், புரட்சிகர கருத்துக்கள் இல்லாதவர்கள், கட்டுப்பாடு இல்லாதவர்கள் கட்சியில் அங்கம் வகிப்பதும், அத்தகைய நபர்கள் சில சமயங்களில் கட்சிக்கு எதிராக இருப்பதும் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட காரணமாக இருக்கிறது.

கட்சி தனது உறுப்பினர்களின் தரம்,  தூய்மை ஆகியவற்றின் மீது எவ்வளவுக்கு எவ்வளவு கண்காணிப்பை செய்து வருகிறது  என்பதைப் பொருத்து, அமைப்பின் தரம் உயரும். போராடும் சக்தி பெருகும், அப்போதுதான் கட்சி மக்களின் தலைவனாக செல்வாக்கை செலுத்த முடியும்.

உறுப்பினர் எண்ணிக்கை அதிகமாக இருந்தால்தான், கட்சி சிறப்பாக இருக்கும் என்றும், கட்சிக்கு ஏதாவது ஒரு வகையில் உதவியவர் அனைவரும் உறுப்பினர் ஆகலாம் என்றும் சந்தர்ப்பவாதிகள் கூறினர். ஆனால், கொள்கை கோட்பாடுகளின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவர்கள், தன்னல மறுப்பாளர்கள், சுய லாபத்தை மறுப்பவர்கள் மட்டுமே கட்சி உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று லெனின் கூறினார்.

கட்சி நடத்தும் போராட்டத்தின் வெற்றி கட்சி உறுப்பினர்களின் தூய்மையை பொறுத்தே அமைகிறது. புதிதாக கட்சி அமைப்பில் சேருபவர்கள் உடைய கல்வியறிவு பற்றி கட்சி மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

மத்தியத்துவம் இல்லாத ஜனநாயகம் கட்சி அமைப்பை ஒரு ஒழுங்கற்ற, இணைந்து செயல்படாத, உட்கட்சி ஒற்றுமை இல்லாத அமைப்பாக மாற்றிவிடும். மாறாக  மத்தியத்துவம் மட்டுமே பின்பற்றபடுமானால்  கட்சி மக்களிடம் இருந்து விலகிப் போய்விடும். குறிப்பிட்ட குழுவின் ஆதிக்க சக்தியாக மாறிவிடும். தங்களது அனுபவத்தையும்,  அறிவையும் கட்சி அணிகள் அளிக்க முடியாது.

பொதுவுடமைக் கட்சி புரட்சிகர மாற்றத்திற்காக போராடும் கட்சி, மாற்றத்தை வேகமாக கொண்டுவர இளைஞர்கள் தேவை. இளைஞர்களை வென்றெடுப்பது கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். “நாம் எதிர்காலத்தின் கட்சி, வருங்காலம் இளைஞர்கள் உடையது, நாம் புதுமையைப் புகுத்தும் கட்சியினர். இளைஞர்கள் புதுமையைப் பெரும் ஆர்வத்துடன் பின்பற்றுவார்கள்,” என்றார் மாமேதை லெனின்.

மார்க்சிய லெனினிய கட்சியின் வழிகாட்டியாக இருப்பது ஜனநாயக மத்தியத்துவம். ஜனநாயக மத்தியத்துவம் என்பது அமைப்பு ரீதியான கொள்கை ஆகும். கட்சியின் உயிர்மூச்சு என்பது இரண்டு அமைப்பியல் கொள்கைகளைக் கொண்டது; உட்கட்சி ஜனநாயகம், மத்தியபடுத்தப்பட்ட தலைமை.

முழுமையான சுதந்திரமான  விவாதத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட கூட்டு முடிவுகளின் அடிப்படையில் கட்சி உறுப்பினர்கள் செயல்பட வேண்டும். செயலில் ஒற்றுமை, விமர்சன சுதந்திரம் ஆகியவற்றை இணைக்கும் கோட்பாடு ஜனநாயக மத்தியத்துவம். இதன் முறையில் விவாத சுதந்திரம்- விமர்சன சுதந்திரம்- செயல் ஒற்றுமை உடன் இணைக்கப்படுகின்றன.

படிக்க :
♦ மூவர் கும்பலின் வலது விலகலை எதிர்ப்போம் || தோழர் ஸ்டாலின்
♦ கட்சி நிறுவனக் கோட்பாடுகள்

கீழ்அமைப்புகள் மேல் அமைப்புகளை தேர்வு செய்கின்றன, மேல் அமைப்புகளுக்கு கட்டுப்படுகின்றன, பெரும்பான்மையோர் முடிவுக்கு எல்லோரும் கட்டுப்பட வேண்டும். விவாதிப்பதற்கும் விமர்சனம் செய்வதற்கும் சுதந்திரம் இல்லாத செயல் ஒற்றுமை சாத்தியமில்லை.

மத்தியத்துவம் இல்லாத ஜனநாயகம் கட்சி அமைப்பை ஒரு ஒழுங்கற்ற, இணைந்து செயல்படாத, உட்கட்சி ஒற்றுமை இல்லாத அமைப்பாக மாற்றிவிடும். மாறாக  மத்தியத்துவம் மட்டுமே பின்பற்றபடுமானால்  கட்சி மக்களிடம் இருந்து விலகிப் போய்விடும். குறிப்பிட்ட குழுவின் ஆதிக்க சக்தியாக மாறிவிடும். தங்களது அனுபவத்தையும்,  அறிவையும் கட்சி அணிகள் அளிக்க முடியாது.

சோவியத் யூனியன், மற்றும் உலக நாடுகளின் பொதுவுடமை இயக்கத்தின் அனுபவங்கள் ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில் மட்டுமே மார்க்சிய லெனினிய கட்சியை கட்டமுடியும் என்று நிரூபணமாகியுள்ளது.

உலகின் பல நாடுகளில் இயங்கும் பொதுவுடமை கட்சிகளின் ஸ்தாபன அமைப்பு பற்றி இந்த நூலில் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. மனிதகுல விடுதலைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமே மார்க்சிய லெனினிய தத்துவ ஞானம். இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளிகளின் தலைமையில் சமத்துவ விடியலை காண்பதற்கு வலிமையான போர்க்குணமிக்க பாட்டாளி வர்க்க கட்சி அமைப்பு இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது.

சோர்வை அகற்றி,  புத்துணர்வு பெற்று சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் ஊக்கமுடன் களமாட, கட்சி ஸ்தாபன கோட்பாடுகள் பற்றி தெளிவான புரிதல், முன் எப்போதையும்விட இப்போது தேவையாக இருக்கிறது. அறிந்த விஷயங்களாக இருந்தபோதும் மீண்டும் மீண்டும் மறுவாசிப்பு அவசியமாகிறது.  கட்சியைப் பற்றிய புரிதலை உருவாக்க இந்த நூல் பெரிதும் பயன்படும்.

நூல் : உழைக்கும் மக்களின் முன்னணிப் படை
பதிப்பகம் : அலைகள் வெளியீட்டகம்
ஆசிரியர் : ஏ. ஷாஜின்
தமிழில்: வி. என். ராகவன்
விலை : ரூ. 30
இணையதளத்தில் வாங்க இங்கே அழுத்தவும்

நூல் அறிமுகம் : எஸ் காமராஜ்
மாநிலத் துணைச் செயலாளர் – அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கம், ஆலோசகர் – தேசிய தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம்

disclaimer

இந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா?

‘‘தனிமனித சுதந்திரம் இவ்வாறு நசுக்கப்பட்டால், உச்ச நீதிமன்றம் அவர்கள் ஒவ்வொருக்காகவும் நிற்கும்’’

− இப்படியொரு தார்மீக ஆவேசத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட், ரிபப்ளிக் தொலைக்காட்சியின் உரிமையாளரும் அதன் தலைமை ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்காலப் பிணை வழங்கிய உத்தரவில் வெளிப்படுத்தினார்.

அர்னாப் கோஸ்வாமியைப் பற்றித் தெரியாத அரசியல் நோக்கர்கள் யாரும் இருக்க முடியாது. அர்னாபை அறிந்திராதவர்களுக்கு அவரைப் பற்றி ஒரே வரியில் கூற வேண்டுமானால், அர்னாப் ஊடகத் துறையில் இயங்கிவரும் ஆர்.எஸ்.எஸ். பேர்வழி, மோடி விசுவாசி. தமிழகத்திற்கு பாண்டே போல, அவர் ‘‘தேசிய’’ பாண்டே. பத்திரிகையாளர்களைச் சந்திப்பதையே எட்டிக்காயாகக் கருதிவரும் பிரதமர் மோடியைக்கூட நேர்காணல் செய்யும் அருளாசி கிடைக்கப் பெற்றவர். அவர் நடத்திவரும் ரிபப்ளிக் டி.வி.யை பாரதிய ஜனதா கட்சியின் அறிவிக்கப்படாத அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி என்றே சொல்லலாம்.

உச்ச நீதிமன்ற ஆதரவில் இடைக்காலப் பிணை பெற்ற பின், தலோஜா மத்திய சிறைக்கு வெளியே பேட்டி கொடுக்கும் அர்னாப்.

மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா − காங்கிரசு கூட்டணி அரசு அர்னாபைக் கடந்த நவம்பர் 4 அன்று கைது செய்தது. பிணை மனுக்களை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதுதான் பொதுவான நடைமுறை. ஆனால், அர்னாப் தரப்பு விசாரணை நீதிமன்றத்தை தவிர்த்துவிட்டுப் பிணை மனுவை மும்பய் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அம்மனுவைக் காலதாமதம் எதுவுமின்றி நவம்பர் 9 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மும்பய் உயர் நீதிமன்ற அமர்வு, ‘‘விசாரணை நீதிமன்றத்திலேயே பிணை மனு தாக்கல் செய்வதற்கு மனுதாரருக்கு மாற்று வழி இருக்கிறது. எனவே, அர்னாப் பிணை மனுவை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அம்மனு தாக்கல் செய்யப்பட்ட நான்கு நாட்களுக்குள் அதனை விசாரிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டது.

இதனையடுத்து அர்னாப் தாக்கல் செய்த பிணை மனுவை அலிபாக் விசாரணை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டியலிட்ட நிலையில், மற்றொரு பிணை மனுவை உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்தார் அர்னாப். கீழமை நீதிமன்றத்தில் பிணை மனு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் உச்ச நீதிமன்றம் பிணை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது மரபு கிடையாது. மேலும், விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் பிணை மறுக்கப்பட்ட நிலையில்தான் உச்ச நீதிமன்றம் பிணை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்.

ஆனால், உச்ச நீதிமன்றமோ இந்தப் பொது மரபை புறந்தள்ளவிட்டு, அர்னாப் தாக்கல் செய்த பிணை மனுவை அவசர வழக்குப் போல பாவித்து நவம்பர் 11 அன்றே விசாரணைக்கு எடுத்துக்கொண்டதோடு, அன்றே அவருக்கு இடைக்காலப் பிணையும் வழங்கி உத்தரவிட்டது. ‘‘நாங்கள் இந்த வழக்கில் இன்று தலையிடாவிட்டால், அழிவுப் பாதையின் மேல் நடந்திருப்போம்’’ என இந்த அவசரத்திற்கு விளக்கமும் அளித்தார் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட். மேலும், தனது உத்தரவில் ‘‘அர்னாப் கோஸ்வாமியை போலிசு விசாரணைக்கு அனுப்புவது அவசியமா?’’ என்றும் கேள்வி எழுப்பினார், அவர்.

உச்ச நீதிமன்றம் அவசர அவசரமாகத் தலையிட வேண்டிய அளவிற்கு அர்னாப் கோஸ்வாமியின் கைது, அவ்வளவு முக்கியத்துவமிக்க வழக்கு கிடையாது. அர்னாப், தனது தொழில் நிமித்தமாக, அதாவது தனது பேச்சு மற்றும் எழுத்திற்காகக் கைது செய்யப்படவில்லை. மாறாக, அன்வாய் நாயக் என்பவரைத் தற்கொலைக்குத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் அர்னாப் கைது செய்யப்பட்டார்.

அர்னாப்புக்கு பிணை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட் (இடது) மற்றும் இந்திரா பானர்ஜி.

பண நெருக்கடி காரணமாக 2018−இல் தற்கொலை செய்து கொண்ட அன்வாய் நாயக், தனது தற்கொலைக் குறிப்பில் அர்னாப் பெயரையும் குறிப்பிட்டிருந்தார். அர்னாப் கோஸ்வாமி நடத்திவரும் ரிபப்ளிக் டி.வி. நிறுவனம், தனக்குக் கட்டணமாகச் செலுத்த வேண்டிய 83 இலட்சம் ரூபாயைத் தர மறுப்பதையும் அன்வாய் நாயக் தனது தற்கொலை குறிப்பில் குறிப்பிட்டிருந்தார். ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டு முடித்து வைக்கப்பட்ட இவ்வழக்கை, அன்வாய் நாயக்கின் மனைவி மறுவிசாரணை செய்ய வேண்டுமெனக் கோரியிருந்தார். அதன் அடிப்படையில் அர்னாப் கோஸ்வாமியைக் கைது செய்ததாக மகாராஷ்டிரா போலிசு விளக்கமளித்தது. இதற்காக அர்னாபைக் கைது செய்திருக்க வேண்டியதில்லை என விமர்சித்துள்ள ஊடகங்கள்கூட, அர்னாப் கைது செய்யப்பட்டதைக் கருத்துச் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகக் குறிப்பிடவில்லை.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க., சிவசேனாவிற்கு இடையே சமீபகாலமாக நடந்துவரும் மோதலுக்கும் அர்னாபின் கைதுக்கும் தொடர்புண்டு. அதனால்தான் அர்னாப் கைது செய்யப்பட்டவுடனேயே மோடி அரசின் அமைச்சர்கள் இந்தக் கைது அவசர நிலை காலத்தை நினைவுபடுத்துவதாகக் கொதித்துப் போனார்கள். அர்னாப் கைது செய்யப்பட்டது சிவசேனா அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றபோதும், அதற்காக உச்ச நீதிமன்றம் இவ்வளவு பதட்டமடைந்திருக்க தேவையில்லை. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே, அப்படி இவ்விவகாரத்தில் நடந்துகொண்டிருக்கும் உச்ச நீதிமன்றம், இதே அவசரத்தை, ஆவேசத்தை எத்துணையோ மனித உரிமைப் போராளிகளும் சமூகச் செயற்பாட்டாளர்களும் மோடி அரசால் பழிதீர்த்துக் கொள்ளும் நோக்கத்தோடு தேசியப் பாதுகாப்புச் சட்டம், உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் தள்ளப்பட்டபோது காட்டியதில்லை.

 அர்னாபுக்கு நீதி – மற்றவர்களுக்கு அநீதி

இழி புகழ்பெற்ற பீமாகோரேகான் வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியைக் கொலை செய்ய சதி செய்தார்கள், மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள், நகர்ப்புற நக்சல்கள் என்பன அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள். ‘‘இந்த 16 பேரில் ஒருவரைத் தவிர, மற்றவர் யாரும் இந்த வழக்கோடு தொடர்புடைய எல்கர் பரிஷத் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. இவர்கள் பிரதமர் மோடியைக் கொலை செய்ய சதி செய்தார்கள், இவர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்புண்டு என்ற குற்றச்சாட்டுக்களுக்கு, இவ்வழக்கை நடத்திவரும் தேசியப் புலனாய்வு முகமை இதுவரை எந்தவொரு வலுவான ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. மேலும், குற்றப்பத்திரிகையிலும்கூட கொலைச் சதி பற்றிய குறிப்புகள் இல்லை’’ எனச் சுட்டிக் காட்டுகிறார்கள் குற்றஞ்சுமத்தப்பட்டோரின் வழக்குரைஞர்கள்.

ஆழிமுகம் என்ற இணையதளப் பத்திரிக்கையைச் சேர்ந்த செய்தியாளர் சித்திக் கப்பன்.

எல்கர் பரிஷத் மாநாட்டைத் தலைமையேற்று நடத்திய இரண்டு முன்னாள் நீதிபதிகளுள் ஒருவரான பி.பி.சாவந்த், ‘‘இம்மாநாடு மோடி அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒன்று. இம்மாநாட்டிற்கு அணிதிரட்டி நடத்திய நீதிபதிகளான எங்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, இம்மாநாட்டோடு தொடர்பற்றவர்களைக் கைது செய்திருப்பது மோடி அரசின் நோக்கம் வேறு என்பதைக் காட்டுகிறது’’ என இந்தக் கைது நடவடிக்கையை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

இக்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கடந்த ஆகஸ்டு 2018−இல் கைது நடவடிக்கையைத் தொடங்கியது மோடி அரசு. அந்நடவடிக்கை இன்று வரை முற்றுப் பெறவில்லை. இவ்வழக்கில் 16−ஆவது குற்றவாளியாக 84 வயதான பாதிரியார் ஸ்டேன் சுவாமியை கடந்த அக்டோபரில் கைது செய்தது, தேசியப் புலனாய்வு முகமை. கடந்த ஏப்ரலில், கரோனா தொற்று தீவிரமாகப் பரவிவந்த நிலையைக்கூடப் பொருட்படுத்தாது, பேராசிரியரும் மனித உரிமைப் போராளியுமான ஆனந்த் தெல்தும்டே கைது செய்யப்பட்டார். அம்பேத்கரின் பேரனாக அறியப்படும் ஆனந்தை அம்பேத்கர் பிறந்த நாளன்று (ஏப்ரல் 14 அன்று) கைது செய்திருப்பதன் மூலம், தாழ்த்தப்பட்டோரின் உணர்வுகளை அவமதித்திருக்கிறது, மோடி அரசு.

புத்தக வெளியீட்டாளர் சுதிர் தவாலே, வழக்குரைஞர்கள் சுரேந்திர காட்லிங், சமூகச் செயற்பாட்டாளர்கள் ரோனா வில்சன் மற்றும் மகேஷ் ரௌத், கல்வியாளர் ஷோமா சென் ஆகியோர் பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. வழக்குரைஞர்கள் அருண் ஃபெரேரியா, சுதா பரத்வாஜ், எழுத்தாளர் வெர்னான் கன்சல்வ்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. புரட்சிகர கவிஞர் வரவர ராவ், பத்திரிகையாளர் கௌதம் நவ்லகா ஆகியோர் கைது செய்யப்பட்டும் ஒரு வருடம் முடிந்துவிட்டது.

இவர்களுள் பலர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டிக்கிறது. அவர்களுக்கு எளிதில் பிணை கிடைத்துவிடக் கூடாது என்ற மோடி அரசின் தீய உள்நோக்கம் காரணமாகவே இக்கருப்புச் சட்டம் அவர்கள் மீது ஏவப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் சிவசேனை − காங்கிரசு கூட்டணி அரசு பதவிக்கு வந்த பிறகு, இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்குப் பிணை வழங்குவதற்கு அக்கூட்டணி அரசு முன்வந்தவுடனேயே, இந்த வழக்கை மகாராஷ்டிரா போலிசிடமிருந்து தேசியப் புலனாய்வு முகமைக்குத் தன்னிச்சையாக மாற்றியது, மோடி அரசு. இவர்களைச் சுதந்திர மனிதர்களாக வெளியே விட்டுவிடக் கூடாது, விசாரணை என்ற போர்வையில் இவர்களைச் சிறையிலேயே அடைத்து வைத்திருக்க வேண்டும் என்பதைத் தவிர, வழக்கை மாற்றியதற்கு வேறு எந்த நோக்கமும் கிடையாது.

படிக்க :
♦ பீமா கொரேகான் வழக்கை முடிக்க மோடி அரசு செய்யும் மோசடிகள் – அம்பலப்படுத்துகிறது அம்னெஸ்டி !
♦ எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு !

அர்னாப் கோஸ்வாமி பத்திரிகையாளர் என்ற போர்வையில் உலாவரும் இந்து மதவெறி பாசிஸ்டு. மோடி அரசை நத்திப் பிழைப்பவன். அதேசமயம் பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு ஒரு வருடம், இரண்டு வருடம் என இன்னமும் நீதிமன்றங்களால் பிணை வழங்கப்படாமல் சிறையில் வாடும் இவர்களோ தொழிலாளர்களின், தாழ்த்தப்பட்டோரின், பழங்குடியினரின் சமூக உரிமைகளுக்காகவும், உழைக்கும் மக்களின் வாழ்வாதார, ஜனநாயக உரிமைகளுக்காகவும் நீண்ட காலமாகப் போராடி வருபவர்கள். இவர்களுள் பலர் சர்வதேச அளவில் மதிக்கப்படும் அறிவுத் துறையினர்.

இவர்களுள் ஐம்பத்தொன்பது வயதான சுதா பரத்வாஜ் இருதய மற்றும் சர்க்கரை நோயாளி; எண்பது வயதைத் தாண்டிய வரவர ராவ் இருதய நோயாளி மட்டுமின்றி, சமீபத்தில் கரோனா நோய்த் தொற்றாலும் பாதிக்கப்பட்டவர். அவருக்குச் சிறுநீரகக் கோளாறு இருப்பதோடு, ஞாபக மறதி நோயாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. எண்பத்து நான்கு வயதான ஸ்டேன் சுவாமி பர்கின்ஸன் எனப்படும் நரம்புத் தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டவர்.

இவர்களின் கல்வித் தகுதி, சமூகத் தகுதி, சமூகத்திற்கு இவர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பு, இந்தக் கைதின் பின்னணி ஆகியவையெல்லாம் உச்ச நீதிமன்றமும் மும்பய் உயர் நீதிமன்றமும் அறியாதவையல்ல. ஆனாலும், இவர்களுள் ஒருவருக்குக்கூட மும்பய் உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ இதுநாள் வரையிலும் பிணை வழங்க முன்வரவில்லை.

எல்கர் பரிஷத் மாநாட்டை ஏற்பாடு செய்த முன்னாள் நீதிபதிகள் பி.பி. சாவந்த் (இடது) மற்றும் கோல்சே பாட்டீல்.

மருத்துவக் காரணங்களுக்காகத் தனக்கு இடைக்காலப் பிணை வழங்குமாறு சுதா பரத்வாஜ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, ‘‘நீங்கள் இடைக்காலப் பிணை அல்லாமல், வழக்கமான பிணையே கேட்கலாம். அதற்குத் தகுதி வாய்ந்த காரணங்கள் உள்ளன’’ எனத் தேனொழுகக் கூறிவிட்டு, அவர் கேட்ட இடைக்காலப் பிணையைக்கூட வழங்காமல், ‘‘இந்த மனுவைத் திரும்பப் பெறுங்கள், இல்லையென்றால் தள்ளுபடி செய்துவிடுவோம்’’ எனக் கூறி, அவரைக் கைகழுவியது.

இதே மருத்துவக் காரணங்களை முன்வைத்து அவர் மும்பய் உயர் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்த வழக்கில், சிறை மருத்துவர்களே அவரை நன்கு கவனித்துக் கொள்வதாகத் தேசியப் புலனாய்வு முகமை கூறிய காரணத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு அவருக்குப் பிணை வழங்க மறுத்தது அந்நீதிமன்றம்.

இருதய நோய், சிறுநீரகக் கோளாறு, ஞாபக மறதி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுத் தொடர் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும் வரவர ராவிற்கும் இதுவரை பிணை வழங்கப்படவில்லை. அவரை ஒரு பதினைந்து நாட்களுக்குத் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதற்குக்கூட மும்பய் உயர் நீதிமன்றத்தில் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

தங்களுக்கு ஒரு போர்வை வேண்டுமென்றால்கூட, நீதிமன்றக் கதவுகளைத் தட்ட வேண்டியிருக்கிறது எனக் குற்றஞ்சுமத்துகிறார்கள், இப்போராளிகள். குறிப்பாக, பர்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஸ்டேன் சுவாமியால் ஒரு குவளை நீரைக்கூடக் கையால் எடுத்துப் பருக முடியாது. அதனால் தனக்கு உறிஞ்சு குழல் (ஸ்ட்ரா) வழங்க வேண்டும் எனக் கேட்டதற்கு, அவரது கோரிக்கையைப் பரிசீலிக்கக் கால அவகாசம் கேட்டிருக்கிறது விசாரணை நீதிமன்றம்.

இப்போராளிகளுக்குப் பிணை வழங்க மறுப்பது மட்டுமல்ல, அவர்களுக்குத் தேவைப்படும் உரிய மருத்துவ சிகிச்சையை, உரிய காலத்தில் வழங்க மறுத்து இழுத்தடிப்பதெல்லாம் அவர்களின் தனிமனித உரிமையை மறுப்பது மட்டுமல்ல, அவர்களின் உயிர்வாழும் உரிமையையும் மறுப்பதாகும். மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர் என்ற குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்கப்பட்டு மகாராஷ்டிரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் சாய்பாபாவை அரசும் நீதிமன்றமும் கைகோர்த்துக்கொண்டு சிறுகச்சிறுகச் சாகடிப்பது நம் கண்முன்தான் அரங்கேறி வருகிறது. அப்படிப்பட்டதொரு அபாயம் இப்போராளிகள் மீது விசாரணை நிலையிலேயே திணிக்கப்படுகிறது.

வழக்குரைஞர் சுதா பரத்வாஜ் (இடது) மற்றும் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே.

பத்திரிகையாளர் அர்னாபிற்குப் பிணை வழங்க சட்டம், மரபுகளை மீறிய உச்ச நீதிமன்றம், கேரளாவைச் சேர்ந்த ஆழிமுகம் என்ற இணையதளப் பத்திரிக்கையைச் சேர்ந்த செய்தியாளர் சித்திக் கப்பனின் பிணை மனு வழக்கில் சட்டவாதக் கண்ணாடியை மாட்டிக் கொண்டது. உ.பி. மாநிலம், ஹாத்ரஸில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற சித்திக் கப்பனை முஸ்லிம் தீவிரவாதியைப் போல முத்திரை குத்தி வருகிறது ஆதித்யநாத் அரசு. அதன் காரணமாகவே, அவருக்கும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கும் தொடர்பிருக்கிறது என்றும், உ.பி. மாநிலத்தில் சாதி, மத மோதல்களைத் தூண்டிவிடும் நோக்கில் அவர் சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்றிருக்கிறார் என்றும் குற்றஞ்சுமத்தி, அவரைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறது.

 

அர்னாபின் பிணை மனு மீதான வழக்கில் மகாராஷ்டிரா அரசின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல், அவருக்குத் தன்னிச்சையாகவும் தடாலடியாகவும் பிணை வழங்கிய உச்ச நீதிமன்றம், சித்திக் கப்பன் பிணை கோரித் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது, உ.பி. மாநில அரசும் உ.பி. மாநில போலிசும் பதில் மனு தாக்கல் செய்யக் கூறி, அவ்வழக்கை ஒத்தி வைத்துவிட்டது.

மோடியின் பழிதீர்க்கும் ஆயுதம்உபா சட்டம்

இவையனைத்தும் ஊடக வெளிச்சம் பட்ட வழக்குகள். இவையன்றி, நீதியும் கிடைக்காமல், பிணையும் கிடைக்காமல், தனிமனித சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில் சிறையில் இருப்போரின் எண்ணிக்கை பல ஆயிரத்தையும் தாண்டும். எடுத்துக்காட்டாக, 2014 தொடங்கி 2016 முடியவுள்ள மூன்று ஆண்டுகளில் மட்டும் 2,700 வழக்குகள் உபா சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ளன. 2016 முதல் 2018 முடியவுள்ள இரண்டு ஆண்டுகளில் மட்டும் உபா சட்டத்தின் கீழ் 3,005 வழக்குகள் பதியப்பட்டு, 3,974 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. 2018−க்குப் பின் உபா சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளில் 93 சதவீத வழக்குகள் இன்னமும் நீதிமன்ற விசாரணையில், நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிடுகிறது, தேசியக் குற்ற ஆவணத் துறை.

மோடி அரசு 2019−ஆம் ஆண்டு உபா சட்டத்தில் கொண்டுவந்த திருத்தங்களின்படி, அமைப்புகளை மட்டுமின்றித் தனிநபர்களைக்கூடத் தீவிரவாதியாக முத்திரை குத்தி உபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க முடியும். சில விதிவிலக்குகள் இருந்தாலும், இந்தச் சட்டத்தில் கைது செய்யப்படுவோருக்குப் பிணை கிடைப்பதும் எளிதான ஒன்றல்ல. குறிப்பாக, சில தீவிரவாதக் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்குப் பிணை வழங்கக் கூடாதவாறு இச்சட்டத்தில் விதிகள் திருத்தப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் குற்றமற்றவர்களாக இருந்தாலும், பிணை வழங்காமலேயே நீண்ட நாட்களுக்கு அவர்களைச் சிறையில் அடைத்து வைத்திருக்க முடியும். விசாரணையையே தண்டனையாக்கும் சதித்தனம் இச்சட்டத்தில் உள்ளார்ந்து உள்ளது. இந்த அடிப்படையில்தான் பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் முற்போக்கு அறிவுத்துறையினரை மட்டுமல்ல, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் போராடிய மாணவர்கள், இளைஞர்களையும் இந்து மதவெறி அரசுகள் இச்சட்டத்தைப் பயன்படுத்தித் தண்டித்து வருகின்றன.

படிக்க :
♦ அயோத்தி தீர்ப்பு : அரசியலமைப்புக்கு விழுந்த அடி !
♦ இந்திய நீதிமன்றம் அந்நிய முதலீட்டாளர்களின் கைக்கூலிப்படையா ?

இந்த அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தவர்களை, குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து சட்டபூர்வமாக அமைதிவழியில் போராடியவர்களை, ஜம்மு காஷ்மீரின் சிறப்புரிமையை ரத்து செய்ததைக் கண்டித்தவர்களை மட்டுமல்ல, ஒரு பாலியல் வன்கொடுமை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளரைக்கூட விட்டுவைக்காமல், இந்து மதவெறி ஆட்சியாளர்கள் உபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள் எனில், இந்த அடக்குமுறைக்கு நீதிமன்றங்களும் ஒத்தூதி வருகின்றன எனில், இந்திய மக்கள் அவசரநிலைக் காலத்தை விஞ்சக்கூடிய அபாய நிலையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்றுதான் கருத முடியும்.

இந்திய நீதிமன்றங்கள் ஆர்.எஸ்.எஸ்.−பா.ஜ.க.வின் அரசியல் திட்டங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் கைக்கூலியாகச் செயல்பட்டு வருவதைப் பல்வேறு வழக்குகளில் அளிக்கப்பட்ட தீர்ப்புகளே அம்பலப்படுத்தியுள்ளன. பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் உலாவரும் இந்து மதவெறி பாசிஸ்டு அர்னாபுக்கு உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தடாலடி பிணை அக்கைக்கூலித்தனத்தின் இன்னுமொரு உதாரணம்.

அர்னாபிற்குப் பிணை வழங்கிய நீதிபதி சந்திரசூட், ‘‘இது போன்ற அடக்குமுறைகளை எதிர்கொள்ளக்கூடிய வகையில் இந்திய ஜனநாயகம் அசாதாரண வலுவோடு இருப்பதாக’’க் குறிப்பிட்டார். ஆனால், மோடி அரசோ இது வெற்று வாய்ஜாலம் என்பதை அத்தீர்ப்பின் மை காய்வதற்குள்ளாகவே அம்பலப்படுத்திவிட்டது. அர்னாபிற்கு அவசர கதியில் பிணை வழங்கியதை நையாண்டி செய்த குணால் கம்ரா என்ற மேடை நகைச்சுவையாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும் எனப் பரிந்துரை செய்திருக்கிறது, மைய அரசு.

மோடி அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்கள் மீதும், அவரது அரசின் சட்டங்களை எதிர்ப்பவர்கள் மீதும் உபா, தேசியப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட கொடிய சட்டங்கள் பாய்கின்றன. இதற்கு ஒத்தூதும் நீதிமன்றங்களை விமர்சிப்பவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் ஏவிவிடப்படுகிறது. எனில், இந்தியாவை ஜனநாயக நாடு எனக் கூறிக் கொள்வதற்கு ஏதேனும் பொருள் இருக்க முடியுமா?

குப்பன்

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2020 இதழ் தரவிறக்கம் செய்ய : இங்கே அழுத்தவும்

வேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை || மக்கள் அதிகாரம் பங்கேற்பு

 “டெல்லியில் தீரத்துடன் போராடும் விவசாயிகளின் டிசம்பர் 14 நாடு தழுவிய அளவில் BJP அலுவலகங்களை முற்றுகையிடுவோம் !!
அம்பானி அதானிகளின் jio மற்றும் சேவைகளை புறக்கணிப்போம் !!”

என்கின்ற முழக்கத்துடன் உசிலம்பட்டியில் உள்ள Jio அலுவலகம் முன்பு பல்வேறு ஜனநாயக, புரட்சிகர அமைப்புகள் இணைந்து பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் CPI, CPM, வி.சி.க. மற்றும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தின் முன்பு, அகில இந்திய விவசாயிகள் சங்க போராட்ட ஒருங்கிணைப்பு குழுவால் நடத்தப்பட்ட காத்திருப்பு போராட்டத்திலும் மக்கள் அதிகாரம் மற்றும் அனைத்து ஜனநாயக சக்திகளும் விவசாய பெருமக்களும் கலந்துகொண்டனர்.

படிக்க :
♦ இந்திய தேசிய ஜோதியில் தமிழகம் கலக்க மறுப்பதேன்?
♦ நூல் விமர்சனம் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | ஆனந்த் தெல்தும்டே | எஸ். காமராஜ்

“நாங்கள் விவசாயிகளின் நலனுக்காகத் தான் இந்த சட்டதிருத்த மசோதாவை கொண்டுவந்தோம், ஆனால் விவசாயிகள் இந்த மசோதாவை பற்றிய சரியான புரிதல் இல்லாததால் தான் போராடுகிறார்கள்” என்று அமித்ஷா, மோடி, நிர்மலா சீதாராமன் போன்ற கார்ப்பரேட் காவிக் கும்பல் கூறுகிறது.

இந்த சட்டதிருத்த மசோதா என்பது விவசாயிகளை அடியோடு ஒழித்துக்கட்டுவதற்காகவே கொண்டுவரப்பட்ட விவசாயி விரோத மசோதா என்பதை புரிந்து கொண்ட பஞ்சாப் மாநில சிறைத்துறை டிஐஜி லக்மிந்தர் சிங் ஜாகர் வேளாண் சட்டதிருத்த மசோதாவை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்காக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு, “நான் முதலில் விவசாயி, பிறகு தான் போலீஸ்காரன்” என அறிவிக்கிறார்.

நாங்கள் படிக்காத பாமரன் அல்ல நன்கு படித்து பட்டம் பெற்ற கற்றறிந்த விவசாயிகள் “WE ARE WELL EDUCATED (PHD) FARMERS” என்னும் பதாகைகளை கையில் ஏந்தி இளைஞர்கள் போராடுகின்றனர்.

ஒரு பத்திரிக்கை நிருபர் ஒரு பெண்ணிடம், “நீங்கள் விவசாயி இல்லை என்கிற போது எதற்காக போராடுகிறீர்கள்?” என்று கேட்டார் அதற்கு அந்த பெண் ” என்னுடைய குழந்தைகளுக்கு நாளைக்கு சாப்பிடுவதற்கு ரொட்டி வேண்டும் விவசாயிகள் இல்லையேல் விவசாயம் இல்லை நாம் உணவிற்கு எங்கே போவது? அதனால் தான் நான் போராடுகிறேன்” என்றார்.

இப்படி சரியான புரிதலுடன் தீர்க்கமாக போராடுபவர்களை மோடி அமித்ஷா நிர்மலா சீதாராமன் போன்ற கார்ப்பரேட் கைக்கூலிகள், இந்த சட்டதிருத்தத்தில் உள்ள நன்மைகள் தெரியாமல் போராடுகிறார்கள் என்று கொச்சைப்படுத்துகிறார்கள்.

விவசாயிகளும் இளைஞர்களும் மக்களும் அரசு அதிகாரிகளும் உணவை உட்கொள்ளும் ஒவ்வொருவரும் இந்த வேளாண் சட்டதிருத்த மசோதாவை வாபஸ் வாங்கும் வரை விடாப்பிடியாக வீதியில் இறங்கி போராட வேண்டும்.
அதுவே இப்போராட்டத்திற்காக உயிர்நீத்த தியாகிகளுக்கும் போராடிக் கொண்டிருக்கும் விவசாய பெருமக்களுக்கும் நாம் செய்யும் கைம்மாறு ஆகும்.

தகவல்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு, மதுரை

000

வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைமையில் தமிழகமெங்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைப்பெற்றது. அதன் ஒரு பதியாக 14.12.2020 காலை 10 மணிக்கு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் கோவை மக்கள் அதிகாரம் தோழர்கள் பகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜன் தலைமையில் கலந்துகொண்டனர்.

பல்வேறு ஜனநாயக மற்றும் புரட்சிகர அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தனர். போராட்டத்தின் முடிவில் போலீசு அனைவரையும் கைது செய்தது.

தகவல்
மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்

மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறது வேதாளம் !

ரு ஆண்டுகளுக்கு முன்பு தீண்டாமைக் குற்றம் தொடர்பான வழக்கொன்றில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி நீர்த்துப் போகச் செய்தது உச்ச நீதிமன்றம்.

அத்தீர்ப்புக்கு எதிராக நாடெங்கும் தாழ்த்தப்பட்டோர் நடத்திய போராட்டங்களில், குறிப்பாக பா.ஜ.க. ஆண்ட ம.பி., உ.பி., இராஜஸ்தான் மாநிலங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர். தாழ்த்தப்பட்டோரின் இத்தியாகங்களுக்குப் பிறகுதான், மோடி அரசு அத்தீர்ப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சட்டமியற்றி, அச்சட்டத்தின் முந்தைய நிலையைப் பாதுகாத்தது.

படிக்க :
♦ உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு : சாதி ஆணவக் கொலைகளுக்கான அங்கீகாரம் !
♦ சாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை ? கலவரமா வந்துவிட்டது ?

எனினும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் தனது நரித்தனத்தை உச்ச நீதிமன்றம் கைவிட்டுவிடவில்லை. ‘‘ஹிதேஷ்ஷர்மா எதிர் உத்தர்கண்ட் அரசு’’ என்றொரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ், ‘‘தாழ்த்தப்பட்டோரைப் பலரும் பார்க்கும் விதத்தில் சாதிரீதியாக அவமானப்படுத்தினால்தான் தீண்டாமைக் குற்றமாகும். யாரும் பார்க்காத இடத்தில், பாதிக்கப்பட்டவர் தனது வீட்டிற்குள் தனியே இருக்கும்போது அவரை அவமதித்தால், அது தீண்டாமைக் குற்றத்தின் கீழ் வராது’’ எனக் குறிப்பிட்டுக் குற்றஞ்சுமத்தப்பட்டவரை விடுதலை செய்திருக்கிறார்.

யாரும் பார்க்காத வண்ணம் நடக்கும் தீண்டாமையைக் குற்றமாகக் கருத முடியாது எனத் தீர்ப்பெழுதியிருக்கும் நீதிபதி, பெண்களுக்கு எதிராக நடந்துவரும் பாலியல் வன்முறைகள், பாலியல் சீண்டல்கள், குடும்ப வன்முறைகள் யாவும் யாரும் பார்க்காத வண்ணமும் தனிமையிலும் நடப்பதால், அவற்றையும் குற்றமாகக் கருத முடியாது எனக் கூறத் துணிவாரா? அரசியல்வாதிகளும் நீதிபதிகளும் யாரும் பார்க்காத வண்ணம் காதும்காதும் வைத்தாற்போல இலஞ்சம் பெறுவதால், அவர்களைத் தண்டிக்காமல்தான் விட்டுவிடமுடியுமா?

நீதிபதி நாகேஷ்வர ராவ்

உச்சநீதி மன்றத் தீர்ப்புகள் அனைத்தும் நாடாளுமன்றம் / சட்டமன்றங்களில் இயற்றப்படும் சட்டங்களுக்கு இணையானவை. எனவே, இத்தீர்ப்பு நீடிப்பதை அனுமதிக்கக் கூடாது. அனுமதித்தால், தாழ்த்தப்பட்டவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்க முயலும்போது, முதலாவதாக, பலரும் பார்க்கும் விதத்தில்தான் சாதிரீதியாக அவமதிக்கப்பட்டேன் என்பதை அவர் சாட்சியங்களின் மூலம் நிரூபித்தாக வேண்டிய நிலை ஏற்படும். அந்த சாட்சியத்தை போலிசு அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். சாட்சி தாழ்த்தப்பட்டவராக இருந்தால், அச்சாட்சியம் போலிசு அதிகாரிகளால் நிராகரிக்கப்பட வாய்ப்புகள் அதிகமுண்டு. ஆதிக்க சாதிவெறியர்கள் அல்லது அச்சாதியில் பிறந்தவர்கள் சாதிப் பற்று அல்லது பயத்தின் காரணமாகச் சாட்சியம் சொல்ல முன்வரமாட்டார்கள். இதனால் புகார் நிலையிலேயே அத்தீண்டாமைக் குற்றம் நிராகரிக்கப்பட்டுவிடக் கூடும்.

‘‘இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதி நாகேஸ்வர ராவ் இட ஒதுக்கீடுக்கு எதிராகத் தொடர்ந்து உத்தரவுகளை வழங்கிவருவதாகவும், இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல எனத் தீர்ப்புக் கூறியவர் இந்நீதிபதிதான்’’ என்றும் சுட்டிக் காட்டுகிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

நீதிபதி நாகேஸ்வர ராவ் விதிவிலக்கல்ல; உச்ச நீதிமன்ற நீதிபதிகளுள் பெரும்பான்மையோர் அல்லது அனைவருமே நாகேஸ்வர ராவின் மனநிலையில் இருப்பதையும் அந்நிறுவனத்துக்குச் சமூக நீதி, இயற்கை நீதி என்பதெல்லாம் எட்டிக்காயாகிவிட்டதையும் பல்வேறு தீர்ப்புகள் வழியாக எடுத்துக்காட்ட முடியும்.

நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அதன் புத்தி போகாது என்பார்கள். அந்தப் பழமொழி பார்ப்பன − உயர்சாதி ஆதிக்கம் நிறைந்த உச்ச நீதிமன்றத்துக்கும் பொருந்தும்.

புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2020 இதழ் தரவிறக்கம் செய்ய : இங்கே அழுத்தவும்

இந்திய தேசிய ஜோதியில் தமிழகம் கலக்க மறுப்பதேன்?

ரியானாவை ஆண்டு வரும் பா.ஜ.க. அரசு, அம்மாநிலத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பிற்கான கல்விக் கட்டணத்தை இந்தக் கல்வியாண்டு முதல் இருபது மடங்கு அதிகரித்து நிர்ணயித்திருக்கிறது.

கடந்த கல்வியாண்டு வரை ரூ.53,000/− ஆக இருந்த கல்விக் கட்டணத்தை, இந்தக் கல்வியாண்டு தொடங்கி முதலாம் ஆண்டு எம்.பி.,பி.எஸ். படிப்புக்கு ரூ.80,000/−, இரண்டாம் ஆண்டுக்கு ரூ.88,000/−, மூன்றாம் ஆண்டுக்கு ரூ.96,000/− நான்காம் மற்றும் இறுதி ஆண்டுக்கு ரூ.1,06,480/− என நிர்ணயம் செய்திருப்பதோடு, அம்மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கல்விக் கட்டணத்தையும் உள்ளிட்டு 10 இலட்சம் ரூபாய் மதிப்பிற்கு உத்தரவாதப் பத்திரம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவாத தொகையையும் சேர்த்தால், எம்.பி.,பி.எஸ்., படிப்பிற்கான மொத்தக் கல்விக் கட்டணம் நாற்பது இலட்சம் ரூபாயைத் தொடுகிறது.

படிக்க :
♦ மோடி அரசின் பாசிசத் திமிர் : அடக்கப் போகிறோமா ? அடங்கப் போகிறோமா ?
♦ INI – CET : 11 கல்லூரிகளுக்கு நீட் விலக்கு – தமிழகத்துக்குக் கிடையாதா ?

மாணவர்கள் இந்த உத்தரவாதப் பத்திரத்தை அளிப்பதற்கு மாநில அரசு உதவி செய்யும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, நான்கு ஆண்டுக்கான மொத்தக் கல்விக் கட்டணத்தில், ரூ.3,70,480/− ரூபாயை மாணவர்கள் சொந்தமாகச் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை மாநில அரசு 6 சதவீத வட்டியில் கடனாக வழங்கும். கடனுக்கான வட்டியையும் சேர்த்தால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.,பி.எஸ். படிப்பை முடிப்பதற்கான மொத்தச் செலவு 55 இலட்ச ரூபாயைத் தொடுகிறது.

எம்.பி.பி.எஸ்., படிப்பை முடித்த மாணவர்களுக்கு அரசு வேலை கிடைத்தால், அரசே தவணைத் தொகையைச் செலுத்தும் என்றும், இல்லாவிடில் அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் அரசு வழங்கிய கடன் தொகையை மாணவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. எம்.பி.,பி.எஸ்., படிப்பை முடிக்கும் அனைவருக்கும் அரசு வேலை கிடைக்கப் போவதில்லை என்பதால், மாணவர்கள் தமது சொந்த வருமானத்திலிருந்துதான் இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும்.

அரியானாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வெறும் எண்ணூறு இடங்கள்தான் உள்ளன. தமிழகத்திலோ 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,400 இடங்கள் உள்ளன. அவற்றுள் மூன்று கல்லூரிகளைத் தவிர்த்து, மற்றைய அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.,பி.எஸ்., படிப்பிற்கு ஆண்டுக் கல்விக் கட்டணம் (Tution fees) ரூ.4,000/−; கல்வி தொடர்பான மற்ற கட்டணங்களையும் சேர்த்தால் ஆண்டுக் கட்டணம் ரூ.13,610/−தான். இதன்படி பார்த்தால், அரியானா மாநில பா.ஜ.க., அரசு எம்.பி.,பி.எஸ்., படிப்பிற்கான ஆண்டுக் கட்டணத்தை ரூ.10 இலட்ச ரூபாயாக அதிகரித்திருப்பது வெறும் கட்டணக் கொள்ளை மட்டுமல்ல. கட்டண உயர்வு என்ற போர்வையால் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தனியார்மயப்படுத்தியிருக்கிறது.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன் நீட் தேர்வு தொடர்பான தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், நீட் தேர்வை எதிர்த்துப் பேசிய பங்கேற்பாளர், தமிழகத்தில், மாவட்டத்துக்கொன்று என்ற வீதத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு வருவதையும் வட இந்திய மாநிலங்களில் மிகக் குறைவான எண்ணிக்கையில்தான், குறிப்பாக குஜராத்தில் 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருப்பதையும் ஒப்பிட்டு வாதாடினார்.

அதற்குப் பதில் அளித்துப் பேசிய ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர், அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுவதைத் தண்டச் செலவு எனப் பொருள்படும்படி, குஜராத் அரசு கடனில்லாத நிதி மிகை மாநிலமாக இருப்பதையும், தமிழக அரசின் கடன் அதிகரித்திருப்பதையும் ஒப்பிட்டார்.

அரசு ஒடுக்குமுறைக்கான கருவி என்பதை நாம் அறிவோம். ஆனால், சங்கிகளோ அரசு ஒடுக்குமுறை கருவியாக இருந்தால் மட்டும் போதாது; அது இலாபம் ஈட்டும் இயந்திரமாகவும் இருக்க வேண்டும் என்றும் கருதுகிறார்கள். அதனால்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தனியாருக்கு இணையான கட்டணக் கொள்ளைக் கூடாரமாக மாற்றியமைத்திருக்கிறது, அரியானா மாநில பா.ஜ.க. அரசு.

கீரன்

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2020 இதழ் தரவிறக்கம் செய்ய : இங்கே அழுத்தவும்

தீவுத்திடல் குடிசைகள் இடிப்பு : எடப்பாடி அரசின் அடாவடித் திமிரும் தீண்டாமையும்..

சென்னை தீவுத்திடல் காயிதே மில்லத் பாலம் அருகே ஆற்றங்கரையோரம் வாழும் மக்களை “கூவத்தை தூய்மைப்படுத்துதல்” என்ற பெயரில் அங்கிருந்து விரட்டியடித்து வருகிறது எடப்பாடி அரசு. அதை எதிர்த்து கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள்.

தலைமுறை தலைமுறையாக இப்பகுதியில் வாழும் பூர்வகுடி மக்களான இவர்கள் அன்றாடங் காய்ச்சிகளாவர். பெண்கள் அருகிலுள்ள தலைமைச்செயலகம், அரசு அலுவலகங்கள், அடுக்குமாடி வீடுகளில்  வேலை செய்வதையும் ஆண்கள் அன்றாடம் கிடைக்கும் உதிரித் தொழிலைச் செய்வதையும் நம்பியே அவர்களின் குடும்பம் உயிர் பிழைக்கிறது. இவர்களின் குழந்தைகளும் அருகிலுள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலேயே படிக்கின்றனர்.

இம்மக்களின் மொத்த வாழ்வாதாரமுமே இங்கிருக்கும் சூழலில் 45 கி.மீ தொலைவில் உள்ள பெரும்பாக்கத்திற்கு துரத்தியடிக்கிறது எடப்பாடி அரசு. “தினமும் 200, 300 சம்பாதிக்கும் நாங்கள் பெரும்பாக்கம் சென்றுவிட்டால் இங்கே வேலைக்கு வந்து செல்வதற்கே தினமும் 100 ரூபாய்க்கு மேல் பேருந்து கட்டணம் ஆகும். அங்கேயும் எங்களுக்கு  எந்த வேலைவாய்ப்பும் இல்லை. குழந்தைகள் படிக்க அருகாமையில் பள்ளிகளோ கல்லூரிகளோ இல்லை. பாதுகாப்பும் இல்லை.” என்கிறார்கள்.

படிக்க :
♦ செம்மஞ்சேரி : எழில்மிகு சென்னையின் இருண்ட காலனி !
♦ சேரி – டிரேசி சாப்மன் பாடல்

மேலும் “பெரும்பாக்கத்தில் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 8 மாடி குடியிருப்பு வீடுகள் முற்றிலும் தரமற்றவை. ஏற்கனவே அங்கு சென்றவர்கள் மழை பெய்தால் வீடு ஒழுகுவதாகவும், மேற்கூரைகள் இடிந்துவிழுவதாகவும் கூறியுள்ளனர்.” என்று அங்கே செல்வதற்கே அஞ்சுகிறார்கள் மக்கள்.

“கூவத்தை தூய்மைப்படுத்துவதற்காக அரசு எங்களை அப்புறப்படுத்துவதாக கூறுகிறது. ஆனால் பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் வீடுகளோ சதுப்பு நிலத்தில் கட்டப்பட்டவை. மழை பெய்தால் இடுப்பளவு தண்ணீர் தேங்குபவை. தரமற்ற அந்த மண்ணில் 8 அடுக்கு மாடி கட்டியுள்ளனர். அதிகாரிகளின், அரசியல்வாதிகள் ஊழலால் அதன் மேற்கூரைகள் இடிந்துவிழுகின்றன. இப்படிப்பட்ட வீடுகளில் எப்படி எங்கள் குழந்தைகளை விட்டு விட்டு நாங்கள் வேலைக்குச் சென்று வர முடியும்.” என்று கேட்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

“கரையோர மக்களை அப்புறப்படுத்தும் போது 8 கி.மீ தொலைவில்தான் குடியிருப்புகளை ஒதுக்க வேண்டும்” என்கிறது உயர்நீதிமன்ற உத்தரவு. ஆனால், எல்லா நீதிமன்ற உத்திரவுகளையும் போல இதுவும் காகிதத்தில் மட்டும்தான் இருக்கிறது. ஏற்கனவே, சென்னைக்குள் பல்வேறு பகுதியிலிருந்து அப்புறப்படுத்திய அடித்தட்டு மக்களை 35 கி.மீ தொலைவிலுள்ள கண்ணகி நகர், செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளுக்கே துரத்தியடித்தது அரசு. அங்கு சென்றவர்கள் தங்களின் மொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து சமூக சீரழிவுகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இவற்றையெல்லாம் நீதிமன்றங்கள் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை.

நீதிமன்ற உத்தரவு இருந்தும், ஆண்டாண்டு காலமாக சேரிப்பகுதி மக்களை சென்னை மாநகரில் இருந்து வெளியே கொண்டுபோய் தான் குடிவைத்து வருகின்றன. இது எந்த ஆட்சி இருந்தாலும் நடக்கும் நடைமுறைதான். கிராமப்புறங்களில் ஊரிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கும் காலனிகளைப் போல இங்கு சேரிப் பகுதிகள் என்றுமே ஊருக்கு வெளியே எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத இடங்களுக்குத் தான் மாற்றப்படுகின்றன.

கடந்த ஆண்டே இப்பகுதி மக்களின் வீடுகளை இடிக்கப் போவதாக நோட்டீசை வழங்கி உடனடியாக காலி செய்யுமாறு வற்புறுத்தியது அரசு. ஆனால், அம்மக்களின் போராட்டம், அதைத் தொடர்ந்த கொரோனா ஊரடங்கினால் இப்பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  கடந்த ஆண்டே இப்பகுதி மக்கள் “காந்தி நகர் குடியிருப்போர் நலச் சங்கம்” என்ற சங்கத்தை உருவாக்கி இதற்கெதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

திடீரென கடந்த 09.12.2020 அன்று அப்பகுதிக்குள் கார்ப்பரேசன் அதிகாரிகளுடன் நூற்றுக்கணக்கான போலீசாரோடு நுழைந்தனர். தங்களின் வீடுகள் பறிபோகப் போவதை உணர்ந்த மக்கள் கூவத்தில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்தனர். 20 க்கும் மேற்பட்ட அண்களும் பெண்களும் கூவத்தில் கழுத்தளவு சாக்கடை நீரில் இறங்கி 8 மணிநேரத்திற்கும் மேலாக நின்று போராடினர். ஆனால் அரசு இதைக் கண்டுகொள்ளவே இல்லை. மக்கள் நீரில் இறங்கி நிற்க, இந்தப் பக்கத்தில் வீடுகளை இடிக்கத் துவங்கியது அதிகாரவர்க்கம்.

பொதுப்பணித்துறை அதிகாரிகளும் காவலர்களும் “என்ன சீன் போடுறீங்களா?, நீங்கள் செத்தா சாகுங்க” என்று கரையில் நின்றவாறே போராடிய மக்களைப் பார்த்துப் பேசியுள்ளனர். பின்பு மக்களின் பொருட்கள் வீடுகளில் இருப்பதைக் கூடப் பொருட்படுத்தாமல் வீடுகளை இடிக்கத் தொடங்கினர் அதிகாரிகள். இதை எதிர்த்துப். போராடிய பெண்களை காவல்துறையினர் தரக்குறைவாகவும் இழிவாகவும் பேசியதோடு அங்கிருந்து விரட்டியடித்தனர். இருபதுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்ட சூழலில் மக்களின் தொடர் போராட்டத்தால் அப்போதைக்கு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதிகாரவர்க்கத்தின் ஆசை வார்த்தைகளுக்கும் மிரட்டல்களுக்கும்  விழுந்திடாத மக்கள் :

இதற்கிடையிலேயே போராட்டத்தில் முன்னணியாக உள்ள நபர்களை அருகில் வீடுகள் தருவதாக ஆசை வார்த்தை காட்டி மக்களைப் பிளவுபடுத்த முயன்றது அரசு. கூவத்தில் இறங்கியதால் கால் கிழிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முதியவர் ஒருவரிடம் “இனி போராட மாட்டேன் என்று கையெழுத்துப் போடு. அப்போதுதான் சிகிச்சையளிப்பேன்” என மிரட்டியுள்ளது போலிசு. ஆனால் இவை எதற்கும் அஞ்சாமல் துவளாமல் அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். அதே முதியவர் “எனக்காக மட்டுமல்ல என் மக்களுக்காகவும் தான் நான் போராடுகிறேன். என் உயிர் அங்கே இருக்குது சார். நான் வெறும் பிணம்.. கையெழுத்துப் போடமாட்டேன்.” என்று கூறி அவர்களது முகத்தில் கரியைப் பூசினார்.

கூவத்தில் இறங்கியவர்களில் ஒருவரின் மனைவியை தனியாக காவல்துறை சூழ்ந்துகொண்டு “ஒரு அதிகாரியையே எதிர்த்து பேசுகிறாயா? மரியாதையா மேடம் காலில் விழு. இல்லையென்றால் உன் கணவனை 15 நாட்கள் ரிமாண்ட் செய்துவிடுவேன்” என்று மிரட்டி பொதுப் பணித்துறை அதிகாரியான கவிதாவின் காலில் விழவைக்க முயன்றுள்ளனர். இதை அறிந்த சக பெண்கள் “நாம் உயிரோடு எரிந்தாலும் எரிய வேண்டுமே தவிர, காலில் விழக்கூடாது” என்று தன்மானத்தோடு பேசினர்.

படிக்க :
♦ கல்விக் கொள்ளை ஜேப்பியாரின் புதிய ஆக்கிரமிப்புக்கு உதவும் பொதுப்பணித்துறை !
♦ கோத்தகிரி ஆற்றை ஆக்கிரமிக்கும் கோபால்ஜி !

அடுத்தநாள் போராட்டத்தில் முன்னணியாக உள்ள நபர்களையும் பெண்களையும் மொத்தமாகக் கைது செய்துவிட்டு வீடுகளை இடித்து வருகிறது அரசு. தன் வீடுகளே இடிக்கப்பட்டாலும் கொட்டகை போட்டு இங்கேயே தங்குவோமே தவிர எங்கும் செல்லமாட்டோம் என்று துணிச்சலாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

பெரும்பாக்கத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளுக்குச் செல்வதற்கான டோக்கணை வாங்க மறுக்கின்றனர். கொட்டும் பணியிலும் இடிக்கப்பட்ட வீடுகளின் அருகில் வெட்ட வெளியிலேயே சோறு தண்ணீர் இன்றி உறங்குகின்றனர். சில முன்னணியான நபர்களை போலீசு குறிவைத்துத் தேடி வருவதால் தங்கள் சொந்த வீடுகளுக்கருகில் கூட செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

“இருக்கும் இடத்திலேயே வீடுகளை ஒதுக்கிக் கொடு! அல்லது அருகாமையில் வீடுகளைக் கட்டிக் கொடு!” என்பதுதான் அவர்களது கோரிக்கை. பொதுப்பணித்துறை, குடிசை மாற்று வாரியம், முதலமைச்சர் அலுவலகம் என பல இடங்களில் முறையிட்டும் தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பதை சொந்த முறையில் உணர்ந்துள்ளனர்.

மக்களின் போராட்டமும் போலீசு குவிப்பும் !

இந்த நகரத்தையே தங்கள் சொந்தக் கரங்களால் உருவாக்கி அழகாக்கிய மக்கள் இன்று அதற்கே ‘அழுக்காக’ கண்ணை உறுத்துகிறார்கள். இன்னொருபுறம் ‘ஆக்கிரமிப்புகள்’ எனும் பெயரில் அடித்தட்டு ஏழை மக்களின் குடியிருப்புகளை காலிசெய்து “விலைமதிப்புள்ள” அந்த இடங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ரியல் எஸ்டேட் கொள்ளையர்களுக்கும் பங்கிட்டுத் தரும் சேவையையே “ஸ்மார்ட் சிட்டி” என்ற பெயரில் செய்யத் துடிக்கிறது மோடி அரசு. அதன் ஒரு பகுதியே கூவம், அடையாறு ஆற்றங்கரையோர மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை.

அந்த மக்களுக்காக குரல் கொடுப்போம் ! தவறினால், நாமும் ஒருநாள் வாழும் உரிமை பறிக்கப்பட்டு வீதியில் வீசியெறியப்படும்போது குரல் கொடுக்க மட்டுமல்ல, ஆறுதல் சொல்லவும் யாரும் இருக்க மாட்டார்கள் !!

தீரன்

நூல் விமர்சனம் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | ஆனந்த் தெல்தும்டே | எஸ். காமராஜ்

 மகத் என்பது என்ன?

 உலகில் எங்குமே நடைபெறாத கொடுங்கோன்மை சாதியின் பெயரால் இன்றளவும் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் காலில் செருப்பு அணியக் கூடாது, சொந்தமாக நிலம் வைத்துக்கொள்ள முடியாது, வீதிகளில் எச்சில் துப்பக் கூடாது கலயத்தை கட்டிக்கொண்டு நடக்க வேண்டும். இப்படி கணக்கற்ற கட்டுப்பாடுகளை சமூக தடைகளை  சாதிப் படிநிலை அமைப்பு விதித்திருந்தது.

ஊருக்குப் பொதுவான நீர்நிலைகளில் தலித் மக்கள் தண்ணீர் எடுக்கக்கூடாது சாதியின் பெயரால் பொருளாதார சமூக அடக்குமுறைகள் உச்ச நிலையில் இருந்த காலகட்டத்தில் தான் உலக வரலாற்றில் முதன்முதலாக பொதுக் குளத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் தண்ணீர் எடுப்பதற்கான உரிமைப் போராட்டம் மகத் நகரில் நடைபெற்றது.

மகத் நகரில் நடைபெற்ற மாநாட்டில் உண்மையில் நடந்தது என்ன? ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் மகத் போராட்டம் ஏற்படுத்திய தாக்கம் என்ன? மனித உரிமைக்காக, சாதி ஆதிக்க அமைப்பை எதிர்த்து,  சமர் புரிந்த போராட்ட வரலாறு சொல்லும் படிப்பினைகள் என்ன?  என்ற கேள்விகளுக்கு தகுந்த ஆதாரங்களோடு இந்த நூலில் முனைவர் ஆனந்த் டெல்டும்டே விளக்கியுள்ளார்.

படிக்க :
♦ சிந்து சமவெளி மக்களின் பிரதான உணவு மாட்டுக் கறியாம் || ஆய்வில் உறுதி
♦ டிசம்பர் 14 : பாஜக அலுவலகங்களை முற்றுகையிடுவோம் – விவசாயிகள் சங்கம் அறைகூவல் !

1927 மார்ச் 19 -20, பம்பாய் கொலாபா மாவட்டத்தின் மகத் நகராட்சி பகுதியில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இரண்டு நாள் மாநாடு பற்றி ஆவண காப்பக தரவுகள், வரலாற்று சான்றாதாரங்கள், உள்ளிட்ட பல மூலாதாரங்களை கொண்டு மகத் போராட்டத்தைப் பற்றிய முழு சித்திரத்தை, 6 ஆய்வுக் கட்டுரைகள், 8 பின்னிணைப்புகள் கொண்ட இந்த நூலில் ஆனந்த் டெல்டும்டே அவர்கள் அளித்துள்ளார்கள்.

இந்தியத் துணை கண்டத்தில் சாதி அமைப்பு என்ன?  என்பதை பற்றி புரிந்து கொள்ளாமல் மகத் போராட்டத்தைப் பற்றி இதன் முழுமையான முக்கியத்துவத்தைப் பற்றி புரிந்து கொள்வது  இயலாது.

சாதிப் படிநிலை அமைப்பும் அதன் கிளையான தீண்டாமைக் கொடுமையும்  மகத் போராட்டத்திற்கு முன்பு,  இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றில் ஒழுங்குஅமைக்கப்பட்ட முறையில் இது போன்ற சவால் எதையும்  ஒருபோதும் எதிர்கொண்டது இல்லை.

பேராசிரியர் ஆனந்த் தெல்தும்ப்டே

மகத் போராட்டத்திற்கு முன்பு பரவலாக நடைபெற்ற சாதி ஆதிக்க,  தீண்டாமை ஒழிப்பு முன்னெடுப்புகள் உள்ளூர் மட்டத்தை தாண்டி வெளி உலகிற்கு செல்லவில்லை.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மகத் நகரிலுள்ள சௌதார் குளத்தில் குளிக்கவும் அந்த தண்ணீரை குடிக்கவும் தடை செய்யப்பட்டிருந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் ஆறுகள் ஏரிகள் குளங்கள் போன்ற நீர் நிலைகளில் இறங்கி தண்ணீரை பயன்படுத்தக்கூடாது என்பது சாதியாதிக்க சட்டம்.

மகத் நகரில் நடைபெற்ற ஒடுக்கப்பட்ட மக்களின் மாநாடு தலித் மக்களின் குடி உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று தீர்மானித்தது. சவுதார் குளத்துக்கு அருகே மனுதர்மத்தை எரிப்பது என்று மாநாடு முடிவு செய்தது.

சாதி ஆதிக்க சக்திகள் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்கியதால் அந்த மனுதர்ம எதிர்ப்பு போராட்டம் நடைபெறவில்லை. “வெடித்தது மகத் சௌதார் குளத்தில் நீர் அருந்தும் போராட்டம்..”

முற்போக்கு படைப்பாளிகள் என்று அறியப்பட்டவர்கள் கூட மகத் போராட்டம் மனித உரிமைக்கான போராட்டம் என்பதை பொதுமைப்படுத்தப்பட்ட வார்த்தைகளில் ஒருபோதும் குறிப்பிடவே இல்லை என்கிறார் ஆசிரியர்.

நவீன கால இந்திய வரலாற்றில் கால் நூற்றாண்டுக்கு முன்பு நடந்த எந்த குடியுரிமை போராட்டத்திற்கும் மகத் நகரில் நடைபெற்ற போராட்டம் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது.

உலக வரலாற்றில் அதிர்வலைகளை ஏற்படுத்திய பிரெஞ்சுப் புரட்சியின் தீவிர நிகழ்வாக பாஸ்டில் சிறை தகர்ப்பு போராட்டம் நடைபெற்றது. பிரெஞ்சுப் புரட்சியுடன் மகத் போராட்டத்தை ஒப்பிட்டு அம்பேத்கர் எழுதியிருக்கிறார்.

பிரஞ்சுப் புரட்சியைப் போல் ஆளுகின்ற அரசை தூக்கி எறிந்துவிட்டு அதிகாரக் கட்டுமானத்தைத் தகர்க்க வேண்டும் என்ற இலக்கை கொண்டது அல்ல மகத் போராட்டம். பிறகு ஏன் மகத் போராட்டத்தை பிரெஞ்சுப் புரட்சியுடன் அம்பேத்கர் ஒப்பிட வேண்டும்? இரண்டுக்குமான தொடர்பு எத்தகையது என்பதை  நூலாசிரியர் தனது ஆய்வின் மூலம் நிறுவுகிறார்.

அம்பேத்கர்

1789-ம் ஆண்டு  நிலப்பிரபுத்துவத்தின் ஒடுக்குமுறைச் சின்னமான பாஸ்டில் சிறையை தகர்த்தெறிந்து விட்டு நிலப்பிரபுத்துவ முடியாட்சி பரம்பரையின் மரணத்தையும், குடியரசின் உதயத்தையும் கண்டது பிரஞ்சு புரட்சி.

பிரெஞ்சு புரட்சியின் முக்கியக் கோட்பாடான சுதந்திரம்- சமத்துவம்- சகோதரத்துவம் என்ற மனித விழுமியங்களுக்கும்  மகத் போராட்டத்திற்கும் ஒற்றுமை உள்ளது என்கிறார் ஆசிரியர்.

அடிமைத்தனத்தை விடவும் படு மோசமானது தீண்டாமை. சுதந்திரமான ஒரு மனிதராக தன்னைத்தானே விடுவித்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பு ஒரு அடிமைக்கு கிடைக்கும். ஓர் அடிமையின் உணர்வு, அடிமைத் தனத்திற்கு எதிராக  கலகம் செய்யத் தூண்டி உந்தித் தள்ளும் வாய்ப்பு உள்ளது.

வருணாசிரம நெறிப்படி, ஒரு சாதிய மனிதப்பிறவி தனது விதியிலிருந்து ஒருபோதும் தப்பிச் செல்ல முடியாது. ஒருமுறை அடிமையானவர் எல்லா காலங்களிலும் அடிமையே என்பது அடிமைகளின் விதி அல்ல, ஆனால் தீண்டப்படாதவர்கள் எல்லா காலங்களிலும் தீண்டப்படாதவராகவே இருத்தப்பட்டிக்கின்றனர்.

இனவாதமும் சாதியவாதமும் என்ற கட்டுரை, இனம் மற்றும் சாதி உறவுகளின் கட்டமைப்புகள் ஒரே அளவுகோலால் அளவிட முடியாதவை என்பதையும் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டையும் தெளிவாக விளக்குகிறது.

ஒரு மாபெரும் வலிமை படைத்த மற்றவர்களை அச்சுறுத்தக் கூடிய சாதி ஆதிக்க அமைப்புக்கு எதிராக சமூகத்தின்  கடைசி அடுக்கில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் கலக எழுச்சியை மகத் குறியீடாக வைத்தது.

இந்திய வரலாற்றில் சாதிஅமைப்பு முறைக்கு எதிரான போராட்டங்கள் காலனிய ஆட்சிக் காலத்தில்தான் முளைவிடத் தொடங்கின. காலனிய ஆட்சிக் காலத்தின் சாதகமான சூழ்நிலையில் நகர்புற தலித்துகளின் ஒரு பிரிவினர் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றனர். பொருளாதாரம் சார்ந்த வாய்ப்புகள் பெற்று, பொருளாதார ரீதியான உயர்வு அடைந்ததன் விளைவாக சாதி ஆதிக்கத்திற்கு எதிராகவும்,  தீண்டாமை கொடுமைக்கு எதிராகவும் போராட முற்பட்டனர்.

மகத்தின் போராட்ட முன்னணி வீரர்களின் வாழ்க்கை சித்திரங்கள் பின்னிணைப்பாக நூலாசிரியர் தொகுத்துத் தந்துள்ளார். மாபெரும் தலித் மக்களின் உரிமை போருக்குப் பின் உள்ள போராளிகளின் வாழ்க்கை குறிப்புகள் போராட்ட உணர்வுக்கு உத்வேகம் ஊட்டுவதாக உள்ளது.

வாழ்க்கையின் அனைத்து தளங்களிலும் பின்னிப் பரவியுள்ள சாதிப் படிநிலை அமைப்பை ஒட்டுமொத்தமாக ஒழிப்பது நடக்காமல் இந்திய நாட்டை ஜனநாயக சமூகமாக மாற்றும் பணி நிறைவடையாது.

தீண்டாமை என்கின்ற மனிதகுல விரோத கொடுமை எப்படி தோன்றியது? என்பது குறித்த அறிவும் தெளிவும் சாதி ஒழிப்பு செயல்பாட்டிற்கு நமக்கு தேவை. சாதி என்பது சமூகத்தின் மேல் கட்டுமானம் என்ற கருதுகோள்  என்றும் உண்மையில்லை.

சாதியப் படிநிலை அமைப்பு சமுதாயத்தின் அடித்தளத்திற்கும்,  மேல் கட்டுமானத்திற்கும் தொடர்புடைய விஷயம். பொருளியல் ரீதியான உற்பத்தி உறவாகவும், கருத்தியல் நிலையாகவும் சாதியப் படிநிலை அமைப்பு விளங்குகிறது. அந்தக் கருத்தியலை வருணாசிரம சதுர்வர்ண முறை கோட்பாடாக பாதுகாக்கிறது.

உற்பத்தியும் நுகர்வும் உலகமயம் ஆகிவிட்டதால் நவீனமயமாக்கல் உடன்,  சமூக வளர்ச்சிப்போக்கில் சாதிப் படிநிலை அமைப்பு தானாகவே மெல்ல மெல்ல மறைந்துவிடும் என்ற புரிதலை சிலர் திட்டமிட்டு உருவாக்குகின்றனர். இது தவறானதாகும்.

இந்திய சமூக அமைப்பின் இயங்கியல் மிகவும் சிக்கலானது. இந்திய சமூக பொருளாதார அமைப்பில் நிலவுடைமை அமைப்பை தகர்த்து எறியாமல் இந்திய தரகு முதலாளித்துவம் முதலாளித்துவ அமைப்பை நிறுவுவதில் ஈடுபட்டுள்ளது.

சொல்லிக் கொள்ளப்படும் இந்திய ஜனநாயகம் அடித்தள மக்களுக்கு சம வாய்ப்புகளை வழங்கவில்லை. அம்பேத்கர் நடத்திய ஜனநாயகப் போராட்டம் இன்னும் முற்றுப்பெறவில்லை.

படிக்க :
♦ ரஜினி ரசிகர்களே ! இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை !
♦ டெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல ! வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி !

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முகவரி அற்றவர்களாக ஆக்கப்பட்டு முகங்கள் சிதைக்கப்பட்ட தலித் மக்களின் மீதான தீண்டாமைகொடுமை, வன்முறைதாக்குதல்கள் இன்றைய காலகட்டத்திலும் சற்றும் குறையாமல் நடைபெற்று வருகிறது.

மத்திய மாநில அரசுகள் கிராமப்புற முன்னேற்றத்திற்காக, வளர்ச்சிக்காக அறிவிக்கும் திட்டங்களின் பயன்கள் கிராமப்புற ஆதிக்க சாதி பணக்கார விவசாயிகளை மட்டுமே சென்று சேர்கிறது. கிராமப்புற இந்தியாவில் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் ஒடுக்கப்பட்ட நிலையிலேயே வாழ்கின்றனர்.

“இந்து மதம் கொடுமையான பயங்கரங்கள் நிறைந்த இருட்டு அறை” என்றார் அம்பேத்கர். இந்தியாவில் சாதிகள் என்ற கட்டுரையில் அம்பேத்கர் சாதியை ஒரு அகமணப் பிரிவு என்றும், அடைக்கப்பட்ட வர்க்கம் என்றும் வரையறுக்கிறார். சாதி முறைமை என்பது மரியாதையின் மேலேறும் ஏணி- வெறுப்பின் கீழிறங்கும் ஏணி என்றும் விவரித்தார்.

ஏடறிந்த வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்ட வரலாறு என்றார் மாமேதை மார்க்ஸ். இந்தியத் துணைக் கண்டத்தில் வர்க்கப் போராட்டம், சாதி எதிர்ப்பு – தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான போராட்டத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. ஒடுக்கப்பட்ட சாதி மக்களே உழைக்கும் வர்க்கம் ஆகவும், ஆதிக்க சாதிகளே சுரண்டும் வர்க்கமாகவும் இங்கு உள்ளனர். விதிவிலக்குகளாக வெகு சிலரே இருக்கின்றனர்.

இந்தியத் துணைக் கண்டத்தில் வர்க்கப் போராட்டத்திற்கு இணையாகவும் துணையாகவும் சாதி ஆதிக்க எதிர்ப்பு,  தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தை நடத்தவேண்டிய வரலாற்றுத் தேவை நம்முன் உள்ளது. நவீன பார்ப்பனியத்தை வேரறுத்து, மனிதனை மனிதனாக மட்டும் மதிக்கின்ற ஒரு சமுதாயத்தை ஏற்படுத்தும் மாபெரும் பணி பொதுவுடமையாளர்கள் முன் உள்ளது.

சாதி ஒழிப்பின் மீது அக்கறை உள்ள ஜனநாயக சக்திகள், சமூக மாற்றத்திற்காக போராடும் போராளிகள் அனைவருக்கும் இந்த நூல் ஒரு புதிய வெளிச்சத்தை காட்டும். சமூக நீதி- சாதி ஒழிப்பு போராளிகளுக்கு இந்த நூல் சிறந்த கருத்து ஆயுதமாய் பெரிதும் பயன்படும்.

 

நூல் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்
ஆசிரியர் : ஆனந்த் டெல்டும்டே

தமிழாக்கம் :  கமலாலயன்
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்
விலை : ரூ. 550/
நூல் விமர்சனம் :  எஸ் காமராஜ்

 

disclaimer

முதலாளித்துவம் உருவாக்கும் முரண் நிலை || உலகப் பட்டினிக் குறியீடு

லகு தழுவிய அளவில் சத்தான உணவு கிடைக்காமல், அரைகுறை பட்டினியால் உடல் மெலிவுற்று, வயதுக்கு ஏற்ற வளர்ச்சியும் உயரத்திற்கு ஏற்ற எடையும் இன்றி நோஞ்சான்களாக உயிர்வாழும் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், அன்றாடம் ஊட்டமான உணவு கிடைக்காமல் வெந்ததைத் தின்று உயிர் வாழும் மக்களைக் கொண்ட நாடுகள் அடங்கிய தரவரிசைப் பட்டியல், உலக பட்டினிக் குறியீடு 2020 எனும் பெயரில் வெளியாகியிருக்கிறது.

வழமை போலவே, இந்தியா இந்தப் பட்டியலில் பின்தங்கி இருப்பதோடு − 107 நாடுகளைக் கொண்ட பட்டியலில் இந்தியா 94 ஆவது இடத்தில் உள்ளது − நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான் (88−ஆவது இடம்) இலங்கை (64),வங்கதேசம் (75), நேபாளம் (73), மியான்மர் (78) ஆகிய சிறிய, வறிய நாடுகளைவிட மிக மோசமான நிலையில் இருப்பதை அக்குறியீடு அம்பலப்படுத்தியிருக்கிறது.

கடந்த ஐந்தாண்டுகளில், அதாவது வளர்ச்சி நாயகன் என விளம்பரப்படுத்தப்பட்ட திருவாளர் மோடியின் ஆட்சியில் உயரத்திற்கு ஏற்ற எடை அற்ற இந்தியக் குழந்தைகளின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஐந்தாண்டுகளைக் காட்டிலும் 2.2 சதவீதம் அதிகரித்திருப்பதையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது. இதுவொருபுறமிருக்க, பன்னாட்டு உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனமும், தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனமும் தனித்தனியாக வெளியிட்டிருக்கும் அறிக்கைகள், இந்தியக் கிராமப்புறங்களில் நான்கில் மூன்று பேர் சத்தான, சரிவிகித உணவுக்கு வழியின்றி வாழ்வதாகக் குறிப்பிட்டுள்ளன.

படிக்க :
♦ ஏழைகளை பட்டினிச் சாவுக்குத் தள்ளும் ஆதார் !
♦ ஜார்கண்ட் – தொடரும் பட்டினி மரணங்கள் !

சத்தான சரிவிகித உணவுக்கு வழியில்லாத கிராமப்புற இந்திய மக்கள், உயரத்திற்கு ஏற்ற எடையும், வயதுக்கு ஏற்ற வளர்ச்சியும் இல்லாத இந்தியக் குழந்தைகள் என்ற இந்த விவரமெல்லாம் காட்டுவதென்ன? கோடிக்கணக்கான இந்தியக் குடும்பங்கள் அடிப்படை உணவுத் தேவையைக்கூட ஈடுசெய்து கொள்ள முடியாத வறுமையின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள் என்பதுதான்.

உலகப் பட்டினிக் குறியீட்டில் இந்தியாவிற்கு அளிக்கப்பட்டிருக்கும் இத்தரவரிசை இடம், கரோனா பாதிப்புகளுக்கு முந்தைய கணிப்பாகும். இப்பெருந்தொற்று தீவிரப்படுத்தியிருக்கும் நிச்சயமற்ற நிலையைக் கணக்கில் கொண்டால், எதிர்காலத்தில் இந்தியா இந்தத் தரவரிசைப் பட்டியலில் இன்னும் கீழே சரிந்து விழக்கூடும்.

அரைகுறை பட்டினி என்ற இந்த அவலத்தை, அபாயத்தை எதிர்கொள்ள வேண்டுமென்றால், ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய் மட்டுமின்றி, பருப்பு வகைகள், தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமான ஊட்டச்சத்து அளிக்கக்கூடிய உணவுப் பொருட்களை மானிய விலையில் அனைவருக்கும் கிடைக்கும்படி ரேஷன் விநியோகத்தை விரிவுபடுத்த வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள், பால் கொடுக்கும் தாய்மார்கள், ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோருக்காக நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு விதமான சத்துணவுத் திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும். மிகவும் முக்கியமாக, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்களையும், அவர்களது வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்டக்கூடிய கூலியையும் உத்தரவாதப்படுத்த வேண்டும்.

ஆனால், மோடி அரசோ இதற்கு நேர் எதிர் திசையில், ரேஷன் விநியோகத்தில் உணவுப் பொருட்களுக்குப் பதிலாகப் பணப் பட்டுவாடாவைக் கொண்டுவர முயலுகிறது. அத்தியாவசிய உணவுப் பொருள் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்தி, பதுக்கலுக்கும் விலை உயர்வுக்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தொழிலாளர் நலச் சட்டத்தில் கொண்டுவந்திருக்கும் சீர்திருத்தங்கள் மூலம் வேலை உத்தரவாதத்தையும், குறைந்தபட்ச கூலி கொடுப்பதையும் இல்லாது ஒழித்திருக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், இச்சீர்த்திருத்தங்கள் மூலம் ஏழைகளை, அடித்தட்டு மக்களைத் தமது வயிற்றைச் சுருக்கிக்கொண்டு வாழச் சொல்கிறது, மோடி அரசு. இப்படிப்பட்ட ஆட்சியில் பட்டினிச் சாவுகள் நடக்கத் தொடங்கினாலும் ஆச்சரியங்கொள்ள முடியாது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற விதத்தில் பட்டினிக் குறியீடு தர வரிசை குறையாதது துரதிருஷ்டவசமானது என அங்கலாய்த்துக் கொள்கிறார்கள், முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள். ஆடு கொழுக்கட்டும் என ஓநாய்களும், நரிகளும் வேண்டுமானால் காத்துக் கிடக்கலாம். ஆனால், கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் இந்த நியதியை ஏற்றுக் கொள்வதில்லை.

அம்பானி உலகக் கோடீசுவரர்களின் பட்டியலில் எந்தளவிற்கு முன்னேறிச் செல்கிறாரோ, அந்தளவிற்கு இந்தியாவில் ஏழ்மையும் பட்டினியும் அதிகரிக்கவே செய்யும். இதுதான் முதலாளித்துவ சமூக விதி. கம்யூனிசப் புரட்சியாளர்கள் கூறிவரும் இந்த உண்மையைத்தான் உலகப் பட்டினிக் குறியீடு 2020−ம் எடுத்துக்காட்டியிருக்கிறது.

மேகலை

டிசம்பர் 2020 – மின்னிதழை தரவிறக்கம் செய்ய : இங்கே அழுத்தவும்

7.5 சதவீத இட ஒதுக்கீடு : புண்ணுக்குப் புனுகாகிவிடக் கூடாது || புதிய ஜனநாயகம்

மிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பதைத் தனது தனிப்பட்ட சாதனையாகக் காட்டிக்கொள்ள முயலுகிறார், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. ‘அவர் தனியொருவனாகச் சிந்தித்து இந்தச் சாதனையைப் படைப்பதற்கு‘ அனிதா தொடங்கி ஜோதிஸ்ரீ துர்கா வரையில் 16 மாணவ−மாணவிகள் தமது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டியிருந்தது என்பதை நாம் மறந்துவிட முடியாது.

ஆங்கில வழி மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பெருக்கத்திற்குப் பிறகு அரசுப் பள்ளி மாணவர்கள், குறிப்பாகத் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பது அரிதாகிப் போனது. தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டபோதும், நுழைவுத் தேர்வு ரத்து செய்த பிறகும் இந்த நிலை மாறவில்லை. மோடி அரசு−உச்சநீதி மன்றக் கூட்டணியால் திணிக்கப்பட்ட நீட் தேர்வு இந்த நிலையை மேலும் மோசமாக்கியிருப்பதோடு, ஏமாற்றமடைந்த மாணவர்களைத் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கும் தள்ளிவிட்டிருக்கிறது.

தாமதமாகக் கொண்டுவரப்பட்டாலும் இந்த இட ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது என்றபோதும்,  அரசுப் பள்ளிகளில் படித்துவரும் ஏழை மற்றும் கீழ் நடுத்தர வரக்க மாணவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது இந்த ஒதுக்கீடு சொற்பமானதுதான். அதேசமயத்தில், இந்தச் சொற்பமான ஒதுக்கீடும் எளிதாகக் கிடைத்துவிடவில்லை.

படிக்க :
♦ INI – CET : 11 கல்லூரிகளுக்கு நீட் விலக்கு – தமிழகத்துக்குக் கிடையாதா ?
♦ 7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் : ஏழை மாணவர்களுக்கு இது போதுமா ?

நீதிபதி கலையரசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்ததை அ.தி.மு.க. அரசு 7.5 சதவீதமாக வெட்டியது. இந்த வெட்டப்பட்ட ஒதுக்கீடிற்கும் ஆளுநர் ஒப்புதல் தராமல் இழுத்தடித்தார். அ.தி.மு.க. அரசோ ஆளுநருக்கு அரசியல் அழுத்தம் தர மறுத்து ஒதுங்கிக் கொண்டது. உயர்நீதி மன்றத்தில் வழக்கு, எதிர்க்கட்சிகளின் போராட்ட அறிவிப்பு, ஆளுநரின் அடாவடித்தனத்திற்கும் அ.தி.மு.க. அரசின் மெத்தனத்திற்கும் எதிராகத் தமிழக மக்கள் மத்தியில் எழுந்த வெறுப்பு−கோபம் ஆகியவற்றுக்குப் பிறகுதான் அ.தி.மு.க. அரசு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. இந்த இட ஒதுக்கீடை மறுப்பதோ இழுத்தடிப்பதோ பா.ஜ.க.வைப் பதம் பார்த்துவிடும் என உரைத்த பிறகுதான் ஆளுநர் தமிழக அரசின் இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் தந்தார். இந்த அழுத்தங்கள் எல்லாம் இல்லாமல் போயிருந்தால், இந்த இட ஒதுக்கீடும் எழுவர் விடுதலையைப் போலவே ஆளுநர் மாளிகையிலேயே அமுக்கப்பட்டிருக்கும்.

தனியார் “மெட்ரிகுலேஷன்” மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும் கார்ப்பரேட் பயிற்சி மையங்களிலும் இலட்சக்கணக்கான ரூபாயைச் செலவழித்துப் படிக்கும் நடுத்தர மற்றும் மேல்தட்டு மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி இடங்களை அப்படியே வாரிச் சுருட்டிக் கொள்வதை அனுமதிப்பது அநீதியானது என்ற நிலையிலிருந்து இந்த இட ஒதுக்கீடை ஆதரிக்கலாமேயொழிய, நீட் தேர்வை மறைமுகமாக முட்டுக் கொடுப்பதற்கும் அல்லது நீட் தேர்விற்கான எதிர்ப்பை மழுங்கடிப்பதற்குமான கருவியாக இந்த இட ஒதுக்கீடைப் பயன்படுத்தும் முயற்சிகளையும் நாம் அனுமதிக்க முடியாது. ஏனென்றால், நீட் தேர்வின் மூலம் திணிக்கப்பட்டிருக்கும் சமத்துவமின்மையை, பாரபட்சத்தை இந்த இட ஒதுக்கீடு இம்மியளவுகூட ரத்து செய்துவிடவில்லை.

தனியார் பயிற்சி மையத்தில் தனது மகள் பகவதியைச் சேர்க்கத் தனது அற்ப சொத்துக்களை விற்றதோடு, கடனாளியாகவும் ஆகிவிட்ட சமுத்திரக்கனி

இந்த ஒதுக்கீடின் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 227 மாணவர்களுக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 86 மாணவர்களுக்கும் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 12 மாணவர்களுக்கும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 80 மாணவர்களுக்கும் இடம் கிடைக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டிருந்தாலும், நீட் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்ணின் அடிப்படையில்தான் மாணவர் தேர்வு நடைபெறும். இந்த நீட் தேர்வு சி.பி.எஸ்.இ., பாடத் திட்டப்படி நடைபெறுவதால், மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வுக்காக அரசு பயிற்சி மையத்திலோ அல்லது தனியார் பயிற்சி மையத்திலோ சேர்ந்து இத்தேர்வுக்குத் தயாராவது தவிர்க்கவியலாத கட்டாயமாகிவிடுகிறது. குறிப்பாக, அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டாம் முறையாக நீட் தேர்வு எழுத வேண்டுமென்றால், அவர்கள் தனியார் பயிற்சி மையத்தில் மட்டும்தான் சேர முடியும்.

இந்த ஆண்டு நீட் தேர்வில் 664 மதிப்பெண்களை எடுத்து, இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம் பெற்றிருக்கும் தேனி மாவட்டம் ஜீவித்குமார் கடந்த ஆண்டு நீட் தேர்வில் எடுத்த மதிப்பெண் 193 தான். அம்மாணவன் இரண்டாம் முறையாக நீட் தேர்வு எழுதுவதற்கு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பயற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி எடுப்பதற்குப் பலரும் உதவியிருக்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தெங்கலம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த பகவதி, கடந்த ஆண்டு நீட் தேர்வில் 111 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்ததால், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு அவர் தனியார் பயிற்சி மையத்தில் சேருவதற்காக, விவசாயக் கூலித் தொழிலாளியான அவரது தாய் சமுத்திரக்கனி, தன்னிடமிருந்த மூன்று கறவை மாடுகளையும் விற்றதோடு, கந்துவட்டிக்கும் கடன் வாங்கியிருக்கிறார்.

இட ஒதுக்கீடின் கீழ் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கும் பகவதியின் கதையிது. இது போன்று அற்பமான சொத்தையும் விற்ற, கடனும் பட்ட துயரக் கதைகள் இன்னும் எத்துணை எத்துணையோ!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 6,692 மாணவ−மாணவிகள் இந்த ஆண்டு நீட் தேர்விற்கு அரசு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றதில் 1,615 பேர் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி அடைந்தவர்களுள் 405 பேருக்குத்தான் இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரிகளிலோ பல் மருத்துவக் கல்லூரிகளிலோ இடம் கிடைக்கும்.

இடம் கிடைக்காதவர்களும், நீட் தேர்வில் தேர்ச்சி அடையாதவர்களும் எதிர்வரும் ஆண்டில் நீட் தேர்விற்குத் தயாராக வேண்டுமெனில் அவர்கள் அனைவரும் தனியார் பயிற்சி மையத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும். இந்நிலையில் அவர்களுள் எத்துனை பேருக்கு ஜீவித்குமாருக்குக் கிடைத்த உதவி போல கிடைக்கும்? எத்துணை பேரால் கையில் இருக்கும் அரைக்காசு சொத்தை விற்றோ, அல்லது கந்து வட்டிக்குக் கடன் வாங்கியோ தனியார் பயிற்சி மையத்தின் கட்டணங்களைக் கட்ட முடியும்?

படிக்க :
♦ ரஜினி ரசிகர்களே ! இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை !
♦ கமல்ஹாசன் – சூரப்பாவின் #நேர்மை, #திறமை, #அஞ்சாமை !!

இந்த 7.5 சதவீத ஒதுக்கீடு 405 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதை உத்தரவாதப்படுத்தியிருக்கிறது என்பது எந்தளவிற்கு உண்மையோ அந்தளவிற்கு மருத்துவராக வேண்டும் எனக் கனவு காணும் அரசுப் பள்ளி  மாணவர்களின் குடும்பங்களின் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றி வைக்கும் என்பதும் உண்மையாகும். குறிப்பாக, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் மாணவர்களுக்கு அரசு உதவிகள் கிடைத்தாலும், அவர்களது குடும்பங்கள் பெரும் கடன் சுமையில் சிக்குவது தவிர்க்க முடியாதது. எனவே, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இன்னும் வலுவாக எழுப்ப வேண்டும் என்பதைத் தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடிற்குப் பிறகான நிலைமைகள் ஏற்படுத்தியிருக்கின்றன.

நீட் தேர்வை ரத்து செய்யக் கோருவதோடு, கல்வி தனியார்மயமாகியிருக்கும் சூழலில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசுக் கல்லூரிகள் அனைத்திலும் உரிய இட ஒதுக்கீட்டை நிர்ணயித்துத் தொடர வேண்டும் என்றும் கோர வேண்டும்.

இந்த உடனடிக் கோரிக்கைகளுக்காக மாணவர்களையும் பெற்றோர்களையும் அணி திரட்டுவதை முதன்மைப்படுத்துவதற்குப் பதிலாக, அரசுப் பள்ளி மாணவர்கள் இந்த இட ஒதுக்கீடைப் பயன்படுத்திக் கொள்ளுவதற்கு ஏற்ற விதத்தில் அவர்களுக்கு உதவுவதை முன்னிலைப்படுத்துவதையும்; நீட் தேர்வைத் தடுத்து நிறுத்துவதில் படுதோல்வியடைந்து நிற்கும் அ.தி.மு.க., தனது தோல்வியை மறைத்துக் கொள்ள இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடைப் பயன்படுத்துவதையும் அனுமதிக்கக் கூடாது.

ரஹீம்

டிசம்பர் 2020 – மின்னிதழை தரவிறக்கம் செய்ய : இங்கே அழுத்தவும்

வெட்கக்கேடு : மத்தியப் பிரதேசம் பாலியல் குற்ற வழக்கு

உ.பி. மாநிலம் ஹாத்ரஸில் நடந்த பாலியல் வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட பெண்ணை, அம்மாநில அரசும், போலீசும், சாதிவெறியர்களும் அவமதித்ததை நாடே காறி உமிழ்ந்து போராடிவரும் வேளையில், ம.பி. மாநில உயர்நீதி மன்றம் அப்போராட்ட உணர்வை எள்ளி நகையாடும் விதத்தில் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

பாலியல் வன்முறைக்குப் பலியாகி நீதி கேட்டு நிற்கும் பெண்ணிடம், தன்னை அக்கொடுமைக்கு ஆட்படுத்திய காமுகனைச் சகோதரனாக ஏற்றுக்கொள்ளும்படியான உத்தரவை வழங்கி, இயற்கை நீதியைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது, அந்நீதிமன்றம்.

படிக்க :
♦ போராட்டங்களின் நோக்கம் || உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்த பார்வை !
♦ ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !

சில வழக்குகளில் குற்றவாளிகளுக்குப் பிணை வழங்குவதற்கு நீதிமன்றங்கள் நிபந்தனைகளை விதிப்பது வழமையானதுதான். ஆனால், ம.பி. மாநிலத்தின் உஜ்ஜைனி மாவட்டத்தில் பாலியல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த விக்ரம் பார்க்கி என்பவரின் பிணை மனு மீதான வழக்கில் நீதிபதி ரோஹித் ஆர்யா, குற்றவாளிக்குப் பிணை வழங்குவதற்கு விதித்திருக்கும் நிபந்தனைகளோ மிகவும் அருவெறுக்கத்தக்க ஆணாதிக்கத் திமிரும், பாதிக்கப்பட்ட பெண்ணைக் கூனிக்குறுகச் செய்யும் வக்கிரமும் நிறைந்தவையாக உள்ளன.

அவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விக்ரம், தனது பாலியல் இச்சைக்கும் வன்முறைக்கும் பலியான பெண்ணின் வீட்டிற்குத் தனது மனைவியுடன் சென்று, அப்பெண்ணிற்கு இனிப்புக்களை வழங்கி, அப்பெண்ணைத் தனது கையில் ராக்கி கயிற்றைக் கட்டிவிடக் கோரவேண்டும். மேலும், ராக்கி கட்டி விடும் தங்கைக்கு அண்ணன் பணம் தரும் வழக்கமான சடங்கைக் குறிப்பிட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குற்றம்சாட்டப்பட்டவர் 11,000 ரூபாய் பணம் தந்து அவரது ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும்; பாதிக்கப்பட்ட பெண்ணின் மகனிடம் துணிகள் மற்றும் இனிப்புகள் வாங்க 5,000 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் − இவைதான் அந்நீதிபதி விதித்திருக்கும் நிபந்தனைகள்.

ஆணாதிக்கத் திமிர் நிரம்பிய தீர்ப்பை வழங்கிய ம.பி. உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹித் ஆர்யா.

ஆதிக்க சாதியினர் நடத்தும் கட்டப் பஞ்சாயத்துகளில் பாலியல் குற்றவாளிகளை விடுவிக்கக் கோவிலுக்கு அபராதம் செலுத்தக் கூறும் நாட்டாண்மைத்தனத்தை ஒத்தது ம.பி. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு.

தன் மீது பாலியல் வன்முறையை ஏவிய குற்றவாளியை, பாதிக்கப்பட்ட எந்தப் பெண்ணாவது சகோதரனாக ஏற்றுக்கொள்ள முன்வருவாரா? தன் மீது பாலியல் வன்முறையை ஏவிய குற்றவாளியையே கணவனாக ஏற்கச் சொல்லும் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்பைக் காட்டிலும் அருவெறுக்கத்தக்க விதத்திலும், பொறுப்பற்ற விதத்திலும், தன்னிச்சைப்படி வழங்கப்பட்டிருக்கும் இந்தப் பிணை உத்தரவு, பாதிக்கப்பட்ட பெண்ணைப் பாதுகாத்து, அவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக, அவரை அவமானகரமான விதத்தில் தண்டிக்கிறது.

பாலியல் வன்முறைக்குப் பலியான பெண்களும், அவரது குடும்பத்தாரும் அதனைப் புகாராகக் கொடுக்க முன்வருவதே அசாதாரணமானது. அப்படிப் புகாராகக் கொடுக்கப்படும் வழக்குகள் போலிசு நிலையத்தைத் தாண்டி நீதிமன்றப் படிக்கட்டைத் தொடுவதும் போராட்டம் நிறைந்தது. மேலும், பாலியல் ரீதியிலான தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்களை ஒழுக்கங்கெட்டவர்கள் போலச் சித்தரித்து, அவர்களையே குற்றவாளியாக்குவது; ஆதிக்க சாதிவெறி மற்றும் மதவெறியை முகாந்திரமாகக் கொண்டு அக்குற்றத்தை நியாயப்படுத்துவதோடு, குற்றவாளிகளை நாயகர்களாக விளம்பரப்படுத்துவது என இப்படிப்பட்ட பலவாறான தடைகளைப் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் எதிர்கொண்டு வரும் நிலையில் வழங்கப்பட்டிருக்கும் இப்பிணை உத்தரவு, பாலியல் குற்றவாளிகளுக்கு மனத் துணிவை அளிக்கக்கூடியது. இப்படிப்பட்ட உத்தரவுகள் வழங்கப்படும் நாட்டில் பாலியல் குற்றங்கள் குறைவதற்கு ஏதாவது வாய்ப்புண்டா?

நிர்பயா வழக்கில் பாலியல் வன்முறையை ஏவிய குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை விதித்த இந்திய நீதித்துறையிலிருந்தா இப்படிப்பட்டதோர் உத்தரவு என யாரும், குறிப்பாகப் பெண்கள் வியப்படையத் தேவையில்லை. நிர்பயா வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு விதிவிலக்கு. மேலும், அச்சமயத்தில் அப்பாலியல் வன்முறைக்கு எதிராக நடுத்தெருவுக்கு வந்த நகர்ப்புறத்தைச் சேர்ந்த மேட்டுக்குடி மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக, வர்க்கச் சார்போடு வழங்கப்பட்ட தீர்ப்பு அது. பாதிக்கப்பட்ட பெண் எந்தச் சாதி, எந்த வர்க்கம், குற்றவாளிகள் எந்தச் சாதி எந்த வர்க்கம் என்பதற்கு ஏற்பத்தான் பாலியல் வழக்குகளில் தீர்ப்புகள் அளிக்கப்படுகின்றன என்பதற்கு நம் கண் முன்னே பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன.

பாலியல் வன்முறை வழக்குகளில், இந்திய நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளின் மனச்சான்றை இந்தியக் கிரிமினல் சட்டங்களைவிட, தந்தை வழி சமூக அமைப்பின் ஆணாதிக்க மனோபாவம்தான் ஆட்டிவைக்கிறது என்பதற்கு ம.பி. உயர்நீதி மன்றத்தால் வழங்கப்பட்டிருக்கும் இந்தப் பிணை உத்தரவு மற்றுமோர் உதாரணம்.

முத்து
புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2020 மின்னிதழ் தரவிறக்கம் செய்ய : இங்கே அழுத்தவும்

டிச 8 : நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் || மக்கள் அதிகாரம் பங்கேற்பு !

த்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாக்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக டிசம்பர் 8 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தனர். அதனையொட்டி நேற்று (டிசம்பர் 8) தமிழகம் முழுவதும் பல்வேறு முற்போக்கு, ஜனநாயக, புரட்சிகர அமைப்புகளும், கட்சிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் அதிகாரம் அமைப்பினரும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கோவை :

 “கார்ப்பரேட் கொள்ளைக்காக விவசாயிகளை காவு கொடுக்கும் வேளாண் சட்டத் திருத்தத்தை எதிர்த்து, டிசம்பர் – 8, 2020 அகில இந்திய வேலை நிறுத்தத்தில் பங்கெடுப்போம் ! டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்போம்!!”  என்ற தலைப்பில் கோவையில் மக்கள் அதிகாரம் தலைமையில் ஜனநாயக அமைப்புகள் பங்கேற்புடன் 8.12.2020 அன்று காலை 11 மணிக்கு, கோவை பவர் ஹவுஸ் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதில் மக்கள் அதிகாரம் கோவை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜன் தலைமை தாங்கினார். சி.பி.ஐ. (எம்.எல்) ரெட் ஸ்டார், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் ஜனநாயக குடியரசுக் கட்சி, தமிழர் திராவிடர் கழகம், அகில இந்திய புரட்சிகர பெண்கள் அமைப்பு, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கண்டன உரையாற்றினர்.

தகவல்
மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
94889 02202

000

உளுந்தூர்பேட்டை :

வேளாண் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் டிசம்பர் 8-ம் தேதி நடைபெற்ற வேலாஇநிறுத்தப் போராட்டத்தில், மக்கள் அதிகாரம் உளுந்தூர் பேட்டை வட்டாரம் சார்பாக  தோழர்கள் வினாயகம், மணிபால், சங்கர், சுபாஷ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களைப் போலீசு கைது செய்தது.

தகவல்
மக்கள் அதிகாரம்
உளுந்தூர்பேட்டை

பாரத் பந்த் : வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறு ! திருச்சி பு.ஜதொ.மு – புமாஇமு போராட்டம் !

மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்பட்ட தர்ணா போரட்டத்தில் திருச்சி பு.ஜ.தொ.மு, பு.மா.இ.மு பங்கேற்பு !

டந்த டிசம்பர் 8, மதியம் 1 மணி அளவில் திருச்சி BHEL ஆலை வாயிலில் CITU, NDLF, LLF, DTS/AITUC, INTUC, BCEU, DR.AWU, DK, MLF ஆகிய தொழிலாளர் சங்கங்கள் சார்பில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

தொழிலாளர்கள் போரட்டத்தில் பெண்கள், சிறுவர்கள், தொழிலாளர்கள் என 300 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தை சிஐடியு தோழர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். விவசாயிகளுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் தீங்கு விளைவிக்க கூடிய விவசாய சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், மோடி அரசை கண்டித்தும் எழுச்சிகரமான கண்டன முழக்கங்கள் எழுப்பபட்டன. அதனை தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிற்சங்க தலைவர்கள் மோடி அரசையை கண்டித்தும், வேளாண் சட்டத்தில் உள்ள பிரச்சனைகளை விளக்கியும் உரையாற்றினார்கள்.

படிக்க :
♦ வேளாண் சட்டத் திருத்தம் : சந்தை ஒரு பிணம் தின்னும் கழுகு !
♦ பிகார் : வேளாண் மசோதாவுக்கு ரத்த சாட்சியாக நிற்கும் விவசாயிகள் !

அதில் பு.ஜ.தொ.மு சார்பாக தோழர் உத்திராபதி, பொதுச்செயலாளர் (BPWU) பேசுகையில் “தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொள்கையை பின்பற்றத் தொடங்கிய நாள் முதலே தொழிலாளர் விரோத, மக்கள் விரோத சட்டங்களை இந்த அரசு அமுல்படுத்தி வருகிறது. குறிப்பாக மோடி தலைமையிலான அரசு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குகிறேன் என்று கூறிவிட்டு குறைந்தபட்ச ஆதார விலையைக் கூட உத்தரவாத படுத்தாமல், அதற்கு மாறாக விவசாயிகளுக்கு எதிராக சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.

கார்ப்பரேட்டுகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டு சாதாரண மக்களிடமிருந்து வரிப்பணத்தை புடுங்கி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகை அளிப்பதாகவே மோடி அரசின் செயல்பாடுகள் உள்ளன. இதைப்பற்றி சிந்திக்க விடாமல், சாதி – மதக் கலவரங்கள், ராமர் கோயில் கட்டுவது, இந்திய-சீனப் போர் பிரச்சனையை கிளறிவிட்டு மக்களை பிளவுபடுத்துவது என கார்ப்பரேட் – காவி சித்தாந்தத்தை வேகமாக அமுல்படுத்தி வருகின்றனர். எனவே நாம் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த தொடர்ச்சியாகப் போராட வேண்டும்” என்று கூறி தனது கண்டன உரையை நிறைவு செய்தார்.

இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக தோழர்களும் கலந்து கொண்டனர்.

தகவல்
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
திருச்சி