பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகளை வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்திற்கு அனுமதியளித்துள்ளது இதைக்கேட்டு மாணவர்களும் பெற்றோர்களும் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரானா தொற்று பரவலும் இறப்பு விகிதமும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டுள்ளது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இது உச்சத்தை எட்டும் என வல்லுனர்களும் மருத்துவரகளும் எச்சரிக்கிறார்கள். எல்லா மாநிலங்களிலும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், விடுதிகள் அனைத்தும் கோவிட் 19 தொற்றுக்கு ஆளானவர்களை தனிமைப்படுத்தும் முகாம்களாக மாற்றப்பட்டுள்ளது. கிராமங்களிலிருந்தும், வெளிமாவட்டங்களில், இருந்தும் படித்து வந்த மாணவர்கள் கொரானா தொற்றால் தங்கள் சொந்த ஊருக்கு சென்று உள்ளனர்.
இந்த நிலையில் ரயில் போக்குவரத்து வசதியில்லாமல் அவர்கள் தேர்வு எழுது சாத்தியமற்றது, மேலும் மாணவர்கள் இளைஞர்கள் கொரானா தொற்றுக்கு பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது இதே நிலையில் ஆன்லைன் வழியாகவும் தேர்வை நடத்துவது அனைவரிடமும் ஆண்ட்ராய்டு செல்போன் இன்டர்நெட் வசதி இல்லாத ஒரு ஏற்றத் தாழ்வான சூழல் நிலவுகிறது இதே சூழலில் நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும்.
சமீபத்தில் மத்திய பாடத்திட்ட வாரியமான சிபிஎஸ்சி கொரானா சூழலால் 30 சதவீத பாடத் திட்டங்களை குறைப்பதாக கூறி 11வது, 12வது பாடங்களில் குடியுரிமை, மதச்சார்பின்மை, ஜனநாயகம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றை நீக்கியுள்ளது. அதேபோல் ஒன்பதாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் தமிழகத்தின் கலாச்சாரம் சார்ந்த பகுதிகளை நீக்கியுள்ளது.
இது அனைத்தும் பாஜக அரசு தனது இந்துத்துவா கொள்கைக்கு எதிரான கருத்துக்களை அனைத்தையும் நீக்குவது என்ற உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது. இந்த பாடத்திட்ட நீக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும், ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர்ச்சியாக எமது அமைப்பு களத்தில் இறங்கி போராடும்.. !
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, கரூர்.
***
புரட்சிகர மாணவர்-இளைஞர்கள் முன்னணி இன்று (15.07.2020) மாநிலம் முழுவதும் ஆன்லைன் கல்வி வேண்டாம் என்றும் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டாம் என்று ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கல்விதுறை அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு கொடுக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில்; காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பு குழு தோழர் துணைவேந்தன் மற்றும் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் இணைந்து மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.
ஊரடங்கு சூழலை மத்திய அரசு பயன்படுத்தி கொண்டு புதிய கல்வி கொள்கை அமல்படுத்தும் முயற்ச்சியில் ஆன்லைன் கல்வியை அமல்படுத்த துடிக்கிறது.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
துவக்க பள்ளிகள் முதல் உயர் கல்வி வரை ஆன் லைனில் பாடம் நடத்த முயற்சிக்கிறார்கள். கிராமபுறங்களில் உள்ள மாணவர்களில் பெரும்பாலானவர்கள் அலைபேசியோ அல்லது கணினியோ இல்லாதவர்கள். அப்படியே அலைபேசி வைத்திருப்பவர்களில் ஆண்ட்ராய்ட் மொபைல் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கையும் குறைவு. அதனை பயன்படுத்தும் அறிவும் இன்னும் மக்கள் அனைவரிடமுஅம் இல்லை. இன்னும் 4ஆம் தலைமுறைக்கான அலைகற்றை கொண்ட அலைபேசி கோபுரங்களும் இல்லாத நிலையே உள்ளது.
ஊரடங்கால் மக்கள் உழைக்க தயாராய் இருந்தும் வேலைக்கு செல்லமுடியாத நிலை உள்ளது. தற்பொழுது பிழைப்பதற்கே தங்களுக்கு வருமானம் இல்லாத சூழலில் ஆன்லைன் கல்வியை கற்க தயாராக வேண்டும். திறக்காத பள்ளிகளுக்கு கட்டணங்களை செலுத்த வேண்டும் என்று கூறுவது குடிக்க கஞ்சி இல்லாத மக்களுக்கு மாளிகையில் வாழும் மன்னன் தங்க பஷ்பம் உண்டால் உடலுக்கு நல்லது என்று சொல்வது போல் உள்ளது.
நாடுமுழுவதும் கொரோனா நோய் தொற்று பாதித்துள்ளதால் மேலும் பரவும் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் உள்ள நிலையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது என்பது மேலும் நோய் தொற்றை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. எனவே செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யவதே சரியானது. உண்மையில் மக்களுக்கு நோய் பரவ கூடாது என்பதற்காக தான் ஊரடங்கு எனில் அரசு செமஸ்டர் தேர்வை மட்டும் நடத்த துடிப்பது ஏன்? உண்மையில் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ள மக்களின் வாழ்நிலையை உணர்ந்துள்ள அரசு எனில் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.ஆன்லைன் கல்வியை நிறுத்த வேண்டும். மாற்றை கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், மாணவர் சங்கங்கள் என அனைவரையும் அழைத்து ஆலோசனை செய்து திட்டமிட வேண்டும்.
இத்தகைய சூழலில் மருத்துவ கல்விக்கான நீட் நுழைவு தேர்வையும் ரத்து செய்ய வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணின் அடிப்படையில் மருத்துவ கல்விக்கான நுழைவை அனுமதிக்க வேண்டும். என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டு. இறுதியாக மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்தில் உள்ள பத்திரிக்கையாளர் சங்கத்திலும் பத்திரிக்கை செய்தி கொடுக்கப்பட்டது.
தகவல் : புரட்சிகர மாணவர் – இளைஞர்கள் முன்னணி, காஞ்சிபுரம்.
“எந்த வித ஆதாரமும் இன்றி சட்ட விரோதச் செயல்பாடுகள் தடுப்பு (உபா) என்னும் கொடூரமான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மக்கள் கவிஞர் வரவர ராவை அதிகாரிகள் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி எழுதப்பட்ட கடிதம் இது:
உலகப் புகழ் பெற்ற கவிஞரும் இதழியலாளரும் இலக்கியவாதியுமான வரவர ராவ் தெலங்கானாவைச் சேர்ந்தவர். ‘விரசம்’ என்ற புரட்சிகர எழுத்தாளர்கள் சங்கத்தை நிறுவியவர். வரலாறு நெடுகிலும் பல ஆட்சியாளர்களால் பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டு கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்பட்டவர். பிறகு விடுவிக்கப்பட்டவர். ஆட்சிக் கட்டிலில் இருப்பவர்களை நெளியச் செய்தவை அவருடைய புரட்சிகரமான எழுத்துகள் என்பதைத்தான் இது சுட்டுகிறது.
அவருடைய கவிதைகளின் வீரியம் ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. பெயரைச் சுட்டிக் காட்டாமலே பெயரற்றவர்களுக்குப் பெயர் சூட்டுபவரே கவிஞர். அப்படியான கவிஞர்களைக் கைது செய்தல் அல்லது குற்றவாளியாக முன்னிறுத்த முனைதல் என்பது தங்களைக் குறித்த கவிதைகள்தாம் அவை என்பதை அதிகாரம் படைத்தவர்கள் ஏற்றுக் கொள்வதன்றி வேறில்லை.
மகாராஷ்டிராவில் உள்ள பீமா-கோரேகானில் 2018ஆம் ஆண்டு நிகழ்ந்த வகுப்புவாத வன்முறையில் தொடர்பிருப்பதாகப் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார் வரவர ராவ். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவருக்கு நியாயமான நீதி விசாரணை நடத்தப்படவில்லை. துடிப்பு மிக்க சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் இவரும் அநியாயமாக இத்தனை காலம் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
80 வயது மனிதர் அவர். செய்திக் குறிப்பாக அவருடைய குடும்பத்தினர் வெளியிட்டதுபோல, “சிறையில் வரவர ராவைக் கொன்று விடாதீர்கள்”. நினைவிழந்த நிலையில் கடந்த மே மாதம் ஜேஜே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து அவருடைய உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவருக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது என்பதை அவருடன் இருக்கும் சிறைவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதிகார மையத்துக்கு எதிராகக் குரல் எழுப்பியவர் என்ற ஒரே காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டவர் வரவர ராவ் என்பது தெள்ளத் தெளிவாகிறது. மக்களுக்காகப் பேச வேண்டிய அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் இளம் கவிஞர்களான நாங்கள் உணர்ந்திருப்பது மட்டுமல்லாமல் அதிகாரத்தைத் தட்டிக் கேட்க வேண்டிய கடமையும் எங்களுக்கு உள்ளது என்பதையும் உணர்கிறோம்.
வரவர ராவை போன்ற மக்கள் கவிஞர்கள் வாழ்வதனால்தான் சமூகத்துக்காகப் பேசவும் எழுதவும் இளம் கவிஞர்களால் முடிகிறது. இந்நாட்டின் இளம் கவிஞர்கள் என்ற முறையில் ராவ் மீதான தாக்குதலை எங்கள் மீது, எங்கள் மனங்கள் மீது, எங்களுடைய பேனாக்கள் மீது, எங்களுடைய கருத்துக்கள் மீது தொடுக்கப்பட்டத் தாக்குதலாகவே கருதுகிறோம் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்களுடைய குரல்கள் இப்படியாகத் தொடர்ந்து நெரிக்கப்பட்டால், எங்களுக்கென்று குரல்கள் இல்லாமலேயே போய்விடும். இறுதியில் இரண்டு குரல்கள் மட்டுமே எஞ்சும். ஒன்று அரசனுடையது மற்றொன்று புரவலரின் அரசவையில் நியமிக்கப்பட்ட புலவருடையது. கட்டுக்கடங்காத சிந்தனை மலர நம்முடைய போராட்ட குணத்தை உயிர்ப்புடன் வைத்திருத்தல் வேண்டும். ஜனநாயகத்துக்குக் கடைசியாக நம்மால் இயன்றது அது மட்டுமே.
பெருந்திரளாகக் குடிமக்கள் கிளர்ந்தெழுந்த பிறகே வரவர ராவ் சிகிச்சைக்காக ஜேஜே மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதாகச் செய்திகள் வெளி வந்திருக்கின்றன. அவருக்கு அவசியமான மருத்துவ சிகிச்சை உடனடியாக அளிக்கும்படி அரசுக்கும் நீதித் துறையினருக்கும் முன்பாகக் கோரிக்கை வைக்கிறோம். அவர்தம் குடும்பத்தினர் உடனிருக்க அனுமதியுங்கள். ஜாமீனில் அவரை உடனடியாக வெளியே விடுங்கள். இவற்றைச் செய்தால் மட்டுமே அச்சமின்றிக் குரலெழுப்பும் தருணங்களில் இளம் கவிஞர்களின் குரல்களை ஆளும் அரசு நெரிக்காது என்ற உத்தரவாதம் எங்களுக்குக் கிட்டும்.
நம்முடைய கற்பனைச் சிறகுகளை விரித்துக் கவிதை எழுத வெளி அமைத்துத் தந்த கவிஞர் வரவர ராவுக்காக நாடு முழுவதும் உள்ள சக இளம் கவிஞர்கள் ஒன்றிணையும்படி அழைப்பு விடுக்கிறோம்”
பொதுத்துறை வங்கிகளை தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளை கொள்ளையிட களமிறங்கும் மோடி அரசு !
கொரோனா சூழலை பயன்படுத்தி படிப்படியாக மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மோடி அரசு, தனது அடுத்த நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள அனைத்து நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாநில கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரக் கூடிய சட்டத்திருத்தைக் கொண்டுவந்துள்ளது. கடந்த ஜூன் 24-ம் தேதி மத்திய அமைச்சரவை கூடி முடிவு செய்து, ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்ற அரசாணை ஜூன் 26-ம் தேதி வெளியிடப்பட்டது.
இச்சட்டத் திருத்த மசோதாவை ஏற்கெனவே கடந்த மார்ச் 3-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனால் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு விவாதிக்க படாமல் இருந்தது. மேலும் கூட்டுறவு வங்கிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரக் கூடிய ஒன்றாகும். கொரோனா சூழலைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தில் வைத்தும் விவாதிக்காமல், மாநில அரசுகளன் கருத்தையும் கேட்காமல் இச்சட்டத் திருத்தத்தை அவசரச்சட்டமாக மோடி அரசு கொண்டு வந்துள்ளது.
இச்சட்டத் திருத்தத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள 1,482 நகர கூட்டுறவு வங்கிகளும், 58 மாநில கூட்டுறவு வங்கிகளும் பொதுத்துறை வங்கிகள் போல ரிசர்வ வங்கியில் முழு கட்டுப்பாட்டில் வரப் போகிறது. இந்த வங்கிகளில் சுமார் 80% தமிழகம், ஆந்திரா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 128 நகரக் கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.
இக்கூட்டுறவு வங்கிகளில் 8.6 கோடி வைப்பீட்டாளர்களின் வைப்புத் தொகை சுமார் 4.85 லட்சம் கோடி பணம் இருப்பில் உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் வீட்டில் சிறியதாக சேமித்து வைத்திருந்த பணத்தையும் வங்கிகளுக்கு வர வைப்பதன் மூலம் பெரும் முதலாளிகளுக்கு கடனாக மாற்ற திட்டமிட்ட அரசு, ரூ.4.85 லட்சம் கோடி பணத்தை விட்டு வைக்குமா என்ன?
மக்களை காக்க வந்த புரவலர்கள் போன்று பா.ஜ.க வை சேர்ந்தவர்கள் இந்த அவசரச் சட்டத்திற்குக் கூறும் காரணமோ நகைமுரணாக உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் முறையான நிர்வாகம் ஒழுங்குமுறை இல்லை . அதனால் நிறைய முறைக்கேடுகள் மற்றும் ஊழல்கள் நடக்கிறது. அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் கூட்டுறவு வங்கிகளை மீட்டு ரிசர்வ வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால்தான் மக்களின் பணம் பாதுகாக்கப்படும். பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (பி.எம்.சி) நடந்தது போன்ற முறைக்கேடுகளை தடுக்கவே இந்நடவடிக்கை கொண்டு வரப்பட்டுள்ளது என்று பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் முட்டுக் கொடுக்கிறார்கள்.
கூட்டுறவு வங்கிகளில் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடப்பது உண்மைதான். ஆனால் இதை சரி செய்யப் போவதாக ஊழல்களுக்கு பெயர் பெற்ற பா.ஜ.க கூறுவது தான் கேலிக்கூத்தான விசயம். பணமதிப்பழிப்பு சமயத்தில் குஜராத்தில், அமித்ஷா தலைவராக இருந்த கூட்டுறவு வங்கிகள் மூலம் நூற்றுக்கணக்கான கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். இது ஒரு உதாரணம் தான், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இது போன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன.
மேலும் கூட்டுறவு வங்கிகள் இதுவரை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இல்லாதது போலவும் அதனால்தான் அவ்வங்கிகளில் முறைகேடு நடப்பது போலவும் ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. ஆனால் அது உண்மை இல்லை. கூட்டுறவு வங்கிகள் இரட்டை கட்டுப்பாடுகள் உடையவை. அதன் அன்றாட நிர்வாகம், தேர்தல், கடன் கொள்கை போன்றவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரால் நிர்வகிக்கப்படுகிறது. அதன் நிதி சார்ந்த விசயங்கள் ரிசர்வ வங்கியால்தான் கட்டுப்படுத்தப்படுகிறது.
ரிசர்வ் வங்கியிடம் இருந்து லைசன்ஸ் பெற்றுதான் கூட்டுறவு வங்கிகள் செயல்பட முடியும். மேலும் இதர வணிக வங்கிகளை போலவே “வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949”-ன் படி நிதி சம்பந்தமான விசயங்களை ரிசர்வ் வங்கி மேற்பார்வையிட்டு ஒழுங்குப்படுத்துகிறது. அதற்காக ரிசர்வ் வங்கியில் கூட்டுறவு வங்கித் துறை” என தனிப் பிரிவே உள்ளது. வருடா வருடம் கூட்டுறவு வங்கிகளின் நிதி அறிக்கைகளை ஆய்வு செய்வதும், தேவை என்றால் நேரில் சென்று ஆய்வு செய்வதும் ரிசர்வ் வங்கி செய்து வருகிறது.
இப்போது இந்த அவசரச் சட்டம் ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம், இந்தக் கூட்டுறவு வங்கிகளை ஒன்று சேர்த்தல், தனியார்மயப்படுத்துதல் ஆகிய அனைத்து குறித்தும் இனி மத்திய அரசால் முடிவெடுக்க முடியும்.
மகாராஷ்டிரா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பி.எம்.சி வங்கியில் நடந்த முறைகேடுகள் கடந்த ஆண்டு வெளிவந்தது. 21,000-க்கும் மேலான பொய் கணக்குகள் தொடங்கப்பட்டு கட்டுமானத் தொழிலில் ஈடுப்பட்டிருக்கும் ஹெச்.டி.ஐ.எல் குழுமத்திற்கு மட்டும் ரூ.6,500 கோடி கடனாக வழங்கப்பட்டது. இவ்வங்கி ரிசர்வ் வங்கியால் ஐந்து முறை தணிக்கை செய்யப்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகளாக நடந்துவரும் இந்த முறைகேட்டை ரிசர்வ் வங்கி கண்டுப்பிடிக்கவில்லை.
பி.எம்.சி. வங்கியின் முன்பாக அணிதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள்.
அதே போல் சி.கே.பி வங்கியின் மொத்த இருப்பான ரூ.161 கோடியில் ரூ.157 கோடி வாராக் கடனாக மாறியுள்ளது. பி.எம்.சி வங்கியை போலவே 10 ரியல் எஸ்டேட் முதலாளிகள் இப்பணத்தை கொள்ளையடித்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட நகர கூட்டுறவு வங்கிகள் சரியாக செயல்படவில்லை என்ற காரணம் கூறி வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் 35A பிரிவின் கீழ் அதை செயல்படாமல் ரிசர்வ் வங்கி வைத்துள்ளது.
எல்லா கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடியவை. ஆனால் இவ்வங்கிகளை ரிசர்வ் வங்கி தணிக்கை செய்தபோது முறைக் கேடுகளை கண்டுபிடிக்கவில்லை. அல்லது கண்டும் காணாமல் விட்டுள்ளது. இந்த யோக்கியதை கொண்ட ரிசர்வ் வங்கிதான் இச்சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட பின்னர், முறைகேடுகளை கண்டுபிடிக்கப்போகிறதாம்.
ரிசர்வ் வங்கியின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் நடக்கும் ஊழல்கள் மற்றும் முறைக்கேடுகள் என்பது ஒரு தனிக் கதை. விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற கார்ப்பரேட் கொள்ளையர்கள் பல்லாயிரம் கோடிகள் கடனை வாங்கிவிட்டு ஏமாற்றியதை பார்த்து வருகிறோம். வெறும் 12 கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய வங்கிகளின் மொத்த வாராக்கடனில் 25% திரும்பத் தர வேண்டியுள்ளது. கார்ப்பரேட்டுகளின் கடன்கள் கமுக்கமாக தள்ளுபடி செய்யப்படுவதும் நடக்கிறது. கடந்த 2018-19 நிதியாண்டில் மட்டும் பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்த வாராக்கடன் தொகை மட்டும் ரூ.1,77,000 கோடிகள் ஆகும்.
பஞ்சாப் தேசிய வங்கி (PNB) மற்றும் யெஸ் வங்கி (Yes Bank) ஆகியவை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்ய கடன்கள் வாராக் கடனாக மாறியதால் நெருக்கடிக்கு உள்ளானது. அதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத ரிசர்வ் வங்கி, யெஸ் வங்கியை SBI மற்றும் LIC யில் இருந்த மக்கள் பணத்தை கொண்டு காப்பாற்றும் வேலை செய்தது. எனவே ரிசர்வ் வங்கி தனது முழு கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கிகளில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் ஊழல்களை தடுக்கவில்லை என்பதோடு அதற்குத் துணை நிற்கவும் செய்திருக்கிறது என்பதுதான் வரலாறு.
வாராக் கடன்களை வசூலிப்பது மற்றும் கடனை திரும்ப செலுத்தாத கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயரை வெளியிடுவது தொடர்பான விவகாரங்களில் மோடி அரசோடு ஒத்துழைக்க மறுத்த ‘குற்றத்திற்காக’த்தான் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை வசைபாடி ஓரம்கட்டியது பாஜக. ரிசர்வ் வங்கிப் பணத்தை அரசாங்கத்திற்கு அள்ளிக் கொடுக்கும் விவகாரத்தில் மோடி அரசோடு ஒத்துழைக்க மறுத்த காரணத்தால் தான் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜிட் படேல் பதவியிலிருந்து ‘தாமாக’ விலகச் செய்யப்பட்டார்.
சுருக்கமாக ரிசர்வ வங்கியை ரிலையன்ஸ் உள்ளிட்ட பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வங்கியாக மாற்றுவதுதான் மோடி அரசின் நோக்கம். அதை நிறைவேற்றும் விதமாகத்தான் ‘வரலாற்று’ நிபுணரான சக்திகாந்த தாஸை ரிசர்வ் வங்கி ஆளுனராக நியமித்தது மோடி அரசு. இதிலிருந்தே ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி என்பது மோடி ஆட்சியின் கீழ் என்ன இலட்சணத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
பிற வங்கிகளை ரிசர்வ் வங்கி காப்பாற்றுவது கிடக்கட்டும்; தனது கையிருப்பில் இருக்கும் பணத்தையே மோடி அரசிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை. அவசர காலகட்டத் தேவைகளுக்காக ரிசர்வ் வங்கி வைத்துள்ள ரிசர்வ் பணத்தில் இருந்து ரூ.1,47,000 கோடியை கடந்த ஆண்டு மோடி அரசு பிடுங்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
கூட்டுறவு வங்கிகள் அரசியல் செல்வாக்கு பெற்ற பணக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பாஜகவினர் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். அது உண்மைதான் என்ற போதிலும், இன்றுவரையில் அவை மூலம் கிராமப்புற, நகர்ப்புற மக்களுக்கு குறைந்த வட்டியில் விவசாய மற்றும் நகை கடன்கள் எளிய முறையில் கிடைத்து வருகின்றன. பொதுத்துறை வங்கிகளின் நகைக்கடன் வட்டியை விட கூட்டுறவு வங்கிகளின் வட்டி விகிதம் 2.5% குறைவு ஆகும். மேலும் வைப்புத் தொகைக்கு 1% வரை கூடுதல் வட்டியும் கிடைக்கிறது. தற்போதைய அவசர சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியின் முழு கட்டுப்பாட்டிற்கு சென்ற பிறகு மக்களுக்கு குறைந்த வட்டிவிகிதத்தில் கடன்கள் கிடைப்பது என்பது சாத்தியமே இல்லை.
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கூட்டுறவு வங்கிகளைக் கொண்டு வருவதற்கு மோடி அரசு முயற்சிப்பதன் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். கூட்டுறவு வங்கிகளில் உள்ள ரூ. 4.85 லட்சம் கோடி பணத்தை கார்ப்பரேட்டுகளின் நிதியாதிக்கச் சூதாட்டத்திற்கு திறந்துவிடும் வகையில் அவற்றைத் தனியார் மயமாக்குவதும் பங்குச் சந்தைக்கு கூட்டுறவு வங்கிகளை திறந்து விடுவதும்தான். இப்படிப்பட்ட நடவடிக்கைகளை கூட்டுறவு வங்கிகளில் செய்வதற்கு வழிவகுக்கும் வகையில்தான் இச்சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட வளர்ந்த மாநிலங்களின், கிராமப்புற நகர்ப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஊன்றுகோலாக இருக்கும் இந்தக் கூட்டுறவு வங்கிகள் தனியார்மயப்படுத்தப்படுவது மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயல் என்பது மட்டுமின்றி மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகவும் இருக்கிறது.
கொரோனா சூழலை பயன்படுத்தி அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு திறந்துவிடும் பல்வேறு திட்டங்களை நிர்மலா சீதாராமன் கடந்த மே மாதத்தில் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாகவே கூட்டுறவு வங்கி நிர்வாகத்தை மத்திய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதனைத் தனியார்மயப்படுத்தும் இந்த அவசரச் சட்டத்தை தற்போது மோடி அரசு கொண்டுவந்துள்ளது. ஏற்கெனவே பயணியர் ரயில்களை விரைவு ரயிலாக மாற்றியிருப்பது கிராமப்புற, நகர்ப்புற பொருளாதாரத்தின் மீது தொடுக்கவிருக்கும் தாக்குதலோடு, கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் நிர்வாகத்திற்குக்கீழ் கொண்டு வரும் அவசரச் சட்டமானது, கிராமப்புற நகர்ப்புற பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்குத் தள்ளிவிடும் !
சாத்தான்குளம் படுகொலையும், அதைத் தொடர்ந்த மக்கள் போராட்டமும் பேரதிர்வை உருவாக்கி, தமிழகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பியுள்ளது. அதன் விளைவாக தானாக முன்வந்து தலையிட்ட உயர்நீதிமன்ற உத்தரவின் கீழ் தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து, கொலைவழக்கு உள்ளிட்டு 4 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
அடுத்தடுத்து பத்து போலீசாரை கைது செய்துள்ளது. தற்போது, குற்றவாளிகளுக்கு சாதகமாக வழக்கை தாமதிக்கும் சதி நோக்கில் (தடயங்களை அழித்தல், சாட்சியங்களை கலைத்தல்) முன்பு, எடப்பாடியால் கோரப்பட்ட, சி.பி.ஐ விசாரணை தொடங்கியுள்ளது. உலகமே அறிந்த போலீசாரின் பச்சைப் படுகொலையை, “சந்தேக மரணம்” எனக் குறிப்பிட்டு அயோக்கியத்தனமான முறையில் விசாரணையைத் துவங்கிய சிபிஐ, வேறுவழியின்றி கொலை உள்ளிட்டு 4 வழக்குகளை பதிவு செய்துள்ளது. அதிலும், தன் சாதி பின்புலம் மற்றும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தப்பிக்க முயன்ற முக்கிய குற்றவாளியான ஆய்வாளர் ஸ்ரீதரை வழக்கிலிருந்து விடுவிக்க ஏதுவாக நான்காம் குற்றவாளியாக சேர்த்துள்ளது.
சாத்தான்குளம் படுகொலை பற்றிய நியூஸ்7 தொலைக்காட்சி விவாதமொன்றில், “இந்திய காவல்துறை வரலாற்றில் இல்லாத வகையில் சாத்தான்குளம் காவல்நிலையம் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது காவல்துறைக்கும், அரசுக்கும் களங்கமில்லையா?” என நெறியாளர் கேட்க அதிமுக-வின் புகழேந்தி, “வருவாய்த்துறை எங்கிருந்து வந்தது சீனாவில் இருந்தா? அல்லது அமெரிக்காவில் இருந்தா? அதுவும் எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது” என, நீதித்துறையின் ‘அதிரடி’ நடவடிக்கையை சுக்குநூறாக நொறுக்கினார்.
சாத்தான்குளம் காவல்நிலையம் மிக விரைவிலேயே மீண்டும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. அங்கு, புதிதாக பொறுப்பேற்றிருக்கும் இன்ஸ்பெக்டர் சேவியர், கன்னியாகுமரி அதிமுகவினர் மற்றும் கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து, வழிப்பறி ரவுடி கும்பல்களின் காட்ஃபாதர் என தோலுரிக்கிறது நக்கீரன் இதழ் (2020 ஜூலை 1-3).
சாத்தான்குளம் படுகொலை தொடர்பாக, சிபிசிஐடி-ன் நடவடிக்கை திருப்தியளிப்பதாக பாராட்டிய நீதிபதிகள், ஒரு சில போலீசாரின் நடவடிக்கையைக் கொண்டு ஒட்டு மொத்த துறையையும் எடைபோடக்கூடாது என போலீசாருக்கு நற்சான்றிதழ் – பாராட்டுப்பத்திரம் வழங்கியுள்ளனர். காவல்துறையினர், மக்களிடம் எவ்வாறு கனிவாக நடந்துகொள்ள வேண்டுமென்ற, கருணாநிதி போன்ற முன்னாள் காவல்துறையினரின் அறிவுரைகளும், போலீசாரின் உடல் – மனநலம் பேண திட்டங்கள் வகுக்கப்படுவதும், துறைரீதியான பயிற்சி பற்றிய அறிவிப்புகளும் அன்றாட செய்திகளாகிவிட்டன.
நீதிபதிகள் சொல்வது போல் அங்கொன்றும், இங்கொன்றும் என ஒரு சில போலீசார் தவறிழைத்து விட்டதாகவும் அல்லது அவர்களின் தனிப்பட்ட நடத்தைதான் குற்றத்திற்கு காரணம் எனவும் ஒரு பொய்யான கருத்து பரப்பப்படுகிறது. சாட்சியமாக மாறியுள்ள ரேவதிக்கு பாராட்டுகள் குவிகிறது. நாமும் பாராட்டலாம். ஆனால், ரேவதி எனும் தனிநபரின் மீதான பாராட்டுகளாக மட்டும் அவை நின்றுவிடவில்லை. காவல்துறையில் ரேவதி போன்றோரும் இருக்கின்றனர் எனக்கூறி, ஒட்டுமொத்தமாக காவல்துறை எனும் காக்கி மிருகத்துக்கு மனித முகமூடி மாட்டுகின்றனர். மக்களின் போராட்ட ஒளியில்தான் ரேவதி இன்று சாட்சியளிக்க முன்வந்துள்ளார் என்பதை மறந்து விடக்கூடாது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், திருச்சியில் போலீசை கணவர் எதிர்த்து பேசியதால் கர்ப்பிணி உஷாவை எட்டி உதைத்து கொலை செய்தது நினைவில்லையா? சந்தேகம், விசாரணை என அழைத்துச் சென்று கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்த சம்பவங்கள் தமிழகத்தில் ஏராளம். இதில், பெரும்பாலும் போலீசாரின் இலக்குக்கு உள்ளாவது இசுலாமியர், ஒடுக்கப்பட்டோர் மற்றும் அடித்தட்டு பிரிவினரே. இந்திய சிறைகளில், விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகளாக நிரம்பி வழியும் அப்பாவிகள் இசுலாமியர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் ஏழைகளே அதற்கு சாட்சி.
பணிச்சுமை அல்லது மன அழுத்தம் காரணமாக இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதாக காவல்துறை கூறுவதில் உண்மையில்லை. ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும், கொரோனா காலத்தில் பணிச்சுமை, மன அழுத்தத்தின் காரணமாக ஒரு மருத்துவரோ, சுகாதார பணியாளரோ இப்படி நடந்துகொண்டால் ஏற்றுக்கொள்வீர்களா?
கனிவான பயிற்சிகள் மூலம் போலீசாரை திருத்தமுடியும் என கதையளக்கிறார்கள். நாய் வாலை நிமிர்த்த முடியுமா? போலீசுத்துறையே லஞ்சம், வழிப்பறி, போதைப்பொருள் கடத்தல் – விற்பனை, கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து, லாக்கப்படுகொலை… என அத்துனை கிரிமினல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. உதாரணமாக, தற்போது உபியில் 8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஷ் துபே கடந்த 30 வருடமாக ரவுடி ராஜ்ஜியம் நடத்தியுள்ளார். இவர் மீது, கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் உள்ளிட்ட 62 கிரிமினல் வழக்குகள் உள்ளது. சம்பவத்தன்று ரவுடி துபே-வுக்கு ஆதரவாக செயல்பட்டதாக சவுபேபூர் காவல் ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளரை கைது செய்துள்ளனர். 68 போலீசார் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ரவுடியின் ராஜ்ஜியத்திற்கு உடந்தையாக இருந்த போலீஸ் உயரதிகாரிகள், அரசியல்வாதிகளை தப்புவிக்க, துபேவையும் அவனது நெருங்கிய கூட்டாளிகள் அனைவரையும் அவசர அவசரமாக என்கவுண்டர் செய்து சாட்சியங்களை அழித்துள்ளது உபி பாஜக அரசு. இந்தியா முழுவதும், ஒட்டுமொத்த காவல்துறையின் இலட்சணம் இப்படி இருக்க, குற்றங்களில் ஈடுபடும் போலீசை விசாரிக்க போலிஸ் கம்ப்ளைனிங் அத்தாரிட்டி (Police Complaining Authority) எனும் கமிட்டியை சரியாக உருவாக்கினால் பிரச்சினை தீர்ந்துவிடும். #ImplementPCA என்பதை ட்ரெண்ட் செய்யுங்கள் என்கிறார்கள்.
ஐதராபாத் போலி எண்கவுண்டருக்கான ஆதரவும், காவல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்படுபவர்களின் கை, கால்களை உடைத்துவிட்டு ‘பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டனர்’ என்ற போலீசின் கதைகளும், அதை அங்கீகரிக்கும் நீதித்துறையின் செயலும் உணர்த்துவதென்ன? இந்தியாவில் 90 சதவிகிதம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவது காவல்துறையினரே. அத்துறையிடம் அதிகாரம் குவிக்கப்படுவதன் விளைவைத்தான் நாம் அன்றாடம் அனுபவிக்கிறோம்.
ஒரு சான்று பார்ப்போம்.1998-ல் நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் அங்கம்மாளையும், அவரின் கணவர் குருவையாவையும் கைது செய்த போலீசார், இருவரையும் கொடூரமாக சித்ரவதை செய்ததில், அங்கம்மாளின் கை உடைக்கப்பட்டது. இருவரையும் அம்மணமாக்கி, குருவையாவின் கண்ணெதிரிலேயே அங்கம்மாளை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தொடர் சித்ரவதையில் குருவையா மரணமடைந்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு போராடியதில் கண்துடைப்புக்காக 9 பேர் மீது வழக்கு பதிந்து, 17 போலீசார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. 18 ஆண்டுகளுக்குப் பின், 2016-ல் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, அரசு தரப்பு வழக்கை நிரூபிக்கவில்லை எனக்கூறி தள்ளுபடி செய்துள்ளது (நக்கீரன் 2020 ஜூலை 04-07, 08-10). இதேபோல், தமிழக போலீசாரின் வாச்சாத்தி பழங்குடி பெண்கள் 18 பேர் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கை எளிதில் மறந்துவிட முடியாது.
ஆட்டோ மற்றும் லாரி ஓட்டுனர்கள், தெருவோரம் கடைநடத்துபவர்கள், அன்றாடம் கூலி வேலைக்கு செல்பவர்கள், திருநங்கைகள், வியாபாரிகள் என ஏழை, எளிய மக்கள், ‘போலீசு உங்கள் நண்பன்’ என்ற போலி முகத்திரையை கிழித்தெரிவார்கள்.
போலீசு மட்டுமல்ல, அதிகாரிகள், நீதிபதிகள் என அதிகாரத்தில் இருக்கும் எவரும் மக்களை மதிப்பதில்லை. மக்களிடம் ஆத்திரமாகவும், கோபத்துடனும் நடந்துகொள்ளும் இவர்கள்தான் ஆற்றுமணல், தாதுமணல், கிரானைட் கொள்ளையர்களிடமும், கார்ப்பரேட்டுகளிடமும், எச்ச ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் போன்ற பார்ப்பன பொறுக்கிகளிடமும் நாய் போல் வாலைச் சுருட்டிக்கொள்கின்றனர்.
வரம்பு மீறிய அதிகாரத்தால், தாங்கள் மக்களுக்கு பதில்சொல்ல கடமைப்பட்டவர்கள் அல்ல என்ற அதிகார திமிரும், தவறு செய்தாலும் தப்பித்துக் கொள்ள முடியும் என்ற தைரியமும்தான் போலீசாரின் குற்ற நடவடிக்கைகள் பெருகக் காரணம். அத்தகைய தைரியத்தைத்தான் சாத்தான்குளம் படுகொலையில் எடப்பாடியும், சாதிபாசத்தோடு கடம்பூர் ராஜூவும் உருவாக்கினர்.
இக்கொலைகார காவலர்களுக்கு நீதிவேண்டி, பசும்பொன் சித்தர் சேனை எனும் பெயரில் தென்மாவட்டங்களில் சாதிக்கலவரத்தைத் தூண்டும் முனைப்பில், போஸ்டர்களை ஒட்டுகிறது சங்கி (ஆர்.எஸ்.எஸ் – பாஜக) கும்பல். கொலைகாரனுக்கு நீதி கேட்டு பாயும் சேனைகள், தமிழக மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் போதும், தூத்துக்குடியில் 13 அப்பாவி மக்கள் போலீசின் துப்பாக்கிக்கு இரையாகும் போதும், எந்த சந்துக்குள் பதுங்கியிருந்தார்கள் எனத்தெரியவில்லை. உ.பியில், “போலிஸ் மித்ரா”வுக்குள் “ஹிந்து யுவ வாகினி”யை நுழைத்தது போல் தமிழகத்தின் “போலிஸ் நண்பர்கள் குழு”(FOP)-வுக்குள் ஆர்.எஸ்.எஸ்-சின் துணை அமைப்பான “சேவா பாரதி” ஊடுருவ வைக்கும் வேலை நடந்துள்ளது. சட்டப்பூர்வ அடியாள் படையான போலீஸ்துறைக்குள், சங்கிகளின் சட்டவிரோத அடியாட்களை ஊடுருவ வைப்பது, தமிழகத்தில் சாதி-மதக் கலவரங்களை தூண்டவும், மக்கள் போராட்டங்களை ஒடுக்கவுமே என்பது அம்பலமாகி கண்டனத்துக்கு உள்ளானதால், தமிழகத்தில் FOP தடை செய்யப்பட்டுள்ளது.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை உள்ளிட்டு இந்த அரசமைப்பின் தோல்வி அம்பலமாகிவிட்டதை மூடி மறைக்கவே உப்புசப்பு பெறாத இந்த ‘அதிரடி’ நடவடிக்கைகள்.
அங்கம்மாளின் மகனும் வழக்கறிஞருமான மலைச்சாமி, “பதினெட்டு வருடங்களாக நீதிக்காக போராடியதெல்லாம் வீணாப்போச்சு. எங்களைப் பொறுத்த மட்டிலும் நீதி செத்துப்போச்சு” என்றார். அங்கம்மாளுக்கு மட்டுமல்ல பாபர் மசூதி இடிப்பு முதல் உடுமலை சங்கர் படுகொலை, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கு வரை ரத்தமும், சதையுமாக சாட்சியங்கள் இருந்தும் மக்களுக்கு கிடைத்த நீதி என்ன?
கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழலிலும், மாணவர்களின் உயிர் மீது விளையாடும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து! தமிழகம் தழுவிய அளவில் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி சார்பாக கீழ்கண்ட கோரிக்கைகளை உள்ளடக்கி 15.7.2020 ஆர்ப்பாட்டம் நடத்த்தப்பட்டது. அந்த வகையில்,
கொரோனா தீவிரமாகும் போது பல்கலை கழக தேர்வுகளை மாணவர்களின் உடல்நலன் கருதி நடத்தக்கூடாது!
பொறியல் படிப்புக்கான ஆன்-லைன் தேர்வை ரத்து செய்ய வேண்டும்!
சி.பி.எஸ்.சி கல்வி வாரியம் 30 % பாடப்பிரிவுகள் நீக்கத்தை திரும்ப பெற வேண்டும்!
நீட் தேர்வை ரத்து செய்து ,+2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை செய்ய வேண்டும்!
தமிழகம் மாநில அதிகாரம் பெரும் வகையில் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்!
ஆகிய கோரிக்கைகள் முன்வைத்து விழுப்புரத்தில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பாக, ஐந்து கிராமங்களில் மாணவர்களை ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி(RSYF). விழுப்புரம், தொடர்புக்கு : 91593 51158
வேலை, வாழ்வாதாரம், பொது சுகாதாரத்திற்காக போராடு !
கொரோனா – பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க
கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்து !
தமிழக தழுவிய பிரச்சார இயக்கம்!
அன்பார்ந்த பொதுமக்களே,
கடந்த நான்கு மாதங்களாக கொரோனா ஊரடங்கு பிரச்சினையால் மக்களின் வாழ்நிலை மீண்டு வரமுடியாத அளவிற்கு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலும், நிகழும் மரணங்களும் பெருகி கொண்டே போகிறது. மருத்துவ சிகிச்சையையும், உணவையும் அரசே கொடுத்தால் மட்டுமே சாதாரண மக்கள் பிழைக்க முடியும்.
கொரோனா தொற்றை எதிர்கொள்ளவும், மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் மத்திய அரசு பல லட்சம் கோடி நிதி ஒதுக்கினால் மட்டுமே சமாளிக்க முடியும் என பொருளாதார வல்லுநர்கள் உட்பட அனைவரும் வலியுறுத்தி வருகிறார்கள். தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் வைத்து அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும். இன்றைய தேவைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட வேண்டும். மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள், வெண்டிலேட்டர்கள், மாவட்டம் தோறும் கொரோனா சிறப்பு மருத்துவமனைகள், பரிசோதனை நிலையங்கள் உருவாக்க வேண்டும். ஆனால் இவற்றை மத்திய, மாநில அரசுகள் செய்யாமல் தனியார் கொள்ளைக்கு கட்டணம் நிர்ணயிக்கிறது.
பல வடிவங்களில் தொடரும் ஊரடங்கால் ஆட்குறைப்பு , சம்பள வெட்டு, வேலையிழப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இருக்கும் வேலைவாய்ப்புகளை பாதுகாக்க அரசிடம் எந்தத் திட்டமும் செயல்பாடும் இல்லை. அரசுகள் வழங்கும் சொற்பப் பணத்தினை கொண்டு எப்படி குடும்பத்தினை நடத்த முடியும். பெருமளவில் வேலைகளை வழங்கும் சிறு தொழில் நடத்துபவர்கள் கடன் நெருக்கடியாலும், போதிய வியாபாரம் இல்லாமலும், ஜி.எஸ்.டி வரிச்சுமையாலும் தொழில்களை நடத்த முடியாமல் திணறுகின்றனர்.
பஸ், இரயில் இல்லாத நிலையில், தினந்தோறும் உயர்த்தப்படும் பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகளின் கைக்காசு பலவந்தமாக உறிஞ்சப்படுகிறது.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
கிராமம், நகரம் வேறுபாடின்றி பெரும்பான்மையான மக்களிடம் காசு இல்லை . ரேசன் அரிசியால்தான் பல கோடி குடும்பங்கள் உயிர் வாழ்கின்றன. குழுக் கடன் கட்டமுடியாமல் நுண்கடன் நிதி நிறுவன வசூல் குண்டர்களின் மிரட்டலுக்கு அஞ்சி தற்கொலை நிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள். எந்த அதிகாரியாலும் அதிகரிக்கும் பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை . அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த நாட்டின் பொருளாதாரத்தை கொரோனா மேலும் படுகுழியில் தள்ளியுள்ளது.
இவற்றை எதிர்கொள்ள ஒரே வழி அரசுகள் மக்களுக்கு நேரடியாக பணம் கொடுப்பதுடன், அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்க வேண்டும். மாதக்கணக்கில் வீட்டில் முடக்கப்படும் மக்களுக்கு மாதந்தோறும் பணம் கொடுங்கள், உணவுக் கிடங்குகளில் புழுத்து வீணாகும் தானியங்களை மக்களுக்கு போதுமான அளவில் விநியோகியுங்கள் எனத் தொடர்ச்சியாக வலியுறுத்தியும் மோடி அரசு அதனை செய்யவில்லை.
நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுப்பதுடன் அதை எதிர்கொள்வதற்கான மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த, தேவைப்படும் கால அவகாசம்தானே ஊரடங்கின் நோக்கம். அரசு நிர்வாகங்களோ கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் வேலைகளை செய்கிறது. ஊரடங்கினை காட்டி போலீசு அத்து மீறல்கள் அதிகமாகியுள்ளன. அதன் உச்சம்தான் கொடூரமான சாத்தான்குளம் ஜெயராஜ் – பெனிக்ஸ் காவல் நிலைய படுகொலை. கொரோனா தடைகளை மீறி எழுந்த மக்கள் போராட்டத்தால் போலீசார் மீது கொலைவழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அழுகிப்போன மீன் கூடையான போலீசு துறையில் நல்ல மீன்களை தேடுவதால் பயனில்லை.
மோடி அரசின் 20 இலட்சம் கோடி கொரோனா நிவாரண பேக்கேஜ் எனும் பித்தலாட்ட வாய்ச்சவடால் மக்கள் அனுபவிக்கும் பிரச்சினையின் முனையைக்கூட தொடவில்லை. “கார்ப்பரேட்டு முதலாளிகளுக்கு வரி விதிப்பதன் மூலம் அரசின் நிதி ஆதாரத்தை பெருக்க முடியும்” என்று மத்திய வருவாய்த் துறை அதிகாரிகள் அறிக்கை கொடுத்தார்கள். மத்திய அரசு அவர்கள் மீதே நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டுள்ளது. இதுவரை பாஜக அரசு கார்ப்பரேட்டுகளின் பையிலிருந்து ஒரு ரூபாயைக்கூட எடுக்கவில்ல . மாறாக, அவர்களுக்கு பல ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் வாரிக் கொடுக்க மக்கள் கட்ட வேண்டிய வரிகளை கறாராக வசூலிக்கிறார்கள்.
பெட்ரோல் – டீசல் விலையை உயர்த்தி கொள்ளையடிக்கிறார்கள். விலைவாசி உயருகிறது; ஏற்றத்தாழ்வு அதிகரிக்கிறது. நாட்டின் செல்வங்களில் 99 சதவீதத்தை வைத்துள்ள அம்பானி , அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கும், பெரும் செல்வந்தர்களுக்கும் சொத்து வரி, புதிய வரிகளை போடுவது, அதிகார வர்க்கம், அரசியல்வாதிகளிடம் உள்ள கருப்பு பணத்தை அரசின் கஜானாவிற்கு கொண்டு வருவதன் மூலம்தான் மக்களின் கைகளுக்கு பணத்தினை கொண்டு வரமுடியும். கொரோனா தொற்றிலிருந்து மட்டுமல்ல, பசியிலிருந்தும் மக்களைக் காக்க முடியும்.
பிரதமர் மோடியோ ‘தற்சார்பு இந்தியா’ என பேசிக் கொண்டு, கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி கார்ப்பரேட் கொள்ளைக்கு அனைத்தையும் திறந்து விடுகிறார். கருப்புப் பணம் ஒழிப்பு, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு, ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பு என பா.ஜ.க மோடி அரசின் ஆறு ஆண்டுகால வாய்சவடாலின் அடுத்த அவதாரமே ‘தற்சார்பு இந்தியா’.
கல்வி, மருத்துவம், காப்பீடு, விண்வெளி அணுசக்தி, இராணுவ தளவாட உற்பத்தி அனைத்திலும் அந்நிய முதலீட்டு சூறையாடலை அனுமதித்து நாட்டை அடிமைப்படுத்திக் கொண்டே தற்சார்பு பொருளாதாரம் பேசும் மோடி – ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்கள் ஒரே நேரத்தில் கிழக்கேயும் மேற்கேயும் போகலாம் என நம்மை நம்ப சொல்கிறார்கள்.
பன்னிரண்டு மணி நேர வேலை – தொழிலாளர் பாதுகாப்பு கடப்பாடுகளிலிருந்து முதலாளிகளுக்கு தளர்வு எனத் தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தம், கனிம இயற்கைவள கொள்ளைகளுக்கு அனுமதி, ஹைட்ரோ கார்பன் – மீத்தேன் எடுக்க மக்களிடம் கருத்து கேட்க வேண்டாம், மாநில அரசை கேட்க வேண்டாம் என சுற்றுச்சூழல் சட்டத்தில் திருத்தம், மின்விநியோகத்தை தனியாருக்கு கொடுக்க மின்சார சட்டத்தில் திருத்தம், வேளான் விளைபொருள்கள் கொள்முதலை தனியாருக்கு கொடுக்க திருத்தம், ரயில்வே தனியார்மயம் என அடுத்தடுத்து மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது. கூடுதல் கடன் வாங்கி நிலைமையை சமாளிக்க மாநில அரசுகள் கார்ப்பரேட்டுகளுக்கு சாதமாக நடக்குமாறு நிபந்தனை விதிக்கப்படுகிறது. ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்த, நாட்டின் பொருளாதாரத்தை நெருக்கடியில் தள்ளிய அதே தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகளை இந்நெருக்கடியான நேரத்தில் மிகத்தீவிரமாக அமல்படுத்துகின்றது மோடி அரசு. நாட்டை மறுகாலனியாக்கப் பாதையில் நடத்திக் கொண்டே, அமெரிக்க ஆதரவு – சீன எதிர்ப்பு தேசிய வெறியைக் கிளப்பி தேசக்காப்பாளர் வேடமிட்டு சர்வாதிகாரத்தினை நிலைநிறுத்துகின்றன.
நாட்டு மக்கள் மீதான பாஜ.க அரசின் அடக்குமுறையை எதிர்க்கும் அறிவுத்துறையினர், மாணவர்கள், இசுலாமிய அமைப்பினர் ஊபா சட்டத்தின் கீழ் ஆண்டுக்கணக்கில் சிறைப்படுத்தப்படுகின்றனர். கொரோனாவை பயன்படுத்தி மக்களின் பேச்சுரிமை, போராடும் உரிமையைப் பறிக்கும் அரசியல் முடக்கம் நிரந்தரமாக்கப்படுகிறது. குற்றவியல் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டு சட்டப்படியான உரிமைகள் ரத்து செய்யப்பட உள்ளன. அனைத்துத் துறைகளிலும் மாநிலங்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு பெயரளவிலான கூட்டாட்சியும் ஒழிக்கப்படுகிறது. நெருக்கடியான நோய்த்தொற்றுக் காலத்திலும் கொரோனா ஜிகாத் என இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பை பரப்பி அவர்களை தனிமைப்படுத்தும் வைரஸை விடவும் கொடியவர்களான ஆர்.எஸ்.எஸ் காவிகளிடமே ஆட்சி அதிகாரம் உள்ளது.
உடனடி வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை நிர்பந்தித்து போராடுவதுடன் நாம் நின்றுவிட முடியாது. கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்த அணிதிரள வேண்டும். அதுவரை நாட்டின் எந்தப் பிரிவு மக்களுக்கும் வாழ்வுமில்லை; ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலையுமில்லை.
மோடி அரசினுடைய கனவு திட்டமான ‘உயர்சிறப்பு கல்வி நிறுவனம் (Institution of Eminence-IoE)’ என்ற திட்டம் எதிர்பார்த்த பலன்களைத் தரவில்லை என பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மூன்று வருடங்களில் IoE திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் உலக தர பட்டியலில் எந்த முன்னேற்றமும் காணவில்லை. குறிப்பாக பழைய இடத்தையும் (old ranking) தக்க வைத்துக் கொள்ள முடியாமல் உள்ளன என்கிறது அந்த பத்திரிக்கை செய்தி.
பல்கலைக்கழக உலக தரவரிசைப் பட்டியலில் (QS or TIME university global ranking) முதல் 200 இடங்களுக்குள் இந்திய உயர் கல்வி நிறுவனங்களை கொண்டுவருவதே IoE திட்டத்தின் இலக்கு என மோடி அரசு அறிவித்து, அதற்காகவே 20 கல்வி நிறுவனங்களை, கட்டிடம் கூட இல்லாத Jio-அம்பானி, Airtel-மிட்டலின் கல்லூரிகள் உட்பட பத்து தனியார் மற்றும் பத்து அரசு கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுத்தது. அரசு கல்வி நிறுவனத்திற்கு தலா 1000 கோடியும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு முழு நிதித் தன்னாட்சியும் வழங்கி IoE திட்டத்தை 2018 -லிருந்து அமல்படுத்தி வருகின்றது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் IoE ல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 18 கல்வி நிறுவனங்கள் கடந்த நான்கு வருடங்களாக பெற்றுள்ள QS தரவரிசைப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏறத்தாழ அனைத்து கல்லூரிகளும் உலகதரப் படியலில் தொடர்ந்து இறங்கு முகமாகவே உள்ளன. குறிப்பாக தனியார் கல்லூரிகள் 800 வது இடத்தில் உள்ளது. மத்திய அரசு குறிப்பிட்டுள்ள மற்றொரு பல்கலைக்கழக தரவரிசை நிறுவனமான TIME பட்டியலில் இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் QS ஐ விட மோசமாகவே உள்ளது.
கடந்த வருட TIME பட்டியலில் முன்னணி IIT கள் 400 வது இடத்திற்கு மேலே தான் வந்தன. பெரும்பான்மை தனியார் கல்லூரிகளோ TIME பட்டியலில் இடம் பெறவே இல்லை. IIT மீதான விமர்சனங்கள் அதிகமாகவே ஏப்ரல் மாதம் முன்னணி IIT கள் (7 IIT) சேர்ந்து தரவரிசை தொடர்பாக ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டன. அதில் பல்கலைக்கழக தரவரிசைக்காக TIME நிறுவனம் சேகரிக்கும் தரவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும் எனவே 2020 ஆண்டுக்கான TIME பட்டியலில் பங்கெடுக்கப்போவதில்லை எனவும் அறிவித்தன.
IIT -ன் குற்றச்சாட்டினை மறுத்த TIME நிறுவனம், அதன் உயர் தகவல் அதிகாரி, நவம்பர் 2019 -ல் டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் 23 IIT பிரதிநிதிகளிடம் சிறந்த பல்கலைக்கழங்களை தேர்ந்தெடுப்பதற்கான TIME நிறுவனத்தின் முறைகள் (methodology) பற்றி விவரித்ததாகவும் தரவரிசைக்காக இந்திய கல்வி நிறுவனங்கள் குறித்து சேகரித்த விவரங்களை மார்ச்சில் நடக்கவிருந்த இந்திய பல்கலைக்கழக சங்கத்தின் (Association of Indian University) ஆண்டு கூட்டத்தில் பரிமாறிக்கொள்ள இருந்ததாகவும் ஆனால் கொரோனா காரணமாக கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் விவரங்களை வெளியிட முடியவில்லை என்றும் கூறியது.
இதனைத் தொடர்ந்து 2020 ம் ஆண்டிற்கான தேசிய தரவரிசை மதிப்பீடான NIRF பட்டியலை வெளியிட்டு பேசிய MHRD அமைச்சர் ரமேஷ் போக்ரியால் “உலக தர பட்டியலை நான் ஏற்கவில்லை… இந்தியாவின் NIRF ஐ புகழ்பெறச் செய்வதன் மூலம் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை NIRF ல் பங்குபெற செய்வோம்” என சவடால் அடித்திருந்தார்.
IoE திட்டத்தினால் பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்ட, கிராமப்புற மற்றும் பொருளாதார பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் இந்தியாவின் முன்னணி கல்வி நிலையங்களில் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் பறிபோகும்; உயர்கல்வியானது கார்பரேட்டுகளின் கட்டுப்பட்டிற்குள் செல்லும்; மாநில உரிமைகள் மற்றும் இடஒதுக்கீடு பறிக்கப்படும் என கல்வியாளர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். உயர்கல்வி நிறுவனங்களை மதிப்பீடு செய்வதற்கு TIME/QS நிறுவனங்கள் கடைபிடிக்கும் அளவுகோள்கள்(Parameters) இந்திய கல்விச் சூழலுக்கு பொருத்தமானவையா? கடந்த ஆறுவருட காலமாக ஊதிப்பெறுக்கப்பட்ட IoE திட்டத்தினால் ஏன் சிறிதளவு முன்னேற்றத்தைக்கூட ஏற்படுத்தமுடியவில்லை? என்றெல்லாம் பரிசீலிக்காமல் TIME மற்றும் QS நிறுவனங்களின் மதிப்பீட்டு முறையை குற்றஞ்சாட்டத் தொடங்கியிருக்கிறது மோடியின் தர்பார்.
***
TIME, QS மற்றும் இதர பல்கலைக்கழக உலக தரவரிசைப்பட்டியல் என்பது உலகளாவிய உயர்கல்வி வணிக சந்தை மற்றும் நிதி மூலதனத்தோடு தெடர்புடையவை. உலகமயமாக்கல் காலகட்டத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளிலுள்ள பெரும் கல்வி முதலாளிகள் இந்தியா, சீனா மற்றும் இதர மூன்றாம் உலக நாடுகளிலிருந்து மேற்படிப்பிற்காக மாணவர்களை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளில் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையானது முக்கிய பங்காற்றுகிறது. உதாரணமாக அமெரிக்காவை எடுத்துக்கொள்ளலாம்.
TIME/QS தரவரிசையில் உள்ள முதல் 100 பல்கலைக்கழகங்களில் அதிகமானவை அமெரிக்காவில் தான் உள்ளன. இப்பல்கலைக்கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது. 2018-19 ஆண்டில் அமெரிக்காவில் பயின்ற வெளிநாட்டு மாணவர்கள் மூலம் 41 பில்லியல் டாலர், இந்திய மதிப்பில் 3,10000 கோடி, வருவாய் (கல்விக்கட்டணம், கல்விக் கடன், விடுதி செலவு மற்றும் இதர செலவுகள்) அமெரிக்க பொருளாதாரத்திற்கு கிடைத்துள்ளது. இவ்வருவாயின் கணிசமான பகுதி கார்பரேட் கல்வி முதலாளிகள், கல்விக்கடன் வழங்கும் வங்கிகள், இணையதள படிப்பு வழங்கும் நிறுவனங்களிடமே சென்றுள்ளன. எனவே கல்விக்கொள்ளைக் கூட்டத்தின் நலங்களே பல்கலைக்கழக தரவரிசை பட்டியலுக்கு பின்னால் முக்கிய பங்காற்றுகிறது என்பது சொல்லாமலே விளங்கும்.
அமெரிக்காவை போல லாபமீட்டக் கனவுகாணும் இந்திய அரசோ தெற்காசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து மாணவர்களை இந்திய உயர்கல்வி சந்தையை நோக்கி ஈர்க்க வேண்டும் எனத் திட்டமிடுகிறது. எனவே தான் இந்திய உயர்கல்வி நிறுவனங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது என்ற முழக்கம் மோடி அரசினுடைய உயர்கல்விக் கொள்கைக்கு அடிப்படையாக உள்ளது. இதனை ஒட்டியே உயர்கல்வி சார்வ்த திட்டங்கள் திட்டங்கள் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன.
உதாரணமாக, வெளிநாட்டு மாணவர்கள் கல்வி உதவித்தொகையோடு இந்தியாவில் படிப்பதற்காக STUDY IN INDIA என்ற திட்டம் (1000 கோடி); வெளிநாட்டு பேராசிரியர்கள் இந்தியாவில் பணிபுரிய முன்னுரிமை மற்றும் வகுப்புகள் எடுக்க GAIN திட்டம்; Institutions Of Eminance திட்டம் (10000கோடி); மாணவர்கள் மேற்படிப்பிற்காக செல்வதற்கு ஏதுவாக பலநாடுகளுடன் போடப்பட்டள்ள Mutual Recognition of Degree ஒப்பந்தம், இந்திய கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட NIRF ranking system; அமெரிக்க இணையதள கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் நலங்களுக்காக கொண்டுவரப்படுள்ள Online degree மற்றும் Twin degree திட்டம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
அதேவேளையில் கிராமபுற மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான திட்டங்கள், அரசு கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டிற்கான அதிக நிதி ஒதுக்கீடு போன்ற எதற்கும் மோடி அரசு முன்னுரிமை தரவில்லை. மேற்சொன்ன திட்டங்களை NIRF பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் வந்த கல்லூரிகளில் அமல்படுத்த முன்னுரிமை தருகிறது மத்திய அரசு. இதில் 46 மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், 26 மாநில பல்கலைக்கழகங்கள், 28 தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதன் மூலம் முன்னணி அரசு கல்வி நிறுவனங்களை சந்தையின் பிடிக்குள் கொண்டு செல்வதையும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பெரும் கொள்ளையும் உறுதிப்படுத்தியிருக்கிறது மோடி அரசு.
மாநில அரசுகளும் தங்களுடைய உயர்கல்வி சார்ந்த திட்டங்களில் மத்திய அரசின் அனுகுமுறையைத்தான் கையாளுகின்றன. கல்லூரிகளுக்கு NIRF ranking மற்றும் NAAC அங்கீகாரம் கட்டாயம்; கல்லூரிகளின் தரவரிசையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்வது; இணையதள வகுப்புகளை கட்டாயமாக்குவது போன்றவைகள் அரசு கல்லூரிகளிலும் நிர்பந்திக்கப்படுகின்றன. போதிய கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகுதியான பேராசிரியர்கள் இல்லாத இக்கல்லூரிகள் எவ்வகையில் NIRF/NAAC ல் போட்டியிடமுடியும்.
இந்தியாவில் கிராமப்புற மற்றும் சமூக-பொருளாதார நிலைகளில் பின்தங்கிய சூழலிலுள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்குவதில் மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநிலக் கல்லூரிகளே முக்கிய பங்காற்றுகின்றன. உயர்கல்வி படிக்கின்ற மாணவர்களில் 65 சதவிகிதம் பேர் இக்கல்விநிறுவனங்களிலிருந்து தான் பட்டம் பெறுகின்றனர். ஆனால் மோடியோ ‘உயர்கல்வியின் தரத்தை உயர்த்துகிறோம்’ என்ற போர்வையில் அம்பானி, மிட்டல், பிர்லா, ஜிண்டால், அதானிகளிடம் உயர்கல்வியை ஒப்படைப்பதற்காக செய்யப்படும் திட்டங்கள் அனைத்துமே அரசு பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகளை வருங்காலங்களில் இல்லாமலே செய்துவிடும்.
அதற்கான தொடக்கமாகவே IoE திட்டம் உள்ளது. மோடி ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட எந்த திட்டங்களும் சொல்லிகொண்ட இலக்குகளை எட்டியதே இல்லை. மாறாக அத்திட்டங்கள் வாயிலாக அந்த துறைகளை அந்நிய முதலீடுகளின் பிடியில் சிக்க வைத்துள்ளார். அந்த வரிசையில் தற்போது உயர்கல்வியும் சேர்ந்துள்ளது.
புரட்சிகர மக்கள் கவிஞரும், எழுத்தாளரும், பேராசிரியருமான தோழர் வரவர ராவ் அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக வரும் செய்திகள் மிகவும் கவலை அளிக்கின்றன.
எழுந்து நிற்கவோ, கழிப்பறை செல்லவோ, பல் துலக்கவோ முடியாத நிலையில் நினைவுகள் அடிக்கடிப் பிறழ்வதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பல்வேறு தரப்பினரின் கண்டனங்களை அடுத்து தற்போது மும்பை ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகத்தெரிகிறது.
இதேபோல கடந்த மே மாதம் 28ம் தேதி உடல்நிலை கெட்டு ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்கள் மருத்துவத்திற்குப்பின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் .
82 வயதாகும் தோழர் வரவர ராவ் இதயநோயாலும், சர்க்கரை நோயாலும் அவதியுற்று வருகிறார். கடந்த 22 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தோழர் வரவர ராவ் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் கடைந்தெடுத்த பொய் என்பது உலகறிந்த உண்மை.
வன்முறையைத் தூண்டியதாகவும் பிரதமர் மோடியை கொலை செய்யத் திட்டமிட்டதாகவும் புனையப்பட்ட பொய்களுக்கு எவ்வித ஆதாரத்தையும் இதுவரை காட்ட முடியவில்லை.
தோழர் வரவர ராவை இனியும் தொடர்ந்து காவலில் வைப்பதற்கு எவ்வித சட்டரீதியான அடிப்படை ஏதும் இல்லை சட்ட வல்லுனர்கள் கருதுகிறார்கள் .
உலக அளவில் பல்வேறு அறிஞர்கள் இந்த அநீதியைக் கண்டித்த பிறகும் அவருக்குப் பிணை வழங்க மறுக்கின்றன நீதிமன்றங்கள். ஆனால் பாகிஸ்தான் தீவிரவாதிகளை பாதுகாத்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட காஷ்மீரின் டி.எஸ்.பி தேவிந்தர் சிங்கை 90 நாட்களில் குற்ற அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறி விடுதலை செய்திருக்கிறது நீதிமன்றம். இதுதான் இந்திய நீதித்துறையின் யோக்கியதை.
வரவர ராவ் மட்டுமின்றி 90 விழுக்காடு உடல் ஊனமுற்ற நிலையில் உள்ள பேராசிரியர் சாய்பாபா, அறிஞர் ஆனந்த் தெல்தும்டே, கவுதம் நாவ்லாக, சுதா பரத்வாஜ், பேராசிரியர் சோமா சென் உள்ளிட்ட 11 அறிஞர்களை எவ்வித ஆதாரமும் இல்லாமல் சிறையில் அடைத்து வதைத்து வருகிறது மோடி அரசு. தன்னை எதிர்ப்பவர்களையும் மக்களுக்காக போராடுபவர்களையும் சித்திரவதை செய்வதும் கொல்வதும் ஹிட்லர் உள்ளிட்ட பாசிஸ்டுகளின் கொடிய குணம். மோடியிடம் எப்படி நியாயத்தை எதிர்பார்க்க முடியும்? ஆனால் வரலாறு பாசிஸ்டுகளை அவர்களின் போக்கில் விட்டு விடுவதில்லை. பாசிஸ்டுகள் மக்களால் வீழ்த்தப்பட்டார்கள் என்பதுதான் வரலாறு .
தோழர் வரவர ராவ் அவர்கள் மீது இதற்கு முன்பு பல்வேறு கொடிய வழக்குகள் போடப்பட்டும் அவை அனைத்துமே பொய் என்று நிரூபிக்கப்பட்டு விடுதலையாகி இருக்கிறார் .
அநீதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தோழர் வரவரராவின் உயிருக்கு மோடி அரசு மட்டுமல்ல, உச்சநீதிமன்றம் உள்ளிட்ட இந்திய நீதித்துறையும் முழுப்பொறுப்பு. மக்களுக்காக போராடியவர்களை காக்கும் கடமை அரசியல் அமைப்புகள் ஜனநாயகவாதிகள், மனித உரிமை இயக்கங்கள் தொழிற்சங்கங்கள் ஆகிய அனைவருக்கும் உண்டு.
தோழர் வரவர ராவ் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு அவருக்கு தேவையான உயர் மருத்துவ சிகிச்சை அவசரமாக வழங்கப்பட வேண்டும். ஏனைய பிற அறிஞர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அமைப்புகளும் இணைந்து போராடுவதோடு இந்த அநீதியை உடனே களையக் கோரி உச்ச நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் . பாசிச ஒடுக்குமுறையில் இருந்து மக்களை காக்க இத்தருணத்தில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டுமென்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன் தோழர் காளியப்பன்,
மாநிலப் பொருளாளர்,
தகவல் : மக்கள் அதிகாரம் , தமிழ்நாடு – புதுவை 9962366221
தமிழகத்தில் அரசு சார்பில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற “அனைத்து சாதி அர்ச்சக மாணவர்கள் 206 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த 15 ஆண்டுகளாக தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கோவில்களில் பணிநியமனத்தை எதிர்பார்த்து பல்வேறு கட்ட சட்ட மற்றும் களப் போராட்டங்கள் நடத்திவந்த சூழலில், தற்போது தமிழக அளவில் இரண்டாவது நபராக மதுரை அர்ச்சக பாட சாலை மாணவர் தியாகராஜனுக்கு மதுரை நாகமலை புதுக்கோட்டை பிள்ளையார் கோவிலில் அர்ச்சகர் பணி வழங்கப்பட்டுள்ளது. உரிய கல்வி, முறையான நேர்முகத் தேர்வு மூலம் மாணவர் தியாகராஜன் பணிநியமனம் பெற்றுள்ளார்.
ஆனால், இத்தகைய திறன் படைத்த மாணவர்களுக்கு இன்றுவரை ஆகமக் கோவில்களில் பணிநியமனம் வழங்கப்படவில்லை. குறிப்பாக மதுரை மீனாட்சியம்மன், பழனி, திருச்செந்தூர் முருகன், சிறீரங்கம் ரெங்கநாதன், மயிலை கபாலீசுவரர் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் பணிநியமனம் எப்படி செய்யப்படுகிறது? என்பது மிகவும் இரகசியமாகவே உள்ளது.
அர்ச்சகர் பயிற்சி முடித்திருந்தும் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி நியமனம் பெற இயலாது உள்ள மாணவர்கள்.
பரம்பரை வழி அர்ச்சகர் உரிமை சட்டப்படி ஒழிக்கப்பட்டு, அதனைப் பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் உறுதி செய்த பின்பும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 100% தமிழகத்தின் பெரிய கோவில்களில் அர்ச்சகர்களாக உள்ளனர். இவர்கள் நியமனம், வெளிப்படையான அறிவிப்பு, முறையான தேர்வு இன்றி நடைபெற்று வருகிறது. அர்ச்சகர் என்பது அரசுப் பணி. அனைத்து அரசுப் பணிகளும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே நியமிக்கப்பட வேண்டும்.ஆனால், சட்டம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் செல்லாத இடமாக ஆகமக் கோயில்கள் உள்ளன.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என தமிழக அரசு 2006 –ல் கொண்டு வந்த அரசாணைக்கு எதிரான வழக்கு 2015-ஆம் ஆண்டு தமிழக அரசின் அரசாணை செல்லும், குறிப்பிட்டு கோயில்கள் பணி நியமனம் குறித்து முடிவு செய்யலாம், ஆனால் பிறப்பின் அடிப்படையில் பணிநியமனம் கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு வந்தது. ஆனால் ஆகமப்படி அர்ச்சகர் நியமனமா? அரசியல் சட்டப்படி அர்ச்சகர் நியமனமா? என்பதில் தெளிவு இல்லை. திராவிட இயக்கத்தின் வழிவந்ததாய் சொல்லும் தமிழக அரசு 2015 உச்சநீதிமன்ற தீர்ப்பின் சட்டத்தன்மை குறித்து இன்றுவரை கருத்துச் சொல்லவில்லை.
அதனால் பயிற்சி முடித்த அர்ச்சக மாணவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இரண்டாண்டுகளுக்கு முன்பு மதுரை அர்ச்சக பாடசாலை மாணவர் திரு. மாரிச்சாமி என்பவருக்கு மதுரை புதூர் அய்யப்பன் கோவிலில் பணி வழங்கப்பட்டது. அதன்பிறகு தற்போது தியாகராஜன் என்ற மதுரை பாடசாலை மாணவருக்கு மதுரை நாகமலை பிள்ளையார் கோவிலில் இந்துசமய அறநிலையத்துறை அர்ச்சகர் பணி வழங்கி உள்ளது. தமிழகம் முழுவதும் சைவத்திலும், வைணவத்திலும் பாடல் பெற்ற பிரபலமான பல நூறு பொதுக் கோவில்கள் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. அர்ச்சகர் பணி காலியிடங்களும் அதிகம் உள்ளது.
இந்துமதத்தில் அனைவரும் சமம், பிறப்பால் உயர்வு – தாழ்வு இல்லை. கருவறையில் உள்ள சாதி – தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்து சாதி அர்ச்சகர் பணி என்று தமிழக அரசு சொன்னது. ஆனால் தமிழக அரசு தயங்கித் தயங்கி, ஒவ்வொரு சாதிக்கும் தனிசுடுகாடு அமைத்துக் கொடுப்பது போல, தனியாக உள்ள சிறு கோவில்களில் பிராமணர் அல்லாத மற்ற சாதி மாணவர்களை பணி நியமனம் செய்கிறது. இதுவும் மொத்தமாக செய்யப்படுவதில்லை. நியமனம் செய்யப்படும் இந்த மாணவர்களுக்கு ஓய்வு பெறும் வரையில் பணி உயர்வு கிடையாது. பணி மாறுதல் கிடையாது.
சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றம் “தீட்டு என்ற அடிப்படையில் பெண்களை ஒதுக்குவதும் தீண்டாமைதான் – எனவே அது குற்றம் என்றது. ஆனால் தமிழகத்தில் கடந்த பல நூற்றாண்டுகளாகத் தொடரும் கருவறை தீண்டாமை அரசியல் சட்ட ஆட்சி வந்தபின்பும் நீடிக்கிறது. இப்பிரச்சனையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், தமிழக முதல்வர் தங்கள் நிலைப்பாடுகளைத் தெரிவிக்க வேண்டும்.
பல்லாண்டுகளாக அனைவரும் போராடிப் பெற்ற அர்ச்சகர் பணி நியமன செய்தியைக்கூட மாணவர்கள் வெளியே சொல்ல அஞ்சுகின்றனர். இந்த நிலைமாற வேண்டும். எனவே, தமிழக அரசு இந்து அறநிலையத் துறையின் கீழான முக்கிய கோவில்களில் உள்ள காலியிடங்களில் அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி முடித்த 200-க்கும் மேலான மாணவர்களுக்கு, இந்துசமய அறநிலையத்துறை பணிநியமனம் வழங்க வேண்டும்.
பணிநியமன நிகழ்வு இந்துசமய அறைநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் முன்னிலையில் விழாவாக நடைபெற வேண்டும். எந்தக் காரணமும் இன்றி மூடப்பட்ட அனைத்து சாதி மாணவர்களுக்கான சைவ – வைணவ அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் திறந்து அர்ச்சகர் பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து சாதி அர்ச்சகர் பணி என்பது வெறும் வேலைவாய்ப்பு தொடர்பானது மட்டுமல்ல! இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள உயர்ந்த கருத்தாக்கங்களான குடிமக்கள் அனைவருக்கும் சமத்துவம், சமவாய்ப்பு, சமூக நீதி, தனி மனித மாண்பு காத்தல் போன்ற அடிப்படை உரிமைகள் தொடர்பானது; கருவறைத் தீண்டாமையை ஒழிப்பது.
எனவே, தமிழக அரசிடம் !
எஞ்சிய 203 மாணவர்களுக்கும் உடனே பணி வழங்கு!
மூடப்பட்ட சைவ வைணவ அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை மீண்டும்
திறந்து நடத்து!
பெண்களையும் அர்ச்சகராக்கு!
என்று கோருகிறோம்.
இப்படிக்கு :
வழக்கறிஞர்.வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு.
வா.ரங்கநாதன்,
தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு.
இந்தியாவில் உள்ள சுரங்கங்களை வணிகமயமாக்குவது, அதிலும் குறிப்பாக நாட்டில் உள்ள 218 நிலக்கரி பிளாக்குகளில் 41 பிளாக்குகளை தனியாருக்கு கொடுப்பது, அதற்கு உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் ஆதிக்கம் புரியும் கார்ப்பரேட்டுகளை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்பது, அவர்களின் மூலம் ஆண்டுக்கு 225 மில்லியன் டன் உற்பத்தி செய்வது, அதன் மூலம் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 250 மில்லியன் டன் நிலக்கரியின் அளவை ஈடு செய்வது (மூச்சு முட்டுகிறதா) என்று “ஆத்ம நிர்மான் பாரத்” கூச்சல் போடும் மோடி அறிவித்துள்ள திட்டம் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும், நிலவும் போலி ஜனநாயக அரசமைப்பின் தோல்விக்கும் துலக்கமான எடுத்துக்காட்டாகும்.
ஊரடங்கு காலத்தில் மக்களிடம் பெரிய அளவு எதிர்ப்பு ஏதுமின்றி கமுக்கமாக ஏலத்தை நடத்தி முடித்து விடலாம் என்ற நோக்கத்துடன் முதலில் ஜூன் 11ம் தேதியை ஏல நடப்பு தேதியாக அறிவித்தார் மோடி. ஆனால் அவரது எண்ணத்தில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் மண்ணள்ளிப் போட்டு, முகத்தில் கரியை பூசி விட்டார்கள்!
இந்த ஏல தேதிக்கு முதல் நாளான ஜூன் 10ம் தேதியன்று அகில இந்திய அளவிலான போராட்டம் நடந்தது. நிலக்கரி சுரங்கங்கள் உள்ள 8 மாநிலங்களில் 535 சுரங்கங்களில் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் ஒன்றரை லட்சம் பேர் ஒருநாள் போராட்டத்தில் குதித்தனர். இந்த தொழிலாளர்கள் மட்டுமின்றி CIL எனப்படும் கோல் இந்தியா லிமிடெட், SCCL எனப்படும் சிங்கரேணி கொலிரெஸ் கம்பெனி லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்தச் செய்திகள் அனைத்தும் ஊடங்களால் திட்டமிட்டு மறைக்கப்பட்டு விட்டது.
இந்த சூழலில் மோடி ஜூன் 11 ஏலத்தை ஒத்திப் போட்டு விட்டார். ஏலத்தில் கலந்து கொள்ள தயங்கிய எஜமானர்களின் மனங்குளிர பல சலுகைகளை அறிவித்து தாஜா செய்து மறு வாரமே, ஜூன் 18ல் இ- ஏலத்தை துவக்கினார் மோடி. பழங்குடி மக்களின் வாழ்வு மலரும், 2.8 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். நிலக்கரி உற்பத்தியில் தன்னிறைவு ஏற்பட்டு மின்னுற்பத்தி ஓகோ என உயரும் என்று வழக்கமாக சரடுகளை அள்ளிவிட்டார். ஆனால் இவற்றினால் சுரங்க தொழிலாளர்களை ஏமாற்ற முடியவில்லை.
ஜூன் 10ம் தேதி வேலை நிறுத்தம் வெற்றிகரமாக முடிந்தாலும், பின் வாங்காத மோடியின் திமிர்தனத்தை எதிர்த்து ஜூலை 2,3,4 என 3 நாட்கள் மீண்டும் சுரங்கத் தொழிலாளர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தம் 5.5 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது. இதில் மைய தொழிற்சங்கங்களான ஏஐடியுசி, சிஐடியு, எச்எம்எஸ், ஏஐசிசிடியு மற்றும் கங்காணி கூட்டமான ஆர்எஸ்எஸ்-சின் கீழ் செயல்படும் பிஎம்எஸ் என 5 மையசங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றன. அரசு பொதுத்துறை நிறுவனங்களான CIL மற்றும் SCCL நிலக்கரி நிறுவனங்கள்தான் நாட்டின் 92% நிலக்கரியை உற்பத்தி செய்கின்றன. இந்நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களும் இவற்றின் துணை நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
ஒரே மாதத்திற்குள் அடுத்தடுத்து, நாடு தழுவிய லட்சக்கணக்கான தொழிலாளர்களின் பங்கேற்புடன் இரண்டு வேலை நிறுத்தங்கள் நடந்தேறியுள்ளது. கொரானா கால ஊரடங்கு எதுவும் செல்லுபடியாகவில்லை.
நிலக்கரி சுரங்கங்களை பற்றி புரிந்து கொள்ள 1980ம் ஆண்டுகளில் வந்த காலா பத்தார் என்ற இந்தி படம் பார்த்தால் தனியார் சுரங்கம் எத்தனை கொடூரமான கொத்தடிமத்தனத்தைக் கொண்டது எனத் தெரியும். மிசா கால சாஸ்நல்லா சுரங்க விபத்தின் கோரம் பற்றி கேள்விப்பட்டவர்களுக்கு, தனியார் சுரங்க கோரங்கள் பற்றி தெரிந்திருக்கும். சமீபத்தில் வந்த அனுராக் காஷ்யப்பின் ‘கேங்ஸ் ஆஃப் வாஸ்ஸிபூர்’ என்ற படமும் சுரங்கக் கொடூரங்களை மையப்படுத்தி வந்த படமே. இவற்றைப் பார்க்க முடியாதவர்கள் நம்மூர் கல்லுடைக்கும் தொழிலாளர்களின் கொத்தடிமைத்தனத்தை செய்திகளில் படித்திருக்கலாம் .
சங்கர் குகா நியோகி
உண்மையில் நிலக்கரி சுரங்க கொத்தடிமைத்தனம் என்பது மிகமிக கொடூரமானதும் அதில் நடக்கும் சுரண்டல் கொடுமை பூதாகரமானதுமாகும். இந்த சுரங்கத் தொழிலாளர்களின் உரிமைகளுக்குப் போராடிய சங்கர் குகா நியோகி என்ற பிரபலமான தொழிற்சங்க தலைவர் படுகொலை செய்யப்பட்டது பற்றி கேள்விப் பட்டிருக்கலாம். அவரின் வழியில் சுரங்கத் தொழிலாளர்களின் உரிமைகளுக்குப் போராடிய பெண் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் இன்று மோடியால் தன்னைக் கொல்ல சதி செய்ததாக பொய் வழக்கில் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய 100 விதமான கனிமங்கள் பூமியில் இருந்து வெட்டியெடுக்கப்படுகிறது. இந்தியாவில் 3100 சுரங்கங்கள் உள்ளதாகவும் அதில் 550 நிலக்கரி, எண்ணெய், இயற்கை எரிவாயு எடுக்க பயன்படுவதாகவும், மற்றவற்றில் 560 உலோக சுரங்கங்களாகவும், 1990 உலோகமல்லாத சுரங்கங்களாகவும் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. கவனியுங்கள்! அரசிடம் இது பற்றி துல்லியமான விவரம் கிடையாது.
1970-கள் வரை இந்த சுரங்கங்களில் சிலவற்றை தவிர பெரும்பாலானவை தனியாரிடமே இருந்தது. 1973ல் இந்திரா காந்தி பிரதமராயிருந்த போது நிலக்கரி சுரங்கங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன. அதன் பிறகு 1993 ல் அதே காங்கிரசு அரசே அரசாணை மூலம் பல சட்ட திருத்தங்களைச் செய்து தனியாருக்கு தாரை வார்க்கத் தொடங்கியது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மேலும் தாராளமாக்கப்பட்டு முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை எனக் கூறி இந்த நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டன. பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த மன்மோகன் சிங் காலத்தில் நடந்த நிலக்கரி ஏல ஊழல்கள் ஊழல்களின் மகாராணி என்று அழைக்கப்பட்டது. சிஏஜி அறிக்கை மூலம் நாடு முழுதும் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ‘கோல்கேட்’ ஊழலின் பிரம்மாண்டம் 10.7 லட்சம் கோடி என்பதிலிருந்து நிலக்கரி சுரங்கம் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதிலுள்ள யோக்கியதையைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் பராளுமன்றத்திற்கு அதே சிஏஜி அறிக்கை தந்தபோது ஊழலின் அளவு 1.82 லட்சம் கோடி என சுருங்கிப் போனது பற்றி எதிர்க்கட்சியான பா.ஜ.ககூட கேள்வி எழுப்பவில்லை. ஆனால் பா.ஜ.கவின் பினாமியான ஊழல் எதிர்ப்புக் கோமாளி அன்னா ஹசாரே போராட்டத்தை பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க கும்பல்.
இப்போது தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் மிகவும் துணிச்சலாக இந்த ‘டோல்கேட்’ ஊழலையே சட்டப்படி செய்யத் தொடங்கியுள்ளது. சந்தேகமிருப்பவர்களுக்கு மோடியின் வீடியோ கான்பரன்சில் பங்கேற்றவர்களின் பெயரைப் பாருங்கள் – இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் சங்கமான ஃபிக்கி (FICCI)-யின் தலைவர், வேதாந்தா, டாடா சன் குழுமம்… என நீள்கிறது. இதிலும் சந்தேகமிருப்பின் அவர்கள் கூறியதைக் கேளுங்கள்: “5 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தின் மிகப்பெரும் அடிவைப்பு இது” – என்கிறது டாடா சன் குழுமம். ”இது வரலாற்றுச் சிறப்பு மிக்க சீர்திருத்தம்” “நாட்டின் கனிம வளங்களைத் திறந்துவிட்டு, பொருளாதாரத்தைத் தூண்டி விடுவதோடு, 5 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவதற்கான கிரியா ஊக்கியாக இது அமையும்” – என்கிறார் ஃபிக்கி தலைவர்.
மன்மோகன் சிங் ‘கோல்கேட்’ ஊழலில் 100 நிலக்கரி தொகுதிகள் டாடா, ஜிண்டால், பிர்லா, எஸ்ஸார், அதானி, லான்கோ……..என பலருக்கும் ஒதுக்கப்பட்டதை நினைவில் கொண்டு தற்போது ஏலம் விட தீர்மானிக்கப்பட்டுள்ள 41 தொகுதிகளின் நிலைமை என்ன ஆகும், யாரிடம் போகும் என்பதை எண்ணிப் பாருங்கள்!
பாரடா சுரங்கத்தின் பரப்பை! கேளடா அதன் கதையை!
1971 முதல் கட்டமாகவும் 1973ல் இரண்டாம் கட்டமாகவும் சுரங்கங்கள் தேசிய மயமாக்கப்பட்டது. இந்த சுரங்கங்களின் மூலம் சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இந்தியாவின் தேசிய வருவாயில் சுரங்கத் துறை ஆண்டுக்கு 2.4% முதல் 2.7% வரை பங்களிப்பு செலுத்துகிறது. இதிலும் குறிப்பாக நிலக்கரி சுரங்கங்களின் மூலம் 2020 மார்ச் முடிய இருந்த முதல் காலாண்டில் 6,024 கோடி லாபம் கிடைத்துள்ளது. பொதுத்துறையான கோல் இண்டியா நிறுவனம் இதில் முக்கிய பங்களிக்கிறது. கோல் இண்டியா நிறுவனம் 2019ல் 607 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்துள்ளது. இந்த விவரங்கள் அனைத்தையும் நமது ‘தேச பக்தி’ கும்பல் மறைத்து நிலக்கரி உற்பத்தியில் தன்னிறைவு அடைய தனியார் முதலீடு அவசியம் என்று சுதேசி பஜனை புரிகிறது. அதுமட்டுமின்றி மின்சார உற்பத்திக்கும், அதற்கு தேவையான நிலக்கரி உற்பத்திக்கும் தனியார் தான் ’ஆபத்பாந்தவன், அனாத ரட்சகன்’ எனவும் சதிராடுகிறது.
இந்த சதிராட்டங்களின் பின்னே முக்கிய அரசியல் மற்றும் பொருளாதார காரணம் உள்ளது. அதை போராடும் தொழிசங்கங்கள் பார்க்க மறுக்கின்றனர். 1990 களில் உலகளாவிய வலைப்பின்னலை ஏற்படுத்தியிருந்த தேசங்கடந்த தொழிற்கழகங்களின் உற்பத்தி வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் மூன்றாம் உலகநாடுகளில் இருந்து இயற்கை வளங்கள் ஏராளமான அளவு ஏற்றுமதி செய்ய வேண்டிய தேவை எழுந்தது. அதற்கு வழி செய்யும் வகையிலேயே புதிய பொருளாதாரக் கொள்கைகளான தனியார்மயம் தாராளமயம் உலகமயம் போன்றவற்றை வலியுறுத்திய காட் ஒப்பந்தத்தின் ஷரத்துகள் அமைந்திருந்தன. இவ்வொப்பந்தத்தின் அடிப்படையில் அதுவரை அரசுடமையாக்கப்பட்டிருந்த பல்வேறு பொதுத் துறைகளின் விதிகள் தளர்த்தப்பட்டு தனியார் மூலதனம் நுழைவதற்கு வழியேற்படுத்தப் பட்டது. அந்த வழியில் தான் இப்போது பட்டவர்தனமாக 33,000 கோடி முதலீடு அதுவும் 100% அன்னிய முதலீடு அவசியம், அதன் மூலமே சுயசார்பு பொருளாதாரத்தை கட்டியமைக்க முடியும். இதற்காகவே சர்வதேச டெண்டர் என்றெல்லாம் நியாயப்படுத்துகிறது மோடி கும்பல்.
ஆனால் மின்சாரத் தேவைகள் பற்றிய களநிலைமைகள் இன்று மாறி விட்டது எனக் கூறுகிறார் அரசு நிறுவனமான தேசிய காணுயிர் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும், சத்புதா பவுண்டேசன் என்ற சுற்றுச் சூழல் அமைப்பின் நிறுவனருமான கிஷோர் ரித் என்பவர். 2012ம் ஆண்டில் மின்சார தேவையானது உற்பத்தியை விட அதிகமிருந்தது. அதனால் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அந்தக் கட்டத்தில் தனியார் பலரும் மின்னுற்பத்தி செய்ய அனுமதி கோரினர். பெரும்பாலும் அனல் மின் நிலையங்கள் என்பதால் நிலக்கரி பயன்பாடும் அதிகரித்தது. ஆனால் இன்று மாற்று எரிசக்தி கொண்டு மின் உற்பத்தி செய்ய பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாராகி விட்டது. இந்த நேரத்தில் காலாவதியாகிப் போன முறையில் மின் உற்பத்தியில் இறங்கினால் லாபம் கொழிக்க முடியாது என்று கைவிட்டு விட்டனர். அதுமட்டுமின்றி 2020 மார்ச் 24ம் தேதிய நிலவரப்படி மின்தேவை 40% ஆக வீழ்ந்து விட்டது. இதனால் தான் அரசு எதிர்பார்த்த அளவு நிலக்கரி சுரங்கத் தொகுதி ஏலத்திற்கு பெரியளவு தனியார் முதலாளிகள் வரவில்லை. இந்த கொரோனா காலத்தில் முதலீடு செய்ய லாப உத்திரவாதம் உள்ள துறைகளையே கார்ப்பரேட்டுகள் தேடியலைகிறது என்பதையும் சேர்த்து பார்க்க வேண்டும்.
’சுரங்க அனுபவம் இல்லாதவர்களும் டெண்டரில் பங்கேற்கலாம்; லாபம் உடனடியாக கிடைக்கும் வகையில் தயார் நிலையில் உள்ள சுரங்கங்களை ஏலம் விடுகிறோம்; என CILன் சொந்த அமைப்பான மத்திய சுரங்க திட்டம் & வடிவமைப்பு நிறுவனத்தை தனித்து, சுயேச்சையாக செயல்பட சட்டத்தில் திருத்தம் செய்ததன் மூலம் சுரங்க மற்றும் நிலக்கரி உற்பத்தியில் அனுபவம் இல்லாதவர்களுக்கு இந்நிறுவனம் உதவும் என்று வேறு அறிவித்துள்ளனர். கார்ப்பரேட்டுகள் கொள்ளையிடும் வகையில் சுரங்க சட்டங்களில் 1992 முதல் செய்யப்பட்ட திருத்தங்கள் பற்றி சில விவரங்களையும் புரிந்து கொள்ள வேண்டும்
“நிலக்கரிச் சுரங்க தேசியமயமாக்கல் சட்டம் 1972-73-ம் ஆண்டுகளில் நிறைவேற்றப்படுகிறது. அதன் பின் சுமார் இருபதாண்டுகளுக்கு அச்சட்டத்தில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை. ஜூலை 1992-ம் ஆண்டு நிலக்கரி அமைச்சகத்தின் சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்படுகிறது. இக்கமிட்டியின் வேலை என்னவென்றால், தனியார்களுக்கு நிலக்கரிச் சுரங்க உரிமையை தாரை வார்ப்பது எப்படி என்று அரசுக்கு வழிகாட்டுவது தான். இக்கமிட்டி, 143 நிலக்கரித் தொகுப்புகளை (coal blocks) இதற்காக அடையாளம் கண்டது.
அதைத் தொடர்ந்து தேசிய நிலக்கரி தேசியமயமாக்கல் சட்டத்தில் ஜூன் மாதம் 1993-ம் ஆண்டு ஒரு திருத்தம் கொண்டு வரப்படுகிறது. அதன்படி, சக்தி உற்பத்தி (மின்சாரம்) மற்றும் நிலக்கரியை மூலப் பொருளாகக் கொண்ட பிற தொழில்களில் ஈடுபடும் தனியார் கம்பெனிகள் நிலக்கரியை வெட்டியெடுக்கலாம் என்பது சேர்க்கப்படுகிறது. பின்னர் 1996-ம் ஆண்டு மீண்டும் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டு சிமெண்டு கம்பெனிகளும் நிலக்கரியை வெட்டியெடுத்துக் கொள்ள வகை செய்யப்படுகிறது. இப்படி படிப்படியான சட்ட திருத்தங்கள் மூலம் நாட்டின் அரியவகை இயற்கை வளமான நிலக்கரி தனியார்களுக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டது.
93-ல் துவங்கி 2010 காலகட்டம் வரை சுமார் ஐந்து முறை சுரங்கச் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 2006-ம் ஆண்டு நிலக்கரிச் சுரங்கத்தில் நூறு சதவீதம் அந்நிய மூலதனத்தை அனுமதிக்க வகை செய்யும் சட்ட திருத்தமும் நிறைவேற்றப்பட்டு விட்டது.” (ஜூலை 5, 2012 வினவு-லிருந்து)
இப்போது மோடி அரசு கொண்டு வந்துள்ள திருத்தம் முழுக்க சுரங்கத்தில் 100% அன்னிய முதலீட்டுக்கு தடையற்ற அனுமதி மற்றும் உற்பத்தியை வணிக நோக்கில் பயன்படுத்த அனுமதி என ஏகப்பட்ட சலுகைகளை வழங்கி சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தான் தேசத் துரோகம் என போராடும் நிலக்கரி சுரங்க சங்கங்கள் எதிர்க்கின்றன. இல்லை இது வளர்ச்சிக்கானது என மத்திய அரசு கூறுகிறது. யாருடைய வளர்ச்சி? கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சி!
சட்டம் அதன் கடமையை செய்யாது! அரசியல் போராட்டமே விடிவை தரும்!!
இந்த சுரங்க ஏலங்களை எதிர்த்து சட்டப்பூர்வ வாய்ப்புகளை பயன்படுத்தலாமே என சில அறிவாளிகள் போதிக்கின்றனர். அவர்கள் கூறுவதைப் போல சில மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை தொடுத்துள்ளனர். பெரும்பான்மையாக ஆதிவாசி மக்கள் வாழும் ஜார்கண்ட் மாநில அரசு உச்ச நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில் முதல் பாயிண்ட்டாக ‘எல்லா அரசியல் சட்ட விதிகளுக்கு எதிராக, பரந்த நிலப்பரப்பில் சுரங்க நடவடிக்கைகளுக்கு அனுமதியளித்து, இயற்கை, மக்களின் வாழ்வை தாராளமாக சூறையடிக் கொழுக்க கார்ப்பரேட்டுகளுக்கு தாராள அனுமதியளிக்கிறது இந்த ஏல அறிவிப்பு’ என்கிறது அதன் நீதிமன்ற மனு.
மேலும் முக்கியமாக அரசியல் சட்டத்தில் வரையறுத்துள்ள “ஷெட்யூல்ட் பகுதி”, வரம்புகள், மாநில உரிமைகள், பழங்குடி மக்களின் உரிமை, அடர்ந்த வனப்பகுதி, நிலச் சீர்திருத்த சட்ட விதிகள், தேசிய விலங்கான புலிகள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் வாழும் பகுதி என பல அம்சங்களின் அடிப்படையில் இந்த ஏல நடவடிக்கையின் சட்ட விரோத தன்மைகளை எதிர்த்து மனு செய்துள்ளது ஜார்கண்ட் மாநில அரசு. ஏறக்குறைய இதே போன்ற வாதங்களை முன்வைத்து மகாராட்டிர மாநிலம், மபி, சட்டிஸ்கர் என மாநிலங்கள் எதிர்த்து வழக்குகளைத் தொடுத்துள்ளன. உச்ச நீதிமன்றத்தின் யோக்கியதையையும், மின் உற்பத்தி கார்ப்பரேட் நிறுவனங்களான ரிலையன்சு, அதானி பவர் உள்ளிட்ட கொள்ளைக் கூட்டத்தை பாதுகாப்பதையும், வோடஃபோன், ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சார்பான தீர்ப்புகளையும் பார்க்கும் போது நமக்கு நம்பிக்கையில்லை.
மக்களின் போராட்டங்களை கண்டு சிறிதும் பின் வாங்காத மோடி ஏல நடவடிக்கைகளை நிறுத்துவதாக இல்லை. ஜூன் 18ம் தேதி ஏலம் நடப்பதற்கான துவக்கம் பற்றி அறிவிக்கப்பட்டது. ஏலம் முடியவில்லை. ஏனென்றால் அப்போதும் அரசு எதிர்பார்த்த அளவு ஏலதாரர்கள் வரவில்லை. எனவே தனது கார்ப்பரேட் சேவையில் சிறிது மனம் தளராத மோடி ஆகஸ்டிலிருந்து ஏலம் விடப்படும் என அறிவித்துள்ளார்..
நிலத்தடி நீர் அரசுக்குச் சொந்தம் என விவசாயிகள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் நிலத்தடி நீரை எடுக்கக் கூடாது என சட்டம் போட்டுள்ள இந்த அரசுதான், நிலத்திற்குக் கீழே உள்ள கனிம வளங்கள் அரசுக்குச் சொந்தம் என்ற அடிப்படை அரசியல் சட்டத்தைத் திருத்தி, அந்த கனிம வளங்களை தனியாருக்கு தாரை வார்த்ததோடு, அதை தனது லாபமிக்க வணிக நோக்கங்களுக்குப் பயன்படுத்தலாம் என கூவிக் கூவி நாட்டையே விற்கிறது. தேசபக்தி, சுய சார்பு பொருளாதாரம் போன்ற பித்தலாட்டங்களுக்கு முடிவு கட்டாமல் சுரங்கங்களை மட்டுமல்ல நாட்டையும் காப்பாற்ற முடியாது!
இதற்கு வழக்கமான சட்ட பூர்வ போராட்டங்கள், மொட்டை மாடி, அட்டை ஏந்தி போராட்டம், போலீசு அனுமதியுடன் அடையாளப் போராட்டம் போன்றவை உதவாது. ஸ்பெயினில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் போர்க்குணத்துடன் போராடியதைப் போல போர்க்குணமுடன் போராடுவதும் சுரங்க தொழிலாளர்களின் போராட்டத்தை இதர பிரிவு பொதுத்துறை தொழிலாளர்களின் போராட்டத்துடன் இணைப்பதும், அரசியல் ரீதியாக நாட்டை மறுகாலனியாக்காதே! என போர்க் குரலுடன் வீதிக்கு வந்து போராடுவதும் காலத்தின் கட்டாயமாகும். தொழிற்சங்கங்களின் பணி குறுகிய பொருளாதாரவாத அணுகுமுறையில் இருந்து விடுபட்டு நாட்டையும் மக்களையும் காக்கும் போராக மாற வேண்டும்.
சிறையில் இருக்கும் தோழர் வரவர ராவின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்குச் சென்ற பின்னரும் அவருக்கு முறையான மருத்துவ வசதியை ஏற்பாடு செய்ய மறுத்து வருகின்றன மத்திய மற்றும் மகாராஷ்டிர மாநில அரசுகள். மோசமாகி வரும் தோழர் வரவர ராவின் உடல்நிலை குறித்து கடந்த சனிக்கிழமை (11.07.2020) அன்று அவரது குடும்பத்தினர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியுள்ளனர்.
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பீமா கொரேகான் கலவரம் தொடர்பான சதி வழக்கின் கீழ் 11 சமூகச் செயற்பாட்டாளர்கள் பொய்க் குற்றச்சாட்டுகளின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கவிஞரும் புரட்சிகர எழுத்தாளருமான தோழர் வரவர ராவ், புனையப்பட்ட பொய்க் கதைகளின் அடிப்படையில் ஜூன் – 2018-ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் துவங்கிய நிலையில், மும்பை கொரோனா பாதிப்பின் மையப் புள்ளியாக இருக்கும் சூழலில் தேசியப் புலனாய்வு முகமை (NIA) தோழர் வரவர ராவை மும்பை தலோஜா சிறையிலடைத்தது.
விசாரணை என்ற பெயரில் கடந்த 22 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள வரவர ராவை, அவரது உடல்நிலை, கோவிட்-19 தொற்று மற்றும் வயதைக் கணக்கில் கொண்டு பிணையில் விடுமாறு அவரது குடும்பத்தினர் தொடர்ந்து நீதிமன்றத்தில் முறையிட்டு வருகின்றனர். ஆனால் 5 முறையும் அவரது பிணைக்கு என்.ஐ.ஏ எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து அவரது பிணையை மறுத்துள்ளது நீதிமன்றம்.
கடந்த மே 28-ம் தேதி தோழர் வரவர ராவ் சிறையில் மயக்கமடைந்து கீழே விழுந்த சூழலில் அவரை மும்பை ஜே.ஜே. அரசு மருத்துவமனையில் சேர்த்தது சிறை நிர்வாகம். அவரது உறவினர்களையோ தோழர்களையோ அவரைச் சந்திக்க அனுமதிக்கவில்லை. இந்நிலையில் அவரது உடல்நிலையை சுட்டிக் காட்டி அவருக்கு பிணை வழங்குமாறு அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்ததை அடுத்து, அவருக்கு உடல்நிலை சரியாகிவிட்டது என்று கூறி மீண்டும் அவரை சிறையில் அடைத்தது போலீசு.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்தில், தோழர் வரவர ராவ் மற்றும் சிறையில் உள்ள பிற சமூகச் செயற்பாட்டாளர்கள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள ஜனநாயகவாதிகளும் முற்போக்காளர்களும் மோடி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), விசிக, திமுக, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதமெழுதியிருக்கின்றனர்.
இ.க.க (மார்க்சிஸ்ட்)-யைச் சேர்ந்த தோழர் பிருந்தா காரத், வரவர ராவ் உட்பட பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அமித்ஷாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இவை எதையும் கருத்தில் கொள்ளாமல், அவரை சிறையில் உள்ள மருத்துவமனையிலேயே வைத்து சிகிச்சை அளிப்பதாக தேசிய புலனாய்வு முகமை கூறியது. இச்சூழலில்தான் வரவர ராவின் உடல்நிலை மேலும் மோசமாகியிருக்கிறது. கடந்த ஜூலை 10-ம் தேதி அன்று தொலைபேசி மூலம் தோழர் வரவர ராவுடன் பேசிய அவரது குடும்பத்தாருடன் அவரால் தெளிவாகவும், கோர்வையாகவும் பேச முடியவில்லை. இது குறித்து கடந்த ஜூலை 11-ம் தேதி பத்திரிகையாளர்களிடம் பேசிய அவரது குடும்பத்தினர், தோழர் வரவர ராவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், அவரது செயல்பாடுகள் மிகவும் சுருங்கிவிட்டதாகவும் கூறியுள்ளனர்.
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவரது துணைவியார், தன்னுடன் வரவர ராவ் தொலைபேசியில் பேசுகையில் கோர்வையற்று அவர் பேசியதைச் சுட்டிக்காட்டி, கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்னர், நடந்த தனது தந்தை ஈமக் கிரியை மற்றும் 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தனது தாயாரின் ஈமக் கிரியை பற்றி சம்பந்தமில்லாமல் அவர் பேசியதாகவும் கூறுகிறார்.
மேலும், அவரது பேச்சு தெளிவற்று கோர்வையற்று இருப்பதற்கு, அவரது உடலில் ஏற்பட்டுள்ள எலெக்ட்ரோலைட் சமமின்மை மற்றும் சோடியம், பொட்டாசியம் அளவில் ஏற்பட்டுள்ள குறைபாடு ஆகியவையே காரணம் என்றார். சோடியம், பொட்டாசியம் அளவுகளின் குறைபாடு மூளையை கடுமையாகப் பாதிக்கும் என்றும் அவரை உடனடியாக சிறையில் இருந்து பிணையில் விடுவித்து சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவம் தரவேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறையில் அவரை அருகில் இருந்து பார்த்துக் கொண்ட சக போராளியான கான்சால்வேஸ் வரவர ராவால் தனியாக நடக்கவோ, கழிவறைக்குச் செல்லவோ, அல்லது பல் தேய்க்கவோ முடியாத நிலையில் இருக்கிறார் என்று கூறியிருப்பதையும் அவரது குடும்பத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தீவிரமான கணைய ஒவ்வாமை, இருதய நோய்கள், அதிக ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் தோழர் வரவர ராவ் கொரோனாவால் எளிதாகத் தாக்கப்படும் நிலையில் இருக்கிறார். இந்தச் சூழலிலும் அவரை சிறையில் இருந்து பிணையில் விடுவிக்காமல் இருப்பது அவரை நேரடியாகக் கொலை செய்வதற்குச் சமமானது.
தண்டனை பெற்ற சிறைக் கைதியே ஆனாலும் உயிர் வாழும் உரிமை ஒவ்வொரு நபருக்கும் உண்டு. அதை இந்திய அரசியல் சாசன சட்டம் உறுதிபடுத்தியிருக்கிறது. ஆனால், கடந்த 22 மாதங்களாக (கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக) இட்டுக்கட்டப்பட்ட ஒரு வழக்கில் விசாரணைக் கைதியாக சிறையிலடைக்கப்பட்டு அடிப்படை மருத்துவ வசதிகளும் மறுக்கப்பட்டு வருவது வக்கிரத்தின் உச்சமாகும்.
பாசிசமயமாகியிருக்கும் ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பில் நீதிமன்றம் உள்ளிட்டு அனைத்தும் தமது வக்கிர முகத்தை அப்பட்டமாகக் காட்டிக் கொண்டு நிற்கின்றன.
மக்களுக்காகக் குரல் கொடுக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவாக இன்று நாம் குரல் கொடுக்கத் தவறுவது பாசிசத்தை அரவணைத்துக் கொள்வதற்குச் சற்றும் குறைவில்லாதது. பாசிசத்திற்கு எதிராக பெருங்குரல் கொடுப்போம் ! சமூகச் செயற்பாட்டாளர்களுக்கு துணை நிற்போம்!
ஆப்பிரிக்க-அமெரிக்கரும், ஐந்து குழந்தைகளின் தந்தையுமான 46 வயது ஜார்ஜ் பிளாய்ட், கடந்த மே 25 அன்று அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகர வெள்ளையின போலீஸ் அதிகாரி டெர்க் சௌவின்னால் 8 நிமிடங்கள், 46 விநாடிகளுக்கு கழுத்தின் மீது முழங்காலிட்டு அழுத்திக் கொல்லப்பட்டார். பிளாய்ட் கொலை செய்யப்பட்ட வீடியோ வெளியானதும் அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. அமெரிக்காவில் எப்போதெல்லாம் இனக்கலவரங்கள் நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் டாக்டர் மார்டின் லூதர்கிங்கின் வார்த்தைகள் அடிக்கடி எதிரொலிக்கின்றன.
டாக்டர் மார்டின் லூதர் கிங்
“கலகங்கள்தான் புறக்கணிக்கப்பட்டவர்களின் மொழி” என்பது டாக்டர் மார்டின் லூதர் கிங்கின் வார்த்தை. பகலில் அமைதியாக நடக்கும் அணிவகுப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள், இரவில் மட்டும் ஏன் வன்முறை வெறியாட்டங்களாக, பொதுச் சொத்தை சூறையாடுவதாக இருக்கின்றது என்பதை வெளிக்காட்ட முயற்சிக்கும் பண்டிதர்களால் மார்ட்டின் லூதர் கிங்கின் வார்த்தைகள் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படுகின்றன.
இந்த சூழலுக்குப் பெருமளவில் பொருத்தமில்லாத போதும், மார்ட்டின் லூதர் கிங் படுகொலை செய்யப்படுவதற்கு சரியாக 7 மாதங்களுக்கு முன்பு, 1967-ம் ஆண்டு வாசிங்டனில் உள்ள அமெரிக்க உளவியல் கழகத்தின் ஆண்டுக் கூட்டத்தில் பேசிய உரை முக்கியமானது. அங்கு அவரது உரையில். “வெள்ளை அமெரிக்கா தனது ஆன்மாவிலேயே இனவெறியால் நஞ்சூட்டப்பட்டுள்ளதை அது புரிந்துகொள்ள வேண்டும். அந்த புரிதல்கள் கவனமாக ஆவணப்படுத்தப்பட வேண்டும், அதன் தொடர்ச்சியாக இதை நிராகரிப்பது மிகக் கடினம்” என்று கூறினார்.
மேலும் “நீக்ரோ வாழ்க்கையின் எதார்த்தத்தைப் பற்றி துளியும் அறிவற்றவர்களாக வெள்ளை அமெரிக்கர்கள் உள்ளனர் என்பதை, உள்ளபடியே வெள்ளை அமெரிக்கர்களிடம் சமூக விஞ்ஞானிகள் எடுத்துரைக்க வேண்டுமென நீக்ரோக்கள் விரும்புகிறார்கள்” என்று தனது பார்வையாளர்கள் மத்தியில் அறைகூவல் விடுத்தார் மார்ட்டின் லூதர் கிங்.
கோவிட் 19 பரவலால், மூன்று மாத ஊரடங்கிலிருந்து அமெரிக்கா மீண்டு வரும் சூழலில், கவனத்தைச் சிதறடிக்க விளையாட்டோ, வேறு எதுவுமோ தொலைக்காட்சியில் இல்லாத நிலையில், இதுவரை அமெரிக்க போலீஸ் வரலாற்றில் இல்லாதபடி வீடியோவாக பதிவு செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டக்கூடிய, சீர்கேடான மற்றும் மனிதத் தன்மையற்ற கொலைவெறித் தாக்குதலை போலீசு பயன்படுத்தியதைப் பற்றி நாடு முழுவதும் மக்கள் மத்தியில் விவாதம் நடந்தது.
17 வயது டார்னெலா ஃப்ரேசரால் தனது செல்போன் மூலம் கவனமாக ஆவணப்படுத்தப்பட்ட பிளாய்ட் கொலைக் காட்சியானது, அமெரிக்கா தோன்றியதிலிருந்து கறுப்பின மற்றும் இதர நிற மக்கள் இடித்துரைத்து வந்த, தங்கள் மீதான அரசால் அனுமதிக்கப்பட்ட இனவெறி வன்முறையின் எதார்த்தத்தை சாரமாக வெள்ளையின அமெரிக்காவிற்கு அம்பலப்படுத்தியது. கடந்த நான்கு மாத காலங்களில், (பிப்,2020 – மே,2020) வெள்ளையினப் போலீசால் கொல்லப்பட்ட நிராயுதபாணியான கருப்பினத்தவர்களில் பிளாய்ட் மூன்றாவது நபர்.
இதற்கு முன்னர், ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள பிரன்சுவிக் நகரில், ஒரு முன்னாள் சட்ட அமலாக்க அதிகாரியும் அவரது மகனும் மற்றொரு வெள்ளையினத்தவரும் சேர்ந்து தமது புதிய குடியிருப்பிப் பகுதிக்கு அருகே ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆப்பிரிக்க-அமெரிக்கரான 25 வயது அகமது ஆர்பெரியை துரத்திச் சென்று சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
மற்றொரு சம்பவத்தில், இன்னொருவர், மிஸ்ஸோரி மாகாணத்தின், செயிண்ட் லூயிஸில் வசிக்கும் அவசரகால மருத்துவ தொழில்நுட்பவியலாளரான 26 வயது பிரியோனா டெய்லர் தனது படுக்கையில் இருந்த நிலையிலேயே இரகசிய போதைப் பொருள் துப்பறிவாளர்களால் 8 முறை சுடப்பட்டு உயிரிழந்தார். ஏற்கனவே போலீஸ் காவலில் இருந்த சந்தேகத்துக்கிடமான ஒரு நபரின் வீட்டில் முன்னறிவிப்பற்ற தேடுதல் ஆணையை (no-knock search warrant) நடைமுறைப்படுத்தும் முயற்சியில் தவறான வீட்டிற்குள் நுழைந்திருக்கின்றனர்.
அடிமைமுறை முதல் ஜிம் க்ரோ சட்டங்கள் (Jim Crow), சிவில் உரிமைகள் / கருப்பின இயக்கங்கள் வழியாக போதைப் பொருள்கள் மீதான போர் மற்றும் தற்போதைய பெருமளவிலான சிறைவைப்பு காலகட்டம் வரையிலான அமெரிக்காவின் நீண்ட கொடூரமான கருப்பின மக்கள் மீதான தாக்குதல் வரலாற்றில், இந்த சமீபத்திய கொலைகள் புதியதாக சேர்ந்திருக்கின்றன.
முதன்முதலாக ஆப்பிரிக்கர்கள் அமெரிக்கக் கடற்கரைக்குக் கொண்டு வரப்பட்ட 1619-ம் ஆண்டு முதல் 1968-ம் ஆண்டு வரையிலான 349 ஆண்டு காலத்தில், கருப்பின மக்கள் தங்கள் முழுமையான குடியுரிமை உரிமைகளை கொள்கையளவில் 1968-ம் ஆண்டுதான் சமத்துவ வீட்டு வசதிச் சட்டத்தின் (Fair Housing act) மூலம் பெற்றனர். நவீன சிவில் உரிமைகள் சட்டம், அதாவது சிவில் உரிமைகள் சட்டம் 1964 மற்றும் ஓட்டு உரிமைச் சட்டம் 1965 ஆகியவற்றை இயற்றியதன் உச்சமாகவே இச்சட்டம் இயற்றப்பட்டது. இன ஒடுக்குமுறையை நசுக்குவதாக வரையறுக்கப்படும் தற்போதைய அமெரிக்காவில் கருப்பின மக்களின் 401 ஆண்டுகால (1618 – 2020) அனுபவத்தின் 87%-த்தை (1964 வரை) இந்தச் சட்டம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
ஆகவே கடந்த 56 ஆண்டுகளில் மட்டும்தான், இந்த எழுத்தாளரின் வாழ்நாளுக்குட்பட்ட காலகட்டத்தில்தான் அமெரிக்கக் குடியுரிமையிலிருந்து உரிமைகளும், சுதந்திரமும் ஆப்பிரிக்க–அமெரிக்கர்களுக்கு வெளிப்பகட்டாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அமெரிக்காவிலிருக்கும் கருப்பின மக்களின் மீதான கொடூரக் கொலைகள் தடையின்றி தொடர்கின்றன.
எவ்வாறாயினும், இதற்கு முன்னர் பெரும்பாலான அமெரிக்க மாகாணங்களில் உள்ள தற்காப்புச் சட்டங்கள் அனுமதித்துள்ள (Stand–Your-Ground law) சரத்துகளின் படி, வெள்ளையினப் போலீஸ் மற்றும் வெள்ளையின குண்டர்களால் தற்காப்பு என்ற பெயரால் கொல்லப்பட்ட நிராயுதபாணி கருப்பினத்தவர்களின் மரணங்கள் நிகழ்ந்த தருணங்களைவிட தற்போதைய தருணம் வெளிப்படையாகவே மாறுபட்டதாக இருக்கிறது. கடந்த காலங்களில், குறிப்பாக 1960-களின் பிற்பகுதியில், நிராயுதபாணியான கருப்பினத்தவர்கள் கொல்லப்பட்டதையடுத்து நடந்த கலவரங்கள் மற்றும் போராட்டங்களில் கருப்பினத்தவர்களே முதன்மையாகப் பங்கேற்ற நிலையில், இந்தமுறை வித்தியாசத்தை உணர முடிகிறது. ஜார்ஜ் பிளாய்டின் மரணத்திற்குப் பிறகு, 64% வெள்ளையினத்தவர்களும், 19% கருப்பினத்தவர்களும் வாழும் மின்னபொலிஸ் நகரின் வீதிகளில் களமிறங்கிய அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள், கிளர்ச்சியாளர்கள் மற்றும் சூறையாடியவர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் அனைவரும் பல்வேறு பின்னணியிலிருந்து வந்த பல்வேறு இனத்தைச் சேர்ந்த கலவையான மக்களே ஆகும்.
இந்தமுறை, அமெரிக்காவின் பன்முகத்தன்மையை மிக நெருக்கமாக பிரதிபிம்பப்படுத்தும் விதமாக போரட்டக்காரர்களும் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறார்கள். போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் அமெரிக்காவின் சிறிய மற்றும் பெரிய நகரங்கள் மற்றும் மாநகரங்களுக்குப் பரவிவரும் நிலையில் அங்கிருந்து வெளிவரும் புகைப்படங்கள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.
போராட்டங்கள் அமெரிக்கா முழுவதும் மற்றும் தற்போது உலகம் முழுவதும் தொடரும் நிலையில், வெள்ளையின நடுத்தரவர்க்கத்தினர் வாழும் சிறு நகர்ப்புற, கிராமப்புறப் பகுதிகளில் வெள்ளையின போராட்டக்காரர்கள் “கருப்பினத்தவர்களின் உயிரும் முக்கியமானது” (Black Lives Matter) என்ற பதாகைகளை ஏந்தியபடி போராட்டங்களில் கலந்து கொள்வது, இந்தமுறை முந்தைய நிலையை விட வேறுபட்டது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
உலகளாவிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பினும். கோரிக்கைகள் என்னவோ அவற்றின் அடிப்படைஅம்சத்தில், பல தலைமுறைகளாக கருப்பின மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளாகவே இருக்கின்றன. அவையும் கூட வேறுபட்டவையே. ஒவ்வொரு விசயத்திலும், வெள்ளையின உயிருக்கும், பிறவற்றுக்கும் மதிப்பளிக்கும் அளவிற்கு கறுப்பின உயிருக்கும் சமூகம் மதிப்பளிக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கைகளின் அடிப்படையாக இருக்கிறது. அமெரிக்காவில் தற்போதுவரை 401 ஆண்டுகாலத்தில் சுதந்திரத்திற்காகவும், இன சமத்துவம் மற்றும் நீதிக்காகவும் நடைபெற்ற இரத்தம் தோய்ந்த போராட்டத்தின் சாரம்சத்தை “கருப்பினத்தவர்களின் உயிரும் முக்கியமானது” என்ற ஒற்றைவரி எளிமையாகவும், நேர்த்தியாகவும் எடுத்துக் காட்டுகிறது.
தற்போதைய போராட்டங்களும் வேறுபட்டவையே. அவை இனங்களைத் தாண்டி நடப்பவையாக மட்டுமின்றி எல்லை கடந்தும் பெருங்கடல்களைத் தாண்டியும் பரவியுள்ளன. கனடா, ஐரோப்பா ஒன்றியம், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் இதர நாடுகளிலும் ”கருப்பினத்தவர்களின் உயிரும் முக்கியமானது” இயக்கத்திற்கு ஆதரவாகவும் அமெரிக்கா மற்றும் இதர நாடுகளிலும் இருக்கும் அமைப்புரீதியான இனவெறி மற்றும் போலீசு மிருகத்தனத்துக்கு முடிவுகட்டக் கோரியும் போராட்டங்கள் நடக்கின்றன.
இதற்கு முன்னர் கொல்லப்பட்ட 12 வயதான தமிர் ரைஸ் (2014), எரிக் கார்னர் (2014), பிலண்டோ கேஸ்டில் மற்றும் இன்னும் எண்ணற்ற கருப்பினத்தவர்களுக்காக கொந்தளிக்காத வெள்ளையின அமெரிக்கர்கள் பிளாய்ட் போலீசால் கொடூரமாகத் தாக்கிக் கொல்லப்பட்ட வீடியோ வெளிவந்தவுடன் மட்டும் ஏன் கொந்தளிக்கின்றனர்? மார்ட்டின் லூதர் கிங் தனது உரையில் அறைகூவல்விடுத்த, விஞ்ஞானப்பூர்வ வழிமுறையை தமது ஆய்வுக்குப் பயப்படுத்தும், சமூக விஞ்ஞானிகளைப் பொறுத்தவரையில், இந்தக் காணொளி சந்தேகப் புத்தியுள்ள வெள்ளையின சிந்தனையோட்டத்தை ஏற்கச்செய்யப் போதுமான அளவிலான ஆதாரமாக இருக்கிறது. அமெரிக்கா எனப்படும் இந்த ஜனநாயக சோதனையில் கருப்பினத்தவர்கள் போலீஸ் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும் அதே வேளையில், கருப்பினத்தவர்களின் அனுபவமானது இந்த நாட்டில் உள்ள சட்ட அமலாக்கத் துறை மற்றும் குற்றவியல் நீதித்துறையில் தங்களது அனுபவத்திற்கு நேர் எதிராக உள்ளது என்பதை அந்த ஆதாரம் நிரூபித்துள்ளது.
கருப்பினத்தவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதன் மூலம், அமெரிக்காவில் நிலவும் அப்பட்டமான இன சமத்துவமின்மையை கோவிட்-19 அம்பலப்படுத்தியதைப் போல, பிளாய்டின் கொலையானது அமெரிக்காவில் பல நூற்றாண்டுகளாக கருப்பினத்தவர்கள் மீது நடத்தப்படும் அரசு அனுமதித்த மற்றும் சட்டத்திற்கு அப்பாற்பட்ட இனரீதியான வன்முறை மற்றும் அநீதிகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. சாதாரண குடிமக்கள் – குறைந்தபட்சம் – வேற்று நிற மக்கள் தங்களது தினசரி வாழ்க்கையில் நேரடியாக சந்தித்துச் சென்றிருக்கக் கூடிய, அரசின் மிகவும் சர்வவியாபகமான முகவர்களான போலீசுடனான ஆப்பிரிக்க – அமெரிக்கர்களின் மோதல் சம்பவங்கள் பிரச்சினையில் வெளித்தெரியும் ஒரு சிறுபகுதி மட்டுமே.
போலீசுக்கும், கருப்பினத்தவருக்குமிடையிலான மோதல்கள் அமெரிக்க சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவியியுள்ள ஆழமான, அமைப்பு ரீதியான இன ஏற்றத்தாழ்வுகளின் அடையாளமாகும். இது அமெரிக்காவில் உள்ள கருப்பின, பழுப்பின, பழங்குடி மற்றும் பல்வேறு சமூக அடையாளங்களைக் கொண்ட ஆசிய மக்களை பாதித்தாலும், இந்த ஏற்றத்தாழ்வு கருப்பின மக்களின் விளிம்பு நிலையில் தான் அப்பட்டமாக வெளிப்படுகிறது, அமெரிக்க ஆன்மாவில் வரலாற்றுரீதியாகவே இருக்கும், கருப்பினத்தவர்களின் பொருளாதார இழப்பு, சிறைத் தண்டனை, அவர்களை தாக்குதல் தொடுப்பவர்களாக சமூக அடையாளப்படுத்துதல் ஆகியவையே பெரும்பாலான வெள்ளை அமெரிக்கர்களை கருப்பின மக்களின் வாழ்க்கையின் எதார்த்தத்தை புரிந்து கொள்வதிலிருந்து தடுக்கிறது.
தற்பொழுது வெள்ளை அமெரிக்கர்கள் மட்டுமல்ல, உலகமே இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டுள்ள நிலையில், கருப்பின மற்றும் குறிப்பிட்ட அளவிற்கு நிறரீதியாக வேறுபட்ட மக்களைப் பாதிக்கின்ற சமூகப் பொருளாதார விளைவுகள் மற்றும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் குற்றவியல் நீதி ஆகியவற்றிற்கு அவர்களது சொந்தத் தோல்விகளே காரணம் என்ற ஆதாரமற்ற கருதுகோள்களை நிராகரிக்க வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு இருக்கிறது. எந்த வகை சோதனைகளாலும் அதை நாம் செய்யாத பட்சத்தில் அமெரிக்கா என்றழைக்கப்படும் இந்த நாடு நிச்சயம் தோல்வியைத் தழுவும்.
கட்டுரையாளர் : Ronnie A.Dunn
தமிழாக்கம் : – ராம்குமார் செய்தி ஆதாரம்:த ஹிண்டு.
ஹாங்காங் அரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிராக ஹாங்காங்-ல் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்களை ஹாங்காங் – சீன அரசுகள் தொடர்ந்து ஒடுக்கி வருகின்றன.
கடந்த ஜுன் 30 அன்று இரவு 11 மணி முதல் “ஹாங்காங் சிறப்பு ஆட்சிப் பகுதியில் தேசியப் பாதுகாப்பிற்கான மக்கள் சீனக் குடியரசின் சட்டம்” என்று தலைப்பிடப்பட்ட புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வருவதாக அறிவித்தார் ஹாங்காங்கின் தலைமைச் செயலரான கேரி லாம்.
ஹாங்காங்கில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த தேசிய பாதுகாப்புச் சட்டம் குறித்து மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களும், ஜனநாயகக் கோரிக்கையாளர்களும் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். தேசிய பாதுகாப்பு எனும் பெயரில் ஹாங்காங் மக்களின் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பறிக்கும் விதமாக இந்தச் சட்டம் இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர்.
பிரிட்டனின் காலனியாக இருந்த ஹாங்காங் சீனாவிடம் திருப்பிக் கொடுக்கப்பட்ட தினத்தை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 1-ம் தேதியன்று பல்வேறு ஜனநாயக கோரிக்கைகளை முன் வைத்து ஹாங்காங் நகரில் பேரணிகள் நடக்கும். இந்த ஆண்டும், ஜூலை 1-ம் தேதி தேசிய பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வரவிருப்பதை ஒட்டி அதற்கு எதிராக மக்கள் பேரணி மற்றும் போராட்டம் நடத்துவதைத் தடை செய்யும் பொருட்டு கொரோனாவைக் காரணம் காட்டி பொது இடங்களில் கூடுவதற்கும் தடை விதித்தது ஹாங்காங் நிர்வாகம்.
இந்தத் தடையையும் மீறி ஆயிரக்கணக்கானோர் இந்தச் சட்டத்தை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடியிருக்கின்றனர். ஜுலை 1 அன்று நடந்த போராட்டங்களில் போலீசுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்களுக்கும் இடையே நடைபெற்ற பல்வேறு மோதல் சம்பவங்களில், சுமார் 370-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 10 பேர் மீது புதியதாக போடப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. எனினும் ஹாங்காங்கில் இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
ஹாங்காங்-கின் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டமானது, பிரிவினைவாதம், நாசகர வேலை, பயங்கரவாதம், தேசிய பாதுகாப்பை அபாயத்துக்குள்ளாக்க அன்னிய சக்திகளோடு கூட்டுச் சதியில் ஈடுபடுதல் ஆகிய குற்றங்கள் குறித்தும் அதற்கான தண்டனைகள் மற்றும் விசாரணை அமைப்பு பற்றியும் விரிவாகப் பேசுகிறது.
இந்தப் புதிய சட்டத்தின்படி போக்குவரத்து வசதிகள், போக்குவரத்து வாகனங்கள், மின்சாரம், எரிவாயு மற்றும் பிற எரியக்கூடிய, வெடிக்கக் கூடிய பொருட்களை அழித்தல் ஆகிய அனைத்து செயல்பாடுகளும் பயங்கரவாதக் குற்றத்தின் (Terrorism) கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்தியாவைப் போல இனி ஹாங்காங்கிலும் போலீசே வாகனத்தைக் கொளுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும்.
ஹாங்காங் அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஹாங்காங் மீதோ, சீனா மீதோ பொருளாதாரத் தடை விதிக்க வெளிநாடுகளுக்கு கோரிக்கை விடுப்பதோ, ஹாங்காங் சட்டத்திற்கும் கொள்கைகளுக்கும் இடையூறு ஏற்படுத்த அந்நிய நாடுகள், நிறுவனங்கள், அல்லது அமைப்புகளிடமிருந்து உத்தரவுகள் பெற்று செயல்படுவது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தப் புதிய தே.பா.சட்டத்தில் உள்ள அந்நிய நாடுகளுடன் கூட்டுச் சதி என்ற பிரிவின் கீழ் கைது செய்ய முடியும்.
சீனாவின் எந்த ஒரு பகுதியின் ராஜ்ஜிய நிலைமைகளை மாற்றுவது குறித்து அல்லது எந்தப் பகுதியையும் பிரிப்பது குறித்து திட்டமிடுவதும், அதற்கு ஏற்பாடு செய்வதும், அத்தகைய செயல்களுக்கு ஆதரவு தெரிவிப்பதும், அதற்கு உதவுவதும், அத்தகைய செயல்களைத் தூண்டுவதும் கடுமையான பிரிவினைவாதக் குற்றமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி ஹாங்காங் நகரத்தின் சுய நிர்ணய உரிமை குறித்தோ அல்லது திபெத்தின் விடுதலை குறித்தோ யாரேனும் இனி சாதாரணமாகப் பேசினாலும்கூட தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிரிவினைவாதத்தை தூண்டிய குற்றத்திற்காகக் கைது செய்ய முடியும்.
புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால், பெருமளவிலான தண்டத்தொகையும், பத்தாண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சிறைத்தண்டனையும் கூட கொடுக்க முடியும். மேலும் ஹாங்காங்கில் கைது செய்யப்பட்ட நபரை விசாரணைக்காக என்று கூறி சீனாவுக்கு நாடு கடத்தவும் முடியும். இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முறையும் முழுக்க முழுக்க ஜனநாயக விரோதமானதாகவும், ஹாங்காங்-ன் தனிப்பட்ட அடிப்படை சட்டங்களுக்கு முரணாகவும் இருக்கிறது.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரிப்பதற்காக ஹாங்காங் நீதிமன்றங்களில் தனிப் பிரிவுகள் அமைக்கப்படும் என்றும் இத்தகைய வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியை நியமிக்கும் அதிகாரம் ஹாங்காங் நகரத்தின் தலைமைச் செயலருக்கு மட்டுமே உண்டு என்றும் இந்தச் சட்டம் குறிப்பிடுகிறது. ஒருவேளை குறிப்பான ஒரு வழக்கு மிகவும் ‘இரகசியம்’ வாய்ந்தது என தலைமைச் செயலர் முடிவு செய்தால், அந்த வழக்கு விசாரணை வெளிப்படையான நீதிமன்றத்தில் நடத்தப்படாமல், மூடிய அறைக்குள் நடத்த உத்தரவிடும் அதிகாரமும் அவருக்கு உண்டு. மிகவும் முக்கிய வழக்குகளை சீனாவில் உள்ள நீதிமன்றங்களுக்கு மாற்றும் அதிகாரமும் தலைமைச் செயலருக்கு உண்டு.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்கப்படாது. இதன் காரணமாக, அரசியல் கைதிகள் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதற்கும் கடும் தண்டனைகள் விதிக்கப்படுவதற்கும் வாய்ப்புண்டு. குறிப்பாக, ஹாங்காங் மீதான சீனாவின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி வரும் அரசியல் எதிரிகளை துரிதமாக முடக்குவதற்காகவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் பிரிவு 55, சீன அரசின் தேசிய பாதுகாப்பு அலுவலகம் ஒன்று ஹாங்காங்கில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கிறது. அங்கு, “தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் கமிட்டி” ஹாங்காங்-கின் தலைமைச் செயலரின் தலைமையில் அமைக்கப்படும். அவ்வாறு அமைக்கப்படும் கமிட்டியும் அதன் கீழ் செயல்படும் குழுவினரும், ஹாங்காங் நீதிமன்றம் மற்றும் போலீசின் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருப்பர். அதாவது, இந்த பிரிவு அலுவலர்களும், அதிகாரிகளும் போராட்டக்காரர்களின் மீதோ, மக்களின் மீதோ மனித உரிமை மீறலில் ஈடுபட்டாலோ, கொலை , கடத்தல் உள்ளிட்ட பாதகங்களைச் செய்தாலோ ஹாங்காங் சட்டத்தின் கீழ் அவர்களை கைது செய்யவோ தண்டிக்கவோ முடியாது.
மேலும் இந்தக் கமிட்டியில் சீன அரசால் நியமிக்கப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர், இந்த கமிட்டியின் செயல்பாடுகளையும் ஹாங்காங்கிற்கான தேசிய பாதுகாப்புக் கொள்கைகளையும் வகுப்பார். ஊடகங்கள், இணையம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பள்ளி பாடத்திட்டம் வரை இந்தக் கமிட்டி தனது அதிகாரத்தை செலுத்தத்தக்க வகையிலேயே இந்த சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இச்சட்டம், ஹாங்காங்கில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு மேலாக அதிகாரம் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள சட்டங்களிலிருந்த பெயரளவிலான ஜனநாயக அம்சங்களையும் இல்லாமல் போகச் செய்திருக்கிறது. இதை எதிர்த்துத்தான் ஹாங்காங் மக்கள் போராடி வருகின்றனர்.
ஹாங்காங்கில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் இந்தச் சட்டத்தின் மேற்கூறிய சரத்துக்கள் அனைத்தும் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) ,ஊபா சட்டம் (UAPA) மற்றும் என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் (NIA Amendment Act) ஆகியவற்றின் மூலமாக ஏற்கெனவே இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் கீழ் நேரடியாக இயங்கும் என்.ஐ.ஏ பிரிவு போலீசு, என்.ஐ.ஏ. சட்டத் திருத்ததின்படி எந்த ஒரு மாநிலத்திலும் நுழைந்து யாரையும் கைது செய்து டில்லியில் சிறையிலிடைக்க முடியும். பிணை கிடையாது; இத்தகைய பயங்கரமான ஆட்தூக்கி சட்டங்கள் இங்கு கொண்டு வரப்பட்டபோது அதற்கு எதிராக பெருமளவிலான மக்கள் திரள் போராட்டங்கள் எதுவும் இந்தியாவில் எழவில்லை. (பார்க்க: வினவு கட்டுரை)
இந்தியாவின் நிலைப்பாடு :
தற்போது ஹாங்காங்கில் கொண்டு வரப்பட்டிருக்கும், ஜனநாயக விரோத தேசிய பாதுகாப்புச் சட்டத்திற்கு, உலகின் மிகப்பெரிய ‘ஜனநாயக’ நாடான இந்தியா, எவ்வித கண்டனமும் தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் முடிந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், இந்த விவகாரத்தில் மிகவும் அடக்கி வாசித்திருக்கிறது. ஐக்கியநாடுகள் அவைக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினரான ராஜீவ் சந்தர், “சம்பந்தப்பட்ட தரப்பினர் இந்தப் பார்வைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு அதனை முறையாகவும், அக்கறையோடும், பொருட்டாகவும் பரிசீலிக்க வேண்டும். பெருமளவிலான இந்திய சமூகத்தினர் ஹாங்காங்கை தங்களது வசிப்பிடமாகக் கொண்டுள்ள காரணத்தால், இந்தியா இந்த நிலைமைகளை நெருக்கமாக கவனித்துக் கொண்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
இந்த விவகாரத்தில் மட்டுமல்ல, கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவின் எந்த ஒரு மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் வாய் திறக்காமல் மவுனித்து வந்திருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு உலகமே கண்டித்த உய்கூர் முசுலீம் சிறுபான்மையின மக்கள் மீதான சீனாவின் ஒடுக்குமுறைக்கு எதிராக இந்தியா வாய் திறக்கவில்லை. கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள தர்மசாலாவில் நடந்த ஜனநாயகத்திற்கான மாநாட்டில் பங்கேற்க ஹாங்காங் மற்றும் உய்கூர் பகுதியில் இருந்து வரவிருந்த இரண்டு செயற்பாட்டாளர்களுக்கு சீனாவின் மிரட்டலைத் தொடர்ந்து விசாவை ரத்து செய்தது இந்திய அரசு.
கடந்த 2014-ம் ஆண்டு மோடி பதவியேற்ற போது, திபெத்தின் மீதான சீனாவின் உரிமையை எதிர்த்து உருவாக்கப்பட்ட நாடு கடந்த திபெத் அரசின் தலைவரான லேப்சங் சங்கே-விற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இரண்டாம் முறையாக 2019-ம் ஆண்டு மோடி பதவியேற்றபோது, சீனாவின் நற்பெயரைப் பெற வேண்டி, லோப்சங் சங்கே-வை அழைக்கவில்லை (ஆதாரம்: தி வயர்) என்பது குறிப்பிடத்தக்கது.
இவையெல்லாம் சீனாவுக்கும், அதன் மனித உரிமை மீறலுக்கும் ஆதரவாக இந்தியா நிலைப்பாடு எடுத்த தருணங்கள். இப்போதும் சீனாவை மென்மையாகக் கூட கண்டிக்கவில்லை. இதன் பின்னணியில் மோடிக்கும் பாஜக-விற்கும் படியளக்கும் இந்திய தரகுமுதலாளிகளின் நலன் அடங்கியுள்ளது. அதற்கும் மேலாக, மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதில் சீனாவுக்குத் தாம் எவ்விதத்திலும் சளைத்த நாடு இல்லை, என்பதை தமது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் துவங்கி சமீபத்திய என்.ஐ.ஏ. சட்டத் திருத்தம் வரை ஒவ்வொரு தருணத்திலும் இந்தியா நிரூபித்துள்ளதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
ஹாங்காங் போராட்டங்களின் வரலாறு :
ஹாங்காங்கில் கொண்டுவரப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்புச் சட்டம், ஜனநாயக விரோதமாகவும் ஹாங்காங் நகரத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு ஜனநாயக உரிமைகளை மறைமுகமாக ரத்து செய்யக் கூடியதாகவும் இருக்கும் காரணத்தினாலேயே ஹாங்காங் மக்கள் இச்சட்டத்தைக் கடுமையாக எதிர்த்துப் போராடி வருகின்றனர்.
கடந்த 2019-ம் ஆண்டு, முக்கிய வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களை ஹாங்காங் நகரிலிருந்து சீனாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்டத் திருத்த மசோதா ஒன்றை ஹாங்காங் அரசாங்கம் கொண்டுவந்தது. அதற்கு எதிராக அந்த ஆண்டில் ஜூலை 1, அன்று ஹாங்காங் சீனாவோடு இணைந்த தினத்துக்கான பேரணியிலிருந்தே போராட்டங்கள் துவங்கின. கடுமையான ஒடுக்குமுறையை போலீசு மூலம் கட்டவிழ்த்துவிட்டது ஹாங்காங் அரசு. எனினும் விடாப்பிடியாக இந்த ஆட்கடத்தி சட்டத்திற்கு எதிராக ஹாங்காங் மக்கள் போராடினர்.
ஹாங்காங்கின் தலைமைச் செயலரான கேரி லாம்.
இந்தப் போராட்டம் சுமார் 2 மாதங்கள் நீடித்தது. இதன் தொடர்ச்சியாக 2019, செப்டெம்பர் 4-ம் தேதி அன்று இந்தச் சட்டத்தை பின்வாங்கியது ஹாங்காங் அரசு. ஆயினும் அதனைத் தொடர்ந்தும் போராட்டங்கள் நடந்தன. ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டியும், அவர்களை விடுதலை செய்ய வேண்டியும் போராட்டங்கள் தொடர்ந்தன. இந்தப் போராட்டங்களில் சீனாவின் ஆதிக்கத்தை அடையாளப்படுத்தும் கட்டிடங்களும் நினைவுச் சின்னங்களும் தகர்க்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.
இளைஞர்கள் முகமூடி அணிந்து வந்து போராட்டங்களில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, முகமூடி அணியத் தடை விதிக்கும் அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தது ஹாங்காங் அரசு. அந்த அளவிற்கு போராட்டத்தின் வீச்சு பெருமளவில் இருந்தது.
தற்போது இந்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கும் ஹாங்காங்-ன் தலைமைச் செயலர் கேரி லாம்-தான் கடந்த 2019-ம் ஆண்டு இந்த ஆட்தூக்கி சட்டத்தைக் கொண்டுவந்தவர். மக்களின் போராட்டம் வலுத்த பின்னர் இந்தச் சட்டத்தை பின்வாங்கி கொண்டார் ஹாங்காங் தலைமைச் செயலர் கேரி லாம்.
ஹாங்காங்கைப் பொறுத்தவரையில் ஹாங்காங்கின் தலைமைச் செயலருக்குத்தான் உச்சபட்ச அதிகாரம் உண்டு. சுமார் 75 லட்சம் மக்களைக் கொண்ட ஹாங்காங்கின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் தகுதி படைத்த தலைமைச் செயலர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்பதுதான் ஹாங்காங்கில் தற்போது இருக்கும் ஜனநாயகத்தின் லட்சணம்.
ஹாங்காங் : மக்கள் ஆட்சியல்ல – நேரடியான கார்ப்பரேட் ஆட்சி :
தற்போதைய நடைமுறைப்படி, 1200 உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக் கமிட்டியால் ஹாங்காங் தலைமைச் செயலர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்த 1200 பேரில் பெரும்பான்மையினர், பல்வேறு தொழிற்சாலைகள், தேசிய இனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் பிரதிநிதியாக அந்தந்த குழுமங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகும்.
ஹாங்காங் மக்களைப் பொறுத்தவரையில் அங்குள்ள மாவட்டக் கமிட்டிகளின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது. இந்தப் பிரதிநிதிகளும் தேர்வுக் கமிட்டியில் இடம்பெறுவர். ஹாங்காங்கில் இயங்கும் பெரும்பாலான தொழிற்சாலை, தன்னார்வ நிறுவனங்கள் சீனாவைச் சார்ந்து இயங்குவதாலேயே, இவர்களால் அனுப்பப்படும் தேர்வுக்குழு பிரதிநிதிகள் சீனாவின் ஆதரவு பெற்ற வேட்பாளரையே ஆதரிப்பர். ஆகவேதான் சீனாவின் நலன்களுக்கு ஏற்ற வகையிலான சட்டத்தை ஹாங்காங் இன்றளவிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
ஹாங்காங்கில் தற்போது ஜனநாயகம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கும் இந்த தேர்தல் மற்றும் ஆட்சி அமைப்பு முறை, நேரடியாக கார்ப்பரேட்டுகள் மற்றும் அவர்களின் நலன்களுக்காகச் செயல்படும் சிந்தானைக் குழாம்களினால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தியா போன்ற நாடுகளில் மறைமுகமாக நடக்கும் கார்ப்பரேட் ஆட்சி, ஹாங்காங்கில் நேரடியாக நடக்கிறது.
ஹாங்காங் அரசின் அடிப்படை சட்டங்களில் ஹாங்காங் தலைமைச் செயலரை ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுப்பதுதான் உச்சபட்ச இலக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஹாங்காங் அரசின் தலைவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஹாங்காங் மக்கள் காலங்காலமாகப் போராடி வருகின்றனர். அனால் இன்றுவரை அதற்கான நடவடிக்கைகளை ஹாங்காங் அரசாங்கம் எடுக்கவில்லை.
ஹாங்காங் தலைமைச் செயலரை மக்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் ஒரு சட்டதிருத்ததைக் கடந்த 2014-ம் ஆண்டு கொண்டுவந்தது ஹாங்காங் அரசு. அதாவது ஹாங்காங் தலைமைச்செயலரை மக்களே வாக்களித்து தேர்ந்தெடுக்கலாம் (ஆதாரம்: தி கார்டியன்) என்றும், ஆனால் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே வாக்களிக்கத் தகுதியுள்ளவர்கள் என்றும் ஒரு சட்டடத்திருத்தத்தைக் கொண்டு வந்தது. அதாவது தமக்கு (சீனாவுக்கு) சாதகமானவர்களை மட்டுமே வாக்களிப்பதற்கான தகுதியுள்ளவர்களாக அங்கீகரிப்பதும் மற்றவர்களை புறக்கணிப்பதும்தான் இந்தச் சட்டத்திருத்தத்தின் நோக்கம்.
இதற்கு எதிராக மிகப் பெரும் போராட்டங்கள் ஹாங்காங்கில் நடைபெற்றன. உலகப் புகழ் பெற்ற மஞ்சள் குடை போராட்டம் பல வாரங்கள் நீடித்தது. பின்னர் இந்த தேர்தல் சீர்திருத்த நடவடிக்கையை ரத்து செய்தது ஹாங்காங் அரசு.
ஹாங்காங் மீதான சீனாவின் ஒடுக்குமுறை என்பது காஷ்மீர் மீதான இந்தியாவின் ஒடுக்குமுறைக்கு நிகரானது. தற்போது சீனாவின் ஒரு பகுதியாக ஹாங்காங் இருப்பதாகக் கூறப்படுகையில், ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கான போராட்டம் நடப்பதன் காரணம் என்ன என்பது குறித்து அறிய ஹாங்காங்கின் வரலாற்றைச் சற்று பார்க்கலாம்.
ஹாங்காங் – சீனா வரலாறு :
சீனாவின் மன்னராட்சியின் கீழ் இருந்த ஹாங்காங் தீவை கடந்த 1842-ம் ஆண்டு நடந்த முதல் ஓப்பியம் போரில் பிரிட்டன் கைப்பற்றியது. அதன் பின்னர் 1898-ம் ஆண்டு சீனாவிடமிருந்து கூடுதல் நிலப்பரப்புகளையும் சேர்த்து 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது பிரிட்டிஷ் அரசு. பிரிட்டன் ஆட்சியில் ஹாங்காங் ஒரு பெரும் வர்த்தக நகராக உருவாகியது.
தோழர் மாவோவின் தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1949-ம் ஆண்டு சீனாவில் புரட்சியைச் சாதித்து மக்கள் சீனக் குடியரசைக் கட்டியமைத்தது. அப்போதும் ஹாங்காங் பிரிட்டிஷ் காலனியாகவே இருந்துவந்தது.
பிரிட்டிஷ் காலனிய அரசை எதிர்த்து பல்வேறு விடுதலைப் போராட்டங்கள் ஹாங்காங்கில் நடந்துள்ளன. அவை அத்தனையும் பிரிட்டிஷ் அரசால் ஒடுக்கப்பட்டது. பின்னர் 1982-ம் ஆண்டு ஹங்காங்கை சீனாவிடம் ஒப்படைக்கக் கோரி சீன அரசு பிரிட்டிஷ் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் விளைவாக 1997-ல் ஹாங்காங்கை சீனாவிடம் கைமாற்றுவதற்கான வேலைகளை இருநாடுகளும் தொடங்கின. ஹாங்காங்-ல் பிரிட்டன் நடைமுறைப்படுத்தி வந்த அதே ஆட்சி முறைகளையும், ஜனநாயக உரிமைகளையும் 2047-வரை (50 ஆண்டுகளுக்கு) நீடிக்கும்படியான மற்றும் அங்கு முதலீடு செய்திருக்கும் தமது நாட்டு முதலாளிகளின் நலனைப் பாதுகாக்கும்படியான நிபந்தனைகளுடன் 1997-ம் ஆண்டு ஹாங்காங் சீனாவிடம் கைமாற்றிக் கொடுக்கப்பட்டது. அதாவது பிரிட்டனின் காலனியாக இருந்த ஹாங்காங், சீனாவின் காலனியாக தாரைவார்க்கப்பட்டது.
இந்த ஐம்பதாண்டுகளும் சீனாவுக்கும் ஹாங்காங்கிற்கும் இருக்கும் உறவு – “ஒரே நாடு, இரண்டு அமைப்பு முறை” என்பதாகும். அதாவது சட்டப்படி ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதியாகும். ஆனால் ஹாங்காங்கிற்கு என தனியான அடிப்படை அரசியல் சட்டமும், நீதித்துறையும், தன்னாட்சி கொண்ட நிர்வாக அரசும் நீடிக்கும். பல கட்சி ஜனநாயகம், பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை ஆகியவை எல்லாம் ஹாங்காங்கில் உண்டு. ஐம்பதாண்டு ஒப்பந்தம் முடிந்த பிறகு ஹாங்காங் அரசு எப்படி இயங்கவேண்டும் என்பதை சீனா முடிவு செய்யும். இதுதான் இந்த ஒப்பந்தததின் சாரம்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது முதல் இன்றுவரை தனது ஆதிக்கத்தை படிப்படியாக ஹாங்காங்கில் நிலைநாட்ட சீனா தொடர்ந்து எடுத்து வரும் பல்வேறு முயற்சிகள் மக்கள் போராட்டத்தால் தோல்வியடைந்த நிலையில், இனி போராட்டங்களே நடைபெறாத வகையில் தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஹாங்காங் நகரம் அரசியல்ரீதியில் இரு பிரிவாக பிரிந்துள்ளது. இந்தியாவில் போலீசு ஒடுக்குமுறைக்கும், வலதுசாரி அரசியலுக்கும் ஆதரவாளர்கள் இருப்பது போல ஹாங்காங்கிலும் சீனாவின் ஒடுக்குமுறை சட்டங்களை ஆதரிக்கும் பிரிவினரும் இங்கு இருக்கின்றனர். அதே சமயத்தில் முழுமையான ஜனநாயக உரிமையையும், சீனாவின் பிடியிலிருந்து விடுதலையைக் கோரும் பிரிவினரும் இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட நாளில் இருபிரிவினரும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பெரும் பேரணிகளை நடத்துகின்றனர். இதில் மோதலும் ஏற்படுகிறது. சீன மேலாதிக்கத்தை ஆதரிக்கும் பிரிவினருக்கு ஆதரவாகவே ஹாங்காங் அரசும் போலீசும் செயல்படுகின்றன.
ஹாங்காங் மக்களைப் பொறுத்தவரையில் 1997-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஹாங்காங் ஒப்படைப்பு என்பது, பிரிட்டிஷ் காலனியிலிருந்து சீனாவின் காலனியாக ஹாங்காங் மாற்றப்பட்டதே ஒழிய காலனியாக்கத்திலிருந்து பெறப்பட்ட விடுதலை அல்ல. சீன அரசின் ஆசி பெற்ற கார்ப்பரேட்டுகளால் நடத்தப்படும் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று குறைந்தபட்ச முதலாளித்துவ ஜனநாயக முறையிலான தேர்தல், எழுத்துரிமை, பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் ஆகியவை வேண்டும் என்பதே ஹாங்காங் மக்களின் கோரிக்கை.
ஒரு ஏகாதிபத்தியமாக வளர்ந்து வரும் சீனா, கம்யூனிஸ்ட் ஆட்சி எனும் போர்வையில் சர்வாதிகார ஆட்சியை நடைமுறைப்படுத்திவருகிறது. மக்கள் மீது ஒடுக்குமுறையைச் செலுத்துகிறது. தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளின் சுயாட்சி உரிமையைப் பறிக்கிறது. இந்தியாவும் ஜனநாயகம் எனும் பெயரில் சர்வாதிகார ஆட்சியையே நடத்தி வருகிறது. மக்களை ஒடுக்குகிறது. மாநிலங்களின் சுயாட்சி உரிமையை பறிக்கிறது.
சீன அரசின் இது போன்ற ஒடுக்குமுறை முயற்சிகளை இதுவரை தங்களது போராட்டத்தால் முறியடித்திருக்கின்றனர் ஹாங்காங் மக்கள். இந்த முறையும் அவர்கள் வீதியில் தான் இருக்கிறார்கள். வெல்வதற்கான வாய்ப்பு உண்டு ! ஆனால் இதே ஒடுக்குமுறைகளை காலங்காலமாக அனுபவித்து வரும் நாம், எதிர்த்துப் போராடாமல் அதனோடு வாழப் பழகியிருக்கிறோம் என்பதுதான் கசப்பான உண்மை ! மிகப்பெரும் அபாயமும் கூட !
திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டம் 39-வது வார்டில் உள்ள இந்திரா நகர் பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பெரும்பாலானவர்கள் கார் உடைக்கும் கூலித் தொழிலாளர்கள். இங்கு போதிய இடவசதி இல்லாததால் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதி. தனிநபர் இல்ல கழிவறை கட்டுவதற்கு போதிய இட வசதியோ, பணமோ இல்லாதவர்கள். பொதுக்கழிப்பிடமும் இல்லாத காரணத்தால் ஆண், பெண் அனைவரும் அருகில் உள்ள திறந்தவெளிப் பகுதியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள். மழைக்காலங்களில் நோய்த்தொற்றுக்கும் உள்ளாகிறார்கள்.
மேலும் இப்பகுதிக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு குடிக்க வருபவர்கள் இப்பகுதி பெண்களிடம் குடித்து விட்டு தவறான முறைகளில் நடந்து கொள்கிறார்கள். இது பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்திலும் கூட பிளீச்சிங் பவுடர் தெளிப்பது, சாக்கடைகளை சுத்தம் செய்வது போன்ற சுகாதாரப் பணிகளை செய்வதில்லை.
இப்பகுதியில் உள்ள மக்கள் அதிகாரம் உறுப்பினர்கள் இப்பிரச்சினை குறித்து பொது மக்களிடம் பேசி பொதுமக்கள் சார்பாக அருகில் உள்ள கோட்ட அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. “பொது கழிப்பறை கட்டுவதற்கு தற்போது மாநகரட்சியில் பணம் ஒதுக்கவில்லை. வேண்டுமானால் தனி நபர் இல்ல கழிவறை கட்டித்தருவதாக” மாநகராட்சி அதிகாரிகள் கூறினர். “தனிநபர் இல்ல கழிவறை கட்டுவதற்கான போதிய இட வசதி இல்லாத காரணத்தால்தான் பொதுக் கழிப்பறை வேண்டும் என்கிறோம்” என பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இந்திரா நகர் பகுதியில் குளியளறையுடன் கூடிய பொதுக்கழிப்பிடம் அமைப்பதற்கு போதிய நிதி ஒதுக்கித் தருமாறு மாநகராட்சி ஆணையரிடம் நேற்று (09.07.2020) மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் லெ.செழியன் தலைமையில் பகுதி மக்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டது.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் எனும் பெயரில் மாநகராட்சியின் மைய பகுதிகளில் அலங்கார விளக்குகள், செயற்கை நீரூற்றுகள், சாலையோர பூங்காக்கள், நடைபாதையை அலங்கரிப்பது போன்ற பல்வேறு திட்டங்கள் கோடிக்கணக்கான ரூபாய்களில் செய்யப்படுகிறது. அதுவே சாதாரண உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை கூட செய்துகொடுக்க மறுக்கிறார்கள் அல்லது அதற்காக பெரும் போரட்டத்தையே நடத்த வேண்டியுள்ளது. அப்படி தொடர்ச்சியாக வழியுறுத்தியதன் பின்புதான் தற்போது மின் விளக்குகளும், தண்ணீர் குழாய்களும் சரி செய்யப்பட்டுள்ளது. தனிநபர் கழிப்பறை கட்டவோ மக்களிடம் இடம் இல்லை. அதிகாரிகளிடமோ பொது கழிப்பறை என்ற பேச்சுக்கே இடமில்லை இதுதான் தூய்மை இந்தியா. “நல்லா இருக்கு திட்டமெல்லாம் எழுதி வச்சு நக்க சொன்னான்…” எனும் ம.க.இ.க பாடல் வரிகள்தான் ஞாபகம் வருகிறது.