Tuesday, July 29, 2025
முகப்பு பதிவு பக்கம் 331

தளர்ந்த வயதிலும் தளராமல் உழைக்கும் டோக்கியோவின் வயோதிகர்கள் ! – படக்கட்டுரை

0

டோக்கியோ மேற்கு புறநகர் பகுதியான ஹிகாஷிமுராயமா, மதுபான விடுதி நடத்தி வருகிறார் 80 வயதான இந்தப் பெண். உணவுகள் பரிமாறுவது நிறுத்தப்பட்டாலும், பானங்கள் இன்னமும் வழிந்தோடியபடியே இருக்கின்றன.

***

தனது சொந்த நகரமான க்யூஷு-விலிருந்து 14 வயதில் நெரிமா நகரத்துக்கு ரயிலேறிவந்த இந்த மதுபான விடுதியின் உரிமையாளருக்கு வயது 83. ஃபிரெஞ்சு சமையல் கலைஞராக சப்போரா மற்றும் டோக்கியோவில் பணியாற்றிய இவர், 39 வருடங்களுக்கு முன் இந்த மதுபான விடுதியைத் திறந்தார். கடந்த ஆண்டு இதய பிரச்சினைகள் காரணமாக சில மாதங்கள் இந்த விடுதி மூடப்பட்டிருந்தது. மீண்டும் திரும்பிய இவர், வாரத்தின் ஆறு நாட்களை இங்கேயே கழிக்கிறார்.

***

அறுபது ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய கணவருடன் இணைந்து இந்த மதுபான விடுதியைத் தொடங்கினார் தற்போது 93 வயதாகும் இந்த மூதாட்டி. இப்போது தனியாக இருக்கும் இவர், பல இரவுகளில் விடுதியைத் திறந்து வைத்திருக்கிறார். டோக்கியோவிலிருந்து மேற்கில் இருக்கும் ஒகுடாமாவில் புதிதாக கட்டப்பட்ட அணைக்காக வசிப்பிடங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்தபோது, இவர் குடும்பத்திலிருந்து பிரிந்து அங்கேயே இருந்துவிட்டார். வாடிக்கையாளர் வரும்வரை வானொலியைக் கேட்டுக்கொண்டிருக்கும் இவர், யார் வந்தாலும் புன்னகையோடு பறிமாறக் காத்திருக்கிறார்.

***

சுஷி சமையல் கலைஞரான இவர், 60 ஆண்டுகளுக்கு முன்பு அடாச்சி நகரத்தில் உணவகத்தைத் தொடங்கினார். அவருடைய மகன் பெரும்பாலான பணிகளைக் கவனித்துக்கொண்டாலும், உணவு தயாரிப்பிலும் பானங்களை பறிமாறுவதிலும் இன்னமும் இவர் உதவிக் கொண்டிருக்கிறார்.

***

நகானோ-வின் அமைதியான பகுதியில் 1935-ம் ஆண்டு இந்த மீன் விற்பனையகம் தொடங்கப்பட்டது. தன்னுடைய குடும்பத் தொழிலை இப்போதும் நடத்தி வருகிறார் இவர்.

***

பாரம்பரியமாக காலணிகளை உருவாக்கும் இந்தக் கடை, அசாகுசா-வில் 1930-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடங்கியவரின் கொள்ளுப் பேரன் இவர். ஆனால், இவர்தான் இந்தப் பணியை செய்யப்போகும் இறுதி நபர். இவர் ஓய்வுபெற்றால், இந்தத் தொழிலும் இவரோடு நின்றுவிடும்.

***

அகிமோனே பழைய மீன் சந்தை அருகே உள்ள, இந்த சிறிய காஃபி கடை வாரத்தின் இரண்டு நாட்கள் மட்டுமே திறந்திருக்கும். அதுவும் காலை 7 மணியிருந்து 9 மணிவரை மட்டுமேயான இரண்டு மணி நேரம் மட்டும்தான். ஆனால், 90 வயதான இதன் உரிமையாளர் இதுவே போதுமென சொல்கிறார்.

***

மற்றொரு காஃபி கடையின் இந்த உரிமையாளர், தன்னுடைய 80-களில் இருக்கிறார்.  அனைத்து நாட்களிலும் தன்னுடைய கஃபே-வை திறந்து வைத்திருக்கிறார். இந்தக் கடை இரண்டு அடுக்குகளால் ஆனது. தனியாக இதை நடத்துகிற இவர், நாள் முழுவதும் இரண்டு அடுக்குகளுக்கும் படிக்கட்டுகளில் ஏறி இறங்குகிறார்.

***

பழைய டோக்கியோவின் கடைத்தெருவான மினோவா-வில் பாரம்பரிய வழிமுறைகளில் ஜப்பானிய காய்கறிகளை வைத்து ஊறுகாய் தயாரிப்பதை தினமும் செய்கிறார் இவர்.

***

92 வயதான இந்தப் பெண், தன்னுடைய குழந்தைகளுக்கான இனிப்பு மற்றும் பொம்மைக் கடையை ஹிகிபுனே-வில் வைத்திருக்கிறார். ஐம்பதாண்டுகளாக இந்தக் கடையை நடத்திவருகிறார் இவர். இது தன்னை இளமையாக உணர வைப்பதாக கூறும் இவர், கணவரை அருகே வைத்திருப்பது அப்போதும் இப்போதும் உதவிக் கொண்டிருப்பதாக சொல்கிறார்.

***

நெரிமா நகரத்தில் 40 ஆண்டுகளாக தன்னுடைய சிறிய மதுபான விடுதியை நடத்தி வருகிற இவருக்கு வயது 82.

***

அகிஹாபாராவில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் இந்தப் பகுதி வெகுவாக மாறிவிட்டது. ஆனால், உண்மையில் சிறிய கடையான இந்தக் கடை மட்டும் மாறவே இல்லை.

***

தொழிலில் ஐம்பது ஆண்டுகளாக உள்ள இந்த உரிமையாளரின் வயது 74. வாரத்தின் ஆறு நாட்களும் நாளின் எட்டு மணி நேரமும் கடை திறந்திருக்கும். அத்தனை பொழுதையும் சிரித்தபடியே கழிக்கிறார் இவர்!

***

கொமகோமில் உள்ள இந்தக் கடை மூடப்பட்டாலும், அதன் உரிமையாளர் தள்ளுவண்டியில் இறைச்சி உணவகத்தை நடத்திவருகிறார்.

***

வயதான ஜப்பானிய மக்கள் பணியாற்றுவதை உற்சாகமாகச் செய்தாலும், யுனோவில் உள்ள இந்த மனிதர், அவ்வளவு மகிழ்ச்சியாக காட்சியளிக்கவில்லை.

***

இடாபாஷியில் உள்ள தன்னுடைய சிறிய உணவகத்தில் கடந்த 46 வருடமாக வாரத்தின் ஆறு நாட்களும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் இவர். தன்னால் முடிந்தால் இன்னும் 46 ஆண்டுகள் இப்படியே பணி செய்வேன் என்கிறார்.

***

அகிஹாபாராவில் உள்ள பொருட்களால் நிறைக்கப்பட்ட மற்றுமொரு சிறிய கடை.

***

சில ஆண்டுகளுக்கு முன்பு கிராமப்பகுதிகளிலிருந்து தங்களுடைய பொருட்களை டோக்கியோவுக்கு பயணித்து வந்து விற்கும் பெண்களை காண்பது பொதுவாகக் காணக் கூடிய காட்சியாக இருந்தது. இப்போது அது அரிதாகிவிட்டது என்றாலும், யுனோவிலிருந்து பயணிக்கும் இந்த பெண், அப்படிப்பட்டவர்களில் இறுதியானவராக இருப்பார்.


கலைமதி
நன்றி : தி கார்டியன்

மோடியின் புதிய இந்தியாவில் 18 ஆண்டுகள் காணாத வாகன உற்பத்தி வீழ்ச்சி !

2

மோட்டார் வாகன உற்பத்தி கடந்த 2018 மே மாதத்தை ஒப்பிடும் போது இந்த வருடம், மே மாதத்தில் 20.55% குறைந்திருக்கிறது. பொதுவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி, கடன் வர்த்தக சரிவு, வரி – காப்பீடு ஒழுங்கு முறைகளில் மாற்றம் காரணமாக வாகன உற்பத்தித் துறை சரிந்திருக்கிறது.

இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம் ( Society of Indian Automobile Manufacturers (SIAM) ) வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி, தொழிற்சாலைகளிலிருந்து முகவர்களுக்கு விற்பனை செய்யப்படும் வாகனங்கள் பெரும் சரிவை சந்தித்திருக்கின்றன. இதில் இலகுரக வணிக வாகனங்கள் மட்டும் ஒரு விதி விலக்கு.

“பொருளாதார வளர்ச்சியின்மை காரணமாகவே இந்த சரிவு நடக்கிறது. கடந்த வருடத்தில் கேரளா வெள்ளத்தில் தத்தளித்த போதே இந்த விற்பனை குறைவு ஆரம்பித்துவிட்டது. மேலும் எரிபொருள் விலை உயர்வும் இந்த நெருக்கடியை தந்திருக்கிறது…” என்கிறார் வாகன உற்பத்தியாளர் சங்கத்தின் இயக்குநர் மாத்தூர்.

சென்ற 2018 அக்டோபர் மாதத்தின் பண்டிகை (தீபாவளி போன்ற) காரணமாக வாகன விற்பனை கொஞ்சம் உயர்ந்திருந்தாலும், அதற்கடுத்த மாதங்களிலிருந்து தற்போதைய மே மாதம் வரை வாகன விற்பனை பெரிதும் குறைந்திருக்கிறது.

மே 2018-ம் ஆண்டில் பயணிகள் வாகனங்கள் 3,01,238 யூனிட்டுகள் விற்பனை ஆனது என்றால் 2019 மே மாதத்தில் விற்பனை 2,39,347 யுனிட்டுகளே விற்பனையாகி இருக்கின்றன. இந்த அளவு விற்பனை சரிந்திருப்பது என்பது கடந்த செப்டம்பர் 2001-ம் ஆண்டில் நடந்தது. அப்போதும் விற்பனை 21.91% அளவுக்கு குறைந்திருந்தது. தற்போது பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு விற்பனை குறைந்திருக்கிறது.

விற்காத வாகனங்களால் முகவர்களின் சுமை கூடியிருக்கிறது. வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன் கொடுக்க மறுப்பதால், அவர்களால் கொள்முதலும் செய்ய இயலவில்லை.

படிக்க:
♦ இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி !
♦ கார்கள் : வளர்ச்சியின் அறிகுறியா ? முதலாளித்துவ அழிவின் குறியா ?

வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் நடந்துவரும் தொடர் நெருக்கடியாலும், வங்கிகளும் எளிதில் கடன் கொடுக்க மறுப்பதாலும் பொதுவில் கடன் பெறுவது சிரமமாகிறது.

“பல்வேறு போக்குகள் இந்த நெருக்கடிக்குக் காரணமாக இருக்கின்றன. கார்களை வாங்கும் விருப்பம் மக்களிடையே குறைந்திருக்கிறது. அதற்குக் காரணம் நிதி நிறுவனங்களின் நெருக்கடி. 7 இலட்சம் ரூபாய் வரை விற்கப்படும் அறிமுக வாகனங்களின் விற்பனை அதனால் பெரிதும் சரிந்திருக்கிறது.” என்கிறார் டிலோட்டி நிறுவனத்தைச் சேர்ந்த குஷால் சிங்.

“கடந்த இரண்டு மூன்று வருடங்களாக ஊரகப் பகுதிகளில்தான் வாகன விற்பனை அதிகம் நடந்தன. விவசாயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும், விவசாயத்தில் இருந்து வரும் வருமானம் குறைந்து விட்டதாலும் கடந்த இரு வருடங்களாக வாகன விற்பனை பாதித்திருக்கிறது. கடந்த எட்டு மாதங்களாக நிலைமை இன்னும் மோசம்” என்கிறார் வாகன முகவர்களின் கூட்டமைப்பு துணைத் தலைவரான வின்கேஷ் குலாட்டி(Vinkesh Gulati).

‘பாரத்ஸ்டேஜ் ஆறு’ எனப்படும் வாகன ஒழுங்கு, 2020-ம் ஆண்டிலிருந்து அமல்படுத்த இருப்பதால் வாகன உற்பத்தியாளர்கள் தற்போது உற்பத்தி செய்யும் வாகனங்களில் அப்டேட் செய்வதில்லை என்பது ஒரு துணைக் காரணமாகும்.

அதே போன்று புதிய காப்பீட்டு கொள்கைகளும் காரணமாக இருக்கின்றன. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி கார்களுக்கு மூன்று வருடங்களும், இருசக்கர வாகனங்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு சேர்த்தும் காப்பீடு கட்டணம் கட்ட வேண்டும். இதனால் கடையில் விற்கப்டும் வாகனங்களின் விலை 7 முதல் 8% வரை உயர்ந்திருக்கிறது.

ஒட்டு மொத்தமாக அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் தமது உற்பத்தியை குறைத்து வருகின்றனர். இந்த வாகன உற்பத்திக் குறைவு, மற்றும் விற்பனைத் தேக்கத்தினால் பாதிக்கப்படுபவர்கள் ஒப்பந்தத் தொழிலாளிகள்தான். வாகன தொழிலில் இருக்கும் தொழிலாளிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தொழிலாளிகள்தான். அவர்கள் அனைவரும் அல்லது கணிசமானோர் வேலையிழப்பர்.

மாருதி, மகேந்திரா போன்ற பெரிய நிறுவனங்கள் உற்பத்தியை குறைக்கவோ, நிறுத்தவோ செய்யும் போது தொழிலாளிகள் ஆயிரக்கணக்கில் வேலை இழப்பர். வருகின்ற பட்ஜெட்டில் புதிய அரசு ஏதாவது பார்த்து ஆவண செய்ய வேண்டும் என வாகன முகவர் சங்கத்தினர் கோருகின்றனர்.

28%-ஆக இருக்கும் ஜி.எஸ்.டி வரியை 18%-ஆகக் குறைப்பது, பழைய கார்களை அழிப்பதை கொள்கையளவில் கொண்டு வருவது, இதனால் மக்கள் பழைய கார்களை அழித்து விட்டு புதிய கார்களை வாங்க இயலுமென்றும் அச்சங்கத்தினர் கூறுகிறார்கள். இப்படித்தான் அமெரிக்காவில் கார் விற்பனையை செய்கிறார்கள். செல்போன்களில் பழையதை கடாசி விட்டு புதியது வாங்குவது போல கார்களையும் மாற்ற வேண்டுமாம்.

மாருதி கார் நிறுவனம் தனது உற்பத்தியை 18% குறைத்துள்ளது. இதை பங்குச் சந்தைக்கு அனுப்பிய கடிதத்திலும் குறிப்பிட்டுள்ளது. மாருதி நிறுவனத் தயாரிப்புகளில் அதிகம் விற்பனையாகும் சிறிய ரகக் கார்களான ஆல்டோ, ஸ்விப்ட், டிசையர் போன்றவற்றின் உற்பத்தி 42% வரை குறைத்துள்தாகவும் மாருதி தெரிவித்துள்ளது.

மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனமோ 13 நாட்களுக்கு உற்பத்தியை முற்றிலும் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இருசக்கர வாகன விற்பனையும் கணிசமாக சரிந்திருப்பதாக முகவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

படிக்க:
♦ ரத்தன் டாடா + நரேந்திர மோடியின் கனவுக்கார் நானோவின் மரணம் !
♦ 100 நாட்களுக்குள் 46 அரசு நிறுவனங்களை ஒழித்துக்கட்டத் துடிக்கும் மோடி அரசு !

மொத்தத்தில் ஐந்தில் ஒரு பங்கு வாகன உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இலட்சக்கணக்கான ஒப்பந்த தொழிலாளிகள் வேலை இழக்கப் போகின்றனர். வாகன உற்பத்தியாளர்களை சார்ந்து பிழைக்கும் ஆயிரக்கணக்கான சிறு, நடுத்தர நிறுவனங்களும் பாதிக்கப்படும். அங்கும் வேலையிழப்பு கணிசமாக இருக்கும். மோடி அரசு பதவி ஏற்றபிறகு இப்படித்தான் புதிய இந்தியா ஆரம்பித்திருக்கிறது.

முதலாளித்துவ நெருக்கடி என்றால் என்ன என்பதற்கு இந்த வாகன விற்பனை தேக்கம் ஒரு நல்ல சான்றாகும். சந்தைக்காக உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள்; வாங்க ஆள் இல்லாமல் தேங்குகின்றன. உடனே நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைக்கின்றன. தொழிலாளிகள் வேலையிழப்பர்.

இதற்கு முன்னாடி கார்கள் விற்பனை கன ஜோராக நடந்ததா என்றால் அப்படியும் இல்லை. நடுத்தர வர்க்கத்தின் நுகர்வு மோகத்தை கூட்டி விட்டு கடன் ஏற்பாடு செய்து, அவர்களது எதிர்கால வருமானத்தை இலக்கு வைத்து இன்னும் பல்வேறு முறைகளில் விற்பனை செய்தார்கள். தற்போது அவை எல்லாம் முட்டுச் சந்துக்குள் வந்து விட்டன. விவசாய வீழ்ச்சி, இதுவரை இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவை இந்த நெருக்கடியோடு தொடர்புடையவையாக இருக்கின்றன. முதலாளித்துவம் சமூகத்தை அழிக்கும் விசச் சூழல் இப்படித்தான் சங்கிலித் தொடர் போன்று பல அழிவுகளை ஏற்படுத்துகிறது.


மதன்
செய்தி ஆதாரம் : ஹிந்துஸ்தான் டைம்ஸ், தி இந்து

மீம் போட்டா ஜெயிலு ! பாம் போட்ட பார்லிமெண்ட் ! – கருத்துப்படம்

பாகிஸ்தான் சாலையில் விராட் கோலியின் ரசிகன் !

பாகிஸ்தான் வீரரை அடையாளப்படுத்தி – ஒருவன் இந்திய சாலைகளில் நடமாடியிருந்தால் அவன் விசாரணையின்றியே கொல்லப்பட்டிருப்பான் !

கருத்துப்படம் : வேலன்

♦ ♦ ♦

இந்துக்களின் சாவைப்பத்தி நம்ம நாட்டுல இந்துக்களே கவலைப்படறதில்ல !

ஆமாமா… ஆண்டி ஜி… !

காந்தி – ரயில் விபத்து
கவுரி லங்கேஷ் – பன்றிக் காய்ச்சல்
ஹேமந்த் கர்காரே – ஃபுட் பாய்சன்
கோவிந்த் பன்சாரே – ஸ்ட்ரோக்
தபோல்கர் – நீரிழிவு
நீதிபதி லோயா – பல் வலி

கருத்துப்படம் : வேலன்

♦ ♦ ♦

மீம் போட்டா ஜெயிலு ! பாம் போட்டா பார்லிமெண்ட் ! – இதுதான் இந்தியா !

 

கருத்துப்படம் : வேலன்

♦ ♦ ♦

பதன்கோட் நீதிமன்றம் வெளியிட்ட எதிர்கால பாஜக MP-க்கள் !

கருத்துப்படம் : வேலன்


இதையும் பாருங்க…

பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி

வரலாறு காணாத வறட்சி – ஆயிரக்கணக்கான கிராமங்கள் காலியாகின்றன !

0

ரலாறு காணாத வெப்பத்தினால் நூற்றுக்கணக்கான கிராமங்களிலிருந்து மக்கள் குடிநீரைத் தேடி வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். சமீப வாரங்களாக இந்தியா முழுவதும் கடும் வெப்பம் நிலவி வருகிறது.

கடந்த வாரம் திங்களன்று (3.6.2019) தலைநகரம் புது தில்லி ஜூன் மாதத்திலேயே அதிகமான வெப்பமாக 48 டிகிரி செல்சியசை கண்டது. ராஜஸ்தான் மாநிலத்தின் சாரு நகரில் வெட்பம் 50.8 டிகிரியைத் தொட்டது. இது பூமியிலேயே அதிக வெப்பம் நிலவும் பகுதிகளில் ஒன்றாகும்.

மேலும் தெற்கே சென்றால், வணிகத் தலைநகராம் மும்பையிலிருந்து 250 கி.மீட்டர் தொலைவில் உள்ள கிராமங்கள் அனைத்தும் வறட்சியால் வெறிச்சோடிக் கிடக்கின்றன. ஒரு மதிப்பீட்டின் படி 90% மக்கள் இங்கிருந்து வெளியேறியிருக்கிறார்கள். வயதானவர்கள், கால்நடைகளை தவிர்த்து விட்டு, இந்த இடப்பெயர்வு நடந்து வருகிறது. மாராட்டிய மாநிலத்தின் பீட் பகுதிக்கு அருகே இருக்கும் ஹத்கார்வாடி கிராமத்திலிருந்து ஏறக்குறைய அனைத்து மக்களும் காலி செய்து வெளியேறி விட்டார்கள்.

அடிபம்பு குழாய்களும், கிணறுகளும் 45 -டிகிரி செல்சியசஸ் வெப்பத்தில் வறண்டு போய்விட்டன. அரசு அதிகாரிகளது மதிப்பீட்டின்படி 1972-ம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சத்தில் இரண்டரை கோடி மக்கள் பாதிக்கப்பட்டார்கள். தற்போதைய வறட்சி அதையும் தாண்டிவிட்டது என்கிறார்கள்.  2018 டிசம்பர் முதல் 2019 மே மாதம் வரை ஹத்கர்வாடி கிராமத்தின் 10 -15 குடும்பங்கள் தவிர 2000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறி இருக்கின்றனர்.

கர்நாடகா மாநிலத்தின் 80% மாவட்டங்களும், மராட்டிய மாநிலத்தின் 72% மாவட்டங்களும் வறட்சி மற்றும் வெள்ளாமை தோல்வியை சந்தித்திருக்கின்றன. இந்த இருமாநிலங்களின் 80 இலட்சம் மக்களும் வாழ்வதற்கே பெரும் சிரமத்தை எதிர் கொள்கிறார்கள். இரு மாநிலங்களுக்கும் பொதுவான நீராதார பகுதிகளில் முரண்பாடு ஏற்பட்டிருக்கிறது.

படிக்க:
♦ முதலாளிகளால் உருவாக்கப்பட்ட மராட்டிய தண்ணீர் பஞ்சம்!
♦ மனம் ஓட ஓடத் துரத்துகிறது என்றால் , நாம் ஏன் ஓட வேண்டும் ?

நீர் பற்றாக்குறையினால் மராட்டிய கிராமங்களில் விவசாயம் சார்ந்த வாழ்க்கை அழிந்து வருகிறது. பயிர்கள் கருக, கால்நடைகளோ பட்டினி கிடப்பதோடு, குடிப்பதற்கே நீரின்றி தவித்து வருகின்றன. இப்பகுதியின் முக்கிய பயிர்களான சோளம், சோயா, பருத்தி, ஆரஞ்சு, நிலக்கடலை ஆகியவை கடும் பாதிப்பை அடைந்து வருகின்றன. உலகில் எல் நினோ விளைவாக சூழலியல் கடுமையாக பாதிக்கப்பட்டு, வழமையான தட்பவெட்ப நிலையும் மாறி வருகிறது. ஏற்கனவே வறட்சியாக இருக்கும் இந்தியா இந்த மாற்றத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

வறட்சியால் இறந்து போன ஆடுகள் அருகில் விவசாயி – படம் : நன்றி – கார்டியன்.

பல மதிப்பீடுகளின்படி மராட்டிய மாநிலமே வறட்சியினால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் வரும் இந்த தொடர் வறட்சியினால் ஏறக்குறைய 4,700 விவசாயிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் தற்கொலை செய்திருக்கின்றனர். அதில் கடந்த ஆண்டு மட்டும் 947 பேர் இறந்து போயிருக்கின்றனர்.

மராட்டிய மாநிலத்தின் பீட் நகரத்தில் குடிநீர் காலியாகி, உடைகளை துவைக்கவும், குளியல் – கழிப்பறை தேவைகளுக்குமான நீர் கூட இல்லை. தேவையான நீரைக் குடிக்காததினால் வரும் வெப்ப நோய்களாலும், மாசடைந்த நீரைக் குடிப்பதனால் வரும் வயிற்றுப் பிரச்சினைகளாலும் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வருகின்றன.

நகரத்தின் வசதி வாய்ந்த நடுத்தர வர்க்கம் ஆயிரம் லிட்டர் நீரை சுமார் 265 ரூபாய்களுக்கு தனியார் நீர் வணிகர்களிடமிருந்து பெற்று வருகின்றனர். கூடவே மருத்துவமனைகளுக்கு வரும் கூட்டமும் அதிகரித்து வருகிறது. சேறு கலந்த நிரை குடிப்பதற்கு மாடுகளே மறுத்து வருகின்றன. இந்த சேறு கலந்த நீர் வறண்டு போன அணைகள், குளங்களில் கொஞ்சம் இருக்கின்றன.

பீட் நகர அரசு மருத்துவமனையின் மருத்துவர் சந்தீப் தேஷ்முக், “கடந்த ஒன்றரை மாதமாக வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்று உபாதைகள் காரணமாக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 50% அதிகரித்து வருகிறது. மாசடைந்த நீரை குடிப்பதாலேயே இந்த பிரச்சினைகள் வருகின்றன, கொதிக்க வைத்த குடிநீரை அருந்துமாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறோம் என்கிறார் அவர்.

மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையான 22 இலட்சம் பேரில் 2,40,000 மக்கள் பீட் நகரத்தில் வசிக்கின்றனர். இம்மக்களின் அதிகாலைத் துவக்கமே குடிநீரைத் தேடி அலைவதில் துவங்குகிறது. எந்த ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் கிடைக்கும், எந்த பக்கத்து வீட்டுக்காரரிடம் தண்ணீர் இருக்கிறது என்று மக்கள் அலைந்து வருகிறார்கள்.

படிக்க:
♦ சென்னைக்குத் தேவைப்படும் தண்ணீருக்காக பாலைவனமாக்கப்படும் கிராமங்கள் !
♦ சென்னை மழைக்கு எல் நினோ மட்டும்தான் காரணமா ?

“தங்களது குடும்பத்தினர் கழிப்பறைகளை பயன்படுத்துவதில்லை, அதற்காக நீரை செலவழிப்பது என்பது ஆடம்பரமாகி விட்டது. பெண்கள் இருட்டும் வரை காந்திருந்து திறந்த வெளியில் மலம் கழிக்கிறோம். விலை கொடுத்து வாங்கும் தண்ணீரில் 5 முதல் 10 லிட்டரை நீரை கழிப்பறைக்காக செலவழிக்க முடியாத நிலையில் இருக்கிறோம்” என்று சிவாஜிநகரில் வசிக்கும் உஷா ஜாதவ் தெரிவிக்கிறார்.

மே மாத இறுதிக்குள் 43% இந்தியா வறட்சியை அனுபவிக்கப் போகிறது. அதற்கு பருவமழை பெய்யாதது முக்கியக் காரணமாகும். 2017-ம் ஆண்டு நீங்கலாக 2015-ம் ஆண்டிலிருந்தே வறட்சி இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

மராட்டிய மாநிலத்தின் 20,000 கிராமங்களில் குடிநீர் பிரச்சினை கடுமையாகி வருகிறது. அங்கே 35 பெரிய அணைகளில் நீரில்லை. 1000 சிறு அணைகளில் நீர் இருப்பு 8%-ற்கும் குறைவாகவே இருக்கிறது. அணைகளுக்கு நீரைத் தரும் ஆறுகள் அனைத்தும் வறண்டு போய் பாளம் பாளமாய் வெடித்து இருக்கின்றன.

மஹராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில் வறண்டு போன கிணற்றில் நீர் ஊற்றும் அவலநிலை.

இந்தியாவின் 40% நீர்த் தேவையை நிலத்தடி நீரே அளிக்கின்றன. அவையும் அதிகமாக உறிஞ்சப்படுவதால் வறண்டு போய் வருகின்றன. இதை நிதி ஆயோக் தனது 2018-ம் ஆண்டு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. மேலும் தில்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் நகரங்களை உள்ளிட்ட 21 நகரங்கள் 2020-ம் ஆண்டிற்குள் நிலத்தடி நீரை முற்றிலும் இழக்கப் போகின்றன. இந்தியாவின் 40% -த்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகைக்கு 2030-ம் ஆண்டிற்குள் குடிநீர் இல்லாத நிலை ஏற்படப் போகிறது.

தென்மேற்கு பருவக்காற்றுதான் இந்தியாவின் 80% மழை நீரை அளிக்கிறது. இந்த ஆண்டு அப்பருவக் காற்று தாமதமாவதாலும், வழக்கமான அளவை விட குறைவாகவே மழை பெய்வதாலும் பாதிக்கப்பட்ட மாராட்டிய மாநிலத்தின் வறட்சி தொடரப் போகிறது.

மராட்டியம் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களில் பாஜக பெரு வெற்றி அடைந்திருக்கிறது. மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத பிரதமர் மோடி, நாடு விட்டு நாடு பறந்து கொண்டிருக்கிறார். மத்திய அமைச்சர்களோ இந்துத்துவ அஜண்டாவில் கவனம் செலுத்தி வருகிறார்கள். மராட்டியத்திலும் மத்திய அரசிலும் பாஜகவே ஆட்சி செய்கிறது. கேட்டால் மழை இல்லை அதனால் வறட்சி என்ன செய்ய முடியும் என்று பாஜக-வினர் கூறலாம். மழை பெய்து விட்டாலும் அவற்றை தேக்குவதற்கு இங்கே வசதிகள் ஏதுமில்லை. எட்டு வழிச்சாலைகளிலும், புல்லட் ரயிலிலும் இலட்சம் கோடி ரூபாய்களை முதலீடு செய்யும் அரசு, அடிப்படைத் தேவையான குடிநீரை அளிக்க எந்த ஏற்பாட்டையும் செய்வதில்லை.

மோடி அரசின் ஸ்வச் பாரத்தை கடைபிடித்து கழிப்பறையில் போனால் நீர் காலியாகி விடும் என்று, மக்கள் மீண்டும் திறந்த வழி கழிப்பறைகளை நோக்கி போகிறார்கள். சென்னையில் இன்னும் ஓரிரு வருடங்களில் நிலத்தடி நீர் காலியாகி விடும் என்றால் பிரச்சினையின் அபாய நிலைமையை நாம் புரிந்து கொள்ளலாம்.

வறண்டு போன வாழ்க்கையை மீட்க நாம் இந்த அரசுகளோடு சண்டையிட வேண்டும். போராட்டமில்லாமல் குடிநீர் நம்மைத் தேடி வராது என்ற நிலையையும் அடைந்து விட்டோம்.


மதன்
நன்றி : த கார்டியன்

யோகியால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரை விடுவித்த உச்ச நீதிமன்றம் !

விடுதலைக்கு பின் ஊடகங்களிடம் பேட்டியளிக்கும் பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா.

டிவிட்டர் கருத்துக்கு பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா உபி யோகி ஆதித்யநாத் அரசால் கைது ! உச்சநீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவு !

த்தர பிரதேச மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத்தை  திருமணம் செய்ய விருப்பம் உள்ளதாக, ஒரு பெண் அளித்த பேட்டியின் காணொளி செய்தியை ‘நேஷனல் லைவ் (National Live) என்ற செய்தி ஊடகம் வெளியிட்டு இருந்தது.

தில்லியைச் சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா கடந்த 06.06.2019 அன்று தனது டிவிட்டர் பக்கத்தில் அந்தக் காணொளி செய்தியை பகிர்ந்து ‘யோகி அவர்களே காதலை மறைத்து வைத்திருக்க முடியாது’ என கிண்டலாக கருத்து தெரிவித்து இருந்தார்.

விடுதலைக்கு பின் ஊடகங்களிடம் பேட்டியளிக்கும் பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா.

இந்த காணொளியை பகிர்ந்ததற்காக உ.பி லக்னோ போலீசு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, தில்லிக்குச் சென்று பத்திரிகையாளர் பிரசாந்தை கைது செய்தது. அவர் மீது இந்திய தண்டனை சட்டம் (இ.த.ச.) பிரிவு -500 (குற்றவியல் அவதூறு) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (த.தொ.ச) பிரிவு – 66-ன் கீழ் முதல் தகவல் அறிக்கையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரை 11 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி லக்னோ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

முதலில் இந்தக் கைது அடிப்படை கருத்துச் சுதந்திரத்திற்கு விரோதமானது. எனினும் இந்த வழக்கினை எந்த அடிப்படையில் பார்த்தாலும் கைது செய்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை‌. அப்படி இருக்கும்போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இந்த கைதை மேற்கொண்டது யோகி அரசு.

(இ.த.ச.) பிரிவு 500-ன் படி பிடியாணை இல்லாமல் கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியாது. குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 41-ன்படி பிடியாணையின்றி கைதுசெய்யும் குற்றங்களுக்கு மட்டும்தான் எந்த ஒரு அறிவிப்புமின்றி கைது செய்ய முடியும். அதேபோல், (த.தொ.ச.) பிரிவு 66-ன் படி பிடியாணை இல்லாமலே கைது மேற்கொள்ளலாம் .

ஆனால் இந்த பிரிவானது கணினியைப் பயன்படுத்தி மோசடியில் / நேர்மையற்ற செயல்களில் ஈடுபடுவது என்பதைத்தான் குறிப்பிடுகிறது. ஆனால் முன்னதாகவே செய்திகளில் வெளியான காணொளியைத்தான் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரசாந்த்  பகிர்ந்து இருந்தார். இதில் மேற்கூறியபடி தவறு  எதாவது இருக்கிறதா? தவறானமுறையில் அதிகாரத்தை பயன்படுத்தி கைது செய்ததுதான் இங்கு ஜனநாயக உரிமைகளை கேள்விக்குறியாக்குகிறது??

மேலும் இந்தக் கைது நடவடிக்கை, குற்றவியல் நடைமுறை சட்டத்திற்கும்,  உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் முரணானது.

அர்ணேஷ் குமார் வழக்கில் 2014 (உச்சநீதிமன்ற தீர்ப்பு) குறிப்பிட்ட வகையில்தான் கைது நடவடிக்கை இருக்க வேண்டும் என வழிகாட்டியுள்ளது. (கு.ந.ச) பிரிவு 41(1)( b) பிடியாணையின்றி கைது செய்ய நியாயமான விளக்கத்தை எழுத்துவடிவில் பதிவு செய்த பிறகுதான் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுவும்(கு.ந.ச.) பிரிவு 199 கீழ்  பாதிக்கப்பட்ட நபர்தான் புகார் அளிக்கவேண்டும். ஆனால் இந்த வழக்கில் யோகிக்கு பதிலாக லக்னோ ஹர்ஷத்கஜ் பகுதி காவல் நிலையத்தை சார்ந்த துணை காவல் ஆய்வாளர் புகாரின் அடிப்படையில் தான் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வழக்கின் விவரங்களை கணக்கில் கொள்ளாமல் பத்திரிகையாளர் பிராசந்தின் கருத்தையும் கேட்காமல், தன்னிச்சையாக 11 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு உபி மேஜிஸ்ட்ரேட் அனுப்பியது இயற்கை நீதிக்கு முரணானது. உபி நீதிமன்றம் யோகியின் கட்டுப்பாட்டில் இருப்பதையே அறியமுடிகிறது.

மேலும் டி.கே. பாசு வழக்கில் 1996 உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, கைது நடவடிக்கை மேற்கொள்ளும்போது காவல்துறை அதிகாரி உரிய சீருடையில்தான் இருக்க வேண்டும்.

இந்த கைதை பொறுத்தவரை காவல்துறை சாதாரண உடையணிந்தே பிரசாந்தை கைது செய்தனர். குறிப்பாக  எந்தவொரு சட்ட வழிமுறைகளையும் பின்பற்றாமல் சர்வாதிகார முறையில் கைது நடவடிக்கை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது.

படிக்க:
♦ யோகி ஆதித்யநாத் : பசுவைக் கொன்றவர்களுக்கு வழக்கு ! போலீசைக் கொன்றவர்களுக்கு விடுதலை !
♦ “அவர்கள் யாரை அழிக்க நினைக்கிறார்கள்” : காவிகளை எதிர்த்த கிரிஷ் கர்னாட் !

மேலும், உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீதான குற்றச்சாட்டைப் பற்றி  நேஷனல் லைவ் (National live) தொலைக்காட்சி ஒளிப்பரப்பு செய்ததற்காக இஷித்தா சிங் (நிறுவனர்) மற்றும் அனுஜ் சுக்லா (ஆசிரியர்) இருவரையும் (இ.த.ச.)  பிரிவு – 505(1) மற்றும் பிரிவு 153 கீழ் தவறான செய்தியை பொதுமக்களிடையே பரப்பியது, கலவரமூட்டும் வகையில் மக்களை தூண்டியது போன்ற பொய்யான வழக்குகளை அவர்கள்மீது பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பத்திரிகையாளர் கைதுகள் குறித்து சமூக வலைதளங்களில் பரவலாக கண்டனக் குரல்கள் எழவே யோகி அரசு பேனை பெருமாளாக்கும் முயற்சியை மேற்கொண்டது. முதல் தகவல் அறிக்கையில் இல்லாத இ.த.ச பிரிவு- 505 மற்றும் த.தொ.ச பிரிவு-67 சேர்த்து வழக்கை பதிவு செய்து பார்த்தது.

அதற்கு ஆதாரமாக டிவிட்டரில் உள்ள மதப்பிற்போக்குதனத்தை விமர்சிக்கும் அவரது பழைய பதிவுகளை ஆதாரமாக காட்டி, அவர் இந்துமதத்திற்கு எதிரானவர் போல் பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்தது. ஆனால் அது பலனளிக்கவில்லை. சமூக பிற்போக்குத்தனத்தை விமர்சிப்பது பத்திரிகையாளர்கள் கடமைதானே…

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்த சட்ட விரோதக் கைதைக் கண்டித்து தில்லியில் பத்திரிகையாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பிரசாந்த் கனோஜியாவின் இணையரும் பத்திரிகையாளருமான ஜகிஷா அரோரா ஆற்றிய பங்கு முக்கியம் வகித்தது. அவர் உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று (11.06.2019) விசாரணைக்கு வந்தது.

பிரசாந்த் கனோஜியாவை விடுவிக்க உ.பி அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அவரை விடுவித்தால், அவர் பரப்பிய தகவல் உண்மை என்றாகிவிடும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார். ஆனால், அவரது வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்தது.

“11 நாட்கள் சிறையில் வைப்பதற்கு அவர் என்ன கொலைக் குற்றம் செய்தார்?  டிவிட்டரில் கருத்து தெரிவித்தால் எப்படி ஒருவரை கைது செய்ய முடியும்?” என உச்சநீதிமன்றம் மேஜஸ்ட்ரேட் உத்தரவை கேள்வி எழுப்பியது

“ஒரு குடிமகனின் சுதந்திரம் என்பது அதிக மதிப்பு வாய்ந்தது. அதில் விவாதத்திற்கே இடமில்லை. அது அரசியல் சாசனம் மூலம் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது. அதை மீற முடியாது.”

அரசியல் சாசனம் சரத்து 19 மற்றும் 21 -ன் கீழ் அவருடைய அடிப்படை உரிமையை (பேச்சுரிமை, வாழ்வுரிமை) யாரும் பறிக்க இயலாது எனக் கூறி பிரசாந்த் கனோஜியாவுக்கு பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

படிக்க:
♦ பெண் பத்திரிக்கையாளரை பாலியல் ரீதியாக தாக்கிய ரிபப்ளிக் டிவி ரிப்போர்டர் !
♦ அமித் ஷாவுக்கு கருப்புக்கொடி காட்டிய மாணவி பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கம் !

ஹிந்து யுவ வாஹினி குண்டர் படை,  1200 போலி மோதல் கொலைகள், 70 பேர் NSA -வில் கைது, கொட்டடிக் கொலைகள், காதலர்களை மிரட்டும் ரோமியோ படை, கோரக்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பை தடுக்கப் போராடிய மருத்துவர் காஃபில் கானுக்கு சிறை என பாசிச அடக்குமுறையை தான் நடைமுறையில் இந்துராட்டிரத்தின் ஜனநாயகம் என்கிறார் பிஜேபியின் யோகி ஆதித்யநாத். அதை பத்திரிகையாளர் வரை தற்போது விரிவுபடுத்தியுள்ளார். அதை எதிர்த்து சிவில் சமூகம் உடனே போராடியதால் பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவின் விடுதலைக்கான பிணையை நீதிமன்றம் வழங்கியது.

பாசிஸ்டுகள் நீதிமன்ற உத்தரவுகளை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அவர்கள் கருத்தை கருத்துகளால் எதிர்கொள்வதில்லை. தங்களுக்கு ஏற்படும் அச்சத்தின் காரணமாக மீண்டும் அடக்குமுறை செலுத்த எத்தனிப்பார்கள். தொடர்ந்து நாம் ஒன்றிணைந்து எதிர்த்து போராடுவதன் மூலம் நமக்கான அடிப்படை உரிமைகளை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.

ஆரிய வீரத்தால் திராவிடன் வீழ்த்தப்படவில்லை !

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 03

கல்வி கேள்விகளிற் சிறந்தவர்களும், ஆராய்ச்சி வசதி நிறைந்தவர்களுமாவது, இந்தத் துறையிலே சற்று உழைப்பார்களானால், திராவிட இனம் உய்ய வழி உண்டு. இல்லையேல் உலகிலே பல இனங்கள் பாழ்பட்டு மறைந்து போனது போல் ஒரு காலத்தில் உலகப் புகழ் வாய்ந்த திராவிட இனமும் அழிந்தேதான் போகும்! எந்த இனம் தனது பண்பை இழந்து, பண்டைய பெருமையை மறந்து எதிரியிடம் அடைக்கலம்  புகுந்து விடுகிறதோ அந்த இனம் அழிவுக் குழிக்கு அவசர அவசரமாக நடக்கிறது என்றுதான் பொருள்.

“எமை நத்துவாய் என எதிரிகள்கோடி
இட்டழைத்தாலும் தொடேன்”

என்று இன எழுச்சியே உருவானது போன்று நம் கவிஞர் கனக சுப்புரத்தினம் (பாரதிதாசன்) பாடுகிறார்! தொடேன் என்று, உறுதியும் ஆவேசமும் மிளிர அந்தப் பதம் உயிர்க்கவியின் உள்ளத்திலிருந்து பீறிட்டுக் கொண்டு வெளிக்கிளம்புகிறது ! எதிரிக்கு அடிமையாக மாட்டேன், கோடி தரினும் என்று கூறுகிறார். கோடி ரூபாய் – பவுன், வைரக்கற்கள், நவரத்தினக் குவியல், எதை நீ கோடியாகக் குவித்து என் எதிரே வைத்தாலும் சரியே, உன்னிடம் நான் அடிவருடியாக மாட்டேன் என்று கவி கூறுகிறார். கோடி என்ற பதத்துடன், வேறு பொருளைக் குறிக்கும் எப்பதத்தையும் அவர் இணைத்தாரில்லை! ஏன்? இன்ன பொருள் என்று குறித்து விட்டால், சரி வேறு பொருள் தருகிறேன் என்று எதிரி கேட்க இடமுண்டல்லவா? கோடி கோடி ரூபாய் தருகிறேன் என்று எதிரி கூறுகிறான்; தமிழன் வேண்டேன் என்று மறுக்கிறான். உடனே தந்திரமுள்ள எதிரி கோடி வராகன் தருகிறேன் என்று கூறலாமல்லவா? அந்தப் பேரப் பேச்சுக்கே கவி இடங்கொடுக்கவில்லை. எதுவாகவேனும் இருக்கட்டுமய்யா, கோடி குவித்தாலும் வேண்டாம் என்று முடிவாகக் கூறுகிறார். ‘தொடேன்’ என்று கவி கூறியதிலே, கையினால் தொடேன் என்ற பொருள் தொக்கியிருக்கிறது. இப்போது மறுமுறை கூறிப்பாருங்கள் அந்தக் கவிதையை .

“எமை நத்துவாய் என எதிரிகள்கோடி
இட்டழைத்தாலும் தொடேன்.”

பாவேந்தன் பாரதிதாசன்.

இந்த உணர்ச்சியும் உறுதியும், சுயநலத்தைப் பற்றித் துளி நினைப்பும் இல்லாத மனப்பான்மையும், சபலத்திற்கு இடங்கொடுக்காத தன்மையும் வீரமும் இருப்பின், கோடி ஈட்டிகள் தமிழரின் மார்புக்கு நேரே நீட்டப்பட்டாலும், எதிரி வெல்ல முடியாதே! எங்கே காண்கிறோம் அந்த உறுதியை? எவரிடம் கேட்கிறோம் இத்தகைய வீரப் பேச்சினை?

‘நமக்கென்ன’ என்று கூறும் சுயநலமிகளும், ‘நம்மால் ஆகுமா?’ என்று பேசும் தொடை நடுங்கிகளும், ‘ஏன் வீண் வம்பு’ என்று சொல்லும் கோழைகளும், ‘எனக்கு இது பிடித்தமில்லை’ என்று மிடுக்காகக் கூறும் கோடரிகளும் தமிழகத்திலே உலவக் காண்கிறோம்!

“மான மொன்றே நல்வாழ்வெனக் கொண்டு
வாழ்ந்த என் மறவேந்தர்
பூனைகள் அல்லர், அவர் வழிவந்தோர்
புலிநிகர் தமிழ்மாந்தர்!”

என்ற வீர முழக்கம், என்று தமிழர் மனைதோறும் கேட்கிறதோ, என்றைய தினம் தமிழர் உள்ளம் இந்த நிலை பெறுகிறதோ, அன்றே ஆரியர், கனக விசயனைக் கல்லெடுக்க வைத்த சேரன் மரபினர் மீண்டும் தமிழராயினர்; இனி நமது கடை நடவாது என்பது தெரிந்து பல்லெல்லாம் தெரியக் காட்டி நிற்பர்! பணிவர்! பகைவரை அடுத்துக் கெடுத்ததன்றிப் போரிட்டு அடக்கிய வரலாறே ஆரியருக்குக் கிடையாது. பெரிய போர்களிலே, அவர்களுடைய பெயர் சம்பந்தப் பட்டதே கிடையாது. புராண இதிகாசங்களிலே நடைபெற்றதாகக் கூறப்படும் போர்கள், வெறும் புளுகு என்றபோதிலும், அதிலும் வீரத்தால் வெற்றி கிடைத்ததாகக் கதை கிடையாது. வேள்விகளால் வெற்றி, பரமன் அருளால் பலம், மாய அஸ்திரங்களால் எதிரி தோற்றான் என்றுதான் இருக்கும்.

திராவிட வரலாறுகளிலே, வீரமே முதலிடம் பெற்றிருக்கும்! ஆரிய இனம் போரிட்டுப் புகழ் ஈட்டியதில்லை; பிறரின் புத்தி கெட்டபோதுதான் ஆரியரின் கொட்டம் வளரும்!

போதை ஏறியவன் கல் தடுக்கியோ, காற்று அடிப்பதாலோ கீழே வீழ்வான். ஆரியரும், திராவிட இனத்தாரிடையே கருத்தில் போதை மூண்டிடச் செய்துவிட்டுப் பிறகு கீழே உருட்டி விட்டனர். திராவிடன் ஆரிய வீரத்தால் வீழ்த்தப்படவில்லை. ஆரியக் கருத்தினைத் தாங்கும் சுமை தாங்கியானான். சோர்ந்தான். சுருண்டான். இந்தச் சூட்சுமத்தை உணராதார் தமிழர் வரலாறு அறியாதாரே.

‘ஐயன்மீர்! இப்போது நீவிர் வணங்கும் உருவாரங்கள் ஆரியக் கற்பனை என்று கூறுவோரை, மேதாவிகளென்று தம்மை எண்ணிக் கொண்டுள்ள தமிழர்கள் நம்புவதில்லை; நையாண்டி செய்கின்றனர்! எதற்கெடுத்தாலும் ஆரியச் சூது, ஆரியச் சதி, புரட்டு என்று கசடர்கள் கூறுகிறார்கள்’ என்று இந்த மேதாவிகள் கூறுகின்றனர். மழையாம் மழை! மழை நம்மை என்ன செய்யும்? என்று எருமை கூறுவதில்லை. அதன் நடவடிக்கை, அதனுடைய நினைப்பை நமக்குக் காட்டுகிறது. தமிழரிலே தடித்த தோளார் உளர். நாற்காற் பிராணிகளிலே எருமை இருத்தலைப் போல!

வீணான மனப் பிராந்தியால் சிலர் இது போல ஆரியர்  -திராவிடர் என்று பிதற்றுகின்றனர் என்று கூறும் ஏமாளிகளுக்கு எத்தனை ஏடுகளைக் காட்டினாலும் கருத்துத் துலங்குவதில்லை. சுயமரியாதைக்காரர்களுக்குத்தான் ஆரியரின் வீணான துவேஷமிருக்கிறது என்று எளிதில் கூறிவிடுகிறார்கள். சுயமரியாதை இயக்க சம்பந்தமே இல்லாத, அறிவுத்துறையிலே ஈடுபட்டுள்ள பேராசிரியர்களின் கருத்துரைக்கு, என்ன குற்றங் கூற முடியும்?

ஆரியர், தங்களுடைய கருத்துக்களையும் கடவுட் கதைகளையுங் கூறிவரும்போது அறிவுக்கு இவை பொருந்துமா? ஆராய்ச்சிக்கு ஈடு கொடுக்குமா? என்பன பற்றிக் கவலையே கொள்ளவில்லை. ஆண்டை , அடிமைக்குக் காரணம் கூறிக் கொண்டிருப்பானோ? குழந்தையை மிரட்டக் கிழவர்கள் ஐந்து கண்ணனைப் பற்றியும், ஆறு காலனைப் பற்றியும் கதை கூறும்போது, குழந்தைகள் மிரட்சியுடன் கேட்டு வாய் பொத்திக் கொண்டிருக்குமேயன்றி, ‘தாத்தா, இதை நான் நம்பமுடியாது’ என்று கூறுவதுண்டா ? குழந்தைப் பருவம் மனித சமுதாயத்திற்கு இருந்த போதுதான், இடி தேவன், மின்னல் மாதா, மழை மாகாளி, தீக் கடவுள் எனக் கடவுட் கதைகள் கட்டிவிடப்பட்டன.

உலகிலே இது போலத் தோன்றிய கதைகள், அறிவுப் பருவத்தை அவனியோர் பெற்றதும் மறையலாயின! ஆனால் இங்கு மட்டும் ஆரியர் அந்த நாள் ஆபாசத்தை இன்றும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பதுடன் அதே கருத்துக்களை மக்களிடையே பரப்புவதையே தங்கள் பிழைப்பாக வைத்துக் கொண்டுள்ளனர். அதனாலேயே, அறிவு சூன்யமே ஞானமென்றும், இருப்பதை இல்லையென்று கூறுவதே வேதாந்தமென்றும், இல்லாததை உண்டு என்று நம்பச் செய்வதே மார்க்கமென்றும் போதிக்கப்பட்டு விட்டது. அபின் விற்று வாழுபவன், போதை கூடாது என்று பிரசங்கம் புரிவானா?

படிக்க:
தாகூருக்கு காவி வண்ணம் பூசும் சங் பரிவாரங்கள் !
புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! அச்சுநூல்

மற்ற மக்களுக்குத் தெரியாதது தங்கட்குத் தெரியுமென்றும், மற்றவர்களால் சாதிக்க முடியாததைத் தாங்கள் சாதிக்க முடியுமென்றுங் கூறிடுபவனை, ஆராய்ச்சியுடையோர் அவன் ஒரு புரட்டன் என்று ஏசி ஒதுக்குவர். ஆராயுந் திறனற்றாரோ, ‘அப்படியா!’ என்று ஆச்சரியத்தால் வாய் பிளக்க நின்று கேட்பர், கைகூப்புவர். இந்த முறையிலே, ஆரியம் தமிழரிலே தன்னுணர்வு, அறிவு நுணுக்கம் அற்றவர்களைப் பலி கொண்டது. வீராவேசங் கொண்ட வேங்கையானாலும், சதுப்பு நிலத்திலே – குழியிலே – வீழ்ந்து விட்டால் சாகத்தானே வேண்டும்! நீள் வையம் எதிர்த்தாலும், எமக்கு நிகர் இல்லை என்று கூறிப் போரிடும் மறத்தமிழரும், ஆரிய மதப் படுகுழியிலே வீழ்ந்ததால் அறிவு, ஆற்றல், ஆண்மை, மானம் எனும் பண்புகளை இழக்க வேண்டி நேரிட்டது!

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

அடத் தாடி, ருஷ்ய மனிதனுக்கு இதுவும் ஒரு வாழ்க்கை ஆகுமா?

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 4

நாற்பத்து இரண்டாம் வார்டில் புதிய நோயாளி வந்ததுமே (அவரை மற்றவர்கள் எல்லோரும் கமிஸார் என்று அழைக்கலாயினர்) வார்டின் வாழ்க்கை அமைப்பு முழுவதும் மாறிவிட்டது. பாரியான, வலிமையற்ற இந்த மனிதர் மறுநாளே எல்லோரையும் விவரமாக அறிமுகம் செய்து கொண்டார். இவ்வாறு செய்து கொள்கையில், பின்னர் ஸ்தெபான் இவானவிச் கூறியது போல, “ஒவ்வொருவரது உள்ளத்துக்கும் பொருத்தமான சாவியைத் தேர்ந்தெடுக்க” அவருக்கு முடிந்தது.

ஸ்தெபான் இவானவிச்சுவிடம் குதிரைகளையும் வேட்டையையும் பற்றி அவர் ஆசை தீரப் பேசினார். இவ்விரண்டையும் இவர்கள் இருவருமே நன்கு அறிந்திருக்கிறார்கள், பெரிதும் நேசித்தார்கள். போரின் சாராம்சாரத்தை உட்புகுந்து ஆராய்வதில் ஈடுபாடு உள்ள அலெக்ஸேயிடம் விமானப்படையையும் டாங்கிகளையும் பயன்படுத்துவதற்கு உரிய நவீன முறைகள் பற்றி அவர் உற்சாகமாக விவரித்தார். விமானங்களும் டாங்கிகளும் அருமையானவைதாம் என்றாலும் குதிரைகள் பயனற்று போய்விடவில்லை என்றும், குதிரைப்படைப் பிரிவுகளை நன்றாகச் செப்பம் செய்து, இயந்திர வசதிகளால் பலப்படுத்தி, விரிவாக, துணிவுடன் சிந்தனை செய்யும் இளைஞர்களைச் சிறந்த வாட்போர் வீரர்களான முதிய கமாண்டர்களுக்கு உதவியாகப் பயிற்றினால் நமது குதிரைப்படை இன்னும் உலகை பிரமிக்க வைக்கும் என்று ஆர்வம் பொங்க நிரூபித்தார்.

வாய்மூடி டாங்கி வீரனுடனும் பேசுவதற்கு அவருக்கு விஷயம் கிடைத்து விட்டது. அவர் கமிஸாராக இருந்த டிவிஷன் யார்த்ஸெவோ அருகிலும் பின்பு துஹொவ்ஷீனாவிலும், அதாவது டாங்கிவீரன் தன் குழுவுடன் எந்த இடத்தில் – பகைவரின் முற்றுகையைப் பிளந்து வெளியேறினானோ அந்த இடத்திலும், ஜெனரல் கோனெவின் புகழ்பெற்ற எதிர்த்தாக்கில் பங்கு கொண்டு போரிட்டதாம். டாங்கிவீரனுக்கும் தமக்கும் பழக்கமான கிராமங்களின் பெயர்களைக் கமிஸார் உற்சாகமாகக் கூறினார்.

பாசிஸ்டுகளுக்கு எங்கே எப்படி மண்டகப்படி நடந்தது என்று விவரித்தார். டாங்கி வீரன் முன்போன்றே மௌனம் சாதித்தான். ஆனால். இதற்கு முன் செய்த மாதிரி முகத்தைத் திருப்பிக் கொள்ளவில்லை. கட்டுப் போட்டிருந்தபடியால் அவன் முகம் தென்படவில்லை. ஆனால் அவன் இசைவு தெரிவிக்கும் பாவனையில் தலை அசைத்தான். குக்கூஷ்கினைக் கமிஸார் சதுரங்கம் விளையாட அழைத்ததும் அவனுடைய சிடுசிடுப்பின் இடத்தில் கனிவு வந்துவிட்டது. சதுரங்கப் பலகை குக்கூஷ்கினுடைய கட்டிலில் வைக்கப்பட்டது. கமிஸார் மூடிய கண்களுடன் படுத்தபடியே “குருட்டு” ஆட்டம் ஆடி, ஓயாமல் பிணங்கும் லெப்டினன்ட் குக்கூஷ்கினை படுதோல்வி அடையச் செய்தார். இதனாலேயே அவனைத் தம்முடன் சமரசத்துக்கு வரச் செய்துவிட்டார்.

காலை நேரத்தில் அறைத் தாதி பலகணித் திறப்பைத் திறந்து விடுவாள். அப்போது சலிப்பூட்டும் மருத்துவமனை நிசப்தத்தை கலைத்துக் கொண்டு தெருவின் குதூகல இரைச்சலோடு மாஸ்கோவின் முன் வசந்த இளங்காற்று குளுகுளுவென்று உள்ளே வரும். கமிஸார் அந்த வார்டுக்கு வந்தது முதல் இதே போன்ற உற்சாகம் அங்கே குடிகொண்டது. இதற்காக கமிஸார் எவ்விதப் பிரயாசையும் எடுத்துக் கொள்ளவில்லை. அவர் செய்ததெல்லாம் தம்மை வதைத்த வேதனையை மறந்துவிட்டு அல்லது மறக் கடித்துவிட்டு ஆர்வமும் உற்சாகமும் பொங்க வாழ்ந்ததுதான்.

காலையில் கண் விழித்ததும் அவர் கட்டிலில் உட்கார்ந்து கைகளை மேலே தூக்குவார், பக்கங்களில் நீட்டுவார், குனிவார், நிமிர்வார், தலையை லயப் பொருத்தத்துடன் திருப்புவார், தாழ்த்துவார் – இவ்வாறு உடற்பயிற்சி செய்வார். முகங்கழுவ நீர் கொடுக்கப்படுகையில், அவர் குளிர்ந்த நீரை வாங்கிக் கொண்டு, பேசினுக்கு மேலே கவிந்தவாறு நெடுநேரம் தண்ணீரைச் சளசளப் பென்று கொட்டிக் கொள்வதும் செருமுவதுமாக இருப்பார். பின்பு துவாலையால் அவர் துவட்டிக் கொள்ளும் உற்சாகத்தில் அவருடைய வீங்கிய உடல் கன்றிச் சிவந்துவிடும். அவரைப் பார்க்கும் மற்றவர்களுக்கும் அப்படியே செய்ய ஆசை உண்டாகும்.

செய்தித்தாள்கள் கொண்டு வரப்பட்டதும் நர்ஸின் கையிலிருந்து அவற்றை ஆர்வத்துடன் வாங்கி சோவியத் தகவல் இலாக்காவின் செய்தி அறிக்கைகளை முதலில் மளமளவென்று உரக்கப் படிப்பார். பின்பு போர் முனைகளிலிருந்து நிபுணர்களின் செய்திகளை விவரமாக, ஒன்றன் பின் ஒன்றாகப் படிப்பார். தமக்கே உரிய தனிப் பாணியில், ஒரு வகையில் சொன்னால் செயல் துடிப்புடன், படிக்க அவரால் முடிந்தது.

தமக்கு பிடித்த இடத்தைத் தணித்த குரலில் மீண்டும் படிப்பார். “சரி!” என்று வாய்க்குள் சொல்லிக் கொள்வார், எதற்கோ அழுத்தங்கொடுத்து அடிக்கோடு இடுவார். சில வேளைகளில் சினத்துடன் ஆர்ப்பரிப்பார்: “புளுகுகிறான், நாய்ப் பயல்! இவன் போர் முனைக்குப் போனதே இல்லை என்று பீர் புட்டிக்கு எதிராக என் தலையை பணயம் வைக்கிறேன். அட கயவாளிப் பயல்! எழுதக் கிளம்பி விட்டான்!”.  ஒரு முறை ஏதோ பொய்க்கதை அளந்திருந்த நிருபன் மேல் எரிச்சல் கொண்டு செய்தித்தாள் ஆசிரியக்குழுவுக்கு அக்கணமே ஒரு கடிதம் எழுதினார். போரில் இத்தகைய விஷயங்கள் நடக்கவில்லை, நடக்க முடியாது என்று நிருபித்து, எல்லை மீறிவிட்ட புளுகனைச் சரிப்படுத்தும் படி கடிதத்தில் கேட்டுக்கொண்டார்.

கொடிய நோவு
அவரை வதைக்கவே இல்லை
என்பது போல அப்போது தோன்றும்.
மருத்துவர்களிடம்
அவசரமின்றி வார்த்தையாடுவார்.
அவர் உடலில்
வலியுள்ள இடங்களை
அவர்கள் தொட்டுப் பார்க்கையில்
கேலி செய்வார்.

சில வேளைகளில் செய்தித்தாளில் படித்த விவரங்களைப் பற்றி எண்ணமிட்டவாறு தலையணையில் சாய்ந்து திறந்த விழிகளுடன் அப்படியே படுத்திருப்பார். அல்லது திடீரெனத் தமது குதிரைப் படையினரைப் பற்றிச் சுவையான கதைகள் சொல்லத் தொடங்குவார். அவர் சொல்வதைக் கேட்டால் அவர்கள் வீரர்களில் வீரர்கள், சிறந்தவர்களில் சிறந்தவர்கள் என்று தோன்றும். பின்பு மீண்டும் செய்தித்தாள் படிக்க ஆரம்பிப்பார்.

பகலில் இரண்டு மணி நேரம், மதியச் சாப்பாட்டுக்கும் சிகிச்சை நடைமுறைக்கும் இடையே, அவர் ஜெர்மானிய மொழியைக் கற்றுக் கொள்வார், சொற்களை மனப்பாடம் செய்வார், வாக்கியங்கள் அமைப்பார். சில வேளைகளில் வேற்று மொழியின் பொருள் பற்றித் திடீரெனச் சிந்தனை செய்து, சொல்லுவார்.

“ஜெர்மன் பாஷையில் கோழிக்குஞ்சு என்பதற்கு என்ன வார்த்தை தெரியுமா நண்பர்களே? க்யூஹெல்ஹென். அருமை! க்யூஹெல்ஹென் என்னும்போதே, ஏதோ சின்னஞ்சிறிய, தூவி அடர்ந்த, மென்மையான ஒன்று என்பது தொனிக்கிறது. மணி என்பதற்கு வார்த்தை என்ன, தெரியுமா? க்யியோக்ளிங். சொல்லிலே கணீரொலி இருக்கிறது, இல்லையா?“

ஒரு முறை ஸ்தெபான் இவானவிச்சால் பொறுக்க முடியவில்லை .

“தோழர் ரெஜிமெண்டுக் கமிஸார், உங்களுக்கு ஜெர்மன் மொழி எதற்கு? வீணாக ஏன் அலட்டிக் கொள்கிறீர்கள்? சக்தியைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும் நீங்கள்..” என்றார்.

கமிஸார் அந்த முதிய வீரரைத் தந்திரத்துடன் நோக்கினார்.

“அடத் தாடி, ருஷ்ய மனிதனுக்கு இதுவும் ஒரு வாழ்க்கை ஆகுமா? நாம் பெர்லினை அடைந்த பிறகு ஜெர்மானியப் பெண்களுடன் நான் எந்த மொழியில் பேசப் போகிறேன்?”

போர் முனை தற்போதைக்கு மாஸ்கோவின் அருகே உள்ளது என்றும் ஜெர்மானியப் பெண்கள் இன்னும் வெகு தொலைவில் இருக்கிறார்கள் என்றும் வாதிக்க ஸ்தெபான் இவானவிச் விரும்பினார். ஆனால், கமிஸாரின் குரலில் தொனித்த குதூகலம் பொங்கும் நம்பிகைகையைக் கேட்டதும் வெறுமே தொண்டையைக் கனைத்துக் கொண்டு, “அது சரிதான். ஆனாலும் இந்த மாதிரி உள் காயத்துக்குப் பிறகு நீங்கள் ஜாக்கிரதையாக உடம்பைப் பேணிக் கொள்வது நல்லது” என்று காரியரீதியாகச் சொல்லி நிறுத்திக் கொண்டார்.

“பேணிக் காத்த குதிரைதான் முதலில் இடறிவிழும் என்று சொல்வார்கள். நீங்கள் கேட்டதில்லையா? மோசம், தாடி!”

நோயாளிகளில் எவனுமே தாடி வைத்துக் கொண்டிருக்கவில்லை. ஆயினும் கமிஸார் எல்லாரையும் எதனாலோ “தாடி!” என்று அழைத்தார். அவர் இப்படி அழைப்பது வருத்தம் தரவில்லை, களிப்பே ஊட்டியது. இந்த வேடிக்கைப் பெயரைக் கேட்டு எல்லோருக்கும் குதூகலம் உண்டாயிற்று.

அலெக்ஸேய் சில நாட்கள் கமிஸாரை விடாது கவனித்து வந்தான். அவர் கடும் வேதனைப்பட்டார் என்பதில் சந்தேகமில்லை. அவர் உறங்கத் தொடங்கி, தம்மீது கட்டுப்பாட்டை இழக்கவேண்டியதுதான் தாமதம், முனகவும் புரளவும் பற்களை நெறுநெறுக்கவும் ஆரம்பித்துவிடுவார். அவர் முகம் வலிப்பு கண்டு சுளிக்கும். அவருக்கு இந்த விஷயம் தெரிந்திருந்தது போலும். எனவேதான் அவர் பகல் வேளையில் ஏதாவது காரியத்தில் ஈடுபட்டு, தூங்காதிருக்க அவர் முயன்றார். விழித்துக் கொண்டிருக்கையிலோ, அவர் எப்போதும் நிம்மதியாகவும் நிதானமாகவும் இருந்தார்.

கொடிய நோவு அவரை வதைக்கவே இல்லை என்பது போல அப்போது தோன்றும். மருத்துவர்களிடம் அவசரமின்றி வார்த்தையாடுவார். அவர் உடலில் வலியுள்ள இடங்களை அவர்கள் தொட்டுப் பார்க்கையில் கேலி செய்வார். அப்போது அவருடைய கை, துப்பட்டியைப் பற்றிக் கசக்குவதையும் அவரது மூக்குத் தண்டில் பாசி மணிகள் போன்று வியர்வை துளிர்ப்பதையும் கொண்டுதான் வலியைப் பொறுத்துக் கொள்வது அவருக்கு எவ்வளவு கடினமாயிருந்தது என்பதை ஊகிக்க முடிந்தது.

படிக்க:
ஹார்லி டேவிட்சன் பைக் வரி குறைப்பு : மிரட்டும் ட்ரம்ப் ! பம்மிய மோடி !
அமித் ஷாவுக்கு கருப்புக்கொடி காட்டிய மாணவி பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கம் !

மனிதர் கொடும் வேதனையை எப்படித் தாங்கிக் கொள்கிறார், இவ்வளவு ஆற்றலும் உற்சாகமும் வாழ்க்கை ஆர்வமும் அவரிடம் எங்கிருந்து வந்தன என்பது அலெக்ஸேய்க்கு விளங்கவில்லை. மயக்க மருந்துகள் வர வர அதிக அளவில் கொடுக்கப்பட்டுவந்த போதிலும் அலெக்ஸேய்க்கு இரவில் உறக்கமே பிடிப்பதில்லை. சில நாட்களில் முனகாமல் இருக்கும் பொருட்டுக் கம்பளியைக் கடித்துக் கொண்டு, திறந்த விழிகளுடன் விடியும் வரை படுத்துக்கிடப்பான். எனவே, கமிஸாரின் உற்சாக ஊற்றுக் கண் எது எனப் புரிந்து கொள்ள அவனுக்கு இன்னும் அதிக விருப்பம் உண்டாயிற்று.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

தோழர் விளவை இராமசாமிக்கு வீரவணக்கம் !

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில துணைத் தலைவரும், கோவை மாவட்டத் தலைவருமான தோழர். விளவை இராமசாமி அவர்கள் 11.06.2019 அன்று காலை அவரது இல்லத்தில் காலமானார்.

1980-களிலேயே மாற்று அரசியலை முன்னெடுத்துக் களமாடியவர். தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஒரு தொழிலாளியாக பணியாற்றி, தேசிய பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கத்தை ஆரம்பித்தார். புரட்சிகர அரசியலில் ஈர்க்கப்பட்டு பின்னர் தன்னை பு.ஜ.தொ.மு.வுடன் இணைத்தார்.

தோழர் விளவை இராமசாமி அவர்கள் ஒரு சிறந்த மார்க்சியவாதி. பரந்து, விரிந்த அரசியல் கருத்துடையவர். சங்கம் ஆரம்பித்த பிறகு ஒவ்வொரு மில் கேட்டிலும் போய் நின்று தொழிலாளர்களிடையே சங்கமாக இணைவதன் அவசியத்தைப் பேசுவார்.

தொழிலாளர்களின் சட்டம் குறித்து மிகுந்த அறிவுடையவர். NTC தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற தொழிற்சங்க தலைமைகள் போலல்லாது பொருளாதாரத்தை தத்துவதோடு இணைத்துப் பணியாற்றியவர். தொழிலாளர்கள் வெறும் பொருளாதாரக் கோரிக்கைகளோடு மட்டும் நின்று விடாமல் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கி செயலாற்றவேண்டும்,  அதற்காக மார்க்சிய  ஆசான்களிடமிருந்தும், களப்போராட்டத்திலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியவர்.

தோழர்களின் குறைகளை தயவு தாட்சணியமின்றி விமர்சிக்கக்கூடியவர். அதேசமயம் மென்மையாகவும்; இணக்கமாகவும்; தோழர்களை விட்டுக்கொடுக்காமலும் பேசக்கூடியவர். தலைவர் என்ற இறுமாப்பு கொஞ்சம் கூட கொள்ளாதவர். பல முதலாளிகளுக்கும், நிர்வாகிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர். ஜெயலலிதாவின் பாசிச ஆட்சியை விமர்சித்து போஸ்டர் ஒட்டியதற்காக குண்டர் சட்டத்தில் சிறைவாசம் அனுபவித்தவர். தொழிலாளர் நலனுக்காக பல போராட்டங்களை நடத்தி பலமுறை சிறை சென்றவர்.

கம்யூனிஸ்டுகள் மனிதகுல விடுதலைக்காக பல தத்துவங்களையும், விசயங்களையும் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும் என்பார். NTC, CRI Pumps, GTN, SRI போன்ற பல நிறுவனங்களில் பு.ஜ.தொ.மு. சங்கத்தை நிறுவினார். தொழிலாளர்கள் சங்கத்திலிருந்து விலகிச்சென்றாலும் இயல்பாக எடுத்துக் கொள்ளக்கூடியவர்.

சங்கத்தின் மூலமாக பல நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு சட்டப்படியே கிடைக்கவேண்டிய பல சலுகைகளை பெற்றுத்தந்தவர். தொழிலாளர்களுக்கு துணிவும், அரசியலுணர்வும், நிர்வாகத்தின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் வழிமுறைகளையும், ஆற்றலையும் கற்றுத் தந்தவர்.

தனது குடும்ப வாழ்விலும், அரசியல் வாழ்விலும் எந்தவித சமரசமும் செய்துகொள்ளாதவர். வழக்கு, கைது, சிறைக்கு அஞ்சாதவர். தொழிலாளர் வர்க்க விடுதலையை தனது இறுதி நாள்வரை முன்னெடுத்துச் சென்றவர்.

அரசியல் வாழ்க்கையில் மட்டும் தோழர் போராடவில்லை, தனது மரணத்தோடும் அவர்  இறுதிவரை போராடினார். மூளையில் ஏற்பட்ட இரத்தக்கசிவால் பாதிக்கப்பட்டு ஏறக்குறைய 2  ஆண்டுகளாக போராடிவந்தார். நோயிலிருந்து படிப்படியாகத் தேறிவந்த வேளையில் எதிர்பாராதவிதமாக 11.06.2019 அன்று காலையில் மரணமடைந்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

பாசிசம் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் இவ்வேளையில் ஒரு மிகச்சிறந்த போர்வீரனை இழந்திருக்கிறோம். ஆனாலும், தொழிலாளிகளின் விடுதலை என்ற தோழரின் இலட்சியத்தை என்றும் நெஞ்சில் ஏந்தி இன்னும் வேகமாக செயல்படுவோம்.

தோழரின் இரங்கல் கூட்டத்தில் பல்வேறு தொழிற்சங்க தலைவர்களும், சமூக செயற்பாட்டாளர்களும், மக்கள் அதிகாரம், ம.க.இ.க. தோழர்களும், உறவினர்களும், நண்பர்களும் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான வர்க்க உணர்வூட்டப்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை. தொடர்புக்கு : 95974 22584.

ஜனநாயக கனவுகளை சுமந்து பறந்த கலைஞர் கிரிஷ் கர்னாட் !

லைஞர் கிரிஷ் கர்னாட் இயற்கை எய்திவிட்டார். நாடக எழுத்தாளரும், மேடை / திரைக் கலைஞருமான கிரிஷ் கர்னாட் அரசியல் துறையில் பகுத்தறிவுக்கு ஆதரவாளராக, இந்துமதவெறி, சாதிவெறி, மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவராக; ஜனநாயக ஆதரவாளராக, எதேச்சதிகார இந்திரா – மோடிகளுக்கு எதிரானவராக; சிறுபான்மையினருக்கு ஆதரவாக, மதவெறி பார்ப்பனிய சம்பிரதாயங்களுக்கு எதிரான அறிவுத்துறை குரலாக, மனித உரிமை மீறல்களை வெளிப்படையாக விவாதித்து மக்களிடையே எடுத்துச் சென்ற களச்செயற்பாட்டாளராக பல்துறை அறிவாளியாக அவர் விளங்கினார்.

கோடம்பாக்கம் திரையுலகம் வரை வந்து நடித்ததால் மக்களிடையே அறியபட்டவரானாலும், கன்னட கலை – இலக்கியத் துறையில் மக்கள் சார்பான விழுமியங்களுக்காக எழுதியும், குரல் கொடுத்து களமிறங்கியும் போராடியவராக தமிழகத்தில் அறியப்படவில்லை. அவ்வகையில் தமிழகத்தின் ஜனநாயக கலைச் சரிவை நாம் இவர் மூலமும் எடைபோட முடியும். இங்கே அவர் வந்துச் சென்ற காலம் கலை நட்புக்கானது. மற்றப்படி அது ஒரு தற்செயல் விபத்தே.

பார்ப்பனச் சாதி அழுகலை கிழித்து தொங்கவிட்ட அவரது நாடக மற்றும் திரைப்படம் ‘சம்சுகாரா’ (கன்னடத்தில் பொருள் ‘இறுதிச்சடங்கு’), இஸ்லாமியரெல்லாம் வெறியர்கள், வஞ்சகர்கள், தேசத்துரோகிகள் என்ற பொதுக் கருத்தை உடைத்தெறியும் வண்ணம் அவர் எதிர் வரலாறாக உருவாக்கிய நாடகங்கள் ‘திப்பு சுல்தானின் கனவுகள்’ மற்றும் ‘துக்ளக்’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

கர்நாடக அரசியல் துறையில் அம்மாநில ஒருவித ரகமான ‘சோசலிஸ்டுகள்’ திரைக்கலைஞர் சிநேகலதா (ரெட்டி), அவரது கணவர் பட்டாபிராம், U.R. அனந்தமூர்த்தி, ஜார்ஜ் பெர்னான்டஸ், அவரது சகோதரர் மைக்கேல் பெர்னான்டஸ் போன்றவர்களின் நட்பினால் ‘சோசலிச’ ஆதரவாளர் என்று அறியப்படுகிறார்.

கர்நாடக நாட்டுப்புறவியல் சிவராம் காரந்த், மேடை எழுத்தாளர் – இயக்குனர் – நடிகரான பி.வி கரந்த், சந்திரசேகர கம்பார் போன்றவரோடும், மகாராட்டிய திரைப்பட இயக்குனரான ஷ்யாம் பெனகல் நட்புக் காரணமாகவும், எழுபதுகளில் கன்னட திரைத்துறையில் புயல் போல் வீசிய ‘கோபமுற்ற இளைஞர்களின்’ நட்பின் காரணமாகவும் தாராளவாத அறிவு ஜீவியாகவும் கன்னட மக்களிடையே பலவிதமாக புகழ்பெற்றவர்.

எப்போதும் இந்துத்துவ மதவெறியை எதிர்த்து‌ வந்த கர்னாட் பாபர் மசூதி இடிப்பின் போது கண்டனக் குரல் எழுப்பியவர். பெங்களூர் விமான நிலையத்திற்கு திப்பு சுல்தான் பெயரை சூட்ட வேண்டும் என கருத்து தெரிவித்து சர்ச்சைகளை எதிர்கொண்டவர்.

படிக்க:
♦ இத்தாலியில் பாசிசத்தின் வளர்ச்சியின் வரலாறு !
♦ “அவர்கள் யாரை அழிக்க நினைக்கிறார்கள்” : காவிகளை எதிர்த்த கிரீஷ் கர்னாட் !

நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷை கொன்ற சங்பரிவாரத்தின் பயங்கரவாத அமைப்பான சனாதன சன்ஸ்தாவின் கொலைப்பட்டியலில் இவரின் பெயர் முதலில் இருந்தது. கௌரி லங்கேஷின் பெயர் இரண்டாவதாக இருந்தது. கல்புர்கி மற்றும் கௌரி லங்கேஷின் கொலைகளை எதிர்த்து வெளிப்படையாக பேசியவர்.

அண்மைகாலத்தில் பசுவின் பெயரால் நடக்கும் படுகொலைகளைக் கண்டித்து நடந்த ‘எனது பெயரில் இல்லை’ (‘Not in my Name’) போராட்டங்களில் கலந்து கொண்டார். கௌரி லங்கேஷ் ஓராண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்ட கர்னாட், தன் கழுத்தில் ‘நானும் ஒரு நகர்ப்புற நக்சல்’ (Me too urban naxal) என்ற அறிவிப்பு பதாகையை துணிவுடன் ஏந்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது.

தற்போது “எனது உடல் எரிப்பு இந்துமத சடங்குகள் எதுவுமில்லாமல், அரசு மரியாதை எதுவுமில்லாமல் எளிமையாக நடத்தப்பட வேண்டும்” என்ற அவரின் விருப்பப்படியே இறுதி அஞ்சலி நடந்தது.

பகுத்தறிவாளராக தன் நெஞ்சுக்கு பொய்யற்றவராக வாழ்ந்து மறைந்த கலைஞர் கிரிஷ் கர்னாட்டின் ஜனநாயக பண்பில் இருந்து கற்றுக் கொள்வோம்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.

“அவர்கள் யாரை அழிக்க நினைக்கிறார்கள்” : காவிகளை எதிர்த்த கிரிஷ் கர்னாட் !

1

‘தெற்கின் அயோத்தி’ என்ற பெயரில் காவிப் படை கர்நாடகத்தின் உள்ள பாபாபுதன்கிரி தர்காவை முற்றுகையிட முனைந்தபோது, எழுத்தாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளை ஒருங்கிணைத்து பேரணி ஒன்றை நடத்தினார் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ்.

லங்கேஷ் பத்திரிகையில் டிசம்பர் 3-ம் தேதி 2003-ம் ஆண்டு கவுரி லங்கேஷ் எழுதிய கட்டுரையில் அண்மையில் மறைந்த நாடகக் கலைஞர் கிரிஷ் கர்னாட், மத நல்லிணக்கத்தை நிலைநாட்டும் பொருட்டு ஆர்வத்துடன் இணைந்துகொண்டதை குறிப்பிட்டுள்ளார்.

கவுரி லங்கேஷ் இந்துத்துவ பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட நிலையில் அந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு, இந்துத்துவ பயங்கரவாதக் குழு உருவாக்கியிருந்த கொலைப்பட்டியலில் கர்னாட்டின் பெயர் முதலில் இருந்ததாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாண்டு கால மோடி ஆட்சியில் இந்துத்துவ குண்டர் படையின் பல அச்சுறுத்தல்களையும் மீறி தனது எதிர்ப்புக்குரலை வெளிப்படுத்தியபடியே இருந்தவர் கிரிஷ் கர்னாட். அவருடைய எதிர்ப்புணர்வு எத்தகைய அர்ப்பணிப்போடு இருந்தது என்பதை கவுரி லங்கேஷின் கட்டுரை விவரிக்கின்றது.

♦ ♦ ♦

பாபாபுதன்கிரியை அயோத்தியாக்க முனையும் காவிப் படையிடமிருந்து அதைக் காக்கும் பொருட்டு, கர்நாடகத்தை குஜராத் ஆக்குவதை நிறுத்த வலியுறுத்தி சிக்மகளூர் மற்றும் பாபாபுதன்கிரியில் மத நல்லிணக்கக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தோம்.

இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த இரண்டு வார காலத்தில் பல அற்புதமான நிகழ்வுகள் நடந்தன. அதை எங்கிருந்து தொடங்குவது என்பதில் எனக்கே குழப்பும் உள்ளது…

மத நல்லிணக்கத்தின் அடையாளமாக உள்ள பாபாபுதன்கிரியை பாதுகாக்கும் பொருட்டு தனது ஆதரவை முன்னமே சொல்லியிருந்த எழுத்தாளர் கிரிஷ் கர்னாட், என்னை அழைத்து இப்படி கேட்டார்.

பாபாபுதன்கிரி

“டிசம்பர் 7 மற்றும் 8 -ஆம் தேதி நடக்கவிருக்கும் நல்லிணக்க கூட்டத்துக்கு முன், அங்கே என்ன நடக்கிறது என்பதை களத்துக்குச் சென்று தெரிந்துகொள்வோமா?” எனக் கேட்டார்.

“என்ன அற்புதமான யோசனை…சரி போகலாம்” என்றேன் நான். எங்களுடன் டாக்டர் கே. மருளசித்தப்பா, ஜி.கே. கோவிந்த் ராவ், சுத்ர ஸ்ரீனிவாஸ், பேரா. வி.எஸ். ஸ்ரீதரா ஆகியோரும் சேர்ந்து சிக்மகளூர் வந்தனர்.

செல்லும் வழியில் பாபாபுதன்கிரியின் தனித்தன்மை குறித்து, காவிப் படை அங்கே உருவாக்கியிருக்கும் விஷச் சூழல் குறித்தும் பேசினோம். இதில் ஒன்றும் ரகசியம் இல்லை, பஜ்ரங் தள குரங்குகள், பாபாபுதன்கிரியில் இந்த ஆண்டு அழிவு வேலைகளை துவக்கியிருக்கின்றன. கடந்த ஆண்டு பஜ்ரங் தளம் போட்ட முழக்கங்களே அதற்கு சாட்சி. ஸ்ரீதர் சென்ற ஆண்டு எடுத்த படங்களை எனக்குக் காட்டினார்.

“நட்பில் ஆர்வமாக உள்ளோம்; ஆனால் அழிக்கவும் தயாராக உள்ளோம்!” என ஒரு புகைப்படத்தில் இருந்த வாசகம் சொன்னது.

கர்னாட் இந்த படத்தைப் பார்த்ததும் சீற்றம் கொண்டு, “அவர்கள் யாரை அழிக்க நினைக்கிறார்கள்? அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளைப் பாருங்கள்… ‘ஆண்மை’, ‘இரத்த ஆறு’, ‘எதிரியை அழித்தல்’… இவையெல்லாம் கன்னடம்தானா?” என வெடித்து தள்ளினார்.

மருளசித்தப்பா இந்த கருத்தை சொன்னார், “நம்முடைய கலாச்சாரம் பசவண்ணா, செரீஃப், கண்ணதாசா, மற்றும் குவேம்பூ ஆகியோரால் வடிவம் தரப்பட்டது. இதுதான் கர்நாடகாவின் மதத்துக்கான அடையாளம். ஆனால், பஞ்ரங் தளம் போன்றோர் மோடி மற்றும் தொகாடியாவின் வழியில் பேசுகிறார்கள்.”

படிக்க:
♦ கவுரி லங்கேஷ் கொலை – சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு : ஒரே குற்றவாளிகள் !
♦ கவுரி லங்கேஷ் கொலையாளிகளின் ஹிட் லிஸ்ட்டில் முதல் இடத்தில் கிரிஷ் கர்னாட்

அந்தப் புகைப்படம் பஜ்ரங் தளத்தின் கோரிக்கைகளையும்கூட காட்டியது. தத்தபீடத்தில் பூஜை செய்யவதற்கும் சிலையை நிறுவுவதற்கும், பூசாரியை நியமிப்பதற்கும் அந்த இடத்தில் உள்ள தூண்களை அகற்றி, முழு இடத்தையும் இந்துக்களின் புனித இடமாக அறிவிக்கவும் பஜ்ரங் கும்பல் கோரிக்கை விடுத்திருந்தது.

சென்ற ஆண்டைப் போல, இந்த ஆண்டும் அதே கோரிக்கைகளை பஜ்ரங் தளம் எழுப்பியிருந்தது. பாஜக தனது முழு ஆதரவை அளிப்பதாக அறிவித்துள்ளது.

பஜ்ரங் தளத்தின் அனைத்து கோரிக்கைகளும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளன. ஒரு கோரிக்கையை நிறைவேற்றுவதுகூட நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக்கும். பாஜக ஆதரவாளர்களுக்கு இது பொருட்டாகவே இல்லை என்பது ஆச்சரியமளிக்கவில்லை.

பாபாபுதன்கிரி குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் நாங்கள் விவாதித்தோம். அந்த தீர்ப்பின்படி, ஜூன் 1975 -வரை நடப்பில் இருந்த சடங்குகள் மட்டுமே நடத்த அங்கே அனுமதிக்கப்படும். புதிய சடங்குகள் எதுவும் அனுமதிக்கப்படாது.

பாபாபுதன்கிரியில் நடத்தப்பட வேண்டிய மத சடங்குகள் என்னென்ன என்பது குறித்தும் ஒரு பட்டியல் அளிக்கப்பட்டிருந்தது. இந்து கோயில்களில் உள்ள சடங்குகள் பலவை இங்கேயும் பின்பற்றப்பட வேண்டும். அவை…

  1. கடவுளின் பாத காலணிகளுக்கு பூ வைப்பது.
  2. விளக்கு ஏற்றுதல்.
  3. பக்தர்களுக்கு தீர்த்தம் என்னும் புனித நீரை அளித்தல்.
  4. தேங்காய் உடைப்பது.
  5. இந்துமத மடங்களைச் சேர்ந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்துதல்.
  6. மயில் இறகைக் கொண்டு பக்தர்களின் தலையில் ஆசிர்வதித்தல்.

1975 -ஆம் ஆண்டு தீர்ப்பு எழுதிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த புனித தலத்தின் நல்லிணக்க தனித்தன்மை குறித்து புகழ்ந்துள்ளனர். ராம் – ரஹீம் என்பது குறித்து அடிக்கடி பேசிக்கொள்கிறோம், அது இங்கே நடைமுறையில் உள்ளது என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அனைத்துக்கும் மேலாக, இந்த புனித தலத்தை பரம்பரை பரம்பரையாக நிர்வகிக்கும் ஷாகாத்ரி எடுத்த முடிவு பாராட்டத்தக்கது என்றும் நீதிமன்றம் புகழ்ந்தது.

தன்னளவில் முசுலீமாக உள்ள அவர், இந்த புனித தலம் இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல, இந்து பக்தர்களுக்காகவும்தான் என்றார். நந்தா தீபம் உள்ளிட்ட இந்து மத அம்சங்கள் உள்ளதால் இந்தத் தலம் இந்துக்களுக்கானது என வழக்கு தொடுத்த இந்துக்களுக்கும் இதில் உரிமை உண்டு.

நூறாண்டுகளுக்கும் மேலாக இங்கே வணங்கி வரும் இசுலாமியர்கள் எவரும், இது எங்களுக்கு மட்டுமே உள்ள தலம் என கூறிக்கொள்ளவில்லை என்பதையும், நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அதே நேரத்தில் வஃக்பு வாரியம் இந்த இடத்தை உரிமை கோரியது. மத மற்றும் சாதி ரீதியாக பிளவுண்ட போதும்கூட, குரு தத்தாத்ரேய பாபாபுதன்ஸ்வாமி தர்கா, மதசார்பின்மையின் சிறந்த உதாரணம் எனவும் நீதிபதிகள் கூறினர்.

அதுபோன்றதொரு இடத்தில் ஒரு தீய சக்தியாக, பழமைவாத இந்து கட்சியான பாஜக-வும், அதனுடைய நரகத்திலிருந்து கிளம்பியிருக்கும் படையான பஜ்ரங் தளமும் அங்கே பூசாரியை (நிச்சயம் அவர் பார்ப்பனராகத்தான் இருப்பார் என்பதை சொல்ல வேண்டியதில்லை) நியமிக்கக் கோரியும், தூண்களை இடிக்கவும் கேட்கிறது. அவர்கள் இது இந்து புனித தலமாக மாற்றுவதில் தீவிரமாக இருக்கிறார்கள்.

கிரிஷ் கர்னாட் இந்த கோரிக்கைகள் அற்பத்தனமானவை என்றார், “தத்த ஜெயந்தி அல்லது தத்த மாலா என்பது நம்முடைய பழக்கமே அல்ல. இவர்களின் கோரிக்கையில் மதம் இல்லை அரசியல்தான் உள்ளது. சாதி அமைப்பை மறுத்த நத பாரம்பரியத்தில் (பசவண்ணரைப் போன்றவர்கள்) வந்த தத்தாத்ரேயாவை பார்ப்பனமயமாக்க நடக்கும் சதி இது என்பதை எளிதாகவே புரிந்துகொள்ளலாம்” என விவரித்தார் அவர்.

குரு தத்தாத்ரேய பாபாபுதன்ஸ்வாமி தர்கா தனக்கென ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளது. அராபியத்திலிருந்து சந்திர துரோண மலைகளுக்கு வந்த ததா ஹயாத், நிலக்கிழார்களால் ஒடுக்குதலுக்கு உள்ளான அங்கிருந்த சூத்திரர்கள் மற்றும் தலித்துகளுக்கு உதவி, அவர்களின் அன்பைப் பெற்றார்.

படிக்க:
♦ சபரிமலை , அயோத்தி : நீதித்துறையை மிரட்டும் மத அடிப்படைவாதிகள் !
♦ மனம் ஓட ஓடத் துரத்துகிறது என்றால் , நாம் ஏன் ஓட வேண்டும் ?

ததா ஹயாத்தின் அன்பு, இரக்கம் மற்றும் சகிப்புத்தன்மை போன்றவற்றின் மீது ஈர்க்கப்பட்ட சிலர் இசுலாத்துக்கு மாறினர். மற்றவர்கள் தங்களுடைய மத நம்பிக்கைகளை புறம்தள்ளாமல் அவருடைய பக்தர்கள் ஆகினர். அவர்கள் தத்தாத்ரேயரின் அவதாரம் என அவரை அழைக்கத் தொடங்கினர்.

அதற்கு இந்து புராணத்தின் படி ஒரு காரணமும் உள்ளது. விஷ்ணு, தத்தாத்ரேயராக அவதாரம் எடுத்து அடிமை மக்களை மீட்கிறார். எனவே, இந்து பக்தர்கள் ததா ஹயாத்தை தத்தாத்ரேயரின் அவதாரமாகக் கருதி, அவருக்கு இந்து பெயரைக் கொடுத்தனர்.

அன்றைய காலக்கட்டத்தில் முசுலீம் சூஃபிகளுக்கு இந்து பெயர் கொடுப்பது பொதுவாக நடந்த ஒன்றுதான். உதாரணத்துக்கு, பிஜாபூரின் சூஃபி காவாஜா அமீனுதீன் அல்லா, பிராமணாந்தயகே ஸ்வாமி என இந்து பக்தர்களால் அழைக்கப்படுகிறார். அதுபோல, டிண்டினியின் மொயிதீன், ‘முனியப்பா’ என்ற பெயரில் இந்துவாக்கப்பட்டார்.

ததா ஹயாத்தும் தத்தாத்ரேயாவும் ஒன்றான நிலையில் தர்காவின் நில உரிமை பத்திரங்களில் ஷாகாத்ரி என்பது ஜகத்குரு என மாறியது. இந்து மற்றும் முசுலீம் மன்னர்கள் இந்த இடத்தில் நூற்றாண்டுகளாக வழிபட்டு வந்துள்ளனர். ராணி சென்னம்மாவின் ஆட்சி காலத்தில் இந்த தர்காவுக்கு சிறப்பான உதவிகள் கிடைத்துள்ளனர்.

ஹைதர் அலி காலத்திலும் நிதி உதவி சிறப்பாகவே அளிக்கப்பட்டுள்ளது. திப்பு சுல்தான் இந்த தர்காவுக்கு நூறு ஏக்கர் நிலத்தை வழங்கியிருக்கிறார். மூன்றாம் கிருஷ்ணராஜா உடையார் இந்த தர்காவுக்கு பல முறை வந்து வணங்கியிருக்கிறார். அதுமட்டுமல்ல, மைசூர் மன்னர், 16 இந்து மத தலைவர்களுக்கு கவுரவங்களை வழங்கியபோது ஸ்ரீ குரு தத்தாத்ரேய பாபாபுதன்ஸ்வாமி ஜகத்குருவுக்கும் மரியாதை செய்துள்ளார். வேறு எந்த முசுலீம் மத தலைவருக்கும் இத்தகைய மரியாதை செய்யப்படவில்லை.

அத்தகைய இடத்தில் காவிப் படை ஹோமம், யாகம், யக்னம், பூஜை மற்றும் அர்த்தமற்ற பல சடங்குகளைச் செய்ய வலியுறுத்துகிறது.


கலைமதி
நன்றி : தி வயர்

மனம் ஓட ஓடத் துரத்துகிறது என்றால் , நாம் ஏன் ஓட வேண்டும் ?

4

னதை ஒருமுகப்படுத்துவது ஒரு பெரிய சவால். நமக்கு மட்டுமல்ல இதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டிருக்கும்; கொண்டிருந்த, முறையே இந்தக்கால மற்றும் அந்தக்கால துறவிகளுக்கும் இதேதான் சிக்கல்.

நாம் மிகவும் விரும்பி ஒரு நூலை வாங்குகிறோம்; படிக்கத் திறந்து அமர்ந்தவுடன் பல்வேறு சிந்தனைகள் மனதை ஆக்கிரமித்து விடுகின்றன. அவர்களுக்கும் கூட இதேதான் பிரச்சினை. நாம் கடிகாரத்தைப் பார்க்கிறோம் – அவர்கள் சூரியனின் நிலையை வெறித்துக் கொண்டிருந்தனர்.

அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி ஒரு வேலையில் அமர்ந்தவுடன் எழும் உணவு குறித்த சிந்தனையோ, பாலுறவு குறித்த சிந்தனையோ இன்ன பிற கவனச்சிதறல்களோ பெரும் சவால்தான். கனவுகள் கூட சில சமயம் தொந்தரவு செய்கின்றன.

அடுத்து வரும் செய்யுட்கள் பட்டிணத்தார் எழுதிய கச்சித்திரு அகவல். கொஞ்சம் நீளம்தான் என்றாலும் மூக்கைப் பிடித்துக் கொண்டு படித்து விடுங்கள்.

மானிடர்க் கெல்லாம் யானெடுத் துரைப்பேன்
விழிவெளி மாக்கள் தெளிவுறக் கேண்மின்;
முள்ளும் கல்லும் முயன்று நடக்கும்
உள்ளங் காலைப் பஞ்சென உரைத்தும்,
வெள்ளெலும் பாலே மேவிய கணைக்கால்

துள்ளும் வரால் எனச் சொல்லித் துதித்தும்,
தசையும் எலும்புந் தக்கபுன் குறங்கை
இசையுங் கதலித் தண்டென இயம்பியும்
நெடும் உடல் தாங்கி நின்றிடும் இடையைத்
துடிபிடி யென்று சொல்லித் துதித்தும்,

மலமும் சலமும் வழும்புந் திரையும்
அலையும் வயிற்றை ஆலிலை யென்றும்,
சிலந்தி போலக் கிளைத்துமுன் னெழுந்து
திரண்டு விம்மிச் சீப்பாய்ந்து ஏறி
உகிரால் கீறல் உலர்ந்து உள் உருகி

நகுவார்க்கு இடமாய் நான்று வற்றும்
முலையைப் பார்த்து முளரிமொட் டென்றும்,
குலையும் காமக் குருடர்க்கு உரைப்பேன்;
நீட்டவும் முடக்கவும் நெடும் பொருள் வாங்கவும்
ஊட்டவும் பிசையவும் உதவி இங் கியற்றும்

அலங்கையைப் பார்த்துக் காந்தள் என்றுரைத்தும்,
வேர்வையும் அழுக்கும் மேவிய கழுத்தைப்
பாரினில் இனிய கமுகெனப் பகர்ந்தும்,
வெப்பும் ஊத்தையும் மேவிய வாயைத்
துப்பு முருக்கின் தூய்மலர் என்றும்,

அன்ன முங் கறியும் அசைவிட்டிறக்கும்
முன்னிய பல்லை முத்தென மொழிந்தும்
நீரும் சளியும் நின்று நின்று ஒழுகும்
கூறிய மூக்கைக் குமிழ் எனக் கூறியும்
தண்ணீர் பீளை தவிராது ஒழுகும்

கண்ணைப் பார்த்துக் கழுநீர் என்றும்
உள்ளுங் குறும்பி ஒழுகுங் காதை
வள்ளைத் தண்டின் வளம் என வாழ்த்தியும்
கையும் எண்ணெயும் கலவாது ஒழியில்
வெய்ய அதரும் பேனும் விளையத்

தக்க தலை யோட்டில் முளைத்து எழுந்த
சிக்கின் மயிரைத் திரள் முகி லென்றும்
சொற்பல பேசித் துதித்து நீங்கள்
நச்சிச் செல்லும் நரக வாயில்
தோலும் இறைச்சியும் துதைந்து சீப்பாயும்

காமப் பாழி; கருவிளை கழனி;
தூமைக் கடவழி; தொளைபெறு வாயில்;
எண்சாண் உடம்பும் இழியும் பெருவழி!
மண்பால் காமம் கழிக்கும் மறைவிடம்;
நச்சிக் காமுக நாய்தான் என்றும்

இச்சித் திருக்கும் இடைகழி வாயில்;
திங்கள் சடையோன் திருவருள் இல்லார்
தங்கித் திரியும் சவலைப் பெருவழி;
புண் இது என்று புடவையை மூடி
உள் நீர் பாயும் ஓசைச் செழும்புண்

மால்கொண்டு அறியா மாந்தர் புகும்வழி;
நோய் கொண்டு ஒழியார் நுண்ணியர் போம்வழி;
தருக்கிய காமுகர் சாரும் படுகுழி;
செருக்கிய காமுகர் சேருஞ் சிறுகுழி;
பெண்ணும் ஆணும் பிறக்கும் பெருவழி;

மலம் சொரிந்து இழியும் வாயிற்கு அருகே
சலம்சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்;
இத்தை நீங்கள் இனிது என வேண்டா;
பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி
மெச்சிச் சிவபத வீடருள் பவனை

முத்தி நாதனை மூவா முதல்வனை
அண்டர் அண்டமும் அனைத்துள புவனமும்
கண்ட அண்ணலைக் கச்சியிற் கடவுளை
ஏக நாதனை இணையடி இறைஞ்சுமின்
போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே!

பாருங்களேன், காமத்தை வென்ற பட்டிணத்தார் கூட சதா நேரமும் அதனோடுதான் கட்டிப்புரண்டு மல்லுக்கட்டி இருக்கிறார். தியானத்தில் அமர்ந்து ”தன்னைத் தான் அறிந்த” நிலை குறித்து சித்தர் பெருமக்கள் பேசியது கூட குறைவுதான்..

படிக்க:
ஹார்லி டேவிட்சன் பைக் வரி குறைப்பு : மிரட்டும் ட்ரம்ப் ! பம்மிய மோடி !
♦ சூப்பர் டீலக்ஸ் : அரதப் பழசான அத்வைதம் | திரை விமர்சனம்

“அண்டத்தைப் பிண்டத்தில் கண்டதையும், பிண்டத்தை அண்டத்தில் கண்டதையும்” குறித்து அவர்கள் “விண்டிலர்”. முகநூலும், ட்விட்டரும், வாட்சப்பும், நெட்ஃப்ளிக்சும், அமேஸான் பிரைமும், டிக்டோக்கும், தொலைக்காட்சி அக்கப் போர்களும் நமது கவனத்தைக் குலைத்துப் போடுகின்றது என்றால்; அந்தக்கால துறவிகளின் தவத்தை சோறும், சதையும் ஆட்டிப் படைத்துள்ளன.

மனதின் அலைபாய்தலைக் குறித்து தீவிரமாக சிந்தித்த அந்தக்கால துறவியர் பெருமக்கள், அதற்கான காரணத்தை மூளைக்கு வெளியே தேடி அலைந்துள்ளனர். மேலை நாட்டு ஞானிகளுக்கும் கூட இதே சிக்கல்தான். கிறிஸ்தவ மெய்யியலின் தந்தை எனப் போற்றப்படும் ஜான் கேஸ்ஸியன் (கிபி 360 – 435) இதைக் குறித்து எழுதியுள்ளார். “திடீர் குறுக்கீடுகளால் மனம் செலுத்தப்படுகின்றது” என்ற ஜான், அது “ஒரு குடிகாரனைப் போல் அலைந்து திரிகிறது” என்கிறார். நல்ல வேளையாக ஜானின் காலத்தில் திறன்பேசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

கிறிஸ்துவுக்குப் பிந்தைய நூற்றாண்டுகளில் வந்த பாதிரிமார்கள் பெரும்பாலும் தனிமையில்தான் தங்கள் நேரத்தைக் கழித்தனர். ஜானின் காலத்துக்குப் பின்னர் மடாலயங்கள் தோன்றி வளரலாயிற்று. கிறிஸ்தவ துறவிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்கிற நடத்தை விதிகளும் உருவாக்கப்பட்டன.

ஏறத்தாழ அதே காலகட்டத்தில் பௌத்த சங்கங்களிடம் இருந்து பார்ப்பனியம் மடங்கள் எனும் வடிவத்தை களவாடிக் கொண்டதையும், அதே போன்ற ஒழுக்க நெறிகள், விதிமுறைகள் உருவாக்கிக் கொண்டதையும் இங்கே ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

மடாதிபதிகள் அல்லது சாமியார்கள் அல்லது துறவரம் பூண்டவர்கள் சதா காலமும் இறை நினைப்போடு வாழ வேண்டும். தியானத்தில் இருக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் விசேடமான ஆற்றல்களைப் பெறுவார்கள் என்றும், உடல் மற்றும் உள்ளத்தின் பலவீனங்களை கடந்துவிடுவார்கள் என்றும் நம்பப்பட்டது.

இறை நினைப்பில் தங்களைத் தக்க வைத்துக் கொள்ள அவர்கள் பின்பற்றிய முறைகள் மிகவும் கடுமையானவை. தாங்கள் மிகவும் விரும்பிய அனைத்தையும் – குடும்பம், சொத்துக்கள், தொழில் – என அனைத்தையும் துறந்துள்ளனர். முடிந்தவரை அன்றாட வாழ்வியல் கடமைகளில் இருந்து தங்களை துண்டித்துக் கொண்டனர்.

ஆனால் உடல் என்று இருக்கும் வரை அதனுள் இருக்கும் இரசாயனங்கள் வேலை செய்து தானே தீரும்? மத்திய கால கிறிஸ்தவ துறவிகள் உடல் அதற்கே உரிய முறையில் உணவு, காமம் போன்றவற்றைத் தேடும் எனவும் அதன் மூலம் மனதைப் பின்னுக்கு இழுக்கும் எனவும் கருதினர்.

எனினும் அவர்கள் உடலை மறுக்கவில்லை; நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மடாலயங்கள் பரவிய சமயத்தில் பாதிரிகளும், சகோதரிகளும் குறைந்த உணவை உட்கொண்டதோடு திருமண பந்தத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதே போல் கடுமையான உடல் உழைப்பையும் மேற்கொண்டனர்.

இதே காலகட்டத்தைச் சேர்ந்த இந்திய யோகிகளும் ஏறத்தாழ இதே வழிமுறைகளைப் பின்பற்றியுள்ளனர் என தனது “யோகா பாடி” எனும் நூலில் நிறுவியுள்ளார் மார்க் சிங்கிள்டன். குடும்ப வாழ்க்கையை, சொத்துக்கள், உறவுகள் என அனைத்தையும் துறந்து விட்டு காடு மலைகள் எனச் சுற்றியலைவது, மரத்தில் தலைகீழாய்த் தொங்குவது, ஆணிப் படுக்கையில் படுப்பது, ஒற்றைக் காலில் நாட்கணக்கில் நிற்பது என கடுமையான யோக சாதனைகளை முயற்சித்துப் பார்த்துள்ளனர்.

அனைத்து முயற்சிகளையும் உடல் தோற்கடித்த பின், சில கற்பனையான காட்சிகளில் மனதை லயிக்கச் செய்யும் முறைகளையும் பரிசோதித்துள்ளனர். மனதை அந்தக் காட்சிகளின் போக்கில் செலுத்துவது, அதனூடாக அதன் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவது என ஏராளமான முறைகளைப் பரிசோதித்துள்ளனர். ஜான் காஸ்ஸியன் பைபிளின் சங்கீதத்தில் வரும் வசனங்களை திரும்பத் திரும்ப ஒப்பிக்கும் முறை ஒன்றை முன்வைத்துள்ளார். நமக்கும் நாமாவளி பஜனை அறிமுகமானது தானே. மனதைக் குவிக்க “ஓம் நமச்சிவாய” “ஜெய் சிறீராம்” என மலை மலையாக நோட்டுப் புத்தகங்களில் எழுதிக் குவித்தவர்களை நமது பள்ளி நாட்களில் பார்த்திருப்போம் – ஏன் நாமே கூட அப்படி எழுதியிருப்போம்.

படிக்க:
நீங்கள் சிரிப்பதும் அழுவதும் ஃபேஸ்புக் கையில் !
♦ அச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது ?

ஆனால், இத்தனை நூற்றாண்டுகளாக ஞானிகள் இகலோக தொந்தரவுகளில் இருந்து தப்பித்து பரலோக அனுபவத்தை அடையவும், புறநிலை இன்னல்களில் இருந்து தப்பித்து, அகநிலை இன்பத்தை அடையவும் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அத்தனையும் வியர்த்தமாகியுள்ளது.

எல்லா பெரிய சிக்கல்களுக்கும் இருப்பது போன்றே இதற்கும் எளிமையான தீர்வு ஒன்றுள்ளது. புறநிலை எதார்த்தங்களை அங்கீரிப்பதும், அதற்குள்ளேயே அதற்கான தீர்வைத் தேடுவதும்தான் அந்த எளிமையான தீர்வு.

ஓட ஓடத் துரத்துகிறது என்றால் ஏன் ஓட வேண்டும்? ட்விட்டரும் முகநூலும் டிக்-டோக்கும் நம் கவனத்தை இழுக்கிறது என்றால், அஞ்சி சுருங்கிக் கொள்ளத் தேவையில்லை.

அவை ஏன் அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன, நமது கவனச் சிதறலும்; நாம் செய்து கொண்டிருக்கும் நேரக் கொலையும், யாருக்குச் சாதகமாய் முடிகிறது என்பதை ஆராய்வது, மெய்நிகர் உலகின் மயக்கங்களில் இருந்து தெளிவடைவதற்கான துவக்கமாக இருக்கும்.

சாக்கியன்

சிங்களப் பேராசிரியர் விஸ்வநாத் வஜிரசேன எழுதிய “தமிழ்ப் பண்பாடு – மொழியும் இலக்கியமும் ”

0

நண்பர்களே…

பொ.வேல்சாமி
ழந்தமிழ் இலக்கியங்களைப் படிக்கச் சொல்லுவது என்பதை “தமிழ்த் திணிப்பு” என்று சொல்ல வேண்டும் என்ற, ஒரு கொழுத்த முட்டாள்தனமான பதிவு சென்ற வாரம் முகநூலில் வந்ததாக நண்பர்கள் கூறினர். இத்தகைய முழு மூடர்களின் உளறல் கேனத்தனமானது.

இத்தகைய அபத்தமான அறிவுகெட்டதனமான கருத்துக்களின் பொருந்தாமையை விளக்குவது போன்ற ஒரு கட்டுரையை சிங்களப் பேராசிரியர் “விஸ்வநாத் வஜிரசேன”, “இருபத்துமூன்று நூற்றாண்டு கால சிங்கள – பௌத்த கலாசாரம்” என்ற நூலில் 1994-ல் எழுதியுள்ளார்.

இந்தக் கட்டுரை தமிழ்மொழிக்கும் சிங்களமொழிக்கும் உள்ள உறவுகளை ஆராய்கின்றது. முற்காலங்களில் வாழ்ந்த சிங்கள அறிஞர்களில் பலர் தமிழ் இலக்கண இலக்கியங்களை செம்மையாகப் படித்திருந்தனர் என்பதற்கு பல்வேறு சான்றுகளைத் தருகின்றார்.

“தர்மப்பிரதீபிகை” என்ற நூலில் இறையனார் களவியலில் வரும் ஒரு பத்தி அப்படியே ஒத்ததாக இருப்பதை மேற்கோள் காட்டுகின்றார். தமிழ்மொழியில் உள்ள சிற்றிலக்கியங்களில் பலவும் சிங்கள இலக்கிய ஆக்கத்திற்கு பயன்பட்டதை விளக்குகின்றார்.

இதுபோன்ற விரிவான விவரங்களை “சுனில் ஆரியரத்ன” என்ற சிங்களப் பேராசிரியர் எழுதிய “தமிழ் இலக்கிய வரலாறு” என்ற சிங்கள நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். இப்படிப்பட்ட பல அரிய செய்திகளைக் குறிப்பிடும் இந்தக் கட்டுரையில் கவனிக்கத்தக்க முக்கியமான அம்சம் என்பது “சிங்கள வினைச்சொற்கள் பற்றியும் பெயர்சொற்கள் பற்றியுமான தெளிவான அறிவினைப் பெற்றுகொள்வதற்கு தொல்காப்பியத்தை பயிலுவது இன்றியமையாதது” என்று அவர் கூறுகிற செய்தியாகும்.

இதுபோன்ற சிறந்த கருத்துக்களைக் கூறும் இந்தக் கட்டுரையை நண்பர்கள் படித்துப் பார்ப்பதற்கு உதவியாக இந்த லிங்கைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்…

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நன்றி : முகநூலில் பொ. வேல்சாமி

இத்தாலியில் பாசிசத்தின் வளர்ச்சி வரலாறு !

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 2 | பாகம் – 9

டோக்ளியாட்டி

பாசிசத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இன்று தோற்றுவிக்கப்படவில்லை; அவை முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட பாதையில் முன்னேறவில்லை. எப்போதும் போலவே இப்போதும் இந்த வாய்ப்புகள் பொருளாதார நிலைமையுடனும் வர்க்கப் போராட்டத்துடனும் பிணைக்கப்பட்டுள்ளன.

இதனை நாம் மனத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்தப் பாடம் நெடுகிலும் இதனை நாம் வலியுறுத்துவோம்; ஏனென்றால் பாசிசத்தின் இன்றைய வாய்ப்புகள் நிலையானவை, நிலைநாட்டப்பட்டவை, நீடிக்கக்கூடியவை, நிரந்தரமானவை என்று நாம் கருதினோமானால் நாம் அத்துடன் ஒழிந்தோம். அரசு எந்திரம் என்பது வர்க்க உறவுகளிலிருந்து தோன்றும் ஓர் அரசியல் மேல் கட்டுமானமே அன்றி வேறல்ல என்பதை நாம் எப்போதுமே மனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தக் கருத்தை விளக்குவதற்கு இத்தாலியில் பாசிசத்தின் வளர்ச்சியை உதாரணமாக எடுத்துக் கொண்டு பார்ப்போம்.

இந்த ஆய்வை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கிறேன். முதல் காலகட்டம் ரோம் படையெடுப்பு வரையிலும் 1922-ம் ஆண்டு வரையிலுமானது. இரண்டாவது காலகட்டம் 1922 முதல் 1925 வரையிலானது. சர்வாதிகாரமல்லாத ஒரு பாசிச ஆட்சியை அமைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்ட காலகட்டம் என இதனைக் கூறலாம்; மூன்றாவது காலகட்டம் 1925 முதல் 1930 வரையிலானது. இந்தக் காலப் பகுதியில்தான் சர்வாதிகாரத்திற்கு அடித்தளமிடப்பட்டது. மாபெரும் பொருளாதார நெருக்கடி இந்தக் காலகட்டத்தில்தான் தொடங்கிற்று.

ரோம் நகர் பேரணியில் முசோலினி மற்றும் கருஞ்சட்டைப் படையினர்.

ரோம் படையெடுப்பு வரையிலான காலகட்டத்தின் ஒரு முக்கியமான அம்சம், பாசிசம் எத்தகைய உறுதியான, தெளிவான திட்டத்தையும் கொண்டிராததுதான். 1919 முதல் 1922 வரை பாசிசம் மேற்கொண்ட தொடர்ச்சியான நிலைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்தீர்களேயானால் அவை தொடர்ந்து மாறி வந்திருப்பதைக் காணலாம். இந்தக் காலப்பகுதியில் எத்தகைய நிலைமை நிலவியது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதைப் பற்றி நாம் ஏற்கெனவே கூறியிருக்கிறோம். அந்தக் காலகட்டத்தின் முக்கிய அம்சங்களை இங்கு மீண்டும் கோடிட்டுக் காட்டுகிறோம்; ஆழமான புரட்சிகர நெருக்கடி; அடிப்படை அரசியல் அமைப்புகளின் முறிவு; முக்கியமாக மிகப் பெரும்பாலான தொழிலாளர்களிடையேயும் விவசாயிகளிடையேயும் பொதுவான அதிருப்தி; நிலைமையில் மாற்றம் ஏற்படும் பொருட்டு ஓரணியாக ஒன்று திரள வேண்டும் என்று புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்திடமும் விவசாயிகளிடமும் ஏற்பட்ட உந்துதல் போக்கு முதலியவை.

இந்தக் காலகட்டத்தில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு பூர்ஷுவா வர்க்கம் மேற்கொண்ட திட்டம் என்ன? அவர்கள் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு திட்டங்களைக் கைக் கொண்டனர்.

இவற்றில் முதல் திட்டம் நிட்டியினுடையது 2: நிட்டி, நிதி மூலதனத்தின் பிரதிநிதி. பல வங்கிகளின் பிதாமகர். மிகப்பெரிய இத்தாலிய வங்கியான டிஸ்கவுன்ட் வங்கியை நிறுவியவர். அதே சமயம் அவர் தீவிர முற்போக்காளர்; ஜனநாயக மனோபாவம் கொண்டவர். நிட்டியின் திட்டத்தில் இரண்டு அம்சங்கள் அதாவது நிதிமூலதனத்தின் மேலாண்மையும் ஒரு ஜனநாயகத் திட்டமும் இணைந்திருப்பதைக் காண்கிறோம். எடுத்தஎடுப்பில் பார்க்கும்போது இந்த இரண்டு அம்சங்களும் பரஸ்பரம் முரண்பட்டவையாகத் தோன்றக்கூடும். முந்தையது நிதி மூலதனத்தை ஆதரிக்கிறது. பிந்தையது சமூக வளர்ச்சிகளைக் கிளர்த்திவிடும் மிகவும் முன்னேற்றமடைந்த அம்சத்தைக் குறிக்கிறது.

பிரான்செஸ்கோ சாவரியோ நிட்டி (Francesco Saverio Nitti)

இந்தத் திட்டம் எதைப் பிரதிநிதித்துவப்படுத்திற்று? நெருக்கடி நிலையிலிருந்து விடுபடுவதற்கான வழியைக் காணும் பூர்ஷுவாக்களின் முயற்சியை அது பிரதிநிதித்துவப்படுத்திற்று. சமுதாயம் மிக ஆழமான மாற்றத்தைக் காணும் என்று நிட்டி முன்னுணர்ந்தார். குடியரசு வடிவிலான அரசாங்கத்துக்கு மாறக் கூடிய வாய்ப்பு இருப்பதை அவர் மறுக்கவில்லை; அரசியல் நிர்ணய சபை ஏற்படக் கூடிய சாத்தியக் கூறையும் அவர் நிராகரிக்கவில்லை. பாபுலர் கட்சியுடன் மட்டுமன்றி சோஷலிஸ்டுகளுடனும் ஒத்துழைக்க அவர் தயாராக இருந்தார்.

சில பிரிவினரைத் தன்பக்கம் ஈர்க்கும் பொருட்டு அவர்களுக்கு சலுகைகள் அளிக்கும் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தார். எனினும் இக்கொள்கையை மேலும் விரிவுபடுத்தி, முற்போக்கு சக்திகளுக்கும் சலுகைகள் வழங்க ஆரம்பித்தார்.

பூர்ஷுவாக்களில் மிகவும் பிற்போக்கான பகுதியினரின் விருப்பத்துக்கிணங்க “ராயல் கார்ட்” எனும் காவற்படையை அவர் உருவாக்கினார். பின்னர் இதனைத் தன் நிலையை வலுப்படுத்திக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் அதேசமயம் சமூக ஜனநாயகவாதிகளுடனும் இரகசியத் தொடர்பு கொண்டிருந்தார். முற்போக்கான பொருளாதார நடவடிக்கைகள் பற்றி அவர்களுடன் விவாதித்தார்.

பாஸ்சி டி கம்பாட்டிமென்டோ.

அவருடைய திட்டத்தை பாஸ்சி டி கம்பாட்டிமென்டோவின் 1919-ம் வருட பியஸ்ஸா சான் செபல்குரோ திட்டத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அவை கிட்டத்தட்ட ஒவ்வொரு அம்சத்திலும் ஒத்திருப்பதைக் காணலாம். பாஸ்சி திட்டம் ஒரு குடியரசுத் திட்டம்; நிட்டி திட்டத்திலும் குடியரசுப் பற்றி நிறைய குறிப்பிடப்பட்டிருக்கிறது. பாஸ்சி திட்டம் அரசியல் நிர்ணய சபையைப் பற்றிப் பேசுகிறது. நிட்டியும் இதில் சற்றும் பின்வாங்கிவிடவில்லை; முதலாளிகள் மீது படிப்படியாக வரி விதிப்பது போன்ற பல முதலாளித்துவ எதிர்ப்பு நடவடிக்கைகள் முந்தைய திட்டத்தில் அடங்கியிருக்கின்றன. பிந்தைய திட்டமும் இத்தகைய நடவடிக்கைகளைப் பற்றிப் பிரஸ்தாபித்துள்ளது.

மிகவும் முன்னேறிய அரசியல் சாகசச் செயல்கள் மூலம் நெருக்கடியைச் சமாளிப்பதற்கு 1919-ம் ஆண்டிலும் 1920-ம் ஆண்டின் ஆரம்ப மாதங்களிலும் இத்தாலியப் பூர்ஷுவாக்கள் மேற்கொண்ட முயற்சியை இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 1919-ம் வருட பாஸ்சி டி கம்பாட்டிமென்டோ திட்டத்தில் இந்த முயற்சி பிரதிபலிப்பதையும் காணலாம்.

நிட்டியின் திட்டம் தோல்வியடைந்தது. அது செயல்படுத்தப்படவில்லை, அதனை நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு அப்போது நிலைமை உருவாகியிருந்தது. பல முரண்பட்ட அம்சங்களுடன் அது மோதிற்று. சமாளிக்க முடியாத அரசியல் இடையூறுகள் காரணமாக அது தவிர்க்க இயலாதபடி முடிவுக்கு வந்தது.

படிக்க:
தாகூருக்கு காவி வண்ணம் பூசும் சங் பரிவாரங்கள் !
பூண்டு திண்ணா புத்தி மழுங்குமா ? கண்ணாடியை திருப்புனா ஆட்டோ ஓடுமா ?

உண்மையில் நிட்டியின் திட்டத்தைச் சீர்குலைத்தவர்கள் பாட்டாளி வர்க்கத்தினரும் தென்பகுதி விவசாயிகளும்தான். பூர்ஷுவாக்களின் சீர்த்திருத்த தந்திரோபாயங்களுக்கு இலக்கான இந்த மக்கள் இன்னும் மிகத் தீவிரமான பிரச்சினைகளை எழுப்பினர். மின்விசைப் பிரச்சினை, நிலங்களைக் கைப்பற்றுதல் போன்றவை இவற்றில் அடங்கும். அச்சமயம் தொழிற்சங்க நடவடிக்கைகள் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த பிராந்தியம் எமிலியா என்பது. இப்பிராந்தியத்தைச் சேர்ந்த பண்ணைத் தொழிலாளர்கள் எழுப்பி வந்த பிரச்சினைகள் கிராமப்புறத்தில் தனிச் சொத்துரிமையின் அடித்தளங்களையே ஆட்டி அசைத்துக் குலுக்குவதாக இருந்தன. சமுதாயத்தின் சகல அஸ்திவாரங்களையும் ஆட்டங்காணச் செய்வதாக இருந்தன. நிட்டியின் திட்டம் வெறும் கற்பனாவாதத் திட்டமாக இருந்தது. எனவே, அது தவிர்க்க முடியாதபடித் தகர்ந்து போயிற்று.

கியோவான்னி கியோலிட்டி (Giovanni Giolitti)

அடுத்து, பூர்ஷுவாக்கள் மற்றொரு முயற்சியை மேற்கொண்டனர். யுத்தப் பிற்காலத்தில் தோன்றிய இக்கட்டான நிலைமையிலிருந்து கியோலிட்டியின் 3 துணை கொண்டு மீள்வதே பூர்ஷுவாக்களது இந்த இரண்டாவது முயற்சியின் நோக்கம். கியோலிட்டி ஒரு பழம்பெரும் பூர்ஷுவா ராஜதந்திரி. போரின்போது தோல்வி மனப்பான்மை கொண்ட ஒரு துரோகியாக மாறினார்(!). அவரும்கூட அரைகுறையான குடியரசு நிலைகளை மேற்கொண்டார். உதாரணமாக, டொரனேரோவில் அவர் நிகழ்த்திய உரையில் போர்ப் பிரகடனம் செய்யும் அதிகாரத்தை அரசிடமிருந்து விலக்கிக் கொள்வதற்கு அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று யோசனை கூறினார். அதேசமயம் முடியாட்சியின் கடைந்தெடுத்த ஆதரவாளராகவும் இருந்துவந்தார். முடியாட்சியை நவீன முறையில் மாற்றியமைத்தவரே அவர்தான் என்றுகூடக் கூற வேண்டும். இவ்வாறெல்லாம் இருந்துங்கூட அவர் குடியரசு நிலைப்பாடுகளை மேற்கொள்ளும் போக்கினைக் கடைப்பிடித்தார்.

ஆனால் கியோலிட்டியின் திட்டம் நிட்டியின் திட்டத்திலிருந்து சில அம்சங்களில் மாறுபட்டதாக இருந்தது. நிட்டியின் திட்டம் ஏற்கெனவே தோல்வியடைந்துவிட்ட நிலைமையில் கியோலிட்டி அதிகாரத்துக்கு வந்தார்.

கியோலிட்டியின் திட்டத்தில் இரண்டு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்; ஒருபுறம் பாசிசத்துக்கும், பாட்டாளி வர்க்கத்தை நசுக்குவதற்கு அதனை ஓர் ஆயுதந்தாங்கிய இயக்கமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கும் முக்கியத்துவம் அளித்தல்; மறுபுறம் சோஷலிஸ்டுக் கட்சியை அடக்கி ஒடுக்குவதற்கும் புரட்சியாளர்களை நாட்டைவிட்டு விரட்டுவதற்கும், சீர்திருத்தவாதிகளைத் தனிமைப்படுத்தி அவர்களை அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதற்கும் திட்டமிடுதல் ஆகியவையே அந்த இரண்டு அம்சங்கள்.

(தொடரும்)

அடிக்குறிப்புகள் :

2. பிரான்செஸ்கோ சாவரியோ நிட்டி, (1868-1953), லுகானியாவைச் சேர்ந்த பொருளாதாரவாதியும் தீவிர அரசியல்வாதியுமாவார். 1919 ஜூன் முதல் 1920 ஜூன் வரை இத்தாலியின் பிரதம மந்திரியாக இருந்தார்.

3. கியோவான்னி சியோலிட்டி (1842-1928) 1892-93, 1906-09, 1911-14, 1920-21 ஆண்டுகளில் பிரதம மந்திரியாக இருந்தார். 20-ம் நூற்றாண்டு துவக்கத்திற்குப்பின் இத்தாலிய அரசியலில் மிகப் பிரபலமான புள்ளியாக இருந்தார். அல்குனி டெமி டெல்லா குயிஸ்டியோனி என்ற முற்றுப் பெறாத தமது கட்டுரையில் கிராம்ஸி கியோலிட்டியின் முன்னேற்றத்தைப் பற்றியும் அவரது உள்நாட்டுக் கொள்கையின் அடிப்படை பற்றியும் மிகத் தெளிவான, துல்லியமான பரிசீலனையை அளித்துள்ளார்.

ரத்தக்களறியான 1890-1900 ஆண்டுகளுக்குப் பின், முற்றிலும் ஒதுங்கி நிற்கும், முற்றிலும் பலாத்காரம், முற்றிலும் சர்வாதிகாரம் – இவற்றை பூர்ஷுவாக்கள் கைவிடவேண்டியிருந்தது. தெற்கேயுள்ள விவசாயிகளும் வடக்கேயுள்ள தொழிலாளிகளும் ஒரே சமயத்தில் – ஒன்றிணைந்து செயல்படாவிடினும் – கலகத்தில் எழுந்தனர்; புதிய நூற்றாண்டில் ஆளும் வர்க்கம் புதிய கொள்கையை துவக்கியது.

அதாவது, வர்க்க கூட்டணிகள், வர்க்க அரசியல் அணி, பூர்ஷுவா ஜனநாயகம், அது இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்: கிராமப்புற ஜனநாயகமா – அதாவது தெற்கத்திய விவசாயிகளுடன் கூட்டணியா அல்லது சுதந்திரமான வியாபாரம், வயது வந்தோருக்கு வாக்குரிமை, நிர்வாகம் கீழ்மட்டத்திற்கு அதிகாரம் வழங்குதல், உற்பத்திச் சரக்குகளுக்கு குறைந்த விலைகள் ஆகியவையா? அல்லது வயது வந்தோர் வாக்குரிமை இல்லாமல் ஒரு முதலாளித்துவ – விவசாயி அணி, சுங்கவரி பாதுகாப்பு, மையப்படுத்தப்பட்ட அரசு (விவசாயிகள் மீது, குறிப்பாகத் தெற்கிலும் தீவுகளிலும் உள்ளவர்கள் மீது, பூர்ஷுவா ஆட்சியின் வெளிப்பாடு) ஊதியம், தொழிலாளர் உரிமைகள் பற்றிய சீர்திருத்தவாதக் கொள்கை. அது இரண்டாவது தீர்வைத் தேர்ந்தெடுத்தது. பூர்ஷுவாக்களின் ஆட்சியை கியோலிட்டி உருவகப்படுத்தினார்.

ஸ்குவாட்ரிஸ் மோ (Squadrismo)

1919 அக்டோபர் 19-ம் தேதி டிரோனேரோவில் கியோலிட்டி ஆற்றிய உரை இத்தாலியின் யுத்தபிற்கால நெருக்கடியை தீர்ப்பதற்கான மிக முற்போக்கான பூர்ஷுவாத் திட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது.  யுத்தத்தில் இத்தாலி தலையிட்டதை கியோலிட்டி விமர்சித்தார். 1914-15 ஆண்டுகளில் அவர் எடுத்த நடுநிலைமைக் கொள்கையை நினைவுபடுத்தினார் (கியோலிட்டியை “ஒரு தோல்வி  மனப்பான்மை கொண்ட தேசத்துரோகி” என்ற தேசியவாதிகளின் குற்றச்சாட்டை பற்றி டோக்ளியாட்டி அப்பொழுது குறிப்பிட்டது) யுத்தப் பிரகடனம் செய்ய அரசருக்கும் மந்திரி சபைக்கும் உள்ள உரிமையை எடுத்துவிட்டு அந்த உரிமையை நாடாளுமன்றத்துக்கு வழங்க, கார்ல் ஆல்பர்டின் அரசியல் சட்டத்தின் 5-வது ஷரத்தை திருத்த வேண்டுமென்று கூறினார்.

படிப்படியான வருமானவரி, சொத்துரிமை வரி திட்டத்தைக் கொண்டு வருவதாகவும் நிறுவனங்களின் பங்குகள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்றார். நீர் மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கு அரசின் தலையீடு சாத்தியம் என்று தனியார் தொழில்களைப் பயமுறுத்தினார். வெளிநாட்டு வர்த்தகத்தின் மீது அரசின் கட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதை முன்வைத்தார். அரசின் அடித்தளத்தை விரிவுபடுத்தி லிபரல் ஜனநாயகக் கட்டுக்கோப்பிற்குள் பூர்ஷுவாக்களின் பொருளாதார அரசியல் அதிகாரத்தை பாதுகாக்கும் திட்டத்திற்கு டிரோனேரோவின் அவரது உரை உருக்கொடுக்கிறது. இதன்மூலம் புரட்சிகர இயக்கத்தின் முன்னேற்றத்தை கூர்மழுங்கச் செய்ய முடியும் என்று கருதினார்.

எனினும் 1920-ல், மீண்டும் கியோலிட்டி பிரதம மந்திரியாக இருந்தபோது, நிலைமை ஏற்கனவே மாறியிருந்தது. வளர்ந்து வரும் பாசிஸ்டு இயக்கம், புரட்சிகர இயக்கத்திற்கு மட்டுமின்றி அவர் பாதுகாக்க விரும்பிய லிபரல் அரசுக்கும் ஒரு ஆபத்தை ஏற்படுத்தியதை இந்த வயது முதிர்ந்த ராஜதந்திரியால் கண்டுகொள்ள முடியவில்லை. தொழிலாளர் இயக்கத்திற்கு எதிர்சக்தியாக ஸ்குவாட்ரிஸ்மோவை பயன்படுத்த கியோலிட்டி முயன்றார். 1921 தேர்தலில் அவர் அமைத்த தேர்தல் கூட்டணியில் பாசிஸ்டுகளைச் சேர்த்துக் கொண்டதன் மூலம் அவர்களுக்கு நாடாளுமன்றத்தின் கதவுகளைத் திறந்து விட்டார்.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

புவாகில்பேர் : காலமும் பணியும் | பொருளாதாரம் கற்போம் – 22

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 22

அத்தியாயம் நான்கு – புவாகில்பேர் : காலமும் பணியும்
அ.அனிக்கின்

“மார்க்ஸ் தன்னுடைய பொருளாதார ஆரய்ச்சிகளைப் பாரிஸ் நகரத்தில் 1843-ம் வருடத்தில் தொடங்கினார்; முதலில் புகழ்பெற்ற ஆங்கில, பிரெஞ்சுப் பொருளியலாளர்களின் ஆராய்ச்சிகளைப் படித்தார்”(1) என்று எங்கெல்ஸ் எழுதியிருக்கிறார்.

18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தைச் சேர்ந்த புவாகில்பேர் என்ற பொருளியலாளரை அப்பொழுது அநேகமாக மறந்து விட்டிருந்தார்கள், எனவே அவருடைய புத்தகங்களைப் படிக்குமாறு மார்க்சைத் தூண்டியது எது என்று சொல்வது கஷ்டமானது. ஒருவேளை இது தற்செயலாகவும் நடைபெற்றிருக்கலாம். ஏனென்றால் 18-ம் நூற்றாண்டின் முதற்பாதியைச் சேர்ந்த பிரெஞ்சுப் பொருளியலாளர்களின் நூல்களின் தொகுப்பு ஒன்று 1843-ம் வருடத்தில் பாரிசில் வெளியிடப்பட்டிருந்தது; நூற்று முப்பது வருடங்களுக்குப் பிறகு புவாகில்பேரின் கட்டுரைகள் முதன்முறையாக அந்தத் தொகுப்பில் மறுபதிப்புச் செய்யப்பட்டிருந்தன.

புவாகில்பேர் (Boisguilbert)

பிரெஞ்சும் ஜெர்மனும் கலந்த நடையில் எழுதப்பட்டிருந்த இந்தக் கட்டுரைகளின் விரிவான பொழிப்பைத் தெரிந்து கொண்ட பிறகு மார்க்ஸ் அவற்றைச் சுருக்கமாகக் குறித்துக் கொண்டார்; பிறகு அவற்றைப் பற்றிச் சிந்தித்தார். பதினான்காம் லுயீயின் ஆட்சிக் காலத்தில் ருவான் நகரத்திலிருந்த ஒரு நீதிபதியின் குறிப்பிடத்தக்க கருத்துக்கள் – அவை அந்தக் காலத்துக்கு மிகவும் வளர்ச்சியடைந்தவையாகும் – இந்தச் சிந்தனைகளை நோக்கி மார்க்சை இட்டுச் சென்றன.

இந்த விரிவான பொழிப்பு இதற்குப் பத்து வருடங்களுக்குப் பிறகு மார்க்ஸ் அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை என்ற புத்தகத்தை எழுதிய பொழுது அநேகமாகப் பயன்பட்டிருக்க வேண்டும். அவர் இந்தப் புத்தகத்தில் “பிரிட்டனில் வில்லியம் பெட்டி மற்றும் பிரான்சில் புவா கில்பேர் ஆகியோரிடமிருந்து தொடங்கி, பிரிட்டனில் ரிக்கார்டோவுடனும், பிரான்சில் ஸிஸ்மான்டியுடனும் முடிவடைகின்ற ஒன்றரை நூற்றாண்டுக் கால மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தை” (2) முதல் தடவையாக ஆழமான மதிப்பீட்டுக்கு உட்படுத்தினார்.

புவாகில்பேர் ஒரு அறிவாளி, ஒரு எழுத்தாளர் என்ற முறையில் மட்டும் மார்க்சைக் கவரவில்லை. அறிவும் நேர்மையும் நிறைந்த இந்த மனிதர் – அவர் சர்வாதிகார முடியாட்சியின் அரசு இயந்திரத்தில் “ஒரு சிறு திருகாணியாக” மட்டுமே இருந்தார் என்ற போதிலும் – ஒடுக்கப்பட்டுக் கிடந்த பெரும்பான்மையினரான பிரெஞ்சு மக்களுக்கு ஆதரவாகப் பேசினார்; அதற்காகத் துன்பங்களை ஏற்றுக் கொண்டார்.

பிரெஞ்சு ஏழைகள்

பதினான்காம் லுயீயின் ஆட்சியின் முதல் இருபதாண்டுகளின் போது கொல்பேர் என்ற அமைச்சர் நாட்டின் பொருளாதாரத்தைக் கவனித்து வந்தார். அவர் தொழில்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தபடியால் அதன் வளர்ச்சிக்காக அதிகம் பாடுபட்டார். கொல்பேர், விவசாயத்தை அரசுக்கு நிதி வருமானத்தைக் கொடுக்கும் ஊற்றுக்கண் என்பதாக மட்டுமே கருதி வந்தார். அதனால் சிற்சில தொழில்துறைப் பிரிவுகளில் ஏற்பட்ட வளர்ச்சி விவசாயத்துக்குக் கேடு விளைவிப்பதாக இருந்தது. கொல்பேரின் கொள்கை நிலப்பிரபுத்துவ உறவுகளை அப்படியே விட்டு வைத்தது அதிலிருந்த முக்கியமான குறைபாடாகும். இந்த நிலப்பிரபுத்துவ உறவுகள் நாட்டின் பொருளாதார, சமூக வளர்ச்சியைத் தடுத்து வந்தன.

படிக்க:
பாசிசம் தோன்றுவதற்கான அடித்தளம் எது ?
♦ சிறப்புக் கட்டுரை : பிரெஞ்சுப் புரட்சி – உலகம் தன் தலை மீது நின்ற காலம் !

அரசர், கொல்பேருக்கு ஒரு முக்கியமான பொறுப்பைக் கொடுத்திருந்தார். அது மட்டும் இல்லையென்றால் கொல்பேரின் முயற்சிகள் ஒருவேளை அதிகமான வெற்றியடைந்திருக்கும். பெரும்புகழ் அடைய விரும்பிய அரசர் லுயீ ஓயாது நடத்திய யுத்தங்களுக்கும்; முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அவர் செய்து வந்த ஊதாரித்தனமான செலவுகளுக்கும்; எப்படியாவது பணம் திரட்ட வேண்டிய பொறுப்பு கொல்பேருக்கு இருந்தது – கொல்பேரின் மரணத்துக்குப் பிறகு அவருடைய கொள்கையால் ஏற்பட்ட சிற்சில சாதனைகள் வேகமாக மறைந்தன; அவற்றின் குறைகள் இரண்டு மடங்கு பலத்தோடு வெளிப்பட்டன.

1701-ம் வருடத்தில் பிரான்சுக்கு அதிகமான தோல்வியையும் அழிவையும் ஏற்படுத்திய ஸ்பானிஷ் வாரிசுரிமைப் போர் என்று சொல்லப்படுகிற போர் தொடங்கியது. இந்தப் போரில் இங்கிலாந்து, ஹாலந்து, ஆஸ்திரியா இன்னும் சில சிறிய அரசுகளின் கூட்டணிக்கு எதிராக பிரான்ஸ் போர் புரிந்தது.

பதினான்காம் லுயீக்கு வயது அதிகரித்த பொழுது, அவர் அரசை நடத்திச் செல்வதற்குத் தகுந்த திறமைசாலிகளைத் தேர்ந்தெடுக்கும் மதி நுட்பத்தை இழந்தார். கொல்பேர் சுறுசுறுப்பானவர், கடுமையாக உழைத்தவர். அவருக்குப் பிறகு அவருடைய பதவியைச் சாதாரணமான நபர்களே வகித்தார்கள்.

பதினான்காம் லுயீ

பதினான்காம் லுயீயின் காலத்திலும் அவருக்குப் பிறகு வந்த இரண்டு புர்போன் அரசர்கள் காலத்திலும் நிதித்துறையின் பொதுப் பொறுப்பாளர்தான் மிக முக்கியமான மந்திரியாக இருந்தார். அவரிடம் அரசாங்க நிதித் துறை, நாட்டின் பொருளாதாரம், உள்நாட்டு விவகாரங்கள், நீதி இலாகா, சில சமயங்களில் இராணுவ விவகாரங்களும் கூட குவித்து வைக்கப்பட்டிருந்தன. அவரை உண்மையில் பிரதம மந்திரி என்றுதான் சொல்ல வேண்டும்; ஆனால் அவர் அரசரின் முடிவைத்தான் நிறைவேற்ற வேண்டும்.

பொருளாதாரத் துறையில் ஏதாவது சீர்திருத்தங்கள் செய்ய வேண்டுமென்றால் நிதித்துறைப் பொதுப் பொறுப்பாளரால்தான் முடியும். புவாகில்பேர் இதை நன்றாக அறிந்திருந்தார். எனவே அவர் 17-ம் நூற்றாண்டின் கடைசிப் பத்து வருடங்களிலும், 18-ம் நூற்றாண்டின் முதல் பத்து வருடங்களிலும் இந்தப் பதவியை வகித்த போன்ஷர்ட்ரேன் மற்றும் ஷமில்லார் ஆகியோரிடம் தன்னுடைய திட்டங்களின் மூலம் ஏற்படக் கூடிய நன்மைகளைப் பற்றி ஓயாது சொல்லிவந்தார். ஆனால் அவர்கள் அதைப் பற்றி எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ளவில்லை.

போன்ஷர்ட்ரே-னுடைய பேட்டி கிடைத்த பொழுது புவாகில்பேர், ”அமைச்சர் அவர்கள் முதலில் என்னைப் பைத்தியக்காரன் என்று நினைக்கக்கூடும். ஆனால் என்னுடைய கருத்துக்களைக் கேட்ட பிறகு உங்களுடைய அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்வீர்கள்” என்று பீடிகையாகச் சொன்னார். அவர் கருத்துக்களைச் சில நிமிடங்கள் கேட்ட பிறகு அமைச்சர் பலமாகச் சிரித்தார். ”நீ முதலில் சொன்னது சரி தான்; பேச்சைத் தொடர வேண்டாம்” என்றார்.

விசேஷமான சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருந்தவர்கள் (பிரபுக்கள், மதகுருக்கள் ஆகியோர்) அல்லது அரசாங்கத்திடம் பணம் கொடுத்து மக்களிடம் விருப்பம் போல வரிவசூலிப்பதற்கு அதிகாரம் பெற்றவர்கள், கொடுக்கல் வாங்கல் செய்து வந்த பணக்காரர்கள் ஆகியோரது நலன்களை பாதிக்கக் கூடிய சீர்திருத்தங்களைப் பற்றிக் கேட்பதற்குக் கூட அரசாங்கம் தயாராக இல்லை. ஆனால் அப்படிப்பட்ட சீர்திருத்தங்கள்தான் நாட்டின் பொருளாதாரத்தைத் தீவிரமான நெருக்கடியிலிருந்து காப்பாற்ற முடியும். பிடிவாதம் கொண்ட ருவான் நீதிபதியின் திட்டங்கள் இதை நோக்கமாகக் கொண்டிருந்தன.

அந்தக் காலத்தில் பிரெஞ்சுப் பொருளாதாரத்தின் ஆபத்தான நிலைமையைப் பற்றியும், 75 சதவிகிதம் விவசாயிகளைக் கொண்டிருந்த பிரெஞ்சு மக்களின் துன்பம் நிறைந்த வாழ்க்கையைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு புவாகில்பேரின் எழுத்துக்கள் மிக முக்கியமான ஆதாரமாக இருக்கின்றன.

ஆனால் இதைப் பற்றி வேறு பலரும் எழுதியிருக்கிறார்கள். சிறப்புமிக்க அரசியல், பொருளாதார எழுத்தாளரான மார்ஷல் வொபான் 1707-ம் வருடத்தில் பின்வரும் மதிப்பீட்டைச் செய்திருந்தார். பிரான்சின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவிகிதத்தினர் வகையற்றவர்களாக வறுமையிலும் 50 சதவிகிதத்தினர் வறுமையின் விளிம்பிலும் 30 சதவிகிதத்தினர் நெருக்கடியில் சிக்கியும் வாழ்ந்து கொண்டிருப்பதாக மதிப்பிட்டார். 10 சதவிகிதத்தினரான மேல் வர்க்கத்தினர் மட்டுமே நல்லமுறையில் வாழ்க்கை நடத்தினர்; மிக ஆடம்பரமாக வாழ்க்கை நடத்திய சில ஆயிரம் பேர்களும் இதில் அடங்குவர்.

படிக்க:
குழந்தை வளர்ப்பை முரணின்றி ஆக்கப்பூர்வமாக நடைமுறைப்படுத்துவது எப்படி ?
♦ நொறுங்கிய பாதங்களுடன் 18 நாட்கள் தவழ்ந்தும் ஊர்ந்தும் தப்பிய வீரன் !

புவாகில்பேருக்கும் மற்ற விமரிசகர்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் இந்த நிலைமையின் அடிப்படையான காரணங்களை அவர் ஓரளவுக்கு அறிந்திருந்ததே. எனவே அவர் பொருளாதாரச் சிந்தனையின் வளர்ச்சிக்கு அதிகமாக உதவி செய்ய முடிந்தது. அவர் கிராமப்புறப் பகுதிகளைப் பற்றி அதிகமாகச் சிந்தித்தது தற்செயலானதல்ல.

பிரான்சில் முதலாளித்துவப் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்குத் தேவையான திறவுகோல் இங்கேதான் இருந்தது. அரசரும் பிரபுக்களும் திருச்சபையும் இந்தத் திறவுகோலைப் பிடிவாதமாகப் புதைத்து வைத்திருந்தார்கள். கடைசியில் அந்த நூற்றாண்டின் இறுதியில் புரட்சி வெடித்தது; பூட்டுகள் நொறுங்கின. இதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பிரெஞ்சு விவசாயி சொந்த வாழ்க்கைச் சுதந்திரத்தை அடைந்திருந்தான், ஆனால் நிலம் அவனுக்குச் சொந்தமல்ல; அவன் உழைத்துப் பிழைத்த நிலம் அவனுக்குச் சொந்தமாக இருக்கவில்லை. ”நிலப்பிரபு இல்லாமல் நிலம் இல்லை” என்ற மத்தியகாலக் கொள்கை இன்னும் முழு வேகத்தோடு இயங்கிவந்தது ; அதன் வடிவங்கள் மட்டும் மாறியிருந்தன.

அதே சமயத்தில் இங்கிலாந்தில் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த முதலாளித்துவக் குத்தகை விவசாயிகள் என்ற பலமான புதிய வர்க்கம் பிரான்சில் ஏற்படவில்லை. பிரெஞ்சு விவசாயிகள் மூன்று சுமைகளைத் தாங்கித் துன்பமடைந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களுடைய நிலவுடைமையாளர்களுக்கு வாரம் கொடுத்ததோடு வேறு பல நிலப்பிரபுத்துவ பாக்கிகளையும் கட்டிக் கொண்டிருந்தார்கள்; தங்களுடைய வருமானத்தில் பத்தில் ஒரு பகுதியை திருச்சபைக்குக் கொடுத்து எண்ணற்ற பாதிரியார்களையும் மதகுருக்களையும் ஆதரித்து வந்தார்கள்: அரசருக்கு வரி கட்டியதும் அவர்கள் மட்டுமே.

கொல்பேர் தன்னுடைய எழுத்துக்களிலும் அறிக்கையிலும் பன்முறை குறிப்பிட்டது போல, இந்தப் பொருளாதார அமைப்பு நிலத்தை அபிவிருத்தி செய்வதற்கும் உற்பத்தியைப் பெருக்குவதற்கும் விவசாயிக்குச் சிறிதும் ஊக்கமளிக்கவில்லை.

மக்களிடமிருந்து அதிகமான வரி வாங்குவது மட்டுமே பொருளாதாரக் கொள்கையின் ஒரே நோக்கமாக இருந்ததனால், அரசு நிலப்பிரபுத்துவ மிச்சங்களை இதற்குப் பயன்படுத்திக் கொண்டது. அவற்றை அழிப்பதைப் தாமதப்படுத்தியது. பிரான்ஸ் முழுவதுமே தனித்தனி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு, வெளியே கொண்டு செல்லப்படும் பொருள்களுக்கு ஒவ்வொரு எல்லையிலும் சுங்க வரிகள் வசூலிக்கப்பட்டன. இது உள்நாட்டுச் சந்தையின் வளர்ச்சியையும் முதலாளித்துவத் தொழில் முயற்சியையும் தடுத்தது.

நகரங்களில் கைவினைஞர்களின் குழுக்கள் இன்னும் நீடித்ததும் இவற்றில் பழைய காலத்துச் சலுகைகளும், கறாரான விதிகளும் குறைவான உற்பத்தியும் பின்பற்றப்பட்டதும் இன்னொரு தடையாக இருந்தது. இது அரசாங்கத்துக்கு லாபகரமானதாக இருந்தது. ஏனென்றால் அது அதே பழைய – சலுகைகளைக் கைவினைஞர்கள் குழுக்களுக்கு விற்பனை செய்து பணம் பெற முடிந்தது. கொல்பேர் ஏற்படுத்திய சிற்சில பெரிய பட்டறைத் தொழில்களும் கூட 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நசிக்கத் தொடங்கின.

1685-ம் வருடத்தில் பதினான்காம் லூயீ ஒரளவுக்கு மத சுதந்திரத்தை அனுமதித்த நான்ட் பிரகடனத்தை ரத்துச் செய்தார். அதன் விளைவாகப் புரோட்டெஸ்டெண்டு மதப்பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஹூகெனோட் குடும்பங்கள் -கைவினைஞர் களும் வர்த்தகர்களும்- தங்கள் பணத்தையும் திறமைகளையும் தொழிலூக்கத்தையும் எடுத்துக் கொண்டு பிரான்சை விட்டு வெளியேறினார்கள்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) K. Marx, Capital, Vol. 2, Moscow, 1967, p. 7.
(2) K. Marx, A Contribution to the Critique of Political Economy, Moscow, 1970, 2, 52.

 

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

கேள்வி பதில் : இந்து தீவிரவாதி – இசுலாமிய தீவிரவாதம் – சீமான்… !

கேள்வி: //தீதும் நன்றும் பிறர் தர வாரா? இவை எவ்வகை கருத்து? நன்மையும் தீமையும் அவர் அவர் என்று பூங்குன்றனார் சொல்லுகிறார்? ஆனால் எல்லா பிரச்சினையும் சமூகத்தில் இருந்துதான் பிறக்கிறது என்று சொல்லிக்கிறது? நாம் எப்படி பார்ப்பது?//

– பா.அருண்

அன்புள்ள அருண்,

சங்ககாலப் புலவரான கணியன் பூங்குன்றானாரின் இந்தப் பாடல் புறநானூற்றுப் பாடலில் இடம் பெற்றுள்ளது.

முழுப்பாடல்:

“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)”

பொருள்:

“எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால், பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.”
(நன்றி: தமிழ் விக்கிபீடியா)

நீங்கள் சொல்வது போல நன்மை தீமைகளை நாமே உருவாக்கிக் கொள்வதில்லை, மட்டுமல்ல, அப்படி உருவாக்கவும் முடியாது. நன்மை, தீமைகளும், இன்ப துன்பங்களும் முதன்மையாக நம்மைச் சுற்றியுள்ள சமூக உறுப்பினர்களால் வருவது. வாழ்வின் அடிப்படை பிரச்சினைகளாகன உணவு, உடை, இருப்பிடம் உட்பட அனைத்தும் நமது சாமர்த்தியங்களாலேயே கிடைத்து விடுவதில்லை. அதன் பொருட்டே இந்த உலகில் ஏழ்மை, பணக்காரர்கள் என்ற வர்க்கப் பிரிவு இருப்பதோடு உலகமயச் சூழலில் அந்த வேறுபாடு அதிகரித்தும் வருகிறது.

எனில் கணியன் பூங்குன்றனார் ஏன் அப்படிச் சொல்கிறார்? அவரது காலமான சங்ககாலம் என்பது புராதன இனக்குழுச் சமூக அமைப்பில் இருந்து வர்க்க ரீதியான பிரிவினைகளோடு மாறிய காலமது. இனக்குழு தலைவர்கள் போய், இனக்குழு ஜனநாயகம் மறைந்து குறுநில மன்னர்களும், ஒடுக்கும் வர்க்கம், ஒடுக்கப்படும் வர்க்கம் என சமூகம் பிரிய ஆரம்பிக்கிறது. சொத்துடமையின் பிரிவால் தோன்றிய இந்த வளர்ச்சி சமூகத்தில் பல பிரச்சினைகளை தோற்றுவிக்கிறது. திருட்டு, பொய், புறம் பேசுதல், அதிகாரத்தால் அடக்குதல், தண்டனை என்று சொத்துடமை சமூகத்தின் பண்புகள் மக்களிடையே பல்வேறு குழப்பங்களை தோற்றுவிக்கின்றன.

அந்தக் குழப்பங்களில் இருந்து மக்களை ஆற்றுப்படுத்தும் பணியினை சங்ககால இலக்கியங்கள் செய்கின்றன. அதாவது சமூகத்தால் தோன்றும் பிரச்சினையில் பாதிக்கப்படும் தனிமனிதனிடம் அந்தப் பிரச்சினைகளுக்கு காரணம் குறிப்பிட்ட தனிநபர்களே என்பதாக எடுத்துரைக்கின்றன. திருக்குறள் உள்ளிட்ட சங்ககால இலக்கியங்களின் வரலாற்றுக் காரணம் இப்படித்தான் இருக்கின்றது. இன்றும் இத்தகைய எண்ணங்களை இலக்கியம், சுயமுன்னேற்றம், மதம், அறநெறிகள் போன்றவற்றில் செல்வாக்கோடு இருப்பதைக் காணலாம்.

படிக்க:
♦ பேராசிரியர் ராம் புனியானிக்கு சங் பரிவாரங்கள் கொலை மிரட்டல் !
♦ கேள்வி பதில் : பெர்முடா முக்கோணம் மர்மம் உண்மையா ?

♦ ♦ ♦

கேள்வி: //தீவிரவாதிகள் என்பவர்கள் யார்? இதில் ஏன் இஸ்லாமியர்கள் மட்டும் தான் தீவிரவாதிகளா? இந்தியாவில் தீவிரவாதிகள் இருக்கீறர்களா? தீவிரவாதிகள் நல்லவர்களா? கெட்டவார்களா?.//

– பா.அருண்

அன்புள்ள அருண் தீவிரவாதிகள் வேறு, பயங்கரவாதிகள் வேறு. கொள்கையில் தீவிரமாக இருந்து இயக்கம் நடத்துபவர்களை தீவிரவாதிகள் என்கின்றனர். உலகம் முழுவதும் ஆயுதப் போராட்டத்தை முன்வைத்து மக்களின் சமூக பொருளாதார விடுதலைக்கு பாடுபடும் இடதுசாரிக் குழுக்கள் இப்படியாக அழைக்கப்படுகின்றனர்.

நம்மூரில் மாவோயிஸ்டுகளை இப்படிக் கூறுகிறார்கள். பயங்கரவாதிகளைப் பொறுத்த வரை அவர்கள் தமது இனம், சாதி, மதம், நிறம் சார்ந்த ஆதிக்கத்தை முன்னிறுத்தும் வண்ணம் மற்ற இன, சாதி, மத, நிற மக்களை பயங்கரவாத செயல்களால் கொல்கின்றனர்.

சொர்க்கத்தில் அல்லா நமக்காக காத்துக் கொண்டிருக்கிறான் என்று மூளைச் சலவை செய்யப்படும் முஸ்லீம் இளைஞர்கள் அல்கைதா, ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்களில் இணைந்து செயல்படுகின்றனர். இத்தகைய முஸ்லீம் பயங்கரவாத குழுக்களை அமெரிக்காவே தோற்றுவித்தது.

கு – கிளாக்ஸ் கிளான் பயங்கரவாத அமைப்பு.

அதே போன்று அமெரிக்காவில் வெள்ளை நிறவெறி, கிறித்தவ மதவெறி போன்றவற்றை முன்னிறுத்தி மற்ற நாட்டவர்களை கொல்லும் கு – கிளாக்ஸ் கிளான் போன்ற இயக்கங்கள் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை தீவிரமாக இயங்கி வந்தன. தற்போதும் ஆங்காங்கே இவர்களது வன்முறைகள் நடப்பதுண்டு.

ஆரிய இனத்தின் மேன்மை என்று பேசிய ஹிட்லரின் நாஜிப்படைகள் அப்படித்தான் யூத இன மக்கள் கொடூரமாக இலட்சக்கணக்கில் கொன்றனர். இந்தியாவில் இந்துமதவெறி அமைப்புக்கள் பலவும் கூட பயங்கரவாத அமைப்புக்கள் தான். ஆர்.எஸ்.எஸ்., ஹிட்லரின் நாஜிக் கட்சி போன்றவை அரசு அங்கீகாரம் பெற்றிருப்பதாலேயே அவர்கள் பயங்கரவாதிகள் இல்லை என்பதல்ல. தத்தமது மதம்தான் உயர்ந்தது என்று பல்வேறு மதங்களின் பெயர்களில் இப்படியான பயங்கரவாத இயக்கங்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன.

ரோஹங்கியா முஸ்லீம்கள் கொன்று குவிக்கும் மியன்மரின் பௌத்த பயங்கரவாதத்தில் பலிகடாக்களாக முஸ்லீம்களே இருக்கின்றனர். எனினும் உலக அளவில் முஸ்லீம் பயங்கரவாதக் குழுக்களின் நடவடிக்கைகள் அதிகம் இருப்பதால் அவர்கள் மட்டும்தான் பயங்கரவாதம் என்பதான தோற்றம் இருக்கிறது.

முஸ்லீம் மக்களோ, கிறித்தவ மக்களோ, இந்துக்களோ அனைவரும் தத்தமது பெயரில் நடக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக மாட்டார்கள் என்றாலும் மதம் என்ற பெயரில் சாத்வீகமாகவே தமது மதங்களின் சிறப்புத் தன்மையை நம்புகிறார்கள். இதுதான அந்தந்த மதங்களின் பயங்கரவாத குழுக்கள் ஒன்றுபடும் புள்ளியாக இருக்கிறது.

பயங்கரவாதி பிரக்யா சிங் தாக்கூர் போபாலின் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கோட்சே தேசபக்தர் என்கிறார். எனில் அந்த தொகுதியின் இந்துக்கள் தார்மீக அளவில் பிரக்யாவிற்கு ஆதரவளிக்கிறார்கள் என்றுதானே பொருள்!

படிக்க:
♦ வேட்பாளராக பயங்கரவாதி பிரக்யா சிங் : ‘ஜனநாயகத்தை’ அம்பலப்படுத்தும் பாஜக !
♦ இசுலாமிய பயங்கரவாதமா ? இசுலாமியவாத பயங்கரவாதமா ?

♦ ♦ ♦

கேள்வி: //தோழர், நாம் தமிழர் கட்சியை பத்தி அக்குவேற ஆணிவேரனு பிரிச்சி சொல்லுங்க.. ஒரே கண்ப்யூசனா இருக்கு.. அவிங்கள புரிஞ்சிக்க வழிகாட்டுங்க.. ஆன் தி வேல.. மே 17 பத்தியும் கம்பேர் பண்ணேல்னா தேவல..பதிலுக்கு மரணவெய்டிங்..//

– ராஜேந்திரன்

அன்புள்ள ராஜேந்திரன்,

நாம் தமிழர் குறித்த வீடியோக்கள், நேர்காணல்கள், கட்டுரைகள் இணையத்தில் ஏராளம் இருக்கின்றன. அது போல மே 17 இயக்கம் குறித்தும் இருக்கின்றன. அவை குறித்து நீங்கள் விரிவாக படித்து கேட்டுவிட்டு என்ன சந்தேகம் என்பதை கேளுங்கள். அவற்றை அறியாமலேயே போகிற போக்கில் அவர்களைப் பற்றி நாங்கள் சொல்லி நீங்கள் அறிந்து கொண்டு ஆகப்போவது ஒன்றுமில்லை.

♦ ♦ ♦

கேள்வி: //முன்பு டிஜிட்டல் இந்தியா -இப்போ புதிய இந்தியா என்பதோடு- எங்களை நம்பாதவர்களுக்கும் சேர்த்தே பணியாற்றப் போகிறோம்.. என்கிறாரே மோடி – அப்படியா.. எந்த விதத்தில்…?//

– எஸ். செல்வராஜன்

அன்புள்ள செல்வராஜன்,

330 இடங்களை வென்று வலுவாக ஆட்சியைப் பிடித்திருக்கும் மோடி எங்களை நம்பாதவர்களுக்கும் சேர்த்தே பணியாற்றப் போகிறோம் என்கிறார்.

அரசியல் சாசனப்படி ஒரு பிரதமரோ, ஒரு மத்திய அரசாங்கமோ நாங்கள் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆட்சி செய்வோம் என்று சட்டப்படி கூற இயலாது.

அந்த சட்டரீதியான உண்மையை ஏதோ போனால் போகிறது என்று இரக்கப்பட்டு கூறுகிறார் மோடி. இதிலிருந்தே அவரது ஆட்சி இந்து ராஷ்டிரத்து ஆட்சியாகத்தான் இருக்கப் போகிறது என்பது தெளிவு.

அவர் பதவி ஏற்ற பிறகு அடுத்து வந்த சில நாட்களிலேயே முஸ்லீம்கள், தலித்துக்கள் மீதான தாக்குதலாக இருக்கட்டும், அவர்களை எதிர்த்து எழுதுபவர்களை (யோகி ஆதித்யநாத் – உத்திரப்பிரதேசம்) கைது செய்வதாக இருக்கட்டும் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. சொல்லில் சமூக நல்லிணக்கம், செயலில் துவேஷம் இதுதான் மோடி அரசின் மந்திரம்.

♦ ♦ ♦

கேள்வி: //முதல் இந்து தீவிரவாதி என்ற விவாதம் ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு போராட்டதை மறைப்பதற்கா?//

– மனோ

அன்புள்ள மனோ,

கமலஹாசன் தற்செயலாக பேசிய இந்த விசயத்தின் பின்னே அவர் பாஜக-வின் பி டீம் என்ற பெயரை மாற்றுவதற்காக இருந்திருக்கலாம். மற்றபடி ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டத்தை விடுத்து சினிமா அரசியல்வாதிகளின் தடாலடி பேச்சுக்களை பேசுபொருளாக்குவது ஊடகங்கள்தான்.

கமலஹாசன் கட்சி ஆரம்பித்த் போதே நான் பினரயி விஜயன், அரவிந்த் கேஜ்ரிவாலை மட்டுமல்ல பிரதமர் மோடியையும் பார்ப்பேன் என்றவர். நான் வலதும் அல்ல, இடதும் அல்ல மையம் என்பதன் மூலம் மறைமுகமாக தான் வலது என்று நிற்பவர்.

பொதுவில் ஊழல் எதிர்ப்பு, சுத்தபத்தமான அரசியல் என்று பேசி பொழுதைக் கழிக்கிறார். அதற்குள் பிக்பாஸ் சீசன் 3 வந்துவிட்டது. இதே ஊடகங்கள் மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்தையோ இன்ன பிற மக்கள் போராட்டங்களையோ கமல்ஹாசனுக்கு ஒதுக்கும் முக்கியத்தவத்தோடு காட்டாது.

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்