Sunday, November 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 65

பி.ஜே.பி. ஆட்சி மீண்டும் வந்தால் ஏழைகள் வாழ முடியாது! | மக்கள் நேர்காணல்

பி.ஜே.பி. ஆட்சி மீண்டும் வந்தால்
ஏழைகள் வாழமுடியாது! | மக்கள் நேர்காணல்

பி.ஜே.பி. ஆட்சி வந்தால் ஏழைகளான எங்களால் வாழ முடியாது. நாற்பது வருடங்களாக ஏறாத பெட்ரோல் விலை பத்து வருடத்தில் பாதிக்கு பாதி ஏறியுள்ளது. ஆனால் வருமானம் ஏறவில்லை. பத்து ரூபாய்க்கும் பதினைந்து ரூபாய்க்கும் இருந்த ரீசார்ஜ் தற்போது முந்நூறு ரூபாயாக மாறிவிட்டது. மோடிக்கு இந்த முறை வாய்ப்பு தரமாட்டோம் என்று மக்கள் தங்களுடைய கருத்துக்களை காணொளியில் தெரிவித்துள்ளனர்.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவசாயத்தில் ட்ரோன்: மோடியின் சதி | வீடியோ

விவசாயத்தில் ட்ரோன்: மோடியின் சதி | தீவிரமாகும் கார்ப்பரேட்மயம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவசாயத்துறையில் “ட்ரோன்”: தீவிரமாகும் கார்ப்பரேட்மயமாக்கம்!

டந்த மார்ச் மாதம் 11-ஆம் தேதி, டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் “நமோ ட்ரோன் சகோதரி” (Namo Drone Didi) என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

இத்திட்டத்தின் முதல்கட்டமாக ஹரியானாவில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில், மிகப்பெரிய ரசாயன உரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் சார்பில், சுய உதவிக்குழுக்களில் இருக்கும் 300 பெண்களுக்கு ட்ரோன்கள் மூலம் விவசாய நிலங்களில் உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் இருந்து பெண்கள் கலந்து கொண்டனர்.

ஆளில்லா விமானங்களை இயக்க பயிற்சி பெற்ற இப்பெண்களுக்கு 30 கிலோ எடையுள்ள ட்ரோன்களும் அவற்றைக் கொண்டு செல்வதற்கு பேட்டரியில் இயங்கும் வாகனங்களும் இலவசமாக வழங்கப்பட்டன.

நாடுமுழுவதும் 15,000 சுய உதவிக்குழுக்களில் இருக்கும் பெண்களுக்கு பயிற்சி கொடுப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கமாம். மகளிர் சுய உதவிக் குழுக்களில் இருக்கும் தகுதியான பெண் ஒருவருக்கு 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியானது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் (Directorate General of Civil Aviation) அங்கீகரிக்கப்பட்ட ரிமோட் பைலட் பயிற்சி அமைப்பால் நடத்தப்படும். பயிற்சியளிக்கும் இத்திட்டத்தில் நாட்டில் இருக்கும் இதர முன்னணி உர நிறுவனங்களும் இணைந்துள்ளன.


படிக்க: WTO-வின் துணையோடு கார்ப்பரேட்மயமாகும் இந்திய விவசாயம்!


இந்த சுய உதவிக் குழுக்களுக்கு மூன்று ஆண்டுகளில் 15,000 ட்ரோன்கள் வழங்கப்படும். இதில் 500 ட்ரோன்கள் முன்னணி உர நிறுவனங்கள் மூலமும் மீதம் 14,500 ட்ரோன்கள் “நமோ ட்ரோன் சகோதரி” திட்டத்தின் கீழும் விநியோகிக்கப்படும்.

விவசாயத்தில் ட்ரோன் பயன்பாட்டை புகுத்தும் வேலையில் மோடி அரசு ஈடுபடுவது புதிய நிகழ்வல்ல. கடந்த 2022-ஆம் ஆண்டில் இருந்து விவசாயப் பயன்பாட்டிற்கான ட்ரோன் உற்பத்தி நிறுவனங்களுக்கும், அதை வாங்குபவர்களுக்கும் மானியங்கள் வழங்குவது; ட்ரோன் பயன்பாட்டிற்கான விதிமுறைகளை (Liberalized Drone Rules 2021) தளர்த்துவது; ட்ரோன் பைலட் உரிமத்திற்கான தேவையை நீக்குவது என பல ஆண்டுகளாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்திய விவசாயத்தில் ட்ரோன் பயன்பாட்டை புகுத்த, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

விவசாயத்துறையில் ட்ரோன் பயன்பாட்டை புகுத்தும் மோடியின் இந்த திட்டம் குறித்து, ஆங்கில ஊடகங்களில், “இந்திய விவசாயத்தை மாற்றும் ட்ரோன்கள்”; “ட்ரோன் புரட்சியை உருவாக்குகிறது”; “நவீன தொழில்நுட்பத்துடன் வருங்கால விவசாயத்துறை” என்ற தலைப்புகளில் கட்டுரைகள் வெளிவந்த வண்ணமுள்ளன.

ஆனால், உண்மையில் ட்ரோன் பயன்பாடு என்பது  சிறு, குறு விவசாயிகளையும், விவசாய கூலித் தொழிலாளர்களையும் ஒட்டுமொத்தமாக துடைத்தெறிந்து விட்டு, விவசாயத் துறையில் கார்ப்பரேட்மயமாக்கத்தைக் கொண்டுவரும் அபாயகரமான நடவடிக்கையின் அடுத்தக்கட்டமாகும்.

தற்போது பெண்களுக்கு இலவசமாக ட்ரோன் வழங்கியது என்பது வேளாண் துறையில் பெண்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்த அல்ல. பெண்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து ட்ரோன்களை வழங்குவதன் மூலம் ட்ரோன் பயன்பாட்டை வழக்காமான நடைமுறையாக மாற்றத் துடிக்கிறது பாசிச மோடி அரசு.


படிக்க: இமாச்சலப்பிரதேசம்: செயற்கை நுண்ணறிவுடன் இணைக்கப்பட்ட ஆப்பிள் விவசாயம்!


விவசாயத்துறையில் ட்ரோன் பயன்பாடு:

விளை நிலத்தில் உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது தொடங்கி ட்ரோன்களில் பொருத்தப்பட்டிருக்கும் உயர்தர கேமராக்கள் மூலம் பயிரின் ஆரோக்கியம், வளர்ச்சி, மகசூல் பற்றி குறிப்பான தகவல்களை பெறுவது; வானிலை மாற்றத்தை தெரிந்து கொள்வது; நீர் பயன்பாட்டை கண்காணிப்பது, நீரை சிக்கனமாக உபயோகிப்பது; பெரிய மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகளை கண்காணிப்பது; பண்ணைகளில் இருந்து சந்தைகளுக்கு விளைப்பொருட்களை எடுத்து செல்வது போன்ற பல வேலைகளை ட்ரோன்கள் மூலம் செய்ய முடியும் என விஞ்ஞானிகள் பட்டியிலிடுகின்றனர்.

குறிப்பாக, “ட்ரோன் சகோதரி திட்டத்தின்” கீழ் ட்ரோன் பயன்பாட்டில் பெண்களை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்கின்றனர்.

இவற்றைக் கேட்க புரட்சிகரமானதாக தோன்றலாம் ஆனால் உண்மை என்ன?

ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் முறையில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள்தான் உரம், பூச்சிக்கொல்லி போன்ற மருந்து தெளிக்கும் வேலையில் ஈடுபடுவார்கள். ஒரு ஏக்கர் நிலத்தில்  இக்கூலித் தொழிலாளி ஒருவரைக் கொண்டு மருந்து தெளிக்க, ஏழு அல்லது எட்டு மணிநேரமாகும் என்றால், அதுவே ட்ரோன் கருவி மூலம் இரண்டரை ஏக்கருக்கு 12 முதல் 15 நிமிடங்களிலேயே மருந்து தெளித்துவிட முடியும் என்கிறார் பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி.

இதனால் ட்ரோன் பயன்பாடு அதிகரிக்கும், இது ட்ரோன் தொழில்நுட்பத்தில் பயிற்சி பெற்ற ஒருவரால்தான் இனி இந்த பணியில் ஈடுபட முடியும் என்ற நிலையை உருவாக்கும். நவீன தொழில்நுட்பத்தால் கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்ற கூற்றே இங்கு உடைகிறது. பெண்கள் சிலருக்கு வேலை கிடைக்கலாம் ஆனால், அதைவிட பன்மடங்கு விவசாய கூலிகள் இந்த நவீன தொழில்நுட்பத்தால் உரம், பூச்சுக்கொல்லி மருந்து தெளிக்கும் வேலைகள் கிடைக்காமல் ஏதுமற்றவர்களாக துரத்தியடிக்கப்படுவார்கள்.


படிக்க: நூல் அறிமுகம்: மறுகாலனியாக்கத்தின் இரும்புப்பிடியில் இந்திய விவசாயம்!


அதேபோல், சாமானிய சிறு, குறு விவசாயிகள் ட்ரோனை வாங்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பேட்டரியில் இயங்கும் ட்ரோனின் விலை கிட்டத்தட்ட 6 லட்சம்; பெட்ரோலில் இயங்கும் ட்ரோனின் விலை சுமார் 12 லட்சம். இந்த செலவீனங்கள் காரணமாக ட்ரோன்கள் அதிகளவில் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. எனினும், ஒருசில நடுத்தர, பணக்கார விவசாயிகள்தான் தற்போது ட்ரோனை வாங்கி பயன்படுத்திவருகின்றனர்.

தமிழ்நாட்டில், காவிரி டெல்டா பகுதியின் ஒருசில இடங்களில் ட்ரோன் பயன்பாடு வந்துள்ளது. “அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில், ட்ரோன்களைப் பயன்படுத்தாமல் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும்” என்கிறார் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.தனபாலன். 2030-ஆம் ஆண்டிற்குள் இந்திய விவசாயத் துறையில் ட்ரோன் கருவியின் பயன்பாடு 38.5 சதவிகிதமாக உயரும் என அமெரிக்காவில் இயங்கும் ஆலோசனை நிறுவனம் ஒன்று கணித்துள்ளது.

ட்ரோன் பயன்பாடு, சுற்றுச் சூழலுக்கு பேராபத்து:

ட்ரோன் பயன்பாட்டின் மற்றொரு மோசமான விளைவு பூச்சிக்கொல்லி மருந்தை வான்வழியாக தெளிப்பதால் ஏற்படவிருக்கும் சுற்றுச்சூழல் பேராபத்து.

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆய்வுகளில் ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதால் காற்று வீசும் திசையில் ரசாயன மருந்து பல பகுதிகளுக்கு பரவும் அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால் மண் மற்றும் நீர்நிலைகள் மாசுபடுவதோடு, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று எச்சரிக்கின்றனர் சுற்றுச்சூழல் நிபுணர்கள்.

ஆக, ட்ரோன்கள் மூலம் மருந்தை தெளிக்கும்போது ட்ரோன் பறக்கும் உயரம், வேகம் உள்ளிட்டவை கவனத்தில் கொள்வது அவசியம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால், இத்தகைய வழிகாட்டுதல்கள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிக்க தற்போது எந்த வழியும் இல்லை என்கிறார் விவசாய சங்கத் தலைவர் ஒருவர்.


படிக்க: விவசாயம் சார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் சாத்தியமானவையா ?


மேலும், ட்ரோன்களை பறக்கவிடுவதன் மூலம் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பறவைகளும் பூச்சி இனங்களும் வராமல், இயற்கையான வளர்ச்சி என்பது தடைப்பட்டு போகும் அபாயமும் ஏற்படும். ட்ரோன்கள் பறக்கும்போது ஏற்படும் சத்தத்தால் பறவைகள் அச்சமடைகின்றன. அதிக உணர்திறன் கொண்ட பறவைகளின் இனப்பெருக்கத்தையே ட்ரோன் பாதிப்படைய செய்யும் என்றும் கூறப்படுகிறது.

ஆக, விவசாயத் துறையில் இருந்து மனித உழைப்பை விரட்டியடிக்கும் அதேவேளையில் இயற்கைக்கும், விலங்குகள் மற்றும் மனிதர்களின் உடல்நலத்திற்கும் மாபெரும் ஆபத்தை விளைவிக்கிறது.

கார்ப்பரேட்மயமாக்கமே நோக்கம்

மேலே குறிப்பிட்டிருப்பதை போல ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிப்பது மட்டுமல்ல,  நிலம் சம்பந்தமான விஷயங்கள் குறித்தும் உரம் பூச்சிக்கொள்ளி மருந்து எந்தளவிற்கு உபயோகிக்கப்படுகிறது; என்ன மாதிரியான விதைகள் பயன்படுத்தப்படுகிறது; என்பது குறித்தும் தரவுகள் சேகரிக்கப்படும். இதன் மூலம் மிகப்பெரிய தரவு களஞ்சியம் உருவாக்கப்பட்டு விவசாயத் துறையில் எவ்வித மாறுதல்களை கொண்டுவரலாம் என்ற திட்டமிடலை கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்து கொள்ளும்  முடியும். முக்கியமாக, விவசாயிகள் பெருமளவில் கண்காணிப்பு வளையத்திற்கு கொண்டுவரப்படுவார்கள். விவசாயிகளின் தனிநபர் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

தற்போது டெல்லியில் விவசாயிகள், குறைந்தபட்ச ஆதார விலைக்காகவும் விவசாயித்துறையில் கார்ப்பரேட்மயமாக்கத்தை எதிர்த்தும போராடி வரும் சூழலில் விவசாய மேம்பாடு, விவசாய பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு, விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம் என பல்வேறு நாடகமாடி, விவசாயத் துறையில் கார்ப்பரேட்மயமாக்கத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது பாசிச மோடி அரசு.


வெண்பா

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



எதிர்க்கட்சிகள் இல்லாமல் தேர்தல் நடத்த மோடி திட்டமா?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த மார்ச் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: ஹேமந்த் சோரன், அரவிந்த் கெஜ்ரிவால் என இரண்டு மாநில முதல்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். காங்கிரஸ் கட்சி வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. மோடி அரசு மேற்கொண்டுவரும் இந்த நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகள் இல்லாமல் தேர்தலை நடத்துவதற்கான முயற்சியா? என்ற கேள்வியை எழுப்புகிறது. இதைப் எப்படி பார்ப்பது?

திர்க்கட்சிகளை வேட்டையாடிவரும் பா.ஜ.க-வின் பாசிசத் தாக்குதல்கள் தேர்தல் முடியும்வரை ஓயப்போவதில்லை என்பதையே பா.ஜ.க. கும்பல் அடுத்தடுத்து மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. மோடிக் கும்பலால் பொய் குற்றச்சாட்டில் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹூவா மொய்த்ரா-விற்கு தற்போது அந்நியச் செலவாணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் அமலாக்கத்துறை மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக  கொல்கத்தாவின் அலிபூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில், பண மோசடி வழக்கில் சி.பி.ஐ. சோதனை நடத்தியிருந்தது. இதிலிருந்து, மஹுவாவையும் கைது செய்து சிறையில் அடைப்பதற்கு மோடிக் கும்பல் தீவிரமாக வேலை செய்து வருகிறது என்பது தெளிவாகிறது.

பஞ்சாப் மாநிலத்தில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு பிறகு பாஞ்சாப் அரசின் ‘‘கலால் கொள்கை’‘ முறைக்கேட்டை அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் என பா.ஜ.க. கும்பல் பிரச்சாரம் செய்து வருகிறது. இன்னொருபுறம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இருந்து முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தில்லி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, அடுத்தடுத்து எதிர்க்கட்சியினர் யாரை வேண்டுமானலும் கைது செய்து சிறையில் அடைக்கலாம் என்ற புதிய நிலையை உருவாக்கி வருகிறது, மோடி கும்பல்.

அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, மத்திய புலனாய்வு அமைப்பு, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளை தனது ஏவல் படையாக பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை செயலிழக்க வைத்து, எதிர்க்கட்சிகள் இல்லா தேர்தலை நடத்துவதற்கான முயற்சியில் பா.ஜ.க. கும்பல் ஈடுபட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. இவற்றையெல்லாம் மீறி எதிர்க்கட்சிகள் தேர்தல் களத்தை சந்திக்க வேண்டும் என்றாலே வீதியில் இறங்கி போராட வேண்டும் என்ற நிலைக்கு பா.ஜ.க. கும்பல் எதிர்க்கட்சிகளை தள்ளியிருக்கிறது என்பதே எதார்த்தம்.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தமிழ்நாட்டில் கொட்டமடிக்கும் பி.ஜே.பி என்ன செய்யப் போகிறோம்? | தோழர் ரவி

தமிழ்நாட்டில் கொட்டமடிக்கும் பி.ஜே.பி என்ன செய்யப் போகிறோம்? | தோழர் ரவி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பழங்குடிகள் ஆண்டு: பி.ஜே.பி தேர்தல் அறிக்கையின் அயோக்கியத்தனம் | தோழர் தீரன்

பழங்குடிகள் ஆண்டு: பி.ஜே.பி தேர்தல் அறிக்கையின் அயோக்கியத்தனம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஈரான் தூதரகம் மீதான தாக்குதல்: அமெரிக்கா – இசுரேலின் அடுத்த போருக்கான தயாரிப்பு

ஈரான் தூதரகம் மீதான தாக்குதல்:
அமெரிக்கா–இசுரேலின் அடுத்த போருக்கான தயாரிப்பு

 

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



“The Final Countdown for BJP” Newsroom || காணொளி

“The Final Countdown for BJP” Newsroom

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



2024 நாடாளுமன்றத் தேர்தல்: வேண்டும் மக்களுக்கான ஜனநாயகம்!

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 தேர்தல். மோடியின் பிரச்சாரப் பயணத்திற்கேற்ப பிற மாநிலங்களில் தேர்தல் பல கட்டங்களாகப் பிரித்து நடத்தப்படுகிறது. மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 7 கட்டத் தேர்தல். மோடி-அமித்ஷா கும்பலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு சுமார் 75 நாட்கள் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இந்துமுனைவாக்கக் கண்ணோட்டத்தில் பிரச்சாரம் செய்கிறது பா.ஜ.க. கும்பல். கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார் மோடி. எதிர்க்கட்சிகளை இந்து விரோதிகள் என்று பிரச்சாரம் செய்கிறார். தேர்தல் ஆணையமோ, இவை எவற்றையும் கண்டுகொள்ளாமல், மோடி வீட்டு ஏவலாளியைப் போல எஜமான விசுவாசத்தைக் காட்டி வருகிறது.

தேர்தல் பத்திரங்கள் வெளியீடு, தேர்தல் அதிகாரி நியமனம் முதலாக அனைத்து விசயங்களிலும் எல்லா மரபுகளையும் ஜனநாயக வழிமுறைகளையும் தூக்கியெறிந்துவிட்டது, மோடி-அமித்ஷா கும்பல். தேர்தலில் வெற்றிபெற வேண்டும், அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம், பேசலாம் என்பதுதான் அக்கும்பலின் ஒரே கொள்கை. சாம, தான, தண்ட, பேதம் எனும் பார்ப்பன சதிக் கோட்பாட்டையே தனது கொள்கையாக வைத்திருக்கும் இந்த கும்பல் எந்த கடைகோடிக்கும் செல்லும் என்பதற்கு இந்த தேர்தலை ஒட்டிய அந்த கும்பலின் அணுகுமுறைகளே சாட்சி.

எதிர்க்கட்சி கூட்டணியில் இருக்கும் சிறிய கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கியதில் செய்த அடாவடித்தனத்தைப் பாருங்கள். வி.சி.க., ம.தி.மு.க., நா.த.க-விற்கு ஒரு நீதி, ஜி.கே.வாசன் போன்ற பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுக்கு ஒரு நீதி. தேர்தல் கட்சிகளைக் கூட ஜனநாயகமாக அணுகத் தயாராக இல்லை.

தேர்தல் பத்திரங்கள் மூலமாக மட்டுமே பல்லாயிரம் கோடிகளைச் சுருட்டிய பா.ஜ.க. கும்பல், காங்கிரசு கட்சியின் வங்கிக் கணக்கை முடக்கியது; அதற்கு எதிராக நீதிமன்றத்திற்குச் சென்று போராடிய பின்னர், வருமான வரித்துறை மூலமாக காங்கிரசுக்கு நெருக்கடி கொடுத்தது.

எதிர்க்கட்சித் தலைவர்களை சுதந்திரமாகப் பிரச்சாரம் செய்யவும் அனுமதிக்கவில்லை. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது; பாரதீய ராஷ்டிரிய சமிதியின் தலைவர் கவிதா கைது; ஆம் ஆத்மி கட்சியின் தலைவர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது – இவ்வாறாக அமலாக்கத்துறையை ஏவி நாள்தோறும் எதிர்க்கட்சிகளை வேட்டையாடி வருகிறது.

இத்தனைக்கும் காரணம் என்ன?

தோல்வி பயம்!

ஆம், தோல்வி பயம் மோடி-அமித்ஷா கும்பலுக்குத் தொற்றிக் கொண்டது. இனி எந்த வகையிலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை அக்கும்பல் நன்குணர்ந்துள்ளது.


படிக்க: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள்: பாசிஸ்டுகளின் தோல்வி முகமும்! எதிர்க்கட்சிகளின் கேடுகெட்ட சந்தர்ப்பவாதமும்!


கடந்த பத்தாண்டுகளில் மோடி-அமித்ஷா கும்பல் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. விவசாயிகள் வருவாயை இரட்டிப்பாக்குவோம், வங்கிக் கணக்கில் ரூ.15,00,000 நிதி போடுவோம்; இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்; விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை சட்டப்பூர்வ உரிமையாக்குவோம்; பெண் கல்வியை மேம்படுத்துவோம்; கருப்புப் பணத்தை ஒழித்துக் கட்டுவோம்… அப்பப்பா, மோடி-அமித்ஷா கும்பல் அவிழ்த்துவிட்ட இந்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய், பித்தலாட்டம் என்பதை மக்கள் தமது சொந்த அனுபவத்தில் இருந்து உணர்ந்துவிட்டனர்.

பாசிச பயங்கரவாதம்

மாறாக, மோடி-அமித்ஷா கும்பலின் பத்தாண்டு ஆட்சி செய்ததுதான் என்ன?

கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பின்னடைந்துள்ளது; சிறுதொழில்கள் நசிந்துள்ளன; விவசாயம், சிறு வணிகங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன; சீனாவில் இருந்து இரும்பு, மலிவுவிலைப் பொருட்கள் போன்றவற்றின் இறக்குமதியால் இந்திய தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன; ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் மூலமாக தென்மாநிலங்களைச் சுரண்டி “பசு வளைய மாநிலங்கள்” என்றழைக்கப்படும் குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு மிகப்பெரிய அளவில் சலுகைகள் வழங்கப்படுகின்றன; நீட், தேசியக் கல்விக் கொள்கை, தேசிய நதிநீர் கொள்கை, குற்றவியல் சட்டத்திருத்தம், தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தம் போன்ற பல்வேறு மக்கள் விரோத சட்டங்கள், திட்டங்களால் மக்களின் பெரும்பகுதியினரின் வாழ்நிலைமை மேலும் மேலும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது; வேலையின்மை அதிகரித்துள்ளது; விலையேற்றம் அதிகரித்துள்ளது.

அம்பானி, அதானி, வேதாந்தா உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சியையே நாட்டின் வளர்ச்சியாக சித்தரிக்கிறது மோடி கும்பல். இந்த கார்ப்பரேட் முதலாளிகளோ உலகப் பணக்காரர்களாக உயர்ந்து வருகின்றனர். மொத்தத்தில், மக்களின் இரத்தத்தில், அம்பானிகளுக்கான சொர்க்கத்தை உருவாக்குகிறது பாசிச மோடி கும்பல்.

இந்த பத்தாண்டுகளில் ஆர்.எஸ்.எஸ். என்னும் நச்சுப் பாம்பானது, நாட்டின் சமூக, அரசியல், பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் அனைத்து இடங்களிலும் கிளை பரப்பியுள்ளது.

பெண்கள் மீது ஏவப்படும் பாலியல் வன்முறைகள், சமூகத்தை சீரழிக்கும் போதைக் கலாச்சாரம், கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபடும் ரவுடி கும்பல் போன்ற பல்வேறு குற்றங்களின் பின்னணியில் கணிசமான அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். கும்பல் உள்ளது. பா.ஜ.க-வின் பல முன்னணி பிரமுகர்கள் கேடி கிரிமினல்களாக இருப்பதையும் அவர்களது குற்றச்செயல்கள் அம்பலத்திற்கு வந்து அவ்வப்போது கைது செய்யப்படுவதையும் நாம் பார்க்கிறோம். இதுபோன்ற குற்றப் படையினரைக் கொண்டுதான் மதக்கலவரங்களை அரங்கேற்றி வருகிறது ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார கும்பல்.

டெல்லி, உத்தரப்பிரதேசம், அரியானா, மணிப்பூர், அசாம், திரிபுரா, கர்நாடகா, ஒரிசா, சத்தீஸ்கர், உத்தராகண்ட், குஜராத், மகாராஷ்டிரா என இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் இஸ்லாமியர்கள், தலித்துகள், உழைக்கும் மக்கள் மீது ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார கும்பலால் கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

தொழிலாளர்கள் உரிமை கேட்டுப் போராடினாலோ, விவசாயிகள் போராட்டங்கள் நடத்தினாலோ உள்ளூர் சமூக விரோதிகள், கார்ப்பரேட்டுகளுடன் சேர்ந்து கொண்டு மக்களை ஒடுக்குவதும் இந்த ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார கும்பல்தான்.

ஆம். ஒரு வரியில் சொன்னால், மோடி-அமித்ஷா கும்பல் பத்தாண்டுகளில் அரங்கேற்றியிருப்பது, பாசிச பயங்கரவாதம்.


படிக்க: டெல்லி சலோ 2.0: பாசிசத்தை வீழ்த்தும் பாதை!


போராட்டக் களம்

இந்த பாசிச பயங்கரவாதம் தோல்வி முகம் தழுவியதற்கு காரணம் என்ன?

மோடி கும்பலின் பயங்கரவாத நடவடிக்கைகளாக மேலே விளக்கியிருப்பவை ஒரு சிறு பகுதிதான். நமது நாட்டின் உழைக்கும் மக்கள் மீது மோடி-அமித்ஷா கும்பலும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கப் பரிவாரக் கும்பலும் திணித்திருக்கும் பயங்கரவாதம் என்பது கொஞ்ச நஞ்சமல்ல.

தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்னும் மறுகாலனியாக்கக் கொள்கைகளைக் கட்டற்ற முறையில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருந்த இந்த கும்பல், அதற்கெதிரான மக்கள் போராட்டங்கள் தீவிரமடையும் என்பதையும் உணராமல் இல்லை.

இப்போது மட்டுமல்ல, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நமது நாட்டை அடிமைப்படுத்தி சூறையாடிய போது அது உருவாக்கிய ஒரு கொள்கை இருக்கிறது. அதுதான் பிரித்தாளும் சூழ்ச்சி. இந்துக்களையும் இஸ்லாமிய மக்களையும் பிளவுப்படுத்தி ஆட்சி செய்யும் முறையை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் உருவாக்கியது. அதற்கு உற்றத் துணையாக இருந்த அமைப்புதான் 1925-இல் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். என்றழைக்கப்படும் ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம்.

இன்று, மறுகாலனியாக்கக் கொள்கைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் போதும், அதே பிரித்தாளும் திட்டத்தை ஆர்.எஸ்.எஸ். கும்பல் நடைமுறைப்படுத்தி வருகிறது. அன்று, இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிய ஆர்.எஸ்.எஸ். இயக்கம், கிறிஸ்தவர்களான வெள்ளையர்களின் அடிமையாக இருந்தது. இன்றோ, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், தலித் மக்கள், பழங்குடி மக்கள் என ஒவ்வொரு பகுதிக்கும் இடத்திற்கும் ஏற்ற வகையில், பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு வருகிறது.

இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு மக்கள் பலியாகாமல் இல்லை. “வளர்ச்சி நாயகன்” என்ற மோடியின் பிம்பத்தைப் பார்த்தும், இந்துமுனைவாக்கத்திற்கு பலியாகியும் வடமாநில மக்கள் மோடிக்கும் பா.ஜ.க-விற்கும் மீண்டும் மீண்டும் ஆதரவளிக்கவே செய்கின்றனர்.

அதேவேளையில், மக்கள் மோடி-அமித்ஷா கும்பலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டுதான் இருந்தனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நூற்றுக்கணக்கான மக்கள் வங்கி வாசல்களில் வரிசையில் நின்றபடியே மரணமடைந்தனர். மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்தன. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பினால் சிறுதொழில்கள் நசிந்தன. கொரோனா திடீர் ஊரடங்கின் போது இலட்சக்கணக்கான மக்கள் உணவின்றி தவித்தனர். ஆக்ஸிஜன் இன்றி பல இலட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். இச்சூழல்களின் போதெல்லாம் வெவ்வேறு வகைகளில் மக்கள் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தனர்.

அதேவேளையில், பா.ஜ.க-விற்கு எதிரான மக்கள் போராட்டங்களும் வளர்ந்து வந்தன.

தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் பா.ஜ.க-விற்கு எதிரான உறுதியான மக்கள் போராட்டமாகும். 2019-ஆம் ஆண்டு குடியுரிமை சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்ட போது இஸ்லாமியப் பெண்கள் தொடங்கிய ஷாகின்பாக் போராட்டம் இந்தியாவே கிளர்ந்தெழுந்த முதல் போராட்டமாகும்.

மூன்று வேளாண் சட்டங்களை மோடி கும்பல் கொண்டுவந்த போது, டெல்லியை முற்றுகையிட்டு பஞ்சாப், அரியானா, இராஜஸ்தான், உ.பி. மாநில விவசாயிகள் தொடங்கிய போராட்டம், ஓராண்டுக்கும் மேலாக நீடித்தது; பல நூறு விவசாயிகள் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்தனர்; இப்போராட்டம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்றது. ஆம், மோடி-அமித்ஷா கும்பலைப் பணியவைத்த முதல் நாடுதழுவிய போராட்டம் இதுவே.

இதோ இன்றும் தொடர்கிறது, மோடி-அமித்ஷா கும்பலுக்கெதிரான மக்கள் போராட்டங்கள்.

குறைந்தபட்ச ஆதாரவிலையை சட்டமாக்கக்கோரி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராடி வருகின்றனர்; மகாராஷ்டிராவில் மராத்தா சாதியினர் இடஒதுக்கீடு கேட்டு போராடி வருகின்றனர்; காஷ்மீரைப் பிரித்தபோது லடாக் மக்களுக்கு பழங்குடி அந்தஸ்தும் மாநில அந்தஸ்தும் வழங்குவதாக சொன்ன மோடி-அமித்ஷா கும்பலின் பொய்யை நம்பி ஏமாந்த லடாக் மக்கள் 21 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர்.

ஆம், மக்களின் போராட்ட அலை, இந்துமுனைவாக்கத்தை மழுங்கடிக்க வைத்துள்ளது. அதனால்தான், தோல்வி பயத்தில் இருக்கும் பாசிசக் கும்பல், அனைத்து ஜனநாயக, சட்ட வழிமுறைகள் மீதும் நம்பிக்கையிழந்து, வெறிப்பிடித்து எதிர்க்கட்சிகளை வேட்டையாடி வருகிறது.


படிக்க: பாசிச பா.ஜ.க-வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி? || சிறுநூல் – PDF வடிவில்!


எதிர்க்கட்சிகளின் வெற்றியின் அடிப்படை

மக்கள் போராட்டங்கள்தான் எதிர்க்கட்சிகளையும் வெற்றிப்பெற வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் 2014-ஆம் ஆண்டில் நடந்தது என்ன?

2ஜி அலைக்கற்றை ஊழல் என்ற ஒரு பொய்யைப் பரப்பி ஆ.ராசா, கனிமொழி கைது செய்து சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். தி.மு.க. மீது ஊழல் முத்திரை குத்தப்பட்டிருந்தது. தமிழ்நாட்டின் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. மிக மோசமான தோல்வியைத் தழுவியது.

ஆனால், 2019-இல் நடந்ததென்ன?

கொங்குவேளாளர் சாதி அடித்தளத்தைக் கொண்ட அ.தி.மு.க-வும், வன்னிய சாதி அடிப்படையைக் கொண்ட பா.ம.க-வும் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தன. இத்துடன், தே.மு.தி.க. போன்ற கட்சிகளும் இணைந்து நின்றன. ஆனால், தி.மு.க. கூட்டணி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றது!

இதற்கு என்ன காரணம்? தி.மு.க. ஊழல் கட்சி அல்ல என்று மக்கள் கருதிவிட்டார்களா? தி.மு.க-வுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் எல்லாம் பாசிச எதிர்ப்புக் கட்சிகள் என்று மக்கள் நம்பிவிட்டார்களா? இல்லை.

தமிழ்நாட்டு மக்களிடம் எழுந்த மோடி எதிர்ப்பலைதான், தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறவைத்தது. அப்போது மட்டுமல்ல, 2021 சட்டமன்றத் தேர்தலிலும் மோடி எதிர்ப்பலைதான் முதன்மையான பங்காற்றியது.

மோடி எதிர்ப்பலை என்பது மோடி என்ற தனிமனிதருக்கு எதிரான எதிர்ப்பலை அல்ல. ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார கும்பலின் இந்துராஷ்டிர வெறி அரசியலுக்கும் பா.ஜ.க. அரசின் கார்ப்பரேட் ஆதரவு, மக்கள் விரோதத் திட்டங்களுக்கும் எதிரான அலையாகும்.

ஆகையால், மக்கள் போராட்டங்களே எதிர்க்கட்சிகளை வாழவைக்கிறது.

மக்களின் விழிப்புணர்வு

மக்களின் விழிப்புணர்வு வளர்ந்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை தமிழ்நாட்டில் நடந்த மக்கள் போராட்டங்களைக் கவனியுங்கள்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள் என பல்வேறு பிரிவினர் தி.மு.க. அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி போராடினர்.

இப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கூட தமிழ்நாட்டில் நிலைமை என்ன?

மேல்மா சிப்காட்டிற்கு எதிராக அங்கிருக்கும் விவசாயிகள் போராடி வருகின்றனர்; பரந்தூர் விமான நிலையத்திற்கு எங்களது விளைநிலங்களை ஒருபோதும் கொடுக்க மாட்டோம் என அம்மக்கள் போராடி வருகின்றனர். காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் அமைக்கப்படுவதற்கெதிராக மீனவ கிராம மக்கள் போராடி வருகின்றனர். இவை மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தங்களது நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றப்படாததை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர்.

ஆம், பாசிச மோடி கும்பலை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பது மக்களின் உணர்வாகும். அதேவேளையில், எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் கார்ப்பரேட் ஆதரவு, மக்கள் விரோத நடவடிக்கைகள் காரணமாக, எதிர்க்கட்சிகள் மீதும் மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர். அதன் விளைவுதான், தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்ற தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்களாகும்.

மக்கள் இந்த அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். அதற்கு காரணம், பா.ஜ.க. மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளும்தான்.

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கப் பரிவார கும்பலுக்கு ஜனநாயகம் மீதும் சமத்துவத்தின் மீதும் தீராத வெறுப்பு இருப்பதை மக்கள் நன்கறிவர். இதனால்தான், அக்கும்பல் முன்வைக்கும் இந்துராஷ்டிரம் தங்களுக்கு வேண்டாம் என்று மக்கள் கருதுகின்றனர்.

ஆனால், “அரசியல் சாசனத்தைப் பாதுகாப்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்” என்று முழங்கும் எதிர்க்கட்சிகள்தான், இந்த அரசியல் அமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பதற்குக் காரணமாக இருக்கிறார்கள். இந்த நிலைமை மாறாமல், பா.ஜ.க-வை தேர்தலில் வீழ்த்துவதால் எந்தப் பயனும் இல்லை என்று மக்கள் கருதுகின்றனர். அதன் விளைவுதான், தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்கள்.


படிக்க: தேவை, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு || வெளியீடு


மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். மோடி-அமித்ஷா கும்பல் கொண்டுவந்த அத்தனை சட்டத் திட்டங்களும் நடைமுறையில் இருக்கும் என்றால், எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்று என்ன பயன் என்பதுதான் மக்களின் கேள்வி.

மக்களுக்குத் தேவை, அரசியல்-பொருளாதார மாற்றுத் திட்டமாகும். அதுதான், பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசாகும்.

ஆம், வைரஸ் நோய்க்கிருமி தொற்றிலிருந்து மக்களைக் காப்பற்ற ஆண்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்துவதைப் போல, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுதான் பாசிசம் வளர்வதற்கான அடிப்படைகளைத் தகர்க்கும்.

குறைந்தபட்ச ஆதாரவிலை, எட்டுமணி நேர வேலை, பணிப்பாதுகாப்பு, அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு, இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாயிகள், பழங்குடியினர் தங்களது வாழ்விடத்திலேயே வாழ்வதற்கான உத்தரவாதம் என அனைத்து வகையிலும் மக்களின் உரிமைகளை இந்த பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுதான் பாதுகாக்கும்.

இந்த மாற்றுக் கொள்கைதான், பா.ஜ.க-வைத் தேர்தலிலும் வீழ்த்தும்! அதனால்தான், மக்கள் போராட்டக் களத்தில் நிற்கிறார்கள்.

பாசிசக் கும்பலால் எதிர்க்கட்சிகள் தேர்தல் களத்தில் இருந்து விரட்டியடிக்கப்படுவதைத் தடுக்க எதிர்க்கட்சிகளும் இப்போது போராட்டக் களத்திற்கு வந்துள்ளார்கள்.

தேர்தல் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்கான மார்ச் 31 டெல்லியில் நடக்கும் “இந்தியா கூட்டணி”யின் போராட்டம், மக்கள் உரிமைகளுக்கான போராட்டங்களுடன் கைகோர்க்கட்டும். இதன்மூலம் தான் தேர்தல் வெற்றியை மட்டுமல்ல, பாசிசத்திற்கு எதிரான வெற்றியையும் சாதிக்க முடியும்!


வெற்றிவேல் செழியன்

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024 | மின்னிதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கொங்கு பகுதியில் கலவரம் செய்து தேர்தலை நிறுத்த சதி செய்யும் பாசிசக் கும்பல்

கொங்கு பகுதியில் கலவரம் செய்து தேர்தலை நிறுத்த சதி செய்யும்
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக் கும்பலை எதிர்த்து நிற்போம்!

பதிலடி கொடுக்காமல் பாசிசக் கும்பல் ஒருபோதும் அடங்காது!

14.04.2024

பத்திரிகை செய்தி

ருகின்ற 19 ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் போட்டியிடக் கூடிய எந்த தொகுதியிலும் வெல்ல முடியாது என்ற நிலைமை வந்துவிட்டதால் பாசிச பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ். கும்பல் போட்டியிடக் கூடிய பகுதிகளில் கலவரம் செய்வதற்கு துணிந்து விட்டார்கள்.

நெல்லை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடிய நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான நிறுவனத்தில் பணியாற்றக்கூடியவர்கள் நயினார் நாகேந்திரனுக்காக நான்கு கோடி ரூபாயை எடுத்துச் செல்லும் பொழுது கையும் களவுமாக ரயிலில் பிடிபட்டார்கள்.

சிவகங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி சார்பாக போட்டியிடக் கூடிய தேவநாதன் என்பவர் மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனத்தில் 525 கோடி மோசடி செய்துள்ளார் என்ற தகவலால் தேவநாதனின் செல்வாக்கு புழுத்து நாறிப் போய் உள்ளது. இதனால் அமித்ஷா தனது பிரச்சாரத்தை ரத்து செய்தார்.

ரோடு ஷோ என்ற பெயரில் தெருத் தெருவாக இழுத்துக் கொண்டு சென்றாலும் சீண்டுவதற்குக்கூட நாதியில்லாமல் போய்விட்டது பாசிச பா.ஜ.க கும்பல்.


படிக்க: பாசிச பி.ஜே.பி கும்பல் இஸ்லாமிய குடும்பத்தினர் மீது தாக்குதல்! | மக்கள் அதிகாரம் கண்டனம்


மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கெஜ்ரிவால் தொடர்பான வழக்கில் “தேர்தல் நேரம் என்பதால் செய்த குற்றத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது” என்றது அமலாக்கத்துறை. ஆனால் அமலாக்க துறையால் இதுவரை தேவநாதன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

எப்படிக் குட்டிக்கரணம் போட்டாலும் தமிழ்நாட்டில் வெல்ல முடியாது என்ற சூழல் வந்து விட்டதால் கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் தேர்தலையே நிறுத்துவது என்ற சதி வேலையில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக்கும்பல் ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாகவே கோவையில், இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்த அண்ணாமலையை தட்டி கேட்ட திமுகவினர் மற்றும் பொதுமக்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ளது இந்த பாசிசக் கும்பல்.

இச்சம்பவம் நடந்து அடுத்து சில நாட்களுக்கு உள்ளாகவே, ஜிஎஸ்டி தொடர்பாக கேள்வி எழுப்பிய திராவிட விடுதலைக் கழகத்தின் தோழர் சங்கீதா அவர்களின் கடையில் உள்ளே புகுந்து, தோழர் சங்கீதாவை தாக்கி, ஆபாச வார்த்தைகளால் திட்டி, அவருடைய செல்போனை பறித்துச் சென்றிருக்கிறது பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல்.


படிக்க: மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய அண்ணாமலை | மக்கள் அதிகாரம் கண்டனம்


இது போலவே கோவை மற்றும் நீலகிரியில் தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியின் பிரச்சாரத்திலும் இடையூறு செய்தது பாசிச பா.ஜ.க கும்பல்.

தற்பொழுது வரை போலீசை வைத்துக்கொண்டு பல்வேறு பொய் காரணங்களை கூறி தோழர் திருமுருகன் காந்தியின் பிரச்சாரத்திற்கு பல இடங்களிலும் தடை விதிக்கிறது.

தமிழ்நாட்டில் எங்கேயும் வெல்ல முடியாது என்ற மிக மோசமான நிலைமையை திசை திருப்பவே திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தலை நிறுத்த பா.ஜ.க சதி செய்து வருகிறது.

மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ரவுடிகள் யார் மீதும் இதுவரை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் மேற்கண்ட தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் அடைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

இது ஒரு மேட்ச் பிக்சிங் தேர்தல் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். அந்த மேட்ச் பிக்சிங் சதிச் செயலை கூட தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த முடியாது என்பதால் தேர்தலையே நிறுத்துவதற்கான மிகப்பெரிய சதித்திட்டத்துடன் செயல்படக்கூடிய ஆர்எஸ்எஸ் – பா.ஜ.க கும்பலுக்கு தமிழ்நாடு உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒருபோதும் இந்த பாசிசக் கும்பல் அடங்கப் போவதில்லை.

இனி தமிழ்நாட்டில் எந்த மூலையிலாவது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக் கும்பல் தமிழ்நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதற்கான எதிர்வினையாக தமிழ்நாட்டில் பா.ஜ.க எங்கேயும் பிரச்சாரம் செய்ய முடியாத சூழலை தமிழ்நாடு உருவாக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஈரான் தூதரகம் மீதான தாக்குதல்: அமெரிக்கா – இசுரேலின் அடுத்த போருக்கான தயாரிப்பு

நேற்று (13.04.2024) மாலை, இசுரேலுக்கு சொந்தமான கப்பல் ஒன்றை, ஹொர்மோஸ் ஜலசந்தியில் ஈரான் பிடித்து வைத்துள்ளது. தேவையெனில், இந்த வழித்தடத்தை மூடுவோம் என்று அறிவித்ததன் மூலம், ஈரான் இசுரேல் மீது தாக்குதல் தொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. போர் மூளும் என்ற அச்சம் மத்தியக் கிழக்கை ஆட்டுவித்து வருகிறது.

(சிரியாவில் ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, ஈரான் நேற்று இரவு இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்துள்ளது. நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளதன் மூலம் நேரடித் தாக்குதலைத் தொடங்கிவிட்டது. இது மிகத் தீவிரமான போராக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. தற்போது பிரசுரமாகியுள்ள இக்கட்டுரை தாக்குதல் தொடங்கப்படுவதற்கு முன்பு எழுதப்பட்டது.)

என்ன நடக்கிறது மத்திய கிழக்கில்?

பாலஸ்தீனத்தின் மீதான ஆறு மாத கால போரின் விளைவாக இதுவரை 35,000-க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸை அழிப்பது என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் போருக்கு அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், துருக்கி உள்ளிட்ட அமெரிக்க நட்பு நாடுகள் கூட, பாலஸ்தீனத்தின் மீதான போரைக் கண்டிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

மத்திய கிழக்கு ஆசியாவில் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டும் வகையில், சீனா-ரசியா மேற்கொள்ளும் முயற்சிகள் அமெரிக்கா-இசுரேல் கும்பலுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வந்தது. குறிப்பாக, பல ஆண்டுகளாக பகையாக இருந்த சவுதி அரேபியா – ஈரானுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தியது சீனாவின் முக்கியமான சர்வதேசப் போர்த்தந்திர முக்கியத்துவமுள்ள வெற்றியாகும். இதன் விளைவாக, அமெரிக்க-இசுரேல் கும்பலின் பாலஸ்தீன இன அழிப்புப் போருக்கு எதிர்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கின.

இத்துடன், ஹிஸ்புல்லா, ஹவுதி போன்ற அமைப்புகள் இசுரேலுக்கு எதிராகவும் இசுரேலை ஆதரிக்கும் நாடுகளுக்கு எதிராகவும் நடத்திய தாக்குதல்கள் அமெரிக்காவை நிலைகுலைய வைத்தன. இதனால், செங்கடல் பிராந்தியத்தின் மூலமாக மேற்கொள்ளப்படும் உலக வினியோகச் சங்கிலி அறுபடுவதுடன், அமெரிக்கப் பொருளாதாரம் மிகப்பெரும் அளவுக்கு சீர்குலையும் நிலைமை உருவானது.


படிக்க: செங்கடல்: ஹவுதியின் கடல்வழி தாக்குதல்களை எப்படிப் பார்ப்பது?


இந்நிலையில், செங்கடல் பிராந்தியத்தில் அமெரிக்காவின் கப்பல்களை இலக்கு வைத்து ஹவுதி நடத்திய தாக்குதல்களின் போது, அமெரிக்கா பாலஸ்தீனத்தின் விடுதலைக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறத் தொடங்கியது. உண்மையில், பாலஸ்தீனத்தை இரண்டு அரசுகளாகப் பிரித்து, நாடுகளுக்கான அந்தஸ்த்தை வழங்குவது என்ற தீர்வை முன்தள்ளி வருகிறது.

அமெரிக்கா திருந்திவிட்டது என்று கருத வேண்டாம். இது போருக்கான புதிய தயாரிப்பு என்பதைத்தான் அதன் அண்மைகால சில நகர்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

000

காசிம் சொலைமானி (ஈரானின் இராணுவத் தளபதி)

மார்ச் 01-ஆம் தேதி சிரியாவின் டாமஸ்கசில் உள்ள ஈரானின் துணை தூதரகத்தின் மீது இசுரேல் நடத்தியதாகக் கருதப்படும் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஈரானின் பிரிகேடியர் ஜெனரல் மொகமத் ரெடா அல்-ஜாஹெதி (Mohamed Reda al Zahedi) கொல்லப்பட்டார். இது ஈரானுக்குப் பெரிய இழப்பாகும். அமெரிக்க-இசுரேல் கும்பலால் ஈரானின் இராணுவத் தளபதி கொல்லப்படுவது இது முதல் முறை அல்ல. 2020-ஆம் ஆண்டு, ஜனவரி 03-ஆம் தேதி, ஈரானின் காசிம் சொலைமானி (Qasem Soleimani) அமெரிக்காவின் ஆள் இல்லாத விமானத் தாக்குதல் மூலமாகக் கொல்லப்பட்டார்.

ஈரானை ஒரு அணு ஆயுத நாடாக சித்தரித்து அதன் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வைத்துள்ளது என்பதையும் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும். இதனைக் காரணம் காட்டித்தான் இதுநாள் வரை ஈரான் மீதான அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் அமெரிக்கா நியாயப்படுத்தி வருகிறது.

ஈரானை ஆத்திரமுட்டிய மார்ச் 1-ஆம் தேதி தாக்குதலுக்கு 48 மணி நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் 13-04-2024 அன்று காலை அறிவித்ததைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் மூளும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், இசுரேலுக்கு பக்கபலமாக இருப்போம் என்று அமெரிக்கா தொடர்ந்து அறிவித்து வருகிறது. அதேவேளையில், ஈரான் அமெரிக்க தூதரகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏவுகனைகள், விமானங்கள், ஆளில்லா விமானங்களால் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அதேவேளையில், அமெரிக்க அதிகாரிகள் “ஈரான் நடத்த இருக்கின்ற தாக்குதல் நாடுகளுக்கு இடையிலான போர் அல்ல. அமெரிக்காவுக்கு ஈரானுடன் ஒரு போர் நடத்த விருப்பமில்லை. அதனால், அமெரிக்கா படை கொண்டு இறங்காது” என்று தெரிவித்துள்ளனர்.


படிக்க: காசா: நிவாரண வாகனத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்திய இஸ்ரேல்


ஆனால், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், சீனா, துருக்கி, சவுதி அரேபியா ஆகிய நாடுகளுடன் தொடர்பு கொண்டு, இசுரேல் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என ஈரானிடம் தெரிவிக்குமாறு எச்சரிக்கை செய்துள்ளது, போருக்கான அனைத்து வேலைகளையும் அமெரிக்கா மேற்கொண்டுவருவதை உறுதிப்படுத்துகிறது.

அமெரிக்க வெளியுறவுத்துறைத் தொடர்பாளர் மேத்யூ மில்லர், “மத்திய கிழக்குப் போரில் தனக்கு நாட்டமில்லை” என்று கூறினாலும் இது உலக மக்களை திசைத்திருப்புவதற்கான ஒரு அணுகுமுறையே அன்றி, உண்மையில், அமெரிக்காதான் மத்திய கிழக்கில் புதிய போர்முனை ஒன்றை உருவாக்குவதற்கான வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளதை நிலமைகள் உணர்த்துகின்றன.

அண்மையில், ஐ.நா. பாதுகாப்பு சபை, பாலஸ்தீனத்திற்கு இரண்டு நாடுகளைப் போன்ற தீர்மானத்தைப் பாதுகாப்பு சபைக்குக் கொண்டுவர இருக்கிறது. ஒன்பது நாடுகள் ஏற்றுக்கொண்டால் இது நிறைவேறும். அமெரிக்காவும் இதனை ஆதரித்துப் பேசிவந்துள்ளது. இருப்பினும், பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது போல அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சி ஒரு நாடகமே.

இப்போதைய நிலையில், ஈரான் இசுரேலைத் தாக்கினால் இதனைக் காரணம் காட்டி, பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் இரண்டு அரசுகள் தீர்மானத்தை அமெரிக்கா மறுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கிவிடும். ஒருவேளை, இரண்டு அரசுகள் தீர்மானத்தை அமெரிக்கா ஆதரிக்காமல் போனால், அதனையும் சேர்த்துக் காரணமாக வைத்து ஈரான் இசுரேலைத் தாக்குவதற்கு ஒரு வலுவான முகாந்திரம் கிடைத்துவிடும். எப்படி இருந்தாலும் ஈரானை ஆத்திரமூட்டியிருப்பதால், ஈரான் தாக்குதலை அமெரிக்கா ஆர்வமாக எதிர்ப்பார்த்து வருகிறது. அத்துடன், இதனைக் காரணமாக வைத்து பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் தீர்மானத்திற்கு தனது விட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடை போட்டு பழியை ஈரான் மீது போட்டுவிடலாம் என்பது அமெரிக்காவின் சதித்திட்டமாகும்.


படிக்க: காசா: இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல் இராணுவம்!


மொத்தத்தில், போர் வெறிப்பிடித்து அலையும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கம் தொடர்ந்து சரிந்து வருகிறது. தனது உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, அது உலகத்தில் பல பகுதிகளில் போர்முனைகளை உருவாக்கி வருகிறது. அதன் ஓர் அங்கம்தான், இப்போது ஈரான் மீது போர்த்தொடுப்பதற்கான முயற்சியாகும். ஈரான், லெபனான் ஆகிய நாடுகள் ஏற்கெனவே பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்து வருபவை என்பது முக்கியமான காரணமாகும்.

இசுரேல் என்ற பேட்டை ரவுடியை வைத்துக் கொண்டு, அமெரிக்கா மேலும் ஒரு போர்முனையை உருவாக்குவதை உலகத்தின் அனைத்து மக்களும் எதிர்க்க வேண்டும். தனது உலக மேலாதிக்க வேட்டைக்காக அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் அமெரிக்காவின் போர் முயற்சிகளுக்கு எதிரான போராட்டங்கள் உலகெங்கும் நடத்தப்பட வேண்டும்.

ஒரு பக்கம் உலகத்தின் அணி சேராத யோக்கியர் போல நாடகமாடிக் கொண்டே, இசுரேலுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க-இசுரேல் போர்வெறி, இரத்தவெறிப் பிடித்த ஓநாய்களின் பாதுகாவலனாக மோடி அரசு செயல்படுவதையும் முறியடிக்க வேண்டும்.

இசுரேல்-அமெரிக்காவின் போர் முயற்சிகளைக் கண்டிக்காமல், அதனை ஒரு விறுவிறுப்பான திகில் படக்காட்சி போலக் காட்டி மக்களை மடமையில் ஆழ்த்தும் அமெரிக்க ஆதரவு ஊடகங்கள், சமூக ஊடகங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.


‌தங்கம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மருத்துவக் காப்பீட்டை சுரண்டலுக்கான கருவியாக பயன்படுத்தும் ஸ்விக்கி

ஸ்விக்கியில் ராகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆறு வருடங்களுக்கும் மேலாக உணவு டெலிவரி வேலை செய்து வருகிறார். அவர், கடந்த ஜனவரி மாத இறுதியில், ஹைதராபாத் பகுதியில் உணவு ஆர்டர்களை டெலிவரிக்கு கொண்டு சென்று கொண்டிருந்தபோது, திடீரென அவரது மனைவியிடமிருந்து அவசர அழைப்பு வந்தது. ”எனக்கு உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. நீங்கள் அவசரமாக வரவேண்டும்” என்று அவரது மனைவி ராகேஷுக்கு தெரிவித்தார். மனைவிக்கு ஏற்பட்டுள்ள நோயைக் கண்டறிவதற்காக விடுமுறை எடுத்த ராகேஷ் மூன்று வாரங்களாக வேலைக்கு செல்லவில்லை.

அவரது மனைவிக்கு ஏற்பட்டுள்ள நோயை கண்டறிந்த பிறகு, சிகிச்சை செய்வதற்காக ராகேஷுக்கு ரூ.1,20,000/- தேவைப்பட்டது. சிகிச்சைக்கான பணத்தை ஸ்விக்கியின் மருத்துவக்காப்பீட்டின் மூலம் கட்டுவதற்கு ராகேஷ் முயற்சித்தபோது, மருத்துவக்காப்பீடு கிடைக்காது என்பதை தெரிந்து அதிர்ச்சியடைந்துவிட்டார். ஸ்விக்கியின் மருத்துவக் காப்பீட்டை பெறுவதற்கான நிபந்தனையை அவர் பூர்த்தி செய்யவில்லை என்று கூறி அவருக்கான காப்பீட்டு நிதி நிராகரிக்கப்பட்டது. மூன்று வாரங்களாக வேலைக்கு செல்லாதால் ”கோல்ட்” (Gold) என்ற நிலையை  இழந்து அதற்குக் கீழான நிலைக்கு சென்று விட்டதை காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் தெரிந்துகொண்டார் ராகேஷ்.

அதென்ன ”கோல்ட்” (Gold) என்ற நிலை?

எந்த மாதிரியான மருத்துவக் காப்பீட்டை ஒரு தொழிலாளி பெற வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் பொருட்டு தொழிலாளர்களை மூன்று நிலைகளில் தரம் பிரித்து வைத்துள்ளது ஸ்விக்கி நிறுவனம். அவை: தங்கம் (Gold), வெள்ளி (Silver), வெண்கலம் (Bronze). ”தங்கம்” மதிப்பிடப்பட்ட தொழிலாளர்களால் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் மருத்துவக் காப்பீட்டைப் பெற முடியும். ”வெள்ளி” மதிப்பிடப்பட்ட தொழிலாளர்களால் தனக்கு மட்டுமே காப்பீட்டைப் பெற முடியும்; அவரது குடும்பத்தால் காப்பீட்டைப் பெற முடியாது. ”வெண்கலம்” மதிப்பிடப்பட்ட தொழிலாளர்களால் விபத்துகளின் போது மட்டுமே மருத்துவக் காப்பீட்டை பெற முடியும்.


படிக்க : ஸ்விக்கி தொழிலாளர் போராட்டம் : நவீன பாட்டாளிகளே, முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக அமைப்பாய் திரள்வோம்!


மேலே குறிப்பிடப்பட்ட, மூன்று நிலைகளும் நிரந்தரமானவையும் கிடையாது. இவை மாறக்கூடியது. ஒவ்வொரு வாரமும், டெலிவரி தொழிலாளர்கள் கோல்ட் தரவரிசையைத் தக்கவைக்க 70 புள்ளிகளுக்கு மேல் பெற வேண்டும். 50 முதல் 70 புள்ளிகளுக்கு இடையில் இருந்தால் அவர்கள் வெள்ளிப் பிரிவிலும், 50 புள்ளிகளுக்குக் கீழே இருக்கும் தொழிலாளர்கள் வெண்கலப் பிரிவிலும் சேர்க்கப்படுவார்கள்.

தனது உயிரைப் பனையம் வைத்து குறிக்கப்பட்ட நேரத்திற்குள் உணவை பத்திரமாக டெலிவரி செய்தால் மட்டுமே “பர்பெக்ட் டெலிவரி” (perfect delivery) ஆக கருதப்படும். ஒரு பர்பெக்ட் டெலிவரி செய்தால் ஒரு புள்ளி வழங்கப்படும்.

சில நேரங்களில் ட்ராஃபிக் காரணமாக ஆர்டர்களை சரியான நேரத்தில் தொழிலாளர்களால் டெலிவரி செய்ய முடியாது. அப்போதெல்லாம் ஸ்விக்கி செயலி அந்த ஆர்டரை மோசமான ஆர்டருக்குள் சேர்த்துவிடும். இதனால் அவர்களுடைய புள்ளிகள் குறையும்.

தொழிலாளர்கள் தங்களுடைய கோல்ட் தரவரிசையைத் தக்க வைப்பதற்காக ஒரு நாளைக்கு 15-16 மணி நேரம் வேலை செய்கிறார்கள்.


படிக்க : கிக் தொழிலாளர்களுக்கான நல வாரியம்: தீர்வாகுமா?


ராகேஷுக்கு நடந்ததைப் போன்றதொரு அவலம், கடந்த அக்டோபர் 2023 இல், மும்பையில் ஸ்விக்கி டெலிவரி தொழிலாளர் ஒருவருக்கும் நடைபெற்றுள்ளது. அவர் ஸ்விக்கி நிறுவனத்தில் ஏழு ஆண்டுகள் பணியாற்றியவர். தனது மனைவியின் மகப்பேறு செலவுக்காக ரூ. 23,000/- மதிப்புள்ள காப்பீட்டுக்கான கோரிக்கையை ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் தாக்கல் செய்தார். ஆனால், நான்கு மாதங்களுக்குப் பிறகு, ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் இந்த உரிமைகோரலை மறுத்து அவருக்கு பதில் கடிதம் அனுப்பியது. அதில் ”நீங்கள் சில்வர் மதிப்பிடப்பட்ட நிலையில் இருப்பதால் உங்கள் குடும்பத்தினருக்கான மருத்துவ செலவுகளை வழங்க முடியாது” என தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டில், ஸ்விக்கி தனது கார்ப்பரேட் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அக்கோ ஜெனரல் இன்சூரன்ஸிலிருந்து ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸுக்கு மாற்றியது. அதன் பிறகுதான் தொழிலாளர்களை வகைப்படுத்தும் முறை கொண்டுவரப்பட்டது என்று ஸ்விக்கி தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான மருத்துவக் காப்பீட்டை தருவதற்கு கூட பல்வேறு நிபந்தனைகளை விதித்து கார்ப்பரேட் நிறுவங்கள் தொழிலாளர்களை ஏமாற்றுகின்றன. அவர்களை கசக்கிப் பிழிவதற்காகவே இது போன்றதொரு காப்பீட்டு மாதிரியை பின்பற்றுகின்றன. இதற்கு அரசும் எப்போதும் துணையாகவே இருந்து வருகிறது.

கிக் தொழிலாளர்கள் தங்களை சங்கமாக்கிக் கொண்டு தொடர்ந்து போராடுவதன் மூலம் மட்டுமே தங்களுக்கான குறைந்தபட்ச உரிமைகளையாவது பெற முடியும்.

செய்தி ஆதாரம்: ரெஸ்ட் ஆஃப் வேர்ல்ட் (restofworld)


‌ஆதன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



சனாதனம் ஒழிப்போம்! | ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு பாடல் | மறுவெளியீடு

சனாதனம் ஒழிப்போம்! | ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு பாடல்
| மறுவெளியீடு

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி சனாதனத்தை வீழ்த்துவதன் அவசியத்தை வலியுறுத்தி இப்பாடலை மீண்டும் வெளியிடுகிறோம்.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



நயினார் (நாலுகோடி) நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம் | தோழர் ரவி

நயினார் (நாலுகோடி) நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்காத
தேர்தல் ஆணையம் | தோழர் ரவி

விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் தங்கியிருந்த அறையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் வைக்கப்பட்டிருந்ததா? என்று சோதனை செய்யப்பட்டது. ஆனால் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுடன் தொடர்புடையவர்களிடம் இருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட பின்பும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழ்நாடு பா.ஜ.க. தலைவரான அண்ணாமலை தனது வேட்புமனுவை முறையாக தாக்கல் செய்யாதபோதும் தேர்தல் ஆணையம் அதை ஏற்றுக்கொண்டது. இந்த தேர்தல் ஆணையம் பா.ஜ.க. வின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



“BAN BJP – BAN RSS” | ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு பாடல் | மறுவெளியீடு

“BAN BJP – BAN RSS” | ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு பாடல்
| மறுவெளியீடு

ணிப்பூரில் கலவரத்தை ஏற்படுத்திய RSS-BJP கும்பலை அம்பலப்படுத்தி இந்தப் பாடல் வெளியிடப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, இந்த பாசிசக் கும்பலை தடை செய்ய வேண்டிய தேவையை மீண்டும் வலியுறுத்தும் பொருட்டு இப்பாடலை மீண்டும் ஒருமுறை வெளியிடுகிறோம்.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube