Sunday, June 28, 2026
முகப்பு பதிவு பக்கம் 342

மூலதனம் நூலின் அனைத்து பாகங்களும் – PDF வடிவில் !

4
Karl_Marx_Slider

கார்ல் மார்க்ஸ் –ன் மூலதனம் ஐந்து பகுதிகள் உங்களுக்கான PDF இணைப்பு. ( சுமார் 3200 பக்கங்கள் )

நண்பர்களே…

பொ.வேல்சாமி

தோழர் தியாகுவால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மார்க்ஸின் மூலதனம் நூல் முழுமையையும் உங்கள் கணிணியில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அந்நூல்களில் உள்ள முன்னுரைகளை தோழர்கள் அவசியம் படிக்க வேண்டும். மற்ற பகுதிகளை மெதுவாகப் படிக்கலாம்.

கம்யூனியம் தொடர்பான வேறு முக்கியமான நூல்களின் PDF உங்களுக்குத் தேவையானால் கருத்துக்களைப் பதிவிடுங்கள்.

( பிடிஎஃப் டவுண்லோடு செய்ய )

மூலதனம் பாகம் 1 பகுதி – 1

மூலதனம் பாகம் 1 பகுதி – 2

மூலதனம் பாகம் 2

மூலதனம் பாகம் 3 பகுதி – 1

மூலதனம் பாகம் 3 பகுதி – 2

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

NEP 2019 : ஒரு துளி பாலில் ஒரு குடம் விஷம் | CCCE திருச்சி அரங்கக் கூட்டம்

பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – திருச்சி சார்பாக  தேசிய கல்விக்கொள்கை  2019 பற்றிய அரங்க கூட்டம் கடந்த 6.8.2019 அன்று திருச்சியில் சுமங்கலி மஹாலில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில்  கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள்,  சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு  அமைப்பினர் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பேரா. மன்சூர் தலைமையுரையில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையைக்காட்டிலும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை பயங்கரமானது என்றும் மாநில உரிமைகள் மீட்டெடுக்கப் படவேண்டும் என்றும் அரசுக் கல்லூரிகளே சுயநிதிக்கல்லூரிகளாக  மாறும்போது அரசு உதவி பெறும் கல்லூரி நிர்வாகங்கள் தங்களுக்கு வரும் பேராபத்தை உணராமல் இருப்பதையும் சுட்டிக் காட்டினார் .

இக்கூட்டத்தில் இந்திய மொழிப் பன்மைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்துப் பேசிய  பேரா. மதிவாணன் இந்த வரைவு அறிக்கையின் பரிந்துரைகள் மாநில மொழிகளை புறந்தள்ளி விட்டு ஒரே பண்பாட்டு மொழியாக சமஸ்கிருதத்தை கொண்டு வரத் துடிப்பதை அம்பலப்படுத்தினார். அடுத்து பேசிய பேரா.அய்யம்பிள்ளை வரைவு அறிக்கை CII, FICII, NASSCOM போன்ற பெருமுதலாளிகளுடைய சங்கங்களின்  பரிந்துரைகளை வழிமொழிவதாகவே உள்ளது எனவும் அடித்தட்டு மக்களுக்கு கல்வியை மறுப்பதையே  தேசிய கல்விக் கொள்கை முன்வைக்கிறது என  விபரங்களுடன்  விளக்கினார்.

அடுத்து பேசிய முனைவர் ரமேஷ் உயர்கல்வியை சர்வதேசியமயமாக்குதல் என்ற பெயரில் இந்தியா பெருமுதலாளிகள் / நிதிமூலதனங்களிடம் தாரைவார்ப்பதற்காக மோடி அரசு முன்வைத்துள்ள பரிந்துரைகளை  அம்பலப்படுத்தி பேசினார் . பேரா.கருணானந்தன் எங்கள் மாநில மக்கள் எதைப் படிக்க வேண்டும்? எப்படிப் படிக்க வேண்டும்? எந்த மொழியில் படிக்க வேண்டும்? என்று தீர்மானிக்க நீ யார்? என்ற கேள்வி எழுப்பினார். இப்போது இந்தியாவில் நவீன தேவாசுரப் போர் நிகழ்கிறது. அது கல்விக் கொள்கையிலும் வெளிப்படுகிறது. தமிழகம் போன்ற கல்வியில் முன்னேறிய மாநிலங்களின் கல்வியை ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டு வந்து குலக்கல்வி என்ற பேராபத்தில் தள்ள முயலும் இந்த முயற்சியை அனைவரும் இணைந்து தடுத்தாக வேண்டும். எத்தனை சூழ்ச்சிகள் வந்தாலும் இந்தப் போரில் வெல்லப் போவது நாம் தான் என எழுச்சியுரையாற்றினார்.

படிக்க:
காஷ்மீர் துண்டாடப்பட்ட நாளின் முதல் பலி – 17 வயது சிறுவன் !
போலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம் !

பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை மறுக்கும் தேசிய கல்விக் கொள்கை – 2019-ஐ முற்றாக நிராகரிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இறுதியாக பேரா.மருதை நன்றியுரை கூறியதுடன் கூட்டம் நிறைவடைந்தது.

தகவல்:
பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு,
திருச்சி.

நூல் அறிமுகம் : மீத்தேன் அகதிகள்

நூலாசிரியர் பேராசிரியர் த.செயராமன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர். பேரழிவைத் தரும் திட்டங்களுக்கு எதிராகக் கருத்துப்பரவலும், களப் போராட்டங்களும் நடத்திவரும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் இன்னுமொரு கருவியாக மீத்தேன் அகதிகள் என்ற இந்நூல் வெளிவருகிறது.

தமிழகத்தில் மீத்தேன், ஷேல் மீத்தேன் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால், மக்கள் அகதிகளாக வெளியேறித்தான் ஆக வேண்டும். அப்படி வெளியேறும் தமிழர்கள் தங்கள் தாயகத்துக்குத் திரும்பவே முடியாது என்ற உண்மையை உணர்த்துவதே இந்நூலின் முதன்மை நோக்கம்.

இந்திய அரசு விவசாயத்திலிருந்து விவசாயிகளை வெளியேற்றுகிறது. சில்லறை வர்த்தகத்திலிருந்து சிறுவணிகர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். மொத்த வணிகம் முழுமையாகப் பறிபோய்விட்டது. பெருந்தொழில்கள் தமிழர்களிடம் இல்லை. குறுந்தொழில்கள் முடக்கப்பட்டு வருகின்றன. கடலிலிருந்தும், கடற்கரையிலிருந்தும் மீனவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.

திணிக்கப்படும் பேரழிவுத் திட்டங்களால் தமிழக மக்கள் வாழ்வுரிமையையும், வாழ்வாதாரங்களையும் இழந்து, தங்கள் வாழ்விடத்தைவிட்டுத் துரத்தியடிக்கப்படும் நிலையை, தமிழக அரசியல் தலைவர்கள் ஒரு பிரச்சினையாகவே கருதவில்லை.

தமிழர்களின் தாயகப் பகுதியைச் சூறையாட இந்திய, பன்னாட்டுப் பெரு முதலாளிகள் போட்டியிடுகிறார்கள். தமிழர் தாயகத்தை இந்திய அரசு ஏலம்விடுகிறது. தமிழ் மக்களின் தன்தீர்மானிப்பு (Self-Determination) உரிமையையும், இயற்கை வளங்கள் மீதான இறையாண்மையையும் (Soveriengnty over Natural Resources) தமிழர்கள் அறிவிக்க வேண்டியக் காலக்கட்டம் இது. அதற்கான புரிதலை உருவாக்குவதற்கான முயற்சிகளுள் இந்நூல் வெளியீடும் ஒன்று. (நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து)

காவிரிப்படுகையில் பல அழிவுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றுள் எல்லாம் மிகக் கொடுமையானது எண்ணெய் – எரிவாயு எடுப்பு. கண்ணுக்குத் தெரியாத வண்ணம் கருவையே அழிக்கும் வேலையை எண்ணெய் – எரிவாயு நிறுவனங்கள் செய்து கொண்டிருக்கின்றன. எண்ணெய் – எரிவாயுக் குழாய் பதிக்கப்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீரை முற்றிலுமாக வாழும் மக்களிடமிருந்தும், தாவர, உயிர் வர்க்கங்களிடமிருந்தும் பறிமுதல் செய்யும் வேலையை எண்ணெய் – எரிவாயு நிறுவனங்கள் செய்து கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் எண்ணெய் – எரிவாயு நிறுவனங்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அவற்றை அரசுகள் விசாரித்து பல குற்றச்சாட்டுகள் உண்மை எனக் கண்டறிந்தன. அந்த எண்ணெய் – எரிவாயு நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அபராதங்கள் வசூலிக்கப்பட்டன. நிலத்தடி நீர் எண்ணெய் – எரிவாயு நிறுவனங்களால் பாழாக்கப்படுவது என்பது பல்வேறு நாடுகளில் நடத்திருக்கிறது. அது உண்மை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அது தடுத்தும் நிறுத்தப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில், நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்பதாலேயே எரிவாயுத் திட்டங்கள் மக்களால் எதிர்க்கப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கின்றன. எண்ணெய் – எரிவாயு எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிப்படையும் என்ற உண்மையைப் பல நாடுகள் அரசுகள், அமைப்புகள் ஏற்றுக் கொள்கின்றன. இந்தியாவில் அரசு இதை ஏற்கிறதா? எந்த எண்ணெய் – எரிவாயு நிறுவனமாவது தங்களால் நிலத்தடி நீர் மாசுபடும் என்பதையும், அப்படி மாசுபடுத்தியிருக்கிறோம் என்றும் ஒத்துக் கொண்டிருக்கிறார்களா? எங்கள் பகுதி நிலத்தடி நீர் தன் தன்மையை இழந்துவிட்டது என்று கூறி ஓ.என்.ஜி.சி., போன்ற எண்ணெய் – எரிவாயு நிறுவனங்களை மக்கள் எதிர்த்துப் போராடும்போது, எந்த மாவட்ட ஆட்சியராவது மக்கள் பக்கம் நின்று, அந்த நீர் பாதிப்பு குறித்து நடவடிக்கை எடுத்ததுண்டா ?

நிலத்தடி நீர் பாதித்துவிட்டது என்று மக்கள் போராடும்போது, அதை அப்போதைக்கு அடக்கும் விதத்தில், நீரை பரிசோதனைக்கு அனுப்பப்போவதாகக் கூறுவதும், பின்னர் நீர் எவ்விதப் பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்று ரிப்போர்ட் வந்து விட்டதாக மாவட்ட ஆட்சியர் கூறுவதும் வாடிக்கை. நீர் கெட்டுப் போகவில்லை என்றால் ஒரு குவளை நீரைக் குடித்துக் காட்டுங்கள் என்று மக்கள் கேட்கும்போது அதிகாரிகளின் முகம் பேயறைந்தது போல மாறிப்போவதும் நாம் கண்ட ஒன்றுதான்.

இதில் கவலைப்படக் கூடிய ஒன்று, நீராய்வு செய்து அறிக்கை தரும் வாட்டர் போர்டு, அந்த நீர் பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்று அதிகாரபூர்வமாகப் பச்சையாகப் பொய் கூறுவதைத் தண்டிக்கப்போவது யார்? அப்படி அறிக்கை தரும் அதிகாரிகளாவது குறிப்பிடப்படும் இடங்களில் உள்ள நிலத்தடி நீரில் ஒரு குவளை குடித்துக் காட்டுவார்களா? எண்ணெய் – எரிவாயு நிறுவனங்களுக்குச் சார்பாக அரசு அதிகாரிகள் நடந்துகொள்வதும் பாதிப்புகளை மறைப்பதும் சமூக விரோதச் செயல்பாடுகள் அல்லவா? (நூலிலிருந்து பக்.145-146)

பிரச்சினையின் தன்மையை உணர வேண்டும்

காவிரி டெல்டா பகுதிகளை அழிக்க வரும் மீத்தேன் திட்டம்

தமிழக மக்கள் பிரச்சினையின் முழு வடிவத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். இது வெறும் சூழலியல் பிரச்சினை அல்ல; அல்லது மீத்தேன் எடுப்பு என்பதால், வாழ்வாதாரங்கள் அழிப்பு என்ற பொருளியல் பிரச்சினை மட்டும் அல்ல; மீத்தேன் எடுப்பில் பயன்படுத்தப்படும் நீரியில் விரிசல் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் 634 இரசாயனங்களால் உருவாகும் நோய்கள் – கோளாறுகள் பற்றிய உடலியல் – உயிரியல் பிரச்சினைகள் மட்டுமல்ல; குறுவிவசாயிகள், விவசாயிகள் நிலமிழந்து உதிரித் தொழிலாளர்களாக மாறிப் போவார்கள்; விவசாயத் தொழிலாளர்கள் தங்கள் உழைப்புத் தளத்தை இழந்து போவார்கள்; ஊதியம் அற்றுப் போவார்கள் என்ற பொருளியல் பிரச்சினை மட்டுமல்ல.

ஒரு தேசிய இனம், தன் வரலாற்றுத் தாயகத்தை இழந்துவிட்டு, நெருக்கடிகளுக்கு உள்ளாகி, வாழ வழிதேடி, அகதிகளாகப் பயணிக்க இருக்கிறது. அவர்கள் வாழும் பிரதேசம் இரசாயனக் கலவைகளால் நச்சுக்காடாகி, அந்த மக்கள் சமூகமே நோய்கொண்ட சமூகமாக மாற இருக்கிறது. நோய் கொண்ட சமூகமாக மாறும் நிலையைத் தவிர்க்க, தமிழர்கள் தங்கள் பூர்வீகத் தாயகத்தை விட்டுக் கட்டாயமாக வெளியேற வேண்டியச் சூழலை எதிர் நோக்கி இருக்கிறது. (நூலிலிருந்து பக்.171)

மீத்தேன் அகதிகள்:

மீத்தேன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால், தாயகப்பகுதியை விட்டு வெளியேறும் மக்களை, “மீத்தேன் அகதிகள்” என்று குறிப்பிடுகிறோம். ஏனைய அகதிகளுக்கும், மீத்தேன் அகதிகளுக்கும் வேறுபாடு உண்டு.

ஈழத்திலிருந்து பெருவாரியாகத் தமிழ் மக்கள் 1983 முதல் வெளியேறினார்கள். அவர்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி, படுகொலைகளையும், பாலியல் வன்முறைகளையும் நிகழ்த்தி, உயிர் அச்சத்தை உருவாக்கி, சிங்களக் காடையர்களும், சிங்களப் படையினரும் தமிழர் தாயகத்தை விட்டு விரட்டியடித்தார்கள். ஆயுதம் தாங்கிய தாக்குதலால் ஈழ மக்கள் அகதிகளாக்கப்பட்டார்கள். அவர்களுடைய தமிழீழத் தாயகப் பகுதியை சிங்களர்கள் கைப்பற்றிக் குடியேறினார்கள்.

படிக்க:
ஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம் !
உன்னாவ் பாலியல் வன்முறை வழக்கில் பாஜகவின் தொடர்புகள் : சிபிஐ அறிக்கையில் அம்பலம் !

வெடிகுண்டுகளால் ஈழமக்களை சிங்களர் விரட்டியடித்தது போல, சற்று மாறுதலாக தமிழக நிலப்பரப்பில் நீரை வெளியேற்றி நீரற்றுப் போகச்செய்து, வாழ்நிலத்தை நச்சுக்காடாகவும், பாலை நிலமாகவும் மாற்றி, வேளாண்மையை அழித்து, இனி அங்கே வாழ முடியா சூழலை உருவாக்கி, பிழைப்புத் தேடி அலைபவர்களாக மாற்றி, தமிழர்களை இந்திய அரசு விரட்டியடிக்கிறது. (நூலிலிருந்து பக்.165-166)

நூல் : மீத்தேன் அகதிகள்
ஆசிரியர்  : பேராசிரியர் த. செயராமன்

வெளியீடு : மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு – தமிழ்நாடு,
19/2, சேந்தங்குடி வடக்குத்தெரு, ஆனதாண்டவபுரம் சாலை,
மயிலாடுதுறை – 609 001.
தொலைபேசி எண் : 04364 – 227484.
மின்னஞ்சல் : jeyaramanvaralaru@gmail.com

நூல்கள் பெற: புத்தகச் சோலை,
பெரியார் மாளிகை, 44-மகாதானத் தெரு, மயிலாடுதுறை – 609 001.

தொலைபேசி எண் : 04364 – 228634.
மின்னஞ்சல் : pcpd.periyar@gmail.com

பக்கங்கள்: 208
விலை: ரூ 150.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : common folks

பள்ளிக்கும் குடும்பத்திற்கும் இடையிலான தொடர்புகளின் சாராம்சம் என்ன ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 16

குடும்பத்திற்கும் பள்ளிக்கும் இடையிலான தொடர்புகள்

டுத்த திங்கட்கிழமையிலிருந்து கூடுதல் பள்ளி நேரத்திற்கு மாறுவோம். குழந்தைகளை இரண்டு குழுக்களாகப் பிரித்தோம். ஒவ்வொரு குழுவிற்கும் பெயர் (“ரோஜா”, “மல்லிகை“) கூடக் கண்டுபிடித்தாகி விட்டது. இன்று வகுப்பறையில் பெற்றோர்களும் உதவியாசிரியர்களும் கூடுவார்கள், இக்குழுக்களில் என்ன செய்வது என்று கூட்டாக விவாதிப்போம்.

வகுப்பறையையும் தாழ்வாரத்தையும் ஒழுங்குபடுத்தி பலவற்றை மாற்றியமைத்ததில் பெற்றோர்கள் காட்டிய அக்கறை, ஆர்வம் குறித்து எனக்குப் பெரிதும் மகிழ்ச்சி.

தாழ்வாரத்தில் ஜன்னல்களில் ரோஜாப் பூ வண்ணத்தில் திரைச் சீலைகள் தொங்கவிடப்பட்டுள்ளன, நன்கு வசதியான சூழல் உடனேயே ஏற்பட்டது.

வளர்ப்புப் பணி ஒரு சமுதாயப் பணியாகும், இதை ஒளிவு மறைவின்றிச் செய்ய வேண்டும். நான் மருத்துவரோ, பொறியியலரோ, பிட்டரோ, திராட்சை பயிரிடும் விவசாயியோ அல்ல. நான் ஆசிரியன், குழந்தைகளை வளர்ப்பவன். எனது துறை மிகச் சிக்கலானது, மிகவும் பொறுப்புள்ளது.

தரையில் வைக்கோலால் செய்யப்பட்ட விரிப்பும் கம்பளமும் விரிக்கப்பட்டிருந்தன, கம்பளத்தில் குழந்தைகள் குட்டிக்கரணம் போட்டு விளையாடுகின்றனர்.

சுவரில் மின்சாரக் கணக்கு அட்டவணை தொங்கியது. இதில் கூட்டலாம், கழிக்கலாம், சிறிது நாட்களுக்குப் பின் பெருக்கலாம், வகுக்கலாம்.

ஜன்னலருகே மீன்தொட்டி உள்ளது. இதில் மீன்களும் நத்தைகளும் நீந்துகின்றன, நீர்ப்பாசி வளருகிறது.

வீடு, கட்டிடங்களைக் கட்டி விளையாடத் தேவையான விளையாட்டுப் பொருட்களும் உட்கார்ந்த இடத்திலேயே விளையாடும் பல சாமான்களுமாக ஏராளமான விளையாட்டுப் பொருட்கள் சேர்ந்துள்ளன. இவற்றை வைப்பதற்காக ஜன்னலருகே காலியான இடத்தில் அலமாரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வகுப்பறையிலும் தாழ்வாரத்திலும் ஒவ்வொரு முறையும் ஏதாவது புதிதாகத் தோன்றும் போதெல்லாம் குழந்தைகள் மகிழ்ச்சியடைந்தனர். ”பெற்றோர்களுக்கு நன்றி சொல்வோம்” என்று ஒவ்வொரு முறையும் சொல்வேன்; பின் சாக்பீசால் தாழ்வாரத்தில் உள்ள கரும்பலகையில் கீழ்வருமாறு எழுதுவேன்:

எங்கள் தாழ்வாரத்தை திரைச் சீலைகளால் அழகுபடுத்தியதற்காக அவ்தன்தீல் மாமாவிற்கு நன்றி!

அல்லது:

மீன்தொட்டி கொண்டு வந்ததற்காக கேத்தினோ அத்தைக்கு நன்றி!

அல்லது:

வாஹ்தாங் மாமா, நீங்கள் மிக அன்பானவர் ! உங்களுக்கு நன்றி!

பெற்றோர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கையில் நான் இப்போது பள்ளிக்கும் குடும்பத்திற்கும் இடையிலான தொடர்புகளைப் பற்றிச் சிந்திக்கிறேன்.

சில சமயங்களில் இத்தொடர்பு எவ்வளவு மெல்லியதாக, உறுதியற்று இருக்கிறது! சில சமயங்களில் இரு தரப்புகளிலுமாக இது எப்படி இழுக்கப்படுகிறது! குழந்தைகள் பள்ளியில் எப்படிப் படிக்கின்றனர், எப்படி நடந்து கொள்கின்றனர் என்பது தொடர்பான விவரங்களைப் பெற்றோர்கள் பெறுவதற்காக சில ஆசிரியர்கள் குறிப்பிட்ட நாட்களையும் நேரத்தையும் முடிவு செய்து அறிவிப்பார்கள். வேறு சிலரோ குழந்தைக்கு புத்தி சொல்லவும், படிப்பில் துணை புரியவும் உதவுமாறு பெற்றோர்களைக் கோருவார், குழந்தைகளின் செயல்களைப் பற்றிப் பெற்றோர்களுக்குக் கடிதம் எழுதுவார், குழந்தையின் நாட்குறிப்பில் அதிருப்தியான, அச்சுறுத்தும் குறிப்புகளை எழுதுவார். வேறு சில ஆசிரியர்கள், குடும்பத்தில் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்று பெற்றோர் கூட்டங்களிலும் விரிவுரைகளிலும் பெற்றோர்களுக்குப் போதனை செய்வார்.

எனவே, பள்ளியைப் பொறுத்தமட்டில் இது குழந்தைகளின் நடத்தை, கல்வி பற்றிப் பெற்றோர்களுக்கு அறிவிக்க மட்டுமே செய்கிறது, எப்படி வளர்க்க வேண்டுமென ஆலோசனை கூற மட்டுமே செய்கிறது என்றாகிறது. அதுவும் குழந்தை ஏதாவது தப்பு செய்தால் மட்டுமே இதற்கான அவசியம் ஏற்படுகிறது. தம் குழந்தைகளைப் பற்றிய வசவுகளைக் கேட்கும் பொருட்டு ஆசிரியர்களிடம் செல்ல அம்மாக்கள் எவ்வளவு தூரம் தயங்குகின்றனர், தந்தைமார்களோ இச்சந்திப்புகளை எப்படி உறுதியோடு தவிர்க்கின்றனர் பாருங்கள், தாம் ஒரு தடவை கூட பள்ளி வாசல்படியை மிதித்ததில்லை, பள்ளி எங்கேயுள்ளது என்று கூடத் தெரியாது – தம் மகன் எவ்வளவு நல்லவன் – என்றெல்லாம் சில அம்மாக்களுக்கு எவ்வளவு பெருமிதம்!

பள்ளிக்கும் குடும்பத்திற்கும் இடையிலான தொடர்புகளின் சாராம்சம் என்ன? பள்ளிக்குத் தேவையான துரிதமான வளர்ப்பு உதவியை அளிப்பதும், குழந்தையின் விஷயத்தில் பலவீனமான பள்ளியின் நிலையை வலுப்படுத்துவதுமா இதன் உட்பொருள்?

இந்நிலவரத்தைக் கண்டு யாரும் வியப்படைய வேண்டாம். ஆறு வயதுச் சிறுவனின் தாய் வெட்கத்தால் முகம் சிவக்க ஆசிரியையின் முன் நின்று அவனது குறைகளைக் கேட்கிறாள்: “உங்கள் சிறுவன் கவனக் குறைவானவன், மேசைக்குப் பின் நாற்காலியில் உட்காரத் தெரியவில்லை. மோசமாக எழுதுகிறான். சொன்ன பேச்சைக் கேட்பதில்லை. அவனுக்கு ஓடிக் குதித்துக் கொண்டிருப்பதே போதும். அவனை சரியாக வளர்ப்பதன் மீது பெரும் கவனம் செலுத்த வேண்டும்”. சிறுவன் அருகேயே நிற்கிறான், ஏதோ விஷயம் சரியில்லை என அவனுக்குப் புரிகிறது, தாயோ “நேராக நில்! வீட்டிற்கு வா ஒரு கை பார்க்கிறேன்!” என்று கூறுவது போல் அவன் கையைப் பிடித்து வலிக்கும் படி திருகுகிறாள். சிறுவனின் மனதில் ஆசிரியை முதல் எதிரியாகிறாள்.

ஒருவேளை இங்கு ஆசிரியை, பள்ளிக்கும் குடும்பத்திற்கும் இடையிலான தொடர்பு எனும் புனிதமான கோட்பாட்டை நிறைவேற்றினாளோ! சரி, அப்படியெனில் அத்தாய் வீடு திரும்பியதும் எப்படி நடந்து கொள்கிறாள் என்று பார்ப்போம். ஏனெனில் ஆரம்பத்திலேயே குழந்தையை சரியான பாதையில் திருப்ப வேண்டுமே! இன்றே அவன் பள்ளியில் கவனக் குறைவாக இருந்தால், குறும்பு செய்தால், படிக்காவிட்டால், சொன்ன பேச்சைக் கேட்காவிட்டால் ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் என்ன நடக்கும்? ஆறு வயதுக் குழந்தையின் அனுபவமேயில்லாத பெற்றோர்கள் தம் முதல் குழந்தையை வளர்க்கும் போது என்ன செய்வார்கள்? “இது மாதிரி இனி செய்யக் கூடாது” என்று தந்தை விரலை ஆட்டி அச்சுறுத்துவார். தாய் கிட்டத்தட்ட தன் மகனை வலுக்கட்டாயமாக மேசை முன் அமர்த்தி எழுதப் படிக்கச் சொல்வாள். பாட்டி கூட கதவின் முன் நின்றுகொண்டு “படித்து முடிக்கும்வரை விளையாட வெளியே விடமாட்டேன்” என்பாள். குழந்தையோ, இவையெல்லாம் பெரியவர்களின் சதியென எண்ணி வருந்துவான்.

“ஏன் அவனை இரண்டாவது பெஞ்சில் உட்கார வைத்தீர்கள்? ஏன் நீங்கள் அவனிடம் அடிக்கடி கேள்வி கேட்பதில்லை? ஏன் அவனிடம் நீங்கள் அன்பாக நடந்து கொள்வதில்லை? ஏன்?…” உண்மையிலேயே நான் அக்குழந்தையிடம் பாரபட்சமாக நடந்து கொள்கிறேனா என்ற சந்தேகம் தோன்றுகிறது.

இச்சிறுவனின் விஷயத்தில் பள்ளிக்கும் குடும்பத்திற்கும் இடையிலான தகவல் ரீதியான, கட்டளை பிறப்பிக்கும் தொடர்பு என்ன செய்தது? குழந்தை வளர்ப்பில் குடும்பம் மற்றும் பள்ளியின் முயற்சிகளை இது ஒன்றிணைத்ததா? இல்லை.

பள்ளிக்கும் குடும்பத்திற்கும் இடையே வெறும் தொடர்பு மட்டும் போதாது. முழுமையான வளர்ப்பு, குழந்தையின்பாலான சர்வாம்ச அணுகுமுறை தேவை. எவ்வொரு குழந்தையையும் சுற்றி மனிதாபிமான பள்ளிச் சூழலை ஏற்படுத்துவதில் பெற்றோர்கள், ஆசிரியர்களின் பொது அக்கறையில் இந்த முழுமை பிரதிபலிக்க வேண்டும், இது இச்சூழலை ஏற்படுத்துவதில் பள்ளியின் முக்கியப் பாத்திரத்தைக் குறிக்க வேண்டும்.

வளர்ப்பின் முழுமைக்கு வழிகோலும் இப்படிப்பட்ட தொடர்பை எப்படி நிறைவேற்றுவது? ஒருவேளை இதே லட்சியத்தைக் கொண்டுள்ள ஆயிரக்கணக்கான என் சக ஆசிரியர்கள் தம் நடைமுறையில் பள்ளிக்கும் குடும்பத்திற்கும் இடையிலான செயல்பூர்வமான தொடர்புக்கான பல சுவாரசியமான வழிகளைக் கண்டுபிடித்திருக்கலாம். எனது ஞானத்தை செழுமைப்படுத்த இவர்களின் அனுபவம் தேவை. தற்போது நான் கீழ்வரும் “முது மொழியைப்” பின்பற்றுகிறேன்:

பள்ளியில் வளர்ப்புப் பணியைத் திட்டமிட்டு நிறைவேற்றுவதில் எந்த அளவிற்குக் குடும்பம் ஈடுபாடு கொள்கிறதோ அந்த அளவிற்குத்தான் பள்ளி, குடும்ப வளர்ப்பின் முழுமையும், குடும்ப வளர்ப்பின் போக்கையும் நிர்ணயிப்பதில் பள்ளியின் முக்கியப் பாத்திரமும் பொறுத்துள்ளன.

பெற்றோர்களுக்காக ஒரு சில வெளிப்படையான பாடங்களை நடத்தி, பின் இவற்றைப் பற்றி இவர்களுடன் சேர்ந்து விவாதிக்கலாமா? குழந்தைகளுக்குப் பாடம் நடக்கும் போது இப்பாடங்களுக்கு பெற்றோர்கள் வர அனுமதிக்கலாமா? அனுமதிக்கலாம். அது மட்டுமல்ல, இதைச் செய்ய வேண்டியது அவசியமும் கூட. சக ஆசிரியர்களை மட்டுமல்ல, குறிப்பாக பெற்றோர்களை இப்பாடங்களுக்கு அழைக்க வேண்டும். கல்வி சொல்லிக் கொடுப்பதும் குழந்தை வளர்ப்பும் எவ்வளவு கடினமானது, சிக்கலானது என்று அவர்கள் உணரட்டும். இது அவசியமாகும். ஆறு வயதுக் குழந்தைகளின் பெற்றோர்கள் எப்படிப்பட்டவர்கள்? இவர்கள் தாம் பள்ளியில் மிகவும் இளைய பெற்றோர்கள், இவர்களுக்குக் குழந்தை வளர்ப்பு அனுபவம் மிகக் குறைவே.

ஆனால் வியப்பு என்னவெனில், குழந்தை வளர்ப்பும் கல்வி போதிப்பதும் இவர்களுக்கு எளிய காரியமாகப்படுகின்றன. ஏன் இப்படித் தெரிகிறது? மாபெரும் ருஷ்ய ஆசிரியர் கான்ஸ் தன்தீன் திமீத்ரியெவிச் உஷின்ஸ்கி இதில் நமக்கு உதவுகிறார். குழந்தை வளர்ப்புக் கலைக்கு ஒரு சிறப்பு அம்சம் உண்டு என்றார் இவர். அதாவது கிட்டத்தட்ட அனைவருக்கும் இது தெரிந்த, புரிந்த விஷயமாக, ஒரு சிலருக்கு எளிய காரியமாகக் கூடத் தோன்றும். அவர்கள் தத்துவரீதியாகவும் நடைமுறையிலும் எவ்வளவுக்கெவ்வளவு இதைப் பற்றிக் குறைவாக அறிந்திருக்கின்றார்களோ அவ்வளவுக்கவ்வளவு இது புரியக் கூடியதாயும் எளிதானதாயும் தோன்றும்.

இது தவறு என்று என் வகுப்புச் சிறுவர் சிறுமியரின் பெற்றோர்களுக்கு எப்படி உணர்த்துவது? நான் இவர்களை வகுப்புகளுக்கு அழைக்கப் போகிறேன்: “வாருங்கள், பாருங்கள், பின்னர் கலந்து பேசுவோம்”. அவர்களுக்கு எப்போது ஓய்வு கிடைக்குமோ அப்போது வகுப்பில் வந்து அமர நான் அனுமதி தருவேன். குழந்தைகளின் பாலான மனிதாபிமான அணுகுமுறைக் கோட்பாடுகளை நான் எப்படி நிறைவேற்றுகிறேன், எப்படிப்பட்ட முறைகளையும் வழிகளையும் பின்பற்றுகிறேன், ஒவ்வொரு குழந்தையுடனும் நான் எப்படிக் கலந்து பழகுகிறேன் என்று அவர்கள் பார்க்கட்டும். முக்கியமானது என்னவெனில், தங்கள் குழந்தை எப்படிப் படிக்கிறான், சமவயதுக் குழந்தைகளுடன் வகுப்பில் எப்படி இருக்கிறான் என்று அறிந்து கொள்ளட்டும்.

அப்போது தான் தம் குழந்தையின் வளர்ச்சி பற்றிய உண்மையான கருத்து பெற்றோர்களுக்கு உருவாகும், ஆசிரியரின் மீது நம்பிக்கை வரும். சில சமயங்களில் என்ன நடக்கிறது தெரியுமா? அந்த “அதிகாரத் தொனியுள்ள” தாய் என்னை ஒவ்வொரு நாளும் சந்தித்து தன் மகனுக்காக விசேஷ சலுகைகளைக் கோருகிறாள்: “ஏன் அவனை இரண்டாவது பெஞ்சில் உட்கார வைத்தீர்கள்? ஏன் நீங்கள் அவனிடம் அடிக்கடி கேள்வி கேட்பதில்லை? ஏன் அவனிடம் நீங்கள் அன்பாக நடந்து கொள்வதில்லை? ஏன்?…” உண்மையிலேயே நான் அக்குழந்தையிடம் பாரபட்சமாக நடந்து கொள்கிறேனா என்ற சந்தேகம் தோன்றுகிறது. விஷயத்தை வேறு விதமாக எடுத்துச் சொல்லவே பயப்படுகிறேன். ஒவ்வொரு தாய், தந்தை, பாட்டி, தாத்தாவின் நம்பிக்கையும் எனக்கு மிக மிக அவசியம். சின்ன விஷயங்களுக்காக மிக முக்கியமானவற்றிலிருந்து கவனத்தை திசை திருப்பாமலிருக்கவும் ஏதோ ஒவ்வொரு குழந்தைக்கும் என்னாலியன்ற அனைத்தையும் தராமல் இருக்கிறேனோ என்று என்னை நானே வருத்திக்கொள்ளாமல் இருக்கவும் இந்த நம்பிக்கை எனக்கு உதவும்.

வளர்ப்புப் பணி ஒரு சமுதாயப் பணியாகும். இதை ஒளிவு மறைவின்றிச் செய்ய வேண்டும். நான் மருத்துவரோ, பொறியியலரோ, பிட்டரோ, திராட்சை பயிரிடும் விவசாயியோ அல்ல. நான் ஆசிரியன், குழந்தைகளை வளர்ப்பவன். எனது துறை மிகச் சிக்கலானது, மிகவும் பொறுப்புள்ளது. ஆசிரியனும் குழந்தை வளர்ப்பாளனுமாகிய நான் எல்லோருக்கும் அவசியமானவன். குழந்தையின் முதல் ஆசிரியனாகிய என்னோடு கலந்து பேசாமல், எனது வகுப்புகளில் இல்லாமல் வேறு எங்கு இந்த இளம் பெற்றோர்கள், தமது முதல் குழந்தைகளை நவீன முறையில் வளர்ப்பதன் அடிப்படைகளைக் கற்றுக் கொள்ள முடியும்?

படிக்க:
“ காஷ்மீரை சிறைச்சாலையாக மாற்றுவதை நிறுத்துங்கள் ” : செயல்பாட்டாளர்கள் போராட்டம் !
தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது !

என் வகுப்புக் குழந்தைகளின் பெற்றோர்களை நோக்கி “என் வகுப்புகளுக்கு தயவு செய்து வந்து பாருங்கள்” என்று அழைப்பு விடுக்கும்போது, இவர்களின் முன், சமுதாயத்தின் முன், எனது அர்ப்பணிப்பையும் ஆசிரியர் திறமையையும் காட்டுவதாக உறுதி ஏற்கிறேன்.

எனது வகுப்புகளுக்கு வரும் பெற்றோர்களுடன் நான் எளிதாக ஒரு பொது மொழியைக் கண்டுபிடிக்க முடியும், குழந்தைகள் வளர்ப்பு பற்றிய கருத்தொருமித்த திட்டத்தைத் தீட்ட முடியும் என்று அனுபவம் காட்டுகிறது.

நான் இன்னமும் ஒரு படி முன் செல்லத் தீர்மானித்தேன் – தம் குழந்தைகளைப் பள்ளியில் வளர்க்க வருமாறு பெற்றோர்களுக்கு அழைப்பு விடுத்தேன்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

போலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம் !

புதிய தாராளவாத நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களாயினும் சரி, இந்துத்துவ எதிர்ப்புப் போராட்டங்களாயினும் சரி, இவற்றில் தமிழகம் கடந்த பல ஆண்டுகளாகவே முன்னிலையில் இருந்து வருகிறது. ஜல்லிக்கட்டு எழுச்சியில் தொடங்கி, சென்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் படுதோல்வி வரை இந்தப் போராட்டங்களின் தாக்கத்தை நாம் கண்டோம்.

இந்தப் போராட்டங்கள் எல்லாம் தேர்தல் அரசியலுக்கு வெளியில் இருக்கின்ற அமைப்புகளால்தான் தூண்டப்படுகின்றன என்றும் மோடியைப் பற்றிய ஒரு எதிர்மறையான பிம்பத்தைத் தமிழக மக்கள் மத்தியில் உருவாக்கியவர்கள் இத்தகைய அமைப்புகள்தான் என்றும் பா.ஜ.க. வினர் பலரும் பலமுறை கூறிவிட்டனர்.

தமிழகத்தின் எதிர்ப்பினை நசுக்குவது எப்படி என்பது பாரதிய ஜனதா கட்சியின் கவலை மட்டுமல்ல, மொத்த ஆளும் வர்க்கம் மற்றும் அதிகார வர்க்கத்தின் கவலையும் கூட. எனவேதான், தமிழக அரசின் நிர்வாகம் முற்றுமுழுதாக போலீசிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

தமது வாழ்வாதாரங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் மக்கள், தமிழகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள போலீசு ஆட்சியின் கொடூரத்தை அன்றாடம் அனுபவித்து வருகிறார்கள். டெல்டா மாவட்டக் கிராமங்களில் நூற்றுக்கணக்கான போலீசார் எதிரி நாட்டின் மீது படையெடுப்பதைப் போல நுழைகின்றனர். மக்களை நெருங்கவிடாமல் விரட்டியடித்து விட்டு, விளைநிலங்களில் எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்படுகின்றன. பச்சைப் பயிர்களை அழித்து கெயில் குழாய்கள் பதிக்கப்படுகின்றன. இந்த போலீசு நடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள் அனைவரும் சட்டம் – ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் என்றும் தேசவிரோதிகள் என்றும் சித்தரிக்கப்படுகின்றனர். தூத்துக்குடி போராட்டத்திற்குப் பிறகு இந்த ஒடுக்குமுறை தீவிரமடைந்திருக்கிறது.

தூத்துக்குடி படுகொலையை நினைவுபடுத்தாதே!

தூத்துக்குடி தியாகிகளுக்கான முதலாண்டு நினைவேந்தல் கூட்டத்தை நடத்துவதற்கு மக்கள் அதிகாரம் அமைப்பை எந்த ஊரிலும் போலீசார் அனுமதிக்கவில்லை. “தூத்துக்குடி சம்பவத்தை நினைவுபடுத்தி, பொதுமக்கள் அந்தச் சம்பவத்திற்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை நடத்துவதற்குத் தூண்டக்கூடிய வகையில் தாங்கள் நடத்தும் கூட்டம் அமைய உள்ளதாகச் சந்தேகம் எழுகிறது. எனவே, அனுமதி மறுக்கப்படுகிறது.” என்று கூறி, திருவாரூரில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவஞ்சலி அரங்கக் கூட்டத்தை போலீசார் தடை செய்தனர்.

தூத்துக்குடி தியாகிகளின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்துபோன தியாகிகளின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டத்திற்கு போலீசு விதித்திருந்த தடையை மீறி மக்கள் அதிகாரம் சென்னையில் நடத்திய நினைவேந்தல். (கோப்புப் படம்)

தூத்துக்குடியில் அரங்கக் கூட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட பாத்திமா பாபு மற்றும் பிற அமைப்பினருக்கு விசித்திரமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. கூட்டத்தில் 250 பார்வையாளர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது என்றும், பார்வையாளர்களின் அடையாள அட்டையைச் சோதித்த பின்னரே காவல்துறையினர் அவர்களை உள்ளே விடுவார்கள் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்ட நிபந்தனைகளை உயர் நீதிமன்றமும் அங்கீகரித்தது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற டெல்டா மாவட்டங்களில் உள்ள கிராமசபைக் கூட்டங்கள் முயன்றபோது, அத்தகைய கிராமசபைக் கூட்டங்களை நடத்த விடாமல், போலீசு துணையுடன் வருவாய்த்துறை அதிகாரிகள் காலவரையின்றி ஒத்தி வைத்துவிட்டனர்.

மக்கள் அதிகாரம் சார்பில் வேதாரணியத்தில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புப் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருப்பது மட்டுமல்ல, அந்த வட்டாரம் முழுவதும் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களையும் போலீசே அழித்துள்ளது. சமீபத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் கும்பகோணத்தில் நடத்தவிருந்த ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு மாநாட்டுக்கும் இறுதி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

கூடங்குளத்தில் அணுக்கழிவை பராமரிப்பது தொடர்பாக மக்கள் கருத்தறியும் கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துவிட்டு, அரசின் முயற்சிக்கு எதிராகக் கருத்துருவாக்கம் செய்வார் என்ற காரணத்துக்காக முன்கூட்டியே
சுப. உதயகுமாரனைத் தடுப்புக்காவலில் கைது செய்வதற்கான சட்ட விரோதமான முயற்சியில் காவல்துறை வெளிப்படையாகவே ஈடுபட்டது.

படிக்க:
தமிழகத்தை நாசமாக்காதே ! சென்னையில் மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்
♦ காஷ்மீர் : பயங்கரவாதத்தையும் போர் சூழலையும் வளர்க்கும் இந்தியா !

குறிவைக்கப்படும் தமிழகம் !

வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் திணிக்கப்படும் பேரழிவுத் திட்டங்களை எதிர்த்து மக்கள் போராடும் இடங்களிலெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற போதிலும், இவ்விசயத்தில் தமிழகம் தனிச் சிறப்பாகக் குறி வைக்கப்படுகிறது.

கோலாரின் கைவிடப்பட்ட சுரங்கத்தில் அணுக்கழிவை வைக்கலாம் என முடிவு செய்தபோது, அம்மாநிலத்தின் காங்கிரஸ் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தி, அந்தத் திட்டத்தை ரத்து செய்ய வைத்தனர். ஆனால், இங்கோ இத்திட்டத்திற்கு எதிராகக் கருத்து கூறுவதே தேசத்துரோக குற்றமாகச் சித்தரித்து முடக்கப்படுகிறது.

மும்பை நகரங்களுக்கு இடையிலான புல்லட் ரயில் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை அம்மாநில விவசாயிகள் எதிர்ப்பதால், அத்திட்டம் ஓராண்டாகத் தடைபட்டு நிற்கிறது. இங்கே ஹைட்ரோ கார்பன், கெயில் திட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் சிறிய அளவு எதிர்ப்புக்கூட கொடூரமான முறையில் நசுக்கப்படுகிறது.

tamil nadu under police state
கருத்துரிமையை நசுக்கும் போலீசு ராஜ்ஜியத்தைக் கண்டித்து மக்கள் அதிகாரம் ஜூலை 17 அன்று நடத்திய தமிழகச் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம்.

போராடும் அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் போன்றோர் பொதுக்கூட்டம், அரங்குக் கூட்டம், ஆர்ப்பாட்டம் முதலான எந்த வடிவத்திலும் தமது கருத்தைப் பிரச்சாரம் செய்வதற்கான உரிமை மறுக்கப்படுகிறது. உரிமை மறுக்கப்பட்ட நிலையே இயல்பான நிலையாக மாற்றப்பட்டு வருகிறது.

இவ்வாறு மறுப்பதற்கான காரணங்கள் சட்டத்துக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும் என்று போலீசார் கடுகளவும் கவலைப்படுவதில்லை.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வந்தபோது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, பெரியார் சிலை உடைப்பு ஆகிய சம்பவங்கள் நிகழ்ந்தன. அவற்றைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மக்கள் அதிகாரம் சார்பில் அனுமதி கேட்டபோது, தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்று எழுத்துப் பூர்வமாக காவல்துறை பதிலளித்தது. அதேபோல, தேர்தலின்போது நடைபெற்ற பொன்பரப்பி சாதிவெறித் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் தேர்தல் நடத்தை விதி என்ற பொய்க் காரணம் சொல்லியே அனுமதி மறுக்கப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் கருத்து வெளியிடலாமா? கூடாதா?, என்னவிதமான கருத்தை வெளியிடலாம் என்று பரிசீலித்து, அதன் அடிப்படையில் அனுமதி மறுப்பதாக எழுதிக் கொடுப்பது சட்டவிரோதமானதாயிற்றே என்றுகூட யோசிக்க முடியாத அளவுக்குச் சட்டவிரோதமான அனைத்தும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு இயல்பானவையாகவும் சட்டபூர்வமானவையாகவும் மாறிவிட்டன.

அரசையும் இந்து அமைப்புகளையும் எதிர்த்தால் அனுமதி இல்லை என்கிறது போலீசு!

வேறு பல அனுமதி மறுப்புக் கடிதங்கள், குறிப்பிட்ட அமைப்புகளுக்கு அனுமதி இல்லை என்ற முன்முடிவோடு போலீசு அணுகுவதை வெளிப்படையாகவே தெரிவிக்கின்றன.

மக்கள் அதிகாரம், திருச்சி கிளை, கஜா புயல் பாதித்த நான்கு மாவட்டங்களைத் தேசியப் பேரிடர் பாதிப்பு பகுதிகளாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியதை நிராகரித்து, காவல் உதவி ஆணையர் அளித்திருக்கும் பதில் இது : “தங்கள் அமைப்பின் செயல்பாடானது நேரடியாக அரசாங்கத்தை எதிர்ப்பதாகவும், அரசாங்கம் பொதுமக்களுக்காக செயல்படுத்தும் அனைத்து நல்ல திட்டங்களையும் செயல்படுத்த விடாமல் தடுக்கவும் சீர்குலைக்கவும் எடுக்கும் முயற்சியாகவும், மக்களிடம் தவறான கருத்துகளை பரப்புகின்ற செயல்பாடாகவும் தெரிகிறது. எனவே, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது.”

பள்ளி, கல்லூரி மாணவர்களை ஓ.என்.ஜி.சி. பணிகளுக்கு எதிராகத் தூண்டி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக தெரிவதால், பெட்ரோலிய மண்டலம் அமைப்பதற்கு எதிரான கூட்டத்துக்கு நன்னிலத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது.

கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில்! மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கிப் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி மறுத்த கோவை மாநகர காவல்துறை, குறிப்பிட்ட கட்சியையும் இந்து அமைப்புகளையும் நேரடியாகத் தாக்கிப் பேசக்கூடும் என்பதாலும், அரசுக்கு எதிராகவும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் இந்து மக்களுக்கு எதிராகவும் தரக்குறைவாகப் பேசக்கூடாது என்பதாலும் அனுமதி மறுப்பதாக கூறுகிறது.

மக்களவைத் தேர்தலின் போது பா.ஜ.க. அ.தி.மு.க. அணிக்கு எதிராகத் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்குப் புரட்சிகர இளைஞர் முன்னணியினருக்குப் பலமுறை அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

போராடுவோரை அச்சுறுத்தும் பொய்வழக்கு எனும் ஆயுதம்!

யாரை ஒடுக்க வேண்டும் என்று அரசு முடிவெடுத்திருக்கிறதோ, அவர்கள் மீது ஒவ்வொரு பொதுக்கூட்டம் அல்லது ஆர்ப்பாட்டத்தின் போதும் போலீசார் பொய் வழக்குகளைப் பதிவு செய்து வைத்துக் கொள்கின்றனர். எந்த வழக்கும் விசாரிக்கப்பட்டு, அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்படவில்லை என்ற போதிலும், இந்தப் பொய் வழக்குகளையே காரணம் காட்டி, எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி மறுப்பதை ஒரு உத்தியாகத் திட்டமிட்டே கையாள்கின்றனர்.

தமிழக போலீசால் போடப்பட்டுள்ள பல்வேறு பொய்வழக்குகளைச் சந்தித்துவரும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன், அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், பச்சைத் தமிழகம் மாநிலத் தலைவர் சுப.உதயகுமார்.

சென்ற ஆண்டு காவிரி பிரச்சினை உச்சத்தில் இருந்தபோது அது தொடர்பாகப் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டபோது, தங்கள் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாலும் தங்கள் அமைப்பினர் மீது பல்வேறு மாவட்டங்களில் பல வழக்குகள் உள்ளதாலும் அனுமதி மறுக்கப்படுகிறது என்று மக்கள் அதிகாரத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்குப் பதிலளித்தது திருச்சி மாநகர காவல்துறை.

யார் மீதும் என்னவிதமான பொய்வழக்கையும் போலீசார் பதிவு செய்து கொள்ள முடியும் என்பதால், யாரையெல்லாம் முடக்கவேண்டும் என்று அரசு கருதுகிறதோ, அவர்கள் மீதெல்லாம் அடுக்கடுக்காகப் பொய் வழக்குகளைப் பதிவு செய்கிறது போலீசு.

டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு மீது டாஸ்மாக் ஊழியரைக் கடப்பாரையால் அடித்துக் கொல்ல முயன்றதாகப் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன் மீது குறைந்தபட்சம் 27 பொய் வழக்குகள் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, துண்டறிக்கை விநியோகிப்பது போன்ற சாதாரணமான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும் தோழர்கள் மீது பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்தினார்கள், பேருந்துகளைக் கல்வீசித் தாக்கினார்கள், போலீசைப் பணி செய்ய விடாமல் தடுத்தார்கள், பொதுமக்களை மிரட்டிப் பணம் பறித்தார்கள் என்று பலவிதமான பொய்வழக்குகள் பதிவு செய்து வைத்துக் கொள்ளப்படுகின்றன.

திருச்சி நகரில் 8 வழிச் சாலைக்கு எதிராக ஒட்டப்பட்ட ஒரு சுவரொட்டிக்காக, நகரின் வெவ்வேறு காவல் நிலையங்களில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கரூரில் அலுவலகத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மக்கள் அதிகாரம் தோழர்களின் மீது அலுவலகத்தில் சட்டவிரோதமாகக் கூடி அரசுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசிக்கொண்டிருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

படிக்க:
மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ! செய்தி – படங்கள் – காணொளி
♦ வியட்நாம் டைரீஸ் : போராளிகளின் தேசம் ! பயண அனுபவக் கட்டுரை

கோத்தகிரி நகரில் செவிலியர் போராட்டத்தை ஆதரித்தும், பொதுக் கழிவறை கட்டித்தர மறுக்கும் நகராட்சி நிர்வாகத்தை விமர்சித்தும், போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்தும், ஈஷா மையத்திற்கு மோடியின் வருகையை கண்டித்தும், பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்தும் மக்கள் அதிகாரம் சார்பில் ஒட்டப்பட்ட ஒவ்வொரு சுவரொட்டிக்கும் அமைப்பாளர் ஆனந்தராஜ் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகள் அனைத்திலும் நாட்டு மக்களை ஜனநாயகப் பாதையில் இருந்து நக்சல்பாரி பாதையில் கொண்டு செல்லத் தூண்டுகின்ற வகையில் என்ற வாக்கியம் தொடர்பே இல்லாமல் வேண்டுமென்றே செருகப்பட்டிருக்கிறது.

காவிரித் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி அமைதியான முறையில் நெய்வேலியில் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீதும், அதில் பங்கேற்ற முன்னணியாளர்கள் மீதும் ராஜத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர் வேறொரு வழக்குக்காக வேல்முருகன் கைது செய்யப்பட்டுப் பிணையில் வெளிவர இருந்த போது, இந்த ராஜத்துரோக வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார்.

இதே போல திருமுருகன் காந்தி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துப் பேசியதையொட்டி கைது செய்யப்பட்டபோது, பிணையில் வர முடியாமல் அடுத்தடுத்த பொய் வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டார். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராடி வரும் பேராசிரியர் ஜெயராமனும் இவ்வாறு அடுக்கடுக்கான பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டார்.

போராடும் மக்கள் முதல் சமூக ஊடகங்களில் எழுதுபவர்கள் வரை அனைவர் மீதும் சரஞ்சரமாகப் பொய்வழக்குகள் போடப்படுகின்றன. இந்தப் பொய்வழக்குகள் எதையும் போலீசார் நிரூபிக்கப் போவதில்லை. இருந்த போதிலும், வழக்கில் சிக்கிக் கொள்ளும் இளைஞர்கள் வேலைக்குப் போக முடியாது. பிழைப்பைக் கெடுத்து நீதிமன்றத்துக்கு அலைய வைப்பதன் வாயிலாக, ‘சுடுபால் குடித்த பூனையைப் போல’, இனிமேல் எந்தப் பொதுப்பிரச்சினைக்கும் போராடக்கூடாது என்ற மனநிலைக்கு மக்களைத் தள்ளுவதுதான் போலீசின் நோக்கம்.

போலீசு சொல்வதே அரசமைப்புச் சட்டம்!

குடிதண்ணீர் முதல் சாலை வரை எந்தப் பிரச்சினையானாலும் அவற்றை போலீஸ்தான் கையாள்கிறது. போலீஸ்தான் அரசின் ஒரே முகம் என்பது தெளிவாக நிறுவப்பட்டு விட்டது. அரசமைப்பு சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் போன்ற சட்டங்கள் எதற்கும் உட்படாமல், போலீசு அதிகாரிகள் என்ன சொல்கிறார்களோ அதுதான் சட்டம் என்ற நிலைமை நடைமுறையில் வந்துவிட்டது.

tamil nadu under police state
கூடங்குளம் அருகேயுள்ள விஜயாபதி கிராமத்தில் நடந்த கிராமசபைக் கூட்டம். இக்கூட்டத்தில் அணுக்கழிவு மையத்துக்கு எதிராகத் தீர்மானம் இயற்றப் பொதுமக்கள் முயன்றதை அதிகார வர்க்கம் அடாவடித்தனமாகத் தடுத்து நிறுத்தியது.

சமீபத்தில் சென்னையில் நீர்நிலை ஒன்றை ஆய்வு செய்யச் சென்ற அறப்போர் இயக்கத்தினரைத் தடுத்து காவல் நிலையத்தில் வைத்திருக்கின்றனர். இந்தச் சட்டவிரோத நடவடிக்கைக்குச் சமூக ஊடகங்களில் பரவலாக கண்டனம் எழுந்த காரணத்தினால் வேறு வழியின்றி விடுவித்திருக்கின்றனர்.

துண்டறிக்கை விநியோகிப்பதென்பது ஒரு கருத்துரிமை. இப்போதெல்லாம் துண்டறிக்கை விநியோகித்தால் அனுமதி வாங்கினீர்களா? என்று கேட்டு போலீசார் கைது செய்கின்றனர். அப்படி எந்தச் சட்டமும் கிடையாது என்று வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினால், மேலிடத்து உத்தரவு என்று சமாளிக்கின்றனர். பிறகு தேசத்துரோகம், பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தல் என்று ஏதேனும் ஒரு பொய்வழக்கைப் போட்டு சிறைக்கு அனுப்புகின்றனர்.

போலீசார் யார் மீது என்ன பொய்வழக்கு வேண்டுமானாலும் போடலாம், எந்தக் கூட்டத்தை வேண்டுமானாலும் தடை செய்யலாம் என்பதுதான் இப்போதைய நிலை. அந்த அளவுக்கு சட்டவிரோதம் என்பதே சட்டமாகி விட்டது. பொதுநலனுக்காகப் பேசுவோரையும் போராடுவோரையும் கிரிமினல் குற்றவாளிகளாக நடத்துகிறது எடப்பாடி அரசு.

போலீசின் இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நீதிமன்றங்களில் முறையிட்டு நிவாரணம் பெறுவது இயலாத காரியம் என்பதைப் பலரும் அனுபவத்தில் உணர்ந்து வருகின்றனர். அரசமைப்பின் எல்லா உறுப்புகளும் அரசமைப்புச் சட்டம் கூறுகின்ற அடிப்படை உரிமைகளுக்கு எதிராகச் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்கள் எதையும் பாசிஸ்டுகள் மதிப்பதில்லை என்ற போதிலும், அவர்களைப் பாதுகாக்கும் திசையிலேயே இந்நிறுவனங்கள் இயங்குகின்றன.

மக்கள் தம் வாழ்வாதாரங்களையும் வாழ்வுரிமையையும் பாதுகாத்துக் கொள்ளவேண்டுமானால், தடைகளை மீறி நமது கருத்துரிமையை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும். கருத்துச் சுதந்திரத்தையும் போராடும் உரிமையையும் பாதுகாத்துக் கொள்ளவில்லை என்றால், எந்த ஒரு வாழ்வுரிமைப் பிரச்சினைக்காகவும் நாம் பேசவே முடியாத சூழ்நிலை நிரந்தரமாகிவிடும். இதனை முறியடிப்பதுதான் போராடும் மக்கள் மற்றும் இயக்கங்கள் அனைவரின் முதல் பணியாக இருக்க வேண்டும்.

– சூரியன்

– புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

காஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்

பிரிவு 370 நீக்கம் : காஷ்மீர் ஆக்கிரமிப்பு !

இந்திய தேசியத்தின் நிர்வாணத்தில் மலரும் இந்து ராஷ்டிரம் ! இந்து ராஷ்டிர நிர்மானத்தில் மலரும் கார்ப்பரேட்டிசம் !

memes-kashmir2

கருத்துப்படம் : வேலன்

அல்சர் மற்றும் கேஸ் பிரச்சினை என்றால் என்ன ? | மருத்துவர் BRJ கண்ணன்

ணக்கம், நான் இப்போது உங்களுக்கு ஒரு சவால் விடப் போகிறேன். நீங்கள் உங்கள் சுற்றத்தார் அல்லது உறவினர் யாருடனேனும், இரண்டு நிமிடங்கள் பேசுங்கள் அதில் ஆங்கில வார்த்தையே வரக்கூடாது. நிச்சயமாக அவர்களால் அப்படி ஆங்கில வார்த்தையே கலக்காமல் பேச முடியாது. “நான் தமிழ் பற்றுள்ளவன் தமிழன்” என வெளியில் கூறிக் கொள்கிறோமே ஒழிய, நாம் தமிழை சரியாக பேசுவதேயில்லை.  என்னடா, அறிவியல் ஆரோக்கியம் நிகழ்ச்சியில் இப்படி தமிழைப் பற்றிப் பேசுகிறாரே என எண்ணுகிறீர்களா?

அல்சர் மற்றும் கேஸ் ஆகிய வார்த்தைகளை கேள்விப்பட்டிருக்கிறீர்களா, இது இரண்டும் ஆங்கில சொற்கள். இந்த இரண்டு சொற்களும் பலபேர் வாழ்க்கையில் அதீதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதைப் பற்றிய ஒரு காணொளிதான் இது.

நான்கு நாட்களுக்கு முன்பு, ரத்தக் கொதிப்பால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி என்னிடம் சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு மருந்து மாத்திரைகள் எழுதிக் கொண்டிருக்கும்போது, சார் எனக்கு அதிகம் மருந்துகள் கொடுக்காதீர்கள். எனக்கு வயிற்றுப் புண் அதாவது அல்சர் உள்ளது எனக் கூறினார்.

நான் அவரை நோக்கி அப்படியா? உங்களுக்கு என்ன செய்கிறது எனக் கேட்டேன், அதற்கு அவர் எனக்கு ஒரு மாதிரி எரிச்சலாக இருக்கும் எனக் கூறினார். அப்படியென்றால், நீங்கள் ‘எனக்கு எரிச்சலாக இருக்கிறது’ என்றுதானே கூற வேண்டும். ஏன், அல்சர் என கூறுகிறீர்கள் என வினவினேன். அதற்கு அவர் ‘எரிச்சலாகவும், அடிக்கடி ஏப்பம் வருவது போலவும் இருந்தால் அது அல்சராக இருக்கலாம்’ என, எனது மருத்துவர் கூறியுள்ளார் என்றார்.

உங்களது மருத்துவர், அது அல்சர் ஆக இருக்கலாம் என்றுதானே கூறி உள்ளார். அல்சர்தான் என நீங்கள் எப்படி உறுதியாக கூறினீர்கள், என நான் மறுபடியும் அவரைக் கேட்டேன்.

உங்களுக்கு உங்களது வாய் வழியாக டியூபை செலுத்தி பரிசோதிக்கப்படும் எண்டோஸ்கோப்பி பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா என கேட்டேன்.

அதற்கு அவர் இல்லை எனக் கூறினார்.

அப்படி பரிசோதித்துப் பார்த்தால்தான் உண்மையில் அல்சர் உள்ளதா, இல்லையா என தெரிய வரும். பரிசோதிக்காமலேயே எப்படி உங்களுக்கு அல்சர் என்று நீங்கள் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள், எனக் கேள்வி எழுப்பிய பின்னர்தான் அவர் தெளிவடைந்தார்.

உண்மையில் எனக்கு கேஸ் பிரச்சினை உள்ளது, அல்சர் பிரச்சினை உள்ளது, வயிற்று வலி உள்ளது என பல பேர் கூறிக்கொண்டு இருக்கிறார்கள் அல்லவா. அவர்களை எண்டோஸ்கோபி செய்து பார்த்தால் உண்மையில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் தென்படாது. அவர்களது வயிற்றில் சுரக்கும் அமிலமும் இயல்பாகத்தான் இருக்கும், அவர்களுக்கு அல்சர் பிரச்சினையும் இருக்காது. இதன் பொருள் இல்லாத ஒரு நோய் தனக்கு இருப்பதாக பலபேர் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.

பலபேர் தனக்கு அல்சர் இருப்பதை பெருமையாகவும், பரம்பரை சொத்து போலவும் வெளியில் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இது உண்மை கிடையாது, இப்படி ஒரு நோயும் கிடையாது. இதை நாங்கள் ஆங்கிலத்தில் functional dyspepsia எனக் கூறுவோம். இதன் பொருள் வயிற்றில் ஏப்பம் வருவது போலவும், வயிறு வலிப்பது போலவும் நமக்குத் தென்படும். இது ஒரு விதமான மன நோய். நமக்கு இந்த பிரச்சினை இருக்கிறது, என நாம் திரும்பத் திரும்ப எண்ணுவதாலேயே, இந்த பிரச்சினை நமக்கு நீடிக்கிறது. இந்த அசிடிட்டி பிரச்சினை மனநோய் என்பதை நாம் உணர்ந்து கொண்டோமேயானால், நாம் மாத்திரைகள் சாப்பிடாமலேயே இருக்கலாம்.

உண்மையிலேயே ஒருவருக்கு அல்சர் இருக்கிறது, அவருக்கு எத்தனை நாட்கள் மருத்துவம் தேவைப்படும் என்றால்? குறைந்தது நான்கு வாரம், அதிகபட்சம் ஒரு ஐந்து, ஆறு வாரங்கள் தேவைப்படும். அல்சர் என்பதன் பொருள் குடல்புண் அல்லவா? ஒருவருக்கு கை அல்லது கால்களில் புண் ஏற்படுகிறது என்றால், அது எத்தனை நாட்களில் சரியாகும்? குறைந்தது ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் அதிகபட்சம் ஒரு மாதம். ஆனால், எப்படியும் அது சரியாகிவிடும்தானே. ஐந்து வருடமாக இந்த புண் இருக்கிறது என யாரேனும் கூறி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கிடையாதல்லவா.

படிக்க :
♦ உடலுக்கும் மனதுக்கும் ஒரு நாள் பட்டினி நல்லது ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
♦ நூல் அறிமுகம் : இராமாயணக் குறிப்புகள் | தந்தை பெரியார்

அதே போல்தான் நம் குடலிலும் புண்ணானது ஏற்பட்டால், அது சரியாகித்தான் தீரும் என்பதே இயற்கையின் விதி, குணமாகாத புண் என ஒன்று கிடையாது. உங்களில் பலபேர் பல வருடங்களாக, அசிடிட்டி மாத்திரை எடுத்துக்கொண்டுதான் வருகிறீர்கள் அல்லவா? ஏன் அவ்வாறு செய்கிறீர்கள்? அசிடிட்டி அல்லது அல்சர் என்பது பிறவி நோயா? இல்லை அல்லவா. போன வருடம் எனக்கு அல்சர் இருந்தது. இரண்டு மாதங்கள் மாத்திரைகள் எடுத்துக் கொண்டேன். குணமாகி விட்டது என்றால், அது சரியான வாதம்.

இதற்கு மாறாக அதை பிறவிநோய் போல் எண்ணுவது தவறு. ஒருவருக்கு அல்சர் என்றால் அதற்கான மருத்துவம் சிலருக்கு ஒருவாரம் தேவைப்படும், இன்னும் சிலருக்கு இரண்டு வாரங்கள் அதிகபட்சம் நான்கு மாதங்களைத் தாண்டி தேவைப்படாது.

ஆனால், உங்களில் பலபேர் பல வருடங்களாக இந்த மாத்திரைகளை உட்கொண்டு வருகிறீர்கள் அல்லவா? இது ஒரு மன நோயாக மாறி, நீங்கள் அதைப் பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறீர்கள். அப்படி என்றால் அல்சர், அதிகப்படியான பொதுவான நோய் கிடையாதா எனக் கேட்டால் கிடையாது.

நான் ஒரு இருதய நோய் மருத்துவர். எனது நோயாளிகளுக்கு நான் தேவையான மருந்து, மாத்திரைகளை எழுதுவேன். ஆனால், பல மருத்துவர்கள் மருந்து மாத்திரைகள் எழுதும்போது, இந்த அசிடிட்டி மாத்திரையும் சேர்த்து எழுதுகிறார்கள். அது தவறு, இது தேவையான ஒன்றே கிடையாது. மிகவும் குறைவான நபர்களுக்குதான், இந்த மாத்திரைகள் உண்டால் அசிடிட்டி ஏற்படும். என்னுடைய நோயாளிகளின்  மருந்து சீட்டுகளை வாங்கி பார்த்தீர்களென்றால், பல பேருடைய சீட்டுகளில் இந்த ஆசிடிட்டி மாத்திரைகள் இருக்காது. அப்படியும் சில பேர் அசிடிட்டி பிரச்சினை ஏற்பட்டு வந்தார்கள் என்றால்.? அவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு மாத்திரைகள் எழுதித் தருவேன். அது ஏற்படாமலிருக்க மாத்திரைகளை நான் ஒருபோதும் நிரந்தரமாக பரிந்துரைக்க மாட்டேன்.

சரி இந்த மாத்திரைகள் சாப்பிடுவது தேவையற்றது என்றாலும், அதை நான் உட்கொண்டு கொள்கிறேன். இதனால் என்ன பாதிப்பு வந்துவிடப் போகிறது என நீங்கள் கேட்டீர்கள் என்றால், அது தவறு.

இந்த மாத்திரைகளினால் பாதிப்பு உண்டா? என்றால் உண்டு. நம் உடலில் தாதுப்பொருட்களையும், வைட்டமின்களையும் உள்ளிழுக்கும் தன்மையை இந்த அசிடிட்டி மாத்திரைகள் குறைக்கிறது. இதனால் பல பேருக்கு எலும்பு முறிவுகள் ஏற்படுகிறது. வயது முதிர்ந்தவர்கள் பல பேருக்கு எலும்பு முறிவு ஏற்படுவதற்கு காரணம், அவர்கள் பல வருடங்களாக இந்த அசிடிட்டி மாத்திரைகளை தொடர்ந்து உட்கொண்டதுதான். அடுத்ததாக இந்த மாத்திரைகள் உட்கொள்வதால் பல பேருக்கு நெஞ்சில் சளி பிடிக்கிறது. நிமோனியா என நாம் கூறுவோம். இன்னும் பெரிய தீங்கு என்னவென்றால் இதனால் நமது கிட்னியும் பாதிப்படைகிறது, உப்புச் சத்தை அதிகமாக ஏற்படுத்தி, நமது கிட்னி பாதிப்படையச் செய்கிறது.

இப்படி பிரச்சினைகள் இருக்கும்போது, இதை நாம் தொடர்ந்து சாப்பிடுவது என்பது நல்ல வழிமுறை கிடையாது. தேவைப்பட்டால் உட்கொள்ள வேண்டும். குணமடைந்தவுடன் குறிப்பிட்ட காலவரைக்குள், அதை நாம் நிறுத்தவும் வேண்டும். ஆனால், பலபேர் மனரீதியாக இந்த மாத்திரையை நிறுத்தினால், எனக்கு அசிடிட்டி ஏற்படும் என நம்புகிறீர்கள். இப்படி நம்புவது மனநோய் என்பதைத்தான் நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறேன். சரி இது அல்சர் இல்லை, அசிடிட்டி இல்லை எனில், படுத்தால் அடிக்கடி ஏப்பம் வருவதும், நெஞ்சு எரிச்சலாக இருப்பதும் எதனால் ?

அதற்கான விடையை இப்போது பார்ப்போம். உணவுக்குழாய் வழியாக செல்கிறோம் உணவு இரைப்பையில் தங்கி சிறிது சிறிதாக  குடலுக்குள் தள்ளப்படும். இரைப்பையில் தான் அமிலம் இருக்கிறது, சுரக்கிறது இரைப்பையில் அமிலம் இருக்கிறது என்பது உண்மை. எனக்கு அமிலம் அதிகமாக சுரக்கிறது என்பது உண்மை கிடையாது. மிகவும் குறைவான எண்ணிக்கை கொண்டோர்க்கு தான் இவ்வாறு சுரக்கும். உணவானது உணவுக் குழாய் வழியாக, இரைப்பையை நோக்கித்தான் வரும் ஆனால் கீழிருந்து மேல் ஏறாது. உணவுக் குழாய்க்கும், இரைப்பைக்கும் நடுவில் வால்வு போன்ற ஒரு செயல்பாடு இருக்கும். நாம் தலைகீழாக நின்றாலும், உணவானது இரைப்பையிலிருந்து மேல் சென்று மீண்டும் இரைப்பைக்கு வந்து தங்கிவிடும்.

நான் மேலே குறிப்பிட்ட அந்த வால்வு செயல்பாடு சரியாக இல்லை என்றால். இரைப்பையில் சுரக்கும் அமிலம் ஆனது, உணவுக் குழாய்க்கு மேலெழும்பி, நமக்கு நெஞ்சில் ஒரு வகையான எரிச்சலை ஏற்படுத்தும். இதனால்தான் ஒருவருக்கு அசிடிட்டி அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது என்றும் கூறலாம். இந்த உணவுக் குழாய், இருதயத்துக்கு பின்னால் உள்ளது. இருதயம் பாதிப்பு அடைந்தால் வரும் எரிச்சலும், இந்த உணவுக் குழாயில் ஏற்படும் எரிச்சலும் ஒரே மாதிரியாக இருக்கும். இது இருதய பாதிப்பினாலும் வரலாம் என மக்கள் எண்ணுவதே இல்லை. எனக்கு அசிடிட்டி உள்ளது கேஸ் பிரச்சினை உள்ளது என்றுதான் பல பேரும் எண்ணிக் கொள்கிறார்கள். இதை உணராத பட்சம் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய ஒன்றாக இது போய் முடியும்.

இயல்பான நெஞ்செரிச்சலை, நாம் ஜி.இ.ஆர்.டி என அழைப்போம். இதன் பொருள் நமது வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாய்க்கு மேல் எழுவதனால் ஏற்படும் எரிச்சல் எனலாம். அல்சரை விட, இதுதான் மிகவும் பெரும்பாலானோருக்கு ஏற்படும் பிரச்சினை. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் நமக்குத் தெரிந்ததுதான்.

முதலாவதாக, நாம் வயிறு முட்ட சாப்பிடுகிறோம் என்றால் இரைப்பை நிரம்பி அமிலம் மேலே வரும். எனவே அரைவயிறு உண்ண வேண்டும். இரண்டாவதாக, நாம் முன்பு கூறியது போல இரைப்பைக்கும் உணவுக்குழாய்க்கும் இடையில் இருக்கக் கூடிய வால்வின் செயல்பாடை தடுப்பது, புகைப்பிடிக்கும் பழக்கம்தான். எனவே புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும். மூன்றாவதாக,  மதுப் பழக்கமும் இந்த வேல்வின் செயல்பாட்டைத் தடுக்கும், அமிலத்தையும் அதிகமாக சுரக்கச் செய்யும். அதேபோல் உணவு உண்டவுடன் உடனே படுக்க கூடாது, நம் படுப்பதினால் அந்த வேல்வின் செயல்பாடு குறைவாக இருந்தால் அமிலம்  மேலே வரும். எனவே உணவு உண்ட உடன் குறைந்தது ஒரு மணி நேரம் நேராக உட்கார வேண்டும்.

எந்த மாதிரியான உணவு உட்கொண்டால், இந்த அசிடிட்டி பிரச்சினை அதிகமாகிறது அல்லது குறைகிறது என்பதை நாமே, நம் அனுபவத்தின் மூலம் யூகிக்க முடியும்.   ஆனால், முக்கியமானது என்னவென்றால் அரிசி அதாவது கார்போஹைட்ரேட்டை நாம் தவிர்க்க வேண்டும். நாம் மூன்று வேளையும் அரிசியே உட்கொண்டு வருகிறோம். இந்த அரிசி அசிடிட்டியை கூட்டுகிறது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. எனவே நான் முந்தைய வீடியோக்களில் கூறியுள்ளது போல அரிசி உணவைத் தவிர்த்து சரிவிகித உணவுக்கு மாறுங்கள்.

படிக்க :
♦ சர்க்கரை நோய் – உடல்பருமனை கட்டுப்படுத்துவது சரிவிகித உணவா – பேலியோ உணவா ? மருத்துவர் BRJ கண்ணன்
♦ அத்தி வரதர் – பற்ற வைத்தது யார் ? கருத்துக் கணிப்பு

ஏப்பம்  நெஞ்செரிச்சல்  வருவதைத்தான் அஜீரணம்  என பல பேர் கூறுகிறார்கள். அப்படி வந்தால் என்ன செய்ய வேண்டும் என்றால் அரை வயிறு உணவு உண்ண வேண்டும். அதேபோல், மது பழக்கம், புகை பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை மட்டுமே நாம் உணவாக அடுத்த 5 நாட்களுக்கு எடுத்துக் கொள்ளலாம். முடிந்தவரை அரிசி, கோதுமை உணவுகளை அதிகம் குறைத்துக் கொள்ளலாம்.

வயிற்றில் வலி ஏற்படும் போதெல்லாம் கட்டித் தயிரை அதிகம் சேர்க்கலாம். இதை செய்தால் நான்கு அல்லது ஐந்து நாட்கள் அல்லது ஒரு வாரத்தில் இந்த பிரச்சினை முழுவதுமாக சரியாகிவிடும். அப்படி இல்லையென்றால் மருத்துவரை அணுகலாம். அவர் மருந்து மாத்திரைகள் கொடுத்து நீங்கள் மருந்து மாத்திரையும் உட்கொண்டும் மாதக்கணக்கிற்கு மேல், இது குணமடையாமல் அப்படியே உள்ளது என்றால், நீங்கள் வயிறு மற்றும் குடல் நிபுணரான மருத்துவரை உடனே அணுக வேண்டும்.

சரிவிகித உணவுக்கு மாறுவதால் நீரிழிவு நோய் குறைகிறது, ரத்தக் கொதிப்பு குறைகிறது, இது எல்லாவற்றுக்கும் முதலாக இந்த நெஞ்செரிச்சல் குறைகிறது. இதன் மூலம் நான் கூற வருவது, எனக்கு அல்சர் பிரச்சனை உள்ளது என தேவையில்லாமல் நாம் கூற வேண்டாம். அதேபோல் சார் எனக்கு அங்கங்க கேஸ் பிடிக்கும், குத்தி விட்டால் உடனே ஏப்பம் வந்து சரியாகிவிடும், என கூறுவதெல்லாம் நாமாகக் கற்பனை செய்து கொண்டதுதான். கேஸ் என்றால் உணவுக் குழாயில் இருக்கும் அல்லது நுரையீரலில் இருக்கும் வேறு எங்கும் இருக்காது. நாம் இறந்து போனால் மட்டுமே உடலின் மற்ற பாகங்களில் கேஸ் உருவாகும்.

எனவே கேஸ், அல்சர் என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தாதீர்கள், உங்களுக்கு என்ன பிரச்சினை உள்ளதோ, அதை அப்படியே தமிழில் கூறிப் பாருங்கள். உங்களுக்கு பாதி நோய்  இல்லாமல் போய்விடும், இருந்தாலும் வைத்தியம் பார்ப்பதற்கு அது எளிதாக இருக்கும்.

அல்சர் என்பது மிகவும் குறைவான நபருக்குத்தான் இருக்கும். அப்படி இருந்தாலும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள், அதிகபட்சம் ஒரு மாதங்களில் குணப்படுத்தக்கூடிய ஒன்று. நமக்கு இருப்பதாக எண்ணிக் கொண்டு நாம் மருந்து மாத்திரைகளை அதிகம் உட்கொள்ள வேண்டாம். சரிவிகித உணவுக்கு மாறுவதன் மூலமும் இதை நாம் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். எனவே இந்த மருந்து, மாத்திரைகளை அதிகம் உட்கொள்வதினால், கிட்னி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் நமக்கு ஏற்படும் என்பதை உணர்ந்து நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

நன்றி வணக்கம்.


நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.

இராமனும் கிருஷ்ணனும் ஆரிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேலை செய்தவர்கள் !

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 19

முதல் முதல் ஆரியர்களுக்குச் சுவாதீனமான நாடு வடமேற்கு மாகாணமாகும். பிறகு, அங்கேயிருந்து தொடர்ந்து திராவிடர்களைக் கொடுமைப்படுத்தி, அடக்கி வெற்றி பெற்றுக் கொண்டே வந்தார்கள் ஆரியர்கள். இந்தியாவில் ஒரே தடவையில் ஒரே கூட்டமாக வந்து ஜெயித்தவர்களல்லர்! ஆதியில் அவர்கள் தனித்தனி சமயங்களில் தனித் தனிக் கூட்டங்களாக வந்து தனித் தனியாகப் போரிட்டும் தனித்தனியே வெற்றி கொண்டார்கள். ஆதியில் இவர்கள் வந்த விதம் சொல்லவேண்டுமானால், வேவுக்காரர் போலவும், திடீரென்று புகுந்து தாக்கியும், கையில் கிடைத்ததைப் பற்றிக் கொண்டும், பிறகு நிலைத்த ஆதிக்கமும் தேடிக் கொண்டார்கள்.

சில மேன்மையான இடங்களையும், சகல சவுகரியமும் பிரபலமும் உள்ள இடங்களையும், யுத்தம் செய்தும் திராவிடர்களைக் கொன்றும், பலரை அடிமைப்படுத்தியும் சுவாதீனம் செய்து கொண்டார்கள்.

இவை தங்களுக்குப் போதுமான அளவு கிடைத்ததால் அவர்கள் இங்கு நிலைத்தவர்களாகி நாடெங்கும் தங்கள் கலைகளை, பழக்கவழக்கங்களைத் தங்கள் சவுகரியத்துக்கும் மேன்மைக்கும் ஏற்ற கொள்கைகளைப் பரப்ப ஆரம்பித்தார்கள். இங்கு வந்த ஆரியர்களின் சொந்தத் தன்மைகளையும் சரித்திரங்களையும் சொல்ல நமக்குப் போதிய சரித்திரம் இல்லை; என்றாலும் வேதம் ஆகியவற்றாலும் அவர்களது தன்மை , மதம், பாஷை ஆகியவற்றாலும் ஒருவாறு ஊகித்தறியலாம்.

அவர்களுக்குப் புரோகிதமும், சடங்குமே பிரதான மதக் காரியமாகும். அவர்களுடைய கடவுளாகப் பஞ்ச பூதங்களும் இந்திரன் முதலியவையும் இருந்து வந்தன. (இது ஆதியில் ரோம், கிரீஸ் முதலிய ஐரோப்பிய நாடுகளிலும் இருந்தது போலவே ஆகும்.)

இன்று ஆரியர்கள் கடவுள்களாக வணங்கும் இராமன், கிருஷ்ணன் என்பவர்கள், ஆரிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேலை செய்த வீரர்கள். இராமன் திராவிடர்களை வென்று, தென்னாட்டிலும் இலங்கையிலும் ஆரியர் தம் ஆதிக்கத்தை ஏற்படுத்தியவன். ஆரியப் புரோகிதர்கள் யுத்த வீரர்கள் இல்லாவிட்டாலும் மிகவும் சக்தி உடையவர்கள்.

‘’ஆரியர்கள் இப்படிப்பட்ட மதத்துக்கு விரோதமாக, யார் யாரோ என்னென்னமோ முயற்சி எடுத்தும், அவை பயனில்லாமல் போய்விட்டன என்றும், புத்த மதத்தை ஆரியர்கள் தங்களுக்கு விரோதமான  மதமென்று கருதியே ஒழித்துவிட்டார்கள் என்றும்; ஜாதி பேதமில்லாத மதத்தையும், மூடநம்பிக்கை இல்லாத வணக்கம், கடவுள் முதலியவற்றையும் ஏற்படுத்திய கிறிஸ்து, முகம்மது, இராஜாராம் மோகன்ராய் போன்றவர்களின் முயற்சிகளையும், கொள்கைகளையும் ஒழித்து அந்த மதங்களையும், மதத்தைச் சேர்ந்த மக்களையும் இழிவு படுத்தி வெறுக்கச் செய்து ஆரியர்களே மனித சமூகத்தில் மேம்பட்டவர்கள்; அவர்களே எஜமானர்கள், குருமார்கள், புரோகிதர்கள், பூஜைக்காரர்கள், உயர்ந்த ஜாதியார்கள் என்று ஆகி மற்ற சமுதாயம் தலையெடுக்கவொட்டாமல் செய்துவிட்டார்கள்.

சென்னையில் 1939 ஏப்ரல் 21 மாலை 6 மணிக்குத் தென்னிந்திய பிரம்ம சமாஜத்தின் ஆதரவில் சென்னை அண்ணாப் பிள்ளைத் தெருவிலுள்ள பிரமசமாஜக் கட்டிடத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அறிஞர் S. சோமசுந்தர பாரதியார் MABL தலைமை வகித்துப் “பழந்தமிழர் மணமுறை” என்ற பொருள் பற்றிச் சுமார் 1 மணி நேரம் அரிய சொற்பொழிவு நிகழ்த்தினார். அதன் தொகுப்பு வருமாறு:

”தமிழ்ச் சகோதரிகளே! சகோதரர்களே! சாதிமத வேறுபாடு கருதாது, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எல்லோரையுமே தமிழர்கள் என்றேன். நான் சென்னைக்கு வந்தபோது இங்குப் பேசுவேன் என எதிர்பார்க்கவில்லை. திடீரென பேச வேண்டுமெனக் கேட்டுக் கொண்ட நண்பர்களின் வேண்டுகோளைத் தட்டமுடியாமல் ஏற்றுக் கொண்டேன்.

பழந்தமிழர் காலம் எது? அதாவது ஆரியர் ஆதிக்கத்தைத் தமிழரிடத்துச் சுமத்த முடியாத காலம் கி.பி. 2, 3-ம் நூற்றாண்டு, அதாவது ஆரியர் வருகையால் தமிழிலுள்ள சில பதங்கள் ஆரியத்திலும், ஆரியப் பதங்கள் சில தமிழிலும் ஏறத் தொடங்கிய காலம். அன்று தமிழ்நாட்டில் ஆரிய ஆதிக்கம் இல்லை. அதன் பின்னர் 3-ம் நூற்றாண்டில்தான், தமிழில் சில ஆரியப் பதங்கள் கலக்க நேரிட்டது. அதாவது சிலப்பதிகாரத்திற்கு முந்திய காலம், ஏன்? சிலப்பதிகாரத்திலேயே ஆரியம் கலந்த முறை வந்து விட்டது.

எனவே சிலப்பதிகாரத்திற்கு முன்புள்ள பழந்தமிழர்களின் மணமுறையைப் பற்றியே ஈண்டு பேசப்படுகிறது. ஆரிய நாகரிகத்திற்கும், தமிழர் நாகரிகத்திற்கும் குடும்பம் பற்றிய அடிப்படையே வேறுபட்டது. குடும்பம் பற்றிய வழக்கில் ஆரிய முறையே இன்று தீர்ப்பாக வந்துவிட்டது. தந்தை சொத்தை – (செல்வத்தைப்) பிள்ளைகள் பிரிப்பது நல்லதென்பர் ஆரியர். அந்த முறை இன்று நமக்கும் வந்துவிட்டது. பொதுக் குடும்ப முறை ஆரியருக்கு அவசியமானது ஏன்? ஆரியர் அந்நிய நாட்டார். இங்கு வந்து குடியேறினர். குடியேறிய இடம் அவர்கள் பழக்கவழக்கங்கட்கு முற்றிலும் மாறுபட்டது. எந்த நாட்டிற்கு வந்தாலும் அந்நாட்டவர்களோடு ஒத்து வாழ்ந்து, தங்களைத் தனிப்பட்ட ஒரு தெய்வப் பிறப்பாகவே கருதுவது ஆரியர் வழக்கம். உதாரணம் பார்த்தால், ஜெர்மனியிலுள்ள ஆரியர்கள் யூதர்களை வெறுத்துத் தாங்கள் ஆரியரெனும் செருக்கால் விரட்டுகின்றனர். இந்த அகம்பாவம் எல்லோருக்கும் உரியது.

ஆரிய நாகரிகத்திற்கும், தமிழர் நாகரிகத்திற்கும் குடும்பம் பற்றிய அடிப்படையே வேறுபட்டது. குடும்பம் பற்றிய வழக்கில் ஆரிய முறையே இன்று தீர்ப்பாக வந்துவிட்டது. தந்தை சொத்தை – (செல்வத்தைப்) பிள்ளைகள் பிரிப்பது நல்லதென்பர் ஆரியர். அந்த முறை இன்று நமக்கும் வந்துவிட்டது.

இந்தச் செருக்கினாலே, பிறரால் ஆரியர்களும் வெறுக்கப்பட்டு வந்தனர் – வருகின்றனர். அவ்வாரியர் ஆதியில் வட நாட்டில் குடியேறிய காலத்து அங்கிருந்த வட நாட்டாரையும் தாழ்வாகக் கருத ஆரம்பித்தனர். வட நாட்டிலிருந்தவர்களும் அறிவிலா கீழ்மக்களாயிருந்ததால், தங்களை இழிவாகக் கருதிய ஆரியர்களை உதைக்க ஆரம்பித்தனர். இதனால் இவர்கட்குத் தற்காப்பு அவசியமாயிற்று. இராமாயணத்தில் பல இடங்களில் அசுரர்கள் உதைத்தார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறதே.

அதன் பொருள் என்ன? இவ்வாரியர்கள் தங்கள் செருக்கால் பிறரைக் கேவலமாகக் கருதவே அவர்கள் (அசுரர்கள்) இவர்களைச் சரியாக உதைத்தனர். இதுதான் உண்மை . இது நான் கூறுவதல்ல; சரித்திரம் கூறுகின்றது. இவ்வாரியர்கள் இரவு பகலாகக் கண்விழித்துத் தற்காப்புச் செய்து கொண்டனர்; எதிரிகளுடன் ஓயாமற் சண்டை பிடிக்க வேண்டி அதிக செல்வாக்கும் தற்காப்பும் இவர்கட்கு வேண்டியிருந்தது. இதனாலேயே இவர்கள் தங்களுக்கு ஆண் பிள்ளைகள் பிறப்பதை அதிகமாக விரும்பினர். பெண் பிள்ளைகள் பிறப்பதைப் பாவமெனவும் கருதினர். எனவே தற்காப்புக் கருதியேதான் இவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டுறவாக வாழ வேண்டி வந்தது.

படிக்க:
நாம் தமிழர் எனும் முள்பொறுக்கிகளின் மற்றுமொரு பலியாடு – வண்டாரி தமிழ்மணி !
தமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்

நிற்க, தமிழர்கள் வடமேற்குக் கணவாய், வடகிழக்குக் கணவாய் வழியாக இங்கு வந்து குடியேறினார்களெனச் சில மூடர்கள் கூறுகின்றனர். அது தவறு. உலகம் தோன்றிய காலந்தொட்டே தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கின்றனர். ஏன்? கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்தக்குடியில் வந்தவர்களன்றோ நம் தமிழர்கள்! தமிழர்கள் அரசியல் காரணமாகத் தங்களுக்குள் சிறு சிறு சண்டைகள் போட்டுக் கொண்டிருந்தார்களாயினும், பிறரால் அந்நிய நாட்டாரால் மோதப்படாதவர்கள். ஏன்? இயற்கையிலே முப்புறம் கடலும் ஒருபுறம் மலையும் தமிழர்கட்கு அரணாக இருந்தன. இதனால்தான் தற்காப்பு வேண்டாது தனித்து வாழும் சிறப்பையே வேண்டினான் தமிழன்.

ஆதி முதல் தனிக்குடித்தனம் நடத்துவதே தமிழன் வழக்கம். தந்தை சொத்தை விரும்பினால் தாயும் மனைவியும் வெறுப்பர். தமிழன் திரை கடலோடித் திரவியம் தேடினான். ”உன் முயற்சியால் பொருள் தேடினாயா? தந்தை பொருளால் வாழ விரும்பும் சோம்பேறியை நான் விரும்பேன்” என்பாள் மனைவி. காதலரிருவர் கருத்தொருமித்த பிறகு மணம் செய்து கொள்வதற்கு முன் பொருள் தேடச் செல்வதே தமிழன் வழக்கு.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

தமிழகத்தை நாசமாக்காதே ! சென்னையில் மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்

அணுக்கழிவுகள் – ஹைட்ரோகார்பன் – எட்டுவழிச் சாலை 

தமிழகத்தை நாசமாக்காதே !

கருத்தரங்கம்

நாள்: 10.8.2019
நேரம்: மாலை 4 மணி
இடம்: சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம்

தலைமை :

தோழர் அமிர்தா
மண்டல ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
சென்னை

சிறப்புரை :

தோழர் தியாகு,
உரிமை தமிழ் தேசம்,
ஆசிரியர்

திரு. வெற்றிச்செல்வன்,
பூவுலகின் நண்பர்கள்

வழக்கறிஞர் ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு

தமிழகத்தை காக்க ஒன்றுதிரள்வோம்! வாரீர்!

மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம்
தொடர்புக்கு : 9176801656

காதலனை ஒரு தடவை கூட நேரில் காணாத கடிதக் காதல் !

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 12-அ

நாற்பத்து இரண்டாம் வார்டில் “ராஜ தோரணையான பொய்க்கால்கள்” வந்திருப்பது பற்றிக் காரசாரமான விவாதம் இன்னும் ஓர் இடத்தில் நடந்தது. மாஸ்கோ அரசாங்கப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவின் மூன்றாம் ஆண்டு வகுப்புதான் அந்த இடம். அந்தக் காலத்தில் இந்த வகுப்பில் மிகப் பெரும்பாலராயிருந்த மாணவிகள் அனைவரும், அன்யூத்தாவின் சொற்படி, நாற்பத்து இரண்டாவது வார்டு விவகாரங்களை நன்கு அறிந்திருந்தார்கள்.

“ராஜதோரணையான பொய்க்கால்களின்” தொடர்பாக மெரேஸ்யெவ் மறுபடி விமானம் ஓட்டுவானா மாட்டானா என்பது பற்றிச் சாப்பாட்டு அறையில் விரிவாக விவாதம் நடந்தது. விவாதத்தில் இளமையும் உற்சாகமும் பொங்கியது. இதில் பங்கு கொண்ட இரு தரப்பினரும் மெரேஸ்யேவ் பால் ஒரே மாதிரி அனுதாபம் காட்டினார்கள். சண்டை விமானம் ஓட்டுவதில் உள்ள சிக்கல்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு மெரேஸ்யெவால் இயலாது என்றார்கள் நம்பிக்கையின்மைவாதிகள். எதிரியிடமிருந்து தப்பி அடர் காட்டின் ஊடாக இரண்டு வாரங்கள் தவழ்ந்தும் ஊர்ந்தும் எத்தனையோ கிலோ மீட்டர் தொலைவைக் கடந்த மனிதனுக்கு இயலாதது எதுவும் இல்லை என்று வாதித்தார்கள் நம்பிக்கைவாதிகள். தங்கள் வாதங்களுக்கு ஆதாரமாக வரலாற்றிலும் புத்தகங்களிலும் இருந்து உதாரணங்கள் காட்டினார்கள் அவர்கள்.

படிக்க :
♦ ஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம் !
♦ காஷ்மீர் மண்ணையும் பெண்களையும் அபகரிக்கத் துடிக்கும் பாஜக !

இந்த விவாதங்களில் அன்யூத்தா கலந்து கொள்ளவில்லை. தனக்கு அறிமுகம் அற்ற விமானியின் பொய்க்கால்களில் அவளுக்கு அதிக அக்கறை ஏற்படவில்லை. அரிதாகக் கிடைத்த ஓய்வு நேரத்தில், கிரிகொரிய் க்யோஸ்தியேவுடனான தனது உறவுகளைப் பற்றியே அவள் எண்ணமிட்டாள். இவை மேலும் சிக்கலாகி வருவதாக அவளுக்குப் பட்டது. இத்தகைய துன்ப வாழ்க்கை கொண்ட வீரக் கமாண்டரைப் பற்றி அறிந்ததும் அவனுடைய துயரத்தை ஓரளவு குறைக்கும் தன்னலமற்ற விருப்பத்தால் தூண்டப்பட்டுத் தொடக்கத்தில் அவள் அவனுக்கு எழுதினாள். ‘அப்புறம், அவர்களுடைய கடித நட்பு வலுவடைய, தேசபக்தப் போரின் அருவ வீரனது உரு அகன்று அதன் இடத்தில், உண்மையான, உயிரோட்டமுள்ள இளைஞன் வந்துவிட்டான். இந்த இளைஞன் பால் அவளது அக்கறை வர வர மிகுந்து கொண்டு போயிற்று.

அவனிடமிருந்து கடிதங்கள் வராவிட்டால் தான் நிம்மதி இழந்து ஏங்கித் தவிப்பதை அவள் கவனித்தாள். இந்தப் புது அனுபவம் அவளுக்கு மகிழ்வு ஊட்டியது, அதே சமயம் அச்சம் உண்டாக்கியது. என்ன, இது காதலா? ஒரு மனிதனை ஒரு தடவை கூட நேரில் காணாமல், அவன் குரலைக் கூடக் கேட்காமல், காதலிக்க முடியுமா? இதே உணர்வு தன்னையும் ஆட் கொண்டிருப்பதாக க்யோஸ்தியேவ் ஒரு முறை அவளிடம் ஒப்புக்கொண்டான் – இந்த உணர்வைத் “தபால் காதல்” என அவன் குறித்தான். தான் காதல் கொண்டுவிட்டதாக, அதுவும் பள்ளிக்கூட நாட்களில் போன்று குழந்தைத்தனமாக அல்ல, உண்மையாகக் காதல் கொண்டுவிட்டதாக, அப்போது முதல் அன்யூத்தாவுக்கு உறுதி ஏற்பட்டது. தான் இப்போது இவ்வளவு பொறுமையின்றி எதிர்பார்க்கும் இந்தக் கடிதங்கள் வருவது நின்றுவிட்டால் வாழ்க்கை தனக்கு அர்த்தம் அற்றதாகி விடும் என்று அவளுக்குத் தோன்றியது.

இவ்வாறு, ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே அவர்கள் தங்கள் காதலை வெளியிட்டார்கள். இதன் பின்பு க்யோஸ்தியேவுக்கு ஏதோ விந்தையானது நிகழ்ந்துவிட்டது. அவனுடைய கடிதங்கள் பதற்றமும் அரைகுறைக் கருத்துக்களும் நிறைந்து விட்டன. பிறகு அவன் துணிவு அடைந்து தன் மனதிலிருப்பதை அப்படியே அவளுக்கு எழுதிவிட்டான். ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே காதலை வெளியிட்டது சரியல்ல என்றும் சூட்டுப்புண் அவனை எப்படி விகாரப்படுத்திவிட்டது என்பதை அவளால் கற்பனை செய்யவே முடியாது என்றும் அவளுக்கு அவன் அனுப்பிய போட்டாவை இப்போது அவன் சிறிதும் ஒத்திருக்கவில்லை என்றும் அவனுடைய கடிதம் கூறியது. தான் அவளை ஏமாற்ற விரும்பவில்லை என்றும், யாருடன் உறவாடுகிறோம் என்று அவள் தன் கண்களால் பார்க்கும் வரை தன் உணர்ச்சிகளைப் பற்றி எழுதுவதை நிறுத்திவைக்கும்படி கேட்டுக் கொள்வதாகவும் க்யோஸ்தியேவ் எழுதினான்…

அவன் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் நாள் நெருங்கியது. அவன் மேலும் அடிக்கடி கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்துக் கொள்ளலானான். ஒரு தரம் எட்ட நின்று விரைந்து மேல்நோக்காகத் தன்னைப் பார்வையிடுவான். மறு தரம் தன் விகாரமான முகத்தைக் கண்ணாடிக்கு வெகு அருகே கொண்டுவந்து புண்களையும் தழும்புகளையும் தடவித் தேய்த்துச் சீர்படுத்த முயல்வான். தொலைவிலிருந்து பார்க்க அவன் எவ்வளவோ நன்றாயிருந்தான். அகன்ற தோள்களும், குறுகிய இடையும், நேரான எஃகுத் தடிகள் போன்ற கால்களும் வலிய உடற்கட்டும் வாய்ந்தவனாகக் காணப்பட்டான். ஆனால் அருகிலோ! கன்னங்களிலும் மோவாயிலும் இருந்த சிவந்த காயத் தழும்புகளும் வரிகள் விழுந்து விரைப்பாயிருந்த தோலும் அவனுக்கு ஒரே உளச்சோர்வு ஏற்படுத்தின. அவள் பார்த்தால் என்ன செய்வாள்? அரண்டு போவாளோ? ஒரு பார்வை பார்த்துவிட்டுத் திரும்பி, தோள்களைக் குலுக்கி விட்டு அப்பால் சென்றுவிடுவாளோ? அல்லது – இது இன்னும் மோசம் உபசாரத்துக்காக அவனுடன் ஓரிரண்டு மணி நேரம், வார்த்தையாடி விட்டு, உணர்ச்சியற்ற சம்பிரதாயச் சொற்களைப் பகர்ந்து விட்டு விடைபெற்றுக் கொள்வாளோ? – இவ்வாறெல்லாம் கலவரத்துடன் எண்ணமிட்டான் க்யோஸ்தியேவ்.

இந்த மாதிரி ஏற்கனவே நடந்துவிட்டதுபோலப் பதற்றமடைந்து மனத்தாங்கலால் வெளிறிப்போனான் அவன்.

உதட்டைக் கடித்துக் கொண்டும் கொடிய வலி காரணமாக விழிகளிலிருந்து கட்டுக்கு அடங்காமல் துளித்த கண்ணீரை அடக்கிக் கொள்ள முயன்றவாறும் இருபத்து மூன்றாவது தடவை ஆளோடியில் நடந்து திரும்பி அன்றையப் பயிற்சியைச் சிரமத்துடன் முடித்தான் சீனியர் லெப்டினன்ட் மெரேஸ்யெவ்.

பிறகு அங்கியின் பையிலிருந்து நிழற்படத்தை எடுத்துக் கூர்ந்து பரிசீலித்தான். படத்தில் இருந்தாள் சதைப்பிடிப்புள்ள கன்னி. அவளுடைய நெற்றி விசாலமாக இருந்தது. அடர்த்தியற்ற, மென்மையான செழுங்கூந்தல் பின்புறமாக வாரிவிடப்பட்டிருந்தது. இயல்பான ருஷ்ய மூக்கு தடித்து, சற்றே மேல் தூக்கியிருந்தது. உதடுகள் குழந்தையினவை போல மென்மையாக இருந்தன. மேல் உதட்டில் அரிதாகவே புலப்படும் கரு மச்சம் இருந்தது. ஓரளவு உப்பிய விழிகள் – அவை சாம்பல் நிறமாகவோ, நீல நிறமாகவோ இருக்க வேண்டும் – கள்ளங் கபடமற்ற அந்த இன் முகத்திலிருந்து ஒளிவு இன்றி நேர்மையுடன் நோக்கின.

“நீ எப்படிப்பட்டவள்? ஊம், சொல்லு: மிரண்டு போய் விட மாட்டாயே? ஓடிவிட மாட்டாயே? என் அலங்கோலத்தைக் காணாதிருக்கும் அளவுக்கு உன் இதயம் விசாலமானதுதானா?” – நிழல்படத்தைத் துரவி ஆராய்ந்தவாறு மனத்துக்குள்ளாகவே அவன் வினவினான்.

அந்தச் சமயத்தில் சீனியர் லெப்டினன்ட் மெரேஸ்யெவ் கவைக் கோல்களை டொக் டொக்கென்று வைத்தவாறு, பொய்க் கால்கள் கறுமுறுக்க அளவாக அடியெடுத்து வைத்து ஆளோடியில் முன்னும் பின்னும் சளைக்காமல் நடை போட்டான். ஒரு முறை, இரண்டு, பத்து, பதினைந்து, இருபது முறைகள் கடந்து சென்றான். காலையிலும் மாலையிலும் தனது ஏதோ திட்டத்தின்படி அவன் நடந்து பழகினான். ஒவ்வொரு நாளும் அவன் தூரம் அதிகமாகிக் கொண்டு போயிற்று.

படிக்க:
போலோ ஸ்ரீராம் – ஜெய் கார்ப்பரேட் ! புதிய கலாச்சாரம் நூல் !
மோடி – அமித் ஷா கும்பலின் தொழிலாளர் சட்டம் ஒழிப்பு நடவடிக்கையை கண்டித்து பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் !

“அருமையான ஆள்! விடாமுயற்சி உள்ளவன், பிடிவாதக்காரன். இவனுக்குத்தான் என்ன சித்தவுறுதி! கவைக் கோல்களின் உதவியால் விரைவாகவும் லாவகமாகவும் நடக்க ஒரு வாரத்தில் பயின்று விட்டான். மற்றவர்களுக்கு இவ்வாறு பழகச் சில மாதங்கள் பிடிக்கும். நேற்று ஸ்டிரெச்சர் வேண்டாம் என்று சொல்லிவிட்டுச் சிகிச்சை அறைக்கு மாடிப்படி இறங்கித் தானாகவே சென்றான். அங்கே போய்விட்டுத் தானே படிகள் ஏறித் திரும்பி வந்தான். கண்ணீர் முகத்தில் வழிந்தது, ஆனால் அவன் விடாது ஏறினான். உதவிக்கு வந்த தாதியை அதட்டக் கூடச் செய்தான். தானாகவே மேல் மாடியை அடைந்தும் அவன் முகந்தான் எப்படிச் சுடர்ந்தது! ஏதோ எல்ப்ரூஸ் சிகரத்தை எட்டிவிட்டவன் போல.” – இவ்வாறு அவனைப் பற்றிச் சிந்தித்தான் க்யோஸ்தியேவ்.

… மாலைப் பயிற்சிக்காக திரும்பிய அலெக்ஸேய் மெரேஸ்யெவ்வின் உடம்பு களைத்து நொந்துபோயிருந்தது. அடித்தொடைகள் இரத்தம் கட்டிக் காத்துவதையும் கவைக் கோல்கள் அழுத்தியதால் மரத்துப்போன தோள்கள் நோவதையும் அவன் உணர்ந்தான்.

டொக்,டொக். கர்ர், மர்ர். டொக்,டொக். கர்ர், மர்ர்.. உதட்டைக் கடித்துக் கொண்டும் கொடிய வலி காரணமாக விழிகளிலிருந்து கட்டுக்கு அடங்காமல் துளித்த கண்ணீரை அடக்கிக் கொள்ள முயன்றவாறும் இருபத்து மூன்றாவது தடவை ஆளோடியில் நடந்து திரும்பி அன்றையப் பயிற்சியைச் சிரமத்துடன் முடித்தான் சீனியர் லெப்டினன்ட் மெரேஸ்யெவ்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

வியட்நாம் டைரீஸ் : போராளிகளின் தேசம் ! பயண அனுபவக் கட்டுரை

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீழ்த்திய வியட்நாம் – போராளிகளின் தேசம்…

“உலகின் மிக நீண்ட
போரை தன்
மார்பில் சுமந்து
தன்னை
தொலைக்காமல்
மீட்டு எடுத்திருக்கும்
இயற்கையின் பொக்கிஷம்
வியட்நாம்”

அமெரிக்கா நிலவில் கால் தடம் பதித்த 50 ஆண்டுக்கால கொண்டாட்டத்தை முன்னெடுத்துள்ளது. இத்தருணத்தில் மனித விடுதலைக்காக போராடிய வியட்நாமை நினைவு கூற மறந்து விட்டோம். “மக்களே வரலாற்றை உருவாக்குகிறார்கள். வரலாறு மக்களுக்கானது, மக்களே அதன் விதைகள்.”

பயணம் என் வாழ்வில் ஒரு அங்கமாய் மாற சே குவேராவின் “மோட்டார் சைக்கிள் டைரீஸ்” ஒரு முக்கிய காரணம். ஆனால் அது என் வாழ்வில் தொடர என் மூத்த சகோதரருக்கும் ஒரு பங்கு உண்டு. இந்தியாவின் அனைத்து பகுதிக்கும் சென்று இருக்கிறேன். ஆனால், இதுதான் இரண்டரை மாத கால நீண்ட வெளிநாட்டு பயணம். ஆறு நாடுகள் அறுபது நாட்கள் என என்னை நான் மறந்த நாட்கள். இவற்றில் எல்லா நாடுகளும் பிடித்து இருந்தாலும் வியட்நாம் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று.

அதற்கு காரணம் உலகின் மிக நீண்ட போரை தன் மார்பில் சுமந்து தன்னை தொலைக்காமல் மீட்டு எடுத்திருக்கும் இயற்கையின் பொக்கிஷம் வியட்நாம்! அதனால் அதைப் பற்றி எழுத கடமைப்பட்டிருகிறேன். உலகில் இயற்கை காதலர்கள் அதிகம் படையெடுக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வியட்நாமிற்கு தனி இடம் உண்டு. அந்த நாட்டின் பெயரை சொல்லும் போது எப்படி ஒரு உத்வேகம் இருக்கிறதோ அதை போன்றே அழகானதொரு நாடு.

வியட்நாமிய போராளிகள் உலகின் ஏகாதிபத்திய அமெரிக்காவை வீழ்த்தி விடுதலை வேட்கையில் இன்று தனக்கென ஒரு இடத்தை தடம் பதித்து இருக்கிறனர். அதில் சாதித்துக் காட்டியிருக்கிறனர் என்றுதான் சொல்லவேண்டும்.

வியட்நாமும் வாழ்வியலும்

வியட்நாம் தென்கிழக்காசியாவின் இந்தோ சீனாவின் கிழக்கில் உள்ள நாடு. இதன் வரைபடம் ஆங்கிலத்தில் “S” வடிவிலான உருவம் கொண்டது. இந்நாட்டின் வடக்கே சீனாவும், வடமேற்கே லாவோசும், தென்மேற்கே கம்போடியாவும், கிழக்கே தென்சீனக்கடலும் எல்லையாக உள்ளது.

2012-ம் ஆண்டு கணக்கீட்டின்படி 9.30 கோடி ஜனத்தொகையை கொண்டுள்ளது. உலகின் மக்கள் தொகை அடிப்படையில் 13 -வது இடத்திலும், ஆசியாவில் 8 வது இடத்திலும் உள்ளது. இதன் தலைநகரம் ஹனோய். வியட்நாமின் இன்னொரு முக்கிய நகரம் ஹோ சி மின் சிட்டி (சைக்கான்).

இந்த நாடு சீனா, ஜப்பான், பிரெஞ்சு என பலரின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்துள்ளது, அதன் நீட்சி அதன் கலச்சாரத்திலும் தொடர்கிறது. மொத்த மக்கள் தொகையில் 81% பேர் மதமற்றவர்களாகவும், 9% பேர் புத்த மதத்தையும், 7% பேர் கிறிஸ்துவ மதத்தையும், 3% பேர் பிற மதத்தையும் பின்பற்றுகிறார்கள்.

இங்கு ஒரு கட்சி ஆட்சி முறை உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின், மத்திய ஆட்சிமன்ற குழுவே அதிகாரம் கொண்ட அமைப்பாகும். இந்த நாட்டின் அதிபர் பாதுகாப்பு படையின் தலைவராவார். பிரதமர் அமைச்சரவையின் தலைவராக உள்ளார். நாட்டின் தலைமை நீதிபதி தேசிய சபையால் நியமிக்கப்படுகிறார்.

இங்கு விவசாயம், தகவல் தொழில்நுட்பம் ஆகியவை பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நாட்டின் நாணயத்தின் பெயர் டாங். வியட்நாமில் காபி மிகவும் பிரபலம். உலகில் காபி ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நாட்டின் இன்றைய நிலைமை ஒரு குறிப்பிடதக்க அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. வாருங்கள் வரலாற்றை புரட்டிப் பார்ப்போம்.

போர் வரலாற்றில் வியட்நாம்

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு இந்தோ சீனா என்று அழைக்கப்பட்ட கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து உள்ளடக்கிய பிராந்தியத்தை பிரான்ஸ் மீண்டும் தன் காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி வியட்நாமின் கூட்டுப்படைகள் 1946 முதல் 1954 வரை பத்து ஆண்டுகள் சண்டையிட்டன.

படிக்க:
“ காஷ்மீரை சிறைச்சாலையாக மாற்றுவதை நிறுத்துங்கள் ” : செயல்பாட்டாளர்கள் போராட்டம் !
♦ காஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம் – கருத்துப்படம்

வியட்நாமின் விடுதலைக்காக, பிரான்ஸ் அரசுக்கு எதிராக (Battle of Dien Bien Phu) வியட்நாமிய கம்யூனிச படைகள் போரிட்டது. 1955 -ம் ஆண்டு ஜெனிவா மாநாட்டின் மூலம் வியட்நாம் இரண்டாக பிரிக்கப்பட்டது. இந்த போரின் முடிவில் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் வட வியட்நாம் புரட்சியாளர் ஹோ சி மின் தலைமையில் ஆட்சி அமைத்தது.

HO_CHI_MINH
வியட்நாம் புரட்சியாளர் ஹோ சி மின்

மேற்கத்திய நாடுகளின் ஆதரவில் பிரதமராக Ngo Dinh Diem (ங்கோ டின் டிஎம்) தெற்கு வியட்நாமில் ஆட்சி அமைத்தார். ஆனால் தெற்கு வியட்நாம் மேற்கத்திய பார்வையில் செயல்படும் கைப்பாவை அரசாக செயல்பட்டதன் காரணமாக ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

“ஒருங்கிணைந்த வியட்நாம் ஒன்றே தீர்வு” என்றார் புரட்சியாளர் ஹோ சி மின். பின் 1960-களில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜான் கென்னடி, கிழக்காசிய கம்யூனிச செல்வாக்கை குறைப்பதற்காக நேரடியாக உள்நாட்டு போரில் தலையிட்டார் .

இதில் வட வியட்நாம் படை சோவியத் ஒன்றியம், சீனா மற்றும் பிற கம்யூனிச நாடுகளால் ஆதரிக்கப்பட்டது. தெற்கு வியட்நாமியப் படை அமெரிக்கா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து மற்றும் பிற கம்யூனிச எதிர்ப்பு அணியால் ஆதரிக்கப்பட்டது. மேற்கத்திய நாடுகள் பேரழிவு ஆயுதங்களையும், பாஸ்பரஸ் குண்டுகளையும், பாரம்பரிய போர் யுத்திகளையும் கையாண்டபோது கம்யூனிச படைகள் கெரில்லா தாக்குதலைக் கையாண்டன.

கெரில்லா தாக்குதலால் மேற்கத்திய அமெரிக்கப்படை பின்வாங்கியது. இதை அடுத்து 1968-ம் ஆண்டு சோன் மை என்ற கிராமத்தில் குண்டுவீசி பெண்கள், குழந்தைகள், முதியவர்களை என ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது அமெரிக்கப்படை. 1968-ம் ஆண்டில் வியட்நாம் முழுவதும் கடும் குண்டுவீச்சுத் தாக்குதலைச் சந்தித்தது. இதற்கு அடுத்த ஆண்டு இந்த விவரம் வெளிவந்தபோது உலகமே கண்ணீரில் முழ்கியது.

உலக நாடுகள் பலவும் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்த நிலையில், அமெரிக்காவிலும் எதிர்ப்பு தொடங்கியது. வியட்நாமிற்கு அமெரிக்க படைகளை அனுப்பியது தவறு என்பது மூன்றில் இருபங்கு அமெரிக்கர்களின் கருத்தாக இருந்தது. வேறு வழியின்றி 1973-ம் ஆண்டு அமெரிக்க படைகள் வியட்நாமிலிருந்து வெளியேறின. அதன் பின்னும் இரண்டு ஆண்டுகள் போர் நீண்டது.

1975-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தெற்கு வியட்நாமின் தலைநகரை கம்யூனிச அரசு கைபற்றியது. அதன்பின் போர் முடிவுக்கு வந்தது. போரில் மொத்தம் வியட்நாமிய போராளிகள், பொது மக்கள் என 38,00,000 பேர் கொல்லப்பட்டனர். அதன் பின் 1976-ல் ஒருகிணைந்த வியட்நாமாக விடுதலை பெற்றது.

நாங்கள் எங்கள் பயணத்தை ஹோ சி மின் நகரத்தில் தொடங்கினோம். முதல் நாள் போர் நினைவு அருங்காட்சியம்; போரின் அவலங்களை எங்கள் கண் முன் கொண்டு வந்தது. அந்த அருங்காட்சியகம் சென்றவுடன் முதலில் பார்த்தது அமெரிக்க இராணுவப் படைகள் விட்டு சென்ற போர்க் கருவிகள், ஆயுதங்கள், ஹெலிகாப்ட்டர்கள். போரை நினைவுப்படுத்திய அவற்றைப் பார்த்தபடியே உள்ளே சென்றோம்.

போர் எவ்வளவு கொடூரமானது என்பதை அங்கிருக்கும் புகைப்படங்கள் என் விழிகளில் வழிந்தோடும் கண்ணீரில் சொன்னது. மனதில் பல கேள்விகள் கேட்டவாரே வெளியில் வந்தோம். பின் மறுநாள் கு-ச்சி சுரங்கபாதை (Cu Chi Tunnel) சென்றோம். ஒன்றிணைந்த வியட்நாம் உருவாக்கப்பட இந்த சுரங்கம்தான் பெரும் பங்கு வகித்தது.

கு-ச்சி சுரங்கப்பாதை (Cu Chi Tunnel)

இந்த சுரங்கமானது தற்போதைய ஹோ சி மின் நகரத்திலுள்ள (சைகான்) நதிக்கரை ஓரத்தில் உள்ள கு-ச்சி என்னும் ஊரில் உள்ளது. இந்த கு-ச்சி சுரங்கபாதையானது சுமார் 75 மைல் (121 கி.மீ) நீளம் கொண்ட மிக நீண்ட போர் சுரங்கம். இங்குதான் தெற்கு (Viet Cong ) மற்றும் வடக்கு வியட்நாமிய கூட்டுப்படை தங்களின் தாக்குதலுக்கான இராணுவ அமைப்பை நிறுவியிருந்தது. வியட்நாமிய போராளிகளின் திறனுக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு கு-ச்சி சுரங்கப்பாதை (Cu Chi Tunnel). இதுதான் தெற்கு மற்றும் வட வியட்நாமிய படைகள் தங்குவதற்கும், ஒளிந்திருந்து தாக்கவும், ஆயுதம் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இதை அமெரிக்க ராணுவம் “Black Echo” என்கிறார்கள்.

நாங்கள் இதில் செல்லும் போது எங்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இந்த சுரங்கமானது மனிதன் தவழ்ந்து செல்லகூடிய மிகவும் சிறிய பாதை, அருகில் என்ன இருக்கிறது என்பது கூட தெரியாத இருட்டு, தேள், பூரன் என பயமுறுத்த; மறுபுறம் பசி, நீர் பற்றாக்குறை என நாள் முழுவதும் சுரங்கப்பாதையில் உள்ளிருந்த (Viet Cong) வியட்நாமியர்கள் எவ்வளவு மெலிந்த உடலமைப்பைக் கொண்ட வலிமைமிக்கவர்கள் என தெரிந்தது.

போரில் இறந்தவர்களை அடுத்து சுரங்கத்தில் மலேரியா காய்ச்சலால் பாதிக்கபட்டு இறந்தவர்கள் பலர். பகல் முழுவதும் சுரங்கத்திலிருந்து போர் யுத்திகள் வகுப்பது, இரவில் தாக்குதலை மேற்கொள்வது; ஆயுதங்கள் தயாரித்தல் போன்றவற்றை மேற்கொண்டனர். அமெரிக்க ராணுவ படையால் இந்த இடத்தை எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் ஜனவரி 7 ,1966 -ம் ஆண்டு Operation Crimp மற்றும் Operation Cedar Falls என்ற இரண்டு மிகப்பெரிய தாக்குதலை மேற்கொண்டது. இதில் B-52 Bombers மூலம் 30 டன் வெடிகுண்டுகள் கு-ச்சி ஊர் முழுவதும் குண்டு மழையை பொழிந்தது. மொத்தம் 38,000 அமெரிக்க ராணுவ படைகள் இதில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதில் அந்த பச்சை வனம் பாலை நிலமானது. ஆனால் இந்த தாக்குதல் அமெரிக்காவிற்கு பெரும் தோல்வியை தந்தது. இதற்கு வியட்நாமின் போர்ப்படை கையாண்ட போர் யுத்தியும், MACV (Military Assistance Command Vietnam) கொடுத்த பயிற்சியே காரணம் என்றது அன்றைய பெரிய நாளிதழ் ஒன்று. வியட்நாம் வரலாற்றில் அமெரிக்கர்களுக்கு மிகவும் சவாலான இருந்தது இந்த கு-ச்சி சுரங்கப்பாதை (Cu Chi Tunel). சுரங்கத்திலிருந்து வெளிவந்தபோது வியட்நாமிய படை தன் நாட்டின் விடுதைலைக்கு எப்படி போராடியுள்ளனர் என்பதை கண்டு வியந்த இடம் கு-ச்சி சுரங்கம். இந்த இடம் தற்போது போர் நினைவு பூங்காவாக அரசு சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. போரில் கு-ச்சி சுரங்கம் போன்றே மற்றொரு இடம் Ho Chi Minh Trial.

ஹோ சி மின் பாதை (Ho Chi Minh Trial)

எப்படி இப்படி ஒரு உழைப்பாளர் நாடு அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடியதில் தோழர் ஹோவிற்கு மிகப் பெரிய பங்கு உண்டோ, அதை போன்றே உலகின் மிக நீண்ட போரை வென்றதில் இந்த ஹோ சி மின் பாதை ஒரு மிகப்பெரிய ஆயுதம். இந்த வழியேதான் வட வியட்நாமிய கூட்டுப்படை தெற்கு வியட்நாமுக்கு தனது இராணுவத்தையும், ஆயுதங்களையும் லாவோஸ், கம்போடியா வழியாக கு-சி சுரங்கத்திற்கு எடுத்து சென்றனர். இதனை தொடர்ந்தே தெற்கு வியட்நாமியப்படை (Viet Cong) போரை முன்னெடுத்தது.

படிக்க:
எனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்! வீடியோ!!
♦ வட இந்தியாவில் சாதி – எனது பயண அனுபவங்கள் !

இதை அறிந்த அமெரிக்கப்படை இந்த பாதைக்கு இப்பெயரை வைத்தது. இந்த பாதையில் லாவோஸ் பெரும் பகுதியை கொண்டுள்ளது. இங்கு தான் வட கம்யூனிஸ்ட் கூட்டுப்படை தனது போர் யுத்திகளை (Strategic Supply Route) வகுத்தனர். அதை அறிந்த அமெரிக்கப்படை லாவோஸ் மீது குண்டுகளை வீசியது. உலகிலேயே மிக அதிக குண்டுகள் வீசப்பட்ட நாடு லாவோஸ்.

1964 முதல் 1973 வரை சுமார் பத்து ஆண்டுகள் 2.1 மில்லியன் டன் வெடிகுண்டுகள் இன்றும் அந்த மண்ணில் புதைந்து மக்களை கொன்று கொண்டுதான் இருக்கிறது. இந்த பாதையை அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமை (National Security Agency ) ஆவணத்தில் (“One of the great achievements of Military Engineering of the 20th Century”) இருபதாம் நுற்றாண்டின் போர் வரலாற்றில் மிக உயர்ந்த ராணுவ பொறியியல் கட்டமைப்பு என்றது. இதன் காரணமாகத்தான் போரை வெல்லமுடியவில்லை என்று பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டது

கம்பீரமான கல்லறையில் ஒரு புரட்சியாளரின் உறக்கம்

வியட்நாமின் தேசத்தந்தை, புரட்சியாளர், தொழிலாளர் கட்சியின் தலைவர் என பன்முகம் கொண்ட தோழர் ஹோ சி மினின் சமாதி.

வியட்நாமின் தலைநகரமான ஹனாயில் உள்ள (Ba Dinh Square) பா தின் சதுக்கத்தின் நடுவில் மிக கம்பீரமான கல்லறை உள்ள கட்டிடத்தில் அவரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இவர் பிரதமராக, அதிபராக 1954 முதல் 1965 வரை பதவி வகித்தார். பின் உடல் நலக் குறைவால் பதவி விலகினார். ஒருங்கிணைந்த வியட்நாம் உருவாக வித்திட்டவர் ஹோ சி மின். “தன் வரலாறு தெரியாத ஒருவன் பிணத்திற்கு சமமானவன்” என்ற விடுதலை வேட்கையை மக்களின் மனதில் கொண்டு சேர்த்த மாபெரும் மனிதரின் உடல் அங்கு உறங்கிக் கொண்டிருக்கிறது. அங்கு சென்றதும் என்னை அறியாமல் என் கைகள் உயர்ந்து லால் சலாம் சொன்னது. அந்த இடத்தை விட்டு வர மனம் இல்லாமல் தவித்தது என் மனது.

வியட்நாம் நிலவியல் அதிசயங்கள்

இந்த பயணத்தில் மிக நீண்ட நாட்கள் பயணித்தது வியட்நாமில் தான். தெற்கு வியட்நாமில் ஹோ சி மின் சிட்டி, ஹோய் அன், கு-சி டனல், ஹேவே, நேத்ரங், டனங் போன்ற பல இடங்களும் சென்றோம். ஆனால் என்னை மிகவும் கவர்ந்தது வட வியட்நாம் மலைகளும், வனங்களும், கடலும் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் அழகிய பகுதிகள்தான்.

நின் பின், போங்கனா குகை, சபா விவசாயம், ஹனோய் மானுட உலகின் சொர்க்கம் அது. என் வாழ்வில் இன்னொரு முறை செல்ல வேண்டும் என்று நினைத்த இடம் வியட்நாம். வியட்நாமில் மிக பெரிய சிகரம் பான்சிபன் மலைதான். இந்தோ சீன தீபகற்பத்தில் (வியட்நாம், லாவோஸ், கம்போடியா உள்ளடக்கிய நாடுகளில்) உயர்ந்த மலைப்பகுதி. இங்கு நாள்தோறும் 1,000 மலையேறிகள் அதன் அழகைக் காண செல்லுகிறார்கள்.

vietnam
சபா விவசாயம்

இந்த மலையேற்றம் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை ஆகும். இதன் உயரம் சுமார் 3,143 மீட்டர் (10,326 ft) கொண்டது. இங்கு ஆண்டு தோறும் பூக்கும் பல்வேறு வகை பூக்கள், தாவரங்கள், விலங்குகள் வாழ்வதால் அதை பாதுகாக்கும் நோக்குடன் அந்த நாடு அப்பகுதியை தேசிய பூங்காவாக அறிவித்து உள்ளது. அந்த நாட்டின் இன்னொரு அதிசயம் ஹா லாங் பே (காலங் விரிகுடா). இது UNESCO-வினால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கையின் மற்றொரு அதிசயம் சபா.

சபா விவசாயம் மலையில் பயிர்விக்கும் முறை அந்த நிலத்தின் அடையாளம். இதைக் காண சுற்றுலா பயணிகள் படையெடுக்கின்றனர். உலகின் மிக பெரிய குகையும் இங்குதான் உள்ளது. அதன் பெயர் ஹாங் சன் டூங் (Hang Son Doong) இப்படி சொல்லிகொண்டே போக இயற்கையின் அதிசயங்கள் அங்கே கொட்டிக் கிடக்கிறது.

பயணம் சொன்னது

வியட்நாமியர்களிடம் உரையாடியபோது அவர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக இருந்தாலும் இயற்கையை பெரிதும் நேசிப்பவர்களாக உள்ளனர். ஆண் – பெண் என்று வேறுபாடு மிகவும் குறைவு.

சமநிலையில் ஒரு சமூகம் பயணிக்கும்போது குடும்ப அமைப்பு உடைகிறது என்பதை பொய்யாக்குகிறது வியட்நாம். அங்கு மக்கள் குடும்ப அமைப்புடனே பெரிதும் வாழ்கின்றனர். எல்லோரும் வாழ்வதற்கான நிலத்தை அரசாங்கம் சமமாக பிரித்து வழங்கி இருக்கிறது. மக்கள் தங்கள் தாய் மொழியிலேயே கல்வி கற்கின்றனர். இலவச கல்வி, சுகாதாரத்தை அரசு உறுதி படுத்தியுள்ளது. ஒரு மருத்துவக் கல்லூரிக்கு சென்றோம் அங்கு ஒரு மாணவனிடம் உரையாடிய போது ஆங்கிலம் தெரியவில்லை. பின் எப்படியோ மொழிபெயர்ப்பளர் உதவி கொண்டு பேசியதில் அவனுக்கு அவனது சமூகம் மற்றும் படிப்பு சார்ந்த விஷயங்கள் நன்றாக தெரிந்திருக்கிறது என்பது புரிந்தது. ஆங்கிலம் தொடர்பு மொழியே தவிர வேறு ஏதும் இல்லை என்பதை உணர்த்திய தருணமது.

vietnam
கடைகோடி கிராமங்களுக்கும் அடிப்படை வசதிகள் போய் சேர்ந்துள்ள வியட்நாம்.

அங்கு ஒரு மருத்துவ மாணவனின் படிப்புச் செலவு வெறும் 35,000 டங்கள் மட்டுமே. இது இந்தியாவை காட்டிலும் மிகவும் குறைவு. நாங்கள் சபாவில் ஒரு வீட்டில் நான்கு நாட்கள் தங்கியிருந்தோம். அந்த அனுபவம் கண்களுக்கு இயற்கை கொடுத்த விருந்து. நாங்கள் மூன்று மலைகளைக் கடந்துதான் அந்த வீட்டிற்கு சென்றோம். மலையின் கடைக்கோடியிலும் மின்சாரம், சாலை, பள்ளி, ஆப்டிக் கேபிளுடன் கூடிய இன்டர்நெட் வசதி என மக்களுக்கு அனைத்தும் சென்று சேர்ந்திருக்கிறது.

இதைப் போன்றே மும்பையில் உள்ள பிரபல மலையேற்றம் ஒன்றிற்கு சென்ற போது அங்கும் மலையில் ஒரு பள்ளி இருந்தது, ஆனால் பத்து ஆண்டுகளாக பூட்டப்பட்ட நிலையில். மக்களுக்கு தேவையான அத்தியாவசியத்தை கொடுப்பதுதான் அரசாங்கத்தின் கடமை. அங்கும் வறுமை இருக்கிறது. ஆனால் அத்தியாவசியங்களை தடுக்கும் நிலைமையில் அல்ல. போரிலிருந்து மீண்ட ஒரு நாடு இன்று இப்படி எல்லா வளங்களுடன் தலை நிமிர்ந்து நிற்கிறது என்பது வரலாற்றில் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று.

மக்களே வரலாற்றை உருவாக்குகிறார்கள்

வியட்நாம் போராளிகள் அனைவரும் அந்த மண்ணின் மைந்தர்கள். உலகின் மிகப் பெரிய ஏகாதிபத்திய அரசிடம் அடிமைப்படாமல், “சுதந்திரம் மட்டுமே எங்கள் கனவு” என முழங்கிய வியட்நாம் போர், வரலாற்றில் மனித இனத்தை மீட்டு எடுத்து இருக்கிறது.

மக்களின் நம்பிக்கையாய் திகழ்ந்த ஹோ சி மின்-ன் வார்த்தைகள் அவர்களை அதிகாரத்தையும், வன்முறையும் தோற்கடித்து; சமூகநீதியையும், சுதந்திரத்தையும் நிலைநாட்டச் செய்திருக்கிறது. வரலாறு மக்களுக்கானது மக்களே அவற்றை உருவாக்குகிறார்கள். கொண்டாடுவோம் மக்கள் போராட்டத்தின் 50-ம் ஆண்டு வெற்றி விழாவை !

சிந்துஜா சமூக ஆர்வலர்.

தமிழ் மக்கள் வரலாறு – ஆனந்தரங்கன் நாட்குறிப்புகள் – PDF வடிவில் !

4

18-ம் நூற்றாண்டில் புதுவையில் வாழ்ந்த ஆனந்தரங்கன் பிள்ளையின் நாட்குறிப்புகள் ( 06.09.1736 முதல் 12.01.1761 வரை ) PDF வடிவில் பனிரெண்டு நூல்கள் உங்கள் கையில்.

நண்பர்களே…

பொ.வேல்சாமி

ம் நாட்டில் படிப்பறிவுள்ளவர்களில் பலர் “வரலாறு” என்பதை சரிவர புரிந்துகொள்ளாதவர்களாக இருக்கின்றனர். மக்களை ஏமாற்றும் வஞ்சகர்கள் இந்த இருள்பகுதியை செம்மையாகப் பயன்படுத்திக் கொண்டு தங்களை வளர்த்துக் கொள்கின்றனர். இதனால் நாட்டு மக்கள் ஏமாளிகளாக ஆகின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டுமானால் குறிப்பிட்ட செய்திகளை மக்கள் எவ்விதம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய விவாதம் நம்மிடையே உருவாக வேண்டும். இதற்கு துணை செய்யும் விதத்திலான பல நூல்கள் தமிழில் உள்ளன. இவற்றை படிக்கும் கல்வியாளர்கள் இச்செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

தமிழக வரலாற்றை அறிந்து கொள்வதற்கு கி.மு.500 தொடக்கம் பதிவாகியுள்ள பிராமி எழுத்துக்களில் தொடங்கி சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம், காப்பியங்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், வெளிநாட்டு அறிஞர்களின் பயணக் குறிப்புகள் போன்றவற்றைத் தொடர்ந்து கல்வெட்டுக்கள் செப்புப் பட்டையங்கள் பிற்காலங்களில் தமிழ்நாட்டுக்கு வந்த ஐரோப்பிய பாதிரிமார்கள் பயணிகளின் குறிப்புகள் போன்ற பல தகவல்கள் கிடைக்கின்றன.

ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கத்தில் எழுதப்பட்ட “புளுடார்க்” போன்ற வரலாற்றுக் குறிப்புகள் நம்மிடையே இல்லை. அதே நேரத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் புதுவையில் வாழ்ந்த ஆனந்தரங்கன்பிள்ளையின் தினசரி நாட்குறிப்புகள் நமக்குக் கிடைத்துள்ளன. ரங்கப்ப திருவேங்கடம்பிள்ளை (1760-1766), இரண்டாம் வீராநாயக்கர் நாட்குறிப்பு (1778 -1792 ) போன்றவர்களின் நாட்குறிப்புகளும் நமக்கு கிடைத்துள்ளன. இதில் ஆனந்தரங்கன்பிள்ளையின் நாட்குறிப்பை அடிப்படையாக வைத்து “வானம் வசப்படும்” என்ற மிக அருமையான நாவலை எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதியிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

பழங்காலத்தில் தமிழ் மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்வில் எந்தெந்த வகையான பிரச்சனைகளையும் வாழ்க்கை அனுபவங்களையும் பெற்றார்கள் என்பதை இந்த நாட்குறிப்புகள் நமக்கு திரைப்படக் காட்சிகளைப் போன்று காட்டுகின்றன. நமக்கு தமிழ்நாட்டு அறிவை சிறப்பாகக் கொடுக்கும் இந்த நாட்குறிப்பை நீங்கள் எல்லாம் பயன்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பாக அதற்கான இணையதள இணைப்பை இவ்விடம் கொடுத்துள்ளேன். 18ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பேச்சுவழக்குத் தமிழ் உரைநடையாக இருப்பதால் படிப்பதற்கு கொஞ்சம் பொறுமையுடன் முயன்று படிக்க வேண்டும்.

குறிப்பு : இந்தத் தொகுதிகளில் பதினொன்று மட்டும் கிடைக்கவில்லை. கையில் இதன் PDF வைத்திருக்கும் நண்பர்கள் இணைப்பைக் கொடுத்தால் உதவியாக இருக்கும்.

( பிடிஎஃப் டவுண்லோடு செய்ய )

ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு : தொகுதி ஒன்று

ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு : தொகுதி இரண்டு

ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு : தொகுதி மூன்று

ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு : தொகுதி நான்கு

ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு : தொகுதி ஐந்து

ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு : தொகுதி ஆறு

ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு : தொகுதி ஏழு

ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு : தொகுதி எட்டு பாகம் – 1

ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு : தொகுதி எட்டு பாகம் – 2

ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு : தொகுதி ஒன்பது

ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு : தொகுதி பத்து

ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு : தொகுதி பன்னிரண்டு

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

காஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம் – கருத்துப்படம்

காஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம், 35A நீக்கம் !

அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் காஷ்மீர் ஒரு வேட்டைக் காடு ! இனி பாரு பிஸினெஸ் பிச்சிக்கிட்டு ஓடும் !

கருத்துப்படம் : வேலன்

போலீசு நிலையம் முற்றுகை : அண்ணாமலை பல்கலை மாணவர்கள் அதிரடி !

0

டலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்
பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். விடுமுறை காலங்களில் மாணவர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு சென்று விட்டு பகல் – இரவு நேரங்களில் பல்கலைக்கழகத்திற்கு வருவது சகஜமானது. கடந்த 04.08.2019 (ஞாயிறு) அன்று மூன்று மாணவர்கள் – தங்களை பாதிக்கூடிய – மோடியின் புதிய கல்வி கொள்கையைக் கண்டித்து நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட இரவு 12:30 மணி அளவில் பல்கலைகழகத்திற்கு வந்தனர்.

அங்கு ரோந்துப் பணியில் இருந்த காவலர் கௌதமன் மாணவர்களைப் பார்த்து உன் பேர் என்ன; என்ன படிக்கிற; உங்க அப்பா என்ன செய்றாங்க; எங்க போய்ட்டு வர; குடிச்சிருக்கியா..? என விசாரித்துள்ளார். போலீசின் எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்த அம்மாணவர்களை, என்னடா திமிரா பேசுற என ஆபாச வார்த்தைகளால் மாணவர்களையும், குடும்பத்தினரையும் கடுமையான பேசினார்.

“சார், நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொன்னால் இப்படிதான் பேசிவீங்களா..!” என கேட்டதற்கு. “என்ன திமிருடா உனக்கு.. கேஸ் போட்டா வாழ்க்கையே போயிடும்.. உன் வார்டன் யார்ரா ? தே.. பய…” எனக் கடுமையாக பேசி விடுதி வாசலில் நின்று மீண்டும் மிரட்டினார். சட்ட ஒழுங்கைக் காப்பாற்றும் யோக்கிய சிகாமணி கௌதமனின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனை கண்டிக்கும் விதமாக மறுநாள் மாணவர்கள் 40 -பேர் திரண்டு சென்று “மாணவர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என போலீசு துணை கண்காணிப்பாளரிடம் (DSP) மனு அளித்தனர்.

மேலும் “இதுபோன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து போலீசு ஈடுபட்டால், பல்கலைக்கழக மாணவர்களைத் திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என அண்ணாமலை பல்கலைக்கழக அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி (மாவட்ட செயலாளர்) தோழர் மணியரசன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி (மாவட்ட செயலாளர்) தோழர் பால. அறவாழி ஆகியோர் உடனிருந்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர் மாவட்டம். தொடர்புக்கு: 97888 08110

திருவாரூர் : தமிழகத்தை நாசமாக்காதே ! – மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்

அணுக்கழிவுகள் – ஹைட்ரோகார்பன் – எட்டுவழிச் சாலை 

தமிழகத்தை நாசமாக்காதே !

கருத்தரங்கம்

நாள் : 10.08.2019, மாலை 3 மணி,
இடம் : தோழர் கு.ம.பொன்னுசாமி நினைவு அரங்கம், U.P மஹால், திருவாரூர்.

நிகழ்ச்சி நிரல்

தலைமை :

தோழர் தங்க. சண்முகசுந்தரம்
தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் – மக்கள் அதிகாரம்.

வரவேற்புரை :

தோழர் லெ. செழியன்
திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் – மக்கள் அதிகாரம்.

நேருரை :

தோழர் P. ஜானகி ராமன்
நன்னிலம் பாதுகாப்பு இயக்கம், நன்னிலம்.

திரு P. செல்வகணபதி
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், கமலாபுரம்

கண்டன உரை :

தோழர் G. சுந்தரமூர்த்தி
CPI(M) மாவட்ட செயலாளர்.

தோழர் பழனி
பொது செயலாளர், மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி.

தோழர் மா. வடிவழகன்
வி.சி.க மாவட்ட செயலாளர் (தெற்கு) திருவாரூர்.

தோழர் V.T. செல்வம்
வி.சி.க மாவட்ட செயலாளர் (வடக்கு) திருவாரூர்.

திரு வாரை. பிரகாஷ்
திமுக நகர செயலாளர், திருவாரூர்.

திரு K.S.S. தியாக பாரி
திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர்.

தோழர் வீ. மோகன்
திராவிடர் கழகம், மாவட்டச் செயலாளர்.

திரு C.A. பாலு
திருவாரூர் வர்த்தக சங்க தலைவர்

சிறப்புரை :

தோழர் G. வரதராஜன்
தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில இணை செயலாளர்.

பொறியாளர். கோ. திருநாவுக்கரசு
தலைவர், தாளாண்மை உழவர் இயக்கம்.

தோழர் அய்யநாதன்
பத்திரிக்கையாளர்.

தோழர் காளியப்பன்
மக்கள் அதிகாரம், மாநில பொருளாளர்

காவிரி படுகையில் பூமிக்கு மேலே நெற்பயிர்… கீழே ஹைட்ரோ கார்பன்.. எது நமக்கு தேவை? முடிவு செய்வோம் வாரீர் !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை – திருச்சி மண்டலங்கள்.
தொடர்புக்கு : 82207 16242, 94454 75157.