Monday, July 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 205

வைரஸ் ஆராய்ச்சிக்கு நிதியளிக்கும் அமெரிக்க இராணுவம் || ஜி. கார்ல் மார்க்ஸ்

ந்தியா ஆராய்ச்சிக்கு போதுமான நிதி ஒதுக்குவதில்லை என்கிற புலம்பல் ஒரு பக்கம் இருந்து கொண்டே இருந்தாலும், பொதுவாகவே ஆராய்ச்சிகளுக்கு ஒதுக்கப்படுகிற பணம் எவ்வளவு, எந்தெந்த ஆராய்ச்சிக்கு எவ்வளவு பணம் ஒதுக்கப்படுகிறது என்கிற மேலோட்டமான தகவல்களைப் படித்தாலே பிரமிப்பாக இருக்கும்.

அணு ஆராய்ச்சி, வைரஸ் குறித்த ஆராய்ச்சி போன்ற பெரிய இடத்து ஆராய்ச்சிகளை விடுங்கள், மானுடவியல் இலக்கியம் போன்ற துறைகளே கூட பாதாள கிணறு போன்றவை. நரிக்குறவர்களின் பேச்சு மொழி, பண்டைய தமிழனின் குறுவாள் எப்படி இருந்தது போன்ற ஆராய்ச்சிகளுக்குக் கூட பெருமளவில் பணம் ஒதுக்கப்படுகிறது. அது மிகப்பெரிய லாபியிங் நெட்ஒர்க். அதைக் கையாள்பவர்கள் மிகவும் தந்திரசாலிகள். நம்மைப்போன்ற துக்கடாக்கள் கவனம் செலுத்தும் இடமே அல்ல அது.

படிக்க :
♦ வைரஸ்கள் எப்படி உருமாறுகின்றன ? || ஓர் அறிவியல் விளக்கம் !
♦ இலாபத்திற்கான உற்பத்தியின் உலகமயமாக்கலும் – வைரஸ்களின் பரிணாமமும் !!

இந்த கொரோனா வைரஸ் விவகாரம் உலகையே ஆட்டிப்படைக்கிறது. கிட்டத்தட்ட உலகம் ஸ்தம்பித்திருக்கிறது. அதைச் சுற்றி நிகழும் conspiracy theory யில் மிகவும் முக்கியமானது, “இந்த கொரோனா வைரஸ், சீனாவின் வுஹான் சோதனைக் கூடத்தில் இருந்து கசிந்ததுதான்” எனும் தியரி. அதை சீனா மறுத்திருக்கிறது. WHO மூலம் சீன வைரஸ் ஆராய்ச்சிக் கூடங்களை சோதனையிட வேண்டும், அங்கு என்னென்ன ஆராய்ச்சிகள் நடக்கின்றன, அவை சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கின்றனவா என்பதை ஆராய வேண்டும் என்றெல்லாம் அமெரிக்காவிலும் மேற்கிலும் குரல்கள் கேட்கத் துவங்குகின்றன.

நோய்த்தொற்று குறித்த ஆராய்ச்சிகள், புதிய மருந்துகளுக்கான ஆராய்ச்சிகள், மரபணு மீதான ஆராய்ச்சிகள், குளோனிங் போன்ற ஆராய்ச்சிகள் என இதன் எல்லைகள் பரந்து விரிந்தவை. அந்தக் கயிறின் நுனி எங்கு தொடங்குகிறது எங்கு முடிகிறது என்பதை யாராலும் கணிக்க முடியாது.

குளோனிங்கில் டாலி என்கிற ஆட்டுக்குட்டியை உருவாக்கியதும் அது பரபரப்பான சம்பவமாக பேசப்பட்டதும் நினைவில் இருக்கலாம். கடவுளின் வேலையை நாம் செய்வதா? இது உலக அழிவுக்கு நம்மை இட்டுச் செல்லும் என்று மத அமைப்புகள் ஒரு பக்கம் கண்டனம் செய்தன. உலகம் உருண்டை என்று சொன்னாலே கூச்சலிட்ட பிற்போக்கு அமைப்புகள் அவை, எப்போதும் அவர்கள் அறிவியலுக்கு எதிராகவே இருந்திருக்கிறார்கள் என்று மத அமைப்புகளை இந்த ஆராய்ச்சிக்கு ஆதரவான அமைப்புகள் எதிர்கொண்டன.

மத அமைப்புகள் எப்போதும் அரசின் உறுப்புகள் ஆகையால் அவற்றின் குரல் ஒரு அளவுக்கு மேல் எழவில்லை. ஆனால், இவற்றில் இருக்கும் அறம் சார்ந்த கேள்விகளுக்கு ஆராய்ச்சி அமைப்புகள் முகம் கொடுக்கவே இல்லை. அவற்றை எழுப்பியது மத அடிப்படைவாதிகள் அல்ல. மானுடவாதிகள். ஆராய்ச்சிக் கூடங்கள், கார்ப்பரேட்டுகள், நவ முதலாளித்துவ அரசுகள் எனும் கூட்டை அவர்கள் சந்தேகத்துக்கு உள்ளாக்கினார்கள். இது வழக்கமான முரட்டு இலுமினாட்டி தியரி அல்ல. மாறாக, அவர்கள் மானுட விழுமியங்களின் அடிப்படையில் தங்களது அதிருப்திகளையும் சந்தேகங்களையும் முன்வைத்தார்கள். அந்த உரையாடல்கள் மேற்கில் இன்னும் சமூக அரங்கில் இருந்து கொண்டே இருக்கின்றன.

சீனா, குளோனிங்கில் மனிதனை உருவாக்கும் சோதனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது என்கிற செய்தி இரண்டு ஆண்டுக்கு முன்பே கசிந்தது. இந்த கொரோனா அலையில் அது பரவலாக விவாதிக்கப்படாமல் இருக்கிறது. சீனாவின் வெளிப்படைத் தன்மை உலகம் அறிந்ததுதான். கல்வான் பள்ளத்தாக்கில் ஒரு குளோனிங் படைவீரனோடு இந்திய வீரன் மோதும்போதுதான் நமக்கே தெரியவருமோ என்னவோ. போகட்டும், அது ஜீயின் கவலை. நாம் இந்த கொரோனா ஆராய்ச்சிக்குத் திரும்புவோம்.

இந்த கொரோனா வைரஸ் ஆராய்ச்சி விவகாரத்தில் முக்கியமான விவாதமாக இருப்பது, விஞ்ஞானிகள் வவ்வாலின் மீது செய்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிகள். சும்மா இணையத்தில் Bat Woman என்று அடித்து தேடிப்பாருங்கள். சீனாவின் பிரபலமான ஒரு பெண் விஞ்ஞானி, வுகான் என்று நம்மை பல இடங்களுக்கு அது கூட்டிப் போகும். பொழுது போகவில்லை என்றால் அவற்றைப் படித்து ஜாலியாக பீதியடையலாம். கொஞ்சம் அரசியல் பிரக்ஞயை இருந்தால், இப்போது நான் செய்வது போல, ராணுவம் + மருத்துவம் + நவ முதலாளித்துவம் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து யோசித்து முடியைப் பிய்த்துக் கொள்ளலாம்.

இதை ஏன் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றால், நாகாலாந்தில் நடந்த வவ்வால் மீதான வைரஸ் ஆராய்ச்சி குறித்த செய்திகளையும், அந்த சோதனைத் திட்டத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் மீறப்பட்டிருக்கிறதா என இந்தியா விசாரணைக்கு ஆணையிட்டிருந்ததும், அதன் அறிக்கை இப்போது வெளிவந்திருப்பதையும் இரண்டு வாரங்களுக்கு முன்பு The Hindu கவனப்படுத்தியிருந்தது. அதையொட்டி நேற்று ஒரு செய்தி வந்திருக்கிறது. நாகாலாந்தில் நடந்த ஆராச்சிகளின் முடிவில் வெளியிடப்பட்டிருக்கும் ஆவணத்தில் co-researcher-ஆக இருப்பவர் ஒரு வுஹான் மருத்துவ விஞ்ஞானி.

நமது முகநூல் பக்கத்தில் இருக்கும் மருத்துவர்கள் யாராவது இந்த ஆராய்ச்சிகளைப் பற்றி, அது பற்றி வரும் செய்திகளைப் பற்றி எளிய மொழியில் நமக்குப் புரிவது மாதிரி விளக்கி எழுதலாம். ஆனால், எனக்குப் பிடித்த இரண்டு மூன்று மருத்துவர்கள் netflix, amazon prime போன்ற தளங்களில் ரிலீசாகும் ஏதாவது மொக்கை தமிழ்ப் படங்களைப் பார்த்துவிட்டு வந்து மன உளைச்சலோடு சினிமா குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளாக எழுதித் தள்ளுகிறார்கள். போகட்டும். இருந்தாலும் நமக்கு சமூகப் பொறுப்பு இருக்கிறது அல்லவா.

நான் இந்த நாகாலாந்து ஆராய்ச்சிகள் குறித்து மேலோட்டமாகப் படித்தேன்.

அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் முகமைகள் அதாவது ஏஜென்சிகள் யாரென்று பார்த்தால் சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்த ஆராய்ச்சிக்கான நிதி எங்ஙனம் வந்திருக்கிறது என்று The Hindu குறிப்பிட்டிருப்பதை அப்படியே தருகிறேன் பாருங்கள்.

//the research was funded by U.S. Dept of Defense, U.S. Naval Biological Defense Research Directorate, and Indian Department of Atomic Energy, and credits researchers at Duke-NUS Singapore, U.S. Uniformed Services University as well as Shi Zhengli and Xinglou Yang from the Wuhan Institute for “writing- review and editing” the paper.//

இவர்களுக்கும் மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா பாருங்கள். இந்த ஆராய்ச்சித் திட்டங்கள் ராணுவ அமைப்புகளால் நடத்தப்படுகின்றன.

இப்போது நாகாலாந்தில் ஆராய்ச்சியையொட்டி நடந்த விசாரணையில் கூட, “சேகரிக்கப்பட்ட ஆபத்தான மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் எங்கு சேகரித்து வைத்திருக்கிறார்கள், அவை பாதுகாப்பான இடத்தில்தான் உள்ளனவா” என்கிற கோணத்திலேயே விசாரணை நடந்து அறிக்கை வெளிவந்திருக்கிறது.

அமெரிக்க ராணுவம், இந்திய அணுசக்திக் கழகம், வுஹான் வைராலஜி, சிங்கப்பூர் அமைப்பு என்று இந்த வலைப்பின்னலைப் பாருங்கள். இத்தகைய வைரஸ் ஆராய்ச்சிகளுக்கும் ராணுவத்துக்கும் தேசப் பாதுகாப்புக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றலாம். ஆனால், பயோ வார் என்ற அடிப்படையில் அணு ஆயுதங்களைப் போல செறிவூட்டப்பட்ட வைரஸ்களை ஆயுதமாகப் பயன்படுத்தும் போர் வியூகம் மற்றும் அவ்வாறு தாக்குதல்கள் நடக்கையில், அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள் என்ற அடிப்படையில் மிகுந்த பொருட்செலவுடன் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

படிக்க :
♦ கோவிட்19 அனுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
♦ உருமாறி வரும் கொரோனா : பெருந்தொற்றுகளின் வரலாறு !

இன்று இந்த கொரோனா வைரஸ் பரவி உலகத்தை முடக்கியிருப்பது நம்மைப் போன்ற குடிமக்களுக்கு surprise-ஆக இருக்கலாம். ஆனால், மருத்துவ விஞ்ஞானிகளுக்கு அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். பாதுகாப்பு குறைபாடு எங்கோ நடந்திருக்கிறது, அதனால்தான் வைரஸ் கசிந்திருக்கிறது என்ற அளவிலேயே அவர்கள் சிந்திப்பார்கள்.

இவற்றையெல்லாம் படிக்கையில் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. எப்படி அணுக்கழிவை அல்லது அணு ஆயுதத்தை அழிக்க முடியாதோ அதே போல வைரஸையும் அழிக்க முடியாது, அவற்றுக்கு எதிரான பாதுகாப்பு வழிமுறைகளை வேண்டுமானால் அதிகரித்துக் கொள்ளலாம் என்பதே அது. அணுவுக்கு எதிரான பாதுகாப்புக்கும், இந்த வைரஸுக்கு எதிரான பாதுகாப்புக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் குறித்து இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்.

ஜி. கார்ல் மார்க்ஸ்
முகநூலில் : Karl Marx Ganapathy

disclaimer

காவிரி உரிமைக்கான போராட்ட வழக்குகளை தூசி தட்டும் தமிழக போலீசு !

PP Letter headகாவிரி உரிமைக்காக போராடினால் பொய் வழக்கு !
தொடரும் தமிழக போலீஸின் அடக்குமுறை !

பத்திரிகைச் செய்தி

19.06.2021

டந்த 13. 03. 2019 அன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் திரு. வேல்முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் , மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி , திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் தபசி குமரன் , தமிழக மக்கள் முன்னணியின் தலைவர் தோழர் பொழிலன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தோழர் வன்னியரசு உள்ளிட்ட 20 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் 21.06.2021 அன்று மதியம் 12 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று போலீசார் அழைப்பாணை கொடுத்துள்ளனர்.

இதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் இவ்வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

படிக்க :
♦ கொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை !
♦ ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன ?

மேக்கேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா செயல்பட்டு வரும் இந்த சூழலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்திய பழைய வழக்குகளை தூசிதட்டி எடுப்பது என்பது மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.

அரசியல் கட்சித் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் என்று பெரிய அளவில் விளம்பரம் செய்த திமுக அரசு அவர்கள் குறிப்பிட்ட தலைவர்களை மட்டும் விடுவித்துவிட்டு மற்றவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை அப்படியே பராமரித்து வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று 2019-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் கொந்தளித்தது. பல லட்சக்கணக்கான மக்கள் தமிழகம் முழுவதையும் ஸ்தம்பிக்க வைத்தார்கள்.

சென்னை வந்த மோடி மூத்திர சந்தில் செல்லுமாறு பணிய வைக்கப்பட்டார். திரும்பும் பக்கமெல்லாம் ஆர்ப்பாட்டம் மறியல் கருப்பு பலூன்கள் என ஒட்டுமொத்த தமிழகமே போர்க்களமாக காட்சியளித்தது என்றால் அது மிகையல்ல. அந்தப் போராட்டங்களில் திமுக உள்ளிட்ட கட்சிகளும் கலந்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. அதன் விளைவாகத்தான் வேறு வழியின்றி காவிரி ஆணையம் அமைக்கப்பட்டது.

அதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தலைமையில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்களை திட்டமிட்டு பழிவாங்கவே சிபிசிஐடி போலீஸ் முடிவு செய்துள்ளது என்பதை அறியமுடிகிறது.

காவிரி உரிமைக்கான போராட்டம் என்பது தமிழர்களின் போராட்டம். இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கீழ்க்கண்ட பிரிவுகளைக் கொண்ட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இரு சமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேச்சுக்கள் இருப்பதால் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் இந்த FIRஐ தாக்கல் செய்திருக்கிறார் . இந்திய தண்டனைச் சட்டம் 153, 153A (1)(a), 153A (1)(b), 501 (1)(b), 501(1)(c) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

மேற்கண்ட பிரிவுகளுக்கான விளக்கம் கீழே உள்ளது.

கலகத்தை விளைவிக்கும் கருத்தோடு வேண்டுமென்றே ஆத்திரம் ஊட்டுதல்; சமய, இன ,மொழி வட்டார வகுப்பினர் சாதிகள் அல்லது சமூகங்களுக்கு இடையே ஒற்றுமையை நிலவுவதற்கான குந்தகமான பொது அமைதியை குலைப்பது அல்லது அனேகமாகப் குலைக்க கூடியதுமான செய்கை செய்வது; பொது மக்களுக்கு அல்லது பொதுமக்களில் ஒரு பிரிவினருக்கு பயம் அல்லது பீதியை விளைவிப்பதன் மூலம் அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தை செய்ய அதனால் தூண்டப்படலாம் என்று பயம் அல்லது பீதியைப் விளைவிக்கும் உக்கிரத்துடன் அல்லது அது அனேகமாக விளைவிக்கின்ற ஒரு செயல்
வகுப்பு அல்லது சமூகம் எதனையும் சார்ந்து ஆட்களை வேறு வகுப்பு அல்லது சமூகத்துக்கு எதிராக குற்றம் எதனையும் செய்யத் தூண்டும் உட்கருத்துடன் அல்லது அனேகமாக தூண்டுகின்ற உரை ,வதந்தி அல்லது அறிக்கை எதனையும் வெளியிடுகின்ற செயல் ..

மேற்கூறிய சட்டப் பிரிவுகளுக்கான விளக்கமான அத்தனை தவறுகளையும் செய்தது மோடி அரசு. மோடி அரசின் நடவடிக்கைகளால் தான் இப்படிப்பட்ட போராட்டம் நடைபெற்றது. மேற்கண்ட சட்டப்பிரிவுகள் மோடி அரசின் மீது போடப்படவேண்டும். மாறாக காவிரி நதிநீர் உரிமைக்காக போராடியவர்கள் மீது இந்த பிரிவுகள் போடப்பட்டு இருக்கின்றன.

காவிரி உரிமை போராட்டம் மட்டுமல்ல தமிழின உரிமைக்காக கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் செய்த போராட்டங்கள் எண்ணிலடங்காதவை. அப்படிப்பட்ட போராட்டங்களின் விளைவாக தான் அதன் அறுவடையை தவிர்க்க இயலாமல் திமுக நாடாளுமன்ற தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் ஈட்டியிருக்கிறது .

காவிரி நதிநீர் உரிமையை பறித்தது தவறு அல்ல; மாறாக அதற்கு எதிராக போராடியது தான் தவறு என்ற ஒரு நீதியை நமக்கு கற்றுக் கொடுக்கிறது அரசு. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் மக்களுக்காக தமிழ் உரிமைக்காக செய்யப்பட்ட அனைத்து போராட்ட வழக்குகளும் ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் மக்களுக்காக போராடுபவர்களை வழக்காடு மன்றங்களுக்கு அலைய விடுவதன் மூலம் முடக்குவது என்ற கடந்த அரசின் யுத்தியையே இந்த அரசும் பின்பற்றுகிறது.

கார்ப்பரேட் – காவி பாசிசம் மக்களின் வாழ்வை சூறையாடிக் கொண்டிருக்கும் பொழுது தன்மானமுள்ள எந்த மனிதனாலும் அமைதியாக இருக்க முடியாது. மக்களுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்து உள்ள அமைப்புகளும் போராளிகளும் நிச்சயமாக அடக்குமுறை மற்றும் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பார்கள் அதை யாரும் தவிர்க்க முடியாது.

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மத்திய மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராடியோர் மீதான அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

போலீசின் பொய் வழக்குகளை எதிர்கொள்வோம்!
மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம்!

தோழமையுடன்
தோழர் மருது ,
செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை

இலங்கை : மன்னார் நகர் பெண்களின் சொல்லப்படாத கதைகள் || எம். ரிஷான் ஷெரீப்

மன்னார் பெண்களால் இதுவரை சொல்லப்படாத கதைகள் !

லங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள மன்னார் நகரமானது, மன்னார் மாவட்டத்தின் பிரதான நகரமாகும். பிரபலமான மடு ஆலயம் இங்குதான் அமைந்துள்ளது. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ராமேஷ்வரம் பகுதிக்கு மிகவும் அண்மையில் அமைந்துள்ள இந்தத் தீவுத் தொகுதியில் பெரும்பான்மையாக வசிப்பவர்கள் கத்தோலிக்கர்கள் என்ற போதிலும், இன, மத ரீதியாக பல்வேறு கலாசாரங்களைப் பின்பற்றும் பல்வேறு தரப்பட்ட மக்களும் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். வெவ்வேறு அடையாளங்களோடு பல சமூகங்கள் இங்கு வாழ்ந்து வரும் போதிலும், செய்யும் தொழில், மொழி போன்றவற்றால் அவர்களது சமூக வாழ்வியல் ஒன்றாகப் பிணைக்கப்பட்டே காணப்படுகிறது.

நீண்ட நெடுங்காலமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இலங்கையின் தனித்த மூலையொன்றில் அமைந்திருக்கும் இந்தத் தீவின் மக்களுக்கு, இன்றும் கூட அமைதியான, இயல்பான வாழ்க்கை மறுக்கப்பட்டிருக்கிறது. இவற்றிடையே இங்குள்ள பெண்களும் பல்வேறு மட்டங்களில் பல்வேறு விதமான துன்புறுத்தல்களுக்கு தினந்தோறும் ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். கீழே தரப்பட்டுள்ள அனைத்தும், அவ்வாறான ஒடுக்குமுறைகளுக்கு ஆட்பட்டுள்ள பெண்கள் இதுவரை வெளியே சொல்லாத வாக்குமூலங்களாகும்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : கச்சத்தீவும் இந்திய மீனவரும் ..
♦ மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் எண்ணூர் ஆலைகள் ! | படக்கட்டுரை

சஞ்சுலா பீற்றர்ஸ்.

தற்கால நவீன உலகில் பெண்கள் எதிர்கொள்ள நேரும் பிரச்சனைகள் மிகவும் குறைந்துள்ளதாக மார் தட்டிக் கொண்ட போதிலும், இன்றும் புராதன காலத்தைப் போலவே பெண்கள் தமது சமூகத்துக்குள்ளேயே நிறைய பிரச்சனைகளை தினந்தோறும் சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதற்கு மன்னாரில் வசிக்கும் இந்தப் பெண்களின் கதைகள் ஒரு உதாரணம் மாத்திரமே.

இவ்வாறு உலகறிய வேண்டியதும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதும், விரைவில் தீர்க்கப்பட வேண்டியதுமான பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, சம்பந்தப்பட்ட பெண்களுடன் கலந்துரையாடி சமூகத்திற்கு வெளிக்கொண்டு வந்திருக்கிறார் சமூக சேவகியும், பெண் சட்டத்தரணியுமான சஞ்சுலா பீற்றர்ஸ்.

இதை வாசிக்கும் தமிழ் சமூகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஆதங்கத்தோடு அந்த உரையாடல்களை தமிழில் தந்திருக்கிறேன்.

000

ரோஸ்மேரி : எனது கணவன், நான்கு பிள்ளைகளோடு என்னைக் கைவிட்டுச் சென்ற போது மூத்த பிள்ளைக்கு 13 வயது. ஆரம்பத்தில் பிள்ளைகளோடு தெருவோரம் வசித்து வந்தேன். பிறகு, பாடுபட்டு ஒரு குடிசையை அமைத்துக் கொண்டேன். கடலில் இறால்களையும், கடலட்டைகளையும் பிடித்துத்தான் வாழ்ந்து வருகிறேன். இந்தப் பிரதேசத்திலுள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட குடும்பத் தலைவிகள் பெரும்பாலானோரின் ஜீவனோபாயத் தொழில் அதுதான். இருந்தாலும் தொழிலுக்குத் தேவையான எவ்விதமான உபகரணங்களும் இல்லாமல்தான் அவர்கள் அனைவருமே தமது தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமது கைகளைக் கொண்டே அவர்கள் இவற்றைப் பிடிக்கிறார்கள். ஆகவே, அடிக்கடி பல விபத்துக்களைச் சந்திக்கிறார்கள். குடும்பத் தலைவி, மீனவத் தொழிலில் ஈடுபடும் பெண்ணொருத்தி ஆகிய பொறுப்புகளைக் கொண்டுள்ள பெண் என்ற காரணத்தால் பலவிதமான ஒடுக்குமுறைகளுக்கு நான் அடிக்கடி ஆளாகிக் கொண்டிருக்கிறேன். எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எடுத்துக் கூற நான் முன்வரும் போது, ‘அதைப் பற்றிப் பேச ஒரு பொம்பளையான நீ ஏன் முன்வருகிறாய்?’ என என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். பெண்ணாக இருப்பதாலேயே பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது நான் அவமானப்படுத்தப்படுகிறேன்.

ரோஸ்மேரி

ஆண்களை மாத்திரம் உறுப்பினர்களாகக் கொண்டுள்ள இப் பிரதேசத்தின் மீனவர் சங்கம் ஆனது, மீனவத் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு உதவி செய்ய முன்வராத காரணத்தால் பெண்களால் மகளிர் மீனவர் சங்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. எமது மகளிர் மீனவ சங்கத்தால் வீடற்ற ஒரு குடும்பத்துக்கு வீடு கட்ட உதவி செய்தோம். பிரதேசத்தின் ஆடவர் மீனவர் சங்கமானது, நாம் அவர்களை மீறிச் செயல்படுகிறோம் என்று எம்மை அவமதித்து இடையூறு விளைவித்தது.

எமது ஊரில் அமைந்துள்ள கடற்படைத் தளத்தின் அனுமதி இல்லாவிட்டால், எமக்கு கடலில் இறங்க அனுமதி கிடைப்பதில்லை. இரவில்தான் கடல் அட்டைகளைப் பிடிக்க முடியும். அந்த நேரத்தில் கடற்படை இராணுவம் எமக்கு கடலுக்குப் போக அனுமதி தருவதில்லை. கடற்படை முகாமைச் சுற்றியுள்ள பகுதியை துப்புரவாக்கிக் கொடுத்தாலே கடலுக்குப் போக அனுமதியளிக்கும். இந்தக் கடற்தொழிலால்தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். ஆகவே அவர்களுக்குத் தெரிவிக்காமல் கடலுக்குச் சென்று வந்ததை அவர்கள் அறிந்து கொண்டால் எம்மிடம் ஐந்து கொப்பிகள், பத்துக் கத்திகள், கண்ணாடிக் குவளையொன்று, மின்சூள் விளக்கொன்றை வாங்கித் தருமாறு விதவைப் பெண்களான எங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். இவ்வாறான இடையூறுகளால் எம்மால் எமது வாழ்க்கையைக் கொண்டு செல்ல முடிவதில்லை.

இந்தக் காலத்தில்தான் கடலட்டைகள் அதிகளவில் அகப்படும் என்ற போதிலும் இதுவரை எமக்கு கடலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படாததால், ஏனைய மீனவர்கள் நாங்கள் தொழிலில் ஈடுபடும் எமது எல்லைக்குள்ளிருக்கும் கடலட்டைகளைப் பிடித்துச் செல்கிறார்கள். தலைமன்னாரிலிருந்து வரும் ட்ரோலர் கப்பல்களும் எல்லாவற்றையும் பிடித்துக் கொண்டு போவதோடு, அவற்றுடனே எமது வலைகளையும் அறுத்துக் கொண்டு போய் விடுகின்றன. அவ்வாறான நாட்களில் எமக்கு எதுவுமே கிடைப்பதில்லை. நாங்கள் வெறுங்கையுடன் வீட்டுக்குப் போக நேரும். அதனால், வலை வாங்கவென எடுத்த வங்கிக் கடனைச் செலுத்த வழியற்று சிலர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் பெண்கள் என்பதால் இவ்வாறான தொந்தரவுகளும், இடையூறுகளும் தொடர்ந்தும் நடந்து கொண்டேயிருக்கின்றன. ஆதரவற்று தனித்துப் போன பெண்களான நாங்கள் எமது சுய முயற்சியில் வாழ்க்கையைக் கொண்டு செல்ல மீனவத் தொழிலில் ஈடுபட்டுள்ள போதிலும் எமக்கு அதை ஒழுங்காகச் செய்வதற்கான வாய்ப்பேயில்லை.

000

அப்துல் கஃபூர் நஜீபா : நான் 2001-ஆம் ஆண்டிலிருந்து காதி நீதிமன்றத்துக்கு போய் வருகிறேன். பெண்ணின் வாக்குமூலத்தைக் கேட்க அங்கே பெண்ணொருவர் நியமிக்கப்பட்டிருப்பதில்லை. ஆகவே, எமது பிரச்சனைகளை அங்கு எம்மால் வெளிப்படையாகக் கதைக்க(பேச) முடிவதில்லை. ஆண்களிடம் கூற முடியாதவற்றை வெளிப்படையாக முறையிட்டுக் கூற அங்கு எவரும் இருப்பதில்லை. பெண்களின் கண்ணீர்க் கதைகளை காதி நீதிமன்றத்தில் கூறப் போய் பெண்கள் மிகவும் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு கூறப் போய் காதி நீதிமன்றத்தில் வைத்து காதி நீதவானே(நீதிபதியே) என்னை தூஷண(தகாத) வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியிருக்கிறார். குறைந்தபட்சம் நாங்கள் யாரென்று கூட அவர் விசாரிப்பதில்லை. நாங்கள் அனைவரும் சுய மரியாதையோடு வாழ வேண்டும். காதி நீதிமன்றத்தால் எனக்கு எந்த வித நீதியும் வழங்கப்படாத காரணத்தால் இப்போதெல்லாம் நான் காதி நீதிமன்றம் செல்வதில்லை.

அப்துல் கஃபூர் நஜீபா

போலீஸும் ஆண்களின் பக்கமே சார்ந்திருக்கிறது. போலீஸுக்குப் போனாலும் எம்மிடம் பணம் இருந்தால் மாத்திரமே உரிய நடவடிக்கை எடுப்பார்கள். அங்கும் பெண்ணென்ற காரணத்தால் கீழ்த்தரமாகத்தான் நடத்துவார்கள். ஐந்து வருடங்களுக்கு முன்பு நான் ஒரு முறைப்பாடு கொடுக்கப் போயிருந்த வேளையில் அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் மிகவும் மோசமான விதத்தில் என்னிடம் கதைத்தார்கள்(பேசுவார்கள்). ‘நீங்கள் போலீஸ் என்பதால்தானே இப்படியெல்லாம் பேசுகிறீர்கள். பெண்கள் விளையாட்டுப் பொருட்களில்லை. எங்களுக்கும் சுய கௌரவம் இருக்கிறது. அதனால் என்னிடம் இவ்வாறெல்லாம் பேச வேண்டாம்.’ என்று கூறி விட்டு வந்தவள்தான். அதற்குப் பிறகு ஒருபோதும் நான் எந்தப் பிரச்சனைக்கும் போலீஸுக்கே போகவில்லை.

நான் வாழும் சமூகத்திடமிருந்து எவ்விதமான உதவி உபகாரங்களும் கிடைக்கப் பெறாததால் நான் இப் பிரதேசத்திலுள்ள மகளிர் சங்கமொன்றில் இணைந்திருக்கிறேன். இணைந்ததன் பிறகு, எனக்கு உதவி கிடைத்தது. நான் பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பிள்ளைகளை வாழ வைப்பதற்காகவே பாடுபடுகிறேன். நாங்கள் ஆணின் துணையற்று தனித்து வாழும் பெண்கள் என்பதால் அனுபவிக்க வேண்டிய அனைத்து அநீதங்களுக்கும்(அநீதிகளுக்கும்) முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

000

அந்தோனி அம்மா : போலீஸுக்குப் போனாலும் நேரடியாக எமது முறைப்பாடுகளை முன்வைக்க முடியாது. அதிகாரிகள் அனைவரும் சிங்கள மொழி பேசுபவர்கள் என்பதனால் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் ஊடாகத்தான் எமது பிரச்சனைகளை எடுத்துக் கூற வேண்டியிருக்கிறது. மொழிபெயர்ப்பாளர் அவர்களிடம் என்ன சொல்கிறார், அதைக் கேட்டு சிங்களத்தில் என்ன எழுதிக் கொள்ளப்படுகிறது என எதுவும் எமக்குத் தெரியாது. மொழிபெயர்ப்பாளர் ஒரு சொல்லையெனும் தவறாகச் சொல்லி விட்டால் நாம் கூறியதற்கு முற்றிலும் மாறுபட்ட விடயங்கள் குறித்துக் கொள்ளப்படலாம், இல்லையா? ஆகவே விசாரணை நடக்கும்போது உரிய மொழி அல்லாத காரணத்தால் நாங்கள் பலவிதமான சங்கடங்களை எதிர்கொள்ள நேர்கிறது.

அந்தோனி அம்மா

மன்னாரின் பிரதான தொழில் மீனவத் தொழில் ஆகும். பொதுவாக ஆண்கள் மீனவத் தொழிலில் ஈடுபடுவதோடு பெண்கள் இல்லத்தரசிகளாக இருப்பார்கள். பெண்கள் சொந்த வீடு கட்ட போன்ற பல்வேறு அத்தியாவசியத் தேவைகளுக்காக ஓரோர் நிறுவனங்களிடமிருந்தும் கடன் வாங்க முன்வருகிறார்கள். அந்த நிறுவனங்களும் பெண்களை இலக்காகக் கொண்டே கடன்களை வழங்குகின்றன. இன்னும் அதிக வட்டிக்கு பிற ஆட்களிடமும் பெண்கள் கடன் வாங்குகிறார்கள். தங்க நகையை அடகு வைத்து பணம் பெறுகிறார்கள். இவ்வாறாக, கடன் பிரச்சனை மன்னார் பெண்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இந்தப் பிரச்சனையைத் தீர்த்துத் தருமாறு கோரி நாங்கள் பிரதேச சபை அலுவலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் கூட நடத்தியிருக்கிறோம். எனினும், நாங்கள் பெண்கள் என்ற காரணத்தால் எமது பிரச்சனைகள் அவர்களால் பொருட்படுத்தப்படவேயில்லை. மன்னார் பிரதேச பெண்கள் ஈடுபட விவசாயம், கைத்தொழில்கள் அல்லது வேறு தொழில் வாய்ப்புகள் எதுவுமேயில்லை. குடும்பங்களில் ஆண்கள்தான் சம்பாதிக்கிறார்கள். பெண்களிடம் பொருளாதார பலம் இல்லாத காரணத்தால் கணவனிடம் ஒரு அடிமையைப் போல இருக்க நேர்ந்திருக்கிறது. இல்லாவிட்டாலும், பெண் என்ற காரணத்தால் எதிர்கொள்ள நேரும் ஒடுக்குதல்கள், அநீதங்களுக்கு முடிவேயில்லாமல் இருக்கிறது.

000

டிலானி குரூஸ் : நான் நகர சபை உறுப்பினர். எமது நகர சபையிலிருக்கும் 16 உறுப்பினர்களில் பெண்கள் மூவர் இருக்கிறார்கள். நான் தமிழ் பேசும் பெண்ணாக, அரசியலில் ஈடுபட்டுள்ளதால் சமூகத்தில் வேறுபாடுகள் காண்பிக்கப்படுகிறது. அரசியல் கட்சி மீதுள்ள வெறுப்பால் அவ்வாறு செய்யப்படுவதில்லை. பெண்ணாக இருப்பதாலேயே அவ்வாறு செய்யப்படுகிறது. பெண்களான நாங்கள் நகரசபை உறுப்பினர்களாக ஆகியுள்ளதால் எம்மை மனரீதியாகத் துன்புறுத்த, அவதூறு கூறுகிறார்கள். ‘பொம்பளைதானே நீ, உன்னால் என்ன செய்ய முடியும்?’ என்று கேட்டிருக்கிறார்கள்.

டிலானி குரூஸ்

அரசியலில் ஈடுபட்டுள்ள சில ஆண்கள் எமது நடத்தை குறித்து பலவிதமான அவதூறான கதைகளை சோடித்து சமூகத்தில் பரப்பி விடுகிறார்கள். அவற்றுக்கு அன்றாடம் முகம்கொடுத்தவாறே பணி புரிவதென்பது மிகுந்த மன அழுத்தத்தைத் தருகிறது. ஒரு பெண்ணைப் பற்றி அவ்வாறு மோசமான கதைகளைப் பரப்பி விட்டால் பெண்கள் பயந்து போய் அடங்கி விடுவார்கள் என்று அவர்கள் கருதிக் கொண்டிருக்கக் கூடும். பெண்களை அரசியல் ரீதியாக முன்னேற விடாமல் வீட்டுக்குள்ளேயே முடக்கி வைப்பதுதான் அவர்களது விருப்பம். நாங்கள் நான்கு வருடங்களுக்கே பதவி வகிக்கப் போகிறோம். பதவி வகிக்கும் எமக்கே இந்த நிலைமை என்றால், இந்தப் பதவிக் காலம் முடிந்த பிறகு சமூகப் பிரச்சனைகளில் தலையிட முடியாமலே போய் விடும்.

எமது நாட்டில் பெண்கள்தான் அதிகம் பேர் இருக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்காக சேவை செய்யவே பாடுபடுகிறோம். நாங்கள் குரல் எழுப்புவது சிறுவர்களினதும், பெண்களினதும் பிரச்சனைகளுக்காக என்பதை அறிந்திருந்தும் சில பெண்கள் எமக்கெதிராகப் பேசுகிறார்கள். பெண்களே பெண்களுக்கு எதிராக, ஆணாதிக்கத்துக்கு ஆதரவாக வேலை செய்கிறார்கள். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பெண்கள்தான் வெளிக் கொண்டு வர வேண்டும். பெண்களால் சாதிக்க முடியும் என்று தைரியமூட்ட வேண்டும். பெண்களுக்கு அரசியல் உரிமையை வழங்கவே வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு சமூகத்தைக் கொண்டு வர வேண்டும். நாங்கள் இன்று செய்யும் இந்தப் போராட்டம் எப்போதாவது ஒரு நாளில் மற்றுமொரு பெண்ணுக்கு பலமாக அமையும் என்று நம்புகிறேன்.

000

என்டன் ஜோய் செல்வநாயகி : என்னுடைய கணவர் ஒரு மாற்றுத் திறனாளி. அவரால் நடக்க முடியாது. சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பார். அவரை அங்கே, இங்கே அழைத்துப் போய் வர ஒவ்வொரு நாளும், ஆட்டோ வைத்திருப்பவர்களிடம் உதவி கேட்க நேர்ந்தது. அவ்வாறு உதவி செய்ய முன் வரும் ஆண்கள் என்னிடம் வேறு விடயங்களை எதிர்பார்த்துத்தான் அவ்வாறு எமக்கு உதவி செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டதன் பிறகு, ‘எனக்கு ஆட்டோவை ஓட்டத் தெரிந்திருந்தால் எவரது உதவியும் தேவைப்படாது அல்லவா?’ என்று தோன்றியது. நான் ஆட்டோ ஓட்டக் கற்றுக் கொண்டேன். ஆட்டோவுக்கு கணவரை ஏற்றவும் நான் எவரதும் உதவியை எதிர்பார்ப்பதில்லை. நான் பெண் என்பதால் என்னால் அவரைத் தூக்கிச் சுமக்க முடியாது என்றே எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் நான் தனியாகத்தான் அவரைத் தூக்கிச் சுமந்து ஆட்டோவில் ஏற்றிக் கொள்கிறேன். திடீரென்று ஆட்டோ செயலிழந்து போனால் எவ்வாறு பழுதுபார்ப்பது என்றும் நான் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டேன்.

என்டன் ஜோய் செல்வநாயகி

நான் தண்ணீர் மோட்டார்களை பழுது பார்க்கிறேன். மின்சார வேலைகளையும், கட்டுமான வேலைகளையும் செய்கிறேன். ஆட்டோ ஓட்டாத நேரங்களில் விற்பதற்காக ஆடைகளைத் தைத்து வருகிறேன். சில நிறுவனங்களிலிருந்து தாமாகவே, உதவி செய்யவென வந்தார்கள். அவர்களிடம் ‘எம்மால் ஏதாவது உழைத்துக் கொள்ள முடியும். எம்மை விடவும் நிர்க்கதி நிலையில் இருக்கும் எதுவுமே செய்ய வழியில்லாதவர்களுக்கு அந்த உதவிகளைச் செய்யுங்கள்’ என்று நாங்கள் கூறினோம்.

மன்னார் பிரதேசத்திலேயே ஆட்டோ ஓடும் ஒரே பெண் நான்தான். நான் ஆட்டோ ஓட்டுவதற்கு, ஆட்டோ ஓட்டும் ஆண்கள் கேலி, கிண்டல் செய்கிறார்கள். நான் பெண் என்பதால் எவரேனும் அவ்வாறு என்னைக் கேலி செய்யும்போது நான் அவரிடம் ‘எனக்கு ஆட்டோ ஓட்டத் தெரியும். உங்கள் மனைவிக்கும் வாகனம் ஓட்ட கற்றுக் கொடுங்கள்’ என்று உபதேசிப்பேன்.

எனது கணவர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார். நான் உறுதியான பெண் என்று அவர் அடிக்கடி கூறுகிறார். சமூகத்தில் என்னைப் பற்றி பேசப்படும் அவதூறுகளை அவர் பொருட்படுத்துவதில்லை. நாங்கள் இருவரும் திருமணம் முடித்து இப்போது 20 வருடங்கள் ஆகின்றன. நான் பணம் சேர்த்து ‘ஆண்கள் மாத்திரம் ஓடக் கூடியது’ என எல்லோரும் எண்ணியிருக்கும் பெரிய மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கியிருக்கிறேன். நான் பெரிய மோட்டார் சைக்கிள் ஓட்டுகிறேன் என்று எனது கணவரின் சகோதரர்கள் அவருடன் கதைப்பதில்லை.

படிக்க :
♦ பெண்கள் மீது தொடரும் சாதிய மற்றும் மூலதனத்தின் சுரண்டல் !
♦ பெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் !

ஒரு நாள் போக்குவரத்து போலீஸார் எனது மோட்டார் சைக்கிளைத் துரத்தி வந்து ‘நீ ஒரு பெண் என்பதால் இவ்வாறான பெரிய மோட்டார் சைக்கிள்களை ஓட்டக் கூடாது. பெண்களுக்கு அது பொருந்தாது. வேண்டுமென்றால் ஸ்கூட்டர் சைக்கிளொன்றை ஓட்டு’ என்றார்கள். ‘உங்களுக்கு வேண்டும் என்றால் உங்கள் மனைவிக்கு ஸ்கூட்டி ஒன்று வாங்கிக் கொடுங்கள். இது நான் பாடுபட்டு உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய சைக்கிள். இதை ஓட்ட எனக்கு உரிமை இருக்கிறது. அதைத் தடுக்க நீங்கள் யார்?’ என்று அவர்களிடம் கேட்டேன். பிறகு போலீஸுக்குப் போய் அவர்களுக்கு எதிராக முறைப்பாடு கொடுத்தேன். இங்குள்ள அநேகமான பெண்கள் என்னைப் பாராட்டுகிறார்கள். ‘அக்கா, உங்களைப் போல நாங்களும் ஆக வேண்டும்’ என்கிறார்கள். சில ஆண்களும் கூட என்னைத் தாண்டிப் போகும்போது பாராட்டி விட்டுப் போயிருக்கிறார்கள்.

எம். ரிஷான் ஷெரீப்

disclaimer

கொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை !

கொழும்பு துறைமுக நகரம் : ஒரு மாதிரிச் சித்திரம்

லங்கையில், “கொழும்பு துறைமுக நகரம்” (Clombo Port City) என்ற பிரம்மாண்டமான நகரத்தை சீனா அமைக்கவுள்ளது. அந்நகரத்தை நிர்வகிக்கும் ஆணையம் தொடர்பான “கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டம்” (Colombo Port City Economic Commission Act) அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் கடந்த மே 19-ஆம் தேதியன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

2014-ல் சீன அதிபர் ஷி ஜின்பிங் இலங்கைக்கு வருகை தந்தபோது, 1.4 பில்லியன் டாலர் தொகையை தொடக்க மூலதனமாகக் கொண்டு ராஜபக்சே அரசுடன் சீன அரசு போட்டுக் கொண்ட பெருந்திட்டமே கொழும்பு துறைமுக நகரத் திட்டமாகும்.

படிக்க :
♦ இலங்கையில் தொடரும் போலீஸ் சித்திரவதைகள் || எம். ரிஷான் ஷெரீப்
♦ இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் உண்மையான நோக்கமும் மோடியின் வஞ்சகமும் !

இலங்கையில் ராஜபக்சே கும்பலுக்குப் பின்னர், ஆட்சிக்கு வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே – அதிபர் மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான அரசாங்கம் சுற்றுச்சூழல் காரணங்களை முன்வைத்து 2015-இல் இத்திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இது, உலக மேலாதிக்க அமெரிக்கா மற்றும் பிராந்திய மேலாதிக்க இந்தியாவின் ஆதரவைப் பெற்ற அரசாங்கமாகும். 2019-இல் சீன ஆதரவு ராஜபக்சே கும்பல் மீண்டும் அதிகாரத்துக்கு வந்த பிறகு இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது.

இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய திட்டம் என்று கோத்தபய ராஜபக்சே அரசால் வர்ணிக்கப்படும் இத்துறைமுக நகரத் திட்டமானது, உண்மையில் அந்நாட்டின் மீதான சீனாவின் ஆதிக்கத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்தோடு, தெற்காசியப் பிராந்தியத்தில் சீனாவின் ராணுவத் தளமாக இலங்கையை மாற்றுவதில் முக்கியமான நகர்வைத் தொடங்கியுள்ளது.

சீனாவின் ஆதிக்கத்தில் இலங்கை

ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் தன்னுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்த சீனா தொடர்ந்து முயன்று வருகிறது. அதற்காக இக்கண்டங்களில் உள்ள பல நாடுகளுக்கு திருப்பி செலுத்த முடியாத அளவுக்கு கடனை அளித்து, அந்நாடுகளைத் தனது போர்த்தந்திர நோக்கத்திற்கேற்ப பயன்படுத்திக் கொள்ளும் உத்தியை மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்க மேலாதிக்க வல்லரசானது, ஈராக் மீது போர் தொடுத்து அந்நாட்டை ஆக்கிரமித்து தனது காலனியாக்கிக் கொண்டது என்றால், சீனாவானது, வளரும் நாடுகளுக்குக் கடன் கொடுத்து, அக்கடனுக்கு ஈடாக அந்நாட்டின் சில பகுதிகளைத் தனது காலனியாக்கிக் கொண்டு வருகிறது. இவ்வாறு சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் செல்லும் நாடுகளின் பட்டியலில், தெற்காசியப் பிராந்தியத்தில் அண்மைக்காலச் சான்றாக இலங்கை விளங்குகிறது.

தெற்காசியப் பிராந்தியத்தில், ஆசிய – ஐரோப்பிய கடல் போக்குவரத்தின் நடுவே இலங்கை அமைந்திருப்பதால், புதிய பட்டுப்பாதைத் திட்டத்தின் (Belt & Road) வாயிலாக அந்நாட்டைத் தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர சீனா தொடர்ந்து தீவிரமாக முயற்சித்தது.

2010-ஆம் ஆண்டில், 361 மில்லியன் டாலர் தொகையை தொடக்க மூலதனமாகக் கொண்டு அம்பாந்தோட்டை (Hambantota) எனும் இடத்தில் துறைமுகம் அமைப்பதற்காக, சீனாவின் அரசு வங்கியான எக்சிம் வங்கியானது 85% பணத்தை (306 மில்லியன் டாலரை 6.5% வட்டிக்கு) இலங்கைக்குக் கடனாக அளித்தது. மேலும், 2012-க்குப் பின்னர், இரு தவணைகளாக, முறையே 300, 600 மில்லியன் டாலரைக் கடனாக அளித்தது.

2017-இல், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% அளவுக்கும் மேலான இக்கடன் சுமையானது, இலங்கையின் கழுத்தை நெறித்தது. வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் சீனாவின் அரசு நிறுவனமான சீனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் (China Merchants Port Holdings) என்ற நிறுவனத்திடம் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெற்றுக் கொண்டு அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 70% பங்கையும் அதைச் சுற்றியுள்ள 15,000 ஏக்கர் நிலப்பரப்பையும் 99 ஆண்டுகள் குத்தகைக்கு இலங்கை அரசு சீனாவுக்கு எழுதிக் கொடுத்தது. அப்போது இலங்கையில் கடும் அந்நிய செலாவணி பற்றாக்குறை இருந்ததால், தனது இந்த அடிமைத்தனமான ஒப்பந்தத்தை சாதனையாகப் பீற்றிக் கொண்டது அப்போதைய ரணில் விக்ரம சிங்கே அரசு. தெற்காசியப் பிராந்தியத்தில், ஆசிய – ஐரோப்பிய கடல் போக்குவரத்தின் நடுவே அமைந்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தைக் கைப்பற்றுவதில் சீனா தீவிரமாக இருந்துள்ளதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.

கொழும்பு துறைமுக நகரம் : இலங்கையில் ஒரு சீனத் தீவு

இலங்கையின் தலைநகரான கொழும்புவின் கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில், 269 ஹெக்டேர் (660 ஏக்கர்) நிலப்பரப்பை மீட்டமைத்து (land reclamation – அதாவது, கடலை நிலமாக்கி) வானுயரக் கட்டிடங்களுடன் வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள், வங்கிகள், பங்குச்சந்தை நிறுவனங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள் – என ஒரு பிரம்மாண்டமான நகரத்தைக் கட்டுவதும், அந்நகரத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை (Special Economic Zone – SEZ) நிறுவுவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். 2040-இல் இத்திட்டம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“இது, இலங்கையின் வரலாற்றிலேயே மிகப்பெரிய திட்டம்; இதன் மூலம் ஆண்டுக்கு 11 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும்; இலங்கையின் கடன்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு, நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்கும்; துபாய், சிங்கப்பூர், ஹாங்காங்கைப் போல, தெற்காசியாவின் நுழைவாயிலாக கொழும்பு நகரம் மாறும்; மிகப் பெரிய வணிக நகராக வளரும்; ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்; ஏராளமான அந்நிய முதலீடுகளை ஈர்க்கும்” – என்றெல்லாம் இத்திட்டத்தைப் பற்றி ஊதிப் பெருக்கி பிரச்சாரம் செய்கிறது, கோத்தபய அரசு. ஆனால், இத்திட்டம் “சீனாவின் காலனியாக இலங்கையை மாற்றுகிறது” என முதலாளித்துவ பத்திரிகைகளே எழுதுகின்றன.

சீனத் துறைமுகப் பொறியமைப்பு நிறுவனம் (China Harbour Engineering Company – CHEC) என்ற சீன அரசின் நிறுவனம், இந்த நில மீட்டமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. இத்திட்டதிற்காக 1.4 பில்லியன் டாலர்களை இலங்கையில் சீனா முதலீடு செய்துள்ளது. அதற்குக் கைமாறாக மீட்டமைக்கப்பட்ட 269 ஹெக்டேர் நிலப்பரப்பை சீனாவுக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு அளித்துள்ளது, இலங்கை.

இவ்வாறு கட்டப்படும் நகரத்தை நிர்வகிக்கும் அதிகார அமைப்பு தொடர்பான சட்டம்தான் மே 19-இல் நிறைவேற்றப்பட்ட “கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணையச் சட்டம்” (Colombo Port City Economic Commission Act) ஆகும். மார்ச் 23-இல் இச்சட்டம் மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட்டபோதே கடும் எதிர்ப்புகளையும் விவாதங்களையும் கிளப்பியது. மிக முக்கியமாக, இம்மசோதாவில் உள்ள பல கூறுகள் இலங்கையின் அரசியலமைப்புக்கும் அந்நாட்டின் இறையாண்மைக்கும் எதிரானவையாக உள்ளன என்றும், இம்மசோதா மீது மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் கோரி எதிர்க்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் 19 மனுக்களை இலங்கையின் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன.

கொழும்புவின் கடலில் இருந்து மீட்டமைக்கப்பட்டுள்ள 660 ஏக்கர் நிலப்பரப்பு

அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு மசோதா நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் உச்சநீதி மன்றத்தால் சரிபார்க்கப்பட வேண்டும் என்பது விதியாகும். அதன்படி, இம்மசோதாவுக்கெதிரான வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், இலங்கை அரசுக்கு இரண்டு பரிந்துரைகளைச் செய்தது.

ஒன்று, இதை அப்படியே சட்டமாக்க வேண்டுமானால், மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவது அவசியம். இரண்டாவது, இதில் உள்ள சில கூறுகளைத் திருத்திவிட்டால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொண்டு இதைச் சட்டமாக்கிக் கொள்ளலாம் என்று கூறியது. இந்த இரண்டாவது வழிமுறையின் மூலம், மசோதாவை நிறைவேற்ற அரசுக்கு வழியமைத்துக் கொடுத்தது நீதிமன்றம்.

எல்லோரும் எதிர்பார்த்ததைப் போல இரண்டாவதைத் தேர்வு செய்தது, கோத்தபயா அரசு. அடிப்படையில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இம்மசோதாவில் சில திருத்தங்களை மட்டும் செய்து, 225 பேரைக்கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 149 பேரின் பெரும்பான்மையுடன் நிறைவேற்றியுள்ளது.

இச்சட்டத்தின்படி, அந்நகரத்தை நிர்வகிக்க “கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையம்” என்ற அதிகார அமைப்பு நிறுவப்படவுள்ளது. அந்நகரில் வரிவசூலித்தல், திட்டங்களை வகுத்தல், நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் இவ்வாணையத்துக்கே வழங்கப்படவுள்ளது. இலங்கையில் ஒரு ஆட்சி இருக்கும்போதே, அதற்குக் கட்டுப்படாத தனித்த அதிகார அமைப்பாகச் செயல்படும் தன்மை கொண்டதாக இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பின் மிக முக்கியமான 25 சட்டப் பிரிவுகளிலிருந்து இவ்வாணையத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சட்டத்தின்படி, துறைமுக நகருக்குள் வரக்கூடிய முதலீட்டாளர்கள், நிலம் வாங்குபவர்கள், வீடுகளை வாங்குபவர்கள், வர்த்தக நடவடிக்கைகள் ஆகிய அனைத்துக்கும் இவ்வாணையமே அனுமதி வழங்கும். துறைமுக நகருக்குத் தேவையான கொள்கைகளை வகுத்தல், நிர்வாக ரீதியிலான தீர்மானங்களை எடுத்தல், அனுமதிகளை வழங்குதல், விதிவிலக்குகளை மேற்கொள்ளுதல், தேவையான அனுமதிப் பத்திரங்களை பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட விடயங்களையும் இவ்வாணையமே மேற்கொள்ளும்.

“இலங்கை குடிமகன் ஒருவர், கொழும்பு துறைமுக நகருக்குள் செல்வதற்குக் கட்டுப்பாடுகள் இருக்கும்; விசா-வை ஒத்த சிறப்பு அடையாள அட்டை நடைமுறையொன்று அமல்படுத்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது; அந்நகருக்கு சென்று திரும்புவதற்கு குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்படவும் வாய்ப்புள்ளது” என்று இச்சட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.

7 பேரைக் கொண்ட இவ்வாணையத்தை இலங்கை அதிபர்தான் அமைப்பார் என்ற போதிலும், நாடாளுமன்றத்தால் இதைக் கட்டுப்படுத்த முடியாது. மேலும், சீனர்களையும் இவ்வாணையத்தில் நுழைக்கக் கூடிய அதிகாரம் அதிபருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல, இவ்வாணையத்தால் தீர்மானிக்கப்படும் வெளிநாட்டு நாணயமே – சீனாவின் யுவான் நாணயமே – இந்நகரத்தில் புழக்கத்தில் இருக்கும் என்றும் இச்சட்டம் கூறுகிறது.

இவையனைத்தையும் தொகுத்துப் பார்த்தால், கொழும்பு துறைமுக நகரம் என்பது இலங்கையின் நிலத்தில் ஒரு சீனத் தீவாகவே இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். மேலும், இந்த ஆணையத்தின் வழியாக, இலங்கையின் நிலப்பரப்பில் சீனா தனது சொந்த ஆட்சியையே நடத்தவிருக்கும் சித்திரம் நம்முன் தெரியும்.

கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம் இரண்டையும் 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்துள்ள சீனா, அவற்றை வணிக நோக்கங்களுக்கு மட்டுமின்றி, இராணுவத் தளமாகவும் பயன்படுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

ஒருபுறம், ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை இணைத்துக் கொண்டு “குவாட்” கூட்டணியை அமெரிக்கா நிறுவியுள்ளது. மற்றொருபுறம், தெற்காசியப் பகுதியில் நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், மியான்மர், மாலத்தீவுகள் ஆகிய நாடுகளில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த சீனா துடிக்கிறது. தெற்காசியப் பிராந்தியத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போட்டாபோட்டி தீவிரமடைந்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் மட்டும் 8 பில்லியன் டாலரை இலங்கையின் ‘வளர்ச்சித் திட்டங்களுக்கு’ சீனா கடனாக வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழினவாதிகளும் இலங்கையின் எதிர்க்கட்சிகளும்

நிலைமையோ இவ்வாறு இருக்க, ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தின்போது இந்தியாவை நம்பச் சொல்லி அம்மக்களுக்குத் தொடர்ச்சியாக துரோகம் செய்த தமிழினவாதிகளோ, இப்பிரச்சனையை இந்தியாவின், தமிழ்நாட்டின், ஈழத் தமிழர்களின் நலனுக்கு மட்டுமே எதிரானது என்பது போலப் பேசி வருகின்றனர்.

ம.தி.மு.க-வின் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீனாவின் இராணுவத் தளமாக இப்பகுதி மாறிவிடும் அபாயம் உள்ளது. கன்னியாகுமரியில் இருந்து 290 கி.மீ. தொலைவில் சீனாவின் கடற்படைத் தளம் உருவானால், அது இந்தியாவின் பூகோள நலனுக்கு எதிராகப் போய்விடும் என்பதை இந்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும். ஈழத்தில் தமிழ் மக்களைக் கொன்று குவிக்க இலங்கைக்குத் துணை நின்ற சீனா, தமிழ்நாட்டுக்கு மிக அருகில் அமைந்துள்ள கடற்பகுதியில் இராணுவத் துருப்புகளை நிறுத்தத் துணிந்தால் தமிழ்நாட்டிற்கு கேடு விளையும். எனவே, ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று சீனவுக்கெதிராக மோடி அரசுக்கு கொம்பு சீவி விடுகிறார்.

அதேபோல, பா.ம.க-வின் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்தியப் பாதுகாப்புக்கு, குறிப்பாக தமிழ்நாட்டின் பாதுகாப்புக்கு இதுவரையில்லாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தைக் கைப்பற்ற வேண்டும்; அதன்மூலம் இந்தியாவைக் கண்காணிக்க வேண்டும் என்பது சீனாவின் நீண்ட நாள் கனவாகும். தென்னிந்தியாவில் இலங்கை தாக்குதல் நடத்த முயன்றால், இலங்கை வழியாகத்தான் நடைபெறக் கூடும் என்பதை நான் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன்.” இதை எதிர்கொள்ள “ஐ.நா மூலம் ஈழத் தமிழர்களுக்கு தனித் தமிழீழம் அமைத்துக் கொடுத்து, இந்தியாவின் வலிமையை இலங்கையில் அதிகரிக்க வேண்டும்” என்று கூப்பாடு போடுகிறார்.

இந்திய வெளியுறவுத்துறையே “இதை நெருக்கமாகக் கண்காணிக்க வேண்டும்” என்று அறிக்கைவிட்டு அடக்கி வாசிக்கும்போது, இவர்களோ இந்தியாவுக்கு ஆபத்து, தமிழகத்துக்கு ஆபத்து, மோடி அரசே எதாவது செய்யுங்கள் என்று பொங்குகிறார்கள்.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம் என்னவென்றால், இவர்கள் அனைவரும் இந்தியாவின் (குறிப்பாக பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கும்பலின்) சீன எதிர்ப்பு நிலைப்பாட்டில் ஒத்துப்போவதோடு, சீனாவுக்கெதிராக தமிழ் மக்களிடம் தேசியவெறியைக் கிளப்புவதன் மூலம், நாடெங்கும் சீனாவைக் காட்டி தேசவெறியைக் கிளறிவிடும் மோடி அரசுக்குச் சேவை செய்கிறார்கள். ஒருவேளை இதைச் சாக்கிட்டு தமிழகத்தின் எல்லையோரங்களில் இராணுத்தை குவிக்க மோடி அரசு முற்பட்டால், “வேறுவழியில்லை, இப்போதைக்கு மோடி அரசை ஆதரிக்க வேண்டும்” என்றும் இவர்கள் பேசக்கூடும்.

இன்னொருபுறம் ஈழத்தில் உள்ள தமிழினவாதிகளோ, “தமிழ் வின்”, “லங்கா ஸ்ரீ”, “குறியீடு” போன்ற இணைய தளங்களில் எழுதும் கட்டுரைகளில், “இலங்கை நிரந்தரமாக இந்தியாவின் கையைவிட்டுப் போகிறது” என்றும், “ஈழத் தமிழர்களை இந்தியா கைவிட்டதால்தான் அவர்களில் சிலரிடம் சீனாவுக்கு ஆதரவான மனநிலை உருவாகியுள்ளது” என்றும் எழுதுகிறார்கள். இதன் உச்சமாக, “இரண்டுபடும் உலக ஒழுங்கு: இலங்கை யார் பக்கம்? ஈழத்தமிழ் மக்கள் யார் பக்கம்?” என்ற கட்டுரை நேரடியாக, ஈழத் தமிழர்களை அமெரிக்கா தலைமையிலான இந்தியாவை ஆதரிக்க வேண்டும் என்கிறது.

அதாவது, ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கத் துணைநின்ற சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை சென்று கொண்டிருக்கிறது என்பதற்காக, ஈழத் தமிழர்கள் இந்தியாவின் ஆதிக்கத்தின் கீழ் செல்ல வேண்டும் என்று கூவுகிறார்கள்.

உண்மை என்னவென்றால், ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை சிதைக்கவும், அதை ஒடுக்கவும் இந்தியா (காங்கிரசு, பா.ஜ.க. இரு அரசுகளுமே) செய்த அட்டூழியங்கள் ஏராளம். ஈழ விடுதலைப் போராட்டக் குழுக்களை சிதைக்க இந்திய உளவுத் துறையான “ரா” வேலை செய்தது, இலங்கைக்குப் ‘அமைதிப் படைகளை’ அனுப்பி ஈழ மக்களை கொன்றது, பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, இறுதிப் போரின் போது இலங்கை அரசுக்கு ஆதரவாக நின்று இந்திய ராணுவத்தின் மூலம் வியூகம் வகுத்துக் கொடுத்தது – என இலங்கை அரசோடு துணைநின்று இனப்படுகொலையை நிகழ்த்திய குற்றவாளிதான் இந்திய அரசு.

தமிழின அழிப்புப் போரின் இறுதி நேரம் வரை ஈழத்திலும் தமிழ்நாட்டிலுமுள்ள தமிழினவாதிகள் எல்லோரும் இந்தியாவை நம்புமாறு, இந்தியாவின் மீதான பிரமையை உருவாக்கினார்கள். இப்போதும் கூட ஈழத் தமிழர்களின் மீதான இனப் படுகொலையை ஐ.நா. மன்றத்தில் சீனா நேரடியாக ஆதரிக்கிறது என்றால், இந்தியா மறைமுகமாக ஆதரிக்கிறது. இவற்றையெல்லாம் மூடிமறைக்கும் இத்தமிழினவாதிகள் ஈழ மக்களுக்கு மீண்டும் துரோகத்தையே செய்கிறார்கள்.

இந்தியாவின் ஆதரவில்தான் தனித் தமிழீழம் அமையும், அதற்கு இந்தியாவையும் அமெரிக்காவையும் எப்படியேனும் பயன்படுத்தலாம் என்ற பிரமையை மக்களிடம் உருவாக்குவது, அமெரிக்காவின் அடியாளாக தெற்காசியப் பிராந்தியத்தில் செயல்படும் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நோக்கங்களை மூடிமறைப்பது, இலங்கையில் முதலீடு செய்துள்ள டாடா, அதானி போன்ற தரகு-அதிகாரவர்க்க முதலாளிகளின் நலன்களுக்கேற்பத்தான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இருக்கும் என்பதை மூடி மறைப்பது, ஈழத் தமிழர்களின் எதிரிதான் இந்தியா என்பதை மூடி மறைப்பது, இலங்கையும் சீனாவும் மட்டுமே எதிரிகள் என்ற கருத்தை மக்களிடம் உருவாக்குவது – ஆகிய இந்திய அடிவருடித்தனத்தைத் தொடர்ச்சியாக இவர்கள் செய்து வருகிறார்கள்.

தேசிய இன விடுதலைப் போராட்டங்களை ஒடுக்குவதில் ஏகாதிபத்திய, பிராந்திய மேலாதிக்க சக்திகளிடையே கொள்கை வேறுபாடு எதுவும் இல்லை என்பதை நாம் மீண்டும் மீண்டும் கூறி வருகிறோம். ஆனால் தமிழினவாதிகளோ, ஈழத் தமிழர்களை மீண்டும் இந்திய அரசை நம்புமாறு பிரமைகளை உருவாக்குகிறார்கள்.

இதுவொருபுறமிருக்க, “வரலாற்று ரீதியாக இந்துமாக் கடலில் முதன்முதலில் கடல் கடந்த சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர்கள் தமிழர்கள். அதாவது, சோழர்கள்தான். அவர்கள் ஏறக்குறைய தென்கிழக்காசியா முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். இதன் மூலம் சோழர்களின் நீச்சல் தடாகமாக அது விளங்கியது. 16–ஆம் நூற்றாண்டில் அது ஐரோப்பியர்களின் நீச்சல் தடாகமாக மாறியது. ஆனால், இன்று பசிபிக்கில் மையம் கொண்டுள்ள இந்து சமுத்திர நாடல்லாத சீனா, (அழுத்தம் நம்முடையது) இந்து சமுத்திரத்தில் கால் பதித்துள்ளது” என்று குறிப்பிடுகிறது தமிழ் வின் இணைய தளத்தில் வெளியான மேற்சொன்ன கட்டுரை.

பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அகண்ட பாரதக் கனவும், தமிழினவாதிகளின் ‘சோழ சாம்ராஜ்ஜியப் பெருமை’யும் இணையும் புள்ளி இதுவாகும். இந்தியாவின் ஆதிக்கத்தின் கீழ் ஈழ விடுதலையைப் பேசி வந்த தமிழினவாதிகளில் ஒரு பிரிவினரின் உண்மையான முகம் இதிலிருந்து பளிச்சென வெளிப்படுவதை நாம் காணலாம். மேலும், தமிழ்நாட்டிலும் ‘சோழ சாம்ராஜ்ஜியப் பெருமை’ பேசும் சீமான் போன்றோரின் கருத்துகளும் இதே வகையில் இருக்கும் அதிசயத்தையும் நாம் பார்க்க வேண்டும்.

இன்னொருபுறம், இத்திட்டத்தை எதிர்த்துச் சவடால் அடிக்கும் ஐக்கிய மக்கள் முன்னணி (SJB), மக்கள் விடுதலை முன்னணி (JVP), ஐக்கிய தேசியக் கட்சி (UNP) உள்ளிட்ட இலங்கையின் எதிர்க்கட்சிகளும் சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிரானவை அல்ல. ஈழத்தில் நடந்த இன அழிப்புப் போரின் போது இராஜபக்சே அரசை ஆதரித்த கட்சிகள்தான் இவை.

எனவே, இனவாதிகள் சொல்வது போல், சீனா அமைக்கும் இத்துறைமுக நகரம் இந்தியாவுக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கும் மட்டும் எதிரானதல்ல; அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இந்த மேலாதிக்கத்திற்கான போட்டாபோட்டி தீவிரமடைந்து வருவதானது, ஈழத்தமிழ் மக்களுக்கும் இலங்கை உழைக்கும் மக்களுக்கும், ஒட்டுமொத்த தெற்காசிய நாடுகளின் மக்களுமே எதிரானது. இதில் எந்தவொரு தரப்பையும் தெற்காசிய நாடுகளின் உழைக்கும் மக்கள் ஆதரிக்க முடியாது.

படிக்க :
♦ கோட்டாபய ஆட்சியில் வீழ்ச்சியை நோக்கி இலங்கை || பு.ஜ.மா.லெ கட்சி
♦ இராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை ! || புஜமாலெ கட்சி

மேலும், உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவோ, அல்லது அதனுடன் போட்டியிடும் சீனாவோ, அமெரிக்க விசுவாச பிராந்திய மேலாதிக்க வல்லரசான இந்தியாவோ ஈழத் தமிழர்களுக்கு எக்காலத்திலும் விடுதலையைப் பெற்றுத் தராது. சிங்கள, தமிழின உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து போராடுவதன் மூலமே ஈழத் தமிழ் மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க முடியும்.

எனவே, ஈழத் தமிழ் மக்களும் சிங்கள உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து, சொந்த நாட்டைச் சீனாவுக்குத் தாரைவார்க்கும் கோத்தபய அரசுக்கு எதிராகவும், இலங்கையில் நடந்துவரும் மறுகாலனியாக்க நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஏகாதிபத்தியங்களுக்கும் அவற்றின் உள்நாட்டுச் சேவகர்களுக்கும் எதிராகவும், இந்தியப் பெருங்கடலில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஆதிக்கப் போட்டா போட்டிக்கு எதிராகவும், தெற்காசிய பிராந்திய அடியாளான இந்தியாவுக்கு எதிராகவும் உடனடியாகப் போராடியாக வேண்டிய காலம் இது.

தங்கம்

ஃபேமிலி மேன் 2 : தமிழ்நாடு எங்கோ ஆப்பிரிக்காவிலா இருக்கிறது? || கலையரசன்

1

அமேசன் தொலைக்காட்சித் தொடர் ஃபேமிலி மேன் 2 பற்றிய விமர்சனம்.

சுருக்கமாக சொன்னால் ஒரு மொக்கைத் தொடரை சர்ச்சைக்குள்ளாக்கி வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். இறுதியில் அமேசன் தளத்திற்கு அதிகளவு சந்தாதாரர்களை சேர்த்துக் கொடுத்ததுதான் மிச்சம். சில நேரம் எதிர்ப்புக் கூட, ஒரு படத்திற்கு விளம்பரமாகி விடும் என்பதற்கு ஃபேமிலி மேன் ஒரு சிறந்த உதாரணம்.

இதுவும் வணிக நோக்கில் தயாரிக்கப்படும் பிற திரைப்படங்கள் போன்று, ஹிந்தி பேரினவாத கோணத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்திய தேசபக்தி படம்தான். இந்தத் தடவை குறிப்பாக தமிழர்கள் மீது இனவாத வன்மம் காட்டி இருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இதிலும், காஷ்மீரிகளுக்கு எதிரான வன்மம், பாகிஸ்தான் எதிர்ப்பு, இஸ்லாமிய வெறுப்பு (லவ் ஜிகாத்) என்று வழமையான இனவாத மசாலாக்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு குப்பைப் படம். இதற்கு இந்தளவு ஆரவாரம் செய்யத் தேவையில்லை. இதைக் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தாலே தோல்வி அடைந்திருக்கும்.

படிக்க :
♦ ஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்
♦ ஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் !! || கலையரசன்

இதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்ட நாளில் இருந்து இன்று வரையில், so called “புலி ஆதரவாளர்கள்”, அல்லது வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகள், கொஞ்சம் ஓவராகவே பொங்கிப் படைத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். புலிகள் தொடர்பாக அவர்கள் கட்டமைத்து வைத்திருக்கும் புனிதப் பிம்பம் உடைக்கப்படும் போது ஏற்பட்ட வலி காரணமாக கதறி இருக்கிறார்கள். “புலிகளைப் பற்றி உனக்கென்ன தெரியும்?” என்ற கணக்காக பொரிந்து தள்ளிவிட்டார்கள். ஒருவர், ஹிந்திக்காரர்களுக்கு தமிழ் புரியாதே என்ற ஆதங்கத்தில், யூடியூப்பில் ஆங்கிலத்தில் பேசி வெளியிட்டு இருந்தார்.

பேமிலி மேன் தொடர் புலிகளை கொச்சைப்படுத்தி உள்ளது என்பது உண்மை தான். ஏற்கனவே, காஷ்மீர் போராளிகளை கொச்சைப் படுத்தியவர்கள் புலிகளை மகிமைப் படுத்துவார்கள் என எதிர்பார்ப்பது எமது மடமைத்தனம். ஆனால், பார்வையாளர்கள், (தமிழர் அல்லாத வேற்றின) மக்கள், இந்தப் படத்தை பார்த்துதான் புலிகளை மதிப்பிடப் போகிறார்கள் என நினைப்பது வேடிக்கையானது.

உண்மையில் ஃபேமிலி மேன் தொடர் புலிகளை சித்தரித்துள்ள விதம் சிறுபிள்ளைத்தனமானது. நகைப்புக்குரியது. தொடக்கத்தில் இருந்து “குறிப்பிட்ட ஐந்து நபர்களைத் தான்” படம் முடியும் வரை காட்டுகிறார்கள். ஒரு சிறு குழுவின் சாகசக் காட்சிகளை பார்த்தால், அதை ஒரு போராட்டம் என்று எவனும் நம்ப மாட்டான். சுருக்கமாக சொன்னால், ஒரு மாபியாக் குழு மாதிரி சித்தரித்து இருக்கிறார்கள். இதை எத்தனை படங்களில் பார்த்து விட்டோம்? புலிகளை மறந்துவிட்டு பார்த்தால், இதுவும் அரைத்த மாவை அரைத்த அரைவேக்காட்டு படம்தான்.

ஏற்கனவே, செய்திகளில் கேள்விப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு படக்கதை எழுதப் பட்டிருந்தாலும், யதார்த்த அரசியலில் இருந்து வெகுதூரம் சென்று விடுகின்றது. அதனால், ஒரு செயற்கைத்தன்மை உண்டாகின்றது. இதைவிட சில வருடங்களுக்கு முன்பு வெளியான மெட்ராஸ் கபே திரைப்படம், ஓரளவு வரலாற்று உண்மைகளுடன் ஒத்துப் போகின்றது. அதனுடன் ஒப்பிட்டால் ஃபேமிலி மேன் வெறும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுக்கப்பட்ட சராசரி மொக்கைப்படம்.

உண்மையில், வடஇந்திய ஹிந்திக்காரர்கள் என்றாலும், அன்றாடம் செய்தி வாசிப்பவர்களுக்கு புலிகளைப் பற்றி நன்றாகத் தெரியும். அவர்களுக்கு, சிறு குழந்தைக்கு கதை சொல்வது மாதிரி, புலிகள் இந்தப் ஃபேமிலி மேன் படத்தில் வருவது மாதிரி இருப்பார்கள் என்று சொல்லி ஏமாற்ற முடியாது. அரசியலில் நாட்டமில்லாத மக்கள் மட்டும், இதையும் இன்னொரு “காஷ்மீர் தீவிரவாதிகள் பற்றிய படம்” என்பது மாதிரி பார்த்து விட்டு கடந்து செல்வார்கள். (அவர்களில் பலருக்கு இலங்கை எங்கே இருக்கிறது என்றும் தெரியாது.) அதற்கு ஏற்றவாறு கதாசிரியர் காஷ்மீர், ISI பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஈழத்திலும் பொதுவாக புலிகளை ஆதரிக்கும் தமிழர்களின் விகிதாசாரம் மிகக் குறைவாகத்தான் இருக்கும். நாற்பது சதவீதம் ஆதரிக்கிறார்கள் என்பதே ஒரு மிகைப்படுத்தல்தான். முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்தவர்களிடமும் புலிகள் தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் உள்ளன. இருப்பினும், அதே மக்கள் வெளியுலகில் புலிகளுக்கு தார்மீக ஆதரவு வழங்குவது போன்று காட்டிக் கொள்வார்கள். இது அவர்களது இருப்பு சார்ந்த விடயம்.

குறிப்பாக, சிங்கள அல்லது ஹிந்தி பெரும்பான்மையினத்தின் அடக்குமுறையை, பேரினவாத மேலாண்மையை எதிர்கொள்ளும் போதெல்லாம், தமிழர்கள் தமது முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு ஓரினமாக ஒன்று சேர்ந்து எதிர்ப்பார்கள். ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியில் காணப்படும் இந்த ஒற்றுமை உணர்வு தான் ஃபேமிலி மேன் படத்தில் மிகுந்த வெறுப்புடன் அணுகப் படுகின்றது. அதை நெறியாளர் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுத்துகிறார்.

கவனிக்கவும்: “தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை” என்று தமிழினவாதிகள் (வலதுசாரிகள்) மட்டும்தான் சொல்லிக் கொள்கிறார்கள். அது அவர்களது வழமையான அரசியல் பிரச்சாரம். ஆனால், வெளியுலகம் தமிழர்களை அப்படிப் பார்ப்பதில்லை. சிங்களவர்களை அல்லது ஹிந்திக்காரர்களை கேட்டால், தமிழர்களிடம் உள்ள ஒற்றுமை தமது மக்களிடம் இல்லை என்பார்கள் !

இதை “ஆரிய – திராவிட முரண்பாடு” என்று சொல்லலாம். அதை ஏற்க மறுப்பவர்கள் “சிங்கள – தமிழ் முரண்பாடு” அல்லது “ஹிந்தி – தமிழ் முரண்பாடு” என்று சொல்லலாம். அது அவரவர் அடையாள அரசியல் குறித்த பிரச்சினை. எது எப்படி இருப்பினும் ஹிந்தி மொழி பேசும் வடஇந்தியர்களுக்கும், தமிழ் மொழி பேசும் தென்னிந்தியர்களுக்கும் இடையில் ஏதோ ஒரு பரம்பரைப் பகை இருந்து வருவது மட்டும் உண்மை. இந்த இன முரண்பாட்டை ஃபேமிலி மேன் படம் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகவே காட்டி விடுகின்றது.

இந்தப் படத்தில் வடஇந்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளாக வரும் கதாபாத்திரங்கள் (திவாரி, ஜேகே, மிலிந்த்) வாழும் இடங்களைப் பார்த்தால் ஐரோப்பா மாதிரி இருக்கிறது. அவர்களது வீடுகளும், வேலை செய்யும் இடங்களும் மிக நவீனமாக உள்ளன. அவர்களது நடை, உடை, பாவனை, கலாச்சாரமும் மேற்கத்திய நாட்டவர் போன்றிருக்கிறது. நிச்சயமாக, குடும்பக் காட்சிகளை பார்க்கும் ஐரோப்பியர்கள் அதில் தங்களைப் பொருத்திப் பார்க்க முடியும். அந்தளவு மேற்கத்திய வாடை அடிக்கிறது.

ஆனால், கதை சென்னைக்கு நகர்ந்ததும் காட்சியமைப்புகள் தலைகீழாக மாறி விடுகின்றன. அப்போதுதான் மக்கள் நெருக்கடியும், இரைச்சலும் மிக்க, பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியுள்ள ஒரு மாநிலத்தை பார்க்கிறோம். “இதுவும் இந்தியாவிலா இருக்கிறது?” என்று ஆச்சரியப்பட வைக்கிறார்கள். ஃபேமிலி மேன் படம் தமிழ்நாட்டை சித்தரிக்கும் காட்சிகளை பார்ப்பவர்கள், அது எங்கோ ஆப்பிரிக்காவில் இருப்பதாக நினைப்பார்கள். அந்தளவு மோசமாகக் காட்டி இருக்கிறார்கள்.

ஃபேமிலி மேன் காட்டும் தமிழ்நாடு எந்த வித மாற்றமும் இல்லாமல் எழுபது வருடங்களுக்கு முந்திய பழைய வீடுகளுடன் உள்ளது. தமிழர்களின் உடுத்துவதிலும் எந்த மாற்றமும் இல்லை. அதே “பழைய பஞ்சாங்கம்” தானாம் ! காலனிய காலத்தில் வெள்ளையர்கள் தமக்கு கருப்பர்களை நாகரிகமயப்படுத்தும் கடமை இருப்பதாக கருதிய மாதிரித்தான், வடஇந்தியர்கள் தமிழர்களை பார்க்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. தெருவில் மக்கள் குடங்களுடன் குழாயடியில் தண்ணீருக்காக காத்திருக்கிறார்கள். வெயில் கொடுமை தாங்க முடியவில்லை என்று வட இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அடிக்கடி புலம்புகிறார்கள். அவர்கள் எங்கோ ஒரு ஐரோப்பிய நாட்டில் இருந்து வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது !

இதெல்லாம் படத்தில் எந்தளவு தூரம் தமிழர்களுக்கு எதிரான இனவாதம் கட்டமைக்கப் படுகின்றது என்பதற்கான உதாரணங்கள். இந்தக் காட்சியமைப்புகளுக்கு பின்னால் ஒரு மேட்டுக்குடி மனப்பான்மை மட்டுமல்லாது, தமிழர்களுக்கு எதிரான இனவாத வெறுப்புணர்வும் காணப்படுகின்றது. இது தான் நாங்கள் எதிர்க்க வேண்டிய விடயம்.

பொதுவாகவே, வடஇந்தியர்கள் தம்மை உயர்வாகவும், தென்னிந்தியர்களை தாழ்வாகவும் கருதும் போக்கு உள்ளது. இருப்பினும், பிற தென்னிந்திய மாநிலங்களை விட்டு விட்டு தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்து எதிர்ப்பதற்கு சில விசேட காரணங்கள் உள்ளன.

இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஹிந்தி மொழி மேலாதிக்கம் தீவிரமாக எதிர்க்கப்பட்டு வருகின்றது. அரசியல் களத்தில் தமிழ்த்தேசியத்தை எதிர்ப்பவர்கள் மத்தியில் கூட தமிழ் மொழி பேசுவதில் ஒரு பெருமிதம் இருக்கும். இந்த விடயத்தில் வலதுசாரிகளும், இடதுசாரிகளும் கட்சி வேற்றுமைகளை மறந்து ஒன்று சேர்ந்து விடுவார்கள். புலி ஆதரவு, புலி எதிர்ப்பு வேற்றுமை கூட அங்கே மறைந்து விடும். தமிழர்களின் இந்த ஒற்றுமை உணர்வு வடஇந்தியர்களுக்கு மிகுந்த எரிச்சல் ஊட்டி வருகின்றது.

இதனை என்னுடன் பேசிய சில வடஇந்திய நண்பர்கள் நேரடியாகவே தெரிவித்துள்ளனர். அதிலும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் கடல் கடந்து வாழும் ஈழத்தமிழர்கள் மீது காட்டும் “தொப்புள்கொடி உறவு பாசம்” கண்டு அவர்கள் இன்னும் பல மடங்கு எரிச்சல் அடைகிறார்கள். இந்த வெறுப்புணர்வை பேமிலி மேன் படத்தில் பல இடங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

தமிழர்கள் ஈழத்தவர் என்றாலும், தமிழ்நாட்டவர் என்றாலும் நம்பத் தகுந்தவர்கள் அல்ல என்று இந்திய நடுவண் அரசுக்கு “போட்டுக்” கொடுக்கிறது. தமிழ்நாட்டில் பேரினவாத மொழியான ஹிந்தியும் பேசத் தெரிந்த அதிகார வர்க்கத்தினரை நம்பலாம். ஆனால், தமிழ் மட்டுமே பேசும் மக்களை நம்ப முடியாது. ஆகவே, தமிழ்நாட்டை விரைந்து ஹிந்தி மயப்படுத்துவதே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு. இது தான் இந்திய அரசுக்கும், பார்வையாளர்களுக்கும் ஃபேமிலி மேன் தெரிவிக்கும் செய்தி.

உதாரணத்திற்கு, புலனாய்வுத் துறை அதிகாரியாக வரும் முத்து அரசுக்கு விசுவாசமாக இருக்கிறார். அதே மாதிரி இயக்கத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டே காட்டிக் கொடுக்கும் இன்போர்மர் செல்வமும் ஹிந்தி பேசுகிறார். துரோகிகள் ஆட்சியாளர்களின் நண்பர்கள் என்பது உண்மை தானே? இதன் இன்னொரு வடிவம்தான், லண்டனில் இயங்கும் நாடு கடந்த ஈழ அரசின் தலைவராக காட்டப்படும் தீபன் என்ற பாத்திரம். அவரும் தனக்குத் தெரிந்த இரகசியங்களை எல்லாம் இந்திய அரசுக்கு தெரிவித்து விடுகிறார். படத்தின் முடிவில் இவர்களுக்கு மெடல் கொடுத்து கௌரவிக்காதது மட்டுமே குறை.

எப்போதும் இந்திய மத்திய அரசுடன், அதாவது ஹிந்தி பேரினவாதத்துடன் ஒத்தோடிக் கொண்டிருக்கும் வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகளை இந்த ஃபேமிலி மேன் படம் ஏமாற்றமடைய வைத்திருக்கிறது. அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அதைத் தான் அவர்களது கதறல்களும் வெளிப்படுத்துகின்றன. தங்களுக்கு “தமிழீழம் பிரிவது மட்டுமே முக்கியம் என்றும், தமிழ்நாடு எப்போதும் போல இந்திய இறையாண்மையை ஏற்று நடக்கும் என்றும்…” வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகள் சொல்லி வருகின்றனர்.

அதற்கு ஃபேமிலி மேன் சொல்லும் பதில் என்ன?

“நீங்கள் இலங்கையின் இறையாண்மையை எதிர்க்கிறீர்கள் என்றால், இந்தியாவின் இறையாண்மையையும் எதிர்க்கிறீர்கள் என்று அர்த்தம் ! அதனால் நாங்கள் உங்களை பாகிஸ்தான் ISI உடனும், காஷ்மீர் தீவிரவாதிகளுடனும் சேர்த்துத் தான் பார்ப்போம் !”

இங்கே சில உதாரணங்களை பார்ப்போம் :

  • இந்தப் படத்தில் முக்கிய பாத்திரமாக வரும் ராஜி என்ற பெண் போராளியை, ஒரு கட்டத்தில் வேதாரணியத்தில் (பெயர் மாற்றி இருக்கிறார்கள்) பிடித்து உள்ளூர் போலிஸ் நிலையத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அந்தக் கிராமத்தில் வாழும் தமிழ் மக்கள் எல்லோரும் இயக்கத்திற்கு ஆதரவானவர்கள். அதனால், உளவுத்துறையினரின் விசாரணையில் ஒத்துழைக்க மறுக்கிறார்கள். மாறாக, மக்கள் ஒன்று சேர்ந்து புலனாய்வுத் துறை அதிகாரிகளை மிரட்டுகிறார்கள். போலிஸ் நிலையத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி பெண் போராளி ராஜியை விடுவித்து விடுகிறார்கள். இந்தத் தாக்குதலுக்கு தலைமை தாங்குவது ஒரு காஷ்மீர் போராளி !
  • லண்டனில் மறைந்து வாழும் “புலிகள்”(?) இயக்கத் தலைவருக்கு உற்ற நண்பனாக வருபவர் ஒரு ISI அதிகாரி. யாருக்கும் தெரியாமல் இயக்கத் தலைவர் பாஸ்கரனை பாதுகாப்பாக பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அந்த இயக்கத்தின் “உப தலைவர்” தீபனை கூட நம்ப முடியாது. ஏனென்றால் அவர் இந்திய அரசுடன் ஒத்துழைப்பவர். இறுதியில், தீபனின் காட்டிக்கொடுப்பால் தலைவர் பாஸ்கரன் சயனைட் கடித்து தற்கொலை செய்து கொள்கிறார்.

படிக்க :
♦ பெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்
♦ சைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் !

அதாவது, பாகிஸ்தானிகளும், காஷ்மீரிகளும் ஈழத்தமிழர்களுடன் மிகுந்த மனிதாபிமானத்துடன் நடந்து கொள்கிறார்கள். ஆனால், இந்தியர்களை (ஹிந்தி பெரும்பான்மையினரின் அரசு) வெறுக்கிறார்கள்.

இப்படிப் போகிறது கதை !


கலையரசன்
முகநூலில் : Kalai marx
disclaimer

கோக்கை தெறிக்கவிட்ட ரொனால்டோ || கருத்துப்படம்

லகப் புகழ் பெற்ற கால்பந்து வீரர் ரொனால்டோ, சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தனது மேஜை மீது விளம்பரநோக்கில் வைக்கப்பட்டிருந்த கோக் பாட்டில்களை அகற்றிவிட்டு, தனது தண்ணீர் பாட்டிலை உயர்த்திக் காட்டி மேஜை மீது வைத்தார். ஏற்கெனவே கோக் நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், ரொனால்டோ கோக்கை புறக்கணித்தது, சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்தது. கோக்கின் ஆரோக்கியமற்ற தன்மை குறித்துப் பலரும் பேசத் துவங்கினர். இதன் காரணமாக, கோக் நிறுவனத்திற்கு ஒரே நாளில் ரூ. 29,337 கோடி பங்குச் சந்தையில் இழப்பு ஏற்பட்டது.

ஒரு முன்னணி வீரராக இருந்துகொண்டு கோக்கின் ஆதிக்கத்தை ஒதுக்கித் தள்ளிய ரொனால்டோவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கோக்கை தெறிக்கவிட்ட ரொனால்டோ


கருத்துப்படம் : மு. துரை

மூடு டாஸ்மாக்கை ! வெடிக்கட்டும் மக்கள் போராட்டம் || மக்கள் அதிகாரம்

PP Letter head16.6.2021

மூடு டாஸ்மாக்கை !
மீண்டும் வெடிக்கட்டும் டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டம் !

கொரோனா கால ஊரடங்கு தளர்வுகளோடு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா கால உதவித்தொகையாக இரண்டாவது தவணையாக ரூபாய் 2,000 கொடுக்கப்பட்ட நாளன்று டாஸ்மாக் திறக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆட்சியின் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் “அரசு கொடுக்கும் உதவித் தொகையானது வேறு வழியில் அரசுக்கே வந்து சேரும்” என்று கூறியதை மெய்ப்பிக்கின்றது இந்நிகழ்வு. யார் ஆட்சிக்கு வந்தாலும் குடிகெடுக்கும் டாஸ்மாக்கை மூட மாட்டார்கள். மக்கள் போராட்டம் ஒன்றே டாஸ்மாக்கை மூடும் என்ற உண்மயையும் அறிவிக்கிறது.

படிக்க :
♦ ஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு ? மூடு டாஸ்மாக்கை!! || மக்கள் அதிகாரம்
♦ ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்

டாஸ்மாக் திறக்கப்பட்ட இரு நாட்களுக்குள்ளேயே எத்தனை குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பதை ஆராய வேண்டும். ரேசன் கடையில் இருந்து உதவித் தொகையை மனைவியிடம் இருந்து பிடுங்கிக்கொண்டும் / தானே உதவித் தொகையை பெற்றுக் கொண்டும் நேரடியாக டாஸ்மாக் செல்கிறார்கள்.

திருச்சி – கரூர் மாவட்ட எல்லைப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் சரக்கு வாங்க குடிமகன்கள் ஆர்வமாக இருந்ததாகவும், இதில் இளையவர்களுக்கு போட்டியாக முதியவர்களும் களத்தில் இருந்ததாகவும் பாலிமர் செய்தியில் ‘சுவாரசியமான’ குறிப்பு வாசிக்கப்படுகின்றது.

காத்திருந்தவர்களின் வீடுகளில் நேற்று எத்தனை சண்டை – சச்சரவுகள் ஏற்பட்டிருக்கும்? பெண்கள் மீதான தாக்குதல்கள் – வன்கொடுமைகள் நடத்தப்பட்டு இருக்கும்? எத்தனை விபத்துக்கள் நடந்திருக்கும்?

இளம் பெண் ஒருவர் “பிராந்தி வேண்டாம், மூணு பாட்டில் பீர் கொடுங்க” என்று கேட்டு வாங்கிச் செல்கிறார். உடனே “பெரியார் பேத்தியைப்பார்!” என்று பிஜேபி கும்பல் சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்க, அதற்கு பதிலடியாக பெரியார் இயக்க ஆதரவாளர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு காரணமான அரசைப் பற்றி துளியும் விமர்சிக்க தயாராக இல்லை.

கள்ளச்சாராயம் – போலி மதுவினை தடுப்பதற்காக கடும் விமர்சனங்களுக்கிடையில் டாஸ்மாக் திறக்கப்படுவதாகவும் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்றவில்லை என்றால் டாஸ்மாக் மூடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த ஆட்சியின் ஊரடங்கின் போது “ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் எதற்கு?” என்று அவர் பிடித்திருந்த முழக்கத்தட்டிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார் மு.க.ஸ்டாலின்.

அவருக்கு ஆதரவாக தமிழகத்தின் அமைச்சர்களும் அவரது கட்சியினரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

கடந்த ஆட்சியில் எடப்பாடியும் அவரது அமைச்சர்களும் மக்களின் நலனுக்காகவே டாஸ்மாக் திறக்கப்படுவதாக கூறியதையே ரீமேக் செய்து திமுக அரசும் கூறுகிறது. கள்ளச்சாராயமும் போலி மதுவும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும், அதனால் டாஸ்மாக் திறக்கிறோம் என்பது எவ்வளவு கேவலமான வாதம்? அதை தடுக்க வக்கில்லாமல்தான் ஒரு அரசு இருக்கிறதா?

மூடு டாஸ்மாக்கை !

11 மாவட்டங்கள் தவிர மீதமுள்ள மாவட்டங்களில் ஒரு நாளில்மட்டும் ரூபாய் 165 கோடி டாஸ்மாக் மூலம் வசூல் செய்யப்பட்டு இருக்கிறது.கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பின்றி மக்கள் வாடிக்கொண்டு இருக்கும் சூழலில் மக்களின் பொருளாதாரம் ரூபாய் 165 கோடி சுரண்டப்பட்டு இருக்கிறது. இந்த உண்மையில் இருந்தல்லவா இப்பிரச்சினையைப் பார்க்க வேண்டும் ?

டாஸ்மாக் அரசியல்

தனியார்மயம் – தாராளமய காலகட்டத்திற்கு பிறகு அரசின் அனைத்து உற்பத்தி நிறுவனங்களும் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகின்றன. இச்சூழலில் சேவைத் துறைகளும் பாதுகாப்புத் துறையும் கூட கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்படுகின்றன.

இந்த தனியார்மய – தாராளமய – உலகமயப் பொருளாதாரம் தனக்கான நுகர்வுப் பண்பாட்டை உருவாக்குகிறது. போதை – நுகர்வு – பாலியல் சீரழிவு என அனைத்தையும் இந்தப் பொருளாதாரம் உருவாக்குகிறது. கடந்த 30 ஆண்டுகளில் சுரண்டல் தீவிரமாகியுள்ளது. 8 மணி நேர உழைப்பு, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்பதெல்லாம் காணாமல் போய்விட்டன. சுரண்டல் தீவிரமடைய தீவிரமடைய அதற்கெதிரான போராட்டங்கள் தீவிரமடையும். அதை மட்டுப்படுத்தவும் ஒழித்துக்கட்டவுமே சீரழிவு பண்பாட்டை பரப்புகின்றது அரசு.

மதுவிலக்கு அன்றும் இன்றும்

2015 – 2016-ஆம் ஆண்டில் மக்கள் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தார்கள். டாஸ்மாக் கடைகள் முற்றுகை, டாஸ்மாக் கடைகள் உடைப்பு என திரும்பும் பக்கமெல்லாம் போராட்டங்கள் நடைபெற்றன. அதில், மக்கள் அதிகாரம் அமைப்பின் பங்கு மிகவும் முக்கியமானது. திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் (அதிமுக, பாஜக, பாமக.. தவிர) சந்தித்து “டாஸ்மாக்கை மூடு” என்ற கோரிக்கைக்கு ஆதரவு திரட்டினோம். திமுக தனது தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக்கை மூடுவோம் என்று அறிவித்தது. ஜெயயலலிதா படிப்படியாக டாஸ்மாக்கை மூடுவோம் என்று அறிவித்தார்.

2016-ஆம் ஆண்டு மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் வைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து மாநில நெடுஞ்சாலைகளை, மாவட்ட நெடுஞ்சாலைகளாக மாற்றி அங்கே டாஸ்மாக் கடைகளை திறந்தார். அந்த நடவடிக்கைகளை எல்லாம் திமுக கடும் விமர்சனம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2021-ஆம் ஆண்டு திமுக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற வாக்குறுதி எதுவும் கொடுக்கவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு மக்களின் உணர்வுகளை பயன்படுத்திக் கொள்வது என்பதைத் தாண்டி திமுக-விடம் ஏதும் இல்லை. 2016-ஆம் ஆண்டு கொடுக்கபட்ட வாக்குறுதிகள் 2021-ஆம் ஆண்டு செல்லுபடியாகாது என்பதை தனது செயல்மூலமாக அறிவித்திருக்கிறது.

திமுக ஆதரவு கட்சிகள், அறிவுஜீவிகளின் மவுனம்

திமுக-வின் ஆதரவு கட்சிகள் டாஸ்மாக் திறப்பு விசயத்தில் வெளிப்படையாக பச்சோந்தித்தனமான வாதம் செய்கின்றன. டாஸ்மாக் திறக்கவில்லை என்றால் கள்ளச்சாராயம் ஆறாக ஓடும் என்கிறார் ப.சிதம்பரம். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலோ பூரண மதுவிலக்கு என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மற்ற
திமுக ஆதரவு கட்சிகள் இப்பிரச்சினை குறித்து நேரடியாக எதுவும் பேசவில்லை.

ஆனால், அக்கட்சிகளைச் சேர்ந்தோர் ஊடகங்களில் வேறுவகையான விவாதங்களை கிளப்பி வருகின்றனர். “டாஸ்மாக்கை மூடு” என்ற கோரிக்கைக்கு 2016-ஆம் ஆண்டு ஆதரவாக இருந்தவர்கள் தற்போது “படிப்படியாகத்தான் மதுவிலக்கு அமல்படுத்த முடியும், உடனே டாஸ்மாக்கை மூட முடியாது, குடிகாரர்கள் பாதிக்கப்படுவார்கள்” ஆகிய பச்சோந்தித்தனமான கருத்துக்களை பரப்பி மொத்த இலக்கையே திசை திருப்புகின்றனர். இதை ஏன் 2016-ஆம் ஆண்டு பேசவில்லை?

டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று மாங்குமாங்குவென கட்டுரைகளை எழுதிய அறிவுஜீவிகள் அமைதியாக இருக்கிறார்கள். இன்னும் சிலரோ “மூடு டாஸ்மாக்கை” என்ற கோரிக்கைக்கு எதிராக பூரணமதுவிலக்கு சாத்தியமல்ல என்று கூறுவதும், வெளிநாட்டு சரக்கு அடித்துக் கொண்டு இருக்கும் போட்டோக்களை வெளியிடுவதன் நோக்கம் என்ன? ஏன் இதையெல்லாம் 2016-ம் ஆண்டுகளில் செய்யவில்லை? திமுக ஆட்சி மீது எவ்விதத்துரும்பும் படாமல் பாதுகாத்து பரிசில் பெறுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் போல.

அதிமுக – பிஜேபி ; அயோக்கியர்களின் புகலிடம் மக்கள் பிரச்சினை

டாஸ்மாக் திறக்காதே ! என்ற தலைப்பில் பிஜேபி-யினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தியுள்ளனர். ஓ.பன்னீர்செல்வமோ “டாஸ்மாக் திறக்கக் கூடாது” என்று அறிக்கை கொடுத்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே புதுச்சேரியில் சாராயக்கடைகளை அப்பிரதேச ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்தார். கர்நாடகாவில் சாராயக்கடைகளை திறந்தது பிஜேபி-யின் எடியூரப்பா. இவர்களுக்கு எல்லாம் தமிழகத்தில் டாஸ்மாக்கை திறக்க வேண்டாம் என்று சொல்வதற்கு தகுதி உள்ளதா என்ன?

சோமபானம், சுராபானம் என்று போதை வஸ்துகளை புனிதமாக கருதிய புராண காலம் முதல் இப்போது வரை போதை, பாலியல் சீரழிவுகளின் கூடாரமான பிஜேபி – ஆர்.எஸ்.எஸ் கும்பல் இப்போது டாஸ்மாக் பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறது.

கடந்த 10 வருட அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடியோரின் மீது போடப்பட்ட வழக்குகள் அளவிடமுடியாது. திருப்பூர், சாமளாபுரத்தில் டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடிய ஒரு பெண்ணை கன்னத்தில் அறைந்த பாண்டியராஜன் என்ற ஏ.டி.எஸ்.பி-க்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. டாஸ்மாக் எதிர்ப்பு போராளி சசி பெருமாள் கொல்லப்பட்டது முதல் டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் ஏராளம். தமிழகத்தையே மொத்தமாக சுரண்டி கொழுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு டாஸ்மாக் பற்றிபேச என்ன தகுதி இருக்கிறது?

இப்படி தமிழகத்துக்கு, தமிழினத்திற்கு எதிரான அதிமுக – பிஜேபி கும்பல் தங்களை இருப்பு வைத்துக் கொள்வதற்காக டாஸ்மாக் பிரச்சினையில் பதுங்கிக் கொள்கிறார்கள். டாஸ்மாக் திறப்புக்கு எதிராக தமிழகத்தின் முற்போக்கான அமைப்புகள் எல்லாம் கொதித்து எழுந்திருந்தால் பிஜேபி – பாமக-வின் போராட்டங்கள் எல்லாம் காணாமல் போயிருக்கும். இனி மக்கள் பிரச்சினையில் அதிமுக – பிஜேபி-யினர் தொடர்ந்து தலையிடுவார்கள். திமுக மீது தூசு படக்கூடாது என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்தால் தமிழகம் இன்னொரு புதுவையாக மாறுவதை யாரும் தடுக்க முடியாது.

முழக்கம் மட்டுமல்ல; மூளையே மாற்றம் அடைந்திருக்கிறது !

டாஸ்மாக் பிரச்சினை எதிரிகளான அதிமுக – பாஜக-வை மட்டுமல்ல துரோகிகளையும் அம்பலப்படுத்தி இருக்கிறது. “மூடு டாஸ்மாக்கை !” என்ற முழக்கம் ‘டாஸ்மாக்கை திறக்காதே !’ என்றும் ‘தமிழக முதல்வருக்கு டாஸ்மாக் மூடுவது சாத்தியமே’ என்றும் மாறி இருக்கிறது.

ஏன் மூடு டாஸ்மாக்கை என்ற முழக்கத்தை இவர்கள் பயன்படுத்துவதில்லை? மூடு டாஸ்மாக்கை என்பது மக்களின் ஆணை, அதை இப்போது திமுக-விற்கு பயன்படுத்த முடியுமா? குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே என்ற முழக்கம் காணாமல் போய் தமிழக முதல்வருக்கு சாத்தியம் என்று கெஞ்சிக்கொண்டு இருப்பதில் போய் அல்லவா முடிந்திருக்கிறது.

பாசிசம் பற்றிய அரசியல் புரிதல் இல்லை என்பதல்ல பிரச்சினை; அரசு அதிகாரத்துடன் கூடிக்குலாவி தங்களின் கோரிக்கைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நவீன யுத்தியே இந்த முழக்க மாற்றத்துக்கு காரணம்.

இனி வருங்காலம் ???

திமுக அரசின் தவறான செயல்பாடுகளை முற்போக்கு அமைப்புகள் எல்லாம் எப்படி டீல் செய்யப்போகின்றன என்பதற்கு டாஸ்மாக் பிர்ச்சினை என்பது ஒரு தொடக்கமே. டாஸ்மாக் திங்கட்கிழமை திறக்கப்பட்டதும் அன்றைய தினம் பொறுக்கி கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்ட செய்தி பிரபலமாக்கப்பட்டதும் வேறு வேறான சம்பவங்கள் அல்ல. திமுக-வின் ஐ.டி டீமை விட பெரிய நெட்வொர்க்கையும் ஆளும் வர்க்க ஆதரவையும் கொண்டது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.

அதனால்தான் மயிரிலும் மலராது என்று பெருமை பீற்றிக் கொண்டிருந்த தமிழ்நாட்டில் 4 பேர் பிஜேபி-யின் எம். எல்.ஏக்களாகி இருக்கின்றனர். மொடக்குறிச்சியின் திமுக வேட்பாளரான திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசனின் தோல்வி எப்படி நேர்ந்தது என்பதை கவனியுங்கள். இதுவரை யாரென்றே கேள்விப்படாத சரஸ்வதியை வைத்து தோற்கடித்திருக்கார்கள். ஒரு தொகுதியில் வருடக் கணக்காக வேலை செய்து யாரையும் தோற்கடிக்க முடியும் என்பதை தெரிவிக்கிறார்கள். கடந்த பத்தாண்டு அதிமுக அட்சியின் அவலங்களையும் மீறி அறுபதிற்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வென்றிருக்கிறது.

ஆட்சி அதிகாரத்துக்கு அரிதாரம் பூசியபடியே பாசிசத்தை வீழ்த்த முடியாது. கார்ப்பரேட் – காவி பாசிசத்துக்கு எதிரான போராட்டங்களை எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் கட்டமைக்கிறோமோ அதுமட்டுமே பாசிசத்தை வீழ்த்துவதற்கான துவக்கமாக இருக்கும்.

மக்களோடு துணை நிற்பது மட்டுமே நமது கடமை

“மூடு டாஸ்மாக்கை!” என்ற கோரிக்கையானது மக்கள் மத்தியில் தற்போது பரவலாக இல்லை. மக்கள் அதிகாரம் அமைப்பாகிய நாங்கள் மட்டுமே இக்காலகட்டத்தில் முதலில் முன்வைத்தோம். தமிழ்த்தேச மக்கள் முன்னணி, மனிதி உள்ளிட்ட அமைப்புக்கள் டாஸ்மாக்கை மூடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளன.

படிக்க :
♦ விவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு ! || மக்கள் அதிகாரம்
♦ அரசு மருத்துவமனை ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரமாக்கு !! || மக்கள் அதிகாரம்

தேர்தல் பாதை இடதுசாரிகள் – பெரியாரிய அமைப்புக்கள் – முற்போக்காளர்கள் – அறிவு ஜீவிகள் என யாரின் துணையின்றியும் மக்களுடன் மட்டுமே களத்தில் நிற்கிறோம்.

ஒரு பிரச்சினைக்கு மக்கள் ஆதரவு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை வைத்து முடிவு எடுக்க முடியாது. இப்போது “மூடு டாஸ்மாக்கை” என்ற முழக்கம் மேலெழாமல் இருக்கலாம். ஆனால், கார்ப்பரேட் சுரண்டல் டாஸ்மாக் மட்டுமல்ல அனைத்துவிதமான பிரச்சினைகளையும் மேலெழ வைக்கும். அதற்கு, மக்களோடு துணை நிற்பது மட்டுமே நமது கடமை.


மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
99623 66321.

ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன ?

ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகலும்
மத்திய ஆசியாவைச் சுற்றி நடக்கும் காய் நகர்வுகளும்!

டந்த 20 ஆண்டுகளாக ஆப்கானை ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்கா, தனது படைகளைத் திரும்பப் பெறப்போவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகளும் (நேட்டோ – NATO) தங்கள் படைகளைத் திரும்பப் பெறப்போவதாக அறிவித்துள்ளன. ஆப்கானை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள 9,500 படைவீரர்களில் 2,500 பேர் அமெரிக்காவையும் மீதம் 7,500 பேர் அதன் நேட்டோ கூட்டணி நாடுகளையும் சேர்ந்தவையாகும். மே 1–ம் தேதி தொடங்கி செப்டம்பர் 11–ம் தேதிக்குள் – இரட்டை கோபுரத் தாக்குதலின் 20–ம் ஆண்டு – படிப்படியாக படைகள் திரும்பப் பெறப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதனை விளக்கியுள்ளார்.

படிக்க :
♦ ஆப்கான் : குழந்தைகளை சல்லடையாக்கிய அமெரிக்க இராணுவம்
♦ ஆப்கான் – மத்திய ஆசியா எண்ணெய் – இசுலாமிய தீவிரவாதம் !

2001 செப்டம்பர் 11–ல் உலக வர்த்தக மையம், பெண்டகன் ஆகியவை அல்கொய்தா பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டதை முகாந்திரமாகக் கொண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ் ஆப்கானின் மீது போர்ப் பிரகடனம் செய்தார். “பயங்கரவாதத்துக்கு எதிரான உலகப் போர்” என்றும் “இந்த நூற்றாண்டின் – ஆயிரமாவது ஆண்டின் முதல் போர்” என்றும் அவரால் அறிவிக்கப்பட்ட “அமெரிக்க வரலாற்றின் நீண்ட போரை” முடிவுக்குக் கொண்டுவந்து விட்டதாக பைடனும் அவரது ஏகாதிபத்தியக் கூட்டாளிகளும் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, பைடனின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார். “ஆப்கான் போரை நடத்தும் நான்காவது அதிபர் நான். ஐந்தாவதாக ஒரு அதிபரின் கையில் அதை ஒப்படைக்க மாட்டேன்”, “அமெரிக்கப் படைகள் தங்கள் தாயகம் திரும்ப வேண்டிய காலம் வந்துவிட்டது” என்றெல்லாம் படைவிலக்கத்தை பெருமையுடன் குறிப்பிடுகிறார், பைடன்.

பைடனின் இந்த அறிவிப்பையும் மத்திய ஆசியப் பகுதியில் அமெரிக்காவின் நகர்வுகளையும் புரிந்துகொள்ள, ஆப்கான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின் வரலாற்றைச் சுருக்கமாகவேனும் பார்ப்பது நமக்கு அவசியமாகும்.

ஆப்கான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின் வரலாறு

1978–ல் ஆப்கானில் “ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி” ஆட்சியை அமைத்தது. 1979–ல் சோவியத் சமூக ஏகாதிபத்தியம் தனது மேலாதிக்க நோக்கத்திற்காக ஆப்கான் மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்தது. அதன்பிறகு, 1986–ல் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியான நஜிபுல்லா-வின் தலைமையிலான அரசு அமைந்தது. பெண் கல்வி உள்ளிட்ட சில சீர்திருத்த நடவடிக்கைகளை நஜிபுல்லா அரசு மேற்கொண்டதாகப் பேசப்பட்டாலும், சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்த சொந்த நாட்டு மக்கள் 80,000-க்கும் மேற்பட்டோரை கொன்றொழித்தது.

சோவியத் சமூக ஏகாதிபத்தியம், அமெரிக்க ஏகாதிபத்தியம் – என இரு மேல்நிலை வல்லரசுகளுக்கு இடையில் தீவிரமான பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலம் அது. மத்திய ஆசியப் பகுதியில் தனது செல்வாக்கை நிலைநாட்ட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த அமெரிக்காவுக்கு, ஆப்கானை சோவியத் ஆக்கிரமித்தது ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. 1979–ல் அப்போதைய அமெரிக்க அதிபரான ஜிம்மி காட்டரும் அவரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஸ்பிக்னியேவ் ப்ரெஸ்சின்ஸ்கியும், பாகிஸ்தான் அரசின் உளவுத்துறை நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யுடன் சேர்ந்து – சோவியத்தை எதிர்ப்பதற்காக – இசுலாமிய அடிப்படைவாத கும்பலான முஜாகிதின்களை வளர்த்து விட்டார்கள்.

ஆப்கான் மீதான சோவியத்தின் ஆக்கிரமிப்பை “இசுலாத்தின் மீதான நாத்திக, கம்யூனிஸ்டுகளின் ஆக்கிரமிப்பு” என்றும், “சோவியத்தை எதிர்த்த புனிதப் போர்” என்றும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவையனைத்துக்கும் பின்னிருந்து நிதியுதவியும் ஆயுத உதவிகளும் செய்தவை அமெரிக்காவும் அதன் (அப்போதைய) கூட்டாளியான பாகிஸ்தானுமே ஆகும். பாகிஸ்தானில் தொடர்ச்சியாக முஜாகிதின்கள் ஆயுதப் பயிற்சியும் மதப் பயிற்சியும் பெற்றனர். ஆப்கான் மீது சோவியத் சமூக ஏகாதிபத்தியம் நடத்திய ஆக்கிரமிப்புப் போரில் உடைமையிழந்த, அகதிகளான இளைஞர்கள்தான் இந்த முஜாகிதின்களில் பெரும்பாலானோர் என்பது சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் மீதான அவர்களின் வெறுப்புக்கு இன்னொரு முக்கியமான காரணமாகும்.

இதன் விளைவாக, முஜாகிதின்களோடு நடந்த தொடர்ச்சியான போரில் சோவியத் சமூக ஏகாதிபத்தியம் தோற்றது. 15,000 சோவியத் துருப்புகளை இழந்த பின்னர், 1989–ல் தன் படைகளை ஆப்கானிலிருந்து விலக்கிக் கொண்டது. ஆப்கான் மீதான சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் தோல்வியானது, அமெரிக்காவின் கை மேலோங்குவதில் முடிந்தது. அதன் பின்னர் சோவியத் ஒன்றியம் உடைந்து பல நாடுகளாகச் சிதறியது.

முகமது நஜிபுல்லா

1992–ல் சோவியத் எடுபிடியான நஜிபுல்லா ஆட்சியை முஜாகிதின் குழுக்கள் வீழ்த்தினர். அதன் பிறகு, முஜாகிதின் குழுக்களிடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டது. அதில், பத்தானிய இனத்தைச் சேர்ந்த குல்புதின் ஹெக்மெத்யார் தலைமையிலான “ஹிஸ்ப்-இ இஸ்லாமி” என்ற குழுவை ஓரங்கட்டிவிட்டு, தாஜிக் இனப்பிரிவைச் சேர்ந்த ரப்பானி மற்றும் அகமத் ஷா மசூத் ஆகியோர் தலைமையிலான “ஜமாத்-இ இஸ்லாமி குழு” என்ற குழு அதிகாரப் போட்டியில் வென்றது.

அதன்பிறகு, 1994–ல் சன்னி மதப் பிரிவு மற்றும் பத்தானி இனப்பிரிவைச் சேர்ந்த தாலிபானும் அதிகாரப் போட்டியில் குதித்தது. அப்போதைய அதிபர் ரப்பானி மற்றும் இராணுவத் தளபதி முகமது ஷா மசூத்-க்கும் முல்லா உமரைத் தலைமையாகக் கொண்ட தாலிபான்களுக்கும் இடையில் ஏற்பட்ட அதிகாரப் போட்டியில் 1996–ல் தாலிபான்கள் நாட்டின் பெரும்பகுதியைக் – 95 சதவீதத்தைக் – கைப்பற்றினர். இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்காக, ஐ.நா அலுவலகத்தினுள் பதுங்கியிருந்த ‘கம்யூனிஸ்டு’ அதிபர் நஜிபுல்லாவைக் கொன்று தூக்கிலிட்டனர், தாலிபான்கள்.

பின்னர், ஏழு ஆண்டுகள் (1996–2001) தாலிபான்களின் காட்டுமிராண்டித்தனமான ஆட்சி ஆப்கானில் நடந்தது. ஷரியத் சட்டத்தின் ஆட்சி என்று சொல்லப்பட்ட தாலிபான் ஆட்சியில் பெண்கள் மீது எண்ணற்ற கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன. பெண்கள் கல்வி கற்பது, வேலைக்குச் செல்வது தடை செய்யப்பட்டது. பர்தா அணியாத பெண்கள் கல்லால் அடித்தே கொல்லப்பட்டனர். ரப்பானி அரசை அதுவரை ஆதரித்து வந்த அமெரிக்கா, தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றியதும் அவர்களை ஆதரிக்கத் தொடங்கியது.

அப்போதைய அமெரிக்க அதிபர் கிளிண்டன்-இன் அரசு தாலிபான்களை அங்கீகரித்தது. ஐ.நா.விலும் அவர்களுக்கு அங்கீகாரம் பெற்றுத்தர முயன்றது. இதற்குக் காரணம், ஆப்கானின் பூகோள முக்கியத்துவமே ஆகும். ஈரானைக் கண்காணிப்பதும், சோவியத் ஒன்றியம் உடைந்து உருவாகியுள்ள தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துருக்மேனிஸ்தான், காசக்ஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய மத்திய ஆசிய நாடுகளில் உள்ள எண்ணெய் – எரிவாயு வளங்களைக் கைப்பற்றி, அவற்றை ஆசிய, ஐரோப்பியச் சந்தைக்கு கொண்டுசெல்ல ஆப்கான் – பாகிஸ்தான் – அரபிக் கடல் வழியாக பாதை அமைப்பதே இதன் நோக்கமாகும். சுருங்கச் சொன்னால், மத்திய ஆசியப் பகுதியில் தன் மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதே ஆகும்.

ஆனால் 1996–க்குப்பின், பின்லேடனுடன் தாலிபான்கள் கூட்டுச் சேர்ந்து கொண்டனர். தன் நோக்கத்திற்கேற்ப செயல்படாமல் தாலிபான்கள் வேறு திசையில் பயணித்ததால், அமெரிக்கா அப்போது செய்வதறியாமல் திகைத்தது. ஆப்கானின் உள்விவகாரத்தில் தலையிட்டு எப்படியாவது தனது நோக்கத்திற்கேற்ப அங்கு ஒரு பொம்மை அரசை அமைக்க வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருந்த அமெரிக்காவுக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்புதான் செப்டம்பர் 11, 2001-ல் நடந்த அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதல். உலக வர்த்தக மையமானது, அல்கொய்தா எனும் பயங்கரவாத அமைப்பால் தாக்கப்பட்டதைச் சாக்கிட்டு, உடனே ஆப்கானில் படைகளைக் குவித்து தாலிபான்களை அழித்துவிட்டு தனது கைக்கூலி அரசை நிறுவ வேண்டும் என அமெரிக்கா தீர்மானித்தது. இதுதான் “பயங்கரவாத எதிர்ப்புப் போர்” என்று பீற்றிக் கொள்ளப்படும் ஆப்கான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின் பின்னணி.

அதாவது, எந்த இசுலாமிய பயங்கரவாத அமைப்புகளை சோவியத் சமூக ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அமெரிக்கா வளர்த்துவிட்டதோ, அவற்றையே பின்னர் எதிரிகளாகவும் உலகை அச்சுறுத்தும் பயங்கரவாதிகளாகவும் அறிவித்து – அவற்றிடமிருந்து உலகைக் காக்க வந்த மீட்பன் போலத் தன்னைக் காட்டிக் கொண்டு – தன் ஆக்கிரமிப்புக்கு நியாயம் கற்பித்தது, அமெரிக்கா.

இதுஒருபுறம் இருக்க, 1996–இல் அதிகாரப் போட்டியில் தோற்ற ரப்பானி மற்றும் மசூத் குழுவானது, தோஸ்தம் என்ற யுத்தப் பிரபுவுடன் சேர்ந்துகொண்டு சில கிராமப்புறப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டு தாலிபான்களை எதிர்த்து வந்தது. இது “வடக்குக் கூட்டணி” என அழைக்கப்பட்டது. இந்த வடக்குக் கூட்டணியை ஒழிக்க 1996–களில் அமெரிக்கா தாலிபான்களுடன் சேர்ந்து கொண்டது. ஏனெனில், இக்கூட்டணியானது ரசியா மற்றும் ஈரானின் ஆதரவைப் பெற்றிருந்தது.

2001–ல் அமெரிக்க, பிரிட்டன், நேட்டோ படைகள் ஆப்கானை ஆக்கிரமித்து கொலைவெறித் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டதால், தாலிபான்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. அவர்கள் காபூலைக் காலிசெய்துவிட்டு பத்தானியர்கள் அதிகமுள்ள மலைகளில் போய் பதுங்கிக் கொண்டனர். தாலிபான்கள் காபூலைக் காலிசெய்யும் செய்தி அறிந்ததும், வடக்குக் கூட்டணியானது காபூலைக் கைப்பற்றிக் கொண்டது. அப்போது அமெரிக்கா வடக்குக் கூட்டணியை ஆதரித்தது. அதாவது, 1996–களில் வடக்குக் கூட்டணியை ஒழிக்க தாலிபான்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்ட அமெரிக்கா, 2001–ல் தாலிபான்களை ஒழிக்க வடக்குக் கூட்டணியுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டது.

ஆனாலும் வடக்குக் கூட்டணியை முழுமையாக அமெரிக்கா நம்பவில்லை. ஏனெனில், அந்நாட்டில் பத்தானிய இனப்பிரிவைச் சேர்ந்த இஸ்லாமிய சன்னி மதப்பிரிவு மக்கள்தான் பெரும்பான்மையாகும். இக்கூட்டணியோ தாஜிக், உஸ்பெக் ஆகிய சிறுபான்மை இனத்தவர்களின் சேர்க்கையாக இருந்ததால், இவர்களின் ஆட்சி நிலையானதாக இருக்காது என்பதே இதற்குக் காரணமாகும்.

சி + சி5

எனவே, தனது மறுகாலனியக் கொள்கைக்கு ஏற்ப ஆப்கானில் ஒரு இடைக்கால அரசை அமைக்க அமெரிக்கா முயன்றது. அதன்படி, அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ், பிரிட்டன் பிரதமர் டோனி பிளேயர், பாகிஸ்தான் அதிபர் முஷாரப் ஆகியோரின் திட்டப்படி ஜெர்மனியில் கூட்டம் நடத்தி, பத்தானிய இனத்தைச் சேர்ந்த ஹமீது கர்சாய் என்பவர் தலைமையில் 2001-ல் ஒரு கைப்பாவை அரசை அமெரிக்கா அமைத்தது. பின்னர் ஜனநாயகத்தை நிலைநாட்ட ஒரு தேர்தல் நாடகம் நடத்தப்பட்டு, 2004 மற்றும் 2009-இல் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று, கர்சாய் அதிபரானார். அதன் பின்னரும் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் படைகள் ஆப்கானிலிருந்து வெளியேறாமல் அங்கேயேதான் இருந்து வந்தன. அதன் பின்னர், தாலிபான்களின் அச்சுறுத்தல்களுக்கு நடுவே மிகக் குறைவான வாக்குப்பதிவுடன் நடந்த 2014 இத்தேர்தலில் அஷ்ரப் கானி வெற்றி பெற்று அதிபரானார். பின்னர் 2019-இல் நடைபெற்ற தேர்தலிலும் இரண்டாம் முறையாக அவரே வெற்றி பெற்று அதிபராக நீடிக்கிறார்.

ஆப்கானில் தாலிபான்களின் வளர்ச்சியும், அமெரிக்கா ‘பின்வாங்குவதன்’ பின்னணியும்!

அமெரிக்கா தனது படைகளைத் திரும்பப்பெறும் அறிவிப்பை இப்போது வெளியிட்டிருப்பது ஒன்றும் வியப்பான விடயமல்ல. இது, அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, கடந்த 20 ஆண்டுகளில் தாலிபான்களின் வளர்ச்சியாகும்.

தாலிபான்களின் வளர்ச்சிக்கு முக்கியமான மூலாதாரம் கஞ்சா (அபினி) உற்பத்தி. 2001–இல் பின்னடைவுக்குப்பின் தாலிபான் யுத்தப் பிரபுக்கள் சில கிராமப்புறப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டு, அங்கு அபினி பயிரிடுவதைச் செய்து வந்தனர். 2003–இல் 3,600 டன்கள் அளவுக்கு நடைபெற்ற அபினி உற்பத்தியானது, 2007–இல் 8,200 டன்களாக உயர்ந்தது. இது, உலகின் மொத்த சட்டவிரோத அபினி உற்பத்தியில் 93 சதவீதமாகும். அக்காலத்திலேயே தாலிபான்கள், படிப்படியாக கிராமப்புறங்களைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரத் தொடங்கினர்.

படிக்க :
♦ ஆப்கானிஸ்தான் : உயிருக்குப் போராடும் 6 இலட்சம் குழந்தைகள் !
♦ ஆப்கானிஸ்தான் மாவோயிஸ்ட் விடுதலை இயக்கம் – சில குறிப்புகள்

ஆப்கானில் தனது கைப்பாவையான கர்சாய் அரசின் பிடி தளர்ந்து வருவதைக் கண்டு அஞ்சிய அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ், தாலிபான்களைக் கட்டுப்படுத்த, 7 பில்லியன் டாலர்களைச் செலவு செய்து “போதை மருத்து ஒழிப்புப் போர்” என்ற பெயரில் ஒரு தாக்குலை நடத்தினார். அதன் பின்னர் 2009–ல் ஒபாமா நிர்வாகம், 1,00,000 துருப்புகளை அங்கே குவித்தது. தாலிபான்களைக் கட்டுப்படுத்துவதில் ஓரளவு வெற்றியடைந்தாலும், அபினி பயிரிடுவதை அமெரிக்காவால் அழிக்க முடியவில்லை. மீண்டும் 2014–ம் ஆண்டு தாலிபான்கள் ஆப்கான் அரசுப் படைகள் மீது தாக்குதல் தொடுக்கத் தொடங்கினர். 2017–ல் அபினி சாகுபடி 9,000 டன்களாக உயர்ந்தது.

தற்போது பெரும்பாலான கிராமப்புறங்களைத் தாலிபான்கள் தங்கள் பிடியில் கொண்டுவந்து விட்டனர். கடந்த பிப்ரவரியிலிருந்து, அஷ்ரப் கானி அரசின் செல்வாக்கிலுள்ள கேந்திரமான கந்தகார், குண்டூஸ், ஹெலமந்த், பக்லான் ஆகிய பகுதிகளை அச்சுறுத்தி வருகின்றனர். பல பகுதிகளில் ஆப்கான் போலீசு மற்றும் இராணுவத்தின் பிடி தளர்ந்து வருகிறது. இதேநிலை நீடித்தால் விரைவில் அமெரிக்க–ஆப்கான் படைகளுக்கும் தாலிபான்களுக்கும் போர் மூளும் என்பதை அமெரிக்கா நன்கு உணர்ந்துள்ளது.

ஏற்கெனவே ஆப்கான் போரில் மட்டும் ஏறத்தாழ 2 டிரில்லியன் டாலர் (2 லட்சம் கோடி டாலர்) அளவுக்கு அமெரிக்கா செலவு செய்துள்ளது. மேலும் 2,500–க்கும் மேற்பட்ட படைவீரர்களை அது இழந்துள்ளது. 57 சதவீத அமெரிக்க மக்கள் ஆப்கான் போரை எதிர்ப்பதாகக் கூறுகிறது, 2007–ல் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பு. எனவே, மேலும் மேலும் ஆப்கான் போருக்காக அதிக செலவுகள் செய்தால், அது அமெரிக்க மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பதை அமெரிக்க அரசு உணர்ந்துள்ளது. அதனால், ஆப்கானிலிருந்து துருப்புகளைத் திரும்பப் பெறுவது, போரை முடிவுக்குக் கொண்டுவருவது ஆகியன பற்றி நீண்ட காலமாகவே அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டணி நாடுகளின் அரசுகள் விவாதித்து வந்தன.

இப்பின்னணியில், டிரம்ப் அதிபராக இருந்தபோதே, 2019 பிப்ரவரியில் தாலிபான்களும் அமெரிக்காவும் கத்தார் நாட்டின் தோஹா நகரில் கூடி ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டனர். இதன்படி, அமெரிக்கா ஆப்கானிலிருந்து வெளியேறுவதாக முடிவானது. அந்த ஒப்பந்தத்தைத்தான் பைடன் இப்போது செயல்படுத்துகிறார். இனி படிப்படியாக ஆப்கான், தாலிபான்களின் பிடியில் செல்லும் என்பது உறுதியாகிவிட்டது.

“பயங்கரவாதத்தை எதிர்த்த உலகப் போர்” என்றும், “ஆப்கானில் நீடித்த சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்கான போர்” என்றும் அமெரிக்காவால் சித்தரிக்கப்பட்ட இந்தப் போர், அதன் நோக்கங்களில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை என முதலாளித்துவ பத்திரிக்கையாளர்களே கேலி செய்கின்றனர். ஆனால் பைடனோ, “அமெரிக்கா தான் வாக்களித்த கடமைகளையெல்லாம் நிறைவேற்றிவிட்டதாகவும், அல்கொய்தாவை அழித்துவிட்டதாகவும்” கூச்சமின்றிப் பேசுகிறார்.

மதவெறி – பயங்கரவாத யுத்தப் பிரபுக்களான தாலிபான்கள் மீண்டும் ஆப்கானை ஆளப்போகின்றனர். இதுதான் அமெரிக்கா மீட்டெடுத்த ‘ஜனநாயகம்’. தனது மேலாதிக்க நோக்கங்களுக்கு அமெரிக்கா நடத்திய இந்த ஆக்கிரமிப்புப் போரில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் கொல்லப்பட்டனர். காயமுற்றவர்களும் உடைமையிழந்தவர்களும் உடல் ஊனமானவர்களும் அகதிகளானவர்களும் எண்ணிலடங்காதோர்.

மத்திய ஆசியப் பகுதியில் அமெரிக்காவின் கேந்திரமான தளம் ஆப்கான்!

ஆப்கானிலிருந்து தன் படைகளைத் திரும்பப் பெறுவது, சீனாவின் பக்கம் பாகிஸ்தான் இருப்பது – ஆகிய இவையெல்லாம் மத்திய ஆசியப் பகுதியில் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பின்னடைவு என்றும், அதன் உலக மேலாதிக்கத்திற்கு மிகப்பெரிய சரிவு என்றும் பலராலும் கருதப்படுகிறது. ஒருபுறம் அது உண்மைதான் என்ற போதிலும், இன்னொருபுறம் அவ்வளவு எளிதில் ஆப்கானை அமெரிக்கா விட்டுவிடாது. “ஆசியா ஒரு விமானம் என்றால், அதில் விமான ஓட்டியின் அறைதான் ஆப்கான்” என்றது, அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ் நிர்வாகம். இப்போதும் அமெரிக்கா ஆப்கானை அப்படித்தான் பார்க்கிறது. சுருக்கமாகச் சொன்னால், 20 ஆண்டுகளாகத் தொடரும் மிக நீண்ட போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நோக்கம் எதுவும் அமெரிக்காவுக்கு இல்லை. அதை வேறு வழிகளில் தொடர்வதற்கு மட்டுமே திட்டமிட்டுள்ளது.

உலக அரங்கில் தனக்குப் போட்டியாக வளர்ந்துவரும் சீனாவையும், ரசியா, ஈரான் ஆகிய நாடுகளையும் கட்டுப்படுத்த ஆப்கானை ஒரு முக்கியமான தளமாகவே அமெரிக்கா கருதுகிறது. “ஆப்கானில் அமெரிக்கா இருப்பதற்கு மூன்று நோக்கங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று, சீனாவைக் கட்டுப்படுத்துவதே” என்று அமெரிக்காவின் முன்னாள் இராணுவ அதிகாரி லாரன்ஸ் வில்கர்சன் 2018–இல் கூறியுள்ளார். அதிபர் பைடன் பதவியேற்றதும் பெண்டகன் எனும் அமெரிக்க இராணுவத் தலைமையகத்துக்கு வந்தபோது, “சீனாதான் 21–ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய சவால். சீனாவின் சவாலைச் சந்திப்போம். எதிர்காலத்துக்கான போட்டாபோட்டியில் வெற்றி பெறுவோம்” என்று வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.

சீனாவுக்கும் ஆப்கானுக்கும், பாகிஸ்தானுக்கும் எல்லைப் பகுதியாக உள்ள ஷின்ஜியாங் (Xinjiang) என்ற சீனாவின் தன்னாட்சி பெற்ற மாநிலமானது, உய்குர் சுயாட்சிப் பிரதேசம் என்று குறிப்பிடப்படுகிறது. இப்பகுதியிலுள்ள துருக்கி மொழி பேசும் தேசிய இனச் சிறுபான்மையினரான முஸ்லிம்களே உய்குர்கள் என்றழைக்கப்படுகின்றனர். உய்குர் முஸ்லிம்கள், இப்பிராந்தியத்தை “கிழக்கு துர்கிஸ்தான்” என்று குறிப்பிடுகின்றனர். தற்போது உய்குர் பிரதேசத்தில், துர்கிஸ்தான் இஸ்லாமிய கட்சியும் (TIP) இன்னும் சில ஆயுதக் குழுக்களும் தனிநாடு கோரிக்கையுடன் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இக்கட்சியும் இதர ஆயுதக் குழுக்களும் ஆப்கானில் பயிற்சி பெற்றதோடு, பயங்கரவாதி பின்லேடன் தலைமையிலான குழுவினர் மூலம் நிதியும் ஆயுதங்களும் பெற்றுள்ளன. 2009-லிருந்து தொடர்ச்சியாக உய்குர் பிராந்தியத்திலும், சீனாவிலும், சீனத் தூதரகம் அமைந்துள்ள நாடுகளிலும் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தி வந்துள்ளன. சிரியாவில் அமெரிக்கா தூண்டிவிட்ட ஆட்சி மாற்றத்திற்கான போரில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் உய்குர் பயங்கரவாதிகளும் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்க – சீன மோதல் தீவிரமடைந்துள்ள தற்போதைய சூழலில், உய்குர் முஸ்லிம் சிறுபான்மையினரின் மனித உரிமைகளைப் பறித்ததாகக் குற்றம்சாட்டி மூன்று சீன அரசு அதிகாரிகளைத் தனது நாட்டுக்குள்ள நுழையக் கூடாதென அமெரிக்க வல்லரசு தடை விதித்துள்ளது. மறுபுறம், “வெளிநாட்டில் இயங்கும் கிழக்கு துர்கிஸ்தான் அரசாங்கம்” என்ற அமைப்பும், “கிழக்கு துர்கிஸ்தான் தேசிய விழித்தெழும் இயக்கம்” என்ற அமைப்பும் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் இயங்கி வருகின்றன.

சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டத்தின்படி (BRI), மேற்காசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் முக்கியப் பகுதியாக ஷின்ஜியாங் மாநிலம் அமைந்துள்ளது. எனவே, உய்கூர் பிரச்சினையைப் பயன்படுத்தி, அங்குள்ள இஸ்லாமிய ஆயுதக் குழுக்களை வளர்த்துவிட்டு சீனாவுக்குத் தீராத தொல்லைகளையும் நெருக்கடியையும் உருவாக்க வேண்டும் என்று ஒபாமாவின் ஆட்சிக் காலத்திலிருந்தே அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. அமெரிக்காவின் இத்திட்டத்திற்கு ஆப்கான்தான் கேந்திரமான தளமாக இருக்கப் போகிறது.

மேலும், கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானில் அமெரிக்கா ஒரு பெரிய புலனாய்வு வலையமைப்பை நிறுவியுள்ளது. ஆப்கானின் பாதுகாப்புப் படையில் 17,000–க்கும் மேற்பட்டோரை “பாதுகாப்பு ஒப்பந்ததாரர்கள்” எனும் பெயரில் அமெரிக்கா நுழைத்துள்ளது. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆயுதந்தாங்கியவர்கள். படைகளைத் திரும்பப்பெறும் பைடனின் திட்டத்தில் இந்தப் “பாதுகாப்பு ஒப்பந்ததாரர்கள்” பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மேலும், “ஆப்கானில் நாம் இராணுவ ரீதியாக ஈடுபாடு கொண்டிருக்க மாட்டோம் என்றாலும், அரசு தந்திர, மனிதாபிமான பணிகள் தொடரும். ஆப்கானிஸ்தான் அரசுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிப்போம்”, “ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் பிராந்தியத்தில் பயங்கரவாத அபாயத்தைத் தொடர்ந்து நாங்கள் கண்காணிப்போம், அதற்கு எதிராக தொடர்ந்து சண்டையிடுவோம்” என்று கூறியுள்ளார் பைடன். “ஆப்கானை அமெரிக்கா கைவிடுவது என்பது, அதோடு கொண்டிருக்கும் தொடர்பின் வடிவத்தை மாற்றுவதுதான்” என்று கூறியுள்ளார் ஆப்கானில் நல்லிணக்கத்துக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதியான, சால்மே கலீல்சாத்.

படைகளைத் திரும்பப் பெறும் பைடனின் அறிவிப்புக்குப் பின்னர், அமெரிக்க இராணுவ தளபதி கென்னத் பிராங்க்ளின் மெக்கென்சி, “அமெரிக்கா அப்பகுதியில் தனது இராணுவ செல்வாக்கை தொடர்ந்து பராமரிக்கும். மேலும், ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல்களை நடத்தும் திறனையும் உறுதி செய்யும்” என்று கூறியுள்ளார்.

இவற்றின் மூலம் ஆப்கானில் அமையவுள்ள அரசை அமெரிக்கா மறைமுகமாகக் கட்டுப்படுத்தவே முயலும். தனது ஆதிக்கத்தைத் தொடரவே முயலும். நேரடியாகப் படைகளைக் குவித்து, ஆக்கிரமிப்பைச் செய்து ஒரு நாட்டைக் கட்டுப்படுத்துவதைக் காட்டிலும், இவ்வகையான மறைமுகமான நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு – சர்வதேச ரீதியில் அவப்பெயர் இல்லை என்பதால் – சாதகமானதே ஆகும்.

இன்னொருபுறம், சீனாவோ ஆப்கானுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள 2017–இல் இருந்து முயன்று வருகிறது. அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னர், ஆப்கானில் தாலிபான்களையும் அஷ்ரப் கனியையும் உள்ளடக்கியதொரு ‘ஜனநாயக’ அரசை ஏற்படுத்தவும் முயற்சிக்கிறது. “ஆப்கானின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்” என 2020–ஆம் ஆண்டு நடந்த ஷாங்காய் கூட்டுறவு (SCO) உச்சி மாநாட்டில் பேசியுள்ளார் சீன அதிபர் ஜி ஜின்பிங். தன்னுடைய புதிய பட்டுப்பாதைத் திட்டத்தில் ஆப்கானை இணைத்துக் கொள்ளவும் சீனா முயற்சிக்கிறது.

சீனாவின் ஷின் ஜியாங் பகுதி

இதுவொருபுறமிருக்க, அமெரிக்காவின் திட்டங்களை முறியடிக்கும் நோக்கத்துடன் மத்திய ஆசியாவின் ஐந்து நாடுகளுடன் சீனா ஒரு கூட்டணியைக் கட்டியமைத்துள்ளது. அது சி+சி5 (C+C5) என்று குறிப்பிடப்படுகிறது. (சீனா + காசக்ஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான், துருக்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 5 மத்திய ஆசிய நாடுகளின் கூட்டணி) கடந்த மே 12 அன்று இந்தக் கூட்டணியின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில், மத்திய ஆசியப் பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு, ஒத்துழைப்பு, பயங்கரவாதத்தை முறியடிப்பது, புதிய பட்டுப்பாதைத் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் முதலானவற்றைச் செயல்படுத்துவதற்கான திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, அமெரிக்கப் படைவிலக்க அறிவிப்புக்குப் பின்னர் எழுந்துள்ள புதிய நிலைமைகளையொட்டி கடந்த ஜூன் 5-ஆம் தேதியன்று ஆப்கான், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அரசுகள் இணையவழி கூட்டத்தையும் நடத்தியுள்ளன.

புதிய போர் அபாயம் ஏற்படுமா ?

ஏற்கெனவே ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த சீனா முயற்சித்து வருவதற்கு எதிராக இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளை இணைத்துக் கொண்டு “குவாட்” கூட்டணியை அமெரிக்கா அமைத்துள்ளது. இப்போது மத்திய ஆசியப் பகுதியிலும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதால், இக்கூட்டணியானது சீனாவுக்கு எதிரான போரில் இறங்கவும் வாய்ப்புள்ளது. இப்போரானது, ஆப்கான், பாகிஸ்தான், ஈரான், சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளும், மத்திய ஆசிய நாடுகளும் ஈடுபடக்கூடிய மிகப் பெரிய போராக மாறவும் வாய்ப்புள்ளது.

அமெரிக்காவின் விசுவாசக் கூட்டாளியாகவும், தெற்காசியாவில் பிராந்திய மேலாதிக்கம் செய்யும் பெரிய நாடாகவும் உள்ள இந்தியா, ஆப்கானில் அமெரிக்காவின் பொம்மை அரசு அமைந்த பிறகு, அமெரிக்காவின் தயவில் ஆப்கானில் மறுசீரமைப்பு – கட்டுமானப் பணிகளைச் செய்யத் தொடங்கியது. இதன் மூலம் ஒருபுறம் இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு ஆதாயம் கிடைக்கும், மறுபுறம் உலக அரங்கில் மனிதாபிமான முகமும் இந்தியாவுக்குக் கிடைக்கும் என்று கருதியது.

ஆப்கானில், தாலிபான்களை வீழ்த்தி, அந்நாட்டை மீண்டெழச் செய்யும் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதன் மூலம் தெற்காசியா மட்டுமின்றி, மத்திய ஆசியப் பகுதியிலும் தனது வல்லரசு பராக்கிரமத்தையும் செல்வாக்கையும் உயர்த்திக் கொள்ள முடியும் என்ற உத்தியுடன் தனது அரசு தந்திரக் கொள்கையை அமைத்துக் கொண்டது. ஆனால், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்குப் பழிதீர்க்க இந்தியத் தூதரகத்தின் மீதும், இந்தியக் கட்டுமானத் தொழிலாளர்கள் மீதும் தாலிபான்கள் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

அமெரிக்காவின் தயவில் பெயரளவிலான ஒரு அரசு ஆப்கானில் நீடிக்கும் வரை, உதவி என்ற பெயரில் இந்தியாவும் ஆப்கானில் தலையிடுவதற்கு ஒரு வாய்ப்பாக இருந்தது. ஆனால், இப்போது அமெரிக்கப் படைகள் வெளியேறுவதால், அமெரிக்காவின் தயவிலான அரசும் நீடிக்க இயலாமல் போய், தாலிபான்களின் கை மேலோங்குவதால், இந்திய அரசின் நோக்கங்கள் தோற்றுப்போய் புஸ்வாணமாகிவிட்டன. இதனால்தான் அமெரிக்காவுக்கும் தாலிபான்களுக்கும் இடையில் கடந்த பிப்ரவரி 2020-ல் ஒப்பந்தம் கையெழுத்தானதும், “இது தாலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்கும் கிடைத்த வெற்றி” என இந்திய அரசு சித்தரித்தது.

பைடனின் படைவிலக்க அறிவிப்புக்குப் பின்னர், ஆப்கானில் அனைத்து தரப்பினரும் போர் நிறுத்தத்தைச் செயல்படுத்துமாறு மோடி அரசின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கோரியது. இல்லையேல், இது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் சிக்கல்களை உருவாக்கும் என்று கவலை தெரிவித்தது.

படிக்க :
♦ ஆப்கான் : அமெரிக்கா வளர்த்த கிடா மாரில் பாய்கிறது!
♦ ஆப்கான் ஆக்கிரமிப்புப் போர் : புதை மணலில் சிக்கியது அமெரிக்கா!

ஏற்கெனவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மற்றும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் முறுகல் நிலை நீடிக்கிறது. இந்நிலையில் ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படை விலகலையொட்டி அங்கு தமது தரகு முதலாளிகளின் முதலீடுகளைத் தொடர்வது குறித்த பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான போட்டி உருவெடுத்துள்ளது. இப்பிரச்சினைகள் சுமுகமாகத் தீர்வதற்கான வாய்ப்பும் இல்லை. ஆப்கானிஸ்தானில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் பட்சத்தில், அது இந்தியாவுக்குச் சாதகமாக இருக்க வாய்ப்பு இல்லை.

மத்திய ஆசியாவில் சீனாவின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த அமெரிக்கா ஒருபுறம் முயற்சிக்கும் வேளையில், தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவுடன் “குவாட்” கூட்டணி அமைத்து போர் சூழலை உருவாக்கியுள்ளது. ஒருவேளை, அமெரிக்காவின் மத்திய ஆசியாவைக் கைப்பற்றும் போரிலோ, தென் கிழக்கு ஆசியாவில் சீனாவுக்கு எதிராக நடத்தப்படும் ‘குவாட்’ இராணுவ நடவடிக்கைகளிலோ இந்திய அரசு ஈடுபட்டால் அது புதைசேற்றில் இந்திய மக்களைத் தள்ளுவதாகவே போய் முடியும்.

தீரன்

உதவிய கட்டுரைகள் :

திமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்

சேவா பாரதி அமைப்போடு திமுக-வின் அமைச்சர்கள் இருவர், எம்.எல்.ஏக்கள் கூட்டு சேர்ந்து கொரோனா வார்டு திறந்து வைத்ததையும், பாரத மாதாவுக்குப் பூஜை செய்ததையும் அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது.

திமுக-வுக்கு வாக்கு கேட்ட முற்போக்கு பேசும் தோழர்கள், யூட்யூப் சேனல்கள், இயக்கங்கள் முதலானவை சேவா பாரதியின் அழைப்பின் பெயரில் திமுக-வினர் கலந்து கொண்டுள்ளனர் என்று normalise செய்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், சேவா பாரதியின் வரலாறு அப்படிப்பட்டது.

படிக்க :
♦ “பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் !
♦ காவி மயமாகும் வடகிழக்கு இந்தியா ! சிறப்புக் கட்டுரை

  • ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மக்கள் சேவைப் பிரிவுதான் சேவா பாரதி. அவர்களின் அகராதியில் ‘சேவா’ என்பது வெறும் சேவை கிடையாது. ’சேவா’ என்றால் சாதியால் பிரிந்திருக்கும் இந்துக்களை ஒரு அணியில் திரட்டுவதற்கும், இந்துக்கள் அல்லாத கிறித்துவ, இஸ்லாமியர்களை மீண்டும் தாய் மதம் திருப்புவதற்கும் மேற்கொள்ளப்படும் பணியாகும்.
  • 2001 குஜராத் பூகம்பத்தின் போது, வெளிநாட்டு நிதியைப் பெற்றுக் கொண்டு உயர்சாதி இந்துக்களுக்கு மட்டும் சேவை செய்த அமைப்பு சேவா பாரதி. மற்ற அமைப்புகள் பணியாற்றுவதைத் தடுத்து, தங்களுக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகளை வைத்து இந்துக் கோயில்களைக் கட்டியிருக்கிறது இந்த அமைப்பு.
  • அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து பழங்குடிச் சமூகங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 31 சிறுமிகளை குஜராத், ராஜஸ்தான் முதலான மாநிலங்களுக்குக் கடத்தி, அவர்களை இந்துக்களாக மாற்றுவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறது சேவா பாரதி. இது குறித்து அவுட்லுக் இதழில் 2016-ஆம் ஆண்டு விரிவான கட்டுரை ஒன்று வெளிவந்தது.
  • சேவா பாரதியின் சர்வதேச அமைப்பான சேவா இண்டர்நேஷனல் அமைப்புக்கு குஜராத் பூகம்பத்தின் போது, பிரிட்டிஷ் மக்கள் அளித்த நிதி, 2002 குஜராத் படுகொலையின் போது முஸ்லிம்களைக் கொல்வதற்காகப் பயன்படுத்தப்பட்டதாக அப்போதைய பிரிட்டிஷ் தொலைக்காட்சி நிறுவனம் சேனல் 4 செய்தி வெளியிட்டது.
  • கடந்த ஆண்டு, சாத்தாங்குளம் லாக்கப் மரணத்தில் சேவா பாரதி அமைப்பு ஊடுறுவிய Friends of Police குழுவுக்குத் தொடர்பு இருந்தது. தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக கோவை, திருப்பூர் முதலான கொங்கு பகுதிகளில் காவல் நிலையங்களிலும், சட்டமன்ற உறுப்பினர்களைச் சுற்றியுள்ளவர்களிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சேவா பாரதி தொண்டர்களைப் பார்க்க முடியும்.

இப்படியான வரலாற்றைக் கொண்டிருக்கும் சேவா பாரதியோடு மேடையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறது திமுக. மேலும், Heartfulness என்ற மற்றொரு தொண்டு நிறுவனமும் இதில் இடம்பெற்றிருக்கிறது. இது ஸ்ரீ ராமசந்திரா மிஷன் என்ற பெயரில் செயல்படும் கார்ப்பரேட் சாமியார் கமலேஷ் படேலின் நிறுவனம். கமலேஷ் படேலின் பணிகளைப் பிரதமர் மோடி தொடர்ந்து பாராட்டி வருகிறார். சர்வதேச அளவில் யோகாவை பரப்புவதற்காக இந்த அமைப்பின் பணிகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னிறுத்தியிருக்கிறார்.

This slideshow requires JavaScript.

Heartfulness அமைப்பின் கொரோனா உதவிச் சேவையை சென்னையில் திறந்து வைத்திருக்கிறார் திமுக-வின் மாநில இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின். எதிர்காலத்தில் இந்த அமைப்பு மற்றொரு ஈஷாவாக உருவாகும் போது, அப்போது இவை பயனற்றதாக இருக்கும்.

திமுக அமைச்சர்கள் பங்குபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, தனது பதவியில் இருந்து விலகிய முன்னாள் மேகாலயா ஆளுநர் சண்முகநாதன், பிஜேபி துணைத் தலைவர் அண்ணாமலை, தமிழக ஆர்.எஸ்.எஸ் மூத்த பொறுப்புதாரிகள் முதலானோர் பங்கேற்றுள்ளனர்.

வாக்கு அரசியலுக்காக சிறுபான்மையினரிடம் பாசிச பாஜக பூச்சாண்டி காட்டியும், ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி எதிர்ப்பு அரசியலை முன்வைக்கும் இயக்கங்களின் போராட்டங்களை அறுவடை செய்தும் ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக, இந்துப் பெரும்பான்மைவாதத்தின் திராவிட முகமாக மாறுவதற்கான ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது.

படிக்க :
♦ சாத்தான்குளம் படுகொலை : காவலர்களல்ல, கிரிமினல்களே !
♦ அபாயம் : அரசு பள்ளிகளில் RSS ஆசிரியர்கள் !

எப்படி தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு எதிரான சாதிவெறி, திராவிடக் கட்சிகளால் வாக்கு வங்கிக்காக கண்டிக்க இயலாத அளவுக்கு normalise ஆகியிருக்கின்றதோ, அதே போல இந்துப் பெரும்பான்மைவாதமும் மாறப் போகிறது.

ர.முகமது இல்யாஸ்
முகநூலில் : Ilyas Muhammed Raffiudeen
disclaimer

கொள்ளை நோய் மரணங்களுக்கு முதலாளித்துவம் எப்படி காரணமாக முடியும் ?

இலாப வெறியை நோக்கமாகக் கொண்ட ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின்
கோரத் தாண்டவமே கொரோனா ! – இறுதிப் பகுதி

பகுதி 1 :  உருமாறி வரும் கொரோனா : பெருந்தொற்றுகளின் வரலாறு !
பகுதி 2 : வைரஸ்கள் எப்படி உருமாறுகின்றன ? || ஓர் அறிவியல் விளக்கம் !
பகுதி 3 : பெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்!
பகுதி 4 : இலாபத்திற்கான உற்பத்தியின் உலகமயமாக்கலும் – வைரஸ்களின் பரிணாமமும் !!

இறுதிப் பகுதி :

கொள்ளை நோய்களுக்கு முதலாளித்துவம் எப்படி காரணமாகிறது?

இதுவரை தற்கால முதலாளித்துவ உற்பத்தி ஒழுங்கமைக்கப்பட்டுள்ள முறையினால் எப்படி மனிதர்களை தொற்றும் புதுப்புது வைரஸ்கள் உருவாகின்றன, பரிணாமமடைகின்றன என்பதையும் நவீன விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பெருநிறுவனங்களின் இலாபவெறியால், எங்ஙனம் புதிய தொற்று வைரஸ்கள் உருவாகின்றன என்பதையும் பார்த்தோம். மேலும், அவை உலகளாவிய கொள்ளை நோயாக உருவாக இந்த உலகளாவிய முதலாளித்துவ உற்பத்திமுறையே (உற்பத்தி, வாணிபம் வலைப்பின்னல், வினியோகம்) எங்ஙனம் வாய்ப்பேற்படுத்திக் கொடுக்கின்றன என்பதையும் கவனித்தோம்.

ஆனால், எந்த தொற்றுகிருமிகளும் அவை தொற்ற ஏதுவான சமூகத்தை எதிர்கொள்ளாமல் கொள்ளைநோயாக உருவெடுப்பதில்லை. அப்படிப்பட்ட சமூகத்தை – ஊட்டச் சத்தற்ற, உடல்ரீதியிலும் மனரீதியிலும் பலவீனமான, பொதுச் சுகாதாரமற்ற, சமூக பாதுகாப்பற்ற மக்கள் சமூகத்தை – முதலாளித்துவம் எப்படி படைக்கின்றது என்பதை அதன் மூலம் கொள்ளைநோய்களுக்கு ம்க்கள் கொத்து கொத்தாக பலியாவதற்கு எப்படி காரணமாகின்றது என்பதையும் இனி பார்ப்போம்.

ஆரம்பகால முதலாளித்துவத்தில் மக்களின் உடல்நிலை எவ்வாறு நலிவுறுகிறது, அதற்கு முதலாளித்துவத்தின் உற்பத்திமுறையே எப்படி காரணமாக இருக்கிறது என்பதை ஏங்கெல்ஸ் தனது இங்கிலாந்தில் தொழிலாளர் வர்க்கத்தின் நிலை என்ற புத்தகத்தில் விளக்குகிறார்.

“… ஆனால் சமூகமானது பல நூற்றுக்கணக்கான பாட்டாளிகளை இத்தகைய நிலையில் இருத்திவைக்கும்போது, அவர்கள் தவிர்க்கவியலாமல் மிகவும் இளமையிலும், இயற்கைக்கு மாறான முறையிலும் மரணங்களைச் சந்திக்க நேரிடுகிறது. இது, வன்முறையால் ஒரு துப்பாக்கிக் குண்டுக்கு அல்லது வாள் வெட்டுக்குப் பலியாவதைப் போன்ற மரணமாகும். இது, ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கைத் தேவைகளைப் பறித்துக் கொள்ளும்போது, அவர்களை வாழவே முடியாத நிலைகளின் கீழ் இருத்தி வைக்கும்போது சட்டத்தின் இரும்புக் கரம் கொண்டு அவர்களைக் கட்டாயப்படுத்தும்போது, மரணங்கள் தவிர்க்கவியலாத விளைவு என்று உறுதியாகும் வரை அவர்களை இத்தகைய நிலைமையிலேயே தொடர்ந்து இருக்குமாறு வைத்திருக்கும்போது இத்தகைய நிலைமைகளால் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டவர்கள் அழிந்தே போக வேண்டும். இருப்பினும், இத்தகைய நிலைமைகள் தொடர்ந்து நீடிக்க அனுமதிக்கப்படுகின்றன.

இத்தகைய செயலானது, நிச்சயமாகவே, ஒரு தனிநபரின் செயலைப் போன்றதொரு அப்பட்டமான கொலையே ஆகும். இது, பொய்வேடமிட்ட, தீங்கிழைக்கும் கொலை; இந்தக் கொலைக்கு எதிராக யாரும் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் முடியாது. அது கொலையாகவும் தெரிவதில்லை. ஏனென்றால், எந்தவொரு மனிதனும் கொலைகாரனைப் பார்க்க முடிவதில்லை. (ஏனென்றால், ஒவ்வொருவரும் இந்தக் கொலைக்குப் பொறுப்பாகிறார்கள்; இருப்பினும் யாரும் இதற்குப் பொறுப்பாளியுமல்ல)… இது சமூகப் படுகொலையைப் பண்படையாளப் படுத்துகிறது…”26

பெரிய நகரங்களில் மக்கள் தொகையைக் குவித்து மையப்படுத்துவதானது, ஒரு சாதகமற்ற சூழலைச் செயல்படுத்துகிறது. இங்கிலாந்தின் கிராமப்புறத்தில் நிலவும் காற்றைப் போல, லண்டன் நகரின் வளி மண்டலம் ஒருக்காலும் தூய்மையாகவும், ஆக்சிஜன் நிறைந்ததாகவும் இருக்க முடியாது. மூன்று முதல் நான்கு சதுர மைல் பரப்பளவில், நெருக்கமாக உயிர்வாழும் 25 லட்சம் ஜோடி நுரையீரல்களும், 2,50,000 எரிவிசை எந்திரங்களும் (ஆலைகளிலுள்ள டீசல் என்ஜின்கள், நிலக்கரி அடுப்புகள் மற்றும் மோட்டார் வாகனங்கள்) ஏராளமான ஆக்சிஜனை உட்கிரகிக்கின்றன. இதனால் ஆக்சிஜன் சிரமத்துடன்தான் மாற்றீடு செய்யப்படுகிறது. ஏனென்றால், நகரங்களைக் கட்டியமைக்கும் முறையானது, காற்றோட்டத்திற்கு இடையூறாக இருக்கிறது.

படிக்க :
♦ அதிகாரவர்க்கத்தின் துணையோடு விதிகளை மீறிய ஜக்கி வாசுதேவ் !!
♦ வருகிறது வேத கல்வி முறை : பாபா ராம்தேவ் அதன் தலைவராகிறார் !

சுவாசத்தாலும், ஆலைகளின் எரிவிசை எந்திரங்களாலும் கார்போனிக் அமில வாயு விளைவிக்கப்படுகிறது. அதன் ஈர்ப்பு விசையின் எடையால் (Specific Gravity) இந்த வாயு தெருக்களில் தங்கி விடுகிறது. பிரதான காற்றின் ஓட்டமானது நகரத்துக் கட்டிடங்களின் கூரைகளுக்கு மேலாகச் செல்கிறது. இதனால், நகரங்களில் வாழ்வோரின் நுரையீரலானது, போதிய அளவுக்கு ஆக்சிஜனைப் பெறத் தவறி விடுகிறது. இதன் விளைவாக, குறைந்த உயிர்ச்சக்தியும், மன ரீதியாக உடல் ரீதியாகக் களைப்பும் ஏற்படுகிறது.

இந்தக் காரணத்தினால் சுதந்திரமான, இயல்பான சூழலில் வாழும் கிராமப்புற மக்கள்தொகையை விட குறைவாகவே, நகரங்களில் வாழ்வோர் மிகக் கடுமையான (acute) நோய்க்கும், குறிப்பாக அழற்சி (inflammatory) நோய்க்கும் ஆளாகின்றனர். ஆனால், நகர்ப்புற மக்கள் நாள்பட்ட நோயினால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். பெருநகரங்களில் வாழ்க்கையானது, தன்னுள்ளேயே, உடல் நலத்திற்குக் கேடு விளைப்பதைக் கொண்டிருக்கிறது என்றால், தொழிலாளி வர்க்கத்தினரின் குடியிருப்புகளில் நிலவும் தீங்கு விளைவிக்கும் அசாதாரணமான சுற்றுச்சூழலின் தாக்கமானது, இன்னும் எவ்வளவு பெரியதாக இருக்கும்? அங்கே, நாம் ஏற்கெனவே பார்த்ததைப் போல அனைத்துமே இணைந்து காற்றை நஞ்சாக்கிக் கொண்டிருக்கின்றன.”27.

இதன் பிறகு டைபஸ், காலரா போன்ற கொள்ளைநோய்கள் உருவாக கூடிய இடங்களாக தொழிலாளர்களின் குடியிருப்புகள் எப்படி உள்ளன; எங்ஙனம் தொழிலாளர்கள் அவற்றுக்கு பலியாகின்றனர் என்பதை விளக்கிச் செல்கிறார். ஏங்கெல்ஸின் கூற்று இன்றைக்கு அப்படியே பொருந்தாவிட்டாலும் (பின் தங்கிய ஏழை நாடுகளுக்கு பொருந்தும்), முதலாளித்துவ சமூகத்தில் தொழிலாளர்களின் நிலைமை குறிப்பாக வாழ்நிலைமை எங்ஙனம் அவர்களை பலவித நோய்களுக்கும், கொள்ளை நோய்களுக்கும் பலியாகுபவர்களாக ஆக்குகிறது என்பதை இன்றும் பொருத்திப்[ பார்த்து புரிந்துகொள்ள முடியும்.

குறிப்பாக, கோவிட்-19 போன்ற கொள்ளை நோயால் உடல்ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அதிகம் பாதிக்கப்படுவது சாதாரண உழைக்கும் மக்கள்தான். அவர்கள் மீது முதலாளித்துவ வர்க்கம் நிகழ்த்தும் நேரடியான மற்றும் சமூகரீதியான கட்டுபாடற்ற சுரண்டல்கள் அவர்களை உடல்ரீதியில் பலவீனமானவர்களாக்குகிறது.

கொள்ளைநோயியலாளர்கள் (Epidemologist) இந்நோய்களை பற்றி பேசும்போது “அடிப்படை மறுவுற்பத்தி எண்” (basic reproduction number, Ro) பற்றி குறிப்பிடுகின்றனர். இந்த எண்ணை எப்படி கணக்கிடுகின்றனர் என்பதை முதலில் பார்க்கலாம். Ro-எனும் அடிப்படை மறுவுற்பத்தி எண்ணைக் கணக்கிட முதலில் சமூகத்தில் யாருக்கும் அந்நோய்க்கெதிராக நோயெதிர்ப்பு சக்தி இல்லை (நோயெதிர்ப்பு சக்தி எண் (A) பூஜியம்என்று கருதிக் கொள்ளப்படுகிறது. அப்படியிருக்கும்போது, அந்நோய் எவ்வளவு மக்களை தாக்கும் என்பதை குறிக்கும் எண் தான் Ro.

அதாவது, Ro என்பது நோயை ஏற்படுத்தும் வைரஸ் / நோய்க்கிருமியின் வீரியத்தை மறைமுகமாக வெளிப்படுத்துகிறது. இந்த Ro எண் ஒன்றுக்கும் குறைவாக இருந்தால் அந்நோயின் பரவல் சிறிது காலத்தில் நின்றுவிடும். Ro ஒன்றுக்கும் மேல் இருந்தால் அது மேலும் பரவ அதிக வாய்ப்பிருக்கிறது. கோவிட்-19 வைரஸுக்கு Ro எண் 2.0 முதல் 2.5 வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வேறுவகையில் பார்த்தால், ஒரு வைரஸ் எவ்வளவுதான் வீரியமிக்கதாக இருந்தாலும் ஒரு சமூகத்தின் நோயெதிர்ப்பு சக்தி எண் (A) அதிகமாக இருந்தால் அவ்வளவுக்கு கொள்ளைநோயின் பரவல் குறைவாக இருக்கும் என்பதை புரிந்துக்கொள்ளலாம். ஆக, நடைமுறையில் (நோயெதிர்ப்பையும் சேர்த்துக் கணக்கிடும்போது) இந்த R எண் ஒன்றுக்கு கீழ் இருக்குமா என்பது தொற்றும் வைரஸை பொருத்தது மட்டுமல்ல, அக்கொள்ளைநோயை எதிர்கொள்ளும் சமூகத்தின் ஆரோகியத்தையும் பொருத்ததாகும்.

ஒரு சமூகம் அனைத்து வகையிலும் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது மக்களின் நிலையான வாழ்வாதாரம், சமூக பாதுகாப்பு, வேலை பாதுகாப்பு, பொது மருத்துவம் மற்றும் சுகாதாரம், மக்களின் ஊட்டச்சத்து நிலை இன்னும் பலவற்றைச் சார்ந்தது. ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வரும் புதியதாராளவாதக் கொள்கைகள் என்பது மேலே கூறிய அனைத்திற்கும் எதிராக வேலைச் செய்கிறது.

மேலும், 2008ம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து இன்னும் முழுமையாக மீள முடியாத முதலாளித்துவம் மக்கள் மீது சிக்கன நடவடிக்கைகளை ஏவியுள்ளது. வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகளில் கூட ஓய்வூதிய வெட்டு, சம்பளக் குறைப்பு, வேலைவாய்ப்பின்மை, சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான நிதிகளை குறைப்பது போன்றவற்றை அமல்படுத்தியதன் விளைவாக அந்த சமூகத்தின் ஆரோக்கியம் வெகுவாக வீழ்த்தப்பட்டது. அதன்மூலம் அச்சமூகங்களில் இக்கொள்ளை நோய் பரவுவதற்கான தளத்தை முதலாளித்துவம்தான் விரிவுபடுத்தி கொடுத்துள்ளது.

உதாரணமாக, இத்தாலியை எடுத்துக் கொள்வோம். இத்தாலி நாட்டில் தேசிய மருத்துவ சேவை அமலில் இருந்து வந்தது; அதன்படி எல்லா இத்தாலிய குடிமக்களும், அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டினரும் தங்களுக்கான மருத்துவ சேவையை இலவசமாக பெற்று வந்தனர். 2000ம் ஆண்டில், உலக சுகாதார நிறுவனம் இத்தாலிய மருத்துவத் துறையை உலகிலேயே இரண்டாவது சிறந்த மருத்துவ சேவை (முதலாவது பிரான்ஸ்) என்று பாராட்டியது. ஆனால், 2012-ம் ஆண்டில் அரசுக்கு ஏற்பட்ட கடன் நெருக்கடியின் காரணமாக சிக்கன நடவடிக்கையை அறிவித்தது;

அதன்படி 2012-ல் இத்தாலிய அரசு மருத்துவத்திற்கான தனது நிதி ஒதுக்கீட்டை 90 கோடி யூரோ குறைத்தது, 2013-ல் மேலும் 180 கோடி யூரோ குறைத்தது, 2014-ல் மேலும் 200 கோடி யூரோ குறைத்தது. தனது குடிமக்களின் மருத்துவத்திற்கான நிதியை தொடர்ச்சியாக குறைத்துக்கொண்டு வந்துள்ளது. இதனால், 2015-ல் 1.22 கோடி இத்தாலியர்கள், அதாவது ஐந்தில் ஒரு பங்கு இத்தாலியர்கள், மருத்துவ வசதி அற்றவர்களாக்கப்பட்டனர்; மேலும் 78 லட்சம் இத்தாலியர்கள் தங்களது மொத்த சேமிப்பையும் மருத்துவத்திற்காக செலவிட வேண்டிய நிலையில் அல்லது கடன் வாங்க வேண்டிய நிலையில் அல்லது இரண்டையும் செய்யக் கூடிய நிலையில் உள்ளனர்28.

இவையல்லாமல் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட வேலையிழப்பு, சம்பள வெட்டு, வேலையின்மை, கடன் நெருக்கடி போன்றவற்றையும் நினைத்து பார்த்தால் அம்மக்களின் ஊட்டச்சத்து, ஆரோக்கியம் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை புரிந்துகொள்ளலாம். இந்நிலைமைகள் எல்லாவற்றையும் கணக்கில் கொண்டால், இத்தாலியில் கோவிட்-19 முதலாம் அலையில் ஏன் அவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தியது என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

ஸ்பெயின், கிரீஸ் போன்ற நாடுகளிலும் இதே நிலைதான். முதல் 20 சதவீத பணக்காரர்களின் வருமானம் மற்றும் கடைசி 20 சதவீத மக்களின் வருமானம் ஆகியவற்றுக்கு இடையிலான விகிதம் இத்தாலியில் 2007-ல் 5.5 ஆக இருந்தது 2016-ல் 6.5 ஆக உயர்ந்துள்ளது; ஸ்பெயினில் 2007-ல் 5.4 ஆக இருந்தது 2016-ல் 6.6 ஆக உயர்ந்துள்ளது; இதுவே கிரீஸில் 2007-ல் 5.3 ஆகவும் 2016-ல் 6.2 ஆகவும் உள்ளது. மேலும் இந்நாடுகளின் சிக்கன நடவடிக்கைகள் எவ்வாறு ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்திருக்கிறது என்பதை ஆக்ஸ்பாம் அறிக்கை (2018) விளக்குகிறது.

ஸ்பெயின் நாட்டின் மொ..(2013-ல் இருந்து) பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு அதிகரித்த போதிலும் 1.3 கோடி அல்லது 28 சதவீத ஸ்பெயின் குடிமக்கள் வறுமையிலும் சமூக விலக்குக்கு ஆட்பட்ட நிலையிலும் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன29. ஸ்பெயினின் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் வறுமையில் உள்ளனர். மேலும் ஸ்பெயினின் பல ஆயிரக் கணக்கான மக்கள் வீடற்றவர்களாக உள்ளனர்; வீட்டுக்கான வாடகை இரண்டு மடங்கு அதிகரித்து செலவழிக்க கூடிய வருமானத்தை விட 40 சதவீதம் அதிகரித்துள்ளது. 2008 நெருக்கடிக்கு பின், பல ஐரோப்பிய நாடுகளின் நிலைமை இதுதான். அமெரிக்காவிலும் மக்களுக்கான மருத்துவ ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளன; அங்கு கோவிட்-19னால் இறந்தவர்களில் பெரும்பான்மையோர் கருப்பினத்தவர்கள் தான் என்று பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தியா போன்ற பின் தங்கிய நாடுகளிலோ (வளர்ந்த நாடுகளில் இருப்பது போல) சமூக பாதுகாப்போ, வேலை பாதுகாப்போ இல்லை. இந்தியாவின் குழந்தைகளில் 40 முதல் 50 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டில் உள்ளனர். மொத்த வேலைவாய்ப்பில் கிட்டதட்ட 80 சதவீதம் வேலைகளை முறைபடுத்தபடாத துறைகள் வழங்குவதால், அத்தொழிலாளர்கள் எவ்வித பாதுகாப்பும் அற்றவர்களாக உள்ளனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட உடனே வெளிப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் போராட்டங்களையும் நெடும் பயணங்களையும் பற்றிய செய்திகளே பார்த்தாலே போதும், இது போன்ற கொள்ளைநோய்களால் நம் மக்கள் கொல்லப்படுவதற்கு ஏதுவாகத்தான் நம் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அமைப்பு உள்ளதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

படிக்க :
♦ தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் !
♦ கோயிலை சுற்றியுள்ள முஸ்லிம் வீடுகளை அகற்ற முயற்சிக்கும் யோகி அரசு !

மேலும், முதலாளித்துவ உற்பத்திமுறை சுற்றுச்சூழலை மாசுபடுத்தி மக்களை நாட்பட்ட நோய்களுக்கு தள்ளிவிடுவதால், கொள்ளைநோய்களில் இறப்பது சுலபமாகிவிடுகிறது. கோவிட்-19-னால் இறப்பவர்கள் ஏற்கெனவே உடல்நல பிரச்சினை உள்ளவர்களும் அதனால் இயல்பாகவே வயதானவர்களும்தான் என்று செய்திகளில் கூறப்படுகிறது. ஆனால், அந்த உடல்நல குறைபாடு ஏன் மக்களுக்கு ஏற்படுகிறது என்பதைதான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். “நகரங்களில் வாழ்கின்ற மக்கள்நாள்பட்ட கொடிய நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்” என்று கூறுகிறார் எங்கெல்ஸ்.

2003-ல் வெடித்த சார்ஸ் நோயின் இறப்பு விகிதம் (mortality) மற்றும் நீண்டகால பாதிப்பிற்கும் (morbidity) காற்று மாசு குறியீட்டிற்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆய்வுகள் வந்துள்ளன. காற்றுமாசு அதிகரிக்க அதிகரிக்க சார்ஸினால் ஏற்பட்ட இறப்பு விகிதமும் அதிகரித்தது. குறைந்த காற்றுமாசு குறியீடு உள்ள இடத்தில் உள்ள சார்ஸ் இறப்பு விகிதத்தை விட மத்தியதர காற்றுமாசு உள்ள இடத்தில் சார்ஸ் இறப்பு விகிதம் 84 சதவீதம் அதிகமாக இருந்தது. இதுவே அதிக காற்றுமாசு குறியீடு உள்ள இடத்தில் 200 சதவீதம் அதிகமாக சார்ஸ் இறப்பு விகிதம் இருந்தது 30.

தற்போதை கோவிட்-19 கொள்ளை நோய்க்கு வட இத்தாலிய பகுதி ஏன் அதிகமாக ஆளாகியுள்ளது என்பதை இன்னொரு ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது, காற்றுமாசு அதிகரிக்க அதிகரிக்க நாள்பட்ட நோய்கள் அதிகமாவதும் அதனால் அதிக அளவில் கோவிட்-19 தொற்று ஏற்படுத்தியிருப்பதையும் எடொர்டோவும் அவரது குழுவும் எடுத்துக்காட்டுகிறது31. அமெரிக்காவை சேர்ந்த இன்னொரு அறிவியலாளர்கள் குழு32 , ஏற்கனவே காற்றுமாசினால் ஏற்பட்டுள்ள நோய்வாய்ப்பட்ட தன்மை கோவிட்-19ன் இறப்பு விகிதத்தை அதிகப்படுத்துவதாக கூறுகிறது. ஒரு கனமீட்டரில் ஒரு மைக்ரோ கிராம் (1 µg/m3) அளவிற்கு காற்றுமாசு அதிகரித்தால் கோவிட்-19ன் இறப்பு விகிதம் 15 சதவீதம் அதிகரிப்பதாக கணக்கிட்டுள்ளது.

000

ஆக, முதலாளித்துவ சமூக அமைப்பு மக்கள் மீது அனைத்து வழிகளிலும் தாக்குதல் தொடுத்துள்ளதன் ஒரு வெளிப்பாடே இக்கொள்ளைநோய் தாக்குதல். முதலாளித்துவத்தில் மக்களின் மேற்கூறிய நிலைமைகள் தான் தற்போதைய கொள்ளைநோயான கோவிட்-19ன் இறப்பு விகிதத்திற்கு காரணம் என்பதை இப்படித்தான் நாம் விளக்க முடியும். இது ஏங்கெல்ஸ் கூறியது போல, முதலாளித்துவத்தால் நடத்தப்படும் சமூகக் கொலை. கொரோனாவைரஸ் மக்களை காவு வாங்குதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தது முதலாளித்துவ சமூக அமைப்பும் முதலாளிகளின் இலாபத்திற்கான வெறியுமேயாகும். எனவே, இந்த முதலாளித்துவ சமூக அமைப்பை தூக்கியெறிவதும், லாபவெறியில்லாத விரிவாக்கப்பட்ட உற்பத்தியை அதாவது சோஷியலிச உற்பத்திமுறையை நிலைநாட்டப் போராடுவதும்தான் இதற்கு நிரந்தர தீர்வாக இருக்க முடியும்.

முற்றும்..

தொடரின் அனைத்துப் பகுதிகள் :

பகுதி 1 :  உருமாறி வரும் கொரோனா : பெருந்தொற்றுகளின் வரலாறு !
பகுதி 2 : வைரஸ்கள் எப்படி உருமாறுகின்றன ? || ஓர் அறிவியல் விளக்கம் !
பகுதி 3 : பெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்!
பகுதி 4 : இலாபத்திற்கான உற்பத்தியின் உலகமயமாக்கலும் – வைரஸ்களின் பரிணாமமும் !!
இறுதிப் பகுதி : கொள்ளை நோய் மரணங்களுக்கு முதலாளித்துவம் எப்படி காரணமாக முடியும் ?

26 இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை, எங்கெல்ஸ், மார்க்ஸ் எங்கெல்ஸ் தொகுப்பு நூல்கள், ஆங்கிலம், தொகுதி-4, பக். 393-4
27 இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை, எங்கெல்ஸ், மார்க்ஸ் எங்கெல்ஸ் தொகுப்பு நூல்கள், ஆங்கிலம், தொகுதி-4, பக். 394-5
28 Rossella De Falco, Death by a million cuts: what future for the right to health in Italy? August 22, 2018
29 Eurostat, 2017. Statistics on Income and Living Conditions (t_ilc)
30 Yan Cui, Zuo-Feng Zhang, Air pollution and case fatality of SARS in the People’s Republic of China: an ecologic study, 2003
31 Edoardo Conticini, Bruno Frediani, Dario Caro, Can atmospheric pollution be considered a co-factor in extremely high level of SARS-CoV-2 lethality in Northern Italy?, March, 2020.
32 Xiao Wu MS, Rachel C. Exposure to air pollution and COVID-19 mortality in the United States, updated on April 5, 2020.

தங்கம்

கொரோனா : பிணத்தை வைத்து கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகள்!

கொரோனாவின் கோரப் பிடியையும் அடுத்தடுத்த அலைகளின் அழுத்தத்தையும் தாங்க முடியாமல் மக்கள் மரண பயத்தில் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். இன்னொருபுறம் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சூழலிலும், தங்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்த செல்வங்களை எல்லாம் குடும்பத்தினரைக் காப்பாற்ற செலவு செய்கிறார்கள்.

ஆனால் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளோ, மக்களின் பயத்தின் மீதேறி உல்லாசமாக சவாரி செய்து கொண்டிருக்கின்றன.

படிக்க :
♦ தனியார்மயக் கொள்கையால் புழுத்து நாறும் இந்திய மருத்துவக் கட்டமைப்பு !!
♦ உபி : கொரோனா நோயாளிகளின் ஆக்சிஜனை நிறுத்தி பலி கொடுத்த மருத்துவமனை

சமீபத்தில், சில தனியார் மருத்துவமனைகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, அம்மருத்துவமனைக்கு நோயாளிகளை வரவழைப்பதற்காக கொரோனா இல்லாதவர்களுக்கும் பாசிட்டிவ் எனச் சான்று கொடுத்த ‘மெட் ஆல்’ என்ற தனியார் ஆய்வு நிறுவனத்தை நமக்கு நினைவிருக்கும். கடந்த மே மாதம் 19, 20 தேதிகளில் மட்டும் கொரோனா இல்லாத சுமார் 400 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என சோதனை முடிவுகளை இவ்வாய்வகம் தந்துள்ளது. மேலும், கொல்கத்தா ஆய்வகத்திலிருந்து எடுக்கப்பட்ட சளி மாதிரிகளை கள்ளக்குறிச்சியில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறி நாடகமாடியதும் அம்பலமானது.

இதன் உச்சமாக, இறந்தவரின் உடலை தாராமல் லட்சக்கணக்கில் பணம் கட்ட சொல்வது, இறந்ததைக் கூட சொல்லாமல் பணம் பறிப்பது என்று தனியார் மருத்துவமனைகளின் அக்கிரமங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இறந்தவர்களின் உடலையும் முகத்தையும் கடைசியாகப் பார்க்க விரும்பும் குடும்பத்தினரின் உணர்வைப் பயன்படுத்திக் கொண்டு பிணத்திலும் பணம் பார்க்கிறார்கள் பல தனியார் மருத்துவமனைகள்.

சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனை இதற்கு ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டு. கொரோனா தொற்றால் கடந்த மே மாதம் நான்காம் தேதி இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவீந்திரன் என்ற நோயாளி, ஜூன் 1-ம் தேதி உயிரிழந்தார். இறப்பதற்கு முந்தைய ஒரு வாரம் இவருக்கு சரியான சிகிச்சை தரப்படவில்லை என்கிறார்கள் உறவினர்கள். இறப்பதற்கு முதல் நாள் முன்பு கூட மருத்துவமனை நிர்வாகம் உறவினர்களிடம் 4 யூனிட் ரத்தம் வேண்டும் என்று கேட்டதால் அவர்கள் ரூபாய் 11,400-க்கு ரத்தம் வாங்கி கொடுத்துள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே ரவீந்திரனின் சிகிச்சைக்காக ரூபாய் 15.5 லட்சம் கட்டியிருந்தபோதிலும், இன்னும் ரூபாய் 8 லட்சம் கட்டினால்தான் உடலை தருவோம் என்று உறவினர்களை மிரட்டியுள்ளது மருத்துவமனை நிர்வாகம்.

இதேபோல, கடந்த வாரம் கோவை சுங்கம் பகுதியிலுள்ள ‘மனு’ என்ற தனியார் மருத்துவமனையின் கொள்ளையும் வெளிச்சத்திற்கு வந்ததுள்ளது. இந்த மருத்துவமனையில் இருபது நாட்கள் சிகிச்சை பெற்று வந்த காதர் என்பவர் கடந்த வாரம் உயிரிழந்தார். அவருக்கு அளித்த சிகிச்சைக்கு மருத்துவமனை நிர்வாகம் ரூபாய் 20 லட்சம் கட்டணம் கேட்டது. ஏற்கனவே, 16 லட்சம் கட்டிய போதிலும் மீதமுள்ள 4 லட்சத்தை கட்டினால்தான் உடலை பெற முடியும் என்று கூறிய நிலையில் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்து உடலை மீட்டுள்ளனர்.

அதே கோவையில் உள்ள முத்தூஸ் என்ற மருத்துவமனையிலும் இதே கதை தான். தந்தை இறந்ததைக் கூட கூறாமல் அங்கேயே சிகிச்சை பெற்று வந்த மகன் நதீப் என்பவரிடம் பணம் பறிப்பதிலேயே மருத்துவமனை நிர்வாகம் குறியாக இருந்துள்ளது. தந்தை சிகிச்சைக்காக ரூபாய் 15 லட்சம் கேட்டு பிறகு குறைத்து கொண்டு பதினொன்றரை லட்சமும், மகனின் சிகிச்சைக்காக தனியாக இரண்டரை லட்சமும் கேட்டுள்ளனர். இறுதியில், மாவட்ட ஆட்சியர் தலையிட்ட பின்னர் உடலை வாங்கியுள்ளார் அவர். ஆனால், உடலைப் பெற்று வீடு திரும்பிய பிறகும் கூட மருத்துவமனை நிர்வாகம் அவரை பணம் கேட்டு தொந்தரவு செய்து கொண்டுதான் இருக்கிறது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வெளிச்சத்திற்கு வரும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென்று, எத்தனை வட்டிக்கு வேண்டுமானாலும், கடன் வாங்கி இருக்கின்ற சொத்து நகைகளை எல்லாம் அடமானம் வைத்து விற்று காசு புரட்டும் உறவினர்களின் இந்த உயிர் பயத்தை வைத்தே, இதுபோன்ற தனியார் மருத்துவமனைகள் சுரண்டி தின்று கொண்டிருக்கின்றன.

இப்படிக் கொள்ளையடிக்கும் மருத்துவமனைகளின் மீது அரசும் அதிகாரிகளும் எந்தவித நடவடிக்கையையும் எடுக்காமல், ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஆள் அனுப்பி கட்டப்பஞ்சாயத்து செய்யும் நிலைதான் உள்ளது. அந்த நேரத்துக்கு மட்டும் உடலை வாங்கி தந்து விட்டு இறந்தவரின் உறவினர்களை தெருவில் விட்டு விடுகின்றனர். பிறகு மருத்துவமனை நிர்வாகம் மீண்டும் அவர்களை பணம் கேட்டு நச்சரிக்க தொடங்கி விடுகிறது.

தனியார் மருத்துவமனைகளின் இத்தகைய அட்டூழியங்களைக் கண்டுகொள்ளாமல் அதில் பங்கு வாங்கித் திண்பது அரசின் அனைத்த் உறுப்புகளின் ரத்தத்தில் கலந்த ஒன்றே என்றபோதிலும், பெருந்தொற்று காலத்திலும் கூட அது தொடரவே செய்கிறது.

இன்னொருபுறம், இப்பெருந்தொற்று காலத்தில் மட்டும், மருத்துவத் துறையில் சுமார் 24 கோடீசுவரர்களின் சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடி அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. ஆனால், அதே சமயம், ஒரு நாள் வருமானம் ரூபாய் 140-க்கும் குறைவாக பெறுபவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 6 கோடியில் இருந்து 13.4 கோடி பேராக உயர்ந்துள்ளது. பல மருத்துவமனைகள் ஒரு நாளைக்கு எழுவதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றன. ஒருநாளைக்கு ரூபாய் 140 கூலி பெற்று, சோற்றுக்கு அல்லற்படும் ஒருவரால், இந்தப் “பிணந்தின்னிகளுக்கு” முன்னால் கொரோனாவே மேல்” என்றுதான் நினைக்க முடியும்.

இன்னொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், ஆக்சிஜன் இல்லாத படுக்கைக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 7,500 வெண்டிலேட்டரோடு கூடிய தீவிர சிகிச்சை பிரிவுக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 35,000 என்று நிர்ணயித்து, கொரோனா சிகிச்சைக்கு அதிகக் கட்டணத்தை மக்களிடம் இருந்து ஜேப்படி செய்துகொள்ளலாம் என அரசே சட்டப்பூர்வ ஏற்பாட்டைச் செய்து கொடுத்திருக்கிறது. இப்போது நாம் பேசும் நிகழ்வுகள் எல்லாம், மேற்படி ஜேப்படி ஏற்பாட்டிற்கும் மேலாக நடைபெறும் பகற்கொள்ளைகளைப் பற்றிதான்.

இத்தனியார் மருத்துவமனைகள், அதிகார வர்க்கத்தை தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டு தங்களை யாரும் அசைக்க முடியாது என்ற திமிருடன் செயல்படுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக அரசின் தனியார்மயக் கொள்கையும் நிற்கிறது. இந்த தைரியத்தில் தான் விஜயா மருத்துமனை நிர்வாகத்தாரும் “யாரிடம் வேண்டிமானாலும் போய் சொல்” என்று நோயாளியின் உறவினர்களை மிரட்டுகிறது.

படிக்க :
இலாபத்திற்கான உற்பத்தியின் உலகமயமாக்கலும் – வைரஸ்களின் பரிணாமமும் !!
பெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்!

“அதிகமாக கட்டணம் வசூல் செய்யும் மருத்துவமனைகளின் உரிமம் இரத்து செய்யப்படும்” உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ள தி.மு.க அரசோ, நடைமுறையில் இவையெதையும் தடுக்க வக்கற்றதாக உள்ளது. இன்னொருபுறம், காப்பீடு என்ற பெயரில் மக்கள் பணத்தை தனியாருக்கு வாரியிறைத்து, அதையே சாதனையாகவும் காட்டிக் கொள்கிறது. தனியார் கொள்ளையைப் பொருத்தவரையில், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை. தனியார்மயத்தை அமல்படுத்துவதில் ஓட்டுக் கட்சிகளிடையே கொள்கை வேறுபாடில்லை.


துலிபா

ஊரடங்கில் வேலையிழந்த மக்களை கொள்ளையடிக்கும் டாஸ்மாக்கை மூடு ! || கருத்துப்படம்

சென்ற எடப்பாடி ஆட்சியில் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி பல அமைப்புகள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கருத்துக்கள் தெரிவித்தனர். அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுகவும் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியது.

ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு டாஸ்மாக் கடைகளை கொரோனா வேகமாக பரவிய காலத்தில் கண் துடைப்பிற்காக மூடிவிட்டு, தொற்று சற்று குறைய தொடங்கியதும் மீண்டும் திறந்துள்ளது. மக்கள் வாழ்வாதாரம் இழந்திருக்கும் இந்தச் சூழலில் டாஸ்மாக் கடைகளை திறந்திருப்பது, கண்டிக்கத்தக்க செயல் ! மூடு டாஸ்மாக்கை !!

குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே !
மூடு டாஸ்மாக்கை !


கருத்துப்படம் : மு. துரை

இலட்சத்தீவை சுற்றி வளைக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் || தோழர் சுரேசு சக்தி முருகன்

இலட்சத்தீவை சுற்றி வளைக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் !

குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த பிரஃபுல் படேலை தற்போது இலட்சத்தீவில் நிர்வாகியாக நியமித்துள்ளது இந்திய ஒன்றிய அரசு.

இலட்சத்தீவு விலங்குகள் பராமரிப்பு ஒழுங்குமுறை விதியின்படி பசு, காளைகள், கன்றுகள் போன்றவற்றை கொல்வதற்கு தடை விதித்துள்ளது. 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் நிற்பதைத் தடுக்க பஞ்சாயத்து ஒழுங்குமுறை விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இலட்சத்தீவு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பின் மூலம், இலட்சத்தீவில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்க முடியும் என்று மாற்றி கார்ப்பரேட் கும்பல் இலட்சத்தீவைக் கொள்ளையிட வழிவகை செய்துள்ளது.

இலட்சத்தீவு சமூகவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் என்ற பெயரில் குண்டர் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இலட்சத்தீவில் ஒரு கோவிட் நோயாளிகூட கிடையாது என்ற நிலை இருந்தது. பிரஃபுல் படேல் பொறுப்பேற்ற பின்பு, கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

இப்படி, பிரஃபுல் படேல் மூலம் தனது கார்ப்பரேட்-காவி பாசிசத்தை இலட்சத்தீவில் மோடி அரசு அரங்கேற்றுவது பற்றி கடந்த ஜூன் 14 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் முகநூல் பக்கத்தில் தோழர் சுரேசு சக்தி முருகன் ஆற்றிய உரை !

காணொலியை பாருங்கள் !! பகிருங்கள் !!


தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
99623 66321.

இலாபத்திற்கான உற்பத்தியின் உலகமயமாக்கலும் – வைரஸ்களின் பரிணாமமும் !!

0

இலாப வெறியை நோக்கமாகக் கொண்ட ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின்
கோரத்தாண்டவமே கொரோனா ! – பகுதி 4

பகுதி 1 :  உருமாறி வரும் கொரோனா : பெருந்தொற்றுகளின் வரலாறு !
பகுதி 2 : வைரஸ்கள் எப்படி உருமாறுகின்றன ? || ஓர் அறிவியல் விளக்கம் !
பகுதி 3 : பெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்!

1990-களுக்குப் பின்னர் புதிய தாராளவாதக் கொள்கைகள் அமல்படுத்தப் பட்டதோடு உலகின் பெரும்பாலான நாடுகளும் காட் ஒப்பந்தத்தில் கையெடுத்திட்டு உலக வர்த்தகநிறுவனத்தின் உறுப்பினர்களாயினர்.

இந்த ஒப்பந்தத்தின் விளைவாகவும், 21-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏகாதிபத்திய நாடுகளின் உற்பத்தி வடிவமாகக் கருதப்பட்ட’”பழைய, இலாபங்குறைந்த, ஆபத்தான, சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தும், தொழிலாளர்கள் செறிவாகத் தேவைப்பட்ட உற்பத்தித்துறைகளையும், தண்ணீர் அதிகமாகத் தேவைப்படும் இறைச்சிக்கான மிருகங்களை உற்பத்தி செய்யும் விவசாயத் தொழிற்துறையையும் வளரும் மூன்றாம் உலக நாடுகளுக்கு மடைமாற்றும்” ஏகாதிபத்திய நாடுகளின் உத்தியால், நாடுகள் மற்றும் கண்டங்களுக்கு இடையேயான வர்த்தக உறவு மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது.

வர்த்தகப் பாதைகளும், சரக்குப்போக்குவரத்தும், மனிதர்களின் நகர்வும் தேச எல்லைகளைத் தாண்டி வரலாறுகாணாத அளவு வேகத்தில் முன்னும் பின்னுமாக மிகச்சிக்கலான வடிவில் நடக்கிறது. சீனாவின் ஒரு பெல்ட் ஒரு ரோடு திட்டம் இத்தகையதொரு வலைபின்னலின் நவீன வடிவமாகும். இந்த சிக்கலான அதிவிரைவு வர்த்தகத் தடங்கள், பொருட்களையும், மனிதர்களையும், விலங்குகளையும் மட்டுமன்றி இவற்றை ஓம்புயிரிகளாகக் கொண்ட நோய்க்கிருமிகளின் உலகளாவிய பரவலுக்கும் தோதான தடமாக செயல்படுகின்றன.

முன்னெப்போதும் இந்நோய்கிருமிகளுக்கு இயலாததாக இருந்த இத்தகையதொரு பரவும் வீரியம் தற்போது சாத்தியமாகி உலகளாவிய கொள்ளைநோயாக மாறுவதில் உலகெங்கும் தேச எல்லைகளைத்தாண்டி குறுக்கும் நெடுக்கும் முன்னும்பின்னுமாக ஓடும் இச்சிக்கலான வர்த்தகத் தடங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

பன்றிகளின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரம் :

கண்டங்கள்

உயிருள்ள பன்றிகளின் எண்ணிக்கை

1980

1990

2017

ஏற்றுமதி

இறக்குமதி

ஏற்றுமதி

இறக்குமதி

ஏற்றுமதி

இறக்குமதி

ஐரோப்பா

57,11,996

56,81,639

78,74,867

86,54,832

3,69,22,652

3,41,61,228

ஆசியா

45,66,473

45,56,678

40,58,058

36,23,814

22,75,617

24,25,408

. அமெரிக்கா

2,53,881

2,48,688

9,48,442

8,90,980

56,77,370

56,00,220

தெ.அமெரிக்கா

53

6,022

13,854

15,014

5,663

9,413

ஆப்ரிக்கா

1,001

11,642

786

24,035

3,478

9,906


உயிருள்ள கோழிகள் குறித்த புள்ளிவிவரம் :

கண்டங்கள்

உயிருள்ள கோழிகளின் எண்ணிக்கை ×1000

1980

1990

2017

ஏற்றுமதி

இறக்குமதி

ஏற்றுமதி

இறக்குமதி

ஏற்றுமதி

இறக்குமதி

ஐரோப்பா

2,14,885

88,071

2,68,624

1,31,083

15,14,680

14,09,545

ஆசியா

66,434

94,367

93,169

1,75,278

1,53,174

1,99,757

.அமெரிக்கா

40,598

20,870

50,476

30,889

76,017

61,716

தெ.அமெரிக்கா

1,182

5,498

8,614

7,506

18,733

17,072

ஆப்ரிக்கா

4,261

54,748

8,212

39,535

11,896

52,176

ஆதாரம்: ஐநா உணவு மற்றும் வேளாண் நிறுவனம் புள்ளிவிவரம்

 

மேலே கொடுக்கப்பட்ட அட்டவணை 1980, 1990, 2017 ஆகிய ஆண்டுகளில் ஐந்து கண்டங்களிலும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட உயிருள்ள இறைச்சிக் கோழிகள் மற்றும் பன்றிகளின் எண்ணிக்கையைத் தருகிறது. ஐரோப்பா, ஆசியா மற்றும் வட அமெரிக்கா கண்டங்களில் 1980, 1990 ஆகிய ஆண்டுகளை விட 2017-இல் உயிருள்ள பன்றி மற்றும் கோழிகளின் ஏற்றுமதி/இறக்குமதி எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளதைக் காணலாம்.

மரபணுவியலின் முன்னேற்றத்தாலும் உற்பத்தியின் வெவ்வேறு நிலைகளுக்கேற்ப தீவனம் கொடுப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தாலும் இறைச்சிக்கான கால்நடை உற்பத்தித் தொழிற்துறையின் உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளது. எடுத்துக்காட்டாக, இறைச்சிக் கோழி மற்றும் பன்றி வளர்ப்புத் துறையில் மரபணுவியலின் உதவியால் குஞ்சு/குட்டிகளை உருவாக்குவதல், பெருக்குதல், அக்குஞ்சு/குட்டிகளை இறைச்சிக்காக வளர்த்தல் (பெரும்பாலும் ஒப்பந்தத் விவசாயிகளால் வளர்க்கப்படுகிறது) ஆகிய பல கட்டங்களில் நடைபெறுகிறது.

இந்த உற்பத்தியின் ஒவ்வொரு கட்டமும் வெவ்வேறு இடங்களில் அல்லது நாடுகளில் நடப்பதால் உயிருள்ள விலங்குகள் அவ்விடங்களுக்கு கொண்டுசெல்ல வேண்டியிருக்கிறது. எடுத்துக்காட்டாக 2005-இல் மட்டும் 2.5 கோடிகளுக்கும் மேற்பட்ட உயிருள்ள பன்றிகள் சர்வதேசரீதியில் வர்த்தகம் செய்யப்பட்டன. அமெரிக்காவில் இது போன்ற உயிருள்ள பண்ணை விலங்குகளின் வர்த்தகம் அதிகமாக நடைபெறுகிறது. 2001-இல் மட்டும் 27% பண்ணைப் பன்றிகள் அமெரிக்காவின் ஒரு மாகாணத்திலிருந்து இன்னொரு மாகாணத்திற்கு அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மாகாணத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன.

கடந்த 2005-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஏற்பட்ட பறவைக்காய்ச்சல் பற்றிய விசாரணையில் உற்பத்தியின் வெவ்வேறு கட்டங்களை நிறைவேற்றுவதற்காக இறைச்சிக் கோழிகள் இங்கிலாந்திற்கும் ஹங்கேரிக்கும் நான்கு முறை கொண்டுசெல்லப்பட்டது தெரிய வந்தது.

சீனா 2018-இல் ஏற்பட்ட ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சலால், பன்றி உற்பத்தியில் பின்னடைந்தது. (ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சல் வைரஸ் வீரியமிக்க தொற்றுத்தன்மை வாய்ந்தது. பதப்படுத்தப்பட்ட இறைச்சியிலும் கூட உயிர்வாழும் சக்திவாய்ந்தவை.) எனவே சீனா பன்றி இறைச்சியை இறக்குமதி செய்ய ஆரம்பித்தது. 2018 மே மாதம் மட்டும் பன்றி இறக்குமதி 63% அதிகரித்தது 1,87,000 டன்னாகியது.

படிக்க :
♦ ஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்
♦ நிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது ? || இ.பா.சிந்தன்

ஏற்கனவே சீனஅமெரிக்க வர்த்தகப் போரால் அமெரிக்க பன்றிகளுக்கான இறக்குமதி வரியை 62% ஆக ஆக்கிய நிலையில் தன் உள்நாட்டுத் தேவைகளுக்காக பிரேசிலையும் ஐரோப்பாவையும் மட்டுமே சார்ந்திருக்கும் நிலைக்குத் சீனா தள்ளப்பட்டது.

கனடா நாட்டிலிருந்து பன்றி இறைச்சி இறக்குமதிக்கு தடை விதித்திருந்தது. சீனாவின் உள்நாட்டுத் பன்றி இறைச்சித் தேவை 24 மில்லியன் டன் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் அதை ஈடுகட்ட அமெரிக்க பன்றி இறைச்சிக்கான இறக்குமதி வரியைக் குறைக்கும் நிலைக்கு சீனா தள்ளப்பட்டது.19 கனடாவுடனான இறக்குமதித் தடையையும் நீக்கியது. உலகளாவிய கால்நடை தொழிற்துறை வர்த்தகத் தடங்கள் எவ்வளவு சிக்கலான முறையில் பிணைக்கப்பட்டுள்ளன என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

ஆசியாவை அடிப்படையாக கொண்ட ச்ரோயன் போக்பெந்த் (Chaoren Pokphand, CP), உலகிலேயே நான்காவது பெரிய இறைச்சிக்கோழி உற்பத்தி நிறுவனமாகும். இதன் இறைச்சிக்கோழி தொழிற்சாலைகள் துருக்கி, சீன, மலேசியா, இந்தோனேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் வைத்துள்ளது. இதன் வணிக வலைப்பின்னல் இந்தியா, சீனா, இந்தோனேசியா வியத்னாம் ஆகிய நாடுகளையும் உள்ளடக்கியது. தென்கிழக்கு ஆசியாவில் துரித உணவக வலைப்பின்னலையும் சொந்தமாக கொண்டுள்ளது.

2003ல், சீனாவில் உள்ள CP குழுமத்தின் இறைச்சிக்கோழி பண்ணையில் பறவைக் காயச்சல் தாக்கிய உடன் ஜப்பான் சீனாவில் இருந்து இறைச்சிக்கோழி இறக்குமதியை தடைச் செய்தது. உடனே, தாய்லாந்தில் உள்ள CP குழுமம் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்து சந்தை இடைவெளியை பூர்த்தி செய்தது. வெவ்வேறு நாடுகளில் இப்படிப்பட்ட வழங்கல் சங்கிலியை கொண்டிருப்பது வைரஸ் பரவலுக்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. மேலும், இது போன்ற நிறூவனங்கள் உலகளாவிய உற்பத்தி மற்றும் வழங்கல் சங்கிலியை கொண்டிருப்பதால் அதன் எல்லா வணிக வலைப்பின்னலுக்கும் வைரஸ் பரவுவதற்கு ஏற்ற நிலைமைகளை உண்டாக்கிவிடுகிறது.

ஏனென்றால், இவ்வர்த்தகத் தடங்கள் வழி வைரஸ் செல்லுமிடமெல்லாம் பூகோளரீதியான மறுசீரமைப்புக்கு (geographical reassortment of antigen) உள்ளாகி் ஒவ்வொரு நாட்டின் சுற்றுச்சூழலுக்கேற்ப தனது பண்புகளான நிறம், வடிவம், அளவு, நடத்தை, உயிர்வேதியியல் பண்புகள் ஆகியவற்றில் ஏற்படும் பீனோடைப் (phenotype – ஒரு வகை சடுதிமாற்றம்) மாற்றத்தை அடைகின்றன. எடுத்துக்காட்டாக 2003-இல் ஹாங்காங்கில் தோன்றிய H5N1 முதலில் பறவையிலிருந்து மட்டுமே மனிதனுக்குப் பரவியது. ஆனால் மனிதமனிதத் தொற்று ஏற்படுத்துவதற்கு ஏற்ற வீரியத்தைப் பெற்ற H5N1 வைரஸ் ஹாங்காங், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேஷியா, எகிபது, சீனா, துருக்கி, ஈராக், இந்தியா, பாகிஸ்தான் எனப் பல இடங்களுக்கு பயணித்ததன் மூலமே சாத்தியமானது.

இந்நாடுகளிலெல்லாம் புதிய தாராள வர்த்தகக் கொள்கைகளையும், பன்னாட்டு நிதிமூலதனத்தின் ஏற்றத்தாழ்வான ஒப்பந்தங்களையும் ஏற்றுக்கொண்டு, தங்கள் நாடுகளின் தொழிற்துறையையும் விவசாயத்துறையையும் ஏகாதிபத்தியங்களும், தனியார் முதலாளிகளும் தங்கு தடையற்ற வர்த்தகத்தை செய்யும் விதமாக மறுகட்டமைப்புகளை நடைமுறைப்படுத்தியவை. இக்காரணத்தால் ஏழை நாடுகளின் பல கிராமப்புற நிலப்பரப்புகள் ஒழுங்குமுறைபடுத்தப்படாத புறநகர் வேளாண் வணிகச் சேரிகளாக மாற்றப்பட்டுள்ளன. பல கண்டங்களில் பரவுவதால் இத்தகு சூழல்களிலிருந்து மரபணு மாறுபாட்டைப் பெறும் வைரஸ்கள் மனிதனை ஓம்புயிரியாக்கத் தேவையான குறிப்பிட்ட பண்புகளை அடைந்து கொள்ளை நோயாக மாறுகிறது; இதே உலகளாவிய வணிக வலைப்பின்னலில் வேகமாக பரவவும் செய்கிறது.

பெய்ஜிங்கில் உள்ள ஒரு மொத்த விலை இறைச்சியகம்

நவீன கால்நடைத்தொழிற்துறை கூட்டுகளில் (livestock-industrial complex) உற்பத்தி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் முறையால் மட்டும் இவ்வைரஸ்கள் உருவாவதில்லை. அதாவது தொழிற்சாலைப் பண்ணைகள் மட்டுமே இத்தகைய புது வைரஸ்களை உற்பத்தி செய்வதாக எளிமைப்படுத்தி புரிந்து கொள்ளக்கூடாது. இதோடு கூடவே பரந்துபட்ட அளவில் காடுகள் அழிக்கப்படுவது, சுற்றுச்சூழல் சீர்குலைக்கப்படுவது, பல்லுயிர் தன்மை சிதைக்கப்படுவது, காலநிலை மாற்றம் போன்றவையும் காரணிகளாக உள்ளன20. இதன் விளைவாக வனவிலங்குகளுக்கும் வீட்டுவிலங்குகளுக்கும் பண்ணை விலங்குகளுக்குமிடையிலான இடைவெளி அழிக்கப்படுவது, பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்களையும் விலங்குகளையும் ஒரே உலகளாவிய மதிப்புச் சங்கிலியில் பிணைத்தது ஆகியவற்றின் மூலம் புதிய நோய்க்கிருமிகளின் சுழற்சிக்கு வழிவகுத்துள்ளது. இதற்குக் காரணம் மூலதனத்தின் உள்ளியல்பே ஆகும்.

முன்னர் காட்டுயிர்களில் தனிமைப்படுத்தப்பட்டதாக அல்லது மனிதர்களுக்கு பாதிப்பில்லாததாக இருந்து வந்த வைரஸ் வகையினங்கள் கொள்ளைத் தொற்றுநோய்க்கான பண்புகளை அடைய சாதகமான உயர்போட்டிச் சூழல்களை (hypercompetitive environment) மூலதனத்தின் இவ்வுள்ளியல்பு உருவாக்கியுள்ளது. கொள்ளைத் தொற்றுநோய்க்கான இப்பண்புகளாவன: விரைவான வைரஸ் வாழ்க்கைச் சுழற்சிகள், சூனாடிக் தாவு திறன் மற்றும் புதிய பரிமாற்ற திசையன்களை (transmission vectors) விரைவாக உருவாக்கும் திறன் போன்றவையாகும். 21

இன்னொரு உதாரணத்தையும் பார்ப்போம். தெற்காசியாவில் 1990-களின் இறுதியில் நிப்பா வைரஸ் உருவானது. இங்கு பன்றிப்பண்ணைகள் அபரிமிதமான வளர்ச்சிகண்ட காலமிது. பண்ணைகளுக்குகாக காடுகள் அழிக்கப்பட்டது மற்றும் வறட்சி போன்ற காரணங்களால் வாழ்விடங்களை இழந்த வௌவால்களாலிருந்து (வௌவால் எச்சத்திலிருந்து) இப்பன்றிகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது.

கடந்த 2013-இல் மேற்காப்பிரிக்காவில் பரவிய கொள்ளைநோயான எபோலா, சமகாலத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஓர் எடுத்துக்காட்டாகும், நோய்த்தொற்று ஏற்பட்ட 90% மக்களை இவ்வைரஸ் கொன்றது. இந்த வைரஸும் வௌவால்களால் காடுகளுக்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அமெரிக்க, ஐரோப்பிய, சீன ஏகபோகங்களால் கினியப் புல்வெளி கையகப்படுத்தப்பட்டு எண்ணெய்ப்பனை விவசாயம் தொடங்கப்பட்டபோது இவ்வௌவால்கள் தங்கள் உணவிற்காக வாழிடத்தை எண்ணெய்ப்பனைப் பண்ணைகளுக்கு மாற்றிக் கொண்டதால் இவ்வைரஸ் வௌவால்களிலிருந்து மனிதருக்கு தொற்றும் சூழல் உருவானது.

கடந்த சில பத்தாண்டுகளாக கார்ப்பரேட் விவசாயத்தின் கட்டுப்பாடற்ற விரிவாக்கத்தால் இந்த போக்குகள் மேலும் அதிகரித்துள்ளன. தொழிற்துறை வேளாண் உற்பத்தியின் விரிவாக்கத்தோடு கூடவே உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கத்தால் உலகெங்கிலும் உள்ள கன்னிவனப்பகுதியையும் சிறுஉடைமை விவசாய நிலங்களையும் மூலதனம் பறிக்கிறது.

படிக்க :
♦ பெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்!
♦ தனியார்மயக் கொள்கையால் புழுத்து நாறும் இந்திய மருத்துவக் கட்டமைப்பு!!

இம்முதலீடுகள், நோய் வெளிப்படுவதற்கு வழிவகுக்கும் காடழிப்பு, சுற்றுச்சூழல் சீர்குலைகேடு, பல்லுயிர் தன்மை சிதைதல் ஆகிய உபவிளைவுகளை உண்டாக்கிறது. மேலும், மூலதனத்தால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் இப்பெரும் நிலப்பரப்புகள் ஏற்படுத்தியிருக்கும் செயற்பாட்டு பன்முகத்தன்மையும் கடுஞ்சிக்கல் நிலையும் (functional diversity and complexity)22 தான், முன்பு பெட்டிக்குள் (காட்டுயிர்களில்) அடைக்கப்பட்டிருந்த நோய்க்கிருமிகள் உள்ளூர் கால்நடைகள் மற்றும் மனித சமூகங்களுக்குள் பரவ ஏதுவாகியுள்ளன.

முதலாளித்துவ அமைப்பின் இதயத்திலிருந்து ஓடும் மூலதனத்தால் இந்நிகழ்ச்சிப்போக்கு நடக்கிறது. இதனாலேயே மூலதனத்தின் மையங்களாகத் திகழும் இலண்டன், நியூயார்க், ஹாங்காங் போன்றவற்றை நமது கொள்ளைநோய்களின் ஊற்றுக்கண்களாகக் கருதவேண்டும் என்கிறார் ராப் வாலஸ். நில பயன்பாட்டில் ஏற்படும் மாற்றங்களைப் போலவே, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பரந்துபட்ட சுற்றுச்சூழல் சீர்குலைவும் மேலும் சூனாசிஸ் ஏற்பட ஏதுவாகும்.

இப்படியாக, முதலாளித்துவ பெருவீத இறைச்சிப் பண்ணை உற்பத்தியின் நிகழ்முறைகளில் (குறிப்பாக தற்கால வடிவத்தில்) சூனாசிஸ் தாவல் வேகமாக நடப்பதற்கு எப்படி வாய்ப்பேற்படுகிறது; சூனாசிஸ் தாவல் மூலம் ஒட்டுண்ணிகள் எப்படி மனிதர்களை வந்தடைகிறது; மேலும் அது கொள்ளை நோயாக அல்லது உலகளாவிய கொள்ளை நோயாக உருவெடுக்க எப்படி வாய்ப்பேற்படுகிறது என்பது பற்றி நமக்கு தெளிவேற்படுத்த நவீன அறிவியல் உதவுகிறது.

தொழிலாளர்கள் பெருந்திரளாக நெருக்கமாக வசிக்கின்ற ஏழ்மையான வட்டாரங்கள் என்று கூறப்படுகின்ற பகுதிகள் நம்முடைய நகரங்களில் அடிக்கடி ஏற்படுகின்ற எல்லாவிதமான கொள்ளை நோய்களும் உற்பத்தியாகின்ற இடங்களாக இருக்கின்றன என்று நவீன இயற்கை விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது”23, என்று எங்கெல்ஸ் அவர் காலத்தில் கூறினார்.

தற்கால கொள்ளை நோய்களில் ஒரு வகையான புளுக் காய்ச்சல்களை ஏற்படுத்தும் வைரஸ்கள் உருவாகும் இடங்களாக நவீன பெருவீத பண்ணைவிலங்கு மற்று இறைச்சிக்கோழி வளர்ப்பு துறை உற்பத்தி மையங்கள் இருப்பதாக தற்கால நவீன அறிவியல் நிரூபித்துள்ளதாக நாம் கூடுதலாகக் கூறுலாம்24.

மேலும், சுற்றுசூழல் பற்றிக் கருதிபார்க்காமல் காடுகளை அழித்து செய்யப்படும் பெருவீத முதலாளித்துவ விவசாயமும் முதலாளித்துவத்தின் விரிவாக்கத்திற்காக அழிக்கப்படும் பல்லுயிர்தன்மை மற்றும் காலநிலை மாற்றங்கள் போன்றவையும் இவ்வைரஸ்கள் உருவாகக் காரணமாக இருப்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை முதலாளித்துவ விஞ்ஞானிகள் ஆராய்ந்து இக்கொள்ளை நோய்களை தடுக்க பல கட்டுப்பாடுகளை விதிக்க பரிந்துரைக்கின்றனர்; அரசு சில கட்டுப்பாடுகளை கொண்டும் வருகின்றன. ஆனால், இந்த புதிய தாரளவாதக் காலத்தில் மற்ற உற்பத்தி நிறுவனங்கள் செய்வதை போல நவீன பெருவீத பண்ணைவிலங்கு மற்று இறைச்சிக்கோழி நிறுவனங்களும் கட்டுப்பாடுகள் குறைவாக இருக்கும் (இன்னும் பல சாதக அம்சங்களை கொண்டிருக்கும்) இடங்களுக்கு, குறிப்பாக இந்தோனிசியா, மெக்சிக்கோ, சீனா, லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கு தங்களது உற்பத்தி மையங்களை மாற்றிக் கொள்வதை பிரதானமாக செய்கின்றன.

முதலாளித்துவ நிறுவனங்கள் இப்படி தங்களது உற்பத்தி மையங்களை மூன்றாம் உலக நாடுகளுக்கு மாற்றுவது லாபத்தை நோக்கமாக கொண்டுதான் என்பதை விளக்கி கூற வேண்டியதில்லை. அம்மையங்களில், ஒரு முறை இவ்வைரஸ்கள் சூனாசிஸ் தாவல் மூலம் பரிணாமம் அடைந்தால் பல நாடுகளுக்கு பரவும் கொள்ளைநோய்களாக உருவெடுக்க வாய்ப்புள்ளன. இங்ஙனம் “முதலாளித்துவ சமூக அமைப்பு அகற்றப்படவேண்டிய தீமைகளை மீண்டும் மீண்டும் மறு உற்பத்திச் செய்கிறது”25. ஏனென்றால், முதலாளித்தும் லாபத்திற்காக இயங்கும் பொருளாதாரமாகும்.

(தொடரும்)

தொடரின் பிற பகுதிகள் :

பகுதி 1 :  உருமாறி வரும் கொரோனா : பெருந்தொற்றுகளின் வரலாறு !
பகுதி 2 : வைரஸ்கள் எப்படி உருமாறுகின்றன ? || ஓர் அறிவியல் விளக்கம் !
பகுதி 3 : பெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்!
பகுதி 5 (இறுதி): கொள்ளை நோய் மரணங்களுக்கு முதலாளித்துவம் எப்படி காரணமாக முடியும் ?

அடிக்குறிப்புகள் :
19. ‘Not enough pork in the world’ to deal with China’s demand for meat

20. Why deforestation and extinctions make pandemics more likely, Nature, Aug 13, 2020

21. Chuang, 2020, Social Contagion : Microbiological Class War in China (February)
22. செயல்பாட்டு பன்முகத்தன்மை (functional diversity) என்பது பல்லுயிர் பெருக்கத்தின் (biodiversity) ஒரு அங்கமாகும். இது பொதுவாக சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளில் உயிரினங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தின் வரம்பைப் பற்றியது. Complexity பெரும்பாலும் நோய்த்தொற்று ஏற்பட்ட உயிரி மற்றும் நோய்க்கிருமிகளின் இணை பரிணாம வளர்ச்சியில் எழுகிறது. நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் நோய்க்கிருமிகள் அதைத் தவிர்ப்பதற்கு உருவாக்கிய பல நுட்பங்கள் போன்ற அதிநவீன தழுவல்கள் காரணமாக இக்கடுஞ்சிக்கல் நிலை உருவாகுகின்றது.
23. மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் பன்னிரண்டு பகுதிகளில், தொகுதி 8, பக். 62-63
24. மார்க்ஸின் பார்வைபடி இயற்கை என்பது மனிதனின் அங்கக உடல் (inorganic body); எப்படி கை, கால், மூளை போன்ற மனித உடல்பகுதிகளின் ஒருங்கிணைப்புடன்தான் மனிதனால் உழைக்க முடியுமோ அதேபோல் இந்த அங்கக உடலுக்கும் மனிதனுக்குமான ஒருங்கிணைப்பு என்பது உற்பத்தி செயல்பாடுக்கு ஓர் முன்நிபந்தனை. இயற்கைக்கும் மனிதனுக்குமான இந்த இடைத்தொடர்பை இயற்கைக்கும் மனிதனுக்குமான வளர்சிதைமாற்ற செயல்பாடு (metabolic interaction between man and nature) என்று கூறலாம். இந்த ஒருங்கிணைப்பை முதலாளித்துவ உற்பத்திமுறை சிதைக்கிறது; இந்த சிதைவு வளர்சிதைமாற்ற பிளவு (metabolic rift) எனப்படுகிறது. நாம் பேசிக்கொண்டிருக்கும் வைரஸ்களின் சூனாசிஸ் தாவலும் முதலாளித்துவ உற்பத்தியால் ஏற்படும் வளர்சிதைமாற்ற பிளவுக்கான ஒரு உதாரணமாகும். இந்த வளர்சிதைமாற்ற பிளவு பற்றிய மார்க்சின் கருத்துக்களாஇ கோட்பாட்டுரீதியாக ஜான் பெல்லாமி பாஸ்டர் (மன்த்லி ரிவியூ பத்திரிக்கையின் ஆசிரியர்), பால் பர்கெட் போன்றோர் 20 ஆண்டுகளாக ஆய்வு செய்து எழுதியுள்ளனர்.
25.
மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் பன்னிரண்டு பகுதிகளில், தொகுதி 8, பக். 64

தங்கம்

நூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின் கதை || பன்வர் மெக்வன்ஷி || சு.கருப்பையா

ர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவாரங்களின் பல்வேறு அமைப்புகள் பற்றி பல நூல்கள் வந்துவிட்டாலும் அது அந்தந்த அமைப்புகளின் அடிப்படைவாத செயல்பாடுகளின் விளைவுகள் மூலம் பெற்ற கருத்துக்கள் அல்லது உண்மைகளின் அடிப்படையில் எழுதியதாகத்தான் இருந்து வந்துள்ளது. ஒரு வேளை, அதன் உண்மைத் தன்மையில் சிறிது சந்தேகம் கூட எழலாம்.

ஆனால், பன்வர் மெக்வன்ஷி, ஆர்.எஸ்.எஸ்-இல் பதினாறு ஆண்டுகள் செயலாற்றி, அந்த அமைப்பிற்குள் அவர் மீது எழுந்த சாதீய அவமதிப்பின் காரணமாக மனம் வெதும்பி ஆர்.எஸ்.எஸ் அமைப்பை விட்டு வெளியேறியவர். அவர் அந்த அமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைகளைப் பற்றியும், சதித் திட்டங்களைப் பற்றியும் புள்ளி விபரங்களோடு விளக்கி இருப்பது உண்மையில் நமக்கு திகிலூட்டுவதாக இருக்கிறது.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா
♦ நூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா

குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ் இந்தியாவை 11 மண்டலங்களாகவும், 41 மாவட்டங்களாகவும் பிரித்து கிட்டத்தட்ட ஒரு இணை அரசாங்கம் போல் செயல்படுகிறது என்று குறிப்பிடுகிறார் பன்வர் மெக்வன்ஷி. அதேபோல் ஒவ்வொரு மாவட்டமும் இரண்டு அல்லது மூன்று சங் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நகரத்திற்கும் மற்றும் மாவட்டத்திற்கும் ஒரு ஷாகா பயிற்சியாளர், விஸ்ட்டாரக், வட்டார பிரசாரக், மாவட்ட பிரசாரக் மற்றும் நன்கொடைகள் மூலம் பெறப்படும் நிதியை பராமரிக்கும் வணிகக்கும்பல் (பனியாத் தலைவர்) என்று கிட்டத்தட்ட ஒரு இராணுவம் போல் செயலாற்றுவதை மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார்.

அதாவது, ஒருவர் ஆர்.எஸ்.எஸ்-இல் சேர்ந்தவுடன் சுயம்சேவக் ஆகி பின்னர், படிப்படியாக கடநாயக் – ஞான நாயக் – முதன்மை ஆசிரியர் – ஷாகா மேலாளர் – கார்யவாஹ் – மண்டல அலுவலர் என்று பதவி உயர்வு பெறுகிறார்கள். இந்த மண்டல அலுவலர்கள் தான் சர்சங்க்ஸ்லாக் என்ற மிக மேல்நிலைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவரே நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை இடமான ஹெட்கேவர் பவனின் தலைமை இயக்குனர் ஆவார்.

இந்த சர்சங்க்லாக் பதவி என்பது “வாழ்நாள் பதவி” ஆகும். பொதுவாக இந்தப் பதவிக்கு மராட்டிய சித்பவன் பிராமணர்களே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 1925-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். துவக்கப்பட்டது முதல் இதுவரை சர்சங்க்லாக் பதவியில் இருந்தவர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது;

  1. கேசவ் பலிராம் ஹெட்கேவர் – கி.பி. 1925-1930.
  2. லட்சுமண் வாசுதேவ் பரஞ்சபே – கி.பி. 1930-1931 (தற்காலிகமாக ).
  3. கேசவ் பலிராம் ஹெட்கேவர் – கி.பி. 1931-1940.
  4. குருஜி எம்.எஸ். கோல்வாக்கர்- கி.பி. 1940-1973.
  5. மதுக்கர் தத்தாத்ரேயா தேவரஸ் – கி.பி. 1973-1994.
  6. ராஜு பைய்யா ராஜேந்திரசிங்- கி.பி. 1994-2000 (இவர் மட்டுமே சத்திரியர் வகுப்பைச் சேர்ந்தவர்).
  7. கே.எஸ். சுதர்சன்- கி.பி. 2000-2009.
  8. மோகன் பகவத்- 21/03/2009 ந்தேதி முதல்.

தற்போதைய ஆர்.எஸ்.எஸ்-இன் தலைமை இயக்குனராக மோகன் பகவத் அவர்கள் 21/03/2009 ந்தேதி முதல் இருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ். தமது அமைப்பில் கும்ஹார், ஜாட், குஜ்ஜார், மாலி போன்ற உயர்சாதி இந்துக்களையும், பங்கார்கள், கோலிகள் போன்ற தலித்துகளையும், பில் – ஆதிவாசிகளையும் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனால், உயர்சாதி இந்துக்களுக்குத்தான் முதன்மை செயல்பாட்டாளர்கள் பதவி கிடைக்கும் என்றும் தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் பதவிகளுக்கு தேர்வு செய்யப்படமாட்டார்கள் என்று குறிப்பிடுகிறார் பன்வர் மெக்வன்ஷி.

ஆர்.எஸ்.எஸ்-இன் அரசியல் பிரிவான பா.ஜ.க-வில் ஒரு தலித்தான ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி ஆகலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ்-இல் அவர் ஒரு மாவட்ட அல்லது மணடல பிரசாராக் போன்ற பதவிக்கு வர முடியாது என்று தெளிவாக குறிப்பிடுகிறார்.

ஆர்.எஸ்.எஸ் கட்டமைப்பு மனுநீதி வழிகாட்டியபடி தான் அமைக்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய குறிக்கோள்களாக இருப்பவைகள் என்னவென்றால்;

  • இந்து – இந்தியா – இந்துஸ்த்தான்.
  • இந்துயிசத்தை இராணுவமயமாக்குவதும், இராணுவத்தை இந்து மயமாக்குவதும்.
  • கிறித்துவ மற்றும் இஸ்லாமியர்களை நாட்டை விட்டு வெளியேற்றுதல் அல்லது அழித்தொழித்தல்.

இவற்றை அடித்தளமாகக் கொண்டே ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களுக்கு ஷாகா பயிற்சி கொடுக்கப்படுகிறது. சுருக்கமாக, அவர்களுக்கு இந்துத்துவத்தையும், தேசபக்தியையும் புகட்டி பிற மதத்தினரை எதிரிகளாக நினைக்க பயிற்றுவிக்கிறது. இவ்வாறான ஒரு சுயம்சேவக் போன்றுதான் பன்வர் மெக்வன்ஷியும் இருந்தார்.

இவர் 1990-ஆம் ஆண்டு நடந்த முதல் கரசேவையில் கலந்து கொள்ள இவரது உடன்பிறந்த சகோதரர் பத்ரிலாலும் அயோத்தி நோக்கிச் செல்லும்போது அப்போதைய உ.பி முதல்வர் முலாயம்சிங் யாதவ்-ன் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு மதுராவில் சிறைவைக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்படுகிறார். தோல்வியுடன் சிர்தியாஸ் திரும்பிய பன்வர் மெக்வன்ஷி பின்னர் ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளில் முன்னிலும் வேகமாக இயங்கி ஆர்.எஸ்.எஸ்-இன் மாவட்ட கார்யவாஹ் பதவி வரை முன்னேறுகிறார்.

இந்த சூழலில், தமது பட்டப்படிற்காக இவரது சிர்தியாஸ் கிராமத்திற்கு அருகில் உள்ள பில்வாரா கிராமத்திற்கு செல்கிறார். அங்கே, இவர் ஒரு தலித் என்பதால் தங்குவதற்கு இடம் கிடைக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்களும் அவருக்கு இடம் கொடுக்கவில்லை. அதனால், பில்வாராவில் உள்ள அம்பேத்கர் விடுதியில் தங்கும் நிலை ஏற்படுகிறது. அதுவரை சாவர்க்கர், மூஞ்சே, திலகர், கோகலே, ஹெக்டேவர் மற்றும் குருஜி கோல்வாக்கர் போன்ற இந்துத்துவா தலைவர்களை மட்டுமே தெரிந்திருந்த பன்வர் மெக்வன்ஷிக்கு பூலே, கபீர், புத்தர் மற்றும் அம்பேத்கர் போன்றவர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு அங்கே கிடைத்தது.

அதேபோல் அதுவரை ஆர்.எஸ்.எஸ். பத்திரிக்கையான “பாஞ்சஜன்யா”-வை மட்டுமே படித்து வந்த அவருக்கு, ஓஷோ ரஜனீஷ் வெளியிட்ட “ஓஷோ டைம்ஸ்” செய்தித்தாள் படிக்கும் வாய்ப்பும் அங்குதான் கிடைத்தது. இந்தச் செய்தித்தாள் தனது மனதின் மற்ற கதவுகளைத் திறந்து விடத் துவங்கியது என்றும், ஆர்.எஸ்.எஸ். தனது மனதிற்குள் புகுத்தியிருந்த தேசியம், நற்குண உயர்பண்பு, மனத்துறவு, ஆன்மீக இயல்பு ஆகியவைகள் ஓஷோவை படித்த பிறகுதான் மாறத் துவங்கியது என்றும் கூறுகிறார், பன்வர் .

இந்த நிலையில், 1990-ஆம் ஆண்டு கரசேவை செய்ய அயோத்திக்கு சென்றபோது இறந்துபோன தொண்டர்களுக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்காக பில்வாராவில் இறந்தவர்களுக்கும் சேர்த்து “தியாகிகள்” தினம் கொண்டாட 1991-ஆம் ஆண்டு மே மாதம் பில்வாராவில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சிர்தியாஸ் வரும்போது அவர்களுக்கு உணவளிக்க முன் வருகிறார் பன்வர் மெக்வன்ஷி.

ஆனால், அவர் தந்தை நாராயணன்லால் “ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உயர்சாதியினர், அவர்கள் போலி வேடதாரிகள்; பொதுவில் ஒன்றைச் சொல்வார்கள்; ஆனால், தனிமையில் வேறு ஒன்றைச் செய்வார்கள், அவர்கள் நமக்கு எதிரான விஷம் நிறைந்தவர்கள். அதனால், நமது வீட்டில் தயாரிக்கப்படும் உணவை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்” என்று எச்சரிக்கிறார்.

ஆனால், பன்வர் மெக்வன்ஷி நம்பிக்கையுடன் தான் ஆர்.எஸ்.எஸ்-இன் முக்கிய பொறுப்பில் இருப்பவன், அதனால் என்னை உதாசீனப்படுத்த மாட்டார்கள் என்று அவரை சமாதானப்படுத்தி பூரியும், உருளைக்கிழங்கும் தயாரிக்கச் சொல்கிறார். ஆனால், ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சாப்பிடுவதற்கு தங்களுக்கு நேரம் இல்லை என்று கூறி, உணவை பொட்டலமாக கட்டித் தருமாறும், தாங்கள் அடுத்த ஊருக்குச் செல்லும் வழியில் அதை சாப்பிட்டுக் கொள்கிறோம் என்று கூறுகிறார்கள். பன்வர் மெக்வன்ஷியும் பூரியையும் கிழங்கையும் பொட்டணம் செய்து தருகிறார். ஆனால், சங் பரிவாரங்கள் பன்வர் மெக்வன்ஷி கொடுத்த உணவை சாப்பிடாமல் ஊருக்கு வெளியே தூக்கி எறிந்துவிட்டுச் செல்கிறார்கள்.

இந்த தகவலை அறிந்த பன்வர் மெக்வன்ஷிக்கு பெருத்த அவமானமும், கோபமும் ஏற்படுகிறது. இந்த தீண்டாமை செயலினால் அவரது மனம் பேதலித்துப்போகிறது. அவர்கள் தனது வீட்டின் உணவை நிராகரித்ததன் மூலம் தன்னை அவமானப்படுத்தியதாக உணர்ந்ததாகவும், தன்னை வெகு தூரத்தில் வீசி எறிந்தது போல் இருந்தது என்றும், தான் அவர்களிடமிருந்து தொலைவில் இருப்பது போல உணர்ந்ததாகவும் குறிப்பிடுகிறார், பன்வர்.

தனக்கு ஏற்பட்ட இந்த தீண்டாமை கொடுமையை அவர் மாவட்ட, மண்டல பிரச்சாரக்குகளுக்கு எடுத்துச் செல்கிறார். ஆனால், யாரும் அவருக்கு சரியான பதிலைக் கூறவில்லை. ஆனால், நந்தலால் காஸ்ட் என்ற பனியா பொறுப்பாளர் மட்டும் “சங் அமைப்பின் எல்லா முயற்சிகளுக்குப் பிறகும், இந்து சமுதாயம் ஒன்றாக ஆகவில்லை. நம்மைப் பொறுத்தவரை எந்த நாளிலும் உங்களுடன் ஒன்றாக அமர்வோம், ஒரே தட்டில் உணவு உண்போம்.

ஆனால், சங் பரிவாரத்தினருக்கு தாழ்த்தப்பட்ட சாதியினர் வீட்டிலிருந்து உணவு கொடுப்பது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிடும். அவர்கள் மிகவும் கோபம் கொள்ளுவார்கள். அவர்கள் விலகிச் சென்று விடுவார்கள்” என்று கூறுகிறார். அவரது வார்த்தைகள் தன்னைக் கல்லாக மாற்றியதாகக் கூறுகிறார் பன்வர் மெக்வன்ஷி.

படிக்க :
♦ நூல் அறிமுகம் :- ஆர்.எஸ்.எஸ்: இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்
♦ நான் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பிலிருந்து விலகியது ஏன் ? ஜெய் கோலியாவின் அனுபவம்

தனக்கு நியாயம் கிடைக்கும் வரை விடக் கூடாது என்று கருதி இந்த சம்பவத்தை பற்றி நாக்பூரில் இருக்கும் சர்சங்க்லாக் தேவரஸ் அவர்களுக்கு எழுதுகிறார். ஆனால், அவரிடமிருந்தும் பதில் கிடைக்கவில்லை. அதன்பிறகு சங் அமைப்பிலிருந்து முற்றிலும் உடைத்துக் கொண்டு வெளியேறுகிறார். சங் பரிவாரங்களின் முகத்திரையை கிழித்து அம்பலப்படுத்த வேண்டும் என்ற உத்வேகம் அவருக்குள் எழுகிறது. ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிர் திசையில் அவரது பயணம் துவங்குகிறது.

1992 டிசம்பர் 6-இல் பாபர் மசூதி இடிக்கப்படும் போது அவர் பில்வாராவில் உள்ள அம்பேத்கர் விடுதியில் இருக்கிறார். இப்போது அவர் ஒரு கரசேவர் அல்ல. சங்கிகளால் தீண்டாமை சுவர்களுக்குள் அடைக்கப்பட்ட ஒரு தலித். அந்த சூழ்நிலையில் அவருக்கு நௌசாத்-ஹதர்-எ- கர்ரார் என்ற இஸ்லாமிய நண்பரின் அறிமுகம் கிடைக்கிறது. அவருடன் ஏற்பட்ட உரையாடல்கள் வழியாக ஏற்பட்ட தெளிவின் மூலம் முஸ்லிம்களின் மீது கொண்டிருந்த வெறுப்பு பனிக்கட்டி போல் உருகியது என்கிறார் பன்வர் மெக்வன்ஷி.

அவர்கள் இருவரும் மாணவர்களை ஆர்.எஸ்.எஸ். வலையில் சிக்கவிடாமல் தடுப்பதற்கும், பல்கலைக்கழகத்திற்குள் குழப்பம் விளைவிக்கும் ABVP (தலிபானின் இந்திய வடிவம் என்கிறார் பன்வர் மெக்வன்ஷி) அமைப்பிற்கு எதிராக செயல்படவும் மாணவர் அமைப்புகளை உருவாக்க நினைத்தார்கள். அதனால், 1993 டிசம்பரில், பன்வர் மெக்வன்ஷி “வித்தியார்த்தி அதிகார் ரக்ஷக் சங் (VARS – மாணவர் உரிமை பாதுகாப்பு மையம்)” என்ற அமைப்பையும், நௌசாத் “இஸ்லாமிய சேவா சங்கத்தையும்” துவக்கினார்கள். இவை இரண்டும் ஆர்.எஸ்.எஸ்-இன் நடவடிக்கையை அம்பலப்படுத்தும் அமைப்புகளாக இருந்தன.

இருந்தாலும் போலீஸ் தொல்லைகளால் இந்த அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக வெற்றிகரமாக செயல்பட முடியவில்லை என்கிறார் பன்வர் மெக்வன்ஷி. அதனால், நௌசாத் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிய – லெனினிய) பிரிவுக்கு சென்றுவிட்டார். பன்வர் மெக்வன்ஷி-க்கு அம்பேத்கரை போல் இந்து மதத்தை விட்டு வெளியேறும் எண்ணம் எழுகிறது !.

மதமாற்றம் பற்றி சிந்திக்கும் போது சீக்கியம், ஜைனம், பௌத்தம் போன்ற மதங்கள் “இந்து மதத்தின் பாகங்கள்” என்று சங் பரிவாரங்கள் சொல்லி வருவதால் அந்த மதங்களுக்கு மாறுவதை பன்வர் மெக்வன்ஷி விரும்பவில்லை. அதே சமயத்தில் இஸ்லாம் மதத்திற்கு செல்வதை விட கிறித்துவ மதத்திற்கு செல்வதை விரும்புகிறார். அதனால் பாப்டிஸ்ட், மேதேடிஸ்ட், சிரியன் மற்றும் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு சென்று தன்னை கிறித்துவ மதத்தில் இணைத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறார். ஆனால், இவரின் ஆர்.எஸ்.எஸ். தொடர்பை நன்கு அறிந்திருந்த கிறித்துவர்கள் இவரை ஆர்.எஸ்.எஸ்-இன் உளவாளி என்று கருதி கிறித்துவ மதத்தில் சேர்த்துக் கொள்ள மறுத்து விடுகிறார்கள்.

ஒரு வழியாக ஜோத்பூர் பாதிரியார் பாவெஸ் அவர்களை சந்தித்து வேண்டுகோள் வைக்கிறார். அவர் இவரை நம்பினாலும் உடனடியாக கிறித்துவ மதத்தில் சேர்த்து கொள்ளாமல், மத போதனைகளை முதலில் கடைபிடித்து வருமாறும், தக்க சமயத்தில் சேர்த்துக் கொள்கிறேன் என்றும் கூறுகிறார். சில நாட்கள் இயேசுவின் போதனைகளை கற்று வருகிறார். ஆனால், கிறித்துவம் முழுவதும் இயேசுவை சுற்றியே சுழல்வதாக இருப்பது அவருக்கு வெறுப்பைத் தருகிறது. “ஒரு சாக்கடையில் இருந்து தப்பி ஒரு கிணற்றுக்குள் விழுந்தது” போன்ற உணர்வு எழுந்ததால் அவரால் கிறித்துவத்தை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. ஆனால், இயேசு மட்டும் ஏற்றுக் கொள்ள முடிந்தது என்கிறார்.

1995-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் தன் கிராமத்திற்குத் திரும்புகிறார். அவரது பார்வை அம்பேத்கர் மீது ஆழமாக பதிகிறது. இந்துமதத்தின் புதிர்கள், சாதி ஒழிப்பு போன்ற நூல்களை வாசிக்கிறார். அந்நூல்கள் அவருக்கு பிராமணீயத்தை புரிய வைத்தது. மூடப்பட்டிருந்த அவரது மனக்கதவுகள் படபடவென்று திறந்து கொள்கின்றன. அதன் பிறகு கபீர், பெரியார் மற்றும் பூலே ஆகியோர்களின் படைப்புகளைத் தேடித்தேடி படிக்கிறார். ஒரு சங்கியாக இருந்த பன்வர் மெக்வன்ஷி ஒரு கிளர்ச்சியாளனாக உருமாறத் தொடங்கினான்.

சமூகத்தின் நலனில் தனது செலுத்த ஆரம்பித்த பன்வர் மெக்வன்ஷி சங்கிகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்துகிறார். குறிப்பாக, பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தலித்துகள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேருவதற்கு பெரும் தடையாக மாறுகிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இவருக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றுகிறது. அவற்றை எல்லாம் தனது தந்தை, சகோதரர் பத்ரிலால் மற்றும் நண்பர்கள் உதவியுடன் எதிர் கொள்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பன்வர் மெக்வன்ஷி-ன் வலுவான எதிர் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் திணறுகிறது.

பின்னர் 2001, ஜனவரி 14-இல் அவரும், அவரது 13 நண்பர்களும் சேர்ந்து “டைமண்ட் இந்தியா” என்ற பத்திரிக்கையை ஆரம்பிக்கிறார்கள். இந்தப் பத்திரிகை ஆர்.எஸ்.எஸ்-இன் செயல்பாட்டை தோலுரித்துக்காட்டி மக்களுக்கு விழிப்புணர்வைத் தந்தது. பன்வர் மெக்வன்ஷி ஆளுமை மிக்க பத்திரிக்கையாளராக வளர ஆரம்பித்தார். எங்கெல்லாம் ஆர்.எஸ்.எஸ் தமது நாசக்கரங்களை நீட்டி கொடுமைகள் புரிகிறதோ அங்கெல்லாம் பன்வர் மெக்வன்ஷியின் கரம் நீண்டது.

குறிப்பாக, ராஜஸ்தானில் உள்ள அசிந்திக்கு அருகிலுள்ள லோவிந்தபுரா கிராமத்தில் இருந்த மசூதி இடிப்பு, தண்பி பார்யா கிராமத்தில் கண்டேஸ்வரி பாபா நடத்திய யாகத்தில் தலித்துகள் புறக்கணிப்பு போன்ற நிகழ்வுகளில் தலையிட்டு அவற்றை செய்திகளாக்கி பிரச்சனை தீர நடவடிக்கை எடுத்தார்.

2002-இல் குஜராத்தில் நடந்த கலவரத்தை நேரில் சென்று ஆய்வு செய்து, “தலிபானி இந்துக்களே, கவனியுங்கள்” என்று டைமண்ட் இந்தியா பத்திரிக்கையில் தலையங்கம் எழுதினார். அதில், “தேவகி-ன் எட்டாவது குழந்தை தன்னைக் கொன்றுவிடும் என்று தெரிந்திருந்த கம்சன் கூட, அவளது கர்ப்பத்தைக் கிழித்துத் திறக்கவில்லை. இன்னும், இரவும் -பகலும் யாரெல்லாம் “ஜெயகிருஷ்ணா” என்று பஜனை செய்து கொண்டிருந்தார்களோ, அவர்களால் கம்சன் கூட கனவு கண்டிராதவாறு அப்பாவிகள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். பொது இடங்களில், பெரும் கூட்டத்தின் முன்னிலையில் பெண்கள் கூட்டுக் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்கள் – இது தான் அவர்களின் இந்துயிசமா ?” என்று கடுமையாக எழுதியிருந்தார்.

சங்கிகளை “இந்து தலிபான்கள்” என்று அடையாளப்படுத்தப்பட்டது சங்கிகளுக்கு கோபமூட்டியது. அதனால், பில்வாராவில் இருந்த டைமண்ட் இந்தியா அலுவலகம் சூறையாடப்பட்டது. அந்த பத்திரிக்கைக்கு நன்கொடை கொடுத்தவர்கள் மிரட்டப்பட்டதால் அவர்கள் பின்வாங்கினார்கள். அதன்பிறகு டைமண்ட் இந்தியா வெளிவரவேயில்லை.

பின்னர், 2005-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பில்வாரா மற்றும் மண்டல் பகுதிகளில் நடந்த இந்து – முஸ்லிம் கலவரங்களை விசாரிக்கும் “குடிமக்கள் விடுதலைக்கான மக்கள் ஒற்றுமை (PUCL)” நடத்திய உண்மை அறியும் குழுவில் சென்ற பன்வர் மெக்வன்ஷி, “அணுகும் பாசிசத்தின் காலடிச் சுவடுகள்” என்ற அறிக்கையை தயார் செய்து, அதை துண்டறிக்கையாக வெளியிட்டார். இது ராஜஸ்தானில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது ஆர்.எஸ்.எஸ். பன்வர் மெக்வன்ஷியின் தந்தை, சகோதரர் மற்றும் உறவினர்களால் எதிர் தாக்குதல் நடத்தப்பட்டது. சங்கிகள் பயந்து ஓடினார்கள்.

ஆனாலும், பன்வர் மெக்வன்ஷி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு குல்தீப் நய்யார், ஹரிஷ் மந்தர், அருந்ததிராய், பாரத் தோக்ரா மற்றும் பிரபாஷ் ஜோஷி ஆகியோர்களை சந்தித்து உதவி கோரினார் பன்வர் மெக்வன்ஷி. இறுதியாக பிரபாஷ் ஜோஷி, அப்போதைய துணை ஜனாதிபதி பைரோன் சிங் செகாவத்திடம் பேசி பிரச்சனையை தீர்க்க உதவி செய்தார்.

மேலும், தேசிய அளவில் பத்திரிக்கையாளர்களாலும், சமூக செயல்பாட்டாளர்கள் தலையீட்டாலும் இந்தப் பிரச்சனை சுமூகமாக முடிந்தது. PUCL அவருக்கு முழுமையாக ஆதரவு தந்ததை அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார். இருந்தாலும், எந்தவொரு தலித் அமைப்பும் அல்லது தலித் இலக்கியவாதிகளும் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பாதது அவருக்கு ஆச்சரியம் தந்ததாக பதிவு செய்துள்ளார்.

மொத்தத்தில் இந்த நூல் பன்வர் மெக்வன்ஷி என்ற சமூகப் போராளியை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவாரங்களுக்கு எதிரான அவரின் திடமான போராட்டம் நம்பிக்கை தருவதாக இருக்கிறது. ஒரு தனி மனிதனாக ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக அடுக்கடுக்கான பல போராட்டங்களை நிகழ்த்தி இருக்கிறார். குறிப்பாக, வட மாநிலங்களில் தலித் மக்கள் ஆர்.எஸ்.எஸ்-இல் சேருவது தடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தை இந்தியாவின் மூலை முடுக்கில் எல்லாம் கொண்டு சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த நூல் மூலம் பன்வர் மெக்வன்ஷி, தான் ஒரு இந்துவாக இருக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்; ஒரு இந்திய குடிமகனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : தியாகி களப்பால் குப்பு || வாய்மைநாதன் || சு.கருப்பையாநூல் ♦ அறிமுகம் : வாட்டாக்குடி இரணியன் || சுபாஷ் சந்திரபோஸ் || சு. கருப்பையா

இந்த புத்தகத்தை வாசித்தபோது எனக்கு ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்ற புத்தகம்தான் ஞாபகம் வந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக வலைப்பின்னலை அந்தப் புத்தகம் வெளிப்படுத்தியது போல், இந்தப் புத்தகம் இந்துத்துவ பாசிசத்தை வெளிப்படுத்தியுள்ளது. இருந்தாலும், இந்தப் புத்தகம் எனக்குள் நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளது.

  • இந்தியா முழுவதும் விஷவித்துக்களாக பரவியுள்ள இந்த ஆர்.எஸ்.எஸ் கும்பலிடமிருந்து இந்திய நாட்டை எப்படி மீட்டெடுப்பது ?
  • இடது சாரி, தலித் மற்றும் மதச்சார்பற்ற அமைப்புகள் இந்த இந்துத்துவ-பாசிச அமைப்புக்கு எதிராக ஏன் வலுவாக போராடுவதில்லை ?
  • நாடு முழுவதும் கிட்டத்தட்ட 57,000 கிளைகளையும், 6 மில்லியன் உறுப்பினர்களையும், 34 துணை அமைப்புகளையும் கொண்ட இந்த இந்துத்துவ -பாசிச அமைப்பை வீழ்த்தி எவ்வாறு நம் நாட்டை மதச்ச்சார்பற்ற நாடாக மீண்டும் புத்தாக்கம் செய்வது ?

இந்த கேள்விகளுக்கான பதிலை காலம் சொல்லும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்.

நல்லதொரு புத்தகத்தை தமிழுக்கு கொடுத்த மொழிபெயர்ப்பாளர் ச.நடேசனுக்கு நன்றி!

(குறிப்பு : இந்த நூலை எழுதிய பன்வர் மெக்வன்ஷி (Bhanwar Maghwanshi) ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மண்டல் கிராமத்தின் அருகில் உள்ள சிர்தியாஸ் என்ற கிராமத்தில் 1975 இல் பிறந்தவர். தனது 13 வயதில் ராஷ்டிரிய சுயம்சேவக் சங் -கில் (RSS) சேர்ந்த இவர் பின்னர் 1991 இல் ஆர்.எஸ்.எஸ் லிருந்து விலகி தற்போது ஒரு தலித் இயக்க செயல்பாட்டாளராகவும் பத்திரிக்கையாளராகவும் இருந்து வருகிறார். அவர் தனது நேரத்தை சிர்தியாஸில் உள்ள அம்பேத்கர் பவனைக் கவனித்துக் கொள்வதற்கும் , நாடு முழுவதும் அவரைக் கொண்டு செல்லும் அரசியல் வேலைகளுக்கும் இடையில் பிரித்துக் கொள்கிறார். இந்த நூல் முதலில் ” நான் கரசேவகனாக இருந்தேன் “என்ற தலைப்பில் ஹிந்தியில் எழுதப்பட்டது. பின்பு “ இந்துவாக நான் இருக்க முடியாது – ஆர்.எஸ்.எஸ்ஸில் ஒரு தலித்தின் கதை (I could not be Hindu-Story of a Dalit in the RSS)” என்ற தலைப்பில் தமிழில் வெளிவருகிறது.)

நுல் ஆசிரியர் : பன்வர் மெக்வன்ஷி
தமிழில் : செ.நடேசன்
பதிப்பகம் : எதிர் வெளியீடு, ஆகஸ்ட் 2020
பக்கங்கள் : 256
விலை : ரூ.299

நூல் அறிமுகம் : சு.கருப்பையா

 

 

 

disclaimer