ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் ! தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்போம் !
பதினைந்து உயிர்களின் தியாகத்தை நெஞ்சில் ஏந்தி, கொலைகார ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவதற்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள் தூத்துக்குடி மக்கள்.
கொலைகார ஸ்டெர்லைட்டோ எப்படியாவது சதி செய்து ஆலையை திறந்து விடுவது என்ற நோக்கில் எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக ஆலையைத் திறக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை, அதை ஆமோதித்த ஆளுகின்ற தி.மு.க உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளின் முடிவை மிகச்சிறந்த வாய்ப்பாக ஸ்டெர்லைட் நிர்வாகம் பயன்படுத்திக் கொண்டது.
மக்களின் துயரத்தைப் பொருட்படுத்தாமல், ஆக்சிஜன் உற்பத்தி செய்து கொண்டாட்டத்தோடு அதை விளம்பரப்படுத்தியது. அது குறித்து ஊடகங்களிலும், பத்திரிக்கைகளிலும் தொடர்ந்து செய்திகள் வரும்படி பார்த்துக் கொண்டது.
உண்மையில், வாக்குறுதி அளித்ததை விட குறைந்த அளவிலேயே ஆக்சிஜன் உற்பத்தி செய்ததையும், ஏறக்குறைய 1500 டன் வளிமண்டல ஆக்சிஜனை வீணடித்ததையும் நித்யானந்த்த ஜெயராமன் உள்ளிட்டோர் ஆதாரப்பூர்வமாக முன்வைத்துள்ளனர்.
அனைத்து செய்தித்தாள்களிலும் INDIAN MEDICAL ASSOCIATION உள்ளிட்ட நிறுவனங்கள் ஸ்டெர்லைட்டை பாராட்டிய விளம்பரங்கள் வெளியானது. “உற்ற நேரத்தில் உயிர் காற்று !, ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி !” என்று கொலைகாரனுக்கு புனிதர் பட்டம் கொடுத்திருந்தன அந்நிறுவனங்கள். அரசின் அங்கங்கள் அனைத்தும் ஸ்டெர்லைட்-க்கு ஆதரவாகவும் இருப்பதையே இந்த விளம்பரம் எடுத்துக் காட்டுகிறது.
இதற்கு கடுமையான கண்டனங்கள் தமிழகமெங்கும் எழத் தொடங்கிய நிலையில், இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அடுத்த கட்ட நடவடிக்கையாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கட்டில்கள், மெத்தைகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை ஸ்டெர்லைட் நிறுவனம் வழங்கியுள்ளது. ஸ்டெர்லைட்டின் விளம்பரம் மருத்துவமனை சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளன.
கொரோனா கால நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு, மக்களுக்கு உதவி செய்வதைப் போல நடித்து, மரணித்த தியாகிகளையும், தூத்துக்குடி மக்களையும் அவமானப்படுத்திக் கொண்டிருக்கிற ஸ்டெர்லைட் நிறுவனம் செய்யும் இச்சதிவேலைகள் அரசின் ஒப்புதலோடுதான் அடுத்தடுத்து வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக திறப்பதற்கான முன்னேற்பாடுகளாகவே இதைக் கருத வேண்டியுள்ளது. ஸ்டெர்லைட்டின் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டிக்காமல் அதற்கு ஒத்துழைக்கும் வகையிலேயே தி.மு.க அரசின் போக்கு உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவதற்காக தனிச்சட்டத்தை உடனே இயற்ற வேண்டும். அதற்கான போராட்டங்களை தூத்துக்குடி மக்கள் முன்னெடுப்பார்கள். அதற்கு மக்கள் அதிகாரம் துணைநிற்கும்.
தோழமையுடன் தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
99623 66321.
ஊரடங்குக் காலத்தில் மக்கள் அல்லல்படும் போது மூடு டாஸ்மாக்கை !
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்களுடைய வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ள இச்சூழலில் டாஸ்மாக்கை திறக்கப் போவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எடப்பாடி ஆட்சியில் ஊரடங்குக் காலத்தில் டாஸ்மாக்கை திறக்க எதிர்ப்பு தெரிவித்த திமுக, தற்பொழுது ஆட்சியில் அமர்ந்தவுடன் இந்த நச்சுச் சூழலிலும் டாஸ்மாக்கை திறக்க உத்தரவிட்டது கடும் கண்டனத்துக்குரியது.
ஊரடங்குக்காலத்தில் மக்கள் வேலையின்றி தவிக்கும் சூழலில் அரசால் அளிக்கப்படும் உதவித்தொகை டாஸ்மாக்கிற்கே செல்லும்.
தமிழக அரசு உடனடியாக டாஸ்மாக்கை திறக்கின்ற உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும். அவ்வாறு டாஸ்மாக் திறக்கப்படும் பட்சத்தில் அதற்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஒருபோதும் தடுக்க முடியாது.
தோழமையுடன் தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321.
ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் சோவியத் ரஷ்யாவையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் வில்லன்களாக காட்டி எடுத்திருந்தார்கள்.நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் ரஷ்யர்களும் அல்ல, கம்யூனிஸ்டுகளும் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!
வியட்கொங் விடுதலைப் போராளிகளால் தென் வியட்நாம் விடுதலை செய்யப்பட்டு சில வருடங்களின் பின்னர் எடுக்கப்பட்ட ராம்போ போன்ற திரைப்படங்களில் வியட்நாமிய போராளிகளை வில்லன்களாகவும், அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினரை ஹீரோக்களாகவும் காட்டினார்கள்.நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் வியட்நாமியரும் அல்ல, கம்யூனிஸ்டுகளும் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!
ராம்போ-2 வில் சோவியத் செம்படையினரை கொடூரமான வில்லன்களாக காட்டினார்கள். ஆப்கான் இஸ்லாமியவாத ஜிகாதிகளை ஹீரோக்களாக காட்டினார்கள்.நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!
ரோஜா என்ற தமிழ்த் திரைப்படத்தில் காஷ்மீர் விடுதலைப் போராளிகளை இஸ்லாமிய மதவெறி பிடித்த கொடூரமான வில்லன்களாக காட்டி இருந்தார்கள்.நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படத்தை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் காஷ்மீரிகளும் அல்ல, இஸ்லாமியரும் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!
உயிரே எனும் தமிழ்த் திரைப்படத்தில் அசாமிய விடுதலைப் போராளிகளை வில்லன்களாக காட்டி இருந்தார்கள்.நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படத்தை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் அசாமியர் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!
கடந்த இருபது வருட காலமாக பல நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய ஜிகாதிகளை வில்லன்களாக காட்டும் திரைப்படங்கள் ஏராளம் வந்து விட்டன. ஹாலிவூட் ஆங்கிலத் திரைப்படங்கள் மட்டுமல்ல, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏராளமான ஹிந்தி, தமிழ்ப் படங்கள் அது போன்ற கதைக்கருவை கொண்டிருந்தன.நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் இஸ்லாமியர்கள் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!
அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்திய பிராந்திய வல்லரசும் தமது நலன்களுக்கு எதிரான இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்களாக அறிவித்து தடைசெய்திருந்தன. அப்போதெல்லாம் எந்தவிதமான அரசியல் புரிதலும் இல்லாமல் நடந்து கொண்டோம். உலகத்தை அல்லது பூகோள அரசியலை புரிந்து கொள்வதற்கு, எமது குறுகிய சிந்தனை கொண்ட தமிழ்த்தேசியம் அனுமதிக்கவில்லை. அதைக் கூட ஒரு குறைபாடாக நினைக்காமல், பெருமையாக நினைத்துக் கொண்டோம்.
நாங்கள் தொடர்ந்தும் அமெரிக்க – இந்திய நலன்களுக்கு விசுவாசமாக இருப்பதாக காட்டிக் கொண்டோம். இப்போதும் காட்டிக் கொள்கிறோம். எஜமானின் காலடியில் விழுந்து கிடந்தோம். ஒவ்வொரு வருடமும் ஜெனீவா மகாநாட்டில் அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் தமிழர்கள் பக்கம் நிற்பதாக எங்களை நாங்களே ஏமாற்றிக் கொண்டோம். தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த நாடுகளில் சீனா, கியூபாவை மட்டும் தேர்ந்தெடுத்து திட்டித் தீர்த்தோம். அப்போதுதான் அமெரிக்காவின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று உண்மையிலேயே நம்பினோம்.
அமெரிக்காவையும், இந்தியாவையும் திருப்திப் படுத்துவதற்காக நாங்களும் சீனாவை திட்டினோம். இலங்கையில் சீன மொழித் திணிப்பு நடக்கிறது, சீனாவின் காலனி உருவாகிறது என்று பிரச்சாரம் செய்தால் இந்தியா தமிழர்களை ஆதரிக்கும் என்று நம்பினோம். சர்வதேச மட்டத்தில் இஸ்லாமியப் பயங்கரவாதத்தை கண்டித்தோம். “இஸ்லாமியர்களை நம்ப முடியாது… குண்டு வைப்பார்கள்…” என்று ஏகாதிபத்தியம் சொல்லித் தந்த பாடத்தை மனனம் செய்து ஒப்புவித்தோம். அத்துடன் இஸ்ரேலை இருக்க விடாமல் அரபு – இஸ்லாமியர்கள் தாக்குகிறார்கள் என்று சொல்லி, பாலஸ்தீனர்களின் போராட்டத்தை எதிர்த்து வந்தோம். இஸ்ரேலை நிபந்தனை இன்றி ஆதரித்தோம். இதன் மூலம் அமெரிக்க எஜமான் மனத்தைக் குளிர வைத்தோம்.
இவ்வாறு எந்த விதமான அரசியல் புரிதலுமற்ற, குறுகிய மனப்பான்மை கொண்ட தமிழ் குறுந் தேசியவாதிகளின் பலவீனத்தை பயன்படுத்தி Family Man – 2 சீரிஸ் தயாரித்திருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு சில எடுத்துக்காட்டுகள்:
இறுதிப்போரில் புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பி விட்டதாகவும் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாகவும் தமிழ்த் தேசியவாதிகள்தான் கதைகளை கட்டி விட்டார்கள். அனைத்து தமிழர்களும் தாம் சொல்வதை உண்மை என்று நம்ப வேண்டும் என அடம்பிடித்தார்கள். இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man – 2 சீரிஸ் தொடங்குகிறது. பாஸ்கரன் என்ற பாத்திரப் பெயருடன் வரும் பிரபாகரன் போர்க்களத்தில் இருந்து உயிருடன் தப்பி விட்டதாக சொல்கிறது.
வைகோ, நெடுமாறன், சீமான் போன்ற தமிழக அரசியல்வாதிகளை “உண்மையான தமிழினப் பற்றாளர்கள்” என்று தமிழர்கள் பலர் (இன்றும்) நம்புகிறார்கள். அன்று புலிகளும் அவர்களை நம்பினார்கள்.இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man – 2 சீரிஸ் தொடங்குகிறது. ஆரம்பத்திலேயே வைகோ, நெடுமாறன், சீமான் போன்றவர்கள் இந்தியப் புலனாய்வுத் துறையின் தொடர்பில் இருப்பவர்களாக காட்டப்படுகின்றனர். அவர்கள் புலிகளின் தலைவருடனும் நேரடித் தொடர்பில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களது விசுவாசம் இந்திய இறையாண்மை மீதே இருக்கிறது. (இந்த உண்மையை சீமானும் மறுக்கவில்லை.)
இறுதிப்போரில் புலிகளின் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் தைரியம் இல்லாத தமிழ்த் தேசியவாதிகள், “இருபது சர்வதேச நாடுகள் ஒன்று சேர்ந்து அழித்து விட்டன” என்று சொல்லித் திரிந்தார்கள். இப்போது கேட்டாலும் அதைத்தான் சொல்வார்கள்.இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man – 2 சீரிஸ் தொடங்குகிறது. புலிகளை அழித்த இந்த சர்வதேச நாடுகள் எல்லாம், இஸ்லாமியவாதிகளுக்கும் எதிரி நாடுகள் தான். ஆகவே லண்டனுக்கு தப்பிச் சென்ற புலிகளின் தலைவர் அங்கிருந்த படியே ISI உடன் கூட்டுச் சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக சதி செய்வதாக கதை அமைத்திருக்கிறார்கள்.
அமெரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபதிபத்திய, அல்லது இந்திய பிராந்திய வல்லரசின் நலன்களுக்கு விசுவாசமாக இருப்பதாக காட்டிக் கொள்கிறது. இதை அவர்கள் எந்த ஒளிவுமறைவும் இன்றி நேரடியாகவே சொல்லிக் கொள்கிறார்கள். இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man – 2 சீரிஸ் தொடங்குகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எந்தக் கட்டத்திலும் இந்திய நலன்களுக்கு எதிராக நடந்து கொள்ளாது. மாறாக, இந்திய அரசுடன் ஒத்துழைப்பார்கள் என்று கதை அமைத்திருக்கிறார்கள்.
000
சரி, இனிமேல் Family Man – 2 சர்ச்சைக்கு பிறகாவது இந்த குறுகிய மனப்பான்மை கொண்ட தமிழ்த்தேசியவாதிகள் திருந்தி நடப்பார்கள் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். இப்போதும் கம்யூனிஸ்டுகள், காஷ்மீரிகள், இஸ்லாமியர்கள் போன்றவர்களுடன் அவர்களுக்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை. இதன் மூலம் ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு தொடர்ந்தும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படியான நிலைமையில், Family Man – 2 க்கு எதிரான எதிர்ப்புகள் அதற்கான விளம்பரமாக அமையுமே தவிர வேறெந்த பலனையும் தரப்போவதில்லை. இனி வருங்காலத்தில் இது போன்ற படங்கள் தயாரிப்பதற்கான ஊக்குவிப்பாகவே, அவர்கள் இந்த எதிர்ப்புகளை கருதிக் கொள்வார்கள்.
சத்தீஸ்கர் மாநிலம் தெற்குப் பகுதியில், சுக்மா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது சில்கர் கிராமம். இக்கிராமத்தில் துணை இராணுவப் படையின் முகாம் ஒன்று கடந்த மே 12-ம் தேதி இரவு அமைக்கப்பட்டது.
கிராம சபையிடம் அனுமதி கேட்காமல் அமைக்கப்பட்ட இம்முகாமை அகற்றக்கோரி, மே 12 இரவு முதல் சில்கர் மற்றும் அதன் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆதிவாசி பழங்குடியின மக்கள் 22 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைதியாக நடந்து கொண்டிருந்த போராட்டத்தில் மாவோயிஸ்டுகளின் தலையீடு இருப்பதாகக் கூறி, மே 17 அன்று போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்டுகள் தலையீடு என்று போலீசு தரப்பு கூறியதை மறுக்கும் கிராம மக்கள், போராட்டத்தை மேலும் தீவிரமாக்கினர்.
ஆதிவாசி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோரை கிராமத்திற்குள் நுழையவிடாமல் போலீஸ் தடுத்தபோதும், போராட்டக் களத்தில் மக்கள் கூடுவது அதிகரித்தே வருகிறது. மே 25 அன்று, துணைராணுவப் படையினர் முகாமிட்டிருக்கும் டாரெம் எனும் இடத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை எடுத்து செல்லவிடாமல் சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள், “துணைராணுவப்படையின் முகாமை அகற்றுங்கள்; நாங்கள் முகாம்களை விரும்பவில்லை; இந்த நிலம் எங்களுடையது; தண்ணீர், காடு, காற்று எங்களுடையது” என முழங்கினர்.
“சில்கர் கிராமத்தில் இருந்து முகாம் அகற்றபடும் வரை, முகாமிற்கான ரேஷன் பொருட்களையோ அல்லது வேறு பொருட்களையோ எடுத்து செல்வதற்கான அனைத்து வாகன வழித்தடங்களையும் மறிப்போம்” என்கிறார் “மூல் நிவாசி பச்சாவ் மஞ்ச்சை” (பூர்வ குடிமக்களை காப்பாற்றுவோம் அமைப்பு) சேர்ந்த இளம் பெண் ஒருவர்.
போராட்டம் வீரியமடைந்த நிலையில் இனியும் தாமதம் செய்தால், போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று அஞ்சிய அம்மாநிலத்தின் பூபேஷ் பாகேல் அரசு, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்தது.
அரசு அமைத்துள்ள குழுவில், 11 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாஸ்டர் மக்களவை எம்.பி.யான தீபக் பைஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இரண்டு மாவட்ட மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால், பிஜாப்பூர் மற்றும் சுக்மா ஆகிய இரண்டு மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் பாஸ்டர் காவல்நிலைய ஆய்வாளர் ஆகியோர் அரசு பிரதிநிதிகளுடன் சென்றனர்.
அரசு அமைத்துள்ள குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த, சுக்மா, பிஜாப்பூர் மற்றும் தாந்தேவாடாவில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நான்கு பெண்கள், ஆறு ஆண்கள் உட்பட பத்து பேரை கொண்ட இளைஞர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. 17 வயது முதல் 25 வயதுடைய இளைஞர்கள்தான் இக்குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள்.
ஜூன் 2 அன்று அரசு தரப்பிற்கும் கிராமப்புற இளைஞர் குழுவுக்கும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டனர். கடும் மழையையும் பொருட்படுத்தாமல், பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் என பலர் அரசு தரப்பில் இருந்து வருபவர்களுக்காக காத்திருந்தனர்.
அரசு தரப்பு குழு டாரெம் பஞ்சாயத்து கட்டிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனக் கூறியுள்ளது. ஆனால் பேச்சுவார்த்தை பொதுவெளியில் அனைவரின் முன்பும் நடத்தப்பட வேண்டுமென்று மூல் நிவாசி பச்சாவ் மன்ச் வலியுறுத்தியது. இந்த நிபந்தனைக்கு அரசாங்க தரப்பு குழு ஒப்புக்கொண்டது. ஆனால், பேச்சுவார்த்தை நடக்கும் அந்த இடத்திற்கு ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் செல்ல போலீசு அனுமதிக்கவில்லை.
“பேச்சுவார்த்தை பயன் தரும் விதமாக அமைந்தது. போராட்டக்காரர்கள் ஆறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இவற்றை நாங்கள் விவாதித்து ஒரு முடிவெடுத்து அவர்களிடம் தெரிவிப்போம்” என்று கூறிய எம்.பி. தீபக் பைஜ், போராட்டக்காரர்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஊடகங்களுக்கு சொல்ல மறுத்துவிட்டார்.
“துணைராணுவப் படையின் முகாமை வெளியேற்ற வேண்டும். போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசாரை இடைநீக்கம் செய்யவேண்டும். ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இதனை விசாரிக்க வேண்டும். இறந்தவர்களுக்காக கட்டப்பட்ட நினைவு சின்னத்தை எதுவும் செய்யக்கூடாது என போலீசாருக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை”, என்கிறார் முன்னாள் பள்ளி ஆசிரியை மற்றும் சமூக செயல்பாட்டாளரான சோனி சோரி.
மேலும், “எந்தவொரு போராட்டக்காரர்களையும் போலீசு துன்புறுத்தக்கூடாது. முகாம் அமைப்பதற்கு முன்பு 7 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி அமைக்கப்படும் குழுவில் கலந்து ஆலோசிக்க வேண்டும். இனி கிராம சபைக் கூட்டத்தை நடத்தாமல் எந்தவொரு முகாம்களும் அமைக்கக்கூடாது” என்றார் அவர்.
பேச்சுவார்த்தை நடந்த ஒருமணி நேரம் கழித்து, அரசு தரப்பு குழு போராட்டக்காரர்களிடம் சென்று, “உங்களது பெரும்பாலான கோரிக்கைகளுக்கு அரசு கட்டுப்படும். ஆனால், துணைராணுவப் படையின் முகாமை அகற்ற மத்திய அரசோ மாநில அரசோ முடிவுக்கு வரவில்லை” என தெரிவித்துள்ளனர்.
“அரசாங்க தரப்பு பதிலை நாங்கள் எழுத்துப்பூர்வமாக தரச்சொல்லி கேட்டுள்ளோம். ஏனென்றால், நாங்கள் இந்த அரசாங்கத்தை துளியும் நம்பவில்லை”, என்கிறார் இளம் தலைவர்களில் ஒருவர். மேலும், “பதில் கேட்டு நான்கு நாட்கள் ஆகியும் அரசாங்கத்தில் இருந்து எங்களுக்கு எழுத்துப்பூர்வ பதில் எதுவும் வரவில்லை என்றால் அரசாங்கம் எங்களை மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது. இப்போது எங்களது போராட்டத்தை தீவிரப்படுத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்கிறார் அவர்.
எழுத்துப்பூர்வ பதிலுக்காக கிராம மக்கள் காத்திருப்பதைப் பற்றி, அரசு தரப்பு குழுவை தலைமை தாங்கிய எம்.பி. தீபக் பைஜ்ஜிடம் ஸ்காரல் இணையதளம் கேட்டுள்ளது. அதற்கு, “எழுத்துப்பூர்வமாக பதில் கொடுத்தால் மட்டும் போராட்டத்தை நிறுத்தப்போகிறார்களா என்ன?”, என்று திமிர்தனமாக பதிலளித்துள்ளார் தீபக் பைஜ்.
அரசு தரப்பு குழுவில் இருந்து எழுத்துப்பூர்வ அறிக்கை ஏதும் வராத நிலையில் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்திருக்கிறார்கள் கிராம மக்கள். “எழுத்துப்பூர்வ அறிக்கை வரவில்லை என்று தெரிந்ததும் முன்பை காட்டிலும் அதிகமான கிராம மக்கள் போராட்டத்தில் இணைந்துள்ளார்கள்” என்கிறார்கள் போராட்டக் களத்தில் இருப்பவர்கள்.
“போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார் துன்புறுத்தமாட்டார்கள் என்று அரசு தரப்பு குழு உறுதியளித்தபோதிலும், கிராம இளைஞர் ஒருவரை டாரெம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றது” என மஞ்ச் தலைவர்கள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர். மேலும், சில்கர் கிராமத்திற்குள் யாரும் நுழையமுடியாதபடி, போலீசாரால் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். ஜூன் 5 அன்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் வந்த குழு ஒன்று டாரெம் பகுதியிலேயே நிறுத்தப்பட்டது. சில்கர் கிராமத்துக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்ட அரசியல் ஆர்வலர்கள் சிலர் டாரெமிலே சாலை மறியல் போராட்டத்தை நடத்தி தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். ஜூன் 6 அன்றும் கிராம மக்களின் போராட்டத்தில் கலந்துகொள்ள வெளியில் இருந்து சில்கர் வந்த எட்டு பேர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கிராம மக்களின் போராட்டத்திற்கு பெருகிவரும் ஆதரவினை கண்டு அஞ்சிய அரசாங்கம் ஜூன் 6 அன்று 144 தடை உத்தரவை பிறப்பித்தது. அப்பகுதியில் நான்கு பேர் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனை மீறி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த சத்தீஸ்கர் பச்சாவ் அந்தோலன் என்ற சமூக ஆர்வ குழு ஒன்று பிஜாப்பூர் நகரத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டது.
போலீசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் போராடிவரும் மக்களின் நோக்கம், தங்களது கிராமத்தில் அத்துமீறி முகாமிட்டிருக்கும் துணைராணுவப் படையின் முகாமை அகற்ற வேண்டும் என்பதுதான். வளர்ச்சி என்ற பெயரில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகள், மலைகளில் இருக்கும் கனிம மற்றும் இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் நோக்கத்தில் செயல்படுகிறது மத்திய மாநில அரசுகள்.
அதை எதிர்த்துப் போராடும் மக்களை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என முத்திரை குத்தி ஒடுக்கும் வேலையைச் செய்து வருகிறது. இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக, போராடும் மக்களோடு துணைநிற்போம் !
விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் வழக்கா ? போலீசின் அடக்குமுறையை முறியடிப்போம் !
கடந்த ஜூன் 5-ம் தேதி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு விடுத்த அறைகூவலை ஏற்று (AIKSCC) தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் தோழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் போராடிய மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்போவதாக போலீசு தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு ஆதரவான முழக்கத் தட்டியை பிடித்து இருந்த ஒரு பெண்ணின் வீட்டிற்கு அதிகாலை 5 மணிக்கு போலீசு சென்று மிரட்டி இருக்கிறது. சேத்துப்பட்டில் நமது போராட்டத்தில் கலந்து கொண்ட முதியவரின், இளைஞர்களின் முகவரி என்ன என்று விசாரித்துக் கொண்டு இருக்கிறது.
முழக்கத் தட்டியைப் பிடித்துக் கொண்டு வீட்டு வாசலில் யார் யார் இருந்தார்களோ அவர்கள் மீதெல்லாம் வழக்குப் போடுவோம் என்று கடந்த மூன்று நாட்களாக ஒவ்வொரு பகுதியிலும் விசாரணை செய்து கொண்டிருக்கிறது போலீஸ்.
கடந்த அதிமுக ஆட்சியில் வாசலில் கோலம் போட்டவர்கள் மீது வழக்கு தொடுத்தபோது கண்டனம் தெரிவித்த திமுக இப்போது ஆட்சியில் இருக்கிறது. ஆனால் விவசாயிகளுக்கு ஆதரவாக கோலம் போட்டார்கள், கையில் முழக்கத்தட்டி வைத்திருந்தார்கள் என்று இப்போது வழக்குப் போடுகிறது . திமுகவுக்கு கடந்த ஆட்சியில் ஜனநாயகமாகப் பட்டதெல்லாம் இந்த ஆட்சியில் ஜனநாயக விரோதமாக மாறி இருக்கிறது.
விவசாயிகளுக்கு ஆதரவாக வீட்டின் முன் கோலம் போடுவதற்கு கூட அனுமதி வாங்க வேண்டும் என்று புது விதி உருவாக்கி வைத்திருக்கிறது போலீஸ். போலீசின் அடக்குமுறைகளுக்கு எப்பொழுதும் பணியப் போவதில்லை. விவசாயிகள் போராட்டத்துக்கு உறுதியான ஆதரவை தெரிவிப்போம்.
தோழமையுடன் தோழர் சி.வெற்றிவேல் செழியன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
முத்துகுமாருடன் நீண்டநேர விவாதத்தை முடிக்கையில், அவர் என்னிடம் நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா என்றார். கேளுங்கள் என்று நான் கூறினேன்.
“நான் எனது மனைவியின் நகைகளை ஒரு அடகு கடைகாரரிடம் சிறிது காலத்திற்கு முன்னர் அடகு வைத்தேன். இப்போது எனக்கு வேலை இல்லை. என்னால் இப்போது தவணைக் கட்ட முடியாததற்காக ஏதாவது தள்ளுபடி செய்வார்களா?’’ என்று அவர் கேட்டார். வட்டி அதிகரித்து விட்டதால் அவரால் கடன் கட்ட இயலாத அச்சத்தில் இந்த கேள்வி வருகிறது. அவர் பெற்ற கடன் ரூ.1,20,000. அவரது மாத தவணையோ ரூ14,000.
அவரும் அவரது மனைவியும் திருப்பூரில் ஒரு நூற்பாலையில் வேலை செய்து வந்தனர். அது துணி ஏற்றுமதிக்காக உலக அளவில் பெயர் பெற்ற ஒரு நிறுவனம். 12 மணிநேர வேலைக்கு அவர்கள் ரூ.500 கூலியாக பெற்றுவந்தனர். தங்கிக் கொள்வதற்கு ஒரு வீடும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. ஊரடங்கு இல்லாத நிலையிலும் கடனை உரிய தேதியில் கட்டுவது அவர்களுக்கு மிகவும் சிரமமான விசயம்தான். இப்போதோ ஊரடங்கால் அனைத்து வருமானத்தையும் இழந்துள்ளனர்.
“இந்த முறை ஏப்ரலில் ஊரங்கு அறிவிக்கப்பட்டதும் முதலாளி எங்களையெல்லாம் திருப்பி அனுப்ப முடிவெடுத்தார்” என்றார் முத்துகுமார். அவரது குரல் தமிழ்நாடு முழுவதும் உள்ள உழைப்பாளிகளின் பதற்றத்தை வெளிப்படுத்துகிறது.
சென்ற ஆண்டின் ஊரடங்கை பற்றி முத்துக்குமாரிடம் கேட்டபோது, “சென்ற ஊரடங்கின் போது எங்கள் முதலாளி எங்களை அங்கேயே சிலநாட்கள் தங்கவைத்திருந்தார். எங்களுக்கு சாப்பாட்டிற்கு அரிசியும் கொடுத்தார். செலவுக்கும் பணம் கொடுத்தார். ஆனால், தொடர்ந்து நிர்வகிக்க முடியாத போது, எங்களை வீட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டியதாகிவிட்டது. அவ்வாறே இந்த முறை ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடனேயே எங்களை அனுப்பிவிட்டார். இப்போது வேலையில்லாமல் ஒரு மாதம் ஆகிவிட்டது” என்றார்.
அவரும் அவரது மனைவியும் இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம்தான் கூலி பெற்றனர். அந்த முதலாளி கொடுத்த முன்பணத்திற்காக ஒரு வார சம்பளத்தை பிடித்துக்கொண்டார். ஊரடங்கு காலத்தில் அவர்களுக்கு வருமானமும் இல்லை.
“நாங்கள் வேலை செய்தால் கூலி கிடைக்கும், சில நாட்கள் வேலையில்லாதபோது எங்களுக்கு சம்பளம் கிடைப்பதில்லை. இது தினக்கூலி வேலைமுறை” என்கிறார் முத்துகுமார்.
மதுரைக்கு அருகில் உள்ள தனது சொந்த ஊரான வாடிப்பட்டிக்கு அவர் திரும்ப வந்துள்ளார். முத்துக்குமாரின் குடும்பத்தினர் அம்மா மற்றும் அவரது சகோதரர் வசிக்க கூடிய, பரம்பரையாக உள்ள வீட்டில் வாழ்ந்துவருகின்றனர். அவருடைய சகோதரர், கோயம்புத்தூரில் உள்ள ஒரு பெயிண்ட் அடிக்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார். அவரும் ஊரடங்கால் அங்கு பணியிழப்பு ஏற்பட்டதும் வீட்டிற்கு திரும்பிவிட்டார்.
“இந்த மாதத்தில் எல்லா பணமும் செலவாகிவிட்டது. அடுத்த மாதத்திற்கு எங்கள் அம்மாவின் சேமிப்பை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. என் அம்மா 100 நாள் வேலைதிட்டத்தில் கூலிவேலை செய்து சம்பாதித்துள்ளார். அதை நம்பித்தான் உள்ளோம்”, தேசிய ஊரக வேலைவாய்ப்பும்கூட கோவிட் இரண்டாம் அலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
முத்துகுமாரின் கதை தனிதன்மையானது அல்ல. மீண்டும் இப்போது வரை கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மாநகரங்களில் வேலை இல்லாமல் போனதாலும் ஊரடங்கு பயமுறுத்துவதாலும் பலரும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். வேலைவாய்ப்பின்மை பற்றிய இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம், இந்த ஆண்டு மே மாதத்தில் வேலையி்ன்மை மிக அதிகமாக பெருகிவருவது பற்றி தெளிவாக கூறுகிறது. தமிழ்நாட்டின் மொத்த உழைப்பு சக்தியில் முறைசார்ந்த பிரிவு 7% மட்டுமே வேலை கொடுக்கிறது. மற்ற 93% அமைப்பாக்கப்படாத தொழில் பிரிவுதான் பெரும்பாலான மக்களுக்கு வேலை கொடுக்கிறது.
மதுரை மாவட்டம், அழகர் கோயில் அருகில் வசிக்கும் பொன்னம்மாவின் வாழ்நிலை முத்துகுமாரின் நிலையை ஒத்ததுதான். இவருடைய குடும்பத்தினர், கோயமுத்தூரில் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர். இவரும் இவருடன் வேலை பார்த்தவர்களையும் செங்கல் சூளையில் வேலை குறைந்ததன் காரணமாக அவர்கள் அனைவரும் மூன்று மாதத்திற்கு முன்னரே வீட்டிற்கு போகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இப்போழுது சொந்த ஊரிலும் கூட வேலை கிடைக்காததால் அவரும் அவரது குடும்பமும் துயரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுவருகிறது.
“நாங்கள் எங்கள் நகைகளை எல்லாம் அடகு வைத்துவிட்டோம். இன்னும் இந்த சில மாதங்கள் உயிர்வாழ எங்கள் வீட்டையும் அடமானம் வைத்துள்ளோம். வேலை தேட வெளியே செல்ல முயற்சித்தால் போலிசு எங்களை தடுத்துநிறுத்தி மோசமாக நடத்துகிறது. ஆகையால் என் கணவரும் என் மகனும் வேலை தேட செல்லவில்லை” என்றார் பொன்னம்மா.
தமிழ்நாடு அரசு கொடுத்த ரூ.2000 ஒரு மாத செலவுகளை சமாளிக்க சிறிது உதவிகரமாக இருந்தது. இருந்த போதிலும், ஊரடங்கு தொடர்ந்தால் மற்றும் வேலைவாய்ப்புக்கான வழி இல்லை என்றால் அவரது குடும்பம் மிக மோசமான நிலையை அடையும் என்பதில் அவருக்கு சந்தேகம் இல்லை. மேலும், அவர் கோவிட் தொற்று வந்துவிடுமோ என்பதிலும் பதட்டமாக உள்ளார்.
“ஊராட்சி அதிகாரிகள் வந்து எங்களை பார்வையிட்டு கைகளை முறையாக கழுவவும், முக கவசம் அணியவும் அறிவுறுத்தினர். வெளியே அதிகமாக எங்கும் போகவில்லை. காய்ச்சல் அல்லது இருமல் வந்தால் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லவேண்டும்” என்றனர்.
பல இளைஞர்கள் ஆலை மூடல் காரணமாக தமது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். பலரும் உணவு விடுதிகள், கடைகள் மற்றும் பிற சேவைகள் போன்றவை மூட நிர்ப்ந்திக்கப்படுவதால் கிராம புறங்களில் கூட வேலை இழந்துள்ளனர். தேசிய ஊரக வேலை வாய்ப்பும் நிறுத்தப்பட்டுள்ளதால் கிடைக்கின்ற ஒரே வேலை விவசாய கூலி வேலைதான். ஆனால், அது எல்லா மாவட்டங்களிலும் கிடைப்பதில்லை.
2020 ஆம் ஆண்டில் முதல் கொரோனா ஊடரங்கில் கடன் பிரச்சனைக்கு எதிராக மதுரை பெண் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்
சிபிஐ எம்எல் (விடுதலை)-யின் மாவட்ட செயலாளர் இளையராஜாவின் கூற்றுப்படி, தேனி மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உட்பட அங்கு நல்ல விவசாய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் அதே நேரத்தில், விவசாயம் என்பது விவசாயம் அல்லாத வேறு துறைகளிலிருந்து அதிகமாக வரும் வேலையாட்களுக்கு வேலையை ஏற்படுத்துவதில்லை. தனது மகனுடன் சேர்ந்து மாடு வளர்க்கும் முத்துகுமார், “பெரும்பாலான நிலங்கள் விற்பனை ஆகிவிட்டது மற்றும் நிலங்களின் மேல் மண் மற்ற பயன்பாட்டிற்கு வெட்டி எடுக்கப்பட்டுவிட்டது” என்கிறார். இப்போது பாறைகள் கூட மணலுக்காகவும் மற்ற பயன்பாட்டிற்காகவும் வெட்டி எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்கிறார். “விவசாயத்தை மறந்ததால், இப்போது நாங்கள் மாடு மேய்க்க இந்த பாறை நிலத்தில் சிரமப்படுகிறோம்” என்கிறார் அவர்.
கூலி வேலையை அதிகம் கோராத வகையில் தஞ்சாவூர் டெல்டா பகுதி விவசாயம் இயந்திரமயமாக்கப்படுகிறது. பல இளைஞர்கள் கேரளாவிற்கும் மற்ற மாநிலங்களுக்கும் வேலை தேடி தொலைதூரம் செல்லவேண்டியிருக்கிறது. எல்லைகள் மூடப்பட்டு பெருநகரங்கள் மூடப்பட்டு இருக்க பலரும் கிராமத்திற்கு திரும்ப வந்துள்ளனர்.
சென்ற ஆண்டைப் போல், இந்த ஊரடங்கு காலங்களில் செலவுகளை சமாளிக்க சிரம்படுகின்ற இந்த காலங்களில் அவர்கள் சந்திக்கின்ற தவணை, கடன், வட்டி போன்றவற்றை திரும்ப செலுத்துவதில் இந்த ஆண்டு முழுவதும் கூட கட்டமுடியாமல் போகலாம். கோவிட் பெருந்தொற்றைவிட இந்த ஊரங்குதான் அதிக அழிவை கொண்டுவரும் என்பதுதான் உழைக்கும் மக்களின் குடும்பங்களுக்கு முக்கியமான உள்ளுணர்வாக இருக்கிறது.
“கோவிட் பெருந்தொற்றால் இறக்கிறோமோ இல்லையோ ஊரடங்கு நீண்டு நாங்கள் வேலை கிடைக்காமல் போனால் பட்டினிச்சாவு நிச்சயம்” என்பதுதான் நான் நேர்காணல் மேற்கொண்ட போது பல உழைப்பாளி பிரிவினரும் தெரிவித்த கருத்துக்கள்.
குறைவான வருமானம் உள்ள அனேக குடும்பங்கள் தமிழ்நாட்டு அரசிடமிருந்து மே மாதத்திற்காக ரூ.2000 பெற்றுள்ளன. இன்னொரு தவனையாக ஜூன் மாதத்திற்கு ரூ.2000 தருவதாக உறுதியளிக்கப்பட்டு்ள்ளது. இருப்பினும், இந்த குறைந்தப் பட்ச தொகை அவர்களுடைய வாடகை தொகையையோ அல்லது கடன் தவணையையோ செலுத்த உதவாது. அவற்றுக்காக ஒரு மாதத்திற்கு பல ஆயிரம் ரூபாய்கள் செலுத்தவேண்டியதாக இருக்கிறது.
அரசாங்கம், நீண்ட ஒரு காலகட்டத்திற்கு உதவியை நீட்டிப்பு செய்து அடிப்படை வருமான வாழ்வாதாரத்திற்கு பொறுப்பு ஏற்கவில்லை என்றால் இந்த நிச்சயமற்றதன்மை மக்களை மேலும் கடனாளியாகும் நிலைக்கு தள்ளிவிடும்.
விவசாய தொழிலாளர்கள் அல்லாத கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்டு சிறு வியாபாரிகள், முறைசார தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக்கப்படாத தொழிலாளர்கள் கூட்டமைப்பு, முதலமைச்சருக்கும் பிரதமருக்கும் உழைப்பாளர் குடும்பங்களுக்கு மாதம் தலா ரூ.10,000 வழங்க கோரி கடிதம் எழுதியுள்ளது. மேலும். அது கடனை திருப்பி செலுத்துவதற்கு ஒரு வருட கால அவகாசம் தரவேண்டும், வட்டியை தள்ளுபடி செய்யவேண்டும், வாடகை தொகையை கட்ட கூடுதல் ஆதரவு தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.
மூலக்கட்டுரை : தொழிலாளர் கூடம் தமிழாக்கம் : முத்துக்குமார் செய்தி ஆதாரம் : Countercurrents
சூனாசிஸ் (Zoonosis) எனும் உயிரியல் நிகழ்ச்சிப்போக்கு
கோவிட்-19 என்பது அதிதீவிர சுவாச பிரச்சினையை உண்டாக்கும் கொரோனா வைரஸ்-2 (Severe Acute Respiratory Syndrome Corono Virus 2, SARS-CoV-2) என்னும் வைரஸ் கிருமியால் உண்டாகும் நோயாகும். முதன்முதலில் கொரோனா வைரஸ் என்னும் வைரஸ் குடும்பம், 1960-களில் கண்டறியப்பட்டது. இது பல நோய்குறிகளை உண்டாக்கும்; சிலரிடம் சாதாரண சளி, காய்ச்சல் மட்டும் வெளிப்படும்; மற்ற சிலருக்கு தீவிரமான சுவாச பிரச்சினை, நுரையீரல் தொற்று போன்றவை உண்டாகி மரணம் வரை இட்டு செல்லலாம்.
கடந்த 2012-ம் ஆண்டு தோன்றிய மெர்ஸ்-கொரோனா வைரசும் (Middle East Respiratory Syndrome Coronovirus, MERS-CoV) தொற்று உறுதிசெய்யப்பட்ட மூன்றில் ஒரு பங்கு மக்களின் மரணத்திற்கு காரணமாக இருந்தது. கோவிட்-19 மற்ற நோய்க்குறிகளுடன், காய்ச்சலையும் வறட்டு இருமலையும் தோற்றுவிக்கிறது. இது நிமோனியாவை உண்டாக்கி குறிப்பாக வயதானவர்களையும், ஏற்கனவே உடல்நலப் பிரச்சினை உள்ளவர்களையும் கொல்லும் ஆபத்தான வைரஸ் தொற்றாக இருக்கிறது. (இந்த நோய்த் தொற்று ஏற்பட்டவர்களின் இறப்புவிகிதம் கிட்டதட்ட 2-4 சதவிகிதமாக இருக்கிறது. இதுவே பருவகால ஃபுளுக்காய்ச்சலின் இறப்புவிகிதமோ 0.1 சதவிகிதம் தான்.) இந்த கரோனாவைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இருமல், தும்மல் மூலம் வெளிவரும் துளிகள் மற்றும் நுண்துளிகள் (Respiratory droplets and aerosols) மூலமாக பரவுகிறது.
உயிரணுவியல்ரீதியாக பார்த்தால் இந்த கொரோனா வைரஸ் வேகமாக சடுதி–மாற்றமடையக்கூடிய (Mutation) – (Mutation – ஒரு உயிரினம் தன்னுடைய மரபணுவை பிரதியெடுக்கும்போது உண்டாகும் தவறுகளில் இருந்து இது ஏற்படுகிறது) – ஒற்றை இழை ஆர்.என்.ஏ (Single Strand RNA) வைரஸாகும்.
“மனிதயினத்தின் மரபணு ஒரு சதவீதம் பரிணாமமடைய 80 லட்சம் வருடங்கள் எடுத்துக்கொள்ளும். விலங்குகளுக்கு இருக்கும் பல ஆர்.என்.ஏ வைரஸ்கள் ஒரு சதவீதம் பரிணாம மாற்றமடைய சில நாட்களே எடுத்துக்கொள்கின்றன.”7மற்ற பல வைரஸ்களை போலவே, கொரோனா வைரஸுக்கும் விலங்கினங்கள்தான் வாழ்கலனாக (reservoirs) இருக்கின்றன. இந்த வைரஸ்கள் பரிணாம வளர்ச்சி (through antigenic shift) மூலம் விலங்கினத்திலிருந்து மனிதயினத்துக்கு பரவும் நிகழ்ச்சிப் போக்கு சூனாசிஸ் (Zoonosis) எனப்படுகிறது.
அப்படி மாற்றமடையும் வைரஸ், பிறகு மேலும் பரிணாம வளர்ச்சியடைந்து மனிதர்–மனிதர் தொற்றாகவும் உருவாகலாம். இப்படி நடக்கும் போதுதான் கொள்ளை நோய்களோ (Epidemics), உலகளாவிய கொள்ளை நோய்களோ (Pandemics) உண்டாகின்றன. பரிணாமமடைந்த இந்த வைரஸ்களுக்கு எதிராக, குறிப்பான நோயெதிர்ப்பு அணுக்கள் மனிதர்களுக்கு இருக்காது என்பதால், வேகமாக பரவி பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
ஃபுளு காய்ச்சல் (Influenza) ஒரு சிறந்த உதாரணம். கொரோனா வைரஸ் போலவே, ஃபுளு காய்ச்சல் வைரஸ்களும் ஒற்றை–இழை ஆர்.என்.ஏ வைரஸ்கள் தான். இந்த வைரஸ்களின் வாழ்கலனாக நீர்வாழ் பறவையினங்களான வாத்து, மணிவாத்து, போன்றவை இருக்கின்றன. இந்த பறவையினங்களில் ஃபுளு காய்ச்சல் வைரஸ்கள் சாதாரண நோய்குறிகளையே உண்டாக்குகின்றன.
உதாரணமாக, இவைகளிடம் செரிமான பிரச்சினை உண்டாகி வைரஸ் தொற்று உள்ள பறவைகளின் கழிவுகளில் இருந்து வைரஸ் வெளிவரும். இவற்றுக்கும் மனிதர்களுக்கும் தொடர்பு ஏற்படும்போது, மனிதர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டு மூச்சுக்குழாய் சுவாசப் பிரச்சினைகள் உண்டாகின்றன. இப்படி, ஃபுளு காய்ச்சல் வைரஸ்கள் பல சடுதி–மாற்றம் மூலம் பறவையினங்களின் எல்லையைத் தாண்டி மனிதர்களையும் வாழ்கலனாக கொண்டு வாழும் வகையில் வைரஸ்கள் பரிணாம மாற்றமடைகின்றன8 . இது அரிதாகவே நடக்கின்றது எனினும், இப்படியும் நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
பொதுவாக, மனிதர்களை வாழ்கலனாக கொள்ளும் வகையில் வைரஸ்கள் சடுதி–மாற்றமடைவது இன்னொரு இடைப்பட்ட (intermediate host) விலங்கினம் மூலமாகவே நடக்கின்றது. பன்றிகள் மூலமாக பல்வேறு சமயங்களில் நடக்கின்றன. ஏனெனில், பன்றிகளின் உயிரணுக்கள் பறவைகளை தொற்றும் வைரஸ்கள் மற்றும் மனிதர்களை தொற்றும் வைரஸ்கள் ஆகிய இரண்டினாலும் பாதிப்படையும் வகையில் உள்ளன9.
ஆக, இந்த இரண்டு உயிரினங்களையும் கடந்து வருவதன் மூலமாக அது மனிதர்களைத் தொற்றும் புதிய வைரஸ்களாக வடிவம் எடுக்கின்றன. கறாராக சொன்னால், இப்படிப்பட்ட சடுதி–மாற்றம் மூலம் சூனாசிஸ் தாவல் நடப்பதற்கு அந்த வைரஸ் பல முறை பறவை – இடைப்பட்ட விலங்கினம் (பன்றி) – மனிதன் என்கிற சுழற்சியில் மீண்டும் மீண்டும் இவ்வுடல்களுக்குள் போய் வருவதன் மூலமே ஏற்பட முடியும்.
அதாவது, இந்த சுழற்சியில் பல சடுதி–மாற்றங்கள் மூலமாக பரிணாமம் அடைந்து மனிதர்களை வாழ்கலனாக கொள்ளும் வைரஸ்களாக இவை தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றன (மாறிக் கொள்கின்றன). இப்படி நடைபெறும் நிகழ்ச்சிப்போக்கைதான் மேலே கூறியுள்ளபடி சூனாசிஸ் (Zoonosis) என்று பரிணாம உயிரியல் குறிப்பிடுகிறது.
பருவகால ஃபுளுக்காய்ச்சல் (Seasonal Influenza) கிட்டதட்ட 5 லட்சம் மக்களை வருடந்தோறும் கொல்வதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால், மேற்கூறியவாறு வடிவமெடுக்கும் புதிய வைரஸ்கள் உலகளாவிய கொள்ளை நோயை (Pandemic Influenza) உண்டாக்க வல்லவை. கொரோனா வைரஸ்கள் பறவையினங்களிலும் இருக்கின்றன. குறிப்பாக, மனிதர்களுக்கு பரவும் கொரோனா வைரஸ் வௌவாலை வாழ்கலனாகக் கொண்டது. வௌவாலிடம் இருந்து மற்ற விலங்கினங்களான பன்றி, புனுகுப் பூனை, ஒட்டகம் ஆகியவற்றுக்கு தாவுவதன் மூலமாக மனிதர்களுக்கு பரவும் தன்மையை இந்த கொரோனா வைரஸ்கள் பெறுகின்றன.
எடின்பர்க் பல்கலைகழகத்தை சேர்ந்த தொற்றுநோய்கள் பற்றிய வல்லுனரான மார்க் உல்ஹவுஸ் அவர்கள், 2005-ல் நடத்திய ஆய்வில் சூனாடிக் தாவல் மூலம் உருவாகும் நோய்களின் முக்கியத்துவத்தை பற்றி கூறுவதாவது : “மனிதர்களை பாதிக்கும் 1407 நோய்களில் 58 சதவீதம் விலங்குகளிடம் இருந்து சூனாடிக் தாவல் மூலம் வருவதாகவும் தொற்றுநோய்களை உருவாக்கும் ஒட்டுண்ணிகளில் 73 சதவீதம் மனிதர்களுக்கும் விலங்களுக்கும் நோய் ஏற்படுத்தும் தன்மையுள்ளவை என்றும்கால்நடை வளர்ப்பு துறையின் மூலம் இது பரவுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறுகிறார்10.மலேசியாவில் 1999-ல் நிப்பா வைரஸ் முதன்முதலில் கண்டுபிக்கப்பட்டது. இதற்கு முன்பு மனிதர்களுக்கு இந்த வைரஸ் இருந்ததில்லை என்பதையும் நிப்பாவின் தோற்றம் பழம்திண்ணி வௌவால்களிடம் இருந்து உருவாகியது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது11. மலேசியாவின் மாம்பழத் தோட்டங்களில் இந்த வௌவால்கள் வாழ்வதையும், அது சாப்பிட்ட மீத மாம்பழங்களை பன்றிகள் சாப்பிட்டதன் மூலம் தொற்றுக்கு உள்ளாகி பிறகு மனிதர்களுக்கு பரவியதாகவும் தசாக் கூறுகிறார்12
சூனாசிஸ் என்னும் வைரஸ் – உயிரியல் நிகழ்ச்சிபோக்கு கொரோனா வைரஸ் போன்ற ஃபுளு கொள்ளைநோய்களை உண்டாக்கும் வைரஸ்களின் தோற்றத்தை புரிந்துகொள்ள அறிவியல் – ரீதியாக முக்கிய பங்காற்றுகிறது.
அடுத்ததாக, இந்த சூனாடிக் தாவல் மூலம் புதிய வைரஸ்கள் உருவாவதற்கான சாத்தியத்தை, தற்கால – இலாபவெறியை மட்டுமே மையமாகக் கொண்ட – முதலாளித்துவ உற்பத்திமுறை எப்படி உண்டாக்குகிறது என்பது குறித்து – அதாவது பல தற்செயலான சடுதிமாற்றங்களின் மூலம் உண்டாகும் சூனாடிக் தாவல்களை இலாபவெறி கொண்ட முதலாளித்துவ உற்பத்திமுறை எப்படி தவிர்க்கமுடியாமல் உண்டாக்குகிறது என்பது குறித்து – விரிவாக அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
7 – Morens, David M, Peter Dazak and Jeffery K Taubenberger, 2020, “Escaping Pandora’s Box-Another Novel Coronavirus”, New England Medical Journal (26 Feburary). 8 – Dehner, George, 2012, Global Flu and You: A History of Influenza 9 – Dehner, George, 2012, Global Flu and You: A History of Influenza 10 – Woolhouse MEJ, Gowtage-Sequeria S. Host range and emerging and reemerging pathogens. Emerg Infect Dis 11(12):1842–1847 (2005) 11 – Chua KB, et al. Isolation of Nipah virus from Malaysian Island flying-foxes. Microbes Infect 4(2):145–151 (2002). 12 – Daszak P, et al. Interdisciplinary approaches to understanding disease emergence: the past, present, and future drivers of Nipah virus emergence. Proc Natl Acad Sci USA 110(suppl 1):3681–3688 (2012)
டேவிட் அலெக்சான்ட்ரோவிச் டஷ்மான் (David Aleksandrovich Dushman) 1.4.1923 – 4.6.2021
“நாங்கள் அங்கே சென்றபோது முகாமை சுற்றி போடப்பட்டு இருந்த மின்சார வேலியை எங்கள் டாங்குகளை ஏற்றி உடைத்து முன்னேறினோம். பின்னர்தான் அந்த ஜீவன்களை கண்டோம். தடுமாறியபடியே அந்த மனித எலும்புக்கூடுகள் வெளியே வந்தன. ஏற்கனவே செத்து மடிந்தவர்கள் மீது அந்த எலும்புக்கூடுகள் உட்கார்ந்தும் சாய்ந்தும் கிடந்தன.
எல்லோரும் சீருடை அணிந்து இருந்தார்கள். அவர்களிடம் நாங்கள் பார்த்தது எல்லாம் வெறும் கண்கள், கண்கள், ஒடுங்கிய கண்கள் மட்டுமே. கொடூரம், மிகக் கொடூரம். எங்களிடம் இருந்த உணவு டப்பாக்களை அந்த மனிதர்களை நோக்கி எறிந்தோம். அடுத்த கணம் ஃபாசிஸ்ட்டுகளை வேட்டையாட முன்னேறினோம். அப்போது வரையிலும் ஆஸ்விட்ஸ் Auschwitz என்ற நாஜி சித்ரவதை முகாம் என்ற ஒன்று இருப்பதே எங்களுக்கு தெரியாது”.
“என்னால் நடக்க முடியாது, ஏனெனில் என்னால் மூச்சுவிட முடியாது. எனது ஒருநாள் உடற்பயிற்சி என்பது ஒரே ஒரு நிமிடம் மட்டுமே என்றுதான் இருந்தது. மிக மிக மெதுவாக, மிக மிக மிதமாக எனது உடற்பயிற்சியை தொடர்ந்து செய்தேன். ஒரு கட்டத்தில் நான் ரஷ்யாவின் வாள்வீச்சு சாம்பியன் ஆனேன் (1951இல்)”.
000
போலந்தில் நாஜி ஹிட்லரால் கட்டப்பட்டு இருந்த கொலைக்கூடமான ஆஸ்விட்ஸ் வதைமுகாமை 1945 ஜனவரி 27 அன்று சோவியத் செம்படை வீரர்கள் முற்றுகை இட்டு அழித்தனர். சோவியத் டாங்கு படையில் அப்போது முன்னணியில் இருந்த டேவிட் டஷ்மான் ஜெர்மனியின் மியூனிக் நகரில் 4.6.2021 அன்று தான் 98-ஆவது வயதில் காலமானார். அவர் கூறியதுதான் மேலே உள்ளவை.
உண்மையில் அவரே காலத்தின் அடையாளம்தான். இந்த 98 ஆண்டுகளில் உலகத்தின் எத்தனை எத்தனை அரசியல் நகர்வுகளையும் போர்களையும் பார்த்திருப்பார்!
டேவிட் அலெக்சான்ட்ரோவிச் டஷ்மான்
செஞ்சேனை விடுதலை செய்த ஐரோப்பா ஒரு காலத்தில் சோசலிச உலகமாக இருந்தது, அதை பார்த்திருப்பார், 1990-களுக்கு பிறகு சோவியத்தின் சிதைவையும் அதன் விளைவாக நிகழ்ந்த ஐரோப்பிய சோசலிச முகாமின் தகர்வையும் பார்த்திருப்பார். சோவியத்தின் சிதைவு எண்ணற்ற ஐரோப்பிய நாடுகளின் தத்துவார்த்த தழுவல்களையும் ஆட்டிப்படைத்தது எனில், 1945 தொடங்கி 1990 வரை ஒரு 45 வருட காலத்திய அரசியல் அமைப்பு பலமான அஸ்திவாரத்தில் கட்டப்பட்டு இருந்ததா, வெறும் ஊதிப்பெருக்கப்பட்ட உள்ளீடு அற்ற போலி கட்டமைப்பாகவே இருந்ததா, பொலபொலவென உதிர்ந்து போகும் அளவுக்கு, என்பது விவாதத்துக்கு உரியது.
ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்தும் ஹிட்லரின் படைகளால் கடத்தப்பட்டும், பிடிக்கப்பட்டும் இருந்த பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் Auschwitz- Birkenau வதை முகாமில் அடைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்களில் பெரும்பகுதியினர் யூத இன மக்கள். பிறர் ஹிட்லரால் போரில் பிடிக்கப்பட்ட சோவியத் படை வீரர்கள், சமூகத்தின் விளிம்பு நிலை மக்கள், குழந்தைகள், பெண்கள், நாடோடிகள், ஓரின சேர்க்கையாளர்கள். 1940 முதல் 1945 வரை இங்கு நடந்த வதைகள், படுகொலைகள் கற்பனைக்கு எட்டாதவை.
சோவியத்தின் டாங்கு படை முகாமின் சுற்றுசுவரை தகர்க்க, சோவியத்தின் 322-ஆவது துப்பாக்கி படை பிரிவு முகாமின் உள்ளே நுழைந்தது. அங்கு அவர்கள் நுழைந்த பின்னர்தான் அது ஒரு சித்ரவதை முகாம் என்பதே அவர்களுக்கு தெரிந்தது, பின்னர் உலகத்துக்கும் தெரிந்தது.
செஞ்சேனையின் ஒரு வீரராக ஜெர்மனிக்கு வரும் முன்னர், டஷ்மான் இரண்டாம் உலகப்போரின் கொடூரமான போர்க்களங்கள் பலவற்றில் பங்கு பெற்றார். புகழ்பெற்ற ஸ்டாலின்கிராட் முற்றுகைப்போர், Kursk போர்க்களம் ஆகியவை முக்கியமானவை. போரின்போக்கில் மூன்றுமுறை மிக மோசமான காயங்களுக்கு உள்ளானார். அவரது நுரையீரலின் ஒரு பகுதி அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. 12,000 போர் வீரர்கள் கொண்ட அவரது டாங்கு படைப்பிரிவில் போர் முடியும்போது உயிருடன் இருந்தவர்கள் 69 வீரர்கள் மட்டுமே, அவரும் ஒருவர்.
20 கோடி சோவியத் மக்களில் 2 கோடி மக்கள் இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்தார்கள் என்பது வெறும் உயிரிழப்பு மட்டுமே அல்ல, ஃபாசிச சக்திகளிடம் இருந்து உலகை காக்க அவர்கள் செய்த உயிர்த்தியாகம் என்றுதான் நாம் அதை புரிந்துகொள்ள வேண்டும்.
000
போரின் பிறகு வாள்வீச்சுக்கலையை கற்றுக்கொண்டார். நுரையீரலின் ஒரு பகுதியை அறுவை சிகிச்சையில் இழந்த அவர் இயல்பு வாழ்க்கையை அவ்வளவு எளிதில் மீட்டுவிடவில்லை. ஒரே ஒரு நிமிடம் கூட என்னால் உடற்பயிற்சி செய்ய முடியாது என்று சொன்னவர்தான் தன் மனஉறுதியை மட்டுமே துணையாக கொண்டு மிக மிக மெதுவாக முன்னேறுகின்றார். 1951-இல் ரஷ்யாவின் வாள்வீச்சு சாம்பியன் பட்டத்தை வெல்கின்றார்!
பின்னர் 1952 முதல் 1988 வரை சோவியத் யூனியன் பெண்கள் வாள்வீச்சு அணிக்கு பயிற்சியாளர் ஆக இருந்தார்! 1976 ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம், 1980 ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை Valentina Sidrova உள்ளிட்ட பல புகழ்பெற்ற வீரர்களுக்கு அவர் பயிற்சி அளித்துள்ளார். 90 வயதுக்குப் பிறகும் பயிற்சி அளிப்பதை தொடர்ந்துள்ளார்!
1972 மியூனிக் ஒலிம்பிக் போட்டியின்போது இஸ்ரேலிய விளையாட்டு அணியின் மீது பாலஸ்தீன போராளிகள் நிகழ்த்திய தாக்குதலின்போது மிக அருகில் இருந்து உயிர் தப்பினார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவரான Thomas Bach தன் இரங்கற்செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: “தலைசிறந்த வாள்வீச்சு பயிற்சியாளர் அவர். ஆஸ்விட்ஸ் வதை முகாமை விடுவித்த வீரர்களில் நம்மிடையே வாழ்ந்த கடைசி வீரர் அவர்”. 1970-இல் மேற்கு ஜெர்மனிக்காகதான் போட்டியில் பங்கு பெற்றபோது டஷ்மான் தனக்கு நட்புரீதியில் ஆலோசனைகள் அளித்ததை நினைவுகூர்கின்றார்.
“டஷ்மான் யூத வம்சத்தை சேர்ந்தவர் என்பதும் இரண்டாம் உலகப்போரில் பங்குபெற்றவர், ஆஸ்விட்ஸ் முகாமை நேரில் கண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது என்றாலும் அவர் அனைத்தையும் புறந்தள்ளி மிகப்பெரிய மனிதாபிமானமிக்க மனிதராக நடந்து கொண்டார், என்னால் அவரது இந்த உயரிய குணத்தை ஒருபோதும் மறக்க முடியாது” என்றும் கூறுகின்றார்.
“வரலாற்றின் சாட்சியங்களாக இருப்போரின் ஒவ்வொருவரின் மறைவும் நமக்கு இழப்புத்தான். அதிலும் டேவிட் டஷ்மானின் இழப்பு என்பது தனிப்பட்ட வேதனையை ஏற்படுத்துகின்றது. நாஜிகளின் மரண ஆட்சியை நேருக்கு நேர் நின்று அழித்தவர்களில் அவர் முன்னணியில் இருந்தார். இரண்டாம் உலகப்போரில் தாங்கள் நேரில் கண்டவற்றை நமக்கு சொல்லிக்கொடுத்தவர்களில் எஞ்சி இருந்தவர்களில் அவரும் ஒருவர்” என ஜெர்மனியின் யூத சமூகத்தவரின் மத்திய கவுன்சிலின் முன்னாள் தலைவரான Charlotte Knobloch தன் இரங்கற்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
000
பால்டிக் கடலோரம் வடக்கு போலந்தில் உள்ள Danzig என்ற நகரில் பிறந்தவர் அவர். போருக்குப்பிறகு சோவியத் ஒன்றியத்தின் நாற்பதுக்கும் மேற்பட்ட வீரப் பதக்கங்கள், பாராட்டு சான்றுகளை பெற்றவர். ஜெர்மன்-சோவியத் போரில் ஈடுபட்டோருக்கு அளிக்கப்படும் உயரிய The Order of The Patriotic War விருதைப் பெற்றவர். 60 லட்சம் மக்களின் மரணத்திற்கு காரணமாக இருந்த ஹிட்லரின் ஹோலோகாஸ்ட் எனப்படும் பெரும் இன அழிப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைப்பது, தனது பெருமைக்குரிய பதக்கங்களை அணிந்து கூட்டங்கள், கலந்துரையாடல்களில் பங்கேற்பது என சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தார்.
ஆஸ்திரியாவில் சில ஆண்டுகள் வாழ்ந்த பின், 1996 முதல் 4.6.2021 வரை ஜெர்மனியின் மியூனிக் நகரில் வாழ்ந்தார். அவர் மனைவி Zoja பல வருடங்களுக்கு முன் மறைந்தார்.
ஜெர்மனி சரண் அடைந்த 1945 மே 9ஆம் நாள் வெற்றித்திருநாள் Victory Day என சோவியத் அரசு அறிவித்து கொண்டாடியது, இப்போதும் தொடர்கின்றது. அந்த நாளில் ரஷ்ய ஜனாதிபதி புடின் தனை அழைத்து வாழ்த்துவதை வழக்கமாக கொண்டு இருந்தார் என டஷ்மான் சொல்வார்.
டேவிட் டஷ்மான்! அவர் காலமானார் என்பது சம்பிரதாயமான அஞ்சலி அல்ல, அவர் மானிட குல விடுதலை வரலாற்றின் செதுக்கப்பட்ட பக்கங்களில் ஒன்றென நிரந்தரமாக வாழ்வார்.
கொரோனா இரண்டாம் அலையில் இந்திய மக்கள் படுமோசமாக பாதிப்படைந்துள்ளனர். மோடி அரசு மக்களை கொரோனா பெருந்தொற்றில் இருந்து காப்பாற்றும் எந்த நடவடிக்கையையும் துரிதமாக எடுக்கவில்லை.
கொரோனாவைக் கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகள் தடுப்பூசியின் மீதான கட்டுப்பாட்டை தங்கள் கைகளில் எடுத்துள்ளன. ஆனால் இந்தியாவில் மோடி அரசு தடுப்பூசிகளை இரண்டு தனியார் நிறுனவங்களின் கட்டுப்பாட்டில் கொடுத்தது மட்டுமல்லாமல், பேரழிவு காலச் சூழலிலும் அந்நிறுவனங்களின் இலாபத்தை உறுதி செய்து கொடுத்திருக்கிறது. மக்களுக்கு சுகாதார வசதியையும் வாழ்வாதாரத்தையும் வழங்க பணம் செலவழிக்காத சூழலிலும், கார்ப்பரேட்டுகளின் கல்லாவில் பணம் குறைந்துவிடக் கூடாது என்பதில் பெரும் அக்கறை செலுத்துகிறது மோடி அரசு.
கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில், அனைவருக்கும் தடுப்பூசி போடுவதில் மோடி அரசின் செயல்பாடுகளைப் பற்றி தோழர் வழக்கறிஞர் சுரேசு சக்தி முருகன் இன்று (09-06-2021) மாலை 6.30 மணியளவில் இணையவழி உரையாற்றுகிறார். மக்கள் அதிகாரம் முகநூல் பக்கத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் அவரது உரையை தவறாமல் பார்க்கவும் !!
♦ தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை ! தொடரும் கார்ப்பரேட் கொள்ளை !
நாள் : 09.06.2021, புதன்கிழமை நேரம் : மாலை 6.30 மணிக்கு
இலாப வெறியை நோக்கமாகக் கொண்ட ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின்
கோரத்தாண்டவமே கொரோனா ! – பகுதி 1
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, கொரோனா கொள்ளை நோயிலிருந்து மீள மனித சமூகம் முயன்று வருகிறது. 2019-ம் ஆண்டின் கடைசி மாதங்களில் பரவ ஆரம்பித்த சார்ஸ்–கொரோனா வைரஸ்-2ல் இருந்து வேறுபட்ட, 9 வகையான உருத் திரிந்த (Virus Variants) சார்ஸ்–கொரோனா வைரஸ்-2 வைரஸ்கள் உருவாகியுள்ளது.
இந்தியாவிலும் B.1.617, B.1.617.1, B.1.617.2, B.1.617.3, போன்ற உருத் திரிந்த (Virus Variants) சார்ஸ்–கொரோனா வைரஸ்கள் உருவாகி பரவி வருகிறது. இதனால், பல்வேறு நாடுகளில் கோவிட்-19 கொள்ளை நோயின் இரண்டாம், மூன்றாம் அலைகள் உருவாகியுள்ளன. இதுவரை உலகளவில் 17 கோடி மக்கள் இக்கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 35 லட்சம் பேர் இறந்துள்ளனர். இந்தியாவிலும் கிட்டதட்ட 2.5 கோடிக்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 லட்சம் பேர் இறந்துள்ளதாகவும் அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
முதல் பார்வைக்கு, இப்படிப்பட்ட கொள்ளைநோய்கள் ஊகிக்க முடியாததாகவும், மனித இனத்திற்கு இயற்கையால் வழங்கப்பட்ட தண்டனை போலவும் இருப்பதாக பலர் கருதலாம். தற்போது பரவிவரும் கோவிட்-19 கொள்ளைநோயும் அப்படிப்பட்ட இயற்கை பேரிடர் என்று கருதலாம். ஆனால், கொள்ளைநோய்களை உண்டாக்கும் கிருமிகளின் தோற்றம் மற்றும் அதன் வேகமான உருத் திரிபு மாற்றம் ஆகியவற்றிற்கு பொருத்தமான சமூக, பொருளாதார நிலைமைகளும் இருக்கும்போதுதான் இத்தகைய பெருந்தொற்று கொள்ளைநோயாக அவை உருவாகின்றன, என்பது இன்னும் சற்றும் ஆழமாக ஆய்வு செய்தால் நமக்குத் தெரியவரும்.
தற்போது ஏற்பட்டுள்ள கோவிட்-19 என்னும் உலகளாவிய கொள்ளைநோய் மற்றும் இதற்கு முன்னால் உருவாகிய ஆந்த்ராக்ஸ், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களின் உருவாக்கத்திற்கான அடிப்படைக் காரணத்தை சற்று ஆழமாக ஆய்வு செய்தால், அதன் அடித்தளத்தை தற்காலத்திய முதலாளித்துவ உற்பத்திமுறையிலும், உலக முதலாளித்துவ நெருக்கடியிலும் கண்டுகொள்ள முடியும்.
இன்றைய சூழலில், உலக முதலாளித்துவம் சிக்கியுள்ள கட்டமைப்பு நெருக்கடியை கோவிட்-19 மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த கோவிட்-19 நோயின் பரவலை தடுக்க’ உலகின் பல அரசுகள் ஊரடங்கு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளன. ஏற்கெனவே, நெருக்கடியின் விளிம்பை தொட்டுவிட்ட பொருளாதாரம் இதனால் இருண்ட ஆழமான சுழலில் விழும் என்று முதலாளித்துவ அறிவுஜீவிகள் கூறுகின்றனர்.
ஆனால், இவர்கள் அனைவருமே தீர்வே காணமுடியாத பொருளாதார நெருக்கடிக்கு மட்டுமல்ல, இக்கொள்ளைநோய் உருவானதற்கும் முதலாளித்துவ இலாப வெறிதான் காரணம் என்பதை வசதியாக பேச மறுக்கின்றனர். பொதுவாக, இப்படிப்பட்ட கொள்ளைநோய்கள் உருவாகுவது முதலாளித்துவ உற்பத்தி முறையின் இலாபவெறி கொண்ட இயக்கத்தில் எப்படி உள்ளார்ந்து இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள இக்கட்டுரை பயன்படும் என்று கருதுகிறோம். வாசகர்களின் வசதி கருதி இந்தக் கட்டுரையை சிறு சிறு பகுதிகளாக பிரித்து வெளியிடுகிறோம்.
கொள்ளைநோய்கள் பற்றிய ஒரு சுருக்கமான வரலாறு :
கொள்ளை நோய்கள் உருவாகுவதும், அதனால் மனித சமூகம் பாதிப்படைவதும் மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே ஆரம்பமாகிவிட்டது. இருந்தபோதிலும், கொள்ளைநோய்களில் ஒருவகையான கோவிட்-19 போன்ற ஃபுளு கொள்ளைநோய்களை (Pandemic flu) உருவாக்கும் வைரஸ்களின் தோற்றத்தை தற்காலத்திய இலாபவெறி கொண்ட முதலாளித்துவ உற்பத்திமுறை அதிகளவில் சாத்தியப்படுத்துகிறது. இதை பார்ப்பதற்கு முன்பு, மனித சமூகம் இதுவரை சந்தித்துள்ள கொள்ளைநோய்களைப் பற்றி ஒரு வரைக்கோட்டு சித்திரத்தை பார்த்துவிடுவோம்.
ஆரம்ப கால மனித சமூகம் வேட்டை மற்றும் உணவு தேடும் சிறு குழுக்களாக இருந்தது. அப்போது சில சமயங்களில் விலங்கு மற்றும் சுற்றுசூழலில் இருந்து அச்சமூக குழுக்கள் தொற்று நோய்களை எதிர்கொண்டன. ஆனால், அச்சிறு குழுக்களில் இருந்து மற்ற குழுக்களுக்கு அந்நோய்கள் பரவ மிக குறைவான வாய்ப்புகளே இருந்தது. சில காலத்தில், அந்நோய் தொற்றுக்கு உட்பட்ட சமூக குழுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுக்கொண்டன. இந்த நிலைமை, கிட்டதட்ட 10,000 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட புதிய கற்கால புரட்சிக்கு பிறகு மாற்றமடைந்தது.
18-ம் நூற்றாண்டு, தொழிலாளர்களின் குடியிருப்பு
புதிய கற்கால புரட்சி நிலையான இருப்பிடத்தைக் கொண்ட விவசாய சமூகத்தை படைத்தது. மக்கள்தொகை பெருகியது; அவ்விருப்பிடங்களில் மனிதக் கழிவுகளும் பெருகின; காட்டு விலங்குகள் வளர்ப்புப் பிராணிகளாக மாற்றப்பட்டு, மனிதன் கால்நடை வளர்ப்பில் ஈடுபடத் துவங்கிய பிறகு மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. இந்நிலைமைகள் வைரஸ் கிருமிகளும் மற்ற நோய் ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகளும் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கும், மனிதனிடமிருந்து விலங்குகளுக்கும் பரவ அதிகமான வாய்ப்புகள் ஏற்பட்டன. மேலும், வாணிபத்தின் வளர்ச்சி, போர் மற்றும் இடப்பெயர்வு மூலமாக மற்ற மக்கள் சமூகத்திற்கும் பரவ வாய்ப்புகள் ஏற்பட்டன.
இங்ஙனம் பரவிய நோய்களை “நாகரிக நோய்கள்” என்கிறார் வில்லியம் மக்நில். ஏதாவது புதிய வாணிப தொடர்புகளோ போர்களோ இம்மக்கள் சமூகத்திற்கு ஏற்பட்டால் புதிய நோய்கள் பரவும் வாய்ப்புகளும் ஏற்பட்டன. உதாரணமாக, கி.பி. 165-ம் ஆண்டில் ரோமப் பேரரசின் ஒரு படைப் பிரிவு மெசப்பொட்டாமியாவில் முகாமிட்டபோது ஒரு கொள்ளை நோய் (பெரியம்மையாக இருக்கலாம் என்கிறார் மக்நீல்) பரவியது1.இது கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கு நீடித்து அப்பகுதியில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையை அழித்தது.
மெடிட்டெரியன் பகுதியில் கி.பி. 541-767 வரை மீண்டும் மீண்டும் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றான புபானிக் பிளேக் நோய் எலிகளை கொண்டு வந்த வணிக கப்பல்கள் மூலம் பரவ வாய்ப்பு ஏற்பட்டது2.இது சில கோடி மக்களை பலி வாங்கியது. 13-ம் நூற்றாண்டில் மங்கோலிய பேரரசு கண்டடைந்த வணிக வழித்தடங்கள் மூலமாக ஸ்டெப்பி பகுதிகளுக்கு புபானிக் பிளேக் நோய் பரவியது. பிறகு, கேரவன் வணிக வழித்தடம் மூலமாக கிரிமியாவை 1346-ம் ஆண்டு அதே பிளேக் நோய் தாக்கி ஐரோப்பா முழுவதும் பரவியது. இதைத்தான் ஐரோப்பிய வரலாற்றில் கருப்புச் சாவு (பிளாக் டெத் – Black Death) என்று கூறப்படுகிறது. இது 1346-50 ஆண்டுகளில் மட்டும் ஐரோப்பிய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களின் இறப்புக்கு காரணமாகியது.
மக்கள் தொகை அடர்த்தியின் வளர்ச்சி, மற்றும் குப்பைகள், கழிவுகள் குவிவது, மக்கள் வாழும் தெருக்களில் எலிகளின் பெருக்கம் ஆகியவை நோய் தொற்று வேகமாக பரவுவதை உறுதிபடுத்தின. ஐரோப்பாவில் 1670-ம் ஆண்டுவரை இந்த பிளேக் நோய் தொடர்ச்சியாக வெடித்தெழுந்து கொண்டிருந்தது.
பிறகு, காலனியாதிக்க காலக்கட்டத்தில் இக்கொள்ளை நோய்கள் இன்னும் தீவிரமான முகமெடுத்தன. பெரியம்மை, பொன்னுக்குவீங்கி, தட்டம்மை ஆகிய கொள்ளை நோய்கள் காலனியாதிக்க கொடுமைகளுடன் சேர்ந்துகொண்டன. கி.பி.1568-ம் ஆண்டிலிருந்து கிட்டதட்ட அரைநூற்றாண்டில் மத்திய மெக்சிகோ மக்கள் தொகையில் 90 சதவீதத்தினரை கொள்ளைநோய்கள் துடைத்தெறிந்தன. அமெரிக்க கண்டம் முழுவதும் இதே நிலைமைதான் இருந்தது. இதனால், பெரு நாட்டின் பூர்வகுடி மக்களின் எண்ணிக்கை 70 லட்சத்திலிருந்து 5 லட்சமாக குறைந்தது.
18-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் (குறிப்பாக இங்கிலாந்தில்) தோன்றிய தொழில்துறை முதலாளித்துவம் நகரமயமாக்கலை புதிய வேகத்தில் துரிதப்படுத்தியது. மோசமான, சுகாதாரமற்ற சேரிகளில் அதிக எண்ணிக்கையிலான உழைக்கும் மக்களைக் கொண்ட நகரங்கள் பரவலாக தோன்றின. வறுமை, மன அழுத்தம் மற்றும் கூட்டநெரிசலான வாழ்விடங்கள் ஆகியவை தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்பை மேலும் அதிகப்படுத்தியது. ஒரு முறை தொற்றுநோய் உண்டானால் அது வேகமாகப் பரவியது. மேலும், இந்த பெருநகரங்களுக்கு ஒரு முறை தொற்றுநோய் வந்துவிட்டால் அந்நகரங்களுடன் தொடர்புடைய வணிக வலைபின்னல்கள் அனைத்திலும் அத்தொற்றுநோய் பரவியது.
19-ம் நூற்றாண்டில், நகரமயமாக்கல், வறுமை மற்றும் காலனியாதிக்கம் எல்லாம் சேர்ந்து புது அச்சுறுத்தல்களை உருவாக்கின. காலரா நோய் இந்தியாவில்தான் பல நூற்றாண்டுகளாக இருந்தது. 1817-ம் ஆண்டு இந்தியாவில் உருவான இக்கொள்ளை நோய் ரஷ்யாவையும் சீனாவையும் தாக்கியது. மூன்று வருடங்களுக்கு பிறகு, பிரிட்டிஷ் படைகள் கிழக்கு மெடிட்டேரியன் பகுதிக்கு இந்நோயை கொண்டு சென்றன. 1832, 1848 மற்றும் 1866 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவில் ஆரம்பித்த கொள்ளை நோய்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பரவியது. பிரிட்டிஷ் பேரரசுடன் இந்தியா இணைக்கப்பட்ட பிறகு, மக்கள் மற்றும் உற்பத்தி பண்டங்களின் போக்குவரத்துடன் காலராவும் பரவியது. இது பாதிக்கப்பட்டவர்களில் கிட்டதட்ட பாதி பேரை கொன்றது. காலரா பாக்டீரியா தண்ணீரில் பரவும் என்பதால், இந்நோய் ஏழைகள் வாழும் பகுதிகளையே வெகுவாக பாதித்தது.
19-ம் நூற்றாண்டு மான்செஸ்டரில் கொள்ளைநோய்கள் பரவிய நிலைமையை ஏங்கெல்ஸ் விரிவாக பதிவு செய்துள்ளார்:
“கொள்ளை நோய் எதிர்வரும் போது, நகர முதலாளிகளை ஒர் அனைத்தும் தழுவிய பயம் பற்றிக்கொள்கிறது. ஏழைகள் வாழும் அழுக்கான குடிசைகளை அவர்கள் ஞாபகப்படுத்தி கொள்கிறனர். உறுதியாக, இந்த சேரிகள் கொள்ளைநோய்க்கான மையாக உருவாகும் என்பதையும், அந்த கோரம் எல்லா திசைகளிலும் பரவி சொத்துடைத்த வர்க்கங்களின் வீடுகளையும் வந்தடையும் என்பதையும் கண்டு நடுக்கமுறுகின்றனர்.
6,951 மான்செஸ்டர் நகர வீடுகளில் நடத்தப்பட்ட ஒர் ஆய்வு தெரிவிப்பது குறித்து மேலும் சொல்கிறார், “2,565 வீடுகளுக்கு உடனடியாக வெள்ளையடிக்க வேண்டுயுள்ளது… 960 வீடுகள் சிதலமடைந்துவிட்டன, 939 வீடுகளில் போதுமான வடிகால் வசதி இல்லை, 1,435 வீடுகள் பூஞ்சை பிடித்துள்ளன, 452 வீடுகளில் காற்றோட்ட சூழல் இல்லை, 2,221 வீடுகளில் கழிப்பறை இல்லை” 3.
1872ல் மீண்டும் இதே கொள்ளை நோய் பிரச்சினையை தனது குடியிருப்புப் பிரச்சினை பற்றிய கட்டுரையில் எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். முதலாளிகள் தொழிலாளர்களின் குடியிருப்பு பிரச்சினையில் ஏன் அக்கறை கொண்டுள்ளனர் என்பதை விளக்கும்போது,
“தொழிலாளர்கள் பெருந்திரளாக நெருக்கமாக வசிக்கின்ற “ஏழ்மையான வட்டாரங்கள்” என்று கூறப்படுகின்ற பகுதிகள் நம்முடைய நகரங்களில் அடிக்கடி ஏற்படுகின்ற எல்லாவிதமான கொள்ளை நோய்களும் உற்பத்தியாகின்ற இடங்களாக இருக்கின்றன என்று நவீன இயற்கை விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது. காலரா, டைபஸ், நச்சுக்காய்ச்சல், அம்மை மற்றும் இதர ஆபத்தான நோய்களின் கிருமிகள் இந்த தொழிலாளிவர்க்கக் குடியிருப்புக்களின் நச்சுக் காற்றிலும் அசுத்தமான தண்ணீரிலும் பரவுகின்றன. இங்கே இக்கிருமிகள் அநேகமாக முற்றிலும் அழிவதில்லை. சாதகமான சந்தர்ப்பங்கள் ஏற்பட்ட உடன், அவை கொள்ளை நோய்களாக வளர்ந்து உற்பத்தியான இடங்களுக்கு அப்பால், நகரத்தில் முதலாளிகள் வசிக்கின்ற அதிக காற்றோட்டமான, ஆரோக்கியமான பகுதிகளுக்குப் பரவுகின்றன.
பலரைப் பலிகொண்ட ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சல்
தொழிலாளி வர்க்கத்தின் மத்தியில் கொள்ளை நோய்கள் உற்பத்தியாவதை முதலாளித்துவ வர்க்கம் ஆபத்தில்லாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதன் விளைவுகளினால் அதற்கு ஆபத்தேற்படுகிறது. மரண தேவன் தொழிலாளர்களின் அணிகளைத் தாக்குவதைப் போலவே ஈவிரக்கமின்றி அதன் அணிகளையும் தாக்குகிறது. இந்த உண்மை விஞ்ஞானரீதியாக நிறுவப்பட்ட உடன் தொழிலாளர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதில் போட்டியிடுகின்ற மேன்மையான உணர்ச்சி பரோபகார முதலாளிகளைத் தூண்டியது… எனினும் முதலாளித்துவ சமூக அமைப்பு அகற்றப்படவேண்டிய தீமைகளை மீண்டும் மீண்டும் மறு உற்பத்திச் செய்கிறது; அதிலும் தடுக்கமுடியாத அவசியத்துடன் அதைச் செய்வதால் – இங்கிலாந்தில் கூட – அவற்றை அகற்றுதல் ஒரு காலடி அளவுகூட முன்னேற்றமடையவில்லை.”4.
பல நாடுகளில், எங்கெல்ஸ் குறிப்பிடும் நிலைமைகள் இன்னும் கடந்த காலத்திற்கு உரியனவாகவில்லை. உதாரணமாக, 2018-ல் ஏமனில் போரும் பஞ்சமும் ஏற்பட்ட போது காலரா பரவி கொள்ளை நோயாக உருவெடுத்தது. தமிழகத்தில் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் சமீப ஆண்டுகளில் தலையெடுத்தன. இந்தியாவில் காசநோயின் காரணமாக தினமும் கிட்டதட்ட 1000 பேர் இறக்கின்றனர் 5.
பொதுமைபடுத்தி பார்த்தால், துரிதமாக்கப்பட்ட நகரமயமாக்கல், அதனுடன் சேர்ந்து உருவாகும் தொழிலாளர் சேரிகள் ஆகிய பொது நிலைமைகள் ஆரம்ப கால தொழில்துறை கட்டத்தில் கொள்ளை நோய்கள் உருவாக காரணமாக இருந்தன. தீவிரமான கொள்ளைநோய்கள், நாட்பட்ட நோய்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு, இவற்றுடன் பொது மருத்துவத்திற்கான நிதிகள் ஒதுக்காமை மற்றும் சுகாதாரமின்மை ஆகியவை எல்லாம் நவீன உலகத்தில் அகற்றப்பட முடியாமல் நீடிப்பவைதான்.
இப்படிப்பட்ட கொள்ளை நோய்கள் உருவாக காரணமாக இருக்கும் நிலைமைகள் சற்று மேம்பட்ட போதிலும் (வளர்ந்த நாடுகளில் இது நடந்துள்ளது, பின்தங்கிய நாடுகளில் அந்த அளவு கூட நிறைவேறவில்லை), புதிய அச்சுறுத்தல், ஃபுளு கொள்ளை நோய் (Pandemic flu) முன்னுக்கு வந்துள்ளது. ஃபுளு காய்ச்சலால் ஏற்படும் கொள்ளைநோய்கள் வரலாற்றில் ஏற்கெனவே ஏற்பட்டுள்ளன என்றாலும், இப்போது புது ஆற்றலுடன் அவை முன்னுக்கு வந்துள்ளன.
முதலாம் உலக போர் முடிவுற இருந்த சமயத்தில் ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃபுளுவை (Spanish Flu) பார்த்தாலே போதும். 1918-ம் ஆண்டு வசந்த காலத்தில் ஏற்பட்ட இக்கொள்ளைநோயின் முதல் அலையில் எண்ணிக்கையில் குறைவான இறப்புகளே ஏற்பட்டன. ஆனால், போரின் தாக்கத்தில் அது பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. இரண்டாவது அலையில், அவ்வைரஸ் மேலும் சடுதி–மாற்றமடைந்து, பெரிய இழப்புகளை ஏற்படுத்தியது. உலக போர் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் போக்குவரத்தை அத்தியாவசியப்படுத்தியது.
பல கோடிக்கணக்கான மக்கள் கூட்டமாக மோசமான நிலைமைகளில் வாழத் தள்ளப்பட்டனர். இந்நிலைமைகள் கொள்ளைநோய் உருவாவதற்கான அடிப்படையை உருவாக்கி கொடுத்தது. ஸ்பானிஷ் ஃபுளு மூன்றாவது அலையாகவும் 1919-ல் பரவியது. இந்த மூன்று அலைகளிலும் கிட்டதட்ட 5 முதல் 10 கோடி மக்கள் இறந்ததாக இப்போது கணிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை, போரில் இறந்தவர்களைவிட அதிகம். எல்லா நிலைமைகளிலும் நேரடியாக ஸ்பானிஷ் ஃபுளு வைரஸால் மக்கள் இறக்கவில்லை. அது ஏற்படுத்திய உடல்நலக் குறைவு பாக்டீரியா தொற்றுக்கு வழிவகுத்து, நிமோனியா ஏற்பட்டும் இறந்தனர்.
இக்கொள்ளை நோயால் அதிகமாக பாதிக்கப்பட்டது ஏழை மக்களும், காலனிய நாடுகளும்தான். இந்தியாவில் மட்டும் 1.5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். பசி, சுகாதாரமற்ற வீடுகள், பிரிட்டன் அரசு அதன் படைகளுக்கு உணவளிக்க உணவு தானியங்களை பறித்துச் சென்றதால் ஏற்பட்ட பஞ்சத்தில் மக்களின் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தது என எல்லா சமூக, பொருளாதார, அரசியல் நிலைமைகளும் இக்கொள்ளை நோயுடன் கைக்கோர்த்ததால்தான் அவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டது.
பிறகு, பல பத்தாண்டுகள் அறிவியலாளர்கள் ஃபுளு காய்ச்சலின் தன்மையையும் அது ஏன் பெரிய இழப்புகளை ஏற்படுத்துகிறது என்பதையும் ஆராய உலகளாவிய ஃபுளு கண்காணிப்பு திட்டம் (Global Influenza Surveillance Programme) ஏற்படுத்தப்பட்டது. இத்திட்டம் உலக சுகாதார நிறுவனம் அமைக்கப்பட்ட பிறகு அதன் பகுதியானது. 1957-ல் ஆசிய ஃபுளு கொள்ளை நோய் ஏற்பட்டது; இதில் 20 லட்சம் மக்கள் இறந்தனர். 1968-ல் ஹாங்காங் ஃபுளு கொள்ளை நோய் ஏற்பட்டது; இதில் 10 லட்சம் மக்கள் இறந்தனர்.
குறிப்பாக, கொள்ளைநோய்களில் ஒரு வகையான ஃபுளு கொள்ளைநோய்கள் சமீப ஆண்டுகளில் அடிக்கடி தோன்றி மனித சமூகத்தை தாக்கிவருகிறது; சார்ஸ்-1, மெர்ஸ், பன்றிக் காய்ச்சல் போன்றவை இதற்கு உதாரணங்கள். கடந்த 50 ஆண்டுகளாக உயிர்வேதியியல், வைரஸ்–உயிரியல், மூலக்கூறு–உயிரியல், நுண்ணுயிரியல் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் காரணமாக ஃபுளுக்காய்ச்சல் வைரஸ்கள் பற்றி மேலும் பருண்மையான, நுட்பமான ஆய்வுகள் செய்ய வழி ஏற்பட்டிருக்கிறது.
இத்துறைகளின் துணைக்கொண்டு நுண்ணுயிர்கள் அடையும் பலவிதமான சடுதி–மாற்றங்கள் (சீரோடைப், ஜீனொடைப், கீனோடைப், பீனோடைப் மாற்றங்கள்) பற்றியும், அதன்மூலம் ஏற்படும் சூனாசிஸ் தாவல் குறித்தும் பல ஆய்வுகள் கடந்த 25 ஆண்டுகளாக செய்யப்பட்டுள்ளது.
அதாவது, பொதுவாக மனிதர்களை தாக்கும் புதிய கொள்ளைநோய்கள், குறிப்பாக இந்த ஃபுளு கொள்ளைநோய்களை உருவாக்கும் வைரஸ்கள்/கிருமிகள் சூனாடிக் தாவல் என்னும் வைரஸ்–உயிரியல் நிகழ்ச்சிபோக்கு மூலம் தோற்றமெடுப்பதை நவீன அறிவியல் ஆதாரத்துடன் நிறுவியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள, கோவிட்-19 கொள்ளைநோயும் இப்படிதான் (அதாவது, சூனாடிக் தாவல் மூலம்தான்) மனிதர்களை தாக்கும் வைரஸ்களாக உருவாகியிருக்க வேண்டும் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர் 6.
1. McNeill, William H, 1976, Plagues and People 2. McNeill, William H, 1976, Plagues and People 3. Engels, Friedrich, 1975 [1845], The Condition of the Working Class in England, in Karl Marx and Frederick Engels, Collected Works, volume 4. 4. மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் பன்னிரண்டு பகுதிகளில், தொகுதி 8, பக். 62-64; அழுத்தம் நம்முடையது. 5. Global TB Report, WHO, 2019. 2018-ல் மட்டும் 4,49,000 பேர் காசநோயால் இந்தியாவில் இறந்துள்ளனர். 6. கோவிட்-19 கொள்ளைநோயை ஏற்படுத்தியுள்ள சார்ஸ்–கொரோனா வைரஸ்-2வின் தோற்றத்தை அறிவியல் சமூகம் இன்னும் உறுதியாக நிறுவவில்லை. இதை ஆராய உலக சுகாதார நிறுவனம் ஒரு குழுவை நியமித்தது; அந்த குழுவின் முதல்நிலை அறிக்கையும் 2020ம் ஆண்டின் இறுதியில் வெளிவந்தது. அதில், சூனாடிக் தாவல் மூலம் இந்த வைரஸ் உருவாகியிருக்க (likely to very likely) அதிக வாய்ப்பிருப்பதாகவும்; வூகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு தவறுதலாக வெளிவந்து பரவியிருக்க (extremely unlikely) சாத்தியமில்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது. (பார்க்க: WHO, “WHO-convened global study of the origins of SARS-CoV-2” (2020); www.who.int/publications/m/item/ who-convened-global-study-of-the-origins-of-sars-cov-2.) 2003ல் சார்ஸ்-1 பரவிய போது அது சூனாடிக் தாவல் மூலம் பரிணாமமடைந்து மனிதர்களுக்கு பரவியது என்று நான்கு மாதங்களிலேயே ஆதாரபூர்வமாக கண்டுப்பிடிக்கப்பட்டது. மெர்ஸ் கொள்ளை நோயின் போதும் ஒன்பது மாதங்களில், ஒட்டகத்தை இடைப்பட்ட விலங்கினமாக கொண்டு மனிதர்களை தொற்றும் வகையில் அவ்வைரஸ் பரிணாமமடைந்ததை அறிவியல் உலகம் நிறுவியது. ஆனால், தற்போதைய கொள்ளைநோயிலோ அது இன்னும் நிறுவப்படவில்லை என்பதால் அதன் தோற்றம் நிறுவப்படும் வரை, அது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது எனும் கருதுகோளையும் கணக்கில் கொண்டே பரிசீலிக்க வேண்டும் என்று சில அறிவியலாளர்கள் கோருகின்றனர். (பார்க்க: Investigate the origins of COVID-19, Science, May 14, 2021) இந்த சாத்தியப்பாட்டையும் உள்ளடக்கி இந்த கட்டுரை எழுதப்படவில்லை. அதை இன்னொரு கட்டுரையில் பூர்த்தி செய்ய முயல்கிறோம்.
சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருதினை நிழல் இராணுவங்கள் நூலுக்கு தமுஎகச வழங்கியிருக்கிறது. இந்த விருது எனக்கு மிகமிக முக்கியமான விருது. ஏனெனில், இதற்கு முன்பு எழுதியதற்காக எந்தவொரு விருதையும் நான் வாங்கியதில்லை. ஒரு வெங்கலக்கிண்ணம் கூட பரிசாகப் பெற்றதில்லை. பள்ளிக்கூடத்தில் படிக்கிற காலத்தில் கூட, பேச்சுப்போட்டிகளில் தொடர்ந்து கலந்துகொண்டிருக்கிறேன். ஆனால், கட்டுரை எழுதும் போட்டிகள் எதிலுமே கலந்துகொண்டதாக நினைவு இல்லை.
அதற்கு மிக முக்கியமான ஒரே காரணம் என்னவென்றால், என்னுடைய கையெழுத்து மிக மோசமாக இருக்கும். கட்டுரை எழுதும் போட்டியில் பெயர் கொடுக்கலாமா என்று பலநேரம் ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால், கையெழுத்து நன்றாக இல்லாத காரணத்தாலேயே அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்திருக்கிறேன்.
அதனால், வெறுமனே பேச்சுப் போட்டியில் மட்டுமே கலந்துகொண்டிருந்தேன். ஒருமுறை வடசென்னை தமுஎ(க)ச நடத்திய பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் கலந்துகொள்ள எங்கள் பள்ளியில் இருந்து அனுப்பினார்கள். பேச்சுப் போட்டியில் எனக்குக் கொடுத்த தலைப்பு “பாரதி பேசிய பெண் விடுதலை” என்பது. பேசி முடிக்கையில் இறுதியாக, “பெண்விடுதலை என்கிற தலைப்பைக் கொடுத்த இந்த போட்டியை நடத்துபவர்களிலும் இந்த மேடையிலும் ஒருவர் கூட பெண் இல்லை என்பது வருத்தமளிக்கிறது” என்று பேசிவிட்டு முடித்தேன். பரிசு கிடைக்காது என்று நினைத்தால், எனக்கு முதல் பரிசு கொடுத்தார்கள். விமர்சனம் செய்தால் கூட பரிசு தருகிறார்களே என்று நினைத்துக் கொண்டேன். தமுஎ(க)சவுடன் அன்று துவங்கிய உறவு இன்று வரை தொடர்கிறது.
அதன்பிறகு மாணவர் இயக்க காலத்திலும் பின்னர் இடதுசாரி அரசியல் காலத்திலும் கூட எழுதுவதை பெரிதாகச் செய்ததே இல்லை. ஐரோப்பாவிற்கு வேலை நிமித்தமாக வந்தபோதுதான், பேசுவதற்கு வாய்ப்பில்லாமல்போனது. அந்த இடத்தை எழுத்து தான் நிரப்ப முடியும் என்று உணர்ந்து, முதலில் வலைத்தளத்திலும், பின்னர் பேஸ்புக்கிலும் எழுதினேன். அங்கு உடனுக்குடன் கிடைத்த கருத்துகளும், விமர்சனங்களும், ஏச்சுக்களும் பேச்சுக்களுமே என்னுடைய எழுத்தை செழுமைப்படுத்தின.
சர்வதேச இயக்கங்களுடன் நட்பு கிடைத்தது. ஐரோப்பா முழுவதும் அலைந்து திரிந்தேன். இடதுசாரி இயக்கம் ஒன்றில் இணைத்துக் கொண்டேன். அதன் பிரதிநிதியாக சர்வதேச இளைஞர் மாநாட்டில் கலந்துகொள்ள தென்னமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டேன். எனக்குப் புதிது புதிதாக இருந்த சர்வதேச அரசியல் பார்வைகளை தொடர்ந்து எழுதியே ஆகனும் என்று முடிவு செய்து எழுத ஆரம்பித்தேன். அதற்குள் மாற்று என்கிற இணையதளம் துவங்கப்பட்டவும் அதில் எழுதத் துவங்கினேன்.
அதுதான் எனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தது. எழுதிப் பழகும் ஒரு தளமாக அது இருந்தது. எதை எழுதினாலும் ஒரு குறைந்தபட்ச வரையறைக்குட்பட்டு அந்த இணையதளத்தில் வெளியாகும் என்கிற நம்பிக்கையும் உருவானது. ஒவ்வொரு கட்டுரையும் அச்சில் வெளியாக வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தால், பலவும் எழுத வாய்ப்பு கிடைத்திருக்குமா என்று தெரியாது.
அதன்பின்னர்தான், சர்வதேச அரசியல் பார்வைகளை எழுதத் துவங்கினேன்.
2012-ல் ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவம் மிகமோசமாக நடந்து கொண்டிருந்தது. உடனே அதனை ஐரோப்பிய ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டுபோய் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்த தோழர் சிசோனின் தலைமையில் “ஆஃப்கானிஸ்தான் ஆதரவு இயக்கம்” என்கிற பெயரில் ஒரு இயக்கத்தைத் துவங்கினோம்.
அந்த இயக்கத்தின் செயல்பாடுகளும் கூட எனக்கு சர்வதேச அரசியல் குறித்த ஒரு பரந்துபட்ட புரிதலை ஏற்படுத்தியது. அந்த காலகட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் குறித்து நிறைய எழுதவும் அது உதவியது. அதே பாணியில் பின்னர் போர்ட்டோரிகோ, ஹோண்டுரஸ், ஈக்வடார், வெனிசுவேலா, ஈரான் என பல நாடுகளின் அரசியலையும் எழுத அந்தந்த நாடுகளின் பிரச்சனைகள் தொடர்பான களப் போராட்டங்கள்தான் எனக்கு உதவி செய்தன.
அந்த காலகட்டத்தில்தான் மிகமுக்கியமான ஒரு தோழரை தற்செயலாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பெயர் முகமது ஹசன். அவர் எத்தியோப்பியாவில் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது எதுகுறித்தும் கவலைப்படாமலும் பொறுப்பில்லாமலும் கல்லூரியில் அனைத்துவித அடாவடித்தனங்களையும் செய்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த கல்லூரிக்கு இந்தியாவின் கேரளாவில் இருந்து ஒரு புதிய பேராசிரியர் வந்திருக்கிறார்.
“வெளியில் கொஞ்சம் எட்டிப்பார். உன்னுடைய நாடும், உன் மக்களும் இந்த ஆட்சியாளர்களால் மிகமோசமாக நடத்தப்படுகிறார்கள். உன்னிடம் மிகப்பெரிய எனர்ஜி இருக்கிறது. அதனை சரியான வழியில் திசைதிருப்பினால், பெரியாளாக வரலாம். உன் மக்களுக்கும் அது பெரியளவுக்குப் பயன்படும்” என்று கூறி பல மார்ச்கிய நூல்களைக் கொடுத்து படிக்கச் சொல்லியிருக்கிறார். ஆரம்பத்தில் அதிக ஆர்வமில்லாமல் இருந்தாலும், கேரளப் பேசாரியரியரின் தொடர்ச்சியான அழுத்தத்தின் காரணமாக மார்க்சியத்தைப் படிக்க ஆரம்பித்திருக்கிறார். அது அவரது வாழ்க்கையையே மாற்றியிருக்கிறது.
ஒரு சோசலிலப் புரட்சி எத்தியோப்பியாவில் நடப்பதற்குக் காரணமாக இருந்தவர்களில் அவரும் ஒருவராக மாறினார். அப்படி மாறியவர் தான் எத்தியோப்பியாவின் முகமது ஹசன். சோசலிச ஆட்சியில் எத்தியோப்பியாவிற்காக அரசு தூதராக பல நாடுகளில் பணிபுரிந்திருக்கிறார். உலகின் எங்கோ ஒரு மூலையான கேரளாவில் பிறந்த ஒருவர் பேராசிரியாக எத்தியோப்பியாவில் இருந்த முகமது ஹசனை ஒரு போராளியாக மாற்றி, அந்த தேசத்தின் தலையெழுத்தையே மாற்ற முடிந்திருக்கிறது என்பது என்னைப் பெரியளவுக்கு ஈர்த்தது.
முகமது ஹசனால்தான் எனக்கு மத்திய கிழக்கு நாடுகளின் வரலாறு, அரசியல் குறித்த புரிதல் ஓரளவுக்கு மேம்பட்டது. அந்த காலகட்டத்தில் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திய ஒரு தாக்குதலும், அது தொடர்பான விவாதங்களும் போராட்டங்களுமே, பாலஸ்தீன ஆதரவு இயக்கத்தை உருவாக்கி செயல்பட உதவியது. அந்த இயக்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் பாலஸ்தீன திரைப்பட விழா நடத்தினோம்.
பாலஸ்தீனத்திற்கு ஐரோப்பியர்களை அழைத்துச் சென்று நேரடியாகவே பாலஸ்தீனப் பிரச்சனைகளைக் காட்டி விளக்கும் பணியையும் செய்தோம். நூற்றுக்கணக்கான பாலஸ்தீன அகதிகளிடம் பேசி, அவர்களின் கதைகளைக் கேட்கும் வாய்ப்பையும் அது ஏற்படுத்திக் கொடுத்தது. இதையெல்லாம் ஒருமுறை சிராஜ் தோழரிடம் (Mohammed Sirajudeen) சொல்லிக் கொண்டிருந்தேன். அதனை நூலாக எழுதத் தூண்டியவரும் அவர்தான். அதுதான் பின்னர் பாலஸ்தீன வரலாறும் சினிமாவும் நூலாக வெளிவந்தது.
இப்படியான காலகட்டத்தில் தான் பாஜகவின் வளர்ச்சி பெரும் அச்சத்தைக் கொடுத்தது. பாஜக ஒரு மதவாதக் கட்சி என்றும் அது எதிர்க்கப்பட வேண்டும் என்கிற அளவில் மட்டும்தான் என்னுடைய புரிதல் இருந்தது.
தற்செயலாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்காக ஐரோப்பாவில் வேலை பார்த்த ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. என்னுடைய அடையாளத்தை மறைத்து அவருடன் தொடர்ந்து பேசியதில், எனக்குக் கிடைத்த தகவல்களெல்லாம் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆர்.எஸ்.எஸ் நடத்தும் ஷாகா வகுப்புகளில் ஒவ்வொரு குழந்தையின் தனித்திறமை என்ன என்பதையெல்லாம் கூர்ந்து கவனித்து, அது தொடர்பான துறைகளிலேயே அவர்களை வளர்த்து, அந்தந்த துறைகளில் அவர்களை வேலைக்குப்போகும் அளவிற்கு வழிநடத்துகிறார்கள்.
ஆக, நாடு முழுவதிலும் இப்படியாக ஆர்.எஸ்.எஸ்-ஆல் வளர்த்துவிடப்பட்டவர்கள் எல்லா துறைகளிலும் அமைதியாக ஆர்.எஸ்.எஸ்-க்காக வேலை செய்கிறார்கள். நான் பழகியவரும் அப்படியாக ஆர்.எஸ்.எஸ் ஷாகாவில் பயிற்சி பெற்று, ஐ.ஐ.டி-யில் படித்து, ஐரோப்பாவில் ஐ.டி துறையில் பணிபுரிந்துகொண்டே, ஆர்.எஸ்.எஸ்-க்குத் தேவையான தகவல்களைத் திரட்டி அனுப்புகிறார் என்று கேட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. உலகெங்கிலும் இந்த நெட்வர்க்கை மிகத்திறமையாக அவர்கள் கையாள்வது புரிந்தது.
இன்றைக்கு ஒருவர் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ இருந்துகொண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்காக வேலை செய்கிறார் என்றால், கிட்டத்தட்ட 20-30 ஆண்டுகளுக்கு முன்னரே அவரை ஆர்.எஸ்.எஸ் உருவாக்கத் துவங்கியிருக்கிறது என்று பொருள். அதாவது 2014-ஆம் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால், கிட்டத்தட்ட மிக மிக விரிவான ஒரு திட்டத்தை அவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே வடிவமைத்து செயல்படுத்தத் துவங்கி இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது.
பல முற்போக்குக் கட்சிகளுக்கு இன்னமும் அடுத்த 3 ஆண்டுகள் கழித்து வரப்போகிற தேர்தலுக்கே கூட எவ்விதத் திட்டமோ இலக்கோ இல்லாமல் இருப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்.
அதனால், இந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் எப்படி செயல்படுகின்றனர், மக்களிடம் எப்படி ஒரு பொதுப்புத்தியை உருவாக்குகின்றனர் என்பதெல்லாம் விரிவாகக் கற்றுக்கொள்ள முடிவு செய்தேன். அதனால், அது தொடர்பான நூல்களை சேகரித்துப் படிக்க ஆரம்பித்தேன். கோல்வால்கர் எழுதிய ஞானகங்கை துவங்கி இன்று எழுதப்படும் நூல்கள் வரையிலும் 100-க்கும் மேற்பட்ட நூல்கள் வரையிலும் படிக்கிறபோதுதான், இந்த Shadow Armies நூல் என்னை பெரியளவுக்கு அதிர்ச்சி கொள்ள வைத்தது.
“இதை யாராவது தமிழில் மொழிபெயர்த்தால் நன்றாக இருக்கும் தோழர்” என்று வழக்கம் போல சிராஜ் தோழரிடம் கூறினேன். “நீங்களே மொழிபெயர்த்தால் நல்லது” என்றார் அவர். அதுவரையிலும் மொழிபெயர்க்கும் எண்ணமெல்லாம் எனக்கு இருந்ததே இல்லை. சரியென்று முயற்சி செய்தேன்.
மொழிபெயர்த்து முடித்தவுடன் கூட எனக்கு நம்பிக்கை இல்லை. என்னுடைய மிக நெருங்கிய தோழியும் இணையருமான தீபாவிடம் கொடுத்து படிக்க சொன்னேன். அவர் சில திருத்தங்களை சொன்னார். அதை சரிசெய்தேன். மேலும், 10 தோழர்களிடம் கொடுத்தேன். அவர்களும் ஆளாளுக்கு படித்துப் பார்த்து சில திருத்தங்களை சொன்னார்கள். அவற்றையும் சரிசெய்தேன்.
தோழர் மதுசூதன் (Madusudan Rajkamal) மற்றும் எதிர் வெளியீட்டின் அனுஷ் (Anush) ஆகியோரின் உதவியோடும் இது நூலாக அச்சில் வெளிவந்தது. நூல் வெளியாகும் வரைதான் என்னுடைய நூல் என்கிற பயமும் பதட்டமும் பொறுப்பும் இருந்தது. ஆனால், நூல் வெளிவந்த பின்னர், இந்த நூலை தமுஎகச-வின் பல தோழர்கள் இதனைத் தங்களுடைய நூலாகவே கையில் எடுத்துக் கொண்டனர். கருப்பு கருணா தோழரெல்லாம் ஒவ்வொருவருக்கும் அவரே அலைபேசியில் அழைத்து, இந்நூலை வாசிக்கச் சொல்லி பேசியிருக்கிறார்.
எக்காலத்திலும் அரசியலற்ற எதையும் எழுதுவதில்லை என்பதில் மட்டும் இந்த பயணத்தில் உறுதியாக இருந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இனியும் அப்படியே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
இந்த விருது எனக்கு வழங்கப்பட்டிருந்தாலும், சிறுவயது முதல் இன்று வரையிலும் அதற்காக உதவிய ஏராளமான மனிதர்களுக்கும் இந்த விருதில் பங்கு இருக்கிறது.
எனக்கான அரசியல் பாதையைக் காட்டிய எனது அப்பாவிற்கும் (Packiam Packiam), சரியான பாதையில்தான் பயணிக்கிறேன் என்று நம்பிய அம்மாவுக்கும், எழுத்துப்பணியில் துணையாக இருக்கிற இணையர் தீபாவிற்கும் (Deepa Chinthan), எதை எழுதுவதற்கு முன்னரும் என் மகளுக்குப் புரிகிறதா என்று சொல்லிப் பார்த்துக் கொண்டு எளிமையாக எழுதுவதற்கு உதவிகரமாக இருக்கிற என்னுடைய மகள் யாநிலாவுக்கும் என்னுடைய நன்றியை சொல்லியே ஆகவேண்டும்.
அரசும் ஆளும் வர்க்கங்களும் நெருக்கடிகளில் சிக்கி, மக்களிடம் அம்பலப்பட்டு அதிருப்திக்கு ஆளாகும் போதெல்லாம் அவர்கள் பின்பற்றும் முக்கியமான தந்திரம் முதன்மையான விசயங்களிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் வேலைகளைச் செய்வதுதான். பொய் செய்திகளை பரப்புவது, தேசியவெறி – போர்வெறி ஊட்டுவது போன்ற நடவடிக்கைகள் மூலம், ஊடகங்களின் துணை கொண்டு ஆளும்வர்க்கம் திசைதிருப்புகிறது.
இத்தகைய ஆளும் வர்க்கச் சேவையில், நாங்கள்தான் “தமிழில் நம்பர் 01 நாளிதழ்” என்று பறைசாற்றுகிறது 04.06.2021 தேதி தினகரனில் வெளிவந்துள்ள “ராஜதந்திரம் தேவை” என்ற தலையங்கம்.
“கொரோனா வைரஸ் இயற்கையாகத் தோன்றிய வைரஸ் இல்லை. சீனாவால் திட்டமிட்டு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது” என்ற அமெரிக்காவின் நிரூபிக்கப்படாத சீன எதிர்ப்பு பிரச்சாரத்தை உண்மை போல சொல்லும் வேலையைச் செய்திருக்கிறது தினகரன்.
“கொரோனா வைரஸ் இயற்கையாகத் தோன்றியதா அல்லது சீனா ஆய்வகத்தில் உருவானதா என்ற கேள்வி தொடர்ந்த வண்ணம் உள்ளது. உண்மையை நீண்ட நாள் மறைக்க முடியாது.” என்று எழுதி, கொரோனா குறித்து நிலவும் சந்தேகத்தில், கொரோனா இயற்கையான உருமாற்றத்தினால் வந்ததுதான் என்று தற்போதுவரை அங்கீகரிக்கப்பட்ட கூற்றை பொய் என்றே கூறிவிட்டது. அதாவது உண்மை மறைக்கப்பட்டிருக்கிறதாம். அது விரைவில் வெளி வந்துவிடுமாம்.
கொரோனா என்பது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது அல்ல. அது இயற்கையாகத் தோன்றியதுதான் என்று சீனாவில் ஆய்வு மேற்க்கொண்ட உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக் குழு விளக்கம் கொடுத்துவிட்டது. ஆனாலும், தற்போது வரை சீன எதிர்ப்பு பிரச்சாரம் தொடர்கிறது.
அதற்கு காரணம், தனது அரசியல்-பொருளாதார மேலாதிக்கத்திற்கு போட்டியாக வளர்ந்து வரும் சீனாவை உலக அரங்கிலிருந்து தனிமைப்படுத்துவதற்காகவும் கொரோனா பெருந்தொற்றை கையாளும் விசயத்தில் அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை திசை திருப்பவும் அமெரிக்காவிற்கு அது தேவைப்படுகிறது. இத்தகைய சீன வெறுப்புப் பிரச்சாரத்தில் டிரம்ப், பைடன் இருவரது நிர்வாகத்துக்கும் கொள்கை வேறுபாடில்லை.
சீனாவின் ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் உருவாகியது என்ற கூற்றிலேயே இருபிரிவினர் இருக்கின்றன. சீனாவின் ஆய்வகத்தில், சீனா நடத்திய உயிரி ஆயுத பரிசோதனையில் இருந்து வெளியானதுதான் இந்தக் கொரோனா வைரஸ் என்று ஒரு தரப்பு கூறுகிறது. மற்றொரு தரப்பினர், பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பாக நிதி வழங்கப்பட்டு, சீனாவின் ஆய்வகத்தில் அவுட்சோர்சிங் முறையில் அமெரிக்கக் குழுவினரால் நடத்தப்பட்ட உயிரி ஆயுத பரிசோதனையில் தான் இந்த வைரஸ் உருவானது என்று கூறப்படுகிறது. இவை எதுவும் ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்படாத சூழலில், சீனா தான் இந்த கொரோனா வைரஸை உருவாக்கி பரப்பியது என்று தீர்ப்பெழுதியிருக்கிறது தினகரன் நாளிதழ்.
அமெரிக்காவின் பரம விசுவாசியான மோடி அரசோ, கடந்த ஆண்டு ஊரடங்கை தீடீரென்று அறிவித்து புலம்பெயர் தொழிலாளர்களை பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடக்கவைத்து அவர்களை பட்டினியில் கொன்றது. ஊரடங்கு காலத்தில் மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்தாமல், ஊரடங்கைக் கொண்டு மக்கள் மீது அடக்குமுறைகளை செலுத்தியது. கொரோனா ‘நிவாரணத் தொகுப்பு’ என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளின் கல்லா பெட்டியை நிரப்பியது.
இதுபோன்ற தனது மக்கள் விரோத – கார்ப்பரேட் ஆதரவு நடவக்கைகளின் விளைவாக வெடித்தெழும் மக்களின் கோபத்தைத் தடுப்பதற்காக “எல்லாவற்றுக்கும் சீனாதான் காரணம், அதுதான் கொரோனாவை பரப்பியது” என்று சங்க பரிவார கும்பல்களைக் கொண்டு பிரச்சாரம் செய்தது. அதற்குத் துணையாக பல ஆளும் வர்க்க செய்தி ஊடகங்களும் இருந்தன.
அதேபோலத்தான் தற்போது இரண்டாம் அலையிலும் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மற்றும் தடுப்பூசி ஏற்றுமதியை அதிகரித்து கார்ப்பரேட்டுகளுக்குச் சேவகம் செய்ததன் காரணமாக உள்நாட்டில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
தடுப்பூசியிலும் பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்டிடியூட் என்ற இரண்டு கார்ப்பரேட் நிறுவனங்களை ஏகபோகமாக வளரச் செய்வதற்கு தகுந்தாற் போல் தடுப்புசிக் கொள்கையை வடிவமைத்தது; ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை மாநில அரசுகளிடம் தள்ளிவிட்டுவிட்டு தான் தப்பித்துக் கொண்டது போன்ற மோடி அரசின் நடவடிக்கைகளால் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் எண்ணற்றோர் பலியாகியிருக்கிறார்கள்.
இரண்டாம் அலையில் மாநில அரசாக உள்ள திமுக அரசு, முந்தைய அதிமுக அரசை ஒப்பிடுகையில் பல்வேறு முயற்சிகள் எடுத்துக் கட்டுப்படுத்தி வரும் நிலையிலும், மாநிலம் முழுவதும் பல்வேறு சிகிச்சைக் குளறுபடிகள் தொடர்கின்றன. அரசு மருத்துவமனைகளில் நிலவும் விட்டேத்திப் போக்குகள் முதல் தனியார் மருத்துவமனைகளில் நிலவும் கட்டணக் கொள்ளை வரை, அன்றாடம் நிகழும் நிகழ்வுகளாகிவிட்டிருகின்றன.
நோயாலும், பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்ததாலும் பாதிக்கப்பட்ட மக்களிடம் அரசின் மீது நிலவும் எதார்த்தமான கோபத்தை மடைமாற்றும் வேலையைச் செய்ய போர் வெறியையும் தூண்டத் தயாராக இருக்கிறது தினகரன்.
“தனியாக நின்று சீனாவை எதிர்க்க முடியாது. அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து செயல்பட்டால் சீனாவுக்கு நிச்சயம் கடிவாளம் போட முடியும்” “சீனாவை எதிர்க்கவும் அடாவடியை தடுக்கவும் இதுவே சிறந்த தருணம்” என்று அமெரிக்க ஆளும் வர்க்கங்களுக்கு ஆலோசனை கூறும் தினகரன் கடைசியாக மோடி அரசிடம் வைக்கும் வேண்டுகோள்தான் முக்கியமானது.
“இந்தியாவுக்கு சீனா எக்காலத்திலும் நண்பனாக இருக்க வாய்ப்பில்லை. எனவே சீனாவுக்கு எதிராக சர்வதேச அரங்கில் இந்தியா குரல் எழுப்ப வேண்டும். இவ்விஷயத்தில் ராஜதந்திர முறையில் செயல்பட வேண்டியது பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது” என்று சொல்லி தனது தலையங்கத்தை நிறைவு செய்கிறது.
கொரோனா சிகிச்சை மற்றும் மருத்துவக் கட்டமைப்பில் உள்ள பிரச்சினைகளிலிருந்தும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளிலிருந்தும் மக்களுக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மீது ஏற்படும் அதிருப்தியை தேசிய வெறி மூலம் மட்டுப்படுத்தும் வேலையைச் செய்வதில், சங்க பரிவார ஊடகங்களோடு இணைந்து பயணிக்கிறது தினகரன்.
உத்திரப்பிரதேச மாநிலத்தின் கோரக்நாத் கோயிலுக்கு பாதுகாப்பு வழங்க கோயிலைச் சுற்றி போலீஸ் படைகளை நிறுத்த உ.பி. அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கோரக்பூரைச் சுற்றியுள்ள முஸ்லிம் மக்கள் பெருமளவில் தங்கியிருக்கும் குடியிருப்பு வீடுகளை அகற்றும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது உ.பி யோகி அரசு.
இந்த திட்டம் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. இதில் யாரும் வற்புறுத்தப்படவில்லை. அனைத்து குடும்பங்களும் தானாகவே முன்வந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர் என்கிறது மாவட்ட நிர்வாக தரப்பு.
ஆனால், யோகி ஆதித்யநாத்தின் இத்தகைய நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அதிகாரிகளின் அழுத்தத்தினால்தான் தங்களது வீடு மற்றும் நிலத்தை விற்கும் ஒப்பந்த படிவத்தில் கையெழுத்திட்டோம். இது குறித்த முழுமையான தகவல்கள் எதுவும் எங்களுக்கு வழங்கப்படவில்லை என்கிறார்கள்.
வீடு மற்றும் நிலத்தை கையகப்படுத்துவது குறித்து வருவாய்துறை அதிகாரிகள் கூறினாலும், எழுத்துப்பூர்வ அறிவிப்பு வந்தவுடன்தான் இது குறித்த விரிவான தகவல்களை கொடுக்க முடியும் என்று அலட்சியமாக பதிலளித்துள்ளார்கள். “திடீரென ஒரு நாள் கணக்காளர் மற்றும் மாவட்ட தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் வீட்டுக்குள் நுழைந்து எங்கள் நிலத்தை அளந்தனர். அதன் பிறகு புரிந்துணர்வு ஒப்பந்த படிவத்தில் கையெழுத்திட நாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டோம்” என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ‘தி வயர்’ இணையத்தளத்திடம் தெரிவித்துள்ளார்கள்.
கோரக்நாத் கோயிலைச் சுற்றியுள்ள வீடுகள்.
ஒப்பந்த படிவத்தில் கையெழுத்திட்ட குடும்பங்கள் பீதியிலும் துயரத்திலும் பீடிக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் தங்களது தொலைபேசி அழைப்புகளை எடுக்கக் கூட அஞ்சி அதனை ஆஃப் (Off) செய்துவிட்டார்கள்.
மே 28 அன்று இந்த புரிந்துணர்வு ஒப்பந்த கடிதத்தின் நகல் சமூக வலைத்தளத்தில் பரவத் தொடங்கிய போதுதான் இந்த விஷயம் வெளியுலகத்திற்கு தெரிய வந்திருக்கிறது. அந்த கடிதத்தில், “கோரக்நாத் கோயிலுக்கு பாதுகாப்பிற்கு போலீஸ் படையை நிறுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவுக்கு ஏற்ப, பழைய கோரக்பூர் தப்பா, கஸ்பா பர்கானா ஹவேலி, தெஹ்ஸில் சதர் ஜன்பாத், கோரக்பூர், கோரக்நாத் கோயிலின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள எங்கள் நிலங்களையும் வீடுகளையும் அரசுக்கு வழங்க நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். இந்த விஷயம் குறித்து எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எங்கள் ஒப்புதல் குறித்த கையொப்பங்களை கீழே காணுங்கள்” என்று குறிபிடப்பட்டிருக்கிறது.
இந்த படிவ ஆவணம் 11 குடும்பத்தைச் சேர்ந்த 19 குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது தொலைபேசி எண்களைக் கொண்டுள்ளது. அந்த படிவத்தின் கடைசி வரிசையில், கையொப்பத்தின்கீழ், எப்போது கையெழுத்திடப்பட்டதோ அன்றைய தேதியும் குறிபிடப்பட்டிருக்கும். ஆனால், இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஆறு பேருடைய கையொப்பங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் இடம்பெறவில்லை. அந்த ஆவணத்தில் எந்த அதிகாரியின் பெயரும் கையொப்பமும் ஏன் முத்திரை உள்ளிட்ட எதுவும் இல்லை.
டெல்லியை சேர்ந்த ‘தி குயிண்ட்’ மற்றும் ‘இந்தியா டுமாரோ’ ஆகிய இணையதளங்கள் இதுகுறித்தான செய்தியினை வெளியிட்டன. ‘இந்தியா டுமாரோ’ இணையதளத்தைச் சேர்ந்த மசிஹுஸ்ஸாமா அன்சாரி, முஸ்லிம் குடியிருப்பை அகற்றும் அறிவிப்பைப் பற்றி மாவட்ட ஆட்சியர் விஜயேந்திர பாண்டியனிடம் கேட்டபோது, அன்சாரிக்கு எதிராக தேசியப் பாதுகாப்புச் சட்டம் போடப்படும் என்று விஜயேந்திர பாண்டியன் மிரட்டல் விடுத்துள்ளார்.
“கோரக்பூரில் கோரக்நாத் கோயிலை ஒட்டியுள்ள முஸ்லிம் குடும்பங்கள் தங்களது வீடுகளைவிட்டு வெளியேறுமாறு வழங்கப்பட்ட நோட்டீஸ் குறித்து நான் ஆட்சியரிடம் பேச முயன்றபோது, வதந்திகளை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு, என்மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் தொடுக்கப்படும் என்று அச்சுறுத்தப்பட்டேன். இதுகுறித்து நான் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகாரும் அளித்துள்ளேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அன்சாரி.
காங்கிரசின் மாநில தலைவர் ஷானவாஸ் அலம், ஊடகவியலாளர் அன்சாரிக்கும் கோரக்பூர் மாவட்ட ஆட்சியருக்கும் இடையிலான உரையாடலின் ஆடியோவை ஜீன் 3 அன்று வெளியிட்டார். அவர் தனது அறிக்கையில், “கோரக்நாத்தைச் சுற்றியுள்ள முஸ்லிம் குடும்பங்கள் சுமார் 125 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை தங்களது நிலத்தைவிட்டு வெளியேறுமாறு மாவட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கையில் தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து செய்தி தரவுகள் பல உள்ளன.
கோரக்நாத் கோயிலுக்கு அருகில் உள்ள தபால் அலுவலகம்
ஆனால், மக்களுக்கு நீதியை வழங்குவதற்கு பதிலாக மாவட்ட ஆட்சியர் விஜயேந்திர பாண்டியன் ஒப்பந்த கடிதத்தில் கையெழுத்திட மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள் என்பதை மறுப்பது மட்டுமல்லாமல், இந்த பிரச்சினை குறித்து விவரங்களைத் திரட்டும் ஊடகவியலாளர்கள் மீது NSA ஏவப்படும் என்று மிரட்டியும் உள்ளார்” என்ற ஷானவாஸ், மாவட்ட ஆட்சியரை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் மற்றும் இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணையின்போது, மே 27 அன்று சதர் தெஹ்ஸில் பகுதியைச் சேர்ந்த கணக்காளர் மற்றும் பிற ஊழியர்கள் போலீசின் துணையோடு, கோரக்நாத் கோயிலின் பிரதான வாயிலுக்கு அருகில் அமைந்துள்ள வீடுகளை அளவிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அங்கு குடியிருக்கும் மக்களிடம் பேசியபோது, கோயிலின் பாதுகாப்பு காரணங்களுக்காக அப்பகுதியில் போலீஸ் படைகளை அமைக்கப்போவதாகவும் இதற்காக தங்கள் வீடுகள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்ததாகவும் பின்னர், ஒரு காகிதத்தில் கையெழுத்திடுமாறு கேட்டார்கள் என்கிறார்கள் உள்ளூர் பகுதி மக்கள். கோயிலுக்கு பின்னால் அமைந்துள்ள மேலும் மூன்று வீடுகளில் வசிப்பவர்களை சந்தித்து அதிகாரிகள் பேசியுள்ளார்கள். ஆனால், அவர்களிடம் கையெழுத்து எதுவும் இதுவரை கேட்கப்படவில்லை.
புரிந்துணர்வு ஒப்பந்தப் படிவம் என்று ஒரு காகிதத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவர் 70 வயதான நெசவாளர் முஷீர் அகமது – 150 வருட பழமையான வீட்டில் தனது இரண்டு சகோதரர்களுடன் வாழ்ந்து வருகிறார். (கோரக்நாத் கோயிலைச் சுற்றியுள்ள பல இடங்களில் – நவ்ரங்காபாத், ஜாஹிதாபாத், புராணா கோரக்பூர், ஹுமாயுன்பூர் மற்றும் ரசூல்பூர் பகுதி மக்களின் முக்கிய தொழில் நெசவு. இது மக்கள் தொகையில் சுமார் ஒரு லட்சமாகும். 1990 வரை கோரக்பூரில் 17,000-க்கும் மேற்பட்ட கைத்தறிகள் இருந்தன. ஆனால், இப்போதோ 150-க்கும் கீழே குறைந்து விட்டன)
“மே 27 அன்று அதிகாரிகள் சிலர் போலீசுடன் வந்து எனது வீட்டையும் எனது பக்கத்து வீட்டையும் அளவெடுத்தார்கள். அடுத்தநாள் அதே நபர்கள் வந்து ஒரு காகிதத்தில் கையெழுத்திடுமாறு கேட்டனர். நானும் கையெழுத்திட்டேன். ஆனால், அதன்பிறகுதான் எனது வீடு கையகப்படுத்தப்படும் என்று தெரிந்தது. ” என்கிறார் முஷீர் அகமது.
இந்த வீட்டை தவிர்த்து முஷீர் அகமதுவிற்கு வேறெந்த சொத்தும் நிலமும் கிடையாது. “வீட்டில் நான்கு பழைய நெசவுத்தறி உள்ளது. ஆனால், இதிலிருந்து சம்பாதியம் என்று எதுவும் இல்லை. இவற்றின் மூலம் வருடத்திற்கு ரூ.100 முதல் ரூ.150 வரை மட்டுமே ஈட்டமுடியும். ஒரு மகன் புத்தகக்கடை வைத்துள்ளான். இன்னொருவன் மாவுமில் வைத்துள்ளான். இவர்களை நம்பிதான் எனது குடும்பம் உள்ளது. இந்த வீட்டை தவிர எங்களுக்கு வேறு நிலமோ அல்லது சொத்தோ இல்லை. இந்த வீடு எங்கள் வாழ்வாதாரம். இதை நாங்கள் எப்படி விட்டுக் கொடுக்க முடியும்? மீறி இந்த அரசாங்கம் எனது வீட்டை கைப்பற்ற முயற்சித்தால் அது நான் செத்தால் மட்டுமே முடியும்” என்கிறார்.
கோரக்நாத் கோயில் வளாகத்திற்கு பின்னால் ஃப்ரோஸ் அகமது மற்றும் இந்தெசர் உசேன் வீடு உள்ளது. மே 28 அன்று மதிய வேளையில் தெஹ்ஸில் பகுதி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தனது வீட்டிற்கு வந்ததாக கூறுகிறார் ஆசிரியரான உசேன். பாதுகாப்பு நோக்கங்களுக்காக அவரது வீடு கையகப்படுத்தப்படுவதாக அவர்கள் உசேனிடம் கூறி வீட்டை காலி செய்ய சொல்லியுள்ளார்கள். இதற்கு நட்ட ஈடாக அவருக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்கள். இதற்கு உசேன், “இதனை எழுத்துப் பூர்வமாக கொடுங்கள், அப்போதுதான் பதிலளிக்க முடியும்” என்று கூறி இருக்கிறார்.
கோரக்நாத் கோயிலைச் சுற்றியுள்ள வீடுகள்.
மீண்டும் ஜூன் 2 தேதி வந்த அதிகாரிகளிடமும் இதே பதிலை கொடுத்துள்ளார் உசேன். “ஜூன் 2 மாலை 4 மணிக்கு தெஹ்ஸில் சென்று மூத்த அதிகாரிகளை சந்திக்கும்படி என்னிடம் கூறினார்கள். ஆனால், நான் இதுவரை அங்கு செல்லவில்லை. எனது அக்கம் பக்கத்து வீட்டையும் அதிகாரிகள் அளவெடுத்தார்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது. எங்களது வீட்டு அருகிலேயே ஒரு மயானம் உள்ளது. அந்த இடமும் கையகப்படுத்தப்படலாம்” என்கிறார் உசேன்.
“கோரக்நாத் கோயிலின் தென்கிழக்கு பக்கத்தில் உள்ள 11 வீடுகள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படுகின்றன என்பதை நான் அறிந்ததும், அரசாங்கம் எங்களது நிலத்தையும் வீட்டையும் கைப்பற்ற ஏன் துடிக்கிறது? என்று தெரிந்துகொள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்க சென்றேன். ஆனால், சரியான பதில் ஏதும் கிடைக்கவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தெரியாமல் கையெழுத்திட்டவர்கள் இப்போது வீடு பறிபோகும் என்ற வருத்தத்தில் உள்ளனர்” என்கிறார் ஆசிரியரான உசேன்.
“கோயிலைச் சுற்றி பாதுகாப்பு படையை அமைப்பதாக நிர்வாகம் தரப்பில் கூறப்படுகின்ற காரணம். ஆனால், கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் இரண்டு போலீஸ் பூத்துகள் ஏற்கனவே இருக்கின்றன. எனவே, இப்போது அமைக்கப்போவதாக சொல்வது தேவையில்லாத ஒன்று. ஆகையால், எந்த காரணமும் இல்லாமல் நாங்கள் வெளியேற்றப்படுகிறோம்” என்கிறார் 71 வயதான ஜாவேத் அக்தர்.
உத்திரப்பிரதேசத்தில் தொடர்ந்து காவி வெறியாட்டத்தை நடத்தி வருகிறது, யோகி ஆதித்யநாத் அரசு. மாட்டுக்கறி பிரச்சினை, தலித் மக்கள் மீதான தாக்குதல், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், கருத்து சுதந்திரம் பறிப்பு, பத்திரிகையாளர்கள் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறை என உத்திரப்பிரதேசம் முழுவதும் தனது காவி பாசிசத்தை அரங்கேற்றி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது கோரக்நாத் கோயிலில் பாதுகாப்பு காரணமாக கோவிலைச் சுற்றி இருக்கும் முஸ்லீம் குடியிருப்புகளை திட்டமிட்டே அகற்றப்பார்க்கிறது ரவுடி யோகி அரசு.
இது உத்தரப் பிரதேசத்தில் மட்டும் நடக்கும் நிகழ்வல்ல. நாம் அமைதியாக இருந்தால், தமிழகத்திலும் நாளை நடக்கவிருக்கும் நிகழ்வுதான். அங்கு முசுலீம்கள் அகற்றப்பட்டார்கள், இங்கு பார்ப்பனரல்லாதோர் அகற்றப்படலாம். அதில் நாமும் ஒருவராக இருக்கலாம்.
இந்திய சமூகத்தில் பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் கொடுமைகளில் முக்கியமானது “சாதிய பிரிவினை”, அதிலும் மிகக் கொடுமையானது தீண்டாமைக் கொடுமை. அந்த வகையில், சில சாதியைச் சேர்ந்த மக்களை ஒடுக்கி அவர்களது சமூக வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, தங்கள் ஆதிக்கத்திற்குள் முடக்கி வைக்கிறபோக்கு இன்றளவும் இந்தியாவில் நிலவி வருகிறது.
சாதி ஆதிக்கத்தால் அதிகம் நசுக்கப்படுபவர்கள் பழங்குடி மக்களும், ஒடுக்கப்பட்ட இனத்தவர்களுமே ஆவர். இவர்களில் குறிப்பாக சாக்கடைக் குழிகள் மற்றும் மலக் குழுகளோடு காலங்காலமாக, பரம்பரை பரம்பரையாக வாழ நிர்பந்தப்படுத்தப்பட்டு கிடக்கின்ற ஒரு சமூகம் “துப்புரவுத் தொழிலாளர்” பணி செய்கின்ற சமூகத்தினர். இவர்களை பற்றி பேசுகிற நாவலே இந்த “கழிசடை”.
தமிழில் கழிசடை என்றால் “மிகக் கேவலமான” அல்லது “கீழ்த்தரமான” என்று பொருள்படும். அப்படி சமூகத்தால் கீழ்த்தரமாக பார்க்கப்படும், அனுமந்தையா என்ற துப்புரவுத் தொழிலாளியின் வாழ்க்கைதான் இந்த கதை.
அவன் மனைவி கொண்டம்மா, வெட்டியான் சுடலை, முனிசிபல் அலுவலகத்தின் ஒட்டுண்ணிகளான ஆய்வாளர் தியாகராஜன், ராகவலு மற்றும் மொய்தீன் மேஸ்திரிகள், வட்டிக்கடை மாணிக்கம், சாராயக்கடை ஜோசப்பு மற்றும் அனுமந்தையாவின் சக துப்புரவுத் தொழிலாளிகளான இயேசு ரத்தினம், சுப்பையா, நாகையா , அந்தோணி, யாகூப், ஐசக் போன்றவர்களின் வாழ்க்கையை மிகவும் எதார்த்தமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார் அறிவழகன்.
நாள் முழுவதும் மலக்குழிகளிலும், சாக்கடையிலும் புழங்கும் அனுமந்தையா சாராயத்திற்கு அடிமையாகிப்போவதும், அதனால், உடல்நலம் கெட்டு பல நாட்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் சம்பளத்தை இழப்பதும், அவனது ஐந்து குழந்தைகளுக்கு உணவளிக்க வட்டிக்கடை மாணிக்கத்திடம் பணம் வாங்குகிறான் அனுமந்தையா.
வாங்கிய கடனுக்கு வட்டி கொடுக்க முடியாமல் போய்விட, மாணிக்கத்தைச் சரிக்கட்ட அனுமந்தையாவின் மனைவி கொண்டம்மா தன்னையே அவனுக்குத் தாரை வார்ப்பது போன்ற கதை ஓட்டம், சமூகத்தில் வட்டிக்கு காசு கொடுத்து பிழைப்பு நடத்தும் கிரிமினல்களின் இழிவாழ்க்கையையும் சுட்டிக் காட்டுகிறது.
தன்னை விரும்பி திருமணம் செய்து கொண்ட மனைவி கொண்டம்மா, மாணிக்கத்துடன் உறவு வைத்திருப்பதை பார்த்ததும் வேதனையுடன் குடித்துவிட்டு வந்து அவளை கடுமையாக அடித்து நொறுக்குகிறான். அடியை வாங்கிக் கொண்ட கொண்டம்மா, ஏனய்யா! “அவன்கிட்ட ஆசைப்பட்டா படுத்தேன்”, அவனுக்கு வட்டிப்பணம் கொடுக்க முடியாததால் அவன் உன்னை கஷடப்படுத்துவதை தடுக்க எனக்கு வேறு வழி இல்லாமல் தானே இப்படி நடக்க வேண்டியிருக்கிறது என்று கூறும்போது, அவளின் பரிசுத்தமான அன்பையும் அரவணைப்பையும் நினைத்துப் அனுமந்தையா புலம்புகிறான்.
தினமும் பசியோடும், நோயோடும் மற்றும் (வேலை போய்விடும் என்ற) பயத்தோடும் வாழும் அனுமந்தையாவின் வாழ்க்கை அவனுக்கு மனப்போராட்டத்தையே கொடுக்கிறது. அவன் மலக்குழியை சுத்தம் செய்துவிட்டு அவ்வழியாக செல்லும் சாக்கடை நீரிலே முகத்தையும் கழுவி விட்டு, பசியைப்போக்க “அம்மா” சாப்பிட ஏதாவது கொடுங்கள் என்று கேட்பது, இன்றும் இந்த நிலைதான் துப்புரவுப் பணியாளர்களின் நிலையாக உள்ளது என்னும் அவலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய மறுக்க முடியாத உண்மை.
கோப்புப் படம்
தனது மகன் சீனய்யாவை தான் செய்யும் வேலைக்கு அனுப்பக்கூடாது வேண்டும் ஆசைப்படும் அனுமந்தையா, மகன் அதே வேலையைச் செய்யும் சூழ்நிலைக்குத் தள்ளப்படும்போது வேதனையால் குமைவதும், மனம் கலங்குவதும் ஒரு நல்ல தந்தைக்குரிய பண்பை அடையாளம் காட்டுகிறது. தன்னைக் குடிக்க வேண்டாம் என்று தடுக்கும் மனைவி கொண்டம்மா, மகன் மலக்குழிக்குள் வேலை செய்கிறான் என்று தெரிந்து கொண்டு, அந்தச் சுழலுக்குப் பழகிக் கொள்ள “சாராயம்” வாங்கி வந்து கொடுக்கும் போது, வேண்டாம் என்று தடுக்க நினைக்கும் அனுமந்தையாவால், அது முடியாமல் போய்விடும்போது பரிதாபமாக இருக்கிறது.
அனுமந்தையாவின் மனைவி கொண்டம்மா, இந்த நாவலின் அற்புதமான பாத்திரப்படைப்பு. வெட்டியான் சுடலையை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டு அனுமந்தையாவை திருமணம் செய்து கொள்வதும், தன் குடும்பத்திற்காக தன்னையே சிதைத்துக் கொள்வதும், தள்ளாத வறுமை நிலையிலும் குப்பைத் தொட்டியில் கிடந்த அனாதைக் குழந்தை லட்சுமியை தனது முத்த மகளாக எடுத்து வளர்ப்பதும், பரிசுத்தமான அன்பு, உழைக்கும் வர்க்கத்திடம் தான் அதிகம் இருக்கிறது என்பதை பறை முழங்குகிறது.
அதேபோல், வெட்டியானாக வரும் சுடலையும் நம் மனதில் உயர்ந்து நிற்கிறான். தொழிலின் மீதான அவனது நேர்த்தி, அர்ப்பணிப்பு, பிணம் எரிக்க வருபவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் உதவுவது என மனிதத்துவத்தை அற்புதமாக வெளிக்கொணருகிறான்.
சுடுகாட்டில் பிணம் எரிக்கும் வேலைக்கு கூட பினாமிகள் இருப்பதும், அவர்களுக்கும் சுடலை பங்கு கொடுக்க வேண்டியதிருப்பதும், வெட்டியான் வேலையில் கூட ஊழல் மலிந்திருப்பதை அறிவழகன் மிகவும் நுட்பமாக பதிவு செய்திருக்கிறார்.
கொண்டம்மா தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதால் பைத்தியமாகிப்போன சுடலை, பின்னர் நலமடைந்து தொழிலுக்கு திரும்பி, கிடைத்த வாழ்க்கையை திருப்தியாக வாழ்வதும், அனுமந்தையாவை தன்னை வென்ற ஒரு போட்டியாளனாக கருதாமல் அவனுடன் இயல்பாக பழகும் விதமும் அற்புதமானது. உழைக்கும் மக்களிடம் இருக்கும் வஞ்சனையற்ற மனதை, இக்கதாபாத்திரங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார் அறிவழகன்.ஒரு வெட்டியானின் வாழ்க்கையை இதைவிட யாரும் அழகாக கூறவில்லை என்றே கருதுகிறேன்.
அனுமந்தையாவின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வரும் உயர்அதிகாரி குமாரசாமி, தனது பால்ய நண்பன் ராசப்பன்தான் அனுமந்தையா என்று தெரிந்து கொண்டு, அவன் மீது அதே நட்பை வெளிப்படுத்தி அரவணைக்கிறார் குமரசாமி.
அனுமந்தையா தனது நண்பரிடம் மகன் சீனய்யாவிற்கு தோட்டி வேலை கொடுக்கும் படி கோரிக்கை வைக்கிறான். அவரும் அந்த வேலையைக் கொடுக்கிறார்; ஆனால், அதுவே சீனய்யாவின் மரணத்திற்கும் காரணமாகி விடுகிறது. ஒரு மலக்குழியையை சுத்தம் செய்யும்போது சீனய்யா விஷவாயுவினால் தீ விபத்து ஏற்பட்டு இறக்கிறான். இறுதியில், அனுமந்தையாவின் வாழ்க்கையில் சோகமே மிஞ்சுகிறது.
அறிவழகன் இந்த நாவலின் மூலம் மிக அற்புதமான மனிதர்களை அடையாளம் காட்டுகிறார். அதுமட்டுமல்லாமல், அந்தோணி, ஐசக் என்று கிறித்துவனாக மாறினாலும், யாகூப் என்று இஸ்லாமியனாக மதம் மாறினாலும் அவர்களை இந்த சமூகம் தோட்டியாகவே பார்க்கும் என்ற உண்மையையும் வெளிப்படுத்துகிறார்.
அவர் இந்த நூலின் முன்னுரையில், “தங்களைப் பற்றியே உணராமல் இச்சமுதாயத்திற்காக சேவை செய்யும் இவர்களது வாழ்க்கை யாரையும் பிரமிக்க வைப்பது. உடலால் தூய்மையற்றவர்களாகயினும் உள்ளத்தால் கள்ளங் கபடமற்ற தூய்மையானவர்கள். இழி நோக்கம் அறியாதவர்கள். குடும்பத்தினர்களுக்குள்ளேயும் குரோதம் பாராட்டத் தெரியாதவர்கள். இச்சமுதாயத்திற்காக செருப்பினும் இழிவாய் சேவை செய்யக் கடமைப் பட்டவர்கள் எனும் மனோநிலையில் இயல்பாகவே தங்களைத் தியாகித்துக் கொண்டவர்கள். சாதி, சமய, இணைப் பாகுபாடின்றி அனைவருக்காகவும் தங்களை அர்பணித்துக் கொண்டவர்களாததால் மற்ற சாதியினரினும் உயர்ந்தவர்கள்” என்று மிக அருமையாக குறிப்பிட்டுள்ளார்.
நான் இந்த “கழிசடை”யை தமிழில் வெளிவந்த நூறு சிறந்த நாவலுக்குள் ஒன்றாக கருதுகிறேன். ஆனாலும், துப்பரவுத் தொழிலாளிகள் சுரண்டப்படுவதையும், ஒடுக்கப்படுவதையும் பற்றித்தான் இந்த நாவல் பேசுகிறதேயொழிய, அடக்குமுறைக்கு எதிரான அவர்களின் எழுச்சியையும், தேவையையும் முன்னிறுத்தவில்லை என்ற குறைபாட்டையும் காண்கிறேன். அந்த குறைபாட்டை தகழியின் “தோட்டியின் மகன்” என்ற மலையாள நாவல் நிறைவு செய்கிறது.
இந்த நாவலை வாசித்து முடிக்கும் வரை அனுமந்தையாவுடன் நானும் வாழ்ந்தேன் என்பதையும், அவன் இறங்கிய மலக்குழிகள் மற்றும் சாக்கடைக்குள் நானும் நுழைந்து வேலை செய்து வெளியேறிய உணர்வும் எனக்கு ஏற்பட்டது என்பதை மறக்காமல் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். “கழிசடை” ஒரு அற்புதமான படைப்பு.
நூல் : கழிசடை ஆசிரியர்: அறிவழகன் பதிப்பகம்: அலைகள் வெளியீட்டகம் பக்கங்கள் : 248 விலை : ரூ .160
ஓ.டி.டி. தளங்கள், சமூக ஊடகங்கள், மற்றும் மின்னணு செய்தி ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் “இடையீட்டாளர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் டிஜிட்டல் மீடியாக்களுக்கான நெறிமுறைகள் விதிமுறைகள் 2021” (Guidelines for Intermediaries and Digital Media Ethics Code 2021) என்ற புதிய விதியை கொண்டுவந்துள்ளது மோடி அரசு.
மேற்கண்ட இந்த விதிமுறைகளை கடந்த பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதியே அறிமுகப்படுத்தியிருந்தது. அனைத்து சமூக ஊடகங்கள், டிஜிட்டல் தளங்களின் நிறுவனங்களும் இவ்விதிமுறைளை ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவதற்காக மே மாதம் 25-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருந்தது. அந்த அவகாசம் முடிவடைந்ததால், தற்போது அனைத்து நிறுவனங்களும் அவ்விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டாக வேண்டிய சூழல் எழுந்துள்ளது. கூகுல், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள் மோடி அரசின் புதிய விதிகளுக்கு கட்டுப்படுவதாக அறிவித்துவிட்டனர்.
இந்நிலையில் இந்த புதிய விதிகள் என்ன சொல்கிறது? இதுவரை சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு இதுபோன்ற எந்த விதிகளும் இல்லாத போது, தற்போது புதிதாக இத்தகைய விதிமுறைகளைக் கொண்டு வருவதற்கான காரணம் என்ன? இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? போன்ற கேள்விகளுக்கான விடைகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
ஏன் இந்தப் புதிய விதிமுறைகள், மோடி அரசு சொல்லும் காரணங்கள் என்ன?
இந்த புதிய விதிமுறைகளை டெல்லியில் அறிமுகப்படுத்திப் பேசிய, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர், “இந்தியாவில் சமூக ஊடக நிறுவனங்கள் வரவேற்புக்குரிய ஒன்று என்றாலும், அவற்றில் பகிரப்படும் சில தகவல்கள், வெறுப்புணர்வைத் தூண்டக் கூடியதாக உள்ளன என்று மத்திய அரசுக்கு ஏராளமான புகார்கள் பல ஆண்டுகளாகவே வந்து கொண்டிருக்கின்றன. போலிச் செய்திகளின் பிரச்சனையும் இதில் அடங்கும்”
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர்
“மேலும் நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்பு, பொது ஒழுங்கு, வெளிநாடுகளுடனான உறவுகள், பாலியல் வல்லுறவு, பாலியல் உணர்வைத் தூண்டும் உள்ளடக்கங்கள் உள்ளிட்டவை தொடர்பாக புகார்கள் வந்தாலோ, ஆட்சேபகர தகவல்கள் பகிர்வதாக தெரிய வந்தாலோ, இந்த புதிய வழிகாட்டுதல்களின்படி அரசுத்துறை நடவடிக்கை எடுக்கும்” என்று புதிய விதிமுறைகளை கொண்டு வருவதற்கான காரணங்களை சொல்லியுள்ளார்.
புதிய விதிகள் என்ன சொல்கின்றன?
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி, ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள்; நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓ.டி.டி. தளங்களின் நிறுவனங்கள், தங்கள் பயனர்களின் புகார்களை விசாரித்து தீர்ப்பதற்காக ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர் இந்தியாவில் இருப்பவராக இருக்க வேண்டும்.
மேலும், இணைச்செயலாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பதவியில் உள்ள ஒரு அதிகாரியை “அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியாக” அரசு நியமிக்கும். இவர் நினைத்தால் குறிப்பிட்ட சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களின் உள்ளடக்கத்தைத் தடைவிதிக்க உத்தரவிட முடியும்.
சமூக ஊடகங்களில் ‘சட்டவிரோதமான’, ‘வெறுப்பைத் தூண்டும்’, ‘தேசத்தின் ஒற்றுமைக்கு அல்லது இறையாண்மைக்கு எதிரான’, இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பற்றிய ‘தவறான கருத்துகள்’, சிறுவர் ஆபாச படங்கள், பாலியல் வக்கிரங்கள் தொடர்பான உள்ளடக்கங்களை “முதலில் பதிவிட்ட நபரைப்” பற்றிய விவரங்களை அரசிற்குத் தரவேண்டும். அதனை வைத்துக் கொண்டு அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். இந்த உள்ளடக்கங்களைப் பகிர்வோருக்கும் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்கிறது.
மேற்கண்டவை தொடர்பாக புகார்கள் வந்தால் அந்த குறிப்பிட்ட உள்ளடக்கத்தை 36 மணி நேரத்திற்குள் நீக்க அல்லது அந்த கணக்கை முடக்க வேண்டும்.
மேலும், இந்த நிறுவனங்களைக் கண்காணிக்கும் “மேற்பார்வைக் குழு அல்லது கண்காணிப்புக் குழு” ஒன்று அமைக்கப்படும்.
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, பாதுகாப்பு, சட்டம், உள்துறை, வெளிவிவகாரங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை ஆகிய அமைச்சகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் அதில் அங்கம் வகிப்பார்கள். மேற்கண்ட ‘நெறிமுறைகளை’ மீறுவதாக புகார் வந்தால் அதனை “தானே முன்வந்து விசாரிக்கும் அதிகாரம்” இந்த மேற்பார்வைக் குழுவுக்கு இருக்கும்.
ஓ.டி.டி. தளங்கள் தாங்கள் வெளியிடும் திரைப்படங்கள், தொடர்கள் போன்றவற்றை U, U/A7+, U/A13+, U/A16+, மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் A என்று வகைப்படுத்தி, குறிப்பிட்ட வயது வரம்புக்குள் இருப்பவர்கள் மற்றவற்றைப் பார்க்காத வண்ணம் தடுக்க வேண்டும்.
இதுபோன்று பல விதிமுறைகளைப் பற்றி சொல்கிறது.
இந்த விதிமுறைகளின் உண்மையான நோக்கம் !
சிறுவர் ஆபாசப் படங்கள், பாலியல் வக்கிரங்கள் தொடர்பான பதிவுகள் போன்றவற்றை தடுப்பது என்பதையும் இந்த விதிமுறைகள் தனது நோக்கமாக காட்டினாலும் உண்மை அதுவல்ல.
இந்து முன்னணி காலிகளால் பெண் உறுப்பு சிதைத்துக் கொல்லப்பட்ட அரியலூர் நந்தினி முதல் காஷ்மீரில் கருவறையிலேயே வைத்து சிதைக்கப்பட்ட அசீபா, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி நாக்கு துண்டிக்கப்பட்டு முதுகெலும்பு முறித்து போடப்பட்ட உத்தரப் பிரதேசத்தின் மனிஷா வரை பாதிக்கப்பட்டது யாரால்? இந்த கொடூரங்களை செய்தவர்களும் அவர்களை ஆதரித்தவர்களும் யார்? இவர்கள் தான் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளைத் தடுக்கப் போகிறார்களா? இது ஒரு சகிக்க முடியாத பொய்.
உண்மையில் “தேச விரோதக் கருத்துக்கள் அல்லது தேசத்தின் இறையாண்மைக்கு ஆபத்தான கருத்துக்கள், வெறுப்பைத் தூண்டும் பதிவுகள், போலிச் செய்திகள்” என்று கூறி தங்களையும் தங்களது இந்துத்துவ அரசியலையும் சமூக ஊடகங்களில் விமர்சிப்பவர்கள், அது தொடர்பாக எழுதும் மின்னணு செய்தி ஊடகங்கள் மற்றும் இந்துத்துவத்தை விமர்சிக்கும் வகையில் வரும் சில ஓ.டி.டி. திரைத்தொடர்கள் (உதாரணமாக ‘லைலா’ (LEILA) போன்ற இணையத் தொடர்கள்) ஆகியவற்றை ஒழித்துக் கட்டுவதை நோக்கமாகக் கொண்டது தான் இந்த விதிமுறிகளை மோடி அரசு அறிவித்திருப்பதற்கான காரணமாகும்.
000
நாள் தோறும் கோடிக்கணக்கான மக்கள் – ஜனநாயக சக்திகள் மோடி அரசின் காவி-கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளைக் கண்டு கொதித்துப் போயுள்ளார்கள். அவர்கள் இந்தப் பாசிச அரசிற்கு எதிரான கோபத்தைப் போராட்டங்கள் போன்ற பல்வேறு வடிவங்களில் வெளிக்கொண்டு வருகிறார்கள்.
அதில் ஒன்றாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதுபோன்ற உள்ளடக்கங்கள் நாடு முழுக்க வைரலாவதும் மோடி அரசின் யோக்கியதை அம்பலமாவதும் நடக்கிறது. தமிழகத்தின் கோ பேக் மோடி (GO BACK MODI) ஹாஷ்டேக் முதல் “டெல்லிச் சலோ” விவசாயிகள் போராட்டம் உலக அளவில் டிரெண்டானது வரை இந்த பார்வையில் தான் பார்க்க வேண்டியிருக்கிறது.
பாசிஸ்டுகளைப் பொறுத்தவரை தங்களுக்கு எதிரான கருத்துக்களை எதிர்கொள்ளத் துணிவற்றவர்கள் மட்டுமல்ல, அதை அடக்கி ஒடுக்கி இல்லாமல் செய்வதற்கும் முயல்பவர்களும் ஆவர்.
ஏனெனில், தங்களது பாசிச ஆட்சியை நிறுவுவதற்கு கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற ஜனநாயக உரிமைகளை இல்லாமல் செய்வது அவர்களுக்கு முன்தேவையாக உள்ளது. அந்த வகையில் அதற்கான ஏற்பாடாகத் தான் சமூக ஊடகங்கள், மின்னணு செய்தி ஊடகங்கள், ஓ.டி.டி. தளங்களுக்கான இந்த புதிய விதிமுறைகளும் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
மேற்கண்ட விதிகளைப் பார்ப்போம், இந்தியாவை தளமாகக் கொண்ட ஒருவரை புகார் அதிகாரியாக நியமிப்பது, அரசு அதிகாரப்பூர்வமாக நியமிக்கும் பிரதிநிதியிடம் (சங்கிகளை தான் நியமிப்பார்கள் என்பதை சொல்லாமலே புரிந்துகொள்ள முடியும்) எந்தவொரு உள்ளடக்கத்தையும் தடைவிதிக்கும் அதிகாரம் கொடுக்கப்படுவது.
மேலும், இதற்கெல்லாம் மேல், மோடி அரசின் பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்தவர்கள் ‘கண்காணிக்கும் குழு’ என்ற பெயரில் அனைத்து சமூக ஊடக, மின்னணு செய்தி ஊடக, ஓ.டி.டி. தளங்களின் நிறுவனங்களையும் விசாரணை செய்யும் அதிகாரத்தில் அமர்ந்து கொள்வது என்பது அனைத்தும் முற்று முழுதாக இந்த தளங்களை பார்ப்பன பாசிஸ்டுகள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதும் அதன் மூலம் தங்களுக்கு எதிரான கருத்துக்களை பதிவிடுபவர்கள், அதை பரப்புபவர்களைக் கண்டறிந்து அவர்களை தண்டிக்கவுமே ஆகும்.
அதற்கு தான் ‘சட்டவிரோத’, ‘தேச விரோதக் கருத்துக்களை’ முதலில் பதவிடுபவர்களை கண்டறிவதும் அதை பரப்புபவர்களுக்கு ஐந்தாண்டுகள் வரை சிறை தண்டனை விதிப்பது போன்றவற்றை தங்களது புதிய விதிமுறைகளில் சேர்த்திருக்கிறார்கள்.
இந்த விதிமுறைகள் அமுலுக்கு வரும்பட்சத்தில் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களுக்கு எதிரான கருத்துக்களே இல்லாத இந்தியாவை நாம் பார்க்கலாம் ! ஏனெனில் அதன் பின் அத்தகைய மாற்றுக் கருத்துக்களை பேசத்துணியும் குரல்வலைகள் அறுத்து வீசப்பட்டிருக்கும்.
பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஹத்ராஸ் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐந்தாம் தேதி, செய்தி சேகரிக்கச் சென்ற கேரள பத்திரிக்கையாளர் சித்திக் காப்பன் உட்பட அவருடன் வந்த சக ஊடகவியலார்கள் மீது உத்திரப்பிரதேசத்தில் ஒரு சதியை அரங்கேற்ற வந்ததாக கூறி அவர்களை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (ஊபா) கைது செய்தது உ.பி அரசு.
மேலும் கொரோனா இரண்டாம் அலையால் காவி கும்பல் ஆளும் உத்திரப்பிரதேசம் மருத்துவ நெருக்கடிக்கு உள்ளானபோது “உத்திரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை, போதிய படுக்கை வசதிகள் இல்லை என்று யாராவது சமூக ஊடகங்களில் பொய் செய்தியைப் பரப்பினால் அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பாயும்” என்று யோகி ஆதித்யநாத் அரசு மிரட்டியது.
சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை, கொரோனா உயிர் பலிகளை மறைத்தல் என கொரோனா இரண்டாவது அலையை மோடி அரசு கையாளும் கொடூரத்தை விமர்சித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதற்கு எதிராக, பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஒருவர் “அரசிற்கு எதிராக சர்வதேச ரீதியில் கருத்துருவாக்கம் செய்வதற்காக காங்கிரஸ்காரர்கள் தாயாரித்த டூல்கிட்” என்று போலியான ஒன்றை பகிர்ந்திருந்தார். காங்கிரஸ்காரர்கள் புகாருக்கு பிறகு அந்த டூல்கிட் போலியானது என்பதை உறுதிபடுத்திய ட்விட்டர் நிறுவனம் பா.ஜ.க-வினரின் பதிவை “சித்தரிக்கப்பட்டது” என வகைப்படுத்திக் காட்டியது.
மூக்கு உடைந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத பாசிச பா.ஜ.க டூல்கிட் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மீதி வழக்கு தொடுத்தது மட்டுமின்றி ட்விட்டர் நிறுவனத்திற்குள் அதிரடியாக டெல்லி போலிசை அனுப்பி ‘விசாரித்திருக்கிறது’ (மிரட்டியிருக்கிறது என்று சொல்வது தான் பொருந்தும்).
நாடே அறிந்த உண்மையாகினும் தன்னை எதிர்த்து எந்தக் கருத்தும் வரக்கூடாது. அப்படி வந்தால் அது எப்படி எதிர்கொள்ளப்படும் என்பதற்கு இவை சிறு உதாரணங்கள். தற்போது இந்த புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்ததன் மூலம் நமது கருத்துரிமைக்கு எதிரான பார்பன பாசிச தாக்குதல் சட்டப்பூர்வாகியிருக்கிறது.
இந்தப் பாசிச அடக்குமுறைகளை எதிர்த்து களத்தில் போராடாமல் இனி கருத்து சுதந்திரத்தைப் பற்றி கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.