Thursday, June 26, 2025
முகப்பு பதிவு பக்கம் 228

ஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு !

கொரானா ஊரடங்கு காரணமாக வீட்டிலிருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் வரை பலரும் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இது மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே பல்வேறு மனநலச் சிக்கல்களை ஏற்படுத்துவதோடு, பெருமளவிலான குற்றங்களுக்கும் வழிவகை செய்கிறது.

இந்தியாவில், ஆன்லைன் கேமில் ஈடுபடும் 60 சதவீதமானோர் 18 முதல் 24 வயதுடையவர்களே. ஊரடங்கில், பேடிஎம்-ன் மொபைல் கேமிங் செயலியான Paytm First Games செயலியை பயன்படுத்துவபவர்களின் எண்ணிக்கை மட்டும் 200 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேமில் வெற்றி அடைபவர்கள் பணம் ஈட்டி, ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள், மற்றும் விராட் கோலி, தமன்னா போன்ற முன்னணி நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் விளம்பரத்திற்கு வருவது ஆகியவற்றில் மயங்குகின்றனர்.மேலும் தம்மாலும் எளிமையாக பணம் ஈட்ட முடியும் என்றும் நம்புகின்றனர்.

பின், பணத்தை இழந்து செய்வதறியாமல் தற்கொலை, கொள்ளை, கொலை ஆகியவற்றிலும் ஈடுபடுகின்றனர்.  மேலும், இதனால் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகள் மணமுறிவு வரை செல்வதாகவும் மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். சமீபத்தில், சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் பணத்தை இழந்த இளைஞர்கள் உள்ளிட்டு தமிழகத்தில் மட்டும் ஆன்லைன் கேமிங்கில் பணத்தை இழந்ததன் காரணமாக 4 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

படிக்க :
ஆன்லைன் சூதாட்டம் : தடுக்கப் போகிறோமா ? இழக்கப் போகிறோமா ?
டாஸ்மாக் போதைக்கு போட்டியாக வரும் ஆன்லைன் ரம்மி !

இராமநாதபுரத்தைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் தனது பெற்றோரின் வங்கிக்கணக்கில் இருந்து 90 ஆயிரத்தை செலவு செய்ததும், வீட்டிற்கு தெரியாமல் இருக்க, வங்கியிலிருந்து தன் அப்பாவின் செல்பேசிக்கு வந்த SMS-களை அழித்ததும் செய்தியாக வெளிவந்தது. இதே போல ஆந்திராவிலும், வடமாநிலத்திலும் இலட்சக்கணக்கில் செலவு செய்துவிட்டு பெற்றோரை ஏமாற்றிய சம்பவமும் வெளிவந்தது.

ஆன்லைன் கேம்கள் எனப் பொதுவாகக் கூறினாலும், PUBG மற்றும் FreeFire போன்ற கேம்களைத்தான் பெரிதாக மாணவர், இளைஞர்கள் விரும்புகின்றனர். இந்தியாவில் மட்டும் பப்ஜி செயலியை 5 கோடி பேர் தரவிறக்கம் செய்துள்ளனர். செயல்பாட்டிலுள்ள அதன் பயனர்களின் எண்ணிக்கை மட்டும் 3.30 கோடி பேர். உலகளவில் பப்ஜி கேமர்களில் 21 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். காரணம், தன் நண்பர்களுடன் கூட்டாக, அவர்கள் எங்கிருந்தாலும் பரஸ்பரம் பேசிக்கொண்டே விளையாடும் வகையில், எந்த செலவுமின்றி, எளிதில் அனைவரும் விளையாடும் வடிவில், நிஜ உலகிற்கு இணையாக 3d கிராஃபிக்சில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

களத்தில் இருக்கும் அனைவரையும் சுட்டு வீழ்த்தி ‘வெற்றியின்’ அடுத்தடுத்த இலக்குகளை அடைவது, நண்பர்கள் மத்தியில் கிடைக்கும் அங்கீகாரம் அவர்களை உற்சாகப்படுத்தி, மேலும் உள்ளிழுத்து செல்கிறது. விளையாட்டில் ஈடுபடும் ஒவ்வொருவரும் தங்கள் ஐடி-க்கு தேவையான உடை, Gun Skin, Pet Skin, helmet, parachute, Skateboard என வாங்கி தாங்கள் விரும்பியபடி, ஐடி-யை ‘ராயலாக’ பராமரித்துக் கொள்வதுடன், அதை பிறருக்கு விற்கவும் செய்கின்றனர். இதற்காகவே, ஆயிரங்களில் இருந்து இலட்சங்கள் வரை பணத்தை விரயம் செய்கின்றனர்.

பொழுதுபோக்கிற்காக பப்ஜி, ஃப்ரிபயர் போன்ற விளையாட்டில் ஈடுபடுபவர்கள், நாளடைவில் அதிலிருந்து அவ்வளவு எளிதாக வெளியே வரமுடியாமல் மூழ்கி அடிமையாகின்றனர். இதனால், தங்களுடைய வழக்கமான படிப்பு, வேலை உள்ளிட்டவற்றில் ஈடுபட முடியாமல் கவனச்சிதறல், மன அழுத்தம், படபடப்பு உள்ளிட்ட நோய்களுக்கும், ஆத்திரப்படுவது, கோபப்படுவது போன்ற behavioural பிரச்சினைகளுக்கு ஆட்படுவதும், கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான, காரணம் விளையாட்டின் உள்ளடக்கத்தில் உள்ளது.

விளையாட்டில், எதிரியாக சித்தரிக்கப்படும் சக விளையாட்டாளரை நோக்கமற்ற முறையில், குழுவாக சேர்ந்து தங்கள் துப்பாக்கி மூலம் சுட்டு வீழ்த்தி, அடுத்தடுத்த கொலைகளுக்கு தயாராவதுதான் இதன் உள்ளடக்கம். விளையாடும் போது ‘மச்சி அவன விடாதடா போட்றா, போட்றா’, ‘அட்றா அவன, கொல்றா’ என ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் மொழி, வன்மத்தை துண்டுகிறது.

ஏதோ, விளையாட்டு தானே எனத் தோன்றலாம். ஆனால், “குழந்தைகள், நிழல் உலகம் (virtual world) கற்றுத்தரும் வன்முறையை நிஜ உலகிற்கு (real world) கொண்டுவரும் ஆபத்துள்ளது” என எச்சரிக்கிறார் WEF-ஐச் சேர்ந்த பாரூல் ஓரி.

அதற்கு உதாரணமாக, சமீபத்தில், ஜீ தமிழ் தொலைகட்சியின் தமிழா, தமிழா நிகழ்ச்சியில் பேசிய பல பெற்றோர்கள், ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடும் தன் பிள்ளைகள் சின்ன சின்ன காரணங்களுக்காக கோபப்பட்டு செல்ஃபோனையும், வீட்டில் உள்ள பொருட்களையும் உடைப்பதாக கூறினர். ஒருவர் மகளிடமிருந்து செல்ஃபோனை பிடுங்கியதால், தன் கழுத்தைப் பிடித்ததாக கூறுகிறார்.

கடந்த மாதம், ம.பி-யில் 11 வயது சிறுவன், ஃப்ரி பயர் கேமில் தன்னை தொடர்ச்சியாக தோற்கடித்த 10 வயது சிறுமியின் தலையில் கல்லால் அடித்துக் கொன்றுள்ளான். தெலுங்கானாவில் பப்ஜி விளையாடுவதை கைவிட்டு படிக்க சொன்னதற்காக பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான். இச்சம்பவங்கள் உணர்த்துவது என்ன? PC கேம்களுக்கு அடிமையான அமெரிக்க மாணவர்களிடையே பரவிய துப்பாக்கிக் கலாச்சாரத்தை இதோடு ஒப்பிட்டால், இதன் ஆபத்தை புரிந்துகொள்ளலாம். உலக சுகாதார நிறுவனம் ஆன்லைன் கேமில், ஈடுபடுவோர் சூதாட்டக் கோளாறுக்கு (gambling disorder) ஆளாவதாக 2018-ல் (WHO) அறிவித்துள்ளது.

படிக்க :
♦ சிந்தனைக் குழாம் – புரட்சி வேடத்தில் புல்லுருவி அறிஞர் படை
♦ உங்கள் சிந்தனையை வடிவமைக்கும் விளம்பரங்கள்

உலகளவில் 560 மில்லியன் இணையதள பயன்பாட்டாளர்களை கொண்டுள்ள இந்தியா, ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதன் மூலம், ஆன்லைன் கேமிங்கிற்கான செயலிகளை பதவிறக்கம் செய்யும் இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக இருந்து வந்த சூழலில், கொரோனா ஊரடங்கு ஆன்லைன் கேமிங் கம்பெனிகளுக்கான கதவை மேலும் அகலத்திறந்துள்ளது.

2023-ல் இணையதள பயனர்களின் எண்ணிக்கை 650 மில்லியனாக அதிகரிக்கும் என்ற தகவல் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் சந்தை ஆதிக்கத்தை முன்னறிவிப்பதாக உள்ளது. 2010-ல் வெறும் 25 ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில் 2019-ல் அது 11 மடங்காக உயர்ந்து 275 நிறுவனங்களாக உள்ளது.

சமீபத்தில் நடந்த இந்திய சீன எல்லை மோதலை ஒட்டி, சீனாவுக்கு நேரடியாக பதிலடிக் கொடுக்க முடியாத இந்தியா, ஆன்லைனிலேயே தனது பதிலடியைக் கொடுத்தது நினைவிருக்கலாம். பப்ஜி உள்ளிட்ட பல்வேறு சீன செயலிகளைத் தடை செய்து உத்தரவிட்டது.  அந்த சந்தையைக் கைப்பற்ற, இந்திய நிறுவனம், நடிகர் அக்சய் குமாருடன் இணைந்து ஃபாவ்-ஜி (FAU:G) என்ற கேமை கொண்டுவர இருக்கிறது. இதன் முதல் கட்டத்தை, கல்வான் பள்ளத்தாக்கை அடிப்படையாகக் கொண்டு அமைத்துள்ளதாக கூறுகிறது அந்நிறுவனம். “பொழுதுபோக்கோடு, நமது இராணுவ வீரர்களின் தியாகங்களையும் தெரிந்துகொள்வார்கள் ”என்கிறார் அக்சய் குமார்.

அப்பட்டமாக தேசியவெறியை போர்வெறியாக்கி இந்துத்துவ பாசிஸ்டுகளின் நிகழ்ச்சிநிரலுக்கு இந்திய இளைஞர்களைப் பலி கொடுப்பதற்கான வழிமுறையை இந்துத்துவக் கும்னல் ஏற்படுத்தியிருப்பதை இதில் காணலாம். இப்படி உருவாக்கப்படும் போர்வெறியைப் பெருமையாகக் காட்டியே மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து பாசிசத்தை அமல்படுத்துகிறது இந்திய அரசு.

இந்தியாவில் 75% இளைஞர்கள்தான் என பீற்றிக்கொள்ளும் மோடியிடம், வேலை எங்கே என்று கேட்டால், பக்கோடா விற்பதுகூட சுயதொழில்தான் என வாய்க்கொழுப்புடன் பதிலளிக்கிறார். கல்வி, மருத்துவ உரிமைகள் பறிக்கப்படுகிறது. விவசாய, சுற்றுச்சூழல், தொழிலாளர்நல சட்டங்களை கிரிமினல்த்தனமாக திருத்தப்படுகிறது. விலைவாசி உயர்வும், வேலையின்மையும் குடும்பங்களை பட்டினிக்குள் தள்ளுகிறது. மறுபுறம் அம்பானி, அதானி போன்ற பெரும் பணக்காரர்களிடம் இந்தியாவின் 77 சதவீத சொத்துக்கள் குவிகிறது. உலகப்பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி கிடுகிடுவென முன்னேறுகிறார். மக்களோ ஓட்டாண்டிகளாப்படுகிறார்கள்.

உலகம் முழுவதும் இத்தகைய சமூக அநீதிக்கும், கார்ப்பரேட் கொள்ளைக்கும் எதிராக களத்தில் நிற்பவர்கள் மாணவர்கள் – இளைஞர்கள்தான். இந்தியாவின், CAA எதிர்ப்பு போராட்டத்தில் மோடி அரசை நிலைகுலைய வைத்தவர்களும் அவர்கள்தான்.

அத்தகைய இளைஞர்களை, நிஜ உலக பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பி நிழல் உலகில் மூழ்கடிக்கிறது ஆன்லைன் கேம்கள். இயல்பான படைப்பாற்றல், சிந்தனை, அறிவு, நல்ல ஒழுக்க விழுமியங்களை, சமூகப்பற்றை காலி செய்து கொலைவெறியை, சகமனிதனை எதிரியாக பார்க்கும் சிந்தனையை, அனைத்து வர்க்க இளைஞர்களிடமும் கலாச்சார சீரழிவைத் திணிக்கிறது.

ஆளும் வர்க்கம், ஆன்லைன் கேம்களையும், சமூகத்தில் அதனால் ஏற்படவிருக்கும் தாக்கத்தையும் தெளிவாகத் தெரிந்தேதான் இதனை அனுமதிக்கிறது. குறிப்பாக ஊக்குவிக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா டுடே 2,50,000 ரூ பரிசுத்தொகை அறிவித்து பப்ஜி கேம்க்கான போட்டியை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

“கஞ்சிக்கு வழியில்ல கேம் கேக்குதா” எனக் கண்டிக்கிறது அடித்தட்டு வர்க்கம். “குளிப்பதில்லை, உண்பதில்லை, வீட்டில் இருப்பவர்களுடன் சரியாக பேசுவதில்லை. மனநோயாளி போல உள்ளான்” என வருத்தப்படுகிறது நடுத்தரவர்க்கம். இப்படி, இளைஞர்களிடம் ஏற்கெனவே திணிக்கப்பட்டுள்ள கும்பல் கலாச்சாரம், போதை உட்பட அனைத்து சீரழிவுகளையும் மேலும் வளர்த்து மனநோயாளியாக்குகிறது.

தன் உரிமைகள் பறிக்கப்படுவதைப்பற்றி, தன் மீதான சுரண்டல் பற்றி கண்டுகொள்ளாத, பொறுப்பற்ற தக்கை மனிதர்களைத்தான் உருவாக்க விரும்புகிறது முதலாளித்துவம். அதற்கு, பொருத்தமான உள்ளடக்கத்தோடுதான் ஆன்லைன் கேம்கள் டிசைன் செய்யப்படுகிறது. ஆளும்வர்க்கத்தின் விருப்பத்திற்கிணங்க, ஸ்மார்ட் ஃபோன்களின் வழியே நிழல் உலகிற்குள் தலையை மூழ்கிக் கொண்டு உரிமைகளை இழப்பதா ? அரசின் மக்கள் விரோத, மாணவர் விரோத நடவடிக்கைகளுக்கு  எதிராக களத்தில் இறங்குவதா? முடிவு செய்ய வேண்டிய தருணம் இது.

அருணகிரி

பெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் !

புதிய ஜனநாயகம் இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரைகள் கடந்த ஏப்ரல் -20 அன்று வினவு தளத்தில் வெளியிடப்படுவதற்காக அனுப்பி வைக்கப்பபட்ட நிலையில், அவை முன்னாள் பொறுப்பாசிரியரால் முடக்கி வைக்கப்பட்டிருந்தன. அக்கட்டுரைகளுல், ஹதராஸ் பாலியல் வன்கொலை, விஜய் சேதுபதியின் குழந்தைக்கு விடுக்கப்பட்ட பாலியல் வன்முறை மிரட்டல் போன்ற விவகாரங்களுக்கான அடிப்படை என்ன என்பதை அம்பலப்படுத்தும் இக்கட்டுரையை இங்கே வெளியிடுகிறோம்.

0-0-0-0-0

டந்த மார்ச் 8 சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தன்று இந்தியாவின் 7 பெண் சாதனையாளர்களிடம் தனது டிவிட்டர் வலைத்தளக் கணக்கை ஒப்படைத்த மோடி, அதை நாட்டிலுள்ள பெண்களுக்காகச் சமர்ப்பிப்பதாக அறிவித்தார். தமிழக அரசும் தன் பங்குக்கு அந்நாளைப் ”பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக”க் கொண்டாடியது. இப்படி அனைத்தும் நல்ல விதமாகச் சென்றுகொண்டிருப்பதாகக் காட்டப்பட்ட சமயத்தில்தான் உசிலம்பட்டியில் நடந்திருந்த பெண் சிசுக்கொலைகள் அம்பலமாகி மோடி-எடப்பாடி இணையின் மலிவான விளம்பரங்களைச் சந்திசிரிக்க வைத்தன.

உசிலம்பட்டி என்றாலே 1990-களில் அவ்வட்டாரத்தில் நடந்துவந்த பெண் சிசுக் கொலைகள் நம் நினைவுக்கு வந்துவிட்டுப் போகும். அச்சமயத்தில் அதனைத் தடுப்பதற்குச் சட்டத்தைக் கடுமையாக்கிய தமிழக அரசு, தொட்டில் குழந்தைத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. அதன் பின் அந்த அவலம் குறையத் தொடங்கி, கடந்த முப்பதாண்டுகளில் கிட்டத்தட்ட இப்பிரச்சினை வழக்கொழிந்து போய்விட்டது எனக் கருதப்பட்ட நிலையில்தான், அப்பகுதியில் அடுத்தடுத்து 3 பெண் சிசுக்கள் கொல்லப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் 2 அன்று உசிலம்பட்டிக்கு அருகேயுள்ள உள்ள செக்காணூரணியில் தமது  இரண்டாவது பெண் குழந்தையைப் பிறந்த ஒரு மாதத்திலேயே அக்குழந்தையின் பெற்றோர்கள் வைரமுருகன்-சவுமியா தம்பதியினர் எருக்கம்பால் கொடுத்துக் கொன்று புதைத்துள்ளனர்.

படிக்க :
♦ “ரேப்பிஸ்டு”களுக்காக போராடும் மனுவின் வாரிசுகள் || ஹத்ராஸ் பாலியல் வன்கொலை அவலம் !
♦ ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !

இதனைத் தொடர்ந்து ஆண்டிப்பட்டியிலும் ஒரு கொலை நடந்திருக்கிறது. அங்கு எருக்கம்பால் கொடுத்துக் கொல்லப்பட்ட பெண் குழந்தை பிறந்து ஆறு நாட்கள்கூட இவ்வுலகில் உயிரோடு இருக்கக் கொடுத்து வைக்கவில்லை.

மூன்றாவதாக, உசிலம்பட்டி அருகே கோவிலாங்குளத்தில் மர்மமான முறையில்  ஒரு பெண் குழந்தை இறந்துள்ளது. அப்பச்சிளம் பெண் குழந்தையின் அகால மரணத்திற்கு மூச்சுத் திணறல் காரணமெனக் கூறப்படுகிறது.

வறுமையின் காரணமாகத்தான் தமது இரண்டாவது பெண் குழந்தையை எருக்கம்பால் கொடுத்துக் கொன்றதாக  வைரமுருகன் – சவுமியா தம்பதியினர் வாக்குமூலம் அளித்துள்ளனர். தற்போதுள்ள மோசமான பொருளாதாரச் சூழலில் அடித்தட்டு மக்கள் குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது என்பது மிகச் சிரமமான காரியம்தான் எனினும், இதுவே ஆண் குழந்தை பிறந்திருந்தால் கொன்றிருப்பார்களா?

சவுமியாவின் பெண் குழந்தை மட்டுமல்ல, மற்ற பெண் சிசுக்களும் கொல்லப்பட்டதற்கு வறுமை அடிப்படையான காரணமாக இருந்துவிட முடியாது. வேறென்ன காரணம் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தந்தை வழி ஆணாதிக்க சமூகக் கண்ணோட்டம்தான் இதன் ஆணிவேர்.

இந்தக் கண்ணோட்டம் இந்தியாவில் பெண்ணினத்தை அழிவின் விளிம்புக்குக் கொண்டு சென்றுவிடுமோ என அஞ்சுமளவிற்கு அபாயகரமாக மாறிவருவதைச் சமீபத்திய புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இந்தியாவில் 2007-ம் ஆண்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 903 பெண் குழந்தைகள் என்றிருந்த தேசிய ஆண்-பெண் பாலின விகிதாச்சாரம் (Sex Ratio at Birth), 2016-ம் ஆண்டு 877 ஆக குறைந்துவிட்டதாக உள்ளூராட்சிப் பதிவு கணக்கெடுப்பு வழியாகத் (Civil Registration Survey) தெரியவந்திருக்கிறது.

இதில் அதிர்ச்சி தரத்தக்க விடயம் என்னவென்றால், முன்னேறிய மாநிலமாகக் கருதப்படும் தமிழகத்தில்  பெண் குழந்தை பிறப்பு விகிதம் தேசிய சராசரியைவிடக் குறைவாக இருக்கிறது என்பதுதான். தமிழகத்தில் 2004-ல் 936 ஆக இருந்த இவ்விகிதம் 2016-ல் 840-ஆக வீழ்ந்திருப்பதாக அக்கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. (ஆங்கில இந்து, 09.03.2020)

இது நம்புவதற்குக் கடினமாகத் தோன்றினாலும், தமிழகத்தில் ஆண்-பெண் விகிதாச்சாரம் குறைந்துவருகிறது என்பதே உண்மை. பத்தாண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பை ஆதாரமாகக் கொண்டு மைய அரசின் புள்ளிவிவரத் துறை 2019-இல் வெளியிட்டுள்ள ஆவணமொன்றில் தமிழகத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் 2011-இல் 996 ஆக இருந்தது எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதே ஆவணத்தில் 0-6 வயதுள்ள பெண் குழந்தைகளின் எண்ணிக்கை விகிதம் 943 எனச் சரிந்திருப்பதாகக் காட்டப்பட்டிருக்கிறது.

பிறந்து ஆறு வயது முடிவதற்குள் 53 பெண் குழந்தைகள் எப்படிக் காணாமல் போக முடியும்? இந்தச் சரிவை இயற்கையானதாக ஏற்றுக்கொள்ள இயலுமா?

* * *

ஒவ்வொரு ஏழு பெண் கருக்களினில் ஒரு பெண் கரு, அது பெண் கரு என்ற காரணத்தாலேயே அழிக்கப்படுவதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனத் தெரிவிப்பதும், பெண் கருக்களைக் கலைப்பதும் கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மோடியின் ஆட்சியில் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம் என்ற முழக்கத்தின் அடிப்படையில் பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. எனினும், பெண் கருக்கள் அழிக்கப்படுவது தடையின்றி நடைபெறுவதை மேற்கண்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அப்படியென்றால், அச்சட்டமும் அச்சட்டத்தை நடைமுறைபடுத்தும் பொறுப்பும் கடமையும் கொண்ட மருத்துவத் துறை, போலீசுத் துறை, நீதித் துறை ஆகியவை என்ன செய்கின்றன?

உசிலம்பட்டி சம்பவத்தில் தொடர்புடைய பெற்றோர்களும் உறவினர்களும் கைது செய்யப்பட்டுவிட்டனர். ஆனால், பெண் கருவை அழிக்கும் பெற்றோர்கள் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர்? இதற்குத் துணைபோன எத்தனை மருத்துவர்கள், ஸ்கேன் சென்டர் முதலாளிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்?

2016-ம் ஆண்டில் கடலூர், நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இயங்கிவந்த 20 ஸ்கேன் சென்டர்கள் மூடப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன. ஆனாலும், அந்த மையங்களின் உதவியோடு பெண் கருக்களை அழித்த பெற்றோர்கள் அடையாளம் காணப்பட்டதாகவோ, கைது செய்யப்பட்டதாகவோ எந்தவொரு தகவலும் இல்லை.

பெண் சிசுக்கள் கொல்லப்படுவதில் நுட்பமாகச் செயல்படும் வரக்கத் தன்மையையும் நாம் காண வேண்டியிருக்கிறது. பிறந்த பெண் குழந்தையைக் கள்ளிப் பாலை ஊற்றிக் கொல்லுபவர்கள் அடித்தட்டு வர்க்கம் என்பதால், சட்டம் பாய்ந்துவிடுகிறது. ஆனால், கருவை அழிக்கும் கனவான்கள் பெரும்பாலும் நகர்ப்புற நடுத்தர வர்க்கம் அல்லது அதற்கும் மேலுள்ள உயர் வர்க்கம் என்பதால் சட்டம் மௌனித்துவிடுகிறது.

படிக்க :
♦ லாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் !
♦ விவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …

பெண்களைப் பாதுகாக்கப் பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்களை மென்மேலும் கடுமையாக்குவதன் மூலம் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைத் தடுத்துவிடலாம் என்ற கண்ணோட்டமும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

இது உண்மையெனில், பெண் கருவும், பெண் சிசுவும் அழிக்கப்படுவதும், கொல்லப்படுவதும் தடுக்கப்பட்டு, இந்த இருபது ஆண்டுகளில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் கணிசமாக அதிகரித்திருக்க வேண்டும். நிர்பயா வழக்கிற்குப் பிறகும் பாலியல் வன்முறை நடப்பது குறைந்திருக்க வேண்டும். ஆனால், உண்மையென்ன?

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. பெண்களுக்கு எதிராக நடைபெறும் பல்வேறு விதமான குற்றங்களைக் கணக்கில் கொண்டால், 2016-இல் 3,38,954 வழக்குகள், 2017-இல் 3,59,849 வழக்குகள், 2018-இல் 3,78,277 வழக்குகள் என ஒவ்வொரு ஆண்டிலும் முந்தைய ஆண்டைவிடக் கூடுதலாக வழக்குகள் பதிவாகியுள்ளன. பதியப்படாமல் மறைக்கப்பட்ட , தட்டிக்கழிக்கப்பட்ட வழக்குகள் எத்தனையோ, யார் அறிவார்? குறிப்பாக, சிறுமியர் மீது நடத்தப்படும் பாலியல்ரீதியான தாக்குதல்கள் இருமடங்கு அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

நிர்பயா வழக்கில், இரவு நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு வெளியே என்ன வேலை? வீட்டுக்குள் இருந்திருந்தால் பிரச்சினை வந்திருக்குமா என ஆணாதிக்கவாதிகள் குதர்க்கமாக வாதிட்டனர். ஆனால், உண்மை நிலைமை என்ன?

கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் கடந்த மார்ச் 20 முதல் 31 வரையிலான 11 நாட்களில் மட்டும் 3.07 இலட்சம் அழைப்புகள் சைல்டு ஹெல்ப் லைனுக்கு வந்துள்ளதாகக் கூறுகிறார் சைல்டு லைன் இந்தியா துணை இயக்குநர் ஹர்லின் வாலியா. இதில் 30%, அதாவது 92,105 அழைப்புகள் துன்புறுத்தல் மற்றும் வன்முறையில் இருந்து பாதுக்காக்கக் கோரி விடுக்கப்பட்டுள்ளன. மேலும், 18 நாட்களுக்குள் 123 குடும்ப வன்முறைப் புகார்கள் தேசிய மகளிர் ஆணையத்தில் பதியப்பட்டுள்ளன.

பெண்கள் மீதான குடும்ப வன்முறை அவர்களை தற்கொலைக்குத் தள்ளுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது

பெண்களுக்கு வீட்டிலும் பாதுகாப்பில்லை, வெளியிலும் பாதுகாப்பில்லை என்பதுதான் உண்மை நிலை. அது மட்டுமின்றி, பெண்களைப் பாதுகாக்கக் கொண்டுவரப்பட்டிருக்கும் கடுமையான சட்டங்களும் குற்றவாளிகளின் வர்க்க நிலைக்குத் தகுந்தவாறுதான் அவர்கள் மீது பாய்கின்றன. நிர்பயா வழக்கின் குற்றவாளிகளைத் தூக்கிலேற்றிய சட்டம், ஆசாராம் பாபு போன்ற மேல்மட்டத்துக் குற்றவாளிகளை ஏன் சிறையில் வைத்துப் பாதுகாக்கிறது?

ஹைதராபாத் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட குற்றவாளிகளைப் போலி மோதலில் சுட்டுக் கொன்ற போலீசின் வரம்பற்ற அதிகாரம், பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மீது ஏன் பாய மறுக்கிறது? அக்குற்றவாளிகள் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்ட வழக்கு விசாரணையில் நிற்கவில்லை. அக்குற்றவாளிகளைத் தப்புவிக்கும்படி மொன்னையாக வழக்குகள் புனையப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது, சட்டம் அவர் மீது பாயவில்லை. மாறாக, அவர் தனது அதிகாரத்தையும் சட்டத்தையும் முறைதவறிப் பயன்படுத்தித் தன் மீது குற்றஞ்சுமத்திய பெண்ணையும் அவரது உறவினர்களையும் பழிதீர்த்துக் கொண்டார்.

நிர்மலா தேவி விவகாரத்தில் சிக்கிக்கொண்ட கவர்னர் தாத்தா பன்வாரிலால் புரோகித், தானே ஒரு விசாரணைக் கமிசன் அமைத்துத் தன்னைத் தற்காத்துக் கொண்டார். இப்படிச் சட்டத்தின் பாரபட்சம் குறித்துக் கூறிக்கொண்டே போகலாம்.

சமூகத்தின் மேல்மட்டம், கீழ் மட்டம் என்ற வேறுபாடின்றி, இந்தியாவின் இன்றைய சமூகக் கட்டமைப்பே தந்தை வழி ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் ஊறிப் போயிருப்பதால், பெண்களுக்கு எதிரான குற்றங்களும், வன்முறைகளும், ஒதுக்குதலும் அன்றாட நிகழ்வுகளாகி, அதனை இயல்பாக எடுத்துக்கொள்ளும் மனோநிலை உருவாக்கி வைக்கப்பட்டிருக்கிறது. பெண்கள், சிறுமிகள் மீது நடத்திப்படும் பாலியல் குற்றங்களுக்கு எதிராகக் கோபங்கொள்ளும் பலரும்கூட, பெண்கள் நுட்பமாக ஒடுக்கப்படுவதை, ஆணுக்குக் கீழானவள்தான் பெண் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனோநிலையில் இருப்பதை நாம் பார்க்கிறோம்.

பருவ வயதுடைய பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் செல்ல அனுமதித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஆர்.எஸ்.எஸ். கும்பல் மட்டும் எதிர்க்கவில்லை. அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும்கூட எதிர்த்துப் பேசினார்கள். பின்னர் அத்தீர்ப்பை உச்ச நீதிமன்றமே நிறுத்திவைத்துப் பெண்களுக்கு அநீதி இழைத்தது.

இந்திய இராணுவத்தின் போருக்குச் செல்லாத படைப்பிரிவுகளில் பெண்களை கர்னல் மற்றும் அதற்கும் மேம்பட்ட உயர் பதவிகளில் நிரந்தர அதிகாரிகளாக நியமிப்பதை மைய அரசும், இந்திய இராணுவம் எதிர்த்து நின்ற கேவலத்தைச் சமீபத்தில் நாம் கண்டோம். இத்தகைய தீண்டாமைகள் பெண்ணுடலின் மீது நிகழ்த்தப்படும் குற்றங்களுக்கு இணையானவை.

பெண்களை வீட்டுவேலைகளைச் செய்யும் வேலைக்காரியாக, பிள்ளைபெறும் எந்திரமாகக் கருதும் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கக் கண்ணோட்டத்தோடு, பெண்ணை நுகர்வுப் பண்டமாக, போகப்பொருளாகக் கருதும் மறுகாலனியாக்க கலாச்சாரச் சீரழிவும் நம்நாட்டில் வேரூன்றியுள்ளது. இந்த அழுகிப்போன சமூகக் கட்டமைப்பை மாற்றுவதற்கான முயற்சிகளை, போராட்டங்களைத் தீவிரமாக நடத்தாமல், சட்டங்களை மட்டுமே நம்பியிருப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு ஒப்பாகும். இந்தச் சட்டங்கள் பல சமயங்களில் புண்ணுக்குப் புனுகு தடவிவிடும் ஆறுதலைக்கூடத் தருவதில்லை என்பதே உண்மை.

மேகலை

இன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் !

ல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் புதன்கிழமை அன்று தங்களது பரஸ்பர ஆதரவை தெரிவித்து தங்களின் ஒற்றுமையை  வெளிப்படுத்தினர். மேலும் கடுமையான  ஊபா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

“மக்களின் உரிமைகளை பறிப்பதற்கான” அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து மக்கள்  தங்களது மவுனத்தை கலைக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அக்டோபர் 8-ம் தேதி,  பழங்குடி மக்களின்  உரிமைகளுக்காக போராடக்கூடிய  83 வயதான சமூக  செயற்பாட்டாளர்  ஸ்டான் சுவாமி கைது செய்யப்பட்டார். எல்கர் பரிஷத் வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பின் சமீபத்திய கைது இதுதான். ஸ்டான் சுவாமி பக்கவாத நோயாளி மட்டுமின்றி  வேறு பிற உடல்நல குறைபாடுகளாலும் துன்புற்றுக் கொண்டிருக்கையில் கொரானா தொற்று காலத்தில் அவர்  கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருப்பதையொட்டி, சமூக செயற்பாட்டாளர்களும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும்  கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

குடிமக்கள் உரிமைக்கான மக்கள் நடுவம் (பி.யூ.சி.எல்) ஏற்பாடு செய்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்,  விளிம்பு நிலை மக்களின்  குரல்வளையை நெறிப்பதற்கு   மத்திய  அரசாங்கம் முயற்சிப்பதாகக் கூறினார். ஒரு வீடியோ காணொளி செய்தியில், தற்போதைய மத்திய அரசாங்கத்தின் கீழ், ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் ஜனநாயக கட்டமைப்புகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

“இன்று மத்தியில் அமர்ந்திருக்கும் என்டிஏ அரசாங்கமானது,  ஆதிவாசிகள், தலித்துகள் மற்றும் பிற  விளிம்பு நிலை மக்கள் என ஏழை எளிய மக்களுக்காக  பேசுவோரின் குரல்களை நெறிக்கிறது, பாஜக அல்லாத  பிற கட்சிகள்  ஆளும் மாநிலங்கள் துன்புறுத்தப்படுகின்றன, ஒரு மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் அதன் சொந்த அரசியல் நலனுக்காக”வெவ்வேறு குழுக்கள் மற்றும் அமைப்புகளை வைத்துக்கொண்டு அதன் மூலம்  இன்று நம் நாட்டு  அரசியலமைப்பின் அனைத்து இயந்திரங்களையும் பலவீனமடைய செய்து வருகின்றது..

“நாடு எங்கு செல்கிறது என்பதைப் பற்றி சிந்திக்க இது நம்மை நிர்ப்பந்திக்கிறது. ஸ்டான் சுவாமியைப் போன்ற  முக்கியமானவர்  ஒருவர் கைது செய்யப்பட்டபோது அது இன்று எல்லா வரம்புகளையும் தாண்டிவிட்டது.. அவர் ஜார்கண்டில் உள்ள, தொலைதூர கிராமங்களில், காடுகளில் அலைந்து,  இங்குள்ள ஆதிவாசிகள், தலித்துகள் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு உதவி கிடைக்க செய்யும் பொருட்டு பல ஆண்டுகளாக அம்மக்களுக்காக  செயல்படக்கூடியவர். இவரின் கைது என்பது  மிகவும் வேதனையளிக்கிறது. ஸ்டான் சுவாமி பல நோய்களால் பாதிக்கப்பட்டிருக்க கூடியவர். ”என்று சோரன் கூறினார்.

மத்திய அரசால்  தெளிவாக இலக்கு வைக்கப்பட்ட  மக்கள் விரோத வழிமுறையை  எல்லா தரப்பட்ட எதிர்கட்சிகளும்  ஒன்றிணைந்து எதிர்கொள்ள  நமக்குள் எந்த பிரச்சினையும் இருக்க கூடாது. “இன்று ஸ்டான்சுவாமி கைது செய்யப்பட்டிருக்கிற முறையானது நாளை நம்மில் எவருக்கும் நிகழக்கூடும். அல்லது மக்களை கொல்ல இது அவர்களுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.” என்றார் சோரன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் திமுகவின் கனிமொழி ஆகியோர் சிவில் சமூகக் குழுக்களையும் பொதுமக்களையும் “மக்களின் உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்கள்”குறித்த தங்களின் அமைதியை கலைந்து கொண்டு போராடத்  தொடங்க  வேண்டும் என்று வலியுறுத்தினர்.

“என்ன  நடக்கிறது என்பதை அமைதியாக ஏற்றுக் கொள்வதா அல்லது அமைதி காத்ததது போதும் என்று கூறி ஒன்றாக  இணைந்து  அவர்களை எதிர்த்துப் போராட வேண்டுமா என்பதை நாம் அரசியல் கட்சிகளாக, முழு சமூகமாக ஒரு முடிவை எடுக்கவேண்டும்.  இந்த அடக்குமுறையை  ஏற்றுக்கொண்டால், சில ஆண்டுகளில் நாம் அறிந்த ஒரு ஜனநாயக இந்தியாவைப் பார்க்க மாட்டோம். இந்த அரசாங்கம் நிறைவேற்றிய ஒவ்வொரு சட்டமும் மக்களின் உரிமைகளை பறித்துவிட்டது. அமைதியை கலைக்க வேண்டிய  நேரம் இது ”என்று வீடியோ சந்திப்பு மூலம் கனிமொழி கூறினார்.

முழுமையாகவே தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதால்,  ஊபா சட்டம் திரும்பப் பெற வேண்டும் என்கிறார், சீத்தாராம் யெச்சூரி. “பாசிச, சகிப்புத் தன்மையற்ற மற்றும் சர்வாதிகார இந்துத்துவ தேசத்திற்கு” வழி வகுக்க, “பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ன் பெரிய திட்டத்தின்” ஒரு பகுதியாகத்தான்  ஊபா, தேசத்துரோக சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியவை இருப்பதை ஒன்றாக இணைத்துப் பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார். வன்முறையின் உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் அதே நேரத்தில் , அரசியலமைப்பைக் பலவீனப்படுத்துவதற்கு  மத்திய அரசின் மைய அமைப்புகளை பிஜேபி அரசு தவறாக பயன்படுத்துகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.

படிக்க :
♦ மிரட்டும் பாஜக : தமிழகத்திலும் வருகிறது என்.ஐ.ஏ கிளை !
♦ 75% விவசாயிகளுக்கு மோடி அறிவித்த 6,000 ரூபாய் கிடைக்கவில்லை !

ஒட்டுமொத்தமாக 16 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கபீர் கலா மஞ்சின் (கே.கே.எம்) மூன்று கலாச்சார ஆர்வலர்கள் – ரமேஷ் கெய்சோர், சாகர் கோக்ரே மற்றும் ஜோதி ஜக்தாப் மற்றும்  மக்கள் உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆனந்த் டெல்டும்ப்டே, கவுதம் நவலகா, ஷோமா சென், ஹானி பாபு, வழக்கறிஞர்கள், சுதா பரத்வாஜ், சுரேந்திர காட்லிங், வெர்னான் கோன்சால்வ்ஸ், சுதிர் தவாலே, மகேஷ் ரவுத், ரோனா வில்சன் மற்றும் அருண் ஃபெரீரா ஆகியோர் அடங்குவர்.

“பொடாவைப் போலவே, ஊபா  மிகவும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்தச் சட்டமும் நமது  சட்ட புத்தகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். இருப்பினும், இது ஒரு சட்டத்தின் பிரச்சினை அல்ல. இந்த கடுமையான சட்டங்கள் அனைத்தும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துடையவர்களை அடக்குவதற்கு  பயன்படுத்தப்படுகின்றன. இந்த கைதுகள் தனிப்பட்ட வழக்குகள் அல்ல; இவை ஆரம்பத்தில் இருந்தே அவர்களின் திட்டமாக இருந்த ஒரு தீவிரமான இந்துத்துவ ராஷ்டிரத்தை நிறுவுவதற்கான நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும். இதை ஏற்க முடியாது.   நமது  இந்த மவுனத்தை நாம் உடைக்க வேண்டும். தீமை வெற்றிபெற  வேண்டுமானால்  நன்மை அமைதியாக மட்டுமே இருக்க வேண்டிய தேவையை கோருகிறது. மதச்சார்பற்ற ஜனநாயகத்தை மக்கள் மீட்டெடுக்க போராட வேண்டும்” என்று யெச்சூரி குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், சுவாமி சிறை தண்டனை கொடுக்கப்பட வேண்டியவர் அல்ல. அவர், “நமது மரியாதை மற்றும் ஆதரவுக்கு” தகுதியானவர் என்றார். “ஏசுவை பின்பற்றும்  எந்தவொரு நபரும்  வன்முறையில் ஈடுபடமாட்டார் அல்லது வன்முறையை நோக்கி யாரையும் இழுக்க மாட்டார்” என்று தரூர் கூறினார். “இது நிறுத்தப்பட வேண்டும். நான் மத்திய அரசை நியாயமாக நடந்துகொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறேன், குறைந்தபட்சம் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும், நாங்கள் ஸ்டான் சுவாமிக்கு எங்கள் ஆதரவை தெரிவித்து அவருடன் ஒன்றுபட்டு நிற்கிறோம்”, என்று அவர் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, ஜனவரி 1, 2018 அன்று பீமா கோரேகான் வன்முறை மற்றும் ஆயிரக்கணக்கான தலித்துகள் எவ்வாறு தாக்கப்பட்டனர் என்பது மட்டுமல்லாமல்  அவர்கள் மீது எவ்வாறு பொய்வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பதையும் மக்களுக்கு நினைவுபடுத்தினார். “மத்திய அரசு ஒரு இரக்கமற்ற அரசாங்கம்; அதற்கு, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை, பி.ஆர்.அம்பேத்கர் கொண்டுள்ள பார்வை மற்றும் அவர் உருவாக்கிய விழுமியங்களுக்கு அது எதிரானது.” என்று அவர் கூறினார்.

கபீர் கலா மஞ்ச் என்ற கலாச்சார அமைப்பைச் சேர்ந்த ரூபாலி ஜாதவ் என்ற பெண் செயற்பாட்டாளரும்  இந்நிகழ்ச்சியில் பேசினார். இந்த வழக்கில் மூன்று கே.கே.எம் உறுப்பினர்கள் தற்போது சிறையில் உள்ளனர், மேலும் இந்த குழு தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் இணைந்திருப்பதாக என்.ஐ.ஏ கூறியுள்ளது. கே.கே.எம் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக எப்போதும் குரல் எழுப்பி வருகிறது. கைது செய்யப்பட்ட தன்  சகாக்கள் கைது அச்சுறுத்தலின் கீழ் தவறான ஆதாரங்களை வழங்க என்.ஐ.ஏ.-வால் கட்டாயப்படுத்தப்படுவதாக அவர் கூறினார். ஏற்கெனவே கைது செய்யப்பட்ட மற்றவர்களை வழக்குகளில் சிக்க வைக்க அவர்களை பயன்படுத்த என்.ஐ.ஏ. முயற்சிக்கிறது. அவர்கள் அதை செய்ய மறுத்து, கைதாவதற்கு தயாராக உள்ளனர் என்று  ஜாதவ் கூறினார்.

குடியுரிமைக்கான மக்கள் நடுவம் மத்திய அரசுக்கு மூன்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளது:

  • 80  வயதைக் கடந்தவர்களானஸ்டான் சுவாமி மற்றும் பீமா கோரேகான் வழக்கில் சிறை வைக்கப்பட்டுள்ள வரவர ராவ் மற்றும் நாக்பூர் மத்திய சிறையில்  உள்ள ஆண்டா  செல்லில்   சிறைவைக்கப்பட்டுள்ள 95 சதவீதம்  ஊனம் அடைந்துள்ள பேராசிரியர் சாய்பாபா ஆகியோரை உடனே விடுதலை செய்ய வேண்டும். இவர்களுக்கு  மனிதாபிமான முறையில் அவர்கள் விருப்பப்படி  மருத்துவ மனைகளில் சேர்த்து அவர்களை  காப்பாற்ற வேண்டும்.
  • பீமா கொரேகான்  வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை கைவிட வேண்டும். அவர்களை விடுதலை செய்து  பீமா கோரேகான் சதி வழக்கை முடிவுக்கு கொண்டுவர  வேண்டும்.
  • சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், (ஊபா) 1967 ஐ ரத்து செய்ய வேண்டும்.


தமிழாக்கம் : முத்துக்குமார்.
நன்றி : தி வயர்

புதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் !

புதிய கல்வி கொள்கை உயர்ந்த வாக்குறுதிகளை முன்வைக்கிறது, ஆனால் சமத்துவத்தின் இலக்குகளை யதார்தத்தில் கொண்டுவருவதற்கான  தெளிவான பார்வை அதனிடம் இல்லை.  COVID-19 தொற்றுநோய் பரவலின் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் முழுமையாக மூடப்பட்டிருக்கும் வேளையில், ஜூலை 29 அன்று மத்திய அமைச்சரவை தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு ஒப்புதல் அளித்ததுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி “இது ஒரு கால தாமதமான மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கல்வித்துறைச் சீர்திருத்தம்” பல லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை மாற்றக்கூடியது” என்றும் ட்வீட் செய்திருந்தார்.

“அறிவின் சகாப்தத்தில் (era of knowledge), கற்றல், ஆராய்ச்சி மற்றும் அறிவு ஆகியவை முக்கியமானவை, இந்த புதிய கொள்கை இந்தியாவை ஒரு புதிய அறிவு மையமாக மாற்றும் (New knowledge hub)” என்று அவர் ட்வீட் செய்திருந்தார். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், இந்த வரைவுக் கொள்கையின் மீது 2.25 லட்சத்துக்கும் மேற்பட்ட கருத்துக்கள் பெறப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்தியாவை உலக அறிவு வல்லரசாக மாற்ற வேண்டுமென்ற பிரதமரின் தொலைநோக்கோடு இந்த கல்வி கொள்கை ஒத்துப்போவதாக அவர் ட்வீட் செய்திருந்தார். மோடி ட்வீட்டின் படி, புதிய கல்வி கொள்கையானது (NEP) “சமத்துவம், தரம், குறைந்த செலவு” ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. “கல்வி நம் தேசத்தை பிரகாசமாக்கி, அதை செழிப்புக்கு இட்டுச் செல்லட்டும்” என்று அவர் ஒரு தீர்க்கதரிசி போல கூறினார். ஆனால், கல்விக் கொள்கையை  கூர்ந்து  நோக்கையில் மோடியின் கூற்றை இது பொய்யாக்குகிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட 66 பக்க கல்விக் கொள்கை ஆவணம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கே. கஸ்துரிரங்கன் தலைமையிலான குழு தயாரித்த மிகப்பெரிய வரைவின்(483 பக்கம்) சுருக்கப்பட்ட வடிவாகும். இதற்கு முன்பு 1986-ல் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. அது 1992-ல் திருத்தம் செய்யப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் ஆட்சிக்காலமான அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கம் பள்ளி பாடப்புத்தகங்களில், குறிப்பாக வரலாற்று பாடப்புத்தகங்களில் பல மாற்றங்களைச் செய்தது. ஆனால் கல்விக் கொள்கையை மாற்றுவது பற்றி அவர்கள் கண்டுகொள்ளவில்லை. புதிய கொள்கையைத் தயாரிப்பதற்கான வேலைகள்  2016-ம் ஆண்டில், மோடி பிரதமராக இருந்த காலத்தில் தொடங்கப்பட்டது. மறைந்த டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம், முன்னாள் அமைச்சரவை செயலாளர், “புதிய கல்விக் கொள்கைக்கான வளர்ச்சிக் குழுவின் (Committee for the Evolution of a New Education Policy)” தலைவராக நியமிக்கப்பட்டார். அக்குழுவினுடைய அறிக்கையின் அடிப்படையில் அமைச்சகம் ஆரம்ப வரைவைத் தயாரித்தது. கஸ்துரிரங்கன் தலைமையிலான புதிய குழு, மே 2019-ல் வரைவை இறுதி செய்தது.

படிக்க :
♦ புதிய கல்விக் கொள்கைக்கு சொம்படிக்கும் தி இந்து – ஆய்வுக் கட்டுரை
♦ தேசிய கல்விக் கொள்கை – நிராகரிக்க வேண்டும் ஏன் ? | இலவச மின்னூல்

இவ்வரைவு மீது உள்ளீடுகள் மற்றும் கருத்துக்களை பெற பொது தளத்தில் வெளியிடப்பட்டது. சாராம்சத்தில், இக்கொள்கை மேலிருந்து கீழ் நோக்கும் (Top-Down) தன்மைக் கொண்டது. இது, உயர்கல்வி நிறுவனங்களுக்களை கட்டுப்படுத்த ஒற்றை கட்டுப்பாட்டாளர், பட்டப்படிப்புகளில் பல நுழைவுகள் மற்றும் வெளியேறுவதற்கான வாய்ப்புகள், MPhil  படிப்பு நீக்கம், பள்ளி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களை அமைத்தல், இணையவழியிலானப்  பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வுகள் ஆகியவற்றை இக்கல்விக் கொள்கை முன்வைக்கிறது.

அனைவருக்குமான தரமான கல்வி வழங்க முயற்சிக்கும் எந்தவொரு கொள்கையும் அக்கல்வியை அனைவரும் பெறக்கூடியதாக மாற்ற வேண்டும். ஆனால் புதிய கொள்கையோ இந்த அம்சத்தைப் பற்றி மிக சொற்பமாக பேசுகிறது. இந்தக் கொள்கையானது கல்வியை “இந்தியாவினுடைய தொடர் வளர்ச்சி மற்றும் உலகளவில் முன்னணி நாடாவதற்கான ஒரு திறவுகோலாக உருவகப்படுத்துகிறது. ஆனால் கல்வியின் நோக்கமே பகுத்தறிவை ஊக்குவிப்பதும்  சமூக மற்றும் பொருளாதார சமத்துவத்தை மேம்படுத்துவதும் தான். “கலாச்சார பாதுகாப்பு” என்ற குறிக்கோளே, சங்க பரிவாரத்தினுடைய கலாச்சார தேசியத்திற்கான திட்டத்தையே குறிக்கிறது. இக்கல்விக் கொள்கையின் பின்னாலுள்ள “அரசியல்” நோக்கமானது, பண்டைய இந்தியாவில் அனைத்தும் மிகச் சரியாக இருந்தது, அனைவரும் கல்வியறிவு பெற தடையேதும் இல்லை என்று கூறுகிற பண்டைய இந்தியாவின் பெருமை பற்றிய அதன் நீண்ட பத்தியில் இருந்தே தெளிவாகத் தெரிகிறது. இப்புதியக் கொள்கையின் முக்கிய அம்சமே, தனிநபர் வளர்ச்சிக்காக உயர்தர கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளில் ஏற்றத்தாழ்வுகளை முன்வைத்துள்ளது தான்.

முழுமையான மறுசீரமைப்பு :

2030 – நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் (2030 sustainable development goals-SDG) திட்டத்தில் சொல்லப்பட்டுள்ள கல்வி இலக்குகளை அடைவதற்கான நோக்கத்தின் அடைப்படையில் கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன்படி, இந்த இலக்குகளை அடைய இந்தியாவிலுள்ள கல்வி அமைப்பையே “முழுமையான மறுசீரமைப்பு” செய்ய வேண்டும்.  SDG புதிய “அறிவு மற்றும் வேலைவாய்ப்புக்கான தளத்தை” முன்வைக்கிறது, அதற்காக இந்தியக் கல்வி அமைப்பு தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், “என்ன கற்றுக்கொள்வது” என்பதை விட “எப்படிக் கற்றுக்கொள்வது” என்பதே முக்கியமானது எனவும் கூறுகிறது. கல்விக் கொள்கை முழுவதுமே பொருளற்ற வாசகங்களை ஒன்றாக சேர்த்துள்ளனர்.

உதாரணமாக, கல்வியில் குறைவான பாடத்திட்டமே வைக்கப்படும் அதேவேளையில் இவை விமர்சனக் கண்ணோட்டத்தை ஊக்குவிக்கவும், சிக்கல்களைத் தீர்க்கவும் ஆக்கப்பூர்வமாக சிந்திக்கவும்  மக்களுக்கு உதவ வேண்டும் என்கிறது. நிர்ணயிக்கப்படும் கல்வி இலக்குகள் மற்றும் அதன் வெளிப்பாட்டுக்கு  இடையிலான இடைவெளியை சீர்திருத்தங்கள் மூலம் சரிசெய்ய வேண்டும் எனக் கல்விக் கொள்கைக் கூறுகிறது. ஆனால் இந்த இடைவெளிகள் உருவாதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றிய எந்தவித விமர்சன மதிப்பீடும் செய்யவில்லை. கல்வி கட்டமைப்பின் அனைத்து அம்சங்களையும் திருத்துவது மற்றும் மாற்றியமைப்பதை பற்றி இக்கொள்கை பேசினாலும் அதன் அழுத்தம் முழுவதும் கல்வியை நிர்வகிப்பதற்காக தற்போதுள்ள ஒழுங்குமுறை அம்சங்களை(regulatory aspects) அகற்றுவதாகும்.

இக்கொள்கை ஆசிரியர்களை பணியமத்துவது மற்றும் சிறந்த மற்றும் திறமையானவர்கள் ஆசிரியராகுவதை ஊக்குவிப்பவிப்பதை பற்றி பேசுகிறது. ஆசிரியர்கள் தான் “கல்வி அமைப்பினுடைய  அடிப்படை சீர்திருத்தங்களின் மையமாக” இருப்பார்கள் எனக் கொள்கைக் கூறுகிறது. இக்கல்விக் கொள்கை ஆசிரியர்களின் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதாகவும் அவர்களின் கவுரவத்தையும் சுய உரிமையையும் உறுதி செய்வதாகவும் கூறுகிறது. அஆனால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தற்காலிக பொறுப்பில் பல ஆண்டுகளாக பணியாற்றுகிறார்கள்.

மாணவர்களை கல்வியைவிட்டுத் துரத்து தேசிய கல்விக் கொள்கை – 2020

பாரதீய ஜனதா (பிஜேபி) ஆளும் மாநிலங்களில் கூட. இதே நிலை தான். இவர்களைப் பற்றி இக்கல்விக் கொள்கை எதுவும் பேசவில்லை.  ஆசிரியர்களின் ” கவுரவம், சுயமரியாதை மற்றும் சுகந்திரம்” என்று வாய்ச்சவடால் அடித்த போதிலும், செப்டம்பர் இறுதிக்குள் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு இந்த அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. இணையவழி மற்றும் திறந்த புத்தகத் தேர்வுகளில்(open book exam) உள்ள சிரமங்கள் மற்றும் நெறிமுறை சிக்கல்கள் குறித்து ஆசிரியர்கள் எழுப்பிய சந்தேகங்களை அரசாங்கம் முற்றிலுமாக புறக்கணித்தது.

இந்த கல்விக் கொள்கையில் 22 அடிப்படைக் கொள்கைள் பட்டியலிடப்பட்டுள்ளது. அவை “கற்பித்தல் மற்றும் கற்றலில் தொழில்நுட்பத்தை விரிவான பயன்படுத்துவது”, “தளார்வான மற்றும் கடுமையான ஒழுங்குமுறை கட்டமைப்பு”, “இந்தியாவின் பெருமை மற்றும் அதன் வளமான பண்டைய மற்றும் நவீன கலாச்சாரம், அறிவு அமைப்புகள் மற்றும் மரபுகள்”, “அரசு கல்வி நிறுவனங்களில் கொடையாளர்கள், தனியார், சமூகப் பங்களிப்பு ஆகியோர் முதலீடு செய்வதற்கு ஊக்குவித்தல்” போன்றவையாகும். கல்வித்துறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு தரப்படும் முக்கியத்துவமானது  கற்றல் கற்பித்தலில் இணையவழி முறையையே பிரதானமாக முயற்சிப்பதாகவே தோன்றுகிறது.  இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை பற்றிக் குறிப்பிடுகையில், மத்திய காலமானது  வெளிப்படையாக தவிர்க்கப்பட்டுள்ளது. அரசு: பொறுப்புகளை சுருக்கிக் கொள்ளுதல்

கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு தரமான ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி (Early Child Care and Education) கிடைக்கவில்லை என்று ஆவணம் கூறுகிறது. ஆனால் அனைவருக்கும் தரமான, மலிவாகக் கிடைக்கக் கூடிய மற்றும் பெறுகின்ற வகையிலான கல்வியை கொடுப்பது அரசின் கடமை என்பதை இந்த கல்விக் கொள்கை எங்கேயும் குறிப்பிடவில்லை. ஆரம்பகால குழந்தை பராமரிப்பு வழங்குவதை சிக்கலானது என இந்த அறிக்கை பார்க்கிறது. இந்த கல்விக் கொள்கையின் கீழ், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்ட (ICDS) மையங்கள் அல்லது அங்கன்வாடிகள் அனைவருக்குமான ஆரம்பகால குழந்தை பராமரிப்பை எட்டுவதற்கான இணைப்பு  நிறுவனங்களாக செயல்படும்.

மூன்று முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சத்தான உணவு மற்றும் பராமரிப்பை வழங்குவதற்காக ICDS செய்துவரும் வேலைகளைப் பற்றி இந்தக் கொள்கை சிறிதளவு பேசுகிறது. ஆனால் ICDS மையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர்களைப் பற்றியும் அவர்கள் வழங்கப்பட்டு வரும் மிகக் குறைந்த ஊதியத்தைப் பற்றியும் இந்தக் கல்விக் கொள்கை பேசவில்லை. சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் பெருகிவரும் தனியார் குழந்தை பராமரிப்பு மையங்கள் அல்லது தனியார் பள்ளிகளை ஒழுங்கமைப்பது பற்றி இந்த கல்விக் கொள்கையில் எந்த முயற்சியும் இல்லை. சுருக்கமாக சொன்னால், புதிய கொள்கையின் பார்வையானது அனைத்து சமூக மற்றும் பொருளாதார பின்னணியிலிருந்தும் வரும் குழந்தைகள் ஒரே மாதிரியான கல்வியைப் பெறுவதற்கான பொது பள்ளி முறையை உருவாக்க வேண்டும் என்பதாக இல்லை. பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் படிக்கும் சலுகை பெற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகளுக்கு நிச்சயமாக இது பாதகமாக அமையும்.

பழங்குடிப் பகுதிகளில் ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியானது “ஆசிரமங்களின்” மூலம் நடத்தப்படும் என கொள்கை கூறுகிறது, ஆசிரமம் என்பது பள்ளிகள் மற்றும் கற்றல் மையங்களை குறிக்கின்ற சமஸ்கிருதச் சொல். தனித்துவமான கலாச்சார மரபுகளைக் கொண்ட பழங்குடி பகுதிகளில் உள்ள பள்ளிகளை ஏன் ஆசிரமங்கள் என்று அழைக்க வேண்டும்? இது சங்க பரிவாரத்தின்  சித்தாந்தத்துடன் பொருந்திப்போகிறது.

படிக்க :
♦ குஜராத் மாடல் அரதப் பழசு ! உ.பி. மாடல் தான் புத்தம் புதுசு !
♦ நீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் !

மேலும், அனைவருக்குமான எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை எட்டுவதில் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்வதற்காக தன்னோடு சக வயதுடையவர்கள் அல்லது வயது மூத்தவர்களின் உதவியோடு கற்பிப்பதற்கான (Peer tutoring) திட்ட பரிந்துரைத்ததின் வாயிலாக எழுத்தறிவு கொடுக்க வேண்டிய பொறுப்பிலிருந்தும் அதற்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்தும் அரசை விடுவித்துள்ளது. ஆரம்பக் கல்வி மற்றும் உயர்நிலைக் கல்வியில் 100 சதவீத மொத்த சேர்க்கை விகிதத்தை அடைவது குறித்து இக்கொள்கை பேசுகிறது, ஆனால் பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய தர அளவீடுகள் (standards) மற்றும் தேவைகளை (requirements) தளர்த்தியுள்ளது. சமூக-பொருளாதார பிரிவுகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைக் களைந்து “பள்ளியை குழந்தைகளிடம் எடுத்துச் செல்வது” என்ற கொள்கைக்கு பதிலாக, பள்ளியில் சேர்ந்து படிக்க முடியாதவர்களுக்கு முறைசாரா பள்ளிப்படிப்பை (non formal schooling) இக்கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது.

இக்கொள்கையில் மறைந்திருக்கும் நடுநிலையின்மை அதன் மொழிகள் குறித்த பகுதியில் வெளிப்படுகிறது. இந்திய மொழிகள், “மிகச் செழிப்பான, , மிக அறிவியல் பூர்வமான, மிக அழகான மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு உலகிலேயே மிக தகுந்த மொழியாகும். பண்டைய மற்றும் நவீன இலக்கியங்கள் (உரைநடை மற்றும் கவிதை), திரைப்படம் மற்றும் இசை ஆகியவை இம்மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. இவையே இந்தியாவினுடைய அடையாளம் மற்றும் செல்வமும் ஆகும். அனால் மொழி, கலை, இசை மற்றும் அழகியல் துறைகளில் மத்திய கால பங்களிப்பை புறக்கணிப்பது உள்நோக்கத்திடனே செய்யப்பட்டுள்ளது. அதேபோல் செம்மொழி மற்றும் பிராந்திய மொழிகளின் பட்டியலிலிருந்து உருதுவை நீக்கியதோடு, பள்ளிகளில் உருதுவை விருப்பப்பாடமாக மாற்றியுள்ளனர்.

வெளிநாட்டு மொழிகளின் பட்டியலில், மாண்டரின் இடம்பெறவில்லை, ஆனால் ரஷ்ய, பிரஞ்சு, ஸ்பானிஷ், ஜப்பானிய, போர்த்துகீசியம், ஜெர்மன், கொரிய மற்றும் தாய் கூட சேர்க்கப்பட்டுள்ளன. பள்ளி கல்வியில் பரிந்துரைக்கப்பட்டுள்ள  மூம்மொழித் திட்டத்தில் இந்தி மூன்று மொழிகளில் ஒன்றாக குறிப்பிடுவதை இக்கொள்கை தெளிவுபடுத்தும் அதே வேளையில், மூன்று மொழிகளில் ஒன்றாக சமஸ்கிருதத்தை வலியுறுத்துவதை சில அரசாங்கங்கள், குறிப்பாக இரு மொழிக்கொள்கையை பின்பற்றும் மாநிலங்கள் மற்றும் சமஸ்கிருதத்தை  “அடிப்படை” மொழியாகக் ஏற்றுக் கொள்ளாத மாநிலங்கள் எதிர்கின்றன.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) மூலம் பள்ளி கல்விக்கான பாடத்திட்டத்தினை மாற்றியமைப்பதற்கான பெரிய திட்டங்களை இந்த கொள்கை கோடிட்டுக் காட்டியுள்ளது. பாடத்திட்ட ஒருங்கிணைப்பு பிரிவில், “இந்திய அறிவு” குறித்த துணைப்பிரிவில் இந்திய அறிவு குறித்து பேசும் போது பண்டைய இந்தியா அறிவுத்துறை பங்களிப்பு பற்றியும் நவீன இந்தியாவிற்கு அது அளித்துள்ள பங்களிப்பு குறித்தும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த வரைவுக் கொள்கை மறுபடியும் மத்திய காலம் அறிவுத் துறை பங்களிப்பை பற்றி குறிப்பிடாமல் பண்டைய காலத்திலிருந்து நவீன இந்தியாவுக்கு தாவிச்செல்கிறது. “இந்திய அறிவு முறைமைகள்(Indian knowledge System)” பற்றிய ஒரு பாடத்தினைச் சேர்க்க இக்கொள்கை பரிந்துரைக்கிறது. அதில் “பழங்குடிகளின் அறிவு மற்றும் உள்நாட்டு மற்றும் பாரம்பரிய கற்றல் வழிகள்” ஆகியவை அடங்கும். இவைகள்  பள்ளி பாடத்திட்டத்தில் உள்ள கணிதம் முதல் பொறியியல், மொழியியல் வரையிலான பல்வேறு பாடங்களை கற்பிப்பதற்கான கற்பித்தல் கருவிகளாகப் பயன்படுத்தப்படும்.

உயர்கல்வி பகுதியில், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு வினாத்தாள்களை தயாரிக்கும் பொறுப்புகளை பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களிடமிருந்து பறிப்பதிலிருந்து இக்கல்விக்கொள்கை ஆரம்பிக்கிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக் கழகங்களின் சுமையைக் குறைப்பதற்காக, தேசிய தேர்வு நிறுவனம் (National Testing Agency) என்ற அமைப்பை இக்கொள்கை முன்வைத்துள்ளது. இது தேசிய அளவில் திறனாய்வுத்தேர்வுகளை நடத்தும். மேற்படிப்பிற்கான நுழைவுத் தேர்வுகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் உதவித்தொகை பெறுவதற்கான தேர்வுகள் ஆகியவற்றை NTA நடத்தும். பல்கலைக்கழகங்கள் விரும்பினால் NTA தேர்வு மதிப்பீடுகளை மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.  தனியார் துறை/கொடைவள்ளல்களுக்கு முன்னுரிமை இந்த கல்விக் கொள்கை கல்வியில் தனியார் துறையை ஊக்குவிப்பதில் ஒரு முன்னுதாரணத்தை உருவாக்குகிறது.

இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கு மையப்படுத்தப்பட்ட தேர்வு முறையை முன்மொழிகின்ற அதேவேளை, அனைத்துப் பள்ளிகளையும் நிர்வகிக்கின்ற மற்றும் ஒழுங்குப்படுத்துகின்ற பள்ளி கல்வித் துறையை கடுமையாக விமர்சிக்கிறது. இக்கல்விக் கொள்கையின் படி, தற்போதைய பள்ளி கல்வி அமைப்பு “கருத்துக்களுகிடையேயான மோதல்களுக்கும் (conflicts of interest), அதிகப்படியான அதிகார மையப்படுத்தலுக்கும், திறமையற்ற மேலாண்மைக்கும்” வழிவகுத்துள்ளது. தற்போதைய ஒழுங்குமுறை அமைப்பு (Regulatory System) கல்வி வணிகமயமாக்கல் மற்றும் பெற்றோர்களிடமிருந்து பொருளாதார சுரண்டலை பார்க்கத் தவறிவிட்டது. மேலும் பொது நல நோக்கோடு தனியார் கொடைவள்ளல்கள் பள்ளிகள் ஆரம்பிப்பதை ஊக்குவிப்பதில் கவனக்குறைவாக இருந்துள்ளது. ஒழுங்குமுறை அமைப்புகள் “தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளை அணுகும் முறைகளில் மிக அதிகமான சமச்சீரற்ற தன்மை இருப்பதாக” இகல்விக் கொள்கை கூறுகிறது. தனியார் துறை / கொடைவள்ளல்களை பள்ளிக் கல்வியில்  ஊக்குவிப்பதையும் பள்ளிக் கல்வியில் அவர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்” என்ற நோக்கத்தை NEP வெளிப்படுத்துகிறது. ஒரு கல்வி கொள்கை தனியார் பள்ளி முறையை வெட்கமின்றி ஆதரிப்பது இதுவே முதல் முறை.

படிக்க :
♦ மாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி !
♦ புதிய கல்வி கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் | பேராசிரியர் வீ. அரசு

வருகிறது இணையவழி கல்வி முறை

2040-ம் ஆண்டிற்குள் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களையும் (HEI) ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர் எண்ணிக்கையை கொண்டதாகவும் பல்வேறு பிரிவுகள் சார்ந்த படிப்புகளை வழங்கக்கூடியதாகவும் மாற்றுவதே NEPன் நோக்கம் எனக் கூறுகிறது.  ஒரே பிரிவு படிப்புகளை (பொறியியல் படிப்பு மட்டும், கலை அறிவியல் படிப்புகள் மட்டும், மருத்துவப் படிப்புகள் மட்டும்) வழங்கக்கூடிய உயர்கல்வி நிறுவனங்கள் படிப்படியாக அகற்றப்படும். ஆனால் உயர்கல்வியில் ஆயிரக்கணக்கான மாணவர்களை சேர்க்க வேண்டுமென்றால் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் ஆயிரக்கணக்கில் இருக்க வேண்டும். எனவே அத்தகைய இலக்கை அடைய நீண்ட காலம் ஆகும் என்பதை உணர்ந்த இக்கவிக் கொள்கை, “இந்த செயல்முறை அதிக காலம் எடுக்கும் என்பதால், முதலில் 2030-க்குள் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் பல பிரிவு படிப்புக்களை (பொறியியல், கலை-அறிவியல், மருத்துவம், மேலாண்மை என அனைத்து படிப்புகளையும் ஒரே கல்லூரி வளாகத்திற்குள் வழங்குவது) வழங்கக்கூடியதாக மாற்றி பின்பு படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்” எனக் கூறுகிறது. உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதத்தை (Gross Enrollment Ratio-GER) 2035-க்குள் 26.3 சதவீதத்திலிருந்து (2018) 50 சதவீதமாக உயர்த்துவதே நோக்கம் எனக் கூறுகிறது. இணையவழி கற்பித்தலை முந்தள்ளுவதற்காக, உயர் கல்வி நிறுவனங்கள் திறந்த வழி தொலைதூர படிப்புகளும் இணைய வழி படிப்புகளும் ஊக்குவிக்கப்படும் எனவும் அறிக்கை கூறுகிறது.

இக்கல்விக்கொள்கை பள்ளிகல்வி மற்றும் உயர்கல்வியில் இணையவழி கற்றலை அதிகரிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. இதன்மூலம் கல்வி பெறுதலில் பல வகைகளை உருவாக்குகிறதே கல்விக் கொள்கை கூறுகின்ற சமூக மற்றும் பொருளாதார பிளவுகளை இணைக்க உதவாது. அனைவருக்கும் பொதுவான மற்றும் வேறுபாடற்ற வகையில் கல்வியை வழங்குவதற்கு பதிலாக, வழமையான முறை; முறைசாரா முறை; மாற்று கல்விமுறை; இணையவழி முறை, போன்ற பல வகைப்பட்ட கல்வி கற்கும் முறைகளை உருவாக்குவதையே இக்கல்விக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. இக்கல்விக் கொள்கை உயர்கல்வி நிறுவனங்கள் இலவசமாக கல்வி வழங்க ஊக்குவிக்கும் அதேவளையில், அக்கல்வி நிறுவனங்களே “கட்டணத்தை நிர்ணயிக்கும் வழிமுறைகளை உருவாக்கிக் கொள்வதற்கும் ” பரிந்துரைக்கிறது. இதன் மூலம் உயர்கல்வி நிறுவனங்கள் தனது “செலவினங்களை மீட்டெடுப்பதோடு தங்களது சமூக கடமைகளையும் நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்கு” வழிசெய்கிறது.

ஆசிரியர்களுக்கு இணையவழியில் பயிற்சியளிக்கும் திட்டமானது இந்தியாவில் இணைய வசதிகளை பெறுவதில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை(digital divide) முற்றிலுமாக கணக்கில் கொள்ளவில்லை. , இந்த ஏற்றத் தாழ்வுகள் பழங்குடி கிராமங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் அதிகமாகவே உள்ளது. பொது சுகாதாரத்தைப் போலவே, இந்தியாவில் கல்வியும் மிகவும் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கையில் கிட்டத்தட்ட 45.2%மாணவர்கள்  தனியார் சுயநிதிக் கல்லூரிகளிலும், 21.2% மாணவர்கள் தனியார் நிர்வகிக்கும் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் படிக்கின்றனர். தொழில்முறை படிப்புகளில் 60% க்கும் அதிகமான மாணவர்கள் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் படிக்கின்றனர். . முன்பெல்லாம்  அரசு உயர்கல்வி நிறுவனங்களில் தான் அதிகமான மாணவர் சேர்க்கை நடந்தது.

தேசிய கல்விக் கொள்கையில் குறித்த தொலைக்காட்சி விவாதத்தில் வலதுசாரி பிரதிநிதியாக கலந்து கொண்ட ஒரு கல்வியாளர், அரசாங்கம் “உலக வர்த்தக கழகத்தின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டதால் ” தேசியக் கல்விக்கொள்கையும் அந்த நிபந்தனைகளுக்கு தகுந்தாற் போல இருக்கும் என்றார். புதிய கொள்கையை தெரியப்படுத்தும் தத்துவமானது கல்வியை ஒரு சேவையாக இல்லாமல் ஒரு சரக்காகப் பார்க்கச் சொல்கிறது.

கட்டுரையாளர் : டி.கே.ராஜலட்சுமி
தமிழாக்கம் : பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாடு
நன்றி : பிரண்ட்லைன்

அமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை !

மெரிக்காவில், கருப்பின மக்களுக்கு எதிராக காலங்காலமாக நடந்து வந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், புதிய ஜனநாயகம் ஜூலை – 2020 இதழில் வெளியான இந்தக் கட்டுரை அச்சமயத்தில் வினவு தளத்தின் முன்னாள் பொறுப்பாசிரியரால் வெளியிடப்படாமல் முடக்கப்பட்டிருந்த இக்கட்டுரையை இப்போது வெளியிடுகிறோம் !

0o0o0

மெரிக்காவின் செல்வ வளம், வளர்ச்சி, முன்னேற்றம் குறித்தும், அதனின் ஜனநாயக மாண்பு குறித்தும் உலகெங்கும் உருவாக்கப்பட்டிருந்த கற்பிதங்கள் அனைத்தும் பூகம்பத்தில் கட்டிடங்கள் சரிந்துவிழுவதைப் போல பொலபொலவென நொறுங்கி விழும் காட்சியை உலகமே கண்டு வருகிறது.
கரோனா நோய்த் தொற்று அமெரிக்காவில் பரவி வரும் வேகமும், அதனால் ஏற்பட்டிருக்கும் உயிர் இழப்புகளும் அந்நாட்டின் செல்வ வளமும் இன்ன பிற முன்னேற்றங்களும் வசதிகளும் அந்நாட்டுத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்திற்கும்கூடப் பயன்படவில்லை, பயன்படுத்தப்படுவதில்லை என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது.

இத்தொற்று காலத்தில் நடந்த ஜார்ஜ் ஃபிளாய்டின் படுகொலை அமெரிக்க ஏகாதிபத்தியம் அணிந்திருக்கும் ஜனநாயக, சமத்துவ மூகமூடியைக் கிழித்துக் கந்தலாக்கிவிட்டது.

அதேசமயத்தில், ஜார்ஜ் ஃபிளாய்டின் படுகொலைக்கு நீதி கேட்டும் இன சமத்துவத்திற்காகவும் அந்நாட்டு மக்கள் நோய்த் தொற்று அபாயத்தையும் மீறி நடத்திவரும் போராட்டம், எதிர்காலம் குறித்து அஞ்சிக் கொண்டிருக்கும் உலக மக்களிடம், தீவிரமடைந்து வரும் முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியின் சுமை தம் மீது திணிக்கிப்படுவதை எதிர்த்து இந்த நிலைமையிலும் போராட முடியும் என்ற நம்பிக்கையை விதைப்பதாக அமைகிறது.

0o0o0

ஜார்ஜ் ஃபிளாய்ட் வெள்ளையின போலிசு அதிகாரியால் கொல்லப்பட்டதைத் தனிப்பட்ட போலிசு அதிகாரியின் தவறாகவும், ஒரு பிறழ் நடவடிக்கையாகவும்தான் பார்க்க முடியும்” எனக் கூறி அமெரிக்க போலிசு துறையை நிறவெறிக் குற்றத்திலிருந்து காப்பாற்றி விட முயலுகிறார், நம்ம ஊர் முன்னாள் சி.பி.ஐ. இயக்குநரான ஆர்.கே.ராகவன். தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்பார்களே, அது இதுதான் போலும்.

இந்த வாதம் ஜார்ஜ் ஃபிளாய்டைக் கொலை செய்த போலிசு அதிகாரிகளை மட்டும் நிறவெறிக் குற்றத்திலிருந்து காப்பாற்றவில்லை. எரிக் கார்னர், மைக்கேல் பிரௌன், டமிர் ரைஸ், வால்டர் ஸ்காட், ஆல்டன் ஸ்டெர்லிங், பிலாண்டோ காஸ்டைல், ஸ்டீபன் கிளார்க், பிரேயொனா டைலர் ஆகியோரைப் படுகொலை செய்தவர்களையும் நிறவெறிக் குற்றத்திலிருந்து காப்பாற்றுகிறது. இவர்கள் அனைவரும் ஜார்ஜ் ஃபிளாய்டுக்கு முன்பாக, கடந்த ஆறு வருடங்களுக்குள் அமெரிக்க போலிசின் வெள்ளை இனவெறியால் உப்பு சப்பில்லாத காரணத்திற்காகக் கொல்லப்பட்டவர்கள்.
2014 ஆம் ஆண்டு ஜூலையில் இளைஞனான எரிக் கார்னர், சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை விற்றான் என்பதற்காகக் கொல்லப்பட்டான். ஜார்ஜ் ஃபிளாய்டைப் போலவே எரிக் கார்னரும் வெள்ளையின போலிசு அதிகாரியின் கால்முட்டியால் கழுத்து நெறிக்கப்பட்டுத்தான் கொல்லப்பட்டான். ஜார்ஜ் ஃபிளாய்டைப் போலவே எரிக் கார்னரும் என்னால் மூச்சுவிட முடியவில்லை எனக் கதறியபடியேதான் இறந்து போனான்.

படிக்க :
♦ கருப்பின மக்களின் வாழ்வும், அமெரிக்கா எனும் ஜனநாயக சோதனையும் !
♦ கருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா !

அதே ஆண்டு ஆகஸ்டில் மைக்கேல் பிரௌன் என்ற 18 வயதான கருப்பின இளைஞன் ஒரு சிகரெட் பெட்டியைத் திருடிவிட்டான் என்ற காரணத்திற்காக வெள்ளையின போலிசு அதிகாரியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டான். பிரௌனின் உடலை ஆறு குண்டுகள் துளைத்திருந்தன.

டமிர் ரைஸ் வெள்ளையின போலிசு அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவனது வயது வெறும் பன்னிரெண்டுதான். அந்தச் சிறுவன் ஆயுதம் வைத்திருந்தான் எனக் கதை ஜோடித்து இந்தக் கொலையை நியாயப்படுத்த முயன்று தோற்றுப் போனது அமெரிக்க போலிசு.

“என்னால் மூச்சுவிட முடியவில்லை” என்ற ஜார்ஜ் ஃபிளாய்டின் கதறல் நமது நினைவுகளிலிருந்து மறைவதற்குள்ளாகவே, அட்லாண்டா நகரில் கருப்பினத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகளுக்குத் தந்தையான ரேய்ஷர்ட் புரூக்ஸ் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அந்நகரின் ஓர் உணவு விடுதியின் கார் நிறுத்துமிடத்தில் தனது காரை நிறுத்திவிட்டு, அதனை எடுக்காமல் தூங்கிக் கொண்டிருந்த புரூக்ஸ், அதனால் பிற வாடிக்கையாளர்களுக்குத் தொந்தரவு தந்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. புரூக்ஸைக் கைது செய்ய வந்த போலிசாரின் துப்பாக்கியைப் பறித்துக்கொண்டு அவர் ஓடியதால், அவரைச் சுட்டுக் கொன்றோம் என்பது போலிசின் வாதம். குற்றச்சாட்டிலோ, அதற்கு வழங்கப்பட்ட தண்டனையிலோ ஏதாவது நியாயம் உள்ளதா?

சிகரெட் பெட்டியைத் திருடிவிட்டதாக, சட்டவிரோதமாக சிகரெட் விற்றதாக, சிகரெட் வாங்க கள்ள டாலர் கொடுத்ததாக, வாடிக்கையாளர்களுக்குத் தொந்தரவாக நடந்து கொண்டதாகக் குற்றஞ் சுமத்தப்பட்ட இந்த ஆஃப்ரோ அமெரிக்கர்கள் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்குக் குற்றங்களை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்ற அமெரிக்க போலிசின் அறவுணர்ச்சியா காரணம்? அல்லது இப்படுகொலைகள் குற்றத்தைத் தடுக்க வேண்டும் என்ற தன்முனைப்பின் காரணமாக நேர்ந்துவிட்ட பிழையா? நிச்சயமாக இரண்டும் இல்லை. அமெரிக்க போலிசையும் அந்நாட்டின் நீதிமன்றத்தையும் பொருத்தவரை குற்றத்தின் தன்மை தண்டனையைத் தீர்மானிப்பதில்லை. குற்றம் சுமத்தப்படுபவனின் தோலின் நிறம்தான் பெரும்பாலும் தீர்மானிக்கிறது.

மேலும், அமெரிக்காவின் பெருவாரியான மாகாணங்களில் நடைமுறையிலுள்ள, பின்வாங்கிச் செல்லாமல் எதிரிகளை எதிர்கொள்வது என்ற சட்டம் (stand your ground law) எதிரிகள் எனக் கருதப்படுவோர் மீது எத்தகைய பலப்பிரயோகத்தையும் பயன்படுத்துவதற்கு போலிசுக்கு அதிகாரம் அளிக்கிறது. அதாவது, எதிரிகளை எவ்வித விசாரணையுமின்றிக் கொலை செய்வதற்கும் போலிசுக்கு சுதந்திரம் வழங்குவதுதான் இந்தச் சட்டத்தின் உட்கிடக்கை.

இப்படி போலிசிற்கு வழங்கப்பட்டிருக்கும் வரம்பற்ற அதிகாரத்தோடு வெள்ளை நிறவெறியும் சேரும்போது, கருப்பின ஆண்கள் அமெரிக்க போலிசின் எளிதான இலக்காகிவிடுகின்றனர்.

அமெரிக்க போலிசு அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளையினத்தவரின் எண்ணிக்கையைவிட கருப்பினத்தவரின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகம். கைகளில் எவ்வித ஆயுதமும் இன்றி நிராயுதபாணியாக நின்ற வெள்ளையினத்தவர் சுட்டுக் கொல்லப்பட்டதை ஒப்பிடும்போது நிராயுதபாணியான நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட கருப்பினத்தவரின் எண்ணிக்கை 1.3 மடங்கு அதிகம். இப்படிச் சட்டவிரோதமான முறையில் சுட்டுக் கொல்லும் போலிசு அதிகாரிகளுள் 98 சதவீத அதிகாரிகள் மீது எவ்விதமான குற்ற வழக்கும் புனையப்படுவதில்லை” எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

போலிசு அதிகாரிகள் மீது கொலை வழக்குப் போடப்பட்டு நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டாலும், தனது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில்தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா?” என்ற கேள்வியை எழுப்பி, அவர்களை விடுதலை செய்துவிடுவதை அமெரிக்க நீதிமன்றங்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளன.
எடுத்துக்காட்டாக, மைக்கேல் பிரௌனைச் சுட்டுக் கொன்ற அதிகாரி நிறவெறியின் காரணமாகத்தான் பிரௌனைச் சுட்டுக் கொன்றார் என நிரூபிக்கப்பட்ட பின்னும், அந்த அதிகாரி தண்டிக்கப்படவில்லை. மாறாக, அவர் கௌரவமான முறையில் போலிசு துறை யில் இருந்து பதவி விலகிச் சென்றார்.

படிக்க :
♦ புதிய தேசிய கல்வி கொள்கையின் நோக்கம் என்ன ? | பேராசிரியர் அனில் சத்கோபால் | CCCE
♦ விவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …

வெள்ளையின எஜமானர்களுக்கு எதிராகக் கருப்பின அடிமைகள் நடத்திய கலகத்தை ஒடுக்கும் நோக்கில்தான் அமெரிக்க போலிசு படை உருவாக்கப்பட்டது. அந்த நிறபேத அணுகுமுறையும் நிறவெறியும் இன்னமும் அமெரிக்க போலிசுத் துறையில் ஊறிப் போயிருப்பதாகக் கூறுகிறார்கள் சமூகவியலாளர்கள்.

போலிசு கண்காணிப்பின் முடிவு” என்ற நூலை எழுதிய சமூகவியலாளர் அலெக்ஸ் எஸ்.விடேல், கடந்த நாற்பது ஆண்டுகளில் அமெரிக்க சமூகத்தின் மீதான போலிசின் அதிகாரமும் கண்காணிப்பும் அளவுக்கு அதிகமாக அதிகரித்திருப்பதாக அந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார். போலிசு துறைக்கு ஒதுக்கப்படும் அதிகப்படியான நிதி, நவீன தொழில்நுட்பங்கள், சமூகத்தில் பரவிவரும் அச்சம், வறுமையின் காரணமாகப் பெருகிவரும் குற்றங்கள், மற்றும் குற்றங்களைக் காட்டிக் கொண்டுவரப்படும் புதுப்பது அடக்குமுறைச் சட்டங்கள் காரணமாக போலிசின் கண்காணிக்கும் அதிகாரம் அதிகரித்திருப்பதாகக் குறிப்பிடும் அவர், சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க இயலாத போலிசின் கைகளில் அதிகாரம் குவிக்கப்படுவதால், பிரச்சினை மென்மேலும் தீவிரமடைகிறதேயொழிய, குறைவதில்லை” என விமர்சிக்கிறார்.

போலிசிற்கு அளிக்கப்படும் வரம்பற்ற அதிகாரத்தால் பிரச்சினைகள் தீவிரமடைகிறது என அவர் குறிப்பிடுவதற்கு இன்னொரு நிரூபணமாய் அமைந்திருக்கிறது ஜார்ஜ் ஃபிளாய்டின் படுகொலை.

0o0o0

நிறவெறியின் காரணமாக அமெரிக்க கருப்பினத்தவர்கள் கொல்லப்படுவது, சித்திரவதை செய்யப்படுவதற்கு எதிராகப் போராட்டங்களும் கலகங்களும் அமெரிக்காவில் நடப்பதும் புதிய விடயமல்ல. எனினும், முந்தைய போராட்டங்களுக்கும் ஜார்ஜ் ஃபிளாய்டின் படுகொலைக்கு நீதி கேட்டுத் தற்பொழுது நடைபெற்று வரும் போராட்டத்திற்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.

கருப்பின மக்களின் உரிமைகளுக்காகவும் இன சமத்துவத்துக்காவும் போராடிய மார்ட்டின் லூதர் கிங் 1968 சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து நடந்த கலகத்தைக் காட்டிலும், தற்பொழுது நடைபெற்றுவரும் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதற்குக் காரணம், இப்போராட்டம் நடுத்தர வர்க்க வெள்ளையினத்தவரையும் கருப்பின மக்களுக்கு ஆதரவாகத் தெருவிற்கு இழுத்து வந்திருப்பதுதான்.
மேலும், அமெரிக்காவையும் கடந்து கனடாவிலும், தென்னமெரிக்க மற்றும் ஐரோப்பிய கண்டத்து நாடுகளிலும் அமெரிக்க போலிசின் மனித உரிமை மீறலை மட்டுமின்றி, அந்நாடுகளிலும் காணப்படும் வெள்ளையின வெறிக்கு எதிரான போராட்டமாகவும் உருவெடுத்திருக்கிறது.

அமெரிக்கச் சமூகத்தில் நிலவிவரும் இனப் பாகுபாட்டை கரோனா தொற்று இத்தொற்றுக்குப் பலியாகும் கருப்பினத்தவரின் எண்ணிக்கை மற்ற இனத்தவரோடு ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிகம் மிகவும் துலக்கமாக எடுத்துக்காட்டி வரும் அதேவேளையில்தான், ஜார்ஜ் ஃபிளாய்ட் கள்ள டாலர் கொடுத்து சிகரெட்டை வாங்கினார் என நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டைச் சாக்காகக் கொண்டு கொல்லப்பட்டார். இனப் பாகுபாட்டிற்கு எதிராகக் கருப்பின மக்களிடம் கனலாக இருந்துவரும் உணர்வை கரோனா இறப்புகளும் ஜார்ஜ் ஃபிளாய்டின் கொலையும் தீயாகப் பற்றியெறியும்படி விசிறி விட்டன என்றால், கரோனா தொற்றால் தீவிரமடைந்திருக்கும் வேலையிழப்பும், எதிர்காலம் குறித்த அச்சமும் வெள்ளையினத் தொழிலாளியையும் நடுத்தர வர்க்கத்தையும் அவர்களிடம் காணப்படும் இன மயக்கத்தைக் கலைத்து வீதிக்கு இழுத்து வந்தன.

அமெரிக்க போலிசின் அதிகாரத்தையும் அத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியையும் குறைக்க வேண்டும் என்பது தொடங்கி போலிசு துறையையே கலைக்க வேண்டும் என்பது வரையில் பல தரப்பட்ட கோரிக்கைகள் இப்போராட்டங்களில் முன்வைக்கப்படுகின்றன. சாராம்சமாக, அமெரிக்க போலிசு மற்றும் நீதித் துறையில் பாரிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது இப்போராட்டத்தின் அடிநாதமாக உள்ளது. அதனால்தான், ஜார்ஜ் ஃபிளாய்டைக் கொன்ற போலிசு அதிகாரி டெரெக் சாவின் மீது கொலைக் (second degree murder charge) குற்றச்சாட்டு பதியப்பட்ட பிறகும், அமெரிக்காவில் போராட்டங்கள் ஓயவில்லை.

போராட்டத்தின் வீச்சும், போராட்டத்தில் காணப்படும் இன ஒற்றுமையையும், போராட்டம் முன்னைப் போல அமைதியாக நடைபெறாமல், முன்னைப் போல சட்ட வரம்புகளுக்குள் அடங்கிவிடாமல், ஊரடங்கையும் மீறித் திமிரி எழுவதும்தான் அமெரிக்க அதிபரையும் ஆளும் வர்க்கத்தையும் அச்சங்கொள்ள வைத்திருப்பதோடு, அதிபர் டிரம்பைப் பதுங்கு குழிக்குள் ஓடி ஒளிந்துகொள்ள வைத்தது.

0o0o0

ரு ஜனநாயக நாட்டில், தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அதிபரோ, பிரதமரோ, தான் அனைத்து மக்களுக்குமான அரசின் பிரதிநிதி என உணர்ந்து செயல்பட வேண்டும் என முதலாளித்துவ அறிவுஜீவிகள் போதிப்பதுண்டு. குறிப்பாக, தேர்தல்களில் மத, இனவெறியைத் தூண்டிவிட்டு வெற்றியடையும் தலைவர்கள் விடயத்தில் அவர்கள் இதனை விசேடமாகக் குறிப்பிடுவதுண்டு. ஆனால், அதிபர் டிரம்போ இந்தச் சம்பிரதாயமான அறநெறிகளைக்கூட மதிக்காமல், அவற்றைக் குப்பைக் கூடைக்குள் வீசியெறிந்துவிட்டு, இன சமத்துவத்திற்காக நடைபெறும் இப்போராட்டத்தின் மீது வன்மத்தைக் கக்கி வருகிறார்.

போராட்டக்காரர்களைக் குண்டர்கள், வன்முறையாளர்கள், உள்நாட்டுப் பயங்கரவாதிகள் எனப் பழித்த டிரம்பின் அவதூறுக்கும்; கொள்ளையடிப்பது தொடங்கினால், துப்பாக்கிச் சூடு தொடங்கும்” என்றும், போராட்டக்காரர்களை ஒடுக்க இராணுவத்தை இறக்கிவிடுவேன்” என்றும் மிரட்டிய டிரம்பின் அச்சுறுத்தலுக்கும் போராட்டக்காரர்கள் அஞ்சிவிடவில்லை. மாறாக, அவரது வன்மத்திற்கு எதிர்வினையாகப் போராட்டம் பரந்துபட்ட ஆதரவைப் பெற்று, அவரைத் தனிமைப்படுத்தியது.

வன்முறை என்பது கேட்கப்படாதவர்களின் குரல்” என்ற மார்ட்டின் லூதர் கிங்கின் புகழ்பெற்ற மேற்கோளை இன்று கோடிட்டுக் காட்டாதவர்களே கிடையாது. நாங்கள் வன்முறையாளர்கள் என்றால், அதை வெள்ளையினத்தவர்கள்தான் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்” எனப் போராடும் கருப்பின மக்களின் சார்பாக டிரம்புக்குப் பதிலடி தந்தார், டமிகா மல்லோரி என்ற இளம் பெண் போராளி.

நவம்பர் 2020 நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலை மனதில் வைத்து ஜனநாயகக் கட்சியும், அக்கட்சியைச் சேர்ந்த ஆளுநர்களும், அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகளும் இப்போராட்டத்துக்கும் ஆதரவு அளித்துவரும் அதேவேளையில், அதிகார வர்க்கத்தின் ஒரு பிரிவும்கூட இன்று டிரம்பை எதிர்த்து, இப்போராட்டத்தை ஆதரிக்கத் துணிந்திருக்கிறது.

இது ஆதிக்கம் செலுத்த வேண்டிய காலக்கட்டம்” என டிரம்ப் நிறவெறியோடும் அதிகாரத் திமிரோடும் பேசியதைக் கண்டித்திருக்கும் ஹூஸ்டன் நகர போலிசு உயர் அதிகாரி, அதிபர் ஆக்கபூர்வமாக எதுவும் செய்ய முடியாவிட்டால், வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.

வெள்ளை மாளிகைக்கு முன் நடந்த போராட்டத்தின் மீது அரசு வன்முறையை ஏவி, போராட்டக்காரர்களைக் கலைத்து விட்டு, வெள்ளை மாளிகையிலிருந்து அதன் அருகிலுள்ள புனித ஜான் தேவாலயத்திற்கு நடந்து சென்று, பைபிளோடு புகைப்படம் எடுத்துக்கொண்ட டிரம்பின் வக்கிரம் பிடித்த நடவடிக்கையை, அது தன்னை அவமானமும் அருவெருப்பும் அடையச் செய்ததாக” விமர்சித்திருக்கிறார், பெயரை வெளியிட விரும்பாத வெள்ளை மாளிகை அதிகாரி.

படிக்க :
♦ என்னால் மூச்சுவிட முடியவில்லை ! அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் !
♦ அமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் !

டிரம்புடன் புனித ஜான் தேவாலயத்திற்குச் சென்ற அமெரிக்க முப்படைகளின் தலைவர் மார்க் மில்லி, தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்திருப்பதோடு, இந்தப் போராட்டம் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்குப் பல நூற்றாண்டுகளாக இழைக்கப்பட்டு வரும் அநீதிகளுக்கு எதிராக நடந்து வருவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

அமெரிக்காவின் முன்னாள் இராணுவச் செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ், டிரம்ப் மக்களை ஒன்றிணைப்பதற்கு மாறாக, பிரிக்கவே முயற்சி செய்கிறார்” எனப் பகிரங்கமாகக் குற்றஞ்சுமத்தியிருக்கிறார்.

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரான ஜார்ஜ் க்ளூனி, இனவெறிதான் மிகப் பெரிய வைரஸ். கடந்த 400 ஆண்டுகளாக அதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை” எனச் சாடியிருப்பதோடு, குற்றவியல் சட்டத் திருத்தங்கள் தேவை” எனக் கோரியிருக்கிறார்.
டிவிட்டர் நிறுவனம் டிரம்பின் இரண்டு சுட்டுரைகளை வன்முறையைத் தூண்டிவிடுவதாகக் குறிப்பிடும் எச்சரிக்கையோடு வெளியிட்டது.

ஜனநாயகக் கட்சியால் ஆளப்படும் மாகாணங்களில், போலிசு துறைக்கு வழங்கப்படும் நிதியைக் குறைக்கவும், தமது கால் முட்டியால் குற்றவாளிகளின் கழுத்தை நெறித்துப் பிடிப்பது உள்ளிட்டு போலிசு வழங்கப்பட்டிருக்கும் பல அதிகாரங்களைத் திரும்பப் பெறவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

இவையாவும் இப்போராட்டம், அமெரிக்கர்கள் ஒவ்வொருவரின் முகத்திற்கு எதிரேயும் நீங்கள் எந்தப் பக்கம் என்ற கேள்விக் கணையை வீசி வருவதை எடுத்துக் காட்டுகின்றன.

இது வெறும் அடையாளப் போராட்டமாக அமையாமல், நிறவெறியின் ஒவ்வொரு அம்சத்தையும் எதிர்த்து நிற்கிறது. ஜார்ஜ் பிளாய்ட் படுகொலைக்கு நீதி கேட்டும், குற்றவியல் சட்டத் திருத்தங்களைக் கோரியும் போராடி வரும் அமெரிக்க மக்கள், நிறவெறியின், அடிமை வியாபாரத்தின் சின்னமாகத் திகழும் சிலைகளைத் தகர்த்தெறியத் தொடங்கியுள்ளனர். 1990 சோவியத் ரசியாவிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் லெனின் உள்ளிட்ட கம்யூனிசத் தலைவர்களின் சிலைகள் வீழ்த்தப்பட்டதைக் கொண்டாடிய அமெரிக்க ஆளும் வர்க்கம், தனது கண்ணெதிரே தனது மூதாதையர்களின் சிலைகள் அமெரிக்க மக்களாலேயே அடித்து நொறுக்கப்படுவதைக் கண்டு விக்கித்து நிற்கிறது. வரலாறு எப்போதும் நேர்கோட்டுப் பாதையில் செல்வதில்லையே!

இந்தப் போராட்டம் தனது குறிக்கோள்களை முழுமையாக அடைய முடியாமல் முடிந்து போனாலும், இதனையடுத்து எழக்கூடிய போராட்டங்கள் இதனைவிட ஒற்றுமையோடும், இதனைவிடப் போர்க்குணமிக்கதாகவும், இதனைவிட முற்போக்கான கோரிக்கைகளை எழுப்பக் கூடியதாகவுமே அமையும். இதுதான் இப்போராட்டம் உணர்த்தும் செய்தி.

மேலும், ஒரு பெருந்தொற்றுக் காலத்திலும்கூட மக்கள் தமது உயிரைவிடவும், சுயமரியாதையையும், சமத்துவத்தையும், நீதியையும்தான் தமது உயிருக்கு மேலான ஒன்றாகக் கருதுகிறார்கள் என்பதை மீண்டுமொருமுறை உலக மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது, இப்போராட்டம்.

குப்பன்

புதிய ஜனநாயகம்

***

பெட்டி செய்தி:

இந்திய நகர்ப்புற நடுத்தர வர்க்கத்துக்கு ஒரு கேள்வி!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் இப்போராட்டத்தை ஆதரித்து வரும் இந்திய நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் இந்தியப் பிரபலங்களின் முகத்திற்கு நேரே நாம் எழுப்ப வேண்டிய கேள்வி, அமெரிக்காவின் நிறவெறிக்குச் சற்றும் குறைந்ததல்ல இந்தியாவின் ஆதிக்க சாதிவெறி என்பதை இவர்கள் என்றாவது உணர்ந்து குரல் கொடுத்ததுண்டா என்பதுதான்.

தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதிவெறியர்களாலும், அரசுப் படைகளாலும் தாக்கப்படும்போது, கொல்லப்படும்போது, அவர்களது அற்ப உடமைகள் சூறையாடப்படும்போது கிராமப்புற மக்கள் மட்டுமல்ல, படித்த நகர்ப்புற நடுத்தர வர்க்கமும் அதனை மௌனமாகக் கடந்து போய்விடுகிறார்கள். இந்த மௌனம் அற்பத்தனமான சுயநலத்திலிருந்து மட்டும் வரவில்லை. மாறாக, தாழ்த்தப்பட்டவர்களைத் தமக்குக் கீழாகக் கருதும் அருவெருக்கத்தக்க சுயசாதிப் பெருமிதத்திலிருந்தும் வருகிறது.

இன்று இந்தியாவை ஆண்டுவரும் சங்கப் பரிவாரக் கும்பல் ஆதிக்க சாதிவெறியையும் சிறுபான்மையினருக்கு எதிரான இந்து மதவெறியையும் தமது கொள்கையாக, திட்டமாகக் கொண்டு இயங்கிவருகிறது. அக்லக், பெஹ்லுகான் உள்ளிட்ட அப்பாவி முசுலீம்களை இந்து மதவெறிக் கும்பல் கொன்று போட்டதும், குஜராத்தின் உனா மற்றும் மகாராஷ்டிராவில் பீமா கோரேகானில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது இந்து மதவெறிக் கும்பல் நடத்திய தாக்குதலும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை.

பிளாய்ட் படுகொலையைத் தொடர்ந்து அமெரிக்காவில் நடந்துவரும் போராட்டம் குற்றமிழைத்த அதிகாரிகளைத் தண்டிக்கவும், போலிசின் அதிகாரத்தைக் குறைக்கவும் வேண்டிய நிலைமையை உருவாக்கியிருக்கிறது. ஆனால், இந்தியாவிலோ இந்து மதவெறியையும், ஆதிக்க சாதிவெறியையும் எதிர்க்கக்கூடிய குரல்கள் பலவீனமாக இருப்பதால், பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவி முசுலீம்களைக் கொன்ற இந்து மதவெறியர்கள் தேச பக்தர்களாகப் புகழப்படுகிறார்கள். பீமா கோரேகான் சம்பவத்தைக் காரணமாக வைத்து முற்போக்கு அறிவுத்துறையினர் தேசத் துரோகிகளாகக் குற்றஞ்சுமத்தப்பட்டு, பயங்கரவாத உபா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
இந்து மதவெறிக் கும்பலின் இந்த பாசிச குற்றச் செயல்களை இந்திய நகர்ப்புற நடுத்தர வர்க்கம் கண்டிக்கவும் எதிர்த்துப் போராடவும் முன்வராத வரை, அமெரிக்காவில் காணப்படும் நிறவெறிக்கு எதிராக அவ்வர்க்கம் எழுப்பும் குரல் போலித்தனமானதுதான்.

விவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …

ஞ்சாப் மாநிலம், பட்டியாலாவிலுள்ள ஃபதேப்பூர் கிராமத்தில் வசிக்கும் 55 வயதான ஷிங்காரா சிங், கடந்த ஜூன் மாதம், தனது வசந்தக் கால மக்காச்சோளத்தை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.700 – ரூ.800-க்கு விற்றுள்ளார். இது பருவக்கால பயிருக்கென மத்திய அரசு நிர்ணயித்திருக்கும் (குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,850) குறைந்தப்பட்ச ஆதார விலையைவிட(MSP) குறைவு. ‘குறைந்தப்பட்ச ஆதார விலையைவிட குறைந்த விலைக்குதான் தனியார் வர்த்தகர்கள் விளை பொருட்களை வாங்குகிறார்கள்’ என்கிறார் ஷிங்காரா சிங்.

பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் நெல், கோதுமையை குறைந்தப்பட்ச ஆதார விலைக்கு மத்திய அரசு வாங்கிவருவது, விவசாயிகளுக்கு ஒரு உறுதியான சந்தை, வருமானத்தை அளிக்கிறது.  ‘வரவிருக்கும் ராபி கால அறுவடைக்கு, தனது கோதுமை பயிருக்கு ஆதாயவிலை கிடைக்குமென’ ஷிங்காரா நம்பிக்கொண்டிருக்கும் அதேவேளையில், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களை எண்ணி கவலையடைகிறார். மத்திய மாநில அரசுகளால் கொள்முதல் செய்யப்படாத இதர பயிர்வகைகளைப் போல நெல்லும் கோதுமையும் அரசாங்கத்தால் இனி கொள்முதல் செய்யப்படாது என்கிறார் ஷிங்காரா.

அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம், விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம், விவசாயிகளுக்கு (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) விலை உத்திரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவை சட்டம் ஆகியவை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்குமென மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இந்த மசோதாக்களின் விதிகள், ‘விவசாய விளை பொருட்களில் தடையற்ற வர்த்தகத்தை அனுமதிப்பதோடு, விவசாயிகள் தங்களது விருப்பப்படி தனியார் முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தம் செய்துக் கொள்ளலாம்’ என்கிறது.

படிக்க :
♦ கார்ப்பரேட் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் புதிய விதை மசோதா !
♦ மிரட்டும் பாஜக : தமிழகத்திலும் வருகிறது என்.ஐ.ஏ கிளை !

‘தனியார் முதலீட்டாளர்களை என்னால் நம்பமுடியாது’:

ஆனால், அரசாங்கத்தின் வாக்குறுதிகளை விவசாயிகள் யாரும் நம்பவில்லை. இந்த வேளாண் மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா (நாடு முழுவதும்) விவசாயிகள் களத்தில் இறங்கியுள்ளனர். தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்த மசோதாக்கள் ‘குறைந்தப்பட்ச ஆதார விலை முறையை’ ஒழிப்பதற்கான முதற்படி என்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலுக்கு தாங்கள் ஆளாகும் வாய்ப்பு அதிகமுள்ளது என்றும் விவசாயிகள் அஞ்சுகின்றனர். இந்த பயம் ஒரு குறிப்பிட்ட விவசாயப் பிரிவினருக்கு மட்டுமல்ல; சிறு, குறு, விளிம்புநிலை தொடங்கி இதர பெரிய, நடுத்தர விவசாயிகளுக்கும் இந்த பயம் தொற்றியுள்ளது. குறு விவசாயிகளும் (இரண்டரை ஏக்கர் வரை சாகுபடி செய்பவர்கள்), சிறு விவசாயிகளும் (ஐந்து ஏக்கர் வரை சாகுபடி செய்பவர்கள்) விவசாயத்திலிருந்து தாங்கள் முற்றிலுமாக வெளியேற்றப்படுவோம் என எண்ணிக் கொண்டிருக்கும் அதேவேளையில், இன்னும் சில ஆண்டுகள் விவசாயத்தில் தாக்குப்பிடித்து நிற்கமுடியுமென நினைத்து கொண்டிருக்கும், ஐந்து ஏக்கருக்கு மேல் பயிரிடும் பெரிய-நடுத்தர விவசாயிகளும், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரிய வர்த்தகர்களுடன் போட்டிப்போட்டு நிற்பது கடினம்.

ஒரு தனியார் நிறுவனத்துடன் வர்த்தகம் செய்த அனுபவத்திலிருந்து ஷிங்காராவுக்கு பயம் திடமாக பற்றிக்கொண்டது. அதிலிருந்து அவர் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதில் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்கிறார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு மதுபான உற்பத்தி நிறுவனம் தனது பயிரை வாங்க முன்வந்ததிலிருந்து பார்லி பயிரை விதைக்கத் தொடங்கியிருக்கிறார் ஷிங்காரா. “அது பீர் தயாரிக்கும் நிறுவனம். அந்நிறுவனத்தில் இருந்து எங்கள் கிராமத்திற்கு வந்து பார்லியை பயிரிட சொன்னார்கள். விளை பொருட்களை குறைந்தப்பட்ச ஆதார விலையைவிட கூடுதலான விலைக்கு கொள்முதல் செய்வதாகவும் தெரிவித்தனர். ஆரம்பத்தில், இரண்டு மூன்றாண்டுகள், 400 ரூபாய் கொடுத்தனர். ஆனால், பின்னர் விவசாயிகள் பலர் பார்லி பயிர் விதைக்கத் தொடங்கியதும் வரத்து அதிகரித்ததும், அந்த உத்திரவாத விலையில் விளை பொருட்களை கொள்முதல் செய்ய தயக்கம் காட்டியது நிறுவனம். பயிரின் தரத்தை காரணம் காட்டி, உற்பத்தியை நிராகரித்தனர் அல்லது குறைந்த விலைக்கு கொள்முதல் செய்தனர். இதனால் 2015க்கு பின் நான் பார்லி பயிரிடுவதையே நிறுத்திவிட்டேன்” என்கிறார் ஷிங்காரா.

15 ஏக்கருக்கு அதிகமான நிலங்களை வைத்திருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு விவசாயி தில்பக் சிங் தன்னை ஏழ்மை நிலைக்கு தள்ளிய இதுபோன்றதொரு கசப்பான அனுபவத்தைப் பகிர்கிறார். “பட்டாணி பதப்படுத்தும் உள்ளூர் நிறுவனம் ஒன்று என்னிடம் பச்சை பட்டாணியை நடவு செய்ய சொன்னது. 2012 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் சார்பாக என்னை அணுகி ஒரு கிலோ பட்டாணிக்கு ரூ.8.5 கொடுப்பதாக கூறினர். இதற்காக சில ஆவணங்களையும் அவர்கள் தயாரித்து கொடுத்தனர். நானும் பயிரிட்டேன். பயிர் தயாரானதும், டிராக்டர் வைத்து 100 மூட்டைகளை (தலா 50 கிலோ பட்டாணி) அந்நிறுவனத்துக்கு எடுத்துச் சென்றேன். ஆனால் அவர்கள் எனது பயிரின் தரம் மோசமாக உள்ளதென காரணம் சொல்லி வாங்க மறுத்துவிட்டனர். இவ்விவகாரத்தில் உள்ளூர் விவசாய சங்கத்தின் தலையீட்டுக்கு பிறகுதான் எனது பயிரை அந்நிறுவனம் வாங்கிக் கொண்டது. பின்னர், ஐந்து ஏக்கர் நிலத்தில் விதைத்த பயிரை ஒரு கிலோவுக்கு ரூ.2-ரூ.3க்கென உள்ளூர் மண்டியில் விற்றேன். இதனால் நான் பெரும் நட்டத்தை சந்திக்க நேர்ந்தது” என்று கூறும் அவர், “என்னால் இனியும் அவர்களை (தனியார் நிறுவனம்) நம்ப முடியாது” என்கிறார்.

மாநிலத்தின் இதர பகுதிகளிலும் நிலைமை இதுதான். ருப்நகர் மாவட்டத்தின் டிப்பா டப்ரியன் கிராமத்தைச் சேர்ந்த தர்மப்பால் சிங், 3 ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரர். சில நாட்களுக்கு முன்பு பாலசவுர் மண்டியில் 25 குவிண்டால் மக்காச் சோளத்தை குவிண்டாலுக்கு ரூ.800க்கு விற்றுள்ளார். “குறைந்தப்பட்ச ஆதார விலையென அரசாங்கம் அறிவித்து என்ன பயன்? நான் சொற்ப(அற்ப) விலைக்குதான் என் பயிரை விற்கிறேன். ஒன்று விவசாய விளை பொருட்களை குறைந்தப்பட்ச ஆதார விலைக்கு அரசு கொள்முதல் செய்யவேண்டும் அல்லது தனியார் வர்த்தகர்கள் இந்த குறைந்தப்பட்ச ஆதரவு விலைக்கு பயிர் வாங்குவதை சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும்” என்கிறார்.

பொது விநியோக முறையின்கீழ் மக்காச்சோளம் விநியோகிக்கப்படாததால்தான் இந்த பிரச்சினையில் அரசு தலையிடவில்லை என்கிறார் பஞ்சாப் விவசாயத் துறையின் இணை இயக்குநர் குர்விந்தர் சிங்.

65 வயதான சுர்ஜித் சிங், எந்தவொரு அரசாங்க ஒழுங்குமுறையும் இல்லாமல் தனியார் வர்த்தகத்தை அனுமதித்தால் வேளாண் விளைபொருள் விற்பனை கமிட்டியின்கீழ் இயங்கும் மண்டிகள் படிப்படியாக ஒழிந்துவிடும் என அஞ்சுகிறார். “ஆர்தியா (தரகு முகவர்) மூலமாக மண்டிக்குள் வர்த்தகம் செய்யப்படுவதற்கு வரி விதிக்கப்படுகிறது. இதில் கிராம அபிவிருத்தி கட்டணம், சந்தைக் கட்டணம் மற்றும் முகவரின் சேவை கட்டணமும் அடங்கும். ஆனால் இந்த மசோதாக்கள் கொண்டு வந்த பிறகு, ஒழுங்குபடுத்தப்பட்ட மண்டிகளுக்கு வெளியே வர்த்தகத்துக்கு எந்த வரியும் விதிக்கப்படாது” என்கிறார் அவர்.

“அதாவது தனியார் வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள் வரி செலுத்த வேண்டியதில்லை என்பதால் விவசாயிகளுக்கு அதிக விலையை வழங்கமுடியும். மண்டிகளில் வழங்கப்படும் விலையைவிட சிறந்த விலையை நிறுவனங்கள் வழங்க தொடங்கியவுடன், இயல்பாகவே விவசாயிகள் தங்களது விளைபொருட்களை அவர்களுக்குதான் (தனியார் நிறுவனங்கள்) விற்க முனைவார்கள். மண்டிகளுக்கு வெளியே வர்த்தகம் நடைபெறுவதால், காலப்போக்கில் மண்டிகள் இல்லாதொழிக்கப்படும். தற்போது கொண்டுவந்திருக்கும் புதிய மசோதாக்களுக்கு எதிராக நான் நிற்பதால், நான் விளைவித்த பாஸ்மதி அரிசியை மண்டி மூலம் மட்டுமே விற்க முடிவு செய்துள்ளேன். ஆனால் எவ்வளவு காலம் இதை என்னால் செய்யமுடியும்? சிறு, குறு விவசாயிகளைவிட சிறந்த வளங்கள் என்னிடம் இருப்பதால் தனியார் வர்த்தகர்கள் அல்லது நிறுவனங்களுடன் ஓரளவுக்கு என்னால் பேரம் பேசமுடியும் (பட்டியாலாவின் லக்கனி கிராமத்தில் இவருக்கு 25 ஏக்கர் நிலம் உள்ளது). இருப்பினும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்ப்பது, தோல்வியை தழுவும் ஒரு யுத்தமாகவே அமையும்” என்று கூறுகிறார்.

உறுதியான பிணைப்பு :

‘விவசாயிகள் இப்போது எங்கு வேண்டுமானாலும் வர்த்தகம் செய்யலாம் என அரசாங்கம் கூறுகிறது’, போக்குவரத்து செலவினைக்கூட விவசாயிகள் தாங்கிக்கொள்ள முடியாத போது இது எப்படி சாத்தியமென கேட்கிறார், 47 வயதான குர்முக் சிங்.

குர்முக் ஒரு சிறு விவசாயி. லக்கனி கிராமத்தில் அவருக்கு நான்கு ஏக்கர் நிலமுள்ளது. அவர் தனது வயலில் நெல் விதைத்துள்ளார். தனது விளைபொருட்களை சேமிக்கவோ அல்லது கொண்டு செல்லவோ எந்தவொரு வாய்ப்பும் இல்லாததால், அவர் மிகவும் ஆதங்கப்படுகிறார். “பயிரை அறுவடை செய்தவுடன், அதனை நான் உள்ளூர் மண்டியிலேயே விற்றுவிடுவேன். தனியார் வர்த்தகர்களிடமிருந்து எனது விளை பொருளுக்கு அதிக விலை கிடைத்தாலும், எனது உற்பத்தியை தொலைதூர இடத்திற்கு எடுத்து செல்வது எனக்கு எளிதானதல்ல. அந்தளவுக்கு எனக்கு வாய்ப்போ வசதியோ இல்லை. எங்கு வேண்டுமானாலும் விற்றுகொள்ளலாம் என்று ஒரு சுதந்திரத்தை அளிப்பதாக இந்த மசோதா உறுதியளித்தாலும், அது நடைமுறையில் எட்டாக் கனியாகவே உள்ளது” என்கிறார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “தனியார் வர்த்தகர்களுக்காக எனது தரகு முகவரை விட்டுக்கொடுக்க முடியாது. ஆர்த்தியாவுடனான (தரகு முகவர்) இந்த உறவு தலைமுறையை கடந்தது. எனக்கு தேவைப்படும்போதெல்லாம் அவரிடமிருந்து பணம் கிடைத்தது. அறுவடை செய்யவேண்டிய பயிருக்கு அவர் முன்கூட்டியே பணத்தை செலுத்திவிடுவார். நம்பிக்கையின் அடிப்படையிலான இத்தகைய உறவு என்பது தனியார் வர்த்தகர்களிடமோ அல்லது நிறுவனங்களிடமோ ஏற்படுவது கடினம்”.

படிக்க :
♦ மருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் ?
♦ கல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE

பட்டியாலாவின் ரன்பிர்புரா கிராமத்திலுள்ள அவ்தர் சிங் இரண்டரை ஏக்கர் நிலம் வைத்துள்ளார். “இந்த பருவ காலத்தில் பயிரிட்ட எனது நெல்லுக்கு முன்பணமாக ஒரு லட்சத்தை எனது தரகு முகவரிடமிருந்து பெற்றுக் கொண்டேன். எனது ஆர்த்தியா முன்பணத்தை எனக்கு கொடுக்காமல் இருந்திருந்தால் நெல் பயிரிட முடியாமல் போயிருக்கும். என்னால் அவருக்கு விற்கப்படும் நெற்பயிரை, குறைந்தப்பட்ச ஆதார விலையில் இந்த அரசு கொள்முதல் செய்யும் என்ற ஒரே நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவர் எனக்கு முன்கூட்டியே பணத்தை வழங்கினார். நெல், கோதுமையை இந்த அரசு குறைந்தப்பட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யவில்லை என்றால், என்னால் இனி எதையும் பயிரிடமுடியாது. உறுதியான உத்திரவாதம் இல்லாமல் எனக்கு இனி யாரும் முன்பணமோ அல்லது நிதி உதவியோ செய்ய முன்வர மாட்டார்கள்” என்கிறார்.

மேலும், ஒழுங்குப்படுத்தப்பட்ட சந்தைக்கு இணையான தனியார் சந்தை செயல்படத் தொடங்கிய பின் சந்தையில் குறைந்தப்பட்ச ஆதார விலை முறை இருக்காதென அவ்தர் சிங் அஞ்சுகிறார். “குறைந்தப்பட்ச ஆதார விலை முறையை விவசாயிகளின் சட்டப்பூர்வ உரிமையாக மாற்ற மற்றொரு மசோதாவை அரசாங்கம் கொண்டுவர வேண்டும்” என்கிறார்.

நிறைவேற்றப்பட்ட புதிய மசோதாக்கள் குறித்து விவசாயிகள் மட்டுமல்ல தரகு முகவர்களும் தொழிலாளர்களும் கவலை கொண்டுள்ளனர். “பலதரப்பட்ட பயிர்களுக்கு இந்த அரசாங்கம் குறைந்தப்பட்ச ஆதார விலையை அறிவித்திருந்தாலும், உண்மையில் கோதுமை, நெல்லுக்கு மட்டுமே குறைந்தப்பட்ச ஆதார விலை மூலம் விவசாயிகள் பயன்பெறுகின்றனர். காரணம் என்னவென்றால் இந்த இரண்டு பயிர்களை மட்டுமே அரசு கொள்முதல் செய்கிறது. இந்த வருடம் கோதுமையை குறைந்தப்பட்ச ஆதரவு விலையில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,925க்கு அரசாங்கம் கொள்முதல் செய்தது. அரசாங்கம் வாங்கிய பிறகு இங்குள்ள மண்டிகளில் இருந்து கோதுமையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,600 முதல் ரூ.1,650 க்கு தனியார் வர்த்தகர்களால் வாங்கப்படுகிறது” என்றவர், “அரசாங்கம் எங்களை சந்தையிலிருந்து அகற்றப்பார்க்கிறது. தொழிலாளர்கள், கடை ஊழியர்கள், சந்தை கூட்டமைப்பின் ஊழியர்களென சங்கிலி தொடராக எத்தனை பேருக்கு இது வேலைவாய்ப்பை வழங்குகிறது என அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என்கிறார் ஆர்த்தியா கூட்டமைப்பின் தலைவர் முல்க் ராஜ் குப்தா.

1990 முதல் பீகாரில் இருந்து பிழைப்பு தேடி பஞ்சாப் மாநிலத்திற்கு வந்திருக்கும் பத்ரி மூக்கையா, மண்டிகளில் வேலை குறைக்கப்படும் என்ற செய்தி கேள்விப்பட்டதும் மீளாத்துயரத்துக்கு செல்கிறார். பத்ரியை போல் பீகாரில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பிழைப்பைத் தேடி பஞ்சாப் மாநிலத்துக்கு வந்துள்ளனர். மண்டிகளில் மூட்டைகளை ஏற்றுவது, இறக்குவது, தானியங்களை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை இவர்கள் செய்து வருகின்றனர். “ஒட்டுமொத்த விவசாயிகளும் மண்டிகளுக்கு வரவில்லையென்றாலும் அல்லது குறைந்த விவசாயிகளே வருகை தருகிறார்கள் என்றாலும் அங்கு எங்களுக்கு குறைவான வேலைகளே இருக்கும். என்னுடன் இங்கு வேலை செய்யும் குறைந்தது 20 பேரின் குடும்பங்கள் இந்த கூலியை நம்பிதான் இருக்கிறது. நாங்கள் நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 400 ரூபாய் வரை சம்பாதிப்போம். இப்போது இதுவும் இல்லையென்றால் சொந்த ஊர்களுக்கு திரும்புவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்கிறார் விரக்தியில்.

கட்டுரையாளர் : விகாஸ் வாசுதேவா
தமிழாக்கம் : ஷர்மி
நன்றி : தி இந்து

டானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் ?

“உறவு கொஞ்சம் புதிதாகவே இருக்கிறது. தறியில் கோர்த்த நூலினைப்போல, இன்னும் பிணைந்து கொண்டிருக்கிறது. நாம் அதை அன்பாலும் ஒருமித்த மனதாலும் வலுவாக்குவோம். நாம் அனைவரும் சேர்ந்து அந்த உறவினைப் பின்னுவோம். அன்பின் பிணைப்பினால், நாம் ஒரு முனையை மற்றொரு முனையுடன் இணைப்போம். வலுவான பிணைப்போடு அவற்றை ஒன்று சேர்ப்போம்..” என்று பின்னணி குரல் ஒலிக்க கர்ப்பிணியாக இருக்கும் தனது இந்து மருமகளை வளைகாப்பு நிகழ்ச்சிக்கு அழைத்து செல்கிறார் ஒரு முஸ்லீம் பெண்.

”அம்மா, இது உங்கள் வீட்டின் வழக்கம் இல்லையே!” என்கிறார் அந்த பெண். அதற்கு அந்த முஸ்லீம் பெண், ”ஆனால், தன் மகளை சந்தோஷமாக வைத்திருப்பது எல்லா வீட்டின் வழக்கம்தானே?” என்று கேட்கிறார். இப்படி இந்து-முஸ்லீம் ஒற்றுமையை பிரதிபலிக்கச் செய்கிறது டாடா குழுமத்துக்கு சொந்தமான தனிஷ்க் நகைக்கடையின் விளம்பரம்.

அந்த விளம்பரம், காலங்காலமாக சாதாரண மக்களிடையே நிலவிவரும் இந்து முசுலீம் ஒற்றுமை குறித்து நமக்கு நினைவூட்டுகிறது. அந்தக் குடும்பத்தின் மகிழ்வோடு நம்மை ஐக்கியமாக்குகிறது அந்த விளம்பரம். ஆனால் இந்துத்துவ வெறி நிரம்பி வழியும் சங்கபரிவாரக் கும்பலின் மூளை இதை எப்படி சிந்திக்கும்? இவ்விளம்பரம் லவ் ஜிகாத்தை ஊக்குவிப்பதாகவும், இந்துக்களின் மனதைப் புண்படுத்திவிட்டதாகவும் கொக்கரிக்கிறது சங்கிகளின் மூளை. தனிஷ்க் நிறுவனத்தின் பொருட்களை புறக்கணிப்போம் என்று டிவிட்டரில் கூச்சலிடுகின்றனர் சங்கிகள்.

படிக்க:
♦ ஒரு சங்கியின் கேவலமான செயல் !
♦ சங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்

மோடியின் குஜராத்தில், ஒரு கும்பல் கட்ச் மாவட்டத்திலுள்ள தனிஷ்க் கடையில் புகுந்து அட்டூழியம் செய்திருக்கிறது. இவ்விளம்பரத்துக்காக கடையின் கிளை மேலாளர் மன்னிப்புக் கேட்பதாக அந்த கடையின் வாயிலில் அக்கும்பலே எழுதியும் வைத்துள்ளது.

மேலும், தனிஷ்கின் மேலாளரான மன்சூர் கான்தான் இந்த விளம்பரம் வெளிவந்ததற்கு முக்கியமான காரணம் என்ற பொய்யான செய்தியும் சங் பரிவார கும்பலால் பரப்பப்பட்டது. தனது (முஸ்லீம்) பெயருக்காகவே மன்சூர் கான் குறிவைத்து தாக்கப்பட்டார். மன்சூரின் சமூக ஊடக கணக்குகள், அவரது புகைப்படம் மற்றும் தொடர்பு எண் ஆகியவை இந்துத்துவா கும்பலால் பகிரப்பட்டு வருகிறது. இவருக்கு பல கொலை மிரட்டல்களையும் விடுத்துள்ளன.

இப்படிப்பட்ட ரகளைகளைத் தொடர்ந்து, தனிஷ்க் நிறுவனம் விளக்கக் கடிதம் ஒன்றை வெளியிட்டு விட்டு அவ்விளம்பரத்தை நீக்கியது. அதில், “இந்த சவாலான காலங்களில் பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்கள், சமூகம் மற்றும் குடும்பங்கள் ஒன்றாக இணைவதைக் கொண்டாடுவதும், அந்த ஒற்றுமையின் அழகைக் கொண்டாடுவதும்தான் ‘ஏகத்வம்’ எனும் பிரச்சாரத்தின் நோக்கம். ஆனால் இந்த விளம்பரமோ ஏற்றுக்கொண்ட நோக்கத்துக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், புண்படுத்தப்பட்ட (இந்துக்களின்) உணர்வுகளுக்கு வருந்துகிறோம். எங்களது பங்குதாரர்கள், கடை ஊழியர்களின் நல்வாழ்வினை கணக்கில் எடுத்துக் கொண்டும் இவ்விளம்பரத்தை நாங்கள் நீக்குகிறோம்” என தெரிவித்துள்ளது.

வலதுசாரி இந்துத்துவ கும்பலின் இச்செயலுக்கு சமூக ஆர்வலர்கள், மனிதவுரிமை செயல்பாட்டாளர்கள் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த விளம்பரத்துக்கு பின்னணி குரல் கொடுத்த நடிகையும் எழுத்தாளருமான திவ்யா தத்தா, “ஆமாம், இந்த விளம்பரத்துக்கு பின்னணி குரல் கொடுத்தது நான்தான். இந்த விளம்பரம் என்னை மிகவும் கவர்ந்தது. இது நீக்கப்பட்டது எனக்கு வேதனையளிக்கிறது” என்ற அவரின் பதிவிற்கு, “உங்களுக்கு எதிராக இதில் எதுவும் இல்லை. இருந்தும் இது தவறான விளம்பரம்” என பதிலளித்தவருக்கு, “ஆமாம் ஐயா, ஆனால் நாம் அனைவரும் சகோதரத்துவத்தை ஊக்குவிக்க வேண்டாமா? வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நமது இந்தியா. இதில்தான் நமது ஆன்மா அடங்கியுள்ளது” என பதிலளித்துள்ளார் திவ்யா தத்தா.

பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர், “ வருந்தத்தக்க முதுகெலும்பற்ற தன்மை மற்றும் தண்டனை..  சமூக ஊடகத்தில் தினசரி ஏராளமான பெண்களும் (ஆண்களும்) கொலை மிரட்டலையும் அச்சுறுத்தலையும் சந்தித்து, எதிர்கொண்டு வருகின்றனர். அவர்க்ள் அதற்கு எதிராக நிற்கின்றனர். ஆனால் ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனமோ தன்மீது கட்டவிழ்த்து விடப்படும் ட்ரோல்களை சில நாட்கள்கூட தாக்குபிடிப்பதற்கான தைரியம் (மற்றும் சக்திகளை) ஒன்று சேர்க்க முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது” என பதிவிட்டுள்ளார்.

பத்திரிக்கையாளர் அனுராதா ஷர்மா, “தனிஷ்கின் மேலாளரை அம்பலப்படுத்தி, ட்ரோலுக்கும் பெருவெறுப்புக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கி, இந்து-முஸ்லீம் ஒற்றுமையை பிரதிபலிக்கும் விளம்பரத்தை நீக்கும்படி மிரட்டிய நபரை நான் அடையாளம் கண்டுகொண்டேன். அவர் பிரதமர் நரேந்திர மோடியால் ட்விட்டரில் பின்தொடரப்படும் நபர்” என்று பதிவிட்டுள்ளார்.

வினீத் ஜெயின் என்பவர், “தனிஷ்க் நேர்மையான மற்றும் அழகான விளம்பரத்தை நீக்கியிருக்கக் கூடாது. வேலையில்லாதவர்கள், மூளையில்லாதவர்கள் பரப்பும் ட்ரோல்கள் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஆயினும், அவதூறு மற்றும் வன்முறையைத் தூண்டுபவர்களை கைது செய்யவேண்டும். சமூக ஊடகங்களுக்கான தனிச் சட்டங்கள் அவசியமானது” என்கிறார்.

மன்மோகன் சிங் பகுஜா, “தனிஷ்க் விளம்பரம் போன்று, நீங்கள் சகோதரத்துவத்தை ஊக்குவிப்பீர்களேயானால், சங் படை உங்களை தாக்கும். ‘ஒற்றுமையை ஊக்குவிக்காதே, பிளவுப்பட்டே இரு’ என்பதையே இது தெளிவுப்படுத்துகிறது” என்று கூறியிருக்கிறார்.

சரங் என்பவர், “நான் நிச்சயமாக சொல்கிறேன். இது ஒன்றும் நகை விளம்பரம் அல்ல” என ஒரு முஸ்லீம் தம்பதியினர் தனது குழந்தைக்கு கிருஷ்ணன் வேடமணித்து அழைத்து போகும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

மத நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை மீது இந்துத்துவா கும்பல் வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பிவருவது இது முதல்முறையல்ல. மோடி ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த பின்னர் தொடர்ந்து இது போன்ற தாக்குதல்கள் நடந்து வருகின்றன. சாதி ஒழிப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரீ ரோஸஸ் விளம்பரத்திற்கு பெருமளவில் எதிர்ப்புத் தெரிவித்தது. அதே போல, மத நல்லிணக்கத்தை வளர்க்கும் விதத்தில் எடுக்கப்பட்ட சர்ஃப் எக்ஸல் விளம்பரத்தையும் சங் பரிவாரக் கும்பல் கடுமையாக எதிர்த்தது. ஆனாலும் அந்நிறுவனம் பின்வாங்காமல் உறுதியாக நின்றது. இதனைப் பலரும் கொண்டாடினர்.

தற்போது சங்கபரிவாரக் கும்பல் எதிர்த்து நிற்கும் டானிஷ்க் நிறுவனத்தின் தாய் நிறுவனமான டாட்டா நிறுவனம் பாஜகவுக்கு நன்கொடையாக சுமார் 800 கோடி ரூபாய் படியளந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. மத அரசியல் செய்வது அவசியப்படும் சூழலில், டாட்டா-வாவது நன்கொடையாவது என்பதுதான் சங்கிகளின் நடைமுறை.

வரலாற்றுரீதியாகவே, தனது சனாதனக் கொள்கைகளை நிலைநாட்டும் வகையிலேயே, முசுலீம்கள் மீதான இந்துக்களின் வெறுப்பை தனி செயல்திட்டமாக வைத்து திட்டமிட்டு பரப்பிவருகிறது. இந்து முசுலீம் மக்களிடையே இயல்பாக இருக்கும் ஒற்றுமையுணர்வை அழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுவரும் சமயத்தில் இந்து முசுலீமுக்கு இடையிலான மகிழ்ச்சிகரமான குடும்ப உறவை உயர்த்திக் காட்டினால், சங்கிகளுக்கு கோபம் வராதா என்ன ?


ஷர்மி

 

கல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE

கொரோனா சமூக வாழ்வின் அனைத்து அவலங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த ஏழு மாதங்களாக பள்ளி/உயர்கல்வி சார்ந்த அறிவிப்புகள் மாநில உரிமைகளை பறித்து மத்தியில் அதிகாரத்தை குவிப்பதாகவும் தனியார் நிறுவனங்களின் நலன்களை முன்னிலைப்டுத்தியும் வந்துள்ளது. கொரானா பரவலினால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களின் தேர்வுகளை மாநில அரசுகள் ரத்துசெய்த போதும் ‘உயர்கல்வி சார்ந்த முடிவுகள் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை’ எனக்கூறி தேர்வை இணையவழியில் நடத்தியதோடு மட்டுமில்லாமல் இணையவழிக் கல்வியை கட்டாயமாக்கியது மோடி அரசு.

தேசியக் கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அனைத்து புதிய அமைப்புகளும் (Regulating body) கல்வியில் மாநில உரிமைகளை பரிப்பவையாகவும் மத்தியில் அதிகாரத்தை குவிப்பவையாகவும் தனியார் கல்வி நிறுவனங்கள் / கொடைவள்ளல்கள்/தன்னார்வு அமைப்புகளை கல்வியில் அனுமதிப்பதாகவுமே உள்ளது. தேசிய மருத்துவ ஆணையமானது (National Medical Commission) நீட் தேர்வை கட்டாயமாக்கியதோடு கல்விக்கட்டணம், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட மருத்துவ கல்வி சார்ந்த அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசிடம் சென்றுள்ளது.

இதனை அம்பலப்படுத்தி பேராசிரியர் கருணானந்தன் உரையாற்றுகிறார் !

பாருங்கள் ! பகிருங்கள் !

 

மருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் ?

doctor-service-in-rural-india-1

வினவு தளத்தில் வெளியிடுவதற்காக கடந்த ஏப்ரல் மாதத்தில் புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழுவால் அனுப்பப்பட்டு வெளியிடப்படாமல் முடக்கப்பட்ட கட்டுரைகளில் ஒன்று இக்கட்டுரை. காலம் தாழ்ந்து வெளியிடப்பட்டாலும் சமூகப் பிரச்சினைகளுக்கு மட்டுமின்றி தமது அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் மருத்துவர்களின் நிலை பாசிச ஆட்சியில் எப்படி இருக்கிறது என்பதை அம்பலப்படுதுதும்  கட்டுரை  இது !

0 0 0

ரோனா நோய்த் தொற்றிலிருந்து மனித குலத்தைக் காப்பாற்ற உலகெங்கும் மருத்துவர்களும், செவிலியர்கள் உள்ளிட்ட துணை மருத்துவப் பணியாளர்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் பலர் இப்போராட்டத்தில் தமது உயிரையும் இழந்து தியாகியாகியிருக்கிறார்கள். அவ்வாறு மனித குலத்திற்காகத் தமது உயிரைப் பணயம் வைத்த மருத்துவர்களுள் குறிப்பிடத்தக்கவர் சீனாவைச் சேர்ந்த 34 வயதான இளம் மருத்துவர் லீ வென்லியாங்.

மருத்துவர் லீ வென்லியாங்தான் கரோனா நோய்த்தொற்றை முதன்முதலில் இனங்கண்டவர். தனது சக மருத்துவர்களிடம் சார்ஸ் போன்று ஒரு புதிய வகையான நோய்த் தொற்று பரவ ஆரம்பித்திருக்கிறதென்ற சந்தேகத்தைப் பகிர்ந்துகொண்டவர்.

சந்தேகங்களும் கேள்விகளும்தான் எந்தவொரு அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையாக இருக்க முடியும். ஆனால், சீன அரசோ, லீ வென்லியாங், தனது சக மருத்துவர்களிடம் பகிர்ந்துகொண்ட இந்த சந்தேகத்தை வதந்தி பரப்புவதாகக் குற்றஞ்சுமத்தியது. வுஹான் மாகாண போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.

ஆனாலும், கடந்த டிசம்பர் மாத இறுதியிலேயே புதிய வகை தொற்றுநோயான கோவிட் 19 வுஹான் மாகாணத்தில் மிகத் தீவிரமாகப் பரவத் தொடங்கி, லீ வென்லியாங்கின் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.  உண்மையைக் கண்டறிந்த தன்னை சீன அரசு  சிறுமைப்படுத்தியது பற்றியெல்லாம் கவலைகொள்ளாது, கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துவந்த லீ வென்லியாங், அந்நோயாலேயே பாதிக்கப்பட்டு இறந்தும் போனார்.

தொழில் அறத்தோடு உண்மையைப் பேசிய அவரது இழப்பு சீன மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான ஆத்திரத்தை உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து சீன அரசு தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்து, “லீ வென்லியாங்கின் அறிவுரையைக் கேட்டிருந்தால், இந்நோய்த்தொற்றை முன்னரே கண்டறித்து, அது பரவுவதைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும். பலர் உயிர் இழந்திருக்கமாட்டார்கள். அவருக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டு லீ வென்லியாங் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோரியிருக்கிறது.

சீனா நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டிருக்கிறது. ஆனால், இங்கு, இந்தியாவில் நிலைமை  என்ன?

படிக்க :
♦ அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றவரின் அனுபவம் !
♦ கோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன ? மருத்துவ நிபுணர்கள் அறிக்கை

தமக்குத் தேவையான முகக் கவசம், பாதுகாப்பு உடைகள் உள்ளிட்டவற்றைப் போதுமான அளவிற்குக் கொடுங்கள் எனக் கோருவதற்குக்கூட மருத்துவர்களுக்கு உரிமையில்லாத நிலைதான் காணப்படுகிறது.

இந்தப் பாதுகாப்பு உபகரணங்களைக் கொடுங்கள் என சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவர்கள் கடிதம் எழுதியதற்காக, அம்மருத்துவர்களுள் ஒருவரான சந்திரசேகரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் இட மாற்றம் செய்து மருத்துவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது, எடப்பாடி அரசு.

மேலும், கடந்த அக்டோபரில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட மருத்துவர்களைப் பழிவாங்கும் விதமாக, அவர்களுள் பலரைத் தொலைதூர கிராமங்களுக்குத் தூக்கியடித்துப் பழிவாங்கியது, தமிழக அரசு. கரோனா நோய்க்குச் சிகிச்சை அளிக்கும் பொருட்டாவது இந்த இடமாற்ற உத்தரவை ரத்து செய்யுமாறு அரசு மருத்துவர்கள் இப்பொழுது  கோரி வருகிறார்கள். அதனைக் காதில் போட்டுக் கொள்ளவே மறுக்கிறது, தமிழக அரசு.

மருத்துவர் கஃபீல்கான்

உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குழந்தை நல மருத்துவர் கஃபீல்கான், தன்னை மீண்டும் பணியில் சேர்த்து கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அவரது இக்கோரிக்கையை பிரதமர் மோடியும் உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத்தும் நிராகரித்துவிட்டனர். அதேபொழுதில் அவரைப் பழிதீர்த்துக் கொள்ளும் வன்மத்தோடு அவர் மீது அடுத்தடுத்து பொய் வழக்குகளைப் போட்டுவருகிறது, உ.பி.மாநில அரசு.

தனது உயிரைப் பற்றிக் கவலை கொள்ளாமல் கரோனா சிகிச்சையில் பங்குகொள்ள விரும்பும் மருத்துவரை உ.பி. இந்துத்துவா அரசு ஏனிப்படி நடத்துகிறது? அப்படியென்ன அவர் குற்றம் இழைத்துவிட்டார்?

கடந்த 2017-ல் உத்திரப்பிரதேசத்தின் கோரக்பூரிலுள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையில் (BRD Hospital) ஆக்சிஜன் பற்றாக்குறையால் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மூச்சுத்திணறி இறந்த சம்பவம் மொத்த இந்தியாவையும் உலுக்கியது. இத்துயர சம்பவத்திற்கு அம்மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் பொறுப்பு மருத்துவராகப் பணியாற்றிய கஃபீல்கான் உள்ளிட்ட மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் காண்ட்ராக்டர் உள்ளிட்ட 9 பேரை பலிகடா ஆக்கியது, உ.பி. மாநில அரசு.

குழந்தைகள் மரணம் குறித்து விசாரிப்பதற்காக அம்மாநிலத் தலைமைச் செயலாளர் ஹிமன்சு குமார் தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணைக் கமிஷன், கஃபீல்கான் கவனக்குறைவாக சிகிச்சை அளித்ததற்கோ அல்லது ஊழல் செய்ததற்கோ எவ்வித முகாந்திரமும் இல்லை என அரசிடம் அறிக்கை அளித்தது. ஆனால், உ.பி அரசோ தான் எதிர்பார்த்தபடி விசாரணை கமிசனின் அறிக்கை வரவில்லை என்பதற்காக, மீண்டும் மறுவிசாரணைக்கு உத்தரவிட்டது. அதேசமயம் கஃபீல்கானோ தான் செய்யாத குற்றத்திற்காக ஒன்பது மாதங்கள் விசாரணைக் கைதியாகச் சிறை தண்டனை அனுபவித்தார்.

ஏப்ரல் 2019-ல் பிணையில் வெளிவந்த கஃபீல்கான், “குழந்தைகளின் மரணம் ஆக்சிஜன் சிலிண்டர் கொள்முதலில் 10% கமிசனுக்கு ஆசைப்பட்ட மனிதர்களின் பேராசையால் ஏற்பட்டது” என்ற உண்மையைப் பத்திரிக்கைகளின் வாயிலாக அம்பலப்படுத்தினார்.

படிக்க :
♦ ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினால் ஊபா UAPA சட்டத்தில் கைதா ?
♦ ஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் !

குழந்தைகளின் மரணத்திற்குக் காரணமான இந்த ஊழலை அம்பலப்படுத்திய கஃபீல்கானை அச்சுறுத்தும் நோக்கில் அவரது தம்பி காஷிஃப் ஜமீல் மீது குண்டர்களை ஏவிவிட்டுத் தாக்குதல் நடத்தியது, ஆதித்யநாத் கும்பல். மூன்று துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையிலும், அவர் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தார்.

இதனிடையே, குழந்தைகளின் மரணத்திற்குப் பொறுப்பாக்கி கிரிமினல் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கஃபீல்கானை, அவ்வழக்கிலிருந்து குற்றமற்றவராக விடுவித்தது, நீதிமன்றம். சட்டப்படி பார்த்தால், நிரபராதியென விடுவிக்கப்பட்ட கஃபீல்கானை உ.பி. மாநில அரசு மீண்டும் அதே பதவியல் அமர்த்தியிருக்க வேண்டும். ஆனால், உ.பி. மாநில இந்துத்துவா அரசோ, அவரை மீண்டும் பணியில் அமர்த்தாததோடு, அடுத்தடுத்து மூன்று முறை பொய்க் குற்றச்சாட்டுக்களின் கீழ் அவரைக் கைது செய்தது. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இதன் பிறகும் பழிவாங்கும் வெறி அடங்காத உ.பி. அரசு, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அலிகார் பல்கலைக்கழகத்தில் கஃபீல்கான் உரையாற்றியதைக் குற்றமாகக் காட்டி, அந்த உரை நிகழ்த்தப்பட்டு 40 நாட்கள் கழிந்த நிலையில், அவர் மீது பல்வேறு கிரிமினல் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்குகளில் கஃபீல்கானுக்கு நீதிமன்றம் பிணை வழங்கிய பிறகும், அவரைத் தொடர்ந்து சிறையிலேயே அடைத்து வைக்கத் திட்டமிட்ட உ.பி. இந்துத்துவா அரசு, பிணை வழங்கப்பட்ட மூன்றாவது நாளில் அவர் மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தைப் பாய்ச்சி, நீதிமன்றம் அளித்த பிணையைக் கழிப்பறை காகிதமாக்கியது.

ஒருபுறம் மருத்துவப் பணியாளர்களுக்காகப் பொதுமக்களைக் கைதட்டித் தமது நன்றியறிதலைத் தெரிவிக்கச் சொன்ன இந்துத்துவா கும்பல்தான் இன்னொருபுறத்தில் கஃபீல்கானை இவ்வளவு குரூரமாக வேட்டையாடி வருகிறது. மருத்துவர் கஃபீல்கான் முசுலீம் என்பதால் மட்டுமல்ல, அவர் அதிகாரத்திற்கு எதிராக உண்மையைப் பேசத் துணிந்தார் என்பதுதான் இதன் பின்னுள்ள காரணம்.

கைதட்டுமாறு சொன்னது இந்துத்துவ பாசிஸ்டுகளின் அரசியல் ஸ்டண்ட்; பழி வாங்குவதுதான் அவர்களது உண்மை முகம்.

உண்மையைத் துணிந்து பேசுவதைக் கண்டுதான் இந்துத்துவ பாசிஸ்டுகள் அச்சங்கொள்கிறார்கள்.

நோய்த் தொற்றுக் காலங்களில் உண்மையைக் கூற வேண்டிய பொறுப்பும் கடமையும் மற்றவர்களைவிட மருத்துவர்களுக்குத்தான் அதிகமுண்டு. அவ்வுண்மையைப் பூசி மெழுகாமல், உரத்துப் பேசுவதன் வழியாகத்தான் நோய்த் தொற்றிலிருந்து மக்களை மட்டுமல்ல, மருத்துவர்கள் தம்மையும் காத்துக்கொள்ள முடியும். ஆளும் இந்துத்துவா கும்பலின் அரசியல் ஸ்டண்டுகளையும் அம்பலப்படுத்த முடியும்.

பூங்குழலி
புதிய ஜனநாயகம்

தொழிலாளர் இயக்கங்களை சீர்குலைக்கும் சாதியவாதமும் தேசியவெறியும் !

தொழிற்சங்க இயக்கமும் – தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி, திசைதிருப்பி, சிதைத்து தவறான திசைவழியில் வழிநடத்தும் மதவெறி, தேசிய வெறியைக் கையாள்வது பற்றியும் !

பாகம் – 2

முதல் பாகம்

1) சாதியவாதம்:

1947-ல் பிரிட்டன் காலனியாதிக்கவாதிகள் தமது ஏகாதிபத்திய நலன்களுக்கு சேவை செய்வதற்காக இந்திய ஆளும் வர்க்கத்தினரிடம் அதிகாரத்தை மாற்றிக் கொடுத்தனர். இந்திய சமூகத்தின் உற்பத்தி முறையானது ஏகாதிபத்திய சுரண்டலுக்கு ஏற்ப அரைக் காலனிய – அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையாகவே பராமரிக்கப்படுகிறது. (இதே போன்ற நிலைமைகள் தான் ஏறக்குறைய எல்லா பிரிட்டனின் காலனிய நாடுகளிலும் நிலவியது; இரண்டாம் உலகப் போருக்குப் பின் அவற்றிலும் ‘சுதந்திரம்’ பிரகடனப்படுத்தப்பட்டது.) இந்தியத் தரகு முதலாளிகளுக்கும், அவர்களின் ஏகாதிபத்திய எஜமானர்களுக்கும், அவர்களின் சொந்த நலன்களுக்காக ‘ஒன்றுபட்ட இந்தியா’ என்பது தொடர வேண்டும் என்பது தேவையாயிருந்தது. இந்த நோக்கத்துடன், ‘இந்து-இந்தி-இந்தியா’ என்கிற கொள்கை மக்கள் மீது திணிக்கப்பட்டு, இந்தியத் துணைக் கண்டமானது பல்வேறு தேசிய இனங்களின் சிறைக்கூடமாக்கப்பட்டது.

இந்திய தொழிலாளி வர்க்கத்தின் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உணர்வுகளுக்குத் தடை போட்ட இந்த தரகு – அதிகார வர்க்க முதலாளித்துவமானது அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளை அப்படியே பாதுகாத்துப் பராமரித்தது. மனு ஸ்மிரிதியின் (பிறப்பின் அடிப்படையிலான வேலைப் பிரிவினையைக் கொண்டுள்ள இந்து மத சட்டம்) அடிப்படையில் தொழிலாளர்களைப் பிரிக்கும் தந்திரத்தைக் கையாண்டனர். இந்தியத் தொழிற்சாலைகளில் சாதி அடிப்படையில் வேலைகள் ஒதுக்கப்பட்டன. கடினமான உடல் உழைப்பைக் கோரும் வேலைகள் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு ஒதுக்கப்பட்டன. இதனடிப்படையில் இரயில்வேக்கள், துறைமுகங்கள், சுரங்கங்கள், தேயிலை – ரப்பர் தோட்டங்கள், இன்ன பிறவற்றில் கடினமான பணிகள் எனப்படும் புளூகாலர் பணிகளில் ஒடுக்கப்பட்ட சாதியினரைக் கொண்டு நிரப்பினர்; வெள்ளைக்காலர் பணி எனப்படும் வங்கிகள், காப்பீட்டுத் துறை, தொலைத் தொடர்பு போன்ற இன்னபிறவற்றில் பார்ப்பனர் உள்ளிட்ட மேல் சாதிகள், ஆதிக்க சாதியினரைக் கொண்டு நிரப்பினார்கள்.

ஆக, இவ்வாறு தொடக்கம் முதலே சாதி அடிப்படையில் தான் தொழிலாளர்கள் பிரிக்கப்பட்டனர் என்பதுதான் வாழ்க்கையின் யதார்த்தம். 1970-களில் நக்சல்பாரி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) புரட்சிகர இயக்கத்தினை எதிர்ப்பதற்காக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நக்சல்பாரி இயக்கத்தின் சமூக அடிப்படைகளாக விளங்கிய ஒடுக்கப்பட்ட மற்றும் மலைவாழ் பழங்குடி மக்களுக்கு காங்கிரசு அரசாங்கமானது வேலை வாய்ப்புகளை வழங்கியது. சிறப்பு வேலைவாய்ப்புத் திட்டங்கள் மூலம் வேலை தந்தது மட்டுமின்றி, ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவினர் தமது சாதி அடிப்படையில் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ள ஊக்குவிக்கப்பட்டனர்.

ஏற்கெனவே இருக்கின்ற தொழிற்சங்கங்களில் இந்து ஆதிக்க சாதியினரே பெரும்பான்மையாகவும், சங்கத் தலைமையிலும் இருந்தனர். எனவே ஒடுக்கப்பட்ட சாதியினரைக் கொண்ட சங்கங்களுக்கென தனியாக வேலைகள் ஏதுமில்லை என்றிருந்தது. இந்தச் சூழலானது பிளவேற்படுத்தும் அடையாள அரசியலுக்கான வாய்ப்பானது மட்டுமின்றி, இது மேலும் பொருளாதாரவாதத்திற்கும், பாராளுமன்றவாதத்திற்கும் இட்டுச் சென்றது.

படிக்க :
♦ தோழர் லெனின் 150வது பிறந்தநாள் நிகழ்வு – புஜதொமு திருவள்ளூர் !
♦ முதலாளித்துவ பயங்கரவாதத்திற்குப் பாடை கட்டுவோம் | புஜதொமு மேதின பொதுக்கூட்டம் பேரணி !

2) புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர் கொள்ளும் தேசியவெறி:

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற புதிய பொருளாதாரக் கொள்கைகள் 1990களில் புகுத்தப்பட்டதன் விளைவாக புதிய தொழிற்சாலைகள் துவக்கப்பட்டன. இந்த ஆலைகளில் பணியமர்த்தப்பட்ட பெரும்பாலான தொழிலாளர்கள் அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகள் நீடித்து நிலவுகின்ற பகுதிகளிலிருந்து வந்தவர்களாயிருந்தனர். இவர்கள் கிராமப் புறங்களில் நிலவிய பாரம்பரிய விவசாயமும் கைத்தொழிலும் அழித்தொழிக்கப்பட்டதன் விளைவாக தொழிலாளர் சந்தையில் கட்டாயமாக திணிக்கப்பட்டவர்கள். தொழிற்சாலைகள் எவ்வளவு நவீனமாயிருந்தாலும், இந்தத் தொழிலாளர்கள் அரை நிலப்பிரபுத்துவ கொத்தடிமைத்தனத்தில் கட்டுண்டவர்களாகவே இருந்தனர்.

மேலே கூறப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைகள் விவசாயம், சிறு வணிகம் மற்றும் சிறிய ஆலைகளை அழித்தது. இவற்றை நம்பியிருந்த பல்லாயிரக்கணக்கான உழைக்கும் மக்களும் தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தைத் தேடி நகரை நோக்கி புலம்பெயர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர். கணிம வளங்கள் மிகுந்த பகுதிகள் தனியாரின் வரம்பற்ற சுரண்டலுக்கு விரியத் திறந்து விடப்பட்டன; வனங்களும் மலைகளும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வேட்டைக் களங்களாயின. பல தலைமுறைகளாக அப்பகுதிகளில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்த பூர்வகுடி மக்கள் தமது பூர்வீக இடங்களிலிருந்து புலம் பெயர்ந்து பிற மாநிலங்களில் உள்ள தொலைதூர இடங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் கூட ஓட வேண்டியதாயிற்று.

அவர்கள் சென்றடைந்த பிற மாநிலங்களோ அல்லது அயல் நாடுகளோ இந்த மக்களை ஒருபோதும் தமக்கு சமமானவர்களாகவோ அல்லது சுதந்திர குடிமக்களாகவோ நடத்தவில்லை. முதலாளிகளுக்கோ இவர்கள் உள்ளூர் தொழிலாளர்களை விட குறைந்த கூலிக்கு உழைப்புச் சந்தையில் கிடைத்த உழைப்புப் பண்டம் என்பதற்கு மேலே வேறு எதுவுமில்லை. இவர்கள் வரம்பற்ற வேலை நேரம், கடின உழைப்பு மற்றும் அபாயகரமான பணிச் சூழலில் கொடூரமாக சுரண்டப்பட்டனர். இந்தக் காரணங்களுக்காகவே உள்ளூர் தொழிலாளர்களால் எதிரிகளாகக் கருதப்பட்டனர்.

உள்ளூர் தொழிலாளர்கள் தமது எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் புலம் பெயர்ந்த இந்தத் தொழிலாளர்கள் தான் காரணம் என பழி போடத் தொடங்கினர். இதுதான் தேசிய வெறிக்கான அடிப்படை. பல தேசிய இனங்களின் சிறைக் கூடமாயுள்ள இந்தியா போன்ற நாடுகளில் பல்வேறு தேசிய இனங்களுக்கிடையிலான அரசியல் வேறுபாடுகள் காரணமாக சம்பந்தப்பட்டவர்களால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுகின்றனர். பீகாரிகள் மும்பையில் தாக்கப்பட்டது, பெங்களூரில் தமிழர்கள் தாக்கப்பட்டது, ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள் மற்றும் இசுலாமியர்கள் அய்ரோப்பாவில் தாக்கப்படுவது என இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன.

உலகம் முழுவதிலும் வலதுசாரி சக்திகள் அரசியல் ரீதியாக வெற்றி பெறுவதை கண்ணெதிரே பார்த்து வருகிறோம். அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப், ரசியாவில் புதின், ஜப்பானில் ஷின்ஷோ அபே, ஆஸ்திரேலியாவில் டோனி அப்பாட், இந்தியாவில் நரேந்திர மோடி என அரசியல் ரீதியாக வெற்றி பெற்ற வலதுசாரி சக்திகளில் சிலர் தான் இவர்கள். தமது நாட்டில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் இந்த புலம் பெயர்ந்தவர்கள் தான் காரணம் என இவர்கள் பழி போடுகின்றனர்.

இந்தப் புலம் பெயர்ந்தவர்களை அப்புறப்படுத்தி விட்டால் உள்ளூர் மக்கள் செழிப்படைவார்கள் என்று கூறுகின்றனர். தமது நாடு மட்டுமல்ல மொத்த உலகமுமே எதிர் கொண்டுள்ள நெருக்கடிக்குக் காரணம் முதலாளித்துவத்தின் லாப வெறியும் பேராசயுமே என்பதை வெற்றிகரமாக மூடி மறைத்து விட்டனர். அது மட்டுமல்ல தொழிலாளி வர்க்க இயக்கத்தை பிளவுபடுத்துவதிலும் வெற்றி பெற்றுள்ளனர். ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேற வழிவகை செய்த பிரெக்சிட் இயக்கத்திற்கு அடிப்படை குறுகிய தேசியவாதமே. பிரான்சில் வரவுள்ள தேர்தலில் அதிதீவிர வலதுசாரியான மேரி லெ பென் வெற்றி பெற வாய்ப்புள்ளதும், புதிய நாஜி கட்சி என சொல்லிக் கொள்ளும் “ஜெர்மனிக்கு மாற்று” என்ற கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு பெருகி வருவதும், இந்த வலது சாரிகளின் செல்வாக்கு தொழிலாளி வர்க்க இயக்கத்திற்குள்ளும் ஊடுருவி அதை பிளவுபடுத்தி, தவறாக வழிநடத்தும் ஆபத்துள்ளதையும் குறிக்கும் அறிகுறிகளாகும்.

கூலி விலையில் ஏற்படும் வீழ்ச்சி மற்றும் வேலையின்மையின் காரணமாக தேசிய வெறி தனது கோர முகத்தைக் காட்டுகிறது. இந்த தேசிய வெறி அற்பக் காரணங்களுக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் தொழிலாளி வர்க்கத்தின் மீது முதலாளித்துவம் கட்டவிழ்த்துவிடும் பயங்கரவாதத்தை மூடி மறைக்கும் திரையாக உள்ளது. தொழிலாளர்கள் ஒரு வர்க்கம் என்ற முறையில் ஒன்றுபடுவதற்கான அடிப்படையைத் தகர்த்து எறிகிறது. தேசிய வெறி மதம், நிறம், மொழி, பிராந்தியம் என எதை வேண்டுமானாலும் கலவரத்தைத் தூண்டுவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தும். ரசியாவில் வெள்ளை நிறவெறி புடினுக்கான அடிப்படையாக அமைகிறது. (டிரம்ப்-பும் அபே-யும் புடினை வெளிப்படையாக ஆதரித்ததையும் டிரம்ப்-பின் வெற்றிக்கு புடின் உதவியதாக சிஐஏ கூறியதையும் இங்கு நினைவு கூறுங்கள்.) இந்தியாவில் பாசிச இந்து அடிப்படைவாதம் வலதுசாரிகளின் ஆயுதமாக சேவை செய்கிறது.

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு ஒரு பெரும் நெருக்கடியின் விளிம்பில் முதலாளித்துவம் உள்ளது, அது உலகையே மிகப்பெரும் பேரிடருக்குள் தள்ளப் போவதாக உணர்கிறோம். இப்படிப்பட்ட சூழலில் மேலே கூறப்பட்ட எந்தவொரு ஆயுதத்தையும் பயன்படுத்தி முதலாளித்துவம் தேசிய வெறியைத் தூண்டலாம். இந்த பேரிடர் அழிவு சக்திகளைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் மிக்கது மார்க்சிய – லெனினியத் தத்துவம் மட்டும் தான். நாம் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் சக்தி மிக்க கொள்கைகளைக் கொண்டுள்ளோம். மார்க்சிய – லெனினிய பதாகையை உயர்த்திப் பிடித்துள்ள தொழிலாளி வர்க்க இயக்கமானது பாசிச சக்திகளின் திட்டங்களுக்கு எதிரான மாற்றை முன்வைத்து தொழிலாளி வர்க்கத்திலான பிளவைத் தடுத்து நிறுத்த முடியும். மார்க்சிய – லெனினியத்தை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது முக்கியமானது. அரசியல், பொருளாதாரப் போராட்டங்களின் ஆதரவோடு சித்தாந்தப் போராட்டத்தை முதன்மைப் போராட்டமாக முன்னெடுக்க வேண்டும்.

படிக்க :
♦ கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ
♦ கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ !

வேலை நிலைமைகளிலான நடவடிக்கைகளோடு தமது நடைமுறைகளை நிறுத்தி விடுகின்ற போக்கை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மிகச் சரியான தருணம் இதுதான். தொழிலாளி வர்க்கம் வேலைத் தளத்திலான நடவடிக்கைகளை அதற்கும் அப்பாலும் தொடர வேண்டும். தனிப்பட்ட ஒரு ஆலைப் பிரச்சினைகளோடு நின்று விடாமல் ஒட்டு மொத்த உள்ளூர் பகுதி அல்லது தொழிற்சாலைகள் அல்லது மாவட்டம் அல்லது பிராந்தியத்தை உள்ளடக்கி தொழிற்சங்கம் உருவாக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட சங்கங்கள் தான் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் சமூக அடித்தளத்தை விரிவுபடுத்தி பலப்படுத்தும். குறிப்பான தொழிலாளர்களின் பிரச்சினைகளோடு நின்றுவிடுகின்ற வழமையான நடவடிக்கைகளை விட்டொழித்து குறிப்பிட்ட பகுதியில் பரந்து பட்ட மக்களை பாதிக்கின்ற அடிப்படையான பிரச்சனைகளை முன்னெடுப்பதன் மூலம் இந்த சமூக அடித்தளம் விரிவுபடுத்தப்படுகிறது.

ஏகாதிபத்திய முகாமானது தனது நலனுக்கு சேவை செய்து வந்த எந்தவொரு கொள்கையையும் அதனுடைய பணி காலம் முடிந்ததும் ஈவிரக்கமின்றி கழித்துக் கட்ட கொஞ்சமும் தயங்கியதில்லை. 1990களில் ஏகாதிபத்திய முகாமால் உருவாக்கப்பட்ட புதிய தாராளவாதக் கொள்கைகளான தனியார்மயம் – தாராளமயம் – உலகமயமானது பன்னாட்டுக் கம்பனிகள் மற்றும் தேசங்கடந்த கார்ப்பரேட் நிறுவனங்கள், வளர்ச்சி குன்றிய மூன்றாம் உலக நாடுகளுக்கு தமது மூலதனத்தை ஏற்றுமதி செய்ததன் மூலம் தமது தொழில் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்திக் கொள்ள உதவின. இந்நாடுகளின் குறைந்த கூலியுழைப்பு, அபரிமிதமான கனிமவளங்கள் மற்றும் இதுவரை சூறையாடப்படாத பரந்து விரிந்த சந்தை ஆகியவை பன்னாட்டுக் கம்பனிகள் மற்றும் தேசங்கடந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் பகாசுர வளர்ச்சிக்கு அடிப்படைகளாக அமைந்தன. சர்வதேச நிதியாதிக்க மாஃபியா குற்றக் கும்பலானது மொத்த உலகையும் ஒரு சூதாட்ட கிளப்பான கேசினோவாக மாற்றியது.

தொடர்ந்து இந்தக் கொள்கைகளைக் கடைப்பிடித்த ஏகாதிபத்தியங்களும் பிற வளர்ந்த முதலாளித்துவ நாடுகளும் இறுதியாக மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டன. பொருளாதாரக் குறியீடுகள் வளர்ச்சியைக் குறித்தாலும் பரந்துபட்ட உழைக்கும் மக்கள் வேலையிழப்பினாலும் பணமதிப்பு வீழ்ச்சியினாலும் சொல்லொணா துன்பதுயரங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். மான்யங்களை வெட்டியதும், மக்கள் நலத் திட்டங்களை ஒழித்துக் கட்டியதும் நெருக்கடியைக் குறைத்து முதலாளித்துவ உலகின் வீழ்ச்சியை தடுப்பதற்கு மாறாக நெருக்கடியை மேலும் ஆழமாக்கி தீவிரப்படுத்தவே செய்தன. தானியங்கிமயமாக்குதல் (Automation) மற்றும் டிஜிடல் மயமாக்குதல் மூலம் லாபத்தை அதிகரித்து நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ள இவர்கள் எத்தனித்தனர். ஆனால் இந்த நடவடிக்கைகளானது தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில் தான் போய் முடிந்ததே தவிர நெருக்கடி தீரவில்லை. மேலும் அதிகரித்தது.

முதலாளித்துவ வர்க்கம் தனது சொந்த அழிவைத் தடுத்து நிறுத்திட முடியாது என்பதை வரலாறு உணர்த்துகிறது. 1914-19ம் ஆண்டுகளில் ஏகாதிபத்திய உலகம் எப்படி இருந்ததோ அதே நிலைமையில் தான் இன்றுள்ளது. அது அன்று நெருக்கடியிலிருந்து மீள என்ன உத்திகளைக் கையாண்டதோ அதே உத்திகளைத் தான் இன்றைய நவீன நிலைமைகளிலும் கையாள்கிறது. அன்று ருசியப் பாட்டாளி வர்க்கம் என்ன செய்ததோ, 20ம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் எப்படி எதிர்கொண்டதோ அதேதான் 21ம் நூற்றாண்டின் துவக்கத்திலும் தேவை என்பதை வரலாறு உணர்த்துகின்றது. முதலாளித்துவ வர்க்கம் வெற்றி கொள்ளப்பட முடியாததல்ல. தொழிலாளி வர்க்கம் அசைக்க முடியாததல்ல. முதலாளித்துவமானது இந்த நெருக்கடிகளுக்குத் தீர்வாக ஏகாதிபத்திய உலகமயமாக்கல் கொள்கையை முன்வைத்து, மூலதனத்தின் ஒற்றிணைவுக்குப் போராடுகிறது.

மேலே தொகுத்துள்ளவைகளின் மூலம் தொழிலாளர் வர்க்கத்தை எப்படிப்பட்ட ஆபத்துக்கள் இன்று சூழ்ந்துள்ளன என்பதைப் பார்க்கிறோம். இதை எப்படி போரிட்டு வெல்வது? தொழிலாளி வர்க்கத்தை எப்படி விடுவிப்பது? யார் இதைச் செய்வது?

மார்க்சிய-லெனினிய பதாகையை உயர்த்திப் பிடிப்போம்

சந்தேகத்துக்கிடமின்றி சரியான மார்க்சிய-லெனினிய அரசியல் நிலைப்பாட்டிலிருந்து வலது மற்றும் இடது விலகல்களை அடையாளம் காணுகின்ற ஆற்றல் மிக்க தலைமையைக் கொண்ட ஒரு அமைப்புதான் இதைச் செய்ய முடியும். அவர்கள் “21ம் நூற்றாண்டின் மார்க்சியம்”, பின் நவீனத்துவம், “அனைத்து அதிகாரங்களுக்கும் எதிராகப் போராடுவோம்”, “வேறொரு உலகம் சாத்தியம்”, அடையாள அரசியல், என்.ஜி.ஓ.க்களின் அரசியலற்ற அரசியல் போக்குகள் மற்றும் முகநூல் குழுக்கள் போன்ற மார்க்சியமற்ற அபத்தங்களையும் அடையாளம் காணக் கூடிய ஆற்றல் மிக்கவர்களாயிருக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக ”மார்க்சியத்தை புதுப்பித்தல்”, “21ம் நூற்றாண்டின் மாறிய நிலைமைகளுக்கேற்ப மார்க்சியத்தை வளர்த்தெடுத்தல்” என்ற மூடுதிரைகளின் பின்னே வரும் மார்க்சிய விரோத முதலாளித்துவ சித்தாந்தங்களான மேலே குறிப்பிட்ட தீமைகளுக்கும் உண்மையான மார்க்சிய-லெனினியத்துக்கும் இடையே தெளிவான சித்தாந்த எல்லைக் கோட்டை வரையறுக்கும் ஆற்றல மிக்க தலைமையாக இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட தீய சிந்தனைகளுக்கு எதிராக இடைவிடாத, ஈவிரக்கமற்ற சித்தாந்தப் போராட்டத்தை நடத்துகின்ற ஆற்றல் மிக்கதாக அந்தத்தலைமை திகழ வேண்டும்.

முதலாவதாக, மார்க்சிய-லெனினியத்தில் தேர்ந்த தெளிவையும் தேர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்ட தலைமைதான் இன்றைக்குத் தேவை. இப்படிப்பட்ட தலைமை ஒன்றுதான் தொழிலாளி வர்க்கத்தை நீர்த்துப் போகச் செய்து, திசைதிருப்பி, பிளவுபடுத்தி, தவறாக வழிநடத்துகின்ற தீமைகளை இடையறாது அடித்து நொறுக்கும். 

இரண்டாவதாக, தற்போது நிலவுகின்ற அரசியல் சூழலுக்கேற்ப நாம் ஒரு மிகச் சரியான அரசியல் மற்றும் செயல் தந்திர திட்டம் வகுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட தருணத்தில் பல்வேறு அரசியல், சமூக, பொருளாதாரப் போராட்டங்களும் மற்றும் மொத்த நாட்டையுமே பாதிக்கின்ற வேறு பல விசயங்களும், பிரச்சனைகளும், சவால்களும் நிலவலாம். இவற்றை எல்லாம் சரியாக ஆய்வு செய்து, இதில் எது மையமானது, முதன்மையானது, அதாவது, பிரச்சினையில் எதை சரி செய்தால் மொத்த பிரச்சனையும் தீரும் என்ற முதன்மையான மையமான அரசியல் பிரச்சனையைக் கண்டறிய வேண்டும்.

இதனடிப்படையில் நாம் ஒரு அரசியல் செயல் தந்திரத்தை வகுக்க வேண்டும் – அரசியல் அரங்கில் கூர்மையான, மையமான அரசியல் முழக்கம், அதற்கேற்ற சரியான போராட்ட வடிவங்கள், அதற்கேற்ப சரியான அமைப்பு முறை – இவை மூலம் இடைவிடாத அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அரசியல் செயல்தந்திர அடிப்படையிலான அரசியல் போராட்டங்கள் தான் முதன்மையான போராட்டமாக இருக்க வேண்டும். பொருளாதாரப் போராட்டங்களோ அல்லது பகுதிக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களோ இந்த அரசியல் போராட்டங்களுக்கு துணை செய்வதாக, இதற்கு கீழ்ப்பட்டதாக இருக்க வேண்டும்.

மூன்றாவதாக, சித்தாந்த மற்றும் அமைப்பு முறைகளில் இருந்து விலகுவதற்கு எதிராக இடைவிடாத போராட்டத்தை முன்னெடுக்கும் அதே வேளையில், பண்பாட்டுச் சீரழிவுகளை அழித்தொழிக்க முறையான, தொடர்ச்சியான, சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். பண்பாட்டுச் சீரழிவை ஒழித்துக் கட்ட தொழிலாளி வர்க்கக் கண்ணோட்டத்திலான நீதிநெறிக் கல்வியும், சீர்செய் இயக்கமும் மிகவும் தேவை. பெரும்பான்மையான தொழிற்சங்க அமைப்புகளில் பண்பாட்டு ஒழுக்கம் பற்றி கணக்கில் கொள்ளாமல் உள்ளனர். பொருளாதாரக் கோரிக்கைகளை விட இதற்குதான் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். அமைப்பு விதிகளில் பண்பாட்டு ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் தரப்படாமல் இருக்கலாம்; ஆனால் அது பற்றிய திட்டம் இருக்க வேண்டும்.

மூடி மறைத்தோ, வெளிப்படையாகவோ ஏற்படும் முதலாளித்துவ சித்தாந்தத்தின் தீய பாதிப்புகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்றால் இந்த மூன்று கடமைகளையும் ஒரே நேரத்தில், எந்த இடை நிறுத்தமுமின்றி தொடர்ச்சியாக நாம் மேற்கொள்ள வேண்டும். இந்த மூன்று கடமைகளையும் உண்மையாக மேற்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். தொழிலாளி வர்க்கத்தின் சிந்தனையிலிருந்து முதலாளித்துவ சித்தாந்தத்தை நீக்க வேண்டும் என்றால் இதைத் தவிர வேறு வழிமுறையோ பாதையோ கிடையாது. மார்க்சியம் என்ற போர்வையில் மறைந்து வரும் முதலாளித்துவ சித்தாந்த மறுகாலனிய ஆயுதங்களிலிருந்து தொழிலாளி வர்க்கத்தை பாதுகாப்பதற்கான ஒரே பாதை இதுவே. இதனூடாகவே பாட்டாளி வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைக்க முடியும்.

  • தொழிலாளி வர்க்க இயக்கத்தை பிளவுபடுத்தி, திசைதிருப்பி, தவறாக வழிநடத்தும் போக்குகளுக்கு முடிவு கட்டுவோம்!
  • பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தைக் கட்டியமைப்போம்!
  • மேல்நிலை வல்லரசின் மேலாதிக்கம் மற்றும் ஏகாதிபத்தியதிற்கு எதிராக தொழிலாளி வர்க்கமும், அனைத்து ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களும் ஒன்றிணைவோம்!


புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தமிழ்நாடு – புதுச்சேரி

கசப்புணர்வுகொண்ட கட்சித் தோழர்களே ட்ராட்ஸ்கியவாதிகளின் இலக்கு! | தோழர் ஸ்டாலின்

0

விவாதங்களுக்குப் பதில் உரை

பாகம் – 4

7 இறுதியாக, மேலும் ஒரு பிரச்சினை. கட்சியின் தனிப்பட்ட உறுப்பினர்களின் தவிர்க்க முடியாத நேரும் விதியைப் பற்றியது. கட்சியிலிருந்து உறுப்பினர்களை வெளியேற்றும் பிரச்சினை பற்றிய அல்லது கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட உறுப்பினர்களை மீண்டும் சேர்த்துக்கொள்வது பற்றிய நமது தோழர்கள் சிலரின் வழக்கமான, இதயமற்ற, அதிகார வர்க்க மனப்பான்மை பற்றிய பிரச்சினைகளை நான் மனதில் கொண்டுள்ளேன். இதில் முக்கியமான விசயமே நமது தலைவர்களில் சிலர் மக்கள் தொடர்பாக, கட்சி உறுப்பினர்கள் தொடர்பாக, தொழிலாளர்கள் தொடர்பாக அக்கறையற்று இருக்கிறார்கள் என்பதுதான். இதைவிட அதிகமாக அவர்கள் கட்சி உறுப்பினர்களை ஆய்வு செய்வதில்லை. அவர்கள் எத்தகைய விருப்பங்களைக் கொண்டிருக்கிறார்கள், எவ்வாறு அவர்கள் வளர்ச்சி பெறுகிறார்கள் என்பதை இவர்கள் தெரிந்து கொள்வதில்லை. பொதுவாக இவர்கள் தொழிலாளர்களைப் பற்றி அறிந்துகொள்வதில்லை. அதனால்தான் கட்சி உறுப்பினர்களுக்கான மற்றும் கட்சி ஊழியர்களுக்கான தனிப்பட்ட அணுகுமுறை இவர்களிடம் இல்லை.

மேலும் தனிப்பட்ட அணுகுமுறை இல்லாத காரணத்தால் கட்சி உறுப்பினர்களையும், கட்சி ஊழியர்களையும் மதிப்பிடுவதில் வழக்கமாக அவர்கள் வெறும் தற்செயலான வழிமுறைகளில் செயல்படுகிறார்கள். ஒன்று, அவர்களை எந்த ஒரு அளவுகோலும் இன்றி ஒட்டுமொத்தமாக பாராட்டுவது அல்லது அவர்களை ஒட்டுமொத்தமாகவும், எந்த அளவுகோலும் இன்றி முழுக்கமுழுக்கப் பழி கூறுவது, கட்சியிலிருந்து ஆயிரக்கணக்கான, பத்தாயிரக்கணக்கான உறுப்பினர்களை வெளியேற்றுவது ஆகியவற்றை மேற்கொள்கிறார்கள். இத்தகைய தலைவர்கள் பொதுவாக அலகுகளைப் பற்றி கவலைப்படாமல், கட்சியின் தனிப்பட்ட உறுப்பினர்களைப் பற்றி கவலைப்படாமல், அவர்களது கதியைப் பற்றி கவலைப்படாமல் பத்தாயிரக்கணக்கானவர்களைப் பற்றி சிந்திக்க முயற்சிக்கிறார்கள். கட்சியிலிருந்து ஆயிரக்கணக்கான, பத்தாயிரக்கணக்கான மக்களை வெளியேற்றுவதை ஒரு ‘வெறும் அற்பம்’ எனக்கருதி, நமது கட்சியில் இருபது இலட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள், பத்தாயிரக்கணக்கானவர்களை வெளியேற்றுவது கட்சியின் நிலையைப் பாதிக்காது என்ற சிந்தனையுடன் தங்களுக்குத் தாங்களே ஆறுதலடைந்து கொள்கிறார்கள். ஆனால், யார் எல்லாம் உண்மையில் ஆழமான கட்சி எதிர்ப்பாளர்களோ அத்தகையவர்கள்தான் கட்சி உறுப்பினர்களிடம் இத்தகைய அணுகுமுறையைக் கொண்டிருப்பார்கள்.

மக்கள் மீதான, கட்சி உறுப்பினர்கள் மீதான, மற்றும் கட்சி ஊழியர்கள் மீதான இந்த இதயமற்ற போக்கின் விளைவாக, கட்சியின் ஒரு பிரிவினரிடையே செயற்கையாக அதிருப்தியும், கசப்புணர்வும் உருவாக்கப்படுகின்றன. மேலும் டிராட்ஸ்கிய இரட்டை வேடதாரிகள் இத்தகைய கசப்புணர்வு கொண்ட தோழர்களிடம் தந்திரமாகத் தூண்டில்களை வீசுகிறார்கள். அவர்களை டிராட்ஸ்கிய சீர்குலைவு சேற்றுக்குள் திறமையாக ஆழ்த்திவிடுகிறார்கள்.

அவர்கள் சொல்வதில் இருந்து எடுத்துக் கொண்டாலும் கூட டிராட்ஸ்கியர்கள் நமது கட்சிக்குள் தங்களை ஒரு பெரும் சக்தியாக ஒருபோதும் காட்டிக்கொண்டதில்லை. நமது கட்சியில் 1927இல் நடைபெற்ற கடைசி விவாதத்தை நினைவு கூருங்கள். அதுதான் கட்சியின் உண்மையான வாக்கெடுப்பு. கட்சியின் மொத்த 8,54,000 உறுப்பினர்களில் 7,30,000 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்றார்கள். இவர்களில் 7,24,000 கட்சி உறுப்பினர்கள் டிராட்ஸ்கியர்களுக்கு எதிராக, போல்ஷ்விக்குகளுக்கு, கட்சியின் மத்தியக்குழுவுக்கு வாக்களித்தார்கள். அப்போது கட்சியின் 4,000 உறுப்பினர்கள், அதாவது அரை சதவீதம் டிராட்ஸ்கியர்களுக்கு வாக்களித்தார்கள். 2,600 கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பதிலிருந்து விலகி நின்றார்கள். 1,23,000 கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

ஏனென்றால், அவர்கள் தொலைவில் இருந்தார்கள், அல்லது இரவு நேரப் பிரிவில் அவர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். டிராட்ஸ்கியர்களுக்கு வாக்களித்த 4,000 பேரோடு வாக்களிப்பிலிருந்து விலகி நின்றவர்களை – அவர்களும்கூட டிராட்ஸ்கியர்களின் மீது அனுதாபம் கொண்டவர்கள் என்ற அனுமானத்தில் – சேர்த்தால், 6,000 ஆகிறது. இத்துடன் வாக்களிப்பில் பங்குபெற வாய்ப்பற்ற 1,23,000 கட்சி உறுப்பினர்களில் உள்ளபடியே அரை சதவீதம் என்பதைத்தான் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதை 5 சதவீதம் என்ற கணக்கில் எடுத்துக்கொண்டு, அவர்கள் டிராட்ஸ்கியர்களுக்கு வாக்களிப்பதாகக் கொண்டால், மேலும் ஏறத்தாழ 6,000 கட்சி உறுப்பினர்கள். அதாவது மொத்தம் 12,000 கட்சி உறுப்பினர்கள் ஏதோ ஒரு வகையில் டிராட்ஸ்கியத்திடம் அனுதாபம் கொண்டவர்கள் ஆவார்கள். இதுதான் டிராட்ஸ்கிய மனிதர்களின் ஒட்டுமொத்த வலிமை ஆகும். இதனோடு சேர்க்க வேண்டிய அம்சம், இவர்களில் பலர் டிராட்ஸ்கியத்தின் மீது கொண்ட பிரமைகளிலிருந்து விடுபட்டு அதைவிட்டு நீங்கிவிட்டார்கள் என்பதாகும்.

மேலும், டிராட்ஸ்கிய சக்திகளின் முக்கியத்துவமற்ற தன்மை பற்றிய ஒரு கருத்துருவை நீங்கள் பெறுவீர்கள். இதற்கு அப்பாலும் இந்த ட்ராட்ஸ்கிய சீர்குலைவாளர்கள் நமது கட்சியைச் சுற்றி சில காத்திருப்புப் படைகளை வைத்திருக்கிறார்கள் என்றால், அது கட்சியிலிருந்து உறுப்பினர்களை வெளியேற்றுவது, மீண்டும் சேர்ப்பது என்ற பிரச்சினையில் நமது தோழர்களின் தவறான கொள்கைகளால்தான். கட்சியில் தனிப்பட்ட உறுப்பினர்களின் கதி பற்றிய , தனிப்பட்ட தொழிலாளர்கள் பற்றிய நமது தோழர்களின் இதயமற்ற நடத்தைகள் ஏராளமான அதிருப்தி கொண்ட மக்களை செயற்கையாக உருவாக்கியது. இவ்வாறு டிராட்ஸ்கியர்களுடைய காத்திருப்புப் படைகளை உருவாக்கியது. ”செயலூக்கம் அற்ற’ என்று அழைக்கப்படும் காரணத்துக்காக மக்களில் பெரும்பங்கினர் வெளியேற்றப்பட்டார்கள்.

‘செயல் ஊக்க மற்ற’ என்றால் என்ன? கட்சியின் ஓர் உறுப்பினர் கட்சித்திட்டத்தில் முழுமையாகத் தேர்ச்சி பெறாதவராக இருந்தால், அவர் ‘செயலூக்கம் அற்றவர்’ என்று கருதப்பட்டு வெளியேற்றுதலுக்கு உள்ளாக்கப்படுகிறார். ஆனால் இது தவறு தோழர்களே. நமது கட்சியின் விதிகளுக்கு ஒரு கறாரான ஆசிரியரைப்போல நீங்கள் விளக்கம் அளிக்கக் கூடாது. கட்சித்திட்டத்தில் முழுவதும் தேர்ச்சிபெற வேண்டுமானால் ஒருவர் பலமுறை முயன்று கோட்பாட்டு ரீதியாகப் பயிற்றுவிக்கப்பட்ட மார்க்சியவாதியாக, உண்மையான மார்க்சியவாதியாக இருக்க வேண்டும்.மது கட்சித் திட்டத்தில் முழுவதும் தேர்ச்சிபெற்ற, உண்மையான கோட்பாட்டு பயிற்சி பெற்ற மற்றும் பரிசோதிக்கப்பட்ட, உண்மையான மார்க்சியவாதிகளாக ஆனவர்களாக நமது கட்சி உறுப்பினர்களில் பலர் உள்ளார்களா என்பது எனக்குத் தெரியாது. இந்தப் பாதையின் வழியை மேலும் நாம் தொடர வேண்டுமானால், அறிவுத்துறையினரையும், கற்றறிந்த மக்களையும் மட்டுமே கட்சியில் விட்டுவைத்திருப்போம். இத்தகைய ஒரு கட்சி யாருக்குத் தேவை? லெனினுடைய, ஒரு கட்சி உறுப்பினர் என்பதை விளக்கும் முற்றிலும் பலமுறை முயன்று சோதிக்கப்பட்ட விதிமுறை நம்மிடம் உள்ளது. இந்த விதிமுறையின்படி கட்சி உறுப்பினர் என்பவர், யார் கட்சியின் திட்டத்தை ஏற்றுக் கொள்கிறார்களோ, கட்சியின் கட்டணத்தை செலுத்துகிறார்களோ, அதன் அமைப்பு ஒன்றில் வேலை செய்கிறார்களோ, அவர்கள்தான். தயவு செய்து கவனியுங்கள்: லெனினின் விதிமுறை, திட்டத்தை முற்றிலும் கற்றுத் தேர்ச்சி அடைவதைப் பற்றி பேசவில்லை. ஆனால், கட்சித்திட்டத்தை ஏற்றுக்கொள்வதைப் பற்றி பேசுகிறது. இவை இரண்டும் மிகவும் வித்தியாசமான அம்சங்கள். இங்கு லெனின் கூறியது சரிதான் என்றும், யார் திட்டத்தில் முற்றிலுமான தேர்ச்சி பெறவேண்டும் என்று சோம்பேறித்தனமாக அரட்டையடிக்கிறார்களோ அவர்கள் நமது கட்சித்தோழர்கள் அல்ல என்றும் நிரூபிக்கவேண்டியது தேவையற்றது. அது கட்டாயம் தெளிவாகியிருக்க வேண்டும்.

எந்தத் தோழர்கள் திட்டத்தில் முழுவதுமாக தேர்ச்சி பெற்றுள்ளார்களோ, தத்துவார்த்த ரீதியாகப் பயிற்சி பெற்றவர்கள் யாரோ, அவர்கள் மட்டுமே கட்சி உறுப்பினர்களாக வரமுடியும் என்ற அனுமானத்திலிருந்து கட்சி நடைபோடத் தொடங்கி இருந்தால், அது ஆயிரக்கணக்கான கட்சி வகுப்புகளையும், நூற்றுக் கணக்கான கட்சிப் பள்ளிகளையும் உருவாக்கியிருக்காது. அங்கு கட்சி உறுப்பினர்களுக்கு மார்க்சியம் கற்றுத் தரப்படுகிறது. அங்கே அவர்கள் நமது கட்சித்திட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆக உதவி அளிக்கப்படுகிறது. நமது கட்சி அத்தகைய பள்ளிகளையும், வகுப்புகளையும் கட்சி உறுப்பினர்களுக்காக அமைக்கிறது. ஏனென்றால், நமது கட்சி உறுப்பினர்கள் இன்னும் கட்சித் திட்டத்தில் முழுமையான தேர்ச்சி பெறவில்லை, இன்னும் கோட்பாட்டு ரீதியாகப் பயிற்சிபெற்ற மார்க்சியவாதிகள் ஆகவில்லை என கட்சி அறிந்திருக்கிறது என்பது மிகவும் தெளிவாகிறது.

இதன் விளைவாக, கட்சி உறுப்பினர் பிரச்சினை பற்றிய நமது கொள்கையையும், கட்சியிலிருந்து வெளியேற்றுவது பற்றியும் திருத்தி அமைப்பதற்காக, ‘செயலூக்கமற்ற’ என்ற பிரச்சினைக்கான தற்போதைய முட்டாள்தனமான விளக்கத்துக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

படிக்க :
♦ சீர்குலைவுவாதிகளோடு தொடர்புடையவர்களைக் கையாளுவது எப்படி ? || தோழர் ஸ்டாலின்
♦ ‘புரட்சிகர’ சதிகாரர்களின் ரிஷி மூலம் !

ஆனால் இந்தத் தளத்தில் இன்னொரு தவறும் இருக்கிறது. நமது தோழர்கள் இந்த இரண்டு உச்ச நிலைகளுக்கும் இடையே உள்ள எந்த அர்த்தத்தையும் அறிந்து கொள்ளவில்லை என்பதுதான் அது. ஒரு தொழிலாளி, ஒரு கட்சி உறுப்பினர் கட்சிக் கூட்டங்களுக்கு ஒரு முறையோ அல்லது இரண்டுமுறையோ தாமதமாக வருவதும், அல்லது கட்சி உறுப்பினர் நிலுவையை செலுத்தத் தவறுவதும் அவர் மீது தாக்குதல் தொடுக்க, கட்சிக்கு வெளியே தூக்கியெறியப்படப் போதுமானதாக இருக்கிறது. எந்த அளவுக்கு அவர் குற்றம் சாட்டப்பட வேண்டும்? அவர் ஏன் கூட்டங்களுக்கு வரத்தவறினார்? அவர் தனது நிலுவையைச் செலுத்தாததற்குக் காரணம் என்ன? இவற்றைப் பற்றி அறிந்து கொள்ள எந்த ஆர்வமும் காட்டப்படுவதில்லை. இந்தப் பிரச்சினைகளின் மீதான அதிகாரவர்க்க அணுகுமுறையானது நேர்மறையாக பார்த்தால் இதுவரை நிகழ்ந்திராத ஒன்றாக வெளிப்பட்டு உள்ளது.

அற்புதமான, திறமைமிக்க தொழிலாளர்கள், அற்புதமான ஸ்டகநோவியர்கள் தாங்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கு இந்த இதயமற்ற கொள்கை முடிவுதான் துல்லியமான காரணம் என்பதைப் புரிந்து கொள்வது கடினமானதல்ல. ஒரேயடியில் அவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றாமல், அவர்களைக் கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கு முன், அவர்களுக்கு எச்சரிக்கை தருவது சாத்தியமற்றதா? அல்லது அதற்கு எந்த விளைவும் இல்லை என்றால், அவர்களைக் கடிந்துரைப்பதும், கண்டிப்பதும் சாத்தியமற்றதா? அதுவும்கூட எந்த விளைவையும் ஏற்படுத்தாவிட்டால், அவர்களை குறிப்பிட்ட காலத்துக்கு சோதித்து அறியும் நிலையில் வைத்திருப்பது அல்லது உச்சகட்ட நடவடிக்கையாக அவர்களை தேர்வு நிலை உறுப்பினர் நிலைக்குத் தரம் குறைப்பதும் சாத்தியமற்றதா? உண்மையில் அது சாத்தியம்தான். ஆனால் இது மக்கள் மீதான, கட்சி உறுப்பினர்கள் மீதான, கட்சி உறுப்பினர் கதியின் மீதான அனுசரணையைக் கோருகிறது. மேலும் இதில்தான் நமது தோழர்களில் சிலர் பின்தங்கியிருக்கிறார்கள்.

இந்த வெட்கக்கேடான நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம், சரியான நேரம் இதுதான் தோழர்களே. (கைதட்டல்கள்)

பிராவ்தா
1 ஏப்ரல் 1937

(முற்றும்)

நூல் : ஜே.வி.ஸ்டாலின் தொகுப்பு நூல்கள் – தொகுதி -14
கிடைக்குமிடம் :
அலைகள் வெளியீட்டகம்
5/1 ஏ, இரண்டாவது தெரு, நடேசன் நகர், இராமாபுரம்,
சென்னை – 600 089
தொடர்புக்கு : 98417 75112

தொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தும் பண்பாட்டுச் சீரழிவுகள் || புஜதொமு

கொரோனா பெருந்தொற்று சமயத்தில் பாட்டாளி வர்க்கத்தின் உரிமைகளை சட்டரீதியாகவும், சட்டவிரோதமாகவும் மோடி அரசு பறித்துக் கொண்டிருந்த சமயத்தில் சூழல் கருதி கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 2-5 தேதிகளில் தெலங்கானா மாநிலம் கோதாவரி ஹானியில் நடந்த சர்வதேச சுரங்கத் தொழிலாளர்களின் இரண்டாவது மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் தமிழாக்கம் கடந்த ஜூலை மாதம் வினவு தளத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் அனுப்பப்பட்டிருந்தது.

அன்றைய சூழலுக்கு அவசியமான அரசியல் முக்கியத்துவமிக்க இந்தக் கட்டுரை அச்சமயத்தில் முன்னாள் பொறுப்பாசிரியரால் வெளியிடப்படாமல் முடக்கப்பட்டிருந்தது. அதனை இப்போது இரண்டு பகுதியாக வெளியிடுகிறோம் ! அரசியல் முக்கியத்துவமிக்க இந்தக் கட்டுரையின் முதல் பகுதி, தொழிலாளி வர்க்கம் எப்படிப்பட்ட பண்பாட்டு சிக்கலில் சிக்கியுள்ளது என்பதை பற்றியும் அதிலிருந்து தொழிலாளி வர்க்கத்தை மீட்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் ஆக்கபூர்வமான வழிமுறைகளை முன் வைக்கிறது. இதன் இரண்டாவது பகுதி தொழிலாளிவர்க்கத்தை பிளவுபடுத்தும் பிரதானமான பிரச்சினைகளான சாதியவாதம் மற்றும் தேசியவாதப் பிரச்சினைகளைப் பற்றி அலசுகிறது !

  • வினவு

0 0 0

தொழிற்சங்க இயக்கமும் தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி, திசைதிருப்பி, சிதைத்து தவறான திசைவழியில் வழிநடத்தும் மதவெறி, தேசிய வெறியைக் கையாள்வது பற்றியும்!

தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி, திசைதிருப்பி, சிதைத்து தவறான திசைவழியில் வழிநடத்துவது பற்றிய சிக்கல்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுவது மட்டுமின்றி ஒவ்வொரு நாட்டிற்கும் குறிப்பானதுமாகும். ஆனால் சில சிக்கல்கள் எல்லா நாடுகளுக்கும் பொதுவானதாயிருக்கும். அதாவது சக தொழிலாளர்களை அன்னியர்களாக, போட்டியாளராக, தன்னுடைய வாழ்வாதாரத்தைப் பறிப்பவராக, எதிரியாக, தன்னை விடக் கீழானவராக…. இப்படிப்பட்ட சில சிக்கல்கள் இருக்கின்றன. இவை மதவெறி, தேசிய வெறி, இனவெறி, அன்னிய நாடு வெறுப்பு, பிராந்திய வாதம், மத அடிப்படை வாதம், சாதி வெறி, மொழி வெறி, ஆணாதிக்கப் போக்கு, பெண்ணியவாதம், இசுலாமிய வெறுப்பு…  என பல காரணங்களால் இந்த வெறுப்பு உருவாகிறது. தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எல்லா துயரங்களுக்கும் அடிப்படையானது முதலாளித்துவத்தின் கொடூர சுரண்டல்தான் காரணம் என வெளிப்படையாகத் தெரிந்தாலும் மேற்கூறிய பிளவுபடுத்தும் மற்றும் தவறாக வழிநடத்தும் போக்குகளால்  சக தொழிலாளிதான் இந்தத் துயரங்களுக்குக் காரணம் என தொழிலாளி வர்க்கத்தை நம்ப வைக்கிறார்கள்.

வலது சந்தர்ப்பவாதமும், இடது தீவிரவாதமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். வலது சந்தர்ப்பவாதம் எதிரியைப் பற்றி மிகை மதிப்பீடு செய்யும் போது இடது சந்தர்ப்பவாதமோ எதிரிகளைப் பற்றி மிக எளிதானதாக அற்பமானதாக மதிப்பீடு செய்கிறது. ஆக, இந்த வலது மற்றும் இடது சந்தர்ப்பவாதங்கள் தொழிலாளி வர்க்கத்தை தவறாக வழி நடத்துவதில் முக்கிய பாத்திரமாற்றுகின்றன. வலது சந்தர்ப்பவாதம் சமரசவாதம், திரிபுவாதம், சீர்திருத்தவாதம் மற்றும் பாராளுமன்றவாதப் பாதையில் தொழிலாளர்களை இழுத்துச் சென்று தொழிற்சங்கவாதத்திற்குள் தள்ளி கேடு கெட்ட பொருளாதாரவாதம், பிழைப்புவாதம் மற்றும் சந்தர்ப்பவாத சகதிக்குள் மூழ்கடிக்கிறது.

படிக்க :
♦ தொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை !
♦ தொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் !

வலது சந்தர்ப்பவாத்த்தின் கள்ளக் குழந்தைதான் திரிபுவாதம். ‘21-ம் நூற்றாண்டின் சோசலிசம்’, ’மற்றொரு உலகம் சாத்தியமே’, ’பின் நவீனத்துவம்’, ’அனைத்து அதிகாரத்தையும் எதிர்ப்போம்’ என கவர்ச்சிகர முழக்கங்களின் கீழ் வரும் இது தொழிலாளி வர்க்கத்தை தவறாக வழி நடத்தி மூலதனத்தின் நலனுக்கு சேவை செய்கிறது. இவையெல்லாம் கூலியடிமைத்தனத்தின் நுகத்தடியிலிருந்து தொழிலாளி வர்க்கம் தன்னை விடுவித்துக் கொள்வதற்கு தடைகளாக உள்ளன. இந்தக் குறுகிய கண்ணோட்டங்கள் மட்டுமின்றி அடையாள அரசியல் போன்ற வேறு சில அரசியல் கோட்பாடுகளும் தொழிலாளர்களை பிரித்து, திசை திருப்பி, தவறாக வழி நடத்துகின்றன. இந்த அடையாள அரசியல் தொழிலாளிகளைப் பிளவுபடுத்தி ஒவ்வொரு தொழிலாளியையும் தனித்துவம் மிக்கவர் என அடையாளப்படுத்தி வர்க்க ஒற்றுமையைச் சிதைக்கிறது.

முகநூல் குழுக்கள், கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) குழுக்கள் உட்பட சமூக ஊடகக் குழுக்களால் கட்டவிழ்த்துவிடப்படும் அராஜகவாதம் என்பது மற்றொரு அபாயம். ஒரேயொரு விவாதம் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களை அணிதிரட்டுகின்ற ஆற்றல் இந்த சமூக ஊடகங்களுக்கு உண்டு. எந்த ஒரு சிக்கலுக்கு அணி திரட்டுவதென்றாலும் இவை ஈர்க்கும்படியான முழக்கங்களை முன்வைக்கும். அந்த சிக்கல் தீர்ந்ததும் அணிதிரண்டவர்களை மிக கவனமாக இக்குழுக்கள் கலைத்து விடும். “அரசியல் இல்லை; அமைப்பு வடிவம் இல்லை; மையப்படுத்தப்பட்ட அமைப்பு கிடையாது; ஜனநாயக உணர்வு கிடையாது!” என மக்களிடம் இக்குழுக்கள் பிரச்சாரம் செய்கின்றன.

அரசு சாரா நிறுவனங்கள் (என்.ஜி.ஓ) தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு மிக மிக ஆபத்தானவை. சுற்றுச் சூழல் மாசு, குழந்தைத் தொழிலாளர்கள், பழங்குடிகளை முன்னேற்றுவது போன்ற பல விசயங்களைக் கையிலெடுத்து ‘இணை அரசாங்கத்தை’ இந்த என்.ஜி.ஓ.-க்கள் நடத்துகின்றன. இந்த அமைப்புகள் அரசு எந்திரத்துடன் அதன் கையாட்களாக செயல்பட்டுக் கொண்டே மறுபுறம் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக உழைக்கும் மக்களை அணிதிரட்டும் வேலைகளையும் செய்வார்கள். “அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம்” என்ற போர்வையில் உழைக்கும் மக்கள் வர்க்கமாக தமக்குரிய ’வர்க்க அமைப்பு’களில் அமைப்பாகத் திரள்வதைத் தடை செய்கின்றன இந்த என்.ஜி.ஓ.-க்கள். சிறிய, பகுதிக் கோரிக்கைகளுக்குள்ளாக தொழிலாளி வர்க்கத்தை முடக்குகின்ற வேலைகளை இந்நிறுவனங்கள் செய்கின்றன.

குறிப்பான சிக்கலை ஒட்டி போராட்டங்களை கட்டமைக்கும் இந்நிறுவனங்கள் பரந்துபட்ட மக்களை அணிதிரட்டும் அரசியல் இயக்கங்களை ஒருபோதும் முன்னெடுப்பதில்லை. ஆற்றல்மிக்க எஃகுறுதிமிக்க அமைப்புகளைக் கட்டுவதற்கு பதிலாக தொளதொளப்பான அமைப்பு வடிவங்களையே என்.ஜி.ஓ.-க்கள் பிரச்சாரம் செய்கின்றன. இந்த அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுப்பதிலும் உறுதியான போராட்டங்களுக்கு பதிலாக மிக தாராளவாதமாகவும் விழாக்கால கொண்டாட்ட மனநிலையிலும் மக்களைத் திரட்டுகின்றன. இந்த வகையான அழிவுத் தன்மையுடன் செயல்படும் இந்த என்.ஜி.ஓ. நிறுவனங்கள் தொழிலாளி வர்க்கத்தை தவறாக வழிநடத்தி, அவர்களுக்கு துரோகமிழைப்பதில் முக்கிய பாத்திரமாற்றுகின்றன.

இடது தீவிரவாதமோ சாகசவாதம், பயங்கரவாதம், எதிரி பற்றிய குறைவான மதிப்பீடு, அகநிலை மற்றும் புற நிலைமைகளைப் பற்றி மிகையான கற்பனையான மதிப்பீடுகளுக்கு இட்டுச் சென்று தொழிலாளி வர்க்கத்தின் எஃகுறுதிமிக்க அமைப்பு ஒற்றுமைக்கு பதிலாக குறுகிய குழுவாதத்திற்கு தொழிலாளர்களைக் கொண்டு செல்கின்றன. இடது விலகள் தவிர்க்கவியலாமல் தொழிலாளி வர்க்க இயக்கத்தை பேரழிவுகளுக்குத் தள்ளுகின்றன. இவ்வகையான குழுக்கள் நிலவுகின்ற அரசியல் நிலைமைகளை மதிப்பீடு செய்வதிலும் அதற்குப் பொருத்தமான மக்கள் திரள் அரசியல் இயக்கத்தை வடிவமைப்பதிலும் தோல்வியுறுகின்றன. இயந்திரகதியான, இயக்கமறுப்பியல் தன்மை கொண்ட இவ்வகையான குழுக்கள் தொழிலாளர் வர்க்க இயக்கத்தை பேரழிவுகளுக்கு இட்டுச் செல்கின்றன.

மூலதனத்தின் கையிலுள்ள மற்றொரு பேரழிவு ஆயுதம் தொழிலாளர் வர்க்கத்தின் மீதான பண்பாட்டுத் தாக்குதல்களாகும். தொழிலாளர்களின் ஓய்வு நேரத்தில் ஓய்வின்றி இடையறாது தாக்குதல்களை நடத்தி பண்பாட்டு ரீதியாக அவர்களை சீரழிக்கின்றன. “வரம்பற்ற சுதந்திரம்; வரம்பற்ற நுகர்வு” என்ற முழக்கங்களை முன்வைத்து தொழிலாளர்களை சிந்தனை ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சீரழித்து வருகின்றன. நுகர்வியமானது கண்ணில் கண்ட அனைத்துப் பொருட்களையும் அடைய வேண்டும் என்ற பேராசையை தொழிலாளிக்கு ஊட்டி, அதை அடைவதற்கு எந்தக் கொடூரங்களையும் புரியலாம் என்ற மனநிலைக்குத் தள்ளுகின்றன. தமது நுகர்வு மோகத்திற்கு குறுக்கே எந்த விதமான தடைகள் வந்தாலும் அவற்றைக் கடப்பதற்கு எல்லா விதமான நீதிநெறிகள், நன்நெறிகள், ஒழுக்கம் மற்றும் தன்மானத்தை உதிர்த்து விடுவது என்பதை இந்தப் பண்பாடு தொழிலாளிகளுக்குக் கற்பிக்கிறது. இந்தப் பண்பாட்டுச் சீரழிவுகள் தொழிலாளிகளை தனது நுகர்வியத்திற்காக எந்தவிதமான கிரிமினல் நடவடிக்கைகளையும் செய்வதற்கு இட்டுச் செல்கிறது.

போதைப் பழக்கத்திற்கு அடிமைப்படுவது மற்றொரு பண்பாட்டுச் சீரழிவு. இது தொழிலாளி வர்க்கத்தை சாவுக்கு இட்டுச் செல்லுகிற ஒரு பொறி. கோகெய்ன் முதல் பான்பராக் வரை எண்ணற்ற போதைப் பழக்கங்கள் தொழிலாளர்களைச் சுண்டியிழுத்து சவக்குழிக்கு அனுப்புகிறது. சர்வதேச அளவிலான போதை வியாபாரத்தின் மதிப்பு கோடானு கோடி ரூபாயாகும். சில வகை போதைப் பொருட்கள் நார்கோடிக் என வகைப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், பான்பராக் போன்ற சில பொருட்கள் இந்தியா உட்பட சில நாடுகளில் சட்டப்படியே விற்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. மார்வாரி, பனியா சாதிகளைச் சேர்ந்த பகாசுர போதைப் பொருள் விற்பனையாளர்கள் சர்வதேச அளவில் வலைப்பின்னலைக் கொண்டிருப்பதோடல்லாமல் அரசு எந்திரத்தின் ஆதரவையும் கொண்டுள்ளனர். உண்மையில், ஏறக்குறைய எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் இந்த “போதை லார்ட்”டுகள் நிதியை வாரி வழங்குகிறார்கள். இந்த போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் பாதி மிருகங்களாக மாற்றப்பட்டுவிடுகிறார்கள்!

இந்த போதைப் பழக்கம் மட்டுமின்றி மற்றொரு பண்பாட்டுச் சீரழிவாக வலைதள போதை உள்ளது. தொழிலாளி வர்க்கத்தின் இயல்பான நன்நெறிப் பண்புகளை வெட்டி வீசுகிறது இந்த வலைதள போதை. இந்த வலைதள மோகமானது தொழிலாளர்களை நுகர்வு மோகத்திற்கும் நீதிநெறியற்ற நடவடிக்கைகளுக்கும் இழுத்துச் செல்கிறது. ஆபாச, நிர்வாணப் படங்களைப் பார்ப்பது மிகமிக மோசமான, சீரழிவான மற்றும் அழிவுகரமான ஒன்று. இந்த வலைதள மோகமானது தொழிலாளகளின் சமூக உணர்வை மழுங்கடிப்பதோடல்லாமல் அவர்களின் சுயமரியாதை உணர்வுகளையும் மழுங்கடிக்கிறது. இத்தோடு வீடியோ விளையாட்டுகள், செல்பி மோகம், வலைதளத்தில் அளவளாவுவது மற்றும் பல்வேறு வலைதள நிகழ்வுகள் தொழிலாளர்களை திசைதிருப்புவதோடல்லாமல் அவர்களின் அன்றாட வர்க்க நடவடிக்கைகளையும் ஒழித்துக் கட்டுகிறது.

இந்தப் பண்பாட்டுத் தாக்குதல்கள் தொழிலாளி வர்க்கத்தை கொத்துக் கொத்தாக பிழைப்புவாதிகளாகவும் சந்தர்ப்பவாதிகளாகவும் மாற்றி இவை பற்றி எந்தக் குற்ற உணர்வுமற்றவர்களாக அவர்களைச் சீரழிக்கிறது. இது அவர்களை தான், தனது என்கிற மிகக் குறுகிய தனிநபர் முன்னேற்றம் என்பதில் தள்ளி சுயநலப் பிண்டங்களாக மாற்றிவிடுகிறது. இந்தத் தனிநபர்வாதமானது மிகமிக உறுதியானதாக இருக்கிறது. எந்த அளவுக்கு என்றால் தொழிலாளி வர்க்கம் அனுபவித்து வருகின்ற இந்த தொழிற் பாதுகாப்பாயிருக்கட்டும், ஜனநாயக உரிமைகளாகட்டும் இவையனைத்தும் பல ஆண்டுகளாக தொழிலாளர்கள் தமது ஒன்றுபட்ட கூட்டுப் போராட்டங்களாலும் போராட்டக் களத்தில் எண்ணற்ற தியாகங்களைச் செய்தும் பெற்றவை என்ற உண்மைகளைக் கூட உணராத அளவுக்கு உள்ளது. தனிநபர் வாதமானது ஒருவரின் ஜனநாயக உரிமைகளைப் பற்றிய உணர்வையே உணரச் செய்யாத அளவிலிருப்பதால் மற்றவர்களுடைய உரிமைகளையும் மறுக்கிறது.

மாறிவரும் உலக நிலைமைகளில் முதலாளித்துவ பயங்கரவாதமானது அதனுடைய கொடூரச் சுரண்டலையும் ஒடுக்குமுறைகளையும் மாற்றிக் கொள்கிறது. மிகச் சமீபத்திய ஒரு சுரண்டலின் வடிவம் ஒப்பந்த மயமாக்கமாகும். ஒப்பந்தமயமாக்கல் தொழிலாளி வர்க்கத்தை பொருளாதார ரீதியாக மட்டும் சுரண்டுவதோடன்றி, மேலும் அவர்களை நிரந்தரத் தொழிலாளி, ஒப்பந்தத் தொழிலாளி என இரண்டு எதிரெதிர் முகாம்களாகப் பிளவுபடுத்துகிறது. இது தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையினிடத்தில் பெரும் பிளவை உருவாக்குகிறது. பல்வேறு ஒப்பந்தமயமாக்கல்களும் துணை ஒப்பந்தமயமாக்கல்களும் வேகமாக நடைமுறைப்படுத்தப்பட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்கள் மத்தியிலேயே பிளவையும் பகைமையையும் ஏற்படுத்தியுள்ளது.

படிக்க :
♦ சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் !
♦ ‘புரட்சிகர’ சதிகாரர்களின் ரிஷி மூலம் !

காரியவாதக் கண்ணோட்டம் கொண்ட தொழிலாளர்கள் எதை அடைய நிணைக்கிறார்களோ அதை அடைவதற்கு எந்த எல்லைக்கும் செல்லத் தயாராயுள்ளனர். தமக்கான தனிப்பட்ட சிறிய இழப்புகளையோ தியாகத்தையோ மிக மோசமாக வெறுக்கும் இந்தத் தொழிலாளி தான், தான் விரும்புவதைப் பெறுவதற்காக சக தொழிலாளர்களுக்கு துரோகமிழைக்கத் தயாராகிறார்கள்; தனது எஜமானர்களின் காலை நக்கிப் பிழைக்கத் தயாராகிறார்கள்; ஒட்டு மொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் முதுகில் குத்தத் தயாராகிறார்கள். தமக்கான வேலைகளை வேறு யாராவது செய்து தர வேண்டும் என காத்திருக்கிறார்கள். சுருக்கமாக, பாட்டாளி வர்க்கத்தின் உயர்வான மதிப்பீடுகளை, உன்னதப் பண்புகளை முதலாளித்துவம் முற்றாக அழித்தொழித்துவிட்டது. ஒருவர் தமது உழைப்பால் உழைத்து வாழ வேண்டும் என்பதை மாற்றி, குறுக்கு வழியில் பணத்தையும் வெற்றியையும் அடையலாம் என்றாக்கி விட்டது. இந்தப் பண்புகளுக்கு பலியாகின்ற தொழிலாளர்கள் வர்க்க உணர்வை இழந்து, தனி நபர்களாக தனிமைப்பட்டு வர்க்க ஒற்றுமைக்கு உலைவைக்கிறார்கள்.

மேலே கூறப்பட்டவைகளின் புரிதலிலிருந்து, சாதியவாதமும், தேசிய வெறியும் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தி, திசைதிருப்பி, தவறாக வழிநடத்தும் இரு பெரும் பிரச்சினைகள் என மதிப்பிடுகிறோம்.

(தொடரும்)

புஜதொமு
தமிழ்நாடு – புதுவை

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் ?

செப்டம்பர் 14-ம் தேதி, வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது தலித் (முன்னர் “தீண்டத்தகாத”) பெண் ஒருவர் சித்திரவதை செய்யப்பட்டு நான்கு ஆதிக்க சாதி ஆண்களால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரின் உடல் கடுமையாக தாக்கப்பட்டிருந்தது. நாக்கு அறுக்கப்பட்டும் கை – கால்களின் எலும்பு உடைக்கப்பட்டும், முதுகெலும்பு சேதமடைந்தும் இருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின், பதினைந்து நாட்கள் கழித்து புதுதில்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அந்தப் பெண் மரணமடைந்தார்.

பாலியல் வன்கொலை செய்தவர்களின் மிருகத்தனத்தின் அதே அளவிற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்காத உத்தரப் பிரதேச போலீசின் செயல்பாடுகள் அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பொய் சொன்னதாக போலிசார் குற்றம் சாட்டினர், பாலியல் வன்புணர்வுப் புகாரை பதிவு செய்ய மறுத்துவிட்டனர், பாதிக்கப்பட்ட அப்பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை தாமதித்தனர்.   ஒரு போலீசு அதிகாரி, பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் விந்து காணப்படாததால் எந்த பாலியல் பலாத்காரமும் நடக்கவில்லை என்றும்கூட தெரிவித்திருக்கிறார். ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில், பாதிக்கப்பட்டவரின் உடல் இரவோடு இரவாக போலீசாரால் விரைவாக தகனம் செய்யப்பட்டது. அவரது உடலைப் பார்க்கவோ அல்லது தகனத்திற்கு வரவோ கூட குடும்ப உறுப்பினர்கள் அனுமதிக்கப்படவில்லை.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் இந்தியாவில் பரவலாக நடக்கிறது. சமீபத்தில் தேசிய குற்ற பதிவுகள் நிறுவனம்(என்.சி.ஆர்.பி) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்தியாவில் 2019-ம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் 88 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாகியுள்ளன. வடமேற்கு மாநிலமான ராஜஸ்தானில் 2019-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 6,000 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாகியுள்ளன; அதற்கு அடுத்தபடியாக உத்தரபிரதேசத்தில் 3,065 வழக்குகள் பதிவாகியுள்ளன

படிக்க :
♦ பொள்ளாச்சி : ஃபேஸ்புக் பயன்பாடுதான் பெண்களுக்கு பிரச்சினையா ?
♦ பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக தான் நம்பர் 1 !

இந்த எண்ணிக்கை வெளிவராத பல பாலியல் பலாத்கார வழக்குகளின் ஒரு சிறு பகுதியே. பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்களில் குறைவான பகுதியினர் மட்டுமே புகார் அளிக்கின்றனர். பாலியல் பலாத்காரத்துடன் தொடர்புடைய சமூக களங்கம் (social stigma) காரணமாக பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் அமைதியாக இருக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். இப்படி பாதிக்கப்பட்டவர் மீது குற்றம் சாட்டப்படுவது அல்லது அவர்களை களங்கப்படுத்துதல் என்பது இயல்பானதாக மாற்றப்பட்டிருக்கிறது.

2012-ம் ஆண்டில் கொல்கத்தாவில் கணவனால் கைவிடப்பட்ட ஒரு தாய் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர் பாலியல் தொழிலாளி என்று களங்கப்படுத்தப்பட்டார். டிசம்பர் 16, 2012 அன்று டெல்லியில் நகரும் பேருந்தில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பாலியல் வன்முறையாளர்கள், இரும்புக் கம்பியை நுழைத்து அவரது குடல்களை சிதைத்தனர். அப்பெண் அனுபவித்த கொடூரமான வன்முறை, “அவள் காதலனுடன் இரவில் ஏன் வெளியே வந்தாள்” என்று மக்கள் கேட்பதைத் தடுக்கவில்லை. அந்தப் பெண்ணா பாலியல் தாக்குதலை வரவழைத்தார் ?

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களில் கணிசமானவர்கள் தலித்துகள். 2019-ம் ஆண்டு பதிவான மொத்த 32,033 பாலியல் பலாத்கார வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களில் 11 சதவீதம் பேர் தலித் பெண்களே. உத்தரபிரதேசத்தில் பதிவாகியுள்ள அனைத்து பாலியல் பலாத்கார வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களில் 18 சதவீதம் பேர் தலித் என்று என்.சி.ஆர்.பி தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்திய சமூகம் ஓரு ஆணாதிக்க சமூகம். இங்கிருக்கும் பிரபல  கலாச்சாரம், “ஆண் தன்மையை” பாலியல் ஆதிக்கவெறிக்கு ஈடு செய்துகாட்டுகிறது. அது ஆண்களையும் சிறுவர்களையும் பெண்களை கொடுமைப்படுத்தவும் துன்புறுத்தவும், அவர்களை பாலியல் பலாத்காரம் செய்யவும் கூட ஊக்குவிக்கிறது. அவர்களை “அடக்க” மற்றும் அவர்களுக்கு ஒரு “பாடம்” கற்பிக்கவும் ஊக்குவிக்கிறது. அதிலும் தலித் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது இந்த கருத்தாக்கத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. ஒரு தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது பெண்ணை தண்டிப்பதற்கும் அவமானப்படுத்துவதற்கும் மட்டுமல்ல, அவரது குடும்பத்தையும் சமூகத்தையும் கூட தண்டிப்பதற்கும் அவமானப்படுத்துவதற்கும் தான்.  தங்கள்  சமூகத்தின்  பெண்களைப் பாதுகாப்பதற்கான தலித் ஆண்களின் சக்தியற்ற தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டு பாலியல் பலாத்காரங்கள் அரங்கேற்றப்படுகின்றன.

உறவினரின் “குற்றத்திற்கான” தண்டனையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவங்களும் நடக்கின்றன. கடந்த ஆகஸ்ட் 2015-ம் ஆண்டு, உத்தரபிரதேசத்தில் பாக்பாத்தில் உள்ள ஆண்களால நிரப்பப்பட்ட சாதிய கவுன்சில் 23 வயதான தலித் பெண்ணையும் அவரது 15 வயது சகோதரியையும் பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாணமாக அணிவகுத்துச் செல்ல உத்தரவிட்டது. அந்த பெண்களின் சகோதரன் ஆதிக்க ஜாட் சமூகத்தைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் ஓடிப்போனதுதான் காரணம்.

பாலியல் பலாத்காரம் கூட சமூக இசைவைப் பெறுகிறது.

டிசம்பர் 2012 டெல்லியில் நடந்த கூட்டுப் பாலியல் வன்புணர்விற்குப் பிறகு பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் வன்முறை ஊடகங்களின் கவனத்திற்கு வந்தது. இது நாடு முழுவதும் பொதுமக்கள் சீற்றத்தையும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களையும் தூண்டியதுடன், வலுவான சட்டங்களை இயற்றுமாறு அரசாங்கத்தை கட்டாயப்படுத்தியது.

2013-ம் ஆண்டின் குற்றவியல் சட்டம் (திருத்தம்) பாலியல் பலாத்காரம் பற்றிய விரிவான வரையறையையும், மேலும் கடுமையான தண்டனையையும் வலியுறுத்துகிறது. இதில் பெரும்பாலான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நீண்ட சிறைத் தண்டனை மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் இறந்தால் மீண்டும் அந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை என்று சட்டம் இயற்றப்பட்டது. இருந்தும், இது இந்தியாவில் பாலியல் பலாத்கார சம்பவங்களை குறைக்கவில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் பதிவான பாலியல் பலாத்கார வழக்குகளின் எண்ணிக்கை 31 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதே நிதர்சனமான உன்மை.

தண்டனையின் அளவு பாலியல் பலாத்காரங்களுக்குத் தடையாக இல்லை என்பது தெளிவாகிறது. நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்பதுதான் குற்றத்தைத் தடுக்கக்கூடியதாக அமைகிறது. இவ்விவகாரத்தில் இந்தியாவின் நிலை வருத்ததிற்குரியது, அதுவும் பாலியல் பலாத்கார வழக்குகளில், குறிப்பாக பாதிக்கப்பட்டவர் தலித் பெண் என்றால் நிலை மிகவும் மோசமானது.

இந்தியாவின் குற்றவியல் நீதித்துறை பெருமளவில் ஆணாதிக்க, பெண்வெறுப்புமிக்க மற்றும் ஆதிக்க சாதியத்தன்மை கொண்டதாகவே இருக்கிறது. இத்தகைய சூழலில் ஒரு தலித் பெண்ணிற்கு நீதி கிடைப்பது என்பது மிகவும் அரிது.

போலீசாரின் பார்வையும் அதிர்ச்சியூட்டக்கூடிய அளவிற்கு பெண்வெறுப்பு மிக்கதாகவே இருக்கிறது. கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள போலீசாரிடம் நடத்தப்பட்ட மறைபுலனாய்வில் பேட்டி எடுக்கப்பட்டவர்களில், பெரும்பாலானோர் பாலியல் பலாத்காரத்திற்குப் பெண்களே காரணம் என்று உறுதியாக நம்புகின்றனர்.

காவல்துறையினரே புகார்களைப் பதிவு செய்ய தயங்குகிறார்கள், குறிப்பாக தாக்குதல் தொடுத்தவர் பணக்காரராகவோ, அரசியல் தொடர்புகள் கொண்டவராகவோ அல்லது ஆதிக்க சாதியைச் சேர்ந்தவராகவோ இருந்தால் அவர்கள் புகார்களை பதிவு செய்யத் தயங்குகிறார்கள். பாலியல் வன்புணர்வு வழக்குகளில் சிறு பகுதியே நீதிமன்றம் வரை செல்கிறது.

படிக்க :
♦ குஜராத் மாடல் அரதப் பழசு ! உ.பி. மாடல் தான் புத்தம் புதுசு !
♦ ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !

பாதிக்கப்பட்டவரோ அல்லது அவரது குடும்பத்தினரோ நீதிமன்றங்கள் மூலம் நீதியைப் பெறத் துணிந்தால், அவர்களையும் சாட்சிகளையும்  “அமைதியாக்கும்” போக்கு இயல்பானதாக இருக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டில் உன்னாவோவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண், ஒரு வருடத்திற்குப் பிறகு நீதிமன்ற விசாரணைக்குச் சென்றபோது, அவரை பாலியல் வன்புணர்வு செய்தவர்கள் உட்பட 5 பேரால் உயிரோடு எரிக்கப்பட்டார்.

நீதிமன்றத்திற்குச் செல்லும் பெரும்பாலான வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுதந்திரமாக நடமாடுவதாகவே தீர்ப்பாகிறது. கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் பாலியல் வன்புணர்வு வழக்குகளில் வெறும் 27 சதவீதம் மட்டுமே குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கக் கூடியதாக இருந்தது. இதன் விளைவாக, பல பெண்கள் அவமானத்தையும் பழிவாங்கும் வன்முறையையும் எதிர்கொள்வதை விட மௌனமாக துன்பத்துடன் உழல்வதையே தெரிவு செய்கிறார்கள்.

ஹத்ராஸ் பாலியல் வன்கொலை வழக்கு தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாதிக்கப்பட்டவரது குடும்பத்தினரின் நீதிக்கான தேடலை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கின்றன. வழக்கு நீதிமன்றம் செல்லும். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களது சக்திவாய்ந்த சாதிப் பிரமுகர்கள், போலீசு மற்றும் அரசியல்வாதிகள், குற்றத்தின் அளவை குறைப்பதற்கான வேலைகளில் இறங்குவதை எதிர்பார்க்கலாம்.

பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ், ஒரு தலித்துக்கு எதிரான குற்றம் என்பது வெறும் குற்றம் மட்டுமல்ல – அது ஒரு வன்கொடுமை. அதன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டம் வழிவகை செய்கிறது. ஹத்ராஸில் பெண் மீது பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது POA சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும். குற்றவியல் நீதி அமைப்பில் உள்ள சாதிய கூறுகள், அந்தப் பெண் தலித் என்பதால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்தப் பெண்ணை குறிவைக்கவில்லை என்பதை நிரூபிக்க முற்படும். அவர் தலித் என்பது அவர்களுக்குத் தெரியாது என்று கூட அவர்கள் வாதிடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

ஹத்ராஸ் கும்பல் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர் மரணமடைந்த சில நாட்களுக்குப் பிறகு, உத்தரபிரதேச மாநில சட்டசபையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திர சிங், “இதுபோன்ற சம்பவங்கள் [பாலியல் பலாத்காரம் போன்றவை] கலாச்சாரத்தின் மூலம் மட்டுமே தடுத்து நிறுத்தப்பட முடியும்” என்று கூறினார். “தங்கள் மகள்களை  நல்ல பண்புகளை  புகட்டி  பண்பட்ட சூழலில் வளர்ப்பது  அனைத்து தாய்மார்களின் மற்றும் தந்தையின் கடமையாகும்” என்றும் கூறினார்.

இந்தியாவும் பாலியல் வன்முறை பேரதிகமாக உள்ள பல்வேறு சமூகங்களைக் கொண்ட மொத்த உலகமும் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராடுவதற்கு இந்த மனநிலைதான் அழிக்க வேண்டும்.

பாலியல் வன்முறையை பரவலாக பார்க்கப்படுகிறது.- பாலியல் வன்முறைக்கு எதிராக போராடி அழிக்க வேண்டும். பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான பொறுப்பை பெண்கள் மீது சுமத்துவது அபத்தமானது மட்டுமல்ல ஆபத்தானது.

பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என்றோ அல்லது கலாச்சார ரீதியாக பொருத்தமான, ஆண்களைத் தவிர்க்கும் விதத்தில் உடை அணிந்து செல்வது குறித்து எச்சரிப்பதோ பாலியல் வன்முறையைத் தடுக்க முடியாது. மாறாக, பாலியல் அடாவடித்தனம் ஆண் தன்மை அல்ல, ஆணாதிக்கத் திமிர் இயல்பானது அல்ல என்பதை சிறுவர்களுக்கும் ஆண்களுக்கும் (அதே போல் பெண்களுக்கும்) நாம் அவசியம் விதைக்க வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் உள்ள பெண்ணெதிர்ப்புக் கருத்து மனப்பான்மையைக் கையாள்வதன் மூலமும்,  ஆணாதிக்க கலாச்சாரங்களை  அகற்றுவதன் மூலமும் தான், சுரேந்திர சிங் போன்றவர்களின் பாலியல் வன்முறைகள் குறித்த கூற்றை எதிர்கொள்ளவும் தடுக்கவும் முடியும்.

கட்டுரையாளர் : சுதா ராமச்சந்திரன்
தமிழாக்கம் : சிந்துஜா
நன்றி : தி டிப்ளமாட்

disclaimer

நமது பலம், மக்களோடு கலந்திருப்பதே! | தோழர் ஸ்டாலின்

0

விவாதங்களுக்குப் பதில் உரை

பாகம் – 3

6 லெனின் நம்மை மக்களுக்குக் கற்றுக்கொடுக்க மட்டுமல்ல, அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் கூட போதித்தார். இதன் பொருள் என்ன?

இதன் பொருள், தலைவர்களாகிய நாம் நமது தலைகளை வீங்கவைத்துக் கொள்ளக்கூடாது. நாம் மத்தியக்குழுவின் அல்லது மக்கள் அரசுப்பணி அமைச்சகத்தின் உறுப்பினர்களாக உள்ளதால், நாம் முறையாக வழிகாட்டுவதற்கான எல்லா அறிவையும் பெற்று விட்டோம் என்று கருதக்கூடாது. நமது தரவரிசை மட்டுமே அறிவை யும், அனுபவத்தையும் கொடுத்து விடுவதில்லை. பட்டங்களும் இன்னும் குறைவாகவே அறிவை அளிக்கிறது.

இதன் பொருள், நமது அனுபவங்கள் மட்டுமே, தலைவர்களின் அனுபவங்கள் மட்டுமே முறையாக வழி நடத்துவதற்கு நமக்குப் போதுமானதல்ல. எனவே, இதைத்தொடர்ந்து மக்களின் அனுபவங்களை, கட்சி உறுப்பினர்களின் அனுபவங்களை உழைக்கும் வர்க்கத்தின் அனுபவங்களை, நமது அனுபவங்களோடும், தலைவர்களின் அனுபவங்களோடும் பின்னிணைப்பாக்கிக் கொள்ள வேண்டும்.

இதன் பொருள், ஒரு கணம்கூட நாம் மக்களுடனான நமது தொடர்புகளைத் தளர்த்திக்கொள்ளக்கூடாது என்பதாகும்.

மேலும் இறுதியாக, இதன் பொருள் நாம் கட்டாயம் கவனத்துடன் பெரும்திரளான மக்களின் குரல்களை, கட்சி அணியினர், உறுப்பினர்களின் குரல்களை, ‘சிறியவர்கள்’ என்று அழைக்கப்படுபவர்களின் குரல்களை, உழைக்கும் மக்களின் குரல்களைக் கேட்க வேண்டும்.

முறையாக வழி நடத்துவது என்றால் என்ன?

இதன் பொருள், அலுவலகத்தில் அமர்ந்து கொள்வதையும், செயற்குறிப்புரைகளை வழங்குவதையும் எக்காரணம் கொண்டும் குறிக்காது.

முறையாக வழிகாட்டுவது என்றால்:

முதலாவதாக, ஒரு பிரச்சினைக்கு ஒரு முறையான தீர்வைக் கண்டறிவது; ஆனால், பெரும் திரளானவர்களின் அனுபவங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஒரு முறையான தீர்வை கண்டறிவது சாத்தியமல்ல. ஏனெனில், பெரும் திரளானவர்கள்தான் நமது தலைமை எடுக்கும் முடிவுகளுடைய விளைவுகளை, அவர்கள்தான் சுமக்கிறார்கள்;

இரண்டாவதாக, சரியான தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதை ஏற்பாடு செய்வது பெரும் திரளானவர்களின் நேரடி உதவியின்றிச் செய்துவிட முடியாது.

மூன்றாவதாக, இந்தத் தீர்வை முழுமையாக நிறைவேற்றியதை சரிபார்க்கும் ஏற்பாட்டைச் செய்வது, பெரும் திரளானவர்களின் நேரடி உதவியின்றி செய்து விட முடியாது.

தலைவர்களாகிய நாம் விசயங்களையும், நிகழ்வுகளையும் மக்களையும் ஒரு பக்கம் இருந்து மட்டும் பார்க்கிறோம்; அதாவது மேலிருந்து மட்டுமே என்று நான் கூறுகிறேன். இதன் விளைவாக நமது கண்ணோட்டத்தின் களம் அதிகமான அல்லது குறைவான வரம்புக்கு உட்பட்டது. அதற்கு மாறாக, பெரும் திரளானவர்கள் விசயங்களையும், நிகழ்வுகளையும், மக்களையும் வேறு பக்கத்திலிருந்து, அதாவது கீழிருந்து பார்க்கிறார்கள் என்று நான் கூறுவேன். இதன் விளைவாக அவர்களது கண்ணோட்டத்தின் களம்கூட சில குறிப்பிட்ட அளவுக்கு வரம்புக்கு உட்பட்டது. ஒரு பிரச்சினைக்கு முறையான தீர்வைக் கண்டறிய இந்த இரண்டு அனுபவங்களும் இணைக்கப்பட வேண்டும். அதன்பிறகு மட்டும்தான் தலைமையானது சரியானதாக அமையும்.

இதன்பொருள் என்னவென்றால், பெரும் திரளானவர்களுக்குக் கற்பிப்பது மட்டுமல்ல, பெரும் திரளானவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதும் ஆகும்.

லெனினினுடைய ஆய்வுரையின் சரியான தன்மையை விளக்கிக் கூற இரண்டு எடுத்துக்காட்டுகள்:

இது பல ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. மத்தியக்குழுவின் உறுப்பினர்களாகிய நாம், டோனெட்ஸ் பள்ளத்தாக்கில் உள்ள சூழ்நிலைகளை மேம்படுத்தும் பிரச்சினை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். கனரகத் தொழில்துறையின் மக்கள் அரசுப்பணி அமைச்சகம் முன்மொழிந்த நடவடிக்கைகள் வெளிப்படையாகவே திருப்தியற்றவைகளாக இருந்தன. மூன்று முறை நாம் அந்த முன்மொழிவுகளை கனரகத் தொழில்துறையின் மக்கள் அரசுப்பணி அமைச்சகத்துக்குத் திருப்பி அனுப்பினோம். மூன்று முறையும் வெவ்வேறு முன்மொழிவுகளை கனரகத் தொழில்துறையின் மக்கள் அரசுப்பணி அமைச்சகத்திலிருந்து நாம் பெற்றோம். ஆனால், அதற்குப் பிறகும் கூட அவற்றை திருப்திகரமானது என்று நம்மால் கருத முடியவில்லை. இறுதியாக நாம் டோனெட்ஸ் பள்ளத்தாக்கிலிருந்து பல தொழிலாளர்களையும், கீழ்நிலை வர்த்தகம் மற்றும் தொழிற்சங்க அலுவலர்களையும் அழைக்க முடிவு செய்தோம்.

இந்தத் தோழர்களோடு நாம் மூன்று நாட்கள் விசயங்களைப் பற்றி விவாதித்தோம். மேலும் மத்தியக்குழுவின் உறுப்பினர்களாகிய நாம் அனைவரும் இந்த சாதாரண தொழிலாளர்களால், இந்த ‘சிறிய மனிதர்’களால் மட்டுமே சரியான தீர்வை நமக்கு ஆலோசனையாகக் கூற முடிந்தது என்பதை ஒப்புக்கொண்டோம். டோனெட்ஸ் பள்ளத்தாக்கில் உள்ள  நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் பற்றிய மத்தியக்குழு மற்றும் மக்கள் அரசுப்பணி அமைச்சகத்தின் முடிவுகளை நீங்கள் நினைவில் கொண்டிருப்பீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. நல்லது. மத்தியக்குழு மற்றும் மக்கள் அரசுப்பணி அமைச்சகத்தின் இந்த முடிவை சரியான மற்றும் குறிப்பிடத்தக்க ஒன்று எனவும், அது அணிகளிலிருந்த சாதாரண மக்களால் நமக்கு ஆலோசனையாக தரப்பட்டது எனவும் நமது அனைத்துத் தோழர்களும் ஒப்புக் கொண்டார்கள்.

இன்னொரு எடுத்துக்காட்டு. தோழர் நிகோலஸ்யென்கோவின் பிரச்சினையை நான் மனதில் கொண்டுள்ளேன். நிகோலஸ்யென்கோ யார்? அவர் கட்சியின் ஓர் அடிமட்ட உறுப்பினர். அந்தப்பெண் ஒரு சாதாரணமான ஒரு ‘சிறிய நபர்’. கீவ்-ல் (கீவ் – உக்ரெய்ன் தலைநகர்) உள்ள கட்சி அமைப்பில் எல்லாமுமே நன்றாக இல்லை என்பதற்கான சமிக்ஞைகளை ஓர் ஆண்டு முழுவதும் கொடுத்துக் கொண்டிருந்தார்; அந்தப் பெண் குடும்ப உணர்வை, தொழிலாளர்களிடம் பண்பற்ற குட்டி முதலாளித்துவ அணுகுமுறையை, சுயவிமர்சனம் ஒடுக்கப்படுவதை, டிராட்ஸ்கிய சீர்குலைவாளர்கள் செல்வாக்குப் பெற்றிருந்ததை அம்பலப்படுத்தினார். ஆனால், அந்தப் பெண் தொடர்ந்து ‘கேடு விளைக்கும் பூச்சி’ என புறந்தள்ளப்பட்டார். இறுதியாக அந்தப் பெண் தரும் தொல்லையில் இருந்து மீள, அவர்கள் அந்தப் பெண்ணை கட்சியில் இருந்து வெளியேற்றினார்கள். கீவ் அமைப்போ அல்லது உக்ரெய்ன் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுவோ உண்மையை வெளிச்சத் துக்குக் கொண்டுவர அந்தப் பெண்ணுக்கு உதவவில்லை. கட்சி மத்தியக்குழுவின் தலையீடு மட்டுமே அந்த சிக்கலை அவிழ்க்க உதவியது.

மேலும் அந்தப் பிரச்சினை புலனாய்வு செய்யப்பட்ட பின் என்ன வெளிப்பட்டது? நிகோலஸ்யென்கோ சரியானவர் என்றும், கீவ் அமைப்பு தவறானது என்றும் வெளிப்பட்டது. இதுதான் துல்லியமாகத் தெரியவந்தது. ஆனாலும், நிகொலஸ்யென்கோ என்பவர் யார்? உண்மையில் அந்தப் பெண் மத்தியக் குழுவின் உறுப்பினர் அல்ல, அவர் ஒரு மக்கள் அரசுப்பணி அமைச்சர் அல்ல; அவர் கீவ் வட்டார அமைப்பின் செயலாளர் அல்ல; அவர் கட்சி மையத்தின் செயலாளரும் கூட அல்ல. அவர் கட்சியின் அடிமட்ட உறுப்பினர் மட்டுமே.

நீங்கள் காண்பதுபோல, சில நேரங்களில் சாதாரண மக்கள், சில உயர் நிறுவனங்களைவிட உண்மைக்கு மிக அருகில் தாம் இருப்பதை நிரூபிக்கிறார்கள்.

என்னால் இது போன்ற நூற்றுக்கணக்கான உதாரணங்களை எடுத்துக்காட்ட முடியும். இவ்வாறு, நீங்களே பாருங்கள், நமது அனுபவங்கள் மட்டுமே, தலைவர்களின் அனுபவங்கள் மட்டுமே நமது இலட்சியத்துக்கான தலைமைப் பண்புக்குப் போதுமானவை அல்ல. முறையாக வழி நடத்துவதற்குப் போதுமானதல்ல. முறையாக வழி நடத்துவதற்காக தலைவர்களின் அனுபவங்கள் கட்சி உறுப் பினர்களின் அனுபவங்களோடு, உழைக்கும் வர்க்கத்தின் அனுபவங்க ளோடு, உழைப்போரின் அனுபவங்களோடு, ‘சிறிய மனிதர்கள்’ என்று அழைக்கப்படுவோரின் அனுபவங்களோடு சேர்க்கப்பட வேண்டும்.

ஆனால் இதைச் செய்வதற்கு எப்போது சாத்தியப்படும்?

எப்போது தலைவர்கள் பெரும்திரளான மக்களோடு மிகவும் நெருக்கமாக இணைக்கப்படுகிறார்களோ, எப்போது அவர்கள் கட்சி உறுப்பினர்களோடு, உழைக்கும் வர்க்கத்தோடு விவசாயிகளோடு, உழைக்கும் அறிவுத்துறையினரோடு மிகவும் நெருக்கமாக இணைக்கப்படுகிறார்களோ அப்போது மட்டும்தான் இதைச் செயல்படுத்துவது சாத்தியமாகும்.

பெரும்திரள் மக்களுடனான தொடர்பு, இந்தத் தொடர்பை பலப்படுத்துதல், பெரும்திரளான மக்களின் குரல்களைக் கேட்கும் தயார்நிலை – இங்குதான் போல்ஷ்விக் தலைமையின் பலமும், வெல்லற்கரிய தன்மையும் படிந்திருக்கின்றன.

எவ்வளவு நீண்டகாலம் போல்ஷ்விக்குகள் பரந்த, பெரும் திரளான மக்களுடன் தங்கள் தொடர்புகளை வைத்திருக்கிறார்களோ, அவ்வளவு காலமும் அவர்கள் வெல்லற்கரியவர்களாக இருப்பார்கள் என்பதை நாம் ஒரு விதியாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் இதற்குமாறாக, எவ்வளவு சீக்கிரம் போல்ஷ்விக்குகள் மக்களிடமிருந்து தங்களைத் துண்டித்துக்கொள்கிறார்களோ, அவர்களது தொடர்புகளை இழந்துவிடுகிறார்களோ அவ்வளவு சீக்கிரம் அவர்கள் அதிகார வர்க்கத் துருவால் மூடப்பட்டு அவர்கள் தங்களது எல்லா வலிமைகளையும் இழந்து வெறும் கேலிக்கூத்தாகிவிடுவார்கள்.

கிரேக்கப் புராணத்தில் மிகவும் கொண்டாடப்பட்ட ஒரு கதாநாயகனாக அண்டாயெஸ் இருந்தான். அந்தப் பழங்கதை இவ்வாறு செல்கிறது: அண்டாயெஸ் கடல்களின் கடவுளான போஸெய்டன் மற்றும் பூமியின் தேவதையான கயீயாவின் மகன். அண்டாயெஸ் தன்னைப் பெற்றெடுத்த, பாலூட்டிய, வளர்த்தெடுத்த தனது தாயிடம் குறிப்பிடத்தக்க வகையில் இணைந்திருந்தவன். இந்த அண்டாயெஸ் வென்றடக்காத நாயகன் எவனும் இல்லை. அவன் வெல்லப்பட முடியாத நாயகனாகக் கருதப்பட்டான். அவனது வலிமை எங்கு படிந்திருந்தது? தனது பகைவனுக்கு எதிரான சண்டையில் ஒவ்வொரு முறையும் அவன் கடுமையாக அழுத்தப்படும்போது அவன், பூமியை, தன்னைப் பெற்றெடுத்துப் பாலூட்டிய தாயைத் தொட்டான். அது அவனுக்குப் புதிய சக்தியை அளித்தது.

ஆனால் அவனிடம் காயம்படத்தக்க ஒரு குறிப்பிட்ட இடம் இருந்தது. ஏதோ ஒரு வகையில் பூமியிலிருந்து பிரிக்கப்பட்டுவிடக் கூடிய ஆபத்து இருந்தது. அவனது பகைவர்கள் இதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருநாள் ஒரு பகைவன் இந்த பலவீனமான குறிப்பிட்ட இடத்தை அனுகூலமாக எடுத்துக் கொண்டு தோன்றினான், அண்டாயெஸ்ஸை வென்றடக்கினான். அவன்தான் ஹெர்குலஸ். எவ்வாறு ஹெர்குலஸ் அண்டாயெஸ்ஸை வென்றடக்கினான்? ஹெர்குலஸ் அண்டா யெஸ்ஸை பூமிக்கு மேலே தூக்கினான். அவனை தற்காலிகமாக பூமியிலிருந்து நீக்கினான், அவன் பூமியைத்தொடுவதிலிருந்து தடுத்தான், அவனைக் குரல்வளையை நெரித்துக் கொன்றான்.

படிக்க :
♦ சீர்குலைவுவாதிகளோடு தொடர்புடையவர்களைக் கையாளுவது எப்படி ? || தோழர் ஸ்டாலின்
♦ வினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் !

போல்ஷ்விக்குகள் கிரேக்கப் புராணக்கதையின் கதாநாயகன் அண்டாயெஸ் -ஐ நினைவுபடுத்துகிறார்கள் என்று நான் கருதுகிறேன். அவர்கள் அண்டாயெஸ் -ஐப் போலவே வலிமை மிக்கவர்கள். ஏனென்றால் தங்களைப் பெற்றெடுத்த, தங்களுக்குப் பாலூட்டிய, தங்களை வளர்த்தெடுத்த தாயுடன், அதாவது பெரும்திரளான மக்களுடன் தங்கள் தொடர்புகளைக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு காலம் தங்கள் தாயுடன் – அதாவது மக்களுடன் தொடர்புகளை அவர்கள் கொண்டிருக்கிறார்களோ அவ்வளவு காலமும் தாங்கள் வெல்லற்கரியவர்களாக விளங்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் அவர்கள் பெற்றுள்ளார்கள்.

இதுதான் போல்ஷ்விக் தலைமையின் வெல்லற்கரிய தன்மையின் திறவுகோல்.

(தொடரும்)

நூல் : ஜே.வி.ஸ்டாலின் தொகுப்பு நூல்கள் – தொகுதி -14
கிடைக்குமிடம் :
அலைகள் வெளியீட்டகம்
5/1 ஏ, இரண்டாவது தெரு, நடேசன் நகர், இராமாபுரம்,
சென்னை – 600 089
தொடர்புக்கு : 98417 75112

ரிபப்ளிக் டிவி : அர்னாப் கோஸ்வாமியின் டி.ஆர்.பி. தில்லுமுல்லு !

2

னித இனத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்ததற்காக சர்வதேச இராணுவ தீர்ப்பாயம் ஜூலியஸ் ஸ்ட்ரைச்சர் (Julius Streicher) என்ற நாசி இனவெறி ஊடகக்காரரை குற்றவாளி என தீர்ப்பளித்து, 1946-ம் ஆண்டு தூக்கிலிட்டது.

தனது தீர்ப்பில் இப்படி கூறியது நீதிமன்றம்.. “மாதத்திற்கு மாதம், வாரத்துக்கு வாரம் தனது உரைகள் மற்றும் கட்டுரைகள் மூலம்,  யூத எதிர்ப்பு வைரஸை ஜெர்மானியர்களின் மனதில் பரப்பினார். மேலும் ஜெர்மானிய மக்களை தீவிரமான துன்புறுத்தலில் ஈடுபடத் தூண்டினார். 1935-ம் ஆண்டில் 600,000 பிரதிகளை எட்டிய டெர் ஸ்டர்மர்-ன்(Der Stürmer) ஒவ்வொரு இதழும் இதுபோன்ற கட்டுரைகளால் நிரப்பப்பட்டிருந்தது. அவை பெரும்பாலும் மோசமானவையாகவும் அருவருப்பூட்டுபவையாகவும் இருந்தன”

இந்தியாவில் இந்துத்துவ பாசிச அரசின் ஊதுகுழல்களாக இருக்கும் பெரும்பான்மை ஊடகங்கள் ஒவ்வொரு நாளும் மனித இனத்திற்கு எதிரான வெறுப்பு எனும் கொடிய வைரஸை பரப்பிக் கொண்டிருக்கின்றன. ஒடுக்குதலுக்கு உள்ளாகும் மதப் பிரிவினருக்கு எதிராக அவதூறு செய்வது, அரசின் பாசிச நடவடிக்கைகளை விமர்சிப்பவர்களை ‘தீவிரவாதிகளாக’ சித்தரிப்பது, ஆளும் அரசின் அரசியல் லாபங்களுக்காக ஒன்றுமில்லாத மரணங்களை பெரும் சதித்திட்டமாக சித்தரித்து குழப்பத்தை உண்டாக்குவது என ஒவ்வொரு நாளும் வெறுப்பில் திளைக்கின்றன இந்த ஊடகங்கள். இந்த வெறுப்பை உமிழும் ஊடகங்களின் முன்னோடியான அர்னாப் கோஸ்வாமி, தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிகள் என்னும் டி. ஆர். பி மோசடியில் சிக்கியுள்ளார்.

நடிகர் சுசாந்த் சிங்கின் தற்கொலையை வைத்து மராட்டிய மாநிலத்தை ஆளும் சிவசேனை – காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்கவும் பீகார் தேர்தலில் ஆதாயம் தேடவும் பா.ஜ.க முனைந்தது. பா.ஜ.க போட்டுக்கொடுத்த இந்தத் திட்டத்தை செயல்படுத்த 24 நேரமும் உழைத்தன பாசிசத்தின் பாதந்தாங்கி ஊடகங்கள். பதவிக்காக தன்னுடைய இனவெறுப்பை தற்காலிகமாக கைவிட்டுள்ள சிவசேனை அரசாங்கம், பங்காளிகளின் சதியை முறியடிக்கும் வேலையில் இறங்கியது.

படிக்க :
♦ குஜராத் மாடல் அரதப் பழசு ! உ.பி. மாடல் தான் புத்தம் புதுசு !
♦ பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு சக்தி

அதன் ஒருபகுதியாகத்தான் அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவியின் டி.ஆர்.பி மோசடி வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளது. தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிகளை கண்காணிக்கும், பார்-ஓ-மீட்டரை நிறுவி பராமரிக்கும் ஹன்சா ரிசர்ச் குரூப் பிரைவேட் லிமிடெட்  நிறுவனம் டி.ஆர்.பி மோசடியில் ஈடுபட்டதாக ரிபப்ளிக் டிவி, ஃபக்த் மராத்தி மற்றும் பாக்ஸ் சினிமா ஆகிய மூன்று தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது மும்பை போலீசில் புகார் அளித்திருக்கிறது.

குறிப்பிட்ட சேரிப்பகுதிகளில் ஸ்மார்ட் டிவி வசதியும் மாதந்தோறும் கணிசமான தொகையையும் கொடுத்துவிட்டு, பாரோ மீட்டரை நிறுவி விடுவார்கள். ஒரு பாரோ மீட்டர், 20 ஆயிரம் டிவி பார்வையாளர்களின் மதிப்பீட்டுக்கு இணையானதாக கணக்கிடப்படப்படுகிறது. இப்படி முறைகேடான வழியில் கிடைக்கும் தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிகளைக் கொண்டு, ‘நாங்கள்தான் நம்பர் 1, தேசம் எங்களுடைய குரலைத்தான் கேட்கிறது’ என கூறிக்கொண்டு திரிந்திருக்கிறார் அர்னாப்.

செப்டம்பர் இறுதி வாரத்தில் ரிபப்ளிக் ஆங்கில செய்தி சானல் 5056 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள டைம்ஸ் நவ் செய்தி சானல் 1872 புள்ளிகளை பெற்றுள்ளது. இரண்டாம் இடத்துக்கும் முதல் இடத்துக்குமான வித்தியாசத்தை அதிகப்படுத்த ரிபள்டிக் டிவிக்கு டி.ஆர்.பி மோசடிகள் உதவியிருக்கலாம். முதல் இடம் என்ற சுயவிளம்பரம் மேலும் அதிக ‘உண்மையான’ பார்வையாளர்களை பெற்றுத்தரும், விளம்பர வருவாயும் அதிகரிக்கும்.

அண்டப்புளுகன் அர்னாப்

முறைகேட்டில் ஈடுபட்ட இரண்டு மராத்தி சானல்களின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ரிபப்ளிக் டிவி மோசடியில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளதாக மும்பை போலீசு ஒப்புக்கொண்டாலும், நிறுவனத்தின் பிரதிநிதிகளை அழைத்து விசாரணை மட்டும் நடத்திக் கொண்டிருக்கிறது பங்காளிகளை மிரட்டினால் மட்டும் போதும் என சிவசேனை அரசாங்கம் கருதுவதால் மேலதிக நடவடிக்கைக்கும் வாய்ப்பிருக்காது என நம்பலாம். சங்கபரிவாரத்தின் தலைமையிலான பாசிச மத்திய அரசின் ஆதரவோடு இயங்கும் அர்னாப் கோஸ்வாமியை, மைய அரசின் கீழ் இயங்கும் ஒரு மாநில அரசாங்கத்தால் எதுவும் செய்துமுடியாது.

சங்க பரிவாரத்தின் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறியின் ஒரு அங்கமாகவே அர்னாப் கோஷ்வாமியும், அவரது ரிபப்ளிக் டிவியும் உருவாக்கப்பட்டிருக்கின்றனர். உதாரணத்திற்கு, சமீபத்தில் அர்னாப் தனது பிரைம் டைம் விவாதத்தில் பேசிய இரண்டு தலைப்புகளை எடுத்துக் கொள்ளலாம்.

முதலாவது பாகிஸ்தான் உளவு அமைப்பிடம் பணம் பெற்றதாக சிறை தண்டனை விதிக்கப்பட்ட சையது குலாம் நபி ஃபை என்பவரை பத்திரிகையாளரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான கவுதம் நவ்லாகா ‘பல முறை’ சந்தித்து அறிவுஜீவிகளை அரசாங்கத்துக்கு எதிராக திரட்ட திட்டமிட்டதாக தேசிய புலனாய்வு முகமையின் குற்றச்சாட்டை ஒட்டிய விவாதம்.

பாக்நக்ஸல் என்ற ஹேஷ் டேக்குடன் குற்றம்சாட்டும் தரப்பில் அரசு தரப்பு அடிபொடிகள் நால்வரும் குற்றத்தை மறுக்கும் தரப்பில் இருவரும் பங்கேற்றனர். குற்றத்தை மறுக்கும் தரப்பின் விளக்கங்கள் எதையும் ரிபப்ளிக் டிவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிரவில்லை. குற்றம்சாட்டும் தரப்பின் அவதூறுகளை தீர்ப்பாகவே எழுதி, அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பரப்பியிருக்கிறது.

மற்றொரு தலைப்பு: அஸ்ஸாமில் உள்ள மதரஸாக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அந்த மாநில அரசாங்கம் நிறுத்தியது தொடர்பான விவாதம். இந்துமத கோயில்களின் கட்டுமானத்துக்காக பல ஆயிரம் கோடி மக்களின் வரிப்பணம் செலவிடப்படும் நிலையில், அஸ்ஸாம் மதரஸாக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி நிறுத்தப்பட்டது குறித்து விவாதிக்கிறார் அர்னாப். ஒரு மாநிலத்தின் முடிவை, பிற மாநிலங்களுக்கும் திணிக்க வேண்டும் என்பதும் சிறுபான்மை மதங்களுக்கு எந்தவித சலுகைகளும் தரப்படக்கூடாது என்பதை வலியுறுத்துவதே அந்த விவாதத்தின் நோக்கம்.

ஊடக விவாதம் என்ற பெயரில் பாசிச பாஜக அரசின் இந்துத்துவ சார்பு கருத்துத் திணிப்புகளை அர்னாப்பின் ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகள் தொடர்ந்து செய்துவருகின்றன. சங்கபரிவாரங்களின் கனவான இந்துத்துவ இந்தியாவிற்கு மக்களை தயார்படுத்தும் இந்த ஊடகங்களின் அரசியலை புரிந்துகொண்டு அம்பலப்படுத்துவதே நாம் உடனடியாக செய்ய வேண்டிய செயலாகும். ஏனெனில், வெறுப்பை விதைப்பது மனித குல விரோத செயல் என்பதை பாசிஸ்டுகள் ஒருபோதும் உணரப்போவதில்லை.


அனிதா
செய்தி ஆதாரம்: தி வயர் #1, தி வயர் #2