Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 271

தோழர் வரவர ராவ் உள்ளிட்ட 11 செயல்பாட்டாளர்களை விடுதலை செய் ! திருச்சியில் ஆர்ப்பாட்டம் !!

மூக செயற்பாட்டாளர் தோழர். வரவரராவ் உள்ளிட்ட 11 சமூக ஆர்வலர்களையும் சிறையிலிருந்து உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி! திருச்சியில் உறையூர் குறத்தெரு பகுதியில் 20.07.2020  காலை 11 மணியளவில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தலைமையில் அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர். சரவணன். தலைமையேற்று நடத்தி வைத்தார்.

கண்டன உரையாற்றியவர்கள்:

  • தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அய்யா ம.ப.சின்னதுரை
  • விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பாராளுமன்ற தொகுதி செயலாளர் தோழர் தமிழாதன்
  • திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட செயலாளர்.தோழர். புதியவன் மற்றும் வழக்குறைஞர் தோழர். சந்துரு
  • ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர்.தோழர். சம்சுதீன்
  • மக்கள் உரிமை மீட்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் தோழர். பஷீர்
  • மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலாளர் வழக்குறைஞர். தோழர். முருகானந்தம்
  • சமூக நீதிப் பேரவையின் மாவட்ட செயலாளர் தோழர். ரவிக்குமார்
  • புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர். சுந்தர்ராஜ்
  • ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர். மணலிதாஸ்
  • புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்டச் செயலாளர் தோழர். பிரித்தீவ்
  • மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர். ராஜா
  • மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழு தோழர். சத்யா

இறுதியாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர். ஜீவா கண்டன உரையாற்றி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர். பரமசிவம் நன்றியுரை கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும் சிறையில் உயிருக்கு போராடும் தோழர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப் பட்டது.

மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள், இயக்கங்கள்,அமைப்புகளை சேர்ந்தோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.

முகக்கவசம் விற்கும் தொழிலாளிகள் ! படக்கட்டுரை

மிழ்நாட்டில் கொரோனா தொற்று நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொடுகிறது. தொற்று பரவும் வேகத்தில் தப்பிக்க முடியாமல், உழைக்கும் மக்கள் வேரறுந்த மரமாக வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் சாய்கிறாகள்.

வறுமையும் நோய்த் தொற்றும் ஒருசேர அவர்களை விரட்டுகிறது. இதை எப்படி எதிர்கொள்வது என்று தவிக்கிறார்கள். நோய்த் தொற்று நமக்கு வந்தாலும் பரவாயில்லை, பசியிலிருந்து குடும்பத்தைக் காப்பாற்ற பலவண்ண முகக்கவசங்களுடன் சாலைகளில் அலைகிறார்கள், இந்த முகமற்றவர்கள். வேலைதேடி புதிய இடம், புதிய தொழில் என்று தடுமாறுகிறார்கள். இவர்களை கைவிட்டுவிட்டது அரசு.

***

சென்னை சைதாப்பேட்டை மார்கெட் பகுதி நகராட்சி மருத்துவமனை அரசு அலுவலகங்கள் குவிந்துள்ள இடம். பேருந்து நிறுத்தம், ஆட்டோ ஸ்டான்ட் என்று அடுத்தடுத்து மக்கள் நெரிசல். அங்கு நடைபாதையை ஒட்டியுள்ள சுற்றுச்சுவர் கம்பியில் தோரணம் போல பல வண்ணங்களில் தொங்கும் முகக்கவசங்கள். இருபது ரூபாய், முப்பது ரூபாய் என்று விலை கூவி விற்றுக்கொண்டிருந்தார் பாபு.

நடுத்தர வயது. அங்குள்ள முகக்கவசங்கள் பற்றி விசாரித்து அவரிடம் பேச்சுகொடுத்தோம்.

கதவு, ஜன்னல், அலமாரின்னு கஸ்டமரோட டேஸ்ட்டுக்கு ஏற்ற மாதிரி வேலை செய்வேன். இப்ப வேலையில்ல, மாஸ்க் விற்க வந்துவிட்டேன் என்கிறார் கார்பென்டர் பாபு.

சார் நான் இந்தத் தொழிலுக்கு வந்து முழுசா 2 வாரம் கூட ஆகல. நான் ஒரு கார்பெண்டர். 20 வருசமா அதுதான் என்னோட தொழில். வீட்டு மர வேலைகளில் நான் ஸ்பெசலிஸ்ட். கதவு, ஜன்னல், அலமாரின்னு அவங்கவுங்க தேவைக்கு ஏற்ற மாதிரி வேலை செய்வேன். அந்தத் தொழில்தான் இவ்வளவு நாள் குடும்பத்துக்கு சோறு போட்டது. கொரோனா வந்தது, எல்லாம் தலைகீழா மாறிடுச்சு. என்ன மாதிரி வேலைக்காரங்கள, வீட்டுக்குள்ள சேர்க்குறதுக்கு கஸ்டமர் ரொம்பவே பயப்புடுறாங்க. கொரோனா தொற்று பயமா இருக்குன்னு வீட்டுக்கு வெளியேகூட நிற்க விடாமல் அனுப்பி விடுகிறார்கள்.

சோத்துக்கு வழி தேடி பெயின்டர் வேலை, பிளம்பர் வேலை செய்ய நினைத்தாலும் கூப்பிட ஆளில்லை. குழந்தைகளை வைத்துக்கொண்டு வெறுமனே வீட்டில் சும்மா இருக்க முடியுமா? பக்கத்தில இளநீர் விற்கும் கடை போட்டிருக்குற அக்கா ஏற்கெனவே பழக்கம். அவர்தான் இந்த யோசனையை எனக்குச் சொன்னாங்க. இப்போ 2 வாரமா இதுதான் பொழப்பு. தினமும் 100, 200 தேறுது. 5000 ரூபா முதல் போட்டிருக்கேன். ஒரு பீஸ் 10 ரூபாயிலிருந்து 30 ரூபா வரை விக்கிறேன். மண்டை ஓடு படம் போட்டது, சோட்டா பீம், ஏஞ்செல்ஸ் படம் போட்ட மாஸ்க்குகள்… இப்படி குழந்தைகளின் விருப்பத்திற்காக பல கலருல வாங்கி வச்சிருக்கேன். எப்படியோ குழந்தைகள் விளையாட்டாக மாட்டிக்கொண்டால்கூட போதுமென்று பெற்றோர்கள் வாங்கிக் கொடுக்கிறார்கள். புதுசா இதுவேற செலவு என்று கஷ்டத்துடன் பணத்தை எடுக்கிறார்கள்.

யாரிடமும் கையில் பணமில்லை. ஏதும் பெரிய வருமானம் இல்லையென்றாலும் 4 பேரை பார்க்கிறோம். மனசு பாரம் குறையுது. முகம் தெரியாத ஒருவருக்கொருவர் துன்பத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, நம் வாழ்க்கை பரவாயில்லையே என்று நம்பிக்கை துளிர்க்கிறது. கொரோனா காலத்தில் இப்படித்தான் என் காலம் ஓடுகிறது.

படிக்க:
இப்ப 10 ரூபா டீத்தூளுக்குக் கூட கடன் கொடுக்க மாட்டேங்குறான் !
நான் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பிலிருந்து விலகியது ஏன் ? ஜெய் கோலியாவின் அனுபவம்

மாஸ்க் விற்கும் டெய்லர் நியாஸ்

மாஸ்க் வாங்க வந்தவர்போல் சொந்தக் கடையை விட்டு தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார் நியாஸ். நீங்கதான் ஓனரா என்றோம். ஓனர் மைலாப்பூர்ல இருக்காரு. இதே மாதிரி ஒரு கடையை அங்கே போட்டிருக்கிறார். சரக்கை தினமும் இங்கே என்னிடம் கொண்டுவந்து கொடுத்துவிடுவார். எனக்கு ஒரு நாளைக்கு 200 ரூபா சம்பளம் என்றார்.

கடைக்கும் தனக்கும் சம்பந்தமில்லாதவரைப் போல பிளாட்பாரத்தின் ஓரத்தில் உட்கார்ந்திருக்கிறார் டெய்லர் நியாஸ்.

ஏன் நீங்களாவே சொந்தமா கடை போடலாமே என்றோம்.

அய்யாயிரம்.. பத்தாயிரமுன்னு முதல் போட நம்மகிட்டே ஏது காசு. இதுல வேற தெரிஞ்சவுங்க பக்கத்துல இருக்கணும். அப்பத்தான் பஜார்ல ஓரமா நின்னு விற்க முடியும். நமக்கு யாரையும் தெரியாது. கையில பணமும் இல்லை. நான் இந்த வேலைக்கு வந்தே ரெண்டு நாளுதான் ஆகுது. என்னோட வேலையே வேற. எனக்கு டெய்லரிங் நல்லா தெரியும். ஜென்ட்ஸ் ஸ்பெசலிஸ்ட். பேன்ட், சட்டை என பீஸ் ரேட்டுக்கு போயி தச்சு கொடுப்பேன். கொரோனாவுக்கு முன்னாளேயே பல நாட்கள் வேலை இல்லை. கொரோனா மொத்தமா எங்க சோலிய முடிச்சிடுச்சு.

டெய்லர் தொழில்ல தினமும் 400 ரூபாயாவது சம்பாதிப்போம். அத வச்சு குடும்பம் ஓடுச்சு. கொரானாவுல பல மாதங்களா வேலை இல்லாம சும்மாதான் இருந்தேன். இப்பத்தான் இங்கேவந்து நிக்கிறேன். வேற வழி தெரியல. ஒரு நாளைக்கு 500 ரூபாய்க்குக்கூட விற்க மாட்டேங்குது. எனக்கு விற்கத் தெரியலன்னு ஓனர் திட்டுராறு. கஷ்டமா இருக்கு. இதோ பாருங்க, காலையிலிருந்து வெறும் 60 ரூபாதான் இதுவரை வித்திருக்கு என்று பாக்கெட்டைத் துழாவி எடுத்துக் காண்பித்தார்.

இப்ப ஒரு வேளைதான் சாப்பாடு. பக்கத்துல பீப் பிரியாணி விற்கிற தம்பிகிட்டேதான் மதியம் சாப்பாடு சாப்பிட்டேன். என்னோட நிலைமைய தெரிஞ்சு, 50 ரூபா குஸ்காவை 30 ரூபாய்க்கு எனக்குக் கொடுக்கும். முகம்தெரியாதவங்கதான் ஆதரவா இருக்காங்க.

30 ரூபாய்க்கு பீப் பிரியாணி சாப்பிட்டேன். இப்ப இருக்குறது, வெறும் 60 ரூபாதான் என்று பாக்கெட்டைத் துலாவி எடுத்துக் காண்பிக்கிறார், நியாஸ்.

என் பொண்டாட்டி நிலைமைய புரிஞ்சிக்கிறா. இந்த கஷ்டமெல்லாம் குழந்தைகளுக்கு புரியுமா? பர்த்டே புது ட்ரெஸ் இல்லன்னு கோச்சுக்குதுங்க. இங்க சோறே பிரச்சினை. குழந்தைகளை காப்பாத்தவாவது எப்படியாவது வாழ்ந்தாகணுமேன்னு தோனுது. மாதம் 2,500 ரூபா வீட்டு வாடகை. மூனு மாதமா கொடுக்கல. ஒரு ரெண்டாயிரமாவது கொடுத்து ஓனர சமாளிக்கலாமுன்னு பாக்குறேன், முடியல. வீடு காலி பண்ணச் சொன்னா, குழந்தைகள அழைச்சிகிட்டு எங்கே போவேன் என்றார் துக்கம் தாளாமல்.

படிக்க:
இந்திய மக்கள் தொகையில் பாதியளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள் : உலக வங்கி அறிக்கை !
கொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை

சேல்ஸ்மேன் ஆன, சேல்ஸ் மேனேஜர்

அப்பகுதியிலிருந்த சாலையோர முகக்கவச கடைகளிலேயே பளிச்சென்று பகட்டாக இருந்த கடை. பார்த்தவுடன் கவர்ந்தது.

எப்படி உங்க கடை மட்டும் தனித்துத் தெரிகிறது? முகக்கவசங்கள் எல்லாம் ப்ரஷாக மிடுக்காக இருக்கே எப்படி? என்றோம்.

இது தி.நகர் பாண்டியன் ஹோல்சேல் ஸ்டோர் போட்ட நேரடி கடை சார். இங்கே 40 ஆயிரத்துக்கு சரக்கு இருக்கு. தினமும் பழைய சரக்க எடுத்துட்டு ப்ரஷா சரக்கு போடுவோம் என்றார்.

பாண்டியன் ஸ்டோரில் என்ன வேலை செய்தீர்கள்? இங்கு எப்படி வந்தீர்கள்? என்றோம்.

தி.நகர் துணிக்கடையில் ப்ளோர் மேனேஜராக இருந்தேன். இப்போ, வியாபாரம் இல்லேன்னு முக்கால்வாசி பேரை தூக்கிட்டாங்க. என்ன மாதிரி பல வருசங்களா வேலை செஞ்சவுங்கள விடாம வச்சிருக்காங்க. சென்னை முழுவதும் இந்த மாதிரியான தெருவோரக் கடைகள், பத்துக்கும் மேல இருக்கு. இன்னும் பல கடைகளை தெறக்கப் போறாங்க.

தி.நகர் பாண்டியன் ஸ்டோர்ஸ்-இல் ப்ளோர் மேனேஜராக இருந்த விஜய், தற்போது சாலையோரக் கடையில் மாஸ்க் விற்பனை செய்து வருகிறார்.

மொத்த சரக்கையும் நம்பிக்கையின் பேரில பில் போட்டு எங்களுக்கு கொடுத்துடுவாங்க. வேலை முடிஞ்சு தினமும் ஸ்டோருக்கு போயி கணக்கு  கொடுக்கணும். சாப்பாடு, தங்குற இடம் அவங்களோட ஏற்பாடு. ஒரு நாளைக்கு 3,000 ரூபாய்க்காவது வித்தாகணும். அதுக்கு மேல ஒவ்வொரு ஆயிரத்துக்கும் 100 ரூபா எக்ஸ்ட்ரா. எதுவும் விக்கலன்னாலும் தினக்கூலி 500 உண்டு.

ஒரு மாஸ்க் 40 ரூபாயிலிருந்து 140 ரூபாய் வரைக்கும் பல வெரைட்டி இருக்கு. நல்ல தரமா இருக்கும். நீங்களே பாருங்கள் என்றார்.

கடையில் ஏசி அறையில் மேனேஜர் வேலை பார்த்துவிட்டு வெயிலில் தூசியில் நிற்பது கஷ்டமா இல்லையா, கொரோனா பயம் போயிருச்சா என்றோம்.

மனசு பயப்படத்தான் செய்யுது. ஆனா, வயிறு பசி எடுக்காமலா இருக்குது? இந்த வேலையும் செய்ய மாட்டேன்னு வீட்டுக்குப் போனா எல்லோரும் பசியிலேயே செத்துடுவோம் சார் என்று வாடிக்கையாளர்களை கவணிக்க ஆரம்பித்தார்.

மேலும் படங்களுக்கு :

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

பறி போகும்  பாரியின்  பறம்பு மலை : வி.இ.குகநாதன்

லகின் சில பெரும் பண முதலைகளின் ஆதாயத்திற்காக உலகின் சுற்றுச் சூழல் விலையாகக் கொடுக்கப்பட்டு, எதிர்கால மனித வாழ்வு கேள்விக்கு உள்ளாக்கப்படும் செயலானது; முன் எப்போதையும் விட இப்போது மிகையாக  நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில்  திரும்பி வர முடியாத / மீளச் சரி செய்ய முடியாத நிலையினை,  உலகு இன்னமும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஆண்டுகளில் அடைந்து விடும் என அறிஞர்கள் கணிப்பிடுகின்றார்கள்.

மேற் கூறியவை யாவும் சூழல் பற்றிய விழிப்புணர்வு ஒப்பீட்டு ரீதியில் கூடிய வளர்ந்த நாடுகளின் நிலையாகும். வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளில் நிலைமை இன்னமும் மோசமாகவேயுள்ளது. இந்த நிலைமை தமிழகத்திலும் தற்போதைய ஆட்சியில் மோசமாகவேயுள்ளது. தமிழகம் எங்கும் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வரும் மண் அகழ்வுகள், காடழிப்பு, விளை நிலங்கள் விளைச்சலிருந்து விலகுதல் என இப் பட்டியல் நீண்டு செல்லும். இந்த நிலையிலேயே  சிவகங்கை மாவட்டத்திலுள்ள பறம்பு மலைப் (பிரான் மலை) பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கற் குவாரி நிறுவனம் ஒன்றின் செயற்பாடுகளானவை இன்னல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளன. ஏற்கனவே சட்டத்திற்குப் புறம்பான மண் அகழ்வுகள் பரவலாக நடைபெற்று வரும் இந்த மாவட்டத்தில், இப்போது இந்த மலை அழிப்புப் பற்றிய செய்திகள் வேறு வந்து கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே தமிழகத்தின் பெரும் பகுதி பாலை நிலங்களாக மாறி வருவதாக் கூறப்படுகின்றது. தமிழகச் சூழலில் இயற்கையான பாலை நிலங்களில்லை. முறைமையில் திரிந்தே பாலை நிலங்கள் தோன்றுகின்றன. தொல்காப்பியத்தில் கூறப்படாத பாலை சிலப்பதிகார காலத்திலேயே (சங்க மருவிய காலம்) சொல்லப்படுகின்றது.

முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்`

(காடுகாண் காதை, 64-66)

அதாவது காட்டில் ஏற்படும் ஒரு காட்டுத் தீயினால் முல்லை நிலம் திரிந்தோ அல்லது மண் சரிவுகளால் குறிஞ்சி நிலம் திரிந்தோ பாலை நிலமாகும் எனப்படுகின்றது.  இன்று மருத நிலங்களும் (பயிர்ச் செய்கை நிலங்களும்) பாலை ஆவது வேறு விடயம்.  இந்த வகையிலேயே கற் குவாரித் தொழிலிற்காக மலைப் பகுதி பாலை நிலங்களாக்கப் படுவதனையும் பார்க்க வேண்டியுள்ளது.  இது தொடர்பாக ஏற்படும் சூழலியற்  கேடுகள் ஒரு புறமிருக்க, இங்கு தமிழர்களின் தொன்மம் ஒன்று அழிவிற்கு உள்ளாவதும் கவனத்திற் கொள்ளப்பட  வேண்டும்.

படிக்க:
தமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் ? | வி.இ.குகநாதன்
அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தலைவர் அரங்கநாதனை  மிரட்டும் பார்ப்பனர்கள் !

பாரியின் பறம்பு மலை :

‘ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும்….  நெடியோன் குன்று’  {புறம் 114} என்று புறநானூற்றில் பாடப்படும் மலை இந்த பறம்பு மலை தான் என்பது அறிஞர்களின் கருத்து. அதாவது தூரத்தில் நகர்ந்து சென்று, இங்கிருந்து பார்ப்போரிற்கும் தெரியும் ‘நெடியோன் குன்று’ என்பது இப் பாடலின் பொருளாகும். இதற்குச் சான்றாக இடைக் கால கோயில் கல்வெட்டுச் சான்றுகளும் (பாரிசுரம்) காணப்படுகின்றன.

இம்மலைக்குத் தெற்கே ‘கூத்துப் பாரிப் பொட்டல்’ என்றொரு இடமும் உண்டு. பாரி ‘முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்த’ கதையினை/ உவமையினை நினைவுபடுத்தும் வகையில் இன்றும்  இப் பகுதி மக்களிடையே பின்வரும் வழக்காறு உண்டு.

‘கொடி தளும்பினால் குடி தளும்பும்’

அதாவது இயற்கையினைப் பேணாமல், கொடி,செடிகள் அழிந்தால் குடிகளும் அழிந்து போகும் என்ற கருத்தினையே மேற்படி சொல்லடை குறிக்கின்றது. ‘பாரிவேட்டை’ என்ற பெயரில் இப் பகுதியில் ஒரு வகையான கூத்தும் நெடுங் காலமாகவே இடம் பெற்று வருகின்றது. ‘வேட்டையில் நடைபெற்றவற்றை மீள் திரும்பி, மீண்டும் செய்து பார்த்தபோதே கூத்துப் பிறந்தது’ என்ற பேரா.கைலாசபதியின் கருத்தினை, இப் பகுதி மக்களின் பாரி வேட்டைக் கூத்தானது மெய்ப்பிக்கின்றது. இத்தகைய தொன்மை வாய்ந்த பறம்பு மலைக்கே இன்று இடர் ஏற்பட்டுள்ளது. இதனை இப்போது ‘பிரான் மலை’ எனவும் அழைக்கின்றார்கள்.

பறம்புமலை > பிறம்பு மலை  >பிரான்மலை.

‘பாரி முல்லைக்குத் தேர் கொடுத்தான்’ என்பதனை இயற்கை மீது அவன் கொண்ட காதலிற்கான ஒரு உவமையாகவே கொள்ள வேண்டும்.

`பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை
நாத் தழும்பு இருப்பப் பாடாதுஆயினும்,
கறங்கு மணி நெடுந் தேர் கொள்க!`

{புறநானூறு 200}.

முல்லைச் செடியானது  தான் படரக் கொம்பில்லை என்று நாவால் கேட்கவில்லை என்றாலும், குறிப்பால் அறிந்து தனது தேரினைக் கொடுத்தான் எனப் பாடப்படுகின்றது.  இதனை ஒரு உவமையாகவே கொள்ள வேண்டும். முல்லை என்பது இயற்கையின் ஒரு குறியீடாகவும், தேர் என்பது அரச அதிகாரத்தின் ஒரு குறியீடாகவும் கொள்ளலாம். அதாவது அதிக வளர்ச்சியினூடாக தனது அரச அதிகாரத்தை இறுக்கி, அதற்காக இயற்கையினைக் காவு கொடுக்காமல்; இயற்கையுடன் இயல்பாக வாழ்ந்தவனே பாரி. இயற்கையினைப் பேணுவதற்காக, தனது ‘கறங்கு மணி நெடுந் தேர்’ {ஒலிக்கும் மணி- அக்கால சைரன் Siren – பூட்டப்பட்ட நெடுந்தேர்} என்ற பெரிய அரச அதிகாரத்தினைக் கைவிட்டவன் என்பதனையே புலவர் உவமையாக ‘முல்லைக்குத் தேர் கொடுத்தான்’ எனக் குறிப்பிடுகின்றார்.

படிக்க:
நான் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பிலிருந்து விலகியது ஏன் ? ஜெய் கோலியாவின் அனுபவம்
மின்சார- வேளாண் அவசர திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறு ! மதுரையில் ஆர்ப்பாட்டம் !!

இவ்வாறு இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முன்னரே இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த ஒரு மன்னனின் நினைவாக உள்ள ஒரு மலையினை இன்று, சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வு கூடிய இவ் வேளையில், சிதைப்பதனை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? இதற்காகப் போராட, கந்த சட்டிக் கவசத்திற்காகப் போராடிய யாரும் வரப் போவதில்லை. பாடல் பெற்ற கோயில் இருக்கின்றது என்றோ அல்லது ‘குன்று இருக்குமிடம் எல்லாம் குமரன் இருக்குமிடம்’ என்றோ எந்த மத அமைப்பும் போராடப் போவதில்லை. சூழலியல் ஆர்வலர்கள், சமூகப் பற்றாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோரிடம் தான் இந்த வரலாற்றுப் பொறுப்பு வந்து சேருகின்றது.

இது தொடர்பாக ஏற்கனவே பார்வையிடச் சென்ற சில தோழர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியுள்ளது. கொரோனா காலத்தில் கல்லுடைப்பிற்குத் தடை போடாத அரசு, அதனைப் பார்வையிடச் சென்ற தோழர்களை மட்டும் கொரோனாவினைக் காட்டித் தடுத்து நிறுத்துவது சரியானதல்ல. எனவே இது தொடர்பான போராட்டங்கள் தமிழ்நாடு தழுவிய நிலையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

வி.இ.  குகநாதன்

disclaimer

அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தலைவர் அரங்கநாதனை  மிரட்டும் பார்ப்பனர்கள் !

அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சிபெற்ற மாணவர் சங்கத்தலைவர் அரங்கநாதனை  பார்ப்பனர்கள் மிரட்டல் !

பத்திரிக்கை செய்தி

நாள்: 26.07.2020

கருவறையில், தமிழ் நுழைந்தாலும், தமிழன் நுழைந்தாலும், பெண்கள் நுழைந்தாலும் தீட்டாகிவிடும் என பாரப்பனர்கள் இன்றுவரை நம்மை தடுத்து வருகிறார்கள்.

ரத்தம் சிந்தி தமிழர்கள் கட்டி அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில்
சாதி வேறுபாடின்றி தகுந்த பயிற்சி முடித்த அனைவரும் அர்ச்சகராகலாம் என கோரினால் பார்ப்பனர்கள் ஆத்திரம் அடைகிறார்கள்.

அனைத்து சாதியினரும் அரசு அலுவலகங்களில் பணிசெய்வது போன்று ஏன் கோவில்களில் பணி செய்ய முடியாது?  பார்ப்பான் பிறப்பால் உயர்ந்தவன், மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற சாதி இழிவை எப்படி ஏற்க முடியும்.?

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மூடப்பட்ட அனைத்துசாதி அர்ச்சகர் பயிற்சி பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் !

பெரிய கோவில்களிலும் பயிற்சி முடித்த மாணவர்களை பணியமர்த்த வேண்டும். என முகநூலில் வாட்ஸ அப் என சமூக ஊடங்கங்களில்  நாங்கள்  தொடர்ந்து  பிரச்சாரம் செய்வதை  பொறுக்க முடியாத சிலர் போனில்  என்னை மிரட்டுகிறார்கள். கடந்த காலத்தில் ஆட்களை வைத்துத் தாக்கினார்கள்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஜுலை 24-ம் தேதி காலையில் 9597187410 என்ற எண்ணிலிருந்து தமிழ்நாடு அந்தணர் சங்கத்தில்  இருந்து மாநிலத் தலைவர் பேசுவதாக ஒருவர் பேசினார்.  பிறகு ஒரு மணிநேரம் கழித்து பிராமணர் சங்கத்தில் இருந்து பேசுவதாக 7548815221 என்ற எண்ணிலிருந்து வேறு ஒருவர் பேசினார்.  பெயர் சொல்லவில்லை. “நீங்கள் ஆகம கோவில்களில் அர்ச்சகராக வரமுடியாது. ஆகமம் இல்லாத கோவில்களில் போகலாம். நீங்கள் என்ன செய்தாலும் நீங்க  ஒரு மயிறும் புடுங்க முடியாது. ஒழுங்கா இருந்துக்கோ”.என மிரட்டினார்.

படிக்க:
மதுரை நாகமலை கோவிலுக்கு அர்ச்சகராக முடியுமென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முடியாதா ?
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு விசாரணை : நடப்பது என்ன ?

நேரடியாக பார்ப்பனர்களோ அல்லது அவர்கள் தூண்டுதலில் மற்றவர்கள் மிரட்டுவது, தாக்குதலில் ஈடுபடுவது இது முதல் முறை அல்ல. திருவண்ணாமலை அர்ச்சகர் பாடசாலையில் நாங்கள் படித்துக்கொண்டிருந்த பொழுது எங்களுக்கு ஆகமம் கற்றுக்கொடுத்த ஆசிரியரை தாக்கினார்கள். அர்ச்சகர் மாணவர்கள் சங்கம் வைத்து செயல்படுவதற்கு எதிராக என்னிடம் பேரம் பேசினார்கள் ஒத்து கொள்ளவில்லை என்பதால் தாக்கினார்கள்.

“கவனமாக அர்ச்சனை செய்யுங்கள்” என சொன்னதற்காக பெண் பக்தரை சிதம்பரம் தீட்சிதர் கன்னத்தில் அறைந்தான். தேவாரம்பாட சென்ற சிவனடியார் ஆறுமுகசாமியை  தாக்கினார்கள். இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கைகாக அர்ச்சக மாணவர்களின் பிரதிநிதியாக  பத்திரிக்கை,  தொலைகாட்சிகளில் பேசி வருகிறேன். ஆகையால் பார்ப்பனர்களால் எனக்கும் ஏதாவது நடக்கலாம்.

எனவே தமிழக மக்களின் கவனத்திற்கும், தமிழக அரசின் கவனத்திற்கும் பார்ப்பனர்களின் மிரட்டலை கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதற்காகவே  இந்த பத்திரிக்கை செய்தியை வெளியிடுகிறோம்.

போலிசில் அளிக்கப்பட்ட புகார் மனு :

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

வா.ரங்கநாதன், 
தலைவர்
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் –  தமிழ்நாடு
தொடர்புக்கு : 90474 00485


இவற்றையும் பாருங்கள்…

கண்கலங்கி நிற்கும் 204 அர்ச்சக மாணவர்கள்… கவனிக்குமா தமிழக அரசு | Samayam Tamil News

நான் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பிலிருந்து விலகியது ஏன் ? ஜெய் கோலியாவின் அனுபவம்

நான் ABVP – யிலிருந்து விலகியது ஏன் ? – ஏ.பி.வி.பி. முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெய் கோலியாவின் அனுபவம்.

சில சமயங்களில் இளமையின் ஆரம்ப நாட்களில் கிடைக்கப்பெறும் அரசியல் அனுபவத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று, அதனுடன் வரக்கூடிய போராட்டங்களை உள்ளடக்கியிருந்தாலும், அதில் ஈடுபட ஈடுபட நீங்கள் பெருமைப்படத் தக்கதாக உங்களை நல்வழியில் இட்டுச்செல்லும். மற்றொன்று, முக்கிய நோக்கத்துடன், பெருமளவில் தன்னிலையிழக்கச் செய்யும் வகையிலான பாதை.

துரதிஷ்டவசமாக, இரண்டாவது பாதைதான் எனது வாழ்க்கையில் பொருந்தியது. ஆனால் எனது மனசாட்சியோ எந்தவொரு பொருளாயத பலனையும் எதிர்பாராமல், உண்மையின் பாதையில் செல்ல என்னை நெட்டி தள்ளியது.

2014 ஆம் ஆண்டு காவி அலை நரேந்திர மோடியை ஆட்சியில் அமர்த்தியது. இந்த புதிய ஆட்சி, ஆற்றல்மிக்க பல இளைஞர்களின் முழு ஆதரவையும் பெற்றது. ஏனென்றால், பாஜக கொடுத்த வாக்குறுதிகளான, கடந்த காலங்களில் நடந்து வந்த ஊழல், கறுப்புப் பணம் மற்றும் வறுமை பிரச்சினைகளை ஒழித்துக்கட்ட புதிய ஆட்சி ஏதாவது செய்யுமென பல இளைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

அப்படி எதிர்பார்த்திருந்தவர்களுள் நானும் ஒருவன். எனது தேசத்திற்காக ஏதாவது செய்ய வேண்டுமென என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இந்த அதிகாரத்துவத்தையும் அரசியல் கட்டமைப்பையும் மாற்றியமைக்க என்னால் முடிந்ததை சிறப்பாகச் செய்ய விரும்பினேன்.

அப்போதுதான் நான் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் பாஜக.வின் வலதுசாரி மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) உடன் தொடர்பு கொண்டேன்.

படிக்க:
மாரிதாஸும், லார்டு லபக்கு தாஸ்களும்.. !
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு விசாரணை : நடப்பது என்ன ?

ஏபிவிபி-யில் இணைந்து பணியாற்றத் தொடங்கியபோது எனக்கு வயது 18 – பி.எஸ்சி முதலாமாண்டு மாணவன். அப்போது ஆர்.எஸ்.எஸ்-ன் உள்ளூர் தலைவர்களையும், உறுப்பினர்களையும் தினசரி சந்திப்பேன். அமைப்பு வேலையில் என்னை மும்முரமாக ஈடுபடுத்திக் கொண்டேன். குறுகிய காலத்திலேயே, நான் தெற்கு மும்பை மாவட்டத் துணை செயலாளராக நியமிக்கப்பட்டேன். அதன்பிறகு, மாவட்டச் செயலாளர். பின், மாநில செயற்குழு உறுப்பினர். இதனிடையே, அந்த அமைப்பில் தொடர்புடைய பலருடன் நான் நல்ல நட்பு கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் – 2019 வந்தது. நான் எனது இரண்டு சகாக்களுடன் மும்பையில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டேன். முதன்முதலில் இங்குதான் வெவ்வேறு சித்தாந்தங்களுடன் நேருக்கு நேர் மோதுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதே நேரத்தில், நான் சார்ந்த அமைப்பின் மறைவான காரியங்களையும் நன்கு புரிந்து கொள்வதற்குமான இடமாகவும் அமைந்தது.

தேர்தல்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை நேருணர்ந்து கொள்வதற்காகவே, அமைப்பின் பிரதிநிதியாக ஜே.என்.யூ.வில் நான் தங்கியிருந்தேன். அங்கு சுமார் இரண்டு வார காலம் இருந்தேன். இந்த காலகட்டம்தான் நான் முடிவெடுக்கவிருந்த சமயத்தில் சற்றேறக்குறைய என்னை ஆதிக்கம் செய்தது.

அங்குதான் (ஜே.என்.யூ) இடதுசாரி சித்தாந்தங்களை நான் நன்கு கற்றுக் கொண்டேன். பல ஆண்டுகளாக எனது அமைப்பு செய்து வந்த தவறான நடவடிக்கைகளையும் அறிந்தேன். ஜே.என்.யூ மாணவர்கள் சிலரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றேன். அச்சந்திப்புகள் கண் திறப்பவையாக இருந்தன.

ஆனால், தேர்தல் முடிந்து ஜே.என்.யூ.வை விட்டு வெளியேறியதும் அந்தக் ‘கட்டத்தை’ நான் கருத்தில் கொள்ளவில்லை. மீண்டும் மும்பையில், அமைப்பு வேலைகளில் என்னை பரபரப்பாக்கிக் கொண்டேன்.

குடியுரிமைத் திருத்தச் சட்டமானது இந்திய முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மீண்டும் மீண்டும் கூறப்பட்டாலும், சிஏஏ அமல்படுத்தப்பட்ட பின்னர், நிலைமை பழைய மாதிரி நீடிக்கவில்லை.

படிக்க:
பாஜக-வுக்கு எதிராக கருத்திட்ட பேராசிரியரை மண்டியிடச் செய்த ஏபிவிபி குண்டர்கள் !
பேசுங்கள் பேசுங்கள் வாய்திறந்து…. ம.க.இ.க.வின் புதிய பாடல் !

டிசம்பர் 19-ம் தேதி எனது தலைமையின்கீழ் சிஏஏ ஆதரவு பேரணி நடந்தது. ஆனாலும், எனது இதயத்தின் ஏதோ ஒரு மூலையில், விசயங்கள் ஒழுங்காக நடக்கவில்லை என்பதை மட்டும் உணர்ந்தேன்.

உங்கள் வாழ்க்கையில் உங்களது சொந்த மனசாட்சியே உங்களை வெறுக்கத் துவங்கும் நேரம் வரும். அந்த நேரம் எனக்கும் வந்தது.

முஸ்லீம் சகோதரத்துவத்துக்கு எதிரான மனிதத் தன்மையற்ற நடவடிக்கைகளும், சங் பரிவாரத்தின் மற்றொரு பிரச்சாரப் பிரிவாக செயல்படுவதைத் தாண்டி ஒரு முறையான மாணவர் குரலை உருவாக்குவதில் அமைப்பின் (ABVP) இயலாமையும் எனக்குள் மனமாற்றத்தை நிகழ்த்தியது.

பல நாட்கள் இரவு பகலாகத் தூக்கமின்றி எனது முடிவைப் பற்றி சிந்தித்த பிறகு, புத்தாண்டின் துவக்கத்தில், முறையான கடிதம் கூட கொடுக்காமல் அமைப்பிலிருந்து வெளியேறினேன்.  அந்த அமைப்பில் எதுவுமே முறையாக இல்லாத நிலையில் கடிதம் மட்டும் எதற்கு?

நான் ஏபிவிபி-யில் இருந்திருந்தால், அவர்கள் சொன்னதைப் போல அமைப்பின்  தரப்பட்டியலில் உயர்ந்து, “பிரகாசமான எதிர்காலத்தைப்” பெற்றிருக்கலாம். ஆனால் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மும்பை வீதிகளில் நின்று குரல் கொடுப்பதில்தான் எனது உண்மையான மகிழ்ச்சியைக் கண்டு கொண்டேன். நமது முஸ்லீம் சகோதரர்களுடன் சேர்ந்து முழக்கமிட்டும், புரட்சிகரப் பாடல்களையும் கவிதைகளையும் பாடியும் அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறேன்.

என்னை பொறுத்தவரையில், எனக்குள் ஒரு தலைகீழ் மாற்றம் (புரட்சி) உண்டாகிவிட்டது. வலதிலிருந்து இடது நோக்கிப் பயணிப்பது என்பது சில இலக்கியங்களைப்  படிப்பதன் மூலம் மட்டுமே நடந்துவிடுவது இல்லை. ஒவ்வொரு இந்தியனுக்கான ஒற்றுமையுணர்வு நிறைந்திருக்கும் வீதிகளில் தான் அது அன்போடு சாத்தியமாகிறது.

ஏபிவிபியில் புதியவனாக உள்நுழைந்த என் வாழ்க்கையின் காலப்பகுதி இவ்வாறாக முடிவுக்கு வந்தது. புத்துணர்வு கொண்ட ஓர் இளைஞனாக இந்தப் பெரிய – பரந்த உலகில் நுழைகிறேன்.

இப்போது ஒரு பொறுப்புள்ள குடிமகனாக எனது பயணம் துவங்குகிறது.


தமிழாக்கம் :
– ஷர்மி
மூலக்கட்டுரை : த வயர்.

மின்சார- வேளாண் அவசர திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறு ! மதுரையில் ஆர்ப்பாட்டம் !!

கில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அறைகூவலை ஏற்று விவசாயிகளை ஒடுக்கும் கார்ப்பரேட் ஆதரவு மின்சார- வேளாண் அவசர திருத்தச் சட்டங்களை மத்திய அரசாங்கமே திரும்பப் பெறு! என்கிற முழக்கத்தை முன்வைத்து, போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

அதனடிப்படையில் விவசாயிகள் விரோத சட்டங்களை எதிர்த்து, கையெழுத்து இயக்கமும் அதன் தொடர்ச்சியாக ஜூலை 27-2020 அன்று தமிழகம் முழுவதும் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் மற்றும் பல்வேறு கட்சிகள், ஜனநாயக சக்திகள் இணைந்து மதுரை ஒத்தக்கடையில் ஜூலை 27 அன்று காலை 10.30 மணி அளவில் கருப்புக் கொடி ஏந்தி மனிதச் சுவர் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் மக்கள் அதிகாரம் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர் தோழர் சரவணன் தலைமையில் நடந்தது. இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் தோழர் காளிதாஸ் ஆர்ப்பட்டத்தைத் தொடங்கி வைத்தார். மதிமுக மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் திரு மாரநாடு முன்னிலை வகித்தார். சி பி எம் -ன் கிழக்கு ஒன்றிய செயலாளர் தோழர் கலைச்செல்வன், ஆதித்தமிழர் கட்சியைச் சேர்ந்த தோழர் விடுதலைவீரன் ஆகியோர் பங்கேற்று கன்டன உரையாற்றினார்கள். திரு இளங்குமரன் (மதிமுக) நன்றியுரையாற்றி ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ எழுச்சி முழக்கத்தோடு ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஜனநாயக சக்திகள்..

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
மதுரை, யா. ஒத்தக்கடை.
தொடர்புக்கு : 63832 43495.

மாரிதாஸும், லார்டு லபக்கு தாஸ்களும்.. !

ங்களில் யாருக்காவது Tamilnadu Young Thinkers Forum என்ற அமைப்புப் பற்றி தெரியுமா? தெரியவில்லை என்றால், தயவுசெய்து கூகுளில் தேடுங்கள். பல அதிர்ச்சிகரமான வலைப்பின்னல்களை அறிந்து கொள்ளலாம்.

இது ஆர்.எஸ்.எஸ்-ன் மறைமுக அமைப்பு. இப்போது யாரெல்லாம் வலதுசாரி அரசியல் கருத்துக்களை சமூக ஊடகங்களில் பரப்புகிறார்களோ.. மாரிதாஸ் முதல் பத்ரி சேஷாத்ரி வரை, ரங்கராஜ் முதல் ஷ்யாம் சேகர் வரை… இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் புள்ளி இதுதான். தமிழக வலது அரசியல் போக்குகளின் aggregator இந்த அமைப்பு. Young Thinkers Forum–> Swarajya –> RSS – என்று இந்த வலைப்பின்னல் போகிறது.

2016-ல் தமிழ்நாட்டில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. அந்த தொடக்கவிழாவில் ஆர்.எஸ்.எஸ்-ஸின் தேசிய செயற்குழு உறுப்பினர் ராம் மாதவ், ஆர்.எஸ்.எஸ். இணைப் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோஸபலே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ஹோஸபலே, ‘அறிவுத்துறையில் நமக்கான போர்வீரர்களை உருவாக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார். இதைத்தான் இந்த அமைப்பு செய்து வருகிறது.

2017 நவம்பரில் இந்த அமைப்பு மைலாபூரில் Social media conclave ஒன்றை நடத்தியது. இதை தொடங்கி வைத்தவர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நீண்டகால தொடர்பு உள்ளவர் என்பதை இணைந்து புரிந்துகொள்ள வேண்டும். இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய விருந்தினர் பட்டியல் இன்னும் சுவாரஸ்யமானது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தந்தி டி.வி.யின் அசோக வர்ஷினி, The news minute இணையதளத்தின் founder editor தன்யா ராஜேந்திரன், பாடகி சின்மயி, டி.வி.விவாதங்களில் கலந்துகொள்ளும் ஷ்யாம் சேகர், சுமந்த் சி.ராமன், பானு கோம்ஸ் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இதில் பேசிய, ’ஸ்வராஜ்யா’ இணையதளத்தின் ஆசிரியர் பிரசன்னா வெங்கடேசன் எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் வெளிப்படையாக பேசினார்.

“தமிழ் சமூக ஊடகத்தில் இடது சிந்தனை அதிகமாக உள்ளது. இது தொழிற்துறை வளர்ச்சிக்கு எதிரான போக்கை வளர்க்கிறது. நியூட்ரினோ, ஹைட்ரோஹார்பன் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் எதிர்க்கும் போக்கு உள்ளது. ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் உந்துதலால், தமிழ்நாட்டை ஒரு எதிர்ப்பு மாநிலமாக மாற்ற முயல்கின்றனர். ஒரு குறிப்பிட்ட சாதி இலக்கு வைத்து தாக்கப்படுகிறது. இந்து ஃபோபியா வளர்த்துவிடப்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்’’ என்று தங்கள் நோக்கத்தை திட்டவட்டமாக குறிப்பிட்டார். சுருங்கச் சொன்னால் அறிவுத்துறையில் வலதுசாரி போக்கை வளர்த்தெடுப்பது இந்த அமைப்பின் ஒற்றை நோக்கம்.

படிக்க:
பேசுங்கள் பேசுங்கள் வாய்திறந்து…. ம.க.இ.க.வின் புதிய பாடல் !
ஊரடங்கு அல்ல, அறிவிக்கப்படாத அவசர நிலை !

இதன் செயல்பாடுகளை தேடிப் படித்தால் ஷ்யாம் சேகர், மாரிதாஸ், பத்ரி ஷேசாத்ரி, ரெங்கராஜ் (Ex. தந்தி டி.வி) போன்றவர்கள் இதன் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருவதை அறிய முடிகிறது. இவர்கள் நடத்தும் கூட்டங்களில் பெரிய கூட்டம் இல்லை. 30 பேர், 50 பேர் வருகிறார்கள். இந்த Young Thinkers Forum-ன் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் பெரிய அளவுக்கு ஃபாலோயர்ஸ் இல்லை. இருப்பினும் பத்ரி, ஷியாம் சேகர் போன்றோர் இதன் நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் தந்து கலந்துகொள்கிறார்கள்.

மாரிதாஸ் என்ற நபர், ‘நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்?’ என்ற புத்தகத்தின் வழியேதான் இங்கு அறிமுகம் செய்யப்படுகிறார். அதற்கு முன்னால் இந்தப் பெயரை கூட யரும் கேள்விப்பட்டதில்லை. அந்தப் புத்தகத்தை தன்னுடைய கிழக்குப் பதிப்பகம் மூலம் வெளியிட்டவர் பத்ரி சேஷாத்ரி. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி பேசியவர்களில் ஒருவர் கே.டி.ராகவன். புத்தகம் போடும் அஜண்டா பத்ரிக்கு… வாழ்த்திப் பேசும் டார்கெட் ராகவனுக்கு. வதந்தி பரப்பும் அஜண்டா மாரிதாஸுக்கு. ஆகவே, மாரிதாஸை மட்டுமல்ல.. இந்த லார்டு லபக்கு தாஸ்களையும் நாம் இணைத்து புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், இந்த Young Thinkers Forum-மானது, இளையோர் நாடாளுமன்றம் என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்குள் ஊடுருவிச் செல்வது, பட்ஜெட் கொள்கை விளக்க கூட்டங்கள், கல்விக்கொள்கை வரைவு அறிக்கை மீதான கூட்டம் என பரந்த வரையறையில் ஒரு கருத்துருவாக்க வேலையிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் ‘அம்பேத்கர் – ராமானுஜச்சார்யா விருதுகள்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பல்வேறு பிரிவினருக்கு விருதுகளையும் வழங்கி வருகிறது. ’கக்கன் வாழ்நாள் சாதனையாளர் விருது’ என்ற பெயரில் மற்றொரு விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த Young Thinkers Forum-ஐ இந்தியா முழுவதும் நடத்தி வருவது ‘இந்தியா ஃபவுண்டேஷன்’ என்ற ஆர்.எஸ்.எஸ். சார்பு கொண்ட அமைப்பு. இந்த இந்தியா ஃபவுண்டேஷனின் ஆலோசகர்களாக செயல்பட்டு வருவோரில் முக்கியமானவர்கள் நிர்மலா சீத்தாராமன், ஆர்.எஸ்.எஸ். தேசியச் செயலாளர் ராம் மாதவ் உள்ளிட்டோர்.

இதைப்போலவே, ‘விவேகானந்தா இண்டர்நேஷனல் ஃபவுண்டேஷன்’ என்ற மற்றொரு Forum வழியேவும் இதேவேலையை செய்து வருகின்றனர். இதன் ஆலோசகர்களில் ஒருவர் குருமூர்த்தி. இந்த அமைப்பு வழியாகதான் 2011-ல் ‘ஊழலுக்கு எதிரான பொது மேடை’ என அன்னா ஹசாரே முன்னிருத்தப்பட்டார். அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளே வந்தார். சுப்ரமணியன் சாமி, கிரண்பேடி என்று பலர் அதில் அணிதிரண்டனர். ஊழல் மட்டுமே நாட்டின் முதனை பிரச்னை என்ற பிரசாரம் நாடு முழுவதும் முடுக்கிவிடப்பட்டு பா.ஜ.க. ஆட்சியையும் பிடித்தது.

தற்போது இவர்கள் தென்னிந்திய ஊடகங்களை, குறிப்பாக சமூக ஊடகத்தை manipulate செய்யும் வேலைத் திட்டத்துடன் களம் இறங்கியுள்ளனர். ஏனெனில் பாரம்பரிய ஊடகங்கள் ஏற்கெனவே அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. சமூக ஊடகம்தான் சவாலானதாக இருக்கிறது என்பதால் அதை குறி வைத்துள்ளனர்.

இதற்கான அடியாள்படையில் மாரிதாஸ், ரெங்கராஜ் போன்றோர் முன்னே நிற்பவர்கள் என்றால், பத்ரி சேஷாத்ரி, ஷ்யாம் சேகர், பானு கோம்ஸ் போன்றோர் பின்னால் நிற்கிறார்கள். மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் இவர்கள் செயல்படுகின்றனர். இப்போதே எச்சரிக்கை அடைந்து வினையாற்றவில்லை என்றால் எதிர்காலத்தில் விளைவுகள் மோசமாக இருக்கும்.

நாம் பெரியார் மண், பெரியார் மண் என்று வாய்ப்பேச்சில் மட்டும் சொல்லிக்கொண்டிருக்க, அவன் அந்த மண்ணுக்கும் கீழாக குழி பறித்துக் கொண்டிருக்கிறான். இதை முதலில் உணர வேண்டும்.

நன்றி : ஃபேஸ்புக்கில்ஊடக கண்காணிப்பு

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு விசாரணை : நடப்பது என்ன ?

0

பாபர் மசூதி இடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் இப்போதுதான் பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பாஜக / ஆர்.எஸ்.எஸ். தலைவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம்.

இந்தியாவின் கருப்பு நாள் என்று அழைக்கப்படும், டிசம்பர் 6, 1992 அன்று சங்க பரிவார மதவெறி கும்பலால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக இரண்டு வழக்குகள் பதியப்பட்டன. குற்றத்தில் நேரடியாக ஈடுபட்ட ‘கரசேவகர்கள்’ மீது ஒரு வழக்கு மற்றும் சதித்திட்டம் தீட்டிய சங்க பரிவாரக் கும்பல் மீது மற்றொரு வழக்கு என இரண்டு வழக்காகப் பதியப்பட்டது.

சதி செய்த குற்றத்தின் கீழ் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான, எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங், கிரிராஜ் சிங் கிஷோர், விஷ்ணு ஹரி தால்மியா, சாத்வி ரிதம்பரா, பால் தாக்கரே உள்ளிட்ட பல்வேறு ஆர்.எஸ்.எஸ் – பாஜக தலைவர்கள் மீது கரசேவகர்களைத் தூண்டும் விதத்தில் பேசியதாகவும், முழக்கமிட்டதாகவும், சதித் திட்டம் தீட்டியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தற்போது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவரும் இந்த வழக்கு, கடந்த 1993-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்று வருகிறது.

“கரசேவை பஜனையும் கீர்த்தனை பாடுவதற்காகவும் அல்ல, ஸ்ரீராமனின் ஆலயத்தை அங்கு கட்டுவதையும் உள்ளடக்கியதுதான்” என மசூதி இடிப்பிற்கு முன்னர் அத்வானி வெறிகொண்டு திரும்பத் திரும்ப கூறியதை குறிப்பிட்டுக் காட்டுகிறது அந்த குற்றப் பத்திரிகை.

அதில் முரளி மனோகர் ஜோஷி குறித்துக் குறிப்பிடுகையில், “டிசம்பர் 1, 1992 அன்று அயோத்திக்கு செல்லும் வழியில் மதுராவில் பேசிய முரளி மனோகர் ஜோஷி, ராமர் கோவில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று பேசியதோடு, டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதி இடிப்பின் போது மேடையில் இருந்து கரசேவகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டும், தூண்டிவிடும்படியாக முழக்கமிட்டுக் கொண்டும் இருந்தார்” என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

உமா பாரதி மீதான குற்றப் பத்திரிகையில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6, 1992 அன்று, “இன்னும் ஒரே அடி .. பாபர் மசூதி வீழ்ந்துவிடும்” என்றும், “ மசூதியை இடி, கோவிலைக் கட்டு, பாபரின் வாரிசுகள் பாகிஸ்தான் செல்லட்டும்” என்றும், “ஜெய் ஸ்ரீராம் என ஜின்னா சொல்லட்டும்” என்றும் முழக்கமிட்டு கர சேவகர்களை மசூதியை இடிக்கத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

1993-ம் ஆண்டு தொடுக்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை கீழமை நீதிமன்றங்களில் முடிந்து பின்னர் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மேல் முறையீட்டுக்கு வந்தது. கடந்த 2010-ம் அண்டு அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் லக்னோ அமர்வு, அத்வானி மற்றும் பிறர் மீதான சதிக் குற்றச்சாட்டை ரத்து செய்து கீழமை நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை உறுதி செய்தது. 9 மாதங்களுக்குப் பின்னர் சி.பி.ஐ இதற்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அச்சமயத்தில் இந்த 9 மாத தாமதத்தைக் காரணம் காட்டி அத்வானி மற்றும் பிறர் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்யக் கோரினர்.

படிக்க:
அயோத்தி இராம ஜென்மபூமி : வரலாறும் புனைசுருட்டும்
ஊரடங்கு அல்ல, அறிவிக்கப்படாத அவசர நிலை !

இந்த வழக்கு நிலுவையில் நின்ற நிலையில் கடந்த ஏப்ரல் 19, 2019 அன்று அத்வானி மற்றும் பிறர் மீதான குற்றச்சதி வழக்கையும், கரசேவகர்கள் மீதான வழக்கையும் ஒன்றிணைத்து, லக்னோவில் ஒரு சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றத்தை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 13 பேர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் வழக்கில் சேர்த்துக் கொண்டது.

சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், கடந்த ஜூன் 4 முதல் வாக்குமூலங்களைப் பெறத் துவங்கியுள்ளது. பிரிவு 313-ன் படி சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நீதிபதி கேள்விகளைத் தொடுப்பார். அதற்கு அவர்கள் பதில் கொடுக்க வேண்டும்.

கடந்த 23-ம் தேதி முரளி மனோகர் ஜோஷி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம், சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ். கே. யாதவ் முன்னிலையில் வாக்குமூலம் அளித்த முரளி மனோகர் ஜோஷி, தனது வாக்குமூலத்தில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் இருந்த மத்திய அரசு, அரசியல் பழிதீர்க்கும் நோக்கோடு தன்னை இவ்வழக்கில் இணைத்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதே போல அரசு தரப்பில் வைக்கப்பட்டுள்ள சாட்சியங்களை பொய்யானவை என்றும் அரசியல் நோக்கங்களால் உந்தப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்த சமயத்தில் வெளியான வீடியோ மற்றும் செய்தித்தாள் புகைப்படங்கள் அனைத்தும் சித்தரிக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளார் ஜோஷி.

இராமர் கோவில் கட்ட தயார் செய்யப்பட்ட கல்தூண்கள். (கோப்புப் படம்)

இந்த விவகாரத்தில் அத்வானி கடந்த 24-ம் தேதி வாக்குமூலம் அளித்தார். அதில் ஜோஷி முன்வைத்த அதே வாதத்தை வைத்துள்ளார் முன்வைத்துள்ளார். அதற்கு முன்னர், கடந்த 22-ம் தேதியே இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசு வழக்கறிஞர்கள் புடைசூழ அத்வானியை சந்தித்துவிட்டு வந்தார். ஒரு வழக்கில் விசாரிக்கப்பட இருக்கும் குற்றம்சாட்டப் பட்ட நபரை ஒரு உள்துறை அமைச்சர் அரசு வழக்கறிஞர்களோடு நேரில் சந்தித்துவிட்டு வருவது எந்த நாட்டிலும் இல்லாத வழக்கம். முரளி மனோகர் ஜோஷியைப் போல தம்மை எதிர்க்காமல் ஒதுங்கி நிற்கும் கிழட்டு நரி அத்வானி தன்னுடைய ஆள்தான் என்பதைக் காட்டி நீதிபதிக்கு ஒரு எச்சரிக்கை விட்டிருகிறார் அமித்ஷா.

எதிர்வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமன் கோவிலுக்கு பூமி பூஜை செய்து வைக்கவிருக்கிறார் மோடி. இந்த வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றமோ அல்லது அதற்குப் பின்னர் ஒருவேளை மேல்முறையீடு செய்யப்பட்டால் உச்சநீதிமன்றமோ என்ன தீர்ப்பளிக்க முடியும் ? கடந்த நவம்பர் 2019-ல் பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில் ராமர் கோவில் கட்டுவதற்கு அந்த நிலத்தை உச்சநீதிமன்றம் தாரை வார்த்து தீர்ப்பளித்திருக்கிறது. அதன்படி, ராமர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை இவ்வளவு நாள் ‘ஆக்கிரமிப்பு’ செய்திருந்த பாபர் மசூதியை அரசாங்கத்துக்கு செலவில்லாமல் இடித்துத் தரைமட்டமாக்கிய கர சேவகர்களுக்கும், அத்வானி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவாரக் கும்பலுக்கும் இடித்ததற்கான கூலியையும், அதற்காக இந்தியா முழுவதும் ர(த்)த யாத்திரை சென்று ஆட்களைத் திரட்டியதற்கான செலவையும் 28 ஆண்டுகளுக்கு 12% வட்டி கணக்கிட்டு பாக்கியில்லாம ‘செட்டில்’ பண்ணுமாறு நீதிமன்றம் தீர்ப்பளிக்கலாம் !

இது அபத்தமான வாதமாகத் தெரியலாம். இவ்விவகாரம் குறித்து அரசியல் புரோக்கர் சுப்ரமணியசாமி கடந்த 21-07-2020 அன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “அயோத்தி பிரச்சினையில் அத்வானி, ஜோஷியை நீதிமன்றத்துக்கு இழுப்பதற்கு முன்னர், பிரதமர் அல்பத்தனமான (Silly) இந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கை மூட உத்தரவிட வேண்டும்” என்று பதிவிட்டிருக்கிறார். மேலும், “அதில் அவர்களுக்கு பங்கிருக்கிறது என்றால், அவர்கள் மசூதியை இடிக்கவில்லை; மாறாக, ஒரு செயல்படும் கோவிலை மறு கட்டுமானம் செய்திருக்கின்றனர்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ‘மனு’ நீதிமன்றங்களின் நிலை, சட்டமும் வேதமும் படித்த சுப்பிரமணியசாமிக்கு நம்மைவிட அதிகமாகத் தெரியுமல்லவா ?


– நந்தன்
செய்தி ஆதாரம் : த வயர், டைம்ஸ் நவ்.

பேசுங்கள் பேசுங்கள் வாய்திறந்து…. ம.க.இ.க.வின் புதிய பாடல் !

0

மிழ ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களை குறிவைத்து பணி நீக்கம் செய்யும் முயற்சியில் பாஜக – ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஈடுபட்டு வருகிறது. அதனைக் கண்டிக்கும் விதமாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் கோவன் பாடியுள்ள புதிய பாடல். பாருங்கள்… பகிருங்கள்… !

பள்ளிக் கல்வியை உலகவங்கியிடம் ஒப்படைக்கும் மோடி அரசு !

ன்பார்ந்த நண்பர்களுக்கு,

பள்ளிக் கல்வியை உலக வங்கியிடம் ஒப்படைப்பதற்கான புதிய திட்டத்தில் கடந்த ஜூன் 24 ம் தேதி அன்று மோடி அரசு கையெழுத்திட்டுள்ளது. ‘மாநிலங்களின் கற்றல் கற்பித்தல் மற்றும் தேர்ச்சியை வலுப்படுத்துதல்’ ‘Strengthening Teaching-Learning and Results for States’ (STARS) என்ற இத்திட்டம் உலக வங்கியின் உதவியுடன் இந்தியாவின் ஆறு மாநிலங்களில் சோதனைத் திட்டமாக அமல்படுத்தப்படும்.

இதன் வாயிலாக அரசுப் பள்ளிகளின் நிர்வாகத்தை தனியார்களிடம் ஒப்படைப்பதற்கான வேலையை மோடி அரசு செய்துள்ளது. இதனை கண்டித்து கல்வி உரிமைக்கான அகில இந்தியக் கூட்டமைப்பு (All India Forum for Right to Education – AIFRTE) இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதம் ஆங்கிலப் பத்திரிக்கையில் வெளிவந்தது. இக்கடிதம் STARS திட்டம் பற்றிய ஒரு எளிய அறிமுகத்தை கொடுக்கும் என்பதால் அதனை தமிழில் மொழிப்பெயர்த்து தருகிறோம்.

பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக்குழு – சென்னை   

***

பள்ளி கல்வியினை உலக வங்கியிடம் ஒப்படைக்கும் இந்திய அரசின் திட்டத்தை கண்டித்து கல்வி உரிமைக்கான அகில இந்தியக் கூட்டமைப்பு இந்திய பிரதமர்க்கு திறந்த கடிதம்

ன்புள்ள பிரதமர்க்கு,

“வாருங்கள் தன்னிறைவு கொண்ட பாரதத்தை உருவாகுவாம்”,  இது சமீபத்தில் நீங்கள் செய்த முழக்கம். பிறகு ஏன் இந்தியாவின் பள்ளி கல்வியை வடிவமைப்பதற்கும் கண்காணிப்பதற்கும் உலக வங்கிக்கு அழைப்பு விடுத்துள்ளீர்கள்?

கல்வி உரிமைக்கான அகில இந்தியக் கூட்டமைப்பு(All India Forum for Right to Education – AIFRTE), 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடிமை சமூக அமைப்புகளைக் கொண்ட கூட்டமைப்பாகும். இது ஜுன் 2009 முதல் 22 மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதசங்களில் செயல்பட்டு வருகிறது. இந்திய அரசு உலக வங்கியனை ‘மாநிலங்களின் கற்றல் கற்பித்தல் மற்றும் தேர்ச்சியை வலுப்படுத்துதல்’ ‘Strengthening Teaching-Learning and Results for States’ (STARS) என்ற திட்டத்தின் மூலம் பள்ளிக் கல்வியில் தலையிட கடந்த 2019 அக்டோப்பரில் அனுமதித்ததோடு இல்லாமல் உலக வங்கியுடன் கடன் ஒப்பந்தத்திலும் ஜூன் 24 ,2020 அன்று கையெழுத்திடுவதற்கான தயாரிப்பு வேலைகளை செய்து வருவதைக்  கண்டு AIFTRE பெரும் கலக்கத்தையும் வேதனையும் அடைந்துள்ளது. STARS திட்டம் ஆறு மாநிலங்களில் viz., ஹிமாசல் பிரதேசம், கேரளா, மத்திய பிரதேசம், மஹாராக்ஷ்ட்ரா, ஓடிஷா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் சோதனைத் திட்டமாக நிறைவேற்றப்பட உள்ளது.

1. உலக வங்கியின் STARS திட்டமானது தந்திரமாக கீழே சொல்லப்பட்டுள்ளவற்றில் தலையிட சாமக்ரா சிக்க்ஷா அபியான் திட்டத்தின் (Samagra Siksha Abhiyan) சில குறிப்பிட்ட நிலைக்களை குறிவைத்துள்ளது.

  1. Early Childhood Care Education -லிருந்து ஒட்டு மொத்த பள்ளி கல்விக்குமான கற்றல்-கற்பித்தலின் உள்ளடக்கம் (teaching-learning content), பயிற்சிகள் (practices) மற்றும் வெளிப்பாடுகளில்(outcomes) பங்கெடுப்பது,
  2. மேற்கூறியவற்றைச் செயல்படுத்தவதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் அவர்களை கண்காணிப்பது,
  3. “தகுதி அடிப்படையிலான” கற்றல் மதிப்பீட்டு முறைகளை உருவாக்குதல்,
  4. நிர்வாக சீர்திருத்தங்களை திட்டமிடுவது மற்றும் அமல்படுத்துவது. இது வெறும் நிர்வாகத்தோடு மட்டுமல்லாமல், திட்டத்தை அமல்படுத்துவதற்காக ஒருபுறம் கல்வி அதிகாரிகளுக்கு பயிற்சியளிப்பதில் தொடங்கி, மறுபுறம் பெற்றோரையும் அதில் பங்கேற்க வைப்பதற்கு பயிற்சியளிப்பது வரை உள்ளடக்கியது.

படிக்க:
உயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் !
பிரசாந்த் பூஷனையும், டிவிட்டரையும் மிரட்டும் உச்சநீதிமன்றம் !

கல்வி கட்டமைப்பின் அனைத்து அம்சங்களிலும் முன்மொழியப்பட்டுள்ள இச்சீர்திருத்த நடவடிக்கைகளில் உலக வங்கியின் கட்டுப்பாடு மற்றும் தலையீடு, STARS திட்டத்தின் மொத்த செலவினங்களில் உலக வங்கியின் பங்கான 14.93%  ஒப்புக் கொண்ட  தேதியிலிருந்து ஆறு வருடங்களுக்கு உறுதிசெய்யப்படுகிறது.  இத்திட்டத்திற்கான மொத்த செலவில் மத்திய அரசு 53.43% -மும் மாநில அரசுகள் 31.64% மும் ஏற்றுக்கொள்ளும்.

மேலும், 2019-25 ஆம் ஆண்டுக்கான  சமக்ரா சிக்க்ஷா அபியான் (இதில் STARS ஒரு அங்கமாக இருக்கும்) திட்டத்திற்காக இந்திய அரசு செலவிடப் போகும் மொத்தத் தொகை 36 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது (பிரிவு 14, பக்கம் 7, ஜூன் 3, 2020 தேதியிட்ட STARS திட்ட தகவல் ஆவணம்).  STARS திட்டத்தில் உலக வங்கியின் பங்களிப்பானது  மத்தியஅரசு  மற்றும் மாநில/யூனியன் பிரதேச அரசாங்கங்கள் சேர்ந்து பள்ளி கல்விக்காக (சமக்ரா சிக்க்ஷா அபியான்) செலவழிக்கும் தொகையில் வெறும் 1.4% மட்டுமே. சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்கு  தேவையான 98.6% நிதியை அரசாங்கத்தால் திரட்ட முடியும் போது, கூடுதல் 1.4% நிதியை ஏன் திரட்ட முடியாது?[1]

இதே விகிதத்திலான  பங்களிப்பைத்தான்  1990 -களில் அமல்படுத்தப்பட்ட மாவட்ட ஆரம்ப கல்வித் திட்டத்திற்கு (District Primary Education Program – DPEP) உலக வங்கி செய்தது. உலக வங்கியால் வடிவமைக்கப்பட்டு நிதியுதவி செய்யப்பட்ட DPEP திட்டம், 1993-2002 ஆண்டுகளுக்கிடையில் 18 மாநிலங்களில், கிட்டத்தட்ட இந்தியாவிலுள்ள பாதி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் அரசு நிதியளிக்கும் தொடக்கப்பள்ளிகளின் (வகுப்பு I-V) தரம் விரைவாக மோசமடைய வழிவகுத்தது. பொது மக்களிடையே, குறிப்பாக எஸ்சி / எஸ்டி / ஓபிசி / முஸ்லிம் /பழங்குடியினர் மற்றும் சமூகத்தின் பிற வறிய பிரிவினரிடையே அரசு தொடக்கப் பள்ளிகள் மீதான நம்பகத்தன்மையை இழக்க செய்தது. இதன் விளைவாக, பள்ளி கல்வியில் தனியார்மயம் மற்றும் வணிகமயமானது DPEP க்கு முந்தைய காலங்களில் இருந்ததை விட DPEP க்கு பிந்தைய காலத்தில் அதிவேகத்தில் அதிகரித்தது.

இதுவே உலக வங்கியின் மைய கோட்பாட்டு திட்டமாகும். உலக வங்கி என்பது சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் அதன் முன்னேற்றத்திற்காகவும்  உருவாக்கப்பட்ட நிறுவனமாகும்.  உலக வங்கியின் DEPE திட்டத்தின் நோக்கமே  6-14 வயதுக்குட்பட்ட 20 கோடி குழந்தைகள் படிக்கின்ற இந்திய தொடக்கப் கல்வியை (I-VIII வகுப்பு) கார்ப்பரேட் முதலீட்டாளர்களுக்கான ‘சந்தையாக’ மாற்றுவதும் , அதன் மூலம் கல்வியை வணிகமயமாக்குவதும் தான். இந்திய அரசு மீது சர்வதேச நாணய நிதியம் (Internationl Monetry Fund – IMF) திணித்த ‘கட்டமைப்பு சரிசெய்வதற்கான சீர்திருத்தங்களின் (Structural Adjustment Reforms)’ காரணமாக 1990 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% மாக இருந்த கல்விக்கான ஒதுக்கீடு படிப்படியாக குறைந்து 2003 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5% க்கும் குறைவான அளவுவே ஒதுக்கப்பட்டது.

இதன் விளைவுகளை உலக வங்கியானது  தனது நோக்கத்தை அடைவதற்கு பயன்படுத்திக்கொண்டது. இதனால் பள்ளிகளிலிருந்து ஏராளமான குழந்தைகள் தொடர்ந்து வெளியேற்றப்படுவது மட்டுமல்லாமல், அடிப்படை உரிமையாக இருந்த கல்வியானது,  தற்போது அவர்கள் நெருங்கமுடியாத அளவிற்கு “மிகவும் விலை உயர்ந்ததாக” மாறியது.   இந்தியாவின் ஆரம்பக் கல்வியில் புகுத்தப்பட்ட DPEP திட்டத்தின் எதிர்மறை அனுபவம் புறக்கணிக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல்  சர்வ சிக்ஷா அபியான் (Sarva Shiksha Abiyan – SSA)  திட்டத்தில்  உலக வங்கியின் தலையீடு 2002 லிருந்து  தற்போது வரைத் தொடர்கிறது.

2. STARS திட்டத்தின் மூலம் இந்திய கல்வித்துறையில் உலக வங்கியின் தலையீடு மூன்றாவது முறையாக அனுமதிக்கப்படுகிறது. இந்த முறை உங்கள் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது. ‘பண்டைய காலத்திலிருந்தே இந்தியா உலகிற்கே குருவாக  இருந்துள்ளது (Vishwa Guru since ancient times)’ என்று உங்கள் அரசாங்கம் கூறிக்கொண்டாலும், 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சமூக மாற்றத்திற்கான கல்விக் கோட்பாடுகளையும் முன்முயற்சிகளையும் கொண்ட சிறந்த மரபு இருந்துள்ளதை பற்றி தெரியாமல் உள்ளீர்கள்.

சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலங்களிலிருந்தே கல்வியை ஜனநாயகப்படுத்துவதற்காக நடைப்பெற்ற சாதி எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சோசலிச ஆரதவு மரபுகளிலிருந்து உங்கள் அரசாங்கம் கற்றுக்கொள்ளத் தவறிவிட்டது. உதாரணமாக ஜோதிராவ் பூலே, சாவித்ரிபாய் மற்றும் பாத்திமா பி, தாதாபாய் நவ்ரோஜி, சத்ரபதி ஷாஹுஜி மகாராஜ், கோபால்கிருஷ்ணா கோகலே மற்றும் கர்மவீர் பாகுராவ் பாட்டீல் (மகாரஷ்டிரா); அயோதி தாஸ், சிங்காரவேலர் மற்றும் பெரியார் (தமிழ்நாடு); நாராயண் குரு மற்றும் அய்யங்காலி (கேரளா); குண்ட்குரி வீர்சலிகம் மற்றும் குராஜாதா அப்பராவ் (பிரிக்கப்படாத ஆந்திரா); குட்முல் ரங்க ராவ் மற்றும் கிருஷ்ணராஜா வாடியார் IV (கர்நாடகா); ஈஸ்வர்சந் வித்யாசாகர், தாகூர் மற்றும் ரோக்கியா பேகம் (மேற்கு வங்கம்); சையத் அஹ்மத் கான் மற்றும் மதன் மோகன் மால்வியா (உத்தரபிரதேசம்); லாலா லஜ்பத் ராய் மற்றும் ஷாஹித் பகத் சிங் (பஞ்சாப்); டாக்டர் ஜாகிர் ஹுசைன் (டெல்லி); சயாஜிராவ் கெய்க்வாட் III மற்றும் கிஜுபாய் பதேகா (குஜராத்); Rev. தாமஸ் ஜோன் மற்றும் ராம்கே டபிள்யூ மோமின் (மேகாலயா); Rev. எஃப். டபிள்யூ. சாவிட்ஜ் (மிசோரம்); ஹிஜாம் இராபோட் (மணிப்பூர்); குய்சாங் மேரு ஜெலியாங் (நாகாலாந்து); சுதந்திர மாநிலங்களின் முற்போக்கு ஆட்சியாளர்களான பரோடா மற்றும் கோண்டல் மகாராஜாக்கள், கோலாப்பூர், மைசூர் மற்றும் திருவிதாங்கூர் மகாராஜாக்கள் மற்றும் போபாலின் பேகம்ஸ்; இறுதியாக, 1930 களில் காந்தி மற்றும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு இடையே நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதி பற்றிய விவாதங்கள் மேலும் அவர்கள் இருவரும் தனித்தனியா சமூக மாற்றத்திற்கான கல்வி பற்றி முன்வைத்த யோசனைகள் எனக் கூறலாம்.

கல்வி சார்ந்த  இந்த உரையாடல்கள் சுதந்திர போராட்டத்தின் போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1920 ல் நாக்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் ஏகாதிபத்திய நிறுவன அமைப்புகளை புறக்கணிக்கவும் சொந்த நிறுவன அமைப்புகளை  உருகவாக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1938 ல் நடைபெற்ற ஹரிபுரா காங்கிரஸ் மாநாட்டில் சுயசார்பான இந்திய கல்வியை ஒரு புதிய அடித்தளத்தின் மீது நிறுவவேண்டுமென  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இது சுதந்திர போராட்ட இயக்கங்களில் மாணவர்கள் மற்றும் மாணவர் அமைப்புகளின் பங்களிப்பிற்கும் வழிவகுத்தது. 1944 ஆம் ஆண்டில், கல்விக்கான மத்திய ஆலோசனைக் குழுவானது (Central Advisory Board of Education – CABE) கல்வியின் நோக்கம் முழுமையானது – தனிநபரின் ஆளுமை மற்றும் திறமைகளை வளர்பது, வாழ்வாதாரத்திற்கான அடிப்படையை உருவாக்குவது மற்றும் நவீன ஜனநாயக அரசுக்கான  சுகந்திர குடிமக்களை வளர்ப்பது எனக் கூறியது.

செழிப்பான, பல்வகைப்பட்ட மற்றும் எதிர் நிலைப்பாடுகளைக் கொண்ட இக்கருத்துக்கள் அரசியல் நிர்ணய சபை விவாதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், அரசியலமைப்பின் நெறிமுறைக் கேட்பாடு 45 க்கு பொருத்தமாக அனைவரும்  தரமான கல்வி பெறுவதற்கான சம உரிமையை உறுதிப்படுத்துவதை இந்திய அரசின் பொறுப்பாக்கியது. 1993 ஆம் ஆண்டு உன்னிகிருஷ்ணன் வழக்கில் தீர்ப்பு கூறிய உச்ச நீதிமன்றம் கல்வி என்பது அடிப்படை உரிமை என்றும் அதனை அமல்படுத்துவது அரசின் கடமை என்றும் கூறியது.

3. நிதியாதாரங்களின் பற்றாக்குறை அல்லது கற்பித்தல் முறையில் போதிய நிபுணித்துவமின்மை போன்ற காரணங்கள்தான் உலக வங்கியால் கட்டுப்படுத்தப்படுகின்ற STARS இந்திய அரசு ஒப்புக்கொள்ள தூண்டுதலாக இருந்தது என்பது பொய் என மேற்கண்ட தரவுகளே உணர்த்துகின்றன. உண்மை என்னவென்றால், உங்கள் அரசாங்கமும், 1990 களில் இருந்து அடுத்தடுத்த வந்த மற்ற மத்திய அரசாங்கங்களைப் போல, உலக வங்கியின் சந்தை சித்தாந்தத்துடன் முற்றிலும் உடன்படுகிறது. ஆகையால், சமூக நீதி மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமத்துவ கல்வி முறையை உருவாக்க வேண்டுமென்ற அரசியலமைப்பின் முக்கியத்துவத்துற்கு எதிரானதாக உள்ளது.

படிக்க:
கார்ப்பரேட்டுகளின் பலிபீடத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு !
நூல் அறிமுகம் : மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன் ?

உலக வங்கியைப் போலவே, உங்கள் அரசாங்கமும் அரசு கல்வி முறையை (state-funded education system) அகற்றிவிட்டு அதற்கு பதிலாக  கார்பரேட்மயமாக்கப்பட்ட  மற்றும் மேல்தட்டுக்கான கல்வி முறையாக  மாற்ற விரும்புகிறது,  இக்கல்வி முறை நம் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 85% உள்ள எஸ்சி, எஸ்டி, ஓபிசி, முஸ்லிம்கள், பழங்குடியினர், பெண்கள் மற்றும், உடல் ஊனமுற்றோர்களுக்கு எட்டாததாகவே இருக்கும். இவ்வாறு  கல்வியிலிருந்து அதிக அளவில் வெளியேற்றப்படுவது – வர்க்கம், சாதி, இனம், மதம், பாலினம், மொழி, பிறந்த இடம், இயலாமை; தகுதி, குறைந்த செயல்திறன்,; குறைந்த வருகை பதிவு; சமூக நீதித் திட்டங்களைத் திரும்பப் பெறுதல் (மாணவர் சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கொள்கை, மற்றும் போதுமான கல்லூரி விடுதிகள், மற்றும் கல்வி உதவித்தொகை); பெரும்பான்மை மக்களை டிப்ளமோ படிப்புகளுக்கு தள்ளுப்படுவது போன்ற சாக்குகளின் அடிப்படையில் அமல்படுத்தப்படும்.

4. கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்த நாடும் நாட்டு மக்களும் முற்றிலுமாக மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கிற நிலையில், இந்திய அரசும் உலக வங்கியும் STARS திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு தீவிரம் காட்டுகின்றன. நிர்வாக முன்னேற்பாடுகள் இல்லாமல் நான்கு மணி நேரத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் திட்டமில்லாமல் செய்த ஊரடங்குத் தளர்வுகளால் நோய் தொற்றானது வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நோய் உருவாகியுள்ள பயமும் துன்பங்களும் இந்தியாவின் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள், குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தினசரி கூலிகள், சுயதொழில் செய்பவர்கள், வீடற்றவர்கள் மற்றும் வேலை இழந்த லட்சக்கணக்கானோர் என யாரையும் விட்டுவைக்கவில்லை.

மேலும் புலம் பெயர் தொழிலாளர்களின் மோசமான நிலையானது 1947 பிரிவினையில் இடம் பெயர்ந்த மக்கள் அடைந்த வேதனையோடு ஒப்பிடக்கூடியதாக உள்ளது. பொதுசுகாதார அவசரநிலை நிலவும் இச்சூழலில் மக்களின் முதன்மையான கவனமும் STARS திட்டத்தை நோக்கி இருக்காதென்பதால் இத்திட்டத்தினை கிடப்பில் போடுவதே சரியானதாகும். STARS திட்டத்தின் விளைவுகளை மதிப்பிடுவதற்கும், அதனை முன்னெடுத்துச் செல்வதற்கும் இத்திட்டத்தின் மீதான மக்களின் கருத்துகளையும் கேட்டவில்லை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இத்திட்டம் பற்றி விவாதங்களையும் நடத்தப்படவில்லை. இத்திட்டத்தை பற்றிய ஒரு திறந்த  தேசிய அளவிலான விவாதம் இல்லாமல், இதனை இந்திய மக்கள் மற்றும் குழந்தைகள் மீது திணிப்பதற்கான  அதிகாரமோ அல்லது தார்மீக உரிமையோ இந்திய அரசுக்கு கிடையாது. இந்த திட்டதின் பேராபத்தை பார்க்கும் போது STARS திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான அனைத்து திட்டங்களையும் அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என்று கோருவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

5. இந்திய அரசு, மேற்சொன்ன கருத்துக்களை புறந்தள்ளுவதாளும் உலக வங்கியோடு முழுசக்தியுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டிருப்பதாலும், STARS திட்டத்தின் சில முக்கிய குறைபாடுகளையும் அது எவ்வாறு இந்திய அரசியலமைப்பு உறுதி செய்துள்ள அடிப்படை உரிமையான அனைத்து குழந்தைகளும் தரமான கல்வி பெறுவதற்கான உரிமைக்கு பேராபத்தாக உள்ளது என்பதை கோடிட்டுக்காட்ட வேண்டியுள்ளது.

5.1 நெருக்கடிகளுக்குள்  நிறைந்துள்ள தற்போதைய கல்வி அமைப்பை  சீர்திருத்துவதற்கு “அரசு சாராத அமைப்புகள் (Non-sate actors) ” பங்கு முக்கியமானது என்று STARS திட்டம் கருதுகின்றது.  இதில் தனியார் கார்ப்பரேட் முதலீட்டாளர்கள்; தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடிமை சமூகம் / தொண்டு / மத அமைப்புகள்; கல்விக் கட்டணம் செலுத்தும் பெற்றோர்கள் மற்றும் சமூக நிறுவனங்கள் போன்றவை அடங்கும். அதேவேளையில் கல்வி அமைப்பின் குறைபாடுகளை சரி செய்வதில் இந்திய அரசுனுடைய கடப்பாடு இல்லை என்று மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. மாநில அரசும், அதன் ஆலோசனை பெறாமல் வடிவமைக்கப்பட்ட STARS திட்டத்தினை அமல்படுத்துவதை கண்காணிக்க மட்டும் செய்ய முடியும்.

5.2 உலக வங்கி மற்றும் கார்ப்பரேட்களால் ஊக்குவிக்கப்பட்ட பல்வேறு வகையான PPP (Public Private Partnership – அரசு தனியார் கூட்டு) திட்டங்களின் எதிர்மறையான விளைவுகளை  இந்தியா ஏற்கனவே கண்டிருக்கிறது.  PPP -ன் செயல்தந்திரங்கள் கல்வியை தனியார்மயமாக்கியுள்ளன மற்றும் கல்வி செலவுகளால் உண்டாகும் பொருளாதார சுமையை குடும்பத்தின் மீது திணித்துள்ளது. கல்வி வணிகத்திற்கான ஒரு “சந்தையை” உருவாக்கியுள்ளதின் மூலம்  பொது சொத்துக்கள் மற்றும் நமது இளைஞர்களின் வாழ்க்கையின் மீது தங்கள் பிடியை வலுப்படுத்தியுள்ளார்கள். இவர்கள், பட்ஜெட் நிதி வெட்டுக்கள், பள்ளிகள் இணைப்பு / மூடுவதற்கான திட்டங்கள், கல்வி வணிகமயத்தை ஊக்குவிக்க வவுச்சர் திட்டங்கள்,  குறைந்த பட்ஜெட்டிலான தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பணம் திருப்பிச் செலுத்தும் திட்டங்கள் போன்றவை மூலம் பொது கல்வி முறையை அழிப்பதற்கான முயச்சிகளை முன்னெடுத்து செல்கிறார்கள்.

5.3 PPP சிறந்த தரமான கல்வியை வழங்காது. இது பின்தங்கிய மற்றும் விளிம்புநிலையில் உள்ளவர்களை கல்வியிலிருந்து வெளியேற்றுவதை அதிகப்படுத்துகிறது.  துரதிஷ்டவசமாக இதற்கான சட்ட அங்கீகாரம் RTE ACT 2009 மூலமாக வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் படி தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில் 25% மாணவர்கள் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவிலிருந்து சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே பள்ளிகளில் செலுத்தும். இதன் வாயிலாக அரசு நிதி தனியாருக்கு மடைமாற்றப்படுகிறது.

5.4 STARS திட்டம்  கல்வியின் “உள்ளடக்கம்” மற்றும் கற்பித்தல்-கற்றல் செயல்முறை ஆகியவற்றிக்கு முக்கியத்துவம் தறாமல் “செயல் திறன்களுக்கே (competencies)” முக்கியத்துவம் தருகிறது. இத்திட்டத்தின் படி கல்வியின் நோக்கமானது வேலைவாய்ப்பு சந்தையில் கார்ப்பரேட் நிதி நிறுவனங்கள், தொழிற்சாலைகள்  மற்றும் உற்பத்தித் துறைகளுக்குத் தேவையான “திறமைகளால்” தீர்மானிக்கப்பட வேண்டியதாகக் காண்கிறது.

5.5 STARS திட்டம் முன்னரே தீர்மானிக்கப்பட்ட கற்றல் வெளிபாடுகளுக்கான (outcomes) அளவுகோல்களைக் கொண்டு கல்வியின் சாதனைகளை கண்காணிப்பதற்கான மதிப்பீடு முறைகளை உருவாக்குவதற்கு கவனம் தருகிறது.  இது சமூகவயப்பட்ட கற்றல்-கற்பித்தல் செயல்முறைக்கு பதிலாக ஆசிரியர்கள்  முன்னமே தயாரிக்கப்பட்ட தகவல்களின் தொகுப்பை வழங்குபவராகவும் மாணவர்கள் அதனை  பெறுபவர்களாகவும்  சுருக்குகிறது.

5.6 கல்வி முறையிலுள்ள(education system) அனைத்து சிக்கல்களுக்கும் தொழில்நுட்ப உதவியுடன் விரைவான – தீர்வுகளை வழங்க STARS திட்டம் முக்கியத்துவம் தருகிறது. கல்வி முறையிலுள்ள சிக்கல் அனைத்தும் பல பத்தாண்டுகளாக பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, கற்பித்தல் உபகரணங்களில் குறைபாடு,  சிறந்த ஆசிரியர்  பயிற்சியினை வழங்குவதில் தோல்வி, போதுமான நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காதது,  ஆகியவற்றின் விளைவாக உருவாக்கப்பட்டது தான்.

5.7 தற்போது பிரபலமாக உள்ள இணையதள கற்றல்-கற்பித்தல் முறையை அனைவருக்கும் கல்வி கொடுப்பதற்கான ஒரு தீர்வாகவும் அறிவை (homogenizing knoeledege) டிஜிடல் நுகர்வு அலகுகளாகவும் (digitally consumable units) மாற்றுவதற்கு  STARS திட்டம் தீவிரமாக பரிந்துரைக்கிறது. இணையதள  கற்பித்தல் முறையின் வரம்புகள் (pedagogical limitations) பற்றியோ அல்லது 5 முதல் 24 வயது வரையிலான குழந்தைகள் உள்ள குடும்பங்களில் 8% வீடுகளில் மட்டுமே கணிணி போன்ற மின்னனு சாதனம் மற்றும் இணைய இணைப்பு இரண்டும் உள்ளதால் மிக அதிக அளவில் கல்வியிலிருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட வாய்புள்ளதைப் பற்றியோ STARS திட்டத்திற்கு எந்தவிதக் கவலையும் இல்லை. இணைய வழிக் கற்றல் என்பது தற்போதுள்ள வகுப்பறை அடிப்படையிலான கற்றல்-கற்பித்தல் முறைக்கு கூடுதல் உதவியாக மட்டுமே  இருக்க முடியும். பெரும்பான்மை குழந்தைகள் சமூகத்தின் மிகவும் பின்தங்கிய மற்றும் விளிம்பு நிலை பிரிவுகளிலிருந்து படிக்க வருவதினால் இணையக்  கல்வி முறையானது  வகுப்பறை அடிப்படையிலான கற்றல்-கற்பித்தல் முறைக்கு மாற்றாக முடியாது.

5.8 கல்வி வெளிப்பாடுகள்(outcomes) மற்றும் சாதனைகளை மதிப்பீடு செய்வதற்கு “தகுதி அடிப்படையிலான” அமைப்புகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதாக STARS கூறுகிறது. இருப்பினும் சாதி, அந்தஸ்து, பாலினம் மற்றும் மத ஒடுக்குமுறை மற்றும் பாகுபாடு ஆகியவற்றை கல்விக் கொள்கைகளால் எதிர்கொள்ளப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. தகுதி(merit) என்பது வெறும் சலுகையாக இருக்குமானால் அது அகற்றப்பட வேண்டும்.

6. அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகளை உத்தரவாதம் செய்துள்ள இந்திய அரசின் அரசியலமைப்புக்கு STARS திட்டம் ஒரு நேரடி சவாலாகும். அரசியலமைப்பு சோசலிச மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்திய அரசின் கொள்கைகள் அனைவருக்குமான சமூக நீதி மற்றும் சமூக நலன்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். அதன் பொறுப்புகளை உலக வங்கியிடமோ அல்லது “அரச சார்பற்ற அமைப்புகளிடமோ” தள்ளிவிட முடியாது.

7. ஆகவே, உலக வங்கியுடன் இணைந்து STARS திட்டத்தை செயல்படுத்துவதற்கான எந்தவொரு ஒப்பந்தத்தையும் இந்திய அரசு செய்யக்கூடாது. மேலும் இத்திட்டத்திற்காக உலக வங்கியிடமிருந்து கடனாக எந்த நிதியையும் ஏற்கக்கூடாது என்று AIFRTE கோருகிறது.

நன்றி மற்றும் அன்புடன்.

[பேராசிரியர். ஜக்மோகன் சிங், தலைவர் AIFRTE;
Dr. விகாஸ் குப்தா, அமைப்பு செயலாளர் AIFRTE.]

செய்தி ஆதாரம் :

  1. Open Letter of AIFRTE to the Prime Minister of India Against GoI’s Move to Surrender School Education to the World Bank Under the STARS Program.
  2. World Bank Project Operation Document.

அடிக்குறிப்பு :

[1]  The Samagra Shiksha program is being implemented across all the 36 states/Union Territories. The overall expenditure for 2019-25 under the Government’s ongoing Samagra program is estimated at US$36 billion. The STARS Program is carved out of the Government’s Samagra Shiksha Abhiyan program to support school education enhancement under the existing framework, by targeting MHRD at the federal level and six pilot participating States in India, through a combination of investments in ongoing and new reforms/interventions. The cost of the PforR Operation (STARS) is USD 3.35 billion which will be financed by (a) MHRD, GoI financing (national support) of US$1.79 billion; (b) States’ contribution over the operation period of US$ 1.06 billion; and (c) World Bank financing of US$500 million.

ஊரடங்கு அல்ல, அறிவிக்கப்படாத அவசர நிலை !

தாஷா நர்வால் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஆராய்ச்சி (Ph.D.) மாணவி. தேவங்கனா கலிதா, அதே பல்கலைக்கழகத்தின் பெண்ணியத் துறை ஆய்வியல் நிறைஞர் (M.Phil.) மாணவி. இவர்கள் இருவரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் “பிஞ்ஜ்ரா தோட்” (கூண்டை உடை) என்ற பெண்ணிய அமைப்பின் உறுப்பினர்கள்.

இவர்கள் இருவரையும் கடந்த பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம் தொடர்பாக மே 23 அன்று கைது செய்தது, டெல்லி போலிசு. அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுக்கும் நோக்கில் அவர்கள் மீது தாக்குதல் தொடுத்தது உள்ளிட்டு ஏழு கிரிமினல் குற்றச்சாட்டுகளை இவ்விரு மாணவிகள் மீதும் சுமத்தி, கடந்த பிப்ரவரியிலேயே முதல் தகவல் அறிக்கை தயார் செய்திருந்த டெல்லி போலிசு, அதன் பின் மூன்று மாதங்கள் கழிந்த நிலையில், ஊரடங்கு நேரத்தில், இளம் மாணவிகள் என்றும் பாராமல் நடாஷாவையும், கலிதாவையும் கைது செய்திருக்கிறது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவிகள் தேவங்கனா கலிதா (இடது) மற்றும் நதாஷா நர்வால்.

இவர்களது பிணை மனுக்கள் மீது மறுநாள் (மே 24) நடந்த விசாரணையில், “இருவரும் அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுக்கும் நோக்கில் தாக்குதல் தொடுத்தார்கள் எனக் குற்றஞ்சுமத்தப்படுவதற்கு முதல் கட்ட ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை” என டெல்லி மாநகர குற்றவியல் நடுவர் கருத்துத் தெரிவித்தார். இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த மற்றைய குற்றச்சாட்டுகள் பிணையில் வெளிவரக்கூடிய சாதாரண குற்றச்சாட்டுகள் என்ற நிலையில், பிணையில் வெளிவரமுடியாத இந்தக் குற்றச்சாட்டும் கலகலத்துப் போனது.

அவ்விரு மாணவிகளும் பிணையில் வெளியே வந்துவிடக் கூடும் என்பதை விசாரணையின் போக்கில் அனுமானித்த டெல்லி போலிசின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு, அதனைத் தடுக்கும் திட்டத்தோடு விசாரணை முடிவடைவதற்கு முன்னரே இரண்டாவது முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்தது. இதில், அவர்கள் இருவர் மீதும் முந்தையதைவிடக் கடுமையான குற்றச்சாட்டுக்கள் கொலை, கொலை முயற்சி, சதி தொடங்கிச் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்தனர் என்பது வரையிலும் சுமத்தப்பட்டன.

இந்த இரண்டாவது முதல் தகவல் அறிக்கையில் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்காக அவர்கள் இருவரையும் 14 நாட்கள் போலிசு காவலில் எடுத்துக் கொள்ள அனுமதி கோரியது சிறப்புப் புலனாய்வுக் குழு. நீதிமன்றம் இரண்டு நாட்கள் மட்டுமே போலிசு காவலுக்கு அனுமதித்த நிலையில், போலிசு விசாரணை முடிந்தபின், அவர்கள் இருவரும் திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டவுடனேயே நடாஷா மீது உபா சட்டத்தின் கீழ் புதிதாக ஒரு வழக்கும், கலிதா மீது மூன்றாவது முதல் தகவல் அறிக்கையும் பதியப்பட்டன.

ஜே.என்.யூ. மாணவிகள் நடாஷா, கலிதா ஆகிய இருவர் மீதும் அடுத்தடுத்து வழக்குகள் பாய்ச்சப்படுவதிலிருந்து, அம்மாணவிகளைப் பழி தீர்த்துக்கொள்ளுவதுதான் டெல்லி போலிசைக் கையில் வைத்திருக்கும் மோடி அரசின் நோக்கம் என்பதை யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

படிக்க:
மக்கள் கவிஞர் தோழர் – வரவர ராவை விடுதலை செய் ! ம.க.இ.க ஆர்ப்பாட்டம் !
பிரசாந்த் பூஷனையும், டிவிட்டரையும் மிரட்டும் உச்சநீதிமன்றம் !

நடாஷா, கலிதா என்ற இந்த இரு மாணவிகள் மீது மோடி அரசிற்கு ஏன் இத்துணை வன்மம் என்றால், அவர்கள் இருவரும் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், தேசியக் குடிமக்கள் பதிவேடு நடவடிக்கையையும் எதிர்த்தார்கள், அவ்விரண்டையும் எதிர்த்து டெல்லி நகர முசுலிம்கள் நடத்திய போராட்டங்களில் கலந்துகொண்டதோடு, அவர்கள் சார்ந்த அமைப்பான பிஞ்ஜரா தோட் அதற்கு ஆதரவு அளித்தது என்பது தவிர வேறு காரணங்கள் இல்லை.

இவர்கள் இருவரை மட்டுமல்ல, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும் தேசியக் குடிமக்கள் பதிவேட்டையும் எதிர்க்கும் ஒவ்வொருவரையும் நிரந்தரமாகச் சிறையில் அடைக்க வேண்டும் என்ற தீய நோக்கத்தோடு மோடி அரசின் உள்துறை அமைச்சகம் செயல்பட்டு வருவது, டெல்லி கலவரம் தொடர்பாகப் பதியப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளில் அம்பலமாகி வருகிறது.

டெல்லி ஜாமியா இஸ்லாமியா பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவி ஸஃபூரா ஜார்கார் (இடது); அப்பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் மீரான் ஹைதர்.

டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவியான ஸஃபூரா ஜார்கர் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகள் மோடி அரசின் மதவெறி பாசிச வன்மத்திற்கு மற்றொரு உதாரணம். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் நடந்த போராட்டத்தையொட்டி கைது செய்யப்பட்ட ஸஃபூராவிற்கு நீதிமன்றம் பிணை வழங்கியவுடனேயே, அவர் டெல்லி கலவரத்தின் சதிகாரர்களுள் ஒருவராகக் குற்றம் சுமத்தப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சதி வழக்கு தொடர்பான விசாரணையின்போது, டெல்லி கலவரத்தில் ஸஃபூரா ஆற்றிய பாத்திரம் குறித்த போலிசின் குற்றச்சாட்டில் தெளிவில்லை என நீதிபதி தெரிவித்தவுடன், ஸஃபூரா மீது உபா சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டன.

ஸஃபூரா கர்ப்பிணி என்ற நிலையிலும்கூட, அவர் பிணையில் வெளியே வருவதை மோடி அரசு விரும்பவில்லை. அவர் மீதான இத்துணை வன்மத்திற்குக் காரணம், ஸஃபூரா குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்தார் என்பது மட்டுமின்றி, அவர் ஒரு முசுலிம், முக்கியமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த முசுலிம் என்பது மற்றொரு முக்கியமான காரணமாகும்.

டெல்லியைச் சேர்ந்த வழக்குரைஞரும் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் டெல்லி மாநகர மன்ற உறுப்பினருமான இஷ்ரத் ஜஹானுக்கு டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில் பிணை வழங்கிய கூடுதல் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி, தனது தீர்ப்பில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டங்களுக்கு ஆதரவு அளித்துவந்த அவர் மீது டெல்லி போலிசு பொய்யாக வழக்கு போட்டிருப்பதாகக் குறிப்பிட்டதோடு, “அரசின் நியாயமற்ற நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கு அவருக்கு அடிப்படை உரிமை இருக்கிறது” என்றும் சுட்டிக் காட்டினார்.

காங்கிரசு கட்சியின் முன்னாள் மாநகர மன்ற உறுப்பினர் இஷ்ரத் ஜஹான். (கோப்புப் படம்)

இவ்வாறான நீதிமன்ற உத்தரவுக்குப் பின், இஷ்ரத் ஜஹான் மீதான வழக்கு திரும்பப் பெறப்பட்டிருக்க வேண்டும். ஆனால், டெல்லி போலிசோ அவருக்குப் பிணை வழங்கப்பட்ட மறுநிமிடமே அவர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது.

டெல்லி கலவரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பைச் சேர்ந்த பர்வேஸ் ஆலம், முகம்மது இல்யாஸ், முகம்மது தானிஷ் மீதான வழக்கிலும் இதே வன்மம்தான். டெல்லி குற்றவியல் நீதிமன்ற நடுவர் பிரபா தீப் கவுர் இம்மூவருக்கும் பிணை வழங்கியவுடனேயே, அவர்கள் பிணையில் வெளியே வந்துவிடக்கூடாது என்ற உள்நோக்கத்தோடு அவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, டெல்லி கலவரத்திற்கு நிதி ஏற்பாடு செய்து கொடுத்தது மற்றும் அக்கலவரத்தைத் திட்டமிட்டு நடத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

டெல்லி கலவரம் தொடர்பாக இதுவரை புனையப்பட்ட வழக்குகளை எடுத்துக் கொண்டால், டெல்லி போலிசும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவும் வெறும் கைத்தடிகள்தான். விசாரணையை எந்தத் திசையில் எடுத்துச் செல்ல வேண்டும், யார் யாரையெல்லாம் கைது செய்ய வேண்டும், கைது செய்யப்பட்டவர்கள் மீது என்னென்ன வழக்குகளை அடுத்தடுத்துப் பாய்ச்ச வேண்டும் என்பதையெல்லாம் முடிவு செய்வது சங்கப் பரிவாரத்தைச் சேர்ந்த நீதிக்கான அறைகூவல் மற்றும் அறிவுத்துறையினர் குழு என்ற இரண்டு அமைப்புகள்தான். இவ்விரண்டு அமைப்புகளும் இணைந்து டெல்லி கலவரம் தொடர்பாக மைய அரசின் உள்துறைக்குக் கொடுத்திருக்கும் அறிக்கையின்படிதான் போலிசு விசாரணை நடந்துவருவதையும் வழக்குகள் பதியப்படுவதையும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் பலரும் அம்பலப்படுத்தியுள்ளனர்.

படிக்க:
அவசர நிலை : ஆர்.எஸ்.எஸ். அன்றும் இன்றும்
திருச்சி : வேலை வழங்க முடியாது ! கடனையும் கட்ட வேண்டும் ! அதிகார வர்க்கத்தின் கோர முகம் !

ஜாமியா பல்கலைக்கழக மாணவன் ஆசிஃப் இக்பால் தன்ஹா வழக்குத் தொடர்பான விசாரணையில் கூடுதல் குற்றவியல் நீதிபதி தர்மேந்தர் ரானா, போலிசின் வழக்கு குறித்த குறிப்பு நோட்டை ஆராயும்போது, போலிசு விசாரணை ஒரு குறிப்பிட்ட “இலக்கை நோக்கியே நகரும் உண்மை தெரிவதாக”க் குறிப்பிடுகிறார்.

டெல்லி கலவரத்தின்போது கடைகளை எரித்ததாகக் குற்றஞ்சுமத்தப்பட்டவரின் பிணை குறித்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதி மன்ற நீதிபதி அனுப் ஜெய்ராம் பம்பானி, பிணையை மறுப்பதன் மூலம் சமூகத்திற்கு ஒரு செய்தியை விடுக்க வேண்டும் என அரசு விரும்புகிறது. ஆனால், நீதிமன்றம் அப்படிச் செயல்பட முடியாது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நடாஷா, கலிதா, ஸஃபூரா ஜார்கர், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்டோர் மீதான வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களும், டெல்லி உயர்நீதி மன்றமும் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் மோடி அரசு சிறுபான்மை முசுலீம்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் எதிராக அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, அவர்களை ஒரேயடியாக ஒடுக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே செயல்பட்டு வருவதை அம்பலப்படுத்துகின்றன.

இதன் காரணமாகத்தான் டெல்லி கலவரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருக்கும் பெரும்பாலோர் மீது பாசிச கருப்புச் சட்டமான உபா ஏவிவிடப்பட்டிருக்கிறது. இச்சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு எவ்விதமான காத்திரமான ஆதாரமும் அரசுக்குத் தேவையாக இருக்கவில்லை என்பதை அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அகில் கோகோய், பிட்டு சோனாவால் ஆகிய இருவர் மீது போடப்பட்டிருக்கும் உபா வழக்கு எடுத்துக்காட்டுகிறது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள் அகில் கோகாய் (இடது) மற்றும் பிட்டு சோனாவால்.

அசாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் சத்ரா முக்தி சங்க்ராம் சமிதி என்ற மாணவர் அமைப்பின் தலைவரான பிட்டு சோனாவால், கிரிஷக் முக்தி சங்க்ராம் சமிதி என்ற விவசாய அமைப்பின் ஆலோசகரான அகில் கோகாய் ஆகிய இருவர் மீதும் உபா சட்டத்தைப் பாய்ச்சுவதற்கு அவர்களை மாவோயிசத் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்களாகக் காட்டியிருக்கிறது, அசாம் மாநில பா.ஜ.க. அரசு.

இதற்கு ஆதாரமாக, இவர்கள் தமது முகநூல் பக்கங்களில் லெனினின் படத்தை வைத்திருந்தார்கள், அவர்களிடம் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை புத்தகம் இருந்தது, அவர்கள் தங்கள் நண்பர்களைத் தோழர் என அழைத்து வருகிறார்கள், முதலாளித்துவத்தை அழிக்க வேண்டும் என்ற லெனினின் மேற்கோளை தமது முகநூலில் வைத்துள்ளனர் எனத் தமது குற்றப் பத்திரிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது, அசாம் மாநில போலிசு.

கரோனா தொற்று பேரிடரைப் பயன்படுத்திக் கொண்டு, இரண்டு முனைகளில் தாக்குதல் தொடுத்து வருகிறது மோடி அரசு. ஒன்று, தனது பார்ப்பன திட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் ஜனநாயக, முற்போக்கு சக்திகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல். மற்றொன்று, தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உரிமைகள் பறிப்பு, மின்சாரம், சுற்றுப்புறச் சூழல், அத்தியாவசிய உணவுப் பொருள் சட்டங்களில் செய்யப்பட்டிருக்கும் திருத்தங்கள் மற்றும் நாட்டின் இயற்கை வளங்களையும், பொதுத்துறை நிறுவனங்களையும் இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்குத் திறந்துவிடுவதற்கு ஏற்ப செய்யப்பட்டிருக்கும் சீர்திருத்தங்கள். இவையிரண்டையும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்துப் பார்க்க முடியாது. இந்தத் தாக்குதல்களைத்தான் கார்ப்பரேட் காவி பாசிசம் என நாம் குறிப்பிடுகிறோம்.

கரோனா தொற்றைவிட, இந்த கார்ப்பரேட் காவி பாசிசம்தான் நாட்டைக் கவ்வியிருக்கும் மிகப் பெரும் அபாயமாகும். இந்த அபாயத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி எதிர்த்து நின்றதற்காகவே வரவர ராவ், ஆனந்த் தெல்தும்டே, சுதா பரத்வாஜ், பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்ட அறிவுத் துறையினரும்; நடாஷா, ஸஃபூரா, கலிதா உள்ளிட்ட முற்போக்கு மாணவர்கள்; பிட்டு சோனாவால், அகில் கோகோய் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் மீதும் பொய் வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

– செல்வம்
புதிய ஜனநாயகம், ஜூலை 2020.

பிரசாந்த் பூஷனையும், டிவிட்டரையும் மிரட்டும் உச்சநீதிமன்றம் !

1

ழக்கறிஞரும் சமூகச் செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூஷன் மீது உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. அவர் சமீபத்தில் டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட விமர்சனக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கை தாமாக எடுத்துள்ளது உச்சநீதிமன்றம்.

சமூகச் செயல்பாட்டாளரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன், தொடர்ந்து பல ஆண்டுகளாக ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அரசின் வன்முறைகளுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராகவும், மக்களின் உரிமைப் போராட்டங்களுக்கு ஆதரவாகவும் உச்சநீதிமன்றத்திலும், பொதுவெளியிலும் குரல் கொடுத்து வருபவர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்றம் குறித்து சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்துக் கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார்.

ஹார்லி டேவிசன் பைக் ஓட்டும் உச்சநீதிமன்ற நீதிபதி பாப்டே.

கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதியன்று தனது டிவிட்டர் பதிவில், நாக்பூரில் உள்ள ஒரு பாஜக தலைவருக்கு சொந்தமான 50 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை முகத்தில் மாஸ்க் மற்றும் தலையில் ஹெல்மெட் ஏதும் இல்லாமல் ஓட்டிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டேயை விமர்சித்தார். அதில் ஊரடங்கைக் காரணம் காட்டி உச்சநீதிமன்றத்தை மூடி குடிமக்கள் தங்களுக்கான அடிப்படை உரிமையான நீதியைப் பெற மறுத்திருப்பதையும் சுட்டிக் காட்டியிருந்தார்.

அதே போல ஜூன் 27 அன்று மற்றொரு டிவிட்டர் பதிவில், “எதிர்காலத்தில் வரலாற்றாளர்கள் கடந்த ஆறு ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவில் முறையான அவசரநிலை அமல்படுத்தப்படாமலேயே எப்படி ஜனநாயகம் அழிக்கப்பட்டது என்பதைத் திரும்பிப் பார்க்கும் போது இந்த அழிப்பில் குறிப்பாக உச்சநீதிமன்றத்தின் பங்கையும் இன்னும் குறிப்பாக நான்கு தலைமை நீதிபதிகளின் (எஸ்.ஏ.பாப்டே, ரஞ்சன் கொகோய், தீபக் மிஸ்ரா, ஜே.எஸ். கெஹர்) பங்கையும் அவர்கள் தனிச்சிறப்பாக குறித்துக் கொள்வார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 9-ம் தேதி அன்று, மஹேக் மகேஸ்வரி என்பவர் பிரஷாந்த் பூஷன் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் பிரசாந்த் பூஷனின் மேற்கூறிய இரண்டு டிவிட்டுகள் குறித்து குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 21-07-2020 அன்று உச்சநீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. குறிப்பாக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் மாண்பைச் சீர்குலைக்கும் வகையில் பதிவு எழுதியதாகக் கூறி இந்த வழக்கை எடுத்துள்ளது. ஆனால் குறிப்பாக எந்த டிவிட்டர் பதிவுக்காக இவ்வழக்கு பதியப்பட்டது என்பது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. இந்த வழக்கில் பிரசாந்த் பூஷனுக்கு மட்டுமல்லாமல் டிவிட்டர் இந்தியா நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியது.

படிக்க:
திருச்சி : வேலை வழங்க முடியாது ! கடனையும் கட்ட வேண்டும் ! அதிகார வர்க்கத்தின் கோர முகம் !
குற்றவாளிகளே நீதிபதிகளாக! உளுத்துப் போன நீதித்துறை !

இந்த வழக்கு கடந்த புதன் கிழமை (22-07-2020) அன்று அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வுக்கு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த அமர்வு இவ்விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. மேலும் இந்த சுவோ மோட்டோ வழக்கில் டிவிட்டர் இந்தியாவை விலக்கிவிட்டு அமெரிக்காவில் இயங்கும் டிவிட்டர் தலைமையகத்தை இந்த சேர்த்துள்ளது.

உச்சநீதிமன்றம் அந்த டிவிட்டுகளை நீக்கும்படி உத்தரவிட்டால், நீக்குவதற்குத் தயாராக இருப்பதாக டிவிட்டர் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அருண் மிஸ்ரா அமர்வு, “ஏன் நீங்களாக சொந்தமாக நீக்க மாட்டீர்களா ? நாங்கள் அவமதிப்பு வழக்கை எடுத்த பின்னரும் முறையான ஆணைக்காக நீங்கள் காத்திருப்பீர்களா ? நாங்கள் எந்த ஒரு ஆணையையும் பிறப்பிக்கப் போவதில்லை என்றே நாங்கள் எண்ணுகிறோம். அதை உங்கள் அறிவுக்கே விட்டுவிடப் போகிறோம்.” என்று தெரிவித்துள்ளது.

குறிப்பறிந்து செயல்படத் தவறிய டிவிட்டர் நிறுவனத்தை கடிந்து கொண்டுள்ளது உச்சநீதிமன்றம். அதாவது எஜமானர்கள் கையில் சவுக்கெடுத்தாலே நாய் வாலை ஆட்டிக் கொண்டு முன் வந்து நிற்க வேண்டுமாம். மாறாக சவுக்கைச் சுழற்றினால்தான் வாலை ஆட்டுவேன் என்று சொல்வது எஜமானனுக்கு இழைக்கப்படும் அவமானம் என்று கருதுகிறது உச்சநீதிமன்றம். மேலும், இந்த வழக்கு விவகாரத்தில் தமக்கு உதவுமாறு அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலை கேட்டுக் கொண்டதோடு இந்த வழக்கை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது அருண்மிஸ்ரா அமர்வு.

பெரும்பாலான முன்னணி வழக்கறிஞர்களும், சட்ட வல்லுனர்களும் இது நீதிமன்ற அவமதிப்பு எனும் வகைக்குள் வராது என்று தெரிவித்துள்ளனர். இத்தகைய நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நேர்மையான, தைரியமான சமூகச் செயற்பாட்டாளர்களுக்குப் புதிதல்ல.

இதற்கு முன்னர் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்று விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் நடத்தைகளை தொடர்ந்து விமர்சித்து வந்திருக்கிறார் பிரசாந்த் பூஷன். அதே போல வரவர ராவ் உள்ளிட்ட பீமா கொரேகான் வழக்கு விசாரணைக் கைதிகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விமர்சித்து வந்துள்ளார்.

இதற்கு முன்னர், கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், தெகல்கா பத்திரிகைக்கு பிரசாந்த் பூஷன் அளித்த நேர்காணலில் முன்னாள் மற்றும் அப்போது நடப்பிலிருந்த உச்சநீதிமன்ற நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. 2012-ம் ஆண்டு மே மாதம் வரை விசாரிக்கப்படாத இந்த வழக்கை தற்போது மீண்டும் தூசி தட்டி எடுத்திருக்கிறது உச்சநீதிமன்றம். எதிர்வரும் ஜூலை 24-ம் தேதியன்று அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இருந்து இன்றுவரையில் மோடி 2.0 ஆட்சியில், பல மக்கள் விரோத தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இப்போது உச்சநீதிமன்றத்தை விமரிசிப்பதே தவறு என்ற அச்சத்தை பொது வெளியில் ஏற்படுத்தி வருகிறது. மக்களுக்காக போராடிய வரவர ராவ் உள்ளிட்ட செயல்பாட்டாளர்களை முடக்குவதற்கு ஆளும் வர்க்கத்திற்கும், இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கும் இந்தியாவின் நீதித் துறை துணை நின்றுள்ளது. இன்று கொரோனா பெருந்தொற்று சூழலிலும் புலம்பெயர் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட பாதுகாக்காமல் பரிதவிக்க விட்டதும் இதே உச்சநீதிமன்றம் தான்.

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், கவுதம் பாட்டியா உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்றம் அரசியல் சாசனத்தை மீறும் தருணங்களிலும், அதன் நீதிபதிகளின் சார்புத் தன்மையையும் அவ்வப்போது அம்பலப்படுத்தியும் விமர்சித்தும் வருகின்றனர். இந்நிலையில், அவர்களை மிரட்டி முடக்குவதற்கும், அவர்களைப் போன்ற செயல்பாட்டாளர்களும், அறிவுஜீவிகளும் உச்சநீதிமன்றத்தை விமர்சிப்பதை டிவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் தன்னியல்பாகவே முடக்குவதற்கும் ஏற்ற வகையில்தான் இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது உச்சநீதிமன்றம்.

தன் மீதான விமர்சனத்தை ஒடுக்க நினைக்கும் இந்த உச்சநீதிமன்றம்தான் நமக்கு நீதியை வழங்கி ஜனநாயகத்தை காக்கப் போகிறதா ?


– நந்தன்
செய்தி ஆதாரம் : த வயர்.

திருச்சி : வேலை வழங்க முடியாது ! கடனையும் கட்ட வேண்டும் ! அதிகார வர்க்கத்தின் கோர முகம் !

  • கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை இழந்த மக்களுக்கு அரசு கட்டுமானப் பணிகளில் கிராமம் – நகர்ப்புறங்களில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்து!
  • உள்ளூர் திட்ட பணிகளுக்கு உள்ளூர் மக்களுக்கே வேலை வழங்கு!

ரசு கட்டுமானப் பணிகளில் கிராமப்புற குடிமராமத்து பணிகளில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க வேண்டும். என்ற கோரிக்கையை முன்வைத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் 22.07.2020 காலை 11 மணி அளவில் மனு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர்.செழியன், தலைமையில் தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) மாவட்ட தலைவர் அய்யா.மாபா. சின்னதுரை, மக்கள் உரிமை மீட்பு இயக்கம் நிறுவனத் தலைவர் தோழர்.பஷீர், ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு தலைவர் தோழர்.சம்சுதீன், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர்.ரமணா, ஜான் பாஷா மாவட்ட தலைவர் தமிழ் புலிகள் கட்சி மக்கள் உரிமை கூட்டணி ஜோசப் தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர் தோழர்.கமலக்கண்ணன், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் தோழர் புதியவன், மற்றும் மக்கள் கலை இலகியக் கழகத் தோழர்கள் ஆகிய பொதுநல அமைப்புகள் சார்பாக பொறுப்பாளர்கள் 20 பேர் கோரிக்கை மனுவை மாநகராட்சி ஆணையரிடமும், மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மாநகராட்சி ஆணையர் மனுவை பெற்றுக்கொண்டு, “வேலைவாய்ப்பு பிரச்சினையில் மத்திய அரசு கில்டு லேபர் திட்டங்கள் நிறைய உள்ளது. ஆகையால் உங்கள் அமைப்புகள்  சார்பாக ஒவ்வொரு பகுதியிலும் எவ்வளவு பேருக்கு வேலை இல்லை என்பதை பட்டியல் எடுத்து எங்களுக்கு தந்தால் அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்.” என்றும் பேசினார்.

மேலும் மாநகராட்சி காண்ட்ராக்டர்கள் சார்பாக; “காண்ட்ராக்டர்கள் விருப்பப்படி ஆட்களை தேர்வு செய்து குறைந்த கூலிக்கு வேலைக்கு ஆள் வைப்பார்கள். நீங்கள் ஆட்களை கொடுத்தால் அவர்களுக்கு காண்ட்ராக்ட் தொகை கட்டுப்படி ஆகாது என கொள்ளையடிக்கும் காண்ட்ராக்ட் காரர்களுக்கு ஆதரவாக பேசினார். மேலும் இது சம்பந்தமாக என்னால் ஒன்றும் செய்ய முடியாது. அரசுக்கு உங்களுடைய கோரிக்கை அனுப்பி வைக்கிறோம்” என அக்கறை இல்லாமல் பேசினார்.

நாம் மீண்டும் பேசும்போது கொரோனா ஊரடங்கு வேலைவாய்ப்பு பாதிப்பு என்பது ஒரு புதிய பிரச்சனை ஆகையால் இதற்கு அரசு அதிகாரிகள் பொதுநல அமைப்புகள் இணைந்து பாதிப்புகளை சரிசெய்ய வேண்டும். என கோரிக்கை விடுத்தும். நான் காண்ட்ராக்ட் காரர்களிடம் பேசுவதாக கூறி நழுவிக் கொண்டார்.

இது சம்பந்தமான அரசு முயற்சி எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய அரசு உத்தரவிட வேண்டும். என கோரிக்கை வைத்தும் அவர் அது என்னால் முடியாது. தெரியப்படுத்துகிறேன் என நழுவிக் கொண்டு பேசினார். பிரச்சினைகளை தீர்க்க இந்த அதிகாரிகள்தான் பொறுப்பில் உட்கார்ந்துகொண்டு அரசு திட்ட பணிகளை செயல்படுத்தாமல் காண்ட்ராக்ட் காரர்கள் நலன் சார்ந்து பேசுவதும் அயோக்கியத்தனமாக உள்ளது.

அடுத்ததாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேசினோம். மனுவை படித்துவிட்டு அரசுக்கு உங்களுடைய கோரிக்கையை நான் கொண்டு செல்கிறேன் என முடித்துக் கொண்டார். மாவட்ட நிர்வாகத்தில் நீங்கள் இது சம்பந்தமான நடவடிக்கை எடுக்க முடியும் என்று பேசிய போது என்னால் எதுவும் செய்ய முடியாது என்று அக்கறை இல்லாமலும் பொறுப்பில்லாமல் பேசினார்.

படிக்க:
கார்ப்பரேட்டுகளின் பலிபீடத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு !
அடாவடி நுண்கடன் நிறுவனங்களை எதிர்த்து பெண்கள் உரிமைப் பாதுகாப்புச் சங்கம் உதயம் !

இதே திருச்சி மாநகர பெரிய பணக்காரர்களுக்கும்; வியாபாரிகளுக்கும் ஒரு பிரச்சினை என்றால் உடனே சொந்தமாக முடிவெடுத்து அமல் படுத்துகின்ற மாவட்ட ஆட்சியர் இப்படி வேலையிலிருந்து வாழ்விழந்து தவிக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதில் அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் அவர் பொறுப்பை தட்டிக்கழிக்கும் வகையில் ஒரே வார்த்தையில் பேசி முடித்துக் கொண்டார். அதிகாரிகள்  நடவடிக்கை என்பது மக்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத வகையில் உள்ளது.

இதற்கு எதிராக களத்தில் இறங்கி நாம் போராடி, நம்முடைய உரிமைகளைப் பெறவேண்டும் என்பதே இந்த கோரிக்கை மனு கொடுத்தது உணர்த்தியது. இந்த அரசு கட்டமைப்பு மக்களுடைய பிரச்சினையை தீர்க்காது. இதற்கு அதிகாரிகளின் பேச்சே  நிரூபணமாக உள்ளது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
மற்றும் பொது நலஅமைப்புகள்,
திருச்சி மாவட்டம்.

***

அடாவடி செய்யும் நுண் கடன் நிறுவனங்கள், சுய உதவி குழுக்களை எதிர்த்து திருச்சி லால்குடி பெண்கள் தொடர் போராட்டம் !

டந்த ஜுலை 16ஆம் தேதி நுண்கடன் நிறுவனம் கூபா சங்கமம், சுய உதவிக் குழுவான ஐடிஎஃப்சி குழுவின் மேலாளர்கள், வசூல் செய்பவர்கள் தொடர்ந்து போன் மூலமும், நேரடியாக வந்து பெண்களை அவமானப்படுத்தும் வகையிலும் இழிவுபடுத்தும் வகையிலும் பேசி கடன் வசூல் செய்கின்றனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, லால்குடி காவல் நிலையத்தில் ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு, மக்கள் இமை கூட்டணி, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் பாதிக்கப்பட்ட பெண்களுடன் சென்று புகார் மனு அளித்தனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அவர்களின் மேல்  உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறிய காவல்துறையினர், வசூல் செய்பவர்கள் “போன் எடுக்கவில்லை…” என அலட்சியமாக பேசினார். ஏற்கனவே லால்குடி பகுதியில் அடாவடி நுண் கடன் நிறுவனங்கள் தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி நெருக்கடி கொடுக்க கூடாது என ஒப்புதல் தெரிவிக்கும் வகையில் நுண் கடன் நிறுவனங்கள் கையெழுத்திட்டு கொடுத்தன. அதனடிப்படையில் அப்போது போராடிய சிபிஎம் தோழர்கள் மற்றும் பெண்களை சமாதானமடைந்தனர்.

அதன்பிறகு மறுநாளே “நாங்கள் அரசுக்கு பணம் கொடுத்து விட்டோம். அவர்கள் இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது எனவும், பணம் கட்டவில்லை என்றால் நீ செத்து போயிரு, நான் உன் கணக்கை முடித்து விடுவேன்…” என கொலை மிரட்டல் விடுத்தும் பணம் கேட்டு கொண்டு வராத பெண்களை “அவ வீட்டுல என்ன பண்றாள் குளிக்கிறதுக்கு இதுதான் நேரமா…” என கேவலமாக பேசினார்கள். இச்செயலை கண்டித்து பெண்கள் மறுநாள் தாசில்தாரிடம் சென்று முறையிட்டனர் அங்கு தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் இருவரும் பிரச்சனை செய்த அவர்களை கைது செய்து சிறையில் அடையுங்கள் என ஆவேசமாக பேசினர்.

உடனே அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பெண்களிடம் “வாங்குன பணத்தை கட்ட மாட்டியா…” என்று அடாவடி நுண்கடன் நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்கி பேசினார்கள். அங்கு சென்ற ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு தோழர் சம்சுதீன் அவர்களிடம், “மரியாதை குறைவாக பேசி ஒன்னும் பண்ண முடியாது போ…” என்று அடாவடியாக அதிகாரிகள் பேசினர்.

படிக்க:
இப்ப 10 ரூபா டீத்தூளுக்குக் கூட கடன் கொடுக்க மாட்டேங்குறான் !
சுயசார்பு இந்தியா : மோடியின் மற்றொரு பித்தலாட்டம் !

தாசில்தார் “நீ எங்க வேண்டுமானாலும் போய் புகார் கொடுத்துக்க.. நான் ஒன்னும் (நிறுவனங்கள் மீது) பண்ண முடியாது போ…” என்று ஒருமையில் பேசினார். நுண் கடன் நிறுவனம் வசூல் செய்யும் நபர்கள் கூறுவதைப்போல “அரசாங்கத்திடம் நிறுவனங்கள் பணம் கொடுத்துவிட்டார்கள்…” எங்களால் ஒன்னும் செய்ய முடியாது என்பதை அதிகாரிகள் சொல்லவில்லையே தவிர, நுண் கடன் நிறுவனங்களுக்கு ஆதரவாக பேசி கேவலமாக நடந்து கொண்டனர்.

இப்படிப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் நுண்கடன் அடாவடி வசூல் செய்யும் நபர்களை கைது செய்து சிறையில் அடைக்கவும் பெண்களை திரட்டி 22.07.2020 அன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தோம்.

மாவட்ட ஆட்சியர் “நான் என்ன செய்வது…” என கைவிரித்தார். பின்பு பெயரளவிற்கு ‘டிஎஸ்பி இடம் கூறி நடவடிக்கை எடுக்க சொல்கிறேன்’ என ஒப்புக்கு பேசினார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒரு மாவட்ட ஆட்சியர் மக்களுடைய குறைகளைக் கேட்க நேரமில்லை என்றும்; பெயரளவுக்கு நடவடிக்கை எடுப்பதாக கூறுவதை நினைத்து மிகவும் நொந்து போனார்கள்.

இந்த அதிகாரிகள் மக்களுக்காக இல்லை இந்த அரசு நிர்வாகம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும்; செல்வந்தர்களுக்கு மட்டுமே வேலை செய்யக் கூடியது என்பதை உணர்ந்தனர். களத்தில் இறங்கிப் போராடி அடாவடி செய்யும் கந்துவட்டி கும்பலான நுண் கடன் நிறுவன நபர்களை ஊரில் கட்டி வைப்பதும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி போராடுவதுமே ஒரே தீர்வு எனப் பேசினர்.

அடுத்த கட்டத்திற்கு லால்குடி பெண்கள் மற்றும் பொதுநல அமைப்பினர் இணைந்து போராட்டத்தை செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி.

கார்ப்பரேட்டுகளின் பலிபீடத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு !

ரோனா உள்ளிட்ட பெருந்தொற்று நோய்க் கிருமிகள் உருவாகிப் பரவுவதற்கும், முதலாளித்துவப் பெருவீத உற்பத்தியால் இயற்கை சூழல் மாசுபட்டிருப்பதற்கும் இடையே நெருங்கிய தொடர்பிருப்பதைச் சுட்டிக்காட்டி, சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்துப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களும் வல்லுநர்களும் எச்சரித்து வருகிறார்கள்.

இயற்கையையும் சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாக்க வேண்டுமென்றால், சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய திட்டங்களை, தொழில்களைத் தடை செய்ய வேண்டும். சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டங்கள், விதிமுறைகளை இன்னும் கடுமையாக்க வேண்டும். இது பாமரனுக்கும் புரியக்கூடிய எளிய வழி. ஆனால், மோடி அரசோ இதற்கு நேரெதிர் திசையில் பயணிக்கிறது.

ஊரடங்கைப் பயன்படுத்திக் கொண்டு சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு சட்டங்களை மிகக் கேடாகத் தளர்த்த முயற்சிப்பதோடு, சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய 191 திட்டங்களுக்குச் சட்டவிரோதமான முறையில் தன்னிச்சையாக அனுமதியும் கொடுத்திருக்கிறது, மோடி அரசு.

ஒரு மரத்தைச் சாய்ப்பதற்கு அதனைச் சிறுகச் சிறுக வெட்டுவதற்குப் பதிலாக, அதன் வேரில் வெந்நீரையோ, வேறு ஏதாவது இரசாயனத்தையோ ஊற்றிவிட்டால், அது எவ்வளவு பெரிய மரமாக இருந்தாலும் சிறுகச்சிறுகப் பட்டுப்போய் அழிந்துவிடும். அப்படிச் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் வேரில், திருத்தம் என்ற பெயரில் வெந்நீர் ஊற்றியிருக்கிறது, மோடி அரசு.

விசாகப்பட்டிணத்தில் இயங்கிவரும் எல்.ஜி. பாலிமெர் ஆலையில் ஏற்பட்ட வாயுக் கசிவால் மூச்சுத் திணறலுக்குள்ளாகி உயிருக்கு போராடும் குழந்தை. (கோப்புப் படம்)

எந்தவொரு பெரிய திட்டங்களையும் தொடங்குவதற்கு முன்பாக, அத்திட்டம் அமையவுள்ள பகுதியின் சுற்றுப்புறச் சூழலில் அத்திட்டம் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிய சுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தயாரிக்க வேண்டும் என்பதும், அத்திட்டம் குறித்து அப்பகுதி மக்களின் கருத்துக்களைக் கேட்டறிய விரிவான கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்பதும் தற்போது நடைமுறையிலுள்ள சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையான விதிமுறைகள்.

இவை இரண்டையும் பெயரளவிலாவது பூர்த்தி செய்வதன் அடிப்படையில்தான் எந்தவொரு திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்படும். எடுத்துக்காட்டாக, சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு முறையாகச் சுற்றுப்புறச் சூழல் அனுமதி பெறப்படவில்லை என்ற அடிப்படையில்தான் அத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்திருக்கிறது.

இந்த விதிமுறைகள் இரண்டையும் நடைமுறைப்படுத்துவதில் சில விதி விலக்குகள் உள்ளன என்றபோதும், இந்த விதிமுறைகளிலிருந்து தமக்கு முற்றிலுமாக விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் கோரிக்கை. 2006 -ஆம் ஆண்டு சுற்றுப்புறச் சூழல் தாக்க மதிப்பீடு விதிமுறைகளைத் திருத்தியிருப்பதன் மூலம் அம்முதலாளிகளின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறது, மோடி அரசு.

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் ஊரடங்கு அறிவிப்பதற்குச் சற்று முன்னதாக வெளியிட்ட சுற்றுப்புறச் சூழல் தாக்கம் குறித்த அறிவிக்கை 2020, ஏற்கெனவே இருந்துவரும் விதிமுறைகளில் மூன்று முக்கியமான தளர்வுகளை முன்மொழிந்திருக்கிறது.

படிக்க:
சந்தியா ரவிசங்கர் – ஒரு Professional Journalist-ன் வாக்குமூலம் !
‘உயர்’ சாதிக்காரரின் பைக்கை தொட்ட தலித் மீது கொலைவெறித் தாக்குதல் !

முதலாவதாக, சுற்றுப்புறச் சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையின்றியே, ஒரு திட்டத்தைத் தொடங்கவோ அல்லது ஏற்கெனவே நடைமுறையில் இருந்துவரும் திட்டத்தை விரிவாக்கவோ அனுமதி அளிக்கிறது, இந்த அறிவிக்கை.
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பார்களே, அது போல, சுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையின்றி தொடங்கப்படும் அல்லது விரிவாக்கப்படும் திட்டங்கள் குறித்துப் பிற்பாடு ஒரு கமிட்டியைப் போட்டு ஆய்வு செய்வார்களாம். அந்த கமிட்டி தரும் அறிக்கை எதிர்மறையாக இருந்தால், ஒன்று திட்டத்தை ரத்து செய்வார்களாம்; இல்லையென்றால், அபராதம் விதித்துத் திட்டத்திற்கு அரசு இசைவு தெரிவிக்குமாம்.

முறைகேடுகள், விதிமீறல்களுக்கு ஏற்ப அபராதம் எப்பேர்பட்ட நியாயம்! பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளியைத் தண்டிப்பதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அக்காமுகனைத் திருமணம் செய்து வைக்கும் நிலப்பிரபுத்துவ கட்டப் பஞ்சாயத்துக்கும் இதற்கும் வேறுபாடு உண்டா?

ஒரு வனப்பகுதியையோ அல்லது விளை நிலத்தையோ அழித்து உருவாக்கப்படும் திட்டங்கள் பிற்பாடு ரத்து செய்யப்பட்டாலும், அழிக்கப்பட்ட இயற்கையை அல்லது எளிய மக்களின் வாழ்க்கையை பழையபடி மீட்டுருவாக்கம் செய்துவிட முடியுமா? திட்டம் தொடங்கிய பிறகு ஆய்வு, அனுமதி, ரத்து என்பதெல்லாம் இயற்கை மீது, மக்களின் வாழ்க்கை மீது ஏவிவிடப்படும் சதித்தனமான நாசவேலைகள்தான்.

மேலும், இந்தியாவின் அதிகார வர்க்க கமிட்டிகளின் யோக்கியதை என்னவென்பது நாம் அறியாததா? போபால் விஷவாயு விபத்து விசாரணையை நினைவுபடுத்திப் பாருங்கள். யார் சுற்றுப்புறச் சூழலை நாசப்படுத்துகிறார்களோ, அவர்கள்தான் அதற்குரிய தண்டத் தொகையைச் செலுத்த வேண்டும் (Polluters must pay) என்பதுதான் இயற்கை நீதி. ஆனால், உச்சநீதி மன்றமோ போபால் விஷவாயு வழக்கில் உரிய நட்ட ஈடு செலுத்துவதிலிருந்து யூனியன் கார்பைடு நிறுவனத்தைக் காப்பாற்றியது. இந்த உத்தரவால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நட்ட ஈடும், தொடர் மருத்துவக் கண்காணிப்பும் சிகிச்சையும் கிடைக்கவில்லை. மாசுபடுத்தப்பட்ட அந்தப் பகுதி மீட்டுருவாக்கமும் செய்யப்படவில்லை.

இதுவொருபுறமிருக்க, கடந்த ஏப்ரல் மாதத்தில் உச்சநீதி மன்ற நீதிபதி சந்திரசூட் சுற்றுப்புறச் சூழல் குறித்த வழக்கொன்றில் அளித்த தீர்ப்பில், திட்டம் தொடங்கிய பிறகு அனுமதி (post facto approval) வழங்க மைய அரசிற்கு அதிகாரம் கிடையாதென்றும், அப்படி அனுமதி வழங்குவது சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு அடிப்படை நியதிகளுக்கு எதிரானதென்றும்” தீர்ப்பளித்திருக்கிறார். இத்தீர்ப்பை ஓரங்கட்டிவிட்டுத்தான் இந்தத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது, மோடி அரசு.

இரண்டாவதாக, குறிப்பான சில திட்டங்களுக்கு அது செயல்படுத்தப்படும் பகுதிகளில் வாழும் மக்களிடம் கருத்துக்கேட்கத் தேவையில்லை எனக் கூறுகிறது, 2020 அறிவிக்கை. மற்ற திட்டங்களுக்குப் பொருத்தவரையில், பொதுமக்களின் கருத்துக்களைத் தெரிவிப்பதற்காக வழங்கப்பட்டு வந்த கால அவகாசத்தை 30 நாட்களில் இருந்து 20 நாட்களாகக் குறைத்துள்ளது. மேலும், இத்திருத்தத்தில் குறிப்பான திட்டங்கள் என்பதற்கு எவ்வித வரையறையும் இல்லாததால், எல்லா திட்டங்களையும் இதன் கீழ் கொண்டுவந்து விடும் மோசடியும் இதனுள் மறைந்தே இருக்கிறது.

அதிகார வர்க்கத்தால் நடத்தப்படும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் அனைத்துமே நாடகங்கள்தான். போலிசைக் குவித்து அச்சமூட்டும் விதத்திலும், அதனையும் மீறி மக்கள் எழுப்பும் மாற்றுக் கருத்துக்களை ஒதுக்கித் தள்ளிவிட்டும்தான் “கருத்துத் திணிக்கும் கூட்டங்கள்” நடத்தப்படுகின்றன. இந்தத் திருத்தமோ ஒப்புக்காகக்கூட அத்தகைய கூட்டங்களை நடத்தத் தேவையில்லை எனக் கூறி, அந்நாடகங்களுக்கு மங்களம் பாடிவிட்டது.

மூன்றாவதாக, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட கேந்திரமான திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிலிருந்து விலக்கு அளிக்கும் சலுகையை வழங்குகிறது, 2020 அறிவிக்கை. ஆனால் இந்த வரைவறிக்கையில் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட திட்டங்கள் என்றால் என்னவென்பதற்கு எவ்விதமான தெளிவான வரையறையும் இல்லை. கேந்திரமான திட்டங்கள் எனப் பொத்தாம் பொதுவாகச் சொல்வதன் வழியாக, எந்தவொரு திட்டத்தையும் அதனுள் கொண்டுவந்து சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு என்பதையே காலில் போட்டு மிதித்துவிட முடியும். இதன் மூலம் இயற்கை வளங்கள் சுற்றுப்புறச் சூழலை மட்டுமல்ல, பொதுமக்களின் வாழ்வாதாரங்களையும் கேள்வி கேட்பாரின்றிக் கபளீகரம் செய்துவிட முடியும்.

இந்த மூன்று திருத்தங்களையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்த்தால், இனி புதிய திட்டங்களுக்கோ அல்லது பழைய திட்டங்களின் விரிவாக்கத்திற்கோ சுற்றுப்புறச் சூழல் தாக்க மதிப்பீடும் தேவையில்லை; பொதுமக்களிடம் கருத்துக் கேட்க வேண்டிய அவசியமும் இல்லை எனப் பொருள்படுகிறது. இவ்வாறான திருத்தங்கள் ஸ்டெர்லைட் போன்ற நாசகார ஆலைகளுக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்து, அது நழுவி வாயில் விழுவது போன்றதாகும்.

படிக்க:
சுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” !
கருப்பர் கூட்டம் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று அவர்களை உடனே விடுதலை செய் !

இவை ஒருபுறமிருக்க, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக, அறிவிக்கை 2020 மிகவும் வெளிப்படையாக ரியல் எஸ்டேட் முதலைகளின் நலனை முன்னிறுத்திக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதுவரையிலும் 20,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும் கட்டுமானங்களுக்கு சுற்றுப்புறச் சூழல் தாக்க மதிப்பீடும், மக்களின் கருத்தும் கேட்கப்பட வேண்டும் என இருந்த விதியை, 1,50,000 சதுர மீட்டர் பரப்பளவு வரையிலும் கட்டப்படும் கட்டுமானங்களுக்குக்கூட இவையிரண்டும் தேவையில்லை என்ற திருத்தத்தை முன்வைத்திருக்கிறது.

மேலும், மிக முக்கியமாக, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்போடு தொடர்புடைய தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் உள்ளிட்டுத் தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட்டு வந்த பல்வேறு ஆணையங்களையும் ஒரே மண்டல அலுவலரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் கட்டமைப்பு சீர்திருத்தத்தையும் கொண்டுவந்திருக்கிறது, மைய அரசு. இம்மாற்றம் கார்ப்பரேட் முதலாளிகளுக்காகக் கொண்டுவரப்பட்டிருக்கும் ஒற்றைச் சாளர அனுமதி முறை தவிர வேறில்லை.

அருணாச்சலப் பிரதேசத்தில் கட்டப்படவுள்ள உலகின் மிக உயரமானதும், இந்தியாவிலேயே மிகப்பெரியதுமான திபாங்க் அணைக்கட்டுத் திட்டத்தை எதிர்த்து மிஷ்மி பழங்குடியின மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

இவற்றுக்கெல்லாம் அப்பால், தற்போது ஊரடங்கியிருக்கும் சூழலைப் பயன்படுத்தி டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டம், அருணாச்சலப்பிரதேசத்தில் ஈடலின் அணை கட்டும் திட்டம், வேடந்தாங்கல் பகுதியிலுள்ள மருந்து தயாரிக்கும் ஆலை விரிவாக்கத்திற்காக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவைக் குறைப்பது, அசாமிலுள்ள பட்காய் யானைகள் வழித்தடப் பகுதியில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பது, கோவாவிலுள்ள பகவான் மஹாவீர் வனவிலங்கு சரணாலயத்தின் வழியாக நெடுஞ்சாலை அமைப்பது, கிர் தேசியப் பூங்கா பகுதியில் சுண்ணாம்பு சுரங்கம் அமைப்பது எனச் சுற்றுச்சூழலுக்குக் கேடுவிளைவிக்கக்கூடிய 191 திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியிருக்கிறது, மோடி அரசு.

நாடாளுமன்றம் கூடாதநிலையில், இந்த அனுமதியை எதிர்க்கட்சிகள் பிரச்சினையாக்கிவிடக் கூடாது என்பதற்காகவே 30 திட்டங்களைப் பற்றி விவாதிப்பதற்கென காணொலி கூட்டத்தைக் கண்துடைப்பு நடவடிக்கையாக நடத்தியிருக்கிறது. இவ்விவாதங்களில் திட்ட அனுமதிக்கு எவ்வித இடையூறும் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதற்காக, துறைசார்ந்த வல்லுநர்கள் எவரும் தமது கருத்தை முழுமையாகத் தெரிவிக்க வாய்ப்பளிக்காத வண்ணம் ஒவ்வொரு திட்டத்தின் மீதான கருத்தையும் வெறும் 10 நிமிடங்களுக்குள் தெரிவிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான திட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட்டதை எதிர்த்து 60 பிரமுகர்கள் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தங்களது செயல்கள், “நீரோ மன்னனை நினைவுபடுத்துவதாக”ச் சாடியுள்ளனர். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்ட அறிவியல் அறிஞர்கள், தொழில்முறை வல்லுநர்கள் அடங்கிய 291 பேர் கொண்ட குழு, “நாடு கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கையில், எவ்வித ஆய்வுகளுமின்றி பல்வேறு திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதை நிறுத்துமாறு” மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இவர்களின் கடிதங்களெல்லாம் எங்கே போயிருக்கக்கூடுமென்று சொல்லத் தேவையில்லை. நல்வாய்ப்பாக, இவர்களுள் ஒருவரையும் நகர்ப்புற நக்சல்கள் என சங்கப் பரிவாரக் கும்பல் முத்திரை குத்தவுமில்லை.

மாற்றுக் கருத்து, ஜனநாயகம் ஆகியவற்றின் மீது மோடிக்கு எந்தளவிற்கு வன்மமும் வெறுப்பும் உண்டோ, அதே அளவிற்கு சுற்றுப்புறச் சூழல் விதிகளின் மீதும், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தும் அமைப்புகள், செயல்வீரர்கள் மீதும் மோடிக்கு வன்மமும் வெறுப்பும் உண்டு. அவர் 2014 பிரதமர் பதவியில் உட்கார்ந்தவுடனேயே, அவரது அரசு பெருந்திட்டங்களுக்கான சுற்றுப்புறச் சூழல் அனுமதிக்கு இணையதள வழியில் விண்ணப்பித்தால் போதும் என ஒற்றைச்சாளர முறையைக் கொண்டு வந்ததும்; சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு குறித்துக் கருத்துத் தெரிவிப்பவர்களை வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என அவரது அரசு அவதூறு செய்து வருவதும் இந்த வன்மத்தைப் புட்டு வைக்கின்றன.

சென்னை – எண்ணூர் கடல் பகுதியில் ஏற்பட்ட கச்சா எண்ணெய்க் கசிவால் படிந்த மாசை வாளிகளில் வழித்து அப்புறப்படுத்தும் தன்னார்வலர்கள் : எப்பேர்பட்ட தொழில்நுட்பம்!

ஓரளவிற்குக் கட்டுக்கோப்பான சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் நடைமுறையில் இருக்கும்போதே, நமது நாட்டின் சுற்றுப்புறச் சூழல் எந்தளவிற்கு நாசப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதற்கு மாசடைந்த நொய்யல் ஆறு தொடங்கி பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். சென்னை எண்ணூர் கடல் பகுதியில் கப்பலில் இருந்து கொட்டிய கச்சா எண்ணெயை வாரி எடுக்க வாளிகளைப் பயன்படுத்திய அவலத்தை நாடே கண்டது. மாசடைந்து போன சுற்றுப்புறச் சூழலை மீட்டுருவாக்க இந்திய அரசிடம் உயர் தொழில்நுட்ப அறிவு எதுவுமில்லை என்பதை இந்தச் சம்பவம் அம்பலப்படுத்தியது.

இந்த நிலையில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு என்பதற்கே வேட்டு வைக்கக்கூடிய திருத்தங்களை ஊரடங்கு நேரத்தில் கொண்டுவந்து, அவற்றைச் சட்டமாக்கிவிடத் துடித்து வருகிறது, மோடி அரசு.

இத்திருத்தங்கள் சட்டமாக்கப்பட்டால், சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம் நீதிமன்றத் தடையை முடக்கிப்போட்டுவிட்டு நடைமுறைக்கு வரும். கர்நாடகா அரசு காவிரியில் கட்டத் திட்டமிட்டிருக்கும் மேகதாது அணையும், கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாகப் புதிய அணை கட்டத் திட்டமிட்டிருப்பதும் செயல் வடிவம் பெறும். மிகவும் முக்கியமாக, காவிரி டெல்டாவில் கேள்வி கேட்பாரின்றி ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு வழி திறந்துவிடப்படும். சுருக்கமாகச் சொன்னால், இத்திருத்தங்கள் தமிழகத்தைச் சுடுகாடாகவும், வறண்ட பாலையாகவும் மாற்றக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளன.

தீவிரமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முதலீடுகளை ஈர்ப்பது என்ற தேன் தடவிய வார்த்தைகளுக்குள் ஒளிந்துகொண்டுதான், வடமாநில பா.ஜ.க. அரசுகள் தொழிலாளர் நலச் சட்டங்களை, முதலாளிகள் நலச் சட்டங்களாகத் திருத்தியுள்ளன. நாட்டின் கேந்திரமான அனைத்துத் துறைகளிலும் இந்தியத் தரகு முதலாளிகளையும் பன்னாட்டு நிறுவனங்களையும் அனுமதிப்பதற்கு ஏற்ப சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவது என்ற போர்வையில் பெரும் வியாபாரிகளின் நலனை முன்னிறுத்தி அத்தியாவசிய உணவுப் பொருள் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இலவசமாகவும் மானியக் கட்டணத்திலும் வழங்கப்படும் மின் விநியோகக் கட்டமைப்பை ரத்து செய்யும் மின்சார திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவற்றின் தொடர்ச்சியாகத்தான் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டங்களிலும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்கு ஏற்றபடி திருத்தங்களை மேற்கொள்ள முயற்சிக்கிறது, மோடி அரசு.

இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி தீர்வுகளை முன்வைத்து தனித்தனியாகப் போராடுவது எதிர்ப்புகளைப் பலவீனப்படுத்தக் கூடும். மாறாக, ஒரே தீர்வாக, கார்ப்பரேட் முதலாளிகளின் கைகளிலுள்ள அதிகாரத்தை மக்களின் கரங்களுக்கு மாற்றும் சமூக, பொருளாதார தீர்வை முன்வைத்துப் போராடுவதுதான் ஒரே மாற்று!

– பூங்குழலி
புதிய ஜனநாயகம், ஜூலை 2020.

இப்ப 10 ரூபா டீத்தூளுக்குக் கூட கடன் கொடுக்க மாட்டேங்குறான் !

நாளொன்றுக்கு 5000 என்று கொரோனா தொற்று நோய் தமிழகம் முழுவதும் பரவுகிறது. ஒவ்வொரு தெருவிலும் கொரோனாவைக் காணாத அண்டை வீட்டாரைக் பார்ப்பது அரிதாகவே உள்ளது. அதிலிருந்து தப்பிப் பிழைப்பவர்கள் அடுத்த வேளை உணவுக்காக சாலைகளில் வேலை தேடி இலக்கில்லாமல் அலைகிறார்கள். ஏற்கெனவே பார்த்த வேலைகள் கண்ணெதிரே காணாமல் போய்விட்டன. கட்டிட வேலையிலிருந்து காகிதம் பொறுக்கும் வேலை வரை, தலை சுமையிலிருந்து தள்ளுவண்டி வியாபாரம் வரை எதுவுமே நிரந்திரமில்லை. சிறு கடை வியாபாரிகளும் கொரோனாவுக்கு மத்தியில் – ஊரடங்கு தளர்வுக்கு மத்தியில் சென்னை நகரத்தில் மக்களோடு மக்களாக பயணித்தபோது கண்ட தெருவோரத் தொழிலாளார்களின் நிலைமைகள் இது.

***

சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் அருகில் இருக்கும் மாண்டியத் சாலை. உயர்தர வகுப்பினர் புழங்கும் பகுதி. நட்சத்திர விடுதிகள், வெளிநாட்டு நுகர்பொருட்கள் விற்கும் வணிக வளாகங்கள். மதிப்பு மிகுந்த கார்களின் அணிவரிசை என்று இயல்பு நிலையில் இருந்தது அந்தப் பகுதி. அந்தச் சாலையின் ஓரத்தில் குணிந்த தலை நிமிராமல் பழைய செருப்புகளுக்கு மத்தியில் துவண்டு போய் சாலையை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார் செருப்புத் தைக்கும் தொழிலாளி.

எங்கள் பாதத்திலிருந்த செருப்பைப் பார்த்துக் கொண்டே ஏதாவது ரிப்பேரா சார்? என்றார்.

அவர் அருகில் அமர்ந்து ஏன் முகத்தில் மாஸ்க் போடாமல் இருக்கிறீர்கள். ஊரெல்லாம் நோயாக இருக்கிறதே என்றோம்.

செருப்புத் தைக்கும் தொழிலாளி கோவிந்தராஜ்.

அவர் சிரித்துக் கொண்டே, அதைப் போட்டுகிட்டா ஃப்ரியா வேலை செய்ய முடியல சார். மூச்சு முட்டுது, கசகசன்னு எரியுது என்று சொல்லிக் கொண்டே தனது டூல் பாக்ஸ் மூலையிருந்த அழுக்கடைந்த முகக்கவசத்தை எடுத்துப் போட்டுக்கொண்டே, சார் நான் பக்கத்துல இருக்குற சிந்தாதிரிப்பேட்டை ஆத்தங்கரை கூவத்துலதான் பொறந்தேன்.

எங்க அப்பா இதே இடத்துலதான் 30 வருசமா செருப்பு தச்சாரு. அவரு கொடுத்துட்டுப் போன சொத்துதான் இது. அதே பொருள வச்சுதான் பொழப்ப ஓட்டுறேன். இப்போ கொரோனா வந்து என் வயித்துல மண்ணள்ளி போட்டுருச்சு சார்.

இங்கே கார்ல வர்றவங்கல்லாம் பை நிறைய ஷூ எடுத்து வந்து ரிப்பேர் பண்ணுவாங்க. ஸ்போர்ட்ஸ் ஷூ, வாக்கிங் ஷூ, ஜாக்கிங் ஷூ, ஆபீஸ் ஷூ, சில்றன்ஸ் ஷூ… இன்னும் என்னென்னமோ சொல்வாங்க. வீட்டுல இருக்குற தாத்தா ஷூ, இது. அவர் மூட்டு வலிக்கு போடுறது, கால் வலிக்குப் போடுறது பத்துறமா பாத்து தை என்பாங்க.

அதுல சின்ன சின்ன ரிப்பேர்தான் செய்வேன். ஐம்பது நூறுன்னு கொடுப்பாங்க, நல்ல வேலை கெடச்சா ஒரு நாளைக்கு 1000 ரூபா கூட சம்பாதிப்பேன். இந்த கொரோனாவுல எல்லாம் அழிஞ்சு போச்சு. நாலு மாசமா வருமானம் இல்ல. யாரும் ரோட்டுல நடக்குறதே இல்ல. கடைசியில பசியில நாங்கதான் இப்ப தேஞ்சி போறோம். ஒரு நாள் போறது ஒரு யுகமா இருக்குது. இப்ப இருநூறு முன்னூறுகூட சம்பாதிக்க முடியல.

வீட்டு பக்கத்துல இருக்குற உப்பு மிளகா சாமான் கடையில சிறுகச் சிறுக பொருள் வாங்குனதுல 7000 ரூபா வரை கடனாயிடுச்சு. இப்ப 10 ரூபா டீத்தூளுக்குக்கூட கடன் கொடுக்க மாட்டேங்குறான். என் பொண்டாட்டி அந்தக் கடைக்குப் போறதுக்குக்கூட பயப்புடுது. அதனால விடியகால எழுந்து சொம்பு தூக்கி போயி டீ வாங்கி வர்ற வேலைய செய்யிறேன். அதுக்கே குறைஞ்சது 50 ரூபா வேணும். பேரப்பசங்களுக்கு பிஸ்கெட், பண்ணு, பொறைன்னு ஏதாவது வாங்கணும். கண்ணு முழுச்சாங்கன்னா எங்கே தாத்தான்னு கேப்பாங்க. இல்லையேன்னு போனா மனசுக்கு கஷ்டமாயிடும். பேரன் அழுவுறத பாத்தா எம் பொண்டாட்டி திட்டி தீத்திடுவா. நான் யாரைப் பாக்குறது, எப்படி சமாளிக்கிறதுன்னே தெரியல, மனசு வெறுத்துப் போகுது.

இங்கே வந்து உக்காந்தா, சாயாந்திரம் வரைக்கும் ஒரு 200 ரூபா கூட தேற மாட்டேங்குது. இதுலவேற வேலை முடிஞ்சு 40 கி.மீ தாண்டி கண்ணகி நகர் பக்கத்துல இருக்குற பெரும்பாக்கத்துக்குப் போகணும். அங்கதான் எங்கள கெவர்ன்மெண்ட் தூக்கிட்டுப் போயி போட்டுருச்சு. இங்கே கூவம் ஆத்தங் கரையில 40 வருசமா இருந்தோம். கூழோ கஞ்சியோ குடிச்சிட்டு நிம்மதியா இருந்தோம். இப்போ மூனு பஸ் ஏறி இறங்கி தொழில் செய்யுறோம். இப்போ பஸ்ஸும் இல்ல, வேலையும் இல்ல. எப்படி சாப்பிடுறது? நீங்களே சொல்லுங்க சார் என்றார்.

***

க்கத்துல செருப்பு தைக்கிறவருதான் என் அப்பா. இங்கேயே பஞ்சர் கடை வச்சி பொழைக்கிறேன். எட்டாவது வரை படிச்சேன், அதுக்குமேல பள்ளிக்கூடம் போறத விட்டுட்டேன். படிப்பு வந்தாதானே சார் பள்ளிக்கூடம் போக முடியும். பள்ளிக்கு போகலன்னு டெய்லி எங்கம்மா என்ன அடிச்சிட்டு அதுவும் அழுவ ஆரம்பிக்கும்.

நான் ஸ்கூல் போகாம இருக்குறத பார்த்து, பக்கத்துல இருக்குற மெக்கானிக் ஷாப்புல வேலைக்கு விட்டுருச்சு. அங்கே அஞ்சு வருசம் வேலை கத்துகிட்டேன். இங்கே வந்து நாலு வருசம் ஆகுது. அதுல சம்பாதிச்சுதான் இந்த டூவிலர வாங்கினேன். இந்த வண்டியிலதான் டெய்லி எங்கப்பாவை வேலைக்கு கூட்டிட்டு வர்றேன். பிரேக் ஷூ மாத்துறது, செயின் டைட் பண்றது, ஸ்பார்க் பிளக் கிளீன் பண்றதுன்னு சின்னச் சின்ன வேலை வரும். இப்ப, அதுவும் குறைஞ்சு போச்சு.

வந்து போற பெட்ரோல் செலவே 150 ரூபா ஆகுது. டீ, டிபன், பான்பராக்குன்னு பாத்து பாத்து செலவு பண்ணுனாக் கூட ரெண்டு பேருக்கும் சேர்த்து 200 ரூபா ஆகும். இந்த செலவுக்குக்கூட சம்பாதிக்க வழியில்லாம இருக்கோம். வெறுமனே உக்கார்ந்திருந்தா வீட்டுல சண்டைதான் வருது. அதுக்கு பயந்துதான் இங்கே ஓடிவந்துடுறோம்.

சாயாந்திரம் வெறுங்கையோட வீட்டுக்குப் போனோமுன்னா கஷ்டமாயிடும். மறுநாளு எப்படிப் போகப்போகுதோன்னு கவலையாயிடும். அதுலேயே தூக்கம் வராது… என்று கொரோனாவினால் சிதைந்த வாழ்க்கையை ரணத்தோடு விவரித்தார். 22 வயதுக்கு உண்டான துடிப்பு துளியும் அவரிடம் இல்லை. அவர் பேச்சும் உடல் மொழியும் விபத்தில் நொறுங்கிய வாகனம் போல் உருக்குலந்து காணப்பட்டது.

தந்தையின் செருப்பு தைக்கும் கடைக்கு அருகிலேயே பஞ்சர் கடை வைத்துள்ள மகன் கணேஷா.

அவரைப் பார்த்து இங்கே உங்க வயசு பசங்க கேர்ள்ஸ் பிரண்டுகிட்டே பேசுறத பார்த்திருப்பீங்க. அப்ப உங்களுக்கு என்ன தோணும்… .

நிமிர்ந்து கூர்ந்து பார்த்தார். நானும் லவ் ‘பண்றேன் சார். அந்தப் பொண்ணு வீட்டுல, நான் செருப்பு தைக்கிறவரு பையன்னு அசிங்கமா பேசுறாங்க. அந்தப் பொண்ணுக்காக நான் பொறுத்துகிறேன் சார். ஒரு பங்க் கடை இந்த கெவர்ண்மென்ட் வச்சிகொடுத்தா அத வச்சி பெரிய ஆளா ஆயிடுவேன். கடை ஓனருன்னு அவங்க கிட்டே போயி நிப்பேன் சார், என்று தளர்ந்த குரலை மேலும் தாழ்த்திக் கொண்டே, பங்க் கடை போடுவதற்காக பலமுறை கவுன்சிலரிடம் கொடுத்த மனுக்களின் பிரதிகளை நம்மிடம் எடுத்துக் காண்பித்தார்.