Sunday, June 22, 2025
முகப்பு பதிவு பக்கம் 150

கர்நாடகா: சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவி தொகையை குறைக்கும் பாசிச அரசு!

ர்நாடகாவில் முனைவர் பட்டம் (Phd) மற்றும் ஆய்வியல் நிறைஞர் (MPhil) படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்காக வழங்கப்படும் உதவி தொகையை 33 சதவிகிதம் முதல் 66 சதவிகிதம் வரை குறைத்து உத்தரவிட்டுள்ளது கர்நாடக அரசு.

2022-23 கல்வியாண்டில் சேர்ந்த PhD மற்றும் MPhil மாணவர்களுக்கு உதவித்தொகை 66 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது; மேலும் 2020-21 மற்றும் 2021-22 கல்வியாண்டுகளில் சேர்ந்த PhD மாணவர்களுக்கு 33 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5, 2022 அன்று இந்த அறிவிப்பை கர்நாடக அரசின் சிறுபான்மை நலத் துறை வெளியிட்டது.

இந்த அறிவிப்பு குறித்து கர்நாடகா பகுதியைச் சேர்ந்த Phd பயிலும் மாணவர் கல்யாண் என்பவர் ஊடகத்திடம் கூறும்போது, “நான் என் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி, என் தந்தை விவசாயத் தொழில் செய்கிறார்; எனது கல்விக்கு நிதியளிக்க எனது குடும்பத்திற்கு நிதி வசதி இல்லை. எனது ஆராய்ச்சியை முடிக்க நான் முழுவதுமாகச் சார்ந்து இருப்பது அரசால் வழங்கப்படும் உதவி தொகையைதான். நான் 2020-21-இல் இத்திட்டத்தில் சேர்ந்தேன்; மண் ஆய்வுகளில் விஞ்ஞானியாக பணியாற்ற விரும்புகிறேன். ஆனால், ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஆதாரங்கள் என்னிடம் இல்லாததால் எனது ஆராய்ச்சியைத் தொடர கடினமாக உள்ளது. முதல் ஆண்டுக்கான உதவித்தொகையை வழங்க முடியாது என்று அரசாங்கம் இப்போது கூறுகிறது; நான் ஏமற்றப்பட்டதாக உணர்கிறேன்” என்று கூறினார்.

படிக்க : புதிய கல்விக்கொள்கையால் வேலையை பறிகொடுக்கும் பேராசிரியர்கள் !

கோவிட்-19 பெருந்தொற்றின் போது ஏற்பட்ட நிதி நெறுக்கடியின் காரணமாக மத்திய அரசு மாநில அரசுக்கு தரவேண்டிய நிதியை குறைத்துவிட்டது. இதனால் சிறுபான்மை மாணவர்களுக்கு தரவேண்டிய உதவித்தொகைக் குறைக்கப்பட்டது என்று விளக்கம் அளிக்கிறது.

ஆனால், இதே கோவிட்-19 காலகட்டத்தில்தான் பெரும் முதலாளிகளுக்கும் நிறுவனங்களுக்கும் கடன் தள்ளுபடி இந்த அரசு செய்து கொடுத்துள்ளது.

கடந்த மார்ச் 2021-ஆம் நிதியாண்டில் மட்டும் 2.03 இலட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இதில் சுமார் 75 சதவிகிதம் கடன்கள் பொதுத்துறை வங்கிகள் கொடுத்த கடன்களாகும். அதிலும் குறிப்பாக 2020-21-ஆம் நிதியாண்டில், ஸ்டேட் வங்கியின் கீழ் இயங்கும் ஐந்து வங்கிகள் மட்டும் ரூ. 89,686 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்திருக்கின்றன.

இப்படி அரசுக்கு வர வேண்டிய பணத்தை எல்லாம் பெரும் முதலாளிகளுக்கும், பெரும் நிறுவனங்களுக்கும் வாரி வழங்கிவிட்டு, சிறுபான்மை மாணவர்கள் Phd. , M.Phil படிக்க உதவும் உதவித்தொகையை கோவிட்-19 பெருந்தொற்றின் பொழுது ஏற்பட்ட நிதி நெருக்கடியினால் குறைக்கப்படுகிறது என்று பாஜக அரசு வேசம் போடுகிறது.

இதையெல்லாம் பார்த்தால் அரசுக்கு நிதி நெருக்கடியெல்லாம் மாணவர்களுக்கு உதவி செய்யும்போது தான் வருகிறது அம்பானி அதானிகளுக்கு உதவி செய்யும்போது ஏற்படுவதில்லை என்று நமக்கு புரிகிறது. மேலும் இது சிறுபான்மை மாணவர்களுக்கு எதிராக இந்த பாசிச அரசு திட்டமிட்டு நடத்தும் ஒரு தாக்குதல் ஆகும்.

இத்தாக்குதல் கர்நாடகா அரசுக்கு ஒன்றும் புதியது அல்ல. இதற்கு முன்பு கடந்த ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் உடுப்பியில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் வகுப்புக்கு செல்ல கல்லூரி நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் 6 மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து ஜனவரி 31-ம் தேதி அந்த மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்தனர்.

இதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 15-ஆம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றம் “இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய நம்பிக்கையில் இன்றியமையாத மத நடைமுறையின்‌ ஒரு பகுதியாக இல்லை” என்று சொல்லி ஹிஜாப் தடைக்கு துணை நின்றது.

இதுபோன்று தொடர்ச்சியாக சிறுபான்மை மாணவர்கள் படிக்கவே கூடாது என்று அவர்களுக்கு எதிராக பல்வேறு வகையில் தாக்குதலை இந்த பாசிச அரசு நடத்தி வருகிறது.

படிக்க : கல்வித் தனியார்மயத்தை ஒழிக்கும் வரை கள்ளக்குறிச்சிகள் ஓயாது!

இதையெல்லாம் பார்க்கும் பொழுது உத்திரப்பிரதேச மாநிலம் எப்படி ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யின் இந்துராஷ்ர கொள்கையை நிறைவேற்றுவதற்கு ஒரு சோதனை களமாக உள்ளதோ, அதேபோல் கர்நாடகா மாநிலத்தையும் மோடி அரசு மாற்றி வருகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்த்து நாம் நீதிமன்றங்ளுக்கு நீதிகேட்டு போனாலும் சிறுபான்மை மாணவர்களாகிய நமக்கு நீதி வழங்காது ஏன் என்றால் நீதிமன்றங்கள் நமக்கானது இல்லை.  இந்த நீதிமன்றங்கள் ஆளும் வர்க்கத்திற்கானது என்பதை நாம் ஹிஜாப் பிரச்சினைக்கு தீர்ப்பு வழங்கிய போது பார்த்தோம்.

இதுபோன்று தொடர்ச்சியாக சிறுபான்மை மாணவர்கள் மீது இந்த பாசிச அரசு நடத்தும் அடக்குமுறைக்கு எதிராக ஹிஜப் பிரச்சினையின்போது எப்படி மாணவர்கள் போராடினார்களோ அதேபோன்று  மாணவர்கள் அனைவரும் சாதி, மதம் கடந்து ஒன்றாய் திரண்டு நம்மை ஒடுக்கமுயற்சிக்கும் பாசிச சக்திகளை வெட்டி வீழ்த்தப் போராட வேண்டும்!

செழியன்

கள்ளக்குறிச்சி: குற்றம்சாட்டப்பட்டவர்கள் பிணையில் விடுதலை! போராடியவர்களுக்கு குண்டாஸ்! மக்கள் அதிகாரம் கண்டனம்!

30.08.2022

கள்ளக்குறிச்சி; குற்றம்சாட்டப்பட்டவர்கள் பிணையில் விடுதலை!
போராடியவர்களுக்கு குண்டாஸ்!

மக்கள் அதிகாரம் கண்டனம்!
பத்திரிகை செய்தி

டந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது. அவ்வாறு வழங்கப்பட்ட பிணைக்கான விரிவான உத்தரவு, நேற்றைய தினம் 29.08.2022 அன்று வெளியாகி உள்ளது.

ஒரு வழக்கில் புலன் விசாரணை நடைபெற்று முடிவதற்கு முன்னரே -குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்னரே- அவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றம் தெரிவிக்கும் கருத்துக்கள், குற்ற புலன் விசாரணையையும் நீதிமன்ற விசாரணையையும் பாதிக்கும் என்று உயர்நீதிமன்றம் அறியாத ஒன்று அல்ல. சட்டப்படியும் நியாயப்படியும் நீதிமன்றங்கள் செயல்பட வேண்டிய அவசியமில்லை என்பதை நீதிமன்றங்கள் தங்களுடைய பல்வேறு பரிபாலனங்கள் மூலம் நிரூபித்து வருகின்ற காலகட்டம் இது.

தமிழகமே ஸ்ரீமதியின் மர்ம மரணத்திற்கும் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியின் அராஜகத்துக்கும் எதிராக ஓரணியில் நிற்கின்ற இவ்வேளையில், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாகவும் பிணை உத்தரவில் குறிப்பான சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

படிக்க : கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி நிர்வாகம் ஓர் குற்ற கும்பல் | தோழர் அமிர்தா வீடியோ

நன்றாக படிக்க வேண்டும், சிறப்பாக படிக்க வேண்டும் என்றதற்காகவே ஆசிரியர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது துரதிருஷ்டவசமானது; வேதனையானது. ஸ்ரீமதியின் மரணம் என்பது கொலையோ, பாலியல் பலாத்காரமோ அல்ல; ஸ்ரீமதியை தற்கொலைக்கு  தூண்டியதற்கும் சம்பந்தப்பட்ட இவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் கேட்டது பிணை. ஆனால் நீதிமன்றம் அவர்களுக்கு வழங்கி இருப்பது விடுதலை. நீதிமன்றம் தெரிவித்துள்ள இந்த கருத்துக்களிலிருந்து குற்றம்சாட்டப்பட்டவர்கள், முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உருவாகி உள்ளன.

கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஸ்ரீமதியின் தாய் செல்வியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “குற்றவாளிகளை நிச்சயம் தண்டிப்போம்” என்று தெரிவித்தார். இப்பொழுது யார் குற்றவாளி என்பதை எப்படி கண்டுபிடிக்க முடியும். பள்ளி நிர்வாகத்துக்கும் மாணவி இறப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று நீதிமன்றம் கூறிவிட்டது. ஆகவே குற்றவாளி யாராக இருக்க முடியும்; ஸ்ரீமதி அல்லது ஸ்ரீமதி பெற்றோராக மட்டுமே இருக்க முடியும். ஏனென்றால் அவர்கள்தான் தன் பிள்ளையை அங்கே படிக்க வைத்தார்கள். மற்ற குழந்தைகள் தற்கொலை செய்யாதபோது உன் குழந்தை மட்டும் ஏன் தற்கொலை செய்து கொண்டது என்ற கேள்வியை வைத்து அவர்கள்தான் குற்றவாளிகள் என்றும் நாளை தீர்ப்பும் வெளியாகலாம்.

இதேவேளையில் நேற்றைய தினம்(29.8.22), கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது மாடுகளை திருடியதாகவும் பள்ளியை சேதப்படுத்தியதாகவும் கூறி 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்  போடப்பட்டுள்ளது.

ஸ்ரீமதி படிப்பு சுமை தாங்காமல் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார், பள்ளியை திட்டமிட்டு கலவரக்காரர்கள் தாக்கினார்கள் என்று இந்த அரசு நடத்திவரும் நாடகத்தின் இன்னொரு பகுதியே இந்தப் பிணை உத்தரவு.

பள்ளி நிர்வாகிகள் மீது காட்டப்பட்ட எவ்வித கரிசனையும் போராடிய மக்கள் மீது துளியும் காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ள பள்ளி, தனியார்மயக் கல்விக் கொள்ளையை தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக நடத்தி வந்த பள்ளி, இந்த பள்ளியில் 7 பேர் இதுவரை மர்மமான முறையில் இறந்து போயிருக்கிறார்கள். 2007 ஆம் ஆண்டு எம்.எஸ் பிரகாஷ் என்று ஒரு மாணவன் மர்மமான முறையில் இறந்து போனது தொடர்பான வழக்கு இப்போது வரை விசாரணைக்கு வரவில்லை. அந்த வகையில் இந்த பள்ளி ஒரு தொடர் முறை குற்றவாளி என்பதை பற்றி எல்லாம் எவ்வித பரிசீலனையும் இன்றி, பிணை உத்தரவில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

படிக்க : கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: ஆதாரங்களை மறைத்தது அயோக்கியத்தனம் | தோழர் அமிர்தா வீடியோ

பல்வேறு மக்கள் பிரச்சினைகளிலும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களிலும் மக்களுக்கு எதிராகவே நீதிமன்றம் உள்ளிட்ட அரசின் அனைத்து உறுப்புகளும் செயல்பட்டிருக்கின்றன. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஆணையம் அமைத்தது, ஜெயராஜ் கொலை வழக்ககில் குற்றவாளிகள் சிறையில் இருப்பது போன்றவை அரிதினும் அரிதே. அதற்கான காரணம் என்பது இந்த அரசும் நீதிமன்றமும் அல்ல. மாறாக மக்களின் கொந்தளிப்பான உணர்வும் அவர்களின் போராட்ட வழிமுறைகளும் மட்டுமே.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்பது அரசின் அரசியல் பொருளாதார சமூக கொள்கை. ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யின் இந்துராஷ்டிர கனவை நிறைவேற்றுவது என்பதும் அரசின் இன்னொரு முக்கியமான கொள்கை. இந்த கொள்கைகளுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய எவ்விதமான அணுகுமுறையையும் எவ்விதமான தீர்ப்பையும் இந்த அரசு ஒருபோதும் கொடுக்காது. ஸ்ரீமதி மர்ம மரணம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை இது.

தொடர்ச்சியாக பல்வேறு பாசிச நடவடிக்கைகளை நீதிமன்றத்தின் வாயிலாகவே இந்த அரசு நிறைவேற்றி வருகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

மக்கள் பிரச்சினைகளிலும் எந்தளவுக்கு நாம் தலையிட்டு போர்க்குணமாக மக்களைத் திரட்டி போராடுகின்றோமோ அந்தளவுக்கு மட்டுமே நீதி கிடைக்கும் என்பதை மீண்டும் மீண்டும் கீழ் வெண்மணி முதல் ஸ்ரீமதி வரையிலான வழக்கின் தீர்ப்புகள் நமக்கு தெரிவிக்கின்றன.


தோழமையுடன்,
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு-புதுவை.
99623 66321.

கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி நிர்வாகம் ஓர் குற்ற கும்பல் | தோழர் அமிர்தா வீடியோ

கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி என்பது ஓர் குற்றகும்பல்! அதாவது ஆட்சியாளர்கள் மத்தியிலும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி மத்தியிலும் செல்வாக்கு கொண்ட நபர்கள் இவர்கள். அந்த பள்ளியில் சாக நடக்கிறது; அந்த பள்ளி தாளாளர் நேரடியாக எடப்பாடி பழனிச்சாமி கிட்ட பேசக்கூடிய நபர்; எப்படி பட்ட ஒரு செல்வாக்கு உடைய குற்றக்கும்பலாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். இப்படி பட்ட நபர்கள் வெளியே வந்தால் என்ன செய்வார்கள் என்பது நமக்கு தெரியும்.

போராடிய மக்களை தேடி தேடி கைது செய்கிறார்கள். ஸ்ரீமதியின் தாய் பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்தவர்களை எல்லாம் கைது செய்கிறார்கள். ஆக,, பள்ளியின் தாளாளர் யார் யாரிடம் பேசியுள்ளார் என்பதை பட்டியலிட்டு அவர்களையெல்லாம் போலீசு கைதுசெய்திருக்கவேண்டுமல்லவா? ராஜசேகர் போன்ற ஆதிக்க சாதி கும்பல்களை ஏன் இன்னும் கைது பன்னவில்லை என்று நாங்கள் கேட்கிறோம்!

ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை தமிழ்மிண்ட் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்…

https://www.youtube.com/watch?v=zQfcCK8OILE

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி; அம்பானி-அதானி பாசிசம் | செப் 17 மாநாடு அணிதிரள்வீர் | தோழர் சிவகாமு

ரும் செப்டம்பர் 17, 2022 அன்று ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம் என்ற தலைப்பில் புரட்சிகர அமைப்புகள் ஜனநாயக சக்திகள் ஆகியோரை இணைந்த்துக்கொண்டு மாநாடு நடத்தவிருக்கிறோம். இம்மாநாட்டில் அனைவரும் கலந்துக்கொள்ளுங்கள்!

மாநாடு நிதி பிரச்சாரத்தின் போது வீட்டுபெண்கள் சிலிண்டர் விலைவாசி உயர்வை சொல்லி குமுறுகிறார்கள். மின்சார கட்டணம் உயர்வை பற்றி சொல்லி குமுறுகிறார்கள்.

விவசாயிகள் தொழிலாளர்கள் மாணவர்கள் அனைவரும் நம் மீது திணிக்கப்படும் பாசிசத்திற்கு எதிராக கணக்கு தீர்க்க ஒன்றிணைவோம் மாநாட்டிற்கு வாருங்கள்! செப்டம்பர் 17, மாநாட்டிற்கு அறைகூவி அழைகிறார் மக்கள் அதிகாரம் மதுரை மண்டலம் தோழர் சிவகாமு அவர்கள்…

 

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: ஆதாரங்களை மறைத்தது அயோக்கியத்தனம் | தோழர் அமிர்தா வீடியோ

மாணவியின் இடுப்பெலும்பு உடைக்கப்பட்டது என்பது முதல் முதல் உடல்கூறு ஆய்வில் தெரியாதா? இரண்டாவது உடல்கூறு ஆய்வில் தான் தெரிகிறது என்றால், ஆதாரங்களை மூடி மறைக்கப் பார்த்திருக்கிறார்கள்!

உண்மையிலேயே மாணவியின் மரணம் தற்கொலைதான் என்றால் ஏன் நீங்கள் இவற்றையெல்லாம் செய்கிறீர்கள். இவர்கள் எல்லாம் சாதாரண குற்றவாளிகள் அல்ல; இவர்கள் வெளியே வந்தார்கள் என்றால் 100 சதவீதம் ஆதாரங்களை அழித்து விடுவார்கள். குற்றவாளிகளுக்கு கிடைத்திருக்கும் ஜாமீன் என்பது இவ்வழக்கில் உண்மையான நீதி கிடைக்காது என்பதையே நமக்கு உணர்த்துகிறது.

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தமிழ்குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி: நீதிமன்றத்தினால் மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்காது! | மருது வீடியோ

ள்ளக்குறிச்சி மக்களின் போராட்டத்தின் போது, டி.ஜி.பி பள்ளியின் மீது எவ்வித குற்றமுமில்லை என்று நேரலையில் கூறுகிறார். ஆசிரியர் பெருமக்களை எடுத்தவுடன் கைது செய்யமுடியாது என்று கூறினார். கள்ளக்குறிச்சிக்கு சென்றார். போராட்டம் செய்பவர்களை உடனே சென்று விடுங்கள் என்று மிரட்டினார். ஆனால் எப்படி பள்ளியின் குற்றவாளிகள் 5 பேரை கைது செய்தார்கள். அப்போது இவர்களின் நோக்கம் என்ன?

திமுகவின் பிரச்சினை என்ன? கொங்கு வேள்ளாளக் கவுண்டர்களை கைது செய்தால், அவர்களின் ஓட்டு நமக்கு போய்விடும் என்று பார்க்கிறார்கள். 9987 தனியார் பள்ளிகள் இருக்கிறது. அவை அரசை மிரட்டிக் கொண்டிருக்கிறது. நந்தக்குமார் ஒரு ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட நபர். தனியார் பள்ளிகளின் சாக நடத்துகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. எதையும் யாரும் தட்டிக்கேட்க முடியவில்லை; மாற்ற முடியவில்லை. இதில் இருந்து மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்குமா? கிடைக்காதா? என்பதை பற்றி நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

தேடி தேடி மாணவர்களையும் இளைஞர்களையும் கைது செய்கிறீர்கள் அல்லவா! அப்படி தேடி தேடி எத்தனை பி.ஜே.பி காரர்களை ஆர்.எஸ்.எஸ் காரர்களை கைது செய்தீர்கள். பட்டியல் காட்டுங்கள்!

இந்த பிரச்சினைக்கும் எச்.ராஜாவிற்கும் என்ன தொடர்பு என்று பதில் சொல்லுங்கள்! நடக்காத ஒரு விஷயத்தை – மாட்டு மடியை வெட்டிக்கொண்டு போனார்கள் என்று சொன்னார் அல்லவா! அதை பற்றி ஏன் விசாரணை செய்யவில்லை. எடப்பாடி பழனிச்சாமியை பற்றி சொல்கிறார்களே ஏன் விசாரணை செய்யவில்லை. யார் யார் போராட்டத்திற்கு வந்தார்களோ, யார் யார் கையில் சிக்கினார்களோ அனைவரையும் கைது பன்னீர்கள் அல்லவா, ரவி குமாரை விசாரியுங்கள் அவர் போனீன் ஒருவார காலம் யாரிடமெல்லாம் பேசினார் என்று ஆய்வு செய்து அவர்களை அழைத்து விசாரிக்கலாம் அல்லவா? ஏன் விசாரிக்கவில்லை. எனவே இவர்களின் நோக்கம்தான் என்ன?

இந்த கொலைகார சக்தி பள்ளியை பாதுகாப்பதன் மூலமாக, தனியார் பள்ளி முதலாளிகளின் இலாபிக்கு தமிழக அரசு பணிந்து போய்விட்டது! பயந்து போய் விட்டது! இனி இவர்களால் ஒன்றும் செய்யமுடியாது.

மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாகவும், போராடிய மக்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்பாகவும், கொலைகார சக்தி தனியார் பள்ளியை பாதுகாக்க அரசின் செயல்பாடுகள் குறித்தும் தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் விரிவாக விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

தொடரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் – தீர்வு என்ன?

சென்னை பரங்கிமலையில் 17 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது அம்மாவுக்கு மனநலம் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது; மேலும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முறையான சிகிச்சை அளிக்க முடியாமல்போன காரணத்தினால் அந்த சிறுமியின் அப்பாவும் அவர்களை தனியேவிட்டு சென்றுவிட்டார். எனவே குடும்ப கஷ்டத்தை சமாளிக்கவும், அம்மாவுக்கு மருத்துவம் பார்க்கவும் மடிப்பாக்கத்திலுள்ள ஒரு அரசியல்வாதியின் (தினகரனில் அவனது பெயரை குறிப்பிடவில்லை)  வீட்டுக்கு உதவிகேட்டு சென்றுள்ளார். வீட்டு வேலை தெரியும் என்று கூறியதால் அந்த அரசியல்வாதி சிறுமியை தன் வீட்டிலேயே தங்கவைத்துள்ளார்.

அடுத்த சில நாட்களில் அந்த அரசியல்வாதி சிறுமியை பத்து ஆயிரம் ரூபாயிக்கு விசுவநாதன் எனும் கஞ்சா வியாபாரியிடம் விற்றுள்ளார். கஞ்சா வியாபாரி விசுவநாதன் கடந்த இரண்டு மாத காலமாக தினமும் அச்சிறுமியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மேலும் அவனது நண்பர்களும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில்தான் அந்த பகுதி மக்கள் அங்கு கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் கஞ்சா வியாபாரி விசுவநாதன் உள்ளிட்டு ஏழு பேரை கைது செய்தது போலீஸ். ஆனால் அந்த அரசியல்வாதி கைது செய்யப்படவில்லை.


படிக்க : பாலியல் குற்றவாளிகளுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கும் கேரள நீதிமன்றத்தின் ஆணாதிக்க தீர்ப்பு !


குழந்தை தொழிலாளர்கள் உருவாக காரணம்:

வறுமை, போதைக்கு அடிமையான பெற்றோர்களை இழந்த காரணத்தாலும், அவர்களுடைய பொருளாதார சிக்கல்களை தீர்ப்பதற்காகவும் குழந்தைகள் வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது. இந்த சூழலில்தான் போதைப்பழக்கம் மற்றும் பாலியல் கொடுமைகள் என அந்த குழந்தைகளின் வாழ்வே சீரழிந்துவிடுகின்றது. கொரோனா தொற்றின் பிறகு கடந்த இருபது வருடங்களில் இல்லாதவகையில் 16 கோடி குழந்தை தொழிலாளர்கள் உருவாகியுள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது. மத்திய மாநில அரசுகளால் இயற்றப்படும் கார்ப்பரேட்மய திட்டங்களால் மக்களின் வறுமை மற்றும் குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்துகட்ட முடியாது, இப்பிரச்சினைகளைத் தீவிரப்படுத்தும் வேலையைதான் செய்யும்.

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ – போதைப் பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்குமா?:

“கடந்த 2021 டிசம்பர் முதல் கடந்த ஜனவரி வரை நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையின் தொடர்ச்சியாக, மார்ச் மாதம் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 27-ஆம் வரை ஒரு மாதம் ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ நடத்தவேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்கப்படுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என சுற்றறிக்கை ஒன்றை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பி இருந்தார். ஆனால் கஞ்சா விற்பனையாளர்களுடன் கள்ளக்கூட்டு வைத்திருக்கும் இந்த காவல் துறையால் கஞ்சா விற்பனையை தடுக்க முடியவில்லை மேலும் இந்த அரசு கட்டமைப்புகுள் அதை நிறுத்தவும் முடியாது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு முக்கிய காரணம் ஆணாதிக்க சமூகம் தான்: 

பெண்களை பற்றித் தாழ்வான கருத்துகளே இந்த சமூகத்தில் நிலவுகிறது. பெண் எப்போதும் ஆணுக்கு சமமானவள் கிடையாது என்றும் ஆண்களுக்கு அடங்கி அவர்களுக்கு எல்லா வேலையும் செய்வதற்காகவே இருக்க வேண்டும் என்றும்  சமூகத்தில் அவர்களை ஒடுக்கி வைத்துள்ளார்கள். இந்த சமூகம் பிற்போக்குத்தனமும் ஆணாதிக்க சிந்தனையும் நிறைந்த உள்ளதால்தான் பெண்கள் மீது எல்லா வகையான வன்முறைத் தாக்குதல்களும் நடக்கிறது. மேலும் பெண்களை ஒரு போகப் பொருளாக மாற்றி சித்தரிப்பதால்தான் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து உள்ளது. எனவே இந்த சமூக கட்டமைப்பை மாற்றி அமைக்காமல் பெண்களுக்கு நடக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடையாது. எனவே சமூக கட்டமைப்பை மாற்றி அமைக்க அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து போராடுவதே ஒரே தீர்வாகும்!!!


ஜீவா

மதுரை : மாணவர்கள் படிக்க தகுதி அற்றதாக மாறிய அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி!

துரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் 1982-ல் திமுக அரசு சார்பாக அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி இடம் ஒதுக்கப்பட்டு கட்டப்பட்டது. இங்கு 250 மாணவ – மாணவியர் பயின்று வருகின்றனர். தினந்தோறும் 300-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் மற்றும் உளநோயாளிகள் பயன்பெற்று வருகின்றனர். திருமங்கலம் மட்டும் இல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் பயன்பெற்று வருகின்றனர் மாணவர்கள். ஆயிரக்கணக்கான இளநிலை மருத்துவர்களை உருவாக்கிய கல்லூரி தற்போது முறையான பராமரிப்பு இன்றி சேதமடைந்து கிடக்கிறது.

சில வருடங்களாகவே அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, கழிவறை வசதி மற்றும் சாலை வசதி ஆகியவை முறையாக இல்லை. கல்லூரி மற்றும் விடுதி வளாகங்கள் புதர் மண்டி காணப்பட்டன. இதற்காக பலமுறை மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டனர்.

2019-ல் மாணவியர் விடுதி குளியலறை சுவர் இடிந்து ஒரு மாணவியின் மீது விழுந்த பிறகு உதவி பொறியாளர் ஆய்வு மேற்கொண்டு விடுதி பயன்பாட்டிற்கு உகந்ததல்ல என்று கூறியதன் அடிப்படையில் மாணவியர் விடுதி காலி செய்யப்பட்டது. இதன்பிறகு தற்காலிக விடுதி வசதி ஏற்பாடு செய்து தருவதாகவும் அதற்குள் விரைவாக விடுதியை கட்டி முடிப்பதாகவும் வாக்களித்து சென்றனர். அதன் பின்னர் 2020-ல் விடுதியை இடித்து கட்டுவதற்கு கல்லூரிக்கு 15 நாட்களுக்கு விடுமுறை அளித்தனர். அதன் பிறகு கொரோனா ஊரடங்கு காரணமாக வகுப்புகள் ஆன்லைனில் தொடங்கப்பட்டு விடுதிக்கான பேச்சு கைவிடப்பட்டது.


படிக்க : மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் EWS 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் துணைவேந்தர் குமார் !


அடுத்ததாக 2015-ல் அதிமுக அரசால் கட்டப்பட்ட மாணவர் விடுதி ஒரு வருடம் கூட உருப்படியாக இல்லை. தரைகள் உடைந்து, மேற்கூரைகள் சேதாரம் அடைந்து இரண்டு வருடங்களுக்குள் மீண்டும் பராமரிப்பு பணி செய்து புதிய தரை தளம் அமைத்தார்கள்.‌ அதுவும் ஓரிரு மாதங்களில் நாசம் அடைந்தது. இருந்தாலும் இங்கு படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழை, நடுத்தர மாணவர்களாக இருப்பதால் வேறுவழி இல்லாமல் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பாம்புகள், விஷ பூச்சிகள் மத்தியில் அங்கேயே தங்க வேண்டியதாயிற்று. அடிப்படை வசதிகளுக்காக மாணவர்கள் பலகட்ட போராட்டம் தொடர்ந்து செய்து வந்துள்ளனர்.

இந்த இடம் கண்மாய் பகுதி என்பதாலும் 2021 நவம்பர் மாதத்தில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்து கல்லூரி வளாகம் முழுவதுமாக மூழ்கிவிட்டது. மேலும் இந்த பகுதியில் கடந்த 2010-ஆம் ஆண்டும் இதேபோல் கல்லூரி வளாகத்தில் வெள்ளம் சூழ்ந்து மாணவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள் அதன் பிறகு முதன்மைப் பொறியாளர் மேலும் சில அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். இந்த ஆய்வில் மொத்த கல்லூரியையும் அதாவது விரிவுரைக்கூடம், உடற்கூறாய்வு கூடம், ஆய்வகங்கள், உள்நோயாளிகள் பிரிவு, மாணவர்கள் மற்றும் மாணவியர் விடுதி ஆகிய அனைத்துமே தகுதியற்றது என சான்றளித்தனர். மேலும் மொத்தமாக கல்லூரி மூடிவிட்டு மாற்று ஏற்பாடு செய்து தருவதாகவும் அதற்கான செலவினை பொதுப்பணித்துறையே ஏற்றுக் கொள்வதாகவும் வாக்களித்தனர். இதனால் மீண்டும் இரண்டு மாதம் கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் வகுப்புகள் ஆன்லைனில் தொடரப்பட்டது.

இதன் பின்னர் மதுரை மாவட்ட கலெக்டர் அணிஷ்சேகர் கல்லூரியை ஆய்வுசெய்து வேறு இடத்தில் கட்டித் தருவதாக வாக்களித்தார். இதன் பின்னர் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குனர் கணேசன் அவர்கள் கல்லூரியை ஆய்வு செய்து புதிய கல்லூரியை கட்டுவதற்கு வாக்களித்து சென்றார்.

எனவே விடுதிக்கான மாற்று ஏற்பாட்டை மாணவர்களே ஏற்பாடு செய்யுங்கள் என்று அலட்சியப்படுத்தியுள்ளனர். மேலும் கல்லூரியை திறக்க மாணவர்கள் விடாப்படியாக கேட்டுக் கொண்டதன் விளைவாக ஆய்வகங்களில் முதலாம் ஆண்டு முதல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும் வேறுவழியில்லாமல் அங்கு வகுப்புகளை நடத்தி வருகின்றனர். விடுதி இல்லாத காரணத்தால் மாணவ – மாணவியர்கள் வெளியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். இக்கல்லூரியில் பயின்றுவரும் மாணவ -மாணவியர் பெரும்பான்மையோர் ஏழ்மை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் என்பதால் வாடகையை கட்ட மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் வெளியில் தங்கி இருப்பதால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

மாற்று இடம் ஒதுக்கி புதுக்கட்டிடம் கட்டித் தருவதாக வாக்களித்துவிட்டு இதுவரை இடம் கூட தேர்வு செய்யாமல் அரசு அலைக்கழிக்கிறது. மறுபுறம் முதல்வர் தனிப்பிரிவு, ஆயுஷ் அமைச்சகம், சுகாதாரத் துறை அமைச்சர், மாற்றுக் கட்சிகள் என அனைவரிடமும் மாணவர்கள் தொடர்ந்து உதவியும் தேடியும் எந்த பயனும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி கல்லூரியை பார்வையிடுவதற்காக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வந்திருந்தார். ஆய்வு செய்த அமைச்சர் தியாகராஜா கல்லூரி பொறியியல் ஆய்வுக் குழுவின் மூலம் ஆய்வு செய்து, இந்தப் பகுதியில் கால்வாய் ஒன்றை அமைத்தால் தண்ணீர் அருகிலுள்ள ஆற்றில் கலந்து விடுமா,  தண்ணீர் வடிந்து விடுமா, என்பதை ஆராய்ச்சி செய்து, இந்த பகுதியில் மறுபடியும் கல்லூரி வளாகத்தை அமைத்தால் கல்லூரி உறுதியாக இருக்குமா, என்பதை ஆய்வு செய்து, ஒருவேளை உறுதியாக இருக்கும் என்றால் இந்த இடத்திலேயே கல்லூரி வளாகத்தை அமைக்கலாம் என்றும், மேலும் இந்த இடம் தகுதியற்றது என்று நிரூபணம் ஆனால் வேறு இடத்தில் புதிய கல்லூரி வளாகத்தை கட்டித் தருவதாக கூறினார்.


படிக்க : நிதி நெருக்கடியால் ஸ்தம்பிக்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் !


புதிய கல்லூரி கட்டிடத்தை கட்டி முடிக்க ஏறக்குறைய இரண்டு வருடங்கள் ஆகும் என்பதால் அதுவரை திண்டுக்கல் அல்லது விருதுநகர் மருத்துவக் கல்லூரியில் தற்காலிகமாக கல்லூரியை செயல்படுத்துவதாகவும் கூறினார். மேலும் கல்லூரி கட்டிடம் முழுவதுமாக கட்டிய பிறகு இங்கு வந்து மீண்டும் படிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில் முதல்வர் மற்றும் மாணவர்கள் விருதுநகர் கல்லூரியில் சென்று கேட்டதற்கு இக்கல்லூரியில் இடமில்லை என்று மறுத்துள்ளனர். இதனால்  கல்லூரிக்கான மாற்று ஏற்பாடு இல்லாததால் கல்லூரியை எங்கு நடத்தலாம் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழக அரசு, இக்கல்லூரி கட்டுமானம் சார்பாக இரண்டு வருடங்களாக மாற்றி மாற்றி பேசி தொடர்ச்சியாக மாணவர்களையும் பெற்றோர்களையும் ஏமாற்றி வருகிறது. மாணவர்களும் அவர்களின் வாக்குறுதிகளை நம்பிக் கொண்டிருப்பதால் என்ன பயனும் இல்லாத நிலையில் உள்ளனர். முறையான போராட்டத்தை கட்டியமைத்து அவர்களின் கோரிக்கைக்கு பணிய வைப்பதே தீர்வாகும்.

மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.

கார்ப்பரேட்டுகளுக்கு 2 லட்சம் கோடியை அள்ளிக் கொடுத்த மோடி அரசு! | சு.விஜயபாஸ்கர்

முதலாளித்துவப் பொருளாதாரத்தில் வரி வசூல் முக்கியமானது. வரி வசூல் இல்லையெனில் அரசு இயங்காது. மக்களிடம் வசூலிக்கும் வரியில் குறிப்பிட்ட அளவு தொகையை மக்கள் நலத் திட்டங்களுக்கும், சாலை அமைத்தல், பள்ளிகள், கல்லூரிகள் அமைத்தல் போன்ற அடிப்படை கட்டமைப்புகளுக்கும் செலவிடுவார்கள்; அல்லது மக்கள் போராட்டங்களைச் சந்திக்க நேரிடும்.

வசூலிக்கப் படும் வரிகள் நேர்முக வரி (Direct Tax) மற்றும் மறைமுக வரி (Indirect Tax) என இரண்டு வகைப்பட்டவை. கார்ப்பரேட் வரி, வருமான வரி, சொத்து வரி, வீட்டு வரி போன்றவை நேர்முக வரி பிரிவின் கீழ் வருகின்றன. ஜி எஸ் டி, கலால் வரி, சுங்க வரி போன்றவை மறைமுக வரியின் கீழ் வருகின்றன.

நேர்முக வரியை அதிகரி, மறைமுக வரியை குறை. 1930-களில் ஜான் மேனார்டு கீன்ஸ் அறிமுகப் படுத்திய இந்த வரிவிதிப்பு முறையை இன்றும் பல நாடுகள் பின்பற்றி வருகின்றன. அரசுகள் அவ்வப்போது சில வரி விகிதங்களில் மாற்றங்களைச் செய்தாலும், யாரால் அதிக வரி செலுத்த முடியுமோ, அதாவது பணக்காரர்கள், அவர்களிடம் அதிக வரி வசூல் செய்வதும், யாரால் வரி செலுத்த முடியாதோ, அதாவது ஏழைகள், அவர்களிடம் குறைந்த வரி வசூல் செய்வதும் பல நாடுகளின் வரி விதிப்பு கொள்கையாக இருக்கிறது.

இதில், நேரடி வரிகளை மற்றவர்கள் மீது மாற்றவோ சுமத்தவோ முடியாது. உதாரணமாக, அதிக வருமானம் பெறுபவர்கள் அதிகமான நேர்முக வரிகளையும், வருமானம் குறைவாக உள்ளவர்கள் குறைவான நேர்முக வரிகளையும் செலுத்துவார்கள். அதாவது, நேரடி வரிகள் ஒருவரின் செலுத்தும் திறனுக்கேற்றவாறு மாறுபடும்.


படிக்க : டிஜிட்டல் செய்தி ஊடகங்களை ஒடுக்கத் துடிக்கும் மோடி அரசு!


ஆனால், மறைமுக வரி அரசால் ஒருவர் மீது விதிக்கப்பட்டாலும், அந்தச் சுமையை தாங்குபவர் வேறு ஒருவராக இருப்பார். அதாவது, ஒருவர் ஏதாவது ஒரு பொருளை அல்லது சேவையினை வாங்கும்போது, அதன் உற்பத்தியாளர் அல்லது விற்பனையாளர் மீது விதிக்கப்பட்ட வரியின் சுமை, நுகர்வோர் மீது கடத்தப்படும். இந்த வரிகள் பொருளின் விலையோடு சேர்த்தோ (உதாரணம் பெட்ரோலின் விலை) அல்லது சிற்றுண்டி சாலை உணவு பில்களில் சேவை வரி குறிப்பிடுவது போன்று தனியாகவோ குறிக்கப்பட்டிருக்கும். இந்த வரி நீங்கள் வாங்கும் பொருளின் விலையினை கூடுதலாக்குகின்றது.

ஏழை பணக்காரர் எல்லோரும் ஒரே விதமான மறைமுக வரிகளை செலுத்துவார்கள் என்பதால், பொருளாதாரத்தில் வருமான மறுபகிர்வுக்கு நேர்முக வரிகளை அதிகம் பயன்படுத்த வேண்டும், அதில்தான் வரி செலுத்தும் திறனுக்கேற்ப வரிவிகிதங்களை மாற்றி அமைக்க முடியும்.

இந்த அடிப்படை விதிப்படி பார்த்தால், ஏழை மக்களை அதிகம் பாதிக்கும் ஜி.எஸ்.டி வரியையும், பெட்ரோல் – டீசல் வரியையும் குறைக்க வேண்டும். ஏழை மக்களை பாதிக்காத பெருநிறுவன வரியை அதிகரிக்க வேண்டும். ஆனால், மோடி அரசு என்ன செய்தது?

பெட்ரோல் – டீசல் வரி

2014-ஆம் ஆண்டு மோடி அரசு பதவியேற்றபோது பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.9.48-ஆகவும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.3.56-ஆகவும் இருந்தது. அதன் பின்னர் மோடி அரசு பெட்ரோல் – டீசல் மீதான கலால் வரியை படிப்படியாக தொடர்ந்து உயர்த்தியதின் விளைவாக,  2020-ஆம் ஆண்டில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.32.9-ஆகவும், டீசல் மீதான வரிகளை லிட்டருக்கு ரூ.31.8-ஆகவும் உச்சம் தொட்டது.

மக்கள் போராட்டம், சில மாநில சட்டமன்ற தேர்தல் தோல்விகளின் விளைவாக பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.19.9-ஆகவும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.15.8-ஆகவும் மோடி அரசு சில மாதங்களுக்கு முன்னர் குறைத்தது.

2014-ஆம் ஆண்டோடு ஒப்பிட்டுப் பார்த்தால், பெட்ரோல் மீதான கலால் வரி இரு மடங்கும், டீசல் மீதான கலால் வரி 4.5 மடங்கும் உயர்த்தியுள்ளார் ஏழைப் பங்காளன் மோடி.

ஜி.எஸ்.டி வரி:

ஜி.எஸ்.டி பற்றி தனியாகச் சொல்ல வேண்டுமா? சுடுகாட்டில் வாங்கப்படும் மயான கட்டணம் தவிர்த்து அனைத்து பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி உண்டு என்று சொன்னால் அது பொய் ஆகாது. அமலில் உள்ள ஜி.எஸ்.டி வரி விகிதங்கள் உங்களுக்கு தெரிந்தது தான். இருப்பினும் சில பொருட்களின் ஜி.எஸ்.டி வரி விகிதங்களை மட்டும் இங்கே நினைவு படுத்துகிறோம்.

இதற்கு முன்பு வரை ஜி.எஸ்.டி வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்த பேக்கிங் செய்யப்பட்ட தயிர், லஸ்ஸி மற்றும் மோர், பால் உள்ளிட்ட பொருட்களுக்கு சமீபத்தில் 5 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டது. பேக்கிங் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, அப்பளம், வெல்லம், மீன், இறைச்சி உள்ளிட்ட பொருட்களுக்கும் 5% ஜி.எஸ்.டி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அனைத்துப் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி வசூலிப்பதால் சுடுகாட்டுக்கும் ஜி.எஸ்.டி இருக்கும் என்ற சந்தேகமும் சிலருக்கு எழுந்தது. சுடுகாட்டில் எரிக்கவோ, புதைக்கவோ அல்லது இதர மயானச் சேவைகளுக்கோ ஜி.எஸ்.டி கிடையாது என நிர்மலா சீதாராமன், இப்போதைக்கு செத்த பிணத்தை மட்டும் ஜி.எஸ்.டி-யில் இருந்து விலக்கி வைத்துள்ளார். இவர்கள் ஆட்சியில் நீண்ட நாளுக்கு பிழைத்திருந்தால், விரைவில் பிணத்தை எரிக்கவும் ஜி.எஸ்.டி விதிக்கப்படலாம்.

பெரு நிறுவன வரி அல்லது கார்ப்பரேட் வரி:

உலகெங்கும் ஜி.எஸ்.டி, தனி நபர் வருமான வரி விகிதங்கள் கார்ப்பரேட் வரியை விட குறைவாக இருக்கும். மோடி நாட்டில்(ஆட்சியில்) தலைகீழ். சிங்கப்பூரில், ஜி.எஸ்.டி 7%; கார்ப்பரேட் வரி 17%. அமெரிக்காவில், அதிக பட்ச ஜி.எஸ்.டி 13%; கார்ப்பரேட் வரி 21%. இந்தியாவில் அதிக பட்ச ஜி.எஸ்.டி 28%; கார்ப்பரேட் வரி 22%.

30 சதவீதமாக இருந்த கார்ப்பரேட் வரியை 2019-ஆம் ஆண்டு செப்டம்பரில் 22 விழுக்காடாக மோடி அரசு குறைத்ததால் ரூ.1.84 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிலைக்குழுவின் தலைவர் பாஜக பாராளுமன்ற உறுப்பினர். குழுவில் உள்ள 16 உறுப்பினர்களில் 12 பேர் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள்.

இந்த அறிக்கையை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

கார்ப்பரேட் வரி விகிதத்தை குறைத்தால், கார்ப்பரேட் வரி கூடுதலாக வசூலாகும் என கடந்த மூன்று வருடங்களாக நிர்மலா சீதாராமன் கூறி வருகிறார். ஆனால் பாஜகவைச் சேர்ந்த 12 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழு கார்ப்பரேட் வரியைக் குறைத்ததால் 1.84 லட்சம் கோடி நட்டம் ஏற்பட்டிருப்பதாக தனது அறிக்கையில் (ஆகஸ்டு 8 2022) குறிப்பிட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் ஹஸ்டன் நகரின் ஹவ்டி மோடி (Howdy Modi) நிகழ்ச்சி நடத்துவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த கார்ப்பரேட் வரிக்குறைப்பு மோடி அரசால் செய்யப்பட்டது.

அதற்கு சில நாட்களுக்கு முன்னர், கோவாவில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களுக்கு தருவதற்கு ஒன்றிய அரசிடம் பணமில்லை என்பதையும், இனிமேல் ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை தரமாட்டோம் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

கார்ப்பரேட் வரி விகிதத்தை குறைத்தால், ஒன்றிய அரசுக்கு வரி வசூல் அதிகரிக்கும் என்றும், குறைக்கப்பட்ட வரியின் மூலம் சேமித்த பணத்தை கார்ப்பரேட்டுகள் மூலதன செலவுகளுக்கு (Capital expenditure) பயன்படுத்துவார்கள் மோடி அரசால் ஜால்சாப்பு சொல்லப்பட்டது.

இரண்டையும் பொய் என கவுரவ் வல்லப் புள்ளி விபரங்களின் உதவியுடன் அம்பலப்படுத்தி உள்ளார்.

2020-ஆம் நிதியாண்டைக் காட்டிலும் 2021-ஆம் நிதியாண்டில் பெருநிறுவனங்கள் 138 சதவீத லாபம் சம்பாதித்துள்ளன.

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால், 2021-ஆம் நிதியாண்டைக் காட்டிலும் 2022-ஆம் நிதியாண்டில்  பெருநிறுவனங்களின் லாபம் 66.2% அதிகரித்துள்ளது.

ஸ்டேட் வங்கி ஆய்வுக் கட்டுரையின் ஒன்றின்படி, 2021-ஆம் நிதியாண்டில் மட்டும் பெரு நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்பில் 19 சதவீதம் கார்ப்பரேட் வரிக் குறைப்பின் பங்களிப்பு உள்ளது. எனவே கார்ப்பரேட் வரிக் குறைப்பு பெருநிறுவன இலாபத்தை அதிகரிக்க உதவியதே அன்றி, பெருநிறுவன வரி வசூலை உயர்த்தவில்லை.


படிக்க : நாட்டை சூறையாடும் காவி – கார்ப்பரேட் கூட்டணி ஆட்சி!


2021-22 நிதியாண்டில் மூலதனச் செலவு ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெறும் 2.3% மட்டுமே அதிகரித்ததால், கார்ப்பரேட் வரிக் குறைப்பால் பெரு நிறுவனங்களால் சேமிக்கப்பட்ட பணம் மூலதனச் செலவாக மாற்றப்பட்டது என்ற மற்றொரு வாதமும் பொய் என்கிறார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர். கார்ப்பரேட் வரிக் குறைப்பினால் பலன் பெற்ற பெரு நிறுவனங்கள், அவ்வாறு மோடி அள்ளிக் கொடுத்த பணத்தை, தங்களது  கடன்களை கட்டவும், கையிருப்பு பணத்தை அதிகரிக்கவும், பிற நடப்புச் சொத்துக்களை வாங்கவும் பயன்படுத்துகின்றன என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது.

மக்களை வாட்டி எடுத்த கொரோனா தொற்றுநோய் காலத்தில், ஊரக வேலைவாய்ப்புக்கு ஒதுக்கப்படும் தொகையை அதிகரிப்பதற்குப் பதிலாக, கார்ப்பரேட் உலகிற்கு வரிக் குறைப்புகளை அள்ளித் தந்தது மோடி அரசாங்கம்.

சோசலிச சமூகத்தில் பெரும்பான்மை மக்களுக்கு சாதாரணமாக கிடைக்க கூடிய உரிமைகள் தனியார்மய – தாராளமய – உலகமய முதலாளித்துவ உலகில் கடும் போராட்டத்திற்கு பிறகு பெயரளவில் கிடைக்கின்றன. அப்படி பெயரளவில் புழக்கத்தில் உள்ள சிற்சில உரிமைகளைக் கூட ஆளும் பாசிச மோடி அரசு பறித்து, தனது நண்பர்களான அதானி – அம்பானி கையில் தூக்கி கொடுத்துவிடுகிறது. அதன் ஒரு சிறு உதாரணம்தான் மோடியின் கார்ப்பரேட் கருணை. அதன் விலை 1.84 லட்சம் கோடி. இந்த தாராளத்தினால் பெருநிறுவனங்கள் பெற்ற 1.84 லட்சம் கோடி பரிசு 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு நிதியாண்டுகளில் பெற்ற தொகை. இனிவரும் ஆண்டுகளிலும் மோடி தனது கார்ப்பரேட் நண்பர்களுக்கு பல பில்லியன் கோடிகளை அள்ளித் தருவார்.

சு. விஜயபாஸ்கர்.
செய்தி ஆதாரம்: Thehindu, Newindianexpress

disclaimer

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன ? | மருது வீடியோ

தூத்துக்குடி மக்கள் நிராயுத பாணியாக நீதி கேட்டு வந்தார்கள். இலட்சம் மக்கள் கூடுவோம் ஸ்டெர்லைட்டை மூடுவோம் என்று… அந்த முழக்கம் ஏதோ திடீரென தோன்றிய முழக்கமல்ல! அந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தை ஜெயலலிதா துவங்கும் போதிலிருந்தே மீனவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்!

கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்த மக்களை, ஒளிந்திருந்து சுட்டுக்கொன்றுள்ளது போலீசு!

துத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றிய அருணா ஜெகதீசன் அறிக்கையை பற்றியும் போலீசின் அடக்குமுறைகளை பற்றியும் ஆதன் தமிழ் செய்தி ஊடகத்திற்கு அளித்த போட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் மருது அவர்கள்…!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

டிஜிட்டல் செய்தி ஊடகங்களை ஒடுக்கத் துடிக்கும் மோடி அரசு!

னது இந்துராஷ்டிரக் கனவை நிறைவேற்ற தடையாக இருப்பவர்களை பல்வேறு வகையில் ஒடுக்கி வரும் பாசிச மோடி அரசு தனது அடுத்த கட்ட இலக்காக டிஜிட்டல் செய்தி ஊடகங்களைக் குறிவைத்துள்ளது. தற்போது நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் “அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா 2022” அதற்கான ஏற்பாடாகும்.

இம்மசோதா 2019 ஆம் ஆண்டே கொண்டுவரப்பட்டது. ஆனால் இதன் மீது பல்வேறு எதிர்ப்புகள் எழுந்ததால் அப்போது நிறைவேற்றப்படவில்லை. தற்போது இம்மசோதா மீண்டும் அவைக்கு வந்திருக்கிறது.

பத்திரிகைகள் மற்றும் பருவ இதழ்கள் மட்டுமல்லமால் முதன்முறையாக டிஜிட்டல் ஊடகங்களையும் உள்ளடக்கி இச்சட்ட மசோதா கொண்டுவரப்பட்டிருக்கிறது. இச்சட்ட மசோதா அமல்படுத்தப்பட்ட 90 நாட்களுக்குள் டிஜிட்டல் ஊடக செய்தி வெளியீட்டாளர்கள் தங்களை பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்; விண்ணப்பிக்காவிட்டால் அவர்களின் ஊடகத்திற்கு தடை விதிக்கப்படும் என்கிறார்கள்.

ஏற்கெனவே அமலில் இருக்கும் பத்திரிகை மற்றும் புத்தகப் பதிவு சட்டம் 1867க்கு மாற்றாகவே இப்புதிய மசோதா நிறைவேற்றப்பட இருக்கிறது. இப்புதிய மசோதாவைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கு முன் ஏற்கெனவே அமலில் இருக்கும் சட்டத்தைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.


படிக்க : உதய்பூர், காஷ்மீர் சம்பவங்கள்: திரை கிழிந்தது காவிகளின் பயங்கரவாத சதி!


1857 ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகத்திற்குப் பிறகு நிறுவன ரீதியாக தன்னை எதிர்க்கும் பத்திரிகைகளை ஒடுக்குவதற்காகவே பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசால் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் ஆங்கிலப் பத்திரிகைகளை மட்டும் கட்டுப்படுத்திய இச்சட்டம் 1878-ஆம் ஆண்டிற்கு பிறகு அனைத்து வட்டார மொழி பத்திரிகைகளையும் கட்டுப்படுத்தியது. அதிகார மாற்றத்திற்கு பின்னரும் இச்சட்டம் தொடர்கிறது.

தற்போது 155 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த காலனித்துவ சட்டத்தை நீக்கி புதிய சட்டம் கொண்டுவருகிறேன் என்ற பெயரில், டிஜிட்டல் ஊடங்களைக் குறிவைத்து ஒடுக்குவதற்கேற்ப புதிய சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

***

புதிய சட்ட மசோதாவின் பிரிவு 5 மற்றும் 6-இன் படி, மத்திய அரசால் பத்திரிகை தலைமை பதிவாளர் (Press Register General) நியமிக்கப்படுவார். இவரிடம் அச்சு ஊடகங்களைப் போல டிஜிட்டல் ஊடகங்களையும் பதிவு செய்ய வேண்டும். இந்த அதிகாரி ஒரு ஊடகம் தொடர்பான எந்த தகவலையும் ஆணையிட்டு பெறலாம், எந்தவொரு ஊடக நிலையத்தையும் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் போன்ற வானளாவிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர் நினைத்தால் ஒரு ஊடகத்தை தடை செய்யலாம் அல்லது அதன் மேல் அபராதம் விதிக்காலம். இவரின் தீர்ப்பே இறுதியானது. இவரும் இவருக்கு கீழ் பணியமர்த்தப்படும் அதிகாரிகள் யாரும் மாநில அரசுக்கு கட்டுப்பட வேண்டிய தேவையில்லை.

இதுவரை எந்த சட்டவிதிகளின் கீழும் கட்டுப்படுத்தப்படாத டிஜிட்டல் ஊடகங்கள் இச்சட்ட மசோதாவின் படி நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிடுகின்றன.

இச்சட்ட மசோதாவின் படி, பத்திரிகையின் ஆசிரியர் கண்டிப்பாக இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். பிரிவு 4 மற்றும் 11-ன் படி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டப்படி 1967 (UAPA) தண்டிக்கபட்டவர்களும் மற்றும் அரசின் பாதுகாப்பிற்கு எதிராக செயல்பட்டு அதற்காக தண்டிக்கபட்டவர்களும் எந்த வகை ஊடகமும் நடத்த முடியாது.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 2014-2020 வரை 10,522 பேர் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்ட பலரும் மோடி அரசின் பாசிச ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்த சமூக செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆவர். எனவே பத்திரிகையாளர் மீது ஊபா வழக்கு பதியப்பட்டிருக்கக் கூடாது என்பது மறைமுகமாக அந்த ஊடகங்கள் பா.ஜ.க. அரசை எதிர்ப்பவையாக இருக்கக் கூடாது, அவ்வாறு எதிர்த்தால் அவர்கள் ஊடகங்களை நடத்த முடியாது என்று சொல்வதாகும்.

மோடி அரசு இச்சட்டத்தை கொண்டு வருவதற்கான முக்கியமான நோக்கம் டிஜிட்டல் செய்தி ஊடகங்களை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதே. ஏனென்றால் பெரும்பாலான அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் தற்போது மோடி அரசிற்கு எதிராக வாய் திறப்பதில்லை. இந்நிலையில் மோடி அரசின் பாசிச ஆட்சிக்கு எதிராகக் குரல்கொடுப்பது தி வயர், குவிண்ட், ஸ்க்ரோல் போன்று முற்போக்கு-ஜனநாயக சக்திகளால் நடத்தப்படும் டிஜிட்டல் ஊடகங்களே.

பெகாசஸ், டெக் ஃபாக் செயலி, பீமா கோரேகான் வழக்கு என மோடி அரசின் பல சதிச் செயல்களை வயர் போன்ற இணையதளங்களே வெளிக்கொண்டு வந்துள்ளன. இதனால்தான் இவற்றை ஒடுக்கிவிடத் துடிக்கிறது மோடி அரசு.

2021-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நியூஸ் கிளிக், ஜூலையில் தைனிக் பாஸ்கர்,’பாரத் சமாச்சார்’ மற்றும் செப்டம்பரில் நியுஸ்லாண்டரி’ என தனது செயல்பாடுகளை விமர்சிக்கும் ஊடக நிறுவனங்கள் மற்றும் அதன் அதிகாரிகள்மீது வருமான வரித்துறையை ஏவியது மோடி அரசு.

இணையம், கணினி, மொபைல் முதலியவற்றில் பகிரப்படும் உரை, ஆடியோ, வீடியோ என டிஜிட்டல் வடிவத்தில் செய்திகளை வழங்கும் அனைத்தையும் இச்சட்டம் ஊடகங்களாகக் கருதி பதிவு செய்ய வலியுறுத்துகிறது. இதன்படி வலைதளங்கள் மட்டுமல்லாது செய்திகளை வழங்கும் யூடியூப் சானல்கள், முகநூல் கணக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் இச்சட்டம் கட்டுப்படுத்தும் என்பதுதான் பொருள்.

இன்றைய டிஜிட்டல் உலகில் மிகப்பெரிய கருத்துரிமை சாதனமாகத் திகழ்வது சமூக ஊடகங்களே. சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கான கருவியாக வெகுமக்கள் சமூக ஊடகங்களையே பாவிக்கிறார்கள். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல உலகெங்கும் பல தன்னெழுச்சிப் போராட்டங்களில் மக்கள் சமூக ஊடகங்களையே தங்கள் கருத்துப் பிரச்சாரக் கருவியாகப் பயன்படுத்துகின்றன. உலங்கெங்கும் மக்கள் விரோத சர்வாதிகார, பாசிச ஆட்சியாளர்கள் இந்த கருத்துரிமை சாதனங்களைக் கண்காணிக்கவும் ஒடுக்கவுமான சட்டங்களை இயற்றிவருகிறார்கள். அந்த வகையிலேயே மோடி அரசு இச்சட்டத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது.


படிக்க : நாட்டை சூறையாடும் காவி – கார்ப்பரேட் கூட்டணி ஆட்சி!


பத்திரிகை சுதந்திரம் குறித்து “எல்லைகள் கடந்த பத்திரிகையாளர்கள்” எனும் உலக பத்திரிகையாளர்கள் அமைப்பு அண்மையில் வெளியிட்ட பட்டியலில் 180 நாடுகளில் இந்தியா 150வது இடத்தில் பின்தங்கி இருந்தது. இதற்கு முக்கிய காரணம் பத்திரிகையளர்கள் மீதான மோடி அரசின் ஒடுக்குமுறைகள். பத்திரிகையாளர்களை தேசவிரோத வழக்கு, ஊபா உள்ளிட்டவைகளின் கீழ் ஒடுக்குவதை இவ்வமைப்பு வன்மையாக கண்டித்திருந்தது.

கொரோனா ஊரடங்கில் மக்களின் துன்பங்களை எழுதிய பத்திரிகையாளர்கள் மீது ‘வதந்தி பரப்புகிறார்கள்’ என்று வழக்கு தொடரப்பட்டது. உத்தரப் பிரேதச மாநிலம்  ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தைச் சந்திக்க சென்ற கேரள பத்திரிகையாளர்களை தேசத் துரோக வழக்கில் கைது செய்தது யோகி அரசு. டெல்லியில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் போராடிய இஸ்லாமியர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலைப் பற்றி செய்தி வெளியிட்ட மீடியா ஒன் தொலைக்காட்சி மீது தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 48 மணி நேரம் தடை விதித்தது.

மேலும் 2019-ஆம் ஆண்டு காஷ்மீரின் சிறப்புரிமையை ரத்து செய்தது மட்டுமல்லமால் அங்கு இணைய சேவை முற்றிலும் முடக்கப்பட்டு, பத்திரிகைகளுக்கும் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன; மீறி செய்தி வெளியிட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்து மோடி அரசு. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்தப் பாசிச அடக்குமுறைகளை எதிர்த்து களத்தில் போராடாமல் இனி கருத்து சுதந்திரத்தைப் பற்றி கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.


மதி

பாலியல் குற்றவாளிகளுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கும் கேரள நீதிமன்றத்தின் ஆணாதிக்க தீர்ப்பு !

 டந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான சந்திரன் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டது. இளம் எழுத்தாளர் ஒருவர் நந்தி கடற்கரையில் உள்ள முகாமில் சந்திரன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்திருந்தார். இதை தொடர்ந்து சந்திரன், ஜாமீன் கோரிய மனுவுடன் புகார்தாரரின் புகைப்படங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

அதன் அடிப்படையில் கடந்த ஆகஸ்டு 17-ஆம் தேதி அன்று இவ்வழக்கு கேரள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது வழக்கை விசாரித்த கேரள நீதிபதிகள் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய போது அப்பெண் உணர்ச்சியை தூண்டும் வகையில் ஆடை அணிந்திருந்தால், இந்திய தண்டனைச் சட்டம் 354ஏ பிரிவு இதற்கு பொருந்தாது. அது பாலியல் வன்கொடுமையாக ஏற்றுக்கொள்ளப்படாது என்று கூறி சந்திரனுக்கு ஜாமீன் வழங்கினர்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட 74 வயதான காமவெறி பிடித்த சந்திரன், மாற்றுத்திறனாளியாக இருப்பதால் இன்னொரு நபரை எப்படி பாலியல் வல்லுறவுக்கு வற்புறுத்தி இருக்க முடியும் என்றும் நீதிமன்றம் அப்பெண்ணை இழிவுப்படுத்தும் வகையில் கேள்வி கேட்டது. ஆனால் குற்றவாளி சந்திரன் மீது ஏற்கனவே பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி இருக்கிறது.

மேலும், சமீபத்தில் 39 வயதான நபர் ஒருவர், 12 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து, அச்சிறுமியிடம் தவறாக நடக்கமுயன்றுள்ளார். இது தொடர்பான வழக்கை மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி புஸ்பா கனேடிவாலா விசாரித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரை ஆடை இல்லாத நிலையில், உடலோடு உடல் தொடுவது போல் தொடர்பு கொண்டால் மட்டுமே அது போக்சோ சட்டத்தின் கீழான பாலியல் வன்கொடுமையாக எடுத்துக்கொள்ளப்படும். ஆனால், பாலியல் ரீதியாக துன்புறுத்தும்  நோக்கத்துடன் ஒருவர் அவர் அணிந்த ஆடைக்கு மேல் தொட்டு தொந்தரவு செய்தால் அது பாலியல் வன்கொடுமை கிடையாது. அது துன்புறுத்தல் மட்டுமே என்ற ஒரு கேவலமான யாராலும் சகித்துக்கொள்ள முடியாத தீர்ப்பை வழங்கினார்.


படிக்க : உதய்பூர், காஷ்மீர் சம்பவங்கள்: திரை கிழிந்தது காவிகளின் பயங்கரவாத சதி!


இதேபோல்தான் கடந்த மே மாதம் பாலியல் தொழில் என்பதும் ஒரு தொழிலே. சட்டத்தின்படி பாலியல் தொழிலாளிகள், அவர்களின் குழந்தைகள் மரியாதையுடனும் கண்ணியத்துடனும், சமமாக நடத்தப்பட வேண்டும். விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடும் 18 வயதிற்கு மேற்பட்டோரை போலீசுத்துறை தொந்தரவு செய்யவோ, அவர்களின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவோக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதாவது அவர்களை மீட்டு எடுப்பதற்கான எந்த வழியையும் சொல்லாமல், பாலியல் தொழில் என்னும் புதைக்குழுயில் அவர்களை இன்னும் ஆழமாக அழுத்தும் வகையிலான தீர்ப்பை வழங்கியது.

உணர்ச்சியை தூண்டும் வகையில் ஆடை அணிந்திருந்தால், அது பாலியல் வன்கொடுமையாக ஏற்றுக்கொள்ளப்படாது என்று முட்டாள்தனமான தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், காஷ்மீர் ஆஃசிபா வழக்கிற்கு என்ன சொல்ல போகிறார்கள்?

காஷ்மீரில் கத்துவா என்ற கிராமத்தை  சேர்ந்த 8 வயது பள்ளி படிக்கும் சிறுமி ஆடு, மாடு, குதிரை  மேய்த்து பிழைப்பு நடத்தும் குஜ்ஜார் இனத்தை சேர்ந்தவர். ஒருநாள் மதியம் சிறுமி காட்டில் விடபட்ட குதிரைகளை தேடி சென்றபோது, அச்சிறுமியை ஆதிக்க சாதியை சார்ந்த 7 பேர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொன்றனர். இந்த 8 வயது குழந்தை உணர்ச்சியை தூண்டும் வகையில் ஆடை அணிந்திருந்ததா? அதனால் தான் அக்குழந்தை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதா? இந்த கேள்விக்கு இந்த நீதிமன்றங்கள் என்ன பதில் சொல்லும் ?

உணர்ச்சியை தூண்டும் வகையில் ஆடை அணிந்தால் அது பாலியல் வன்கொடுமையாக ஏற்றுகொள்ளப்படாது என்றால் இங்குள்ள நீதிமன்றங்கள் என்ன சொல்ல வருகின்றன? இவர்கள் சொல்லும் ‘அடக்க ஒடுக்கமான’ ஆடை அணியும் பெண்களுக்கு மட்டும்தான் இங்கு நீதி கிடைக்கும் என்று சொல்ல வருகின்றனவா? இல்லை, அப்படி ‘உணர்ச்சியை தூண்டாத வகையில்’ ஆடை அணியும் பெண்களை பாலியல் வல்லுறவில் இருந்து பாதுகாக்க முடியும் என்றுதான் இந்த நீதிமன்றங்களால் உத்தரவாதப்படுத்த முடியுமா?

முதலில் உணர்ச்சியை தூண்டும் ஆடை, உணர்ச்சியை தூண்டாத ஆடை என்பதை எதை வைத்து வகைப்படுத்துவது. “இந்த மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் இப்படி தான் நடக்கும்” என்ற ஆணாதிக்கவாதிகளின் கருத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாதது தான் கேரள உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு.

இவ்வாறு தொடர்ச்சியாக நீதிமன்றங்களின் தீர்ப்புகளை பார்க்கும்போது இந்த சமூகத்தில் புரையோடி போய் கிடக்கும் ஆணாதிக்க சிந்தனை நீதிமன்றங்களையும் விட்டுவைக்கவில்லை என்பது புரிய வருகிறது.

இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், கேரள நீதிபதி ஏதோ போகிற போக்கில் இத்தீர்ப்பை வழங்கவில்லை. 354 ஏ என்ற சட்டப்பிரிவை கோடிட்டு காட்டிதான் தீர்ப்பு வழங்கியுள்ளார். ஏற்கனவே இருக்கின்ற சட்டமே இப்படி ஒரு தீர்ப்பை வழங்குவதற்கு ஏதுவாக உள்ளது என்பது முக்கியமான அம்சம்.


படிக்க : மேக்கேதாட்டு அணை மூலம் காவிரியைத் தடுக்கப் பார்க்கிறது (காவி)ரி மேலாண்மை வாரியம்!


ஒரு பக்கம் இந்த அரசு பெண்கள் பாதுகாப்புக்காக பல சட்டங்களையும் நடவடிக்கைகளையும் எடுப்பதுபோல பொதுவெளியில் வேடம் போட்டுகொண்டு, மறுபக்கம் அரசே நீதிமன்றத்தின் வாயிலாக ஆணாதிக்க சிந்தனையால் பெண்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது.

இதைதான் உலக தத்துவவாதியான ஏங்கல்ஸ், “முன்பெல்லாம் நிலப்பிரபுத்துவ ஒழுக்கக் கேடுகள் பட்டபகலில் பகிரங்கமாகத் தாண்டவமாடின. அவை அடியோடு ஒழிக்கப்படாவிட்டாலும் இப்போது அவை அப்படியே பின்னிலைக்கு தள்ளபட்டுவிட்டன. அவற்றின் இடத்தில், இதுநாள்வரை இரகசியமாக செயல்பட்டு வந்த முதலாளித்துவ ஒழுக்கக் கேடுகள் அவற்றைவிட ஆடம்பரமாகத் தழைத்தோங்கத் தொடங்கின” என்று கூறினார்.

இதுபோல் தொடர்ச்சியாக நீதிமன்றங்கள், முதலாளித்துவ ஆணாதிக்க சிந்தனையை தூக்கி பிடித்து பெண்கள் மீது பாலியல் வன்புணர்வுகளை அதிகரிக்கும் வகையில் தீர்ப்பு வழங்கி வருகின்றன. இதை எதிர்த்து நாம் அனைவரும் ஒரே வர்க்கமாய் ஒன்றிணைந்து இந்த முதலாளித்துவ அரசுக் கட்டமைப்பை தகர்த்தெரிந்து, பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கான அரசை உருவாக்கினால் மட்டுமே இதுபோன்று பெண்கள் மீது சட்டரீதியாகவே நடக்கும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த முடியும்.


செழியன்

பரந்தூர் விமான நிலையம்: கார்ப்பரேட் நலனிற்காக மக்களை வெளியேற்றும் திமுக அரசு | தோழர் வெற்றிவேல் செழியன் | வீடியோ

ரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர். அவர்களின் போராட்டம் பற்றி இது நம்ம வாய்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி வீடியோவில் களநிலவரங்களை விளக்குகிறார் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள்…

மண்ணின் மைந்தர்களை அகதிகளாக்கும் பரந்தூர் விமான நிலையம்! | தோழர் வெற்றிவேல் செழியன்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

உதய்பூர், காஷ்மீர் சம்பவங்கள்: திரை கிழிந்தது காவிகளின் பயங்கரவாத சதி!

ராஜஸ்தானில் தையல் கடை நடத்திவந்த கண்ணையா லால் என்பவரை, கடந்த ஜூன் 28 அன்று இசுலாமிய இளைஞர்களான முகமது ரியாஸ் அட்டாரி மற்றும் கௌஸ் முகம்மது இருவரும் தலையைத் துண்டித்துக் கொலை செய்தனர்; முகமது நபியை தவறாகப் பேசிய நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக வலைதளத்தில் கண்ணையா லால் போட்ட பதிவுக்கு பழிவாங்கும் விதமாகவே அவரை கொலை செய்தோம் என அவர்கள் இருவரும் வீடியோ வெளியிட்டனர். அதில் நரேந்திர மோடிக்கும் நுபுர் சர்மாவுக்கும் கொலைமிரட்டல் விடுத்திருந்தனர்.

இக்கொலையாளிகளுக்கு பாகிஸ்தானில் உள்ள தவாத்-இ-இஸ்லாமி அமைப்புடன் தொடர்பிருப்பதாக என்.ஐ.ஏ. செய்தி வெளியிட்டது. பா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராஜ்யவர்தன சிங் ரத்தோர், “காங்கிரஸ் ஆட்சியில் ராஜஸ்தான் தாலிபான்  மாநிலமாக மாறிக் கொண்டிருக்கிறது. இசுலாமியர்களை காங்கிரஸ் தொடர்ந்து சமாதானப்படுத்தி வருவதால் ஜிகாதிகள் இந்துக்களைக் கொலை செய்வதற்கும், பிரதமருக்கு மிரட்டல் விடுவதற்கும் துணிந்துவிட்டார்கள்” என்று இச்சம்பவம் பற்றிக் கூறினார்.

இந்துமதவெறி அமைப்புகள் பலவும் முசுலீம் எதிர்ப்பு கலவரத்திற்கு ஆயத்தமாகின. கண்ணையா லாலின் ஊர்வலத்தை நூற்றுக்கணக்கானோர் அணிதிரள நடத்தின இந்துத்துவ அமைப்புகள். இந்நிலையில், ஜூலை 1 அன்று வெளியான இந்தியா டுடே பத்திரிகையின் சிறப்புப் புலனாய்வு செய்தி கொலையாளிகள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் என்பதை அம்பலப்படுத்தியது.


படிக்க : கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதில், காவியும் திராவிடமாடலும் கூட்டணி !


ராஜஸ்தான் மாநில பா.ஜ.க.வின் சிறுபான்மை பிரிவு செயலாளரான இர்ஷத் செயின் வாலாவிடம் இந்தியா டுடே நடத்திய விசாரணையில் இவ்விசயம் அம்பலமானது. அவ்விசாரணையில், பா.ஜ.க.வின் கட்சி ஊழியரான முகம்மது தாஹிர் உடன் முக்கியக் குற்றவாளியான ரியாஸ் அட்டாரி உதய்பூரில் நடக்கும் பா.ஜ.க-வின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்று இர்ஷத் செயின் கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பவன் கேரா, கொலையாளி ரியாஸ் ராஜஸ்தான் பா.ஜ.க தலைவரும் முன்னாள் அமைச்சருமான குலாப் சந்த் கட்டாரியா பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்பார்; பா.ஜ.க கூட்டங்களில் ரியாஸ் கலந்து கொண்ட புகைப்படங்களும் தற்போது வெளியாகியிருக்கின்றன என்று பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார்.

ரியாஸ் பா.ஜ.க தலைவர்களுடன் இருக்கின்ற புகைப்படங்கள் அம்பலமானதை அடுத்து பா.ஜ.க.வினர் சுதாரிக்க ஆரம்பித்துவிட்டனர். பா.ஜ.க.வின் சிறுபான்மை பிரிவு தலைவரான முகம்மது சாதிக் கான், “யார் வேண்டுமானாலும் எந்த தலைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். அதற்காக அவர் பா.ஜ.க-வை சேர்ந்தவர் என்று அர்த்தம் இல்லை” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

கட்டாரியாவோ, “நான் நிச்சயமாக நிகழ்ச்சிக்குச் சென்றிருப்பேன், என்னுடன் புகைப்படத்தில் யார் நிற்க வேண்டும் என்பது என் கையிலோ அல்லது வேறு யாருடைய கையிலோ இல்லை” என்று கூறியிருக்கிறார்.

உண்மை என்னவென்றால் வெளிவந்த புகைப்படங்கள் எதுவும் கொலையாளி ரியாஸ் அட்டாரியின் முகநூல் பதிவிலிருந்து எடுக்கப்படவில்லை. பா.ஜ.க. தலைவர்களுடன் ரியாஸ் இருக்கின்ற புகைப்படத்தை பா.ஜ.க. தலைவர்கள் தங்கள் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றனர். வெளிவந்த புகைப்படங்கள் பா.ஜ.க தலைவர்களின் முகநூல் பக்கத்திலிருந்துதான் எடுக்கப்பட்டிருக்கின்றன.

பா.ஜ.க-வின் சிறுபான்மை பிரிவு செயலாளரான இர்ஷத் செயின்வாலா நவம்பர் 30 2018 அன்று தனது முகநூல் பதிவில் ரியாஸூடன் இருக்கின்ற புகைப்படத்தைப் பதிவிட்டிருக்கிறார். பா.ஜ.க ஊழியரான முகம்மது தாஹிரும் பிப்ரவரி 3/2019, அக்டோபர் 27/2019, நவம்பர் 28/2019 மற்றும் ஆகஸ்ட் 10/2021 ஆகிய தேதிகளில் தனது முகநூல் பதிவில் ரியாஸூடன் இருக்கின்ற புகைப்படத்தைப் பதிவிட்டிருக்கிறார்.  பிப்ரவரி 3/2019 அன்று தாஹிர் தனது பதிவில், இர்ஷத், ரியாஸ் மற்றும் பலர் இருக்கிற புகைப்படத்துடன் ரியாஸ் கட்சி ஊழியர் என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, கட்டாரியாவிற்கு ரியாஸ் பூத் ஏஜெண்டாக செயல்பட்டிருக்கிறார் என்று குறிப்பிடுகிறார், ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் ராஜேந்திர சிங் யாதவ்.

***

உதய்பூர் கொலையாளிகள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் என்ற செய்தி அம்பலமாகி நாடு முழுவதும் நாறிக் கொண்டிருக்கும் சூழலில், காஷ்மீரிலும் இதேபோல மற்றொரு சம்பவம் நடைபெற்றது.

ஜம்மு-காஷ்மீரில் ரியாசி மாவட்ட மக்கள் கடந்த ஜூலை 3 அன்று இரண்டு லக்ஷர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளான தலிப் உசேன் ஷா மற்றும் ஃபைசல் அகமது ஆகியோரை ஆயுதங்களுடன் பிடித்து போலீசிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.

பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவன் என்று காஷ்மீர் போலீசாரால் தேடப்படும் குற்றவாளி தலிப் உசேன் ராஜௌரி மாவட்ட பா.ஜ.க-வின் சிறுபான்மை பிரிவு சமூக ஊடகப் பொறுப்பாளர் என்பது விசாரணையில் அம்பலமானது. தலிப் உசேனிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போனின் மூலம், அவனது முகநூல் கணக்கில் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களுடன் தலீப் இருக்கும் புகைப்படங்கள் அம்பலமானது.

கடந்த மே 9 2022 அன்று ராஜௌரி மாவட்ட சமூக ஊடகப் பொறுப்பாளராக தலீப் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான ஆணை ஜம்மு-காஷ்மீர் பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு அமைப்பால் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த ஆணையின் நகலானது மூத்த பா.ஜ.க. தலைவர் அசோக் கவுல் மற்றும் சிறுபான்மை பிரிவின் தேசிய தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது.

இச்செய்தி அம்பலமானவுடன் ஆன்லைன் உறுப்பினர் சேர்த்ததால் அந்த நபரின் பின்னணியை சரிபார்க்க முடியவில்லை என்றும், தலீப் வெறும் 18 நாட்களில் தன்னுடைய பொறுப்பிலிருந்து விலகிவிட்டார் என்றும் பா.ஜ.க சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் ஆ.எஸ்.பதானியா என்.டி.டி.வி-க்கு அளித்த பேட்டியில், “இந்த கைதால் பா.ஜ.க உயர்மட்ட தலைவர்களைக் கொல்லும் தீவிரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டது” என்று சமாளித்தார்.

2017-ஆம் ஆண்டிலிருந்து தலீப் பா.ஜ.க-வில் இருப்பதாக அவனது குடும்பத்தினரும் கூறியிருக்கின்றனர். ஆன்லைன் உறுப்பினராகும்போது ஒருவரின் பின்னணியை சோதிக்க முடியாது என்பது யதார்த்த உண்மைதான் என்றாலும், பொறுப்பு கொடுக்கும்போது அவரது பின்னணி பற்றி ஏன் உறுதிப்படுத்தவில்லை? தேசிய தலைவர்கள்வரை தலீப் நியமனத்தை அங்கீகரித்திருப்பது எப்படி? மத்திய மற்றும் ஜம்மு காஷ்மீர் உளவுத்துறையை கையில் வைத்திருக்கும் பா.ஜ.கவுக்கு அவரின் பின்னணி தெரியாது என்பதைக் குழந்தை கூட ஏற்றுக் கொள்ளாது.


படிக்க : 5G அலைக்கற்றையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்ற மோடி அரசு!


“இசுலாமியர்கள் சேர்ந்து இந்து ஒருவரை படுகொலை செய்துவிட்டார்கள்; அவர்கள் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்கள்; இந்தியாவில் இந்துக்களைக் கொல்வதற்காக முசுலீம்கள் ஜிகாதிகளாக மாறியுள்ளார்கள்” போன்ற கருத்துக்களைப் பிரச்சாரம் செய்வதன் மூலம் நாடுமுழுக்க இசுலாமியர்களுக்கு எதிரான ஒரு பாசிச வேட்டையை நடத்த வேண்டும் என்ற திட்டத்தோடுதான் உதய்பூர் கண்ணையா படுகொலை அரங்கேற்றப்பட்டுள்ளது.

கோத்ரா ரயில் எரிப்பு, ரத யாத்திரை, ராம ஜென்ம பூமி, மாலேகான் குண்டுவெடிப்பு என அனைத்தும் இசுலாமியர்களைப் படுகொலை செய்வதற்காக இந்துமதவெறிக் கும்பலால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதுதான். அதன் தொடர்ச்சியே இதுவும். ஆனால் தற்போது அவர்கள் கையும் களவுமாக அம்பலப்பட்டுப் போய்விட்டார்கள்.

முசுலீம்களுக்கு எதிராகப் பொய்யையும் புளுகையும் வாரிவீசி மதவெறியைத் தூண்டும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் பயங்கரவாத நடவடிக்கையை சாதாரண இந்து மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்ட இதுவொரு வாய்ப்பாகும்.


அப்பு

மேக்கேதாட்டு அணை மூலம் காவிரியைத் தடுக்கப் பார்க்கிறது (காவி)ரி மேலாண்மை வாரியம்!

காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்கான 50 ஆண்டுகால விடாப்பிடியான போராட்டத்தின் விளைவாகவே, காவிரி மேலாண்மை ஆணையமானது அமைக்கப்பட்டது.

தற்போது அந்தக் காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலமே, நம் காவிரி உரிமையைப் பறிப்பதற்கான வேலையை மோடி அரசு திரைமறைவில் செய்துவருகிறது. மேக்கேதாட்டு அணை மூலம் காவிரியைத் தடுத்து தமிழகத்தைப் பாலைவனமாக்கத் துடிக்கிறது.

***

தமிழகத்தின் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மொத்தம் 11 மாவட்டங்கள் காவிரி நீரையே விவசாயத்திற்கான ஆதாரமாகவும் குடிநீர் தேவைக்கும் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், காவிரிக்கு நடுவே கர்நாடகாவின் மேக்கேதாட்டுப் பகுதியில் அணை கட்டும் முயற்சியை அம்மாநிலத்தின் அரசுகள் பல காலமாக மேற்கொண்டுவருகின்றன. 11 மாவட்டங்களையும் பாலைவனமாக்கும் இம்முயற்சியை எதிர்த்து தமிழக மக்களும் தொடர்ச்சியான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தியுள்ளனர். அதனால், அவர்களின் முயற்சி இதுவரை கைகூடவில்லை.

ஆனால் இன்றைய பா.ஜ.க. தலைமையிலான கர்நாடக அரசு மிகுந்த இனவெறியோடு மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியில் இறங்கியது. அதற்கு மத்தியில் உள்ள அவர்களது ஆட்சியும் அனுசரணை செய்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தை ஏவியுள்ளார்கள்.


படிக்க: மேக்கேதாட்டு: காவியை ஒழிக்காமல் காவிரி வராது!


இம்முறை நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான வரைவு திட்டம் விவாதிக்கப்பட இருக்கிறது என்று ஆணையம் தகவல் வெளியிட்டது.

இத்தகவல் வெளியான உடன் தமிழக மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பிய போதும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இம்முயற்சிக்கு கண்டனம் தெரிவித்தபோதும் “மேக்கேதாட்டு தொடர்பாக விவாதிக்க எங்களுக்கு எல்லாவித உரிமையும் உள்ளது” மிகுந்த ஆணவத்தோடு அறிவித்தார் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர்.

இதைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான வரைவுத் திட்டத்தை விவாதிக்கக் கூடாது என தமிழக அரசானது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அவ்வழக்கில், மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை வாரியத்துக்கு அதிகாரம் உள்ளதா என விசாரிக்கப் போவதாகவும் இதுதொடர்பாக ஆணையத்தின் கருத்தையும் கேட்க விரும்புவதாகவும் தெரிவித்தது.

நான்கு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டைக் கண்காணித்து, வழிகாட்ட அமைக்கப்பட்டதே மேலாண்மை ஆணையம். இந்த நடுவர் வேலையைத் தாண்டி அதற்கு வேறெந்த அதிகாரமும் கிடையாது. மேலும் நதிநீர் பங்கீட்டில்கூட மாநில அரசுகளுக்கு வழிகாட்டத்தான் முடியுமே தவிர, அவைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் ஆணையத்திற்கு கிடையாது.

இவ்வாணையம் அமைக்கப்பட்டபோதே, இது “பல்லில்லாத ஆணையம்” என்று புதிய ஜனநாயகத்தின் தோழமை அமைப்புகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன. இதையெல்லாம் உச்சநீதிமன்றம் நன்கறியும். இருந்தும் தீர விசாரிக்க வேண்டும் என்று சொல்வதும் கேள்விக்குள்ளாக்கப்பட்ட ஆணையத்தின் அதிகாரத்தைப் பற்றி ஆணையத்திடமே கருத்தறிய விரும்புவதாகக் கூறுவதும் நீதிமன்றம் காவிகளின் திரைமறைவு சதிக்கு துணைபோவதை அப்பட்டமாக காட்டுகின்றன.

மேக்கேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தை இழுப்பதானது, அணை கட்டுவதற்கான அனுமதியை மோடி அரசு நேரடியாக வழங்காமல் காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் வழங்குவதற்கான நோக்கத்தின் வெளிப்பாடே.

மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தை ஆதரித்தால் தமிழக மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதித்தால், மோடி அரசானது நேரடியாக அனுமதி கொடுத்த மாதிரி இருக்காது. காவிரி மேலாண்மை ஆணையம்தான் அனுமதி கொடுத்தது. அது தன்னிச்சையானது. அதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று தப்பித்துக் கொள்ளலாம்.

***

மேக்கேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில் மோடி அரசானது நடுநிலையாக இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கோண்டே கர்நாடகாவிற்கு ஆதரவாகவும் தமிழகத்திற்கு எதிராகவுமே செயல்பட்டுவந்துள்ளது. ஆனால் தமிழக அரசோ, இதை மக்கள் முன் அம்பலப்படுத்தி தமிழகத்தைக் கிளர்ச்சியூட்டாமல் சந்தர்ப்பவாதமாக மூடி மறைத்தது.

கர்நாடக முதலமைச்சர் டெல்லி சென்று பேசும்போது, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அணையை கட்ட உத்திரவாதம் அளித்திருக்கிறார் என்று கூறுவார். தமிழக அமைச்சர்களும் போவர், டெல்லி சென்றுவந்து “தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் அணையைக் கட்டவிட மாட்டோம்” என்று மத்திய அரசு உறுதியளித்ததாகச் சொல்வர்.

ஆனால், முன்னர் மேக்கேதாட்டு அணைக் கட்டுமானம் பற்றி, கர்நாடக அரசிடம் விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யச் சொல்லிக் கேட்டுப் பெற்றது மோடி அரசு. திட்டத்திற்கு ஒப்புதல் கொடுப்பதற்காகத்தான் விரிவான திட்ட அறிக்கை கேட்பது வழக்கம். எனவே தமிழக மக்களின் தரப்பில் இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அப்போது டெல்லி சென்று மத்திய அமைச்சரைச் சந்தித்த துரைமுருகன், “மேக்கேதாட்டு அணைக்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கை முழுமையாக இல்லை. மத்திய அரசின் நிபந்தனைகளை கர்நாடகா பூர்த்தி செய்யவில்லை. எனவே மேக்கேதாட்டு அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை” என்று பதிலளித்தார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அணை கட்டுவதற்கான வரைவு திட்டத்தை ஏன் கேட்டுப் பெற்றீர்கள் என சட்டையைப் பிடித்துக் கேட்காமல், மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என ‘வலியுறுத்தினோம்’ என்று கூறினார் துரைமுருகன்.

மோடி அரசின் நயவஞ்சகமான அணுகுமுறை தெரிந்தும், “மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளார்”, “அணையைக் கட்ட விடமாட்டோம்” என்று சவடாலாகப் பேசுவது தமிழக மக்களுக்குத் துரோகமிழைப்பதே ஆகும்.

***

50 ஆண்டுகாலம் மத்தியில் ஆண்ட காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டு அரசுகளுமே காவிரியின் மீதான தமிழகத்தின் உரிமையை மறுப்பதில் ஒரே நிலைப்பாட்டையே எடுத்துள்ளனர். இக்காலத்தில் நமது நீர் உரிமையை நாம் படிப்படியாக இழந்துவந்துள்ளோம்.


படிக்க: மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை வாரியம் முடிவு ! | மக்கள் அதிகாரம் கண்டனம்


தமிழ்நாடு 1970-ல் அமைக்கக் கோரிய நடுவர் மன்றத்தை 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அதுவும் உச்சநீதிமன்றத்தின் கடுமையான உத்தரவுக்குப் பிறகே அமைத்தது, அப்போதைய காங்கிரஸ் அரசு. காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக 2007-ல் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை தமிழக மக்களின் விடாப்பிடியான போராட்டங்களுக்குப் பிறகே 2018 ஆம் ஆண்டு நிறைவேற்றியது.

இக்கால கட்டத்தில் தமிழகத்தின் நீர் ஒதுக்கீடானது படிப்படியாக குறைக்கப்பட்டு, தமிழக மக்களுக்கு துரோகமிழைக்கப்பட்டது. 1924-ல் 575.68 டி.எம்.சி, 1984 வரை சராசரியாக 361 டி.எம்.சி, 1991 இடைக்காலத் தீர்ப்பில் 205 டி.எம்.சி, 2007 தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் 192 டி.எம்.சி, 2018 உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பில் இறுதியாக 177.25 டி.எம்.சி என கடுமையாகக் குறைந்துவிட்டது.

கர்நாடகாவானது கடந்த காலங்களில் மத்திய அரசின் முறைப்படியான எந்த ஒப்புதலும் பெறாமல் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளில் கபிணி அணை, ஹேரங்கி, ஹேமாவதி, ஸ்வர்ணவதி என பல நீர்த்தேக்கங்களைக் கட்டியதன் காரணமாகவே தமிழகத்திற்கு வர வேண்டிய நீர் வரத்து குறைந்தது. இதற்கு மத்திய அரசுகளும் உடந்தை.

கடந்த பத்தாண்டுகளில் கர்நாடக அரசானது தமிழகத்திற்குக் காவிரியில் திறந்துவிட்டுள்ள நீரின் அளவையும், திறந்துவிடப்பட்ட காலத்தையும் அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், தன்னால் தேக்கி வைக்க முடியாத உபரி நீரைத்தான் கர்நாடகாவானது தமிழகத்திற்கு திறந்துவிட்டுள்ளது என்ற உண்மையையும், காவிரியின் மீதான தமிழகத்தின் உரிமையை மறுத்து, உபரி நீரை வெளியேற்றும் வடிகாலாக தமிழகத்தை மாற்றியுள்ளது என்பதையும் புரிந்துக்கொள்ள முடியும்.

தற்போது மேக்கேதாட்டு அணையை கட்டுவதன் மூலம் குறைந்த அளவாக வரும் தண்ணீரையும் தடுத்து நிறுத்தி, தமிழகத்தைப் பாலைவனமாக்கத் துடிக்கிறது மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு. இதன் மூலம் தமிழகத்தின் மீதான தன் இனப்பகைமையைக் காட்டிக் கொள்கிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் மோடி அரசு மறைமுகமாக செய்துவரும் சதித்தனங்களை அம்பலப்படுத்திப் போராடாவிட்டால், தமிழக டெல்டாவில் இனி நாம் பச்சை வயல்களைப் பார்க்கவே முடியாது.


அமீர்