Sunday, June 22, 2025
முகப்பு பதிவு பக்கம் 151

உதய்பூர், காஷ்மீர் சம்பவங்கள்: திரை கிழிந்தது காவிகளின் பயங்கரவாத சதி!

ராஜஸ்தானில் தையல் கடை நடத்திவந்த கண்ணையா லால் என்பவரை, கடந்த ஜூன் 28 அன்று இசுலாமிய இளைஞர்களான முகமது ரியாஸ் அட்டாரி மற்றும் கௌஸ் முகம்மது இருவரும் தலையைத் துண்டித்துக் கொலை செய்தனர்; முகமது நபியை தவறாகப் பேசிய நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக வலைதளத்தில் கண்ணையா லால் போட்ட பதிவுக்கு பழிவாங்கும் விதமாகவே அவரை கொலை செய்தோம் என அவர்கள் இருவரும் வீடியோ வெளியிட்டனர். அதில் நரேந்திர மோடிக்கும் நுபுர் சர்மாவுக்கும் கொலைமிரட்டல் விடுத்திருந்தனர்.

இக்கொலையாளிகளுக்கு பாகிஸ்தானில் உள்ள தவாத்-இ-இஸ்லாமி அமைப்புடன் தொடர்பிருப்பதாக என்.ஐ.ஏ. செய்தி வெளியிட்டது. பா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராஜ்யவர்தன சிங் ரத்தோர், “காங்கிரஸ் ஆட்சியில் ராஜஸ்தான் தாலிபான்  மாநிலமாக மாறிக் கொண்டிருக்கிறது. இசுலாமியர்களை காங்கிரஸ் தொடர்ந்து சமாதானப்படுத்தி வருவதால் ஜிகாதிகள் இந்துக்களைக் கொலை செய்வதற்கும், பிரதமருக்கு மிரட்டல் விடுவதற்கும் துணிந்துவிட்டார்கள்” என்று இச்சம்பவம் பற்றிக் கூறினார்.

இந்துமதவெறி அமைப்புகள் பலவும் முசுலீம் எதிர்ப்பு கலவரத்திற்கு ஆயத்தமாகின. கண்ணையா லாலின் ஊர்வலத்தை நூற்றுக்கணக்கானோர் அணிதிரள நடத்தின இந்துத்துவ அமைப்புகள். இந்நிலையில், ஜூலை 1 அன்று வெளியான இந்தியா டுடே பத்திரிகையின் சிறப்புப் புலனாய்வு செய்தி கொலையாளிகள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் என்பதை அம்பலப்படுத்தியது.


படிக்க : கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதில், காவியும் திராவிடமாடலும் கூட்டணி !


ராஜஸ்தான் மாநில பா.ஜ.க.வின் சிறுபான்மை பிரிவு செயலாளரான இர்ஷத் செயின் வாலாவிடம் இந்தியா டுடே நடத்திய விசாரணையில் இவ்விசயம் அம்பலமானது. அவ்விசாரணையில், பா.ஜ.க.வின் கட்சி ஊழியரான முகம்மது தாஹிர் உடன் முக்கியக் குற்றவாளியான ரியாஸ் அட்டாரி உதய்பூரில் நடக்கும் பா.ஜ.க-வின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்று இர்ஷத் செயின் கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பவன் கேரா, கொலையாளி ரியாஸ் ராஜஸ்தான் பா.ஜ.க தலைவரும் முன்னாள் அமைச்சருமான குலாப் சந்த் கட்டாரியா பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்பார்; பா.ஜ.க கூட்டங்களில் ரியாஸ் கலந்து கொண்ட புகைப்படங்களும் தற்போது வெளியாகியிருக்கின்றன என்று பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார்.

ரியாஸ் பா.ஜ.க தலைவர்களுடன் இருக்கின்ற புகைப்படங்கள் அம்பலமானதை அடுத்து பா.ஜ.க.வினர் சுதாரிக்க ஆரம்பித்துவிட்டனர். பா.ஜ.க.வின் சிறுபான்மை பிரிவு தலைவரான முகம்மது சாதிக் கான், “யார் வேண்டுமானாலும் எந்த தலைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். அதற்காக அவர் பா.ஜ.க-வை சேர்ந்தவர் என்று அர்த்தம் இல்லை” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

கட்டாரியாவோ, “நான் நிச்சயமாக நிகழ்ச்சிக்குச் சென்றிருப்பேன், என்னுடன் புகைப்படத்தில் யார் நிற்க வேண்டும் என்பது என் கையிலோ அல்லது வேறு யாருடைய கையிலோ இல்லை” என்று கூறியிருக்கிறார்.

உண்மை என்னவென்றால் வெளிவந்த புகைப்படங்கள் எதுவும் கொலையாளி ரியாஸ் அட்டாரியின் முகநூல் பதிவிலிருந்து எடுக்கப்படவில்லை. பா.ஜ.க. தலைவர்களுடன் ரியாஸ் இருக்கின்ற புகைப்படத்தை பா.ஜ.க. தலைவர்கள் தங்கள் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றனர். வெளிவந்த புகைப்படங்கள் பா.ஜ.க தலைவர்களின் முகநூல் பக்கத்திலிருந்துதான் எடுக்கப்பட்டிருக்கின்றன.

பா.ஜ.க-வின் சிறுபான்மை பிரிவு செயலாளரான இர்ஷத் செயின்வாலா நவம்பர் 30 2018 அன்று தனது முகநூல் பதிவில் ரியாஸூடன் இருக்கின்ற புகைப்படத்தைப் பதிவிட்டிருக்கிறார். பா.ஜ.க ஊழியரான முகம்மது தாஹிரும் பிப்ரவரி 3/2019, அக்டோபர் 27/2019, நவம்பர் 28/2019 மற்றும் ஆகஸ்ட் 10/2021 ஆகிய தேதிகளில் தனது முகநூல் பதிவில் ரியாஸூடன் இருக்கின்ற புகைப்படத்தைப் பதிவிட்டிருக்கிறார்.  பிப்ரவரி 3/2019 அன்று தாஹிர் தனது பதிவில், இர்ஷத், ரியாஸ் மற்றும் பலர் இருக்கிற புகைப்படத்துடன் ரியாஸ் கட்சி ஊழியர் என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, கட்டாரியாவிற்கு ரியாஸ் பூத் ஏஜெண்டாக செயல்பட்டிருக்கிறார் என்று குறிப்பிடுகிறார், ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் ராஜேந்திர சிங் யாதவ்.

***

உதய்பூர் கொலையாளிகள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் என்ற செய்தி அம்பலமாகி நாடு முழுவதும் நாறிக் கொண்டிருக்கும் சூழலில், காஷ்மீரிலும் இதேபோல மற்றொரு சம்பவம் நடைபெற்றது.

ஜம்மு-காஷ்மீரில் ரியாசி மாவட்ட மக்கள் கடந்த ஜூலை 3 அன்று இரண்டு லக்ஷர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளான தலிப் உசேன் ஷா மற்றும் ஃபைசல் அகமது ஆகியோரை ஆயுதங்களுடன் பிடித்து போலீசிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.

பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவன் என்று காஷ்மீர் போலீசாரால் தேடப்படும் குற்றவாளி தலிப் உசேன் ராஜௌரி மாவட்ட பா.ஜ.க-வின் சிறுபான்மை பிரிவு சமூக ஊடகப் பொறுப்பாளர் என்பது விசாரணையில் அம்பலமானது. தலிப் உசேனிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போனின் மூலம், அவனது முகநூல் கணக்கில் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களுடன் தலீப் இருக்கும் புகைப்படங்கள் அம்பலமானது.

கடந்த மே 9 2022 அன்று ராஜௌரி மாவட்ட சமூக ஊடகப் பொறுப்பாளராக தலீப் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான ஆணை ஜம்மு-காஷ்மீர் பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு அமைப்பால் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த ஆணையின் நகலானது மூத்த பா.ஜ.க. தலைவர் அசோக் கவுல் மற்றும் சிறுபான்மை பிரிவின் தேசிய தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது.

இச்செய்தி அம்பலமானவுடன் ஆன்லைன் உறுப்பினர் சேர்த்ததால் அந்த நபரின் பின்னணியை சரிபார்க்க முடியவில்லை என்றும், தலீப் வெறும் 18 நாட்களில் தன்னுடைய பொறுப்பிலிருந்து விலகிவிட்டார் என்றும் பா.ஜ.க சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் ஆ.எஸ்.பதானியா என்.டி.டி.வி-க்கு அளித்த பேட்டியில், “இந்த கைதால் பா.ஜ.க உயர்மட்ட தலைவர்களைக் கொல்லும் தீவிரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டது” என்று சமாளித்தார்.

2017-ஆம் ஆண்டிலிருந்து தலீப் பா.ஜ.க-வில் இருப்பதாக அவனது குடும்பத்தினரும் கூறியிருக்கின்றனர். ஆன்லைன் உறுப்பினராகும்போது ஒருவரின் பின்னணியை சோதிக்க முடியாது என்பது யதார்த்த உண்மைதான் என்றாலும், பொறுப்பு கொடுக்கும்போது அவரது பின்னணி பற்றி ஏன் உறுதிப்படுத்தவில்லை? தேசிய தலைவர்கள்வரை தலீப் நியமனத்தை அங்கீகரித்திருப்பது எப்படி? மத்திய மற்றும் ஜம்மு காஷ்மீர் உளவுத்துறையை கையில் வைத்திருக்கும் பா.ஜ.கவுக்கு அவரின் பின்னணி தெரியாது என்பதைக் குழந்தை கூட ஏற்றுக் கொள்ளாது.


படிக்க : 5G அலைக்கற்றையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்ற மோடி அரசு!


“இசுலாமியர்கள் சேர்ந்து இந்து ஒருவரை படுகொலை செய்துவிட்டார்கள்; அவர்கள் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்கள்; இந்தியாவில் இந்துக்களைக் கொல்வதற்காக முசுலீம்கள் ஜிகாதிகளாக மாறியுள்ளார்கள்” போன்ற கருத்துக்களைப் பிரச்சாரம் செய்வதன் மூலம் நாடுமுழுக்க இசுலாமியர்களுக்கு எதிரான ஒரு பாசிச வேட்டையை நடத்த வேண்டும் என்ற திட்டத்தோடுதான் உதய்பூர் கண்ணையா படுகொலை அரங்கேற்றப்பட்டுள்ளது.

கோத்ரா ரயில் எரிப்பு, ரத யாத்திரை, ராம ஜென்ம பூமி, மாலேகான் குண்டுவெடிப்பு என அனைத்தும் இசுலாமியர்களைப் படுகொலை செய்வதற்காக இந்துமதவெறிக் கும்பலால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதுதான். அதன் தொடர்ச்சியே இதுவும். ஆனால் தற்போது அவர்கள் கையும் களவுமாக அம்பலப்பட்டுப் போய்விட்டார்கள்.

முசுலீம்களுக்கு எதிராகப் பொய்யையும் புளுகையும் வாரிவீசி மதவெறியைத் தூண்டும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் பயங்கரவாத நடவடிக்கையை சாதாரண இந்து மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்ட இதுவொரு வாய்ப்பாகும்.


அப்பு

மேக்கேதாட்டு அணை மூலம் காவிரியைத் தடுக்கப் பார்க்கிறது (காவி)ரி மேலாண்மை வாரியம்!

காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்கான 50 ஆண்டுகால விடாப்பிடியான போராட்டத்தின் விளைவாகவே, காவிரி மேலாண்மை ஆணையமானது அமைக்கப்பட்டது.

தற்போது அந்தக் காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலமே, நம் காவிரி உரிமையைப் பறிப்பதற்கான வேலையை மோடி அரசு திரைமறைவில் செய்துவருகிறது. மேக்கேதாட்டு அணை மூலம் காவிரியைத் தடுத்து தமிழகத்தைப் பாலைவனமாக்கத் துடிக்கிறது.

***

தமிழகத்தின் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மொத்தம் 11 மாவட்டங்கள் காவிரி நீரையே விவசாயத்திற்கான ஆதாரமாகவும் குடிநீர் தேவைக்கும் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், காவிரிக்கு நடுவே கர்நாடகாவின் மேக்கேதாட்டுப் பகுதியில் அணை கட்டும் முயற்சியை அம்மாநிலத்தின் அரசுகள் பல காலமாக மேற்கொண்டுவருகின்றன. 11 மாவட்டங்களையும் பாலைவனமாக்கும் இம்முயற்சியை எதிர்த்து தமிழக மக்களும் தொடர்ச்சியான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தியுள்ளனர். அதனால், அவர்களின் முயற்சி இதுவரை கைகூடவில்லை.

ஆனால் இன்றைய பா.ஜ.க. தலைமையிலான கர்நாடக அரசு மிகுந்த இனவெறியோடு மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியில் இறங்கியது. அதற்கு மத்தியில் உள்ள அவர்களது ஆட்சியும் அனுசரணை செய்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தை ஏவியுள்ளார்கள்.


படிக்க: மேக்கேதாட்டு: காவியை ஒழிக்காமல் காவிரி வராது!


இம்முறை நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான வரைவு திட்டம் விவாதிக்கப்பட இருக்கிறது என்று ஆணையம் தகவல் வெளியிட்டது.

இத்தகவல் வெளியான உடன் தமிழக மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பிய போதும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இம்முயற்சிக்கு கண்டனம் தெரிவித்தபோதும் “மேக்கேதாட்டு தொடர்பாக விவாதிக்க எங்களுக்கு எல்லாவித உரிமையும் உள்ளது” மிகுந்த ஆணவத்தோடு அறிவித்தார் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர்.

இதைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான வரைவுத் திட்டத்தை விவாதிக்கக் கூடாது என தமிழக அரசானது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அவ்வழக்கில், மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை வாரியத்துக்கு அதிகாரம் உள்ளதா என விசாரிக்கப் போவதாகவும் இதுதொடர்பாக ஆணையத்தின் கருத்தையும் கேட்க விரும்புவதாகவும் தெரிவித்தது.

நான்கு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டைக் கண்காணித்து, வழிகாட்ட அமைக்கப்பட்டதே மேலாண்மை ஆணையம். இந்த நடுவர் வேலையைத் தாண்டி அதற்கு வேறெந்த அதிகாரமும் கிடையாது. மேலும் நதிநீர் பங்கீட்டில்கூட மாநில அரசுகளுக்கு வழிகாட்டத்தான் முடியுமே தவிர, அவைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் ஆணையத்திற்கு கிடையாது.

இவ்வாணையம் அமைக்கப்பட்டபோதே, இது “பல்லில்லாத ஆணையம்” என்று புதிய ஜனநாயகத்தின் தோழமை அமைப்புகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன. இதையெல்லாம் உச்சநீதிமன்றம் நன்கறியும். இருந்தும் தீர விசாரிக்க வேண்டும் என்று சொல்வதும் கேள்விக்குள்ளாக்கப்பட்ட ஆணையத்தின் அதிகாரத்தைப் பற்றி ஆணையத்திடமே கருத்தறிய விரும்புவதாகக் கூறுவதும் நீதிமன்றம் காவிகளின் திரைமறைவு சதிக்கு துணைபோவதை அப்பட்டமாக காட்டுகின்றன.

மேக்கேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தை இழுப்பதானது, அணை கட்டுவதற்கான அனுமதியை மோடி அரசு நேரடியாக வழங்காமல் காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் வழங்குவதற்கான நோக்கத்தின் வெளிப்பாடே.

மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தை ஆதரித்தால் தமிழக மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதித்தால், மோடி அரசானது நேரடியாக அனுமதி கொடுத்த மாதிரி இருக்காது. காவிரி மேலாண்மை ஆணையம்தான் அனுமதி கொடுத்தது. அது தன்னிச்சையானது. அதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று தப்பித்துக் கொள்ளலாம்.

***

மேக்கேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில் மோடி அரசானது நடுநிலையாக இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கோண்டே கர்நாடகாவிற்கு ஆதரவாகவும் தமிழகத்திற்கு எதிராகவுமே செயல்பட்டுவந்துள்ளது. ஆனால் தமிழக அரசோ, இதை மக்கள் முன் அம்பலப்படுத்தி தமிழகத்தைக் கிளர்ச்சியூட்டாமல் சந்தர்ப்பவாதமாக மூடி மறைத்தது.

கர்நாடக முதலமைச்சர் டெல்லி சென்று பேசும்போது, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அணையை கட்ட உத்திரவாதம் அளித்திருக்கிறார் என்று கூறுவார். தமிழக அமைச்சர்களும் போவர், டெல்லி சென்றுவந்து “தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் அணையைக் கட்டவிட மாட்டோம்” என்று மத்திய அரசு உறுதியளித்ததாகச் சொல்வர்.

ஆனால், முன்னர் மேக்கேதாட்டு அணைக் கட்டுமானம் பற்றி, கர்நாடக அரசிடம் விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யச் சொல்லிக் கேட்டுப் பெற்றது மோடி அரசு. திட்டத்திற்கு ஒப்புதல் கொடுப்பதற்காகத்தான் விரிவான திட்ட அறிக்கை கேட்பது வழக்கம். எனவே தமிழக மக்களின் தரப்பில் இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அப்போது டெல்லி சென்று மத்திய அமைச்சரைச் சந்தித்த துரைமுருகன், “மேக்கேதாட்டு அணைக்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கை முழுமையாக இல்லை. மத்திய அரசின் நிபந்தனைகளை கர்நாடகா பூர்த்தி செய்யவில்லை. எனவே மேக்கேதாட்டு அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை” என்று பதிலளித்தார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அணை கட்டுவதற்கான வரைவு திட்டத்தை ஏன் கேட்டுப் பெற்றீர்கள் என சட்டையைப் பிடித்துக் கேட்காமல், மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என ‘வலியுறுத்தினோம்’ என்று கூறினார் துரைமுருகன்.

மோடி அரசின் நயவஞ்சகமான அணுகுமுறை தெரிந்தும், “மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளார்”, “அணையைக் கட்ட விடமாட்டோம்” என்று சவடாலாகப் பேசுவது தமிழக மக்களுக்குத் துரோகமிழைப்பதே ஆகும்.

***

50 ஆண்டுகாலம் மத்தியில் ஆண்ட காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டு அரசுகளுமே காவிரியின் மீதான தமிழகத்தின் உரிமையை மறுப்பதில் ஒரே நிலைப்பாட்டையே எடுத்துள்ளனர். இக்காலத்தில் நமது நீர் உரிமையை நாம் படிப்படியாக இழந்துவந்துள்ளோம்.


படிக்க: மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை வாரியம் முடிவு ! | மக்கள் அதிகாரம் கண்டனம்


தமிழ்நாடு 1970-ல் அமைக்கக் கோரிய நடுவர் மன்றத்தை 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அதுவும் உச்சநீதிமன்றத்தின் கடுமையான உத்தரவுக்குப் பிறகே அமைத்தது, அப்போதைய காங்கிரஸ் அரசு. காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக 2007-ல் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை தமிழக மக்களின் விடாப்பிடியான போராட்டங்களுக்குப் பிறகே 2018 ஆம் ஆண்டு நிறைவேற்றியது.

இக்கால கட்டத்தில் தமிழகத்தின் நீர் ஒதுக்கீடானது படிப்படியாக குறைக்கப்பட்டு, தமிழக மக்களுக்கு துரோகமிழைக்கப்பட்டது. 1924-ல் 575.68 டி.எம்.சி, 1984 வரை சராசரியாக 361 டி.எம்.சி, 1991 இடைக்காலத் தீர்ப்பில் 205 டி.எம்.சி, 2007 தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் 192 டி.எம்.சி, 2018 உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பில் இறுதியாக 177.25 டி.எம்.சி என கடுமையாகக் குறைந்துவிட்டது.

கர்நாடகாவானது கடந்த காலங்களில் மத்திய அரசின் முறைப்படியான எந்த ஒப்புதலும் பெறாமல் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளில் கபிணி அணை, ஹேரங்கி, ஹேமாவதி, ஸ்வர்ணவதி என பல நீர்த்தேக்கங்களைக் கட்டியதன் காரணமாகவே தமிழகத்திற்கு வர வேண்டிய நீர் வரத்து குறைந்தது. இதற்கு மத்திய அரசுகளும் உடந்தை.

கடந்த பத்தாண்டுகளில் கர்நாடக அரசானது தமிழகத்திற்குக் காவிரியில் திறந்துவிட்டுள்ள நீரின் அளவையும், திறந்துவிடப்பட்ட காலத்தையும் அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், தன்னால் தேக்கி வைக்க முடியாத உபரி நீரைத்தான் கர்நாடகாவானது தமிழகத்திற்கு திறந்துவிட்டுள்ளது என்ற உண்மையையும், காவிரியின் மீதான தமிழகத்தின் உரிமையை மறுத்து, உபரி நீரை வெளியேற்றும் வடிகாலாக தமிழகத்தை மாற்றியுள்ளது என்பதையும் புரிந்துக்கொள்ள முடியும்.

தற்போது மேக்கேதாட்டு அணையை கட்டுவதன் மூலம் குறைந்த அளவாக வரும் தண்ணீரையும் தடுத்து நிறுத்தி, தமிழகத்தைப் பாலைவனமாக்கத் துடிக்கிறது மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு. இதன் மூலம் தமிழகத்தின் மீதான தன் இனப்பகைமையைக் காட்டிக் கொள்கிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் மோடி அரசு மறைமுகமாக செய்துவரும் சதித்தனங்களை அம்பலப்படுத்திப் போராடாவிட்டால், தமிழக டெல்டாவில் இனி நாம் பச்சை வயல்களைப் பார்க்கவே முடியாது.


அமீர்

இந்து உணர்வைப் புண்படுத்தியதாக சிவபெருமான் கைது!

மோடி ஆட்சிக்கு எதிராகப் பேசினால் நமக்கு மட்டுமல்ல, அந்த சிவபெருமானே ஆனாலும் ஒடுக்குமுறைதான் என்பதற்கு அசாம் மாநில சமூக செயல்பாட்டாளர் பிரிஞ்சி போரா கைது செய்யப்பட்டது ஒரு சான்று.

நாகௌன் நகரில் மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு குறித்து இவரது குழு வீதிநாடகம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியது. அதில் சிவபெருமான் வேடமிட்ட பிரிஞ்சிபோரா மோடி அரசை அம்பலப்படுத்துகிறார்.

உமையாள் பின் இருக்கையில் அமர்ந்திருக்க, சிவபெருமான் புல்லெட் வண்டியை ஓட்டி வருவதாக நாடகக் காட்சி. வண்டி பாதியில் நின்றுவிடுகிறது. கோபித்துக் கொண்ட உமையாள் சண்டையிடுகிறாள். வண்டி நிற்கக் காரணம் போதுமான அளவில் பெட்ரோல் போட என்னிடம் பணமில்லாதது தான் காரணம் என தன்னிலை விளக்கமளிக்கிறார் சிவபெருமான். மேலும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, உணவுப் பொருட்களின் விலை உயர்வு இப்படி அனைத்துக்கும் கடவுளாகிய தான் காரணம் இல்லை, மோடியின் இந்த மக்கள் விரோத ஆட்சிதான் காரணம் என்று கூறுகிறார். நாடகத்தின் இறுதியில், “மோடி அரசை எதிர்த்து நாம் கேள்விக் கேட்க வேண்டும்” என்று மக்களைப் பார்த்து சிவபெருமான் கூற, மக்கள் ஆரவாரத்தோடு அதை வரவேற்கிறார்கள்.

இந்த நாடகம் உள்ளூர் பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வெளி வந்து பரபரப்பாக பேசப்படவே, பாரதிய ஜனதாவின் குண்டர்படை தங்கள் “தெய்வங்களை அவமதித்ததாகவும், மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும்” புகார் அளித்து சிவபெருமானாக நடித்த பிரிஞ்சி போராவை கைதுசெய்ய வைத்துள்ளது. இந்த நடவடிக்கை பொது மக்களிடம் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தவே பின்னர் பிணையில் வெளியிடப்பட்டார்.


படிக்க: ம.பி : பத்திரிகையாளர், நாடகக் கலைஞர்கள் கைது – சித்திரவதை செய்த போலீசு !


மோடி ஆட்சியின் யோக்கியதையை கேள்வி கேட்டுவிட்டார் என நேரடியாக புகார் கொடுக்கவில்லை பா.ஜ.க. மாறாக, அவர் சிவபெருமான் வேடமிட்டு நடித்ததன் மூலம் இந்துக்களின் மனதைப் புண்படுத்திவிட்டாராம். இதன் பொருள் என்ன? மோடியை ஆட்சியை சிவபெருமானே விமர்சித்தாலும் அவரும் இந்து உணர்வைப் புண்படுத்தியவர்தான் என்கிறார் பா.ஜ.க.வினர்.

பிரிஞ்சி பத்திரிகையாளர்களிடம் பேசும் பொழுது ஏன் இந்த நாடகம் நடத்தப்பட்டது என்பதை விளக்கினார்:

“நரேந்திரமோடி நல்லாட்சி தருவார் என்றுதான் அவரை ஆட்சியில் அமர்த்தினர். ஆனால் அவரோ பெட்ரோல்-டீசல், காஸ் சிலிண்டர், ஏன் சாதாரண மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெயைக் கூட விலை உயர்த்திவிட்டார். ஏழைகள் வாழ்வதுதான் எப்படி? வருடம் இரண்டு கோடிப் பேருக்கு வேலை என்று சொன்னார். நாடெங்கும் வேலையில்லா திண்டாட்டம். உள்ள வேலைகளையும் பறித்து விட்டார். 23 லட்சம் அசாம் இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதாகச் சொன்னார். ஆனால் 1 லட்சம் பேருக்கு கூட வேலை கிடைக்கவில்லை. ஆட்சிக்கு வந்தபின்னர் அவர் சொன்னது அத்தனையும் பொய் என்று தெரிகிறது. இந்த நாடகம் இதைப் பற்றியதுதான். இதில் என்ன தவறு. தானும் சிவா பக்தன் தான். பா.ஜ.க.வுக்கு மட்டுமே கடவுள் சொந்தமா?” என்று கேள்வி எழுப்பினார்.

அசாம் மாநில முதல்வராக இருக்கும் ஹிமாந்த பிஸ்வா சர்மா மத்திய அரசின் வழக்குகளுக்குப் பயந்து கட்சி காங்கிரஸ் கட்சியிலிருந்து பா.ஜ.க.விற்கு தாவியவர். இந்த நபர் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் ஊழல், கொலை, அடிதடி என பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொரோனா நோய் தடுப்புக்காக வாங்கிய கருவிகள் மற்றும் உடைகளில் கூட பல கோடி ரூபாய் சுருட்டியுள்ளதாக “தி வயர்”, இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு விசாரணைக்கு ஏற்பாடு ஆகியுள்ளது.

இத்தகைய ரவுடிகள் மதத்தையும் தெய்வங்களையும் பயன்படுத்தி ஆட்சிக்கு வரலாம். ஆனால் அவர்களது யோக்கியதையைப் பற்றிப் பேச அந்த தெய்வங்களுக்கே கூட உரிமை இல்லை என்பதுதான் மோடியின் பாசிச ஆட்சி.


கிருஷ்ணராஜ்

நாட்டை சூறையாடும் காவி – கார்ப்பரேட் கூட்டணி ஆட்சி!

னைத்து தரப்பு மக்களுக்கும் விரோதமான இந்த பா.ஜ.க. ஆட்சி பெரும்பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே பொற்கால ஆட்சியாக இருந்துள்ளது. குறிப்பாக அம்பானி, அதானி உள்ளிட்டு குஜராத்தைச் சேர்ந்த பார்ப்பன-பனியா, சிந்தி, மார்வாடி சாதியைச் சேர்ந்த முதலாளிகளே பா.ஜ.க.வின் புரவலர்கள். இக்கார்ப்பரேட்டுகளும் காவிகளும் பிரிக்க முடியாத ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருந்துகொண்டு நாட்டையும் மக்களையும் சூறையாடி வருகிறார்கள்.

மோடியின் எட்டாண்டு கால ஆட்சியில் மட்டும் 5 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி மோசடி நடைபெற்றிருக்கிறது. இதில் 53 ஆயிரம் கோடி வரை ஏமாற்றிவிட்டு 23 பேர் நாட்டைவிட்டே தப்பியோடிவிட்டனர். நீரவ் மோடி, மெகுல் சோக்ஷி, விஜய் மல்லையா உள்ளிட்டு இந்த 23 பேரில் பெரும்பாலானவர்கள் மோடிக்கு நெருக்கமான குஜராத்திகள்.

மோடி ஆட்சிக்கு முன்பு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வாராக்கடன்கள் 2014-ல் 2 லட்சத்து 83 ஆயிரம் கோடியாக இருந்தது. இப்போது 13 லட்சம் கோடியாக அது உயர்ந்திருக்கிறது. மக்கள் பணத்தை கார்ப்பரேட்டுகள் எப்படி வேட்டையாடிவருகின்றனர் என்பதற்கு வங்கி மோசடிகள் ஒரு சான்று.

இப்படி வங்கி மோசடி செய்யும் கார்ப்பரேட்டுகளுக்குத்தான் மோடி அரசு ஒவ்வொரு பட்ஜெட்டின்போதும் ‘தொழில் வளர்ச்சி ஊக்குவிப்பு’ என்ற பெயரில் பல்வேறு சலுகைகளை வாரிவாரி வழங்குகிறது. கார்ப்பரேட்டுகள் செலுத்த வேண்டிய வரியை 40 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக குறைத்தது மோடி அரசு; இதன் மூலம் 2019-20லிருந்து 2020-21 வரையான ஓராண்டில் மட்டுமே அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 1.20 லட்சம் கோடியாகும்.


படிக்க : கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதில், காவியும் திராவிடமாடலும் கூட்டணி !


இன்னொரு பக்கம் பொதுத்துறை சூறையாடல். தனியார்மய-தாராளமய-உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கையை தீவிரமாக அமல்படுத்தும் மோடி அரசு, மக்களுக்குச் சொந்தமான பொதுச் சொத்துக்களை விற்று தனக்கு நெருக்கமான கார்ப்பரேட்டுகளை வளர்த்துவருகிறது. பொதுச்சொத்துக்களை விற்பதற்கென்றே நிதியமைச்சகத்தின் கீழ் பங்கு விலக்கல் துறை என்றொரு தனித்துறையே செயல்பட்டுவருகிறது.

2014-15லிருந்து 2020-21 வரையில் 4.86 லட்சம் கோடி மதிப்பிலான பொதுத்துறை பங்குகளின் சொத்துகள் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளன. பொதுத்துறை பங்குகளை விற்பதன் உச்சமாக, ஒட்டு மொத்த நாட்டையே கார்ப்பரேட்டுகளுக்கு விற்றுத்தள்ள தீட்டிய திட்டங்களுக்குப் பெயர்தான் ஆத்ம நிர்பர் திட்டம். அதன் அங்கமான தேசிய பணமயமாக்கல் திட்டம் மூலம் அரசு வைத்துள்ள அனைத்து சொத்துக்களையும் பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு விற்று உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு நிதி திரட்டலாம் என்கிறது பா.ஜ.க.

இத்திட்டத்தின் கீழ் ரயில் பாதைகள் மற்றும் நிலையங்கள், தொலைத்தொடர்பு அமைப்பு, மின்சாரத்துறை, எண்ணெய் எரிவாயுக் குழாய்கள், சாலைகள், துறைமுகங்கள் உள்ளிட்டு 6 லட்சம் கோடி மதிப்பிலான பொதுச்சொத்துக்களை கார்ப்பரேட்டுகளுக்கு 40 ஆண்டுகள் குத்தகைக்கு விட தீர்மானித்துள்ளது மோடி அரசு. பல பத்தாண்டுகள் தொழிலாளர்களின் உழைப்பாலும் மக்களின் வரிப்பணத்தாலும் உருவாக்கப்பட்ட விலைமதிப்பற்ற சொத்துக்களை மொத்தமாக வாங்குவதற்கு காசு இல்லாததால் ‘குத்தகை’ என்ற பெயரில் கொடுக்கிறது பா.ஜ.க. அரசு. ஆனால் பெயர் மட்டும்தான் வேறுபாடு.

***

பொதுவாக கார்ப்பரேட்டுகளுக்கு என்பதைவிட தனக்கு நெருக்கமான கார்ப்பரேட்டுகளான அம்பானி, அதானியை பா.ஜ.க. தலைமையிலான மோடி அரசு அசுரத்தனமாக வளர்த்துள்ளது. இந்த எட்டாண்டுகளில் முகேஷ் அம்பானியின் சொத்து 400 சதவிகிதமும், அதானியின் சொத்து 1830 சதவிகிதமும் அதிகரித்திருக்கிறது.

2014-ல் இருந்து 2019 வரையிலான காலத்தில் அம்பானி, அதானிகளின் சொத்துமதிப்பு வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. அம்பானியின் சொத்துமதிப்பு 118 சதவிகிதம் அதிகரித்து 1.68 லட்சம் கோடியிலிருந்து 3.65 லட்சம் கோடியாக உயர்ந்தது. அதானியின் சொத்துமதிப்பு 121 சதவிகிதம் அதிகரித்து 50.04 ஆயிரம் கோடியிலிருந்து 1.1 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 313வது இடத்திலிருந்த அதானி மோடியின் தயவால் 12வது இடத்திற்கு உயர்ந்திருக்கிறார்.

இலங்கை மின் உற்பத்தி ஒப்பந்தத்தை அதானிக்கு கொடுப்பதற்காக, கோத்தபய அரசிடம் மோடியே பேரம் பேசியுள்ளார் என்ற செய்தி அண்மையில் அம்பலமானது. ‘உலகம் சுற்றும் வாலிபனான’ மோடி ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போதும் அம்பானிக்கும் அதானிக்கும் சர்வதேச அளவில் பல்வேறு ஒப்பந்தங்கள் கிடைத்திருக்கின்றன என்பதை தற்போது கணக்குப் போட்டு பார்க்க வேண்டியிருக்கிறது.

2014 நவம்பரில் மோடியின் ஆஸ்திரேலியா பயணம்; அதைத் தொடர்ந்து 200 கி.மீ. குறுகிய ரயில் திட்டத்தை ஆஸ்திரேலியா அரசிடமிருந்து அதானி பெற்றார். 2015 ஜூனில் வங்கதேசம் பயணித்தார் மோடி; அவ்வாண்டில் வங்கதேசத்தில் ரிலையன்ஸ் குழுமம், அதானி குழுமம் இரண்டும் சேர்ந்து 4.5 பில்லியன் டாலர் முதலீட்டில் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்திற்கு அந்நாட்டு மின்வாரியத்திடமிருந்து ஒப்புதல் பெற்றது. 2014 ஆகஸ்டு, செம்படம்பர் மற்றும் 2016 நவம்பர் என தொடர்ச்சியாக பலமுறை மோடி ஜப்பான் சென்றதன் பயனாக, 2018-ல் அதானி குழுமம் ஜாப்பானின் என்.ஒய்.கே ஆட்டோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து ஆட்டோமொபைல் சரக்கு ரயில்களை இயக்க ஒப்பந்தம் பெற்றது.

2015 ஜூலை மோடியின் ரஷ்யப் பயணத்தை அடுத்து, ரிலையன்ஸ் குழுமத்துடன் அல்மஸ் அண்டே என்ற ரஷ்ய வான் பாதுகாப்பு நிறுவனம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. 2016 அமெரிக்கப் பயணம், அதையொட்டி அமெரிக்கப் போர் கப்பல்களைப் பழுதுபார்ப்பதற்கான ஒப்பந்தம் ரிலையன்ஸுக்கு கிடைத்தது. 2015 மலேசிய பயணம், அதைத் தொடர்ந்து அதானிக்கு கிடைத்த துறைமுகத் திட்டம்… என இப்பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. கடைசியாக இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா இணைந்து புதிதாக உருவாக்கியுள்ள ஐ2யு2 கூட்டமைப்பின் மாநாட்டுக்கு பிறகு அதானிக்கு இஸ்ரேலின் இரண்டாவது மிகப்பெரிய துறைமுகமான ஹைபா குத்தகைக்கு கிடைத்திருக்கிறது.

கார்ப்பரேட் சேவைக்கு கைமாறாக, பா.ஜ.க.விற்கு பல நூறு கோடிகளை தேர்தல் நன்கொடையாக பொழிந்துள்ளார்கள் கார்ப்பரேட்டுகள். ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கத்தின் அறிக்கைப்படி (ADR), 2020-21 ஆம் ஆண்டில் கார்ப்பரேட்டுகள் மற்றும் தனிநபர்களிடமிருந்து ஏழு தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற 258.43 கோடி நன்கொடைகளில், 82.05 சதவிகித நிதியை (212.05 கோடி) பா.ஜ.க. என்ற ஒரே கட்சி பெற்றுள்ளது.

***

அம்பானி, அதானிகளின் அசுர வளர்ச்சியைப் பார்த்து கார்ப்பரேட் முதலாளிகளில் ஒரு ஆகப் பிற்போக்கான பிரிவானது தங்களையும் பாசிச முகாமில் இணைத்துக் கொள்ள ஆர்.எஸ்.எஸ்.இன் தயவை நாடுகிறது.


படிக்க : லாபவெறிக்காக இயற்கையை அழிக்கும் முதலாளித்துவம்!


எச்.சி.எல். நிறுவனத்தின் முதலாளி ஷிவ் நாடார், விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம் ஜி ஆகியோர் நாக்பூருக்குச் சென்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தைச் சந்தித்து பேசியுள்ளனர். ராகுல் பஜாஜ் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவரின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த ஸ்மிருதி மந்திர் சென்றார்.

கடந்த ஏப்ரல் மாதம்கூட ரத்தன் டாடா மோகன் பகவத்தைச் சந்திப்பதற்குச் சென்றிருந்தார். 2018 ஆம் ஆண்டு டாடா அறக்கட்டளை நாக்பூர் தேசிய புற்றுநோய் மருத்துவமனையுடன் இணைந்து சேவை வழங்கிய ஆர்.எஸ்.எஸ்-ன் ஆபாஜி தாட்டே அறக்கட்டளைக்கு 100 கோடி நன்கொடை வழங்கியது.

இவ்வாறு ஒரு காவி –  கார்ப்பரேட் கூட்டணி உருவாகி நம் நாட்டை அழித்துவருகிறது. தங்களது மேலாண்மையைச் செலுத்துவதற்கு பாசிச ஒடுக்குமுறைகளைக் கையாண்டுவருகிறது. ஒட்டுமொத்த நாட்டுக்கும் உழைக்கும் மக்களுக்கு எதிரான இக்கூட்டணியை வீழ்த்த இப்பாசிச கும்பலால் பாதிக்கப்படும் அனைத்து மக்களும் ஓரணியில் திரண்டு பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியாகத் திரள்வதைத் தவிர வேறு வழியில்லை.


வேல்முருகன்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: வேதாந்தாவிற்கு அடியாள் வேலை பார்த்த போலீசு-கலெக்டர்! | தோழர் அமிர்தா வீடியோ

தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுக்கள் தொடர் போராட்டங்களை மக்களை இணைத்துக்கொண்டு நடத்தியதன் விளைவாகத்தான் இந்த கமிஷனே அமைக்கப்பட்டது. இந்த கமிஷனுடைய அறிக்கை என்பது அன்று மக்கள் அதிகாரம் போன்ற மக்களை சார்ந்த அமைப்புகள் என்ன சொன்னமோ அதுதான் இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் பார்க்கிறோம். அவர்கள் பல்வேறு விசயங்களை சொல்லி இருக்கிறார்கள்.

17 போலீசு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். துறைசார்ந்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக அன்று சொல்லப்பட்டது என்ன? போலீசில் பலபேர் பாதிக்கப்பட்டர்கள்; அதனால் தான் சுட்டோம் என்று கூறியது. பிஜேபியை சார்ந்த தமிழிசை சௌந்தரராஜன், அன்று துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை என்றால் ஆயிரம் பேர் செத்துபோய் இருப்பார்கள் என்று கூறினார். ஆனால் இந்த அறிக்கை என்பது இவர்கள் சொன்ன அனைத்து பொய் என்று நிருபித்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் போலீசுத்துறையை அம்பலப்படுத்தும் அருணா ஜெகதீசன் அறிக்கையை பற்றியும் தூப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பற்றியும் தமிழ்குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்….

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதில், காவியும் திராவிடமாடலும் கூட்டணி !

சில மாதங்களுக்கு முன்பு பின் வரும் ஆட்டோ வாசகம் பலரின் கவணத்தை ஈர்த்தது அது இதுதான் “இயற்கை சீற்றங்கள் மூலம் பஞ்சத்தால் தீவரவாதிகளின் தாக்குதலால் மக்கள் சாக வேண்டியிதல்லை மத்திய அரசு திட்டங்கள் போதும் மக்களை கொல்வதற்கு” இதனை மெய்ப்பிக்கும் வகையில் தமிழக அரசு ஆதரவுடன் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தின் மீது தாக்குதல் தொடுப்பதற்கான திட்டம் ஒன்றை அறிவித்திருக்கின்றது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தமிழகத்தில் இரண்டாவது புதிய விமான நிலையம் எங்கே அமையவிருக்கின்றது என்ற கேள்விக்கு அத் – துறையின் அமைச்சர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பரந்துர் ( இந்த கிராமத்தின் பெயரை தாங்கி இருப்பதுடன் பரந்துர் ஏகனத்துர் உள்ளிட்ட 13 கிராமங்கள் மொத்தம் 4000 ஏக்கர் விளை நிலங்கள் மற்றும் மூன்று கிராமங்களின் குடியிருப்புகள் ஆதாவது ஆறாயிரம் வீடுகள் பாதிக்கப்பட இருக்கின்றன.) கிராமத்தில் வரவிருக்கின்ற புதிய விமான நிலையம் ரூ 20000 கோடி மதிப்பில் அமையவிருக்கின்றன என அதிகாரப்புர்வமாக அறிவித்தார்.

மேற்படி புதிய விமான நிலையம் அமைக்க தமிழகத்தில் நான்கு இடங்கள் பரிசிலைனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் 1.படாளம் 2.திருப்போருர் 3.பரந்துர் ( காஞ்சிபுரம் ) 4. பன்னுர் (திருவள்ளுர் ) பரந்துர் தேர்வு செய்யப்பட்டதின் பின்னணியை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இருங்காட்டுகோட்டை, ஒரகடம், மாம்பாக்கம், ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற் பேட்டைகள் சுங்குவார்சத்திரத்தில் உள்ள SEZ சிறப்பு பொருளாதார மண்டலம் இவைகளில் உள்ள பல நுற்றுக்கணக்கான அந்நிய பண்ணாட்டு நிறுவனங்கள் செயல் படுகின்றன.


படிக்க : 12 கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து யாருக்காக விமான நிலையம்?


அமையவிருக்கின்ற புதிய விமான நிலையத்திற்கும் தொழிற்சாலை பகுதிக்கும் அரை மணி நேர பயனத்தில் சென்று விடலாம். கார்ப்ரேட் முதலாளிகளின் விருப்பமும் இலக்கும் இதுதான் தன்னுடைய சுக போகத்திற்கும் தனது உற்பத்திக்கான உதிரி பாகங்களை இறக்கு மதி செய்யவும் உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் இரு சக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்யவும் புதிய விமான நிலையம் வாய்ப்பாக இருப்பதோடு இதன் மூலம் அந்நிய மூலதனம் பெருகும் இதன் விளைவாக பல ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு பெருகும் மாநில வளர்ச்சிக்கான புதிய படிக்கட்டு 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் பயனத்தின் மற்றொரு மைல்கல் என வரவேற்கின்றார் தமிழக முதல்வர்.

அந்நிய மூலதனம் குறித்தும் அதனால் ஏற்கெனவே உருவான வேலை வாய்ப்புகளோ சொல்லி கொள்ளும்படி இல்லை என்பதுடன் உரிமைகளை பறிப்பதில் ஈவு இரக்கமற்ற முறையில் அடக்கு முறைகளை செலுத்தி பெரும் திரளான தொழிலாளர்களை கொத்தடிமையாக்கிருக்கின்றன.

சான்றாக HYUNDAI நிசான் டைம்லர் செயின்ட் கோபின் இன்னும் பிரசித்திப் பெற்ற ஆலைகளில் என்ன மாதிரியான வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கின்றது ? நீம் மற்றும் ஒப்பந்த முறையிலான வேலைகள்தான் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பணி பாதுகாப்பு சமூக பாதுகாப்பு ஏதும் இல்லாத நிலையில் பிழைப்புக்கு ஒரு வேலை என மனம் நொந்த நிலையில்தான் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
அடுத்து நாம் விமான நிலையம் அமையவிருக்கின்ற பகுதியை சற்று பார்ப்போம் தமிழகத்திலே ஏரிகளும் – குளங்களும் நிறைந்து நீர் நிலைகள் பாதுகாப்பதில் காஞ்சிபுரம் மாவட்டம் முன்னுதாரணம் என்பதுடன் அதற்குறிய கட்டமைப்பை பெற்றுருப்பதல்தான் தொழிற்சாலைகள் பெருகின.

பரந்துர் ஏகானத்துர் உள்ளீட்ட சில கிராமங்களை சுற்றி ஏரிகளால் சூழப்பட்டு விவசாய நிலங்கள் இருப்பதால் தண்ணீருக்கு பிரச்சனை இல்லை இப்போதும் 20 – 30 அடி ஆழத்திலே தண்ணீர் இருப்பதை பெருமையுடன் குறிப்பிடும் அப் – பகுதி மக்கள் நாங்கள் முப்போகமும் விவசாயம்தான் செய்கின்றோம் அதுதான் எங்கள் வாழ்வதாரம் அதனை பறித்து விட்டால் நாங்கள் எப்படி வாழ முடியும் …? என கேள்வியெழுப்புகின்றனர்.

தொழிற்சாலை விமான நிலையம் வந்தால் வேலை வாய்ப்பு பெருகும் கை நிறைய சம்பாதிக்கலாமே என கேட்ட போது இவ்வளுவு கம்பெனிங்க இருந்தும் எங்களுக்கு வேலை இல்லை ஏன் என்றால் நாங்கள் உள்ளுர்காரார்கள். அதையும் தாண்டி சிலர் வேலைக்கு செல்கின்றனர் ஆண்கள் என்றால் காண்டிராக்ட் வேலை பெண்களுக்கு ஹவுஸ் கீப்பிங் கார்டன் பராமரிப்பது போன்ற வேலைகள்தான் செய்கின்றோம் என்றனர்.

விவசாயத்தில் போதுமான வருமானம் இல்லாமல் போவதால் கடன் அடைக்க பிள்ளைகளை படிக்க வைக்க மாதம் குறைந்த பட்ச வருமானம் தேவையாக இருப்பதால்தான் கம்பெனி வேலைக்கு செல்கின்றோம் இல்லையெனில் அந்த பக்கம் தலை வைச்சு கூட படுக்க மாட்டோம். என்றனர்.

அப்படியனால் உங்கள் கவலைகளை அரசுக்கு தெரிவித்திர்களா ? எனக் கேட்ட போது எங்களின் வாழ்வதாரம் பாதுகாக்க வேண்டுமனால் புதிய விமான நிலையம் இந்த பகுதியில் அமைப்பதை கைவிடக் கோரி காஞசிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஒரு வாரம் கடந்த நிலையில் உங்கள் கோரிக்கை ஏற்க்க தக்கது அல்ல நிராகரிக்கின்றோம் என பதில் வந்திருப்பது எங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்றனர்.

இது குறித்து ஆட்சியர் பிற அதிகாரிகள் ஏதாவது சொன்னார்களா என்ற போது இது வரையில் எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை தமிழக அரசு எதுவும் அதிகாரப்புர்வமாக அறிவிக்கவில்லை என சொன்னதாக தெரிவித்தனர். அதிகார வர்க்கத்தின் திமிர்த்தனமான இந்த பேச்சை என்வென்று சொல்ல ? முதல்வர் ஸ்டாலின் புதிய விமான நிலைய திட்டத்தை மாநில வளர்ச்சிக்கான படிக்கட்டு என வர்னிக்கின்றார்.

மறுபுறம் ஜீலை மாதம் 26 அன்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார் கூட்டத்தின் முடிவில் பரந்துர் மற்றும் பன்னுர் ( திருவள்ளுர் ) ஆகிய இரு இடத்தில் ஏதாவததொன்று இறுதி செய்யப்படும் என்பதால் புதிய விமான நிலையம் வரவிருக்கும் பகுதி குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துருப்பதாக தெரிவித்தார். ( செய்தி ஆதாரம் ஆகஸ்ட் 03 தமிழ் இந்து )


படிக்க : லாபவெறிக்காக இயற்கையை அழிக்கும் முதலாளித்துவம்!


உண்மை இப்படியிருக்க அரசு அதிகாரப்புர்வமாக அறிவிக்கவில்லை என்பது எவ்வளவு பெரிய மோசடி அறிவிக்கவில்லை என்பதுதான் பிரச்சனையா ? அந்த திட்த்தை அரசின் சார்பாக முதல்வர் ஆதிரிகின்றார் பிரச்சனை. புதிய விமான நிலையம் அல்லது தொழிற்சாலைகள் வந்தால் இந்த நாட்டின் கோடிக்கானக்கான மக்களின் வாழ்க்கைத் தரம் உயரம் கெளரவமான வாழ்க்கைகு உத்ரவாதம் என்பது போல ஆட்சியாளர்கள் அதிகாரவர்க்கம் பேசுவது திராவிட மடலின் அங்கமான பகுத்தறிவுக்கு எதிரானது. கார்ப்பரேட் நிறுவனங்களின் நோக்கம் நமக்கு வேலையளிப்பது அல்ல மாறாக கொள்ளையடிப்பதுதான். இதற்கு வேலையளிப்பது என்ற முகமமூடி அரசின் ஆதரவோடு நடைமுறைப்படுத்தப் படுகிறது.

அடுத்து பெரும் கார்ப்பரேட் நிறுவங்கள் கொள்ளைக்கு அடியாளாக வேலை செய்யும் மத்திய – மாநில அரசிற்கும் மோடிக்கும் – ஸ்டாலினுக்கும் என்ன பெரிய வித்தியாசம் ? கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் மற்றும் அரசு சொல்லும் முன்னேற்றம், வளர்ச்சி, நாடு வல்லரசாகுகின்றது இனி யாரவது சொன்னால் முகத்தில் காரி உமிழ்வோம்.

நோக்கியா போர்டின் துரோகமும் தொழிலாளர்களை நட்டாற்றாறில் விட்ட நயவஞகமும்தான் நீங்கள் சொல்லும் வளர்ச்சியின் அளவுகோல். எனவே பறந்துர் புதிய விமானம் நிலையம் வருகை என்பது நமது வளத்தை வாழ்க்கையை சுற்றத்தை அழிக்கும் கொடூர திட்டம். திராவிட மாடலின் சமூக நீதி கார்ப்பரேட் வளர்ச்சியை உள்ளடக்கியது மக்களுக்கோ (பெண்களுக்கு) இலவச பேருந்து போன்ற குச்சி மிட்டாய் கணக்காய் சில்லறை சலுகைகளை வழங்க கூடியது. இப்படிப்பட்ட துரோகத்திற்கு முடிவு கட்ட மக்கள் அனைவரும் ஓர் அணியில் திரள்வோம்.

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி.
சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்கள்.
மக்கள் அதிகார தமிழ்நாடு – புதுவை.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குற்றவாளிகளான போலீஸ் உயரதிகாரிகள், கலெக்டர், துணை தாசில்தார் உள்ளிட்டோரை உடனடியாக கைது செய்! | மருது வீடியோ

துத்துக்குடி மக்களை சுட்டுக்கொன்றவன் இன்னும் பதவியில் இருக்கிறான். துப்பாக்கிச்சூட்டின் துரோகிகள் அம்பலப்பட்டுபோய் நிற்கிறார்கள்.

ஒரு அரசாங்கம் மக்களை ஸ்னைபர் gun-ஐ வைத்து சுடவேண்டிய அவசியம் என்ன? துணை தாசில்தாரிடம் தன் விருப்பம் போல அனுமதியை வாங்கியிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் திட்டமிட்ட படுகொலையை கோவில்பட்டியில் இருந்து அறங்கேற்றியிருக்கிறார்.

துத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கையின் மூலம் துரோகிகளை ரெட் பிக்ஸ் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் தோழர் மருது.

பாருங்கள்! பகிருங்கள்!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு! கார்ப்பரேட் கொள்ளைக்காக போலீசு நடத்திய வன்முறை! – அம்பலப்படுத்தியது அருணா ஜெகதீசன் அறிக்கை ! | மக்கள் அதிகாரம்

18.08.2022

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு!
கார்ப்பரேட் கொள்ளைக்காக போலீசு நடத்திய வன்முறை! – அம்பலப்படுத்தியது அருணா ஜெகதீசன் அறிக்கை !

குற்றவாளிகளான போலீஸ் உயரதிகாரிகள், கலெக்டர் , துணை தாசில்தார் உள்ளிட்டோரை உடனடியாக கைது செய்!

கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்திய வேதாந்தா என்ற கார்ப்பரேட் கம்பெனிக்காக போலீசும் அரசும் நிர்வாகமும் சேர்ந்து தூத்துக்குடி மக்களை காக்கை குருவிகளைப் போல சுட்டது. குறிவைத்து மார்பிலும் நெஞ்சிலும் போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

ஸ்டெர்லைட் கார்ப்பரேட் கம்பெனிக்கு எதிராக தொண்ணூற்று ஒன்பது நாட்கள் அமைதி வழியில் போராடிய மக்கள் நூறாவது நாள் நீதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றார்கள்.

“லட்சம் மக்கள் கூடுவோம் ஸ்டெர்லைட்டை மூடுவோம்” என்ற முழக்கத்தை முன்வைத்து திரண்ட மக்களுக்கு கிடைத்ததோ துப்பாக்கிச்சூடும் அரசு வன்முறையும் தான். மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன் உட்பட 13 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு தியாகி ஆனார்கள். சிலர் அடுத்தடுத்த நாட்களிலும் சில மாதங்களிலும் உயிரிழந்தார்கள். இத்தனை பேரை பலி கொடுத்தாலும் ஸ்டெர்லைட்டை மூடாமல் தியாகிகளின் உடல்களை வாங்க மாட்டோம் என்று உறுதியாக மக்கள் இருந்ததன் விளைவாக மட்டுமே ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது.


படிக்க : ஸ்டெர்லைட்டின் ஆணிவேரை அறுக்காமல் விடமாட்டோம் : தூத்துக்குடி மக்கள் போராட்டம் !


போலீசும் மாவட்ட நிர்வாகமும் சேர்த்து நடத்திய மாபெரும் அரசு வன்முறையை டி.வி.யில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று எகத்தாளமாக பேசினார் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ரஜினிகாந்தும், அன்றைய பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரும் – இன்றைய ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனும் துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தினர்.

இத்தனைக்குப் பிறகும் அனைத்து படுகொலைகளையும் மூடி மறைக்கவே அன்றைய அரசு முயன்றது. தொடர்ச்சியாக மக்கள் தமிழகம் முழுவதும் போராடியதன் விளைவாக வேறுவழியின்றி நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளை நெருங்கும் நிலையில் தற்பொழுது விசாரணை அறிக்கை வெளியாகியிருக்கிறது.

அப்போதைய தென்மண்டல ஐ.ஜி.சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

எவ்வித ஆத்திரமூட்டலும் இல்லாத நிலையிலும் போராட்டக்காரர்களை, போலீசார் மறைந்து இருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர் என்று அந்த அறிக்கை கூறியதன் மூலம் போராடிய மக்களை திட்டமிட்டு வேண்டுமென்றே அரசும் போலீசும் சேர்ந்து சுட்டுக் கொன்றது நிரூபணமாகிறது.

மக்களை சுட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இரண்டு துணை தாசில்தார்களிடம் விருப்பம் போல துப்பாக்கிச்சூட்டுக்கு ஆணையைப் பெற்று இருக்கிறது போலீஸ்.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் கலைந்து ஓடியவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது என்று பதிவு செய்துள்ள ஆணைய அறிக்கையின் வாயிலாக அரச பயங்கரவாதத்தை நம்மால் உணர முடிகிறது.

எந்த ஒரு போலீசாருக்கும் படுகாயம் ஏற்படவில்லை என்பதையும் அந்த அறிக்கை பதிவு செய்திருக்கிறது. ஆனால் படுகாயம் அடைந்தார்கள் போலீஸ் என்று, அன்று போலீஸ் நடத்திய நாடகத்துக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்தார்கள் என்பதும் இப்போது அம்பலமாகியுள்ளது.

போலீசாரின் துப்பாக்கிச்சூடு சம்பவம் கொடூரமான செயல் என ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

துப்பாக்கிக் குண்டு எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமலேயே போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர் என்றும், ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த போராட்டக்காரர்களை, பூங்காவில் ஒளிந்துகொண்டு போலீசார் சுட்டுள்ளனர் என்றும், அப்போதைய ஆட்சியர் வெங்கடேசன் தனது பொறுப்புகளை தட்டிக் கழித்துவிட்டு கோவில்பட்டியில் இருந்துள்ளார் என்பதையும் உறுதிசெய்கிறது அறிக்கை.

தொலைவில் இருந்து சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, உடற்கூராய்வு சோதனையில் உறுதியாகியுள்ளது என்றும், போலீசார் தங்களது வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர் என்பதை பதிவு செய்துள்ளது அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் போலீசு சுடலைக்கண்ணுவை வைத்து மட்டும் 17 ரவுண்ட் சுடவைத்திருக்கிறது போலீசும் நிர்வாகமும்.


படிக்க : சுடுகாட்டு ஜனநாயகம்! உறுதியாய் நின்ற மக்கள்! மக்களிடம் கற்போம்! ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடி நீதி பெறுவோம்!


ஒரே போலீசை 4 இடங்களில் வைத்து சுட வைத்ததன் மூலம், அவரை அடியாள் போல போலீசுத்துறை பயன்படுத்தியுள்ளதையும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

வேதாந்தா கார்ப்பரேட் கம்பெனிக்கு எதிராக போராடிய மக்களை பழிவாங்கிய இந்த அரசு வன்முறைக்கு காரணமான அத்தனை போலீஸ் உயர் அதிகாரிகளும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் மீதான விசாரணை பகிரங்கமாக நடத்தப்பட்டு உச்சபட்ச தண்டனை அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். அன்றைக்கு அரசின் தலைமை பொறுப்பில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரின் பங்கு குறித்து விசாரணை விரிவுபடுத்தப்பட வேண்டும்.

மேலும் ஸ்டெர்லைட்டை மூடுவதற்கான சிறப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்,

தோழர் வெற்றிவேல் செழியன்,

மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.

5G அலைக்கற்றையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்ற மோடி அரசு!

ந்தியா முழுவதும் பெரும் பேசு பொருளான 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை ஏழு நாட்களாக இணைய வழியில் நடந்து முடிந்து விட்டது. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா மற்றும் அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் மட்டும் இந்த ஏலத்தில் பங்கெடுத்துக் கொண்டன.

இந்த 5 ஜி அலைக்கற்றை ரூ.4.30 லட்சம் கோடி வரை ஏலம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 40 சுற்றுகள் நடந்தும் இந்த 5ஜி அலைக்கற்றை வெறும் ரூ.1,50,173 கோடி என்ற அடிமாட்டு விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. 5ஜி ஏலம் எதிர்பார்க்கப்பட்ட விலையை விட தாண்டி விட்டது என்றும், 3 ஜி ஏலத்தை விட மூன்று மடங்கு அதிகம் 4ஜி ஏலத்தை விட இரண்டு மடங்கு அதிகம் என்று மழுப்பிக் கொண்டிருக்கிறார் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைசவ். 5 ஜி அலைக்கற்றை என்பது 4ஜியை விட பத்து மடங்கு வேகமானது என்று அத்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்த அதிவேக தொழில்நுட்பத்தைத் தான் தனது எஜமான்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்றிருக்கிறார் மோடி.

மேலும், அதானி நிறுவனம் விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்காக மட்டுமே இந்த ஏலத்தில் பங்கெடுத்ததாகவும், வாடிக்கையாளர் சேவைக்காக இல்லை என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் இந்த ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. பிஎஸ்என்எல் நிறுவனம் ஒதுக்கப்படுவது இது ஒன்றும் முதல் முறையல்ல. இதற்கு முன்னர் பிஎஸ்என்எல் நசுக்கப்பட்ட வரலாற்றை சற்று திரும்பி பார்க்க வேண்டியுள்ளது.

1991களில் ‘புதிய தாராளமயமாக்கல்’ என்ற கொள்கை இந்தியாவில் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 1995இல் ‘தேசிய தொலைத்தொடர்பு கொள்கை (NTP)’ உருவாக்கப்பட்டது. அரசு வழங்கிக் கொண்டிருந்த தொலைதொடர்பு சேவையை பிடுங்கி தனியாரிடம் கொடுப்பதே இதன் உன்னதமான நோக்கம். ஆனால், ‘தொலைபேசி இணைப்பை மலிவு விலையில், உலகத் தரத்தில் கொடுப்பதே’ இதன் நோக்கம் என்று கதையளக்கப்பட்டது.


படிக்க: கல்வித் தனியார்மயத்தை ஒழிக்கும் வரை கள்ளக்குறிச்சிகள் ஓயாது!


இந்தியாவில் மொபைல் சேவைகளின் தொடக்க காலம் அது. மொபைல் சேவைகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அரசு துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மொபைல் சேவை வழங்க அனுமதிக்கப்படவில்லை. தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்க்கும் வரை பிஎஸ்என்எல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டது. கிட்டத்தட்ட கடுமையான போராட்டத்திற்கு பின்னரே 2002-ல் தான் பிஎஸ்என்எல் நிறுவனம் மொபைல் சேவைக்குள் அடியெடுத்து வைத்தது. இவ்வளவு நெருக்கடிக்குப் பிறகும் பிஎஸ்என்எல் ஊழியர்களின் தொடர் உழைப்பினால் பத்து பதினைந்து ஆண்டுகளிலே அனைத்து நிறுவனங்களையும் பின்னுக்குத் தள்ளி முன்னேறியது. ஆனால், 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் பிஎஸ்என்எல்-லின் வளர்ச்சிக்கு ஒரு முட்டுக்கட்டை போடப்பட்டது.

2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் 3ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது. ஏலம் விடுவதற்கு முன்பாகவே 3ஜி அலைக்கற்றையை ஒதுக்கியது காங்கிரஸ் அரசு. பின்பு, யார் அதிக விலைக்கு ஏலம் எடுக்கிறார்களோ அத்தொகையை கணக்கு செய்து பிஎஸ்என்எல் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. மேலும் WiMax தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான வயர்லேன் மற்றும் அதிவேக இன்டர்நெட் வசதிக்கான அலைகற்றைக்கும் மிக அதிக தொகை செலுத்த வேண்டியிருந்தது. இதனால் ரூ.17,000 – ரூ.18,000 கோடி வரை அந்நிறுவனத்தின் கையிருப்பு காலியானது.

இதனையடுத்து, 4ஜி அலைக்கற்றையை 2010ம் ஆண்டு ஏலம் எடுத்து இரண்டே ஆண்டுகளில் வாடிக்கையாளருக்கு சேவையை வழங்கிவிட்டது ஏர்டெல் நிறுவனம். 2016 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மோடியின் விளம்பரத்துடன் 4 ஜி சேவையை வழங்கியது. ஆனால் 12 வருடங்களாகியும் அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி சேவை வழங்க அரசால் தொடர்ந்து முட்டுக்கட்டை போடப்பட்டு வருகிறது.

குறிப்பாக, பிஎஸ்என்எல்-ஐ புத்தாக்கம் செய்யப் போவதாக மோடி அரசு 2019 ஆம் ஆண்டில் அறிவித்தது. இதற்காக 70,000 கோடி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தில் விருப்பு ஓய்வு, 4ஜி சேவை உள்ளிட்டவை இதில் அடங்கியிருந்தது‌. ஆனால் இத்திட்டம் அமல்படுத்துவதற்கு சில மாதங்கள் முன்பிருந்தே சரியான தேதியில் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்காமலும், ஒப்பந்த ஊழியர்களுக்கு 3-4 மாதங்களாக ஊதியம் வழங்காமலும் மோடி அரசு இழுத்தடித்தது. இது போன்ற நெருக்கடியால் 50% பேர் அதாவது 78,569 ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தை நாடினார்கள்.

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் கிடைத்தாலும் அதற்கான உபகரணங்களை வாங்குவதற்கு மோடி அரசு அனுமதி கொடுக்கவில்லை. இதற்கு அரசு வைத்த வாதம், “ஒரு பொதுத்துறை நிறுவனம் வெளிநாடுகளிலிருந்து உபகரணங்களை வாங்குவதென்பது தேச பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பதாகும்” என்றும் “நம் நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள்” என்றும் அத்திட்டத்தை ரத்து செய்தது. ஆனால் இந்த வாதம் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது; அவர்கள் மட்டும் 4ஜி உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். மேலும் இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இதுபோன்ற உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனம் இந்தியாவிலேயே இல்லை. பிஎஸ்என்எல்-க்கு தயாரித்துக் கொடுப்பதற்காக தற்போது டிசிஎஸ் (TCS) நிறுவனம் இதற்கான சோதனை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த சோதனை முயற்சி முடிந்து 4G உபகரணங்கள் பிஎஸ்என்எல்-ன் கைக்குக் கிடைப்பதற்குள் மற்ற நிறுவனங்கள் 5G சேவையை தொடங்கி விடுவார்கள்.


படிக்க: பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு !


பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்காகவே மோடி அரசால் கொண்டுவரப்பட்ட தேசிய பணமாக்கல் திட்டத்தின் மூலம் BSNL மற்றும் MTNL-க்கு சொந்தமான 14,917 மொபைல் டவர்கள் ஆப்டிக் பைபர்கள் ஆகியவற்றை வெறும் ரூ.40,000 கோடிக்கு விற்கப்பட்டது. விற்கப்பட்ட டவர்கள் அனைத்தும் கார்ப்பரேட்டுகளால் குறித்துக் கொடுக்கப்பட்டவை. இனி இவற்றைப் பயன்படுத்துவதற்கு பிஸ்என்எல் வாடகை செலுத்த வேண்டும். இதுவே தேசிய பணமாக்கல் திட்டத்தின் மகத்துவம்!

கார்ப்பரேட்டுகள் லாபம் கொழிப்பதற்கு பொதுத்துறை நிறுவனங்களை முடக்குவதில் காங்கிரஸ் பாஜக இடையே எந்தவித பாகுபாடுமில்லை‌. ஆனால், தன் அதானி-அம்பானி எஜமானர்களுக்காக இதை அதிதீவிரமாக செய்து வருகிறார் மோடி. 5ஜி அலைக்கற்றையை வழங்குவதன் மூலம் நாடு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டு இருக்கிறது என்று மோடி அரசு பீற்றீக் கொண்டிருக்கிறது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் மொபைல் சேவையிலிருந்து வெளியேற்றப்பட்டால் உழைக்கும் மக்களுக்கு பெருமளவு பாதிப்பு உண்டாகும். முதலில் தனியார் முதலாளிகளின் லாபவெறிக்கு எல்லையே இல்லாமல் போய்விடும். கார்ப்பரேட்களின் லாப வெறிக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் கடிவாளம் போட்டு வைத்திருக்கிறது. ஏனென்றால், 2021 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல்,வோடபோன் ஐடியா போன்ற தனியார் நிறுவனங்கள் 20-25% டேட்டா பேக்கின் விலையை உயர்த்தியது. ஆனால் பிஎஸ்என்எல் உயர்த்தவில்லை. மேலும் பிஎஸ்என்எல் புறக்கணிக்கப்பட்டால் 5ஜி போன்ற தொழில் நுட்பங்கள் மற்றும் மொபைல் சேவைகள் என்பது மேல்த்தட்டு மக்களுக்கு மட்டுமே சொந்தமாகிவிடும் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மலை கிராமங்களிலும், குக் கிராமங்களிலும், தனியார் முதலாளிகள் லாபம் ஈட்ட முடியாத இடங்களிலும் இன்றுவரை மொபைல் சேவையை வழங்கி வருவது பிஎஸ்என்எல் மட்டுமே.


ஹைதர்

கல்வித் தனியார்மயத்தை ஒழிக்கும் வரை கள்ளக்குறிச்சிகள் ஓயாது!

அரசு பயங்கரத்தை ஏவும் தி.மு.க. அரசே!
கல்வித் தனியார்மயத்தை ஒழிக்கும் வரை கள்ளக்குறிச்சிகள் ஓயாது!

ள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம், கனியாமூர் பகுதியில் உள்ள சக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவந்த மாணவி ஸ்ரீமதி விடுதியில் மர்மமான முறையில் இறந்தார். இம்மரணத்திற்கு நீதிகேட்டு பெற்றோர்கள், தன்னெழுச்சியாக திரண்ட மாணவர் – இளைஞர்கள் மற்றும் ஊர்மக்களால் முன்னெடுக்கப்பட்டப் போராட்டம் தீவிரமடைந்தது. தனியார் பள்ளி நிர்வாகத்தினை எதிர்த்து தமிழகத்தில் இதுவரை நடைபெறாத மாபெரும் போராட்டம் இது அமைந்தது.

இப்பள்ளிக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டம், அதைத் தொடர்ந்த விவாதங்கள், அரசின் அடக்குமுறை ஆகியவை நம்மிடம் பல கேள்விகளை முன்வைக்கிறது. மரணத்தில் பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும்போதும் போலீசும் அரசு நிர்வாகமும் உரிய நாளில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கலவரம் என்று சொல்பர்களின் நோக்கம் என்ன? நீதி கேட்டுப் போராடியவர்களை இந்த அரசு கொடூரமான ஒடுக்குவது ஏன்? என்பது போன்ற இக்கேள்விகளுக்கு விடை காண்பது அவசியமாகிறது.

***

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் – செல்வி ஆகியோரின் மகள் ஸ்ரீமதி. சக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த இவர், பள்ளி மாடியில் இருந்து குதித்துவிட்டார் என்று கூறப்பட்டது. பள்ளி நிர்வாகத்தால் ஸ்ரீமதி உயிரிழந்ததாகச் சொல்லப்பட்ட நேரமும் மருத்துவமனையில் சொல்லப்பட்ட நேரமும் முன்னுக்கு பின் முரணாக இருந்தது; ஸ்ரீமதி உடலில் கீறல்கள், இரத்த கரைகள் இருந்ததையும் கண்ட பெற்றோர், இந்த இறப்பு தற்கொலையால் நடந்தது அல்ல; பள்ளியும் சம்பந்தப்பட்டிருக்கிறது என உறுதியாய் நம்பினர்.

இதுகுறித்து பள்ளி தரப்பில் இருந்து எந்த பதிலும் வராததால், கோபமுற்ற உறவினர்களும் ஊர் மக்களும் மாணவியின் உடலை வாங்க மறுத்து பள்ளியை முற்றுகையிட்டனர். சிறிதளவில் தொடங்கிய இப்போராட்டம் சமூக வலைதளம் வாயிலாகப் பரவி தீவிரமடைந்தது. போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த பள்ளி நிர்வாகம், தற்கொலைக்கு முன்பு ஸ்ரீமதியால் எழுதப்பட்டது என்று கடிதம் ஒன்றை வெளியிட்டது. கடிதத்தில் இருப்பது ஸ்ரீமதியின் கையெழுத்தே இல்லை என ஸ்ரீமதி தாய் செல்வி மறுத்தார்.


படிக்க : கள்ளக்குறிச்சி விவகாரம்: போலீசுடன் கூட்டு சேர்ந்து மக்களை வேட்டையாடிய ராஜசேகர்! | வெற்றிவேல்செழியன்


நான்கு நாட்களாக அரசு, போலீசு தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததைக் கண்டு ஆத்திரமடைந்து தன்னெழுச்சியாக திரண்ட மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராடினார்; இப்போராட்டம் வன்முறையானது. பள்ளி வளாகத்தில் உள்ள வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கண்ணாடி சன்னல்கள் நொறுக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சியில் போராட்டம் தீவிரமடைந்ததன் பின்னணி என்ன?

முன் திட்டமிடல் இல்லாமல் குறுகிய காலத்திற்குள் இப்படிப்பட்டதொரு போராட்டம் சாத்தியமா? சாத்தியம். பிரச்சினையின் தீவிரம், போராட்டம் நடக்கும் களம் ஆகியவை இத்தகைய சூழலில் பங்காற்றுகிறது.

கள்ளக்குறிச்சி, நாமக்கல், சேலம், ஓமலூர், ஊத்தங்கரை உள்ளிட்ட சுற்றுவட்டாரம் என்பது தனியார் கல்வி நிலையங்கள் நிறைந்த பகுதியாகும். தமிழகத்தில் உள்ள 14 ஆயிரம் தனியார் பள்ளிகளில் கிட்டத்தட்ட 8,000 பள்ளிகள் இச்சுற்றுவட்டாரத்தில் உள்ளன.

இங்குள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மீதான ஒடுக்குமுறைகளும் அடக்குமுறைகளும் அதிகம்; கட்டண கொள்ளையால் பெற்றோர்களும் அலைக்கழிக்கப் படுவார்கள்; மாணவர் தற்கொலைகள் அதிகம் நடக்கும் பகுதி. தனியார் பள்ளிகளின் அட்டூழியங்களுக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்களும் முற்றுகைப் போராட்டங்களும் நடைபெற்ற பகுதி என்று விளக்குகிறார் நக்கீரன் பத்திரிகையின் மூத்த செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ்.

சான்றாக, 2007-ல் ஓமலூர் கிறித்துவ தனியார் பள்ளி ஒன்றில் ஸ்ரீமதி மரணத்தைப் போலவே மாணவி ஒருவர் உயிரிழந்தார். வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மாணவி இறப்புக்கு நீதி கேட்டு பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது. 2011-ல் ஊத்தங்கரையில் உள்ள பள்ளி ஒன்றில் நிர்வாக அலட்சியத்தால் மாணவர் ஒருவர் விபத்தில் இறந்தார். இங்கும் பெரியளவில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

ஸ்ரீமதி இறப்பு நடந்த இதே கள்ளக்குறிச்சியில், 6 ஆண்டுகளுக்கு முன்பு அடிப்படைக் கட்டமைப்பு வசதியில்லாத எஸ்.வி.எஸ். மருத்துவ கல்லூரியின் நிர்வாகத்தைக் கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகிய 3 மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர். அதற்கு முன்பும் இக்கல்லூரியில் அடிப்படை வசதிக்காகவும், கட்டண கொள்கைக்கு எதிராகவும் பல போராட்டங்கள் நடந்துள்ளன.

தற்போது ஸ்ரீமதி மரணமடைந்த இந்த பள்ளியும் இதற்கு விலக்கல்ல. சில கால இடைவெளியில் இப்பள்ளியிலும் பல மாணவர்கள் இறந்துள்ளனர். பள்ளி வாகனம் மோதி ஒரு மாணவி உயிரழந்துள்ளார். கட்டிட சுவர், கூரை இடிந்து விழுந்து பல மாணவர்கள் தங்கள் கை, கால்களை இழந்துள்ளனர்.

ஆக, கள்ளக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், தனியார் பள்ளி நிர்வாகத்தின் அராஜகத்தையும் அட்டூழியத்தையும், மாணவிகள் மீதான பாலியல் தொல்லைகளையும், கட்டண கொள்ளையையும் நேரில் உணர்ந்தவர்கள்; தனியார் பள்ளிகளால் தங்களது பிள்ளைகளையும், சகோதர சகோதரிகளையும் இழந்தவர்கள்; நிர்வாகத்தை எதிர்த்தப் போராட்ட அனுபவமும் அவர்களுக்கு உண்டு. இவைதான் ஸ்ரீமதிக்கு நீதி வேண்டி தொடங்கப்பட்டப் போராட்டத்தில், குறுகிய காலத்துக்குள் ஆயிரக்காணோரை திரண்டெழச் செய்தது.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் திட்டமிட்ட வன்முறையா?

இங்கும் அதே கேள்விதான்; வேறு தொனியில் கேட்கப்படுகிறது. மாணவர்கள், இளைஞர்களால் மட்டும் இத்தகைய போராட்டத்தை நடத்தியிருக்க முடியுமா? இவர்களுக்கு பின்னே நிச்சயமாக அமைப்புகள் உள்ளன என்கிறார்கள்.

“மாணவி மரணத்தில் பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்டிருப்பதை மூடிமறைக்கதான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. இப்படிப்பட்டதொரு கலவரத்தை நடத்தியுள்ளது” என முற்போக்காளர்கள் பலரும் கூறினர். “அமைதியான வழியில் நடந்துகொண்டிருந்தப் போராட்டத்தில் வன்முறையாளர்கள் புகுந்துவிட்டார்கள்” என போலீசும் கூறியது.

பள்ளி முன்பு கூடியவர்களுக்கு கலவரம் செய்வது, கொள்ளையடிப்பது மட்டுமே நோக்கமென்றால், போராட்டத்தன்று வீடியோ எடுத்திருக்க மாட்டார்கள்; அப்பள்ளி முதல்வர் அறையில் ஆணுறைகள் கிடந்ததை அம்பலப்படுத்தியிருக்கமாட்டார்கள். சரி, தடயங்களை அழிக்க வந்த ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.காரர்கள் என்றால், இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் வந்து அழித்திருக்கலாமே. பட்டப்பகலில் ஒட்டுமொத்த பள்ளியையே சூறையாடிதான் தடயங்களை இல்லாமல் செய்திருக்கவேண்டுமா என்ன?

மேலும் இப்பள்ளியை வைத்து சிறுபான்மை மக்களுக்கு எதிராக எவ்வித கலவரங்களையும் தூண்டமுடியாத நிலையில், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. ஏன் இவ்வன்முறையை நிகழ்த்த வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

தனியார் பள்ளி நிர்வாகத்தினை எதிர்த்து தமிழகத்தில் இதுவரை நடைபெறாத மாபெரும் போராட்டம் இது. 2021 ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த மிகப்பெரிய போராட்டமும் இதுவே. இப்பட்டதொரு போராட்டத்தினை அரசு கொஞ்சம்கூட எதிர்ப்பார்த்திருக்காது.

அரசின் பாராமுகம் காரணமாகவே போராட்டம் தீவிரமடைந்தது என்பது விவாதப் பொருளானால் தங்களது சமூக நீதி ஆட்சி விமர்சனத்திற்குள்ளாக்கப்படும் என்பதால் தி.மு.க ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பவர்கள் “ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. திட்டமிட்டு நடந்திய கலவரம்” என்பதை பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

கடந்தாண்டு பெண் தொழிலாளர்கள் பெருமளவில் திரண்டு நடத்திய ஃபாக்ஸ்கான் போராட்டத்தையும் தி.மு.க விரோத சக்திகள் பரப்பிய வதந்தி என்று இதே திராவிட மாடல் ஆதரவாளர்கள் கூறியதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

மாணவர்கள், இளைஞர்கள் மீதான ஒடுக்குமுறை ஏன்?

சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையைக் கண்டித்து தனியார் பள்ளிகளை காலவரையறையின்றி மூடப்போவதாக அறிவித்தார் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் நந்தகுமார். எங்கே தனியார் பள்ளிகளுக்கு எதிரான போராட்டங்கள் பரவினால், சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நிலைமை மற்ற பள்ளிகளுக்கு வருமோ என்று அஞ்சியதன் வெளிப்பாடாக அது இருந்தது.


படிக்க : உண்மையை சொன்னா கொன்னுருவாங்க – கதரும் கள்ளக்குறிச்சி மக்கள் | மருது வீடியோ


தனியார் பள்ளியின் மீது புகார் வந்திருந்தும் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஏனென்றால், தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளிலும் தனியார் பள்ளிகளை நடத்தி கொள்ளை லாபம் பார்க்கும் ‘தனியார் பள்ளி முதலாளிகளாக’ உள்ளனர் என்பதே தி.மு.க.வின் மௌனத்திற்கு காரணம். இவர்களின் வர்க்க பாசம்தான் தனியார் பள்ளிகளின் அரணாக இருந்து சேவையாற்றி வருகிறது. ஆக, திராவிட அரசும் தனியார்மயம் தாராளமயத்திற்கு எதிரானதல்ல என்பது நிரூபனமாகிறது.

நீதித்துறை, போலீசுத்துறை உள்ளிட்டவை கள்ளக்குறிச்சியில் நடந்தது திட்டமிட்ட கலவரம் என்கிறது. கலவரத்திற்கு பின்னணியில் இருப்பவர்களை சிறப்புப் படை அமைத்து ஒடுக்கவேண்டும் என்கிறது சென்னை உயர்நீதிமன்றம். தனியார் பள்ளிகளுக்கு எதிரான போராட்டங்களைப் பற்றியே இனி யாரும் யோசிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசு எந்திரம் செயல்படுகிறது.

போராட்டகளத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்களின் எண்களை வைத்தும் வீடியோவில் தெரியும் நபர்களின் அடையாளங்களை வைத்தும் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பலர் ‘பாத்ரூம்மில் வழுக்கி விழுந்துவிட்டார்கள்’’ என்று கூசாமல் பொய் சொல்கிறது போலீசு. மெரினா, பச்சையப்பன் கல்லூரி உள்ளிட்ட மாணவர்கள் அதிகளவில் கூடும் இடங்களில் போலீசு படையை குவித்துவைத்துள்ளது. வலைதளங்களில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தவர்களை வலைவீசி தேடி வருகிறது.

தனியார் பள்ளிக்கு அச்சுறுத்தும் இப்படிப்பட்டதொரு போராட்டம் இனி நடைபெறக் கூடாது என்பதே இத்தகைய அவதூறுகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் காரணம். ஆனால், எரிவதைப் பிடுங்காமல் கொதிப்பது அடங்காது. தனியார் பள்ளிகள் மாணவர்கள் மீது நடத்தும் ஒடுக்குமுறைகளுக்கு முடிவு எழுதப்படும் வரை, ஒட்டுமொத்த தனியார் பள்ளிகளையும் அரசுடைமையாக்கும் வரை கள்ளக்குறிச்சிகள் தொடரும்…


ரவி

திரௌபதி முர்மு, இளையராஜா: பதவி வேண்டுமா? துரோகம் செய்!

ழங்குடியினப் பெண்ணான திரௌபதி முர்முவை ஆதரிக்காமல் உயர்சாதியைச் சேர்ந்த சின்ஹாவை ஆதரிப்பதுதான் சமூக நீதியா என்று பா.ஜ.க. அண்ணாமலை முதல் எடப்பாடி பழனிச்சாமி, பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் வரையிலான ‘புதிய சமூகநீதியின்’ திருமுகங்கள் கொப்பளித்தன.

மகாராஷ்டிரத்தில் ஏக்நாத் ஷிண்டே மூலம் சிவசேனாவை உடைத்து ஆட்சியைக் கலைத்த பா.ஜ.க.வின் வேட்பாளருக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு தெரிவித்தார். இதுவரை மோடியை கடுமையாக விமர்சித்து வந்த சந்திரபாபு நாயுடுவும் முர்முவை ஆதரித்திருக்கிறார். இவர்கள் தவிர அசாம் மாநிலம் உட்பட சில மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் முர்முவுக்கு ஆதரவாக வாக்களித்து இருக்கின்றனர்.

பழங்குடியின பெண் வேட்பாளரை ஆதரிக்காமல் போனால், பழங்குடிகள் மத்தியில் தங்கள் வாக்கு வங்கிகளை இழந்துவிடுவோம் என்று அஞ்சிய எதிர்க்கட்சிகளில் ஒரு பிரிவினர் முர்முவை ஆதரித்தார்கள், மற்றொரு பிரிவினர் முர்முவை எதிர்க்கவில்லை.

எனவே முர்மு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வென்றார். குடியரசுத் தலைவராகும் முதல் பழங்குடியினப் பெண், இளம் வயது குடியரசுத்தலைவர், குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்கும் இரண்டாவது பெண் ஆகிய பெருமைகள் வழிய பதவியேற்றுக்கொண்டார்.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிசக் கும்பல் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் யாரை நிறுத்தும் என்ற ஊகங்கள் முன்னரே கிளம்பி இருந்தன. வெங்கையா நாயுடுவை குடியரசுத்தலைவர் வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் தென்மாநிலங்களில் தன்னுடைய பலத்தைப் பெருக்கிக்கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 100 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்திருக்கும் இந்துத்துவ பாசிச இயக்கத்தின் ஒவ்வொரு நகர்வும் எங்கே அடித்தால் சரியாக விழுமோ அதை நோக்கியே இருப்பது போல இப்போதும் இருந்திருக்கிறது.

***

ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டம், உபர்பேடா என்ற மிகவும் பின்தங்கிய கிராமத்தில் பிறந்த முர்மு, இக்கிராமத்தில் இருந்து கல்லூரி சென்ற முதல் பட்டதாரி ஆவார். ஆசிரியர்; 1997-ம் ஆண்டு கவுன்சிலர்; 2000, 2004-ம் ஆண்டுகளில் இருமுறை சட்டமன்ற உறுப்பினர்; பிஜூ ஜனதா தளம் – பா.ஜ.க. ஆட்சியில் அமைச்சர், ஜார்கண்ட் மாநில ஆளுநர் எல்லாவற்றையும் தாண்டி பா.ஜ.க.வின் பழங்குடியின பிரிவு தலைவராகவும் இருந்தவர் திரௌபதி முர்மு.

இவர் ஜார்கண்ட் மாநில ஆளுநராக பதவி வகித்த (2015 – 2021) காலத்தில், பழங்குடி இன மக்களின் மீது மத்திய – மாநில அரசுகள் நடத்திய அரசு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வழிகாட்டியாக இருந்தார். குறிப்பாக, 2018-ல் பலாமு புலிகள் சரணாலயம் அமைந்திருக்கும் பகுதியில் புலிகள் மற்றும் விலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற காரணத்தை வைத்துக்கொண்டு எட்டு பழங்குடி கிராமங்களை காலி செய்ய வேண்டும் என்று அரசு கூறியபோது பழங்குடியினப் பெண்ணான முர்மு ஏழை பழங்குடியினருக்கு ஆதரவாக இருந்தாரா என்ன?


படிக்க : இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை : மோடியின் கூட்டாளி முர்முவுக்கு கவர்னர் பதவி !


பாரம்பரியமாக வாழ்ந்த நிலத்தை விட்டுச் செல்லும் மக்களுக்கு 10 லட்ச ரூபாய் அல்லது 5 ஏக்கர் நிலம் என்று பரிந்துரைத்தாலும், ஜார்க்கண்ட் அரசிடம் நிலம் இல்லாததால் 10 லட்ச ரூபாயை வீசியெறிவோம் எடுத்துக்கொண்டு ஓடிப்போய்விடு என்று உத்தரவிட்ட மாநில அரசின் ஆளுநராக இருந்தவர் அவர் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.

2019-ல் பழங்குடிகளின் நிலத்திலிருந்து விரட்டும் ஒன்றிய அரசுக்கு எதிராக, அரசியலமைப்பு சட்டத்தில் பழங்குடிகளின் நில உரிமையை வலியுறுத்தும் பிரிவுகளை ஒவ்வொரு கிராமத்திலும் நடுகல்லாகச் செதுக்கிவைத்து தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்தனர் ஜார்கண்ட் பழங்குடிகள். மாபெரும் பதல்காடி இயக்கம் என்றழைக்கப்படும் இப்போராட்டத்தை ஒடுக்க 10,000 பழங்குடியினர் மீது தேசத்துரோக வழக்குகளை மாநில அரசு பதிவு செய்தபோதும் அம்மாநில ஆளுநராக தொடர்ந்தவர் முர்மு.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான பழங்குடி மக்களின் நிலம் கனிம வளமிக்கது. அந்த கனிமவளங்களை அதானி போன்ற கார்ப்பரேட்டுக்கு வாரிக்கொடுத்து விடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒன்றிய – மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. பழங்குடி மக்களிடமிருந்து நில உரிமையைப் பறிக்க முயன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக பிரிட்டிஷ் ஆட்சி காலம் முதலே வீரஞ்செறிந்துப் போராடி வருபவர்கள் பழங்குடிகள். அம்மக்களின் கோரிக்கைக்காக தோள் கொடுத்துப் போராடிவரும் மாவோயிசப் போராளிகளை ஒடுக்குவது என்ற பெயரில் கொல்லப்பட்ட, சித்திரவதை செய்யப்பட்ட பழங்குடியின மக்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது.

நில உரிமையிலும் சுயமரியாதையிலுமே பழங்குடி மக்களின் கவுரவம் இருக்கிறது. முர்மு குடியரசுத் தலைவரானதில் இல்லை. சொல்லப்போனால் தங்களின் நில உரிமையை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் பணியை – கார்ப்பரேட் அடியாள் வேலையைத் திறம்பட மேற்கொண்ட முர்முவுக்கு கிடைத்ததே இப்பதவி.

***

இளையராஜாவின் இசையை ரசிக்காதவர் யாருமுண்டோ எனும் அளவுக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பிரபலமானவர் அவர். கடந்த மாதம் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டுப்பேசினார். அதற்கெதிராக கடும் கண்டனங்கள் எழுந்த நிலையிலும் தன்னுடைய கருத்தை வாபஸ் பெற முடியாது என்று உறுதியாக இருந்தார். இளையராஜாவின் பிற்போக்குத்தனமான அரசியலைப் புறந்தள்ளி அவரது இசைக்கு அடிமைகளாக இருந்தவர்கள் கூட அவருக்கு எதிராக கருத்து சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

இளையராஜா தலித் என்பதால் அவரை விமர்சனம் செய்கிறார்கள் என்று சிலர் தங்கள் அடையாள அரசியலின் இழிநிலையை வெளிப்படுத்திக்கொண்டனர். இளையராஜாவுக்கு பம்பர் பிரைஸ் (Bumper Prize) கிடைக்கும் என எதிர்பார்த்தபடியே இம்மாதம் மாநிலங்களவை எம்.பி. பதவியை பா.ஜ.க. அளித்துள்ளது.

இளையராஜாவின் இசை அறிவுக்கு அடிப்படையே இந்த நாட்டின் உழைக்கும் மக்கள்தான். அவரது அண்ணன் பாவலர் தன் தம்பிகளுடன் கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளிலும் பல கிராமங்களுக்குச் சென்று பெற்ற அறிவு அது. ஆனால் அந்த இசை அறிவுக்கு தனக்கு மட்டுமே சொந்தம் என்றும் கடவுள் தனக்கு அளித்த வரம் என்று பிதற்றிக்கொண்டு இருக்கும் ‘ஞானி’ அவர்.

தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்திருந்தாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான பார்ப்பனீய தீண்டாமைக்கெதிராகவும் ஆதிக்க சாதியினரின் வன்முறைக்கு எதிராகவும் சிறு துரும்பையும் கிள்ளிப்போடாதவர். திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டவரின் வாயில் மலத்தைத் திணித்த போதும், கொடியங்குளத்தில் வீடுகள் சூறையாடப்பட்ட போதும், மாஞ்சோலையில் தாமிரபரணியில் தள்ளிவிடப்பட்டு ஆற்றிலேயே அடித்துக் கொல்லப்பட்டபோதும் என்ன செய்தார் இளையராஜா? ஆதிக்க சாதிகளின் அடக்குமுறைக்கு எதிராக ஏன் பேச மறுத்தார் என்பதில்தான் இளையராஜாவின் பார்ப்பனீய அடிமைத்தனம் இருக்கிறது.


படிக்க : ஒடிசா : ஜிண்டால் எஃகு ஆலைக்கு எதிராக போராடும் பழங்குடி மக்கள் – அடக்குமுறைகளை ஏவும் பாசிச அரசு !


ஜெயராஜ் – பென்னிக்ஸ் காவல் படுகொலை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு போன்ற அரச வன்முறைக்கு எதிராக வாய்திறக்காமல் அமைதியாக இருந்த இசைஞானிக்குத்தான் கோடிக்கணக்கானோர் ரசிகர்கள் என்பது தமிழகத்தின் இழிநிலை.

தன்னை தலித் என்று யாராவது கூறினால் கடுமையாக எதிர்க்கும் இளையராஜா, திருவண்ணாமலை கோயிலுக்கு கோபுரம் கட்டுவதற்கு சில இலட்சங்களைக் கொடுத்தார். ஆனால் அக்கோயில் கும்பாபிஷேகத்துக்கூட வரக்கூடாது என்று பார்ப்பனர்கள் இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு செய்து முடித்தார். மனமுருகத் திருவாசகத்திற்கு இசையமைத்த ராஜாவுக்கு, திருவாசகத்தைப் பாட அடிபட்டு, உதைபட்டுப் போராடி இறந்த போன ஆறுமுகசாமியைப் பற்றி தெரியாமலிருந்திருக்குமா என்ன?

எல்லா நிகழ்வுகளுக்கு ஒருவர் பதில் சொல்லித்தான் ஆகவேண்டுமா? கருத்துச் சொல்லாதவர்கள் எல்லாம் குற்றவாளியா? என்று யாரும் எதிர் கேள்வி கேட்கலாம். ஆனால் நமது கேள்வி என்னவென்றால், எதற்கும் வாய்திறக்காத இளையராஜாவுக்கு மோடியோடு அம்பேத்கரை இணைத்துப் பேசமட்டும் எப்படி வாய்வருகிறது என்பதுதான். மேலும் இளையராஜாவின் மகனான யுவன்சங்கர் ராஜா இசுலாமியராக மாறியபோது, அது தனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தாரே, அதுவே அவர் யாருக்காக சிந்தித்தார் என்பதைக் கூறும்.

***

தாழ்த்தப்பட்ட, பழங்குடி, சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களில் எவர் ஒருவர் அம்மக்களுக்கு எதிராகவே காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு அடியாள் வேலை பார்க்கிறாரோ, எந்த அளவு அம்மக்களுக்கு துரோகம் செய்கிறாரோ, அந்த அளவுக்கு பதவிகளையும் வெகுமானங்களையும் பா.ஜ.க. அள்ளி வீசும். அப்படித்தான் அர்ஜுன் சம்பத், கிருஷ்ணசாமி, எல்.முருகன், முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோர் வெகுமதிகளையும் பதவிகளையும் பெற்றிருக்கின்றனர்.

குஜராத் கலவரத்துக்குப் பின்னர் உலக அளவில் இந்தியாவுக்கு ஏற்பட்ட தலைகுனிவை சரிக்கட்ட அப்துல்கலாம் பா.ஜ.க.வால் குடியரசுத் தலைவராக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த, பா.ஜ.க.வின் நடவடிக்கைகளை எதிர்த்த கே.ஆர்.நாராயணனுக்கு எதிராக கலாம் நிறுத்தப்பட்டார். குஜராத் உள்ளிட்ட பல பகுதிகளில் நடத்தப்பட்ட முசுலீம் மக்களின் படுகொலைகளை மூடி மறைத்து இசுலாமியரின் ரத்தக்கவுச்சியை நுகர்ந்தபடிதான் குடியரசுத் தலைவர் ஆகமுடியும் என்ற உண்மையை நன்கு அறிந்தவர் கலாம்.

அவர் இறந்த பின்னர் “ஒரு கையில் கீதையும் மறுகையில் ஏவுகணையும் வைத்திருந்தவர்” என்று ஆர்.எஸ்.எஸ். ஊடகத்தால் பாராட்டப்பட்டவர். தன்னுடைய பிழைப்பிற்காக எதையும் எப்போதும் செய்யத்துணிந்தவராக இருந்ததால்தான் அவரால் குடியரசுத்தலைவராக முடிந்தது. அந்த துரோக வரிசையில் தற்போது திரௌபதி முர்முவும் இளையராஜாவும்!


மருது

கோவை: அரசு கலை அறிவியல் கல்லூரியில் அதிகார வெறியும் சாதிய வன்மமும்!

கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில்(தன்னாட்சி) தமிழ்த்துறையில் உதவி பேராசிரியராக முனைவர் ப.ரமேஷ் பணியாற்றி வருகிறார். அவர் மீது புகார் எழுந்த நிலையில் மே மாதம் 27ம் தேதி சிவகாசி அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.

தன்மீது தவறு ஏதும் இல்லையென்று நீதிமன்றத்தின் மூலம் தடை ஆணை பெற்று கோவையிலுள்ள தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் Deputation ஆக பணியாற்றி வருகிறார். வருகை பதிவேடு, சம்பளம் போன்ற தேவைக்காக இதுவரை பணிபுரிந்த அதே கல்லூரிக்கு சென்று வருகிறார்.

25.07.2022 அன்று கல்லூரிக் கல்வி இயக்குநர் அவர்கள், கோவை அரசு கல்லூரி முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் முனைவர் ப. ரமேஷ் மீது எழுந்துள்ள புகாரை “விசாகா வழக்கு” அடிப்படையில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க கோரப்பட்டது.

இந்நிலையில், 11.08.2022 அன்று விசாரணைக்காக கோவை அரசு கல்லூரிக்கு முனைவர் ரமேஷ் வந்துள்ளார். அப்போது அவர் மீது புகார் கொடுத்த முனைவர் ராஜ ராஜேஸ்வரி மற்றும் அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில தலைவர் முனைவர் வீரமணி தலைமையில் 30 க்கும் மேற்பட்ட பேராசியர்கள் முனைவர் ரமேஷ் என்பவருக்கு எதிராக கோசமிட்டனர்.


படிக்க : கோவை மலுமிச்சம்பட்டி : 15 வருட கால மனு கொடுக்கும் போராட்டம் ! கற்றுக்கொடுத்தது களப்போராட்டமே !


அதே நேரத்தில் முனைவர் ரமேஷ்-க்கு ஆதரவாக அவருடைய நெறியாளுகையில் கீழ் பயிலும் பி.எச்.டி இரு மாணவிகள் மற்றும் தமிழ்த்துறையை சேர்ந்த இரு ஆய்வு மாணவிகளும் போராடினர். முனைவர் ரமேஷ் மீது எவ்வித தவறும் இல்லை, இக்கல்லூரியில் சாதிய பாகுபாடு பார்க்கின்றனர், ஊழல் முறைகேடுகளை தட்டிக்கேட்டதற்கு அவரை பழிவாங்கும் நோக்கத்தில் வெளியேற்றியுள்ளனர் என்று கூறினர்.

அடுத்த நாள் காலை இந்த 4 மாணவிகள் மற்றும் ஒரு மாணவியின் தாயாருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் போராடினர். கலைந்து செல்லாவிட்டால் கைது செய்வதாக போலிசு மிரட்டிய பின்னரும் “கலெக்டர் எங்களை வந்து சந்திக்க வேண்டும்” என உறுதியாக நின்றனர். பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து “நேர்மையாக விசாரணை நடத்தி தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும்” என்று கடிதம் கொடுத்துள்ளனர்.

***

அருணா என்ற மாணவி 01.07.2019 முதல் முனைவர் அ. ராஜ ராஜேஷ்வரி நெறியாளுகையின் கீழ் “கொங்கு வட்டார புதினங்களில் வெளிப்பட்டுள்ள சாதிய ஆணாதிக்க அதிகாரங்கள்” என்ற தலைப்பில் முழுநேர ஆய்வு படிப்பை மேற்கொண்டு வந்துள்ளார்.

மாணவி மிகவும் பிற்ப்படுத்தபட்ட  சமூகத்தை (MBC) சேர்ந்தவர், சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளார். மாணவியின் ஆய்வுக் கட்டுரையை படித்த போது கணவரின் சாதியை சுட்டிக்காட்டி “அந்த சாதி இழிந்த சாதி என்பதால் நீ இம்மாதிரி எழுதுகிறாய்” என்றும், “உன் ஆய்வு தவறானது நான் நெறியாளராக இருக்க மாட்டேன் வேறு நெறியாளரை மாற்றிக்கொள்” என்று கூறிவிட்டு “நீ முனைவர் பட்டத்தை எப்படி முடிக்கிறாய் என்று பார்க்கிறேன்” என்றும் கவுண்டர் சாதிய வன்மத்துடன் பேசியுள்ளார்.

அருணா என்ற மாணவியின் ஆய்வு படிப்பை ரத்து செய்ய கடிதம் கொடுத்து தனது சாதிய வன்மத்தை கக்கியுள்ளார். ஆய்வு படிப்பை கற்பிக்கும் ஆசிரியருக்கே மாணவி கட்டுரை எழுதிக் கொடுத்து அதனை ஆசிரியரின் பெயரில் பதிவிட்டு கொண்ட கேலிக்கூத்தும் அரங்கேறியுள்ளது.

இம்மாணவி எம்.பில் செய்த பேராசிரியரான ப.ரமேஷ் என்பவரிடம் பி.எச்.டி ஆய்வு படிப்பை தொடர கல்லூரி ஒப்புதல் அளித்துள்ளது. இதனடிப்படையில் 04.04.2022 பின் பேராசிரியர் ரமேஷ் என்பவரிடம் ஆய்வு படிப்பை தொடர்ந்துள்ளார்.

முனைவர் ராஜ ராஜேஷ்வரி 08.04.2022 தேதியிட்டு உயர்கல்விச் செயலர் அவர்களுக்கு மாணவியை முனைவர் ரமேஷுடன் தொடர்புபடுத்தி அவரை கல்லூரியை விட்டு துறத்த திட்டமிட்டு புகார் கடிதத்தை அனுப்பினார். அதன் பெயரில் கல்வி இணை இயக்குநர் உலகி என்பவர் தலைமையில் உறுதி செய்யப்படாத குற்றத்தை நிரூபிக்க வேண்டி விசாரணையை நடத்தி ரமேஷ் என்பவரை பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.

மாணவியை விசாரிக்கும் போது, “தங்களுக்கும் முனைவர் ரமேஷ் அவர்களுக்கும் என்ன தொடர்பு? உறவினரா? நண்பரா?” என்று கேட்டுள்ளனர். இதே போல் முனைவர் ரமேஷிடமும் கேட்டுள்ளனர். விசாரணையில் 18 பேராசிரியர்கள் கலந்துக்கொண்டதில் 11 பேராசிரியர்கள்(பெண் பேராசிரியர்கள் உட்பட) முனைவர் ரமேஷ் மீது எவ்வித தவறும் இல்லையென எழுதிக் கொடுத்ததாக கூறியுள்ளனர். அவரை எப்படியாவது கல்லூரியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற வன்மத்துடன் விசாரணை நடைபெற்றுள்ளது உறுதியாகிறது.

***

முனைவர் ரமேஷ் என்பவர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர். அவர் கல்லூரியின் துணைத் தேர்வு கட்டுப்பாடு அலுவலராகவும், கல்லூரியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் துணைத் தலைவராகவும், யூஜிசி கல்வி உதவித்தொகை மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ஆகியவற்றிற்கான நோடல் அலுவலராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

மேலும், ஒற்றை பெண் குழந்தை கல்வி உதவித்தொகை (Single girl child scholarship), யுனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர் கல்வி தொகை பெற மாணவர்களுக்கு தன்னார்வ வழிகாட்டியாக செயல்பட்டு வந்துள்ளார். பல மாணவர்கள் அவரை சந்தித்து உரையாடுவதும், ஆலோசனை பெறுவதும் இவர் மாணவர் நலனில் அக்கரைக்கொண்டவராக செயல்பட்டு வந்தது தெரிகிறது.

இக்கல்லூரியில் இவரும் இவரது நண்பரும் மாணவர்களிடம் முற்போக்கான கருத்துக்களை கூறுவது மற்றும் மாணவர்கள் மத்தியில் ஜனநாயகமாக நடந்து கொள்ளும் பண்பு போன்றவற்றால் இந்த கல்லூரி நிர்வாக கட்டமைப்பு எதிர்ப்பதை இந்நிகழ்வின் மூலம் உணர முடியும்.

கடந்த வருடம் 31.10.2021-ல் பொறுப்பேற்று கல்லூரி முதல்வராக இருக்கும் முனைவர் கலைச்செல்வி அவர்களிடம் சென்று ராஜ ராஜேஷ்வரி  “நானும் நீங்களும் ஒரே சமூகத்தை(கவுண்டர்) சேர்ந்தவர், இங்கு எஸ்.சி சாதியினர் ஆதிக்கம் அதிகமாக உள்ளது, இவர்களை இதற்கு முன்னால் இருந்த முதல்வர் சித்ரா வளர்த்து சென்றுள்ளார் நீங்கள் அவ்வாறு செய்ய கூடாது” என்று தனது கவுண்டர் சாதியத் திமிரை வெளிப்படுத்தி நிர்வாகத்தில் உள்ள sc சமூகத்தினரை ஒழித்து கட்ட கல்லூரி முதல்வரிடம் கோரியுள்ளார்.

முனைவர் கலைச்செல்வி ஆதிக்க சாதியாக இருந்தாலும் முற்போக்கு கருத்து பேசும் குடும்பப் பின்புலம் இருப்பதால் ராஜேஷ்வரி கூறியதை உயர்கல்வி துறை செயலருக்கு கடிதமாக எழுதி அனுப்பியுள்ளார். இதனை முனைவர் ரமேஷ் RTI மூலம் பெற்றிருக்கிறார்.

தமிழ்த்துறை தலைவர் பூங்கொடி (பட்டியலின சமூகம்) வகுப்பிற்கு முறையாக செல்லாமலும் கேள்வி கேட்கும் மாணவர்களை மிரட்டியும் வந்துள்ளார். “பாடம் எடுக்காமல் ஏமாற்றிக்கொண்டிருக்கும் பூங்கொடி, ஜோதி, சிவகாமி ஆகியோர்களை வேலையை விட்டு துறத்துங்கள்” என்று மாணவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கடிதம் எழுதி cm cell-ற்கு அனுப்பியுள்ளனர். முனைவர் பூங்கொடி வகுப்பில் பேசும்போது “cm cell address-யே தெரியாது, கலெக்டர் எப்படி உட்கார்ந்திருப்பார் என்று கூட தெரியாது நீ எல்லாம் பேசுவியா?” என்றும் “UG படிக்கும் போது எவ்வளவு மார்க் எடுத்தாலும் PG சேர விடமாட்டேன்” என்றும் அதிகார வெறிபிடித்த திமிரோடு மாணவர்களிடம் பேசியுள்ளார்.

கடந்த வருடம் நவம்பர் 20-ம் தேதி ரகுநாதன் என்ற பேராசிரியர் மீது மாணவிகளால் பாலியல் புகார் கொடுக்கப்பட்டது. அவருக்கெதிராக மாணவர்களின் போராட்டத்திற்கு பின் கைது செய்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்போது அவர்மீது பாலியல் புகார் நிரூபிக்கப்படவில்லை என்று மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் கடிதத்தை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளார். இவ்விசயம் தெரிந்ததும், பேராசிரியர் ரகுநாதன் துறையை சேர்ந்த முன்னாள் மாணவிகள் “மீண்டும் ரகுநாதன் கல்லூரிக்கு வந்தால் இதுவும் ஒரு கள்ளக்குறிச்சியாக மாறும்” என எச்சரிக்கை கடிதம் எழுதியுள்ளனர்.

கல்லூரியில் முன்னாள் முதல்வர் சித்ரா என்பவர் பணிபுரிந்த காலத்தில் தாவரவியல் துறைக்கு யூஜிசி அளித்த ஆராய்ச்சிக்கான 41 லட்சம் ரூபாய் நிதி சரியாக கையாளப்படவில்லை. இவர் பதவி வகிக்கும் போது முதல்வர் அலுவலக 3 நாற்காலிகளை தலா ரூ.33 ஆயிரம் என ரூ.99 ஆயிரம் கொடுத்து வாங்கியதாக் கணக்கு காட்டியுள்ளனர். அதனால் முன்னாள் முதல்வர் சித்ரா பணியிடைமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் தற்போது முதல்வராக பணிபுரியும் கலைச்செல்வி என்பவர் அந்த முறைகேட்டை அம்பலப்படுத்தினார்.

முனைவர் ராஜேஷ்வரி, துறைத்தலைவர் முனைவர் பூங்கொடி மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் வீரமணி  ஒன்று சேர்ந்து  திட்டமிட்டு இந்த மாணவியின் ஆய்வு படிப்பைப் பயன்படுத்தி முனைவர் ரமேஷ் என்பவரை பழி வாங்கப்பட்டுள்ளார் என்பதை அம்பலப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு கல்லூரிக் கல்வி நிறுவனத்தில் ஊறி கிடக்கும் சாதிய வன்மமும் பதவிக்கான அதிகாரப் போட்டியும் காரணமாக அமைகின்றன.

முனைவர் ரமேஷ் என்பவரை பழித் தீர்த்துக்கொள்ள மண்டல கல்வி இணை இயக்குநர் உலகி என்பவரை பயன்படுத்தியுள்ளனர். உலகி மற்றும் ராஜ ராஜேஷ்வரி உறவினர்கள், வீரமணி என்பவர் பல்வேறு ஊழலில் ஈடுபட்டதை ரமேஷ் கண்டித்துள்ளார். இவர்கள் அனைவரும்  இணைந்து திட்டமிட்டு முனைவர் ரமேஷ் மீது சாதிய விசத்தை கக்கியதற்கு பின்னால் ஒளிந்திருப்பது பார்ப்பனிய கண்ணோட்டமே.

***

கவுண்டர் சாதியை சேர்ந்த ராஜ ராஜேஸ்வரியும், பட்டியிலின சாதியிலே உயர்ந்த பிரிவு என காட்டிக்கொள்ளும் துறைத்தலைவர் பூங்கொடியும், பட்டியலின சமூகத்தை சேர்ந்த வீரமணி ஆகியோரும் சேர்ந்துக்கொண்டு முனைவர் ரமேஷ் அவர்களை கல்லூரியை விட்டே வெளியேற்ற திட்டமிட்டுள்ளனர். பேராசிரியர்களின் அதிகாரப் போட்டி மனபான்மையும், தாழ்த்தப்பட்டவனை எப்படி முன்னேற விட முடியும்? என்ற சாதிய வன்ம விசத்தை கக்குவதற்கு இக்கட்டமைப்பு உறுதுனையாக இருந்துள்ளது.

கல்லூரி முதல்வர் கலைச்செல்வி, துறை பேராசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் முனைவர் ரமேஷ் அவர்களுக்கு நற்பெயர் இருக்கிறது. மண்டல கல்வி இணை இயக்குநர் உலகி என்பவரின் அதிகாரத் திமிரும், கவுண்டர் சாதிய வன்மமும் வைத்து பாலியல் புகார் எனும் பொய் புகாரை தயார் செய்து பழிவாங்க அனுமதித்துள்ளது இந்த கல்லூரி நிர்வாகக் கட்டமைப்பு.

இவர் மீது எந்தவொரு மாணவியும் பாலியல் புகார் கொடுக்கவில்லை, முனைவர் ராஜ ராஜேஷ்வரி பாலியல் புகார் என்ற சொல்லை புகாரில் பயன்படுத்தவே இல்லை. ஆனால் முனைவர் ரமேஷ் உடன் பணிபுரிந்த மாநில ஆசிரியர் கழக தலைவர் வீரமணி என்பவர் பாலியல் புகார் கொடுக்கப்பட்டதாக போராட்டத்தில் பேட்டியளிக்கிறார். அதனை ஊடகங்கள் பாலியல் குற்றவாளியாக முனைவர் ரமேஷ் என்பவரை சித்தரித்துள்ளது.


படிக்க : கோவை – திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் !


இக்கல்லூரியில் நிகழும் ஊழல் முறைகேடுகளுக்கு எதிராகவும், பாடம் எடுக்காத ஆசிரியர்களுக்கு எதிராகவும், பாலியல் புகாருக்கு எதிராகவும் கடந்த 10 மாதத்தில் பல்வேறு மாணவர் போராட்டங்கள் நடந்துள்ளன.

இந்நிலையில் முனைவர் ரமேஷ் என்பவருக்கு ஆதரவாக மாணவர்கள் போராடும் மனநிலையில் இருந்துள்ளனர். ஆனால், அவர்களை அமைதிப்படுத்தி வந்துள்ளார். அருணா என்ற மாணவியை வைத்து இந்த பணியிடை மாற்றம் செய்யப்பட்டதால் கடந்த 3 மாதமாக மீண்டும் அவரை கல்லூரிக்கு கொண்டுவர cm sell-ற்கு கடிதம் அனுப்புவது, கல்வி இயக்குநருக்கு கடிதம் அனுப்புவது, மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்புவது போன்ற பல்வேறு வகையில் 4 மாணவிகளும் போராடி வருகின்றனர்.

இந்த மாணவிகளை துறை ரீதியாக மிரட்டி வருவதும், மாணவர்களை மிரட்டி போராடும் மாணவிகளுக்கு எதிராகவும், பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு எதிராகவும் திசை திருப்புவது அரங்கேறி வருகிறது.

நேர்மையாக இருக்கும் ஆசிரியர்களுக்கு துணை நிற்பதும், களத்தில் போராடும் மாணவிகளுடன் போராடுவதும் மாணவர்களாகிய நமது அனைவரின் கடமையாகும்.

இது போன்ற அதிகார வெறிபிடித்த சாதிய வன்மத்துடன் இருக்கும் பேராசிரியர்களை வெளியேற்றுவதும், அடுத்து பழிவாங்கும் இலக்கில் உள்ள முற்போக்கான பேராசிரியர்கள் வெளியேற்றபடுவதை தடுக்கவும் மாணவர்களாகிய நாம் விழிப்புடனும் ஒற்றுமையாகவும் இருந்து களத்தில் போராட வேண்டியுள்ளது.

வினவு செய்தியாளர்,
கோவை.

போலி சுதந்திரம் – கேலிச்சித்திரம்

போலி சுதந்திரம் – கேலிச்சித்திரம்

  • இந்திய உழைக்கும் மக்களை கொடியை ஏற்றச்சொல்லி நிர்பந்தம் படுத்து மோடி அரசு.
  • அதானி – அம்பானி கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக செயல்படும் பாசிச மோடி அரசு.
  • இந்தியாவின் இயற்கை வளங்களை – மனித வளங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு படையல் வைக்கும் மோடி அரசு
  • கொரோனா காலங்களில் பசி பட்டினியில் வேலையின்றி சித்திரவதைக்குள்ளானார்கள் உழைக்கும் மக்கள் – ஆனால் அதானி அம்பானிகளின் சொத்துமதிப்பு பன்மடங்கு உயர்ந்து இருக்கிறது.
  • கார்ப்பரேட் சுதந்திரத்தை(போலி சுதந்திரத்தை) தேசிய கொடி என்ற மூவர்ண்ண திரைபோட்டு மறைக்கும் மோடி அரசு!

கேலிச்சித்திரம்:
தோழர் ரூபாவதி,
மக்கள் அதிகாரம்,
புதுச்சேரி.

***

ஆகஸ்ட் 15 : யாருக்கு சுதந்திரம்?

நன்றி – புதிய தொழிலாளி

சிறுபான்மை மக்களை ஒடுக்கும் காவி பாசிசம் !

மோடி 2014 ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டபோது மிகப் பரவலாகப் பேசப்பட்டது ‘குஜராத் மாடல்’ என்ற சொல்லாடல். குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்த மோடி அம்மாநிலத்தை ஐரோப்பாவுக்கு நிகராக வளர்த்துள்ளதாக ஒரு உலகமகா மோசடி வைரலாக பரப்பிவிடப்பட்டது. உண்மையில் மோடி தலைமையிலான குஜராத் கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடு. ஆர்.எஸ்.எஸ். அமைக்க விரும்பிய இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலை. 2002 குஜராத் கலவரத்திற்கு பின்புதான் அம்பானி, அதானி உள்ளிட்ட பார்ப்பன-பனியா கார்ப்பரேட்டுகளால் மோடி தத்தெடுத்துக் கொள்ளப்பட்டார்.

அந்த வகையில் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி ‘குஜராத் மாடலை’ தேசியமயமாக்கியிருக்கிறது. எங்கெல்லாம் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்து காலூன்றியுள்ளதோ, அங்கெல்லாம் நீண்ட காலமாக ஆர்.எஸ்.எஸ். வேலைசெய்து பல்வேறு மதவெறிக் கலவரங்களை நடத்தியிருக்கின்றது. எட்டாண்டு காலத்தில் சுமார் 10 ஆயிரம் மதக் கலவரங்களை நடத்தியிருக்கின்றன சங்க பரிவார கும்பல்கள்.

இசுலாமியர்கள் நிலை :

பெரும்பான்மை இந்துக்களுக்கும் இந்த நாட்டிற்கும் முசுலீம்களால்தான் ஆபத்து என்ற கருத்தை கிட்டத்தட்ட நூறாண்டுகளாகப் பிரச்சாரம் செய்துவருகிறது ஆர்.எஸ்.எஸ். முசுலீம்களுக்கு எதிரான கலவரங்களைக் கட்டமைப்பதற்காகவே காவி கும்பல் பல வழிகளில் வேலைசெய்கிறது. மாட்டுக் கறி, லவ் ஜிகாத், மதமாற்றம், நாட்டுக்கு எதிரான சதி என பல காரணங்களை வைத்துள்ளது. இவை ஒவ்வொன்றுக்கும் ஏற்றபடி பசுப்பாதுகாப்புப் படை, லவ் ஜிகாத் எதிர்ப்புப் படை என பல வன்முறை அமைப்புகளையும் கட்டிவைத்துள்ளது.

2016 தில்லியில் மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று கூறி அக்லக் என்ற முதியவர் அடித்தே கொல்லப்பட்டார். 2017-ல் மாட்டைக் கடத்துவதாகக் கூறி ஹரியானாவைச் சேர்ந்த பால் வியாபாரி பெஹ்லுகான் இந்துமதவெறி குண்டர்களால் கொல்லப்பட்டார். மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பின் 2019-ம் ஆண்டின் அறிக்கைப்படி, அதுவரை குறைந்தபட்சம் 44 பேர் பசுப்பாதுகாப்பு குண்டர்களால் அடித்தே கொல்லப்பட்டுள்ளனர்.

2018 ஆம் ஆண்டு காஷ்மீரின் கத்துவா பகுதியில் எட்டு வயதேயான முசுலீம் சிறுமி கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி முசுலீம் என்பதாலும் வல்லுறவு குற்றவாளி இந்து என்ற ஒரே காரணத்திற்காகவும் குற்றவாளியைப் பாதுகாப்பதற்காக தேசியக் கொடியைத் தூக்கிக் கொண்டு ஊர்வலம் போனது பா.ஜ.க.


படிக்க : சிறுபான்மை சமூகங்களை வஞ்சிக்கும் மோடி அரசு!


முசுலீம்களை நான்காந்தர குடிமக்களாக்க விழையும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து இசுலாமிய மக்கள் நடத்திய ஷாகின்பாக் போராட்டங்களையும், ஜே.என்.யு, ஜாமியா பல்கலைக்கழகங்களின் போராட்டங்களையும் கடுமையாக ஒடுக்கியது பாசிச பா.ஜ.க. டெல்லியில் காவிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரத்தில் 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைப் போல உத்தரகாண்ட், அசாம், திரிபுரா, கர்நாடகா என தன்னுடைய இந்துராஷ்டிர சோதனைச் சாலைகளை விரிவுபடுத்திக் கொண்டே உள்ளது ஆர்.எஸ்.எஸ்.

ராம ஜென்ம பூமி இயக்கத்தின்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கலவரம் வெடித்த நிலையில், பெரிய அளவில் சலனங்கள் இல்லாத மாநிலங்களில் திரிபுரா முக்கியமானது. ஆனால் காவி கும்பல் ஆட்சி அமைத்த பிறகு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மசூதிகளை அடித்து நொறுக்கியும் முசுலீம்களின் வீடுகளுக்குத் தீவைத்து கொளுத்தியும் வெறியாட்டங்களை நிகழ்த்தியுள்ளது காவி கும்பல். ஹிஜாப் அணியத் தடை, ஹலால் ஜிகாத் என கர்நாடகத்தில் அடுத்தடுத்து இசுலாமியர்களுக்கு எதிரான கலவரங்களை இதுவரை அம்மாநிலம் கண்டதே இல்லை எனலாம்.

தங்கள் மீது நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு எதிராக இசுலாமியர்கள் திரண்டெழுந்து போராடினால் புல்டோசரைக் கொண்டு வீடுகளை இடித்துத்தள்ளுகிறது காவி அரசு. ராமநவமி கலவரங்களின் போதும், நபிகளை அவதூறாகப் பேசிய நுபுர் ஷர்மாவிற்கு எதிராகப் போராடிய போதும் புல்டோசரைக் கொண்டுவந்து போராட்டங்களை ஒடுக்கினார்கள் காவிகள். சட்டவிரோதமான இந்த இடிப்பை நீதிமன்றங்கள் ஆதரித்து நிற்கின்றன. இஸ்ரேலில் யூத இனவெறி அரசு பாலஸ்தீனிய மக்களை ஒடுக்குவதற்கு ஒப்பாக, இந்தியாவில் புல்டோசர் இடிப்பு திகழ்கிறது.

நுபுர் ஷர்மாவின் கருத்தை ஆதரித்து பதிவு போட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த கண்ணைய லால் இரண்டு இசுலாமியர்களால் கொல்லப்படுகிறார். அதைத் தொடர்ந்து இசுலாமியர்களுக்கு எதிராக இந்துமதவெறியைத் தூண்ட முயற்சித்த பஜ்ரங்தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஹரியானா மகாபஞ்சாயத்தில் கலந்துகொண்டார்கள். அம்மாநாட்டில் “தேவைப்பட்டால் குஜராத்தை மீண்டும் நடத்துவோம்” “இந்துராஷ்டிரத்தை அடைவதற்கு உயிரையும் கொடுப்போம்” என்று கூச்சலிட்டுள்ளார்கள் காவிகள்.

கடைசியில் இசுலாமியர்களான அந்த இருவரும் பா.ஜ.க.வின் கைக்கூலிகள் என்று அம்பலமானது. கண்ணைய லால் படுகொலையை வைத்து மிகப்பெரிய மதக்கலவரத்தை நடத்த முயன்ற காவிகளின் சதித்திட்டம் இதன் மூலம் வெளிவந்திருக்கிறது.

பிப்ரவரி 26 அன்று சர்வதேச அளவில் நடைபெற்ற இணையவழியிலான உச்சிமாநாட்டில், இந்தியா இனப்படுகொலைக்கான பாதையில் பயணிப்பதாக ஐநா மன்றத்தில் பொறுப்பு வகிக்கக்கூடியவர்களும் மற்றும் பலதுறை அறிவுஜீவிகள், ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர். மோடி அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம் பாசிச ஜெர்மனியின் நுரெம்பர்க் சட்டத்துடன் ஒப்பிடத்தக்கது என்று இம்மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் கூறினார்கள்.

இதற்கு முன்னதாகவே, உத்தரகாண்டில் நடைபெற்ற சாமியார்கள் மாநாட்டில் இசுலாமியர்களை இனப்படுகொலை செய்துவிட்டு இந்துராஷ்டிரத்தை அமைக்க வேண்டும் என்று காவி பாசிஸ்டுகள் வெளிப்படையாக அறைகூவினார்கள்.

தலித்துகள் நிலை :

2016 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டம், மோட்டா சமதியாலா கிராமத்தில் செத்த மாட்டின் தோலை வைத்திருந்ததற்காக தலித் குடும்பத்தினர் கட்டி வைத்து அடிக்கப்பட்டனர்.

2017 ஆம் ஆண்டு உன்னவ் மாவட்டம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தலித் இளம்பெண், தாக்கூர் சாதியைச் சேர்ந்த அத்தொகுதி எம்.எல்.ஏ. குல்தீப் செங்கர் மற்றும் அவரது அடியாள் கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

2020 ஆம் ஆண்டு ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தலித் இளம்பெண்ணின் உடலை பெற்றோரிடம்கூட ஒப்படைக்காமல் நள்ளிரவிலேயே சட்டவிரோதமாக தீ வைத்து எரித்தது உ.பி. போலீசு.

மாட்டின் தோலை வைத்திருந்ததற்காக, குஜராத்தில் கட்டி வைத்து அடிக்கப்படும் தலித் குடும்பத்தினர்

தலித்துகளுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகள், வன்கொடுமைகள், கொலைகள் ஆகியவை பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலேயே அதிகம் நடைபெறுகின்றன. இதற்குக் காரணம் அம்மாநிலங்களின் பிற்போக்குத் தன்மை. இரண்டாவது முக்கியக் காரணம் அதிகாரத்திலிருக்கும் காவிகள், ஆதிக்க சாதி வெறியர்களை சட்ட ரீதியாக பாதுகாக்கிறார்கள் என்பதுதான். தேசிய குற்றவியல் ஆணவக் காப்பகப் புள்ளிவிவரப்படி, நாடு முழுவதும் தலித் மக்கள் மீது நடைபெற்றுவரும் தாக்குதல்களில் 25.3 சதவிகிதம் யோகி தலைமையிலான உத்தரப் பிரதேசத்தில் மட்டும் நடக்கிறது.

இடைச்சாதிகளில் உள்ள சாதி வெறியர்கள் இயல்பாக இந்துமதவெறியர்களின் கூட்டாளியாகவும் உள்ளார்கள். தமிழகத்தில் பொன்பரப்பியில் நடந்த கலவரத்தில் வன்னியர் சாதிவெறியர்களோடு சேர்ந்துகொண்டு தலித் மக்களின் வீடுகளைச் சூறையாடியது இந்து முன்னணியும்தான்.


படிக்க : ’முஸ்லீம்களை கொளுத்த வேண்டும்’- வெறுப்பு விஷத்தை கக்கும் பாஜக எம்.எல்.ஏ ஹரிபூஷன் தாக்கூர் !


கிறித்தவர்கள் மீதான தாக்குதல் :

கிறித்தவ தன்னார்வ நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றுக் கொண்டு இந்துக்களை மதமாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்று கூறும் காவிகள், நாடுமுழுக்க கிறித்தவர்கள் மீது பரவலான தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.

கடந்த ஆண்டு கிறித்துமஸ் தினத்தில் பஜ்ரங்தள், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்துமதவெறி அமைப்புகள் உத்தரப் பிரதேசம், ஹரியானா, கர்நாடாகா என பல மாநிலங்களிலும் தேவாலயங்களின் மீது தாக்குதல்களைத் தொடுத்தனர். கிறிஸ்மஸ் தாத்தாவின் உருவ பொம்மையைக் கொளுத்தினார்கள். கிறித்தவ பள்ளிகள் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டது.

தமிழகத்தில் அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில், தென் மாவட்டங்களில் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு கிறித்துவப் பள்ளிகள் மீது மதமாற்றக் குற்றஞ்சாட்டி, இந்து முன்னணி பல முறை கலாட்டாக்களில் ஈடுபட்டிருக்கிறது.

இந்துராஷ்டிர கொடுங்கோல் அரசு :

1976 கணக்கெடுப்பின் படி, நாடாளுமன்றத்தில் 9.3 சதவிகிதமாக இருந்த முசுலீம் உறுப்பினர்களின் எண்ணிக்கை பாசிஸ்டுகள் தேசிய அரசியலில் செல்வாக்கடைந்த பிறகு, 2019 ஆம் ஆண்டு 5 சதவிகிதமாகச் சுருங்கியது.

பெரும்பான்மை ஓட்டுக் கட்சிகள் இசுலாமியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ள அஞ்சுகிறார்கள். நாம் இந்துமதவெறி பாசிஸ்டுகளின் தாக்குதலுக்கு ஆளாவோம் என்று அவர்கள் கருதுகிறார்கள். பாரம்பரியமாக இசுலாமியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கும் பெரிய கட்சிகளும்கூட அவர்களுக்கு பொதுத்தொகுதிகளை ஒதுக்குவதில்லை. முசுலீம்கள் அடர்த்தியாக வாழக்கூடிய தொகுதிகளில் ஓட்டுப் பொறுக்குவதற்காக மட்டுமே வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள். அந்த அளவுக்கு இந்துமதவெறி அரசியல் மைய நீரோட்டத்தில் செல்வாக்கு செலுத்துகிறது.

காமன் காஸ் (Common Cause) என்ற என்.ஜி.ஓ.வின் 2019 ஆம் ஆண்டின் அறிக்கை, போலீசுத் துறையில் இருக்கக்கூடிய 50 சதவிகிதம் பேர் முசுலீம்களை தன் இயல்பிலேயே வெறுப்பவர்களாக, குற்றவாளிகளாகக் கருதுபவர்களாக உள்ளனர் என்று கூறுகிறது. மேலும் அவர்கள் முசுலீம்களுக்கு எதிரான வழக்குகளை புறக்கணிக்கிறார்கள் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

சிறுபான்மையினர் நலனுக்காக செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களுக்கான நிதியும் அத்திட்டங்களின் கீழான பயனாளர்களின் எண்ணிக்கையும் கடந்த 3 ஆண்டுகளில் குறைந்துள்ளன. இதை மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியே நாடாளுமன்றத்தில் ஒத்துக் கொண்டுள்ளார்.

ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் முசுலீம் மக்களுக்கு எதிராகவும் காவி பாசிச கும்பலுக்கு ஆதரவாகவும் உருக்கி வார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இனிமேலும் ஜனநாயக, மதச்சார்பற்ற இந்தியாவைப் பற்றி பேச யாருக்கும் துணிவில்லை. தேர்தலில் ஓட்டுப் பொறுக்குவதற்கு கூட மென்மையான இந்துத்துவம் பேச வேண்டியிருக்கிறது.

பசுப்பாதுகாப்புச் சட்டம், லவ் ஜிகாத் தடைச்சட்டம், மதமாற்றத் தடைச் சட்டம், பொதுச்சொத்து சேத தடுப்புச் சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், உத்தரப் பிரதேசத்தில் பொது இடங்களில் தொழுகை நடத்த தடை, ஹிஜாபுக்கு தடைவிதித்த நீதிமன்ற உத்தரவு என இசுலாமியர்களுக்கு எதிராக சட்டப்பூர்வமாகவே பாசிச நடவடிக்கைகள் ஏவப்படுகின்றன.

ஜனநாயகம், சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவை பாசிசத்திற்கு எதிரான போராட்டங்களில் எழுப்பப்படும் முழக்கங்களாகிவிட்டன. அதாவது அவை கோரிக்கைகளாகிவிட்டன. “நிலவுகின்ற அரசுக் கட்டமைப்பு இந்துராஷ்டிரக் கொடுங்கோலாட்சிக்கு உகந்த வகையில் மாற்றப்பட்டுவிட்டது, இனி இந்தக் கட்டமைப்புக்குள் தீர்வில்லை” என்பதுதான் இவைகளின் பொருளாகும்.


சந்திரசேகர்

Let’s defeat RSS-BJP Ambani-Adani Fascism! Conference | Pamphlet

Let’s defeat RSS-BJP Ambani-Adani Fascism!

dear working people!

We are living under the clutches of an evil regime. Does this regime allow the working people to lead a peaceful life? Our life is being ruined because of the rise in prices of essential commodities, increase in taxes, unemployment and loss of livelihood due to destructive pro-corporate policies!

Domestic LPG which was sold at Rs. 410 in 2014 has now almost touched the Rs. 1100 mark. Petrol which was sold at Rs. 66 had crossed Rs. 100. The people can’t even afford basic goods like rice, pulses, milk and curd. The prices are galloping because of GST. Though the prices continue to rise, the salaries remain the same. More than 20 crore people sleep hungry every night as they can’t afford to cook.

Within one year of the implementation of GST, one-fifth of the MSME businesses fell into the abyss. The retail businesses are facing a disaster because of the government’s decision to allow 100% FDI (Foreign Direct Investment) and the encouragement of e-commerce penetration.

The backbone of the farmers had been fractured because of the hike in prices of agricultural inputs, inadequate procurement prices, acquisition of the farming lands to hand over to the corporates in the name of development and the planned cut in agricultural subsidies; and the farm laws were being amended in order to corporatize the farming sector.

The Modi government, which introduced servitude contractual schemes such as NEEM and FTE, amended labour laws with the sole aim of snatching away the rights of the labourers.

The rate of unemployment is at a 40-year high. According to a statistic, 43.7% of the job seekers are youngsters between the age group of 20 to 24 years. During the first seven years of the Modi regime, student suicides rose by 55% and the suicides of the unemployed rose by 58%. The suicides of the farmers and the daily wagers rose by 139.37%. This fascist regime is pushing us towards suicide.

The RSS-BJP is hiding its anti-national activities and is provoking religious fanaticism by projecting Muslims as the enemies of the country and religious conversion as the biggest threat.

The saffron thugs are orchestrating riots by targeting the Muslim populated areas and are openly calling out for genocide. In the BJP-ruling states Muslims are prohibited from wearing hijab, Azan is banned and Muslim vendors are being prohibited from conducting businesses. If they fight against these injustices, their houses are being bulldozed. Muslims are being turned into refugees in their own country. Various laws such as Citizenship Amendment Act, love jihad law, Cow Protection Act, Prevention of Damage to Public Property Act have been brought with the sole purpose of suppressing the minorities.

Those who oppose the RSS-BJP are annihilated lawfully. 16 members, including advocates, professors and social activists, were arrested by the police using a doctored letter and a cooked up story of ‘conspiracy to kill Modi’; the arrest of Teesta Setalvad, who accused Modi in the Gujarat pogrom; the arrest of the Alt News founder Zubair, who exposed the fake news propaganda of the RSS-BJP; it was made as a rule that sedition and UAPA will pounce upon anyone who speak against Modi.

The true benefactors of the RSS-BJP regime are the corporates; that too in particular Adani and Ambani. In the last 10 years, the value of assets of Adani rose by 1830% and Ambani by 400%. Modi’s foreign trips had won many international contracts such as coal mines in Australia, power project in Sri Lanka to Adani-Ambani. Adani, who was in the 313rd position in the Hurun global rich list, had moved to the 12 position due to Modi’s efforts (According to Hurun India Report).

Public assets, i.e., from ports, airports, coal mines to the 5G spectrum, are being sold to a very few corporates such as Adani, Ambani, Tata at cheaper rates. Amending various laws such as the Farm Laws, Labour Laws, Environmental Impact Assessment and allowing FDI in retail businesses and military, National Monetization Pipeline are being done to ease the plundering of the corporates.

The recolonizational policies of liberalization-privatization-globalization were imposed by the imperialists in the 90’s. These policies were designed to stop the governments from being welfare States and direct them to act only as brokers to the corporates. The corporates including Adani and Ambani unanimously back the fascistic BJP regime led by Modi knowing well that it will ferociously implement these pro-corporate policies. That’s why 82.5% of the election funds of the corporates is being donated to the BJP.

The BJP is not just another vote bank party. It is the political wing of the RSS, a fascistic-terrorist organisation. Its aim is to establish a Hindurashtra by dividing the people into hundred bits along caste lines and thereby modernizing the brahmanical dominance and caste hierarchy. On the other hand, the aim of Adani and Ambani is to exploit the natural resources and the people and contest in the world billionaire race. These saffron fascist groups have partnered among themselves and are enforcing a fascist rule.

In order to assist their aforesaid two aims, all the sectors including the judiciary, Election Commission, CBI, Reserve Bank, police, military are being filled with RSS-BJP cadres. Not only the parliament, but also the entire State structure has been occupied by the fascists.

Many judgements such as the Babri masjid judgement, hijab verdict, Gujarat pogrom judgement were pronounced in favour of the saffron mob and against the Muslims; It is not new that the CBI is being used against the members of the opposition parties and the cases are being dropped if they defect to the BJP; It is historical that the Reserve Bank had transferred the emergency funds to the BJP government; A statistic reveals that 50% of the police force is anti-Muslim; the administrators in the corporate companies are being appointed in various government departments as Joint Secretaries and Directors.

Can this be overturned if we just bring another political party to power? The track record shows that the BJP had captured power in 10 states by horse trading of the MLAs. Haven’t the RSS running parallel governments in the states ruled by the opposition by appointing governors like R.N.Ravi?

Therefore, the RSS-BJP, Ambani-Adani fascism can only be brought down by a popular uprising outside of the electoral system. We should protest by organizing the working people including the labourers, farmers, micro-small scale businessmen, students and the youth. It is the only way to defeat fascism!

Let’s unite as Anti-Fascist People’s Front to bring down the RSS-BJP Ambani-Adani Fascism!

Let’s get away from this illusion of pseudo-democracy! Let’s create an anti-fascist uprising!

Let’s establish an Anti-Fascist Democratic Republic!