Monday, June 23, 2025
முகப்பு பதிவு பக்கம் 152

12 கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து யாருக்காக விமான நிலையம்?

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான இறுதித் தேர்வாக, மத்திய அரசாலும் மாநில அரசாலும் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அரசால் தேர்வு செய்யப்பட்ட இப்பகுதி விவசாயம் செய்யும் பகுதியாகவும் நீர் நிலைகள் அதிகமாக உள்ள பகுதியாகவும் இருக்கிறது. குறிப்பாக 30 ஏரிகளும் 40 குளங்களும் இப்பகுதியில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் பரந்தூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், நெல்வாய், தண்டலம், கூத்தவாக்கம் உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள சுமார் 4500 ஏக்கர் விவசாய நிலங்கள் இதனால் பாதிப்படைகிறது. இதனை அப்பகுதி மக்கள் எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக ஏகனாபுரம் கிராம மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

இக்கிராமத்தில் 800 வீடுகளும் அதில் 2500-க்கும் மேற்பட்ட மக்களும் வாழ்ந்து வருகின்றனர். புதிதாக இப்பகுதியில் விமான நிலையம் அமைய உள்ளதால் இம்மக்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 8-ஆம் தேதி ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை நேரில் சந்தித்தனர். தங்கள் குடியிருப்பு பகுதிகளில் விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு அளித்தனர்.


படிக்க : வன அதிகாரிகளுக்கு நாங்கள் பயப்படுகிறோம், விலங்குகளுக்கு அல்ல: கர்நாடகாவின் ஜெனு குருபா பழங்குடி மக்கள்!


“எங்களுக்கு தெரிந்தது விவசாயம் மட்டும்தான். நாங்கள் விவசாயத்தையும் கால்நடைகளையும் மட்டுமே நம்பி இருக்கிறோம். இதை தவிர வேறெந்த வேலையும் எங்களுக்கு தெரியாது. திடீரென்று வீடுகளை காலி செய்ய சொன்னால் நாங்கள் எங்கே போவோம்? நீங்கள் தருகின்ற மூன்று அல்லது நான்கு செண்ட் கொண்ட மாற்று குடியிருப்பு வீட்டை வைத்து நாங்கள் என்ன செய்வது?” என்று அம்மக்கள் இந்த அரசை பார்த்து கேள்வி எழுப்பினர்.

மேலும் “நாங்கள் விமான நிலையம் வருவதை எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டில் அனேக இடங்களில் தரிசு நிலங்கள் உள்ளன. அங்கு விமான நிலையங்களை அமைத்துக் கொள்ளுங்கள்” என்றும் கூறினர்.

விவசாயத்தை அழித்து தான் விமான நிலையம் கொண்டு வர வேண்டும் என்றால் வரும் காலங்களில் சாப்பாட்டுக்கு என்ன செய்வீர்கள் என்றும் மக்கள் கேள்வி கேட்டனர். நாங்கள் இந்த இடத்தை விட்டு போக மாட்டோம் என்றும் இதற்காக எதையும் இழக்க தயாராக உள்ளோம், ஏன் உயிரை கூட இழக்க தயாராக இருக்கிறோம் என்றும் அம்மக்கள் கூறினர்.

ஒட்டுமொத்த கிராம குடியிருப்பும், ஏக்கர் கணக்கான விவசாய நிலங்களும், மிகபெரிய நீர்நிலைகளும் மத்திய அரசு வெளியிட்ட அங்கீகரிக்கப்படாத வரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் தொலைக்காட்சி ஊடகங்களோ மக்கள் இதை மிகவும் வரவேற்கின்றனர் என்று வெட்கமின்றி ஆளும் வர்க்கத்துக்கு துதி பாடி கொண்டிருக்கின்றன. “ஏதாவது தரிசு நிலங்களில் விமான நிலையம் அமைத்து கொள்ளுங்கள், எங்கள் வாழ்வாதாரத்தை விட்டுவிடுங்கள்” என்று ஏகனாபுரம் கிராம மக்களின் வாழ்வாதாரத்துக்கான எதிர்ப்பு குரலை அவ்வூடகங்கள்  தனது “நடுநிலை” வாதத்திற்கு கூட எடுத்துக் கொள்வதில்லை.

அரசு தொடர்ச்சியாக சென்னையை உருவாக்கிய பூர்வ குடி மக்களின் வீடுகளை நீர்நிலைப் பகுதியில் உள்ளது என்று இடித்து அவர்களை சென்னையை விட்டு வெளியேற்றி வரும் நிலையில், இப்பொழுது அரசே நீர்நிலைப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து விமான நிலையங்களை கொண்டு வருவது விந்தையாக உள்ளதல்லவா? அதற்கு காரணம் இது முதலாளிகளுக்கான தேவை. மெட்ரோ ரயில், விமான போக்குவரத்து போன்ற வசதிகள் உருவாக்குவது முதலாளிகளின் தேவைக்காகவும் மேட்டுக்குடி வர்க்கத்தினரின் வசதிகளுக்காகவும் தான்.

அதற்காக இந்த அரசு எந்த எல்லைக்கும் செல்லும். எத்தனை ஆயிரம் மக்கள் என்றாலும் கண்மூடித்தனமாக வெளியேற்றும். வெளியேற்றப்பட்ட மக்களுக்கு முறையாக வாழ்வாதாரம் அமைத்து தருமா என்றால் அதுவும் இல்லை.


படிக்க : காசா: “பிள்ளைக்கறி திங்கும் யூத இனவெறி பிடித்த இசுரேல்”


இதுவரை உழைக்கும் மக்களிடம் இருந்து பிடுங்கிய எந்த நிலத்திற்கும் முழுமையான இழப்பீடு தந்ததாகவோ அல்லது மாற்று ஏற்பாடு செய்து தந்ததாகவோ சரித்திரமே இல்லை. மந்தையில் இருந்து ஆடு மாடுகளை அவிழ்த்து துரத்தியடிப்பதை போல தான் இந்த அரசு அவர்களை கையாண்டுள்ளது. மக்களிடம் முறையான அனுமதியோ தகவலோ கூட தெரிவிக்கப்பட்டது கிடையாது. அதனால் தான் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி எள்ளளவும் சிந்தனையின்றி ஒட்டுமொத்த கிராமத்தையும் வரைப்படத்திற்குள் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.

4500 ஏக்கர் விவசாய நிலங்களை அழித்தும் 2500-க்கும் மேற்பட்டோர் வசிக்கும் 800 வீடுகளை அழித்து விமான நிலையம் கொண்டு வருவதால் பயனடைய போவது யார்? இந்நாட்டின் பூர்வகுடி மக்களா? இல்லை இந்நாட்டின் பூர்வகுடி மக்களின் உழைப்பை சுரண்டி தின்னும் முதலாளி வர்க்கங்கள் மட்டுமே.

ஒரு பக்கம் உழைக்கும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகரத்தின் வெளிப்பகுதிக்கு துரத்தியடிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். மற்றொரு பக்கம் அவர்கள் உருவாக்கிய நகரங்களோ பணம் படைத்தவர்கள் மட்டுமே வாழக்கூடிய பகுதியாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு போராடுவது மட்டுமே அவர்கள் உருவாக்கிய நகரத்தை, அவர்களே தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரே தீர்வு.

செழியன்

வளர்ச்சியை ( Growth ) எட்டி உதைத்துவிட்டு, போலி ‘சுதந்திர’ கொண்டாட்டமாம்! | கருத்துப்படங்கள்

ஆகஸ்ட் 15 – ‘சுதந்திர’ தினத்தை கோவணத்துடன் கொண்டாடுவோம்!

***

வளர்ச்சியை ( Growth ) எட்டி உதைத்துவிட்டு, போலி ‘சுதந்திர’ கொண்டாட்டமாம்!

***

தேசியக்கொடி – அம்பானி மோடி…
எதிலும் கார்ப்பரேட் நலன் தான்!

***

ஆகஸ்ட்: 15
வாழ்வுரிமை பறிப்பும்
கார்ப்பரேட் கொள்ளையும்!
கொண்டாட என்ன இருக்கு?

கருத்துப்படங்கள் : புதிய தொழிலாளி

உண்மையை சொன்னா கொன்னுருவாங்க – கதரும் கள்ளக்குறிச்சி மக்கள் | மருது வீடியோ

உண்மையை சொன்னா கொன்னுருவாங்க – கதரும் கள்ளக்குறிச்சி மக்கள் | மருது வீடியோ

கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி தொடர்பான பல்வேறு சதித்திட்டங்களையும்… கள்ளக்குறிச்சி மக்கள் மீதான போலீசின் அடக்கு முறைகளையும்… தமிழ் மின்ட் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்!

பாருங்கள்! பகிருங்கள்!!

காசா: “பிள்ளைக்கறி திங்கும் யூத இனவெறி பிடித்த இசுரேல்”

எழுபது ஆண்டுகளாக பாலஸ்தீனத்தின் மீது யூத இனவெறி பிடித்த இசுரேல் நடத்தி வரும் இந்த ஆக்கிரமிப்புப் போரில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு காசா பகுதியில் இஸ்ரேல் “குண்டு மழையை பொழிந்து உள்ளது”. இவ்வான்வழி தாக்குதலின் மூலம் 16 குழந்தைகள் உட்பட 45 அப்பாவி பாலஸ்தீன மக்களை கொன்றுகுவித்து பிள்ளை கறி தின்று இரத்த ருசிபர்த்து உள்ளது இசுரேல். 2000-லிருந்து இதுவரை 2,200க்கும் அதிகமான பாலஸ்தீனிய குழந்தைகள் இஸ்ரேலிய படைகளால்
படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏறக்குறைய 400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சுவத்தில் அடிக்கும் சாணியை போல் பாலஸ்தீன மக்களின் உடல்கள் இஸ்ரேல் வீசும் குண்டில் அவர்கள் மண்ணிலே அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறி சிதறி கிடக்கின்றன. மேலும் அரிதாகவே செயல்பட்டுக் கொண்டிருந்த மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் நிரம்பி வழிந்துள்ளன.

காசாவில் வாழும் சுமார் 2.3 மில்லியன் பாலஸ்தீனியர்கள் இசுரேலிய மற்றும் எகிப்திய இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். வெறும் 141 சதுர மைல்கள் மட்டுமே கொண்ட அதாவது டெட்ராய்ட் நகரத்திற்குச் சமமான பரப்பளவில் உள்ள ஒரு பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான சக்திவாய்ந்த குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் தாக்கியுள்ளது.

உக்ரைன் போரில் ரஷ்யாவின் அட்டூழியங்கள் என்று செய்தி ஊடகங்களுக்கு தலைமை தாங்கி பிரச்சாரம் செய்த நியூ யார்க் டைம்ஸ் இசுரேலின் அட்டூழியங்களை “கடுமையான எல்லை தாண்டும் சண்டை” என கூறுகிறது. இது சண்டை அல்ல!, ஆக்கிரமிப்புப் போர்!, என்ற வரலாற்று உண்மை திட்டமிட்டே மறைக்கப்பட்டு வருகிறது. இந்த முதலாளிதத்துவ வேசி ஊடகங்கள் ஆக்கிரமிப்பு போரை திட்டமிட்டு இரு தரப்பினருக்கு இடையிலான சண்டை என்றே சித்தரித்து வருகின்றது.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இசுரேல் என்ற தேசம் ஒன்றே இல்லை. ஆனால் இன்று நாடாக மாற்றப்பட்டு அது பாலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பு செய்யும் அளவிற்கு வந்திருக்கின்றது என்றால் அதன் பின்னணியை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நாசிசக் கொடுங்கோலன் ஹிட்லரின் ஆட்சியில் கொத்து கொத்தாக கொல்லப்பட்டு துரத்தியடிக்கப்பட்ட யூதர்கள் பல நாடுகளில் தஞ்சம் அடைந்தார்கள்.

தஞ்சம் பிழைக்க வந்தவர்களை “பாலஸ்தீன மக்கள் அரவணைத்தார்கள்”. ஆனால் யார் தங்களை அரவணைத்தார்களோ எந்த மண் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததோ அந்த மண்ணையே கைப்பற்றிக் கொண்டார்கள் யூத வெறியர்கள். அப்படி பாலஸ்தீனத்தின் சில நகரங்களை கைப்பற்றிக்கொண்டு 1940-களின் பின்பகுதியில் இசுரேல் என்ற தனி நாட்டை அறிவித்தார்கள். அந்த இசுரேல் என்ற நாட்டை முதன் முதலில் அங்கீகரித்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். காரணம் மத்திய கிழக்காசியப்பகுதியில் தன்னுடைய பேட்டை ரவுடியாக இசுரேலை வளர்த்து அதன் மூலம் தனது உலக மேலாதிக்கத்தை நிறுவுவது தான்.

அதன் விளைவு பாலஸ்தீனம் என்ற பரந்து விரிந்த தேசம் கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றப்பட்டு காசாமுனை, மேற்கு கடற்கரை என்ற இரு பகுதிகளாக சுருக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிறிய பகுதியையும் கைப்பற்றி அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவவே லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்களின் மீதான இசுரேலின் போர் நடக்கிறது.
இந்த தாக்குதல் நடப்பதற்கு முன்னதாக ஜூலை 13 மற்றும் 14 ஆம் தேதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு சென்று வந்துள்ளார். இதன் மூலம் இப்பொழுது நடந்துள்ள தாக்குதலுக்கு கைகாட்டியது ஜோ பைடனே என்பது அம்பலமாகி உள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உதவியுடன் இஸ்ரேல் மத்திய கிழக்கில் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணைகளுடனும் ராணுவ படை பலத்துடன் குவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து Palestinian Islamic Jihad (PIJ) என்ற பாலஸ்தீன போராளி குழு தன்னிடம் இருக்கும் ராக்கெட் ஏவுகணைகளை வைத்துக்கொண்டு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டு வருகிறது.

நியூ யார்க் டைம்ஸ் வெளியீட்டு உள்ள அறிக்கையில், “காசா இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றது” என்று குறிப்பிட்டுள்ளது “பாலஸ்தீன மக்களுக்கோ கடந்த 70 ஆண்டுகள் போர் மட்டுமே இயல்பு நிலையாக உள்ளது”.

இது மீள முடியாத ஒரு இயல்பு நிலைக்கு அவர்களை தள்ளியுள்ளது. மேலும் , 50 சதவிகித வேலையின்மை விகிதம் மற்றும் நொறுங்கி போன உள்கட்டமைப்பு வசதிகள் பாலஸ்தீனத்தின் அடிவயிற்றை இருக்க பற்றி கொண்டு உள்ளது. பாலஸ்தீனத்தில் வசிப்பதற்காக ( breathing space ) ஏதோ மின்நிலையம் இயங்கி வந்தன ஆனால் அதுவும் இப்பொழுது ஒழிக்கப்பட்டுள்ளது .இதற்கு வீசிய குண்டு காரணமல்ல, மாறாக அது இயங்க தேவையான எரிபொருளை இஸ்ரேலும் எகிப்தும் விநியோகிக்க தடை விதித்த குண்டினால்.

இப்பொழுது நம் மனதில் ஒரு கேள்வி எழலாம், பாலஸ்தீனத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது எப்படி?
எந்தவொரு பிற்போக்குத்தனமான தேசியவாத ஆட்சிகள் மூலமாகவோ அல்லது ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுடனான சூழ்ச்சிகள் மூலமாகவோ உலகத்தின் மையமான வாஷிங்டனால் நடத்தப்படும் “சமாதான” பேச்சுக்கள் எல்லாம் உலக மேலாதிக்கத்தை நிறுவுவதை நோக்கமாக கொண்டுள்ளது என்பது தெள்ள தெளிவாக உள்ளது.

சோசலிச மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அரபு, இஸ்ரேலிய, துருக்கிய மற்றும் குர்திஷ் தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் பிரச்சாரத்தின் மூலமும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் சர்வதேச இயக்கத்தின் மூலம் மட்டுமே இயல்பு நிலையை கொண்டு வர முடியும்!

சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் வரிசையில், தெற்காசியாவில் பாட்டாளி வர்க்கத்தின் சூறாவளியாக மையம் கொண்டுள்ள சூறாவளி ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் விடுதலைக்கு தோள் கொடுத்து உலக பாட்டாளி வர்க்கத்தின் ஒன்றிணைவுக்கு முன்னேறுவோம்.

எழிலன்

கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியில் தொடர் மாணவர் கொலைகள்! | நேர்காணல் வீடியோ

ள்ளக்குறிச்சி கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியின் அடாவடிதனங்களையும், அப்பள்ளியை காப்பாற்ற துணை நிற்கும் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசு பற்றியும் தமிழக அரசியல் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு ஊடங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் அமிர்தா மற்றும் தோழர் மருது ஆகியோரின் பேட்டி காணொலிகளை இங்கே பதிவிடுகிறோம்!

https://youtu.be/hqgElKRKX_s

காணொலிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியை அம்பலப்படுத்தும் மகனை இழந்த பெற்றோர்! – வீடியோ

கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியை அம்பலப்படுத்தும் மகனை இழந்த பெற்றோர்!

கள்ளக்குறிச்சி கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி தங்களிடம் படிக்கும் மாணவர்களை எப்படி கொடுமைப்படுத்துகிறது என்பதை பற்றியும் தன் மகன் இறந்ததை பற்றியும் மிகவும் உருக்கமாக இக்காணொலியில் விளக்குகிறார்கள் தன் மகனை அப்பள்ளியில் பறிகொடுத்த பெற்றோர்!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கள்ளக்குறிச்சி விவகாரம்: போலீசுடன் கூட்டு சேர்ந்து மக்களை வேட்டையாடிய ராஜசேகர்! | வெற்றிவேல்செழியன்

கள்ளக்குறிச்சி விவகாரம்: போலீசுடன் கூட்டு சேர்ந்து மக்களை வேட்டையாடிய ராஜசேகர்!

கள்ளக்குறிச்சி விவகாரத்தின் உண்மை அறியும் குழுவை சார்ந்த வழக்கறிஞர்கள் சென்றார்கள் ஆனால், அவர்களுக்கு கிடைத்த உண்மைகளை விடவும், அதிகாரவர்கத்திடம் தான் உண்மை பொதிந்து கிடக்கிறது. அது எக்காரணத்திற்காகவும் வெளியே வராது. அதாவது உண்மைகள் அதிகார வர்க்கத்திற்கு பாதிப்பு இல்லை என்றால் வெளியிவருவே தவிர, அதற்கு பாதகம் என்றால் கண்டிப்பாக வெளிவிட வாய்ப்பே இல்லை.

கள்ளக்குறிச்சியில் போராடிய மக்களை போலீசுடன் கூட்டு சேர்ந்து கொண்டு வேட்டையாடிய ராஜசேகர் பற்றியும் குண்டர்கள் பற்றியும் போலீசின் அடக்குமுறைகள் பற்றியும் இந்த காணொலியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள்!

காணொலியை பாருங்கள் பகிருங்கள்!!

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம்: உண்மை அறியும் குழு பத்திரிகையாளர் சந்திப்பு !

ள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் மற்றும் கலவரம் தொடர்பான உண்மை அறியும் குழுவின் அறிக்கை!

வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு!
நாள் : 10.08.2022

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை: நோயாளிகளை அல்லாடும் நிலைக்கு தள்ளியுள்ளது திமுக அரசு!

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை: “கல்லாக” கிடக்கும் நோயாளிகள் – கள ரிப்போர்ட்

ள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள அரசுப் பொது மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் துளியும் இல்லாமல் நோயாளிகளை அல்லாடும் நிலைக்கு தள்ளியுள்ளது திமுக அரசு.

ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகள், தனியார் மருத்துவமனையில் இலட்சக்கணக்கில் செலவுச் செய்து சொகுசாக படுத்து கிடக்க, ஓட்டுப் போட்ட மக்களோ அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத அரசு மருத்துவமனையில் அநாதையாக தூக்கி எறியப்பட்டுள்ளனர்.

ஒரு அறையில் 20 படுக்கைகள் இருக்க வேண்டிய இடத்தில் 40-க்கும் மேற்பட்ட படுக்கைகளை அமைத்து, குப்பை வண்டியில் குப்பைகளை அடைப்பதுபோல் நோயாளிகளை ஒரே அறையில் அடைத்து வைத்துள்ளனர். போதிய காற்றோட்ட‌ வசதியோ, குடிநீர் வசதியோ கிடையாது. ஒரு நோயாளிக்கும் இன்னொரு நோயாளிகளுக்கும் இடையே விடப்படும் இடைவெளி கூட விடமால் நெருக்கமாக‌ படுக்கைகளை அமைந்துள்ளனர்.

குளுக்கோஸ் ஏற்றுவதற்கு சரியான உபகரணங்கள் இல்லாமல் ஜன்னல் கம்பிகளில் குளுக்கோஸ் பாட்டிலை மாட்டி தொங்க விட்டு மருத்துவம் பார்த்து வருகின்றனர். 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் இருக்கும் கட்டிடத்தில் லிப்ட் வசதிகள் கிடையாது. மூன்றாவது மாடி என்றாலும் நோயாளிகள் நடந்துதான் செல்ல வேண்டும். உணவு வாங்குவதற்கு கூட நோயாளிகள் இறுதி தளத்திற்கு நடந்து வருகின்றனர்.


படிக்க : செவிலியர்கள் முதல் மருத்துவர்கள் போராட்டம் வரை – நம்மிடம் கோருவது என்ன? ஒன்றினைந்த போராட்டமே !


போதிய மருத்துவர்கள் வசதியும் கிடையாது. தினமும் ஒரு மருத்துவர்தான் வருகிறார். அறைகளில் அடைத்து வைக்க முடியாத நோயாளிகள், நோயாளிகளை கூட்டி செல்ல பயன்படுத்த படும் சறுக்கு படிக்கட்டு‌க்கு அருகே படுக்கை அமைத்து படுக்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு எந்தவொரு பேன் வசதியோ, அவசர சிகிச்சை அளிப்பதற்கு உபகரணங்கள் வசதிகளோ கிடையாது. நோயாளிகளுக்கு பாதுகாப்பு வசதி துளியும் இல்லை. நோயாளிகளின் பொருட்கள் வைப்பதற்கும் எந்த வசதியும் செய்து தரப்படவில்லை.

ஒரு பெண் நோயாளியை சந்தித்து பேசியபோது, “செவிலியர்கள் சரியாக வருவது கிடையாது பலமுறை கூறியும் குளுக்கோஸ் ஏற்றுவது கிடையாது. எனக்கு ரத்தம் ஏற்ற வேண்டும், ஆனால், அதை யாரும் தயார் செய்துக் கொடுக்க முன்வரவில்லை. கொசுக்கடி மத்தியில் இந்த படிகட்டு அருகே தனியே அமர்ந்து காத்திருக்கிறேன்” என்றார்.

நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரை சந்தித்து பேசியபோது, “நான் இங்கு வந்து ஒரு வாரம் ஆகிறது. இதுவரை ஒரு முறைதான் எனக்கு குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர். சரியான கவனிப்பு இல்லை. செவிலியர்களிடம் கேட்டால் மருத்துவர் சொன்னால்தான் எங்களால் செய்ய முடியும் என்று கூறுகிறார்கள். ஒரு நாளைக்கு ஒருமுறைதான் மருத்துவர் வருகிறார். அதுவும் எல்லா‌ நோயாளிகளையும் பார்த்து முடிப்பதற்குள் 12 மணி ஆகிவிடுகிறது. நீங்கள் கொஞ்சம் மருத்துவரிடம் சொல்லி உடனே பார்க்க சொல்லுங்கள் வலி கொஞ்சம் அதிகமாக இருக்கிறது” என்று இறுதியாக நம்மிடம் கூறினார்.

செவிலியர்களை சந்தித்து பேசியபோது, ”இங்கு செவிலியர்கள் பற்றாக்குறை அதிகம் இருக்கிறது. எங்களால் முடிந்தவரை நாங்கள் எல்லோரையும் பார்த்து கொள்கிறோம். எல்லா நோயாளிகளையும் சந்தித்து பேசி மருந்துகளை வழங்கி வருகிறோம். ஆம், இங்கு இருக்கும் செவிலியர்கள் மனிதாபிமானத்தோடு தங்கள் சேவைகளை செய்து வருகின்றனர். ஆனால் இந்த அரசோ இவர்களுக்கு 6 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. பலமுறை நிர்வாகத்திடம் முறையிட்டும் பலன் ஏதுமில்லை. 40-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இங்கு கான்ட்ராக்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் நிலையும் இதேதான். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற செவிலியர்கள், மருத்துவர்கள் இங்கு கிடையாது. இருக்கும் ஒன்று, இரண்டு பேர்தான் தலைக்குமேல் சுமைகளை போட்டுகொண்டு எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கின்றனர்” என்றார்.

2019-ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் 3400 செவிலியர்களை கான்ட்ராக்டர் முறையில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அதன்பிறகு மூன்று முறை கான்ட்ராக்டர் கால‌ நீட்டிப்பு செய்யப்பட்டு விட்டது. ஆனால், இவர்களுக்கு பணி நிரந்தரம் இதுவரை வழங்கப்படவில்லை. இரண்டு முறை போராட்டம் நடத்தியும் இவர்களின் குரலுக்கு அரசு செவி சாய்க்கவில்லை.

கொரோனா காலத்தில் தேவதைகளாக பார்க்கப்பட்ட செவிலியர்களை தற்போது குப்பை காகிதமாய் தூக்கி எறிந்துவிட்டது அரசு. கொரோனா காலத்தில் உயிரை விட்ட மருத்துவர்களுக்கும் இதுவரை சரியாக நிவாரணம் வழங்கப்படவில்லை.


படிக்க : மதுரை அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா இறப்புகள் || புமாஇமு கள அறிக்கை


உயிரை பணையம் வைத்து வேலை செய்யும் செவிலியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை, அப்பாவி மக்களுக்கு மருத்துவ வசதி செய்து தரப்படவில்லை, ஆனால் இந்த அரசு பல நூறு கோடி செலவு செய்து செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்துகிறது அரசு.

குஜராத்தில் எப்படி மோடி திரையிட்டு சேரிகளை மறைத்தாரோ அதேபோன்று சாலைகளில் எல்லாம் சதுரங்க விளையாட்டு பலகை வரைந்து ஏழைகளின் நிலை வெளியே தெரியாமல் மறைத்துள்ளது திமுக அரசு. நேப்பியர் பாலத்தை மிக பெரிதாக சதுரங்க பலகையாக மாற்றத் தெரிந்த அரசின் கண்ணுக்கு, அதன் கொஞ்ச தொலைவில் நீண்ட ஆண்டுகளாக இடிந்த குடிசையில் வாழும் சத்தியா நகர் மக்களை தெரியவில்லை.

செஸ் போட்டியில் பங்கு பெற்ற நபர்களுக்கு 3500 உணவுப் வகைகளை அரசு தயார் செய்துள்ளது. அதில் எந்த வகை உணவும் “ரிப்பீட்” ஆகாது என்றும் கூறியுள்ளது. காலை சாப்பிட்ட உணவு  மதியம் கிடைக்குமா என தவித்துக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்களின் மத்தியில், பன்னாட்டு வீரர்களுக்கு உழைக்கும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி படையல் வைத்து கொண்டிருக்கிறது திமுக அரசு!


பாரி

உழைக்கும் மக்களைப் பேரழிவுக்குள் தள்ளிய பாசிச மோடி அரசு!

நாட்டை மீட்பதற்காக கடவுள் என்னை அனுப்பியுள்ளார். நான் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுப்பதற்காக இங்கு வரவில்லை. உங்கள் சேவகனான எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். 60 மாதங்களில் (5 ஆண்டுகள்) இந்தியாவை மாற்றிக் காண்பிக்கிறேன்” என்று 2014 தேர்தல் பிரச்சாரத்தில் சவடாலடித்தார் மோடி. 8 ஆண்டுகள் ஆண்டுவிட்டார் தேவதூதர். இந்தியா எப்படி இருக்கிறது?

கருப்புப் பண ஒழிப்பு, 5 டிரில்லியன் பொருளாதாரம், 2 கோடி வேலை வாய்ப்பு, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு என அடுக்கடுக்கான புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்த மோடி, இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் அனைவரையும் வாழ வழியில்லாமல் ஆக்கியிருக்கிறார். ‘இந்தியாவை மாற்றிக் காண்பிக்கிறேன்’ என்று அவர் கூறியதன் உண்மைப் பொருளை இன்று நாடு கண்டுவருகிறது.

நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பமும் அன்றாட வாழ்வாதாரச் செலவிற்கே திண்டாடுகிறது. 2014-ல் 66 ரூபாய் இருந்த பெட்ரோல் விலை, இன்று 110-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது; 400 ரூபாய் இருந்த சிலிண்டரின் விலை 1,100-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வாலும் ஜி.எஸ்.டி. வரி உயர்வாலும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக ஏறிவருகிறது.

பால், தயிர், அரசி உள்ளிட்டு பார்சல் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் வரியை 5 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது மோடி அரசு. எண்ணெய், பருப்பு ஆகியவற்றின் விலை ஏற்கெனவே மோசம். ஜி.எஸ்.டி. வரி கூட்டிய பிறகு 10 ரூபாய்க்கு விற்ற டீ 12 ரூபாய் ஆகிவிட்டது. ஐந்து, பத்து ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த தள்ளுவண்டிக் கடை இட்லி, தோசை கூட இரண்டொரு ரூபாய் கூடிவிட்டது. அரைவயிற்றுக் கஞ்சிக்குக்கூட நம்மை அல்லாட வைத்துவிட்டது பா.ஜ.க.


படிக்க : சிறுபான்மை சமூகங்களை வஞ்சிக்கும் மோடி அரசு!


வறுமையை ஒழிப்பேன் என்று சொன்னார் மோடி. ஆனால் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில்தான் வறுமை செழித்தோங்கி வளர்ந்துகொண்டிருக்கிறது. 2019 ஆம் ஆண்டு வோர்ல்ட் பாவர்ட்டி கிளாக் (World Poverty Clock) என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கைப்படி, அதீத வறுமையுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடம். மேலும் ஏழைகள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடம். இந்திய மக்கள் தொகையில் 68.8 சதவிகிதம் பேர் ஒரு நாளைக்கு 160 ரூபாய்க்கும் குறைவான வருமானத்தில் வாழ்கிறார்கள்.

ஹின்ட்ரைஸ் பவுண்டேஷன் ஆய்வறிக்கையின்படி, 20 கோடிக்கு மேலான இந்தியர்கள் நாள்தோறும் பசியோடு உறங்கச் செல்கிறார்கள். மேலும் நாள்தோறும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உணவில்லாமல் பசியால் இறந்துபோவதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.

***

கடந்த 8 ஆண்டுகளில் 12.5 கோடி பேரின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது; இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் மற்றும் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அறிக்கைப் படி, இவற்றில் கிராமப்புறத்தில் 57 சதவிகிதமும், நகர்ப்புறத்தில் 80 சதவிகிதத் தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளார்கள். கடந்த மே-ஜூன் வரையிலான ஒரே மாதத்தில் 1.6 கோடி பேர் வேலையிழந்திருக்கிறார்கள். இதுவெறும் கொரோனா காலத்தில் மட்டும் நிகழவில்லை. மோடியின் மக்கள் விரோத கொள்கைகளால் விளைந்த விளைவு இது.

சான்றாக, கருப்புப் பண ஒழிப்பு என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பழிப்பு நடவடிக்கை. பண மதிப்பழிப்பு குறித்த அறிவிப்பு வந்த உடனேயே மொத்த விலைச் சந்தை சுமார் 20 நாட்களுக்கு மூடப்பட்டு விற்பனை நின்று போனது. இதனால் ஆலைகளின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் நட்டமடைந்த பல சிறுகுறு தொழிற்சாலைகள் மூடப்பட்டன. 35 லட்சம் பேர் வேலை இழந்தனர். உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

மேலும் இந்நடவடிக்கைக்குப் பிறகு 96 சதவிகிதம் ரொக்கப்பணம் மீண்டும் வங்கிகளுக்கே திரும்பிவிட்டது. செல்லாத பணத்தை மாற்றுவதற்காக வரிசையில் நின்றே 140 பேர் உயிரிழந்தனர்.

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை அறிமுகப்படுத்தியது அடுத்த தாக்குதல். கடந்த 2018-ஆம் ஆண்டு  ஜூலை மாதம் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) நடத்திய ஆய்வில், 6.3 கோடி சிறுகுறு தொழில்களில் ஐந்தில் ஒரு பங்கு தொழில்கள் ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு பின்னர் தனது லாபத்தில் 20% வீழ்ச்சியைக் கண்டது; இதனால் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய வேண்டியிருந்தது என்று குறிப்பிடுகிறது.

அதேபோல இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் மதிப்பீட்டின்படி, ஜி.எஸ்.டி. கொண்டுவரப்பட்ட ஆண்டில் கிட்டத்தட்ட 50 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளார்கள். இதனால் 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம், 4.1 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் வேலையின்மை விகிதம் ஆகஸ்டில், அதாவது ஒரே மாதத்தில் 6.4 சதவிகிதமாக உயர்ந்தது.

இச்சிறுகுறு தொழில்கள்தான் இந்தியப் பொருளாதாரத்திற்கு 32% பங்களிப்பை வழங்குகின்றன. விவசாயம் ஒழிக்கப்பட்டுவரும் நிலையில், முறைப்படுத்தப்பட்ட ஆலைத்தொழில்கள் 10 சதவிகிதத்திற்கும் குறைவான வேலைவாய்ப்பையே வழங்குகின்றன. 40 சதவிகிதத்திற்கும் மேலானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கிவரும் சிறுகுறு தொழில்கள் மோடி ஆட்சியில் திட்டமிட்டு ஒழித்துக் கட்டப்பட்டது இப்படித்தான்.

வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. அதன் சதவிகிதம் 7.83 ஆக உயர்ந்திருக்கிறது. 15 முதல் 19 வயதே உள்ள இளந்தலைமுறையினரின் வேலையின்மை சதவிகிதம்தான் 50-க்கு மேல் உள்ளது.

2018 – 2020க்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில், கடன் நெருக்கடி, வேலையின்மை, வியாபார நெருக்கடி போன்ற காரணங்களால் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 25,000 பேர். இதை தற்கொலை என்று சொல்வதைவிட மோடி கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகள் செய்த இனப்படுகொலை என்றே சொல்ல வேண்டும்.

விவசாயம் பொய்த்துப் போய், போதுமான வேலைவாய்ப்பில்லாமல் சொந்த மாநிலங்களைவிட்டு நாட்டுக்குள்ளேயே புலம்பெயரும் தொழிலாளர்களின் சதவிகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உரிமைகள் ஏதுமற்ற நிலையில், அடிமாட்டுக் கூலிக்கு வேலைசெய்யும் இத்தொழிலாளர்கள் உள்நாட்டிலேயே அகதிகளைப் போல வாழக்கூடியவர்கள். மாநிலங்களுக்கு இடையே புலம்பெயரும் தொழிலாளர்கள் 10 கோடி பேர் இருப்பதாக மோடி அரசே கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

கொரோனா பெருந்தொற்றின்போது, எவ்வித முன்னறிவிப்பு இன்றி மோடி அறிவித்த ஊரடங்கால் கொடூரமாக பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள். பல லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள், உணவிற்கும் பணத் தேவைக்கும் வழியின்றி நூற்றுக்கணக்கான மைல்கள் நாட்டின் குறுக்கும் நெடுக்கும் நடந்தே கடந்தனர். போகும் வழியிலேயே பட்டினியால் மாண்டவர்கள் பல பேர். பட்டினி மயக்கத்தில் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அநியாயமாக மடிந்த செய்தி நம்மில் பலரது நெஞ்சையும் உலுக்கியது. 2௦20-ஆம் ஆண்டில் மட்டும் 8,733 பேர் இவ்வாறு இறந்தனர்.

தனியார்மய கொள்கைகளின் விளைவாக மொத்த பொதுத்துறை நிறுவனங்களும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு வருகிறது. அரசு வேலையில் இருக்கும் தொழிலாளர்கள் கூட தமது வேலை எப்போது பிடுங்கப்படும் என்ற பயத்தில்தான் வாழ்கின்றனர். மேலும் தொழிலாளர் சட்டத் திருத்தம் என்ற பெயரில் தொழிலாளர்களின் சங்கம் சேரும் உரிமை உள்ளிட்டு மொத்த உரிமைகளும் காவு வாங்கப்படுகின்றன. ‘அக்னிபத்’ என்ற பெயரில் இராணுவமே காண்டிராக்ட்மயமாக்கப்படுகிறது. இனி அனைத்து அரசு வேலைகளும் காண்டிராக்ட் கொத்தடிமைமயமே என்பதற்கான கட்டியம் கூறல் இது.

வெவ்வேறு வடிவங்களில் விவசாயிகளை ஒழித்துக்கட்டும் வேலையை மோடி அரசு செய்துவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் வேளாண்மைக்கான நிதி துண்டிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. உணவு, உரம் மற்றும் பெட்ரோலிய மானியங்கள் ஆகியவை வெட்டபட்டுகொண்டே இருக்கின்றன. இதுபோன்ற மோடி அரசின் தொடர் வஞ்சனை காரணமாக கடந்த எட்டு ஆண்டுகளில் பல லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2014-2020 ஆண்டுகளில் மட்டும் 9.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.


படிக்க : தொழிலாளிகள் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம் !


விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று கூறிய மோடி அரசு, குறைந்தபட்ச ஆதாரவிலையை ஒழித்துக் கட்டவும் விவசாய நிலங்களையும் விவசாயத்தையும் கார்ப்பரேட்டுகள் கைப்பற்றிக் கொள்வதற்கு ஏற்ற வகையில் வேளாண் சட்டத்தைத் திருத்தியது. டெல்லியை முற்றுகையிட்டு கிட்டத்தட்ட 2 ஆண்டுகள்வரை போராடிய விவசாயிகள் மோடியை பணியவைத்தனர். இப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் இன்னுயிரை ஈந்து தியாகியானார்கள்.

வேளாண் சட்டங்களை இரத்துசெய்யும்போது, குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்ட உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றுவேன் என்று எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் பல மாதங்களாகியும் நிறைவேற்றாத மோடி அரசு, இப்போது வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்களைக் கொண்டே குழு அமைத்துள்ளது.

வேளாண் சட்டத் திருத்தம், தொழிலாளர் சட்டத் திருத்தம், நீம் – எஃப்.டி.இ சட்டங்கள், மீன்வள பாதுகாப்பு மசோதா, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு 100 சதம் அனுமதி, ஜி.எஸ்.டி, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுச் சட்டம், நிலத்தடி நீருக்கு கட்டணம், மின்சாரத் திருத்தச் சட்டம், புதிய கல்விக் கொள்கை, நீட் உள்ளிட்டு எண்ணற்ற மக்கள் விரோத – கார்ப்பரேட் நலக் கொள்கைகளைக் கொண்டுவந்து நாட்டையும் உழைக்கும் மக்களையும் தாக்கிவருகிறது இந்த பாசிசப் பேயாட்சி.

பா.ஜ.க. ஆட்சி நீட்டித்திருக்கும் ஒவ்வொரு நொடியும் விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், சிறுகுறு வணிகர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிராக ஒரு மறைமுகப் போரைத் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டாமல் உழைக்கும் நிம்மதியாக வாழ முடியாது.


துலிபா

நாடாளுமன்ற பாசிசம்!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஜி.எஸ்.டி. வரி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்டு பல்வேறு மக்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று தொடக்க நாள் முதல் எதிர்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.

பாக்கெட்டில் அடைத்த உணவுப் பொருட்களுக்கு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வரி கூட்டியதைக் கண்டிக்கும் விதமாகவும் விலைவாசி உயர்வு குறித்து அவையில் விவாதிக்கக் கோரியும் தயிர், பால் பாக்கெட்டுகளுடன் எதிர்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவை நடவடிக்கைகளை முடக்குவதாகக் கூறி அவைத்தலைவர் ஓம் பிர்லா 27 எதிர்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்தார். மாணிக்கம் தாக்கூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன் ஆகிய 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் நடப்புக் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். “நாடாளுமன்ற நடவடிக்கைகளைச் சீர்குலைப்பதை பா.ஜ.க. சட்டப்பூர்வமான தந்திரமாகவே கடைபிடிக்கிறது” என்று குற்றஞ்சாட்டினார் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி. “விவாத சுதந்திரம் இல்லையென்றால் நாடாளுமன்றம் எதற்கு” என கேள்வி எழுப்பினார் ராகுல் காந்தி.


படிக்க : நொறுங்கும் நாடாளுமன்ற ஜனநாயகம் அரங்கேறும் பாசிச சர்வாதிகாரம் !


பாசிச பா.ஜ.க. ஆட்சியின் கீழ் நாடாளுமன்றத்தில் நடைபெறும் இடைநீக்கங்களும் விவாத மறுப்பும் முந்தைய காங்கிரஸ் அரசின் எதேச்சதிகாரத்தைப் போன்றதல்ல. நாடாளுமன்ற போலி ஜனநாயகம் திவாலாகி பாசிசம் சட்டப்பூர்வமாகியதன் வெளிப்பாடே என்று நாம் முன்பே அடையாளப்படுத்தினோம். அதை மெய்ப்பிக்கும் வகையில் தி பிரிண்ட் இணையதளம் சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டிருக்கிறது.

பா.ஜ.க. ஆட்சியின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவது, மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 2006-ஆம் ஆண்டு மழைக்காலக் கூட்டத்தொடர் முதல் 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி வரை இரு அவைகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் 51 எம்.பி.க்கள். அதேநேரம் 2015 ஆகஸ்டு முதல் தற்போது வரை 130 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஊழல், சகுனி, சர்வாதிகாரி, திறமையற்றவர், கபட நாடகம், பொய், போலித்தனம், பாலியல் வன்முறை உள்ளிட்டு பல சொற்கள் விவாதங்களில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறிப் பேசினால் அவைக்குறிப்பிலிருந்து அவை நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. “மோடியையும் பா.ஜ.க. ஆட்சியையும் விமர்சனம் செய்கின்ற சொற்களை பொறுக்கியெடுத்து தடைவிதிக்கப்பட்டுள்ளது; இந்த அடிப்படையான சொற்களைக்கூட பேசக்கூடாது என்றால் எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.வை விமர்சிக்கவே முடியாது” என்று குற்றஞ்சாட்டுகின்றன எதிர்கட்சிகள்.

இதுகுறித்து ஊடக விவாதம் ஒன்றில் பேசிய தி.மு.க. வழக்கறிஞர் சரவணன், “எதிர்காலத்தில் இந்த அவைக்குறிப்பைப் படிப்பவர்கள் பா.ஜ.க. ஆட்சி இவ்வளவு தூய்மையான ஆட்சியா என்று வியக்க வேண்டும்; அத்தகைய ஒரு ’பொற்கால வரலாற்றை’ உருவாக்கத்தான் பா.ஜ.க. இச்சொற்களுக்குத் தடைவிதித்துள்ளது என்றார்.

ஜெர்மனியிலும் இத்தாலியிலும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை அதிரடியாக ரத்துசெய்ததைப் போல் அல்லாமல், நிலவுகின்ற போலி ஜனநாயகத்தையே பாசிசத் தன்மைகொண்டதாக மாற்றிக் கொண்டுவருகிறது பா.ஜ.க. நாடாளுமன்றம் இருக்கிறது, எதிர்கட்சி உறுப்பினர்களும் இருக்கிறார்கள், ஆனால் அவர்களால் அவையில் பேச முடியாது. விவாதம் நடத்தி சட்ட மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்வதற்குப் பதிலாக, குரல் வாக்கெடுப்பு மூலமாகவே அனைத்து சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்படும். இனிமேலும் இதை ‘நாடாளுமன்ற ஜனநாயகம்’ என்று சொல்லமுடியாது. ‘நாடாளுமன்ற பாசிசம்’ என்று அழைப்பதே பொருந்தும்.

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2022 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் ஆகஸ்ட் – 2022 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா- ரூ.240
இரண்டாண்டு சந்தா- ரூ.480
ஐந்தாண்டு சந்தா- ரூ.1,200
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !
தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561
வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

♦ தலையங்கம்: நாடாளுமன்ற பாசிசம்!

♦ உழைக்கும் மக்களைப் பேரழிவுக்குள் தள்ளிய பாசிச மோடி அரசு!

♦ சிறுபான்மை மக்களை ஒடுக்கும் காவி பாசிசம்!

♦ நாட்டை சூறையாடும் காவி – கார்ப்பரேட் கூட்டணி ஆட்சி!

♦ அரசு பயங்கரவாதத்தை ஏவும் பாசிஸ்டு ரணிலே, எம் மக்கள் உனக்கும் பாடம் புகட்டுவார்கள்!

♦ திரெளபதி முர்மு, இளையராஜா: பதவி வேண்டுமா? துரோகம் செய்!

♦ உதய்பூர், காஷ்மீர் சம்பவங்கள்: திரை கிழிந்தது காவிகளின் பயங்கரவாத சதி!

♦ டிஜிட்டல் செய்தி ஊடகங்களை ஒடுக்கத் துடிக்கும் மோடி அரசு!

♦ அரசு பயங்கரத்தை ஏவும் தி.மு.க. அரசே! கல்வித் தனியார்மயத்தை ஒழிக்கும் வரை கள்ளக்குறிச்சிகள் ஓயாது!

♦ மேக்கேதாட்டு அணை மூலம் காவிரியைத் தடுக்குப் பார்க்கிறது (காவி)ரி மேலாண்மை வாரியம்!

♦ இந்து உணர்வைப் புண்படுத்தியதாக சிவபெருமான் கைது!

உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்கள் – பாகம் 2

உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்கள் – பாகம் 1

உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்கள் – பாகம் 2

விளையாட்டில் திறமையை அளவிடும் திறன்

இத்தகைய விளையாட்டுகளில் திறமையின் கூறுகளை எவ்வாறு அளவிடுவது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களிடையே பல்வேறு வழிமுறைகள் உள்ளன. ஒரு பொதுவான சோதனையானது, ஒரு குழுவில் ஒருவர் மற்றொருவருடன் தொடர்ந்து விளையாட அனுமதித்து, ஒவ்வொரு ஆட்டத்திற்குப் பிறகும் ஆட்டக்காரர்களின் முடிவை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுவதும் ஆகும். சிலரால் மற்றவர்களை தொடர்ந்து தோற்கடிக்க முடிந்தால், அந்த விளையாட்டில் திறமையின் கூறு உள்ளது, மேலும் அது நிலையான வெற்றியாளர்களைக் கொண்டுள்ளது. இதுபோன்ற மற்றொரு நிலையில், குறைந்த தர மதிப்பீட்டை பெற்ற வீரர், அதிக மதிப்பீட்டைப் பெற்ற வீரரை தோற்கடிக்கும் எண்ணிக்கையை வைத்து விளையாட்டின் சீரற்ற தன்மையின் ஆதிக்கம் தீர்மானிக்கப்படுகிறது. இதில் அதிக மதிப்பீட்டைப் பெற்ற வீரர் கணிசமான முறையில் தொடர்ந்து தோற்கடிக்கப்படும் போது அவற்றில் மற்ற காரணிகளின் தாக்கமும் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை கண்டறியமுடியும். இதையே விளையாட்டில் உள்ள சீரற்ற தன்மை என்கிறோம்.

இத்தகைய சோதனைகள் முடிவுகள் பலவிதமான விவரங்களை வழங்குகின்றன. இதன் மூலம் இரண்டு வகையான விளையாட்டுகளுக்கும் (திறன் அல்லது வாய்ப்பு) இடையேயான எல்லைகளை வரையறுக்க முடியும். இத்தகைய தொழில்நுட்ப முடிவுகள் வசதியானவை, இவற்றிலிருந்து விளையாட்டுகளை வாய்ப்பு அடிப்படையிலானதா அல்லது திறன் அடிப்படையிலானதா என எளிதில் வகைப்படுத்தலாம். ஆனால் வீரர்கள் ஏன் இவ்வகை விளையாட்டுகளில் மூழ்கி, யதார்த்த உணர்வை இழந்து மீண்டும் மீண்டும் விளையாட தூண்டப்படுகிறார்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் விளக்கவில்லை.

நீதிமன்றங்கள் இந்த விளையாட்டுகள் தொடர்பான தந்திரமான கேள்விகளை சரியான கோணத்தில் விவாதிக்குமேயானால், இவை வாய்ப்பு அல்லது திறன் அடிப்படையிலானது என்பதையும் தாண்டி வேறு நிலைக்கும் செல்லக்கூடும். இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய கேள்வி என்னவென்றால், ‘லுடோ’வில் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்ய ஒருவரைத் தூண்டுவது எது?”என்பதாகும்.

“தொடக்கத்தில் நான் சில ஆட்டங்களில் வெற்றி பெற்றேன், பணம் சம்பாதிக்க இது எளிதான வழியாக இருக்கும் என்று நினைத்தேன்” என்கிறார் மகேஷ்.


படிக்க : ஆன்லைன் சூதாட்டம் : கார்ப்பரேட்டுகளின் இலாபவெறிக்காக தொடரும் படுகொலைகள் ! என்ன செய்ய வேண்டும்?


இத்தகைய சூதாட்டங்கள் விளையாடுபவரை அதிக பணத்தை வெல்ல முடியும் என்ற கற்பனையில் மூழ்கடிக்கும் தன்மையை கொண்டுள்ளன. போட்டியில் பணத்தை வெல்ல தனக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக நினைக்கும் போது மட்டுமே ஒரு வீரர் அந்த விளையாட்டில் பங்குபெறுகிறார். அவர் தன்னை புத்திசாலி என்று கற்பனை செய்து கொள்வதோடு, குறைந்த முயற்சிகளுக்கு ஈடாக பெரிய வெகுமதிகளை வெல்ல முடியும் என நம்புகிறார். இது யதார்த்தத்தை புறக்கணிப்பவர்களின்  கருத்தாகும்.

சீரற்ற நிலையில் இருக்கும், ஆனால் பந்தயம் கட்டப்படாத ‘லுடோ’ விளையாட்டில், நகர்த்துவதற்கு ஒரு துண்டைத் தேர்ந்தெடுப்பது மட்டுமே விளையாட்டில் வெற்றிபெறத் தேவைப்படும். இருப்பினும், பந்தயம் கட்டப்பட்ட சூதாட்டத்தில், வீரர்கள் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல், பந்தயம் கட்டப்படும் பணத்தை பெறவேண்டும் என்ற அழுத்தின் காரணமாக கடினமாக போராட வேண்டியுள்ளது. ஒரு பெரிய வெகுமதி பெற போகிறோம் என்ற எதிர்பார்ப்பின் மாயையில் இத்தகைய சூதாட்டங்களை விளையாடுகிறவர்கள், இதில் பந்தயம் கட்டப்பட்ட பணத்தை சேமிக்க அல்லது சம்பாதிக்க தம்மால் செலுத்தப்பட்ட உழைப்பை மறந்துவிடுகின்றனர்.

“நான் சிறப்பாகவே வியூகம் வகுத்தேன், இருப்பினும் தொடர்ந்து பணத்தை இழந்து கொண்டே இருந்தேன்,” – மகேஷ்.

இதனால் ‘லுடோ’வில் திறன் கூறு இல்லை என்பதல்ல வாதம்; வெல்வதற்கு வீரர்கள் சிந்தித்தே செயல்படுகிறார்கள். ஆனால், அவர்களின் சிந்தனை ‘பகடையின் எண்’ என்ற அதிர்ஷ்டத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறது. பகடை விரும்பத்தகாத எண்ணைக் கொண்டிருந்தால் ஒரு வீரர்களால் சிறப்பான தேர்வுகளைச் செய்ய முடியாது. வீரர்கள் ஒரு நகர்வைச் செய்ய ‘திறமையை பயன்படுத்துகிறார்கள், அதனாலேயே அவர்களின் தேர்வுகள் தான் விளையாட்டின் முடிவுகளை தீர்மானிப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் விளையாட்டிற்குள் அவர்களின் சிந்தனையும், தேர்வும் பகடை எண்களால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை அவர்கள் உணரத் தவறிவிடுகிறார்கள். அவர்கள் மோசமாக செயல்பட்டால் தம் தேர்வுகளால் தான் காரணம் என தங்களையே குற்றம் சாட்டிக் கொள்கிறார்களே தவிர, பகடையின் சீரற்ற தன்மை குறித்து சிறிதும் சிந்திப்பதில்லை.

“விளையாடுவதற்காக நான் கடன் வாங்க வேண்டியிருந்தது. நான் அதை மீண்டும் வெல்ல முடியும், பகடை எனக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்தேன்” – மகேஷ்

மகேஷ் எந்த அளவிற்கு அதிகமாக விளையாடினரோ, அந்த அளவிற்கு அதிக பணத்தை இழந்தார்.

சீற்ற காரணிகள்

தனது பணம் முழுவதையும் இழந்த பிறகும், மகேஷ் அதை மீண்டும் வெல்ல முடியும் என்று நினைத்தார்.

பகடை உருட்டப்படும் ஒவ்வொரு புதிய நிகழ்விலும், அதிர்ஷ்டம் தனக்கு சாதகமாக இருக்கும் என்று வீரர் நம்புகிறார். விளையாட்டின் சீரற்ற தன்மையின் கூறுகள், வீரர்களின் மனநிலையை தொடர்ந்து எதிர்பார்ப்பு நிலையில் இருக்கும்படி செய்கின்றன. மேலும் இந்த எதிர்பார்ப்பு அவரை தொடர்ந்து விளையாடவும் தூண்டுகிறது. இந்த உணர்வுகளே ஒரு வீரரின் மனதை அடிமையாக்கும் தன்மையையும் கொண்டிருக்கின்றன. எனவே, ஆன்லைன் விளையாட்டுகளில் அதன் சீரற்ற தன்மை எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதை ஆராய்வது மிகவும் முக்கியமானது.

‘லுடோ’ போன்ற ஆன்லைன் பகடை அடிப்படையிலான விளையாட்டுகளில், பகடையில் விழும் எண்கள் வீரர்களிடம் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆஃப்லைனில் ‘லுடோ’ விளையாடும் போது, பகடை நியாயமாகவே இருக்கிறது என்ற நம்பிக்கை வீரர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் ஆன்லைனில் இது அப்படியா என்றால் இல்லை என்றே கூறவேண்டும். இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் மற்ற வீரர்கள் மனிதர்களா என்பதை கூட சரிபார்க்க வழி இல்லை. மனிதர்கள் விளையாடுவதாக நினைத்து, அதிக தொகை கொண்ட போட்டிகளை விளையாடும் நிகழ்வுகளும் நடக்கின்றன. விளையாட்டில் சீரற்ற தன்மையின் ஆதிக்கம் எதுவாக இருந்தாலும், வீரர்கள் தங்கள் தவறுகள் தான் விளையாட்டைப் பாதிக்கிறது என்றும், தாங்கள் சரியாக செயல்பட்டால் போட்டியில் வெல்ல முடியும் எனவும் கற்பனை செய்துகொள்கிறார்கள். ஆட்ட துண்டின் நிறத்தைத் தேர்ந்தெடுக்கும் செயல்களாலும், பகடை வெவ்வேறு வழிகளில் உருட்டப்படும் காட்சிகளை காண்பதாலும், போட்டி நேர்மையாகவே நடக்கிறது என்ற மாயை உருவாக்கப்படுகிறது.

“எனது சேமிப்பு அனைத்தும் போய்விட்டது, நான் எவ்வளவு பணம் இழந்தேன் என்பதை நான் கணக்கிடவே முடியவில்லை” – மகேஷ்.

ஒரு வீரர் மாதம் வருமானம் ரூ.20,000 சம்பாதிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், அதில் ரூ.5,000 சேமித்து ரூ.4,000-தை சூதாட்டத்தில் இழக்கிறார். கணித ரீதியாக அவர் இழந்த தொகை என்பது அவரது வருமானத்தில் 20 சதவீதம் மட்டுமே, ஆனால் அவரது சேமிப்பில் 80 சதவீதம் ஆகும். ஒரு ஆன்லைன் சூதாட்டத்தில், இந்த வீரரின் பந்தயம் குறைவாகவும், மற்ற செலவுகளுடன் ஒப்பிடும் போது பெரிதாகத் தெரிவதில்லை. ஆனால் பந்தயம் விளையாடும் போது, வீரர்கள் பணத்தை சேமிப்பாக நினைப்பதை நிறுத்திவிட்டு, அவர்களுக்கு இருக்கும் உண்மையான செலவுகளை மறந்துவிடுகிறார்கள். அவர்களின் சேமிப்பு மற்றும் வருமானம் ஆகியவற்றுடன் பந்தயம் கட்டப்படும் பணத்தின் விகிதத்தை அவர்கள் கற்பனை கூட செய்து பார்ப்பதில்லை. பந்தயம் கட்டப்பட்ட தொகை வெறும் எண்ணாக மட்டுமே திரையில் தோன்றுகிறது. வீரர்கள் எவ்வளவு இழந்தார்கள் என்ற புள்ளி விவரங்களின் பதிவுகள் பெரும்பாலும் காட்டப்படுவதில்லை. இது வீரரை ஏமாற்றும் மற்றொரு வேலையாகும். இத்தகைய சூதாட்டங்கள் அவசர காலங்களில் தேவைப்படும் சேமிப்பு பணத்தின் உன்னதத்தை மறைக்கின்றன. தனது சேமிப்புப் பணத்தை இந்த செயலிகள் வெறும் எண்களாக மட்டுமே காட்டுவதாலேயோ அல்லது அதிக பணத்தை வெல்ல முடியும் என்ற எதிர்பார்ப்பை தூண்டும் மாயைகளாலேயோ சேமிப்பின் இழப்பையும், அந்த இழப்புகளின் விளைவுகளையும் விளையாடுபவர் மறந்துவிடுகிறார்.

முதலில், ஒரு வீரர் தனது முயற்சிகள் விளையாட்டின் முடிவை மாற்றும் என்று உறுதியாக நம்ப வைக்கப்படுகிறார். ஆனால் தேர்வுகள் பகடையைச் சார்ந்தது என்பதால் இது மிகப்பெரிய ஏமாற்று வேலையாகும்.

இரண்டாவதாக, பெரிய எழுத்துக்களில் திரைப்படுத்தப்படும் வெகுமதிகளுடன் ஒப்பிடும்போது விளையாட்டில் அவரது கடினமாக போராட்டத்தை மிக சொற்பம் என்று அவர் எண்ணுகிறார்.

கடைசியாக, அவர் வென்ற தொகை முழுமையானது என்றும், அதில் தனது பங்களிப்பையும் தன் போராட்டங்களையும் மறந்துவிடுகிறார்.

இவை அனைத்தும் வாய்ப்பை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் விளையாட்டின் கூறுகளே தவிர வேறில்லை. எனவே ஒரு விளையாட்டில் ‘திறமை மேலாதிக்கம் அல்லது வாய்ப்பு மேலாதிக்கம்’ என்பதை தீர்மானிப்பது பணம் சம்பந்தப்பட்ட விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவதை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கக்கூடாது.

இத்தகைய சூதாட்டங்களிலிருந்து பெற்ற உண்மையான அனுபவத்திலிருந்து, அவை நடத்தையில் ஏற்படுத்தும் விளைவுகள் மற்றும் அவற்றின் சமூக பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவையும் இதன் பகுதியாக இருக்க வேண்டும்.

மக்களை கவர்ந்திழுத்து அவர்களை வீரர்களாக மாற்றும் இவற்றின் விளம்பரங்கள் அனைத்து தளங்களிலும் மண்டிகிடக்கின்றன். கேஷ் பேக் மற்றும் வெகுமதிகள் வழங்கப்படுகின்றன, பிரபலங்கள் தன் சுய லாபத்திற்காக இத்தகைய செயலிகளை அங்கீகரிப்பதுடன், விளம்பரங்களில் அவற்றின் நம்பகத் தன்மையைச் சரிபார்க்காமல் சான்றுகளையும் வழங்குகின்றனர். ஆனால் விளையாட்டிற்குள் “பகடையில் விழும் எண் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது?” போன்ற பல கேள்விகள் இன்னும் பதிலளிக்கப்படாமலே உள்ளன. மேலும் நீதிமன்றங்களிலும் இன்னும் இது போன்ற கேள்விகள் எழுப்பப்படவும் இல்லை.


படிக்க : ஆன்லைன் சூதாட்டம் : கார்ப்பரேட்களின் இலாபவெறிக்காக தொடரும் படுகொலைகள்


இவ்வகையான நிறுவனங்கள் பணத்திற்காக விளையாடும் விளையாட்டுகளை அறிமுகப்படுத்தும் முன் அவற்றின் உள்ள நேர்மையின் தன்மை வெளிப்படையாக பரிசோதிக்கப்பட வேண்டும், மேலும் அது ஒரு முறைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.

சமூகத்தில் ஏற்படுத்தப்படும் தாக்கம்

மகேஷின் இழப்பானது ஒரு உதாரணம் மட்டுமே, இவை நாம் வசிக்கும் தெருக்களிலேயே கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.

திறமைகளை வளர்த்துக்கொள்வது மற்றும் கடினமாக உழைப்பதே ஒரு சிறந்த வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்று இனியும் நம்பாத ஒரு சமூகம்; அதற்கு மாற்றாக அதிர்ஷ்டம் என்ற கற்பனை குதிரையின் மூலம் பொருளாதார விடுதலையை அடையமுடியும் என நம்புகிறது.

எத்தகைய விளையாட்டுகளையும் சட்ட-ஒழுங்குமுறை முன் வைக்கும் கேள்விகளுக்கும் அப்பால் நாம் பார்க்க வேண்டியுள்ளது. விளையாட்டுகள் சமூகத்தின் கூறு மற்றும் சமூகநலன்களை அடிப்படையாக கொண்டவைகளாக இருக்க வேண்டும் என்பதே நம் எண்ணமாகும். எனவே இவற்றை மதிப்பிட புதிய கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன, அவை சட்டம் மற்றும் சட்டமன்றத்தின் நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட கட்டமைப்புகளைப் பெற்றிருப்பதோடு, ஒரு விளையாட்டு தனிநபர் மற்றும் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராயும் தன்மையையும் கொண்டிருக்க வேண்டும்.

(முற்றும்)

GIRISH DALVI AND MALAY DHAMELIA

நம் வீட்டுப் பிள்ளை ஸ்ரீமதி “அடையாளம் தெரியாத உடல்” என்றால் ஓ, தொழிலாளி வர்க்கமே! நாம் யார்?

துவரை கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் குறித்து நடக்கும் விசாரணையும், அது குறித்து வெளியிடப்படும் செய்திகளும் குற்றம் சாட்டப்பட்டுள்ள தனியார் பள்ளி முதலாளியின் குடும்பத்தினர் மீது நடப்பதாக ஒரு செய்தியும் வரவில்லை.

ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக தற்போது வெளிவரும் செய்திகள் குறிப்பாக ஒரு செய்தியை நம் எல்லோருக்கும் சுட்டிக் காட்டுகின்றன.

அரசின் ஒவ்வொரு உறுப்புகளும் சக்தி இண்டர்நேசனல் தனியார் பள்ளி முதலாளிக்கு சாதகமாக மிக இயல்பாக செயல்பட்டிருக்கின்றன, செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான செய்தி.

இது ஒருபக்கமிருக்க, தற்போது வருகின்ற தகவல்களின்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஸ்ரீமதி “அடையாளம் தெரியாத உடல்” (Unidentified body) என்று குறிப்பிடப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாக தெரிய வருகிறது. இதைவிட வேறென்ன நம்மை இழிவுபடுத்த முடியும்?

பள்ளி நிர்வாகத்தில் இருந்துதான் மருத்துவமனைக்கு ஸ்ரீமதியின் உடலை கொண்டு வந்துள்ளனர். அப்படியென்றால் அனைத்து விபரமும் தெரிந்துதான் இருக்கும். ஆனாலும் “அடையாளம் தெரியாத உடல்” என்று மருத்துவமனை ஆவணத்தில் குறிப்பிட முடிகிறதென்றால் இந்த விசயத்தை முதுகெலும்புள்ள யாராவது அமைதியாக கடந்து செல்ல முடியுமா?


படிக்க : தனியார் கல்விக்கு எதிரான போராட்ட(கள்ளக்குறிச்சி)மாடல் பரவி விடக்கூடாது என்பதே திமுக அரசின் நோக்கம்! | மருது வீடியோ


கல்வி தனியார்மய பயங்கரவாதத்தால் அரசின் துணையோடு பணக் கொழுப்பெடுத்து திரியும் சக்தி இண்டர்நேசனல் போன்ற முதலாளிகளின் லாபம் மட்டுமே புனிதமானது. அவர்களின் லாபத்தின் முன் நம் வீட்டுப் பிள்ளைகளின் உயிரெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்பதுதானே மருத்துவமனை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைக்கு பொருள்.

போலீசால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டார்கள் சாத்தான்குளம் ஜெயராஜும், பென்னிக்ஸும். சிறைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட அவர்களின் உடல்நிலை குறித்த சான்றிதழில் இருவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று போலீசுக்கு சாதகமாக குறிப்பிட்டு மருத்துவர்களே கொலைக்கு துணை போனார்களே, அந்த சம்பவம் நம் நினைவை விட்டு இன்னும் அகலவில்லை.

அரசின் உறுப்புகள் ஒன்றுக்கொன்று இணைந்து உழைக்கும் மக்கள் மீது தொடர்ந்து நடத்திக் கொண்டே இருக்கும் இந்தக் கொடூரத்திற்கும் “அடையாளம் தெரியாத உடல்” என்று ஸ்ரீமதியின் உடலுக்கு கொடுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையின் குறிப்புக்கும் ஏதேனும் வேறுபாடு இருக்கிறதா?

தொழிலாளி வர்க்கம் இந்தப் பிரச்சினையில் இருந்து ஒதுங்கியிருக்க முடியுமா? ஓ, தொழிலாளி வர்க்கமே! நீயும், ஸ்ரீமதியும் வேறுவேறா? யோசித்துப் பார்! நம் வர்க்கத்துப் பிள்ளை என்பதால்தானே அவளுக்கு இந்தக் கதி! நாளை நாமும் ”அடையாளம் தெரியாத உடல்கள்தானே!” அப்படித்தானே முதலாளிகளும், அரசும் நம்மைக் கருதுகின்றனர்.

முதலாளித்துவப் பயங்கரவாதம் ஒவ்வொரு ஆலையிலும், ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தொழிலாளி வர்க்கத்தின் மீது ஏவும் கொடூரங்களை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். கொரோனா காலகட்டத்தில் பாசிசக் கோமாளியின் முட்டாள்தனமான நடவடிக்கையால் சொந்த ஊர்களை நோக்கி அநாதைகளைப் போல விரட்டப்பட்ட தொழிலாளிகள் இரயில்களில் அடிபட்டு உடல் சிதைந்தும், பசியினாலும் மடிந்தார்களே, அப்போது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பெயர் என்ன தெரியுமா? “அடையாளம் தெரியாத உடல்கள்” என்பதுதான்.

முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்காக எந்தப் பணிப் பாதுகாப்புமின்றி, எந்த உத்தரவாதமுமின்றி பாய்லர்களில் விழுந்து உருக்குலைந்த தொழிலாளிகளின் உடல்களுக்கு கொடுக்கும் பெயர் என்ன? இன்று ஸ்ரீமதிக்கு என்ன பெயர் கொடுத்தார்களோ அதேதான்.

ஒவ்வொரு நாளும் நாடெங்கும் ஆலைகளிலும், சுரங்கங்களிலும், முதலாளி வர்க்கத்தின் ஏவல்நாயான அரசின் பயங்கரவாதத்தாலும், முதலாளித்துவம் உருவாக்கும் பசியாலும், பட்டினியாலும், வேலையின்மையாலும் உழைக்கும் வர்க்கத்தின் ”அடையாளம் தெரியாத உடல்கள்” உருவாகிக் கொண்டே இருக்கின்றன. கேட்பாரற்று அநாதையாக மண்ணுக்குள் செல்கின்றன.

முதலாளித்துவப் பயங்கரவாதமோ ”உயிருள்ள லாபத்தை” நம் உடலில் இருந்து எடுத்துக் கொண்டு தன்னை யாரும் அசைக்க முடியாதென்று கொக்கரிக்கிறது.

இன்று தொழிலாளர் நலச் சட்டத்தை திருத்தி, எவ்வித உரிமைகளுமற்ற அடிமைகளாக நம்மை மாற்றி நம்மீது மிகப் பெரிய பயங்கரத்தை ஏவக் காத்திருக்கும் இந்த முதலாளித்துவப் பயங்கரவாதிகளுக்கு நாம் உயிரோடிருக்கும்போதே ”அடையாளம் தெரியாத உடல்கள்” தானே. நம் உழைப்பைச் சுரண்டிக் கொள்வதைத் தவிர வேறெதைப் பற்றியும் எக்காலத்திலும் அவர்கள் கவலைப்படப் பட்டதுமில்லை, கவலைப்படப் போவதுமில்லை.


படிக்க : கள்ளக்குறிச்சியில் போராடியவர்கள் மீதான ஒடுக்குமுறை: உ.பி.யோகிக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை! | மருது வீடியோ


ஸ்ரீமதிக்காக தொழிலாளி வர்க்கம் தனது குரலை உயர்த்த வேண்டும். அவ்வாறு உயர்த்துவது தனக்காகவும்தான் என்பதை உணர வேண்டும்.

நாம் அடையாளம் தெரியாத உடல்கள் அல்ல. நமக்கென்று ”வர்க்கம்” என்ற அடையாளம் உள்ளது. அந்த வர்க்கத் திமிர் மட்டும்தான் முதலாளித்துவப் பயங்கரவாதத்தை அச்சுறுத்தும். முதலாளித்துவச் சுரண்டலை அடியோடு வீழ்த்தும்.

முதலாளித்துவச் சுரண்டலை அடியோடு வீழ்த்துவது மட்டும்தான் ஸ்ரீமதி என்ற நம் வீட்டுப் பிள்ளைக்கு நேர்ந்த துயரம் மற்ற பிள்ளைகளுக்கும் நேராமல் நிரந்தரமாக தடுக்கும்.

இனியன்

உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்கள் – பாகம் 1

ந்தியாவில் பணத்தை வைத்து விளையாடும் எண்ணற்ற ஆன்லைன் சூதாட்ட செயலிகள் பெருகிவிட்டன. இந்த செயலிகளால் கடனில் சிக்கி தற்கொலை முயற்சிகளை மேற்கொள்பவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

“நான் மோசமான தவறு செய்துவிட்டேன், என் பணம் அனைத்தையும் இழந்துவிட்டேன்,” என ஆன்லைன் சூதாட்டத்தில் தனது பணத்தை இழந்த மகேஷ் என்பவரின் வார்த்தைகள் இவை.

இதை கூறும்போது அவரது முகபாவனை கவலையளிப்பதாக இருந்தது. மகேஷ் தோட்ட வேலை செய்து தான் சேமித்து வைத்திருந்த பணத்தை வைத்து விளையாடியதுடன், கடன் பெற்றும் விளையாடியுள்ளார். தற்போது பணம் அனைத்தையும் இழந்து, கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் உள்ளார்.

ஆரம்பத்தில் இவை பரவலாகவே உபயோகப்படுத்தப்பட்டன. ஆனால் தொற்றுநோய் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த போது, வெற்றியாளர்களுக்கு நிறைய பணம் என இந்த சூதாட்டங்களைப் பற்றிய ஆயிரக்கணக்கான வஞ்சகத்தனமான குறுஞ்செய்திகள் மக்களுக்கு அனுப்பபட்டன. இதில் “வரவேற்பு தொகை ரூ. 2,000, லூடோ விளையாடுங்கள் பணத்தை வெல்லுங்கள், மேலும் இலவசமாகப் பதிவு செய்யுங்கள்” என்பதும் ஒன்றாகும். யூடியுபில் பிரபலமாக இருபவர்கள் அவர்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்கள் என்று பெருமை பேசி, இந்த செயலிகளை பெரிய அளவில் விளம்பரப்படுத்தினர். மேலும் இந்த சூதாட்டங்களின் மூலம் நிலையான தினசரி வருமானத்தை திரட்டுவதற்கான குறிப்புகளையும், தந்திரங்களையும் அவர்கள் பகிர்ந்தனர். எதிர்விளைவுகளை பற்றி சிறிதும் சிந்திக்காமல் செய்யப்படும் இத்தகைய கீழ்த்தரமான விளம்பரங்களுக்கு மகேஷ் போன்றவர்கள் எளிதில் இரையாகிவிடுகின்றனர்.


படிக்க : ஆன்லைன் சூதாட்டம் : கார்ப்பரேட்டுகளின் இலாபவெறிக்காக தொடரும் படுகொலைகள் ! என்ன செய்ய வேண்டும்?


வேலை நீக்கம் அதிகரித்து, ஊதிய குறைப்பு போன்றவை மிகவும் சாதாரணமாகிப்போன அந்த சமயத்தில், பலர் நிச்சயமற்ற வாழ்க்கையை எதிர்நோக்கியிருந்தனர். ஆனால் அவர்கள் தங்கள் வாழ்வை மீட்டு கட்டமைக்க தேவையான முயற்சிகளை செய்வதை விடுத்து, கைப்பேசியில் நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தனர். மேலும் சூதாட்டங்களில் மூலம் தனது ஒவ்வொரு வெற்றிக்கும் பணத்தை பரிசாக பெறமுடியும் என எண்ணி, சிறிது பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியில் இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்யத் தொடங்கினர்.

“வரவேற்பு தொகையில் எனது அதிர்ஷ்டத்தை முயற்சி செய்ய சில ஆட்டங்கள் மட்டும் விளையாடலாம் என்று நினைத்தேன்,” என மகேஷ் கூறினார்.

ஆரம்பத்தில் மக்கள் தாங்கள் கட்டுப்பாட்டில் தான் இருப்பதாக நம்பி, வரவேற்பு தொகையில் மட்டும் விளையாடி விட்டு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தப்பித்து விடலாம் என எண்ணுகின்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது அரிதாகவே நிகழ்கிறது. ஏனெனில் பெரும்பாலான செயலிகளில் வரவேற்பு தொகையை பெறுவதற்கு ஆரம்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. இதற்காக நீங்கள் உங்கள் வங்கி கணக்கை இதனுடன் இணைக்கும் படி செய்துவிடுகின்றனர். எனவே செயலியில் உள்ள பணத்தை இழந்தவுடன், இழந்ததை மீட்க நாம் தன்னிச்சையாகவே வங்கி கணக்கில் உள்ள பணத்தை மீண்டும் அந்த செயலியில் கொட்ட இது வழிவகுக்கிறது. இதுவே இத்தகைய விளையாட்டுகளில் ஆரம்ப நிலையாகும். வரவேற்பு தொகையை தொடக்கத்திலேயே பயன்படுத்தும் நிலை இருந்தால் அதை மட்டும் வைத்து விளையாடிவிட்டு தம்மால் இதில் வெற்றி பெறமுடியாது என்பதை உணர்ந்தது வெளியேறிவிடுவர் என்பதை திட்டமிட்டே இந்த கன்னி வைக்கப்பட்டுள்ளது.

சூதாட கவர்ந்திழுக்கப்படும் பயனாளர்கள்

இந்த செயலிகள் தங்கள் சதித்திட்டங்களை இத்துடன் நிறுத்திக் கொள்வதில்லை, இதன் பின்னர் பயனாளர்களை சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் பற்றிய அறிவிப்புகளை இடைவிடாமல் அனுப்புவதன் மூலம் செயலியில் மேலும் அதிகப் பணத்தை கொட்ட பலவிதமான நுட்பங்களை இந்நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.

எச்சரிக்கையானவர்கள் இதில் உள்ள பொறிகளை விரைவாக உணர்ந்து அதிக பணத்தை இழக்கும் முன் வெளியேறிவிடுகின்றனர். இச்செயலிகளின் நோக்கங்களை கணிக்க தெரியாதவர்கள் மென்மேலும் அதிக பணத்தை இழக்கிறார்கள். இன்னும் சில ஏமாளிகளோ பணத்தை இழப்பதுடன், வாழ்க்கையையே இழந்ததாக எண்ணி தற்கொலை முடிவை நாடுகின்றனர். இது இந்த வகையான சூதாட்டங்களினால் ஏற்பட்ட கடன் தொல்லைகளின் காரணமான தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையில் இருந்து தெளிவாக தெரிகிறது.

இந்த ஆன்லைன் சூதாட்டங்களில் புழங்கும் பணம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு (FICCI) மற்றும் எர்ன்ஸ்ட் &யங் (EY) ஆகியவற்றால் வெளியிடப்பட்ட மதிப்பீட்டின் படி, 2022-இல் பரிவர்த்தனை அடிப்படையிலான இவ்வகையான சூதாட்டங்களின் மூலம் ரூ.8,500 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இதில் ஈடுபடும் நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.61,000 கோடியாகும். இதை இன்னும் தெளிவாக  கூற வேண்டுமானால், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) இன் சந்தை மதிப்பை விட இது அதிகமாகும். மற்ற வணிகங்களுடன் ஒப்பிடும் போது இந்நிறுவனங்களின் முதலீடு மிக குறைவாக இருப்பதால், இதன் செலவுகள் பெருமளவில் விளம்பரத்திற்காக மட்டுமே செலவிடப்படுகின்றன. இதைத்தான் அனைத்து தளங்களிலும் அன்றாடம் காண்கிறோம்.

மேற்கண்ட விவரங்கள் நன்கு அறியப்பட்டவையாக இருந்தாலும், சூதாட்டங்களில் தொடர்புடையவர்களின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களை எவரும் கணக்கில் கொள்வதில்லை. எங்கள்  மதிப்பீடுகளின் படி, சுமார் 10லட்சத்திற்கும் மேற்பட்டோர் இது போன்ற விளையாட்டுகளால் ‘மனச்சோர்வு, கவலை, தற்கொலை எண்ணம் மற்றும் தற்கொலை முயற்சிகள்’ உள்ளிட்ட ஆபத்தான பழக்கங்களின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றனர்.

நடத்தையில் ஏற்படும் மாற்றம்

மகேஷுக்கு அவரது விரக்தி கோபமாக மாறிவிட்டது. “இந்த ஏமாற்றுக்காரர்கள் எனது பணத்தை பறித்துக்கொண்டனர், அரசாங்கம் அவற்றைத் தடை செய்ய வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.

இத்தகைய செயலிகள், சூதாட்டங்களின் பின்னணியில் என்னென்ன நாசகர வேலைகளை செய்கின்றன என்பது தெரியவில்லை. மேலும் அவை எவ்வளவு நேர்மையானவை என்பதைக் கண்டறிவது சாத்தியமற்றதாகவே உள்ளது. வாடிக்கையாளரின் ‘உடல்நலம் – நிதி’ ஆகியவற்றின் அபாயத்தை உள்ளடக்கிய வணிகங்களில் குறிப்பாக ‘மருந்துப் பொருட்கள், புகையிலை மற்றும் பங்குச் சந்தைகள்’ போன்றவை அரசால் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அதே நேரத்தில், நிதி ஆபத்து சம்பந்தப்பட்ட இத்தகைய சூதாட்டங்களை கண்காணிக்கும் அமைப்பும், அதற்கான ஒரு ஒழுங்குமுறையும் இந்தியாவில் இல்லை.

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்வதற்கானத் தனி சட்டங்களை சமீபத்தில் இயற்றியது. இருப்பினும், இந்நிறுவனங்கள் இந்த சட்டங்களின் மீது விரைவாக நீதிமன்றங்களில் முறையீடு செய்தன. நீதிமன்றமும் இவற்றை சூதாட்டமாக எண்ணாமல் “திறமை சார்ந்த விளையாட்டுகள்” எனவும், இவற்றை தடை செய்வது அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் கூறி இத்தனிச் சட்டங்களை ரத்து செய்து உத்தரவிட்டது. இதில் நீதிமன்றத்தின் கருத்து என்னவென்றால் “திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது அரசியலமைப்பின் 19 வது பிரிவுக்கு எதிரானது’’ என்பதாகும். ஏனெனில் “திறமை சார்ந்த விளையாட்டுகள்” பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. இந்த வழக்கின் மையப்புள்ளியானது, “எவை திறமை சார்ந்த விளையாட்டுகள்?” என்பது தொடர்பான விளக்கத்தில் உள்ளது.

சதுரங்கம் போன்ற விளையாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி திறமை சார்ந்த விளையாட்டுகளாகும், ஏனெனில் அவை சீரற்ற தன்மையில் இயங்குவது இல்லை. இவ்விளையாட்டில் வீரர்கள் தங்களிடம் உள்ள திறமையின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறார்கள். உதாரணமாக,


படிக்க : ஆன்லைன் சூதாட்டம் : கார்ப்பரேட்களின் இலாபவெறிக்காக தொடரும் படுகொலைகள்


‘அதிக மதிப்பீட்டைப் பெற்ற ஒரு வீரர் சதுரங்கத்தில் புதியவர்களை எப்போதும் தோற்கடிக்கிறார்’, என ஒரு கிராண்ட்மாஸ்டர் கூறுகிறார்.

மறுபுறம், ‘பாம்புகள் மற்றும் ஏணிகள்’ விளையாட்டை பார்க்கும் பொழுது அது ஒரு வாய்ப்பு விளையாட்டாக உள்ளது. அது முழுவதும் பகடையில் விழும் எண்களை சார்ந்து உள்ளது, ஆனால் பகடையின் எண்ணானது சீரற்றதாக உள்ளது. இந்த விளையாட்டில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் அல்லது எல்லா வீரர்களுக்கும் விளையாட்டில் வெற்றி பெறுவதற்கு சமமான வாய்ப்பு உள்ளது, அதனால் தான் குழந்தைகள் அதை விளையாட விரும்புகிறார்கள். இதுவே ‘லுடோ’ போன்ற விளையாட்டுகளை எடுத்துக்கொண்டால், இதில் திறன் மற்றும் வாய்ப்பு ஆகிய இரண்டு கூறுகளும் உள்ளன. இதுவே இந்த விளையாட்டின் ஒவ்வொரு நிகழ்வையும் புதியதாகவும், வீரர்களுக்கு உற்சாகத்தை அளிப்பதாகவும் இருக்கிறது.

‘லுடோ’-வில், ஒரு துண்டு எவ்வளவு நகர்கிறது என்பது பகடையில் விழும் சீரற்ற எண்ணை சார்ந்தும் (வாய்ப்பு அம்சம்) மற்றும் எந்த துண்டை நகர்த்துவது என்பது வீரரை (திறன் அம்சம்) சார்ந்ததும் அமைகிறது. எனவே, இத்தகைய விளையாட்டுளை ‘திறமை சார்ந்த விளையாட்டா அல்லது “வாய்ப்பு சார்ந்த விளையாட்டா’ என தீர்மானிக்க கடினமாக உள்ளது. இந்த கேள்விதான் நீதிமன்றத்திலும் வந்துள்ளது.

கிரெய்ல் பிரைவேட் லிமிடெட் (லுடோ சுப்ரீம் ஆப் டெவலப்பர்கள்) மீது கேசவ் முலே தாக்கல் செய்த மனுவில், ‘லுடோ’ திறமை சார்ந்த விளையாட்டா அல்லது வாய்ப்பு சார்ந்த விளையாட்டா என்பதை மும்பை உயர்நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும். இது திறமை சார்ந்த விளையாட்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தால், பணத்துடன் ‘லூடோ’ விளையாடுவது சட்டப்பூர்வமாக இருக்கும்; இல்லையெனில், பணத்தை வைத்து விளையாடுவது சூதாட்டமாகவும், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் சட்ட விரோதமாகவும் கருதப்படும்.

(தொடரும்…)

GIRISH DALVI AND MALAY DHAMELIA