Saturday, August 2, 2025
முகப்பு பதிவு பக்கம் 205

ஸ்டான் சுவாமி படுகொலை : பீமா கொரேகான் வழக்கில் கைதானோரின் குடும்பத்தினர் அறிக்கை !

அருட்தந்தை ஸ்டான் சுவாமியின் நிறுவன ரீதியான கொலை
(
பி.கே.-16இன் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் விடுக்கும் அறிக்கை)

6.7.2021

பீமா கொரேகான் சதி வழக்கில் குற்றம்சாட்டப் பட்டுள்ளவர்களின் நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களுமான நாங்கள் அருட்தந்தை ஸ்டான் சுவாமியின் இழப்பினால் உலுக்கப் பட்டு ஆழ்ந்த காயமடைந்திருக்கிறோம். இது ஒரு இயற்கையான மரணமல்ல; ஒரு கனிவான ஆத்மாவிற்கு எதிராக ஒரு மனிதாபிமானமில்லாத அரசு நடத்திய நிறுவன ரீதியான கொலை.

வாழ்நாள் முழுவதிலும் ஜார்கண்ட் மாநிலத்தின் ஆதிவாசிகளிடையே இருந்து அவர்களுடைய வளங்கள், நிலங்கள் மீது அவர்களுக்கு இருந்த உரிமைக்காகப் போராடிய அருட்தந்தை ஸ்டானுக்கு, அவர் நேசித்த ஜார்கண்டிலிருந்து தொலைதூரத்தில், பழிவாங்கும் உணர்ச்சி மிகுந்த அரசினால் சிறை வைக்கப்பட்ட நிலையில் இப்படி மரணம்  நேர்ந்திருக்கக் கூடாது.

படிக்க :
♦ அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட ஸ்டான் சுவாமி
♦ சமூக செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமிக்கு கோவிட் தொற்று !

பீமா கொரேகான் வழக்கில் தவறாகக் குற்றம்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட 16 பேரில் கடைசியாகக் கைதானவர் அருட்தந்தை ஸ்டான்தான். பார்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 84 வயதான அவர்தான் கைது செய்யப்பட்டவர்களில் மூத்தவர்; அதிகம் நலிவடைந்தவர். உடல்நிலை மோசமாக இருந்த போதிலும், அவருடைய தார்மீக வலிமையாலும் அசைக்க முடியாத நேர்மையாலும் அனைவருக்கும் உத்வேகம் அளித்தார்.

சிறையில் அவருடைய உடல்நிலை மோசமடைந்து கொண்டிருந்த போதிலும் சக சிறைவாசிகளைக் குறித்தே அவருடைய எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இருந்தன. தன்னுடைய கடிதங்களில் பல்வேறு வழக்குகளில் போலியாக குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருந்தவர்களைப் பற்றி எழுதிய அவர் சமுதாயத்தில் நிலவும் அநீதிகளைக் குறித்து வேதனையில் புழுங்கினார்.

அவருடைய கனிவையும், மனித நேயத்தையும், இரக்க உணர்வையும் நினைத்துப் பார்க்கும் நேரத்தில், அவர் சிறைவைக்கப்பட்டதெனும் மாபெரும் அநீதியை மறக்க முடியாது. அருட்தந்தை ஸ்டான் போல் வயதுமுதிர்ந்த நோய்வாய்ப்பட்டிருந்த ஒருவர் சிறையிலடைக்கப்படுவதே, அதுவும் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நடப்பது, மனசாட்சிக்கு விரோதமானது.

அக்டோபர் 8, 2020-ம் ஆண்டில் அவர் கைது செய்யப்பட்டபோதே அவருக்கு எதிரான விசாரணை முடிவுற்றிருந்தது; அவர் ஓடிப் போகும் அபாயம் இல்லை என்பதும் தெளிவு. அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதும், நவி மும்பையிலிருக்கும் தஜோலா சிறையில் அடைக்கப்பட்டதுமே அவருக்குக் கொடுக்கப்பட்ட மரண தண்டனை போன்றதுதான்.

அருட்தந்தை ஸ்டான் கைது செய்யப்பட்ட நேரத்தில் மனதை உருக வைக்கும் ஒரு வீடியோ அறிக்கையை வெளியிட்டார். அவருடைய கணிணியிலிருந்து எடுக்கப்பட்ட சில குறிப்பிட்ட ஆவணங்களின் அடிப்படையில் – அந்த ஆவணங்களை அவர் அதற்கு முன் பார்த்ததில்லை, தன் கணிணியில் பதியவுமில்லை என்ற போதிலும் – அவர் ஒரு மாவோயிஸ்ட் சதியில் ஈடுபட்டதாக மென்மையான ஆனால் தெளிவான குரலில் கூறினார்.

அந்த ஆவணங்கள் அவருடைய கணிணியில் தொலைத்தூரத்திலிருந்து திருட்டுத் தனமாக பதியப்பட்டன என்பதை இந்த வருட ஆரம்பத்தில் ஆர்சனல் கன்சல்டிங் என்கிற நிறுவனமும், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையும் வெளியிட்ட ஸ்தம்பிக்க வைக்கும் உண்மைகள் உறுதிப்படுத்தின.

நெட்வைர் மால்வேர் என்கிற இணையக் கருவியைப் பயன்படுத்தி பீமா கொரேகான் பிரச்சனையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கணிணிகளில் அவர்களை சதியில் தொடர்பு படுத்தும் ஆவணங்களை தொலைத்தூரத்திலிருந்து பதிந்த முறையையும் அந்த இரு நிறுவனங்களும் விளக்கியிருந்தன. இப்படி தீய நோக்கத்துடன் ஜோடிக்கப்பட்ட ஆதாரத்தின் அடிப்படையிலான குற்றச்சாட்டுக்கு விலையாக அருட்தந்தை ஸ்டான் தன் உயிரைக் கொடுக்க நேர்ந்திருப்பதைக் கண்டு நாங்கள் கொதித்துப் போயிருக்கிறோம்.

அருட்தந்தை ஸ்டான் சிறையிலடைக்கப்பட்ட பிறகும் கூட அவரது உடல்நிலையைக் குறித்து கவலை கொள்ளாத பொறுப்பற்ற போக்கு தொடர்ந்தது. சிறையில் ஸ்ட்ரா வைத்து உறிஞ்சிக் குடிக்க உதவும் கோப்பையைப் பயன்படுத்தக் கூட அவருக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. அடிப்படையான இந்தத் தேவைக்காகக் கூட அவர் நீதிமன்றத்தை நாட வேண்டியிருந்தது. நீதிமன்றமும் விரக்தியடையச் செய்யும் வகையில் மெத்தனமாக நடந்து கொண்டது.

பின்னர் அவரது உடல் நிலை தொடர்ந்து சீரழிந்து வந்த போதிலும் மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் பிணையில் விடுவிக்குமாறு அவர் செய்த மனுவும் இதே குருட்டுத் தனமான, உணர்ச்சிகளற்ற, சொரணையற்ற என்.ஐ.ஏ. நீதிமன்றத்தால் எந்திர ரீதியாக நிராகரிக்கப்பட்டது. அவருக்கு கோவிட் தொற்று இருக்கிறதா என்பது கூட மருத்துவ ரீதியாகத் தீர்மானிக்கப்படவில்லை; உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவுடன்தான் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மருத்துவக் காரணங்களுக்காக பிணை கோரி செய்த மனுவின் விசாரணையின் போது அவர், தன் மோசமாகி வரும் உடல் நிலை குறித்து நீதிமன்றத்தில் நிகழ்த்திய உருக வைக்கும், இதயத்தை உடையச் செய்யும் உரையை நாம் மறக்க முடியாது. தான் நீண்ட நாள் உயிரோடு இருப்பேன் என எதிர்பார்க்கவில்லையென்றும், ராஞ்சியிலிருக்கும் பகாய்ச்சவில் வாழும் தன் மக்கள் கூட்டத்துக்கு நடுவே இருந்து இறக்க விரும்புவதாகவும் அவர் பேசினார். இந்த எளிமையான வேண்டுகோளைக் கூட நம் நீதித் துறையினால் நிறைவேற்ற முடியவில்லை என்பது கேவலமானது.

அருட்தந்தை ஸ்டானின் மறைவு குறித்து நாம் சோகமாயிருக்கும் அதே நேரத்தில், அவரது துரதிருஷ்டவசமான மரணத்துக்கு அலட்சியமான சிறைச்சாலைகளும், பொறுப்பற்ற நீதிமன்றங்களும், தீய நோக்கம் கொண்ட புலனாய்வு அமைப்புகளுமே பொறுப்பு என நாங்கள் உறுதிபடக் கூறுகிறோம்.

இதே சிறைகளில், இதே பொறுப்பேற்க மறுக்கும் அமைப்பின் அடியில், இதேபோன்ற அநீதிகளை எதிர்கொண்டிருக்கும் எங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சகாக்களின் உடல்நிலை குறித்தும் உயிர் குறித்தும் அச்சம் கொண்டிருக்கிறோம். அனைவரின் பாதுகாப்பையும் நாங்கள் விழிப்புணர்வுடன் தொடர்ந்து கண்காணிப்போம். “நாங்கள் அமைதியான பார்வையாளர்களாக இருக்க மாட்டோம்; அதற்கான விலையைக் கொடுக்கத் தயாராக இருப்போம்.” இதைத்தான் அருட்தந்தை ஸ்டானும் விரும்பியிருப்பார்.

இப்படிக்கு,
மீனால் காட்லிங்க், ராய் வில்சன், மோனாலி ராவுட், கோயல் சென், ஹர்ஷாலி போட்தார், ஷரத் கெய்க்வாட், மாய்ஷா சிங், ஒய். ஃஃபெரேரா, சூசன் ஆப்ரஹாம், பி. ஹேமலதா, சபா ஹுசைன், ரமா டெல்டும்ப்டே, ஜென்னி ரொவீனா, சுரேகா கோர்க்கே, ப்ரனாலி பரப், ருபாலி ஜாதவ், அருட்தந்தை ஜோ சேவியர்


தமிழாக்கம் : விஜயசங்கர் ராமச்சந்திரன்
முகநூலில் : Vijayasankar Ramachandran

disclaimer

ஸ்டான் சுவாமி மரணம் : மோடி அமித்ஷா நடத்திய படுகொலையே || தோழர் மருது நேர்காணல்

ழங்குடி மக்கள் நலனுக்காக தன் 84 வயதிலும் போராடி வந்த ஸ்டான் சுவாமியை பொய்க் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது மோடி அரசு. அவரது உடல்நிலை பாதிப்பின் காரணமாக தண்ணீர் குடிக்க ஸ்ட்ரா வைத்த குவளை கேட்டதைக் கூட கொடுக்க மறுத்து அவரை சிறையில் துன்புறுத்தியது மோடி அரசு. சிறையில் கொரோனா பரவுகையில் அவரது வயதைக் கருத்தில் கொண்டு அவருக்கு பிணை வழங்க கோரிய நிலையில், அவருக்கு பிணை வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதற்கும் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை.

இப்படி தொடர்ச்சியாக கொடுமைப்படுத்தப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாகி மரணமடைந்துவிட்டார் ஸ்டான்சுவாமி. திருச்சியில் புள்ளப்பாடியில் பிறந்த ஸ்டான் சுவாமி ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்தபோது, பழங்குடி மக்களை அரச பயங்கரவாத்தில் இருந்து பாதுகாப்பதற்காக போராடினார். கடவுளுக்கு தொண்டூழியம் செய்வதை விட மக்களுக்கு வேலை செய்வதையே முக்கியமான பணி என்று முடிவு செய்தவர் பாதிரியார் ஸ்டான் ஸ்வாமி.

படிக்க :
♦ அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட ஸ்டான் சுவாமி
♦ ரூ. 4.74 இலட்சம் கோடி அந்நிய நேரடி முதலீடு : பெருமைப் பட முடியுமா ?

அவர் கடவுளுக்கு தொண்டூழியம் செய்திருந்தால் கூட அவரை விட்டுவைத்திருக்கும் இந்த அரசு. ஆனால் அவர் அரச பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடியதன் காரணமாகவே மோடி கும்பலால் தற்போது கொல்லப்பட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் மோடி அரசுக்கு எதிராக பேசும் சமூக செயற்பாட்டாளர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், அறிவுத்துறையினர் கடுமையாக ஒடுக்கப்படுவது, கொலை செய்யப்படுவது போல் தற்போது சமூக செயற்பாட்டாளர்  ஸ்டான் சுவாமி மோடி, அமித்ஷா மற்றும் அதிகார வர்க்கத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளார், என்பதை மக்கள் அதிகாரம் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தோழர் மருது ரெட்பிக்ஸ் யூடியூப் தளத்திற்கு அளித்த நேர்காணலில் விளக்கியுள்ளார்.

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

அடுத்த ஜிகாத் : முசுலீம் தெரு வியாபாரிகளைக் குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் || அலிசன் ஜாஃப்ரி

0

லவ் ஜிகாத், கொரோனா ஜிகாத்துக்கு அடுத்து
முசுலீம் தெரு வியாபாரிகளை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர் படை !

நிலத்துக்கான ஜிகாத், லவ் ஜிகாத், கொரோனா ஜிகாத், சிவில் சர்வீஸ் ஜிகாத் வரிசையில், இந்துத்துவ குண்டர் படை தலைநகர் உள்ளிட்டு நாடு முழுவதும் முசுலீம் தெரு வியாபாரிகளை குறிவைத்து ’ரெடி ஜிகாத்’ (Redi Jihad) என்ற புதிய சதித்திட்டத்தை உருவாக்கியுள்ளது.

இந்த வகுப்புவாத பிரச்சாரத்தில் பல்வேறு தீவிர இந்துத்துவ அமைப்புகளின் குண்டர்களும் இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் உள்ளூர் தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர். மேலும், நொய்டாவை தளமாகக் கொண்ட சுதர்சன் டி.வி. என்ற செய்தி தொலைக்காட்சியும் இந்த பிரச்சாரத்தில் இணைந்துள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சமீபத்தில் ஒளிபரப்பு ஊடகங்களுக்கான நெறிமுறைகளை மீறியதற்காக அதன் மேற்பார்வை முறையை கடுமையாக்கிய போதிலும் சுதர்சன் டி.வி. இந்தப் ’பணி’யில் ஈடுபட்டுள்ளது.

படிக்க :
♦ உ.பி : பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பா.ஜ.க வென்றது எப்படி? || முரளிதரன் காசி விஸ்வநாதன்
♦ அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட ஸ்டான் சுவாமி

ஜூன் 18, 2021 அன்று, புது டெல்லியின் உத்தம் நகரில் ஒரு முசுலீம் பழ விற்பனையாளர், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எனக் கூச்சலிட்ட அடையாளம் தெரியாத மனிதர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜூன் 20 அன்று, ‘ஜிகாதி’ பழ விற்பனையாளர்களால் வன்முறை மற்றும் ஆக்கிரமிப்பு எனக் கூறிய இந்துத்துவ குண்டர்கள் அதே பகுதியில் பரபரப்பான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இந்த குண்டர்கள் முசுலீம்-விரோத முழக்கங்களை எழுப்பினர். கைகளில் லத்திகளை வைத்துக் கொண்டு, பெரும்பான்மையாக உள்ள முசுலீம் விற்பனையாளர்கள் வரக் கூடாது என்ற எச்சரிக்கையை அனுப்பினர். பின்னர் மாலையில், இந்த குண்டர்களும் உள்ளூர் கடைக்காரர்களும் ‘இந்து ஒற்றுமை’யை வெளிப்படுத்தும் வகையில் சாலையின் நடுவே அனுமன் சாலிசாவை ஓதினர்.

உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, தற்போதைய பதற்றத்திற்கு காரணம் ஒரு வாரத்திற்கு முன்னர் நடந்த ஒரு சண்டையாகும். இதில் ஒரு உள்ளூர் கடைக்காரர் பழ விற்பனையாளர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜூன் 20 அன்று உத்தம் நகரில் இருந்து ஒளிபரப்பப்பட்ட ஒரு நேரலை வீடியோவில், அடையாளம் தெரியாத ஆண்கள், முசுலீம் விற்பனையாளர்களை அப்பகுதியிலிருந்து விரட்டியடித்ததாகக் கூறினர். தெரு விற்பனையாளர்கள் அனைவரும் முசுலீம்கள் என இந்துத்துவ குண்டர் படையைச் சேர்ந்த ஒருவர் கூறினார். முஸ்லீம் கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறார்கள் எனவும் ‘அவர்கள் நடமாடும் புற்றுநோய்’ எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

உத்தர் நகரில் பழ விற்பனையாளர்களை எதிர்த்து லத்திகளுடன் இந்துத்துவா குண்டர்கள்

தெரு விற்பனையாளர்களுக்கும் கடைக்காரர்களுக்கும் இடையிலான சண்டைகள் நகர்ப்புற இந்தியாவின் பிரதானமானவை, குடிமைத் திட்டமிடல் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகள் இல்லாமையும் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. எவ்வாறாயினும், உத்தம் நகர் நிகழ்வுக்குப் பின், ஏப்ரல் 2021 முதல் சமூக ஊடக இடுகைகள் மற்றும் ஆன்லைன் கருத்துரைகளை படித்தபோது, வலதுசாரிகள் திட்டமிட்டு, இந்தப் பகுதியில் மத ரீதியிலான கோணத்தை முன்னெடுப்பது தெரிகிறது.

ஒரு குடிமை பிரச்சனையை வகுப்புவாதமாக்குதல்

கிழக்கில் ஜனக்புரி, மேற்கில் நஜாப்கர் ஆகியவற்றின் எல்லையில் அமைந்துள்ள உத்தம் நகர் பகுதி டெல்லியின் மேற்கு விளிம்பில் அடர்த்தியான குடியிருப்பு காலனியாகும். இங்கு தினக் கூலி பெறுபவர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கிறார்கள்.

உத்தம் நகரில் உள்ள மிலாப் நகர் டைல் சந்தை மற்றும் துவாரகா பாஸ் இடையேயான சாலை கடந்த இரண்டு தசாப்தங்களாக கடுமையான போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் பழ விற்பனையாளர்கள் மற்றும் இ-ரிக்‌ஷாக்களின் அக்கிரமிப்பு. இந்தப் பகுதியில் அதிகரிக்கும் பயிற்சி மையங்களுக்கு வரும் மாணவர்கள் தங்கள் வாகனங்களை சாலைகளில் நிறுத்துவதால், பிரச்சனை மேலும் அதிகரித்துள்ளது. அத்துமீறல்களை அகற்றுவதில் நிர்வாகம் மற்றும் போலீசுத்துறையினரின் குறைபாடான அணுகுமுறை குறித்து அப்பகுதியின் குடியிருப்பாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் பலமுறை புகார் அளித்துள்ளது நாளிதழ்களில் பதிவாகியுள்ளது.

அதிகாரிகளை நடவடிக்கை எடுக்கக் கோருவதற்குப் பதிலாக அல்லது நகராட்சியையும் போலீசுத்துறையையும் செயல்பட கட்டாயப்படுத்த நீதிமன்றத்திற்குச் செல்வதற்குப் பதிலாக, உள்ளூர் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களும் பல்வேறு இந்துத்துவ அமைப்புகளும் ’கண்காணிக்கும்’ பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர். (அதாவது, தாமே சட்டமும் நீதிமன்றமும்தான் என்பதை சொல்கின்றனர்). முசுலீம் பழ விற்பனையாளர்களை அப்பகுதியிலிருந்து பலவந்தமாக வெளியேற்றுவதாக அச்சுறுத்தியதைத் தவிர, ஜூன் 20-ஆம் தேதியன்று களத்தில் இறங்கிய குண்டர் படை முசுலீம்களுடன் வியாபாரம் செய்வதை நிறுத்துமாறு இந்துக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

முசுலீம்களுக்கு எதிராக வெறுப்பை பரப்புவதாக அடிக்கடி குற்றம்சாட்டப்படும் தீவிர வலதுசாரி தொலைக்காட்சி சேனலான சுதர்சன் நியூஸ், உத்தம் நகரில் நடைபெற்ற நிகழ்வுகளை வன்முறையைத் தூண்டும் வகையில் தெரிவித்துள்ளது. நிகழ்ச்சி முழுவதும், சுதர்சன் நிருபர் சாகர் குமார் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் சுபம் திரிபாதி ஆகியோர் முசுலீம்களை ‘ஜிகாதிகள்’ எனக் குறிப்பிட்டு பிற கேவலமான சொற்களைப் பயன்படுத்தினர்.

‘டெல்லியில் தெரு விற்பனையாளர் ஜிஹாத்தின் பயங்கரவாதம்’, என்று எழுதியிருக்கும் ஒரு வீடியோவின் முகப்பு படம்

‘முதல் முறையாக இந்துக்கள் ஜிகாதிகளுக்கு எதிராக உத்தம் நகரில் லத்திகளுடன் மிகவும் ஆக்ரோஷமாக வெளியே வந்துள்ளனர்’ என சுபம் கூறினார்.

“இன்று, உத்தம் நகரில் அனுமன் சாலிசா பாராயணம் செய்யப்படும், ஜிகாதிகளை புறக்கணிக்க அழைப்பு விடுக்கப்படும். சுதர்ஷன் நியூஸ் நீண்ட காலமாக ஜிகாதிகளை பொருளாதார ரீதியில் புறக்கணிப்பதை ஆதரிக்கிறது” என சாகர் குமார் கூறினார்.

‘இந்த முசுலீம் விற்பனையாளர்களில் பெரும்பாலானோர், கடந்த காலங்களில் வன்முறையைச் செய்த ரோஹிங்கியாக்கள் என்ற தகவல்கூட எங்களுக்கு கிடைத்துள்ளது’  இப்படி எழுதினார் சுதர்சன் நியூஸின் கட்டுரையாளர் அபய் பிரதாப்.

“மோசடி செய்யும் பழக்கம் குறித்து புகார் அளிக்கும் வாடிக்கையாளர்கள் கத்தியால் அச்சுறுத்தப் படுகிறார்கள். நாங்கள் சிறிது நேரம் காத்திருப்போம், ஆனால் எங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை என்றால் நாங்கள் இங்கே ஒரு சாலை மறியலை தொடங்குவோம்” என்று பா.ஜ.க-வின் நஜாப்கர் மாவட்ட துணைத் தலைவர் புல்கித் சர்மா உத்தம் நகர் ‘போராட்ட’த்தின் போது கூறினார்.

“அன்று தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றிய வீடியோவில், போராட்டத்தில் மதவாதம் எதுவுமில்லை என சர்மா கூறினார். ஆனால், அவர் தனது வாக்கு பொய் என்பதை நிரூபிக்க ஆத்திரமூட்டும் மற்றும் வகுப்புவாத முழக்கங்களுடன் கூடிய வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டார்.

மிருகத்தனமாக அடிப்பது

இந்த வலிமையைக் காண்பிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ரிஸ்வான் என்ற முசுலீம் விற்பனையாளர் அடையாளம் தெரியாத இந்துத்துவ குண்டர்களால் தாக்கப்பட்டார்.

“இது ஒரு பழ விற்பனையாளருக்கும் கடைக்காரருக்கும் இடையே ஒரு சிறிய சண்டை காரணமாக தொடங்கியது. இருப்பினும், பல சமூக விரோத சக்திகள் இந்த விஷயத்தில் உள்ளே புகுந்து வகுப்புவாதமாக்கிவிட்டன. பின்னர், எங்கள் விற்பனையாளர்களில் ஒருவரான ரிஸ்வானை கம்புகள் மற்றும் இரும்பு கம்பிகளால் ஒரு கும்பல் தாக்கியது. பலத்த காயமடைந்து தீனதயால் உபாத்யாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குற்றவாளிகளைக் கைது செய்வதற்குப் பதிலாக, போலீசுத்துறையினர் இப்போது தெரு விற்பனையாளர்களைத் துன்புறுத்துகிறார்கள்” என மேற்கு டெல்லியில் உள்ள பழ விற்பனையாளர்களின் தலைவர் அஜய் சிங் கூறுகிறார்.

முசுலீம் பழ விற்பனையாளர்களுக்கு எதிராக இந்துத்துவா குண்டர்கள் ஆர்ப்பாட்டம்

“ஜூன் 18, 2021 அன்று இரவு 9 மணியளவில், நான் எனது பழ வண்டியை சந்தையிலிருந்து இழுத்துக் கொண்டிருந்தேன். அப்போது 10 முதல் 15 பேர் கொண்ட கும்பல் என்னைத் தாக்கியது. அடி விழுந்தது மட்டும்தான் எனக்குத் தெரியும். வேறு எதையும் அவர்கள் சொல்லவில்லை. அவர்கள் யார் என்று எனக்குத் தெரியாது” என்கிறார் ரிஸ்வான். ரிஸ்வான் இந்த விஷயத்தைப் பற்றி பேசத் தயங்குகிறார். இதைக் கடந்து செல்ல விரும்பினாலும், டெல்லி துவாரகாவில் உள்ள பூண்டா புர் போலீசு நிலையத்தில் ஜூன் 19-ஆம் தேதியன்று பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூச்சலிட்ட ஒரு குழுவினர் தாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது பெயரை கேட்டதாகவும், ‘ரிஸ்வான்’ எனக் கூறியபோது கொடூரமாக தாக்கப்பட்டதாகவும், அவர் இனி தனது வண்டியை அப்பகுதிக்கு கொண்டு வரக் கூடாது என அவர்கள் சொன்னதாகவும்  குறிப்பிடுகிறார்.

ரிஸ்வானுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு, திட்டமிட்ட மதரீதியிலான தாக்குதல் என முதல் தகவல் அறிக்கை விவரிக்கிறது. ஆனால் டெல்லி போலீசுத்துறை தொடர்புடைய மற்றும் மிகவும் தீவிரமான – இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் (153, 295 அல்லது 505) கீழ் வழக்கைப் பதியவில்லை. அதற்கு பதிலாக வழக்கை சாதாரண தாக்குதலாக பதிவு செய்துள்ளது.

பழ விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் அஜய் சிங், உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவோடு சமூக விரோத சக்திகளால் இந்த தாக்குதல் நடந்துள்ளது என கூறுகிறார். விற்பனையாளர்கள் சட்டவிரோத ‘வசூல்’ மற்றும் அதிகாரிகளின் துன்புறுத்தல் குறித்து தன்னிடம் புகார் அளித்ததாக அவர் குற்றம் சாட்டினார். “நீண்ட காலமாக, இந்த இனவாத திட்டம் வெளிப்புற நோக்கங்களுக்காக அனுமதிக்கப்பட்டது. இது அமைதியை சீர்குலைக்கும் மற்றும் அப்பகுதியில் கலவரத்தைத் தூண்டக்கூடும் என நான் போலீசில் புகார் செய்தேன்” என்கிறார் சிங்.

ஒரு வருடத்திற்கும் மேலாக முசுலீம் விற்பனையாளர்களை குறிவைத்து இந்துத்துவா குண்டர்கள் பல வெறுப்புணர்வை தூண்டும் வீடியோக்கள் மற்றும் சமூக ஊடக பதிவுகளை எழுதி வருகின்றனர் என்பது சிங்கின் கருத்துக்கு வலுசேர்க்கிறது.

இந்துத்துவா சமூக ஊடக வலைப்பின்னல்களில் முசுலீம்-விரோத வன்முறையை ஊக்குவிக்கும் வீடியோக்களையும் பரப்பி வருகின்றனர். பல வீடியோக்களில் இடம்பெற்ற பா.ஜ.க உள்ளூர் தலைவரான ஹிமாஷு யாதவ், “இவர்களில் 90% பேர் ரோஹிங்கியாக்கள் என்று சிலர் கூறுவார்கள். அவர்கள் அனைவரும் ரோஹிங்கியாக்கள் என்று நான் நம்புகிறேன். மக்களை தாக்கவும் கொலை செய்யவும் அவர்கள் சிறுவர்களையும் பெண்களையும் அனுப்புகிறார்கள்” என்கிறார். யாதவ் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ.க எம்.பி. பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா ஆகியோருடன் உள்ள படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேற்கு டெல்லியில் நடந்த வன்முறை ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, சுரேஷ் சாவன்கே சுதர்ஷன் டி.வி-யில் ஒரு வீடியோவை ஒளிபரப்பினர். யமுனா நகரில் ஒரு முசுலீம் தெரு விற்பனையாளரின் வண்டியில் ‘குப்தா’ என்ற வார்த்தையை வண்ணம் பூசி அழிக்கும் இந்துத்துவ குண்டர்களின் வீடியோ அது. வெறுப்புணர்வை தூண்டும் அந்த வீடியோவை சாவன்கேவும் ட்வீட் செய்து, “மியான் 18 ஆண்டுகளாக குப்தா என்ற பெயரைப் பயன்படுத்தி பர்கர்களை விற்றுக் கொண்டிருந்தார்” என முசுலீம்களை மோசமாக அழைக்கும் சொல் ஒன்றையும் பயன்படுத்தியுள்ளார். “மக்கள் அதை அகற்றினர். விழித்திருங்கள் விழித்திருங்கள்.” எனவும் அறைகூவல் விடுத்துள்ளார்.

கடந்த வார இறுதியில் பஜ்ரங் தளத்தின் பெயரைக் கொண்ட சுவரொட்டிகள் மற்றும் முசுலீம்களை பொருளாதார ரீதியில் புறக்கணியுங்கள் என அழைப்பு விடுத்தது சமூக ஊடகங்களில் வைரலாகி வந்ததை அடுத்து, போலீசுத்துறை இதுகுறித்து விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

ஒரு திட்டமிட்ட வெறுப்பு பிரச்சாரம்

உத்தம் நகரில் உள்ளூர் கடைக்காரர்களின் போராட்டத்தை வகுப்புவாதமாக்கியது, நீண்டகால இந்துத்துவ பிரச்சாரத்தின் விளைவு. இது 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சில முக்கியத்துவங்களைப் பெற்றுள்ளது. 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வடகிழக்கு டெல்லியில் நடந்த முசுலீம் எதிர்ப்பு வன்முறைக்குப் பின்னர், 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4-ஆம் தேதியன்று இந்தியா கேட்டில் ஒரு ஆர்ப்பாட்டம் என சுதர்சன் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் சுரேஷ் சவாங்க்கே அழைப்பு விடுத்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக ஒரு வாரம் இந்தத் தொலைக்காட்சி விவாதங்கள் “கலகக்காரர்களை” பொருளாதார ரீதியாக புறக்கணிக்கும்படி அழைப்பு விடுத்தன. இந்த “கலகக்காரர்கள்” யார் என்று சவாங்கே குறிப்பிடவில்லை. ஆனால் அவர் முசுலீம்களைக் குறிப்பிடுவதாக கிராபிக்ஸ் மற்றும் விவரிப்பு மூலம் வலுவான குறிப்புகளைக் கொடுத்தார்.

கபில் மிஸ்ராவுடன் வினோத் சர்மா.

“உங்கள் தொண்டையை அறுப்பதை தடுக்க நீங்கள் விரும்பினால், உங்கள் பணத்தை இப்போது அவர்களின் ‘பச்சை அங்கிக்கு’ நன்கொடையாக தருவதை நிறுத்த வேண்டும்,” என சாவாங்கே தனது சேனலில் மார்ச் முதல் வாரத்தில் போராட்டங்களை ஏற்பாடு செய்தபோது கூறினார். அவர் “கலகக்காரர்களை” இவ்வாறு விவரித்தார்: “அவர்கள் எங்கள் இராணுவத்தை விட அதிக பணம் பெறுகிறார்கள். இந்த கலவரக்காரர்களுக்கு இராணுவத்தை விட அதிக பணம் கிடைத்தால், அவர்கள் என்ன செய்வார்கள்? முடி திருத்துபவர்களிடம் கூட ரூ.11,000 கோடி பொருளாதாரம் உள்ளது! … நீங்கள் கலகக்காரர்களின் தொழில்களின் பட்டியலை உருவாக்கினால், முடிதிருத்தும் தொழிலாளர்கள், தச்சர்கள், பஞ்சர் ஒட்டுபவர்கள், பழ விற்பனையாளர்கள் மற்றும் மிக முக்கியமாக இறைச்சி வணிகங்களில் அவர்கள் வல்லுநர்களாக உள்ளது தெரியும்”

முசுலீம் சமையல்காரர்கள் மற்றும் வியாபாரிகள் தாங்கள் தயாரிக்கும் உணவில், நோய்களை பரப்பும்பொருட்டு ‘துப்பி’ தருவதாகவும் ஒரு பொய்யான கோட்பாட்டை இந்துத்துவ கும்பல் பரப்பி வருகிறது.

சத்ய சனாதன் சேனலுக்கு அளித்த பேட்டியில், இந்து இளைஞர்கள் சில வேலைகளில் இருந்து முறையாக நீக்கப்பட்டுள்ளதாக மிஸ்ரா கூறுகிறார்.  “இந்துக்களின் பொருளாதார வாய்ப்புகளை திட்டமிட்டு கொள்ளையடிக்கிறார்கள். இந்த நாட்களில் முடியை வெட்ட இந்து முடிதிருத்துநர் ஒருவரைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். புதிய வேலைகளில், அவர்கள் [முசுலீம்கள்]வீடுகளுக்கு விநியோகிக்கும் பணிகளில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அதை நாம் மாற்ற வேண்டும். இந்த சிக்கலை தீர்க்க, இந்து சுற்றுச்சூழல் அமைப்பு, அமைப்பின் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கும். ”

சில முறைசாரா வேலை பிரிவுகளில் முசுலீம் ஆதிக்கம் என்ற பொருளில் மிஸ்ரா மற்றும் சாவாங்கே ஆகியோரின் எண்ணங்கள் மற்றொரு வலதுசாரி இந்து அமைப்பான சுதர்சன் வாகினியின் வினோத் சர்மா எதிரொலிக்கிறார். ஜூன் 20-ஆம் தேதியன்று உத்தம் நகரில் நடந்த போராட்டத்தில் ஷர்மா ஒரு முக்கிய பங்கேற்பாளராக இருந்தார். மேலும் அவர் முசுலீம் வணிகங்களின் பொருளாதார புறக்கணிப்பின் தீவிர ஆதரவாளர் ஆவார். கடந்த ஆண்டு, அவர் தனது குடியுரிமை (திருத்த) சட்ட ஆதரவு போராட்டங்களில் மிஸ்ராவுடன் இணைந்து செயல்பாட்டார்.

‘எந்தவொரு வியாபார நோக்கத்திற்காகவும் இந்த கிராமத்தில் முசுலிம்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று எழுதப்பட்ட பேனர்.

இந்துத்துவா கும்பலின் ‘ரெடி ஜிஹாத்’ பிரச்சாரத்தின் குறிக்கோள், முசுலீம்களை பொருளாதார ரீதியாக முடக்கி, அவர்களை இந்தியாவில் முறைசாரா வர்த்தகம் மற்றும் சமூக வாழ்க்கையிலிருந்து வெளியேற்றுவதாகும். இந்த இலக்கை அடைய, வலதுசாரி ஆர்வலர்கள் இந்தியாவின் முசுலீம்கள் இந்து வாழ்வாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை கையகப்படுத்த சதி செய்கிறார்கள் என்ற அச்சத்தை பரப்பினர். இது இந்துத்துவ குறுங்குழு பிரச்சாரமாக மட்டும் நின்றுவிடவில்லை. 2020-ம் ஆண்டில் தப்லிகி ஜமாஅத் மீதான ஊடக குற்றச்சாட்டுகளுக்குப் பின்னர் அது அதிக மதிப்பைப் பெற்றது. பா.ஜ.க எம்.எல்.ஏக்களும் வலதுசாரித் தலைவர்களும் தங்கள் சுற்றுப்புறங்களில் முசுலீம் வணிகர்கள் நுழைவதைத் தடுத்தனர். கிராமங்களுக்கு வெளியே பலகைகளை ஒட்டினர். முசுலீம்கள் ஊருக்குள் நுழைவைத் தடை செய்தனர். இந்து விற்பனையாளர்களின் வண்டிகளுக்கு காவிக் கொடி கட்டி அனுமதித்தனர்.

2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இந்திய தள்ளுவண்டி வியாபாரி கூட்டமைப்பு, பொது முடக்கத்தின் முசுலீம் விற்பனையாளர்களுக்கு எதிரான பாகுபாடு குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. “அவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள், தடுத்து நிறுத்தப்படுகிறார்கள், துன்புறுத்தப்படுகிறார்கள், மேலும் முழுமையான தண்டனையின்றி செயல்படும் கண்காணிப்பு குழுக்களால் அடித்து நொறுக்கப்படுகிறார்கள். இந்த சம்பவங்கள் சிலரால் ஊக்கமளிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படுகின்றன” என அந்த அறிக்கை கூறியது.

முறைசாரா பொருளாதாரத்தை சுருக்கியதன் விளைவு

டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் சட்டம் மற்றும் ஆளுமை ஆய்வு மையத்தின் உதவி பேராசிரியர் கசலா ஜமீல், முசுலீம்களின் வாழ்வாதாரத்தை இலக்காகக் கொண்ட இந்துத்துவ பிரச்சாரத்தின் பின்னணியில் உள்ள அரசியல் மற்றும் பொருளாதாரத்தை விளக்கினார்.

“இந்தியாவில் முறைசாரா துறையில் தொழிலாளர் சந்தை பிரிவுகள் பெரும்பாலும் சாதி மற்றும் உறவு வலைப்பின்னல்களைச் சுற்றி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. இதனால்தான் சில சாதிகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள் சில தொழில்களில் வேலை செய்வதை நீங்கள் காண்பீர்கள். முசுலீம்கள் சில துறைகளாக பிரிக்கப்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக, ‘பஞ்சர் வாலா’ என்ற சொல் முசுலீம்களை சிறுமைப்படுத்தும் சொல்லாக பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் நிறைய ஆட்டோமொபைல் மெக்கானிக்குகள் முசுலீம்கள்” என்கிறார் அவர்.

“நுட்பமான பாகுபாடு, வெளிப்படையான விரோதப் போக்கு, இலக்கு வைக்கப்பட்ட வன்முறை மற்றும் மாசு மற்றும் தூய்மை பற்றிய சாதி அடிப்படையிலான கருத்துக்களை உள்ளடக்கிய சிக்கலான செயல்முறைகள் மூலம், முசுலீம்கள் மிக மோசமான பணியினைக் கொண்ட பிரிவினராக பிரிக்கப்படுகிறார்கள். குறைந்த ஊதியம், குறைவான இலாப விகிதங்கள், கண்ணிய குறைவு, ஆனால் துன்பங்கள் அதிகம். ஏனெனில் இந்த வேலைகள் மற்றவர்களால் விரும்பப்படாதவை அல்லது மற்றவர்களுக்கு எல்லைக்கு அப்பாற்பட்டவை என்பதால் இந்த பிரிவுகளில் அவர்கள் இடத்தை எடுக்க முடிகிறது.  இந்த பிரிவுகளில் தெரு விற்பனையும் ஒன்றாகும்” என்கிறார் கசாலா ஜமீல்.

உத்தம் நகரில் சந்தையில் ரோந்து செல்லும் பாதுகாப்புப் படையினர்

கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த 2020-ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட நீண்டகால பொதுமுடக்கத்தின் காரணமாக முறைசாரா பொருளாதாரத்தில் பெரிய அளவிலான சுருக்கம் இந்த பிரச்சாரங்களை வினையூக்குகிறது என அவர் நம்புகிறார். எப்போதும் இருக்கும் முசுலீம்-விரோத தப்பெண்ணங்கள் கோவிட்-19 நோய்த்தொற்றுகள் அல்லது இந்து வாழ்வாதாரத்தின் மீதான பொருளாதார தாக்குதல்கள் தொடர்பான அச்சத்தைத் தூண்டும் வகையில் மறுவடிவமைக்கப் படுகின்றன எனவும் அவர் கூறுகிறார்.

“அவர்கள் முசுலீம்களை அதிக தொழிலாளர் பிரிவுகளிலிருந்து வெளியேற்ற விரும்புகிறார்கள். பல முசுலீம்களை தெருக்களில் பழம் மற்றும் காய்கறி விற்கும் வியாபாரத்திலிருந்து வெளியேற்றுவது வெற்றிகரமாக இருக்கலாம், ஆனால் இதுவரை, பல இந்து தொழிலாளர்கள் இந்த பிரிவில் பணியாற்ற தயாராக இல்லை” என கசாலா ஜமீல் விளக்கினார்.

‘இனப் படுகொலைக்கான பாதை’

சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜெனோசைட் வாட்சின் நிறுவனத் தலைவரும், தலைவருமான கிரிகோரி ஸ்டாண்டன் இனப்படுகொலையின் பத்து நிலைகளில் புறக்கணிப்புகள் மூலம் பாகுபாடு மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது என விவரித்தார்.

கடந்த காலத்தில், சிறுபான்மையினருக்கு எதிரான பெரும்பான்மை பொருளாதார புறக்கணிப்பு பிரச்சாரங்கள் இறுதியில் வெகுஜன வன்முறைக்கு வழிவகுத்தன. இன்று சாவன்கே மற்றும் அவரது கூட்டாளிகளைப் போலவே, நாஜிகளும் யூதர்கள் பொருளாதாரத்தில் அதிக செல்வாக்கு செலுத்துவதாகக் கூறும் சதி கோட்பாடுகளை தயாரித்து பிரச்சாரம் செய்தனர். பின்னர், இந்த ‘தீவிர யூத செல்வாக்கை’ பொருளாதாரத்திலிருந்து அகற்றுவது அவர்களின் பணியாக மாற்றியது. 1933-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த “ஜூடன்பாய்காட்” (யூத புறக்கணிப்பு), சாதாரண ஜெர்மானியர்கள் நாஜி அழைப்பை புறக்கணித்ததால் குறிப்பாக வெற்றிபெறவில்லை. ஆனால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1938-ஆம் ஆண்டில், நாஜிக்கள் கிறிஸ்டல்நாட்ச் படுகொலையில் நேரடியாக விஷயங்களை எடுத்துக் கொண்டனர்.

படிக்க :
♦ தண்ணீர் குடித்தது குற்றம் : உ. பி.யில் தொடரும் முசுலீம்கள் மீதான தாக்குதல்கள் !
♦ யோகி ஆட்சியில் உ.பி : பாலியல் வன்முறையின் தலைநகரம் !

இந்தியாவில், விஸ்வ இந்து பரிஷத் தலைமையிலான வலதுசாரி குழுக்களால் விநியோகிக்கப்பட்ட வெறுப்புணர்வை தூண்டும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் புறக்கணிப்பு பிரச்சாரங்கள் குஜராத்தில் 2002-ஆம் ஆண்டில் முசுலீம்-விரோத படுகொலையின் போது பயன்படுத்தப்பட்டன. மிக சமீபத்தில் ஆசியாவில், மியான்மரின் தீவிர பழமைவாத தேசியவாதி அஷின் விராத்தின் 969 இயக்கம் முசுலீம் வணிகங்களை புறக்கணித்தது. இது ரோஹிங்கியாக்களின் இனப்படுகொலையின் ஒரு பகுதியாக இருந்தன.

‘அடிப்படை மனித உரிமைகளை மீறுதல்’

தன்வீர் கூறினார், “லத்திகள் அல்லது வேறு எந்த ஆயுதத்தையும் வைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வது, ஒரு சமூகத்தை புறக்கணிப்பதை வெளிப்படையாக ஆதரிப்பது ஒரு கிரிமினல் குற்றமாகும். இது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளை மீறுகிறது. மேலும் இது இந்துக்கள் மற்றும் முசுலீம்களிடையே பகைமையை ஊக்குவிக்கிறது. அதிர்ச்சியூட்டும் வகையில், போலீசுத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.” என்கிறார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அனஸ் தன்வீர்.

கடந்த 2020-ஆம் ஆண்டு தப்லிகி ஜமாஅத் ஊடக பொய் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னர் முசுலீம்களை புறக்கணிக்குமாறு தொடர்ச்சியான அழைப்புகளை விடுத்தபோது, வழக்கறிஞர் முகமது அஃபீப், அரசியலமைப்புக்கு விரோதமானது, குற்றவியல் தன்மை கொண்டது என எழுதினார். இதுபோன்ற புறக்கணிப்பு அழைப்புகள், அடிப்படை சர்வதேச மனித உரிமை சட்டத்தை மீறுகின்றன என்கிறார்.


கட்டுரையாளர் : அலிசன் ஜாஃப்ரி
சுருக்கப்பட்ட தமிழாக்கம் : கலைமதி
செய்தி ஆதாரம் : The Wire

உ.பி : பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பா.ஜ.க வென்றது எப்படி? || முரளிதரன் காசி விஸ்வநாதன்

உத்தரப்பிரதேச பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. எப்படி வெற்றிபெற்றது. அதன் அர்த்தம் என்ன?

த்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் மொத்தமுள்ள 75 பதவிகளில் 67 இடங்களை பா.ஜ.க.வும் சமாஜ்வாதி கட்சி ஆறு இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது. இந்த வெற்றி பா.ஜ.க.-வுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

உண்மையில் அப்படித்தானா என்பதைப் பார்க்கலாம். இது தொடர்பாக பிபிசி-யின் இந்தி சேவையின் செய்தியாளர் சமீரத்மஜ் மிஸ்ரா ஒரு விரிவான கட்டுரையை எழுதியுள்ளார். அதன் சுருக்கமான மொழிபெயர்ப்பைப் படித்தால், இந்த வெற்றியின் அர்த்தம், அதன் பின்னணியை புரிந்துகொள்ளலாம்.

படிக்க :
♦ உ.பி : “ஜெய் ஸ்ரீராம்” சொல்லக் கூறி முசுலீம் முதியவர் மீது காவிக் குண்டர்கள் தாக்குதல்!
♦ உ.பி : போலீசு அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக கவுன்சிலர் || நாளை தமிழகத்தில் ??

மொத்தமுள்ள 75 இடங்களில் 22 இடங்களில் போட்டியின்றி தலைவர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். அதில் 21 இடங்கள் பா.ஜ.க-வுக்கும் 1 இடம் சமாஜ்வாதி கட்சிக்கும் கிடைத்தது. மீதமுள்ள 53 மாவட்டங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்டதில் 46 இடங்களைப் பா.ஜ.க.-வும் ஐந்து இடங்களை சமாஜ்வாதி கட்சியும் ஒரு இடத்தை ஆர்.எல்.டி.-யும் ஒரு இடத்தை ஜன்சட்டா தளமும் வென்றிருக்கின்றன.

அடுத்த ஆண்டு அங்கு சட்டமன்றத்தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இந்த வெற்றிகளை வைத்துப் பார்க்கும்போது மீண்டும் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்குமென்றே பலர் கூறிக் கொள்கின்றனர். ஆனால், அது அப்படியில்லை. நடந்து முடிந்த பஞ்சாயத்து தலைவர் தேர்தல்களில் மக்கள் வாக்களிக்கவில்லை. ஏற்கனவே தேர்வுசெய்யப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களே வாக்களித்தனர்.

இங்குதான் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்தபோது மொத்தமுள்ள 3052 இடங்களில் பா.ஜ.க. 603 இடங்களையே பிடித்தது. மாறாக எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி 842 இடங்களில் வெற்றிபெற்றது.

பெரும்பான்மையான இடங்களை சுயேச்சைகளே கைப்பற்றினர். இந்த சுயேச்சைகள்தான் இப்போது பா.ஜ.க.-வால் விலைக்கு வாங்கப்பட்டு, பெரும்பாலான தலைவர் பதவிகளை பா.ஜ.க. கைப்பற்றியிருக்கிறது.

இந்தத் தேர்தலில் பா.ஜ.க.-வை எதிர்த்து காங்கிரசும் சமாஜ்வாதி கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தின. ஆனால், பெரும்பாலன இடங்களில் மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களையே நிறுத்தவில்லை.

“இந்தத் தேர்தலை செமி – பைனல் என்றெல்லாம் சிலர் சொல்கிறார்கள். மக்களே வாக்களிக்காதபோது அதை எப்படி செமி – ஃபைனல் என்று சொல்லலாம்? வேண்டுமானால் ஜில்லா பஞ்சாயத்துத் தேர்தலை செமி – ஃபைனல் என்று சொல்லலாம். அதில் பெரும்பலான இடங்களை சமாஜ்வாதி கட்சிதான் பிடித்தது. அரசின் ஆதரவுடன்தான் இம்மாதிரி தேர்தல்கள் வெல்லப்படுகின்றன” என்கிறார் உ.பியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான சித்தார்த் கலகன்ஸ்.

தவிர, இந்தத் தேர்தல்களில் பா.ஜ.க. பெரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக எஸ்.பி-யும் காங்கிரசும் குற்றம்சாட்டுகின்றன. பா.ஜ.க-வுக்கு ஆதரவாக வாக்களிக்க ஒவ்வொரு சுயேச்சை உறுப்பினருக்கும் லட்சக் கணக்கில் பணம் தரப்பட்டது. ஜில்லா பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்ற சுயேச்சைகள் உடனடியாகக் கடத்தப்பட்டு, தலைவர் தேர்தல் முடியும் வரை பா.ஜ.க-வின் பிடியில் வைக்கப்பட்டிருந்தனர்.

இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம், கடந்த மூன்று முறையும் சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாகவே பஞ்சாயத்துத் தலைவர் தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. மூன்று முறையும் எந்தக் கட்சி அதிக இடங்களைப் பிடித்ததோ, அந்தக் கட்சி தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

“2010-ம் ஆண்டில் மாயாவதியின் பி.எஸ்.பி பெரும்பாலான தலைவர் பதவிகளைக் கைப்பற்றியது. ஆனால், 2012-ம் ஆண்டில் பெரும்தோல்வியடைந்தது அக்கட்சி. 2016-ஆம் ஆண்டில் சமாஜ்வாதி கட்சி பெரும்பாலான தலைவர்கள் பதவிகளைக் கைப்பற்றியது. ஆனால், 2017-ம் ஆண்டில் பெருந்தோல்வியைச் சந்தித்தது. இப்போது பா.ஜ.க. கைப்பற்றியிருக்கிறது.” என்கிறார் சித்தார்த்.


முரளிதரன் காசி விஸ்வநாதன்
முகநூலில் : K Muralidharan
disclaimer

அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட ஸ்டான் சுவாமி

0

ழங்குடியின மக்களின் உரிமைக்காகப் போராடிய பாதிரியார் ஸ்டான்சுவாமி இன்று (05/07/2021) பிற்பகலில் மரணமடைந்தார். ஸ்டேன்சுவாமியின் மரணம், மக்களுக்காகப் போராடுபவர்களை ஒழித்துக்கட்டும் அரச பயங்கரவாதப் படுகொலையின் நேரடி சாட்சியாகும்.

ஜார்கண்ட் மாநிலப் பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்களின் உரிமைகளுக்காக கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ச்சியாகப் போராடி வந்தவர் பாதிரியார் ஸ்டான்சுவாமி. உயிர்வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்கப் பெறாமல், கார்ப்பரேட்டுகளின் இலாப வெறிக்காக துரத்தியடிக்கப்பட்ட பழங்குடியின, மலைவாழ் மக்களின் பிரச்சினைகளுக்காக பல்வேறு சட்டரீதியான போராட்டங்களை மேற்கொண்டவர் ஸ்டான்சுவாமி.

பாசிச பாஜக அரசின் பழங்குடியின மக்கள் விரோத நிலைப்பாட்டை தமது தொடர் போராட்டங்கள் மூலம் அம்பலப்படுத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ம் தேதி எல்கார் பரிஷத் ‘சதி’ வழக்கில் என்...-வால் (NIA) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

படிக்க :
♦ சமூக செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமிக்கு கோவிட் தொற்று !
♦ இன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் !

சமூகச் செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கு என்றே புனையப்பட்ட எல்கார் பரிஷத் வழக்கில், மாவோயிஸ்ட்டுகளோடு சேர்ந்து பிரதமர் மோடியைக் கொல்ல சதி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

84 வயதான பாதிரியார் ஸ்டான்சுவாமி, நடுக்குவாத நோயால் (நரம்புத் தளர்ச்சி) பாதிக்கப்பட்டிருந்தார். கேட்கும் திறனையும் படிப்படியாக இழந்து வந்திருந்த அவர், சிறையில் நிற்க முடியாமல் பல முறை கீழே விழுந்து உடலில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளன.

கைநடுக்கம் காரணமாக தண்ணீர்க் குவளையைக் கூட கையில் எடுத்து குடிக்க முடியாத நிலையில், அவர் தமக்கு குடிப்பதற்கு சிப்பர் (உறிஞ்சு குழாய் கொண்ட தண்ணீர் குவளை) வேண்டுமென்று கோரியிருந்தார். அதைக் கூட கொடுக்காமல் மறுத்தது சிறை நிர்வாகம்.

இதற்கு எதிராக என்... சிறப்பு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் பதிலளித்த என்..., அவருக்கு சிப்பர் கொடுப்பது குறித்து பரிசீலிப்பதற்கு 20 நாள் அவகாசம் கேட்டது. இதுவே வக்கிரம் என்றால், என்...-வின் கோரிக்கைக்கு நீதிமன்றமும் அனுமதியளித்ததுதான் வக்கிரத்தின் உச்சம்.

போராட்டக் களத்தில் பாதிரியார் ஸ்டான்சுவாமி

சிறையில் ஸ்டான்சுவாமியின் உடல்நிலை மேலும் மோசமாகிப் போன சூழலிலும், அவருக்கு பிணை வழங்க மறுத்துவிட்டது நீதிமன்றம். கடுமையான சட்டப் போராட்டங்களுக்குப் பிறகுதான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஸ்டான்சுவாமி அனுமதிக்கப்பட்டார்.

அந்த சமயத்தில் தான், ஸ்டான்சுவாமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. சிறையில் முறையான சிகிச்சை வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு கொரோனா பாதிப்பு முற்றிய நிலையில்தான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்து போயிருக்கிறார் ஸ்டான்சுவாமி.

ஸ்டான் சுவாமி மரணம் என்பது நோயால் ஏற்பட்ட மரணம் அல்ல. சமூகச் செயற்பாட்டாளர்களை ஒழித்துக்கட்ட கங்கணம் கட்டிக் கொண்டு திரியும் பாசிச ஆர்.எஸ்.எஸ் பாஜக கும்பலும், இந்தக் கும்பலுக்கு அடியாள் வேலைபார்க்கும் என்..வும் இவர்களுக்குத் துணை நிற்கும் நீதிமன்றமும் சேர்ந்து நடத்திய அரச பயங்கரவாதப் படுகொலையாகும்.

இதுவரையில் எல்கர்பரிஷத் வழக்கில் சமூகச் செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள் என 20-க்கும் மேற்பட்டவர்களை மோடியைக் கொல்ல மாவோயிஸ்ட்டுகளுடன் இணைந்து சதி செய்ததாகக் கூறி ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்தது என்...

இந்த வழக்கில் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டவரான ரோனா வில்சனின் மடிக் கணிணியிலிருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்ட ஒரு சதிக் கடிதத்தை, முகாந்திரமாக வைத்தே, இவ்வழக்கில் அனைத்து சமூகச் செயற்பாட்டாளர்களையும் கைது செய்தது. ஆனால் இந்தக் கடிதம் வெளியிலிருந்து ஒரு தீமென்பொருள் மூலமாக ரோனா வில்சனின் கணிணிக்குள் நுழைக்கப்பட்டது என்பது இந்த ஆண்டின் துவக்கத்தில் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது.

படிக்க :
♦ மூத்த செயல்பாட்டாளர்கள் மீது வலதுசாரிகள் குறிவைப்பது ஏன் ?
♦ செயற்பாட்டாளர்களை சிறையில் நீர் பருகக் கூட விடாமல் துன்புறுத்தும் மோடி அரசு !

நீதிமன்றம் யோக்கியமானதாக இருந்திருக்கும் பட்சத்தில், போலியானது மற்றும் சதித்தனமாக திணிக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்ட அந்த சதிக்’ கடிதத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அனைத்து சமூகச் செயற்பாட்டாளர்களையும் வழக்கிலிருந்து விடுவித்திருக்க வேண்டும். குறைந்தபட்சமாக அவர்கள் மீது போடப்பட்ட ஊபா சட்டப் பிரிவையாவது ரத்து செய்து அவர்கள் அனைவருக்கும் பிணை அளித்திருக்க வேண்டும்.

இவை எதையும் செய்யாமல், கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்களின் வயதையும் கருத்தில் கொள்ளாமல் அவர்களை சிறையில் வைத்து விசாரணைக் காலத்தையே தண்டனைக் காலமாக்கி அவர்களை சித்திரவதை செய்திருக்கின்றது, நீதிமன்றம். அதில் உச்சபட்சமாக, பாதிரியார் ஸ்டான்சுவாமிக்கு விசாரணைக் காலத்திலேயே மரண தண்டனையை வழங்கியிருக்கிறது.

விசாரணைக் காலத்தையே தண்டனையாக மாற்றும் நடைமுறையின் மூலம், மக்களுக்காக குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்களை பாசிச ஆர்.எஸ்.எஸ். – மோடி கும்பல் அச்சுறுத்துவதற்குத் துணை போயிருக்கிறது நீதித்துறை.

ஸ்டான் சுவாமியின் மரணம், ஒட்டுமொத்த நீதித்துறைக்கே ஏற்பட்ட வெட்கக் கேடு. ஆனால் இன்னமும் அதை உணரக் கூட முடியாத அளவிற்கு அனைத்தையும் உதிர்த்துவிட்டு அமர்ந்திருக்கிறது இந்திய நீதித்துறை.

இன்று ஸ்டான் சுவாமி அரசு பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்டுவிட்டார். அடுத்து படுகொலை செய்யப்படுவதற்காக சாய்பாபா, ஆனந்த் தெல்தும்டே, சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, சோமா சென் உள்ளிட்ட சமூகச் செயற்பாட்டாளர்கள் கொட்டடியில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காகப் போராடிய ஸ்டான் சுவாமியை இழந்துவிட்டோம். அரசின் மக்கள் விரோதத் தன்மைகளை தொடர்ந்து அம்பலப்படுத்திய பிற சமூகச் செயற்பாட்டாளர்களையும் அடுத்ததாக இழக்கப் போகிறோமா ?

பாசிச ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பலுக்கு கைக்கூலியாக செயல்படும் தேசிய புலனாய்வு முகமையை (NIA) ஒட்டுமொத்தமாகக் களைக்கவும், விசாரணைக் காலத்தையே தண்டனைக் காலமாக்கி செயற்பாட்டாளர்களைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்படும் ஊபா, தேசிய பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட கறுப்புச்சட்டங்களை ரத்து செய்யவும் வீதியில் இறங்கிப் போராடுவதே பாதிரியார் ஸ்டான்சுவாமிக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும் !


சரண்

ஓட்டுனர்களைச் சுரண்டும் ஓலா – ஊபர் நிறுவனங்கள்! || நிதி குமார்

டந்த ஜூன் 30-ம் தேதி புதன்கிழமை அன்று ஓலா ஊபர் ஓட்டுனர்கள் தன்னெழுச்சியான ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். ஓலா ஊபர் மாதிரியான நிறுவனங்கள் வெறும் ஆப்பை மட்டும் வைத்துக் கொண்டு தங்களிடம் 30% கமிஷனை வாங்குகின்றனர் என்றும் டீசல் விலை ரூ.50 இருந்தபோது எவ்வளவு கட்டணம் நிர்ணயம் செய்தார்களோ அதே தொகையை இன்று டீசல் விலை ரூ.94 கடந்து விட்ட பின்பும் நிர்ணயம் செய்கின்றனர் என்றும் தொழிலாளர்கள் குமுறினர்.

கிட்டத்தட்ட ரூ.100-ல் ஒரு ட்ரிப் எடுத்தால் அதில் ரூ.30 ஓலா-ஊபர் மாதிரியான நிறுவனங்களுக்கும் பெட்ரோலுக்கு ஒரு ரூ.40-50 என்று போக கைக்கு ரூ.10-20 தான் நிற்கின்றது என்று கூறுகின்றனர் ஓட்டுநர்கள். இந்த பணத்தை வைத்துக் கொண்டு EMI  கட்டுவதா வீட்டை பார்ப்பதா இதனை வைத்து கொண்டு நாங்கள் என்ன செய்வது என்று புலம்புகின்றனர்.

படிக்க :
♦ ஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் காரணமில்லை : மாருதி சுசூகி !
♦ ஓலா – ஊபர் டாக்சி ஓட்டுனர் போராட்டத்தை ஆதரிப்போம் !

ஆகவே, ஓலா ஊபர் மாதிரியான நிறுவனங்களின் 30 சதவீத கமிஷனை 10 சதவீதமாக குறைக்கவும் நிலவுகின்ற டீசல் விலைக்கு ஏற்ப கட்டணங்களை அரசே தொடர்ச்சியாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஒட்டி கடந்த புதன், வியாழன் ஆகிய கிழமைகளில் மிகப் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொழிலாளர்கள் முன்னெடுத்தனர்.

இந்த தொழிலாளர்கள் அனைவரும் சங்க மற்ற தொழிலாளர்கள் அதாவது வாட்ஸ்அப், டெலிகிராம் மாதிரியான குரூப் மூலமாக இணைந்தவர்கள். தற்போதுள்ள சங்கத்தின் மீது அவநம்பிக்கை உள்ளவர்களும் கூட. அந்த வகையில் தன்னெழுச்சியாக இந்தப் போராட்டம் புதன்கிழமை அன்று தொடங்கியது.

இந்த போராட்டம் தெரியாமலோ அல்லது தெரிந்தும் பணத்திற்காக சில ஓட்டுநர்கள் ஓலா ஊபரில் வாகனம் ஓட்டவே செய்தனர். கடந்த புதன், வியாழன் கிழமைகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஓட்டுனர்களே அவர்களை மடக்கி வேலை நிறுத்தத்தை பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களையும் தங்களுடன் போராட்டத்தத்தில் இணைத்துக் கொண்டனர். அந்த வகையில் கடந்த இரு நாளும் போராட்டம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது.

சங்கம் இல்லாமல் இணைந்த இந்த தொழிலாளர்கள் மற்ற அனைத்து ஓட்டுநர் சங்கங்களின் ஆதரவையும் கோரினர். ஆனால், ஓட்டுனர் சங்கங்கள் தனித்தனியாக இந்த மாதிரியான வேலை நிறுத்தத்தினால் எந்த பலனும் கிடைக்காது; ஆகவே ஒற்றுமையாக ஒரு ஓட்டுநர் கூட்டமைப்பின் சார்பாக ஒரு மாபெரும் போராட்டத்தை சென்னை சேப்பாக்கத்தின் ஆணையர் அலுவலகத்திற்கு முன்பாக நடத்தலாம் என்று ஆலோசனை வழங்கினர். அதனை ஏற்று இன்று கிட்டத்தட்ட 2000-த்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் அந்தப் போராட்டக் களத்தில் இணைந்தனர்.

ஆரம்பத்தில் ஓட்டுநர் கூட்டமைப்பின் சங்க நிர்வாகிகள் போக்குவரத்து கமிஷனரை சந்தித்து இந்தப் போராட்டத்தைப் பற்றிய மனுவைக் கொடுத்து, இந்த போராட்டம் சம்பந்தமாக பேசினர். ஆனால், அதில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. மனுவை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்; பிறகு ஆலோசித்து பதில் சொல்கிறோம் என்று கூறிவிட்டனர். ஆனால், அதனை ஓட்டுநர்கள் யாரும் ஏற்கவில்லை.

அதன் விளைவாக மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தை நடந்தது. அதில் ஓட்டுநர்களின் சில பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அவர்கள் பேசிய பின்னர் ஜூலை 9-ஆம் தேதி இதனைப் பற்றி முடிவெடுப்பதாக அரசு தரப்பிலிருந்து விளக்கம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதனையும் ஓட்டுநர்கள் யாரும் ஏற்கவில்லை.

This slideshow requires JavaScript.

இது இந்த போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் என்றே ஓட்டுநர்கள் கருதினர். அதனால் அதன் பிறகும் ஓட்டுனர்கள் கலையாமல் அதே இடத்தில் உட்கார்ந்து போராடியபடி இருந்தனர். இவ்வாறு இருக்க காலையில் ஒவ்வொரு சங்க பிரதிநிதிகளும் வந்து தொழிலாளர்களிடம் பேசுகையில் இத்தனை லட்சம் ஓட்டுனர்கள் இருக்கிறார்கள் நாம் மிகக் குறைவே அவர்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்று பேசியதை கேட்ட  தொழிலாளர்களே சங்க நிர்வாகிகளை கோபமாகப் பேசி அங்கிருந்து வெளியேற்றினர்.

இயல்பாகவே தொழிலாளர்களிடம் ஊறிப்போன சங்கம் வேண்டாம், சங்கம் வந்தால் போராட்டத்தை கெடுத்துவிடும் என்ற சிந்தனையும், சங்கங்களும் அதனை சரிவர கையாலாததால் சங்க நிர்வாகிகளை அங்கிருந்து தொழிலாளர்களே திட்டித் தீர்த்தனர். அதன் விளைவாக ஒவ்வொரு சங்கங்களும் சங்க நிர்வாகிகளும் படிப்படியாக அங்கிருந்து விலகிச் சென்றனர்.

முன்பெல்லாம் ஒரு போராட்டம் தொடங்கப்பட வேண்டும் எனில் சங்கமாக இணைய வேண்டிய தேவை தொழிலாளர்களுக்கு இருந்தது. அவர்கள் போராட்டத்தை எவ்வாறு நடத்த வேண்டும் என்றும் எப்போது தொடங்க வேண்டும், அதன் கோரிக்கைகள் என்ன, அந்த போராட்டத்தின் காலம் எவ்வளவு, எப்போது முடிக்க வேண்டும் என்ற அனைத்து திட்டமிடல்களும் நடக்கும். ஆனால் இப்போது பல சங்கங்கள் அவ்வாறு இல்லாமல் இருப்பதால் தொழிலாளர்கள் பலர் இந்த சங்கங்களின் மீது அதிருப்தியில் இருக்கின்றனர்.

சங்கங்கள் வந்தால் போராட்டம் கலைந்துவிடும் என்ற அளவுக்கு இறுதியாக இந்த போராட்டம் கலைந்து தொழிலாளர்கள் செல்லும்போது கூடவும் சங்கத்தினால் தான் போராட்டம் கலைந்தது என்று அவர்கள் கூறியபடியே சென்றனர்.

ஆகவே சங்கத்தினால் தொடங்கப்பட்ட போராட்டம் போய் சங்கமே போராட்டத்தை கலைக்கும் எண்ணம் தொழிலாளர்கள் மத்தியில் வெகுவாக ஊறிப் போயிருக்கிறது.

முக்கியமாக அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு இந்த எண்ணம் வளர்ந்து வருகிறது. அது அமைப்பு மறுப்பியல் என்ற சிந்தனையில் தொழிலாளர்கள் ஊறி போய் உள்ளனர். ஆனால் எந்த ஒரு போராட்டமும் சரியான அமைப்பு வழிகாட்டுதல் இல்லை எனில் வெற்றியடைய முடியாது என்பதே நிதர்சனம்.

அமைப்பில் இருக்கும் சிக்கல்களை பற்றி விவாதிக்கலாம். ஆனால் அமைப்பே கூடாது என்பது சரியல்ல. அதே வகையில் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களிடம் முறையாக பேசி அவர்களின் கோரிக்கைகள் என்ன அவற்றை எவ்வகையில் வழி நடத்தினால் கொண்டு செல்ல முடியும் என்றும் சரியாக விளக்காமல் ஒரு தொழிலாளர்களிடம் இருந்து  அந்நியப்பட்ட மனநிலையையே தொழிற்சங்கங்கள் வகித்து வருகின்றன.

சொல்லப்போனால் சங்கங்கள் நடத்தும் பெரும்பாலான போராட்டங்கள் அடையாளப் போராட்டங்களாக இருப்பதும் தொழிலாளர்களின் விரக்திக்கு ஒரு முக்கியமான காரணம். ஆனால் இந்த போராட்டம் அடையாளப் போராட்டமாக இல்லாமல்; பலர் பெரும் கடன் வாங்கி வட்டி கட்ட முடியாமல் குடும்பத்தை நடத்த முடியாமல் இருந்த விரக்தியின் விளைவாய் தொடங்கப்பட்ட போராட்டம்.

போராட்டமே கூடாது என்று சொல்லும் நடுத்தர வர்க்க மக்கள் தான் தங்களுடைய சுயவாழ்க்கையின் வெளிப்பாடாய் விரக்தியில் போராட்டமே தீர்வு என்ற முறையில் வீதிக்கு வந்து இருக்கின்றனர். அவர்களை சரியாக வழிநடத்த வேண்டிய சங்கமும் வழி நடத்தவில்லை. அவர்களுடைய அமைப்பு மறுப்பியல் சிந்தனையும் சங்கமாக அவர்களை இணைய அனுமதிப்பதில்லை.

இந்நிலையில் இரண்டாவது பேச்சுவார்த்தைக்கு சென்று வந்த தொழிலாளர்களிடம் அமைச்சர் பேசினார். 9-ஆம் தேதி இதைப் பற்றி விவாதிப்பதை கூறியிருக்கிறார். நமது கோரிக்கைகளை கேட்டு இருக்கிறார் என்று சொன்னார்கள். மற்ற தொழிலாளர்கள் அமைச்சர் இங்கே வந்து எங்களிடம் அதை நேரடியாகச் சொன்னால்தான் என்ன? அமைச்சரை வர சொல்லுங்கள் என்று கூச்சலிட்டனர். ஆனால், அமைச்சரோ உணவருந்த சென்றுவிட்டார் என்று பேச்சுவார்த்தைக்கு போன தொழிலாளர்கள் கூறினார்கள்.

அதனைக் கேட்ட ஓட்டுனர்கள் காலையிலிருந்து மதியம் தாண்டியும் சாப்பிடாமல் இங்கே நாங்கள் அமர்ந்திருக்கிறோம் போராட்டக்களத்தில் அமைச்சர் மட்டும் அழகாய் உணவு சாப்பிட சென்றுவிடுவாரா என்று கூறினர்.

இறுதியாக காவல்துறையும் ஓட்டுநர்களை மிரட்டுவதற்கு முன்பே கைது செய்வதற்குரிய வாகனங்களைக் கொண்டு வந்து இறக்கி விட்டு இருந்தனர். இடையிடையே உள்ளே பேசி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தனர். இறுதியாக ஒன்று கலைந்து செல் அல்லது கைதாகு என்பதையே காவல்துறை கோரிக்கையாக முன்வைத்தது. இறுதியில் கைது செய்யுங்கள் என்று தொழிலாளர்கள் முன்வந்தனர். அதன் வகையில் இரண்டு அரசு பேருந்துகளில் தொழிலாளர்களை ஏற்றினர். பிறகு மனம் மாறிய தொழிலாளர்கள் அதில் இருந்து கீழே இறங்கி நாங்கள் கிளம்புகிறோம் என்று முடிவெடுத்தனர்.

ஆனாலும்கூட கூட்டத்தில் நிறைய சிறு சிறு குழுக்கள் எண்ணற்ற மாற்றுச் சிந்தனைகளோடவே இருந்தனர். சிலர் விரக்தியின் உச்சத்தில் இருந்தனர். சிலர் நான் தீ குளிக்க போகிறேன் என்ற ஒரு வெறுப்பிலும் பேசிக் கொண்டே இருந்தனர். அந்த அளவுக்கு அவர்களின் வாழ்க்கை மிக மோசமான நிலையில் இருந்தது.

மக்களுக்கான அரசு என்று சொல்லிக் கொள்ளும் தி.மு.க அரசும் கடைசி வரையும் அங்கு வந்து பார்க்கவேவில்லை. போராட்டத்தில் ஈடுபடும் ஓட்டுநர்களும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.-வான உதயநிதி ஸ்டாலினும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேரில் வந்து எங்களுக்கு வாக்குறுதி கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். ஆனால், எதுவுமே நடக்கவில்லை.

போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய சில தி.மு.க. உறுப்பினர்கள் என்று சந்தேகப்படும் சில ஓட்டுநர்களும் இப்போது அமைந்திருப்பது மக்களுக்கான அரசு என்று கூறி போராட்டத்தை கலைப்பதில் உறுதியாக ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர். அதனை தெளிவாக நம்மால் அங்கு பார்க்க முடிந்தது.

தொழிற்சங்கம் என்பது தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காகத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அவர்களை சரியாக வழி நடத்தி அவர்களின் கோரிக்கையை வெற்றி பெற செய்வதற்கான செயல் உத்திகளை வகுத்து செயல்பட வேண்டும். ஆனால், அப்படியான தொழிற்சங்க இயக்கம் குறைவாகவே உள்ளது. அதே சமயம் தொழிலாளர்களும் ஒரு சங்கமாய் அமைப்பாய் இணைந்து தங்களுடைய கோரிக்கைகளை சரியாக அணுகி அதனை எப்படி வெற்றி அடைய வைப்பது என்ற இலக்குடன் செயல்பட வேண்டும்.

ஆனால், இங்கு இரண்டு மாபெரும் குறையாகவே உள்ளது. அடையாளப் போராட்டங்களை நடத்தும் தொழிற்சங்க இயக்கம் ஒருபுறமும் இயக்க அமைப்பு மறுப்பு சிந்தனையில் இருக்கும் தொழிலாளர்கள் மறுபுறமும் இருக்க மோடி அரசு தன்னுடைய தொழிலாளர் விரோத சட்டங்களை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

படிக்க :
♦ கொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் !
♦ கலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் !

போராட்டக் களத்தில் வந்த ஒரு ஓட்டுனர் உணர்வு ரீதியாக ஒரு கருத்தை வெளியிட்டார். கிருஷ்ணகிரியில் ரூ.2,000 கோடியில் ஓலா நிறுவனம் இருசக்கர வாகன தொழிற்சாலையில் கட்டப்போகிறதாம். அதற்கு முதலமைச்சர் ஆதரவு தருவாராம். ஆனால், அவர்களோ எங்களை சுரண்டிக் கொண்டிருக்கின்றனர். எங்களுக்கு எந்தவிதமான நன்மையும் செய்துதராத இது யாருக்கான அரசு, ஓலா நிறுவனத்திற்கான அரசா? ஓட்டுநர்களுக்கான அரசா? என்று முழக்கமிட்டார். ஆனால், எவ்வகையிலும் ஒரு முதலாளித்துவ அரசு என்பது மக்களுக்கான அரசாக எவ்வாறு இருக்க முடியும்.

இறுதியாக உண்மையிலேயே இது ஒரு தன்னெழுச்சியான மாபெரும் போராட்டமாக தொடங்கியிருக்கிறது தொழிலாளர்களே இரண்டு நாட்கள் சிறப்பாக போராடி இருந்தனர். அவர்களை தொழிற்சங்கங்கள் ஒரு இடத்தில் ஒன்றிணைத்து இதை பெரிய போராட்டமாக மாற்றுவதாக உறுதி அளித்தது. ஆனால், அதன் செயல்பாடு அப்போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதாகவே இருக்கிறது. இந்த போராட்டம் நாளை எவ்வாறு தொடரும் அடுத்த கட்டங்கள் எவ்வாறு நகரும் என்பதை பொருத்தே இன்றைய இந்த மாபெரும் போராட்டத்தை நம்மால் மதிப்பிட முடியும். ஆனால், தொழிலாளர்கள் சிறு குழுக்களாக இல்லாமல் ஒற்றுமையாக தங்களுக்குள்ளே அமைப்பாக திரண்டால் மட்டுமே தீர்வை நோக்கி பயணிக்க முடியும்.

குறிப்பு : (ஜூலை, 2) அன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்திற்கு அருகில் கால் டாக்ஸி ஓட்டுனர்களின் மாபெரும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் ஆரம்பம் முதல் முழுவதுமாக உடன் நின்ற வகையில் எனது அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


நிதி குமார்

முகநூலில் : Nithi Kumar
disclaimer

காவிரி உரிமைக்கான போராட்டம் மீண்டும் வெடிக்கட்டும் || மக்கள் அதிகாரம் – கடலூர்

காவிரி உரிமைக்கான போராட்டம் மீண்டும் வெடிக்கட்டும் !

04.07.2021

பத்திரிகைச் செய்தி

ர்நாடக அரசு 9,000 கோடி செலவில் மேகேதாட்டு பகுதியில் அணை கட்டுவதற்கு அனைத்து முயற்சியும் செய்து வருகின்றது. இந்த அணையின் மூலம் 4.75 டி.எம்.சி. தண்ணீரை குழாய் மூலம் பெங்களூருக்கு எடுத்துச் செல்வதும், 400 மெகாவாட் அளவில் புனல் மின்சாரம் தயாரிக்கவும் திட்டமிட்டு உள்ளது. இந்த நிலையில்தான் சென்ற மாதம் செய்தித்தாள் ஒன்றில் மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கட்டுமானப் பொருட்களை கர்நாடக அரசு குவித்து வருவதாக செய்தி வெளிவந்தது.

மேகதாட்டுவில் சட்டத்துக்குப் புறம்பாகவும் வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராகவும் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில், அங்கு கட்டுமான பணி நடைபெறுகிறதா என்று குழு ஒன்றை சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அமைத்தது. இக்குழு ஜூன் 7-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தரவேண்டும் என்றும் சொல்லியிருந்தது.

படிக்க :
♦ டாஸ்மாக்கை மூடிடு !! || மக்கள் அதிகாரம் பாடல் || வீடியோ
♦ சேலம் படுகொலை : போலீஸின் அதிகாரத்துக்கு எதிராக அணிதிரள்வோம் || மக்கள் அதிகாரம்

இதனை எதிர்த்து கர்நாடக அரசு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. பசுமை தீர்ப்பாயத்தின் முதல் அமர்வு ஏற்கெனவே வழக்கு நிலுவையில் உள்ளதால் இக்குழுவை கலைப்பதாக அறிவித்துள்ளது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த நடவடிக்கையை மக்கள் அதிகாரம் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். மேகேதாட்டுவில் அணை கட்டுவதன் மூலமாக காவிரி நதிநீரை நம்பி விவசாயம் செய்வோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, இதை உடனடியாக கர்நாடக அரசு கைவிட வேண்டும். ஓட்டுப் பொறுக்குவதற்காகவும், தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காகவும் பாரதிய ஜனதா கட்சி, மீண்டும் மீண்டும் தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வருகிறது. மாநிலத்துக்கு ஏற்றவாறு மாற்றி மாற்றி பேசி வருகிறது.

மார்கண்டேய நதியில் அணையை கட்டியதன் மூலம் கர்நாடக அரசு அந்த நதியின் கடைமடை பகுதியான கிருஷ்ணகிரி, தர்மபுரி மக்களுக்கு துரோகம் இழைத்திருக்கிறது. இதனால் 870 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்.

1966 ஹெல்சிங்கி தீர்மானத்தின்படி, நதி உருவாகும் இடத்தில் உள்ள மக்களுக்கு இருக்கும் அதே சம உரிமை கடைமடைப் பகுதியில் இருக்கும் மக்களுக்கும் உள்ளது.

காவிரி, மார்கண்டேயா, பாலாறு, முல்லைப் பெரியாறு என நதிநீர் பிரச்சனைகளில் தொடர்ச்சியாக ஒன்றிய அரசு தமிழக மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்திருக்கிறது.

எனவே, தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் முற்போக்கு அமைப்புகளும் ஜனநாயகவாதிகளும் உழைக்கும் மக்களும் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வீதிக்கு வந்து போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இதன் ஒரு பகுதியாக வருகின்ற 6/7/2021 விருதாச்சலம் பாலக்கரையில் 10:30 மணி அளவில் தேசிய பசுமை தீர்ப்பாயம் குழுவை கலைத்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அனைத்து உழைக்கும் மக்களும் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கடலூர் மண்டலம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.


தோழமையுடன்,
தோழர் முருகானந்தம்,
கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தொடர்புக்கு : 9791286994

ஆன்லைன் கல்வி : ஆலமரத்தில் தொங்கும் டிஜிட்டல் இந்தியா || கருத்துப்படம்

ஆன்லைன் வகுப்புகள்: ஆலமரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது மோடியின் டிஜிட்டல் இந்தியா!

நாமக்கல் மாவட்டம் பெரிய கோம்பை ஊராட்சியில் இணைய வழிக் கல்விக்கு சிக்னல் கிடைக்காமல் மரத்தில் ஏறி அமர்ந்து பாடத்தைப் படிக்கும் மாணவரகள்.

டந்த 2020-ம் ஆண்டில் பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “’டிஜிட்டல் இந்தியா’ திட்டம் தற்போது மக்களின் வாழ்க்கை முறையாகவே மாறிவிட்டது” என்று குறிப்பிட்டார். மேலும், “டிஜிட்டல் இந்தியாவுக்கு மக்கள் நன்றி தெரிவிக்கவேண்டும், ஏனெனில் வளர்ச்சிக்கு மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறையை நம் நாடு கண்டிருக்கிறது. நமது நிர்வாக மாதிரியில் ‘தொழில்நுட்பம்தான் முதன்மையானது” என்றும் தெரிவித்தார்.

மோடி கூறிய டிஜிட்டல் வளர்ச்சி யாருக்கானது ? நகர்ப்புறத்தைச் சேர்ந்த உயர் நடுத்தர வர்க்க, மேல்தட்டு வர்க்கத்தினருக்கு மட்டுமே சாத்தியமான தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவே தொழில்நுட்ப மயமானதாக பீற்றிக் கொள்கிறது மோடி அரசு.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளி, கல்லூரிக் கல்வியை ஆன்லைனில் ஏற்பாடு செய்து அதையே டிஜிட்டல் இந்தியாவாக அறிவித்த இந்த அரசாங்கத்திற்கு, கைபேசி வசதி கூட இல்லாத சாதாரண மக்கள் இன்னும் இந்த நாட்டில் நிறைந்திருப்பது தெரியாதா ? அவர்களது பிள்ளைகள் எல்லாம் திறன்பேசிக்கும், இணைய இணைப்பிற்கும் எங்கே செல்வார்கள் ?

படிக்க :
♦ ஆன்லைன் கல்வி : 71% சாலையோரம் வசிக்கும் மாணவர்கள் பாதிப்பு
♦ மாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி !

ஓரளவு வளர்ச்சியடைந்த தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலேயே, கிராமப்புற மாணவர்களுக்கும், நகர்ப்புற உழைக்கும் வர்க்கப் பின்னணி கொண்ட மாணவர்களுக்கும் இணையவழிக் கல்வி சாத்தியமானதாக இல்லை.

இதனை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் ஏழை மாணவர்களின் கல்வியை பொசுக்கிக் கொண்டிருக்கிறது டிஜிட்டல் இந்தியா. இணையவழிக் கல்வியை ஏற்பாடு செய்த மத்திய மாநில அரசுகள் அதற்கான உபகரணங்களையும், உட்கட்டமைப்பையும் நாடு முழுவதும் உள்ள அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் ஏற்படுத்தித் தந்திருக்க வேண்டும் அல்லவா ? அப்படி இந்த அரசு செய்யத் தவறியது ஏன் ?

இந்தக் கேள்விக்கான பதிலில் தான் டிஜிட்டல் இந்தியா யாருக்கானது? என்ற கேள்விக்கான பதிலும் பொதிந்துள்ளது.


கருத்துப்படம் : மு.துரை

தென்கொரிய தூசான் நிர்வாகத்துக்கு சம்மட்டி அடி || தூசான் தொழிலாளர் சங்கம்

தூசான் தொழிலாளர் சங்கம்

தென்கொரிய தூசான் நிர்வாகத்துக்கு சம்மட்டி அடி!
தொழிலாளர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்ய அரசு அனுமதி மறுப்பு!

பத்திரிகைச் செய்தி

01.7.2021

பூவிருந்தவல்லி பைபாஸ் சாலையில் இயங்கி வந்த தென்கொரிய நிறுவனமான தூசான் பவர் சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்த நிரந்தரத் தொழிலாளர்கள் அனைவரையும் நட்டக்கணக்கு-பொய்க்கணக்கு காட்டி ஆட்குறைப்பு செய்ய தமிழக அரசின் அனுமதி கேட்டு மனு செய்திருந்தது. தூசான் தொழிலாளர் சங்கம், அதன் சிறப்புத் தலைவர் தோழர் பா.விஜயகுமார் (பு.ஜ.தொ.மு) தலைமையில் இந்த சட்டவிரோத ஆட்குறைப்பை எதிர்த்து சட்டப்போராட்டங்களை முன்னெடுத்தது.

வழக்கறிஞர்கள் திரு.பாலன் ஹரிதாஸ் மற்றும் திரு.காமாட்சி சுந்தரேசன் ஆகியோர் சங்கத்தின் சார்பில் ஆஜரானார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் மிகச்சிறப்பாக வாதிட்டனர். இதன் தொடர்ச்சியாக, 23.6.2021 அன்று தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் துறை அரசு செயலாளர் திரு.கிர்லோஷ் குமார் I.A.S நடத்திய விசாரணையின் இறுதியில், தூசான் நிர்வாகத்தின் ஆட்குறைப்பு மனுவை நிராகரித்து அரசாணை (அரசாணை (டி) எண் : 261 தேதி: 30.6.2021) வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக, தூசான் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.

தூசான் தொழிலாளர்களின் ஆட்குறைப்பு தொடர்பான அரசாணை

எமது சட்டப்போராட்டத்தில் துணைநின்ற வழக்கறிஞர்கள் திரு.பாலன் ஹரிதாஸ் மற்றும் திரு.காமாட்சி சுந்தரேசன், தொழிலாளர்துறை அதிகாரிகள், வழிநடத்திய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மாநில ஒருங்கிணைப்புக்குழு (தமிழ்நாடு) ஆகிய அனைவருக்கும் தூசான் தொழிலாளர் சங்கம் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. தூசான் தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்களையும், முதலாளித்துவ பயங்கரவாதத்தால் அச்சுறுத்தப்படும் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
மா.செ.சந்திரமோகன்,
பொதுச்செயலாளர்,
தூசான் தொழிலாளர் சங்கம்.
தொடர்புக்கு : 8056048103

மோடியின் தடுப்பூசி ஜூம்லா முதல் ஜி.எஸ்.டி கொண்டாட்டம் வரை || குறுஞ்செய்திகள்

1

மோடியின் தடுப்பூசி ஜூம்லா :

கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரையில் 1.45 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், 30.06.2021 அன்று தமிழக சுகாதாரத் துறையின் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் அனைத்தும் போட்டு முடிக்கப்பட்டன. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனா, தமது மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் மருத்துவக் கட்டமைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் அடிப்படை தோழர் மாவோ சீனாவில் ஏற்படுத்தியிருந்த சோசலிசக் கட்டமைப்பே ஆகும். மேலும் இன்று ஏகாதிபத்தியமாக வளர்ந்து வரும் சீனாவில், தடுப்பூசி உற்பத்தி என்பது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதற்கான உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கியிருக்கிறது சீனா.

இத்தகைய உட்கட்டமைப்பைக் கொண்டுள்ள சீனா, கடந்த மாதத்தில் இருந்து தினமும் சராசரியாக 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது. ஆனால் இத்தகைய உட்கட்டமைப்போ, தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களின் மீதான கட்டுப்பாடோ, அதனை அதிகமாக உற்பத்தி செய்யும் உட்கட்டமைப்போ எதையும் உருவாக்க வக்கற்ற மோடி அரசு, புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக கடந்த ஜூன் மாதம் 21-ம் தேதியன்று ஒரே நாளில் அதிகமான தடுப்பூசி போட்டு இந்தியா சாதனை படைத்ததாக மோடி அரசு பெருமை கூறிக் கொண்டது.

அதற்கு முந்தைய இருநாட்களுக்கான தடுப்பூசிகளை மக்களுக்கு விநியோகிக்காமல் தேக்கி வைத்து குறிப்பான நாளில் அந்த தடுப்பூசிகளை எல்லாம் போட்டு சாதனை செய்ததாக பீற்றிக் கொண்டது அடுத்த சில நாட்களில் அம்பலமானது.

பிரதமர் மோடி, தனது மான்கிபாத் உரையில், 2021-ம் ஆண்டு இறுதிக்குள் 130 கோடி பேருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று கூறினார். ஆனால் தடுப்பூசியை கூடுதலாக தயாரிப்பதற்கான திட்டமோ, தயாரிப்போ எதுவும் இல்லாமல் இப்படி வாயில் வடை சுடுவதில் மோடி கில்லாடி என்பதுதான் இன்று தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பு இல்லாத நிலைமை எடுத்துக் காட்டுகிறது.

0-0–0-0-0

உலகச் சுகாதார அமைப்பில் சீர்திருத்தம் கோரும் ‘வேத புத்திஜீவி’ ஹர்ஷ்வர்தன்!

கடந்த ஜூன் 30-ம் தேதியன்று ஹாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் இணையக் கூட்டம் ஒன்றில் இந்திய ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், உலக சுகாதார அமைப்பில் (WHO) ஒரு மிகப்பெரிய அவசர சீர்திருத்தம் தேவை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சீனா, ரசியா, இந்தியா, கஜகஸ்தான், கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக நடந்த கூட்டத்தில்தான் இதனை ஹர்ஷ்வர்தன் பேசியுள்ளார்.

மாட்டுச் சாணத்தையும், மாட்டு மூத்திரத்தையும் கொரோனாவுக்கு மருந்தாகவும், “கோ..கோ.. கொரோனா” என்று கூவிக் கொண்டே தட்டையும் கரண்டியையும் தட்டுவதை கொரோனாவுக்கு எதிரான போராகவும் வெளிப்படையாகக் கூறிய மாபெரும் அறிவுஜீவிகளைக் கொண்ட கட்சி பாஜக.

ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரான ஹர்ஷ் வர்தன்

இத்தகைய அறிவார்ந்த ஒரு கட்சி ஆட்சி செய்யும் அரசாங்கத்தின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் ஹர்ஷ் வர்தன். அவரது அறிவியல் அறிவும் மேற்கூறிய அறிவுஜூவிகளுக்கு சற்றும் குறைந்தது அல்ல.

உலகப் புகழபெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாங்கிங்ஸ் இறந்த பிறகு ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஹர்ஷ்வர்தன், பிரதமர் மோடியின் முன்னிலையில், “ஐன்ஸ்டீனின் E = mc2 கோட்பாட்டை விட வேதத்தில் உள்ள கோட்பாடு மேலும் சிறந்தது என ஆதாரத்துடன் ஸ்டீபன் ஹாங்கிங்ஸ் பதிவு செய்துள்ளார்” என்று கூறினார். பத்திரிகையாளர்கள் இது குறித்து கேள்வியெழுப்பியபோது, இப்போதாவது ஆதாரத்தை நீங்கள் தேடிக் கண்டுபிடியுங்கள், கிடைக்கவில்லை எனில் நான் தருகிறேன் என்று கூறினார்.

கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரியில் நடந்த ஒரு கூட்டத்தில், அல்ஜீப்ரா மற்றும் பித்தகோரஸ் தேற்றத்தையும் இந்தியாதான் கண்டுபிடித்தது என்றும், பின்னர், பிறர் அதை தங்களது கண்டுபிடிப்பாக அறிவித்துக் கொள்ள தாராளமாக அனுமதித்து விட்டது என்றும் கூறியிருக்கிறார்.

சொந்த வகையிலும், கட்சிரீதியாகவும் இத்தகைய ‘அறிவியல்’ பின்புலம் கொண்ட ஹர்ஷ்வர்தன் உலக சுகாதார அமைப்பில் அவசரமான சீர்திருத்தத்தை கோரியிருக்கிறார். எவ்வகையிலான சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என ஹர்ஷ்வர்தன் சிந்தித்திருப்பார் ?

ஒருவேளை பிரக்யா சிங் உட்பட பாஜகவின் பல பிரமுகர்களும் கொரோனாவை ஒழிக்கும் மருந்தாக அறிவித்துள்ள மாட்டு மூத்திரத்தையும், மாட்டுச் சாணியையும் உலக சுகாதார அமைப்பு, சர்வதேச கொரோனா நிவாரணியாக அறிவிப்பதைத் தான் சீர்திருத்தம் என்று கூறியிருப்பாரோ ?

0-0-0-0-0

மோடி : ஜி.எஸ்.டி ஒரு மைல் கல் !

இந்தியாவின் பொருளாதார அமைப்பில் ஜி.எஸ்.டி, ஒரு மைல்கல்லாக இருந்து வருகிறது. இது வெளிப்படைத்தன்மை, இணக்கம் மற்றும் ஒட்டுமொத்த வசூல் ஆகியவற்றை கணிசமாக அதிகரிக்கும். அதே வேளையில், சாதாரண மனிதர்கள் மீதான வரிகள், இணக்கச் சுமை மற்றும் ஒட்டுமொத்த வரிச்சுமை ஆகியவற்றைக் குறைத்துள்ளது” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் மோடி.

கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் சிறு வணிகத்தை உயிரோடு புதைத்த ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை நாடு முழுவதும் அமலாக்கப்பட்டது. இந்த மாபெரும் அவலத்தின் 4-ம் ஆண்டு நிறைவு ‘நினைவு நாளை’ ஒட்டியே டிவிட்டரில் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார் மோடி.

உண்மையில் ஜி.எஸ்.டி. இந்தியப் பொருளாதார அமைப்பின் ஒரு மைல்கல் தான். இதில் நாம் கவனிக்க வேண்டியது ஒரே ஒரு விசயம்தான். இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிப் பாயத் துவங்கிய புள்ளியின் மைல்கல் தான் அது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் நாள் இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி பணமதிப்பழிப்பு திட்டத்தை அறிவித்து இந்தியப் பொருளாதாரத்திற்கு மோடி தீவைத்த சம்பவம் நாம் அனைவரும் அறிந்ததே.

அன்று வீழத் துவங்கிய சிறு வணிகர்கள் மற்றும் சிறு, குறுந்தொழில் முனைவோரின் வாழ்க்கையை, மொத்தமாகக் கவிழ்த்துப் போட்டதில் முக்கியப் பங்கு ஜி.எஸ்.டியினுடையது.

பெரும் மூலதனத்துடன், பெருவித உற்பத்தியில் ஈடுபடும் கார்ப்பரேட் தயாரிக்கும் பொருளுக்கும் ஒரே வரி, சிறுவித அளவில் உற்பத்தி செய்யும் சிறு தொழில்முனைவோரின் உற்பத்திப் பொருளுக்கும் ஒரே வரி என ஜி.எஸ்.டியைக் கொண்டுவந்து அவர்களின் வாழ்க்கையை வீழ்ச்சிக்குத் தள்ளியவர் மோடி.

சிறு, குறு தொழில் முனைவோர், சிறு வியாபாரிகள் மற்றும் இத்தொழிலைச் சார்ந்து வாழும் தொழிலாளர்கள் என பலரது வாழ்வாதாரத்தைப் பறித்ததன் மூலம், மக்களின் ‘வாங்கும் திறனில்’ பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. அதன் விளைவாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் தேக்கம் ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

வீழ்ந்த இந்தியப் பொருளாதாரத்திற்கு நினைவுநாளாக இன்றைய தினத்தை மோடி ‘கொண்டாடுகிறார்’.

0-0-0-0-0

சரண்
செய்தி ஆதாரம் : தினமணி

நீட் : பாஜக கையாளப் போகும் உத்திக்கு பிள்ளையார் சுழி போட்ட கரு நாகராஜன் !!

4

மிழ்நாட்டில் நீட் தேர்வு ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையிலான குழுவை கடந்த மாதம் ஒரு அரசாணை மூலம் நியமித்தது. .கே.ராஜன் குழுவின் நியமனத்திற்கு எதிராக பாஜகவின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான கரு நாகராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தமிழக மருத்துவக் கல்லூரிகள் கட்டமைப்பை அபகரிக்கும் வகையிலும், ஏழை எளிய மாணவர்களை மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் இருந்து விலக்கும் வகையிலும் நீட் தேர்வை கொண்டுவந்தது ஒன்றிய பாஜக அரசு.

நீட் தேர்வுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், நீட் தேர்வு முறை தொடரலாம் என உச்சநீதி மன்றத்தில் ஒரு இடைக்கால உத்தரவைப் பெற்று, நீட் தேர்வை தொடர்ந்து நடத்தி வருகிறது மோடி அரசு.

படிக்க :
♦ நீட் தேர்வு : சமூக நீதிக்கு எதிரானதா? || ஃபரூக் அப்துல்லா
♦ நீட் தேர்வு : தமிழக அரசை நம்பி இருப்பது தீர்வல்ல ! போராட்டமே தீர்வு !

பொதுப்பட்டியலில் கல்வி இருக்கையில், அது தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கும் உரிமை உள்ளது. அந்த வகையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு நீட்டிலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கும் சட்டத்தை இயற்ற முடிவு செய்தது. அதற்கான பரிந்துரைகளைப் பெறவும், நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்யும் வகையிலும் நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையிலான கமிட்டியை அமைக்க ஒரு அரசாணையை வெளியிட்டது. அந்தக் கமிட்டியும் மக்களிடமிருந்து கருத்துக்களைக் கேட்டு தொகுத்தது.

இந்நிலையில், பாஜகவின் பொதுச் செயலர்களில் ஒருவரான கரு நாகராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு நீட் தேர்வு தொடர்பாக சட்டம் இயற்றிய பின்னர், அதுகுறித்து ஒரு ஆய்வுக் கமிட்டியை அமைக்க திமுக அரசு வெளியிட்ட அரசாணை தவறானது என்றும் அது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது குறிப்பிட்டார். மேலும், அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.

தனது மனுவை அதோடு நிறுத்தவில்லை. கூடுதலாக,  நீட் தேர்வை ரத்து செய்துவிட்டால், சாதாரணர்களும் கூட மருத்துவர்கள் ஆகிவிடும் சூழல் அமைந்துவிடும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான இருநபர் அமர்வு, இது குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டது.

தமிழ்நாடு அரசு தமது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில்தான், நீட் தேர்வு ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய கமிட்டி அமைத்ததாகவும், அது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு என்றும் தெரிவித்துள்ளார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான நிலைப்பாட்டை மாநில அரசு எடுக்க முடியாது என்றும், நீட் தேர்வு பாதிப்புகளைக் கண்டறியும் குழுவை அமைப்பதற்கு உச்சநீதிமன்றத்திடம் அனுமதி பெறப்பட்டதா? என்றும் கேள்வி எழுப்பினர்.

கல்வி என்பது மாநில மற்றும் ஒன்றிய அரசுகளின் பொதுப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒன்று. அந்த வகையில், கல்விச் சட்டங்களை இயற்றுவது குறித்து முடிவெடுக்கவும் ஆய்வு செய்யவும் ஒரு மாநில அரசுக்கு உரிமை உள்ளது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்து குறைந்தபட்ச அறிவு கொண்டவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு விசயம் தான்.

ஆனாலும் நமது உயர்நீதிமன்ற நீதிபதிகள் அது குறித்து மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளனர். ஆய்வு செய்வதற்கு உச்சநீதிமன்றத்திடம் அனுமதி வாங்கினீர்களா என்றும் அறிவார்ந்த கேள்வியை எழுப்பியுள்ளனர்.

ஒருவேளை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் மேலானதாக உச்சநீதிமன்றம் இருக்கும் பட்சத்தில் வேண்டுமானால், உச்சநீதிமன்றத்திடமிருந்து அப்படி ஒரு அனுமதி தேவைப்படலாம். ஆனால், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஒரு அடிப்படை உரிமையை மாநில அரசு நிறைவேற்ற அப்படி ஒரு அனுமதி அவசியமில்லை.

இந்த வழக்கு தொடுத்திருப்பதன் மூலம் தனது உண்மையான முகத்தை மட்டுமல்ல, தனது மக்கள் விரோத வழிமுறைகளையும் காட்டியுள்ளது பாஜக.

கல்வி பொதுப்பட்டியலில் இருக்கையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் வகையில் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு முழு உரிமை உள்ளது. அந்தச் சட்டமானது ஒன்றிய கேபினட்டில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்றால் நடைமுறைக்கு வந்துவிடும். இதுவரையில் பொதுப்பட்டியலில் உள்ள பல்வேறு துறைகளில் மாநில அரசுகளால் இயற்றப்படும் சட்டங்கள் இந்த வகையில் தான் நிறைவேற்றப்பட்டன.

அதிகபட்சமாக, மாநில அரசு இயற்றும் சட்டங்களில் கூடுதல் விவரங்கள், சந்தேகங்கள் மற்றும் அரசியல்சாசனத்திற்கு எதிரான அம்சங்கள் ஆகியவை இருந்தால் மட்டும் ஒன்றிய அரசு அதுகுறித்து விளக்கம் கேட்டுத் தெரிந்து கொள்ளும். அதுதான் நடைமுறை. அப்படி பின்பற்றப்படுவதுதான் கூட்டாட்சித் தத்துவத்திற்கு அழகு.

பார்ப்பன சனாதனத்தையும் கார்ப்பரேட் கொள்ளையையும் கல்வியில் கொண்டுவந்தே தீரவேண்டும் என துடிக்கும் பாஜக அரசு, தமிழ்நாடு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதை தடுத்தே தீரவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தமிழ்நாடு அரசு நீட்டிலிருந்து விலக்கு பெறும் சட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுப்பதற்கு, தனக்குச் சாதகமான உத்தியைக் கையாளத் துவங்கியுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இழுத்தடித்து, பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்து, அதற்குள் தமது நோக்கத்தை மறைமுகமாக நடைமுறைப்படுத்துவதுதான் பாஜக அரசின் உத்தியாக கடந்த ஏழாண்டுகளாக இருந்துவருகிறது.

உதாரணத்திற்கு ஆதார் தொடர்பான வழக்கில், தனிமனிதர்களின் அந்தரங்க உரிமைக்கு எதிரானது எனத் தொடுக்கப்பட்ட வழக்கை கிடப்பில் போட்டு நீர்த்துப் போகச் செய்து, இடைக்காலத்தில் ஆதார் இருந்தால்தான் வாழ முடியும் என்ற நிலைமையை மறைமுகமாக ஏற்படுத்தி அதனை நடைமுறைப்படுத்தியதை இதோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ஆதார் எனும் தனி மனித அந்தரங்கத் தகவல் சேகரிப்புப் பணியை செய்வதற்கான மசோதாவை, நிதி மசோதா என ஒன்றிய அரசு கூறிய கித்தாப்புக் கதைகளை ‘அப்பாவியாக’ நம்பி, ஆதார் சட்டத்தை அனுமதித்தது உச்சநீதி மன்றம்.

படிக்க :
♦ ஆதார் உச்சநீதிமன்றத் தீர்ப்பு : கட்டாயமில்ல … ஆனா கட்டாயம்தான் !
♦ ஆதார் : பார்ப்பனியத்தின் டிஜிட்டல் பாசிசம் !

நீட் தொடர்பாக தமிழ்நாடு தனிச்சட்டம் இயற்றினாலும், அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து, மேலே சொன்னது போல கிடப்பில் போட்டு, பல ஆண்டுகளாக நீட்டை அமல்படுத்தி பிரச்சினை நீர்த்துப் போன பிறகு நீட்டுக்கு எதிரான தமிழக அரசின் சட்டம் செல்லுபடியாகாது என தீர்ப்பளிக்க வாய்ப்பிருக்கிறது.

மோடி அரசின் இந்த உத்தியைத் தான் நீதிமன்ற உத்தியைத்தான் தற்போது பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்திருக்கிறார் கரு நாகராஜன்.

மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு ஆகிய இரண்டு தரப்புக்குமான பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வித் துறையில் சட்டம் இயற்றுவதற்கான மாநிலத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்கு சமீபத்தில் நம் கண் முன்னே கண்ட உதாரணம் இருக்கிறது.

அது ஜல்லிக்கட்டு போராட்டம் தான். பொதுப்பட்டியலின் கீழ் வரும் விலங்குகள் கொடுமை தடுப்புச்சட்டத்தில் மாநில அரசு வேண்டிய மாற்றத்தை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு மறுத்த நிலையில், தமிழகத்தில் நடைபெற்ற மெரினா எழுச்சி தான், ஒன்றிய மோடி அரசை அடிபணியச் செய்தது.

திமுக அரசு வெறுமனே சட்டத்தை மட்டும் இயற்றிவிட்டு அமைதியாக இருந்துவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கைக் காயப் போட்டு ஆதாரைப் போல நீட்டையும் அடுத்த தலைமுறையினர் மீது திணித்துவிடுவார்கள். இது தமிழக மக்களுக்குச் செய்யப்படும் துரோகமாகவே அமைந்துவிடும்.

ஆகவே நீதிமன்றத்தையும், ஒன்றிய அரசையும் அடிபணியச் செய்யும் வகையிலான மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதும், அனைத்து மாணவர்கள் மற்றும் முற்போக்கு, ஜனநாயக சக்திகளின் போராட்டங்களுக்கு அனுமதியளிப்பது என்ற வகையில் தான் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முடியும்.

சரண்

எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் : அமெரிக்காவின் மறைமுக ஆக்கிரமிப்புப் போரே !!

ப்பிரிக்கா கண்டம் என்றதும், போர், பசி, வறுமை, குண்டுகளுக்கு பலி கொடுக்கப்படும் அப்பாவி உயிர்கள், பெற்றோரை இழந்து நிற்கும் குழந்தைகள், சொந்த நாட்டை விட்டு வெளியேறும் அகதிகள் – ஆகியவைதான் நம் மனக் கண்களில் வந்து நிற்கின்றன. வை இயல்பாகிப்போன, வறுமையின் குறியீடாக நாம் பொதுவில் அறிந்து வைத்திருக்கும் ஆப்பிரிக்க கண்டத்தில், இரண்டாவது பெரிய நாடான எத்தியோப்பியா, அங்கு கடந்த 8 மாதங்களாக நடைபெறும் உள்நாட்டுப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தில் பூகோள முக்கியத்துவம் வாய்ந்த நாடாக எத்தியோப்பியா இருக்கிறது. இந்நாடு பூகோள ரீதியாக கிழக்கு மற்றும் தெற்கு சூடான், சோமாலியா, எரித்திரியா, சிபூத்தி, கென்யா ஆகிய நாடுகளின் எல்லைகளோடு இணைக்கப்பட்டுள்ள – நிலத்தால் சூழப்பட்ட நாடாகும். 20-ம் நூற்றாண்டில் ஆப்பிரிக்க கண்டத்தில் முதல் தன்னாட்சி பெற்ற ஐ.நா வின் உறுப்பு நாடாகவும், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைநகரமாகவும் (அடிஸ் அபாபா – எத்தியோப்பியாவின் தலைநகர்) எத்தியோப்பியா விளங்குகிறது.

அதிக மக்கள்தொகை கொண்ட ஆப்ரிக்க நாடான இது, அக்கண்டத்தின் மூன்றாவது சக்திவாய்ந்த இராணுவத்தையும், ஆப்பிரிக்க கொம்பு நாடுகளில் (எரித்திரியா, எத்தியோப்பியா, சிபூத்தி, சோமாலியா) முதன்மையான இராணுவ வலிமை கொண்ட நாடாகவும் உள்ளது.

படிக்க :
♦ தொடர் பஞ்சம் – வறுமை : ஆப்பிரிக்க கொம்பு நாடுகளைக் கைவிடும் அமெரிக்கா | படக் கட்டுரை
♦ ஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்

1992 வரை எத்தியோப்பியாவில், சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தால் ஆதரிக்கப்பட்ட போலி கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தது. அப்போது தனது அண்டை நாடுகளான சோமாலியா, எரித்திரியா மீது ஆக்கிரமிப்புப் போரை நடத்திய எத்தியோப்பிய அரசுக்கு, சோவியத் சமுக ஏகாதிபத்தியம் தனது பூகோள நலனுக்காக, ஆயுத உதவிகளைச் செய்து வந்தது. சோவியத் சமூக ஏகாதிபத்தியம் வீழ்ந்த பிறகு, இங்கிருக்கும் போலி கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி, ஆப்பிரிக்க கொம்பு நாடுகளில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட எத்தியோப்பியாவை தனது பேட்டை ரவுடியாக அமெரிக்க எகாதிபத்தியம் பயன்படுத்தி வந்தது.

எத்தியோப்பியா 10 தன்னாட்சி பிராந்தியங்களை கொண்ட கூட்டாட்சி அரசாகும். இந்நாட்டின் பிராந்தியங்களும், பிராந்திய கட்சிகளும் இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவே அமைந்துள்ளன. இந்நாட்டில் 80-க்கும் மேற்பட்ட இனங்கள் இருந்தாலும், ஒரோமியா, அம்ஹாரி, திக்ரின்யா போன்றவையே பெரும்பான்மை இனங்களாக இருக்கின்றன.

இவற்றில், தீக்ரே பிராந்தியத்தைச் சேர்ந்த இனவெறிக் கட்சியான “தீக்ரே மக்கள் விடுதலை முன்னணி”யின் (TPLF) தலைமையிலான கூட்டாட்சி அரசே 1992 முதல் 2018 வரை எத்தியோப்பியாவை ஆட்சி செய்தது. 2018 தேர்தலில் டி.பி.எல்.எஃப் தோற்கடிக்கப்பட்டு,எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி”யின் (EPRDF) தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர், டி.பி.எல்.எஃப் கட்சி தீக்ரே பிராந்தியத்தை மட்டுமே ஆட்சி செய்யும் நிலைக்கு சென்றது.

தற்போது, எத்தியோப்பிய கூட்டாட்சி அரசின் இராணுவத்திற்கும், தீக்ரே பிராந்தியத்தை ஆளும் டி.பி.எல்.எப்.-க்கும் இடையே, கடந்த 8 மாதங்களாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. 2018இல் ஈ.பி.ஆர்.டி.எஃப். கட்சியைச் சேர்ந்த அபி அகமது அலி என்பவரின் ஆட்சி அமைத்ததும், அந்நாட்டின் நீண்டகாலப் பகையாளியான எரித்திரியாவுடன் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. உயர் பதவிகளில் இருந்தும், இராணுவத் தலைமைப் பொறுப்புகளில் இருந்தும் டி.பி.எல்.எப் கட்சியைச் சேர்ந்தவர்களை நீக்கியது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இதனால் அந்நாட்டில் ஒரு பதற்றமான சூழல் இருந்துவந்த நிலையில், கொரோனா தொற்றுக் காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் நடக்கவிருந்த தேர்தலும் ஒத்திவைக்கப்படுவதாக அபி அகமது அறிவித்தார். இதனை எதிர்த்த டி.பி.எல்.எப். கட்சி, தான் ஆளும் தீக்ரே பிராந்தியத்தில் மட்டும் தேர்தலை நடத்தி, பிரச்சினையைத் தீவிரமாக்கியது.

த்தேர்தலைச் சட்டவிரோதமானது என்று அபி அகமது அறிவித்திருந்த நிலையில், நவம்பர் 4, 2020 அன்று அதிகாலையில் டி.பி.எல்.எஃப் கட்சி, தீக்ரேயில் உள்ள கூட்டாட்சி அரசு இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. டி.பி.எல்.எப்–இன் இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்குமாறுராணுவத்திற்கு உத்தரவிட்டார் பிரதமர் அபி அகமது. இதனால் எத்தியோப்பிய படைகள் தீக்ரே பிராந்தியத்தை நோக்கி தாக்குதலைத் தொடர்ந்த. இப்படிக் கடந்த நவம்பரில் தொடங்கிய இந்த உள்நாட்டுப்போர், 8 மாதங்களாக நடந்து வருகிறது.

இதுவரை ஆயிரக்கணக்கானோர் இப்போரினால் கொல்லப்பட்டுள்ளனர். 5000 குழந்தைகள் பெற்றோருடனான தொடர்பை இழந்துள்ளனர். 2 மில்லியன் மக்கள் தங்கள் சொந்த வீடுகளை விட்டு அகதிகளாக வெளியேறியுள்ளனர். 60,000 பேர் அண்டை நாடான சூடானின் அகதி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதில் பெண்களின் மீது இராணுவத்தால் நடத்தப்படும் கோரமான பாலியல் வன்கொடுமைகளும் அடங்கும்.

இத்தைகைய பேரழிவை ஏற்படுத்தியுள்ள உள்நாட்டுப் போரை பற்றியும் அதனால் பாதித்த மக்களைப் பற்றியும் எழுதும் வலதுசாரி பத்திரிக்கைகளோ, அபி அகமதுவின் அரசை மட்டுமே குற்றவாளியாக முன்நிறுத்தி, டி.பி.எல்.எப் மீது ஒரு பரிதாப பார்வையை ஏற்படுத்துமாறும் அவர்களுக்கு நியாயம் கற்பித்தும் எழுதுகின்றன. அதன் மூலம், அமெரிக்காவும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களும் இந்த உள்நாட்டுப் போரைப் பற்றி சர்வதேச ரீதியில் உருவாக்க விரும்பும் கருத்தை பிரச்சாரம் செய்கின்றன.

ஆனால் இந்த உள்நாட்டுப் போரைப் பற்றி நாம் புரிந்துகொள்ள, டி.பி.எல்.எப்.ஐயும் அதன் பின்னணியையும் இப்போருக்குப் பின்னால் உள்ள அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் நோக்கங்களையும் புரிந்து கொள்வது அவசியமாகும்.

அமெரிக்க மேல்நிலை வல்லரசின் அடியாள் படையே டி.பி.எல்.ப். !

டி.பி.எல்.எப். அட்சி செய்த 2018-ம் ஆண்டு வரையில், எத்தியோப்பியா அமெரிக்காவின் தீவீர அடிவருடியாகவும், ஆப்பிரிக்க கொம்பு நாடுகளில் அமெரிக்காவின் நலன்களைப் பாதுகாக்கும் பேட்டை ரவுடியாகவும் இருந்து வந்தது. 1975 முதல் 1991 வரை அதில் சிக்கல் இருந்து வந்தாலும், 1991-ல் மெங்கிஸ்ட் ஹைலே மரியத்தின் போலி கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி, திக்கிரின்யா இனவெறி கட்சியான டி.பி.எல்.எப் ஆட்சியைப் பிடித்தது, அமெரிக்காவிற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.

ஆட்சியமைத்த பின்னர், அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராணுவ உதவியோடு தன்னுடைய இராணுவத்தை பலப்படுத்திக்கொண்ட டி.பி.எல்.எப்.,  அருகில் உள்ள எரித்திரியாவில் நடத்திய ஆக்கிரமிப்பு, சோமாலியாவின் மீதான படையெடுப்பு, தெற்கு சூடானில் மத்தியஸ்தம் என்ற பெயரில் உள்நுழைவது என அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடியாள் படையாகவே செயல்பட்டது. 2018-ல் டி.பி.எல்.எப்–ன் தேர்தல் தோல்வியை சூடான், சோமாலியா, எரித்திரியா, லிபியா ஆகிய நாடுகள் ஆதரித்ததே இதற்கு ஒரு முக்கியமான சான்றாகும்.

அதுமட்டுமன்றி 1991 முதல் 2018 வரை டி.பி.எல்.எப். ஆட்சி செய்த 30 ஆண்டுகளில் எத்தியோப்பியாவில் கொலை, இனப்படுகொலை, பெருமளவில் மக்கள் இடம்பெயர்வது, போர்கள், பாலியல் வன்முறை, ஊழல், மோசடி என மனித உரிமை மீறல் கோரத்தாண்டவம் ஆடியது. தீக்ரே பிராந்திய இன மக்களின் நலன்களுக்காக ஒதுக்கப்படும் நிதியைத் தன்னுடையை இராணுவத்துக்காக பயன்படுத்துவதன் மூலம் சொந்த பிராந்திய மக்களின் நலன்களுக்கு எதிரான கட்சியாகவும் டி.பி.எல்.எப் இருந்தது. 2018-க்குப் பின்னும் இன மோதல்களை தூண்டும் வகையிலும், அபி அகமதுவின் ஆட்சிக்கு நெருக்கடி கொடுப்பதற்கும் பல்வேறு தக்குதல்களை நடத்தியது.

இப்படி சொந்த பிராந்திய மக்களுக்கே எதிரான, இனவெறி கொண்ட, அமெரிக்காவின் அடியாள் படையான டி.பி.எல்.எப் கட்சிக்கு ஆதரவாக, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களும் வலதுசாரிப் பத்திரிக்கைகளும் கருத்துருவாக்கம் செய்ய வேண்டியதன் பின்னணியை நாம் பார்க்கலாம்.

எத்தியோப்பியாவில் “மனித உரிமை மீறல்” எனக் கூச்சலிடும் அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் சதித்தனம்!

எத்தியோப்பியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்தே, ஐரோப்பிய பிரஸ்ஸல்ஸ் கூட்டமைப்பு, அம்னஸ்டி இண்டர்நேஷனலின் அறிக்கை (Amnesty International), யு.என்.எச்.சி.ஆர்.இன் அறிக்கை (UNHCR – United Nations High Commissioner for Refugees), அதனை ஏற்றுக்கொண்ட அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் என அனைவரும் இதனைஇன அழிப்புப்” போர் எனக் கூறினர்.

மேலும், “தீக்ரே மக்கள் பசியில் வாடுகின்றனர், அவர்களுக்கு இப்போது உதவி தேவைப்படுகிறது, பெரிய பஞ்சம் வரப்போகிறது, எத்தியோப்பியாவின் அருகில் உள்ள எரித்திரிய படைகளால் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகின்றனர்என அடுக்கடுக்கான அறிக்கைகளின் மூலம், எரித்திரியாவையும் எத்தியோப்பியாவையும் கண்டித்தனர். எத்தியோப்பியாவிற்கு பொருளாதார மற்றும் பாதுகாப்பு உதவிகள் வழங்குவதில் கட்டுப்பாடு விதித்துள்ளது அமெரிக்கா. இதன்மூலம், பொதுவெளியில் அபி அகமதுவின் அரசு மற்றும் எரித்திரிய அரசை குற்றவாளிகளாகச் சித்தரிக்க முயற்சிப்பதன் மூலம் டி.பி.எல்.எப்.-ஐ நியாயப்படுத்துகின்றனர்.

அமெரிக்க தலையீட்டை எதிர்த்துப் போராடும் எத்தியோப்பிய மக்கள்

எத்தியோப்பியாவுக்கு பராமரிப்பாளர் தேவையில்லை” ”நாங்கள் ஒருபோதும் மண்டியிடமாட்டோம்” என்ற முழக்கங்களைத் தாங்கிய பதாகைகளுடன் அந்நாட்டு மக்கள் 10,000 க்கும் மேற்பட்டோர் அமெரிக்காவை எதிர்த்து பேரணி நடத்தியுள்ளனர். “இது உள்நாட்டு விவகாரம் அமெரிக்கா இதில் தலையிடத் தேவையில்லை. அமெரிக்கா விதித்துள்ள தடைகளை நாங்கள் கண்டிக்கிறோம்” என்ற மக்களின் கருத்தில் நின்று அதனை ஆராயத் தொடங்குவோம்.

சமீபத்தில், நைல் நதியில் அணை கட்டும் திட்டத்தினால் எத்தியோப்பியாவுக்கு எகிப்துடன் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை, கிழக்கு ஆப்பிரிக்கா முழுவதும் வெட்டிக்கிளி படையெடுப்பு, வேலையின்மை, பசி, பஞ்சம் என பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுவரும் நிலையில், உள்நாட்டுப் போரின் மூலம் மேலும் கடுமையான நெருக்கடியையும், சர்வதேச அளவிலான அழுத்தத்தையும் அபி அகமதுவின் அரசுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதே டி.பி.எல்.எப்ன் நோக்கமாக இருக்கிறது.

முன்னரே நாம் பார்த்தப்படி டி.பி.எல்.எப் தலைமையிலான எத்தியோப்பிய அரசாங்கம் ஏகாதிபத்தியங்களின் புவிசார் நலன்களையும், வெளியுறவுக் கொள்கையின் நோக்கங்களையும் பாதுகாக்க ஒரு அடிவருடியாக செயல்பட்டது. அதனால் பல்வேறு நாடுகள் அதற்கு வரம்பற்ற இராணுவ மற்றும் பொருளாதாரத்தில் இராஜதந்திர பாதுகாப்பு அளித்தன.

கடந்த 2018-ல் அமைந்த அபி அகமதுவின் ஆட்சி, எரித்திரியாவுடனான சமாதான ஒப்பந்தம், தற்போது நடக்கப்போகும் தேர்தல் வாக்குறுதிகளில் அபி அகமதுவின் கூட்டணி எரித்திரியாவைப் போல நிலங்களை தேசியமயமாக்கப் போவதாக அறிவித்திருப்பது என இவையெல்லாம் டி.பி.எல்.எப்க்கு மட்டுமல்ல ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்கும் உகந்ததாக இல்லை.

டி.பி.எல்.எப் மற்றும் ஏகாதிபத்தியங்கள் எத்தியோப்பியாவுக்கு நிகராக எரித்திரியாவையும் கடுமையாக தாக்குகின்றன. உதாரணமாக, ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் தன்னுடைய அறிக்கையில், எரித்திரிய வீரர்கள் தீக்ரேயில் ”மக்களை கொடூரமாக கொல்கின்றனர்” என்றும் ”பெண்களை பாலியல் வல்லுறவு” செய்கின்றனர் என்றும் கூறுகிறது. அமெரிக்காவோ எத்தியோப்பியாவிலிருந்து எரித்திரிய படைகள் வெளியேற வேண்டும் என எச்சரிக்கிறது. இதை மறுத்த எரித்திரிய பிரதமர், எத்தியோப்பிய உள்நாட்டுப்போரின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகக் கூறுகிறார்.

இவ்வளவு சிரமப்பட்டு எத்தியோப்பியாவோடு இணைத்து எரித்திரியாவையும் தாக்க முயற்சிப்பதற்குப் பின்னே நீண்ட வரலாற்றுப் பின்னணி இருக்கிறது. எனினும், சுருக்கமாகப் பார்த்தால், 1896-ல் காலனிய விஸ்தரிப்புக்காக இத்தாலி நடத்திய போரில், கலானியாகாத ஒரே ஆப்பிரிக்க நாடு எத்தியோப்பியாதான். ஆனால் அந்த படையெடுப்பில் அருகாமை நாடான எரித்திரியா அடிமைப்படுத்தப்பட்டது. இந்த அவமானத்தை போக்க முசோலினியின் ஆட்சி காலத்தில் எரித்திரிய துருப்புகளின் உதவியோடு எத்தியோப்பியா மீது மீண்டும் போர் நடத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டது. ஆனாலும் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை.

படிக்க :
♦ உலகமயத்தின் சாதனை : அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை | படக் கட்டுரை
♦ பூமியை அரிப்பதுதான் உலகமயம் – கேலிச்சித்திரங்கள்

இரண்டாம் உலகப்போரில் இத்தாலி தோற்கடிப்பட்டதால் எரித்திரியா, எத்தியோப்பியா ஆகிய இரு நாடுகளும் விடுவிக்கப்பட்டன. ஆனால் எரித்திரியா தனி நாடாக இல்லாமல், எத்தியோப்பியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்றிலிருந்து எத்தியோப்பியாவால் ஒடுக்கப்படும் எரித்திரிய மக்கள் தனி நாடுக்காக போராடி வந்த நிலையில், 1991-ல் .நா நடத்திய வாக்கெடுப்பில் பெரும்பான்மை மக்கள் தனிநாடு வேண்டுமென வாக்களித்தன் மூலம் எத்தியோப்பியாவிடமிருந்து விடுதலை அடைந்தது எரித்திரியா.

இந்த விடுதலைக்குப் பின் ஆப்பிரிக்க நாடுகளுக்கான முன்மாதிரியாக எரித்திரியா விளங்கியது. இரண்டாம் உலாகப்போருக்கு பின் பிரிட்டன் எரித்திரியாவை விட்டு வெளியேறியதும், செங்கடல் கடற்கரையில் எரித்திரியா இருப்பதனாலும், அங்கு இருக்கும் தாதுப்பொருட்களின் வளம் காரணமாகவும், தனது 14-வது மாகாணமாக எத்தியோப்பியா எரித்திரியாவை இணைத்துக்கொண்டதுதான் வரலாறு.

எரித்திரியாவின் விடுதலையை ஏற்காத எத்தியோப்பியாவின் இராணுவம், எரித்திரிய விடுதலைக்குப் பின்பும் ஆக்கிரமிப்புப் போரை தொடர்ந்து நடத்தி வந்தது. ஏனென்றால் எத்தியோப்பியாவின் ஆட்சியின் கீழ் எரித்திரியா இருக்க வேண்டும் என்பது டி.பி.எல்.எப்இன் நோக்கம் என்பதைத் தாண்டி ஏகாதிபத்தியங்களின் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களுக்கும் அவசியமானதாக இருக்கிறது என்பதே உண்மை.

இன்னொருபுறம், அமெரிக்காவின் நோக்கத்திற்கு எதிராக, கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிரிக்கவில், குறிப்பாக எரித்திரியா மற்றும் எத்தியோப்பிய பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் வளர்ந்து வருகிறது. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு 16 பில்லியன் டாலரை சீனா கடனாக வழங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் (2017-2018) ஆப்பிரிக்க நாடுகளில் சீனாவின் வர்த்தகம் 60 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் 2012-ல் 120 பில்லியன் டாலர்களாக இருந்த அமெரிக்காவின் ஆப்பிரிக்க நாடுகளுக்கான வர்த்தக மதிப்பு, 2017-2018 ஆண்டுகளில் 330 மில்லியன் டாலர்களாக சரிந்துள்ளது.

எத்தியோப்பியா தனது பெரும்பாலான பொருட்களைச் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்கிறது. போர் நடக்கக் கூடிய தீக்ரே பிராந்தியத்திலும் அதிக அளவிலான முதலீட்டினை சீனா செய்துள்ளது. அதேபோல் எரித்திரியாவிலும் எரிசக்தி, பொது சுகாதாரம், உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் தன்னுடைய முதலீடுகளைச் செலுத்தி வருகிறது. மிக முக்கியமாக சீனாவின் புதிய பட்டுப்பாதைத் (Belt and Road) திட்டத்தில் எரித்திரிய எத்தியோப்பிய பகுதிகள் முதன்மையான இலக்காக இருக்கின்றன.

இப்படி இந்த இரண்டு நாடுகள் மட்டுமின்றி ஆப்பிரிக்க நாடுகளில் நடக்கும் சமாதான ஒப்பந்தம் போன்ற அமைதி காக்கும் பணிகளுக்கும் போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு போன்றவற்றிற்கும் சீனா அதிக அளவிலான நிதியை செலவிடுவதன் மூலம் ஆப்பிரிக்க கண்டத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது.

புதிய ஏகாதிபத்தியமாக வளர்ந்து வரி சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். (அமெரிக்க அடிவருடியான டி.பி.எல்.எப் ஆட்சியில் இருந்தபோது அம்ஹாரா மற்றும் எரித்திரியா உள்ளிட்ட பகுதிகளில் சீனாவின் திட்டங்களை குறிவைத்து எத்தியோப்பிய இராணுவம் போர் நடத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.)

எனவே, சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும் ஆப்பிரிக்க கொம்பு நாடுகளில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டவும் ஒரு பேட்டை ரவுடி அமெரிக்க மேல்நிலை வல்லரசுக்குத் தேவைப்படுகிறது. அதனால்தான் எத்தியோப்பியாவையும் எரித்திரியாவையும் மட்டுமே குற்றவாளிகளாக்கி, டி.பி.எல்.எப்.-இன் தாக்குதல்களை இனவுரிமைக்கான பிராந்தியப் போராட்டமாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர்.

உலகம் முழுவதிலும் ஆக்கிரமிப்புகளையும் ஆட்சிக் கவிழ்ப்புகளையும் நடத்தி, இலட்சக் கணக்கான மக்களைக் கொன்ற ஈவிரக்கமற்ற அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் “மனித உரிமை மீறல், இன அழிப்பு, போர், பஞ்சம்” எனக் கூச்சலிடுவதன் நோக்கம் என்ன?

பயங்கரவாதத்துக்கு எதிரான போர்என்ற பெயரில் ஆப்கான், ஈரான் போன்ற நாடுகள் நேட்டோ கூட்டணிப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. ஆனால், “மனித உரிமை மீறல்” என்னும் பெயரில், 2011-ல் லிபியாவில் சர்வாதிகாரி கடாபியின் ஆட்சி தூக்கியெறியப்பட்டது ஏகாதிபத்தியங்களின் ஒரு புதிய வகையிலான அணுகுமுறையாக அமைந்தது.

அமெரிக்க சதியால் கொல்லப்பட்ட லிபியாவின் சர்வாதிகாரி கடாபி

அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய நேடோ கூட்டணி நாடுகள் லிபியாவில் தனக்கு விசுவாசமான கூலிப்படையை உருவாக்கிக்கொண்டு ஆக்கிரமிப்புப் போரை தொடர்ந்தது. இந்தப் போரானது லிபிய சர்வாதிகார அதிபர் கடாபிக்கு எதிரானஜனநாயக போராட்டமாக’ சித்தரிக்கப்பட்டு, கடாபியின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என நேட்டோ படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியதோடு, நாங்கள் தாக்குதல் நடத்தவில்லையென்றால் நகரமே மயானமாக மாறியிருக்கும் என இதற்கு விளக்கமும் அளித்தது.

இப்படி “மனித உரிமை மீறல்” என்ற பெயரில் தலையிடும் இந்த அணுகுமுறை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களுக்கு வெற்றியை ஏற்படுத்தியதோடு, ஆப்கான், ஈரான் போன்ற நாடுகள் ஆக்கிரமிக்கப்பட்ட போது உலகெங்கும் போராட்டங்கள் நடந்தது போல, லிபியா ஆக்கிரமிக்கப்பட்ட போது போராட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், “இப்போரில் 200 கோடி டாலரை அமெரிக்கா செலவிட்டது. ஆனால் ஒரு அமெரிக்கன் கூடக் கொல்லப்படவில்லை. கடந்த காலங்களைப் போலன்றி நாங்கள் முன்னேறிச் செல்வதைக் குறிக்கும் முக்கியமான விசயம் இது.” எனக் கொண்டாடியவர்தான், அமெரிக்காவின் அப்போதைய துணை அதிபரும் இப்போதைய அதிபருமான ஜோ பைடன்.

தற்போது எத்தியோப்பிய உள்நாட்டுப் போரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் தலையிட வேண்டும் என வலதுசாரி பத்திரிகைகள் கூறுவதும், “தீக்ரே மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது”, “மனித உரிமை மீறல் நடக்கிறது” என்ற அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் கூச்சலும் லிபியாவில் பின்பற்றிய ’மனித உரிமை மீட்பு’ முறையின் மூலம் எத்தியோப்பியாவை தமக்குக் கீழான நாடாகக் கொண்டுவரும் சதித் திட்டமே ஆகும்.


பூபாலன்

உதவி கட்டுரைகள் :

தோழர் அம்பிகாபதி இறுதி அஞ்சலி மற்றும் இரங்கல் கூட்டம் || மக்கள் அதிகாரம்

தோழர் அம்பிகாபதி

ருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் தற்போது பிரிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி பகுதியில் உள்ள பெருந்தோட்ட கிராமத்தில் பிறந்தவர் தோழர் அம்பிகாபதி. இவர் விவசாயத்தை பின்னணியாக கொண்ட நடுத்தர வர்க்க விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.

இவர் சிறு வயதில் இருந்தே சுயமரியாதை, சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான உணர்வு கொண்டவர். திராவிட இயக்க தோழர்களை வரவழைத்து கிராமத்தில் இலக்கியக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் போன்றவற்றை நடத்தி மக்கள் மத்தியில் பகுத்தறிவு மற்றும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை பிரச்சாரம் செய்தார்.

இளம் வயதில் தி.மு..வில் இணைந்து தீவிரமாக செயல்பட்டார். 1983-ல் ஈழ ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். சிறையில்தான் அவருக்கு மார்க்சியலெனினியமாவோ சிந்தனை கொண்ட நக்சல்பாரி இயக்கத் தோழர்களுடன் தொடர்பு கிடைத்தது. புதிய கலாச்சாரம் இதழ்களை படித்து மார்க்சியலெனினியமாவோ சிந்தனையால் ஈர்க்கப்பட்டு பிறகு சீர்காழி பகுதியில் புதிய கலாச்சாரம் இதழை விற்பனை செய்வது, புதிய கலாச்சாரம் வாசகர் வட்டம் நடத்துவது போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சீர்காழி பகுதியில் மக்கள் கலை இலக்கிய கழக அமைப்பைக் கட்டி, பகுதி உழைக்கும் மக்களிடம் மார்க்சியலெனினிய அரசியலை பிரச்சாரம் செய்தார். பிறகு தமிழக அளவில் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பு துவங்கப்பட்டபோது நாகை மாவட்ட அமைப்பாளராக விவசாயிகள் மத்தியில் வேலை செய்து மக்களை அணி திரட்டினார்.

விவசாயிகளை பாதிக்கின்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் விவசாயிகள் மற்றும் பொது மக்களை அணி திரட்டி போராடி வந்தார். அதில் ஒரு முக்கியமான போராட்டம்தான் சீர்காழியில் நடைபெற்ற இறால் பண்ணை அழிப்பு போராட்டம். இந்த பேராட்டத்தை ஒடுக்குவதற்கு, இறால் பண்ணை முதலாளிகளால் பகிரங்கமாய் தோழர் அம்பிகாபதிக்கு கொலை மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் தேவாரம் தலைமையிலான போலீசு படையின் பல்வேறு நெருக்கடிகள் வந்த போதும் அதையெல்லாம் எதிர்த்து உறுதியாக போராடியவர்தான் தோழர் அம்பிகாபதி. கடந்த 2015-ம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினராக இருந்து செயல்பட்டு வந்தார்.

அதேபோல, கருவறை நுழைவுப் போராட்டம், வினோதகன் மருத்துவமனை கைப்பற்றும் போராட்டம், தேக்குப் பண்ணை அழிப்புப் போராட்டம், தில்லை நடராஜர் கோவிலில் தமிழில் பாடும் உரிமைக்கான போராட்டம், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு எதிரான போராட்டம்… இப்படி அமைப்பு முன்னெடுத்த அனைத்து போராட்டங்களிலும் ஒரு முன்னணி தோழராக தனது மரணம் வரை செயல்பட்டு வந்தார். பல்வேறு போராட்டங்களில் பல முறை சிறைக்கு சென்றுள்ளார்.

மரணமடைந்தபோது தோழர் அம்பிகாபதிக்கு வயது 69. ஆனாலும் ஒரு இளைஞரை போல சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்தார். 27.06.21 அன்று தனது வீட்டில் உள்ள மாமரத்தில் ஏறி கீழே விழுந்து அடிபட்டு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் அன்று மாலை 6.30 மணிக்கே தோழர் மரணமடைந்தார்.

28.06.2021 அன்று கடலூர் மண்டலம் மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் தலைமையில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஊர்ப் பொதுமக்கள், உறவினர்கள், நண்பர்கள், மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள், 20-க்கும் மேற்பட்ட ஜனநாயக அமைப்புகள், அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தோழர்கள் கலந்து கொண்டனர்.

தோழர் அம்பிகாபதி தான் ஏற்றுக்கொண்ட மார்க்சியலெனினிய சித்தாந்தத்தில் சரியான திசை வழியில் உறுதியாக ஊன்றி நின்றார். 1980-களில் அமைப்பில் ஓடுகாலிகள் ஏற்படுத்திய பிளவு குழப்பத்தின் போதும் சரி, சமீபத்தில் 2020-ல் சீர்குலைவுவாதிகள் ஏற்படுத்திய பிளவு மற்றும் சதியின்போதும் சரி, அவர்களுக்கு எதிராக கறாராக போராடி மாலெமா சிந்தைனையை உயர்த்தி பிடித்து அமைப்பின் பக்கம் நின்று அமைப்பை பாதுகாத்தார்.

இரங்கல் கூட்டத்தில் பேசிய தோழர்கள், ஜனநாயக சக்திகள, மாற்று அமைப்புகளை சேர்ந்தவர்கள் அனைவரும் அவருடைய எளிமையான வாழ்க்கை, அவர் தாம் ஏற்றுக் கொண்ட மார்க்சியலெனினிய அரசியலை அனைவரும் ஏற்கும் வகையில் பிறருக்கு தெளிவாகவும் எளிமையாகவும் எடுத்துரைப்பது பற்றியும், அவரது கடினமான உழைப்பு பற்றியும் பேசினார்கள்.

‘புரட்சிதான் தீர்வு, மார்க்சியலெனினிய சித்தாந்தம்தான் சரியானது, இறுதியானது என்பதை கருத்து ரீதியாக ஏற்றுக் கொண்டுள்ளோம். அதற்கு மார்க்சியலெனினிய சித்தாந்தத்தைப் பற்றி எங்களுக்கு அறிமுகப்படுத்தி கற்றுக் கொடுத்தவர் தோழர் அம்பிகாபதி’ என்று பிற அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த தலைவர்களும் பேசினர். பல பேர் நான் மக்கள் அதிகாரம் என்ற அமைப்பில் இல்லாமல் வேறு ஒரு அமைப்பில் செயல்பட்டாலும் மக்களை பாதிக்கின்ற சமூக பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும், போராட வேண்டும் என்ற உணர்வு எனக்கு ஏற்படுவதற்கு காரணமாக இருந்தவர் தோழர் அமபிகாபதி என்று கூறினர். தங்களைப் போல பல பேரை உருவாக்கியவர் அவர் என்பதையும் பதிவு செய்தார்கள்.

இரங்கல் கூட்டத்தில் பேசிய அனைவருமே “தோழர் அம்பிகாபதி விட்டுச்சென்ற பணியை நாம் எடுத்து செல்வதுதான் நாம் அவருக்கு செய்யும் மரியாதை – அதை தொடர்ந்து செய்வோம்” என்று உறுதியேற்றனர்.

இறுதியாக தோழருக்கு 2 நிமிடம் சிவப்பு அஞ்சலி செலுத்தி அவர் மேல் சிவப்புக் கொடி போர்த்தப்பட்டு ‘தோழர் அம்பிகாபதிக்கு சிவப்பஞ்சலி, நக்சல்பாரி இயக்கத் தோழர் அம்பிகாபதிக்கு வீர வணக்கம், மார்க்சியலெனினியமாவோ சிந்தனை வெல்லட்டும்’ ஆகிய முழக்கங்களோடு ஊர்வலமாக கொண்டு சென்று எந்த ஒரு பார்ப்பனிய சாதிய சடங்குகள் எதுவும் இல்லாமல் அமைப்பு முறைப்படி தாடாலம் காமராஜபுரம் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

தகவல் : மக்கள் அதிகாரம், கடலூர் மண்டலம்.
தொடர்பு எண் : 9791286994.

புடவை கடந்து வந்த பாதையும் அது சார்ந்த போராட்டங்களும் ! || சிந்துஜா

புடவை என்றவுடன் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது திருவிழா, திருமணம், கோவில். இவை எல்லாம் தானே புடவையை பற்றி நாம் அதிகம் பேசும் இடம். ஆனால், ஆண்களுக்கு புடவை என்றவுடன் நினைவுக்கு வருவது பெண்களின் வெட்கமும், அழகும். இப்படி ஆடை ஒருவருக்கும் ஒரு விதமான பார்வையை தருகிறது. இந்த புடவை வரலாற்றறை புரட்டும் முன் ஆடையை பற்றி  புகழ்ப்பெற்ற ஒரு  நகைச்சுவையைப் பார்ப்போம்.

பிரான்ஸ்சில் ஒரு பள்ளியில் குழந்தைகளை ஓவியக் கண்காட்சிக்கு அழைத்து சென்றார்களாம். அங்கே ஆணும் பெண்ணும் ஆடையின்றி நிர்வாணமாக இருப்பது போன்று ஒரு ஓவியம் இருந்தாம். அதைப்பார்த்த ஆசிரியர் குழந்தைகளிடம் இதில் ஆண் யார்? பெண் யார்? என்று கேட்டபோது, ஆடை அணியாமல் இருகிறார்களே எப்படி ஆணா பெண்ணா என்று கண்டுபிடிக்க முடியும் என்று குழந்தைகள் ஆசிரியரிடம் கேட்டார்களாம்.

படிக்க :
♦ மாதவிடாயும்  சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா
♦ பாவாடை பெண்களுக்கே உரிய உடையா ? || சிந்துஜா

நம்மைச் சுற்றி உள்ள சமூகம்தான் நமது ஆடையை கட்டமைகின்றது. அது ஆணுக்கு ஒருவிதமாகவும் பெண்ணுக்கு ஒரு விதமாகவும் ஆடை அணிவிக்கிறது. இதைப் பார்த்தே பழகிய கண்கள் ஆண் என்றால் ஒருவிதமாகவும் பெண் என்றால் வேறுவிதமாக பார்க்கிறது. ஆண் பெண் ஏற்றத்தாழ்வை அவர்களுக்கான உடையிலே பிரதிபலிக்கிறது. இதில் ஏதேனும் மாற்றத்தை  நிகழ்த்தினால் , அதை உடனே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எளிதில் வந்துவிடுவதில்லை.

ஆண், பெண் பேதம் தாண்டி, ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதமான ஆடைப் பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. இப்படி எல்லா நாடுகளின் கலாச்சாரத்திலும் ஆடை ஏதோ ஒரு இடம் பிடிக்கிறது. அந்த வகையில் இந்தியா என்றவுடன் நினைவுக்கு வருவது வேட்டி, புடவைதான். இதில் பெண்களின் புடவைதான் இந்தியாவின் கலாச்சார அடையாளமாக காட்டப்பட்டிருக்கிறது.

சேலை உலகின் மிகப் பழமையான ஆடை வடிவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. வடமேற்கு இந்தியாவில் சிந்து சமவெளி நாகரிகத்தில் (3,300–1,300 B.C.E.) முதன் முதலில் சேலை பயன்படுத்தினார்கள் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதன் பின்னர் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களிலும் சேலை புழக்கத்தில் வந்தது.

இந்தியாவில் சேலை ஒவ்வொரு பகுதிலும் வெவ்வேறு பெயர்களை கொண்டு உள்ளது. இந்த saree என்ற வார்த்தை “satika” சமஸ்கிரத மற்றும் பாலி மொழியில் இடம்பெற்று உள்ளது. “satika” என்பது பெண்கள் அணியும் ஆடை என்று புத்த இலக்கியத்தில் ஜகர்தா கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின் இந்த பெயர் புழக்கத்திலிருந்து எளிமையாக “saree” என்று மாறியது.

இன்றும் புத்த துறவிகள் உடுத்தும் தைக்கபடாத ஆடையே தூய்மையின் அடையாளமாக கருதுகின்றனர். இதைப் போன்றே இந்துமத நம்பிக்கையில் தைக்கப்படாத ஆடையை  அணியும் பெண்களே தூய்மையானவர்களாக பார்க்கப் படுகின்றனர். இதனால் தான் பெண்கள் கோவில், திருவிழா, திருமணம் போன்ற நாட்களில் புடவை அணிய வேண்டும் என்ற பிம்பத்தை ஏற்படுத்த காரணம்.

முகலாயர்களின் வருகைக்குபின் சேலையில் கற்கள், ஜமிக்கிகள் கொண்ட வேலைபாடுகளும், முந்தியில் அன்னம், மயில், யானை போன்ற உருவங்கள் பொறிக்கப்பட்டும், புடவையின் ஓரங்களில் வேலைபாடுகளையும் கொண்டு வந்தனர். பிரிட்டிஷ் வருகைக்குப் பின் நீண்ட தைக்கபடாத ஆடையையுடன் தைக்கப்பட்ட ரவிக்கை மற்றும் பாவாடை இணைக்கப்பட்டது.  பின்னாட்களில் புடவையுடன் இந்த இரண்டும் இணைந்து கொண்டன.

இந்த நாலரை முழம் முதல் எட்டு முழம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாகவே இருந்தது வந்துது. பின் நீள கால்சட்டைகளின் வருகைக்குபின் ஆண்களிடமிருந்து வேஷ்டி மறைந்தது. ஆனால், உடுக்க வசதியற்ற உடை என்றாலும் பாரம்பரியம், கலாச்சாரம் என்ற பெயரில் புடவை மீது பெண்களுக்கு ஒரு அதீத ஈர்பை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்த சாவித்திரி பூலே தான் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தர பள்ளிக்குச் செல்லும் வழியில் அதனைத் தடுக்க ஆதிக்கச் சாதியினர் அவரை கற்கள் மற்றும் சாணியை கொண்டு அவமதித்த போதும் மாற்று புடவையை எடுத்துச் சென்று மாற்றிக் கொள்வார் என்பது வரலாறு.

அதுமட்டுமா, வாராணசியில் ஜான்ஸி போரிலும் கூட புடவை அணிந்து சென்று போரிட்டார். தெலுங்கனாவில் ருத்ரமாதேவி என்ற பெண் அரசி, ஆணின் ஆடையை உடுத்தியே போர்களத்தை எதிர்கொண்டாலும், பின்னாளில் புடவையுடன் போர்க்களத்தில் வெற்றிகொண்டார். கல்விக் கூடம் முதல் போர்க்களம் வரை புடவை இந்தியாவில் பெண்களுக்கான உடையாக இருந்துள்ளது.

ஆனால், இந்தப் புடவையை கட்டக் கூடாது என தடை விதிக்கப்பட்ட பெண்களும் இந்தியாவில் இருக்கின்றனர். அவர்கள் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களே. கேரளாவில் முளச்சிபரம்பில் முலைவரி சட்டத்தை எதிர்த்து நங்கேளி நடந்திய  போராட்டம் இதற்கு ஒரு சாட்சி.

கிழத்தஞ்சையில் முழங்கால் சேலையை கணுக்காலுக்கு இறக்கி கொடுத்த மணலி கந்தசாமி போன்றோர்களின் போராட்டமும் மற்றொரு சாட்சி. விவசாயக் கூலிகளாகவும், பண்ணை அடிமைகளாகவும் வாழச் சபிக்கப்பட்ட பெண்கள் வரப்பில் நிற்கும் ஆண்டைகளின் வக்கிரப்பார்வைக்குத் தீனியாக்கப்படவும், வேலை வேகமாக செய்ய வைக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் தங்கள் சேலைகளை முழங்காலுக்கு மேலே தூக்கிக் கட்டிக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டு இருக்கிறார்கள். செங்கொடி இயக்கத்தின் தலைமையில் போராடி தான் அந்த சேலை கணுக்கால் வரை இறங்கியது. இப்படி போரட்டங்களுடனே பெண்களின் புடவை பயணித்து வந்துள்ளது.

புடவையை சுமார் 80 வகையான புடவை ரகங்களை கொண்டு உள்ளது. மாநிலத்துக்கு மாநிலம் புடவையின் தரம், ரகம் மாறுபடும் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், குஜராத்தில் பாந்தினி, மகாராஷ்டா பைத்தானி, வாரணாசியில் பனராஸ், மைசூரில் மைசூர் பட்டு, கேரளாவில் செட் முண்டு, பெங்காலில் பல்சுரி பட்டு என நகரத்திற்கு எற்றவாரு புடவைகள் இருக்கக்கூடும்.

சேலை மூன்று பகுதிகளை கொண்டது பாவாடை, ரவிக்கை அல்லது மாராப்பு, சீலை. இதை வடமேற்கில் லேஹெங்கா, காக்ரா மற்றும் சோலி என சொல்கின்றனர். சோலி அல்லது சீலையை வடமேற்கில் தலைக்கும் தெற்கில் தோளில் பல்லுவாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இப்படிதான் 6-ம் நுற்றாண்டில் புடவையை வகைப்படுத்தி இருந்தனர்.

உலகம் முழுவதும் சுமார் 108 வகையாக புடவையை உடுத்துகின்றனர். புடவை சற்று உடுத்த கடினமான உடை என்றாலும் அதன் மீது மக்களுக்கு அதீத ஈர்ப்பும் இருக்கத்தான் செய்கிறது. ஏனெனில் புடவையை பலவிதமாக இன்றைக்கு வடிவமைக்கின்றனர். புடவை உலக அரங்கில் சுமார் 38,000 கோடி வர்த்தக மதிப்பை கொண்டுள்ளது. இது இன்னும் 6 ஆண்டுகளில் 60,000 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்ட வீராங்கனைகள் முதல் தற்போது இருக்கும் பெண் அரசியல் ஆளுமைகள் வரையில் மருத்துவர்கள், விஞ்ஞானிகள் என அனைத்து ஆளுமைகளும் புடவையைப் பயன்படுத்தியது, இந்த ஆடையின் மீதான பார்வையை மேம்படுத்தியிருக்கிறது. சேலை அணிவதற்கும், தமது சுயமரியாதையை காப்பாற்றுவதற்குமான போராட்டத்தை பெண்கள், புடவையை முன் வைத்து இந்தியாவில் முன்னெடுத்திருக்கின்றனர்

படிக்க :
♦ ஜீன்ஸ் : ஆடையின் வரலாறும் – பொதிந்துள்ள உழைப்பின் வரலாறும் !
♦ பொள்ளாச்சி கொடூரமும் சீழ்பிடித்த சமூகமும் – சிந்துஜா

சாவித்ரிபாய் பூலே முதல் அருந்ததிராய் வரை பல பெரிய ஆளுமைகளும் சேலையை தங்களின் உடையாக தேர்ந்தெடுத்து இருகின்றனர். புடவை கடந்து வந்த பாதை துயரங்கள் நிறைந்து இருந்தாலும் உலகம் முழுவதும் பெண்களின் விருப்ப ஆடையாக இருந்து வருகிறது.

பெண்கள் பணிக்குச் செல்லும் இந்தக் காலகட்டத்தில், சேலை உடுக்கவும், அவசர உலகில் பயணிக்கவும் வசதியற்றதாக இருக்கிறது. ஆகையால் பெண்களின் உடையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆடையைப் பொறுத்தவரையில் ஒருவர் உடுக்கும் உடை, அவரவர் விருப்பத்திற்கு உட்பட்டது. அதை தேர்தெடுக்கும் உரிமை அவர்களுக்கானது மட்டுமே. தொடர்ந்து மாற்றத்தை நோக்கி பயணிப்போம் !!

சிந்துஜா
சமூக ஆர்வலர்
disclaimer

சமையல் எண்ணெய் விலை உயர்வு : பின்னணி என்ன ?

1

பெட்ரோல் விலையைக் காட்டிலும் கடந்த ஓராண்டில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது சமையல்  எண்ணெய் விலை. பெட்ரோல் இல்லாமல் கூட வாழ்ந்துவிடலாம்; ஆனால், சமையல் எண்ணெய் பயன்படுத்தாத சாமானியர் இருந்துவிட முடியாது. கடந்த 2020-ம் ஆண்டு, தொடக்கத்தில் ரூ.100 விற்ற ஒரு லிட்டர் ரீ பைண்ட் சமையல் எண்ணெய், ஜூன் 2021-ல் ரூ.180-க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் எண்ணெய் விலை கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது. உதாரணமாக, டெல்லி நகரத்தில் கடுகு, வனஸ்பதி, சோயா மற்றும் பாமாயில் சில்லறை விற்பனை விலை சுமார் 30% அதிகரித்துள்ளது. சூரியகாந்தி எண்ணெய் 40% அதிகரித்துள்ளது.

படிக்க :
♦ ஈரான் கச்சா எண்ணெய் : அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்த மோடி அரசு !
♦ வெண்ணெய்த் திருடன் கண்ணன் – எண்ணெய்த் திருடன் மோடி

விலை உயர்வுக்கு என்ன காரணம்?

இந்தியா தனது சமையல் எண்ணெயில் பெரும் பகுதியை இறக்குமதி செய்கிறது. தனது உள்நாட்டு தேவையில் சுமார் 70% அளவிற்கு இறக்குமதி செய்கிறது. இந்த நிலை எப்போதுமே அப்படி இருந்ததில்லை.

1990-களின் முற்பகுதி வரை, கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற வழக்கமான சமையல் எண்ணெய்களால் இந்தியா தன்னிறைவு பெற்றது. அந்த நேரத்தில் அமல்படுத்தப்பட்ட தாராளமயமாக்கலுக்குப் பிறகு, சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களுக்குச் சாதகமான கொள்கை முடிவுகளை ஆட்சியாளர்கள் எடுத்ததன் தொடர்ச்சியாகவும்,  தனிநபர் நுகர்வு கணிசமாக அதிகரித்ததன் காரணமாகவும் பற்றாக்குறை அதிகரித்தது.

இந்தியா கச்சா எண்ணெய் (பெட்ரோலியம்), தங்கத்துக்கு அடுத்த படியாக இறக்குமதிக்கு அதிகம் செலவிடும் பொருளாக சமையல் எண்ணெய் மாறியது.

இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவைக்கு இறக்குமதியை நம்பியிருக்கும் சூழலானது, சர்வதேச நிலைமைகளுக்கு ஏற்றவாறு எண்ணெய்களின் சில்லறை விற்பனை விலையை இந்தியாவில் மாறச் செய்தது.

கடந்த ஆண்டில், உலகம் முழுவதும் பல பயிர்களின் உற்பத்தி பெரும் சவால்களை எதிர்கொண்டன. மலேசியாவில் கோவிட் -19 பொதுமுடக்கத்தால் பனை பயிர் கொள்முதல் மோசமானது. 2020-ம் ஆண்டில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் எஎற்பட்ட வறண்ட சூழல் உலக அளவிலான சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியை 9% குறைத்தது. பயோடீசலுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக சோயா பீன் எண்ணெய் விலை உச்ச அளவை எட்டியது.

தொடர் பொதுமுடக்கம் காரணமாக வீட்டில் சமைக்கும் உணவுகளின் நுகர்வு அதிகரித்ததால், வடமாநிலங்களில் கடுகு எண்ணெய்க்கான தேவை மேலும் அதிகரித்தது. இந்த காரணங்களால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கடுகு எண்ணெய் போன்ற எண்ணெய்களின் விலையும் உயர்ந்தது.

உள்நாட்டு உற்பத்தி கைக்கொடுக்குமா?

இந்தியாவின் மொத்த எண்ணெய் வித்து உற்பத்தி கடந்த சில ஆண்டுகளில் ஓரளவு உயர்ந்துள்ளது. கொள்கை அளவில், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக அரசாங்கம் கூறிக் கொள்கிறது (இந்த நோக்கங்கள் பெரும்பாலும் பின்பற்றப்படாவிட்டாலும் கூட). அதிகரித்த உள்ளூர் உற்பத்தி, உணவுப் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது. மேலும், விவசாய வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது. இருப்பினும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது விலையில் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாரத் மேத்தா, இந்தியாவில் நடைமுறையில் உள்ள திறனற்ற விவசாய முறைகளால் உற்பத்தி தன்னிறைவற்ற நிலை ஏற்படுகிறது என விளக்குகிறார். “இந்தியாவில் உற்பத்தித்திறன் மிகக் குறைவு. எனவே இந்த குறைந்த உற்பத்தித்திறனில் விவசாயம் செய்தால், விலைகள் அதிகமாகவே இருக்கும்” என்கிறார்.

சிறிய அளவிலான பண்ணைகள் மற்றும் காலாவதியான விவசாய முறைகளால் இந்தியா வேளாண்மை உலக அளவில் திறமையற்ற ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது.  உதாரணமாக, இந்தியாவைப் போலவே வளரும் நாடாக இருக்கும் பிரேசிலில், சோயாபீன்ஸின் மகசூல் இந்தியாவில் இருப்பதைவிட மூன்று மடங்கு அதிகம்.

எனவே விவசாயத்தை மிகவும் திறன்மிக்கதாக்குவதும், சமையல் எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதும், விலையைக் குறைப்பதற்கான வழிமுறைகளாக இருக்க முடியும்.

எண்ணெய் விலை உயர்வு கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ள நிலையில், ஒன்றிய பாஜக அரசைப் பொருத்தவரையில் அது தேர்தலில் மிகப்பெரும் பாதகத்தை அக்கட்சிக்கு ஏற்படுத்தும் என்றாலும், நிலவும் நிச்சயமற்ற பொருளாதார நிலைமைகள் இப்பிரச்சினையை தீர்க்கும் சூழ்நிலையை ஏற்படுத்த வில்லை.

இறக்குமதி வரிகள் தாக்கத்தை ஏற்படுத்துமா?

பாமாயில் இறக்குமதிக்கு இந்தியா 32.5% வரி விதிக்கிறது, அதே நேரத்தில் கச்சா சோயா பீன் மற்றும் சோயா எண்ணெய்களுக்கு 35% வரி விதிக்கப்படுகிறது. சில்லறை விலைகளை குறைக்க முடியும் என்பதற்காக இந்த வரிகளை குறைப்பதை மோடி அரசு தீவிரமாக பரிசீலித்து வந்தது.

கடந்த ஜூன் 16-ம் தேதி சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை 20% வரை குறைந்துள்ளதாக அரசு செய்திக்குறிப்பு தெரிவித்தது. சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்ததும், வரியைக் குறைப்பதற்கான தனது திட்டங்களை மோடி அரசு நிறுத்தி வைத்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

5 விழுக்காடாக இருந்த கச்சா எண்ணெய் (சுத்திகரிக்கப்படாத பாமாயில், சூரியகாந்தி எண்ணெய்) இறக்குமதி வரி, இந்த ஆண்டு 17.5 விழுக்காடாக உயர்த்தியது மோடி அரசு. இதுதான் சமையல் எண்ணெயின் விலையேற்றம் உச்சத்தைத் தொடக் காரணமானது.

பெரும் கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமான நடவடிக்கைகள் :

கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து  கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான சிறு இறக்குமதியாளர்களின் உரிமத்தை ஒன்றிய அரசு புதுப்பிக்கவில்லை. சிறு இறக்குமதியாளர்கள் உரிமம் இல்லாததால், பெருநிறுவனங்கள் ஏக போக உரிமையுடன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து அதிக விலைக்கு இங்கு விற்பதாக சென்னையைச் சேர்ந்த எண்ணெய் இறக்குமதியாளர்கள் மற்றும் வணிகர் சங்கத்தைச் சேர்ந்த சுந்தர் கூறுகிறார்.

படிக்க :
♦ கேஸ் சிலிண்டர் – பெட்ரோல் – டீசல் விலை உயர்வும் – அம்பானிகளின் சொத்து மதிப்பு உயர்வும் !!
♦ பெட்ரோல் விலை உயர்வை ரத்து செய் : பிரான்சில் தீவிரமடையும் போராட்டம் – படக் கட்டுரை

மோடியின் கார்ப்பரேட் நண்பரான அதானி, சிங்கப்பூரின் வில்மர் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் அதிகளவு விற்பனையாகும் ஃபார்ச்சூன் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடுகிறார். இதைப் போலவே சமையல் எண்ணெயை இறக்குமதி செய்வதில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களை மட்டுமே அனுமதித்திருப்பதால், சமையல் எண்ணெயின் விலை மீதான கட்டுப்பாட்டை பேணுவதில்லை, மோடி அரசு.

90-களுக்குப் பிறகு, வேளாண்மையை இந்திய அரசு கைவிட்டதும், திறந்து விடப்பட்ட சர்வதேச சந்தையும், தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் இல்லாமல் விட்டதும் தான் சமையல் எண்ணெய் விலை உயர்வுக் காரணமாகியுள்ளது. மோடி தனது நண்பர்களுக்காக  செய்துகொடுத்திருக்கும் கொள்கை மாற்றங்களின் காரணமாக சமையல் எண்ணெயின் விலை உயர்ந்து, பெரும்பான்மையினரது வயிற்றில் அடித்துள்ளது.


கலைமதி
நன்றி : ஸ்க்ரால், தினமணி