Wednesday, November 5, 2025
முகப்பு பதிவு பக்கம் 387

நூல் அறிமுகம் : இந்து என்று சொல்லாதே … ராமன் பின்னே செல்லாதே !

னித உரிமைகளுக்கு மாபெரும் எதிரியான பார்ப்பன இந்துமதத்தின் புரட்டுக்களையும், இழிவுகளையும் எதிர்ப்பது என்பது அடிப்படையில் ஜனநாயகத்திற்கான போராட்டமாகும். வரலாற்று அறிவியலின் அடிப்படையில் தொல்லியல் துறை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து முன்வைத்த உண்மைகளை தூக்கி யெறிந்து விட்டு, மத நம்பிக்கை என்ற அடிப்படையில் துளசிதாசர் இராமாயணத்தை ஆதாரமாகக் கொண்டாடும் உச்சநீதி மன்றம். நேர்மையான முன்னாள் இராணுவ வீரர் நல்லகாமனை மனித உரிமைக்கு எதிராக அடித்து அரைநிர்வாணமாக்குவதும், கிரிமினல் சங்கராச்சாரி ஜெயேந்திரன் மலம் கழிக்க தலைவாழை இலை அறுக்கும் காவல் நிலையங்கள்.

இப்படியொரு முறைகேடான வெட்கக்கேடான சூழல் நிலவும்போது வெறும் சட்டவரம்புகளில் மட்டும் நின்று சமூக விடுதலையை சாதிக்க முடியாது. சட்டவரம்பிற்கு அப்பாற்பட்ட முறையில் மட்டுமே சமூகத்திற்காக சரியாகச் சிந்திக்க முடியும் என்பதை காலம் உணர்த்துகிறது. ஏற்கெனவே சிதம்பரம் நடராசர் கோவிலில் தமிழில் பாடினால் தீட்டு என்று கொக்கரிக்கும், சிவனடியார் ஆறுமுகச்சாமி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் தில்லை வாழ் அந்தணர்களின் திமிருக்கு எதிராகப் போராடி வருகிறோம் நாங்கள். இப்போது ராமன் பெரும்பான்மை இந்துக்களின் நம்பிக்கை’ என்று புதிய கதை எழுதும் உச்சநீதி மன்ற தில்லிவாழ் அந்தணர்களுக்கு எதிராகவும் அவாளோடு சேர்ந்து ராம பஜனை பாடக் கிளம்பியிருக்கும் புதிய பார்ப்பனர்களுக்கு எதிராகவும் நாங்கள் செய்துவரும் வேலைகளின் ஒரு பகுதியாக இந்தக் கவிதை நூலைக் கொண்டு வருகிறோம். நூற்றாண்டுகளாக நம்மை நசுக்கும் பார்ப்பனி யத்துக்கு எதிரான வழக்கு இன்னும் தீர்க்கப்படவில்லை. அதை தீர்ப்பதற்கான அரசியல் திசை வழியை அடையாளம் காட்டும் இந்தக் கவிதை நூலை வழக்கம் போல நீங்கள் வரவேற்று ஆதரியுங்கள். (நூலின் முன்னுரையிலிருந்து…)

கதிருக்கு அடிக்க வேண்டிய
பூச்சி மருந்தை
தன் உயிருக்கு
அடித்துச் சாகிறான் விவசாயி;

காரணமான உலகமயம் பற்றி
நான் உணர்த்தவேண்டிய நேரத்தில் – இந்த
குதிரைக்குப் பிறந்த ராமனைப் பற்றி
நான் குறிப்பாகப் பேச நேர்ந்ததென்ன!…

மசாஜ் பார்லர் வைத்து
ஆளைப்பிடித்து இழுத்தால்
அது விபச்சாரம்;

மனுதர்மத்தை வைத்து
ஆளைப் பிடித்து அமுக்கினால்
அது மகாபாரதம்

மாமனை வைத்து தொழில் செய்தால்
அதற்குப் பெயர் விபச்சாரம்;
ராமனை வைத்துத்
தொழில் செய்வதற்குப் பெயர்
ராமாயணம்.

ராமனையா பழிப்பது
என கோவணத்தை வரிந்து கட்டும்
கோபாலா….

ஆ… ஊ… என்று அரற்றி வரும்
அக்கிரகாரத்து சூத்திர்வாலே
‘ஏ’வும் ‘யு’வும் போட்டு
ஓட்ட வேண்டிய
உங்கள் ராம காவியத்தை
உள்ளது உள்ளபடி ஓட்டுவாயா?…

அன்று:
ஊரான் மாட்டை
அவாள் ஓசியில் தின்றது
உபசாரம்;
இன்று:
உழைத்திடும் மக்கள்
காசுக்கு வாங்கிக் கறி தின்றால்
அபச்சாரம் அபச்சாரம்.

அவாள்
சாராயம் குடித்தால்
அது தீர்த்தம்;
நம்மாள் குடித்தால்
நாத்தம்.

பார்ப்பானோடு பழகி
கெட்ட பழக்கங்கள் வந்தது போதும்
பஞ்சமரோடு/பறையரோடு பழகடா
பாட்டாளி வர்க்க
உழைப்பைக் கற்று உயரடா…

நம்ம மேல சாமி வந்தா
நாக்குல கம்பியைக் குத்துது!
பார்ப்பான் சாமி மேலே வந்தா
போய் அடுத்தவனை வெட்டுது!
எனவேதான் சொல்கிறோம்
பக்தி என்ற பெயரிலே
பார்ப்பான் பின்னே செல்லாதே!

இந்து என்ற நினைப்பிலே
ராமன் பின்னே செல்லாதே!…

எய்ட்ஸ்… ஆர்.எஸ்.எஸ்.
இரண்டும் ஆபத்து
உள்ளுக்குள் விட்டால் உயிரின்
எதிர்ப்புணர்வு குன்றிவிடும்
உள்ளே விட்டதனால்
இதோ-உருக்குலைந்து தமிழ்நாடு!…. ( நூலிலிருந்து…)

நூல்: இந்து என்று சொல்லாதே… ராமன் பின்னே செல்லாதே!
ஆசிரியர்: துரை.சண்முகம்

வெளியீடு: மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளை.
158, சேதுபதி குறுக்குத் தெரு, இராமையா தெரு கடைசி,
ஜெய்ஹிந்த் புரம், மதுரை – 11.
தொலைபேசி: 94434 71003

பக்கங்கள்: 56
விலை: ரூ 20.00

சென்னையில் 42-வது புத்தகக் கண்காட்சியில் குடும்பத்துடன் பங்கேற்று நூல்களை வாங்குங்கள் !

நாள் : 04-01-2019 முதல் 20-01-2019 வரை
நேரம்: வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி

இடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை – 35

அனைத்து முற்போக்கு நூல்களையும் ஒரே இடத்தில் உங்களுக்கு வழங்கக் காத்திருக்கிறது…

சென்னை புத்தகக் காட்சியில் நூல் வாங்க…

கீழைக்காற்று வெளியீட்டகம்

கடை எண் : 147, 148

கீழைக்காற்று அலுவலக முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
அலைபேசி: 99623 90277


இதையும் பாருங்க…

அவன் மட்டும் சம்மதித்தால் … !

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 50

மாக்சிம் கார்க்கி
ன்று மாலையில் இக்நாத் நிகலாய் வெஸோவ்ஷிகோவுக்கு எதிராக, ஒரு சின்ன நில அடி அறையில் உட்கார்ந்து தணிந்த குரலில் பேசிக்கொண்டிருந்தான்:

“மத்திய ஜன்னலில் நாலு தடவை தட்ட வேண்டும்…”

”நாலு தடவையா?” என்ற ஆர்வத்தோடு கேட்டான் நிகலாய் வெஸோவ்ஷிகோவ்.

”முதலில் மூன்று — இந்த மாதிரி” என்று கூறிக்கொண்டே அவன் மேஜை மீது தட்டிக் காண்பித்தான். “ஒன்று. இரண்டு, மூன்று ஒரு விநாடி பொறு. அப்புறம் இன்னொரு முறை.

“புரிந்துகொண்டேன்.”

“உடனே செம்பட்டைத் தலையனான ஒரு முஜீக் வந்து கதவைத் திறப்பான் திறந்து; ‘நீ மருத்துவச்சிக்காக வந்தாயா?’ என்பான். உடனே: ”ஆமாம். முதலாளியின் மனைவியிடமிருந்து வருகிறேன்” என்று நீ சொல்ல வேண்டும். அவ்வளவுதான். அவன் உன்னைப் புரிந்து கொள்வான்.”

அவர்கள் இருவரும் ஒருவர் தலையோடு ஒருவர் தலை முட்டுமாறு உட்கார்ந்திருந்தனர். இருவரும் குண்டுக்கட்டான பலசாலிகள். அவர்கள் இருவரும் தணிந்த குரலில் பேசிக்கொண்டிருப்பதை, தாய் தன் மார்பில் கரங்களைக் கோத்தவாறு நின்று கவனித்துக்கொண்டிருந்தாள். அவன் கூறிய மர்மமான சங்கேதச் சொற்களையும், தட்டுவதன் அர்த்த பாவத்தையும் காண அவளுக்கு வேடிக்கையாயிருந்தது.

‘இன்னும் சின்னப் பிள்ளைகள்தான்” என்று அவள் தனக்குத் தானே நினைத்துக்கொண்டாள்.

சுவரிலிருந்த விளக்கு ஒரு நெளிந்து போன பழைய வாளியையும், மூலையிலே தரையில் கிடக்கும் தகரத் தொழிலாளியின் தகட்டுக் குப்பைகளையும் ஒளி செய்து காட்டிக்கொண்டிருந்தது. அந்த அறை முழுதும் நீரூற்று நாற்றமும் எண்ணெய்ச் சாய வாடையும் துரு நாற்றமும் நிறைந்து நின்றன.

இக்நாத் தொள தொளத்த துணியால் தைக்கப்பெற்ற கனத்த கோட்டு அணிந்திருந்தான்; அது அவனுக்கு மிகவும் பிடித்துப் போனது போல் தோன்றியது. அந்தக் கோட்டின் கையை ஆசையுடன் அவன் தடவிக் கொடுத்ததைத் தாய் பார்த்தாள். அவன் தன் கழுத்தைத் திருப்பித் தன்னைத் தானே நன்கு பார்த்துக்கொள்ளத் திரும்பினான்.

”குழந்தைகள்!” என்று நினைத்துக்கொண்டாள் அவள். ”அருமைக் குழந்தைகள்……”

”ரொம்ப சரி” என்று கூறிக்கொண்டே எழுந்தான் இக்நாத். ”முதலில் முரார்த்தலின் வீட்டுக்குச் சென்று. நாத்தாவைப் பற்றிக் கேட்க மறந்துவிடாதே.”

”மறக்கமாட்டேன்” என்று பதிலளித்தான் நிகலாய் வெஸோவ்ஷிகோவ்.

ஆனால் இக்நாத்துக்குப் பூரண திருப்தி ஏற்படவில்லை. தான் சொல்லிக் கொடுத்த சமிக்ஞைகளையும் சங்கேதங்களையும் திரும்பவும் ஒரு முறை சொல்லிவிட்டுத் தன் கரத்தை நீட்டிப் பேசினான்;

“அவர்களுக்கு என் நன்றியைச் சொல்லு. அவர்கள் எவ்வளவு நல்ல மனிதர்கள் என்பதை நீயே கண்டுகொள்வாய்” என்று சொன்னான் அவன்.

அவன் தனக்குத்தானே மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டு தன் கோட்டைத் தட்டிவிட்டுக்கொண்டான்.

“நான் போவதற்கு நேரமாகிவிட்டதா?” என்று அவன் தாயிடம் கேட்டான்.

“உனக்கு வழி தெரியுமா?”

”கண்டுபிடித்துப் போய்விடுவேன். போய் வருகிறேன். தோழர்களே!”

அவன் வெளியே சென்றான். நிமிர்ந்த மார்போடும், அகன்ற தோள்களோடும், ஒரு புறமாகச் சாய்த்து வைத்த தொப்பியோடும்.

பாக்கெட்டுக்குள் கைகளை லாவகமாக விட்டவாறும் அவன் வெளியே சென்றான். அவனது சுருட்டைத் தலையின் வெளிர்மயிர்க் கற்றைகள் அவனது நெற்றிப் பொருத்துக்களில் ஊசலாடின.

“ஒரு வழியாக எனக்கு இப்போது ஒரு வேலை கொடுத்தாகி விட்டது” என்று கூறிக்கொண்டே நிகலாய் வெஸோவ்ஷிகோவ் தாயின் பக்கமாக மெதுவாக வந்தான் ”ஏனடா சிறையை விட்டு வெளியில் வந்தோம் என்று எனக்கு முதலில் இருந்தது. வந்த புதிதில் எனக்கு ஒரே எரிச்சல். இங்கே வந்து ஒரு வேலையும் செய்யாமல், இரவும் பகலும் உள்ளே மறைந்திருப்பதுதான் என் வேலை. அங்கே இருந்தாலாவது ஏதாவது கற்றுக்கொண்டிருப்பேன். பாவெல் எங்கள் அறிவை எப்படியெல்லாம் வளர்த்தான்! சரி, அவர்கள் தப்பி வருவதற்குப் போட்ட திட்டம் என்ன ஆயிற்று, நீலவ்னா?”

“எனக்குத் தெரியாது” என்று தன்னையுமறியாது எழுந்த பெருமூச்சுடன் சொன்னாள் அவள்.

நிகலாய் தனது கனத்த கரத்தை அவள் தோள் மீது போட்டு, தனது முகத்தை அவள் பக்கம் கொண்டு போனான்.

”நீ அவர்களிடம் சொல்லிப்பார்” என்று பேசத் தொடங்கினான் அவன். “நீ சொன்னால் அவர்கள் கேட்பார்கள். அதில் ஒன்றும் சிரமமில்லை. நீயே போய்ப்பார். சிறைச்சாலைச் சுவர் இருக்கிறதா? அடுத்தாற்போல் தெருவிளக்கு அதற்கு எதிர்த்தாற்போல் வெட்ட வெளி மைதானம்; இடது புறம் இடுகாடு, வலது புறம் தெருக்களும் வீடுகளும், ஒவ்வொரு நாளும் விளக்கேற்றுபவன் விளக்கைத் துடைத்துச் சுத்தம் செய்ய வருவான். எனவே அவன் சிறைச்சாலைச் சுவரின் மீது ஏணியொன்றைச் சாத்தி, மேலே ஏறி, அந்தச் சுவரிலுள்ள ஒரு செங்கல் தூணில் ஒரு நூலேணியைக் கட்டி, சிறைச்சாலைக்குள்ளே அதை இறக்க வேண்டியது. அப்புறம் அவன் போய்விட வேண்டியது. சிறைக்குள்ளே இருப்பவர்களுக்கு இது எப்போது நடக்கும் என்பது நன்றாகத் தெரியும். அவர்கள் சாதாரணக் கிரிமினல் கைதிகளோடு வம்பிழுத்துப் பேசி ஒரு கலவரத்தைக் கிளப்ப வேண்டியது. இல்லையென்றால் தமக்குள்ளேயே அவர்கள் கலாட்டா செய்ய வேண்டியது. அதாவது சிறைச்சாலைக் காவலாளிகள் கண்டுபிடித்து விடாதபடி, அவர்கள் கவனத்தைக் கொஞ்சம் கவர வேண்டியது. இதற்குள் தப்பியோட வேண்டியவர்கள் ஏணி வழியாக ஏறி வெளியே வந்துவிட வேண்டியது. ஒன்று, இரண்டு, மூன்று – அவ்வளவுதான். அதற்குள் எல்லாம் முடிந்து விடும். இதுதான் சுலபமான வழி.”

அவன் தனது திட்டத்தைக் கைகளை ஆட்டி சைகைகள் காட்டி விளக்கியதால், அவன் கூறிய விஷயங்கள் எல்லாம் தெளிவாகவும் புத்திசாலித்தனமாகவும் எளிதாகவும் தோன்றின. நிகலாயை அவள் எப்போது ஒர் அசமந்தப் பேர்வழியாகவே கருதி வந்திருக்கிறாள். முன்னெல்லாம் அவன் எந்த விஷயத்தையும் பகைவுணர்ச்சியோடும் அவநம்பிக்கையோடும் தான் பார்ப்பான். இப்போதோ அவன் புனர்ஜன்மம் எடுத்த மாதிரி, முற்றிலும் மாறிப்போய்விட்டான். அவனிடம் காணப்பட்ட நிதானமும் அன்பும் தாயின் இதயத்தைக் கவர்ந்தது. பரவசப்படுத்தியது.

“கொஞ்சம் யோசித்துப் பார். அவர்கள் இதைப் பகல் நேரத்திலேயே செய்யலாம். பகலில்தான் செய்ய முடியும்! சிறைச்சாலையிலுள்ளவர்கள் அனைவருமே விழித்திருந்து நடமாடிக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு கைதி தப்பியோடிவிடுவான் என்று எவரேனும் சந்தேகப்பட முடியுமா?”

”அவர்கள் சுட்டுத் தள்ளமாட்டார்களா?” என்று நடுங்கிக் கொண்டே கேட்டாள் தாய்.

”யார்? சிப்பாய்கள் இல்லை. அந்தக் காவலாளிகளுக்கு எல்லாம் தங்கள் கைத்துப்பாக்கிகளை வைத்து ஆணி அறைந்துதான் பழக்கம்.”

“நீ சொல்வதைப் பார்த்தால் எல்லாம் எளிதாகத்தான் தோன்றுகிறது.”

”நீயே பாரேன். நீ அவர்களிடம் இது விஷயமாகப் பேசிப் பார். நான் எல்லாம் தயாராய் வைத்திருக்கிறேன். நூலேணி, சுவரில் அறைய வேண்டிய கொக்கி – எல்லாம் தயார். இங்கே என் வீட்டுக்காரன் இருக்கிறானோ, அவன்தான் விளக்கேற்றுகிற நபராக இருப்பான்.”

படிக்க:
நெருங்குவது காவி இருளடா … | ம.க.இ.க. பாடல் காணொளி
ஆந்திரா – காக்கிநாடா : இயற்கை பேரிடர் ஆபத்தும் அரசின் அலட்சியமும் !

கதவுக்கு அந்தப் புறத்தில் யாரோ இருமிக்கொண்டே தடவித் தடவி நடந்தார்கள். ஏதோ ஒரு தகரத்தை உருட்டி ஓசை உண்டாக்கும் சத்தம் கேட்டது.

“அதோ, அது அவன்தான்” என்றான் நிகலாய்.

வாசல் நடையில் ஒரு தகர குளியல் தகர தொட்டி முதலில் தெரிந்தது. அதைத் தொடர்ந்து ஒரு கரகரத்த குரல் ஒலித்தது.

”ஏ, பிசாசே ! உள்ளே போய்த் தொலையேன்!”

அந்தத் தகர்த்தொட்டிக்கு மேலாக ஒரு மனிதனின் முகம் தெரிந்தது. சுமூகபாவமும், துருத்திய கண்களும், நரைத்த தலையும் மீசையுமாகக் காட்சி அளித்தான் அவன்.

நிகலாய் அந்தத் தொட்டியை உள்ளே இழுத்து அவனுக்கு உதவி செய்தான். தொட்டி உள்ளே வந்த பிறகு, நெட்டையான கூனிப்போன அந்த மனித உருவத்தை அவர்கள் கண்டார்கள். தாடியற்ற கன்னத்தைப் புடைக்கச் செய்யும் பலத்த இருமலோடு அவன் இருமியவாறு துப்பினான். பிறகு தன் விருந்தாளிகளைப் பார்த்து வரவேற்றான்.

”உங்களுக்கு நலம் உண்டாகட்டும்.” “இதோ, இவனையே கேள்” என்று சொன்னான் நிகலாய். ”என்னை என்ன கேட்கிறது?”

“”சிறையிலிருந்து தப்புவது பற்றி” “ஆஹா!” என்று அந்தத் தகரத் தொழிலாளி சொல்லிவிட்டுத் தனது கறைபடிந்த விரல்களால் மீசையைத் தடவி விட்டுக்கொண்டான்.

“யாகவ் வசீலியவிச்! அது எவ்வளவு சுலபமான காரியம் சொன்னால், இவள் நம்பமாட்டேன் என்கிறாள்.”

“நம்பவில்லையா? ஹம்! அப்படியானால் அவளுக்கு இதில் விருப்பமில்லை என்றுதான் தோன்றுகிறது. உனக்கும் எனக்கும் விருப்பம் இருக்கிறது, அதனால், நான் இதை நம்புகிறோம்!” என்று அமைதியாகச் சொன்னான் அவன். திடீரென்று அவன் முதுகைக் குனிந்து இருமத் தொடங்கினான். அந்தத் தொண்டைப் புகைச்சல் ஓய்ந்து அடங்கியதும், அவன் தன் நெஞ்சைக் கையால் தடவிக் கொடுத்தவாறே அறையின் மத்தியிலேயே நின்று, தனது முண்டகக் கண்களால் தாயையே கவனித்துப் பார்த்தான்.

“பாவெலும் அவனது தோழர்களும் இந்த விஷயத்தைத் தீர்மானிப்பார்கள்” என்றாள் தாய்.

நிகலாய் ஏதோ சிந்தித்தவாறே தலையைத் தொங்கவிட்டான்.

“யார் அது – பாவெல்?” என்று கேட்டுக்கொண்டே ஒர் இடத்தில் அமர்ந்தான் அந்தத் தொழிலாளி.

”என் மகன்.” “அவன் முழுப் பெயர்?” ”பாவெல் விலாசவ்.”

அவன் தலையை அசைத்தான், புகைக் குழாயை எடுத்து அதில் புகையிலையை நிரப்பத் தொடங்கினான்.

“அவனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான் அவன் : ”என் மருமகனுக்கு அவனைத் தெரியும். என் மருமகனும் சிறையில்தான் இருக்கிறான். அவன் பெயர் எவ்சென் கோ. கேள்விப்பட்டிருக்கிறாயா? என் பேர் கோபுன். அவர்கள் போகிற போக்கிலே கூடிய சீக்கிரத்தில் ஊரில் இருக்கிற இளைஞர்களை எல்லாம் பிடித்துச் சிறையில் தள்ளிவிடுவார்கள். நம்மைப் போன்ற கிழடுகட்டைகளுக்கு வெளியே தாராளமாய் இடம் இருக்கும்! என் மருமகனை அவர்கள் சைபீரியாவுக்கு அனுப்பப் போவதாக ஒரு போலீஸ்காரன் என்னிடம் சொன்னான். செய்வார்கள் – நாய்கள்!”

அவன் நிகலாவிடம் திரும்பி, புகைக் குழாயைத் ‘தம்’ பிடித்து இழுத்துக் கொண்டே. அடிக்கொரு தடவை தரையில் காரித் துப்பிக்கொண்டிருந்தான்.

ஏனடா சிறையை விட்டு வெளியில் வந்தோம் என்று எனக்கு முதலில் இருந்தது. வந்த புதிதில் எனக்கு ஒரே எரிச்சல். இங்கே வந்து ஒரு வேலையும் செய்யாமல், இரவும் பகலும் உள்ளே மறைந்திருப்பதுதான் என் வேலை. அங்கே இருந்தாலாவது ஏதாவது கற்றுக்கொண்டிருப்பேன்.

”அப்படியானால் அவளுக்கு இதில் விருப்பமில்லை. இல்லையா? அது அவள் பாடு. ஒருவன் சுதந்திரமாயிருந்தால்தான், உட்கார்ந்து களைத்துப் போனாலும் கொஞ்ச தூரமாவது நடந்து பார்க்கலாம் நடந்து நடந்து களைத்துப் போனாலும் கொஞ்ச நேரமாவது உட்கார்ந்து பார்க்கலாம். ஆனால், அவர்கள் உன்னைக் கொள்ளையடித்தால், கண்ணை மூடிக் கொள். அடித்தால் பட்டுக்கொள். அழாதே, கொன்றால் அப்படியே செத்துப்போ. இது எல்லோருக்கும்தான் தெரியும். என்ன ஆனாலும் சரி, நான் என் சவேலியை வெளியே கொண்டுவரத்தான் போகிறேன். நிச்சயம் கொண்டுவந்து விடுவேன்.”

அவன் அந்தச் சின்னஞ்சிறு வாக்கியங்களைச் சொன்ன விதத்தைக் கண்டு தாய் வியப்படைந்தாள், இறுதி வார்த்தைகளால் ஒரு விதத்தில் பொறாமை உணர்ச்சிகூட ஏற்பட்டது.

தெரு வழியாகக் குளிர் காற்றிலும் முகத்தில் அறையும் மழையிலும் நடந்து வரும்போதும் கூட, அவள் நிகலாயைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தாள்;

“அவன் எவ்வளவு மாறிவிட்டான். எப்படி மாறினான் நினைத்துப் பார்த்தால் ”

அவள் கோபுனைப் பற்றியும் நினைவு கூர்ந்தாள். பிரார்த்திப்பது போல, தன்னுள் தானே பணிவுடன் நினைத்துக்கொண்டாள்.

“வாழ்க்கையைப் பற்றிய புதிய அபிப்பிராயம் கொண்டிருப்பவள் நான் ஒருத்தி மட்டும்தான் என்பதல்ல அது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.”

அதே சமயத்தில் அவளது இதயத்தில் மகனைப்பற்றிய சிந்தனையும் நிரம்பியெழுந்தது.

“அவன் மட்டும் சம்மதித்தால்…!”

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

 

அனைத்து தொழிற்சங்க வேலைநிறுத்தத்தை ஆதரித்து பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் !

“தொழிலாளர் உரிமையை மீட்க, பாசிச RSS – BJP யை வீழ்த்த, ஜனவரி 8,9 இருநாள் வேலை நிறுத்தத்தை முன்னெடுப்போம்!” என்ற தலைப்பின் கீழ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி திருவள்ளூர் (மேற்கு) மாவட்டத்தின் சார்பாக ஆவடி நகராட்சி அலுவலகம் அருகில் 08.01.2019 அன்று மாலை 4:00 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் தோழர் மா. சரவணன் தலைமை உரையாற்றினார். அதை தொடர்ந்து விண்ணதிர முழக்கங்கள் முழங்கப்பட்டன.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில பொருளாளர் தோழர் பா.விஜயகுமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்; அதில் கடந்த நான்கரை ஆண்டுகளாக மோடி ஆட்சியின் கீழ் தொழிலாளர் நலன்கள் மற்றும் உழைக்கும் மக்களின் நலன்கள் எவ்வாறு பறிக்கப்பட்டன என்பதை விளக்கியும். சுதந்திரத்திற்கு முன்பே போராடிப்பெற்ற 44 தொழிலாளர் நலச் சட்டங்களையும் நான்கு தொகுப்புகளாக மாற்றுவதன் மூலம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு  சேவை செய்யும் மோடி அரசின் நோக்கத்தையும் அம்பலப்படுத்தினார்.

நாடே ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போலவும், முதலாளிகளுக்கு லாபமீட்டி தருவது ஒன்றே நாட்டின் ஒரே செயல்பாடு போலவும், மத்திய – மாநில அரசுகள் இதனை செய்து முடிக்கும் கங்கானிகளாகவும்  இருக்கும் வகையில் நாட்டின் கட்டமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானிக்கு ஜியோ, அனில் அம்பானிக்கு ரஃபேல், அதானிக்கு மின்சாரம், ஆலைகள் முதல் சாலைகள் வரை அனைத்தும் கார்ப்பரேட்களின் கொள்ளைக்கு திறந்துவிடப்படுவதை பட்டியல் போட்டு விளக்கினார்.

இங்கு தொழிலாளர்கள் மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களும் ஒடுக்கப்படுகின்றனர்.  மீனவர்கள் கடலை விட்டு துரத்தப்படுகின்றனர், மாணவர்கள் நீட் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வுகள் மூலம் கல்வியை விட்டு துரத்தப்படுகின்றனர்.
விவசாயிகள் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற நாசகாரத் திட்டங்களால் விவசாயத்தில் இருந்து துரத்தப்படுகின்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கஜா புயலில் டெல்டா மாவட்டங்கள் மிகப்பெரிய சேதத்தை சந்தித்தபோது கூட அதை திரும்பி பார்க்க மறுக்கிறது மோடி அரசு. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி அப்பாவி மக்கள் 14 பேரை அருகிலிருந்து தலையிலும், மார்பிலும் சுட்டுக்கொன்றது இந்த அரசு. இந்த படுகொலை மீதான விசாரணை துவங்கும் முன்னர், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எல்லா நடவடிக்கைகளும் சட்டப்பூர்வமாக செய்து வருகின்றனர். இதிலிருந்தே தெரிகிறது இந்த அரசு யாருக்காக செயல்படுகிறது என்பதையும்.

மேலும் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி, பெட்ரோல் டீசல் மீதான தொடர்ச்சியான விலையேற்றம் அதன் மூலமாக சாதாரண அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் எந்த அளவு பாதித்துள்ளது என்பதையும் விளக்கி தன்னுடைய கண்டன உரையை நிகழ்த்தினார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை தலைவர் தலைவர் தோழர் சே.சரவணன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

கூட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட கிளை / இணைப்பு சங்க தோழர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை ஒட்டி பகுதியில் உள்ள கடைகளில் நிதி வசூல் செய்யப்பட்டது. அதில் குறைந்த நேரத்தில் ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து பகுதிவாழ் தரைக்கடை வியாபாரிகள் பெருந்திரளாக நிதி அளித்தனர்.

மேலும் கூட்டத்தை ஆங்காங்கே நின்று கவனித்த வண்ணம் இருந்தனர். ஆர்ப்பாட்ட பிரசுரம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.

தகவல் :

திருவள்ளூர் மேற்கு மாவட்டம்.


புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பாக ஜன.8-9 அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து தங்களது பங்கேற்பை செலுத்தும் வண்ணம் ஒசூர் ரயில் நிலையம் முன்பாக ஜன.8 அன்று மாலை 5 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பாகலூர் பகுதி அமைப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார். இறுதியாக பு.ஜ.தொ.மு.வைச் சேர்ந்த தோழர் சங்கர் நன்றியுரை ஆற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்  திரளான ஆலைத் தொழிலாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற பலரும் கலந்து கொண்டனர்.

♣ காண்ட்ராக்ட், நீம், குறிப்பிட்ட கால வேலை போன்ற கொத்தடிமை முறைகளை வாபஸ் பெறு!
♣ சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டு பேர உரிமைகளை பறிக்காதே!
♣ முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு, வேலை பாதுகாப்பு உறுதிப்படுத்து!
♣ சுயசார்பு பொருளாதாரத்திற்கு துணை புரியும் பொதுத் துறையை தாரை வார்க்காதே!
♣ நிரந்தர தொழில்களில் ஒப்பந்த ஊழியரை ஈடுபடுத்தி பல உயிரிழப்புகள், உடலுறுப்பு இழப்புகள் ஏற்படுகிறது, தொழிலாளர் துறையே தூங்காதே!
♣ Fixed Term Employment and Neem – ஐ முழுமையாக கைவிடு!
♣ 44 தொழிலாளர் சட்டத்தையும் முடக்காதே!
♣ மக்களின் சொத்தான பொதுத் துறைகளை விற்காதே!
♣ பாசிச RSS – BJP யை வீழ்த்திடுவோம்!

தகவல்:

கிருஷ்ணகிரி –  தர்மபுரி  – சேலம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு : 97880  11784


தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட ஜனவரி 8, 9 அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து ஜனவரி 9 அன்று அனைத்துச் சங்கக் கூட்டமைப்பு சார்பில் வேலூர் மாவட்டம், ஆம்பூரில் மறியல் போராட்டம் நடைபெற்றது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (NDLF), AITUC, CITU, LPF, HMS, SDPI, மற்றும் INTUC உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சார்ந்த தொழிலாளர்கள் இம்மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாவட்டச் செயலாளர் தோழர் சுந்தர், AITUC மாவட்டச் செயலாளர் தோழர் தேவதாஸ், CITU மாவட்டப் பொருளாளர் தோழர் குமார், INTUC மாவட்டத் தலைவர் தோழர் கோவிந்தசாமி, HMS மாவட்டத் தலைவர் தோழர் பெருமாள், LPF மாவட்டப் பொருளாளர் தோழர் ஞானதாஸ் மற்றும் SDPI  கட்சியினர் உள்ளிட்ட பலரும் இம்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிக அளவில் பெண் தொழிலாளர்களும் இம்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு பிறகு மாலை 6.30 மணி அளவில் விடுவிக்கப்பட்டனர்.

படிக்க:
இங்கே நடப்பது மக்களாட்சி அல்ல ! கிரிமினல் கும்பல்களின் ஆட்சி !
ஆண்டிராய்டில் மூழ்கும் மாணவர்களை மீட்கும் வழி – விளையாட்டு | விருதை செஸ் போட்டி

தகவல்:

வேலூர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிக்கக்கோரி குடந்தை மாணவர்கள் போராட்டம் !

0

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கலாம் : கார்ப்பரேட்டுகளுக்கு காவடி தூக்கும் உச்சநீதிமன்றம் !

ஸ்டர்லைட் ஆலைக்கு தடை விதித்து மதுரை உயர்நீதி மன்ற உத்தரவை ரத்து செய்தும், பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை வழிமொழிந்து “வேதாந்தா கார்ப்பரேட் முதலாளிக்கு” காவடி தூக்கும் உச்சநீதி மன்றத்தை கண்டித்து பு.மா.இ.மு தலைமையில் 09.01.2019 காலை 9:30 மணிக்கு  குடந்தை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள்  கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கல்லூரி வாயிலில் நடந்த இந்த ஆர்ப்பட்டத்தை பலரும் நின்று கவனித்துச் சென்றனர்.

தகவல் :

குடந்தை.

வாசகர் புகைப்படம் இந்த வாரத் தலைப்பு : பொங்கலும் விவசாயமும்

0

சென்ற வாரம் “உங்கள் விருப்பம்” தலைப்பில் பல நண்பர்களும் தாங்கள் எடுத்த  படங்களை அனுப்பியிருந்தார்கள். அவர்களுக்கு எமது நன்றிகள். இந்த வாரம் உங்கள் தலைப்பு “பொங்கல் – விவசாயம்”.

பொங்கல் காலத்தில் நீங்கள் பார்க்கும் விவசாயக் காட்சிகள் – பயிர், கரும்பு, மஞ்சள், காய்கள் – நிலங்கள், தோட்டங்கள், இவற்றின் நிலவியல் காட்சிகள், நிலவியலோடு மக்கள் காட்சிகள், பொங்கலுக்கான கிராம நகர சந்தைகள், ஒரு வீட்டில் கொண்டாடப்படும் பொங்கல் காட்சிகள், கோலங்கள், கிராம அளவிலான போட்டிகள், மாட்டுப் பொங்கல், மாடுகள், போன்றவற்றினை அனுப்பலாம்.

கஜா புயலால் நிலைகுலைந்திருக்கும் தஞ்சை டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு பொங்கல் கண்டிப்பாக மகிழ்ச்சியான விழாவாக இருக்காது. சோகத்தில் சிக்கியிருக்கும் அப்பகுதி மக்கள் – கிராமங்களையும், கஜா புயலுக்கு பிறகான இன்றைய காட்சிகளையும் படம் பிடிக்கலாம்.

பொங்கல் காலத்தில் நமது விவசாயத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்கு ஒரு நல்ல காட்சி கிடைக்கும்.

வாழ்த்துக்கள்!

புகைப்படங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 17-1-2019

வினவு மின்னஞ்சல் vinavu@gmail.com அல்லது வினவு வாட்ஸ்அப் எண்ணிற்கு (91) 97100 82506 புகைப்படங்களை அனுப்புங்கள். புகைப்படம் எடுக்கப்பட்ட இடம், நாள், அது குறித்த விவரங்கள் கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்!

தெரிவு செய்யப்படும் படங்கள் அனைத்தும் வெளியிடப்படும். அடுத்த வாரம் இன்னொரு தலைப்பு ! காத்திருக்கிறோம். நன்றி!

நட்புடன்
வினவு


புகைப்படம் எடுப்பது தொடர்பான சில ஆலோசனைகள்:

♦ எந்த ஒரு இடம்/கருத்திற்காக புகைப்படம் எடுப்பதாக இருந்தாலும் அதன் முழுப் பரிமாணத்தை உணர்த்தும் வகையில் wild ஆக புகைப்படம் ஒன்று எடுக்க முயற்சிக்க வேண்டும். (உ-ம்) மார்க்கெட் கடைவீதியை மையப்படுத்தி கதை சொல்லப்போகிறோம் என்றால், அதன் தெரு அமைப்பு, வாடிக்கையாளர்களின் அடர்த்தி ஆகியவற்றை பதிவு செய்வது.

♦ தனிநபரை புகைப்படம் எடுக்கும் பொழுது, அந்த நபரை மையமாக வைத்து புகைப்படம் எடுப்பதை விட, அந்த நபர் வலது / இடது ஓரத்தில் இருப்பது போல எடுக்க வேண்டும். இதன் மூலம் அப்படத்தில் நிறைய Details கொண்டு வர முடியும். (உ-ம்) வியாபாரியை படம் எடுக்கும்பொழுது, அவரது முகம் இடது வலது ஓரத்தில் இருந்தால் மீதமுள்ள இடத்தில் அவரது கடை மற்றும் வாடிக்கையாளர்களின் நடமாட்டம் பதிவாகும்.

♦ எந்த ஒரு இடத்திற்கு சென்றதும் எடுத்தவுடன் புகைப்படம் எடுத்துத் தள்ளிவிடக்கூடாது. முதலில் அந்த இடத்தை அவதானிக்க வேண்டும். கண்ணால் முதலில் காட்சிகளை வகைப்படுத்திக்கொண்டு எந்த Frame இல் எடுக்கப் போகிறோம் என்பதை கூடுமான வரையில் முன்னரே தீர்மானித்து விட்டு அதன்பின்னர் புகைப்படங்களை எடுக்கப் பழக வேண்டும்.

♦ ஏற்கெனவே பல முறை ஒரு இடத்தைப் பலரும் பல விதமாக புகைப்படம் எடுத்திருந்தாலும் அவ்விடத்தில் நாம் புதுமையாக சில படங்களை எடுக்க முடியும். அல்லது அங்கேயே இதுவரை யாரும் செல்லாத புதிய இடம், அல்லது புதிய கோணம் நமக்கு தெரிய வரும். இதற்கு நாம் தேடி அலைய வேண்டும். மெனக்கெட வேண்டும். (உ-ம்) ரெங்கநாதன் தெருவைப் புகைப்படம் எடுக்க வேண்டுமெனில், குறுக்கு நெடுக்காக சிலமுறை சென்று வந்தால் புதிய கோணம் கட்டாயம் கிடைக்கும்.

♦ புகைப்படம் எடுப்பதில் நேரம் மிக முக்கியமானது. காலை 6 – 9 மற்றும் மாலை 4 முதல் இருட்டும் வரையிலான நேரம் பொருத்தமானது. கண்ணில் காண்பதை அப்படியே காமிராவில் கொண்டு வர முடியும். குறிப்பான சில இடங்களுக்கு இந்த நேரம் மாறுபடலாம். (உ-ம்) தி.நகர் கடை வீதியின் பிரம்மாண்டத்தை அதன் பளபளப்பை காட்ட வேண்டுமென்றால் இரவு 7 மணிக்கு மேல் எடுப்பதே பொருத்தமானது.

♦ ஒரு கதைக்கருவைத் தீர்மானித்துக்கொண்டு அதற்கேற்ற படங்களை எடுக்கும் பொழுது, அதன் ஒட்டுமொத்த கதையையும் ஒரே படத்தில் சொல்வதைப்போல First Photo அமைய வேண்டும். (உ-ம்) காசிமேடு மீன் சந்தையை படமாக்குவது நமது கதைக்கரு என்றால், கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் படகில் நின்று கொண்டு கடற்கரையில் காணும் மக்கள் அடர்த்தியைக் காட்சிப் படுத்துவது.

♦ எதையும் நேரடியாக சொல்ல வேண்டும் என்பதில்லை. இதே இடத்தை இதற்கு முன்னர் பலரும் பலவிதமாக எடுத்த புகைப்படங்களைப் போலவே நாமும் முயற்சிக்க வேண்டும் என்பதில்லை. புதிய கோணத்தில் முயற்சிக்க வேண்டும்.

♦ சில்லவுட் (உருவங்கள் மட்டுமே தெரிவது போன்று) படங்களை எடுக்க முயற்சிக்க வேண்டும். எல்லா படங்களும் கலராக இருக்க வேண்டுமென்பதில்லை. உள்ளடக்கத்தைப் பொருத்து கருப்பு வெள்ளைப் படங்களாக இருப்பது சிறப்பு.

♦ இணையத்தில் புகைப்படக்கலையில் நிபுணத்துவம் பெற்றவர்களின் புகைப்படங்களை பார்க்க வேண்டும். ஒவ்வொரு புகைப்படத்தையும் ரசித்து உள்வாங்க வேண்டும். இந்தப் பயிற்சிதான் புதிய இடத்தில் புதிய கோணத்தில் புகைப்படங்களை எடுக்க நமக்கு கை கொடுக்கும்.

♦ எங்கும் எப்பொழுதும் விதியை மீற வேண்டும் (Break The Rule) . கடை வீதி என்றால் சடங்குத்தனமாக இப்படித்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை. Frame களை மாற்றிப் போட்டு முயற்சித்துப் பார்க்க வேண்டும்.

♦ சில இடங்களில் staging set பண்ணி புகைப்படம் எடுக்கலாம். அங்கு இருக்கும் நபரை நாம் சொல்லும் விதமாக நிற்க வைத்தோ, நமது frame க்குள் வர வேண்டிய பொருட்களை மாற்றியமைத்தோ எடுக்கலாம். தவறில்லை.

♦ போராட்டக்களத்தில் புகைப்படம் எடுக்கும்பொழுது, இந்த விதியை எல்லாம் பயன்படுத்திப் பார்க்க போகிறேன் என்று குறுக்கும் நெடுக்குமாக அலையக் கூடாது. போலீசார் குறுக்கீடு செய்ய நிறைய வாய்ப்பிருக்கிறது என்பதை கருத்திற் கொள்ள வேண்டும். ஆத்திரத்தில் காமிராவைத் தட்டிவிட்டாலோ, அல்லது புகைப்படம் எடுக்கக்கூடாதென்று தடுத்துவிட்டாலோ நமது நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். எனவே, இதுபோன்ற நேரங்களில் தூரத்தில் நின்று கொண்டே ஆவணப்படுத்தும் நோக்கில் ஒன்றிரண்டு புகைப்படங்களை எடுத்துக் கொள்ளலாம். அதன் பின்னர், அங்குள்ள நிலைமையை கணித்து பின்னர் தேவையான கோணத்தில் எடுக்கலாம். ஆனால், மிக முக்கியமாக மொபைலில் புகைப்படம் எடுக்கிறோம் என்பதால் மிகவும் எச்சரிக்கையாக கையாள வேண்டும். நமது உடல்மொழி அவற்றை படம்பிடிக்கிறோம் என்று காட்டிக்கொள்ளாத வகையில் சாமர்த்தியமாக புகைப்படம் எடுக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

♦ சில இடங்களில், சிலரை புகைப்படம் எடுக்கும் பொழுது அவர்களது முன் அனுமதி பெற்று புகைப்படம் எடுக்க வேண்டும். நேர்காணலுக்காக செல்லும் பொழுது, எடுத்தவுடன் அவர்களை புகைப்படம் எடுத்துவிடக்கூடாது. முதலில் அவர்களுடன் நட்புமுறையில் பழகி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற பின்னர் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டால் மறுப்பின்றி ஒப்புதல் தருவார்கள். நாம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமையும்.

♦ பாதிக்கப்பட்ட மக்களிடமோ, ஒரு குறிப்பிட்ட பிரச்சினையையொட்டி செல்லுமிடங்களிலும் மக்களிடம் மிகவும் அனுசரணையோடும் அமைதியாகவும் அணுக வேண்டும். நான் உங்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகத்தானே வந்திருக்கிறேன் என்ற ரீதியில் மிதப்பாக அணுகக் கூடாது. (உ-ம்: வெள்ளம் புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களை அணுகுவது).


புகைப்படங்களை எடுக்கப் போகும் மக்கள் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் படங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.

இந்தியாவை குப்புறத் தள்ளிய பணமதிப்பழிப்பு : ”தி பிக் ரிவர்ஸ்” – நூல் அறிமுகம் !

ந்தப் புத்தகத்தை புத்தகக் கண்காட்சி துவங்குவதற்கு முன்பே வாங்கிவிட்டேன். கிட்டத்தட்ட படித்து முடிக்கப் போகிறேன்.

பொருளாதாரம் குறித்து எழுதப்படும் புத்தகங்களை இதைவிட எளிதாக எழுதுவது மிகக் கடினம்.

நாட்டையே தெருவில் நிறுத்திய பண மதிப்பழிப்பு நடவடிக்கை குறித்து வெகுமக்களுக்காக எழுதப்பட்ட மிகச் சிறந்த புத்தகமாக இந்தப் புத்தகத்தைச் சொல்லலாம்.

புழக்கத்தில் இருந்த 86 சதவீத ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த இந்த நடவடிக்கையினால், அமைப்புசாரா தொழில்துறையில் இருந்த கோடிக்கணக்கான இந்தியர்கள் எப்படி நடுத்தெருவுக்கு வந்தார்கள், விவசாயிகளும் வர்த்தகர்களும் எப்படி கடுமையான சிரமத்திற்கு உள்ளானார்கள். சிறிய, நடுத்தரத் தொழில்கள் நாசமாகிப்போயின என்று எளிய ஆங்கிலத்தில் விளக்குகிறார் மீரா சன்யால்.

உலகம் முழுவதும் எந்தெந்த நாடுகளில் எல்லாம் இதற்கு முன்பாக பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடந்திருக்கிறது, அவை பலனளிக்காமல் போனது, இந்தியாவில் இதற்கு முந்தைய பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள் என்னென்ன என்று ஒரு சுவாரஸ்யமான களஞ்சியம் இந்தப் புத்தகம்.

புள்ளிவிவரம், ஆய்வு, தகவல்கள், வரலாறு எல்லாம் ஒருங்கிணைந்த இந்தப் புத்தகம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஏன், எதற்காக, எப்படிச் செயல்படுத்தப்பட்டது என்று விளக்குகிறது.

படிக்க:
♦ கிரெடிட் கார்டு வல்லரசாகும் ஏழை இந்தியா ! – தோழர் மருதையன் உரை !
♦ எது கருப்புப் பணம் ? தோழர் மருதையன் உரை – பாகம் 1

புத்தகத்தை எழுதிய மீரா சன்யால், இந்தியாவின் சிறந்த வங்கி அதிகாரிகளில் ஒருவர். ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்தின் சிஇஓவாக இருந்தவர். பொருளாதார கொள்கைகளுக்கான தேசியக் கமிட்டியின் உறுப்பினர்.

A must read!!

ரூ. 600 விலையுள்ள புத்தகம் அமேசானில் 335 ரூபாய்க்கு கிடைக்கிறது!

அமேசானில் இப்புத்தகத்தை வாங்க…

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

இங்கே நடப்பது மக்களாட்சி அல்ல ! கிரிமினல் கும்பல்களின் ஆட்சி !

ஸ்டெர்லைட்டை திறக்க சொல்கிற பசுமை தீர்ப்பாய உத்தரவு கிடக்கட்டும்…. தமிழக அரசே.…. மேல்முறையீடு என்று ஏமாற்றாதே ! தனிச்சட்டம் இயற்று! ஸ்டெர்லைட்டை விரட்டு!! என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மதுரை மண்டலம் சார்பாக கடந்த டிசம்பர்- 30 அன்று நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் ஆற்றிய உரை.

ண்மையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டத்தின் ஆட்சி இங்கே நடைபெறுகிறதா? இல்லை. இங்கே நடப்பது கிரிமினல் கும்பல்களின் ஆட்சி. கஜா புயலால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள வெறும் 12,000 ரூபாய்க்கு தன் மகனை மாடு மேய்க்க கொத்தடிமையாக விற்றதை கேள்விப்பட்டு தோழர்களை விசாரிக்க அனுப்பிய போது அந்த விவசாயி என்னிடம் எதுவுமே மிஞ்சவில்லை புயலிற்கு பிறகு பல நேரங்களில் குடும்பமே பட்டினியில்தான் இருக்கிறது. அரசின் நிவாரணம் எதுவுமே கைக்கு முறையாக வரவில்லை. என்னுடைய மகன் அங்கே வேலை பார்த்தாலாவது மூன்று வேளை சோறு சாப்பிடுவான் என்கிறார்.

ஆனால், இதே வேளையில் இ.பி.எஸ் – ஓ.பி.எஸ். இருவரும் சோடியாக சேர்ந்து அருகே திருச்சிக்கு காது குத்து நிகழ்வில் பங்கு கொள்கின்றனர். செருப்பை கழட்டி இவர்களை அடித்தாலென்ன என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. நாடு முழுவதும் பாராட்டப்பட்ட தமிழக சுகாதார துறை இன்று எய்ட்ஸ் பரப்பும் துறையாக மாறியுள்ளது. எனக்கு இதுவே மருத்துவ துறையை தனியார் மயமாக்கும் சதியோ என்று தோன்றுகிறது.

சத்துணவு திட்டத்தை ஊத்தி மூடுவதற்கு வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. எண்ணிக்கை குறைவு என்பதை காரணம் காட்டி 13 ஆயிரம் சத்துணவு மையங்களை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது அரசு. அதே சமயம் சாகர்மாலா, சேலம் எட்டு வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் என்று தமிழகத்தை கார்ப்பரேட் மண்டலமாக்க திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ஆளும் வர்க்கம். ஸ்டெர்லைட் வழக்கை விசாரித்த முறையிலிருந்தே இதை நீங்கள் பார்க்கலாம். இந்த வழக்கில் எதிர்தரப்பில் யாரையும் வாதாட அனுமதிக்காமல் மக்களிடமும் கிராமத்திலும் எந்த ஆய்வையும் செய்யாமல் ஒரு தரப்பாக தீர்ப்பு எழுதப்பட்டது. இதில் நிறுவனத்தின் கோரிக்கைக்கு ஏற்ப தமிழகத்தை சேர்ந்த நீதிபதிகளை விசாரிக்க விடாமல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதியாமல் நேரடியாக சுப்ரீம் கோர்ட், பசுமை தீர்ப்பாயம் என்று சென்று ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக தீர்ப்பு வருவதே இந்த அரசின் கார்ப்பரேட் சார்புக்கு ஒரு சாட்சி.

இன்னொரு புறம் இது இந்த கட்டமைப்பின் தோல்வி. எல்லா அரசுத் துறைகளும் பெரு நிறுவனங்களுக்கு சார்பாக நடக்கும் அளவிற்கு வந்து விட்டது. தேர்தல் அரசியல் கட்சிகள் கூட சம்பிரதாயமாக ஒரு மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தரும் அளவிற்கு அதன் கட்டமைப்பிலும் மாற்றம் வந்துள்ளது. அதே சமயம் இத்தகைய திட்டங்களுக்கு எதிராக போராடும் எந்த அமைப்பையும் அவர்கள் போராட விடுவதில்லை. குறிப்பாக எங்களுடைய மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு எந்த மாவட்டங்களிலும் போராடவோ கருத்தரங்கம் நடத்தவோ அனுமதி அளிக்கப்படுவதில்லை. இந்த அரங்கத்தை அளித்தவர்களுக்கு இதற்காகவே நாம் குறிப்பாக நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.

படிக்க:
அதிமுக + பாஜக + போலீசு + புகையிலை = குட்கா கூட்டணி !
42-வது சென்னை புத்தகக் கண்காட்சி : வாசிப்பின் அவசியம் என்ன ? துரை. சண்முகம்

நான் போலீசின் இத்தகைய அணுகுமுறையை நேரடியாக சென்னை டி.ஐ.ஜி அலுவலகத்திற்கு சென்றே கேட்டேன். அவர் மற்றவர்கள் எல்லாம் வேறு நீங்கள் வேறு. உங்களுக்கு அனுமதி அளிப்பது கடினம்தான். அது என்ன மக்கள் அதிகாரத்திற்கு மட்டும் சிறப்பு அணுகுமுறை? நமக்கு தெரியவில்லை. ஆனால், இந்த அரசு கட்டமைப்பில் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வு இல்லை. அதை இந்த அரசே நினைத்தாலும் கொடுக்கமுடியாது.

அதனால் மக்கள் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வது மற்றும் அரசை நிர்பந்திக்ககூடிய, தங்களை காத்துக்கொள்ளும் வகையில் ஜல்லிக்கட்டை போல் திரளான போராட்டங்களை கட்டமைப்பை உருவாக்கி வளர்ப்பது மட்டும்தான் ஒரே தீர்வு என்று மக்கள் அதிகாரம் கூறுகிறது. அதை மக்கள் தங்கள் சொந்த அனுபவத்தில் உணர்ந்துள்ளார்கள். கட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்றும், பெரு நிறுவனங்களுக்கு எதிராக ஒரு போராட்டத்தை கட்டி எழுப்ப தேர்தலில் பங்கேற்க கூடிய எந்த அரசியல் கட்சிகளையும் அவர்கள் நம்ப தயாராக இல்லை.

எனவே அதிகாரத்தை மக்கள் தங்கள் கையில் எடுத்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை என்கின்ற நிலை உருவாகியுள்ளது.

தகவல்

மக்கள் அதிகாரம்
மதுரை மண்டலம்

பிரெக்சிட் : ஆப்பின் இடுக்கில் சிக்கிப் புலம்பும் பிரிட்டன் !

பிரெக்சிட் – ஒரு சொதப்பலான கேரியர் (பணி வாழ்வு) நகர்வு

ரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான 2 கட்டுரைகளின் மொழிபெயர்ப்பை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறோம்.

  1. ஐரோப்பாவிலிருந்து விலகல் : ஆப்பசைத்த பிரிட்டன்
  2. நெருங்கும் பொருளாதாரம், பிரியும் அரசியல் : முதலாளித்துவ திண்டாட்டம்

மேலே சொன்ன கட்டுரைகளை எழுதிய அதே கட்டுரையாளர் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகு இரு தரப்புக்கும் இடையே சுங்க மற்றும் ஒற்றைச் சந்தை தொடர்பாக எத்தகைய உடன்பாடு இருக்க வேண்டும் என்பதில தொடரும் இழுபறி குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

இந்தக் கட்டுரையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் உயர் பதவியில், செல்வாக்குடன் பணி புரிந்த ஒரு மேனேஜர் அந்த வேலையை ராஜினாமா செய்வதாக அறிவித்து விட்ட பிறகு, வெளியில் அதற்கு இணையான செல்வாக்குடனும், வசதிகளுடனும் வேறு வேலை கிடைக்காமல் தவிப்பதுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார். கட்டுரையின் மொழிபெயர்ப்பு கீழே.

கடந்த 25 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வரும் கார்ப்பரேட் உலகமயமாக்கலின் விளைவான வேலை வாய்ப்பின்மை, வேலை இழப்புகள், பொது சேவைகள் ரத்து இவற்றை எதிர்த்து உழைக்கும் வர்க்கம் போராடுகிறது. அதற்கு தீர்வாக இனவாத, மதவாத அரசியலை முன் வைக்கும் கட்சிகள் உழைக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு ஈட்டுகின்றன. அத்தகைய ஒரு நிகழ்வில், 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி நடைபெற்ற ஒரு கருத்துக் கணிப்பில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது 51.9% வாக்குகளை பெற்றது.

ஆனால், ஸ்காட்லாந்தில் 62% வாக்காளர்கள் வெளியேறுவதை எதிர்த்தனர், வட அயர்லாந்தில் 55.8% எதிர்த்து வாக்களித்தனர். கார்ப்பரேட்டுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சிகளோ தொடர்ந்து உலகமயமாக்கல் கொள்கைகளை ஆதரிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வதை உறுதி செய்ய விரும்புகின்றன. இந்த இழுபறியின் ஒரு வெளிப்பாடாக பிரெக்சிட் தொடர்பான நாடகங்கள் அரங்கேறி வருகின்றன.

அட்லாண்டிக் பெருங்கடலின் மறு பக்கத்தில் அமெரிக்க முதலாளித்துவத்தின் பிரதிநிதியாக டிரம்ப் கார்ப்பரேட் உலக மயமாக்கலை கேலிக் கூத்தாக்கி வருகிறார். உலக வங்கி, ஐ.எம்.எஃப், உலக வர்த்தகக் கழகம் வழிகாட்டலில் அமல்படுத்தப்பட்ட உலகமயமாக்கல் தீர்க்க முடியாத முரண்பாடுகளில் சிக்கி, முதலாளித்துவம் நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதை இவை காட்டுகின்றன.

முதலாளித்துவ உலகம் இதை விவாதிக்க மட்டும் செய்கிறது. இதற்கான தீர்வு பாட்டாளி வர்க்க சித்தாந்தத்திலும், பாட்டாளி வர்க்க அரசியலிலும்தான் உள்ளது.

பிரெக்சிட் – ஒரு சொதப்பலான கேரியர் (பணி வாழ்வு) நகர்வு

ஐரோப்பிய ஒன்றியம் (EU) பிரிட்டனைக் கொடுமைப்படுத்துவதாகவும் தண்டிப்பதாகவும் மிக அதிகமாக கூச்சலிடுபவர்கள் மத்தியில் சுதந்திர சந்தையை ஆதரிப்பதாக சொல்லிக் கொள்பவர்களும் உள்ளனர். இது கொஞ்சம் வேடிக்கையானதுதான். ஏனெனில், பிரெக்சிட் என்பதே பிரிட்டன் தனது சந்தை வலிமையையும் செல்வாக்கையும் நடைமுறையில் சோதித்து பார்ப்பதற்கான நடவடிக்கைதான். அந்த சோதனையின் விளைவாக ஐரோப்பிய ஒன்றியம் நம்மை அலட்சியப்படுத்துகிறது என்றால் சுதந்திர சந்தை விதிப்படி அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்

பிரெக்சிட்-ஐ நோக்கி நம்மை வழிநடத்திச் சென்றவர்கள், “பிரிட்டன் ஒரு பெரிய சக்தி, உலகின் மிகப்பெரிய வர்த்தக கூட்டமைப்பை விட்டு வெளியேறுவது உண்மையில் நமக்கு இன்னும் அதிக நன்மைகளை கொண்டு வரும்” என்று உறுதி அளித்தனர். அதாவது, “நமக்கு ஏற்கனவே கிடைத்து வரும் நன்மைகளை தொடர்ந்து பெறுவோம்; ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் உள்ள மற்ற நாடுகள் நம்முடன் வர்த்தக உடன்படிக்கைகள் செய்து கொள்ள அதிக ஆர்வம் காட்டும்; ஐரோப்பிய ஒன்றியமோ தனது மிகப்பெரிய உறுப்பினர்களில் ஒன்றான பிரிட்டன் வெளியேறுவதைக் கண்டு அஞ்சி, பிரிட்டனுக்கு மிகச் சாதகமான ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டி வரும்” என்றெல்லாம் ஆசை காட்டினார்கள்.

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், நடப்பவை அவர்கள் எதிர்பார்த்தது போல இல்லை. இந்த வாரம் அடுத்தடுத்த வெளிவந்த செய்தி அறிக்கைகள் கூறுவது போல, பிரெக்சிட் எந்த வழியில் அமல்படுத்தப்பட்டாலும் அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தபோது இருந்ததை விட மோசமான நிலைக்குத்தான் பிரிட்டனைத் தள்ளும்.

பிரெக்சிட்-டுக்கு பிறகு பிற நாடுகளுடன் போட்டுக் கொள்ளும் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் பிரிட்டனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) மிகச் சிறிய அளவு மாற்றத்தையே கொண்டு வரும் என்று பிரிட்டன் கருவூலத்துறையின் (Treasury) பிரெக்சிட் பற்றிய பகுப்பாய்வில் மிக வெளிப்படையாகவே காட்டப்பட்டுள்ளது. நாம் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்கு சாத்தியமான நாடுகள் பற்றிய மிகச் சாதகமான அனுமானங்களின்படியே கூட அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படுத்தப் போகும் அதிகரிப்பு 0.2 சதவீதம் மட்டுமே ஆகும். இந்த அதிகரிப்பு ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக உராய்வுகளினால் ஏற்படவிருக்கும் இழப்புக்களை சிறிதளவு கூட ஈடுகட்டப் போவதில்லை.

பிரெக்சிட்டுக்கான அனைத்து பாதைகளும் மோசமாக இருக்கின்றன; ஐரோப்பிய ஒற்றை சந்தையிலிருந்தும் சுங்க ஒன்றியத்திலிருந்தும் நாம் எவ்வளவு தூரம் விலகிப் போகிறோமோ அவ்வளவு தூரம் நிலைமை மோசமாக இருக்கும். பிரெக்சிட் ஆதரவாளர்கள் நம்மிடம் பிரச்சாரம் செய்து நம்ப வைத்ததை விட வெளியுலகம் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது.

“இது நியாயமில்லை, ஐரோப்பிய ஒன்றியம் நாஜிகளைப் போல நடந்து கொள்வதோடு, ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்காக பிரிட்டனை தண்டிக்கிறது” என்றெல்லாம் பேசுபவர்கள், தனக்கு இதைவிட நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்பிருக்கிறது என்று நினைத்துக்கொண்டு, வேலையை ராஜினாமா செய்த ஒருவர் தான் எதிர்பார்த்த, தனக்குக் கிடைத்தே ஆக வேண்டும் என்று விரும்பிய, நல்ல வேலை கிடைக்கா விட்டால் குழந்தைத்தனமாக புலம்புவதை போல நடந்து கொள்கின்றனர்.

என்னுடைய அனுபவத்தில் இத்தகைய நபர்கள் பலரை நான் அறிவேன். வேலையை விடும் அவர்களின் முடிவு பெரும்பாலும் சொதப்பலாகவே முடிகிறது. பெரும்பாலானவர்கள் புற உலக யதார்த்தத்தை பார்த்து பெரும் அதிர்ச்சியடைகிறார்கள்.

அவர்கள் புரிந்து கொள்ள மறுப்பது என்னவென்றால், அவர்கள் வாங்கி வந்த சம்பளத்தின் ஒரு பகுதி ஒரு பெருநிறுவன (கார்ப்பரேட்) அமைப்பின் ஒரு பகுதியாக செயல்படுவதற்கானதாகும். ஒரே நிறுவனத்தில் சிறிது காலமாக வேலை செய்தால், அவர்களின் வளர்ச்சியின் ஒரு பகுதி அந்த நிறுவன நடைமுறைகளைப் பற்றிய அவர்களது அறிவையும் அதற்குள் வேலை செய்வதற்கான அவர்களின் திறமையையும் அடிப்படையாகக் கொண்டது.

மற்றவர்கள் அவர்ளுக்கு கொடுக்கும் மதிப்பும் மரியாதையும் அவர்களின் கார்ப்பரேட் பதவியை அடிப்படையாகக் கொண்டது. பிற நிறுவனங்களின் உயர் பதவி வகிப்பவர்கள் அவர்களை சந்திக்க நேரம் ஒதுக்குகின்றனர்; அவர்கள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்கிறார்கள்; கருத்தரங்குகளில் எல்லோரும் அவர்களுடன் பேச முயற்சிக்கிறார்கள். இவை எல்லாம் “ஆள் திறமையானவர்” என்பதால் இல்லை, மாறாக அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் செல்வாக்கினால் கிடைப்பவை.

கார்ப்பரேட் வேலையை ராஜினாமா செய்து விட்டு தனிப்பட்ட முறையில் வேலை செய்ய போகிறவர்கள் அடிக்கடி இந்த அதிர்ச்சியை சந்திக்கிறார்கள். “பெரிய கார்ப்பரேட்” நிறுவனத்தின் உயர் அதிகாரியாக இருக்கும் போது உங்களோடு தொடர்பை பராமரிக்க எல்லோரும் விரும்புகிறார்கள். “நானும் நண்பர்களும்” நிறுவனத்தின் எம்.டியாகவே நீங்கள் இருந்தாலும் அதே அளவிலான அங்கீகாரத்தை பெறுவது மிகவும் கடினம்.

எனவே, கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்து விட்டு வெளியேறிய நமது நிர்வாகி அவர் நினைத்தது போன்ற அதிக சம்பளத்தில் வேலை கிடைப்பது புற உலகில் கடினமாக இருப்பதை எதிர்கொள்கிறார்.

ஆனால், அவர் அந்த நிதர்சனத்தை உடனே ஏற்றுக் கொள்வதில்லை. தனது தகுதிக்கு பொருத்தமில்லாத வேலை வாய்ப்புகள் வழங்கும் முட்டாள்களை பற்றி அவர் குடித்து விட்டு புலம்புவதை நீங்கள் கேட்டிருக்கலாம். “என்னுடைய மதிப்பு இதை விட அதிகம்” என்று அவர் உளறுகிறார். “எனக்கு என் மதிப்பு என்னவென்று தெரியும். அதற்கு தகுந்த வேலை கிடைப்பது வரை நான் காத்திருப்பேன்.”

நாம் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளா விட்டாலும் பிரிட்டனின் இன்றைய மதிப்பு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருப்பதோடு தொடர்புடையது என்பதை பிரெக்சிட் முயற்சி வெளிப்படுத்தியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் இருக்கும் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகத்துக்குத்தான் முன்னுரிமை அளிக்கின்றன. காமன்வெல்த் நாடுகள் கூட, பிரிட்டன் உடனான வர்த்தக உறவுகளை விட ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உறவுகளை வளர்ப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றன. அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஏனென்றால், பொருளாதார ரீதியாக ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டனை விட மிகப்பெரியது.

“நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறினால் உங்களது செல்வாக்கை இழக்க நேரிடும்” என்ற அவர்கள் நம்மை எச்சரிக்கத்தான் செய்தார்கள்.. ஆனால், அவர்களின் எச்சரிக்கையை நாம் புறக்கணிக்க முடிவு செய்தோம்.

இன்றும் பிரிட்டன் உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களில் ஒன்று என்பது உண்மைதான், ஆனால், அதன் மதிப்புக்கும் செல்வாக்கும் மேற்கத்திய இராணுவ கூட்டணி, ஆங்கிலம் பேசும் நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை இணைக்கும் புள்ளியில் நாம் இருப்பது பெரும்பகுதி காரணமாக உள்ளது. இவற்றில் முக்கியமான ஒரு இடத்தை கைவிடுவது பிறருக்கு நம்முடனான உறவில் இருக்கும் அக்கறையை குறைப்பதில்தான் முடியும்.

பிரெக்சிட்டை வேலையை ராஜினாமா செய்து விட்டு புதிய வாய்ப்பை தேடுபவருடன் ஒப்பிடுவதை மேலும் தொடர்ந்தால் , இதுவரையில் கிடைத்த அனைத்து புதிய வாய்ப்புகளும் பழைய பதவியை விட மோசமாக இருக்கின்றன. எல்லாவற்றிலும் ஏற்கனவே இருந்த வேலையை விட குறைந்த ஊதியம், குறைந்த பாதுகாப்பு மட்டுமே கிடைக்கிறது.

படிக்க:
உங்கள் விருப்பம் | கொஞ்சம் நிமிரு தல | வாசகர் புகைப்படங்கள்
ஆந்திரா – காக்கிநாடா : இயற்கை பேரிடர் ஆபத்தும் அரசின் அலட்சியமும் !

தற்போது உள்ளதில் சிறந்த வழி பழைய முதலாளியிடமே திரும்பிச் சென்று, முன்பு வாங்கியதை விட குறைந்த ஊதியத்தில், காண்டிராக்டராக சேருவதுதான். மேல்மட்ட நிர்வாகக் குழுவில் ஏற்கனவே வகித்த இடம் கிடைக்காது. இன்னும் மோசமான நிலை என்னவென்றால், முன்பு தன்னை விட ஜூனியர் என்று கருதிய நபர்களின் உத்தரவுகளை ஏற்று செயல்பட வேண்டிய நிலையும் ஏற்படும்.

ஆனால், அந்த அளவு கூட நிலைமை மோசம் இல்லை. ஆச்சரியம் என்னவென்றால், அவருடைய பழைய நிறுவனம் இன்னும் அவர் வேலைவாய்ப்பை அப்படியே வைத்திருக்கிறது. அதே ஊதியம், பிற சலுகைகள், நிர்வாகக் குழுவில் இடம் ஆகியவற்றுடன் எப்போது வேண்டுமானாலும் திரும்பிச் செல்லலாம்.

ஆனால், அவர் திரும்பிச்செல்ல மாட்டார், ஏனெனில் அது அவரை ஒரு முட்டாளாகக் காட்டும். அவர் இன்னும் மதுக்கடையில் அமர்ந்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் தன்னம்பிக்கையையும், பேரம் பேசும் திறமையையும் வளர்த்துக் கொண்டால் அந்த மதிப்புமிக்க பெரும் வாய்ப்பு கூடிய விரைவில் தன்னை வந்தடையும் என்று அடித்து பேசிக் கொண்டிருக்கிறார்.

அவரது நண்பர்கள் அவரது பேச்சுக்களை அனுதாபத்தோடு கேட்டு விட்டு அவருக்குப் பின்னல் கேலி செய்து விட்டு கடந்து போகிறார்கள்.


ஆதாரம் :
Brexit as a bad career move
தமிழாக்கம் : மணி
நன்றி : new-democrats

திருவாரூர் : கலெக்டர் உத்தரவை செயல்படுத்தக் கோரிய மக்கள் அதிகாரம் தோழர்களுக்கு சிறை !

ஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நுண்கடன் நிறுவனங்களின் அட்டூழியம் தொடர்ந்து நடக்கிறது. வருமான ஆதாரங்கள் அத்தனையையும் இழந்த மக்களிடம் கடனைக் கட்டுமாறு மிரட்டுவது அவமானப்படுத்துவது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தன இந்நிறுவனங்கள். இதனைப் பொறுக்க முடியாமல் மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். இப்போராட்டங்களின் விளைவாக கடந்த டிசம்பர் மாதம் 22-ம் தேதி திருவாரூர் மாவட்ட கலெக்டர் 6 மாத காலத்திற்கு நுண்கடன்களை வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தார்.

ஆனாலும், கலெக்டர் உத்தரவை மதிக்காத தனியார் நுண்கடன் நிறுவனங்களும், தேசிய வங்கிகளும் கடனைக் கட்டச் சொல்லி தொடர்ந்து அடாவடியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் அரசின் 100-நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வரும் சம்பளப் பணத்திலேயே வங்கிகள் அதற்கான நுண்கடனுக்கான பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள்.

இதனை ஒட்டி மக்கள் அதிகாரம் அப்பகுதிகளில் அனைத்து கிராமங்களிலும் பரவலாக ”பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டாம்” என இது குறித்து பிரச்சாரம் செய்து வந்தது.

வங்கிகள் மற்றும் நுண்கடன் நிறுவனங்களின்  தொடர் நெருக்குதல்களுக்கு ஆளாகி இருக்கும் மக்கள் குறிப்பாக பெண்கள் நூற்றுக்கும் அதிகமானோர் திரண்டு கடந்த 07-01-2019 அன்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அவர்களைத் தடுத்து உள்ளே விட அனுமதி மறுத்தது போலீசு. இதனைக் கண்டித்து பெண்கள் அனைவரும் அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களின் இப்போராட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்களும் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் அனைவரையும் கைது செய்தது போலீசு. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தில் முன்னிலை வகித்த 6 மக்கள் அதிகாரம் தோழர்களைத் தனியாக கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. தோழர்களில் நால்வரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்திருக்கிறது போலீசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

சட்டப்படியான உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்திற்காக  கைது செய்கிறார்கள் எனில் நாம் என்ன ஜனநாயக நாட்டிலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ?

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.
தொடர்புக்கு : 96263 52829

வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமாயிருக்கிறது !

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 49

மாக்சிம் கார்க்கி
மையலறைக் கதவை யாரோ ஓங்கித் தட்டுவதைக் கேட்டு, திடுக்கிட்டு விழித்தெழுந்தாள் தாய். கதவைத் தட்டியது யாரோ? எனினும் இடைவிடாது பலத்துத் தட்டிக் கொண்டேயிருந்தார்கள். சுற்றிச் சூழ இருளும் அமைதியும் நிலவியிருந்தன. கதவைத் தட்டும் அந்த பலத்த ஓசை இருளினூடே பயபீதியை நிரப்பியொலித்தது. தாய் அவசர அவசரமாக எதையோ எடுத்து உடுத்திக்கொண்டு சமையலறைக்குச் சென்றாள். கதவருகே ஒரு கணம் தயங்கினாள்.

”யாரது?” என்று கேட்டாள்.

“நான்தான்” என்றது ஒரு பழகாத குரல்.

“யார்?”

“கதவைத் திறவுங்கள்” என்று தணிந்த குரலில் வந்தது பதில்.

தாய் நாதாங்கியைத் தள்ளினாள்; கதவைக் காலால் தள்ளித் திறந்தாள். இக்நாத் உள்ளே வந்தான்.

”நான் இடம் தவறி வந்துவிடவில்லை” என்று உற்சாகத்தோடு கத்தினான் அவன்.

அவனது இடுப்புவரையிலும் சேறு தெறித்துப் படிந்திருந்தது. அவனது முகம் கறுத்து, கண்கள் குழி விழுந்து போயிருந்தன. அவனது தொப்பிக்குள்ளிருந்து எல்லாப் பக்கத்திலும் அவனது சுருட்டைத் தலைமயிர் துருத்திக்கொண்டு வெளிவந்திருந்தது.

”நாங்கள் அபாயத்திலிருக்கிறோம்” என்று கதவை அடைத்துக் கொண்டே ரகசியமாகச் சொன்னான் அவன்.

“எனக்குத் தெரியும்.”

அவள் கூறியதைக் கேட்டு அந்த வாலிபன் ஆச்சரியம் அடைந்தான்.

“உங்களுக்கு எப்படித் தெரியும்” என்று திருகத்திருக்க விழித்தவாறே கேட்டான் அவன்.

அவள் சுருக்கமாக விளக்கிச் சொன்னாள்.

“உன்னுடைய அந்த இரண்டு தோழர்களையும் கூட அவர்கள் கொண்டு போய்விட்டார்களா?”

”அவர்கள் அங்கில்லை. ஆஜர் கொடுக்கச் சென்றிருந்தார்கள். மிகயீல் மாமாவையும் சேர்த்து இதுவரை ஐந்து பேரைக் கொண்டு போய்விட்டார்கள்.”

அவன் ஆழ்ந்த பெருமூச்செடுத்தான், லேசாகச் சிரித்துக் கொண்டே சொன்னான்.

”நான் மட்டும் தப்பிவிட்டேன். இப்போது அவர்கள் என்னைத் தேடித் திரிந்து கொண்டிருப்பார்கள்.”

”நீ எப்படித் தப்பிவர முடிந்தது?” என்று கேட்டாள் தாய். அடுத்த அறையின் கதவு லேசாகத் திறந்து கிடந்தது.

”நானா?” என்று கூறிக்கொண்டே ஒரு பெஞ்சின் மீது உட்கார்ந்து சுற்றுமுற்றும் பார்த்தான் இக்நாத். “அவர்கள் வருவதற்கு ஒன்றிரண்டு நிமிஷங்களுக்கு முன்னால், அந்தக் காட்டு ஷிகாரி நமது குடிசைக்கு ஓடி வந்து ஜன்னலைத் தட்டினான். ‘ஜாக்கிரதையடா, பயல்களா! அவர்கள் உங்களைத் தேடி வருகிறார்கள்’ என்று சொன்னான்.”

அவன் அமைதியாகச் சிரித்துக்கொண்டே முகத்தைக் கோட்டுத் துணியில் துடைத்துக்கொண்டான்.

“சரி. கடப்பாரையைக் கொண்டு தாக்கினாலும், மிகயீல் மாமாவைக் கொஞ்சங்கூட அசைக்க முடியாது. அவன் சொன்னான். ‘இக்நாத் சீக்கிரமே நகருக்கு ஓடிப் போய்விடு, அந்தப் பெரிய மனுஷியை உனக்கு ஞாபகமிருக்கிறதா?’ என்று சொல்லிக்கொண்டே ஒரு சீட்டு எழுதினான். ‘இதோ, இதை அவளிடம் கொண்டு போய்க் கொடு’ என்றான். எனவே நான் புதர்களின் வழியாக ஊர்ந்து ஒளிந்து வந்தேன். அவர்கள் வரும் சத்தம் கூட எனக்குக் கேட்டது. அந்தப் பிசாசுகள் நாலா திசைகளிலிருந்தும் சுற்றி வளைத்துப் பதுங்கி வந்தார்கள். எங்கள் தார் எண்ணெய்த் தொழிற்சாலையையே சூழ்ந்து வளைத்துக் கொண்டார்கள். நான் புதர்களுக்குள்ளேயே பதுங்கிப் பம்மிக் கிடந்தேன். அவர்கள் என்னைக் கடந்து அப்பால் சென்றார்கள். உடனே நான் எழுந்து வெளியே வந்து என்னால் ஆனமட்டும் ஓட்டம் பிடித்தேன். இரண்டு நாள் இரவிலும். ஒரு நாள் பகலிலுமாக நான் நிற்காமல் நடந்து வந்திருக்கிறேன்.”

நான் செய்த காரியத்தை எண்ணி அவனே திருப்திப்பட்டுக் கொள்வது தெளிவாகத் தெரிந்தது. அவனது கபில நிறக் கண்களில் களிப்புத் துள்ளாடியது; பெரிய சிவந்த உதடுகள் துடிதுடித்துக் கொண்டிருந்தன.

”சரி, நான் ஒரே நிமிஷத்தில் உனக்குத் தேநீர் தயார் செய்கிறேன்” என்று கூறிக்கொண்டே தேநீர் பாத்திரத்தின் அருகே சென்றாள் தாய்.

“இதோ அந்தச் சீட்டு”

அவன் மிகுந்த சிரமத்தோடு முணுமுணுத்துக்கொண்டும் வேதனையால் முகத்தை நெரித்துக்கொண்டும் தன் காலையெடுத்து பெஞ்சின் மீது போட்டான்.

நிகலாய் வாசல் நடையில் வந்து நின்றான்.

”வணக்கம். தோழா!” என்று கண்களைச் சுருக்கி விழித்தவாறே சொன்னான் அவன். “இருங்கள். நான் உங்களுக்கு உதவுகிறேன்.”

அவன் இக்நாதின் காலருகே குனிந்து காலுறைகளுக்குப் பதிலாக, காலில் சுற்றப்பட்டிருந்த அழுக்கடைந்த ஈரத் துணிகளை அவிழ்த்துவிட்டான்.

“புத்திசாலிகள் எங்கும்தான் இருக்கிறார்கள். தேவைதான் அவர்களை உருவாக்குகிறது. அவர்கள் அவரவர் இடத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைக் கண்டுபிடிப்பதுதான் சிரமமாயிருக்கிறது.”

“வேண்டாம்” என்று வியப்போடு கூறியவாறே அந்த வாலிபன் தன் காலை இழுத்துக்கொண்டே, தாயை அதிசயத்தோடு பார்த்தான்.

“அவனது கால்களை கொஞ்சம் ஓட்கா மது தடவித் தேய்த்துவிட வேண்டும்” என்று அவன் தன்னைப் பார்த்ததைக் கவனிக்காமலேயே கூறினாள் தாய்.

“ஆமாம்” என்றான் நிகலாய்.

கலக்கத்தால், கனைத்து இருமிக்கொண்டான் இக்நாத்.

நிகலாய் அந்தச் சீட்டை எடுத்தான். கசங்கியிருந்த அந்தச் சீட்டை நீட்டி நிமிர்த்தி தன் கண்களுக்கு அருகே கொண்டு போய் அதை வாசித்தான்.

”அம்மா! எங்கள் இயக்கத்தை நீ கவனிக்காமல் விட்டுவிடாதே. உன்னோடு வந்தாளே, அந்த நெட்டைப் பெண் அவளிடம் சொல்லி, எங்களது காரியங்களைப் பற்றி இன்னும் அதிகமாக எழுதச் சொல். போய் வருகிறேன். ரீபின்.”

நிகலாய் சீட்டை வைத்துக் கொண்டிருந்த கையை மெதுவாகத் தளரவிட்டான்.

“எவ்வளவு மகத்தானது!.” என்று அவன் முணுமுணுத்தான்.

தனது காலின் அழுக்கடைந்த விரல்களை ஜாக்கிரதையோடு தடவிப் பிடித்துக் கொடுத்தவாறே அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான் இக்நாத். தாய் தன் கண்ணில் பொங்கும் கண்ணீரை மறைக்க முயன்று கொண்டே ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவந்து அவனது காலை யெடுப்பதற்காகக் கீழே குனிந்தாள்.

”ஊஹூம். நீங்கள் செய்ய வேண்டாம்” என்று அவன் பயத்தோடு கத்திக்கொண்டு, காலை பெஞ்சுக்கடியில் இழுத்துக்கொண்டான்.

“நீ காலைக் கொடு. சீக்கிரம் வேலை முடியட்டும். ”நான் கொஞ்சம் ஓட்கா கொண்டு வருகிறேன்” என்றான் நிகலாய்.

அந்தப் பையன் தன் காலை மேலும் உள்ளிழுத்துக் கொண்டான்.

”என்ன நினைத்துக் கொண்டீர்கள்? நான் என்ன ஆஸ்பத்திரியிலா இருக்கிறேன்?” என்று முணுமுணுத்தான்.

தாய் அவனது அடுத்த காலில் சுற்றப்பட்ட துணிகளை அவிழ்த்தெறிந்தாள்.

இக்நாத் பலமாகத் தும்மிக்கொண்டே, தன் கழுத்தை வளைத்து வேண்டா வெறுப்பாகத் தாயைக் குனிந்து பார்த்தான்.

“மிகயீல் இவானவிச்சை அவர்கள் அடித்தார்கள்” என்று நடுநடுங்கும் குரலில் சொன்னாள் தாய்.

“உண்மையாகவா?” என்று அமைதியோடு வியந்து கேட்டான் அந்த வாலிபன்.

“ஆமாம். நிகோல்ஸ்கிக்குக் கொண்டு வரும்போதே அவன் படுமோசமான நிலையில்தான் இருந்தான். அங்கே அந்தப் போலீஸ் தலைவனும், போலீஸ் ஸார்ஜெண்டும் அவனை அடித்தார்கள்! முகத்தில் அடித்தார்கள்! உதைத்தார்கள்! உடம்பெல்லாம் ரத்தம் காணும் வரையிலும் உதைத்தார்கள்.”

“அடிப்பது எப்படி என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். சரி, இருக்கட்டும்” என்று அந்த வாலிபன் முகத்தைச் சுழித்துக்கொண்டே கூறினான். அவனது தோள்கள் அசைந்து நடுங்கின. “அவர்களைக் கண்டால் – ஆயிரம் பேய்களைக் கண்ட மாதிரி நான் பயப்படுகிறேன். முஜீக்குகளும் அவனை அடித்தார்களா?”

”போலீஸ் தலைவனின் உத்தரவின் பேரில் ஒருவன் மட்டுமே அடித்தான். ஆனால் மற்றவர்கள் ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் அவன் பக்கமாகக் கூடச் சேர்ந்தார்கள். அவனை அடிப்பதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று கூச்சலிட்டார்கள்.”

“ம். அப்படியா?” யார் யார் எந்தப் பக்கம் இருக்கிறார்கள். ஏன் இருக்கிறார்கள் என்பதை முஜீக்குகள் உணரத் தொடங்கிவிட்டார்கள்.”

“அவர்கள் மத்தியிலே சில புத்திசாலிகளும் இருக்கிறார்கள்.”

“புத்திசாலிகள் எங்கும்தான் இருக்கிறார்கள். தேவைதான் அவர்களை உருவாக்குகிறது. அவர்கள் அவரவர் இடத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைக் கண்டுபிடிப்பதுதான் சிரமமாயிருக்கிறது.”

நிகலாய் ஒரு பாட்டில் ஓட்கா மதுவைக் கொண்டு வந்தான். தேநீர் அடுப்பில் கொஞ்சம் கரி அள்ளிப் போட்டான். பிறகு ஒன்றுமே பேசாமல் வெளியே சென்றான். இக்நாத் வாய் பேசாது அவனையே கவனித்தான்.

“இந்தக் கனவான் யார் – டாக்டரா?” என்று நிகலாய் வெளியே போன பிறகு தாயைப் பார்த்துக் கேட்டான் அவன்.

“நமக்குள்ளே கனவான்களே கிடையாது; இங்கே நாம் எல்லோரும் தோழர்கள்தான்.

”எனக்கு விசித்திரமாயிருக்கிறது” என்று சொன்னான் இக்நாத். அவனது புன்னகையில் அவனது சந்தேகமும் குழப்பமும் தெரிந்தன.

”எது விசித்திரம்?”

“பொதுவாக எல்லாம்தான். ஒருபுறத்தில் சிலர் மூக்கில் ரத்தக் கறை காணும்படி உதைக்கிறார்கள், இன்னொருபுறத்தில் சிலர் காலைக் கழுவிச் சுத்தம் செய்யவும் வருகிறார்கள். இந்த இரண்டுக்கும் மத்தியில் வேறு யாராவது இருக்கிறார்களா?”

படிக்க:
ஆந்திரா – காக்கிநாடா : இயற்கை பேரிடர் ஆபத்தும் அரசின் அலட்சியமும் !
நெருங்குவது காவி இருளடா … | ம.க.இ.க. பாடல் காணொளி

கதவு திறந்தது. நிகலாய் பேசினான்:

”இரண்டுக்கும் மத்தியில் வேறு சிலர் இருக்கிறார்கள். அவர்கள் முகத்திலே குத்துபவர்களின் கரங்களை நக்கிக்கொடுக்கிறார்கள். ரத்தம் பொங்கி வழியும் முகங்களைக் கொண்ட மனிதர்களின் உதிரத்தை உறிஞ்சுகிறார்கள். அவர்கள்தான் மத்தியில் இருக்கிறார்கள்.”

இக்நாத் அவனை மரியாதையோடு பார்த்தான்.

”உண்மையைத் தொட்டுவிட்ட மாதிரி இருக்கிறது” என்று ஒரு கணம் கழித்துச் சொன்னான் அவன்.

அந்த வாலிபன் எழுந்து, கொஞ்ச தூரம் நடந்தான். “புதுக் கால்கள் மாதிரியாகிவிட்டது. ரொம்ப நன்றி!” என்றான் அவன்.

பிறகு அவர்கள் சாப்பாட்டு அறைக்குள் தேநீர் பருகச் சென்றார்கள். உள்ளத்தைத் தொடும் ஆழ்ந்த குரலில் இக்நாத்தின் வாழ்க்கையைப் பற்றி அவர்களுக்குச் சொல்லத் தொடங்கினான்.

“நான்தான் நமது பத்திரிகையை விநியோகம் செய்கிறேன். நடந்து திரிவதில் நான்தான் சளைக்காதவன்.”

“கிராமப்புறத்தில் நம் பத்திரிகையை நிறையப் பேர் வாசிக்கிறார்களா?” என்று கேட்டான் நிகலாய்.

”படித்தவர்கள் எல்லாம்; அவர்கள் பணக்காரராயிருந்தாலுங்கூட, வாசிக்கிறார்கள். ஆனால் பணக்காரர்கள் அதை நேராக நம்மிடமிருந்து வாங்குவதில்லை ……. விவசாயிகள் பணக்காரர்களின் நிலங்களை எடுத்துக்கொள்ளப் போகிறார்கள் என்பதும், அப்பொழுது அந்த நிலத்தை நிலச்சுவான்தார்களிடமிருந்து பெற ரத்தத்தைச் சிந்தவும் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரிந்த விஷயம்தானே. பண்ணையார்களின் நிலத்தைப் பிடுங்கி அவற்றைப் பங்கிட்டு , பண்ணையாளர்களும் பண்ணையடிமைகளும் இல்லாதவாறு செய்யப்போகிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியத்தான் செய்யும். பின் எதற்காக அவர்களோடு சண்டையிட்டுக் கொள்ள வேண்டும்?”

அவன் மனம் புண்பட்டுப்போனது மாதிரி தோன்றியது. அவன் நிகலாயை அவநம்பிக்கையோடும் எதையோ கேட்கும் பாவனையோடும் பார்த்தான். நிகலாய் புன்னகை புரிந்தான்; எதுவும் பேசவில்லை.

“இந்த உலகம் பூராவையுமே நாம் இன்று எதிர்த்துப் போராடி, எல்லாவற்றையும் அடக்கியாள முடிந்தாலும் நாளைக்கு மீண்டும் உலகமெங்கும் ஒருபுறத்தில் பணக்காரரும் இன்னொரு புறத்தில் ஏழைகளும் உற்பத்தியாகிவிடுவார்கள் – அப்புறம் இந்தப் போராட்டத்துக்கு என்ன அர்த்தம்? போதும், உங்களுக்கு ரொம்ப நன்றி, நீங்கள் எங்களை முட்டாளாக்க முடியாது – செல்வம் என்பது காய்ந்துபோன மணலைப் போலத்தான். அது ஓரிடத்தில் கிடக்காது. எல்லாத் திசைகளிலும் வாரியடித்துச் சிதறும். வேண்டாம், எங்களுக்கு அது வேண்டவே வேண்டாம்!”

”அதை நினைத்து நீ ஒன்றும் கோபவெறி கொள்ளாதே” என்று கூறிச் சிரித்தாள் தாய்.

”எனக்கு இருக்கிற கவலையெல்லாம் ஒன்றே ஒன்றுதான், ரீபின் கைதானதைப் பற்றிய துண்டுப்பிரசுரத்தை எப்படிச் சீக்கிரமே ஜனங்களிடம் பரப்புவது?” என்று யோசித்தவாறு கேட்டான் நிகலாய்.

இக்நாத் உஷாராகி நிமிர்ந்தான்.

”அப்படி ஒரு பிரசுரம் இருக்கிறதா?” என்று கேட்டான்.

”ஆமாம்.”

”அதை என்னிடம் கொடுங்கள். நான் கொண்டு போகிறேன்” என்று தன் கைகளைப் பிசைந்து கொண்டே சொன்னான் அந்த வாலிபன்.

அவனைப் பார்க்காமலேயே தாய் அமைதியாகச் சிரித்துக் கொண்டாள்.

“ஆனால். நீ களைத்து இருக்கிறாய். மேலும் நீ பயந்து கொண்டிருப்பதாக வேறு சொன்னாய்” என்றாள் அவள்.

இக்நாத் தனது அகன்ற கையால் தனது சுருட்டைத் தலைமுடியைத் தடவி விட்டுக்கொண்டு, நேரடியாகச் சொன்னான்.

“பயம் வேறு, சேவை வேறு., எதை எண்ணிச் சிரிக்கிறீர்கள்? நீங்கள் ஓர் அற்புத ஆசாமிதான்.”

”இரண்டுக்கும் மத்தியில் வேறு சிலர் இருக்கிறார்கள். அவர்கள் முகத்திலே குத்துபவர்களின் கரங்களை நக்கிக்கொடுக்கிறார்கள். ரத்தம் பொங்கி வழியும் முகங்களைக் கொண்ட மனிதர்களின் உதிரத்தை உறிஞ்சுகிறார்கள். அவர்கள்தான் மத்தியில் இருக்கிறார்கள்.”

”அட, என் செல்லக் குழந்தை!” என்று தன்னையுமறியாமல் கூறினாள் தாய். தன் மனத்தில் எழுந்த மகிழ்ச்சியை வெளிக்காட்டாதிருக்க முயன்றாள்.

”ஆமாம், குழந்தை!” அவன் வெட்கத்தோடு தனக்குள் முனகிக் கொண்டான்,

”நீங்கள் ஒன்றும் அங்குத் திரும்பிப் போகவேண்டாம்” என்று கண்களைச் சுருக்கி அவனை அன்போடு பார்த்தவாறே கூறினான் நிகலாய்.

“ஏன் கூடாது? நான் எங்கே போகிறேன்?” என்று எரிச்சலோடு கேட்டான் இக்நாத்.

“பிரசுரங்களை வேறு யாராவது கொண்டு போகட்டும். போகிற ஆளிடம் அவன் எப்படியெப்படிப் போக வேண்டும், வரவேண்டும் என்பனவற்றுக்கு மாத்திரம் விவரம் சொல்லிக் கொடுங்கள். அது போதும், சரிதானே?”

‘சரி’ என்று அதிருப்தியோடு சொல்லிக்கொண்டான் இக்நாத்.

”உங்களுக்கு ஒரு புது பாஸ்போர்ட் வாங்கி, காட்டுக்காவலன் வேலை வாங்கித் தருகிறோம்.”

“சரி. அப்படி வேலை பார்க்கும்போது முஜீக்குகள் வந்து விறகையோ வேறு எதையுமோ திருடிக்கொண்டு போனால் நான் என்ன செய்வது? அவர்களைப் பிடித்துக் கட்டி வைத்து உதைப்பதா? அந்த வேலை எனக்கு ஒத்துவராது.”

தாய் சிரித்தாள். நிகலாவும் சிரித்தான். அவர்களது சிரிப்பு அந்த இளைஞனின் மனத்தைக் குத்தியது; நிலைகொள்ளாமல் தவிக்கச் செய்தது.

”கவலைப்படாதே. எந்த முஜீக்கையும் கட்டி வைக்க வேண்டியிராது” என்று தேறுதல் கூறினான் நிகலாய். ”என் வார்த்தையையும் நம்பு.”

“ரொம்பச் சரி. அப்படியானால் சரிதான்” என்று மகிழ்ச்சி நிறைந்த புன்னகையோடு கூறினான் இக்நாத். ”ஆனால், எனக்குத் தொழிற்சாலை ஒன்றில் வேலை கிடைத்தால் நல்லது. மற்றவர்களை விடத் தொழிற்சாலை வேலைக்காரர்கள் புத்திசாலிகளாயிருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.”

தாய் மேஜையை விட்டு, ஜன்னலை நோக்கி நடந்தாள்.

“வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமாயிருக்கிறது!” என்று சிந்தித்தாள் அவள். ”ஒரே நாளில் ஐந்து தடவை அழுகிறோம்; ஐந்து தடவை சிரிக்கிறோம். சரி இக்நாத் நீ பேசி முடித்தாயிற்றா? தூங்குவதற்கு நேரமாகிவிட்டது.”

”எனக்குத் தூக்கம் வரவில்லை.” “போ… போ, தூங்கு தூங்கு.”

”நீங்க ரொம்பக் கண்டிப்பானவர் இல்லையா? சரி நான் போகிறேன். நீங்கள் கொடுத்த தேநீருக்கு ரொம்ப நன்றி….. அன்புக்கும்தான்…”

அவன் தாயின் படுக்கை மீது ஏறிப் படுத்தவாறு தன் தலையைச் சொறிந்துகொண்டே முனகினான்:

”இப்போது சாமான்களெல்லாம் தார் எண்ணெய் நாற்றம் எடுக்கப் போகிறது… இதிலெல்லாம் ஓர் அர்த்தமுமில்லை … எனக்குத் தூக்கமும் வரவில்லை…. அந்த ரெண்டுங்கெட்டான் ஜனங்களை இவர் எவ்வளவு சுளுவாகத் தாக்கிப் போசினார்… அந்தப் பிசாசுகள்…”

திடீரென்று அவன் தூங்கிப்போய் உரத்துக் குறட்டைவிட ஆரம்பித்தான். அவனது வாய் பாதி திறந்தவாறு இருந்தது, புருவங்கள் ஏறியிருந்தன.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

 

அகில இந்திய வேலை நிறுத்தம் : தமிழகம் முழுவதும் புஜதொமு ஆர்ப்பாட்டம் !

த்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள ஜனவரி 08, 09 அகில இந்திய வேலை நிறுத்தத்தை வர்க்க உணர்வோடு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், முற்றுகைப் போராட்டம், தெருமுனைக் கூட்டங்கள் ஆலைவாயிற் கூட்டங்கள் வடிவில் முன்னெடுத்து சென்று வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றி பெறச் செய்து வருகிறது.

திருவள்ளூர் கிழக்கு

2019 ஜனவரி 08, 09 இரு நாள் வேலை நிறுத்தத்தை முன்னெடுப்போம் என்கிற தலைப்பின் கீழ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக கும்முடிப்பூண்டி தபால் நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

கார்ப்பரேட்களின் பிடியில், தொழிலாளர், விவசாயி, மாணவர், சிறுவணிகம் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் சிக்கித் தவிப்பதைப் போல காட்சியமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. செங்கொடிகள் பதாகைகள், விண்ணதிரும் முழக்கங்கள், பறையிசையுடன் நடத்தப்பட்ட முற்றுகைப் போராட்டம் கும்முடிப்பூண்டி பஜாரில் உள்ள அனைத்து மக்களையும் ஈர்த்தது.

மாவட்ட செயலாளர் தோழர் விகந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி. சுதேஷ்குமார் கண்டன உரையாற்றினார்.

கும்மிடிப்பூண்டி காட்டுக்கொள்ளை தெருவில் தொடங்கி தபால் நிலையத்தை முற்றுகையிட சென்ற தோழர்களை போலீசார் கைது செய்தனர்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் – 94444 61480

திருவள்ளூர் மேற்கு

தொழிலாளர் உரிமையை மீட்க, பாசிச ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பலை வீழ்த்த, ஜனவரி 8-9 வேலை நிறுத்தத்தை  முன்னெடுப்போம்! என்ற தலைப்பின் கீழ் ஜன-8 அன்று காலை, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின்  இணைப்பு சங்கமான டி ஐ மெட்டல் பார்மிங் நிறுவனத்தில் ஆலைவாயில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் ஆலை சங்கத்தின் தலைவர் தோழர் ச.மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில பொருளாளர் தோழர் பா.விஜயகுமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசும்போது, ‘’இன்றைய தொழிலாளர்களின் நிலைமை என்ன என்பதையும் மோடி அரசு நான்கரை ஆண்டுகளாக தொழிலாளர் நலச் சட்டங்கள் 44 யும் 4 தொகுப்புகளாக கார்ப்பரேட் முதலாளிகளுக்காக மாற்றியும் திருத்தியும் வருவதை கண்டித்து அதன் மூலம் ஒட்டுமொத்த தொழிலாளர்களின் வாழ்க்கை எந்த அளவிற்கு  பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது, பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, வேலை இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் விளக்கி உரையாற்றினார்.

இறுதியாக ஆலை சங்கத்தின் துணைத்தலைவர் தோழர் ரகுபதி நன்றி உரையாற்றினார். கூட்டத்தில்  நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்.

கோவை

“தொழிலாளர் உரிமைகளை மீட்க பாசிச RSS – BJP கும்பலை வீழ்த்த 2019 ஜனவரி 8 – 9 வேலைநிறுத்தத்தை முன்னெடுப்போம்!” எனும் முழக்கத்தின் அடிப்படையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி   பொது வேலை நிறுத்தத்தில்  பங்கேற்றது.

ஜன 8 அன்று காலை  10 மணியளவில்  துடியலூர்  பேருந்து நிறுத்தம் முன்பாக   கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில்  இருநூறுக்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

ஸ்ரீ ரங்கநாதர் இண்டஸ்டிரீஸ்   தலைவர் தோழர் கோபிநாத்  தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பு.ஜ.தொ.மு. மாவட்டத் துணைத்தலைவர் தோழர் தேவராஜ், மாவட்ட பொருளாளர்  தோழர் சரவணகுமார், கோவை மண்டல   பஞ்சாலை தொழிலாளர்  சங்கத்தின்  பொருளாளர்  தோழர்  செல்வராஜ், மக்கள் கலை இலக்கிய  கழகத்தின்  கோவை மாவட்ட  செயலாளர்  தோழர்  சித்தார்த்தன் உள்ளிட்ட முன்னணியாளர்கள் கண்டன உரையாற்றினர்.

தகவல்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை.

படிக்க:
நெருங்குவது காவி இருளடா … | ம.க.இ.க. பாடல் காணொளி
உங்கள் விருப்பம் | கொஞ்சம் நிமிரு தல | வாசகர் புகைப்படங்கள்

நெருங்குவது காவி இருளடா … | ம.க.இ.க. பாடல் காணொளி

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் எட்டாவது பாடல் ஒலிப் பேழையான காவி இருள் பாடல் தொகுப்பிலிருந்து “நெருங்குதடா… இருள் நெருங்குதடா… நெருங்குவது காவி இருளடா’’ என்ற பாடல் இப்பதிவில் இடம்பெறுகிறது.

இப்பாடல் வெளியான 1999-ம் ஆண்டில் நிலவிய அரசியல் சூழல் குறித்து இப்பாடலுக்கான அறிமுக உரையில் ம.க.இ.க.-வின் பொதுச் செயலாளர் தோழர் மருதையன் குறிப்பிடுபவை எல்லாம், இன்றைய காலச் சூழலுக்கும் சரியாகப் பொருந்தும். பார்ப்பனக் கும்பலின் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள ‘உயர்’ சாதிகளுக்கு 10% இட ஒதுக்கீட்டை மோடி அரசு அறிவித்திருப்பது, இதற்கு ஒரு சான்று!

தோழர் மருதையனின் இப்பாடலுக்கான அறிமுக உரை இதோ :

”இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்நாட்டை அடிமைத்தளத்தில் ஆழ்த்திய அதே இருள். சாதிக்கொடுமை, பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கை, தற்குறித்தனம், காலனி அடிமைப்புத்தி ஆகிய அனைத்திற்கும் காரணமான அதே காரிருள்.

அந்தக் காவி இருள்தான், தன்னை எதிர்காலத்தின் நம்பிக்கை ஒளி என்று கூறுகிறது. பெயர் சொன்னாலே மக்கள் காரி உமிழ்ந்தார்களே, அந்தப் பார்ப்பனியம் எனும் இருள் இன்று ஆர்ப்பரித்து வருகிறது.

மத்தியில் பாரதிய ஜனதாவின் ஆட்சி, தமிழகத்திலோ கோவை கலவரம். அதைத் தொடர்ந்து குண்டு வெடிப்பு, ரதயாத்திரையின் போதும் மசூதி இடிப்பின்போதும் ஒப்பீட்டளவில் இந்துமத வெறியர்களால் பாதிக்கப்படாத தமிழகம் கோவை கலவரத்தின் விளைவாக திசை மாறுகிறது. இல்லை, மாற்றுகிறார்கள். முசுலீம்களை குறிப்பதற்கு மட்டுமே மதவெறி என்ற சொல்லை பயன்படுத்துகின்றனர் பத்திரிகைகள்.

ஆள்தூக்கி தடா சட்டம் பொடா என்ற பெயரிலே புதுப்பிக்கப் படுகிறது. சாதாரண மக்களுக்கு எதிராக குண்டுவைத்தவர்கள் அணைவரும் கண்டிக்கத்தக்கவர்கள்தான். இசுலாமியத் தீவிரவாதம் கண்டிக்கத்தக்கதுதான்.

ஆனால், இந்துக்கள் என்று தம்மைக் கருதிக்கொள்பவர்கள் நெஞ்சில் கைவைத்து சொல்லட்டும், கடந்த இருபது ஆண்டுகளில் இந்துவெறியர்களால் கொலை செய்யப்பட்ட முசுலீம்கள் எத்தனை ஆயிரம். அந்தக் கொலைகளுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? கோவையிலும்கூட முசுலீம் மக்களின் படுகொலைக்கு எதிர்வினைதானே குண்டுவைப்புகள்.

குண்டுவெடிப்பின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், கலவரத்தின் குற்றவாளிகள் அவர்களுக்குப் பதவி கிடைத்திருக்கிறது. இது என்னவகை நீதி? பாரதிய ஜனதா, முசுலீம்களுக்கு மட்டுமல்ல., அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எதிரான கட்சி.

சாதியின் பெயரால் மனுநீதியின் பெயரால் மக்களை ஒடுக்கிய பார்ப்பனியத்தின் புதிய அவதாரம்தான் பாரதிய ஜனதா கட்சி. முன்னாள் மன்னர்களும் பண்ணைகளும் ஆதீனங்களும் பார்ப்பன பனியா தரகு முதலாளிகளும் இவர்களது பங்காளிகள். ஜனநாயகத்தை அதன் வாசனைக்கூடத் தெரியாமல் ஒழித்துவிட விரும்பும் பாசிஸ்டுகள் இவர்கள்.

சகுணம் எதையும் காட்டாமல் பாசிசம் ஆட்சிக்கு வந்துவிடுவதில்லை. அணுகுண்டுவெடிப்பு, அயோத்தியில் சட்டவிரோதமாகக் கோயில் கட்டுவது, சிறுபான்மையினருக்கு எதிரானக் கலவரங்கள், ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே அவர்கள் யார் என்பதைக் காட்டுகிறார்கள்.

இனிமேலும், தாமதிப்பதற்கு இல்லை. இப்போது நாம் போராடத் தவறினால், எப்போதும் போராட முடியாமல் நசுக்கப்படுவோம். இப்போது நாம் பேசத்தவறினால், நாம் பேச்சுரிமையே இழப்போம். இத்தனைகாலம் நாம் போராடிப்பெற்ற உரிமைகள் அனைத்தையும் நாம் இழப்போம்.

இந்த ஆட்சி நிலைக்குமா நிலைக்காதா என்பதல்ல பிரச்சினை நம்முடைய உரிமைகள் நிலைக்குமா என்பதுதான் பிரச்சினை. ஆம், நம் நாட்டின் மீது கவிழ்ந்து கொண்டிருக்கிறது, ஒரு இருள். காவி இருள்.”

யூ-டியூப் காணொளி :

முகநூல் காணொளி:

பாடல் – இசை : ம.க.இ.க., கலைக்குழு
ஆக்கம்: வினவு.

பாருங்கள்! பகிருங்கள்!!

∗∗∗

பாடலின் வரிகள்:

நெருங்குதடா இருள்
நெருங்குதடா
நெருங்குவது காவி இருளடா

ஈராயிரம் ஆண்டாய்
நாம் சுமந்த இருளடா… – அந்த
இருள் கிழிக்கும் தருணமிது
கொடுவாளை ஏந்தடா

மறைக்க ஏதுமில்லை
மனுநீதி ஆண்டிடும்….
மதவெறியின் முகமணிந்து
சாதி பாய்ந்திடும்….

தீயில் வெந்த ரணங்கள் என்ன
ஆறி போனதா…?
தருணமிது விழித்துக் கொள்ளடா

காவித்துணி நெற்றியில் – இது
இந்து பாசிசம்
காலிகளின் கால்களில் – நம் உரிமை மிதிபடும்…
போராடி மாண்ட தோழர்களின்
குரல் மறந்ததா?
தருணமிது துணிந்து நில்லடா…

தேசவெறி, போர் வெறி
அணுகுண்டு சாகசம்… – இந்து
நாஜிகளின் கனவிலே…
அகண்ட பாரதம்…!
முசோலினியை, இட்லரை
மறந்து போனதா…?
தருணமிது விழித்துக் கொள்ளடா….

காவி இருள் அன்னியனின்
கவசமாவதா…?
துரோகமும் வஞ்சமும்
விவேக மாவதா?
வீரமும் தியாகமும்
துவண்டு சாய்வதா….?
தருணமிது எழுந்து நில்லடா….

உங்கள் விருப்பம் | கொஞ்சம் நிமிரு தல | வாசகர் புகைப்படங்கள்

தன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளை வீட்டில் விட்டு, வளர்ப்புப் பிள்ளைகளோடு கழனி சென்றவள் வீடு திரும்பும் தருணம். படம்: அருள் முருகன்

***

இளமையில் தேடிய கேள்விகளுக்கு முதுமையிலும் விடைகிடைத்த பாடில்லை.
இடம்: பார்த்தசாரதி கோயில், திருவல்லிக்கேணி. படம்: கார்த்திக்.

***

சொட்டும் நீரில் பட்டுத் தெறிக்கிறது, டெல்டா சோகம்!
இடம்: திருவாரூர். படம்: கார்த்திக்.

***

நெருக்கடியை சந்தித்துவரும் பட்டாசுத் தொழில். அரசின் முன் வைத்த கோரிக்கைகள் நிறைவேறி ஆலை திறப்பது எப்போது? போராட்டக் களத்தில் கவலையுடன் காத்திருக்கும் முதியவர். படம்: மா.பேச்சிமுத்து

***

முதுமை ..  வறுமை ..விவசாயி …!
படம்: கோபி நாராயணசாமி

***

கேலிகளும் நகைகளும் கேள்வியில்லை… வெற்றிகளும் தோல்விகளும் கவலையில்லை… வாழ்த்துதலும் போற்றுதலும் தேவையில்லை…
இகழ்வுக்கு இடமில்லை… இணக்கத்திற்கு தடையில்லை… இன்புற்று வாழும் இம் மழலைகளின் வாழ்வு கண்டு நாமும் மகிழ்ந்திருப்போமே… மகிழ்ந்திரு மானுடமே…
படம்: கோகுலன் கிருஷ்ணமூர்த்தி

***

அரக்க பறக்க வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, பொழுது புலரும் முன்னே தெருவை சுத்தம் செய்யக் கிளம்பும் தூய்மைப் பணியாளர்கள். உணவு இடைவேளையின் போதும்கூட சற்று களைப்பாற விடாமல் துரத்தும் ‘தாய்மை’ப் பணி.
இடம்: திருவண்ணாமலை, பேருந்து நிலையம். படம்: கலா

***

கைவிட்ட காவிரி… புரட்டிப் போட்ட கஜா… கேட்பாடற்ற அரசு… வறுமையும் வஞ்சமும் தஞ்சையை வாட்டினாலும் மனிதம் மறத்துப்போய்விடாது. குரங்கு என்ன சாதியென்று ஆராய்ச்சி நடைபெறும் நாட்டில், பசியோடு வாடும் குரங்கு குட்டிக்கும், சுமைதூக்கும் தொழிலாளிக்குமிடையேயான பாசப் ‘பிணைப்பின்’ சாட்சி!
இடம்: தஞ்சை, ரயிலடி. படம்: தமிழினி

***

தஞ்சை பெரிய கோவில் : கல்பாறை சுமந்து, சுமந்த பாறைச் சரிந்து, சந்ததியிழந்த ஆயிரமாயிரம் அடிமைகளின் உழைப்பில் நிமிர்ந்து நிற்கும் கோவில்!
இடம்: தஞ்சை பெரிய கோவில், மாலை 4 மணி. படம்: தமிழினி

கடல் நீரில் நீந்திக்களித்த மீன்கள் கண்ணாடிக் கூண்டுக்குள் அடைபட்டு காட்சிப் பொருளானது. மீனுக்கு கண்ணாடிக் கூண்டு! நமக்கு கையடக்க ஆண்ட்ராய்டு!
இடம்: கனடா. படம்: அன்பழகன் பாலா

♠ ♠ ♠ ♠

பைக்ல, பஸ்ல, ரோட்ல , வீட்ல, நைட்ல, சாப்பிடயில, ஸ்கூல்ல, காலேஜ்ல, பெட்ரூம்ல, பாத்ரூம்ல, பஸ்ஸ்டான்ட்ல, பால்கனில, படிக்கயில… அட., ஆண்ட்ராய்டு அடிமைகளா நாம்? கொஞ்சம் நிமிரு தல !
இடம்: திருச்சி. படங்கள்: பிரித்திவ்

 

சிங்கார சென்னை என பெருமைப் பேச மேம்பாலங்களும் மெட்ரோ ரயிலும்.  பரபரப்பான இயந்திர வாழ்க்கைக்கு மத்தியில் தள்ளாடிச் செல்லும் மாட்டுவண்டி.
இடம்: கிண்டி மேம்பாலம். படம்: தமிழன்பன்

காலை ஆறு மணிக்கு சாலையோரம் கண்ட அந்த மனிதன், அந்தி சாய்ந்த பின்னும் அயராமல் அமர்ந்திருந்தார். இந்த வறுமைக்கு யார் காரணம் இரவு பகல் பாராது உழைக்கும் இந்த மனிதனின் நிலைமைக்கு யார் காரணம்…?
இடம் ஆதம்பாக்கம், ரயில்வே மேம்பாலம். படம்: தமிழன்பன்

ஸ்ரீ ஸ்ரீ பெட்ரோல் துணை! கழுதபடத்த மாட்டி வச்சா காடு விளையுமா?  கார்ப்பரேசன் வாட்டரிலே காரு ஓடுமா?  எந்த சாமி பேர துணைன்னு போட்டாலும் பெட்ரோல் இல்லாட்டி வண்டி ஓடாதுங்கோ… பகுத்தறிவோம்!
இடம்: திருச்சி. படம்: சரவணன்

தெரு வெறிச்சோடிக் கிடந்தாலும், வாடிக்கையாளரின் வருகைக்காக நம்பிக்கையோடு காத்திருக்கும் நடைபாதை வியாபாரி.
இடம்: காக்கிநாடா, ஆந்திரா. படம்: வினவு களச்செய்தியாளர்

தீவுகளைப்போல் சேறும் சகதியும் சூழ்ந்திருக்க… கம்பு கழிகளை நட்டு பிளாஸ்டிக் கூரைகளைப் போர்த்தியிருக்கும் இவைகளெல்லாம் ஆந்திர தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகள். மாடுகளின் நலன் காக்கும் மோடி அரசில் இந்தியாவின் மக்கள் குடியிருப்பு வாழ்க்கை இது!
இடம்: காக்கிநாடா, ஆந்திரா. படம்: வினவு களச்செய்தியாளர்

சதையைக் கிழித்து ஊடுருவி எலும்பைக் குடையும் மார்கழி மாத கடுங்குளிரில், உழைத்தக் களைப்பில் அயர்ந்துறங்கும் வீடற்ற நாடோடி கூலித் தொழிலாளர்கள்.
இடம்: விஜயவாடா, ரயில் நிலையம், ஆந்திரா. படம்: வினவு களச்செய்தியாளர்

ஆல்அவுட்டும், ஓடோமாசும் இல்லாது கடப்பதில்லை நம் இரவுகள். அன்றாடம் சந்திக்கும் வாழ்க்கைப் பிரச்சினைகளோடு, ஒப்பிடுகையில் குளிரும் கொசுக்கடியும் பொருட்டே இல்லை என்கிறாரோ, இந்த உழைப்பாளி? எவ்வளவுதான் உழைச்சாலும் வயிறும் மனமும் நிறைந்ததேயில்லை ஒரு நாளும்.
இடம்: விஜயவாடா, ஆந்திரா. படம்: வினவு களச்செய்தியாளர்


வாசகர் புகைப்படம் பகுதிக்கு புகைப்படம் அனுப்பும் வாசகர்கள், vinavu@gmail.com வினவு மின்னஞ்சல் அல்லது வினவு வாட்ஸ்அப் எண்ணுக்கு (91) 97100 82506 உடன் அனுப்புங்கள். கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்!

ஆந்திரா – காக்கிநாடா : இயற்கை பேரிடர் ஆபத்தும் அரசின் அலட்சியமும் !

Kakhinada-Cyclone damage 4
புயலில் துக்கி வீசப்பட்ட கட்டுமரம்.

ந்திரா மாநிலம் காக்கிநாடாவில் இருந்து தூணி செல்லும் உப்படா கடற்கரை சாலை. பாண்டிச்சேரிக்கு கிழக்கு கடற்கரை சாலை என்றால்; காக்கிநாடாவிற்கு இந்த சாலை. அருகிலேயே கடலையொட்டி பரந்து விரிந்த வயல், அக்கம்பக்கமாக ஏராளமான தொழிற்சாலைகள் இருக்கின்றன. மத்திய அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்திற்கான இடமாகவும் உருவெடுத்து வருகிறது காக்கிநாடா.

kakkinada smart poonkaகடந்த டிசம்பர்-17ம் தேதி வீசிய பெய்ட்டி புயலால் இந்த கடற்கரை சாலையும், அதனையொட்டிய நெல் வயல்களும், மீனவர்களின் படகுகளும் பாதிக்கப்பட்டிருந்ததாகக்கூறி அதனைக் காண்பிக்க அழைத்துச் சென்றார் இந்திய பொதுவுடைமைக் கட்சி (மாலெ) நியு டெமாக்ரசி கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் துர்கா பிரசாத்.

Comrade Durga Prasad New Democrocy
தோழர் துர்கா பிரசாத்

காக்கிநாடா நகரின் புயல்  பாதிப்பு பற்றியும், அரசின் நிவாரணம் குறித்தும் கேட்டபோது, “கடந்த அக்டோபர் 11-ம்  தேதி வீசிய டிட்லி புயல் விசாகப்பட்டினம்–சிறீகாகுளம் ஆகிய பகுதிகளை கடுமையாகத் தாக்கியது. பின்னர் டிசம்பர் மாதத்தில் வீசிய பெதாய் புயல் காக்கிநாடா-ஏனம் ஆகிய பகுதிகளையும் தாக்கியுள்ளது.

Kakhinada-Cyclone damage 2
உப்படா கடற்கரை சாலை

இந்த புயலில் செல்போன் டவர்கள் சாய்ந்தன, மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததில் மூன்று நாட்கள் மின்சாரம் இல்லை. ஆங்காங்கே சில மரங்கள் விழுந்தன.  மொத்தத்தில் இந்த புயலில் பாதிப்பு குறைவு என்பதால் உள்ளூர் கார்ப்பரேசன் ஆட்களே எல்லா வேலையையும் முடித்துவிட்டனர். இல்லையென்றால், இதைக்கூட சரி செய்யாமல் இருந்தால் மக்களிடம் வெறுப்பு வந்துவிடும்; ஊடகங்கள் அவப்பெயரை ஏற்படுத்தி விடும் என்றஞ்சி  விரைவாக சரிசெய்யப்பட்டது.”

“புயல் நிவாரணம் உண்டா?”

உண்டு. பொங்கலுக்கு அறிவித்திருக்கும் அரிசி பருப்புதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம். இதுக்கு மேல எதாவது உண்டா..ன்னா வேற எதுவும் இல்ல. சந்திரபாபு நாயுடு “என்னிடம் காசு இல்லை” என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறார். “மத்திய அரசு நம்மை வஞ்சித்து விட்டது” என்று சொல்லி தப்பிக்கப் பார்க்கிறார்.

Kakhinada-Cyclone damage 4
புயலில் துக்கி வீசப்பட்ட கட்டுமரம்.

“அதிகாரிகளிடம், நீங்களே கணக்கெடுத்து நிவாரணம் கொடுங்க… அப்புறமா சென்ட்ரல் கவர்ன்மெண்ட்ல இருந்து நிதி வந்த பிறகு தறேன்” என்ற தொனியில் சொல்கிறார். அதிகாரிகள் மட்டும் எப்படி கொடுப்பார்கள்?

“ஏற்கனவே அடிச்ச புயலுக்கு நிவாரணம் இன்னும் வரல. அதுக்குள்ள இந்தப் புயல்” என்று பத்திரிக்கைகள் கிண்டல் செய்து எழுதுகிறது. அந்த அளவிற்கு நிவாரண உதவிகளை கேட்டுப் பெறுவதிலும், புயல் பாதிப்புகளை மதிப்பிடுவதிலும் அலட்சியம் காட்டி வருகிறது சந்திரபாபு நாயுடு அரசு.

டிட்லி புயலினால் ஏற்பட்ட இழப்பு ரூ.5,000 கோடிக்கும் மேல் இருக்கும். ஆனால் ரூ.2,800 கோடி என்று மதிப்பிட்டிருந்தது. அதேமாதிரி இந்த புயலுக்கு ரூ.1,000 கோடிக்கும் மேல் இருக்கும். ஆனால் ரூ.480 கோடி தான் இழப்பு என்று மதிப்பிட்டுள்ளது.

டிட்லி புயலுக்கு இடைக்கால நிதியாக ரூ.1,200 கோடி கேட்டார்கள். பிறகு ரூ.500 கோடிக்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்கள். அதுவே இன்னும் வரல. இதுதான் புயல் பாதிப்புல இருந்து மக்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியா எதுவும் செய்யிறதில்லை. முதல்வர் நிதி, மாவட்ட ஆட்சியர் நிதின்னு அனுப்பிடுகிறாங்க. அந்த  நிதியில் இருந்துதான் இதுவரை வேண்டிய செலவுகளை செய்து வருகிறார்களே தவிர அரசு நிதியில் இருந்து இல்லை. அதையாவது முழுசா செஞ்சாங்கள… இல்லையா? எவ்ளோ வந்தது? என்ற கணக்கு வழக்கே இல்லை.

“வாலண்டியர் வந்தாங்களா?”

எந்தப் புயலுக்கும் வாலண்டியர்கள் வருவதில்ல. நிவாரண நிதியோட நிறுத்திப்பாங்க. அரசுதான் செய்யனும்… ஆனா செய்யிறதில்ல. செய்யிறவங்களையும் புடிச்சி உள்ள போடுது…

Kakhinada-Cyclone damage 1
கட்டுமரங்கள் மட்டுமல்ல கடவுளர்களையும் புரட்டிப் போட்ட புயல்.

“டிட்லி புயலுக்கு குண்டூர் ஏரியாவில் இருந்து இடதுசாரி-மக்கள் திரள் அமைப்பினர் நிவாரணப் பொருட்களை சேகரித்து சிறீகாகுளம்-பந்தாகுளம் பகுதியில் வழங்கியபோது ஒரு விசித்திரமான ஒரு சம்பவம் நடந்தது.

நிவாரணம் கொடுத்தவங்களை தடுத்து “நீங்க சட்ட விரோத செயலில் ஈடுபடுறீங்க..” எனக் கூறி கைது பண்ணி ரிமாண்ட் செய்துவிட்டது போலீசு. இந்தப் புயலுக்கு கொஞ்ச  நாளைக்கு முன்னாடிதான் அவர்கள் வெளியே வந்தார்கள்.

“புயல் கடுமையா வீசிய பகுதி எது?”

ஜெக்கம்பேட்டா, சீத்தாநகரம், ஜிந்த்தூரு வி.ஆர். புரம், தூணி, கொத்தப்பள்ளி, காக்கிநாடா, ஏனம், பைரவ் பள்ளம் மற்றும் ராஜமுந்தரியில் சில ஏரியா…. அதுலயும் இந்தப் பகுதிகளில் அதிகம் பாதிக்கப்பட்டது விவசாயம்தான்.

நிவாரண முகாம் அமைச்சாங்களா?”

“கேம்ப் அமைச்சாங்க. ஆனா அதுல மக்கள் யாரும் தங்கல.. அதிகபட்சம் இரண்டு நாள் தங்கினாங்க… அவ்ளோதான்.”

“ஏன்?”

“அரிசி சோறும் சாம்பார்’ன்ற பேர்ல குழம்பும் ஊத்துனாங்க. சுத்தமா நல்லா இல்ல.. வேற எந்த வசதியும் ஏற்படுத்தி தரல. உடுத்த துணி இல்ல, மெடிக்கல் வசதி இல்ல. குடிக்க-குளிக்க தண்ணி இல்ல. இல்லை.. இல்லை… என்பதுதான் இருக்கிறது.  இதனால நோய் தொற்று வரும்னு பயப்படுறாங்க. இதோடு சேர்த்து இன்னொரு பிரச்சனையும் இருக்கு. வீட்ட விட்டு வந்து கேம்ப்ல தங்கிட்டா வீட்டுல இருக்க பொருட்களை யாராவது திருடிட்டு போயிடுவாங்களோன்ற அச்சம் இருக்கு. புயல்ல போனது போக மிஞ்சி இருக்கிறதை கொண்டுதான் வாழ்க்கைய தேத்தனும் அதுவும் திருடு போயிட்ட என்னா பன்றது…” .என்று சொல்லிக் கொண்டே ஆட்டோவை நிறுத்தச் சொன்னார்.

Kakhinada-Cyclone damage 7
சாலை அரிப்பு

இறங்கி பார்த்தபோது எதிர்பார்த்ததைவிட பயங்கரமாக ஏற்பட்டிருந்தது கடற்கரை சாலை அரிப்பு. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை எல்லாம் தூக்கி வீசியிருந்தது புயல். வழிபாட்டுக்காக மக்கள் வைத்திருந்த சாமி சிலைகளும் தப்பவில்லை. அரிக்கப்பட்டிருந்த அந்த அபாயகரமான சாலையில்தான் மக்கள் பயணித்து வருகிறார்கள். பரந்து விரிந்த வயலும் மக்கள் குடியிருப்பும் கடலையொட்டியே இருந்தது. கடலுக்கும் குடியிருப்புக்கும் மிஞ்சி போனால் இருபது மீட்டர் இடைவெளி இருக்கும் அவ்வளவுதான். இரண்டுக்கும் இடையில் பாதுகாப்பு அரணாக பெரும்பாறைகள் கொட்டப்பட்டிருந்தன.

இந்த கடல் அரிப்பு பற்றி கேட்டபோது சொன்னார்.  “தூணி வரைக்கும் போகும் இந்த சாலை மொத்தம் 15 கிலோ மீட்டர் இருக்கும். 2-3 வருஷத்துக்கு ஒரு முறை இந்த சாலையை போடுவாங்க. இப்ப நிக்குற இடத்திலிருந்து சுமார் இருநூறு மீட்டர் தள்ளி இருந்த சாலை இது…  அப்படியே கொஞ்சம் கொஞ்சமா அரிச்சி இங்க கொண்டு வந்து விட்டிருக்கு. இனியும் இதை சரி பண்ணலன்னா பக்கத்துல இருக்க நிலங்கள் கடுமையா பாதிக்கும்.. அதைவிட முக்கியமா இந்த குடியிருப்புப் பகுதி தாக்கு பிடிக்காது.

கடல் அலையின் சீற்றம் காரணமாக ஒவ்வொரு முறையும் சாலை அறுத்துக்கொண்டு செல்வது வழக்கம்தான், எனினும் இந்த புயலில் கரையையொட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சாலையில் புரட்டிப் போடப்பட்டிருந்தது.

இந்த சாலையை டெண்டர் எடுப்பதற்கு ஒப்பந்ததாரர்களிடையே கடும் போட்டி நிலவும். ஒரு முறை டெண்டர் எடுத்தாலே போதும் பணம் கொட்டோ கொட்டென கொட்டும். அந்த அளவிற்கு இதில் ஊழல் மலிந்துள்ளது. இந்த கடற்கரை சாலையில் செல்ஃபி எடுக்கும்போது பாறைகள் சறுக்கி நிறைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

வழக்கமான சாலை அரிப்புக்கு காரணம் இங்கு இருக்கும் துறைமுகம்தான் என்றாலும் இந்த புயலில் வீசிய அலை சாலை அரிப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. குறைந்த வேகத்தில் வீசிய புயலுக்கே இது தாக்குபிடிக்கவில்லை. எனில் இந்த சாலைகளும், தடுப்புகளும் எந்த லட்சணத்தில் போடப்பட்டிருக்கிறது, அதில் எந்தளவிற்கு முறைகேடு நடக்கிறது என்பதை இயற்கை அம்பலத்திபடுத்தி விட்டது”.

“சரி…துறைமுகத்துக்கும்- சாலை அரிப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்கு’ன்னு நெனக்கலாம். இயற்கையோட சமநிலையை குலைக்கும்போது அது தன்னோட வேலையை செய்து விடும். மூன்று முக்கியமான சம்பவங்கள் உள்ளது.

முதலாவதாக, காக்கிநாடா இயற்கையான துறைமுகம்னு சொல்லுவாங்க. அந்த ஹார்பரை அகலப்படுத்துறது முதல் காரணம். அதன் பரப்பளவை அதிகரிக்க அதிகரிக்க அலையின் இயல்பான வேகத்துல இருந்து வேகமா அடிக்க ஆரம்பிச்சிடுது. அதனாலயே பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

இரண்டாவது, கிருஷ்ணா-கோதாவரி டெல்டாவுல கடற்கரையோரம் ரிலையன்சும்-குஜராத் பெட்ரோலியமும் இணைந்து எண்ணெய் துரப்பன கிணறு அமைச்சிருக்காங்க. கடலுக்குள்ள எண்ணெய் எடுக்கிறாங்க. ஏனம் அருகே கடற்கரையையொட்டி அதற்கான இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

மூன்றாவதாக, காக்கிநாடா கிழக்குல மணல் அதிகமாக இருக்கக் கூடிய ஹோப் தீவும், வட-தெற்குல மடாக்காடும் இருக்கிறது.  இதனால் புயல் மற்றும் கடல் கொந்தளிப்பு போன்ற அழிவிலிருந்து  காக்கிநாடா காப்பாற்றப்படுகிறது.

கடலில் இருந்து எண்ணெய் எடுப்பதுபோல, இந்த தீவில் இருந்து குழாய் மூலம் மணல் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதனால் தீவின் இயல்பான சமநிலை சீர்குலைக்கப்படுவதால் அலையின் வேகமும், புயல் காற்றின் வேகமும் சற்று அதிகமாகிறது. இன்னொரு பக்கம் மடாக்காடு புயலின் வேகத்தை மட்டுப்படுத்துகிறது. இதனையெல்லாம் அழிப்பதால் என்ன நடக்கும் என்பதை நாங்கள் ஒவ்வொரு புயலிலும் உணர்ந்து வருகிறோம்” என்றார்.

உண்மைதான்! இயற்கை நல்லதா-கெட்டதா என்று கேட்டல்; அதன் வேலையை அது செய்கிறது. அந்த இயற்கையின் சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாப்பது ஒரு அரசின் தலையாயக் கடமை. ஆனால் இங்கு அரசே தன் கடமையிலிருந்து நழுவிக் கொள்கிறது.

படம், செய்தி : வினவு செய்தியாளர்கள்,
ஆந்திரா, காக்கிநாடாவில் இருந்து..

செல்லுமிடமெல்லாம் மக்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த வேதாந்தா !

ஸ்டெர்லைட்டை திறக்க சொல்கிற பசுமை தீர்ப்பாய உத்தரவு கிடக்கட்டும்…. தமிழக அரசே.…. மேல்முறையீடு என்று ஏமாற்றாதே ! தனிச்சட்டம் இயற்று! ஸ்டெர்லைட்டை விரட்டு!! என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மதுரை மண்டலம் சார்பாக கடந்த டிசம்பர்- 30 அன்று நடைபெற்ற அரங்கக்கூட்டத்தில், புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்த தோழர் குமரன் ஆற்றிய உரை.

”தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட்டிற்கு எதிரான இந்தப் போராட்டத்தைத்தான் மோடியும் எடுபிடி எடப்பாடியும் சேர்ந்து ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளனர். மன்னராட்சியில்தான் மக்களுக்கு ஜனநாயக மறுப்பு இருக்கும். ஆனால், ஜனநாயக நாடு என்று இவர்களே சொல்லிக்கொள்ளும் நாட்டில் இப்படி நடப்பது இது கார்ப்பரேட் ஆட்சி என்பதற்கு சாட்சி. இந்த பின்னணியில் இருந்துதான் பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த அனுமதியை நீங்கள் பார்க்க வேண்டும்.

மேலும், அதிகாரிகள் முதல் கட்சிகள் வரை ஸ்டெர்லைட்டின் நன்கொடை பாயாத இடமில்லை. பா.ஜ.க விற்கும் கூட பல கோடி ரூபாயை நன்கொடை கொடுத்துள்ளது ஸ்டெர்லைட். எனவே, இது ஸ்டெர்லைட் ராஜ்ஜியம் என்றால் மிகையல்ல. ஏற்கனவே ஸ்டெர்லைட்டின் தாய் நிறுவனமான வேதாந்தா ஜாம்பியா, தென்னாப்பிரிக்கா, சட்டீஸ்கர் என்று சென்ற இடமெல்லாம் போராடும் மக்களை எல்லாம் ரத்த வெள்ளத்தில் மிதக்க செய்துள்ளது.

இன்னொருபுறம் அரசின் கொள்கை வகுப்பை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தேவையான தொழில் கட்டமைப்புகளை உருவாக்குவது, அதை மக்கள் நலனுக்காக உருவாக்குவது போல் நாடகமாடி அதற்கான செலவுகளை மக்களுடைய வரிப்பணத்தில் இருந்து செலவு செய்து பெரு நிறுவனங்களுக்கு படையல் வைப்பதுதான் உலகம் முழுவதும் அரசுகளின் கொள்கையாக இருக்கிறது. இதில் காங்கிரஸ் செய்யத் தயங்கியதை ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்ட் மோடி செய்து கொடுப்பார் எனத்தெரிந்துதான் பெரு நிறுவனங்கள் அவரை பிரதமராக கொண்டு வந்துள்ளனர். ஏனெனில், மோடி குஜராத் முதல்வராக இருந்த போதே புதிய தொழில்களை துவங்குவதற்கு ஏதுவாக சுற்று சூழல் விதிகளை மாற்றுவோம் என பொது மேடையிலேயே தெரிவித்தார்.

அடுத்ததாக ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும் அதற்குப் பிறகும் காவல்துறை இத்தகைய போராட்டங்களை எப்படி அணுகுகிறது என்பதை கவனிக்க வேண்டும். எம்.கே. நாராயணன் என்பவர் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு சில நாள் பிறகு இந்து பத்திரிக்கையில் இப்படிப்பட்ட போராட்டத்தை எப்படி பார்க்க வேண்டும் என்றும், எப்படி ஒடுக்குவது என்றும் அரசிற்கு பாடம் நடத்துவதாக கட்டுரை எழுதியிருந்தார்.

படிக்க:
மெரினா எழுச்சியின் அனுபவத் தொகுப்பு – தோழர் மருதையன்
மோடி – பாஜகவின் சிறந்த ஜால்றா யார் ? சிறப்பு விருதுகள் – 2018 !

அதாவது தற்போது நடக்கும் போராட்டங்கள் எல்லாம் மக்கள் எந்த அரசியல் கட்சிகளின் தலைமையிலும் இல்லாமல் தன்னிச்சையாக சொந்த அனுபவத்தில் இருந்து போராடுகிறார்கள். அவர்கள் சந்திக்கும் பிரச்சினையின் அளவிற்கு ஏற்ப முகநூல், வாட்ஸ் அப் என்று பயன்படுத்தி அணிதிரட்டி போராடுகிறார்கள். ஆனால், நம்முடைய காவல்துறையோ லத்திக்கம்பை மட்டும் நம்பி இருக்கிறது என்று நீட்டி எழுதியிருந்தார். நாம் அனைவரும் ஒரு எச்சரிக்கையாக அதை படித்து புரிந்து மாற்று வழியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அரசின் கொள்கையையும், அதன் ஒடுக்குமுறை வடிவத்தையும் தோலுரித்துக்காட்டினார்.


தகவல்,
மக்கள் அதிகாரம்,
மதுரை.

(இக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய மற்ற பேச்சாளர்களின் உரைகள் அடுத்தடுத்த பதிவுகளில் இடம்பெறும்)