Thursday, July 10, 2025
முகப்பு பதிவு பக்கம் 56

தேர்தல் நிதிப் பத்திரங்கள்: பா.ஜ.க.வின் பாசிச வழிகளில் ஒன்று!

ச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தேர்தல் ஆணையம் 14/03/24 அன்று தேர்தல் நிதிப் பத்திரங்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது. ஆனால், எந்த நிறுவனம் எந்த கட்சிக்குப் பணம் கொடுத்தது என்பதை அறிந்துகொள்ள உதவும் தேர்தல் பத்திரங்களின் வரிசை எண் போன்ற முழுமையான விவரங்கள் SBI வங்கி இன்னும் வெளியிடவில்லை.

தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலமாக பா.ஜ.க.தான் அதிகமான பணத்தைப் பெற்றிருக்கிறது என்ற உண்மை நம் யாரையும் எந்த வகையிலும் ஆச்சரியப்படுத்தவில்லை. ஆனால், இதை பா.ஜ.க. எந்த வழிமுறைகளைப் பயன்படுத்திச் சாதித்தது என்பதை இந்த தேர்தல் நிதிப் பத்திர விவரங்கள் மூலமாக நாம் தெரிந்துகொள்ளும் போது பா.ஜ.க.வின் பாசிசத்தன்மையை புரிந்துகொள்ள முடியும்.

படிக்க : தேர்தல் நிதிப்பத்திரம் – கருப்புப் பணத்தை சுருட்ட பா.ஜ.க-வின் புதிய அஸ்திரம் !

தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலமாக மிக அதிகமாக நன்கொடைகளை வழங்கியது, Future Gaming என்ற நிறுவனமாகும். இது “லாட்டரி ராஜா” என்று சொல்லப்படும் மார்டின் என்பவனின் நிறுவனமாகும். இந்த நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக அமலாக்கத் துறையின் கண்காணிப்பிலிருந்துள்ளது. மேலும், இந்த நிறுவனத்தின் சுமார் ரூ.410 கோடி அசையும் சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததும் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தேர்தல் நிதிப் பத்திரங்களை இந்த நிறுவனம் வாங்கியுள்ளது.

இதுபோல், தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலமாக அதிகமாக நன்கொடைகள் கொடுத்த முதல் ஜந்து நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை அல்லது வருமான வரித்துறை சோதனைகள் நடந்துள்ளது.

நியூஸ் லாண்ட்ரி (News Laundry) செய்தித்தளம் வெளியிட்டுள்ள செய்தியின் படி, கடந்த 5 ஆண்டுகளில் ரூ.335 கோடி நன்கொடையாகக் கொடுத்த 30 நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை அல்லது வருமான வரித்துறை சோதனைகள் நடந்துள்ளது.

தேர்தல் பத்திரங்களுக்குக் கைமாறாக, நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களைத் தாரை வார்த்திருக்கிறது பா.ஜ.க.

அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா, பிரைட்ஸ்டார் இன்வஸ்மண்ட் (Bright star Investments) என்ற நிறுவனத்திடம் அந்த மாநிலத்தின் அரசு மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்கிறார். இந்த நிறுவனம் பல கோடி ரூபாய் தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலமாக நன்கொடையாக வழங்கியது தற்போது அம்பலமாகி உள்ளது.

படிக்க : தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டம்: போலி ஜனநாயக மாயையை விட்டெறியுங்கள்!

ஆனால், டாடா, ரிலையன்ஸ் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் நேரடியாகத் தேர்தல் பத்திரங்களை வாங்கவில்லை.  ரிலையன்ஸ்  குறுக்கு வழியில் தேர்தல் பத்திரங்களை வாங்கியது அம்பலமாகியுள்ளது. க்யூக் சப்ளை செயின் (Qwik Supply chain) என்ற நிறுவனத்தின் மூன்று இயக்குநர்களில் ஒருவரான தாபஸ் மித்ரா ரிலையன்ஸின் பிற நிறுவனங்களிலும் இயக்குநராக இருக்கிறார். இந்த க்யூக் சப்ளை செயின் (Qwik Supply chain) நிறுவனத்தின் மூலமாக ரூ.410 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடையாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், முகேஷ் அம்பானியின் பழைய கூட்டாளியான சுரேந்திர லுனியா என்பவர் தொடர்புடைய சில நிறுவனங்கள் மூலமாக ரூ.50 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை 2019, மே மாதம் நாடாளுமன்ற தேர்தலின்போது கொடுக்கப்பட்டதாகும். இதுபோன்ற பலர் தேர்தல் காலங்களில் கொடுத்த தேர்தல் நிதிப் பத்திரங்கள்தான் மோடியை இரண்டாம் முறையாக பிரதமராக்குவதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது.

2022 ஆம் ஆண்டு ஹிமாச்சல பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களவை தேர்தலின்போது வழக்கத்தைவிடக் கூடுதலாக 15 நாட்கள் தேர்தல் நிதிப் பத்திரங்கள் வாங்க அனுமதிக்கும் வகையில் மோடி கும்பல் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது.  இந்த சட்டத்திருத்தம் செய்யப்பட்ட இரண்டு நாட்களில் 2022 நவம்பர் 9 ஆம் தேதி மொத்தமாக 676 கோடி ரூபாய்க்குத் தேர்தல் நிதிப் பத்திரங்கள் வாங்கப்பட்டது. அவற்றில் 87 சதவீதம் அதாவது 590 கோடி பாஜகவிற்குச் சென்றுள்ளது. இதேபோல்  2022 டிசம்பரில் மொத்தம் 232 கோடி பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. அதில், 71 சதவீதம் அதாவது 165 கோடி ரூபாய் பாஜகவிற்கு சென்றுள்ளது.

தேர்தல் நிதிப் பத்திரங்கள் தொடர்பான இந்த விவரங்களை நாம் கவனிக்கும்போது, தீர்மானகரமாக மூன்று முக்கியமான முடிவுகளுக்கு வருகிறோம். ஒன்று, தேர்தல் நிதிப் பத்திரங்கள் என்ற திட்டத்தைப் பயன்படுத்தி பா.ஜ.க அரசியல் அயோக்கியத்தனத்தைச் செய்யவில்லை, அந்த திட்டம் தன்னளவிலே அயோக்கியத்தனமானதுதான். இரண்டாவது, இவையெல்லாம் முதலாளித்துவ தேர்தல் அமைப்பில் நடக்கும் மற்றொரு ஊழல் என்று பார்க்கமுடியாது. இவை பண்பளவிலும் பரிணாமத்திலும் பாசிசமயமான கட்டத்தைக் குறிக்கிறது. மூன்றாவது, தேர்தல் நிதிப் பத்திரங்களை அரசியல் கட்சிகளுக்கு லஞ்சமாகக் கொடுப்பதன்மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது சொந்த நலன்களை அரசாங்க கொள்கை முடிவுகளாகச் சாதித்துக் கொள்ளும், கியிட் ப்ரோ க்யோவ் (Quid pro quo) என்று சொல்லக்கூடிய அரசியல் கட்சிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பயனடைந்து கொள்வார்கள், மக்கள் ஏமாற்றப்படுவார்கள் என்ற வாதம் பிரச்சினையின் ஒரு பகுதி  மட்டுமே.

படிக்க : தேர்தல் நிதிப்பத்திரம்: ‘தேர்தல் ஜனநாயகத்திற்கு’ வெட்டப்பட்ட சவக்குழி!

மற்றொரு பக்கம், பா.ஜ.க கார்ப்பரேட் நிறுவனங்களை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற மத்திய முகமைகளை வைத்து மிரட்டி பணம் வசூலித்துள்ளது. இந்தவகையில்தான் பா.ஜ.க என்ற பாசிச கட்சி மற்ற கட்சிகளிடமிருந்து வேறுபடுகிறது. மற்ற காட்சிகளைப்போல கார்ப்பரேட் நலனை வெறுமனே முன்னிலைப்படுத்துவது மட்டுமல்ல பா.ஜ.க.வின் அரசியல் இருப்பு, பா.ஜ.க என்ற பாசிச கட்சி அதன் சொந்த இருப்பிலே பாசிசத்தன்மையானது.

2014 ஆம் ஆண்டில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து நடைபெற்ற எந்த தேர்தலும் “சொல்லிக்கொள்ளப்படும் ஜனநாயக முறைப்படி” நடத்தப்படவில்லை. காரணம், பா.ஜ.க தேர்தலுக்கு முன்பு, பின்பு, தேர்தலின்போது என அனைத்து வகைகளிலும் தனது பாசிச நடவடிக்கைகளின் மூலமாகத் தன்னை ஆட்சியில் தக்கவைத்துக் கொள்ளும் நிலையே இருந்தது. மேலும் இந்த தேர்தல் நிதிப் பத்திரங்கள் என்பது பா.ஜ.க பயன்படுத்தும் பலவகைப்பட்ட பாசிச வழிகளில் ஒன்று மட்டுமே.

சீனிச்சாமி

காசா மீது பட்டினிப் போரை தொடுத்திருக்கும் பாசிச இஸ்ரேல் அரசு!

பாலஸ்தீன மக்களின் மீதான இனப்படுகொலையை 167 நாட்களாக தொடர்ந்து நடத்திவரும் பாசிச இஸ்ரேல் அரசு, பாலஸ்தீனத்தின் காசா மக்கள் மீது தற்போது பட்டினிப் போரை தொடுத்துள்ளது. “காசாவின் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு பொருட்களை வழங்க மறுத்து பட்டினியில் போடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது இஸ்ரேல்” என ஐ.நா. மனித உரிமைகள் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் டர்க் கூறுகையில், “காசாவிற்குள் அடிப்படையான உதவிகள் நுழைவதற்கு இஸ்ரேல் அரசு தொடர்ச்சியான கட்டுப்பாடுகளை விதித்து வருவதும், அது தொடர்ந்து போர் விதிமுறைகளை மதிக்காமல் மக்கள்விரோத போக்கை கடைப்பிடிப்பதும், பட்டினியை ஒரு போர் முறையாக பயன்படுத்துவதுமாக இருக்கிறது, இது ஒரு போர்க்குற்றமாகும்” என கூறியுள்ளார். மேலும், காசாவில் சிறை வைக்கப்பட்டுள்ள மக்களில் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.

படிக்க : காசா இனப்படுகொலையின் அடையாளமாக மாறிய யசான் கஃபர்னா

வோல்கர் டர்க்கின் அறிக்கை குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையிடம் கேட்டதற்கு, “அதை நாங்கள் கவனிக்கவோ அல்லது நேரில் பார்க்கவோ இல்லை” என பதிலளித்தது.  இந்த மறுப்பு காசா மக்கள் மீதான இஸ்ரேலின் பட்டினி போரை ஆதரிப்பது என்பதை தாண்டி வேறென்னவாக இருக்க முடியும்?

பட்டினி குறியீட்டை வெளியிடும் அமைப்பான சர்வதேச ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு வகைப்பாடு (IPC) கூட்டமைப்பு மூலம் மார்ச் 19 அன்று காசா நிலையை பற்றி வெளியிட்ட அறிக்கையில் “பஞ்சம் நெருங்கிவிட்டது” எனவும்  ”இறப்புகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது” எனவும் வெளியிட்டுள்ளது. ஐ.பி.சி. (IPC) மதிப்பீட்டின் படி, காசாவில் 1.1 மில்லியன் மக்கள் உணவு பற்றாக்குறையால் பட்டினியில் இறப்பை எதிர் நோக்கி இருந்து வருவதாகவும், இது ஒரு பேரழிவு நோக்கி செல்லும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது. மேலும், “ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு வகைப்பாடு அமைப்பால் இதுவரை பதிவு செய்யப்பட்டதில், இது மிகப்பெரிய அளவிலான பட்டினி பேரழிவை எதிர்கொள்ளும் எண்ணிக்கையாகும்” என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ தெரிவித்துள்ளார்.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு முன் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 1 சதவிகிதத்திற்கும் குறைவான குழந்தைகளே ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருந்துள்ளனர். ஆனால், தற்போது 12.4 முதல் 16.5 சதவிகிதம் வரை குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது. காசாவில் உள்ள ஒவ்வொருவரும் உணவு பற்றாக்குறையுடன் வாழ்வதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா பகுதி தற்போது உணவுப் பற்றாக்குறையுடன் “அவசர காலக்கட்டத்தில்” இருப்பதாகவும், வடக்கு காசா பகுதி ஒரு சில மாதங்களுக்குள் பஞ்சத்திற்கு தள்ளப்படும் எனவும் அறிக்கை கூறுகிறது. பாசிச இஸ்ரேல் அரசு, ஒருபுறம் காசா மக்களை பல வழிகளில் பட்டினிக்கு தள்ளுவதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கும் அமைப்புகளையும் தடுத்து நிறுத்தி மேலும் மேலும் காசா மக்களை பட்டினிக்குள் தள்ளுகிறது.

மார்ச் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் வடக்கு காசாவிற்கான உதவிப் பணிகளில் ஈடுபட்டவர்களை இஸ்ரேல் அதிகாரிகள் தடுத்துள்ளனர். உதவிப் பணிகளுக்கு ஈடுபடுவதற்குச் சென்ற,  24 குழுக்களில் 11 குழுக்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது. மீதமுள்ள குழுக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டன அல்லது ஒத்திவைக்கப்பட்டன.

ஏற்கெனவே வடக்கு காசாவில் உள்ள மக்கள் உணவு கிடைக்காமல் பறவைகள், விதைகள், விலங்குகளின் தீவனம், காட்டு புல் ஆகியவற்றை சாப்பிட்டு வருகின்றனர். குழந்தைகள் அதை தேடித்தேடி அள்ளி செல்லும் வீடியோக்கள் மனதை உலுக்குகின்றன. இந்நிலையில்தான் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியை அதிகரிக்காவிட்டால் வடக்கு காசாவில் 3,00,000 மக்களை பஞ்சம் தாக்கும் என அறிக்கைகள் கூறுகிறது. கூடியவிரைவில் காசாவில் ஒரு நாளைக்கு 200-க்கும் மேற்பட்ட மக்கள் பட்டினியால் இறக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே, பிறந்தக் குழந்தைகள் மிகக் குறைந்த எடையில் பிறக்கின்றன மற்றும் பட்டினியால் மரணத்தின் விளிம்பில் குழந்தைகள் இருக்கின்றன என உலக சுகாதர அமைப்பின் செய்தி தொடர்பாளர் “மார்கரெட் ஹாரிஸ் ” கூறுகிறார்.

தற்போது இஸ்ரேல் அரசானது முதலுதவிப் பணியாளர்களை கொன்றொழிப்பதை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறது. அல்ஜசீராவின் சமீபத்திய தகவலின்படி, 23 முதலுதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது உணவு விநியோகத் தொழிலாளர் மீது நடத்தப்படும் திட்டமிட்ட தாக்குதல் என உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். இதனோடு மட்டுமல்லாமல் அல்-ஷிஃபா மருத்துவமனை மீதான தாக்குதலை நடத்தி காசா மக்கள் பலரையும் கொன்று வருகிறது இஸ்ரேல் இராணுவம்.

இந்நிலையில், இரஃபா எல்லையிலுள்ள மக்கள் மீது தரைவழி தாக்குதல் நடத்தப்  போவதாக இஸ்ரேல் இராணுவம் திட்டமிட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இஸ்ரேலின் போர் விவகாரத்துறை அமைச்சர் ரான் டெர்மர் கூறுகையில் “ரஃபா மீது தரைவழி தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தாலும், அதனை மீறி அந்த நகரின் மீது படையெடுப்பதில் உறுதியாக இருக்கிறோம்” என கூறியிருக்கிறார். காசாவில் போரை தொடர்ந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ரஃபா எல்லையில்தான் தஞ்சமடைந்துள்ளனர். இத்தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தாலும் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி தொடர வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது.

படிக்க : காசா: உணவுக்காக காத்திருக்கும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவரும் பாசிச இஸ்ரேல் அரசு

காசாவில் கடந்த 167 நாட்களாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 31,988 பேர் உயிரிழந்துள்ளனர். 74,188 பேர் காயமடைந்துள்ளனர். இந்த இனஅழிப்பை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் அமெரிக்க – இஸ்ரேல் கூட்டு சதிநடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச நாடுகள் அனைத்தும் ஒன்றாக குரல் எழுப்ப வேண்டியுள்ளது. ஜோபைடனும், நெதன்யாகுவும் போர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டும். பட்டினியை முடிவுக்கு கொண்டுவரவும், பஞ்சத்தின் அனைத்து அபாயத்தைத் தவிர்ப்பதற்கும் தேவையான உதவிப் பொருட்கள் தடையின்றி நுழைவதற்கும் விநியோகிப்பதற்கும் இஸ்ரேலின் தடையை நீக்கவும் உலக மக்கள் குரல் கொடுக்க வேண்டும்.

செய்தி ஆதாரம் : Countercurrents

அருமை தோழனே பகத்சிங்! || கவிதை

0

அருமை தோழனே பகத்சிங்
நீ இன்னும் சாகவில்லை

கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சங்களிலும்
இளைஞர்களின் நெஞ்சங்களிலும்
நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்!

பகத்சிங் நீ ஓர் இளம்புயல்!!
உன்னை ஆளும் வர்க்கம் அச்சுறுத்தியது
ஆனால், அடங்கவில்லை
உன் தேச விடுதலை உணர்வு!


படிக்க : தோழர் பகத்சிங்கும் மதவெறி சர்வாதிகாரமும்!


விடுதலைப் போராட்டத்தில்
வீரத்துடன் பங்கேற்றாய்
வீதி வீதியாய் சென்று
துண்டு பிரசுரங்களை கொடுத்தாய்!

நாட்டின் விடுதலைக்காக
குடும்பத்தை தியாகம் செய்தாய்!
காதலை தியாகம் செய்தாய்!

தியாகம் நிறைந்த
உன் வாழ்க்கையில்
போராட்டங்களுக்கு
பஞ்சமில்லை தோழனே!

போர்க்களமே
உன் வாழ்க்கையானது
போராட்டமே
உன் மகிழ்ச்சி!

நாடாளுமன்றத்தில்
குண்டு வீசினாய்..
அடக்குமுறை சட்டத்தை
திரும்ப பெற்றிட!

நாடாளுமன்றத்தில்
நீ எழுப்பிய முழக்கம்
நாட்டையே
திரும்பிப் பார்க்க
வைத்தது தோழனே!

இன்குலாப் ஜிந்தாபாத்
நீ எழுப்பிய முழக்கம்!
ஆங்கிலேயர்களின் தலையில்
இடியென இறங்கியது!

கைது செய்தது காவல்துறை
உன்னை கலங்கவில்லை
உன் நெஞ்சம்!

சிறைக் கம்பிகளுக்கு பின்னால்
அடைத்த போதும்
அங்கேயும் தொடர்ந்தது
உன்னுடைய போராட்டம்
சிறை கைதிகளுக்காக!

நீதிமன்றமும்
நிலைகுலைந்து போனது
உன்னுடைய வார்த்தைகளால்!

தூக்கு தண்டனை வழங்கிய போதும்
துவளவில்லை நீ!
துணிந்தே தூக்கு கயிற்றை
முத்தமிட்டாய்!

நாட்டின் விடுதலைக்காக
உன்னையே
அர்ப்பணித்துக் கொண்டாய்
தோழனே!!


படிக்க : பகத்சிங்கும் இளைஞர்களின் எதிர்காலமும்


உன்னுடைய தியாகம்
இளைஞர்களுக்கு
அரசியலை கற்றுக் கொடுத்தது….

உன்னுடைய தியாகம்
இளைஞர்களின் மனதில்
விதையாய் விழுந்தது!

கோடான கோடி
தாய்களுக்கு மகனாய்
சகோதரர்களுக்கு சகோதரனாய்
மாணவர் படையின் தலைவனாய்
இளைஞர்களின் இதயம் நிறைந்த வீரனாய்..
நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்
தோழனே!!

நன்றி: பு.மா.இ.மு, தமிழ்நாடு – முகநூலிலிருந்து…

தோழர் பகத்சிங்கும் மதவெறி சர்வாதிகாரமும்!

மார்ச் 23 – தோழர் பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் நினைவு நாள்!
தோழர் பகத்சிங்கும் மதவெறி சர்வாதிகாரமும்!

ர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங்கப் பரிவார் கும்பல் அதிதீவிர கார்ப்பரேட் சுரண்டலையும், வர்ணாசிரம ஏற்றத்தாழ்வுகளையும் அடிப்படையாகக்கொண்ட இந்து ராஷ்டிர பயங்கரவாத அரசைக் கட்டியமைப்பதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. சமூகத்தின் அடித்தளத்தில் பார்ப்பன இந்துமதவெறியை வெகு தீவிரமாகப் பரப்பிக் கொண்டிருக்கிறது. இத்தகு சூழலில் தோழர் பகத்சிங்கின் மதம் தொடர்பான கருத்துக்களைப் பொருத்திப் பார்ப்பது அவசியமானது.

மதங்களின் சடங்குகள் நம்மைத் தீண்டத்தகுந்தவர்கள் என்றும் தீண்டத்தகாதவர்கள் என்றும் பிரித்துவிட்டதாக எழுதுகிறார். இந்தக் குறுகிய மற்றும் பிளவுபடுத்தும் மதங்களால் மக்களிடையே உண்மையான ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது என்றும் அவர் உணர்ந்தார். “நம்மைப் பொறுத்தவரைச் சுதந்திரம் என்பது பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் முடிவு என்று இருக்கக்கூடாது. நமது முழு சுதந்திரம் என்பது சாதி மற்றும் மதத் தடைகள் இல்லாமல் மகிழ்ச்சியாக ஒன்றாக வாழ்வதைக் குறிக்கிறது” என்றும் கூறுகிறார்.


படிக்க : பகத்சிங்கும் இளைஞர்களின் எதிர்காலமும்


அன்றைய காலகட்டத்தில் மதக்கலவரங்களை தூண்டிய அரசியல் தலைவர்களைக் கண்டிக்கிறார். இந்திய அரசியல் தலைமை முற்றிலும் திவாலாகிவிட்டது என்று உறுதிப்படக் கூறுகிறார்.

“வகுப்பு வன்முறையைத் தூண்டுவதற்கு மற்றொரு கருவி பத்திரிகைகளில் எழுதுபவர்கள். பத்திரிகைத் தொழில் ஒரு காலத்தில் உன்னதமானதாகக் கருதப்பட்டது. ஆனால், இன்று அது ஒரு மோசமான குழப்பத்தில் உள்ளது. இந்த மக்கள் சமூகங்களுக்கு இடையே வெறுப்பு மற்றும் பகைமையின் நிலையான உணர்வைத் தூண்டும் தலைப்புகளுடன் மற்றொரு சமூகத்திற்கு எதிராக எழுதுகிறார்கள். இந்தக் கொந்தளிப்பான காலங்களில் தங்கள் மனதிலும் இதயத்திலும் சமநிலையைக் கொண்டிருக்கக் கூடிய சில செய்தியாளர்கள் மட்டுமே இருந்தனர்” என்று எழுதுகிறார் பகத்சிங். இது நிகழ்காலத்திலும் துல்லியமாகப் பொருந்துகிறதல்லவா? அப்படி சமநிலையைப் பேணுகின்ற பத்திரிகையாளர்கள் இன்று பாசிச மோடி கும்பலால் வேட்டையாடப்படுகிறார்கள்.

…சுதந்திரத்தை நம் கண்முன்னே பார்த்த அந்த நாட்கள் எங்கே? சுதந்திரம் என்பது மீண்டும் தொலைதூரக் கனவாகிவிட்ட காலகட்டத்தை பாருங்கள்! இந்தக் கலவரங்கள் அதன் குற்றவாளிகளுக்குக் கொடுத்த மூன்றாவதும் இறுதியானதுமான பலன் இது! ஒத்துழையாமை நாட்களில், அதன் இருப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த அதிகாரத்துவம் இப்போது அதன் வேர்களை ஆழப்படுத்தியுள்ளது. அவை தற்போதைய சூழலில் அசைக்க முடியாததாகிவிட்டன” என்று குறிப்பிடுகிறார்.

மதக் கலவரங்கள் அடிப்படையில், சுரண்டும் வர்க்கத்திற்குத் தனது அதிகாரத்தைப் பலப்படுத்தும் கருவியாக இருப்பதை இன்று வெளிப்படையாகக் காண்கிறோம். அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கம் என பாசிச மோடி கும்பலின் சர்வாதிகார அடக்குமுறைகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதை காண்கிறோம். நூறாண்டுக்கு முன்பு தோழர் பகத்சிங் கூறியது மெய்ப்பிக்கப்படுகிறது.

பகத்சிங் மேலும் “எனவே, வகுப்புவாத கலவரங்களுக்கு ஏதேனும் தீர்வு இருந்தால், அது இந்தியாவின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே அடையமுடியும்” என்று குறிப்பிட்டுச் சொல்கிறார்.

“மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதை தடுக்க வர்க்க உணர்வுதான் இன்றைய தேவை. ஏழை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அவர்களின் உண்மையான எதிரிகள் முதலாளிகள் என்பதைத் தெளிவாகக் கற்பிக்க வேண்டும். எனவே, நீங்கள் அவர்களின் (வகுப்பு வாதிகள்) தந்திரங்களில் கவனமாக இருக்க வேண்டும். அவற்றைக் கண்மூடித்தனமாகப் பின்பற்ற வேண்டாம்” என்று மக்களை எச்சரிக்கிறார்.


படிக்க : பகத்சிங்-ஐ சோவியத் யூனியனுக்கு அழைத்த தோழர் ஸ்டாலின் !


“உலகின் ஏழைகள், இனம், நிறம், மதம் அல்லது தேசம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒரே உரிமைகளைப் பெற்றுள்ளனர். நிறம், மதம், இனம், பிராந்தியம் ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாடுகளைத் துடைத்து, ஆட்சி அதிகாரத்தை உங்கள் கைகளில் எடுத்துச் செல்ல ஒன்றுபடுவதுதான் உங்கள் நல்வாழ்வுக்கு அடிப்படை. அவ்வாறு முயற்சி செய்வதன்மூலம், நீங்கள் எதையும் இழக்கப்போவதில்லை. ஆனால், ஒரு நாள் உங்கள் தளைகள் உடைந்து உங்களைப் பொருளாதார அவநம்பிக்கையிலிருந்து விடுவிக்கும்” என்று தனது சர்வதேசிய பாட்டாளி வர்க்க உணர்வை வெளிப்படுத்தி உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார்.

உழைக்கும் மக்களின் முதன்மை எதிரிகளான ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி ; அம்பானி – அதானி பாசிச கும்பலின் சுரண்டல் மற்றும் மதவெறி சர்வாதிகாரத்திற்கு எதிராகத் தோழர் பகத்சிங்கின் வழியில் நாம் இனம், நிறம், மதம் கடந்து உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். முதலாளித்துவ கும்பல்களின் கைகளில் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பதன்மூலம் ஒருகாலும் பாசிச சர்வாதிகாரத்தை வீழ்த்த முடியாது. அதற்கு உழைக்கும் மக்களின் அதிகாரத்தை முன்னிபந்தனையாகக் கொண்ட பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுதான் ஒரே வழி. அதுவே தோழர் பகத்சிங்கின் வழி!

அய்யனார்

ஆளுநர் ஆர்.என்.ரவி உடனே தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும்! || மக்கள் அதிகாரம்

21.03.2024

ஆளுநர் ஆர்.என்.ரவி உடனே தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்
அல்லது வெளியேற்றப்பட வேண்டும்!

மக்கள் அதிகாரம் அறிக்கை

திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடிக்கு அமைச்சர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என அறிவித்த ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடுமையான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறது. முதல்வரும் அமைச்சரவையும் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டவர்தான் ஆளுநர் என்று பலமுறை உச்சநீதிமன்றம் தன் தீர்ப்புகளின் வழியாக தெரியப்படுத்தியுள்ளது.

ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு ஒரு சில மாதங்களுக்கு முன்பு தாக்கல் செய்த வழக்கில் கூட உச்சநீதிமன்றம் ஆர்.என்.ரவிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது.


படிக்க : டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது! || மக்கள் அதிகாரம் கண்டனம்


பாசிச பா.ஜ.க., கடந்த 10 ஆண்டுகளில் தனக்கு ஒத்து வராத அல்லது தனது வழிக்கு வராத மாநில அரசுகளை கலைப்பதற்கும் ஒடுக்குவதற்கும் ஆளுநர்களைத்தான் பயன்படுத்துகிறது.

ஊழல் வழக்கில் பெற்ற தண்டனையை எதிர்த்து பொன்முடி, மேல்முறையீடு செய்ததால் உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்திருந்தது. அதனால் அவர் தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை மீண்டும் பெற்றார். இதையடுத்து பொன்முடியை மீண்டும் அமைச்சராக்குவதற்கு ஆளுநருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் அனுப்பி இருந்தார்.

உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்தி மட்டுமே வைத்திருப்பதாகவும் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வரவில்லை என்று கூறி முதலமைச்சரின் கோரிக்கையை மறுத்திருந்தார் ரவி.

பொன்முடி ஊழல் செய்தாரா? உத்தமரா? என்பதல்ல தற்போதைய பிரச்சினை. மாநில அரசின் அனைத்து உரிமைகளையும் காலில்போட்டு மிதிக்கும் ரவியின் இன்னொரு நடவடிக்கையே இது.

இதற்கு எதிராக தமிழ்நாடு அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது விசாரணை செய்த உச்சநீதிமன்றம், ரவி அரசியலமைப்பின் படி செயல்படவில்லை என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை என்றும் கடும் கண்டனம் தெரிவித்து, தீர்ப்பை நடைமுறைப்படுத்த இன்று(21.03.24) ஒரு நாள் இரவு மட்டுமே ஆளுநர் ரவிக்கு கெடு விதித்துள்ளது.


படிக்க : ஆதிஷ் அகர்வாலா – கட்டமைப்பிற்குள் பதுங்கியிருந்த கார்ப்பரேட் அடியாள்


இனியும் தமிழ்நாட்டில் இருப்பதற்கு ஆர்.என்.ரவிக்கு அருகதை இல்லை. உடனே அவர் தனது பதவியை ராஜினாமா செய்து தமிழ்நாட்டில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவியை ராஜினாமா செய்ய மறுக்கும் பட்சத்தில், அவரை தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது! || மக்கள் அதிகாரம் கண்டனம்

21.03.2024

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது!

மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை

ன்றைய தினம்(21.03.24) டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனைத் தொடர்ந்து பாசிச பா.ஜ.க. அரசால் கைது செய்யப்படும் இரண்டாவது முதலமைச்சர் கெஜ்ரிவால்.

நாடாளுமன்றத் தேர்தலை அறிவித்துவிட்டு எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது, அதன்மூலம் வெற்றி பெறுவது என்ற பாசிச பா.ஜ.க-வின் நிகழ்ச்சி நிரல் நடைமுறைக்கு வந்திருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அனைத்து விதமான தில்லுமுல்லுகளையும் முறைகேடுகளையும் செய்வதற்கு பாசிச பா.ஜ.க. தயாராகிவிட்டது என்பதையே இந்த சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை ஆகிய மூன்று ஏவல் துறைகளையும் ஏவி தனக்கு வேண்டாத கட்சிகளை பிளவுபடுத்துவதும் கட்சித் தலைவர்களை கைது செய்வதும் ஆட்சிகளை சீர்குலைக்கும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன. அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை, தேசிய புலனாய்வு முகமை ஆகியவைகள் கலைக்கப்பட வேண்டும் என்பதை முன்னிறுத்தி மக்கள் போராட்டங்களை உருவாக்க வேண்டும்.

நாட்டின் அனைத்து துறைகளும் பாசிசமயமாகிவரும் இச்சூழலில் நாடாளுமன்றத் தேர்தல் எப்படி நடக்கும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இது. மக்கள் போராட்டங்கள் மட்டுமே பாசிச நடவடிக்கைகளுக்கு எதிரான தடுப்பரண்களாக அமையும்..

பாசிச பா.ஜ.க-வை தேர்தலில் வீழ்த்த வேண்டுமென்றாலும் கூட அதற்கு மாபெரும் மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டிய தேவை உள்ளது என்று மக்கள் அதிகாரம் தெரிவித்துக் கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

ஒடிசா: ஓர் ஆண்டைக் கடந்த சிஜிமாலி சுரங்க எதிர்ப்பு போராட்டம்!

டிசாவின் சிஜிமாலி பகுதியில் உள்ள பழங்குடி மக்கள், மோடி அரசின் ஆதரவு பெற்ற நாசகர வேதாந்தா நிறுவனத்தின் கோரப் பசியில் இருந்து தங்கள் மலைகளைக் காப்பாற்றுவதற்காக கடந்த ஓர் ஆண்டிற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநிலத்தில் ஆளும் நவீன் பட்நாயக் அரசின் கடும் அடக்குமுறைகளை மீறியும், மக்கள் உறுதியுடன் தொடர்ந்து போராடி வருகின்றனர். இச்சுரங்க திட்டத்தால் பாதிக்கப்படும் சிஜிமாலி மலைகளைச் சுற்றியுள்ள 50 கிராம மக்கள் “சிஜிமாலி சுரக்ஷா சமிதி” என்ற அமைப்பை உருவாக்கி தங்கள் போராட்டங்களை கட்டியமைத்து வருகின்றனர்.

கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 15 அன்று, ஒடிசா அரசாங்கத்தால் நடத்தப்பட்ட ஏலத்தில் சிஜிமாலியில் பாக்சைட் சுரங்கத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. அலுமினியத்தை உற்பத்தி செய்வதற்கான முக்கிய தாதுப்பொருளாக பாக்சைட் உள்ளது. இந்தியாவின் பாக்சைட் இருப்புகளில் பாதிக்கும் மேல் ஒடிசாவில் உள்ளது. அவற்றில் 95 சதவிகிதம் ராயகவுடா, கோராபுட் மற்றும் காலாஹண்டி மாவட்டங்களில் உள்ளது. சிஜிமாலி மலை ராயகவுடா மாவட்டத்திற்குள் அமைந்துள்ளது.

சிஜிமாலி பகுதியில் கோந்த் மற்றும் பிரஜா என்று அழைக்கப்படும் பழங்குடி மக்களும் தலித் பிரிவை சேர்ந்த மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக சிஜிமாலி மலைகளையே சார்ந்து உள்ளதாலும் ஒடிசாவின் பிற பகுதிகளில் செயல்பட்டுவரும் சுரங்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்திருப்பதாலும், சுரங்க திட்டத்திற்கு எதிராக உறுதியாக போராடி வருகின்றனர். மேலும் தங்கள் போராட்டங்களுக்கு வேதாந்தா நிறுவனத்தை விரட்டியடித்த நியாம்கிரி மக்களிடமும் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

ராயகடா மாவட்டத்தின் பந்தேஜி கிராமத்தைச் சேர்ந்த லாபன்யா நாயக், “எங்கள் வாழ்வுக்கும் வாழ்வாதாரத்துக்கும் ஒரே ஆதாரம் சிஜிமாலிதான். சிஜிமாலி மலைகள் இல்லாமல் எங்கள் நிலையை நினைத்துப் பார்க்க முடியாது. சுரங்க திட்டத்திற்காக சிஜிமாலி மலைகளை வேதாந்தாவிடம் ஒப்படைக்கும் அரசின் முடிவுக்கு நாங்கள் எதிரானவர்கள். எனவே அரசின் இத்தகைய மக்கள் விரோத கொள்கையை அமைதியான இயக்கத்தின் மூலம் எதிர்க்கிறோம்” என்று கூறுகிறார்.

ஆனால், வேதாந்தா நிறுவனத்தின் அடியாட்படையைப் போல செயல்படும் ஒடிசா மாநில போலீசு, பழங்குடி மக்கள் மீது கடும் அடக்குமுறைகளை செலுத்தி வருகிறது. இந்த அடக்குமுறைகள் எல்லாம் வெளிஉலகத்திற்கு பெரிய அளவில் தெரிவதில்லை. இவற்றை பற்றி ஒரு சில ஆங்கில ஊடகங்களை தவிர, பிற ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதில்லை. எந்த தேர்தல் அரசியல் கட்சிகளும் இம்மக்களின் போராட்டத்தை ஆதரிக்கவில்லை.


படிக்க: ஒடிசா: வேதாந்தாவின் நலன் காக்க துப்பாக்கி முனையில் கருத்துக்கேட்பு கூட்டம்!


எனவே, சிஜிமாலி மலைகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்துவரும் பழங்குடி மக்கள், மாநில போலீசு மற்றும் துணை இராணுவப் படையால் தங்களுக்கு என்ன நேருமோ என்ற ஒருவித அச்ச உணர்விலேயே ஒவ்வொரு நொடிப் பொழுதையும் கழித்து நரக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாநில அரசு, சுரங்க எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை தாங்கிவரும் ஒன்பது போராட்டத் தலைவர்கள் மீது கொடிய பாசிச சட்டமான UAPA- வை பாய்ச்சியது. 200 பேர் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 22 பேரை சிறையில் அடைத்தது. மேலும், அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி, பொது விசாரணை என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்த மாநில அரசு திட்டமிட்டது. அக்கூட்டத்தில் பெரும்பான்மையான பழங்குடி மக்கள் சுரங்க திட்டத்தை எதிர்க்கவில்லை என்று அறிவித்து, சுரங்க திட்டத்தை செயல்படுத்துவதற்காக சதி வேலையில் ஈடுபட முடிவு செய்திருந்தது.

போலீசின் சதித்திட்டத்தை முன் அனுமானித்த பழங்குடி மக்கள், ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி பொது விசாரணையை ஒத்திவைக்குமாறு முறையிட்டனர். அக்கடித்தில் “16.10.2023 அன்று திட்டமிடப்பட்ட பொது விசாரணை வேதாந்தா நிறுவனத்தின் குண்டர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு, சுரங்க திட்டத்திற்கு எதிரான எதிர்ப்புக் குரல் அழிந்துவிடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம். எனவே எங்கள் பகுதிகளில் காவல்துறை அடக்குமுறை, கட்டுப்பாடு மற்றும் எங்கள் கிராம மக்கள் சட்டவிரோதக் காவலில் இருந்து விடுவிக்கப்படும் வரை பொது விசாரணை நிறுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தனர்.

ஆனால், மாநில போலீசு மற்றும் துணை இராணுவப் படை உதவியுடன், துப்பாக்கி முனையில் பொது விசாரணையை நடத்தியது நவீன் பட்நாயக் அரசு. மக்களை பொது விசாரணைக்கு வரவிடாமல் தடுப்பதற்காக, பொது விசாரணை நடைபெறும் இடத்திற்கு சென்ற மக்கள் மீது போலீசு கொடூரமாகத் தாக்குதல் நடத்தியது. கூட்டத்திற்கு வருவதற்கு முன்னாலேயே கிராமத்திற்கு சென்று சுரங்க திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு மிரட்டியது. பொது விசாரணையைப் போல டிசம்பர் மாதத்திலும் போலீசின் துணையுடன் கிராம மக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு கிராம சபைக் கூட்டங்களை நடத்தியது.

புவனேஸ்வரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான நரேந்திர மொஹந்தி, “பொது விசாரணைக்குப் பிறகு, சிஜிமாலியில் உள்ள மக்களின் நிலை குறித்து அரசாங்கத்திடம் எந்த பதிலும் இல்லை. அவர்கள் தங்கள் நிலத்தை மீட்பதற்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசாங்கமும் வேதாந்தா நிறுவனத்தின் அதிகாரிகளும் தங்களுடைய வஞ்சகத்தின் மூலம் மக்களை வற்புறுத்த முயற்சிக்கின்றனர்” என்று கூறுகிறார்.


படிக்க: ஒடிசா: பழங்குடி மக்களின் நிலத்தை அபகரிக்கத் திட்டமிடும் நவீன் பட்நாயக் அரசு!


இவ்வாறு சிஜிமாலி மலைகளைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் ஓர் ஆண்டாய் போலீசு மற்றும் துணை இராணுவப் படைகளின் கடும் அடக்குமுறைகளை மீறியும் தங்கள் போராட்டங்களுக்கு எந்த அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்காத நிலையிலும் உறுதியுடன் போராடி வருகின்றனர். ஓர் ஆண்டாய் சுரங்க திட்டத்தை செயல்படுத்த முடியாததற்கு பழங்குடி மக்களின் போராட்ட உறுதியே காரணமாகும்.

மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து காடுகளையும் மலைகளையும் கார்ப்பரேட்டுகள் சூறையாடுவது தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற கார்ப்பரேட் கும்பல்கள் கனிம வளங்களை சூறையாடுவதற்காக வனப் பாதுகாப்பு திருத்த சட்டம் 2023-ஐ கடந்த ஆண்டில் நிறைவேற்றி உள்ளதால் இந்நிலை மேலும் மோசமாகியுள்ளது. அதேசமயம், இந்த சூறையாடலுக்கு எதிரான பழங்குடியின மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களும் தீவிரமடைந்து வருகின்றன.

அத்தகைய தன்னெழுச்சியான போராட்டங்களுடன் டெல்லி சலோ 2.0 போராட்டத்தை போன்று பிற வர்க்கங்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை இணைக்கவும் வளர்தெடுக்கவும் வேண்டும். அதில்தான் இந்திய உழைக்கும் வர்க்கத்தை கருமேகங்கள் போல் சூழ்ந்துள்ள ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்துவதற்கான பாதை அடங்கியுள்ளது.

நன்றி: மக்தூப் மீடியா


உதயன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஒளிபரப்பு சேவை (ஒழுங்குமுறை) மசோதா 2023: கருத்து சுதந்திரத்திற்கு கட்டப்படும் கல்லறை!

டந்த பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி, “தி கேரவன்”(The Caravan) பத்திரிகையின் பிப்ரவரி மாத இதழில் “இராணுவ நிலையத்திலிருந்து அலறல்கள்” (Screams from the Army Post) என்ற தலைப்பில் காஷ்மீரில் நடக்கும் ராணுவ அட்டூழியங்கள் குறித்தான ஒரு கட்டுரை வெளியானது. 24 மணி நேரத்திற்குள் இணையதளத்திலிருந்து அக்கட்டுரையை நீக்கவேண்டும் என்றும் நீக்கத் தவறினால் முழு இணையதளமும் தடை செய்யப்படும் என்றும் தி கேரவன் பத்திரிகைக்கு மிரட்டல் விடுத்திருந்தது ஒன்றிய பாசிச மோடி அரசு. அதே மாதத்தில் 22-ஆம் தேதி விவசாயிகள் போரட்டம் குறித்து செய்திகள் வெளியிடும் சில குறிப்பிட்ட கணக்குகள் மற்றும் பதிவுகளை முடக்குமாறு எக்ஸ் தளத்திற்கு (ட்விட்டர்) மோடி அரசால் உத்தரவிடப்பட்டதும் அம்பலமாகியது. இதுபோன்று மோடி அரசு ஊடகங்கள் மீதும் கருத்து சுதந்திரத்தின் மீதும் ஒடுக்குமுறையை ஏவுவது முதன்முறையல்ல.

மோடி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பெயரளவில் நிலவும் ஜனநாயகக் கட்டமைப்பை ஒழித்துவிட்டு பாசிச சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியமானது கருத்து சுதந்திரத்தை ஒழித்துக்கட்டுவது. பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் செயல்பாட்டளர்கள், பத்திரிகையாளர்கள் மீது ஊபா போடுவது; காவி பயங்கரவாதிகளை வைத்து அவர்களை படுகொலை செய்வது; தனக்கு பணியாத ஊடக நிறுவனங்களில் ரெய்டு நடத்துவது; அதானி – அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் மூலம் ஊடக நிறுவனங்களை கைப்பற்றுவது என மோடி அரசு பல பாசிச ஒடுக்குமுறைகளை செலுத்தி வருகிறது. பத்திரிகை முதல் டிஜிட்டல் ஊடகங்கள் வரை எல்லா தளங்களையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு பல்வேறு பாசிச சட்டத்திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது.

இதன் உச்சக்கட்டமாக இனி மோடி அரசின் கண்காணிப்பிற்கு உட்படாமல் எந்தவொரு கருத்தும், செய்தியும் வெளியே வராது என்ற நிலையை உருவாக்கும் விதமாக ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதா 2023 (Broadcasting Services (Regulation) Bill) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பர் 10-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இம்மசோதாவின் வரைவு அறிக்கை மீது கருத்துகளை தெரிவிக்க அளித்திருந்த காலவரம்பு இந்தாண்டு ஜனவரி 27-ஆம் தேதியோடு நிறைவடைந்துள்ளது. இம்மசோதாவிற்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பத்திரிகையாளர்களின் தேசியக் கூட்டமைப்பு, டெல்லி பத்திரிகையாளர்கள் சங்கம், எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா போன்ற பல்வேறு ஊடக அமைப்புகள் இந்த ஒளிபரப்பு சேவை மசோதாவை “தணிக்கைக்கான நுழைவாயில்” (Gateway to Censorship) என விமர்சித்துள்ளன.


படிக்க: தி கேரவன் பத்திரிகையின் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் பாசிச மோடி அரசை கண்டிக்கின்றோம்!


ஏனெனில், இதுவரை நடைமுறையில் இருந்துவந்த கேபிள் நெட்வொர்க்குகள் (ஒழுங்குமுறை) சட்டம் 1995-க்கு பதிலாகத் தான் தற்போது ஒளிபரப்பு சேவை (ஒழுங்குமுறை) மசோதா 2023 முன்வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நடைமுறையில் இருந்த சட்டப்படி கேபிள் டிவி, செயற்கைக்கோள், இணைய ஒளிபரப்பு, வானொலி ஒலிபரப்பு முதலியவைதான் “ஒளிபரப்பு நெட்வொர்க்” என்ற வரம்பிற்குள் இருந்தது. தற்போது புதிய மசோதாவில், நெட்ஃபிளிக்ஸ், அமேசான், டிஸ்னி+ஹாட்ஸ்டார் போன்ற ஓ.டி.டி. தளங்கள் (OTT- Over The Top), டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் என அனைத்து தளங்களும் ஒளிபரப்பு நெட்வொர்க் என்ற வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் நிகழ்ச்சி (Programme) என்பதற்கு இம்மசோதாவில் தெளிவான வரையறை கொடுக்கப்படவில்லை. ஒளிபரப்பு நெட்வொர்க்கை பயன்படுத்தி அனுப்பப்படும் ஆடியோ, வீடியோ அல்லது ஆடியோ வீடியோ உள்ளடக்கம், அடையாளம் (Sign), சமிக்ஞைகள் (Signals), எழுத்து (Text), படங்கள் என அனைத்தும் உள்ளடங்கும் என்று மிகவும் பொதுவாக குறிப்படப்பட்டுள்ளது. அதாவது, ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், கதைகள், நாடகங்கள், ஆவணப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் தொடர்கள், நேரலைகள் இணைய தளங்களில் எழுதப்படும் கட்டுரைகள், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் வெளியாகும் வீடியோக்கள் என அனைத்தையும் இனி மோடி அரசு தணிக்கை செய்யப்போகிறது.

பாசிசக் கும்பிலின் பிடியில் டிஜிட்டல் ஊடகங்கள்

தற்போது முன்வைக்கப்பட்ட ஒளிபரப்பு சேவை மசோதாவின்படி, ஒளிபரப்பு நெட்வொர்க் ஆப்ரேட்டர்கள் ஒன்றிய அரசிடம் பதிவு செய்திருந்தால் மட்டுமே சேவையை வழங்க முடியும். ஓ.டி.டி. தளத்தைப் பொறுத்தவரை, தளத்தின் பார்வையாளர்கள், சந்தாதாரர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் இருக்கவேண்டும்; அதுகுறித்து ஒன்றிய அரசுக்கு தரவுகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இம்மசோதாவில், “ஒளிபரப்பாளர்கள் மற்றும் நெட்வொர்க் ஆப்ரேட்டர்களால் சுய ஒழுங்குமுறை” (Self-regulation by broadcasters and broadcasting network operators), “சுய ஒழுங்குமுறை நிறுவனங்கள்” (Self-regulatory Organisations), “ஒளிபரப்பு ஆலோசனைக் குழு” (Broadcast Advisory Council) என மூன்று ஒழுங்குமுறை கட்டமைப்புகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மூன்று கட்டமைப்பிலும் ஒன்றிய அரசுதான் முடிவெடுக்கும் இடத்தில் உள்ளது.

முதலாவதாக, சுய ஒழுங்குமுறையின்படி, ஒவ்வொரு ஒளிபரப்பாளரும் அல்லது ஆப்ரேட்டரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட “உள்ளடக்க மதிப்பீட்டுக் கமிட்டியை” (Content Evaluation Committee) நிறுவ வேண்டும். இந்த கமிட்டியில் எத்தனை பேர் இருக்க வேண்டும், அதன் செயல்பாட்டு விவரங்கள் என அனைத்தும் ஒன்றிய அரசால் தீர்மானிக்கப்படும். இதன்படி இனி “உள்ளடக்க மதிப்பீட்டுக் கமிட்டி”யால் சான்றளிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை மட்டுமே ஒளிபரப்பாளர்கள் ஒளிபரப்ப முடியும்.

செய்தி ஊடகங்களை பொறுத்தவரை, இந்த விதிமுறையால் ஆசிரியர் குழுக்கள் செல்லாக் காசாக்கப்படும். இதுகுறித்து பேசிய “தி குயிண்ட்” இணையதளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான ரிது கபூர், “செய்தி ஊடகங்களை பொறுத்தவரை ஒவ்வொரு நிறுவனங்களும் என்ன செய்தி எப்படி வெளியிட வேண்டும் என தங்களுக்கென வரையறை வகுத்து செயல்பட்டு கொண்டிருக்கும். இதற்கென ஆசிரியர் குழு இருக்கும். ஆனால் அதையும் மீறி உள்ளடக்க மதிப்பீட்டுக் குழு எதற்கு?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


படிக்க: கருத்துச் சுதந்திரத்திற்கு கல்லறை கட்டிவரும் பாசிச மோடி அரசு!


கூடுதலாக, இந்தக் கமிட்டியால் சான்றளிக்கப்படாத நிகழ்ச்சிகளை பரிந்துரைக்கவும் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆக, இனி என்ன சேனலில் என்ன நிகழ்ச்சி வெளியிடப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்போவது பா.ஜ.க. அரசுதான். ஏற்கெனவே, தொலைக்காட்சி சேனல்களில் முற்போக்கு நிகழ்ச்சிகளை ஒழித்துக்கட்டி பல சேனல்களில் இந்துத்துவத்துக்கு தோதான புராணக் குப்பைகள் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இனி ஓ.டி.டி. மற்றும் டிஜிட்டல் ஊடகங்களுக்கும் இதே நிலைதான் ஏற்படப்போகிறது. பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிரான கருத்துகளையோ, ஏன் முற்போக்கு கருத்துகளையோ கூட இனி எந்த இடத்திலும் ஒளிபரப்ப முடியாது.

இரண்டாவதாக, இந்த மசோதாவின்படி சுய ஒழுங்குமுறை நிறுவனங்களில் அனைத்து ஒளிபரப்பாளர்கள்/ ஆப்ரேட்டர்கள் இணைய வேண்டும். இந்த நிறுவனம் அனைத்து குறைகள், முறையீடுகள், தனிப்பட்ட ஒளிபரப்பாளர்களால் கவனிக்கப்படாத பிற விஷயங்களை நிவர்த்தி செய்து வழிகாட்டுதல்களை வெளியிடுவது, அரசால் தீர்மானிக்கப்பட்ட “விதிமுறைகள்” (codes)- இன்னும் பொதுவெளியில் அறிவிக்கவில்லை, அடிப்படையில் செயல்படுவதை உறுதி செய்வது முதலியவற்றை செய்யும். இந்த விதிமுறைகளுக்கு உடன்படாத ஒளிபரப்பாளர்கள்/ ஆப்ரேட்டர்களை தற்காலிகமாக இடைநீக்கம் செய்வது, உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது, எச்சரிக்கை அல்லது 5 லட்சம் வரையிலான அபராதம் விதிப்பது போன்ற அதிகாரங்கள் இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, மேலே குறிப்பிட்டிருந்த கமிட்டியின் தணிக்கையை மீறி பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிரான அல்லது முற்போக்கு கருத்து கொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டால், அதற்கு எதிராக இந்த சுய ஒழுங்குமுறை நிறுவனத்தில் புகாரளிக்கலாம். இந்த புகார்கள் மீது இந்நிறுவனம் விசாரணை நடத்தி தண்டனை வழங்கும். சான்றாக, சமீபத்தில் “நெட் ஃபிளிக்ஸ்” தளத்தில் வெளியான அன்னபூரணி படத்திற்கு சங்கிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அத்தளத்தில் இருந்து அப்படம் நீக்கப்பட்டது. இம்மசோதா நடைமுறைக்கு வந்தால் பாசிச மோடி அரசுக்கு அடங்க மறுக்கும் தளங்கள் முற்றிலுமாக முடக்கப்படும்.

மூன்றாவதாக, ஒளிபரப்பு ஆலோசனைக் குழு (Broadcasting Advisory Council) ஒன்று அமைக்கப்படும். இத்தகைய குழுவின் தலைவராக, ஊடகத்துறையில் 25 வருட அனுபவம் கொண்ட ஒருவர் நியமிக்கப்படுவார். மேலும், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், வெளிவிவகாரத்துறை அமைச்சகம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து அதிகாரப்பூர்வ அதிகாரிகளும், அவர்களுடன் ஊடகம், பொழுதுபோக்கு, ஒளிபரப்பு, குழந்தைகள் மற்றும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், மனித உரிமை, சட்டம் போன்ற துறைகளில் அனுபவம் கொண்ட ஐந்து ‘சுயாதீன நபர்கள்’(independent persons) இக்குழுவில் நியமிக்கப்படுவார்கள். இதில் கேலிக்கூத்து என்னவென்றால் இவர்கள் அனைவரையும் ஒன்றிய அரசுதான் நியமிக்கும்.


படிக்க: “தி காஷ்மீர் வாலா” சுதந்திர ஊடகம் முடக்கம்: கருத்துச் சுதந்திரத்தின் மீதான மோடி அரசின் கொலைவெறித் தாக்குதல்!


சுய ஒழுங்குமுறை நிறுவனங்களில் அளிக்கப்பட்ட புகார்கள் மீதான மேல்முறையீடுகளை இந்த ஆலோசனைக்குழு விசாரிக்கும். ஆனால் ஆலோசனைக்குழுவால், பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியுமே ஒழிய முடிவெடுக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்குதான் உள்ளது. ஆக, ஒளிபரப்பு சேவை மீதான அனைத்து அதிகாரங்களும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கப்போகிறது. வெறும் கண்துடைப்பிற்காகத்தான் இத்தனைக் குழுக்கள், நிறுவனங்கள் அமைக்கப்படுகின்றன.

மேலும், இவ்வரைவு மசோதா பிரிவு 31-இன் படி, ஒளிபரப்பு நெட்வொர்க்குகள் மற்றும் சேவைகளின் உபகரணங்களை ஆய்வு செய்ய, இடைமறிக்க, கண்காணிக்க மற்றும் பறிமுதல் செய்ய ஒன்றிய அரசிற்கு அதிகாரம் உள்ளது. மேலும் பிரிவு 35-இன் படி, எந்தவொரு ஒளிபரப்பு நெட்வொர்க்கின் நிகழ்ச்சி அல்லது விளம்பரத்தை நீக்க அல்லது மாற்றியமைக்க ஒன்றிய அரசு உத்தரவிட முடியும். விதிமுறைகளை மீறும் ஒளிபரப்பு நெட்வொர்க்குகளுக்கு, குறிப்பிட்ட மணிநேரங்களுக்கு சேனலில் எந்த நிகழ்ச்சியும் ஒளிபரப்பப்படாமல் நிறுத்திவைக்கவும் அதிகாரமளிக்கிறது. இது டிஜிட்டல் ஊடகம் (இ-பேப்பர்ஸ், நியூஸ் போர்ட்டல், இணையதளம், சமூக ஊடகம்) போன்று செய்தி மற்றும் நடப்பு விவகார நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் எந்தவொரு நிறுவனத்திற்கும் அல்லது நபருக்கும்  பொருந்தும்.

மேலும், பாசிச அரசு‘பொது நலன் கருதி’ அவசியம் என்று கருதும்பட்சத்தில், ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் எந்த ஒளிபரப்பு சேவைகளும் வழங்காதவாறு நிறுத்தி வைக்கவும், ஒளிபரப்பு நெட்வொர்க் ஆப்ரேட்டர்கள் செயல்படுவதை தடை செய்யவும் இம்மசோதா ஒன்றிய அரசுக்கு அதிகாரத்தை வழங்குகிறது. அதாவது மோடி அரசுக்கு எதிரான விஷயங்கள் பேசுபொருளாவது, பாசிசக் கும்பலுக்கு எதிரான போராட்டங்கள் வலுபெறுவது போன்றவற்றை தடுக்க இப்பாசிச நடவடிக்கையை மோடி அரசு மேற்கொள்ளும். இதன் மூலம், மிச்சமீதமிருந்த கருத்து சுதந்திரத்தையும் துடைத்தெறிந்து மொத்தமாக காவி, இந்துத்துவ கருத்தை திணிக்கவல்லதாக ஒளிபரப்பு சேவையை மாற்றியமைக்க இச்சட்டத்தை கொண்டு வந்துள்ளது மோடி கும்பல்.

பாசிஸ்டுகளின் ஆட்சியில், கருத்துரிமைக்கு இடமில்லை

ஏற்கெனவே டிஜிட்டல் ஊடகங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு மோடி அரசு தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ஐ (IT Rules) கொண்டுவந்திருந்தது. தற்போது ஓ.டி.டி., சமூக ஊடக நிறுவனங்கள் என எந்தெந்த தளங்களில் எல்லாம் கருத்து தெரிவிக்க முடியுமோ அவை அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கேற்ப இந்த ஒளிபரப்பு சேவை மசோதாவை பாசிச மோடி அரசு கொண்டுவந்துள்ளது.

இவ்வாறு டிஜிட்டல் ஊடகங்களை கட்டுப்படுத்துவதில் மோடி அரசு தீவிரமாக இருப்பதற்கு காரணம், பிரதான ஊடகங்கள் (Mainstream) பெரும்பாலானவை மோடி அரசின் ஊதுகுழலாக மாறிவிட்டன. தற்போது டிஜிட்டல் ஊடகங்கள்தான் இதற்கு மாற்றாக பார்க்கப்படுகின்றன. இன்று மக்கள்விரோத திட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக யூடியூப் சேனல்கள் போன்ற சமூக ஊடகங்களில்தான் பெரும் விவாதங்கள் கிளம்புகின்றன. இது மோடி அரசிற்கு நன்கு தெரியும்.

பா.ஜ.க. அரசின் ஒடுக்குமுறையால் ஊடகங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பத்திரிகையாளர்கள், கார்ப்பரேட் ஊடகங்களில் தங்கள் கருத்துகளை சொல்ல முடியாத பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள் என பலரும் யூடியூப் சேனல்களில் தங்களுக்கென செய்தி ஊடகத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். குறிப்பிடத்தக்க அளவில் மோடி அரசுக்கு எதிராக வினையாற்றும் தளமாக இருக்கக்கூடிய இந்த யூடியூப் தளத்தை, இனி “உள்ளடக்க மதிப்பீட்டு குழுவால்” கண்காணிப்புக்குட்படுத்தி தணிக்கை செய்து ஒடுக்க முடியும்.

பத்திரிகையாளர்கள், செயற்பாட்டளர்கள் மட்டுமின்றி, மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போன்றவர்களும் முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக பக்கங்களில் மீம்கள், ட்ரோல் வீடியோக்கள் மூலமாக சமூக அநீதிகளுக்கு எதிராக வினையாற்றி வருகின்றனர். சான்றாக மணிப்பூர் கலவரத்தின்போது, இணையத்தடை மற்றும் இந்திய ஊடகங்களின் கள்ளமௌனத்தால் குக்கி பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல்கள் மூடிமறைக்கப்பட்டபோது சமூக ஊடகங்களின் வழியாகத்தான் அவை வெளியுலகிற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், இம்மசோதா சட்டமாக்கப்பட்டால் அரசை விமர்சிக்கும் கருத்துகளும், தளங்களும் மொத்தமாக துடைத்தெறியப்படும் அபாயம் உள்ளது. பொதுவெளியில் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிரான கருத்துகள் வடிக்கட்டப்பட்டு, இந்துத்துவ பாசிச கருத்துக்கள் மட்டுமே பேசுபொருளாக்கப்படும்.

கடந்தாண்டு, “தொலைத்தொடர்பு மசோதா 2023”, “டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் 2023”, “அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு சட்டம் 2023”, “தகவல் தொழில்நுட்ப விதிகள் திருத்தம் 2023” என கருத்துரிமையை பறிக்கும், ஊடகங்களை ஒடுக்கும், மக்களின் தனியுரிமையை கேள்விக்குள்ளாக்கும் பல பாசிச சட்டங்களை மோடி அரசு கொண்டு வந்தது. தற்போது கருத்து சுதந்திரத்தை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டி, பாசிச சர்வாதிகாரத்தை செப்பனிடும் வகையில் ஒளிபரப்பு மசோதாவை கொண்டுவரத் துடிக்கிறது.


வெண்பா

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



திருச்சி – திருவெறும்பூரில் இஸ்லாமியர்களை தொழுகை நடத்தவிடாமல் பா.ஜ.க குண்டர்படை அட்டூழியம்

திருச்சி – திருவெறும்பூரில் இஸ்லாமியர்களை தொழுகை நடத்தவிடாமல்
பா.ஜ.க. குண்டர்படை அட்டூழியம்

தமிழ்நாட்டிலும் மசூதிகளை இலக்காக்கும் பா.ஜ.க குண்டர்கள்!

திருச்சி மாவட்டம்  திருவெறும்பூரை அடுத்த வேங்கூர் –  இந்திரா நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுவரும் பள்ளிவாசலில் ரமலான் நோன்பை முன்னிட்டு வழிபாடு நடத்தச் சென்ற இஸ்லாமியர்களை திருவெறும்பூர் பா.ஜ.க. ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட பா.ஜ.க. குண்டர்கள் தடுத்து தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.

“இது பூங்கா இடம்; இந்த இடத்தில் நீங்கள் பள்ளிவாசல் கட்ட அனுமதிக்க மாட்டோம்; அங்கு தொழுகையும் நடத்த விடமாட்டோம்” என்று சில நாட்களாகவே அங்கு வழிபாடு நடத்தச் செல்பவர்களை காவி குண்டர்கள் அச்சுறுத்தி வருகின்றனர். மேலும் நீதிமன்றத்தில் தடையாணையும் பெற்றுள்ளனர். அதனால் இஸ்லாமியர்கள் அவ்விடத்தில் கட்டுமானப்பணிகளை நிறுத்திவிட்டு வழிபாடு மட்டுமே நடத்தி வந்தனர்.

மசூதி கட்டுவதற்கான இடம் உரிய பத்திரங்களோடு வைத்திருக்கும் போதே, “விதி மீறல்; பள்ளிவாசல் இந்த இடத்தில் அமையக் கூடாது; அருகில் உள்ளவர்களிடம் அனுமதி பெற வேண்டும்”  என புதுப்புது நியாயங்களை பேசிக்கொண்டே கலவரம் உண்டாக்க முயற்சித்து வருகிறது பா.ஜ.க. கும்பல்.


படிக்க: தூத்துக்குடி பெரியார் மையத்தின் மீது தாக்குதல் ; RSS, BJPயை தடை செய்!


இதற்கிடையே நேற்று மாலை அப்பகுதிக்கு தொழுகை நடத்தச் சென்ற இஸ்லாமியர்களை சங்கிகளின் தூண்டுதலின் பேரில் போலீஸ் தடுத்து நிறுத்த முயன்றனர்.

இதைக் கண்டித்து நேற்று (18-03-2024) இரவு திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ., மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் அப்பகுதி இஸ்லாமியர்கள் பெருந்திரளாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சியாக பா.ஜ.க. குண்டர் படையும் அப்பகுதியில் குவிந்தது.

இதன் பிறகு வட்டாட்சியர், காவல் கண்காணிப்பாளர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பேச்சுவார்த்தையில் “சட்டபூர்வமாக எங்கள் தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் நிலைநாட்டி நாங்கள் பள்ளிவாசலைக் கட்டிக்கொள்கிறோம்; அதுவரை பள்ளிவாசலில் வழிபாடு நடத்தவும், மிரட்டல் விடுக்கும் பா.ஜ.க-வினரிடம் இருந்து என்களை பாதுகாக்கவும்  வேண்டும்” என இஸ்லாமியர்கள் கோரிக்கை வைத்தனர்.


படிக்க: உத்தராகண்ட் பொது சிவில் சட்டம்: இந்துராஷ்டிரத்திற்கு அடித்தளமிடும் பாசிஸ்டுகள்!


வடமாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகளை ஏவிவிடும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. காவி கும்பல், தமிழ்நாட்டிலும் வெகுநாட்களாகவே அதற்கான செயல்திட்டத்தில் உள்ளது; தனக்கிருக்கும் அதிகார பலத்தின் துணையோடு, கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் கவவரத்தை உண்டாக்க முயற்சித்து வருகிறது என்பது இந்த சம்பவத்திலிருந்து மீண்டும் நிரூபனமாகியுள்ளது.

சமீபத்தில் குஜராத் பல்கலைக்கழகத்தில் விடுதி அறையில் தொழுகையில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கையை சேர்ந்த ஐந்து மாணவர்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தியது சங்க பரிவார கும்பல். இப்போது தமிழ்நாட்டிலேயே தொழுகை நடத்துவதற்கும் மசூதி கட்டுவதற்கும் எங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று மிரட்டல் விடுக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. சங்க பரிவார கும்பலின் இத்தகைய தாக்குதல்களை ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து முறியடிக்காவிட்டால் குஜராத்திலும் பசு வளைய மாநிலங்களிலும் நடந்தது போன்ற கலவரங்கள் நாளை தமிழ்நாட்டிலும் ஏற்படும் அபாயம் உள்ளது.


வினவு செய்தியாளர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கல்வித்துறையை விழுங்கத் துடிக்கும் கார்ப்பரேட்மயம்! தீர்வு என்ன?

நிரந்தரப் பணி கோரும் தற்காலிக – பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம், சம வேலைக்கு சம ஊதியம் கோரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம், ஆசிரியர் – விரிவுரையாளர் பணி உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் போராட்டம், நீட் எதிர்ப்பு – அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கக் கோரும் அமைப்புகளின் போராட்டங்கள் மற்றும் கூட்டங்கள் என கல்வித்துறை சார்ந்த போராட்டங்களும், நடவடிக்கைகளும் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் அதிகரித்து வருகின்றன. இன்னொருபுறத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்ந்து ஏராளமான அறிவிப்புகளும், திட்டங்களும் அரசு சார்பில் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் கூட, தமிழ்நாட்டிலேயே அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஷிவ் நாடார் குழுமம், ஒவ்வொரு ஆண்டும் பின்தங்கிய ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த 200 மாணவர்களை இலவசமாகப் படிக்க வைப்பதாக தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இம்மாதிரியான அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தங்கள், திட்டங்களின் நோக்கம் என்ன? இந்தியக் கல்வித்துறை சந்திக்கும் சவால்களின் ஆணிவேர் எது? என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடை காணாமல், தமது கோரிக்கைகளுக்காகப் போராடுவோர் தீர்வை நோக்கி முன்னேற முடியாது. பிரச்சினைகளின் வெளிப்பாடுகளை மட்டும் எதிர்த்து போராடாமல் அதற்கு பின்னால் இருக்கும் காரணத்தை உணர்ந்து போராட்டத்தை முன்னெடுக்கும் போதுதான் உண்மையான தீர்வை நோக்கி நகர முடியும்.

கல்வித்துறை மீதான மோடி அரசின் தாக்குதல்கள்!

ஒன்றியத்தில் பாசிச மோடி கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த பத்தாண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு கல்வியிலும், கல்விசார் நிறுவனங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒருபுறம் தனியார்மயத்தின் உச்சமாகிய கார்ப்பரேட்மயம்; மறுபுறம் ஆர்.எஸ்.எஸ்-இன் மூர்க்கமான காவிமயம் என இரண்டும் ஒருசேர கல்வியில் திணிக்கப்பட்டு வருகிறது. சாராம்சத்தில் இவ்விரண்டுமே, கல்வியை சாதாரண உழைக்கும் மக்களிடமிருந்து விலக்கி, பணம் காய்க்கும் கருவியாகவும் குறிப்பிட்ட சாதி – பணக்காரப் பிரிவினருக்கானதாகவும் மாற்றும் நோக்கம் கொண்டவை.

மோடி அரசு கொண்டு வந்திருக்கும் தேசிய கல்விக் கொள்கை-2020, பள்ளிக்கல்வி முதல் பல்கலைக்கழக ஆய்வுப் படிப்பு வரை அனைத்தையும் காவி – கார்ப்பரேட்  நலனிற்கு ஏற்ப மாற்றியமைப்பதற்கான நடைமுறைத் திட்டங்களை முன்வைக்கிறது. 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு; இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு; அனைத்து வகை உயர்கல்விக்கும் நீட், கியூட் போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுகள்; அரசுக் கல்வி நிறுவனங்களைத் தன்னாட்சி அதிகாரம் கொண்டவையாக மாற்றி அரசு நிதியளிப்பை நிறுத்துவது; பல்கலைக்கழக மானியக் குழுவைக் (யு.ஜி.சி.) கலைத்துவிட்டு உயர்கல்வி ஆணையத்தை உருவாக்குவது; வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் நுழைய அனுமதி; இணையவழிக் கல்வியைக் கட்டாயமாக்குவதன் மூலம் கார்ப்பரேட் – டிஜிட்டல் ஆதிக்கம்; பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட அம்சங்களைக் கற்றுத்தர என்.ஜி.ஓ., தன்னார்வலர்கள் என்ற பெயரில் காவிக் கும்பலை உள்நுழைப்பது; சிறுபான்மையின மாணவர்களின் கல்வி உதவித்தொகையை ஒழிப்பது; முற்போக்குக் கருத்துகளைப் பேசும் ஆசிரியர்கள் – மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி. குண்டர்கள் மூலம் தாக்குதல் நடத்துவது, துறைசார் நடவடிக்கை எடுப்பது; பாடத் திட்டங்களில் வரலாற்றைத் திரிப்பது, அறிவியல் கருத்துகளை நீக்குவது, புராண – இதிகாசப் புளுகுகளைச் சேர்ப்பது; கல்வித்துறை செயலர்கள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் என அனைத்து உயர்பதவிகளிலும் ஆர்.எஸ்.எஸ். அடியாட்களை நியமிப்பது என கல்வித்துறையில் கார்ப்பரேட்-காவிமய நடவடிக்கைகள் தினசரி நிகழ்வுகளாகிவிட்டன. ஏற்கெனவே இருந்துவந்த கல்விசார் நடவடிக்கைகள், நிறுவனங்கள் அனைத்தையும் காவி – கார்ப்பரேட்மயத்திற்கேற்ப மறுஒழுங்கமைப்பு – மறுகட்டமைப்பு செய்வதைத் தீவிரமாக்கி வருகிறது மோடி கும்பல்.

திமுக அரசின் ‘மாநிலக் கல்விக்கொள்கை’

மோடி அரசின் இத்தாக்குதல்களை நாடெங்கிலும் உள்ள ஜனநாயக – முற்போக்கு சக்திகள் தொடர்ந்து எதிர்த்து வந்தாலும், போராட்டக்களத்தில் தமிழ்நாடு முன்னோடியாக இருந்து வருகிறது. இந்த பின்னணியில் இருந்துதான் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், தேசிய கல்விக் கொள்கையை நிராகரித்து தமிழ்நாட்டிற்கென தனியாக மாநிலக் கல்விக்கொள்கை வகுக்கப்படும் என்று அறிவித்தது. ஆட்சிக்கு வந்த பின்னர், மாநிலக் கல்விக்கொள்கை வகுப்பதற்கான குழுவையும் அமைத்தது. ஆனால், “தேசிய கல்விக்கொள்கையின் ‘சரியான’ அம்சங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்” என்பதே அதன் உள்ளடக்கமாக இருந்தது. இதனை அம்பலப்படுத்திதான் மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த பேரா.ஜவஹர்நேசன் அக்குழுவிலிருந்து வெளியேறினார்.

“தேசியக் கல்விக்கொள்கை 2020-இன் அடியைப் பின்பற்றி மாநிலக் கல்விக்கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழு முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. எனவே, இந்த உயர்நிலைக் குழு உருவாக்கும் மாநிலக் கல்விக்கொள்கை பெயரில் மட்டும் மாற்றம் கொண்ட, தனியார்மய, வணிகமய, கார்ப்பரேட், சந்தை, சனாதன சக்திகளின் நலன்களைக் கொண்டிருக்கின்ற தேசியக் கல்விக்கொள்கை 2020-இன் மற்றொரு வடிவமாகவே இருக்கும்” என்று குற்றச்சாட்டை முன்வைத்தார்.


படிக்க: கல்வித்துறையில் கார்ப்பரேட் ஆதிக்கம்! | பேராசிரியர் வீ.அரசு


இந்தக் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு அரசு பதிலேதும் சொல்லாமல் கள்ளமௌனம் சாதித்தது. மாநிலக் கல்விக்கொள்கையை வகுக்கும் குழுவின் தலைவரோ, “இதெல்லாம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்” என புறங்கையால் தள்ளிவிட்டு கடந்து சென்றார். மேலும், கடந்தாண்டு அக்டோபர் மாதத்திலேயே, இன்னும் ஒரு வாரத்தில் மாநில கல்விக்கொள்கையின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில் இன்றுவரை அதன் நிலை என்னவென அறிய முடியவில்லை.

இதற்கிடையே, மாநிலத்திற்கென புதிதாக கல்விக்கொள்கை வகுக்கப்படும் என சொல்லிக் கொண்டே, இடைப்பட்ட காலத்தில் தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்திவரும் அனைத்து திட்டங்களும் தேசிய கல்விக்கொள்கையை அடியொற்றிய திட்டங்களாகவே உள்ளன. தமிழில் பெயர் வைத்துக் கொள்வதால் மட்டும் உள்ளடக்கம் மாறிவிடுமா என்ன?

கார்ப்பரேட்மயம் – கல்வித்துறை மறுகட்டமைப்பு

தி.மு.க. அரசின் நடவடிக்கைகளை கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக கல்வியில் நடைமுறைப்படுத்தப்படும் வழக்கமான தனியார்மய நடவடிக்கையாக மட்டும் பார்க்கக் கூடாது, இவை தற்காலத்திய நவீன வடிவத்திலான கார்ப்பரேட்மய நடவடிக்கைகள் ஆகும்.

1980-களின் இறுதியில் எம்.ஜி.ஆர். ஆட்சியின் இறுதிக்காலத்தில் துவங்கிய கல்வி தனியார்மயமானது, அரசு கல்வி நிறுவனங்களுக்கு இணையாக தனியார் மழலையர் பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை துவங்குவது, தனியார் கல்லூரிகள் துவங்குவது என்ற வகையில் இருந்தது. இது கல்வி தனியார்மயத்தின் முதல் கட்டமாக அமைந்தது.

2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு சி.பி.எஸ்.இ. எனப்படும் ஒன்றிய அரசின் பாடத்திட்டம், ஐ.சி.எஸ்.இ. எனப்படும் பன்னாட்டு பாடத்திட்டம் ஆகியவற்றைக் கற்பிக்கும் உண்டு உறைவிடப் பள்ளிகள் (இவை பெரும்பாலும் சங்கிலித் தொடர் நிறுவனங்கள் போல அமைந்தன) தொடங்கப்பட்டன. தனியார் கல்லூரிகளின் வளர்ச்சிப்போக்கில், பாடத்திட்டங்களைத் தாங்களே தீர்மானித்துக்கொள்ளும், வெளிநாட்டுக் கல்வி  நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போட்டுக்கொள்ளும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் நடைமுறைக்கு வந்தன. இது கல்வி தனியார்மயத்தின் இரண்டாவது கட்டமாகும்.

தற்போதைய கட்டத்தில், மேற்சொன்ன எல்லா நிறுவனங்களையும் உள்ளடக்கிய, அரசுக் கல்வி நிறுவனங்களையும் தின்று செரிக்கக்கூடிய கார்ப்பரேட்மயம் நடைமுறைக்கு வந்துள்ளது. கல்வியில் ஒவ்வொரு துறையையும் தனித்தனியே பிரித்து தனிச்சிறப்புமயமாக்கல், மையப்படுத்துதல், டிஜிட்டல்மயமாக்கல், கார்ப்பரேட்மயமாக்கல் என்ற வகையில் இந்த மறுகட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கூடுதலாக, வட இந்தியாவில், காவிகளின் நலனுக்கேற்ற வகையில் இந்த மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.


படிக்க: அநீதிக்கு எதிராகப் போராடவேண்டும் என்ற உணர்வை கொடுக்கும் கல்வி! | பேராசிரியர் ப.சிவக்குமார்


கடந்த இரண்டாண்டுகளாக தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வரும் வானவில் மன்றம், நம்ம ஸ்கூல் பவுண்டேசன், இல்லம் தேடிக் கல்வி, எமிஸ் பதிவேடு, எண்ணும் எழுத்தும், சிற்பி திட்டம், நான் முதல்வன் திட்டம், பொதுப்பாடத்திட்டம், பொது வினாத்தாள் முறை போன்றவற்றின் உள்ளடக்கம் மேற்சொன்ன வகையிலான கார்ப்பரேட்மயமே.

கற்பித்தலை பல்வேறு பிரிவுகளாக பிரிப்பது, இல்லம் தேடிக்கல்வி திட்டம், வானவில் மன்றம், இணையவழிக் கல்வி மூலம் மாணவர்களை வழக்கமான பாடத்திட்டம் மற்றும் வகுப்பறை முறைக்கு வெளியே கொண்டு செல்வது, அதனை மையப்படுத்துவது, பிறகு கார்ப்பரேட் நிறுவனங்களை அதில் நுழைப்பது என்பதே தனிச்சிறப்புமயமாக்கல், மையப்படுத்துதல், கார்ப்பரேட்மயமாக்கலின் நிகழ்ச்சிப்போக்காகும். இவற்றில் என்.ஜி.ஓ-க்களும், கார்ப்பரேட் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் பங்கெடுக்கின்றன. இதுமட்டுமின்றி, அனைத்து கற்றல் – கற்பித்தல், இதர பல நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக டிஜிட்டல் தளங்களில் பதியப்பட்டு, பிக் டேட்டா (Big Data) எனப்படும் பெரும் தரவுக்களஞ்சியம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், ஒட்டுமொத்த கல்வித்துறையின் நடவடிக்கைகளைப் பற்றிய தரவுகளையும் கார்ப்பரேட்டுகளால் எளிதாகப் பெற முடிகிறது. இதிலிருந்து, கார்ப்பரேட்டுகள் தமது அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட்டுக் கொள்ள முடியும்.

இன்னொரு பக்கத்தில், பள்ளிக் கட்டடங்கள் பராமரிப்பு, துப்புரவுப் பணிகள், உணவு சமைத்தல், பாதுகாப்பு என கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தையே தனித்தனியே பிரிப்பது, அவற்றை மையப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் கீழ் கண்காணிப்பது, இப்பணிகளை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் என்ற பெயரில் இயங்கும் கார்ப்பரேட்டுகள் கட்டுப்பாட்டில் விட்டுவிடுவது என்ற போக்கும் தீவிரமடைந்து வருகிறது.

இதற்கு முன்பு, அரசு – தனியார் கூட்டுத்துவ அடிப்படையிலும், கார்ப்பரேட்டுகளின் விருப்பம் சார்ந்தும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி நிர்வாகங்களை, கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொள்ளும் திட்டம் நடைமுறையில் இருந்தது. இத்திட்டம், கார்ப்பரேட்டுகளுக்கு அவ்வளவாக இலாபம் தரவில்லை என்பதால், புதிய வேடம் பூண்டு வந்துள்ளதே தி.மு.க. அரசு அமல்படுத்தியுள்ள அரசு பள்ளிகளில்  கார்ப்பரேட்டுகளை உள்நுழைக்கும் நம்ம ஸ்கூல் திட்டமாகும். கல்வி வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு விலகிக்கொள்வது என்ற காட்ஸ் (GATS) ஒப்பந்த அடிப்படையில்தான் இவையாவும் நடந்து வருகின்றன. ஆனால், காலத்திற்கேற்ப நடவடிக்கைகளின் பரிணாமம் மாறிக்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மனப்பாடக் கல்வியை பெருமளவு ஊக்குவித்த பாடத்திட்டத்தில் இருந்து சற்று மாறுபட்டதாக சமச்சீர் பாடத்திட்டமும், செயல்வழிக் கற்றலும் அமைந்தன. ஆனால், அது போதுமானதாக இல்லை. அதிலும் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தற்போது மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. இவ்வாறு பாடத்திட்டங்களுமே குழந்தைகளையும் அவர்களது உளவியல் புரிதலையும் மையப்படுத்தியதாக இல்லாமல், தொழிற்துறைக்குத் தேவையான திறன் சார்ந்தவையாக தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றன. மாணவர்களை சமூக மனிதர்களாக வளர்ப்பது, நன்னெறிப்படுத்துவதே கல்வியின் நோக்கம் என்றில்லாமல் புதிய பொருளாதார நிலைமைகளுக்கேற்ற நவீனக் கொத்தடிமைகளை உருவாக்குவதாக மாற்றப்பட்டுள்ளது.

இன்னொரு பக்கத்தில், மாணவர்கள் கூடிப் படிக்கும் – ஆசிரியர்கள் நேரடியாகக் கற்பிக்கும் வழமையான வகுப்பறை முறையை, இணைய வழிக் கற்றல் மூலம் பதிலீடு செய்வது என்ற போக்கு அதிகரித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் வேறுவழியற்ற நிலையில் இணையவழிக் கற்றல் நடைமுறைக்கு வந்தது போலத் தோன்றினாலும், இது முற்றுமுழுதாக கார்ப்பரேட் – டிஜிட்டல் ஆதிக்கத்தின் இலக்கிலிருந்து செயல்படுத்தப்பட்டதே. இதற்கான சான்றுதான் யு.ஜி.சி. வழிகாட்டியுள்ள கலவைமுறைக் கற்றல் முறையாகும் (Blended Learning). கார்ப்பரேட் – டிஜிட்டல் ஆதிக்கம் அரசின் நோக்கமாக இல்லாவிட்டால், பல இலட்சம் பேர் ஆசிரியர், விரிவுரையாளர் பணிகளுக்குப் படித்துவிட்டு அற்பக்கூலிக்கு தனியார் கல்வி நிறுவனங்களிலும், சம்பந்தமில்லாத வேலைகளிலும் உழன்று கொண்டிருக்கும் ஒரு நாட்டில், கட்டாயமாக 40 சதவிகித பாடங்களை இணைய வழியில்தான் கற்பிக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? இவற்றின் பின்னே ஏகாதிபத்திய, டிஜிட்டல் கல்வி நிறுவனக் கொள்ளைதான் பிரதானமாக அடங்கியுள்ளது. இதற்கான சான்றுதான் பைஜூஸ்(Byjus) போன்ற கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களின் அசுர வளர்ச்சியாகும்.

கல்வி கட்டமைப்பில் சிறுசிறு மாற்றங்களைத் தொடர்ந்து செய்துவருவதன் மூலம் ஒட்டுமொத்த கட்டமைப்பையே மாற்றுகின்ற வகையில்தான் ஒன்றிய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. புதிதாக உருவாக்கவிருக்கும் கட்டமைப்புக்கான கொள்கை, இலக்குகள் எதையும் வெளிப்படையாக அவர்கள் அறிவிப்பதில்லை. அவர்களின் பல்வேறு நடவடிக்கைகளில் இருந்து நாமே புரிந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது. சான்றாக, ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை எதை நோக்கி இட்டுச் செல்கிறது என்பதுகூட ஓரளவு புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஆனால், மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் பூடகமானவையே. இவற்றின் பின்னே ஒளிந்திருக்கும் கொள்கை – இலக்குகளை அவ்வளவு எளிதாக நாம் அடையாளம் காண முடியாது.

தரப்படுத்தலா, இரகசியத் திட்டங்களா?

நாடு முழுவதிலும் பல இலட்சக்கணக்கான ஆசிரியர், விரிவுரையாளர், பேராசிரியர், ஆசிரியரல்லாத ஊழியர் பணியிடங்கள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழங்களில் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இந்த  காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான எண்ணிக்கையை காட்டிலும் பன்மடங்கு அதிகமான இளைஞர்கள் படித்துவிட்டு வேலையின்றி தவித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனாலும் ஒன்றிய, மாநில அரசுகள் இவர்களை நிரந்தரப் பணியாளர்களாக நியமனம் செய்யாமல், தற்காலிக, பகுதிநேர ஊழியர்களாக மட்டுமே நியமித்து வருகின்றன. ஆசிரியல்லாத இதர பணியிடங்களை அயல்பணி (அவுட்சோர்சிங்) மூலம் நிரப்பும் போக்கும் உருவாகி வருகிறது.

மற்றொருபுறம், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதியை அரசு தொடர்ந்து வெட்டி சுருக்குவதன் மூலமும் அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கத்தின் ஊழல் முறைகேட்டாலும் கல்வித்துறை திட்டமிட்டு சீரழிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 37,211 அரசுப் பள்ளிகளிகளில் பெரும்பாலானவை வகுப்பறை, ஆய்வுக்கூடங்கள், நூலகம், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல்தான் இயங்கி வருகின்றன. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு வாழ்வாதாரம் இழந்த உழைக்கும் மக்கள் பலர் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தபோதும் அம்மாணவர்களை தக்கவைத்து கொள்ளும் அளவிற்கு கூட அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதி இல்லை என்பதே எதார்த்த நிலையாகும். கட்டமைப்பு வசதி இல்லாததால் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவதை காரணம்காட்டி அரசு பள்ளிகளை இழுத்து மூடுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேற்சொன்ன வகையில் அரசுப் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும், ஆசிரியர் – ஊழியர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் மாணவர்களின் கற்றல்திறன் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தாத அரசு, தகைசால் பள்ளிகள் (School of Exellence), மாதிரி பள்ளிகள் (Model Schools) என ஏற்கெனவே இருக்கும் பள்ளிகள், மாணவர்களைத் தரம் பிரித்துக் கையாளத் தொடங்கியிருக்கிறது. 1000 மாணவர்களுக்கு அதிகமாகப் படிக்கும் பள்ளிகளை தகைசால் பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்து, போதிய ஆசிரியர் – அடிப்படை வசதிகள், ஆய்வக வசதிகள் செய்து தரப்போவதாக அரசு கூறுகிறது. 10-ஆம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள், மாநில – ஒன்றிய அளவிலான திறனறி தேர்வுகளில் முன்னிலை பெறும் மாணவர்களாகப் பொறுக்கியெடுத்து மாதிரிப்பள்ளிகள், சூப்பர் 30 போன்ற பெயர்களில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக சிறப்புப் பயிற்சிகள் கொடுத்து, பெரும் நிறுவனங்களில் படிக்கவும் வேலைக்குச் செல்லவும் உத்தரவாதம் செய்வதே அரசின் இலக்கு எனக் கூறப்படுகிறது.

1000 பேருக்கு மேல் படிக்கும் பள்ளிகளுக்கு செலுத்தும் கவனத்தை இதர பள்ளிகளுக்கு அரசு கொடுக்க மறுப்பது ஏன்? அங்கெல்லாம் மாணவர் சேர்க்கை குறைந்திருப்பதற்கான காரணங்கள் குறித்த அரசின் கருத்தென்ன? இதேபோல மாவட்டத்திற்கு சில மாணவர்களை மட்டும் வெற்றிபெற வைப்பது மட்டும் போதுமென்றால், மற்றவர்களின் நிலை குறித்து அரசின் பார்வை என்ன? இந்தப் போக்குகள்தான் மாநில அரசுக்கு ரகசியத் திட்டங்கள் இருப்பதை உறுதி செய்கின்றன. ஒட்டுமொத்த அரசுப் பள்ளிகளையும் மாணவர்களையும் தரப்படுத்த முயற்சி செய்யாமல், பொறுக்கியெடுத்து வளர்ப்பதன் மூலம், எதிர்காலத்தில் கார்ப்பரேட்டுக்கு தாரைவார்ப்பதற்கான முன்னோட்டமாகத்தான் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என நாம் குற்றம் சாட்டினால், அரசால் மறுக்க முடியாது.

நமது கவனம் குவிய வேண்டியது எங்கே?

கல்வித்துறையில் மேற்சொன்னவாறான கார்ப்பரேட் – டிஜிட்டல்மயமாக்கத்தை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது? ஆரம்ப காலத்திலிருந்தே கல்வி என்பது சமூகத்தின் பொருளாதார, உற்பத்தி நிலைமைகளுக்கேற்ப கட்டமைக்கப்படுவதாகவே இருந்து வந்துள்ளது. மாறிவரும் உற்பத்திமுறைக்குப் பொருத்தமாக கல்விமுறையும் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருகிறது. இன்றைய நிலைமையில், சமூகத்தில் உற்பத்திமுறை – பொருளாதாரத்தில் கார்ப்பரேட் – டிஜிட்டல்மயமே ஆதிக்கம் செலுத்துவதாக மாறி வருகிறது. தொழிற்துறை, விவசாயம், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், மருத்துவம் என அனைத்துத் துறைகளிலும் இந்தப் போக்கினை வெவ்வேறு அளவுகளில் நம்மால் கண்ணுற முடிகிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் கல்வித்துறையிலும் கார்ப்பரேட் – டிஜிட்டல்மயம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

தங்களுக்கு நிரந்தர வேலை வேண்டும் எனக் கோரும் தற்காலிக – பகுதிநேர ஆசிரியர்கள், சம்பள உயர்வு – ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட இதர கல்வித்துறை சார்ந்த கோரிக்கைகளுக்குப் போராடும் ஆசிரியர் சங்கங்கள், தரமான கல்வி, உத்தரவாதமான வேலைவாய்ப்புக்காக போராடும் மாணவர் அமைப்புகள் என அனைவரும் கவனிக்க வேண்டியது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் கார்ப்பரேட் – டிஜிட்டல்மயம் என்னும் போக்கையே. இப்போக்கினை எதிர்த்து இதர வர்க்கங்கள் எவ்வாறு போராடுகின்றனர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

சான்றாக, டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளில் ஒன்று உலக வர்த்தகக் கழகத்திலிருந்து இந்திய அரசு வெளியேற வேண்டும்; அடுத்தது, சுதந்திர வர்த்தகத்திலிருந்து (Free Trade Agreement) வெளியேற வேண்டும். உலக வர்த்தகக் கழகத்தின் அடிமை ஒப்பந்தங்களில் இந்திய அரசு கையெழுத்திட்டதன் விளைவே சுதந்திர வர்த்தகம் என்னும் பொறியில் சிக்கியிருப்பது என்பதை விவசாய சங்கங்கள் புரிந்து கொண்டு விட்டனர். இந்த ஒப்பந்தங்களின் விளைவே விவசாயம் மற்றும் விவசாய விளைப்பொருட்கள் மீதான கட்டுப்பாடு கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கு செல்வதாகும். எனவே தான் பிரச்சினையின் மையக்கண்ணியான உலக வர்த்தகக் கழகத்தில் இருந்து அரசு வெளியேற வேண்டுமெனக் கோரிக்கை வைக்கிறார்கள் விவசாயிகள்.

கல்வித்துறைக்கான தீர்வையும் நாம் இங்கிருந்தே துவங்க வேண்டும். மாறிவரும் பொருளாதாரச் சூழலுக்கேற்ப மாணவர்களைத் தயார்படுத்தவே, எல்லா மாற்றங்களையும் (கார்ப்பரேட் – டிஜிட்டல்மயம்) கொண்டு வருவதாகவும், இதுவே வளர்ச்சிக்கான வழியென்றும் அரசுகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. கல்வி என்பதே வேலைக்காகத்தான் என்ற மனநிலைக்குத் தயார் செய்யப்பட்டுள்ள பொது சமூகமும் இது சரிதானே என்று ஏற்றுக்கொள்ளும். ஆனால் கல்வி சார்ந்து இயங்கும், மக்களை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த மாற்றங்களுக்கு பின்னால் குழந்தைகளின் இயல்பை கொன்று அவர்களை அடிமைகளாக மாற்றுவது, கல்வியில் வர்க்க ஏற்றத்தாழ்வை உருவாக்குவது போன்ற பேரபாயங்கள் உள்ளதை உணர்ந்துகொள்ள முடியும்.

இந்த அபாயங்களை முறியடிப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி சிந்திப்பதில் இருந்தே, கல்வித்துறை சார்ந்த இதர எல்லாப் பிரச்சினைகளையும் தீர்ப்பதை நோக்கி நாம் நகர முடியும். கல்வியை சமூகத்தின் இதர துறைகளில் இருந்து எப்படி பிரித்துப் பார்க்க முடியாதோ, அதேபோல்தான் நிரந்தர வேலையின்மை, ஓய்வூதியம் உள்ளிட்ட எல்லாப் பொருளாதாரக் கோரிக்கைகளையும், கல்வித்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது. இன்றைய கட்டத்தில் கல்வித்துறையில் புகுத்தப்பட்டு வரும் கார்ப்பரேட்மயத்தை எதிர்ப்பதில்தான் நமது கவனம் குவிக்கப்பட வேண்டும்.

கார்ப்பரேட்மயத்தையும் காவிமயத்தையுமே இலக்காகக் கொண்டிருக்கும் தேசியகல்விக் கொள்கையை முற்றாக நிராகரிக்க வேண்டும். அதே சமயத்தில், தமிழ்நாடு அரசு உருவாக்க இருக்கும் மாநிலக் கல்விக் கொள்கை இத்தகைய அம்சங்களில் இருந்து மாறுபட்டதாக, குழந்தைகளை மையப்படுத்தியதாக, சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை நோக்கியதாக, ஆசிரியர்கள் – ஊழியர்களின் நலன் பேணுவதாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் போராட வேண்டும். நாம் ஏற்கெனவே வலியுறுத்தி வரும் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி; அறிவியல்பூர்வமான – தாய்மொழிக் கல்வி அடிப்படையிலான பாடத்திட்டம்; அருகமைப் பள்ளி – பொதுப்பள்ளி முறை; ஆகியவற்றுடன் பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை காவி – கார்ப்பரேட் பாசிச சித்தாந்தத்தின் ஊடுருவலைத் தடுத்து நிறுத்தவும் போராட வேண்டும்.

கல்வித்துறையில் எதிர்கொள்ளும் குறிப்பான பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் மற்றும் குறித்த நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆசிரியர்கள், கல்வியாளர்களை உள்ளடக்கிய “மக்கள் கல்விக் கூட்டியக்கம்” போன்ற அமைப்புகள் பருண்மையாக முன்வைத்து வருகின்றன. இத்தகைய முன்னெடுப்புகளை தொடர்ந்து ஆதரிப்பதும், தொடர் விவாதங்கள் மூலமாக குறிப்பான பிரச்சினைகளுக்கான குறிப்பான தீர்வுகள் – நடவடிக்கைகளை நாம் செழுமைப்படுத்திக் கொண்டே முன்னேறுவதும் அவசியம்.

நாம் சந்திக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கு பின்னாலும் அரசியல் அதிகாரம் இருப்பது போல, தீர்வுகளுக்குப் பின்னாலும் அரசியல் அதிகாரமும் இருக்கவே செய்கிறது. நாட்டையே சூறையாடும் கார்ப்பரேட்மயத்தின் பின்னால் அம்பானி – அதானிகளின் நலன்களுக்கான ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி. பாசிசக் கும்பலின் அரசியல் அதிகாரமே பாதுகாப்பாய் இருக்கிறது. இவற்றால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், மீனவர்கள், வியாபாரிகள், ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களின் கார்ப்பரேட்மய எதிர்ப்புப் போராட்டங்களை ஒன்றிணைப்பதும், இப்போராட்டங்களின் வழியே நமக்கான அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதும்தான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். நாம் எடுத்து வைக்கும் சிறுசிறு அடிகளும் இத்தீர்வை நோக்கியதாக இருக்கட்டும்!


வாகைசூடி

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மக்களுக்கான களம் போராட்டமே!

ருவழியாக, “இந்தியா” கூட்டணி கட்சிகளுக்குள் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடுகள், பல மாநிலங்களில் முடிவுக்கு வந்துள்ளது. காஷ்மீர், மேற்குவங்கம் ஆகிய இரண்டு முக்கிய மாநிலங்களிலும் விரைவில் தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வரும் என இந்தியா கூட்டணி கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

“தேர்தலில் பாசிச பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டுமென்றால் வலுவான கூட்டணி வேண்டும். மாநிலங்களில் அமையும் கூட்டணியைப் பொறுத்தே வெற்றி வாய்ப்புகளும் அமைகின்றன. எனவே, தற்போது இந்தியா கூட்டணிக் கட்சியினரிடையே தொகுதிப் பங்கீடு நிறைவடைந்திருப்பது வெற்றிவாய்ப்பை உறுதிப்படுத்தும்” என எதிர்க்கட்சிகளாலும், பா.ஜ.க. எதிர்ப்பாளர்கள் பலராலும் பார்க்கப்படுகிறது.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றிப் பெற்றுவிட்டால் இனி தேர்தலே நடக்காது; பாசிச இருள் சூழ்ந்துவிடும்; எனவே பாசிச பா.ஜ.க-வை தேர்தலில் தோற்கடிப்பது மிகவும் இன்றியமையாதது என்பதை பலரும் பேசி வருகின்றனர். அதிகாரத்திலும் சமூகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வேரூன்றியிருக்கும் சங்கப் பரிவார அமைப்புகளைக் களையெடுப்பதுடன், பாசிசத்தை வீழ்த்த கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; அதன் ஒரு அங்கமாக பா.ஜ.க-வை தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.

ஆனால், தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டுமெனில், இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று பல ஜனநாயகச் சக்திகள் மக்களைக் கோருகின்றனர். இந்தியா கூட்டணி உருவானதிலிருந்தே எதிர்க்கட்சிகளைக் கண்டு பாசிச மோடி கும்பல் அஞ்சி வருகிறது. எதிர்க்கட்சிகளை ஒன்றிணையாமல் தடுப்பதற்காக அமலாக்கத்துறை மூலம் வேட்டையாடுவது, குதிரைபேரம் நடத்தி விலைக்கு வாங்குவது போன்ற சதி வேலைகளில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. இச்சூழலில், இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்திருப்பது, முன்னேற்றகரமானதாகவும் கூட்டணி வலுவடைந்துள்ளதாகவும் கருதப்படுகிறது.


படிக்க: டெல்லி சலோ 2.0: பாசிசத்தை வீழ்த்தும் பாதை!


ஆனால், இந்தியா கூட்டணியானது, தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க. கூட்டணியைப் போன்றதல்ல. தி.மு.க. கூட்டணி உறுதியாக உள்ளது, அதற்குள் தொகுதி பங்கீடு நடக்கிறது. ஆனால், இந்தியா கூட்டணியை உருவாக்கிய பின்னர் அதன் உறுதித்தன்மை தொடர்ந்து கேள்விக்குள்ளானது. நிதிஷ்குமார் இக்கூட்டணியில் இருந்து விலகிய சூழலில், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகிய கட்சிகள் இந்தியா கூட்டணியில் நீடிக்குமா என்ற நிலைமை உருவானது. மூன்றாவது கூட்டத்தைக் கூட இந்தியா கூட்டணியால் கூட்ட இயலவில்லை. ஆகையால், இந்தக் கூட்டணியைப் பொறுத்தவரை சீட்டு பேரம் முடியவில்லை எனில் கூட்டணியே நீடிக்குமா என்ற ஐயத்தைத்தான் எழுப்பியது.

எனவே, இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது, அதனால், இந்தியா கூட்டணிதான் வெற்றி பெறும் என்று கருதுவது தவறு என நடந்துமுடிந்த ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் நமக்குணர்த்திவிட்டன. இந்தியா கூட்டணி உருவாகி சந்தித்த முதல் தேர்தலான ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலின்போதும் இதேபோன்று பா.ஜ.க. நிச்சயம் தோற்கடிக்கப்படும் என்றே கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் வெற்றிபெறும் என அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் கூட படுதோல்வியைத் தழுவியது.

உண்மையில், மக்களிடம் நிலவும் பா.ஜ.க. எதிர்ப்புணர்வை அறுவடை செய்து கொள்வதில்தான் இந்தியா கூட்டணி கட்சியினர் கவனம் செலுத்துகின்றனர். அதனால், வலுவான கூட்டணி அமைப்பதைவிட தொகுதிப் பங்கீடுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

குறிப்பாக, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நிலைநாட்டுதல், விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உரிமையாக்குதல், புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப்பெறுதல், ஜி.எஸ்.டி. வரி, நீட் தேர்வு முதலியவற்றை ரத்து செய்தல், அதானியின் எண்ணூர், விழிஞ்சம் போன்ற நாசகர துறைமுகத் திட்டங்கள், தொழிலாளர் விரோத சட்டத்திருத்தங்கள், கிரிமினல் சட்டத் திருத்தங்களைத் திரும்பப்பெறுதல், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார அமைப்புகளைத் தடை செய்தல் போன்ற எந்த மக்கள் பிரச்சினைகள், கோரிக்கைகள் குறித்தும் இந்தியா கூட்டணி இன்னமும் ஒரு பொதுமுடிவுக்கு வரவில்லை.


படிக்க: WTO-வின் துணையோடு கார்ப்பரேட்மயமாகும் இந்திய விவசாயம்!


கூட்டணி பேரம் முடிந்த பின்னர், ஓட்டு வாங்குவதற்கு மட்டுமே மக்களிடம் சில வாக்குறுதிகளைக் கொடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என இந்தியா கூட்டணியினர் கருதினால், சத்தீஸ்கர் தேர்தலில் ஏற்பட்ட நிலைமை அவர்களுக்கு மீண்டும் ஏற்படுவதை தடுக்க முடியாது.

ஆகையால், உழைக்கும் மக்கள் தங்களது உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுத்துச் சென்று மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்பதுதான், பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவது மட்டுமின்றி, இந்தியா கூட்டணியினரைக் கூட மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்பந்திக்க முடியும். உரிமைகளுக்கான மக்களது களம் போராட்டமாகும். இதனை உணர்ந்து ஹரியானா விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட போராட்டக் களத்தில் காத்திருக்கின்றனர். டெல்லி விவசாயிகளைப் போல, இந்திய மக்கள் கிளர்ந்தெழ வேண்டிய நேரமிது!


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



காசா இனப்படுகொலையின் அடையாளமாக மாறிய யசான் கஃபர்னா

காசா மீது இஸ்ரேல் நடத்திய இன அழிப்புப் போரின் காரணமாக ஏற்பட்ட கடுமையான ஊட்டச்சத்துக்குறைபாட்டால் பத்து வயதான யசான் கஃபர்னா (Yazan Kafarna) மார்ச் 4 ஆம் தேதியன்று உயிரிழந்துள்ளார்.

யசானுக்கு பிறப்பிலிருந்தே பெருமூளை வாத நோய் இருந்துவந்துள்ளது. மேலும் அவருக்கு உணவு விழுங்குவது மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சினையும் இருந்தது. இதனால் அவர் ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் எளிமையாக விழுங்கும் உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.
யசான் கஃபர்னாவின் உடல்நிலை இவ்வாறு இருக்க, யசானின் குடும்பம் வாழ்ந்த பைட் ஹனூன் பகுதி உள்ளிட்ட வடக்கு காசா பகுதிகளில் இஸ்ரேல் அரசு மின்சாரம், உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை நிறுத்தியது.

இதனால், யசான் கஃபர்னா குடும்பத்தினர் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து வேறு இடத்திற்குச் செல்லத் தொடங்கினர். இதனால் யசான் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் பசியுடனே இருந்தனர். இஸ்ரேல் ராணுவம் காசா மக்களை ரஃபா நகரை நோக்கிச் செல்லுமாறு அறிவுறுத்தியது. இம்மாதிரியான தொடர்ச்சியான இடப்பெயர்ச்சியினால் யசானுக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவு கிடைக்காமல், யசானின் உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது.


படிக்க: காசா: குழந்தைகளை நரவேட்டையாடும் இரத்தவெறி பிடித்த இஸ்ரேல் | காணொளிகள்


யசானின் தந்தை மருத்துவமனைகளுக்குச் சென்று யசானின் உடல் நிலையை சரிசெய்ய தீவிர முயற்சி செய்தார். ஆனால் அங்கிருந்த பல மருத்துவமனைகள் இஸ்ரேலின் திட்டமிட்ட குண்டுவீச்சின் விளைவாக ஏற்கெனவே இடிபட்டுக் கிடந்தன. போருக்கு முன்பு காசா பகுதியில் கிட்டத்தட்ட 35 மருத்துவமனைகள் இருந்தன. ஆனால் தற்போது 5 மருத்துவமனைகள் தட்டுத் தடுமாறி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவையும் கூட முதன்மை சிகிச்சையை மட்டுமே வழங்கும் நிலையில் தான் இருக்கின்றன.

இதனால் யசானுக்கு தேவையான மருந்துகளும் சிகிச்சையும் கிடைக்கவில்லை. இதனால் மிகவும் உடல் மெலிந்து போயிருந்த யசான் மார்ச் 4 ஆம் தேதி இறந்துவிட்டார்.

யசான் மட்டும் இஸ்ரேலிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்படவில்லை. வடக்கு காசாவில் உடல் நீரிழப்பு (dehydration) மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் இதுவரை 16 குழந்தைகள் இறந்துள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

யசான் இறப்பதற்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழப்பு மற்றும் பட்டினி தான் காரணம் என்பதை உணவு ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் மர்வான் சலேம் (Dr. Marwan Salem) தெளிவுபடுத்தியுள்ளார்.


படிக்க: காசாவில் பத்திரிகையாளர்களைப் படுகொலை செய்யும் இஸ்ரேல்!


யசான் இறந்த பிறகு சமூக ஊடகங்களில் #YazanKafarna, #AirDropFoodToGaza, #Justice4Palestine, #CeasefireNOW, #FreeGaza, H2O4GAZA போன்ற பல ஹேஷ்டேக்குகள் X- தளத்தில் முன்னணியில் இருந்தன.

ஐ.நா மற்றும் பல்வேறு நாடுகள் 1000 லாரிகளில் உணவு மற்றும் மருந்துகளை பாலஸ்தீன மக்களுக்காக அனுப்பியுள்ளன. ஆனால் காசாவைச் சுற்றியுள்ள ரஃபா, கரேம் அபு சலேம் மற்றும் பைட் ஹனூன் ஆகிய இடங்களில் இருக்கின்ற இஸ்ரேலிய இராணுவம் இந்த “மனித நேய” உதவிகளை தடுத்தபடி இருக்கிறது.

உலகில் பட்டினியால் வாடும் 5 பேரில் 4 பேர் காசாவில் இருப்பதாகவும், அந்த 4 பேரில் ஒருவர் கடுமையான பசியில் இருப்பதாகவும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனம் (UNRWA) கூறியுள்ளது. பாலஸ்தீன மக்கள் நீண்ட காலமாக, கடுமையான பட்டினியை அனுபவித்து வருவதாக உலகம் முழுவதும் உள்ள தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன. இந்த பட்டினி நிலையானது பாலஸ்தீன பெண்கள், குழந்தைகள் மற்றும் பலவீனமானவர்களிடையே தீவிர நோய்களை ஏற்படுத்தி அதிக எண்ணிக்கையிலான இறப்புக்கு வழிவகுக்கும்.

அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டணிக்கு எதிரான சர்வதேச அளவிலான வீரியமான மக்கள் போராட்டங்கள் மட்டுமே யசானை கொன்ற யூத இனவெறி இஸ்ரேலிய அரசால் நிகழ்த்தப்படும் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவரும்.

செய்தி ஆதாரம்: Countercurrents


ஆதன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



உத்தராகண்ட் பொது சிவில் சட்டம்: இந்துராஷ்டிரத்திற்கு அடித்தளமிடும் பாசிஸ்டுகள்!

ம்மு காஷ்மீர் மாநில சிறப்புரிமை ரத்து, அயோத்தி இராமர் கோயில் திறப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து, தனது இந்துராஷ்டிரக் கனவை நிறைவேற்றிக்கொள்வதற்கு நீண்டகாலமாக பிரச்சாரம் செய்துவரும் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த தொடங்கியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல்.

உத்தராகண்ட் மாநில சட்டமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் “ஜெய் ஸ்ரீ ராம்”, “வந்தே மாதரம்” என கூச்சலிட்டுக் கொண்டே “உத்தராகண்ட் பொது சிவில் சட்டம் 2024”-ஐ நிறைவேற்றியுள்ளனர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் இச்சட்டத்தின் வரைவை தயாரிக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்தது அம்மாநில பா.ஜ.க. அரசு. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான குழுக்களை அமைக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து, பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக செயல்பட்ட இக்குழு கடந்த பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி 392 சட்டப்பிரிவுகளை நான்கு பகுதிகளாக கொண்ட 172 பக்க அறிக்கையை சமர்பித்தது.

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட உடனேயே அவசர அவசரமாக, பிப்ரவரி 5-ஆம் தேதி பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்காக சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரை உத்தராகண்ட் அரசு கூட்டியது. 6-ஆம் தேதி மசோதாவை தாக்கல் செய்தது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மசோதாவை படிக்கவும் பரிசீலனை செய்யவும் அவகாசம் வழங்காமல், கேள்வி நேரத்தை (Question Hour) ரத்து செய்தும் குரல் வாக்கெடுப்பின் மூலமும் தனக்கே உரிய பாசிச வழிமுறைகளில் மசோதாவை நிறைவேற்றியது. மேலும், சட்டத்தின் வரைவை தயாரித்து மக்களிடம் முன்வைத்துக் கருத்துகள், ஆலோசனைகள் கேட்பதற்கு பதிலாக முதலில் கருத்து கேட்பதாக நாடகமாடிவிட்டு வரைவை தயாரித்தது உத்தராகண்ட் பா.ஜ.க. அரசு.


படிக்க: பொது சிவில் சட்டம், அறிவிப்பு: இந்துத்துவத்தின் பிரம்மாஸ்திரமா? புஸ்வானமா?


இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உத்தராகண்ட் முதல்வர் புஸ்கர் சிங் தாமி, “திருமணம், பராமரிப்பு, வாரிசுரிமை மற்றும் விவாகரத்து போன்ற விஷயங்களில் எந்தவித பாகுபாடுமின்றி அனைவருக்கும் சம உரிமையை பொது சிவில் சட்டம் வழங்கும். முக்கியமாகப் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்கவும், பெண்களுக்கு எதிரான அநீதி மற்றும் தவறான செயல்களை ஒழிப்பதற்கும் உதவும். மாத்ரி-சக்திக்கு (பெண்கள்) எதிரான அட்டூழியங்களை நிறுத்த வேண்டிய நேரம் இது. நமது சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு எதிரான பாகுபாடு நிறுத்தப்பட வேண்டும். மக்கள் தொகையில் சரிபாதி இருக்கும் பெண்கள் சம உரிமையைப் பெற வேண்டும்” என்று பேசினார்.

அதாவது, பெண்களின் நலனில் பா.ஜ.க. அரசு மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளது என்பதே முதல்வர் புஸ்கர் தாமி பேச்சின் சாரம். ஆனால், பாசிச பா.ஜ.க. கும்பல் பெண்கள் மீது கொண்டுள்ள அக்கறைக்கு இஸ்லாமியர்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட குஜராத் கலவரத்தில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு இன்றுவரை நீதி கிடைக்காமல் போராடிவரும் பில்கிஸ் பானுவும், மணிப்பூர் கலவரத்தின் போது நிர்வாணமாக இழுத்துசெல்லப்பட்ட பெண்களுமே போதுமான சாட்சி. உண்மையில், காவிக்கும்பல் போடும் பெண்ணுரிமை வேடத்திற்கு பின்னால், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்களின் உரிமைகள் அனைத்தும் ஒழித்துக்கட்டப்பட்டு, சட்டப்பூர்வமாக ‘ஒரே நாடு ஒரே பண்பாடு’ கொண்ட இந்துராஷ்டிரத்திற்கான அடித்தளத்தை உருவாக்கும் சதித்திட்டமே ஒளிந்திருக்கிறது.

இஸ்லாமிய வெறுப்புணர்வு சட்டம்

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை பொறுத்தவரையில், குற்றவியல் சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதாக பின்பற்றப்படுகிறது. ஆனால், திருமணம், விவாகரத்து, மறுமணம், சொத்துரிமை, வாரிசுரிமை உள்ளிட்ட குடும்ப விவகாரங்களை கையாள்வதற்கு ஒவ்வொரு மதத்தினருக்கும் அந்தந்த மத நூல்கள் மற்றும் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் தனிநபர் சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. இதனை நீக்கிவிட்டு அனைத்து மதத்தினருக்கும் ‘ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை’ அமல்படுத்தும் பொது சிவில் சட்டத்தை கொண்டுவரப்போவதாக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் பல ஆண்டுகளாக கூறி வருகிறது. அந்த வகையில் 1947 அதிகார மாற்றத்திற்குப் பிறகு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக உத்தராகண்ட்டில் தற்போது பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உத்தராகண்ட்டில் கொண்டுவந்துள்ள பொது சிவில் சட்டத்தில் உள்ள பெரும்பாலான சட்டப் பிரிவுகள் “முஸ்லிம் தனிநபர் சட்டத்திற்கு (ஷரியத்)” எதிராக உள்ளதை சமூக செயற்பாட்டாளர்களும் பத்திரிகையாளர்களும் அம்பலப்படுத்தி உள்ளனர். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் உத்தராகண்ட் பெண்கள் குழு போன்ற சமூக செயற்பாட்டு குழுக்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

இஸ்லாமியர்களின் சட்ட நூலான ஷரியத்தே (Sharia) இந்தியாவில் இஸ்லாமிய மக்களின் தனிநபர் சிவில் சட்டமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதில், ஒரு ஆண் தனது மனைவியின் ஒப்புதலோடு நான்கு பெண்கள் வரை திருமணம் செய்துகொள்ளும் பலதார மணம்; இஸ்லாமிய பெண்களை வயதுக்கு வந்தவுடன் (15 வயதை எட்டியிருந்தால்) திருமணம் செய்து வைக்கும் வழக்கம் உள்ளிட்டவை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுகின்றன.

இந்த அம்சங்களை குறிவைத்தே உத்தராகண்ட் பொது சிவில் சட்டத்தை கொண்டுவந்துள்ளது பா.ஜ.க. கும்பல். உத்தராகண்ட் பொது சிவில் சட்டப் பிரிவு 4(1), ஓர் ஆண் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்வதை குற்றமாக்குகிறது; பிரிவு 4(3), பெண்களின் திருமண வயதை 18 ஆகவும், ஆண்களின் திருமண வயதை 21 ஆகவும் நிர்ணயிக்கிறது; விபச்சாரத்தில் ஈடுபடுவது, கொடுமைப்படுத்துவது, இரண்டு ஆண்டுகள் பிரிந்து செல்வது உள்ளிட்ட பல காரணங்களுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை கொண்டிருந்தாலும் விவாகரத்து அளிக்கப்படலாம் எனக் கூறுகிறது. இவையெல்லாம் கேட்பதற்கு முற்போக்கானதாக தோன்றலாம். ஆனால், உண்மையில் இஸ்லாமியர்களின் தனிநபர் சட்டத்தை ஒழித்துக்கட்டி அதன்மூலம் இஸ்லாமியர்களை அடக்கி ஒடுக்குவதே பாசிஸ்டுகளின் நோக்கம்.

ஏனெனில், இஸ்லாமிய மதத்தில் மட்டுமின்றி இந்து மதம் உள்ளிட்ட எல்லா மத தனிநபர் சட்டங்களிலும் வாரிசுரிமை, சொத்துரிமை உள்ளிட்ட பல விதிகளில் பெண்களுக்கு எதிரான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், அதற்கு எதிரான விதிகள் எதுவும் உத்தராகண்ட் பொது சிவில் சட்டத்தில் சேர்க்கப்படவில்லை. பெண்களுக்கு சம உரிமை வழங்குவதற்குதான் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளதென்றால், இந்துமத சட்டத்தில் மூதாதையர்களின் சொத்தில் பெண்களுக்கு சொற்ப உரிமை அல்லது உரிமை மறுக்கப்படுவது போன்ற அநீதிகளை ஒழித்து சமத்துவத்தை நிலைநாட்டலாம் அல்லவா? அவ்வாறு செய்யாமல் இஸ்லாமிய தனிநபர் சட்டத்தை மட்டும் குறிவைப்பதிலிருந்தே இச்சட்டம் இஸ்லாமிய மக்களின் மீது தொடுக்கப்பட்டுள்ள அப்பட்டமான பாசிச தாக்குதல் என்பது தெளிவாகிறது.

மேலும், தற்போது இஸ்லாமிய பெண்களின் உரிமையை மீட்பதாக சொல்லும் பா.ஜ.க-வின் மூதாதையர்கள்தான், சாதி ஆதிக்கம் மற்றும் ஆணாதிக்கத்தின் அவமானகரமான சின்னமாகக் காட்சியளித்த இந்துச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள முயன்றபோது அம்பேத்கரை மூர்க்கமாக எதிர்த்தனர். 1951-இல் ஒருதார மணம், ஜீவனாம்சம், பெண்ணுக்கும் சொத்துரிமை, வாரிசுச் சட்டத்திருத்தம் போன்ற சில திருத்தங்களை கொண்டுவருவதற்கான இந்துச் சட்ட மசோதாவை அன்றைய சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். காவிக்கும்பலின் கடும் எதிர்ப்பால், மசோதாவின் ஒரு பகுதிகூட நிறைவேற்றப்பட முடியாமல் கைவிடப்பட்டது. இதனையடுத்து, “தான் தொடர்ந்து அமைச்சராக நீடிப்பதில் அர்த்தமில்லை” என்றுக் கூறி அம்பேத்கர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த காவி கும்பல் தான் இப்போது பெண்ணுரிமை, சமத்துவம் என்றெல்லாம் நாடகமாடுகிறது.


படிக்க: அசாம் பலதார மணம் தடை மசோதா: பொது சிவில் சட்டத்தின் ஒரு பகுதியே!


“ஒரு முஸ்லீம் நான்கு மனைவியை வைத்துக் கொள்கிறான். நினைத்த நேரத்தில் ‘தலாக்’ சொல்லி விவாகரத்து செய்கிறான். வதவதவென பிள்ளைகளை பெற்றெடுத்து தங்கள் மதத்தவரின் எண்ணிக்கையை பெருக்கிக் கொள்கிறான். இந்துக்கள் சிறுபான்மையாகிறார்கள். முசுலீம் ஷரியத் சட்டத்தை நாட்டின் சட்டமாக கொண்டுவந்துவிடுவான்” என்பதெல்லாம் காவிக் கும்பல் நெடுங்காலமாக பெரும்பான்மை‘இந்து’ மக்களிடையே அடித்தளத்தை உருவாக்குவதற்காக செய்துவரும் வெறுப்பு பொய் பிரச்சாரங்களாகும். இதனோடு பெண்கள் மீதான அக்கறை என்ற நாடகத்தையும் இணைத்து அரங்கேற்றிதான் மோடி கும்பல் முத்தலாக் சட்டத்தையும் தடை செய்திருந்தது. முத்தலாக் முறை தடை செய்யப்பட்டபோதே அது பொது சிவில் சட்டத்தின் ஒரு பகுதியே என்பதை பலரும் அம்பலப்படுத்தினர். அதன் தொடர்ச்சியாகவே, தற்போது பாசிசக் கும்பல் பொது சிவில் சட்டத்தை கையிலெடுத்துள்ளது.

மேலும், உத்தராகண்ட் பொது சிவில் சட்டத்தின் விதிகளை மீறுபவர்களுக்கு ஆறு மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் அல்லது 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது சிறைத்தண்டனை மற்றும் அபராதம் இரண்டும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பாக குறைந்தபட்சம் இரண்டு குற்றங்களில் ஈடுபட்டிருந்தால் சம்மந்தப்பட்ட நபரை நீதிமன்ற பிடி ஆணை (வாரண்ட்) இல்லாமலேயே கைது செய்யவும் அனுமதிக்கிறது. இவ்வாறு, சட்ட விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வரையறுத்துள்ளதன் மூலம் வருங்காலங்களில் இஸ்லாமிய மக்களின் மீது சட்டப்பூர்வமாகவே பாசிச அடக்குமுறைகளை செலுத்துவதற்கு ஆயத்தமாகியுள்ளது பாசிசக் கும்பல்.

பாசிசக் கும்பலின் சோதனை முயற்சி!

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில், பா.ஜ.க. கும்பல் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றியுள்ளதை வைத்து நாடு முழுவதும் இஸ்லாமிய எதிர்ப்புணர்வை தூண்டிவிட்டு, அதன் மூலம் பெரும்பான்மை ‘இந்து’க்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக பிரச்சாரம் செய்து பெரும்பான்மை மக்களின் வாக்குவங்கியை அறுவடை செய்துகொள்ளும்.

இன்னொருபுறம், பழங்குடி மக்கள் மத்தியில் கிளம்பிய எதிர்ப்பின் காரணமாக உத்தராகண்ட் பொது சிவில் சட்டத்திலிருந்து பழங்குடியின மக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இச்சட்டத்திற்கு எதிரான பழங்குடியின மக்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்துகிறது பா.ஜ.க. கும்பல். மேலும், இச்சட்டம் நாட்டின் பிற மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டாலும் பழங்குடியின மக்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று கூறி பா.ஜ.க-வின் முக்கிய வாக்குவங்கியாக உள்ள அம்மக்களின் வாக்குகளை அறுவடை செய்துகொள்ளும்.

இருப்பினும், உத்தராகண்ட் மாநிலத்தில் தற்போது பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான உத்தி என்று மட்டும் சுருக்கி பார்க்கக் கூடாது. பொது சிவில் சட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்துவதற்கான முன்னோட்டமாக, சோதனை முயற்சியாகவே பாசிசக் கும்பல் தற்போது உத்தராகண்ட் மாநிலத்தில் இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

ஏனெனில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துபோவதாக பா.ஜ.க கும்பல் அறிவித்தபோது அதற்கு பழங்குடியின மக்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள் என பல்வேறு தரப்பினரிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்தன. பா.ஜ.க. கட்சி உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளிலிருந்தும் கூட எதிர்ப்புகள் கிளம்பின. பாசிசக் கும்பல் தோல்வி முகத்தில் உள்ள தற்போதைய சூழலில் பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தினால் எதிர்ப்புகளும் போராட்டங்களும் கிளம்பி தோல்வி முகத்தை மேலும் ஆழப்படுத்தும் என அஞ்சும் காவிக் கும்பல் தற்காலிகமாக பின்வாங்கியது. ஆனால், தற்போது மதங்களுக்கான தனிநபர் சிவில் சட்டங்கள் பொதுப்பட்டியலில் உள்ளதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, உத்தராகண்ட் மாநிலத்தில் சோதனை முயற்சியாக பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றி உள்ளது.

இதுகுறித்து பேசிய பத்திரிகையாளர் நீரஜா சவுத்ரி, “உத்தராகண்ட்டில் இந்த மசோதாவை பரிசோதித்துப் பார்க்க பா.ஜ.க. விரும்புகிறது. இதற்கு என்ன எதிர்விளைவுகள் என்பதையும், ஒரு சமூகத்தை மட்டும் ஒதுக்கி வைத்தோ, அல்லது குறிப்பிட்ட சமூகங்களுக்கு மட்டும் இது பொருந்தும் என்று கூறியோ, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடியுமா, நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் முன் இது நிற்குமா என்ற சட்ட அம்சங்களையும் பா.ஜ.க. ஆராய விரும்புகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், இது ஒருவகையான பரிசோதனைதான். ஆனால் அதே நேரத்தில் தாங்கள் இதில் தீவிரமாக இருப்பதாக காட்டவும் பா.ஜ.க. முயற்சி மேற்கொண்டுள்ளது” என்கிறார்.

அதாவது, குஜராத், உத்தரப்பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்கள் இந்துராஷ்டிரத்திற்கான சோதனைச்சாலையாக உள்ளதை போல தற்போது உத்தராகண்ட் மாநிலத்தை பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான சோதனைச்சாலையாக கையிலெடுத்துள்ளது பாசிசக் கும்பல். அவ்வாறு உத்தராகண்ட் மாநிலம் தேர்தெடுக்கப்பட்டதற்கு குறிப்பான காரணங்கள் உள்ளன.

உத்தராகண்ட் மாநிலம் இந்து மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு சிறிய பசுவளைய மாநிலமாகும். சமவெளி முதல் மலைப்பகுதிகள் வரை எல்லா இடங்களிலும் இந்துக்கள் பரவி வசித்து வருகின்றனர். பத்ரிநாத், கேதர்நாத், ஹரித்வார், ரிஷிகேஷ், கங்கோதிரி, யமுனோதிரி போன்ற இந்துக்களின் புனித தளங்களும் இம்மாநிலத்தில் அதிகளவில் உள்ளன. இம்மாநிலத்தில் அடித்தளத்தை விரிவுப்படுத்தும் வேலையிலும் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டு வருகிறது. இன்னொருபுறம் சமவெளி பகுதிகளில் வசித்துவரும் இஸ்லாமிய மக்கள் 13 சதவிகிதமே உள்ளனர். இதனால், காவி குண்டர்களால் இஸ்லாமியர்களுக்கு எதிராக பகிரங்கமாக கலவரங்கள், வெறுப்பு பிரச்சாரங்கள், வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்த்துவதற்கு ஏற்றவாறு இம்மாநிலம் உள்ளது. இவ்வாறு புவியியல் ரீதியாகவும் மக்கள் தொகை அடிப்படையிலும் இம்மாநிலம் பொது சிவில் சட்டத்தை சோதனை செய்வதற்கேற்ப உள்ளது.

உத்தராகண்ட்டை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்திலும் இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சியில் அம்மாநில அரசு ஈடுபட்டுவருகிறது. இதுகுறித்து பேசிய ராஜஸ்தான் அமைச்சர்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகான சட்டமன்றக் கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம் தாக்கல் செய்யப்படும் என்று கூறினர். இஸ்லாமிய எதிர்ப்பு, அந்நிய எதிர்ப்பு மனநிலை ஊறிப்போன அசாம் மாநிலத்தில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முதல் படியாக, பிப்ரவரி 24-ஆம் தேதி “இஸ்லாமிய திருமணங்கள் மற்றும் விவாகரத்து பதிவு சட்டம் 1935”-ஐ ரத்துசெய்ய அசாம் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அடுத்தடுத்து பிற பசுவளைய மாநிலங்களில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என்பது தெளிவாகிறது.

இந்துராஷ்டிரத்திற்கு அடித்தளமிடும் காவி பாசிஸ்டுகள்

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், பழங்குடியின மக்கள் போன்ற பல்வேறு பிரிவு மக்களின் வெவ்வேறு பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் ஒழித்துக்கட்டிவிட்டு ஒரே நாடு ஒரே கல்வி வரிசையில் ஒரே பண்பாட்டையும் கலச்சாரத்தையும் நிறுவுவதையே காவிக் கும்பல் நோக்கமாக கொண்டுள்ளது. ஆனால், காவிக் கும்பல் கொக்கரிக்கும் ஒரே நாடு – ஒரே கல்வி, ஒரே மொழி, ஒரே வரி என்பதெல்லாம் அனைவருக்கும் பொதுவானதோ குறைந்தபட்சம் இந்துக்களுக்கானதோ அல்ல. மாறாக அது அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பல் மற்றும் ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்டுகளின் நலனுக்கானது என்பதுதான் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டத்தின் அனுபவம். பொது சிவில் சட்டமும் அத்தகையதுதான்.

பார்ப்பன சனாதன மரபுகள், பழக்கவழக்கங்கள், வழிகாட்டு நெறிமுறைகளை ‘இந்துக்கள்’ என்ற பெயரில் பெரும்பான்மை உழைக்கும் மக்கள்மீதும் திணிப்பதற்கான ஏற்பாடே பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள உத்தராகண்ட் பொது சிவில் சட்டம். காவி-கார்ப்பரேட் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக ஒரே வரி, ஒரே கல்வி, ஒரே தேர்தல் என பல்வேறு சட்டத்திட்டங்களை வைத்திருக்கும் பாசிசக்கும்பல் அடுத்தக்கட்டமாக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த தொடங்கியுள்ளதன் மூலம், இந்துராஷ்டிரத்திற்கான அடித்தளத்தை வேகமாக அமைக்க தொடங்கியுள்ளது.

தற்போது வேண்டுமானால் பாசிசக் கும்பலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பழங்குடியின மக்கள் உள்ளிட்டோருக்கு பொது சிவில் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படலாம். ஆனால், பாசிசக் கும்பலின் கனவான இந்துராஷ்டிரத்தில் இரண்டாம்தர குடிமக்களாக மாற்றப்படும் இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், தலித்துகள், பழங்குடியின மக்கள் ஆகியோரை ஒடுக்கும் வகையிலேயே இச்சட்டம் கொண்டுசெல்லப்படும்.

எனவே, தற்போது நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்டமென்பது இஸ்லாமிய மக்களின் பிரச்சினையோ உத்தராகண்ட் மாநில மக்களின் பிரச்சினையோ அல்ல. இந்திய நாட்டின் பன்முகத்தன்மை, ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் பண்பாடு, கலாச்சாரம் சாரந்த உரிமைகள் குறித்தான பிரச்சினை. எனவே, இப்பாசிச சட்டத்திருத்தத்தின் அபாயத்தை உணர்த்தி இதற்கு எதிரான போராட்டத்தை புரட்சிகர, ஜனநாயக சக்திகள் உடனடியாக கட்டியமைக்க வேண்டியுள்ளது.


சிவராமன்

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



டெல்லி சலோ 2.0: பாசிசத்தை வீழ்த்தும் பாதை!

மூன்று வேளான் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் மூலம் பாசிசக் கும்பலை தோல்வி முகத்திற்கு தள்ளியதில் முக்கியபங்காற்றிய, மோடிக்கும்பலுக்கு சிப்பசொப்பனமாக திகழும் விவசாயிகள் தற்போது மீண்டும் டெல்லி சலோ 2.0 போராட்டத்தை முன்னெடுத்திருப்பது பாசிஸ்டுகளுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் தங்களின் போராட்டத்தின் மூலம் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ள விவசாயிகள் “பாசிசத்தை வீழ்த்துவதற்கான பாதை களப்போராட்டங்கள்தான்” என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.

மேலும் உலகம் முழுவதும், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் விவாயிகள் போராட்டம் தீவிரமடைந்துவரும் சூழலில், மறுகாலனியாக்க கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்திவரும் பாசிச மோடி அரசுக்கு எதிராகவும், விவசாயம் கார்ப்பரேட்மயமாக்கப்படுவதற்கு எதிராகவும், ஒட்டுமொத்த இந்திய உழைக்கும் மக்களின் நலன்களை உள்ளடக்கிய இந்திய விவசாயிகள் நடத்திக்கொண்டிருக்கும் இப்போராட்டம் சர்வதேச அளவில் முன்னுதாரணமிக்க போரட்டமாகும்.

டெல்லி சலோ 2.0!

கடந்த 2020-ஆம் ஆண்டு விவசாயிகள் முன்னெடுத்த டெல்லி சலோ போராட்டத்தினால் அடிபணிந்த பாசிசக் கும்பல் மூன்று வேளான் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்ததோடு விவசாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்ட அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் ஒப்புக்கொண்டிருந்தது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் மோடி அரசு அக்கோரிக்கைகளை நிறைவேற்றாததை எதிர்த்து தற்போது மீண்டும் விவசாயிகள் டெல்லி சலோ 2.0 போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

சம்யுக்தா கிசான் மோர்ச்சா (அரசியல் சாராதது) (SKM(NP)), கிசான் மஸ்தூர் மோர்ச்சா (KMM) ஆகிய விவசாய சங்கங்களின் தலைமையில் நடத்தப்படும் இப்போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் பங்கெடுத்துள்ளன. 2020-2021 விவசாயிகள் போராட்டத்திற்கு, தலைமை தாங்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா (SKM) சங்கத்திற்கு கீழுள்ள பாரதிய கிசான் யூனியன் (BKU) போன்ற பல விவசாய சங்கங்களும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளன. அந்தவகையில், கடந்த பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி தொடங்கிய டெல்லி சலோ 2.0 போராட்டமானது, நாடுமுழுவதும் பாசிச மோடி அரசுக்கு எதிராகவும் அதன் பாசிசத் சட்டத்திட்டங்களுக்கு எதிராகவும் போராடும் பிற வர்க்கங்களுக்கு முன்னுதாரணமிக்க வகையில் வீரதிரத்துடன் நடைபெற்று வருகிறது.

இப்போராட்டத்தில், 2020-2021 போராட்டத்தின்போது மோடி அரசு நிறைவேற்றுவதாக ஏற்றிருந்த வாக்குறுதிகளான குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதப்படுத்துவதற்கான சட்டம், விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி, மின்சாரச் சட்டத்திருத்தம் 2020 ரத்து உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை விவசாயிகள் மீண்டும் முன்வைத்துள்ளனர். அதனோடு, 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு மாதம்தோறும் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்; உலக வர்த்தக கழகத்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டும்; பழங்குடி மக்களுக்கு சொந்தமான நிலம், காடுகள், நீர் ஆதாரங்கள் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் போன்ற ஒட்டுமொத்த இந்திய மக்களின் வாழ்வாதராத்தை பாதுக்காக்க கூடிய, மறுகாலனியாக்க கொள்கைகளுக்கு எதிரான முக்கியமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு மாதங்கள் கூட இல்லாத நிலையில், களப்போராட்டம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வழி என்பதை நன்குணர்ந்துள்ள விவசாயிகள் பாசிசக்கும்பலுக்கு எதிராக நாடுமுழுவதுமிருந்து அணித்திரண்டு கொண்டிருக்கிறார்கள். “13 நாட்கள், 13 மாதங்கள், 13 ஆண்டுகள் ஆகினாலும் ஒன்றிய அரசு சட்டம் இயற்றும்வரை, மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நாங்கள் வீடு திரும்பமாட்டோம்” என்ற விவசாயிகளின் போராட்ட உறுதியைக்கண்டு பாசிசக் கும்பல் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது.

விவசாயிகள் மீதான மோடி அரசின் உள்நாட்டு போர்

டெல்லி முற்றுகை போராட்டத்தை விவசாயிகள் அறிவித்தவுடனேயே, கதிகலங்கிய ஒன்றிய மோடி அரசும் பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகளும் விவசாயிகள் போராட்டத்தை எப்படியாவது ஒடுக்கி தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்பதற்காக தயாரிப்புப் பணிகளில் இறங்கின. ஹரியானா – பஞ்சாப் எல்லையில் அமைந்திருக்கும் அம்பாலா, குருஷேத்ரா, கைதல், ஜிந்த் போன்ற கிராமங்களில் பிப்ரவரி 11 அன்று காலை 6 மணி முதல் இணையம் மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் துண்டிக்கப்பட்டன.

ஒன்றிய பா.ஜ.க. அரசு டெல்லியில் ஒருமாதக் காலத்திற்கு 144 தடை உத்தரவை பிறப்பித்தது. நகரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கூடி நிற்க தடை விதிக்கப்பட்டது. சில கல்வி நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன. விவசாயிகள் டெல்லிக்குள் மெட்ரோ ரயில் வழியாக நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக சில மெட்ரோ ரயில் நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன. மேலும், டெல்லிக்குள் நுழையும் போராட்டக்காரர்களை தடுக்கும் விதமாக, டிராக்டர்கள், தள்ளுவண்டிகள், பேருந்துகள் போன்ற வாகனங்கள் டெல்லிக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் 60 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஹரியானாவில், விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் தடுப்பதற்காக அம்மாநில பா.ஜ.க. அரசு விவசாயிகள் மீது மூர்க்கத்தனமான அடக்குமுறைகளை செலுத்தியது. விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று போலீசு கிராமங்களில் எச்சரிக்கை விடுத்தது; டிராக்டருடன் விவசாயிகள் வெளியில் வந்தால் அவர்கள் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தது; விவசாயிகளுக்கு டீசல் வழங்கக்கூடாது என்று பெட்ரோல் நிலைய உரிமையாளர்களை மிரட்டியது. விவசாய சங்கத் தலைவர்களிடம் அவர்களது வங்கிக்கணக்குகள் மற்றும் நிலங்கள் குறித்த விவரங்களை அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது; விவரங்களை அளிக்கத் தவறினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மிரட்டியது. போலீசின் அடக்குமுறையால் பல விவசாய சங்கத் தலைவர்கள் போராட்டம் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பே பஞ்சாப்பிற்கு சென்றுவிட்டனர்.


படிக்க: தொடரும் விவசாயிகள் போராட்டம்: மார்ச் 10 நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம்!


விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர், ஷம்பு உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் சிமெண்ட் மற்றும் மணல் மூட்டைகள், முள்வேலிகள், பேரிகார்டுகள், லாரிகள் போன்றவற்றின் மூலம் தடுப்புகளை அமைப்பது; டிராக்டர்களின் டயரை கிழிக்க சாலைகளில் ஆணிகளைப் புதைப்பது; டிராக்டர்கள் செல்ல முடியாத வகையில் சாலையில் பள்ளங்களை தோண்டுவது போன்ற காட்டுமிராண்டித்தனமான முறைகளை போலீசும் துணை ராணுவப் படைகளும் கையாண்டன. கண்ணீர் புகைக்குண்டுகளை வீசும் ட்ரோன்கள், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பீரங்கிகள், தடுப்புகளை நகர்த்தி வைப்பதற்கான கிரேன்கள் என விவசாயிகளை ஒடுக்க பாசிசக் கும்பலின் அடியாட்படையான போலிசும் துணை ராணுவமும் முழுத்தயாரிப்பில் இருந்தன. கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி போராட்டங்களை கலைப்பதற்கான ஒத்திகையிலும் ஈடுபட்டன.

விவசாயிகளின் மீது கொடிய தாக்குதல்களை தொடுப்பதற்காக மோடி அரசு செய்துவந்த முன்தயாரிப்புகள் ஆங்கில செய்தி ஊடகங்களில் வெளிவந்து மோடி அரசின் கோரமுகம் அம்பலப்பட்டதோடு பெரும் பேசுபொருளானது. சமூக ஊடகங்களில், “மோடி அரசு தயாராவது விவசாயிகளின் போராட்டத்திற்கா? இல்லை உள்நாட்டு போருக்கா” என பலரும் கேள்வியெழுப்பி பாசிச மோடி அரசின் முகத்திரையை கிழித்தனர்.

அடக்குமுறைகளை எதிர்கொண்டு முன்னேறும் விவசாயிகள்

பாசிச மோடி அரசின் இந்த ஒடுக்குமுறைகளை கண்டு அஞ்சாத விவசாயிகள், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் டெல்லி எல்லையை நோக்கி விரையத் தொடங்கினர். விவசாயிகளின் மீது போலீசு கொடிய அடக்குமுறைகளை செலுத்தி வந்தாலும் எல்லைகளில் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது.

டெல்லி முற்றுகைப் போராட்டம் துவங்கிய 13-ஆம் தேதி அன்று, ஷம்பு எல்லைப் பகுதியில் மட்டும் 10,000 விவசாயிகள் திரண்டிருந்ததாக போராட்டத்தில் பங்கேற்ற விவசாய அமைப்பு ஒன்று தெரிவித்தது. ஒரு வாரத்திற்கு பிறகு அதே ஷம்பு எல்லையில் சுமார் 14,000 விவசாயிகள் திரண்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. டெல்லி எல்லையை நோக்கி செல்வதற்காக ஒட்டுமொத்தமாக இலட்சக்கணக்கில் விவசாயிகள் போராட்டகளங்களில் குவிந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

அதேபோல், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், கர்நாடகா போன்ற நாட்டின் பிற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். பலர் தங்கள் மாநிலத்தில் இருந்து டெல்லி எல்லைகளை நோக்கி செல்லும்போது போலீசு படையினரால் தடுத்துநிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். விவசாயிகளுக்கு ஆதாரவாக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. நாட்கள் செல்ல செல்ல நாட்டின் ஒட்டுமொத்த விவசாய வர்க்கத்தின் போராட்டமாக டெல்லி முற்றுகை போராட்டம் உருவெடுத்தது.

விவசாயிகள் தங்கள் டிராக்டர்கள் உதவியுடன் எல்லைகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறி செல்ல முயன்றனர். கான்கீரிட் தடுப்புகளை தங்கள் டிராக்டர்களில் கயிறுகட்டி இழுத்து சென்று அப்புறப்படுத்தும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. சம்பு எல்லையில் மேம்பாலத்தில் இருந்த தடுப்புகளை அகற்றி கீழே தூக்கி வீசி எறிந்தனர். தடுப்புகளை மீறிச் செல்ல முடியாத நிலையில் நெடுஞ்சாலைகளைத் தவிர பிற வழிகளிலும் டெல்லிக்குள் செல்ல முயன்றனர். தண்ணீர் ஓடும் கால்வாய்களை டிராக்டர்கள் கடந்து செல்லும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

தடுப்புகளை மீறிச் செல்ல முயன்ற விவசாயிகளை ஈவிரக்கமின்றி ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி போலீசு தாக்கியது. பல இடங்களில் விவசாயிகள் கூடாரங்கள் அமைத்து முகாமிட்டிருந்த பகுதிகளின் மீது தொடர்ச்சியாக ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது பாசிச பா.ஜ.க. அரசு. இதற்காக டெல்லி போலீசு மட்டும் 30,000 கண்ணீர் புகைக்குண்டுகளை கொள்முதல் செய்திருந்தது. இது பாலஸ்தீன மக்களை ஒடுக்க இஸ்ரேல் இனவெறி அரசால் கையாளப்படும் கொடூரமான வழிமுறையாகும்.

விவசாயிகள் போரட்டத்தை எப்படியாவது அடக்கி ஒடுக்க வேண்டும் என்பதற்காக, ரப்பர் குண்டுகள், விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் பெல்லட் குண்டுகளை கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதிக அழுத்தத்தில் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் தண்ணீர் பீரங்கிகள், செவித்திறனை பறிக்கக்கூடிய சோனிக் (ஒலி) பீரங்கிகள் உள்ளிட்ட மிருகத்தனமான ஆயுதங்களை கையாண்டது.

இவ்வாறு மோடி அரசு எதிரி நாட்டின் மீது போர் தொடுத்துள்ளதைப் போல விவசாயிகளின் மீது போர் தொடுத்து அவர்கள் மீது ஈவிரக்கமின்றி கொடூரமாக தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், நெஞ்சுரமிக்க விவசாயிகள் மோடி அரசின் கொடிய தாக்குதல்களை மிகுந்த மன உறுதியுடன் எதிர்கொண்டு வருகின்றனர். 21 வயது விவசாயி உட்பட ஆறு விவசாயிகள் பாசிஸ்டுகளின் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர். 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் படுகாயமடைந்துள்ளனர். பலருக்கு கண்பார்வை பறிபோயுள்ளது. இத்தகைய, சூழலிலும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

ஆனால், பாசிஸ்டுகளின் கொடிய அடக்குமுறைகளிலிருந்து அனுபவப் படிப்பினைகளை எடுத்துகொண்ட விவசாயிகள், கண்ணீர்ப்புகை மூக்கினுள் புகாமல் தடுக்கக்கூடிய முகக்கவசங்கள், கண்ணீர் புகையிலிருந்து பாதுகாக்கும் மூக்குக் கண்ணாடிகள் போன்ற உபகரணங்களை பயன்படுத்தனர். ட்ரோன்களை செயலிழக்க செய்ய பட்டம் விடுவது, காஸ்கோ பந்துகளை பயன்படுத்துவது போன்ற வழிமுறைகளையும் கையாண்டு வருகின்றனர்.

குலை நடுக்கத்தில் மோடி-அமித்ஷா கும்பல்

அத்துணை அடக்குமுறைகளையும் மீறி விவசாயிகள் போராட்டக்களத்தை நோக்கி முன்னெறி கொண்டிருப்பது பாசிசக் கும்பலின் பீதியை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் இப்போராட்டத்தில் பங்கெடுக்காத சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு, 21 வயது இளைஞர் பஞ்சாப்-ஹரியானா எல்லையில் கொல்லப்பட்டதையடுத்து நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் டிராக்டர் அணிவகுப்பு நடத்தப்படும் என்று அறிவித்து போராட்டத்தில் குதித்தது. போலிசின் அடக்குமுறைகளை கண்டித்து பஞ்சாப் மாநிலத்தில் 20-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. தலைவர்களின் வீட்டு வாசலின் முன் போராட்டம் நடத்தப்பட்டது.

குறிப்பாக, கடந்த 2020-ஆம் ஆண்டு மூன்று வேளான் சட்டம் என்ற பாசிச அடக்குமுறைக்கு எதிராக போராடிய விவசாயிகள் இம்முறை குறைந்தபட்ச ஆதார விலைக்கான கோரிக்கை, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட வாழ்வாதார உரிமைகளுக்காக போராடுவது விவசாயிகள் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாகும். ஜனநாயக வாடையை கூட அறிந்திருந்த பாசிச கும்பலால் விவசாயிகளின் இத்தகைய ஜனநாயகப்பூர்வமான போராட்டத்தையும் கோரிக்கைகளையும் சகித்துகொள்ள முடியவில்லை. இதனை ஆர்.எஸ்.எஸ்-இன் பத்திரிகையான “ஆர்கனைசர்”-இன் கதறல் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

விவசாயிகள் போராட்டம் குறித்து தலையங்கம் எழுதிய ஆர்கனைசர் பத்திரிகை, “2020-ஆம் ஆண்டில் டெல்லியில் நடந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு விவசாயத்துறையில் சீர்திருத்தங்கள் தொடர்பான மூன்று மசோதாக்கள் காரணமாக இருந்தது. ஆனால், தற்போது அத்தகைய காரணம் எதுவும் இல்லை” என்றும், அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை, கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், உலக வர்த்தக கழகத்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் உள்ளிடவை “நியாயமற்ற கோரிக்கைகள்” என்றும் கதறியுள்ளது.


படிக்க: WTO-வின் துணையோடு கார்ப்பரேட்மயமாகும் இந்திய விவசாயம்!


ஐந்து மாநில தேர்தலுக்கு பிறகு, அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு, ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது போன்ற எதிர்க்கட்சிகள் மீதான தாக்குதல்கள், உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமல், உத்தரகாண்ட் கலவரம் என பா.ஜ.க. கும்பல் அடுத்தடுத்த பாசிச நடவடிக்கைகளையும் தாக்குதல்களையும் மேற்கொண்டு வந்தாலும், களத்தில் பாசிச சர்வாதிகாரத்திற்கு எதிரான இளைஞர்களின் நாடளுமன்ற புகைக்குப்பி வீச்சு, பாசிசக் கும்பலை பணியவைத்த லாரி ஓட்டுநர்களின் போராட்டம் என அடுத்தடுத்த மக்கள் போராட்டங்கள் பாசிசக் கும்பலுக்கு நெருக்கடியை ஏற்படுத்திவந்தன.

தற்போது அதன் உச்சமாக ஜனநாயக உரிமைகளைகோரும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருவது வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசக் கும்பலுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதோடு, விவசாயிகளின் போராட்டம் பிற வர்க்கத்தினரிடம் பரவி பாசிச மோடி அரசிற்கு எதிரான வலுவான போரட்டமாக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளதால், விவசாய போராட்டத்தை ஒடுக்கிவிட வேண்டும் என்பதில் பாசிசக் கும்பல் தீவிரமாக உள்ளது. ஒருபுறம் போராடும் விவசாயிகள் மீது மிருகத்தனமான தாக்குதல்களை தொடுத்துவரும் அதேவேளையில் மறுபுறம் விவசாயிகளுடனான பேச்சுவார்த்தைகள் மூலம் நயவஞ்சகமான முறையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிடலாம் என்ற நோக்கத்தில் காய்களை நகர்த்தி வருகிறது மோடி அரசு.

போராட்டம் துவங்குவதற்கு முன்னாலேயே விவசாய சங்கத் தலைவர்களுடன் இரண்டுகட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான குழுக்களை அமைப்பதாக வாக்குறுதி அளித்தது பா.ஜ.க. அரசு. வாக்குறுதியை நிராகரித்த விவசாயிகள், “குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்க வேண்டியதன் அவசியத்தை ஏற்கெனவே பல குழுக்கள் விவாதிட்டுவிட்டன, குழுக்களை உருவாக்குவதன் மூலம் விஷயத்தை நீட்டிக்க விரும்புகின்றனர்” என்று மோடி அரசை அம்பலப்படுத்தினர்.

நான்காம் கட்ட பேச்சுவார்த்தையில் பருத்தி, சோளம், துவரை, உளுந்து, மசூர் பருப்பு ஆகிய விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதார விலையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒன்றிய அரசு கொள்முதல் செய்யும் என அமைச்சர்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனால், “அடிப்படையில், இது ஒரு ஒப்பந்த விவசாய திட்டம். ஒப்பந்த விவசாயம் ஏற்கெனவே தோல்வியடைந்துள்ளது மற்றும் ஒப்பந்த விவசாயத்தில் நிலையான வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது” என்றும், “23 விளைபொருட்களில் ஐந்து விளைபொருட்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்துள்ளது, மற்ற விவசாயிகளை விட்டுவிடுவது நியாயமானதல்ல” என்றும் கூறி விவசாயிகள் அவ்வாக்குறுதியை நிராகரித்தனர்.

மேலும், விவசாயிகளின் போராட்டம் பற்றிய செய்திகளை தங்களுடைய பினாமி ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் இருந்து மூடிமறைப்பது; விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் எக்ஸ் பக்கத்தை முடக்குவது; போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளை “காலிஸ்தான் தீவிரவாதிகள்” என்றும் “போராட்டத்தை காங்கிரஸ் தூண்டிவிட்டுள்ளது” என்றும் இழிவுப்படுத்தி பிரச்சாரம் செய்வது போன்ற பா.ஜ.க. கும்பலின் கீழ்த்தரமான நடவடிக்கைகளும் மோடி அரசின் குலைநடுக்கத்தின் வெளிப்பாடுகளே.

ஆனால் விவசாயிகள் மீது மோடி அரசு தொடுத்துவரும் கொடூரத் தாக்குதல்களும் விவசாயிகளின் போர்க்குணமிக்க போராட்ட வழிமுறைகளும் முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தளங்களிலும், ஆங்கில செய்தி ஊடகங்களிலும் நாடு முழுவதும் பரவி பாசிச கும்பலின் பொய் பிரச்சாரங்கள் புஸ்வானமாகி வருவதோடு விவசாயிகளின் போராட்டத்திற்கான ஆதரவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாதம்

விவாசாயிகள் தங்களின் போராட்டத்தை தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அறிவிப்பை வெளியிட்டு தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுவந்த போதிலும், விவசாயிகளை ஒடுக்க மோடி அரசு ஆயத்தாமாகி வருவது தொடர்ந்து ஆங்கில ஊடகங்களில் வெளியாகி கொண்டிருந்த போதிலும் எதிர்க்கட்சிகள் கருத்தேதும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்துவந்தன. 13-ஆம் தேதி விவாசாயிகள் மீது மோடி அரசு மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்திய பிறகுதான் எதிர்க்கட்சிகள் பா.ஜ.க-வை விமர்சித்தன. நியாயமான கோரிக்கைகளோடு போராட்டம் நடத்தவரும் விவசாயிகளை, பா.ஜ.க. அரசு பயங்கரவாதிகள் போலத் தாக்க நினைக்கிறது என்றும் சீன எல்லைப் பாதுகாப்பைப் பலப்படுத்தச் சொன்னால் டெல்லியின் எல்லைகளில் பாதுகாப்பைப் பலப்படுத்திக் கொண்டிருக்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை இப்போது அறிவிக்கிறேன். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக எங்களின் முதல் வாக்குறுதி இது. ஆட்சிக்கு வந்ததும் இந்த வாக்குறுதியை நிச்சயம் செயல்படுத்துவோம்” என்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இதே வாக்குறுதியை ராகுல்காந்தியும் அளித்திருந்தார். மேலும் இமாச்சலப்பிரதேச காங்கிரஸ் அரசும் விவசாயிகளுக்கு பாலுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது.

மேலும், இப்போராட்டத்தில் கணிசமான அளவு விவசாயிகள் கலந்துகொண்டுள்ள பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை, அம்மாநில ஆளும் கட்சியான ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மன்-தான் விவசாயிகளுக்கும் ஒன்றிய மோடி அரசுக்கும் இடையில் மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறார். இப்போராட்டத்தில் பங்கெடுத்துள்ள கிசான் மஸ்தூர் மோர்ச்சாவிற்கும் ஒன்றிய மோடி அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்வதிலும் முக்கிய பங்காற்றி வருகிறார். போராட்டக்களத்தில் பாசிச பா.ஜ.க-வால் சுட்டுக்கொல்லப்பட்ட 21 வயது இளைஞரின் குடும்பத்திற்கு ஒரு கோடி இழப்பீடும் அவரது தங்கைக்கு அரசு வேலையும் வழங்குவதாக ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது.

ஆனால், இன்னொருபுறம் இந்நடவடிக்கைகள் ஆம் ஆத்மி அரசின் மீதான அம்மாநில விவசாயிகளின் எதிர்ப்பை திசைதிருப்புவதற்கான முயற்சி என்று விமர்சிக்கப்படுகிறது. குறிப்பாக, ஆம் ஆத்மி அரசாங்கத்திற்கு எதிராக பிப்ரவரி 24 அன்று பாரதி கிசான் யூனியன் (ஏக்தா உக்ரஹான்) (BKU(EU)) என்ற விவசாய சங்கத்தால் “சலோ சண்டிகர்” பேரணி அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, டெல்லி சலோ போராட்டத்தால் இப்பேரணி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், 2022-ஆம் ஆண்டு நடந்த பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலின்போது, ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 22 பயிர்களை குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வதாகவும் கொள்முதலை உத்தரவாதம் செய்வதாகவும் பகவந்த் மன் உள்ளிட்ட பல ஆம் ஆத்மி தலைவர்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவ்வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளை வஞ்சித்து வருகிறது ஆம் ஆத்மி அரசு. வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டத்தை ஆம் ஆத்மி அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

குறைந்தபட்ச ஆதாரவிலை கோரிக்கையை நிறைவேற்றுவதாக தற்போது வாக்குறுதி அளித்துவரும் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும், இக்கோரிக்கையானது விவசாயிகளுக்கு உயிராதாரமானது என்பதும் காங்கிரஸ் ஆட்சி காலத்திலிருந்தே விவசாயிகள் இக்கோரிக்கைக்காக போராடி வருகின்றனர் என்பதும் நன்கு தெரியும். சொல்லபோனால், சுவாமிநாதன் கமிட்டியின் குறைந்தபட்ச ஆதார விலை பரிந்துரையை ஏற்பதற்கு அப்போதைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு விடாப்பிடியாக மறுத்தது என்பதே உண்மை.

இதனையடுத்து விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாகக் கூறி மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சிக்கு வந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் நயவஞ்சகமாக விவசாயிகளை ஏமாற்றி வருவதோடு விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கும் மூன்று வேளான் சட்டங்கள் போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக விவாசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருவதும், வாழ்வாதாரத்தை இழந்துவரும் விவாசாயிகள் மத்தியில் குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கைக்கான போராட்டங்கள் அதிகரித்து வருவதும் அனைவரும் அறிந்ததே.

ஆனால், இத்தனை ஆண்டுகளாக விவசாயிகளின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல், தாங்கள் ஆளும் மாநிலங்களில் குறைந்தபட்ச ஆதார விலைய நிறைவேற்றாமலும் அதற்கான வாக்குறுதிகளை அளிக்காமலும்தான் எதிர்க்கட்சிகள் இருந்து வந்துள்ளன. அவ்வாறு வாக்குறுதி அளித்த ஆம் ஆத்மி கட்சியும் அதனை விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்துகொள்வதற்காக மட்டுமே பயன்படுத்தியதே ஒழிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மேலும், மோடி-அமித்ஷா கும்பலுக்கு எதிராக ஒன்றிணைவதாகக் கூறிக்கொள்ளும் எதிர்க்கட்சிகள் தாங்கள் ஆளும் மாநிலங்களில் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வைக்கும் வகையிலான போராட்டங்களையும் கட்டியமைத்ததில்லை.

தற்போது விவசாயிகள் மத்தியில் உள்ள பா.ஜ.க. எதிர்ப்பை பயன்படுத்தி மக்கள் வாக்குகளை அறுவடை செய்து கொள்வதற்காக குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கையை நிறைவேற்றுவதாக எதிர்க்கட்சிகள் வாக்குறுதி அளிக்கின்றன. ஆனால், மக்கள் இக்கட்சிகளை நம்ப வேண்டுமெனில் குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று இந்தியா கூட்டணி கட்சிகள் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்.

விவசாயிகளின் போராட்டம் உரிமைக்கான போர்க்குரல்!

இந்தியாவில் 1990-களுக்குப் பிறகு, தனியார்மயம்–தாராளமயம்–உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, விவசாயம் மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகிய இடுபொருள்களின் விலை உயர்வு, விவசாயத்துறைக்கு அளித்துவந்த மானியங்களின் அளவை குறைப்பது, இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் விளைபொருள்கள் வீழ்ச்சி, வங்கிக்கடன் மறுப்பு, விவசாயத் துறைக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டு நிதியை குறைப்பது போன்றவற்றால் விவசாயிகளின் வாழ்வு கேள்விக்குறியாகிவிட்டது.

குறிப்பாக, மோடி-அமித்ஷா தலைமையிலான பாசிசக் கும்பல் இந்தியாவில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, மறுகாலனியாக்க கொள்கைகள் மூர்க்கத்தனமாக அமல்படுத்தப்படுகின்றன. விவசாயத்துறையில் கார்ப்பரேட் ஆதிக்கம் வேகமாக நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. உலக வர்த்தக கழகத்தின் உத்தரவின்படி, கடந்த 10 ஆண்டுகால பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கான நிதிஒதுக்கீடும், உர மானியத்திற்கான நிதிஒதுக்கீடும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன. மூன்று வேளாண் சட்டங்களின் கூறுகளை மறைமுகமாக அமல்படுத்துவதன் மூலம், உள்நாட்டு-பன்னாட்டு கார்ப்பரேட் கும்பல்களின் ஆதிக்கத்தை நிறுவும் வகையில் விவசாயத்துறைக்கான கட்டமைப்புகள் மாற்றப்பட்டு வருகின்றன.

அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2024-2025 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான ஒட்டுமொத்த ஒதுக்கீடு 2022-2023 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை ஒப்பிடும் போது 81 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய கிசான் சபா (AIKS) தெரிவித்துள்ளது. மேலும், 2024-2025 நிதியாண்டிற்கான விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான ஒட்டுமொத்த ஒதுக்கீடு, 2022-2023 நிதியாண்டிற்கான உண்மையான செலவீனங்களுடன் ஒப்பிடுகையில் 22.3 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும், 2023-2024 நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட பட்ஜெட் உடன் ஒப்பிடுகையில் 6 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மோடி அரசின் பத்தாண்டுகாலப் பாசிசப் பேயாட்சியில், கோடிக்கனக்கான விவசாயிகளின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு பிழைக்க வழியின்றி மரணப் படுகுழியை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுபடி, 2020-ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது 2022 ஆம் ஆண்டில் விவசாயிகளின் தற்கொலை 5.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் 1,00,474 விவசாயிகள் இறந்துள்ளதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.


படிக்க: இந்திய விவசாயிகளின் நெருக்கடி வாழ்வு: மேலும் துயரத்தை நோக்கி!


கார்ப்பரேட் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுவரும் இந்த பின்னணியில் இருந்துதான், வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை சட்டப்படி அமல்படுத்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை நாம் அணுக வேண்டியுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை என்பது, விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களுக்கு அதன் உற்பத்திச் செலவிற்கு அதிகமாக (குறைந்தப்பட்சம் 50 சதவிகிதத்திற்கு)விலை நிர்ணயத்து அரசால் கொள்முதல் செய்யும் முறை. இப்படி கொள்முதல் செய்யப்பட்ட உணவுப்பொருட்களை அரசு பொதுவிநியோக முறை மூலம் மக்களுக்கு வழங்கும். இதன் மூலம் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படாமல் அவர்களின் வாழ்வாதாரம் உத்தரவாதம் செய்யப்படும். ஆனால், இந்தியாவில் நெல், கோதுமை தவிர மற்ற வேளாண்பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை உறுதி செய்யப்படாத நிலையே இன்றுவரை உள்ளது. அதிலும் பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களில் மட்டுமே நெல், கோதுமை ஆகியவை முழுமையாக அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இந்த நிலை இல்லை. பெரும்பாலும் இடைத்தரகர்களால்தான் கொள்முதல் செய்யப்படுகின்றன.

பொருளை நேரடியாக உற்பத்தி செய்யாத சிறுகுறு வணிகர்களால் கூட குறிப்பிட்ட அளவிற்கு சரக்கு விலையை நிர்ணயம் செய்ய முடியும்போது, விவசாயிகளால் தாங்கள் விளைவிக்கும் பயிர்களுக்கான விலையை தீர்மானிக்க முடியாதது என்பது அப்பட்டமான பகல் கொள்ளை. 1990-களில் மறுகாலனியாக்க கொள்கைகள் உருவாக்கப்படுவதற்கு முன்னர் விவசாய தரகர்கள், இடை தரகர்கள், கமிஷன் மண்டி முதலாளிகள் சிண்டிக்கேட் அமைத்து விவசாய பொருட்களின் விலையை தீர்மானித்து கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர். இன்று அந்த இடத்தை கார்ப்பரேட்டுகள் பிடித்துள்ளன.

எனவே, விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலைக்கான கோரிக்கை என்பது தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை உரிமைக்கு ஒப்பான உயிராதாரமான கோரிக்கையாகும். விவசாயத்துறையில், உழைப்பவருக்கே அதிகாரம் என்பதை நிலைநாட்டும் வகையிலான கோரிக்கையாகும்.

அதேசமயம் விவசாயிகளின் போராட்டமும் கோரிக்கையும் அவர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கானது என்று மட்டும் பார்க்க கூடாது. ஒட்டுமொத்த இந்திய மக்களின் உணவு பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்துவதற்கான மகத்தான போராட்டம். ஏனெனில், விவசாயித்தில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதால் விவசாயிகள் மட்டுமில்லை, ஒட்டுமொத்த இந்திய உழைக்கும் வர்க்கமும் படுகுழியில் தள்ளப்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, விவசாயத்தில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை நிலைநிறுத்த மோடி அரசு பொது விநியோக முறையை ஒழித்துக்கட்டுவதற்கான வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது. பொது விநியோக முறைக்கான பொருட்களை கொள்முதல் செய்யும் இந்திய உணவுக் கழகத்திற்கான மானியங்களை வெட்டுவது, கொள்முதலை குறைப்பது, இந்திய உணவுக் கழகத்தில் இருக்கும் உணவு தானியங்களை மாநில அரசுகள் ஏலம் எடுப்பதற்குத் தடை விதிப்பது, குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு மானியங்களை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கான திட்டம் என திட்டமிட்டு பொது விநியோக முறையை ஒழித்துக்கட்டுவதற்கான வேலைகளை செய்து வருகிறது. பொது விநியோக முறையை முற்றிலும் ஒழித்துக்கட்டினால், விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை முழுமையாக கார்ப்பரேட் கைப்பற்ற முடியும். எனவே, விவசாயிகளின் குறைந்தப்பட்ச ஆதார விலை கோரிக்கை உத்தரவாதப்படுத்தப்பட்டால், அவர்களால் தொடர்ச்சியாக உற்பத்தியில் ஈடுபட முடியும், பொது விநியோக முறையையும் அரசு தொடரவேண்டியிருக்கும். அதேப்போல், மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து உழைக்கும் மக்கள் எதிர்கொண்டு வரும் தாக்குதல்களில் முக்கியமானது, உணவுப்பொருட்களின் விலையேற்றம். இதுவும் விவசாயத்துறையில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை நிலைநிறுத்தப்பட்டுவருவதன் விளைவே.

எனவே விவசாயிகளின் கோரிக்கை என்பது அவர்களின் உரிமைக்கானாது மட்டும் கிடையாது, நம்முடைய உணவுக்கானது, நாட்டின் உணவுப்பாதுகாப்புக்கு இன்றியமையாதது. விவசாயிகளின் இப்போராட்டத்திற்கு ஆதரவளித்து, வெற்றிடைய செய்ய வைப்பது இந்திய உழைக்கம் வர்க்கத்தின் கடமையாக உள்ளது.மேலும்,கார்ப்பரேட்டுகளின் கட்டற்ற சுரண்டலின் விளைவாக உருவாகியிருக்கும் பருவநிலைமாற்றமும், சுற்றுச்சூழல் சீர்கேடும் இன்று உலகாளாவிய பிரச்சனையாக உருவாகியிருக்கும் சூழலில் விவாசயத்தில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை எதிர்த்து, நிலம், நீர் சுற்றுச்சுழை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் விவசாயிகள் முன்வைத்திருப்பது சர்வதேசளவில் முக்கியத்துவம் வாயந்தது. ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் மறுகாலனியாதிக்க பிடியிலிருந்து விடுவிக்க கூடிய போராட்டத்திற்கான முன்னெடுப்பாக அமைந்துள்ளது.

பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசுக்காக போராடுவோம்!

தேசிய நதிநீர் கொள்கை, அணைப்பாதுகாப்பு சட்டம் போன்ற சட்டத்திட்டங்களால் ஏரி குளம் போன்ற நீர்நிலைகளில் கார்ப்பரேட் ஆதிக்கம் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது; கிராணைட் கொள்ளை, சிப்காட் போன்ற நாசகர திட்டங்களுக்காக விவசாய நிலங்கள் அபகரிக்கப்பட்டு நாசமாக்கப்படுவதால் வேளான்பரப்பு தொடர்ந்து குறைந்துவருவது; ஸ்டெர்லைட் போன்ற நச்சுக்கழிவுகளை வெளியேற்றும் கார்ப்பரேட் ஆலைகள், சுற்றுசூழலுக்கு கேடான பிளாஸ்டிக் கழிவுகளின் பெருக்கம், மணல் கொள்ளை ஆகிய பல்வேறு காரணங்களால் விவசாய கட்டமைப்பு பிரம்மாண்டமான அளவிற்கு அழிக்கப்பட்டுள்ளது.

இணைய வணிகம், முன் பேர வர்த்தகம், ஒப்பந்த விவசாயமுறை போன்றவற்றால் விவசாயத்தில் கார்ப்பரேட் ஆதிக்கம் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது; விவசாயத்தில் கார்ப்பரேட் ஆதிக்கம் காரணமாக விவசாயத்திற்கான இயற்கை உள்ளீடு பொருட்கள் அனைத்தும் ரசாயனமயமாக்கப்பட்டுள்ளது; இதனால், பூச்சிக்கொல்லி, மரபனு மாற்றப்பட்ட விதைகள் போன்ற செயற்கை உள்ளீடு பொருட்களை சார்ந்து வாழவேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்; ஒப்பந்த விவசாயமுறை, அரசின் உத்தரவாதமற்ற கொள்முதல் போன்றவை இதை மேலும் தீவிரப்படுத்துகிறது.

இதனால், விவசாய கட்டமைப்பு பெருமளவு சிதைக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் ஆதிக்கம் காரணமாக இந்த கட்டமைப்பில் விவசாயம் உயிர்பித்து வாழ்வதற்கே குறைந்த பட்ச ஆதார விலை கோரிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆனால், இத்தகைய குறைந்தபட்ச உத்தரவாதத்தைக்கூட மோடிக்கும்பல் கொடுக்க மறுப்பதுதான் இப்பிரச்சனையின் தீவிரமாகும்.

விவசாயிகள் போராட்டத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த கோரிக்கை உலக வர்த்தக கழகத்திலிருந்தும், சுதந்திர வர்த்தகத்திலிருந்தும் இந்தியா வெளியேற வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளானது இப்போலி ஜனநாயக கட்டமைப்பில் குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கை மட்டும் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் உண்மையான பாதுகாப்பை வழங்கிவிடாது என்ற உண்மையுடன் நெருக்கமானது. இந்த போலி ஜனநாயக கட்டமைப்பிற்குள் குறைந்தபட்ச ஆதார விலையை கோரிக்கையைக்கூட முழுமையாக உத்தரவாதப்படுத்த முடியாது என்பதே எதார்த்தம். மறுகாலனியாக்க கொள்கைகளை திணிக்கும் உலக வர்த்தக கழகத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு விவசாயித்தில் கார்ப்பரேட் ஆதிக்கம் நிலைநிறுத்தப்படுவதை தடுப்பதோ, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதோ நடக்காத காரியம். இதனை உணர்ந்தால்தான் “விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கொடு! உலக வர்த்தக கழகத்திலிருந்து வெளியேறு! சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்!” என்ற கோரிக்கைகளையும் முன்வைத்து போராடி வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டம் மாற்றுக்கட்டமைப்பிற்கான தேவையை தெளிவாக பறைசாற்றுகிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற நாட்டையும் மக்களையும் மறுகாலனியாதிக்க புதைசேற்றில் தள்ளிவிட்டு, காவி-கார்ப்பரேட் பாசிசத்தை திணித்துவரும் பாசிசகும்பலை தூக்கியெறிவது முதன்மையானதென்றால், மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை வழங்கக்கூடிய, விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் உண்மையான பாதுகாப்பை அளிக்கக்கூடிய மாற்று ஜனநாயக கட்டமைப்பு நிறுவுப்படுவதும் அவசியமானது.

விவசாயிகளுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம் வழங்கக் கூடிய, விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கைகளை தடுக்க கூடிய, மறுகாலனியாக்க கொள்கைகளுக்கு மாற்றாக தேசிய ஜனநாயக பொருளாதார கொள்கைகளை வகுத்து செயல்படக்கூடிய பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்பதென்பதே இதற்கு தீர்வாகும். அங்குதான் ஒட்டுமொத்த உழைக்கும்மக்களுக்கான உரிமை நிலைநாட்டப்படுவதோடு, விவசாயிகளுக்கு முழுமையான பாதுகாப்பும், மறுவாழ்வு அளித்து முன்னேற்றத்தையும் கொடுக்க முடியும்.

எனவே, பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை அமைப்பதற்கான போராட்டத்தை விவசாயிகளும் விவசாயிகளை ஆதரிக்கக்கூடிய புரட்சிகர-ஜனநாயக சக்திகளும் முன்னெடுப்போம்!

டெல்லி சலோ 2.0 போராட்டத்தின் மூலம் விவசாயிகள் வழிகோலியுள்ள பாசிசத்தை வீழ்த்தும் பாதையில் அனைவரும் ஒன்றிணைவோம்!


அமீர்

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



WTO-வின் துணையோடு கார்ப்பரேட்மயமாகும் இந்திய விவசாயம்!

WTO-வின் துணையோடு கார்ப்பரேட்மயமாகும் இந்திய விவசாயம்!
சூழ்ந்து நிற்கும் பேராபத்து!

ம் நாட்டில் இன்று உலக வர்த்தகக் கழகம் (WTO) ஆனது குறைந்தபட்ச ஆதாரவிலை (MSP), பொது விநியோக அமைப்பு (PDS) ஆகிய இரண்டுக்கும் தடைக்கல்லாக மாறியுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு WTO-இல் இந்தியா நுழைந்ததன் விளைவை நாம் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். 2019-ஆம் ஆண்டில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

மூன்றாம் உலக நாடுகளின் விவசாயத்தைச் சுரண்டி, பெரும் லாபத்தைப் பெறுவதற்கு உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனங்களின் சந்தைத் தளமாக WTO இருக்கிறது. இதன் காரணமாகத்தான் உலக வர்த்தகக் கழகத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

உலக வர்த்தக கழகத்தில் இந்தியா இணைந்தபோது பெரிய வாக்குறுதிகள் நமக்கு அளிக்கப்பட்டன. தடையற்ற வர்த்தகத்தின் மூலம் நமது உற்பத்திப் பொருட்களை அதிகளவில் ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் கூடுதலான வருமானத்தை விவசாயிகள் பெற முடியும் என்றும் பொய்களைப் பரப்பினர்.

ஆனால் அதற்கு நேர்மாறாக, ஏழைநாடுகளின் விவசாயிகளைச் சுரண்டி, மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே இதன் மூலம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன. வளரும் நாடுகள் மேலும் தங்களுக்கான சந்தைகளைத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. நீண்ட காலமாகவே தாராள வர்த்தகத்தின் அடிப்படையில் விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான கெய்ர்ன்ஸில் (Cairns) உள்ள மேற்கத்திய நாடுகள் நெறிமுறையற்ற வர்த்தகத் தடைகளை நாடின. வளரும் நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் விவசாயப் பொருட்களின் விலைகளைச் செயற்கையாகக் குறைத்தன.

மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்கள் பெரிய அளவிலான மானியங்களை அவர்களது நாடுகளில் பெறுகின்றன.  இந்த சலுகை நிலையில் இருந்து விவசாயப் பொருட்களை மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. இது மூன்றாம் உலக நாடுகளைச் சார்ந்த கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையை திவாலாக்குகிறது. உதாரணத்திற்கு நியூசிலாந்தில் இருந்து ஆப்பிள்களும், அமெரிக்காவில் இருந்து ஆரஞ்சுகளும் வருவதால், உள்நாட்டு விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைப்பதில்லை. மேலும் நமது விவசாய விளைபொருட்கள் கார்ப்பரேட் சந்தை தரகு கும்பல்களால்தான் வர்த்தகம் செய்யப்படுகின்றன. இது விவசாயிகளுக்கு மேலும் துன்பத்தைக் கூட்டுகிறது.

WTO-வில் வர்த்தகத்தில் அளவு கட்டுப்பாடுகள் தொடர்பான பெரும்பாலான பிரச்சினைகளில் இந்தியா தோல்வியையே தழுவியது. இப்போது வளர்ந்த பணக்கார நாடுகள் நமது நாட்டின் குறைந்தபட்ச ஆதாரவிலை மற்றும் இந்திய உணவுக் கழகத்திற்கான மானியங்கள் ஆகியவற்றை அகற்றுவதற்கு நிர்ப்பந்திக்கின்றன. ஏற்கனவே அமேசான், வால்மார்ட் மற்றும் பிற பன்னாட்டு நிறுவனங்கள் நமது உள்ளூர் உணவு சந்தைகளில் ஆன்லைன் மூலம் நுழைந்து விவசாயிகள், சிறு, நடுத்தர வணிகர்களின் வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கின்றன. அதனால்தான், போராடுகின்ற விவசாயிகள், குறைந்தபட்ச ஆதாரவிலையை (MSP) சட்டப்பூர்வமாக அமல்படுத்துவதை உறுதி செய்வதற்கான சட்டத்தைக் கோருகின்றனர்.


படிக்க: கருப்பை இல்லாத பீட் மாவட்ட பெண்கள்: இதுதான் மோடியின் இந்தியா


உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை வெறும் வர்த்தகப் பொருளாக மட்டுமே WTO கருதுகிறது. வளரும் நாடுகளில் பட்டினியால் வாடும் கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு அந்நாடுகள் உணவளிக்கும் பொறுப்பை புறக்கணிக்கக் கோருகிறது. WTO விதிமுறைகளின்படி சூடான் அல்லது ஜார்க்கண்டில் உள்ள சிறு விவசாயிக்கு வழங்கப்படும் எந்த மானியமும் வர்த்தகக் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கப்படுகிறது.

பணக்கார நாடுகள் தங்கள் நாடுகளில் விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால் வளரும் நாடுகளில் உற்பத்திச் செலவில் 10 சதவீதத்திற்கு மேல் மானியம் வழங்கக் கூடாது என WTO நிர்ப்பந்திக்கிறது. நம் நாட்டின் மானியங்களோ (விதைகள், மின்சாரம், டீசல், MSP ஆகியவற்றின் விலையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது) 1986-ஆம் ஆண்டு விதிகளின்படிதான் இன்று வரை நடைமுறையில் இருக்கின்றன. உண்மையில் உற்பத்தி செலவு 6 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலைமையானது மானியங்கள் அதிகம் பெறும் மேற்கத்திய நாடுகளின் விளைபொருட்களோடு எந்த வகையிலும் ஈடுகொடுக்க முடியாத நிலைக்கு நமது நாட்டின் விவசாயிகளை மாற்றியுள்ளது. உண்மையில் கொடுக்கப்படும் மானியங்களின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பெருமளவில் பயனடைவது பெரும் விவசாய வணிக நிறுவனங்களே ஆகும். இது பல லட்சக்கணக்கான  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது.

ஆனால் வளரும் நாடுகள் உலகச் சந்தைகளில் மிகவும் மலிவான உணவுப் பொருட்களைத் திணிப்பதாக மேற்கத்திய நாடுகள் வாடிக்கையாக குற்றம் சாட்டுகின்றன. இது அப்பட்டமான பொய்யாகும். சூடான் நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுவிவசாயி, உலகச் சந்தையில் பருத்தியைக் கொட்டி அதிக லாபம் ஈட்டி, அமெரிக்க பருத்தி விவசாயிக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறார் என்பது எவ்வளவு மோசமான கற்பனை. உலக வர்த்தகக் கழகத்தின் மானியம் தொடர்பான விதிகள் ஐரோப்பிய நாடுகளையோ அல்லது அமெரிக்காவையோ கட்டுப்படுத்துவதில்லை. அது அவர்களுக்கு ஆதரவாகவே உள்ளது.

ஒட்டுமொத்த விவசாயத்தையும் கார்ப்பரேட்மயமாக்கும் நோக்கத்திற்காகவே உலக வர்த்தகக் கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. விதைகள், உரங்கள், உணவு சந்தைப்படுத்துதல் ஆகிய எல்லா அம்சங்களிலும் பன்னாட்டு கார்ப்பரேட்டுளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. கார்கில், ADM, Zenoh போன்ற ஒரு சில விவசாய கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே உலக தானிய வர்த்தகத்தில் 50 சதவீதத்தைக் கட்டுப்படுத்துகின்றன. மேலும் இவை செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தி கொள்ளை லாபம் அடிக்கின்றன. 2009-ஆம் ஆண்டில் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் கடுமையான உணவு பற்றாக்குறை ஏற்பட்டதன் பின்னணியில் இந்நிறுவனங்களின் சதி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


படிக்க: இந்திய விவசாயிகளின் நெருக்கடி வாழ்வு: மேலும் துயரத்தை நோக்கி!


இந்தியாவைப் பொறுத்தவரை 140 கோடி மக்களைக் கொண்ட மிகப்பெரிய உணவு தானிய சந்தையை மேற்கத்திய கார்டெல்கள் அம்பானி மற்றும் அதானி ஆகிய உள்நாட்டு கார்ப்பரேட் தரகு கும்பலுடன் சேர்ந்து கொள்ளையடிக்க விரும்புகின்றன. அதற்காக குறைந்தபட்ச ஆதாரவிலை, பொது விநியோக அமைப்பு, மானியங்கள் ஆகிய அனைத்தையும் நீக்கி சிதைக்கத் துடிக்கின்றன. கோடிக்கணக்கான விவசாயிகளின் போராட்டத்தையும் மதிக்காமல் பாசிச மோடி கும்பல் செயல்படுவதற்கு இதுவே காரணமாகும்.

அதாவது உலக விவசாயச் சந்தைகளுடன் இந்திய விவசாயத்தை இணைப்பதன் தொடர் நிகழ்வாக விவசாயத்துறையை முழுமையாக கார்ப்பரேட்மயமாக்கும் பாதையில் விரைந்து பயணிக்கிறது மோடி அரசு.  கோடிக்கணக்கான சிறு மற்றும் குத்தகை விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கத் துடிக்கின்றது பாசிச மோடி கும்பல். மிக சமீபத்தில் கூட ஐஸ்லாந்து, லீச்சென்ஸ்டியன், நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நான்கு ஐரோப்பிய நாடுகளுடன் விவசாயத் துறை தொடர்பான தாராள வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது மோடி அரசு.

விவசாயம், சந்தை, உணவு வர்த்தகம் ஆகியவற்றை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒப்படைப்பதற்கான பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.

விவசாயம் கார்ப்பரேட்மயமாக்கப்படுதல் என்பது நாட்டில் பசி, பஞ்சம், பட்டினி, தற்கொலைகள், வறுமை ஆகியவற்றை கற்பனைக்கெட்டாத வகையில் கொண்டு செல்வதோடு தொடர்புடையதாகும்.

உலக வர்த்தகக் கழகமானது ஒரு நடுநிலை நிறுவனம் அல்ல. உலகளாவிய அளவில் ஏழைநாடுகளின் அரசுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம்,  அந்நாட்டு விவசாயிகளை ஒட்டச் சுரண்டி, கார்ப்பரேட்மயமாக்கலை தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளை பல்வேறு வழிகளில் மேற்கொண்டு பன்னாட்டு கார்ப்பரேட் கும்பலின் கொள்ளைக்கு தரகு வேலை பார்க்கும் கைக்கூலி நிறுவனமாகும்.

பாசிச மோடி கும்பலோ உலகவர்த்தகக் கழகத்தின் ஆணைகளை அச்சுப் பிசகாமல் நிறைவேற்றும் அடிமை கும்பலாக உள்ளது.

இவற்றை போராடுகின்ற விவசாயிகள் தெளிவாக உணர்ந்துள்ளனர். அதனால்தான் ”உலக வர்த்தகக் கழகத்தில் இருந்து வெளியேறு!” என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர். இது இந்தியாவின் 140 கோடி மக்களுக்குமான  கோரிக்கையாகும்.


அய்யனார்

செய்தி ஆதாரம்: Countercurrents

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube