Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 134

ஓடிப் போனவரின் கதை!

பெண்ணுக்கு வயது 23-ஐ தாண்டிவிட்டது. வீட்டில் எவ்வித உரிமையும் கிடையாது. செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு எல்லாம் அம்மா தெருவில் வைத்து விளக்குமாற்றால் அடிப்பார். சிறு வயது முதல் தினம் தினம் அந்தப் பெண் சந்தித்த அவமானங்கள் கொஞ்சம் நெஞ்சம் அல்ல.

குடும்பத்திலிருந்து வெளியேறுவதே அந்த பெண்ணுக்கு முதல் தேவையாக இருந்தது. அப்பா அம்மா என ஒட்டுமொத்த குடும்பம் தன்னை அடிமையாக நடத்துவதை அந்தப் பெண் விரும்பவில்லை.

வேலைக்குச் சென்ற இடத்தில் காதல் பூத்தது. பெண் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். பையனோ ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்.

தினமும் ஏச்சுக்களும் பேச்சுக்களும் அடிகளையும் வாங்கிய அந்தப் பெண்ணின் மனதிற்குத் தென்றலாய் இருந்தது காதலனின் பேச்சு.

ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்ய, அந்தப் பெண்ணோ தான் ஒரு நபரைக் காதலிப்பதைச் சொல்ல, மீண்டும் குடும்பம் அடித்து உதைத்து, சித்திரவதை செய்தது. காதலனும் எப்படியாவது கிளம்பி வந்து விடு நாம் திருமணம் செய்து கொள்வோம் என்கிறான். அந்தப் பெண்ணின் விருப்பத்தை மீறி.


படிக்க : கர்நாடக தேர்தல் முடிவுகள்: பாசிஸ்டுகளின் மிகைமதிப்பீடும், பாசிஸ்டுகளைப் பற்றிய குறைமதிப்பீடும்!


நிச்சயதார்த்தம் முடிந்த அன்று, இரவில் அந்தப் பெண் வீட்டிலிருந்து தப்பித்து ஓடுகிறார். அப்பெண்ணின் குடும்பம் துரத்த ஊர் வேடிக்கை பார்க்கிறது. குடும்பத்திடம் சிக்காமல் தப்பி ஓடிவிட்டார்.

காதலனைச் சந்தித்து நாம் திருமணம் செய்து கொள்வோம் என்கிறார். தாழ்த்தப்பட்ட பெண்ணை திருமணம் செய்தால் ஊரில் பிரச்சினையாகும் என்று காதலனுக்கு திடீரென்று ஞானோதயம் பிறக்க அவன் விட்டுவிட்டு ஓடுகிறான்.

என்ன செய்வார் அந்தப் பெண்?

அடிமைப்பட்டுக்கிடந்த இடத்தில் இருந்து தப்பி வந்த பிறகு காதலன் ஏமாற்றிவிட்டு ஓடி விட்டான். திரும்பி அந்த இடத்துக்கு போக வேண்டுமா இல்லை, ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் சாக வேண்டுமா?

எல்லாவற்றையும் எதிர்கொண்டு வாழ வேண்டும் என்ற இன்னொரு முடிவை அந்தப் பெண் எடுக்கிறார்.

தன்னுடைய பெண் நண்பர்களோடு இணைந்து அறையில் வாழ முடிவெடுக்கிறார். இதைக் கேள்விப்பட்ட அந்தக் குடும்பம், அந்தப் பெண்ணை மீண்டும் தன் வீட்டுக்கு அழைத்து வர பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. அழைத்து வருவது அந்த பெண்ணை மீண்டும் பழிவாங்குவதற்கே தவிர வேறு எதற்காகவும் இல்லை.

 

அந்தப் பெண் தன்னுடைய குடும்பத்துக்கு மீண்டும் திரும்பி வர மறுக்கிறார். இந்த நிலையில் அந்தப் பெண்ணின் குடும்பம் போலீஸ் நிலையத்துக்குச் செல்கிறது. இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணிடம் பேசி பார்க்கிறார். அந்தப் பெண்ணோ குடும்பத்துடன் சேர்ந்து வாழ முடியாது என்றும் தனியாக வாழ்ந்து கொள்வதாகவும் கூறிவிட்டார். அந்தப் பெண் வீட்டிலிருந்து குண்டுமணி நகையைக் கூடக் கொண்டு செல்லவில்லை.

ஆனாலும் போலீசு யோசனை கொடுக்கிறது .”தாய் மாமன் வீட்டிலிருந்து நகையை உங்கள் பெண் திருடிக் கொண்டு ஓடி விட்டதாக ஒரு கம்ப்ளைன்ட் கொடுங்கள். அந்தப் பெண்ணை கைது செய்து கொண்டு வந்து ஸ்டேஷனில் வைத்து விடுகிறோம். பிறகு நீங்கள் வந்து பேசிக் கொள்ளுங்கள்”.

இதைக்கேட்டுப் பயந்துபோன அந்த தாய் மாமன், “இதெல்லாம் என்னால் முடியாது” என்று போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தப்பித்து ஓடிவிட்டார்.

இப்போது வரை அந்தப் பெண் தன் நண்பர்களுடன் இருக்கிறார். இறுதிவரை தனியாக வாழலாம் அல்லது குடும்பத்தினரின் சித்திரவதையை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த புதைகுழியில் போய் விடக் கூட நேரலாம். இதெல்லாம் அந்தப் பெண்ணுடன் தொடர்பானது மட்டுமல்ல.

ஒரு பெண் தன்னுடைய விருப்பப்பட்ட வாழ்க்கையைத் தெரிவு செய்வதற்கும் சுதந்திரமாக வாழ்வதற்கும் இந்த சமூகம் அங்கீகாரம் கொடுக்கிறதா இல்லையா? இல்லை என்பது தானே உண்மை.

ஏற்கனவே, இந்த சமூக முறையில் இருக்கின்ற குடும்பம் என்ற நிறுவனம் ஒரு கேடுகெட்ட நிறுவனம். அது எப்பொழுதுமே தனிப்பட்ட ஒரு பெண்ணின் அல்லது ஆணின் சுதந்திரத்தைப் பற்றிய உரிமைகளைப் பற்றியோ ஒருபோதும் யோசிக்காது. ஏற்கனவே, புரையோடிப்போன பழக்கவழக்கங்களைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு சுமக்கும். அதற்காக எப்படிப்பட்ட கீழ்த்தரமான விபச்சாரத்தனமான வேலைகளையும் பார்க்கும். அதையும் மீறிச் சிந்திக்கின்ற குடும்பங்கள், ஏற்கனவே இருக்கின்ற குடும்ப அமைப்பு முறையை உடைத்துவிட்டுப் பிறந்தவையாக இருக்கின்றன.


படிக்க : டெல்லி அரசின் நிர்வாக அதிகாரம் பறிப்பு: மோடி அரசின் சட்டப்பூர்வ பாசிச நடவடிக்கை!


இந்த கேடுகெட்ட குடும்ப அமைப்புமுறை தானாக மாறிவிடுமா? இந்தப் பெண்ணுடைய பிரச்சினையை எடுத்துக் கொள்ளுங்கள். தன்னுடைய வாழ்க்கையை தீர்மானித்துக் கொள்வதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. வீட்டிலே வாழ்வதற்கும் சரி; வீட்டைவிட்டு வெளியேறுவதற்கும் சரி.

வீட்டைவிட்டு வெளியேறிய அந்த பெண்ணின் தோல்வியைத் துடைப்பதல்ல இந்த குடும்பத்தின் நோக்கம்; மாறாக இழந்துபோன பெருமையை மீட்பதற்காக நடத்துகின்ற நாடகம். இதை அறிந்த போலீசின் செயல்பாடு என்னவாக இருக்கிறது? இந்த அரசமைப்பு முறைக்கு எதிராக அல்லவா இருக்கிறது? அந்தப் பெண் மீது பொய்ப்புகார் கொடுங்கள் நான் கொண்டு வந்து நிறுத்துகிறேன் என்று கூறும் அந்தப் போலீசின் உளவியல் என்னவாக இருக்கிறது? இந்த கேடுகெட்ட குடும்பம் என்ற நிறுவனத்தைக் காப்பதாக அல்லவா இருக்கிறது? போலீசின் உளவியல்தான் நீதிமன்றத்தின், அரசின் உளவியலாக எப்போதும் இருக்கிறது.

சாதி, மதம், குடும்பம், பாரம்பரியம், பழக்கவழக்கம், போலீஸ், நீதிமன்றம் எல்லாம் அரசு என்ற ஒரே சங்கிலியில் இணைக்கப்பட்டவைதான் எதுவும் வேறு அல்ல. இந்த அரசை அடித்து நொறுக்குகின்ற போராட்டத்தைத் தொடங்காமல் தனிப்பட்ட ஒருவரின் விடுதலை சாத்தியமாகலாம். அது ஒருபோதும் ஒரு சமூகத்திற்கான முழுமையானதாக இருக்காது.

மருது

புதிய ஜனநாயகம் – ஜூலை 2023 | மின்னிதழ்

ன்பார்ந்த வாசகத் தோழர்களே,

ஜூலை – 2023 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.20

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

♦ தலையங்கம்: நீட் தேர்வு: பிரபஞ்சன்களும் அனிதாக்களும்!
♦ ஒடிசா ரயில் விபத்து: மறுகாலனியாக்கத்தின் கோரமுகம்!
♦ லுலு ஹைப்பர் மார்க்கெட்: எல்லா மாடலும் கார்ப்பரேட் சேவைக்கே! கார்ப்பரேட் சேவையில் ‘எம்மதமும் சம்மதமே’!
♦ அமுல் விரிவாக்கத்துக்குப் பின்னே அம்பானியின் ஏகபோக விருப்பம்!
♦ கழண்டது முகமூடி: பாசிசக் கும்பலின் தோல்வி முகமும் பாசிச எதிர்ப்பு சக்திகளின் செயலூக்கமிக்க போராட்டமும்!
♦ தோழர் லிங்கன் – ஒரு லட்சிய மீனவன் நம்மை விட்டுப் பிரிந்தார்!
♦ துருக்கி தேர்தல் முடிவு: தேவை, பாசிசத்திற்கு எதிரான மாற்று ஜனநாயகத் திட்டம்!
♦ தெலுங்கானா: பாசிச எதிர்ப்பு அறிவுத்துறையினர் – செயல்பாட்டாளர்கள் மீது தொடரும் வேட்டை!
♦ ரஷ்யா: ஒரு நாளைக்குள் முடிந்த பிரிகோஜியின் ‘ஆட்சிக்கவிழ்ப்பு சதி’!
♦ மதுரை வழக்கறிஞர்கள் கைது: வெறியாட்டம் போடும் என்.ஐ.ஏ!
♦ புரட்சிகரப் பாதையை நிலைநாட்டிய பு.ஜ.தொ.மு.வின் 25 ஆண்டுகள்!
♦ படக்கட்டுரை: அமெரிக்காவிலும் கிழிந்தது மோடியின் முகமூடி!
♦ ஒரு அடியாளின் அமெரிக்கப் பயணம்!

கர்நாடக தேர்தல் முடிவுகள்: தேர்தல் தோல்வி மட்டுமே பாசிசத்தை அளக்குமா?

மொத்தமுள்ள 224 தொகுதிகளில், 135 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைத்துள்ளது காங்கிரஸ். கடந்த முறை 104 தொகுதிகளில் வென்ற பா.ஜ.க, இந்த தேர்தலில் 66 தொகுதிகளை மட்டுமே தக்கவைத்துக் கொண்டுள்ளது. பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில், குதிரை பேரம் நடத்தினாலும் ஆட்சியைக் கைப்பற்ற முடியாத அவநிலை பா.ஜ.க.விற்கு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மக்களின் இந்தத் தீர்ப்பு, காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுக்குமே உற்சாகத்தை அளித்திருக்கின்றது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்ற வலிமையான நம்பிக்கையையும் இத்தேர்தல் முடிவுகள் அக்கட்சிகளுக்கு ஏற்படுத்தியிருக்கின்றன.

கர்நாடக தேர்தல் முடிந்த பின்னர் ராகுல் காந்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “பெருமுதலாளிகளை எளிய மக்கள் வீழ்த்தியுள்ளனர். கர்நாடகாவில் வெறுப்புச் சந்தை மூடப்பட்டு அன்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “திராவிட நிலப்பரப்பிலிருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்” என்று கூறினார்.

“இது 2024 பொதுத்தேர்தலில் பா.ஜ.க. வீழ்ச்சியின் தொடக்கம்” என்று கருத்து தெரிவித்துள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி.

“பாசிச, வகுப்புவாத, பிளவுவாத பா.ஜ.க.வை சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்தியதன் மூலம் கர்நாடக மக்கள் ஒட்டுமொத்த நாட்டுக்கும் நம்பிக்கை ஒளிக்கீற்றை வழங்கியிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் காஷ்மீரைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி.

இமாச்சலப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து காங்கிரஸுக்கு இது இரண்டாவது வெற்றி. எனினும் இமாச்சலப் பிரதேசத்தின் வெற்றியைவிட கர்நாடகத்தின் தேர்தல் வெற்றியே காங்கிரஸுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக கருதப்படுகிறது. காங்கிரஸ் மட்டுமின்றி, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. எதிர்ப்பாளர்களும் கர்நாடகத்தில் பா.ஜ.க.வின் தோல்வியை முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நிகழ்வாகக் கருதி மகிழ்கிறார்கள். இதற்கு சில காரணங்களும் உண்டு.

000

கடந்த ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஏழாவது முறையாக மீண்டும் ஆட்சியமைத்தது. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில், பஞ்சாபை தவிர மற்ற நான்கு மாநிலங்களிலும் பா.ஜ.க. வென்றது. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1985-க்கு பிறகு மீண்டும் ஆளுங்கட்சி ஆட்சி அமைத்ததில்லை என்ற வழக்கத்தை பொய்யாக்கி பா.ஜ.க. வெற்றிபெற்றது. கடந்த பிப்ரவரி மாதம் திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின் முடிவிலும், மேகாலயா தவிர்த்த இரண்டு மாநிலங்களில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியே அமைத்துள்ளது.

மேற்கண்ட தேர்தல்களில் பா.ஜ.க. பெற்ற வெற்றிகள், எதிர்க்கட்சிகளிடத்தில் ஒரு ஆழமான கருத்தை பதித்துச் சென்றது. இந்துமதவெறி, தேசியவெறி, ‘வலிமையான தலைவர்’ என்ற மோடியின் பிம்பம் ஆகியவற்றை எதிர்கொண்டு, ஒரு கட்சி பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவது மிகச் சவாலான விசயம் என்பதே அந்தக் கருத்து. கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இந்த கருத்தை அடித்து நொறுக்கியுள்ளது. அதன் காரணமாகவே இத்தேர்தல் முடிவுகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

“கர்நாடகாவில் மதவாதம் எடுபடவில்லை”, “இது மோடிக்கு கிடைத்த தனிப்பட்ட தோல்வி” போன்ற பல்வேறு தலைப்புகளில் பா.ஜ.க.வின் தோல்வி குறித்து பத்திரிகைகள் எழுதிவருகின்றன. இது எந்த அளவிற்கு உண்மை; கர்நாடகாவில் பா.ஜ.க.வின் தோல்வியை எப்படி மதிப்பிடுவது, புரட்சிகர-ஜனநாயக சக்திகள் பாசிஸ்டுகளின் தேர்தல் வெற்றி-தோல்விகளை எப்படி புரிந்துகொள்வது என்பதை ஆய்வுப்பூர்வமாக தெளிவுபடுத்திக் கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

வேலைக்கு ஆகாத பிரம்மாஸ்திரங்கள்!

இமாச்சலப் பிரதேசம் பா.ஜ.க.வின் கைகளில் இருந்து நழுவி காங்கிரஸுக்குச் சென்றதில் ஆச்சரியமில்லை. ஏனெனில் குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களைப் போல, முஸ்லிம் வெறுப்பை கிளறிவிட்டு இந்துப் பெரும்பான்மையினரின் ஓட்டுக்களை திரட்டிக்கொள்ளும் வாய்ப்பு, இமாச்சலப்பிரதேசத்தில் குறைவு. மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில், 2.18 சதவிகிதம் பேர் மட்டுமே முஸ்லிம்கள். மேலும் எந்த ஒரு குறிப்பிட்ட சாதியும் ஆதிக்கம் செலுத்தும் சாதியாக அல்லாமல், பல்வேறு சாதிகளும் பரவலாக வாழும் மாநிலமாகவும் இமாச்சலப்பிரதேசம் உள்ளது. ஆகவே, அடிமட்டத்தில் எவ்வித அணிதிரட்டலும் இல்லாத காரணத்தால், பா.ஜ.க. அங்கு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. ஆனால், கர்நாடகா அப்படிப்பட்ட மாநிலமல்ல.

1980-களில் இருந்தே தீவிரமாக வேலைசெய்து கரையோர கர்நாடகத்திலும் வட கர்நாடகத்திலும் தங்களுக்கான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல். மாநிலத்தில் 17 சதவிகிதம் உள்ள லிங்காயத்துகளை தனது ஆதரவுப் பிரிவாக மாற்றிவைத்துள்ளது. தென்னிந்தியாவிலேயே ராமஜென்ம பூமி இயக்கத்தைப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். தன்னை மிகப்பெரிய அளவில் வலுப்படுத்திக் கொண்ட மாநிலம் கர்நாடகம் மட்டுமே. ஆகவேதான் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பல் கர்நாடகத்தை தனது “தென்னிந்திய நுழைவாயில்” என்று அழைத்துக் கொள்கிறது.

உத்தரப்பிரதேசத்தில், “இது 80 சதவிகிதத்துக்கும் 20 சதவிகிதத்துக்குமான தேர்தல்” (இந்து முஸ்லிம் மக்கள்தொகை விகிதம்) என்று வெளிப்படையாக இந்துமதவெறியை தேர்தல் பரப்புரையாக வைத்து செயல்பட்டதைப் போல, கர்நாடகத்திலும் கையாண்டது காவிக் கும்பல்.

“சாலை, குடிநீர் வடிகால் போன்ற வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பேசத்தேவையில்லை. இந்து-முஸ்லிம் பிரச்சினை குறித்தும், இந்து தர்மம் குறித்தும் பேசி தேர்தலைச் சந்திப்போம். ஒரு முஸ்லிம் வாக்குகூட எங்களுக்கு தேவையில்லை” என்று வெளிப்படையாக அறிவித்தார் பா.ஜ.க.வின் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா.


படிக்க: கர்நாடக தேர்தல்: பாசிஸ்டுகளின் தோல்வி – நாம் இறுமாந்து இருக்க முடியுமா? || தோழர் மருது


முஸ்லிம்களின் நான்கு சதவிகித இடஒதுக்கீட்டைப் பறித்து, அதை லிங்காயத்துக்களுக்கும் ஒக்கலிகர்களுக்கும் தலா இரண்டு சதவிகித இடஒதுக்கீடுகளாக பிரித்து வழங்கியதன் மூலம் கர்நாடகத்தில் பெரும்பான்மையாக உள்ள இச்சமூகத்தினரின் வாக்குகளை திரட்டிக் கொள்ள முயன்றது காவிக் கும்பல்.

திப்பு சுல்தானைக் கொன்றது உரி கவுடா, நஞ்சே கவுடா என்ற ஒக்கலிக மன்னர்கள்தான் என்றொரு மதவெறிப் புரட்டை பரப்பினார்கள். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்றார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதம் வளரும் என்று நச்சுப்பிரச்சாரம் செய்தார்கள். “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று மோடியே பிரச்சாரம் செய்தார். “பஜ்ரங்தள் அமைப்பை தடைசெய்வோம்” என்று காங்கிரஸ் அளித்த வாக்குறுதியை “பஜ்ரங்கியை (ஆஞ்சநேயரை) அவமதித்துவிட்டார்கள்” என்று மடைமாற்றினார் மோடி. வாக்களித்துவிட்டு “ஜெய் பஜ்ரங்பலி” என்று முழக்கம் போடுங்கள் என்றார்.

தேர்தலுக்கு முன்பிருந்தே மதமாற்றத்தடைச் சட்ட அமலாக்கம், ஹிஜாபுக்கு தடை, பாங்கு ஓத எதிர்ப்பு, ஹலால் ஜிகாத் பிரச்சாரம், பழம்பெரும் மசூதிகள் அனைத்தும் இந்துக்கோயில்களை இடித்துக் கட்டப்பட்டவை என்ற பிரச்சாரம், கோயிலுக்கு வெளியில் முஸ்லிம் வியாபாரிகள் கடைபோடுவதற்கு தடை என பல்வேறு வடிவங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்துமதவெறி தூண்டிவிடப்பட்டது. பல்வேறு கலவரங்களை காவிக்கும்பல் திட்டமிட்டு நடத்தியது. ஆனால், இந்த மதவெறி தூபம் எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

மேலும், தனது மூன்றரை ஆண்டுகால சாதனைகளாக எதையும் சொல்லி ஓட்டுக் கேட்க முடியாத நிலையிலும், காங்கிரஸின் “40 சதவிகிதம் கமிஷன் சர்க்கார்” என்ற பிரச்சாரத்தை எதிர்கொள்ள முடியாத நிலையிலும், பா.ஜ.க. முன்னெடுத்த “இரட்டை என்ஜின் சர்க்கார்” பிரச்சாரம் எடுபடவில்லை.

மாநிலப் பிரச்சினைகள் எதையும் பேசாமல் இஸ்லாமிய வெறுப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு மற்றும் தன்னைப் பற்றிய சுயவிளம்பரம் ஆகியவற்றையே முன்னிறுத்திய மோடியின் பிரச்சாரம் வடமாநில மக்களைப் போல கர்நாடக மக்களை கவரவில்லை. அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீத்தாராமன், பிரகலாத் ஜோஷி, நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள் இறக்கிவிடப்பட்டு ‘இரட்டை என்ஜின் சர்க்காரை’ வலியுறுத்திப் பிரச்சாரம் மேற்கொண்டார்கள். மோடிக்கு அடுத்து இந்துத்துவத்தின் தேசிய முகங்களாக அறியப்படுகின்ற யோகி ஆதித்யநாத், அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்வா ஆகியோரையும் களமிறக்கிப் பிரச்சாரம் செய்தார்கள். எதுவும் வேலைக்கு ஆகவில்லை.

ஊழல், உள்ளடிச்சண்டை, செல்வாக்குமிக்க தலைவர்கள் இல்லாத சூழலில் ‘வெல்லப்பட முடியாத தலைவர்’ என்று கருதப்படுகின்ற மோடியை இறக்கிவிட்டது தனது கட்சிக்கு பலம் என்று கருதிக்கொண்டிருந்தது பா.ஜ.க. மோடி பங்கேற்ற 33 பேரணிகள், 28 ரோடு ஷோக்கள், ஏழுநாள் தொடர் பிரச்சாரக் கூட்டங்கள் அனைத்தும் பா.ஜ.க.வின் வாக்குவங்கியை கூட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், “பா.ஜ.க. 80 தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்பிருந்தது; மோடியின் பிரச்சாரத்தால் அது குறைந்துவிட்டது” என்கிறது பிபிசி தமிழ். “மோடி பிராண்டு கர்நாடகத்தில் வேலைக்கு ஆகவில்லை” என்று கைகொட்டி சிரிக்கின்றன ஊடகங்கள்.

பாசிச பா.ஜ.க.வை தோல்வியுறச் செய்த உழைக்கும் மக்கள்!

சென்ற முறைப் பெற்ற தொகுதிகளை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை என்றாலும், பா.ஜ.க. தனது வாக்குசதவிகிதத்தை அப்படியே தக்கவைத்துக் கொண்டுள்ளது என்று பா.ஜ.க.வினர் கூறுவதெல்லாம் மீசையில் மண் ஒட்டாமல் பார்த்துக் கொள்வதாகும். உண்மையில், பா.ஜ.க. தனது அடித்தளப் பகுதிகள் என்று பீற்றிக் கொண்டிருந்த பகுதிகளில்கூட வாக்குவங்கியை இழந்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்-இன் கோட்டை என்று கருதப்படுகின்ற கடலோர கர்நாடகத்தின் 19 தொகுதிகளில் கடந்தமுறை 17 இடங்களை வென்றது; இந்த தேர்தலில் 13 தொகுதிகளையே தக்கவைத்துக் கொண்டுள்ளது. நியூஸ்18 பத்திரிகையின் பகுப்பாய்வின்படி, இந்த பிராந்தியத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்ற தொகுதிகளில்கூட 20 முதல் 40 சதவிகிதம் வாக்குவங்கி குறைந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறது.

அண்மைக்காலமாக பா.ஜ.க.வின் செல்வாக்குமிக்க பிராந்தியங்களாக இருந்த மும்பை கர்நாடகா (-2.4), ஹைதராபாத் கர்நாடகா (-1.8), மத்திய கர்நாடகா (-7) போன்ற பிராந்தியங்களிலும் தற்போது அதன் வாக்குசதவிகிதம் சரிந்திருக்கிறது.

சாதிரீதியான முனைவாக்கம், மதரீதியான முனைவாக்கம் அனைத்தையும் கடந்து பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்தியதில் முக்கியமான பங்கு விவசாயிகள், தொழிலாளர்கள், அன்றாடம் காய்ச்சிகளான ஏழை உழைக்கும் மக்களுடையதாகும்.

அனைத்து சாதிகளிலும் மேட்டுக்குடிகள் மத்தியிலும் அதிக சம்பளம் பெறும் குடும்பத்தினர் மத்தியிலும் பா.ஜ.க.விற்கு பெருமளவு ஆதரவு இருப்பதையும், ஏழைகள், சொற்ப சம்பளம் பெற்று வாழ்க்கை நடத்தும் குடும்பங்களிடம் காங்கிரஸுக்கு அதிக ஆதரவு இருப்பதையும் கன்னட செய்தி ஊடகமான ஈ-தினாவின் தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்தியது.

224 சட்டப் பேரவைத் தொகுதிகளுள் 204 தொகுதிகளில் 41,169 பேரிடம் நேரில் சென்று பதிலைப் பெற்ற இக்கருத்துக் கணிப்பில், விவசாயத் தொழிலாளர் – அன்றாடங்காய்ச்சிகளில் 50 சதவிகிதம் பேர் காங்கிரஸூக்கும், 29 சதவிகிதம் பேர் பா.ஜ.க.வுக்கும் வாக்களிக்கப்போவதாக கூறியுள்ளனர். வியாபாரிகள், சொந்தமாக தொழில் செய்பவர்களில் 43 சதவிகிதம் பேர் பா.ஜ.க.வையும் 30 சதவிகிதம் பேர் காங்கிரஸையும் ஆதரிக்கின்றனர். அதிக அளவு ஊதியம் பெறுவோரில் குறைவானவர்களே காங்கிரஸை ஆதரிக்கின்றனர். குறைந்த அளவு ஊதியம் பெறுவோரில் அதிகமானோர் காங்கிரஸை ஆதரித்துள்ளனர்.

பா.ஜ.க.வின் உறுதியான வாக்குவங்கிகளாகக் கருதப்படும் முற்படுத்தப்பட்ட சாதிகளிலேயே மிகவும் ஏழைகள் 34 சதவிகிதம் பேர் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். லிங்காயத்துகளில் பணக்காரர்களில் 24 சதவிகிதமும் ஏழைகளில் 32 சதவிகிதமும் காங்கிரஸை ஆதரித்துள்ளனர். அதேநேரம், பட்டியல் இனத்தவர்களில் ஏழைகளில் 31 சதவிகிதம் காங்கிரஸையும், பணக்காரர்களில் நான்கு சதவிகிதம் பேர் பா.ஜக.வையும் ஆதரித்துள்ளனர்; முஸ்லிம்களில்கூட முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களில் 22 சதவிகிதம் பேர் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஈ-தினா வெளிப்படுத்தும் இந்த புள்ளிவிவரங்கள், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் மதவெறிப் பிரச்சாரங்களுக்கு பலியாகாமல், வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு, விவசாயப் பிரச்சினைகள் என தங்களது பொருளாதார வாழ்நிலையை கணக்கிலெடுத்துக் கொண்டு வாக்களித்த கிராமப்புற உழைக்கும் மக்களால்தான் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டுள்ளது என்பதை விளக்குகின்றன.

பா.ஜ.க.வை தாங்கிப் பிடித்த நகர்ப்புற நடுத்தர, மேட்டுக்குடி வர்க்கம்!

பல்வேறு பிராந்தியங்களில் பா.ஜ.க.வுக்கு வாக்குவங்கி சரிந்திருக்கிறது என்றால், அது மீண்டும் தனது வாக்குவங்கியை மீளப்பெற்றது எப்படி? கிராமப்புற பகுதிகளில் பா.ஜ.க.வை வீழ்த்திவிட்டு காங்கிரஸ் வெற்றிபெற்றாலும் பெரும்பாலான நகர்ப்புறப் பகுதிகளில் பா.ஜ.க. தனது வாக்குவங்கியைக் கூட்டியுள்ளது; நகர்ப்புறத்தைச் சேர்ந்த நடுத்தர, மேட்டுக்குடி வர்க்கங்களே பாசிச பா.ஜ.க.வை தூக்கி நிறுத்தியுள்ளன என்ற மறுபக்கமும் சேர்ந்ததுதான் கர்நாடகத் தேர்தலின் முடிவுகள்.

பழைய மைசூர் மற்றும் பெங்களூருவில் 2018-ஆம் ஆண்டு பெற்ற வாக்குகளைவிட, இந்த தேர்தலில் பா.ஜ.க. அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறது. மொத்தமுள்ள 58 நகர்ப்புறத் தொகுதிகளில் 32 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகாவின் நகர்ப்புற வாக்குவங்கியில் 45.7 சதவிகிதத்தை பா.ஜ.க. மட்டுமே பெற்றுள்ளது.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தனது சீட்டுகளை இழந்தாலும் பல இடங்களில் வாக்குவங்கியை அதிகரித்திருப்பது குறித்து ஸ்வராஜ்யா தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை கீழ்கண்டவாறு விவரங்களை அடுக்குகிறது:

“மொத்தமாகப் பார்க்கும்போது, மும்பை கர்நாடகாவில் பா.ஜ.க. 2.4 சதவிகித வாக்குகளை இழந்திருக்கிறது. நெருக்கிப் பார்த்தால், மும்பை கர்நாடகாவின் 18 தொகுதிகளில் பா.ஜ.க. 7.4 சதவிகித வாக்குகளை இழந்திருக்கிறது. அதேநேரம் மீதமுள்ள 32 தொகுதிகளுள் 16 தொகுதிகளில் தனது வாக்குவங்கியில் 10 சதவிகிதம் உயர்வைக் கண்டிருக்கிறது.

37 தொகுதிகளை உள்ளடக்கிய மத்திய கர்நாடகாவில் (ஸ்வராஜ்யாவின் கணக்குப்படி) மொத்தமாகப் பார்க்கும்போது, 2.1 சதவிகிதம் வாக்குவங்கி சரிவு. நெருக்கிப் பார்த்தால் 15 தொகுதிகளில் மொத்தம் 10 சதவிகிதம் வாக்குவங்கி சரிவைக் கண்ட அதேநேரத்தில், மீதமுள்ள 22 தொகுதிகளில் 3 சதவிகிதம் வாக்குவங்கியை அதிகரித்திருக்கிறது.

ஹைதராபாத் கர்நாடகத்தில், மொத்தமாகப் பார்க்கும்போது 3.5 சதவிகிதம் வாக்குவங்கியை பா.ஜ.க. இழந்துள்ளது. நெருக்கிப் பார்த்தால், 18 இடங்களில் பா.ஜ.க.வின் வாக்குவங்கி அதிகரித்திருக்கிறது”

பா.ஜ.க.வின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஸ்வராஜ்யா பட்டியலிடும் தொகுதிகளில் ஆகப் பெரும்பாலானவை நகர்ப்புறத் தொகுதிகளாகும். தெள்ளத்தெளிவாக, பாசிஸ்டுகளின் அரசியலுக்கு பலியாகியுள்ள பிரிவினரை வர்க்கரீதியாக நாம் அடையாளம் காணமுடிகிறது.

குறைந்தவையானாலும் பாசிஸ்டுகளுக்கு இது சித்தாந்த வெற்றி!

பொதுவாக ஊழல், நிர்வாக சீர்கேடுகள், ஒரு கட்சியின் அரசியல் கொள்கை ஆகியவை குறித்து பெரிதும் அக்கறைப்படும் வர்க்கமாக இருப்பது நகர்ப்புறத்தைச் சேர்ந்த படித்த, நடுத்தர மற்றும் உயர்நடுத்தர வர்க்கங்களே. ஆனால், “40 சதவிகிதம் கமிஷன் சர்க்கார்” என்ற காங்கிரஸின் பிரச்சாரத்தை இந்த வர்க்கங்கள் துளியும் பொருட்படுத்தவில்லை. மேலும், இவர்கள் கொள்கை ரீதியாக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலை ஆதரித்துள்ளார்கள் என்பதுதான் அபாயகரமான உண்மை.

“பெருமழையால் பெங்களூரு நீரில் மூழ்கியது, பெருகும் போக்குவரத்து நெரிசல்கள், மோசமான திடக்கழிவு மேலாண்மை ஆகியவை பா.ஜ.க.வின் வெற்றியை பாதித்திருக்க வேண்டும். ஆனால், வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்தே பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். பெங்களூரில் உள்ள 7 எம்.எல்.ஏ.க்களில் 5 பேர் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்” என்கிறது நியூஸ் கிளக் செய்தித்தளத்தின் ஒரு கட்டுரை.

கர்நாடகாவில் கிராமப்புறங்களில் காங்கிரஸுக்கு இருக்கும் அமைப்பு பலம் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலுக்கு இல்லை. இன்றளவும் அது கிராமப்புற பகுதிகளில் பலவீனமாகவே உள்ளது. அதேநேரம், பல ஆண்டுகாலமாக ஆர்.எஸ்.எஸ். கும்பல், கர்நாடகாவின் நகர்ப்புறங்களில் தீவிரமாக வேலைசெய்துவந்திருக்கிறது. அதன் பலனைத்தான் இத்தேர்தலில் அறுவடை செய்துள்ளது. சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் நகர்ப்புற பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். தனது ஷாகா வலைப்பின்னலை பெருக்கியது. அரசுப் பள்ளிகளிலேயே ஷாகா பயிற்சிகள் வெளிப்படையாக நடைபெற்றன. இன்று பஜ்ரங்தள் அமைப்பை தடை செய்வோம் என முழங்கும் காங்கிரஸுதான் ஷாகா பயிற்சிகளை தடுத்தால், ‘இந்துக்கள்’ கோபித்துக் கொள்வார்கள் என வேடிக்கை பார்த்தது.

பலரும் தீவிரமான இந்துத்துவப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டதால்தான் பா.ஜ.க. தோல்வியுற்றது என்கிறார்கள். கர்நாடகத்தில் பாசிசக் கும்பலின் இந்த அணுகுமுறை பெரும்பான்மையான நடுநிலை, ஊசலாட்ட வாக்காளர்களை எதிர்வரிசைக்கு தள்ளியுள்ளது என்பதும், அதனால் பா.ஜ.க. தோல்வியுற்றது என்பதும் உண்மைதான். அதேநேரம் நாம் இதன் மற்றொரு பகுதியையும் கவனிக்க வேண்டும்.


படிக்க: கர்நாடகா: கோசாலைகளை இயக்க அரசு ஊழியர்களிடம் ஊதியம் பிடித்தம்!


மாநில மக்களின் பிரச்சினைகளைப் பேசாதது, எடியூரப்பாவுக்கு அடுத்து மாநிலத்தில் பிரபலமான தலைவர்கள் இல்லாமல் போனது, ஜெகதீஷ் ஷெட்டர், லஷ்மன் சவடி போன்ற பா.ஜ.க. பெருந்தலைவர்கள் காங்கிரஸூக்கு ஓடிப்போனது, பல புதிய முகங்களை வேட்பாளர்களாக நிறுத்தியது, மூன்றரை ஆண்டுகால ஆட்சி ஏற்படுத்திய அதிருப்தி ஆகியவற்றையெல்லாம் கடந்து 30 சதவிகிதம் பேர் பா.ஜ.க.வை ஆதரித்துள்ளார்கள். இவை அனைத்தும் சித்தாந்த ரீதியாக கிடைத்துள்ள வாக்குகளாகும்.

ஆனால், காங்கிரஸூக்கு கிடைத்த வாக்குகள் இப்படி சித்தாந்த ரீதியாக பெறப்பட்ட வாக்குகள் அல்ல. மக்களின் பொருளாதார வாழ்நிலை ஏற்படுத்திய பாதிப்பிலிருந்தே அவர்கள் காங்கிரஸை தேர்ந்தெடுத்துள்ளனர். ஏழை எளிய மக்களின் வாக்குகளையும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வாக்குகளையும் கவரும் வகையில் தனது தேர்தல் வாக்குறுதிகளை வடிவமைத்துக் கொண்டதே காங்கிரஸின் வெற்றிக்கு அடிப்படை. ஆகவே, இதிலிருந்துதான் பாசிஸ்டுகளின் தேர்தல் தோல்வியை நாம் பரிசீலிக்க முடியும்.

கர்நாடகத்தை குஜராத், உத்தரப்பிரதேசத்தைப் போலக் கருதிக் கொண்டு மிகைமதிப்பீடு செய்ததுதான், பா.ஜ.க. செய்த ஒரே தவறு. மைசூர் பல்கலைக்கழக கலைத்துறையின் தலைவரான முசாபர் அசாதி, வயர் தளத்திற்கு அளித்த பேட்டியில் இதைத் தெளிவாக விளக்குகிறார்.

“அப்படியானால், நீங்கள் இங்கு இந்துத்துவா வெற்றிபெற முடியாது என்று கருதுகிறார்களா?” என்ற கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் பின்வருமாறு:

“இந்துத்துவாவிற்கு சில தனித்த கட்டங்கள் இருப்பதாக நான் கருதுகிறேன். முதலில் இந்துத்துவா வெவ்வேறு சாதிக் குழுக்களை அல்லது அடையாளங்களை அங்கீகரித்து, அதனை பரந்த இந்து அடையாளத்தின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும். இரண்டாவது, இந்து அடையாளத்தை இந்துத்துவா அடையாளமாக (முஸ்லிம், கிறித்தவ வெறுப்பு) மாற்ற வேண்டும். மாற்றம் ஒவ்வொரு கட்டமாக நடைபெறுகிறது”

“கர்நாடகாவில் இந்துத்துவா இன்னும் முதல் கட்டத்திலேயே – அதாவது குழந்தைப் பருவத்திலேயே உள்ளது” என்கிறார். கடலோர கர்நாடகத்தைத் தவிர, ஒட்டுமொத்த கர்நாடகத்தை எடுத்துக் கொண்டால், முசாபர் அசாதி குறிப்பிடுவதுதான் உண்மையாகும்.

ஆகவே, கர்நாடகம் இன்னும் குஜராத்தாக மாறவில்லை; ஆனால், மாறும் போக்கில் உள்ளது. கர்நாடகத்தைப் பற்றிய தங்களின் மிகைமதிப்பீட்டை பாசிஸ்டுகள், இந்த தேர்தல் தோல்வியின் மூலம் உணர்ந்திருப்பார்கள். இனி அடுத்து தங்களது நிகழ்ச்சிநிரலை எப்படி வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால், பா.ஜ.க.வின் இந்த தேர்தல் தோல்வியைப் பார்த்து “மதவாதம் வீழ்ந்துவிட்டதாக” பாசிச எதிர்ப்பு சக்திகள் இருமாந்திருந்தால், அடுத்த சுற்றில் நாம் எழுந்திருக்கமுடியாத வகையில் வீழ்த்தப்படுவோம்!


பால்ராஜ்

டெல்லி அரசின் நிர்வாக அதிகாரம் பறிப்பு: மோடி அரசின் சட்டப்பூர்வ பாசிச நடவடிக்கை!

2014-ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றது முதல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. ஆளுநர்கள் மூலமாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் அதிகாரத்தில் குறுக்கீடு செய்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது. அந்தவகையில், டெல்லி யூனியன் பிரதேசத்தில், குடிமைப் பணி அதிகாரிகளை (ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை) நியமிப்பது தொடர்பான விசயத்தில், ஆளுநரைக் கொண்டு டெல்லி அரசுக்கு நெருக்கடிகள் கொடுத்து வந்தது, ஒன்றியத்தை ஆளும் மோடி அரசு.

இது தொடர்பான வழக்கில், 2015-ஆம் ஆண்டில் தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு டெல்லி அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. ஆனால், அந்த தீர்ப்பு மோடி அரசின் மேல்முறையீட்டால் முறியடிக்கப்பட்டது. இதற்கெதிராக டெல்லி அரசு மேற்கொண்ட மேல்முறையீட்டு வழக்கு விசாரணை கிட்டதட்ட எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த மே 11-ஆம் தேதி டெல்லி யூனியன் பிரதேசத்தில் குடிமைப் பணி அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் டெல்லி யூனியன் பிரதேச அரசுக்குதான் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்பை உறுதிசெய்துள்ளது.

அத்தீர்ப்பில் “டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது. ஜனநாயக நாட்டில் துணைநிலை ஆளுநரை விட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே அதிகாரம் இருக்க வேண்டும்” மற்றும் “அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வழங்கப்படாவிட்டால் அரசியலமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகி விடும்” என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஜனநாயக சக்திகள் பலரும் வரவேற்று இருந்தனர். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், “ஜனநாயகத்திற்கும் டெல்லி மக்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி” என வரவேற்று இருந்தார்.


படிக்க: டெல்லி: பாசிஸ்டுகளின் அதிகார வெறிக்கு நீதிமன்றம் தடைபோட முடியாது!


இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் மேற்கண்ட தீர்ப்புக்கு சவால்விடும் விதமாக, மே 19-ஆம் தேதி டெல்லி யூனியன் பிரதேச அரசின் நிர்வாக அதிகாரத்தை பறிக்கும் வகையில், தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டத்தைத் (The Government of National Capital Territory of Delhi Act – 1991) திருத்தி, தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை (National Capital Civil Service Authority) உருவாக்குவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளது மோடி அரசு.

இந்த அவசரச் சட்டம் டெல்லி அரசின் குடிமைப் பணி அதிகாரிகளை (ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை) நியமனம் மற்றும் மாறுதல் செய்வதற்கான அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது.

இதன் மூலமாக, டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூனியன் பிரதேச அரசிடமிருந்து மோடி அரசால் சட்டப்பூர்வமாகவே பறிக்கப்பட்டுள்ளது. இது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எதிரான மோடி அரசின் சட்டப்பூர்வ பாசிச நடவடிக்கை ஆகும்.

இந்த அவசரச் சட்டத்தின்படி, அமைக்கப்படும் ஆணையக் குழுவில் முதல்வர் தலைமையில் தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மை செயலாளர் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் மற்றும் மாறுதல் செய்வதற்கான முதல்வரின் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டு, பெரும்பான்மை அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஒருமித்த முடிவு எடுக்கப்படாவிட்டால், துணைநிலை ஆளுநர் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் கூறப்பட்டுள்ளது.

000

இந்த வழக்கு விசாரணையின்போது மோடி அரசு, டெல்லியின் நிர்வாக அதிகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தேச நலனுக்கு முக்கியமானது என்ற அடிப்படையில் வாதங்களை முன்வைத்தது. “டெல்லி இந்தியாவின் தலைநகராக உள்ளது. உலக நாடுகள் டெல்லியின் வழியாகத்தான் இந்தியாவை பார்க்கின்றன. இதனால் அரசு ஊழியர்களின் நியமனம் மற்றும் இடமாற்றம் ஒன்றிய அரசுக்கு தேவையான மற்றும் அவசியமான ஒன்று” என்று வாதிட்டது.

ஏற்கெனவே ஒன்றிய அரசு, தேச நலனைக் காரணம் காட்டி டெல்லி யூனியன் பிரதேசத்தின் பொது ஒழுங்கு, நிலம், காவல் ஆகியவற்றை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. பல ஆண்டுகளாக, டெல்லிக்கு மாநில அந்தஸ்து கோரிக்கையையும் மறுத்து வருகிறது. தற்போது நிர்வாக அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதன் மூலம், யூனியன் பிரதேசம் என்பதற்குக் கூட அருகதையற்ற நிலைக்கு டெல்லியைக் கொண்டு சென்றுவிட்டது, மோடி அரசு.

ஆகையால், மோடி அரசு முன்வைக்கும் ‘தேச நலன்’ என்பது வெற்றுக் கூச்சலாகும். மாநிலங்களுக்கான அதிகாரங்களைப் பறித்து அவற்றை அதிகாரங்கள் ஏதுமற்ற சமஸ்தானங்களாக சுருக்க வேண்டும் என்பதுதான் மோடி அரசின் நோக்கமாகும். இந்த நோக்கத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஏதாவது ஒரு வகையில் தடையாக அமைந்துள்ளன என்பதுதான் எதார்த்தமாகும்.

எதிர்க்கட்சிகள் கூட கார்ப்பரேட் திட்டங்களைத்தான் நடைமுறைப்படுத்துகின்றன என்றாலும், அது மோடி அரசு முன்னிறுத்தும் கார்ப்பரேட் வர்க்கங்களின் நலனிற்கும் இந்துராஷ்டிரக் கொள்கைக்கும் எதிரானதாக இருக்கக் கூடாது.

தமிழ்நாட்டில், அடிமை அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் பல்வேறு விசயங்களில், அ.தி.மு.க. எந்த எதிர்ப்பையும் காட்டியதில்லை. ஆனால், பி.ஆர்.எஸ். ஆட்சி புரியும் தெலுங்கானா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் ஏதாவது சில அம்சங்களில் ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு உட்படாமல் எதிர்த்து வருகின்றன.

மாநிலங்களுக்கென சில தனித்துவமான கோரிக்கைகள் இருப்பதைக் கூட மோடி அரசு விரும்புவதில்லை என்பதுதான் எதார்த்தம். மாறாக, பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களே ஆனாலும், அவை மாநில உரிமை என்று எதையும் கேட்க முடியாது; கேட்கக்கூடாது என்பதுதான் இந்திராஷ்டிரத் திட்டமாகும்.

டெல்லியில் மட்டுமல்ல, பா,ஜ.க ஆட்சி செய்யாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இதுதான் பொது நிலைமை. ஆளுநர்கள் மூலமும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்டவர்களை அதிகாரிகளாக நியமிப்பதன் மூலம் இணையாட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களை எந்த அதிகாரமும் அற்ற வெற்றுக் கூடுகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளே அதற்கு சான்றுகளாகும்.


படிக்க: டெல்லி ஜஹாங்கீர்புரி முஸ்லிம் மக்களின் வீடுகள் இடிப்பு : இந்துராஷ்டிரத்திற்கான பாதை செப்பனிடப்படுகிறது !


இது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் தலைமையிலான மோடி அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சட்டப்பூர்வமாகவே எந்த முறையிலும் அதிகாரத்தை கைப்பற்றலாம் என்பதற்கான அறிகுறி ஆகும். “நாட்டில் எங்கு வேண்டுமானாலும் இது நடக்கலாம் என்பதால் இது அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கிறது” என ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரான மெகபூபா முப்தி கூறியுள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலங்களுக்கு பெயரளவிலான உரிமைகள் வழங்கப்பட்டிருந்தாலும், மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அதிகப்படியான அதிகாரம் ஒன்றிய அரசிற்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது டெல்லி அரசின் நிர்வாக அதிகாரத்தை பறிப்பதற்காக மோடி அரசால் கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டமும் இந்த அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் அதிகாரம்தான்.

இந்த அரசியல் சாசனத்தின் ஒரு கூறைப் பயன்படுத்தி, பாசிஸ்டுகள், மாநிலங்களின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜி.எஸ்.டி, நீட் போன்ற போட்டித் தேர்வுகள், புதிய கல்விக் கொள்கை, மின்சார திருத்தச் சட்டம் போன்ற பல பாசிச சட்டங்களை அதற்கு நாம் சான்றுகளாக கூற முடியும். அதாவது இந்த பெயரளவிலான ஜனநாயகக் கட்டமைப்பை பயன்படுத்தி, இந்துராஷ்டிரத்தை நிறுவிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், மாநிலங்களவையில் பா.ஜ.க.விற்கு பெரும்பான்மை இல்லை; எனவே எதிர்க்கட்சிகளின் ஆதரவைத் திரட்டி அவசரச் சட்டத்தை ரத்து செய்து விடலாம் என கெஜ்ரிவால் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறார்.

மாநிலங்களவையில் போதிய வாக்குகள் இன்றி, அவசரச் சட்டம் தற்காலிகமாக கூட பின்வாங்கப்படலாம். ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி செய்யலாம். ஆனால், அவையெல்லாம் தற்காலிகமானவைதான். ஏனென்றால், இந்தப் போலி ஜனநாயகக் கட்டமைப்பு என்பது பாசிஸ்டுகளுக்கு விளைநிலமாக அமைந்துள்ளது. பல்வேறு வகைகளில் சதித்தனமாகவும் அரசியல் சாசனத்தின் மற்ற ஓட்டைகளைப் பயன்படுத்தியும் மாநிலங்களுக்கு தொடர்ந்து நெருக்கடிகளைக் கொடுப்பதன் மூலம் மாநில உரிமைகளைப் பறித்துவிடுவதில் மோடி கும்பல் கைதேர்ந்தது.

ஆகையால், பாசிஸ்டுகளைப் பின்வாங்க வைப்பதற்கான ஒரே வழி மக்கள் போராட்டங்கள் மட்டுமே. “சுற்றிவளைக்குது பாசிசப் படை, வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு” என்பது தமிழ்நாட்டிற்கான முழக்கம் எனினும் இந்துராஷ்டிரத்திற்கு எதிரான உரிமை முழக்கமாகும். இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களும் தங்களது மாநிலத்தின் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்காக, நாட்டையே சுற்றிவளைத்துக் கொண்டிருக்கும் பாசிசப் படைக்கெதிராக முழங்க வேண்டும். போலி ஜனநாயக மாயைகள் பாசிஸ்டுகளை வளர்க்கவே செய்யும்! பாசிசத்திற்கு எதிராக துவளாமல் போராடுவதற்கான மக்கள் எழுச்சிகளே பாசிஸ்டுகளைப் பின்வாங்க வைக்கும்!


குப்பு

140 ரூபாய்க்கு தக்காளி விலை கடுமையான உயர்வு! – தோழர் அமிர்தா | வீடியோ

140 ரூபாய்க்கு தக்காளி விலை கடுமையான உயர்வு!
அரசே நேரடியாக தக்காளியை கொள்முதல் செய்!
அனைத்து மக்களுக்கும் குறைந்த விலையில் அனைத்து ரேசன் கடைகளிலும் விநியோகம் செய்!

கண்டன உரை: தோழர் அமிர்தா, மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம்
(குறிப்பு : காணொலியில் கூறும் விலை ஜூலை 5 அன்றைய விலை நிலவரம்)

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

நெஞ்சமெல்லாம் லிங்கன் | நினைவுப் பகிர்தல் | வீடியோக்கள்

நெஞ்சமெல்லாம் லிங்கன் | நினைவுப் பகிர்தல் – வீடியோக்கள்

01.07.2023 | மாலை 5 மணி
ரிப்போர்ட்டர்ஸ் கில்டு, சேப்பாக்கம், சென்னை.

தலைமை: தோழர் மருது, மக்கள் அதிகாரம்

000

தொடக்க உரை : வழக்கறிஞர் கார்க்கி வேலன்

000

வழக்குரைஞர் சங்கர சுப்பு :

000

வழக்குரைஞர் சத்ய சந்திரன்:

000

வழக்குரைஞர் கிருஷ்ணகுமார், MHAA, செயலாளர்:

000

வழக்குரைஞர் ரஜினிகாந்த், மாநில துணைப் பொதுச்செயலாளர், வி.சி.க:

000

வழக்குரைஞர் ஜான்சன்

000

தோழர் கு.பாரதி, தென்னிந்திய மீனவர் சங்கம்.

000

தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை:

000

முனைவர் பகத்சிங், ஆய்வாளர்.

000

தோழர் மனிதி செல்வி

000

தோழர் தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்.

000

தோழர் ரமணி, மாநிலப் பொதுச்செயலாளர், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி:

000

வழக்குரைஞர் பாவேந்தன், தமிழக மக்கள் முன்னணி.

000

தோழர் அதியமான், மாநிலச்செயலாளர், AICCTU.

000

தோழர் சாலமன், மாநிலக்குழு உறுப்பினர், அம்பேத்கர் பொதுவுடமை முன்னணி.

000

தோழர் புவன், மக்கள் அதிகாரம், சென்னை.

000

ஏழு தமிழர் விடுதலைக்காகப் போராடிய அற்புதம் அம்மாள்

மற்றும் தோழர் லிங்கனுடன் இணைந்து பணியாற்றிய சமூக இயக்கங்களைச் சார்ந்த தோழர்கள்.

தலைமை: இராமு(எ)மருது, தொடக்க உரை: கார்க்கி வேலன்,
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: புளியந்தோப்பு மோகன், நிறைவுரை: மகிழன்

7358556847, 9710392882, 9840327140, 8939136163, 9025870613

ம.பியில் பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த பா.ஜ.க கிரிமினல் பிரவேஷ் சுக்லா! | புமாஇமு போஸ்டர்

0

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த பா.ஜ.க கிரிமினல் பிரவேஷ் சுக்லா!

இனம்,மதம்,மொழி என அனைத்தின் பெயராலும் வன்மத்தைக் கக்கும் நச்சுப்பாம்புகளே காவி பாசிஸ்டுகள்!

உழைக்கும் மக்களே,

இந்தக் கொடூரம் நடந்து மூன்று மாதங்களாக குற்றவாளியைக் காப்பாற்றியுள்ளது ம.பி பாஜக அரசு!

குற்றவாளி பிரவேஷ் சுக்லா தவறு செய்யவில்லை என பாதிக்கப்பட்ட நபரே சொல்வது போல் போலி வீடியோ போடுகிறது காவி கும்பல்!

குற்றவாளி சங்கி என அம்பலமானதும் வழக்கம் போல, தங்களுக்கும் அவனுக்கும் தொடர்பில்லை என அப்பட்டமாகப் புளுகுகிறது பி.ஜே.பி!

மணிப்பூர் கலவரம், லவ் ஜிகாத், பசுப் பாதுகாப்பு என்று பல பெயர்களில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், தலித் மற்றும் பழங்குடி மக்கள் மீது இன – மத – சாதிவெறி தாக்குதல், படுகொலை – கலவரங்களை நடத்தி வருகிறது காவி கும்பல்!

சமூக விரோத ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலை ஒழிக்காமல் நாட்டுக்கு மக்களுக்கும் விடிவில்லை!

 

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தமிழ்நாடு – 94448 36642.

கல்வியும் சாதியும்.. என் நினைவுக் குறிப்பு -1 | கருணாகரன்

நான் சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன். அந்த படத்தில் நான் ஈ புகழ் நானியும் நஸ்ரியாவும் சேர்ந்து நடித்திருப்பர். அந்த படத்தின் ஒரு சீனில் ஒரு நாடகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

அந்த சீனில் ஒரு சின்ன பெண் செருப்பு துடைக்கும் சிறுவனை  “என்னுடன் விளையாட வா”என அழைப்பாள். அதற்கு அவன் “அய்யோ சின்னமா நீங்க என்ன, என் கூட விளையாட கூப்பிடுறீங்க, நீங்க எங்க நான் எங்க” அப்படின்னு சொல்லி அவன் தயங்குவான்.

உடனே அந்தப் பெண் அவள் அப்பாவிடம் போய்,” அப்பா பாலுவை என்னுடன் விளையாட சொல்லுங்கள், அவன் ஏன் எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்கிறான்”? எனக் கேட்க..

அதற்கு அவனுடைய அப்பா சொல்வார், அவன் படிக்கவில்லை அல்லவா அதனால் தான் இப்படி இருக்கிறான்.

அதற்கு அவள் ‘நீங்களும் தான் படிக்கல நீங்க நல்லா நிம்மதியா உட்கார்ந்து கொண்டு நகம் வெட்டிட்டு இருக்கீங்களே”என கேட்க அதற்கு அவர் சற்று கடுப்பாகி அவளை முறைப்பார்.

உடனே அவளும் எனக்கு தெரியும்பா! அவன் ஒரு கீழ் ஜாதியை சேர்ந்தவன் என்று, அதனால் தான் நீங்க அவனை எப்போதும் வேலை வாங்கிக் கொண்டே இருக்கீங்க, அப்புறம் ஜோஸ்வா டீச்சர் அவங்க சாதி தானே அவங்க படிச்சிருக்காங்களே என்று அவள் கேட்க..

அதற்கு அவளுடைய அப்பா சொல்வார் நானும் அதைத்தான் சொல்றேன், அவங்க படிச்சிருக்காங்க அதனால தான் நீங்க எல்லாரும் அவங்க பேச்சை கேக்குறீங்க இல்லன்னா எப்படி கேட்பீங்கன்னு..


படிக்க: பழங்குடியின அடிப்படையில் சாதி சான்றிதழ் கொடுக்க மறுக்கும் அரசு – பறிபோகும் பழங்குடி மாணவர்களின் உயர்கல்வி.


அத கேட்டு அந்த பெண் சரிதான் படிச்ச எல்லாரும் சமம் ஆயிருவோமில்ல சூப்பரான ஐடியா இது அப்படின்னு சொல்லி வேக வேகமாக பாலுவை நோக்கி ஓடுவாள். அங்க அவன்  ஷூக்கு பாலிஷ் போட்டுக் கொண்டிருப்பான். அவனிடம் சென்று “வா படிக்கலாம் பள்ளிக்கூடம் நோக்கி போகலாம்” எனக் கூற அவன் “சின்னமா என்ன என்னைய வந்து கூப்பிடுறீங்கன்னு மறுபடியும் தயங்குவான். உடனே அவள் படிச்சா எல்லாரும் எல்லாருக்கும் சமமாகிருவாங்களாமான்டா எங்க அப்பா  சொன்னாரு, நீயும் படிச்சிட்டேன்னா நானும் உன் கூட வந்து நல்லா விளையாடலாம்ல படிக்கலாம் அப்படின்னு சொல்லி அவனைக் கையை பிடித்து பள்ளிக்கூடத்துக்கு கூட்டிட்டு போற மாதிரி அந்த நிகழ்வு முடியும்.

இது அந்த படத்தின் இருக்கக்கூடிய ஒரு வலிமையான ஒரு நிகழ்வாகும், அதே நேரம் அது ஒரு நேர்த்தியான ஒரு படைப்பும் கூட..

இதில் இருக்கும் செய்தி படித்தால் எல்லாரும் எல்லாருக்கும் சமமாய் ஆகி விடுவார்கள் என்பது தான். இந்த படம் சொன்ன செய்தியை நான் என் சிறு வயதில் கேட்டிருக்கிறேன். அதுவும் நான் 3-வது படிக்கும் போது.

எங்களுடைய ஊர் சுமார் ஒரு 600-க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட ஒரு நடுத்தர கிராமம் ஆகும். அதே நேரம் பெரிதளவு மருத்துவ வசதியோ இல்லை கல்வி குறித்த அக்கறையோ இல்லாத காலம் அது. அப்பொழுதெல்லாம் எங்கள் வீட்டில் ஐந்து மணிக்கு மேல் ஆகிவிட்டால் டியூசன் எடுக்க ஆரம்பித்து விடுவார் எனது அம்மா. அது அவர்களுடைய சேவையாக நினைத்து அவர் இதை எப்போதும் பண்ணுவார்..

ஒருமுறை அவ்வாறு டியூசன் எடுத்துக் கொண்டிருக்க என் வீட்டில் அருகில் நின்று கொண்டிருந்த சிலர், எனது அம்மாவிடம் “எப்படியாவது எங்க பயங்களையும் சரி பிள்ளைகளையும் சரி ஓரளவுக்கு படிக்க வைத்துவிடுனு”, புன்னகையுடன் சொல்லிவிட்டு வேறு விஷயங்களை நோக்கி பேச ஆரம்பித்தனர்.

அப்போது அந்த தெருவின் உள்ளே  ஒரு நபர் வந்தார். அவர் ஒரு ரெட்டியார். அவர்களை போல மனிதர்கள் எங்கள் தெருவிற்கு வருகிறார்கள் என்றால், அதற்கு அப்பொழுது ஒரு காரணம் தான் இருக்கும். எப்படி நோகாமல் வேலைக்கு ஆட்களை தேடுவது என்பது தான் அந்த காரணம்.

அவர் எங்கள் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த என் சித்தியை பார்த்து பெயர் சொல்லிக் கூட அவரை அழைக்காமல் ஏதோ ஒரு வார்த்தையை, அதுவும் ஒரு தரம் கெட்ட வார்த்தையை போட்டு அழைக்க, அது என்னை திக்குமுக்காட செய்தது.

இத்தனைக்கும் என் சித்தி அந்த நபரை விட வயதில் பெரிய ஆள், ஆனாலும் அவர் பயன்படுத்திய சொற்கள் என்னையும் சரி என்னுடன் இருந்தவர்களையும் சரி இடிபோல் தாக்கியது. அவரின் பேச்சுக்கு  என் சித்தி என்ன பதில் சொல்வாள் என நான் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தேன்.

அவள் எப்போதும் இந்த மாதிரி தரக்குறைவாக தன்னை உடன் இருந்தவர்களை யாராவது பேசினால் உடனே கோபத்தில் தாக்கி விடுவாள் இதுதான் அவருடைய நடைமுறை.


படிக்க: கால் மேல் கால் போட்டு உட்காரலாமா?


இதுதான் அன்றும் நடக்கும் என நான் அப்போது நம்பினேன்  ஆனால் நடந்தது என்னவோ வேறு.அவர் தன்னை அப்படி அழைத்ததும் அதனைப் கேட்ட என் சித்தி “சொல்லுங்க எஜமா என கையை குப்பிக்கொண்டு உடலையும் சற்று வளைத்துக் கொண்டு அவருக்கு பதில் சொல்ல அந்த உடல் நலிவும் பேச்சும் எங்களை திக்கு முக்காட செய்தது.

அந்த நபர் “உன் புருஷன் எங்க இருக்கான், அவனை எல்லாம் தேடி இந்த தெரு பக்கம் எல்லாம் நான் வர வேண்டி இருக்கு, ஆவன உடனே கூட்டிட்டு வா! வீட்டுல இருக்கானா வேற எங்கேயும் போய்ட்டானா என சொல்ல”…

அதற்கு அவன் சாமி வீட்லதான் இருக்காரு,  நான் உடனே வர சொல்றேன் நீங்க வீட்டுக்கு போங்க, எனக் கூற நான் அப்போது என் அம்மாவை பார்த்தேன். அதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டே அவள் சற்று முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டே “பிள்ளைகளா படிங்க இதையெல்லாம் கண்டுக்க கூடாது. இப்படி தான் பேசுவாங்க அதனை எல்லாம் இப்ப நம்ம பாத்துட்டு இருந்தா நம்மளால படிக்க முடியாது, படிக்கிற வேலையை மட்டும் தான் இப்ப பாக்கணும் சரியா அப்படின்னு சொல்லி எங்களுக்கு பாடம் எடுக்க ஆரம்பித்தார்.

அப்போது அந்த நபர் சுற்றி முற்றி மற்றவர்களையும் சற்று ஏளனமாக பேச இவர்களும் ஐயா, அப்படியெல்லாம் இல்ல இல்லையா, எஜமான்னு கைய கட்டிட்டு எனத்தெனத்தியோ பேச ஒருவாறு அந்த பேச்சு எப்படியோ முடிந்தது..

அவரும் சற்று வேகமாக அந்த தெருவை விட்டு கிளம்ப ஆரம்பிக்க, அப்போது என் அம்மாவை பார்த்து என்ன டீச்சரமா பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கிறீர்களா? நன்றாக நடத்துறீங்க! போல என்று சொல்ல.. எங்க அம்மாவும் அதற்கு ஆமாம் தம்பி, எப்படியோ பசங்க ஓரளவுக்கு படிச்சிட்டு இருக்காங்க நமக்கு அது தான் முக்கியம் அப்படின்னு சொல்லி அவங்க சொன்னாங்க.

எனக்கு அவர் மற்றவரிடம் பேசிய பேச்சுக்கும் எனது அம்மாவிடம் அவர் பேசிய பேச்சுக்கும் மிகுந்த இடைவெளி இருந்ததை நான் கவனித்தேன். எங்கள் எங்கள் தெரு பெரிய நபர்களை துளியும் மதிக்காத அந்த நபர் எனது அம்மாவை மட்டும் டீச்சர் அம்மா என சொன்னது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அவர் அங்கிருந்து கிளம்பியதற்குப் பிறகு எனது அம்மா எங்களிடம் சொன்னார் நான் படித்தவள்,அதுவும் டிகிரி முடித்திருக்கிறேன். அதனால்தான் அவர் என்னை மரியாதையாக அப்படி பேசி விட்டு செல்கிறார், நம்முடன் இருந்தவங்கள அந்த மாதிரி அவரால பேச முடியல அப்ப படிப்பு அப்படிங்கறது எல்லாத்தையும் மாத்திரம். நமக்கு செயற்கையா அது ஒரு ஒரு மரியாதை அது வந்து கொடுக்கும். அதனால தயவு செஞ்சு எல்லாரும் நல்லா படிச்சிருங்க அப்படி படிச்சா மட்டும் தான் நம்மள ஓரளவு  எல்லாரும் மதிப்பாங்க இல்லன்னா அது கூட கஷ்டம் என்றார்..
என்று அவர் சொன்ன அந்த வார்த்தை என்னை மட்டுமல்ல என் உடன் இருந்தவர்களை ஆழமாக யோசிக்க வைத்தது.

கல்வி ஒரு முழுமையான சமத்துவத்தை போதிக்காது என்றாலும் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்க ஆரம்பிக்கும் போது கல்வி தன்னை முழுமைப்படுத்தி கொள்கிறது. அது சாதிக்கு எதிரான பாலின பேதத்திற்கு எதிரான ஒரு போரை இந்த சமூகத்திலும் சரி வீட்டிலும் சரி மிக ஆழமாக அது நடத்த துணிகிறது. …

அப்படி நான் இந்த  சமூகத்தில் நடத்திய, நடத்திக் கொண்டிருக்கிற ஒரு நீண்ட போரின் சில களங்களை இனி நாம் பார்ப்போம் .

கருணாகரன்

கருப்புப் பண ஒழிப்பு 2.0: மக்கள் சேமிப்பை சூறையாடும் சதித்திட்டம்!

டந்த மே 19-ஆம் தேதி, ரிசர்வ் வங்கி புழக்கத்தில் உள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள், வங்கிகளில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள கால அவகாசமும் வழங்கியுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, ஏழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு பணமதிப்பழிப்பு என்ற நடவடிக்கையின் மூலம் மீண்டும் “கருப்புப் பண ஒழிப்பு” நாடகத்தை கையிலெடுத்துள்ளது மோடி அரசு.

நாள் ஒன்றுக்கு ஒரு நபர் 20,000 ரூபாய் மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை ரொக்கமாக மாற்றிக்கொள்ளலாம்; எந்த ஆவணமும் தேவையில்லை; எந்த வங்கிக் கிளையிலும் மாற்றிக் கொள்ளலாம்; 20,000 ரூபாய்க்கு மேல் மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்திக் கொள்ளலாம் என வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

0-0-0

சங்கிகளும், நடுநிலை என்ற போர்வையில் செயல்பட்டுக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் கருத்துகளை பிரச்சாரம் செய்யும் “தமிழ் பொக்கிஷம்” போன்ற யூடியூப் சேனல்களும் ஆர்.பி.ஐ.யின் நடவடிக்கையை கருப்புப் பண ஒழிப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ற கருத்தை பிரச்சாரம் செய்துவருகின்றன.

படிக்க : பற்றி எரிகிறது மணிப்பூர் | மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் – நேரலை!

ஆர்.பி.ஐ.யின் வழிகாட்டு நெறிமுறைகளை, இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை கருப்புப் பணமாக பதுக்கி வைத்துள்ளவர்கள் பின்பற்ற முடியாது. எனவே, இந்நடவடிக்கை மூலம் கணக்கில் காட்டாமல் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை ஒழிக்க முடியும் என்று ஊடகங்களில் கதையளந்துவருகிறது காவிக் கும்பல்.

மேலும், தேர்தல்களின்போது அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதற்காக 2,000 ரூபாய் நோட்டுகளை அதிகம் பயன்படுத்துகின்றனர் என்றும், 2,000 ரூபாய் நோட்டுகளை தற்போது திரும்பப் பெறுவதன் மூலம் இத்தகைய சட்டவிரோத பணப் பரிமாற்றத்தைத் தடுத்துவிடுவதுதான் மோடியின் திட்டம் என்றும் புல்லரிக்கும் வகையிலான கதைகளையும் சங்கிகள் கூறிவருகிறார்கள்.

தமிழ்நாட்டு பா.ஜ.க கும்பல் கருப்புப் பண ஒழிப்பு என்பதை வைத்து, தி.மு.க.வினரை தாக்கிப் பிரச்சாரம் செய்துவருகிறது. பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “2024 தேர்தலுக்காக மூட்டை மூட்டையாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தி.மு.க.வினர் கட்டி வைத்திருக்கிறார்கள். ஆர்.பி.ஐ. அறிவிப்பு அவர்களுக்கு பாதிப்பு என்பதால்தான் தமிழக முதல்வர் கோபப்படுகிறார்” என்று கூறியிருக்கிறார்.

ஆனால், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதை ஒட்டி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், சங்கிகளின் கதைகளெல்லாம் சொல்லப்படவில்லை. மாறாக, ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டபோது பொருளாதாரத்தின் நாணயத் தேவையை பூர்த்தி செய்யவே இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. மற்ற நோட்டுகள் போதுமான அளவில் கிடைத்தவுடன் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டன என மட்டுமே கூறப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கெனவே ரிசர்வ் வங்கியால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வந்துள்ளன. 2018 மார்ச் 31 அன்று புழக்கத்தில் இருந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பானது 6.73 லட்சம் கோடி ரூபாய். இது புழக்கத்திலுள்ள ரூபாய் நோட்டுகளில் 37.3 சதவிகிதம். இது 2023 மார்ச் அன்று 3.62 லட்சம் கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது. இது புழக்கத்திலுள்ள ரூபாய் நோட்டுகளில் 10.8 சதவிகிதம் மட்டுமே ஆகும்.

ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி பார்த்தால், 2016-ஆம் ஆண்டில் புதிய ரூபாய் நோட்டுகளை முழுமையாக அச்சடித்துவிட்டு பழைய ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்து இருக்கலாம் அல்லவா? இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை நாணயத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அச்சடித்து விநியோகித்துவிட்டு அதை மீண்டும் ஏன் திரும்ப பெற வேண்டும்? இதில்தான் காவி-கார்ப்பரேட் கும்பலின் சதித்தனம் அடங்கியிருக்கிறது

இரண்டாவது “சர்ஜ்ஜிகல் ஸ்டிரைக்”!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, மக்கள் மத்தியில் மோடியின் பிம்பத்தை ஊதிப்பெருக்கும் முயற்சிதான் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் நடவடிக்கை. சங்கிகளின் மொழியில் கூறினால், இது “இரண்டாவது சர்ஜிக்கல் ஸ்டிரைக்”.

2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் மோடி, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 இராணுவ வீரர்களின் புகைப்படங்களை வைத்து மக்களிடையே தேசவெறியைத் தூண்டி, தேசத்திற்கு பாதுகாவலனாக தன்னை முன்னிறுத்திக் கொண்டதைப் போல, தற்போது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் கருப்புப் பண முதலைகளை ஒழித்துக் கட்டுபவராக மீண்டும் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார்.

ஆனால், 2016இல் மேற்கொள்ளப்பட்ட “முதலாவது சர்ஜிக்கல் ஸ்டிரைக்கே” ஊத்திக் கொண்டது என்பதுதான் வரலாறு. இதை ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.  2017-18 ஆம் ஆண்டிற்கான ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில், பணமதிப்பழிப்பு செய்யப்பட்ட 15.41 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளில், ஜூன் 30, 2017க்குள் 15.31 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் திரும்பி வந்ததாக தெரிவித்துள்ளது. அதாவது, 99 சதவிகிதம் திரும்பி வந்துவிட்டன. 100 சதவிகிதம் நோட்டுக்கள் திரும்பி வந்துவிட்டதாக தெரிவிக்கிறார், முதலாளித்துவ பொருளாதார அறிஞர் ஆனந்த் சீனிவாசன். இவையெல்லாம் மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்தப் பட்டவைதான்.

மேலோட்டமாக பார்த்தால் மீண்டும் ஒரு பணமதிப்பழிப்பு என்பது கோமாளித்தனமாகத் தெரியும். ஆனால், தங்களது இணைய வானரப்படைகள் மூலம் எதையும் நம்பவைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் மோடி அரசு களமிறங்கியுள்ளது. மேலும், சாதாரண மக்களிடம் இன்றளவும் கருப்புப் பணத்தை பற்றி உள்ள தவறான புரிதல்கள் சங்கிகளின் பிரச்சாரத்திற்கு அடிப்படையாக உள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கு கருப்புப் பணம் தடையாக இருக்கிறது என்றும், அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கட்டுக்கட்டாக கருப்புப் பணத்தை மூட்டையாக கட்டியும், சூட்கேசில் அடைத்தும் மர்மமாக மறைத்து வைத்திருப்பதாகவும் நம்புகின்றனர். அந்த கருத்துகளையே ஊடகங்கள் விதைக்கின்றன.

கார்ப்பரேட்டுகள்தான் பெரும் கருப்புப் பண முதலைகள்!

அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் கருப்பு பணம் இல்லை என்று நாம் கூறவில்லை. இவர்கள் தங்களிடம் உள்ள பெரும்பாலான கருப்புப் பணத்தை முதலீடுகளாகவும் சொத்துகளாகவும் மாற்றி வைத்துள்ளனர். விதிவிலக்காக சிலர் ரொக்கமாக வைத்து இருக்கலாம். அது ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த அளவு. இவையே சில இடங்களில் போலீசில் பிடிபடுகின்றன. சமீபத்தில்கூட, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் யோஜனா பவன் என்ற அரசு அலுவலகத்தில் சூட்கேசில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மொத்த கருப்புப் பணத்தில், அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் இருக்கும் பணம் மிகக் குறைவான அளவுதான். வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம் 120 இலட்சம் கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இவ்வளவு பணத்தை பதுக்கி வைத்திருப்பர்களா? சிலர் இருக்கலாம். பெரும் அளவிலான கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பது அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள்தான்.

கார்ப்பரேட் முதலாளிகள் இலட்சக்கணக்கான கோடிகள் கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருந்து, அவற்றை தங்களுடைய பினாமி நிறுவனங்கள் மூலம் அந்நிய முதலீடுகளாக இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றனர். மிகப்பெரும் அளவிலான கருப்புப் பணம் சுழன்று கொண்டே இருக்கிறதே தவிர, எங்கும் நிலையாக பதுக்கி வைக்கப்படவில்லை.

கோமாளித்தனமல்ல, கார்ப்பரேட்டுகளுக்கு விருந்து!

இரு பணமதிப்பழிப்பு நடவடிக்கைகளையும் விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பெரும்பாலானோர், முட்டாள்தனமான நடவடிக்கை என்ற விமர்சனத்தையே முன்வைக்கின்றனர். பாசிசக் கும்பலை குறைத்து மதிப்பீடுகின்றனர்.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், “அதிக அளவில் பரிமாற்றத்திலிருந்த ரூ.500, ரூ.1,000 பணமதிப்பு நீக்கம் என்ற முட்டாள்தனமான முடிவை மூடி மறைக்க ரூ.2,000 நோட்டு கட்டுக்கட்டாக அறிமுகம் செய்யப்பட்டது” என்றும்; மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரரான துஷார் காந்தி, “நவீன துக்ளக்கின் உச்சகட்ட முட்டாள்தனம்” என்றும் கூறியுள்ளனர்.

இது முட்டாள்தனமான நடவடிக்கை அல்ல. காவிக் கும்பலின் மிகப்பெரிய சதித்திட்டமாகும். கருப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறிக்கொண்டு, யார் கருப்புப் பணத்தின் ஊற்றுக் கண்களோ அவர்களிடம் (அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற கார்ப்பரேட் முதலாளிகளிடம்) மக்களின் சேமிப்பை ஒட்ட சுரண்டி ஒப்படைப்பதாகும். மேலும் இது கருப்புப் பண முதலைகளின் மீதான தாக்குதல் அல்ல. மக்களின் மீதான பாசிசத் தாக்குதலாகும்.

பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, “மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பு ஏற்படுத்தாமல் கிளீன் நோட் பாலிசியில் உயர்ந்த மதிப்பு கொண்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுகிறார்கள். இன்னும் 10 வருடங்களில் 500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்று விடுவார்கள். உயர்ந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும்போது, மக்கள் ஆன்லைன் பரிவர்த்தனையை நோக்கி செல்ல ஆரம்பிப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

2016 பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் போது மோடி தன் உரையில், பணப்பொருளாதாரத்தை அழித்து அனைவரையும் வங்கிப் பொருளாதாரத்துக்குள் கொண்டு வரப்போகிறேன் என்று கூறியிருந்தார்.

அதாவது, மோடி அரசு பணப் பரிவர்த்தனைகளை படிப்படியாக ஒழித்து, டிஜிட்டல் பரிவர்த்தனைக்குள் மக்களை நெட்டித் தள்ளி வருகிறது. 2016 பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2017 ஜனவரியில் 0.45 கோடியாக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள், 2023 ஜனவரியில் 804 கோடியாக மிகப்பெருமளவு அதிகரித்துள்ளது.

இதன் மூலம் மக்களின் பணம் வங்கிகளில் குவிக்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள வங்கிகளில் 50 லட்சம் கோடி ரூபாயாக இருந்த டெபாசிட்டுகள், 2021 மார்ச் இறுதிக்குள் 150 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி விட்டது. டெபாசிட்டுகள் 5 ஆண்டுகளுக்கு 50 லட்சம் கோடி ரூபாய் என்ற விகிதத்தில் அதிகரிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

படிக்க : செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடி! | மக்கள் அதிகாரம்

ஒருபுறம், மக்களின் சுருக்கு பையிலும் சேமிப்பு உண்டியல்களிலும் இருக்கும் பணம் உட்பட வங்கிகளில் மலை போல குவிக்கப்பட்டு வருகிறது. மறுபுறம், பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கான முயற்சிகள் மோடி அரசால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதாவது, அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற கார்ப்பரேட் கும்பல்கள் மக்களின் சேமிப்பை சூறையாடுவதற்கு மோடி அரசே வழியேற்படுத்திக் கொடுக்கிறது.

“கருப்புப் பணம்”, “கள்ளப் பணம்”, “ஊழல் ஒழிப்பு” போன்ற பெயரில் மக்கள் முன் தங்கள் பிம்பத்தை நிறுத்திக் கொள்வது மட்டுமல்லாமல், மக்களை டிஜிட்டல் பரிவர்த்தனைக்குள் நெட்டித் தள்ளி கார்ப்பரேட் கும்பல்கள் மக்களின் பணத்தை சூறையாட வழியேற்படுத்திக் கொடுக்கிறார்கள் காவி பாசிஸ்டுகள்.

எனவே, காவி பாசிஸ்டுகளின் கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தையும், அதற்கு பின்னால் திரைமறைவில் மக்களின் சேமிப்பை சூறையாடுவதற்காக உள்ள சதித்திட்டத்தையும் அம்பலப்படுத்தி பிரச்சாரங்களையும் போராட்டங்களையும் கட்டியமைக்க வேண்டியது சமூக அக்கறை கொண்ட ஒவ்வொருவரின் கடமையாகும்.

– சிவராமன்
புதியஜனநாயகம்
ஜூன் 2023

பழங்குடியின அடிப்படையில் சாதி சான்றிதழ் கொடுக்க மறுக்கும் அரசு – பறிபோகும் பழங்குடி மாணவர்களின் உயர்கல்வி.

பிச்சை எடுத்தாவது கல்வி கற்கவேண்டும் என்ற மரபுக் கொண்ட இந்த தமிழ் மண்ணில், கல்வி பெறுவதற்கான சாதி சான்றிதழ் இல்லாததால் பல ஆண்டுகளாக ஆதியன் பழங்குடியின மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதி கச்சனம் பஞ்சாயித்துக்கு உட்பட்ட ஆப்பரக்குடி என்ற கிராமத்தில் 485 க்கும் மேற்பட்ட ஆதியன் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். நாடோடியாக அலைந்து திரிந்த  ஆதியன் பழங்குடியின மக்களில் சிலர் கடந்த  40 ஆண்டுகளாக ஆப்பரக்குடியில் தங்களுக்கு என்று  குடிப்பிருப்புகளை அமைந்துக் கொண்டு  பிளாஸ்டிக் விற்பனை, பாசிமணி, திருஷ்டி பொருட்கள் விற்பது என பல்வேறு வேலைக்கு சென்று வருகின்றனர். இச்சமூக மக்களின் பிரதான வேலையாக இசை கருவி செய்து தருவதும், இசை கருவி வாசிப்பதென தமிழ்நாட்டியின் பல்வேறு பகுதிகளில் இசை கருவி வாசிக்கவும் சென்று வருகின்றனர். இருவர்களுக்கு  என்று சொந்தமாக பட்டா நிலம் கூட கிடையாது கோவில் நிலத்தில் தான் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள்  12 வகுப்பு பொதுத்தேர்வில்  நல்ல மதிப்பெண் பெற்றிருந்த போதிலும்  ”சாதி சான்றிதழ்” இல்லாததால் கல்லூரி சேர முடியாத அவலநிலையில் உள்ளனர். இது தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுத்த போதும் இதுவரை அதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளாமல் இருந்து வருகிறது.

படிக்க : பீகார்: ‘பசுப் பாதுகாப்பு’ என்ற பெயரில் மீண்டும் ஒர் படுகொலை!

வறுமை கோட்டிற்கு கீழ்வாழும் இச்சமூக மக்கள் கடந்த 20 ஆண்டுகளாகதான் தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முயன்று வருகின்றனர். குடும்ப வறுமையை தாண்டி மாணவர்கள் பள்ளிக்கு சென்றிருந்தாலும் சாதி சான்றிதழ் இல்லாததால் அவர்களால் 8 வகுப்பை தாண்டி படிக்க முடியாத சூழல் உள்ளது.  எட்டாம் வகுப்பு வரை மாணவர்களின் மாற்றுச் சான்றிதழில் ஆதியன் பழங்குடி என்று இருப்பதை  எட்டாம் வகுப்பு முடியும் போது MBC என்று பள்ளி நிர்வாகம் சுழித்து மாற்றிவிடுவதாகவும் பெற்றோர் மற்றும் மாணவர்கள் கூறுகின்றனர்.  மன்னார்குடி வருவார் கோட்டாச்சியர் அலுவலகம் சென்றாலும் பிற்படுத்தப்பட்டோர் அடிப்படையில் தான் சாதி சான்றிதழ் வழங்கமுடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றர்.

ஆதியன் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும் இவர்களுக்கு திருவாரூர் மாவட்ட நிர்வாகமோ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த ஜோகி சமூகம் என்று சாதி சான்றிதழ் வழங்கியுள்ளது.

ஆனால் எதன் அடிப்படையில் இவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு சேர்ந்தவர்  என்று சான்றிதழ் வழங்கப்பட்டது என்று ஆதராம் இல்லை. ஜோகி சமூகம் என்பது வட மாநிலத்தில் வசிக்கும் ஒரு சமூக பிரிவு மக்கள் ஆகும். மக்களின் உண்மையான வாழ்க்கை நிலையை நேரில் சென்று அரசு அதிகாரிகள் பார்வை இடமால் யாரோ சொல்லியதை வைத்து இந்த சான்றிதழில் வழங்கி இருப்பதாக ஊர் பொதுமக்கள் கூறுகின்றனர்.இதனால் அரசு தரக்கூடிய இடஒதுக்கீடு மற்றும் அரசு சலுகைகளை கூட இச்சமூக மக்கள் பெறமுடியாத நிலையில் உள்ளனர்.

ஆனால் திருவாரூர் மாவட்டத்திற்குள் திருவாஞ்சியம் பகுதியில் வசிக்கும் ஆதியன் சமூக மக்களுக்கு பழங்குடி அடிப்படையில் சான்றிதழ் வழங்கியுள்ள மாவட்ட நிர்வாகம் அதே மாவட்டத்தில் ஆப்பரக்குடியில் வசிக்கும் ஆதியன் சமூக மக்களுக்கு மட்டும் பழங்குடி அடிப்படையில் சான்றிதழ் கொடுக்க மறுக்கிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் திருவாஞ்சியத்தில் வசிப்பதால் பழங்குடி அடிப்படையில் சான்றிதழும் தம்பி ஆப்பரக்குடியில் வசிப்பதால் MBC  அடிப்படையில் சான்றிதழ் என வெவ்வேறு பெயர்களில் மாவட்ட நிர்வாகம் சான்றிதழ் வழங்கியுள்ளது.

ஒரே சமூகத்தை சேர்ந்த மக்கள் அதே  மாவட்டத்தில் வெவ்வேறு பகுதியில் வசிப்பதால் வெவ்வேறு சாதி சான்றிதழ் வழங்கி இருக்கும் முறை என்பது அரசின் அலட்சிய போக்கை தெளிவாக காட்டுகிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் திருவாஞ்சியத்தில் வசிப்பதால பழங்குடி சான்றிதழும் தம்பி ஆப்பரக்குடியில் வசிப்பதால் MBC  அடிப்படையில் சான்றிதழ் என வெவ்வேறு பெயர்களில் மாவட்ட நிர்வாகம் சான்றிதழ் வழங்கியுள்ளதாக ஊர் மக்கள் கூறுகின்றனர்.

நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, திருச்சி போன்ற மாவட்டங்களில் வசிக்கும் ஆதியன் சமூக மக்களுக்கு பழங்குடியினர் அடிப்படையில் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆப்பரக்குடி, மன்னார்குடி, திருத்துறைபூண்டி, விளத்தூர் போன்ற பகுதியில் வசித்து வரும் ஆதியன் சமூக மக்களுக்கு மட்டும் பழங்குடி அடிப்படையில் சாதி சான்றிதழ் வழங்காமல் காலம் தாழ்த்திவருகிறது மாவட்ட நிர்வாகம். இது தொடர்பாக பல முறை மன்னார்குடி வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம் அலைந்தும் இவர்களும் தீர்வு கிடைக்கவில்லை.

இதைபற்றி ஆப்பரக்குடி பகுதியில் வசிக்கும் ஒருவரிடம் பேசிய போது ”நீங்கள் எங்களை பற்றி செய்தி சேகரிக்க வந்துள்ளீர்கள் எங்களுக்கும் சாதி சான்றிதழ் கிடைத்திருந்தால் உங்களை போல்  எங்கள் பிள்ளைகளும் நன்றாக படித்துவிட்டு நல்ல நிலைமைக்கு வந்து உங்களை போல் செய்தியாளராக ஆகி இருப்பார்கள் என்று கூறினார். 70 க்கும் மேற்பட்ட மனுக்கள் அரசிடம் கொடுத்தப் போதும் இதுவரை எங்களுக்கான நீதி கிடைக்கவில்லை, நாங்கள் எங்கள் நாடோடி வாழ்க்கையை  விட்டுவிட்டு எங்கள்  பிள்ளைகளை படிக்கவைக்க விருப்புகிறோம் ஆனால் இந்த அரசு எங்களுக்கு பழங்குடி அடிப்படையில் சாதி சான்றிதழ் வழங்காமல் வேறு பெயரில் சாதி சான்றிதழ் வழங்கி எங்களின் பிள்ளைகளின் படிப்பை பறித்து வருகிறது 30 ஆண்டுகாளக போராடியும் பயன் ஏதுமில்லை” என்று கூறினார்.

ஆப்பரக்குடியை சேர்ந்த மாணவர்கள் கபடி மற்றும் சிலம்பம் போன்ற விளையாட்டுகளை விளையாடும் திறன் கொண்ட மாணவர்களாக இருந்த போதிலும் சாதி சான்றிதழ் இல்லாததால்  உயர்கல்வி சேர முடியாத நிலையுள்ளது. தற்போது ஆப்பரக்குடியில் இருந்து 80 மாணவர்கள் பள்ளியில் கல்வி படித்துவரும் நிலையில் சாதி சான்றிதழ் இல்லாததால் அவர்களின் எதிர்கால வாழ்க்கையையும் கேள்விகுறியாக்கி உள்ளது.  சாதி சான்றிதழ் வழங்க வேண்டிய மன்னார்குடி வருவாய் கோட்டாச்சியர் அலுவலகமும் மாவட்ட நிர்வாகமும்  மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்காமல் மாணவர்களின் கனவுகளை சீரழித்துவருகிறது.

கடந்த வாரம் திருவண்ணாமலை – திருக்கோவிலூர் எடப்பாளையம் கிராமம், எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற மாணவி 12 வகுப்பு பொதுத்தேர்வில் 375 மதிப்பெண் பெற்றிருந்த போதும் பன்னியாண்டி அடிப்படையில் பழங்குடி சாதி சான்றிதழ் இல்லாததால் உயர்கல்வி சேர முடியாத மனஉளைச்சலில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இடஒதுக்கீடு பெறுவதற்கு அடிப்படையாக உள்ள சாதி சான்றிதழ் அரசு முறையாக வழங்காமல் அந்த சமூக மக்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக படுகுழியில் தள்ளிவருகிறது.

படிக்க : இந்திரா காந்தியின் எமர்ஜென்சியும் சங்கப் பரிவாரத்தின் ஆதரவும்!

அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு முடியபோகும் நிலையில் இதுவரை ஆப்பரக்குடி மாணவர்களுக்கு பழங்குடியினர் அடிப்படையில் சாதி சான்றிதழ் வழங்கவில்லை.  இதனால்  கல்லூரி சேர விண்ணபிக்க முடியாமலும், கல்லூரி கலந்தாய்வில் சாதி சான்றிதழ் ஒப்படைக்க முடியாமலூம்  மாணவர்கள் தவித்துவருகின்றனர்.

பல கோடி செலவு செய்து கலைஞர் கோட்டம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கும் திராவிட மாடல் அரசு சொந்த மாவட்டத்தில் கல்விக்காக ஏங்கி கொண்டிருக்கும் மாணவர்களை கண்கொண்டு பார்க்க மறுக்கிறது.

சமூக நீதி அரசு, கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு என்றெல்லாம் மேடைகளில் பேசும் திமுக அரசு உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு சாதி சான்றிதழ்காக போராடும் மாணவர்களுக்கு பழங்குடியினர் அடிப்படையில் சாதி சான்றிதழ் கிடைப்பதை உறுதிச் செய்யவேண்டும்.

வினவு களச்செய்தியாளர்

இட ஒதுக்கீட்டைத் தடை செய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

0

மெரிக்காவில், கடந்த ஜூன் 29 அன்று, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பல்கலைக்கழக சேர்க்கையில் இனத்தை ஒரு காரணியாகக் கருத முடியாது என்று‌ அது கூறியுள்ளது.

அமெரிக்காவில் இட ஒதுக்கீட்டை உறுதியான நடவடிக்கை (affirmative action) என்று கூறுவார்கள். இதனை நேர்மறை பாகுபாடு (positive discrimination) என்றும் அழைப்பார்கள்.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் பல நூற்றாண்டுகளாக அடிமைகளாக நடத்தப்பட்டனர். அங்கு சட்டரீதியாக அடிமை முறை ஒழிக்கப்பட்டுப் பல ஆண்டுகளாகியும் இன்னும் இனப் பாகுபாடு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இதன் காரணமாக, கறுப்பின மற்றும் இலத்தீன் இன மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகப்படுத்தும் பொருட்டு, அங்கு உறுதியான நடவடிக்கை கொள்கைகள் (affirmative action efforts) என்ற பெயரில் இன அடிப்படையிலான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுகிறது. மாணவர் சேர்க்கையின்போது அவர்கள் இனத்தை அறிந்து கொள்ளும் வகையில் விண்ணப்பப்படிவங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும். கல்வி நிறுவனங்களில் பன்முகத்தன்மையை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த முறை 1960-களில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது.


படிக்க: அமெரிக்க கருப்பின மக்கள் மீது தொடரும் நிறவெறித் தாக்குதல் !


கன்சர்வேடிவ் சட்ட நிபுணரான எட்வர்ட் ப்ளூம் தலைமையில் இயங்கும் “நியாயமான சேர்க்கைக்கான மாணவர்கள்” (Students for Fair Admissions) என்ற அமைப்பு இன அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று இரண்டு வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருந்தது. இவ்வமைப்பு இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வரும் அமைப்பாகும்.

ஹார்வர்டின் சேர்க்கைக் கொள்கை ஆசிய அமெரிக்க (Asian Americans) விண்ணப்பதாரர்களுக்கு எதிராகச் சட்டவிரோத பாகுபாடு காட்டுவதாகக் கூறி ஒரு வழக்கு தொடரப்பட்டிருந்தது. வடக்கு கரோலினா பல்கலைக்கழகம் வெள்ளை மற்றும் ஆசிய அமெரிக்க விண்ணப்பதாரர்களுக்கு எதிராகச் சட்டவிரோத பாகுபாடு காட்டுவதாகக் கூறி மேலுமொரு வழக்கு  தொடரப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்றம் ஹார்வர்ட் தொடர்பான வழக்கில்  6-2 என்ற கணக்கிலும், வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்திற்கு எதிரான வழக்கில் 6-3 என்ற கணக்கிலும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியது.

தலைமை நீதிபதி ஜான் ஜி ராபர்ட்ஸ் தனது தீர்ப்பில் “மாணவர்களை தனிநபர்களாக அவர்களின் அனுபவங்களின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும்; இனத்தின் அடிப்படையில் அல்ல. பல பல்கலைக்கழகங்கள் நீண்ட காலமாக இதற்கு நேர்மாறாகச் செய்துள்ளன. அவ்வாறு செய்ததன் மூலம், ஒரு தனிநபரை மதிப்பிடுவதற்கு அவரது திறமைக்கு மாறாக அவரது தோலின் நிறத்தை உரைகல்லாக பயன்படுத்தியுள்ளனர். நமது அரசியலமைப்பு அதைச் சகித்துக்கொள்ளாது” என்று கூறியுள்ளார்.


படிக்க: கருத்துரிமை, ஊழல், சுரண்டல், நிறவெறி – தோழர் கலையரசனின் உலகச் செய்திகள் !


அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கடுமையாகச் சாடியுள்ளார். அவர் “அமெரிக்காவில் பாகுபாடு இன்னும் நீடிக்கிறது. இன்றைய தீர்ப்பு அதை மாற்றிவிடாது. இது அனைவரும் அறிந்த உண்மையாகும்” என்று கூறியுள்ளார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்துள்ளார். அவர்‌ “அனைத்து மாணவர்களுக்கும் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய உறுதியான நடவடிக்கை (affirmative action) போன்ற கொள்கைகள் அவசியம். சமத்துவ சமூகத்தை நோக்கிய பாதையில் உறுதியான நடவடிக்கை (affirmative action) ஒருபோதும் முழுமையான தீர்வாக இருக்கவில்லை. ஆனால் அமெரிக்காவின் பெரும்பாலான முக்கிய நிறுவனங்களிலிருந்து பல தலைமுறையாகத் திட்டமிட்டு விலக்கப்பட்ட எங்களுக்கு, நாங்களும் தகுதியானவர்கள் தான் என்று நிரூபித்துக் காட்ட இது எங்களுக்கு வாய்ப்பளித்தது” என்று கூறியுள்ளார்.

பாசிஸ்ட் டொனால்ட் டிரம்ப் “இது அமெரிக்காவுக்கு ஒரு சிறந்த நாள்” என்று இத்தீர்ப்பு குறித்துக் கூறியுள்ளார்.

ஏற்கனவே அரிசோனா, கலிபோர்னியா, புளோரிடா, இடாஹோ, மிச்சிகன், நெப்ராஸ்கா, நியூ ஹாம்ப்ஷயர், ஓக்லஹோமா மற்றும் வாஷிங்டன் ஆகிய ஒன்பது மாகாணங்களில் பொதுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இன அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பானது கறுப்பின மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் செயலாகும். அமெரிக்கச் சமூகத்தில் நிலவும் இனப் பாகுபாட்டைப் பாதுகாத்து நிலை பெறச் செய்வதற்கான பாசிச‌ இனவெறி நடவடிக்கையாகும்.


பொம்மி

நெஞ்சமெல்லாம் லிங்கன் | நினைவுப் பகிர்தல் | நேரலை

நெஞ்சமெல்லாம் லிங்கன் | நினைவுப் பகிர்தல்

01.07.2023 | மாலை 5 மணி
ரிப்போர்ட்டர்ஸ் கில்டு, சேப்பாக்கம், சென்னை.

பாகம் : 1

பாகம் 2:

வழக்குரைஞர் சங்கர சுப்பு

வழக்குரைஞர் சத்ய சந்திரன்

வழக்குரைஞர் கிருஷ்ணகுமார்,
MHAA, செயலாளர்.

வழக்குரைஞர் ரஜினிகாந்த்,
மாநில துணைப் பொதுச்செயலாளர், வி.சி.க.

வழக்குரைஞர் ஜான்சன்

தோழர் கு.பாரதி,
தென்னிந்திய மீனவர் சங்கம்.

தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபு,
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை.

முனைவர் பகத்சிங், ஆய்வாளர்.

தோழர் மனிதி செல்வி

தோழர் தியாகு,
பொதுச் செயலாளர்,
தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்.

தோழர் ரமணி,
மாநிலப் பொதுச்செயலாளர்,
சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி.

வழக்குரைஞர் பாவேந்தன்,
தமிழக மக்கள் முன்னணி.

தோழர் அதியமான்,
மாநிலச்செயலாளர்,
AICCTU.

தோழர் சாலமன்,
மாநிலக்குழு உறுப்பினர்,
அம்பேத்கர் பொதுவுடமை முன்னணி.

தோழர் அமிர்தா,
மக்கள் அதிகாரம்,
மாநில தலைமைக்குழு உறுப்பினர்.

மற்றும் தோழர் லிங்கனுடன் இணைந்து பணியாற்றிய சமூக இயக்கங்களைச் சார்ந்த தோழர்கள்.

தலைமை: இராமு(எ)மருது, தொடக்க உரை: கார்க்கி வேலன்,
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: புளியந்தோப்பு மோகன், நிறைவுரை: மகிழன்

7358556847, 9710392882, 9840327140, 8939136163, 9025870613

பீகார்: ‘பசுப் பாதுகாப்பு’ என்ற பெயரில் மீண்டும் ஒர் படுகொலை!

0

டந்த ஜூன் 28 அன்று பீகாரின் சரண் மாவட்டத்தில் மாட்டிறைச்சியை வாகனத்தில் கொண்டு சென்றதாக் கூறி முஸ்லீம் ஒருவரை ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளது. பக்ரீத் பண்டிகைக்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சரண் மாவட்டத்தின் மஜ்வாலியா கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ஜஹிருதீன் அம்மாவட்டத்தில் உள்ள நாகரா (Nagara) எலும்பு தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தார். பத்ராஹா பஜார் அருகே சென்று கொண்டிருந்த போது அவரது கன்டெய்னர் லாரி பழுதானது. ஜஹிருதீன், அவரது உதவியாளர் மற்றும் சில தொழிலாளர்கள் வாகனத்தை சரிசெய்ய முயன்றனர்.

அப்போது அங்கு வந்த சுமார் 40 பேரைக் கொண்ட கும்பல் அவர்களுக்கு உதவுவதாகக் கூறியது. பின்னர் வாகனத்தில் இருந்து துர்நாற்றம் வீசியதால் கன்டெய்னரைத் திறக்கும்படி கட்டாயப்படுத்தியது. விலங்குகளின் எலும்புகள் லாரியில் இருப்பதாகவும், மருத்துவ நோக்கங்களுக்காக அதை நகராவில் உள்ள தொழிற்சாலைக்கு கொண்டு செல்வதாகவும் லாரியில் இருந்தவர்கள் பதிலளித்தனர். இதனையடுத்து அந்த கும்பல் அவர்களை தாக்கத் தொடங்கிவிட்டது.


படிக்க: மகாராஷ்டிரா: முஸ்லீம் மக்களை படுகொலை செய்யும் பசு குண்டர் படை!


அச்சமடைந்த உதவியாளரும் மற்ற தொழிலாளர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். ஜஹாருதீனின் காலில் இரும்பு கம்பி பொருத்தப்பட்டிருந்ததால் அவரால் ஓட முடியவில்லை. அந்த கும்பல் அவரை கொடூரமாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த ஜலால்பூரின் உள்ளூர் போலீசு இதில் தலையிடவில்லை.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜாஹிருதீன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக பீகார் போலீசு கூறியது. கன்டெய்னரில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகளின் மாதிரிகள் தடயவியல் சோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இறந்தவர் மாட்டிறைச்சியை கொண்டு சென்றாரா என்பதை உறுதிப்படுத்த விசாரணை நடந்து வருவதாகவும் போலீசு தெரிவித்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் 8 பேர் மீதும் அடையாளம் தெரியாத 30 பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி கூறினார். 20 சந்தேகநபர்கள் (suspects) கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனையவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


படிக்க: ‘பசு பாதுகாப்பு’ எனும் ஆயுதத்தை சுழற்றும் பாசிஸ்டுகள்!


பீகார் விலங்குகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுச் சட்டம், 1955, பசுக்கள் மற்றும் கன்றுகளை கெல்வதைத் தடை செய்கிறது. ஆனால் 15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட அல்லது ஊனமுற்ற மாடுகளை வெட்ட அனுமதிக்கிறது. இது போன்ற பசுவதை தடைச் சட்டங்கள் ‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்த ஏதுவாக இருக்கின்றன.

மார்ச் 2023-இல், இதே சரண் மாவட்டத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் ‘பசு பாதுகாப்பு’ கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். அதேபோல் 2019 ஆம்-ஆண்டில், சரணில் கால்நடை திருட்டு சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்டனர்; ஒருவர் படுகாயமடைந்தார்.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இது போன்ற பாசிச தாக்குதல்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. பாசிசத்தை வீழ்த்தாமல் இதுபோன்ற வன்முறை வெறியாட்டங்களைத் தடுக்க முடியாது.


பொம்மி

கால் மேல் கால் போட்டு உட்காரலாமா?

ழக்குரைஞர் ஒருவரைச் சந்திப்பதற்காக கீழமை  நீதிமன்றத்திற்கு வண்ண உடையில்  சென்றிருந்தேன். நான் பார்க்க வேண்டிய வழக்குரைஞர் நீதிமன்றத்திற்குள் இருந்தார். நான் நீதிமன்றத்திற்கு வெளியே கொஞ்ச தூரம் தள்ளி வெளியே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தேன். நான் அமர்ந்திருந்த பெஞ்சுக்கு எதிரில் இருந்த நீதிமன்றத்தில் யாரும் இல்லை, நீதிமன்ற பணிகள் எதுவும் நடைபெறவில்லை . அரை மணி நேரம் ஆனது, செல்பேசியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தேன்.

திடீரென பெண் காவலர் ஒருவர் வந்தார். “சார் கால் மேல கால் போட்டு உட்காராதீங்க ” என்று சொல்லிவிட்டுச் சென்றார். எனக்குச் சுருக்கென்று கோபம் வந்தது.  நான் கால் மேல் கால் போட்டிருந்ததை எடுக்கவே இல்லை . பத்து நிமிடம் என்னைப் பார்த்துக் கொண்டே  இருந்தார். பிறகு நானே அவரிடம் நேரில் சென்று கேட்டேன்.

“ஏன் கால் மேல கால் போட கூடாதுன்னு சொன்னீங்க?”

“ஜட்ஜ் வருவாங்க”

“நீதிமன்றத்தில்  எந்த நடவடிக்கையும் இல்லாமத்தான இருக்கு . நீதிபதி வரும் பொழுது யாராவது அவரை அவமரியாதை செய்வார்களா? அந்த குறைந்த பட்சம் நாகரிகம் கூட இல்லாமலா நாங்க இருக்கிறோம்?”

“அதை என்கிட்ட சொல்லாதீங்க ஜட்ஜ் கிட்ட சொல்லுங்க”

“நான் கால் மேல கால் போட்டு உட்கார்ந்திருக்கிற போது மற்றவர்களை எப்படி அவமானப்படுத்தும்?

எத்தனை நாளைக்கு செருப்பு போடாதீங்க, கால் மேல கால் போடாதீங்க ,  கூளை கும்பிடு போடுன்னு  சொல்லிட்டே இருப்பீங்க?” என்றேன் காட்டமாக.

அதற்கு அந்தப் பெண் காவலரிடம் பதில் ஏதுமில்லை.


படிக்க: செந்தில் பாலாஜி கைது! THE UNCONDITIONAL SUPPORT அரசியல்!


கடந்த 13 வருடமாகச் சென்னையில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களுக்குப் பலமுறை சென்று வந்திருக்கிறேன். நீதிமன்ற வளாகத்தில் கால் மேல் கால் போட்டு உட்காரக் கூடாது என்று யாரும் சொன்னது இல்லை.

கால் மேல் கால் போட்டு உட்காருவது என்பது போலீசின் அதிகாரத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது என்பது தான் பிரச்சனை. என்னிடம் பேசிய அந்த பெண் போலீசு நீளமாக முடி வளர்க்காமல் கட்டிங் செய்திருந்தார். முடி வளர்ப்பது தேவையற்றது என்று கருதி முடிவெடுத்த அவரால் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருப்பது சாதாரண செயலாக, இது ஒரு மனிதனின் தனிப்பட்ட உரிமையாகக் கருத முடியவில்லை.

இது சாதிய, அதிகார வர்க்கப் புத்தி!

ஆண்டைத் தனமான கலாச்சாரங்களின் குரல்கள் ஒலிக்கும் போதெல்லாம் அவற்றின் செவிட்டில் அறைவதே நம்முடைய முதல் வேலையாக இருக்க வேண்டும்.


மருது

பற்றி எரிகிறது மணிப்பூர் | மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் – நேரலை!

பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி பாசிஸ்டுகள்!

கண்டன ஆர்ப்பாட்டம்

இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவள்ளுவர் சிலை அருகில்
நேரம் : காலை 10.30 மணி
நாள் : 01.07.23

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அம்பானி-அதானி பாசிசத்தை வீழ்த்தாமல் வாழ்வில்லை என்பதை மீண்டும் நிரூபிக்கிறது மணிப்பூர்.

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை உருவாக்கப் போராடுவோம்!

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.