Saturday, June 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 142

ஜி.பி.எஸ் சுங்கக்கட்டண வசூல்: ‘டிஜிட்டல் பிட்பாக்கெட்’ ஜாக்கிரதை!

ரந்து விரிந்த இந்தியாவை குறுக்கு நெடுக்காக பிளக்கின்றன தேசிய நெடுஞ்சாலைகள். இந்த சாலைகளில் பயணிப்பதற்கு சேவைக்கட்டணம் என்ற பெயரில் வாகன ஓட்டிகளை ஒட்டச் சுரண்டுகிறார்கள் பணம் திண்ணும் கழுகுகளான கார்ப்பரேட் முதலாளிகள். அரசானது மக்களாகிய நம்மிடம் சாலை வரி, மோட்டார் வரி என வசூலித்த பிறகும், இக்கட்டணக் கொள்ளையை நம்மீது திணிக்கிறது. சுங்கச்சாவடிகள் மூலம் நம்மீது சுரண்டலை நிலைநாட்டியவர்கள், தற்போது ஜிபிஎஸ் கருவி மூலம், சாலையில் வாகனங்கள் பயணிக்கும் குறிப்பிட்ட கிலோமீட்டர்களை கணக்கிட்டு அதன் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செப்டம்பர் 9 அன்று டெல்லியில், இந்திய – அமெரிக்க வர்த்தகக் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி, “சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தாமல், தானியங்கி வாகனப் பதிவெண் அங்கீகார முறையில் (Automatic Number-plate Recognition) தாமாக சுங்கக்கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை மத்திய அரசு சோதனை முறையில் நடைமுறைப்படுத்த உள்ளது. இதன் மூலம் நெடுஞ்சாலைகளில் பயன்பாட்டின் அடிப்படையில், அதாவது செல்லவிருக்கும் தொலைவின் அடிப்படையில் கட்டணங்களை வசூலிக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

படிக்க : பாரதிதாசன் பல்கலையில் தேர்வு கட்டண உயர்வு! திரு.வி.க அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

டிஜிட்டல் முறையில் கட்டணம் வசூலிப்பது ஒருபுறமிருக்கட்டும், முதலில் சுங்கச்சாவடிகளில் ஏன் கட்டணம் வசூலிக்கிறார்கள்? கட்டணங்கள் ஏன் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றன? இப்போது ஜி.பி.எஸ் மூலம் கட்டணம் வசூலிப்பதன் தேவை என்ன? போன்ற கேள்விகள் நம்முன் எழுகின்றன. இக்கேள்விகளுக்கு விடை காண்பது அவசியமாகிறது.

***

நாடு முழுவதிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 800 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் 50 சுங்கச்சாவடிகள் உள்ளன. தனியார் முதலாளிகள் சாலைகளை அமைத்துப் பராமரித்து, செலவிட்ட தொகையை கட்டணங்கள் மூலம் வசூலித்து முடித்த பின்னர், அவற்றை நாட்டுக்கு அர்ப்பணிப்பது எனும் “உருவாக்கு – பயன்படுத்து – ஒப்படை” என்ற திட்டத்தின் கீழ் பொதுச் சாலைகள் அமைக்கப்பட்டன.

சாலைகள் அமைத்ததற்கான செலவை ஈடுகட்ட, முதலில் தனியார் முதலாளிகளுக்கு சுங்கம் வசூலிக்கும் உரிமை 15 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது. பின்னர் 30 ஆண்டுகள் வரை நீடிக்கப்பட்டது. சாலைகள் அமைத்ததற்கான முழுத்தொகையையும் வசூலித்த பிறகு, அச்சாலைகளை பராமரிப்பதற்காக 40 சதவீதம் கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதி தரப்பட்டது. ஆனால் சாலை அமைத்த நிறுவனங்கள் ஒப்பந்தங்களை மீறி நீண்டகாலமாக முழுஅளவுக் கட்டணத்தை வசூலித்து வருகின்றன. அவ்வப்பொழுது அக்கட்டணத்தையும் உயர்த்துகின்றன.

2013ஆம் ஆண்டு மத்திய அரசானது, ஆண்டுத்தோறும் சுங்கக்கட்டணத்தை உயர்த்த தனியார் முதலாளிகளுக்கு அனுமதி அளித்தது. மத்திய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி, 1992ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. அதன்படி, ஆண்டுக்கு 10 – 15 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு மார்ச் புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் மட்டும் ஓராண்டு வருமானம் 2,400 கோடி. தமிழகத்தில் மட்டும் இவ்வளவு பணத்தைக் தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்கிறார்கள் என்றால், ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் ஓராண்டில் எவ்வளவு பணத்தை கொள்ளையடிப்பார்கள். மேலும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரை எவ்வளவு பணத்தைக் கொள்ளையடித்து இருப்பார்கள் என்பதை நாம் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

***

தனியார் முதலாளிகள் ஆண்டுத்தோறும் சுங்கச்சாவடி கட்டணங்களை அதிகரித்து வாகன ஓட்டிகள் பணத்தை கொள்ளையடிக்க வழிசெய்த மத்திய அரசானது, தற்போது அக்கொள்ளையை மேலும் அதிகரிக்கும் விதமாக ஜி.பி.எஸ் மூலமாக – டிஜிட்டல் முறையில் – சுங்கக் கட்டணங்களை வசூலிக்கும் புதிய முறையை உருவாக்கி உள்ளது.

சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவே, இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக மோடி அரசால் காரணம் கூறப்படுகிறது. இக்காரணத்தை இப்பொழுது மட்டும் கூறவில்லை. பாஸ்டேக் மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை அறிமுகப்படுத்திய போதும், இதே காரணத்தைக் கூறியது. பாஸ்டேக் முறை இருக்கும் போது ஏன் ஜி.பி.எஸ் மூலம் கட்டணம் வசூலிக்கும் புதிய முறையை கொண்டுவருகிறார்கள் என்று கேள்வி கேட்டாலே, இத்திட்டத்தின் உண்மையான நோக்கத்தை புரிந்துக்கொள்ள முடியும்.

படிக்க : சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு : உழைக்கும் மக்களை ஒட்டச் சுரண்டும் ஒன்றிய அரசு !

பாஸ்டேக் முறையானது, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு வாகன ஓட்டிகளை பழக்கப்படுத்தியது. அதாவது சுங்கச்சாவடிகளில் நேரடியாக கட்டணங்களை செலுத்திக் கொண்டிருந்த வாகன ஓட்டிகளை, ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணங்களை செலுத்த வேண்டும் என நிர்பந்தித்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்குள் நெட்டித் தள்ளியது. பாஸ்டேக் முறை மற்றும் அதில் நடக்கின்ற குளறுபடிகளால், வாகன ஓட்டிகளின் பணம் கூடுதலாக சுரண்டப்படுகிறது என்பது தனிக்கதை.

ஜி.பி.எஸ் முறையில், பாஸ்டேக் மற்றும் சுங்கச்சாவடிகளுக்கான தேவையும் இல்லாமல் போகும். இம்முறையில் முக்கியமாக வாகனங்கள் செல்லும் சாலைகளின் தூரத்தை பொறுத்து சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளது. இதற்காக நாட்டின் அனைத்து வாகனங்களுக்கும் அதன் நம்பர் பிளேட் மின்னணு தொழில்நுட்பத்துடன் மாற்றப்பட உள்ளது. இந்த பணி முடிந்தால் தான் ஜிபிஎஸ் முறையில் சுங்கக்கட்டணம் சாத்தியமாகும்.

இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால், சாலையில் வாகனங்கள் பயணிக்கும் தூரமும் ஜி.பி.எஸ் முறையில் கணக்கிடப்படும். அதற்கேற்ப வாகன ஓட்டிகளின் வங்கிக் கணக்கில் இருந்து கட்டணம், தனியார் நிறுவனங்களால் நேரடியாக பிடித்துக் கொள்ளப்படும். இனிமேல் தேசிய நெடுஞ்சாலையில் 2 அல்லது 3 கிலோமீட்டர் தூர பயணங்களுக்கே கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலை உருவாகலாம். கைநீட்டி செலவுசெய்வதற்கு பதில், டிஜிட்டல் முறையில் வங்கிக் கணக்கில் இருந்து உருவப்படுவதால், இந்தக் கொள்ளையை நம்மால் உணர முடியாது என்பது அவர்களுக்குச் சாதகமான மற்றொரு அம்சம். கிட்டத்தட்ட பிட்பாக்கேட்டுக்கு நிகரான இதை, டிஜிட்டல் பிக்பாட்கெட் என்றே கூட அழைக்கலாம்.


குப்பு

நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள்: புரட்சி வீரர்களை நினைவு கூறுவோம்!

ரஷ்ய புரட்சியின் ஓராண்டு நிறைவின் போது, புரட்சியின் வீரர்களை நினைவு கூறும் விதமாக தோழர் லெனின், புரட்சி வீரர்களின் மகத்தான அர்பணிப்பையும் தியாகத்தையும் பற்றி எடுத்துரைத்தார். அந்த மகத்தான ரஷ்ய சோசலிசப் புரட்சியின் வீரர்களை 106-வது ரஷ்ய புரட்சி நாளில் நினைவு கூறுவதன் மூலம், அவர்களது அர்ப்பணிப்பையும், தியாகத்தையும், புரட்சிகர உணர்வையும் வரித்துக்கொள்வோம். நம் நாட்டில் ஓர் புரட்சியை நடத்திட சூளுரைப்போம்!

– வினவு

000

அக்டோபர் புரட்சியில் உயிர் இழந்தவர்களுக்கான நினைவுக்கல் திறப்புவிழாவின் போது ஆற்றிய உரை

நவம்பர் 7, 1918

தோழர்களே! 1917 ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சியில் வீழ்த்தப்பட்டவர்களை நினைவு கூரும் ஒரு நினைவுச் சின்னத்தைத் திறந்து வைத்திட இங்கு கூடியுள்ளோம். நாடுகளை ஏகாதிபத்தியப் பிடியினின்றும் விடுதலை செய்திட, நாடுகளுக்கிடையே போர்களை ஒழித்திட, மூல தன ஆதிக்கத்தை வீழ்த்திட மற்றும் சோஷலிசத்தை அடைந்திடப் புரட்சி ஒன்றினைத் துவக்கி அதில் உழைக்கும் மக்களின் தவப்புதல்வர்கள் தங்களது உயிரினைத் தியாகம் செய்தார்கள்.

தோழர்களே! ருஷ்யாவின் பலபத்தாண்டுக் கால நவீனகால வரலாற்றில் புரட்சிகரத் தியாகிகளின் நீண்ட பட்டியல் இருந்து வந்துள்ளது. ஆயிரம் ஆயிரம் பேர்கள் ஜாராட்சியை எதிர்த்துப் போரிட்டு மடிந்தனர். அவர்களது உயிர்த்தியாகம் புதிய போராளிகளை எழுச்சியுறச் செய்தது, போராட்டத்திற்குள் இன்னும் அதிகமதிகமான மக்களை ஈர்க்க உதவியது.

கடந்த அக்டோபரின் போது வீழ்த்தப்பட்ட இந்தத் தோழர்கள் வெற்றியின் மகத்தான நற்பேற்றைக் கொண்டு வந்தார்கள். மனித குலத்தின் புரட்சிகரத் தலைவர்கள் கனவு கண்ட அந்த மகத்தான சிறப்பினை இவர்கள் வென்று பெற்றார்கள் : போர்க்களத்தில் வீரமரணம் அடைந்து இந்தத் தோழர்களின் சடலங்களைத் தாண்டி தமது வெகுஜன வீராவேசத்தினால் வெற்றி ஈட்டிய ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான புதிய இதேபோன்று அச்சமென்பதே அரியாத வீரர்கள் முன்னேறிச் சென்றார்கள்.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள்: தோழர் லெனினை நினைவு கூறுவோம்!

இன்று, அகில உலகிலும், தொழிலாளர்கள் கோபாவேசத்தால் கொதித்துக் குமுறிக் கொண்டு இருக்கிறார்கள். பல்வேறு நாடுகளில் தொழிலாளர்களின் சோஷலிஸ்டுப் புரட்சி துவங்கிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுதுமுள்ள முதலாளிகள் திகிலாலும் குரோதத்தாலும் புரட்சியினை அடக்கிட அவசரமாக அணி திரளுகின்றனர். மேலும் ருஷ்யாவின் சோஷலிஸ்டு சோவியத் குடியரசு அவர்கள் விலாவினைக் குத்திடும் குறிப்பிட்ட முள்ளாக இருக்கிறது. ஒன்றுபட்ட உலக ஏகாதிபத்தியவாதிகள் நம்மைத் தாக்கிடத் தயாராக உள்ளனர். இன்னும் பல புதிய போர்களில் நம்மை இழுத்து விடவும் நம் மீது இன்னும் அதிகமான தியாகங்களைச் சுமத் திடவும் தயாராக உள்ளனர்.

தோழர்களே! இவர்களது அடிச்சுவடுகளைப் பின்பற்ற நடப்போம் என்றும், இவர்களது துணிவையும் வீரத்தையும் நாம் முன்மாதிரியாகக் கொள்வோம் என்றும், இவர்களது நினைவுச் சின்னத்தின் முன்னின்று சபதமேற்பதன் மூலம் இந்த அக்டோபர் வீரர்களின் நினைவை நாம் கௌரவப்படுத்துவோம். அவர்களது குறிக்கோள் வாசகமே நமது குறிக்க வாசகம் ஆகட்டும். இதுதான் புரட்சி செய்து வரும் உலகத் தொழிலாளர்களது குறிக்கோள் வாசகம். இந்தக் குறிக்கோள் வாசகம் : “வெற்றி அல்லது வீர மரணம்!’

ஆகவே இந்த குறிக்கோள் வாசகத்தை ஏற்ற பாட்டாளி வர்க்கச் சர்வதேச சோசலிஸ்ட்டு புரட்சியின் போராளிகள் வெல்ல முடியாதவர்கள் ஆவர்.

லெனினின் அட்டோபர் புரட்சியின் ஆண்டுவிழாக்களை ஒட்டி (1918-1922 உரைகள், அறிக்கைகள், கட்டுரைகள்) எனும் நூலிலிருந்து…

பாரதிதாசன் பல்கலையில் தேர்வு கட்டண உயர்வு! திரு.வி.க அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

0

சூத்திரனுக்கு படிப்பு எதற்கு என்று கல்வி மறுக்கப்பட்ட காலம் போய், பணம் இல்லாத ஏழை மாணவர்களுக்கு படிப்பு எதற்கு என்று கல்வி நிலையத்திலிருந்து மாணவர்களை விரட்டியடிக்கும் வேலையில் அரசு இறங்கியுள்ளது.

பல ஆண்டுகளாக பார்ப்பன கொடுங்கோல் ஆதிக்கத்தால் கல்வி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் கிராமப்புற மக்கள் இன்று சிறிதளவேனும் அரசுப் பணிகளும் மற்ற துறைகளுக்கும் செல்ல அடிப்படை காரணமாக இருந்தது வருவது இடஒதுக்கீடும் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கல்லூரிகளும்தான். ஆனால் அதற்கும் இப்போது முடிவுகட்டத் தொடங்கியுள்ளது அரசு.

திருவாரூர் அருகே உள்ள கிடாரம்கொண்டான் பகுதியில் அமைந்துள்ள திரு.வி.க அரசினர் கலைக்கல்லூரியில் 4000-க்கும் மேற்பட்ட ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் அதிகப்படியான மாணவர்கள் கூலி விவசாயக் குடும்ப பின்னணியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஏற்கனவே கல்வி கட்டணம், பேருந்து கட்டணம் மற்றும் புத்தகமென அதிகப்படியான செலவை தன் தலையில் சுமக்கின்றனர். ஆனால் எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சென்ற வாரம் தீடீரென்று முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

படிக்க : அண்ணா பல்கலையில் சான்றிதழ் கட்டண உயர்வு : கல்வி என்ன கடைச்சரக்கா? | புமாஇமு

சென்ற ஆண்டு இளங்கலை ஒரு பேப்பருக்கு ரூ.75-ஆக இருந்ததை தற்போது ரூ.120-ஆகவும், செய்முறை தேர்வுக்கு ரூ.100-ஆக இருந்ததை ரூ.200-ஆகவும் உயர்த்தி உள்ளது. அதேபோன்று, முதுகலை படிப்பிற்கும் ஒரு பேப்பர்க்கு ரூ.120-ஆக இருந்ததை ரூ.200-ஆகவும், செய்முறை தேர்வுக்கு ரூ.200-ஆக இருந்ததை ரூ.300-ஆகவும் உயர்த்தி உள்ளது. இளங்கலைக்கு மொத்தம் ரூ.950-ஆகவும் முதுகலைக்கு மொத்தம் ரூ.1500-ஆகவும் உயர்த்தி உள்ளது.

ஏற்கனவே, மாணவர்கள் குடும்ப வறுமையின் காரணமாக படிப்பதற்கே கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இந்த தேர்வு கட்டண உயர்வு என்பது மாணவர்களை கடும் நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது.

இந்த தேர்வுக் கட்டண உயர்வை கண்டித்து 600-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பாக அக்டோபர் 17, 2022 அன்று போராட்டம் நடைபெற்றது.

அப்போதைக்கு போராட்டத்தை கலைப்பதற்காக மாணவர்களிடம், “பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக தேர்வு கட்டண உயர்வை பற்றி பேசுகிறேன்” என்று சொன்ன கல்லூரி முதல்வர் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போராட்டம் நடத்தி இரண்டு நாட்கள் ஆகியபோதும் தேர்வு கட்டண குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் வரவில்லை. பல்கலைக்கழகம் உயர்த்திய தேர்வு கட்டணத்தை அப்படியே வசூலிக்க தொடங்கியுள்ளனர்.

படிக்க : கியூட் நுழைவு தேர்வு – 1 முதல் 12 வகுப்பு வரை படித்ததற்கு மதிப்பில்லையா?

அனைவருக்கும் தரமான இலவச கல்வியைக் கொடுக்க வேண்டிய இந்த அரசு தொடர்ச்சியாக கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டண உயர்வு என்றப் பெயரில் மாணவர்களை வஞ்சித்து வருகிறது. இலவசம் என்று படிக்கவரும் ஏழை எளிய மாணவர்களும் இதுபோன்ற தேர்வுக் கட்டண உயர்வால் கல்லூரியில் இருந்து பின்வாங்கும் நிலையும் உருவாகியுள்ளது.

திரு.வி.க அரசினர் கலைக்கல்லூரியில் பேதிய கழிவறை வசதியோ குடிதண்ணீர் வசதியோ கிடையாது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற ஆசிரியர்களும் கிடையாது. கல்லூரி கட்டிடத்தில் அங்கங்கே விரிசல் காணப்படுகிறது. திருவாரூர் சுற்றியுள்ள அனைத்து கிராமப்புற மாணவர்கள் இந்த அரசுக் கல்லூரிக்குதான் படிக்க வருகின்றனர். மாணவர்கள் எண்ணிக்கை ஏற்ற பேருந்து வசதியும் கிடையாது. கிடைத்த ஒன்று இரண்டு பேருந்துகளும் மாணவர்கள் கூட்ட நெரிசலில் தொங்கி கொண்டு வருகின்றனர். ஆனால் இதைப்பற்றி துளியும் கவனம் செலுத்தாத அரசு தேர்வுக் கட்டணத்தை மட்டும் உயர்த்தி உள்ளது.

இராணுவ செலவுக்கு இந்திய வருமானத்தில் இருந்து 30 சதவிகிதம் செலவு செய்யும் அரசு, மாணவர்களுக்கு கல்வி என்று வரும்போது மட்டும் மாணவர்களிடமே பணம் வசூலித்து கல்லூரியை நடத்த சொல்கிறது. இது முற்றிலும் ஏழை எளிய மாணவர்களை கல்வியிலிருந்து விரட்டியடிக்கும் செயலாகும்.


பாரி

நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | சோசலிசம்: முதலாளிகளின் கொடுங்கனவு! பாட்டாளிகளின் கலங்கரை விளக்கம்!!

சோசலிசம்: முதலாளித்துவத்தின் கொடுங்கனவு!
பாட்டாளி வர்க்கத்தின் கலங்கரை விளக்கம்!! – மீள்பதிவு

து நவம்பர் புரட்சி நூற்றாண்டின் துவக்கம். 1917, நவம்பர் 7 – உலகின் முதல் தொழிலாளி வர்க்க அரசு அமைந்த நாள்.

இது கலாச்சாரப் புரட்சியின் ஐம்பதாண்டு நிறைவு. மே, 1966-இல் தான் சோசலிசத்தை உள்ளிருந்தே கவிழ்க்கும் முதலாளித்துவ மீட்புக்கு எதிரான சீன கலாச்சாரப் புரட்சி தொடங்கியது.

இது நக்சல்பாரி எழுச்சியின் ஐம்பதாம் ஆண்டு. மே, 1967-இல்தான், திருத்தல்வாத கம்யூனிஸ்டு தலைமையின் நாடாளுமன்ற சரண்டைவுப் பாதைக்கு எதிரான போர்க்குரலாக நக்சல்பாரி உழவர் எழுச்சி தொடங்கியது.

இது கார்ல் மார்க்ஸின் பிறந்தநாளின் 200-வது ஆண்டு தொடக்கம். முதலாளித்துவத்தின் மரணத்தையும், தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தையும் முன்னறிவித்த பேராசான் மார்க்ஸின் பிறந்த நாள் மே 5, 1818.

ஐம்பதாம் ஆண்டு, நூறாம் ஆண்டு போன்றவை ஒருங்கே அமையப் பெறுவது ஒரு தற்செயல் நிகழ்வுதான். ஆனால் அந்தக் குறிப்பிட்ட காலத்தில் நடைபெற்ற குறிப்பிட்ட நிகழ்வுகளும், அவற்றுக்கு இடையிலான உறவும் தற்செயலானவைகள் அல்ல. அவ்வகையில் இந்நான்கு நிகழ்வுகளும் ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்தவை.

1917 ரசிய சோசலிசப் புரட்சி என்பது முதலாளித்துவம் முயன்றாலும் மறக்கவே முடியாத கெட்ட கனவு. மனித சமூகத்தை தலைமை தாங்கி வழிநடத்திச் செல்வதாகக் கூறி வந்த முதலாளித்துவ வர்க்கத்தை, அதிகாரத்திலிருந்து அகற்றியது மட்டுமல்ல, அது சமூகத்துக்குத் தேவைப்படாத வர்க்கம் என்பதையும் சமூக முன்னேற்றத்தின் தடைக்கல் என்பதையும் நடைமுறையில் நிரூபித்தார் நவம்பர் புரட்சியின் நாயகன் தோழர் லெனின்.

இன்று சோசலிசம் தோற்றுவிட்டதாக முதலாளித்துவம் தனக்குத்தானே தைரியம் சொல்லிக் கொள்கிறது. இருப்பினும் அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு – என ஒவ்வொரு துறையிலும் சோசலிசம் நிகழ்த்திய சாதனைகள் தொல்பொருட்களாகப் புதைந்து விடவில்லை. அவை பல்வேறு வடிவங்களில் உலகெங்குமுள்ள தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளாக உயிருடன் உலவுகின்றன.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள்: தோழர் லெனினை நினைவு கூறுவோம்!

தொழிலாளிகளுக்கான பணி உத்திரவாதம், ஓய்வூதியம், வேலையின்மைக்கான உதவித்தொகை, பெண்களுக்கான உரிமைகள் – என சோசலிச ரசியா முன்னோக்கி எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் முதலாளித்துவத்தின் மீது இடியென இறங்கியது. இன்று மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் தொழிலாளி வர்க்கம் பெற்றிருக்கும் பல உரிமைகள், அன்று தத்தம் நாடுகளில் சோசலிசப் புரட்சியைத் தடுக்கும் பொருட்டு முதலாளித்துவம் மேற்கொண்ட தற்காப்பு நடவடிக்கைகளே!

சோசலிசத்தின் தோல்வி குறித்து பெருங்கூச்சல் போடும் முதலாளி வர்க்கம், அதனைக் காட்டிலும் நெடிய வரலாறு கொண்ட தன்னுடைய தோல்வியைப் பேசுவதில்லை. சுதந்திரச் சந்தையின் இடத்தை ஏகபோகம் கைப்பற்றிக் கொண்டிருப்பதையும், ஜனநாயகம் மெல்ல மெல்ல பாசிசமாக உருமாறி வருவதையும், உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியாமல் முதலாளித்துவம் தவிப்பதையும், முதலாளித்துவத்தின் கருவறையிலேயே கிளர்ந்தெழும் மக்களின் போராட்டங்களையும் அது தனது தோல்வியாக கூறிக் கொள்வதில்லை.

ஆனால் ஒரு நூற்றாண்டுக்குள் சோசலிசம் தோற்றுவிட்டதாக தீர்ப்பு கூறுகிறது. மனித குலத்தின் வரலாற்றுடன் ஒப்பிடும்போது நூறு ஆண்டுகள் என்பது ஒரு நாளின் ஒரு மணித்துளி. பிறந்த முதல் ஐம்பது ஆண்டுகளில் வெற்றி மேல் வெற்றி ஈட்டிய சோசலிசம், பிந்தைய ஆண்டுகளில் சரிவையும் தோல்வியையும் சந்தித்தது உண்மைதான்.

ஒரு நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்தை மனித உடலில் சோதித்துப் பார்த்து, அதன் விளைவுகள் – பக்க விளைவுகள் என்ன என்பதை ஓரளவு புரிந்து கொள்வதற்கே அறிவியலுக்கு, ஒரு மனிதனின் ஆயுட்காலமே தேவைப்படுகிறது. சோசலிசம் என்பது சமூக அறிவியல். இது மனித சமூகத்தின் வாழ்நிலை மீதான சோதனை; சிந்தனை மீதான சோதனை. சடப்பொருளின் மீதோ, தன்னிலை உணரவியலாத உயிர்ப்பொருளின் மீதோ நடத்தப்படும் இயற்கை விஞ்ஞான சோதனை அல்ல. சிந்திக்கின்ற மனிதர்கள் மீதான சோதனை. உற்பத்தி சாதனங்களின் மீதான தனியுடைமையை ஒழிப்பது மட்டுமல்ல, அந்தக் கருத்தாக்கத்தையே சமூகத்தின் நினைவிலிருந்து அகற்றுவதற்கான சோதனை.

உற்பத்தி சாதனங்களின் மீதான தனியுடைமை ஒழிக்கப்பட்டு விட்டாலும், சமூகத்தில் பரவியிருக்கும் முதலாளித்துவ வர்க்க சிந்தனை உடனே அகன்று விடுவதில்லை. அது கம்யூனிஸ்டு கட்சிக்கு உள்ளேயும் தலையெடுக்கிறது. மக்களுக்கு பதில் சொல்லும் கடமையிலிருந்து தவறிய அதிகாரத்துவப் போக்காக, திறமைக்கு முன்னுரிமையும் சலுகையும் அளித்து அதிகாரத்தில் அமர்த்த வேண்டுமென்றும் ‘’இலக்குதான் முக்கியம்; வழிமுறை முக்கியமல்ல’’ என்றும் கூறுகின்ற முதலாளித்துவ சிந்தனைப் போக்காக அது வெளிப்படுகிறது.

இத்தகைய போக்குகள் அதிகாரத்தில் இருக்கும் ஒரு கம்யூனிஸ்டு கட்சிக்குள் தலையெடுக்குமானால், அதற்கு எதிராகப் போராட மக்களைக் களத்தில் இறக்க வேண்டும் – சோசலிச அரசே அமைந்தாலும் வர்க்கப் போராட்டம் தொடரத்தான் செய்யும் என்றார் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர் தோழர் மாவோ. சொன்னது மட்டுமல்ல, , சோசலிசத்தின் கீழ் தொழிலாளி வர்க்கம் தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு நடத்த வேண்டிய கலாச்சாரப் புரட்சியின் அறைகூவலாக, ‘’தலைமையகத்தைத் தகர்த்தெறியுங்கள்’’ என்ற அறைகூவலையும் விடுத்தார்.

இருப்பினும் சீனக் கம்யூனிஸ்டு கட்சியை முதலாளித்துவப் பாதையாளர்கள் கைப்பற்றிக் கொள்வதை சீனத் தொழிலாளி வர்க்கத்தால் தடுக்கவியலவில்லை. இன்று முதலாளித்துவ மீட்புக்குப் பின்னர் சமூகத்தில் அதிகரித்து வரும் சீரழிவுகளும் ஏற்றத்தாழ்வுகளும் சோசலிசம் குறித்த ஏக்கத்தை சீனமக்களிடம் தோற்றுவித்து வருவதை சீன முதலாளி வர்க்கத்தாலும் தடுக்கவியலவில்லை.

முதலாளித்துவ மீட்புக்கு எதிராக சீனத்தில் கலாச்சாரப் புரட்சி தொடங்கிய அதே காலத்தில், நாடாளுமன்ற நாற்காலி கம்யூனிஸ்டு இயக்கமாக மாறி விட்ட இந்திய கம்யூனிஸ்டு இயக்கத்திலும் ஒரு புரட்சி வெடித்தது. மே, 1967-இல் நக்சல்பரி கிராமத்தில் வெடித்தெழுந்த உழவர் புரட்சி, ஒரு புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியின் உருவாக்கத்துக்கு வித்திட்டது. இடது விலகல் காரணமாக இ.பொ.க (மா-லெ) பின்னடைவைச் சந்தித்த போதிலும், இந்த அரசமைப்பைத் தூக்கியெறிய வேண்டுமென்று அது விடுத்த அறைகூவல், இன்றைக்கு முன்னிலும் பொருத்தமானதாகியிருக்கிறது. ஆளும் வர்க்கம் தோற்கடிக்கப்படவில்லை என்பது உண்மைதான். எனினும், அது ஆளும் அருகதை இழந்து தோற்றுவிட்டது. தன்னை அகற்றும் வலிமையை பாட்டாளி வர்க்கம் பெற்றிருக்கவில்லை என்ற காரணத்தினால், அது அதிகாரத்தில் நீடிக்கிறது.

உலக முதலாளி வர்க்கத்தின் நிலையும் அதுதான். முதலாளித்துவத்தின் முடிவை, அதனை ஒழித்துக் கட்ட வேண்டிய பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையை முன்னறிந்து சொன்ன மார்க்சும் மார்க்சியமும் செத்துவிட்டதாக முதலாளித்துவம் பிரச்சாரம் செய்யாத நாளில்லை. மார்க்சியம் சாகவில்லை என்பதை தொழிலாளி வர்க்கம் புரிந்திருக்கிறதோ இல்லையோ, முதலாளி வர்க்கம் தெளிவாகப் புரிந்திருக்கிறது.

“இத்தனை நாடுகளில் தோல்வியடைந்த பின்னரும் சோசலிசம் என்ற இந்தக் கருதுகோள் வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு நாடுகளில் தலையெடுப்பது ஏன்? சோசலிசம் என்பது மனிதனின் உள்ளுணர்விலேயே உறைந்திருக்கிறதா? ஒரு வேளை அது மனித மூளையின் அங்கமாக இருந்தால், அதனை சமாளித்து சுதந்திரச் சந்தையின் ஆதாயங்களை மனிதர்களுக்குப் புரிய வைப்பது எப்படி?” என்று ஆராய்ச்சி நடத்துகிறது அமெரிக்க முதலாளித்துவம். மூளையை அறுத்தெறிவதன் மூலம் சோசலிசக் கருத்தை வெல்ல முடியுமா என்று சிந்திக்கிறது.

சோசலிசம் பெறவிருக்கும் வெற்றியை இதைக்காட்டிலும் தெளிவாக யாரேனும் கூற இயலுமா? இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் மனித குலத்தின் சிந்தனையில் உயிர்வாழும் மார்க்ஸை அகற்ற முடியாத முதலாளித்துவத்தின் தோல்வியைத்தான் மேலும் தெளிவாக யாரேனும் விளக்க இயலுமா?

புதிய ஜனநாயகம், நவம்பர் 2016

தூத்துக்குடி அரச பயங்கரவாத படுகொலைகள் அம்பலம்: குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை? | மருது வீடியோ

டப்பாடி பழனிசாமி, கிரிஜா வைத்தியநாதன், அன்றைய டி.ஜி.பி, டி.ஐ.ஜி, ஐ.ஜி, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து தூத்துக்குடியில் நடத்திய அரசு பயங்கரவாதப் படுகொலை. யாருக்காக இந்த படுகொலை வேதாந்தா நிறுவனத்திற்காக. இப்படி குற்றப்பத்திரிகையில் பதிவு செய்யப்படவில்லை.

யார்யாரெல்லாம் இந்த பச்சை படுகொலையை ஆதரித்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ரஜினி கோமாளி என்று நினைத்தோம், ஆனால் அவர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி பாசிஸ்ட் தன்மையில் கருத்து சொன்னார். பாஜகவின் தமிழிசை சௌந்திரராஜன் 13 பேரை சுட்டுக்கொல்லாவிட்டால் 100 பேருக்கு மேல் இறந்திருப்பார்கள் என்று சொன்னார்கள். அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமியின் மீது என்ன நடவடிக்கை?

படிக்க : தூத்துக்குடி ஸ்டெர்லைட் அரசு பயங்கரவாதப் படுகொலைகள் | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

தூத்துக்குடி மக்கள் குற்றம் செய்தார்கள்; போலீசு தற்காப்பிற்காக சுட்டார்கள் என்று சி.பி.ஐ அறிக்கை சொல்கிறது. போலீசுதான் குற்றவாளிகள் என்று அருணா ஜெகதீசன் அறிக்கை சொல்கிறது. இவற்றில் எது வெல்லும்?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் அரச பயங்கரவாத படுகொலைகள் பற்றியும் அருணா ஜெகதீசன் அறிக்கையை பற்றியும் பல்வேறு கருத்துக்களை ரெட் பிக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்….

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக செயற்பாட்டாளர்களை செயலிழக்க வைப்பதே பாசிஸ்டுகளின் நோக்கம்!

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிலிருந்ததாக கைது செய்யப்பட்டு ஆயுள்தண்டனை வழங்கப்பட்ட டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என். சாய்பாபா உட்பட ஆறு பேரை  கடந்த வெள்ளிக்கிழமை 14-ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டது. ஆனால் அதற்கு மறுநாளே (அக்டோபர் 15)  உச்ச நீதிமன்றம் அவர்களின் விடுதலையை ரத்து செய்து மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

சாய்பாபாவின் மேல் முறையீட்டு மனுவை மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையைச் சேர்ந்த நீதிபதிகள் ரோஹித் தியோ மற்றும் அனில் பன்சாரே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. ‘தேசபாதுகாப்பிற்கு ஆபத்து என்ற பலிபீடத்தில் சட்டத்தின் சரியான செயல்முறைகளை பலியிட முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு பாதுகாப்பும், எவ்வளவு சிறிதாக இருப்பினும் அது கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டும்’ என கூறி உடனடியாக ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பு பலரிடத்தில் வரவேற்பைப் பெற்று வந்தது, குறிப்பாக சாய்பாபாவின் மனைவி ‘இது ஒரு நீண்ட இழுபறியான போராட்டம்; ஆனால் இறுதியாக நீதி கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று  கூறினார். வழக்கறிஞர் ரத்தோட் என்பவர், “இது ஒரு வரலாற்று தீர்ப்பு மற்றும் இதேபோன்று துன்பங்களை அனுபவித்து வரும் பல நபர்களுக்கு இது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறினார். ஆனால் இவர்களின் மகிழிச்சி ஒரு நாள் கூட முழுமையாக நீடிக்கவில்லை.

மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த சில மணி நேரங்களில் மகராஷ்டிர மாநில அரசு ஆறு பேரின் விடுதலை உத்தரவை தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஊபாவின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பது நியாயமற்றது, இதனை உடனே அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டது.


படிக்க: முன்னால் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது!


உச்ச நீதிமன்றமும்  இதை  ஏற்று விடுமுறை நாளான சனிக்கிழமையன்று விசாரணையை மேற்கொண்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர் ஷா மற்றும் பேலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. இரண்டு மணிநேரம் நடந்த விசாரணையில் ‘மும்பை உயர்நீதிமன்றம் குற்றத்தின் தீவிரத்தை புரிந்துக் கொள்ளமால், தகுதிகளை பரிசீலிக்காமல் உத்தரவு பிறப்பித்துள்ளது’ என கூறி விடுதலையை ரத்து செய்தது.

குறைந்தபட்சம் போலியோவால் பாதிக்கப்பட்டு 90 சதவிதம் உடல் செயலிழந்துள்ள சாய்பாபாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவரை வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் இதை எதிர்த்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா என்பவர், ‘இப்போதெல்லாம், நகர்ப்புற நக்சல்கள் வீட்டுக் காவல் கேட்கும் போக்கு அதிகமாகியுள்ளது. தற்போது அவர்கள் எல்லாவற்றையும் தொலைபேசியின் மூலம்  வீட்டிலிருந்தே செய்யலாம். அதனால் வீட்டுக் காவல் ஒரு தேர்வாக இருக்க முடியாது’ என வாதிட்டார்.

இதனை ஏற்ற அமர்வு ‘நாங்கள் இந்த வழக்கிற்காக சொல்லவில்லை; பொதுவாக மூளை மிகவும் ஆபத்தான விஷயம். பயங்கரவாதிகள் அல்லது மாவோயிஸ்டுகளுக்கு, மூளைதான் எல்லாமே’ என்று கூறி மனதாபிமானமற்ற முறையில் வீட்டுக் காவல் கோரிக்கையை நிராகரித்தது.

அரசுக்கட்டமைப்பு முழுவதும் எப்படி பாசிசமயமாகியுள்ளது என்பதை  சாய்பாபாவின் விடுதலையை ரத்து செய்ததிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடியும்.


படிக்க: சிசிடிவி-யை அகற்றகோரி சிறையில் பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரதப் போராட்டம் !


எட்டு ஆண்டுகளாக சித்திரவதையை அனுபவித்து வருகிறார்கள்!

2017-ஆம் ஆண்டு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிலிருந்ததாக கூறி சாய்பாபா, மகேஷ் திர்கி, ஹெம் கேஸ்வதத்தா மிஸ்ரா, பிரசாந்த் ராஹி , விஜய் நன் திர்கி, பாண்டு போரோ நரோட் ஆகியோருக்கு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (UAPA)-கீழ் மகாராஷ்டிரா நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியது. இதில் தண்டனை அனுபவித்து வந்த பாண்டு போரோ நரோட் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாததால், உடல்நிலை மோசமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

2020-ஆம் ஆண்டிலிருந்து சாய்பாபாவின் உடல் நிலையும் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. அவருக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதில்லை. அவர் விண்ணபித்த மருத்துவ ஜாமீன் மனுவையும் மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மரணத்தின் மூலம் மட்டுமே அவரால் சிறையில் இருந்து விடுபட முடியும், மற்றபடி ஒரு நாள் கூட அவர் வெளியில் இருப்பதை இந்த பாசிச அரசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சாய்பாபா மட்டுமல்ல மோடி அரசை எதிர்த்து சிறுபான்மையினருக்கு ஆதரவாக போராடும் அறிவுத்துறையினரின் நிலை இதுவாக தான் உள்ளது. இதற்காகவே தான் உபா என்ற கருப்பு சட்டம் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் மீது பொய்யாக குற்றம்சாட்டி சிறையில் அடைத்து, பிணை கொடுக்கமால், அவர்கள் முழுமையாக மனம் நொந்து செயலிழந்து போகும் வரை சித்தரவதை செய்கிறது.

இப்படி தான் பீமா கோரேகான் வழக்கில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட சமூக செயற்பாட்டாளர்களை மோடி அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதில் கைது செய்யப்பட்ட 84 வயதான ஸ்டான் சுவாமிக்கு மருத்துவ சிகிச்சையும் கொடுக்காமல்  பிணையும் கொடுக்காமல் சிறையிலேயே கொன்றுவிட்டது.

சமீபத்தில் சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் (PUCL) அறிக்கை வெளியானது. அதில், நாடு முழுவதும் UAPA சட்டத்தில் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுபவர்களில் 97.2% பேர் குற்றமற்றவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. 2015 – 2020 காலகட்டத்தில் UAPA சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட 8,371 பேரில் வெறும் 235 பேர் மீதான குற்றங்கள் மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளன. அதே போல மோடி அரசாங்கம்தான் 80 சதவிகிதம் அளவிற்கு இந்த சட்டத்தை பயன்படுத்தியிருக்கிறது. பாசிசிட்டுகளின் தாக்குதலை புரிந்துக்கொள்ள இந்த புள்ளி விவரமே போதுமானது.

பீமா கோரேகான் வழக்கில் ரோன வில்சன் கணினியில் இருந்து எடுக்கப்பட்ட கோப்புகள் புனே போலீசாரால் தான் நடப்பட்டது என்பதை அமெரிக்க ஆய்வு நிறுவனம் நிருபித்துள்ளது. சாய்பாபாவின் மீதான வழக்கு புனையப்பட்ட ஒன்று என்பதும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தும் எந்த வெகுஜன ஊடகங்களும் இதை பேசு பொருளாக்கவில்லை. ஏனென்றால் மோடியை எந்த அளவுக்கு விமர்சிக்க வேண்டும் என்பதும் மோடியால் தான் தீர்மானிக்கப்படுகிறது. நிலைமை இப்படி இருக்கையில் இன்னமும் சட்டத்தின் மூலம் விடுதலையை பெற முடியும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனத்தின் உச்சமாகத்தான் இருக்கும்.


இளமதி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் அரசு பயங்கரவாதப் படுகொலைகள் | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

19.10.2022

தூத்துக்குடி ஸ்டெர்லைட் அரசு பயங்கரவாதப் படுகொலைகள்;
அன்றைய முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்  ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டும்!

பத்திரிகை செய்தி

னில் அகர்வாலுக்குச் சொந்தமான வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியின் நீர், நிலம், காற்று என அனைத்தையும் நஞ்சாக்கி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்ததற்கு எதிராக ஏறத்தாழ 30 ஆண்டுகளாகப் போராடினர்.

கடந்த 2018-ஆம் ஆண்டில்  ஸ்டெர்லைட் வேதாந்தா ஆலைக்கு எதிராக தொடர் போராட்டத்தை தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு  அறிவித்தது.

அந்தப் போராட்டத்தின் 100வது நாளான 2018-ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்து நீதி கேட்பது என்று முடிவெடுத்தனர்.

அமைதியான முறையில் போராடிய பொதுமக்களை பூங்காவில் மறைந்திருந்து வேண்டுமென்றே திட்டமிட்டு துப்பாக்கியால் சுட்டு  வேதாந்தா கம்பெனிக்காக படுகொலைகளை செய்தது தமிழ்நாடு போலீசு .

அன்றைய தினம் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் எமது மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன் உள்ளிட்ட 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர். 13 பேரை சுட்டுக் கொல்லப்பட்ட பிறகும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் தூத்துக்குடி மக்கள் கிஞ்சித்தும் பின்வாங்காமல் ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் தான் இறந்தவர்களின் உடலை வாங்குவோம் என்று உறுதியாக நின்றார்கள். அதன் விளைவாகவே ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது என்பதே உண்மை.


படிக்க: சுடுகாட்டு ஜனநாயகம்! உறுதியாய் நின்ற மக்கள்! மக்களிடம் கற்போம்! ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடி நீதி பெறுவோம்!


இது தொடர்பா நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அளித்த அறிக்கை நேற்று (18.10.2022) தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் பரிந்துரைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.

அருணா ஜெகதீசன் அறிக்கையில் குறிப்பாக,  “மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தவர்களை பூங்காவில் இருந்து மறைந்து கொண்டு வந்திருந்த மக்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே  துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

மேலும் துணை தாசில்தார்களிடம் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப துப்பாக்கிச்சூடு உத்தரவை போலீசு திட்டமிட்டு பெற்றிருக்கிறது.
நெற்றியிலும் மார்பிலும் திட்டமிட்டு கொலை செய்ய வேண்டும் என்றும் நோக்கில் மிக அருகில் இருந்து போலீசால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது ” என்று கூறப்பட்டுள்ளது.

சுடலைக்கண்ணு என்ற போலீசின் துப்பாக்கியில் குண்டுகள் தீர்ந்து விட்டதால் மட்டுமே 17 ரவுண்டுகள் சுடப்பட்டு இருக்கின்றன. ஒருவேளை அவருடைய துப்பாக்கியில் குண்டுகள் இருந்திருந்தால் இன்னும் பலரின் உயிர் பலியாகி இருக்கும் என்பதையும் குறிப்பாக இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது .

அன்றைய முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி இந்த சம்பவத்தை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டதாகக் கூறியது ஒரு பச்சைப் பொய் என்பதையும் அந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு  திட்டமிட்டு நடைபெற்ற ஒரு படுகொலை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நாள் முதல் தூத்துக்குடி மக்கள் பலரை வீடு புகுந்து அராஜகமான முறையில் கைது செய்த போலீசு, கடும் சித்திரவதை செய்து  ஒவ்வொருவரின் மீதும் பல வழக்குகளை பதிவு செய்தது.
எமது மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த மதுரை முதல் நெல்லை வரையிலான பல தோழர்கள் கைது செய்யப்பட்டதுடன் கடும் சித்திரவதைக்கு உள்ளாகினர்.

தூத்துக்குடி மக்கள் மீதான துப்பாக்கிச் சூட்டையும் அடக்குமுறையையும் ஆதரித்த ரஜினிகாந்த், அன்றைய பா.ஜ.க-வின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட அனைவரும் மக்கள் எதிரிகளே.

000

அப்போதைய தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இறந்தவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.20 லட்சம் போக, எஞ்சியத் தொகையை வழங்க வேண்டும் என்பதும் அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருக்கின்ற வழிமுறைகளாகும்.


படிக்க: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குற்றவாளிகளான போலீஸ் உயரதிகாரிகள், கலெக்டர், துணை தாசில்தார் உள்ளிட்டோரை உடனடியாக கைது செய்! | மருது வீடியோ


மேலும் “இந்த போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு போதிய அளவில் போலீசிடம் ஒருங்கிணைப்பு இல்லை என்றும்  ஸ்டெர்லைட் போராட்டத்தில் மே 13 முதல் 22 வரை நடந்த படிப்படியான சீரான வளர்ச்சியை எடைபோட்டு யுக்திகளைக் கையாண்டு குழப்பம் விளைவிக்கும் நபர்களை அடையாளம் கண்டு கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வேண்டுமென்ற போராட்டக்காரர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டிருக்கும்.

ஆனால், அதை முறியடிக்கும் வகையில் அணுகுமுறை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இது காவல்துறையின் குறைபாடு, மாவட்ட நிர்வாகத்தின் செயலின்மை, அலட்சியம் என்பது தெளிவாகத் தெரிகிறது” என்றும் அந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது.

வேதாந்தா ஸ்டெர்லைட் என்ற கார்ப்பரேட் நிறுவனத்திற்காக தமிழ்நாட்டின் அன்றைய முதலமைச்சர், தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட ஒட்டுமொத்த அதிகார வர்க்கமே இணைந்து தூத்துக்குடி மக்களை கொன்றொழித்தது என்பதுதான் உண்மை .

அந்தப் போராட்டத்தை உருவாக்கியதும் அந்தப் போராட்டத்தில் குழப்பத்தை விளைவித்ததும் ஸ்டெர்லைட் வேதாந்தாவும் அன்றைய அதிகாரவர்க்கமும் தான் . போராட்டக்காரர்கள் அல்ல.

தமிழ்நாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம் எந்த அளவிலும் உருவாகக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு நடத்தப்பட்ட அரசு வன்முறை இது.  இந்த உண்மையை அருணா ஜெகதீசன் ஆணையம் பிரதிபலிக்கவில்லை.

தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டமும்,  போலீசால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு படுகொலைகளும் அதற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட  கைதுகள் – சித்திரவதைகளும்   இந்த அரசு கார்ப்பரேட் ஆதரவாக மக்கள் மீது நடத்திய பயங்கரவாத நடவடிக்கையே.

தனியார்மயம் – தாராளமயம்- உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகளே அரசியல் சட்டங்களாகவும் பொருளாதாரத் திட்டங்களாகவும் நீடிக்கும் வரை இப்படிப்பட்ட படுகொலைகளையும் அரசு பயங்கரவாத செயல்களையும் ஒருபோதும் தடுக்க முடியாது .

ஒரு அரசின் அடக்குமுறையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் பல்வேறு தியாகங்களின் மூலமாக மட்டுமே ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை மூட முடியும் என்பதையும் தூத்துக்குடி மக்கள் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

அன்றைய தினம் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தமிழ்நாடும்  ஒருங்கிணைந்து நின்றே அந்த அரசு பயங்கரவாதத்தை முறியடித்தது என்பதை எப்போதும் மறக்க முடியாது.

ஆர்எஸ்எஸ்-பாஜக அம்பானி – அதானியின் பாசிச சூழலில் தூத்துக்குடி மக்களின் போராட்ட பாரம்பரியத்தை நாம் வரித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமானவர்கள் என்று அருணா ஜெகதீசன் அறிக்கை குறிப்பிட்டுள்ள 17 பேர் தவிர
அன்றைய முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,  டிஜிபி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்  ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

ஸ்டெர்லைட் வேதாந்தாவுக்கு எதிராக வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தி மாபெரும் வரலாற்றைப் படைத்த தூத்துக்குடி தியாகிகளின் புகழ் ஓங்குக!

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம் வெல்க!


தோழமையுடன்
தோழர் வெற்றிவேல் செழியன், மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு  – புதுவை
9962366321

துரோகி சாவர்க்கர் விடுதலை வீரரா?

நாடு முழுவதும் ஆகஸ்டு 15-ஐ ஒட்டி சாவர்க்கரை விடுதலைப் போராட்ட வீரராகக் காட்டும் வேலையை மோடி அரசும் பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகளும் திட்டமிட்டு மேற்கொண்டன. இதன்மூலம், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அடிவருடியான சாவர்க்கரை ‘வீர் சாவர்க்கராக’ மாற்றும் பிரச்சாரத்தை காவி கும்பல் நாடு முழுவதும் வீச்சாகக் கொண்டு சென்றது.

நமது நாட்டின் 75-வது ‘சுதந்திரத் தினத்தன்று’ விடுதலைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்த தியாகிகளுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி உரையாற்றியபோது, அதில் சாவர்க்கரையும் இணைத்துப் பேசினார். அன்றைய தினம், ‘சுதந்திர தின’ விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் சாவர்க்கரை முன்னிறுத்தும் செயல்கள் அரங்கேறின.

இதுபோலவே, காவி கும்பல் ஆளும் மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில், அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட விளம்பரத்தில், படேல், காந்தி, ஜான்சி ராணி, திலகர் வரிசையில் சாவர்க்கருடைய படமும் இடம்பெற்றிருந்தது. ஆனால், இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் படம் இடம்பெறவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, “நேருவை அவமதித்ததற்காக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஒட்டுமொத்த தேசத்திடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும். தங்கள் நாட்டின் முதல் பிரதமரை இழிவுபடுத்தும் எவரையும் கர்நாடக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்றார். இதற்காக, சித்தராமையா மீது முட்டையை வீசி தாக்குதலை நடத்தியது சங்கப் பரிவார கும்பல்.

படிக்க : சாவர்க்கர் ஒரு அதிதீவிர சாதிவெறியர் : இந்துத்துவ ஆவணங்களிலிருந்து ஆதாரம் !

கர்நாடகாவின் பல இடங்களில் சாவர்க்கர் படம் கொண்ட பேனர்கள் வைக்கப்பட்டன. ஷிவமோகா நகரில் இருக்கும் பள்ளிவாசலை ஒட்டிய ஷாப்பிங் மால் ஒன்றில் இந்துத்துவ அமைப்புகளால் சாவர்க்கர் படத்துடன்கூடிய பேனர் வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்கள் சிலர் சாவர்க்கர் படம் கொண்ட பேனருக்கு பதிலாக, திப்பு சுல்தான் புகைப்படத்தை வைக்க முயன்றனர். அப்போது காவி கும்பல், அந்த இளைஞர்கள் மீது தாக்குதலை நடத்தியது. காவி கும்பலுக்கு எதிரான எதிர்த்தாக்குதல் தீவிரமடைந்ததை ஒட்டி, கூட்டத்தைக் கலைக்க போலீசு தடியடி நடத்தியது.

விடுதலைப் போராட்ட வீரர்களின் வரிசையில் சாவர்க்கரின் படத்தை வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களூரு, உடுப்பி, ஷிவமோகா உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இவ்வாறு மக்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியதை சற்றும் எதிர்பாராத ஆளும் பா.ஜ.க. அரசு, போராட்டங்களைத் தடுக்கும் வகையில், மங்களூரு, ஹிவமோகா பகுதிகளில் ஆகஸ்ட் 18 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறை செலுத்தியது.

ஊரடங்குக்குப் பிறகு, கர்நாடக பா.ஜ.க. சார்பில், “சாவர்க்கர் ரத யாத்திரை” என்ற பெயரில் ஆகஸ்ட் 23 முதல் 31 ஆம் தேதி வரை பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. ரத யாத்திரையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த எடியூரப்பா “போராடுபவர்களுக்கு சாவர்க்கரின் சித்தாந்தம் மற்றும் தியாகத்தைக் கொண்டு போய் சேர்ப்பது நமது கடமையாகும். ரத யாத்திரை தேசவிரோதிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும்” என்றார்.

இப்படி, கர்நாடகாவில் சாவர்க்கரை விடுதலைப் போராட்ட வீரராகக் காட்டும் வேலையை கர்நாடக பா.ஜ.க. அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில், கடற்கரை சாலையில் ‘சுதந்திர தின’ விழாவையொட்டி அமைக்கப்பட்ட தியாகிகள் சுவரில், தேச விடுதலைக்காகப் போராடிய ஆயிரம் தியாகிகளின் பெயர்களுடன் சாவர்க்கர் பெயரும் சேர்த்திருக்கிறது பா.ஜ.க. அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. இது குறித்துப் பேட்டியளித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “சாவர்க்கரை எதிர்ப்போருக்கு விடுதலைப் போராட்ட வரலாறு தெரியாது. சுதந்திரத்துக்காக ஒரு சிறிய கல்லை எடுத்துப் போட்டாலும் அவர் சுதந்திரப் போராட்ட வீரர்தான். வீர சாவர்க்கர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்பதை எந்த சபையிலும் அழுத்தமாக என்னால் கூறமுடியும்” என்றார்.

இதேபோல், இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் இணையதளத்தில் ஆகஸ்டு 15-ஐ ஒட்டி வெளியிடப்பட்ட இ-போஸ்டரில் நேருவின் படம் இல்லாமல் சாவர்க்கர் படம் இடம்பெற்றிருந்தது.

இதுமட்டுமல்ல, தற்போது கேரளாவில் ராகுல்காந்தி மேற்கொண்ட நடைப்பயணத்தில் வைக்கப்பட்ட பேனரில்கூட சாவர்க்கர் படம் இடம்பெற்றிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த காங்கிரசு தலைவர்கள், அவசரவசரமாக காந்தியின் படத்தை வைத்து சாவர்க்கர் படத்தை மறைத்தனர். “விடுதலைப் போராட்ட வீரர்கள்” என்று இணையதளத்தில் தேடினாலே சாவர்க்கர் படமும் வரும் வகையில், காவிக் கும்பலின் ஐ.டி. பிரிவு சதி செய்துள்ளது.

சாவர்க்கர் பிரச்சாரத்திற்கு தமிழகமும் தப்பவில்லை. அகில பாரத இந்து மகாசபா சார்பில் “சுதந்திரத்தின் தந்தை வீர சாவர்க்கர்” என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடத்தப்பட்டுள்ளது.

இதுவரை ‘சுதந்திர தின விழா’ பள்ளிகளில் கொண்டாடப்பட்டால் காந்தி, நேரு, பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்களின் வேடம்தான் பிள்ளைகளுக்குப் போட்டு அனுப்பப்படும். ஆனால், கேரளாவின் மலப்புரம் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், சாவர்க்கர் போல வேடமிட்டு வந்தது, ஒரு குழந்தை. இதற்கு எதிர்ப்புகள் எழுந்த போதும், பள்ளி நிர்வாகம் அதனைப் பொருட்படுத்தவில்லை.

இந்த நிகழ்வுகளில் மட்டுமல்ல, பாடப்புத்தகங்களில் சாவர்க்கரை விடுதலைப் போராட்ட வீரராகக் காட்டும் வேலையை கர்நாடக பா.ஜ.க. அரசு செய்து வருகிறது. கர்நாடக மாநிலத்தின் 8-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில், “சாவர்க்கர் சிறையில் அடைக்கப்பட்ட அறையில், ஒரு சிறிய சாவித் துவாரம் கூட இல்லை. இருப்பினும், புல்புல் பறவைகள் எங்கிருந்தோ அறைக்கு வரும். சாவர்க்கர் ஒவ்வொரு நாளும் தாய்நாட்டிற்குச் செல்ல அந்த பறவைகளின் இறக்கைகளில் அமர்ந்து பறந்து செல்வார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இந்த பகுதியை நீக்க வேண்டும் என குரல் கொடுத்த போது, இந்த புத்தகத்தை வடிவமைத்த குழுவின் தலைவர் ரோஹித் சக்ரதீர்த்தா என்பவர்  “இந்த பத்தியில் உள்ள வரிகள் அழகிய புலமை நயமிக்கவை. இந்தப் புலமை நயத்தை சிலரால் புரிந்துகொண்டு ரசிக்கத் தகுந்த அளவில் அறிவாற்றல் இல்லையே என்பது ஆச்சரியமாக இருக்கிறது” என்று திமிராகப் பதிலளித்தார்.

***

மோடி அரசும், பா.ஜ.க ஆளும் மாநில அரசுகளும் வரலாற்றைக் காவிமயமாக்கும் நோக்கத்தில், ஒருபுறம், உண்மையான விடுதலைப் போராட்ட, பார்ப்பன எதிர்ப்பு மரபை இருட்டடிப்பு செய்கின்றன; திரித்துப் புரட்டுகின்றன. மற்றொருபுறம், பொய்யான கற்பனைக் கதைகளை வரலாற்றாக்க முயற்சிக்கின்றன. பொய்யான கற்பனைக் கதைகளை வரலாற்றாக்க முயற்சிக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றுதான் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை விடுதலைப் போராட்ட வீரர்களாகக் காட்டும் முயற்சியாகும்.

இதற்காக, மோடி அரசும் பா.ஜ.க ஆளும் மாநில அரசுகளும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான கோல்வால்கர், சாவர்க்கர், தீனதயாள் உபாத்யாயா போன்றவர்களின் பெயர்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கில் பேருந்து நிலையம், ரயில்நிலையம், விமானநிலையம் போன்ற பொது இடங்களுக்குச் சூட்டின. இதன் தொடர்ச்சியாக, அவர்களை வரலாற்று நாயகர்களாக ஒளிவட்டமிடுவதற்கான நடவடிக்கைகள்தான், ஆகஸ்டு 15-ஐ ஒட்டி மேற்கொள்ளப்பட்ட மேலே விவரிக்கப்பட்ட நடவடிக்கைகளாகும்.

***

சொந்த நாட்டு மக்களுக்குத் துரோகமிழைத்த வரலாற்றைத் தவிர ஆர்.எஸ்.எஸ்-க்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை. தற்போது இவர்களால் முன்னிறுத்தப்படும் சாவர்க்கர், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து, தன்னுடைய விடுதலைக்காக மண்டியிட்டவர்; விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்தவர். ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் வரலாறு அனைத்தும் துரோக வரலாறுதான். விடுதலைப் போராட்டத்தில் இந்த கும்பல் எந்தவித நேர்மறை பங்கையும் ஆற்றியதில்லை.

படிக்க : கர்நாடகா: பள்ளி பாடத்திட்டத்தில் சாவர்க்கரை திணிக்கும் சங் பரிவார்!

இப்படி இழிபுகழ் வரலாற்றைக் கொண்ட சங்கப் பரிவாரக் கும்பலுக்கு, இந்துராஷ்டிரத்தை நிலைநாட்டுவதற்கு நேர்மறையான வரலாறு தேவைப்படுகிறது. விடுதலைப் போராட்டத்தில், முதன்மையான பங்காற்றியது ஆர்.எஸ்.எஸ்.தான் என்று பொய்யாக சித்தரிப்பதன் மூலம், விடுதலைப் போராட்டப் பாரம்பரியமிக்க, மதிக்கத்தக்க ஒரு அமைப்பாக ஆர்.எஸ்.எஸ்-ஐ முன்னிறுத்துகிறது.

தங்களது இந்துத்துவ சித்தாந்தத்தை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கவும், பார்ப்பன, கார்ப்பரேட் அடிமைத்தனத்தை மக்கள் ஏற்றுக்கொண்டு இந்துராஷ்டிரத்தில் ஐக்கியப்பட வைப்பதற்கும் இவ்வாறான கற்பனைத் தலைவர்களையும் கற்பனைக் கதைகளையும் உருவாக்குகிறது. இதன்மூலம், வரலாற்றைப் பற்றி ஏதும் அறியாத பாமர மக்களை எளிதில் இந்தக் கற்பனைக் கதைகளுக்கு ஆட்படுத்திவிடலாம் என்பது ஆர்.எஸ்.எஸ்-இன் பெருங்கனவாகும். ஆனால், இந்தக் கனவு ஒருபோதும் பலிக்கப் போவதில்லை.

வள்ளலாரின் சமரச சன்மார்க்க நெறி, சித்தர்கள், அம்பேத்கர் – பெரியார் – பூலே போன்ற சமூக சீர்த்திருத்தவாதிகளின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபையும், பகத்சிங், திப்பு சுல்தான், வ.உ.சி., கட்டபொம்மன் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு – தேசிய மரபையும், விவசாயிகள், தொழிலாளர்கள், பழங்குடியினர் உள்ளிட்ட பல்வேறு உழைக்கும் மக்களின் தனியார்மய – தாராளமய – உலகமய எதிர்ப்புப் போராட்ட மரபையும் கொண்ட நமது நாட்டின் கோடான கோடி உழைக்கும் மக்கள் இந்த கற்பனைப் புரட்டுகளை ஒரு போதும் ஏற்கப்போவதில்லை.


மதி

ஒரு கம்யூனிச துரோகி செத்துத் தொலைந்தான்!

முன்னாள் ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தின் கடைசி அதிபரான கோர்பி என்கிற மிகைல் கோர்பச்சேவ் தனது 91-வது வயதில் இறந்த செய்தி ஊடகங்களில் வெளியான பிறகு,  ஏகாதிபத்தியவாதிகள், மேற்கத்திய ஊடகங்கள் மிகுந்த நன்றி உணர்வுடன் அவருக்கு இரங்கல் தெரிவித்தன. மற்றொருபுறம், 1992-இல் ரஷ்ய சமூக ஏகாதிபத்தியம் சிதைவதற்குக் காரணமாக இவர் இருந்தார் என்பதால், ரஷ்ய அதிபர் புடின், கோர்பச்சேவ்-வின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளவில்லை. இதே காரணத்திற்காக சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகளும் கோர்பச்சேவுக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை.

***

அன்றைய சோவியத் சோசலிச ரஷ்யாவின் உக்ரைன் குடியரசில் 1931-இல் பிறந்தவர் கோர்பச்சேவ். 1953-இல் தோழர் ஸ்டாலின் மறைவுக்குப் பின்னர், கம்யூனிச துரோகி குருஷேவ் கொல்லைப்புறமாக ஆட்சியைக் கைப்பற்றி, சோசலிசத்தைத் திரித்து, முதலாளித்துவப் பாதைக்கு ரஷ்யாவை இட்டுச் சென்றான். “அமைதி வழி மாற்றம்” என்ற திரிபுவாதப் பாதையை முன்வைத்தான். இதன் மூலம், உலகெங்கிலும் கம்யூனிச உலகத்தைப் பிளவுபடுத்தினான். சோசலிச ரஷ்யாவை சமூக ஏகாதிபத்தியமாக சீரழித்தான். அமெரிக்காவுடன் உலக மேலாதிக்கப் போட்டியில் இறங்கினான்.

குருஷேவின் திரிபுவாதப் பாதையை அடுத்தடுத்து வளர்த்தெடுத்த துரோகிகளான பிரஷ்னேவ், ஆந்திரோபோவ், சேர்னன்கோவ் வரிசையில் கடைசியாக இடம்பெற்றவன்தான் கோர்பச்சேவ். ஏகாதிபத்தியவாதிகள் புகழாரம் சூட்டுவதைப் போல, கோர்பச்சேவ் சோசலிச ரஷ்யாவின் அதிபரல்ல, கம்யூனிசத் துரோகப் பாதையைப் பின்பற்றிய ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தின் கடைசி அதிபர்.

இவர் 1985 முதல் 1991-ஆம் ஆண்டு வரையில் ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தின் அதிபராக இருந்தார். இவரது கம்யூனிசத் துரோகத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில், இந்த துரோகிகளின் பரம்பரையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

படிக்க : ஆரிய பார்ப்பனியத்திற்கு எதிரான இறுதிப் போர்: தமிழகமே உன் போர்வாளை கூர் தீட்டு!

1917-இல் உலகத்தில் முதல் சோசலிச அரசாக ரஷ்யா உதயமானது. ரஷ்யாவில் முதலாளித்துவ நாடாளுமன்றப் பாதைக்கு முடிவு கட்டி, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஏகாதிபத்திய உலகத்தில் சிக்குண்ட பல நாடுகளுக்கு சோசலிச ரஷ்யா விடிவெள்ளியாகத் திகழ்ந்தது. உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள், அறிவாளிகள் சோசலிசத்தின் பால் ஈர்க்கப்பட்டனர். உலக முதலாளித்துவம் பிழைத்திருக்க வேண்டுமென்றால், சோவியத் ரஷ்யாவை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று ஏகாதிபத்திய முதலாளிகள் பல்வேறு சீர்குலைவு நடவடிக்கைகள், கலகங்களைத் தூண்டிவிட்டனர்; நேரடியாகவும் மறைமுகமாகவும் ரஷ்யாவின் மீது போர் தொடுத்தனர்; பொருளாதாரத் தடைகளை விதித்தனர். இருப்பினும், தோழர் லெனின் தலைமையிலும், அதனைத் தொடர்ந்து தோழர் ஸ்டாலின் தலைமையிலும் ரஷ்யா சோசலிசத்தை நோக்கிப் பீடுநடை போட்டு முன்னேறியது.

1930-களில் ஏகாதிபத்திய முதலாளித்துவம் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த போது, ரஷ்யா முன்னேற்றத்தில் இருந்தது. ஜெர்மனின் ஹிட்லர், இத்தாலியின் முசோலினி போன்றவர்களின் தலைமையிலான பாசிச ஆட்சிகளை வீழ்த்தி உலகத்தைக் காத்தது ரஷ்யா. இதற்காக அன்றைக்கு 2 கோடி ரஷ்யர்கள் தங்களது இன்னுயிரை ஈந்தனர்.

சோசலிச ரஷ்யாவில் விவசாயத்தில் இருந்த தனியுடைமை ஒழிக்கப்பட்டு கூட்டுப் பண்ணைகள் உருவாக்கப்பட்டிருந்தன. தனியுடைமைகள் அனைத்துத் துறைகளிலும் ஒழிக்கப்பட்டு கூட்டுத்துவ சோசலிச உற்பத்தி முறை புகுத்தப்பட்டிருந்தது. ஒட்டுமொத்த சமூகமே மேற்கொண்ட இந்த பிரம்மாண்டமான உற்பத்தியால், முதலாளித்துவ உலகம் 150 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியை பல நெருக்கடிகளுக்கும் இடையில் ரஷ்யா சில பத்தாண்டுகளில் அடைந்தது.

பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ரஷ்யாவில், இன அடையாளங்கள் மறைந்து மக்கள் ஐக்கியமடைந்தனர். “ரஷ்ய சோவியத் சோசலிசக் குடியரசுகளின் கூட்டமைப்பு” (USSR) என்று ரஷ்யா அழைக்கப்பட்டது. இது 21 குடியரசுகளும், ஒரு சுயாட்சிப் பிரதேசமும், பத்து சுயாட்சி மாவட்டங்களையும் கொண்டிருந்தது. இவை மட்டுமின்றி 2.5 கோடி பேர் பல தேசிய இனங்களாக இருந்தனர். அவர்கள் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி நடத்திக் கொண்டிருந்தனர். அவர்களது மொழி, கல்வி, பண்பாடு, தனித்துவம், மத உரிமைகள் ஆகியவற்றை அவர்களே பாதுகாத்துக் கொண்டனர். பல தேசிய இனங்களைக் கொண்ட ஜனநாயகக் குடியரசாக ரஷ்யா திகழ்ந்தது. இந்தப் பாதையில் பல நாடுகள் தேசிய இன சுயநிர்ணய உரிமையுடன் கூடிய குடியரசுகளை அமைத்துக் கொண்டு சோசலிசப் பாதையில் முன்னேறின. இரண்டாம் உலக யுத்தத்தின் இறுதியில், உலகில் மூன்றில் ஒரு பங்கு நாடுகள் சோசலிசப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்தன.

உலகம் சிவப்பாக மாறி வருவதை ஏகாதிபத்திய முதலாளிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தங்களது காலனி நாடுகளில் இருக்கும் தரகு அதிகார வர்க்க முதலாளிகள், முதலாளித்துவத்திற்கு முந்தைய, அரை நிலவுடைமைத் தன்மை கொண்ட பிற்போக்காளர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டனர். தமது காலனியாதிக்கத்தில் இருந்த நாடுகளுக்கு ‘விடுதலையை’ வழங்கினர். ஏகாதிபத்தியங்களிலிருந்து ‘விடுதலை’யடைந்த நாடுகளில் ‘மக்கள் நல’ அரசுகள் உருவாகின. அந்த நாடுகளின் அரசியல் சாசனங்களில் ‘சோசலிசம்’ என்ற சொல் சேர்த்துக் கொள்ளப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்குதல், பொது வினியோக முறைகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ‘ஜனநாயக’ ‘சோசலிச’ நாடுகளாகத் தங்களது நாடுகளைக் காட்டிக்கொண்டன. இதன் மூலம் தத்தமது நாடுகளில் புரட்சி வெடிக்காமல் தடுப்பதற்கான வேலையில் இறங்கின.

அந்த வரிசையில்தான், நமது நாடும், மதசார்பற்ற ஜனநாய சோசலிச இந்தியா என்று அறிவிக்கப்பட்டது; நேரு, இந்திரா ஆட்சி காலங்களில் மன்னர் மானிய ஒழிப்பு, பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்குதல், பொதுவினியோக முறையைக் கொண்டுவருதல் போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன; இத்துடன், சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய போலி கம்யூனிசக் கட்சிகள் நாடாளுமன்றப் பன்றித் தொழுவத்தில் புரளத் தொடங்கியதும் நடந்தேறின.

***

சோசலிசத்தை வீழ்த்துவதற்கு இடைவிடாது சதிச் செயல்களை மேற்கொண்டுவந்த ஏகாதிபத்திய முதலாளிகள், தோழர் ஸ்டாலின் மறைவுக்குப் பின்னர், கட்சியில் இருந்த முதலாளித்துவப் பாதையாளர்களான குருஷேவ்-பிரஷ்னேவ் கும்பல் மூலமாக ரஷ்யாவை முதலாளித்துவப் பாதைக்குத் திருப்பினர். புரட்சியின் மூலம் சோசலிசத்தை நிலைநாட்டுவதற்குப் பதிலாக, ‘சமாதானம்’, ‘அமைதிவழி மாற்றம்’ என்ற திரிபுவாதப் பாதை முன்வைக்கப்பட்டது. உற்பத்தியில் முன்னேற்றத்தைக் காட்டுபவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதன் மூலமாக, சோசலிச உடைமைக்குப் பதிலாக, அதிகார வர்க்க முதலாளித்துவம் புகுத்தப்பட்டது. இத்துடன் ஒற்றுமையாக இருந்த தேசிய இனங்களுக்கு இடையில் பகைமை உருவாக்கப்பட்டது.

சுமார் 25 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிகார வர்க்க முதலாளித்துவப் பாதையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்று, புதிய ஏகபோக முதலாளித்துவத்தை நிலைநாட்டும் வகையில், சட்டப் பூர்வமாக முதலாளித்துவ தனியுடைமையை உருவாக்கி, சோசலிசம் என்பதை பெயரளவில் கூட இல்லாமல் ஒழிக்கும் வேலையைச் செய்தவர்கள்தான், இப்போது இறந்த போன கோர்பச்சேவும் அவருக்குப் பின்வந்த யெல்ட்சினும்.

தன்னை மிகப்பெரும் சீர்திருத்தவாதி என சொல்லிக்கொண்ட கோர்பச்சேவ் ரஷ்யாவின் பொருளாதாரத்தை மறுசீரமைக்கப் போவதாகவும், அரசியலில் சீர்திருத்தம் செய்ய வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதாகவும் கூறிக் கொண்டார். மறுசீரமைப்பு (பிரஸ்ட்ரோய்க்கா), திறந்து விடுதல் (க்ளாஸ்னாட்ஸ்) என்ற பெயரில் அப்பட்டமான முதலாளித்துவத்தை முன்வைத்ததுதான் கோர்பி கும்பல் செய்தது. இதன் மூலம், கோடிக்கணக்கான ரஷ்ய உழைப்பாளிகள் ரத்தம் சிந்தி உருவாக்கிய செல்வங்களை எல்லாம், கையளவேயான ஏகபோக முதலாளிகள் சூறையாட அனுமதித்தது மட்டுமின்றி, மேற்கத்திய ஏகாதிபத்தியங்களும் சூறையாட அனுமதித்தது.

இதன் விளைவு, நெருக்கடியில் இருந்த ரஷ்யப் பொருளாதாரம் சின்னாபின்னமாக்கப்பட்டது. நுகர்வுக் கலாச்சாரம் தலைத்தூக்கியது; சமுதாயத்தின் ஒரு சிறு பிரிவினர் சுகபோகங்களை அனுபவிக்கும் வகையில் சந்தைப் பொருளாதாரம் கலைக்கட்டியது. வேலையிலிருந்து பெண்கள் துரத்தப்பட்டதால், பல ஆயிரக்கணக்கானோர் விபச்சாரத்திற்குத் தள்ளப்பட்டனர். சிறுகுழந்தைகள் கூட விபச்சாரத்திற்குத் தள்ளப்பட்டனர். இதற்காக, ஆண், பெண் பிஞ்சுக் குழந்தைகளின் புகைப்பட ஆல்பங்கள் உலகம் முழுதும் மேட்டுக்குடி கும்பலின் பாலியல் வக்கிரத்திற்காக உலாவ விடப்பட்டன. அடுத்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 30 லட்சம் மக்கள் பட்டினியால் செத்து மடிந்தனர்.

படிக்க : உலகளவில் ஏழைகளாக மாறிய 7 கோடி பேரில், இந்தியர்கள் 5.6 கோடி

தங்களது சதி, நாச வேலைத் திட்டங்களை ரஷ்யாவில் நடைமுறைப்படுத்திய காலத்தில், கோர்ப்பச்சேவை ஏகாதிபத்தியவாதிகள் கொண்டாடினர். அவருக்கு 1990-இல் அமைதிக்கான நோபல் பரிசையும் வழங்கினர். ஆனால், கோர்ப்பசேவ் அவருக்குரிய நாச வேலைகளைச் செய்து முடித்த பின்னர், தங்களின் கைப்பாவையான யெல்ட்சின் மூலமாக அதிகார ஆட்சிப் கவிப்பு நடத்தி, கோர்பச்சேவைக் கழிவறைக் காகிதமாக வீசியெறிந்தனர்.

‘கம்யூனிஸ்ட்’ கட்சியின் பெயரால் ஏகாதிபத்திய சேவை செய்வதற்கு பதில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்து விட்டு முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தையும், ‘ஜனநாயக’த்தையும் கொண்டு வரவேண்டும் என ஏகாதிபத்தியங்கள் யெல்ட்சினை முன்னிறுத்தி கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே கலவரங்களைக் கட்டவிழ்த்து விட்டன.

அப்பட்டமாக அதிகாரப் போட்டி நடந்தது. இதுமட்டுமின்றி, தேசிய இனங்களுக்குள் சண்டை மூட்டி விடப்பட்டது. மிகப்பெரும் அளவில் இனக்கலப்பு நடந்த நாட்டில், இனவெறி தலைக்கேறி, கலவரங்களும் நாடு பிடிக்கும் போட்டியும் உருவானது.

1953-இல் சோசலிச ரஷ்யாவில் தொடங்கிய முதலாளித்துவ மீட்டுருவாக்கத்தின் விளைவாக, ரஷ்ய மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்தனர். 1992-இல் ரஷ்ய சமூக ஏகாதிபத்தியம் சிதைந்ததை அடுத்து, “சோசலிசம் வீழ்ந்துவிட்டது”, “கம்யூனிசம் தோற்றுவிட்டது” என்று சொல்லி முதலாளித்துவத்தை ஆதரித்தவர்கள் எல்லாம் இன்று “முதலாளித்துவம் கொல்லும், கம்யூனிசமே வெல்லும்” என்று முழங்குகின்றனர். மீண்டும் கம்யூனிசத்தின் மீதான பார்வை உலகம் முழுவதும் திரும்பிக் கொண்டிருக்கிறது. இது அடுத்த சோசலிச அலையை உலகம் முழுவதும் உருவாக்கும்; மீண்டும் உலகம் செங்கொடிகளால் சிவக்கும்; முதலாளித்துவம் முடிவினும் முடிவாக சவக்குழிக்குத் தள்ளப்படும்; அத்துடன் கோர்ப்பசேவ் போன்ற கம்யூனிசத் துரோகிகளின் கணக்கும் முடிக்கப்படும்.

அந்த நாளுக்காகக் காத்திருப்போமாக!


தங்கம்

உ.பி.யின் வினைபூரில் இஸ்லாமியர் ஒருவர் 20 பேர் கொண்ட கும்பலால் அடித்துப் படுகொலை!

.பி.யின் வினைபூரில் இஸ்லாமியர் ஒருவர் 20 பேர் கொண்ட கும்பலால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் உள்ள வினைபூரில் சுமார் ஐந்நூறு பேர் வாழ்கின்றனர். இதில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் எண்ணிக்கை ஏறக்குறைய சமம். கிராமத்தில் உள்ள இந்துக்கள் பெரும்பாலும் குஜ்ஜர்கள் மற்றும் முஸ்லிம்கள் பெரும்பாலும் தியாகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி தாவூத் அலி தியாகி தனது வீட்டின் முன்பு கட்டிலில் ஃபோன் பேசிக்கொண்டு இருந்தபோது, இரவு பத்து மணிக்கு அங்கு தீடீரென ஏழு எட்டு பைக்குகளில் வந்த கும்பல் கத்தி, மண்வெட்டி ,உருட்டு கட்டையாலும், சைக்கிள் செயினாலும் எந்தவொரு வார்த்தையும் பேசாமல் அந்த முதியவரை சரமாரியாகத் தாக்கியது. அவர் ஃபோன் பேசிக்கொண்டிருந்த அந்த கையை உடைத்தனர். உடல் முழுவதும் சரமாரியாக அடித்த அந்தக் கும்பல், தூப்பாக்கியில் வானை நோக்கிச் சுட்டு ’ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோசமிட்டபடி அவரைத் தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அவரைக் கூட்டிச் சென்றாலும், தியாகியால் ஒரு  வார்த்தைக் கூட பேசமுடியவில்லை. மறுநாளே அவர் உயிரிழந்துவிட்டார்.

இந்தத் தாக்குதலையொட்டி செப்டம்பர் 3ம் தேதி கெக்ரா காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, செப்டம்பர் 5ம் தேதி தியாகி கொலை வழக்கில் நான்கு பேரைக் கைது செய்தது காவல்துறை. ஆனால் அந்த நான்கு பேரை விசாரித்த காவல்துறை தாக்கியவர்களுக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிவிட்டது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட மற்றவர்கள் இன்னும் தலைமறைவாக இருக்கின்றனர்.

இந்த சம்பவம் நடைப்பெற்ற கிராமத்தில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருப்பதால் முஸ்லிம் மக்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதற்காக அங்குள்ள இளைஞர்கள் ஒரு கோவிலில் கூட்டம் ஒன்றை நடத்தினர். அங்கு தாக்குதலில் பங்கேற்க பல இளைஞர்களை அழைத்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவர், சமூக ஊடகங்களில் தாக்குதலைத் தூண்டும் வகையில் பதிவுகளைப் பகிர்ந்துள்ளார்.

படிக்க : முஸ்லீம் மக்களை ஒடுக்கும் உ.பி காவி போலீசுப்படை!

ஒரு மாதம் ஆகியும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல் இருப்பதால் தியாகியின் மகனான ஷாருக், ஒரு விதமான பதட்டத்துடன் இருக்கிறார். ஷாருக்கின் தம்பியும், அவரது மாமாவும் வயலுக்கு போகும் போது மிரட்டப்பட்டு இருக்கின்றனர். ”அந்த கும்பல்களால் நாங்கள் அச்சுறுத்தப்பட்டதாக உணர்ந்தோம். மீண்டும் எதுவும் நடந்தால் என்ன செய்வதென்று தெரியமால் நாங்கள் இருக்கிறோம்” என்றார் ஷாருக். தியாகியின் மகளான லூப்னா, ”என்னுடைய அப்பா யாரிடமும் சண்டை போட்டது இல்லை. வீட்டை விட்டு கூட வரமாட்டார். என்னுடைய அப்பா என்ன குற்றம் செய்தார் என்று யாராவது சொல்லமுடியுமா?அவருக்கு ஏன் இப்படி நேர்ந்தது!” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

ஷாருக்கின் அப்பாவை கொலை செய்த கும்பல் பாஜகவிடம் தொடர்பில் உள்ளவர்கள் தான் என்று அப்பகுதியில் உள்ள மக்கள்  கூறுகிறார்கள். அப்பகுதியில் உள்ள  போலீஸ் அதிகாரிகள் இக்கொலைக்கு மதம் காரணமில்லை என்று கூறினாலும் இது மத அடிப்படையில் நடந்த ஒரு கொலை தான்.

அந்த பகுதியில் உள்ள இந்துத்துவா தலைவர் அங்கித் படொலே முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான  ரட்டால் கிராமத்தில் (Rataul) இந்து சிறுமிகள் மற்றும் அவர்களது சகோதரர்கள் முஸ்லிம் இளைஞர்களால் தாக்கப்பட்டதாகவும், காவல்துறை அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினார். அதனால் தான் தாங்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும் அவர் கூறுகிறார்.

படொலே கூறுவதைப் போல எந்தப் புகாரும் வரவில்லை என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்து முஸ்லிம் ஒற்றுமையை குலைப்பதற்காக பாஜக முன்னெப்பதையும் விட இன்னும் கூர்மையாக மக்கள் மத்தியில் வெறுப்பைப் பரப்பிக் கொண்டு இருக்கிறது.

படிக்க: உ.பி : முஸ்லீம் மக்களை சித்திரவதை செய்யும் காவி போலீசு !

“அரசாங்கத்திடம் இருந்து இதுவரை எந்த நிதியுதவியும் வரவில்லை. என்னுடைய வீட்டில்  என்னுடைய தம்பியும், தங்கையும் இன்னும் கல்வியைத் தொடர்ந்து கொண்டிருப்பதால், எனது தந்தையின் சொற்ப வருமானத்தை நம்பியிருந்தோம். எங்களுக்கு வயல்களை உழுவதற்கோ மண்வெட்டியைப் பிடிக்ககவோ கூட தெரியாது” என்று தியாகியின் மகனான ஷாருக் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் இந்திய பாராளுமன்றத்திலிருந்து  நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாக்பத்தின் வினைபூர் கிராமத்தில் நடந்ததுள்ளது. ஆனால், எந்த ஊடகமும் இச்செய்தியை வெளியிடவில்லை; யாரும் இது குறித்து எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை; எங்கும் விவாதம் கூட நடைபெறவில்லை. நாட்டின் தலைச்சிறந்த ஆட்சி என்று யோகி ஆதித்யநாத் ஆட்சியை காவிகள் குறிப்பிடுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் மாநிலத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. சிறுபான்மை முஸ்லிம் மக்கள் ஒவ்வொரு நாளும் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முகமது அக்லக் முதல் தியாகியின் மரணம் வரையிலான சம்பவங்கள் நமக்குக் கூறுவது ஒன்றே ஒன்றுதான்; “முஸ்லிம்கள் என்பதால் கொல்லப்பட்டார்கள்” என்பதே அது!


ரோகித் வெமுலா

முன்னால் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது!

0

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்தாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னால் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா உட்பட 5 பேரை மும்பை  உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை அக்டோபர் 14 அன்று விடுதலை செய்தது.

இந்தத் தடையை எதிர்த்து மகாராஷ்டிர அரசாங்கம் உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சனிக்கிழமை (அக்டோபர் 15) விடுமுறை நாளாக இருந்த போதிலும் நீதிபதிகள் எம்ஆர் ஷா, பேலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு இந்த மனுவினை அவசரமானதாக எடுத்துக்கொண்டு காலை 11 மணிக்கு விசாரித்தது.

சாய்பாபா மற்றும் ஐவர் விடுதலைக்கு  இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 390-ல் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்துவதாகவும், குற்றவாளிகள் சிறையிலேயே இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் டிசம்பர் 8ம் தேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

சாய்பாபா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாசந்த், “சாய்பாபா 90 சதவீதம் உடல் ஊனமுற்றவர்; பல்வேறு நோய்களால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் சக்கர நாற்காலியிலேயே தான் இருக்க வேண்டியவராக இருக்கிறார். அதனால் அவருடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவரை வீட்டுக்காவலில் வைக்க அனுமதிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். இக்கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

படிக்க : சிறையில் சித்திரவதைக்கு உள்ளாகும் பேராசிரியர் சாய்பாபா !

மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு மே 2104-ல் பேராசிரியர் சாய்பாபா கைது செய்யப்பட்டார். நக்சல் தலைவர்களுடன் சாய்பாபா தொடர்பு வைத்திருந்தார் என்றும் குறிப்பாக தலைவர் முப்பல்ல லஷ்மண ராவ் என்பவருடன் தொடர்ச்சியாக தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் ஹேம் மிஸ்ராவைக் கைது செய்து விசாரித்த போது சாய்பாபாவுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே தான் தூது சென்றதாக அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரக்கத்தனமான உபா (UAPA) சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட அவருக்கு மார்ச் 2017-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்தே அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.

கைதான 6 பேரில் Narote என்பவர் கடந்த ஆண்டு பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிறையிலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சாய்பாபா உள்ளிட்ட 5 பேரும் தற்போது மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அரசை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை நகர்ப்புற நக்சல்கள் என்றும் மாவோயிஸ்டுகள் என்றும் குற்றம் சாட்டி UAPA சட்டத்தின் கீழ் கைது செய்வதானது தொடர்கதையாகி விட்டது. கைது செய்யப்பட்டவர்கள் நிரந்தரமாக சிறையிலேயே அடைக்கப்படுகின்றனர். அரசின் இந்த அடக்குமுறைகளுக்கு நீதிமன்றங்களுக்கு துணை நிற்கின்றன. இந்த பாசிச மோடி அரசால் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகிறது.


பொம்மி

நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள்: தோழர் லெனினை நினைவு கூறுவோம்!

நமது ஆசானும் தலைவருமாகிய லெனினை நினைவிலேந்துவீர்; அவரை நேசிப்பீர்; அவரை கற்றறிவீர்.

லெனின் நமக்கு எப்படி போதித்தாரோ, அப்படியே, உள்நாட்டு – வெளிநாட்டு எதிர்களை எதிர்த்துப் போராடி, அவர்களைத் தோற்கடிப்பீர்.

லெனின் நமக்கு எப்படி போதித்தாரோ, அப்படியே, புதியதொரு வாழ்வை, புதிய வாழ்க்கை முறைகளை, புதிய கலாச்சாரத்தைக் கட்டியமைப்பீர்.

சிறிய காரியங்களைச் செய்ய ஒருபோதும் மறுக்காதீர்; ஏனெனில், சிறிய காரியங்களிலிருந்தே பெரிய காரியங்கள் கட்டியமைக்கப்படுகின்றன – இது லெனினுடைய முக்கிய ஆணைகளில் ஒன்று.

– ஸ்டாலின்

ரஷ்யப் பொதுவுடைமைக் கட்சியின் அமைப்பாளரும் தலைவருமான லெனின்

மார்க்சியவாதிகள் இரு பிரிவினராக உள்ளனர். இரு பிரிவினருமே மார்க்சியக் கொடியின் கீழ்தான் வேலை செய்கின்றனர். இரு பிரிவினரும் தம்மையே “உண்மையான” மார்க்சியவாதிகள் என்று கருதிக் கொள்கின்றனர். இருந்தபோதிலும், அவர்கள் எந்த விதத்திலும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. மேலும், அவர்களுக்கிடையில் மலைக்கும் மடுவுக்குமான பெருத்த வேறுபாடு உள்ளது. ஏனெனில், அவர்களது வேலைமுறைகள் ஒன்றுக் கொன்று நேரெதிரானவையாக உள்ளன.

முதல் பிரிவினர், வெளிப் பார்வைக்கு மார்க்சியத்தை ஏற்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்; இவர்கள் மார்க்சியத்தின் பெயரில் ஒப்புக்கு சூளுரைப்பவர்களாக உள்ளனர். மார்க்சியத்தின் சாரத்தை கிரகித்துக் கொள்ள இயலாதவர்களாக அல்லது விருப்பமற்றவர்களாக அவர்கள் உள்ளனர்; மார்க்சியத்தை நடைமுறைப்படுத்த இயலாதவர்களாக அல்லது விருப்பமற்றவர்களாக அவர்கள் உள்ளனர். இதனால், மார்க்சியத்தின் உயிரோட்டமான – புரட்சிகரமான கோட்பாடுகளை, உயிரோட்டமற்ற – பொருளற்ற சூத்திரங்களாக அவர்கள் மாற்றி விடுகின்றனர்.

இவர்கள், தமது நடவடிக்கைக்ளுக்கு நடைமுறையை, நடைமுறை அனுபவத்தின் படிப்பினைகளை அடிப்படையாகக் கொள்வதில்லை; மார்க்சின் மேற்கோள்களையே அடிப்படையாகக் கொள்கின்றனர். இவர்கள் உயிரோட்டமுள்ள யதார்த்த நிலையைப் பகுத்தாய்ந்து, தமக்கான வழிகாட்டுதல்களையும் திசைவழிகளையும் வந்தடைவதில்லை; ஒப்புவமைகளிலிருந்தும் இணையான வரலாற்று நிகம்ச்சிகளிலிருந்தும் தமக்கான வழிகாட்டுதல்களையும் திசைவழிகளையும் வந்தடைகின்றனர். இவர்களுடைய சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலான முரண்பாடே இவர்களைப் பீடித்துள்ள தலையாய நோயாகும். இதனால்தான் இவர்கள் என்றென்றும் விரக்தியுறுகின்றனர்.

விதிக்கு எதிராக அடிக்கடி நொந்து கொள்கின்றனர். விதியோ அவர்களை மீண்டும் மீண்டும் கைவிட்டு விடுகிறது; “ஏமாற்றி” விடுகிறது. ரஷ்யாவில் இவர்கள் பெயர் மென்ஷ்விக்குகள்; ஐரோப்பாவில் இவர்கள் பெயர் சந்தர்ப்பவாதிகள். இவர்களைப் பற்றி தோழர் டைஷ்கா (ஜோகி செஸ்), இலண்டனில் நடந்த கட்சியின் பேராயத்தில் மிகப் பொருத்தமாகவே வர்ணித்தார். இவர்கள் மார்க்சியக் கண்ணோட்டத்தைப் பற்றி நிற்பதற்கு பதிலாக, அதன் மீது படுத்துத் தூங்குகின்றனர் என்று அவர் வர்ணித்தார்.

இரண்டாவது பிரிவினர், இதற்கு நேர்மாறானவர்கள். இவர்களுக்குப் பிரச்சினையின் குவிமையம், வெளிப்பார்வைக்கு மார்க்சியத்தை ஏற்பதல்ல; மார்க்சியத்தை மெய்யாக்குவதும், அதை நடைமுறையில் பிரயோகிப்பதுமே இவர்களுக்கு குவிமையமானப் பிரச்சினையாக உள்ளது.

இவர்கள் தமது தலையாய கவனத்தை எதில் குவிக்கிறார்கள் என்றால், நிலைமைக்கு சாலப் பொருந்தும் வகையில் மார்க்சியத்தை நனவாக்கும் வழிவகைகளைத் தீர்மானிப்பதிலும், நிலைமை மாறுகையில் இந்த வழிவகைகளை மாற்றிக் கொள்வதிலும்தான். இவர்கள் தமக்கான வழிகாட்டுதல்களையும் திசைவழிகளையும், ஒப்புவமைகளிலிருந்தும் இணையான வரலாற்று நிகழ்ச்சிகளிலிருந்தும் அல்லாமல் தம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைக் கற்றாய்வதிலிருந்துதான் வந்தடைகிறார்கள்.

மேற்கோள்கள், பொது உண்மைகளின் அடிப்படையில் இவர்கள் தமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்வதில்லை; மாறாக, நடைமுறை அனுபவத்தின் அடிப்படையிலேயே அமைத்துக் கொள்கிறார்கள். நடைமுறை அனுபவத்தைக் கொண்டு தமது ஒவ்வொரு அடியையும் சோதிக்கிறார்கள்; தமது தவறுகளிலிருந்து கற்றுக் கொள்கிறார்கள்; இவற்றைக் கொண்டு, புதியதொரு வாழ்வை எவ்வாறு உருவாக்குவது என்பதைப் பிறருக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

இவர்களின் நடவடிக்கைகளில், சொல்லுக்கும் செயலுக்குமிடையில் முரண்பாடு ஏன் இல்லை என்பதற்கான உண்மைக் காரணத்தை இதுதான் விளக்குகிறது; இவர்களிடம், மார்க்சின் போதனைகள், ஏன் உயிரோட்டத்துடனும் புரட்சிகரமான ஆற்றலுடனும் இருக்கின்றன என்பதற்கான உண்மையான காரணத்தை இதுதான் விளக்குகிறது.

மார்க்சியவாதிகள், உலகைப் பற்றி கருத்துரைப்பதுடன் மனநிறைவு அடைந்து ஓய்ந்துவிட முடியாது; மேலும் முன்னேறிச் சென்று உலகை மாற்றியமைத்தாக வேண்டும். மார்க்சினுடைய இந்தக் கூற்று, இந்தப் பிரிவினருக்குத்தான் முழுமையாகப் பொருந்தக் கூடியதாகும். இந்தப் பிரிவினரின் பெயர்தான் போல்ஷ்விக்குகள், பொதுவுடைமையாளர்கள்.

இந்தப் பிரிவினரின் அமைப்பாளர்தான், தலைவர்தான் லெனின்.

(ஜோசப் ஸ்டாலின் எழுதிய “லெனின்” என்ற நூலிலிருந்து…)

அரசுப் பள்ளி ஆசிரியர்களை வதைக்கும் மத்திய, மாநில அரசுகள்!

மீபத்தில் மத்திய அரசு ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தது. இந்த இணைக்கும் பணியை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது.

ஆதார் எண்ணுடன் வாக்களர் அடையாள அட்டை எண்ணை இணைக்கும் பணியில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்தும்படி முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறித்தியுள்ளனர். மேலும் இப்பணியைக் கடந்த மாதத் தொடக்கத்தில் இருந்தே மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த மாதம் 15 ஆம் தேதியிலிருந்து இப்பணியைச் செய்து வருகிறார்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.

குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, சேலம், தர்மபுரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்ளில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வீடுவீடாகச் சென்று அங்கு இருப்பவர்களின் ஆதார் எண்ணுடன் அவர்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைத்து வருகிறார்கள்.

“குறிப்பாக சென்னை நகரப் பகுதிகளில் செல்லும்போது மக்களின் பங்களா வீடுகள் முன்பு நின்று, வீட்டுல யாருங்க? நாங்க BLO வந்து இருக்கோம், கொஞ்சம் வெளியில வாங்க என்று தேஞ்சி போன ரெக்கார்டர் மாதிரி ஒவ்வொரு வீட்டு கேட்டு [gate] முன்பும் நின்று வேகாத வெயிலில் குரல் கொடுத்தாலும் வீட்டு ஓனர்கள் எட்டிப் பார்ப்பதில்லை. அவர்களின் நன்றியுள்ள ஜீவன்களான நாய்கள் எங்களை திருட வந்தவர்களென நினைத்து குரைத்து குரைத்து டையர்ட் ஆகிவிடுகிறது.


படிக்க : சின்மயா மிஷன் பள்ளி சாதி புத்தி – வன்கொடுமை சட்டம் பாயுமா? | மருது வீடியோ


அப்படியே கதவைத் திறந்து தலையை மட்டும் நீட்டி, இல்லை நாங்க எப்பவோ இணைச்சாச்சு என்று கூறி நமது பதிலைக் கூட எதிர்பார்க்காமல், கதவை மூடி உள்ளே சென்றுவிடும் மனிதர்கள் மத்தியில் இல்லங்க நீங்கள் இணைத்தது வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை தான்; இது வேறு என்று கூறிப் புரிய வைப்பதே பெறும் வேலையாக இருக்கிறது.

மேலும், ஆசிரியர்கள் வாக்குச் சாவடி அலுவளர் பணி, அதாவது குறிப்பாக சொல்லப்போனால் நாட்டில் எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பது, இடை நீக்கம் செய்வது,  இறந்தவர்கள் கணக்கெடுப்பு, புதிய வாக்களர் சேர்ப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, மேலும்  இப்பொழுது புதிதாக பள்ளிகளில் தினந்தோறும் குழந்தைகளின் எல்லா தகவல்களையும் இணையதளத்தில் [online] பதிவேற்றம் செய்வது.

அதுமட்டுமல்லாமல் மேலும் இவர்கள் கல்வித் துறையில் மாற்றத்தை கொண்டுவருகிறேன் என்ற பெயரில் பல திட்டங்களை கொண்டுவந்து, அத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு அரசு பள்ளி ஆசிரியர்களை  முடுக்கி விடுவதே இவர்களது வேலையாக மாறி விட்டது” என்று கூறுகிறார் இந்த வேலையில் ஈடுபட்ட கல்வியியலாளர் உமா மகேஷ்வரி.

இப்பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுவது அவர்களுக்கு பெரும் பணிச்சுமையாக இருக்கிறது. சமீபத்தில் ஆசிரியர் ஒருவர் இதுபோன்ற பணியில் ஈடுபடுவதால் என்னால் வேறெந்த வேலையும் செய்ய முடியாமல் போய்விடுகிறது. குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் “நாளை பள்ளிக்குச் செல்வதற்கு முன் ஏற்பாடு மேற்கொள்வதா? பாடக் குறிப்புகளை தயார் செய்வதா? சமையல் செய்வதா? துணிகளை துவைப்பதா? தாயை கவனிப்பதா?” என்று கண்ணீர் விட்டு தன் கஷ்டத்தை இணையதளத்தில் காணொளி  மூலம் வெளிப்படுத்தினார்.

இந்தக் காணொளி சமூகத்தில் பேசு பொருளானவுடன் நமது கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி “கடந்த செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டுப் பேசியபொழுது, ஆசிரியர்களைச் சுதந்திரமாகச் செயல்படவிட்டாலே மாணவர்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தி விடுவார்கள்; ஆதலால் ஆசிரியர்களைச் சுதந்திரமாகச் செயல்படவிடுவதைப் பற்றி முதல்வர் கவனத்திற்குக் கொண்டுசென்று உரிய தீர்வு காணப்படும்” என்று கூறினார்.

அவர் முதல்வர் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு கண்டதை, ஆசிரியர்கள் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டை எண்ணை இணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருவதைக் காண்பதன் மூலம் நம்மால் புறிந்துகொள்ள முடிகிறது.

ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கும் நிலையில், பணிபுரியும் ஆசிரியர்களும் இதுபோன்ற வேலைகள் செய்வதற்கு மதியம் 2 மணிக்குமேல் சென்றுவிடுகிறார்கள். இதனால் ஆசிரியர்கள் வகுப்பறையில் மாணவர்களுடன் நேரத்தை செலவிட முடியாமல் போய்விடுகிறது.

கொரோனா காலத்தில் ஏற்கனவே மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்றுக்கொண்டதால் அவர்களுடைய கற்றல் திறன் என்பது குறைந்துபோனது. அதன் பிறகு இப்பொழுதுதான் பள்ளிகள் ஒழுங்காக செயல்பட்டு வருகின்றன. மேலும் ஆசிரியர்களும் மாணவர்களிடத்தில் நேரத்தைச் செலவிட்டு அவர்களுடைய கற்றல் திறனை வளர்த்தெடுத்து வரும் நிலையில், இப்பொழுது மீண்டும் ஆசிரியர்களை அரசாங்கத்திற்குத் தேவையான வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. இதனால் ஆசிரியர்கள் மீண்டும் மாணவர்களிடத்தில் செலவிடும் நேரம் என்பதும் குறைந்துவிட்டது. இதனால் மாணவர்களின் கற்றல் திறன் மீண்டும் கேள்விக்குறியாகிறது.

இங்கு ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் கல்வி என்பது மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளும் கேவலமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை என்பது அதிகளவில் இருகிறது. ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் சரியாகக் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

இதனால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கவைத்து வருகிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பெற்றோர்கள் மட்டும்தான் தனது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைத்து வருகிறார்கள்.

இப்போது அவர்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று இந்த அரசாங்கம் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டுவந்து அதை ஒவ்வொன்றாக அரசு கல்வி நிறுவனங்களில் செயல்படுத்தி மாணவர்கள் படிக்க முடியாத நிலையை ஏற்படுத்துகிறது. ஆனால் இதே சமயத்தில்தான் தனியார் கல்வி நிறுவனத்தில் ஆண்டிற்கு 25 சதவீத ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்று கூறியது. அதற்குத் தேவையான நிதியையும் அரசாங்கம்தான் வழங்கி வருகிறது.


படிக்க : இல்லம் தேடிக் கல்வி கொள்கை என்ற பெயரில் திணிக்கப்படும் புதிய கல்விக் கொள்கை! | புமாஇமு கண்டனம்!


குறிப்பாக அரசுக் கல்வி நிறுவனங்களிலே “இல்லம் தேடிக்கல்வி”, “எண்ணும் எழுத்தும்” இதுபோன்ற புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தச் செலவிடும் நிதிகளையும் தனியார் கல்வி நிறுவனத்தில் 25 சதவீத மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கச் செலவிடும் நிதிகளையும் அரசுக் கல்வி நிறுவனங்களுக்கு ஒதுக்கி, ஆசிரியர் பற்றாக்குறையை ஏன் சரி செய்யக்கூடாது, சீர்குலைந்து இருக்கும் உள்கட்டமைப்பு வசதியை ஏன் ஒழுங்குபடுத்தக் கூடாது, அரசுப் பள்ளிகளில் 5583 கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன; அதை ஏன் சீரமைக்கக் கூடாது. இந்த அரசு நினைத்தால் இதையெல்லாம் செய்யலாம்; ஆனால் இந்த அரசு செய்யாது.

ஏனென்றால் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களைப் பற்றியும் அங்கு வேலை செய்யும் ஆசிரியர்களைப் பற்றியும் இந்த அரசாங்கத்திற்கு கொஞ்சம் கூட கவலை கிடையாது. அதனால்தான் ஆசிரியர்களை மாணவர்களிடம் சேரவிடாமல் இவர்களுடைய வேலைகளைச் செய்யப் பயன்படுத்திக் கொள்கிறது. இவர்களின் ஒரே நோக்கம், கல்வியைத் தனியார்மயமாக்குவதும், அதை பண்டப் பொருளாக மாற்றுவதும்தான்.

ஆகையால் இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் தனியார்மய கொள்கையையும் இந்த கொள்கையை நிறைவேற்ற உதவி செய்யும் இந்த அரசாங்கத்தையும் தகர்த்தெறிந்தால் மட்டும்தான் இங்கு கல்வி என்பது எல்லோருக்கும் சமமாகக் கிடைக்கும்.


செழியன்

பல் இளிக்கும் நோபல் பரிசுகள் !

2022 ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு, பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. L Occupation என்ற நூலை எழுதியதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலின பாகுபாட்டுக்கு எதிரான கருத்துக்களை தைரியமாக பதிவு செய்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரின் புத்தகங்கள் மொழி, பாலினம் மற்றும் தரம் பிரிப்பு போன்றவற்றை பற்றியதாக இருப்பதாக பலரும் பெருமைபட கூறி வருகின்றனர். “எழுத்து என்பது ஓர் அரசியல், சமூக சமத்துவமின்மை பற்றிய ஒரு விழிப்புணர்வை அளிக்கிறது” என்று ஆனி எர்னாக்ஸ் கூறுகிறார்.

ஆனி எர்னாக்ஸ்க்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதற்கான குறிப்புகளை படிக்கும் போதோ அல்லது ஆனி எர்னாக்ஸ் எழுத்து பற்றி கூறுவதை கேட்கும் போதோ பலருக்கும் மாற்றுக்கருத்துக்கள் எதுவும் இருக்கப்போதில்லை. ஆனால் சமூக சமத்துவமின்மைக்கு அடிப்படை காரணங்களான சுரண்டல், செல்வம் ஓரிடத்தில் குவிக்கப்படுதல், ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான போட்டி, ஏகாதிபத்தியங்களுக்கான பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றைப் பற்றி ஆனி எழுதுவாரா அல்லது அவ்வாறு எழுதினால் நோபல் பரிசு கிடைக்குமா? நிச்சயம் கிடைக்காது என்பதற்கான பதிலாகவே பொருளாதரத்துக்கான நோபல் பரிசு யாருக்கு, எதற்கு வழங்கினார்கள் என்பதில் இருக்கிறது.

***

அமெரிக்காவைச் சேர்ந்த பென்.எஸ்.பெர்னாக், டக்ளஸ் டைமண்ட், பிலிப் டிவிக் ஆகிய மூன்று பேருக்கும் 2022 ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்த ஆய்வுக்காக  இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.


படிக்க : ஆரிய பார்ப்பனியத்திற்கு எதிரான இறுதிப் போர்: தமிழகமே உன் போர்வாளை கூர் தீட்டு!


இவர்களின் ஆராய்ச்சி என்பது நவீன வங்கிகள், பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளுதல் தொடர்பானதாகும். 1980-களின் முற்பகுதியில் பென் பெர்னான்கே, டக்ளஸ் டயமண்ட் மற்றும் பிலிப் டிப்விக் ஆகியோரால் இந்த ஆராய்ச்சியின் அடித்தளம் அமைக்கப்பட்டது.

2020-இல் தொற்றுநோய் தாக்கியபோது, உலகளாவிய நிதி நெருக்கடியைத் தவிர்க்க குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த பிந்தைய நெருக்கடிகள் சமூகத்திற்கு பேரழிவு தரும் விளைவுகளுடன் புதிய மந்தநிலைகளாக உருவாகாமல் இருப்பதை உறுதி செய்ததில் இவர்களின் நுண்ணறிவு முக்கிய பங்கு வகித்தன என்கின்றன ஊடகங்கள். அதென்ன நுண்ணறிவு?

பென்.எஸ்.பெர்னான்கே அளித்துள்ள செய்திக் குறிப்பில், “இங்கே ஒரு முரண்பாடு உள்ளது எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டால், சேமிப்பாளர்கள் தங்கள் பணத்தை உடனடியாக அணுக விரும்புகிறார்கள். இது ஒரு அடிப்படை சிக்கலை முன்வைக்கிறது, இது வங்கிகளையும் பணத்தையும் நிலையற்றதாக ஆக்குகிறது மற்றும் சில நேரங்களில் அதிர்ச்சிக்கு ஆளாகிறது” என்கிறார்.

மக்கள் தங்களுடைய சேமிப்பை திடீரென எடுப்பது என்பது ஏன் நடைபெறுகின்றது.  கார்ப்பரேட் முதலாளிகளைக் காப்பாற்ற பல லட்சம் கோடிகளை வாரியிறைப்பதால் வங்கிகள் சரிகின்றன. அதனால் மக்கள் பீதியடைந்து தங்களின் முதலீடுகளை திரும்பப்பெறுகின்றனர். ஆனால் இந்த எளிய உண்மையை மறுத்து மக்கள் பணம் எடுப்பதை தடுக்க வேண்டும் என்பதும் வங்கி முதலாளிகளைக் காப்பாற்ற மக்களின் பணத்தை கொடுக்க வேண்டும் என்பதல்லவா இவர்களின் நுண்ணறிவு.

வங்கிகளின் சரிவுக்கு இன்னொரு முக்கியக் காரணமான வங்கிகளை சந்தைப்படுத்துவதை எதிர்க்காமல், வங்கிகள் சந்தைப்படுத்துவதை ஒழுங்கமைக்க வேண்டும் என்று ஆய்வு செய்திருக்கின்றனர் ஆய்வாளர்கள்.

டயமண்ட் மற்றும் பிலிப் இருவரும் இணைந்து ஏன் வங்கிகள் வெளியேறுகின்றன? வரவிருக்கும் சரிவு பற்றிய வதந்திகளின் பாதிப்பு, இந்தப் பாதிப்பை சமூகம் எப்படி குறைக்க முடியும் என்பது பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்களாம். இவர்களின் ஆராய்ச்சிகள் நவீன வங்கி ஒழுங்குமுறையின் அடித்தளத்தை உருவாக்கியிருக்கிறதாம்.

வங்கிகள் மக்கள் பணத்தை சூறையாடி கார்ப்பரேட் முதலாளிகளைக் காப்பாற்றுவதும் வங்கி முதலாளிகளைக் காப்பாற்ற அரசு பெயில் அவுட் என்று அரசின் கஜானாவை காலி செய்வதும் வதந்தியாம். இந்த வதந்தியை நம்பக் கூடாது என்கிறார்கள் நோபல் பரிசு பெற்ற ஆய்வறிஞர்கள். ஆக 1% பேருக்காக 99% பேர் வறுமையில் உழல்வதும் கூட வதந்தியா?

***

அமெரிக்கா மட்டுமல்ல உலகம் முழுவதுமான பொருளாதார நெருக்கடிகடிக்கு மூலக்காரணமே சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கை. தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் ஆகிய கொள்கைகளால் மூன்றாம் உலக நாடுகளும் ஏன் வளர்ந்த நாடுகளும் கூட திக்கித் திணறி மூச்சுவிட முடியாமல் இன்றைக்கோ நாளைக்கோ என்று சாகும் தருவாயில் இருக்கின்றன.


படிக்க : கல்கியின் நோக்கமும், மணிரத்னத்தின் நோக்கமும் ஒன்று தான்; தமிழ் வரலாற்றைத் திரித்து ஆரிய பார்ப்பன வரலாறாக மாற்றியமைப்பது | மருது வீடியோ


முதலாளித்துவ – ஏகாதிபத்திய அமைப்புக்குள்ளேயே முன்வைக்கப்படுகின்ற ஆலோசனைகள் மேலும் மக்களை புதைக்குழிக்குள்ளேயே தள்ளும். எத்தனை ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் அவை சில ஆண்டுகளில் இன்னோர் பொருளாதார புதை குழிக்குள்ளே தள்ளும். ஏனெனில் முதலாளித்துவ – ஏகாதிபத்திய பொருளாதாரம் இயல்பிலேயே ஒருபுறம் முதலாளிகளுக்கு செல்வத்தையும் மறுபுறம் உழைக்கும் வறுமையையும் குவிக்கும்.

இப்படி ஒருபுறம் மென்மேலும் குவிக்கப்படும் செல்வமும் இன்னொருபுறம் தாங்கவொண்ணா வறுமையும் சுரண்டலும்தான் சமத்துவமின்மைக்கு அடிப்படை.. பெரும்பான்மை மக்களின் உழைப்பை உறிஞ்சுவதால் அல்லவா பணக்கார அட்டைகள் கொழுத்துப்போயிருக்கின்றன. இதை மாற்றியமைக்க வேண்டுமென்றால் சமத்துவமின்மைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென்றால், பாகுபாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென்றால் சமத்துவத்தை அல்லவா உருவாக்க வேண்டும். அதற்கு தடையாக இருக்கும் முதலாளித்துவ வர்க்கத்தை அல்லவா ஒழித்துக்கட்ட வேண்டும்.

மொழி, பாலினம் மற்றும் தரம் பிரிப்பு, சமத்துவமின்மை, பாகுபாடு போன்றவற்றை பற்றி எழுதும் ஆனி எர்னாக்ஸ்க்கு ஒரு நோபல் பரிசு, சமத்துவமில்லா உலகை தக்க வைக்க ஆய்வு செய்த அறிஞர்களுக்கும் நோபல் பரிசு. நோபல் பரிசுக்குழுவினரின் சமத்துவம்’ பல் இளிக்கிறது.


மருது

ஆரிய பார்ப்பனியத்திற்கு எதிரான இறுதிப் போர்: தமிழகமே உன் போர்வாளை கூர் தீட்டு!

கர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்த கையோடு, தமிழகத்தில் மதவெறிக் கலவரங்களைத் தூண்டவும் தி.மு.க.வை ஒழித்துக் கட்டவும் என்னவெல்லாம் துருப்புச் சீட்டுகள் கிடைக்கின்றன என ஆராய்ந்து சொல்வதற்கே தனியாக ஒரு குழுவை அமைத்து வேலைசெய்துவருகிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. வார்டு அளவில் தொடங்கி, வட்டாரம், மாவட்டம், மாநிலம் என பிரச்சினைகளை வகைபிரித்து உருவாக்கி, அதற்கு ஏற்றார் போல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது அக்கும்பல்.

அரியலூர் மாணவி லாவண்யாவின் பிணத்தை வைத்து தமிழகத்தில் மதமோதலை தூண்ட முயன்றது, தி.மு.க.விற்கு எதிரான பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் போன்றவை இத்திட்டத்தின் அங்கங்களே.

இவையெல்லாம் விவாதப் பொருளாக தமிழகத்தில் குறிப்பிட்ட அளவிற்கு தாக்கத்தைச் செலுத்தினாலும், எந்தவொரு குறித்த நடவடிக்கைகளிலும் காவிக் கும்பல் தான் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. லாவண்யா விசயத்தில், பா.ஜ.க.வின் தகிடுதத்தங்கள் அம்பலப்பட்டு நாறிப் போயின.


படிக்க : கவுதம் நவ்லகாவின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கும் நீதிமன்றம்!


அண்மையில், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டங்களும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் திட்டமிட்டு மேற்கொண்டவையே. அதிலும், தற்போது மூக்குடைபட்டு போயுள்ளது.

***

செப்டம்பர் 6 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற கூட்டமொன்றில் நிகழ்த்திய உரையில், “இந்துமதம் நம்மை சூத்திரர்களாக ஒதுக்கிவைத்துள்ளது; மனுதர்மம் சூத்திரர்களைத் தீண்டத்தகாதவர்கள், வேசிமக்கள் என்கிறது. ஆகவே மானமுள்ள யாராவது இந்துவாக இருக்க முடியுமா?” – என்று கேள்வி எழுப்பினார் ஆ.ராசா. செப்டம்பர் 12ஆம் தேதி இவ்வுரையை அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, பிரச்சினையைத் தொடங்கி வைக்கிறார்.

மனு தர்மத்தை எடுத்துக் காட்டி பேசியதை மறைத்து, ஆ.ராசா இந்துக்களை வேசிமகன் எனக் கூறிவிட்டார் என்று திரித்து பிரச்சாரம் செய்தது காவிக் கும்பல். “ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும்”, “தி.மு.க. ஆ.ராசாவை பதவியிலிருந்தும் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்” – போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நெருக்கடிகளைக் கொடுக்க ஆரம்பித்தது.

எச்.ராஜா, அர்ஜூன் சம்பத் மட்டுமல்லாது, மன்னார்குடி ஜீயர், பூசாரிகள் பேரவைத் தலைவர் என தமது ‘ஆன்மிகப் பெரியோர்கள்’ மூலமாகவும் இந்துக்களை வீதியில் திரட்டப் போராடியது. மனு கொடுக்கும் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள், நீலகிரி, புதுவையில் கடையடைப்பு என முடிந்த அளவிற்கு மிரட்டிப் பார்த்தும் பயனில்லாமல் தோற்றுப்போனது பாசிசக் கும்பல்.

பௌத்த-சமணர்கள், திருவள்ளுவர், சித்தர்கள், வள்ளலார், பெரியார் என தொடர்ச்சியாக தமிழகத்திற்கே உரிய பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியம் ஆ.ராசாவுக்கு துணை நின்றது. “ஆ.ராசா பேசியதில் என்ன தப்பு?” – என தமிழகம் தாக்குதல் நிலையில் பேசும் என்று சங்கிக் கூட்டம் எதிர்பார்க்கவில்லை.

மனுதர்ம எரிப்பு போராட்டங்கள், மனுதர்ம விளக்கக் கூட்டங்கள் உள்ளிட்டு பல வடிவங்களில் ஜனநாயக அமைப்புகள் தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினார்கள். சமூக ஊடக விவாதங்களில், ஜனநாயக சக்திகள் அனைவரும் நிபந்தனையின்றி ஆ.ராசாவை ஆதரித்தும் மனுதர்மத்தை அம்பலப்படுத்தியும் பேசினார்கள். தான் பேசிய கருத்தில் உறுதியை வெளிப்படுத்திய ஆ.ராசா, “நான் எதுக்குடா மன்னிப்பு கேட்கனும் லூசு” என்றார்.

விளைவு, “ஆ.ராசா மேற்கோள் காட்டியது, வெள்ளைக்காரன் வில்லியம் ஜோன்ஸ் மொழிபெயர்த்த மனுதர்மம்”, “நாங்கள் சொல்கின்ற மனுதர்மத்தில் சில பிற்போக்கு கருத்துக்கள் இருந்தாலும் வேசிமக்கள் என்றெல்லாம் இல்லை”, “ஆ.ராசா கூறும் பொருளில் இல்லை”, “சூத்திரர்கள் என்றால் அதற்கு வேறு பொருள் உள்ளது”, “பல்வேறு மனுதர்மங்கள் உள்ளன, நாங்களே எல்லா மனுதர்மத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை”, “பழசெல்லாம் இப்போது எதற்கு” – என்று படுத்தே விட்டது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல்.

***

அக்டோபர் 2 ஆம் தேதி, தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு போலீசு அனுமதி மறுத்ததால், உயர்நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றது காவிக் கும்பல். ஆனால், தமிழக ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைந்த எதிர்ப்பால், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் போலீசு அனுமதி மறுத்துள்ளது. இது சங்கிக் கும்பலுக்கு ஏற்பட்ட அடுத்த கால்முறிவு.

காஷ்மீர் முதல் கேரளா வரை, எல்லா மாநிலங்களிலும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி கொடுக்கிறார்கள், ஆனால் தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுப்பது நியாயமற்றது என்று புலம்பியது காவி கும்பல்.

காந்தி ஜெயந்தி, 75 ஆம் ஆண்டு சுதந்திர தினம், அம்பேத்கரின் நூற்றாண்டு பிறந்தநாள், விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்தபோதே, அதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் மனுதாக்கல் செய்தார்.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி கொடுத்தால், மதவெறிக் கலவரத்தில் ஈடுபடுவார்கள், சட்ட ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என்று அவர் தமது மனுவில் தெரிவித்திருந்தார். மேலும், காந்தியைக் கொலைசெய்த அமைப்பே காந்தி பிறந்தநாளைக் கொண்டாடுவது அவரை இழிவுபடுத்துவது என்றும், அம்பேத்கரின் சித்தாந்தத்திற்கு எதிரானவர்கள், அவரது 130-வது பிறந்தநாளே முடிந்தபின்பு, நூற்றாண்டு கொண்டாடப் போகிறோம் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால், இதையெல்லாம் நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டும், இல்லையென்றால், தமிழக போலீசுத் துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்று மிரட்டியது. நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக, தமிழகத்தில் தமது பேரணியை வெற்றிகரமாக நடத்திக் காட்டலாம் என்று கனவுடன் இருந்த ஆர்.எஸ்.எஸ் கண்களில், மண்ணைத் தூவியது திருமாவளவனின் மற்றொரு அறிவிப்பு.

ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தும் அதே அக்டோபர் 2 ஆம் தேதி, சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடத்தப்போவதாக அறிவித்தார் திருமாவளவன். திருமாவளவனின் இந்த அறிவிப்பை ஆமோதித்து, சி.பி.ஐ, சி.பி.எம், திராவிடர் விடுதலைக் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய தேசிய லீக் உள்ளிட்டு 20-க்கும் மேற்பட்ட அமைப்புகள், தங்கள் கட்சிகளும் பேரணியில் பங்கேற்கும் என்று அறிவித்தன.

முக்கியத்துவம் வாய்ந்த விசயம் என்னவென்றால், நாம் தமிழர் கட்சியின் சீமானும் இப்பேரணியை ஆதரித்து பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ளார். திராவிட எதிர்ப்பையே தன் மைய அரசியலாகக் கொண்டிருந்த சீமான், திடுமென இதுபோன்ற நிலையெடுக்கும் காரணத்தை நாம் கவனிக்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வை எதிர்த்து ஜனநாயக சக்திகள் மேற்கொள்கின்ற கூட்டுப் போராட்டத்தில், நாம் தமிழர் கட்சி பங்கேற்பது அக்கட்சியின் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிசக் கும்பலின் கொட்டம் தீவிரமடையத் தீவிரமடைய, மற்ற மாநிலங்களைப் போல் அல்லாமல் தமிழகம் உறுதியாக அதை எதிர்த்து மோதுகிறது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை ஆற்றுகிறது.

தமிழகத்தில் அரசியல் கட்சிகளாக அறியப்படும் யாராக இருந்தாலும் ஒன்று அவர்கள் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. எதிர்ப்பு அணியில் நம்மோடு நிற்க வேண்டும், இல்லை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வோடு இணைந்துகொண்டு எதிரணியில் நிற்க வேண்டும் – இதுதான் தமிழகத்தின் இன்றைய அரசியல் போக்கு. சீமான் இதைப் புரிந்துகொண்டுவிட்டார் என்று சொல்லலாம்.


படிக்க : இந்தித் திணிப்பு ; தாய்மொழி அழிப்பு ! அமித்ஷா குழு பரிந்துரை ! | மக்கள் அதிகாரம் கண்டனம்


இது முழுமுதல் மாற்றம் இல்லை – திராவிட எதிர்ப்பை சீமான் கைவிட்டுவிடவில்லை – என்றாலும், இந்த மாற்றம் – ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. எதிர்ப்பில் கைகோர்ப்பது – பாசிச எதிர்ப்பாளர்களுக்கு சாதகமான நகர்வு. இதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

புரட்சிகர-ஜனநாயக அமைப்புகளின் எதிர்ப்பின் காரணமாக, ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுத்த போலீசு, ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பாளர்களின் மனிதச் சங்கிலிக்கும் அனுமதி மறுத்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அதேநேரம், மாற்று ஏற்பாடாக நவம்பர் 6-இல் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதிக்க வேண்டும் என்று மீண்டும் உயர்நீதிமன்றம் போலீசுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது.

அரசுக் கட்டமைப்பு முழுவதும் பாசிசமயமாகிவரும் சூழலில், பாசிச எதிர்ப்பில் முதன்மைப் பங்காற்றுபவை களப் போராட்டங்களே. பார்ப்பனியம் இன்று பார்ப்பனிய பாசிசமாக, இந்துத்துவமாக அவதாரம் எடுத்துள்ளது. தன் வரலாறு நெடுகிலும் பார்ப்பனியத்தோடு போர் புரிந்த தமிழகத்திற்கு, அதன் பாசிச அவதாரத்தை வீழ்த்துவதில் முன்னணி கடமை உள்ளது. இது ஆரிய பார்ப்பனியத்திற்கு எதிரான இறுதிப் போர், தமிழகமே உன் போர்வாளை கூர் தீட்டு!