Sunday, May 25, 2025
முகப்பு பதிவு பக்கம் 333

ஒரு குடம் தண்ணிக்கு ஓராயிரம் பேர்கிட்ட வசவு வாங்கறதா இருக்கு !

மிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தண்ணீருக்கான போராட்டம் தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சென்னையில் தினந்தோறும் போராட்டம் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. பல்லாவரத்தில் போராட்டம்.. மாதவரத்தில் போராட்டம், வண்ணாரப்பேட்டையில்  போராட்டம்… எங்கும் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த 08.05.2019  புதன்கிழமை அன்று சென்னை வண்ணாரப்பேட்டை 4-வது மண்டலத்தில் உள்ள பார்த்த சாரதி நகரில் உள்ள மக்கள் தண்ணீர் கேட்டு சாலை மறியல் செய்திருக்கின்றனர்.

அப்பகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து அவர்கள் சொல்வது நம்மை உலுக்குகிறது. “உண்மையில் இப்படி ஒரு பஞ்சத்தை  எதிர் கொள்வோம் என்று நாங்கள் கனவிலும் நினைத்து பார்த்தது இல்லை” என்கிறார்கள் தண்ணீர் லாரிக்காக காத்திருந்த அப்பகுதி பெண்கள்.

படிக்க:
♦ ஒரு விரல் புரட்சியால் ஈரானிடம் எண்ணெய் வாங்க முடியுமா ?
♦ “ராடாரேந்திர மோடி !” – மோடியை வறுத்தெடுத்த வலைத்தளவாசிகள் !

தண்ணிர் லாரி வந்ததும் கூடியிருந்த மக்கள் எல்லோரும் ஓடியவாறு வரிசையில் நின்று குடங்களை அதனருகே வைத்தவாறு பரபரப்பாகினர். தண்ணீரை முறையாக எல்லோர் வீட்டுக்கும் கொடுக்க ஒரு மேஸ்திரி நியமித்து இருந்தார்கள். ஒரு குடத்திற்கு ஒரு ரூபாய் கொடுத்த பிறகு அவர் தண்ணீரை திறந்து விடுகிறார்.

வந்த தண்ணீர் லாரியின் கொள்ளளவு 9,000 லிட்டர். ஆனால், காத்திருந்த குடங்களோ அதிகம். எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. ஒருவர் மட்டும் “பாத்தியா இந்த ரெண்டு கொடத்துக்காக நான் எவ்வளவு பாடுபட்டேன்” என்று இரண்டு கைகளிலும் பிளாஸ்டிக் குடங்களை தாங்கி கொண்டு மூச்சு முட்ட சொல்லிக் கொண்டே நகர்ந்தார்.

மற்றவர்கள் தண்ணீர் கிடைக்காத கோபத்தில் பொறுமிக் கொண்டே போக……  அசதியாக உட்கார்ந்த மேஸ்திரி கோமளாவிடம்…  இந்தப் பகுதியில் தண்ணீர் பிரச்சினையை எப்படி இருக்கு என்றதும்….

“நா… என்ன சொல்ல… அதான் நீங்களே பார்த்திங்களே எங்க நெலமைய.  இதோ.. இந்த லாரிகாருக்கு வசூல் பண்ண காசு 250 ரூபாயில 220 ரூபா அவருக்கு கொடுக்கனும். மீதி இருக்கிறது 30 ரூபா தான்” என்று சில்லறையை எடுத்துக் காட்டினார்.

லாரி ஓட்டுநரிடம் பணத்தை கொடுத்துவிட்டு மூச்சிறைக்க சொன்னார்… “எப்பா சாமி… உன்னை கெஞ்சிக் கேட்டுக்குறேன்.  தண்ணி மட்டும் கொண்டு வராம இருந்துடாத… நீ கேக்குற காசகூட கொடுத்துடுறோம். இந்த தண்ணிக்காக நாங்க படாதபாடு படுறோம்.  எப்ப தண்ணி வருமோன்னு வேலைக்கும் போகாம வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம் தயவு செஞ்சி வந்துருப்பா… ப்ளீஸ்”  என்றார்.

“சரிக்கா”.. என்று சொல்லிவிட்டு அந்த லாரி ஓட்டுநர் கிளம்பியதும் சொன்னார். “இந்த பார்த்தசாரதி தெருவில் மொத்தம் 9 சந்து வரை இருக்கு. பாக்கதான் சின்னதா இருக்கும். ஒவ்வொரு சந்துக்கும் 100-லருந்து 150 குடும்ப வரைக்கும் இருக்கும். மொத்தமா ஆயிரம் குடும்பங்களுக்கு மேல இங்க இருக்காங்க.

பெரும்பாலும் பிட்டர், எலெக்ட்ரிசியன், ஏசி மெக்கானிக், டூவீலர் மெக்கானிக் சுத்தி இருக்க சின்ன சின்ன பட்டறைகளில் தான் வேலை செய்து வருகிறார்கள். இதுதான் இங்கு வாழக்கூடிய மக்களின் அடிப்படை ஆதாரமாக இருக்கிறது. வேலைக்கு போனால் தான் சாப்பாடு என்ற  நிலைமையில் இருக்கும்  எங்களுக்கு குடிக்க தண்ணிகூட கிடைக்கிறதில்ல.

கடந்த 20 நாளா சரியா தண்ணி வரது இல்ல… ஒண்ணு விட்டு ஒருநாள் தண்ணி வரும். அதுவும் இப்ப வர்ரது இல்ல.  நாங்க தினம் தினம் ஓடிப்போய் அதிகாரிங்ககிட்ட எழுதி கொடுத்துட்டு வருவோம். ’எங்க தெருவுக்கு தண்ணி வேணும்’ன்னு சொல்றதுக்கு காலையில் 6 மணிக்கு அந்த ஆபிசுக்கு போய் விடுவோம். அங்க போயிட்டு சொன்ன 2 மணிக்கு அனுப்புறோம்னு சொல்லுவாங்க. நாம நம்பி வந்துடக் கூடாது அங்கேயே நின்னாதான் தண்ணி அனுப்புவாங்க. 2 மணிக்கு நீங்க போய் சொன்னிங்கன்னா 6 மணிக்குதான் வருவாங்க. வேலைக்கு போற யாராவது ஒருத்தவங்க வேலைக்கு லீவு போட்டுட்டு அந்த அலுவலகத்துக்கு நடையா நடக்கணும். அப்படி நடந்தா தான் நாங்க தண்ணி குடிக்க முடியும்.

லாரி வந்ததும் ஒரு வீட்டுக்கு ஐந்து குடம் தண்ணீர் புடிக்கிறதுக்கு அனுமதி உண்டு.  அஞ்சி கொடம் தண்ணியத்தான் இரண்டு நாள் வரைக்கும் வச்சிக்கனும். துணி துவைக்கிறதோ, குளிப்பதோ அல்லது கக்கூஸ் போறது எதுவா இருந்தாலும் இந்த அஞ்சு குடம் தண்ணீரிலேயே எல்லா வேலையும் முடிச்சிக்கனும்.

தண்ணி இருந்தப்ப டெய்லி குளிச்சோம். இப்ப அப்படி இல்லை. குளிக்கிறதுக்கு நாலு நாளாவது, அழுக்கு துணிகளை தான் வேலைக்கு போட்டுட்டு போறோம். துணி மொத்தமா சேர்த்து ஒருநாள் புடிக்கிற தண்ணியில துவைச்சிக்கிறோம்.

இந்த ஏரியாவுல ஒரு குடும்பத்துக்கு குறைந்தபட்சம் 7 லிருந்து 8 பேர் வரை இருக்காங்க. இதுபோக குழந்தை குட்டி என்று ஏராளமா இருக்குதுங்க. இந்த குழந்தைங்க தண்ணில விளையாடுதுங்க. அவங்ககிட்ட போயிட்டு எதையும் எடுத்துச் சொல்ல முடியல. சொன்னா புரிஞ்சிக்கிற வயசுமில்ல. இதுவே எங்களுக்கு பெரிய பிரச்சனையா இருக்கு.

இந்த தண்ணீர் குடிக்கிறதுக்கு நாங்க ஊர்ல இருக்கிற எல்லார்கிட்டயும் திட்டுவாங்கறதா இருக்கு. இப்ப எங்க தெருவுக்கு ஒரு லாரி வருது அப்படின்னா எங்களால தண்ணி புடிக்க முடியல. அப்புறம் நாங்க பக்கத்து தெருவுக்கு வர லாரில தண்ணி புடிக்க கொடத்த தூக்கிட்டு ஓடுவோம். அங்க இருக்கறவங்க  “ உங்க ஏரியாவுல தான் தண்ணி வருதே….. இங்க எதுக்கு நீ வர” அப்படின்னு நம்ம கிட்ட சண்டைக்கு வருவாங்க.

ஒரு குடம் தண்ணிக்கு ஓராயிரம் பேர்கிட்ட வசவு வாங்கறதா இருக்கு. தண்ணி இல்லன்னா உயிர் வாழ முடியுமா யோசிச்சு பாருங்க? லாரி வரும்போது வீட்ல ஆள் இல்லாதவங்க, இல்லனா தண்ணி கெடக்காதவங்க என்ன பண்ணுவாங்கன்னா நைட்டு ரெண்டு, மூனு மணிக்கு குடிநீர் வாரிய ஆபிசுக்கு போயிட்டு தண்ணீர் கொண்டு வருவாங்க. ஆட்டோ, பைக்குன்னு எடுத்துட்டு போயிடுவாங்க. அந்த நேரத்துக்கு போனாதான் நெரிசல் இல்லாம இருக்கும். இல்லனா அங்கயும் கூட்டம்தான்.

இதுக்கு முன்னாடி எங்களுக்கு தண்ணி பஞ்சம் வந்தது இல்லை. கார்ப்பரேஷன் வாட்டர் தான். டெய்லியும் குழாய்ல தண்ணி வந்துரும். ஆனா இப்ப லாரி தண்ணீரை நம்பி தான் இருக்கிறோம்.

படிக்க:
இந்தியாவின் சிறந்த விஞ்ஞானி : செல்லூர் ராஜுவா ? மோடியா ? கருத்துக் கணிப்பு
நூல் அறிமுகம் : பிம்பச் சிறை (எம்.ஜி.ஆர் – திரையிலும் அரசியலிலும்)

தண்ணி வேணும்னு அதிகாரிங்கள கேட்டா, எந்த பதிலும் சொல்ல மாட்றாங்க. கொஞ்சம் கோவமா கேட்டா “எவ்வளவு பேருக்கு தான் நாங்களும் தண்ணி அனுப்ப முடியும். உங்கள மாதிரி நாங்களும் மனுஷங்கதானே” அப்படின்னு நம்மளையே திருப்பிக் கேட்கிறாங்க. பரிதாபமா பேசுறாங்க.

ஏற்கனவே வீட்ல நாங்க 60 அடி போர் போட்டு இருக்கிறோம். அதுல தண்ணி ஏறவில்லை. 19 அடியில கிணறு வெட்டியிருக்கோம். அதுலயும் தண்ணி இல்ல. இப்ப என்ன பண்ண முடியும்? அதிகாரிங்களத்தானே கேக்க முடியும்.

கேன் வாட்டர் வாங்கலாம்னா அதுவும் விலை கூடிடுச்சு. அதுவும் சொல்ற நேரத்துக்கு வருவதில்லை. இந்த லாரிக்காரன் மாதிரியே கேன் வாட்டர்காரங்களும் ஏமாத்துறாங்க. அப்படியே வந்தாலும் வழியிலேயே இருக்கிறவங்க மடக்கிக்கிறாங்க. கடைசியில இருக்கிறவங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது பெரும்பாடாக இருக்கு. அதே மாதிரி இங்க டேங்க் இருக்குது. தெருவுக்கு தெரு வச்சிருக்காங்க. ஆனால் அது எதுக்கும் பயன்படாம இருக்குதுங்க.

எனக்கு தெரிஞ்சு பத்து பதினைந்து வருஷம் ஆகுது அதுல தண்ணி புடிச்சி. அதை சரி பண்ணுங்க அப்படின்னு சொன்னா, இதோ வறேம்மா…. நாளைக்கு வறேம்மா’னு” அதிகாரிகள் சொல்லிட்டு போயிடுறாங்க. அதுக்கப்புறம் திரும்பி வருவதே இல்லை.

எங்க ஜனங்க ரொம்ப கடுப்பாகி இனிமே இந்த அதிகாரிங்களை நம்புனா வேலைக்கு ஆகாது. நாமளே காசு போட்டு இந்த டேங்கை சரி பண்ணிடலாம். இந்த டேங்குல தண்ணீர் நிரப்பிடட்டும். வேலைக்கு போனவங்ககூட வந்து புடிச்சிக்குவாங்க அப்படின்னு சொல்லி இருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு “எவ்வளவு காசு கேட்டாலும் கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறோம்….. ஆனால், தண்ணி தான் கிடைப்பதில்லை” என்கிறார் கோமளா.

ஒரே ஒரு குடம் மட்டும் பிடித்த சுல்தானா என்பவர் கையிலிருந்த குடத்தை தனது கணவரிடம் கொடுத்துவிட்டு சொன்னார்.  “நாங்க நாயா அலஞ்சாலும் எங்களுக்கு தண்ணி கெடச்ச பாடில்லை. முஸ்லீம்கள் இப்ப எங்களுக்கு நோன்பு இருக்கும் நேரம். சரியா தண்ணீர் கிடைக்கிறது இல்லை. அதற்கு முக்கியமான காரணம் லாரில வர தண்ணி எல்லாத்தையும் வீட்டு ஓனருங்க சம்புல போட்டு அடைச்சு வச்சிக்குறாங்க. எங்கள மாதிரி வாடகைக்கு இருக்கவங்களால சமாளிக்க முடியல.

சுல்தானா.

கீழ இருக்கவங்களுக்கு சிரமம் இல்லாம தண்ணி புடிச்சி வச்சிக்குறாங்க. நாங்க மேல இருந்து கீழ வரதுக்குள்ள தண்ணியும் காலியாகிடுது. லாரியும் காணாம போயிடுது. குளிக்கவும் தண்ணி இல்ல. குடிக்கவும் தண்ணி இல்ல.

தினமும் சமைக்க மட்டும் ஒரு கேன் வாட்டர் வாங்கிக்குவோம். அதற்கு முப்பது ரூபா. சமைச்சது போக குடிக்கிறதுக்கு மட்டும் வச்சிக்குவோம். ஒண்ணுவிட்டு ஒருநாள்தான் தண்ணி வரும். அதுவரைக்கும் பத்திரமா பாத்துக்கனும்” என்கிறார் சுல்தானா.

அப்பகுதியில் செயல்பட்டு வரும் சிஐடியு தொழிற்சங்கத்தின் நகர செயலாளர் தினேஷ் அவர்களை கேட்டபோது சொன்னார். ”குறிப்பாக 3 மற்றும் 4வது சந்தில் சுமார் 150 குடும்பங்கள் வசிக்கும். இந்த சந்திற்கு மட்டும் மெட்ரோ பைப் லைன் மூலமாக தண்ணீர் கொடுத்ததால் லாரி தண்ணீர் வீடுகளில் கட்டி வைத்திருந்த தண்ணீர் தேக்க தொட்டிக்கு (சம்ப்)  சென்று விடுவதால் பல வீடுகளுக்கு தண்ணீர் போவதில்லை. இது ஒரு பக்கம் இருக்க கடந்த சில நாட்களாக லாரி தண்ணீர் வருவதையும் நிறுத்தி விட்டார்கள்.

மேலும் மெயின் தெருவில் பல மாதங்களாகவே சாக்கடை தண்ணீர் கலந்து வருகிறது. இப்பிரச்சனையை தீர்க்க மெட்ரோ வாட்டர் அதிகாரியை சந்தித்து மனு கொடுத்தால் அதற்கும்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதான் போராட்டத்திற்கு முக்கிய காரணம்.

சொந்தமாக போர் போட்டு தண்ணீர் பிடித்துக் கொள்வதற்கான வசதியும் இல்லை. அதற்கான சூழலும் இல்லை. காரணம் 60 அடி 70 அடி மட்டத்திற்கு தண்ணீர் இல்லை. அப்படியே 150 அடிக்கு போட்டால் உப்பு தண்ணீர் தான் வருகிறது என்பதால் இந்த லாரி தண்ணீரையே நம்பி இருக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்” என்கிறார்.

“தண்ணீர் பஞ்சம்” – “பூமியில் தண்ணியில்லை” – “மழை பெய்யவில்லை” வேறு என்ன செய்ய முடியும்? என்று பொதுவான பிரச்சனையாக கருதி புறந்தள்ளும்படியாக இல்லை. நாம் எதிர்பாராத வகையில் மிகப்பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான ஒரு வகை மாதிரிதான் இது!

படிக்க:
தாகத்திற்கா தண்ணீர் லாபத்துக்கா ? – கோவன் புதிய பாடல் !
பெருக்கெடுக்குது டாஸ்மாக் சரக்கு ! வறண்டு போனது குடிநீர் !

சென்னை நகரம் முழுவதும் இதுதான் நிலை. வசதி உள்ளவர்கள் தமது அடுக்ககங்களில் பாதாள அறைகளில் லாரித் தண்ணீரை நிரப்பிக் கொள்கிறார்கள். இப்போது அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு அதிக விலைக்கு விற்கிறார்கள். தண்ணீர் வசதி இல்லாத வீடுகளிலிருந்து குடித்தனக்காரர்கள் காலி செய்கிறார்கள். தண்ணீர் வசதி உள்ள வீடுகளின் வாடகை திடீரென உயர்ந்திருக்கிறது. கேன் வாட்டர்களுக்கு கடுமையான கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. பல இடங்களில் மாநகராட்சி தண்ணீர் வருவதே இல்லை. சில வி.ஐ.பி பகுதிகளில் மட்டும்தான் வருகிறது.

தண்ணீருக்காக அன்றாடம் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலையில் சாதாரண மக்கள் இருக்க, நடுத்தர வர்க்கமோ தனது துண்டு விழும் பட்ஜெட்டில் மேலும் செலவை தண்ணீருக்காக போட வேண்டிய நிலையில் இருக்கிறது. பிரச்சினையை தீர்க்க வேண்டிய அரசோ செயலற்று இருக்கிறது. ஊடகங்களோ தேர்தல் பரபரப்பில் காலந்தள்ளுகின்றன.

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பார்கள். அன்றாடம் அரசுக்கும் மாநகராட்சிக்கும் எதிராக போராடும் சிந்தனை உள்ள மக்களுக்கே தண்ணீர் கிடைக்கும் என்பது தற்போதைய சேதி! இந்தக் கோடைகாலம் சுட்டெரிக்கும் வெயிலோடு போராடும் காலமாகவும் இருக்கிறது.

– வினவு களச் செய்தியாளர்.

இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் இலங்கை குண்டுவெடிப்புகளும் !

”இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளும்!” என்ற தலைப்பில் இலங்கையில் செயல்பட்டுவரும் புரட்சிகர அமைப்பான புதிய ஜனநாயக மாக்சிச – லெனினிச கட்சி ஒரு சிறு வெளியீட்டை வெளியிட்டுள்ளது.

இந்த வெளியீட்டை PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும். இந்த வெளியீட்டை முழுமையான பதிவாக இங்கு வெளியிட்டுருக்கிறோம்.

***

இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளும் !

அனைத்து மத அடிப்படைவாதங்களும் எதிர்க்கப்படவேண்டும் ! முஸ்லீம் மக்கள் எல்லோரையும் சம்மந்தப்படுத்தி நோக்கக்கூடாது !

தாக்குதலும் எதிர்வினைகளும்

டந்த 2019 ஏப்ரல் 21-ம் திகதி கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் தற்கொலைக் குண்டுதாரிகள் குண்டுகளை வெடிக்க வைத்ததால் 250-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். திட்டமிட்டு இலக்கு வைத்த தேவாலயங்கள் மூன்றும் கத்தோலிக்கத் தேவாலயங்கள் எனவும் நேரந் தவறியதால் சியோன் தேவாலயம் தாக்கப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது.

தாக்குதல்கள் நிகழ்ந்த நாள் கிறிஸ்தவர்கட்கு அதி புனிதமான உயிர்த்த ஞாயிறு. அது கிறிஸ்தவர்கள் பெருந்தொகையாகத் தேவாலயஞ் சென்று விசேட ஆராதனைகளிற் பங்கேற்கும் நாள். எனவே தாக்குதல்களின் நோக்கம் தேவாலயங்களைச் சேதப்படுத்துவதுடன் பெருந்தொகையான கிறிஸ்தவர்களைக் கொல்வதுமாகும். குறி தவறிய ஒரு ஹோட்டல் உட்பட, இலக்கு வைத்த ஹோட்டல்கள் என்ன அடிப்படையிற் தெரியவாயின என நிச்சயமில்லை.

இத் தாக்குதல்கள் எழுப்பும் முக்கிய கேள்விகளைப் புறக்கணித்தே, அரசியற் பிரமுகர்களும் சமூகத் தலைவர்களும் தாக்குதல்களைப் பற்றியும் மேற்கொண்டு இவ்வாறான தாக்குதல்களைத் தவிர்ப்பதைப் பற்றியும் அதிகமாகப் பேசுகின்றனர். மிக நிதானமான சிலர், சமூகங்களிடையே ஒற்றுமையைப் பேணலும் பாரபட்சத்தை நீக்கலும் தேவை என வலியுறுத்துகின்றனர். பலர் தங்களுடைய இறுகிய சிந்தனைகளினின்று விடுபடாது, தமக்கு வாய்ப்பான விளக்கங்களையும் தீர்வுகளையும் முன்வைக்கின்றனர். சில ஊடகங்களின் நடத்தை எரிகிற வீட்டில் விறகு பொறுக்கும் வழமையில் வணிக நோக்குடன் தொடர்கிறது.

படிக்க :
♦ இலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும் இலங்கை மக்கள் !
♦ இலங்கை குண்டுவெடிப்பு

இது தனியே முஸ்லிம்கள் பற்றிய பிரச்சனையல்ல. முஸ்லீம் ‒ கிறிஸ்துவப் பகை பற்றியதுமல்ல. இது முழு நாட்டினதும் பிரச்சனை. நாட்டின் அமைதியும் மக்களின் பாதுகாப்பும் பற்றிய பிரச்சனை. எனினும் இப் பிரச்சனையின் அடிப்படை, தேசிய இனப் பிரச்சனை ஒரு பகை முரண்பாடாக்கப்பட்டமையாகும். அதனால் சாதாரண மக்களிடையே இனப் பகை கூறிப்பிடத்தக்க அளவில் இல்லாவிடினும் பிற சமூகங்களைச் சிறிதேனும் சந்தேகத்துடன் நோக்கும் தன்மை உருவானது.

எனவே, முஸ்லிம் தீவிரவாத எழுச்சியின் பின்புலத்தைச் சிறிது ஊன்றி நோக்க வேண்டும். அதன் தேசிய, சர்வதேசியப் பரிமாணங்களையும் கவனிக்க வேண்டும். அதைவிட, முஸ்லிம் சமூகத்தினருக்கும் பிற சமூகத்தினருக்கும் இருந்த உறவின் சீரழிவையும் அதற்குப் பங்களித்த சமூகப் போக்குகளையும் விசாரிக்கவேண்டும்.

முதலில், முஸ்லிம்களின் சமூக அடையாளத்தையும் பிற சமூகங்களுடனான அவர்களுடைய உறவையும் கவனிப்போம்.

முஸ்லிம்களின் சமூக அடையாளம்

முஸ்லிம்கள் நீண்டகாலமாகத் தம்மை ஒரு தேசிய இனமாக அறிவிக்காத போதும், அவர்கள் தமது தனித்துவத்தை ஒரு நூற்றாண்டுக்கு மேலாக வலியுறுத்தி வந்துள்ளனர். இஸ்லாம் மதம் வணிகர்கள் ஊடாகவே இலங்கைக்கு அறிமுகமாகியதால், முஸ்லிம்களிடையே வணிகர்களின் விகிதாச்சாரம் பிற சமூகங்களில் உள்ளதினும் அதிகம். எனினும் இன்று பெரும்பாலோர் உடல் உழைப்பாற் பிழைப்போராவர்.

சிங்கள முதலாளிகட்கு முஸ்லிம்களுடன் வணிகப் போட்டியிருந்தது. அதன் விளைவாகவே 1915-ல் வடக்கு ‒ கிழக்கு தவிர்ந்த இலங்கையிற் கடுமையான சிங்கள ‒ முஸ்லிம் மோதல் நடந்தது. அம்மோதலில் வன்முறையைத் தூண்டியமைக்காகக் கைதான சிங்கள பேரினவாதத் தலைவர்களின் சார்பில் கப்பலில் லண்டனுக்குப் போய் வாதாடிய சேர் பொன்னம்பலம் இராமநாதன் பேரினவாதிகளை விடுவிக்குமாறு மன்றாடியதோடு, முஸ்லிம்கட்குப் பாதகமாயும் பேசியமை தென்னிலங்கை முஸ்லிம் தலைவர்களிடையே கசப்பை ஏற்படுத்தியது.
முஸ்லிம்களில் ஏகப்பெரும்பாலானோரின் வீட்டு மொழி தமிழ் என்ற காரணத்தை முன்னிறுத்தி, அவர்கள் தமிழர்கள் என்றும் முஸ்லிம்கட்குத் தனிப் பிரதிநிதித்துவம் தேவையில்லை என்றும் இராமநாதன் முன்னர் வாதித்தமையும் நோக்கத்தக்கது.

படிக்க :
♦ இலங்கை குண்டுவெடிப்பு : குற்றவாளிகளைப் பிடிக்க உதவிய இசுலாமியர்கள் !
♦ ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு ! உண்மையா ? பொய்யா ?

முஸ்லிம்கள் கிழக்கிலங்கையிற் கணிசமானளவு பிரதேசத்திற் செறிவாக வாழ்கின்றனர். வடக்கிலும் மேற்குக் கரையோரமாயும் முஸ்லிம்கள் கணிசமாக வாழும் பிரதேசங்கள் உள்ளன. ஆயினும் ஏகப் பெரும்பாலோர் பல இடங்களிற் சிங்கள மக்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க சிறுபான்மையாக உள்ளனர். எனவே அவர்கள் தமிழருடன் ஒப்பிடத்தக்க மொழிப்பற்று உடையோராயினும், அவர்களின் தனித்துவம், மொழியை விட முக்கியமாக மதமும் பண்பாடும் சார்ந்திருந்தது.

ஜி.ஜி. பொன்னம்பலம்

அவர்களுடைய தனித்துவத்தை இராமநாதன் நிராகரித்தார். முற்றிலும் யாழ், குடாநாட்டை மையப்படுத்திய தமிழ்த் தேசிய அரசியலை அவருக்குப் பின் வந்த ஜி.ஜி. பொன்னம்பலம் முன்னெடுத்தார்.

வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழரையும் மலையகத் தமிழரையும் முஸ்லிம்களையும் ஒரு பொது அடையாளத்துட் கொண்டுவரும் நோக்குடன் தமிழரசுக் கட்சி தமிழ் பேசும் மக்கள் என்ற கருத்தை முன்வைத்தது. அது வடக்கு‒கிழக்கின் முஸ்லிம்கட்கு உடன்பாடானதெனினும், தமிழரசுக் கட்சியின் கோரிக்கைகளும் போராட்டங்களும் முஸ்லிம்களதும் மலையகத் தமிழரதும் சிறப்பான தேவைகளை வலியுறுத்தத் தவறின. தமிழரசுக் கட்சிக்குப் பாராளுமன்ற ஆசன எண்ணிக்கை முக்கியமாயிருந்தது. முஸ்லிம் பிரமுகர்கட்குத் தங்களைத் தனிப்பட வலுப்படுத்தும் தேவை இருந்தது. எனவே, வெறும் தேர்தல் வாக்குக் கணிப்பின் மீது கட்டியெழுப்பிய புரிந்துணர்வு நிலைக்கவில்லை.

பேரினவாதிகளுடைய ஒடுக்கல் அணுகுமுறையாலும் தமிழ்த் தேசியவாதிகளின் குறுகிய நோக்காலும் தேசிய இனப் பிரச்சனை மோசமாகி ஒடுக்குமுறை வலுத்த சூழலில் தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அக்கோரிக்கை நாட்டில் வாழும் தமிழ்த் தேசிய இனம் முழுவதையும் பற்றிய கணிப்பில்லாமலும் முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள் பற்றி உரிய சிந்தனை இல்லாமலும் அமைந்தது. எனவே, முஸ்லிம்கள் தமிழ் மக்களின் உரிமைகட்கு ஆதரவாக இருந்தபோதும் பிரிவினை பற்றிய ஐயத்துடனேயே இருந்தனர்.

தமிழர் ‒ முஸ்லிம்கள் பிரிவினை

தமிழ்ப் பாராளுமன்ற அரசியற் தலைமைகள் மீதான நம்பிக்கையை இழந்த நிலையில் முன்னணிக்கு வந்த தமிழ்த் தேசிய இளைஞர் இயக்கங்களிடையிலும் குறுந்தேசிய மேலாதிக்கப் போக்கு முனைப்பாயிருந்தது. முஸ்லிம்கள் தமிழீழக் கோரிக்கையை ஏற்றேயாக வேண்டுமெனப் பெருவாரியான இளைஞர் இயக்கங்கள் நிர்ப்பந்தித்தன.

குறிப்பாக, விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் வலுத்த போர்ச் சூழலில், முஸ்லிம்களும் தமிழ் மக்களைப் போல தமக்குக் கீழ்ப்பட்டு நடக்க வேண்டுமென எதிர்பார்த்த விடுதலைப் புலிகளின் அணுகுமுறையால் முஸ்லிம்கள் அதிருப்தி அடைந்தனர். அதன் பயனாகக் கிழக்கில், குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில், முஸ்லிம்களை வலிந்து தாக்கலும் முஸ்லிம்களின் எதிர்த் தாக்கலும் சில முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் நிற்பதுமாகத் தமிழ் ‒ முஸ்லிம் நல்லுறவுக்குக் கேடு விளைந்தது.

காத்தான்குடி மசூதி மீதான தாக்குதல்

அதை மேலும் மோசமாக்குமாறு 1990-ல் விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை வடக்கிலிருந்து வெளியேற்றியமை தமிழ்த் தேசியத்துக்கும் முஸ்லிம்கட்குமிடையே கடும் பிரிவை ஏற்படுத்தியது.

தமிழரிடமிருந்து முஸ்லிம்கள் விலகுவதை விரும்பித் தமிழ் ‒ முஸ்லிம் பகையைத் தூண்டும் செயல்களைச் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்தனர். அதை வாய்ப்பாக்கிய சில தமிழ்த் தேசியவாதிகளும் தமிழ் ‒ முஸ்லிம் பகைக்குத் தூபமிட்டனர். அதில் பேரினவாதிகள் குளிர்காய்ந்தனர்.

இன்று தென்னிலங்கையில் முஸ்லிம்களிற் குறிப்பிடத்தக்க பகுதியினர் அரசாங்க நிர்ப்பந்தத்தாலும் வளக் குறைவுகளாலும் சில சமயம் சுய தெரிவாயும் சிங்கள மூலமே கல்வி பெறுகின்றனர். சிங்களம் இன்னமும் பலரின் வீட்டு மொழியாகாவிடினும், முஸ்லிம் சமூகத்தின் அடையாளம் மேலும் மேலும் மதமும் பண்பாடும் சார்ந்து அமையும் சூழ்நிலை வலுத்துள்ளது.

எவ்வாறாயினும், சிங்களத் தேசியவாதம் சிங்கள ‒ பௌத்த பேரினவாதமாக உருமாறிய நிலையில் அது முஸ்லிம்களைச் சிங்களவர்களாக ஏற்கும் வாய்ப்புக் குறைவு. அதேவேளை, தமிழ்க் குறுந்தேசியம் ஒருபுறம் முஸ்லிம்களின் தனித்துவத்தை மறுத்து அவர்களைத் தமிழ் மேட்டுக்குடிகட்குக் கீழ்ப்பட்டோராகக் கருதுவதால், முஸ்லிம்கள் தமிழ்த் தேசிய அடையாளத்துக்கு உட்படவும் வாய்ப்பு இல்லை எனலாம்.

தேசிய இனமாக முஸ்லிம்கள்

பொது நிலைமைகளுடன் குறிப்பான நிலைமைகளையும் கணிப்பிற்கொண்ட புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, முஸ்லிம் தலைவர்களையும் மலையகத் தமிழ்த் தலைவர்களையும் விட முற்போக்காகச் சிந்தித்து, முஸ்லிம்களதும் மலையகத் தமிழரதும் தனித்துவத்தை அங்கீகரித்ததோடு, அவர்களைத் தனித் தேசிய இனங்களாக ஏற்கவேண்டுமெனவும் வற்புறுத்தியது.

அந்த அடிப்படையிலேயே சுயநிர்ணயக் கோட்பாட்டை மேலும் விரிவுபடுத்தி, நாட்டின் நான்கு தேசிய இனங்கட்கும் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி, ஐக்கிய இலங்கைக்குட் சுயாட்சி அமைப்புகள் என்ற தீர்வை முன்வைத்தது.

1978-ம் ஆண்டின் அரசியல் யாப்புப் புகுத்திய விகிதாசாரத் தேர்தல் முறை முஸ்லிம்கட்கு முன்னெப்போதினும் அதிகப் பிரதிநிதித்துவத்துக்கு வழி செய்தது. அதன் மூலம் பாராளுமன்றத்திற் கணிசமான ஆசனங்களை வென்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் பதவிகளைப் பெறவும் பிற சலுகைகளையும் வளங்களையும் அடையவும் முற்பட்டதேயொழிய, முஸ்லிம் மக்கள் ஒரு தேசிய இனமாகவோ தனித்துவமான ஒரு சமூகமாகவோ எதிர்நோக்கும் பிரச்சனைகளைப் பார்க்கவில்லை. இப்போக்கு முஸ்லிம் பாராளுமன்ற அரசியற் தலைமைகளின் சமூக நம்பகத்தை வேகமாகக் குலைத்தது.

பேரினவாதத்தின் இலக்காக முஸ்லிம்கள்

1915 -க்குப் பின் நீண்டகாலமாக சிங்கள ‒ முஸ்லிம் மோதல் ஏதும் நிகழவில்லை. ஆயினும், முஸ்லிம் வணிகர்கள் இரத்தினக்கல் வணிகம் போன்ற துறைகளிலும் 1970 -களின் எண்ணெய் நெருக்கடிக்குப் பின்பு மத்திய கிழக்குப் பொருளாதாரம் கண்ட செழிப்பின் பயனான புதிய வணிக முயற்சிகளிலும் மேலுஞ் செல்வந்தர்களான சூழ்நிலையிற், பழைய போட்டியுணர்வு தலைதூக்கியது. எனினும் ஒருசில உள்ளூர் மோதல்கட்கு மேல் குறிப்பிடத்தக்களவில் எதுவும் நிகழவில்லை.

1977 -க்குப் பின் தமிழ்த் தேசிய இனத்தை இலக்குவைத்த சிங்களப் பேரினவாதம், முஸ்லிம்களுடன் தனது முரண்பாட்டைத் தாழ்நிலைக்கு இறக்கியது. ஆயினும் முஸ்லிம்கட்கெதிரான கசப்பு நீறுபூத்த நெருப்பாகத் தொடர்ந்தது. அதை முஸ்லிம் அரசியல்வாதிகள் அறிவராயினும். வாக்கு வங்கிகளைப் பலப்படுத்துவதிலும் பாராளுமன்ற, அமைச்சுப் பதவிகளைக் கட்டிக்காப்பதிலும் தங்களையும் தங்களது குறுகிய வட்டங்களை வளப்படுத்துவதிலும் அவர்கள் கவனங்காட்டினரே ஒழிய, முஸ்லிம்களைப் பிற சமூகங்களுடன் இணக்குவதைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை.

படிக்க :
♦ புலித் தலைமை படுகொலை: சதிகாரர்களும் துரோகிகளும்.
♦ ஈழப் போராளிகள் முதுகில் குத்தும் எம்.ஜி.ஆர்-ராஜீவ் கும்பல்!

சிங்கள ‒ பௌத்த மதவாதம் சிஹல உருமய எனத் தொடங்கி இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜாதிக ஹெல உருமய எனும் அப்பட்டமான சிங்கள ‒ பௌத்த இனவாத அமைப்பாகப் பரிணமித்தது. அதனோடொட்டி முஸ்லிம் விரோதத்தை முதன்மைப்படுத்தும் வன்முறை அமைப்புகள் தோன்றின. அவற்றுள் முக்கியமானவை பொது பல சேன. சிஹல ராவய, சிங்ஹ லே போன்றவை.

அதேவேளை, கிறிஸ்தவர்கட்கும் முஸ்லிம்கட்கும் எதிரான துவேஷத்தைக் கிளறிய சோம தேரர் போன்றவர்கட்கு ஊடக ஆதரவும் இருந்தது. 2003 -ஆம் ஆண்டு ரஷ்யாவுக்குச் சென்ற சோம தேரர்; நோய் காரணமாக மரித்ததை ஒரு சதியென்று கூறிக் கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டன. இப் போக்கு இன்னமும் தொடர்கிறது.

விடுதலைப் புலிகளின் தோல்வியின் பின், சிங்கள‒பௌத்த வன்முறை அமைப்புகள், தேசிய இனப் பிரச்சனையின் தீர்வுக்கு ஆப்பு வைப்பது போக, முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் குறிப்பாக இலக்கு வைத்தன. முஸ்லிம் வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டன. ஆயினும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கக்கூடிய சூழ்நிலைகளிலும் பேரினவாதிகளுடன் சமரசம் செய்வதையே முஸ்லிம் பெருவணிகர்கள் விரும்பினர். இப் பலவீனத்தைச் சிங்கள‒பௌத்த வெறியர்கள் தமக்குச் சாதகமாக்கினர்.

சிங்கள‒பௌத்த வெறியர்கள் ஹலால் மாமிசத்துக்கு எதிராக முன்னெடுத்த இயக்கத்தின் போது, இரு தரப்புகளிலும் இருந்த பிரச்சனைகளை அறிந்த முஸ்லிம் தலைமைகள், சிங்கள மக்களுக்கு ஹலால் பற்றி அறிவூட்டாததோடு, ஹலால் என்பதைப் பணம் சம்பாதிக்கும் உபாயமாக்கும் மத நிறுவனங்களைக் கண்டிக்கவும் தயங்கினர். இதனால் முஸ்லிம்கள் சிங்களவர் மீது ஹலால் மாமிசத்தைத் திணிப்பதாகப் பொது பல சேன ஆகிய நிறுவனங்கள் நடத்திய துவேஷப் பிரசாரங்களை வேளைக்கே முறியடிக்க இயலவில்லை.

முஸ்லிம்களிடையே மத அடிப்படைவாதப் போக்கு

முஸ்லிம் சமூகம் அரசியற் தளத்திற் தனிமைப்பட்ட அதே வேளை, அதை மேலும் தனிமைப்படுத்துங் காரியங்களில் சவுதி நிதி உதவியுடன் செயற்பட்ட சலாஃபி‒வஹாபி முகவர்கள் தீவிரமாயினர்.

1970 -களின் இறுதி ஆண்டுகள் தொட்டு மத்திய கிழக்கில் வேலை தேடும் போக்கு வலுத்தது. அதை யூ.என்.பி. அரசாங்கம் ஊக்குவித்தது. அதன் தீய சமூக விளைவுகளைப் பற்றி இப்போது பலரும் பேசுவர்.

இலங்கை முஸ்லிம்களின் சமூக வாழ்வில் அரபியப் பண்பாட்டுத் திணிப்பு ஒரு முக்கிய அம்சமாகும். மத்திய கிழக்கில் வேலை வாய்ப்புகள் பெண்களைப் பணந்திரட்டும் பொறிகளாக்கிய அளவுக்குப் பெண்கள் சம்பாதித்த பணம் அவர்களுடைய சமூக விடுதலைக்கு உதவவில்லை.

அரபுச் சமுதாயங்களின் (முக்கியமாகப் படுபிற்போக்கான ஆட்சிகளைக் கொண்ட அரபுத் தீபகற்ப நாடுகளின்) கடும் ஆணாதிக்கச் சிந்தனை ஆண்கள் மூலமும் பெண்கள் மூலமும் இலங்கை முஸ்லிம் சமூகத்திற் பரவியது.

அதைவிடப், பல்வேறு அரபு நாடுகள் முஸ்லிம்களிடையே தமது செல்வாக்கை வளர்க்க நிதியுதவி, நிவாரணப் பணிகள், அபிவிருத்தித் திட்டங்கள் போன்றவற்றைப் பாவித்தன. குறிப்பாக, நிதியுதி முதல் சலாஃபி‒வஹாபி பிரசாரங்கள் உட்படப் பல வழிகளிற் சவூதிச் செல்வாக்கு முஸ்லிம் சமூகத்தை ஊடுருவியது.

இஸ்லாம் என்பது இன்னது தான் என்று கட்டுப்படுத்தவும் அதற்குப் புறம்பான எதுவும் இஸ்லாமிய மார்க்கத்துக்கு விரோதமானது எனவும் முஸ்லிம் சமுதாயத்தினுட் புதிய கட்டுப்பாடுகள் உருவாகின. தனிப்பட்ட அளவில் இது பெண்களின் உடை பற்றிய கட்டுப்பாடாக வெளிப்பட்டது. முஸ்லிம் ஆண்கள் தாடி வைப்பது முதல் சவூதியில் அணிவது போன்ற மேலங்கி அணிவது வரை வற்புறுத்தப்பட்டது.

முஸ்லிம் விரோத வன்செயல்களும் நிந்தனைகளும் வலுத்தநிலைமைகளில் அதற்குத் தமது எதிர்ப்பைக் காட்டவும் கணிசமானோர் இஸ்லாமிய உடைகளை அணியலாயினர். இஸ்லாமிய உடை அணிந்த யாவரும் சலாஃபி‒வஹாபிகளல்ல. எனினும் நாட்டில் வலுத்துவந்த மதவாதச் சிந்தனைகளிடையே அது முஸ்லிம்களைப் பிற மதத்தினரிடமிருந்து தனிமைப்படுத்த உதவியது.

அதேவேளை, மதத் தீவிரவாதம் முஸ்லிம் சமூகத்தினுட் பிளவுகளை விளைவித்தது. மதச்சார்பற்றுச் சிந்திக்கும் முஸ்லிம்களையும் சலாஃபி‒வஹாபிகள் ஏற்காத நடைமுறைகளைக் கடைப்பிடிப்போரையும் மார்க்க விரோதிகள் என நிந்திக்கவும் முஸ்லிம் சமூகத்தினின்று விலக்கவும் முயற்சிகள் நடந்தன.

சூஃபியம் எனும் திறந்த சிந்தனைப் போக்குள்ள ஒரு வகைச் சித்தர் மரபு இலங்கையிலும் இருந்துள்ளது. அதைவிட நல்லொழுக்கமுடைய முஸ்லிம் சான்றோரின் ஜனாஸாக்களை (சடலங்களை) அடக்கிய கபுர் எனும் கல்லறைகளை வணங்கும் வழக்கமும் இருந்துள்ளது. இவை யாவும் கடுமையாகச் சாடப்பட்டன. ஒரு தசாப்தம் முன்னர் மேற்கில் பேருவளையிலும் கிழக்கில் காத்தான்குடியிலும் மார்க்க விரோதப் பள்ளிவாசல்கள் என சூஃபி பள்ளிவாசல்களைத் தாக்கிய நிகழ்வுகள் பரவலாகப் பேசப்பட்டன.

முஸ்லிம் சமூகத்தைப் பிளந்த இப் போக்குகள் ஆழப் புரையோடி மேலால் அயறு படர்ந்த புண்களாக இருந்தன. முஸ்லிம் மக்களைப் பிறரிடமிருந்து பிரிக்கும் தீவிரப் போக்குகளை முறியடிக்க முஸ்லிம்களிற் பெரும்பான்மையினருக்கு ஆதரவு தேவையாய் இருந்த சூழ்நிலையில், முஸ்லிம் விரோதப் பிரசாரமும் வன்முறையும் தீவிரப் போக்குகட்கும் அடிப்படைவாதத்துக்கும் மேலும் தனிமைப்படலுக்குமே உதவின.

முஸ்லிம் மக்களும் முஸ்லிம் தலைமைகளும்

தென்னிலங்கையில் 1970 -களின் நடுப்பகுதியில் நடந்த ஓரிரு வன்செயல்களை ஐக்கிய முன்னணி அரசாங்கம் கவனமாகக் கையாண்டு அவை பரவாமற் தடுத்தது. ஆனால் அடியாழத்திலிருந்த துவேஷத்தின் காரணங்களை விளங்கவோ களையவோ இயலவில்லை.

1970 -களில் இரத்தினக் கல் வணிகம் மூலம் சில முஸ்லிம் வணிகர்கள் பெருஞ் செல்வந்தர்களாயினர். அதைவிட, 1974 -இன் பின் எண்ணெய் விலை பன்மடங்கு உயர்ந்ததால் மத்திய-கிழக்கு நாடுகளின் பொருளாதாரம் செழித்தது. அதையொட்டி வணிக, வேலை வாய்ப்புகள் வளர்ந்தன. இதனால் இலங்கையின் எல்லாச் சமூகத்தினரும் நன்மையடைந்தாலும், முஸ்லிம்கள் வாய்ப்புகளைக் கூடியளவிற் பயன்படுத்தினர். 1978 -இன் திறந்த பொருளாதாரக் கொள்கையையடுத்து மத்திய கிழக்கிற் தொழில்தேடும் போக்கு வேகமடைந்தது.

அதைவிட, 1956 முதல் அரசாங்கம் முஸ்லிம்களின் கல்வியிற் சிறப்பான கவனங் காட்டியது. 1970 தொட்டு முஸ்லிம்கள் உயர் கல்வியிற் துரிதமாக முன்னேறினர். எனவே, முஸ்லிம்களுடன் வணிகத் துறையில் இருந்த போட்டி 1980 -களில் உயர் கல்வித்துறைக்கும் விரியலானது.

அது போக, முஸ்லிம் செல்வந்தர்கள் தம் செல்வச் செழிப்பைக் காட்டுமாறு ஆடம்பர வீடுகளையும் பெரிய பள்ளிவாசல்களையும் கட்டலாயினர். பெரு நகரங்களை விட முக்கியமாகப், பொருளாதார வளங்குறைந்த சிறிய பட்டணங்களில் இவை வறுமைப்பட்ட பிற சமூகத்தினரின் கண்களை உறுத்தின. மத்திய கிழக்கிலிருந்து வந்த நிதியுதவி முஸ்லிம் சமூகத்தின் வசதி படைத்தோரை வளப்படுத்தியமை பலரது கவனத்தையும் ஈர்த்தது.

பேரினவாத அரசியற் கட்சிகள் ஆட்சி அமைக்க முஸ்லிம் அரசியல் தலைமைகளின் அரசியல் சந்தர்ப்பவாதம் உதவியபோதும், முஸ்லிம் தலைவர்கள் பேரம் பேசி முக்கிய பதவிகளைப் பெறுவதும் அவற்றின் மூலம் தம்மையும் தம்மைச் சார்ந்தோரையும் வளப்படுத்துவதும் பற்றிய வெறுப்பு இருந்தது. முஸ்லிம் தலைமைகள் இவ்வாறான விடயங்களைக் கவனிப்பதற்கு மாறாகத் தமது முஸ்லிம் வாக்கு வங்கிகளை வலுப்படுத்தும் நோக்கிற் செயற்பட்டனர்.

1978 -ஆம் ஆண்டுக்குப் பிந்திய விகிதாசாரத் தேர்தல் முறை, முற்றிலும் முஸ்லிம் வாக்குகளையே நம்பித் தேர்தலில் இறங்க இடமளித்தது. எனவே முஸ்லிம் காங்கிரஸ் முதலிற் கிழக்கிலும் பின்பு வடக்கிலும் தன்னை வலுவாக நிலைநிறுத்தியது. பிற மாவட்டங்களிற், பேரினவாதக் கட்சிகளில் இணைந்தும் (அரிதாகத் தனித்தும்) போட்டியிட்டுத் தேர்தல்களில் வென்ற முஸ்லிம் பாராளுமன்ற அரசியல்வாதிகட்கு முஸ்லிம் சமூகம் ஒரு தேசிய இனம் என்ற உணர்வோ அதன் தேசிய அபிலாசைகள் என்ன என்ற கவனிப்போ முஸ்லிம் மக்கள் முகங்கொடுக்கும் சமூகப் பிரச்சனைகள் என்னவென்ற அக்கறையோ இருக்கவில்லை.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி முஸ்லிம்களை ஒரு தேசிய இனமாக ஏற்ற பின்பும், முஸ்லிம்களின் அரசியலை ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் முன்னெடாமல் முஸ்லிம் அடையாளத்தின் பேரில் வாக்கு வேட்டையாடுதைத் தாண்டி முஸ்லிம் அரசியல் வளரவில்லை.

சென்ற நூற்றாண்டின் முடிவையண்டி இந்த நூற்றாண்டின் முற்பகுதி வரை கிழக்கிலங்கையில் முஸ்லிம் தேசம் என்ற ஒரு கருத்துச் சிறிது முக்கியம் பெற்றது. எனினும், இலங்கையின் முஸ்லிம் சமூகத்தின் குடிப்பரம்பலின் சிக்கல்களைக் கணிப்பில் எடாமல், தமிழீழக் கோரிக்கைக்கு ஏட்டிக்குப் போட்டியான ஒரு மனநிலையுடன் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் வாழ்வோரை மட்டுமே கருதி முன்வைத்த இக் கருத்து விரைவாக அடங்கியது.

அதற்கு மாறாக, வேறெந்த அரசியற் கட்சியும் பேசத் துணியாதவாறு, முஸ்லிம்களை ஒரு தேசிய இனமாக ஏற்று, அவர்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் சுயாட்சிகளையும் அவர்கள் ஐதாக வாழும் பகுதிகள் உள்ளக சுயாட்சிக் கட்டமைப்புகளையும் நிறுவ வேண்டும் என்ற ஆலோசனையை தேர்தல் அரசியல் நோக்கிற் செயற்பட்ட முஸ்லிம் தலைமைகள் கருத விரும்பவில்லை. அதே வேளை, தமிழ்த் தேசியவாதக் கட்சி எதுவும் முஸ்லிம்களை ஒரு தேசிய இனமாக ஏற்கத் துணியவில்லை.

எனவே முஸ்லிம்களின் அரசியல், தெளிவான சமூகநோக்கும் அரசியல் நெறியும் இல்லாமல் அடையாள அடிப்படையில் தேர்தல்கட்கு முகங்கொடுப்பதற்கும் முஸ்லிம் சமூகம் தாக்கப்படும் போதோ குறிப்பான நெருக்கடியை எதிர்நோக்கும் போதோ உரக்கப் பேசுவதற்குமான வரையறைக்குட்பட்டது.

முஸ்லிம்கள் கிழக்கில் அடுக்கடுக்காக நிலப்பறிப்பையும் வடக்கில் மீள்குடியேறத் தடைகளையும் தெற்கு முழுவதும் பேரினவாத நிந்தனையையும் வன்முறையையும் எதிர்நோக்குகையில், அதைக் கையாளற்குரிய விரிந்த அரசியல் நோக்கும் அணுகுமுறையும் முஸ்லிம் தலைமைகட்கு வாய்க்கவில்லை.

முஸ்லிம் சமூகம் இவ்வாறு பிற சமூகங்களிடமிருந்து தனிமைப்படவும் தனக்குள்ளேயே பிளவுண்ணவும் காரணங்களைச் சுருங்கக் கூறின்:

I. சவூதி அராபியாவின் ஆழமான பொருளாதார ஊடுருவல்.

II. சவூதி முகவர்களாக இயங்கிய இஸ்லாமியத் தூய்மைவாதிகள் முஸ்லிம் சமூகத்தின் மீது அராபியப் பண்பாட்டைத் திணித்தமை.

III. நாட்டின் அரசியலில் பேரினவாத எழுச்சியும் அதையொட்டித் தமிழ்க் குறுந்தேசியவாத எழுச்சியும்.

IV. முஸ்லிம் அடையாள அரசியல் தேர்தல் இலக்குடன் செயற்பட்டமையும் முஸ்லிம் தேசிய இனத்தின் பிரச்சனைகளை நாடாளவிய நோக்கிற் கருதத் தவறியமையும்.

V. இடதுசாரி இயக்கத்தில் முஸ்லிம்களின் பங்குபற்றல் ஓய்ந்தமை. (இதற்கு இடதுசாரி இயக்கம் 1970 -களின் போது கண்ட நலிவும் பேரினவாதத்தினதும் தமிழ்க் குறுந்தேசியத்தினதும் எழுச்சியும் பங்களித்தன.)

முஸ்லிம்கள் ஒரு தேசிய இனமென வலியுறுத்திய புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, முஸ்லிம்களை அவ்வாறு அடையாளப்படுத்தி அவ்வடிப்படையில் முஸ்லிம்களின் தேசிய உரிமைகட்காகப் போராடுவதன் மூலமே முஸ்லிம்கள் நடுவே இஸ்லாமியத் தீவிரவாதம் பரவுவதைத் தவிர்க்க இயலும் என விளக்கியது. இவ்விடயத்தில் முஸ்லிம்களின் தனித்துவத்தை ஏற்க மறுத்த தமிழ்த் தேசியவாதமும் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் சந்தர்ப்பவாதமும் பெருந் தவறிழைத்தன.

முஸ்லிம்கள் செறிவாக வாழும் பகுதிகளில் முஸ்லிம்களைத் தமிழரிடமிருந்து தனிமைப்படுத்தல் மூலம் தமது வாக்கு வங்கிகளை வளர்த்த முஸ்லிம் அரசியல்வாதிகட்குத், தென்னிலங்கையில் மொழி, பண்பாட்டு உரிமைகளும் ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்படும் முஸ்லிம்களின் பிரச்சனைகள் பற்றிய அக்கறை துளியும் இருக்கவில்லை.

தென்னிலங்கை முஸ்லிம் பிரமுகர்கட்கு யாருடன் கூட்டுச் சேர்ந்தால் பாராளுமன்றப் பதவிகளையும் அமைச்சர் பதவிகளையும் பெறலாம் என்பதை விட வேறு கவனம் இருக்கவில்லை.

எனவே இலங்கையில் முஸ்லிம்களின் சுயநிர்ணயமும் சுயாட்சியும் பற்றிய அக்கறைக்குப் பதிலாக, குறிப்பிட்ட சில பிரதேசங்களில் தமது அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கும் தனிப்பட்ட சலுகைகளைப் பெறுவதற்கும் மட்டுமே முஸ்லிம் அரசியல் சக்திகள் முயன்றன.

அண்மைய முஸ்லிம் விரோத அலை

இப் பின்புலத்தில், 2002 -ஆம் ஆண்டு மாவனல்ல தாக்குதலின் பின் அடுத்தடுத்து நிகழ்ந்த முஸ்லிம் வணிக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், முஸ்லிம் வணிகர்களைப் புறக்கணிக்கும் பிரசாரம், ஹலால் மாமிச விற்பனையை முஸ்லிம்கட்கெதிரான பிரசாரமாக்கியமை, பொது இடங்களில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் நிந்தித்தல் ஆதிய துன்புறுத்தல்கள் வலுத்தன.

குறிப்பாக ராஜபக்ச ஆட்சியில் போர் உச்சத்தை எட்டிய சூழலில் வலுவடைந்த பொது பல சேன, சிஹல ராவய, ராவண பலய அமைப்புகள் முஸ்லிம் விரோதத்ததைச் சிங்கள இளைஞர்களிடையே பரப்பின. ஜூன் 2014 -இல் உச்சத்தை எட்டிய முஸ்லிம் விரோதம் அளுத்தகமவில் முஸ்லிம் விரோத வெறியாட்டமாக வெளிப்பட்டது. அதிற் பங்குபற்றியவர்களையும் அதைத் தூண்டியவர்களையும் தண்டிக்க ராஜபக்ச அரசாங்கம் விரும்பாமை 2015 -ஆம் ஆண்டு சனாதிபதித் தேர்தலில் ராஜபக்சவின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமானது.

முஸ்லிம்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த சனாதிபதி சிரிசேனவோ யூ.என்.பி.‒ஸ்ரீ.ல.சு.க அரசாங்கமோ குற்றவாளிகளைத் தண்டிக்கத் துணியவில்லை. அதைவிட, ரக்பி கால்பந்தாட்ட வீரர் தாஜுடீன் கொலை விசாரணையைத் தேர்தல் பிரசாரத்திற் பாவித்த யூ.என்.பி. பின்பு அந்த விசாரணையை இழுத்தடித்தமை போன்ற விடயங்கள் முஸ்லிம்களிடையே அதிருப்தியை வளர்த்தது.

முஸ்லிம்கட்கெதிரான மதத் துவேஷகள் தண்டிக்கப்படாமை பௌத்த‒சிங்கள வெறியர்கட்குத் துணிவூட்டியது. முஸ்லிம்கட்கு எதிரான பொய்ப் பிரசாரங்கள் மூலம் 2018 பெப்ரவரியில் அம்பாறையிலும் அடுத்து கண்டியிலும் நடந்த வெறியாட்டத்தை உடனடியாகக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறியமையும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடாமையும் முஸ்லிம் சமூகத்தை மேலும் வருத்தியது.

இத்தனைக்கும் நடுவே, முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வழமை போல பதவிகளை இறுகப் பற்றிக் கொண்டு சடங்காக அறிக்கைகளை விடுத்து மனநிறைவு கொண்டனர்.

ஐ.எஸ்.ஸின் கவர்ச்சி

அளுத்கம நிகழ்வுகளின் பின் முஸ்லிம் இளைஞர்களிற் கணிசமானோரிடம் ஏற்பட்ட மனக் கொதிப்பு அவர்களைத் தீவிரவாதத்தை நோக்கி உந்தியது. இக் காலத்தில் அமெரிக்க‒சவூதி ஆதரவுடன் சிரியாவில் வேர்கொண்ட இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.) வேகமாக வளர்ந்தது. சிரிய அரசாங்கத்தைக் கவிழ்க்க சவூதி அராபியா, கட்டார், துருக்கி ஆகிய நாடுகள் வெவ்வேறு நோக்கங்களுடனும் அமெரிக்க ஊக்குவிப்போடும் 2011 முதல் நேரடியாகச் செயற்பட்டன.

அவற்றின் ஆதரவுடைய போராளிகள் வெல்லத் தவறிய நிலையில், 2013 -இல் உருவான ஐ.எஸ். சர்வதேச மட்டத்தில் தன் இஸ்லாமியப் படைக்கு ஆட்களைத் திரட்டியது. அமெரிக்காவும், சவூதி அராபியாவும், கட்டாரும், துருக்கியும் ஐ.எஸ்.ஸை ஆதரித்தன.

ஐ.எஸ்.ஸிற்கான நிதி சவூதி அராபியா, கட்டார் உட்பட்ட நாடுகளிலிருந்தும் சிரியாவிற் களவாடிய எண்ணெயைத் துருக்கிக்கு அனுப்பியும் தீவிரவாத ஆதரவு நிறுவனங்களிடமிருந்தும் கிடைத்தது.

முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் எல்லாவற்றிலும் ஐ.எஸ். வேரூன்றாமை கவனிக்கத்தக்கது. எனினும் முஸ்லிம்கள் ஒரு சமூகமாக வாழும் நாடுகள் பலவற்றிலிருந்தும் ஐ.எஸ். ஆட்களைத் திரட்டியது. ஐரோப்பாவில் இஸ்லாமிய விரோதத்திற்கு முகங்கொடுத்த முஸ்லிம்கள் தொட்டு ஆசிய நாடுகளின் அதிருப்தியுற்ற முஸ்லிம்கள் வரை ஏலவே இஸ்லாமிய அடிப்படைவாத ஈர்ப்புக்கு உட்பட்டிருந்தனர். அவர்களிடையே அல் கைடா போன்ற இயக்கங்களிலும் பிற போராளி அமைப்புகளிலும் இணைந்தோரை விட ஐ.எஸ்.ஸில் இணைந்தோரின் தொகை அதிகம். காரணம், ஐ.எஸ்.ஸின் வெற்றியின் கவர்ச்சி. குறுங்காலத்திற் தனக்கென ஒரு பெரிய பிரதேசத்தை உருவாக்கிய ஐ.எஸ். ஒரு இஸ்லாமிய அரசை (கலிபா ஆட்சியை) அறிவித்தது.

2017 -இல் அதன் பிரதேசம் துரிதமாகச் சுருங்கியதோடு அதன் பெருமை மங்கியது. அதில் இணைந்த போராளிகள் தமது நாடுகட்கு மீள இயலாதபோது வேறு நாடுகளின் தீவிரவாத அமைப்புகளில் இடம் தேடினர். பலர் அரசியலிலிருந்து ஒதுங்கினர். சிலர் தமது மதச் செயற்பாடுகளை மட்டும் தொடர்ந்தனர்.

இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதம் சென்ற நூற்றாண்டின் இறுதிப் பகுதியிற் தொடங்கியதையும் அதன் பிரதான ஆதரவுத் தளம் சவூதி அராபியா என்பதையும் 2013 -க்குப் பின்பே இலங்கையில் ஐ.எஸ். தோன்றியதையும் கருத்திற் கொள்ளத் தகும்.

இலங்கையில் ஒரு பயங்கரவாதக் குழுவின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் பின்புலமாகவுள்ள புறக்காரணிகளுள் ஐ.எஸ். மட்டுமன்றி சவூதி அராபிய, அமெரிக்க முகவரகங்களும் அடங்கும். ஆனால்; அதன் தளம் உள்ளூர் முஸ்லிம்களைக் கொண்டது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முன்னெடுத்த சலாஃபி‒வஹாபி குழுக்கள் போக, முஸ்லிம் அரசியல்வாதிகள் பற்றி விரக்தியுற்றோர், குறிப்பாக இளையோர், இவ் வன்முறைப் போக்கில் இணைந்தனர்.

ஐ.எஸ். இலங்கையில் வேர்கொள்வதை சவுதியின் தீவிர மதவாத அமைப்புகள் ஊக்குவிக்க வாய்ப்பு மிக இருந்தது. பெருமளவான ஆயுதத் திரட்டலும் தற்கொலைப் படைப் பயிற்சியும் ஐ.எஸ். தூண்டுதலாலோ துணையோடோ நடந்ததென்பது மிகச் சாத்தியம். மத்திய கிழக்கில் ஐ.எஸ். சந்தித்த தோல்வியும் எதிர்நோக்கும் பேரழிவும் ஐ.எஸ்.ஸின் கலிபாப் பேரரசுக்கு முடிவுகட்டிய பின், ஐ.எஸ். தலைமை இலங்கைக்கென ஒரு வேலைத் திட்டத்தைக் கொண்டிருந்தது என்பது கடினம்.

தாக்குதலின் நோக்கம்

இத் தாக்குதல்கள் பற்றி மேலும் விளக்கம் தேவைப்படும் சில கேள்விகள் உள்ளன.

I. இத் தாக்குதல் ஏன் கத்தோலிக்கர்களைக் குறிவைத்தது?

II. தாக்குதல் முயற்சிகள் யாவும் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றிருந்தாலும் இவ்வாறான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தும் வாய்ப்போ சூழலோ இருந்ததா?

III. தாக்குதல் பற்றி எவ்வளவு தகவல்கள் இந்திய உளவு நிறுவனங்கட்குத் தெரிந்திருந்தன?

IV. இந்திய உளவு நிறுவனங்கள் தகவல்களை ஏன் இடைநிலை மட்டத்திற் பரிமாறின?

V. தகவல்களை அறிந்த உயர்மட்ட அதிகாரிகளும் அரசியல், அரசாங்கத் தலைவர்களும் யார்? அவர்கள் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை?

இந்திய உளவுத் தகவல்கள் கிடைத்து, உடனடியாகச் செயற்பட்டிருப்பின் அறிந்த இலக்குகளைக் காப்பாற்றியிருக்கலாமே ஒழியத் தனிமனிதர்களாகவோ சிறு குழுக்களாகவோ செயற்பட்ட தற்கொலைக் குண்டுதாரிகள் இவ்வாறான தாக்குதலை மே தினம், வெசாக் போன்று இன்னும் அதிகமாக மக்கள் திரளும் நாட்களில் நடத்தியிருக்கலாம். ஏனெனிற் பயங்கரவாதிகளின் நோக்கம் கத்தோலிக்கர்களிற் சிலரையும் சுற்றுலாப் பயணிகள் சிலரையும் அழிப்பதைவிட விரிவானது என்றே தெரிகிறது.

விரிவான நீண்டகாலப் போராட்டத்துக்கு வாய்ப்புக் குறைவு என்பதோடு ஆக மிஞ்சி ஒரு சில இலக்குகள் மீது தற்கொலைத் தாக்குதல்களை விட அதிகம் இயலாத ஒரு வன்முறை அமைப்பு ஒரே நாளில் இவ்வளவு பெரிய உயிரழிவாலும் கணிசமான பொருளழிவாலும் சாதித்தது என்ன?

படிக்க :
♦ இஸ்லாமிய சர்வதேசியம் ஒரு மாயமான் !
♦ இசுலாமிய பயங்கரவாதமா ? இசுலாமியவாத பயங்கரவாதமா ?

உடனடி விளைவுகள் எனக் கூறக்கூடியன:

I. நாட்டில் அச்ச உணர்வை வலுப்படுத்திப் பாதுகாப்புத் தேவையை அரசாங்கம் வலியுறுத்தவும் அதன் பெயரில் அடக்குமுறைச் சட்டங்களைப் புகுத்தவும் வாய்ப்பு உருவானமை.

II. சமூகங்களிடையே சுமுக உறவைச் சீரழித்துப் பரஸ்பர ஐயத்தை வலுப்படுத்தியமை. (குறிப்பாக முஸ்லிம் துவேஷ உணர்வைப் பரப்புவோரின் கைகளைப் பலப்படுத்தியமை.)

III. இலங்கையில் நுழையக் காத்திருக்கும் அந்நிய மேலாதிக்கச் சக்திகள், முக்கியமாக அமெரிக்கா அடுத்து இந்தியா, நாட்டின் பாதுகாப்பை முன்னிறுத்திப் படைத் தளங்களை நிறுவவோ வேறு வகையிலோ இராணுவ உறவுகளை வலுப்படுத்த ஊக்குவிப்பு.

IV. முஸ்லிம்களின் இருப்பைச் சமூகத்தளத்திலும் பொருளாதாரத் தளத்திலும் மிரட்டலுக்குட்படுத்தல்.

V. குறுகிய‒இடைக்கால நோக்கில் நாட்டின் பொருளாதார நெருக்கடியை மோசமாக்கல்.

எனவே இத் தாக்குதல்களின் மூலம் நலனடையும் சக்திகள் எவை என நாம் கவனிக்கவேண்டும். ஐ.எஸ். மட்டுமே அவற்றுடன் தொடர்புடைய அயற் சக்தி என்று விடயத்தை எளிதாக விளக்க இயலாது.

ஐ.எஸ். யாருடைய கருவி என்பது போக, தேசிய தௌஹிட் ஜமாத்தை (NTJ) ஜமாத்தெய் மில்லத்து இப்ராஹிம் (JMI) ஆகியவற்றை ஐ.எஸ். வழிநடத்தியது என்று சொல்லி அவற்றைப் பயன்படுத்தக் கூடிய வேறு சர்வதேச நிறுவனங்களைப் புறக்கணிக்கலாகாது. ஏனெனில் பயங்கரவாத இயக்கங்களை எதிர்த்துப் போரிடுவதாக அறிவிக்கும் அமெரிக்கா அதே பயங்கரவாத இயக்கங்களைத் தனக்குக் கீழ்படிய மறுக்கும் ஆட்சிகளைக் கவிழ்க்கப் பயன்படுத்துகிறது.

இத் தாக்குதல்கள் பற்றிய விவரங்களை நுணுக்கமாக இந்திய உளவுத்துறை அறிந்து இலங்கைக்குத் தகவல் வழங்கியதாயும் அவை மேலிடத்துக்குப் போகத் தவறியதாயும் மாறிமாறிக் குற்றச்சாட்டுகளைப் பரிமாறும் அதே வேளை, என்ன தகவல்கள் என்றும் யார் எதை யாருக்கு எவ்வாறு வழங்கினர் என்றும் விவரமறிய மக்களுக்கு உரிமையுண்டு. அவ் விவரங்களை இதுவரை வழங்காமை விசாரிக்கத் தக்கது.

பின் விளைவுகளும் எதிர்காலமும்

தேடுதல்களின் போக்கில் இந் நிகழ்வுடன் தொடர்புள்ளவர்கள் மட்டுமன்றித் தொடர்பற்ற பலரும் கைதாகின்றனர். ஒவ்வொரு முஸ்லிமையும் சந்தேகத்துக்குரியவராகவும் ஒவ்வொரு பள்ளிவாசலையும் மதராசாவையும் பயங்கரவாதப் பாசறையாகவும் நோக்கும் போக்கு வலுத்துள்ளது.

இப் போக்குத் தொடர்வது நாட்டின் சமூகங்களின் ஒற்றுமைக்கு நல்லதல்ல. முஸ்லிம்கட்கு எதிரான பாரபட்சம் வலுத்தால்; அதன் பயனான அதிருப்தி நாட்டை எங்கு கொண்டு செல்லும் என நாம் சிந்திக்க வேண்டும்.

ஏற்கெனவே நாட்டின் பாதுகாப்பின் பெயரில் அடக்குமுறைச் சட்டங்களை நிறைவேற்றும் முயற்சிகள் துரிதமாகின்றன. பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் ஒழிப்பது என்ற பெயரில் மக்களின் நியாயமான பேராட்டங்கட்குத் தீவிரவாத முத்திரை குத்தியும் அரச வன்முறைக்கெதிரான மக்களின் தற்காப்பு முயற்சிகட்குப் பயங்கரவாத முத்திரை குத்தியும் மக்களை அடக்கும் முயற்சிகள் பற்றி மக்கள் விழிப்போடிருக்க வேண்டும்.

ஆயுதப் போராட்டத்தை ஏற்கும் புரட்சிவாதிகள் புரட்சிகர வன்முறைக்கும் எதிர்ப்-புரட்சிகர வன்முறைக்கும் வேறுபாட்டை அறிவர். தமது போராட்டங்கள் மக்களைத் துன்புறுத்துவதை நிராகரிக்கும் அதேவேளை, ஆளும் வர்க்க ஒடுக்குமுறைக்கும் அரச பயங்கரவாதத்திற்கும் எதிராக மக்கள் ஆயுதம் ஏந்துவதை மக்களின் அடிப்படை உரிமையாக அவர்கள் ஏற்கின்றனர். ஆனாற் தனிமனிதப் பயங்கரச் செயல்களையும் வலிந்து மக்களைத் துன்புறுத்தும் வெறிச் செயல்களையும் அவர்கள் எதிர்க்கின்றனர். மக்கள் விரோத ஆட்சியை மாற்றி அதனிடத்தில் மக்களாட்சியைக் கொண்டுவரும் அரசியல் தீவிரவாதமல்ல.

இன்று முக்கியமான விடயம் தேசிய இனங்களின் ஒற்றுமை. குறிப்பாக, உழைக்கும் மக்கள் இன வேறுபாடு கடந்து இணைந்து செயற்படல். குறுந் தேசியவாதத் தலைமைகளும் பேரினவாதக் கட்சிகளும் அதைச் செய்யத் தகுதியற்றவை.

தேர்தல் அரசியலுக்காக இன உணர்வுகளைக் கிளறிப் பகையைத் தூண்டுவோர் மேலோட்டமாகவே ஒற்றுமையைப் பேசுவர். அதன் கீழ், இனப்பகை நீறுபூத்த நெருப்பாகக் கனலும். மதத் தலைவர்கள் மேடையேறி மத நல்லிணக்கம் பற்றிப் பேசினும் கீழ் மட்டங்களில் சமூகங்களின் இணக்கப்பாட்டுக்குச் செயலாற்ற வல்லோரல்ல.

படிக்க :
♦ ஒரு விரல் புரட்சியால் ஈரானிடம் எண்ணெய் வாங்க முடியுமா ?
♦ ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு ! உண்மையா ? பொய்யா ?

மத நிறுவனங்களிற் செல்வாக்குள்ள மேட்டுக்குடிகளின் நலன்கட்கு மாறாக எந்த மதத் தலைமையும் செயற்பட்டதில்லை. கீழ் மட்டங்களில் உள்ள மதகுருமார் மதஞ்சாராத சமூக‒அரசியல் அமைப்புகளில் பங்குபற்றினால் அவர்களால் மதத் தலைவர்கள் என்போரை விட அதிகம் செய்ய இயலும். ஆயினும் மக்களிடையே மூடநம்பிக்கைகளையும் மூடிய சிந்தனையையும் ஊக்குவிக்கும் மதகுருமார் பற்றி மக்கள் விழிப்புறுவது அவசியம்.

வரலாற்று நோக்கில் இலங்கையின் அனைத்துத் தேசிய இனங்களையும் அணைத்துச் செயற்பட்ட பெருமை இடதுசாரி இயக்கத்தினது. தேர்தல் அரசியல் தொடங்கிய நாள் முதல் முதலாளியக் கட்சிகள் இன அடிப்படையிலேயே இயங்கியுள்ளன. தேர்தல் அரசியல் பாராளுமன்ற இடதுசாரிகளைப் பேரினவாதிகளுடன் சமரசஞ் செய்யத் தூண்டியது. அவர்கள் வேறுபடுமளவுக்குப் பேரினவாத ஒடுக்கலுக்குத் துணைபோன போதும் அப்பட்டமான இனத் துவேஷ அரசியலில் இறங்கியோர் வெகு சிலரே.

இடதுசாரி முகமூடியுடன் தொடங்கிய ஜே.வி.பி. பேரினவாதத்தை முதன்மைப்படுத்தியே தன்னை வளர்த்தது. போரின் முடிவு வரை, அதன் பேரினவாத அணுகுமுறை வலுவாயிருந்தது. இப்போது பேரினவாதத்தின் மூலம் அதிகஞ் சாதிக்க இயலாமையால் பேரினவாதத்தை அடக்கி வாசித்தாலும் அதன் கொள்கைகள் இன்னமும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றிச் சரியான புரிதல் அற்றவை.

பல முஸ்லிம்கள் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்குப் பலியாகவும் முஸ்லிம்கள் தம்மைப் பிற சமூகங்களினின்று தனிமைப்படுத்தவும் முக்கியமான ஒரு காரணம் இடதுசாரி அரசியலின் நலிவு. இன்று தமிழ்த் தேசியவாதமும் இந்து மதவாதப் போக்குகளின் விளைவான முரண்பாடுகளையும் பிளவுகளையும் எதிர்நோக்குகிறது.

இந்தியாவில் மதவாத அரசியல் இந்துத்துவமாக வெளிப்பட்ட பின், 1980-கள் தொட்டு இந்துத்துவம் தமிழ்ச் சமூகத்தை ஊடுருவி முஸ்லிம், கிறிஸ்தவத் துவேஷத்தை வளர்த்துள்ளது. போரின் முடிவோடு துரித வளர்ச்சி கண்ட இந்துத்துவம் பவுத்த மதவெறியர்களுடன் இணக்கங் காணத் துடிக்கிறது. ஏட்டிக்குப் போட்டியாக நடக்கும் சினமூட்டல்கள் பற்றி மக்களை விழிப்பூட்டும் பணி நம் முன்னுள்ளது.

மதவாத அரசியல் மக்களைப் பிரித்து முதலாளியத்தினதும் ஏகாதிபத்தியத்தினதுங் கைகளை வலுப்படுத்தியுள்ளது. நாட்டை மதவாதத்தினின்று காப்பாற்ற அரசை மதச்சார்பற்றதாக்க வேண்டும். நேபாளத்தின் இந்து முடியரசைப் பிரதேச சுயாட்சிகளைக் கொண்ட மதச்சார்பற்ற அரசாக மாற்றிய நேபாள அரசியல் யாப்பிற் குறைபாடுகள் இருப்பினும், மதச் சார்பின்மையும் அதிகாரப் பரவலாக்கமும் நேபாளத்தின் சமூக ஒற்றுமைக்கு உதவுவன. அதன் பாடங்களை நாம் கற்க வேண்டும்.

சிதறிக் கிடக்கும் போராளிகட்கான ஒரு வேலைத்திட்டம் இல்லாத நிலையில் அவர்கள் உதிரிகளாகச் செயற்படவும் பிற மதவாத அமைப்புகளில் இணையவும் வாய்ப்புண்டு. எனவே மதத் தீவிரவாதத்தினின்று அவர்களை மீட்பது அவசியம். அதில் முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமன்றிப் பிற சமூகங்கட்கும் பொறுப்புண்டு.

தேர்தல் அரசியலுக்குப் பலியாகாது, குறுகிய இன அடையாள வற்புறுத்தலைப் பகிரங்கமாக நிராகரிக்கும் சமூக‒அரசியல் சக்திகள் மட்டுமே தேசிய இனங்களின் ஒற்றுமைக்கு வழிகாட்டித் தலைமை தாங்க வல்லன.

இப்போது, ஏப்ரல் 21 -இன் துன்ப நிகழ்வுகளை மறந்து அரசியல் ஆதாயந் தேடுவதிலேயே பாராளுமன்ற அரசியற் கட்சிகளும் தலைவர்களும் குறியாயுள்ளனர். நாட்டின் அவலத்தைப் பாவித்து ஊடுருவ ஏகாதிபத்தியமும் பிராந்திய மேலாதிக்கவாதிகளும் துடிக்கின்றனர்.

அடக்குமுறைச் சட்டங்களை நிறைவேற்றியும் அரச இயந்திரத்தை மேலும் வலுவாக ஆயுதபாணியாக்கியும் மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கும் முதலாளிய, ஏகாதிபத்திய நோக்கங்கள் அறவே மக்கள் விரோதமானவை.

எனவே நேர்மையான இடதுசாரிகளின் முன்னுள்ள பணி பாரியது. அரசியலை மக்கள்மயப்படுத்தி ஒரு புரட்சிகர வெகுஜன இயக்கத்தைக் கட்டியெழுப்பல் மூலமே, மக்கள் விரோத அரசையும் அதன் ஏகாதிபத்திய எசமான்களையும் அவர்கட்கு மறைமுகமாக உதவும் அனைத்து மதத் தீவிரவாதிகளையும் முறியடிக்க இயலும். இத்தகைய மக்கள் சார்பு இடதுசாரி இயக்கங்களுடன் மக்கள் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும்.

வெளியீடு :
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி,
இலங்கை.

ஒரு விரல் புரட்சியால் ஈரானிடம் எண்ணெய் வாங்க முடியுமா ?

ஒரு விரல் புரட்சி செய்தால் அமெரிக்க உத்தரவை மீறி ஈரானிடன் கச்சா எண்ணெய் வாங்க முடியுமா ?

பிஜேபி ஆதரவாளர்கள் கிட்ட கேட்டா, எங்க தலைவர் வீராதி வீரன் சூராதி சூரன், ‘அவர் சிவந்த கண்களை காட்டினால் போதும் அதை பார்த்து இந்த லோகத்துல இருக்கற அனைத்து தலைவர்களும் நடுங்குவாங்க’ன்னு எல்லாம் அடிச்சு விடுவாங்க.

பிஜேபி-காரர்கள் இப்படி என்றால், தேர்தல் வந்துவிட்டதால் மற்ற கட்சிக்காரர்கள் எல்லாம் சொல்வது ஒன்றே ஒன்றை தான், அதுதான் ‘ஒரு விரல் புரட்சி’ – தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடலாம், அதனால் ஓட்டு போடுங்கள்!

எப்போதும் போல, உண்மை இவர்கள் சொல்வதற்கு நேர்மாறாக இருக்கிறது!

மே 2019 முதல் இந்தியா ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி மறுத்துவிட்டது என்று செய்திகள் வருகின்றன. நமக்கு இயல்பாக எழும் கேள்வி /  எழவேண்டிய கேள்வி, ‘இந்தியா ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவால் எவ்வாறு தடை செய்ய முடியும்?’ என்பதுதான்.

இதை புரிந்துகொள்ள கொஞ்சம் பின் நோக்கி செல்ல வேண்டும்.
அதற்கு முன் சில தகவல்கள். இந்தியா தனது பெட்ரோலிய தேவைகளை இறக்குமதி செய்துதான் பூர்த்தி செய்கிறது என்று நமக்கு தெரியும். சுமார் 80 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்ட பெட்ரோலிய பொருட்களையே நாம் உபயோகிக்கிறோம். இதில் 10-12 சதவீதம் ஈரானில் இருந்து இறக்குமதி செய்வதாகும்.

ஒபாமா அதிபராக இருந்த சமயத்தில், ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று கூறி அமெரிக்கா ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்தது. பொருளாதாரத் தடையால் அத்தியாவிசய பொருட்களை இறக்குமதி செய்வதில் ஈரான் மிகவும் சிரமப்பட்டது. மற்ற நாடுகளின் அழுத்தத்தாலும் ஈரான் கொஞ்சம் விட்டுக்கொடுக்க முன்வந்ததாலும் ஒபாமா அவருடைய பதவியின் இறுதி காலத்தில் ஈரானுடன் அணு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டார்; ஈரான் மீதான பொருளாதார தடை நீக்கப்பட்டது. ஈரானும் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியை கைவிடுவதாக உத்தரவாதம் அளித்தது. திருவாளர் டிரம்ப் அதிபராகும் வரை எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தது!

டிரம்ப் பிரச்சாரத்தின்போதே ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை முறிக்கப்போவதாக பேசி வந்தார். பதவி ஏற்று ஒரு ஆண்டிற்கு பிறகு, மே 2018-ல், ஒருதலைப்பட்சமாக அந்த ஒப்பந்தத்தை முறித்து, ஈரான் மீது பொருளாதாரத் தடையும் விதித்தார்.

படிக்க:
♦ ஈரான் கச்சா எண்ணெய் : அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்த மோடி அரசு!
♦ ஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்!

விதித்தால் விதிக்கிறார்கள், அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனைக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்?

அமெரிக்கா ஈரான் மீது பொருளாதார தடை விதித்ததால் இந்தியாவையும் ஈரானிடம் இருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்க கூடாது என்று சொல்கிறது.
‘நீ யாருடா நான் எங்க, என்ன வாங்கணும்னு சொல்றதுக்கு?’ என்று இந்தியாவால் சொல்ல முடியவில்லை. ஏனென்றால், இந்தியா டாலர் கொடுத்துதான் எண்ணெய் வாங்குகிறது. அந்த டாலர்களை எல்லாம் அமெரிக்கன் வங்கிகள் வழியாகத்தான் ஈரானுக்கு கொடுக்க முடியும். அந்த வங்கிகள் பொருளாதார தடையினால் அந்தச் சேவையை செய்ய முடியாது என்று சொன்னார்கள்.

2-3 வருடங்களுக்கு முன், ஒபாமா ஆட்சி காலத்தில் ஈரான் மீது பொருளாதார தடை இருந்தபொழுதும், இதே பிரச்சனை வந்தது. அப்பொழுது, இந்தியாவிடம் ரூபாயிலேயே பணம் பெற்றுக்கொள்வதாக ஈரான் சொன்னது. இந்தியாவும் ஈரான் பெட்ரோல் ஏற்றுமதி நிறுவனங்களை இந்திய வங்கி ஒன்றில் கணக்கு துவங்க சொல்லி அந்த வங்கிக் கணக்கில் இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலுக்கான பணத்தைச் செலுத்தி வந்தார்கள். ஈரான் அந்த ரூபாய் பணத்தை வைத்து இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு பணம் செலுத்தி வந்தது.

இந்த ஏற்பாடு மே 2018-ல் டிரம்ப் பொருளாதார தடை விதித்த பொழுது வேலை செய்யாமல் போய்விட்டது. ஏனென்றால், ஒபாமா ஆட்சியின் பொருளாதார தடையின்போதே அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியாத மாதிரி ஒரே ஒரு இந்திய வங்கிதான் இருந்தது. ‘அமெரிக்க பொருளாதார தடை இந்திய வங்கியை எப்படி கட்டுப்படுத்தும்’ என்று சந்தேகம் வருகிறதா? வரவேண்டும்!

பெரும்பாலான இந்திய வங்கிகள், அமெரிக்காவில் கிளைகள் வைத்திருப்பது மட்டுமல்லாமல் டாலரில் பரிவர்தனைகளும் சொத்துக்களும் வைத்திருப்பார்கள். இப்படிப்பட்ட வங்கிகளின் டாலர் சேவைகளை அமெரிக்க அரசால் முடக்க முடியும். ஈரானுடன் பரிவர்த்தனை செய்யும் எந்த ஒரு நிறுவனத்தையும் அமெரிக்க அரசாங்கம் முடக்க முயற்சி செய்யும்.

கடந்த முறை இருந்த ஏற்பாட்டில் யூகோ வங்கி என்ற ஒரு வங்கிக்கு அமெரிக்க சொத்துக்களோ சேவைகளோ எதுவும் இல்லாமல் இருந்ததால் அந்த வங்கியை உபயோகப் படுத்தி ரூபாயில் ஈரானுக்கு பணம் செலுத்த முடிந்தது. ஆனால் இந்த முறை, யூகோ வங்கிக்கும் அமெரிக்க சொத்துக்கள் இருப்பதால் ஒரு வழியும் இல்லாமல் நிற்கிறது இந்திய அரசாங்கம்.

பணம் செலுத்துவது போக, எண்ணெயை ஏற்றி வரும் கப்பல், அந்த கப்பலுக்கு காப்பீடு வழங்கும் காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றை அமெரிக்காவால் எளிதாக கட்டுப்படுத்த முடியும். பொருளாதாரத் தடை விதித்த பின், ஈரானுடன் எந்த விதத்தில் சம்பந்தப்பட்டாலும் சம்பந்தப்படும் நிறுவனத்தை அமெரிக்காவில் செயல்பட அனுமதிக்காது. எண்ணெய் கப்பல் நிறுவனங்களும், அதற்குக் காப்பீடு வழங்கும் நிறுவனங்களும் உலகத்திலேயே மிகக் குறைவாகத் தான் இருக்கும், அவற்றுக்கும் அமெரிக்காவுடனான வியாபாரம்தான் முதன்மையானதாக இருக்கும். இவ்வாறிருக்க அமெரிக்கா எளிதில் கட்டுப்படுத்தி விடுகிறது.

படிக்க:
♦ “ராடாரேந்திர மோடி !” – மோடியை வறுத்தெடுத்த வலைத்தளவாசிகள் !
♦ தேர்தல் – 2019 : அரசுக் கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு | மக்கள் அதிகாரம்

இவை அனைத்தையும் சரி செய்துதான், ஒபாமா ஆட்சிக் காலத்தில் இந்திய அரசு ஈரானிடம் எண்ணெய் வாங்கியது என்பது வேறு கதை.

இந்த நிலையில், ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை திடீர் என்று நிறுத்தினால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவோம்; அதனால் எங்களுக்கு விலக்கு வேண்டும் என்று இந்திய அரசு அமெரிக்காவிடம் கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து 6 மாதத்திற்குள் ஈரானிடமிருந்து இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்திவிட வேண்டும் என்று அமெரிக்கா விலக்கு வழங்கியது. அந்த 6 மாத விலக்கு ஏப்ரல் 2019-உடன் முடிவுக்கு வந்தது. விலக்கை நீட்டிக்குமாறு இந்தியா விடுத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்தது.

ஈரானுக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவை பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். 1947-ல் இந்தியாவில் சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்குமாறு மேற்கத்திய நிறுவனங்களான ஷெல் (Shell), கால்டெக்ஸ் (caltex) போன்றவற்றிடம் இந்திய அரசு கேட்ட பொழுது அந்த நிறுவனங்கள் மறுத்துவிட்டன. அதன் பிறகு, 1960-களில் ஈரானுடன் இணைந்துதான் இந்தியாவில் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட்டது. அப்போது இந்தியாவுக்கு உதவியது ஈரான்! அப்படி வலுவாக இருந்த உறவு இப்போது எப்படி இருக்கிறதென்று பாருங்கள்!

விலக்கு நீட்டிப்பு கேட்ட பொழுது, விலக்கை நீட்டிக்கவில்லை என்றால் இந்தியா அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டி இருக்கும் என்று இந்தியா அமெரிக்காவிடம் வாதிட்டது, முறையிட்டது. அதற்கு ‘இந்தியா அமெரிக்காவிடம் இருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்கலாம்’ என்று அமெரிக்கா பதிலளித்தது. ஆனால், இந்த உத்தரவாதமும் இப்போது காற்றில் பறந்துவிட்டது. கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை அதிகமாகிறது அமெரிக்கா விற்கும் விலையை குறைக்க வேண்டும் என்று இந்தியா கேட்ட பொழுது, தனியார் நிறுவனங்களை இந்த விலைக்கு தான் விற்க வேண்டும் என்று எங்களால் வற்புறுத்த முடியாது என்று அமெரிக்க வர்த்தக அமைச்சர் தெரிவித்துவிட்டார் என்று செய்திகள் வந்தன.

இன்னும் சில முக்கிய செய்திகளும் வந்தன. இந்தியா அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2017-18 உடன் ஒப்பிடும் பொழுது 2018-19-ல் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவு நான்கு  மடங்கு அதிகரித்துள்ளது.
குறைந்த விலையில் இரானிடம் எண்ணெய் வாங்குவதற்கு பதிலாக அதிக விலையாக இருந்தாலும் தன்னிடம்தான் வாங்க வேண்டும் என்பது அமெரிக்கா ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கிறது என்று புருடா விடுவதற்கு ஒரு காரணம்.  இதற்குமேல் வெளிப்படையாக இருக்கவும் முடியாது.

இது ‘பாவப்பட்ட’ ஏழைகளை பாதிக்கின்ற விஷயமோ, இன்னும் 10 ஆண்டுகள் கழித்து பாதிக்கக்கூடிய விஷயமோ அல்ல, அடுத்த முறை பெட்ரோல் பங்க் செல்லும்போது நம்மை நேரடியாக பாதிக்கப்போகும் விஷயம்.

இந்த பிரச்சனை போல பல பிரச்சனைகளுக்கு நமக்கு கொடுக்கப்படும் ஒரே மாத்திரை – ‘ஓட்டு’. ஒரு ஓட்டு போட்டால் இது போன்ற அனைத்து பிரச்சனைகளை பற்றியும் நாம் மறந்துவிடலாம் என்று நமக்கு போதிக்கப்படுகிறது. அமெரிக்கா, இந்தியாவை மட்டுமல்ல – நம்மைப் போன்ற பல நாடுகளை காலனி போல நடத்துகிறது, இதற்கு ஒரே ஓட்டு தீர்வு தந்துவிடும் என்று சொல்கிறார்கள்.

ஓட்டு போடுவதுடன் நமது பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா?

சும்மா ஊர்ல போஸ்டர் ஒட்டுறவன், பாட்டு பாடுறவன், சிலைக்கு மாலை போடுறவன், மனித உரிமைக்காக போராடுபவர்கள், தலித்துகளுக்காக போராடுபவர்கள், அரசின் திட்டங்களுக்கு எதிராக போராடுபவர்கள், எங்கள் மண்ணை, காட்டை, காற்றை நாசம் செய்யாதே என்று போராடுபவர்கள் – என இவர்கள் அனைவரையும் அரசு பிடித்து சிறையில் அடைக்கிறது.

என்ன காரணத்துக்காக சிறையில் அடைக்கிறது தெரியுமா? இவர்கள் நாட்டின் இறையாண்மைக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்றுச் சொல்லி சிறையில் அடைக்கிறது. இந்த இறையாண்மை என்றால் என்ன? ஒரு நாட்டுக்கு தன்னைத் தானே ஆளும் உரிமை என்பதுதான் இறையாண்மை. நாட்டு மக்கள் போஸ்டர் ஓட்டுவதால், பாடுவதால், போராடுவதால், இந்தியாவின் இறையாண்மைக்கு தீங்கு நடப்பதாக அரசு கூறுகிறது. இந்த சிறிய மனிதர்கள் இவ்வளவு பலம் கொண்ட அரசை என்ன செய்ய முடியும் என்று நீதிமன்றங்களும் கேட்பது இல்லை, நாமும் பெரும்பாலும் கேட்பது இல்லை.

உண்மை என்னவென்றால், இது போல் போராடும் சிறிய மனிதர்களால்தான் இந்தியாவின் இறையாண்மை மீட்கப்படுகிறது, காப்பாற்றப்படுகிறது. தூத்துக்குடியில் லண்டன் நிறுவனம் சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதாகட்டும், நியம்கிரியில் அதே நிறுவனம் காடுகளையும் மலைகளையும் அழிப்பதாகட்டும், ஒரிசாவில் கொரிய நாட்டை சேர்ந்த போஸ்கொ நிறுவனம் ஆதிவாசிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதாகட்டும், பல இடங்களில் வெளிநாடுகளில் இருந்து வரவிருந்த அணு உலைகளாகட்டும் – இவை அனைத்தையும் இந்திய அரசு தடுக்கவில்லை, எளிய மனிதர்களின் போராட்டங்கள்தான் தடுத்தன! போராட்டங்கள் தான் இறையாண்மையைக் காப்பாற்றின!

ஒரு விரல் புரட்சி செய்தாலும் செய்யாவிட்டாலும், போராட்டங்களே நம்மையும், நமது சந்ததிகளையும், இறையாண்மையையும் காப்பற்றும்!

செய்தி ஆதாரங்கள் :

– அருண் கார்த்திக்

இந்தியாவின் சிறந்த விஞ்ஞானி : செல்லூர் ராஜுவா ? மோடியா ? கருத்துக் கணிப்பு

வைகை அணையின் நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மோகோல் போட்டு பிரபலமானார் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு. அன்று முதல் தெர்மோகோல் ராஜு என்று தமிழகத்தால் அன்போடு அழைக்கப்படுகிறார். ஆனால் மோடியோ உலகப் புகழ் பெற்றுவிட்டார்.

1988-லேயே டிஜிட்டல் காமரா பயன்படுத்தியது, மின்னஞ்சல் அனுப்பியது போக, இந்த ஆண்டு நடந்த பாலகோட் தாக்குதலின் போது ஹாலிவுட் படங்கள் போல மோடிதான் தாக்குதலுக்கு தலைமை தாங்கியதும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எந்த நேரம் விமானங்களை அனுப்பலாம் என்று தளபதிகள் தலையை பிய்த்துக் கொண்ட போது, மேகங்கள் சூழ்ந்த அந்த நேரத்தில் அனுப்பினால் பாகிஸ்தான் ரேடார்களை ஏமாற்றி குண்டு போட்டுவிட்டு திரும்பி விடலாம் என்று சொல்லியிருக்கிறார் மோடி. உடனே விமானங்களும் மேகங்களில் மறைவாக பறந்து சென்று குண்டுகளைப் போட்டுவிட்டு திரும்பி விட்டன.

படிக்க:
♦ செயற்கை நுண்ணறிவு : அறிவியல் உலகில் அறம் சார்ந்த கேள்விகள் !
♦ ஸ்லீப்பர் செல் சங்கிகளின் நஞ்சு பரப்புத் தளமாகும் வாட்சப் குழுக்கள் !

மேகங்கள் ரேடாரை மறைத்து விடுமா என்றுஅறிவியல் உலகமே அதிர்ச்சியடைந்தாலும் மீம்கள் உலகம் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறது.

இன்றைய கேள்வி :

இந்தியாவின் சிறந்த விஞ்ஞானி யார் ?

  • செல்லூர் ராஜு
  • நரேந்திர மோடி

டிவிட்டரில் :

யூ-டியூபில் இங்கு அழுத்தி வாக்களிப்பீர்

நூல் அறிமுகம் : பிம்பச் சிறை (எம்.ஜி.ஆர் – திரையிலும் அரசியலிலும்)

நூல் அறிமுகம் : பிம்பச் சிறை (எம். ஜி. ராமச்சந்திரன் – திரையிலும் அரசியலிலும்)

ம்.ஜி.ராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்.) அவர்களின் சகாப்தத்தை நவீன கால அரசியல் புனைவாக இந்தப் புத்தகம் பகுத்து ஆய்கிறது. தமிழக அரசியலில் இதற்கு முன் எவரும் பெற்றிடாத செல்வாக்கை பெற்றிருந்த எம்.ஜி.ஆர். ‘தமிழ்நாட்டு ஏழைகளின் ஈடிணையில்லாத காவல் தெய்வம்’ என அவரின் ரசிகர்களால் புகழ்ந்துரைக்கப்பட்டவர். ‘அரசியல் கோமாளி’ என்று அவரின் எதிர்ப்பாளர்களால் வசைபாடவும்பட்டார். அவர் வாழ்நாளிலேயே ஜாம்பாவனாகத் திகழ்ந்தவர். ஏதேனும் அரசியல் அல்லது சொந்த சிக்கல்களில் எம்.ஜி.ஆர் சிக்கிக் கொண்டபோதெல்லாம் அவரின் நன்றிமிகுந்த ஆதரவாளர்கள் விருப்பத்தோடு தங்களின் உயிர்களை ஈந்தார்கள். அவரின் அரசியல் எதிரிகள் எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பின்னரும் அவரின் பெயர் பொதுமக்களிடையே உண்டாக்கும் உணர்ச்சிப்பெருக்கை கண்டு பயம்கொண்டார்கள்.

எம். ஜி. ஆர். எனும் ஆளுமையின் தாக்கத்தில் குறிப்பிடத்தகுந்த அம்சம் அவர்  வெறுமனே அரசியல் ஆளுமையாக மட்டுமல்லாமல் சினிமா நட்சத்திரமாகவும், அரசியல்வாதியாகவும் ஒரே சமயத்தில் திகழ்ந்தார் என்பதே ஆகும்…

… எம்.ஜி.ஆர். தாக்கத்தை உருவாக்கிய நிகழ்வுகள் பற்றிய கால வரிசையிலான வர்ணனையில் இந்நூல் ஈடுபடவில்லை. அதற்குப் பதிலாகப் பலதரப்பட்ட ஒன்றுக்கொன்று தொடர்புடைய பண்புக்கூறுகளை விவரித்து அவற்றை ஒன்று சேர்த்து கோர்வையான வர்ணனையின் மூலம் அவற்றுக்கு இடையே உள்ள தொடர்பை இந்நூல் நிறுவும். ஏன் எம்.ஜி.ஆர். தாக்கம் தீவிரமான தேடலுக்கு உரிய ஒன்றாக உள்ளது என்பது பற்றிய முக்கியக்கூறுகளைக் காட்டுகிறது எம்.ஜி.ஆரின் திரை பிம்பத்தின் வெவ்வேறு கூறுகள் குறித்து விவரமாக அலசுகிறது, அது ஏன் பொதுமக்களால் பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது, அவர்களோடு பிணைந்தது அல்லது தமிழகத்தின் கலாசார மரபோடு அது எவ்வாறு தொடர்புடையது என்பன குறித்துப் பேசுகிறது. மேலும் முன்னோக்கி பயணித்து எப்படி இந்தத் திரை பிம்பத்தை எம்.ஜி.ஆரின் புனையப்பட்ட வாழ்க்கை வரலாறுகளின் மூலம் அரசியல் களத்துக்கு வெற்றிகரமாகக் கொண்டு சேர்க்க முடிந்தது என்பது குறித்தும் பகுத்து ஆய்கிறது. இந்தப் புனையப்பட்ட வாழ்க்கை வரலாறுகள் அவரின் திரை பிம்பத்தோடு முழுக்கப் பொருந்தும் வகையில் இரண்டுக்கும் வேறுபாடு காணமுடியாத வகையில் கவனமாக உருவாக்கப்பட்டன. இறுதியாக, இந்நூல் அடித்தட்டு மக்களின் பொருளியல்/பொருளாதாரச் சூழ்நிலைகள் மற்றும் எம்.ஜி.ஆர் தாக்கத்தின் எழுச்சிக்கு இடையே உள்ள உறவை கண்டறிகிறது. (நூலின் முன்னுரையிலிருந்து)

பெண்கள் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் அனுபவிக்கும் விடுதலைத் தருணங்கள் சிதறிக்கிடப்பவை. அவை தமிழ் சமூகத்தில் எங்கும் நிறைந்திருக்கும் ஆணாதிக்கத்தைத் திறந்த மனதுடன் விமர்சிக்கவில்லை என்பதை இறுதியாகப் பகுத்தாய்வு செய்து பார்க்கையில் காண முடிகிறது. இதற்கு மாறாக, படத்தின் முடிவுகள் பெண்களுக்கான உரிமை சார்ந்த கேள்விகளை ஆணாதிக்கச் சமூகத்தின் மதிப்பீடுகளை உறுதிபடுத்தியே இருக்கின்றன. இப்படி ஆணாதிக்கத்தை உறுதிபடுத்துவது இரண்டு வழிகளில் இயல்பாக நடக்கிறது. ஆணின் இச்சைக்கு உரிய, ஆணின் கவலைக்குரிய, கீழ்படிய மறுக்கிற பெண்ணை , அல்லது அடங்காப்பிடாரி என்று அழைக்கப்படும் கதாப்பாத்திரத்தை நாயகன் கீழ்படிய வைப்பார். இரண்டாவதாக, இப்படங்களில், ஒருவனுக்கு ஒருத்தி, கற்பு மற்றும் பிற ஆணாதிக்க அமைப்புகளோடு தொடர்புடைய அடையாளங்கள் அனைத்தும் பெண்ணின் முக்கிய நற்குணங்களாக விவரிக்கப்பட்டு நியாயப்படுத்தப்படும். (நூலிலிருந்து பக்-104)

சுருக்கமாக, எம்.ஜி.ஆர். திரைப்படங்களின் மூலம் எங்கும் கண்ணுக்குத் தெரியாமல் நிறைந்திருக்கும் ஆணாதிக்கத்தின் கட்டமைப்பு தமிழகத்தில் மறு உறுதி செய்யப்பட்டது. இத்திரைப்படங்களில் பெண்களுக்கு விடுதலை தரப்படும் தருணங்களும், ஆணாதிக்கக் கட்டமைப்புக்குள்ளேயே அடங்கும்படி உருவாக்கப்பட்டன. ( நூலிலிருந்து பக்.112)

படிக்க:
எம்.ஜி.ஆர் : முழு வரலாறு !
ரஜினி, கமல், அஜித், விஜய், ஹீரோவா ஜீரோவா ? – புதிய கலாச்சாரம் செப்டம்பர் 2016

எம். ஜி.ஆரின் திரைப்படங்களில், அவருக்கு சினிமாவிலும், அரசியல் செயல்பாடுகளிலும் பெண்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்ததென்றால் அதற்கு தமிழ்க்கலாசாரத்தின் தலையாய பண்பாக இருந்த தந்தைவழி சமூக அமைப்பே காரணமாகும். பெண்களின் குழந்தைப் பருவம் முதல் வீடே உலகம், கற்பே சிறந்த பண்பு எனச் சொல்லி வளர்க்கப்படுகின்றனர். இளம் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்கவேண்டும் என்றும், மணமான பெண்கள் தங்கள் கணவனுக்கு நீண்ட ஆயுளை அருள் வேண்டும் என்றும் இறைவனை வேண்டுகின்றனர். சமூகத்தைக் கட்டமைக்கும் வெளிப்படுத்தும் தமிழ் மொழியே ஆணாதிக்கத் தன்மையுடையதாக இருக்கிறது. கணவனை இழந்த பெண்ணைக் குறிக்க விதவை (கைம்பெண்) என்ற சொல் இருப்பதைப் போல், மனைவியை இழந்த ஆணைக் குறிக்கும் சொல் ஏதும் இல்லை. முறை தவறிய உறவுகளில் ஈடுபடும் பெண்களை, வைப்பாட்டி, கூத்தியாள், தாதி, கணிகை, பரத்தை போன்ற சொற்களால் குறிப்பதைப் போல் ஆண்களைக் குறிக்கும் சொற்கள் இல்லை.

தமிழகத்தின் அடித்தட்டு மக்களுடைய எல்லாக் கதையாடல்களும் ஆணாதிக்கமுடையவை என்று சொல்லிவிட முடியாது. நாம் ஏற்கனவே சொன்னதைப்போல், பொதுபுத்தி என்பது ஒன்றுக் கொன்று முரண்பட்ட எண்ணங் களின் தொகுப்பாகும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள், அடித்தட்டு மக்களின் பொதுபுத்தியானது, தனக்கே உரிய வகையில் ஆணாதிக்கத்துக்கு எதிரான கூறுகளைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றன. (நூலிலிருந்து பக்.114-115)

… குறிப்பிட்ட வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைக் கட்டமைப்பதன் மூலம், எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் காட்டப்படும் அதே வாழ்க்கையையே அவர் நிஜத்திலும் வாழ்கிறார் என்று நம்ப வைக்கப்பட்டது. இந்தத் திரைப்பட வாழ்க்கைக்கும் நிஜவாழ்க்கைக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை எனத் துடைத்து அழித்துப் பதிய வைத்தது பொதுபுத்தியில் கச்சிதமாகச் சென்று சேர்ந்தது. எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்கள் பற்றி எழுதிய ஒரு ஆய்வு அறிக்கை இப்படிச் சொல்கிறது:

”எம். ஜி. ஆரின் திரைப்படங்களில் வெளிப்பட்ட பிம்பங்கள் ஏற்படுத்திய தாக்கத்தைத் தாண்டி இந்த ரசிகர்மன்ற உறுப்பினர்களால் செல்ல இயலாமல், திரையில் காட்டப்படுவதே எம்.ஜி.ஆரின் குணம் என நம்பப்படுகிறது. அவரின் ரசிகர்களிடம் எம்.ஜி.ஆர் நல்ல மனிதர் என்கிற அவர்களின் வாதத்தை நிறுவுங்கள் எனக் கேட்ட பொழுது, எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் இருந்தே எல்லாரும் எடுத்துக்காட்டுகள் தந்தனர் என்பதில் இருந்து இது தெளிவாகின்றது.” (நூலிலிருந்து பக்.157)

நூல்:பிம்பச் சிறை
(எம்.ஜி. ராமச்சந்திரன் – திரையிலும் அரசியலிலும்)
ஆசிரியர்: எம்.எஸ்.எஸ். பாண்டியன்
தமிழில்: பூ.கொ. சரவணன்

வெளியீடு: பிரக்ஞை பதிப்பகம்,
10/2 (8/2), போலீஸ் க்வாட்டர்ஸ் சாலை,
தியாகராய நகர், சென்னை – 600 017.
தொலைபேசி எண்: 044 – 2434 2771
கைபேசி : 99400 44042 – 98414 94448
மின்னஞ்சல் : publications@pragnai.com

பக்கங்கள்: 248
விலை: ரூ 225.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க: udumalai | noolulagam

குழந்தைகள் கணிதத்தை எப்படிப் பார்க்கிறார்கள் ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 6

பாடங்களுக்கு இடையிலான நேரத்தை – எப்படிப் பயன்படுத்துவது? (தொடர்ச்சி…)

விரைவில் அடுத்த பாடவேளை துவங்கும் மணி அடிக்கும். நான் ஏற்படுத்திய சூழல் இடைவேளையில் எப்படி இயங்குகிறது என்று பார்க்க வேண்டும். என்ன நடக்கிறது? இன்று தாமாகவே மேற்பார்வையாளர்களாக இருக்கும் பெற்றோர்கள் சுவரில் தொங்கும் தாளில் குழந்தைகள் வரைவதைத் தடை செய்கின்றனர், சிரிப்புப் படங்களைத் தொடவிடாமல் தடுக்கின்றனர். குழந்தைகளிடமிருந்து விளையாட்டுச் சாமானைப் பிடுங்குகின்றனர். குழந்தைகளை அடக்கும் குடும்ப அனுபவம் பள்ளி இடைவழியில் புகுந்து, குழந்தைகளின் குறும்புகளை மாற்றியமைக்கும் என் நோக்கங்களுக்குக் குறுக்காக நிற்கிறது. “குழந்தை வளர்ப்பு, பெற்றோர் வளர்ப்பிலிருந்து துவங்க வேண்டும்” என்று எப்போதோ ஒரு முறை ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூறியது என் நினைவிற்கு வருகிறது. இன்றே முதல் பெற்றோர் கூட்டத்தை நடத்துவது என்ற முடிவிற்கு வருகிறேன். முதல் இடைவேளையைக் குலைக்க பெற்றோர்கள் செய்த முயற்சி பலிக்கவேயில்லை.

நான்காண்டு காலக் கல்வியின் போது மொத்த இடைவேளை நேரம் 166,500 நிமிடங்கள். இந்த நேரத்தை வீணாக்காமல் நன்கு பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இது ஆசிரியர் தன் மாணவர்களுடன் நன்கு கலந்து பழகும் 175 நாட்களுக்குச் சமமாகும்.

இனிய மணியோசை கேட்கிறது. “குழந்தைகளே, வகுப்பறையினுள் வாருங்கள். சிறுவர்களே, நீங்கள் ஆண் பிள்ளைகள் என்பது நினைவில் இருக்கட்டும்!”

“நம்மில் யார் சரி, யார் தவறு?”

அனேகமாக எல்லாக் குழந்தைகளுக்கும் பத்து வரை அல்லது இருபது வரை, ஏன் நூறு வரை கூட எண்ணத் தெரிந்திருக்கும். என் அனுபவத்திலிருந்து இது எனக்குத் தெரியும். இவர்களில் ஒவ்வொருவரும் “ ஒன்று – இரண்டு – மூன்று – நான்கு -ஐந்து” எனும் பாடலை தங்கு தடையின்றி சரளமாகச் சொல்வதை சரிபார்க்க வேண்டுமா என்ன? இதை இன்று செய்ய வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் குழந்தைகளுக்கு எண்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அவர்களுக்குப் பழக்கமில்லாதவற்றிலிருந்து துவங்குவது நல்லது. இது அவர்கள் ஏற்கெனவே அறிந்தவற்றைப் பயன்படுத்துவதாயும், “ஒன்று – இரண்டு – மூன்று – நான்கு – ஐந்து’ எனும் மனப்பாடப்பாட்டிற்கு பொருளைத் தருவதாயும் இருக்கும்.

ஆனால், முதலில், நமது தாய்மொழிப் பாடவேளையில் அட்டைப்பெட்டியில் எவ்வளவு அட்டைவில்லைகள் (சொற்கள்) சேர்ந்தன என்பதைப் பார்க்க வேண்டும். இலிக்கோ அட்டைப்பெட்டியை எடுத்து வர அவன் பின் தேன்கோவும் மாயாவும் வருகிறார்கள். “ஏராளமாக உள்ளன!” என்கிறாள் மாயா. “நூறுக்கும் மேலே!’ என்று விளக்கினான் தேன்கோ . “பார்த்தீர்களா, இன்று நாம் எவ்வளவு வார்த்தைகளைச் சேகரித்துள்ளோம்! நாளை நாம் இன்னமும் அதிகமாகச் சேர்க்க வேண்டும்” என்று நான் குழந்தைகளைப் பார்த்துக் கூறுகிறேன். “வார்த்தை அட்டைவில்லைகளை எண்ண உதவியதற்கு உங்களுக்கு மிக்க நன்றி!.”

“உங்களுக்கு எதற்கு இவ்வளவு நிறைய சொற்கள்?” என்று நாத்தோ கேட்கிறான்.

”எனக்கு வேண்டும்!”

“நான் இதை அடுத்த முறை விளக்குவேன்!” என்று நான் நாத்தோவிடம் கூறுகிறேன். “இப்போது கணிதப் பாடத்தைத் துவக்குவோம்.”

சாதாரணமாக முதல் கணித வகுப்பில், குழந்தைகள் கூட்ட, கழிக்க, பெருக்க, வகுக்க கற்றுக் கொள்ளத் துவங்குவதாக விளக்குவார்கள். இது குழந்தைகளுக்குப் புரியக் கூடிய ஒரு விளக்கம் என்று கருதப்படுகிறது. ஒருவேளை உண்மையிலேயே இது சரியாக இருக்கலாம். ஆம், உண்மையிலேயே, ஐந்து ஆப்பிள்களிலிருந்து மூன்று ஆப்பிள்களை எப்படிக் கழித்து மீதியிருப்பதை அறிவது; அல்லது மூன்று கடலைகளுடன் ஆறு கடலைகளை எப்படிச் சேர்ப்பது , பத்து பேரிக்காய்களை இருவருக்கு எப்படிப் பகிர்ந்தளிப்பது, என்றெல்லாம் கூறினால் குழந்தைகளுக்கு நன்கு விளங்கும். ஆனால் கூட்டுவதும் கழிப்பதும், பெருக்குவதும் வகுப்பதும் மட்டுமே கணிதத்தின் சாரம் இல்லை அல்லவா !

படிக்க:
அச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது ?
நிகழ்வெல்லைத் தொலைநோக்கியும் ! ஐன்ஸ்டைனும் !

முறையியல் ரீதியாக நான் தவறிழைத்தாலும் நான் செய்வது இப்படித்தான்.

“குழந்தைகளே, கணித விஞ்ஞானம் என்றால் என்ன தெரியுமா?”

தாம்ரிக்கோ: “அதாவது, நூறு வரை எண்ணுவது…”

எலேனா: ‘நூறு வரை எண்ணத் தெரிய வேண்டும், இது தவிர கூட்டத் தெரிய வேண்டும்… எனக்கு கூட்டத் தெரியும்… ஐந்தும் ஐந்தும் பத்து ….”

வாஹ்தாங்: “எனக்கும் கூட்டவும் கழிக்கவும் தெரியும்…. அப்பா சொல்லித் தந்தார்…”

நான் கரும்பலகையை அணுகி, திரையை விலக்குகிறேன். அதில் நியூட்டன் விதியும், வழிச் சார்பும் வண்ண சாக்பீஸ்களால் எழுதப்பட்டிருந்தன, டெக்கார்ட்டிசின் கூற்றுத் தொகுதி சார்பாலனோடு வரையப்பட்டிருந்தது .

சாஷா: “என்ன இது? எவ்வளவு அற்புதமான எழுத்துக்கள்!”

பலரின் கண்கள் அகல விரிந்தன, கரும்பலகையில் உள்ளதை நன்கு பார்ப்பதற்காகப் பலர் தம் இடங்களை விட்டு எழுந்தனர்.

“இது உண்மையான கணிதம், அளவின உறவுகள் மற்றும் இடஞ்சார்ந்த வடிவங்களைப் பற்றிய விஞ்ஞானம்.”

“எவ்வளவு அழகாயுள்ளது!” என்று கரும்பலகையிலிருந்து கண்களை அகற்றாத படி லேலா ஆச்சரியத்துடன் கூறுகிறாள்.

“ஏனெனில் கணிதமே அழகானது, இது தான் விஞ்ஞானங்களிலேயே ராணி போன்றது என்கின்றனர் அறிஞர்கள். இந்தச் சூத்திரங்கள் உங்களுக்குப் பிடித்துள்ளனவா?”

கணிதத்தைப் பற்றிய இவ்விளக்கம் குழந்தைகளுக்குப் புரியுமா? நான் கூறியதிலும் காட்டியதிலும் பல விஷயங்கள் அவர்களுக்கு நிச்சயமாகப் புரியவில்லை. ஆனாலும் அவர்களுக்கு எவ்வளவு சுவாரசியமாக இருந்தது தெரியுமா!

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

“ராடாரேந்திர மோடி !” – மோடியை வறுத்தெடுத்த வலைத்தளவாசிகள் !

0

மீபத்தில் நியூஸ் நேஷன் என்ற தொலைக்காட்சிக்கு மோடி அளித்த பேட்டியில் பாலகோட் தாக்குதல் பற்றி அவிழ்த்துவிட்ட பொய் சமூக ஊடகங்களில் பகடிக்கு உள்ளாகியிருக்கிறது.

மோடி தனது பேட்டியில் “மேகமூட்டங்களில் விமானங்களை ஒளித்துவைக்கமுடியும்” என தெரிவித்திருந்தார். கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் ‘அறிவியல்’ பாடாய்பட்ட நிலையில், தனது அறிவிலித்தனத்தை பட்டவர்த்தனமாக அறிவிக்கும்விதமாக மோடி அளித்திருக்கும் பேட்டி, மக்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியிருக்கிறது.

இன்னொரு பக்கம் இத்தகைய நபர் ஒருவர் நாட்டின் பிரதமராகியிருப்பது அவமானமாக இருப்பதாகவும் பலர் சமூக ஊடகங்களில் கருத்திட்டுள்ளனர்.

தமிழ் முகநூலில் கேலி கிண்டல் பதிவுகள் மட்டுமல்லாது, மீம்களும் பறந்தன.

விநாயகமுருகன்:

“பாலகோட் விமான தாக்குதலின் போது அன்றைய தினம் இரவு சுமார் 9 – 9.30 மணிவாக்கில் நான் தாக்குதல் குறித்து ஆராய்ந்தேன். அதே ஆய்வை மீண்டு இரவு 12 மணிக்கு மேல் செய்ய நேரிட்டது. இதற்கு அப்போது வானிலையில் ஏற்பட்ட மாறுதலே காரணம் ஆகும். அதன் பிறகு நான் சில நிமிடம் யோசித்தேன். எனது மனதில் இது நடக்குமா அல்லது நடக்காதா என்னும் கேள்வி எழுந்திருந்தது.

தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்த தாக்குதலை வேறு ஒரு தினத்தன்று மாற்றலாம் என யோசனை அளித்தனர். ஆனால் உடனடியாக நடத்தாவிடில் இந்த ரகசியம் எப்படியும் வெளியாகி விடும் என எனக்கு தோன்றியது. நான் விஞ்ஞானம் படிக்காதவன். இருந்தாலும் மேகங்கள் இருப்பதாலும் கனமழை பெய்வதாலும் ராடாரால் நமது விமானங்களை கண்டறிய முடியாது என்பதை நான் அறிவேன்.

இந்த மழை மற்றும் மேக மூட்டம் நமக்கு நன்மை தரும் என்பதையும் நான் தீர்மானம் செய்து விட்டேன். அதனால் நான் அன்றே பாலகோட் வான்வழி தாக்குதல் நடத்த உகந்த நாள் என முடிவு செய்தேன். அதனால் மேகங்கள் சூழ்ந்துள்ளன. கிளம்புங்கள் என உத்தரவிட்டேன். அவர்களும் கிளம்பினார்கள்…”

… அண்மை பேட்டியொன்றில் மோடி

நம்மூர்ல சீமான் எப்படி பெரிய தலைக்கட்டோ அவங்க ஊர்ல அவரு. ஆனா, ஒண்ணு இந்த ஆபரேஷனில் மேஜர் மாலனோட கருத்தை பிரதமர் கேட்காமல் போனதில் எனக்கு வருத்தம்தான். திராவிடத்தால் வீழ்ந்தோம் ஒறவே

வசந்தா சுசீலா:

Actually அந்த ராடார் கதை சொல்லி முடிச்ச 10-வது நிமிடத்தில் இங்க ஒரு ராணுவ புரட்சி வந்திருக்கணும்..

நமக்கே இம்புட்டு கடுப்பாகுது. பாவம் அந்த எல்லையில் இருக்கும் ராணுவ வீரன்!!

படிக்க:
♦ தொழிலாளர் சட்டத்தை ஒழி – தொழில் வளரும் ! மோடினாமிக்ஸ் !
♦ இந்திய அறிவியல் மாநாட்டில் போலி அறிவியல் | பேராசிரியர் முருகன்

ராஜசங்கீதன்:

Aviator என ஓர் ஆங்கிலப் படம். Hughes கதாபாத்திரத்தில் Dicaprio நடித்து மார்டின் ஸ்கார்சசி இயக்கியிருப்பார்.

போரைப் பற்றிய படம் ஒன்றை எடுத்துக் கொண்டிருப்பார் டிகாப்ரியோ. எடுத்தவரை படத்தை போட்டு பார்க்கும்போது, நிஜமாகவே வானில் விமானம் பறக்க வைத்து, விமானத்தில் இருந்து அதை படம் பிடித்த உழைப்பு ஏதும் தென்படாது. ஸ்டுடியோவில் கயிறு கட்டி ப்ளைட் மாடலை கேமராவுக்கு அருகே வைத்து எடுப்பதை போலவே தெரிகிறது. காரணம் புரியாமல் மண்டையை உடைத்துக் கொள்ளும் டிகாப்ரியோ, ஒரு கட்டத்தில் காரணத்தை கண்டுபிடித்து விடுகிறார். வானுக்கும் விமானத்துக்கும் இருக்கும் தூரத்தை காட்ட இன்னுமொரு object திரையில் இருக்க வேண்டும். அதுதான் தூரத்தை relate செய்து காட்ட இயலும். Relativity!

வானில் வேறென்ன இருக்க முடியும்?

Clouds!

மேக மூட்டம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விமானம் பறக்கவிட்டு படம்பிடித்தால் திரையில் வானத்தின் பிரம்மாண்டம் தெளிவாக தெரியும். மேகங்களுக்குள் இருந்து வரும் விமானம், மேகத்துக்குள் மறையும் விமானம் என மக்களால் மேகத்துடன் relate செய்து வானை பிரமிக்க முடியும். டிகாப்ரியோ ஒரு வானியல் அறிஞரை வேலைக்கு அமர்த்துகிறார்.

ஷூட்டிங்கின்போது இருவரும் பேசிக் கொள்ளும் ஒரு வசனம்:

Di Caprio: Why there’s no clouds?

Climatologist: They are clouds Mr.Hughes. They move. That’s what they do.

Di Caprio: Find me some goddamn clouds.

என கத்திவிட்டு செல்வார். கொஞ்ச நேரம் கழித்து வானியலாளர் குதித்து கொண்டு ஓடி வந்து சந்தோஷமாக ‘மேகங்களை கண்டுபிடித்து விட்டேன்’ என்பார். உடனே அங்கு விமானங்கள் அனுப்பி படம் பிடிப்பார்கள்.

நம்மூரில் டிகாப்ரியோ இல்லை. மோடிதான் இருக்கிறார். ஆதலால் Find some goddamn clouds என மோடியே சொல்லியிருக்கிறார்.

அநேகமாக மோடிக்கு மேகங்களை கண்டுபிடித்து தந்த வானியலாளர் பால்கோட்டிலேயே சுற்றிக் கொண்டிருந்த மாலனாக இருக்கலாம். Aviator படமாவது drama ரகம். மோடி பேசுவது tragic comedy ரகம். தியேட்டருக்குள் நுழைந்தது நம் தப்பு. குறை கூறினால் என்ன நியாயம்? பார்த்து ரசியுங்கள்…

ரகுபதி பாலசுப்ரமணியன்:

ஒரளவுக்கு வாசிச்சு தெரிஞ்சுகிட்ட இந்திய அரசியல் வரலாற்றுல, இப்படி ஒரு தற்குறித்தனமான பிரதமர கேள்விப்படல. மண்ட முழுக்க மாட்டுச்சாணிதான் போல. பிள்ளையார் பிளாஸ்டிக் சர்ஜரி பேஷண்ட்டுன்னு சொன்னதுல தொடங்கி, இன்னைக்கு மேகங்கள வச்சு ரோடாரயே ஏமாத்தலாம்னு, வாயத்தொறந்தாலே OVOP’க்கள்தான்..

வெங்கடேஷ் ஆறுமுகம்:

மேஜர் நான் பிரதமர் பேசுகிறேன்.. குண்டு வீசச் சென்ற நம் விமானங்கள் எப்போது தாக்குதல் நடத்தும்?

ஜி.. அவர்களின் வான் எல்லைக்குள் நுழைந்துவிட்டோம் துல்லியமாக இன்னும் 3 நிமிடம் 36 நொடிகளுக்குள் குண்டுகளை வீசிவிடுவோம்!

அச்சா.. கோவைக்கோ திருச்சூருக்கோ எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது முடிந்தால் வயநாட்டிலும் 4 குண்டுகளை போட்டுவிட்டு திரும்புங்கள்!

ப்ரைம் மினிஸ்டர்ஜி என்ன சொல்றிங்க?!!! அதெல்லாம் நம்ம இந்தியாவில் கேரளாவில் இருக்கும் ஊரு ஜி!!

அரே நம்பிள் இந்தியா விமானமெல்லாம் பாலக்காடுல குண்டு போட போயிருக்குன்னு அமித்ஜி சொன்னாரே!

ஹே பஹ்வான்!! ஜி அது கேரளா பாலக்காடு நஹி.. பாகிஸ்தான் பாலாகோட் ஹே!

ஸ்வரா வைத்தி:

இவ்வளவு முட்டாளா இருக்க மோடி தான் ரபேல் விமானம் வாங்கற டீல பேசி முடிச்சிருக்காப்ல 😐😐😐

விக்னேஷ் பழனிசாமி:

நிலாவுக்கு விண்கலம் அனுப்புறீங்க. சூரியனுக்கு ஏன் அனுப்பலன்னு கேட்டேன். சூரியன் மேற்பரப்பு சூடா இருக்கும்னு சயிண்டிஸ்ட் சொன்னாங்க. எனக்கு இவங்கள்லாம் எப்படி சயிண்டிஸ்ட் ஆனாங்கன்னே தெரியல. நைட்டுல அனுப்பவேண்டியது தானே.

– மோடி (சொன்னாலும் சொல்வார்).

செ. அன்புச்செல்வன்:

இரேடார் நிகழ்விலிருந்து இந்தியராகிய நாம் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான்…. அடிப்படை அறிவியலில் நாம் மிகமிகப் பின்தங்கி இருக்கிறோம் என்பதே அது. உலகில் எங்கோ ஒருமூலையில் எவரொருவர் அரும்பாடுபட்டுக் கண்டுபிடித்துத் தருவனவற்றை மட்டும் பெற்றுக்கொள்ளும் வெறும் பயனாளிகளாக மாறிக்கொண்டிருக்கிறோம்.

சான்றாக, பல்லாயிரங்கள் செலவு செய்து ஒரு திறன்பேசியை வாங்கிப் பயனுறும் நாம் அதன்பின்னே இருக்கும் அறிவியல் இன்னதென்று துளியளவும் சிந்திப்பதில்லை.

நித்தியானந்தா போன்ற சாமியார்கள் ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கை பொய்யென்று சொல்வதை வேண்டுமானால் பகிர்ந்து அறிவுப்பசியாறிக் கொள்வோமேயன்றி ஏன் பொய்யல்ல என்று தேடியறிந்துகொள்ள முயலோம். சக்கி சாமியார் சரியான உணவுப்பழக்கம் இல்லாததால்தான் மனவழுத்தம் வருகிறது என்று சொன்னால் ஆதி ஓகியைப் போலவொரு ஆசான் இவ்வுலகில் இல்லையென்று அவர் அடியொற்றிக் கொள்வோம்.

வெறும் கையடக்க திறன்பேசியை வடிவமைத்து அதை இயங்கச்செய்ய, பத்து நோபல் பரிசுவென்ற அறிவியலாளர்களும் அவர்தம் இருநூறாண்டு உழைப்பும் தேவைப்படுகிறது என்பதை நாம் எற்றைக்கு உணர்வோம்??!!

ட்விட்டரிலும் மோடியின் ‘அறிவிலித்தனம்’ பாடாய்ப்பட்டது.

“கண்டுபிடிக்காதபடி எப்படி இந்தியாவிலிருந்து தப்பியோடினீர்கள் மல்லையா?” என மேகங்களுக்குள் பதுங்கியிருக்கும் மல்லையாவிடம் கேட்கிறார் கஜோல் ஸ்ரீனிவாசன்.

ரேடாரிலிருந்து தப்பிக்க விமானங்களை மேகங்களில் ஒளித்து வைக்க முடியுமா? என்ற கேள்வியைத்தான் கூகுளில் கடந்த இரண்டு நாட்களாக பலர் தேடியிருக்கின்றனர். உண்மையில் அப்படி ஒளித்து வைக்க முடியாது என்பதே விமானப்படை அதிகாரிகளின் பதிலாக உள்ளது.

ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி கபில் காக், டெலிகிராப் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “பல ஆண்டுகளாக பயிற்சி பெற்ற தொழில்ரீதியிலான படையை இவர் இப்படி அதிகாரம் செய்யக்கூடாது. பொருளாதாராத்தை புறம் தள்ளலாம்; அரசியலை புறம் தள்ளலாம்; அவர் உள்நாட்டு பாதுகாப்பை புறம் தள்ளலாம்; சிறுபான்மையினரை புறம் தள்ளலாம்; நாட்டில் பேரழிவுகளை உருவாக்கும் முடிவுகளை புறம் தள்ளலாம்; ஆனால், பிரச்சினைக்குரிய இடத்தில் போர் விமானத்தை பயன்படுத்துவதா வேண்டாமா என்பதில் அவர் தலையிடக்கூடாது. விமானப்படை தலைவரும் காமாண்டருமே அத்தகைய முடிவுகளை எடுப்பார்கள். அதுபோன்ற முடிவுகள் நிபுணர்களால் எடுக்கப்படுகின்றன..” என தெரிவித்துள்ளார்.

படிக்க:
♦ ரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை !
♦ எத்தகைய ஒரு குரூர பாசிஸ்டை தேர்ந்தெடுத்துள்ளோம் நாம் !

முன்னதாக கபில் காக் உள்ளிட்ட 1,500 முன்னாள் வீரர்கள், அரசியல்வாதிகள் எல்லை தாண்டிய தாக்குதல்கள் குறித்து அரசியலுக்காக பெருமை பேசுவதை நிறுத்த வேண்டும் என ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

இத்தனைக்கும் நடுவே, நியூஸ் நேஷன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி மோடியின் மற்றுமொரு ஜோடிக்கப்பட்ட பேட்டி என்கிற தகவலை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியிருக்கிறார் ஆல்ட்நியூஸ் இணையதளத்தின் ஆசிரியர் பிரதீக் சின்ஹா.

ஆட்சியை பிடிக்கும் அவஸ்தையில் இருக்கும் மோடி, இறுதிநேரத்தில் தனது அறிவிலித்தனத்தை அப்பட்டமாக காண்பிக்கிறார். இந்திய பிரதமர்களின் வரிசையில் ஒரு களங்கமாக அமைந்துவிட்ட மோடியின் ஆட்சி தொடருமானால், நாட்டுக்கு அது எத்தகைய பேரழிவாக அமையும் என்பதற்கு இறுதி எச்சரிக்கையாகவே இது உள்ளது.


தொகுப்பு :
கலைமதி

ஐ.ஐ.டி -யில் 10% இட ஒதுக்கீடு – ஒரு கேலிக் கூத்து !

பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கான 10% இட ஓதுக்கீடு எவ்வளவு கேலிக்கூத்தானது என்பதை ஐஐடி மாணவர் அனுமதியைப் பற்றிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இத்தரவுகளை வாங்கி வெளியிட்ட நண்பர் எத்திராஜன் முரளிதரனைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். மாணவர் அனுமதி மற்றும் ஆசிரியர் நியமனம் போன்றவற்றில் இடப்பங்கீட்டுக் கொள்கையை மீறி ஐஐடி சென்னை தில்லுமுல்லுகள் செய்வதைத் தொடர்ந்து கண்காணித்தும் வழக்குகள் தொடுத்தும் வரும் இவரைப் பாராட்ட வேண்டும்.

படிக்க :
♦ ஸ்டெர்லைட்டை மட்டுமல்ல டெல்டாவையும் அனில் அகர்வாலுக்கு அள்ளித் தந்த மோடி !
♦ ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு ! உண்மையா ? பொய்யா ?

முரளிதரன், நான் ஐஐடி சென்னையில் ஆராய்ச்சி மாணவராக இருந்தபொழுதுதான் அங்கு ஆராய்ச்சி மாணவராக இருந்தார். அப்பொழுது ஐஐடி சென்னையின் கிரிக்கெட் அணியின் தலைவராகவும் இருந்தார். சென்னையைச் சேர்ந்த ஓரளவுக்கு வசதியான குடும்பத்திலிருந்து வந்தவர். ஐஐடியில் ஆய்வு மாணவர்களுக்கான மாத ஊதியத் தொகை இவர்களைப் போன்ற பல சென்னை மாணவர்களுக்கு கைச் செலவுக்கான தொகை. நல்ல வண்டி, வெளியே நல்ல உணவகங்களில் உணவு, திரைப்படங்கள், விளையாட்டுத் துறைக்கான செலவு என செலவழிப்பார்கள். ஆனால் கிராமங்களிலிருந்து முதல் தலைமுறையாக கல்லூரிப் படிக்கும் வாய்ப்புப் பெற்ற எங்களைப் போன்ற நிறைய சிற்றூர்/சிறுநகர மாணவர்களுக்கு அவ்வூதியத்தில் ஊரிலுள்ள எங்கள் குடும்பத்தையும் ஆதரித்து எங்களுடைய செலவுகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதனால் எங்களுக்குள்ளேயே கூட இரண்டு பிரிவாகத்தான் இருந்திருக்கிறோம். விடுதிகளில் இந்த இரண்டு பிரிவினரும் ஒன்றாகக் கூடி இருந்தாலும் தனித்தனி நண்பர்கள் குழுவாகவே இருந்ததுண்டு. அப்பொழுதெல்லாம் ஐஐடிக்குள் பெரியார், கலைஞர், தமிழ், ஈழம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த என்னையெல்லாம் இவர்களெல்லாம் ஏளனமாகக் கிண்டலடிப்பார்கள். மலையாள மாணவர்கள் என்னை நமட்டுத்தனமாகக் கிண்டலடிக்கும் ”பாண்டி” என்ற பெயரை இவர்களும் அவ்வப்பொழுது பயன்படுத்துவதுண்டு.

மண்டல் கமிசன் பரிந்துரைகளுக்கெதிரான எங்கள் விடுதி மாணவர்களின் நடவடிக்கைகளை எதிர்த்து நானும், இப்னு சாத் என்ற இன்னொரு கேரள மாணவரும்தான் வெளிப்படையாக எதிர்த்துக் களத்தில் இறங்கினோம். ஐஐடி ஊழியர்களைத் துணைக்கொண்டு போட்டிக் கையெழுத்து வேட்டை நடத்த ஆரம்பித்த பின்னர் வார்டனால் அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டோம். நாங்கள் இருவரும் கைவிடாதபடியால், பின்னர் இரண்டு தரப்பு நடவடிக்கைகளும் வார்டனால் நிறுத்தப்பட்டன.

அப்பொழுதெல்லாம் முரளிதரனோ, இடப்பங்கீட்டைப் பயன்படுத்தி தமிழ்நாட்டு அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் இளநிலை பட்டம் படித்த நிறைய மாணவர்களோ எங்களிருவருக்கும் துணையாக வந்ததில்லை. ஒருசில அறிவுஜீவிகள் எங்களிருவரையும் விமர்சனம் செய்து, ஐஐடியின் தரத்தைக் குறைக்கக் கூடாதென்று மண்டல் கமிசன் அமலாக்கத்தை எதிர்த்துக் கையொப்பமிட்டனர். அவர்களெல்லாம் பார்ப்பன ஆசிரியர் / மாணவர்களிடம் தம் நட்பை இழக்க விரும்பாமல் மவுனம் காத்தனர்.

படிக்க :
♦ சென்னை ஐ.ஐ.டி APSC நிறுவனர்களில் ஒருவரான ரமேஷை குறி வைக்கும் மோடி அரசு !
♦ பார்ப்பனக் கொழுப்பு வழிந்தோடும் சென்னை ஐ.ஐ.டி!

எங்களிருவருக்கும் இரண்டு சாதகமான நிலைகளும் இருந்தன எனலாம். 1. நாங்களிருவரும் இடஒதுக்கீட்டுக் கொள்கையினால் பலனடந்தவர்களல்லர் என்பதனால் எங்களுக்கெதிரான முத்திரை குத்தலைப் பற்றிய தயக்கமில்லை. 2. அண்மையில் மறைந்த என்னுடைய ஆராய்ச்சி வழிகாட்டி பேராசிரியர் பி.டி.மனோகரன் – சட்டத்துக்குட்பட்டு என்னுடைய செயல்பாடுகளுக்கான உரிமைகளை எப்பொழுதும் மதித்தவர். (முன்னரே ஒருமுறை என்னை ஐஐடியை விட்டு வெளியேற்றப்படலாம் என்று எச்சரிக்கப் பட்டபொழுது நிர்வாகம் சட்டப்படி அதைச் செய்ய இயலாது என்று உறுதி அளித்தார்.) இப்பொழுதும் அவர் அரசின் கொள்கையை எதிர்த்து மாணவர்கள் செயல்பட முடியுமென்றால் அதைவிட எங்களிருவருக்கான உரிமை இன்னும் அதிகமென்றார். என்னுடைய ஆய்வறிக்கை தாமதமாகியதே தவிர வேறெந்தச் சிக்கலும் எனக்கு ஏற்படவில்லை. முடித்தகையோடு அமெரிக்கா வந்து விட்டேன்.

ஆனால், முரளிதரன் அவருடைய ஆராய்ச்சி வழிகாட்டியிடம் வேறொரு தனிப்பட்ட பிரச்னையில் முரண்பட்டு மோதியதால் ஐஐடி நிர்வாகம் அவரைக் கடைசிநேரத்தில் பழிவாங்கியது. தேர்வானபிறகும் அவருடைய பட்டச் சான்றிதழை அளிக்காமல் பட்டமளிப்பு விழாவில் வெற்றுக் காகிதத்தை அளித்து ஏமாற்றியது. அதன்பின்னர்தான் ஐஐடி நிர்வாகம் கமுக்கமாக எப்படியெல்லாம் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட முடியுமென்று முரளிதரன் உணர்ந்தார். அமெரிக்கா வந்தபின்னரும் கூட அவருடைய பட்டச்சான்றிதழை அளிக்காததால் சென்னைக்குத் திரும்பி ஐஐடியின் மீது வழக்குத் தொடுத்தார். அதன்பின்னர் அங்கேயே இருந்து கடந்த 30 ஆண்டுகளாக ஐஐடியின் பல்வேறு பிரச்னைகளைச் சட்ட ரீதியாகப் போராடி வருகிறார் என்று அறிந்தேன்.

அவருடன் எனக்குத் தொடர்பில்லை என்றாலும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

முகநூலில் : சொ.சங்கரபாண்டியன்

ரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை !

0

மியான்மரில் ரோஹிங்கியா முசுலீம் இனப்படுகொலையை ஆதாரங்களுடன் எழுதியதற்காக ஏழாண்டு சிறை தண்டனை பெற்ற இரண்டு ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் 500 நாள் சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பத்திரிகையாளர்கள் வா லோன் (33) மற்றும் யாவ் சோ ஓ (29) ஆகியோர் டிசம்பர் 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். பாதுகாப்புப் படை மற்றும் உள்ளூர் புத்த மதத்தினர் இணைந்து பத்து ரோஹிங்கியா முசுலீம்களை கொன்றது குறித்த செய்தி வெளியிட்டதற்காக இவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தது மியான்மர் அரசு. அரசு ரகசிய காப்பு சட்டத்தின் கீழ் இவர்களுக்கு ஏழாண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மியான்மர் அரசின் ‘ஜனநாயகம்’ குறித்து கேள்வி எழுந்ததோடு, ஊடக நிறுவனங்களிடமிருந்தும் மனித உரிமை ஆர்வலர்களிடமிருந்தும் கடும் கண்டனங்களும் வந்தன. இந்த நிலையில், ஜனாதிபதியின் பொது மன்னிப்பு காரணமாக இவர்கள் இருவரும் கடந்த செவ்வாய்கிழமை அன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் முதல் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு காரணமாக 6,520 சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறையிலிருந்து விடுதலையான வா லோன் மற்றும் யாவ் சோ ஓ தங்களுடைய குழந்தைகளுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்கள்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இவர்கள் இருவரும் எந்தத் தவறையும் செய்யவில்லை எனக் கூறியதோடு, உடனடியாக இவர்களை விடுவிக்க வேண்டும் எனக் கூறியது.

சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டபின், தங்களுடைய குடும்பத்துடன் இணைந்த உற்சாகத்தில் இருவரும்..

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இருவரையும் அவர்களுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்லும் ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள்…

வா லோன் மற்றும் அவருடைய மனைவி பான் எல் மோன் தங்களுடைய மகளுடன் விடுதலையை கொண்டாடுகிறார்கள்.

யாவ் சோ ஓ, தனது மனைவி சித் சு வின் மற்றும் மகளுடன் தனது விடுதலையை கொண்டாடுகிறார்.

புத்த மதத்தைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து பாதுகாப்புப் படையினர் 10 ரோஹிங்கியா முசுலீம் ஆண்கள் மற்றும் சிறுவர்களைக் கொன்றது தொடர்பான விசாரணையில் இருந்தபோது, டிசம்பர் 2017-ம் ஆண்டு இவர்கள் இருவரும் கைதாகினர்.

இன்செயின் சிறையிலிருந்து விடுதலையான வா லோன்.

இன்செயின் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்த யாவ் சோ ஓ புன்னகைக்கிறார்.


– அனிதா
நன்றி : அல்ஜசீரா 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்!

“தமிழக மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூல்கள் இலவசமாய் வழங்க உதவுங்கள் !”என வாசகர்களுக்குக் கோரிக்கை வைத்திருந்தோம். அதனை ஏற்று, ஜெயகர் என்ற வாசகர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூல்கள் வழங்கக் கோரி பணம் செலுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு ஏற்கனவே புதிய கலாச்சாரம் நூல்களை வழங்கி இருந்தோம்.

அதன் தொடர்ச்சியாக பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் மற்றும் இதயத்தை மீட்பது எப்படி ? என்ற இரண்டு வெளியீடுகள் 100 எண்ணங்களை மீண்டும் மாணவர்கள் மத்தியில் விநியோகித்தோம்.

தேர்வு நேரம் என்பதால் முன்னர் நூல் வாங்கிய மாணவர்கள் பலரையும் சந்திக்க முடியவில்லை. கடந்த முறை நூல் வாங்கிய மாணவர்கள் சிலர் அந்தப் புத்தகங்கள் தனியார் பிடியில் உள்ள கல்வி நிலையங்களை பற்றி புரிந்து கொள்ள முடிந்தது என்றும், அரசே எப்படி திட்டமிட்டு ஆபாச இணையதளங்களை அனுமதிக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது என்று கூறினர். இந்த முறை அம்மாணவர்கள் தாங்களாகவே நூல்களை ஆர்வமாக வாங்கிச் சென்று வகுப்பு மாணவர்களுக்குக் கொடுத்தனர்.

இம்முறை வெளியீடு வாங்கிய ஆய்வு மாணவர் ஒருவர் நூலின் தலைப்புகளே படிக்கத் தூண்டும் வகையில் உள்ளது என்றும், கண்டிப்பாக படிப்பதாகவும் கூறினார்.

முதுகலை மாணவர்கள் சிலர், “நல்ல முயற்சி.. கண்டிப்பாக படிக்க வேண்டிய விசயம்தான், இப்பொழுது படிக்க வேண்டிய தேவை அனைவருக்கும் உள்ளது. சரியான தருணத்தில் இது போன்ற விசயங்களை எங்களிடம் சேர்த்துள்ளீர்கள்” என்றும் கூறினர்.

நீங்களும் உங்கள் பங்களிப்பாக புதிய கலாச்சாரம் வெளியீடுகளை மாணவர்களுக்கு வழங்குங்கள். நீங்கள் விரும்பிய கல்லூரிகளை தெரிவு செய்தும் பணம் அனுப்பலாம். கீழே உள்ள இணைப்பில் முழு விவரங்கள் உள்ளன. ஆதரவு தாருங்கள் !

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

பாசிஸ்டு பலே தந்திரக்காரன் ! பாவனை செய்வான் !

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 13

ழுந்து நிற்க வீண் முயற்சி செய்த பின் நிலை குலைந்து விழுந்த அலெக்ஸேய் கனநேர உணர்வு அவனைச் சுய நினைவு அடையச் செய்தது. பைன் மரச் சோலைவில் சந்தேகமின்றி மறைந்திருந்தார்கள் ஆட்கள். அவர்கள் அவனைக் கண்காணித்தார்கள். எதையோ பற்றிக் கிசுகிசு வென்று பேசிக்கொண்டார்கள்.

அலெக்ஸேய் கைகளை ஊன்றி நிமிர்ந்து, வெண்பனியிலிருந்து ரிவால்வாரை எடுத்துக்கொண்டு அதைத் தரைக்கு அருகில் மறைவாகப் பிடித்தவாறு உன்னிப்பாக நோக்கலானான். அபாயம் அவனை சுயநினைவுக்குக் கொண்டுவந்தது. உணர்வு தெளிவாக வேலை செய்தது. இவர்கள் யார்? விறகு வெட்டுவதற்காக பாசிஸ்டுகளால் இங்கே வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டிருக்கும் மரம் வெட்டிகளோ? ஒருவேளை அவனைப் போலவே பகைவர்களால் சூழப்பட்ட ருஷ்யர்களோ? ஜெர்மானியப் பின்னணிகளிலிருந்து முனைமுக வரிசையின் ஊடாகத் தம்மவர்களிடம் செல்கிறார்களோ? அல்லது அந்த வட்டாரத்தைச் சேர்ந்த குடியானவர்களில் யாரேனுமோ? யாரோ ஓருவன் “மனிதனா” என்றுத் தெளிவாகக் கத்தியது அவன் காதில் படத்தானேச் செய்தது?…

இவ்வாறு அவன் எண்ணமிடுகையில் புதர்களிலிருந்து கிளர்ச்சி பொங்கும் குழந்தைக் குரல் கணீரென ஒலித்தது:

“ஏய், நீ யார்? ஜெர்மன்காரனா? உனக்கு ஜெர்மன் பாஷை தெரியுமா?’

இச்சொற்கள் அலெக்ஸேயைத் திடுக்கிடச் செய்தன. ஆனால் கத்தினவன் சந்தேகமின்றி ருஷ்யன், சந்தேகமின்றிச் சிறுவன் என்பது தெளிவாயிருந்தது.

“நான் ருஷ்யன், ருஷ்யன். நான் விமானி. ஜெர்மானியர்கள் என் விமானத்தைச் சுட்டு வீழ்த்திவிட்டார்கள்.”

இப்போது அலெக்ஸேய் எச்சரிக்கையாக இருக்கவில்லை. புதர்களின் பின்னே இருப்பவர்கள் தன்னவர்கள், ருஷ்யர்கள், சோவியத் நாட்டினர் என்பது அவனுக்கு உறுதிப்பட்டு விட்டது. அவர்கள் அவனை நம்பவில்லையாக்கும். அதனால் என்ன? யுத்தம் எச்சரிக்கையை கடைப்பிடிக்க கற்பிக்கிறது. தான் முற்றிலும் வலு இழந்து விட்டதையும் கையையோ காலையோ மேற்கொண்டு அசைக்கவோ, இயங்கவோ, தற்காத்துக் கொள்ளவோ தன்னால் முடியாது என்பதையும் தனது நெடும் பயணத்தில் முதல் தடவையாக அவன் உணர்ந்தான். இவனுடைய கன்னங்களில் கறுத்த குழிவுகள் வழியே பெருகி வழிந்தது கண்ணீர்.

”பார், அழுகிறான்! ஏய், நீ எதற்காக அழுகிறாய்?’ என்று ஒலித்தது புதரின் பின்னிலிருந்து வந்த குரல்.

“அட, ருஷ்யன் நான், ருஷ்யன், நம்மவன், விமானி.”

“எந்த விமான நிலையத்தை சேர்ந்தவன்?”

“ஆமாம் நீங்கள் யாரோ?”

“உனக்கு அது எதற்காக? நீ பதில் சொல்லு!”

“நான் மொன்ச்சாலோவ்ஸ்க் விமான நிலையத்தைச் சேர்ந்தவன். எனக்கு உதவுங்களேன், வெளியே வாருங்களேன்! என்ன சனியன் பிடித்த…”

புதர்களுக்குள் ஆட்கள் தீவிரமாகக் கிசுகிசுத்து விவாதித்தார்கள். இப்போது அவர்களுடைய பேச்சு அலெக்ஸேய்க்குத் தெளிவாகக் காதில் விழுந்தது.

படிக்க:
மாரடைப்பு என்றால் என்ன ? உடனடியாக செய்யவேண்டியது என்ன ? | மருத்துவர் BRJ கண்ணன்
அல்லாவின் பெயரால் : பாகிஸ்தானியரின் கனவும் … சவுதி மரண தண்டனையும் !

“கேட்டாயா, மொன்ச்சாலாவ்ஸ்க் நிலையத்தைச் சேர்ந்தவனாம்…. ஒருவேளை உண்மையாயிருக்கலாம்… ஏய், விமானி, ரிவால்வாரை இப்படி வீசி எறி! எறிந்து விடு, சொல்லி விட்டோம். இல்லாவிட்டால் வெளியே வர மாட்டோம், ஓடி விடுவோம்!”

அலெக்ஸேய் ரிவால்வாரை ஒரு புறம் எறிந்தான். புதர்கள் விலகின. ஆவல் கொண்ட சிட்டுக் குருவிகள் போன்று எந்த நிமிடமும் சிவ்வென்றுப் பறந்து விடத் தயாராக எச்சரிக்கையுடன், ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு அவன் பக்கம் நெருங்களாயினர் இரண்டு சிறுவர்கள்.

மூத்தவன், தகப்பனின் பிரம்மாண்டமான நமுதா நீள் ஜோடுகளை அணிந்து அலெக்ஸேயின் அருகே வந்து வெண் பனியில் கிடந்த ரிவால்வாரை எற்றித் தள்ளினான்.

“விமானி என்றா சொல்லுகிறாய்? தஸ்தாவேஜுகள் இருக்கின்றனவா? காட்டு”

சட்டைப் பைக்குள்ளிருந்து பிரமாணப் புத்தகத்தை எடுத்துக் காட்ட வேண்டியதாயிற்று. கமாண்டருக்குரிய நட்சத்திரம் பொறித்த சிவப்புப் புத்தகம் சிறுவர்கள் மீது மந்திரம் போட்டது போன்ற விளைவை ஏற்படுத்தியது. பகைவர் கைப்பற்றலுக்கு உள்ளாகியிருந்த நாட்களில் அவர்கள் இழந்துவிட்ட பிள்ளைமைக் கூட, அவர்கள் முன் தங்களவன், அருமை சோவியத் சேனையைச் சேர்ந்த விமானி இருப்பதைக் கண்டதுமே ஒரேயடியாகத் திரும்பி வந்துவிட்டது போல் இருந்தது.

“மாமா, நீ ஏன் இப்படி இளைத்துப் போயிருக்கிறாய்?”

“பாசிஸ்டுகள் இங்கிருந்து விரட்டப்பட்டார்கள். நம்மவர்கள் அவர்களை எப்படி அடித்துப் புடைத்து நொறுக்கினார்கள் தெரியுமா? பயங்கரச் சண்டை நடந்தது இங்கே. ஜெர்மன்காரர்களைக் கொன்று குவித்து விட்டார்கள் நம்மவர்கள். அடேயப்பா, எத்தனை பேரைக் கொன்று விட்டார்கள் தெரியுமா?”

“பாசிஸ்டுகள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அகப்பட்டதில் ஏறிக்கொண்டு தப்பி ஓடினார்கள். ஒருவன் தொட்டியை ஏர்க்காலுடன் சேர்த்துக் கட்டிக் கொண்டு தொட்டியில் சவாரி செய்தான். காயமடைந்த இரண்டு பேர் குதிரை வாலைப் பிடித்துக் கொண்டார்கள். மூன்றாமவன் அதன் மேல் ஏறிக் கொண்டான். இந்தக் கோலத்தில் அவர்கள் பிரயாணம் செய்தார்கள்… ஆமாம் மாமா, உன் விமானத்தை யார் அடித்து வீழ்த்தினார்கள்?” இப்படிச் சற்று நேரம் புட்கள் போலச் சிலம்பிய பின் சிறுவர்கள் காரியத்தில் முனைந்தார்கள்.

திறப்பு வெளியிலிருந்து குடியிருப்பு அவர்களின் தகவலின்படி ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. வில்லோ மரக்கிளைகள் சேகரிப்பதற்காக “ஜெர்மானியக் காடு திருத்திடத்துக்கு இச்சிறுவர்கள் கொண்டுவந்திருந்த ஸ்லெட்ஜ் மிகமிகச் சிறியதாக இருந்தது. தவிர, பாதையற்ற கன்னி வெண்பனிமீது ஓர் ஆளை இழுத்துச் செல்வது சிறுவர்களின் சக்திக்கு மீறிய செயல். முழு மூச்சாகக் கிராமத்துக்கு ஓடி ஆட்களை அழைத்து வரும்படி இளையவன் பேத்யாவுக்கு உத்தரவிட்டான் மூத்தவன் செர்யோன்கா. தான் அலெக்ஸேயை ஜெர்மானியர்களிடமிருந்து பாதுகாப்பதற்பாக அவனருகே தங்கிவிட்டான். ஆனால் வெளிக்கு இப்படிச் சொன்ன போதிலும் உள்ளூற அவன் நினைத்தது வேறு. அலெக்ஸேயை அவன் நம்பவில்லை. பாசிஸ்டு பலே தந்திரக்காரன். சாகப்போகிறவன் போலப் பாவனைச் செய்வான், சான்றுப் பத்திரங்களையும் எங்கேனும் திருடியிருப்பான்…” என்று எண்ணினான். ஆனால் கொஞ்சங் கொஞ்சமாக இருந்தச் சந்தேகங்கள் விலகிவிடவே சிறுவன் கலகலவென்று பொரிந்து கொட்டத் தொடங்கினான்.

மென்மையான, புஸ்புஸுவென்று அடர்ந்த ஊசியிலைப் பரப்பின் மேல் படுத்து, பாதி மூடிய விழிகளுடன் உறங்கி வழிந்தான் அலெக்ஸேய். சிறுவனின் கதையை அவன் அரை குறையாகவே கேட்டான். திடீரென அவனது உடல் முழுவதையும் பிணித்த அமைதியான உறக்க நிலையில், தனித்தனியான, சம்பந்தா சம்பந்தம் இல்லாத சொற்றொடர்களே அவன் உணர்வை எட்டின. அவற்றின் பொருளைப் புரிந்து கொள்ளாமலே தாய் மொழியின் ஒலிகளில் துயிலுடனே இன்பம் துய்த்தான் அலெக்ஸேய். ப்ளாவ்னி என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு நேர்ந்த விபத்தைப் பற்றி அப்புறம்தான் அவன் தெரிந்து கொண்டான்.

“பாசிஸ்டுகள் இங்கிருந்து விரட்டப்பட்டார்கள். நம்மவர்கள் அவர்களை எப்படி அடித்துப் புடைத்து நொறுக்கினார்கள் தெரியுமா? பயங்கரச் சண்டை நடந்தது இங்கே.

காடுகளும் ஏரிகளும் நிறைந்த இந்தப் பிரேசத்துக்கு ஜெர்மானியர்கள் அக்டோபர் மாதமே வந்துவிட்டார்கள். ப்ளாவ்னியின் சுற்று வட்டாரங்களில் சண்டைகள் நடக்கவில்லை. ஒரு முப்பது கிலோ மீட்டர் மேற்கே அவசர அவசரமாக நிறுவப்பட்டிருந்த தற்காப்பு அரண்வரிசையில் இருந்த சோவியத் படைப் பிரிவைத் தாக்கி அழித்துவிட்டு விறல் மிக்க டாங்கி முன்னணிப் பிரிவுகளுடன் வந்த பாசிஸ்ட் படைகள், பாதையிலிருந்து ஒதுக்குப்புறமாகக் காட்டு ஏரியின் பக்கத்தில் மறைந்திருந்த இந்தக் கிராமத்தின் உள்ளே புகாமலே கிழக்கு நோக்கிச் சென்றுவிட்டன.

படிக்க:
♦ பா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா !
♦ சென்னை மெட்ரோ : பணிப்பாதுகாப்பு இல்லை ! பயணம் மட்டும் பாதுகாப்பாக இருக்குமா ?

போர் தங்களை விட்டு விலகிப் போய்விட்டது என்று பளாவ்னி கிராமக் குடியானவர்கள் மகிழ்ந்தார்கள். பாசிஸ்டுகள் வழக்கமாகக் கோருவதற்கு இணங்கத் தங்கள் கூட்டுப் பண்ணைத் தலைவனது பதவிப் பெயரை நாட்டாண்மைக்காரன் என்று மாற்றிவிட்டார்கள். ஆக்ரமிப்பாளர்கள் சதாகாலமும் சோவியத் மண்ணை மிதித்து வைத்துக் கொண்டிருக்கப் போவதில்லை. ஆகவே இத்துன்பம் விலகும் வரைப் பொறுத்துச் சமாளிக்கக் காட்டின் ஒதுக்குப்புறத்தில் இருந்த ப்ளாவ்னி கிராமத்தவர்களுக்கு ஒரு வேளை முடியலாம். இவ்வாறு நம்பி, கிராமவாசிகள் முன் போலவே கூட்டுறவு முறையில் தொடர்ந்து வாழ்ந்து வந்தார்கள். ஆனால் சதுப்பு நிலப் பூண்டு நிறச் சீருடை அணிந்த ஜெர்மானியர்களைத் தொடர்ந்து மோட்டார்களில் வந்தார்கள் கறுப்புநிறச் சீருடை அணிந்த ஜெர்மானியர்கள். அவர்களுடைய தொப்பிகளின் மேல் மண்டையோடும் எலும்புகளும் அடையாளமாகப் பொறிக்கப்பட்டிருந்தன. ஜெர்மனிக்கு நிரந்தர வேலைக்காகச் செல்ல பதினைந்து தொண்டர்களை இருபத்து மணி நேரத்திற்குள் தருமாறு ப்ளாவ்னி வாசிகளுக்கு உத்தரவு இடப்பட்டது. உத்தரவு நிறைவேற்றப்படாவிட்டால் கிராமம் பெரு விபத்துக்கு உள்ளாகும் என்று அச்சுறுத்தப்பட்டது.

ஆனால் குறித்த நேரத்தில் ஒருவரும் வரவில்லை. கறுப்பு உடையணிந்த ஜெர்மானியர் ஏற்கனவே அடைந்துள்ள அனுபவம் காரணமாக, ஆட்கள் வருவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் சில ஆட்களைப் பிடித்து, கிராம நிர்வாக அலுவலகத்துக்கு முன் அவர்களைச் சுட்டுக் கொன்றார்கள் – மற்றவர்களை எச்சரிப்பதற்காக. நாட்டாண்மைக்காரன், குழந்தைப் பள்ளியின் முதிய ஆசிரியை வெரோனிக்கா கிரிகோர்யெவ்னா, இரு கூட்டுப் பண்ணைக் குழுத் தலைவர்கள், ஜெர்மானியர் கைகளில் பிடிபட்ட ஒரு பத்து குடியானவர்கள் ஆகியவர்கள் இந்த மாதிரிச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அவர்களுடைய உடல்களை அடக்கம் செய்யவும் ஜெர்மானியர் அனுமதிக்கவில்லை. இன்னும் இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் தொண்டர்கள் உத்தரவில் குறிக்கப்பட்ட இடத்துக்கு வந்து சேராவிட்டால் கிராமத்தினர் எல்லோருக்கும் இந்தக் கதியே என்று அறிவித்தனர்.

தொண்டர்களோ இந்தத் தடவையும் வரவில்லை. எஸ்.எஸ். படையினர் காலையில் கிராமத்தைச் சுற்றிப் பார்க்கையில் எல்லா வீடுகளும் வெறுமையாயிருந்தன. கிழவர்களோ, சிறுவர்களோ, ஒரு பூதரும் இல்லை அவற்றில். தங்கள் வீடுகளையும் நிலத்தையும் வருஷக்கணக்காக சேர்த்திருந்த எல்லாப் பண்டங்களையும், அனேகமாக எல்லாக் கால்நடைகளையும் அப்படியே போட்டுவிட்டு, இந்த வட்டாரங்களில் அடர்த்தியாக இருக்கும் இரவுப் பனி மூட்டத்தின் மறைவில் எல்லா ஜனங்களும் போன சுவடு தெரியாமல் மறைந்து விட்டார்கள். கிராமத்தார் அனைவரும் ஓர் ஆள் பாக்கியின்றிப் பதினெட்டு வெர்ஸ்டாக்கள் தொலைவில் காட்டுக்குள் இருந்த பழையத் திருத்திடத்துக்குக் குடியேறிப் போய்விட்டார்கள். மண்ணைத் தோண்டி நிலவறைகள் அமைத்த பின் ஆண்கள் கொரில்லாப் போர் புரியச் சென்றார்கள். பெண்களும் குழந்தைகளும் வசந்த காலம் வரும் வரை காட்டில் தங்கியிருந்தார்கள். கலகக்கார கிராமத்தை எஸ். எஸ். படையினர் எரித்து சாம்பலாக்கிவிட்டார்கள். பாசிஸ்டுகள் செத்த பிரதேசம் என்று அழைத்த இந்த வட்டாரம் முழுவதிலும் பெரும்பாலான கிராமங்கள் இவ்வாறே தீக்கிரையாக்கப்பட்டன.

“… எங்கள் அப்பா கூட்டுப் பண்ணைத் தலைவராக – இருந்தார். அவரை நாட்டாண்மைக்காரர் என்று ஜெர்மானியர்கள் அழைத்தார்கள்” என்று சொல்லிக் கொண்டு போனான் செர்யோன்கோ. அவனுடைய சொற்கள் சுவரின் மறுபுறமிருந்து வருபவைப் போல அலெக்ஸேயின் உணர்வில் சென்று பதிந்தன. “அவரையும் என் அண்ணனையும் ஜெர்மானியர் கொன்று விட்டார்கள். பதினாறு ஆட்கள் கொல்லப்பட்டார்கள். என் கண்ணால் பார்த்தேன். அவர்களைப் பார்ப்பதற்கு நாங்கள் எல்லோரும் இழுத்து செல்லப்பட்டோம். அப்பா விடாமல் கத்தித்திட்டி நொறுக்கினார். ’பன்றிப் பயல்களா, எங்களுக்காக உங்களைப் பழிவாங்குவார்கள் சோவியத் வீரர்கள்! எங்களைப் படுத்தியதற்குத் தண்டனையாக இரத்த கண்ணீர் வடிக்கப் போகிறீர்கள்’ என்று இரைந்தார்…”

அவரையும் என் அண்ணனையும் ஜெர்மானியர் கொன்று விட்டார்கள். பதினாறு ஆட்கள் கொல்லப்பட்டார்கள். என் கண்ணால் பார்த்தேன். அவர்களைப் பார்ப்பதற்கு நாங்கள் எல்லோரும் இழுத்து செல்லப்பட்டோம்.

அலெக்ஸேய் உறக்க மயக்கத்திலிருந்து சிரமத்துடன் தன்னை விடுவிடுவித்துக் கொண்டு, ”அப்படியானால் காட்டி தான் வசிக்கிறீர்களாக்கும்?” என்று காதில் அரிதாகவே படும்படி ஈன சுரத்தில் சிறுவனிடம் வினவினான்.

“வேறு எங்கே? அங்கேதான் வசிக்கிறோம் பேத்யா, அம்மா, நான், மூன்று பேர் தாம் இருக்கிறோம். நியூக்ஷா என்று ஒரு தங்கை இருந்தாள். பனிக்காலத்தில் காலமாகிவிட்டாள் – உடம்பெல்லாம் வீங்கிச் செத்துப் போனாள். இன்னோரு சின்னக் குழந்தையும் செத்துப் போய்விட்டது. ஆக மீதம் இருப்பவர்கள் நாங்கள் மூன்று பேர் மட்டுமே… அதோ பேத்யாவோடு, தாத்தா வருகிறார் பாருங்கள்!”

சிறுவர்களால் மிஹாய்லா தாத்தா என்று அழைக்கப்பட்ட கிழவர் உயரமும் கூனலும் ஒடிசலுமாக இருந்தார். அவர் முகத்தில் நல்லியல்பு சுடர் விட்டது. குழந்தையினுடையவை போன்ற தூய விழிகள் ஒளி வீசின. முற்றிலும் வெள்ளியாக நரைத்த அடர்த்தியற்ற மென் தாடி, அருவிப் போலக் காட்சியளித்தது. பல நிற எட்டுத் துணிகளால் ஆன பழைய ஆட்டுத் தோல் மேல் கோட்டை அலெக்ஸேய்க்கு மாட்டி, அவனுடைய லேசான உடலை அனாயசமாகத் தூக்கி அப்புறமும் இப்புறமும் புரட்டியவாறு கிழவர் இடைவிடாது பேசிக் கொண்டு போனார். அவர் குரலில் குழந்தைத் தனமான வியப்பு தொனித்தது.

“அடப் பாவமே! ஆள் எப்படி ஒரேடியாக தேய்ந்து மாய்ந்து போயிருக்கிறான்! எவ்வளவு எய்த்து இளைத்து விட்டான் பாரேன்!… அட என் ஆண்டவனே, வெறும் எலும்புக்கூடு தான் மிச்சம்! சண்டைதான் ஆட்களை என்னவெல்லாம் பாடுபடுத்து கிறது. அடா-டா-டா! அடா-டா-டா!”

பச்சைக் குழந்தையைப் போல அலெக்ஸேயைப் பதபாகமாகத் தூக்கி, அகன்ற ஸ்லெட்ஜில் கிடத்தினார். பூட்டுக்கயிற்றை அவன் மேல் சுற்றிக் கட்டினார், சற்று யோசித்தார். தமதுத் துணிக் கோட்டைக் கழற்றிச் சுருட்டி அலெக்ஸேயின் தலைக்கு அடியில் வைத்தார். முன்னே போய், கோணிச் சாக்குகளால் ஆன நுகத்தில் கழுத்தை மாட்டிக் கொண்டார், சிறுவர்களுக்கு ஆளுக்கு ஒரு கயிறு கொடுத்து, “”ஊம், புறப்படுவோம்!” என்றார். மூவருமாக இளகிய வெண்பனிமீது ஸ்லெட்ஜை இழுத்துச் செல்லலானார்கள். வெண்பனி, ஸ்லெட்ஜின் சறுக்கு கட்டைகளுக்கு அடியே உருளைக்கிழங்கு மாவுப் போல ஒட்டிக் கொண்டு கறுமுறுத்தது, பாதங்களுக்கு அடியே புதைந்தது.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் நினைவை நெஞ்சிலேந்துவோம் ! தூத்துக்குடி மக்கள் அறைகூவல் !

மே 22 தியாகிகளுக்கு நினைவஞ்சலி நிகழ்த்த ஆதரவு கோரி  வணிகர் சங்கங்களின் பேரவையிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு  மக்கள் கூட்டமைப்பு கோரிக்கை !

தூத்துக்குடியில் 05.05.2019 அன்று வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாக 36-வது மாநில மாநாடு (சுதேசி பொருளாதார மாநாடு) நடைபெற்றது. அதில் வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர், ஐயா வெள்ளையன் அவர்களிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக மே -22 அன்று, அவரது தலைமையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு நினைவஞ்சலி நடத்த வேண்டும் என்றும், அன்று ஒரு நாள் முழு கடையடைப்பு செய்யவேண்டும் என்றும் இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும் அந்த மாநாட்டில் கலந்துகொண்ட வழக்கறிஞர் ஹென்றி திபேன், ஐயா பழ. நெடுமாறன் அவர்களையும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் சந்தித்தனர். அவர்களிடமும் நினைவஞ்சலி நடத்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று ஐயா பழநெடுமாறன் அவர்கள் மே 22 அன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவஞ்சலி நடத்துவதாக கூறியுள்ளார்.

தூத்துக்குடியின் மண்ணையும், மக்களையும் பாதுகாக்க ஸ்டெர்லைட் எனும் நாசகார ஆலைக்கு எதிராகப் போராடி தங்கள் உயிரை அர்ப்பணித்த தியாகிகளுக்கு அனைத்து கட்சிகளும், ஜனநாயக அமைப்புகளும் நினைவஞ்சலி செலுத்த வேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இப்படிக்கு,
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு,
தூத்துக்குடி. 

மன்னர்களை மண்டியிடச் செய்த மாவீரனுக்கு சாஸ்திரத்தைக் காட்டுகிறார்கள் !

சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 14


காட்சி : 20

இடம் : இந்துமதி தனிஅறை
உறுப்பினர்கள் : இந்துமதி.

(இந்துமதி தனிமையில் சோகமாய்ப் பாடுகிறாள்)

காட்சி : 21
இடம் : தர்பார்
உறுப்பினர்கள் : சிவாஜி, மோகன், தளபதிகள், வீரர்கள்.

(கோட்டை உடைத்தல்)

தளபதி – 1 : காகப்பட்டரின் மறுமொழி கிடைத்துவிட்டதாமே? சாஸ்திர சம்மதம் பெற்ற மார்க்கம் இருக்கிறதாமே?

சிவாஜி : ஆமாம்! சூத்திரனை க்ஷத்திரியனாக்குகிறாராம். அதற்கு ஒரு சடங்கு இருக்கிறதாம்.

மோகன் : பறவைக்கு இறக்கையை ஒட்டிவிடப் பார்க்கிறார்கள். சூட்சி பலித்துவிட்டது.

சிவாஜி : இதிலே சூட்சி என்ன இருக்கிறது? அவர்கள் சாஸ்திரத்தைத் தானே கூறுகிறார்கள்?

மோகன் : ஆமாம்! சாஸ்திரத்தைதான். ஆனால், யாருடைய சாஸ்திரம்? எதிரிகளிடம் இந்த நாடு சிக்கிய போது, அந்த சாஸ்திரம் உதவவில்லையே? யாரும் அதன் துணையைத் தேடவில்லையே? கங்கைக் கரைக்கா ஓடினோம். களத்திலே என்ன செய்வது, எப்படிப் போரிடுவது என்று கேட்க ? மராட்டியரின் தோள் வலிமையும், அவர்கள் ஏந்திய வாளின் கூர்மையும், அப்போது தேவைப்பட்டது. இப்போது மன்னர்களை மண்டியிட வைத்த மாவீரனுக்கு சாஸ்திரத்தைக் காட்டுகிறார்கள். சாஸ்திரத்தை !

தளபதி – 1 : அதைத் தவிர வேறு வழி காணோமே?

மோகன் : எங்கே போக வழி வேண்டும் தோழரே? வீரபுரிக்கு மார்க்கம் வெகு தெளிவாக இருக்கிறது. விவேக புரிக்கும் அப்படித்தான். ஆனால் வைதீகபுரிக்குத் தான் – வளைந்த பாதை இருக்கிறது.

தளபதி – 1 : காகப்பட்டர் நமது தலைவரை க்ஷத்திரியராக்க இசையும் போது, நமக்கென்ன கஷ்டம்? சிக்கல் தீர்ந்து விட்டது என்றல்லவா தெரிகிறது.

மோகன் : அதை நான் மறுக்கிறேன் மாதவரே! பலமாக மறுக்கிறேன். சிக்கல் தீரவில்லை; சிக்கல் பலமாகிறது. வீர சிவாஜியின் வெற்றிகள் அத்தனையும் வீண் என்பதை நாம் பிற்காலச் சந்ததிக்குச் சாசனமாக்குகிறோம். போரிலே புலியாக இருந்தார். ஆனால் வைதீகபுரியிலே சிக்கினார் சிவாஜி என்று வருங்காலத்தில் மக்கள் கூறத்தான் போகின்றனர். நெடுங்காலத்துக்குப் பிறகும் போரிடவோ, ஆளவோ, உழைக்கவோ, ஊருக்கு உதவி செய்யவோ, வீரமோ, தீரமோ , தகுதியோ, திறமையோ அற்றக் கூட்டம் பெருமையுடன் தலை நிமிர்ந்து கூறத்தான் போகின்றது. மாவீரன், மராட்டியம் பெற்றெடுத்த தீரன், களத்திலே சூரன் சிவாஜி. ஆனால் எமது காகப்பட்டரிடம் அடைக்கலம் புகுந்த பிறகே அரியாசனம் ஏற முடிந்தது. எமது ஆதிபத்தியத்தைப் பாரீர் என்று பேசத்தான் போகிறது.

வீரத் தலைவனே! வேண்டாம். வேண்டாம், இந்த விபரீத காரியம். மராட்டியத்தின் மானத்தைக் காக்கத் தயங்காதீர். மணிமுடி தரிக்க உமக்கு எந்த ஜடாதரியின் தயவும் தேவையில்லை

சிவாஜி : தயவல்ல! ஆசீர்வாதம் தானே அது! அதைப் பெறுவதிலே இழிவு என்ன?

தளபதி – 1 : சாஸ்திரப் பலத்தைத்தான் தேடுகிறோம்.

மோகன் : மகனை இழந்தாலும் மனம் தளராத மாதர்கள் மராட்டியத்திலே இருக்கிறார்கள். வீரர்கள் ஏராளமாக உள்ளனர். தியாகப் புருஷர்கள் இருக்கிறார்கள். இவர்களால் வரும் பலம் உங்களுக்குப் பலமாகத் தோன்றவில்லை. மகராஜ்! பச்சிளங் குழந்தைக்குப் பாடுவது போல் இருக்கிறது தங்களுடைய வாதம். காகப்பட்டர் தங்களைச் க்ஷத்திரியராக்குகிறார். தாங்கள் தோன்றிய திருக்குலத்தையல்ல. அந்தக் குலம் என்றும் சூத்திரக் குலமாகவே இருக்குமே. தங்களை எங்களிடமிருந்து பிரித்து விடுகிறார். தாங்கள் பிறந்த குலம் தாழ்ந்தது. நாடாளத் தகுதியற்றது என்று தாங்களே ஒத்துக் கொள்ளும்படி சொல்கிறார்.

பெற்ற தாயைப் பிச்சைக்காரியாக்கிவிட்டு, மகன் பெருநிதி பெற்று வாழ்ந்தால் அவனை பெரியோன் என்று பேதையும் கூறானே. குடியானவர் குலத்துக்கு என்ன மாசு? நமது குலத்தைக் குறை கூறும் ஏட்டை நாம் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்று அவர்கள் காட்டும் ஏட்டின் துணைகொண்டு, நாம் நாட்டை மீட்டிருந்தால் அதற்கு நாம் மதிப்பளிக்கலாம். எதிரிகள் நம்மைத் தாக்கிய போது அந்த ஏடு கேடயமாக இல்லை, வாளாக இல்லை, வாளையிடும் உறையாகக் கூடப் பலனளிக்க வில்லையே! ஏன் அந்த ஏடு மகராஜ்?

சிவாஜி : சந்திரமோகன்! ஆரியர்களின் அபிப்பிராயப்படி நடப்பதால் நீ இவ்வளவு அதிருப்தி கொள்ளலாமா? நானும் முதலிலே கோபித்துக் கொண்டேன். ஆனால் இப்போது காக்கப்பட்டரின் யோசனை இருதரப்பாருக்கும் திருப்திகரமாக இருக்கிறது என்றே எண்ணுகிறேன். சாஸ்த்திர சம்பிரதாயமும் நிலைக்கும். உன் போன்ற உள்ள தோழர்களின் அபிலாஷையும் நிறைவேறும்.

மோகன் : மராட்டியத் திலகமே மன்னிக்க வேண்டும். நான் வெற்றி வீரன் சிவாஜி ஆவதை விரும்பி வந்தேனே ஒழிய, ஆரிய தாசனான பிறகு அரியாசனம் ஏறும் துர்ப்பாக்கிய காட்சியைக் காண வரவில்லை. மகராஜ் ஆரிய சிரேஷ்டர் என்று அர்ச்சிக்கிறீர். ஒரு ஆற்றலற்ற கூட்டத்தை பார்ட்டாரி தேசத்துப் புரவிகள் மீதமர்ந்து. தகதகவெனும் கவசம் பூண்டு, பளபளக்கும் கடகம் ஏந்தி, போர்க் குணம் படைத்த மக்கள் இங்குப் புயலெனக் கிளம்பிய பொழுது, காய்ந்த புல்லைக் கையிலேந்தி திரிந்த கூட்டம் என்ன செய்தது? தாங்கள் யார்? தங்களுடைய வீர தீரம் எத்தகையது? தாங்கள் எங்கள் கண்களுக்கு மராட்டிய நாட்டிலே மார்தட்டி நின்று, மகத்தான போராட்டங்களை நடத்திய மாவீரராக காட்சியளிக்கிறீர். கட்கமெடுத்து, புரவி மீதேறி, காடு மலை கடந்து சென்று, கடும் போரிட்ட வீரன். ஆனால் அவர்கள் கண்களுக்கு ஒரு சூத்திரராகத் தெரிகிறீர். கண்ணிலும், கருத்திலும் கடும் விஷம் இருக்கிறது காவலா!

மராட்டிய மண்டலத்தைக் கமண்டல நீர் தெளித்து அவர்கள் உண்டாக்கவில்லை. மராட்டியரின் ரத்தத்தைச் சிந்தி இந்த மண்டலத்தைப் பெற்றோம். யாக குண்டத்தின் விளைவல்ல மராட்டியம். தியாகத் தீயிலே தோன்றிய தேசம். இந்த வேலையை வேதம் ஓதும் அவர்கள் செய்யவில்லை. நாம் செய்தோம்; நம்மை நிந்திக்கிறார்கள், சூத்திரர்கள் என்று. அதை நாம் ஏற்றுக் கொள்வதா, மன்னா! இது நமது வீழ்ச்சியின் அறிகுறி என்பேன்.

தளபதி – 2 : தளபதிகளே ! மராட்டிய மண்டலத்திற்கு ஒரு மன்னன் தேவை. மக்களின் விருப்பம் மட்டுமல்ல, பரத கண்டம் முழுவதும் இதே பேச்சாக உள்ளது. ஆகவே நாம் சில்லறை விஷயங்களைப் பேசிக்கொண்டு சிக்கலை வளர்த்துக் கொள்வது நல்லதல்ல. காகப்பட்டரை வரவழைத்து, அவர் கூறும் சடங்கு செய்து, நமது தலைவரை முடிசூட்டிக் கொள்ளச் செய்வதே முறை.

மோகன் : தளபதிகளே! மிக மிக சாமான்யக் குடியிலே பிறந்த சிவாஜி. ஒரு பெரிய அரசை, மராட்டிய சாம்ராஜ்யத்தைத் தன் தோள் வலிமையால் கண்டார். அவரது மின்னும் வாள் ஒளி வீசாத இடமில்லை . அவருடைய படையின் பரணி கேட்காத நாளில்லை. அவருடைய கண்ணோட்டம் அடிமைத்தனத்தைப் போக்கிற்று காடுகளிலே கூடாரங்கள், மலைகளிலே கோட்டைகள், குகைகளிலே பாசறைகள். யாரால் ஏற்பட்டன? நமது இனத்தின் பங்கத்தைப் போக்கிய சிங்கத்தால், அந்தச் சிங்கம் சிலந்திக் கூட்டிலே சிக்குவதா? ஈட்டிக்கு மார்பு காட்டுகின்ற இணையில்லா வீரன், உலர்ந்த சருகு கண்டு உடல் துடிக்க நிற்பதா? மார்பு வாள் வடுவுடன் விளங்க, மராட்டியத்திலே மண்ணோடு குருதி கலந்து குழைய, மராட்டியக் குடும்பங்களிலே தாய்மார்கள் கோவெனக் கதற, போரிட்டு நிறுவியது மராட்டிய சாம்ராஜ்யம். மலை, காடு, நதி, படை எதுவும் தடுக்கவில்லை சிவாஜியை! ஆனால் ஆரியர்கள் தடுக்கின்றனர். எவ்வளவு விசித்திரம். வேதனை தரும் விசித்திரம். கூண்டிலே சிக்கிய புலி, தூண்டிலிலே சிக்கிய மீன், வலையிலே வீழ்ந்த மான், வர்ணாஸ்ரமத்திலே வீழ்ந்த வீரன் – இந்த வேதனை தரும் காட்சியையா நான் காணவேண்டும்? ஐயோ, மராட்டியமே! உன் நிலை இப்படியா குலைய வேண்டும்? ஒரு சிறு கூட்டத்திடம் சிக்கிச் சீரழிகிறாயே.

சிவாஜி : மக்களின் மனப்போக்கைக் கவனிக்க வேண்டாமா?

மோகன்: மக்களின் மனம்! தாங்கள் வீரமாகக் கிளம்புவதற்கு முன்பு மக்களின் மனம் இனி என்றென்றும் நாட்டிற்கு விடுதலை கிடையாது; விடுதலை பெற முடியாது என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தனர். போரிடக் கிளம்பிய நீர், புதுமையைக் கண்டீர். கோழையும் வீரனானான் ; கோட்டைகள் தூளாயின; கொட்டினோம் வெற்றி முரசு, பறக்கிறது, சுதந்திரக் கொடி.

சிவாஜி : மோகனா! காகப்பட்டரின் யோசனையை மறுத்தால், என்ன நேரிடும் என்பதை எண்ணிப் பார்க்காமலே பேசுகிறாய் .

மோகன் : என்ன நேரிடும்? காகப்பட்டர் தமது ரத, கஜ, துரக பதாதிகளுடன் மராட்டியத்தின் மீது படையெடுத்து விடுவார். நாம் அவரது அசகாய சூரர்களால் தோற்கடிக்கப்பட்டு விடுவோம்! அதுவா சத்திரபதி தங்கள் சிந்தை கலங்குவதற்குக் காரணம்?

சிவாஜி : மோகன்! நீ என்னைக் கேலி செய்கிறாய்! நான் நெடுநேரமாக உனது பேச்சுக்கு இடமளித்து வந்தேன். இனி வாதிடப் போவதில்லை. நான் காகப்பட்டரை வரவழைப்பதென்று தீர்மானித்து விட்டேன். தீர யோசித்துத்தான் இந்த முடிவுக்கு வந்தேன். இனி நீ போகலாம்; காகப்பட்டரை வரவழைக்க ஏற்பாடுகள் தயாராகட்டும்.

(மோகன் தலை குனிந்து நிற்கிறான். சபை கலைகிறது. மோகன் போகிறான். சிவாஜி உலவியப்படி)

சந்திரமோகன் கூறுவது அவ்வளவும் உண்மைதான்!

(கோட்டைகளைப் பார்த்து)

அதோ தோர்ணா, அந்தக் கோட்டையைப் பிடிக்க நடந்த பயங்கரச் சண்டையை நினைத்துக் கொண்டால், ஆபத்தைத் துரும்பாக எண்ணிய சிவாஜியின் நிலைமையை இன்றைய நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்…..? எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது.

“சத்திரபதி இந்தக் கணவாயின் பக்கம் போகக்கூடாது.”

”ஏன்?”

“எதிரியின் படை பலம் அதிகம்.”

“கோழைகள் விலகட்டும், வீரர்கள் பின் தொடரட்டும்.”

”கொட்டு முரசு” என்று உத்தரவிட்டுப் பாய்ந்து சென்று வெற்றி பெற்ற புரந்தர். எதிரியே ஆச்சரியம் அடையும்படியான அபார வீரத்துடன் வெற்றி பெற்ற ராஜகிரி, மராட்டிய கீர்த்தியின் உறைவிடம் போலுள்ள கல்யாண்…

கோட்டைகள் வெற்றியின் சின்னங்கள் ; வீரத்தின் அறிகுறிகள்; அந்த சிவாஜியா நான்? அஞ்சா நெஞ்சன் எங்கே? பஞ்சையிடம் பணியப்போகும் நான் எங்கே ? ஒழிந்தது. அந்த சிவாஜி மங்கிவிட்டான். எதற்கும் அடிபணியும் சிவாஜி உலாவுகிறான். தோர்ணா! புரந்தர்! ராஜகிரி! என் கண்முன் இருக்க வேண்டாம்.

(கோட்டைகளை உடைத்து )  சிதறுகின்றன சிறுசிறு துண்டுகளாக. வீரத்தின் சின்னங்கள். என் மனக்கோட்டை பொடிப் பொடியாகிறது.

(மெளனமாக உலவிவிட்டு)

சந்திரமோகா! நீ எல்லாம் அறிந்திருக்கிறாய் வெட்டு ஒன்று; துண்டு இரண்டாகப் போகிறாய்; வீரன். ஆனால் என் நிலையை மட்டும் உணரவில்லை. ஒரு வினாடியில் காகப்பட்டர் வேண்டாம், மகுடாபிஷேகம் இன்று நடக்குமென்று உத்தரவு பிறப்பித்து விடலாம். மராட்டியம் மறுக்காது. ஆனால் மறுகணம் முதல் என்ன நடைபெறும்? இந்த மண்டலத்திலும், வேறு பல மண்டலங்களிலும் ஆஸ்ரமவாசிகள் ஆரம்பிப்பார் தமது பிரச்சாரத்தை.

படிக்க:
சாதி உங்களுக்கு என்ன செய்தது ?
மோடி : அடிமைகளின் மகாராஜா ! மகாராஜாக்களின் அடிமை !! புதிய கலாச்சாரம் மின்னிதழ்

‘மராட்டிய மண்டலாதிபதி சாஸ்திர விரோதி! சம்பிரதாய வைரி! சனாதனத்தைக் கெடுத்தவன்! அவனுடைய ராஜ்யம் பாவ பூமி!’என்று கூறுவர்.

அவர்கள் பூதேவர்கள்! மக்கள் அப்படித்தானே எண்ணுகிறார்கள். அந்த மக்கள் பிறகு மராட்டிய மண்டலத்தை உள்ளிருந்து கெடுத்துவிடுவர். நான் இன்று பட்டாச்சாரிக்குப் பணியாவிட்டால், அந்தப் பாதகர்கள் பாமரரை நாளை என் மீது ஏவிவிடுவர். மராட்டியனைக் கொண்டே மராட்டியனை அழிப்பர். பரத கண்டம் முழுவதும் ‘சிவாஜி நீச்சன், சாஸ்திர சம்மதமில்லாது ராஜ்யம் ஸ்தாபித்தான். அவனுக்குச் சர்வ நாசம் சம்பவிக்கும். – இமயம் முதல் குமரி வரை எனக்கு எதிர்ப்பு, ஏளனம் கிளம்பும். என்ன செய்வேன்? மராட்டியத்தை அவர்கள் சும்மா விட மாட்டார்களே. ஒருபுறம் வெளிநாட்டார் எதிர்ப்பு ; வேறொரு புறம் வேறு வேந்தர்களின் எதிர்ப்பு! மராட்டியத்திலேயே எதிர்ப்பு. எத்தனை கணைகளைத்தான் மராட்டிய மாதா தாங்குவாள். மோகன் நான் பணிந்துதான் ஆகவேண்டும்; வீழ்ச்சிக்குத் தான்! ஆனால் வேறு வழியில்லை; வேறு வகையில்லை.

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

தூத்துக்குடி தியாகிகளின் நினைவைப் பேசாதே ! போலீசு பொய் வழக்கு !

பத்திரிகைச் செய்தி

11.05.2019

தூத்துக்குடி தியாகிகளின் முதலாமாண்டு நினைவைப் பேசக்கூடாது என்பதற்காகவே பொய்வழக்கு!

கடந்த 2018-ம் ஆண்டு, டிசம்பர் 29 அன்று “14 பேரின் உயிர் தியாகம் வீணாகலாமா? குற்றவாளிகளை கைது செய்!”  என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்க கட்டிடத்தில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் தோழர் இளஞ்சேகுவேரா, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலர் தோழர் தியாகு, ஜனநாயக வழக்குரைஞர் சங்கத்தின் செயலர் பாரதி, வழக்குரைஞர் சுரேஷ் சக்தி முருகன் ஆகியோர் மீது 505(i)(b) சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது திருவல்லிக்கேணி போலீசு.

இந்த வழக்கு பதிவு செய்ததின் பின்னணி என்ன?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டடத்தை சீர்குலைத்து வன்முறையை ஏவி 15 பேரை சுட்டுக் கொன்றது போலீசு.

சுட்டுக்கொன்ற போலீசு மீது எந்த நடவடிக்கையும் இல்லை, ஆனால் போராடிய மக்கள் மீதும், மக்கள் அதிகாரம் அமைப்பின் மீதும், போடப்பட்ட வழக்குகளும், ஏவப்பட்ட அடக்குமுறைகளும் ஏராளம்.

படிக்க :
♦ தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் ! மக்கள் அதிகாரம் ராஜு பதில்
♦ தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | போலீசு உருவாக்கிய பொய்க் கதை

மக்கள் அதிகாரம் சார்பில் கூட்டங்கள் நடத்த போலீசு அனுமதி மறுக்கிறது. அரங்க நிர்வாகிகளை அச்சுறுத்துகிறது. அதையும் எதிர்கொண்டு சென்னை நிருபர்கள் சங்கக்கட்டிடத்தில் நடத்திய கூட்டத்திற்குதான் இந்த வழக்கு.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் முதலாமாண்டு நினைவேந்தலை மக்கள் அனுசரிக்க உள்ள நிலையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்றுவரை தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேசுவதையேகூட குற்றமாக்கி பொது அமைதியை சீர்குலைத்தது போலீசுதான். அது மட்டுமல்ல, எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, மீத்தேன் என எதைப் பேசிடவும் கூடாது என்கிறது அரசு.

பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக, மக்களுக்கு ஆதரவாக நிற்பவர்கள் மீது போலீசு வழக்கு பதிவு செய்கிறது.

இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மீதும், மற்ற தலைவர்கள் மீதும் போடப்பட்ட பொய் வழக்குகள் உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

போலீசின் சர்வாதிகாரத்திற்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தங்கள்
தோழர். மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்
9962366321
ppchennaimu@gmail.com
Facebook id : makkal athikaram

ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு ! உண்மையா ? பொய்யா ?

ச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது அவரிடம் பணிபுரிந்த முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்திருக்கிறார். இதனை விசாரிக்க அமர்த்தப்பட்ட மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வும், அதிவேகமாக விசாரித்துவிட்டு கோகோய் குற்றமற்றவர் என அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

ஒரு வழக்கறிஞர் இதன் பின்னணியில் தலைமை நீதிபதிக்கு எதிராக ஒரு பெரும் சதி நடப்பதாக வழக்குப் பதிவு செய்திருந்தார். விசாரணையில் அவரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இது போக, புகார் அளித்த அந்தப் பெண் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் இருந்து வெளியே வந்ததை ‘யாரோ’ பார்த்ததாக  வாட்சப் செய்திகள் ஒரு புறமும், உச்சநீதிமன்ற நீதிபதியை ’மிரட்டி’ வைப்பதற்காகவே, அப்பெண் காங்கிரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என்பது போன்ற சந்தேகங்கள் மற்றொரு புறமும் எழுப்பப் படுகின்றன. ஜனநாயகத்தை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருப்பதாகக் கூறிக் கொள்ளும் பாஜக-வும், காங்கிரசும் இவ்விவகாரம் குறித்து வாய் கூட திறக்கவில்லை. .

எனில் இந்தச் சம்பவங்களின் பின்னணியில் உள்ள உண்மை என்ன ? அந்தப் பெண் பொய் சொல்கிறாரா ? ரஞ்சன் கோகாய் மிரட்டப்படுகிறாரா ? விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராஜு.

பாருங்கள் ! பகிருங்கள் !