Thursday, July 10, 2025
முகப்பு பதிவு பக்கம் 398

வல்லரசு இந்தியாவின் வளர்ச்சி : காற்று மாசுபாட்டில் மட்டும்தான் !

சியாவின் மிகப்பெரிய பொருளாதாரமான சீனா நீண்ட காலமாக காற்று மாசுபாட்டிற்காக பெயர் பெற்றது. ஆனால் சமீப காலமாக, அதன் அண்டை நாடான இந்தியா காற்று மாசுபாட்டுடன் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி வருகிறது. தெற்காசிய நாடான இந்தியாவில்தான் உலகிலேயே மிகவும் மாசடைந்த 10 நகரங்கள் உள்ளன.

உலகிலேயே மோசமான காற்றை சுவாசிப்பதற்குக் கொடுக்கப்படும் தனிநபர் மற்றும் பொருளாதார விலை குறித்து 29 வயதான குசும் தோமர் (Kusum Tomar) நன்கறிந்துள்ளார். காற்று மாசுபாடே தனது நுரையீரல் புற்றுநோய்க்கான முதன்மைக் காரணி என்பதை அவர் அறிந்திருக்கிறார். அவர் ஒருபோதும் சிகரெட்டை புகைத்ததில்லை. சிகிச்சை செலவிற்காக அவரது கணவர் நிலத்தை விற்றுவிட்டார். உறவினர்களிடமிருந்து கடன் பெற்றுள்ளனர். அவர்களது சேமிப்பும் மெல்ல மெல்ல கரைந்துவிட்டது.

“நாட்டின் பொருளாதார வளர்ச்சி பற்றியே இந்த அரசு எண்ணுகிறது. ஆனால் மக்கள் நோய்களால் துன்பப்படுகின்றனர், சாகின்றனர்” என்கிறார் தோமர். மேலும், “உள்நாட்டில் சொந்த மக்கள் காற்று மாசுபாட்டினால் பொருளாதார சிக்கல்களில் உழலும்போது எப்படி நீங்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைய முடியும்?” என்று கேட்கிறார்.

காற்று மாசுபாட்டைக் குறைக்க ஒரு ஒருங்கிணைந்த தேசிய அணுகுமுறைக்காக நீண்ட காலமாக இந்தியா போராடி வருகிறது. அதே அணுகுமுறை சீனாவிற்கு காற்று மாசுபாட்டை குறைக்க உதவியிருக்கிறது. காற்று மாசுபாட்டை குறைக்க புதிய திட்டங்களை அறிவித்துள்ள மோடி அரசாங்கம் அத்திட்டங்கள் மாசுபாட்டைக் குறைக்கத் தொடங்கியுள்ளதாக கூறுகிறது. ஆனால் நடைபெற்றுவரும் ஆயிரக்கணக்கான கட்டுமானப் பணிகளால் ஏற்படும் மாசு முதல் இலட்சக்கணக்கான மகிழுந்துகள் வெளிப்படுத்தும் புகை வரை இந்தியாவின் பரவலான வளர்ச்சியின் விளைவுகள், இவ்வளர்ச்சியின் நல்ல அம்சங்களை ஒன்றுமில்லாமலாக்குகின்றன.

படிக்க :
தில்லியின் மாசுபாட்டிற்கு காரணம் சிவகாசி பட்டாசா ? அமெரிக்க தார் கரியா ?
சிவகாசி பட்டாசு தொழிலுக்கு சாவுமணி ! அமெரிக்க பெட்கோக்குக்கு சிவப்பு கம்பளம் !!

வரும் வாரங்களில் வட இந்தியா மீது கவிய இருக்கும் பனிக்காலமானது மோடி அரசாங்கத்தின் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான வழிமுறைகளை சோதிக்கக் காத்திருக்கின்றது. இந்த பயிர்ப்பருவத்தில் எரிக்கப்படும் பயிர்கள் மற்றும் தீபாவளிப் பண்டிகையின் போது கொளுத்தப்படும் கோடிக்கணக்கான பட்டாசுகள் காற்று மாசுபாட்டின் அளவை அபாயகரமான அளவிற்கு உயர்த்தும்.

கடுமையான மாசுப்பாட்டு வழிமுறைகளை வெற்றிகரமாக அமல்படுத்தியிருந்தால் இந்திய அரசும் அதன் மக்களும் இன்னும் செழிப்பாக இருந்திருக்கலாம். மருத்துவச்செலவுகள் மற்றும் உற்பத்தித்திறன் இழப்பின் காரணமாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.5 விழுக்காடு அளவிற்கு இழப்பு ஏற்படுவதாக உலக வங்கி கணக்கிட்டுருக்கிறது. இந்தியாவின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியான 2.6 ட்ரிலியன் டாலரில் (190 இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம்), சுமார் 221 பில்லியன் டாலர் (16 இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம்) வரை ஆண்டுதோறும் இந்தியா இழக்கிறது.

உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருந்தாலும் கூட 12.2 டிரில்லியன் டாலருடன் (894 இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம்) அதை விட கிட்டத்தட்ட ஐந்து மடங்கு பெரிய பொருளாதாரமாக சீனா உள்ளது. அடிப்படை உற்பத்தியை பெருக்க இந்தியா தீவிரமாக முயன்று வரும் நிலையில் அது காற்று மாசுபாட்டை மிகவும் மோசமடைய செய்து விடும் என்கிறார் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரான இராகபேந்திரா ஜா.

மேலும், “ஒரு மாசற்ற பொருளாதார வளர்ச்சிக்கான மாற்றம் சுமூகமாக இருக்கும் எனக் கருதுவது மிகவும் ஒரு எளிமையான புரிதல்” என்கிறார்.

தூய்மையான காற்று இல்லாமல் மூச்சு தினறுகிறது இந்தியா.

புது டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் கடந்த 1988-ம் ஆண்டில் ஒரு மார்பு அறுவை சிகிச்சை நிபுணராக தனது பணியை அரவிந்த் குமார் தொடங்கிய போது அவரிடம் நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக வந்தவர்களில் 90 விழுக்காட்டினர் புகைப்பழக்கம் உடைய நடுத்தர வயது ஆண்களாகவே இருந்தனர். ஆனால் தற்போது வருபவர்களின், 60 விழுக்காட்டினர் புகைப்பழக்கம் இல்லாதவர்கள் என்றும் அவர்களில் பாதி பேர் பெண்கள் என்றும் அவர் குறிப்பிடுகிறார். காற்றில் பரவும் நுண்துகள்களால் ஏற்படும் மூச்சுத்திணறல், இதய நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் காரணமாக 2015-ம் ஆண்டில் 11 இலட்சம் இந்தியர்கள் மரணமடைந்ததாக ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிட்யூட் (Health Effects Institute) என்ற தனியார் தொண்டு நிறுவனம் கூறுகிறது.

இதற்கிடையில், இரண்டு பத்தாண்டுகால பொருளாதார விரிவாக்கத்தினால் சீனப் பொருளாதாரம் புனரமைக்கப்பட்டு தற்போது குறைந்த மாசுப்பாடு ஏற்படுத்தும் சேவைகள் மற்றும் பொருட்கள் பயன்பாட்டிற்கு சீனா மாறி வருகிறது. அதன் நகரங்கள் இன்னும் புகை மூட்டமாக இருந்தாலும் முன்னேற்றமும் அடைந்திருக்கின்றன.

படிக்க :
முதலாளித்துவம் – ஒரு பேய்க்கதை ! – கருத்துப் படங்கள்
புது தில்லி ஓபராய் விடுதியில் தரமான காற்று கிடைக்குமாம் !

புது டெல்லியில், 2017-ம் ஆண்டிலேயே, மிகவும் அபாயகரமான காற்று நுண்துகளான PM2.5-ன் அளவு 200-யைத் தாண்டிவிட்டது. கடந்த 2015-ம் ஆண்டு 66-ஆக இருந்த “மிகவும் ஆரோக்கியமற்ற நாட்களின்” எண்ணிக்கை 2017 –ம் ஆண்டில் 84-ஆக அதிகரித்து விட்டது என்று காற்றின் தரத்தை ஆய்வு செய்யும் “ஏர்விசுவல்” நிறுவனத்தின் தகவல்கள் கூறுகின்றன. இதே காலகட்டத்தில் பீஜிங்கின் “மிகவும் ஆரோக்கியமற்ற நாட்களின்” எண்ணிக்கையை 43-லிருந்து 20 நாட்களாக சீனா குறைந்திருக்கிறது.

“சீனாவைப் போல இங்கே மக்கள் தொடர்ச்சியாக காற்று மாசுபாட்டை குறைக்க கோரிக்கை விடுக்காமல் இருப்பது ஒரு பெரிய பிரச்சினை” என்கிறார் சிகாகோ பல்கலைகழகத்தின் ஆற்றல் கொள்கை நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல் கிரீன்ஸ்டோன். “ஏனெனில் மக்களது வாழ்நாளைக் குறைப்பதிலும் அவர்களை நோயில் தள்ளுவதிலும் காற்று மாசுபாடு எந்த அளவு தாக்கம் செலுத்துகிறது என்பது குறித்து முழுவதுமாக இங்கே கண்டு கொள்ளப்படவில்லை” என்று மேலும் அவர் கூறினார்.

காற்று மாசுபாடு தொடர்பான மரணங்கள் குறித்த உலகளாவிய ஆய்வுகள் [இந்திய நிலைமைகளுக்கு] பொருத்தமாக இல்லை. மேலும் உள்நாட்டு ஆய்வுகளின் அடிப்படையிலேயே காற்று மாசுபாட்டினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை கணக்கிடப்பட வேண்டும் என்றும் இந்திய அரசு கூறியிருக்கிறது.

காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் அரசு செயல்பட்டு கொண்டிருப்பதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கூறினார். டெல்லியில் நுண்துகள் (PM2.5) காற்று மாசுபாடு அளவு செப்டம்பர் மாதத்தில் தாங்கள் கணக்கிட்ட படி குறைந்துள்ளதை மேற்கோளிட்டு அவர் காட்டினார். காற்று மாசுபாட்டின் அளவு மிக அதிக அளவு எட்டும் முன்னரே எச்சரிக்கை செய்து தடுப்பதற்கான கட்டமைப்பு வசதியை சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிமுகம் செய்திருக்கிறது. மேலும் சாலை துப்புரவு இயந்திரங்களை அதிகளவு பயன்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறது.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மைய அமைச்சரான ஹர்ஷ் வர்தன்

அரசு செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மைய அமைச்சரான ஹர்ஷ் வர்தன் கூறினார். “அனைத்தும் இப்போது சரியாக இருக்கிறது. நாம் பொறுமையாக வேலை செய்யலாம் என நாங்கள் கூறவில்லை. நாங்கள் ஒருகணம் கூட ஓய்வெடுக்கவில்லை” என்று மேலும் அவர் கூறினார்.

மோடி அரசாங்கம் சூரிய எரிசக்தியையும் ஊக்கப்படுத்தியிருக்கிறது, மாசு கட்டுப்பாட்டு தரத்தையும் மேம்படுத்தியிருக்கிறது மற்றும் விறகடுப்பு பயன்பாட்டை குறைக்க இலட்சக்கணக்கான சமையல் எரிவாயு அடுப்புகளை கொடுத்தது. விவசாயிகள் விளைந்து களைந்த பயிர்களை கொளுத்துவதையும் அதிகாரிகள் தடுத்திருக்கின்றனர். ஆனால் அதிகாரபூர்வமாக தொடங்கப்படவிருக்கும் ஒரு தேசிய திட்டத்தின் உறுதியான இலக்குகளுக்காக சூழலியலாளர்கள் இன்னும் காத்திருக்கின்றனர்.

“இந்த கட்டத்தில் எந்த ஒரு திட்டத்திற்கும் காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான இலக்குகள்தான் அவசியமானவை” என்று காற்று மாசுபாடு குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆலோசனைகள் வழங்கிவரும் புது டெல்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தைச் சேர்ந்த அனுமிதா ராய் சௌத்ரி கூறினார். மேலும் தெளிவான இணக்கம் மிகுந்த உத்தி ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று மேலும் கூறினார்.

படிக்க :
யோகாவின் தேசத்தில் ஆரோக்கியத்தின் அருகதை என்ன ?
புவி வெப்பமயமாதல் : கொதிக்கிறது இந்தியா

இங்கே மேலும் கூடுதலான சவால் ஒன்று இருக்கிறது. இந்தியாவின் குழப்பம்மிக்க மக்களாட்சியில், ஏழ்மையும் வேலையின்மையும் பெரும்பாலும் பெரும் பிரச்சினைகளாக பார்க்கப்படுகிறது. ஒன்றுக்கொன்று போட்டி போடும் கட்சிகளால் ஆளப்படும் அரசாங்கங்களுக்கு காற்று மாசுபாட்டை கூட்டாக குறைப்பதில் சில சமயங்களில் இலாபம் எதுவும் இல்லை.

காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு தன்னுடைய கட்சிக்கு குறைவான அதிகாரமே இருப்பதாக டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் இராகவ் சதா கூறுகிறார். ”தற்காலிகமாக கட்டுமானப் பணிகளை நிறுத்துவது போன்ற அளவு மட்டுமே எங்களால் தடுக்க இயலும். மைய அரசின் தலைமையில் பல்வேறு மாநிலங்களுக்கிடையிலான இணக்கம்தான் தற்போது தேவைப்படுகிறது” என்று கூறும் அவர் மோடியின் நிர்வாகத்துடன் கடுமையாக வேறுபடுவதாக கூறினார்.

நாடே ஸ்வாக ஆகும் போது மோடிக்கு யோகா.

இதற்கு மாறாக சீனாவைப் பொருத்தமட்டில் அதன் பிரதமர் லி கெச்சியாங் (Li Keqiang) காற்று மாசுபாட்டிற்கு எதிராக தேசிய அளவிலான போரை அறிவித்துள்ளார். காற்று தரத்தின் இலக்குகளை அடையாவிட்டால் பதவி உயர்வு கிடையாது என்று சீன அரசாங்கம் கூறிவிட்டது. மேலும் மாசுபாட்டை உருவாக்கும் தொழிற்துறைகளிலிருந்து விலகவும் முயன்று வருகிறது. அரசாங்கத்தின் கடுமையான கொள்கைகள் பல இலட்சக்கணக்கான குடும்பங்களையும் தொழில்களையும் நிலக்கரியிலிருந்து தூய்மையான இயற்கை எரிவாயுவிற்கு மாறச்செய்துள்ளது.

காற்று நுண்துகள் மாசுபாட்டின் (PM2.5) அளவு பீஜிங் மற்றும் தியான்ஜினில் 33 விழுக்காடும் சுற்றியுள்ள நகரங்களில் 26 விழுக்காடும் சென்ற ஆண்டின் 4-வது காலாண்டில் குறைந்துள்ளது.

“அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளைக் காட்டிலும் வேகமாகவும் விவேகமாகவும் முடிவெடுக்கும் ஆற்றலை சீனா பெற்றுள்ளது” என்று ஸ்மித் கல்லூரியில் வரலாற்றுத்துறை பேராசிரியரும் “சீனாவில் காற்று மாசுபாடு” என்ற நூலின் ஆசிரியருமான டேனியல் கார்ட்னர் கூறினார்.

புற்றுநோயை எதிர்த்து சீனா தொடர்ந்து போராடுகிறது. அதே சமயத்தில் காற்று மாசுபாட்டை குறைக்கும் அதன் முயற்சிகளில் அதற்கேயுரிய சிக்கல்களும் உள்ளன. முதன்மையான நகரங்களில் காற்று மாசுபாட்டை உண்டாக்கும் தொழில்களை வெறுமனே மூடிவிட்டு அவற்றை மேற்கு பகுதிகளுக்கு மாற்றியிருப்பதாக உலகளாவிய காலநிலை ஆய்வு மையத்தை (Center for International Climate Research) சேர்ந்த மூத்த ஆய்வாளர் கிறிஸ்டின் ஆனன் கூறினார். பின்னர் விரிவாக்கப்பட்ட காற்று மாசுபாடு இலக்குகளை கொண்ட திட்டங்களை பிற மாநிலங்களுக்கும் சீனா பின்பற்றியுள்ளது.

இந்தியாவில் இதன் விளைவுகளை ஏற்கனவே வணிக நிறுவனங்கள் உணரத்தொடங்கி விட்டன. இணைய வர்த்தக நிறுவனமான பேடிஎம்-மின் நிறுவனரும் பில்லியனருமான விஜய் சேகர் சர்மா, காற்று மாசினால் ஏற்படும் திறமையானவர்களின் இழப்பு குறித்து வருந்துகிறார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த முன்னாள் வங்கியாளரான கிருஷ்ணா ஹெக்டே பேடிஎம்-மிற்கான புதிய தயாரிப்புகளை செய்வதற்காக பெங்களூருக்கு இடம் பெயர்ந்தார். ஆனால் டில்லியில் உள்ள பேடிஎம் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு பயணம் செய்ய முடியாததால் வேலையை விட்டு விட்டார். “முதல் நாளின் முடிவில் எனது ஆற்றலின் அளவு குறைந்து விட்டது. இரண்டாம் நாளின் இறுதியிலோ எனக்கு தலைவலியே வந்துவிட்டது” என்று ஹெட்கே கூறினார்.

புகைமூட்டத்தைக் குறைக்கவல்ல உள்ளூர் மற்றும் உலக அளவிலான புதிய நிறுவனங்களில் முதலீடு செய்ய ஒரு நிதிமூலதன முதலாளியுடன் சர்மா இணைந்திருக்கிறார். மற்ற நிறுவனங்களும் கூட இதேபோன்ற திட்டங்களை முயற்சிக்கின்றன. டிராக்டர் தயாரிப்பு நிறுவனமான சோனாலிகா குழுமம், ஹரியானாவில் உள்ள விவசாயிகள் விளைந்து களைந்த பயிர்களை எரியூட்டுவதை நிறுத்துவதற்காக புதிய இயந்திரக்கருவிகளை வடிவமைத்து அவர்களுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளது.

6 ஆண்டுகளுக்கு முன்பு நான்காம் நிலை நுரையீரல் புற்றுநோய்க்காக புது டெல்லியில் சிகிச்சை பெற்ற தோமர், எந்த வேலையிலும் ஈடுபட முடியாது. தமது வீட்டிலிருந்து கொண்டே மருத்துவ ஆய்வுகளுக்காகவும் வேதிச்சிகிச்சைக்க்கும் (கீமோத்தெரபி) தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.

“எனது குடும்பம் மனரீதியாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும், உடல்ரீதியாகவும் இன்னும் சொல்லப்போனால் பொருளாதார ரீதியாகவும் எனது சுமையைத் தாக்கிக் கொண்டிருப்பதை நினைத்து சில நேரங்களில் நான் உடைந்து போகிறேன்” என கலங்குகிறார் தோமர்.

தமிழாக்கம்:

 

நன்றி : லைவ்மிண்ட்

இந்தி பிரச்சார சபை : நிதி விவரங்களைத் தர மறுப்பது ஏன்?

தென்னிந்திய இந்தி பிரச்சார சபைக்கு 2005-ம் ஆண்டின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட கேள்விகளை அனுப்பியிருந்தேன்:

  1. தக்ஷிண பாரத இந்தி பிரச்சார சபாவிற்கென மத்திய அரசு நிதி ஏதும் ஒதுக்கீடு செய்கிறதா?
  2. 2017-ம் ஆண்டில் இந்தி பிரச்சார சபாவிற்கென மத்திய அரசு ஒதுக்கீடு எவ்வளவு?
  3. தக்ஷிண பாரத இந்தி பிரச்சார சபாவிற்கென மாநில அரசு நிதி ஏதும் ஒதுக்கீடு செய்கிறதா?

இதற்குப் பதில் அனுப்பியுள்ள பிரச்சார சபாவின் பொதுச் செயலர், “தக்ஷிண பாரத இந்தி பிரச்சார சபை தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் வரவில்லையென்பதை அறியவும். தாங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2 -எச்ஐப் பார்க்கவும். ஆயினும் தாங்கள் கோரிய விவரங்கள் தங்களுக்கு அனுப்பப்படுகின்றன. தாங்கள் அனுப்பிய 10 ரூபாய்க்கான வில்லை தங்களுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. பெற்றுக்கொள்ளவும்”. என்று சொல்லிவிட்டு, கேட்ட கேள்வி அனைத்திற்கும் இல்லையென பதில் அளித்துவிட்டனர். அதாவது மத்திய அரசிடமிருந்து நிதி எதையும் பெறவில்லையாம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2 H எதுவெல்லாம் பதில் சொல்ல வேண்டிய பொது அமைப்பு என்பதை வரையறுக்கிறது. அந்த வரையறைக்குள் தாங்கள் வரவில்லையென்கிறது பிரச்சார சபா.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2 H இதுதான்:

பிரிவு 2 (h) “public authority” means any authority or body or institution of self-government established or constituted,—
(a) by or under the Constitution;
(b) by any other law made by Parliament;
(c) by any other law made by State Legislature;
(d) by notification issued or order made by the appropriate Government, and includes any—
(i) body owned, controlled or substantially financed;
(ii) non‑Government Organisation substantially financed, directly or indirectly by funds provided by the appropriate Government.

2009-ம் ஆண்டிலும் இதுபோல தகவல் கேட்ட ஒருவருக்கு இதேபோல கேலியாக “தாங்கள் அனுப்பிய 10 ரூபாய்க்கான வில்லை தங்களுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. பெற்றுக்கொள்ளவும்” என்று பதில் அனுப்பியிருக்கிறார்கள்.

தில்லியைச் சேர்ந்த ரமேஷ் திவாரி என்ற அந்த மனிதர் என்ன கோபத்தில் இருந்தாரோ தெரியவில்லை. நேரடியாக மத்தியத் தகவல் ஆணையத்திற்கு அப்பீல் போய்விட்டார்.

முதலில் அந்த அப்பீலை விசாரித்த மத்திய தகவல் ஆணையம், பிரச்சார சபா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் சொல்லவேண்டியதில்லை என்று தீர்ப்பளித்துவிட்டது. ஆனால், ரமேஷ் திவாரி விடவில்லை. மத்திய அரசின் நிதி அந்த அமைப்புக்குச் செல்கிறது என்று கூறி மீண்டும் அப்பீல் செய்தார். அதனை விசாரித்த மத்திய தகவல் ஆணையம், 2005லிருந்து 2008 வரையிலான தணிக்கை செய்யப்பட்ட கணக்கு வழக்குகளைக் கேட்டு வாங்கியது.

அதன்படி பார்த்தால் 2005-2006 -ல் 76 லட்சத்து 17ஆயிரமும் 2006-2007-ல் 96 லட்சத்து 9 ஆயிரமும் 2007-2008-ல் 95 லட்சத்து 32 ஆயிரமும் மத்திய அரசிடமிருந்து மானியமாகப் பெற்றுள்ளது.

இதையடுத்து, பிரச்சார சபை சுட்டிக்காட்டிய அதே சட்டப்பிரிவு 2 H-ன் விதி எண் d 1-ன் படி, மத்திய அரசின் குறிப்பிடத்தக்க நிதியைப் (மொத்த வருவாயில் பத்து சதவீதத்திற்கு மேல்) பெறுவதால், மனுதாரர் கேட்ட தகவல்களை அளிக்க வேண்டுமென மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும் 2009-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதிக்குள் பொதுத் தகவல் அதிகாரி ஒருவரையும் முதல் நிலை மேல் முறையீட்டு அதிகாரி ஒருவரையும் நியமிக்க உத்தரவிட்டது.

இப்போது தகவல் கேட்டால், மீண்டும் அதே பழைய பல்லவியைப் பாடுகிறார்கள். என்ன செய்வது?

படிக்க:
இந்தி – வடமொழித் திணிப்பிற்காக ஆர்.எஸ்.எஸ் கொண்டு வரும் புது டிசைன் !
Plea submitted against Vedanta at the NGT by Makkal Athikaram

(தக்ஷிண பாரத இந்தி பிரச்சார சபை தவிர, Department of Languages, சென்ட்ரல் இந்தி டைரக்ட்ரேட், சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தி, கமிஷன் ஃபார் சயின்டிஃபிக் அண்ட் டெக்னிகல் டெர்மினாலஜி ஆகியவை மூலமும் கோடிக் கணக்கான பணம் இந்தி வளர்ச்சிக்குக் கொட்டிக்கொடுக்கப்படுகிறது. எந்தச் செலவுக்கும் கணக்குக் கேட்க முடியாது போலிருக்கிறது.)

மத்திய தகவல் ஆணையத்தின் ஆணையை பெற இங்கே சொடுக்கவும்: central information commission_order

முகநூலில் Muralidharan Kasi Viswanathan

விவசாய நிலத்தைப் பறிச்சிட்டு பணத்தைக் கொடுத்தா சரியாப் போச்சா ?

விவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை – பாகம் 2

வாழ்வை இழந்த கதைகள்

 

ருவர், முன்னாள் ஆளுங்கட்சி, இப்போது இருக்கும் எதிர்க்கட்சி நபரால் பிடுங்கப் பட்டு தனது நிலத்தை இழந்தவர். அவரது நிலத்தை அடி மாட்டு விலைக்கு வாங்கி ரியல் எஸ்டேட் பண்ணிருக்கிறார்கள். இதனால் அவருடைய விவசாயமும், அதையொட்டி இருந்த அவருடைய வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டு இருக்கிறது. இதைப் பற்றி புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷன், கலெக்டர் ஆபீஸ் எல்லாம் போயி முயற்சி பண்ணியிருக்கார். குற்றவாளி ஆளுங்கட்சியாக இருந்ததால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. புகாரைக் கூட எடுக்கல.

நிலத்தை மிரட்டிப் பிடுங்கும் ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள்.

ஊருக்குள் பஞ்சாயத்து வச்சி நீ உயிரோட இருக்கணுமா வேண்டாமா என்று மிரட்டி அடி மாட்டு விலைக்கு நிலத்தை வாங்கி இருக்காங்க. அந்தக் காசை வைத்து பையனை டிப்ளமோ படிக்க வச்சிருக்கார். நல்ல தெரிஞ்ச சொந்தத் தொழிலை விட்டுட்டு சாப்பாட்டுக்கு வழியில்லாம, படிச்ச படிப்புக்கு அரியலூர் மாவட்டத்தில வேலையும் கிடைக்காம ஒரு போலி ஏஜென்டை நம்பி அங்கு சென்று மாட்டிக் கொண்டார்.

இன்னொருவருடைய இடத்தை அரசின் நெடுஞ்சாலை துறை பிடுங்கி இருக்கு. அந்த இடத்தில இருக்கும் கிணறும் வேணும் என்று சொல்லி, கிணற்றை அடைத்து அதனோடு சேர்ந்த இடத்தையும் எடுத்துகிட்டாங்க. இடமும் குறைந்து விட்டது. விவசாயம் செய்ய கிணறு போடணும்; நெடுஞ்சாலை அருகே வந்ததால் இலவச மின்சாரம் வாங்கும் தகுதி இல்லை என்று கூறி மின்சாரத்தையும் பிடுங்கிட்டாங்க. நட்டத்தை சமாளிக்க முடியமா இடத்தை விற்க வேண்டிய சூழ்நிலை. விற்று பெண்ணுக்கு திருமணம் செய்திட்டு, வருமானம் இல்லாமல் நகைகளை அடகு வைத்து மலேசியா போயி மாட்டியிருக்காங்க.

இவங்க 6 பேரோட பின்னணியை பார்த்தா ஒன்னு அதிகாரத்தை பயன்படுத்தி இடத்தை பிடுங்கி இருக்காங்க. அல்லது நெடுஞ்சாலைத் துறையோ வேறு நிறுவனங்களோ அது வருது, இது வருது என்று இடத்தை எடுத்திருக்காங்க.

விவசாயத்துக்கு மூலமாக இருக்க கூடிய நிலமும், தண்ணியும் இல்லாமல் வெறும் காசை வைத்து பெருசா ஒன்னும் பண்ண முடியல. நெடுஞ்சாலைத் துறை அந்த இடத்துக்கு என்ன மதிப்போ அந்த காசு கொடுத்ததும் ஒன்னும் செய்ய முடியல. ஏன்னா “இலவச மின்சாரம் போயிடுச்சி, தண்ணி இல்லை, ரோடு அருகே வந்ததால் விவசாயமும் செய்ய முடியவில்லை. இந்த இடத்தில் இந்தத் திட்டம் எல்லாம் வரணும்னு யாரு கேட்டா” என்று நொந்துபோய் பேசினார்கள்.

படிக்க :
ரியல் எஸ்டேட்காரன் போல தமிழ்நாட்டை விற்கிறார்கள் ! நடிகர் பிரகாஷ் ராஜ் பேச்சு !
மோடியின் புல்லட் ரயில் திட்டத்திற்கு 1000 விவசாயிகள் எதிர்ப்பு !

நெடுஞ்சாலை துறை கிட்டயிருந்து பணம் வாங்க 2% கமிஷன் கொடுத்து தான் ஊராட்சி ஒன்றியத் தலைவர் மூலமா வாங்க முடிஞ்சிருக்கு. இதுதான் இன்னைக்கு நாட்டோட உண்மை நிலவரம்.

பணமா வாழ்க்கையா?

இப்படி பாதிக்கப்படுபவர்களின் வாழ்க்கையை பற்றி திட்டமிடாமல் ஒரு திட்டத்தை கொண்டு வந்து அதிகாரத்தை பயன்படுத்தி நிலத்தை கைப்பற்றி விட்டு, அதுக்கு இழப்பீடா 5, 6 லட்சம் கொடுத்தாலும் அந்தப் பணத்தை வைத்து என்ன செய்ய முடியும்? பணத்தை வச்சி கடை ஏதாவது வைத்து வாழலாம்னு நீங்க சொல்லலாம், ஆனால் எந்த விதமான முன் அனுபவமும் இல்லாமல் ஒரு புதிய தொழிலை செய்து எப்படி வாழ்க்கை நடத்த முடியும்?

பணமா வாழ்க்கையா?

ஒரு வியாபாரி தன் மகனை தன்னுடைய அனுபவங்களை கொண்டு ஒரு வியாபாரியாக வளர்க்க முடியும். ஆனால், ஒரு விவசாயி பணத்தை கொண்டு தன் மகனை முடிந்த அளவு படிக்க வைக்கவோ அல்லது ஏதேனும் ஒரு சிறு வியாபாரமோ செய்து பிழைக்க விரும்பினால், அதில் வெற்றி காணுவது அனைவராலும் இயலுவதில்லை.

புதிய தொழிலில் அல்லது வியாபாரத்தில் வெற்றிக்கான உழைப்பு மட்டும் போதுமா? இல்லவே இல்லை.. கடின உழைப்புடன் கூடிய விடாமுயற்சியோடு நீண்ட கால முதலீடு, நேரம், முன் அனுபவம், அந்தத் துறையில் தொடர்புகள் ஆகியவையும் தேவைப்படுகிறது. நமது மாநில அரசு ஆகட்டும் இல்லை மத்திய அரசு ஆகட்டும் அதற்கான வாய்ப்புகளையோ அல்லது அவகாசத்தையோ அனைவருக்கும் கொடுக்கிறதா?

எதற்கெடுத்தாலும் சென்னை தான் வரவேண்டியுள்ளது. அங்கிருந்து வெளி நாடு போய் சம்பாதிக்க வேண்டியுள்ளது. இதனால் கிராமங்களையும், சிறு நகரங்களையும் சேர்ந்த உழைப்பாளிகள் இப்படியொரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இவர்களின் பொருளாதார பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டு அரசை பின்புலமாக கொண்ட மற்ற சிலரும் ஏமாற்றுகிறார்கள்.

எப்படி ஏமாற்றுகிறார்கள்?

இதற்கு உதாரணமாக… இந்த 6 பேர் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் விஜயலக்ஷ்மி, இளங்கோ என்ற இரண்டு பேர். இளங்கோ திருச்சியை சேர்ந்தவர். இவர்கள் கீழே ஒரு பெரிய நெட்ஒர்க்கே இருக்கு. இவங்க இந்த மாதிரி கிராமங்களில் போய்ட்டு டிப்ளமோ முடிச்ச பசங்க, கம்யூனிகேஷன் பலவீனமாக இருக்கிற பசங்க, வசதி இல்லாமல் இருக்கும் பசங்களிடம், “உனக்கு இந்த வேலை தெரியுமா, உனக்கு மலேசியாவில், துபாயில் வேலை வாங்கி தர்றேன், சிங்கப்பூர்ல வேலை வாங்கி தர்றேன்”-னு சொல்லி ஆசை வார்த்தை கூறி, அவர்கள் குடும்பத்திடம் பேசி ஒரு லட்சம் ரூபாய் வாங்கி கொண்டு அவர்களை இந்த மாதிரி ஏமாற்றி அனுப்பிடறாங்க.

இது மாதிரி வெளிநாடுகளுக்கு டூரிஸ்ட் விசால போயி அங்குள்ள காண்ட்ராக்டர் ஒருத்தன் கூட்டிட்டு போய் கொத்தடிமையா நடத்தறான். உயிருடன் இருக்க சாப்பாடு மட்டும் போட்டுட்டு சம்பளமே கொடுக்காம கொத்தடிமையா நடத்தறான்.

முன் கூறிய ஆளுங்கட்சியை சேர்ந்த இரண்டு பேர் மீது ஆறு பேரும் இந்தியா வருவதற்கே முன்னாடியே குடும்பத்தினர் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்க போனதுக்கு, “இந்தப் புகாரை எடுத்துக்க முடியாது. நீங்க காசுக்கு ஆசைப்பட்டு போர்ஜ்ரி பண்ணிட்டு எப்படி அவர் மேல புகார் கொடுக்க முடியும்”னு கேட்டு கேவலமா பேசி இருக்காங்க. மோசடி புகார்னு எடுக்கவும் மாட்றானுங்க.
இவங்க இந்தியா திரும்பிய பிறகு எஸ்.பி ஆபீஸ், Protector of emigrant ஆபீஸ்க்கெல்லாம் போனதுக்கு அப்பறம் தான் புகார் எடுக்கவே முயற்சி எடுக்குறாங்க.

விவசாயிகள், தொழிலாளர்களின் இத்தகைய பிரச்சனைகளை பற்றி அரசுக்கு கவலையில்லை. முழு கவனத்தையும் சென்னை போன்ற பெரிய நகரங்களுக்கு மட்டுமே கொடுக்கிறதால, கிராமப்புற மாணவர்களுக்கு வெளி உலகத்தை பற்றின புரிதலே இல்லாமல் போகுது. வெளி நாடு செல்வதற்கான சட்டபூர்வமான விதிமுறைகள், வழிமுறைகள் என்னென்ன என்று எல்லாருக்கும் தெரியிற மாதிரி எங்கேயாவது வெளியிடனும். ஆனால் இவைகளை எல்லாருக்கும் தெரியிற மாதிரி அரசு வெளியிடறதும் இல்லை; அதற்கான முயற்சியும் எடுக்கிறது இல்லை.

படிக்க :
தமிழக வறட்சி : பிணந்தின்னி பா.ஜ.க. ! பணந்தின்னி அ.தி.மு.க. !!
ஆசாத் நகரின் கொத்தடிமைகள் – படக் கட்டுரை

சென்னை- சேலம் பசுமை வழி சாலை திட்டத்தை பார்க்கிறோம். இடத்திற்காக பணம் கொடுத்தாலுமே, இந்த மாதிரியான குற்றங்களுக்கு ஒரு காரணமாக தான் அது அமையும்; அன்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்க போவதில்லை.

“நான் விவசாயம் பண்ணுவேன், என் பையன் செய்வான் அப்புறம் என் பேரன் செய்வான். நாலு பேருக்கு சாப்பாடு போட்டு வாழ வைப்போம்.” இது தான் விவசாயம். ஆனால், எனக்கு ஆதாரமாக இருக்கிற இடத்தை பிடுங்கிகிட்டு அதற்கு ஒரு கோடி கொடுத்தாலுமே, அதை வைத்து வாழ முடியாது. ஒரு கோடியா இன்சூரன்ஸ்ல போட்டா tax, பேங்க்ல போட்டா எடுக்க முடியாது; எதை பண்ணாலும் tax … இந்த சூழ்நிலையில என்ன செய்ய முடியும்?

பையன படிக்க வச்சா வேலை வாய்ப்பு எல்லா மக்களுக்கும் சமமா கிடைக்குதா? ஒரு தட்டு மக்கள், ஒரு தரப்பட்ட மக்களுக்குத்தான் வேலை வாய்ப்பு- னு ஒரு எழுதப்படாத சட்டம் பின்பற்றப்படுது.

– சரவணன்

(தொடரும்)

நன்றி : new-democrats

இதன் முந்தய பாகத்திற்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :

1. வல்லரசு இந்தியாவில் விவசாயம் தேய்வது ஏன் ?

நீங்கள் உங்கள் சொந்த சுகத்தை எதற்காகத் தியாகம் செய்ய வேண்டும் ?

மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 16

அன்று மாலையில் அவள் தேநீர் பருகிக்கொண்டிருக்கும்போது வெளியே சக்தி தெறிக்க வரும் குதிரைக் குளம்புகளின் ஓசையும் அதைத் தொடர்ந்து ஒரு பழகிய குரலும் கேட்டது. அவள் துள்ளியெழுந்து கதவைத் திறப்பதற்காக சமையல் கட்டுக்குள் ஓடினாள். யாரோ வாசல் பக்கத்தில் அவசர அவசரமாக நடந்து வருவதாய்த் தெரிந்தது. அவளது கண்கள் திடீரென இருண்டன. அவள் கதவைக் காலால் தள்ளித் திறந்துவிட்டு, கதவு நிலைமீது சாய்ந்து நின்று கொண்டாள்.

மாக்சிம் கார்க்கி

“வணக்கம் அம்மா!” என்ற பழகிய குரல் கேட்டது; அதே சமயம் மெலிந்து நீண்ட கரங்கள் அவள் தோள்களில் மீது விழுந்தன.

அவளது இதயம் ஏமாற்றத்தால் கலங்கியது. அந்த ஏமாற்றத்தோடு அந்திரேயைக் கண்டதால் ஏற்பட்ட ஆனந்தமும் பொங்கியது. அந்த இரு உணர்ச்சிகளும் ஒன்றோடொன்று முயங்கி, ஒரு பேருணர்ச்சியாகத் திரண்டு, அவளை மகிழ்ச்சிப் பரவசத்துக்கு ஆளாக்கி உந்தி எழச்செய்து, அந்திரேயின் தோள் மீது முகத்தைப் புதைத்துக் கொள்டாள். நடுநடுங்கும் கைகளோடு அவளை இறுக அணைத்துக்கொண்டான் அவன். தாய் அமைதியாக அழுதாள். அவளது தலைமயிரைத் தடவிக் கொடுத்துக்கொண்டே சொன்னான் அவன்.

”அழாதீர்கள். அம்மா! வீணாக மனத்தை நோகச் செய்து கொள்ளாதீர்கள். என்னை நம்புங்கள். அவர்கள் பாவெலைச் சீக்கிரம் விட்டுவிடுவார்கள். அவனுக்கு எதிராக அவர்களுக்கு ஒரு சாட்சியமும் கிடையாது. வெந்து போன மீனைப் போல், எல்லோரும் ஊமையாகவே இருக்கிறார்கள்…”

தன் கரத்தைத் தாயின் தோள் மீது வைத்தவாறே அவளை அடுத்த அறைக்குள் அழைத்துச் சென்றான்; அவனோடு ஒட்டித் தழுவிக்கொண்டாள் அவள். ஒரு அணிற்குஞ்சின் சுறுசுறுப்போடு அவள் தன் கண்களில் பொங்கிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் அள்ளிப் பருகினாள்.

“பாவெல் உங்களுக்குத் தன் அன்பைத் தெரிவிக்கச் சொன்னான். அவன் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உற்சாகமாகவும், நன்றாகவும் இருக்கிறான். சிறையிலே ஒரே கூட்டம் சுமார் நூறு பேரைக் கொண்டுவந்து அடைத்திருக்கிறார்கள். நம் ஊர் ஆட்களும் இருக்கிறார்கள். நகரிலிருந்து வந்தவர்களும் இருக்கிறார்கள். ஒரு கொட்டடிக்கு மூன்று அல்லது நாலு பேராகப் போட்டுப் பூட்டி வைத்திருக்கிறார்கள். சிறை அதிகாரிகள் ரொம்ப நல்லவர்கள். இந்தப் பிசாசுப் பிறவிகளான போலீஸ்காரர்கள் கொடுத்துள்ள வேலையினால் அவர்கள் இளைத்துக் களைத்து ஓய்ந்து போயிருக்கிறார்கள்.

அதிகாரிகள் ரொம்பக் கடுமையாக இல்லை; அவர்கள் எங்களைப் பார்த்து ‘பெரியோர்களே, அமைதியாக மட்டும் இருங்கள். வீணாய் எங்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள்’ என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எனவே எல்லாம் நன்றாய்த்தான் நடக்கிறது. நமது தோழர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிறார்கள்; புத்தகங்களைக் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். சாப்பாட்டையும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். அது ஒரு நல்ல சிறைதான். ரொம்பப் பழசு. அட்டுப் பிடித்த சிறை; என்றாலும் கைதிக்கு மோசமாக இல்லை. கிரிமினல் கைதிகளும் ரொம்ப நல்லவர்கள், அவர்கள் நம்மவர்களுக்கு எவ்வளவோ உதவி செய்கிறார்கள். நானும் புகினும் இன்னும் நால்வரும் விடுதலையாகிவிட்டோம். பாவெலும் சீக்கிரம் திரும்பி வந்துவிடுவான் என்பது மட்டும் எனக்கு நிச்சயம் தான்.

நிகலாய் வெஸோவ்ஷிகோவ் தான் கடைசியாக வருவான். அவன் அவர்களிடம் தாறுமாறாக நடந்து கொள்வதால், அவன் மீது அவர்களுக்கு ஒரே கோபம். அவனைப் பார்க்கக்கூட போலீஸ்காரர்கள் பயப்படுகிறார்கள். அநேகமாக அவனைச் சீக்கிரம் விசாரணைக்குக் கொண்டு செல்வார்கள்; இல்லாவிட்டால் என்றாவது ஒரு நாள் அடித்துத் தள்ளுவார்கள் !

நிகலாய் நிறுத்து. உன் வசவுகளால் ஒரு பயனும் இல்லை என்று பாவெல் அடிக்கடி கூறிக்கொண்டுதான் இருக்கிறான். ஆனால் நிகலாயோ போலீசாரைப் பார்த்து ‘உங்களையெல்லாம் பொருக்காடிப்போன புண்ணைத் துடைக்கிற மாதிரி பூமியிலிருந்தே துடைத்துத் தீர்த்துவிடுவேன்!’ என்று கத்துகிறான். பாவெல் நன்றாக நடந்து கொள்கிறான். உறுதியோடும் நிதானத்தோடும் இருக்கிறான். அவனைச் சீக்கிரம் வெளியே விட்டுவிடுவார்கள் என்பதுதான் என் எண்ணம்…”

“சீக்கிரமா?” என்று அன்பு ததும்பும் புன்னகையோடு திருப்பிக் கேட்டாள் தாய்; “அவன் சீக்கிரம் வந்துவிடுவான். அது நிச்சயம்.”

“அதனால் விஷயங்கள் எல்லாம் ஒழுங்காகத்தான் இருக்கின்றன. சரி எனக்கு முதலில் ஒரு குவளைத் தேநீர் கொடுங்கள். அப்புறம், நீங்கள் எப்படிக் காலந் தள்ளினீர்கள்? சொல்லுங்கள்.”

அவன் சிரித்துக்கொண்டே, அவளை ஏற இறங்கப் பார்த்தான். அன்பும் அமைதியும் ததும்பப் பார்த்த அவனது பாசம் ஒளி வீசம் கண்களில் ஒரு கணம் சோகத்தின் சாயை படர்ந்து மறைந்தது.

“உங்கள் மேல் எனக்கு ரொம்பப் பிரியம். அந்தியூஷா” என்று கூறிப் பெருமூச்செறிந்தாள் தாய். மண்டி வளர்ந்திருந்த தாடிக்குள் தெரியும் அவனது மெலிந்த முகத்தை கூர்ந்து பார்த்தாள்.

”என்னை நீங்கள் கொஞ்சமாக நேசித்தாலும் எனக்குத் திருப்திதான்” என்று கூறிக்கொண்டே தான் அமர்ந்திருந்த நாற்காலியை முன்னும் பின்னும் ஆட்டிக்கொண்டான் அவன். “உங்களுக்கு என் மேலே பிரியம் என்பதும் எனக்குத் தெரியும். உங்கள் இதயம் பரந்தது, நீங்கள் எல்லோரையுமே நேசிக்கிறீர்கள்.”

“ஆனால் உங்களை பிரத்தியேகமாக நேசிக்கிறேன் என்று அவள் அழுத்திக் கூறினாள். ”உங்களுக்கு ஒரு தாய் மட்டும் இருந்தால், உங்களை மாதிரி ஒரு மகனைப் பெற்றதற்காக, எல்லோரும் அவள் மீது பொறாமை கொள்வார்கள்.”

அந்த ஹஹோல் தலையை அசைத்தான, தன் இரு கைகளாலும் தலையைப் பிடித்துக் கரகரவென்று தேய்த்து விட்டுக் காண்டான்.

”எனக்கும் எங்கோ எவ்விடத்திலோ ஒரு தாய் இருக்கத்தான் செய்கிறாள்” என்றான். அவன் குரல் தணிந்து போயிருந்தது.

”இன்றைக்கு நான் என்ன செய்தேன் தெரியுமா?” என்று தொடங்கினாள் தாய். பிறகு மிகுந்த உணர்ச்சிப் பரவசத்தோடு அன்று அவள் தொழிற்சாலைக்குள் பிரசுரங்களைக் கொண்டு சென்ற விவரத்தைக் கொஞ்சம் மூக்கும் முழியும் வைத்துச் சொல்ல முனைந்தாள். எனினும் அவளது ஆனந்தத்தாலும், ஆர்வத்தாலும் சொல்லுக்கு வளையாமல் அடிக்கடித் தடுமாறிக் குழறியது நாக்கு.

முதலில் அவன் தன் கண்களை வியப்போடு அகல விரித்தவாறே இருந்தான், பிறகு வாய்விட்டுக் கலகலவென்று சிரித்தான்.

”ஓஹோ!” என்று ஆனந்த மிகுதியினால் கத்தினான். ”நீங்கள் செய்ததும் நல்ல காரியம்தான். இது விளையாட்டல்ல. பாவெல் கூடச் சந்தோஷப்படுவான். அம்மா, நீங்கள் செய்த வேலை எவ்வளவு பிரமாதம் தெரியுமா? பாவெலுக்கும் அவன் தோழர்களுக்கும் அது ரொம்ப உதவும்!”

அவனது உடம்பு முழுவதுமே முன்னும் பின்னும் அசைந்து குலுங்கியது. அவன் தன் விரல்களை முறித்துச் சொடுக்கு விட்டான். உற்சாகத்தால் புளகாங்கிதம் அடைந்து சீட்டியடித்தான். அவனது உவகையைக் கண்ட தாய்க்கு இன்னும் பேச வேண்டும் என்ற ஆசை உந்தியெழுந்தது…

”என் அருமை அந்தியூஷா!’ என்று ஆரம்பித்தாள் அவள். அவளது இதயமே திறந்து கொண்டது போல், திறந்த இதயத்திலிருந்து பரிபூரண உவகையோடு முன்னிட்டுத் தெறிக்கும் வார்த்தைகள் மளமளவென்று பொழிந்து வழியப் போவது போலத் தோன்றியது. “நான் என் வாழ்வையே நினைத்துப் பார்த்தால் – அட, ஏசுவே! நான் எதற்காகத்தான் உயிர் வாழ்ந்தேனோ, தெரியவில்லை. ஓயாத வேலை……. பயத்தைத் தவிர வேறு எதையுமே நான் அறிந்ததில்லை. ஓயாது உதை, அடி……. என் புருஷனைத் தவிர வேறு யாரையுமே நான் கண்டதில்லை! பாவெல் எப்படி வளர்ந்தான் என்பது கூட எனக்குத் தெரியாது.

என் புருஷன் உயிரோடிருந்தபோது, நான் பாவெலை நேசித்தேனோ. நேசிக்கவில்லையோ என்பதும் எனக்குத் தெரியாது. என் சிந்தனைகள் என் கவலைகள் எல்லாம் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றித்தான் என்னைக் கட்டிக் கொண்ட மிருகத்துக்கு இரை போடுவதும், உடனடியாக அவன் சௌகரியத்தைக் கவனிப்பதும்தான் என் கவலை. அப்படிக் கவனிக்காது மெத்தனமாக இருந்தால் அவன் கோபங்கொண்டு என்னைப் பயமுறுத்துவானே, அடிப்பானே என்ற பயத்தால், அந்த அடிக்கு ஆளாகாமல் ஒரு நாளாவது தப்பி வாழ வேண்டுமே என்ற கவலையால்தான் நான் அப்படி வாழ்ந்தேன். ஆனால் அவன் என்னை அடிக்காத நாளே கிடையாது. அவன் என்னை அடித்து உதைக்கும் போது தன் மனைவியை அடிப்பதாக அவன் நினைத்துப் பார்ப்பதே இல்லை. யார் யாரோ மீது உள்ள கோபத்தையும் காட்டத்தையும் என் மீது காட்டித் தாக்குவான். இருபது வருஷ காலம் நான் இப்படியேதான் உயிர் வாழ்ந்தேன்.

என் கல்யாணத்துக்கு முன்னால் நான் எப்படியிருந்தேன் என்பது கூட எனக்கு நினைவில்லை. என் கடந்த காலத்தைப் பற்றி நினைத்தாலே நான் குருடாகிப் போவது மாதிரி இருக்கிறது. எதுவுமே தெரிவதில்லை. இகோர் இவானவிச் இங்கே வந்திருந்தான். அவனும் நானும் ஒரே ஊர்க்காரர்கள். அவன் எதை எதைப்பற்றியெல்லாமோ பேசினான். எனக்கோ அங்குள்ள வீடுகள் ஞாபகத்துக்கு வந்தன; ஜனங்கள் நினைவுக்கு வந்தனர். ஆனால் அந்த ஜனங்கள் எப்படி வாழ்ந்தார்கள், என்ன பேசினார்கள், அவர்கள் ஒவ்வொருவரும் என்ன ஆனார்கள் – இதெல்லாம் நினைவுக்கு வரவேயில்லை. எப்போதோ தீப்பிடித்து எரிந்த சம்பவம் — இல்லை – – இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. எனக்கு என்னவோ என் இதயத்தையே பூட்டிவிட்டது போல், என் ஆத்மாவுக்கே முத்திரையிட்டு இறுக மூடிவிட்டது போல் இருக்கிறது. கண்ணும் தெரியவில்லை. காதும் கேட்கவில்லை…”

கரையில் இழுத்துப்போட்ட மீனைப்போல், அவள் மூச்சுக்காக வாயைத் திறந்து திணறினாள். முன்புறமாகக் குனிந்து கொண்டு மீண்டும் அவள் தணிந்த குரலில் பேசத் தொடங்கினாள்.

”என் கணவன் இறந்தான். நானும் என் மகனைக் கவனிக்கத் தொடங்கினேன். ஆனால் அவனோ இந்த மார்க்கத்தில் ஈடுபட்டுவிட்டான். எனக்கு மிகவும் சங்கடமாயிருந்தது. அவனுக்காக அனுதாபப்பட்டேன். அவனுக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், நான் எப்படி வாழ்வது என்ற கவலை எனக்கு. நான் எப்படிப் பயந்து நடுங்கினேன் தெரியுமா? அவனுக்கு என்ன நேரக்கூடும் என்று நான் நினைத்துப் பார்த்தபோது என் இதயமே வெடித்துவிட்ட மாதிரி இருந்தது.

அவள் ஒரு கணம் மெளனமாயிருந்தாள். பிறகு மீண்டும் தலையை ஆட்டி விட்டுப் பேசத் தொடங்கினாள்.

“பெண்களாகிய எங்கள் அன்பு பரிசுத்தமான அன்பு அல்ல. நாங்கள் எங்களுக்காகத்தான் பிறரை நேசிக்க வேண்டியிருக்கிறது, இதோ நீங்கள் இருக்கிறீர்கள். தாயை எண்ணித் துக்கப்படுகிறீர்கள். எதற்காக நீங்கள் அவளை விரும்புகிறீர்கள்? இதோ இங்கே எத்தனையோ இளைஞர்கள் சகல மக்களின் க்ஷேமத்துக்காகவும் துன்பத்தை அனுபவிக்கிறார்கள், சிறைக்குச் செல்கிறார்கள்; சைபீரியாவுக்குச் செல்கிறார்கள்; சாகிறார்கள், இளம் பெண்கள் தன்னந்தனியாக வெகுதூரம் நடந்து செல்கிறார்கள். இருட்டிலே, மழையும் பனியும் கொட்டுகின்ற குளிரிலே, சேறு நிறைந்த பாதை வழியே ஏழு கிலோமீட்டர் தூரத்துக்கும் நடந்து செல்கிறார்கள்; அவர்களை இப்படிச் செய்யச் சொல்வது யார்? அவர்கள் ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? ஏனெனில், அவர்கள் கொண்டுள்ள அன்பு, பரிசுத்தமான தூய்மையான அன்பு அவர்களிடம் நம்பிக்கை, ஆழ்ந்த நம்பிக்கை ஒன்றிருக்கிறது. அந்தியூஷா! ஆனால் எனக்கோ, அந்த மாதிரி நேசிக்க முடியவில்லை! எனக்குச் சொந்தமானவர்களையே மிகவும் நெருங்கியவர்களையே நான் நேசிக்கிறேன்!”

“நீங்களும் நேசிக்க முடியும்” என்று ஒரு புறமாகத் திரும்பிக்கொண்டு சொன்னான் ஹஹோல். அப்படிச் சொல்லும்போது வழக்கம் போலவே தன் கைகளால் தலையையும் கன்னத்தையும் கண்களையும் பரபரவென்று தேய்த்துவிட்டுக் கொண்டான்.” எல்லோரும் தம்மோடு நெருங்கியிருப்பதையே மிகவும் நேசிக்கிறார்கள்; ஆனால் ஒரு பரந்த இதயம், தனக்கு வெகு தொலைவிலுள்ள பொருள்களைக்கூட, தன்னருகே கவர்ந்திழுத்து நெருங்கச் செய்யும் சக்தி வாய்ந்தது. நீங்களும் மகத்தான காரியங்களைச் செய்ய முடியும் – ஏனெனில் உங்களிடம் மகத்தான தாய்மை அன்பு ததும்பி நிற்கிறது!”

“அப்படியே ஆகட்டும்” என்று பெருமூச்சோடு சொன்னாள் அவள். ”இந்த மாதிரி வாழ்வதும் ஒரு நல்ல வாழ்வுதான் என்பதை நான் உணர்கிறேன், அந்திரேய் நான் உங்களை நேசிக்கிறேன். ஒரு வேளை பாவெலைவிட உங்களை நான் அதிகம் நேசிக்கவும் செய்யலாம். அவனோ என்னிடம் திறந்து கூடப் பேசுவதில்லை. நீங்களே பாருங்கள். அவன் சாஷாவைக் கல்யாணம் செய்ய விரும்புகிறான், ஆனால் என்னிடம் அவன் தாயிடம், இதுவரை ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை..”

“அது உண்மையல்ல என்று ஆட்சேபித்தான் ஹஹோல். “அது உண்மையல்ல என்பது எனக்கு நிச்சயமாய்த் தெரியும். அவன் அவளைக் காதலிக்கிறான், அவளும் அவனைக் காதலிக்கிறாள். அதுவும் உண்மைதான். ஆனால் அவர்கள் என்றுமே கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை. அவள் விரும்பலாம். ஆனால் பாவெல் விரும்பமாட்டான்,”

“அப்படியா செய்தி” என்று சிந்தனை வசப்பட்டவளாய்ச் சொன்னாள் தாய். அவளது துயரம் தோய்ந்த கண்கள் ஹஹோலின் முகத்தையேப் பார்த்தன், “இப்படியா இருப்பது? நீங்கள் உங்கள் சொந்த சுகத்தை எதற்காகத் தியாகம் செய்ய வேண்டும்…”

”பாவெல் ஒரு அபூர்வப் பிறவி ” ஹஹோலின் குரல் மிருதுவாயிருந்தது. “அவன் ஒரு இரும்பு மனிதன்”

“ஆனால், இப்போது அவன் சிறையில் இருக்கிறான்’ என்று மீண்டும் சிந்தனையிழந்தவாறே பேசினாள் தாய். அதை நினைத்தாலே பயங்கரமாயிருக்கிறது. ஆனால் முன்பிருந்தது போல் அவ்வளவு பயமில்லை. என் வாழ்க்கையும் மாறிவிட்டது. என் பயங்களும் மாறிவிட்டன. இன்றோ நான் ஒவ்வொருவருக்காகவும் பயந்து கொண்டிருக்கிறேன். இப்போது என் இதயமே புதிது. ஏனெனில் என் ஆத்மா இதயத்தின் கண்களைத் திறந்து விட்டுவிட்டது. அந்தக் கண்கள் அகலத் திறந்து பார்க்கின்றன. சோகம் கொள்கின்றன. அதே வேளையில் மகிழ்வும் கொள்கின்றன.

எனக்குப் புரியாத விஷயங்கள் எத்தனை எத்தனையோ இருக்கின்றன. நீங்கள் கடவுளையே நம்பாமலிருப்பது எனக்குக் கசப்பாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. ஆனால் அதற்கு நான் என்ன செய்ய முடியும். நீங்கள் எல்லோரும் மிகவும் நல்லவர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் மக்களின் நல்வாழ்வுக்காக துன்ப வாழ்வு வாழ்கிறீர்கள். சத்தியத்துக்காகச் சங்கடமான வாழ்க்கையை அனுபவிக்கிறீர்கள், இப்போதுதான் உங்கள் சத்தியம், உங்கள் உண்மை எனக்குப் புரிகிறது. பணக்காரர்கள் என்று ஒரு வர்க்கம் இருக்கிறவரையில், சாதாரண மக்களுக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை – மகிழ்ச்சியோ, நியாயமோ – எதுவுமே கிட்டப்போவதில்லை. இப்போதோ நான் உங்களைப் போன்ற இளைஞர்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். சில சமயங்களில் இரவு நேரத்தில் எனது கடந்த காலத்தைப்பற்றி, பூட்ஸ் காலால் மிதித்து நசுக்கப்பட்ட எனது இளமையின் பலத்தைப் பற்றி, கசக்கிப் பிழியப்பட்ட எனது இளம் இதயத்தைப்பற்றி நான் நினைத்துப் பார்ப்பதுண்டு. அந்த நினைவினால் எனக்கே என்மீது அனுதாபம் பிறக்கிறது, கசப்புணர்ச்சி பிறக்கிறது. ஆனால் இப்போதோ எனக்கு வாழ்வது அவ்வளவு கஷ்டமாக இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக சிறுக சிறுக நான் என்னையே உணர்ந்து வரத் தொடங்குகிறேன்………

நெட்டுவிட்டு வளர்ந்து மெலிந்திருந்த ஹஹோல் எழுந்தான் , சிந்தனை வசப்பட்டு, காலடியோசையே கேட்காத வண்ணம் எழுந்து உலவத் தொடங்கினான்.

“எவ்வளவு நன்றாகச் சொன்னீர்கள்!” என்று அதிசயித்தான். ”எவ்வளவு தெளிவாகச் சொல்லிவிட்டீர்கள். கோச் நகரில் ஒரு வாலிப யூதன் இருந்தான். அவன் ஒரு கவி. ஒரு நாள் அவன் ஒரு பாட்டு எழுதினான். அறியாது கொலையுண்ட அனைவரும், உண்மை நெறிகொள்ளும் பலத்தாலே உயிர் பெற்று நிற்பார்! ”அவனையும் கூட கோச் நகர போலீசார் கொன்றுவிட்டார்கள். நான் அதைச் சொல்ல வரவில்லை. அவன் உண்மையை உணர்ந்தான், அந்த உண்மையை அவன் மக்களிடம் பரப்பினான். அவன் சொன்ன மாதிரி அந்த அறியாது கொலையுண்ட’ பேர்களில் நீங்களும் ஒருவர்.”

”இப்பொழுதெல்லாம் நானே பேசிக் கொள்கிறேன். அதை நானே கேட்டுக் கொள்கிறேன். என்னை நானே நம்புவதுமில்லை. என் வாழ்நாள் முழுவதும் நான் ஒன்றே ஒன்றைப் பற்றித்தான் சிந்தித்தேன் ஒவ்வொரு நாளையும் யார் கண்ணிலும் படாமல் ஒதுக்கமாய் எப்படிக் கழிப்பது – யார் கையிலும் படாதபடி பார்த்துக்கொள்வது – இதுதான் என் சிந்தனை. ஆனால் இப்போதோ என் மனதில் பிறரைப் பற்றிய சிந்தனைகளே நிரம்பி நிற்கின்றன. உங்களது கொள்கையை நான் முழுக்க முழுக்க அறியாது இருக்கலாம்; ஆனால், நீங்கள் அனைவரும் என் அன்புக்கு உரியவர்கள். உங்கள் அனைவருக்காவும் நான் வருந்துகிறேன். அனைவரின் நலத்தைப் பற்றியும் முக்கியமாக உங்கள் சுகத்தைப்பற்றி நான் மிகுந்த அக்கறை கொள்கிறேன். அந்தியூஷா!”

அவன் அவள் பக்கம் வந்தான். “ரொம்ப நன்றி” என்றான் அவன். அவள் கரத்தை எடுத்து ஆர்வத்தோடு அழுத்திப் பிடித்தான். பிறகு விரைவாக விலகிச் சென்றுவிட்டான். அவள் தன் உணர்ச்சியினால் நிலை குலைந்து போய், மிகவும் மெதுவாகவும் மெளனமாகவும் பண்ட பாத்திரங்களைக் கழுவ ஆரம்பித்தாள், அப்போது அவள் மனம் தன் இயதயத்தின் அமைதி நிறைந்த ஆனந்தத்தையே எண்ணியெண்ணி புளகித்துக்கொண்டிருந்தது.

ஹஹோல் அறைக்குள் மேலும் கீழும் நடந்தவாறே அவளைப் பார்த்துப் பேசினான்.

“அம்மா! நீங்கள் வெஸோவ்ஷிகாவிடம் சிறிது அன்பு காட்டுங்களேன். அவனது தந்தை – அந்த உதவாக்கரையான குடிகாரமட்டை – சிறையில் இருக்கிறான்; தன் தந்தையின் முகத்தை ஜன்னலோரமாகக் கண்டாலும் போதும் உடனே நிகலாய் தன் தந்தையைச் சரமாரியாகத் திட்ட ஆரம்பிக்கிறான். அது ரொம்ப மோசமான செய்கை. நிகலாய் இயற்கையில் கருணையுள்ளம் படைத்தவன். அவன் நாய்களை, எலிகளை, சகல் மிருகங்களையும் நேசிக்கிறான். அன்பு காட்டுகிறான்; ஆனால், மனிதர்கள் மட்டும் பகைத்து ஒதுக்குகிறான்; ஆமாம், மனிதன் எப்படியெல்லாம் கெட்டுப்போகிறான்?”

“அவன் தாய் எங்கோ தொலைந்து போனாள். அப்பனோ குடிகாரன், திருடன்…” என்று முனகினாள் தாய்.

அந்திரேய் படுக்கைக்குச் சென்ற பிறகு, தாய் மிகவும் ரகசியமாக அவன் பக்கம் சென்று அவன் தலைக்கு மேலாக சிலுவைக் குறியிட்டு விட்டு வந்து படுத்தாள். அவன் படுத்து அரைமணி நேரம் கழித்த பின்னர் அவள் அவனைப் பார்த்து மெதுவாகக் கேட்டாள்:

“தூங்கி விட்டாயா, அந்திரியூஷா?”

“இல்லையே, ஏன்?”

“நல்லிரவு”

”நன்றி, அம்மா, நன்றி” என்று நன்றியுணர்ச்சியோடு சொன்னான் அவன்.

(தொடரும்)

 

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

மூனு மாடி ஏறிப் போய் சிலிண்டர் போட்டாலும் பத்து ரூபாதான் !

குமரேசன்.

நாளுக்கு ஒரு விலை விற்றாலும் கேஸ் தீர்ந்து போனா வாங்கித்தான் ஆக வேண்டும்; ஏனென்றால் விறகுக்கு மாற முடியாதே. அதுவும் ஒரு சிலிண்டருக்கான இணைப்பு மட்டுமே வைத்திருப்பவர்களின் நிலை சொல்லில் அடங்காதது. பாதியில் வெந்த பருப்பை அப்படியே பக்கத்து வீட்டாரிடம் வேகவைத்து வாங்குவதிலிருந்து, அக்கா உங்க வீட்ல ஃபுல் இருக்கா… னு கெஞ்சி கூத்தாடி எதிர் வீட்டில் சிலிண்டர் வாங்குவது வரையில் குடும்பப் பெண்களின் சிரமம் சொல்லி மாளாது.

கேஸ் கம்பெனிக்கு புக் பண்ணி சிலிண்டர் எப்போ வரும்னு காத்திருந்து… ”அண்ணே பக்கத்துவீட்ல ரெண்டு நாள்ல திரும்பத் தர்றேனு சொல்லி வாங்கிட்டேன். இன்னிக்கே கிடைக்கிறமாதிரி கொண்டுவர்றீங்களானு’’ நடுத்தர வர்க்கத்தின் குடும்பப் பெண்கள் உரிமையோடு அணுகுவது சிலிண்டர் சப்ளை செய்யும் கேஸ் கம்பெனி ஊழியர்களைத்தான்.

வெயிலோ, மழையோ எதையும் பொருட்படுத்தாமல், மூன்று மாடியானாலும் தோள் சுமையாகவே சுமந்துச் சென்று விநியோகம் செய்யும் தினக்கூலிகளை கோடம்பாக்கத்தில் சந்தித்தோம்.

ஆம்! அவர்கள் தினக்கூலிகள்தான். கம்பெனி முத்திரையோடு, அவரவர் பெயர் பதித்த சீருடை அணிந்திருந்தாலும், கம்பெனி வண்டியை மிதித்து வந்திருந்தாலும் அவர்கள் காஸ் சப்ளை செய்யும் நிறுவனத்தில் மாதச்சம்பளம் வாங்கும் தொழிலாளிகள் அல்ல அவர்கள். சிலிண்டர் ஒன்றுக்கு பத்து ரூபாய் கூலி பெறும் கூலித் தொழிலாளர்கள்.

டிரைவர் விநாயகம்.

“இவனுங்கெல்லாம் எவ்ளோ சொன்னாலும் கேட்க மாட்டேன்கிறானுங்க. பதினஞ்சு வருசமா வேலை பார்க்குறவனுக்கு கூட தீபாவளி காசு 500; நேத்துக்கு வேலைக்கு சேர்ந்தவனுக்கும் அதே 500… வெக்கமில்லாம ஏண்டா வாங்குனீங்கனு கேட்கிறேன்…’’ வெடிக்கிறார், விநாயகம். சிலிண்டரை சுமந்து வரும் வாகனத்தின் டிரைவர்.” இவங்களுக்கு கம்பெனில எந்த உரிமையும் கிடையாது. மாச சம்பளம் இல்லை. இ.எஸ்.ஐ., பி.எஃப். இல்லை. எதுவுமில்லை. சிலிண்டருக்கு பத்து ரூபா கூட இப்பதான் உயர்த்தினாங்க…’’ என்றவர், “கேளுங்க, கதை கதையா சொல்வாங்க பசங்க’’ என்று தொடங்கி வைத்துவிட்டு, லோடு வண்டியிலிருந்து தள்ளு வண்டிக்கு சிலிண்டரை இறக்கிக் கொடுக்க சென்றுவிட்டார், விநாயகம்.

கணேசன்.

வயதில் மூத்தவரும் துடுக்காக பேசிக்கொண்டிருந்தவருமான கணேசனை கை காட்டினார்கள் தொழிலாளர்கள். 59 வயதாகும் கணேசன் கடந்த பத்து வருடங்களாக வீடுகளுக்கு சிலிண்டர் போடுகிறார். இதற்கு முன்னர் வெல்டிங் வேலை செய்து வந்திருக்கிறார். “அட எங்கதைய ஏன் கேட்கிற… வீட்ல சிலிண்டர் போட்டா பத்துரூபா. மூனு மாடி ஏறிப்போயி போட்டாலும் அதே பத்துரூபாதான். வீட்டுக்காரங்க அவங்களா விருப்பப்பட்டு கொடுக்கறத வாங்கிக்கனும். இவ்ளோ தொலைவு உனக்காகத்தான் வந்துருக்கேன்… பத்து ரூபா சேத்துக் கொடுங்கனு கேட்டுட்டா போச்சு… கம்பெனிக்கு உடனே போன போட்ருவாங்க. இன்னிக்கு சிலிண்டரு 896 ரூபா விக்கிது. 900 ரூபா கொடுப்பாங்க. அதுக்கு மேல தரமாட்டாங்க. இதோ பாரு நா வச்சிருக்க பில்லுல இதெல்லாம் டிப்ஸ் 4 தான் தேரும். இவுங்க 5 ரூபா தருவாங்க…’’ என்று பட்டியலிடுகிறார், கணேசன்.

தாமரைச் செல்வன்.

திருவல்லிக்கேணியிலிருந்து வரும் தாமரைச்செல்வன், இத்தொழிலுக்கு வந்து 8 வருடமாகிறது. ‘’ எங்க கம்பெனி தேனாம்பேட்டையில இருக்கு. குடோனு சிட்டிக்கு வெளிய இருக்கு. அவ்ளோ தூரம் நாங்க போயி லோடு எடுக்க முடியாதுனு இந்த மாதிரி சிட்டிக்குள்ள அங்கங்க ஜம்பிங் பாயிண்ட்னு போடுவாங்க. லோடு வண்டில சிலிண்டர் வந்துரும். பில்லுக்கு ஏத்த மாதிரி ஆளுங்கள ஒதுக்குவாங்க. இங்கயிருந்து நாங்க சப்ளை பன்னுவோம். சைக்கிள் பஞ்சர் ஆனா கூட எங்க செலவுலதான் பஞ்சர் ஒட்டிக்கனும். டயர் வெடிச்சா 500 ஆயிடும். அதுவும் நாங்கதான் பாத்துக்கனும்’’ என்கிறார், அவர்.

க்யூ.ஆர். கோடை மொபைலில் அப்டேட் செய்யும் தொழிலாளர்கள்.

கையில் எல்லோரும் புத்தம் புதிய ஆண்ட்ராய்டு போனை வைத்திருந்தார்கள். அதுகுறித்து கேட்டபோது, ” இந்த போன கம்பெனிலதான் கொடுத்தாங்க… ஆனா, காசு நாங்கதான் கொடுத்தோம். ஏழாயிரம் ரூபாய். ஏன்னா, எங்களுக்கு போனு வாங்கத் தெரியாது பாரு’’ என்றார், குமார். ” இப்ப வர்ற பில்லு எல்லாம் கோடோடதான் வருது. எவ்ளோ டெலிவரி பன்னிருக்கோம்னு இந்த போன்லதான் ஏத்திவிடனும்னு சொல்லி கொடுத்துருக்காங்க’’ என்றார்.

குமார்.

கஷ்டமாயில்லியா வேலை…? டெய்லி தண்ணி அடிப்பீங்களா? என்றோம் குமாரே தொடர்ந்தார்… “ என்ன பன்றது. நான் டெய்லி தாம்பரத்திலேர்ந்து வந்துட்டு போறேன். இங்க இருக்க 18 பேர்ல பத்து பேர் தண்ணியடிப்பாங்கதான். வேற என்ன பன்றது? எங்களுக்கு வெயில்கூட பழகிருச்சி. மழைதான் பேஜாரு.’’

“இதுகூட பரவால்ல. நாய்க்கடிலாம் படவேண்டியிருக்கும். இந்தா இவருக்குக்கூட இப்ப கொஞ்ச நாளக்கி முன்னதான் நாய்கடிச்சிச்சி’’னு முரளியை அறிமுகப்படுத்திவைத்தார், தாமரைச்செல்வன்.

முரளி

” நாப்பத்தைஞ்சு வயசாகுது. நான் ஒரு அஞ்சு வருசமா இந்த வேலை பாக்குறேன். திருவள்ளூர் கடம்பத்தூர்ல இருந்து டெய்லி வர்றேன். காலைல 4, 4.30க்கா எழுந்திருச்சாதான் வண்டிய ஸ்டேசன்ல போட்டு டிரெயின் புடிச்சி சென்ட்ரல் வந்து அப்புறம் தேனாம்பேட்டை ஆபிஸ்க்கு போயி… அங்கேர்ந்து இன்னிக்கு பாயிண்ட் எங்கனு கேட்டு வந்து சேர்றதுக்குள்ள ஏழு ஆயிடும்.’’ … “வேறென்ன வேனும் கேளு…’’ படபடவென பொரிந்து தள்ளினார் முரளி.

நாய்க்கடி பற்றி கேட்டதற்கு, “வீட்டு நாயிதான். கட்டிதான் போட்டுருந்தாங்க. அது கொறச்சப்பவே தயங்கி நின்னேன். கடிக்காது வாங்கனு கூப்டாங்க. போறப்ப ஒன்னும் பன்னல. அந்த தைரியத்துல காலி சிலிண்டரோட திரும்பி வர்றப்ப… என்ன நெனச்சிச்சோ தெரில… வள்ளுனு பிடுங்கிருச்சி. அப்புறம் அந்த வீட்டுகாரங்களே கூட்டிட்டு போயி டி.டி. இன்ஜெக்சன் போட்டுவிட்டு, கைல இருநூறு ரூபா கொடுத்தாங்க..’’ என்று நாய்க்கடியின் தடத்தைக் காண்பித்தார்.

குமரேசன்.

“நாய்க்கடிலாம் சகஜம். நாலஞ்சி பேரு கடி வாங்கியிருக்காங்க.’’ என்றபடியே கூட்டத்தில் சங்கமித்தார், குமரேசன். சைதாப்பேட்டையிலிருந்து வரும் இவர், கடந்த நான்கு வருடங்களாக இந்த வேலை செய்கிறார். ஒரு லோடு முடித்துவிட்டு வந்தக் களைப்பையும் தாண்டி, ரொம்பவும் அமைதியாகவே இருந்த குமரேசனிடம் இதற்கு முன்ன என்ன வேலை செஞ்சீங்க? என்று கேட்டோம். “மார்க்கெட்டிங் லைனில் இருந்தேன். பத்து வருசத்துக்கு மேல செஞ்சேன். டார்கெட், டார்கெட்னு ஒரே டார்ச்சர் கொடுப்பாங்க. அதனாலயே அந்த வேலையே வேனானு வந்துட்டேன். கடைசியா ரெனால்ட்ஸ்  கம்பெனியில வேலை பார்த்தேன்’’ என்றார்.

என்ன படிச்சிருக்கீங்க?

பி.ஏ. எக்கனாமிக்ஸ்… பிரசிடென்ஸி காலேஜ்ல…

சுரேஷ்.

‘’இந்த வேலைக்கு எழுதப்படிக்க தெரிஞ்சா போதும்… டிகிரி முடிச்சவங்களும் நிறைய இருக்காங்க’’ என்ற சுரேஷ் கடந்த ஒருவருடமாக குடோன் கீப்பராக இருக்கிறார். இவரும் இதற்குமுன், இருபது வருடங்களாக டெலிவரிபாயாக வேலை பார்த்தவர்தான். குடோன் கீப்பரான பிறகு, இவரது மாதச்சம்பளம் 20,000.

மேகநாதன்.

“ஒரு லோடுல 306 சிலிண்டர் வரும். இந்த ஏரியாவுல எவ்ளோ பில் இருக்குனு பார்த்து இத்தன பேர் இங்க போங்கனு சொல்லிருவாங்க. தி.நகர், தேனாம்பேட்டை, மயிலாப்பூர்னு பாயிண்ட்க்கு ஏத்தமாதிரி கம்பெனியிலிருந்து ட்ரை சைக்கிள ஓட்டி வந்துடுவாங்க. அவங்களுக்கு இருக்கிற லோடு, பில்ல பொறுத்து தலைக்கு இவ்ளோனு பிரிச்சி கொடுப்பேன். அதான் என்வேலை. சராசரியா ஒரு நாளைக்கு குறஞ்சது தலைக்கு 20 – 30 சிலிண்டர் வரும். தீபாவளி மாதிரி சீசன் டைம்ல 40 வரைக்கும் போகும்.’’

‘’எங்க கதையெல்லாம்… நிறைய இருக்கு…’’ என்று கோரஸாக தொடர்ந்தனர், முருகனும் தாமரைச்செல்வனும்.

“சிலிண்டரு நாலுநாளுக்கு முன்ன ஒரு விலை விக்கும். அந்த விலைக்கு காசு எடுத்து வச்சிருப்பாங்க. நாங்க போயி நின்னா அம்பது குறையிது நூறு குறையிதுனு பக்கத்து வூட்ல வாங்கியாந்து கொடுப்பாங்க. காசே இல்லாம, கண்ணெதிருல சேட்டு கடையில நகையை அடமானம் வச்சில்லாம் தந்திருக்காங்க…’’ இது முருகனின் அனுபவம் மட்டுமல்ல; எல்லோரும் இதேபோல பல சம்பவங்களை அடுக்குகின்றனர்.

“இந்த மாதிரி கஷ்டபடுற ஜனங்கதான் மனசு வந்து எங்களுக்கு 30, 40 ரூபா கூட டிப்ஸா தருவாங்க. அபார்ட்மெண்ட்ல இருக்கிறதுங்க, கணக்கு பாக்குங்க. மூனு மாடி ஏறி வந்திருக்கேனு கேட்டா, நான் ஏன் உனக்கு தரனும். அதான் கம்பெனில சம்பளம் தர்றாங்களேனு சொல்றதோட இல்லாம போன போட்டு வேற சொல்லிடுவாங்க. மேனேஜர் கூப்டு கத்துவாரு.’’ என்கிறார், தாமரைச் செல்வன்.

ஜான்சன்.

“இவனுங்க டெய்லி ஒரு விலை வக்கிறானுங்க. ஏதோ, நாங்கதான் விலையை ஏத்துறாமாதிரி மாசா மாசா விலையை ஏத்துவியானு எங்ககிட்ட சண்டைக்கு வருவாங்க.’’ என்றார், ஜான்சன்.

“ஒரு சில அபார்ட்மென்ட்ல லிப்ட் யூஸ் பண்ணவே கூடாதுனு சொல்லிடுவாங்க. சில அபார்ட்மென்ட்ல போறப்ப யூஸ் பன்னிக்க சொல்வாங்க. வர்றப்ப காலி சிலிண்டரோட படியில இறங்கிடுனுருவாங்க. இதுஒரு பிரச்சினை எங்களுக்கு’’ என தொடர்ந்த தாமரைச்செல்வன், “கம்பெனி மீட்டிங் கொடுமையை சொல்லியே ஆகனும். நிக்க வச்சியே பேசுவாங்க. எப்போ மீட்டிங் போட்டாலும், ஒரே பல்லவிதான். டிப்ஸ் வாங்காதே, லீக்கேஜ் சிலிண்டர் போடாதே. இதுதான். ஒரு லோடுக்கு எப்டி பாத்தாலும் 40 – 50 லீக்கேஜ் வந்துரும். சிலதுல வாசர் இருக்காது. அதுக்கு நாங்க என்ன பன்ன முடியும்? சரி மீட்டிங் வந்துருக்கோம், டீ வாங்கிக்கொடுங்கன்னா, வெளியில போயி குடிச்சிட்டுவானு சொல்வாரு மேனேஜர். சரி சம்பளமாவது ஏத்திக்கொடுங்க… சிலிண்டருக்கு பத்துரூபா பத்தாதுனு கேட்டா… கட்டுபடியாகலனா வேலையை வுட்டு நின்னிரு..னு கூலா சொல்வாரு’’ என்கிறார், அவர்.

இளைப்பாறும் தொழிலாளர்கள்.

பெயரைக் குறிப்பிட வேண்டாமென்று கூறி பேசிய தொழிலாளிகள் சிலர், ” பிளாக்ல டீக்கடைக்கு ஹோட்டலுக்கு சிலிண்டர் போடுறீங்களேனு கேட்கிறீங்களே? நாங்க மட்டும் அப்படி போட்டு சம்பாரிச்சிற முடியுமா? ஏஜென்சில இருக்கிற மானேஜரே, தலைக்கு இவ்ளோனு எக்ஸ்ட்ரா சிலிண்டர கொடுத்துருவாரு. நானூறு ரூபா இருந்தப்ப எழுநூறு ரூபாய்க்கு கொடுப்போம். இதுல நானூறு சிலிண்டர் காசு போக இருக்கிற முன்னூறுல இருநூறு மேனேஜருக்கு. சிலிண்டர் ஒன்னுக்கு நூறுதான் எங்களுக்குக் கிடைக்கும். அந்த இருநூற மேனேஜர் மட்டும் எடுத்துக்கிடுவாரா? இல்ல, ஓனருக்கும் போகுமானு தெரியாது. அதுவும், இப்ப ஆதாரோட, செல்போன் நம்பரெல்லாம் இணைச்சதுக்கப்புறம் நாங்களா எதுவும் செய்ய முடியாது. ஒரு சில நல்ல கஷ்டமருங்க, வருசத்துக்கு எட்டு சிலிண்டர் நான் யூஸ் பன்ன போறதில்ல… நீ ரெண்டு எடுத்துக்கோனு அவங்களே புக் பண்ணி கொடுத்திருவாங்க. அததான் நாங்க மாத்திவிடுவோம். மத்தபடி, டிப்ஸ் கிடைக்கிற காச வச்சிதான் எங்க பொழப்பு ஓடுது. நாளொன்னுக்கு 30 சிலிண்டர் போட்டாலும் முன்னூறு கூலி. டிப்ஸா ஒரு முன்னூறு நானூறு தேரும். டெய்லி 30 சிலிண்டரும் போட முடியாது. சராசரியா 20-லேர்ந்து 30 அவ்ளோதான்.’’ என்றார், அவர்.

பேட்டியை தொடங்கி வைத்த விநாயகம், மூனு வண்டிக்கு லோடு ஏற்றிவிட்ட களைப்போடு வியர்த்து விறுவிறுக்க வந்து சேர்ந்தார். ‘’இந்த லோடு வண்டிய ஓட்ற டிரைவர். நான்தான் இந்த லோடு எல்லாத்தையும் இறக்கி வச்சாகனும்னு கட்டாயப்படுத்துறாங்க… இங்க பாரு சிலிண்டர இறக்கிறப்ப கால்ல பட்டு ரத்தம் வருது. இதையும் எழுதுங்க..’’ என்ற விநாயகம், 16 வருடங்களாக டிரைவராக இருக்கிறார். குடோனிலிருந்து லோடு ஏற்றி, இதுபோன்ற ஜம்பிங் பாயிண்டுகளில் நாள் முழுக்க காத்திருந்து சிலிண்டரை இறக்கி கொடுத்து, காலி சிலிண்டரை ஏற்றிச் செல்வது வரையிலான வேலைக்கு இவரது ஒருநாள் கூலி 930.

‘’ஏஜென்சிகாரனுங்க நல்லா கொள்ளையடிக்கிறானுங்க. கஷ்டபடுற தொழிலாளிங்களுக்கு எதுவும் செய்ய மாட்டாங்க. வருசத்துக்கு ரெண்டு யூனிபார்ம் கொடுக்கனும். ஷூ கொடுக்கனும். ரெயின்கோட், தொப்பி கொடுக்கனும். ஆனா, எதுவும் கிடையாது. சிலிண்டர் விலை ஏர்றப்ப முன்கூட்டியே, 900 சிலிண்டர் வரைக்கும் குடோன்ல ஸ்டாக் ஏத்திருவாங்க. பழைய ரேட்டில் போட்ட பில்லை எல்லாம் திரும்ப வாங்கி, கேன்சல் செஞ்சிருவாங்க. புது விலைக்கு புதுசா பில்ல போட்டு கொடுத்துருவாங்க. சிலிண்டருக்கு 50 வச்சிகிட்டா கூட, ஒரே நாள்ல சுளையா 45000 அடிச்சிருவாங்க. சி.பி.சி.எல். கம்பெனியும் இத கண்டுக்க மாட்டான். ஆனா, கஷ்டபட்ற இவங்களுக்கு கொடுக்கறதுக்கு அவ்ளோ யோசிப்பான். நாங்களும் சி.ஐ.டி.யு. மூலமா சங்கம் வச்சில்லாம் பார்த்துட்டோம். எல்லா வேலையும் பண்ணி, கலைச்சி விட்டுட்டானுங்க.

இந்த ஏஜென்சினு இல்ல. எல்லா ஏஜென்சியிலயும் இதான் நிலமை. ஒரு எடத்துல பத்துரூபாய்க்கு மேல கமிசன் தந்தான்னா கூட, அத சொல்லி அங்க அவ்ளோ கொடுக்கிறாங்க., நீயும் சேர்த்துக் கொடுனு கேட்கலானு பார்த்தா. எல்லாரும் சொல்லி வச்சா மாதிரி பத்து ரூபாய்க்கு மேல தரமாட்டேன்கிறானுங்க. இதுவே பர்ஸ்ட் தப்பு. சி.பி.சி.எல்.ட்ட இருந்து சிலிண்டர் ஒன்ன டெலிவரி பன்றதுக்குனு முப்பதுரூபாய்க்கு மேல பில்போட்டு வாங்குறாங்க. அந்த காச அப்படியே தொழிலாளிங்ககிட்ட கொடுக்காம அதுலயும் கமிசன் அடிக்கிறானுங்க…’’ வண்டியிலிருந்து சிலிண்டரை இறக்கிப்போடுவதைப் போல… ஆதங்கங்களை கொட்டிவிட்டு அடுத்த வண்டிக்கு லோடு ஏற்றிவிட கிளம்பினார் விநாயகம்.

இந்தியாவை ஏழையாக்கும் டி.சி.எஸ்-ன் திருப்பணி !

டி.சி.எஸ் : இந்தியாவை ஏழையாக்கும் அயல் சேவை திருப்பணி !

1914-ம் ஆண்டில் ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 5 டாலர் கூலி வழங்க ஹென்றி ஃபோர்டு முடிவு செய்த போது, அவர் தொழிலாளர்களை ஈர்த்து தக்க வைத்துக் கொள்ள முயற்சித்தார்.

ஃபோர்ட் ஸ்பான்சர் செய்த 1953-ம் ஆண்டு சாட்டர்டே ஈவ்னிங் போஸ்ட் கட்டுரை

இது போல 2001-ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள ஐ.டி நிறுவனங்கள் புதிதாக சேரும் ஒரு ஊழியருக்கு சராசரியாக ஆண்டுக்கு ரூ 3.3 லட்சம் சம்பளம் கொடுக்க ஆரம்பித்தனர். ஹென்றி ஃபோர்டைப் போலவே, மற்ற துறைகளிலிருந்தும் திறமையான பொறியாளர்களை மென்பொருள் துறைக்கு ஈர்க்கும் நோக்கம் உடையதாக இது இருந்தது. பணவீக்கத்தையும் வளர்ச்சி வீதத்தையும் அந்நியச் செலாவணி மாற்றங்களையும் கணக்கிட்டு பார்த்தால் இது இன்றைய மதிப்பில் ஆண்டுக்கு ரூ 11.5 லட்சமாகும்.“இந்த நடவடிக்கை மிகவும் இலாபகரமானதாக நிரூபிக்கப்பட்டது; தொழிலாளர்களுக்கு கூடுதல் கூலி கொடுப்பதன் மூலம் டெட்ராய்ட்டில் சிறந்த தொழிலாளர்கள் ஃபோர்டுக்குச் சென்றனர், உற்பத்தித்திறனை உயர்த்தினர், அது பயிற்சி செலவுகளைக் குறைத்தது. போட்டியாளர்கள் ஊதியங்களை உயர்த்த நிர்பந்திக்கப்பட்டனர். இல்லாவிடில் அவர்கள் சிறந்த தொழிலாளர்களை இழப்பார்கள்.. ஃபோர்டின் கூடுதல் கூலி கொள்கை, ஃபோர்டு தொழிலாளர்களை தாங்கள் உற்பத்தி செய்யும் கார்களை வாங்கும் அளவுக்கு வளப்படுத்தவும் உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்தும்படியாகவும் அமைந்தது”.

ஒருவர் 2001-ம் ஆண்டில் ரூ 3.3 லட்சத்துக்கு வாங்கும் பொருளை, 2018-ம் ஆண்டில் 11.5 லட்ச ரூபாய் கொடுத்தால்தான் வாங்க முடியும். 2018-ல் ஐ.டி துறையில் ரூ 11.5 லட்சம் ஆண்டு வருமானம் என்பது 2001-ல் சராசரி மென்பொருள் பொறியியலாளரின் ஊதியத்தை விடக் குறைவானதாகும். 2018-ல் ஐ.டி துறையில் ரூ 11.5 லட்சம் ஆண்டு சம்பளத்திற்கு குறைவாக வாங்குபவர்கள், 2001-ல் உள்ள சராசரி மென்பொருள் பொறியியலாளரின் ஊதியத்தை விட குறைவாக வாங்குபவர்களே.

படிக்க :
உலகம் உழைக்கிறது – அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் நாடுகள் வாழ்கிறது !
பேஷ், பேஷ்….மோசடின்னா அது இன்போசிஸ் நாராயணமூர்த்திதான் !

இடைப்பட்ட காலத்தில், இந்திய ஐ.டி ஊழியர் சந்தை அதிக எண்ணிக்கையில் பொறியியல் பட்டதாரிகளை உருவாக்குவதாக மாறியது. ஒவ்வொரு ஆண்டும் மேலும் மேலும் அதிக எண்ணிக்கையிலான பொறியாளர்கள் பட்டம் பெற்று வெளிவருவதால், ஐ.டி நிறுவனங்கள் குறைவான சம்பளத்துக்கு ஊழியர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள முடிந்தது. தேவையை திட்டமிடாமல் நூற்றுக்கணக்கான தனியார் பொறியியல் கல்லூரிகளை அனுமதித்த அரசாங்கத்தின் கொள்கையாலேயே இது சாத்தியமானது.

இதனால் இலாப வேட்டையை அடிப்படையாகக் கொண்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் அதிகரித்தன. இலட்சக் கணக்கான மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு பெரும் தொகையை செலவிடுகிறார்கள். குடும்ப சொத்துக்களை விற்றோ, கடன் வாங்கியோ கட்டணம் செலுத்துகின்றனர். ஆனால் அவர்கள் படித்து முடித்த பின் வேலை கிடைக்காமல் திண்டாடுகின்றனர். அல்லது மிகக் குறைவான ஊதியம் பெறும் வேலையையே பெறுகின்றனர். கடினமாக உழைக்கும் ஒரு டீ மாஸ்டர் மாதம் ரூ. 60,000 வரை சம்பாதிக்கிறார். ஆனால் ஒரு சராசரி பொறியியல் பட்டதாரி மாதத்திற்கு ரூ 30,000 சம்பளத்திலான வேலை பெறுவதே அரிதாக உள்ளது.

இலாப வேட்டை அடிப்படையிலான இந்த சந்தை வேண்டல்/வழங்கல் நிலைமை தொடர்வதால் எதிர்கால தலைமுறையினரும் இதே போன்ற பிரச்சனையை எதிர்கொள்வார்கள். கார்ப்பரேட்டுகளை மேலும் லாபம் குவிக்கவும், உழைக்கும் வர்க்கத்தை மேலும் மேலும் வறுமையாக்கும் இந்த போக்கு எதிர்காலத்திலும் தொடரும். இப்போது கார்ப்பரேட்டுகள் நீண்ட கால அனுபவம் ஈட்டிய ஊழியரின் இடத்தில் குறைந்த சம்பளத்துக்கு புதிய பட்டதாரியை வேலைக்கு அமர்த்துகின்றனர். இதனால் நாட்டின் உற்பத்தித் திறனும், தொழில்நுட்ப வலிமையும் பலவீனமடைகிறது.

இந்த உழைப்பாளர் சந்தையில் உழைப்பாளர் சேமப் பட்டாளம் நிரம்பியுள்ளது.

இந்தியாவில் பிற துறைகளில் ஊதிய விகிதங்கள் ஐ.டி துறையை விட குறைந்த அளவிலேயே உள்ளன. ஐ.டி துறையிலேயே ஆண்டுக்காண்டு ஊதியங்கள் வீழ்ச்சி அடைவதால், பிற துறையிலும் தொழிலாளர்களின் பொருளாதார நிலைமை ஆண்டுக்காண்டு நலிந்து வருகிறது.

இந்திய தகவல் தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்றான (ஒருவரான) டி.சி.எஸ், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் மொத்த விற்பனையில் 12.5 சதவிகிதத்தை கட்டுப்படுத்துகிறது. டி.சி.எஸ் இத்துறையில் குறைந்த சம்பளம் கொடுப்பது பொதுவாக அறியப்பட்ட உண்மையாகும்.

மிகப்பெரிய நிறுவனம் குறைந்த சம்பளம் வழங்குவது பிற நிறுவனங்களும் அதே முன்மாதிரியை பின்பற்றுவதற்கான அடிப்படையாக உள்ளது. பிற நிறுவன பங்குதாரர்கள் ஊழியர்களின் ஊதியத்தை குறைக்கும்படி மேலாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். “டி.சி.எஸ் குறைந்த சம்பளத்துக்கு ஊழியர்களை எடுத்துக் கொள்ள முடியும் போது, நாமும் ஏன் அதே அளவில் ஊழியர்களை அமர்த்தக் கூடாது” என்று வாதிடுகின்றனர்.

இதன் காரணமாக, வெளிநாட்டு நிறுவனங்களான ADP, JP Morgan Chase, Bank of America, Pega Systems, Amazon, Google போன்றவை சராசரி இந்திய ஐ.டி துறை ஊதியத்தை விட சிறிதளவு கூடுதல் ஊதியம் கொடுத்து தமது வேலைகளை செய்து முடித்துக் கொள்கின்றன.

இந்திய ஐ.டி துறையில் சுமார் 75% வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் அயலகப் பணி நிறுவனங்களும், சுமார் 25% தமது சொந்த நிறுவனத்துக்கு சேவைப் பணி செய்து வாங்கும் நிறுவனங்களின் கிளைகளும் உள்ளன. இந்த அன்னிய நிறுவனங்கள் இந்திய ஊழியர்களுக்கு இவ்வாறு குறைந்த ஊதியம் கொடுப்பதன் மூலம் ஈட்டும் லாபத்தை தமது நாட்டுக்கு எடுத்துச் சென்று விடுகின்றன.

அயலக பணி செய்து தரும் இந்திய நிறுவனங்களும் குறைந்த சம்பளம் மூலம் செய்யும் செலவுக் குறைப்பில் பெரும்பகுதியை ஐரோப்பிய, அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு குறைந்த பில்லிங் கட்டணம் மூலம் அவர்களுக்கு கடத்த வைக்கப்படுகின்றன.

இவ்வாறாக, இந்தியாவில் ஒரு ஊழியர் குறைந்த சம்பளத்தில் வேலை வாங்கப்பட்டு அதன் பலன் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு லாபமாக கடத்தப்படுகிறது. இதன் விளைவாக கணிசமான மதிப்பு வாய்ந்த அந்நியச் செலாவணியை நமது நாடு இழப்பதோடு மட்டும் இல்லாமல் நாம் தொடர்ந்து ஒப்பீட்டு வறிய நிலையில் வைக்கப்படுகிறோம்.

இது யார் குற்றம்? நிச்சயமாக டி.சி.எஸ் தான் – இந்திய ஐ.டி துறையின் பெரியண்ணன். டி.சி.எஸ் ஊழியர்களின் சராசரி சம்பளத்தை அதிகரித்து கொடுக்காதவரை பிற நிறுவனங்கள் சம்பளத்தை அதிகரிக்கப் போவதில்லை. டி.சி.எஸ் தன்னிடம் உபரியாய் உள்ள ரூ 50,000 கோடி தொகையை, புதிய நிறுவனங்களை உருவாக்கவும், ஜாகுவார் லேண்ட் ரோவர், புஷான் ஸ்டீல் போன்ற நிறுவனங்களை வாங்குவதற்கும் திருப்பி விடுகிறது.

ஊழியர்களுக்கு இதன் பலன்களை கொடுக்காமலே ஏய்த்து வருகிறது. இது நம் நாட்டை மேலும் மேலும் பொருளாதார ரீதியில் பலவீனமாக்குகிறது. மென்பொருள் சேவை சந்தையில் 12.5%-ஐ கட்டுப்படுத்தும் டி.சி.எஸ், இந்த நிலைமையை மாற்றி நாட்டை வளப்படுத்தும்படி விரும்பினால் ஊழியர்களின் ஊதிய விகிதங்களை உயர்த்துவதை செய்ய முடியும்.

ஒரு அதீத கற்பனையாக டி.சி.எஸ் இந்திய ஊழியர்களுக்கு மணிக்கு $30 என்ற வீதத்தில் சம்பளம் கொடுக்கிறது என்று வைத்து கொள்வோம். இதன் பொருள் டி.சி.எஸ் எந்தவொரு இலாபமும் இல்லாமல் அல்லது கணிசமாக குறைந்த இலாபம் மட்டுமே ஈட்டுவதாக அமையும். அதாவது வாடிக்கையாளர்களுக்கு பில்லிங் செய்து பெறும் தொகையில் பெரும்பகுதியை ஊழியர்களுக்கு ஊதியமாக வழங்குவதாக அமையும். இதன் விளைவாக பிற இந்திய நிறுவனங்களும் இந்த அளவு சம்பளம் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தப்படும்.

படிக்க :
வெல்லம் தின்னும் டி.சி.எஸ் – விரல் சூப்பும் ஊழியர்கள் !
40 வயதுக்கு மேல் ஐ.டி துறையில் வேலை இல்லை – பங்கஜ்

பல சிறு, நடுத்தர நிறுவனங்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் டி.சி.எஸ் போன்ற பெரிய நிறுவனங்களுடன் இணைய வேண்டி வரும். இந்தியாவில் மலிவான உழைப்பை பயன்படுத்தி லாபம் ஈட்டும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது கிளைகளை உள்ளூர் நிறுவனங்களுக்கு விற்று விட்டு வெளியேறி விட நேரிடும். டி.சி.எஸ் போன்ற நிறுவனங்கள் தற்போதைய அளவை விட 4 மடங்கு அதிகமான லாபத்தை ஈட்ட முடியும். ஒரு மணி நேர உழைப்புக்கு குறைவான இலாபம் ஈட்டினாலும், மொத்த வருவாயில் அதிகமான லாபத்தை விளைவிக்கும். நிறுவனத்தின் மதிப்பீடு குறுகிய காலத்திற்கு பாதிக்கப்படலாம் ஆனால் நீண்ட கால நோக்கில் மீண்டும் அது மீட்டெடுக்கப்பட்டு விடும்.

ஒரு வேளை டி.சி.எஸ் அதன் நுழைவு நிலை ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ரூ 12 லட்சம் சம்பளம் என்ற அளவிலாவது நிர்ணயித்தால் என்ன நடக்கும்?

அதன் அடிப்படையில் அடுத்தடுத்த மட்டங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதல் ஊதியம் தர வேண்டியிருக்கும். ஒரு ஆண்டுக்கு ஒரு ஊழியருக்கு சுமார் ரூ 8 லட்சம் ஊதிய உயர்வு என்பது மணிக்கு $5.55 அதிகரிப்புக்கு சமமாகும். மேலே சொன்னது போல மணிக்கு $30 சம்பளம் இல்லை என்றாலும் இந்த குறைந்த அளவு உயர்வு கூட கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், தடையற்ற சந்தைப் போட்டி, பெருமளவு சந்தையில் நிற்கும் பொறியிலாளர் சேமப்படை ஆகியவற்றை பயன்படுத்தி முதலாளிகள் ஊழியர்களுடன் பேரம் பேசி ஊதியங்களை குறைத்து விடுகின்றனர். எனவே, இதில் இந்திய அரசு இதில் முக்கிய பங்காற்ற வேண்டும்.

அனைத்து வளர்ந்த நாடுகள் போன்று, நம் அரசும் ஒவ்வொரு திறனுக்கும் குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிக்கவேண்டும். இது சரியான முறையில் அமல்படுத்தப்பட்டால், தொழிலாளர்கள் ஒரு சரக்காக நடத்தப்படமாட்டார்கள். தகுதி வாய்ந்த ஊழியர்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளதானாலேயே குறைந்த சம்பளத்துக்கு வேலை வாங்குவதை அனுமதிக்க முடியாது என்று அரசு கார்ப்பரேட்டுகளுக்கு உணர்த்த வேண்டும்.

அரசு குறைந்தபட்ச ஊதிய வீதத்தை நிர்ணயித்தால் எல்லா நிறுவனங்களும் கூடுதல் சம்பளம் கொடுக்க ஆரம்பித்து, அதற்கேற்றபடி வெளிநாட்டு பில்லிங் கட்டணங்கள் உயர்த்தப்படும். நமது நாட்டுக்கு கூடுதல் அன்னியச் செலாவணி கிடைக்கும். நமது நாட்டு ஊழியர்களின் உழைப்பின் பலன் நம் நாட்டிலேயே தக்க வைக்கப்படும். இதனால் உள்நாட்டில் பொருட்களின் வேண்டல் அதிகரிக்கும். வீடு, வாகனங்கள், வீட்டு பயன்பாட்டு பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். அது மேலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இதனால் நான் அனைவரும் ஒன்றாக முன்னேறுவோம்.

ஆனால், ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பும் டாடா, போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்வதாகவே இயங்குகிறது. எனவே, நாம் எந்த மாற்றமும் தானாக நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. நமது நாடு பல பிரச்சனைகளை தீர்க்க வேண்டியிருக்கிறது. நம் நாட்டின் தலைவர்கள் மேற்கத்திய நாட்டு தலைவர்களை விட சுயநலம் மிகுந்தவர்களாகவும் நாட்டின் நலனை புறக்கணிப்பவர்களாகவும்தான் உள்ளனர். ஆனால் நிறுவனங்களின் மேல்மட்ட, இடைமட்ட மேலாளர்கள் நாட்டின் நலனையும், மனிதநல பொறுப்புகளையும் புறக்கணித்து, முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் கொள்கைகளை அமல்படுத்துவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

இந்த நச்சுச் சுழற்சியை உடைப்பது தொழிலாளி வர்க்கம் தொழிற்சங்கங்களில் ஒன்றிணைவதன் மூலமும், அரசுகளும் கார்ப்பரேட்டுகளும் ஊழியர்களின் நலனையும், நாட்டின் நலனையும் முன்நிறுத்தி செயல்படும்படி கட்டாயப்படுத்துவதன் மூலமுமே சாத்தியமாகும்.

♦ ஆங்கிலத்தில் : பிரசாந்த்
♦ மொழிபெயர்ப்பு : கோகுல்

நன்றி : new-democrats

மூடு டாஸ்மாக்கை : கொட்டும் மழையில் குமரி காட்டுவிளை மக்கள் போராட்டம்

ன்னியாகுமரி மாவட்டம் கட்டிமாங்கோடு அருகே காட்டுவிளை கிராமத்தில் புதிதாக திறந்துள்ள டாஸ்மாக் கடையை மூடுமாறு கூறி காட்டுவிளை கிராம மக்கள்  நேற்று (02-11-18) காலை முதல் முற்றுகையிட்டு போராடி வருகின்றனர்.

ஓர் ஆண்டுக்கு முன்பு இதே இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.  கடை திறக்கப்பட்ட அன்றே காட்டுவிளை கிராம மக்கள் சுற்று வட்டார கிராம மக்களுடன் இணைந்து கடையை முற்றுகையிட்டு விடிய விடிய போராடி கடையை விரட்டியடித்தனர்.

தற்போது மீண்டும் அதே உணர்வுடன் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இரண்டாவது நாளாக தொடர்கிறது, மக்களின் போராட்டம்.

பேச்சுவார்த்தைக்கு வந்த தாசில்தார், ‘’கடையை சீல் வைக்கின்றோம்’’ என்று கூறியுள்ளார். ‘’ஏன் சீல் வைக்க வேண்டும்?  கடையை காலி செய்து எடுத்து செல்லுங்கள்’’ என்று மக்கள் அவரை திருப்பியனுப்பினர். பின்னர், மாவட்ட ஆட்சியரிடம் பேசுவதற்கென்று மக்களில் சிலரை அழைத்து சென்றனர். ‘’கடையை காலி செய்து எடுத்து சென்றால்தான் போராட்டத்தை கைவிடுவோம்’’ என்று ஆட்சியரிடமும் உறுதியாக தெரிவித்துவிட்டனர்.

தற்போது, டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்ட உடனே, முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்கு ஆயத்தமாகினர் மக்கள். இதற்கு முன்னர் இதே டாஸ்மாக் கடை முதல்முறையாக திறக்கப்பட்ட அன்றே முற்றுகை போராட்டம் நடத்தியதன் காரணமாகத்தான் கடையை மூடினர். இந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே மக்கள் போராடத்தயராயினர். ஆனால், சில உள்ளூர் பாரதிய ஜனதா கட்சி  கட்சி தலைவர்களின் நிர்பந்தம் காரணமாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர். வழக்கம் போல கோரிக்கையை பரிசீலிக்கிறோம் என்று சமாதானம் சொல்லி அனுப்பிய மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சியர் நடவடிக்கைக்கு எடுக்கும் வரையில் காத்திருக்க கோரினர் பா.ஜ.க. நிர்வாகிகள்.

‘’கடையை முற்றுகையிடாமல் கடையை மூட மாட்டார்கள்,முற்றுகையிட்டு நாமே மூடுவோம்’’ என்று அதிகாரத்தை செலுத்தி வருகின்றனர் காட்டுவிளை மக்கள்.

படிக்க:
சிறப்புக் கட்டுரை : அம்மாவின் ஆட்சியில் கொழிக்கும் டாஸ்மாக் – மணற்கொள்ளை !
என் ஊரு நெல்லை ! ஆனா எனக்கு சொதி குழம்பு தெரியாது !

மக்கள் முற்றுகை போராட்டம் நடத்துவதை அறிந்த பா.ஜ.க. வினர் உட்பட பல்வேறு அரசியல்கட்சியினரும் களத்திற்கு வந்து மக்கள் போராட்டத்தை ஆதரித்து பேசிவருகின்றனர். குளச்சல் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வும் வந்து ஆதரித்து பேசியுள்ளார். மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட செய்தி அறிந்தது முதல் தற்போது வரை போராட்டக்களத்தில் காட்டுவிளை மக்களுடன் உள்ளனர்.

தகவல்:

கன்னியாகுமரி மாவட்டம்.

காரைக்குடி கோலா உருண்டையும் கோடம்பாக்கம் கதை இலாகாவும் | நாடகம்

4

கற்பனைதான் ஒரு படைப்பின் துவக்கம். நீங்கள் எதை விரும்புகிறீர்களோ  அதை கற்பனை செய்யுங்கள். நீங்கள் எதை கற்பனை செய்வீகிறீர்களோ அதுவாகவே மாறுவீர்கள். இறுதியில் நீங்கள் எதுவாக இருக்கிறீர்களோ அதையே படைப்பீர்கள்!

– ஆங்கில நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னாட் ஷா

காரைக்குடி கோலா உருண்டையும் கோடம்பாக்கம் கதை இலாகாவும் | நாடகம்

முதன்மைப் பாத்திரங்கள்: இயக்குநர் முறுக்குதாஸ், எழுத்தாளர் சுயமோகன், முறுக்குதாஸின் தனி உதவியாளர்கள் ஜகன், ஜோதி. நான்கு வருங்கால இயக்குநர்கள் பீட்டர், பல்லவன், தொல்காப்பியன், ஜிப்பா மணி மற்றும் தயாரிப்பு நிர்வாகி நிக்கில், தயாரிப்பு உதவியாளர் – கற்பூரம் என்ற செல்லம்.

காலம்: தமிழகத்தின் வடகிழக்கு பருவமழைக் காலம்.

காட்சி 1 – வருகைப் படலம்.     
நேரம் : விடியற் காலை பகல் 11.00 மணி
இடம்: (LUXURY SEA VIEW SUITE) கடலைப் பார்த்த ஆடம்பர விடுதி அறை, தாஜ்ஃபிஷர்மேன் கோவ் – ரிசார்ட், சென்னை மாமல்லபுரம் அருகே உள்ள 5 நட்சத்திர டீலக்ஸ் காட்டேஜ் விடுதி.

புரடக்சன் காரில் தயாரிப்பு நிர்வாகி நிக்கில், உதவியாளர் கற்பூரம் என்ற செல்லம், நான்கு வருங்கால இயக்குநர்கள், ஆளுயர டிபன் கேரியர்,
உதவி இயக்குநர் பெட்டி (பெட்டிக்குள் ஏ 4 பேப்பர் கட்டு, ஜூனியர் விகடன் – நக்கீரன் கட்டுக்கள், பத்திரிகைகளின் கிளிப்புகள், டஜன் ஷார்ப் பேனாக்கள் – பென்சில்கள் – ஷார்ப்னர்கள், ஸ்டேப்ளர்கள், எழுத்துப் பலகைகள், டேப்லட், லேப்டாப்புகள், வாய்ஸ ரிக்கார்டர்).

அனைவரும் நெருக்கிக் கொண்டு அமர்ந்த இண்டிகா காரிலிருந்து இறங்குகின்றனர்.

ஜிப்பா மணி: (சுற்றும் முற்றும் பார்த்த படி) இந்த ஓட்டல்ல நமக்கு எங்க போட்டுருக்காங்களோ ரூமு, காம்பவுண்டுல எறக்கி வுட்டானுங்க!

பீட்டர்: உனக்கு ஆசைதான்! போனவாட்டி என்னை ரிசப்சன்லயே படுக்கச் சொல்லிட்டானுங்க. அவங்க தங்குற சூட்ல ஒரு ஓரமா வுடுவாங்களா பாரு!

செல்லம்: சீக்கிரம் எறங்குங்க சார், உங்க டிஸ்கசனை வெளிய வெச்சுக்குங்க, நாங்க ரிடர்னாகணும் சார்! டிஸ்கசனுக்கு வர்ரறது நாலு பேரு. எட்டு எடம் போய் வரணும் சார்….ஒவ்வொருத்தரும் ஒரு லிஸ்ட் கொடுத்துட்டாங்க என்னன்ன வேணும்னு! அத்த தேடி எடுத்துன வரதுக்குள்ள நீங்க நாலு கதை டிஸ்கஸ் பண்ணலாம் சார், கோவிச்சுக்காதீங்க!

தொல்காப்பியன்: ஏம்பா நீ கூட அசிஸ்டஸ்ண்ட டைரக்டருன்னா மதிக்க மாட்டியா?

பல்லவன்: தொல்லு, உனக்கு தெரியாதாப்பா, செல்லத்துக்கு ஆயிரம் வேலை, நம்பளுக்கு ஒரே ஆதரவு அவன்தான்!

பீட்டர்: ஆமா, இவருதான் இந்தப் படத்துக்கு புரடீயூசர், ஹீரோயின் கீர்த்தி ரமேஷை கொச்சிக்கு ஃபிளைட்ல போய் புக் பண்ண போறாரு…..

செல்லம்: ஆமா சார், உங்களுக்கு நான்தான் கிடைச்சேன்….எங்கப்பன் பேச்ச கேட்டுருந்தா நானே நாலு படம் எடுத்துருப்பேன். கேக்காததால இப்ப கேரியர தூக்குறேன். பாக்குறவனுக்கெல்லாம் எளக்காரமாயிருச்சு…

வரவனுங்க டிஸ்கசனுக்கு வரானுங்களா, துன்றதுக்கு வராணுங்களான்னு தெரியலை. ஃபோன்லயே லிஸ்ட் கொடுத்துட்டாங்க. உட்லண்ட்ஸ்ல தயிர் வடை, காரைக்குடியில கோலா உருண்டை, அப்பால டிசி மேனர்ல பகளா பாத், டிராகன்ல சிக்கன் கிளீயர் சூப்புன்னு இன்னும் எவ்ளோ இருக்குது சார், நாங்க போகணும் ஆள வுடுங்க…

(உதவி  இயக்குநர்கள் பெட்டியுடன் காட்டேஜ்ஜை நோக்கிப் போக, புரடக்சன் கார் திரும்பியது.)

காட்சி முடிகிறது.

காட்சி 2 : துயிலெழுப்பும் படலம்
நேரம்: அதிகாலை பகல் 11.00 மணி
இடம்: இயக்குநர் முறுக்குதாஸின் தனி பங்களா

முதல் மாடி பால்கனியில் தனி உதவியாளர்கள் ஜகனும் ஜோதியும் பதட்டத்தோடு பேசிக் கொள்கிறார்கள்.

ஜகன்: டேய் நீ எழுப்புடா போய்!

ஜோதி: அந்த வேலை எனக்கு கிடையாதுப்பா, நீதான் செய்யணும், ஏற்கனவே ஏகப்பட்ட டோஸு வாங்கிட்டேன், ஓன் முகத்துல முழிச்சாத்தான் ராசியாம், போய் எழுப்புடா.

ஜகன்: ஆமாண்டா ராசி அவருக்குத்தான், எனக்கு…..?
எவ்வளோ மிதிச்சாலும் தாங்குவேன்னு என் மூஞ்சிலேயே எழுதி வெச்சுருக்கா?

(அந்தநேரம் பார்த்து முறுக்குதாஸ் சோம்பல் முறித்துக் கொண்டே பெர்முடா சகிதம் என்ட்ரி.)

முறுக்குதாஸ்: டேய் இன்னிக்கு டிஸ்கசன் இருக்கேடா. அந்த வேலைய பாக்காத இங்க என்ன பண்றீங்க?

ஜோதி – ஜகன்: சார்………
(மேற்கொண்டு பேச தயங்கி நிற்கிறார்கள்)

முறுக்குதாஸ்: டிஸ்கசனுக்கு காரை அனுப்பிச்சீங்களா? எல்லாரும் ஓட்டல் போய் சேந்துட்டாங்களா? அவங்களுக்குஃபோன் பண்ணீங்களாடா?

ஜோதி: சார், அல்லாரையும் அனுப்பிச்சிட்டேன் சார்…

ஜகன்: சார் ரிசப்சன்ல இருந்து 9 மணிக்கே ஃபோன் பண்ணாங்க. “உங்க ஆளுங்க யாரோ டிஸ்கசனுக்கு வந்திருக்காங்க, ரூம் கீ கொடுக்கவான்னு” கேட்டாங்க சார்! அந்த ஃபேமஸ் எழுத்தாளர்னு சொல்லுவீங்களே, அவருதான் வந்துட்டராம், சாவிய கொடுக்கச் சொல்லிட்டன் சார்……

முறுக்குதாஸ்: டேய் நான் எப்படா சொன்னேன் ஃபேமசுன்னு? அவனுங்களே சொல்லிக்கிறாங்கடா… அவங்கல்லாம் பன்ச்சுவல் ஆசாமிங்கடா. ஆனா நம்ம கிட்ட கதைய பன்ஞ்சுவலா கொடுப்பாங்களான்னு தெரியல. டேய், அவரு மணி சார் ஆளுடா!

ஜோதி: சார், ஸ்டோரி லைன் கேக்குறதுக்கு புரடியூசர் சைடுலேர்ந்து சக்சேனா சார் ஃபோன் பண்ணார். ….கலைநதி சார் எப்ப ஓட்டலுக்கு வரணும்னு கேக்கச் சொன்னாராம்.

முறுக்குதாஸ்: ஆரம்பிச்சுட்டானுங்களா! ஓட்டல் பில் கட்டும்போதே ஃபர்ஸ்ட் காப்பி கேக்குறானுங்க. இவனுங்கள விட்டாலும் நமக்கு ஆளு எவனும் இல்லை.
புடுங்கி, சொல்றேன்னு சொல்டா. இல்லெல்லை, சாருகிட்ட பேசலை, அவரு மூடு அவுட்டா இருக்காராறுன்னு சொல்லுடா. எல்லாத்தயும் எங்கிட்டயே கேட்டுக்கிணு! இதல்லாம் மட்டும் ஏங்கிட்ட வக்கனையா கேளுங்க.

ஜகன் மைண்ட் வாய்ஸ் ( இவனுங்க ஒரிஜினல் கதை பண்ணாங்கன்னா இன்னும் துள்ளுவாங்க, ராத்திரி பூரா சி.டியில கதைய தேடுறதுக்கே இந்த டென்சன்…)

ஜோதி: சரி சார். ஓட்டலுக்கு உங்க திங்க்ஸெல்லாம் எடுத்து வெச்சிருக்கோம், பாத்தீரீங்களா. இப்ப மூணு நாள்தான் சார் தங்கப் போறீங்க.

குளிர்காலம் சார். பீச்சுக்கு போவீங்க. ஏற்கனவே உங்களுக்கு சளி பிடிக்கும். அம்மா திட்டுவாங்க. அயர்லாண்ட் வெதர் ஜாக்கெட்ட ரெண்டு செட்டு வெச்சிருக்கேன், பெர்முடாஸ் போடாதீங்க சார்…. அப்பால ட்ராக் சூட்டு ரெண்டு வெச்சுருக்கேன். ஷார்ப் அல்டிமேட் கோல்டு பேனா ரெண்டு எடுத்து வெச்சிருக்கேன். ஓகே-வா சார்?

ஜகன்: (மெல்லிய குரலில்) சார்,  டின் பீர் சாப்பீடாதீங்க சார், பெரிய அம்மா திட்டுனாங்க. மூஞ்சி ஊதுனாப்புல, தொப்பயும் தெரியுதான் சார். ஹென்னசி, சென்ட் ரெமி, மார்டெல் மூணுலயும் ரெண்டு ஃபுல் எடுத்து வெக்கவா சார்?

ஜோதி: சார், ஹீரோயின் மேனேஜர் பேசுனார். டேட் சம்பந்தமாக உங்ககிட்ட சொல்லணும்னு சொன்னாரு. அவருக்கு என்ன சார் சொல்லணும்? அவரை அங்க வரச் சொல்லலாமா சார்?

முறுக்குதாஸ்: டேய் கிளம்புங்கடா, எல்லா டிஸகசனையும் இங்கயே முடிச்சிருவீங்களடா …..

(ஒருவழியாக அனைவரும் பி.எம்.டபிள்யூ காரில் ஏறி மாமல்லபுரம் நோக்கி பயணிக்கிறார்கள்.)

காட்சி 2 முடிகிறது.

காட்சி 3: தவிப்புப் படலம் (ஏசி ரூமு வேற…)
நேரம்: பகல் 12.00 மணி
இடம்: லக்சுவரி டீலக்ஸ் சூட் பாத்ரூமின் உள் அலங்கார அறை.

எழுத்தாளர் சுயமோகன் குளித்து முடித்து விட்டு ஃபிஷர்மேன் கோவின் புகழ் பெற்ற எகிப்திய காட்டன் ஈரத்துண்டை இடுப்பில் கட்டியவாறு ஐ ஃபோன் மாடல் 15-இல் எண்களை எழுதுகிறார். எவரும் சிக்கவில்லை. கடைசியில் இண்டியன் டாய்லட்டில் வாட்ஸ்அப் பார்த்துக் கொண்டிருந்த அவரது சீடரான அரங்கப்பன் கிடைத்தார்.

சுயமோகன்: வணக்கம் அரங்கா, எப்படி இருக்கீங்க?

அரங்கப்பன்: ஆசானுக்கு வணக்கம். இப்பதான் எந்திருச்சேன். இன்னிக்கு நீங்க போட்ட நகல்முரசு பாகம் இன்னும் படிக்கல. நேத்து படிச்சதுல  கிடைச்ச தரிசனத்தலேர்ந்தே இன்னும் வெளியில வர முடியல.

சுயமோகன்: அப்டியா, நானும் அதை எழுதும் போதே உணர்ந்தேன். நேத்து  வெளியான பாகத்துல பாத்தீங்கன்னா ஆழ்மனசுல அலையாம தவிப்போட இருக்கும் ரெண்டு குறுகுறுப்புகளை மனசாந்தியோட விதார விடுப்புக்களோடு நான் அதை அனுபவிச்ச போதே, சொன்னா நம்ப மாட்டீங்க, எனக்கே ரெண்டு நாள் தூக்கம் வரலே..

அரங்கப்பன்: ஆசானே, உங்க குரல்ல ஒரு சோகம் தெரியுதே? என்னாச்சு?

சுயமோகன்:  ஆமா, அரங்கு. நான் இப்ப திருவனந்தபுரத்துல இல்லை. ஒரு வேலையா சென்னை வந்துட்டேன். காலையில ஃபிளைட்டல இறங்கி தாஜ் கூரூப்போட பிஷர்மேன் கோவில இருக்கேன். டீலக்ஸ் சூட்டாம். இந்த ரெசார்ட்டுதான் இளையராஜா சாரோட மனசுக்கு பிடிச்ச இடமாம். இந்த மனநிலையில எழுத்துத் தவம், வேலைப் பணம்னு மூளை ரொம்பவே பேரக்னியா தகிக்குது.

அரங்கப்பன்: ஆசானே யார்? மணி சாரா, கமல் சாரா, பாலா சாரா? யாரோட ஃபில்ம்?

(கழிப்பறையின் ஃபிளஷை அழுத்தி நீரை வெளியேற்றுகிறார்.)

சுயமோகன்: இப்போ தீடீர்னு முறுக்குதாஸ் புது புராஜக்ட்டுனு கூப்ட்டாரு, அவருக்கு மணி சார் சொன்னாராம் அரங்கா. நல்லவேளை மிச்ச வேலையெல்லாம் ஞாபகப்படுத்துனீங்க. இன்னி தேதிக்கு ஒரு மூளை பத்தல எனக்கு. அதுக்குள்ள நகல்முரசோட 333-வு படலத்தை முடிச்சாத்தான் மூணு மாசம் தாங்கும். அதுக்கு மேல விருது விழா வேற! இன்பாக்ஸ மூணு நாளா திறக்கல. இனி ஒன்றரை மாசம் நான் வேற உலகம். அதுக்கு பெறகுதான் நம்ம உலகத்துல பெறக்கணும்.

அரங்கப்பன்: நம்ம அன்பான எதிரிங்க செத்தாங்க சார். நீங்க கொண்டாடுர இலக்கிய உலகத்துக்காரங்களே இதை தாங்க மாட்டாங்க சார். அறாத்து ஸ்டேட்டஸ்ல அனானிமசா கமெண்டு போட்டா பாரு நிவேதிதா வரைக்கும் நமக்கு நல்ல பிரமோசன் கிடைக்கும் சார்.

சுயமோகன்: அரங்கு, நான் உங்ககிட்ட சொன்னது எங்கிட்ட சொன்னது மாதிரி. வேற யாருக்கும் வேணாம். நம்ம வேலை அதுவா? சூரியனுக்கு எதுக்கு டிரைலர்?

(கதவு மணியிசை கேட்கிறது. அரங்கப்பனிடம் அவசரமாக விடை பெற்ற சுயமோகன் கதவை நோக்கி போகிறார்.)

காட்சி 3 முடிகிறது.

காட்சி 4 – புலம்பல் படலம்
நேரம் பகல் 1.00 மணி
மாமல்லபுரத்தை நோக்கிச் செல்லும் பி.எம்.டபிள்யூ காரில் முறுக்குதாஸ் உதவியாளர்களுடன் பேசியபடியே வருகிறார்.

ஜகன்: எனக்கே ரொம்ப கஷ்டமாருக்குது சார், காலையிலே உங்கள எழுப்புறதுக்கு! நேத்தும் லேட்டாதான் தூங்குனீங்க. கண்ணெல்லாம் செவந்து போயிருக்குது. அடிக்கடி அம்மா என்னய திட்டுராங்க, அவர் உடம்பை நீ கவனிக்க மாட்டேங்கிறன்னுட்டு.

முறுக்குதாஸ்: டேய் டேய் நிறுத்துரா, நைட்டு நான் தண்ணியடிச்சதை காத்தால அம்மாகிட்ட போட்டு குடுத்துருப்ப, அதுக்கு பரிகாரம் தேடுறியா?

ஜோதி: இல்ல சார். எனக்கும் உங்களப் பாத்தா பரிதாபமா இருக்குது. காலையில எதுவும் சாப்பிடறதில்ல. மதியமும் லேட்டு. நைட்டு மட்டும் தண்ணியடிக்கிறத குறைச்சுக்கிட்டா நல்லாருக்கும். இது எங்களுக்கே தோணுது, அதுக்கு ஏன் நம்ம அம்மாவ இழுக்குறீங்க!

முறுக்குதாஸ்: டேய் எனக்கு தெரியாதாடா? டென்சன்டா. கொடாக் பிலிம் ரோல் போனாலும் போச்சு. டிஜிட்டல் வந்துருச்சு. குப்பையில கிடக்குற கேமரவா எடுத்துணு வந்து ஷூட்டிங் நடத்துரானுங்க! அதுவும் நல்லாருக்குணு பொழப்பத்தவனுங்க சோசியல் மீடியாவுல கொண்டாடுறானுங்க! நம்பள மாதிரி மெகா பட்ஜெட்டு, பெரிய ஸ்டார்னு தலையிடி தாங்கிகிணு படம் எடுத்தா, அதை நொட்ட சொல்லி ஒரே நாள்ல கவுத்துரானுங்க.

நம்ம வொர்க் டிரண்டியா இல்லேன்ன சொல்லிடுனுவாங்க. அதாண்டா மணி சார், ஷங்கர் சார் ரூட்ல போக வேண்டியிருக்குது!

ஜகன்: என்ன சார், படத்த வேற மாதிரி திங்க் பண்றீங்களா? ஃபாரின்லேர்ந்து வில்லன இறக்குமதி பண்ணப் போறீங்களா? இல்ல, கிராஃபிக்கஸுக்கு ஹாலிவுட் போறீங்களா?

முறுக்குதாஸ்: அப்டி போனாலும் வில்லங்கம்தான்டா. கதையில நேட்டிவிட்டி கேக்குறாங்கடா. டயலாக்ல பன்ஞ் மட்டும் பத்தாது, ஃபிலாசபியும் வேணுமாம். இது எல்லாத்துக்கும் மொத்தமா ஒரு ஆளு இருக்கான்னு மணி சார் சொன்னாரு. ஷங்கர் சாருகிட்ட கிராஸ் செக் பண்ணேன். அவரும் பெருமையா சொன்னாருடா! ஓவர் நைட்ல 400 பக்கம் டெலிவரி பண்ணுவாராண்டா! அத எப்படி படிக்க போறோன்னுதான் த்ரில்லா இருக்குடா!

ஜோதி: சார், கொஞ்சம் வூட்டு மேலயும் கவனம் வைங்க சார்! வேல வேலன்னு பேசிகிட்டு… வூட்ல அம்மா திட்றாங்க. நேத்து வந்தவனெல்லாம் அண்ணா நகர், அசோக் நகருன்னு வீடு வாங்கிட்டாங்க. ஈசிஆருல பண்ண வூடு கட்டுறாங்க! ஏற்கனவே நாலு புரோக்கரு நம்மகிட்ட வந்து போனாங்க! சொல்லிக்கிணே இருக்குறோம். நீங்க வந்து அந்த இடத்த பாக்க மாட்டேங்கிறீங்க. போனா வராது. நீங்க டெக்னிக்கலாதான் பெரிய ஆளுங்கள ஃபாலோ பண்றீங்க! லைஃப்லயும் அவங்கள ஃபாலோ பண்ணுங்க சார்! அவங்க எப்டி செட்டிலாயிட்டாங்க பாருங்க!

போறது போறோம், ஈசிஆருல எம்.ஜி.எம் பக்கத்துலதான். கதவைத் தொறந்தா கடல்ல காலை நனைக்கலாம். ரெண்டு பண்ண வீடு இருக்குதாம். ஏற்கனவே அதுக்குப் போட்டியாம். அதைப் பாத்துட்டு ஓட்டல் போலாமா சார்!

முறுக்குதாஸ்: டேய், முதலுக்கே மோசம் வெக்காதீங்க. இப்பதான் புரடியூசர் ஃபோன் பண்ணி கத கேட்டாருன்னு நீதான சொன்ன? அட்வான்ஸ்தான் வாங்கியிருக்கிறோம். அடுத்தது வாங்கணும்ல! இப்ப நீ என்னா பண்ற, சார் டிஸ்கசன்ல இருக்காறு, அடுத்த பேமண்டு என்னாச்சுன்னு கேக்கச் சொன்னாருன்னு கேளு!

ஜகன் மைண்ட் வாய்ஸ்: (எப்படி சோப்பு போட்டாலும் கடைசியில நம்ம கண்ணுதான் எரியுது)

(பிஷர்மேன் கோவில் பி.எம்.டபிள்யூ நுழைகிறது)

காட்சி முடிகிறது.

காட்சி 5 – டென்சன் படலம்
நேரம் பகல் 1.52
இடம்: ஃபிஷர்மேன் கோவ் விடுதி அறை

நான்கு உதவி இயக்குநர்களும் முறுக்குதாசை வரவேற்று அறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். ஆனால் முறுக்குதாசின் கண்களுக்கு யாரும் தெரியவில்லை. அவசரமாக அறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைகிறார். உதவி இயக்குநர்களும், தனி உதவியாளர்களும் அச்சத்துடன் அறை வெளியே நிற்கின்றனர்.

சுயமோகன்: வாங்க சார்

(இயக்குநர் முறுக்குதாஸின் முகத்தில் தென்படும் பதட்டைத்தைப் பார்த்ததும் அவரும் பதட்டமடைந்தார்)

சுயமோகன் மைண்ட் வாய்ஸ்: மெகா டைரக்டருன்னா டென்சன் இருக்கத்தான் செய்யும். முதல் சந்திப்பே துர்சகுனம் ஆயிடக் கூடாது…. மனதில், வாலி – இளையராஜாவின் பழைய விபத்து கதை ஓடியது.

அந்தக் கதை பின்வருமாறு…

வெளிநாட்டுப் பயணத்திற்காக இசைஞானி இளையராஜா தனது சொந்தக்காரில் கவிஞர் வாலியை அமர்த்திக் கொண்டு விமான நிலையம் சென்றார். எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டு பயணம் ரத்தாகிறது. நல்வாய்ப்பாக இருவரும் பெரிய காயம் இல்லாமல் வீடு வந்து சேர்கின்றனர்.

வாலியின் மனைவிக்கு போன உயிர் திரும்பியது போல ஒரு சந்தோசம். மாங்கல்யத்தை எடுத்து கண்ணில் வைத்துக் கொண்டு, “இந்த பாக்கியத்தை கொடுத்தது இளையராஜாதான். அவர் கூட இருந்ததால்தான் கடவுள் கடாச்சத்தினால் என் வாலி மாமா உயிர் பிழைத்தார்” என்று பிரார்த்திக்கிறார். இதை கேட்ட கவிஞர் வாலி, உடனே ஃபோன் போட்டு இளையராஜாவிடமும் அதையே சொல்லுமாறு மனைவியிடம் கேட்கிறார். இது ஒரு கவித்துவ வாய்ப்பு என்று மகிழ்கிறது வாலியின் மனம்.

வாலி மனைவி உணர்ச்சியுடன் பேசியதைக் கேட்ட இளையராஜா “எல்லாம் கடவுள் அருள்” என்று ஃபோனை வைத்தார். ஆனால் அவரது மைண்ட் வாய்சோ வேறு ஒன்றை யோசித்தது. வாலியை நான் காப்பாற்றினேன் என்றால், விபத்து நடப்பதற்கே அவர்தான் காரணமோ, கெட்ட சகுனமோ என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தார்.

இதை பஜார் தெரு திரைப்பட டிஸ்கசனில் ஒரு மூத்த சினிமா ஆளுமை சொன்னது இப்போது சுயமோகனனின் ஞாபகத்திற்கு வந்து சேர்ந்தது. உடனே அவர் உசாரானார். இந்த கதை டிஸ்கசனில் தான் ஒரு கெட்ட சகுனத்தின் துவக்கமாக ஆகிவிடக்கூடாதே என்று பதட்டமடைந்தார்.

சுயமோகன்: என்ன சார், நீங்க எப்பவுமே ஒரு தேஜஸோட சிரிப்பீங்களே, ஏதோ ஒரு மெல்லிய வாட்டம் தென்படுதே?

முறுக்குதாஸ்: ஒண்ணுமில்லை சார்.

சுயமோகன்: சார் நீங்க வரதுக்கு முன்னால எனக்கு ஒரு தாட் போயிகிட்டிருந்துச்சு. பாத் டப்புல இருந்த டவலைப் பாத்தேன். அது எகிப்து நாட்டுலேர்ந்து வந்த ஒரு அழகான காட்டன் துண்டு. எகிப்துன்னா நம்ம வணிக சினிமாவுல பெல்லி டான்சு மட்டும்தான் தெரியும். பாத்தீங்கன்னா அங்க நூறாண்டுகள் கடந்த பிரமீடுகள் இருக்கு. மனித குலத்தோட தொல்லிய நாகரீகத்தின் கீற்றுகள் துவண்டு கிடந்த பூமி சார் அது. கிளியோபாட்ரா மூக்கு அழகுன்னு ரசிக்கிறவங்க, அந்த ராணி குளிக்கும் கழுதைப் பாலைப் பத்தி யோசிச்சிருக்க மாட்டாங்க.

ஒரு ராணியோட அழகியல் உணர்வு எவ்வளவு அசாத்தியமா இருந்திருந்தா அரண்மனையில ஒரு கழுதைத் தொழுவம் வெச்சு அதுல 1,500 கழுதங்களை பராமரிச்சு அதுக்கு ஒரு சிப்பந்தி படையே போட்டு………. அந்த ஈஸ்தடிக்கஸ் அசாத்தியமானது சார்…….. இதெல்லாம் ஏழை – பணக்காரன்ன்னு பயன்பாட்டு வாதிங்க உளறுவாங்க. இவங்களுக்கு உலகத்தோட அழகும், அந்த அழகோட பிரமிப்பும் என்ன தெரியும். எகிப்தை நினைக்க நினைக்க வரலாற்றோட ஆழ்ந்த நதியில முடியாம போற ஒரு பயணம் மாதிரி இருக்கு. இதை எல்லாம் ஒரு தொடர் தொன்மக் குறியீடா உங்க கதை நாட்ல கொண்டு வர்ற மாதிரி நினைச்சேன். அப்பதான் சார் உங்க என்ட்ரி.

முறுக்குதாஸ் மைண்ட் வாய்ஸ்: (ஸ்ஸ்….எப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே! இதை கூகுள்ள தட்டுனாவே டன் கணக்குல கொட்டுமேடா!)

முறுக்குதாஸ்: நீங்கல்லாம் வேற லெவல் சார், உங்க மீட்டர் வேற, என் மீட்டர் வேற. ஆரம்பத்திலயே என்ன பயமுறுத்திராதீங்க சார். மணி சார் தாங்குவாறு. ஷங்கர் சார் கூட சமாளிச்சுறுவாறு. அந்த கெப்பாசிட்டி எனக்கு இல்ல சார். இப்பதான் எனக்கு நெஜமா உங்க மூலமா ஒளி கிடைச்சிருக்கு. இந்தக் கதை கண்டிப்பா நிக்கும் சார். நம்பிக்கை வந்திருச்சு சார்.

சுயமோகன்: மணி சார் கூட உங்கள மாதிரி அட்சரம் பெசகாம பேசுவாறு. இன்டஸ்ட்ரியில பெரியவங்க எல்லாரும் ஒரே மாதிரி எப்படி சார் திங்க் பண்றீங்க? எனக்கும் கொஞ்சம் அனுபவம் இருந்தாலும் சின்ன வயசுல நீங்க அசத்துறீங்க!

முறுக்குதாஸ்: சார் சாப்டீங்களா, நாங்கதான் நேரம் கெட்ட நேரத்துல வேலை பாப்போம். உங்களுக்கு தெரியாததது இல்லை….

(உடனே……..டேய் யார்ரா வெளியில – என்று கதவைத் திறந்து கூப்பிடுகிறார்.)

காட்சி முடிகிறது.

காட்சி ஆறு: தின்னும் படலம்
நேரம் பிற்பகல் 2.20
இடம்: ஃபிஷர்மேன் கோவ் விடுதி அறை

இயக்குநர் குரல் கேட்டதும் மோதிக் கொள்வது போல உதவி இயக்குநர்கள் ஓடி வந்தனர். அவர்களின் பின்னால் ஆளுயரக் கேரியருடன் கற்பூரம் என்ற செல்லமும் அவருடன் நிக்கிலும் வந்தனர்.

நிக்கில்: கற்பூரத்திடம் – டேய் பார்சலை டேபிள்ள எடுத்து வைடா, ஹாட் கேரியரை திறந்து வை! சார் நீங்க எல்லாம் கைகழுவினு வாங்க

(முறுக்குதாஸை நைசாக அணுகிய நிக்கில் கிசுகிசு குரலில்)

நிக்கில்: டின் பீரை எடுக்கட்டா சார்.

(இதை சைடு பார்வையில் அவதானித்த சுயமோகன் சிரித்தவாறு)

சுயமோகன்: நீங்க நீங்களா இருங்க சார், அதான் எனக்கு ரொம்ப பிடிக்கும். என்ன அன்னியனா நினைச்சுராதீங்க!

முறுக்குதாஸ்: இல்ல சார். படுக்குற நேரம் கொஞ்சம். அதிலயும் தூக்கம் வரதில்லை. பசங்க பாத்துட்டு கஷ்டப்படுறாங்க. நம்ம வீட்ல மனமுடைஞ்சு போறாங்க. ஏதோ கொஞ்சம் ரிலாக்சுக்கு இது உதவுது!

ஜிப்பா மணி: சார், புரடியூசர் கதை கேக்க வரதுக்கு டைம் கேட்டத ஞாபகப்படுத்த சொன்னீங்க!

முறுக்குதாஸ்: அதை ஏன் இப்ப ஞாபகப்படுத்துறீங்க! முதல்ல சாப்புடுவோம். அப்பறம் கொஞ்சம் சாயணும். ஈவினிங் ஷார்ப்பா 7 மணிக்கு வேலைய ஆரம்பிக்கலாம்.

(உடனே செல்லம் தட்டுக்களில் பதார்த்தங்களை வைக்கிறார்.)

செல்லம்: (முறுக்குதாசைப் பார்த்து) சார் மன்னிச்சுக்குங்க சார். ரைட்டர் சாருக்கு நீங்க சொன்ன நாகர்கோவில் ரசவடை, உப்பேரி, முந்திரிக் கொத்து, சக்க வரட்டி, இதெல்லாம் வாங்க நேரமில்லை சார். அது அடையாறு பாலக்காடு அச்சன் கடையிலதான் கிடைக்கும். சாயங்காலம் வாங்கியாறேன் சார்!

சுயமோகன்: (முறுக்குதாஸைப் பார்த்து) சார், என்ன நீங்க சேத்துக்கவே இல்லை. தனியா பாக்குறீங்க. நான் வேல செஞ்ச “நான் கடவுள்” வெறும் படமில்லை சார். அது என்னோட வாழ்க்கை. காசியில அகோரிங்க கூட வாழ்ந்தவன் சார் நான். பச்சைக்கறி கூட சாப்புடுவேன். இப்போ உங்கள மாதிரி பாத்துப் பாத்து எனக்கு வசதி செய்யுறவங்க வந்த பிறகு அதை ஏத்துக்குற உடம்பில்லாம போச்சு சார்! ஐஞ்சு வருசமா டயட்ட ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்றேன்.

நம்ம பாரத மரபு எடுத்துக்கிட்டீங்கன்னா, உணவே மருந்து மட்டுமில்லை சார். உணர்வு, உணர்ச்சி, உடுப்பு, உறைவிடம், உலை, ஊர்னு எல்லாமே நம்ம உடம்ப ஒரு ஆலயமா பாத்த நாடு சார் இது! இன்னிக்கு காலனி அடிமைத்தனத்துல பல பேர் பேலியோ, வேகன், நேச்சுரல்னு பேசுறாங்க! நம்ம மரபுல ஒரு கல்யாண விருந்தையே மொத்தமா உள்ள தள்ளுன கும்பகர்ணனும் இருந்தாங்க, காத்தடிச்சா விழுற குச்சி மாதிரி நகுலன் – சகாதேவனும் இருந்தாங்க. இரண்டு பேரும் அவங்க அவங்க கர்மாவுல சாதனை படைச்சுருக்காங்க! இந்த உணவு – கட்டுப்பாடு – எச்சரிக்கை – இங்கிலீஸ் மருத்துவமெல்லாம் நம்ம கலாச்சாரத்துக்கு தேவையே இல்லை சார்……

(அடுத்த பாயிண்டை சுயமோகன் ஆரம்த்தால், எங்க சாப்பிட ராத்திரி ஆயிருமோ என்று பயந்த இயக்குநர் முறுக்குதாஸின் குறிப்பறிந்து, செல்லம் குறுக்கிட்டார்)

செல்லம்: எப்பவுமே சீரிசா வேலை வேலைண்ணு பேசிக்கிணு இருக்காதீங்க சார். சாப்பிடுங்க சார்!

முறுக்குதாஸ்: டேய், கரெக்டா சொன்னடா. சாப்பாட்ட போட்டுட்டு ரெத்தத்தை கேக்குறாங்கடா புரடியூசருங்க. நாமதான் அலர்ட்டா வேலையை பாக்கணும்.

(இந்த சாப்பாட்டு உரையாடல் நடக்கும் போது உதவி இயக்குநர்கள் தங்களது எல்லையான தாண்டக் கூடாது என்ற கடமை உணர்வுடன், எப்படா சாப்பிட்டு முடிப்பாங்க, செல்லம் நம்மள எப்ப கவனிப்பான், பசி வயத்தைக் கிள்ளுது என்று பரிதவித்துக் கொண்டிருந்தார்கள்.)

நிக்கில்: டைரக்ட்ர் சார், உங்களுக்கு புடிச்ச மஞ்ச வஞ்சிரம் கிடைக்கல. பையன் ஃபோன் பண்ணாப்ல. நான்தான் அஞ்சப்பர்ல ஆந்திரா சிவப்பு நண்டு ஃப்ரை வாங்கியாடா, சாருக்கு பேலன்ஸ் ஆயிடும்னேன்.

செல்லம்: ஆமா சார், கூட வவ்வால் மீன் சினைப் பொறியலும் இன்னைக்கு கிடைச்சுது. ஸ்பெசலா பிச்சுக்கோழி பிரட்டியும் இருக்கு.

முறுக்குதாஸ்: டேய் எனக்கு இப்போ எதுக்கும் மூடு இல்ல. சூடு ஏத்தாதீங்க. நீங்க சாப்புடுங்க. (என்று சாப்பிட ஆரம்பித்தார் இறால் வதக்கலை கையில் எடுத்தவாறே, ஜிப்பா மணி பக்கம் திரும்பி)

முறுக்குதாஸ்: ஜிப்பா மணி, அந்த ஒன்லைட் பேட எடு, சார்கிட்ட காமிக்கலாம்.

ஜிப்பா மணி: என்னண்ணே, அதான் சரியா வரலேன்னு நீங்களே வேணாமுன்னு சொல்லிட்டீங்க, ஃபிரஷ்ஷா திங்க் பண்ணலாமுன்னு சொன்னீங்கண்ணே!

முறுக்குதாஸ்: ஆமாம்பா, நான்தான் மறந்துட்டேன், ஏன்டா பீட்டர் ஒரு ஹீரோ இன்ரடக்சன் புதுசா சொன்னியே, அத டெவலப் பண்ணச் சொன்னனே என்னாச்சு?

பீட்டர்: சார், நான் பண்ண சீன், சிவகாசி படத்துல வர்ற வில்லன் என்ட்ரி மாதிரி இருக்குண்ணு பல்லவன் ஃபீல் பண்றாப்புல. என் மனசுல புது லைன் ஓடிக்கிட்டுருக்கு, கொஞ்சம ஃபாலிஷ் பண்ணிட்டு சொல்றனே சார்!

முறுக்குதாஸ்: (சிவப்பு நண்டை எந்தப் பக்கம் சுரண்டுவது என்று குழம்பிக் கொண்டிருந்த சுயமோகன் பக்கம் திரும்பி) சார், டெண்டுல்கர் மாதிரி நம்ம ரிக்கார்டை நாமளே முறியடிக்கணும், அதான் தலைவலி! பிஸ்டல் படம் வசூல் 100 கோடின்னு அல்லாரும் வாயப் பொளந்தாங்க சார்! அதை நாமதான் “வாள்” படம் எடுத்து முறியடிச்சோம். அப்புறம் 200 கோடி புது ரிக்கார்டுனு அலறுனானுங்க. இதான் இங்க சிக்கலு! புரடியூசருக்கு நாமளே ரூட்ட காமிச்சுட்டோம். அவன் இப்ப கலெக்சன் 250 கோடி வேணுமுன்னு நிக்கிறான். இதை சிந்திச்சு சிந்திச்சு எனக்கு மூளை சூடாவுது சார்!

சார், இந்த படத்துக்கு நாலு நாட் திங்க் பண்ணிருக்கேன். எது சொன்னாலும் பசங்க பொல்லாதவன் ஷேடு மாறி இருக்கு, வேலைக்காரன் மாறி இருக்குன்னு ஏதாவது சொல்றாங்க. ஃபிரஷ்ஷா ஒரு லைன் திங்க் பண்ணிருக்கேன். உங்கள நம்பித்தான் இந்த ஒன்லைனயே இப்பதான் சொல்றேன்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஓட்டு போட பூத்து போறார் சார். ஏற்கனவே அவரு ஓட்ட யாரோ போட்டுருக்காங்க. ஷாக்காவுறார். இதான் சார் கதை. சரியான நாட் சார். மேற்கொண்டு சாயங்காலம் திங்க் பண்ணலாம். சாப்புடுங்க சார்!

சுயமோகன் மைண்ட் வாய்ஸ்: நம்மள மாதிரி 400 பக்கல் இல்லேன்னாலும், 40 கோடி வாங்குற டைரக்டர் வெறும் 4 பக்கமாவது ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணி வைக்க கூடாதா? நாலு வார்த்தையில முடிச்சிட்டாரே. கோடு போட்டா ரோடு போடலாம். புள்ளி வெச்சா கோலம் போடலாம். கதையைக் கொடுத்தா வசனம் எழுதலாம். இப்ப எந்தப் பக்கம் போறது, என்ன செய்யறது? நாம் படிச்சு ஹோம் வொர்க் பண்ணியிருந்த எதுக்கும் இப்ப தேவையே இல்லையா? – ஆழ்ந்த சிந்தனையிலும், குழப்பத்திலும் ஆளானார்.

முறுக்குதாஸ் மைண்ட் வாய்ஸ்: ஏற்கனவே நாம சுட்டு வெச்சுருக்குற கதையை யாராவது கண்டுபிடிக்கிறாங்களான்னு பாப்போம்! இதான் இங்க டெஸ்ட்டு! இது ஒர்க்கவுட் ஆயிருச்சுன்னா, இன்ட்ரவல் பிளாக், எண்ட் கார்டு, இன்ட்ரடக்சன்னு குறைஞ்சது ஒரு மூணு சீன் புதுசா தேத்துனா, சுட்ட கதை நம்ம கதையா மாறிடும். அந்த வேலைக்காவது இந்த எழுத்தாளர் தேறுவாரா பாப்போம்.

அங்கே ஒரு பெரும் வேலைக்கான ஆயத்த மனங்களின் அமைதி. எழுத்தாளர் சுயமோகன் அறை வளாகத்தின் பிரெஞ்சு சன்னலை நோக்கி நடந்தார். எதிரே வங்கக் கடல் சீற்றமில்லாமல் இசைத்துக் கொண்டிருந்தது. அவருள்ளே ஒரு பெரும் படைப்பிற்கான கரு சூல் கொண்டது. நான்கு நகல் முரசு கோரும் உழைப்பிற்கு ஈடான அந்த படைப்பு அவஸ்தை அவரை வாட்ட ஆரம்பித்தது.

(தொடரும்)

  • தம்பி அழகு மதி – காளமேகம் அண்ணாச்சி

பழங்குடிகளின் வாழ்வாதாரத்தை பறித்த ‘ உலகின் மிகப் பெரிய சிலை ‘

லகிலேயே மிகப்பெரிய சிலை என்கிற வெட்டி பெருமையுடன் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை நர்மதா நதிக்கரையில் திறந்துவைத்தார் பிரதமர் மோடி. இந்த வெட்டி சிலை திறப்பு சமூக ஊடகங்களில் சந்தி சிரித்தது. “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” தமிழ் சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. ஆனால், மோடி ஆதரவு ஊடகங்களால் போற்றி புகழப்பட்ட சிலை திறப்பு நூற்றுக்கணக்கான பழங்குடி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பலிவாங்கியிருக்கிறது.

பழங்குடிகளின் வாழ்வாதாரத்தை பறித்த ‘உலகின் மிகப் பெரிய சிலை’!

சுமார் மூவாயிரம் கோடி செலவில் ‘ஒற்றுமைக்கான சிலை(!)’ஐ, வல்லபாய் பட்டேல் பிறந்த நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் திறக்கப்பட்டது. இந்த இடத்தை புதிய சுற்றுலா தளமாக மாற்ற மோடி சூளுரைத்த நிலையில், இந்தச் சிலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த பழங்குடிகள்  கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை கைது செய்தது குஜராத் போலீசு. இவர்களில் பெரும்பாலோனோர் பழங்குடியின விவசாயிகள். சிலை திறப்பு விழாவன்று கைதானவர்கள் ஒரு நாளுக்குப் பின் விடுவிக்கப்பட்டனர்.

லக்கன் முசாஃபர், பட்டேல் சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தள்ளியுள்ள இடத்தில் அமைந்துள்ளது லக்கன் முசாஃபரின் கிராமம்.  சிலை திறப்பை எதிர்த்து போராடியதற்காக கைது செய்யப்பட்ட 24 பேரில் இவரும் ஒருவர். பட்டேல் சிலை திறப்பு தன்னுடைய கிராமத்தினரை சினம் கொள்ள வைத்துள்ளது என்கிறார் இவர்.

“மோடியின் தனிப்பட்ட விருப்பத்துக்காக, பழங்குடிகளின் உரிமைகளின் மீது இந்த சிலை எழுப்பப்பட்டிருக்கிறது. மக்களின் பணம், பிரயோசனம் இல்லாமல் வீணாக்கப்பட்டிருக்கிறது” என்பதே சினத்துக்கு காரணம் என்கிறார் லக்கன்.

நர்மதா நதியில் கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணை மூலம் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிராவைச் சேர்ந்த மக்கள் வாழிடங்களை இழந்திருக்கும் நிலையில், கெவாடியா என்ற இடத்தில் ‘ஒற்றுமைக்கான சிலை’ நிறுவப்பட்டுள்ளது. கெவாடியா பகுதியைச் சுற்றிலும் தெற்கு குஜராத்தின் பழங்குடிகள் வசிக்கிறார்கள். சர்தார் சரோவர் அணை மற்றும் பட்டேல் சிலையை உள்ளடக்கி இந்த பகுதி சுற்றுலா தளமாகும் போது பழங்குடிகளில் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.

பழங்குடிகளின் விவசாய நிலங்களும் வீடுகள், ‘பூக்களின் பள்ளத்தாக்கு’ ஆகவும் ‘டெண்ட் நகரம்’ ஆகவும் சுற்றுலா துறையால் மாற்றப்படும். அனைத்து மாநிலங்களுக்குமான விருந்தினர் இல்லங்கள், ஹோட்டல்கள், படகு குழாம் ஆகியவை ஆக்கிரமிக்கும். இதை சாத்தியப்படுத்த கெவாடியாவிலிருந்து ஆறு கிலோமீட்டர் தள்ளி நர்மதா ஆற்றின்  கீழே சிறிய அணையை கட்டிமுடித்திருக்கிறது. அணை பணிகள் முழுமையடையும்போது, ஆற்றிலிருந்து இந்த சிறிய அணைக்கு நீர் கொண்டுவந்து நிரப்புவார்கள்.

இந்த சிறு அணைக்காக, ஆறு கிராமங்களில் நிலங்கள் ஏற்கனவே பிடுங்கப்பட்டுவிட்டன. பணி நிறைவடையும்போது, இருபக்கமும் உள்ள மேலும் ஏழு கிராமங்கள் காணாமல் போகும்.

லக்கன் முசாஃபர்.

“இந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக நர்மதா ஆற்று நீரை பாசனத்துக்காக கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் லக்கன். “எங்களுக்கு எப்போதும் தண்ணீர் பிரச்சினை இருந்தது. உண்மையில் அரசுக்கு எங்கள் மீது அக்கறை இருந்திருந்தால் ஒரு கால்வாயின் மூலமாக அணையிலிருந்து எங்கள் கிராமத்துக்கு தண்ணீரை கொண்டுவந்திருப்பார்கள். ஆனால், எங்களுக்கு என்ன தேவையோ அதைச் செய்யும் அரசியல் விருப்பம் அவர்களுக்கு இல்லை.”

போதிய இழப்பீடு பெறுவதைத் தவிர வேறு எதையும் அரசாங்கத்திடம் எதிர்பார்க்க முடியாது என்பதே கடந்த காலங்களில் வாழிடங்களை இழந்து வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தவர்களின் அனுபவமாக இருக்கிறது. 1990களில் நர்மதா மாவட்டத்தைச் சேர்ந்த 19 கிராமத்தினர் சர்தார் சரோவர் அணைக்காக வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். அந்த இடங்களில் இன்னமும்கூட போதிய குடிநீர் வசதியோ, இன்னபிற அடிப்படை வசதிகளோ செய்து தரப்படவில்லை என்கிறார் லக்கன். பல விவசாயிகளின் வீட்டு, விவசாய நிலத்திலிருந்து வெகு தூரம் தள்ளியிருந்தது.

விவசாயிகள் குறித்து மோடிக்கும் குஜராத் அரசுக்கும் கடுகளவும் அக்கறை இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை அக்டோபர் 31-ஆம் தேதி நிரூபணம் ஆனது. பட்டேல் சிலையைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் கால்வாயை நிரப்ப, நர்மதா அணையிலிருந்து சுற்றியிருக்கும் கிராமத்தினருக்கு எவ்வித முன்னெச்சரிக்கை விடப்படாமல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் குறைந்தது முப்பது விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்திருந்த அறுவடையை இழந்துள்ளனர். ஊடகங்களில் சிறப்பாக காட்டப்பட வேண்டும் என்பதற்காக விவசாயிகளின் உழைப்பு வீணாக்கப்பட்டிருக்கிறது என கொதிக்கிற லக்கன், குறைந்தபட்சம் தண்ணீர் திறந்துவிடப்போகிறோம் என்பதையாவது சொல்லியிருக்கலாம் என்கிறார்.  “தண்ணீர் நிரம்பிய விவசாயி நிலங்களில் படகை விடப்போகிறார்களா?” என கேட்கிறார் லக்கன்.

பட்டேலின் சிலையை அடைய போடப்பட்ட சாலைக்காக ஆறு கிராமங்களைச் சேர்ந்தவர்களின் நிலங்கள் பறிபோயிருக்கின்றன. கடந்த வாரம் குருதேஸ்வர் கிராமத்தில் வீடுகள், கடைகள், தண்ணீர் குழாய்கள் ஆகியவை சேதப்படுத்தப்படுவதைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் லத்தி கம்புகளை கொண்டு போராட்டக்காரர்களை அடித்திருக்கிறது போலீசு. அங்கே வீடிழந்தவர்கள் ஒரு கிலோ மீட்டர் தள்ளி குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

தன்கண்முன்னே சக கிராமத்தைச் சேர்ந்தவர் அல்லலுறுவதைக் கண்ட லக்கன், ’உலகின் மிகப்பெரிய சிலை’ என்கிற வெட்டி பெருமையை கடுமையாக சாடுகிறார்.

படிக்க:
மோடியின் நர்மதா அணை பிரகடனம் : சதிகாரன் புத்திசாலி ! சகிப்பவன் குற்றவாளி !!
பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீது இந்திய அரசு தொடுத்துள்ள போர்!

“இந்த திட்டத்தால் இங்கே வாழும் மக்களுக்கு யாதொரு பயனும் இல்லை. குறைந்தபட்சமாக உறுதியளித்த வேலை வாய்ப்பும்கூட ஒப்பந்த அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. இந்த அரசுக்கு சுற்றுலா வருமானத்தின் மீதுதான் முழு கவனமும். ஆனால், அவர்கள் உள்ளூர்வாசிகள் பற்றி எந்தக் கவலையும் இல்லை.  மோடி தனக்காக இதை செய்கிறார், தன்னுடைய புகழுக்காக இதைச் செய்கிறார். இப்போது அவர், ‘நான் உலகத்திலேயே பெரிய சிலையை உருவாக்கியவன்’என சொல்லிக்கொள்ளலாம். மேலும் அவர், இதை பெரிய நிறுவனங்களாகவும் செய்கிறார்” என்கிறார் லக்கன்.

மேலும் அவர், “விவசாயிகளும் உள்ளூர்வாசிகளும் பழங்குடிகள் என்பதாலேயே இப்படியான விட்டேத்தி தனத்துடன் அரசு நடந்துகொள்கிறது. இதுவே ‘பட்டேல்’களாக இருந்திருந்தால் அவர்களால் அசைத்திருக்கக்கூட முடியாது. ஆனால், பழங்குடிகளால் ஒன்றும் செய்யமுடியாது என அவர்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் நாங்கள் போராடுகிறோம்”.

செய்தி ஆதாரம்:
‘Statue of Unity tourism zone will displace us from our lands’: Why Adivasis protested Modi event

என் ஊரு நெல்லை ! ஆனா எனக்கு சொதி குழம்பு தெரியாது !

திமாறன் தோசை குறித்து பேசியதாக ஒரு காணொளியை எனது கல்லூரி நண்பர்கள் வாட்ஸ் அப் குருப்பில் பகிர்ந்து கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள். மதிமாறன் உணவில் சாதி குறித்து பேசும் போது உதாரணமாக தோசை குறித்து பேசியிருக்கிறார் என நினைக்கிறேன். இணையத்திலும் இது குறித்து விவாதிப்பதால் அந்த குரூப்பில் பகிர்ந்த எனது தோசை அனுபவத்தை இங்கும் பகிர்ந்து கொள்கிறேன்.

தோசை பிரச்சனையெல்லாம் பெரிய பிரச்சனையா என்று சிலர் நினைக்கக்கூடும். பெரிய பிரச்சனையில்லை தான். ஆனாலும் தோசையில் கல் தோசை என்றும் நைஸ் என்று இரு வகை இருப்பதை நான் தெரிந்து கொள்வதற்கு எனக்கு பிறந்து 18 ஆண்டுகள் தேவைப்பட்டன.

முதல் முறையாக நைஸ் தோசையை பார்த்த போது அடைந்த வியப்பிற்கு அளவே இல்லை. திருநெல்வேலி நகரத்திற்கே கூட போகாத நான், அப்பாவுடன் அண்ணா பல்கலைகழக கவுன்சிலிங் வந்த போது தான் நைஸ் தோசையை முதல் முறை பார்த்தேன். முதல் முறையாக பெரிய ஹோட்டல் ஒன்றில் தினத்தந்தி பேப்பரை உருட்டி வைத்தது போல தோசையை கொண்டு வந்து என் முன்னால் வைத்த போது கொஞ்சம் வியந்துதான் போனேன். நான் ஆர்டர் செய்தது ஸ்பெசல் தோசை அல்ல என்று சொன்னதும் அந்த வெயிட்டர் “இல்லப்பா இது சாதா தோசை தான். நைஸ் என்றார்”. வியப்புக்கு காரணம் வீட்டில் அம்மா கொஞ்சம் தடிமனாக சுடும் தோசையைத்தான் தோசை என்று அறிந்திருந்தேன்.

திருநெல்வேலிக்கோ இல்லை நாகர்கோவிலுக்கோ போய் சைவ ஹோட்டல்களில் சாப்பிட்டதே இல்லை. சிறுவயதில் காசு சேர்த்து ஹோட்டலில் சாப்பிட்டாலும் பரோட்டாதான் எங்களது தேர்வாக இருக்கும். கஷ்டப்பட்டு பணம் சேர்த்து எவனாவது சைவ ஹோட்டலுக்கு போவானா? மனோ ஹோட்டல் பரோட்டா தான் ஆகச்சிறந்த ஹோட்டல் உணவு எங்களுக்கு. இன்று நகரங்களில் குடும்பத்தோடு சினிமாவிற்கு போய் விட்டு இரவு டின்னரை ஹோட்டல்களில் சாப்பிடுகிறார்கள். அது போன்ற ஒரு பழக்கமும் இல்லை. எனக்கு தெரிந்து நாங்கள் குடும்பமாக ஹோட்டல்களில் சாப்பிட்டதே இல்லை. பெண்கள் உள்ளிட்டு குடும்ப சகிதமாக ஹோட்டலில் சாப்பிடுபவர்கள் பண்பாடற்றவர்கள் என்பது இன்னும் அம்மாவின் கருத்து.

அதற்கு பிறகு வீட்டில் மெல்லிதாக தோசை சுடச் சொல்லி டார்ச்சர் செய்து கொண்டே இருந்தேன். எவ்வளவு டார்ச்சர் செய்தாலும் கேட்டாலும் தடிமனின் அளவு கொஞ்சம் குறையுமே ஒழிய அந்த மெல்லிய தோசை வந்ததேயில்லை. மெல்லிய தோசைக்கு சண்டையிட்டால் ” உங்களுக்கு என்னலே. தெனமும் பலகாரம் பன்றேல்ல என்ன தான் சொல்லனும். எங்களுக்கு தீபாவளி பொங்கல்னு நல்ல நாளுக்கு தான் இதெல்லாம் செஞ்சி தருவாங்க. குடும்பம் மொத்தத்துக்கும் செய்யும் போது மெல்லுசாவா செய்வாங்க. வேகமா செய்யனுமினாக்கி தண்டியாத்தான் ஊத்துவாங்க” இது தான் அவரது ஸ்டண்டர்டு பதில். அவர் இன்று வரை இட்லியையும் தோசையையும் பலகார லிஸ்டில்தான் வைத்திருக்கிறார். அவர்களை பொருத்தவரை அந்த தக்கையான தோசை என்பது ஸ்பெசல் உணவு.

இதவிட கொடுமை என்னவென்றால் எங்கள் வீட்டில் செய்யப்படும் தோசை நல்லா இருக்கு என்று எனது நண்பன் அவன் அம்மாவிடம் சண்டையிடுவான். “ அவளுக்கென்னல வீட்ல சும்மா ஒக்காந்திருக்கா. நான் வெள்ளனயே கள பறிக்க போவாண்டாமா. வேணும்னா அவ வீட்டுலேயே போய் சாப்பிடு. போ”. இது அவனது அம்மாவின் பதில். தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்லும்போது அதில் ஒரு வர்க்கமும் ஒளிந்திருக்கிறது. அவர்கள் தினமும் அதிகாலையில் வேலைக்கு சென்றால் வீடு திரும்ப இருட்டி விடும். கிடைக்கும் சொற்ப நேரத்தில் எதையாவது செய்து பசியாறிக் கொள்ள வேண்டும். அதனால் தாழ்த்தப்பட்ட மக்களின் உணவில் வயிறுக்குதான் முதலிடமே தவிர நாக்குக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது.

கொஞ்சம் பணம் சேர்த்த பிறகும்கூட அது அப்படித்தான் இருக்கிறது. மாறவில்லை. பணம் வந்த பிறகும் என்ன தெரியுமோ அதைத்தானே செய்து சாப்பிட முடியும்.
தோழர் எதையும் நல்லா இல்லைனு சொல்ல மாட்டார். அவருக்கு டேஸ்ட் பிரச்சனையில்லை என்று சில தோழர்களும், அவன் என்ன கொடுத்தாலும் சாப்பிடுவாண்டா என நண்பர்களும் பல முறை வேடிக்கையாக சொல்வார்கள். யோசித்து பார்த்தால் சாப்பாடு என்பது வயிறுக்கு என்ற நினைப்பு ஒரு பழக்கமாகவே (practice) மாறிவிட்டது என்று தான் நினைக்கிறேன்.

தோசை கதை இப்படி என்றால் பள்ளியில் தீபாவளிக்கு அடுத்த நாள் நண்பர்கள் கொண்டு வரும் பண்டங்களை கொண்டு அவர்களின் சாதி/வர்க்கத்தை நிர்ணயித்து விடலாம். அம்மா செய்யும் அதிரசம் இன்று வரை மென்மையாக வந்ததே கிடையாது. வீசினால் மண்டை உடைவது போல தான் வரும். என் அம்மா என்றில்லை. பொதுவில் உறவினர்களுக்கும் அப்படித்தான். “அவங்க கைபக்குவம் எனக்கு வராது. என் கைபக்குவம் அவங்களுக்கு வராது” என்பார். “சுத்து முறுக்கெல்லாம் செய்ய கைபக்குவம் வேணும்பா. நம்ம கடையிலேயே வாங்குவோம் என்பார்.”

களை பறிக்கவும், சாலை போடுவதற்காக கொதிக்கும் தாரோடு சேர்ந்து கொதித்து வேலை செய்து வரும் பாட்டியிடம் கைசுத்து முறுக்கு கைப்பக்குவத்தை கேட்கவா முடியும். கடைசிவரை தீபாவளி என்றால் முந்திரி கொத்து தான். இந்த கைபக்குவம் என்பதில் சாதிக்கு என்ன பங்கு இருக்கிறது என்பதை தான் மதிமாறன் சொல்ல வருகிறார்.

பள்ளி நண்பர்களை காட்டி விரும்பி கேட்டால் தன் குழந்தைகள் ஏங்கிவிட கூடாது என்பதற்காக காக்க முட்டையில் ஆயா சுடும் பீசா போல பண்டங்கள் கிடைக்கும். ஆதிக்க சாதியினரின் சமயலறைக்குள் சென்று அவர்கள் எப்படி செய்கிறார்கள் என்பதை பார்த்து செய்ய முடியாது. அங்கு சாதி உங்களை தடுக்கும். ரேசன் கடைகளில், மீன் சந்தைகளில் அல்லது வேறு இடங்களில் அவசர அவசரமாக இது செய்ய தெரிந்த நபர்களிடம் கேட்டு அதன் படி செய்ய முயற்சி செய்து காக்கமுட்டை பீசா போல கிடைக்கும் பண்டங்கள் தான் என்னைப் பொருத்தவரை சுவையானவை.

அவை தவிர என் அம்மாவின் காலத்தில் ராணி, தேவி போன்ற பத்திரிகைகளில் வரும் சமையல் குறிப்புகளையும் தெரிந்து கொண்டு ‘பீசா’ செய்ய முயற்சி செய்தார். இந்த பத்திரிகை இல்லாத காலத்தில் எனது பாட்டி அவருக்கு முந்தையவர்களோ என்ன செய்திருப்பார்கள். வேலைக்கு செல்வதற்கு நடுவில் வயிறுக்கு கொடுக்கப்படும் ஏதோ ஒன்றிற்கு பெயர் தான் சமையல். அவர்களுக்கு அக்கார அடிசலோ, சொதியோ நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஏன் இன்னமும் தெரியாது.

நாங்கள் பணம் சம்பாதித்த பிறகும் கூட பக்கத்து வீட்டிற்கு ஒரு குடும்பம் வாடகைக்கு வந்த பிறகு தான் தோசையில் அடை தோசை என்ற ஒன்று இருக்கிறது என்று தெரியும். சிறுசேரி வளாகத்தின் சங்கீதா உணவகத்தில் அடை அவியல் ஒன்று கொடுப்பார்கள். அடை தோசை, அவியல், அதனுடன் கொஞ்சம் வெல்லமும் இருக்கும். ஏதேச்சையாக எங்க ஊரு அவியல் கிடைக்கும் என்பதற்காக அதை ஆர்டர் செய்யப் போய் என்னாடா இது தோசைகூட மண்ட வெல்லத்தை வைக்குறாங்க என்று அலுவலக நண்பரிடம் கேட்டேன்.

அவர் வீட்டில் வைக்கப்படும் அடை அவியல், அதற்கான காம்பினேசன் குறித்து சுமார் 1 மணி நேரம் வகுப்பு எடுத்தார். அவர் பேச பேச நாக்கில் எச்சி ஊறியது. அடை தோசையில் இப்படியெல்லாமா வெரைட்டி இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருந்தது. பதிலுக்கு கப்பை கிழங்கை காரல் மீன் குழம்புடன் சேர்த்து சாப்பிடும் காம்பினேசனை சுத்த சைவமான அவரிடம் தெரிவித்தேன். நிச்சயமாக உணவில் சாதி இருக்கிறது; அல்லது சாதி சமூகத்தில் தோசை மட்டுமல்ல பிற உணவு பழக்கவழக்கங்களில் பாரிய வேறுபாடும் இடைவெளியும் இருக்கிறது.

திருநெல்வேலி சைவப்பிள்ளை நண்பர் ஒருவர் வீட்டிற்கு செல்லும் போது நண்பர்கள் நாங்கள் வந்திருப்பதால் ஸ்பெசல் உணவு என்று ஒன்று கொடுத்தார்கள். அப்போது தான் சொதி என்கிற ஒரு உணவு நான் பிறந்த மாவட்டத்தில் பலரால் விரும்பி உண்ணப்படும் உணவு என்பதே எனக்கு தெரியும். நெடுநாட்களுக்கு பிறகு எனது டீம் லீடர் ஒருவர் தனது மாமியார் சொதி செய்யும்போது மட்டும் தேங்காயை மிக்சியில் அரைக்க கூடாது என்கிறாரென என்னிடம் புலம்பிக்கொண்டிருந்தார். சொதி செய்வதை கழுவி கழுவி ஊற்றினார் அவர்.

உணவில் சாதி என்று சொல்லும்போது எனக்கு இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது. சிறுவயதில் அப்பா அம்மாவின் கல்யாண புகைப்படங்களில் சொந்தகாரர்கள் இலையில் சாப்பிடும் புகைப்படமும், அப்பாவின் நண்பர்கள் (அன்வர் அண்ணனின் அப்பா தவிர) பேப்பர் தட்டில் சாப்பிடும் புகைப்படத்தையும் பார்த்தேன். “இவங்க நம்மவீடல் சாப்பிடமாட்டாங்க. அதனால டீ, பிஸ்கட், பழம், கலர்-னு வெளியில இருந்து வாங்குனத வெச்சி சாய்ந்திரம் பங்சன் வைப்பாங்க. அது தான் இவங்க இலையில சாப்பிடல” என்று அம்மா என் சிறுவயதில் சொல்லியது இன்னும் நினைவில் இருக்கிறது. உணவில் சாதி மட்டும் இல்லை வர்க்கமும் இருக்கிறது. “நம்ம வீட்ல ரேசன் அரிசிலால அதுனால அவங்க சாயந்திரம் தான் வருவாங்க” என்று குறிப்பான சில உறவினர்கள் வருகை குறித்து அம்மா சொல்லுவார்.

இப்போது தெருக்காரர்களும், உறவினர்களும் எங்கள் வீட்டில் சாப்பிடுவார்கள். ஆனாலும் அவர்களின் உணவுகளும், அம்மாவுக்கு அவர்களின் கைப்பக்குவமும் இன்னமும் வரவில்லை. இதில் வருத்தப்பட எதுவுமில்லை. இது யதார்த்தம். உழைக்கும் மக்களின் கைப்பக்குவத்தை வளர்ந்து நிற்கும் மாடமாளிகைகளும், சாலைகளும், இன்னபிற வளர்ச்சிகளும் என்றைக்கும் சொல்லிக் கொண்டு தான் இருக்கும்.

படிக்க:
சமையல் குறிப்பில் மாட்டுக்கறியை தவிர்ப்பதுதான் ஊடக நடுநிலைமையா ?
பாலிலும் இருக்குதய்யா பார்ப்பனியம்

வேலை வெட்டி இல்லாமல் மன்னரின் மானியங்களையும் இதர சலுகைகளையும் பெற்ற சோம்பேறி வர்க்கம் புது புது பதார்த்தங்களை கண்டுபிடித்து உண்டிருப்பார்கள். அதை தம் மக்களுக்கு தலைமுறை தலைமுறையாக கைமாற்றியும் இருப்பார்கள். அதில் பிரச்சனையில்லை. அது இன்னும் அப்படியே இருக்கிறது என்பது தான் வேதனை.

ஆன்சைட் வேலைக்காக அமெரிக்காவில் இருந்த போது பல்வேறு தேசிய இனங்களை சேர்ந்தவர்களை பார்க்கிறேன். ஒரு வெள்ளை பெண்மணியும், கருப்பின ஆணும் திருமணம் செய்துகொண்டு வாழ்வது வெகு இயல்பானதாக இருக்கிறது. தேசிய இனங்களும் பல்வேறு பண்பாடுகளும் சங்கமிக்கும் போது அவர்களின் உணவுபழக்கம் முதல் பல்வேறு கலாச்சாரங்கள் சங்கமித்து புதிய ஒன்று, இன்னும் சிறப்பான ஒன்று பிறக்கிறது. ஆனால் இன்னும் இரண்டு தெரு தாண்டி இருக்கும் நண்பர் வீட்டு சமையல், பதார்த்தங்கள் இன்னும் நம் வீட்டிற்கு வரவில்லை. தோசையை எப்படி சுட்டா என்ன எல்லாம் வயித்துக்குதான் போகுது என்று நம் அம்மாக்கள் சமாதானம் சொல்லிக் கொண்டே தன் பிள்ளைகள் ஆசைப்பட்டதை செய்து கொடுக்க மெனக்கெடுகிறார்கள். பெருமாள் கோயில் சக்கரை பொங்கலும், புளியோதரையும் ஏனோ நம் வீட்டு சக்கரை பொங்கல், புளியோதரையை விட சிறப்பானதாகவே இருக்கிறது.

இங்கு எந்த கலாச்சாரமும் எதனுடனும் இணையவில்லை. தனித்தனியாக இருக்கிறது. ஒரு பார்ப்பனர் வீட்டு சமயலறைக்கு சென்று அவர் சமையல் செய்வதை வேடிக்கை கூட பார்க்க முடியாது. தலித் ஒருவர் எந்த தொழில் செய்தாலும் தலித் என்று அறிவித்துக் கொண்டு ஹோட்டல் வைத்து பிழைக்க முடியாது.

இந்த அழுக்குகளை எல்லாம் வைத்துக் கொண்டு அது குறித்து பேசினால் அதில் சில பகுதிகளை உருவி எடுத்துக்கொண்டு பேசியவரை கிண்டல் செய்வது. இதில் தமிழ்த்தேசியவாதிகள் என்பவர்களும் இந்து மதவெறியர்களும் வழக்கம் போல் கைகோர்த்துக் கொண்டு தங்கள் சாதி வெறியை தீர்த்துக் கொள்கிறார்கள்.

இது குறித்து பேசும் போது என்னுடைய தோழி யூடியூபில் பல உணவு செய்முறைகளை பார்த்து வைத்திருப்பதாக கூறினார். நானும் வேறு வழியில்லாமல் சமையல் செய்ய யூடியூப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். யோசித்து பார்த்தால் சாதி முறையை அப்படியே வைத்துக்கொண்டு ஆதிக்க சாதியினரின் சமயலறைக்குள் நுழைந்திருக்கிறோம் நாங்கள். பிளாஸ்டிக் கப்பை கொண்டு இரட்டை குவளை முறையை மறைமுகமாக பாதுகாப்பதை போல. இந்த கேடு கெட்ட சமூகத்திற்கு தோசையில் சாதி என்று பேசினால் பொத்துக் கொண்டு வருகிறது. ஆனாலும் மதிமாறன் பேசிய காணொளி முழுவதுமாக பார்க்கவில்லை. அந்த தோசை போர்சன் என் மனதுக்கு நெருக்கமானதாக இருந்தது.

– ராமச்சந்திரன்

நூல் அறிமுகம் : எங்கள் ஒரு நாள் குடும்ப வாழ்க்கை – ஜென்னி மார்க்ஸ்

கார்ல் மார்க்சின் மனைவி ஜென்னி வான் வெஸ்டபாலன் 1814 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் பிறந்தது செல்வம் கொழித்த உயர்குடி. கார்ல் மார்க்சுக்கு நான்கு ஆண்டுகள் மூத்தவர். கல்வியும் அறிவும் எழுத்துத் திறனும் நிரம்பியவர். பேரழகி. பல ஆண்டுகள் கழித்து ஜென்னிக்கு எழுதிய கடிதத்தில் டிரயர் நகரின் “அழகுத் தேவதை” என மக்கள் பாராட்டியதை நினைவுகூர்ந்தார். அத்தகைய அம்மையார் சாதாரணமான வருவாயுடைய யூதமதம் சார்ந்த குடும்பத்தில் பிறந்த கார்ல் மார்க்சைக் காதலித்தது விந்தையிலும் விந்தை.

கார்ல் கிறிஸ்துவராக மதம் மாறினார். ஜென்னி – கார்ல் மார்க்ஸ் சிறுவயது முதல் ஒருவரையொருவர் நேசித்துக் காதலித்து வந்தனர். தம் பெற்றோர் திருமணத்திற்கு இசையமாட்டார்கள் எனக் கருதி ஆறு ஆண்டுகள் காத்திருந்து காலம் கனிந்ததும் 19-6-1843 அன்று காதல் கணவனைக் கைப்பிடித்த ஜென்னி, காரியம் யாவிலும் கைக்கொடுத்தார். அன்றிலும் பெடையும் போல இணைபிரியாது வாழ்ந்தனர். அவர்களை ஒத்த கணவன் மனைவி புராணங்களிலும், கற்பனைக் காவியங்களிலும் மட்டுமே காணப்படுவர். ஜென்னி ஜெர்மன் மொழி – இலக்கியத்தில் வல்லுநர் எனப் பாராட்டப்படுபவர். கார்ல் மார்க்ஸினுடைய அரிய நண்பர் ஹெய்ன் (Heine) தலை சிறந்த ஜெர்மன் மொழிக் கவிஞர். இவரே தம் கவிதை பற்றிய ஜெர்மனியின் மதிப்பீட்டுக்குத் தலை வணங்குவார். அது மட்டுமல்லாமல் அறுவெறுப்பும் அகந்தையும் இன்றிக் கார்ல் மார்க்ஸ் எழுத்துக்களைப் படித்துப் பார்த்து யோசனை வழங்குவது, சொன்னபடி எழுதிச் செப்பனிடப்பட்டவைகளைத் திருத்தமாகப் படி எடுத்துக் கார்ல் மார்க்சுக்குத் தருவது இவருடைய அன்றாடப் பணிகள். வீட்டு வேலைகளைக் கவனித்தல், குழந்தைகளைப் பராமரித்தல், உணவுத் தட்டுப்பாடுகளைச் சரிசெய்தல் எல்லாம் ஜென்னி செய்யும் அன்றாடக் குடும்ப வேலைகள்.

பிரெஞ்சு அரசாங்கத்தால் நாடு கடத்தப்பட்ட கார்ல் மார்க்ஸ் 1845  பிப்ரவரி, 3 அன்று பாரிசைவிட்டுப் பிரஸல்ஸ் நகருக்குச் சென்றார், இதனை ஜென்னி எதிர் பார்க்கவில்லை. உடனடியாக, ஜென்னி தன்னுடைய கைக் குழந்தையுடன், தட்டுமுட்டுச் சாமான்களை விற்றுவிட்டுப் பயணச் சீட்டுக்கு மட்டுமே கிடைத்த பணத்தைப் பெற்றுக்கொண்டு மார்க்சைப் பின்தொடர்ந்தார். அங்கு மார்க்சின் மேதமை மக்களை ஈர்த்தது. ஆனால், ஜென்னியின் விருந்தோம்பல் பண்பு புரட்சியாளர்களை ஈர்த்துப் பிணைத்தது. எந்த இடமும் புதியதாகத் தோன்றவில்லை. கார்ல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் லீக் மத்தியக் குழுவைத் திருத்தி அமைக்கும் பொறுப்பை மேற்கொண்டார். இதனை மோப்பம் பிடித்து அறிந்த காவல்துறையினர் சட்டத்துக்குப் புறம்பாக நாட்டில் நுழைந்ததாகக் குற்றம் சுமத்தி வீட்டைச் சோதனையிட்டுக் கைது செய்து மார்க்சைக் சிறைக்குக் கொண்டு போனார்கள்.

ஆனால், உடனடியாக விடுதலையானார். 24 மணி நேரத்துக்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமென அரசாங்கம் உத்தரவிட்டது. ஜென்னி பிரஸல் சிலிருந்து வெளியேறும் முன் தம்மிடமிருந்த வெள்ளியை வெய்டிமெயர் உதவியுடன் அடகு வைத்துச் சிறிது தொகையைக் கடன் பெற்றுப் பாரிசில் குடியேறினார். 1848-1849 ஐரோப்பிய தொழிலாளி வர்க்கம் எழுச்சி பெற்ற காலம். ஏங்கெல்சுக்கும் மார்க்சுக்கும் இணைபிரியாத தோழமையும் நட்பும் உருவான காலமிது. மார்க்ஸ் 1845-ம் ஆண்டு பாரிசிலிருந்தும், 1848-ல் பிரஸிலிருந்தும், 1849-ம் ஆண்டு கொலோனிலிருந்தும் வெளியேற்றப்பட்டார். 1849 ஆகஸ்டு 23 அன்று மீண்டும் பாரிசிலிருந்து வெளியேற்றப்பட்டார். நாடு கடத்தப்பட்ட மார்க்ஸ் இலண்டனுக்குச் சென்று பணியைத் தொடர்ந்தார். ஜென்னியை உடன் அழைத்துச் செல்ல பணம் இல்லை, ஜென்னி கர்ப்பமுற்றிருந்தார். குழந்தைகளுக்கோ இளம் வயது. பலவாறு முயன்று செப்டம்பர் 15 வரை அதாவது 3 வாரங்கள் அவகாசம் பெற்றார். 1850ல் மே 20 அன்று வீட்டுச் சொந்தக்காரி வாடகை தராத காரணத்தினால் நீதிமன்றம் காவலர்கள் துணையுடன் படுக்கை, போர்வை, ஆடை புதிதாகப் பிறந்த குழந்தையின் தொட்டில், விளையாட்டும், பொருள்கள் எல்லாவற்றையும், குழந்தைகள் அழுது  கொண்டிருக்கும்போதே, இரண்டு மணி நேரத்தில் எடுத்துச் சென்றுவிட்டாள். வெய்டிமெயருக்கு ஜென்னி எழுதிய கடிதத்தில் தானும், குழந்தைகளும் கடுங்குளிரில் கட்டாந்தரையில் படுத்து இரவைக் கழித்ததாகவும் பொறுக்கமுடியாத மார்புவலி வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

படிக்க:
மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய காதல் கடிதம் !
துன்பம் பற்றிய உங்கள் கருத்து என்ன ? கீழ்ப்படிதல் என்கிறார் கார்ல் மார்க்ஸ் !

கார்ல் மார்க்ஸ் வாடகை தர நண்பர்களிடமிருந்து பண உதவிபெற்றார். ஆனால், மற்ற கடன்கார்கள் வந்து சூழ்ந்துகொண்டதால் வாடகை தர முடியவில்லை. இதனால் பல இடங்களில் குடியிருக்க நேர்ந்தது. 1884-ம் ஆண்டு காலரா என்னும் கொள்ளை நோய் கோலோச்சிய பகுதியில் குடியமர்ந்து ஆறு ஆண்டுகள் மார்க்சும் ஜென்னியும் வாழ்ந்தனர். மார்க்சினுடைய ஏழு குழந்தைகளில் நான்கு ஒன்றன் பின் ஒன்றாக இறந்து போயின. பிறந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்த தோழர்கள் இறந்த குழந்தைகளை அடக்கம் செய்யவும் துயர்துடைக்கவும் உதவி செய்தனர். 1857 ஜூலையில் ஜென்னியின் பிறந்த குழந்தை பிறந்தவுடன் இறந்தது. 8 வயது நிரம்பிய பாலகன் எட்கார். இவன் குடும்பத்தின் “அறிவுச் செல்வ மகன்” எனக் கருதப்பட்டவன். மறைந்தான். இக்குழந்தையின் மறைவு பற்றி ஏங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் தான் பல துன்ப துயரங்களை ஏற்கனவே அனுபவித்திருப்பதாகவும் ஆனால் மகன் – மறைந்தது தம்மைக் கொடுமையாக வாட்டி வதைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இப்படிப்பட்ட நெஞ்சை உருக்கும், இதயத்தைப் பிழியும் நிகழ்ச்சிகள் கார்ல்-ஜென்னி குடும்ப வாழ்க்கையில் ஏராளம்.

மார்க்ஸ் குடும்பத்தின் வரலாற்றாளர்கள் ஜென்னி குழந்தைகளை எப்பொழுதும் உண்மையே பேச வேண்டும், பொய் பேசக்கூடாது, யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது, மக்கள் சுதந்திரம் பெற்று நல்வாழ்வு வாழப் பாடுபடவேண்டும், உதவ வேண்டும். அவர்களுடைய போராட்டங்களிலே பங்குபெற வேண்டும் என்று அறிவுறுத்தி, வளர்த்தார் எனக் கூறுகின்றனர்.

ஒரு சமயம் மார்க்சின் மகன் அவருடைய கரங்களிலே உயிர்விட்டான். அந்தக் காலம்தான் ஏங்கெல்ஸ் மார்க்சின் குடும்பப் பொறுப்பை ஏற்றிருந்த காலம். ஏங்கெல்சுக்கு மார்க்ஸ் எழுதினார்: “இச் சோதனை நிகழ்ந்த காலத்தில்தான் உங்களுடைய நட்பின் பெருமை தெரிகிறது; உதவியை என்றும் மறவேன்; அந்த நினைவிலேயே உம்மையும் உம் நட்பையும் நம்பி வாழ்க்கையைத் தொடங்குகிறேன். இருவரும் இணைந்து இவ்வுலக மக்களுடைய நல்வாழ்வுக்கான பணியைத் தொடர்வோம்”.

ஜென்னிக்கு 1870 நவம்பரில் அம்மை நோய் கண்டது, குழந்தைகள் பக்கத்தில் குடியிருந்த லிப்னெட்ஸ் பாதுகாப்பில் விடப்பெற்றனர். வெய்டிமெயருக்கு எழுதிய கடிதத்தில் கார்ல் தன்னைக் கருணை உள்ளத்துடன் பராமரித்ததாகவும், வீட்டு வேலைகள் அனைத்தையும் அவரே செய்ததாகவும், அவருடைய அன்புப் பிணைப்பு தம்மைக் காப்பாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டார். ஏங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் மார்க்ஸ் தன் மனைவி நெடுநாள் மிகத் துன்புற்று வருந்தி உழன்றார்; ஆனால் நோயின் கொடுமை சிறிது சிறிதாகக் குறைந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.

மார்க்சின் பணி தடைப்பட்டது. ஜென்னி தேறியபின் கார்ல்மார்க்ஸ் நோய்வாய்ப்பட்டார். கடன் மேல் கடன் கூடிற்று. மார்க்ஸ் மூலதனம் பற்றி எழுதிவந்தார். அது ஒரு பெருநூலாகயிருக்கும் ஜெர்மன் நிலத்தில் வெடிகுண்டு வீசுவது போலிருக்கும் என்று தன்னுடைய தோழிக்கு (பெர்தா மர்கின்) ஜென்னி எழுதினார். மூலதனம் முதல் பகுதி 1869ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ம் அன்று வெளியிடப்பட்டது. இதிலிருந்து கிடைத்த வருமானம் தான் புகைத்த சுருட்டின் விலைக்கும் காணாது என்று குறிப்பிட்டார்.

1880ஆம் ஆண்டு ஜென்னியின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஈரலில் புற்றுநோய் இருப்பதாக மருத்துவர் கண்டு பிடித்துச் சொன்னார். 1881-ம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் நாள் ஜென்னி மறைந்தார். அப்பொழுது ஏங்கெல்ஸ் எழுதினார். “இம் மறைவுகுறித்து மிக்க வருத்தத்துடன் கூறுகிறேன். ஜென்னியின் அறிவாற்றலும், துணிச்சலும், எச்சரிக்கை நிரம்பிய ஆலோசனையும் இனி நமக்குக் கிட்டா. அவர் அஞ்சாதவர், தற்பெருமை கொள்ளாதவர், நிதானமானவர். ஆனால் கண்ணியமானவர்…”

தாம் இறக்கும் முன் தம்முடைய மகள் எலியனாரிடம் மூலதனத்தின் எஞ்சியுள்ள இரண்டு பகுதிகளின் கையெழுத்துப் பிரதிகளை ஏங்கெல்ஸிடம் சேர்ப்பிக்குமாறு பணித்திருந்தார். ஏங்கெல்ஸின் மேற்பார்வையில் மூலதனம் இரண்டாம் பகுதி 1885-ம் ஆண்டும் மூன்றாம் பகுதி 1894-ம் ஆண்டும் வெளிவந்தன. மார்க்சின் விருப்பத்தின்படி ஏங்கெல்ஸ் ஜென்னியின் நினைவாக அவருக்குப் படையலாக இவ்விரண்டு பகுதிகளை வெளியிட்டார்… (நூலின் பதிப்புரையிலிருந்து)

நூல்: எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை,
ஆசிரியர்: ஜென்னி மார்க்ஸ்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098.
பேச: 044 – 26251968, 26359906

பக்கங்கள்: 60
விலை: ரூ.40.00 (டிச-2016 பதிப்பு)

இணையத்தில் வாங்க: என்.சி.பி.ஹெச் | பனுவல்

இதர மின் நூல்கள் (e books)

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

 

பாதிக்கப்பட்டவனையே குறை கூறும் சமுதாயம் | ஃபருக் அப்துல்லா

பாதிப்பை தந்தவனை விடுத்து பாதிக்கப்பட்டவனை குறை கூறும் சமுதாயமாக நாம் இருப்பதால் ஒரு குற்றம் நடக்கும் போது அதில் பாதிக்கப்பட்டவர் கூட இதில் நமக்கு நியாயம் கிடைக்காது மீறி இன்னும் நாம் தான் அதிக பாதிப்படைய நேரும் என்பதால் அந்த சூழ்நிலையை பொறுத்துக்கொண்டு கடந்து விடுகின்றனர்.

நாம் குழந்தை பருவத்தில் நடக்கத்தொடங்கும் காலத்தில் இருந்தே இந்த விக்டிம் ப்ளேமிங் நமக்கு எப்படி கற்றுக்கொடுக்கப்படுகிறது என்று பாருங்கள்..

ஒரு கதவு மோதி குழந்தை கீழே விழுந்தால்..

குழந்தையிடம் நாம்.. இது உன் தவறு.. நீ சரியாக பார்த்து நடக்க வேண்டும் என்று கூறுவதற்கு பதில்..

அப்பாவியான கதவை அடித்து..

ஏ.. குழந்தைய இடிச்சுட்டியே.. அடி..அடி.
என்று அந்த கதவை அடித்து குழந்தைக்கு மறைமுகமாக விக்டிம் ப்ளேமிங்கை விதைக்கிறோம்

அதே குழந்தை பள்ளிக்கு படிக்க செல்கிறது.. கூட படிக்கும் மாணவர்களில் ஒருவன்.. தன்னை அடித்து விட்டான் என்று வீட்டாரிடம் வந்து கூறுகின்றது. நாம் என்ன செய்ய வேண்டும்?

ஏன் அடித்தான் ? என்று கேட்க வேண்டும். அதை விடுத்து.. நீ அவன அடிச்சுருப்ப அதான் அவன் உன்ன அடிச்சுருக்கான் . இதையெல்லாம் பெருசா ஆக்காத.. என்று அவன் கூற வருவதைக் கூட கேட்காமல் நாமே ஒரு முடிவு செய்கிறோம்.

சாலையை கடக்கும் போது ஒரு இருசக்கர வாகன ஓட்டி , மது அருந்தி நம்மை ஏற்றினாலும் .அதை வீட்டில் வந்து கூறினால்..

திட்டு விழுவதோ அந்த அடிப்பட்டவனுக்கு தான்..
“நீ ஒழுங்கா ரோட்ட பாத்து போயிருக்க மாட்ட. அதான் ஏத்திருக்கான். நீ இனிமே ஒழுங்கா போடா”
என்று தான் அறிவுரை வருகிறது.

இதே பெண் பிள்ளைகள் விசயத்தில் நடப்பது என்ன?

பள்ளியிலிருந்து நடந்து வருகையில் ஆண்கள் சிலர் பெயர் சொல்லி கேலி செய்கிறார்கள் என்று வீட்டில் சொன்னால் “யார்டி அவன்.. நீ ஏன் முகத்துக்கு பவுடர் போட்டுக்கிட்டு போற.. நீ வெரசா நடந்து வந்துக்கிட்டே இரு.. நீ எதுக்கு அதெல்லாம் காது கொடுத்து கேக்குற.. ஆம்பளைனா அப்டிதான் இருப்பான். நீ ஒழுங்கா நடந்து வா” என்று கூறும் வீட்டார் உண்டு.

பேருந்துகளில் நடக்கும் சீண்டல்கள், அலுவலகங்களில் நடக்கும் அத்துமீறல்கள்
இன்னும் குடும்பங்களுக்குள்ளேயே நடக்கும் அத்துமீறல்களை கூட வெளியே கூறினால் தாம் தான் அறிவுரை வழங்கப்படுவோம் என்பது தெரிந்தே பலரும் வாய் மூடி வாழ்கின்றனர்.

இன்னும் சிலர் தங்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக குரலோ புகாரோ கொடுத்தால்.. அந்த பெண்ணின் ஒழுக்கம் முதலில் கேள்விக்குட்படுத்தப்படும். “இவ.. ஒரு மாதிரி டைப்.. எப்பவுமே யாரையாவது சீண்டிக்கிட்டே இருப்பா” என்று கூறுவார்கள்..

உண்மையில் சீண்டியது யாரோ.. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணிற்கு தான் இந்த பட்டம் சூட்டப்படும் உடனே அவள் செய்யும் உடை சிகை முக அலங்காரங்கள் கேள்விக்குட்படுத்தப்படும். “இவ கவர் பண்ற மாதிரி மேக் அப் போட்டுட்டு வரால்ல . அப்ப அப்படி தான் நடக்கும்” என்று பெண்களே பேசுவதை நான் கேட்டதுண்டு.

படிக்க:
கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடப்பட்ட வங்கிகள் | தோழர் விஜயகுமார் உரை
மீ டூ : நாம் யார் பக்கம் நிற்பது ? வில்லவன்

அலுவலகத்துக்கு நல்ல முறையில் ஒப்பனை செய்து வருவது ஒரு குத்தமா?
மேலும் அந்த அத்துமீறல்காரர்களுக்கு பயந்து முடி கூட வாராமல்.. பவுடர் அடிக்காமல் கூட அலுவலகத்துக்கு வரும் பல பெண்களை நான் கடந்தே வந்துள்ளேன்.

தனக்கு கீழ் நிலையில் உள்ள பெண்களை சீண்டுவதில் இந்த அத்துமீறல்காரர்களுக்கு அலாதி ருசி. காரணம் தாங்கள் அத்துமீறும் அந்த பெண்கள் அல்லது ஆண்கள் தங்கள் தயவின்றி அந்த அலுவலகத்தில் வாழ இயலாது என்பதை அறிந்து கொண்டு இவ்வாறு செய்கின்றனர்.

உடலை தொட்டு செய்யும் சீண்டல்கள் ஒரு வகை என்றால்.. பேச்சினால் ஒருவரை சீண்டல் செய்து வலைவிரிக்கும் வேலையும் நடக்கும். இதற்கு அடிபணியாதவர்களை அடிமாடுகள் போல வேலை வாங்குவது.. அவர்களுக்குரிய அடிப்படை உரிமைகளை கூட மறுப்பது போன்ற கீழ்த்தரமான வேலைகளை செய்கிறார்கள்

பெண்களும் தங்களின் குடும்ப சூழ்நிலை கருதி தானும் உழைத்து குடும்பத்தின் வருவாயை பெருக்கவே தங்களின் படிப்புக்குட்பட்ட வேலையை செய்ய வெளியே வருகின்றனர். அவ்வாறு வெளியே வருவதற்கு அவர்கள் எத்தனை பேருக்கு விளக்கம் கூறி.. அனுமதி பெற்று வருகிறார்கள் என்றும் நான் அறிவேன்.

ஆனால் வந்த இடத்தில் இது போன்ற மிருகங்கள் இருப்பதையும் அவை தன்னிடம் அத்துமீறுகின்றன என்பதையும் வீட்டில் கூறினால்..

உடனே வரும் பதில்
“நீ வேலையை விட்டு நின்று விடு.. இதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன்.. இதெல்லாம் நமக்கு தேவையில்லை” என்று ஒரே அடியாக அவளது கனவுக்கு சமாதிகட்டப்படும்

ஆனால் அந்த அத்துமீறிய மிருகம் தொடர்ந்து அங்கேயே இருந்து சிக்கும் ஆடுகளை புசித்தே வாழும் இன்னும் இது பெண்களுக்கு மட்டும் நடக்கும் கதை அல்ல. இதற்கு இன்னொரு பக்கமும் உண்டு..

ஒரு அலுவலகத்தில் தனது வேலையை சிறப்பாக செய்யும் லஞ்சம் வாங்காத கை சுத்தமான ஒரு ஆணுக்கு அவன் தனக்கு கீழ் வேலை செய்யும் அனைவரும் தன்னைப் போல நேர்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்த ஒரே காரணத்திற்காக மொட்டைக்கடிதாசிகள் மூலம் பலருக்கு அவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்படும்

இன்னும் சில இடங்களில் பெண்ணே முன் வந்து தனக்கு அந்த ஆண் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று பொய் புகார் கொடுத்த விஷயங்களையும் நான் கடந்தே வந்துள்ளேன்.

இது போன்ற பொய் புகார்களால் பாதிக்கப்பட்ட பல நேர்மையான அரசு அதிகாரிகளையும் நான் அறிவேன். அதே நேரத்தில் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி பல பெண்களை வலைக்குள் இழுத்து அவர்களுக்கு இணங்க வைத்தவர்களையும் அறிவேன். ஆகவே இந்த மீ டூ விசயத்தில் பாதிக்கப்பட்டது ஆணோ பெண்ணோ அவர்கள் கூற வரும் விசயங்களை காது கொடுத்து முதலில் சமுதாயம் கேட்க வேண்டும்.

ஒருவர் புகார் கொடுத்து விட்டதாலேயே குற்றம் சாட்டப்பட்டவரை தண்டைக்குட்படுத்த இயலாது. முறையான நீதி விசாரணை வேண்டும். இது போன்று தங்களுக்கு நேர்ந்த அத்துமீறல்களை கூறுபவர்களை இந்த சமூகம் அரவணைக்க வேண்டும். அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

படிக்க:
சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி
பெண் விடுதலைக்கு தீர்வு என்ன ?

இனியும் இது போன்ற ப்ரிடேட்டர்களிடம் சிக்கினால் அவர்களை கன்னி வைத்து பிடிக்க வேண்டும். சாட்சியங்களோடு நிரூபித்து தண்டனை வாங்கித்தர வேண்டும்.
இதற்கு சிறிய கேமரா மற்றும் மைக் உடன் கூடிய பேனா போதுமானது என்று கருதுகிறேன். தன்னிடம் ஒருவர் அத்துமீறுகிறார் என்றால் அவரது அடுத்த நடவடிக்கைகளை நாம் அவரது அனுமதி இன்றி படம் பிடிப்பதில் தவறே இல்லை.

சாட்சியங்கள் மட்டுமே நீதிமன்றங்களில் பேசும். நீதியை பெற உதவும். அலுவலகங்கள் அனைத்திலும் சி.சி.டி.வி. கேமராவை கட்டாயமாக்கலாம்.

பெண்கள் ( சில இடங்களில் ஆண்களும்) தங்கள் கைகளில் இந்த மைக் / கேமராவுடன் கூடிய பேனாவை வைத்துக்கொள்ளலாம். அல்லது பல நேரங்களில் ஸ்மார்ட் போன் போதுமானது. தங்களுக்கு வரும் அத்துமீறல் கால்களை ரெகார்ட் செய்ய வேண்டும்.

இப்படி ஆதாரங்களை வலுவாக சேர்த்து அந்த மிருகங்களை ஓட ஓட விரட்டினால் மட்டுமே. நிம்மதியான வேலை செய்யும் அலுவலகம் பெண்களுக்கு கிடைக்கும்.

இனியும் விக்டிம் ப்ளேமிங் செய்யாத சமுதாயமாக நாம் மாறினால் பத்து வருடம் பதினைந்து வருடம் கழித்து தங்களுக்கு நேர்ந்த அத்துமீறல்களை பெண்கள் கூறும் நிலை இருக்காது. பிரச்சனைகள் அவ்வப்போது தீர்க்கப்படும்..

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., சிவகங்கை.

மீனவ மக்கள் வெளியிட்ட அண்ணாவின் நூல்கள் !

0

மீனவர் சங்கமும் அண்ணாவும்….

ண்பர்களே…

பொ.வேல்சாமி
1949 – 50 காலகட்டங்களில் அண்ணா நகர்புறத்தில் வாழுகின்ற உதிரி தொழிலாளர்கள் வர்க்கங்களுக்கு உணர்வூட்டும் வகையில் தன்னுடைய எழுத்துக்களையும் பேச்சுக்களையும் வடிவமைத்து வந்திருக்கிறார்.

அந்தச் செயல்பாடு அவரும் திராவிட முன்னேற்ற கழகமும் செழிப்பாக வளரும் நோக்கில் பயன் தந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக “அண்ணா” எழுதிய இரண்டு நூல்களை “மீன் பிடிப்போர் சங்கம்” வெளியிட்டிருப்பதைக் குறிப்பிடலாம்.

1. ஏழை பங்காளர் எமிலி ஜோலா
2. சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர்

இந்த இரண்டு நூல்களின் உள்ளடக்கமும் மேற்குறி்ப்பிட்டுள்ளவாறு நாம் கருதுவதற்கு இடமளிக்கிறது. மேற்கண்ட அருமையான இரண்டு நூல்களை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ள இணைப்பைக் கொடுத்துள்ளேன்.

நூல்களைத் தரவிரக்கம் செய்ய கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :

ஏழை பங்காளர் எமிலி ஜோலா  சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர்

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

இப்போதெல்லாம் திருடர்களைப் பிடிப்பதில் லாபமில்லை !

மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 15

ந்தப் புதிய சாப்பாட்டுக் கூடைக்காரியைத் தொழிலாளர்கள் இலகுவில் அடையாளம் கண்டுகொண்டார்கள்.

“வியாபாரத்தில் இறங்கிவிட்டாயா, பெலகேயா?” என்று அவள் வந்ததை ஆமோதித்துத் தலையை ஆட்டிக்கொண்டே கேட்டார்கள்.

மாக்சிம் கார்க்கி
சிலர் அவளது மகன் பாவெல் சீக்கிரத்திலேயே விடுதலையாகிவிடுவான் என்று ஆர்வத்தோடு உறுதி கூறினார்கள். சிலர் அவளுக்கு அனுதாபவுரைகள் புகன்றார்கள். சிலர் போலீஸ்காரர்களையும், மானேஜரையும் வாய்க்கு வந்தபடி முரட்டுத்தனமாய்த் திட்டினார்கள். இவையெல்லாம் தாயின் இதயத்திலேயும் எதிரொலித்தன. சிலர் மட்டும் அவனைப் பழிவாங்கும் வர்ம சிந்தனையோடு பார்த்தார்கள். அவர்களில் ஒருவனான இஸாய் கர்போவ் என்னும் ஆஜர் சிட்டைக் குமாஸ்தா பற்களைக் கடித்துக்கொண்டு முணுமுணுத்தான்:

“நான் மட்டும் கவர்னராயிருந்தால், உன் மகனைத் தூக்கில் போட்டிருப்பேன். மக்களைக் கண்டபடி நடத்திச் செல்வதற்கு அதுதான் சரியான தண்டனை!”

இந்த வர்மப் பேச்சு அவளது எலும்புக் குருத்தைச் சில்லிட்டு நடுக்கியது. அவள் இஸாய்க்குப் பதிலே சொல்லவில்லை. அவனது சின்னஞ் சிறிய மச்சம் விழுந்த முகத்தை மட்டும் ஒரு பார்வை பார்த்தாள். பெரு மூச்செறிந்தவாறு, கண்களைத் தாழ்த்திக்கொண்டாள்.

தொழிற்சாலையில் அமைதியே நிலவவில்லை. தொழிலாளர்கள் சிறுசிறு கூட்டமாகக் கூடி நின்று ஏதோ இரகசியம் பேசிக்கொண்டார்கள். மனங்கலங்கிப்போன கங்காணிகள் வேவு பார்த்துத் திரிந்தார்கள். ஆங்காரமான வஞ்சின வசவுகளும், குரோதம் பொங்கும் சிரிப்பொலியும் எங்கும் கேட்டுக்கொண்டிருந்தன.

இரண்டு போலீஸ்காரர்கள் சமோய்லவை நடத்திக் கூட்டிக்கொண்டு அவள் பக்கமாகச் சென்றார்கள். அவன் தனது ஒரு கையைச் சட்டைப் பைக்குள் புகுத்தியவாறும், மறு கையால் தனது செம்பட்டை மயிரை ஒதுக்கித் தள்ளியவாறும் நடந்து சென்றான்.

சுமார் நூறு தொழிலாளர்கள் அந்தப் போலீஸ்காரர்களுக்குப் பின்னாலேயே சென்று, ஆங்காரத்தோடு சத்தம் போட்டார்கள்:

போலீஸ்காரர்களைக் கிண்டல் செய்தார்கள்.

”என்ன சமோய்லவ், உலாவப் போகிறாயா?” என்று யாரோ கேட்டார்கள்.

“இப்போதெல்லாம் அவர்கள் நம்மவர்களை மதிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதனால் தான் நாம் உலாவப்போகும் போது கூட, முன் பாரா பின் பாராப் போட்டுத் துணைக்கு ஆளனுப்பி வைக்கிறார்கள்” என்றான் வேறொருவன்.

இதைத் தொடர்ந்து திட்டித் தீர்த்தான். .

“இப்போதெல்லாம் திருடர்களைப் பிடிப்பதில் லாபமில்லை போலிருக்கிறது. அதனால்தான் அவர்கள் யோக்கியமானவர்களையே பிடித்துக்கொண்டு போகத் தொடங்கிவிட்டார்கள்” என்று நெட்டையான ஒற்றைக்கண் தொழிலாளி ஒருவன் சொன்னான்.

“இதுவரையிலும் அவர்களை இராத்திரியில் தான் பிடித்துக் கொண்டு போவது என்ற மரியாதையாவது இருந்தது. இப்போதோ பட்டப் பகலிலேயே பிடித்துக்கொண்டு போகிறார்கள். அயோக்கியப் பயல்கள்!” என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் கத்தியது.

அந்தப் போலீஸ்காரர்கள் முகத்தைச் சுழித்துக்கொண்டே எட்டி நடக்க முனைந்தார்கள். தங்கள் மீது ஏவும் வசை மொழிகளைக் காதில் வாங்காத பாவனையில், எதையுமே கவனிக்காதவர்கள் போல் விரைவாக நடந்தார்கள். போகிற வழியில் ஓர் இரும்புக் கடப்பாரையைச் சுமந்து வந்த மூன்று தொழிலாளர்கள் அவர்களை வழிமறித்துக்கொண்டு சத்தமிட்டார்கள்.

“அப்படிப் போங்கடா, அட்டுப் பிடித்தவன்களே!’

சமோய்லவ் தாயைக் கடந்து செல்லும் போது தலையை ஆட்டினான்.

”நாங்கள் போகிறோம்!” என்று கசந்த சிரிப்புடன் கூறினான்.

அவள் வாய் பேசாது அவனை வணங்கி வழியனுப்பினாள். உதட்டிலே புன்னகை பூத்தபடி சிறைக்குச் செல்லும் நாணயமும் ஞானமும் நிறைந்த அந்த இளைஞர்களைக் கண்டு அவளது உள்ளம் நெகிழ்ந்தது. அவனது இதயம் தாய்மையின் பரிவோடும் பாசத்தோடும் விம்மியெழுந்தது.

“இப்போதெல்லாம் திருடர்களைப் பிடிப்பதில் லாபமில்லை போலிருக்கிறது. அதனால்தான் அவர்கள் யோக்கியமானவர்களையே பிடித்துக்கொண்டு போகத் தொடங்கிவிட்டார்கள்”

அன்று அவள் தொழிற்சாலையிலிருந்து திரும்பி வந்த பிறகு குறைப்பொழுதையும் மரியாவுடன் போக்கினாள். அவளது வம்பளப்பைக் கேட்டுக்கொண்டே, அவளது வேலைகளில் தானும் பங்கெடுத்து உதவினாள். மாலையில் வெகு நேரம் கழித்து, அவள் தனது குளிர் நிறைந்து வெறிச்சோடி வசதி கெட்டுப்போன வீட்டுக்குத் திரும்பி வந்தாள். வெகு நேரம் வரையிலும் அவள் மன அமைதியே காணாமல், என்ன செய்வது என்பதும் தெரியாமல், அங்குமிங்கும் நடந்து அலைக்கழிந்தாள். இருள் அநேகமாகக் கவிந்து படர்ந்து விட்டதைக் கண்டு அவள் உள்ளங் கலங்கினாள். ஏனெனில் இகோர் இவான்விச் தான் கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டுப்போன அந்த பிரசுரங்களை இன்னும் கொண்டு வந்து கொடுக்கக் காணோம்.

ஜன்னலுக்கு வெளியே இலையுதிர் காலத்தின் கனத்த சாம்பல் நிற பனித்துண்டுகள் விழுந்து கொண்டிருந்தன. அந்தப் பனித்துண்டுகள் ஜன்னல் கண்ணாடிகளில் விழுந்து, உருகி வழிந்து சத்தமின்றி நழுவி வழிந்தன. அவை விழுந்த இடங்களில் ஈரம் படிந்த வரிக்கோடுகள் தெரிந்தன. அவள் தன் மகனைப் பற்றிச் சிந்தித்தாள்……..

கதவை யாரோ எச்சரிக்கையாய்த் தட்டும் ஓசை கேட்டது. தாய் விருட்டென்று ஓடிப்போய் நாதாங்கியைத் தள்ளினாள். சாஷா உள்ளே வந்தாள். தாய் அவளை ரொம்ப நாட்களாய் பார்க்கவே இல்லை. எனவே அவளைப் பார்த்த மாத்திரத்தில் அவள் அளவுக்கு மீறிப் பருத்திருப்பதாகத் தாய்க்குத் தோன்றியது.

”வணக்கம்” என்றாள் தாய், யாராவது ஒருவரேனும் வந்து சேர்ந்ததில் அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இனிமேல் அன்றிரவின் கொஞ்ச நேரமாவது தான் தனிமையில் கிடந்து அவதிப்பட வேண்டியிருக்காது என்ற திருப்தி. ”உங்களைப் பார்த்து ரொம்ப நாளாகிறது. இல்லையா? எங்காவது வெளியூர் போயிருந்தீர்களா?” என்று கேட்டாள் தாய்.

”இல்லை. நான் சிறையில் இருந்தேன்” என்று புன்னகையுடன் பதில் சொன்னாள் அந்த யுவதி. “நிகலாய் இவானவிச்சுடன் நானும் இருந்தேன் – அவனை ஞாபகமிருக்கிறதா?”

இல்லாமலென்ன, நன்றாய் ஞாபகமிருக்கிறது என்றாள் தாய்; “நேற்றுத்தான் இகோர் இவானவிச் சொன்னான்; அவனை விடுதலை செய்த செய்தியை மட்டும்தான் சொன்னான். ஆனால் எனக்கு உங்களைப்பற்றித் தெரியாது……. நீங்களும் சிறையிலிருந்தீர்கள் என்று யாரும் எனக்குச் சொல்லவில்லை.”

”பரவாயில்லை. சரி, இகோர் இவானவிச் வருவதற்கு முன்னால் நான் உடை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று அங்கு மிங்கும் பார்த்தாள்.

”உங்கள் கோட்டு முழுவதும் நனைந்து போயிருக்கிறதே.”

“ஆமாம். நான் அறிக்கைகளும் பிரசுரங்களும் கொண்டு வந்திருக்கிறேன்.”

“எடுங்கள் அதை எடுங்கள்!” என்று ஆர்வத்தோடு கத்தினாள் தாய்.

அந்தப் பெண் தனது கோட்டைக் கழற்றி, உடம்பைக் குலுக்கினாள். உடனே மரத்திலிருந்து இலைகள் உதிர்வது போல, காகிதங்கள் பறந்து விழுந்தன. தாய் சிரித்துக்கொண்டே அந்தக் காகிதங்களைப் பொறுக்கத் தொடங்கினாள்.

”உங்களைப் பார்த்தவுடன் ஏன் இப்படித் தடித்துப்போய் விட்டீர்கள் என்று நான் முதலில் அதிசயப்பட்டேன். ஒருவேளை மணமாகி இப்போது கர்ப்பிணியாயிருக்கிறீர்களோ என்றுகூடச் சந்தேகப்பட்டேன். இப்போதல்லவா புரிகிறது! அடி கண்ணே இவ்வளவு கொண்டு வந்திருக்கிறீர்களா? இத்தனையையும் சுமந்து கொண்டு இவ்வளவு தூரம் நடந்தா வந்தீர்கள்?”

“ஆமாம்” என்றாள் சாஷா. மீண்டும் அவள் தனது பழைய நெடிய ஒல்லியான உருவைப் பெற்றுவிட்டாள்! அவளது முகம் ஒடுங்கி, கண்கள் முன்னை விடப் பெரியதாகத் தோன்றுவதையும், கண்களுக்குக் கீழே கறுத்த வளைவுகள் தெரிவதையும் தாய் கண்டாள்.

”சிறையிலிருந்து இப்போதுதான் வந்திருக்கிறீர்கள். வந்தவுடன் கொஞ்சமேனும் ஓய்வெடுக்காமல், அதற்குள் இப்படி வேலை செய்யலாமா? யோசித்துப் பாருங்கள்” என்று தலையை அசைத்துக்கொண்டும் பெரு மூச்செறிந்து கொண்டும் அனுதாபப்பட்டாள் தாய்.

”எப்படியும் இது செய்து முடிக்க வேண்டிய காரியமாயிற்றே!” என்று குளிரால் நடுங்கிக்கொண்டே சொன்னாள் அந்த யுவதி. “சரி. பாவெலைப்பற்றிச் சொல்லுங்கள். அவர்கள் அவனைக் கைது செய்து கொண்டு போகும்போது, மிகவும் கலங்கிப் போய்விட்டானா?”

அதைக் கேட்கும்போது சாஷா தாயைப் பார்க்காமல் தலையைக் குனிந்து நடுங்கும் விரல்களால் தன் தலை மயிரைச் சீர்படுத்திக் கொண்டாள்.

“அது ஒன்றுமில்லை. அவன் ஒன்றும் தன்னைக் காட்டிக்கொடுத்து விடமாட்டான்” என்றாள் தாய்.

“அவன் உடம்பு திடமாக இருக்கிறதா?” என்று மெதுவாகக் கேட்டாள் அந்தப் பெண்.

அந்தப் பெண் தனது கோட்டைக் கழற்றி, உடம்பைக் குலுக்கினாள். உடனே மரத்திலிருந்து இலைகள் உதிர்வது போல, காகிதங்கள் பறந்து விழுந்தன. தாய் சிரித்துக்கொண்டே அந்தக் காகிதங்களைப் பொறுக்கத் தொடங்கினாள்.

“அவன் ஆயுளில் அவனுக்கு நோய் நொடி எதுவுமே வந்ததில்லை” என்றாள் தாய். ”அது சரி. ஆனால், நீங்கள் ஏன் இப்படி நடுங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? இருங்கள், கொஞ்சம் தேநீரும், ராஸ்ப்பெர்ரி பழ ஜாமும் கொண்டு வருகிறேன்.”

“அது நன்றாகத்தானிருக்கும். ஆனால், உங்களுக்கு இந்த நேரத்தில் அத்தனை சிரமம் எதற்கு? இருங்கள், நானே தயார் செய்து கொள்கிறேன்.”

“சே! எவ்வளவு களைத்துப் போயிருக்கிறீர்கள், நீங்களே செய்கிறதாவது?” என்று கண்டித்துக் கூறும் தொனியில் பதிலளித்துவிட்டு, தேநீர்ப் பாத்திரத்தை ஏற்றப் போனாள் தாய். சாஷாவும் சமையலறைக்குள் சென்று, அங்கு கிடந்த பெஞ்சின் மீது, கைகளைத் தலைக்குப் பின்னால் அணை கொடுத்துக்கொண்டு, உட்கார்ந்தாள்.

”என்ன இருந்தாலும் சிறை வாழ்க்கை ஆளை இளைத்துப் போகத்தான் செய்கிறது. சங்கடமான சோம்பேறித்தனம் இருக்கிறதே. அதைவிட மோசமானது ஒன்றுமே இல்லை. எவ்வளவோ காரியங்களைச் செய்ய வேண்டும் என்பது தெரிந்திருந்தும், அடைபட்ட மிருகத்தைப்போல், அங்கே சும்மா அடங்கியிருப்பது என்பது…”

“உங்கள் உழைப்புக்கெல்லாம் யார் கைம்மாறு செய்யப் போகிறார்கள்?” என்று கேட்டாள் தாய்.

பிறகு ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு, தானே அதற்கு விடையும் கூறிக்கொண்டாள்: ”கடவுள் தான் கைம்மாறு செய்ய வேண்டும். ஆனால், உங்களுக்குக் கடவுள் நம்பிக்கையும் கிடையாது, இல்லையா?”

”இல்லை” என்று சுருக்கமாகத் தலையையாட்டிவிட்டுப் பதில் சொன்னாள் அந்தப் பெண்.

”நீங்கள் சொல்வதை நான் நம்பவில்லை” என்று உணர்ச்சி பூர்வமாகச் சொன்னாள் தாய். பிறகு தன் ஆடை மீது படிந்திருந்த கரித்தூசியைக் கையால் தட்டிவிட்டுக்கொண்டு. நிச்சயமான குரலில் பேசினாள்: ”உங்கள் கொள்கையே உங்களுக்குப் புரியவில்லை. கடவுள் நம்பிக்கையே இல்லாமல் இந்த விதமான வாழ்க்கை எப்படித்தான் நடத்த முடியும்?”

திடீரென வெளியில் வாசல் பக்கத்தில் காலடியோசையும் கசமுசப்புக் குரல்களும் கேட்டன். தாய் கதவைத் திறக்கப் புறப்பட்டாள்.

அதற்குள் அந்தப் பெண் துள்ளியெழுந்து நின்றாள்.

”கதவைத் திறக்காதீர்கள்” என்று இரகசியமாகக் கூறினாள் சாஷா, அவர்கள் போலீஸ்காரர்களாயிருந்தால். என்னை யாரென்று தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளாதீர்கள். ஏதாவது கேட்டால், நான் இருட்டில் வீடு தெரியாமல் வழி தவறி இங்கு வந்ததாகவும், வாசல் நடையில் மயக்கமுற்று விழுந்திருந்ததாகவும் சொல்லுங்கள். பிறகு என் ஆடையணிகளை அவிழ்த்து என்னை ஆசுவாசப்படுத்தியபோது இந்தக் காகிதங்களைக் கண்டதாகச் சொல்லுங்கள். தெரிந்ததா?”

படிக்க:
அமெரிக்காவின் பால் ராப்சன் பாடும் சோவியத் கீதம்- வீடியோ !
சோவியத் சிறுகதை: வெள்ளரி நிலத்தில் பிள்ளைப் பேறு !

“அடி என் கண்ணே ! நான் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்?” என்று கனிவாய்க் கேட்டாள் தாய்.

”ஒரு நிமிஷம் பொறுங்கள்” என்று கூறிக்கொண்டே கதவருகே காதைக் கொண்டு போனாள், “இகோர் மாதிரி இருக்கிறது.”

வந்தது இகோர்தான். அவன் ஒரே தெப்பமாக நனைந்து இளைத்துக் களைத்துத் திணறிக்கொண்டிருந்தான்.

”அடேடே! தேநீர் தயாராகிறதா? ரொம்ப சரி! அம்மா, தேநீரைப்போல எனக்கு இப்போது தெம்பு அளிக்கக்கூடியது. எதுவுமில்லை. அட, சாஷாவா? நீங்கள் ஏற்கெனவே வந்துவிட்டீர்களா?”

அடுப்பங்கரை முழுதும் ஒலிக்கும் குரலில் கொரட்டு கொரட்டென்று மூச்சு விட்டபடி, இடைவிடாது பேசிக்கொண்டே, தன்னுடைய கனத்த கோட்டை மெதுவாகக் கழற்றினான்.

“ஏ பிசாசுகளா! நீங்கள் எங்கள் பைகளைச் சோதனை போட்டு என்ன பிரயோசனம்? எங்கள் தலையையல்லவா சோதனை போட வேண்டும்” என்று நெட்டையான சுருண்ட மயிர்த் தலையனான ஒரு தொழிலாளி தன்னைச் சோதனையிட்ட காவலாளிகளைப் பார்த்துக் கத்தினான்.

“அம்மா. இதோ இருக்கிறாளே, இந்தப் பெண்ணைக் கண்டால் அதிகாரிகளுக்குப் பிடிப்பதே இல்லை. சிறைக் காவலாளி இவளைக் கண்டபடி பேசத் துணிந்தான் என்பதற்காக அவன் மன்னிப்புக் கேட்கிறவரையில் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டாள் இவள். எட்டு நாட்களாய் இவள் எதுவுமே சாப்பிடவில்லை. உயிர்தான் போகவில்லை. கெட்டிக்காரிதானே? என் வயிற்றையும் தான் பாரேன்.”

அவன் தனது தொப்பை விழுந்து பெருத்த தொந்தி வயிற்றை நிமிர்த்தி நடந்தவாறே அடுத்த அறைக்குள் போனான். அறைக் கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே போகும்போதும் அவன் பேசிக்கொண்டே தானிருந்தான்.

“நீங்கள் என்ன எட்டு நாட்களாகவா சாப்பிடவில்லை? உண்மையாகவா?” என்று அதிசயத்தோடு கேட்டாள் தாய்.

“அவனை மன்னிப்புக் கோர வைப்பதற்கு நானும் ஏதாவது செய்தாக வேண்டியிருந்தது” என்று குளிரால் நடுங்கிக்கொண்டே சொன்னாள் அவள். அந்தப் பெண்ணின் உறுதியும் உக்கிரமும் நிறைந்த பேச்சில் ஏதோ ஒரு கண்டன பாவமும் தொனிப்பதாகத் தாய்க்குத் தோன்றியது.

“இவள் குணம் இப்படி” என்று தனக்குள் நினைத்துக்கொண்டாள் தாய்.

“நீங்கள் செத்துப்போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?’ என்று கேட்டாள் பெலகேயா .

“செத்தால் சாகவேண்டியதுதான்” என்று மெதுவாகச் சொன்னாள் அவள். ”ஆனால், அவன் மன்னிப்புக் கேட்டுவிட்டான். நம்மைப் பற்றி ஒருவன் கேவலமாகப் பேசும்படி நாம் விட்டுவிடக் கூடாது.”

”ஊம்!” என்று மெதுவாக முனகினாள் தாய். ”ஆண்கள் எல்லாருமே அப்படித்தான் – பெண்களாகிய நாம் வாழ் நாள் முழுதும் அவர்களிடம் கேவலப்பட வேண்டியதுதான்.”

”சரி. நான் என் மூட்டையை இறக்கித் தள்ளியாய்விட்டது” என்று சொல்லிக்கொண்டே கதவைத் திறந்தான் இகோர். “தேநீர் தயாரா? சரி, இருங்கள். நான் அதை இறக்கி எடுக்கிறேன்.”

அவன் தேநீர்ப் பாத்திரத்தை அடுத்த அறைக்குத் தூக்கிக்கொண்டு போனான்; கொண்டு போகும் போதே அவன் சொன்னான்.

“என்னைப் பெற்ற அருமை அப்பன் இருக்கிறாரே. அவர் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் இருபது குவளை தேநீராவது குடிப்பார். அதனால்தான் அவர் ஆரோக்கிய திடகாத்திரத்தோடு அமைதியுடன் வாழ்ந்தார். 120 கிலோ எடையுள்ள உடம்போடு வஸ்க்ரெசென்ஸ்க் ஊர்த் தேவாலயத்துப் பாதிரியாக வேலை பார்த்து, எழுபத்து மூன்று வருஷம் உயிரோடிருந்தார்.”

”நீங்கள் இவான் சாமியாரின் மகனா?” என்று கேட்டாள் தாய்.

“ஆமாம், ஆமாம். என் தந்தையை உங்களுக்கு எப்படித் தெரியும்?”

”நானும் வஸ்க்ரெசென்ஸ்க் ஊர்க்காரிதான்.”

“அடேடே நீங்கள் என் ஊர்க்காரரா? சரி, நீங்கள் யார் மகள்?”

”உங்கள் அடுத்த வீட்டுக்காரரான செரியோகின் தம்பதிகள்தான் என் பெற்றோர்.”

”நொண்டி நடக்கும் நீல்லின் மகளா நீங்கள்? எனக்கு அவரை நன்றாய்த் தெரியுமே! எத்தனை தடவை அவர் என் காதைப் பிடித்துத் திருகியிருக்கிறார், தெரியுமா?”

அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டே சரமாரியாகக் கேள்வி கேட்டுக்கொண்டார்கள். தேநீரை வடிகட்டிக்கொண்டிருந்த சாஷா புன்னகை செய்தாள். கோப்பைகளின் ஓசை தாயை மீண்டும் சூழ்நிலையின் பிரக்ஞைக்கு இழுத்து வந்தது.

“ஓ! என்னை மன்னித்துவிடுங்கள். எல்லாம் எனக்கு மறந்தே போய்விட்டது. சொந்த ஊர்க்காரர் யாரையாவது சந்திப்பது என்றால், ஒரே மகிழ்ச்சி.”

”இல்லை. மன்னிப்புக் கேட்க வேண்டியது நான்தான். நான் பாட்டுக்கு இங்கேயே பொழுதைப் போக்கிவிட்டேன். மணி பதினொன்று ஆகிவிட்டது. இன்னும் நான் வெகுதூரம் நடந்து செல்ல வேண்டும்” என்றாள் சாஷா.

”எங்கே போகிறீர்கள்? நகருக்கா?” என்று வியப்புடன் கேட்டாள் தாய் .

“ஆமாம்.”

“எதற்காகப் போக வேண்டும்? ஒரே இருட்டாயிருக்கிறது. ஒரே ஈரம். களைத்துப் போயிருக்கிறீர்கள், இரவு இங்கேயே தங்கிவிடுங்கள். இகோர் இவானவிச் சமையல் கட்டிலே தூங்கட்டும். நாமிருவரும் இங்கேயே படுத்துக்கொள்ளலாம்.”

“இல்லை. நான் போய்த்தானாக வேண்டும்” என்றாள் சாஷா.

”துரதிருஷ்டவசமாக அவள் போய்த்தான் ஆக வேண்டியிருக்கிறது. அவளை இங்கு எல்லாருக்கும் தெரியும். நாளைக்குக் காலையில் அவளை யாரும் தெருவில் பார்த்துவிடக்கூடாது” என்றான் இகோர்.

“ஆனால் எப்படிப் போவது? தனியாகவா?”

“ஆமாம். தனியாகவேதான்!” என்று சிறு சிரிப்புடன் சொன்னான் இகோர்.

அந்தப் பெண் ஒரு கோப்பையில் தேநீரை ஊற்றினாள். ஒரு கறுத்த ரொட்டியின் மீது உப்பைத் தடவிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். சாப்பிடும்போது தாயையும் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டாள்.

நீங்களும் நதாஷாவும் எப்படித்தான் துணிந்து போகிறீர்களோ? நானாயிருந்தால் போகவே மாட்டேன், எனக்கு ஒரே பயந்தான்!” என்றாள் பெலகேயா.

“இவளுக்கும் பயம்தான்” என்றான் இகோர். ”என்ன, சாஷா. பயந்தான், இல்லையா?”

”இல்லாமலிருக்குமா? பயம்தான் என்றாள் அந்தப் பெண். தாய் அவளையும் இகோரையும் பார்த்தாள்.

”நீங்கள் எல்லாம் என்ன பிறவிகளோ, அம்மா!” என்று அதிசயித்தாள் தாய்.

தேநீர் பருகி முடிந்தவுடன், சாஷா ஒன்றும் பேசாமல் இகோருடன் கைகுலுக்கிவிட்டு, சமையல் கட்டுக்குள் வந்தாள். தாயும் அவளைப் பின் தொடர்ந்தாள்.

“நீங்கள் பாவெலைப் பார்க்க நேர்ந்தால். நான் கேட்டதாகச் சொல்லுங்கள். மறந்துவிடாதீர்கள்” என்றாள் சாஷா.

கதவின் கைப்பிடியில் கை வைத்துத் திறக்கப்போகும் சமயம் அவள் மீண்டும் திரும்பினாள்.

“நான் உங்களை முத்தமிடட்டுமா?”

தாய் ஒன்றுமே பேசாமல் அவளை ஆர்வத்தோடு அணைத்து அன்பு ததும்ப முத்தம் கொடுத்தாள்.

“ரொம்ப நன்றி” என்று கூறிவிட்டு அந்தப் பெண் தலையை அசைத்து விடை பெற்றவாறே வெளியே சென்றாள்.

தாய் அறைக்குள் திரும்பி வந்தவுடன், ஜன்னல் வழியாக கவலையோடு வெளியே எட்டிப் பார்த்தாள். இருளில் குளிர்ந்த பனித்துளிகள்தான் பெய்து கொண்டிருந்தன.

“அம்மா. இதோ இருக்கிறாளே, இந்தப் பெண்ணைக் கண்டால் அதிகாரிகளுக்குப் பிடிப்பதே இல்லை. சிறைக் காவலாளி இவளைக் கண்டபடி பேசத் துணிந்தான் என்பதற்காக அவன் மன்னிப்புக் கேட்கிறவரையில் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டாள் இவள். எட்டு நாட்களாய் இவள் எதுவுமே சாப்பிடவில்லை. உயிர்தான் போகவில்லை. கெட்டிக்காரிதானே?

”உங்களுக்கு புரோசரவ் தம்பதிகளை ஞாபகமிருக்கிறதா?” என்று கேட்டான் இகோர். அவன் தன் கால்களை அகலப் பரப்பியவாறு, தேநீரை ஓசையெழும்ப உறிஞ்சிக் குடித்தான். அவனது முகம் சிவந்து திருப்தி நிறைந்து வியர்வை பூத்துப்போய் இருந்தது.

“ஆமாம் நினைவு இருக்கிறது” என்று ஏதோ நினைவாய்க் கூறிக்கொண்டு மேஜையருகே வந்தாள் அவள். அவன் பக்கத்திலேயே உட்கார்ந்து இகோரைச் சோகம் ததும்பப் பார்த்தாள்.

“ச்சுக்சூ! பாவம் அந்த சாஷா! அவள் எப்படி நகருக்குப் போய்ச் சேரப் போகிறாள்?”

“அவள் மிகவும் களைத்துப் போவாள்” என்று தாய் கூறியதை ஆமோதித்துப் பேசினான் இகோர்; “சிறை வாழ்க்கை அவள் உடல் பலத்தை உருக்குலைத்துவிட்டது. அவள் எவ்வளவு பலசாலியாயிருந்தாள்? செல்லமாய் வளர்க்கப்பட்ட பெண்…… அவள் நுரையீரல் ஏற்கெனவே கெட்டுப் போயிருப்பது போலத்தான் தோன்றுகிறது….”

“யார் அவள்?” என்று மெதுவாகக் கேட்டாள் தாய்.

அவள் ஒரு கிராமாந்திரக் கனவானின் மகள். அவள் சொல்வதைப் பார்த்தால் அவள் தந்தை ஓர் அயோக்கியனாகத்தான் இருக்க வேண்டும். அவர்கள் இரண்டு பேரும் கல்யாணம் செய்துகொள்ள விரும்பினார்களே, தெரியுமா. அம்மா?”

”யார்?”

”அவளும் , பாவெலும் தான். ஆனால் நீங்கள் தான் பார்க்கிறீர்களே, அது ஒன்றும் நடக்கிற வழியாய்க் காணோம். அவன் வெளியே இருந்தால், அவள் சிறையில் இருக்கிறாள். அவள் வெளியில் இருந்தால் அவன் சிறையிலிருக்கிறான்.”

“எனக்குத் தெரியாதே” என்று ஒரு கணம் கழித்துப் பதில் சொன்னாள் தாய். ”பாவெல் தன்னைப்பற்றிப் பேசுவதே இல்லை.”

தாய்க்கு அந்தப் பெண்மீது அதிகப்படியான அனுதாப உணர்ச்சி மேலோங்கியது. தன்னை மீறிய ஒரு வெறுப்புணர்ச்சியோடு அவள் இகோரிடம் திரும்பிப் பேசினாள்.

”நீங்கள் ஏன் அவளை வீட்டுக்குக் கொண்டுபோய் விடவில்லை?”

“அது முடியாது” என்று அமைதியுடன் பதில் சொன்னான் இகோர். ”எனக்கு இங்கே எத்தனையோ வேலைகள் ஆக வேண்டியிருக்கிறது. விடிந்து எழுந்திருந்தால் ஒவ்வொரு இடமாகப் போய்வர வேண்டும். என்னை மாதிரி மூச்சு முட்டும் பேர்வழிக்கு அதுவே ரொம்பச் சிரமமான காரியம்.”

“அவள் நல்ல பெண்” என்றாள் தாய். அவளது மனத்தில் இகோர் அப்போது சொன்ன விஷயமே நிறைந்து நின்றது. அந்த விஷயத்தைத் தன் மகன் மூலமாகக் கேள்விப்படாமல், ஓர் அன்னியன் மூலமாகக் கேள்விப்பட்டதானது அவளது மனத்தைப் புண்படுத்திவிட்டது அவள் தன் புருவங்களைச் சுருக்கிச் சுழித்து, இரு உதடுகளையும் இறுகக் கடித்து மூடிக்கொண்டாள்.

“அவள் நல்ல பெண்தான். சந்தேகமே இல்லை” என்று தலையை ஆட்டினான் இகோர், ”நீங்கள் அவளுக்காக வருத்தப்படுவது எனக்குத் தெரிகிறது. அதில் அர்த்தமே கிடையாது. எங்களை மாதிரிப் புரட்சிக்காரர்களுக்கெல்லாம் அனுதாபப்பட்டுக்கொண்டிருந்தால், இதயமே தாங்காது. உண்மையைச் சொல்லப்போனால், எங்களில் யாருக்குமே சுக வாழ்க்கை கிடையாது. என்னுடைய தோழர்களில் ஒருவன் நாடு கடத்தப்பட்டு, சமீபத்தில்தான் திரும்பி வந்தான். அவன் நீஸ்னி நோவ்கரத் சென்ற பொழுது, அவனது மனைவியும் குழந்தையும் ஸ்மலென்ஸ்கில் அவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவன் ஸ்மலேன்ஸ்கிக்குத் திரும்பி வருவதற்குள், அவர்கள் மாஸ்கோ சிறைக்குள் சென்றுவிட்டார்கள். இப்போதோ அவனது மனைவி சைபீரியாவுக்குப் போகப்போகிறாள். எனக்கும் ஒரு மனைவி இருந்தாள். ரொம்பவும் அருமையானவள்தான். இந்த மாதிரிதான் நாங்களும் ஐந்து வருஷம் தத்தளித்தோம். பிறகு அவளது வாழ்வும் முடிந்தது.”

அவன் தன் முன்னிருந்த தேநீரை ஒரே மடக்கில் பருகினான்; பிறகு தன் கதையை மேலும் தொடர்ந்தான். அவனது சிறைவாச காலத்தின் புள்ளிவிவரங்கள், நாடு கடத்தப்பட்டு சைபீரியாவில் பட்ட பசிக்கொடுமை, சிறையிலே விழுந்த அடி உதைகள், எல்லாவற்றையும் அவளிடம் சொன்னான். அவள் அவனையே பார்த்தாள். துன்பமும் துயரமுமே நிறைந்த சோகவாழ்வுச் சித்திரத்தை அவன் அமைதியோடு எளிதாக நினைவு கூர்ந்து சொல்லுகின்ற முறையைக் கண்டு அவள் அதிசயித்தாள்…….

”சரி. நாம் நம் விஷயத்துக்கு வருவோம்.”

அவனது குரல் மாறிவிட்டது, முகமும் முன்னைவிட உக்கிரம் அடைந்தது. அவள் எப்படித் தொழிற்சாலைக்குள் அந்தப் பிரசுரங்களைக் கொண்டு போக உத்தேசித்திருக்கிறாள் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டான். ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாக ஆராய்ந்து கேட்கும் அவனது அறிவைக் கண்டு தாய் பிரமிப்பு அடைந்தாள்.

”சிறையிலிருந்து இப்போதுதான் வந்திருக்கிறீர்கள். வந்தவுடன் கொஞ்சமேனும் ஓய்வெடுக்காமல், அதற்குள் இப்படி வேலை செய்யலாமா? யோசித்துப் பாருங்கள்” என்று தலையை அசைத்துக்கொண்டும் பெரு மூச்செறிந்து கொண்டும் அனுதாபப்பட்டாள் தாய்.

அவர்கள் இந்த விஷயத்தைப் பேசி முடித்தவுடன், மீண்டும் தங்களது பிறந்த ஊர் ஞாபகங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். அவனோ மிகவும் குஷாலாகப் பேசினான். அவளோ தனது கடந்து போன வாழ்வின் நினைவுலகத்தில் தன்னை மறந்து சுற்றித் திரிந்தாள். அது ஒரு சதுப்பு நிலம்போலத் தோன்றியது. சதுப்பு நிலத்தில் சிறுசிறு மண் குன்றுகள் குன்றுகளின் மீது குத்துக்குத்தான் காட்டுப்பூச்செடிகள்; குன்றுகளுக்கிடையே வெண்மையான பெர்ச் மரக் கன்றுகளும் குத்துப் புல் செடிகளும் அடர்ந்து வளர்ந்திருந்தன. மெல்லிய பூச்செடிகள் பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்தன. பெர்ச் மரக்கன்றுகள் சிறுகச் சிறுக வளர்ச்சி பெற்று, ஐந்து வருஷங்களுக்குப் பிறகு அந்தப் பிடிப்பற்ற நிலத்தில் கால் ஊன்றி நிற்கமுடியாமல் முடி சாய்ந்து விழுந்து அதிலேயே அழுகிப் போயின. இந்தக் காட்சியை கண்டபோது, அவளது இதயத்தில் ஒரு பெரும் சோக உணர்ச்சி கவிழ்ந்து சூழ்ந்தது. மீண்டும் அவளது மனக் கண் முன்னால் ஒரு இளம் பெண்ணின் உருவம் தோன்றியது. அந்த இளம் பெண்ணின் முகம் துடிப்பும் எடுப்பும் நிறைந்து உறுதியைப் பிரதிபலிக்கும் உணர்ச்சியோடு விளங்கியது. அந்தப் பெண் தன்னந்தனியாக, தள்ளாடித் தள்ளாடி கொட்டும் பனிமழையின் ஊடாக நடந்து சென்றாள்… அவளது மகன் சிறையிலே இருந்தான். அவன் தூங்கிவிடவில்லை. வெறுமனே படுத்துக்கொண்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்…. அவன் அவளைப்பற்றி, தன் தாயைப்பற்றிச் சிந்திக்கவில்லை. இப்போது அவனது அன்பைக் கவர்ந்திருப்பது தாயல்ல; வேறொருத்தி… கட்டுலைந்து சிதறிப்போன மேகத்திரள்களைப் போல் வேதனை தரும் சிந்தனைகள் அவளைச் சூழ்ந்தன. அவளது ஆத்மாவையே இருளில் மூழ்கடித்தன….

“அம்மா, நீங்கள் களைத்துப் போயிருக்கிறீர்கள். சரி, நாம் படுக்கலாம்” என்று இகோர் புன்னகை செய்து கொண்டே சொன்னான்.

அவனிடம் விடைபெற்றுக்கொண்டு, சமையலறையை நோக்கி ஜாக்கிரதையாக வந்தாள். அவளது இதயம் முழுதிலும் நமைச்சல் தரும் கசப்புணர்ச்சி நிரம்பியிருந்தது.

மறுநாள் காலையில் சாப்பிடும்போது இகோர் சொன்னான்.

”அவர்கள் உங்களைப் பிடித்து, இந்தத் துவேஷப் பிரசுரங்கள் எல்லாம் எங்கிருந்து கிடைத்தன என்று கேட்டால், என்ன பதில் சொல்வீர்கள்?”

“அது ஒன்றும் நீங்கள் கேட்டுத் தெரிய வேண்டியதில்லை என்பேன்” என்றாள்.

“அப்படிச் சொன்னால் அவர்கள் அதை ஒப்புக்கொண்டு உங்களை விட்டுவிட மாட்டார்கள்” என்றான் இகோர். ”கேட்டுத் தெரிய வேண்டியதுதான் தங்கள் வேலை என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே உங்களை அப்படியும் இப்படியும் புரட்டிப் புரட்டிக் கேள்வி கேட்டு, உண்மையை உங்கள் வாயிலிருந்து பிடுங்கப் பார்ப்பார்கள்.”

”எப்படிக் கேட்டாலும் நான் சொல்லவே மாட்டேன்.”

”சிறையில் போடுவார்கள்.”

”போடட்டுமே! அதற்காவது நான் லாயக்கு என்றால் கடவுளுக்குத்தான் நன்றி செலுத்த வேண்டும்” என்று பெருமூச்சுடன் சொன்னாள் அவள். “என்னை யார் விரும்புகிறார்கள்? ஒருவருமில்லை. அவர்கள் என்னைச் சித்ரவதை செய்யமாட்டார்கள். இல்லையா?”

“ஊம்!” என்று அவளைக் கூர்மையாகப் பார்த்துக்கொண்டே சொன்னான் இகோர். “சித்ரவதை செய்யமாட்டார்கள். ஆனால், தங்கள் நலனைத் தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டும் அதுதான் கெட்டிக்காரத்தனம்.”

“ஆமாம். அதை நீங்கள் சொல்லித்தான் அப்பா, எனக்குத் தெரிய வேண்டும்” என்று சிறு சிரிப்புடன் சொன்னாள் தாய்

இகோர் பதிலே பேசாமல் அறைக்குள் மேலும் கீழும் நடந்தான். பிறகு அவள் பக்கம் திரும்பிச் சொன்னான்.

”அம்மா, இது கஷ்டம் தான்! உங்களுக்கு எவ்வளவு கடினமாயிருக்கிறது என்பது எனக்குத் தெரியும்.”

”எல்லோருக்கும்தான் கஷ்டமாயிருக்கிறது” எனக் கையை ஆட்டிக்கொண்டே பதிலளித்தாள் அவள். “புரிந்து கொண்டவர்களுக்கு அத்தனை சிரமமில்லை. எந்த நன்மைக்காக மக்கள் இப்படிக் கஷ்டப்படுகிறார்கள் என்பதை நானும் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாய்ப் புரிந்து கொண்டு வருகிறேன்.”

”அதை மட்டும் நீங்கள் உணர்ந்துகொண்டால் ஒவ்வொருவரும் உங்களை விரும்புவார்கள், அம்மா! ஒவ்வொருவரும் விரும்புவார்கள்” என்று மனப்பூர்வமாகச் சொன்னான் இகோர்.

அவள் அவனை லேசாகப் பார்த்து, புன்னகை புரிந்தாள்.

மத்தியானத்தில் அவள் தொழிற்சாலைக்குப் புறப்படத் தயாரானாள். போவதற்கு முன் அந்தப் பிரசுரங்களைத் தன் ஆடைகளுக்குள், வெளியே தெரியாமல் நாசூக்காக வைத்துக் கட்டிக்கொண்டாள். அவள் எல்லாவற்றையும் ஒளித்து வைத்துக் கொண்ட லாவகத்தைக் கண்டு திருப்தியோடு சப்புக் கொட்டினான் இகோர்.

படிக்க:
சபரிமலை பெண்கள் நுழைவை எதிர்த்த சங்கி ராகுல் ஈஸ்வர் பிடிபட்ட கதை !
மேற்கு தொடர்ச்சி மலை : செங்குத்து வாழ்க்கையின் படம் | ராஜ்

“ஸேர் குட்” என்று கத்தினான். முதல் புட்டி பீரைக் குடித்த உற்சாகத்தில் ஜெர்மானியர்கள் இப்படித்தான் சொல்லுவார்கள். ”இந்த பிரசுரங்களை உடையிலேயே பொதிந்து வைத்துக்கொண்டதால், ஆள் வித்தியாசமாகத் தோன்றவில்லை. அம்மா நீங்கள் இப்போதும் சதை விழத் தொடங்கும் நடுத்தர வயதுப் பெண் போலவே நெட்டையாக இருக்கிறீர்கள்! விகாரம் தென்படவில்லை. கடவுள் உங்கள் சேவையை ஆசீர்வதிக்கட்டும்”

அரைமணி நேரத்துக்குப்பின் அவள் தொழிற்சாலையின் வாசலில் நின்றாள். அமைதியும் நம்பிக்கையும் நிறைந்தவளாய்த் தன் கையிலுள்ள கூடைகளின் கனத்தால் குனிந்து போய் நின்றாள். தொழிற்சாலைக்குள் பிரவேசிக்கும் ஒவ்வொரு தொழிலாளியையும் அங்கு நின்ற இரண்டு காவலாளிகளும் சோதனை போட்டு உள்ளே விட்டார்கள். இதனால் அந்தத் தொழிலாளிகள் கொதிப்படைந்து அந்தக் காவலாளிகளின் மீது தாறுமாறாக வசைமாரி பெய்தார்கள். கிண்டல் செய்தார்கள். ஒரு புறத்தில் படபடக்கும் கண்களும் சிவந்த முகமும் நீண்டுயர்ந்த கால்களும் கொண்ட ஒருவனும் போலீஸ்காரனும் நின்று கொண்டிருந்தார்கள். தாய் தனது அன்னக்காவடியின் நுகக்காலை ஒரு தோளிலிருந்து மறுதோளுக்கு மாற்றினாள். அந்த நெட்டைக்காலனைப் புருவங்களுக்கு மேலாக லேசாகப் பார்த்தாள். அவன் ஒரு வேவுகாரன் என்று சந்தேகம் அவளுக்குத் தட்டியது.

“ஏ பிசாசுகளா! நீங்கள் எங்கள் பைகளைச் சோதனை போட்டு என்ன பிரயோசனம்? எங்கள் தலையையல்லவா சோதனை போட வேண்டும்” என்று நெட்டையான சுருண்ட மயிர்த் தலையனான ஒரு தொழிலாளி தன்னைச் சோதனையிட்ட காவலாளிகளைப் பார்த்துக் கத்தினான்.

“உன் தலையிலே உண்ணிப் புழுவைத் தவிர வேறு என்ன இருக்கும்?” என்று பதில் கொடுத்தான் காவலாளிகளில் ஒருவன்.

”பின்னே , உண்ணிப் புழுவைப் பிடித்து, பத்திரம் பண்ணு. எங்களை விடு” என்று எரிந்து விழுந்தான் தொழிலாளி.

அந்த வேவுகாரன் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டுக் கசப்போடு காறி உமிழ்ந்தான்.

”என்னை உள்ளே போகவிடு. இந்த மாதிரிச் சுமையைத் தாங்கிக் கொண்டு நின்றால் என் முதுகுதான் முறிந்து போகும்” என்று சொன்னாள் தாய்.

“போ, போய்த் தொலை” என்று எரிச்சலோடு கத்தினான் காவலாளி “வருகிறபோதே திண்டு முண்டு பேசிக்கொண்டேதான் வருகிறது” என்று முனகிக்கொண்டான்.

தாய் உள்ளே வந்து தனது வழக்கமான இடத்துக்குச் சென்று. கூடைகளைக் கீழே இறக்கினாள். முகத்தில் சுரந்திருந்த வியர்வையைத் துடைத்துவிட்டு சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டாள்.

கூஸெவ் சகோதரர்களில் இருவர், இருவரும் யந்திரத் தொழிலாளிகள் அவளிடம் உடனே வந்து சேர்ந்தார்கள்.

“அப்பம் இருக்கிறதா?” என்று அவர்களில் மூத்தவனான வசீலி முகத்தைச் சுழித்துக்கொண்டே கேட்டான்.

”நாளைக்குத்தான் கிடைக்கும்” என்றாள் அவள்.

அதுதான் அவர்களது பரிபாஷை. அந்தச் சகோதரர்களின் முகங்கள் பிரகாசமடைந்தன.

“அட என் அம்மாக்கண்ணு ” என்று மகிழ்ச்சி பொங்கச் சொன்னான் இவான்.

வசீலி கூடைக்குள் பார்க்கும் பாவனையில் குனிந்து உட்கார்ந்தான் , அதே கணத்தில் ஒரு கத்தைப் பிரசுரங்களும் அவனது சட்டைக்குள்ளாக, நெஞ்சுக்குப் பக்கமாகத் திணித்து ஒளித்து வைக்கப்பெற்றன.

படிக்க:
சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி
#Metoo : இந்தியாவில் மீ டூ இயக்கத்தின் விளைவு என்ன ? ஒரு முழுமையான அறிக்கை !

”நாம் இன்றைக்கு வீட்டுக்குப் போகவேண்டாம்” என்று சத்தமாகச் சொன்னான் அவன், “இவளிடமே வாங்கிச் சாப்பிடலாம்.” அப்படிப் பேசிக் கொண்டே அவன் இன்னொரு கத்தையை எடுத்து பூட்சுக் காலுக்குள் திணித்துக் கொண்டான். இந்தப் புதிய கூடைக்காரிக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும்” என்று கூறிக்கொண்டான்.

“ஆமாம்!” என்று சிரிப்புடன் ஆமோதித்தான் இவான். தாய் சுற்றுமுற்றும் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொண்டாள். ”சூடான சேமியா, சூப்” என்று கத்தினாள்.

பிறகு மிகவும் சாதுரியத்தோடு பிரசுரக் கட்டுகளை ஒவ்வொன்றாய் எடுத்து அவர்கள் கையிலே கொடுக்க ஆரம்பித்தாள். அவளது கண்முன்னால் அந்த மஞ்சள் மூஞ்சி அதிகாரியின் முகம் நெருப்புப் பற்றிய தீக்குச்சியைப் போலத் தெரிந்தது. அவள் தனக்குத்தானே வன்மத்துடன் ஏதோ சொல்லிக்கொண்டாள்.

”இதோ, இது உனக்கு அப்பனே.” பிறகு அடுத்த கத்தையைக் கொடுத்தாள். ”இந்தா….”

தொழிலாளர்கள் கைகளில் குவளைகளை ஏந்தியவாறு அவள் பக்கமாக வந்தார்கள். அவர்களில் யாரேனும் பக்கத்தில் வருவதாகத் தெரிந்தால் உடனே இவான் கூஸெவ் வாய்விட்டுச் சிரிப்பான். உடனே தாய் பிரசுரங்களைக் கொடுப்பதை மறைத்துவிட்டு, சேமியா சூப், கொடுக்க ஆரம்பித்துவிடுவாள்.

”நீ ரொம்பக் கெட்டிக்காரி, பெலகேயா நீலவ்னா” என்று கூறி அந்தச் சகோதரர்கள் இருவரும் சிரித்தார்கள்.

”தேவை வந்தால் திறமையும் கூடவே வந்துவிடும்” என்று பக்கத்தில் நின்ற கொல்லுத் தொழிலாளி ஒருவன் சொன்னான். ”பாவம் அவளுக்கு உழைத்துப் போட்டு உணவு கொடுத்தவனை அவர்கள் கொண்டு போய்விட்டார்கள் அயோக்கியப் பயல்கள்! சரி, எனக்கு மூன்று கோபெக்குக்குச் சேமியா கொடு. கவலைப்படாதே, அம்மா . எப்படியாவது உன்பாடு நிறைவேறிவிடும்.”

”நல்ல வார்த்தை சொன்னாயே. உனக்கு ரொம்ப நன்றி” என்று இளஞ்சிரிப்போடு பதில் கூறினாள் தாய்.

“நல்ல வார்த்தைக்கு என்ன காசா பணமா?” என்று சொல்லிக்கொண்டே அவன் ஒரு பக்கமாக ஒதுங்கிச் சென்றான்.

”சூடான சேமியா, சூப்” என்று கத்தினாள் பெலகேயா.

தன் மகனிடம் தனது பிரசுர விநியோகத்தின் முதல் அனுபவத்தை எப்படிச் சொல்வது என்பதைப்பற்றி அவள் யோசித்துப் பார்த்தாள். ஆனால் அவளது மனத்தாழத்தில் அந்தக் கோபாவேசமான புரிய முடியாத கடுகடுத்த மஞ்சள் மூஞ்சி அதிகாரியின் முகம்தான் நிழலாடிக் கொண்டிருந்தது. அவனது திருகிவிட்ட கரியமீசை நிமிர்ந்து நின்றது; இறுக மூடிய அவனது பற்கள் பிதுங்கிப் போன உதடுகளின் இடையே வெள்ளை வெளேரெனப் பளிச்சிட்டன. தாயின் இதயத்தில் வானம்பாடியைப் போல் ஆனந்த உணர்ச்சி பாடித் திரிந்தது. அவள் தன் புருவங்களை வளைத்து உயர்த்தி, வந்து போகும் வாடிக்கைக்காரர்கள் அனைவரையும் பார்த்து தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருந்தாள்.

”இதை வாங்கு, அதை எடு”.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

டி.சி.எஸ் இலாபத்தில் கொழிக்கிறது – புதிய ஊழியர்களுக்கு கணினி கூட இல்லை !

டி.சி.எஸ் லாபம் : சம்பள உயர்வு இல்லை, புதிய ஊழியர்களுக்கு கணினி கூட இல்லை!

சென்ற பகுதியில் டி.சி.எஸ் காலாண்டு முடிவுகள் பற்றியும், அதன் நிகர லாப அதிகரிப்பு பற்றியும் பார்த்தோம். இந்த லாப அதிகரிப்பால் டி.சி.எஸ் தொழிலாளர்கள் எந்தவித பெரிய நலனும் அடைந்துவிடப் போவதில்லை என்பதை பார்த்தோம்.

அதே போல இன்னொரு செய்தி படிக்க நேர்ந்தது அதைப்பற்றி என்னுடைய கருத்தை உங்களுடன் ஒரு சக தொழிலாளியாக பகிர்ந்துகொள்ள விருப்பப்படுகிறேன் ஆதலால் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

அதற்கு முன்னால் உங்களுக்கு ஒருசிலவற்றை தெளிவுபடுத்த விருப்பப்படுகிறேன். நான் இவ்வாறு எழுதுவது குறிப்பிட்ட நிறுவனத்தின் நன்மதிப்பை கெடுப்பதாகவும், அதனால் மற்ற நிறுவனத்தை பாராட்டுவதாகவோ எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்தக் கட்டுரையின் நோக்கம் தொழிலாளர்களின் வேலை நிலைமைகளில் ஏற்படும் பாதிப்புகளை கண்டுகொள்ளாமல், அல்லது கண்டுகொள்வதுபோல நடித்துக் கொண்டு அடாவடியாக இருந்துகொண்டு, வெறும் லாபத்தை குறிக்கோளாக கொண்டு செயல்படுவதை நிறுவனங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே.

படிக்க :
சின்டெல் ஆட்குறைப்பு, டி.சி.எஸ் போனஸ் மோசடி
ஊழியர்களை கசக்கிப் பிழிந்தால் இலாபம் ! பட்டியலிடுகிறார் ஒரு டி.சி.எஸ் ஊழியர்

இல்லையெனில் நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் கூட்டாக இணைந்து நிலைமையை மாற்றி அமைக்க வேண்டும். இன்றைய நிலைமையில் ஊழியர்களுடையை பிரச்சனைகளை நிறுவனத்திற்குள் பேசும்படியான சூழல் அமையவில்லை. எனவே இந்தக் கட்டுரை மூலமாக உங்களுடன் பேசிக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்கிறேன்.

தொழிலாளர்களின் வேலை நிலைமைகள் அதாவது வேலை நேரம், வேலை செய்வதற்கான போதிய கட்டமைப்பு வசதி, அவர்களுக்கான சம்பளம் போன்ற அடிப்படை தேவைகளை சிறப்பாக எந்த நிறுவனம் செய்துகொடுக்கிறதோ அங்குதான் விருப்பத்தோடு கொடுத்த வேலையை ஊழியர்கள் செய்து முடிப்பார்கள்.

இல்லையென்றால் வேலைகளை குறித்த நேரத்தில் முடிக்கமுடியாமல் போவதும் அந்த வேலையை எப்படியாவது செய்து முடிக்க வேண்டும் என்று போராடி செய்வதால் சொந்த வாழ்க்கை பிரச்சனையாக முடிவதும் நடக்கிறது. பல நேரங்களில் ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை நெருக்கடியில் சிக்கி தற்கொலையில் கூட முடிகிறது. இதை ஏதோ கற்பனையில் சொல்லவில்லை கடந்த சில காலங்களாக தற்கொலை எண்ணிக்கை மிகவும் அதிகரித்திருக்கிறது.

நாம் இப்போது டி.சி.எஸ் நிறுவனத்தை பற்றி வந்த அடுத்த செய்தியை பார்ப்போம் :

“இந்த வருடத்தில் டி.சி.எஸ் 28,000 பேரை வளாக நியமனம் மூலம் (campus recruitment) புதிதாக வேலைக்கு சேர்க்க உள்ளது. இது கடந்த மூன்று வருடங்களில் மிக அதிக எண்ணிக்கை ஆகும். கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 10,227 பேரை புதிதாக வேலைக்கு அமர்த்தியுள்ளது. இது கடந்த 12 காலாண்டுகளில் நடக்காத ஒன்று.” ஏற்கனவே 16,000 பேரை புதிதாக வேலையில் அமர்த்தி விட்டதாகவும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் அதற்கேற்றாற்போல் தேவையான ஊழியர் எண்ணிக்கையை அதிகரிப்பதாக நிர்வாகம் தெரிவிக்கிறது.

இவ்வளவு ஊழியர்களை புதிதாக வேலைக்கு எடுக்கிறார்கள் என்றால் அவர்களுக்கான போதிய கட்டமைப்பு வசதிகள் நிறுவனத்தில் உள்ளதா என்பதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அதைச் செய்வதில்லை என்பதற்கு உதாரணமாக வளாக நேர்முகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் வேலைக்கு சேரும்போது எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கு விளக்குகிறேன்.

புதிய ஊழியர்களின் பணி அனுபவம் எவ்வாறு உள்ளது என்று பார்ப்போம். தினமும் பேருந்தில் அடிச்சிபுடிச்சி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்ததும் அமர்ந்து வேலைபார்ப்பதற்கு நாற்காலி கிடைப்பதில்லை. ஒருவேளை நாற்காலி கிடைத்துவிட்டால் வேலைபார்ப்பதற்கு கணினி உடனடியாக கிடைப்பதில்லை. இரண்டுக்கும் காத்திருக்க வேண்டும்.

நம்மைப் போன்ற நிலையில் இருக்கும் யாராவது வேலை முடித்துவிட்டு செல்வார்களா என்று சில மணி நேரம் காத்திருக்க வேண்டும். நாற்காலியும், கணினியும் கிடைத்தவுடன் வேலையை வேகமாக தொடங்கி செய்ய வேண்டும். அதாவது சாப்பிடாமல் அல்லது இடைவேளைக்கு போகாமல் வேலை பார்த்தால் மட்டுமே கொடுத்த வேலையை ஓரளவிற்கு முடிக்க முடியும். இல்லையென்றால் இவ்வளவு நேரமாக என்ன செய்திருந்தாய் என்று மேலாளர்கள் கேட்பார்கள்.

கணினி வசதி இல்லை என்ற உண்மையான காரணத்தை சொன்னால் சகித்துக் கொள்ள முடியாமல் நம் மீது எரிந்து விழுவார்கள். அதை குறித்து வைத்துக் கொண்டு அப்ரைசல் வரும்போது “புதிதாக எதுவும் செய்யவில்லை, கொடுத்த வேலையை குறித்த நேரத்தில் முடிக்கவில்லை” என்று நம்மீது குற்றம் சுமத்தி சம்பள உயர்வை தடுப்பது அல்லது கடைசி பேண்ட் போட்டு சட்டத்திற்கு புறம்பாக சம்பளத்தை குறைப்பார்கள். அதற்கு ஏதாவது காரணத்தை உருவாக்கி ஊழியர்களை மட்டம் தட்டி, ஒதுக்கி வைப்பது நடந்திருக்கிறது. இதற்கு உதாரணம் நான்தான்.

அவர்கள் சொல்ல வருவது சொந்த வாழ்க்கை, உடல்நிலை, விருப்பம் எல்லாத்தையும் துறந்து வேலையே வாழ்க்கை என்று கம்பெனியிலேயே முக்கால்வாசி நேரத்தை செலவிட்டு கொடுத்த வேலையை முடிக்க வேண்டும். அவ்வாறு சில ஊழியர்கள் அதீத அடிமையாகி போனதை காரணம் காட்டி மற்றவர்களை வேலை செய்வதில்லை என்று முத்திரை குத்தி சம்பள உயர்வை தடுப்பது, பதவி உயர்வை தடுப்பது என்று ஊழியர்களை சுரண்டுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

நாம் போகும் நேரத்தில் அலுவலகத்தில் கணினி கிடைக்கவில்லை, அதாவது எல்லா கணினிகளும் பயன்பாட்டில் இருப்பது என்ற நிலைமை அடிக்கடி ஏற்படும். இது பற்றி முறையிட்டால், நாற்காலியும் கணினியும் ஏற்பாடு செய்யாமல் வேறு ஷிஃப்ட்டில் (இரவு நேரப்பணியில்) வருமாறு அறிவுறுத்துவார்கள். தேவையில்லாமல் இரவுப் பணிக்கு வந்து ஊழியரின் உடல்நிலை பாதிப்பதை பொருட்படுத்துவதில்லை. அவர்கள் சொல்வதற்கெல்லாம் ஓகே சொல்லிவிட்டு நிறுவனம் நாற்காலி/மேசை, கணினி செலவை மிச்சப்படுத்துவதற்கு நமது உடலை தேய்த்துக் கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலைதான் பெரும்பான்மையான நேரங்களில் நடக்கிறது.

ஒருவேளை அவர்கள் சொல்லும் ஷிப்டில் (வேலை நேரத்திற்கு) வருவது சாத்தியமில்லை என்று உண்மையான காரணங்களை சொன்னால் அதற்கு அவர்களுடைய பதில் “வேலை கிடைக்காமல் எவ்வளவோ பேர் காத்திருக்கிறார்கள். உங்களுக்கு கிடைத்த வேலையை பாதுகாக்க தெரியவில்லை” என்று நம்மீது குற்றம் சுமத்தி ஏற்றுக்கொள்ள நிர்பந்திப்பார்கள். இவ்வாறு நமது சக தொழிலாளர்களை காட்டியே நம்மை மிரட்டி பணிய வைப்பார்கள்.

அமருவதற்கு நாற்காலி, கணினி கிடைப்பதற்கு சிலமணி நேரம் முன்பே வேலைக்கு வரவேண்டும் என்பார்கள். அவ்வாறு வந்தாலும் நடுவில் வெளியே சென்று வரும்போது அதை இன்னொருவர் எடுத்துக்கொள்வார். அவருடன் வாக்குவாதம் ஏற்படும். அதனால் ஊழியர்களிடைய மனக்கசப்பு ஏற்பட்டுவிடும்.

படிக்க :
பொறியியல் படித்த அப்பாவிகளின் கவனத்திற்கு !
TCS டிசிஎஸ் : ஒரு இன்பக் கனவின் துன்பக் கதை !

இப்படியாக புதிய ஊழியர்களுக்கு வேலை பார்ப்பதற்கு தேவையான போதுமான கட்டமைப்பு வசதிகளை நிறுவனங்கள் ஏற்படுத்தி கொடுப்பதில்லை, அதன் மூலம் சில ஆயிரம் ரூபாய் பணத்தை மிச்சப்படுத்துகின்றனர். இவ்வாறு லாபத்தையே நோக்கமாகக் கொண்டு தொழிலாளர்களை சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் கொத்தடிமைகளாக மாற்றுவது நடைமுறையாக உள்ளது என்பதே எனது அனுபவம்.

மேலும் இன்னொரு செய்தி “ஊழியர்களுக்கு காலாண்டு ஊக்கத்தொகை (Variable pay) 100% கொடுப்பதாக தலைமை அதிகாரி தெரிவித்திருக்கிறார். பலகோடி ருபாய் லாபத்தை ஈட்டித்தந்த தொழிலாளர்களுக்கு தர வேண்டிய நியாயமான சம்பளத்தை கொடுப்பதையே பெரிய சலுகையாக நிறுவனம் பில்ட் அப் கொடுப்பதும் அதையே ஊடகங்கள் பெரிதாக செய்தி வெளியிடுவதும் அசிங்கமாக இருக்கிறது.

லாபம் இவ்வளவு அதிகரித்ததால் கூடுதலாக சம்பள உயர்வு, போனஸ் என்று செய்தி இருந்தால் அதை போடலாம். அப்படி செய்ய கார்ப்பரேட் ஆண்டைகளுக்கு மனம் வரப் போவதில்லை என்பது புரிகிறது.

– அனுபவமுள்ள ஐ.டி ஊழியர்
நன்றி : new-democrats