Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 447

மதக் கலவரத்திற்கு திட்டமிடும் மேற்குவங்க ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. – ஆதாரங்கள் !

ரவிருக்கும் நாடாளுமன்றத்தில் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் பலவித திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறது பா.ஜ.க. அரசியல் கட்சிகளை வளைப்பது, இமேஜ் பில்டப் செய்வது, முக்கியமாக கலவரங்களை திட்டமிடுவது என பா.ஜ.க.வும் அதன் மூளையான ஆர்.எஸ்.எஸ்.ஸும் கடுமையாக திட்டமிடுகின்றன. எந்தக் கட்சியை உடைக்கலாம், வளைக்கலாம் என்பதை நான்கைந்து மாநிலங்களில் செயல்படுத்திய அனுபவத்துடன் தமிழகத்திலும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் என்ன ரிசல்ட் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்து அறிவு தளத்தில் இவர்கள் செய்த சமீபத்திய பில்டப் ஒன்றை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் வால்டர் ஏ ஆண்டர்சன் நூல் ஒன்றை எழுதியிருக்கிறார் ‘ஆர்.எஸ்.எஸ்-இன் உள்ளே ஒரு பார்வை (The RSS: A View to the Inside) என்பது நூலில் பெயர். இந்த நூல் குறித்து அனைத்து ஆங்கில ஊடகங்களிலும் கட்டுரைகளும் பேட்டிகளும் வெளியாகின. இடதுசாரி, லிபரல் ஊடகங்களும்கூட மதிப்பிற்குரிய பேராசிரியர் ஒருவருடைய நூல் என்கிற வகையில் நேர்காணல்களை வெளியிட்டிருந்தன. கேள்விகள் என்னவோ சூடாகத்தான் இருந்தன, ஆனால் ஆண்டர்சனின் பதிலோ ஆர்.எஸ்.எஸ். பிரச்சார பிரமோத் அதாவது ஆர்.எஸ்.எஸ். செய்தி தொடர்பாளரைப் போல உள்ளன.

உதாரணத்துக்கு ஸ்க்ரால் இணையதளத்தில் வெளியான நேர்காணலில் ஆர்.எஸ்.எஸ். காரர்களின் உளவியல் எப்படிப்பட்டது என்கிற கேள்விக்கு ஆண்டர்சன் இப்படிச் சொல்கிறார்,  “நான் சந்தித்த அத்தனை பிரச்சாரக்குகளும் (ஆர்.எஸ்.எஸ்-இன் முழுநேர ஊழியர்கள்) கல்லூரி படிப்பு முடித்தவர்கள். கல்வி மிக முக்கியமான தேவையாக உள்ள அவர்களுடைய திட்டங்களுக்கு அது பொருத்தமாக உள்ளது. பெரும்பாலானவர்கள் உயர்சாதியினர்; அனைவரும் அல்ல. பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பிரச்சாரக்குகள் அதிக அளவில் வரத்தொடங்கியிருக்கிறார்கள்.

இவர்களுடைய ஆளுமை பற்றி சொல்வதென்றால், இளையவர்கள் தேசியத்தில் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கிறார்கள். சிலர் ஆர்.எஸ்.எஸ்.ஸை சாதியற்ற இந்து மடம் என்பார்கள். இவர்கள் குடும்பத்தை விட்டுக்கொடுத்தவர்கள், சொத்துக்களை துறந்தவர்கள், அமைப்புதான் இவர்களை ஆதரிக்கிறது. கொள்கை பற்று இருந்தால் மட்டுமே முழு வாழ்வையும் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்காக அர்ப்பணிக்க முடியும். ஆர்.எஸ். எஸ். பிரச்சாரக்குகள்,  சமயத் தொண்டர்களைப் போல இந்த உலகத்துக்கு நல்லது செய்ய வந்தவர்கள். நான் நூலில் குறிப்பிட்டிருக்கும் வாக்கியத்தில் சொல்வதென்றால், அவர்கள் தர்மத்தின் தூதுவர்கள்” என்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு கிறித்துவர்களுடன், இஸ்லாமியர்களுடன், இந்துக்களில் சில பிரிவினருடன் இடதுசாரிகளுடன் பிரச்சினை இருக்கிறது. அவர்களுக்கு இந்தியாவின் கடந்தகாலம் குறித்து குறைகள் உள்ளன இல்லையா? என்ற மற்றுமொரு கேள்விக்கு,

“இல்லையில்லை. 50 பிரச்சாரக்குகளை சந்தித்த பின்பே இந்த கருத்தாக்கத்துக்கு வந்துள்ளேன். வெளியிலிருந்து பார்க்கும்போது ஆர்.எஸ். எஸ். அப்படியான தோற்றத்தைத் தரலாம். சாதாரண உறுப்பினர்களிடம் இத்தகைய பண்புகள் இருக்கலாம். பிரச்சாரக்குகளிடம் அப்படியில்லை” என்கிறார் ஆண்டர்சன். பசுவின் பெயரால் கட்டவிழ்க்கப்படும் கும்பல் கொலைகளுக்கும் முஸ்லீம்கள்கள் மீதான திட்டமிட்ட வெறுப்பு செயல்பாடுகளுக்கும் கலவரங்களுக்கும் ஆண்டர்சனின் பதில் ‘அவர்கள் அப்படியில்லை’ என்பதுதான்.

பைசாபாத்தில் முஸ்லீம் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறும் விழா ஒன்றில் எடுக்கப்பட்ட படம். (கோப்புப் படம்)

பெரும்பான்மையாக உள்ள இந்துக்களில் பெரும்பான்மையினர் தங்களை ‘இந்து’க்களாக உணருவதில்லை. அதாவது, இந்து தேசியத்துக்கு அடித்தளம் போட்ட சாவர்க்கரின் இந்துக்களாக அவர்கள் இல்லை. எனவே அவர்களை ஒருங்கிணைக்க ‘இந்து தேசியம்’ மிகத் தேவையாக உள்ளது. அறிவு தளத்தில் தாக்கம் செலுத்தும் நடுத்தர வர்க்கத்தின் கருத்தை கவர, ஆண்டர்சன் போன்ற ‘அறிவுஜீவி’ பேராசிரியர்களின் துணை ஆர்.எஸ்.எஸ்ஸுக்குத் தேவைப்படுகிறது. அதை அவரும் ‘இந்துத்துவ’ அறிஞர் ஸ்ரீதர் டீ டம்ளே  இந்நூலில் சேர்ந்து செய்திருக்கிறார்கள்.

ஆண்டர்சன் என்ற அமெரிக்க அறிவுஜீவி ஆர்.எஸ்.எஸ். உள்ளிருந்து ஆர்.எஸ்.எஸ்.ஸின் குரலை ஒலித்தார் அல்லவா, அதுபோல் ஆர்.எஸ்.எஸ்ஸின் உள்ளிருந்து அதன் உண்மையான குரலை ஒலிக்க வைத்திருக்கிறார் மேற்குவங்க சமூக செயல்பாட்டாளர் ஒருவர். சய்பால் தாஸ்குப்தா என்ற அவர், ஆர்.எஸ்.எஸ். கூடாரத்துக்குள் சென்று, ஆர்.எஸ். எஸ்.ஸின் பிரபலமான முகமான ‘கலவர’ முகத்தை வெளிக்கொண்டுவந்துள்ளார். சய்பால் வெளியிட்ட இந்தத் தகவல்கள் ஆண்டர்சனின் ‘தர்மத்தின் தூதுவர்கள்’ முகத்திரையை கிழிக்கப் போதுமானவை.

செப்டம்பர் 2-ஆம் தேதி நடக்கவிருக்கிற கிருஷ்ண ஜெயந்தி (ஜென்மாஷ்டமி) விழாவில் ஊர்வலம் என்ற பெயரில் பெரும் கலவரம் ஒன்றை ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் திட்டமிட்டிருப்பதாக ஆதாரத்துடன் சொல்கிறார் சய்பால். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உறுப்பினராக இணைந்து அதன் இணைய பிரிவில் பணியாற்றிய சய்பால், மேற்குவங்க பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். பெரும்தலைகள், ஆண்டர்சன் எழுதியிருக்கும் படித்த பட்டதாரி பெரும்தலைகள் கலவரத்துக்காக திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்.

கடந்த மார்ச் 25-ஆம் தேதி ராமநவமி ஊர்வலத்தின்போது மேற்குவங்கத்தின் அன்சோல், ராணிகன்ஞ், துர்காபூர் போன்ற இடங்களில் திட்டமிட்ட கலவரத்தை உண்டாக்கியது இந்த கும்பல். இதில் மூவர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். கலவரங்களை முன்வைத்து மட்டுமே தனது செல்வாக்கை பெருக்கிக் கொள்வது ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க.வின் ‘இந்து தேசிய’ திட்டத்தின் ஒரு பகுதி. எனவேதான்,  வரவிருக்கும் ஜென்மாஷ்டமியில் ஹவுரா மாவட்டத்தின் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியில் ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருக்கிறது  இந்தக் கும்பல்.

ஹவுரா மாவட்டத்தின் பா.ஜ.க. செயலாளர் நித்தீஷ் குமார் சிங் என்பவர் செப்டம்பர் 2-ஆம் தேதி நடக்கிவிருக்கிற ஊர்வலத்தின் திட்டங்களை இமெயில் வழியாக ஆர்.எஸ்.எஸ்.காரராக நடித்துக் கொண்டிருக்கும் சய்பாலிடன் விவரிக்கிறார். ஊர்வலம் கிருஷ்ண மந்திரில் தொடங்கிய ஹவுரா நிலையத்தில் முடிவதாகவும் இடையே முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று கோஷங்கள் போடுவதன் மூலமாக அவர்களைத் தூண்டி கலவரத்தை உண்டாக்குவதே திட்டம் எனவும் விவரிக்கிறார் நித்தீஷ் குமார்.

ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்த மனோஜ் திவாரி . (வாள் ஏந்தியபடி உள்ளவர்)

ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்த மனோஜ் திவாரி (படத்தில் கையில் வாள் ஏந்தியபடி உள்ளவர்) என்பவர் ஊர்வலம் எப்படி எந்த வழியாக செல்ல வேண்டும் என மிக விரிவாக சாய்பாலுக்கு விவரிக்கிறார். கண்டிப்பாக ஊர்வலம் முக்கிய பகுதிகள் வழியாக செல்ல வேண்டும் என சொல்லும் அவர்,  “அவர்கள்(முஸ்லீம்கள்) எதுவும் செய்ய மாட்டார்கள். அப்படியும் எதிர்வினையாற்றினால் நாம் பலமாக திருப்பித் தாக்க வேண்டும். போலீஸ் மட்டும் அமைதியாக இருந்தால் இவர்களை காலி செய்துவிடலாம்” என அறைகூவல் விடுக்கிறார். இவர் கலவர கமிட்டியின் உறுப்பினர் என தன்னிடம் கூறியதாக சய்பால் தெரிவிக்கிறார். 50 மேற்பட்ட சங்கிகளிடம் ஒன்றரை மாதங்களாக ‘களப்பணி’ செய்து கலவர திட்டத்தை வெளிக்கொண்டுவந்துள்ளார் சய்பால்.

சங்பரிவாரத்தின் சூப்பர் ஹிட் திட்டமான ரத ராத்திரை ஊர்வலமும் பாபர் மசூதி இடிப்பும் பா.ஜ.க.வுக்கு மிகப் பெரிய நீண்ட நெடிய பலனைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது.  எங்கெல்லாம் பிரிவினைக்கான சாத்தியங்கள் உண்டோ அங்கெல்லாம் இந்தத் திட்டத்தை மீள் உருவாக்கம் செய்து பலனடையப் பார்க்கிறது சங்பரிவார் கும்பல். மேற்கு வங்கம் அதன் சமீபத்திய களம். தர்மத்தின் தூதுவர்கள் இந்து தேசியத்தை அமைக்கும் பொருட்டு கைகளில் வால் ஏந்தி தலைகளை கொய்ய காத்திருக்கிறார்கள். ஆண்டர்சன் போன்ற அமெரிக்க கெட்டிக்காரன் சொன்ன புளுகு எட்டு நாள்கூட தாங்கவில்லை.

  • கலைமதி

உதவியவை:

உரிமைப் போராட்டமும் வழக்கறிஞர்கள் கடமையும் ! சென்னை கருத்தரங்கம்

PRPC

ஸ்டெர்லைட் ஆலையினை மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டம், சமகாலத்தில் மிகமுக்கியமான வரலாற்று பதிவாகும். லட்சக்கணக்கான மக்கள் அமைதியாக நடத்திய போராட்டம் ரத்தச்சகதியில் மூழ்கடிக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முறையாக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேர் கொல்லப்பட்டதுடன், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அத்துடன் 200-க்கும் மேற்பட்டோர் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டும், 1000-க்கும்அதிகமானோர் கிரிமினல்களைப் போல தேடப்பட்டும், முக்கியமாக கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும், 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்திலும், சிறை வைக்கப்பட்டனர். 22.05.2018 நாளின் ஒரே சம்பவத்திற்காக 200-க்கும் மேற்பட்ட வழக்குகள், கைது செய்யப்பட்ட ஒவ்வொருவரின் மீதும் 50 முதல் 100 வழக்குகள் என மக்கள் மீதான அடக்குமுறையும், மனித உரிமை மீறல்களும் கணக்கில் கொள்ள முடியாதவை.

PRPC chennai seminarஅதேவேளையில், மக்கள் மீது ஏவப்பட்ட இந்த அடக்குமுறையை எதிர்த்த, வழக்கறிஞர்களின் சட்டப்போராட்டமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. துப்பாக்கிச் சூட்டிற்கு அடுத்த நாள், காவல்துறையின் சட்டவிரோத ‘முற்றுகையை’ தகர்த்ததில் துவங்கி, கொல்லப்பட்டவர்களின் உடல்களை சிறப்பு மருத்துவர் குழு மூலம் பரிசோதனை செய்வது, காவல்துறையால் பீதியூட்டும் வகையில் பதிவு செய்யப்பட்ட 200 மேற்பட்ட வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க உத்தரவு பெற்றது, சட்டவிரோத கைதுகள், மிரட்டல்களை முறியடித்தது, NSA, குண்டர்சட்டம் போன்ற தடுப்புக்காவல் அடைப்புகளை தகர்த்தது, கைது செய்யப்பட்டவர்களின் விடுதலைக்கு துணைநின்றது, தமிழக காவல்துறையின் ஒருதலைபட்சமான விசாரணையை சி.பி.ஐக்கு மாற்றியது என வழக்கறிஞரின் பணி மக்கள் போராட்டத்தின் நிழல்போல் பின் தொடர்ந்தது என்றால் மிகையல்ல.

போராடும் மக்கள் பயங்கரவாதிகளாக சித்தரித்து அச்சுறுத்தப்பட்ட நிலையில் நமது சட்டப்போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. தூத்துகுடியில் மட்டுமல்ல ஐ.நா. மன்றத்தில் மனித உரிமை மீறலை எடுத்துப் பேசியதற்காக கைதுசெய்யப்பட்ட திருமுருகன் காந்தி, நீதிமன்றம் சிறையிலடைக்க மறுத்ததால், ஒன்றன்பின் ஒன்றாக 24 பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு, தற்போது UAPA என்ற கருப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும்,  எட்டு வழிச் சாலைக்கு எதிராக யார் பேசினாலும் கைது என்பதான ’சட்டத்தின் ஆட்சியல்ல, இது போலிசின் ஆட்சி’ என்ற ஆபத்து பெறுகிவரும் காலத்தில் சமூக அக்கறை கொண்ட வழக்கறிஞர்கள் ஒன்றாய் இணைவதும், மக்களுடைய போராடும் உரிமையை காப்பதும் காலத்தின் தேவையாக உள்ளது.

தற்போது வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு சட்டரீதியாகவும், சட்டத்திற்கு புறம்பான வகையிலும் முயற்சி எடுத்து வருகிறது. ஆலையின் மாசுபாடு பற்றியும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் உள்ள வழக்கு நிலைமைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இத்தனை போராட்டத்திற்குப் பிறகும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா ? இதனை நாம் சட்டரீதியாக எதிர்கொள்வது பற்றி வல்லுநர்கள், மூத்த வழக்கறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்? என்பது பற்றியும், உரிமைப் போராட்டத்தில் மக்களுடன், வழக்கறிஞர் கடந்து வந்த பாதையையும், எதிர்காலத்தில் நாம் நம்முன் உள்ள கடமையையும் பகிர்ந்து கொள்ள அனைவரையும் அழைக்கின்றோம்.

தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.
தொடர்புக்கு: 9962366320, 9842812062

வாஜ்பாயி புகழஞ்சலி செலுத்தும் தோழர்களுக்கு சில யோசனைகள் !

vajpayee

வாஜ்பாயிக்கு புகழஞ்சலி கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது பாஜக. இந்தக் கூட்டத்தில் ‘அரசியல் நாகரிகம்’ கருதி திமுக, காங்கிரஸ், விசிக போன்ற பாஜக அரசை கடுமையாக எதிர்க்கும் கட்சிகளும் இந்த புகழஞ்சலி கூட்டத்தில் பங்கேற்கின்றன. முத்தாய்ப்பாக எப்போது ஒன்று சேர முடியாத சித்தாந்த எதிரிகளாக சொல்லிக்கொள்ளும் இடதுசாரிகளும் (சிபிஐ, சிபிஎம்) இந்த ‘புகழஞ்சலி’ கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். இந்த அரசியல் நாகரீகம் சப்பைக் கட்டைத் தாண்டி ‘புகழஞ்சலி’ செலுத்துவதென்பது வேற லெவல் அரசியல். வாஜ்பாயிக்கு இவர்கள் என்ன மாதிரியான ‘புகழஞ்சலி’ செலுத்துவார்கள் என சமூக ஊடகங்கள் பரபரக்கின்றன. இந்த நிலையில் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாஜ்பாயிக்கு எப்படியெல்லாம் ‘புகழஞ்சலி’ செலுத்தலாம் என சில யோசனைகளை அள்ளித் தருகிறோம்.

இந்தியாவை ரிலையன்சுக்கு விற்ற கார்ப்பரேட் பிரதமரே வாழ்க!

reliance‘ராடியாவுக்கு முன்பே வாஜ்பாயி ஆட்சியில் இந்திய குடியரசு விற்பனைக்கு வந்தது; அதை வாங்கியது ரிலையன்ஸ்!’ என்ற தலைப்பில் அவுட்லுக் இதழ் ‘எஸ்ஸார் டேப்’ விவகாரத்தை வெளிக் கொண்டு வந்தது. ரிலையன்ஸால் ஆட்சியதிகாரத்தில் எவ்வளவு ஆழமாக ஊடுருவ முடிகிறது என்பதையும் அவர்களால் அரசாங்கத்திலும் நாடாளுமன்ற குழுக்களிடையேயும் எப்படி செல்வாக்கு செலுத்த முடிகிறது என்பதையும் யாரை அமைச்சராக்கலாம் என்பதையும் நீதித்துறையினருக்கு லஞ்சம் தருவதையும், மத்திய பட்ஜெட்டையும்கூட இந்நிறுவனம் தீர்மானிப்பதையும் எஸ்ஸார் டேப் வெளிப்படுத்தியது. அரசுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்-லுக்கு கட்டணத் திட்டங்களை வரையறுக்கும் அளவுக்கு ரிலையன்ஸ் என்ற தனியார் நிறுவனர் ஆட்சி செலுத்தியிருக்கிறது. ரிலையன்ஸ் ஸ்பான்ஸரில் ஊர் முழுக்க பல்லிளித்த ‘இந்தியா ஒளிர்கிறது’ விளம்பரங்கள் நினைவிருக்கிறதா? முந்தைய பிரதமர்கள் கார்ப்பரெட்டுகளுக்கு சாதகமாக இருந்தவர்கள்தான். ஆனால், கார்ப்பரேட்டுகளுக்காக குடியரசையே விற்ற பெருமை வாஜ்பாயியை சேரும். ஆக, ‘இந்தியாவை ரிலையன்சுக்கு விற்ற கார்ப்பரேட் பிரதமரே வாழ்க!’ என்று புகழுடன் இரங்கற்பாவை துவங்கலாம்.

அப்பாவிக்கு உதாரணமான அடல் பிஹாரி நாமம் ஓங்குக!

atal bihari vajpayeeபிரதமர் அப்பாவி, ஆனால் வாஜ்பாயி ரூ.42 ஆயிரம் கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தினார்  என்கிறது 2013-ஆம் ஆண்டு வெளியான நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை. காங்கிரசின் 2ஜியை பேசி தேர்தலில் வெற்றி பெற்ற மோடியின் குரு வாஜ்பாயி அரசு செய்தது இது. வாஜ்பாயி அரசில் கொண்டு வரப்பட்ட புதிய டெலிகாம் பாலிசியால் இந்த இழப்பு ஏற்பட்டதாக கூட்டுக்குழு அறிக்கை சொல்கிறது. இதையெல்லாம் தெரியாத அப்பாவி பிரதமராக வாஜ்பாயி இருந்திருக்கிறார். எனவே, அவரை  அப்பாவிக்கு உதாரணமான அடல் பிஹாரி நாமம் ஓங்குக! என வாழ்த்தலாம். 

மதசார்பின்மையை உதறிய மாமனிதரே போற்றி!

ஏப்ரல் 12, 2002 குஜராத் கலவரத்துக்குப் பின், அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாயி கோவாவில் தன்னுடைய கட்சியினருடன் ஆற்றிய உரை இப்போதும் பிரபலமானது. கம்போடியாவில் இந்து மன்னர்களின் ஆட்சியில் அனைவரும் சுபிட்சமாக இருந்ததாக குறிப்பிட்டு தனது உரையைத் தொடங்கிய வாஜ்பாயி ’மதச்சார்பின்மை இப்போது தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். நம்மை குற்றம்சாட்டும் இவர்களெல்லாம் யார்? மதச்சார்பின்மை என்பதற்கான பொருள் என்னவென்பதை இவர்கள் அறிவார்களா? முசுலீம்கள், கிறித்தவர்கள் இங்கே வராத போது இந்தியாவில் மதச்சார்பின்மை இருந்தது. கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவார்கள் என யாரும் நினைக்கவில்லை. நம்முடைய மதத்தில், நம்முடைய கலாச்சாரத்தில் அது இல்லை” என்கிறார்.  பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர், சிறுபான்மை மதத்தினரை அச்சுறுத்தும் வகையில் பேசுகிறார். தனது பதவியின் சார்பற்ற தன்மையை உதறித்தள்ளி ‘நாம்’, ‘நமது’ என பெரும்பான்மை இந்துக்களின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்துகிறார். எனவே இவருக்கு ‘மதசார்பின்மையை உதறிய மாமனிதரே’ என புகழஞ்சலி செலுத்தலாம்.

நியூட்டனின் மூன்றாம் விதிக்கு உதாரணம் சொன்ன குருவே சரணம்!

vajpayee with modiஅதே கோவா உரையில் வாஜ்பாயி சொல்கிறார், “குஜராத்தில் என்ன நடந்தது? சபர்மதி எக்ஸ்பிரஸில் அப்பாவி மக்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டது நடந்திருக்காவிட்டால், குஜராத்தில் அந்த சோக சம்பவம் (முசுலீம் படுகொலை) நடந்திருக்காது. ஆனால், மக்கள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். இதை செய்த குற்றவாளிகள் யார்? அரசு வேகமாக விசாரித்துக் கொண்டிருக்கிறது. உளவுத்துறை வேகமாக தகவல்களை திரட்டி வருகிறது. ஆனால், குஜராத்தில் இந்த கொடுமை எப்படி தொடங்கியது என்பதை மறக்கக் கூடாது. அதன்பின் நிகழ்ந்த விளைவுகள் கண்டிக்கத் தக்கவைதான், ஆனால், கொளுத்தியவர்கள் யார்? எப்படி நெருப்பு பரவியது?” என வீரவேசம் பேசுகிறார் ஒரு சங்கியின் பாணியில். இதையேதான் குஜராத் படுகொலைகள் குறித்த டிவி பேட்டியில் மோடியும் சொன்னார். குருவின் பாணியில் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்றார் மோடி. எனவே, நியூட்டனின் மூன்றாம் விதிக்கு உதாரணம் சொன்ன குருவே சரணம் என புகழஞ்சலி செலுத்தலாம்.

கும்பல் வன்முறையை அனுமதித்த மூத்த முன்னோடி தேவா போற்றி!

1998-2004 வரையிலான வாஜ்பாயி ஆட்சியில் விஎச்பி பிரவீன் தொகாடியா வார்த்தைகளில் சொல்வதென்றால் ’இந்துத்துவ சோதனைக் களமான குஜராத்’தில் மத சிறுபான்மையினர் மீதான வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. விஎச்பி, பஜ்ரங் தள், இந்து ஜக்ரான் மஞ்ச் போன்ற வலதுசாரி கும்பல் அமைப்புகள் சிறுபான்மையினரின் வழிபாட்டிடங்கள், பள்ளிகள், திருமணங்கள், பணி இடங்கள், வீடுகளில் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். அந்தக் காலக்கட்டத்தில்தான் பசு பாதுகாப்பை முன்வைத்த வன்முறைகளும் சோதனை செய்யப்பட்டன. 1998-ஜூன், ஜூலை மாதங்களில் குஜராத் டங்க்ஸ் மாவட்டத்தில் வலதுசாரி கும்பல் ஏற்பாடு செய்திருந்த 4000 பேர் பங்கேற்ற பேரணியில் கிறித்துவர்களுக்கு எதிரான முழுக்கங்கள் வெளிப்படையாக எழுப்பப்பட்டன. கிறித்தவ பள்ளி ஒன்று அடித்து நொறுக்கப்பட்டது. எனவே, மோடி ஆட்சியில்தான் சிறுபான்மையினர் மீதான கும்பல் தாக்குதல் அறிமுகமானது என முழு ‘பெருமை’யையும் மோடி-அமித் ஷா கூட்டணிக்கு தரமுடியாது. பிரதமராக கும்பல் வன்முறையாளர்களை கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பதில் முன்னோடியான வாஜ்பாயியை, ‘கும்பல் வன்முறையை அனுமதித்த மூத்த முன்னோடி தேவா போற்றி’ என புகழலாம்.

எல்லாம் முடிந்த பின் விழித்தெழுந்த சூரியனே வாழ்க!

மீண்டும் குஜராத் படுகொலைக்கு வருவோம். குஜராத் படுகொலைகள் நிகழ்ந்தேறிய சமயத்தில் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டின் பிரதமர் மக்கள் அமைதியாக இருக்கும்படி கேட்கிறார். கலவரத்தில் ஈடுபடுகிறவர்களை அரசு எந்திரம் இரும்பு கைக் கொண்டு அடக்கும் என்பதற்கு பதிலாக ‘மதநல்லிணக்கம்’ வேண்டும் என்றார். அவருடைய பேச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவோ, வன்முறையாளர் மீது கோபமோ வெளிப்படவில்லை. குஜராத் கலவரம் முடிந்து மூன்று நாட்கள் கழித்து, அதாவது 2002, மார்ச் 2-ஆம் தேதி  இந்தத் தொலைக்காட்சி  உரையை ஆற்றினார் வாஜ்பாயி. அதற்குள் பரிவாரங்கள் எல்லா படுபாதகங்களையும் செய்து முடித்திருந்தார்கள்.  எனவே, எல்லாம் முடிந்த பின் விழித்தெழுந்த சூரியனே வாழ்க! என்ற புகழஞ்சலி முழக்கம் மிகப் பொருத்தமாக இருக்கும்.

நாக்பூர் தலைமை பீடத்தின் வழிநடப்பவரே வாழ்க, வாழ்க!

vajpayee in shaka

குஜராத் முசுலீம் மக்கள் இனப்படுகொலையை  (ஆமாம், சமகால வரலாற்றில் மறக்கக்கூடாத ரத்த ஆறு ஓடிய படுகொலை அல்லவா அது?) ஒட்டி அந்த ஆண்டின் மே மாதத்தில் மாநிலங்களவையில் வாஜ்பாயி பேசினார், “நான் கோவாவுக்குப் போனது, குஜராத் ஆட்சியாளரை (மோடி) மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான். ஆட்சியாளரை மாற்றினார் நிலைமை இன்னும் மோசமாகும் என்பதால் அதைச் செய்யவில்லை”. உண்மையில் அந்த நேரத்தில் மோடி பதவியிலிருந்து அகற்றப்படுவதை எதிர்த்தது ஆர்.எஸ்.எஸ்ஸும் விஎச்பியும் மட்டும் தான். மோடியை பதவியிலிருந்து அகற்றியிருந்தால் குஜராத்துக்கு நல்லது நடந்திருக்கும் இல்லையா என்பது வேறு விடயம். ஆனால், ஒரு நாட்டின் பிரதமர் கிரிமினல் கும்பலுக்கு பயந்து பின்வாங்கியதை வரலாற்றில் இப்படி பதிந்து புகழஞ்சலி செலுத்தலாம், “நாக்பூர் தலைமை பீடத்தின் வழிநடப்பவரே வாழ்க, வாழ்க!”

இந்து தேசியத்தின் முதல் ஊழல் அரசை அமைத்த காம்ரேட் !

இந்து தேசியத்தை முழங்கும் பாஜக ஊழல் கரைபடியாத தூய கட்சி என சங்கிகள் பிரசங்கம் செய்வார்கள். வாஜ்பாயி அதிலும் முன்னோடி! தொலைத் தொடர்பு துறையில் ஊழல், ரிலையன்சுக்கு நாட்டை விற்றது, சவப்பெட்டி வாங்கியதில் ஊழல், ஹர்ஷத் மேத்தா ஸ்டாக் மார்க்கெட் முறைகேடு, ரூ.80 ஆயிரம் கோடி அளவுக்கு கார்ப்போரேட்களின் வாராக்கடன் காரணமாக தேசிய வங்கிகளை போண்டியாக்கியது (ஆமாம் அதிலும் முன்னோடி), ஓயாமல் கூச்சலிடும் தேசபக்தி காரணமாக இராணுவத்தில் டஜனுக்கும் மேல் ஊழல்… இந்த ஊழல் பட்டியலை வெளியிட்டிருப்பது சிபிஎம் கட்சியின் இணையதளம். புகழஞ்சலி கூட்டத்துக்கு செல்லும் முன் காம்ரேட்டுகள் ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்று ‘இந்து தேசியத்தின் முதல் ஊழல் அரசை அமைத்த காம்ரேட்!’ என முழுங்கிவிட்டு வரவும்.

புகழஞ்சலி செலுத்துவோருக்கு இன்னும்கூட யோசனைகள் சொல்ல விரும்புவோர் பின்னூட்டத்தில் தாராளமாக அள்ளி வழங்கலாம். தோழர் வாஜ்பாயி நாமம் வாழ்க! புரட்சியாளர் வாஜ்பாயி புகழ் ஓங்குக!

கலைமதி

புகழஞ்சலி யோசனைகளுக்கு உதவியவை:
The ‘Laboratory of Hindutva’ Began Experimenting During Vajpayee’s Reign
‘Wherever Muslims Live…’: Text of Vajpayee’s Controversial Goa Speech, April 2002
Let Us Not Forget the Glimpse We Got of the Real Vajpayee When the Mask Slipped
The Rot Goes Deeper Than Radia
Vajpayee Government Corruption At Its Venal Worst Quit (sept 2001)
PM innocent, but Vajpayee caused Rs. 42,080 crore loss: JPC report

தோழர்கள் பங்கேற்கும் வாஜ்பாய் புகழாஞ்சலி ! ஃபேஸ்புக்கில் இகழாஞ்சலி !

vajbayee

றந்து போன பா.ஜ.க தலைவர் வாஜ்பாய்-க்கு தமிழக பா.ஜ.க சார்பில் சென்னையில் அஞ்சலிக் கூட்டம் நடக்கிறது. இதில் தமிழகத்தின் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரசு, பா.ம.க, புதிய தமிழகம், ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி, தேவநாதன் கட்சி, ஏ.சி.சண்முகம் கட்சி, லோக் ஜனசக்தி இவர்களோடு விடுதலைச் சிறுத்தைகளின் திருமாவளவனும், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பி.சம்பத்தும், சி.பி.ஐ சார்பில் வீரபாண்டியனும் கலந்து கொள்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன்னர் தி.மு.க சார்பில் நெல்லையில் நடந்த கலைஞர் அஞ்சலிக் கூட்டத்தில் தமிழிசை கலந்து கொண்டு முழங்கினார். இன்று வாஜ்பாய் கூட்டத்தில் தமிழிசையின் முன்னால் இவர்கள் வாஜ்பாயிக்காக கண்ணீர் வடிக்கப் போகிறார்கள்.

அரசியல் நாகரீகம், இரங்கல் கூட்டம், நீத்தோர் நினைவு, வாஜ்பாய் மட்டும் நல்லவர் என பல சமாதானங்களைக் கூறிக் கொண்டு ‘தோழர்கள்’ இன்று காவிக் கரையோரம் கண்ணீர் வடிக்கப் போகிறார்கள். இந்த வெட்கம்கெட்ட நடத்தையை காறித்துப்புகிறது தமிழ் ஃபேஸ்புக்!
-வினவு

vajbayee praise meeting

Thiru Yo
அப்போ இனிமேல் சாவர்க்கர் நினைவு தினம், கோட்சே தியாகநாள், கோல்வால்கர் நினைவுநளெல்லாம் தோழர்கள் கொண்டுவார்களா என்கிறார் ஆர்வமிகுதி கொண்ட ஒருவர்.

அவருக்கு என்ன பதிலைத் தருவது தோழர்களே? (இந்த கேள்வி சிவப்பிற்கும், நீலத்திற்கும்)
————-

Keetru Nandhan
இவங்க எல்லாம் வருசா வருசம் பசும்பொன் முத்துராமலிங்கத்துக்கு திதி கொடுக்கிறதை நினைச்சிப் பார்த்தால், இதுக்கு ஷாக் ஆக மாட்டீங்க…
————-

Samsu Deen Heera
என்ன சொல்லிப் புகழப்போகிறீர்கள் தோழர்களே..?

நரகலை மிதித்துவிட்டதைப் போல அருவெறுப்பாய் இருக்கிறது. அரசியல் நாகரிகம், மண்ணாங்கட்டி என்று பிழைப்பு வாதிகளைப்போல பசப்பப்போகிறோமா..? அவநம்பிக்கையாய் உணர்கிறேன். இனம் புரியாத பதட்டமும் கடும் எரிச்சலும் கலந்த மனநிலையில் எதாவது மரியாதைக் குறைவாக எழுதிவிடுவேனோ என்ற அஞ்சுகிறேன்.

கம்யூனிஸ்டுகளுக்கென்று ஒரு பாரம்பரியமுண்டு.. பாசிஸ்ட்டுகளைப் புகழ்ந்து பேச கம்யூனிஸ்டுகளின் நா எழுமா..?

#கொடுமை..
————-

Villavan Ramadoss
அன்னைக்கு சாயங்காலம் கொஞ்சம் ஃப்ரீ. அதான் வாஜ்பாய மகிமைப்படுத்தி, அக்ரஹாரத்தை ஜனநாயக்கப்படுத்தி அப்படியே முதலாளித்துவ கழுதைய வென்றெடுக்கலாம்னு முடிவு பண்ணி நிகழ்ச்சிக்கு ஒத்துக்கிட்டோம்!
————-

Sukirtha Rani is feeling angry.
இனி
பசு எனக்குப் புனிதம்
தாமரை என் மலர்
காவி என் நிறம்
தமிழிசை எனக்குத் தலைவி
ஸ்ரீசுகிர்தானந்தமாயி என் பெயர்.
————-

Nethaji AT
#வாஜ்பாய்க்கு_புகழஞ்சலிப்_பாடப்போகும்_தலைவர்களே!

#மறந்திடாமல்_இதையும்_சேர்த்துப்_புகழாய்ப்_பாடுங்கள்_நாடே_கேட்கட்டு_காரித்துப்பட்டும்!

௦ வந்தேமாதிரப் பாடலை பாடதவர்கள் பாக்கிஸ்தானுக்கு ஓடவேண்டுமெனச் சொன்னவர்தான் வாஜ்பாய்.

௦ பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரனை நடத்திய லிபரான் கமிசனை முடக்கிப்போட்ட மகான்தான் வாஜ்பாய்.
௦ மும்பை கலவரம் குறித்த கிருஷ்ணா கமிசனை ஒன்றுமில்லாமல் அடித்த உத்தமர்தான் வாஜ்பாய்.

௦ கார்கில் போர்வீரர்களின் சவப்பெட்டியில் கூட ஊழலை நிகழத்திகய கண்ணியவான்தான் வாயஜ்பாய்.

௦ குஜராத் கலவரத்தின்போது மோடி! ராம ராஜ்ஜியத்தை காத்துக்கொள்ளென முழங்கிவர்தான் வாய்பாய்.

௦ ஆர்.எஸ்.எஸ் என் ஆன்மா என்று தீரமுடன் சொன்ன மதவாதிதான் வாஜ்பாய்.

௦ சிறப்பு பொருளாதர மண்டலத்தின் மூலம் நூறு சதவீதம் அன்னிமுதலீடுகளை திணித்த கார்பரேட் கைக்கூலிதான் வாஜ்பாய்.

௦ ரியலெஸ்டேட்டில் எம்பது சதவீதம் அன்னிய முதலீட்டை திணித்து தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்க வழிவகுத்தவர்தான் வாஜ்பாய்.

௦ காப்பீட்டுத் துறைகளை தனியாருக்கு கபலிகரம் செய்த புன்னியவான்தான் வாஜ்பாய்.

௦ ஐயாயிரம் கோடிக்குமேல் மதிப்புள்ள பால்கா நிறுவனத்தை ஐநூற்றைம்பைது கோடிக்கு விற்ற கொள்ளை கூட்டத் தலைவன்தான் வாஜ்பாய்.

o ஆயிரக்கணக்கான சதுர ஏக்கர் கனிமவள நிலஙககளை தனியாருக்கு விற்றுபோட்டு இந்திய இயற்கை வளங்களை அழித்தவர்தான் வாஜ்பாய்
————-

இரவிக்குமார்
சோசலிசத்துக்குப் பதிலாகத் தேசியவாதத்தை முன் வைத்த, சுட்டுக் கொல்லப்பட்ட இணையற்ற வீரன் முசோலினிக்குப் புகழாஞ்சலி!
————-

Thiru Yo
அரசியல் நாகரீகம் கருதி ஆர்எஸ்எஸ்-ல் கூட சேரலாம். 🤷🏿‍♂️

வாஜ்பாய்க்கு கம்யூனிஸ்ட்டு தலைவர்கள் ஆற்ற வேண்டிய ‘இகழாஞ்சலி‘! CPI ML செய்தி!

தேவையற்றுப்போன முகமூடி!
————-

மு.வி.நந்தினி
அப்பயும் பாருங்க, இடதுசாரிகளை விமர்சனம் பண்றாங்க, விசிகவை விமர்சனம் பண்றாங்க, ஆனா திமுக அந்த லிஸ்ட்லேயே சேர்த்துக்கல.
————-

வில்லவன்:
இந்தியாவின் பெரிய அச்சுறுத்தல் இந்துத்துவா.
அடுத்ததாக வரப்போவது இந்த அரசியல் நாகரீகம்தான் போல..
விசி மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் இயக்கங்களும் வாஜ்பாயை என்ன சொல்லி புகழப்போகின்றன?

செத்தவர்கள் எல்லோருமே புகழத்தக்கவர்கள் என்றால் அடுத்து இந்து மகாசபா போன்ற இயக்கங்கள் கோட்ஸேவுக்கு புகழஞ்சலி செலுத்த கூப்பிடும். போவீர்களா?

பாஜகவை மகிமைப்படுத்துவதான் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை மோடி டெமோ காட்டிவிட்டார். டெட்பாடிக்கு பாவ புண்ணியம் பார்க்க வேண்டாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ்சுக்கு டெட்பாடிகள்தான் மூலதனம்
————-

எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன்
எல்லாரும் ஒன்னாச் சேர்ந்து பாரதிய ஜனதா கட்சிக்கு ஜனநாயகச் சாந்து அடிக்குறாங்க. பாசிசம் பத்தி இனிமே வகுப்பு எடுக்காம இருங்க..
————-

பத்திரிகையாளர் கவின்மலர்
வாஜ்பாய் நல்ல கவிஞர். அமைதியே உருவானவர். அதனால்தான் குஜராத்தின் புகழ்பெற்ற கவிஞரான வலிகுஜராத்தியின் கல்லறையை மோடி இடித்தபோது வாஜ்பாய் அமைதியாய் இருந்தார். மெல்லிய மனம் படைத்த வாஜ்பாயால் மோடியின் இந்த செயலுக்கு எப்படி எதிர்ப்பு தெரிவிக்கமுடியும்? அதனால்தான் குஜராத் வன்முறைகளின்போதும் அமைதிகாத்தார். தன் ஆசீர்வாதம் கிடைக்கவில்லை என்றால் மோடி வருத்தப்படுவார் என்பதை உணர்ந்து குஜராத் வன்முறைகளை நிறைவாகச் செய்யும்படி ஆசீர்வதித்த உத்தமர் அவர். பாபர் மசூதியை இடிக்கப் புறப்பட்டு வந்த கரசேவகர்களின் மனம் கோணாமல் அவர்களுக்கு ஆதரவளித்த மஹான் வாஜ்பாயி. எவர் மனதையும் நோகடிக்காத மென்மையான கவிமனம் அவருக்கு…

இப்படித்தான் உரையாற்றப் போகிறீர்களா தோழர்களே?
————-

அரசியல் செயல்பாட்டாளர் நிவேதா:
அடுத்ததாக
சாத்வீக தீவிரவாதி வாஜ்பாய் ஜி அவர்களுக்கு தோழர் புகழஞ்சலி செலுத்துவார்…
————-

செயல்பாட்டாளர் முருகன் கண்ணா:
வாஜ்பாயை நாமும் கொஞ்சம் புகழுவோமா ?

சுதந்திர போராட்டத்தை வேடிக்கை பார்க்க வந்ததாக பிரிட்டிஷ் அரசிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மிக சிறந்த போராளி.

சர்வதேச முதலாளிகள் மிக எளிதாக தங்களின் சரக்குகளை நகர்த்தி செல்ல தங்க நாற்கர சாலை திட்டத்தை செயல்படுத்திய ஒரு சிறந்த கார்ப்ரேட் எடுப்பு.

குஜராத் படுகொலை உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை அரங்கேற்ற துணையாக இருந்த சிறந்த மனிதநேய பண்பாளர்.

ராமர் கட்டிய பாலத்தை கண்டு பிடித்து இடிக்கவிடாமல் தடுத்து தேச வளர்ச்சிக்கு உதவிடும் சேதுசமுத்திர திட்டத்தை நிறுத்திய மிக சிறந்த பொறியியல் வல்லுனர்.

ராணுவ வீரர்களுக்கு சவபெட்டி வாங்கும் போது எப்படி ஊழல் செய்யனும் என்று கற்றுக் கொடுத்த முன்மாதிரி அரசின் மிக சிறந்த பிரதமர்.

மொத்தத்தில் ஆர்.எஸ்.எஸ்ன் ஒரு சிறந்த சங்கி

போதுமா இன்னும் புகழனுமா ?

***

அடல் பிகாரி வாஜ்பாயும் இந்திய வலதின் அகோர வளர்ச்சியும்

முன்னாள் பிரதம மந்திரி அடல் பிகாரி வாஜ்பாய் இன்று காலமானார்.

இந்திய வலதுசாரி அரசியல்வாதிகளில் மிகப்பெரும் உயர்ந்த நிலையும் கௌரவமும் கொண்டவராக வாஜ்பாய் இருந்தார். ஜனசங்க காலத்திலிருந்து, அதன்பின் ஜனதா கட்சி கட்டம் ஊடாக, இறுதியில் BJPயாக அது வளர்ச்சியடையும் வரையில் RSSன் நாடாளுமன்ற அரசியலை அவர் வழிநடத்தினார். காந்தியத்தோடும், சோசலிசத்தோடும் அவர் கொண்டிருந்த சிறுபிள்ளை காதல் BJPயின் வரலாற்றுக் கட்டத்தில் மறக்கப்பட்ட ஒன்றானது. ஆனால், அத்வானியின் தாக்குதல் தன்மைகொண்ட இந்துத்துவா பிரச்சார இயக்கத்துக்குப் பின்பு BJP இந்தியாவின் ஆகப் பெரும்பான்மை கொண்ட கட்சி ஆனபோது வாஜ்பாய் BJPயின் அரச முகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

RSS ன் கருத்தியல் தலைவர் கோவிந்தாச்சார்யா சொன்ன மறக்க முடியாத உருவகத்தை நினைவுபடுத்திக்கொள்வோம். “வாஜ்பாய் தாராளவாத முகமூடி. BJPயின் உண்மையான முகம் அத்வானி“. BJP தனது மதவெறி பாசிச முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டிய காலத்தில் , அக்கட்சியின் கவனத்தை ஈர்த்த தலைவர்களில் ஒருவராக வாஜ்பாய் இருந்தார். அத்வானி, அல்லது மோடி போன்ற தீவிர RSSகாரர்ககளை ஆதரிப்பதில் சங்கடத்துக்கு ஆளான NDA கூட்டணியின் பங்காளிகள் வாஜ்பாயின் மகிழ்வான, பண்பானவர் என்ற தோற்றத்தைக் கொண்டு தங்களின் அம்மனத்தை மறைத்துக்கொள்ள முடிந்தது.

NDAவின் முதல் அரசு காலத்தின்போது, தான் ஆற்ற வேண்டிய பாத்திரத்தை நிறைவேற்றுவதற்கு வாஜ்பாய் தனது அரசியல் வார்த்தைகளை மென்மையாக்கிக்கொள்ள வேண்டியிருந்தது. இன்று நாம் NRC பிரச்சனையில் மோடி மற்றும் அமித் ஷா புலம்பெயர்ந்தவர்கள் பற்றி விஷத்தைக் கக்கும் உரைகளைக் கேட்டுவருகிறோம். 1983ல் அசாமில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது “அன்னியர்கள் இங்கே வந்திருக்கின்றனர். ஆனால், அரசு ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் ஒருவேளை பஞ்சாப்பில் நுழைந்திருப்பார்கள் என்றால், கண்டம்- துண்டமாக வெட்டி வீசப்பட்டிருப்பார்கள்“ என்று அனல் கக்கப் பேசியதை நாம் நினைவுக்குக் கொண்டுவருவது நல்லது. அதனையடுத்து ‘நெல்லி‘யில் 2000 முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதன்பின் மேற்படி உரையிலிருந்து விலகி நிற்பது நல்லது என்று BJP உணர்ந்தது.

1992ல் பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பு அயோத்தியிலிருந்து RSSஆல் திட்டமிடப்பட்ட வகையில் வெளியேற்றப்பட்டவர்களில் ஒருவர் வாஜ்பாய். அதற்கு முன்பு அவர் கரசேவகர்கள் மத்தியில் உரையாற்றினார். “தரையைச் சமப்படுத்த வேண்டும் என்றால், இடித்துத் தள்ளுவதற்கான ‘சாதனங்கள்‘ வேண்டும்“ என்ற பொருள்பட மறைபொருளாகப் அவர் பேசினார். கேட்டுக்கொண்டிருந்தவர்கள் ஆர்ப்பரித்தனர். அது அடுத்த நாள் மசூதியை இடிக்கும் வரை நீண்டது. வாஜ்பாய் பயன்படுத்திய உவமையைக் கரசேவகர்கள் சரியாகப் புரிந்துகொண்டார்கள் என்பதை அது காட்டியது.

2002ல் குஜராத்தில் மதவெறி வன்முறை அரங்கேறியபோது வாஜ்பாய் பிரதம மந்திரியாக இருந்தார். மோடி ‘ராஜதர்மத்‘தில் தவறிவிட்டார் என்று கள்ளத்தனமாகக் கண்டித்தார். அதன்பின்னும் மோடி முதலமைச்சராகத் தொடர்வதற்கு அனுமதித்தார். 2002 மதவெறி வன்முறையின்போதும், அதன் பின்னரும் முஸ்லீம்கள் காக்கப்படுவதை உறுதி செய்வதற்கு வாஜ்பாய் எதனையும் செய்யவில்லை.

நயத்தக்க நாகரீகம்- விவாதம் என்ற நிலைப்பாட்டை வாஜ்பாய் கடைபிடித்து வந்தார். மதமாற்றத்தைத் தடுப்பது என்ற காரணம் சொல்லிக்கொண்டு, RSSன் அமைப்புகள் நடத்திய மதவெறி வன்முறையை கிருத்துவர்கள் எதிர்கொண்டிருந்த சூழலில் “வாருங்கள்.. மத மாற்றம் பற்றி விவாதம் நடத்துவோம்“ என்று கிருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்தார்! 2004ல் குஜராத் படுகொலைகளுக்குப் பின்னர், இந்தியா ஜொலிக்கிறது என்ற கட்டுக்கதை குப்புற வீழ்ந்த பின்னர் வாஜ்பாய் வழிநடத்திய NDA ஒட்டுமொத்த தோல்வியைத் தழுவியது.

இன்றைய BJPயும் NDAவும் அவர்களின் அரசும் மிகவும் மாறுபட்ட காலத்தில் இருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு முகமூடி எதுவும் தேவையில்லை. மோடியும் யோகியும் இன்றைக்கு BJPயின் நட்சத்திரங்கள். அவர்கள் மதவெறியைச் சற்றும் மறைப்பதில்லை. அடித்துக்கொலை செய்யும் குற்றவாளிகளுக்கு மந்திரிகள் மாலையிடுவர். முஸ்லீம் ஒருவரை உயிருடன் எரித்தவரை RSS அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கேமிரா முன்பு கட்டித் தழுவிக்கொள்வார்கள். அவரை ’வீரக் கதாநாயகர்‘ ஆக்கி மகிழ்வார்கள். ‘பசு வதை‘ பற்றியோ, ‘காதல் கொலை‘ பற்றியோ ‘தேசிய விவாதம்‘ எதனையும் நடத்த வேண்டிய தேவை இனியும் BJPக்கு இல்லை. வாஜ்பாய் காலத்தைச் சேர்ந்த BJP தலைவர்கள் அனைவரும், NDAவில் வாஜ்பாயின் பாத்திரத்திற்கு துணையாக நின்ற அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் இன்று ‘ஆலோசனை‘ சொல்கின்ற இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுவிட்டனர்.

மதவெறி பாசிசமாக அல்லாமல், பிற்போக்கு வலதுசாரிக் கட்சியாக BJP இருக்க முடியும் என்ற இந்திய ஆளும் வர்க்கம் மற்றும் வலதுசாரி அறிவாளிகளின் மாயக் கனவின் பிரதிநிதியாக வாஜ்பாய் இருந்தார். வாஜ்பாய் உடல் ரீதியாக மறைவதற்கு வெகுமுன்பே அந்த மாயக்கனவு கரைந்து கலையத் துவங்கியிருந்தது.

இன்றைய நிலையில், இந்திய வலதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமான அடையாளமாக வாஜ்பாய் இருக்கிறார். வாஜ்பாயின் நேற்றைய காலத்துக்கும் மோடியின் இன்றைய காலத்துக்கும் இடையிலான தொடர்பு என்ன? மாறுபாடு என்ன? என்பதை வேறுபடுத்தி தற்போதைய பாசிச தாக்குதலின் தீவிரம் என்ன என்பதைக் கண்டுபிடிப்பதற்கான அளவுகோலாக இருக்கிறார்.

CPI(ML) Liberation கட்சியால் 16 August 2018 அன்று வெளியிடப்பட்டது.

மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த ராஜதந்திரி…
போராட்டக்காரர்களை காட்டிக்கொடுத்த சாணக்யன்…
பிரிட்டிஷ் அரசுக்கு பணிந்த மதியூகி. ..
குஜராத் கலவரத்துக்காக நீலிக்கண்ணீர் வடித்த நீதிமான்…
தங்க நாற்கர சாலையில் சாவடி அமைக்க காவடி தூக்கிய தேசபக்தர்…
வங்கி சேமிப்பு வட்டியை குறைத்த வள்ளல்…
இன்னும் புகழ வார்த்தையின்றி தொண்டை அடைக்கிறது.
————————–

குறிஞ்சி நாதன்
கலைஞர்க்கு அஞ்சலி செய்வது—- சுயமரியாதை
வாஜ்பேய்க்கு செய்வது— அவமரியாதை
பாசிச பாஜக வாஜ்பேக்கு யார் செய்தாலும் சந்தேகம் கொள்
அவர்கள் தமிழின விரோதிகள்தான் என்பதை விட #மக்கள் விரோதிகளே என்பதை புரிவோம்
————-

Sasi Dharan
நான் பி.ஜே.பி இல்ல..
ஆர்.எஸ். எஸ் சப்போட்டர் இல்ல..
ஆனா எங்க இதெல்லாம் நடந்துருமோன்னு பயமா இருக்கு..
யோசிச்சி சொல்லு..
————-

Thiru Yo
ஒரு ஓநாயின் நிகழ்ச்சித் திட்டத்திற்குள் எல்லா ஆடுகளும் தானாக சென்று அடைந்து கொ(ல்)ள்கின்றன. பெரிய ஆடு, சின்ன ஆடு, மலையாடு, வரையாடு, வெள்ளாடு, செம்மறியாடு… என எந்த வேறுபாடுமில்லை. அனைத்தும் ஒற்றைமயம்.
————-

Thiru Yo
 “அரசியல் நாகரீகம்” கருதி அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்தால் தேர்தல் செலவு மிஞ்சும்.
————-

இரவிக்குமார்
மிக மென்மையாக மனிதக்கறி சுவைத்துண்ட இடி அமீனுக்குப் புகழாஞ்சலி!
————-

பரிசல் சிவ. செந்தில்நாதன்
ஹிட்லருக்கு வீர வணக்கம் செழுத்துறது அரசியல் நாகரிகம் தோழர்😳
வெங்காயம்
————-

இரவிக்குமார்
அகாலத்தில் தற்கொலையுண்ட சிறந்த ஓவியக் கலைஞரான தோழர் ஹிட்லருக்குப் புகழாஞ்சலி…

தேசக் கொள்ளையர்கள் தெரிவிக்கிறார்கள் மக்கள் அதிகாரம் தேசவிரோதியாம் !


நடந்தாய் வாழி மக்கள் அதிகாரம்

பொங்கி வரும்
விடுதலைப் பெரு நதிகள்
சற்று,
தங்கிச் செல்லும்
தடுப்பணைகள்
சிறைக் கூடங்கள்.

போராட்ட நதி பெருக்கே!
ஓடும் போது
நீ விவசாயம்
தடுக்கும் போது
நீ மின்சாரம்.

ஆனால்… ஆனால்..
அணைகள் உடையும்
காலம் இது!

மதகுகள் உடைந்து ஆற்றில் அடித்துச் சொல்லப்படும் அவலம்.

கட்டமைப்பே
காலாவதி
கொள்ளிடத்தின் மீதென்ன
குற்றம்?

மணல் திருடர்கள்
சொல்கிறார்கள்,
கரை மீறிய காவிரி
பயங்கரமாம்!

மலைத் திருடர்கள்
சொல்கிறார்கள்,
நிலம் சரியும்
நீல மலை
ஆபத்தாம்!

வனக் கொலையாளிகள்
‘ஸ்னைப்பர்’ துப்பாக்கியின்
ஆவி பறக்க
கதை அளக்கிறார்கள்
வண்ணத்துப் பூச்சிகள்
வன்முறையைத்
தூண்டுகின்றனவாம்!

தேசக் கொள்ளையர்கள்
தெரிவிக்கிறார்கள்,
மக்கள் அதிகாரம்
தேசவிரோதியாம்!
மக்களை,
தூண்டி விடுகிறார்களாம்.

தூண்டுதல் இன்றி
துலங்கும் காட்சி ஒன்று
உலகில் உண்டா?

இயற்கையின் தூண்டுதல்
இப் புவிக்கோளம்.
புவி அமைப்பின் தூண்டுதல்
நம் உயிர்க் கோலம்.

ஈரம் வந்து
வேரைத் தூண்டாமல்
ஏது செடி?

செடியை வந்து
ஒளிக்கதிர் தூண்டாமல்
ஏது மலர்?

மலரை வந்து
வண்டு தூண்டாமல்
ஏது தேன்?

காணும் ஒவ்வொன்றிலும்
தூண்டுதலின் இயக்கம்
மக்கள் அதிகாரம்
மக்களின் இதயத்தின்
இயக்கம்!

நதிகளும்
நாங்களும் ஒன்று,

காவிரி காய்ந்தால்
கழனிகள் காயும்,

கழனிகள் காய்ந்தால்
கருவறையும் காயும்,

மகசூல் இல்லாத
ஊரில்
மகவு சூலும்
இல்லாது போகும்…

ஆனாலும்…
காய்ந்தது போல்
தோன்றும்…

நடை
ஓய்ந்தது போல்
தோன்றும்,

திடீரென
பாய்ந்து வரும்
உணர்ச்சிப் பெரு நதியை
தடுக்க முடியாமல்,

பொய் நா தெறித்து
புறம் பேசும்
நாணல்கள்
தலை சுற்றும்!

பழைய கோலங்கள்
மாறும்.
புதிய நியாயங்கள்
வாழும்!

கண் துஞ்சாது
பசி அறியாது
கடை மடைக்கு
நீர் பாய்ச்சி
விளை நிலத்தை
பாதுகாக்கும்
விவசாயி போல்,
வன் நெஞ்ச அரசின்
பொய் – களையெல்லாம்
வேரறுத்து,
மண்பசை காத்த
மாண்புமிகு வழக்கறிஞர்களே!

தண்டனையை விட
தாளாத கொடுமை
சட்டப்போராட்டம்!

சாதாரணமல்ல,
உயிர் வலி தாங்கி
பனிக்குடம் உடைத்து
வேதனையின் முடிவில்
புத்துயிர் களிக்கும்
போராட்ட மகிழ்ச்சியின்
தாய்மடி நீங்கள்.

உங்கள்,
தன்னலமில்லா
உழைப்பின் ஈரத்தில்
தாய் நிலம் சிலிர்க்கிறது!
தரு நிழலும் வாழ்த்துகிறது!

நெஞ்சின்
கரு மணலை
நெறித்த போதும்,

நிழலாடும்
உழைக்கும் மக்களோடு
உறவாடும்,

அன்பின் பொழுதையெல்லாம்
பறித்த போதும்,

உண்மையின் உதடுகளை
சிதைத்த போதும்,

ஊற்றுக் கண்களையே
ஒடுக்கிய போதும்,

அக்கரையில் தவிக்கும்
அக்கா குருவியின்
ஒற்றைக் குரலுக்கும்
பொறுப்பான  அக்கறையோடு,
இத்தனைக்கும் பிறகும்
கரை வந்த
காவிரி போல்
சிறை மீண்ட தோழர்களே!

உணர்வுகளை
சிறைபடுத்த மறுத்ததால்
உங்கள்
உடல் சிறைபட்டது.

ஆனாலுமென்ன,
மக்களுக்காக வாழும்
உங்கள் உணர்ச்சிகள்
பலர் உடலெங்கும்
வெளிப்பட்டது! செயல்பட்டது!

நீங்கள்,…
மண்ணின் விசை
மக்கள்,
கண்ணின் பசை!
வையமே வாழ்த்துகிறது
நடந்தாய் வாழி காவிரி!
நடந்தாய் வாழி
மக்கள் அதிகாரம்!

 துரை. சண்முகம்

வெளியிலிருந்து வந்து தூண்டியவன் வேதாந்தா | துரை. சண்முகம்

மே நாள் சிலிர்ப்புகள் | துரை. சண்முகம்

நான்தாம்பா ரஜினிகாந்த்! | துரை.சண்முகம்

சீர்காழி வெள்ள பாதிப்பு : நிவாரணப் பணியில் மக்கள் அதிகாரம்

சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள கிராமங்கள் நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல். இக்கிராமங்களில்ஆயிரம் குடும்பங்கள் விசித்து வருகின்றனர்.

மேலும், சிதம்பரம் தாலுகா ஜெயங்கொண்ட பட்டிணம், மரத்தான் தோப்பு, திட்டுகாட்டூர், குண்டலபாடி ஆகிய கிராமங்களில் 1300 -க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் நீர் டெல்டாவின் கடைமடைக்குப் போய்ச்சேராத நிலையில், கொள்ளிடம் ஆற்றில் திருப்பிவிடப்பட்டிருக்கிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றுக்கு அருகில் உள்ள மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் பலர் வெள்ள பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பலரும் தங்களது வீடுகளையும், உடமைகளையும் இழந்து பரிதவித்து வருகின்றனர்.இந்நிலையில் எடப்பாடி அரசு பாதிக்கப்பட்ட மக்களை இதுவரை சந்திக்கவில்லை. எந்தவித நிவாரண உதவிகளையும் வழங்கவில்லை. மக்களை நட்டாற்றில் தவிக்கவிட்ட அரசு, இந்த பகுதியில் உள்ள பழையப்பாளையம் ஓ.என்.ஜீ.சி- எண்ணைய் நிறுவனத்துக்கு பாதிப்பு ஏற்படாமலிருக்க கரைகளை பலப்படுத்தி பாதுகாத்து வருகிறது.

இவ்வாறு அரசால் புறக்கனிக்கப்பட்ட கையறு நிலையில் அப்பகுதி கிராம மக்கள் தங்களுக்குள்ளாகவே, ஒருவருக்கொருவர் உதவிகளை செய்துகொண்டு, வெள்ளப் பாதிப்பகளிலிருந்து மீண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்கள் மேற்கண்ட பகுதிகளில் அங்குள்ள மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர். மேலும் மக்கள் தற்காலிகமாக குடியேறுவதற்கான உதவிகளையும் செய்து வருகின்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம், சீர்காழி, தொடர்புக்கு: 78450 18440

கேரளா : கொழஞ்சேரியை சீர்குலைத்த வெள்ளம் ! நேரடி ரிப்போர்ட்

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட் ! பாகம் 8

கேரளாவின் கனமழை அம்மாநிலத்தையே உருக்குலைக்கும் என்பதை நாம் யாரும் எதிர்பார்த்திருக்க  மாட்டோம். ஏன்..! அம்மக்களே அதனை எதிர்பார்க்கவில்லை. மழை எப்பொழுதும் அவர்களுக்கு பழகிப்போன ஒன்றுதான் என்றாலும், கடந்த 8 -ஆம் தேதி முதல் 15 -ம் தேதி வரை பெய்த மழை அவர்களுடைய வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பெரும் துயரம்.

கடந்த ஒரு நுற்றாண்டாக இது போன்றதொரு கனமழை பெருவெள்ளத்தை கண்டதில்லை என்கிறார்கள் கேரள மக்கள். எதிர்காலத்தில் மழை என்றால் அச்சப்படவும் வாய்ப்புள்ளது என்கிற அளவிற்கு கடும்பாதிப்பு.

பத்தினம்திட்டா மாவட்டம் முழுவதும் கடுமையான பாதிப்பு. கேரளாவில் படகுப் போட்டிக்கு பெயர்போன ஆரன்முலா முழுவதும் சேதாரம். வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட படகுகளுக்கு அப்பகுதியில் இருந்த வீடுகள் தான் தடுப்புச் சுவராக இருந்தது என்றால் அந்த கோரத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும். அப்பகுதிக்கு அருகே உள்ள ஒரு சிறிய நகரம் கொழஞ்சேரி. இதையொட்டிய பம்பை ஆறு.  அதன் கீழ் பகுதியில் நெடும்பிரையார் என்கிற சிறிய ஊர். அதில் அப்பகுதியில் பிரபலமான ஒரு டென்டல் கிளினிக்.

ஒரு வட மாநில இளைஞர் மட்டும் கிளினிக்கின் முன் வாசலில் இருந்த சேற்றை சிரமப்பட்டு அள்ளிக் கொண்டிருந்தார். உள்ளே இருந்து வாளிகள் மூலம் தண்ணீரை கொண்டு வந்து தெருவில் ஊற்றிக் கொண்டிருந்தார் மற்றொருவர்.

உள்ளே ஜெனரேட்டர் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. சற்று எட்டிப்  பார்த்ததும் மூன்று பேர் பி.வி.சி. பைப்பில் தண்ணிரை பீய்ச்சி சுவர், தரை எங்கிலும் அடித்துக் கொண்டிருக்க, ஒருவர் கிளினிங் வைப்பரைக் கொண்டு தரையை அழுக்குப் போக அழுத்தி தேய்த்துக் கொண்டிருந்தார். அவர்களுக்கருகே தன்னால் முடிந்த வரை சிறு சிறு உதவிகளை செய்துகொண்டிருந்தார் கிளினிக்கின் உரிமையாளர் மருத்துவர் ஜான் ஜோஜி.

மருத்துவர் ஜான் ஜோஜி

சாதாரண நாட்களில் அந்த கைகள் சிகிச்சை அளிப்பதற்காக மட்டுமே கத்தியை பிடித்திருக்கும் என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து விட்டது. இருப்பினும் தற்போது வேறு வழியில்லாமல் சகதியை அள்ளிக்கொண்டிருந்தது. அவரிடம் கேட்டதும் சொல்ல ஆரம்பித்தார்.

“1988 -இல் ஆரம்பிக்கப்பட்டது இந்த மருத்துவமனை. தொடக்கத்தில் ஒரு சிறிய ஆஸ்பெஸ்டாஸ் சீட் போட்ட கட்டிடத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து இப்பகுதியில் வாழும் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதன்  மூலம் அவர்களின் நம்பிக்கையையும் பெற்று… டூ வீலர் பார்கிங், கார் பார்கிங் என்று நோயாளிகளின் வாகனங்களுக்கு இடம் விட்டு இந்த மருத்துவமனையை உருவாக்கினேன்.

படிப்படியாக முன்னேறி  இந்த உயர்ந்த கட்டிடத்திற்கு வந்தேன்.  கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் சில புதிய தொழில்நுட்ப கருவிகளையும்  வாங்கி போட்டிருந்தேன். இதுபோன்ற காட்டாற்று வெள்ளம் வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய இத்தனை ஆண்டுகள் உழைப்பையும் இந்த மழை வாரி சுருட்டிக் கொண்டு சென்று விட்டது.

மழை வரும் என்று எச்சரித்தவுடன் வீட்டிற்கு முன்னுரிமை கொடுத்து எல்லா பொருட்களையும் எடுத்து பத்திரப்படுத்தினோம். அதே சமயம் இந்த இடத்தில் இவ்வளவு தண்ணீர் வரும் என்று எதிர்பார்க்கவில்லை என்பதால் பெரிய அளவில் மருத்துவமனை மீது கவனம் செலுத்தவில்லை. அதன் விளைவு எல்லா பொருட்களும் நாசமாகி விட்டது. குறைந்தது பத்தடி உயரத்திற்கு இப்பகுதியில் வெள்ள நீர் ஓடியது.

எனக்கு ஏற்பட்ட இழப்பை நான் கணக்கிட விரும்பவில்லை… அப்படியே விரும்பினாலும் என்னால் கணிக்க இயலாது….. இனி நான் திரும்ப பின்னோக்கி செல்ல வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் குறைந்த பட்ச உபகரணங்களைக் கொண்டு சிறிய அளவில் மருத்துவ மனையை மீண்டும் நடத்த உள்ளேன்.” என்று சொல்லிக் கொண்டே அடுத்த வேலையைப் பார்க்க செல்கிறார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

*****

தே பகுதியில் சற்று தொலைவில் இருக்கும் ஆட்டிங்கரா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் வாசலில் குப்பை கிடந்குபோல் கொட்டி கிடந்த சேறு படிந்த பொருட்களில் துழாவிக் கொண்டிருந்தனர் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள்.

அனைத்தும் வீட்டு உபயோகப் பொருட்கள் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின், மிக்சி, கிரைண்டர், கட்டில் , பீரோ, மெத்தை போன்ற பர்னிச்சர் மற்றும்  எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள். அதில் எதானும் தேறாதா? சேதமடையாமல் இருக்கும் பொருட்களை எடுத்து மீண்டும் உபயோகிக்கலாம் என்று தேடிக்கொண்டிருந்தனர். அதில் நல்ல பொருட்கள் எவ்வளவு உள்ளது என்று ஒருவர் கணக்கெடுத்துக் கொண்டிருந்தார்.

உள்ளே பளிங்குக் கல் பதிக்கப்பட்ட தரையை இரண்டு பேர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். உள்ளேயும் வெளியேயும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆபர்கள் அறிவித்து தொங்க விடப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள் நுகர்வோரை சுண்டி இழுக்கும் விதமாக காட்சி அளித்துக்கொண்டிருந்தது. அவர்களை எல்லாம் வேலை வாங்கியபடி அதன் உரிமையாளர் ஸ்ரீகுமார்  நின்றிருந்தார்.

ஸ்ரீகுமார்

அவரிடம் கேட்டபோது “ என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதனை எல்லாம் எப்படி ஈடுகட்டுவது என்றும் தெரியவில்லை. எல்லா பொருட்களுக்கும் இன்சுரன்ஸ் கட்டி இருந்தாலும் கம்பனியில் இருந்து வந்து பார்த்து விட்டு கணக்கெடுத்து மட்டும் சென்றுள்ளனர்.

அவர்களோ… இந்த எல்லா பொருட்களுக்கும் எவ்வாறு இன்சுரன்ஸ் கிளியர் செய்வது என்று தெரியவில்லை. நாங்களும் இதுபோல் பாதிப்பை எதிர்கொண்டது இல்லை என்று சொல்லி விட்டு சென்றார்கள். அவர்கள் சொல்வதைப் பார்த்தல் பாதி பணம் கூட கிடைக்காது என்றுதான் தோன்றுகிறது.

வெள்ளத்தால் நான் தற்போது இழந்துள்ள பொருட்களின் மதிப்பு மட்டும்  ஒரு கோடி இருக்கும். அரசாங்கம் வீடுகளுக்கு மட்டும்தான் இழப்பீடு கொடுப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். தொழில் நிறுவனங்களுக்கு அப்படி எதுவும் சொல்லவில்லை. இது ஒரு பெரும் வருத்தமாக இருக்கிறது” என்கிறார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கிட்டத்தட்ட கொழஞ்சேரியில் உள்ள சிறு கடை முதல் பெரிய கடைகள் வரை இதே பாதிப்புக்கு உள்ளாகித்தான் இருந்தன. இதில் கொடுமை என்னவென்றால் அவர்கள் கடைகளுக்கு மட்டும் பாதிப்பு இல்லை. வீட்டில் இருந்த பொருட்களையும் இழந்துள்ளார்கள் என்பது  கூடுதல் துயரம்!

  • வினவு களச்செய்தியாளர்கள் கொழஞ்சேரி, பத்தினம் திட்டா மாவட்டம், கேரளா.

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் முசுலீம்களுக்கு வீடில்லை

ஸ்லாமாஃபோபியா உலகெங்கிலும் பரவிவரும் தொற்றுநோய். இந்தத் தொற்று மேற்குவங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் நீண்ட வருடங்களுக்கு முன்பாகவே பரவிக் கிடக்கிறது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., போன்ற இந்துத்துவ சக்திகளின் சமீபத்திய வளர்ச்சி அந்த மாநிலத்தில் வேகமாகும் பின்னணியுடன் மாநில தலைநகரில் ஒரு முசுலீம் தங்குவதற்கு இடமில்லை என்கிற வெறுப்புக்கும் மறுப்புக்கும் உள்ள தொடர்பை இந்தக் கட்டுரை சொல்கிறது.

ஜாவத்பூர் பல்கலைக்கழகத்தில்  படிப்பைத் தொடங்கிய 2011-ஆம் ஆண்டிலிருந்து கொல்கத்தா வந்துசெல்கிறார் லபானி ஜாங்கி. ஒவ்வொரு நாளும் வரவும் போகவும் என எட்டு மணி நேரம் கொல்கத்தாவுக்கும் அவருடைய சொந்த ஊருக்கும் பயணித்த லபானி, மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒரு மெஸ்ஸில் நாள் வாடகையில் சேர்கிறார். அவருடைய மதம் காரணமாக இடம் மறுக்கப்பட்டதால், லபானி என்ற முதல் பெயரை மட்டும் வைத்து மெஸ்ஸில் சேர்கிறார். தன்னுடைய பல்கலைக்கழகத்தில் படிக்கும் சி.பி.ஐ. (எம்) கட்சியைச் சார்ந்த அமைப்புகளில் உள்ளவர்கள் அங்கிருந்ததால் பாதுகாப்பாய் உணர்கிறார்.

முதல் நாள் இரவில், மெஸ்ஸில் தங்கியிருக்கும் அனைவரும் ஒன்றுகூடி ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள். அப்போது லபானியின் மதத்தை அவர்கள் கண்டுபிடித்து விடுகிறார்கள்.

கொல்கத்தாவின் வீதி…

லபானி அந்த நிமிடத்தை இப்படிச் சொல்கிறார், “அடுத்த நிமிடமே, அவர்கள் திடுக்கிட்டு, கண்களை அகல விரித்தார்கள். அவர்கள் அனைவரும் பயந்திருந்தது தெரிந்தது”. அதில் ஒருவர் மெஸ்ஸின் உரிமையாளர் அறையின் கதவைத் தட்டி, ஏன் ஒரு முசுலீமுக்கு மெஸ்ஸில் இடம் கொடுத்தீர்கள் என கேட்கிறார். ஒவ்வொரு நாளும் அறையில் தன்னுடன் தங்கிருந்த பெண், ஒரு முசுலீமுடன் தங்க நேர்ந்ததை நினைத்து அழுதுகொண்டே தூங்குவார் என சொல்லும் லபானி தற்போது சமூக அறிவியல் ஆய்வாளராக உள்ளார்.“நான் இப்போது ஒரு புதிய இடத்தைத் தேட வேண்டும். மனதளவில் ஏற்பட்டிருக்கும் இந்த வலி கனக்கச் செய்கிறது. என்ன செய்யப்போகிறேன் என தெரியவில்லை” என்கிறார் லபானி.

ஃப்டாப் ஆலமும் அவருடைய மூன்று நண்பர்களும் இதேபோன்ற அனுபவத்தை இந்த நகரித்தில் பெற்றிருக்கிறார்கள். மருத்துவர்களான இவர்கள் கொல்கத்தாவில் உள்ள குத்கட் பகுதியில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்தனர். இடத்தின்  உரிமையாளருக்கு ஒரு பிரச்னையும் இல்லை; ஆனால் பக்கத்தில் இருந்த பார்ப்பனருக்குத்தான் இவர்கள் குடியேறியதில் ஏகப்பட்ட பிரச்சினை. முதலில், இவர்கள் நால்வரும் திருமணமாகாதவர்களாக இருந்தது பிரச்சினையாக இருந்தது. பின், இவர்களுடைய மதத்தை கண்டுபிடித்தபோது, அவர் நேருக்கு நேராகவே ‘தீவிரவாதிகள்’ என அழைக்க ஆரம்பித்தார். அவர்களைக் காணவரும் நண்பர்களிடம் விசிட்டிங் கார்டு கொடுக்கும்படி வற்புறுத்தியதோடு, கொடுக்கவில்லை என்றால் காவல்நிலையத்தில் புகார் செய்வேன் என்றும் மிரட்டியுள்ளார். வீடு கிடைப்பதில் தங்களுக்குள்ள பிரச்சினையை ஆலம் முகநூலில் எழுதுகிறார். அப்போது ‘சன்கதி அபிஜான்’ என்ற அமைப்பைச் சேர்ந்த சமீருல் இஸ்லாம் இந்த விஷயத்தை கேள்விப்படுகிறார்.

ஒருவர் மெஸ்ஸின் உரிமையாளர் அறையின் கதவைத் தட்டி, ஏன் ஒரு முசுலீமுக்கு மெஸ்ஸில் இடம் கொடுத்தீர்கள் என கேட்கிறார். ஒவ்வொரு நாளும் அறையில் தன்னுடன் தங்கிருந்த பெண், ஒரு முசுலீமுடன் தங்க நேர்ந்ததை நினைத்து அழுதுகொண்டே தூங்குவார்.

‘சன்கதி அபிஜான்’ சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடும் ஓர் இயக்கம்; குறிப்பாக மதத்தை முன்வைத்து உறைவிடங்கள் மறுக்கப்படுவதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது இந்த இயக்கம். சமீருல்-உம் இத்தகைய ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர். சி.பி.ஐ.(எம்) ஆட்சியிலிருந்த 2006-ஆம் ஆண்டு கொல்கத்தா வந்த சமீருல், “இந்த நகரத்தில் வாழும் முசுலீம்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று என்றாகிவிட்டது. ஆனால், இது எப்போதும் இயல்பான விஷயமாக ஆகிவிடக்கூடாது” என்கிறார்.

அஃப்டாப் ஆலம்.

பா.ஜ.க கால்பதிக்காத மாநிலங்களில் ஒன்று மேற்குவங்கம். முசுலீம்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக இப்போது ஆண்டு கொண்டிருக்கும் திரிணாமூல் காங்கிரஸை இந்துக்கள் குற்றம் சாட்டுவதுண்டு. மாநில முதல்வர் மமதா பானர்ஜி, தன் உரையைத் தொடங்கும் முன் ‘இன்ஷா அல்லா’ என சொல்வதிலிருந்து, கைகளை ஏந்தியபடி இறைவணக்கம் செய்வது, சர்ச்சைகளை ஏற்படுத்திய முசுலீம் போதகர்களுக்கு நிதி உதவி அளித்தது வரை இவரின் முசுலீம் ஆதரவு செயல்பாடு வெளிப்பட்டது. 27% வாக்கு வங்கியுடன் நாட்டில் அதிக முசுலீம்கள் உள்ள மாநிலங்களில் ஒன்றாக மேற்கு வங்கம் இருப்பதே மமதாவின் ஆதரவு பின்னணி.

“திரிணாமூல் காங்கிரஸ் அரசியலுக்காக எடுக்கும் ஆதரவுநிலை சுத்த அயோக்கியத்தனம்” என்கிறார் சன்கதி அபிஜானின் உறுப்பினர்கஸ்தூரி பாசு. “திரிணாமூல் ஒரு வெகுஜன கட்சி. வெகுஜனத்தின் மதிப்பை பெறுவதற்காகவே அது உழைக்கிறது. மேற்கு வங்கத்தில் முசுலீம்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது, திரிணாமூல் ஆட்சிக்கு வந்த பிறகும்கூட அது மாறவில்லை” என்கிறார்.

2016-ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், சில அமைப்புகளுடன் இணைந்து மேற்கு வங்க முசுலீம்களின் சமூக-பொருளாதார நிலைகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மேற்க வங்க முசுலீம்கள் மிக மிக ஏழ்மை நிலையிலும் அவர்களுடைய வாழ்நிலை சீரழிந்த நிலையிலும் இருப்பதை சுட்டிக்காட்டியது அந்த அறிக்கை. மேலும், உடனடியாக இந்த நிலையை சீரமைக்க வேண்டிய தேவையுள்ளதையும் அந்த அறிக்கை வெளியிட்டபோது அமர்த்தியா சென் வலியுறுத்திருந்தார்.

இயற்பியல் பி.எச்டி மாணவரான நூர் அமீன்,  “திரிணாமூல் காங்கிரஸ் அல்லது சிபிஐ (எம்) இரண்டுமே முசுலீம்கள் எதிர்க்கொள்ளும் இந்தப் பிரச்சினையை பேசவில்லை. இந்த இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் இந்த நிலையே நீடித்தது. அதிகரித்து வரும் பா.ஜ.க ஆதரவு முசுலீம்களுக்கு எதிரான உணர்வுகளை மாநிலத்தில் எரியூட்டிக்கொண்டிருக்கிறது” என்கிறார்.  முசுலீம்களுக்கு எதிராக வெளிப்படையான பேச்சுக்களை இப்போது அதிகமாக கேட்க முடிகிறது என்கிற நூர், பா.ஜ.க-வினர் முசுலீம்களை அழித்தொழிப்பார்கள் என மக்கள் பேசிக்கொள்வதாகவும் சொல்கிறார்.

கொல்கத்தா, லால்பஜார் தெருவிலுள்ள குடியிருப்பு வளாகம்.

“முசுலீம்கள் அதிகம் வசிக்கும் அன்வர்ஷா சாலை பகுதிகளில் மக்கள் இப்படி விவாதித்துக் கொள்வதை கேட்டிருக்கிறோம். ‘முசுலீம் போதகரின் குழந்தைகள்’ என கொச்சைப்படுத்தி சொல்வதோடு, அவர்களுடைய ரத்தம் கொதிப்பதாகவும் அதை பா.ஜ.க தணிக்கும் என்றும் பேசிக் கொள்வார்கள். என்னால் அதை எதிர்க்கக்கூட முடியாது. அப்படி நான் எதிர்த்தால், எனக்கு என்ன ஆகுமென்று தெரியாது. அவர்கள் எதுவும் செய்யாமல் இருக்கலாம். ஆனால், அந்த பயம் இருக்கிறதல்லவா? என்னுடைய பெற்றோர் பொது இடங்களில் கவனமாக இருக்கும்படி எப்போதும் எச்சரிப்பார்கள்” என்கிறார் நூர்.

பா.ஜ.க திரிபுராவில் ஆட்சியைப் பிடித்தபோது, பக்கத்துவீட்டுக்காரர் ஒருவர் தன்னுடைய வீட்டு உரிமையாளரிடம் பா.ஜ.க இங்கே வெற்றிபெற வேண்டும், ரோஹிங்கியா முசுலீம்கள் துரத்தப்பட்டதுபோல இங்கிருக்கும் முசுலீம்களை துரத்த வேண்டும் என சொன்னதாகச் சொல்கிறார் லபானி ஜாங்கி. நாட்டின் வளர்ச்சி கீழிறங்கி உள்ளதற்கு எங்கும் நிறைந்திருக்கும் முசுலீம்களே காரணம் எனவும் அவர் சொல்லியிருக்கிறார்.

“சில நாட்களுக்கு முன் லால்கோலா ரயிலில் கிட்டத்தட்ட அடித்து கொல்லப்படும் நிலையை ஒத்த அனுபவத்தைப் பெற்றேன். உண்மையில் அப்படித்தான் நடந்தது” அழுத்தமான குரலில் சொல்லும் லபானி, “அப்போதிலிருந்து சில மணிநேரங்களுக்கு ஒருமுறை என் சகோதரனை அழைத்து பேசிவிடுகிறேன். அவர் கொல்கத்தாவில் இருக்கிறாரா? ரயிலில் இருக்கிறாரா? என அறிந்துகொள்ளவே அப்படிச் செய்கிறேன். ஏனெனில் ரயிலில் எனக்கு நடந்த அனுபவம், எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எது வேண்டுமானாலும் எங்களுக்கு நிகழலாம் என்கிற பயத்தைக் கொடுத்திருக்கிறது”.

பா.ஜ.க திரிபுராவில் ஆட்சியைப் பிடித்தபோது, பக்கத்துவீட்டுக்காரர் ஒருவர் தன்னுடைய வீட்டு உரிமையாளரிடம் பா.ஜ.க இங்கே வெற்றிபெற வேண்டும், ரோஹிங்கியா முசுலீம்கள் துரத்தப்பட்டதுபோல இங்கிருக்கும் முசுலீம்களை துரத்த வேண்டும் என சொன்னதாகச் சொல்கிறார் லபானி ஜாங்கி.

பா.ஜ.க-வின் செயல், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக உள்ளது என்கிறார் கஸ்தூரி பாசு. “வங்காளத்திற்கென்று தனிப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. பிரிவினையின்போது ஏற்பட்ட வலியை அது பெற்றிருக்கிறது.  அதிகமாக அகதிகள் வருவதை எல்லையோரமாக உள்ள மக்கள் பிரச்சினையாக பார்க்கிறார்கள். இந்தப் பிரச்சினையை கையாள ஏராளமான வழிமுறைகள் உள்ளன. ஆனால், பா.ஜ.க இருக்கும் அமைப்புகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி சமூகத்தில் பிளவை ஏற்படுத்தப் பார்க்கிறது” என்கிறார் கஸ்தூரி.

விழாக்களில் மதத்தை நுழைப்பதன் வாயிலாக, புதிய புதிய விழாக்களை அறிமுகப்படுத்துவதன் மூலமாக பா.ஜ.க பலனடையப் பார்க்கிறது. முன்னதாக ராம நவமி ஒரு சில இடங்களில் கொண்டாடப்பட்டது. இப்போது மாநிலம் முழுக்க ராம நவமி கொண்டாட்டங்களை பா.ஜ.க நடத்துகிறது, இந்த விழாக்களில் ஆயுதம் ஏந்தியும் ஊர்வலங்கள் நடத்தியும் கலவர முயற்சிகள் செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு நடந்த ஊர்வலத்தில் மூவர் கொல்லப்பட்டனர் என்கிற தகவலை வேதனையோடு சொல்கிறார் கஸ்தூரி.

“அவர்கள் வேண்டுமென்றே முசுலீம்கள் வசிக்கும் பாதையில் ஊர்வலத்தை நடத்துகிறார்கள். ஒரேஒரு எதிர்வினை வந்தாலும் அதை வைத்து, பெரும் அரசியல் பிழைப்பை பெற்றுவிடும் பா.ஜ.க. உடனே, மேற்கு வங்கத்தில் இந்துக்கள் அச்சுறுத்தப்படுவார்கள் என சொல்வார்கள்” என்கிறார். பா.ஜ.க-வின் செயல்பாடுகளுக்கு எதிர்வினையாக திரிணாமூல் காங்கிரஸ் ராமநவமி ஊர்வலங்களை நடத்துவதோடு, அனுமன் ஜெயந்தியையும் நடத்துகிறது. காரணம் இந்துக்களின் வாக்கு வங்கி என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

“தங்களுடைய வசிப்பிடத்தில் வேற்று மதத்தினரை அனுமதிக்காத மக்களிடம் இத்தகைய அரசியல் சதிகளையெல்லாம் சொல்ல முடியுமா? மதச்சார்பற்ற தன்மைக்காக அவர்களால் எப்படி போராட முடியும்? அவர்கள் ஏன் போராடப் போகிறார்கள்? இந்துக்கள் மட்டுமே உள்ள வசிப்பிடத்தை விரும்புவதைப் போல, இந்து தேசத்தைத்தான் அவர்கள் விரும்புவார்கள்” – ஆதங்கத்தோடு சொல்கிறார் லபானி.

சன்கதி அபிஜான் அமைப்பின் சார்பில் ”கதவைத் திற” என்ற முழக்கத்துடன் நடத்தப்பட்ட கூட்டமொன்றில் பேசும், தன்வி சுல்தானா.

நில உரிமையாளர்களையும் வீட்டு உரிமையாளர்களையும் மட்டும் லபானி குறைசொல்லவில்லை. தன்னுடன் இருக்கும் பல்கலைக்கழக நண்பர்களையும் இந்தப் பட்டியலில் சேர்க்கிறார். அரசியல் செயல்பாட்டாளராக உள்ள இவர், தன்னுடன் உள்ள ‘தோழர்களி’டம் ஒவ்வொருவருடமும் மாணவர்கள் சந்திக்கும் இந்த வீட்டுப் பிரச்சினையை ஒரு இயக்கமாக முன்னெடுக்க வலியுறுத்தி வருகிறார், ஆனால் அது நடக்கவில்லை. பதிலாக, தன்னுடைய சொந்த பிரச்சினையை அடையாள அரசியல் ஆதாயம் பெற பயன்படுத்துவதாக அவர்களால் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார். ஆனால் இதே கதைகளை நடுத்தர வர்க்க பின்னணியுள்ள இந்து அடையாளத்துடன் எழுதும் பத்திரிகையாளர்கள் சொல்லும்போது, இந்த குற்றச்சாட்டை அவர்கள் வைப்பதில்லை என்கிறார்.

சன்கதி அபிஜான் மட்டுமே தற்போதைக்கு இருக்கும் நம்பிக்கை கீற்று;  நகரத்துக்கு வரும் இளைஞர்கள் இந்த அமைப்பின் உதவியோடு எதிர்த்து நின்று போராடுவார்கள் என்கிறார் லபானி.

சன்கதி அபிஜான், மதத்தை முன்வைத்து வீடு மறுக்கும் இடங்களுக்குச் சென்று அவர்களுக்கு விளக்கம் கொடுக்கிறது. ஆரம்பத்தில் உரிமையாளர்கள் தயக்கம் காட்டினாலும் இது பலனளிப்பதாக தெரிவிக்கிறார்கள். பெரும்பான்மையினர் வசிக்கும் வாழிடச் சூழலில் முசுலீம் வாடகைதாரர்களுக்கு இது நல்லதொரு சூழலை உருவாக்குகிறது. அஃப்டாப் ஆலமும் அவருடைய நண்பர்களும் இப்படித்தான் குட்கட் பகுதியில் இடம் கிடைத்து வசிக்கிறார்கள்.

மதத்தின் பெயரால் பாகுபாடு காட்டும் உரிமையாளரை தண்டிக்க சட்டம் எதுவுமில்லை. இது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பத்தைச் சார்ந்தது. ஆனால் இந்திய அரசியலமைப்பில் இது ஒரு இருண்ட பக்கமாகவே உள்ளது. எனவேதான், நாங்கள் குறுகியகால தீர்வுகளை நோக்கிச் செல்கிறோம். இத்தகைய சம்பவங்கள் குறித்த விவரங்களையும் சேகரிக்கிறோம். நீண்டகால தீர்வாக, மத பாகுபாட்டுக்கெதிரான சட்டத் தீர்வை நோக்கி செல்லவிருக்கிறோம் என்கிற இந்த அமைப்பின் கஸ்தூரி பாசு, “பெரும் திரளாக உள்ள எளிய வங்காள மக்களுக்கு மிகப்பெரிய சமூக பொறுப்பு இருக்கிறது. நாம் செயல்பட ஆரம்பித்தால், இது நின்றுவிடும்” என்கிறார்.

நன்றி:த வயரில் சூர்யாதாபா முகர்ஜி எழுதிய கட்டுரை
தமிழாக்கம்: கலைமதி.

அமித்ஷாவை அழைத்திருக்கும் தி.மு.க குறித்து என்ன கருதுகிறீர்கள் ? கருத்துக் கணிப்பு

“கலைஞரின் நினைவேந்தலுக்கு அமித்ஷாவை அழைத்தது குறித்த விமர்சனங்கள் கடுமையாக இருக்கின்றன. அழைத்தது அமித்ஷாவை அல்ல, பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவரை.

விசிக தலைவர் திருமாவளவனின் வார்த்தைகளில் சொல்வதென்றால் “எதிரிகளை ஜனநாயகப்படுத்துவதில்தான் தொடங்குகிறது இலக்கு நோக்கிய வெற்றி ”

என்கிறார், நியூஸ் 7 நெல்சன் சேவியர்.

தத்துவஞானி சேவியரின் மேற்கோளில் இரண்டு விசயங்கள் இருக்கின்றன. ஒன்று அமித்ஷா வேறு, பாரதிய ஜனதா வேறு. நீங்கள் அமித்ஷாவை வெறுத்தாலும் பாரதிய ஜனதா எனும் ஆளும் கட்சியை அங்கீகரித்தாக வேண்டும். இரண்டாவதில், பாரதிய ஜனதாவோ, அமித்ஷாவோ உங்களது எதிரிகளே என்றாலும் அவர்களை திருத்துவது அதாவது ஜனநாயகப்படுத்துவது உங்களது இலட்சிய பயணத்தின் தொடக்கம்.

காரியவாதத்திற்கு பொருத்தமான வார்த்தைகள் அதாவது நியாயப்படுத்தும் விளக்கங்கள் கிடைக்காத போது கைப்பிள்ளையே களத்தில் இறங்கி “கையப் பிடிச்சி இழுத்தியா – இழுப்பதும் கையே, இழுக்கப்படுவதும் கையே, இரண்டுமே கைகள்தான், இனி இருக்கப்போவதும் இணைக்கப்போவதும் ஒரு ஜோடி கை அல்ல, ஒராயிரம் இல்லையில்லை, பலப்பல கோடி ஜோடி கைகளே! என்பதாக புது தத்துவம் கசிகிறது.

கட்சி வேறு, நபர் வேறு என்பதை மூளை வேறு கிட்னி வேறு என்று கூட பொருள் கொள்ளலாம். இல்லையில்லை இரண்டுமே ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது என்றால் பழமொழியை அனுபவிக்கணும், ஆராயக் கூடாது எனும் ஆழ்வார்பேட்டையின் சித்திரத்தில் கிரேஸ் மோகன் அருளிய நவீன கவிதையைக் கூட ஆதாரம் காட்டலாம்.

நேல்சன் சேவியரின் “அண்ணன் வேறு அமைப்பு வேறு” கவிதையை இன்னும் இழுத்தால்…

அழைத்தது சங்கரராமன் புகழ் ஜயேந்திரன் அல்ல, சங்கர மடத்தின் தலைவரை
அழைத்தது கோகுல் புகழ் யுவராஜை அல்ல, கொங்கு இளைஞர் அணி தலைவரை
அழைத்தது எச்.ராஜாவை அல்ல, தேசியக் கட்சியின் செயலர் ஒருவரை
அழைத்தது ஹிட்லரை அல்ல, நாசிக் கட்சியின் தலைவரை
அழைத்தது நிர்மலாதேவியை அல்ல, கல்லூரி பேராசிரியர் ஒருவரை

இப்படியாக அழைத்துப் பார்த்தால் இறுதியில் ஊழல் எதிர்ப்பு மற்றும் சுற்றுச் சூழல் கூட்டம் ஒன்றிற்கு நீங்கள் அழைத்தது வைகுண்டராஜனை அல்ல, தாது மணல் விவி மினரல்ஸ் ஆலை அதிபர் மற்றும் நியூஸ் 7 தமிழ் உடமையாளரை…….

எதிரியை ஜனநாயகப்படுத்துவதில் துவங்குகிறது நம் இலட்சியப் பயணத்தின் வெற்றி எனும் தத்துவ முத்தை எப்படி விளங்கிக் கொள்வது?

இர்ஷத் ஜஹான் போலி மோதல் படுகொலையின் குற்றவாளிகளை தண்டிப்பதெல்லாம் ஜனநாயகத்தில் வராதா? தபோல்கர்,  கௌரி லங்கேஷ் இன்னபிற ஜனநாயகவாதிகளைக் கொன்றவர்களை நியாயப்படுத்தி கொலைகாரர்களின் பின் நிற்கும் இயக்கங்கள், கட்சியினர், பிரதமரெல்லாம் எந்த ஊர் ஜனநாயகத்தில் வருகிறார்கள்?

ஜனநாயகத்தின் பாதுகாப்போடு துரோகம், சந்தர்ப்பவாதம், காரியவாதம், பிற்போக்குத்தனம் போன்றவற்றை ஒருவரோ ஒரு கட்சியோ செய்தால் மக்களிடையே அவர்களை அம்பலப்படுத்துவர்களா இல்லை இதுதான் இலட்சிய ஜனநாயகம் என்பீர்களா?

ஆளுக்கொரு வாக்கு என்பது கூட்டுறவு சங்கத் தேர்தலின் ஜனநாயகம், பங்குக்கொரு வாக்கு என்பது கம்பெனிகளின் ஜனநாயகம். எனில் ரிலையன்ஸ் அம்பானியும், தஞ்சாவூர் கூட்டுறவு சங்க விவசாயத் தலைவரும் சரிக்கு சமமான ஜனநாயகவாதிகளா?

நெல்சன் சேவியரின் கல்லூரித் தோழரும், தி.மு.க-வின் பேச்சாளரும் வழக்கறிஞருமான தமிழன் பிரசன்னா திராவிடர் கழகத்தின் Prince Ennares Periyar எழுதிய பதிவை வழிமொழிகிறார். இதன் மூலம் பிரசன்னா என்ன கூற விரும்புகிறார்?

#அமித்ஷா_வருகை – வெகு இயல்பானது. நிறைய யோசிக்கவோ, வருந்தவோ அவசியமில்லை. இறப்பின் பின்னான நிகழ்வுகள் வழக்கமான அரசியல் பார்வையின்றி பார்க்கப்படவேண்டியவை. அப்படித் தான் நாம் பழகியிருக்கிறோம். எதிரியே ஆயினும் நாம் நடந்துகொள்ளும் விதம் அது தான். go back modi, go back amitsha போட்டு விரட்டிய நாம் தான் கலைஞர் புகழைக் காண, திராவிட இயக்கத் தலைவரின் புகழைக் காண அழைக்கிறோம். வந்து பார்த்துச் செல்லட்டும்…..

அவர்களின் வருகையால் மேடை தீட்டுப்பட்டுவிடாது. அதீத சுத்தவான்களாக நம்மைக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. பிறரிடம் நாம் எதிர்பார்க்கும் அதே நாகரிகத்தை நாம் முன்னெடுப்பதே நமது பண்புக்குச் சான்று. இந்தியாவை ஆளும் கட்சி என்னும் வகையில், அவர்களுக்கு அழைப்பு விடுப்பதும், அதற்கு யார் வரலாம் என்று அவர்கள் முடிவெடுக்கிறார்களோ, அவர்களை ஏற்று வரவேற்பதும் அத்தகைய பண்பின் அடிப்படையிலானதே!

தீட்டு, சுத்தம் போன்றவை பார்ப்பனியம் உருவாக்கிய அநாகரீகங்கள். அந்த அநாகரிகங்களது அரசியல் அதிகாரத்தின் சின்னமான பா.ஜ.கவை பார்க்காமல் இருப்பதும், அழைக்காமல் இருப்பதும் அதீத சுத்தம் பார்க்கும் மேட்டிமைத்தனமாம். தம்பி வில்சனை அண்ணன் பிரசன்னா அட்சரம் பிசகாமல் பின் தொடர்கிறார்.

அதன்படி கௌரி லங்கேஷ் கொலைகாரர்களையோ, பெஹ்லுகான் கொலைகார்களையோ கொலைகாரர்களை கருத்து – களத்தில் ஆதரிக்கும் கயவர்களையோ அழைத்து மேடையேற்றினால் ஒன்றும் குடி முழுகிவிடாது. மட்டுமல்ல, அந்தக் கயவர்களுக்கு கலைஞரின் “நெஞ்சுக்கு நீதி” கதையை போட்டுக் காட்டி அசத்துகிறார்களாம்!

அமித்ஷா அழைப்பை ஒட்டி தி.மு.க. உடன் பிறப்புகளின் விளக்கங்கள் இப்படித்தான் இருக்கின்றன. தேர்தல் அரசியலின் வரம்பு இதுதான் என்று சமாதானப்படுத்திக் கொள்பவர்களும் தேர்தல் அரசியலை எதோ ஒரு ‘ஒழுக்கம்’ சார்ந்து எதிர்ப்பவர்களும் இந்தப் பிரச்சினை மூலமாக ஒன்றை அறிவது சாலச்சிறந்தது. தேர்தல் அரசியல் என்பது ஏதோ நல்லதை தெரிவு செய்யும் சுத்தபத்தமான ஜனநாயக நெய் அல்ல! இந்தியாவைப் பொறுத்தவரை அது பார்ப்பனக் கொழுப்பை மணமாகவும், ஆளும் வர்க்கத்தின் ஆட்சியை நீட்டிக்கும் ‘காயகல்பமாகவும்’ இருக்கிறது.

அதாவது ஆளும் வர்க்கத்தின் இருப்பை முற்றிலும் எதிர்ப்போரை சற்று தளர்வுறச் செய்வதற்குத்தான் தேர்தல் அரசியலே அன்றி அதன் மூலம் நமக்கு சமத்துவமோ, நீதியோ கிடைப்பதில்லை. சொல்லப் போனால் நீதி கிடைப்பதான மாயையை உருவாக்குவதே அதன் மூலம். மட்டுமல்ல இது  போலி ஜனநாயகமும் கூட.

ஆனால் இந்த போலி ஜனநாயக அமைப்பு பலரையும் தின்று சீரணித்து விட்டது. பாபர் மசூதி இடிப்பு, குஜராத் 2002 இனப்படுகொலை, மாட்டுக்கறி படுகொலைகள் இதையே எத்தனை காலம் சொல்வீர்கள்? என்று கொஞ்ச நஞ்சம் முற்போக்கு பேசியவர்கள் சிலர் கூட இன்று பாரதிய ஜனதாவை ‘திருத்தும்’ வேலையில் இறங்கியிருக்கிறார்கள். இப்படித்தான் என்ன இருந்தாலும் அது ஆளும் கட்சி, அரசு, பெரிய கட்சி, தேசியக் கட்சி என்ற சமாளிப்புகள்……

தமிழகத்தில் மோடி ஆட்சிக்கு பிறகு பாரதிய ஜனதா ஒரு மாபெரும் கட்சி என்பதாக அரசு எந்திரம், ஊடகங்கள், மூலம் பொதுப்புத்தியில் நிலை நாட்டப்பட்டு வருகிறது. இன்று என்ன தலையங்கம் எழுத வேண்டும், என்ன விவாதம் நடைபெற வேண்டும், யாரெல்லாம் அதில் பங்கேற்க வேண்டும் வரை அனைத்தையும் கமலாலயமே தீர்மானிக்கிறது.

கல்வியில் தமிழ் இல்லை, நீட்டில் தமிழ் மாணவர்களுக்கு இடமில்லை, நீதிமன்றத்தில் தமிழ் இல்லை, கோவில் கருவறைகளில் சூத்திர பஞ்சமர்களுக்கு இடமில்லை, தனியார்மயம் காரணமாக அரசு வேலையே இல்லை எனும் இட ஒதுக்கீடும் இல்லை………. இந்த இல்லையில்லை எனும் முழு அம்மண நிலையில் தி.மு.க உடன்பிறப்புகள் எந்த இலட்சியப் பயணத்தை செய்யப் போகிறார்கள்? அமித்ஷாவை மேடையேற்றினால் தவறில்லை என்றால் திராவிட இயக்கத்தின் சமூகநீதியோ சமத்துவமோ இனி பெரிய அளவுக்கு சாத்தியமில்லை என்று ஒத்துக் கொள்ளலாமே?

கலைஞருக்கு மெரினாவில் இடம் வாங்கித் தந்தது ஒட்டு மொத்த தமிழ் மக்களின் சுயமரியாதையும் அது மூட்டிய கோபக் கனலும்தான். நீதிமன்றம் அதை மறுத்திருந்தால் கூட மக்கள் மன்றம் அதை மீட்டிருக்கும் நிலை இருந்ததா இல்லையா?

தி.மு.க-வின் அமித்ஷா டிப்ளமசியை பல்வேறு தி.மு.கவினரே கடுமையாக கண்டித்திருக்கிறார்கள். அந்தக் கண்டிப்பு தமிழகத்தின் முற்போக்கு அரசியல் பேசும் மக்களின் பலத்தில் இருந்து எழுகிறது. தமிழகம் இந்துத்துவத்தின் கல்லறை என்பதை சாத்தியப்படுத்த நாம் இன்னமும் அதிகமாய்  போராட வேண்டியிருக்கிறது.

இனி கருத்துக் கணிப்பின் கேள்வி:

அமித்ஷாவை அழைத்திருக்கும் தி.மு.க குறித்து என்ன கருதுகிறீர்கள்?

கடுமையான கண்டனம்
அரசியல் நாகரீகம்
தவறு, பெரிய பிரச்சினையில்லை
தேர்தல் அரசியலில் சகஜம்

ட்விட்டரில் வாக்களிக்க:

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

ஃபேஸ்புக்கில் வாக்களிக்க:

  • வினவு செய்திப் பிரிவு

வேதாரண்யத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் நள்ளிரவில் கைது

டக்குமுறைதான் ! ஜனநாயகமா? என்ற தலைப்பில் வருகிற செப்-08 அன்று திருச்சியில் சிறப்பு மாநாடு ஒன்றை நடத்தவிருக்கிறது, மக்கள் அதிகாரம். கடந்த ஆகஸ்டு 18 அன்று, வேதாரண்யம் கடைவீதியில் இம்மாநாடு நடத்தப்படுவதன் நோக்கத்தை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தும் மாநாட்டு செலவினங்களுக்காக மக்களிடம் நன்கொடையும் திரட்டிக் கொண்டிருந்தனர், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் தோழர்கள்.

அன்று நள்ளிரவு 2 மணிக்கு மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர் தனியரசு வீட்டிற்கு சென்ற வேதாரண்யம் போலீசு இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் எஸ்.ஐ. அன்பழகன் உள்ளிட்ட நான்கு போலீசார் தோழர் தனியரசுவை சட்டவிரோதமான முறையில் கடத்திச் சென்றனர்.

அப்போது, பீரோ உள்ளிட்டு வீடு முழுவதையும் சோதனையிட்டதோடு, மக்களிடம் விநியோகிப்பதற்காக வைத்திருந்த திருச்சி மாநாட்டுப் பிரசுரங்களை அள்ளிச்சென்றனர்.

சாதாரண மக்கள் சட்டப்படியேக்கூட வாழமுடியவில்லை என்பதோடு, அடக்குமுறைதான் ஜனநாயகம் என்பதை தமது நடைமுறையின் மூலம் மீண்டுமொருமுறை நிருபித்திருக்கிறது, வேதாரண்யம் போலீசு.

”தங்களது நடவடிக்கை சட்டவிரோதமானது. எதற்காக தனியரசுவை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?” என்று வழக்கறிஞர்களும், மக்கள் அதிகாரம் தோழர்களும் வேதாரண்யம் போலீசு இன்ஸ்பெக்டரிடம் விசாரித்த போது, தாம் தனியரசுவை கைது செய்யவில்லை என்று திமிராகப் பேசியுள்ளார்.

இதற்குப் பின்னரே, தோழர்கள் தனியரசு மற்றும் வெங்கடேசன் ஆகியோர், ”போலீசுக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் போராடுமாறு மக்களுக்கு அறைகூவல் விடுத்து சுவரொட்டி ஒட்டினார்களாம், தூத்துக்குடி மாடல் வளர்ச்சி என்று பேசி, மக்களிடையே கிளர்ச்சியை உண்டுபன்ன முயற்சித்தார்களாம்.”. ஆகவே, அவர்கள் மீது ஐ.பி.சி. 153-18,  190-18 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தனர், வேதாரண்யம் போலீசார்.

தனியரசுவின் சட்டவிரோதக் கைதை கண்டித்தும் போலீசின் சதியை அம்பலப்படுத்தியும் உடனடியாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

கைது செய்யப்பட்ட தோழர்களை, நாகை நீதிமன்றத்தில் நேர்நிறுத்திய போது, இரண்டு சட்டப்பிரிவுகளில் ஒரு சட்டப்பிரிவின்கீழ் பிணை வழங்க மறுத்துவிட்டது, நீதிமன்றம். நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், இரு தோழர்களும்.

சாதாரண மக்கள் சட்டப்படியேக்கூட வாழமுடியவில்லை என்பதோடு, அடக்குமுறைதான் ஜனநாயகம் என்பதை தமது நடைமுறையின் மூலம் மீண்டுமொருமுறை நிருபித்திருக்கிறது, வேதாரண்யம் போலீசு.

பொய் வழக்குகளுக்கும் அடக்குமுறைக்கும் அஞ்சாமல் எமது போராட்டம் தொடரும்.

மக்கள் அதிகாரம், வேதாரண்யம்.

ஓசூர் : RV அரசுப்பள்ளி மைதானத்தை ஆக்கிரமிக்கும் அமைச்சரை எதிர்த்து மாணவர் போராட்டம் !

சிய விளையாட்டுப் போட்டிகள் துவங்கி விட்டன. இந்திய வீரர்கள் அந்தப் போட்டியில் வென்றார்கள், இந்தப் போட்டியில் பதக்கம் வாங்கினார்கள் என்ற செய்திகளை அரைமணிக்கு ஒருமுறை தொலைக்காட்சி செய்திகளில் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், தாங்கள் தினந்தோறும் விளையாடிக் கொண்டிருக்கும், தங்களின் ஒரு பகுதியாக மாறிவிட்ட மைதானத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே நாட்கணக்கில் போராடிக் கொண்டிருக்கும் மாணவர்களைப் பற்றிக் கவலைப்படவோ, கவனிக்கவோ யாரும் இல்லை. ஓசூர் நகரத்தில் இருக்கும் RV அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள்தான் இப்படிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

R.V. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மைதானம் காமராஜர் காலனியில் அமைந்துள்ளது. இதை ஓசூர் நகராட்சி பராமரித்து வருகிறது. இங்கு பயிலும் மாணவர்களில் பலரும் கைப்பந்து போட்டியில் மாநில, தேசிய அளவில் விளையாடி வருபவர்கள். முறையான பயிற்சி பெற்ற, வசதியான பள்ளிகளின் அணிகளையும் கூட வீழ்த்தும் சிங்கக்குட்டிகளாக இருக்கிறார்கள் இம்மாணவர்கள். ஆனால் முறையான எந்த வசதியும் கிடையாது, காலில் ஷூ இல்லாத மாணவர்களையும், காலையில் வெறும் வயிற்றோடு வருபவர்களையும் கொண்டது இந்த மாணவர் கூட்டம்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள்.

ஓசூர் முழுவதுமே பல மைதானங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் காலை, மாலை இருவேளையும் மாணவர்கள் சீருடையோடு விளையாடிக் கொண்டிருப்பதை நாம் பார்க்க முடியும். ஆனால், அவர்களுக்கு உதவி செய்யவோ, போதுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவோ அரசு முன்வருவதில்லை. இம்மாணவர்களுக்கு, ஓசூர் ஈகிள்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த தாயுமானவன் மற்றும் மாணிக்கவாசகம் ஆகியோருடன், இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களும் ஒருங்கிணைந்து பயிற்சியளித்து வருகிறார்கள். சர்வதேச போட்டியில் பங்கெடுக்க சென்றாலும், தேசியப் போட்டிகளில் கலந்து கொள்ள சென்றாலும் முழுமையான உதவிகளைச் செய்வதில்லை என்ற ஆதங்கம் இப்பகுதி மாணவர்களிடம் இருக்கிறது. திறமைமிக்க மாணவர்கள் இருந்தும் சாதிக்க வழிவகை செய்யாத அரசு இருக்கும் நாட்டில் இருந்து எப்படி ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் வர முடியும்? இதைக் கேள்வி கேட்காமல், கொரியா, ஜப்பான் மாதிரி நாடுகள் எல்லாம் மெடல் வாங்குறான், 130 கோடி பேர் இருக்குற நாட்டுல ஒரு திறமைசாலி கூடவா இல்லை என அங்கலாய்த்துக் கொள்வதில் அர்த்தமென்ன இருக்க முடியும்?

ஓசூரில் இயங்கி வரும் லுக் இந்தியா என்னும் தனியார் நிறுவனம் தனது CSR நிதியில் இருந்து 25 இலட்சத்தை ஒதுக்கி, தரம் வாய்ந்த கைப்பந்து திடல் அமைத்துத் தர முன்வந்துள்ளது. இதற்கான இடத்தை ஒதுக்கித் தருமாறு பள்ளியின் தலைமையாசிரியர் நகராட்சி நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதி, முறையான அனுமதியும் வாங்கியுள்ளார். அதன் அடிப்படையில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன.

பத்திரிகை செய்தி.

இந்த நிலையில், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், ஓசூர் பகுதியைச் சேர்ந்தவருமான பாலகிருஷ்ணா ரெட்டி, தனது பரிவாரங்களுடன் மைதானத்தைப் பார்வையிட வந்துள்ளார். காலியிடத்தைப் பார்த்தாலே அவர்களுக்கு காசாகத்தானே தெரியும். அதே போல மைதானத்தின் ஒரு மூலையில் நடந்து வந்த கைப்பந்து திடலுக்கான கட்டுமான வேலைகள் மந்திரியின் கண்ணை உறுத்தியுள்ளது. இதை யார் கட்டுவது? யார் அனுமதி கொடுத்தது? ஏற்கனவே அரசு விழாக்கள் நடத்த இடம் போதாமல் இருக்கும் போது இப்படி எல்லாம் கட்டிக் கொண்டிருந்தால் தொந்தரவாக இருக்காதா? உடனே இடித்துத் தள்ளுங்கள் என வாய்மொழி உத்தரவு போட்டுவிட்டு போனார். மந்திரி காலால் இட்டதை தலையால் செய்யும் வேகத்தில் பொக்லைன் எந்திரத்தோடும், போலீஸ் பாதுகாப்போடும் வந்து இறங்கியது நகராட்சி நிர்வாகம். தான் கொடுத்த அனுமதியை தானே மீறி சுவரை இடிக்க ஆரம்பித்த உடனேயே வண்டியின் முன்னால் சென்று தடுத்த மாணவர்கள், எங்கள் மீது ஏறி சென்று இடித்துக் கொள்ளுங்கள் என உட்கார்ந்து முழக்கமிட ஆரம்பித்ததும் வேறு வழியின்றி பின்வாங்கினர். பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தும் பயனில்லை, எல்லாரும் மாணவர்கள், தகுந்த ஆதாரமும் வைத்திருக்கிறார்கள்

சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்கிறார்கள் என அ.தி.மு.க., பி.ஜே.பி.யின் சில ஆட்கள் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் போதே, நகராட்சி நிர்வாகம் கொடுத்த தடையில்லா சான்றிதழின் நகலைக் காட்டியும், ஏற்கனவே 2006-ஆம் ஆண்டில், விளையாட்டு தவிர்த்து வேறு செயல்பாடுகளுக்குத் தடைவிதித்து போடப்பட்ட அரசாணை பற்றியும் பேட்டி கொடுத்து உண்மை நிலைமையை எடுத்துக்கூறி அவதூறு செய்தவர்களின் முகத்தில் கரியைப் பூசினார்கள் மாணவர்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

எப்படியாவது மந்திரியின் வார்த்தைகளை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில், உங்களுக்கு மாற்று இடம் தருகிறோம் என 5 கி.மீ தூரத்தில் உள்ள அந்திவாடி பகுதிக்கு விரட்ட முயற்சி செய்தனர். காலுக்கு ஷூ வாங்கக்கூட காசில்லாமல் வெறுங்காலுடன் விளையாட வரும் மாணவர்கள் அவ்வளவு தூரம் தினமும் பஸ் ஏறிப் போக முடியுமா? விளையாடுவதற்கு என ஒதுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பது யார்? எனக் கேள்வி எழுப்பிய மாணவர்கள், தங்களது மைதானத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற இலக்கோடு, இரவு பகலாக கொட்டகை அமைத்து, தங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இரவு பகலாக கொட்டகை அமைத்து, தங்கி போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இதே மைதானத்தில்  மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 15 இலட்ச ரூபாய் செலவில் உள் விளையாட்டரங்கம் ஒன்றும் கட்டப்பட்டு, நகராட்சியே பராமரித்து வருகிறது. அதற்கென கிளப் கமிட்டி உருவாக்கப்பட்டு, உறுப்பினர் கட்டணம் 10 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதைக் கட்டும் தகுதியுள்ள பணக்காரக் கூட்டம் தினந்தோறும் கொழுப்பைக் கரைப்பதற்காக உள்ளே சென்று விளையாடி வருகிறது. அரசுப்பள்ளி மாணவர்களோ உள்ளே நுழையக் கூட வழியில்லாமல் நிற்கிறார்கள். தங்களது விளையாட்டு சாமான்களைக் கூட உள்ளே வைப்பதற்கும் அனுமதி மறுப்பதாக வேதனையோடு சொல்கிறார்கள். மாணவர்களுக்கான விளையாட்டுக் கூடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, அங்கே விளையாட செல்லும் கூட்டத்தின் ஒரு பகுதியினர்தான் மாணவர்களையும், அவர்களுக்கு ஆதரவானவர்களையும் ஆக்கிரமிப்பாளர்கள் எனக் குற்றம் சாட்டுகிறார்கள்.

தங்களது போராட்டத்தையும், அதன் நியாயத்தையும் விளக்கி சமூக வளைதளங்கள் மூலமும், ஆதரவு தரும் ஊடகங்கள் மூலமும் பரப்புகிறார்கள் மாணவர்கள். அதன் மூலம் இப்பள்ளியில் படித்து, இம்மைதானத்தில் விளையாடி, அதனாலேயே வேலைக்கும் சென்றவர்கள், விளையாட்டை உயிராய் நேசிப்பவர்கள் என முன்னாள் மாணவர்கள் பலரும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வந்து ஆதரவு தருகின்றனர். கட்சிக்காரர்களும் தங்களது பங்குக்கு வந்து ஆதரித்து செல்கின்றனர். ஆக்கிரமிப்புக் குற்றம் சாட்டியவர்களின் கட்சிகளும் இப்படி வந்து ஆதரித்து செல்லும் வேடிக்கையும் நடக்கத்தான் செய்கிறது.

கலெக்டரிடம் மனு கொடுப்பது, சட்ட ரீதியாக வழக்கு தொடுப்பது என்ற வகையில் மாணவர்களுக்கு ஆதரவாக சிலர் உதவி வருகின்றனர். ஆனால், அரசாணை, தார்மீக நியாயம், தனது கடமை என அனைத்தையும் மீறி,   விளையாட்டுத்துறையை மேம்படுத்த வேண்டிய மந்திரியே மைதானத்தைப் பறித்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியிருப்பது அரசு, அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஏற்கனவே கட்டப்பட்ட உள்விளையாட்டரங்கம் பணம்படைத்த சிலரின் கட்டுப்பாட்டுக்கு சென்றது போல ஒட்டுமொத்த மைதானமும், தனியார் சிலருக்கு கைமாறும் அபாயமும் இருக்கிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஓசூர் சுற்றுவட்டார ஏரிகள், விளையாட்டு மைதானங்களில் இதுபோன்ற ஆக்கிரமிப்பு நடந்து வருவதையும் மக்களும் மாணவர்களும் கவனித்து வருவதன் விளைவாகவே இந்தத் தொடர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். எனினும், தங்களை அமைப்பாக்கிக் கொண்டு, விளையாட்டினை நேசிப்பவர்கள், விளையாடும் மாணவர்கள், ஓசூர் நகரத்தின் உழைக்கும் மக்கள் என அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் திரட்டிக் கொண்டு, குன்றில் இட்ட விளக்காக எல்லாருக்கும் தெரியும் வகையில் இந்த போராட்டத்தை நடத்தும் போதே வெற்றிக்கனியைப் பறிக்க முடியும் என்பதை மாணவர்கள் உணர வேண்டியுள்ளது. இதுவரை வெற்றிபெற்ற போராட்டங்கள் நமக்குக் கற்றுத்தரும் பாடமாகவும் இதுதான் உள்ளது. போரட்டக்களத்தில் நிற்கும் மாணவர்கள் இந்த திசை நோக்கி நகரவும், அவர்களின் நியாயமான கோரிக்கை வெற்றிபெறவும் துணை நிற்போம்! தோள் கொடுப்போம்!

  • வினவு களச்செய்தியாளர்கள், ஓசூர்.

வளர்மதி மீது பாலியல் சீண்டல் ! போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

டவுளின் தேசமான கேரளாவில் பெரு வெள்ளத்தில் வீடுகளையும், உடைமைகளையும் இழந்த மக்களுக்காக பல நாடுகளும் உதவிகரம் நீட்ட தயார்! என்ற போது ‘56” மார்புடைய’ இந்தியாவின் பாரத பிரதமர் நானே என் மக்களை “பார்த்துக் கொள்கிறேன்” என்று வாய்சவடால் அடித்து 20,000 கோடிக்கு மேல் பொருளாதார இழப்பு அடைந்த மக்களுக்கு வெறும் 600 கோடியை பரந்த மனத்துடன் அள்ளி வீசியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க கேரள மக்களுக்கு உதவுவதற்காக தன்னார்வமுடன் பலரும் முன்வந்து நிதி திரட்டிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில்,

23.08.2018 அன்று மாணவி வளர்மதியும் தன் பங்களிப்பாக மக்களிடம் பிரச்சாரம் செய்து நிதி திரட்டும் வேலையை செய்துள்ளார். அதை தடுக்கும் விதமாக அவரிடம் தகாத முறையில் நடத்து கொண்டது போலீசு.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கேட்பது தேச பாதுகாப்பிற்கே ஆபத்து என்பது போல அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்து தங்களுடைய அடாவடிதனத்தை அரங்கேற்றி உள்ளது.

இதனைத் தொடர்ந்து “போராடினால் தேசப்பாதுகாப்பு சட்ட அடக்குமுறை ! போராடும் பெண்களுக்கு பாலியல் சீண்டல் ! போலீசின் பொறுக்கித்தனம் !” என்ற முழக்கத்தின் கீழ் மக்களை அச்சுறுத்தும் காவல் துறையைக் கண்டித்தும்;

போராடும் பெண்களின் மீது நடத்தப்படும் பாலியல் சீண்டல்களை வேடிக்கை பார்க்கும் ‘மாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா’வின் வழியில் ஆட்சி நடத்தும் ‘எடப்பாடி அரசை’க் கண்டித்தும்;

பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் கடந்த 25.08.2018 அன்று சென்னை சென்ட்ரல் இரயில்நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை, தொடர்புக்கு : 94990 38982.

அமெரிக்க வர்த்தகப் போரை சீனா எதிர் கொள்வது எப்படி ?

முதலாளித்துவ பொருளாதாரத்தில் ஏற்படும் நெருக்கடிகளை, தேக்கத்தை, வேலை இல்லா திண்டாட்டத்தை முதலாளிகளால்  சரி செய்ய முடியுமா? ஒரு தனிப்பட்ட முதலாளி புதிய புராஜக்டில் முதலீடு செய்ய வேண்டுமா வேண்டாமா என்பதை அதில் லாபம் கிடைக்குமா கிடைக்காதா என்பதை பொறுத்துதான் முடிவு செய்வார். வேலை வாய்ப்பை உருவாக்கவோ, பொருளாதார தேக்கத்திலிருந்து மீட்கவோ ஏற்ற வகையில் முதலீட்டை லாப நோக்கமில்லாத அரசு/பொதுத்துறைதான் செய்ய முடியும் என்பது சீன முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படை என்கிறது இந்தக் கட்டுரை.

இந்தக் கட்டுரையின் பின்னூட்டங்களில் சீன பொருளாதாரம் பற்றியும், சீன அரசின் தன்மை பற்றியும் பல விபரங்கள், கருத்துக்கள் பேசப்படுகின்றன. அமெரிக்காவுடனான வர்த்தகப் போரை சமாளிக்க சீனா எடுக்கும் நடவடிக்கைகள் இந்தியா போன்ற நாடுகளில் செல்லுபடியாகுமா என்பதை பார்ப்பதற்கு மேலே சொன்ன பின்னூட்டங்களில் கிடைக்கும்  ஒரு சில தகவல்களை கணக்கில் எடுத்துக் கொள்ள  வேண்டும்.

  1. சீனாவில் நிலம் அனைத்தும் அரசுக்கே சொந்தம். தனிநபர்கள், நிறுவனங்கள் 70 ஆண்டு குத்தகைக்கு வாங்கிக் கொள்ளலாம். எனவே, நிலத்தை வைத்து சூதாட்டம் ஆடுவது, வங்கியில் கடன் வாங்கி ரியல் எஸ்டேட் சூதாட்டம் நடத்துவது போன்றவற்றுக்கான சாத்தியங்கள் குறைவு.
  2. சீனாவில் தனியார், வெளிநாட்டு நிறுவனங்கள் பெருமளவு அனுமதிக்கப்பட்டு விட்ட பிறகும் இன்னும் அரசுத் துறை (பொதுத்துறை நிறுவனங்கள்) பெரும்பான்மையாக உள்ளன. எனவே, வேலை வாய்ப்பு அதிகரிப்புக்கும், பொருளாதாரத்தை தூண்டி விடுவதற்கும் சாதகமாக பொருளாதாரத்தை நிர்வகிப்பது சீன அரசுக்கு ஒப்பீட்டளவில் எளிதாக உள்ளது. இருப்பினும், இந்த நிலைமை வெகு வேகமாக மாறி வருகிறது.

இனிமேல், கட்டுரையை படியுங்கள்.

சீனாவின், “கீனிசிய” கொள்கைகள் (China’s ‘Keynesian’ policies – ஆகஸ்ட் 6, 2018)

டொனால்ட் டிரம்ப் சீன ஏற்றுமதிகள் மீது வரி விதித்து தொடுத்த வர்த்தகப் போருக்கு பதிலடியாக சீனா அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதியாகும் மீன், சோயாபீன் போன்ற உணவு பொருட்கள் மீது இறக்குமதி வரி விதித்துள்ளது.

மேலும் சீன அரசு சீன நாணயமான யுவானின் டாலருக்கு எதிரான மதிப்பை குறைய அனுமதித்தது. இதன் மூலம் சீனாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் டாலர் விலை டாலர் விலை குறைந்து அவற்றின் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பை கணிசமான அளவு சரி செய்து விடுகிறது. மேலும், இது சீனாவுக்குள் இறக்குமதியாகும் அமெரிக்க பொருட்களின் சீன விலையையும் அதிகரித்து விடுகிறது. இந்த இரண்டும் சேர்ந்து வர்த்தக போரில் டிரம்பின் தாக்குதலை முனை மழுங்கச் செய்து, தனக்கு சாதகமான வர்த்த சமநிலையை பராமரிக்க முயற்சிக்கிறது, சீனா.

மேலே சொன்ன இரண்டு நடவடிக்கைகளுக்கும் மேலாக மூன்றாவது ஒரு திட்டத்தையும் சீன அரசு மேற்கொண்டிருக்கிறது. மேலே சொன்ன பதிலடிகளையும் தாண்டி ஏற்றுமதியில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அதைச் சரிக் கட்டுவதற்காக உள்நாட்டு வேண்டலை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக கட்டுமான திட்டங்களில் பொதுத்துறை முதலீட்டை திட்டமிட்ட முறையில் அதிகரித்துள்ளது.

2008-09-ல் மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார பெரும் தேக்கத்தின் தாக்கத்திலிருந்து சீன பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு சீன அரசு இது போன்று உள்கட்டுமானங்கள் மூதான முதலீடுகளை அதிகரித்தது எதிர்பார்த்த பலனை அளித்தது. அதாவது, அனைத்து முக்கியமான முதலாளித்துவ பொருளாதார நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியும், முதலீடும் குறைந்து போன காலகட்டத்தில், சீன பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்தது. 2009-ல் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.4% வீழ்ச்சியடைந்த போது, சீனாவின் வளர்ச்சி 9.1% ஆக இருந்தது. அந்த ஆண்டில் வளர்ச்சி கண்ட ஒரே முதலாளித்துவ நாடு ஆஸ்திரேலியா. வேகமான வளர்ச்சி வீதத்தை பராமரித்த சீனாவுக்கு கச்சா பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம்தான்அந்நாடு தனது வளர்ச்சியை தக்க வைத்துக் கொண்டது .

இதன் அடிப்படையில், முன்னணி பிரிட்டிஷ் கீனிசிய பொருளாதார அறிஞரும், வலைப்பதிவருமான சைமன் ரென்-லூயிஸ் பொருளாதார பெரும் தேக்கத்தில் சீனப் பொருளாதாரம் சிக்காமல் தப்பித்ததற்குக் காரணமாக இரண்டு விஷயங்களை குறிப்பிடுகிறார்.

  1. பெரிய முதலாளித்துவ நாடுகளில் பெரும் தேக்கத்துக்கும், அதைத் தொடர்ந்த பலவீனமான பொருளாதார மீட்சிக்கும் காரணமாக இருந்தது அரசுகளின் செலவுகளை வெட்டும் சிக்கன நடவடிக்கைகள்தான்.
  2. மாறாக, சீன அரசு செலவுகளை அதிகரித்து பற்றாக்குறை பட்ஜெட் போட்டது சீன பொருளாதாரம் தேக்கமடையாமல் தவிர்ப்பதை சாத்தியமாக்கியது.

இது எந்த அளவு உண்மை என்று பார்க்கலாம். 2008—09ல் மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில் தனியார் முதலீடும், உற்பத்தியும் பெருமளவு வீழ்ச்சியடைந்த நிலையில் அரசு செலவினங்களை வெட்டியது நிலைமையை மேலும் மோசமாக்கியது என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில், மேற்கத்திய அரசுகள் மேற்கொண்ட ‘சிக்கன நடவடிக்கை’ ஒரு தவறான கொள்கைதான்.

ஆனால், நான் முந்தைய பல கட்டுரைகளில் விளக்கியது போன்று கீனிசியர்கள் கருதுவது போல ‘சிக்கன நடவடிக்கை’ என்பது ஏதோ  முதலாளித்துக்கு கிறுக்கு பிடித்ததால்  நடப்பது இல்லை. அதற்கு ஒரு தர்க்க அடிப்படை உள்ளது : தனியார் லாபவீதம் மிகக் குறைவாக இருக்கும் நிலையில் அதை மீட்பதற்கு செலவுகளை குறைக்க வேண்டும். அதற்கு தனியார் நிறுவனங்கள் மீது வரிவிதிப்பை குறைப்பது ஒரு நடவடிக்கையாகும். அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை சரிக்கட்ட பொது செலவினங்களையும் அரசு முதலீட்டையும் வெட்ட வேண்டும். இப்படி செய்வது  வரி விதிப்பை அதிகரித்தோ, துண்டு  பட்ஜெட் அடிப்படையிலோ செலவினங்களை அதிகரிப்பதை விட மூலதனத்துக்கு மிக உகந்தது. வரியை வெட்டி விட்டு செலவுகளை குறைக்கா விட்டால், அதை ஈடு கட்ட வாங்கும் கடனை பிற்காலத்தில் சமாளிக்க  வேண்டியிருக்கும்.

அரசு செலவுகளை அதிகரிப்பதன் மூலம் மூலம் பொருளாதாரத்தை தேக்கத்திலிருந்து மீட்க முடியுமா, முடியாதா?

இது பற்றி ரென் லூயிஸ் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

“இந்த கீனீசிய கோட்பாட்டு சரியானது என்பதற்கு சீனா ஒரு சிறந்த நடைமுறை உதாரணம். இதனால் நிதி பேரழிவு நடக்கும் என்று சாபம் விட்ட புலவர்கள் எங்கே போனார்கள்? ஆறு ஆண்டுகளுக்கு பிறகு சீனாவில் ஒரு சிறிய அளவு நெருக்கடி ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால், இந்த நெருக்கடிக்கும் பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசு செய்த செலவுகளுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்ல முடியாது. மேலும், இந்த இப்போதைய இந்த நெருக்கடி சீன பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. அத்தகைய பொருளாதாரத்தை மீட்பதற்கான அரசு செலவுகள், எதிர்கால தலைமுறை மீது மிகப்பெரிய சுமையைப் ஏற்றி விடுமே என்று கேட்கலாம். சீனாவின் அத்தகைய திட்டதிதன் பலனாக உயர் வேக ரயில் வலைப்பின்னல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்நாடு ரயில்வே கட்டுமானத்தில் உலக அளவில் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறது.”

அதாவது, எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்க்கும் போது சீனா கீனீசிய கொள்கைகளை நடைமுறையில் நிரூபித்து காட்டியிருக்கிறது என்கிறார் ரென் லூயிஸ்.

ஆனால், சீனா பின்பற்றியது உண்மையிலேயே கீனீசிய கொள்கைகள்தானா? கறாராக சொல்வதென்றால், ஒரு கீனீசிய அரசு, பள்ளம் தோண்டி மீண்டும் நிரப்புவது போன்ற அபத்தமான செயல்பாடுகள் உள்ளிட்டு [100 நாள் வேலைத் திட்டம் நினைவுக்கு வருகிறதா] ஏதாவது ஒரு வகையில் தனது செலவினங்களை அதிகரிக்க வேண்டும். அதனால் தூண்டி விடப்படும் சந்தை வேண்டல் அதிகரிப்பின் மூலம் தனியார் முதலீட்டையும்  குடும்பங்களின் நுகர்வையும் தூண்டி விட வேண்டும்.  [அதாவது மயிரைக் கட்டி மலையை இழுக்க வேண்டும், இதற்கு மேல் அரசு எதையும் செய்வது முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைக்கு நேர் விரோதமானது]

இதற்கு மேலும் பொருளாதாரம் பிக் அப் ஆகவில்லை என்றால், வேறு வழியே இல்லாமல் கடைசி தீர்வாக ‘முதலீட்டை சமூக மயமாக்க வேண்டும்‘ என்று கீன்ஸ் சொன்னது என்பது உண்மைதான்.

ஆனால், கீனீசிய கோட்பாட்டை கடைப்பிடித்த எந்த அரசும் முதலீட்டை சமூக மயமாக்குவதை ஒருபோதும் அமல்படுத்தியதில்லை [அதன் பெயர் சோசலிசம்]. அதன் பொருள் தனியார் முதலீட்டை தேசிய மயமாக்குவது ஆகும். உண்மையில், ரென் லூயிஸ் போன்றவர்கள் முதலீட்டை தேசியமயமாக்குவது, அல்லது சமூகமயமாக்குவது பற்றி தப்பித்தவறிக் கூட பேசுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை கீனீசிய கொள்கை என்பது சந்தை ‘தேவையை தூண்டுவதற்கான’ அரசு செலவின அதிகரிப்புதான். [அதன் மூலம் தனியார் முதலீட்டை தூண்டி விட வேண்டும்].

ஆனால், பொருளாதார பெரும் தேக்கத்தின் போது சீனா பின்பற்றிய கொள்கை வெறும் கீனீசிய ‘நிதித் தூண்டுதல்’ இல்லை.  சீன அரசு பொருளாதாரத்தில் நேரடியாக முதலீடு செய்து உள்கட்டுமானத்தை உருவாக்கியது. அதாவது, அது ‘சமூகமயமாக்கப்பட்ட முதலீடு’.  சீனாவின் பொருளாதார மீட்பு கொள்கை நுகர்வை அதிகரிப்பதையோ, ஏதோ ஒரு வகையில் அரசு செலவை அதிகரிப்பதையோ அடிப்படையாகக் கொண்டது கிடையாது. அது ஒரு நிலையான சொத்துக்களை உருவாக்கும் முதலீடு ஆகும்.

உண்மையில் பார்க்கப் போனால் அமெரிக்காவின் பொருளாதார பெரும் தேக்கம் குடும்பங்களின் நுகர்வு குறைபாட்டாலோ, அரசின் ‘சிக்கன நடவடிக்கைகளாலோ’ ஏற்படவில்லை, தனியார் முதலீட்டின் வீழ்ச்சியால் ஆரம்பித்தது; அதன் தேக்கத்தால் தொடர்ந்தது. ஐரோப்பாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு முழுவதும் நிலை முதலீட்டு வீழ்ச்சியினால் ஏற்பட்டது.

ஜான் ராஸ் அந்த நேரத்தில் தனது வலைப்பதிவில் சொன்னது போல, “சீனா உண்மையில் அமெரிக்காவின் நேரெதிர் உதாரணமாக உள்ளது. அமெரிக்காவின் பொருளாதார பெரும் தேக்கம் நிலை முதலீட்டின் வேகமான சரிவால் ஏற்பட்டது என்றால், சீனா தேக்கத்தை தவிர்த்ததும் அதன் வேகமான பொருளாதார வளர்ச்சியும் நிலை மூலதன வளர்ச்சியால் சாத்தியமானது. இந்த  வெளிப்படையான வேறுபாட்டில் இருந்து பொருளாதார நெருக்கடியின் போது அமெரிக்க பொருளாதாரமும், சீன பொருளாதாரமும் எப்படி வெவ்வேறு திசையில் பயணித்தன என்பதை  தெளிவாக புரிந்து கொள்ளலாம்”

கீனீசிய கொள்கைகளை பின்பற்றியிருந்தால் அற்புதங்களை நிகழ்த்தியிருக்கலாம் என்றும், பெரிய முதலாளித்துவ நாட்டு அரசுகளின் “சிந்தனை தேக்கம்தான்” கீனீசிய கொள்கைகளை புறக்கணித்து சிக்கன நடவடிக்கையில் கொண்டு போய் அவற்றை தள்ளியது என்றும் சொல்லப்படுவது எந்த அளவுக்கு உண்மை?

பெரிய முதலாளித்துவ நாட்டு அரசுகள் சீனாவின் முன்னுதாரணத்தை பின்பற்றாமல் இருந்ததற்கு ஒரு காரணம் அவை சித்தாந்த ரீதியாக அரசு முதலீட்டை எதிர்க்கின்றன உண்மைதான். உண்மையில், ‘சிக்கன’ நடவடிக்கையின் முதல் இலக்காக அவர்கள் வெட்டியது பொதுத்துறை முதலீடுகளைத்தான். அதுதான் செலவுகளை குறைப்பதற்கான மிக விரைவான வழியாக கருதப்பட்டது.

ஆனால், முக்கியமான பிரச்சனை சித்தாந்த கண்ணோட்டமோ, “சிந்தனை தேக்கமோ” இல்லை. கீனீசிய மீட்பு கொள்கைகள் அமெரிக்கா போன்ற பொருளாதாரத்தில் செல்லுபடியாவதில்லை என்பதுதான் விஷயம். தனியார் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும், ஏற்கனவே முதலீட்டிற்கான லாபவீதம் குறைவாக இருப்பதால் முதலீடுகள் வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தில்  கீனீசிய கொள்கையின் அடிப்படையிலான நடவடிக்கைகள்  எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.  ஏனென்றால், முன்னேறிய முதலாளித்துவ பொருளாதார நாடுகளில் அரசு முதலீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% என்ற அளவிலும் தனியார் முதலாளித்துவ முதலீடு 15%+ ஆகவும் உள்ளது

இந்நிலையில், அரசு முதலீடு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால் பொதுத்துறையின் பங்கு பெருமளவு அதிகரிக்கப்பட வேண்டும். குறைந்த வட்டி வீதங்கள் மூலமும், நலத்திட்ட செலவினங்கள் மூலமும் தனியார் முதலீட்டை ‘தூண்டி’ விடுவது மட்டும் போதாது. அதாவது தனியார் முதலீட்டுக்கு பதிலாக ‘சமூகமயமாக்கப்பட்ட’ முதலீடு செய்யப்பட வேண்டும்.

மேற்கத்திய நாடுகளின் வரலாற்றில் அது தற்காலிகமாகக் கூட நடந்தது 1940-45 போன்ற போர்க்காலங்களில் மட்டுமே. [அதாவது முதலாளித்துவ அரசுகள் நேரடி முதலீடு செய்வது கொலைத் தொழிலில் மட்டும்தான்].

கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், ஜப்பானிலும் முதலாளிகள்தான் முதலீடு தொடர்பானதும் வேலை வாய்ப்பு தொடர்பானதும் ஆன முடிவுகளை எடுத்தனர். அவர்கள் அந்த முடிவுகளை எடுத்தது, லாபத்தின் அடிப்படையில். பொருளாதாரத்தை மீட்க வேண்டும் என்பது அவர்களது நோக்கம் இல்லை. எனவே, அரசு பண அளவை அதிகரித்தாலும், நிதித்துறையை ஊதிப் பெருக்கினாலும் அது தனியார் முதலீட்டை குறிப்பிட்ட அளவுக்கு தூண்டி விட முடியவில்லை. [அத்தகைய நிதி ஊக வணிகத்திலும், ரியல் எஸ்டேட் சூதாட்டத்திலும் பாய்ந்தது, உண்மையான பொருளாதாரத்தில் சொத்துக்களை உருவாக்கவில்லை]

இதற்கு முற்றிலும் மாறாக, சீனாவில் அரசே நேரடியாக முதலீடு செய்வதன் மூலமும், பொதுத்துறை வங்கிகள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கும் கடன்களை அதிகரிப்பதன் மூலமும் நிலை மூலதனம் வெகு வேகமாக அதிகரித்தது.

இது 2008-09 பொருளாதார பெரும் தேக்கத்தின் போது நடந்தது.

இப்போது தனியார் முதலாளித்துவ நாடுகளில் கீனீசிய நடவடிக்கைகளுக்கும், சீனாவின் அரசின் கட்டுப்படுத்தப்பட்ட முதலீட்டுக்கும் இடையேயான வேறுபாடு மீண்டும் ஒருமுறை பரிசீலனைக்கு உள்ளாக போகிறது. பெரும்பாலான முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் டிரம்பின் அமெரிக்காவுடனான வர்த்தகப் போரில் சீனா கடுமையாக பாதிக்கப்படும் என்றும், அதன் பொருளாதார வளர்ச்சி வீதம் குறையப் போகிறது என்றும் கணித்திருக்கின்றனர். உண்மையில் சீனாவில்  கடன் மலையால் தூண்டப்படும் ஒரு மிகப்பெரிய நெருக்கடிக்கான அபாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், சீன அரசு ஏற்கனவே இதை எதிர்கொள்ளும் வகையில் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. சாதாரண பற்றாக்குறை பட்ஜெட்டுடன் (நிதி ‘தூண்டுதல்’) கூடவே, அரசு நேரடியாக முதலீட்டு திட்டங்களுக்கு நிதி அளிப்பதன் மூலமும் முதலீடு தூண்டப்படுகிறது.

அரசு முதலீட்டுக்கான நிதியில் பெரும்பகுதி உள்ளூராட்சி அமைப்புகள் நிலத்தை விற்பதன் மூலம் திரட்டப்படுகிறது. உள்ளூராட்சி அமைப்புகள், நிதி பத்திரங்கள் மூலம் நிலத்தை கட்டுமான நிறுவனங்களுக்கு விற்று, சாலைகள், வீடுகள், நகரங்களை கட்ட வைக்கின்றன. மத்திய அரசின் நேரடி நிதியும் அளிக்கப்படுகிறது. (80%)

அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் விளைவாக சீனாவின் ஏற்றுமதிகள் குறைந்தால் இத்தகைய நிதி உதவியும், முதலீட்டு திட்டங்களும் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். பெரிய முதலாளித்துவ பொருளாதாரங்கள் தத்தளிக்கும் நேரத்தில் அரசு முதலீடு சீன பொருளாதாரத்தை தொடர்ந்து ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

ஆங்கில மூலம் : (China’s ‘Keynesian’ policies – ஆகஸ்ட் 6, 2018), மைக்கேல் ராபர்ட்ஸ் நன்றி : new-democrats தளத்தில் வெளியான கட்டுரை

மோடி அரசின் உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம் !

0

சென்னையில் கடந்த 2018 ஆகஸ்ட், 21-ஆம் தேதி அன்று உயர்கல்வி ஆணைய மசோதாவை எதிர்த்து புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் அரங்குக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.

அக்கூட்டத்திற்கு பு.மா.இ.மு-வின் சென்னை மாநகர செயலாளர் தோழர் சாரதி தலைமை தாங்கினார்.

மேலும் அரங்குக் கூட்டத்தில் குடியாத்தம் அரசுக்கல்லூரியின் மேனாள் முதல்வர் ப.சிவக்குமார், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தின் நிறுவன உறுப்பினர் முனைவர் ரமேஷ், மற்றும் பு.மா.இ.மு-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

சென்னையின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சார்ந்த மாணவர்கள் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரங்கக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஏழை மாணவர்களின் பட்டதாரி கனவைப் பறிக்கும் மோடி அரசின் உயர்கல்வி ஆணைய மசோதாவை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம். இலவசக் கல்வி கிடைக்க பெற்றோர்கள், ஆரிசியர்கள், மாணவர்கள் என அனைவரும் ஓர் அணியில் திரளுவோம். என்ற உறுதியேற்புடன் இக்கூட்டம் நிறைவடைந்தது.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,  சென்னை. தொடர்புக்கு : 94451 12675.

மே-17 திருமுருகனை விடுதலை செய் ! ஊபா சட்டத்தை ரத்து செய் !

 

25.08.2017

காளியப்பன்,
மாநிலப் பொருளாளர்.

பத்திரிகைச் செய்தி

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்  திருமுருகன் காந்தி அவர்களை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப்  பிரிவின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சென்ற ஆண்டு அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டது. இந்த மாதம், பெங்களூரு விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டார். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த படுகொலைக்கு எதிராக ஐ.நா வில்  பேசியது குற்றமல்ல என்றும் அவரை காவலில் வைக்கத் தேவையில்லை என்றும் கூறி நீதித்துறை நடுவர் விடுவித்தவுடனேயே, அனுமதி இல்லாமல் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றதாகக் கூறி ஒரு பழைய வழக்கில் அவரை மீண்டும் கைது செய்தனர்.

இன்னும் பழைய வழக்குகள் அனைத்திலும் கைது செய்தாலும் பிணையில் வெளியே வந்துவிடக்கூடும் என்பதால், அவ்வாறு வரமுடியாமல் தடுப்பதற்காகவே UAPA சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பயங்கரவாதத்தை அடக்குவதற்கு என்று சொல்லி கொண்டுவரப்பட்ட தடா, பொடா சட்டங்கள் எப்படி ஜனநாயக உரிமைக்காகப் போராடுவோர் அனைவர் மீதும் ஏவப்பட்டதோ அவ்வாறே UAPA சட்டமும் தற்போது ஏவப்படுகிறது.

குறிப்பாக வளர்ச்சி என்ற பெயரில் மக்கள் மீது திணிக்கப்படும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்களுக்கு எதிராகவும், இவற்றைத் திணிக்கின்ற பாஜக அரசுக்கு எதிராகவும் போராடுகின்ற இயக்கங்கள் மற்றும் தனிநபர்கள் அனைவரையும் நசுக்குவதன் மூலம் மட்டுமே தமிழகத்தில் இத்திட்டங்களை அமல்படுத்த முடியும் என்று மத்திய உளவுத்துறை, ஊடகங்கள் வாயிலாக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது.

மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இத்தகைய வளர்ச்சித் திட்டங்களை எதிர்ப்பவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள், சமூக விரோதிகள் என்ற புதியதொரு விளக்கத்தை பாஜக-வின் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் தொடர்ந்து கூறிவருகிறார். அதை மோடியும் வழிமொழிந்திருக்கிறார். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடியவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். எதிர்த்துப் பேசிய திருமுருகன் காந்தி மீது ஊபா சட்டம் ஏவப்படுகிறது.

அச்சுறுத்தி அடக்கி விடலாம் என்பதுதான் இந்தக் கைது நடவடிக்கைகளின் நோக்கம்.  அந்த நோக்கத்தை முறியடிப்போம். திருமுருகன் காந்தியின் விடுதலைக்கு குரல் கொடுப்போம்.

மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் காவி – கார்ப்பரேட் பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம். ஊபா சட்டம் உள்ளிட்ட அனைத்து கருப்பு சட்டங்களையும் நிரந்தரமாக அகற்ற அனைவரும் ஒன்றுபட்டுப் போராடுவோம்.

நன்றி!

தோழமையுடன்,
காளியப்பன்
மாநிலப் பொருளாளர்

தொடர்புக்கு :
மக்கள் அதிகாரம்,
எண்: 1, அண்ணா நகர்,
தஞ்சாவூர்94431 88285