Friday, May 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 751

சொல்லாத சோகம் – யாரும் வெல்லாத வீரம் ! பாடல் !!

36

தேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல். நாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.

=========

பாபர், தன் மகன் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற உயிலில் சொல்கிறார். ‘அருமை மகனே, வகை வகையான மதங்களை பின்பற்றுபவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். நீ உனது மனதை குறுகிய மத உணர்வுகள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்து சேதப்படுத்தக் கூடாது. பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.’ இது பாபர் தன் கைப்பட எழுதிய உயில். அர்ஜூனனுக்கு கண்ணன் செய்த கீதோபதேசம் போல புராணக் கட்டுக்கதை அல்ல. எனினும் அந்த பாபர்தான் கோயிலை இடித்ததாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.

இவர்கள் பழைய வரலாற்றை மட்டுமா திரித்தார்கள்! வெள்ளையனுக்கு எதிராக வீரப் போர் புரிந்து இறந்த முஸ்லீம் போராளிகளின் தியாகத்தையும் மறைக்கிறார்கள், திரிக்கிறார்கள். போர்த்துக்கீசியரை கடற்போரில் வென்ற கேரளத்தின் குஞ்ஞாலி மரைக்காயரையும், முதல் இந்திய சுதந்திரப் போருக்கு தலைமை தாங்கிய மன்னன் பகதூர்ஷாவையும் எத்தனை பேருக்குத் தெரியும்? வெள்ளையர்கள் நடுநடுங்க வீரப் போர் புரிந்த பைசலாபாத் மௌல்வி அகமதுஷாவை வெள்ளையரிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு சதி செய்து கொன்றவன் அன்றைய அயோத்தியின் இந்து மன்னன் ஜகன்னாத ராஜா, என்று யாருக்குத் தெரியும்?

முதல் சுதந்திரப் போருக்கு வித்திட்ட வேலூர் கோட்டைக் கலகத்திற்கு தலைமை தாங்கிய முஸ்லீம் தளபதிகள் சவுக்காலும் புளியம் விளாறுகளாலும் அடித்தே கொல்லப்பட்டது யாருக்குத் தெரியும்? பகத்சிங்கைப் போலவே தூக்கு மேடை ஏறிய அவன் தோழன் அஷ்வகுல்லாகானை யாருக்குத் தெரியும்?

தெரியக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறது ஆர்எஸ்எஸ் கும்பல். அதனால்தான் புராணப் புளுகுகளை உண்மை போல சித்தரிக்கும் தொலைக்காட்சியில் திப்புசுல்தானின் வரலாற்றை கற்பனைக் கதை என்று குறிப்பிடுகிறார்கள். இருட்டடிப்பு மட்டுமா, அந்தத் தியாகிகளை துரோகிகள் என்றும் தூற்றுகிறார்கள்.

அவர்களுடைய வாரிசுகளும் இந்த மண்ணின் மைந்தர்களுமான முஸ்லீம் மக்களை அன்னிய கைக்கூலிகள் என்று அவதூறு செய்கிறார்கள். எத்தனை பெரிய துரோகம், உங்கள் இதயம் வலிக்கவில்லையா, கண்கள் பனிக்கவில்லையா இந்த அநீதியைக் கண்டு?



சொல்லாத சோகம் – யாரும்  வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – இது கண்ணீரின் கீதம்…

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

என்றும்…உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும் வாழும்

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…
அயோத்தி என்பது தியாகம் – அதன் சின்னம் அசரத் பேகம்
கோரஸ் : அதன் சின்னம் அசரத் பேகம்

அசரத் மஹல் அயோத்தியின் ராணி. முதல் சுதந்திரப் போரில் ஆங்கிலேயரை எதிர்த்து வீரப் போர் நடத்தி தோல்வியுற்றாள் ஹசரத் மஹல். அவளுக்கு அடைக்கலம் அளிக்கக் கூட எந்த இந்து மன்னனும் முன்வரவில்லை. தன் 10 வயது மகனோடு இமயத்தின் அடிவாரக் காடுகளில் அநாதையாக திரிந்து இறந்தாள் அந்தத் தாய்.

அயோத்தி என்பது தியாகம் – அதன் சின்னம் அசரத் பேகம்
கோரஸ் : அதன் சின்னம் அசரத் பேகம்

ஆளரவம் இல்லா காட்டில்…அநா..தையாக மரணம்
கோரஸ் : அநா..தையாக மரணம்

அந்தப் பெண் ஈன்ற மண்ணே… இன்று அய்யோ அவமானம்…
கோரஸ் : அந்தப் பெண் ஈன்ற மண்ணே… இன்று அய்யோ அவமானம்…

என்றும்…உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும்…வாழும்…

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

திப்பு சுல்தானின் வீரம் – கட்டபொம்மனையும் மீறும்
கோரஸ் : கட்டபொம்மனையும் மீறும்

திப்பு சுல்தான், இந்திய மன்னர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து வெள்ளையனை விரட்ட வேண்டும் என்பது அவன் கனவு. ஆனால், திப்பு தோற்கடிக்கப்பட்டான். அவனை முதுகில் குத்தியவர்களில் முதன்மையானவர்கள் மராத்திய பேஷ்வா மன்னர்கள். வேறு யாருமல்ல, அவர்கள்தான் ஆர்எஸ்எஸ்சின் மூதாதையர்களான சித்பவன பார்ப்பனர்கள்.

திப்பு சுல்தானின் வீரம் – கட்டபொம்மனையும் மீறும்
கோரஸ் : கட்டபொம்மனையும் மீறும்

இந்து மன்னர்களின் துரோகம் – எட்டப்பன் வகையில் சேரும்…
கோரஸ் : எட்டப்பன் வகையில் சேரும்…

தன் படையோடு தானும் சாவை எதிர்கொண்ட தீரம்…
கோரஸ் : தன் படையோடு தானும் சாவை எதிர்கொண்ட தீரம்..

என்றும்…உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும்…வாழும்..

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

மாப்பிளா போராட்டம் – மண்ணை உழவன் கையில் சேர்க்கும்
கோரஸ் : மண்ணை உழவன் கையில் சேர்க்கும்

உழுபவனுக்கு நிலம். மாப்பிளா முஸ்லீம் விவசாயிகளின் முழக்கம். அது தாழ்த்தப்பட்ட மக்களும் முஸ்லீம் விவசாயிகளும் இணைந்து நடத்திய போராட்டம். சொந்த மண்ணின் மக்களை ஒடுக்க வெள்ளையனின் காலை நக்கினார்கள் நம்பூதிரிகள். கிராமம் கிராமமாக கொலை செய்யப்பட்ட போதும் 50 ஆண்டு காலம் அந்த போராட்டம் ஓயவில்லை.

மாப்பிளா போராட்டம் – மண்ணை உழவன் கையில் சேர்க்கும்
கோரஸ் : மண்ணை உழவன் கையில் சேர்க்கும்

நம்பூதிரி வெள்ளையர் ஆட்டம் – அவன் சாதித் திமிரை ஓட்டும்
கோரஸ்: அவன் சாதித்திமிரை ஓட்டும்

அரை நூற்றாண்டு காலம் அடி பணியாத கோபம்
கோரஸ் : அரை நூற்றாண்டு காலம் அடி பணியாத கோபம்

என்றும் உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும் வாழும்

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

முதல் சுதந்திரப் போராட்டம் – தமிழ்மண்ணில்தான் வெள்ளோட்டம்
கோரஸ் : தமிழ்மண்ணில்தான் வெள்ளோட்டம்

வேலூர் கோட்டை. அங்கே சிறை வைக்கப்பட்டிருந்த திப்புவின் முஸ்லீம் தளபதிகளும் ஆங்கிலப் படையின் தமிழ் சிப்பாய்களும் கோட்டையைக் கைப்பற்றினார்கள். கிளர்ச்சியை நசுக்கினான் வெள்ளையன். பீரங்கி வாயில் வைத்து அவர்களை பிளந்து அகழியில் வீசினான். விடுதலைப் போரின் உறவாய் அந்த மண்ணில் உறைந்து விட்ட இரத்தத்தில் மதம் எங்கே?

முதல் சுதந்திரப் போராட்டம் – தமிழ்மண்ணில்தான் வெள்ளோட்டம்
கோரஸ் : தமிழ்மண்ணில்தான் வெள்ளோட்டம்

வெள்ளை கசையால் சிதைந்த தேகம் – வேலூர் கோட்டை அகழியை மூடும்
கோரஸ் : வேலூர் கோட்டை அகழியை மூடும்

அந்த முஸ்லீம் மக்கள் தியாகம்…விடுதலைப் புயலின் கருவாய் மாறும்…
கோரஸ் : அந்த முஸ்லீம் மக்கள் தியாகம்…விடுதலைப் புயலின் கருவாய் மாறும்…

என்றும்… உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும்…வாழும்

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

எட்டப்பன்மாரின் துரோகம் – இந்து என்பதனாலா மாறும்
கோரஸ் : இந்து என்பதனாலா மாறும்

பேஷ்வா அரச பரம்பரையும் இன்னும் பல எட்டப்பன்களும் நினைத்திருப்பார்களா, இந்து என்ற ஒரே காரணத்தால் நாம் போற்றப்படுவோம் என்று. அல்லது களத்தில் உயிர்நீத்தானே திப்பு சுல்தான், அவன் நினைத்திருப்பானா, முஸ்லீம் என்ற ஒரே காரணத்தால் நாம் தூற்றப்படுவோம் என்று. இசைப்பார் இல்லை என்பதால் அந்த ராகம் இல்லாமலா போய் விடும்.

எட்டப்பன்மாரின் துரோகம் – இந்து என்பதனாலா மாறும்
கோரஸ் : இந்து என்பதனாலா மாறும்

திப்பு சுல்தானின் தியாகம்… – ஏன் முஸ்லீம் என்ற பேதம்
கோரஸ் : ஏன் முஸ்லீம் என்ற பேதம்

இது பாடாத வீரம் யாரும் தேடாத ராகம் –
கோரஸ் : இது பாடாத வீரம்  யாரும் தேடாத ராகம்

என்றும் உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும்… வாழும்…

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

என்றும் உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும்… வாழும்…

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

__________________________________________

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் காவி இருள் ஒலிக்குறுந்தகடில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கிறது. ஒலிக்குறுந்தகடு தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083.
தொலைபேசி: 044-23718706
செல்பேசி: அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002.
தொலைபேசி: 044-2841 2367

 

இரான்: அமெரிக்கக் கழுகிடம் சிக்கிய கோழிக்குஞ்சு!

17

லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போரை முடித்த கையோடு, இரானைக் குறிவைக்கத் தொடங்கிவிட்டன, அமெரிக்கா தலைமையிலான மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள். அமெரிக்கா, ஆப்கான் மற்றும் இராக்கின் மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்த சமயத்திலேயே, “இரான், சிரியா, வட கொரியா ஆகிய மூன்று நாடுகளையும் ரவுடி அரசுகள்” எனப் பழித்துப் பேசி வந்தார், அந்நாட்டின் அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ். குறிப்பாக, இரானின் இசுலாமியக் குடியரசைக் கவிழ்த்துவிட்டு, அங்கு தனது அடிவருடிகளின் ஆட்சியைத் திணிக்க, அமெரிக்கா கடந்த பத்தாண்டுகளாக வெளிப்படையாகவே முயன்று வருகிறது.

இரானில் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தப் பொருளாதாரத் தடையுத்தரவுகள், எதிர்த்தரப்பினரைத் தூண்டிவிடுதல், இரகசியக் குழுக்களைக் கட்டி அந்நாட்டினுள் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துதல் எனப் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா, இப்பொழுது அந்நாட்டின் மீது ஓர் அதிரடித் தாக்குதலை நடத்தும் நோக்கத்தோடு, பாரசீக வளைகுடாவில் தனது துருப்புகளைக் குவித்து வருகிறது.  இராக்கிலிருந்து தனது கடைசித் துருப்புகளையும் விலக்கிக் கொண்டுவிட்டதாக அறிவித்துள்ள ஒபாமா, அத்துருப்புகளை இரானை அச்சுறுத்தும் நோக்கத்தோடு குவைத்தில் இறக்கிவிட்டுள்ளார். இரானில் இராணுவத் தலையீடு செய்வதை நியாயப்படுத்துவதற்காக, அந்நாடு அணு ஆயுதங்களை இரகசியமாகத் தயாரித்து வருவதாகவும் அது தொடர்பாகப் புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளன, மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள்.

இரான் இரகசியமாக அணுகுண்டைத் தயாரித்து வருகிறது என்ற தமது புளித்துப்போன குற்றச்சாட்டை நிரூபிக்கவும், இரானை ஓர் பயங்கரவாத நாடென முத்திரை குத்தவும் முயலும் அமெரிக்க ஏகாதிபத்திய கூட்டணி, அதற்காக மிகவும் கேவலமான, கீழ்த்தரமான வேலைகளையும் செய்து வருகிறது. அமெரிக்காவின் இந்த அடாவடித்தனங்களுக்கும் அயோக்கியத்தனங்களுக்கும் வழமை போல சர்வதேச அணுசக்தி முகமையும், ஐ.நா. மன்றமும் அடியாளாகச் செயல்பட்டு வருகின்றன.

இரான் : அமெரிக்கக் கழுகிடம் சிக்கிய கோழிக் குஞ்சு !சர்வதேச அணுசக்தி முகமை, “இரான் 2003-ஆம் ஆண்டுக்கு முன்பாக அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பாக நடத்தி வந்த பரிசோதனைகளை இன்னமும் கைவிடாது தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதாக’’க் குறிப்பிட்டு கடந்த நவம்பர் மாதம் அறிக்கையொன்றை வெளியிட்டதோடு, அதற்காக இரானைக் கண்டித்துத் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியது. மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட ஆக்கப் பணிகளுக்காகத்தான் அணுசக்தி பரிசோதனையில் ஈடுபட்டு வருவதாக இரான் கூறுவதை ஏற்றுக் கொள்ளாத சர்வதேச அணுசக்தி முகமை, இரான் அணு ஆயுதங்களை இரகசியமாகத் தயாரிக்க முயன்று வருகிறது என்ற தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக எந்தவொரு புதிய சான்றையும் தனது அறிக்கையிலோ தீர்மானத்திலோ சுட்டிக் காட்டவில்லை. மாறாக, இது பற்றிய ஆதாரங்கள் பின்னர் தரப்படும் என்று பொத்தாம் பொதுவாகத்தான் குறிப்பிட்டுள்ளது.

உண்மையில் சர்வதேச அணுசக்தி முகமையின் இந்தப் புளுகுணி அறிக்கையும் கூட, அதனின் சொந்தசரக்கு கிடையாது. இரானின் அணுசக்திப் பரிசோதனைகள் குறித்து மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளின் உளவு நிறுவனங்கள் அளித்த விவரங்கள் அடங்கிய ஒரு கணினிக் கோப்பை அடிப்படையாகக் கொண்டுதான் சர்வதேச அணுசக்தி முகமை தனது அறிக்கையைத் தயாரித்துள்ள உண்மையும் இப்பொழுது அம்பலத்திற்கு வந்துவிட்டது. சர்வதேச அணுசக்தி முகமையின் முன்னாள் இயக்குநரும், அமெரிக்காவின் அணுஆயுதத் துறையோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவருமான ராபர்ட் கெல்லி, இந்த மோசடியை ஸெய்மோர் ஹெர்ஷ் என்ற பத்திரிக்கையாளரிடம் அம்பலப்படுத்தி பேட்டியளித்திருக்கிறார்.    இதுவொருபுறமிருக்க, சர்வதேச அணுசக்தி முகமை ‘தயாரித்த’ அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படும் முன்பே, அது ‘கடத்தி’ச் செல்லப்பட்டு, மேற்குலகப் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் “பிரேகிங் நியூஸாக” வெளியிடப்பட்டது.

இரான் : அமெரிக்கக் கழுகிடம் சிக்கிய கோழிக் குஞ்சு !இப்படி அறிக்கையைத் தயாரித்ததிலும், அது வெளியானதிலும் நடந்த பல உள்ளடி வேலைகளும் சதிகளும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்த போதிலும், அமெரிக்க ஆளும் கும்பலும், மேற்குலக ஊடகங்களும் அது பற்றியெல்லாம் கூச்சப்படவில்லை. குறிப்பாக, இந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவிருப்பதால், அமெரிக்காவில் இரானுக்கு எதிரான போர்வெறிக் கூச்சல் நாலாந்திர பாணியில் காதுகூசும் அளவிற்கு நடந்து வருகிறது.

‘‘இரானுடன் ஏற்றுமதி  இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபடும் எந்தவொரு நாடும் அமெரிக்க டாலரைச் செலாவணியாகப் பயன்படுத்தக்கூடாது; யூரோவைச் செலாவணியாகப் பயன்படுத்தினால், பொருளாதாரத் தடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள பொருட்களை இரானில் இருந்து இறக்குமதி செய்வதற்குப் யூரோவைப் பயன்படுத்தவில்லை என்று இறக்குமதி செய்யும் நாடுகளின் மத்திய வங்கிகள் சான்றளிக்க வேண்டும்” என மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் இரானின் எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகத்தைச் சீர்குலைக்கும் வண்ணம் பல பொருளாதாரத் தடையுத்தரவுகளை ஏற்கெனவே போட்டுள்ளன. தற்பொழுது, அமெரிக்க அதிபர் ஒபாமா சர்வதேச அணுசக்தி முகமையின் அறிக்கையைக் காட்டி, “இரானின் மத்திய வங்கியுடன் தொடர்பு வைத்திருக்கும் எந்தவொரு நாடும் அமெரிக்காவின் வங்கிகள், நிதி நிறுவனங்களோடு வணிகத் தொடர்புகளை வைத்துக் கொள்ள முடியாது” என்ற புதிய பொருளாதாரத் தடையுத்தரவை விதித்திருக்கிறார்.

அமெரிக்காவின் இப்புதிய பொருளாதார தடையுத்தரவு, தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்றதாகும். இரானிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வரும் நாடுகள் அனைத்தும் இரானின் மத்திய வங்கியோடு தொடர்பு வைத்துக்கொள்வது தவிர்க்க முடியாதது.  இந்த நாடுகளை மிரட்டிப் பணிய வைப்பதன் மூலம், இரானின் உயிர்நாடியான எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகத்தை முற்றிலுமாக முடக்கிவிட நரித்தனமாக முயலுகிறது, அமெரிக்கா.

இந்தியா, சீனா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய ஆசிய நாடுகளும்;  இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் உள்ளிட்ட சில ஐரோப்பிய யூனியன் நாடுகளும்தான் இரானுடன் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நாடுகளுள் முக்கியமானவை. ஐரோப்பிய யூனியன் எதிர்வரும் ஜூலை 1 முதல் இரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை முற்றிலுமாகத் தடை செய்யப் போவதாக அறிவித்து, அமெரிக்காவின் மனதைக் குளிரவைத்துவிட்டது. ஜப்பானும் தென் கொரியாவும் அமெரிக்காவின் விருப்பப்படி தங்களின் கச்சா எண்ணெய் இறக்குமதியை இரானிலிருந்து சவூதி அரேபியாவிற்கு மாற்றிக்கொள்ள முடிவு செய்துவிட்டன.

அமெரிக்கா தனது புதிய பொருளாதார தடையுத்தரவை அமல்படுத்துவதற்கு ஆறு மாத கால அவகாசம் அளித்திருக்கிறது. இந்தியா, இந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொண்டு, இரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைக் குறைக்கப் போ்வதில்லை என வீறாப்பாக அறிவித்திருக்கிறது. சீனாவோ அமெரிக்காவின் பொருளாதார தடையுத்தரவை வாயளவில் கண்டித்தாலும், மறுபுறம் இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு, தான் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு அதிகக் கட்டணச் சலுகை தர வேண்டும் எனப் பேரம் நடத்திக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் இரான் மீது திணித்துள்ள இப்பொருளாதார தடையுத்தரவு, அந்நாட்டின் மீது ஓர் ஆக்கிரமிப்புப் போரைக் கட்டவிழ்த்துவிடுவதற்கு ஒப்பானது. அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் தொடங்கி வைத்துள்ள இம்மறைமுகமான போரை எதிர்கொள்வது என்ற அடிப்படையில், தனது நாட்டின் கடற்பரப்புக்குட்பட்ட ஹொர்முஸ் கால்வாயில் கச்சா எண்ணெய் போக்குவரத்தைத் தடைசெய்வதன் மூலம் அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுப்போம் என இரான் அறிவித்திருக்கிறது.

அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் இரான் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையுத்தரவுகளைத் தலையாட்டி ஏற்றுக் கொள்ளும் உலக நாடுகளுக்கு, இரானின் இந்தத் தடையை எதிர்ப்பதற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது. மேலும்,  தன்னைவிட மிகப் பெரும் இராணுவ வலிமையும், அணு ஆயுத பலமும் மிக்க அமெரிக்காவின் அச்சுறுத்தலை  இப்படிபட்ட அதிரடி நடவடிக்கைகளின் மூலம்தான் இரான் போன்ற ஏழை நாடுகள் எதிர்கொள்ள முடியும்.

இரான் : அமெரிக்கக் கழுகிடம் சிக்கிய கோழிக் குஞ்சு !மேற்காசிய நாடுகளில் இருந்து கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெயில் நான்கில் மூன்று பங்கு எண்ணெய் ஹொர்முஸ் கால்வாய் வழியாகத்தான் செல்கிறது. ஹொர்முஸ் கால்வாயில் கச்சா எண்ணெய்ப் போக்குவரத்துக்கு ஏற்படும் சிறு இடையூறுகூட, உலக நாடுகள் எங்கும் பாரதூரமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள்கூட அலறத் தொடங்கியுள்ளனர்.  இரான் மீது திணிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையுத்தரவுகளை விலக்கிக் கொள்வது மட்டும்தான் இப்பிரச்சினைக்கு ஒரே, எளிமையான தீர்வு. ஆனால், அமெரிக்காவோ, இரானை ஆத்திரமூட்டும் நோக்கத்தோடு, பாரசீக வளைகுடாப் பகுதியில் தனது அணு ஆயுதம் தாங்கிய போர்க் கப்பலையும் துருப்புகளையும் கொண்டுவந்து இறக்கி, இந்த நெருக்கடியைத் தீவிரப்படுத்தி வருகிறது.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இரானின் எதிர்த்தரப்பைத் தூண்டிவிட்டு, இரானின் இசுலாமியக் குடியரசுக்கு எதிராக ஒரு வண்ணப் புரட்சியை நடத்த முயன்று தோற்றுப் போன அமெரிக்க ஏகாதிபத்தியம், தற்பொழுது இரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த போரையும், பயங்கரவாதத் தாக்குதல்களையும்தான் நம்பியிருக்கிறது. அமெரிக்கா பாரசீக வளைகுடாவில் தனது துருப்புகளை இறக்கிய அதேவேளையில், இரானைச் சேர்ந்த இளம் அணு விஞ்ஞானியான முஸ்தபா அகமதி ரோஷன் தனது காரில் பயணம் செய்துகொண்டிருந்தபொழுது, அவரது காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து இறந்துபோனார். 20 சதவீத அளவிற்கு யுரேனியத்தைச் செறிவூட்டும் முயற்சியில் தான் வெற்றி அடைந்துவிட்டதாக இரான் அறிவித்த இரண்டாவது நாளே இப்படுகொலை நடந்துள்ளது.

இரானைச் சேர்ந்த அணுவிஞ்ஞானிகள் இப்படிக் கொல்லப்படுவது இது முதன்முறையல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளில் ரோஷன் உள்ளிட்டு ஆறு அணுவிஞ்ஞானிகள் பயங்கரவாதத் தாக்குதல்கள் மூலம் கொல்லப்பட்டுள்ளனர். பொருளாதார தடையுத்தரவுகள் மூலம் முடக்கவியலாத இரானின் அணுசக்தி பரிசோதனைகளை, அந்நாட்டின் அணு விஞ்ஞானிகளைக் கொல்வதன் மூலம் சாதிக்கப் பார்க்கிறது, அமெரிக்கா.

இப்படுகொலைகள் ஒருபுறமிருக்க, இரானின் அணுசக்தி பரிசோதனைக் கூடங்கள், இராணுவ  ஏவுகணைத் தளங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்றை இரான் இராணுவம் சுட்டு வீழ்த்தியது. அந்த விமானம் தவறுதலாக இரானின் வான்பரப்புக்குள் சென்றுவிட்டதாகக் கூறி, உண்மையை மூடிமறைக்க முயன்று தோற்றுப் போனது அமெரிக்கா. இரானின் மீது நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னே இசுரேலின் உளவு நிறுவனமான மொசாத் இருப்பதை லீ ஃபிகாரோ என்ற பிரெஞ்சு நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது.

இப்படி இரான் மீது கடந்த சில ஆண்டுகளாகவே பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வரும் அமெரிக்க  இசுரேல் கூட்டணியைத்தான், பயங்கரவாத நாடுகளாக அறிவித்துத் தண்டிக்க வேண்டும்.  ஆனால், அமெரிக்கவோ சர்வதேச அரங்கில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு, அமெரிக்காவிற்கான சவூதி அரேபியத் தூதரைக் கொல்ல இரான் முயன்றதாகவும், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கும் இரானுக்கும் தொடர்பிருப்பதாகவும் கட்டுக்கதைகளைப் பரப்பி, இரானைப் பயங்கரவாத நாடென முத்திரை குத்திவிடக் கீழ்த்தரமாக முயன்று வருகிறது.

இரான் : அமெரிக்கக் கழுகிடம் சிக்கிய கோழிக் குஞ்சு !அணு ஆயுதங்களைத் தயாரிக்க வேண்டும் என்றால், யுரேனியத்தை 90 சதவீத அளவிற்கு செறிவூட்டும் தொழில்நுட்பத் திறனைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இரானோ மருத்துவச் சிகிச்சைக்குப் பயன்படும் வகையில் யுரேனியத்தை 20 சதவீதம் அளவிற்கே செறிவூட்டும் திறனைப் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்த்த கதையாக, ஏராளமான அணுஆயுதங்களைத் தயாரித்து வைத்திருக்கும் இசுரேலைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, இன்னும் அணு ஆயுத ஆற்றலைப் பெறாத இரானை அமெரிக்காவும் அதனின் கூட்டாளிகளும் தண்டிக்கத் துடிப்பது அநீதியானது. தம்மிடம் குவிந்து கிடக்கும் அணு ஆயுதங்களை அழிக்கவோ, கைவிடவோ விரும்பாத அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு ஆகிய ஏகாதிபத்திய நாடுகளும், அவற்றின் அடிவருடிகளான இசுரேலும், இந்தியாவும், “இரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயலக் கூடாது என உபதேசிப்பதும், அதற்காக அதனைத் தண்டிக்க முயலுவதும்” கேலிக்கூத்தானது மட்டுமல்ல, அடிப்படையிலேயே நியாயமற்றது.

இராக் மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுக்கும் முன்பாக, அந்நாட்டைப் பலவீனப்படுத்தும் சதித் திட்டத்தோடு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதைப் போலவே, இரான் மீதும் அடுக்கடுக்காகப் பல பொருளாதாரத் தடையுத்தரவுகளைத் திணித்துவருகிறது, அமெரிக்கா. சதாம் உசேன் பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களைத் தயாரித்துக் குவித்து வைத்திருப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் நடத்தப்பட்டதைப் போலவே, இரான் இன்னும் ஓராண்டிற்குள் அணு ஆயுதங்களைத் தயாரித்துவிடும் திறனைப் பெற்றுவிடும் என்ற பிரச்சாரம் நடத்தப்படுகிறது. இப்பீதியூட்டும் புளுகுணிப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்தி, இரானைத் தனிமைப்படுத்தித் தாக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே, இரானின் அணுசக்தி பரிசோதனை முயற்சிகள் தொடர்பாக நடைபெற்று வந்த சர்வதேச பேச்சுவார்த்தையைச் சீர்குலைத்தது, அமெரிக்கா.  இவையனைத்தும் 1970களில் தான் இழந்த சொர்க்கத்தை எப்படியாவது மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற வெறியோடு சாத்தானின் பேரரசு அலைவதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.

– புதிய ஜனநாயகம், பிப்ரவரி-2012

காதலைத் தீர்மானிப்பது அப்பியரன்சா, அப்ரோச்சா, அரிவாளா?

41

இன்று காதலர் தினம். ஊடகங்களின் உதவியால் ஊதிப்பெருக்கப்படும் இந்த தினத்தில் காதல் குறித்த இந்திய யதார்த்தம் கிஞ்சித்தும் இருப்பதில்லை. நம் சமூகத்தில் தோன்றும் காதல் எத்தகைய வில்லன்களையெல்லாம் எதிர்த்து போராட வேண்டியிருக்கிறது? குறிப்பாக சாதிவெறி கோலேச்சும் சமூகத்தில் காதல் வெற்றி பெறுவதற்கு வாழ்வா, சாவா என்று போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. ஊடகங்களின் ஜிகினா காதலையும், யதார்த்தம் சுட்டெரிக்கும் உண்மைக் காதலையும் இந்தக் கட்டுரை அலசுகிறது. காதலர் தினத்திற்காக மீள் பதிவு.

விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சியில் காதலுக்குத் தேவை தோற்றமா, அணுகுமுறையா (அப்பியரன்சா, அப்ரோச்சா) என்ற தலைப்பில் காதலர்கள், காதலித்து மணந்தவர்கள், காதலிக்கக் காத்திருக்கும் இளைஞர்கள், இளம் பெண்கள் எல்லோரும் மனம் திறந்து ஒரு மாதிரியாக விவாதித்தார்கள்.

காதலின் ஆன்மாவை மறுத்து அலங்காரங்களை மட்டும் விவாதிக்கும் விஜய் டி.வி.
காதலின் ஆன்மாவை மறுத்து அலங்காரங்களை மட்டும் விவாதிக்கும் விஜய் டி.வி.

தோற்றத்தில் என்ன பிடிக்கும், பிடிக்காது வகையறாக்களை பட்டியலிட்டவர்கள் அழகு, தலைமுடி, சீரான பல், நடுத்தர உயரம், உடை நிறம், உடல் வண்ணம், உடை வகைகள், முதலானவற்றை அலசினார்கள். அடுத்து அணுகுமுறையைப் பட்டியலிட்டவர்கள் அசடு வழியாமை, எதிர் பாலை ஆதிக்கம் செய்யாமை, எதிர் பாலை உரிமை எடுத்துக் கொள்வது-கொள்ளாமை, என என்னவோ பேசினார்கள். பெண் சுதந்திரம் குறித்து தனது விருப்பப்படி உடை அணிவது, பேருந்தில் செல்வது, நண்பர்களிடம் பேசுவது, கேட்டதை வாங்கிக் கொடுப்பது, தன்னை அன்புடன் கவனிப்பது, இன்ன பிறவற்றை அடுக்கினார்கள். இப்படி ஒரு மணிநேரத்தில் காதலை அலசிவிட்டு காதலைப் பெண்களிடம் எப்படித் தெரிவிப்பது என்று பார்வையாளர்களை வைத்தே நடித்துக் காட்டினார்கள். மொத்தத்தில் காதலும், பெண்ணுரிமையும் ஒரு மணிநேரமாகப் படாதபாடு பட்டது என்றால் மிகையல்ல.

இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு இளைஞர் காதலிப்பது இவ்வளவு சுலபமா என்று ஆச்சரியப்பட்டு உடனே ஒரு பெண்ணைத் தெரிவு செய்து கணக்கு பண்ணுவதற்குத் திட்டமிடும் சாத்தியமும் உண்டு. இந்த ஜிகினாக் காதலைத்தான் பத்திரிகைகளும், காதலர் தினக் கொண்டாட்டங்களும் வருடா வருடம் போதித்து வருகின்றன. இந்திய நடைமுறையில் இந்த சரிகை வேலைப்பாடுகள் எவையும் செல்லுபடியாவதில்லை. உண்மையில் காதலிக்க வேண்டுமென்றால் பல தடைக்கற்களைக் கடக்கவேண்டும். காதலின் உயிராதாரமான இந்தப் பிரச்சினைகளின் பால் சினிமாவும், ஊடகங்களும் கவலை கொள்வதில்லை. காதல் டூயட்டுக்காக வெளிநாடு செல்லும் இயக்குநர்கள் எவரும் இந்த மண்ணின் உண்மைக் காதலை அதன் வலியை அறிந்து கொள்வதில்லை.

சாதி மதம் மாறி, ஜாதகம் பார்க்காமல், பெற்றோர்-உற்றோரை எதிர்த்துக்கொண்டு, மணம் செய்வது என்பது அவ்வளவு சுலபமானதல்ல. இதில் சமரசம் செய்து கொண்டு பெற்றொர் வழி திருமணம் செய்தவர்களே இங்கு அதிகம். அவர்களுக்கெல்லாம் காதல் விருப்பமற்றது என்பதல்ல, காதல் நடைமுறையில் சாத்தியமல்ல என்ற சமூக நிர்ப்பந்தமே காரணம். காதலிப்பவர்களும் கூட இந்த தடைக்கற்களைத் தாண்டுவதை விட சமரசம் செய்து கொண்டு குறுக்கு வழியைத் தேடுகிறார்கள். சாதி, மதம் மாறாமல் காதலிப்பது, தனது சாதியின் தரத்தினையொத்த சாதியில் காதலிப்பது, கீழ் சாதியைத் தவிர்ப்பது, தனது வர்க்க நிலைக்கேற்ப காதலிப்பது, காதலித்தாலும் ஜாதகப் பொருத்தம் பார்ப்பது, பெற்றோருக்காக வரதட்சணை கேட்டு காதலியை நிர்ப்பந்திப்பது, தாய் தந்தை விருப்பத்திற்காகக் காதலியை வேலையை விடச் செய்து வீட்டு விலங்காக நடத்துவது, பிறக்கும் குழந்தைகளை தந்தையின் சாதி அடையாளத்துடன் வளர்ப்பது, இருவரில் யார் மேல்சாதியோ அவர்களது சாதியப் பண்பாட்டைக் கடைபிடிப்பது….. இங்கே காதல் எங்கே இருக்கிறது?

இவ்வளவு பிற்போக்கு அழுக்குகளை அகற்றாமல், இதைப் பற்றி பேசாமல் காதலுக்கு தேவை தோற்றமா, அணுகுமுறையா என்று விவாதிப்பது அயோக்கியத்தனமில்லையா? தான் விரும்பிய உடைகளை அணிவதுதான் பெண்ணுக்கு சுதந்திரம் என்று பிதற்றுவது அக்கிரமில்லையா? இந்தியாவில் காதலுக்குத் தேவைப்படுவது போராட்டமும், கலகமும்தான். இந்த உண்மையை ரத்து செய்யும் ஊடகங்கள் காதலை மின்மினிப் பூச்சி போல உணர்த்துகின்றன. இருண்டு கிடக்கும் சமூக இருட்டை இச்சிறிய ஒளி அகற்றுவதில்லை.

காதலிப்பது ஜாலிக்காக, கல்யாணம் செய்வது பெற்றோருக்காக!
காதலிப்பது ஜாலிக்காக, கல்யாணம் செய்வது செட்டிலாக!

மேம்போக்கான காதல் நடவடிக்கைகள் பெருநகரங்களில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். இதிலும் ஜாலிக்காகக் காதல், செட்டிலாவதற்கு பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம் என்பதே வழக்கமாக நடக்கிறது. ஆனால் சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் காதல் என்பது இன்னமும் அபாயகரமாகவே உள்ளது. டெக்கான் குரோனிக்கிள் செய்தித் தாளில் 10.9.08 அன்று வந்த ஒரு துயரக்காதல் சம்பவம் இதைக் கண்ணீருடன் தெரிவிக்கிறது.

தஞ்சை மாவட்டம் அரித்துவார் மங்கலத்ததைச் சேர்ந்த சிவாஜி எனும் 32 வயது தலித் இளைஞரும், அம்மாபேட்டைக்கு அருகில் வாழும் கள்ளர் சாதியைச் சேர்ந்த 29 வயது லட்சுமியும் காதலிக்கிறார்கள். தஞ்சை மாவட்டத்தின் அரசியல், சமூக வாழ்க்கையில் கோலேச்சும் கள்ளர் சாதி அவ்வட்டாரத்தில் பிரபலமான ஆதிக்க சாதியாகும். ஒரு கள்ளர் சாதிப் பெண்ணை அதுவும் ஒரு தலித் இளைஞன் திருமணம் செய்வது என்பது அங்கே நிலநடுக்கத்திற்கு ஒப்பானது. விசயம் வெளியே தெரிந்தால் தஞ்சையே சாதி வெறியால் கொந்தளித்துக் குமுறும். இச்சூழ்நிலையில் இக்காதலர்கள் எவ்வளவு சிரமங்களோடும், அச்சத்தோடும், இரகசியமாகவும் காதலித்திருப்பார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

காதலிப்பதற்கே இவ்வளவு சாகசம் தேவைப்படும் போது திருமணம் என்பதை அங்கே கற்பனை கூடச் செய்யமுடியாது.

இந்நிலையில் காதலர்கள் வேறுவழியின்றி தமது பெற்றோர், உறவினர் அறியாமல் திண்டுக்கல்லில் இருக்கும் ஒரு மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு அங்கேயே வாழ்கின்றனர். சிவாஜி ஆட்டோ ஓட்டுநராக பிழைப்பு நடத்தி இல்லறத்தை நடத்துகிறார். தஞ்சைக்கும், திண்டுக்கல்லுக்கும் தூரம் சற்றே அதிகமென்பதால் கள்ளர் சாதி வெறியின் கொடுக்குகள் தம்மைத் தீண்டாது என்றே அந்த அப்பாவிக் காதலர்கள் எண்ணியிருந்தனர். ஆனால் வன்மத்திலும், வெறியிலும் மையம் கொண்டிருக்கும் இச்சாதி வெறிக்கு இந்த தூரமெல்லாம் ஒரு பிரச்சினையே அல்ல.

லட்சுமியின் சகோதரர்கள் சுப்பிரமணியன், சிவக்குமார், மீனாட்சி சுந்தரம், மூவரும் காதலர்கள் திண்டுக்கல்லுக்கு புலம் பெயர்ந்ததைக் கண்டுபிடித்து சில ரவுடிகளுடன் ஒரு டாடா சுமோவில் செல்கிறார்கள். செப்டம்பர் 7 ஆம் தேதி இருப்பிடத்தை தெரிந்து கொண்டு சிவாஜியை அடித்து வண்டியில் ஏற்றுகிறார்கள். அதைத் தடுக்க முயற்சித்த லட்சுமி அடிபட்டவாறு செய்வதறியாமல் கதறுகிறார். எப்படியாவது தனது காதல் கணவனைக் காப்பாற்றவேண்டுமென போலீசில் புகார் கொடுக்கிறார். அடுத்த நாளே ஆனைமலைப் பகுதியில் சித்ரவதையுடன் கொலை செய்யப்பட்ட சிவாஜியின் உடலைப் போலீசார் கண்டுபிடிக்கிறார்கள். கோபத்தில் வந்த சகோதரர்கள் சிறிது அடித்துவிட்டு தனது கணவனை விட்டுவிடுவார்கள் என்று நினைத்தேன் இப்போது என்ன செய்வேன் என்று மனமுடைந்து கதறுகிறார் லட்சுமி.

உடன் பிறந்த தங்கை தாலியறுத்தாலும் பரவாயில்லை, ஒரு தலித் ஒரு கள்ளர் பெண்ணை தொடக்கூடாது என்று பித்தம் தலைக்கேறிய இந்த சாதிவெறிக் கொடூரத்தை அரங்கேற்றியவர்கள் யாரும் வயதானவர்கள் அல்ல. செல்பேசியும், இருசக்கர வாகனங்களும் இன்னபிற நவநாகரீகங்களைப் பயன்படுத்தியும், விஜய் டி.வியைப் பார்ப்பவர்களாவும் உள்ள இளைஞர்கள்தான். தமது தங்கைக்கு அவளது கணவனது பிணத்தையே திருமணப் பரிசாக வழங்கியிருக்கிறார்கள், அந்தப் பாசமிகு அண்ணன்மார்கள். தஞ்சையில் இனி ஒரு கள்ளர் பெண்ணை ஒரு தலித் கை வைக்க நினைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு பாடம் என்று தஞ்சை வாழ் கள்ளர் குலக் கூட்டங்கள் வீரக்கதையாக பெருமை பேசும். கல்லூரிக்கு செல்லும் கள்ளர் மாணவிகளும் இந்தக்கதை மட்டுமல்ல இதற்கு முன்னால் நடந்த பல கதைகளையும் மனதில் கொண்டு காதலைக் கற்பனையில் கூட அரங்கேற்றாத மனநிலையை வளர்த்துக்கொள்வார்கள். காதலின் முன்னுதாரணங்களை இலக்கியத்தின் வழியாக ஷாஜகான் – மும்தாஜ், அனார்கலி – சலீம், ரோமியோ – ஜூலியட் போன்ற காதலர்களை வைத்து யாரும் சிந்திக்க முடியாது. இங்கே கொலை செய்யப்பட்ட காதலர்களின் கதைதான் காதலின் யதார்த்த இலக்கியமாகக் கட்டியம் கூறுகின்றன.

காதலர்களை எரிப்பது காலம் காலமாக நடக்கும் ஒரு இந்தியச் சடங்கு!
காதலர்களை எரிப்பது காலம் காலமாக நடக்கும் ஒரு இந்தியச் சடங்கு!

இது இந்தியக் காதலின் உண்மை முகம். கலப்பு மணம் செய்த காதலர்கள் கட்டி வைத்து எரிப்பது இங்கு நெடுநாள் இருக்கும் ஒரு சடங்கு. சில ஆண்டுகளுக்கு முன்னர் விருத்தாசலம் அருகே ஒரு கிராமத்தில் ஒரு தலித் இளைஞனும், ஒரு வன்னியப் பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இதையறிந்து ஆத்திரமடைந்த மணமகள் தரப்பு இருவரையும் பிடித்து ஊர்கூடி ஆதரிக்க எரித்துக் கொன்றார்கள். ஒரு காதல் ஜோடி எரிந்து சாவதை ஊரின் வன்னியர்கள் திரண்டு வந்து வாழ்த்தும் போது அந்த சாதி வெறியின் வன்மத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பல சமூக ஆர்வலர்களின் முயற்சிக்குப் பிறகு இப்போதுதான் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. வழக்கு முடிவடையவில்லை என்பதால் குற்றவாளிகள் சுதந்திரமாக உலா வருவதோடு எப்படியும் விடுதலை ஆவோம் என்று திமிராகவும் பேசிவருகிறார்கள். ஊரே இந்த எரிப்பில் பங்கெடுத்திருக்கும்போது சட்டம் மட்டும் என்ன செய்யும்?

சட்டமும், போலீசும், மொத்தத்தில் இந்த சமூக அமைப்பும் காதலர்களுக்கு எதிராகத்தான் அணிவகுக்கிறது. சாதி மாறி காதலிப்பதில் அதுவும் ஒரு தலித்தாக இருந்துவிட்டால் தண்டனை நிச்சயம் என்பதுதான் யதார்த்தம். ஆதிக்க சாதியின் பெண்ண ஒரு தலித் தொடுவதை சாதியின் புனிதம் கெட்டுப்போவதாக சாதிவெறி இயல்பாக சிந்திக்கிறது. இத்தகைய அடக்குமுறைகளுக்குள்ளே வாழும் ஒரு பெண்ணுக்கு காதலிக்கும் சுதந்திரம் எங்கே இருக்கிறது?

காதலில் மட்டுமல்லா கடவுளிலும் இதே சாதிவெறி அடங்காமல் நர்த்தனமாடுகிறது. சேலம் கந்தம் பட்டி கிராமத்தில் இருக்கும் திரௌபதி அம்மன் கோவிலில் வழிபடுவதற்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி இல்லை. வன்னியர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தக் கோவிலில் வழிபடும் உரிமைக்காக தலித் மக்கள் நெடுங்காலமாக போராடி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக உயர்நீதிமன்றம் வழிபடும் உரிமையை அமல்படுத்துமாறு உத்தரவிட்டதும் இம்மாதம் 8ஆம் தேதி போலீசார் பாதுகாப்புடன் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலில் நுழைந்து அம்மனை வழிபட்டனர். இதை எதிர்த்த வன்னியர் தரப்பின் 200 குடும்பங்கள் மதுரை உத்தப்பரம் பிள்ளைமார்கள் செய்தது போல ஊரைக் காலி செய்து விட்டு அருகாமை மலையில் தங்கி போராட்டம் செய்கிறார்கள். அதிலும் சில வன்னிய சாதி வெறியர்கள் கோவில் இருந்தால்தானே கும்பிட வருவாய், கோவிலையே இடித்துவிடுகிறோம் என்று பேசி வருகிறார்கள். கோவிலின் புனிதம் கூட சாதிவெறிக்கு தப்பவில்லை.

காதலித்தால் எரிப்பார்கள்: கும்பிட்டால் கோவிலையே இடிப்பார்கள். இப்போது சொல்லுங்கள் எது காதல்? காதலுக்குத் தேவைப்படுவது என்ன?

பள்ளி மாணவர்களிடம் கொலைவெறி ஏன்? ஓர் ஆய்வு !

45

ஜெர்மனியில் திம் கிரெட்ஷ்மெர் என்ற 17 வயது மாணவன் தனது முன்னாள் பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்து பதினைந்து பேரைக் கொன்றுவிட்டு பின்னர் போலீசுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு தன்னையும் சுட்டுக் கொண்டு இறந்திருக்கிறான். விடலைப் பருவத்து பள்ளி மாணவர்கள் இத்தகைய வன்முறையில் ஈடுபட்டு சக மாணவர்களை சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் அமெரிக்காவில் அடிக்கடி நடப்பதைக் கேள்விப் பட்டிருப்போம். அமெரிக்கா அளவுக்கு இந்தியாவில் துப்பாக்கிகள் இன்னமும் மலிவாகிவிடவில்லை என்றாலும் தனிநபரை முன்னிறுத்தும் அமெரிக்க பாணி வாழ்க்கைமுறை இங்கேயும் வளர்ந்து வருகிறது.

அப்படி மாறிய மாணவர்கள் சிலர் துப்பாக்கியுடன் செய்த வன்முறைகளை இந்தக் கட்டுரை ஆய்வு செய்கிறது. இன்றைய கல்வி, மொழி,  வாழ்க்கை, நுகர்வு பொருட்கள் அத்தனையும் மாணவர்களிடன் பொறுமையற்ற மனநிலையை உருவாக்குவதோடு, சமூக உணர்வை குன்றச் செய்வதையும் பார்க்கிறோம். ஆடம்பர வாழ்க்கை குறித்த நாட்டம், எப்படியும் முன்னேற வேண்டுமென்ற வெறி, சமூக மதிப்பீடுகளை மாற்றச் செய்யும் சுற்றுச்சூழல், எல்லாம் சேர்ந்து விடலைப்பருவத்தினரை சமூகத்திற்கு எதிரான பதட்டமுடைய தனிநபர்களாக மாற்றுகின்றது.

இந்தக் கட்டுரை நோயை மட்டும் ஆராயவில்லை. இந்த நோய்க்கு என்ன மருந்து அத்தியாவசியம் என்பதையும் எடுத்துச் சொல்கிறது. விடலைப் பருவத்தினரை எந்த அளவு சமூகமனிதர்களாக மாற்றுகிறோமோ அந்த அளவு அவர்களது வன்முறையை தணித்து நல்ல குடிமக்களாக உருவாக்க முடியும்.

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்

சம்பவம் 1. தெற்கு தில்லி, அரியானா எல்லையில் இருக்கும் குர்கான் நகரம். அங்கு யூரோ சர்வதேசப் பள்ளியில் அவினாஷ், வினய் இருவரும் எட்டாம் வகுப்பு படிக்கிறார்கள். அதே வகுப்பில் படிக்கும் அபிஷேக் தியாகியுடன் தகராறு வருகிறது. அவினாஷின் அப்பா ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர். வீட்டில் துப்பாக்கி வைத்திருக்கிறார். தொலைக்காட்சிப் பெட்டி அருகில் தயார் நிலையிலிருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, அவினாஷ், வினய் இருவரும் அபிஷேக்கைச் சுட்டுக் கொல்கிறார்கள்.

சம்பவம் 2. பெங்களூர் நகரம். ஆங்கில வழி வகுப்பில் படிக்கும் அந்த மாணவனது வீடு, பள்ளிக்கு அருகில்தான் இருக்கிறது. வீட்டு மொட்டை மாடியில் ஏர் கன்னால் சுட்டுப் பழகுவது, இம்மாணவனது பொழுதுபோக்கு. அப்பா பொறியியலாளர். அம்மா மருத்துவர். இம்மாணவனை கன்னட வழி வகுப்பில் படிக்கும் இரு மாணவர்கள் கேலி செய்தார்களாம். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த மாணவன், வீட்டின் மொட்டை மாடியிலிருந்து பள்ளி முடிந்து வரும் அந்த இரு மாணவர்களையும் துப்பாக்கியால் சுடுகிறான். இருவரும் சாகவில்லை என்றாலும், காயம்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள்.

சம்பவம் 3. உத்திரப் பிரதேச மாநிலம், காஜியாபாத் மாவட்டம் மெத்னாரா கிராமத்தைச் சேர்ந்த அதர் சிங் +2 படிக்கும் மாணவன். உடன் படிக்கும் விபன் எனும் மாணவனை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறான். “தங்கையை கேலி செய்யாதே எனப் பலமுறை எச்சரித்தும் கேட்காததால் விபனைச் சுட்டுக் கொன்றேன் ” என அதர் சிங் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் 4. நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் திருச்செங்கோடு நகரம். அங்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ரஞ்சித் +2 படிக்கிறான். கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட ரஞ்சித், புது மட்டை வாங்குவதற்கு பெற்றோர்களை நச்சரித்துப் பணம் வாங்குகிறான். லோகநாயகி என்ற வயதான பெண்மணி நடத்தும் விளையாட்டு பொருட்கள் விற்பனையகத்துக்கு செல்லும் ரஞ்சித், அங்கு பல மட்டைகளைப் பார்த்தும் திருப்தியடையவில்லை. தனது நேரத்தை வீணடிப்பதாக அவனிடம் லோகநாயகி நொந்து கொள்கிறார். இதை ஒரு பெரிய அவமானமாக எடுத்துக்கொண்ட ரஞ்சித், அந்தப் பெண்மணியைப் பழிவாங்க நினைக்கிறான். அவனது தாத்தா கந்தசாமி, தி.மு.க.வில் இரு முறை சட்டமன்றப் பதவிக்குப் போட்டியிட்டவர். வீட்டில் ஒரு வெளிநாட்டு கைத்துப்பாக்கியை வைத்திருக்கிறார். அதை எடுத்துக் கொண்ட ரஞ்சித், இருநாட்கள் கழித்து லோகநாயகி அம்மாளைச் சுட்டுப் படுகாயப்படுத்துகிறான். அந்தப் பெண்மணி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.

இந்நான்கு சம்பவங்களும், கடந்த சில மாதங்களில் நடந்து பத்திரிக்கைகளில் பதிவானவை. மாணவர் மத்தியில் நடக்கும் இது போன்ற துப்பாக்கிச்சூடு நிகழ்வுகளுக்கு புகழ்பெற்ற நாடு அமெரிக்காதான். கடந்த பிப்ரவரி மாதத்தில் இல்லினாய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவன் ஒருவன் சுட்டு, 5 மாணவர்கள் இறந்திருக்கின்றனர். இந்த அமெரிக்கப் பாணி வன்முறை இந்தியாவிலும் வந்து விட்டதா என்று சிலர் அதிர்ச்சியடையலாம். வாழ்க்கை, பண்பாடு, பொருளாதாரம், அரசியல் அத்தனையும் அமெரிக்கமயமாகி வரும் போது, வன்முறை மட்டும் விதிவிலக்கா என்ன? அமெரிக்கா அளவுக்கு இங்கே துப்பாக்கிகள் மலிவாகப் பரவவில்லையே தவிர, வன்முறை அதன் தன்மையளவில் மாணவர்களிடையே சமீப காலமாகப் பரவித் தான் வருகிறது.

இது சமூக அநீதிக்கு எதிராகக் கலகம் செய்யும் மாணவப் பருவத்திற்கேயுரிய போராட்ட வன்முறையல்ல; ஆடம்பரத்திற்காகவும், அற்பப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவும் துப்பாக்கி எடுக்கும் தனிநபர் வன்முறை. மேற்கண்ட சம்பவங்களில் வன்முறையின் கருவி துப்பாக்கியாக இருப்பதினாலேயே போலீசும், பத்திரிக்கைகளும் விசேடமாகப் பார்க்கின்றன. உண்மையில் துப்பாக்கியல்ல பிரச்சினை. விடலைப் பருவத்தின் வன்முறை மனோபாவம்தான் பிரச்சினை.

2006 டிசம்பர் மாதத்தில், சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கும் 13 வயதே நிரம்பிய அரவிந்த் என்ற சிறுவன் அவனது தெரு நண்பர்களாலேயே கொல்லப்படுகிறான். புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பணமில்லாததால், அரவிந்தை  பணையக் கைதியாகக் கடத்தி, அவனுடைய அப்பாவிடமிருந்து தேவைப்பட்ட பணத்தைக் கறந்து விடலாம் என்று திட்டமிடுகிறார்கள். திட்டம் குளறுபடியாகி, அம்மாணவன் கோரமாகக் கொல்லப்படுகிறான். இதே காலத்தில் ஆடம்பர, கேளிக்கை வாழ்விற்காகப் பணம் திரட்ட நினைத்த மூன்று ஏழை மாணவர்கள், ஒரு நகைக் கடையைக் கொள்ளையடிக்க முயன்றபோது பிடிபட்டார்கள்.

இப்படிப் பரபரப்பிற்காகப் பத்திரிகைகளில் வெளிச்சமிடப்படும் சம்பவங்கள் பல இருந்தாலும், இவை எங்கோ ஒரு வீட்டில் நடப்பதாகவும், நம் வீட்டில் பிரச்சினையில்லை என்று பல பெற்றோர்கள் சுயதிருப்தி கொள்ளலாம்.  வன்முறையின் கடும் தருணங்கள் இங்குதான் வெடிக்கவேண்டுமென்று திட்டமிட்டுக் கொள்வதில்லை. அவை எங்கும் எப்போதும் நடக்கலாம். அதற்குத் தோதாக விடலைப் பருவ மாணவ வாழ்க்கை தயாராகி வருகிறது. அதில் நம் வீட்டுப் பையனும் இருக்கிறான் என்பதைப்  பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை.

ஓரிரு தலைமுறைகளுக்கு முன்பு இருந்ததை விட, மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை வெகுவாக மாறிவிட்டது. முன்பு ஆடம்பரமாகக் கருதப்பட்டவை, இன்று அத்தியாவசியமானவையாக மாறிவிட்டன. எல்லா வேலைகளுக்கும் நவீனக் கருவிகள்; அது போக வேலையாட்கள், குளிர்பதனக் கருவி, கார், இருசக்கர வாகனங்கள், செல்பேசிகள், பீட்ஸா, பர்கர் என்று மாறிவிட்ட உணவுப் பழக்கம், குடும்ப உறுப்பினராக மாறிவிட்ட தொலைக்காட்சி, வார இறுதியில் எல்லையில்லா கேளிக்கைகள் …

இலட்சக்கணக்கான விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளிவரும் புதிய பொருளாதாரக் கொள்கைதான், நடுத்தர வர்க்கத்தை இப்படியொரு ‘மகிழ்ச்சியான வாழ்க்கைக்குள்’ பிடித்துத் தள்ளியிருக்கிறது. மற்றவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட வாழ்க்கையை, நவீன வசதிகளாக  மாற்றித் தந்திருக்கும் உலகமயமாக்கம் உருவாக்கியிருக்கும் இந்த வாழ்க்கையின் தன்மைதான் என்ன? எல்லா வகை உடலுழைப்பையும், சமூக உறவுகளையும் ரத்து செய்துவிட்டு, கேளிக்கை, நுகர்வு ஒன்றையே இலக்காகக் கொண்டு ஓடும் இந்த வாழ்க்கை, சிறார்களின் உலகை என்னவாக மாற்றியிருக்கிறது?

வன்முறை கற்றுத்தரும் கார்ட்டூன் தொடர்கள்!

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்குழந்தைகளுக்கு விருப்பமான கார்ட்டூன் சேனல்கள் இன்று தமிழிலேயே வந்து விட்டன. பள்ளிக் கல்விக்கு ஆங்கிலமும், பொழுது போக்குவதற்கு மட்டும் தமிழ் என்பது ஒரு முரண்பாடாகத் தோன்றலாம். குழந்தைகள் மனதை தாய்மொழியில்தான் கொள்ளை கொள்ள முடியும் என்பது அந்தச் சேனல்களைச் சந்தைப்படுத்தும் முதலாளிகளுக்குத் தெரியும்; சுட்டி டி.வி.யையும், தமிழ் ஜெட்டிக்ஸையும் சிறார்கள் நீண்ட நேரம் வெறித்துப் பார்க்கிறார்கள். அப்படிப் பார்ப்பதற்காகவே விரும்பிக் காத்திருக்கிறார்கள். அதற்காகவே வீட்டுப் பாடத்தை விரைந்து முடிக்கிறார்கள். அவர்களது கற்பனை உலகை கார்ட்டூன்களும், யதார்த்த உலகை கார்ட்டூன்களுக்கு இடையில் வரும் விளம்பரங்களும் கட்டியமைக்கின்றன. ஆசை தோற்றுவிக்கும் ஏக்கத்திற்கும், அது நிறைவேற தடையாக இருக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான இந்த மாய உலகின் முரண்பாட்டில்தான் இளம்பருவத்து மாணவர்கள் உலவுகிறார்கள்.

பவர் ரேன்ஜர்ஸ் அவர்கள் விரும்பிப் பார்க்கும் ஒரு தொடர். கிராபிக்ஸ் உதவியோடு வண்ணச் சிதறலாகத் தெறிக்கும் இத்தொடரில் அடிப்பது, வெட்டுவது, சுடுவது, வெடிப்பது எல்லாம் நொடிக்கொரு தடவை நடக்கிறது. நமக்கு ஓரிரு நிமிடங்களில் சலித்துப் போகும் இத்தொடர், அவர்களுக்குச் சலிப்பதில்லை. கிராஃபிக்ஸ் இல்லாமல், நிஜத்தில் மாமிச மலைகள் மோதும் டபிள்யூ.டபிள்யூ. எஃப் மல்யுத்தச்  சண்டைகளும் ஜெட்டிக்சில் காண்பிக்கப்படுகின்றன. வகை தொகையில்லாமல் மனிதர்கள் அடித்துக் கொள்ளும் இந்த வன்முறைக் காட்சிகளைத் தொடர்ந்து பார்ப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன?

சக மனிதன் அடிபட்டாலோ, இரத்தம் சிந்தினாலோ, இறந்து போனாலோ அதிர்ச்சியடைவது மனித இயல்பு. சிறார்களின் உலகில், இந்த உள்ளார்ந்த மனித மதிப்பீடுகள் நமத்துப் போகின்றன. வன்முறை குறித்த இரக்கமோ, பயமோ இல்லாதது மட்டுமல்ல, அவர்களே அதைச் செயல்படுத்துபவர்களாகவும் மெல்ல மெல்ல மாறுகிறார்கள். அற்பப் பிரச்சினைகளாக இருந்தால் கூட, அதை வன்முறை மூலம் தீர்த்துக்கொண்டு இறுதி வெற்றி அடையவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். விளைவறியாத இளங்கன்றுகளாக இருப்பதால், இத்தகைய வன்முறை அவர்களது ஆளுமையின் அங்கமாகிறது.

விலங்குகளையும் இயற்கையையும் நேரில் கண்டு கற்கவேண்டிய வயதில், மிக்கி மவுசின் பொருளற்ற வேடிக்கைகளில் காலந்தள்ளுகிறார்கள் சிறார்கள். அதிலும் விலங்குகளை மையமாக வைத்து எடுக்கப்படும் கார்ட்டூன் தொடர்கள், இப்போது அருகி வருகின்றன. சண்டைக் காட்சிகளை மையமாக வைத்து எடுக்கப்படும் அதிதீவிர வீரர்களின் தொடர்களே இன்று பெருகி வருகின்றன. இவற்றின் வன்முறைக்கு ஒத்திசைவான விதத்தில் இடையில் வரும் விளம்பரங்களும் குழந்தைகளைப் போட்டுத் தாக்குகின்றன. பெரியவர்களுக்கு வேண்டுமானால் விளம்பரங்கள் மீது சலிப்பு வரலாம். சிறியவர்களுக்கு அவைதான் பாலபாடம்.

விளம்பர உலகில் வெதும்பும் சிறார்கள்!

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்சில விநாடிகள் மட்டுமே வரும் விளம்பரங்களின் செய்தி, நாள் முழுக்க சிறுவர்களை இயக்குகின்றது. அவர்களது அறிவுத்திறனின் அடிப்படையே விளம்பரங்கள்தான். வேகமான படத்தொகுப்புக்களில் விரைந்து செல்லும் விளம்பரத்தின் சிறு செய்தி கூட, சிறுவர்களின் மனதில் தைப்பதற்குத் தவறுவதில்லை. விளம்பரங்கள் செதுக்கித்தரும் ‘மகிழ்ச்சியான குடும்பம்’ உண்மையில் ஒரு கற்பனைதான் என்றாலும், அந்த மகிழ்ச்சியான வாழ்க்கைக்காகச் சிறுவர்கள் ஏங்குகிறார்கள். இயற்கையின் இயக்கத்தையும், சமூகத்தின் போராட்டத்தையும் அறிய வேண்டிய இளம் பருவம், இத்தகைய செயற்கையான, சுயநலம் மிகுந்த, ஆடம்பரமான கற்பனை உலகத்தில் வெம்பி வாடுகிறது. பஞ்சில் பழுத்த மனம், தான் காணும் தொலைக்காட்சி வாழ்க்கை கிடைக்காத போது வன்முறையின் பக்கம் எளிதாக நகருகிறது.

சந்தையில் அறிமுகமாகும் புதிய பொருள் எது, எது வாங்கினால் எது இலவசம், எதற்குத் தள்ளுபடி, எந்தக் கடையில் என்ன கிடைக்கும் முதலான நுகர்வுக் கலாச்சார பொது அறிவில், குழந்தைகள் பெரியவர்களை விஞ்சி நிற்கிறார்கள். அவ்வகையில் முதலாளிகளின் விளம்பரங்களுக்கு பிரச்சார பீரங்கிகளாக சிறுவர்களே விளங்குகிறார்கள். ஒரு குடும்பத்தில் ஒரு புதிய பொருளை வாங்க வேண்டுமென்ற போராட்டம், அநேகமாக சிறியவர்களிடமிருந்துதான் துவங்குகிறது.

வானவேடிக்கை போல விளம்பரங்களை வாரி இறைக்கும் இன்றைய முதலாளித்துவத்தின் அடிப்படைகளில் ஒன்றான நுகர்வுக் கலாச்சாரம், தன்னளவிலேயே ஒரு வன்முறையைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு புதிய செல்பேசி, கார், தொலைக்காட்சி முதலானவை அறிமுகமாகும் போதும் அவற்றின் பழைய மாடல்களை வைத்திருப்பவர்களிடம், ஒரு பதட்டம் பற்றிக் கொண்டு விடுகிறது. புதியதை வாங்கும் வரை, மனம் அமைதியடைவதில்லை. பங்குச் சந்தை குறியீட்டெண் போல, ஒவ்வொரு புதிய விளம்பரமும் இந்த மெல்லிய வன்முறையின் அளவைக் கூட்டுகிறது. இதில் சிக்கியிருக்கும் பெரியவர்களின் கதியே இதுவென்றால், சிறியவர்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

விளம்பரங்களின் வழியாக மனதில் பதியும் புதிய பொருளை வாங்க வேண்டுமென்று சிறார்கள் அடம் பிடிக்கிறார்கள்; சண்டை போடுகிறார்கள். வகுப்புத் தோழர்களிடம் அற்பவிசயங்களுக்காக எழும் பொறுமையின்மைக்கான அரிச்சுவடி, இதிலிருந்து ஆரம்பிக்கிறது. அவ்வகையில் சகிப்புத் தன்மையற்ற மனநிலையை நுகர்வுக் கலாச்சாரம் கற்றுத் தருகிறது. நச்சரிப்பு தாங்காத பெற்றோர்களும், கேட்டதை வாங்கித் தருகிறார்கள். பிடிவாதம் பிடித்தால் நினைத்ததை வாங்கிக் கொள்ளலாம் என்பதைக் குழந்தைகள் தமது சொந்த அனுபவத்தில் அறிந்து கொள்கிறார்கள். இந்தப் பிடிவாதம்தான் வன்முறையின் துவக்கப்புள்ளி என்பதைப் பெற்றோர்கள் உணர்வதில்லை.

“இந்த உலகத்தில் பெரும்பான்மை மக்களுக்கு என்ன கிடைக்கிறதோ அதுதான் நமக்கும்” என்று போதித்து வளர்ப்பதுதான், குழந்தைகளை  ஒரு சமூக மனிதனாக வளர்ப்பதற்குரிய “சரியான அணுகுமுறை. மாறாக “இந்த உலகில் நீ மட்டும்தான் முக்கியம், உன் மகிழ்ச்சிதான் எங்கள் மகிழ்ச்சி”, என்று குழந்தைகளைச் சீராட்டிப் பாராட்டி வளர்க்கிறார்கள் பெற்றோர்கள். இப்படிச் செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் சிறுவர்களிடம்தான் பொறுமையின்மையும், கோபமும், பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்கின்றது. இந்த எதிர்மறைப் பண்புகளின் விளைவு குறித்து இவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதால் இவர்கள் யாருக்கும் அடங்குவதில்லை.

ஆனால் இவர்களின் பல தவறுகள் பெற்றோரால் மன்னிக்கப்படுகின்றன. நிகழ்காலத்தில் கண்டிக்கப்படாத தவறுகள், எதிர்காலத் தவறுகளுக்கான ஊக்கசக்தியாக மாறிவிடுகின்றன. துப்பாக்கியால் சக மாணவனைச் சுடுவதென்பது, நிச்சயம் அவர்களது முதல் தவறாக இருந்திருக்க முடியாது. துப்பாக்கி வெடிப்பதற்கு முன்பே வன்முறையின் வெவ்வேறு வடிவங்கள் அவர்களிடம் வெடித்திருக்க வேண்டும். அந்தப் பட்டியலில் இன்னொன்று என்று, அந்த மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டைப் பற்றி அலட்சியமாகக் கருதியிருக்க வேண்டும். அல்லது,  அப்பொதெல்லாம் தங்களைக் காப்பாற்றியிருக்கும் பெற்றோர்கள் இப்போதும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையும் அவர்களை இந்த எல்லைக்கு கொண்டு வந்திருக்கக்கூடும்.

செல்பேசி,  இணையத்தில் சீரழியும் மாணவர்கள்!

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்சென்ற தலைமுறைப் பெற்றோர்கள் அளவிற்குக் கூட, இந்தத் தலைமுறைப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கண்டிப்போடும், ஒழுக்கத்தோடும் வளர்ப்பதில்லை. அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்தால் பிரச்சினை முடிந்து விடும் என்று கருதுகிறார்கள். உண்மையில் அப்போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. நடுத்தர வர்க்கத்தின் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கல்லூரி சென்றால்தான் அதிகபட்சமாக சைக்கிளோ, கைக்கடிகாரமோ கிடைத்தது. இன்றோ பள்ளியிறுதியாண்டுகளிலேயே இருசக்கர வாகனம் மாணவர்களின் கனவாகி விட்டது. முக்கியமாக செல்பேசி வைத்திருப்பது, மாணவ நாகரீகத்தின் அளவு கோலாகப் பரவி வருகிறது.

ஆளும்வர்க்கத்தின் கலாச்சாரத் தாக்குதலுக்கு முக்கியமான படைக்கலனாக இருக்கும் செல்பேசி, மாணவ சமுதாயத்தை சீர்குலைப்பதற்கு கச்சிதமான கையடக்கக் கருவியாகும். ஒரு புதிய செல்பேசியிலிருக்கும் தொழில்நுட்ப சாத்தியங்கள், பெரியவர்களுக்குக் கூடத் தெரிவதில்லை. சிறியவர்களே அதில் விற்பன்னர்களாக இருக்கிறார்கள். செல்பேசி நிறுவனங்களும், மாணவர்களுக்கென்றே சிறப்புத் திட்டங்களை அவ்வப்போது அறிவிக்கின்றன. அதில் தவறாமல் இலவசக் குறுஞ்செய்திகள் அனுப்பும் வசதி நூற்றுக்கணக்கில் இருக்கும். நாட்டு நடப்பு குறித்து செய்தித்தாள்களின் பக்கம் தலையெடுத்தும் பார்க்காத மாணவர்கள், குறுஞ்செய்தி அரட்டைகளில் மூழ்குகின்றனர். கடி ஜோக்ஸ், காதலர் தினம் என்று ஆரம்பித்து, இறுதியில் பாலுறவு விரசங்களில் மூழ்குகின்றனர்.

சென்ற ஆண்டு, டெல்லியில் தன் வகுப்பு மாணவியுடன் உறவு கொண்டு, அதை காமரா செல்பேசியில் படம்பிடித்து தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டான், ஒரு மாணவன். இத்தகைய வக்கிரக் கலாச்சாரம் மாணவர்களிடையே வெகுவேகமாகப் பரவி வருகிறது. பார்க்கும் பெண்களை ஆபாசக் கோணத்தில் படம்பிடிப்பதும், பரப்புவதும் ஒரு பொழுது போக்காக நிலை பெற்று விட்டது.  இத்தகைய படங்களை கட்டணம் வாங்கிக் கொண்டு பதிவுசெய்து தருவதற்கென்றே பல இணையத்தள தரகர்கள் இருக்கின்றனர். மேலும் இன்று இணையத்தள மையங்கள் அனைத்தும் மாணவர்களை நம்பியே நடத்தப் படுகின்றன. இணையத்தில் உலாவுவதற்கு வீட்டில் கணினி இருக்க வேண்டிய அவசியமில்லை. பத்து ரூபாயில், பலான விசயங்களை டன் கணக்கில் மேய்ந்து விடலாம். ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடற்று, இந்த நச்சுப் பண்பாடு கைக்கெட்டிய தூரத்தில் மாணவர்களுக்குக் கிடைக்கிறது, என்பதுதான் முக்கியமானது.

விடலைப் பருவத்தில், பாலியல் உறுப்புகள் முதிர்ச்சி அடையும் வயதில், செக்ஸ் என்பது ஒரு புகைமூட்டம் போல மர்மமாய்க் கவிந்திருக்கும் சூழல் இன்று இல்லை. பாலியல் உணர்வில் கட்டுப்பெட்டித்தனம் கொண்டிருந்த இந்திய மனநிலையின் மடையை, இணையத்தின் வெள்ளம் உடைத்திருக்கிறது. திருமணத்துக்கு முந்தைய உறவு மாணவர்களிடம் வேகமாக வளர்ந்து வருவதாக, பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டிகின்றன. இதற்குத் தீர்வாக, மாணவர்களுக்குப் பாலியல் கல்வியைக் கற்றுக்கொடுக்கவேண்டும் என்று பல கல்வியலாளர்கள் முன்வைக்கின்றனர்.

எய்ட்ஸைக் கட்டுப்படுத்துவதற்கு ஆணுறை போடுங்கள் என்பது போலத்தான் இதுவும். இதனால் பாலியல் கல்வி வேண்டாம் என்பதல்ல. ஆனால் பிரச்சினைக்கு அது தீர்வல்ல. சொல்லப் போனால் மாணவப்பருவத்தில்தான் கட்டுப்பாடுகள் மிக அவசியம். அறியாக் குழந்தை கண்டதையும் வாயில் போடும்போது, சிறிது அடித்துத் திருத்துவதில் என்ன தவறு இருக்கிறது?

வளரும் பருவத்தை வலிமையாக்கும் கட்டுப்பாடு!

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்அப்படி ஒரு கட்டுப்பாட்டை, அதாவது கல்லூரி வளாகத்தில் செல்பேசியைப் பயன்படுத்தக்கூடாது என்று அண்ணா பல்கலைக் கழகத்தில் அறிமுகப்படுத்திய போது, பத்திரிக்கைகளும், முற்போக்கு முகாமும் ஆவேசத்துடன் அதனைக் கண்டித்தன. இது சுதந்திரத்துக்கும், தனிநபர் உரிமைக்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எதிரானது என்று  வாதிட்டார்கள். அமெரிக்க மாணவர்களிடையே வன்முறையை நிறுத்துவதற்கு துப்பாக்கி வியாபாரத்தைத் தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது,  ஜனநாயக உரிமையின் பெயரால்தான் அது அங்கே நிராகரிக்கப்பட்டது.

இந்த வாதங்களில் ஒரு வெங்காய ‘உரிமை’யும் உண்மையில் இல்லையென்பது ஒருபுறமிருக்க, இந்த உலகமே கட்டுப்பாட்டில்தானே இயங்கி வருகிறது? ஒரு தொழிலாளிக்கு சீருடை அணிய வேண்டும், குறித்த நேரத்திற்கு வேலைக்கு வரவேண்டும், குறிப்பிட்ட இடைவெளி நேரத்தில்தான் மதிய உணவு அருந்த வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் இல்லையா? பல அலுவலகங்களிலும் செல்பேசியில் பேசக்கூடாது என்று கட்டுப்பாடு வைத்திருக்கிறார்களே, இதனால் என்ன குடி முழுகிப் போய்விட்டது? விதியின் பெயராலும், நடைமுறை ரீதியிலும் உழைக்கும் வர்க்கத்தின் மீது ஆயிரம் கட்டுப்பாடுகள் வைத்திருக்கும் முதலாளித்துவம், சமூகத்தில் சீரழிவுக் கலாச்சாரத்தைப் பரப்புவதற்கு மட்டும் தனக்கு சுதந்திரத்தைக் கோருகிறது.

வீட்டிலும், பள்ளியிலும் கட்டுப்பாடு இல்லாத மாணவர்கள்தான், வன்முறை எண்ணம் கொண்டவர்களாகத் தலையெடுக்கின்றனர். விடலைப்பருவ உளவியலின் காரணமாகப் பெற்றோருடனும், சூழலோடும் முரண்படுகிறார்கள். மாணவர்களின் உடல் மாற்றத்திற்கேற்ப நடக்கும் இந்த உளவியல் வெளிப்பாடுகளை, மேற்கண்ட நச்சுக்கலாச்சாரம் ஊதிப் பெருக்குகிறது. இதனால் தனிமைப்படும் மாணவர்களைத்தான் வன்முறை எண்ணம் தின்று சீரணிக்கிறது. மாணவர்களை உடலுழைப்பிலும், விளையாட்டிலும் ஈடுபடுத்துவதுதான் இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்குரிய வழி. ஆனால் அந்தச் சூழல் நமது கல்வி முறையிலோ, பண்பாட்டிலோ இல்லை.

வளரும் சிறுவருக்கு உடலுழைப்பு அவசியம்!

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்இளம் மாணவர்களின் வயதினையொத்த சிறார்கள், நாடெங்கிலும் இலட்சக்கணக்கில் உதிரித் தொழில்களில் ஈடுபடுகின்றனர். குழந்தைத் தொழிலாளர் உழைப்பைத் தடை செய்ய வேண்டும் என இவர்களது வாழ்க்கை குறித்து கவலைப்படுவது தொண்டு நிறுவனங்களின் நாகரீகப் பணியாக இருக்கிறது. படிக்கவேண்டிய வயதில் இவர்களை இவ்வேலைகளுக்கு அனுப்பியது பெற்றோர்களின் குற்றமெனத் தொண்டு நிறுவனங்கள் சாதிக்கின்றன. உண்மையில் பணமில்லாதவனுக்கு எதுவுமில்லை என இந்தச் சமூக அமைப்பை மாற்றியஅரசும், ஆளும் வர்க்கங்களும்தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.

இது ஒருபுறமிருக்க, இக்குழந்தைகள் விடலைப் பருவச் சேட்டைகளையோ, வன்முறைகளையோ செய்வதில்லை. தேநீர்க்கடைகளில் குவளை கழுவும் சிறுவனோ, ஓட்டலில் மேசை துடைக்கும் சிறுவனோ இத்தகைய வன்முறை வெறிக்குப் பலியாவதில்லை. சமூகத்துடன் யதார்த்தமான உறவில் இருக்கும் இச்சிறுவர்கள், பண்பையும் முதிர்ச்சியையும்தான் பழகிக் கொள்கின்றனர்.  வயதுக்கு மீறிய அதீத உழைப்புதான், இவர்களைப் பின்னாளில் உதிரிக் குணம் கொண்டவர்களாக மாற்றி விடுகிறது. அப்போதும்கூட இவர்கள், சமூகத்தின் மீது வன்முறை செலுத்தும் மேட்டுக்குடிப் பொறுக்கிகளைப் போல மாறுவதில்லை.

ஆம். மாணவர்களை குறிப்பிட்ட அளவில் உடலுழைப்பில் ஈடுபடுத்துவதன் மூலமே, அவர்களது பருவப் பிரச்சினைகளைக் கடந்து ஒரு சமூக மனிதனாக வளர்க்க முடியும். கோடை விடுமுறையில் சிறுவர்களை சிறு பட்டறைகளுக்கோ, இருசக்கர வாகன பழுது நீக்கும் கடைக்கோ,  கட்டிட வேலைக்கோ, விவசாய வேலைக்கோ அனுப்பினால், பட்டை தீட்டப்பட்ட வைரக்கற்களாகப் புடம் போடப்பட்டு வருவார்கள். உடலுழைப்புடன் கூடிய சுயமதிப்புடன் சமூகத்தைப் பற்றி அறிந்து கொள்வார்கள். கட்டுப்பாட்டுடன் பணியாற்றுவதன் மூலமே இச்சமூகத்தின் அங்கத்தினன் என்ற தகுதியைப் பெறமுடியும் என்பதைத் தங்களது சொந்த அனுபவத்திலிருந்து புரிந்து கொள்வார்கள்.

ஆனால் நடுத்தர வர்க்கமோ தங்களது செல்வங்களை டென்னிசுக்கும், கணினிப் பயிற்சிக்கும், பாட்டு வகுப்பிற்கும் அனுப்பி நம்பர் 1 ஆக்குவதற்கு மட்டுமே மனப்பால் குடிக்கிறது. இது மாணவர்களுக்கு தனிநபர் வாதத்தையும், சுயநலத்தையும், காரியவாதத்தையும் கற்றுத் தருகின்றதே ஒழிய, நல்ல குடிமகனாக்குவதில்லை. மேலும் கடுமையான போட்டிகள் நிறைந்த இக்காலட்டத்தில், தோல்வி குழந்தைகள் மனதை ரணமாக்குகிறது. விஜய் டி.வி.யின் பாட்டுப் போட்டியில் தோல்வியுற்றதால் வெளியேற்றப்பட்ட குழந்தைகள் அழுவதைப் படம்பிடித்துக் காண்பிப்பதை இங்கு நினைவு படுத்திக் கொள்வோம்.

வளரும் குழந்தைகளுக்கு கலைத்திறமைகளை கற்றுத்தருவதை விட, அவர்களை மக்களின் பால் பற்று கொண்ட நன்மக்களாக மாற்றுவதே அத்தியாவசியமானது. உண்மையில் அவர்களது வன்முறை எண்ணத்தை மடைமாற்றும் சூட்சுமம், இதில்தான் அடங்கியிருக்கிறது. ஆனால் நடுத்தர வர்க்கக் குழந்தைகளுக்கு, உடலுழைப்பு அறவே கிடையாது. எல்லா வேலைகளுக்கும் இயந்திரங்கள் இருக்கின்றன. இது போக வேலையாட்கள்! பெற்றோர்கள் பணியாட்களை மிரட்டுவது போல பிள்ளைகளும் செய்கிறார்கள். குறைந்த பட்சம் தன்னைப் பராமரித்துக் கொள்வதைக் கூட இக்குழந்தைகள் செய்வதில்லை. பெற்றோரும் விரும்புவதில்லை. தான் சாப்பிட்ட தட்டைக் கழுவுவதற்கோ, உடுத்தும் உடையைத் துவைப்பதற்கோ பழகிக் கொள்ளாத ஒரு சிறுவன்தான், இந்த உலகம் தனக்காகப் பணிசெய்ய படைக்கப்பட்டிருப்பதாக எண்ணுகிறான். இந்த அணுகுமுறையில் நெருடல் வரும்போது, தவிர்க்கவியலாமல் வன்முறையின் பக்கம் நகர்கின்றான்.

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்

அருகும் விளையாட்டு அரிக்கும் வீடியோ விளையாட்டு!

உடலுழைப்புக்கு அடுத்த படியாக குழந்தைகளுக்குத் தேவைப்படுவது, வியர்க்க விறுவிறுக்க விளையாடப்படும் விளையாட்டு. மனம் விரும்பிச் செய்யப்படும் இவ்வுழைப்பில்தான் அவர்கள் வளருவதற்கேற்ற வலிமை உடலுக்கும், உள்ளத்திற்கும் கிடைக்கிறது. குழுரீதியான உணர்வு பெறுவதற்கும், சண்டையுடன் கூடிய நட்பு அரும்புவதற்கும், வெற்றி தோல்விகளையெல்லாம் சகஜமாக எடுத்துக் கொள்வதற்கும், பாடங்கள் கற்பதற்கேற்ற உற்சாகத்தைப் பெறுவதற்கும், விளையாட்டு அவசியமாகிறது. அடுக்குமாடிக் கட்டிடங்கள் துருத்தி நிற்கும் நகரங்களில், மைதானங்கள் காணக் கிடைப்பதில்லை. பல்லாயிரம் ரூபாய்களைக் கட்டணங்களாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளிலும், விளையாட்டுத் திடல்கள் போதுமானதாக இல்லை. மாணவர்களும் இந்திய அணி ஆடும் சமயங்களில் மட்டும் கிரிக்கெட் ஆடுவதைத் தவிர, விளையாட்டில் விருப்பத்துடன் ஈடுபடுவதில்லை.

இந்த இடத்தை மாணவர்களால் பரவலாக விளையாடப்படும் வீடியோ விளையாட்டு எடுத்துக் கொள்கிறது. இணையத் தள மையங்களில் பாலுறவு விசயங்களுக்கு அடுத்தபடியாக மாணவர்கள் விரும்புவது இந்த எந்திர விளையாட்டைத்தான். வியர்வைத் துளிகளுக்கு வேலை கொடுக்காமல், மூளையை அரிக்கும் இந்த விளையாட்டைத் தொடர்ந்து விளையாடும்போது மாணவர்கள் அதற்கு அடிமையாகிறார்கள்.

இந்தப் போதையிலிருந்து மீள்வது சிரமம் என்பதோடு, இது ஏற்படுத்தும் உளவியல் கோளாறுகள் அதிகம். கற்பனையான உலகில் கற்பனையான வெற்றிக்காக மணிக்கணக்கில் ஆடும் மாணவர்கள், அதீத உணர்ச்சிக்கு ஆட்படுகிறார்கள். இந்த உணர்ச்சிச் சமநிலைச் சீர்குலைவு வன்முறைக்குப் பொருத்தமான சமன்பாட்டைக் கொண்டிருக்கிறது.

விளையாடி முடித்ததும் ஏற்படும் சோர்வு நிஜ உலகோடு கொண்டுள்ள உறவைச் சோர்வுக்குள்ளாக்குகிறது. இந்தச் சோர்விலிருந்து வாழ்வின் பிற அம்சங்கள் மீது அளவு கடந்த சோம்பல் உருப்பெறும். கணிப்பொறி விளையாட்டின் மீது ஒன்றி பரவசம் அதிகரிப்பதற்கேற்ப மனித உறவுகளின் மீது நெருடல் அதிகரிக்கிறது. பிரச்சினை வரும்போது அமைதியுடன் எதிர்கொள்ள வேண்டிய மூளையின் தன்மை, நேரெதிராக மாற்றப்படுகிறது. வீடியோ விளையாட்டின் வேகம் விரிவடைதற்கேற்ப, நிஜவாழ்வின் பிரச்சினைகளை பரிசீலிக்கும் பொறுமை சுருங்குகிறது.

விதவிதமான உணவு வகை எல்லைமீறும் உணர்ச்சிகள்!

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்இப்படி உடலுழைப்பிலும், விளையாட்டிலும் அன்னியப்பட்டுள்ள மாணவர்கள் விரும்பும் மற்றுமொரு விசயம் நவீன உணவு வகைகள். பீட்ஸா, பர்கர், விதவிதமான சாக்லேட், பிஸ்கட், ஐஸ்கிரீம் வகைகள், பெட்டிக் கடைதொட்டு சரம்சரமாகப் பல வண்ணங்களில் தொங்கும் நொறுக்குத்தீனி பாக்கட்டுகள், உணவகங்களில் கிடைக்கும் பலநாட்டுத் துரித உணவு வகைகள்…. இவையெல்லாம் தொலைக்காட்சி விளம்பரங்கள் போல, குழந்தைகள் மனதில் ஆழப்பதிந்து விட்டன.

குடும்பத்துடன் வெளியில் செல்லும்போது சிறார்கள் அடம்பிடித்துச் சண்டையிடுவது இவ்வுணவு வகைகளுக்காகத்தான். வீட்டுச்சமையல் என்பதே இப்படி டப்பா வகை உணவுப் பிரிவுக்கு வேகமாக மாறி வருகிறது. இது பற்றி பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், மருத்துவர்களும் கவலைப்படாமல் இல்லை. ஆனால் அந்தக் கவலை, குழந்தைகள் குண்டாவது குறித்த பிரச்சினையாக மட்டுமே நின்று விடுகிறது.

உண்மையில் இந்த ‘குண்டு’ பிரச்சினை இரண்டாம் பட்சமானதுதான். நவீன உணவு வகைகளில் சர்க்கரையும், உப்பும், கொழுப்பும் மிக அதிகம். ஒரு சிறுவனது உடலில் இம்மூன்றும் திடீரென்று அதிகரிக்கும் போது அது மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. இப்படி தொடர்ந்து தின்று தீர்க்கும் சிறுவர்கள், அவற்றைச் செலவழிக்கும் உடலுழைப்பு ஏதும் இல்லாததால் எளிதில் உணர்ச்சி வசப்படுவர்களாக மாறுகிறார்கள். எல்லா வகை உணர்ச்சிகளும் எல்லை மீறும்போது, அதன் இறுதி நிலை வன்முறையில் தான் முடியும். இதுபோக உடல் பருமனாவதால் சோம்பேறிகளாகவும், மந்தகதிக் குழந்தைகளாகவும் நாட்களைத் தள்ளுகிறார்கள். ஏற்öகனவே அவர்களது வாழ்க்கைச் சூழல் இப்படித்தான் உள்ளது எனும்போது, டப்பா வகை உணவுகள் அந்தச் சூழலை வீரியமாக்குகின்றன. பெற்றோர்களே இந்த நவீன உணவு வகைகளுக்கு அடிமையாகும் போது, குழந்தைகளைக் கடைத்தேற்றுவதற்கு வழியேதுமில்லை.

அரசு பள்ளி நன்மைகள் தனியார் பள்ளி தீமைகள்!

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்இந்த நொறுக்குத் தீனிகளின் பெயர்கள் கூடத் தெரியாமல், சத்துணவிற்காகவே குழந்தைகள் கோடிக்கணக்கில் அரசுப் பள்ளிகளுக்கு வருவதும் இந்நாட்டில்தான். இன்று அரசுப் பள்ளிகள் முற்றிலும் ஏழைகளுக்கு மட்டுமானவையாக மாறி விட்டன. நகரங்களைப் பொறுத்தவரை, சென்ற தலைமுறைப் பெற்றோர்களில் பெரும்பான்மையோர் அரசுப்பள்ளிஅரசுக் கல்லூரிகளில் படித்து வந்தவர்கள்தான். அப்போது தனியார் பள்ளிகள் ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகவே இருந்தன.

ஏழையும், பணக்காரனும், குறிப்பிட்ட அளவில் சாதிய வேறுபாடுகள் இல்லாமலும், சமூகத்தின் எல்லாப் பிரிவினரும் அரசுப் பள்ளிகளில் சங்கமித்தனர். கிராமப்புறங்களிலிருந்து வரும் மாணவர்களின் வழியாக கிராம வாழ்க்கையைப் பற்றியும், விவசாயத்தின் நிலை குறித்தும் தெரிந்து வைத்திருந்தனர். தனது வர்க்கம் தவிர, ஏனைய வர்க்கங்கள் எப்படி வாழ்கின்றன என்பதை அறியக்கூடிய வாய்ப்பை அன்றைய அரசுப் பள்ளிகள் வழங்கின. அதனால்தான் இன்றைய மாணவர்களை விட, சென்றதலைமுறை மாணவர்கள் பொது அறிவிலும், வாழ்க்கை குறித்த யதார்த்தமான கண்ணோட்டத்திலும் மேம்பட்டு விளங்குகின்றனர்.  திராவிட இயக்கமும், இடதுசாரி இயக்கமும் இந்தப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்தான் தமது அடிப்படையைக் கட்டியமைத்தன.

இன்று வர்க்க முரண்பாடு துல்லியமாகப் பிரிந்து விட்டது. காசு உள்ளவனுக்கு தனியார் பள்ளி மற்றும் சுயநிதிக் கல்லூரி; இல்லாதவனுக்கு அரசுப்பள்ளி. தனியார் மயம் நாட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வேட்டைக்காடாக மாற்றிவருகிறது என்ற அநீதிக்கு, குறைவில்லாத பங்கை தனியார் பள்ளிகளும் செய்து வருகின்றன. மேற்கண்ட துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் பலரும், இத்தகைய தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள்தான். அரசுப் பள்ளிகள் என்னென்ன நன்மைகளைச் செய்கிறதோ, அவற்றின் நேரெதிர் தீமைகளைத் தனியார் பள்ளிகளும் சுயநிதிக் கல்லூரிகளும் செய்து வருகின்றன. இங்கு மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்தோரே படிக்க வருகின்றனர். உழைக்கும் வர்க்கங்களைச் சேர்ந்தவர்களும் கடன் வாங்கியாவது இப்பள்ளிகளுக்கு வந்தாலும், இவர்கள் இங்கே சிறுபான்மையினர்தான். ஆகவே இப்பள்ளிகள் சமூகத்தைப் பிரதிபலிப்பதில்லை. வண்ணமயமான வாழ்க்கையின் வகைகள் இங்கே பரிமாறப்படுவதில்லை. நடுத்தர வர்க்கத்தின் காரியவாத வாழ்க்கை மட்டுமே இங்கு பேசுபொருளாக இருக்கிறது.

சமீபத்தில் சந்தைக்கு வந்த செல்பேசிகள், வாகனங்கள், டி.வி.க்கள், கணினிகள் எவை என்பதுதான் இங்கே மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் கல்வி! எதிர்காலத்தில் டாக்டர், இன்ஜினியர், எம்.பி.ஏ, அமெரிக்கா முதலான இலட்சியங்களை அடையவேண்டும் என்பதை இப்பள்ளிகள் ஊட்டி வளர்க்கின்றன. அவ்வகையில் சுயநலமும், பிழைப்பு வாதமும் மாணவர்களின் நற்பண்புகளாக ஏற்றப் படுகின்றன.

இதனால் போட்டி, பொறாமை, இரக்கமின்மை, முதலிய சொத்துக்கள் ஒவ்வொரு மாணவனுக்கும் அவனது இலட்சியத்தை அடைவதற்குத் தேவைப்படுகின்றன. எல்லா மாணவர்களும் இக்காரியவாதப் போட்டியில் வெல்லமுடியாது என்பதால் சோர்வும், விரக்தியும், தனிமைப்படுவதும் நடக்கிறது. சில சமயங்களில் அது சமூகத்தின் மீதான கோபமாகவும் வெடிக்கிறது. தன்னிலும் ஆடம்பர வாழ்வைப் பார்த்து ஏங்குவதும், அதை அடைய குறுக்கு வழிகளை நாடுவதும் இயல்பான விசயங்களாக ஏற்கப்படுகின்றன.

முன்னர் கண்ட செல்பேசிஇணையக் கலாச்சாரம், திருமணத்திற்கு முந்தைய உறவு, புத்தாண்டுக் கொண்டாட்டங்கள், பீர் கலாச்சாரம், வீடியோ விளையாட்டு முதலியவற்றிலும், தனியார் பள்ளி மாணவர்களே முன்னிலை வகிக்கின்றனர். பள்ளி திறக்கும் பருவத்தில் எல்லாத் தனியார் பள்ளிகளும் தங்களது தேர்ச்சி விகிதத்தை விளம்பரமாக வெளியிட்டு பெற்றோர்களை ஈர்க்கின்றன.

அந்த விளம்பரங்களில் கூறப்படாத செய்தி என்னவென்றால், வன்முறை விகிதத்திலும் இப்பள்ளிகள்தான் முதலிடம் வகிக்கின்றன என்பதுதான். சுருங்கக்கூறின் அரசுப் பள்ளிகள் ஒரு மாணவனை நல்ல குடிமகனாக மாற்றும் போது, தனியார் பள்ளிகளோ ஒரு மாணவனை சமூகத்திற்கு விரோதமான தனிநபராய் வளர்க்கின்றன. கல்வியில் தனியார்மயம் நுழைந்ததற்கு, நாம் பெற்றுள்ள சாபக்கேடு இதுதான்.

நடுத்தர வர்க்கத்தின் தனியார் பள்ளி மோகத்திற்கு இணையான மற்றொரு மோகம், ஆங்கில வழிக் கல்வி. ஆங்கில வழிக் கல்விக்கும் மாணவர் வன்முறைக்கும் என்ன சம்பந்தம் என்று சிலர் நினைக்கலாம். முதலில் கண்ட துப்பாக்கி வன்முறை மாணவர்களெல்லாம், ஆங்கில வழிக் கல்வியில் படிப்பவர்கள்தான். இதை வைத்து மட்டுமே, ஆங்கில மோகம் வன்முறையை வளர்க்கிறது என்று சொல்லவில்லை. சிறார்களின் கல்வியறிவுக்காக பயன்படுத்தப்படும் ஆங்கிலம், அவர்களுடைய வாழ்க்கையை ரத்து செய்கிறது. ஐ.டி துறையின் எழுச்சிக்குப் பிறகு வேலைவாய்ப்பிற்காக ஆங்கிலம் மட்டுமே உதவும் என்ற சூழ்நிலையில், தமிழ் வழிக் கல்வியின் மீது பலருக்கு நம்பிக்கையில்லாமல் இருக்கலாம். ஒரு மொழி என்ற அளவில் ஆங்கிலத்தை தேர்ச்சியுடன் கற்றுக்கொள்வதும், அதை ஒரு பயிற்று மொழியாகவே பயன்படுத்துவதும் ஒன்றல்ல.

அன்னியப்படுத்தும் ஆங்கில மோகம்

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்1947க்குப் பின்னர் உயர் கல்விக்காகப் படித்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், தமிழ் வழிக் கல்வி கற்றவர்கள் என்பதோடு ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்தவர்களாக இருப்பதையும் காண்கிறோம். இவர்களது பெற்றோர்கள் எவரும் பள்ளிக்கூடத்தை எட்டிப் பார்த்தவர்கள் அல்லர். இருப்பினும் வறியவாழ்க்கையோடு, பலமைல் தூரம் நடந்துச் சென்று, கல்விக்காகக் கடும் உழைப்பு செலுத்தி, போராடிக் கற்றார்கள். அந்தக் கால ஆசிரியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கல்விப் பணி செய்தார்கள்.

அதற்குப் பிந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், வசதியான வாழ்க்கையுடன் பள்ளிக்குச் சென்றாலும், அவர்களுக்கு ஆங்கிலம் மட்டுமல்ல தமிழும் தெரியாமல் இருப்பதைக் காண்கிறோம். இது போக, இன்றைய மாணவர்களின் கவனத்தைச் சிதறடிக்கும் பொழுது போக்குகளும் ஏராளம். மேலும் அன்று உயர்கல்வி முடித்தால் ஏதோ ஒரு அரசுப் பணி கிடைக்கும் என்ற நிலைமையும் இன்று இல்லை. இந்தப் பிரச்சினையை ஆங்கிலவழிக் கல்வி தீர்த்து விடாது என்பதையே இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

மேலும் ஆங்கிலவழிக் கல்வி ஒரு மாணவனை யதார்த்தமான சமூக வாழ்க்கையிலிருந்து அன்னியப்படுத்துவதோடு, அவனது அறிவுத்திறன் வளர்ச்சிக்கும் குந்தகம் விளைவிக்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்து வளரும் சிறார்கள் தாயுடனும், தமிழுடனும் சேர்ந்தே உலகை அறியத் துவங்குகிறார்கள். பெற்றோர், சுற்றம், உற்றம், நட்பு, தெரு, பெட்டிக்கடைக்காரர், மளிகைக் கடைக்காரர், வணிகர்கள், ஆட்டோக்காரர், பேருந்து ஓட்டுநர் என தமிழால் சூழப்பட்ட உலகில்தான், சிறார்களின் வாழ்க்கைக் கல்வி துளிர் விடத் துவங்குகிறது. இந்தச் சூழலை ஆங்கில வழிக் கல்வி செயற்கையாக துண்டிப்பதோடு, அந்த உறவு மேற்கொண்டு வளர விடாமலும் செய்கிறது.

இதனால் ஆங்கில வழிக் கல்வியின் உலகம் பள்ளி வகுப்பறையுடன் சுருங்கி விடுகிறது. அதனால்தான் ஆங்கில வகுப்பில் படிக்கும் மாணவர்கள் பொதுவில் தனிமை விரும்பிகளாகவும், சிறுசிறு பிரச்சினைகளைக்கூட தீர்ப்பதற்கு இலாயக்கில்லாதவர்களாகவும், சமகாலப் பொதுஅறிவில் பின்தங்கியவர்களாகவும் இருக்கிறார்கள். பொது வாழ்க்கைக்கு ஆங்கிலம் விதித்திருக்கும் இத்தடைகள்தான், அவர்களை பொறுமையிழந்தவர்களாகவும், வன்முறை சுபாவம் கொண்டவர்களாகவும் மெல்ல மெல்ல மாற்றுகிறது. தமிழை விட ஆங்கிலம்தான் நுகர்வுக் கலாச்சாரத்தின் எல்லா வகைகளுக்கும் பொருத்தமாக இருப்பதால், எரியும் கொள்ளியில் எண்ணெயை ஊற்றி தீப்பிடிக்க வைக்கிறது.

தேம்ஸ் நதிக்கரையையும், வாஷிங்டன் அதிபர்களையும், அமெரிக்க மல்யுத்த வீரர்களையும், வால்ட் டிஸ்னியின் முயலையும் அறிந்து வைத்திருக்கும் ஆங்கில மாணவன், தாமிரபரணி நதி பற்றியோ, காவிரியின் கீழத்தஞ்சை விவசாயப் பிரச்சினை பற்றியோ, காஞ்சிபுரத்தின் பட்டுத்தறி பற்றியோ, ஏன் கபடி விளையாட்டைக்கூட தெரியாதவனாக இருக்கிறான். இப்படி தமிழக வாழ்க்கையிலிருந்து தூக்கியெறியப்பட்டு, தனக்குத் தொடர்பற்ற மேற்கத்திய விசயங்களுக்கு அறிமுகமாகும் மாணவன்தான் இந்த மண், மக்கள், வாழ்க்கை குறித்து வெறுப்போடும், நம்பிக்கையில்லாமலும் வாழப் பணிக்கப்படுகிறான்.

விவசாயப் பிண்ணனியிலிருந்து வரும் ஒரு மாணவனுக்கு, நூற்றுக்கணக்கான தாவர வகைகளும், கிராம வாழ்க்கை மூலம் விவசாய அனுபவமும் தமிழ் வழியாகத்தான் தெரிந்திருக்கும். இம்மாணவன் ஆங்கிலத்தின் மூலம் தாவரவியலைக் கற்பதால் என்ன நடக்கும்?  அவன் சேகரித்து வைத்திருந்த அறிவுக்குப் பயனில்லாமல் போவதோடு,  ஆயிரக்கணக்கான ஆண்டு விவசாய அறிவைத் தாங்கி வரும் தமிழக விவசாயிகளுடன் பேசுவதற்குக் கூட வழியில்லாமலும் போகிறது. இந்த அவலம் எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும்.

இதனால்தான் ஆங்கில வழிக் கல்வி அறிவுத் திறனை மட்டுப்படுத்துவதோடு, சமூகத் தொடர்பையும் இல்லாமல் செய்து விடுகிறது என்கிறோம். ஆங்கிலவழிக் கல்வியினால் வேலை கிடைத்துவிடும் என்ற மூடநம்பிக்கையின் விளைவாக, சிறார்களை தனியார் பள்ளிகளில் ஆங்கிலத்தில் படிக்க வைக்கும் பெற்றோர்கள் அனைவரும், உண்மையில் தமது வாரிசுகளை வாழ்க்கையை எதிர்கொள்ளத் திராணியற்றவர்களாக மாற்றுகிறார்கள். இது போக இன்றைய பாடத்திட்டமும் மேலும் மேலும் தொழில்முறைத் தேர்ச்சியை நோக்கி மாற்றப்படுவதால் அதில் பொது அறிவும், சமூகக் கண்ணோட்டமும் அருகி வருகிறது.

இந்த நோய்களோடு வட இந்தியாவில் இருக்கும் மாணவர்களுக்கு சாதிவர்க்கத் திமிரும் சேர்ந்து கொள்கிறது. தமிழகத்தில் இவை இல்லாமலில்லை என்றாலும், இந்தி பேசும் மாநிலங்களில் இவை அதிகம். இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மேல் சாதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தை, இங்கு நினைவு படுத்திக் கொள்வோம்.

வட இந்தியாவில் அநேக பிரபலங்கள் துப்பாக்கியோடும் பாதுகாவலர்களோடும்தான் உலா வருகிறார்கள். அப்பனே கிரிமினலாக இருக்கும் போது, மகன் அப்படி இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். ஜெசிகா லாலைக் கொன்ற மனுசர்மாதான் வடக்கின் மேட்டுக்குடி மாணவர்களுக்கு வகை மாதிரி. ஏழைகள் மற்றும் தலித்துகள் மீது வன்மம் கொண்டவர்களாகத்தான், வட இந்திய மாணவர்கள் வளர்க்கப் படுகிறார்கள். கூடவே இந்துமதவெறிப் பாசிசத்தின் செல்வாக்கும் இவர்களிடத்தில் அதிகம்.

இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். பொதுவில் இன்றைய மாணவத் தலைமுறையினர் இளமைக்குரிய துடிப்புடனோ, உற்சாகத்துடனோ, கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடனோ இல்லை. முக்கியமாக, அவர்களது மனவலிமை மேலும் மேலும் குறைந்து வருகிறது. பள்ளி இறுதி ஆண்டு மதிப்பெண்கள் வந்தவுடனேயே, தேர்ச்சி பெறாத மாணவர்களிடத்தில் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருவதையும் பார்க்கிறோம். வீட்டு நிலைமைக்குப் பொறுப்பேற்கும் சென்ற தலைமுறையின் பண்பு கூட, இத்தலைமுறை மாணவர்களிடத்தில் இல்லை. காலச்சூழலில் அடித்துச் செல்லப்படும் இன்றைய நிலையில், நாம் என்ன செய்ய முடியும் என்று சிலர் விரக்தி அடையலாம். அப்படி இல்லை.

இக்கட்டுரை மாணவரைச் சீர்குலைக்கும் விசயங்களைப் பரிசீலிப்பதோடு நின்று விடவில்லை. நேர்மறையில் ஒரு மாணவனை எப்படி வளர்க்க வேண்டும் என்ற தீர்வுகளையும் உங்களுக்கு எடுத்துச் சொல்கிறது. அதைப் புரிந்து கொள்வதோடு, நடைமுறைப்படுத்துவதற்கும் முயற்சி செய்யுங்கள். இல்லையேல் அற்பப் பிரச்சினைகளுக்காக ஆத்திரங்கொண்டு வெடிப்பதற்குத் துப்பாக்கிதான் வேண்டுமென்பதில்லை, கிடைக்கும் எதுவும் பயன்படும். அதுவும் கண்காணாத ஒரு வீட்டில்தான் நடக்கவேண்டும் என்பதில்லை, அந்த வீடு உங்களுடையதாகவும் இருக்கலாம்.

-புதிய கலாச்சாரம், மார்ச்’08

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

4

புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்!

  1. “மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலைவைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!” – தமிழகம் தழுவிய புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்-ஆர்ப்பாட்டம்
  2. 2-ஜி அலைக்கற்றை ஊழல் தீர்ப்பு: நுனி இது, அடி எது?
  3. காமராஜ் மெட்ரிக் பள்ளியின் கட்டணக் கொள்ளையைத் தூள்தூளாக்கிய பெற்றோர்களின் போராட்டம்!
  4. ஜெயா-சசி-சோ: அதிகாரச் சூதாட்டம்!
  5. குளோபல் ஃபார்மாடெக் நிர்வாகத்தின் ஒடுக்குமுறை – பொறுக்கித்தனம்! ஒத்தூதும் தமிழக அரசு!!
  6. கூடங்குளம்: இந்து முன்னணியின் காலித்தனம்
  7. மாமி-மாட்டுக்கறி-நக்கீரன்: பார்ப்பனக் கும்பலின் தீண்டாமை வெறி!
  8. இந்துஸ்தான் யுனிலீவரின் அடக்குமுறைக்கு எதிராக ஒன்றுபட்ட தொழிலாளி வர்க்கத்தின் போர்!
  9. தேய்ந்துபோன செருப்பும் முதலாளித்துவ சமூக நீதியும்
  10. கோயில் சொத்துக்களைக் கொள்ளையிடும் பார்ப்பன – ‘மேல்’சாதிக் கும்பல்
  11. இரான்: அமெரிக்கக் கழுகிடம் சிக்கிய கோழிக்குஞ்சு!
  12. டர்பன் மாநாடு: ஆடுகள் மீது பழிபோடும் ஓநாய்கள்
  13. உலகளாவிய நிதி நெருக்கடியின் ஐந்து கட்டங்கள் (2007-2011) தீராத தலைவலி!
  14. ஆலயத் தீண்டாமைக்கு எதிராகச் சிவனடியார்களின் போராட்டம்!
    ஒடுங்கியது பார்ப்பன சிவச்சாரியார்களின் கொட்டம்!!
  15. உரிமைக்காகப் போராடும் தொழிலாளர்களைப் பழிவாங்கும் கமாஸ் வெக்ட்ரா!
  16. தானே புயல் பேரழிவு: தேவை, அற்ப நிவாரணமல்ல; மறுவாழ்வு!

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க்  ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK –  SAVE TARGET AS or SAVE LINK AS)

சிறுகதை : தேர்தல்

1

இது சீனப் புரட்சியின் அறுபத்தி மூன்றாம் ஆண்டு. புரட்சிக்குப் பின்னால் மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம் என்ற அரசமைப்பின் கீழ் நடைபெற்ற  தேர்தலை விளக்குகிறது இந்தக் கதை. ”கம்யூனிஸ்டு நாடு என்றால் தேர்தலே கிடையாது, கட்சியின் சர்வாதிகாரம்தான்” என்றும், நமது நாடுதான் ஜனநாயக நாடென்றும் முதலாளித்துவப் பத்திரிகைகள் தொடர்ந்து பொய்ப்பிரச்சாரம் செய்கின்றன.

இந்திய ஜனநாயகத்தின் யோக்கியதையை நாம் புதிதாக அம்பலப்படுத்தத் தேவையில்லை. கேடிகள், கிரிமினல்கள், திருடர்களைத் தவிர வேறு யாரும் வேட்பாளராக நிற்க முடியாது என்பதை மக்களே அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள். சீனத்திலோ, மக்களுக்குத் தொண்டாற்றி, மக்களின் மதிப்பையும் அங்கீகாரத்தையும் பெறாத யாரும் வேட்பாளராகக் கூடப் போட்டியிட முடியாது என்பதையும், வேட்பாளரின் குறைநிறைகள் மக்கள் மத்தியில் அலசி ஆராயப்படும் என்பதையும் இச்சிறுகதை தெளிவுபடுத்துகிறது.

அனைத்துக்கும் மேலாக, பெண் விடுதலை, பெண்களின் குடும்ப, சமூக, அரசியல் அடிமைத்தனங்களை எதிர்த்த போராட்டம் உழைக்கும் மக்கள் மத்தியில் எப்படி நடத்தப்பட்டிருக்கிறது என்பதை அலங்காரங்கள் இன்றி மிகச் சாதாரணமாக விவரிக்கிறது இக்கதை.

இந்தியாவைப் போலவே மிகவும் பின்தங்கியிருந்த சீனத்தில் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் தேர்தலின் நின்ற ஒரு பெண் வேட்பாளரின் அனுபவம் இது. இங்கே பெண்களுக்கான ஒதுக்கீடு மூலம் பஞ்சாயத்துத் தலைவியான பெண்கள் ‘அவர்’ மூலம்தான் ஆட்சி நடத்தமுடிகிறது- என்ற வெட்கக்கேடும் இந்தக் கதையைப் படிக்கும் போது நினைவுக்கு வரத்தான் செய்கிறது.

__________________________________________

தேர்தல்துவே சீனத்தின் முதல் தேர்தல், நாடு முழுக்க தேர்தல். யாரைத் தேர்ந்தெடுப்பது? – அதற்காகத்தான் இன்றைய கிராமக் கூட்டம். ஒவ்வொரு பிராந்தியத்திலும் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதிகள் எவ்வளவு என்று தீர்மானித்திருந்தார்கள். அவர்களைப் பிராந்தியத்திலிருந்து தேர்ந்தெடுத்து மக்கள் பேராயத்துக்கு (மக்கள் காங்கிரஸ்) அனுப்ப வேண்டும்.

சியாங் பிராந்தியத்திலிருந்து மூன்று பேர். ஏற்கனவே மூன்று வேட்பாளர்கள் நிற்கவைக்க முடிவு செய்யப்பட்டுவிட்டது. முதல் நபர், குவின் ஷீ ஜூ- இவர் கிராமத்தின் கம்யூனிஸ்டு கட்சிச் செயலாளராக கடந்த ஆறு வருசமாக இருந்து வருகிறார்; இரண்டாமவர், வாங் ஷூன்டே – பழைய பாரம்பரிய மருத்துவர், வட்டாரத்திலேயே மாதிரி மருத்துவ ஊழியர் என்று பெயரடுத்தவர்; மூன்றாமவர், குவின் ஜியா குய் – இளைஞர். இருபதே வயது. பரஸ்பர உதவிக்குழுவின் தலைவர். ஆனால் பெண்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு வேட்பாளரை நிற்க வைக்க முடிவு செய்திருக்கிறார்கள் – வேறு யாருமல்ல; குவின் ஜியா குய்யின் மனைவி, ஜாங்குயா ஃபெங்.

யின் சியாங் ஜென் எழுந்து நின்று பேசினாள். எல்லோரையும் வசீகரிக்கும் இனிய, தெளிவான குரல். ”எதற்காக நான்காவது வேட்பாளர்? பரஸ்பர உதவிக் குழுவின் தலைவரான குவின் ஜியாகுய் அவரது மனைவியின் உதவி இல்லாமல் இவ்வளவு சாதனைகளைச் செய்திருக்க முடியுமா? இரண்டு வருடத்துக்கு முன்னால் முதன் முதலில் அதனை அமைத்தபோது எங்களுக்கு விவசாய வேலை ரொம்பவும் புதிது. ஒவ்வொரு வீடாகச் சென்று இப்படிப்பட்ட குழு கிராமத்துக்கே அவசியம் என்று எங்கள் பெற்றோரிடமும், மாமி – மாமனிடமும் எடுத்துச் சொல்லி விளங்க வைத்தது யார்?”

”எல்லா கஷ்டமான வேலைகளையும் முதலில் எடுத்துச் செய்து முன்மாதிரியாக நின்று எங்கள் முதுகு வலியைக் கூட மறக்கச் செய்தது யார்? எவ்வளவு வேலை செய்தோம், அதற்கு எவ்வளவு கூலி என்று அளக்க முனைந்தபோது, சம உழைப்புக்குச் சம கூலி என்று வாதாடியது யார்? அது ஆணா, பெண்ணா என்று பிரித்துப் பார்க்கக் கூடாது என்று உறுப்பினர் கூட்டத்திலேயே பிரச்சனையை வைத்தது யார்? நண்பர்களே, அவள் செய்கிற வேலைகளிலேயே மூழ்கி விடுகிறாள்; யாரிடமும் பீற்றிக் கொள்வதில்லை. ஆனால் அவள் ஓர் ஊழியர் என்பது மட்டுமே கிராமத்தாருக்குத் தெரியும். அவள் என்ன வேலைகளைச் செய்தாள் என்று யாருக்குமே முழுமையாகத் தெரியாது.”

லி குய்ஹூவா என்ற இளம்பெண் அடுத்ததாகப் பேசுவதற்கு அனுமதி கேட்டாள். ”ஒரு மாதத்துக்கு முன்னால் வட்டார மாதிரி தொழிலாளர் மாநாட்டுக்குப் பார்வையாளராகச் சென்றேன். அங்கே குவின் ஜியா குய்யின் அறிக்கையைக் கேட்டேன். அவர் பேசும்போது ”கள வேலைகளுக்குச் செல்வதற்காகப் பெண்களை அழைத்து ஏற்க வைத்தேன்,” என்றார். குழுவின் எல்லாச் சாதனைக்கும் தானே பொறுப்பு என்று பேசினார். சியாங்கில் ஒருமுறை மாநாட்டில் ஒருமுறை, ஆக இரண்டு முறையும்அவர் பேசியபேச்சு பச்சையான சுயதம்பட்டம். இங்கு திரும்பிவந்த பிறகு பெண்கள் கழகத் தலைவரோடு இது பற்றிப் பேசினேன். அவர் மூலம் கிராமத் தலைவர்கள் குவின் ஜியா குய்யிடம் இதுபற்றி விமரிசித்ததாகக் கேள்விப்பட்டடேன்.”

லி தொடரந்தாள்: ”அப்போது, தான் தவறு செய்துவிட்டதாக ஒப்புக் கொண்டார். ஆனால் வட்டாரக் கூட்டத்தில் மறுபடி தன்னைப் பற்றி மட்டுமே விளம்பரம் செய்து கொண்டார். இன்றைக்கு இதுபற்றி இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டும். குயாஃபெங் என்ன உதவிகள் செய்தாள், அவள் பங்கு என்ன என்பது பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.”

ஜியா குய்யை ஒருமுறை பார்த்துவிட்டு பின்னலைப் பின்புறம் ஒதுக்கிக் கொண்டே அமர்ந்தாள் லி. சட்டென கூட்டம் அமைதியானது. எல்லோருடைய கண்களும் ஜியா குய்யை மொய்த்தன.

அவன் இதோ இப்போதுகூட எழுந்திருந்து தன் மனைவிக்கும் பங்குண்டு என்று சொல்லிவிட்டுத் தன் குறையாடுகளை ஒப்புக் கொண்டால் கூடப்போதும் என்பது போல அவர்கள் பார்த்தனர். அப்படியிருந்தால் வெற்றி அவன் பக்கம்தான். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை.

பதவிகளை அனுபவித்து அனுபவித்துப் பழகிவிட்டான் ஜியா. கிராமத்தார் தன்னை ஆதரிப்பார்கள்; கை தட்டி ஆதரித்துத் தேர்ந்தெடுத்துவிடுவார்கள் என்று அவன் எண்ணியிருந்தான். தேர்தலுக்காகவே புதிதாக நீலமேல் கோட்டு கூட அணிந்து வந்திருந்தான்.

இப்போது அவனுக்கு உடம்பெல்லாம் கசகசத்தது; ஓரக்கண்ணால் மனைவியைப் பார்த்தான் – தனக்கு ஆதரவாக ஏதாவது சொல்ல மாட்டாளா? ”சகோதர சகோதர்களே! ஜியா குய்யை காரணமில்லாமல் பழி சொல்லாதீர்கள்….. நான் முன்னேறியிருக்கிறேன் என்றால் அதற்கு அவரது உதவியே முழுக்க முழுக்கக் காரணம்,” – இப்படி ஏதாவது பேசமாட்டாளா?

ஆனால் அவளோ வாயே திறக்கவில்லை; தலையைத் தொங்கப் போட்டிருந்தாள்; தலைமுடி அவள் கண்களைத் திரையிட்டிருந்தது. இதுபோல ஒரு கூட்டத்தில் அவள் எப்போதும் எழுந்து நின்று பேசியது கூட இல்லை.

”சகோதர சகோதரிகளே!” குயின் ஜியா குய் வெறுமனே முனகினான். வாய் உலர்ந்தது. குரல் தழுதழுத்தது. ”லி குய் ஹூவா இப்போது சொன்னது உண்மையல்ல….”

லி உடனே எழுந்து அதை மறுத்தாள். ”நீங்கள் ஒரு நல்ல பரஸ்பர உதவிக்குழு தலைவர் என்பதை முழுக்க ஒப்புக் கொள்கிறேன்; நமது கிராமத்தில் உற்பத்தியை முன்னே தள்ளியதில் உங்களுக்குப் பங்கு உண்டு, நான் மறுக்கவில்லை. உங்களை ஒரு வேட்பாளராகக் கூட அங்கீகரிக்கிறேன். ஆனால் இன்றைய கூட்டம் மிக முக்கியமானது. குயாவ் ஃபெங்கின் நல்ல அம்சங்களை நான் சொல்லியே தீரவேண்டும். அப்படி என்றால் உங்களது குறைகளைச் சொல்லாமல் இருக்க முடியாது. நான் உண்மையைத்தான் சொல்கிறேன்.”

அமைதி சூழ்ந்திருந்தது. பின் வரிசையில் அமர்ந்திருந்த ஒருசில முதியவர்கள் மட்டும் ரகசியக் குரலில் பேசிக் கொண்டனர். ”இதப்போய் இந்தப் பொட்டச்சிங்க பெரிசாக்கறாங்களே. ஜியா குய்யுக்கு இதனால எவ்வளவு பெரிய அவமானம்? எத வேணுமானாலும் இவளுக சொல்லட்டும். அவங்க ரெண்டுபேரும் புருசன் – பெண்சாதி தானே? யாரைத் தேர்ந்தெடுத்தாலும் ரெண்டும் ஒன்னுதானே?”

அன்றைய தேர்தலுக்கான கூட்டத் தலைவர் குயாவ் ஃபெங்கின், வேட்பு முன் மொழிதலை ஓட்டுக்கு விட்டார். எல்லோரும் அந்த வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டதற்காகக் கை உயர்த்தி ஆமோதித்தனர்.

தன் மனைவி பற்றி கிராமத்தார் இவ்வளவு ஒசத்தியாகப்  பேசிக்கொள்கிறார்களே என்று குயின் ஜியா குய் யோசித்தான். அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது; பிறகு கோபமும் கசப்புமாக மாறியது. அவனது குழுவிலிருந்த பெண்கள் மீது வெறுப்பு வந்தது. ”நீங்கள் சற்று முன்னேறியது உண்மையே. ஆனால் நீங்கள் முன்னேறுவதற்கே என் தலைமையல்லவா காரணம்? என் மீதே விமர்சனம் வைக்கிறீர்கள்? உங்களுக்கு நாகரீகம் தெரியவில்லையே.” –அவன் மனத்தில் இப்படி எண்ணங்கள் ஓடின. உடனே அந்தக் கூட்டத்திலிருந்து வெளியேறி விட நினைத்தான்.

கட்சிச் செயலர் பேசுவதைக் கேட்க்க கூட குவினுக்கு மனமில்லை. வாங் ஹூன்டேவைப் பேசச் சொல்லி கிராமத்தார் சிலர் கோரினார்கள். தலைவர் குவினைக் கூப்பிட்டார். எதுவும் அவன் காதுகளில் விழவில்லை. இரண்டாம் முறை அவர் அழைத்த போதுதான் கிறக்கத்திலிருந்து வெளியே வந்தான் குவின்.

மேடைநோக்கி நடந்தான். இப்போதுகூட ஒன்றும் கெட்டுவிடவில்லை. எனது மனைவி குய்யா ஃபெங்கைத் தேர்ந்தெடுங்கள் என்று ஒருசொல் கேட்டால்போதும், அவனைப் பற்றி எல்லோருமே ஒரு உயர்வான கருத்துக்கு வந்து விடுவார்கள். எப்படியாவது தன் கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே அவன் நினைத்தான் – முஸ்தீபுடன் அவன் பேச்சு ஆரம்பித்தது.

”சகோதர, சகோதரிகளே, என்னுடைய பரஸ்பர உதவிக்குழுதான் இந்தக் கிராமத்திலேயே முதலில் துவக்கப்பட்டதாகும்….” மறுபடி பழைய கதை. இரண்டு வருஷம் முன்னால், போன வருஷம், இப்போதைய நிலை என்று அவன் வரிசையாக நீட்டி வளைத்துப் பேசினான்.

”அடேய், எதுக்குடா பழைய கதை” என்று கிராமத்தார் பொறுமை இழந்தார்கள்.

”உன்னோட வேலைகள் பற்றி உன் போதனையை அவிழ்க்காதே, எங்களுக்கு மனப்பாடம் ஆகிவிட்டது” என்றார் மற்றொருவர்.

ஒரு வழியாக குவின் முடித்துக் கொண்டான். கைதட்டல் பலமாக மழைபோல் கொட்டியது. அது அவனுக்காக அல்ல. அடுத்து பேச அழைக்கப்பட்ட குய்யா ஃபெங்குக்காக.

குவின், மனைவியைப் பார்த்தான். அவள் தலை சட்டென்று நிமிர்ந்தது; அவளது தோள்கள் உயர்ந்தன; அவளது கன்னங்கள் ஒளி சிந்தின; பெரிய கறுப்புக் கண்கள் சுடர்விட்டன; எல்லோரையும் விட சற்று உயரமாகக் கூட தெரிந்தாள். அவன் சற்றும் எதிர்பாராத விதமாக அவள் தெளிவாக நிதானமாகப் பேசினாள்.

”சகோதர, சகோதரிகளே! நாம் செய்துள்ள வேலைகளைத் திரும்பிப் பார்க்கும் போது எனக்கே கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது. முதலாவதாக, இந்த வருச அறுவடையின் போது குழு உறுப்பினர்களை ஒன்று திரட்டி சிறுவர் பள்ளி ஒன்றைத் துவங்கிவிட வேண்டும் என்று நான் எண்ணியிருந்தேன்; அப்படித் துவங்கியிருந்தால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அங்கே விட்டுவிட்டு கள வேலைகளுக்குப் போக வசதியாக இருந்திருக்கும். அது திட்டம். ஆனால் அந்த நேரம் எனக்கு உடம்பு சுகமில்லை. நான் அந்த வேலையை முடிக்கவில்லை. பிரச்சினைகள் வரும்போது அவற்றை எதிர்த்துப் போராடி காரியத்தை சாதிக்கும் மன உறுதி என்னிடம் போதிய அளவு இல்லை. இது என்னுடைய தவறு. அடுத்ததாக, பரஸ்பர உதவிக் குழுவை நிறுவி மூன்றாண்டுகள் ஆகியும் இன்னமும் இது ஓர் கூட்டுறவுச் சங்கமாக வளரவில்லை. அதற்குத் தகுந்த முயற்சியை நான் மேற்கொள்ளவில்லை… நான் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இல்லையென்றாலும் இந்த இருவி ஷயங்களுக்காக நான் உழைக்கப் போகிறேன்.”

கூட்டம் அவளது நேர்மையைப் பாராட்டியது; கைதட்டி அங்கீகரித்து ஆரவாரம் செய்தது.

லி குய் ஹுவா ஓடிப்போய் அவளை அணைத்துக் கொண்டாள். ”நடந்ததை எண்ணிப் புலம்பாமல் வரப்போகிற காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்று குய்யா ஃபெங் பார்க்கிறாள். இப்படித்தானே வேட்பாளர் இருக்க வேண்டும்?” அவள் கூட்டத்தைப் பார்த்துச் சொன்னாள்.

திடீரென குய்யாவின் மாமியார் எழுந்து நின்றாள். ”இதென்னய்யா கொடுமை! நம்மூருக்கு மூணு பிரதிநிதிகள்தான் அனுப்ப முடியும். நீங்க நாலு பேரை வேட்பாளரா நிப்பாட்றீங்க. கட்சி செயலாளருக்கு எல்லாரும் ஓட்டு போட்டுப்புடுவாங்க; டாக்டரய்யாவுக்கு யாராவது ஓட்டுப் போடாம இருப்பாங்களா, அவருக்கும் போட்டுப்புடுவாங்க. கடைசில எம்மவனுக்கும் மருமவளுக்கும்தான் போட்டியா?” என்று வெளிப்படையாக அரற்றத் தொடங்கினாள்.

மாமியார்க்காரியின் பிரச்சினை என்ன என்று எல்லோருக்குமே தெளிவாகத் தெரிந்தது. மருமகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் மகன் நிலைகுலைந்து போவான். ஏற்கெனவே கூட்டத் தலைவர் கூட்டம் முடிந்ததை அறிவித்துவிட்டார். மாலையில் தேர்தல் நடக்கும். மாமியாரின் பிரச்சினையைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

இது தேர்தல். பாரபட்சம் காட்ட முடியாது. யார் நல்லவர் என்றாலும் அவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் ஆண் என்ன, பெண் என்ன? மகனா, மருமகளா என்பதற்கெல்லாம் வேலை?

****

குவின் ஜியா குய் நேரே வீடு சென்றான். ஒரு வார்த்தையும் சொல்லாமல் படுக்கையில் பொத்தென்று விழுந்தான்.

அவனது தாய்க்குச் சமையலில் உதவி செய்தவாறு குய்யா ஃபெங் கலகலவென்று பேசிக் கொண்டிருந்தாள். குவினுக்கு அது பொறுக்கவில்லை.

“ஏ இங்கே வா” அவன் கத்தினான்.

அவள் உள்ளே வந்தாள். அவள் கைகளில் மாவு, முகத்தில் சிரிப்பு.

”கூட்டத்தில் என்னவெல்லாம் பேசினே? பெரிய இவன்னு நெனப்போ?”

”ஏன், அப்படி என்ன தப்பாப் பேசினேன்?” குய்யா அதிர்ச்சி அடைந்தாள்.

”எதற்காக அப்படிப் பேசினாய்? நம் குழு மூன்று வருசத்தில் கூட்டுறவுச்

சங்கமா வளரல்லேன்னு பேசினியே. எதற்காக அப்படிச் சொன்னே?”

”சே, நீ எப்படிப்பட்ட ஆளுன்னு தெரிஞ்சி போச்சு” குய்யா பொங்கிவிட்டான். அவள் நேர்மையானவள், சூதுவாது தெரியாதவள். குவின் அப்படிக் கேட்டது அவளுடைய ஆத்திரத்தைத் தூண்டிவிட்டது.

அப்படியே தொடுத்துத் தொடுத்து சண்டை வளர்ந்தது. இரண்டு பேரும் சாப்பிடவில்லை.

மாமியார்க்காரியும் திணறினாள். மருமகள் மீது தப்புச் சொல்ல முடியாது; மகனைத் திட்டவும் முடியாது. கையைப் பிசைந்தாள்; பெருமூச்சு விட்டாள்; முனகினாள். கொதிக்கும் மனதை யாரிடமாவது கொட்டி ஆற்ற வேண்டும் போல அவளுக்குத் தோன்றியது. அதன் விளைவு என்ன ஆகும் என்று அவள் யோசிக்கவில்லை.

வெளியே சென்றாள். பெண்கள் கழகத் தலைவர் முதலில் அகப்பட்டார். ”தலைவரே, முதல்லேயே தலைப்பாடா அடிச்சுகிட்டேன். ரெண்டு பேரையும் நிக்க வெக்காதீங்கன்னு, கல்யாணம் கட்டினதுலேருந்து இப்படி அவுங்க அடிச்சுகிட்டு நின்னதில்லே. அவங்க ரெண்டு பேரும் சாப்பிடக்கூட இல்லே….”

அடுத்து லி குய் ஹீவா, அதற்கடுத்து மருமகளை வேட்பாளராக முன்மொழிந்த ‘யின்’ என்ற பெண்…. எல்லோரிடமும் வீட்டில் நடந்த சண்டையை வரிவிடாமல் கொட்டித்தீர்த்தாள்.

‘யின்’ பக்கத்து வீடுதான். சண்டையின் உச்சத்தில் அவன் கத்தியதெல்லாம் அவளுக்கும் காதில் விழுந்தது. கேட்டு உள்ளுக்குள்ளே கொதித்துக் கொண்டிருந்தாள்.

செய்தி கேள்விப்பட்டு அநேகமாக கிராமத்தில் பெண்களும் ஆண்களுமாய்ப் பலர் கூடிவிட்டனர். ”இவ்வளவு மோசமானவனா குவின்?” எல்லோர் மனதிலும் அந்தக் கேள்வி எழுந்தது.

*****

மாலை நேரம் வந்தது, தேர்தல் நடந்தது. முடிவு எல்லோருக்குமே அதிர்ச்சி தந்தது. குவினுக்கு மூன்றே ஓட்டுக்கள. மற்ற எல்லோரும் குய்யா ஃபெங்குக்கு ஓட்டுப் போட்டிருந்தார்கள்.

குவினால் தாங்க முடியவில்லை. கூட்டம் முடிவதற்கு முன்னே அவன் கிளம்பிவிட்டான். அவன் தாய் அவனைத் துரத்திக்கொண்டு ஓடினாள் – அழுது புலம்பிக் கொண்டே.

பெண்கள் கழகத் தலைவரும், அடுத்த வீட்டுக்காரியும் வந்து பார்த்தபோது அவன் படுக்கையில் படுத்துத் தலையணையால் முகத்தை மூடியிருந்தான்.

அவர்கள் சமாதானமாய்ப் பேசிப் பார்த்தார்கள். அவன் பதில் பேசவில்லை, கிராமத்திலிருந்தே தன்னைத் தள்ளிவைத்து விட்டதைப் போல அவன் நினைத்துக் கொண்டான். எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் ஏதும் கேட்காததால் அவன் அம்மாவும் படுத்துவிட்டாள். நீண்ட நேரம் அவளது முணுமுணுப்பு மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தது.

குய்யா ஃபெங் எல்லோரையும் திருப்பியனுப்பினாள்; தானே பேசுவதென்று முடிவு செய்தாள். குவினின் முகத்தை மூடியிருந்த தலையணையை அகற்றினாள். அவன் கண்களில் நீர் திரண்டு வழிந்தது. அவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். ”ச்சீ… உன் மேல எனக்கொண்ணும் கோபம் இல்ல. ஆனா நீ கொஞ்சம் யோசிச்சுப் பாக்கணும்” நெஞ்சை நீவிவிடுவது போல இதமாகச் சொன்னாள்.

”ம்… யோசிச்சுப் பாக்கறேன்” சொல்லும்போதே அவன் குரல் அடைத்தது; கண்களில் நீர் திரண்டது.

****

மூலம்: சீனச் சிறுகதைத் தொகுப்பு ”ஐம்பதாம் ஆண்டுகளின் சீனக் கதைகள்” (1984)

புதிய கலாச்சாரம், அக்டோபர் 1999.

கூடங்குளம் அணு உலையை மூடு! தூத்துக்குடி ஆர்ப்பாட்டம் – சிறப்புரைகள் !

41

கூடங்குளம்-மறியல்பன்னாட்டு முதலாளிகளின் லாப வெறிக்கான, மனித குலத்திற்கு எதிரான கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு என்ற முழக்கத்தின் அடிப்படையில் கடந்த இரு  மாதங்களாக மனித உரிமை பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள,  போராட்ட ஆதரவு வழக்கறிஞர் குழுக்கள் அமைத்தல், சட்ட ரீதியான உதவிகள் எனப் போராட்ட ஆதரவுப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் கடந்த  21-01- 2012 அன்று திருநெல்வேலியிலும், அதனைத் தொடர்ந்து  01-2-2012 அன்று காலை 10.30 மணிக்கு  தூத்துக்குடி இராஜாஜி பூங்கா அருகில் மனித உரிமை பாதுகாப்பு மையம் தூத்துக்குடி கிளை சார்பில் மிகவும் எழுச்சிகரமான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தின் துவக்கத்தில் 31-01-2012 அன்று நெல்லையில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவினரை இந்து முன்னணி -பி.ஜே.பி, காங்கிரஸ் கும்பல் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், அணு உலையை உடனே மூட வலியுறுத்தியும், மக்கள் விரோத , தேசத் துரோக அமெரிக்க – இந்திய அணு சக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரியும் மின்சாரத்திற்காக அணு உலை என்ற மோசடியை அம்பலப்படுத்தியும், இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் ஜெர்மன், பிரான்ஸ், இத்தாலி, உள்ளிட்ட நாடுகள் அணு உலைகளை மூடி வரும் நிலையில், பன்னாட்டு முதலாளிகளுக்கு ரூ.8 லட்சம் கோடி மக்கள் பணத்தை தூக்கிக் கொடுத்து 36 அணு உலைகளை, கமிசன் பெற்றுக் கொண்டு மன்மோகன் சிங் காங்கிரஸ் அரசு இந்தியா முழுவதும் அமைக்கவுள்ளதைக் கண்டித்தும், போராடும் மக்களின் மீது போடப்பட்ட 156 பொய் வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தியும், காற்றாலை, கடலலை, சூரிய ஒளி என்ற மாற்று மின் தயாரிப்பு முறைகள் அமுல்படுத்தக் கோரியும், தொடர்ந்து கூடங்குளம் போராட்டடம் தொடர்பாக அணு சக்திக் கழகத்திடம் கையூட்டு பெற்றுக்கொண்டு பொய்ச்செய்திகள், அதாவது அவதூறுகளை வெளியிட்டு வரும் தினமலருக்கு எச்சரிக்கை விடுத்தும் விண்ணதிர முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

பெரும் எண்ணிக்கையில் போலீசார், அதிரடிப்படையைக் குவித்து ஆர்ப்பாட்டத்தில் மக்கள் பங்கேற்பை தடுக்க முயற்சித்த தூத்துக்குடி நகரக் காவல்துறையை மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் எச்சரித்து அடக்கினர்.

தலைமை உரை ஆற்றிய மனித உரிமை பாதுகாப்பு மையம் தூத்துக்குடி மாவட்ட இணைச்செயலர் வழக்கறிஞர் அரிராகவன், கூடங்குளம் அணு உலை கட்டப்பட்டது, பன்னாட்டு முதலாலிகளின் இலாபம், இந்திய முதலாளிகளின் அணு குண்டு வல்லரசுக் கனவிற்காகத்தானே தவிர மின்சாரத்திற்காக அல்ல என்பதையம் இன்று உற்பத்தி ஆகும் மின்சாரத்தில் பெரும்பகுதி முதலாளிகள், பணக்காரர்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்குச் செல்லும் நிலையில் அணு உலை மின்சாரம் வந்தாலும் பெரும்பான்மை மக்களுக்கு, விவசாயிகள், தொழிலாளிகளுக்கு கிடைக்காது என்பதையும் சுட்டிக்காட்டி புள்ளிவிவரங்களோடு உரை நிகழ்த்தினார்.

“ஓமியோபதி மருத்துவர் ஊசி போட்டால் போலி மருத்துவர் என்று போலீசு கைது செய்கிறது. ராக்கெட் என்ஜினியர் அப்துல்கலாம் அணு உலை பாதுகாப்பானது அறிக்கை விடுகிறார் அவரை போலி அணு விஞ்ஞானி என்று ஏன் கைது செய்யக்கூடாது? சுனாமி பாது காப்புக்காக அரை கிலோமீட்டர் தள்ளி குடியிருப்புகளை அமைக்க வேண்டும் என கடலோர சட்டம் சொல்லுது.அணு உலை மட்டும் அருகிலேயே கட்டியிருக்கிறான். யார் கேக்கிறது?.என பேசினார்.

அதன்பின் அனைவரும் இந்து முன்னனி, ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி. காங்கிரஸ் ரவுடிகளை கண்டித்தும், அம்பலப்படுத்தியும் போராட்டத்தில்   தமிழகத்தின் அனைத்து மக்களும் இணைய வேண்டியதன் அவசியத்தையம், போராடும் மக்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தியம் உரை நிகழ்த்தினர்.

கூடங்குளம் அணு உலையை மூடு கார்டூன் போஸ்டர் பேனர்அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசியல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திரு.மனோதங்கராஜ், வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் கடந்த 1987 லிருந்து நடைபெற்று வரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் போராட்ட வரலாறையும், பேச்சிப்பாறை நீரை கூடங்குளம் அணு உலைக்கு எடுக்கக் கூடாதெனக் கோரி கன்னியாகுமரி மாவட்ட மக்கள் நூற்றுக்கணக்கான போராட்டங்கள் நடத்தியுள்ளதையும் விளக்கிப் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் இறுதியில் பேசிய மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய விடுதலை போராளிகள் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கு அதே காரணங்களுக்காக இன்றும்போடப்படுகிறது. காங்கிரசு, பி.ஜே.பி, தி.முக, அ.தி.முக. ஆட்சி மாறலாம், ஆனால் ஒரு போதும் மக்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதில்லை. விளை நிலங்களை துப்பாக்கி முனையில் விவாசாயிகளிடமிருந்து பறித்து பன்னாட்டு கம்பெனிக்கு வழங்குகிறது  மத்திய மாநில அரசுகள். மக்கள் நலனை பற்றி சிறிதும் கவலைப்படாமல் கல்வி, மருத்துவம், குடிநீர் என அனைத்தும் தனியாருக்கு தாரை வார்க்கிறார்கள்.இது மக்கள் நல அரசு இல்லை.கூடங்குளம் மக்கள் தென்பகுதியில் பன்னாட்டு முதலாளியின் காலை இறுகப் பிடித்து விட்டார்கள்.அதன் கை உடம்பு தலை என ஏனைய பிரிவுமக்களான விவசாயிகள், தொழிலாளர்கள்,  மாணவர்கள் என அனைவரும் ஒரே நேரத்தில் போராடி பிடித்து அழுத்தி கீழே சாய்த்து விட முடியும், என பேசினார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைப் பொதுச் செயலாளர் தோழர் காளியப்பன் பேசும்போது, அணுகுண்டை விட,  அணு உலை ஆபத்தானது.  அணு குண்டு வெடித்தால் தான் அழிவு ஏற்படும் அணு உலை வெடிக்காமலே ஆபத்து ஏற்படும். அப்துல்கலாம் எப்படி அணு விஞ்ஞானி என்று மக்களால் நம்பவைக்கப்பட்டாரோ அதுபோல திரும்ப திரும்ப பொய்ப் பிரச்சாரம் செய்து அணுஉலை பாதுகாப்பானது என நம்பவைக்கிறார்கள்.  அணு உலையை ஏற்றுமதி செய்து கோடி கோடியாக கொள்ளை லாபம் சம்பாதிக்ககும் அமெரிக்கா பிரான்ஸ், ரஷ்யா கடந்த 30  ஆண்டுகளில் புதியதாக அணு உலையை துவங்கவில்லையே ஏன்? யுரேனிய கையிருப்பில் உலகில் நான்கில் ஒரு பகுதியை வைத்துள்ள ஆஸ்திரேலியா ஒரு அணு உலையை கூட அமைக்கவில்லை. ஆனால் இந்தியாவில் கூடங்குளத்தில் மட்டும் அல்ல ஜெகதாப்பூரில் 10000 மெகாவாட்டில் உலகில் மிகப்பெரிய அணுஉலையை கட்ட முயற்ச்சிக்கிறார்கள்.

கூடங்குளம் அணு உலையை மூடு கார்டூன் போஸ்டர் பேனர்கூடங்குளம் அணுஉலையை திறப்பதில் மத்திய அரசு இனி என்ன வகையான அணுகுமுறையை மேற்கொள்ளும் என்பதற்கு முன்னோட்டமாக நெல்லை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் அணுஉலைக்கு எதிராக போராடும் போராட்டக்காரர்கள் மீது  இந்துமுன்னணி ரவுடிகள் தாக்குதல் நடத்தி நாம் நாளை எப்படி போராட வேண்டும் என்பதை எதிரிகள் எச்சரித்து சென்றிருக்கிறார்கள்.  ‘ஜனநாயகம்’ என்பதற்கு உரிமைகள் என்ற பொருள் அல்ல. பெரும்பான்மையான மக்கள் மீது சுரண்டல் வர்க்கமாகிய சிறுபான்மையினர் கையாளும் வன்முறையை ஒழுங்குபடுத்துவதற்கு  பெயர் தான் ஜனநாயகம். மக்களின் கோரிக்கையை பரிசிலிப்பதற்கு பதிலாக போராடும் மக்களை போலீஸ் சட்டபூர்வமாகவே ஒடுக்குகிறது.

ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தில் பென்னிகுயிக் என்ற பொறியாளர் ஐந்து மாவட்ட மக்களின் பஞ்சத்தை போக்க முல்லை பெரியாறு அணையை கட்டினார். மழை வெள்ளத்தில் அணை அடித்து செல்லப்பட்ட போது மகனை பறிகொடுத்த தாய் போல் பென்னிகுயிக் வாய்விட்டு கதறி அழுதாராம். ஆனால் தன் சொந்த நாட்டு மக்கள் பட்டினியால் சாகும்போது வீணாகும் உணவு தானியத்தை கொடு என உச்சநீதி மன்றம் பேசியபோது   எதற்குமே வாய் திறக்காத மன்மோகன்சிங் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடக் கூடாதென பேசியதுடன் இலவசமாக கொடுக்க முடியாதென மறுத்தார்.

மக்கள் வரிப்பணத்தில் 50 %  ஏறத்தாழ 4 லட்சம் கோடி ரூபாயை முதலாளிகளின் தொழிலை காப்பாற்ற மான்யமாக வாரி கொடுத்து வக்காலத்தும் வாங்குகிறார் மன்மோகன்சிங். சொந்த நாட்டு மக்களை பலியிடும் நயவஞ்சகன், துரோகி, அயோக்கியன், கல்நெஞ்சக்காரன்,  நம்பர் 1 கிரிமினல்தான் மன்மோகன்சிங். மின்சாரம் தயாரிக்கவா அணுஉலையை கொண்டுவந்தார்கள்?

1980 களில் வல்லரசு கனவிற்காக அணுசக்தி நீர்முழ்கி கப்பலை ரஷ்யாவிடம் வாங்க ஒப்பந்தம் போட்டபோது அணுஉலையை வாங்கினால்தான் கப்பல் என்ற நிபந்தனையை ஏற்றுக்கொண்டு வந்ததுதான் கூடங்குளம் அணுஉலை. இந்த தேசத்து மக்களை காவு கொடுத்து போடப்பட்ட ஒப்பந்தம்.

அணுஉலை பாதுகாப்பானது என அப்துல்கலாம் சொல்லலாம், மன்மோகன்சிங் சொல்லலாம்,  நாராயணசாமி சொல்லலாம், யார் நம்புவது?   நகராட்சி கழிப்பிடம் சுத்தமாக வைத்திருக்க துப்பில்லை. பாதுகாக்கப்பட்ட குடிநீர் கொடுக்க வக்கற்ற அரசாங்கம் அணு உலை கழிவை பல ஆயிரம் ஆண்டுகள் பத்திரமாக பாதுகாப்பானாம்?. வெள்ளை காக்கா வானத்தில் மல்லாந்து பறக்கிறது என்று நம்புகிறவர்கள் இதை நம்பலாம்.

கூடங்குளம் அணு உலையை மூடு கார்டூன் போஸ்டர் பேனர்இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைப் பற்றி ஜார்ஜ்புஷ் கூறுவது மன்மோகன்சிங் சாதனைகளில் மகுடம் வைத்தார்போல் உள்ளது என புகழ்ந்துள்ளார். உலகில் படுத்துப்போன அணுஉலை வியாபாரத்தை தூக்கி நிறுத்த 8 லட்சம் கோடிக்கு வியாபாரம் செய்ய மன்மோகன்சிங் போன்ற தேசத் துரோகிகள்தான் உகந்த நபர். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய மூலதனத்தை அனுமதித்து கோடிக்ணக்கான வியாபாரிகளின் வாழ்க்கையை சூறையாடுகிறார்கள். பெட்டிகடை வைக்க எதற்கு அன்னிய மூலதனம்?

கூடங்குளம் அணுஉலை மூடினால் 14 ஆயிரம் கோடி பற்றி கவலைப்பட வேண்டியது மக்கள்தான் அதைப்பற்றி உங்களுக்கென்ன? பிரதமரின் நேரடி பொறுப்பில் உள்ள இஸ்ரோவில் 2 லட்சம் கோடி எஸ்பேண்டு ஊழல் 175000 கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல்1 இலட்சத்து 70 ஆயிரம் கோடி, சில இலட்சம் கோடி கருப்பு பணம் இன்னும் எண்ணற்ற ஊழல்கள் செய்யும் காங்கிரஸ் கட்சிதான் உரிமைக்காக போராடும் மக்களை கொச்சைப்படுத்துகிறது. இடிந்தகரை மக்கள் போராட்டம் அவர்களது போராட்டம் மட்டுமல்ல. மத்திய அரசின் மறுகாலனியாக்க கொள்கையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள் என  அனைத்து மக்களுக்குமானது. மறுகாலனியாக்கத்திற்கு எதிரான இந்த போராட்டம் தேச விடுதலைக்கான போராட்டம், அனைவரும் இணைந்து போராட வேண்டும். என அறைகூவல் விடுத்தார்.

அணு சக்தி்க்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.உதயகுமார் பேசும் போது நாங்கள் இடிந்த கரையில் அணுஉலைக்கு எதிராக போராட்டம் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை நேரிலே  வந்து ஆதரவு தருவதுடன் ஆலோசனைகளும் தந்து பங்களிப்பு செய்கின்ற மனித உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிர்களுக்கு நன்றி கூறுகிறேன். கூடங்குளம் அணுஉலையை நாங்கள் ஏன் மூட சொல்கிறோம் “அமெரிக்கா காசு கொடுக்கிறது”  அன்னிய சக்திகள் தூண்டிவிடுகிறது கூடங்குளம் அணுஉலையை மூடிவிடு கோடி கோடியாகபணம் தருவார்கள் என அறுவறுப்பாக பொய் பேசி வருவது யார் என்று உங்களுக்கு தெரியும். இந்த திட்டம் இந்த மண்ணில் செயல் படுத்தினால் 8 கோடி தமிழர்களின் எதிர்காலம் அழிந்துபோகும். எம்.எல்.ஏ, எம்.பி ஆக வேண்டும் என்பதற்காக போராடவில்லை நாங்கள், இந்த மண்ணின் மைந்தர்கள். அணுஉலை பாதுகாப்பானது என அப்துல்கலாம் நாராயணசாமி மன்மோகன்சிங் பேசுகிறார்கள். சுனாமி நிலநடுக்கம் வராது என்கிறார்கள். சுனாமியும் நிலநடுக்கமும் சொல்லிவிட்டு வருமா?

ஜப்பானியர்களுக்கு தெரியாத எந்த தொழில் நுட்பம் நம்மிடம் இருக்கிறது? கூடங்குளம் பகுதியில் நிலநடுக்கம் வந்திருக்கிறது. சுனாமியும் வந்திருக்கிறது. அந்த பகுதியில் பூமிக்கடியில் எரிமலை குழம்பு இருக்கிறது. அதற்கான கற்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும் பூமிக்கடியில் வெற்றிடம் இருக்கிறது. அதனால்தான் மழைநீர் கிணற்றுக்குள் போவது போல ஓடுகிறது. அந்த பகுதியில் பாறைகள் கடினமானவை அல்ல. அலை போன்று வண்டல் மண் குவியல் உள்ளது. இதனால் மண் சரிவு ஏற்பட்டு சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளது என கற்றறிந்த விஞ்ஞானிகள் சொல்கிறார்களே இதற்கு அணுசக்தி துறையினரிடம் பதில் இல்லையே.

கூடங்குளம் அணு உலையை மூடு கார்டூன் போஸ்டர் பேனர்அணு உலையில் விபத்து வேண்டாம், தீவிரவாத தாக்குதல் வேண்டாம் நிலநடுக்கம் வேண்டாம் சுனாமி வேண்டாம், அவர்கள் சொல்வதுபோல் இயங்குவதாக வைத்துக்கொள்வோம். அணுஉலை புகைப்போக்கின் வழியாக அயோடின் சீசியம் சார்ட்டியம் என நஞ்சுத்துகள்கள் காற்றிலே பரவும். அந்த நச்சுக்காற்று 40 முதல் 60 வருடங்கள் காற்று வீசும் திசையெல்லாம் பரவும். அதை சுவாசிக்கும் நமது குழந்தைகள  பற்றி எண்ணி பாருங்கள். நம்மைபோல வாழ்வாங்கு வாழ வேண்டாமா. கூடங்குளம் அணுஉலையில் நாள் ஒன்றுக்கு கதிர்வீச்சு கழிவு, நச்சுநீர் எவ்வளவு வெளியாகும். இதில் காற்றில் எவ்வளவு கலக்கும், கடல் நீரில் எவ்வளவு கலக்கும் என கேட்டோம். பாதுகாப்பானது என்ற பதிலைத் தவிர எதுவும் அவர்கள் சொல்லவில்லை.

பிரதமரை சந்தித்தப்போது அணுசக்தி தலைவர் எஸ்.கே.ஜெயினிடம் கேட்டோம் சிறிதளவுதான் வரும் அதை உருட்டி உங்கள் வீட்டு வரவேற்பரையில் வைத்துக்கொள்ளலாம் என்றார்.  உலகத்தில் எந்த நாட்டிலும் கண்டுபிடிக்காத தொழில் நுட்பம் இது. பிறகு கூடங்குளம் அணுஉலை இயக்குநர் காசிநாத் பாலாஜியிடம் கழிவு எவ்வளவு வரும் என கேட்டோம். கொஞ்சமாக வரும் என்றார். விஞ்ஞானிகள் போலவா பேசுகிறார்கள். பிறகு மறுச்சுழற்சி  செய்கிறோம் கழிவு வராது என்றார்கள். அணுஉலையை விட மறுசுழற்ச்சி உலை  ஆபத்தானதே என நாம் கேள்வி எழுப்பியவுடன் சுதாரித்து இல்லை என்றார். அப்துல்கலாம் 25 சதவீதம் கழிவு வரும் என்றார்.  எதிலே 25 சதவீதம் என சொல்ல மறுக்கிறார்கள் இவர்கள் உண்மையை சொன்னதாக சரித்திரம் இல்லை. இப்படி நாம் கேள்வி கேட்டதால் இந்திய இறையாண்மைக்கு எதிராக தேச துரோக குற்றம் சாட்டப்பட்டுள்ளோம்.

கூடங்குளம் அணுஉலையை குளிர்வித்து தண்ணீரை 24 மணிநேரமும் வாரத்தின் 7 நாட்களும் வருடத்தில் 365 நாட்களும் 40 ஆண்டுகள்  12 டிகிரிக்கும் அதிகமாக சூடான நீரை  கடலுக்குள் கலப்பார்களாம் அதனால் எந்த பாதிப்பும் வராது என்கிறார்கள். பகுத்தறிவுள்ளவர்களே சிந்தித்துப் பாருங்கள் கடல்வளம் என்ன ஆகும் மக்களின் மீன் உணவு என்னவாகும் யோசித்துப்பாருங்கள். மன்மோகன்சிங் 46 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கிறார்கள் என்று பேசுகிறார். சத்தில்லாத குழந்தை நன்றாக கல்வி கற்குமா முழு வளர்ச்சி அடையமா. தமிழகத்தில் கல்பாக்கம் கூடங்குளம் மேற்கு வங்கம் மகாராஷ்டிரா குஜராத் ஆந்திரா என இந்திய கடல் பகுதி முழுமைக்கும் அணுஉலையை அமைக்க இருக்கிறார். கூடங்குளம் அணுஉலையில் உள்ள பரத்வாஜ் அணுஉலைகழிவுகளை 10000 ஆண்டுகள் புதைத்து  பாதுகாப்பாக வைத்திருப்போம் என்கிறார். நமது தாத்தா பாட்டி பாட்டன்களை எங்கே புதைத்தோம் என தெரியாது. பரத்வாஜ் 10000 ஆண்டுகள் பக்கத்திலே உட்கார்ந்திருப்பாரா?

அணு கழிவின் கதிர்வீச்சு வீரியம் 48 ஆயிரம் ஆண்டுகள் இருக்கும். அரைஆயுள் முடிய 24 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். மின்சாரம் நமக்கு தேவை ஆனால் கண்ணை விற்று சித்திரம் வாங்க முடியமா? மொத்த மின் உற்பத்தியில் இன்று அணு மின்சாரம் 2.5 சதவீதம் மட்டுமே. நாடு  முழுவதும் புதிதாக அணுஉலைகள் அனைத்தும் இயங்கினால் கூட 7 சதவீதம் மட்டுமே பூர்த்தி அடையும். தண்ணீயில் சூரிய ஒளி போன்ற மாற்று முறையில் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் . கூடங்குளம் அணுஉலையில் 20 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது என குற்றம் சாட்டுகிறோம். ஊழல் செய்த காண்ட்ராக்டர்களும் பலன் அடைந்தவர்களும் அணுஉலைக்கு ஆதரவாக போராடுகிறார்கள். அணு சக்தி கழகம் அணுஉலை தொடர்பான கணக்கை காட்டட்டும் போராட்ட செலவை நாங்கள் காட்டுகிறாம். பன்னாட்டு கம்பெனிகளுக்கு நம்மையெல்லாம் விற்றுவிட்டு ஓடப் பார்க்கிறார்கள். அணு சக்தி கழகத்தின் சட்டையை பிடித்து பதில் சொல் என நடுத் தெருவில் நிறுத்தி இருக்கிறோம். இந்தியாவில் இது தான் முதல்முறை. ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட போதும், குஜராத்திலே ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்ட போதும், 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் அமைதிகாத்த அப்துல்கலாம் இன்று யாழ் பாணத்திற்கு போய் பேச என்ன அருகதையிருக்கிறது?

இந்திய ரஷ்யாவுடன் 2008 ல் போடப்பட்ட அணுஉலை ஒப்பந்தப்படி விபத்து ஏற்பட்டால் ரஷ்யா இழப்பீடு கொடுக்க வேண்டாம். உலகத் தரம் வாய்ந்தது  உத்திரவாதமானது என்பவர்கள் ஏன் ஓட வேண்டும்? இந்திய மக்களின் பிரதமர் மன்மோகன்சிங் எவ்வளவு அதிக இழப்பீடு வாங்கித் தர முடியும் என முயற்சிக்காமல் எந்த இழப்பீடும் தர வேண்டாம் என ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் போடுகிறார். இதுபற்றி இந்து பத்திரிக்கையில் சித்தார்த்த வரதராஜன் என்பவர் ஒப்பந்த நகலை கைப்பற்றி விட்டோம் என  கட்டுரை எழுதினார். இழப்பீடு பெறுவது குறித்த ஒப்பந்த நகலை நமக்கு தர மறுக்கிறார்கள். ரஷ்யாவுக்கு கொடுக்கிறார்கள்.

போபால் விஷவாயு வழக்கில் கொலை குற்றவாளி ஆண்டர்சனை இழப்பீடு தண்டனை இல்லாமல் தனி விமானத்தில் காங்கிரஸ் அரசாங்கம் அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்த்து. காங்கிரஸ்சிக்கு கமிசன் ரஷ்யாவுக்கு லாபம் நமக்கு வாயில மண் இதை எதிர்த்து நாம் கேள்வி கேட்கிறோம். விவசாயிகள் மீனவர்கள் தொழிலாளர்களுக்கு கேள்வி கேட்க தெரியாது. ஏமாற்றி விடலாம் என நினைக்கிறார்கள். அணுசக்தி கழகம் தோன்றிய நாள் முதல் 65 ஆண்டுகாலமாக இரண்டரை சதவீத மின் உற்பத்திக்காக மக்களின் வரிபணத்தை ரத்தமாக உறிஞ்சிக் குடிக்கிறது.

பிரதமர் மன்மோகன்சிங்  வெள்ளைக்காரனின் அடிவருடியாக  அமெரிக்க அடிமையாக சிந்திக்காமல் இந்த நாட்டு மக்களின் பிரதிநிதியாக பேச வேண்டும்.  புகுஷிமாவில் அணுஉலை விபத்து நடந்தவுடன்  லட்சம் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு ஜப்பான் அரசு குடியமர்த்தியது. கூடங்குளத்தில் 30 கி.மீ. ருக்குள் 12 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். இந்திய அரசாங்கம் நகராட்சி கழிப்பிடத்தை பாதுகாப்பாக பராமரிக்க வக்கற்ற அரசாங்கம் என்ன செய்யும். என பேசினார்.

ஆர்பாட்டத்தில் மக்கள் கலை இயக்கக் கழகத்தின் மைய கலைக்குழு சிறப்பான நாடகமும், கலை நிகழ்ச்சியும் நடத்தியது மக்களைப் பெரிதும் கவர்ந்தது. நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு நின்று ஆர்ப்பாட்டத்தை கேட்டு ஆதரித்தனர்.

–    மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.

கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.11 நெல்லையில் மறியல்!! அணிதிரள்வோம் !!!

26

கூடங்குளம்-மறியல்மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலை வைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு என்ற மைய முழக்கத்தின் அடிப்படையில் ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புக்களும் தமிழகத்தில் தீவிர பிரச்சார இயக்கத்தினை மேற்கொண்டு வருகின்றன. இதனடிப்படையில் தோழர்கள் பலர் விடுமுறை எடுத்துக் கொண்டு தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டப் பகுதிகளில் மக்களிடையே தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். பாடல்கள், கலை நிகழ்ச்சிகள், துண்டுப் பிரசுரம், வெளியீடு, தெருமுனைக்கூட்டங்கள் ஆகிய வடிவங்கள் மூலம் கருத்துக்கள் மக்களை சென்றடைகின்றன.

சென்ற இடங்களிலெல்லாம் 99% மக்கள் எமது தோழர்களை ஆதரித்திருக்கின்றனர். பல கிராமங்களில் தங்க இடமும், உணவும் கொடுத்து தோழர்களை பராமரிக்கின்றனர். தெருமுனைக் கூட்டங்கள் நடக்கும் இடங்களில் கணிசமான நிதியுதவியும் அளிக்கின்றனர்.

அதே நேரம் மின்வெட்டு பாதிப்பு, மின்சாரத் தேவை என்ற அரசு மற்றும் ஓட்டுக் கட்சிகளின் ஓயாத பிரச்சாரத்தால் மக்களில் பலர் குருட்டாம் போக்கில் அணு உலையை ஆதரிக்கின்றனர். இது நகர்ப்புறங்களில் வெளிப்படுகிறது. தோழர்கள் இதற்கு பொருத்தமக பதில் அளித்துப் பேசும் போது ஏற்கின்றனர். காங்கிரசு, பா.ஜ.க மற்றும் போலிசார் எமது பிரச்சாரத்திற்கு சில தடைகளையும் ஏற்படுத்தியிருக்கின்றனர். இவற்றையெல்லாம் முறியடித்துத்தான் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த பிரச்சார இயக்கத்தின் மைய நிகழ்வாக வரும் பிப்ரவரி 11-ம் தேதி சனிக்கிழமை அன்று நெல்லையில் இருந்து பேரணியாகச் சென்று கூடங்குளம் அணு உலையை முற்றுகையிடுவது என்ற போராட்டம் நடக்க இருக்கிறது.

பேரணி துவங்கும் இடம்: பாளையங்கோட்டை மார்க்கெட் ஜவகர் திடல், திருநெல்வேலி.

நாள்: 11.02.2012 சனிக்கிழமை.

நேரம்: காலை 10.30

மறியல் அழைப்பிதழ் PDF வடிவில் பெற இங்கே அழுத்தவும்

இந்த ஊர்வலம், ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் குறிப்பாக தென்மாவட்டங்களில் இருக்கும் வாசகர்கள், பதிவர்கள் தமது நண்பர்கள், குடும்பத்தினருடன் கலந்து கொள்ளுமாறு கோருகிறோம்.

கூடங்களும் அணு உலையை மூடக்கோரி ம.க.இ.க அமைப்புக்கள் சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் சிறு வெளியீடு பல ஆயிரம் பிரதிகளாக தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த பிரச்சார இயக்கத்தில் கலந்து கொள்ளுமாறு உங்களையும் அழைக்கிறோம். அவர்களுக்கு அரசு, ஊடகங்கள், ஓட்டுக் கட்சிகள் என அனைவரும் ஒருங்கிணைந்து கூடங்குளம் அணு உலையை திறக்க முயற்சிக்கும் போது நாம் மக்களை நம்பி அதை தடுக்க வேண்டியிருக்கிறது. அந்த வரலாற்றுக் கடமையாற்ற உங்களையும் உரிமையுடன் அழைக்கிறோம்.

இந்த மைய இயக்கத்தின் முழக்கங்கள்:

இந்தியாவை அமெரிக்காவின் அடிமையாக்கும்
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவோம்!

அணுஉலை = பல்நோய் உற்பத்திக் கூடம் + பேரழிவு ஆயுதக் கிடங்கு!

பதவிக்கும் பட்டத்திற்கும் பல்லிளித்து பொய்யும் புரட்டும் பேசி
பன்னாட்டு முதலாளிகளின் இலாபவெறிக்கு
பாமர மக்களின் உயிரைக் காவு கொடுக்கும்
அணு விஞ்ஞானிகளின் உண்மை உருவத்தைத் தோலுரிப்போம்!

அணு மின்சாரத்தை விட மலிவான, ஆபத்தில்லாத,
சுற்றுச்சூழலை நாசமாக்காத காற்றாலை, கடலலை,
சூரிய ஒளி மின்நிலையங்களை அமைக்கப் போராடுவோம்!

42% கிராமங்களுக்கு மின்னிணைப்பே இல்லை!
சிறு- குறுந்தொழில்கள், விவசாயத்துக்கோ என்றைக்கும் மின்வெட்டு!
நாட்டின் மின் உற்பத்தியை விழுங்குவது
டாடா, அம்பானிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளே!
அணு மின்சாரம் அவனுக்கு, புற்றுநோய் சாவு எங்களுக்கா?

அணு உலைகளால் அறவே ஆபத்து இல்லையென்றால்
அப்புறம் எதற்கு அணுஉலை விபத்து காப்பீட்டுச் சட்டம்?

தங்கள் நாடுகளில் அணு உலைகளை மூடும்
ஏகாதிபத்திய முதலாளிகளிடம்
எட்டு இலட்சம் கோடிக்கு அணு உலை வாங்க
ஒப்பந்தம் போட்டிருக்கிறது இந்திய அரசு – இதுதான் தேசத்துரோகம்!

பன்னாட்டு முதலாளிகளின் இலாபவெறிக்கு
இந்திய மக்களை பலியிடாதே!

‘வளர்ச்சி – வேலைவாய்ப்பு – வல்லரசு’ என்று ஆசை காட்டி
தேசத்துரோக, மக்கள் விரோத சதியில் ஈடுபட்டிருக்கும்
காங்கிரசு, பா.ஜ.க. உள்ளிட்ட ஓட்டுப்பொறுக்கிகளைப் புறக்கணிப்போம்!
தனியார்மயம், தாராளமயம், உலகமயம்-
மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!

தொடர்புக்கு:

அ.முகுந்தன் – 94448 34519 ,  வினவு – 97100 82506

மக்கள் கலை இலக்கியக் கழகம்விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி

ஏனிந்த அணு உலை வெறி? – கலையரசன்

63

ஏனிந்த அணு உலை வெறி?

கூடங்குளம் அணு உலை கட்டட வேலைகள் ஆரம்பம், ஈழப் போராட்டத்தில் ஏற்பட்ட திருப்புமுனை, செர்னோபில் அணு உலை வெடிப்பு, சோவியத் யூனியனின் மறைவு…. இவை எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சம்பவங்கள் போலத் தோன்றும். எப்போதும் மக்களும், அவர்கள் சார்ந்திருக்கும் அரசியல் சக்திகளும் குறுகிய நலன்கள் குறித்தே சிந்தித்து வருகின்றனர். கூடங்குளம் அணு உழு கட்டப் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், தமிழகத்தில் அது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கவில்லை. ஊடகங்களும் அதனை சிறு பெட்டிச் செய்திக்கப்பால், விவாதப் பொருளாக்கவில்லை. எண்பதுகளில், ஈழப்போராட்டத்தில் தோன்றிய இடதுசாரி அறிவுஜீவிகள், கூடங்குளம் அணு உலை வெடித்தால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து, வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதி வந்தனர்.

“கூடங்குளம், இலங்கையில் தமிழர்கள் செறிவாக வாழும் வட பகுதிக்கு அண்மையில் இருப்பதால், அணு உலை வெடித்தால் ஏற்படும் கதிர்வீச்சுக்கு அகப்பட்டு மரணிக்கப் போவதும் ஈழத் தமிழர்களாக இருப்பர்.” இந்தக் கூற்று, ஈழத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. கல்வியறிவற்ற கூலித் தொழிலாளிகள் கூட, அணு உலை பற்றியும், அதனால் ஏற்படப் போகும் பாதிப்புகள் பற்றியும் என்னிடம் விசாரித்தனர். அந்த அளவுக்கு மக்கள் விழிப்புற்று இருந்தனர். எனினும், கூடங்குளம் எதிர்ப்பு அலை அமுங்கிப் போனது. இந்திய நலன்களுக்கு சார்பான, வலதுசாரி அரசியல் சக்திகள், கூடங்குளம் அணு உலை குறித்து பேசுவதை விரும்பவில்லை. ஈழப் பிரதேசங்களில் நிலைமை இவ்வாறு இருந்தால், சிறிலங்கா அரசு வட்டாரங்கள் அது குறித்து மௌனம் சாதித்து வந்தன. என்ன இருந்தாலும் அழியப் போவது தமிழர்கள் தானே, என்று அரசில் இருந்த இனவெறியர்கள் வாளாவிருந்திருப்பார்கள்.

அதே காலகட்டத்தில் தான், உக்ரைனில் செர்னோபில் அணு உலை வெடித்து பெருமளவு மக்கள் இறந்தனர். குறிப்பிட்ட பிரதேசம், மக்கள் வாழ முடியாத அளவுக்கு கதிர்வீச்சு ஆபத்து இருப்பதாக அறிவிக்கப் பட்டது. இந்த செய்தி, உலகம் முழுவதும் அணு உலை குறித்த அச்ச உணர்வை தோற்றுவித்தது. வளர்ச்சி அடைந்த நாடுகளில், அணு உலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது சாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருந்தது. செர்னோபில் வெடிப்பின் பழி முழுவதும், அன்றைய சோவியத் கம்யூனிஸ்ட் அரசின் மீது போடப் பட்டது. அதாவது, நிர்வாக சீர்கேடுகளே அணு உலை வெடிப்புக்கு காரணமாக தெரிவிக்கப் பட்டது. கலக்கமடைந்த உலக மக்களுக்கு அவ்வாறு தான் ஆறுதல் கூறப் பட்டது. அதே நேரம், “சிறப்பான நிர்வாகம் நடக்கும்” மேற்கத்திய நாடுகள் புதிய அணு உலைகள் கட்டுவதை நிறுத்தி விட்டன. இது அணு உலையின் ஆபத்தை, ஆளும் வர்க்கம் உணர்ந்துள்ளதை எடுத்துக் காட்டுகின்றது.

செர்னோபில் அணு உலை வெடிப்பதற்கு முன்னர், ஐரோப்பாக் கண்டத்தில் அணு குண்டு வெடிப்பு பற்றிய அச்சம் நிலவியது. பனிப்போர் காலத்தில், ஒரு பக்கம் நேட்டோ படையணிகள், மறுப்பக்கம் வார்ஷோ படையணிகள் அணுவாயுதங்களை கொண்டு வந்து குவித்திருந்தன. பல தடவை, சம்பந்தப் பட்ட அரசுகள் தமது மக்களுக்கு அறிவிக்காமலே அதற்கு ஒத்துழைப்பு வழங்கின. உலகில், முதலும் கடைசியுமாக, ஜப்பானில் மட்டுமே அணு குண்டு போடப்பட்டாலும், இனியொரு போர் தொடங்கும் சமயம், எந்த தரப்பு அணுவாயுதத்தை முதலில் பயன்படுத்தும் என்பதை ஊகிப்பது கடினமாக இருந்தது. “திடீரென யாரவது ஒரு மன நலம் பிசகிய அதிகாரி, அணுவாயுதம் ஏவும் பட்டனை அழுத்தி விட்டால்…?” இந்தக் கேள்வி எல்லோர் மனதிலும் குடைந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக, அணுவாயுத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கே இடம்பெற்றன. “சமாதான இயக்கங்களின்” அங்கத்தவர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியது. சோவியத் யூனியனின் அதிபராக கோர்பசேவ் தெரிவானதும், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டு, அணுவாயுதங்களை அழிக்க ஒப்புக் கொண்டார். இருந்தாலும், அணு உலைகள் குறித்து அன்று யாரும் கவனம் செலுத்தவில்லை…. செர்னோபில் வெடிக்கும் வரையில். அதன் பிறகு தான், அணு சக்தி எப்போதும் ஆபத்தான விடயம் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.

உலகில் மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து, அனைவருக்கும் உணவு கிடைக்க வைப்பது ஒரு பிரச்சினையாகவே உள்ளது. அதே போன்று, மின்சாரம் போன்ற தேவைகளை பூர்த்தி செய்வதும் ஒரு சவாலாகவே தொடர்கின்றது. மின்சாரத் தட்டுப்பாட்டை நீக்க மேற்கத்திய நாடுகள் அணுசக்தியை பயன்படுத்துகின்றன. அணுவுக்கு மாற்றீடாக பயன்படுத்தக் கூடிய வளங்கள் உள்ளன. நீர், காற்றாடி, சூரிய ஒளியை பயன்படுத்தியும் மின் உற்பத்தி செய்யலாம். உதாரணத்திற்கு டென்மார்க், நெதர்லாந்தில் காற்றாடி மின்சாரமும், நோர்வேயில் நீர் வலு மின்சாரமும் ஏற்கனவே கட்டமைக்கப் பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன. அல்ஜீரியாவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பிரான்சிற்கு விநியோகிக்கும் திட்டமும் ஆலோசிக்கப் படுகின்றது. இத்தகைய பசுமைப் புரட்சிகள், இன்னமும் விருத்தி செய்யப் படவில்லை. இவை எல்லாம் இன்னமும் பெரும்பாலான மக்களை போய்ச் சேரவில்லை. கடந்த சில ஆண்டுகளாக, நெதர்லாந்து நாட்டின் பெரிய மின் விநியோக நிறுவனம், “உங்களுக்கு தூய்மையான மின்சாரம் வேண்டுமா?” என்று வீட்டுக்கு வீடு கடிதம் அனுப்பி கேட்டுக் கொண்டிருக்கிறது. “தூய்மையான மின்சாரம்” என்றால், காற்றாடிகளினால் உற்பத்தி செய்யப் படும் மின்சாரம் எனப் பொருள் படும். மேலைத்தேய மக்கள், அணு சக்தி மின் திட்டத்தை எதிர்ப்பதன் காரணமாக, இது போன்ற மாற்றுத் திட்டங்களை அரசு அறிவித்து வருகின்றது.

இங்கே ஒரு விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும். இத்தகைய மாற்று வளங்கள் இருந்தும், இவ்வளவு காலமும் எதற்காக அணு மின்சாரத்தை பயன்படுத்தி வந்தார்கள்? எண்ணெய் நிறுவனங்கள், தமது இலாப நோக்கத்திற்காக, மாற்று எரிபொருள் பாவனையை தடுத்து வருகின்றன. அது போலத் தான், அணு மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. (மேற்கத்திய நாடுகளில், இவை “அணு உலை மாபியாக்கள்” என்று அழைக்கப் படுகின்றன.) செர்னோபில் அணு உலை வெடித்த பின்னர் தான், அவர்களது பிடி தளர்ந்தது. இன்றைக்கு மேற்கு ஐரோப்பிய அரசுகள், மாற்று எரிபொருளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. காற்றாடி, நீர், சூரிய ஒளி, என்று இயற்கையாக கிடைக்கும் சக்தியில் முதலிட முன்வருகின்றன.

புதிதாக அணு உலைகள் அமைக்கப்படாத காரணத்தால், அவற்றில் இலாபம் பார்த்த நிறுவனங்கள் வேறு வழி தேடி அலைகின்றன. அவர்களின் முன்னாள் உள்ள ஒரே தெரிவு… மின் உற்பத்தியில் தன்னிறைவு அடையாத மூன்றாம் உலக நாடுகளுக்கு அணு உலை கட்டிக் கொடுப்பது. பனிப்போர் நிலவிய காலத்தில் அதுவும் அரசியலாக்கப் பட்டிருக்கும். ஆனால், இன்றைக்கு ஈரான் போன்ற சில நாடுகளைத் தவிர, பிற நாடுகளில் அணு உலை அமைப்பதற்கு எதிர்ப்பிருக்கப் போவதில்லை. சோவியத் யூனியனின் மறைவின் பின்னர், “அணு உலை வியாபாரம்” செய்வதற்கு தடையேதும் ஏற்படப் போவதில்லை. அந்த அடிப்படையிலேயே, இந்தியாவில் கட்டப்படும் அணு உலைகளையும் பார்க்க வேண்டும். (அணு உலை கட்டுவது ரஷ்ய நிறுவனமாக இருந்தாலும், சர்வதேச சந்தையில் அதன் பங்கு என்ன என்பது தான் முக்கியமானது.) முரண்நகையாக, ஈரானில் அணு உலை கட்டினால் தடுக்க முனையும் “சர்வதேச சமூகம்”, இந்தியாவில் கட்டினால் வாயை மூடிக் கொண்டிருக்கியது. இந்தியாவிலும், மேற்குலக நாடுகளிலும், மக்கள் மட்டுமே எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். வீதியில் இறங்கி போராடுகின்றனர். இது சர்வதேச சமூகங்களின் ஒன்றிணைந்த போராட்டமாக காணப்படுகின்றது.

மேற்கைரோப்பிய நாடுகளில், தொடர்ந்து தொலைக்காட்சி செய்திகளை பார்த்து வரும் சாதாரண பார்வையாளர்கள் அனைவரும், அதனை அவதானித்திருப்பார்கள். அணு உலைக் கழிவுகளை ஏற்றிச் செல்லும், ரயில் வண்டி (Castor train) மறிப்புப் போராட்டம் மிக ஆக்ரோஷமாக நடைபெறும். ஒவ்வொரு வருடமும் தவறாமல் இடம்பெறும் நிகழ்வு இது. (இரண்டு வருடங்களுக்கு முந்திய, வெற்றிகரமான அணு உலைக் கழிவு எதிர்ப்பு போராட்டம் பற்றிய வீடியோ கீழே இணைக்கப் பட்டுள்ளது. ) குறிப்பாக பிரான்ஸ் எல்லையோடு இருக்கும் மேற்கு ஜெர்மன் பகுதி ஒரு போர்க்களம் போன்று காட்சி தரும். பல நூற்றுக்கணக்கான இளம் ஆர்ப்பாட்டக்காரர்கள், தண்டவாளத்தோடு தம்மை சேர்த்து பிணைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களை சுற்றி பொலிஸ் படை குவிக்கப் பட்டிருக்கும். பாதுகாப்புக் கவசங்கள் அணிந்த பொலிசார், உத்தரவு கிடைத்தால் தாக்குவதற்கு தயாராக நிற்பார்கள். இறுதியில் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் நடக்கும் மோதலில் காயமுற்றோர், கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை, போராட்டத்தின் வீரியத்தை உணர்த்தும்.எதற்காக இந்தப் போராட்டம்?

பிரான்ஸ் நாட்டு அணு உலைகள் வெளியேற்றும் கழிவுப் பொருட்களை, ரயில் வண்டி மூலம் ஏற்றிச் சென்று, வட ஜெர்மனியில் ஓரிடத்தில் புதைப்பார்கள். ஒரு வேளை, கடுமையான பாதுகாப்புடன் செல்லும் ரயில் வண்டி தடம்புரண்டால், அக்கம் பக்க ஜனங்கள் கதிர்வீச்சால் பாதிக்கப் படுவார்கள். அதை விட, அணு கழிவுகள் புதைக்கப் படும் இடத்தில், ஆயிரம் வருடங்கள் சென்றாலும் கதிர்வீச்சு அபாயம் காணப்படும். இது போன்ற தகவல்களை கேள்விப்பட்ட ஊர் மக்கள், தாமாகவே முன் வந்து போராட்டத்தில் குதிக்கின்றனர். சில இடதுசாரி (அனார்கிஸ்ட்) அமைப்புகளும், “கிரீன் பீஸ்” தொண்டு நிறுவனமும், இந்த போராட்டத்தை ஒழுங்கமைத்து நடத்தி வருகின்றன. கணிசமான உள்ளூர் மக்களும் கலந்து கொள்கின்றனர். போராட்டத்திற்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாக, பிற மக்களும் அறிந்து கொள்ள முடிகின்றது. துரதிர்ஷ்டவசமாக, பெரும்பான்மை மக்கள் அரசின் பக்கம் சார்ந்து நிற்கின்றனர். அதற்குக் காரணம், அணு உலைக் கசிவுகளால் மக்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து ஊடகங்கள் பேசுவதில்லை. மாறாக, ஆர்ப்பாட்டம் செய்யும் ஆர்வலர்களுக்கும், போலீசாருக்கும் இடையிலான மோதலுக்கு மாத்திரம் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதனால் அணு உலை எதிர்ப்பாளர்களை, “இலக்கற்ற வன்முறையாளர்கள்” என்றே மக்கள் புரிந்து கொள்கின்றனர். அவர்களை அடக்குவது சரி என்று, காவல் துறைக்கு வக்காலத்து வாங்குகின்றனர். அரசியல் தஞ்சம் கோரிய ஈழத்தமிழ் அகதிகள் கூட இது போன்ற கருத்துகளை தெரிவித்ததை காதாரக் கேட்டிருக்கிறேன்.

ஒரு போராட்டம் நடக்கும் பொழுது, முதலாளித்துவ ஊடகங்களின் தன்மை குறித்தும், வெகுஜன மக்களின் மனப்பான்மை குறித்தும், ஆராய்வது அவசியமாகின்றது. முதலாளித்துவ ஆட்சியாளர்கள், “அனைவருக்குமான மலிவு விலை மின்சாரம்” குறித்து மட்டுமே பேசுவார்கள். அணுசக்திக்கு மாற்றீடு குறித்து தெரிந்திருந்தாலும், வேறு வழி இல்லை என்று சாதிப்பார்கள். இதனால், அணு உலை எதிர்ப்பு போராட்டக் காரர்கள் தான், மாற்று எரிபொருள் குறித்தும் பேச வேண்டியுள்ளது. அது பற்றிய விளக்கங்களை, கலந்துரையாடல்கள், பிரச்சாரம் மூலம் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டியுள்ளது. “தூய்மையான மின்சாரம்” குறித்து மேற்கு ஐரோப்பிய மக்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வு, இந்திய மக்களிடமும் ஏற்பட வேண்டும். இந்தியாவுக்கு அருகில் உள்ள, நேபாளமும், இலங்கையும், நீர் வீழ்ச்சிகளில் இருந்து தூய்மையான மின்சாரம் உற்பத்தி செய்யும் வளங்களைக் கொண்டிருக்கின்றன. இலங்கையில் ஈழப்போர் வெடிப்பதற்கு முன்னர், நீர் மின்சாரத் திட்டத்தை விரிவு படுத்தி, தமிழகத்திற்கும் விநியோகிக்கும் சாத்தியப்பாடுகள் குறித்து ஆராயப் பட்டன. இன்று நிலைமை தலைகீழாக மாறி விட்டது. கூடங்குளம் அணு உலையில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை, இலங்கைக்கு விநியோகிக்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப் படுகின்றது. ஒன்றைப் பேசும் பொழுது, இன்னொன்றைப் பற்றியும் பேசாமல் இருக்க முடிவதில்லை. “உலகமயமாக்கல்” எனும் பொருளாதார சித்தாந்தம், எவ்வாறு அனைத்து மக்களையும் பாதிக்கின்றது என்பதற்கு, அணு உலைகள் சாட்சியமாக உள்ளன. அணு உலைகளுக்கு எதிரான போராட்டம், உலகமயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

நன்றி – கலையகம்

பெருகி வரும் கேரள நகைக்கடைகள் – பின்னணி என்ன? கேள்வி-பதில்!

சமீக காலமாக கேரளாவைச் சார்ந்த நகைக்கடைகள் மற்றும் தங்கநகை அடகு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் கிளைகளை அதிகமாக திறந்து வருகின்றனவே இதன் உண்மையான பின்னணி குறித்து விரிவாக விளக்க முடியுமா?

லிவிங்ஸ்டன்

__________________________________

அன்புள்ள லிவிங்ஸ்டன்,

தமிழகத்தில் கேரள நகைக்கடைகள் மற்றும் தங்கநகை அடகு நிறுவனங்கள் சமீப காலமாக அதிகரித்திருப்பதன் பின்னணி குறித்து பார்க்கும் முன், இதைப் பற்றிய அடிப்படைப் புரிதலுக்காக வேறு சில விஷயங்களை பார்த்து விடுவோம். குறிப்பாக நமக்கெல்லாம் அதிகம் அறிமுகமாகாத கேரள மக்களின் ‘மஞ்சள் பித்து’ குறித்து புரிந்து கொள்வது அவசியம்.

இந்தியாவின் வருடாந்திர ஆபரணத் தங்க நுகர்வு அளவான சுமார் 800 டன் தங்கத்தில் (2010ம் ஆண்டுக் கணக்கு) ஒவ்வொரு வருடமும் மூன்றில் ஒரு பங்கு அளவு கேரளாவில் மட்டும் நுகரப்படுகிறது. சின்னஞ்சிறு மாநிலமான கேரளத்தில் ஆலுக்காஸ், ஜோஸ், ஜோய், மலபார் கோல்ட், பீமாஸ், ஆலாபட் போன்ற பிரம்மாண்ட சங்கிலித் தொடர் நகைக்கடைகள் திரும்பிய சந்து பொந்துகளிலெல்லாம் கடைகளைத் திறந்துள்ளன.

இதெல்லாம் போக, ஆர்ரென்ஸ் கோல்டு சவுக் எனும் ரியல் எஸ்டேட் நிறுவனம் தற்போது கொச்சியில் ஒரு பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் ஒன்றை உருவாக்கி வருகிறது. சுமார் 33 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக இருக்கும் இந்த ஷாப்பிங் மாலில், மேலே பட்டியலிடப்பட்டுள்ளதைப் போன்ற சங்கிலித் தொடர் நகை சாம்ராஜ்ஜியங்கள் தமது கடைகளைத் திறக்க உள்ளன. அவை மட்டுமல்லாமல், நகை உருவாக்கம், வடிவமைப்பு, தரச் சோதனை மற்றும் ரத்தினக்கற்கள் பற்றிய தொழில்நுட்பங்களை கற்றுத் தரும் பயிற்சி நிறுவனம் ஒன்றும் இதில் துவங்கப்படவுள்ளது.

சுதந்திரத்துக்குப் பின் மற்றய இந்திய மாநிலங்களை விட கல்வி அறிவு சதவீதத்தில் முன்னணியில் இருந்த கேரளம், ஓரளவுக்கு வேலைவாய்ப்புகளைப் பெறுவதிலும் முன்னணியில் இருந்தது. எண்பதுகளின் இறுதியில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்களை ஏற்றுமதி செய்வதிலும் கேரளமே முன்னணியில் இருந்து வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கு ஒன்றின் படி, நூற்றுக்கு சுமார் 25 சதவீத வீடுகளில் யாரேனும் ஒருவராவது வெளிநாட்டில் பணிபுரிகிறார் என்பது தெரியவந்துள்ளது. இந்தியாவுக்குள் வரும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் அன்னியச் செலாவனியில் 25 சதவீதம் கேரளாவுக்கே செல்கிறது.

வரலாற்று ரீதியாகவே உற்பத்தித் தொழில் சாராத வணிகப் பின்புலம் கொண்ட கேரளாவில், இப்படி வெளியிலிருந்து வரும் பணம் இரண்டே வழிகளில் தான் முதலீடு செய்யப்படுகிறது. ஒன்று நிலம் மற்றது தங்கம். மேல் நடுத்தர வர்க்க மலையாளிகளின் திருமணங்களில் மணப் பெண்ணை நடமாடும் தங்க நகை ஸ்டாண்டு போல ‘அலங்கரிக்கும்’ கோமாளிக் கூத்துகள் சாதாரணம். அதே போல் கேரளப் புறநகர்ப் பகுதிகளில் பயணிக்கும் போது அலங்காரமான பிரம்மாண்டமான மாளிகைகளையும் காணலாம். இப்படி வீடு கட்டிக் கொள்வதும், நகைகளை வாங்கிக் குவிப்பதும் கௌரவத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.

இந்தப் போக்கு இரண்டாயிரங்களில் மத்தியப் பகுதி வரை நீடித்தது. மேற்கில் துவங்கிய பொருளாதாரப் பெருமந்தம் மத்திய கிழக்கு நாடுகளையும் விடாது போட்டு உலுக்கியதில் கேரளம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் ஒரே மாதத்தில் சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து ஊர் திரும்பவிருப்பதாக அம்மாநில தொழிலாளர் துறை அமைச்சரே தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம் கேரளா போன்ற ஒரு சிறிய மாநிலத்திற்கு இத்தனை நகைக் கடல்கள் திரும்பிய திசையெல்லாம் தமது பிரம்மாண்டமான கடைகளைத் திறப்பதென்பது அதீதமான போட்டியை உண்டாக்கவல்லது.  இன்னொரு பக்கமோ இவர்களின் வாடிக்கையாளர்களே வருமானமற்று ஊர் திரும்பும் நிலை. மூன்றாவதும் முக்கியமானதுமான வேறு ஒரு காரணமும் இருக்கிறது. தங்க நகை விற்பனைக்கான மதிப்புக் கூட்டு வரி கேரளாவில் 4 சதவீதம் – இதே பிற மாநிலங்களில் 1 சதவீதம் தான். இந்த அதிக வரி விதிப்பை இத்தனை நாளும் மலையாளிகளின் தங்க நூகர்வு வெறிக்குத் தீணி போடுவதன் மூலம் ஈடுகட்டி வந்த நிலையில், அதில் விழுந்த அடி தான் இவர்களைக் கேரளத்தை விட்டு கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறது.

சாமானிய இந்தியர்களைப் பொருத்தவரையில் நகையும் அடகும்,  உடலும் நிழலும் போலப் பிரிக்க முடியாதது. அந்த வகையில் கேரளாவில் நகைக்கடைகள் எந்தளவுக்கு அதிகமோ அதே அளவுக்கு நகை அடகு நிறுவனங்களும் அதிகமே. அதில் முன்னணில் இருப்பது, முத்தூட் பைனான்ஸ், முத்தூட்டு மினி மற்றும் மணப்புறம் கோல்ட் பைனான்ஸ். இவர்களும் நமக்குப் பரிச்சியமான ‘சேட்டு’கள் மட்டும் ‘செட்டிகளை’ப் போன்ற அடகுக்கடைக்காரர்கள் தான். ஒரு வித்தியாசம் என்னவென்றால், இந்த நிறுவனங்கள் வங்கிகளைப் போன்றே மையப்படுத்தப்பட்ட வலைப்பின்னல் கொண்டவை. இதன் ஒவ்வொரு கிளையும் கணினி மயமாக்கப்பட்டு தலைமையகத்தோடு இணைக்கப்பட்டிருக்கும்.

கொச்சியைத் தலைமையகமாகக் கொண்ட முத்தூட் பைனான்ஸ்க்கு, 2011 ஆண்டு வாக்கில் 3,369 கிளைகள் இருந்தன. 2009-ம் ஆண்டு வாக்கில்  985 கிளைகளாக இருந்து இரண்டே வருடத்தில் நான்கு மடங்காக வளர்ந்துள்ளது. முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளைகளது எண்ணிக்கை தற்போது நாட்டிலேயே மூன்றாவது அதிகக் கிளைகளைக் கொண்ட பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் எண்ணிக்கையை எட்டியுள்ளது. இந்தக்  கிளைகளில் சுமார் 85 சதவீதமானவை தென்னிந்திய மாநிலங்களில் தான் அமைந்துள்ளது.

தற்போது தங்க நகைக்கடன் சந்தையில் சுமார் 19.5 சதவீத அளவை முத்தூட் பைனான்ஸ் நிறுவனமே கட்டுப்படுத்துகிறது. கடன் அளிப்பதில் பொதுததுறை வங்கிகளுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் ஏதுமில்லாத முத்தூட், அடகுக்காக நகைகளை எடுத்துவரும் ஒருவருக்கு பத்தே நிமிடத்தில் கடன் தொகையை அளித்து விடுகிறது. பொதுத்துறை வங்கிகள் கடனளிக்கவும் புதிய கிளைகள் துவங்கவும் ரிசர்வ் வங்கியின் மூலம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள  அரசு, இது போன்ற தனியார் வட்டிக்கடை நிறுவனங்களுக்கு எவ்விதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. இந்நிறுவனங்களின் செயல்பாடுகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிலும் இல்லை. கடந்தாண்டு ஜனவரி 31-ம் தேதி அன்று ஒரே நாளில் மட்டும் முத்தூட் 103 புதிய கிளைகளைத் துவக்கியுள்ளது.

கேள்வி - பதில் : பெருகி வரும் கேரள நகைக்கடைகள் – பின்னணி என்ன ?

இந்நிறுவனங்கள் தென்னிந்தியாவில் பிரதானமாகத் துவக்கப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, மலையாளி நிறுவனங்கள் தமது கிளைகளை விரிவாக்க அக்கம் பக்கத்து மாநிலங்கள் என்றால் வசதி. மொழி, கலாச்சாரம், உள்ளூர் அரசியல் போன்ற காரணிகளை சுலபத்தில் சமாளிக்கலாம். இரண்டாவதும் முக்கியமானதுமான காரணம், வடஇந்திய மாநிலங்களைக் காட்டிலும் தென்மாநிலங்கள் தொழில் வளர்ச்சி, சிறுதொழில் முனைவு, தனிநபர் வருமானம் போன்றவற்றில் வளர்ந்த மாநிலங்கள். அந்த வகையில் வளர்ந்து வருகிற நடுத்தர வர்க்கம் ஒப்பீட்டளவில் அதிகம். இங்கே தங்க ஆபரண நுகர்வு வடக்கை விட அதிகம் என்பதோடு, சிறிய தொழில்களுக்கு உடனடியாக பணம் புரட்டவோ அல்லது ஆத்திர அவசரத்திற்கு அடகு வைக்கவோ இந்நிறுவனங்கள் ஒரு வசதி.

மேலும் தற்போது அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி, சிறு தொழில் முனைவோரிடம் நிலவும் செலாவாணி வறட்சி, சாமானிய மக்கள் எதிர் கொள்ளும் சம்பளக் குறைப்பு, வேலையிழப்பு போன்ற நெருக்கடிகள் இது போன்ற நிறுவனங்கள் வளர வாய்ப்புகளை வழங்குகிறது. அந்த வகையிலும் தென்னிந்தியா மாநிலங்களில் அடகுக் கடைகள் நிறைய வளர முடியும்.

வடக்கே தொழில் வளர்ச்சியில் முன்னேறியுள்ள ஒரு சில மாநிலங்களும் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மார்வாரி, பனியாக்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு ஊடுருவி கடைகளைத் திறப்பது ஒப்பீட்டளவில் சவாலானது. ஆனாலும், தென்னிந்தியாவினுள் மட்டும் சுருங்கிக் கிடப்பது தமது நிறுவனத்தின் எதிர்காலத்திற்கு ஆபத்தானது என்பதை உணர்ந்துள்ள முத்தூட் சகோதரர்களில் மூத்தவரும் அந்நிறுவனத்தின் சேர்மனுமான ஜார்ஜ் முத்தூட், தனது அலுவலகத்தை தில்லியில் அமைத்துக் கொண்டு வட இந்தியாவில் கிளை பரப்பும் திட்டத்தை சொந்த முறையில் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஆக, முத்தூட், மணப்புரம் போன்ற மலையாள அடகுக் கடைகளும், கேரளத்தை மையமாகக் கொண்ட பிற சங்கிலித் தொடர் நகைக் கடைகளும் தமிழகம் என்றில்லாமல் பிற மாநிலங்களிலும் தமது கிளைகளைத் திறந்தே வருகிறார்கள். அதற்கான சூழலும் தற்போது அனைத்து மாநிலங்களிலும் நிலவுகிறது. இந்தியர்களுக்கே உரித்தான தங்கத்தின் மேலான பித்தும், அதை வாங்கி பதுக்கி வைப்பதில் இருக்கும் அற்பத்தனமான பெருமிதமும், அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியுமே மலையாளி தங்க முதலாளிகளுக்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.

ஏற்கனவே நகைக் கடைகளுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை பெருக்கிக் கொண்ட இந்த நிறுவனங்கள் அண்டைய மாநிலங்களில் விரிவு படுத்துவது சாத்தியம்தான். அதற்கு தோதாக மறுகாலனியாக்கத்தின் விளைவாக வளரும் நடுத்தர வர்க்கமும், பெருகி வரும் அதன் வாழ்க்கைப் பிரச்சினைகளும் ஒருங்கே சேர்ந்து இத்தகைய நகைக்கடைகளுக்கான சமூக அடிப்படையை தோற்றுவிக்கின்றன. இதை நாம் தமிழர், மலையாளி என்ற இனவாத அரசியலுக்கு அப்பால் உள்ள பொருளாதார அடிப்படைகளின் மூலம்தான் புரிந்து கொள்ள முடியும்.

சசிகலா நடராஜன் ஊழல் பணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்!

12

ம.நடராசன் யாரென்று கேட்டால் எவருக்கும் தெரியாது. ஆனால் ஜெயாவின் உடன்பிறவாத் தோழி சசிகலாவின் கணவன் நடராசன் அல்லது சசிகலா நடராசன் யாரென்று எல்லோருக்கும் தெரியும். ஆணாதிக்கம் கோலேச்சும் சமூகத்தில் என்னதான் பிரபலமானவராக இருந்தாலும் மனைவியின் பெயரால் அறியப்படுபவர் இந்த நடராசன். ஆனாலும் இதை வைத்து பெண்ணுரிமையின் மகத்துவம் என்று தவறாக எண்ணி விடக்கூடாது. பிரபலமற்ற பல கணவன்மார்கள் தத்தமது பிரபலமான மனைவியரின் பேரால் அறியப்படுவார்கள் என்றாலும் நடராசனின் கதை வேறு.

80களில் வீடியோக்கடை நடத்தி பிழைத்து வந்த சசிகலா பின்னர் நடராஜனின் வியூகத்தால் ஜெயாவின் அந்தப்புரத்தில் நுழைந்து உடன்பிறவா சகோதரி என்று ஜெ உருகுமளவு தலையெடுத்தார். அடுப்பங்கரை மங்கையாக இருந்தவர் கிச்சன் கேபினட்டின் குயின் மேக்கராக அவதரித்தார். இந்தப் பரிணாம வளர்ச்சியில் அரசு அதிகாரியாக இருந்த நடராசனது பங்கை பலரும் அறிந்திருக்கவில்லை. பிறகு அ.தி.மு.க எனும் மக்கள் அடித்தளமுள்ள மாஃபியா சாம்ராஜ்ஜியத்தை கட்டி மேய்த்ததோடு, கொள்ளையடித்து தரகு முதலாளியானதும் வரலாறு.

ம.நடராசன்
ம.நடராசன்

அதில் சசிகலாவின் ஒவ்வொரு அசைவும் நடராசனால் தீர்மானிக்கப்பட்டது. இடையில் ஜெயா சினம் கொண்டு நடராசனை வெளியேற்றினாலும் மறைமுக அதிகார மையங்களில் ஒன்றாக நடராசனே விளங்கினார். ஒரு வகையில் அவரை தமிழ்நாட்டின் சுப்ரமணிய சுவாமி என்றும் கௌரவமாக அழைக்கலாம். சுவாமி அளவுக்கு நகைச்சுவை உணர்வில்லை என்றாலும் தமிழ்நாட்டின் சக்திவாய்ந்த அரசியல் தரகராக நடராசன் பணியாற்றினார். எம்.எல்.ஏ, எம்.பி தேர்தல், அதிகார நியமனம் – பணிமாற்றம், தொழில் ஒப்பந்தங்கள், சொத்து விவகாரங்கள் என அனைத்திலும் நடரசானது பங்கு தீர்மானகரமாக இருந்தது.

குறுகிய காலத்தில் ஜெயா சசி கும்பல் முழு தமிழ்நாட்டையும் மொட்டையடிக்கும் அளவுக்கு நடராசனது வியூகம் விரிந்தது. இது போக அனைத்திந்திய அளவில் கூட்டணி, பல தேசிய பிரமுகர்களோடு நட்பும் நடராசனின் வழியாகவே இயங்கியது. பகுஜன் சமாஜ் கட்சின் இறந்து போன கன்சிராம் கூட நடராசனது நண்பர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டின் சு.சுவாமியான பிறகே நடராசன் மாணவர் பருவத்தில் 1967 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்றார் போன்ற கீர்த்திகள் புழுதி படிந்த வரலாற்றின் பக்கங்களிலிருந்து எடுத்து வியந்தோதப்பட்டன.

அதில் ஒன்று இவர் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது. என்ன தலைப்பில்? “மகளிர் முன்னேற்றத்தில் இதழ்களின் பங்கு”! அந்த வகையில் ஜெயா-சசி எனும் இரட்டை மகளிரது முன்னேற்றத்தில் இவருக்கு முனைவர் பட்டம் நிச்சயமாகக் கொடுக்கலாம். சு.சாமி என்னதான் அரசியல் தரகராக இருந்தாலும், காமடியனாக இருந்தாலும் ஆக்ஸ்போர்டு, ஹார்வர்டு சென்று பேராசிரியப் பணியாற்றுபவர் என்று அறிவாளியாகவும் இருப்பது போல நடரசானும் “புதிய பார்வை” எனும் இதழை ஆரம்பித்து அப்படிக் காட்டிக் கொண்டார். பத்திரிகையாளர் மணா போன்று பல எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் பிழைப்புவாதம் காரணமாக இவரை வியந்து போற்றும் நபராகவும் சித்தரித்தார்கள்.

இவரது கள்ளர் சாதி பிரமுகர்கள் முக்கியமாக குடும்ப உறுப்பினர்கள் முழு அதிமுகவையும் ஆக்கிரமித்து ருத்ர தாண்டவம் ஆடுவதற்கு வழியமைத்தவரும் நடராசன்தான். இது போக காலனியாதிக்க எதிர்ப்பு வீரர்களான புலித்தேவன், மருது பாண்டியருக்கு சாதி ரீதியான விழா எடுத்து தன்னை தேவர் சாதி வெறியராகவும் காட்டிக் கொண்டார். இது போக பொங்கல் பண்டிகையை தஞ்சாவூரில் வருடாவருடம் நடத்தியும் தனது அடியாட்படையை கவனித்துக் கொண்டார். இந்த விழாக்களில் தேவர் சாதியைச் சேர்ந்த நடிகர்களும், மார்க்கெட் இல்லாத கனவுக் கன்னிகளும் கலந்து கொள்வார்கள்.

அண்ணனது கஞ்சா புகழ் செரினா கதை தனி அத்தியாயம். இனி தலைப்புக்கு வருவோம்.

ஜெயாவை விட்டு சசிகலா பிரியும் நாடகம் நடக்கும் போதும், தேர்தல் கூட்டணி கூத்துக்களின் போதும் நடராசன் என்ன சொல்கிறார் என்று கிசுகிசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு அவரை லைம் லைட்டுக்கு கொண்டு வரும். இப்போதும் அப்படித்தான். தற்போது அதிகாரத்திற்கு மயிலாப்பூர் கும்பல், சொத்துக்கு மன்னார்குடி கும்பல் என்று ஒப்பந்தம் செய்து கொண்டு வெளியே அடிப்பது போல் அடித்து அழுவது போல அழுது அவர்கள் நடத்தும் நாடகம் கிசுகிசு ஊடகங்களுக்கு ஜாக்பாட் சுரங்கமாக செய்திகளை வழங்குகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டு தஞ்சாவூரில் நடராசன் நடத்திய பொங்கல் விழவில் அவர் பேசிய பேச்சு வெளிவந்திருக்கிறது.

இனி அவரது பேச்சை படியுங்கள்: (செய்தி – தினமலர்)

தஞ்சாவூர்: தஞ்சாவூரில், மருதப்பா அறக்கட்டளை சார்பில் நடந்து வரும் தமிழர் கலை இலக்கியத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் (சசிகலா) பேசியதாவது: இந்த விழாவுக்கு, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மைத்துனர் கிருஷ்ணமோகன்ஜி வந்துள்ளார். இது போல், இந்தியா முழுவதும் உள்ள என் நண்பர்களை அழைத்தால் தாங்க மாட்டார்கள்; இனிமேல் அனைவரையும் அழைப்பேன். இனி, நான் யாருக்கும் கட்டுப்பட மாட்டேன். ஒன்று பழ.நெடுமாறனுக்கு கட்டுப்படுவேன்; இரண்டாவது என் மனைவிக்கு கட்டுப்படுவேன். தன் மகள் திகார் சிறையில் இருந்து விடுபட, முல்லைப் பெரியாறு பிரச்னையில் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க கருணாநிதி தயங்குகிறார். காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, இலங்கைத் தமிழர் பிரச்னை என, அனைத்து பிரச்னைகளிலும், தமிழகத்துக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்துள்ளது. கருணாநிதி, காங்கிரஸ் உறவை விலக்கிக் கொண்டால் தமிழகம் வாழ்த்தும்; இல்லையென்றால் உங்களை வீழ்த்தும். நீங்கள், “முடிவெடு’ என்கிறீர்கள். நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது. அதை மாற்றியது மக்கள். மக்கள் சக்தியை திரட்டினால் மாற்றம் வரும். வரும் எம்.பி., தேர்தலிலும் அது எதிரொலிக்கும். முடிவு எடுத்துவிடலாம். அதனால், தமிழகத்தின் பொது நலனுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. என் மனைவி மீது வழக்கு உள்ளது; அதனால், பொறுமையாக இருக்கிறேன். தற்போதுள்ள இடர்பாடுகளை பார்த்து, யாரும் அச்சப்பட வேண்டாம். மற்றவர்களை போல் பொறுப்பற்ற முறையில் என்னால் பேச முடியாது; அவசரப்பட முடியாது. “என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே… இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே!’ இவ்வாறு நடராஜன் பேசினார். இனி, சொந்த காரை பயன்படுத்தாமல், பொது காரை பயன்படுத்துவதாகவும், தூக்கு தண்டனையை, இந்தியாவில் ரத்து செய்ய வலியுறுத்தி, கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடை பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் நடராஜன் தெரிவித்தார். தஞ்சை அருகே, விளார் ரோட்டில் அமைக்கப்பட்டு வரும், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்துக்காக, நடராஜனுக்கு சொந்தமான ரோலக்ஸ் வாட்ச், நிசான் கார், என்டோவர் கார், சொனாட்டா கார் ஆகியவற்றை, மேடையில், 45 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து, அந்த பணம், பழ.நெடுமாறனிடம் வழங்கப்பட்டது.”

இதில் நடராசன் குறிப்பிட்டிருக்கும் இரண்டு விசயங்கள் நமது கவனத்தை கவருகின்றது. ஒன்று அவர் ஐயா பழ.நெடுமாறனுக்கும், மனைவி சசிகலா நடராசனுக்கும் கட்டுப்படுதல் குறித்தது. சசிகலாவுக்கு அவர் கட்டுப்படுவதை நாம் புரிந்து கொள்ளலாம். அதில் அரசியல், சொத்து, கட்சி, அதிகாரம் என்று எவ்வளவோ இருக்கின்றது. ஆனால் அவர் ஏன் பழ.நெடுமாறனுக்கு கட்டுப்பட வேண்டும்? இப்படி ஒரு அன்பான அடிமை பேசியதை ஐயா நெடுமாறனும் மறுத்திருக்கவில்லை.

பழ-நெடுமாறன்
பழ.நெடுமாறன்

ஐயா நெடுமாறனுக்கு கட்டுப்பட்டவர் நடராசன். நடரசானுக்கு கட்டுப்பட்டவர் சசிகலா. சசிகலாவுக்கு கட்டுப்பட்டவர் ஜெயா. பார்ப்பனியமும், பாசிசமும்,  கொள்ளையும் ஜெயாவுக்கு கட்டுப்பட்டவை. இனில் இந்த உறவு இழையில் ஏங்கோ இடிக்கிறதா? அது என்ன இடி?

ஐயா நெடுமாறன் தமிழகத்தில் பிரபலமானவர் என்பதை விட ஈழத்தில் பிரபலமானவர். முக்கியமாக புலிகளின் நெருக்கமான பிரமுகர். அந்த வகையில் தமிழகத்தின் புலி தூதர் என்றும் சொல்லலாம். புலி அபிமானத்திற்காக இந்து மதவெறியர்களையும் அரவணைத்துக் கொள்ளுமளவு ‘மனிதாபிமானம்’ மிக்கவர். பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற இந்துமதவெறி புரவலர்களுக்கெல்லாம் பட்டம் கொடுத்து மகிழும் ஒழுக்கமுடையவர்.

முள்ளிவாய்க்கால் போரின் போது எப்படியாவது ஜெயா வெற்றி பெற்று ஈழத்தை வாங்கி தருவார் என்ற மூடநம்பிக்கையை ஈழத்தமிழர்களிடமும், புலிகளிடமும் செல்வாக்கோடு உருவாக்கியவர். இப்படி இந்தியாவிடமும், அமெரிக்காவிடமும் லாபி வேலை செய்து ஈழப்பிரச்சினையை தீர்த்து விடலாம் என்ற அணுகுமுறை புலிகளிடமும் இருந்தது; ஐயா நெடுமாறனிடமும் இருந்தது. இன்றும் அவர் சீனப்பூச்சாண்டியை எழுதி இந்திய அரசை மனம் குளிர்விப்பவர். ஈழம் மலர்ந்தால் அது வலுவான இந்திய வெளியுறவுக் கொள்கையின் கோட்டையாக இருக்குமென்று பிரகடனப்படுத்தியவர்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவும், மத்தியில் பாஜகவும் வெற்றி பெறும், பெற வேண்டும் என்பதற்காக தீவிரமாக வேலை செய்தார். ஜெயாவை ஈழத்தாயாக போற்றுமளவு அந்த வேலை தொடர்ந்தது. பின்னர் ஈழப் போர் முடிந்து பின்னடைவுக்குள்ளானாலும் தொடர்ந்து அதிமுக பிரச்சார பீரங்கியாக செயல்படுகிறார். ஜெயாவின் சட்டசபைத் தீர்மானம் குறித்து பாராட்டுபா படித்தார். அந்த வகையில் இப்போதும் மூவர் தூக்கிற்கு ஜெயா இழைத்த துரோகம் குறித்தும் மவுனம் சாதிக்கிறார்.

இதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் மேற்கண்ட இடியையும், இழையையும் புரிந்து கொள்ளலாம்.

ஆகவே நடராசன் ஏன் அப்படி பேசினார் என்பதும், ஐயா நெடுமாறனது அரசியலும் முரண்படவில்லை எனும் போது இதை புரிய வைக்க நாம் மெனக்கெட வேண்டியதில்லை.

இரண்டாவதாக நடராசன் தனது கார், வாட்ச், செயினை ஏலம்விட்டு ரூ.45 இலட்சத்தை முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்திற்காக ஐயா நெடுமாறனிடம் அளித்த செய்தியைப் பார்க்கலாம்.

இந்த ஏலம் அமெரிக்காவில் நடந்தால் கூட இப்படி வசூலாக வாய்ப்புள்ளது. அப்போதும் கூட இந்த அளவு ஏலம் கொடுத்து வாங்க நடராசன் ஒன்றும் ஜேம்ஸ்பாண்டு படத்தில் வரும் நடிகைகளின் பிகினி உடைகள் அல்ல. ஆதலால் அங்கேயும் அப்படி வசூலாகமுடியாது எனும் போது பட்டினிக்காக எலிக்கறி சாப்பிடும் தஞ்சை மாநகரத்தில் அப்படி யார் ஏலமெடுத்தார்கள் என்பது சிரிப்பதற்குரிய ஒன்று.

அது நிச்சயமாக நடராசனது பினாமிகள்தான் வாங்கியிருக்க வேண்டுமென்பது ஊரறிந்த விசயம்.

அடுத்து அந்த ஏலம் யார் எடுத்திருந்தாலும் நமக்கு பிரச்சினை அல்ல. ஆனால் நடராசனது சொத்து என்பது ஜெயா சசி கும்பலின் கொள்ளை, ஊழல் பணத்தில் வந்தது. இதை நடராசனது வீட்டு நாய் கூட மறுத்து வாதிடாது. இந்த கொள்ளை பணத்தை, இரத்தப் பணத்தை வெட்கம் கெட்டு ஐயா நெடுமாறன் ஏன் வாங்கினார் என்பதுதான் நமது கேள்வி. நடராசனது சொகுசுக் கார் இலண்டனிலிருந்து வரி கட்டாமல் மோசடி செய்து இறக்குமதி செய்யப்பட்டது என்ற போண்டா வழக்கே அண்ணாரது பெருமையை பறைசாற்றும்.

இந்திய தேசியத்திடமிருந்து தமிழ்நாடு விடுதலை அடைய வேண்டும், இலங்கையில் ஈழம் மலர வேண்டும், அங்கே புலிகள் ஆட்சி நடக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் பாடுபடும் கட்சிகள், இயக்கங்கள், குழுக்கள் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன. நாள்தோறும் புதிது புதிதாக தோன்றியும் வருகின்றன.

அந்த இயக்கங்கள் மூலம் தமிழக மக்களிடம் வசூலித்து அப்படி ஒரு நினைவுச்சின்னம் கட்ட முடியாதா?

ஒருவேளை அவர்களெல்லாம் லெட்டர் பேடு கட்சிகள், வசூலாகாது என்று ஐயா நெடுமாறன் நினைத்தாரென்றால் அப்படி ஒரு நினைவுச்சின்னம் கட்டாமலேயே இருந்திருக்கலாமே?

நெடுமாறன், வைகோ உள்ளிட்ட ஈழ ஆர்வலர்களை தடா, பொடாவில் போட்டு, போரென்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள், மூவர் தூக்கை எதிர்க்கவில்லை என்பது வரை ஈழ விரோதத்தில் பாசிச சாட்சியாக இருக்கும் ஒரு கட்சியின் கொள்ளைக் காசில்தான் முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க முடியுமென்றால் அது எவ்வளவு இழிவானது?

இல்லை இது புலிகளது தவறான அரசியலுக்கு கிடைத்த கவித்துவ நீதியா ?

எது எப்படியோ போகட்டும். ஆனால் தமிழகத்தில் உள்ள தமிழன கட்சிகள், குழுக்கள் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். அந்த கொள்ளைப் பணத்தை மறுக்க வேண்டும். தூக்கியெறிய வேண்டும். நெடுமாறன் கட்டும் அந்த நினைவுச்சின்னத்தை நிராகரிக்க வேண்டும். இல்லையேல் முள்ளி வாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களது தியாகம் உங்களை மன்னிக்காது.

ஐ.ஐ.டி பொலிகாளைகளும் ‘மலட்டு’ச் சமூகமும்!

40

iit-sperm-wanted

சென்னையச் சேர்ந்த தம்பதியினர் தாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள செயற்கைக் கருவுறும் முறைக்குச் செல்லவிருப்பதால், தகுதியுள்ள விந்தணு தானம் செய்பவரைத் தேடி வருவதாக ஊடகங்களில் விளம்பரப்படுத்தியுள்ளனர். தகுதியான என்றால்………?

ஆரோக்கியமான, புகை மற்றும் இதர கெட்டப் பழக்கங்கள் இல்லாத முடிந்தால் அழகான, வெள்ளையான, உயரமான  ஐ.ஐ.டி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் போன்ற நிபந்தனைகளைகளை விதித்துள்ளனர். விரைவிலேயே இச்செயற்கைக் கருவுறுதலை செய்யவிருப்பதால், அன்பும் செழிப்பும் பொங்கித் ததும்பவிருக்கும் தங்களது வாழ்க்கையைத் தொடங்க அவசரமாக விந்தணு தானம் தேவை என்றும் கூறியுள்ளனர். (மதிப்பெண்கள் (CGPA) மற்றும் வேலைக்குச் செல்லும் நிறுவனத்தையும் நிபந்தனையாக வைக்க மறந்து விட்டனரோ). இதற்காக தானம் செய்யும் அனைத்து அம்சங்களும் பொருந்திய ஐ.ஐ.டி பொலிகாளைக்கு  20,000 ரூபாய் தரவிருப்பதாகவும் விலை நிர்ணயித்துள்ளனர்.

படிப்பதற்கு நாராசமாக இருந்தாலும், இது போன்ற விஷயங்கள் சமூகத்தின் பிற தளங்களிலும் பிரதிபலிக்கின்ற காரணத்தால், அது விளைவிக்கவிருக்கும் அபாயத்தையும் இங்கு பரிசிலிக்க வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு குழந்தையில்லாத் தம்பதியினர் ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் போது கூட பல நிகழ்ச்சி நிரல்களை அல்லது பிற்போக்குத்தனங்களை மனதில் நிறுத்தியே தங்கள் கோரிக்கையை அமல்படுத்துவதற்கு உடன்படுகின்றனர். தத்தெடுப்பதற்கு அவர்களின் சொந்த சாதியிலேயே பிறந்த குழந்தை அல்லது சமூகக் கட்டுமானத்தில் அவர்களுக்கு மேலிருக்கிற சாதியில் பிறந்த குழந்தை, நோய் நொடியில்லாமல் அங்க பாதிப்பெதுவும் இல்லாத குழந்தை போன்றவையே பிரதான கோரிக்கையாயிருக்கின்றன.

குறிப்பாக இவர்கள் வைக்கிற  முக்கியமான நிபந்தனைகள், தத்தெடுக்கப்படும் குழந்தைகள் கண்டிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பிச்சைக்காரர்கள் அல்லது தெருவோரங்களில் வசிப்பவர்களுடையதாக இருக்கக் கூடாது என்பதே, இதற்கு அவர்கள் வைக்கிற வாதம் அக்குழந்தைகளைத் தத்தெடுத்து தத்தம் குடும்பச் சூழ்நிலைகளில் வளர்த்தால் கூட அது தனது இரத்த உறவின் சாதிய குணநலன்களையே கொண்டிருக்கும் என்பதே. ஆக சாதியின், வர்க்கத்தின் மேல்நிலையில் உள்ளவர்களே அதிக அறிவைக் கொண்டவர்களாகவும், ஒழுக்கச் சீலர்களாகவும் இவர்களால் முன்னிறுத்தப்படுகிறது.

மேலும் இவர்கள் பெண் குழந்தைகளை தத்தெடுப்பதையே வழக்கமாகக்  கொள்கின்றனர். இது தத்தெடுத்தவர்கள் இறுதிக் காலங்களில் ஆண் குழந்தைகளை அண்டி வாழ வேண்டிய நிர்பந்தம் வந்துவிடும் என்ற பயத்தினாலும், பெண் என்றால் கல்யாணம் ஆனவுடன் சென்றுவிடுவார்கள், சட்டப்படி சொத்துரிமை கேட்க மாட்டார்கள் என்ற எண்ணத்தினாலும் விளைந்ததே. ஆக எக்காலத்திலும் சொந்தக் குழந்தையானாலும், தன் பொருளாதார, சாதி நலன் சார்ந்தே முடிவெடுக்கிறார்கள். சீரழிந்து வருகிற ஒரு சமூகம் தான் விரும்பும் வாழ்க்கைக்கான விழுமியங்களை எத்தகைய விலை கொடுத்தேனும் தக்கவைத்துக் கொள்ளத் தயங்காது என்பதற்கான ஆதாரமே இது.

இதற்குச் சற்றேதும் குறைவில்லாத விழுமியங்களுடன் கொண்ட விளம்பரத்தைத்தான் அத்தம்பதியினரும் கொடுத்துள்ளனர். மேற்கொண்டு இச்செய்தியை அறிவியல் கொண்டு பார்த்தால்………… விளம்பரத்தில் கோரியுள்ளபடியே அத்தம்பதியினர் தாங்கள் விரும்பிய ஐ.ஐ.டி பொலிகாளைகளின் விந்தைப் பெற்று, செயற்கை முறையில் கருவுறுதல் மூலம் குழந்தை பிறந்தால் கூட அக்குழந்தை வளர்ந்து அதன் இலக்கை அடைய முடியுமா என்பது நிச்சயமற்றது.

ஏனெனில் சிந்தனை, செயல் மற்றும் வாழ்வு போன்றவை அவரவர் வாழும் புறச்சூழலைப் பொருத்தே அமையும். அதன் தாக்கமே ஒருவர் பகத்சிங்காக மாறுகிறாரா அல்லது எட்டப்பனாக மாறுகிறாரா என்பதை முடிவு செய்யும். அது ஒவ்வொருவரும் தாங்கி நிற்கும் மரபணுக்களைப் பொருத்து அமைய எள்ளளவும் வாய்ப்பில்லை. மரபணுக்கள் மூதாதையரின் உடல் கூறுகளின் தன்மைகளான நிறம், கண்ணின் கருவிழி, உடலின் வாகு போன்றவற்றைத் தான் கடத்தும். அன்றி, கருத்து, சிந்தனைக் கூறுகளை அல்ல.  ஆகையால் அது அப்துல் கலாம் விந்தணுவாக இருந்தால் கூட பிறக்கும் குழந்தை அவரைப் போன்று காமடி அறிவாளியாகப் பிறக்கும் என்பது அறிவீனம். இருந்தும் தற்போது நிலவுகிற சமனற்றச் சமூகத்தில் பெருஞ்சுயநலமிக்க பெற்றோர்களின் வளர்ப்பாலும், அவர்களால் ஊட்டப்படுகின்ற சமூகத்தைப் பற்றிய கருத்தோட்டங்களாலும் வளர்ந்து வருபவன் சுயநலம் மிகுந்த பிழைப்புவாதியாக மாறவே வாய்ப்புள்ளது. அரிதும் அரிதான வாய்ப்புகளில் மட்டுமே இவர்கள் சமூகப் பிரக்ஞையுள்ளவர்களாக மாற இயலும். இதுவும் அத்தகைய அரசியல், தொடர்பு, இயக்கங்கள், மூலமே சாத்தியம். ஆக பிறக்கப் போகும் குழந்தையின் திறனை விந்தணுக்களின் மூலம் நிர்ணயிப்பதென்பது அறிவீனம்.

ஐ.ஐடி மாணவர்கள் மட்டுமே வேண்டும் என்பது, அவர்கள் நன்றாகப் படிக்க கூடிய நல் விழுமியங்களைக் கொண்டுள்ளவர்கள் என்பதைத் தாண்டி பெரும்பாலானவர்கள் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் இப்படி மறைமுகமாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இது சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு விடப்படும் என்ற பார்ப்பன மேட்டிமைத்தனமின்றி வேறல்ல.

தங்கள் பேச்சு முதல் நடை, உடை, பாவனை, உணவுப்பழக்கம், சாங்கியம் பார்த்தல் வரை அனைத்தையும் பார்ப்பனர்களைப் போலவே (இன்னும் சொல்லப் போனால் அவர்களை விட ஒரு படி மேலே) செய்து கொண்டிருக்கும் பெரும்பான்மையான நடுத்தர வர்க்கப் பெற்றோர்களின் சிந்தனைச் சொரிதலால் வந்த குழந்தையே இது போன்ற விந்து விருப்பம். ஐ.ஐ.டியனர் ஏதோ இயற்கையிலேயே அறிவுச் செழிப்புடன் பிறந்தவர்கள் போலவும் மற்றவர்கள் இவையெதுவும் இல்லாததால்தான் மற்ற கல்லூரிகளில் படிப்பதாகவுமான ஒர் கருத்து இவ்விளம்பரத்தின் மூலம் பிதுங்கி வருவதைக் காணலாம்.

நடுத்தர, மேல்தட்டு வர்க்கப் பெற்றோர்கள் குறிப்பாக பார்ப்பன பனியா சாதிகளைச் சேர்ந்தவர்கள் சிறுவயதில் இருந்தே தங்கள் குழந்தைகளுக்கு ஐ.ஐ.டி கனவுகளை ஊட்டி அதற்குத் தேவையான பாடங்களை எந்திரகதியில் மனதில் உருவேற்றிவிடுகிறனர். மாணவர்களுக்கோ சிறு வயது முதல் வாழ்வின் அத்துனை அம்சங்களையும் இழந்தாலும் ஐ.ஐ.டி ஒன்றே வாழ்க்கை போன்ற என்ணங்கள் மனதில் பதிய வைக்கப்படுகிறது. தேர்வுகளில் தான் விழுங்கியதைத் துப்பும் வேலையை கச்சிதமாகச் செய்வதால் இடமும் கிடைத்துவிடுகிறது. இதில் அறிவிற்கு என்ன வேலை?

பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் இது போன்று சிறு வயதில் இருந்தே பயிற்சியெடுக்க வாய்ப்பில்லாமல் போவதாலும் இங்கு இடஒதுக்கீடு இல்லாதபடியாலும் அவர்கள் இங்கு சேர்வதைப்  பற்றி யோசிப்பதில்லை. ஆக தான் வாழும் சமூகம் சமூகத்தில் காணப்படுகிற ஏற்றத்தாழ்வுகள் போன்ற எதையும் பார்க்காத/பார்க்க விரும்பாத இவர்களின் குருட்டுக் கண்களுக்கு பணத்தின் இருப்பு மற்றும் அதன் மீதான அதீத காதல் மட்டுமே தேவை என்பதாக கற்பிக்கப்படுகின்றன. குழந்தைகளும் பிற்காலத்தில் அதுவாகவே ஆகின்றனர். எனவே இங்கு சேர்வதற்கான தகுதி திறமை எல்லாம் சாதி வர்க்க ரீதியில் அமைந்தது என்பதையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.  அதனால் தான் நன்றாகச் சம்பாதிக்கப் கூடிய, சந்தையில் அதிக விலைபோகும் ஐ.ஐ.டி பொலிகாளைகளை இவ்விளம்பரம் கோருகிறது.

இந்த ‘அறிவுஜீவி’களின் யோக்கியதையை, இச்சமூகத்தில் குறைந்த பட்சம் தனது இருத்தலுக்கான போராட்டத்தைக் கூட செய்ய லாயக்கற்ற குப்பைத் தொட்டிகளாக விளங்குவதன் மூலம் காணலாம். தன் கூடப் படித்த சக மாணவன் தற்கொலை செய்து கொள்வதைப் பார்த்து கண்டும் காணாமல் வாய் மூடி ஊமைகளாய் இருக்கும் மாணவர் சமூகத்தை படைப்பதுதான் இந்த ஐ.ஐ.டிக்கள். சமீப காலங்களில் ஐ.ஐ.டிக்களில் நடைபெற்ற மாணவர்களின் தற்கொலைகளும், சென்ற மாதம் இந்திய அறிவியல் கழகத்தில் (IISC- Bangalore) மன உளைச்சல் மற்றும் தனிமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட பராக் சதாலே என்ற பேராசிரியரைப் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

அதீத மன உளைச்சல், தனிமை என்றால் சாவு ஒன்றுதான் தீர்வு போல, குறைந்தபட்சம் அதை எதிர்த்துப் போராடக்கூட வக்கில்லாமல் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்கின்றனர். இவர்கள் இச்சமூகத்தின், இக்கல்விமுறையின் பலிகடாக்கள், அதன் நேரடித் தோல்வியால் ஏற்பட்ட விளைபொருட்கள், ஒட்டுமொத்த வினைகளின் எதிர்வினைகள்.

டிசைனர்-பேபிஇது போன்ற விளம்பரங்கள் நமக்கு அதிர்ச்சியூட்டுவனவாக இருந்தாலும் இவ்வகையறா விளம்பரங்கள் மேலை நாடுகளில் பரவலாகக் காணமுடியும். அங்கு அதற்கான ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டுதான் வருகின்றன. டிசைனர் விந்தணு, டிசைனர் பேபி போன்ற மாய்மால வார்த்தைகள் அங்கு பிரபலம். பிறக்கப் போகும் உங்களுக்கான குழந்தைகளை உங்கள் விருப்பப்படி டிசைன் செய்து கொள்ள வேண்டுமா? நல்ல அறிவுடன், பச்சை நிறக்கண்களுடன், அழகான முடியுடன், பளிச்சென்ற நிறத்துடன், உயரமாக வேண்டுமா ! இது போன்ற சொற்களைத் தாங்கிய விளம்பரங்களும் சர்வ சாதாரணமே.

ஆனால் நமக்கு இது போன்ற விளம்பரங்கள்  வருவது புதியதாயினும் இலை மறை காயாக அத்தகைய விழுமியங்கள் நம் சமூகத்தில் காலங்காலமாகவே இருந்து வருகின்றன. வெகு நாட்கள் மூடியுள்ள முகத்திரையால் பயனேதும் இல்லை என்பதால் தனது போலி முகத்தை கிழித்தெரிந்துள்ளது அவ்வளவே! தன்னை அடையாளப்படுத்துவதன் மூலம் மக்களின் பொதுப்புத்தியினூடாக இது போன்ற செயல்கள் தவறானதல்ல என்றும், அது தனிமனிதர் விருப்பு வெறுப்பைச் சார்ந்தது என்றும் நிலைநிறுத்தப்படுகிறது.

ஏற்கனவே பல ஏற்றத்தாழ்வுள்ள, அசமத்துவப் படிநிலைகளைக் கொண்ட இச்சமூகம் இது போன்ற வீரியமிக்க ஒட்டுரக டிசைனர் குழந்தைகளை உருவாக்கும் பட்சத்தில் (உயிரித் தொழில் நுட்பம் மூலமாக சாத்தியமே என்கிறார்கள் அறிஞர்கள்) அது இச்சமூகத்தில் தனக்கான முரண்பாடுகளை அதிகமாக ஏற்படுத்திக்கொள்ளுமே ஒழிய அதனால் வேறெதுவும் பயனில்லை. இது போன்ற டிசைனர் குழந்தைகள் சமூக, பொருளாதார மற்றும் அறிவுத்தளங்களில் தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொண்டு அசமத்துவத்தின் புதிய படிநிலையில் விட்டு விடும் அபாயமும் உள்ளது. ஆனால் இங்கு விந்தை தானமாகக் கொடுப்பவரின் பின்புலம் பற்றி அறிய சட்டம் இடம் கொடுக்காது என்ற போதிலும் நிலவுகின்ற சட்டத்தின் ஓட்டைகளின் மூலம் தாங்கள் விரும்பும் டிசைனர் விந்துவைப் பெற சாத்தியம் இருக்கவே செய்கிறது. டிசைனர் குழந்தைகள் தங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத பட்சத்தில் அப்பெற்றோர்களால், குழந்தைகள் முற்றிலும் நிராகரிக்கப்படுவதற்கான முகாந்திரங்களும் உள்ளது.

மரபணு தொழில்நுட்பம் (Genetic Engineering)  இல்லாமல் இயற்கையாகவே டிசைனர் விந்துக்களைக் கொண்டுள்ளதாகக் கற்பிக்கப்படும் பார்ப்பன ஐ.ஐ.டியினர், பொலிகாளைகளாக மாறும்பட்சத்தில், வீரியமற்ற இம்’மலட்டு’ச்சமூகம் மேலும் மலடாகி போகுமே அன்றி அறிவார்ந்த சமூகமாக மலர முடியாது.

அறிவும், திறனும், சமூக பிரக்ஞையும் சமூக நடைமுறைகளில்தான் மலருமே அன்றி டிசைனர் விந்துவால் உருவாக்க இயலாது. உடல் ஆரோக்கியத்தின் மேம்பட்ட தன்மையை வேண்டுமானால் டிசைனர் விந்து கொண்டு வரலாம். ஆனால் சமூக ஆரோக்கியத்தை இது வழங்கி விடாது. மூதாதையரின் உடற்கூறுகளைத்தான் மரபணு தாங்கி வருகிறதே அன்றி அவர்களின் சமூக வரலாற்று உணர்வை அல்ல. அது வர்க்கப் போராட்டம் எனும் உலைக்களத்தில் வடிக்கப்படும் ஒன்று.

–    குட்டக்கொழப்பி

ஏனாமில் நடந்தது முன்னோட்டம் – பாண்டிச்சேரி ஆர்ப்பாட்டம் !

ஏனாமில் நடந்தது முன்னோட்டம்,
அதை புரிந்துகொள்வதற்கு தேவை பாட்டாளி வர்க்க கண்ணோட்டம்
.!

இந்தியாவிலேயே செராமிக் மற்றும் டைல்ஸ் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் 5 பெரும் கம்பெனிகளில் ஒன்றான ரீஜென்ஸி செராமிக் லிட். என்ற தொழிற்சாலையில் 1500 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். ஆனால் இத்தொழிற்சாலை நிர்வாகம் வெறும் 300 பேரை மட்டுமே நிரந்தரப் படுத்தியுள்ளது. மீதம் உள்ள 1200 தொழிலாளர்களை ஒப்பந்த தொழிலாளர்களாகவே வைத்துள்ளது. இக்கம்பெனியின் குறைந்தபட்ச வருடாந்திர வருமானம் 250 கோடி. ஆனால் நிரந்தர தொழிலாளர்களுக்கே கூட நிறுவனம் கொடுக்கும் சம்பளம் ரூ.8000 மட்டுமே.

இந்த கம்பெனியின் கேடுகெட்ட சுரண்டலை தட்டிக்கேட்கவோ, தடுக்கவோ தொழிலாளர் ஆணையமோ, புதுச்சேரி அரசோ இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் உரிமைகளை நிலைநாட்ட, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளின் படி 2011ல் ’ரீஜென்சி தொழிலாளர் மற்றும் ஊழியர் சங்கத்தை கட்டினார்கள்.’ சங்கம் அமைத்த உடனே சங்கத்தின் முன்னனியாளர்கள் 5 பேரை பணிநீக்கம் செய்தது மட்டுமின்றி. இரண்டு மாதகால ஊதியமும் கொடுக்க மறுத்தது நிர்வாகம். தொழிற்சங்க தலைவர் முரளிமோகன் மீது மின்விசிறி திருடியதாக பொய் குற்றச்சாட்டு சுமத்தி பணிநீக்கம் செய்தது.

அதுமுதல், பணிநீக்கம் செய்யப்பட்டோரை மீண்டும் பணியிலமர்த்தக் கோரியும், ஊதிய உயர்வு கோரியும் சட்டபூர்வமான முறையிகளில் தங்களது போராட்டங்களை தொடர்ந்தனர். தங்களது நியாயமான கோரிக்கைகளை எல்லாம் சட்டபூர்வமான முறைகளில் தெரிவித்த போதெல்லாம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நிர்வாகத்திற்கும் அரசிற்கும் உறைக்கும் வகையில் தொழிற்சாலையின் உற்பத்தியை தடுத்து நிறுத்தும் போராட்டத்தை அறிவித்தனர். மிரண்டு போன நிர்வாகம் தொழிலாளர்களை மிரட்டி அவர்களிடையே பிரிவினை ஏற்படுத்தி உற்பத்தியை தொடர திட்டமிட்டது. நிர்வாகத்தின் மிரட்டலுக்கு பலியான தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வதும் அவர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்துவதும் நடந்துள்ளது.  இப்படி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களைத் தடுப்பதை நிறுத்த, 27-1-2012 அன்று நிர்வாகிகளை போலீசை வைத்து மிரட்டியது நிர்வாகம். போலீசு மிரட்டலுக்கு தொழிலாளர்கள் அஞ்சாததால், ஆத்திரம் அடைந்த போலீசார் தொழிற்சங்க நிர்வாகிகள் செயலர் முரளி மோகன் உட்பட 10 பேரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கியிருக்கின்றனர். போலீசாரின் கொலைவெறி  தாக்குதலுக்குள்ளான சங்கத் தலைவர் முரளி மோகன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.

சங்கத் தலைவரின் இறப்புச் செய்தியைக் கேட்ட தொழிலாளர்களும், ஏனாம் பகுதி மக்களும் இணைந்து வாகனங்களை எரித்தும், ரீஜென்ஸி ஆலையை அடித்து நொறுக்கியும் நிர்வாகத்தின் மேலாளர் சந்திரசேகரனைக் கொன்று பழிதீர்த்தனர். அரசின் உதவியுடன் தொழிலாளர் வர்க்கத்தை பயமுறுத்தி ஒடுக்கிவிடலாம் என்று கனவுடன் வாழும் முதலாளி வர்க்கத்தின் கபாலத்தில் ஓங்கி கத்தியை செருகியிருக்கின்றனர் ஏனாம் பகுதி தொழிலாளர்கள். தங்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்கு முறைகளுக்கு எதிராக பன்மடங்கு எதிர்த் தாக்குதலை தங்களாலும் தொடுக்கமுடியும் என்பதை முதலாளி வர்க்கத்திற்கு புரிய  வைத்திருக்கிறார்கள்.

நம்முடைய உழைப்பைச் சுரண்டி கோடிக்கணக்கான பணத்தைச் சுருட்டிக் கொள்ளும் முதலாளிகளின் கொட்டத்தை அடக்க தொழிலாளர்களாகிய நாம் சாதி, மதம், இனம் என்பதை மறந்து ஒரு வர்க்கம் என்ற அடிப்படையில் ஒன்றுபடுவோம் என்ற முழக்கத்துடன் போலீசின் கொலை வெறிச் செயலைக் கண்டித்து 1-2-2012 அன்று பாண்டிச்சேரியில் புஜதொமு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது இதில் திரளான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

–    புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பாண்டிச்சேரி

ரீஜென்சி செராமிக்ஸ் தொழிற்சங்கச் செயலர் முரளிமோகன் அடித்துக் கொலை!

ரீஜென்சி செராமிக்ஸ் தொழிற்சங்கச் செயலர் முரளிமோகன் அடித்துக் கொலை! பாண்டிச்சேரி – யேனம் போலீசாரின் கொலைவெறிச் செயல்!

தொழிலாளர் உரிமைக்காகப் போராடிய ரீஜென்சி செராமிக்ஸ் தொழிற்சங்கச் செயலரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற பாண்டிச்சேரி – யேனம் போலீசார் அடித்துக் கொன்று விட்டனர். இக்கொலையைக் கண்டித்து போரட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். சிலர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இப்படி கொலை செய்யும் அளவிற்கும், துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவிற்கும் என்ன குற்றம் செய்தனர்? ரீஜென்சி செராமிக்ஸ் தொழிலாளர்களாகிய இவர்கள் தொழிற்சங்கம் அமைத்தனர். அவர்களுக்கான கொரிக்கையை வலியுறுத்திப் போராடினர். இதுதான் அவர்கள் செய்த ‘குற்றம்’! இச்சங்கத்தை நிர்வாகம் ஏற்கவும் இல்லை. சங்கத்தை கலைப்பதற்கான முயற்சியையும் மேற்கொண்டது. மேலும், தொழிற்சங்கத்தைத் துவங்கியதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக நிர்வாகிகளை, முரளிமோகன் உட்பட 6 பேரை ரீஜென்சி செராமிக்ஸ் நிர்வாகம் வேலை நீக்கம் செய்து விட்டது. இதை எதிர்த்து தொழிற்சங்கம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

நீதிமன்றமும் தொழிற்சங்கத்திற்க்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இதையும் நீதுமன்றம் நிராகரித்து விட்டது. வேறு வழியின்றி நிர்வாகம் பணிந்தது. ஆனால், அடிமைச்சாசனம் எழுதி தந்து விட்டு வேலைக்கு வரும்படி கூறியது. இதை மறுத்த தொழிலாளர்கள், மீண்டும் போராட்டத்தை துவக்கி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் வேலைக்கு எடுக்கக் கோரியும், மேலும் 15 வருடத்திற்கு மேல் வேலை செய்யும் தினக்கூலித் தொழிலாளர்களை நிரந்தரம் செய்யக் கோரியும், விலைவாசி உயர்வுக்கேற்ப சம்பளத்தை உயர்த்தக் கோரியும், பழிவாங்கும் அடிப்படையில் சிலரை வேறு கிளைக்கு மாற்றம் செய்ததை ரத்துச் செய்யக் கோரியும் போராடி வந்தனர்.

1983-இல் ரீஜென்சி செராமிக்ஸ் கம்பெனி முதலாளி ஜி.என். நாயுடு ரூ. 4 கோடியை வைத்துக் கொண்டு ரூ. 8 கோடியைக் கடனாகப் பெற்று மொத்தம் 12 கோடியை மூலதனமாகக் கொண்டு இத்தொழிற்சாலையைத் தொடங்கினான். இன்று அந்தக் கம்பெனியின் சொத்து மதிப்போ ரூ. 2500 கோடி. கோடிக்கணக்கான ரூபாய் சொத்தை தனது உழைப்பால் பெருக்கிக் கொடுத்த தொழிலாளியோ இன்னும் அற்பக் கூலிக்காக கையேந்தி நிற்கிறார். தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்த ஜி. என். நாயுடுவுக்கு தொழிலாளர் கோரும் அற்பக் கூலி உயர்வைக் கூட கொடுக்க மனமில்லை.

‘பசித்தவனைப் பார்க்க வைத்து தான் மட்டும் புசித்தவனை போல’ வக்கிர (வர்க்கப்) புத்தி பிடித்த ஜி.என். நாயுடுவோ இவர்களின் கோரிக்கையை நிராகரித்ததோடு தொழிற்சங்கத்தையும் ஒழிக்க முயன்றான்.

ஜி.என். நாயுடுவுக்கு மேலும் நிர்ப்பந்தம் கொடுத்து கோரிக்கையை நிறைவேற்றி வைக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் வேலைநிறுத்தம் செய்தனர்! இதில் சில தொழிலாளர்கள் அவ்வப்போது வேலைக்குச் செல்ல முயல்வதும் அதை போராடும் தொழிலாளர்கள் தடுப்பதும் நடந்துள்ளது. இப்படி வேலைக்குச் செல்ல முயலும் தொழிலாளர்களைத் தடுப்பதை நிறுத்த, நிர்வாகிகளை போலீசை வைத்து மிரட்டினான் ஜி.என். நாயுடு. போலீசு மிரட்டலுக்கு தொழிலாளர்கள் அஞ்சாததால், ஆத்திரம் அடைந்த போலீசார் தொழிற்சங்க நிர்வாகிகள் செயலர் முரளி மோகன் உட்பட 10 பேரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கினர். போலீசாரின் இந்தக் கொலைவெறி தாக்குதலினால் தான் ரீஜென்சி செராமிக்ஸ் தொழிற்சங்க செயலர் முரளி மோகன் இறந்தார்.

போலீசாரால் முரளிமோகன் அடித்துக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தி பலரை படுகாயப்படுத்தியதோடு, சிலரை கவலைக்கிடமாகவும் கிடத்தி விட்டனர். இக்கொலைவெறியர்களை கைது செய்யவும் அவர்களை தூக்கிலிடும் வரை போராடுவதும் தொழிலாளர்களாகிய நமது கடமை என்பதை உணர்வோம்.

நம்முடைய உழைப்பைச் சுரண்டி கோடிக்கணக்கான பணத்தைச் சுருட்டிக் கொள்ளும் முதலாளிகளின் கொட்டத்தை அடக்க தொழிலாளர்களாகிய நாம் சாதி, மதம், இனம் என்பதை மறந்து ஒரு வர்க்கம் என்ற அடிப்படையில் ஒன்றுபடுவோம். அனைத்து ஒடுக்கமுறைகளில் இருந்தும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நமக்கென்று ஒரு படையைக் கட்டுவோம். தொழிலாளர்களையும் – இதர உழைக்கும் மக்களையும் ஒட்டச் சுரண்டும் மூலதனக் கொடுமைக்கு முடிவு கட்டுவோம். அதற்கு தேவை ஒரு மாற்றம் என்பதை உணர்வோம். அந்த மாற்றத்தை ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் கொண்டு வருவோம்.

 _____________________________________________________________________________

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, சென்னை. 

தொடர்புக்கு: அ.முகுந்தன், 110,2-வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம், 63, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை-24. PH 9444834519.

_______________________________________________________________________________

போலீசின் வெறிச்செயலைக் கண்டித்து 2.2.2012 அன்று சென்னையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்களும் தொழிலாளிகளும் கலந்து கொண்டனர்.

சிறுபான்மையினர் தனிக்குடியிருப்பு , அக்கிரகாரம் பொதுக்குடியிருப்பா?

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 12

”முசுலீம்களும், கிறித்தவர்களும் எல்லா இடங்களிலும் தனிக்குடியிருப்பில் ஒதுங்கி வாழ்வது ஏன்? அவர்கள் இந்துக்களுக்கெதிராக தேச – விரோதச் செயல்களில் ஈடுபடுவதற்கும், திட்டமிடுவதற்கும் இதுவே காரணமாவதால், இந்தத் தனிக் குடியிருப்புகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.”

ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் முதல், இந்து முன்னணி இராம.கோபாலன் வரை  பலர் பேசி, எழுதி வரும் ஒரு அவதூறு.

முசுலீம்களும் கிறித்தவர்களும் தனியாக  வாழ்வது பற்றி பீதியைக் கிளப்பும் இந்துமதவெறியர்கள்தான், தனிக்குடியிருப்பு – தனி வாழ்க்கை முறையை விதியாக்கி – மதமாக்கி – சாதியாக்கி இன்று வரையிலும் அமல்படுத்துகிறார்கள். உலக மனித குலத்தின் ‘சேர்ந்து வாழ்தல்’ என்ற சமூகப் பண்பாட்டிற்கு எதிராகப் ‘பிரிந்து வாழ்தல்’ என்ற மனித விரோதப் பண்பையே பார்ப்பனியம் தனது உயிராகக் கொண்டுள்ளது.

ஊருக்கு நடுவே கோவில், கோவிலுக்கருகில் குளம், இரண்டைச் சுற்றியும் அக்கிரஹாரம், அக்கிரஹாரத்தில் பார்ப்பனர்கள். அக்கிரஹாரத்தைச் சுற்றி மேலத் தெருக்கள். மேலத்தெருக்களில் வேளாளர், ரெட்டி, நாயுடு, முதலியார், செட்டியார் போன்ற ‘மேல்’சாதியினர். இதை அடுத்து கீழத்தெருக்களில் ‘பிற்படுத்தப்பட்ட மேல்’ சாதியினர். இவர்களை அடுத்து நாவிதர், வண்ணார், குயவர் போன்ற சேவைச் சாதியினர். ஊருக்கு வெளியே சேரி. சேரியில் பள்ளர், பறையர், சக்கிலியர். இந்த பார்ப்பன செட் – அப்பில் இல்லாத கிராமங்கள் எதுவும் இந்தியாவில் கிடையாது.

குடியிருப்பு, தொழிலில் மட்டுமல்ல; உண்பது, உடுத்துவது, கேளிக்கை, சுடுகாடு என மொத்த வாழ்க்கையிலும் பார்ப்பனியத்தின் தனித்தன்மை காப்பாற்றப்பட்டு வருகிறது. நீர் கலந்து தயாரிக்கப்படும் ‘கச்சா’ உணவு தீட்டு. நெய் அல்லது சுத்தமான எண்ணெயில் தயாரிக்கப்படும் ‘பக்கா’ உணவு சுத்தமானது. கச்சா உணவை தன் சாதியினரிடமும், பக்கா உணவை தனக்கு கீழ் உள்ள சாதியிலும் பெற்றுக் கொள்ளலாம். வட இந்திய மேல் சாதியினரிடம் இந்த ‘உணவுத் தீண்டாமை’ இன்றும் நிலவுகிறது.

பார்ப்பன ‘மேல்’சாதியினர் ‘பச்சரிசி’ உண்பதற்குக் காரணம், புழுங்கல் அரிசி சூத்திர – பஞ்சமர்களால் அவிக்கப்படுவதினால்தான். பூமிக்குக் கீழே விளையும் கிழங்கு பயிறு வகைகளை சமீபகாலம் வரை பார்ப்பனர்கள் உண்பதில்லை. இப்படித் தீட்டுப்பட்ட காய், பயிறு வகைகள் இன்றைக்கும் கோவில் கருவறைகளில் நுழைய முடியாது. சமீபகாலம் வரை உணவு விடுதிகளில் இருந்த ‘பிராமணாள் கபே, சைவாள் கபே’ போன்ற பெயர்கள் யாத்திரை வரும் பார்ப்பனர்களின் புனிதத்தைக் காப்பாற்றத்தான் ஏற்படுத்தப்பட்டன. பார்ப்பன இலக்கியங்கள் குறிப்பிடும் ‘அதிதி பூசை’ (விருந்தினர்களை உபசரித்தல்) பார்ப்பன ‘மேல்’சாதியினரை மட்டும் குறித்தது. சேவைச்சாதியினர் சமைத்து மிகுந்துபோன உணவை தானமாகப் பெறுவார்கள். பூசை – புனஸ்காரங்களுக்கு வரும் ஐயர் பச்சரிசியை மட்டும் தானமாகப் பெறுவார்.

வட இந்தியாவின் பார்ப்பன – ‘மேல்’சாதி அரசியல் தலைவர்கள் பலரும் எங்கு சென்றாலும் தன் சாதி சமையற்காரரையும் கூடவே அழைத்துச் செல்வார்கள். சில ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன கமலபதி திரிபாதி என்ற உத்திரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் அதற்கோர் உதாரணம். அமெரிக்காவில் கணிப்பொறி அடிக்கிற அம்பி கூட ‘வடமாள், கொண்டின்ய கோத்திரம், மிருகசீரிஷ நட்சத்திரம், எம்.சி.ஏ. புத்திரனுக்கு இதே உட்பிரிவில் வெல்  – எஜுகேட்டட் பெண் தேவை’ என்றுதான் மணவிளம்பரம் கொடுப்பான். ‘அனைத்து வசதிகளுடன் கூடிய பங்களா வாடகைக்கு உள்ளது. பிராமின்ஸ் மற்றும் சைவாள் தொடர்பு கொள்க’ – இவ்விளம்பரம் சென்னையில் அடிக்கடி வெளிவரும்.

20-ஆம் நூற்றாண்டின் கணினி யுகத்திலேயே கிராமம், நகரம், சென்னை, தில்லி, அமெரிக்கா என்று எல்லா இடங்களிலும் தனி வாழ்க்கை முறையைத்தொடர்பவர்கள் யார் என்பதை யாரும் புரிந்துகொள்ள முடியும். இனி இந்துமத வெறியர்களின் அவதூறைப் பரிசீலிப்போம்.

கோவை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து தமிழகமெங்கும் முசுலீம் குடியிருப்புகளில் போலீசு காவல் அரண் வைத்துச் சோதிப்பதாக நாளேடுகள் செய்தி வெளியிடுகின்றன. ஏதோ தீவிரவாதத்தை வளர்ப்பதற்காகத் திட்டமிட்டே, அவர்கள் தனியாகக் குடியிருப்பதுபோல செய்தி நிறுவனங்களும், இந்து மதவெறியர்களும் தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றனர்.

இது அப்பட்டமான பொய். ஏற்கனவே பார்த்ததுபோல சாதி ஆதிக்க உணர்வு நிரம்பி வழியும் சமூகத்தில் அனைத்துத் தனிக் குடியிருப்புகளுக்கும் காரணம் பார்ப்பனியம்தான். பார்ப்பன ‘மேல்’ சாதியினர் தங்களது புனிதத்தைக் காக்க, தாங்களே தெரிவு செய்து தனியாக வாழ்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் தனியாக வாழ்வது அவர்கள் மேல் திணிக்கப்பட்ட ஒன்று. முசுலீம்களுக்கும் இது பொருந்தும்.

சாதி இந்துக்கள் பலரும் முசுலீம் மக்களுக்கெதிராகக் கொண்டுள்ள பண்பாட்டு வெறுப்பு, முசுலீம் மக்களின் ஏழ்மை இவைகளே அவர்களிடம் பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்துகிறது. கிராமங்களை விடுங்கள், நகரங்களில் கூட சேர்ந்து வாழ நினைத்தாலும் முசுலீம்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் யாரும் வீடு தருவதில்லை. அநேக நகரங்களில் முசுலீம்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் அருகருகிலோ, கலந்தோதான் வாழ்கின்றனர். அதிலும் இவர்களில் பெரும்பான்மையினர் ஏழைகளாக இருப்பதாலும் சேர்ந்து வாழ்கின்றனர். கிறித்தவ மதத்திலும் வர்க்க சாதி வேறுபாட்டுக்கேற்பவே சேர்ந்தோ, தனியாகவோ வாழ்கின்றனர்.

எனவே, இசுலாமிய மக்களின் தனிக்குடியிருப்புக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்-ன் வெறுப்பு சாதி வர்க்கத் துவேசமாகும். பம்பாய், கோவை, திருவல்லிக்கேணி கலவரங்களில் சேரிகளில் முஸ்லீம் மக்களோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தபோதும் தாழ்த்தப்பட்ட மக்களே முசுலீம்களைத் தாக்கினர். தனியாக இருந்தும் ஏழைகளாக இருந்தும் இரு பிரிவினரையும் ஒருவரையொருவர் மோதவிட்டிருப்பது தான் இந்து மதவெறியர்களின் சமீபத்திய சாதனையாகும்.

எனவே, சாதி  – மதக் கலவரங்களுக்காகக் கண்காணிக்கப்பட வேண்டும் என்றால் – இந்து மதவெறியர்கள், சாதி வெறியர்கள் வாழும் அக்ரஹார – ‘மேல்’ சாதிக் தெருக்கள்தான் கண்காணிக்கப்பட வேண்டும். அதேபோல மக்கள் விரோத – தேசவிரோத நடவடிக்கைகளை ஒழிப்பதற்கு நகரத்தின் பணக்கார வர்க்கம் வாழும் பகுதிகளையும், நட்சத்திர விடுதிகளையும் கண்காணிக்க வேண்டும்.

– தொடரும்.

முந்தைய பாகங்களுக்கு :