Thursday, June 18, 2026
முகப்பு பதிவு பக்கம் 76

என் கழுத்துக்கு மேலே ஆலிவ் இலைகளை வரையுங்கள்… | பாலஸ்தீன கவிதை

என் கழுத்துக்கு மேலே ஆலிவ் இலைகளை வரையுங்கள்…

இதோ…
இவ்வுலகை விட்டு பறந்து சென்று கொண்டிருக்கிறேன்
தலையில்லாத முண்டமாய் பறப்பதால்
உங்களுக்கு என்னை அடையாளம் தெரியாமல் இருக்கலாம்.
அதற்காக நீங்கள் வருந்த வேண்டாம்..

என் அப்பா-அம்மாவே
என்னை உடனடியாக அடையாளம் காண முடியாமல்
சற்று தவித்துதான் போனார்கள்…

முண்டமாக என்னை பார்ப்பதில்
உங்களுக்கு ஏதேனும் சங்கடம் இருந்தால்
என் கழுத்துக்கு மேலே
ஏதாவது வரைந்து கொள்ளுங்கள்…

அது தர்பூசணி பழமாகவோ
ஆலிவ் இலைகளாகவோ இருந்தால்
நான் நிச்சயம் மகிழ்ச்சியடைவேன்

அல்லது என் உருவத்தில் ஒரு ஹண்டாலா வரையுங்கள்
திரும்பி நிற்கும் அந்த சித்திரத்திற்கு
என் முகம் தேவை இல்லை அல்லவா?

எளிமையாக ஏதேனும் வரைய எண்ணினால்
என் கழுத்துக்கு மேலே பாலஸ்தீன கொடியை வரையுங்கள்
பாலஸ்தீன விடுதலையின்
இன்னுமொரு அடையாளமாய் மாறிப் போகிறேன்.

இவை எதுவும் வரையாமல்
நான் முண்டமாகவே காட்சியளித்தாலும்
அதில் குறையேதும் இல்லை

கோரமான அந்த காட்சி
யூத இனவெறி ஓநாய்களின்
தூக்கத்தை கலைக்கும் என்று
நான் உறுதியாக நம்புகிறேன்

ஏனெனில், குறிவைத்து கொன்றுவிட்டு
அதனை ‘துயரமான தவறு’ என்று ‘கடந்து செல்லும்’
அந்த பாசிச கூட்டத்திற்கு
என்னை அடையாளம் தெரியாமல் போக
வாய்ப்பில்லை அல்லவா?

எங்களின் பாலஸ்தீன கொடியை போல
நானும் இந்நேரம்
அவர்களுக்கு கொடுங்கனவாய் மாறியிருப்பேன் என்பதில்
எனக்கு துளியும் சந்தேகம் இல்லை

ஓ அமெரிக்க-இஸ்ரேல் போர்வெறி ஓநாய்களே…
என்ன நினைத்தீர்கள்?
தலைகளை துண்டாக்கினால்
எங்களின் ஓலங்களை
உலகம் கேட்காமல் செய்துவிடலாம் என்றா?

பாசிஸ்டுகள் பயங்கொல்லி முட்டாள்கள் என்பதை
மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டீர்கள்…

உலகத்தின் ஒட்டுமொத்த கண்களும்
தற்போது ரஃபாவின் எல்லைகளை உற்று நோக்கியிருப்பதையும்
உலக மக்கள் முன்னிலையில் நீங்கள் தண்டிக்கப்படும் நாள்
வெகு தொலைவில் இல்லை என்பதையும்
இன்னுமா நீங்கள் உணரவில்லை?

தலையை துண்டாக்கி முண்டமாக்கினாலும்
உடலை சிதைத்து உருக்குலைத்தாலும்
எங்களது குரல் உலக மக்களை சென்றடைவதை
உங்களால் ஒருபோதும் தடுக்க முடியாது.

ஏனெனில், உலகின் செவிகளுக்கு
நாங்கள் உணர்த்த விரும்புவது
எங்கள் மரண ஓலத்தை அல்ல..
விடுதலை முழக்கத்தை!

உடல் சிதைந்து உயிர் பிரிந்தாலும்
நாங்கள் விட்டுசென்ற சுவாசக் காற்று
எங்கள் விடுதலைக்கு தூது செல்லும்!


துலிபா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கார்ப்பரேட் நலனுக்காக சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசு

திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களின் வழியாக பாய்ந்து காவிரியில் கலக்கும் அமராவதி ஆற்றின் கிளை ஆறுகள் தான் பாம்பாறு, தேனாறு, சின்னாறு ஆகியவை. அந்த தேனாற்றின் கிளை ஆறான சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு எந்த சட்ட திட்டத்தையும் மதிக்காமல் தன்னிச்சையாக தடுப்பணை ஒன்றை கட்டி வருகிறது.

இந்த தடுப்பணை எதற்காக யாருக்காக கட்டப்படுகிறது என்கிற உண்மையை மறைக்கும் பொருட்டு மக்களின் குடிநீர் தேவைக்காக கட்டப்படுவதாக மோசடி நோக்கத்துடன் அங்கு அருகாமையில் இருக்கும் சில கிராமங்களுக்கு மூன்று மேல்நிலை குடிநீர் தொட்டிகளையும் கட்டி வருகிறது கேரளத்தின் சி.பி.எம் அரசாங்கம்.

இரண்டு மீட்டர் உயரமும் 40 மீட்டர் நீளமும் கொண்ட அந்த சிலந்தி ஆற்றின் தடுப்பணை தேனாறுக்கு வரவேண்டிய நீர் வரத்தை கணிசமாக தடுத்து நிறுத்தி விடும் என்பதையும் தேனாற்றின் நீர் வரத்து குறைந்தால் அது அமராவதி ஆற்றின் நீர்ப்பாசனப் பகுதிகளையும் திருப்பூர் மாவட்டத்தின் பல குடிநீர் திட்டங்களையும் பெரிய அளவில் பாதிக்கும் என்பதையும் கேரள மற்றும் தமிழ்நாடு அரசாங்கங்கள் நன்கு அறியும்.

இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் இருக்கும் விவசாயிகளுக்கான அமைப்புகள் பலவும் அதற்கு எதிராக குரலெழுப்பி போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழ்நாடு அரசோ பெரிய அளவில் கண்டனம் தெரிவிக்காமல் கள்ள மௌனம் சாதித்து வருகிறது.


படிக்க: மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை வாரியம் முடிவு ! | மக்கள் அதிகாரம் கண்டனம்


கேரள அரசு இப்படி அத்துமீறி தமிழ்நாட்டின் ஆற்று நீர் வரத்தினை தடுப்பது புதியதல்ல. ஏற்கெனவே சிறுவாணி ஆற்றில் இப்படிப்பட்ட ஒரு தடுப்பணை மூலமாக சிறுவாணி ஆற்றின் நீரை பாதியாக குறைத்து விட்டது. மேலும் இதே போன்ற இன்னொரு கிளை நதியான பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணையைக் கட்டி தண்ணீரை தன் பக்கமாய் திசை மாற்றிக் கொண்டது. அதைவிடவும் முக்கியமானதான முல்லைப் பெரியாறு அணையை எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விடும் என்றும் அதற்கு பதிலாக அணையின் கீழ் பகுதியில் புதிய அணை ஒன்றை கட்டுவது என்றும் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

எத்தனை வல்லுனர் குழுக்கள் சென்று சோதித்து அணை மிகவும் உறுதியானதும் பாதுகாப்பானதுமாகும் என்று சான்றளித்த போதும் அதை ஏற்றுக் கொண்டு உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளி வந்த பின்னரும் மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தின் கதவைத் தட்டிக் கொண்டேயிருக்கிறது கேரள அரசு.

கேரள மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் ஆபத்து என்ற ஒரே பொய்யை திரும்பத் திரும்ப அழுத்தமாக சொல்லி வருகிறது.

கேரளாவில் சி.பி.எம் அரசாங்கமோ, காங்கிரஸ் அரசாங்கமோ எது வந்தாலும் தமிழ்நாட்டின் நீர் தேவையை மறுக்கின்ற இந்த போக்கில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை

ஓர் ஆற்றின் குறுக்கே கடைமடைப் பகுதியில் இருக்கும் பயனாளியின் அனுமதி பெறாமல் எந்த கட்டுமானங்களையும் ஏற்படுத்தக் கூடாது என்கிற சாதாரண பொது அறிவு கூட இல்லையென புரிந்து கொள்வதா?

அரசாங்கம் ஒரு சார்பாக நடந்து கொள்ளும் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் எதற்காக இவ்வளவு அடாவடித்தனமாகவும் மோசடித்தனமாகவும் நடந்து கொள்ளவேண்டும்? மக்களின் குடிநீர் தேவை என்பதை இரு மாநில அரசாங்கங்கள் சட்டபூர்வமாக அமர்ந்து பேச்சு வார்த்தையின் மூலமாக பேசித் தீர்த்துக் கொள்ளவே முடியாதா?

இல்லை. இதுவெல்லாம் உண்மை இல்லை. அவர்கள் தெரிந்தே தான் செய்கிறார்கள். சர்வதேசச் சட்டத்தை, இந்திய ஒன்றிய அரசின் சட்டத்தை, நீர் மேலாண்மை வாரியங்களின் வழிகாட்டுதல்களை, நீதிமன்றத் தீர்ப்புகளை எல்லாம் மீறித்தான் செய்கிறோம் என்று தெரிந்தே தான் செய்கிறார்கள்

காரணம் தான் என்ன?

கேரளத்தின் இந்தத் திட்டங்கள் எவையும் அந்த மாநில விவசாயிகளுக்கான பாசன திட்டமோ அல்லது இன்ன பிற மக்களுக்கான குடிநீர் திட்டமோ அல்ல.

மாறாக அனைத்துமே கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப நோக்கங்களுக்கான திட்டங்கள். அவற்றுக்கு ஆவன செய்ய வேண்டியது அரசாங்கங்களின் கடமை என்று பார்க்கப்படுகிறது. அதனால் தான் எந்த சட்டம் குறுக்கிட்டாலும் அதை ஒதுக்கித் தள்ளி “மக்கள் உயிருக்கு ஆபத்து” என்பது போன்ற பொய்க் காரணத்தையும் அநியாயமாக சொல்லத் துணிகிறார்கள்.

சிலந்தி ஆற்றின் நீரை தடுப்பதும் கூட அதற்கு அருகில் நிறுவப்பட்டுள்ள குடிநீர் வர்த்தக நிறுவனம் ஒன்றின் தேவைக்காகத்தான் என்பதை பட்டும் படாமல் பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.

முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்தவரை அவர்களுக்கு தேவைப்படுவது தண்ணீர் அல்ல. முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதியின் நிலம். முல்லைப் பெரியாறு அணையை அகற்றினால் தான் அந்த நிலத்தை அவர்கள் கையகப்படுத்த முடியும்.


படிக்க: முல்லைப் பெரியாறு அணையை தகர்க்கத் துடிக்கும் கேரள அரசு !


கேரளாவின் தேக்கடியில் மிகப்பெரும் சுற்றுலா தளத்தையும் பலவகை கேளிக்கை பூங்காக்களை, ஐந்து நட்சத்திர விடுதிகளை அமைத்து பணம் பார்க்க பல்வேறு கார்ப்பரேட்டுகள் அவரவர் திட்டங்களுடன் நெடுங்காலமாகவே காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அணையினால் பாசனத்திற்கும் குடிநீர் தேவைக்கும் பயன்பெறுபவர்கள் தமிழ்நாட்டின் ஐந்தாறு மாவட்ட விவசாயிகள்தான். இதனால் ஆளும் வர்க்கமான கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எவ்வித ஆதாயமும் இல்லை. விவசாயிகள் நலன் பற்றி அவர்களுக்கு எந்த அக்கறையும் கிடையாது.

ஆகவேதான் முல்லைப் பெரியாறு அணையை உடைத்து தகர்க்க கேரளாவின் சி.பி.எம் அரசாங்கத்தை நெட்டித் தள்ளுகிறார்கள். சி.பி.எம் கட்சியும் கூச்சநாச்சமோ மக்களுக்கு துரோகம் செய்கிறோம் என்று குற்ற உணர்வோ சிறிதும் இல்லாமல் முதலாளிகளின் பாதம் தாங்கிகளாக அவர்கள் விட்டெறியும் எலும்புத் துண்டுகளுக்காக, எச்சில் காசுக்காக காவல் நாய்களாக விசுவாசமாக செயல்படுகிறார்கள்.

கார்ப்பரேட் முதலாளிகள்தான் எப்போதும் எல்லா தேசிய – திராவிட – மாநில அரசியல் கட்சிகளுக்கும் எஜமானர்கள். அந்த எஜமானர்களின் தயவின்றி ஒரு நாட்டில் எந்த மைய நீரோட்ட அரசியல் கட்சியும் இயங்க முடியாது என்பது அரசியலில் ஆரம்பப் பாடமாகும். அதனால்தான் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முல்லைப் பெரியாறு அணையினால் கேரள மக்களின் உயிருக்கு உடைமைக்கு ஆபத்து என்று மோசடியான முறையில் ஒப்பாரி வைக்கிறார்கள்.

இது இங்கு மட்டும் இல்லை. இந்தியா முழுவதிலும் நீங்கள் இந்த நிலைமைகளைப் பார்க்க முடியும். கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டங்கள் தான், நீர் நில வளங்களைக் கொள்ளையடிக்கும் அவர்களின் திட்டங்கள் தான், தமிழ்நாட்டின் பல முனைகளிலும் நீர் ஆதாரம் முடக்கப்படக் காரணம். ஆந்திரத்தில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை; கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணைக்கட்டு எல்லாமும் இதே போன்ற கார்ப்பரேட் நலன்களுக்காகத் தான் செயல்படுத்தப்படுகின்றன.

நதிநீர் மேலாண்மையில் மட்டுமல்ல, அதானிக்கு வழங்கப்படும் துறைமுகங்கள், கார்ப்பரேட் முதலாளிகளின் வசதிக்காக ஏற்படுத்தப்படுகின்ற பரந்தூர் விமான நிலைய திட்டமானாலும், தஞ்சை டெல்டாவை தோண்டுகின்ற ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டங்களானாலும், சேலம் சென்னை எட்டு வழி சாலையானாலும் நியூட்ரினோ திட்டமென்றாலும் இவை அனைத்துக்கும் அரசாங்கங்கள் முனைந்து செயல்படுவதற்கு காரணம் அவை கார்ப்பரேட்டுகளின் திட்டங்கள் என்பதால் மட்டும்தான்.

மக்களின் கோரிக்கைகள் ஒருபோதும் இந்த வகை முன்னுரிமையை பெற்றதில்லை. இதிலும் எந்த கட்சியும் விதிவிலக்கில்லை.

நாட்டின் தொழில் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், மக்களுக்கு வேலை வாய்ப்பு என்கிற பெயரில் தான் கார்ப்பரேட் முதலாளிகள் தங்களின் திட்டங்களை முன் நகர்த்துகிறார்கள்.

1990-களில் தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகள் நிலைநாட்டப்பட்டன. அதன் பிறகு அவை அனைத்தும் சேர்ந்து கார்ப்பரேட்மயம் என்றாகி, கார்ப்பரேட் கும்பலுக்குள் நடக்கும் போட்டா போட்டியின் விளைவாக, கடலானாலும் மலையானாலும் காடானாலும் நிலமானாலும் நீரானாலும் எந்த இயற்கை வளங்களையும் நீயா நானா என்று போட்டி போட்டுக் கொண்டுகொண்டு சூறையாடுகிறார்கள்.

அரசாங்கங்களை பணத்தால் அடித்து மக்களுக்கு விரோதமாக, நாட்டின் சட்ட திட்டங்களை மாற்ற நிர்பந்திக்கிறார்கள். அரசியல் கட்சிகளும் எந்த கொள்கை வேறுபாடும் இல்லாமல் இந்த விஷயத்தில் வாலைக் குழைத்துக் கொண்டு கார்ப்பரேட் எஜமானர்கள் காட்டும் பாதையில் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகிறார்கள்.

இந்த உண்மையை, எந்த கட்சியானாலும் அவை எதிர்க்கட்சியாகவோ ஆளுங்கட்சியாகவோ எப்படி இருந்தாலும் ஒருபோதும் மக்களிடத்தில் வெளிப்படுத்துவதில்லை.

மக்களுக்கான குடிநீர் தேவை, விவசாயத்துக்கான நீர்ப்பாசனத் திட்டங்கள் என்று மாநில அரசாங்கங்கள் முனைந்து செயல்படுவதாக மக்களிடம் காட்டிக் கொள்ளுகிறார்கள். உண்மையை மொத்தமாக மறைக்கிறார்கள்.

சான்றாக, சிலந்தியாறு தடுப்பணை பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு சி.பி.எம் மாநிலக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையும் கூட, கேரள மக்களின் குடிநீர்த் தேவைக்காகத்தான் தடுப்பணை கட்டப்படுவதாகவும், தமிழ்நாடு அரசுடன் பேசி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி வாங்காமல் கட்டுவது தான் பிழையெனவும் கூறுகிறது. சட்டவிரோதமாக நடந்து கொள்ளும் கேரள அரசாங்கம் மீது ஒரு வார்த்தை கூட கண்டனம் இல்லை. இதேபோல ஒரு மொன்னையான அறிக்கையை முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்கும் வெளியிட்டுள்ளனர். காலங்காலமாக இது போன்ற சந்தர்ப்பவாத அறிக்கையோடு நின்று கொள்வதை மட்டுமே தமிழ்நாடு சி.பி.எம் செய்து கொண்டிருக்கிறது.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் இந்த திட்டம் ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் திட்டத்திலிருந்து 16 கோடி ரூபாய் பெற்று அதைக் கொண்டுதான் கேரளத்தின் குடி நீர் வாரியம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்று தன் இணையத்தில் தினமலர் கூறியிருக்கிறது.

இது உண்மையாய் இருக்கும் பட்சத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் இடையில் இருக்கும் இறுக்கமான உறவு இதன்மூலம் நமக்கு புரிய வருகிறது.

பெங்களூருவின் தொழில் மயமாக்கம் மற்றும் நகரமயமாக்கல் திட்டத்திற்காகத்தான் மேகே தாட்டு அணையின் மூலம் காவிரியின் தண்ணீரை தடுத்து பெங்களூருக்குத் திருப்புகிறார்கள்.


படிக்க: காவிரி நீருக்கான போராட்டம் பாசிச எதிர்ப்புப் போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்!


இந்த உண்மைகளுக்குள் செல்லாமல், எப்பொழுதும் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் அந்த மாநிலத்து அரசாங்கங்கள் அந்த மாநிலத்து மக்களுக்காக நீரை மறிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டி போராடுகிறார்கள்.

தண்ணீர் மறுப்புக்குப் பின்னால் இருக்கின்ற கார்ப்பரேட் நோக்கங்களைப் பின்னுக்குத் தள்ளி மறைக்கிறார்கள். தண்ணீர் தமிழ்நாட்டின் விவசாயிகளுக்கா அல்லது கர்நாடக விவசாயிகளின் நலனுக்கா? கேரள மக்களின் நலனுக்கா? என்று இரு வேறு தேசிய இன மக்களுக்கிடையிலான மோதலாகவே எப்போதும் கையாளுகிறார்கள்.

இதில் எப்போதும் எந்த தீர்வையும் எட்டவில்லை என்றாலும் இந்த அணுகு முறையிலிருந்து அவர்கள் மாறுவதே இல்லை.

அந்தந்த மாநிலத்தின் எந்தக் கட்சி அரசாங்கமானாலும், அதேபோன்று ஒன்றிய அரசில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், இந்த நதிநீர்ப் பிரச்சினைகளில் என்றுமே தீர்வைக் கண்டடைந்ததில்லை. இறுதியில் பாதிக்கப்படுவது என்னவோ தமிழ்நாட்டு விவசாயிகளும் மக்களும்தான். ஆனால் தமிழ்நாட்டு மக்களின் பகையாக காட்டப்படுவதோ அண்டை மாநிலங்களின் விவசாயிகளும் உழைக்கும் மக்களும்.

நமக்கு உரிமையாகச் சேர வேண்டிய நீரை அவர்கள் தான் அனுபவிக்கிறார்கள் என்ற முறையில் தேசிய இனவெறி விசிறி விடப்படுகிறது.

இந்த உள்ளார்ந்த அரசியலை அம்பலப்படுத்தினால் தான், மேலே சொல்லப்பட்ட பிரச்சனைகள் எல்லாமும் அந்தந்த தனித்தனியான மாவட்டத்து விவசாயிகளின் பிரச்சனை அல்ல என்பதும், மொத்த நாட்டையும் வளங்களையும் காக்கும் மக்களின் பிரச்சனை என்பதையும் அனைத்து மக்களும் புரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

கார்ப்பரேட் முதலாளிகளின் இயற்கை வளக் கொள்ளைக்கு எதிராக, திட்டங்களுக்கு எதிராக மக்கள் அணி திரண்டு போராடுவதன் மூலம் தான் விவசாயிகளும் மக்களும் வெற்றியையும் நல்வாழ்வையும் பெற முடியும்.


ஆதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



சத்தீஸ்கர் படுகொலை: பாசிசக் கும்பலால் நடத்தப்படும் நரவேட்டை

டந்த ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி, சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் பகுதிக்குட்பட்ட கான்கேர் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்பு படை (BSF) மற்றும் மாவட்ட ரிசர்வ் காவல்படை (DRG) ஆகியவை இணைந்து 29 மாவோயிஸ்ட் தோழர்களை போலி மோதலில் துப்பாக்கியால் சுட்டும் சித்திரவதை செய்தும் படுகொலை செய்தது. இந்த ஆண்டிலேயே அதிக எண்ணிக்கையில் மாவோயிஸ்டுகளை படுகொலை செய்த இந்த போலி மோதலில், மாவோயிஸ்ட் அமைப்பின் சங்கர் ராவ், லலிதா மாத்வி உள்ளிட்ட முன்னணி தோழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மாவோயிஸ்டுகள் தேர்தலை தடுத்து நிறுத்தும் சதி வேலைகளில் ஈடுபட்டதாகவும், அதை துணை இராணுவப் படை முறியடித்ததாகவும் பா.ஜ.க. கும்பல் பொய்யான கதையைக் கட்டி இந்தப் படுகொலையை ‘பா.ஜ.க. அரசின் சாதனையாக’ காட்டுவதற்கு முயற்சித்து வருகிறது. சத்தீஸ்கர் மாநில முதல்வர் விஷ்ணு தேவ் சாய், இந்தப் படுகொலையை“ஒரு வரலாற்று வெற்றி” என்றும்  சத்தீஸ்கர் மாநில உள்துறை அமைச்சர் விஜய் சர்மா, “நக்சலிசத்தின் மீதான பஸ்தார் போலீசின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்” என்றும் கூறியுள்ளனர்.

ஆனால், சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) கட்சியின் வடக்கு துணை மண்டலப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் மங்கலி வெளியிட்டுள்ள அறிக்கை பா.ஜ.க. கும்பலின் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்துகிறது.

முதலில் போலி மோதலில் 12 மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும்  பின்னர் 8 மாவோயிஸ்டுகளை சித்திரவதை செய்து கொன்றதாகவும், நிராயுதபாணியாக இருந்த 9 தோழர்களை இரண்டு கி.மீ தொலைவில் இருந்த தியாகிகள் நினைவிடத்திற்கு  இழுத்துச் சென்று மனிதாபிமானமற்ற முறையில் லத்திகளால் தாக்கி அதன் பிறகு சுட்டுக்கொன்றதாகவும் அம்பலப்படுத்தியுள்ளது. மேலும், இந்தப்படுகொலை “ஆபரேஷன் ககர்”(Operation Kagar)  அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பதையும் குறிப்பிட்டுள்ளது.


படிக்க: சத்தீஸ்கர் போலி மோதல் கொலை: FACAM கண்டன அறிக்கை


இவ்வாறு கனிம வளக் கொள்ளைக்காக மாவோயிஸ்டு தோழர்களும் பழங்குடி மக்களும் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கண்டனங்களை கூட தெரிவிக்கவில்லை. சத்தீஸ்கர் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல், “பா.ஜ.க. அரசு பல அப்பாவி பழங்குடி கிராம மக்களை நக்சல்கள் என்று முத்திரை குத்தி போலியாக எண்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்கிறது” என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார். மற்றபடி, காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல், மற்ற இந்தியா கூட்டணி கட்சியின் தலைவர்கள் என யாரும் இதுகுறித்து வாய்திறக்கவில்லை.

ஏனென்றால் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளும் தாங்கள் ஆளும் மாநிலங்களில் கார்ப்பரேட் நலத் திட்டங்களை தீவிரமாக அமல்படுத்திக் கொண்டு இருக்கின்றன. அதிலும் 2004-2014 காங்கிரஸ் ஆட்சிக் காலக்கட்டத்தில்தான், சல்வாஜூடும் என்ற சட்டவிரோத பயங்கரவாத படை மூலமாகவும், துணை இராணுவப் படைகளைக் கொண்டு “ஆபரேஷன் கிரீன் ஹண்ட்” என்ற பெயரிலும் பழங்குடி மக்கள், மாவோயிஸ்டுகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தது.

பாசிசக் கும்பலின் நரவேட்டைக்கான பயங்கரவாதத் திட்டம்

“ஆபரேஷன் ககர்” என்பது, சத்தீஸ்கரில் பஸ்தர், அபுஜ்மர் மற்றும் காடுகளை உள்ளடக்கிய பிற பகுதிகளில் உள்ள  கனிம வளங்களை அம்பானி, அதானி, வேதாந்தா, ஜிண்டால் போன்ற கார்ப்பரேட் கும்பல்கள் சூறையாடுவதற்கு தடையாக இருக்கும் பழங்குடியின மக்களையும் அவர்களுக்கு உறுதுணையாக போராடிவரும் மாவோயிஸ்ட் போராளிகளையும் வேட்டையாடுவதற்காக, பெரிய அளவில் (ஒவ்வொரு ஏழு பழங்குடியின மக்களுக்கும் மூன்று ராணுவ வீரர்கள் என்ற வகையில்) எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களைத் திரட்டும் நோக்கத்துடன்  பாசிச பா.ஜ.க கும்பலால் கொண்டுவரப்பட்டுள்ள பயங்கரவாதத் திட்டமாகும்.

இத்திட்டத்தால் இந்தாண்டு ஜனவரி முதல் மாவோயிஸ்டுகளும் பழங்குடியின மக்களும் போலி மோதலில் படுகொலை செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் கான்கேர் மாவட்டத்தில், மரங்களின் பட்டைகள், தண்டுகள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு கயிறு தயாரிப்பதற்காக காடுகளுக்கு சென்ற பழங்குடியினத்தைச் சார்ந்த மூன்று பேரை  மாவோயிஸ்டுகள் என்றுக் கூறி அரசின் பயங்கரவாதப் படை படுகொலை செய்தது. அதேபோல, மார்ச் மாதத்தில் பிஜப்பூர் மாவட்டம் சிபுர்பட்டியில் மக்களின் குறைகளை கேட்பதற்காக கிராமத்திற்கு சென்ற மாவோயிஸ்ட் தோழர்கள் இருவரையும், பழங்குடியின மக்களில் நான்கு பேரையும் கைது செய்து, ஓட விட்டு  கண்மூடித்தனமாக சுட்டுப் படுகொலை செய்துள்ளது. இவ்வாறு பா.ஜ.க. அரசு, மாவோயிஸ்டுகளை மட்டுமின்றி, கேள்விக்கிடமற்ற முறையில் மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் அப்பாவி பழங்குடி மக்களையும் நரவேட்டையாடி வருகிறது.


படிக்க: மாவோயிஸ்டுகளை நரவேட்டையாடும் சத்தீஸ்கர் அரசு! | தோழர் ரவி


இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 79 மாவோயிஸ்டுகள் போலி மோதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த இரு ஆண்டுகளில் போலி மோதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். இந்த கனிமவள கொள்ளைக்காக நடத்தப்படும் இந்த நரவேட்டையை மோடி-அமித்ஷா கும்பல் தனது தேர்தல் பிரச்சாரத்திற்காகவும் பயன்படுத்தி வருகிறது.

ஏப்ரல் 22-ஆம் தேதி கான்கேர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலின் ஆட்சியின் கீழ் நக்சல்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றும், “நீங்கள் விஷ்ணு தியோ சாயை உங்கள் முதலமைச்சராக்கியுள்ளீர்கள். நான்கு மாதங்களில் 90-க்கும் மேற்பட்ட நக்சல்கள் கொல்லப்பட்டனர். 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 250 பேர் சரணடைந்துள்ளனர், மோடிக்கு இன்னொரு பதவி கொடுங்கள். சத்தீஸ்கரில் இருந்து நக்சலிசம் முற்றிலுமாக ஒழிக்கப்படும்” என கார்ப்பரேட் கொள்ளைக்காக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரசு பயங்கரவாதத்தை பா.ஜ.க-வின் சாதனையாக சித்தரிக்கிறார்.

கனிம வளக் கொள்ளைக்கான போர்

பழங்குடி மக்களை மலைகளில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதற்காக துணை இராணுவப் படைகள் மூலம் படுகொலைகளை நிகழ்த்துவது மட்டுமின்றி, அம்மக்கள் வாழும் பகுதிகளில் ஆளில்லா ட்ரோன் (Drone) மூலம் எதிரி நாட்டின் மீது பயன்படுத்தப்படும் குண்டுகளை வீசி பாசிச பயங்கரவாதத் தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. கடந்த ஜனவரி 13 அன்று பஸ்தரில் 5-வது முறையாக ட்ரோன்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டதாகவும், இந்த குண்டு வீச்சுகளுக்கு பா.ஜ.க. அரசு இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஹெரான் மார்க் 2 (Heron Mark 2) ட்ரோன்களை அதிகளவில் பயன்படுத்துவதாகவும் “பெருநிறுவனமயமாக்கல் மற்றும் இராணுவமயமாக்கலுக்கு எதிரான மன்றம்” (FACAM) கூறுகிறது.

சத்தீஸ்கர் மட்டுமின்றி, ஒடிசா, ஜார்கண்ட போன்ற மாநிலங்களிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பழங்குடி மக்கள் மீது துணை இராணுவப் படைகள் மூலமும் அம்மாநில போலீசு மூலமும் பா.ஜ.க. அரசு தாக்குதலை தொடுத்து வருகிறது; கார்ப்பரேட் கும்பலின் நலனுக்காக பழங்குடி மக்கள் மீது அறிவிக்கப்படாத உள்நாட்டுப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. வனப் பாதுகாப்பு சட்டத் திருத்தம், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்திருத்தம் போன்ற சட்டத் திருத்தங்கள் மூலம் கனிம வளக் கொள்ளையை தீவிரப்படுத்துவதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. எனவே, இனி வருங்காலங்களிலும் மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடி மக்கள் மீதான மோடி அரசின் தாக்குதல்கள் அதிகரிக்கவே செய்யும்.

ஆகவே, கனிம வளக் கொள்ளைக்கு எதிராக போராடும் மாவோயிஸ்டுகளும் பழங்குடி மக்களும் மோடி அரசால் படுகொலை செய்யப்படுவதை கண்டிக்க வேண்டியதும், கார்ப்பரேட்டுகளின் கனிம வளக் கொள்ளையை தடுத்து நிறுத்தும் வகையில் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியதும் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.


சிவராமன்

(புதிய ஜனநாயகம் – மே 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மும்பை இரசாயன ஆலை விபத்து: தொழிலாளர்கள் கொல்லப்படுவதற்கு அரசே காரணம்!

மும்பை இரசாயன ஆலை விபத்து:
ஆலை விபத்துக்கள் அதிகரிப்பதற்கும்,
தொழிலாளர்கள் கொல்லப்படுவதற்கும் அரசே காரணம்!

மும்பையில் தானே மாவட்டத்திற்கு உட்பட்ட எம்.ஐ.டி.சி தொழிற்பேட்டையில் இயங்கும் அமுதன் இரசாயன ஆலையில் கடந்த 23.05.24 அன்று பாய்லர் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உடல் சிதறி பலியாகினர். அறுபது (60) பேர் காயமடைந்துள்ளனர் .

தொழிற்சாலை அருகில் இருந்த வீடுகள் அதிர்ந்து கண்ணாடி உள்ளிட்ட பிற பொருட்கள் உடைந்துள்ளது. மூன்று முதல் நான்கு கீ.மீ வரை அதிர்வுகள் ஏற்பட்டிருக்கிறது.

தீ அணைப்பு படையினர் மட்டும் அல்ல, பேரிடர் மீட்புப் குழுவும் நிவாரண வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுருக்கிறது என்றால் அதன் பாதிப்பின் பரிமாணத்தை உணர முடிகிறது.

முதலாளித்துவ ஊடகங்கள், பத்திரிகை – தொலைக்காட்சிகள் அனைத்தும் முதலில் விபத்து என தலைப்பிட்டு செய்தியை விவரித்துள்ளனர்.

முதற் கட்டமாக அம்மாநில துணை முதல்வர் தேவிந்திர பட்னாவிஸ் விபத்து குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்டுருப்பதாக தெரிவித்துள்ளார். ஆலை நிர்வாகம் எட்டு அதிகாரிகளை தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.

மேற்படி அமுதன் இரசாயன ஆலை செயல்படாமல் இருந்துள்ளது (எத்தனை ஆண்டுகள் என்ற விவரம் திரட்ட முடியவில்லை). கடந்த சில வாரங்களாகத்தான் ஆலை இயங்கி வருகிறது என்று சுற்றுப்புற கிராம மக்கள் கூறுவதை பார்க்கையில், உற்பத்தியை விரைவாக துவக்க திட்டமிட்டு பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகள் காற்றில் பறக்க விட்டிருக்கிறது ஆலை நிர்வாகம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இராயன ஆலை இயங்குவதற்கு அடிப்படையான பாய்லர் மற்றும் இன்னும் பிற சாதனங்கள் – கருவிகளை பரிசோதிக்க தவறியது, புதியவற்றை வாங்க மறுத்தது என்ற முதலாளித்துவ லாப வெறிதான் பத்து தொழிலாளர்கள் மரணத்திற்கு காரணம்.

இறந்த தொழிலாளர்களின் குடும்ப உறவுகள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் எதிர்காலத்தில் சந்திக்க இருக்கும் துயரங்களுக்கு, வாழ்வாதார பிரச்சனைக்கு யார் பொறுப்பு என நினைக்கையில் நெஞ்சம் கணக்கிறது.


படிக்க: பட்டாசு ஆலை தொழிலாளர்களின் வலிகளும் வேதனைகளும்! | கவிதை


தொழிலாளி வர்க்கத்திற்கு குறைந்த பட்சம் தொழிற் சங்க உரிமை, பணியிட பாதுகாப்பு, வேலை நிரந்திரம் வழங்கிய சட்டங்களை எல்லாம் பாசிச மோடி அரசு பறித்ததின் விளைவாக முதலாளித்துவ லாப வெறிக்கு தொழிலாளர்கள் பலியாவது அதிகரித்துள்ளது.

கடந்த 2019-இல் குஜராத் மாநிலம் பாருச் மாவட்டத்தில் யஷாஸ்வி இரசாயன ஆலையில் நடந்த விபத்தில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர். 2023-இல் மும்பையில் தற்போது விபத்து நடந்துள்ள அதே எம்.ஐ.டி.சி தொழிற்பேட்டை இரசாயன ஆலை ஒன்றில் நடந்த விபத்தில் ஒருவர் பலியாகி ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். 2024 ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் ஃபார்மா என்ற மருந்து தயாரிக்கும் ஆலையில் பாய்லர் வெடித்ததில் நான்கு பேர் இறந்தனர்.

இவற்றையெல்லாம் விபத்தாக சித்தரிப்பதை ஏற்க முடியாமா? சாலையில் நடைபெறுவதும் ஆலையில் நடைபெறுவதும் இரண்டும் ஒரே விதமான விபத்தாக கருத முடியுமா? கண்டிப்பாக முடியாது. ஏனெனில், உற்பத்தி சார்ந்த நடவடிக்கை திட்டமிட்ட விதிமுறைக்கு உட்பட்டு பயணிக்கும் நடைமுறையாகும். அங்கு நடப்பது எப்படி எதிர்பாராமல் நடக்கும் விபத்தாகும்?

முதலாளித்துவ லாப வெறி உழைப்பை சுரண்டுவதுடன் உயிரை பறிக்கும் நடைமுறை தன்னகத்தே கொண்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் அது அன்றாட நிகழ்வாகி வருகிறது.

2017 முதல் 2020 வரையிலான காலத்தில் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலையில் ஒவ்வொரு நாளும் மூன்று பேர் இறப்பதாகவும், 11 பேர் காயமடைவதாக தொழிலாளர் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் பொது தொழிற்சாலை ஆலோசனை சேவை மற்றும் தொழிலாளர் நிறுவனங்களின் (Directorate General Factory Advice Service & Labour Institutes – DGFASLI) தரவுகள் தெரிவிக்கும் மற்றொரு செய்தியின்படி கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் இந்தியாவில் ஆலைகளில் இறந்த தொழிலாளர்கள் 3331 பேர். இதற்காக கைது செய்யப்பட்டவர்கள் வெறும் 14 பேர் மட்டுமே. இது மோடியின் ஆட்சி கார்ப்பரேட் முதலாளிகளுக்காகத்தான் என்பது சொல்லாமல் சொல்லும் செய்தியாகும்.

தொழிலாளி வர்க்கத்தின் நிலையில் இருந்து மட்டும் அல்ல, விவசாயிகள் இதர உழைக்கும் மக்கள் நிலையில் இருந்து பார்த்தாலும் நிலவும் பாசிச ஆட்சி தனது அடக்குமுறை மற்றும் கருப்பு சட்டங்கள் வழியாக போராடும் மக்களை ஒடுக்கி கார்ப்பரேட் முதலாளிகளை வாழ வைக்கிறது.

தொழிலாளி வர்க்கம் அமைப்பு ரீதியாக திரள்வதும், ”ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக!” என போராடுவதும் மட்டுமே இப்படிப்பட்ட அநீதிகளுக்கு முடிவு கட்டும்.

பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசு அமைக்க அணிதிரள்வோம்!


புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக்குழு)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாசிசக் கும்பலின் பிடியில் திரைத்துறை, மோடிக்கும்பலின் அறிவிக்கப்படாத தேர்தல் பிரச்சாரம்!

மீபத்தில் தமிழ்நாட்டில், “சன் டிவியில்” இராமாயணம் தொடரை ஒளிப்பரப்ப போவதாக அறிவித்தது விவாத பொருளாகியது. நாடுமுழுவதும் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எதிராக போராட்டங்கள் வலுவடைந்துக்கொண்டிருக்கும் சூழலில், காசுக்காக ராமனை புனிதனாக்கி பாசிஸ்டுகளுக்கு கரசேவை செய்யும் சன் டிவியை அம்பலப்படுத்தி பலர் பேசியிருந்தனர். இதேபோன்று, பலரின் கவனத்திற்கு வராத ஆபாயகரமான பாசிச நச்சுக்கருத்துக்களை கொண்ட பல திரைப்படங்களை பாசிசக் கும்பல் இத்தேர்தலையொட்டி வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.

இந்தியாவில் மே 2023 முதல் 2024 ஜூன் வரையிலான தேர்தல் காலகட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இந்துத்துவ கருத்துருவாக்கப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. பல படங்கள் ஏற்கெனவே வெளிவந்துள்ள நிலையில், சில படங்கள் மே–ஜூன் இடைப்பட்ட நாட்களில், அதாவது நாடாளுமன்றத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவின்போது வெளியாக உள்ளன. தேர்தல் சமயத்தில் இத்தகைய வெறுப்பு பிரச்சார திரைப்படங்களை(Hate Propaganda Flim)  அதிகளவில் வெளியிடுவதன் மூலம், “இந்து மக்களுக்கும் நாட்டிற்கும் இஸ்லாமியர்களால் பெரும் ஆபத்து இருக்கிறது”, “பாகிஸ்தானால், தேசத்திற்கு ஆபத்து” போன்ற கருத்துருவாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தி மதவெறியையும், தேசவெறியையும் கிளப்பிவிடுவதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறது பாசிச கும்பல்.

தேர்தல் பிரச்சாரங்களாக திரைப்படங்கள்

2024 நாடாளுமன்றத் தேர்தல் நடந்துகொண்டிருக்கும் சூழலில், இந்தாண்டு ஜனவரி மாதத்திலிருந்து, “மைன் அடல் ஹூன்” (Main Atal Hoon), “சட்டப்பிரிவு 370” (Article 370), “பஸ்டர் – தி நக்சல் ஸ்டோரி, ரசாக்கர்” (Bastar: The Naxal Story), “சுதந்திர வீரர் சாவர்க்கர்” (Swatantra Veer Savarkar), “ஜே.என்.யு: ஜஹாங்கீர் நேஷனல் யுனிவர்சிட்டி” (JNU-Jahangir National University), “விபத்தா அல்லது சதியா: கோத்ரா” (Accident or Conspiracy: Godhra), “தி சபர்மதி ரிப்போர்ட்” (The Sabarmati Report), “திப்பு”(Tipu), “எமெர்ஜென்சி” (Emergency) உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

இப்படங்கள் அப்பட்டமான இஸ்லாமிய வெறுப்பையும், வரலாற்று உண்மைகள் என்ற பெயரில் காவிக் குப்பைகளையும், மோடி அரசுக்கு எதிராக போராடுபவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் நோக்கத்தையும் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளன. மூன்றாவது முறை ஆட்சியை பிடிப்பதற்காக பாசிச மோடி கும்பல் கலவரத்தை தூண்டும் வகையில் அப்பட்டமான வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதை போல, இப்படங்களும் பாசிச பா.ஜ.க-விற்கும் மோடிக்கும்  அறிவிக்கப்படாத தேர்தல் பிரச்சாரமாக செயல்படுகின்றன.


படிக்க: மோடியின் வெறுப்பு பேச்சு: செவிடாகிப் போன தேர்தல் ஆணையம்


“தி கேரளா ஸ்டோரி” என்ற இஸ்லாமிய வெறுப்பு படத்தை இயக்கிய சுதிப்தோ சென்-இன் மற்றொரு படமான “பஸ்டர் – தி நக்சல் ஸ்டோரி” திரைப்படத்தின் முன்னோட்டத்தில்,  மாவோயிஸ்டுகளால் சி.ஆர்.பி.எஃப். படையினர் கொல்லப்படுவதாகவும், அதனை ஜே.என்.யூ. மாணவர்கள் கொண்டாடுவதாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்டர் பகுதியில் கனிமவள கொள்ளைக்காக பழங்குடி மக்கள் மீது அரசுத்தொடுக்கும் தாக்குதல்களுக்கு எதிராக போராடிவரும் மாவோயிஸ்டுகளை பழங்குடி மக்களுக்கு எதிரானவர்களாகவும், அவர்களை அழித்தொழிப்பதுதான் அரசின் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் இப்படம் சித்தரிக்கிறது. இத்திரைப்படம் வெறுப்பு பிரச்சாரத்தையும் வன்முறையையும் தூண்டுவதை அம்பலப்படுத்தி, இப்படத்தின் போஸ்டரை கிழித்து படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர்களுக்கு எதிராக ஜே.என்.யு. மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.கோ

இதேபோல, கோத்ரா ரயில் எறிப்பு சம்பவத்தை இஸ்லாமியர்கள் செய்த பயங்கரவாத தாக்குதலாக சித்தரிக்கும் விதமாக “கோத்ரா: விபத்தா அல்லது சதியா” என்ற திரைப்படம் வெளிவரவிருக்கிறது. இப்படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் மட்டும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன்தொடர்ச்சியாக ஆர்.எஸ்.எஸ் குண்டர்களால் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட குஜராத் படுகொலை அப்பட்டமாக மூடிமறைக்கப்பட்டுள்ளது. ஆனால், திஸ்தா செதல்வாட், தெகல்கா பத்திரிகை நிரூபர்கள் உள்ளிட்டோர் மேற்கொண்ட விசாரணையில், ஆர்.எஸ்.எஸ். காவி பயங்கரவாதிகளால் பல நாட்கள் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியே குஜராத் படுகொலை என்று தெரியவந்தது. எனவே, குஜராத் படுகொலையை நிகழ்த்துவதற்கான முகாந்திரமாக, காவி குண்டர்கள் சொந்த அமைப்பினரையே கொன்றுள்ளனர் என்று அப்போதே விவாதமானது. மேலும், 2019-ஆம் ஆண்டு வி.எச்.பி. குண்டர்ப்படையைச் சேர்ந்த சாமியார் பிராச்சி, “பிரதமர் (மோடி) அவர்களே, கோத்ரா போல ஒரு சம்பவத்தை நிகழ்த்தி பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுங்கள்” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், வரலாற்று திரைப்படம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்-இன் பயங்கரவாத நடவடிக்கைகளை  மூடி மறைத்துவிட்டு, இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மறைத்துவிட்டு அவர்களையே பயங்கரவாதிகளாக சித்தரிக்கிறது இத்திரைப்படம். இதேபோன்றே கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து பொய்-வெறுப்பு குப்பைகளை அடிப்படையாக கொண்டு “சபர்மதி ரிப்போர்ட்” என்ற மற்றொரு திரைப்படமும் வெளிவர உள்ளது.

வரலாற்று நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தும் திரைப்படங்களில் எவ்வித தவறான தரவுகளும் இடம்பெறக்கூடாது என்பது காட்சி ஊடகத்தின் நெறியாக சொல்லப்படுகிறது. ஆனால் அவை அனைத்தையும் குப்பைத் தொட்டியில் வீசியெறிந்துவிட்டு, வரலாற்றை ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு ஏற்றவாறு திரித்து திரைப்படங்களாக்கி வருகிறது பாசிசக் கும்பல்.

18-ஆம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்திய திப்பு சுல்தான் குறித்து “திப்பு” என்ற திரைப்படம் வெளிவரவுள்ளது. அப்படத்தின் டிரெய்லரில், திப்புவின் காலத்தில் 8000 இந்து கோவில்கள் மற்றும் 27 தேவாலயங்கள் இடிக்கப்பட்டதாகவும், 40 லட்சம் இந்து மக்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டதாகவும், மாட்டிறைச்சி உண்ணும்படி இந்துக்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்துக்கள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், 2000-க்கும் மேற்பட்ட பார்ப்பனக் குடும்பங்கள் அழிக்கப்பட்டதாகக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை போர்க்குணத்துடன் எதிர்த்து நின்ற திப்பு சுல்தானை இஸ்லாமிய மதவெறியனாக சித்தரிக்கும் ஆர்.எஸ்.எஸ்-இன் கட்டுக்கதைகளுக்கு உயிர்கொடுக்கும் விதமாக எந்த அடிப்படை ஆதாரமுமின்றி இந்த வெறுப்பு படத்தை எடுத்துள்ளார்கள்.


படிக்க: பாசிச பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகரிக்கும் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள்!


ஆனால், திப்பு சுல்தானிற்கு நேரெதிராக ஆங்கிலேயர்களின் காலை நக்கிப்பிழைத்த சாவர்க்கரை விடுதலைப்போராட்ட வீரனாக சித்தரிக்கும் “சுதந்திர வீர் சாவர்க்கர்” என்ற திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியானது. 2019-ஆம் ஆண்டு மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட “பி.எம். நரேந்திர மோடி(PM Narendra Modi)” படத்தின் தயாரிப்பாளர்கள்தான் இப்படத்தையும் தாயாரித்துள்ளனர். இதிலிருந்தே பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் கும்பலின் காவிக்குப்பைகளையும், வரலாற்றுத் திரிபுகளையும் படமாக்குவதற்காகவே திரைத்துறையில் ஒரு கும்பல் உருவாகியிருப்பது தெளிவாகிறது.

இந்துத்துவ கொள்கைகளை பரப்புவதற்காகவே எடுக்கப்படும் இவ்வகைப்பட்ட படங்கள் பா.ஜ.க-வின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக போரடுபவர்களை மோடிக்கும்பல் குறிப்பிடுவதுபோல் ‘அர்பன் நக்சல்’ என்று முத்திரைக்குத்தும் வகையிலும் எடுக்கப்படுகிறது. இந்தியாவின் பொதுக் கல்வி நிறுவனமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை (ஜே.என்.யு.) குறிவைத்து “ஜே.என்.யு: ஜஹாங்கீர் நேஷனல் யுனிவர்சிட்டி” என்ற பெயரில் படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. குண்டர்ப்படை புனிதப்படுத்தி காட்டப்படும் இப்படத்தில், பல்கலைக்கழகத்தில் செயல்பட்டுவரும் இடதுசாரி மாணவர் அமைப்புகளை தேச விரோத அமைப்புகளாகவும், போராடும் முற்போக்கு எண்ணம் கொண்ட மாணவர்களை தேசவிரோதிகளாகவும் சித்தரிக்கிறது. இப்பட டீசரில் பின்னணி குரலில், “நாட்டின் முன்னணி பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் வகுப்பறைகளைக் காட்டிலும் ஊடகத்தின் முன்னணியில்தான் இருக்கிறார்கள்” என்று போராடும் மாணவர்கள் மீது வெறுப்பை கக்குகிறது.

இது போன்று பல திரைப்படங்கள் பாசிசக் கும்பலின் நச்சுக்கருத்துகளை பரப்புவதற்காக எடுக்கப்பட்டு வருகிறது, இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது சொற்பமே. உலகளவில் அதிக திரைப்படங்களை தாயாரிக்கும் மையமாக இருக்கும் பாலிவுட் (Bollywood) எனும் இந்தித்திரைத்துறை பாசிஸ்டுகளின் பிரச்சாரக்கருவியாக மாறிவருகிறது.

காவிமயமாகியுள்ளத் திரைத்துறை

மோடிக்கும்பல் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அரசின் அனைத்து துறைகளிலும் சமூகத்திலும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஊடுருவி தனது ஆதிக்கத்தை செலுத்திவருகிறது. அந்தவகையில் பாலிவுட் என்று அழைக்கப்படும் இந்தித் திரைப்படத்துறை ஏறக்குறைய பாசிஸ்டுகளின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வந்துள்ளது. சந்தர்ப்பவாதமாகவும் பிழைப்புவாதமாகவும் உள்ள படைப்பாளர்களுக்கு பணம், விருதுகளைக் கொடுத்து இந்துத்துவ படங்களை எடுக்க வைக்கிறது, காவி கும்பல். பணத்திற்கு மயங்காதவர்களை மிரட்டி பணிய வைக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன.

இத்தகைய படங்கள் வெளிவரும்போது பாசிச மோடி அரசும் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார கும்பலும் படத்திற்கும் படக்குழுவினருக்கும் பல்வேறு சலுகைகளையும் வாரி இறைக்கின்றன. சான்றாக, “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” மற்றும் “தி கேரளா ஸ்டோரி” போன்ற திரைப்படங்கள் மோடியே நேரடியாக பாராட்டி விளம்பரப்படுத்தியது; வரி தள்ளுபடி செய்வது; திரையரங்குகளில் இலவசக் காட்சிகளுக்கான ஏற்பாடு செய்வது; திரையரங்குகளில் சங்கிகளை குவித்து படத்தை ஓட வைப்பது போன்ற நடவடிக்கைகள் இப்படங்களுக்கு லாபத்தை அளிப்பதோடு பிற தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களையும் இத்தகைய படங்களை எடுக்கத் தூண்டுகிறது.


படிக்க: தி கேரளா ஸ்டோரி: முஸ்லீம் வெறுப்பிற்கான மற்றுமொரு கருவி!


இதுகுறித்து பேசும் ஆவணப்படத் தயாரிப்பாளர் ராகேஷ் சர்மா, “இந்தி படங்கள் அடியோடு மாறிவிட்டன. அவர்கள் வெறித்தனமாக வகுப்புவாதமாக மாறிவிட்டனர். அவை பெரும்பாலும் பாசிசப் போக்குகளை ஊக்குவிக்கின்றன” என்கிறார்.

இன்னொபுறம், முற்போக்கு படங்களை ஒழித்துக்கட்டுவதற்கும் பாசிசக் கும்பல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. காட்சி ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை இயற்றியது; தணிக்கைத்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது; திரைத்துறையில் பாசிஸ்டுகளின் ஊடுருவல் அதிகரித்திருப்பது போன்றவற்றின் மூலம் பாசிசக் கும்பல் இதனை சாத்தியமாக்கியுள்ளது.

மோடியின் ஆட்சியில் நடந்த விவசாயிகள், மாணவர்கள் போராட்டங்கள் மற்றும் அவர்கள் மீதான போலீசு தாக்குதல்கள் குறித்து 2021 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட “தாண்டவ்” வெப் சீரிஸை மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி அந்த சீரிஸ் மீது பல வழக்குகளைத் தொடுத்தது பாசிசக் கும்பல். அந்த சீரிஸை வெளியிட்ட அமேசான் பிரைம் நிறுவனத்தின் இந்திய தலைவரை கைது செய்ய வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

ஒரு கொள்கையையோ, ஒரு நிகழ்வை பற்றிய குறிப்பான சிந்தனையோ வெகுஜன மக்களுக்கு சென்று சேர்க்கும் சிறந்த தளமாக திரைப்படங்கள் செயல்படுகின்றன. அதனால்தான் திரைத்துறையை தனக்கான முக்கிய பிரச்சாரக்க கருவியாக முசோலினி, ஹிட்லர் போன்ற பாசிஸ்ட்டுகள் வைத்திருந்தனர். தற்போது மோடிக்கும்பலும் தனக்கான பிரச்சாரக் கருவியாக இந்தித்திரைத்துறையை மாற்றிவருகிறது. இந்த அபாயகரமான போக்கு உடனடியாக தடுக்கப்பட வேண்டும். பாசிஸ்டுகளால் கொண்டுவரப்படும் வெறுப்படங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும், ஜனநாயக சக்திகள் அவற்றை அம்பலப்படுத்த வேண்டும். அதேவேளையில், மக்களின் உண்மையான பிரச்சனைகளை பேசக்கூடிய, சாதிய வர்ண கட்டமைப்பிற்கு எதிரான, பெண் விடுதலை, வர்க்க சிந்தனை, மத நல்லிணக்கம் போன்றவற்றை பேசும் படங்களை ஊக்குவிக்க வேண்டும்.


வெண்பா

(புதிய ஜனநாயகம் – மே 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மாற்றுக்கான மக்கள் கோரிக்கைகளும் அரசியல் கட்சிகளின் கவர்ச்சி வாக்குறுதிகளும்!

2024 நாடாளுமன்றத் தேர்தல்:
மாற்று அரசுக்கட்டமைப்பைக் கோரும் மக்கள் கோரிக்கைகளும்
அரசியல் கட்சிகளின் கவர்ச்சி வாக்குறுதிகளும்!

த்தாண்டுகால மோடி ஆட்சியில் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கையால் இந்திய மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். அம்பானி-அதானி-அகர்வால் கார்ப்பரேட் கும்பல்களைத் தவிர்த்து இதர உழைக்கும் மக்களுக்கும் சிறு-குறு, நடுத்தரத் தொழில்முனைவோருக்கும் மோடி ஆட்சியே ஒரு பேரிடர் என்பது நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

மூன்றாவது முறையாக மோடி ஆட்சிக்கு வந்தால் பாசிசம் நிலைநாட்டப்படும் என்ற அபாய சூழலில்தான் 18-வது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலானது, எதிர்க்கட்சிகளுக்கு அவர்களது இருப்பைத் தீர்மானிக்கிற வாழ்வா? சாவா? போராட்டமாக இருக்கிறது; ஆளும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. காவி கும்பலுக்கு இந்துராஷ்டிரத்திற்கான நுழைவாயிலாக இருக்கிறது. எனவே, இத்தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதில் ஆளும் பா.ஜ.க-வும், எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணியும் தீவிரமாக உள்ளன.

இத்தேர்தலில் மோடி ஆட்சி நீக்கப்பட வேண்டும் என்பதோடு, நீட்-புதியக் கல்விக் கொள்கை ரத்து, குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்ட அங்கீகாரம், அரசு கொள்முதல் நிலையங்கள் உருவாக்கப்படுவது, விலைவாசி குறைப்பு,  நிரந்தர அரசு வேலைவாய்ப்பு, பழைய ஓய்வூதியம், தொழிலாளர் உரிமைகள் நிலைநாட்டப்படுவது, அரசு தொழிற்துறைகள் உருவாக்கப்படுவது,  தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்ட அரசு நிறுவனங்கள் மீட்கப்படுவது, சி.ஏ.ஏ., ஊபா, புதிய குற்றவியல் சட்டம் போன்ற கருப்புச் சட்டங்கள் ஒழிக்கப்படுவது, காஷ்மீர்-லடாக்கிற்கு மீண்டும் மாநில அந்தஸ்து, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்குவது, ஆளுநர் முறை ஒழிக்கப்படுவது, மாநிலங்களுக்கான நீர்ப் பங்கீட்டில் கழிமுகப்பகுதி மாநிலங்களின் நீர் உரிமையை உத்தரவாதம் செய்வது, எல்லாவற்றுக்கும் மேலாக சாதி-மதக் கலவரங்களைத் தூண்டுகிற ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. தடை செய்யப்பட வேண்டும் என்பதே பெரும்பான்மை மக்களின் உள்ளார்ந்த விருப்பமாகவும், கோரிக்கையாகவும் இருக்கிறது. மக்களின் இக்கோரிக்கைகள் குறித்து கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் கூறுவதென்ன?

இந்துராஷ்டிரத்திற்கான மோடியின் உத்தரவாதம்

“மீண்டும் மோடி வேண்டும் மோடி”  என்ற முழக்கத்தில் தேர்தலை எதிர்க்கொண்டு வரும் காவி கும்பல், “மோடியின் உத்தரவாதம் (Modi Ki Guarantee)” என்ற பெயரில் பா.ஜ.க-வின்தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. 69 பக்கங்களைக் கொண்ட இவ்வறிக்கை மோடி பிராண்டை பிரபலப்படுத்துவதற்கான அறிக்கையாகத்தான் இருக்கிறது. இது பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை அல்ல மோடியின் அறிக்கை என எதிர்க்கட்சிகளும் அம்பலப்படுத்தியுள்ளன.


படிக்க: நிதி ஆயோக்-இன் மோசடி அறிக்கை: மோடியின் பாசிச ஆட்சியில் வறுமை ஒழிந்த வேடிக்கை!


“ஆண்டிற்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்”, “விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்” என்று 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கும்பல் அறிவித்த வாக்குறுதிகளெல்லாம் பொய் என அம்பலப்பட்டு நாறிப்போயுள்ளது. எனவே, இம்முறை அதுபோன்ற டாம்பீகமான அறிவிப்புகள் எதுவும் பா.ஜ.க. அறிக்கையில் இடம்பெறவில்லை. இதையே மோடி ஊடகங்கள் “கவர்ச்சிவாத அறிவிப்புகள் இல்லை, நிலையான வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது” என மெச்சிப் புகழ்கின்றன.

இந்தத் தேர்தல் அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் செயல்படுத்திய அதே மக்கள் விரோதத் திட்டங்களைத்தான் மீண்டும் செயல்படுத்துவதாகவும் வலுப்படுத்துவதாகவும் அறிவித்திருக்கிறது, மோடிக் கும்பல். “மோடியின் உத்தரவாதம்” என்று அறிவிக்கப்பட்டுள்ள பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையில், அக்னிபாத் திட்டம், வேளாண் சட்டங்கள் ரத்து போன்ற மக்களின் கோரிக்கைகள் குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை.

“நிலமற்ற விவசாயிகள், கூலி ஏழை விவசாயத் தொழிலாளர்கள், ஆதிவாசிகள் மற்றும் தலித் விவசாயிகள், சிறு குறு மீனவர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களின் கோரிக்கைகள் குறித்து எந்த உத்தரவாதத்தையும் மோடி அளிக்கவில்லை. மோடியின் பத்தாண்டுகால ஆட்சியும், மோடியின் உத்தரவாதமும் இந்திய விவசாய வர்க்கத்திற்கு செய்த துரோகம்”  என்கின்றனர் தேசிய விவசாயிகள் கூட்டணி அமைப்பினர். பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்துவிட்டு, காலி அரசுப் பணியிடங்களைத் தேர்வுகள் மூலம் நிரப்புவோம் என்ற பா.ஜ.க-வின் தேர்தல் வாக்குறுதியை முதலாளித்துவ ஊடகங்களே எள்ளி நகையாடுகின்றன.

மோடியின் பத்தாண்டுகால கார்ப்பரேட் நலத் திட்டங்களால் இந்திய மக்களிடம் மோடி எதிர்ப்பு மனநிலை உருவாகியிருக்கிறது. சொந்தக் கட்சியினரே மோடியை முன்னிறுத்த அஞ்சுமளவிற்கு மோடி எதிர்ப்பலை இருக்கிறது. விவசாயிகள் போராட்டம், லாரி ஓட்டுநர்கள் போராட்டம், அயோத்தியில் ராமர் கோயிலுக்காக மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டதற்கு எதிரான மக்கள் போராட்டம், இடஒதுக்கீட்டிற்கான மராத்தா சாதியினர் போராட்டம், ராஜபுத்திர சாதியினர் போராட்டம் ஆகியவற்றால் மோடி கும்பல் தோல்வி முகத்திலிருக்கிறது. இந்துராஷ்டிரத்  திட்டங்களாலும், இஸ்லாமிய வெறுப்புப் பேச்சுக்களாலும் மட்டுமே மக்களிடம் ஓட்டு வாங்க முடியாது என்பதை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. காவி கும்பல் நன்கு உணர்ந்திருக்கிறது.

ஆகையால்தான், இலவசங்களையும் மக்கள் நலத்திட்டங்களையும் வெறுக்கின்ற இக்கும்பல், தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக 5 ஆண்டுகளுக்கு இலவச ரேசன், 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்குதல், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஏழைக் குடும்பங்களுக்கு 5 லட்சத்திற்கு மருத்துவம், பிரதம மந்திரி சூரிய வீடு திட்டத்தின் கீழ் கட்டணமில்லா மின்சாரம், பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை தொடர்ந்து அதிகரிப்போம், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நிலையான வருமானத்தை வழங்குவோம் எனத் தேர்தல் அறிக்கையில் கவர்ச்சித் திட்டங்களைத் அள்ளி வீசியிருக்கிறது.

மேலும், 2025-ஆம் ஆண்டு பழங்குடிகள் ஆண்டாக கொண்டாடப்படும்; உலகம் முழுவதும் திருவள்ளுவர் பண்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளையும் அளித்துள்ளது. ஆனால், இந்த ஏமாற்று வாக்குறுதிகளால் பத்தாண்டு கால மோடி ஆட்சியில் பழங்குடி மக்கள் மீது தொடுக்கப்பட்ட அரசு பயங்கரவாதத்தையும், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தையும் அநீதிகளையும் மறைக்க முடியாது என்பதே எதார்த்தம்.

அதேபோல், தமிழ்நாடு தேர்தலின் போது தி.மு.க. ஒப்புதலுடன் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துவிட்டார்கள் என்று அள்ளிவிட்ட மோடி, தமிழ்நாட்டு மீனவர் நலனுக்காகக் கச்சத்தீவை மீட்போம் என்ற உத்தரவாதத்தை அளிக்கவில்லை.  தமிழ் மொழியையும், தமிழ்நாட்டின் பார்ப்பன எதிர்ப்பு மரபையும் அழிப்பதற்காகவே, மோடி-அண்ணாமலை-வானதி கும்பல் தமிழ் மீதும் தமிழ்நாட்டு மக்கள் மீதும் அக்கறை இருப்பதுபோல் பாசாங்கு செய்கிறது. மேலும், தமிழ்நாட்டு வளங்களை அம்பானி -அதானி கும்பலுக்கு படையல் வைப்பதற்காகவும் இக்கும்பல் இத்தகைய நயவஞ்சக வேலைகளில் ஈடுபடுகிறது.

மொத்தத்தில், மோடியின் உத்தரவாதம் என்பது புதியக் கல்விக் கொள்கை, பொது சிவில் சட்டம்,  ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள அட்டை,  பாரதிய கையெழுத்துப் பிரதிகள் மற்றும் கல்வெட்டுகள் குறித்து ஆராய்ச்சி செய்வது, பாரதிய சமஸ்கிருதி கோஷ் என்ற பெயரில் ‘பழங்கால பாரத’ நாகரீகம், மொழிகள், பண்பாடு, மரபுகளை தொழில்நுட்ப உதவியுடன் பாதுகாப்பது, அயோத்தியை மேம்படுத்துவது, இந்தியாவின் ஆடம்பரத்தையும், பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டுகிறோம் என்ற பெயரில் “இந்தியாவில் திருமணம்”  திட்டம் உள்ளிட்ட இந்துராஷ்டிரத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கானது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை – செயல்திட்டமற்ற கவர்ச்சிவாதம்:-

“அரசியலமைப்பைப் பாதுகாப்போம்”  என்ற முழக்கத்துடன் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய காங்கிரஸ், “நீதிக்கான ஆவணம்”  (Nyay Patra) என்ற தனது தேர்தல் அறிக்கையில் கூட்டாட்சி, சமூக நீதி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற கூறுகளை முன்வைத்திருக்கிறது. எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின் அடிப்படையில்  விவசாய விளைப்பொருட்களுக்கு 50 சதவிகித உத்தரவாதத்துடன் கூடிய குறைந்தபட்ச ஆதாரவிலை, 30 லட்சம் காலி அரசுப் பணியிடங்களை நிரப்புவது, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு ஆண்டிற்கு 1 லட்சம் நிதியுதவி, அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு, பொதுப் போக்குவரத்திலும், ரயில்களிலும் மோடி அரசால் மூத்தக் குடிமக்களுக்கு ரத்து செய்யப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்படும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், ஜி.எஸ்.டி. ரத்து செய்யப்படும், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை ஒழிக்கப்படும் போன்ற காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகளை பெரும்பான்மை ஜனநாயக சக்திகள் வரவேற்றுள்ளனர். காங்கிரசின் அணுகுமுறை மாறியிருக்கிறது என பா.ஜ.க. எதிர்ப்பு ஊடகங்கள் பாராட்டுகின்றன. காங்கிரசின் தேர்தல் அறிக்கையை “நாடாளுமன்றத் தேர்தலின் கதாநாயகன்” என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

மோடி அரசுக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்ற மக்கள் போராட்டங்களே காங்கிரசின் அணுகுமுறையை மாற்றியிருக்கிறது என்பதே உண்மை. மோடி அரசிற்கு எதிராக விவசாயிகளின் போராட்டம்,  மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம், அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான இளைஞர்களின் போராட்டம், நீட் தேர்வுக்கு எதிரான தமிழக மக்களின் போராட்டம், குக்கிகளின் போராட்டம்,  சி.ஏ.ஏ-க்கு எதிரான  இஸ்லாமியப் பெண்களின் ஷாகீன்பாக் போராட்டம் என கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு மக்கள் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த மக்கள் போராட்டங்கள்தான் பாசிச மோடியை தோல்வி முகத்திற்கு தள்ளியிருக்கின்றன என்பதை காங்கிரசும் உணர்ந்திருக்கிறது. ஆகவே, மக்களின் கோரிக்கைகளை குறைந்தபட்சமாவது வாக்குறுதிகளாகக் கொடுத்தால் மட்டுமே தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற சூழலில்தான் காங்கிரசு கட்சி இத்தகைய வாக்குறுதிகளை அளித்திருக்கிறது. இந்த வாக்குறுதிகள் பாசிச கும்பலுக்கு நெருக்கடியை எற்படுத்தியிருப்பதால்தான், மோடி தினந்தோறும் தேர்தல் பரப்புரைகளில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பொய்-வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்

ஆனால், காங்கிரசு மக்கள் கோரிக்கைகள் சிலவற்றை வாக்குறுதிகளாக அறிவித்திருப்பினும் அவை மக்களின் கோரிக்கைகளை முழுமையாக பிரதிபலிக்கவில்லை.

மோடி அரசால் கடந்த பத்தாண்டுகளில் கொண்டுவரப்பட்ட  புதிய கல்விக் கொள்கை, சி.ஏ.ஏ., சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டம், புதிய குற்றவியல் சட்டம் உள்ளிட்டவற்றை ரத்து செய்வதாகக் காங்கிரஸ் அறிவிக்கவில்லை. மேலும், பழைய ஓய்வுதியத் திட்டம், ஆளுநர் முறை ரத்து, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்குவது குறித்தும் காங்கிரசு தனது ‘நீதி ஆவணத்தில்’ பேசவில்லை.


படிக்க: குறையும் வாக்குப்பதிவு: பா.ஜ.க – விற்கு மட்டும்தான் நெருக்கடியா?


மேலும், ‘சமூகநீதி’ குறித்து பேசுகிற இந்த ஆவணத்தில், உழைக்கும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சுக் கொண்டிருக்கும் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யாமல் அதற்கு மாற்றாக ஜி.எஸ்.டி. 2.0 கொண்டு வருவோம் என்று கூறியிருக்கிறது. ஏழை மாணவர்களின் கல்வியையும் உயிரையும் பறிக்கும் நீட், கியூட் போன்ற தேர்வுகளை ரத்து செய்யாமல் மாநிலங்கள் விருப்பப்பட்டால் நடத்திக்கொள்ளலாம் என்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை பறிப்பதற்காக கொண்டுவரப்பட்ட உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை, அனைத்து சாதியினருக்கும் விரிவுப்படுத்துவதாக அறிவித்திருக்கிறது.

உண்மையில் மக்கள் விரோதமான இச்சட்டங்களை ரத்து செய்வதுதானே சமூக நீதியாக இருக்க முடியும். மாறாக, இச்சட்டங்களில் திருத்தங்கள் செய்வதும், வேறு பெயரில் கொண்டு வருவதும்  காங்கிரசின், மக்களை ஏமாற்றும் முயற்சியாகத்தான் உள்ளது. ‘சமூகநீதி மாடல்’ ஆட்சியை நடத்துகிற தி.மு.க-வும் இதனை விமர்சிக்கவில்லை.

இதுதவிர, தி.மு.க. முன்வைத்துள்ள தேர்தல் வாக்குறுதிகளான, மாநில அரசுகளைக் கலைக்கும் சட்டப்பிரிவு 356 நீக்கம், மாநில அரசுகளின் ஆலோசனையின்படி ஆளுநர் நியமனம், கல்வியைப் பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல், கச்சத்தீவை மீட்பது, புதியக் கல்விக் கொள்கை முற்றிலுமாக ரத்து, ஒன்றிய அரசால் மாநில அரசுகளின் மீது திணிக்கப்படும் அனைத்துத் நுழைவுத் தேர்வுகளும் ரத்து போன்றவை குறித்து காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

காங்கிரசின் தேர்தல் அறிக்கையில், அரசியல் சாசனத்தின் ஏழாவது அட்டவணையில் பொதுப்பட்டியலில் உள்ள சில துறைகளை மாநிலப்பட்டியலுக்கு மாற்றுவது குறித்து கருத்தொற்றுமை ஏற்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளதே தவிர எந்தவித உத்தரவாதமும் கொடுக்கப்படவில்லை. எனவே தி.மு.க-வின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவது என்பது கேள்விக்குறியேயாகும்.

அதேபோல், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற காங்கிரசின் வாக்குறுதிக்கு சொந்தக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்திருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று மூத்த காங்கிரஸ்காரர் ஆனந்த சர்மா அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கேவிற்கு கடிதம் எழுதியிருக்கிறார். சமீபத்தில், “சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய உதயநிதி நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும்” என தெலுங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதும் குறிப்பிடத்தக்கது. காங்கிரசுக்குள்ளேயே ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. சித்தாந்தத்தை பேசுபவர்கள் இருக்கும்போது, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வை தடைசெய்வது என்பது காங்கிரசால் நினைத்துப் பார்க்க முடியாததாகும்.

மேலும், வேலைவாய்ப்பை உருவாக்குவதுதான் தனது புதிய லட்சியக் கொள்கை என்று தனது தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கூறியிருக்கிறது. அக்னிபாத் திட்டம் ரத்து மற்றும் 30 லட்சம் காலி அரசுப் பணியிடங்களை நிரப்புவதைத் தவிர, புதிதாக அரசு தொழிற்துறைகள்- வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவது குறித்து எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை. பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவதுபோல, இந்தியாவை உள்நாட்டிற்கும், உலகத்திற்குமான உற்பத்தி மையமாக மாற்றுவோமென்று காங்கிரசும் குறிப்பிட்டுள்ளது.

காங்கிரசு தனது அறிக்கையில், 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் நிதியுதவியுடன் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஒரு ஆண்டு தொழிற்பழகுநர் (Apprenticeship) பயிற்சி அளிக்கப்படும் என்பதையே மிகப்பெரிய வேலைவாய்ப்பாகக் குறிப்பிட்டுள்ளது. இத்திட்டமானது, நிரந்தர வேலைவாய்ப்பை ஒழித்துக்கட்டுவதோடு, இந்திய இளம் தொழிலாளி வர்க்கத்தை கார்ப்பரேட் முதலாளிகள் ஒட்டச் சுரண்டுவதற்கான ஏற்பாடுமாகும். இத்திட்டம், தொழிலாளர் நலச் சட்டத்தையே செல்லாக்காசாக்கிவிடும்.

அதுமட்டுமின்றி, விவசாய சங்கப் பிரதிநிதிகள், உழவர்-உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் தனிப்பட்ட முன்னணி விவசாயிகள் அடங்கிய தன்னாட்சிமிக்க இ-சந்தைகள் செயல்படுத்தப்படும்; வேளாண் விளைபொருட்களை விவசாய சந்தைகளிலோ, விற்பவர்-வாங்குபவர் ஒப்பந்தத்தை மின்னணு முறையில் பதிவேற்றம் செய்யக்கூடிய அவர்களுக்கு விருப்பமான வேறொரு இடத்திலோ விற்பனை செய்து கொள்ளலாம் என்று காங்கிரஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது வேளாண் விளைபொருட்களை அரசுக் கொள்முதல் செய்வதை கைகழுவுகிற சதித்திட்டமாகும். வேளாண் பொருட்களை அரசு கொள்முதல் செய்யாது என்றால், விவசாயிகளின் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை என்பதும் கேள்விக்குறியாகிவிடும். காங்கிரசு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இத்தகைய முரண்பட்ட கூறுகள் பல இருக்கின்றன. நாம் குறிப்பிட்டிருப்பது சிலவே.

சி.பி.எம். கட்சியின் வெற்று வாக்குறுதிகள்:

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை அளிக்க வேண்டும், இந்தியாவின் பொருளாதார இறையாண்மைக்கு சி.பி.எம். உறுதியாகப் போராடும், பொதுத்துறைகள் தனியார்மயமாக்குவது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் மற்றும் மாற்றியமைக்கப்பட வேண்டும், சிறுகுறு தொழில் ஊக்குவிக்கப்பட்டு விரிவுப்படுத்தப்பட வேண்டும், தொழிலாளர்களுக்கான மாதாந்திர வருமானம் ரூ.26,000-க்கு குறையாமல் இருக்க வேண்டும், கல்வி தனியார்மயமாவது, காவிமயமாவது மற்றும் மையப்படுத்தப்படுவது ஆகியவற்றை மாற்றியமைக்க வேண்டும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவிகிதம் கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும், தேசிய பாதுகாப்புச் சட்டம், ஆயுதப்படை சிறப்புச் சட்டம், ஊபா போன்ற சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும், கார்ப்பரேட்டுகளிடம் அரசியல் கட்சிகள் நிதி பெறுவதைத் தடுத்து அரசே தேர்தலை நடத்த வேண்டும், திட்டக்கமிஷனை மீட்டமைக்க வேண்டும் உள்ளிட்டவற்றை சி.பி.எம். தனது வாக்குறுதிகளாக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கிறது. இவ்வாக்குறுதிகளெல்லாம் எவ்வாறு நிறைவேற்றப்படும், அதற்கான வழிமுறை என்ன என்பது எதுவுமே குறிப்பிடப்படாமல் வெற்று வாக்குறுதிகளாகவே அளித்திருக்கிறது.

பாசிச பா.ஜ.க-வுக்கு மாற்று என்று சொல்லும் எதிர்க் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் பல வண்ணங்களிலும், ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவும் இருக்கின்றன. பாசிசத்திற்கு மாற்று என்று சொல்கிற இவர்களிடம் பாசிசத்திற்கு எதிரான மாற்று அரசியல்-பொருளாதார கொள்கைகளை உள்ளடக்கிய ஒரு குறைந்தபட்ச செயல்திட்டம் இல்லாததே தேர்தல் அறிக்கைகள் பல வண்ணங்களில் காட்சியளிப்பதற்கான காரணம். குறைந்தபட்ச செயல்திட்டம் இல்லாததன் விளைவாகவே இத்தகைய கொள்கை வேறுபாடுகளும், கூட்டணியில் விரிசல்களும், குழப்பங்களும் ஏற்படுகின்றன என்று நாம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறோம்.

முதலாளித்துவ கட்சிகளான ஆம் ஆத்மியும், தி.மு.க-வும் இந்தியா கூட்டணிக்கு குறைந்தபட்ச செயல்திட்டம் வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் முன்வைத்திருக்கின்றன. கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக்கொள்கிற சி.பி.எம்., குறைந்தபட்ச செயல்திட்டத்திற்காகவும், நாடு முழுவதும் ஒரே கூட்டணிக்காகவும் போராடியிருக்க வேண்டும். ஆனால், அக்கட்சியோ, கேரளாவில் தனது வாக்கு வங்கியையும், ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒன்றுபட்ட கூட்டணிக்காகவும், குறைந்தபட்ச செயல்திட்டத்திற்காகவும் போராடவில்லை.


படிக்க: தோல்வி முகத்தில் மோடி-அமித்ஷா கும்பல்: மக்கள் போராட்டமே ஆயுதம்!


மாற்று அரசியல் பொருளதாரக் கட்டமைப்பே தேவை!

காங்கிரஸ், தி.மு.க. சி.பி.எம் கட்சிகள் தங்களது வாக்குறுதிகளை, ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுவரும் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திக் கொண்டே நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளன. ஆனால் மோடியின் இந்த பத்தாண்டுகால ஆட்சியில் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட இந்த மறுகாலனியாக்கக் கொள்கைகளைகளால்தான் இந்திய விவசாயம், தொழிற்துறை, சேவைத்துறை, சிறு-குறு தொழில்கள் நாசமாக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு லட்சக்கணக்கான விவசாயிகள் மரண படுகுழிக்கு தள்ளப்பட்டுள்ளனர். பொதுத்துறைகள் நிறுவனங்கள் கார்ப்பரேட் கும்பலுக்கு தாரைவார்க்கப்பட்டு, அரசுத்துறை வேலைகள் அனைத்தும் ஒப்பந்தமயமாக்கப்பட்டுள்ளன, இந்திய நாட்டின் கோடான கோடி உழைக்கும் மக்கள் அனுபவிக்கும் விலைவாசி உயர்வு, வேலையின்மை, வாழ்வாதாரப் பிரச்சினைகள் அனைத்திற்கும் இந்த மக்கள் விரோத கொள்கைகள்தான் மூலகாரணமாக இருக்கும்போது, எதிர்க்கட்சிகள் இதற்கு மாற்றான ஒரு கொள்கையும் திட்டமும் முன்வைக்காமல் குறைந்தபட்ச ஆதார விலைக் கொடுப்போம், 30 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவோம் என்று வாக்குறுதி அளிப்பது நடைமுறைக்கு சாத்தியமற்ற போராடும் மக்களை ஈர்ப்பதற்கான கவர்ச்சி அறிவிப்புகளாகவே உள்ளன.

சான்றாக, எதிர்க்கட்சிகள் விசாயிகளுக்கு 50 சதவிகித உத்தரவாதத்துடன் குறைந்தப்பட்ச ஆதார விலை வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளன. ஆனால், விவசாயித்திற்கான மானியங்களை வழங்குதல், விவசாயக் கட்டமைப்பை சீரழிக்கும் வகையிலான கார்ப்பரேட் திட்டங்களை கைவிடுதல் போன்றவையும் விவிசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. எதிர்க்கட்சிகளோ விவசாயிகள் போராடும் ஒரு கோரிக்கையை மட்டும் நிறைவேற்றுவதாக சொல்கிறார்கள். ஆனால், அந்த கோரிக்கையைக்கூட மறுகாலனியாக்க கொள்கைகளை நடைமுறைப்படுத்திக் கொண்டே நிறைவேற்ற முடியாது என்பதே உண்மை. அதனால்தான், டெல்லி எல்லைகளில் குறைந்தப்பட்ச ஆதார விலைக்காக போராடும் விவசாயிகள் “இந்திய அரசே, உலக வர்த்தக கழகத்தில் இருந்து வெளியேறு” என்று டெல்லி எல்லைகளில் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, எதிர்க்கட்சிகளிடம் மாற்றுக்கொள்கை இல்லாமல் மக்கள் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்ற முடியாது என்பதே எதார்த்தநிலை.

மேலும், அரசுக்கட்டமைப்பில் ஊடுருவி ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்ற ஆர்.எஸ்.எஸ். கும்பல், இந்தக்கட்டமைப்பை இந்துராஷ்டிர சர்வாதிகாரத்தை நிறுவும் வகையில் மறுவார்ப்பு செய்துவருகிறது. இதற்காக ஜி.எஸ்.டி.,நீட்.,புதிய கல்விக்கொள்கை, ‘உயர்சாதி ஏழைகளுக்கு’ 10 சதவிகித இடஒதுக்கீடு போன்ற பல இந்துராஷ்டிர கட்டுமானங்களை உருவாக்கி வைத்துள்ளது. இந்த இந்துராஷ்டிர கட்டுமானங்களில் ஒன்று இரண்டைத்தவிர மற்ற எதையும் எதிர்கட்சிகள் ரத்துச் செய்வதாக அறிவிக்கவில்லை, பலவற்றைக் குறித்து வாயே திறக்கவில்லை. ஆனால், பாசிச பா.ஜ.க.-வை வீழ்த்த வேண்டுமெனில் இந்த இந்துராஷ்டிர கட்டுமானங்கள் தகர்க்கப்பட வேண்டும். இதற்கு மாற்றாக, உழைக்கும் மக்களின் நலன்களைப் பாதுக்காக்கும் வகையிலான மாற்று அரசியல்-பொருளாதாரத் திட்டம் வைக்கப்பட வேண்டும்.

ஆனால், எதிர்க்கட்சிகள் இந்த அரசுக்கட்டமைப்பு பாசிசமயமாகி வருவதும், மறுகாலனியாக்கக் கொள்கைகளுமே மக்களின் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்ற உண்மையை மூடிமறைக்கும் விதமாக, பா.ஜ.க. கட்சி  மட்டும்தான் பிரச்சினை என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் கட்டமைக்கின்றன. ஆகவே,  மக்கள் விரோத -ஜனநாயக விரோத இந்த அரசுக் கட்டமைப்புக்கும், மறுகாலனியாக்கக் கொள்கைக்கும் மாற்றான சுயசார்பும் அரசியல்-பொருளாதார இறையாண்மையும்  கொண்ட ஒரு பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு  நிறுவப்படுவதை நோக்கில் மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். அதுதான் எதிர்கட்சிகள் மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவும் நிர்பந்திக்கும். அத்தகைய மாற்றுக் கட்டமைப்பில் மட்டுமே, பாசிசமும் வீழ்த்தப்படும்,  மக்களுக்கான கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.


அப்பு

(புதிய ஜனநாயகம் – மே 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாசிஸ்டுகளே! நாங்க எதையும் இன்னும் மறக்கல… | கவிதை

ருப்புப் பணத்தை ஒழிக்கிறேனு சொல்லிபுட்டு
கடுகு டப்பா, பருப்பு டப்பாள சேர்த்து வைத்த
காசை எல்லாம் களவாடி போயிட்டு
கருப்புப் பணத்தை மட்டும் கடைசி வரை ஒழிக்காததை
நாங்க இன்னும் மறக்கல!

செத்துப்போன காசை எடுத்துக்கிட்டு
போன வழியிலேயே சுருண்டு விழுந்து
மாண்டு போன எங்க கதையெல்லாம்
நாங்க இன்னும் மறக்கல!

கொரோனா காலத்துல
ஒரு வேளை சோத்துக்கு கையேந்தி
நாங்கள் நிற்கையில
அதானி, அம்பானி மட்டும் சொத்து சேர்த்து
உலக பணக்கார வரிசையில் முந்தி வந்து
முன் வரிசையில் நின்னதெல்லாம்
நாங்க இன்னும் மறக்கல!

பட்டதாரி இளைஞர் கூட்டமெல்லாம்
படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்காம
பத்தாயிரம் சம்பளத்துக்கு
கொத்தடிமையாய் மாறிப்போன கதையெல்லாம்
நாங்க இன்னும் மறக்கல!

வடக்கிருந்து வாழ வழி தேடி வந்த
வடமாநில தொழிலாளர் கூட்டம்
கூட்டம் கூட்டமா நடந்து போன பாதையெல்லாம்
ரத்தம் வடிந்த பாத தடங்கள் படிஞ்சு
பாதையெல்லாம் சிவந்து தான் கிடந்ததை
நாங்க இன்னும் மறக்கல!

கடன உடன வாங்கி
காக்கா குருவி போல சேத்த காசை எல்லாம் வச்சு
தொழில் தொடங்கினா

ஜிஎஸ்டி வரியைப் போட்டு
வாங்கின கடனை கட்ட முடியாம
குடும்பத்தோட நாங்க தூக்குல தொங்குன கதை எல்லாம்
நியூஸ் பேப்பர் முழுக்க நிறைஞ்சு தான் கிடந்ததை
நாங்க இன்னும் மறக்கல!

ஒலிம்பிக்ல தங்க மெடல ஜெயிச்சு வந்து
மொத்த நாட்டுக்கும்
பெருமை சேர்த்த மல்யுத்த வீரமங்கைகள்
நீதிக்காக போராட வீதியில நின்னு,
நீதி கிடைக்காததை
நாங்க இன்னும் மறக்கல!

விலைவாசி உயர்வு விண்ணை முட்ட
வாங்கும் போதே கண்ணீரோடு வாங்கிய வெங்காயமும்
தங்கத்துக்கு நிகரா தக்காளி வந்துருமோனு
மனம் தத்தளிச்சது கண்ணமூடுனா
கனவுலயும் தக்காளி வந்துபோனதை
நாங்க இன்னும் மறக்கல!

கந்து வட்டிக்கு கடன் வாங்கி
பத்தாத காசுக்கு
தாரத்தோட தாலியை வித்து
விதை வாங்கி, உரம் வாங்கி களைப்பறிச்சி
அறுத்ததெல்லாம் வித்து பார்த்தா
உழுத கணக்கு அழுது தான் தீர்ந்துச்சு!
வாங்குன கடனுக்கு வழி தெரியாம
எங்க குடும்பங்கள் எல்லாம் பால்டாயிலோட
வாழ்க்கையை முடிச்சுக்கிட்டதை
நாங்க இன்னும் மறக்கல!

மலையோடு மழையா மகிழ்ச்சியா வாழ்ந்த மணிப்பூர் மக்கள் கூட்டம்
சங்கி கூட்டம் புகுந்து
இனவெறியை தூண்டிவிட்டதால
குக்கிப் பெண்களை அடித்து ஆடைகளை அவிழ்த்து
கூட்டம் கூட்டமாய் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தை கண்டு
மொத்த உலகமே அதிர்ச்சியில் உறைந்து போனதை
நாங்க இன்னும் மறக்கல!

குஜராத்தில் கொத்து கொத்தா
முஸ்லிம் மக்களை கொன்னது பத்தாதுன்னு
CAA ,NRC சட்ட திருத்தம் கொண்டு வந்து
முஸ்லிம் மக்களையும் ஈழத் தமிழர்களையும்
நிரந்தர அகதிகளாக்க திட்டம் போட்டிருக்கிறதை
நாங்க இன்னும் மறக்கல!.

நம்மோட  வரிப்பணத்தில் உருவான
அரசோட சொத்துக்களை
அதானிக்கும் அம்பானிக்கும்
கொஞ்சம் கொஞ்சமா தாரைவார்க்கிறதை
நாங்க இன்னும் மறக்கல!

சங்கிகளே,
நீங்க எங்களை பிளக்க
அற்பத்தனமாக மதத்தை வைத்து
கலவரத்தை தூண்டிவிட முயற்சி செய்தாலும்
நாங்க எதையும் மறக்கல!

மோடி,
நான் கடவுள் அவதாரமுனு
சொல்லிக்கிட்டு திரிந்தாலும்
நாங்க நம்பப்போறதில்ல!

பாசிஸ்டுகளே,
மீண்டும் ஒருமுறை கூறுகிறோம்
நாங்க எதையும் இன்னும் மறக்கல!


செந்தாழன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாசிஸ்டுகளின் தேர்தல் ‘ஜனநாயகம்’!

2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்குவதற்கு முன்னரே, எதிர்க்கட்சியினர் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ரெய்டுகளை ஏவுவது; எதிர்க்கட்சி முதல்வர்களை சிறையிலடைப்பது; காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை முடக்குவது என அப்பட்டமான சர்வாதிகார ஒடுக்குமுறையை ஏவத் தொடங்கியது பாசிச மோடி அரசு. எதிர்க்கட்சிகள் மீதான இந்த ஒடுக்குமுறையை அமெரிக்கா, ஜெர்மனி போன்ற உலக நாடுகளும் கண்டித்திருந்தன.

இந்நிலையில், வங்கதேசம், பாகிஸ்தான், ரஷ்யா ஆகிய நாடுகளில் அந்நாட்டு ஆளும் கட்சிகளால் எதேச்சதிகாரமாகத் தேர்தல் நடத்தப்பட்டதைப் போலவே, இந்தியாவிலும் தன்னுடைய அதிகார பலத்தை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளையும் சதித்திட்டங்களையும் அரங்கேற்றி பாசிச வழிமுறையில் தேர்தலை நடத்தி வருகிறது மோடி-அமித்ஷா கும்பல்.

சான்றாக, ஏப்ரல் 14-ஆம் தேதி பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியீட்டின்போது, மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தப் பிறகு முதல் 100 நாட்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்களுக்கான பணிகளைத் தொடங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மோடி கூறியிருந்தார். மோடியின் உத்தரவின்படி, வீட்டுக் கடனுக்கான வட்டிக்கு மானியம் வழங்குதல், புதிய நகர்ப்புற மையங்களை உருவாக்குதல் போன்ற திட்டங்களை அரசு அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும், இதில் சில திட்டங்கள் புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன் வெளியிடும் பட்ஜெட்டின் ஒரு பகுதியாக  இருக்கும் என்றும் செய்திகள் வெளியானது.

தேர்தல் நடத்தை விதிகளை மோடி கழிவறை காகிதமாக கூட மதிக்கவில்லை என்பதையும் தனது கைப்பாவையாக இருக்கும் அரசு நிறுவனங்களை பயன்படுத்தி தேர்தல் வெற்றியைப் பெற்றுவிடலாம் என்ற மோடியின் நோக்கத்தையும்தான் இந்த செய்தி தெளிவாக உணர்த்துகிறது. இந்த ஜனநாயகமற்றத் தேர்தலை, “மேட்ச் ஃபிக்சிங்” (Match Fixing), “நோ லெவல் பிளேயிங் ஃபீல்ட்” (No Level Playing Field)  என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

எதிர்க்கட்சிகள் இல்லாதத் தேர்தல்

2014 நாடாளுமன்றத் தேர்தலில் “காங்கிரஸ் இல்லாத இந்தியா” என்ற ஆரவாரத்துடன் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க. கும்பல், தற்போதைய 2024 நாடாளுமன்றத் தேர்தலில் “எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா”வை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனடிப்படையில், கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் ஊழலில் உலக சாதனைப் படைத்துள்ள மோடி-அமித்ஷா கும்பல், எதிர்க்கட்சிகள் மீது “ஊழல்” குற்றஞ்சாட்டி அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. மூலம் எதிர்க்கட்சிகளை வேட்டையாடி வருகிறது.

கடந்த ஜனவரி மாத இறுதியில் ஜார்கண்ட் மாநில முதல்வரும் “ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா” கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரனை நில மோசடி வழக்கிலும், மார்ச் மாதத்தில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை மதுபான கொள்கை ஊழல் வழக்கிலும் அமலாக்கத்துறை கைது செய்து சிறையிலடைத்தது. இந்திய வரலாற்றில் அரவிந்த் கெஜ்ரிவால்தான் பதவியிலிருக்கும்போதே கைது செய்யப்பட்ட முதல் முதலமைச்சர் ஆவார்.


படிக்க: தோல்வி முகத்தில் மோடி-அமித்ஷா கும்பல்: மக்கள் போராட்டமே ஆயுதம்!


கெஜ்ரிவாலுக்கு முன்பாக, இதே மதுபான ஊழல் வழக்கில் தெலுங்கானா பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் கவிதாவும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். திகார் சிறையிலிருந்த கவிதாவிடம் விசாரணை நடத்துவதற்கு சி.பி.ஐ-யும் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றது. இதனை கவிதா எதிர்த்த நிலையில், ஏப்ரல் 11 அன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருந்த கவிதாவை சி.பி.ஐ. கைது செய்தது.  “வெளியில் பா.ஜ.க. தலைவர்கள் பேசியதையே சி.பி.ஐ. மீண்டும் மீண்டும் என்னிடம் கேட்கிறது, இது பா.ஜ.க. காவலே ஒழிய சி.பி.ஐ. காவல் அல்ல” என்று சி.பி.ஐ. விசாரணையின் லட்சணத்தைப் பத்திரிகையாளர்களிடம் அம்பலப்படுத்தியிருக்கிறார், கவிதா.

இதே வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியாவும், அக்கட்சியின் மாநிலங்களவை அமைச்சர் சஞ்சய் சிங்கும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். தற்போது சஞ்சய் சிங் மட்டும் பிணையில் வெளியே வந்திருக்கிறார். அரவிந்த் கைதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தையும் முடக்கியுள்ளது மோடி கும்பல்.

இவர்கள் மட்டுமின்றி 2ஜி அலைக்கற்றை வழக்கில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, பா.ஜ.க-வால் பதவி பறிக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோரை கைது செய்யவும் மோடி-அமித்ஷா கும்பல் தீவிரம் காட்டி வருகிறது.

தேர்தல் முடியும்வரை கெஜ்ரிவாலை வெளியே விடக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ள மோடி அரசு, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலுக்கு சிறையில் இன்சுலின் மருந்து கூட வழங்காமல் வதைத்து வருகிறது. இதன்மூலம், மக்களுக்காகப் போராடுகிற சமூக செயல்பாட்டாளர்களை சிறையிலடைத்து, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்காமல் ஒடுக்குகிற உத்தியை தற்போது எதிர்க்கட்சிகளுக்கும் விரிவுபடுத்தியிருக்கிறது மோடி அரசு.

தேர்தல் ஆணையம்மோடியின் செல்லப் பிராணி

தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகும், தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் தளர்த்திக் கொள்ள முடியாது என்று ‘படம்’ காட்டிய தேர்தல் ஆணையம், மோடியின் செல்லப் பிராணி என்பது நிரூபணமாகியிருக்கிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தலானது, நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக 44 நாட்களுக்கு நடைபெறும் என்று கடந்த மார்ச் 16 அன்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மோடியின் தொடர்ச்சியான தமிழ்நாடு பயணமும், அதனையடுத்து ஏப்ரல் 19  நடந்த முதற்கட்ட தேர்தலுமே,  மோடியின் பிரச்சாரப் பயணத்திற்கேற்ப தேர்தல் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்திக் காட்டின.

தேர்தல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்குவதிலும், பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளுக்கு அவர்கள் கோரிய சின்னத்தை உடனே ஒதுக்குவது,  வி.சி.க., நாம் தமிழர் போன்ற கட்சிகளுக்கு அவர்கள் கோரிய சின்னங்களை ஒதுக்காமல் தேர்தல் தேதி நெருங்கும்வரை அலைக்கழிப்பது என தேர்தல் ஆணையம் பா.ஜ.க-விற்கு அடியாள் வேலை பார்த்தது.

அதேபோல், மதம், இனம், சாதி, தனிநபர் விவகாரம் குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசக்கூடாது, புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிடக்கூடாது போன்றவை தேர்தல் நடத்தை விதிமுறைகளாக உள்ளன. இந்த விதிமுறைகள் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு பாடம் எடுக்கும் தேர்தல் ஆணையம், மோடி கும்பல் விதிமுறைகளை மீறுகின்ற போது தனது நவ-துவாரங்களையும் மூடிக்கொண்டிருக்கிறது.

கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் மோடியின்  ‘வளர்ச்சி நாயகன்’ அரிதாரம் கலைந்த நிலையில், இத்தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக இந்துமுனைவாக்க பிரச்சாரத்தைத் தீவிரமாக கையிலெடுத்திருக்கிறது, மோடி-அமித்ஷா கும்பல்.

முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டிற்கு வந்தபோது எதிர்க்கட்சிகள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் என்று பேசியது; ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் வெளியிட்டிருந்த இறைச்சி உண்ணும் பழைய காணொளிகளை குறிப்பிட்டு, எதிர்க்கட்சிகள் இந்துக்கள் உணர்வுகளை காயப்படுத்துகிறார்கள், முகலாயர்களின் சிந்தனையை பிரதிபலிக்கிறார்கள் என்று பேசியது; சுதந்திரப் போராட்டத்தின் போது முஸ்லிம் லீக்-இல் இருந்த அதே கருத்தைத்தான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பிரதிபலிக்கிறது என குறிப்பிட்டது; ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்களின் செல்வங்களை எல்லாம் ஊடுருவியர்களுக்கும், அதிக குழந்தை பெற்றெடுத்தவர்களுக்கும் கொடுத்து விடுவார்கள்” என்று கூறியது என அப்பட்டமான இஸ்லாமிய வெறுப்பைக் கக்கினார் மோடி.

இந்துக்களின் மத உணர்வைத் தூண்டும் வகையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலி உட்பட அனைத்து நகைகளும் கணக்கீடு செய்யப்பட்டு பகிர்ந்தளிக்கப்படும் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் உள்ளது எனப் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மோடியின்  இந்தப் பொய்-வெறுப்பு பேச்சுக்கு எதிராக நாடுமுழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. டைம் (Time), தி கார்டியன் (The Guardian), ஃபினான்சியல் டைம்ஸ் (Financial Times), புளூம்பெர்க் (Bloomberg) உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் மோடியின் வெறுப்பு பேச்சை அம்பலப்படுத்தி கட்டுரைகள் வெளியிட்டிருந்தன.

வெறுப்பு பேச்சிற்காக மோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இரண்டு சிவில் உரிமை குழுக்கள் 17,000 பேர் கையெழுத்திட்ட கடிதத்தை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பின. காங்கிரஸ், சி.பி.ஐ(எம்) மற்றும் சி.பி.ஐ(எம்.எல்) லிபரேஷன் உள்ளிட்ட கட்சிகள் உட்பட பலரும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். ஆனால், தேர்தல் ஆணையமோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கள்ளமௌனம் சாதித்தது.

இறுதியில், வேறுவழியின்றி ஏப்ரல் 25-ஆம் தேதி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு நோட்டீஸ் அனுப்பியது தேர்தல் ஆணையம். அதில், “மோடி” என்ற பெயர் கூட குறிப்பிடாமல் பா.ஜ.க-வின் “நட்சத்திர பிரச்சாரகர்” என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

இவையன்றி, தேர்தல் நடந்துகொண்டிருக்கும் போதே தூர்தர்ஷனில் “தி கேரளா ஸ்டோரி” என்ற இஸ்லாமிய வெறுப்பு திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது; தூர்தர்ஷன் சின்னத்தின் நிறம் சிவப்பிலிருந்து காவியாக மாற்றப்பட்டது; தேர்தல் நடக்கும்போதே மோடி அடுத்தடுத்து நலத்திட்டங்களை அறிவித்துக்கொண்டிருப்பது என எதற்கும் மோடி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மாறாக, தேர்தல் நடத்தை விதிகளை மீறுகிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் மீது பாய்கிறது தேர்தல் ஆணையம். மோடியின் வெறுப்பு பேச்சுக்காக நோட்டீஸ் அனுப்பிய அதே நாளில் வேண்டுமென்றே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் நோட்டீஸ் அனுப்பி பதிலளிக்க சொன்னது. மேலும், இந்தியா கூட்டணியைச் சேர்ந்த சிவசேனா தனது கட்சி சின்னத்தை பிரபலப்படுத்துவதற்காக வெளியிட்ட பாடலில் “ஜெய் பவானி”, “இந்து” போன்ற வார்த்தைகள் இடம்பெற்றதற்காக கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. தற்போது ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரச்சார பாடல் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டிருக்கிறது. சி.பி.ஐ., அமலாக்கத்துறை போல, தேர்தல் ஆணையமும் மோடியின் அடியாளாக மாறியிருக்கிறது என்பதையே இந்நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

பாசிசத்திற்கு துணைநிற்கும் அதிகார அமைப்புகள்

தேர்தல் ஆணையம் மட்டுமின்றி நீதிமன்றம், போலீசு போன்ற பிற அதிகார அமைப்புகளும் மோடி அரசின் வாலாகவே செயல்பட்டு வருகின்றன. மோடியின் வெறுப்பு பிரச்சாரம் குறித்து ஏப்ரல் 23 அன்று உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அதனை விசாரிக்காமல்  உச்சநீதிமன்றம் தள்ளிப்போட்டது.

மேலும், உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபட்டில் தேர்தல் விதிகளை மீறி இந்து மற்றும் சீக்கிய தெய்வங்களின் பெயர்களையும், வழிபாட்டு தலங்களின் பெயர்களையும் பயன்படுத்தி மோடி பேசியதற்காக அவருக்கு அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டுமென்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு ஏப்ரல் 26 அன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி சச்சின் தத்தா விடுப்பில் சென்றது சந்தேகத்தை கிளப்பியது. ஏப்ரல் 29 அன்று அவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், எதிர்பார்த்தபடியே, குற்றச்சாட்டு முற்றிலும் தவறாக கருதப்பட்டுள்ளதாகக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.


படிக்க: குறையும் வாக்குப்பதிவு: பா.ஜ.க – விற்கு மட்டும்தான் நெருக்கடியா?


அதேபோல், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் அனைத்து வாக்குகளையும், வாக்கு ஒப்புகைச் சீட்டுகளுடன் முழுமையாக ஒப்பிட்டு சரிபாா்க்க உத்தரவிடக்கோரி” கடந்த மாதத்தில் ஏ.டி.ஆர். அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது. வழக்கு விசாரணையின் தொடக்கத்திலிருந்தே மனுதாரர்களின் வாதங்களை கொஞ்சமும் பரிசீலிக்காமல், தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர்களை போல வாதாடி வந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது சந்தேகப்படுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்கும் “பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்” நிறுவனத்தில் இயக்குநர்களாக பா.ஜ.க-வைச் சார்ந்த நான்கு நபர்கள் நியமிக்கப்பட்டது; வாக்குப்பதிவு இயந்திரங்களையும் விவிபேட்-களையும் கையாள தனியார் கம்பெனிகளை அனுமதித்தது என வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் அவநம்பிக்கைக்கு அனைத்து முகாந்திரங்களும் உள்ள நிலையில், உச்சநீதிமன்றம் இவ்வழக்கை தள்ளுபடி செய்து எதிர்க்கட்சிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும், மோடியின் ராஜஸ்தானில் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டது தொடர்பாக சி.பி.ஐ(எம்) கட்சித் தலைவர் பிருந்தா காரத்தின் புகாரை பதிவுசெய்ய டெல்லி போலீஸ் மறுத்துள்ளது. மேலும் பல மாநிலங்களில் எதிர்க்கட்சி வேட்பாளர்களை பிரச்சாரத்திற்கு செல்லவிடாமல் போலீஸ் தடுப்பதும் அம்பலமாகி வருகிறது. தற்போது அமித்ஷா குறித்து பொய் காணொளி பரப்பியதாக காங்கிரஸ் நிர்வாகி அருண் ரெட்டியை டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது. இவையெல்லாம்,போலீசு, நீதிமன்றம், அதிகார அமைப்புகள் என அனைத்தும் மோடிக் கும்பல் தேர்தலில் வெற்றிப்பெறுவதற்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது என்பதையே வெட்டவெளிச்சமாகக் காட்டுகிறது.

பாசிஸ்டுகளின்தேர்தல்எனும் கேலிக்கூத்து

தேர்தல் ஆணையம், நீதித்துறை, போலீசு துணையோடு பாசிசக் கும்பல் நடத்தும் தேர்தல் எவ்வாறு நடக்கும் என்பதற்கு வடகிழக்கு மாநிலங்களே சான்று. கடந்த 19 அன்று மணிப்பூரில் நடைபெற்ற முதற்கட்டத் தேர்தலில், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் அரம்பை தெங்கால் என்ற மெய்தி இனவெறி கும்பல் பல வாக்குச்சாவடிகளை சூறையாடியதோடு, துப்பாக்கிச்சூடு நடத்திய காணொளி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வன்முறையும், முறைகேடுகளும் நடைபெற்ற 47 வாக்குச்சாவடிகளில் வெறும் 11 வாக்குச்சாவடிகளில் மட்டுமே மறுவாக்குப்பதிவு நடத்தியது தேர்தல் ஆணையம்.  மணிப்பூர் மக்களும், பல்வேறு அமைப்புகளும் தேர்தலைப் புறக்கணித்திருந்த நிலையில், மறுவாக்குப்பதிவில் 80 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், பா.ஜ.க. ஆளும் திரிபுராவில், முதற்கட்டத் தேர்தல் முடிந்த மறுநாளே, தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், 80 சதவிகித வாக்குச்சாவடிகளுக்குள் எதிர்க்கட்சிகளை சேர்ந்த முகவர்களை பா.ஜ.க-வினர் அனுமதிக்கவில்லை என்றும் காங்கிரஸ், சி.பி.ஐ(எம்) கட்சிகள் குற்றஞ்சாட்டின. இந்நிலையில் வாக்குப்பதிவு நடந்த மூன்று நாட்களுக்கு பிறகு வெளியான தகவலில் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட மூன்று சட்டசபை தொகுதிகளில் நூறு சதவிகிதத்திற்கு மேலாக வாக்குப் பதிவாகியிருந்தது அம்பலமானது. இதையடுத்து, 597 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டுமென்று காங்கிரஸ் சார்பாக அம்மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. பிற கட்சிகளும் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள அசாம் மாநிலத்தில், பா.ஜ.க-விற்கு வாக்களிக்கவில்லை எனில் வீடுகள் புல்டோசரால் இடிக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் இஸ்லாமிய மக்களை மிரட்டியிருக்கின்றனர். ஏப்ரல் 26 அன்று அம்மாநிலத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. அதேநாளில், இஸ்லாமிய புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிப்பதைத் தடுக்கும் விதமாக அசாம் தலைநகர் குஹாத்தியிலிருந்து அம்மாநிலத்தின் பராக் பள்ளத்தாக்கிற்கு செல்கிற 6 ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால், இஸ்லாமியர்கள் பலரால் வாக்களிக்க முடியாமல் போனது.

இதன் உச்சக்கட்டமாக, ஏப்ரல் 23 அன்று குஜராத் மாநிலம் சூரத்தில் பா.ஜ.க. வேட்பாளர் ‘போட்டியின்றி வெற்றி’ பெற்றதாக அறிவிக்கப்பட்டது நாடு முழுவதும் விவாதத்தை கிளப்பியது. காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனுவில் கையெழுத்திட்ட மூவரும் அது தங்களது கையெழுத்து இல்லை என்று தேர்தல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்துவிட்டு தலைமறைவாகினர். காங்கிரசின் மாற்று வேட்பாளர் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அத்தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த எட்டு வேட்பாளர்களும் அடுத்தடுத்து தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர்.

அதேபோல், மத்தியப்பிரதேசம் இந்தூரில் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காந்தி கடைசி நேரத்தில் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றுக்கொண்டு பா.ஜ.க-வில் இணைந்தார். இங்கும் “சூரத் மாடலை” அமல்படுத்த பா.ஜ.க. முயன்றுள்ளதாக “தி வயர்” இணையதளம் நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும், குஜராத்தின் காந்திநகரில் அமித்ஷாவிற்கு எதிராக போட்டியிடும் 16 வேட்பாளர்கள் மிரட்டப்படுவதும் அம்பலமாகியுள்ளது. இதன்மூலம், சூரத், இந்தூர் போன்று தனக்கு செல்வாக்கு உள்ள இடங்களில் அதிகார பலத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளே இல்லாமல் வெற்றிப்பெறுவோம் என அறிவிக்கிறது பாசிசக் கும்பல்.

எதார்த்தத்திற்கு முகங்கொடுக்க மறுக்கும் எதிர்க்கட்சிகள்

ஒருபுறம், கடந்த பத்தாண்டு காலத்தில் தேர்தல் ஆணையம், நீதிமன்றம், போலீசு, அதிகார வர்க்கம், சி.பி.ஐ. அமலாக்கத்துறை என ஒட்டுமொத்த அரசு அதிகார அமைப்புகளையும் பாசிசமயாக்கி, அவற்றைத் தனது அடியாட்களாக வைத்துக் கொண்டு, வன்முறைகளை அரங்கேற்றி பாசிச வழிமுறையில் தேர்தலை நடத்தி வருகிறது பாசிச மோடி கும்பல்.

மற்றொருபுறம் நம்பிக்கையளிக்கும் விதமாக, பா.ஜ.க-விற்கு அடித்தளமாக உள்ள மக்கள் பிரிவினரே பா.ஜ.க-வை எதிர்க்கும் சூழல் உருவாகியிருக்கிறது என்பதையே விவசாயிகள், மராத்தியர்கள், ராஜ்புத்திரர்களின் போராட்டம் காட்டுகிறது.

ஆனால், இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொள்வதற்கு கூட எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. மோடி அரசுக்கு எதிராக நடைபெறும் மக்கள் போராட்டங்களை ஆதரிப்பது, வடமாநிலங்களில் நடைபெறும் எதேச்சதிகாரத் தேர்தலை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி, அதை ரத்து செய்யக் கோரி மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பது,  என்ற கண்ணோட்டம் இல்லாமல் மோடியின் ஏவல் அமைப்பான தேர்தல் ஆணையத்திடமும், நீதிமன்றத்திலுமே முறையிடுவது, புகாரளிப்பது என எதிர்க்கட்சிகள் செய்துவருகின்றன.

இதன் மூலம் பாசிசமயமாகியுள்ள இந்த அரசுக் கட்டமைப்பை ஜனநாயகமானது என்றும், பாசிஸ்டுகளை சட்டப்போராட்டங்களின் மூலம் தோற்கடிக்க முடியுமென்றும் மக்களை நம்ப வைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், பாசிச மோடி கும்பலோ எதிர்க்கட்சிகளின் ஒரே களமாக இருக்கும் தேர்தலையும் பறிப்பதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இனிமேலும் எதிர்க்கட்சிகள் மக்கள் போராட்டங்களை கட்டியமைக்காமல் தாமதிப்பார்களேயானல், பாசிஸ்டுகளால் தேர்தல் களத்தில் இருந்து துடைத்தெறியப்படுவார்கள் என்பதே எதார்த்தம்.


பானு

(புதிய ஜனநாயகம் – மே 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாலஸ்தீனம்: இன அழிப்புப் போரை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்!

பாலஸ்தீனம்: இன அழிப்புப் போரை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்!

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐரோப்பிய நாடுகள்! மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

நாளை (28-05-2024) பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப்போவதாக நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள் அறிவித்துள்ளன. இந்த மூன்று நாடுகளின் பிரதமர்களும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது பற்றிய தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கடந்த புதன் கிழமையன்று (22-05-2024) செய்தியாளர்களை சந்தித்த நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர், பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாகக் கூறினார். மேலும், “நிரந்தரத் தீர்வு என்பது இரு நாடுகளின் ஆதரவின் மூலம் மட்டுமே அடையப்படும். பாலஸ்தீன மக்களுக்கு ”சுய நிர்ணய உரிமைக்கான அடிப்படை மற்றும் சுதந்திரமான உரிமை உள்ளது. இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனர்கள் அந்தந்த நாடுகளில் நிம்மதியாக வாழ அவர்களுக்கு உரிமை உண்டு” என்றும் கூறினார்.


படிக்க: பாலஸ்தீன இனப்படுகொலை – பாசிஸ்டுகள் உலகளவில் ஒன்றிணைகிறார்கள்!


ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கடந்த வியாழக் கிழமையன்று (23-05-2024) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, அமைதி, நீதி மற்றும் உறுதித்தன்மை ஆகிய மூன்று காரணங்களுக்காக பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கப் போவதாகக் கூறினார்.

டப்ளினில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ், “பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது அமைதியைக் கொண்டு வருவதற்கு மிகவும் தேவையான நடவடிக்கை” என்று கூறினார்.

நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவுள்ள நிலையில், இதற்கு இனவெறிப்பிடித்த இஸ்ரேல் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த மூன்று நாடுகளில் இருந்து தனது நாட்டு தூதர்களையும் திரும்ப அழைத்துள்ளது.

மற்றொருபுறம், ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் முடிவை ஹமாஸ் அமைப்பு மற்றும் பாலஸ்தீன அரசு வரவேற்றுள்ளது. இந்த முடிவு சர்வதேச அரங்கில் முக்கியமான மற்றும் தீர்க்கமான திருப்புமுனையாக அமையும் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் முடிவை வரவேற்றுள்ள சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம், இதுவொரு நேர்மறையான நடவடிக்கை என்றும் மற்ற நாடுகளும் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக கடந்த 1967-ஆம் ஆண்டு, பாலஸ்தீன அரசை அங்கீகரிக்குமாறு சர்வதேச நாடுகளை, குறிப்பாக பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களை சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வரை 140 நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. இதில் ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 22 நாடுகளை கொண்ட அரபுக் குழு, 57 நாடுகளை கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் 120 உறுப்பினர்களைக் கொண்ட அணிசேரா இயக்கம் ஆகியவையும் அடங்கும்.

1988-இல்அப்போதைய பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராபத் பாலஸ்தீனத்திற்கான கொடியை அறிமுகப்படுத்தி பாலஸ்தீனத்திற்கான அங்கீகாரத்தை கோரியபோது, அதனை முதன்முதலில் அங்கீகரித்தது அல்ஜீரியாதான். அதன் பிறகு துருக்கிவும், இந்தியாவும் ஆதரித்தன.

பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நாடுகளில் ஸ்வீடனை தவிர வேறு எந்த நாடும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை. அமெரிக்கா, பிரிட்டனை போல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டையே கொண்டுள்ளன.


படிக்க: பாலஸ்தீனம்: போராட்டக் களம் காண்போம்? | கவிதை


ஆனால், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நார்வே, ஸ்பெயின், அயர்லாந்த் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் முடிவானது முக்கியத்துவம் வாய்ந்தது. 200 நாட்களுக்கும் மேலாக இனப்படுகொலைக்கு ஆளாகிவரும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சர்வதேச அளவில், குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் மக்கள் போராட்டங்கள்தான் பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்கும் முடிவை நோக்கி நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளைத் தள்ளியுள்ளது.

அந்தவகையில் உலகம் முழுக்க நடக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களும், மக்கள் மத்தியில் உருவாகிவரும் பாலஸ்தீன ஆதரவு மனநிலையும்தான் பாலஸ்தீனம் மீது பாசிச இஸ்ரேல் தொடுத்துள்ள இன அழிப்பு போருக்கு முடிவுக்கட்டி பாலஸ்தீன விடுதலைக்கு வழிவகுக்கும்.


தன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தோல்வி முகத்தில் மோடி-அமித்ஷா கும்பல்: மக்கள் போராட்டமே ஆயுதம்!

டந்த பத்தாண்டுகால பாசிச பேயாட்சியில் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் படுகுழிக்கு தள்ளிய பா.ஜ.க. கும்பல், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் “ஆப்கி பார் 400 பார்” (இம்முறை 400-ஐ தாண்டும்), “பா.ஜ.க-விற்கு 370, என்.டி.ஏ-க்கு 400” போன்ற கோஷங்களை முன்வைத்து மிருகப் பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கப் போகிறது என்ற பிம்பத்தை தேர்தலுக்கு தொடங்குவதற்கு முன்னரே கட்டமைக்க தொடங்கியது. ஆனால், தற்போது இரண்டுகட்ட தேர்தலே நிறைவடைந்துள்ள நிலையில் பா.ஜ.க. கட்டமைத்துவந்த பிம்பம் சுக்குநூறாகி வருகிறது.

“அஞ்சி நடுங்கும் பா.ஜ.க. கும்பல்”, “150 தாண்டாது”, “பழிவாங்க காத்திருக்கும் அமைச்சர்கள், மோடிய கழட்டி விட்டுருவாங்க”,“மோடிக்கு தோல்வி பயம் வந்துடுச்சி, அவர் கண்ணுல அது தெரியுது” என மோடிக் கும்பலை நக்கலடித்துக் கொண்டிருக்கின்றன யூ-டியூப் சேனல்கள். தமிழ்நாட்டு ஊடகங்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதுமுள்ள இந்தி, ஆங்கில ஊடகங்களும் சர்வதேச பத்திரிகைகளும் கூட மோடி கும்பல் நெருக்கடியில் உள்ளதை அம்பலப்படுத்தி செய்திகள் வெளியிட்டு வருகின்றன.


படிக்க : அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்த போலீசின் அடாவடி! | மக்கள் அதிகாரம்


ஏறக்குறைய, பாசிசக் கும்பல் தோல்வி முகத்தில் உள்ளது என்பதை அனைவருமே வெவ்வேறு வார்த்தைகளில் பேசத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், பாசிசக் கும்பலின் இத்தோல்வி முகமானது நடந்துகொண்டிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்திலும் பா.ஜ.க-விற்கு பல்வேறு நெருக்கடிகளையும் சவால்களையும் ஏற்படுத்தி வருகிறது.

ஆதிக்கச் சாதியினர் போராட்டம்
சரியும் பாசிஸ்டுகளின் மக்கள் அடித்தளம்

2014-ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்ததற்கு ஆதிக்க சாதியினரின் வாக்குகள் முக்கிய பங்காற்றின. அச்சமயத்தில் ஆதிக்கச் சாதிகளை சேர்ந்தோர் மகா-பஞ்சாயத்துகளைக் கூட்டி ஒட்டுமொத்த மக்களும் பா.ஜ.க-விற்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி பா.ஜ.க-வை வெற்றியடையச் செய்தனர். இதன் காரணமாக, 56 சதவிகித ஆதிக்க சாதியினரின் வாக்குகள் பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணிக்கு விழுந்தது. இது 2009 நாடாளுமன்றத்தேர்தலுடன் ஒப்பிடும்போது 30 சதவிகிதம் அதிகமாகும். பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இந்திபேசும் மாநிலங்கள் இந்த வாக்கு சதவிகிதத்தில் பெரும்பகுதியை கொண்டிருந்தன. ஆனால், தற்போதைய 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது, பா.ஜ.க. வெற்றிப்பெற காரணமாக இருந்த ஜாட், ராஜ்புத், மராத்தா உள்ளிட்ட ஆதிக்கச் சாதிகளை சேர்ந்த கணிசமானோர் பா.ஜ.க-விற்கு எதிராக திரும்பியுள்ளனர்.

பல ஆண்டுகளாக பா.ஜ.க-வின் அடித்தளமாக இருந்துவந்த பணக்கார விவசாயிகளான ஜாட் சாதியினர், மூன்று வேளான் சட்டங்களுக்கு எதிரான “டெல்லி சலோ” போராட்டத்தில் பா.ஜ.க-வின் கோர முகத்தைக் கண்டுக்கொண்டனர். இப்போராட்டம் விவசாயிகளை ஜனநாயகப்படுத்தியதோடு ஜாட் சாதியில் கணிசமானோரை பா.ஜ.க-விற்கு எதிராக திருப்பியது. பா.ஜ.க-விற்கு எதிராக போராடும் மற்ற பிரிவினருடனும் விவசாயிகள் கைக்கோர்க்க ஆரம்பித்தனர்.

“ஹரியானாவின் சகோதரிகள்” என்று அழைக்கப்படும் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் வல்லுறவு செய்த பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யுமாறு போராடிய வீராங்கனைகளை மோடி அரசு கொடூரமாக ஒடுக்கியது ஜாட் சாதியினரை ஆத்திரமூட்டியது. குறிப்பாக, மல்யுத்த வீராங்கனைகள் ஜாட் சாதியைச் சேர்ந்த€வர்கள் என்பதால் இப்போராட்டம் ஹரியானாவில் மட்டுமின்றி பிற மாநிலங்களில் வசிக்கும் ஜாட் சாதியினரிடமும் கடும் எதிர்ப்பை கிளப்பியது.

இந்நிலையில், பாலியல் குற்றவாளி பிரிஜ் பூஷனின் மகனுக்கு பா.ஜ.க-வில் எம்.பி. சீட்டு கொடுக்கப்பட்டுள்ளதும் டெல்லி எல்லைகளில் போராடி கொண்டிருக்கும் விவசாயிகளை மோடி அரசு மிருகத்தனமாக ஒடுக்கிவருவதும் ஜாட்களிடம் இன்னும் எதிர்ப்பை அதிகமாக்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த காலங்களில் ஜாட்களின் பெரும்பான்மை வாக்குகளை பெற்றகட்சியாக திகழ்ந்த பா.ஜ.க., இத்தேர்தலில் ஜாட் அல்லாதோரின் வாக்குகளை குறிவைத்து தேர்தலை அணுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதேபோல், பா.ஜ.க-வின் அடித்தளமாக இருந்த மற்றொரு சாதியினரான ராஜ்புத் மக்கள் குஜராத், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பசுவளைய மாநிலங்களில் தீவிரமான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் மாத இறுதியில் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பா.ஜ.க. எம்.பி. பர்ஷோத்தம் ரூபாலா, ராஜ்புத் சாதியினரை இழிவுப்படுத்தும் விதமாக பேசியது ராஜ்புத் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, குஜராத்தில் ஆயிரக்கணக்கில் திரண்ட ராஜ்புத் சாதியினர் வேட்பாளராக நிற்கும் ரூபாலாவை திரும்ப பெறக்கோரி பா.ஜ.க-விற்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களையும் மாநாடுகளையும் முன்னெடுத்தனர். இப்போராட்டத்தால் அஞ்சி நடுங்கிய பாசிசக் கும்பல், ராஜ்புத் மக்களை சமாதானம் செய்வதற்காக பர்ஷோத்தம் ரூபாலாவை மன்னிப்பு கேட்க வைப்பது, ராஜ்புத் சாதியைச் சேர்ந்த உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை வைத்து ராஜ்புத் மக்களிடம் சமாதானம் பேசுவது போன்ற முயற்சிகளை மேற்கொண்டாலும் அவை எதுவும் பலனளிக்கவில்லை. ஒரு மாதத்திற்கு மேலாக பெண்கள்  முன்நின்று போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.


படிக்க : எட்டு முறை பாஜகவுக்கு கள்ள ஓட்டு போட்ட இளைஞர்!


மேலும், குஜராத் மட்டுமின்றி உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் போராட்டம் பரவியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு மகாபஞ்சாயத்தை நடத்திய ராஜ்புத்கள் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களை புறக்கணிக்கப் போவதாக தீர்மானம் நிறைவேற்றினர். “2013-ஆம் ஆண்டு நடைபெற்ற மகா பஞ்சாயத்து பா.ஜ.க. ஆட்சி அமைக்க உதவியது. பின்னர் அவர்கள் எங்களை புறக்கணித்தனர். இங்கு எந்த வேலையும் இல்லை, எந்த திட்டங்களும் அமல்படுத்தப்படவில்லை. மக்கள் அக்னிவீர் திட்டத்திற்கு எதிராக உள்ளனர். இனி, இந்த நிலமே பா.ஜ.க-வின் வீழ்ச்சிக்கு காரணமாக அமையும்”  என பாசிஸ்டுகளை கதிகலங்கச் செய்தனர்.

அதேபோல், ஒன்பது சதவிகித ராஜ்புத் மக்களை கொண்ட ராஜஸ்தானில் இப்போராட்டம் பா.ஜ.க-விற்கு தேர்தலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.  பா.ஜ.க. மீது ஆத்திரத்தில் உள்ள ராஜ்புத்களில் கணிசமானோர் தேர்தலை புறக்கணித்த நிலையில் அம்மாநிலத்தில் வாக்குப்பதிவு விகிதம் பெரியளவில் குறைந்துள்ளது. இதன் காரணமாக, 2014, 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் மொத்தமுள்ள 25 இடங்களையும் கைப்பற்றிய பா.ஜ.க-விற்கு இம்முறை ராஜஸ்தான் பெரும் சவாலாக இருக்கும் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ராஜ்புத் மக்களின் இப்போராட்டம் பா.ஜ.க-விற்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. ஒருபுறம் ரூபாலாவை திரும்பபெறுமாறு ராஜ்புத் மக்கள் தேர்தல் சமயத்தில் நெருக்கடி கொண்டுக்கின்றனர். மற்றொருபுறம், படேல் சாதியைச் சேர்ந்த ரூபாலாவை திரும்ப பெற்றால் படேல் சாதி மக்களிடமும் ராஜ்புத் சாதி அல்லாத மக்களிடமும் எதிர்ப்பு கிளம்பும். இதனால் பா.ஜ.க. கும்பல் செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கிறது.

அதேபோல், 33 சதவிகித மராத்தா சாதியினரைக் கொண்ட மகாராஷ்டிராவில் இடஒதுக்கீடுக்கோரி மராத்தா மக்கள் நடத்திய போராட்டம் இத்தேர்தலில் பா.ஜ.க-விற்கு பின்னடைவாக மாறியுள்ளது கடந்த காலங்களில் பெரும்பாலும் பா.ஜ.க-வை ஆதரித்துவந்த மராத்தா சாதியினர் பத்து சதவிகித இசஒதுக்கீடுக்கோரி கடந்தாண்டு இறுதியில் பிரம்மாண்டமான போராட்டங்களை முன்னெடுத்தனர். இப்போராட்டம் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொளிக்கும் என்று அஞ்சிய பா.ஜ.க-வின் அடிமை ஏக்நாத் ஷிண்டே அரசு கடந்த பிப்ரவரி மாதத்தில் மராத்தா மக்களுக்கு ஒதுக்கீடு வழங்கும் சட்டம் இயற்றியது.

ஆனால், இச்சட்டம் நீதிமன்றத்தின் முன் நிற்காது என்பதையும் மராத்தா மக்களின் கோவத்தை தணிக்க பா.ஜ.க. மேற்கொண்ட கண்துடைப்பு நாடகம் என்பதையும் மராத்தா மக்கள் உணர்ந்துகொண்டனர். மேலும், ஏக்நாத் ஷிண்டே வெறும் பொம்மைதான் என்றுணர்ந்துள்ள மக்கள் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்தான் தங்களை ஏமாற்றியதாக நம்புவதால் மக்களின் கோவம் நேரடியாக பா.ஜ.க-விற்கு எதிராகத் திரும்பியுள்ளது. இதன் காரணமாக, மராத்தா சாதியில் ஒரு பிரிவினர் தேர்தலை புறக்கணிக்கும் நிலையில் மற்றொரு பிரிவினர் பா.ஜ.க-விற்கு எதிராக வாக்களிக்க முடிவெடுத்துள்ளனர்.

பா.ஜ.க-வின் ‘கோட்டை’ என்று சொல்லப்பட்ட பசுவளைய மாநிலங்களில், பா.ஜ.க. ஆட்சிக்கு வர ஆதரவாக இருந்த ஆதிக்கச் சாதியினர் மத்தியிலேயே எதிர்ப்பு கிளம்பியிருப்பது பாசிசக் கும்பல் எதிர்ப்பார்க்காதப் பெரிய நெருக்கடியாகும். அது தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலிலும் பெரும் தாக்கம் புரிந்து வருகிறது.


படிக்க : புதிய ஜனநாயகம் – மே 2024 | மின்னிதழ்


மேலும், ஆதிக்கச் சாதியினரின் எதிர்ப்பு வெறுமனே வாக்குவங்கி சரிவு மட்டுமல்ல. பா.ஜ.க-வின் மக்கள் அடித்தளமே கொஞ்சம் கொஞ்சமாக சரியத் தொடங்கியுள்ளது என்பதைக் காட்டுகிறது. சாதிவெறி, மதவெறியைத் தூண்டி மக்களிடையே பிளவை ஏற்படுத்தி தன்னுடைய அடித்தளமாக மாற்றிக்கொள்ளும் பா.ஜ.க-வின் உத்தி தற்போது பா.ஜ.க-விற்கே எதிராகத் திரும்பியுள்ளது.

மதவெறி போதையை கலைக்கும்
மக்கள் போராட்டங்கள்

கார்ப்பரேட்மயமாக்கத்தை தீவிரமாக அமல்படுத்திவரும் பாசிச மோடி அரசு  பொதுத்துறைகள் நிறுவனங்களை கார்ப்பரேட் கும்பலுக்கு தாரைவார்த்து விட்டு,  அரசுத்துறை வேலைகள் அனைத்தையும் ஒப்பந்தமயமாக்ககி வருவதன் விளைவாக கடந்த பத்தாண்டுகளில் அரசு வேலைவாய்ப்புகள் பெரியளவில் குறைந்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த நிலை இந்தியா முழுவதும் தாக்கம் செலுத்தினாலும் தனியார்த்துறை வேலைவாய்ப்புகள் உள்ள தமிழ்நாடு, கேரளா போன்ற தென்மாநிலங்களைக் காட்டிலும், அரசு வேலைகளை மட்டுமே பிரதானமாக கொண்டுள்ள வடமாநிலங்களில் கோரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே வேலையின்மைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்னொருபுறம், கடந்த பத்தாண்டுகால பா.ஜ.க. இந்தியாவில் வறுமையும் ஏற்றத்தாழ்வும் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது என்பதை பல ஆய்வறிக்கைகள் தரவுகளோடு நிரூபித்துள்ளன. ஆனால், இந்த கோரநிலையை உணர்ந்துகொள்ள முடியாத அளவிற்கு பெரும்பான்மை மக்களுக்கு மதவெறி போதை ஊட்டப்பட்டிருந்தது. ஆனால், மோடியின் இரண்டாவது ஆட்சி காலத்தில் இஸ்லாமியர்கள், விவசாயிகள், இளைஞர்கள் என பல பிரிவு மக்கள் பா.ஜ.க.வின் பாசிச திட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தது. மக்களிடம் உள்ள மதவெறி போதையை கலைத்து மக்களை எதார்த்தத்தைக் காணச் செய்துள்ளது.

சான்றாக, கடந்த 2022-ஆம் ஆண்டு மோடி அரசு கொண்டுவந்த ராணுவத்தை கார்ப்ப்பரேட்மயமாக்கும் அக்னிபாத் திட்டத்திற்கு பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் போர்குணமிக்க இளைஞர்களின் போராட்டம் வெடித்தது. கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட இத்திட்டத்திற்கு எதிரான இளைஞர்களின் எதிர்ப்பு இன்னமும் நீர்த்துப் போகாமல் அப்படியே உள்ளது,

அதேப்போல். இந்தாண்டு தொடக்கத்தில் போலீஸ் தேர்வு முறைகேடுக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் நடந்த இளைஞர்கள் போராட்டம் மற்றொரு சான்றாகும். அம்மாநிலத்தில், வெறும் 67,000 போலீஸ் கான்ஸ்டபிள் பதவிகளுக்கு 48 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் போட்டியிட்டனர். ஆனால், இத்தேர்வில் பல முறைகேடுகளும் வினாத்தாள் கசிவுகளும் நடந்தது அம்பலமானதையடுத்து, மறுத்தேர்வு நடத்த வேண்டுமென்று மாநிலம் முழுவதும் இளைஞர்கள் தெருக்களில் இறங்கி போராடினர். சாதி மற்றும் மதங்களைக் கடந்து பல ஆயிரம் இளைஞர்கள் பிரயாக்ராஜில் உள்ள உத்தரப்பிரதேச பொதுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு வெளியே போராட்டத்தை நடத்தி பா.ஜ.க. அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர். இளைஞர்களின் போராட்டத்தினால் பணிந்த யோகி ஆதித்யநாத் அரசு அத்தேர்வை ரத்து செய்தது.

இதேபோல், குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வேலைவாய்ப்பிற்காகவும் அரசு வேலைக்கான ஆட்சேர்ப்பு எண்ணிக்கை குறைக்கப்படுவதற்கு எதிராகவும் இளைஞர்கள் போராட்டம் நடத்துவது தற்போது தொடர் கதையாகியுள்ளது. இதன்விளைவாக, மக்களிடையே பா.ஜ.க.வின் மதவெறி பிரச்சாரம் எடுபடாமல், வேலையில்லாத் திண்டாட்டமும் விலைவாசி உயர்வும் இந்தியாவின் முதன்மையான பிரச்சினையாக மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

தேர்தல் களத்தில் எதிரொளித்த நெருக்கடி

மக்கள் போராட்டங்களால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிகளால் முதல் இரண்டு கட்ட தேர்தலில் பா.ஜ.க-விற்கு மிகப்பெரிய அடியை ஏற்படுத்தியது. முதல்கட்ட தேர்தல் முடிந்தவுடனேயே மோடியின் பேச்சில் பயம் தெரிவதாக பலர் சமூக ஊடகங்களில் பேசவும் எழுதத் தொடங்கினர்.

ஒன்றிரண்டு தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டும் என மோடி கும்பல் முயற்சித்துவந்த தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களின் வாக்குப்பதிவு நிலவரம் பா.ஜ.க-விற்கு ஏமாற்றமளித்ததோடு கர்நாடகாவும் இம்முறை கைக் கொடுக்காது என தகவல்கள் வெளியாகின.

வடக்கிழக்கு மாநிலங்களை பொறுத்தவரை, மணிப்பூரில் குக்கி இன மக்கள் மீது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் முன்னின்று நடத்திய கலவரத்தின் காரணமாக குக்கி இன மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். மேலும் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மெய்தி மக்களும் வாக்களிப்பதில் அக்கறை காட்டவில்லை. மேலும், நாகாலாந்தில் அங்குள்ள ஆயுதக் குழுக்களுடன் மோசமான அணுகுமுறையை மேற்கொண்டதாலும் கடுமையாக ஒடுக்கி வருவதாலும் கிட்டத்தட்ட நான்கு லட்சம் மக்கள் தேர்தலில் வாக்களிக்கவில்லை. ஆறு மாவட்டங்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.

கடந்த தேர்தல்களில் காங்கிரசை விட ஒன்றிரண்டு சதவிகித வாக்குகள் மட்டுமே அதிகம் பெறுவதன் மூலம் கணிசமான தொகுதிகளில் வெற்றியை தக்கவைத்துள்ள பா.ஜ.க-விற்கு, இத்தேர்தலில் வாக்குப்பதிவு குறைவதானது மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ளது.

இவ்வாறு பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வாக்கு விகிதம் குறைவது பா.ஜ.க-வை நேரடியாக பாதிக்கும் என்பதால் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. ஊழியர்கள் வீடு வீடாக சென்று மக்களிடம் வாக்களிக்க வலியுறுத்த வேண்டுமென்றும் மக்கள் வாக்களித்தனரா என்று சோதிக்குமாறும் ஆர்.எஸ்.எஸ். தலைமையிடம் வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகின.

மேலும், வாக்கு விகிதம் குறைவது மோடி பிராண்டுக்கு விழுந்த அடியாகும். எப்போது போல இத்தேர்தலிலும் மோடியே நட்சத்திர பிரச்சாரகராக முன்னிறுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் வாக்களிக்க வராததது மோடியின் பிராண்ட் போணியாகாததையேக் காட்டுகிறது.

மோடியின் வெறுப்பு பேச்சு
தோல்வி பயத்தின் வெளிப்பாடு

இத்தகைய கடுமையான நெருக்கடி காரணமாக எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட மோடி-அமித்ஷா கும்பல், கடைசி அஸ்திரமான மதவெறி பிரச்சாரத்தை கையிலெடுத்தது. எதிர்க்கட்சிகளுக்கு இந்து-விரோதி சாயம் பூசுவது, இஸ்லாமிய வெறுப்பு பேச்சு பேசுவது, போணியாகாத பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை தூக்கியெறிந்துவிட்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கொண்டு இஸ்லாமிய வெறுப்பு-பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுவது என அப்பட்டமான இந்துமுனைவாக்க வேலையில் இறங்கியது. இதனை மோடியே முன்னின்று தொடங்கி வைத்தார்.

இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது, தோல்வி பயம் தலைக்கேறிய மோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலியை கூட பிடுங்கி இஸ்லாமியர்களுக்கு கொடுத்துவிடுவார்கள் என்று பேசியது சர்வதேச அளவில் விவாதமானது. ஏன் ‘விஷ்வகுரு’ முதல்கட்ட தேர்தலுக்கு பிறகு தனது முகமூடி நழுவ அனுமதித்தார்? என பத்திரிகைகள் கட்டுரை எழுதின.


படிக்க : முடிவுறாப் பயணம்? | புலம்பெயர் தொழிலாளர்கள் | கவிதை


உண்மையில், குஜராத் படுகொலை குற்றவாளியான மோடிக்கு, ஆர்.எஸ்.எஸ். கும்பலும் ஆளும் வர்க்க கும்பலும் முகமூடிகளை அணிவித்து 2014 தேர்தலில் ‘வளர்ச்சி நாயகனாக’ முன்னிறுத்தியது. ஆனால், அடுக்கடுக்கான மக்கள் போராட்டங்களால் அந்த முகமூடி கிழித்தெறியப்பட்டுள்ள நிலையில், இத்தேர்தலில் தனது சுயரூபத்தை காட்ட வேண்டிய நிலைக்கு மோடி தள்ளப்பட்டுள்ளார். ஆனால், இந்துமதவெறி ஊட்டப்பட்ட வாக்காளர்ப் பிரிவினர் மத்தியில் மோடியின் இந்துத்துவ பிரச்சாரம் தாக்கம் செலுத்தினாலும், போராட்டங்களால் விழிப்படைந்துள்ள பெரும்பான்மை மக்கள் முன்னர் போல் மோடியின் மதவெறி பேச்சுக்கு பலியாகப்போவதில்லை.

எனவே, இதற்கடுத்தடுத்த கட்டதேர்தலில் இந்துமதவெறி பிரச்சாரத்தை தொடரலாமா? கைவிட்டுவிடலாமா? எனப் புரியாமல் மோடி-அமித்ஷா கும்பல் தலையை பிய்த்துக்கொள்கிறது.

மோடிக்கும்பலை திக்குமுக்காட வைப்பது மக்கள் போராட்டங்களே

பாசிச பா.ஜ.க. கும்பலுக்கு இத்தேர்தலில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிலும் ஆதிக்கச் சாதியினரின் எதிர்ப்பு, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வாக்குவிகிதம் குறைவது, மக்கள் வாழ்வாதார பிரச்சினைகளை கண்ணுற்றுள்ளது போன்றவையெல்லாம் மோடி-அமித்ஷா தோல்விமுகத்தில் இருப்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. ஆனால், இத்தோல்வி முகத்திற்கு, பா.ஜ.க. கட்சிக்குள் உள்ள நெருக்கடி, ஆளும் வர்க்க முரண்பாடு, இந்தியா கூட்டணியின் செயல்பாடுகள் போன்றவையே காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன.

உண்மையில், களத்தில் நடந்த மக்கள் போராட்டங்களே பாசிசக் கும்பலை தோல்வி முகத்திற்கு தள்ளியது, பா.ஜ.க தற்போது தேர்தல் களத்தில் சந்தித்துவரும் நெருக்கடிகள் அனைத்திற்கும் அடிப்படையானது மக்கள் போராட்டங்களே என்பதை யாரும் பேசுவதில்லை.

கடந்த 2019-ஆம் ஆண்டு பா.ஜ.க. இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த பிறகு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, ராமன் கோவில் தீர்ப்பு, சி.ஏ.ஏ. சட்டம் நிறைவேற்றம் என தன்னுடைய நிகழ்ச்சிநிரல்களை மூர்க்கமாக நடைமுறைப்படுத்த தொடங்கியது. இதற்கிடையே பா.ஜ.க-விற்கு எதிராக ஆங்காங்கே மக்கள் போராட்டங்கள் நடந்துவந்த நிலையில், 2019-ஆம் ஆண்டு இறுதியில் சி.ஏ.ஏ-க்கு எதிராக இந்தியா முழுவதும் கிளர்ந்தெழுந்த இஸ்லாமிய மக்களின் போராட்டம் பாசிச கும்பலுக்கு தோல்வி முகத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியது. அதனைத்தொடர்ந்து 2021-ஆம் ஆண்டு மூன்று வேளான் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் முன்னெடுத்த “டெல்லி சலோ” போராட்டம், அக்கும்பலை தோல்வி முகத்திற்கு அடித்து வீழ்த்தியது.

தற்போது வரை பாசிசக் கும்பலால் இந்த தோல்வி முகத்திலிருந்து மீள முடியவில்லை. அடுத்தடுத்து நிகழ்ச்சிநிரல்களை அமல்படுத்தி வந்தாலும் அதிகபட்சம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை மக்கள் போராட்டங்கள் மேலெழுந்து பாசிசக் கும்பலை திக்குமுக்காடச் செய்கின்றன. குறிப்பாக, மணிப்பூரில் தனது காவி-கார்ப்பரேட் நலனிற்காக குக்கி பழங்குடியின மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை வெறியாட்டங்கள் பா.ஜ.க கும்பலுக்கு எதிராகவே திரும்ப ஆரம்பித்தது. குக்கி இன பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் ஒட்டுமொத்த இந்திய மக்களையும் பா.ஜ.க-விற்கு எதிராக குரல் எழுப்ப வைத்தது.

2023-ஆம் ஆண்டு இறுதியில் நடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு பிறகு, ராமர் கோவில் திறப்பு, உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம், சி.ஏ.ஏ. அமல் என அடுத்தடுத்த நிகழ்ச்சிநிரல்களை மோடி-அமித்ஷா கும்பல் அமல்படுத்தி வந்தது. ஆனால், நாடாளுமன்றத்தில் இளைஞர்கள் புகைக்குப்பி வீசிய சம்பவம், மூன்று தண்டனைத் திருத்தச்சட்ட அம்சங்களுக்கு எதிராக இந்திபேசும் மாநிலங்களில் நடந்த லாரி ஓட்டுநர்கள் போராட்டம் போன்றவை பா.ஜ.க-வை பயமுறுத்தி வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் கிளர்ந்தெழுந்த விவசாயிகளின் டெல்லி சலோ 2.0 போராட்டமானது பாசிசக் கும்பலின் நெருக்கடியை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இந்த மக்கள் போராட்டங்களின் தொடர்ச்சியாகதான் இன்று தேர்தல்களத்தில் பா.ஜ.க கும்பல் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

ஆனால், பா.ஜ.க தேர்தல் களத்தில் சந்திக்கும் நெருக்கடிகளை பார்த்து நம்பிக்கையடைந்து பேசும் எதிர்க்கட்சிகளுக்கும் மற்றவர்களுக்கும் இத்தனை ஆண்டுகளாக நடந்த மக்கள் போராட்டங்கள் கண்ணுக்கு தெரிவதில்லை. சிலர், “ஒருவேளை தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றிப்பெற்றுவிட்டால் அமைதிவழி மக்கள் போராட்டங்களை கட்டியமைக்கலாம்” என்கிறார்கள். இது இவர்கள், பா.ஜ.க.-வை வீழ்த்தி ஆட்சியை பிடிப்பதற்கு மக்கள் போராட்டங்களை  எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுகிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது.


படிக்க : குறையும் வாக்குப்பதிவு: பா.ஜ.க – விற்கு மட்டும்தான் நெருக்கடியா?


மாறாக எதிர்க்கட்சிகளுக்கே மக்கள் போராட்டங்கள்தான் பல கட்டங்களில்  நம்பிக்கையளித்துள்ளது. சான்றாக, பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய விவசாயிகள் போராட்டம்தான் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை அளித்து இந்தியா கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டில் நகர்வை ஏற்படுத்தியது. தற்போது தேர்தலில் கூட பா.ஜ.க. கும்பலுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால், பா.ஜ.க. எம்.பி-க்களின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தி மக்கள் நிராகரித்தாலும் மாற்று கொள்கை வைத்து மக்களுக்கு நம்பிக்கை அளிக்க காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் தயாராக இல்லை. பா.ஜ.க. எதிர்ப்பு மற்றும் கவர்ச்சிவாதத்தை மட்டுமே நம்பி எதிர்க்கட்சிகள் தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன. எதிர்க்கட்சிகளின் இந்த கையாலாகத்தனம் மக்கள் போராட்டங்களால் நெருக்கடியில் இருக்கும் பா.ஜ.க-விற்குதான் ஆதரவாக போய் முடியும்.

எனவே, பா.ஜ.க கும்பலை அச்சுறுத்தும் ஒரே ஆயுதமாக இருக்கும் மக்கள்  போராட்டத்தை கட்டியெழுப்புவது மட்டுமே பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கும், பாசிச கும்பலுக்கு முறியடிப்பதற்கான ஒரே வழி! ஆகவே, பா.ஜ.க-விற்கு எதிரான மக்கள் போராட்டங்களை வளர்த்தெடுத்து, பாசிசத்தை வீழ்த்துவதற்கான திசை நோக்கி முன்னேறுவோம்!

துலிபா
புதிய ஜனநாயகம்
மே 2024

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தூத்துக்குடி : ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் | பாகம் 2

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளின்
ஆறாம் ஆண்டு நினைவேந்தல் | பாகம் 2

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



குறையும் வாக்குப்பதிவு: பா.ஜ.க – விற்கு மட்டும்தான் நெருக்கடியா?

ழு கட்டங்களாக நடைபெறும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. நடந்துமுடிந்த இரண்டு கட்டத் தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்த இறுதி புள்ளிவிவரங்களை ஏப்ரல் 30-ஆம் தேதி  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதற்கட்ட தேர்தலில் 66.14 சதவிகிதமும், இரண்டாம் கட்ட தேர்தலில் 66.71 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. முன்னதாக, வாக்குப்பதிவு நடந்து முடிந்த அன்று இரவு 7 மணிக்கு, முதற்கட்ட தேர்தலில் 60 சதவிகிதமும் இரண்டாம் கட்டத்தில் 60.96 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட இந்த இரண்டு தரவுகளுக்கும் இடையில் கிட்டத்தட்ட ஆறு சதவிகிதம் வரை வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், முதற்கட்ட வாக்குப்பதிவு (ஏப்ரல் 19) நடந்து 11 நாட்கள் கழித்தும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு (ஏப்ரல் 26) நடந்து நான்கு நாட்கள் கழித்தும் தேர்தல் ஆணையம் இப்புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதிலும், பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை அறிவிக்காமல் வெறுமனே வாக்கு சதவிகிதத்தை மட்டும் அறிவித்துள்ளது.


படிக்க: இது ஒரு மேட்ச் பிக்சிங் தேர்தல்!


இதுகுறித்து தனது “எக்ஸ்” பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘‘இறுதி வாக்குப்பதிவு புள்ளிவிவரங்களை வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் இவ்வளவு காலதாமதம் செய்வது இதுவே முதன்முறை. கடந்த காலங்களில், வாக்களித்த உடனேயே அல்லது 24 மணி நேரத்திற்குள் இறுதி வாக்காளர் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுவிடும்” எனக் கூறியுள்ளார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையம் முன்பு வெளியிட்ட சதவிகிதத்திலிருந்து 5.75 சதவிகித வாக்குகள் உயர்ந்துள்ளது கவலையளிப்பதாகவும், பா.ஜ.க-விற்கு ஆதரவு இல்லாத இடங்களில் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர். சி.பி.ஐ(எம்) கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இதுகுறித்து விளக்கமளிக்கக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், தற்போதுவரை வாக்கு சதவிகிதம் தாமதமாக அறிவிக்கப்பட்டதற்கான காரணத்தையும், வாக்கு எண்ணிக்கையை அறிவிக்காதது குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கான பதிலையும் தெரிவிக்காமல் தேர்தல் ஆணையம் கள்ள மௌனம் சாதித்து வருகிறது.

இதேபோல், தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ஆம் தேதி தேர்தல் நிறைவடைந்த அன்று மாலை 7 மணி நிலவரப்படி, 72.09 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்தார். ஆனால், அதன்பிறகு தேர்தல் ஆணையம் நள்ளிரவில் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த பத்திரிகையாளர்கள், ‘‘பெரும்பாலும் தேர்தல் முடிந்த பிறகு அறிவிக்கும் வாக்கு சதவிகிதத்திற்கும், அதிகாரப்பூர்வ வாக்கு சதவிகிதத்திற்கும் இடையில் 1 முதல் 1.5 சதவிகிதம் அளவிற்குதான் வித்தியாசம் இருக்கும். ஆனால் இம்முறை சில இடங்களில் சுமார் 11 சதவிகிதம் வரை வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. அதிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியினர் வெற்றிப்பெற வாய்ப்புள்ள தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. ஆனால், பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட இடங்களில் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என அம்பலப்படுத்தியுள்ளனர்.

ஏற்கெனவே, இரண்டு கட்ட தேர்தலின்போது பல இடங்களில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் பா.ஜ.க-விற்கே வாக்கு பதிவாகிறது என எதிர்க்கட்சியினர் போராட்டங்களில் ஈடுப்பட்டனர். தற்போது தொடர்ச்சியாக வாக்குப்பதிவு விவரங்களில் முன்னுக்குபின் முரணான தகவல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. இவையெல்லாம், தேர்தல் ஆணையம் பா.ஜ.க-வுடன் கள்ளக்கூட்டு வைத்துக்கொண்டு தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டு வருகிறது என்பதை அப்பட்டமாகக் காட்டுகிறது.

பா.ஜ.க-விற்கு முற்றும் நெருக்கடி
ஒருபுறம் தேர்தல் ஆணையத்தின் மோசடி நடவடிக்கைகள் விவாதத்தை கிளப்பியிருக்கும் அதேசூழலில், கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களை காட்டிலும் இத்தேர்தலில் வாக்கு விகிதம் குறைந்திருப்பது பா.ஜ.க-விற்கு நெருக்கடியாக மாறியுள்ளதும் விவாதப்பொருளாகியுள்ளது.

தற்போதய தேர்தலை போலவே ஏழு கட்டங்களாக நடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, முதற்கட்ட தேர்தலில் பதிவான வாக்கு விகிதம் கிட்டதட்ட நான்கு சதவிகிதமும், இரண்டாம் கட்ட தேர்தலில் பதிவான வாக்கு விகிதம் மூன்று சதவிகிதமும் குறைந்துள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த 21 மாநிலங்களில் சுமார் 19 மாநிலங்களில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

குறிப்பாக, இந்தி பேசும் மாநிலங்களான (Hindi Heartland States) உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்களில் 2019 தேர்தலை விட வாக்கு சதவிகிதம் அதிகளவு குறைந்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளன. பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் வாக்குப்பதிவு குறைவது ஒரு போக்காக மாறியுள்ளது. ஏற்கெனவே தேர்தல் களத்தில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துவரும் பா.ஜ.க-விற்கு தன்னுடைய செல்வாக்கு மண்டலமாக திகழ்ந்த மாநிலங்களில் வாக்குப்பதிவு குறைந்து வருவது தலைவலியாக மாறியிருக்கிறது.

வாக்குப்பதிவு நடந்த மாநிலங்களை இந்திபேசும் மாநிலங்கள், கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள், இந்தியாவின் பிற மாநிலங்கள் (தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் யூனியன் பிரதேசங்கள்) என மூன்று குழுக்களாக பிரித்து பகுப்பாய்வு செய்து ‘‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” இணையதளம் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், முதற்கட்ட வாக்குப்பதிவில் இந்தி பேசும் மாநிலங்களில்தான் அதிகளவு வாக்குப்பதிவு குறைந்துள்ளது எனவும் அதைத்தொடர்ந்து கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு குறைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், முதற்கட்டமாக தேர்தல் நடந்த 102 தொகுதிகளில், 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது என்.டி.ஏ. கூட்டணி 50 தொகுதிகளையும் ‘‘இந்தியா கூட்டணி’‘ கட்சிகள் 49 தொகுதிகளையும் வென்றிருந்தது. தற்போது  என்.டி.ஏ. கூட்டணியிடம் உள்ள 50 தொகுதிகளில் வாக்குப்பதிவு 5.1 சதவிகிதம் குறைந்துள்ளது. அதேசமயம் ‘‘இந்தியா கூட்டணி” கட்சிகள் வென்றிருந்த 49 தொகுதிகளில் 2.4 சதவிகிதம்தான் வாக்குப்பதிவு குறைந்துள்ளது என அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தரவுகள், பா.ஜ.க. வெற்றிப்பெற்ற இடங்களில்தான் வாக்குப்பதிவு அதிகளவு குறைகிறது என்பதைத் துலக்கமாகக் காட்டுகின்றன. இக்கருத்து மேலும் வலுசேர்க்கும் விதமாக பா.ஜ.க-வின் “இரட்டை இன்ஜின் அரசு” செயல்படும் இடங்களில் வாக்குப்பதிவு அதிகளவில் குறைந்துள்ளதாக ‘‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” கட்டுரை குறிப்பிடுகிறது.

சான்றாக, ராஜஸ்தானில் நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 74.62 சதவிகிதம் வாக்குகள் பதிவாகிருந்த நிலையில், தற்போது முதற்கட்டமாக நடந்த தேர்தலில் 57.65 சதவிகித வாக்குகள்தான் பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட 17 சதவிகித வாக்குகள் குறைந்துள்ளன. ராஜஸ்தான் தேர்தலோடு இணைத்து நடத்தப்பட்ட மத்தியப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் 76.22 சதிவிகித வாக்குகள் பதிவாகிருந்த நிலையில், தற்போது முதற்கட்டத்தில் 67.75 சதவிகித வாக்குகள்தான் பதிவாகியுள்ளது. 9 சதவிகித வாக்குகள் குறைந்துள்ளன.

இதேபோல், உத்தரப்பிரதேசத்தில், 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, பா.ஜ.க. ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற காசியாபாத் தொகுதியில், வாக்குப்பதிவு 55.89 சதவிகிதத்திலிருந்து 49.88 சதவிகிதமாக குறைந்துள்ளது. அதேபோல், 2019-இல் மூன்று லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வெற்றிபெற்ற கௌதம புத்தா நகரில், 60.49 சதவிகிதத்திலிருந்து 53.63 சதவிகிதமாக குறைந்துள்ளது.

இதுகுறித்து ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு கட்டுரையில், பா.ஜ.க. மீது மக்கள் வெறுப்படைந்துள்ளதால் வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது என பா.ஜ.க-வை சேர்ந்தவர்களே விளக்குவதாக தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க-வின் மாவட்ட பிரச்சார மேலாளர்களில் ஒருவரான அனிருத் சிங், ‘‘ராமர் கோவில் திறப்பு ஏற்படுத்திய தாக்கம் உச்சத்தில் இருந்த பிப்ரவரி-மார்ச் மாதங்களில் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால், ஏராளமான தேர்தல் பலன்களைப் பெற்றிருக்க முடியும். ஆனால், கோவில் திறப்பு விழாவிற்குப் பிறகு மோடிக்கான மக்கள் ஆதரவைப் பெறுவதில் பா.ஜ.க. தோல்வியடைந்துவிட்டது. மத உணர்வானது வேலையின்மை மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்சினைகளால் பெருமளவில் மாறிவிட்டது” என்றுக் கூறியுள்ளதை அக்கட்டுரை குறிப்பிடுகிறது.


படிக்க: எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயகமின்றி நடந்து கொண்டிருக்கும் தேர்தல்


மேலும், பா.ஜ.க-வின் தீவிர ஆதரவாளர்கள் சிலரே, ‘‘இம்முறை நோட்டாதான் (None of the above) சிறந்த தேர்வு” என வாட்ஸ்அப் குழுக்களில் பதிவிட்டுள்ளார்கள். இது குறித்து பேசிய பா.ஜ.க. செயற்பாட்டாளர் ஒருவர், ‘‘இந்த முறை எந்த உற்சாகமும் இல்லை. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், வருமானம் உயராமல் இருப்பது மக்கள் மத்தியில் கோபத்தை உருவாக்கியுள்ளது. உள்ளூர் உள்கட்டமைப்பு பிரச்சினைகள் கூட பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது. மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்காத பயனற்ற அரசியலை புரிந்துக்கொள்ள பத்தாண்டு காலம் மிகவும் அதிகம். ஆனால், இம்முறை நாங்கள் மோடிக்கு வாக்களிக்கவில்லை என்றாலும் எங்கள் விசுவாசத்தை மாற்றிக் கொள்ளவில்லை” என்றார்.

இவ்வாறு பா.ஜ.க. ஆதரவாளர்களே அக்கட்சிக்கு வாக்களிக்க விரும்பாததும், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வாக்குப்பதிவு குறைவதும் பா.ஜ.க-விற்கு பெரிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.

எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி இல்லையா?
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வாக்கு சதவிகிதம் குறைவதற்கான காரணமாக பல வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. மோடி தோற்கடிக்க முடியாதவர் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளதால் மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை; மோடியின் மதவெறுப்பு அரசியலால் மக்கள் சலிப்படைந்துள்ளனர்; மோடியின் பத்தாண்டுகால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள்விரோத திட்டங்கள், வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்றவை மக்களை ஒருவித சோர்வு (Fatigue) மனநிலைக்கு தள்ளிவிட்டது என பல வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதில் பாதி உண்மை உள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கட்டுரையில் மக்கள் சிலர் இவ்வாறான கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். சான்றாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராஜ்நந்துகாவுன் என்ற மாவட்டத்தில் இருந்து பேசிய விகாஷ் குமார், ‘‘பா.ஜ.க. தன்னுடைய ஆட்சியின் சாதனைகள் மூலம் வாக்குகளை கேட்பதற்கு மாறாக வகுப்புவாதத்தின் மூலம் பிரச்சாரத்தை மேற்கொள்வதால் நாங்கள் ஆர்வத்தை இழந்துவிட்டோம்” என்று கூறியுள்ளார். அதேபோல், உத்தரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் கடை வைத்துள்ள இஸ்லாமியரான கமல் அப்பாஸ், ‘‘தேர்தலில் மோடி கட்சிதான் வெற்றிப்பெறும் என்பதால் வாக்களிக்க தனது சொந்த ஊரான பிரயாக்ராஜுக்கு சென்று நேரத்தையும் பணத்தையும் வீணடிக்க மாட்டேன். பெரும்பான்மை ஆட்சியில் சிறுபான்மையினரின் வாக்குகள் எங்கும் நிற்காது. நேரத்தை வீணடிப்பதில் அர்த்தமில்லை” என்றுக் கூறியுள்ளார்.

ஆனால், வாக்குசதவிகிதம் குறைவதற்கு இது காரணம் இல்லை. பா.ஜ.க. வேண்டாம் என்று முடிவெடுத்துள்ள, பா.ஜ.க. ஆதரவாளர்கள் உட்பட பெரும்பான்மை மக்கள் பிரிவினர் பா.ஜ.க-விற்கு எதிராக எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்காமல் ஏன் தேர்தலை புறக்கணிக்கிறார்கள் என்பதில்தான் வாக்குப்பதிவு குறைவதற்கான முழுமையான காரணம் அடங்கியுள்ளது.

வாக்குப்பதிவு விகிதம் குறைந்துள்ளதை தொகுதி வாரியாக பரிசீலிக்கும்போது, இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்துள்ளதை காண முடிகிறது. உத்தரப்பிரதேசம் கைரானாவில் 2019-இல் 67.45 சதவிகிதமாக இருந்த வாக்குப்பதிவு தற்போது 62.46 சதவிகிதமாக குறைந்துள்ளது. முசாபர்நகர் தொகுதியில் 68.42 சதவிகிதத்திலிருந்து 62.46 சதவிகிதமாகவும், மொராதாபாத் தொகுதியில் 65.46 சதவிகிதத்திலிருந்து 62.18 சதவிகிதமாகவும், ராம்பூர் தொகுதியில் 63.29 சதவிகிதத்திலிருந்து 55.85 சதவிகிதமாகவும் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

இஸ்லாமியர்கள் பா.ஜ.க-வின் வாக்குவங்கி அல்ல. பெரும்பாலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வாக்குவங்கியாகவே கடந்த காலங்களில் இருந்துள்ளனர். ஆனால் அவர்கள் ஏன் இம்முறை எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை.

இதேபோல், 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் தொகுதி வாரியாக ஒப்பிட்டு பார்க்கும்போது, ராஜஸ்தானின் கங்காநகர் மற்றும் சுன்சுனு, மத்தியப்பிரதேசத்தின் சிதி ஆகிய மூன்று தொகுதிகளில் சாராசரியை விட குறைவாக வாக்குப்பதிவாகியுள்ளது. இந்த மூன்று தொகுதிகளில், கங்காநகர், விவசாயிகளின் போராட்டத்தால் அதிகம் தாக்கம்புரிந்த தொகுதி. சுன்சுனு அக்னிபாத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அதிகம் இருக்கும் தொகுதி. சிதி மத்தியப்பிரதேசத்தின் மிகவும் ஏழ்மையான பகுதி, 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக பழங்குடியின மற்றும் தலித் மக்கள் வாழும் சாதோல் நகரத்தை கொண்ட தொகுதி.

இத்தொகுதிகளில் உள்ள மக்களுக்கு பா.ஜ.க-விற்கு எதிரான மனநிலையும் போராட்ட உணர்வும் உள்ளது. ஆனால், இங்கும் மக்களின் வாக்குகள் எதிர்க்கட்சிகளுக்கு அறுவடையாகாமல் வாக்கு விகிதம் குறைந்துள்ளது. இங்குதான் விவாதிக்கப்பட வேண்டிய விசயமே உள்ளது.

பா.ஜ.க. வேண்டாம் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டாலும் பா.ஜ.க-விற்கு எதிரான சரியான மாற்று இல்லை என்பதே மக்கள் வாக்களிக்காமல் இருப்பதற்கான உண்மையான காரணமாக இருக்கிறது. மக்கள் வாக்களிக்காமல் இருப்பதால், பா.ஜ.க-விற்கு ஏற்படும் நெருக்கடியை பக்கம் பக்கமாக விளக்கும் பலர், பா.ஜ.க. எதிர்ப்பு மனநிலையில் இருக்கும் மக்கள் ஏன் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முன்வரவில்லை என்பதையும் அதனால், எதிர்க்கட்சிகளுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பதையும் விளக்காமல் சந்தர்ப்பவாதமாக மூடி மறைக்கின்றனர்.

மக்கள் கோருவது மாற்றுக் கொள்கை!
உண்மையில், மக்கள் சோர்வுற்று இருப்பதால் வாக்களிக்கவில்லை என்று கூறுவதே அயோக்கியத்தனமானது. மக்கள் போராட்டக் களத்தில் போர்குணத்தோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சோர்வுற்று இருப்பதென்னவோ எந்த மாற்றும் தென்படாத இந்த தேர்தலின் மீதுதான். அச்சோர்விற்கு பா.ஜ.க. மட்டுமின்றி எதிர்க்கட்சிகளுக்கும் பங்குள்ளது.

மோடிக்கும் பா.ஜ.க-விற்கும் எதிரான மக்களின் மனநிலை என்பது, மக்கள் விரோத திட்டங்களுக்கும், பாசசி கும்பல் நிறுவத்துடிக்கும் இந்துராஷ்டிர சர்வாதிகாரத்திற்கும் எதிரானது.

இவற்றிற்கு எதிராக தனியாக போராடிக் கொண்டிருக்கும் மக்களுடன் எதிர்க்கட்சிகள் கைக்கோர்த்து நிற்பதில்லை. கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராடும்போது அவர்களை ஒடுக்கவும் செய்கின்றன. பா.ஜ.க-வின் பாசிச கொடுங்கோன்மைக்கும் மக்கள்விரோத சட்டங்களுக்கும் எதிரான போராட்டங்களில் மக்களுடன் தோளோடு தோள் நிற்காத, மக்கள் எதிர்க்கும் பாசிச சட்டங்களை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளிக்காத எதிர்க்கட்சிகளை மக்கள் எப்படி ஏற்றுக்கொண்டு மாற்றாக பார்ப்பார்கள்?


படிக்க: தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை இழப்பு!


சி.ஏ.ஏ. உள்ளிட்ட இஸ்லாமிய விரோத சட்டத்திட்டங்களை ரத்துச் செய்வோம், இஸ்லாமியர்களை ஒடுக்கும் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார குண்டர் படைகளை தடை செய்வோம் என்ற உத்தரவாதத்தை அளிக்காத காங்கிரஸ் உள்ளிட்ட ‘‘இந்தியா” கூட்டணியினரை இஸ்லாமிய மக்கள் எப்படி மாற்றாக பார்ப்பார்கள்?

எனவே, மேற்சொன்ன எதையும் செய்யாமல், மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் மாற்றுக் கொள்கையையும் திட்டத்தையும் முன்வைக்காமல், மக்களின் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை மட்டும் அறுவடை செய்துகொண்டு தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துவிடலாம் என்று எதிர்க்கட்சிகள் பகல் கனவு கண்டால், அது கடைசிவரை பகல் கனவாக மட்டுமே இருக்கும் என்பதையே வாக்கு சதவிகித குறைவு உணர்த்துகிறது.

தலையங்கம்
புதிய ஜனநாயகம்
மே 2024

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாசிசத்தை வீழ்த்த வேண்டுமா? பஞ்சாப், ஹரியானா மக்களிடம் பாடம் கற்போம்! | தோழர் ரவி

பாசிசத்தை வீழ்த்த வேண்டுமா?
பஞ்சாப், ஹரியானா மக்களிடம் பாடம் கற்போம்!
தோழர் ரவி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாலஸ்தீன விடுதலைப் போரில், வெல்வது நிச்சயம் நாங்களே! | கவிதை

குளிர்ந்த மேகமழை பொழியும்
எங்க தேசத்துல,
பாஸ்பரஸ் குண்டுமழை பொழியுது.

வானை எட்டும் மருத்துவக்
கட்டடங்கள் இப்போ,
ஊனமுற்று ஒடைஞ்சி கெடக்குது.

அன்பு வெள்ளம் வழியும்
எங்க  தெருக்களில்,
ரத்தம் பெருக்கெடுத்து வழியுது.

காரு போகும் சாலையில
பாசிச இசுரேலின்,
பீரங்கி டேங்கர்கள் வலம்வருது‌.

தங்க  வீடு  இல்லேன்னு
கூடாரத்துல குடிபுகுந்தா,
குண்டு வந்து மேலவுழுது.

பிஞ்சு கொழந்தைங்க ஒடம்பயெல்லாம்
வெடிமருந்து கந்தகமோ,
பிச்சு தனியே எடுக்குது.

தெற்கு  காசா  வீதிகளில்
எங்களின் அழுகுரலாய்,
மரண ஓலம் கேட்குது.

ஒருவேளை சோத்துப் பொட்டலத்த
கண்ணால பாக்குறதே
பெரிய பாடா ஆகிபோச்சி.

அமெரிக்கா கொடுக்குற ஆயுதம்
யூதவெறி புடுச்ச
இசுரேலு அரசுக்கோ பேராதாயம்.

உலகப்  பஞ்சாயத்து ஓநாய்களோ
எங்கநாட்ட கூறுபோட,
கொளுத்திவுட்டு குளிர் காயுதுங்க.

யாருமில்லா கூட்டமென்று கொக்கரிக்கும்
இனவெறி பாசிச மிருகங்களே,
எத்தனை எத்தனை ஆதரவு போராட்டங்கள்
எங்களுக்காய் பாருங்களேன்.

உங்க  அதிகாரத் திமிரடக்க
ஓங்கி ஒலிக்குது போராட்டச் சத்தம்;
பார்  முழுவதும்  நடக்குது
மாணவர்களின் வீரிய யுத்தம்.!

பாலஸ்தீன விடுதலைப் போரில்,
வெல்வது நிச்சயம் நாங்களே!


தென்றல்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube