Tuesday, June 23, 2026
முகப்பு பதிவு பக்கம் 117

சினிமா அரசியல் போதை மிருகம் = விஜய்

சுயமரியாதை உணர்வு, பார்ப்பனிய எதிர்ப்பு, மொழிப்பற்று, அநீதிகளுக்கு எதிரான மாணவர் போராட்டம் என தமிழ்நாட்டின் பெருமை கொள்ளத்தக்க உணர்வுகளையெல்லாம் காறி உமிழ்கிறது ஆழமாக வேரூன்றி வரும் தமிழ்நாட்டின் சினிமா போதை வெறி பொறுக்கித்தன கலாச்சாரம். தாங்கள் கோடிகளில் மிதப்பதற்காக இந்த வெறியை திட்டமிட்டு ஊட்டுகிறார்கள் கோடம்பாக்கத்து சினிமா பொறுக்கிகள்.

இசை நிகழ்ச்சிகள் நடத்தி கொள்ளையடிப்பது, எந்நேரமும் சினிமாவைப் பற்றிய சிந்தனையிலேயே சமூகத்தை இருத்தி வைப்பது, படம் வருவதற்கு முன்பே இசைவெளியீடு, பாடல்கள் அறிமுகம், ட்ரெய்லரை தியேட்டர்களில் வெளியிட்டு இளைஞர்களை வெறியூட்டுவதும், அதன் மூலம் கோடிக்கணக்கில் காசு பார்ப்பதும் என்று திட்டமிட்டு இந்த சினிமா கழிசடை கும்பல்கள் செயல்பட்டு வருகின்றனர்.  நடிகர் விஜய் நடித்த லியோ படத்தின் ட்ரெய்லர் கடந்த அக்டோபர் 5 அன்று வெளியானது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் லியோ பட ட்ரெய்லர் பார்க்க சென்ற சில வெறிபிடித்த புறம்போக்கு கும்பலால் தியேட்டரின் உட்பகுதி சூறையாடப்பட்டிருக்கிறது. இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்தேதான் ட்ரெய்லரை தியேட்டரில் ரிலீஸ் செய்ய வைக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தியேட்டரில் வெறியாட்டம் போடுவதற்கும் உதிரி புறம்போக்கு கும்பலை தயார் செய்தே வைத்திருக்கின்றனர் என்பதே உண்மை.

இதைத் தடுத்திருக்க முடியாதா? ட்ரெய்லர் திரையிடலை ரத்து செய்திருக்க முடியாதா? கண்டிப்பாக முடிந்திருக்கும். எவன் செத்தால் என்ன, எக்கேடு கெட்டால் என்ன, நமக்கு துட்டு பார்க்க வேண்டும், படத்திற்கு விளம்பரம் கிடைத்து கோடிக்கணக்கில் இளைஞர்களின் பாக்கெட்டிலிருந்து பணத்தை சுருட்ட வேண்டும் என்பதே விஜய் உள்ளிட்ட சினிமா புகழ் போதை தலைக்கேறிய கழிசடைகளின் நோக்கம்.


படிக்க: நூல் அறிமுகம் : சினிமா – திரை விலகும் போது …


இந்த சினிமா கழிசடைகளுக்கு குறைந்தபட்ச பொறுப்புணர்ச்சி கூட கிடையாது. தமிழ்நாடு முழுக்க நடிகர் விஜய்க்கென்று லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் ரசிகர்கள் இருக்கின்றனர். அதில் பலரும் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். குடும்பத்திற்கு பொறுப்பாக உழைத்து வாழும் இளைஞர்கள்தான். நடிகர் விஜயை ரோல்மாடலாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட இளைஞர்களின் வறுமை, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக என்றாவது களத்தில் இறங்கிப் போராடியிருக்கிறாரா? சமூகப் பிரச்சினைகள் என்றால் வாயே திறக்காமல் அமைதியாக இருந்துவிட்டு சினிமாவில் நரம்பு புடைக்க வசனம் பேசுவதைத் தவிர விஜய் நடைமுறையில் என்ன செய்தார்?  உண்மையில் இவர்களுக்கு விஜய்யின் படங்கள் கற்றுக் கொடுப்பது என்ன?

லியோ ட்ரெய்லரில் ஒரு இடத்தில் தே… பையன் என்று வசனம் பேசுகிறார் விஜய். இந்த வசனம் சமூகத்தில் மாணவர்கள், இளைஞர்களிடம் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும், அதனால் எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் என்பதெல்லாம் தெரியாமலா அந்த வசனத்தை வைத்திருப்பார்கள் இந்தக் கழிசடைகள்?

கண்டிப்பாக தயாரிப்பாளருக்கும், இப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும், நடிகர் விஜய்க்கும் தெரியும். தெரிந்துதான் அந்த வசனத்தை வைத்துள்ளார்கள். பெண்களை எப்படி வேண்டுமானாலும் கேவலப்படுத்தி வசனம் எழுதுவது, இளைஞர்களுக்கு போதையேற்றி வெறியூட்டுவது, கோடிக்கணக்கில் பணம் பார்ப்பது என்பது மட்டும்தான் அவர்களுடைய இலக்கு.

பெண்களை இழிவுபடுத்தும் பார்ப்பனியக் கழிவுகளை வாந்தியெடுத்து பார்ப்பன பாசிசத்திற்கு இடைவிடாமல் சேவை செய்கிறார்கள் விஜய் உள்ளிட்ட  சினிமா கழிசடைகள். அதனால்தான் அப்படிப்பட்ட வசனங்களை மாணவர்கள், இளைஞர்களை ரசிக்க வைக்கும் வேலையை செய்கிறார்கள். அப்படி உச்சரிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்ற கண்ணோட்டத்தையும், அந்த கேடுகெட்ட வசனத்தை கெத்தாக உச்சரிக்கும் பொறுக்கித்தனத்தையும் கற்றுக் கொடுப்பதைத் தவிர இந்த சினிமா கழிசடை கும்பலிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

குறிப்பாக லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஒவ்வொரு படமும் போதைமருந்துக் கடத்தல், ரவுடியிசம், வன்முறைக் கொலைகள் ஆகியவற்றை குரூரமாக ரசிக்க வைக்கும் தன்மையில் எடுக்கப்படுகிறது. இன்றைய தமிழ் சினிமாவின் டிரெண்டே இதுதான். இதனால் ஏற்படும் சமூக உளவியல் தாக்கங்கள் குறித்து இவர்களுக்கு எந்தவிதமான சமூகப் பொறுப்புணர்ச்சியும் கிடையாது.

இலக்கற்ற முறையில் பொறுக்கித்தனத்தை வியந்தோதி எடுக்கப்படும் இதுபோன்ற படங்களுக்கு ஏற்ப வெறியூட்டும் இசை. குறிப்பாக அனிருத்தின் இசை. மனதளவில் இளைஞர்களை எதைப்பற்றியும் கவலைப்படாதவர்களாக வெறிபிடித்தவர்களாக மாற்றுவதுதான் அனிருத் போன்றோரின் இசையின் அடிநாதமே.

ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தும் இசைக்கச்சேரிகளும் கோடிகளில் பணம் குவிக்க நடத்தப்படும் மறுகாலனியாக்க நுகர்வு வெறியின் ஒரு அம்சமே.


படிக்க: பி.வி.ஆர் சினிமா – அபராதம் வசூலித்த மக்கள் போராட்டம்


ஆனால் இங்கே உண்மை நிலை என்ன? பயிர் காய்ந்து அழிந்துவிடுமோ என்ற அச்சத்தில் காவிரியில் தண்ணீர் கேட்டு விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் நாடு முழுக்க பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. படித்து முடித்து வேலை கிடைக்காத நிலையில் எந்த பாதுகாப்பும் இல்லாத, உரிமைகள் அற்ற நிலையில் கிடைத்த வேலையை செய்து கொண்டு எதிர்காலத்தைப் பற்றிய பயத்தோடு நம்வீட்டுப் பிள்ளைகள் ஓடிக்கொண்டிருக்கின்றனர். வறுமை சூழ்ந்த வாழ்நிலை நெருக்கடிகள் ஏற்படுத்தும் மனஅழுத்தத்தால் தற்கொலை செய்யும் இளைஞர்கள், தொழிலாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கை கந்துவட்டி கடனிலும், நாளை என்ன ஆகுமோ என்ற பயத்திலும் போய்க் கொண்டிருக்கிறது.

இதற்காகப் போராடுவதற்கோ, ஏன் பேசுவதற்கு கூட துப்பில்லாத கோழைகள்தான் விஜய் போன்றவர்கள். இவர்கள் நடிக்கும் படங்களும் இளைஞர்களை சமூக சிந்தனை அற்றவர்களாக, பொறுப்பற்றவர்களாக, பெண்களை இழிவாக பார்க்கும் கண்ணோட்டம் கொண்டவர்களாக மாற்றுவதையே நோக்கமாக கொண்டிருக்கின்றன.  வாழ்க்கை குறித்த எந்த விழுமியங்களோ, சிறந்த லட்சியங்களோ இல்லாமல் சினிமா, போதை உள்ளிட்ட நுகர்வு வெறியே இளைஞர்களின் லட்சியமாக இந்த சினிமா பொறுக்கி கும்பலால் மாற்றப்படுகிறது. அப்படிப்பட்ட பண்பாட்டையே இளைஞர்களின் பண்பாடாக சிந்திக்க வைத்திருக்கிறார்கள்.

ஒழுக்கம், விழுமியங்கள், பிறரைப் பற்றி சிந்திப்பது குறித்து அக்கறையற்ற இத்தகைய மனநிலைதான் இந்துமதவெறி பாசிஸ்டுகள் தங்களுக்கான அடியாட்படையைத் திரட்டிக் கொள்வதற்கும் அடிப்படையாக உள்ளது.  எவ்வளவு பெரிய அபாயம் இது. சொல்லப்போனால் பண்பாட்டுத் தளத்தில் இந்துமதவெறி பாசிச கும்பலின் பங்காளிதான் நடிகர் விஜய்.

மறுகாலனியாக்கம் உருவாக்கியுள்ள இந்த நுகர்வுவெறி, போதை சீரழிவுப் பண்பாட்டை  சினிமா பொறுக்கிக் கும்பல் மேலும் மேலும் வளர்த்து சமூகத்தை சீழ்பிடிக்க வைக்கிறது. தங்களது சொகுசு வாழ்க்கைக்காக, சினிமா, அரசியல் போதைவெறிக்காக இளைஞர்களின் வாழ்க்கையில் தெரிந்தே விளையாடுகின்றனர் இந்த பொறுக்கி நாயகர்கள். தங்கள் துயரமான வாழ்க்கை நிலை வேறு, கோடிகளில் குதூகலிக்கும் சினிமா கதாநாயகர்களின் சொகுசு வாழ்க்கை வேறு என்பதை உணர்ந்து விஜய் போன்ற சினிமா கழிசடைகளின் உண்மை முகத்தை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு சென்று கூட்டத்தில் சிக்கிக் கொண்டோம், கூட்டத்தில் தவறாக நடந்து கொண்டார்கள், நிகழ்ச்சியை நடத்திய நிர்வாகிகள் சரியாக ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்று நடுத்தர வர்க்கம் புலம்பிக் கொண்டிருப்பதால் ஒன்றும் மாறப் போவதில்லை. இந்த சந்தர்ப்பவாதப் போக்கை உதறித் தள்ள வேண்டும். மறுகாலனியாக்க சீரழிவான இந்த சினிமா போதைவெறியை சமூகப் பொறுப்பணர்ச்சியுள்ள அனைவரும் அம்பலப்படுத்த வேண்டும். கேடுகெட்ட இந்த சினிமா கழிசடைகளை கண்டிக்க வேண்டும்.  இல்லாவிட்டால் நம் வீட்டுப் பிள்ளைகள் படிப்படியாக சமூகத்திற்கு எதிரானவர்களாக மாறுவதை நம்மால் தடுக்க முடியாது.

அதே சமயம் மாணவர்கள், இளைஞர்களின் உள்ளார்ந்த சமூகப் பொறுப்புணர்வை, மானுடநேயத்தை, மக்களுக்காகப் போராடுகின்ற உன்னத குணத்தை அரசியல், பண்பாட்டுத் தளத்தில் மிகப் பரந்த அளவில் வளர்த்தெடுக்க வேண்டிய தேவை புரட்சிகர ஜனநாயக சக்திகளுக்கு முன்நிபந்தனையாக உள்ளது.


இனியன்



நிர்மலாவின் தெனாவட்டு பேச்சு.. | தோழர் மருது

  • மீபத்தில் பிரதமர் மோடி தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதுபோல் சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்களின் நிர்வாகத்தை கையில் எடுக்க முடியுமா என்றும் பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
  • கோவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில், தொழில்முனைவோர் ஒருவர், தனக்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை என புகார் தெரிவித்தார். அதற்கு நிர்மர்ராமன் திமிர்த்தனமாக வினையாற்றினார்.

இந்நிகழ்வுகள் குறித்து மக்கள் அதிகராம் செய்தி தொடர்பாளர் தோழர் மருது அவர்கள் அளித்துள்ள நேர்காணல்..

நிர்மலாவின் தெனாவட்டு பேச்சு.. | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!



பத்திரிகையாளர்களை அடாவடித்தனமாக பணிநீக்கம் செய்யும் விகடன் குழுமம்!

மிழ்நாட்டின் முன்னணி இதழ்களான ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் போன்றவற்றை நடத்திவரும் விகடன் குழுமம், மூத்த பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட ஊழியர்களை அடாவடித்தனமாக பணிநீக்கம் செய்துள்ளது. இந்நடவடிக்கையை புதிய ஜனநாயகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தன்னுடைய நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும் புகழுக்காகவும் இரவு பகல் பாராமல் கடினமாக உழைத்த ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பது, விகடன் குழுமத்தின் இலாபவெறியின் உச்சமாகும்.

சட்டவிரோதமாக ஊழியர்களைத் தனித்தனியாக அழைத்து, பணியிலிருந்து விலகிக்கொள்வதாக எழுதிக்கொடுக்கும்படி நிர்பந்தித்தும் ‘விலகல் கடிதம்’ எழுதிக் கொடுக்காதவர்ளை மிரட்டி எழுதிவாங்கியும் அடக்குமுறை செலுத்தியுள்ளது, விகடன் குழுமம். சட்டப்படி வழங்கவேண்டிய இழப்பீடுகளை கொடுக்காமல் இருப்பதற்காகவே ஊழியர்களிடம் விலகல் கடிதங்களை விகடன் குழுமம் எழுதி வாங்கியுள்ளதாக குற்றம் சாட்டுகிறது, சென்னை பத்திரிகையாளர் சங்கம்.

கடந்த ஆகஸ்ட் மாதமே பணிநீக்கத்திற்கு திட்டமிட்டு இருந்தாலும், செப்டம்பர் மாதத்தில் “விகடனும் கலைஞரும்” என்ற நூலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வைத்து வெளியிட திட்டமிட்டு இருந்ததால், அந்நிகழ்ச்சியில் பணிநீக்கம் பேசுபொருளாகக்கூடாது என்பதற்காக, நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நிறைவடையும் வரை பணிநீக்கத்தை தற்காலிகமாக தள்ளிவைத்திருந்தது. நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நிறைவடைந்த இரண்டு நாட்களுக்குள் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது, விகடன் குழுமம்.


படிக்க: விகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர் இல்லை !


ஆனந்த விகடன் இதழாசிரியரான சுகுணா திவாகர் என்னும் ரீ.சிவக்குமார், “15 ஆண்டுகால உறவு முடிவுக்கு வந்த”தாக தன்னுடைய எக்ஸ் (டிவிட்டர்) பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். பத்திரிகையாளரான ராஜாதுரைகண்ணன், “அடுத்த கட்டமாக டிசம்பர் மாதம் இன்னும் சிலரை பணிநீக்கம் செய்ய தயார் ஆகிவருகிறது” என விகடன் நிறுவனத்தின் பணிநீக்கத்தை பற்றி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்னர் 2020-ஆம் ஆண்டு கொரோனா காலத்திலும் மூத்த பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 170-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தது, விகடன் குழுமம். அப்போதும் இதைப்போலவே சட்டவிரோதமாக ஊழியர்களை வற்புறுத்தியும் மிரட்டியும் விலகல் கடிதத்தை எழுதி வாங்கியது.

“கொரோனா காரணமாக நிறுவனம் சந்திக்கும் நெருக்கடியை கருத்தில் கொண்டு பல தொழிலாளர்கள் அவர்களாகவே வேலையை விட்டு வெளியேறியதாக” மனசாட்சி இல்லாமல் புளுகியது, விகடன் குழுமம். ஆனால், விகடன் குழுமத்தின் வரவு-செலவு ஆண்டறிக்கையை, கணக்கு தணிக்கையாளர் மூலம் “மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம்” ஆய்வு செய்ததில், விகடன் குழுமத்தின் கூற்றுப் பொய் என அம்பலப்பட்டுப் போனது.

ஒருபுறம், இலாபத்தை அதிகரிப்பதற்காக அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்களை பணிநீக்கம் செய்யும் விகடன் குழுமம், மறுபுறம் “விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்” என்ற பெயரில் அற்பக்கூலி கொடுத்து பயிற்சி மாணவர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்து வருகிறது.


படிக்க: 176 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் விகடன் குழுமம் !


விகடன் நிறுவனத்தின் 2020-ஆம் ஆண்டு பணிநீக்கத்தின் போது, பிற பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் மத்தியில் கண்டனக்குரல்கள் எழுந்தன. ஊரடங்கு சூழலில் கூட, 170 ஊழியர்களின் பணிநீக்கத்தைக் கண்டித்து விகடன் அலுவலக வாயிலின் முன்பு போராட்டம் நடைபெற்றது. திரைப்பட இயக்குனர் லெனின்பாரதி, “மேற்கு தொடர்ச்சி மலை” திரைப்படத்திற்காக, விகடன் குழுமம் வழங்கிய விருதை திருப்பி அனுப்பினார். ஆனால், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவான அப்படிப்பட்ட சூழல் தற்போது இல்லை என்பது கவலைக்குரியதாகும்.

விகடன் குழுமத்தின் தற்போதைய ஊழியர்கள் பணிநீக்கத்திற்கு எதிராக, “மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம்”, “சென்னை பத்திரிகையாளர் சங்கம்” தவிர பிற நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள், தொழிற்சங்கங்கள் அமைதி காக்கின்றன. கலைஞர்களை ஊக்கப்படுத்த, “பொற்கிழிகள்” வழங்கிக் கொண்டிருந்த, ஊடகவியலாளர்களுக்கு உரிமைக்குரல் கொடுப்பதாகக் காட்டிக் கொள்கின்ற தி.மு.க. அரசும் இந்த ஊடகவியலாளர்களைக் கண்டுகொள்ளவில்லை.

சமூக ஊடகத்துறை வளர்ந்து வருகின்ற, ஊடகத்துறை டிஜிட்டல்மயமாகிக் கொண்டிருக்கின்ற, ஊடகத்துறையின் முக்கியத்துவம் மென்மேலும் அதிகரித்து வருகின்ற இக்காலத்தில், ஊடகவியலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அதிக முக்கியத்துவமுடையதாகும். முக்கியமாக, பாசிச அடக்குமுறைகள் அதிகரித்துவருகின்ற சூழலில், உரிமைகளற்ற ஊடகவியலாளர்களை உருவாக்கும் நோக்கத்தில் ஊடகத்துறை செல்வதானது, பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை முனைமழுங்கச் செய்யும்.

எனவே, பணிநீக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டியது நம்முடைய முதற்கடமையாகும்.


ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.

(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2023 இதழ்)



பூணூல் அணிந்தால் பறையர் பார்ப்பனராக மாறிவிடுவார்களா? | தோழர் மருது

ந்தனார் பிறந்த ஆதனூர் கிராமம் சிதம்பரம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ளது. அங்கு நடைபெறும் நந்தனார் குருபூஜை விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அதில் 100 தலித்களுக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பூணூல் அணிந்தால் பறையர் பார்ப்பனராக மாறிவிடுவார்களா? | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!



மகத்தான மக்கள் விஞ்ஞானி மேக்நாட் சாகா

மகத்தான மக்கள் விஞ்ஞானி, மேக்நாட் சாகா:
வரலாறு மறைத்தாலும்
வானியலுக்கு வெளிச்சம் பாய்ச்சிய அறிவியல் மேதை!


க்களை முட்டாள்களாக்கி, காட்டுமிராண்டி நிலைக்குத் தள்ளும் பார்ப்பன பாசிசக் கும்பல், இந்துராஷ்டிரத்தை நோக்கி முனைப்புடன் செயல்பட்டு வரும் காலமிது.

இந்தப் பார்ப்பன கும்பலின் சனாதன சித்தாந்தத்திற்கு எதிராக முற்போக்கு கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதன் ஒரு அங்கமாக நவீன அறிவியல் சிந்தனைகளை மக்களிடம் விதைப்பது ஒரு முக்கியப் பணியாகும்.

அந்த வகையில் சித்தித்து செயல்பட்டவரும் சமத்துவ சமூகத்தைப் படைக்க வேண்டுமென பாடுபட்ட மக்கள் விஞ்ஞானியுமான, பல்துறை ஆற்றல் கொண்ட “மேக்நாட் சாகா”வின் வரலாற்றை, இன்றைய தலைமுறையிடம் கொண்டு செல்வது அவசியமானதொரு பணியாகும்.

இந்திய சமூகத்தின் சாதியும் வர்க்கமும் எத்தகைய கொடிய தன்மை கொண்டவை என்பதை இவரது வாழ்க்கை வரலாறு நமக்கு எடுத்துக் காட்டுகிறது. அத்தகைய விஞ்ஞானியான மேக்நாட் சாகாவை, அவரது 130-வது பிறந்த நாளை ஒட்டி (அக்டோபர் 06) வினவு வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறோம்.

தமிழ் வாசிப்பு தளத்தில், பார்ப்பன இந்திய சிந்தனைப் போக்கும் மேலான்மையும் பல மக்கள் விஞ்ஞானிகளை, மக்கள் அறிஞர்களை இருட்டடிப்பு செய்திருப்பதன் தாக்கத்தை உடைக்கும் வகையில் பல முயற்சிகள் நடந்து வருகின்றன. அதில் ஒன்றுதான், “மேக்நாட் சாகா” குறித்து வெளிவந்துள்ள நூலாகும். 

தோழர் தேவிகாபுரம் சிவா, “மேக்நாட் சாகா – ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை” என்ற தலைப்பில் எழுதியுள்ள, வாழ்க்கை வரலாற்று நூலை “பாரதி புத்தகாலயம்” தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது சிறந்த பங்களிப்பாகும்.

அந்நூலுக்கு தோழர் தேவிகாரபுரம் சிவா எழுதிய முன்னுரையை சுருக்கிக் கொடுத்துள்ளோம். இந்நூலை அனைவருக்கும் பரப்புங்கள், பகிருங்கள். நம்மில் பல மேக்நாட் சாகா-க்கள் உருவாவதற்கு வழிகோலுங்கள்!


னிதம் ததும்பும் மகத்தான வரலாறு மேக்நாட் சாகாவினுடையது. வங்க மண் தந்த வண்ணமயமான ஆளுமை மேக்நாட் சாகா.

‘விஞ்ஞானி’ என்ற ஒற்றைச் சொல்லுக்குள் மட்டுமே அகப்பட்டுவிடாத விரிவும் செறிவும் கொண்ட விரிவுறு வெளியாக அவரது ஆளுமை பிரம்மாண்டம் காட்டி நிற்கிறது. விடுதலை வீரர், சோசலிச செயல்பாட்டாளர், வரலாற்று ஆய்வாளர், கல்வியாளர், பொருளாதார நிபுணர், நிறுவனக் கட்டமைப்பாளர், உலக அமைதிப் போராளி, சமூகப் புரட்சியாளர், தொல்பொருள் ஆய்வாளர், மனித உரிமைப் போராளி, நாடாளுமன்றவாதி என அவரது ஆளுமை விரிந்து நிற்கிறது.

உண்மையில், இந்தியா உலக அறிவியலுக்கு குறிப்பாக இயற்பியலுக்கு அளித்த முதல் நேரடி பங்களிப்பு மேக்நாட்டின் வெப்ப அயனியாக்கக் கோட்பாடும், அது குறித்த அவர் பெயரிலான அயனியாக்கச் சமன்பாடுமேயாகும்.

“ஃபில் மேக்” என அழைக்கப்படும் “ஃபிலாசாபிகல் மேகசின்” (Philosophical Magazine) எனும் ஆய்விதழில், 1920-ஆம் ஆண்டு வெளிவந்த “சூரிய நிறமண்டலத்தில் அயனியாக்கம்” என்ற ஆய்வுக் கட்டுரை, மேற்கண்ட வெப்ப அயனியாக்கக் கோட்பாட்டையும், அவரது சமன்பாட்டையும் கொண்டிருந்தது.

நூற்றாண்டுகளாகத் தேங்கிக் கிடந்த வானியற்பியல் ஆய்வுகளுக்கு, இவை புது வழிகாட்டிட நவீன வானியற்பியல் பிறந்தது. ஆம், நவீன வானியற்பியலின் தந்தை மேக்நாட் தான். இச்சாதனை நிகழ்த்தப்பட்டபோது அவரது வயது 27 மட்டுமே.


படிக்க: நூல் அறிமுகம் : ஐன்ஸ்டீன் வாழ்வும் சிந்தனையும்


மேக்நாட்டின் சாதனைக்கான பாதை அனிச்சம் பரப்பப்பட்ட மென்மலர்ப் பாதையாக இருக்கவில்லை. அது நெருஞ்சி முட்களால் நிரப்பப்பட்டதாகவே இருந்தது.

தீண்டாமைக்குட்பட்ட ஒடுக்கப்பட்ட சாதியில் ஓர் எளிய பெட்டிக்கடைக்காரரின் மகனாகப் பிறந்த மேக்நாட்டை வறுமையும், சாதிய ஒதுக்கலும் வைராக்கியமான இளைஞராகவும், சமத்துவ சிந்தனையாளராகவும் ஆக்கின.

அவரது சமகாலத்து இந்திய விஞ்ஞானிகள் ஆய்வுக்கூடங்களில் முடங்கிக் கிடந்தபோது தன் ஆசிரியர் பி.சி.ராயின் தாக்கத்தால் ஊக்கமடைந்து மக்கள் பிரச்சினைகளோடு தன்னை இணைத்துக் கொண்டார் அவர்.

சொந்த நாட்டின் ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்பட்ட மக்களிடம் காட்டிய வன்மம் மிக்க தீண்டாமை அணுகுமுறையையும், காலனி ஆட்சியாளர்கள் வெளிப்படுத்திய இனவெறியையும் ஒரு சேரக் கண்டு வளர்ந்தவர் மேக்நாட்.

அவரது அரசியல், சமூக நிலைப்பாடுகளைக் கட்டமைப்பதில் இவை முக்கிய பங்காற்றின. காலனிய ஆட்சியாளர்களை எதிர்த்த விதத்திலும் ஜனநாயக வகுப்பினர் எனத் தான் அழைத்த பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்களின் தோழனாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட விதத்திலும் அவர் தன் காலத்தின் பிற அறிவியலாளர்களிடம் இருந்து மாறுபட்டு நின்றார்.

இந்த நாடு மேக்நாட்டுக்கான அங்கீகாரத்தை இன்றுவரை அளிக்கவில்லை. அதை நம்மால் புரிந்துகொள்ளவும் முடிகிறது. இந்தியச் சமூகம்போல் இந்தியாவின் அறிவியல் கட்டமைப்பும்  சாதிமயமாகித்தான் கிடக்கிறது. இந்தியா விடுதலை அடைந்து நேரு தலைமையில் அமைக்கப்பட்ட அரசு, அரசின் அனைத்து அறிவியல் கட்டமைப்புகளில் இருந்தும் மேக்நாட்டைத் திட்டமிட்டு ஓரங்கட்டி வைத்தது.


படிக்க: நூல் அறிமுகம்: ஆர்.எஸ்.எஸ். ஆழமும் அகலமும்


மேக்நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பே அதற்கான காரணம் என அபாசூர் போன்ற ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தியாவில் அறிவியல் புலங்களில் கூட மேக்நாட்டை அவருக்குரிய பெருமைகளோடு அறிந்தவர்கள் குறைவே. அறிவியல் மேதைகளை அறிமுகப்படுத்தும் பணி, பள்ளி பாடத்திட்டங்களில் இருந்தே தொடங்கப்பட வேண்டும். இங்கு சி.வி.ராமன், ஜகதீஸ் சந்திர போஸ் போன்ற சிலரைத் தவிர்த்து மேக்நாட் உட்பட பல அறிவியல் மேதைகள் பற்றி மாணவர்களுக்குச் சொல்லித் தரப்படுவதில்லை.

பின்தங்கிய சூழ்நிலையில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களிடம் மேக்நாட்டைக் கொண்டுபோய்ச் சேர்த்தால், அவர்கள் எதிர்மறைச் சூழல்களை வென்று எப்படிச் சாதிப்பது என்பதற்கான பாடத்தை அவரது வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வர்.

மேக்நாட்டின் மாபெரும் அறிவியல் பங்களிப்புகளான வெப்ப அயனியாக்கக் கோட்பாடும் சமன்பாடும் இந்தப் பேரண்டம் தோன்றிய சில வினாடிகளில் என்ன நிகழ்ந்தது? அது எப்படி இருந்தது? என்ற ஆராய்ச்சியில் அடிப்படையான பங்காற்றுகின்றன என அறிவியலாளர் ஜே.வி.நர்லிகர் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் முதல் ஏவுகணை முயற்சியில் ஏற்பட்ட இடர்பாடுகளை சாகா கோட்பாடே தீர்த்து வைத்ததாக அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். “அடிப்படை இயற்பியல் கோட்பாடு ஒன்று தவிர்க்க இயலாத வகையில் எதிர்பாராத ஆய்வுத்தளங்களிலும் பயன் அளிக்கின்றன. சாகா சமன்பாடு இதற்கு ஓர் உதாரணம்” என்று நர்லிகர் கட்டுரை குறிப்பிடுகிறது.

மேக்நாட்டின் தெரிவுசெய் கதிர்வீச்சு அழுத்தக் கோட்பாடு, ஒரு கோட்பாட்டு அறிவியலாளனின் ‘மாத்தி யோசி’க்கும் அற்புத ஆற்றலுக்கான சான்று. விண்மீன்களின் இயற்பியல் பண்புகளைப் புரிந்துகொள்வதில் இதுவும் முக்கியப் பங்காற்றுகிறது. உலக அளவில் ‘ஆய்வுக்கூட வானியற்பியல்’ (Laboratory Astrophysics) பெரும் துறையாக வளர்ந்து நிற்கிறது.

அரிய பெரிய வானியல் ஆய்வுக்கருவிகள் எதும் இல்லாமல் நுட்பமான வானியற்பியல் ஆய்வுகளைச் செய்து காட்டமுடியும் என்பதற்கான இத்துறையின் முன்னோடி மேக்நாட் தான். சாகா சமன்பாட்டின் இன்னொரு வடிவமான சாகா – லாங்மியூர் சமன்பாடு (Saha-Langmuire equation) அணுத்துகள் முடுக்கிகள் (Particle Accelerators) நிறை நிறமாலை மானிகள் (Mass Spectrometers) ஆகியவற்றை வடிவமைப்பதில் முக்கிய வழிகாட்டியாக உள்ளது. பிளாஸ்மா இயற்பியல் (Plasma Physics) ஆராய்ச்சிகளிலும் வெப்ப அயனியாக்கக் கோட்பாடு முக்கியப் பங்காற்றுகிறது.

சாகா, வெப்ப அயனியாக்கக் கோட்பாடு மட்டுமின்றி வளிமண்டல அடுக்கான அயனிமண்டல (ionosphere) ஆய்விலும் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தினார். இன்றைய வானொலி, தொலைக்காட்சி மற்றும் விண்வெளி தகவல் தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்த ஆய்வுகளுக்கு முக்கிய பங்கு உள்ளது.

அணு ஆற்றல் குறித்த விஷயங்களில் சாகா முன்னோடி ஆய்வாளர் ஆவார். 1931-இல் அணுக்கருத் துகள் நியூட்ரான் கண்டுபிடிக்கப்பட்டது. 1932-இல் ஜேம்ஸ் சாட்விக் அதை உறுதிப்படுத்தினார். அணு இயற்பியலில் அடுத்து நடந்த வளர்ச்சிகளை சாகா எல்லையற்ற உற்சாகத்தோடு கொண்டாடியதோடு தன் ஆய்வுத்துறையையும் நிறமாலையியலில் இருந்து அணுக்கரு இயற்பியலுக்கு மாற்றிக் கொண்டார்.

வெப்ப அயனியாக்கக் கோட்பாட்டின் தர்க்கரீதியான விளைவுதான் அணுக்கரு இணைவு (nuclear fusion) வினைகள். இதை உலக அறிவியல் அறியும் முன்பே சாகாவின் கட்டுரை ஒன்று தெரிவித்துள்ளது.

காந்த தனி துருவத்தின் (Magnetic Monopole) துருவ வலிமை (pole strength) பற்றி “பால் டிராக்”-இன் சூத்திரத்தை மேம்படுத்தியதன் மூலம் துருவ வலிமை பற்றிய டிராக்-சாகா சூத்திரம் உருவானது.

கல்கத்தா பல்கலைக்கழகத்தில் துகள் முடுக்கியான சைக்ளோட்ரானை அமைக்கவும், அணுக்கரு இயற்பியல் ஆய்வு நிறுவனம் ஒன்றை அமைக்கவும் அவர் எடுத்துக் கொண்ட இமாலய முயற்சிகள் இந்திய இயற்பியல் வரலாற்றின் தனித்துவமான பக்கங்களை அலங்கரிக்கின்றன.

மேக்நாட் சாகா ஆய்வுக்கூடங்களில் மட்டுமே முடங்கிப் போனவர் அல்லர். அவர் சமூகம், அறிவியல், அரசியல் எனப் பல தளங்களில் தன் ஆளுமையைப் பதித்தவர். அவரது வாழ்க்கை வரலாற்றை வாசிப்பது என்பது அவர் வாழ்ந்த 62 ஆண்டுகால இந்திய வரலாற்றையும், இந்தியாவின் அறிவியல், குறிப்பாக இயற்பியல் வரலாற்றையும் வாசிப்பதாக இருக்க முடியும்.

ஜவகர்லால் நேருவின் அறிவியல் சிந்தனைகளில் மேக்நாட்டின் தாக்கம் அதிகம். குறிப்பாக, விடுதலைக்கு முன் சாகா நேருவுக்கு எழுதிய பல கடிதங்களில் அறிவியலின் சமூகப் பயன்பாட்டைத் தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறார். மேக்நாட் நடத்திய ‘சயின்ஸ் அண்ட் கல்ச்சர்’ இதழை நேரு தொடர்ந்து வாசித்து வந்தார்.

மேக்நாட்டால் செல்வாக்கு செலுத்தப்பட்ட விடுதலைக்கு முந்தைய நேருவின் அறிவியல் பார்வை, விடுதலைக்குப் பின் அதிகார அரசியலின் விதிகளுக்கு உட்பட்டு திசைமாறியது. கோடிக்கணக்கான எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கானதாக அல்லாமல் சில முதலாளிகளின் வணிக நோக்கத்தை வலுப்படுத்தும் ஒன்றாக இந்த நாட்டு அறிவியல் மாறியதை மேக்நாட் தன் வாழ்நாளிலேயே கண்டார்.

1956-இல் அவரது மறைவுக்குப் பின் அறிவியலை ஜனநாயகப்படுத்துவதற்கான அவரது முன்னெடுப்புகளைத் தொடர ஆள் இல்லாமல் போய்விட்டது. மக்களின் இல்லாமை, கல்லாமை, நோய்மை ஆகியவற்றை நீக்குவதற்கான கருவியாக மேக்நாட் அறிவியலை முன்மொழிந்தார். அதை வாழ்நாள் முழுதும் வலியுறுத்தினார்.

அந்த வகையில், இந்தியாவில் “மக்கள் அறிவியல்” என்ற கோட்பாட்டை முன்வைத்த முன்னோடி அவர். அவரது பிறந்த நாளான அக்டோபர் 06-ஐ ”மக்கள் அறிவியல் தினமாகக்” கொண்டாடுவதன் மூலம் மட்டுமே அவருக்குப் பெருமை சேர்க்க முடியும். அந்த நாளை எளிய மக்களின் வாழ்வை மேம்படுத்த அறிவியலை எப்படிப் பயன்படுத்த வேண்டும் எனச் சிந்திப்பதற்கும் விவாதிப்பதற்குமான தேசிய தினமாகக் கடைபிடிக்கலாம்.

இன்று, தேசிய தினங்கள் என அறியப்படும் பெரும்பான்மை தினங்கள் உயர்சாதி தலைவர்களின், அறிஞர்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய தினங்களாக மட்டுமே உள்ளன. இவற்றின் மூலம் தேச நிர்மாணத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே பங்கெடுத்தனர் என்பது போன்ற பொய்மை நிலைநாட்டப்படுகிறது.

இந்தியாவின் முதல் பிரதமர், முதல் குடியரசுத் தலைவர் என எல்லா ‘முதல்’-உம் குறிப்பிட்ட பிரிவினராக இருப்பது தற்செயல் அல்ல. அவைபோல், எல்லா தேசிய தினங்களும் குறிப்பிட்ட பிரிவினரின் பிறந்த நாள், நினைவு நாள் என இருப்பதும் தற்செயல் அல்ல. அதிகாரம் தொடர்பான அரசியல் சதி அதில் அடங்கியுள்ளது.

சி.வி.ராமன் “ராமன் விளைவை” கண்டுபிடித்த பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினமாக’க் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், “ராமன் விளைவு” கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே மேக்நாட்டின் “வெப்ப அயனியாக்கக் கோட்பாடு” நவீன வானியற்பியலின் தந்தையாக அவரை உயர்த்தியிருந்தது.

மேக்நாட்டின் அறிவியல் சாதனை, சி.வி.ராமன் போன்றோரின் அறிவியல் சாதனைக்கு எந்த நிலையிலும் குறைவானதல்ல. அதைவிடவும், அறிவியலின் சமூக செயல்பாட்டையும் தேச கட்டுமானத்தில் அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி செயல்பட்ட வகையில் மேக்நாட்டின் அறிவியல் பார்வைகள் கவனத்துக்குரியவை.

மேக்நாட் சாதாரண பொறியியல் பணிகளில் கூட மக்கள் பங்கேற்பை வலியுறுத்தியவர். பங்கேற்பு ஜனநாயகம் (participatory democracy) என்னும் உயரிய கருத்தாக்கத்தை முன்வைத்த மிகச் சிறந்த ஜனநாயகவாதி ஆவார்.

“எளிய மக்களின் வாழ்வைச் சூழ்ந்திருந்த கல்லாமை, ஏழ்மை, நோய்மை ஆகிய இடர்பாடுகளை நீக்க தனக்கான வழியில் அறிவியலை ஆயுதமாக ஏந்தி நின்றவர் மேக்நாட். அந்த வகையில், ஒரு போர்ப்படைத் தளபதிபோல் முன்நின்று சுபாஷ் சந்திர போஸ், ஜவகர்லால் நேரு, இந்திய அறிவியலாளர்கள் அனைவருக்கும் அறிவியல் தொழில்நுட்பத்தின் சமூக செயல்பாட்டை விளக்கிப் பொருளாதாரத் திட்டமிடலைக் கற்றுக் கொடுத்தார்.

ஆனால், விடுதலை பெற்ற இந்தியா, அதிகாரம் உயர்சாதியினர் கையிலும் இந்திய முதலாளிகளின் கையிலும் இருக்க வேண்டும் என்று விரும்பியது. மேக்நாட் போன்றவர்கள் ஓரங்கட்டப்பட்டனர்.

மேக்நாட் மறைந்து 59 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், அவரைப் போல் சமூகத்திற்கான அறிவியலையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலையும் தூக்கிப்பிடிக்கும் அறிவியலாளர் ஒருவரும் உருவாகவில்லை. இந்திய ஐ.ஐ.டி.க்கள், எய்ம்ஸ்-கள் போன்றவை ஏன் எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக உள்ளன? ஏன் அவை சாதிப் பண்டாரங்களின் தினவெடுத்த சதைப் பிதுக்கல்களாக மட்டுமே நீடிக்கின்றன? இந்த நிலை மாற என்ன செய்யவேண்டும்?

மேக்நாட் போன்ற அறிவியல் போராளிகளின் வாழ்க்கையை மீண்டும் மறுவாசிப்பு செய்ய வேண்டும். அவரது தொடர்ச்சியாகப் பல்லாயிரக்கணக்கான மேக்நாட்டுகள் ஒடுக்கப்பட்ட மாணவர்களில் இருந்து உருவாக வேண்டும்.

மகாத்மா ஜோதிபா பூலே, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், மேக்நாட் போன்றோரின் மானுடநேயம் ததும்பும் வாழ்க்கைக் கதைகளை எளிய மக்களின் புதல்வர்களிடம் விளக்கிக் கூற வேண்டும். மேக்நாட்டின் வாழ்வியல் இளம் தலைமுறையினருக்கான வழிகாட்டியாக விளங்கும் தகுதி பெற்றது.


நூலின் பெயர்: மேக்நாட் சாகா: ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை
ஆசிரியர்: தேவிகாபுரம் சிவா
பக்கங்கள்: 288
விலை: ₹ 260
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை
தேனாம்பேட்டை
சென்னை – 600 018
தொலைபேசி: 044 2433 2924
மின்னஞ்சல்: bharathiputhakalayam@yahoo.com

இணையதள முகவரி: thamizhbooks.com


ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.



புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் அக்டோபர் – 2023 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.240
இரண்டாண்டு சந்தா – ரூ.480
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,200

புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.20 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

 

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

தலையங்கம்: சனாதனம் ஒழிப்போம்!
ஓட்டம் பிடித்த பார்ப்பன கும்பல்
தமிழ்நாடு மாடலை தேசியமயமாக்குவோம்!

♦ அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி முறிவு:
சுயமரியாதைத் தூண்டுதலா, எலும்புத் துண்டுக்கான சீற்றமா?

♦ நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்: சிலந்திவலைகள் எச்சரிக்கை!

♦ பத்திரிகையாளர்களை அடாவடித்தனமாக பணிநீக்கம் செய்யும் விகடன் குழுமம்

♦ இந்துராஷ்டிர தர்பார்!

♦ பி.எம். விஸ்வகர்மா: பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கான சதித்திட்டம்!

♦ மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு: சரிந்துவரும் மோடியின் பிம்பத்தைத் தூக்கி நிறுத்துவதற்கான துருப்புச் சீட்டு!

♦ மணிப்பூர்: ஐந்து மாதங்களாகியும் அணையாத நெருப்பு!

♦ செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான ஹாலிவுட் எழுத்தாளர்கள்-கலைஞர்கள் போராட்டம் வெற்றி!

♦ அமெரிக்க வாகன உற்பத்தித் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் கைதுசெய்த தமிழ்நாடு அரசு!

05.10.2023

ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல்
கைது செய்யும் தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது!

கண்டன அறிக்கை

டந்த ஏழு நாட்களுக்கும் மேலாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி வந்த ஆசிரியர்களை இன்று காலை தமிழ்நாடு போலீசு கைது செய்துள்ளது.

டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கக் கோரியும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தியும், 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியர்களும் கடந்த ஒரு வாரமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் போராடி வந்தனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆசிரியர்களின் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக திராவிட முன்னேற்றக் கழகம் உறுதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு நிதி இல்லை, நிதிப் பற்றாக்குறை என்ற காரணங்களைக் காட்டி ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்காமல் தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது.

நேற்றைய தினம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு பகுதி நேர ஆசிரியர்கள் 10,359 பேர்களுக்கான தொகுப்பு ஊதியத்தை ரூ 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம வேலைக்கு சம ஊதியம் கோரும் ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து ஆராய மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், டெட் தேர்வு எழுதி காத்திருப்போர் வயது வரம்பை 55 வரை உயர்த்தி உள்ளதாகவும், ஆசிரியர்கள் அனைவரும் கேட்காத ஒரு கோரிக்கையான 10 லட்ச ரூபாய் காப்பீட்டு தொகை என்பதையும் நிறைவேற்றவுள்ளதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று அறிவித்தார்.


படிக்க: DPI வளாகத்தில் நடைபெற்ற ஆசிரியர்களின் தொடர் போராட்டம்! | வீடியோ


சம வேலைக்கு சம ஊதியம், ஆசிரியர் என்ற தகுதி ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நிகழ் காலத்தில் ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள். தமிழ்நாடு அரசோ நீங்கள் எல்லாம் செத்த பிறகு ரூ 10 லட்சம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறுகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்புகளை ஏற்க முடியாது என்று தொடர்ச்சியாக போராடி வந்த ஆசிரியர்கள் தான் இன்று காலை கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். சம வேலைக்கு சம ஊதியம் என்பதை பல்வேறு தீர்ப்புகளின் வழியாக உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அதிகாரிகளுக்கு பல லட்ச ரூபாய் சம்பளம் கொடுப்பதும் தமிழ்நாடு ஆளுநருக்கும் அவர் பரிவாரங்களுக்கும் கோடிக்கணக்கில் செலவழிப்பதும் போன்ற நடவடிக்கைகளை நிறுத்தினாலே நிதி சேமிப்பு செய்ய முடியும். அது எல்லாவற்றையும் தாண்டி ஆசிரியர்களை வெறும் இயந்திரமாக மாற்றும் கல்வி தனியார் மயத்தின் விளைவாகவே ஆசிரியர்கள் வெறும் வேலை ஆட்களாக மாற்றப்படுகின்றனர்.

கல்விக்கு போதிய நிதி ஒதுக்காமலும், பள்ளிகளை சீரமைக்காமலும், அதன் தொடர்ச்சியாக ஆசிரியர்களுக்கு போதிய ஊதியம் வழங்காமலும் இருப்பது மிகக் கேடானதாகும். இதனை மக்கள் அதிகாரம் கண்டிப்பதுடன் ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321



ரஷ்யா: போர் வேண்டாம் என்றால் 8.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

போர் வேண்டாம் என்றால் 8.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை
ரசிய ஏகாதிபத்திய அரசின் அடக்குமுறையை கண்டிப்போம்!

க்ரைன் மீதான ஏகாதிபத்திய ரசியாவின் போரைக் கண்டித்து “போர் வேண்டாம்”, ”போரை நிறுத்துங்கள்” என்று பதாகை ஏந்திய ஒரே காரணத்திற்காக ரசியாவைச் சார்ந்த 45 வயதான பத்திரிகையாளர் மரினா ஓவ்சியானிகோவாவுக்கு மாஸ்கோ நீதிமன்றம் 8.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அரசு நடத்தும் சேனல் ஒன் செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றும் அவர் கடந்த மார்ச் 2022-இல் செய்தி வாசிப்பாளருக்கு பின்னால் இருந்து ”போர் வேண்டாம், போரை நிறுத்துங்கள், அவர்களின் பிரச்சாரத்தை நம்பாதீர்கள், அவர்கள் பொய் சொல்கிறார்கள்” என்று குறிப்பிடப்படும் வாசகங்கள் அடங்கிய பதாகையை உயர்த்திப் பிடித்திருந்தார். அரசுக்கு எதிராக தவறான தகவலைப் பரப்பினார் என்று கூறி இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளார்.

”இந்தத் தீர்ப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது. நிச்சயமாக குற்றத்தை நான் ஒப்புக் கொள்ளவில்லை” என்று மரினா தீர்ப்பு குறித்து கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 2022-இல் உக்ரைன் மீது ரசிய ஏகாதிபத்தியம் முழு அளவிலான ஆக்கிரமிப்புப் போரைத் துவக்கியது. இதைத் தொடர்ந்து ரசியாவில் போரை நிறுத்தக் கோரிய போராட்டங்கள் பரவலாக நடைபெற்றன.


படிக்க: ரஷ்யா: ஒரு நாளைக்குள் முடிந்த பிரிகோஜினின் ‘ஆட்சிக்கவிழ்ப்பு சதி’!


போரை விமர்சிப்பதை புதின் தலைமையிலான ரசிய ஏகாதிபத்தியக் கும்பல் சட்டரீதியாகவே தடை செய்து வைத்துள்ளது. படையெடுப்பு என்று கூறுவதையே சட்டவிரோதம் என்கிறது ரசிய அரசு. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள செய்தி நிறுவனங்கள் இந்தப் போரை சிறப்பு இராணுவ நடவடிக்கை என்றுதான் குறிப்பிட வேண்டும் என்கிற அளவுக்கு மிக மோசமான ஒடுக்குமுறை அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

போரை எதிர்த்து போராடிய ரசிய மக்கள் நூற்றுக்கணக்கானோர் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஏகாதிபத்தியங்களுக்கிடையேயான போட்டாபோட்டியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ரசிய ஏகாதிபத்திய கும்பலும் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான நாடு பிடிக்கும் போட்டியில் வெறிகொண்டு ஈடுபட்டு வருகிறது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும், ஆப்பிரிக்க நாடுகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான முயற்சியில் ரசிய ஏகாதிபத்திய கும்பல் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.

இன்று உலகு தழுவிய அளவில் உழைக்கும் மக்களின் முதன்மையான எதிரியாக அமெரிக்க ஏகாதிபத்தியம் அம்பலப்பட்டுப் போயுள்ளது. அதன் உலகளாவிய சுரண்டல், பல்வேறு நாடுகளின் மீதான ஆக்கிரமிப்புப் போர், ஒடுக்குமுறைகள் அனைத்தும் ஜனநாயக சக்திகள் மத்தியிலும், உழைக்கும் மக்கள் மத்தியிலும் அம்பலப்பட்டுப் போயுள்ளன.


படிக்க: உக்ரைன் மரியுபோல் : அமெரிக்காவின் அடியாள்படையாக செயல்படும் அசோவ் பயங்கரவாதிகள் !


ஆனால் அதே சமயம் ஏகாதிபத்திய ரசியாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும், இதன் உடன்நிகழ்வாக நடக்கும் உள்நாட்டு மக்கள் மீதான புதின் தலைமையிலான ரசிய அரசின் கொடூரமான அடக்குமுறைகளையும் அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கை என்ற காரணத்தைக் கொண்டு ஆதரிக்கும் அல்லது கண்டும் காணாமல் அமைதியாக இருக்கும் யாரும் ஜனநாயகவாதிகளாக இருக்க முடியாது.

ஏகாதிபத்தியங்கள் என்றாலே லாபவெறி, போர், ஆக்கிரமிப்பு, உள்நாட்டில் கொடூரமான அடக்குமுறைகள் என்ற அடிப்படையில் இருந்துதான் பார்க்க வேண்டும். உக்ரைன் மீதான போரின் மூலம் உள்நாட்டில் உழைக்கும் மக்கள் மத்தியில் ரசிய ஏகாதிபத்திய கும்பலானது அம்பலப்பட்டுப் போயுள்ளது. இந்தப் போரின் பாதிப்புகளை ரசிய மக்கள் மீது திணிக்கிறது. இதனால் அரசியல் பொருளாதார ரீதியாக அழுத்தப்படும் ரசிய மக்கள் போரை எதிர்த்துப் போராடுகின்றனர். எனவே சொந்த நாட்டு மக்கள் மீது அடக்குமுறைகளை ஏவிவிட்டு வருகின்றது ஏகாதிபத்திய ரசிய அரசு. தவறான தகவலைப் பரப்பினார் என்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து மரினா ஓவ்சியானிகோவாவுக்கு 8.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்பது மிகவும் அநீதியானது. ரசிய ஏகாதிபத்திய கும்பலின் இந்த நடவடிக்கையை அனைவரும் கண்டிக்க வேண்டும். அனைத்து ஏகாதிபத்தியக் கும்பல்களின் போர்வெறியை எதிர்த்து ”போர் வேண்டாம்” என்ற குரலை நாம் அனைவரும் ஓங்கி ஒலிக்க வேண்டும். அதற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.


சிவக்குமார்



தெலுங்கானா உரை: மோடி பிரதமரல்ல பிரிவினைவாதி!

05.10.2023

இந்த நாட்டின் மிகப்பெரிய பிரிவினைவாதி நரேந்திர மோடி!

பிரிவினையையும் கலவரத்தையும் உருவாக்கும்
பாசிச ஆர்எஸ்எஸ் – பாஜக தடை செய்யப்பட வேண்டும்!

உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நரேந்திர மோடி மீது
வழக்கு பதிவு செய்ய வேண்டும்!

பத்திரிகை செய்தி

பீகாரில் நடத்தப்பட்ட சாதி வாரி மக்கள் கணக்கெடுப்பு இந்துராஷ்டிரக் கனவில் மிதக்கும் நரேந்திர மோடி அமித்ஷா பாசிச கும்பலுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நாடு முழுவதும் கலவரங்களை ஏற்படுத்தி அதன் மூலமாக ஆட்சியைப் பிடிக்கும் மோடி – அமித்ஷா பாசிச கும்பல், வட மாநில மக்களுக்கு தமிழ்நாட்டை எதிரியாக காட்டி பேசத் தொடங்கி இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ” தமிழ்நாட்டில் இந்தி படிக்க அனுமதி இல்லை, சமஸ்கிருதம் அனுமதி இல்லை ” என்று தமிழ்நாட்டின் மீதான பொய் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி “எத்தனை மக்கள் தொகையோ அத்தனை உரிமை என்று சொல்கிறார்கள். நான் காங்கிரஸிடம் கேட்கிறேன். தெற்கில் குறிப்பாக தமிழ்நாட்டில் கோவில்கள் மீது அரசின் பிடி இருக்கிறது. அரசு அவற்றை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ளது. கோவில்களின் சொத்துகள் அரசின் கூட்டு சதி மூலம் அபகரிக்கப்பட்டு வருகிறது. கோவில்கள் சூறையாடப்படுகின்றன. கோவில் சொத்துகள் அபகரிக்கப்படுகின்றன. ஆனால் சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் மீது கை வைக்கப்படுவதில்லை. அவற்றின் கட்டுப்பாட்டை தன்வசம் எடுத்துக் கொள்வதில்லை” என்று தெரிவித்திருக்கிறார். ஒரு நாட்டின் பிரதமர் என்ற முறையில் தான் இந்த நாட்டின் மிக மோசமாக ஆகக் கேடான பிரிவினைவாதி என்பதை மீண்டும் இந்த நாட்டு மக்களுக்கு தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை மட்டுமல்ல வக்ப் வாரியமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.


படிக்க: செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடி! | மக்கள் அதிகாரம்


தமிழ்நாட்டில் எப்பொழுதுமே கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்திருக்கின்றன. அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் மடங்கள் ஆதீனங்கள் கட்டுப்பாட்டில் பல கோயில்கள் தற்பொழுதும் செயல்பட்டு வருகின்றன.

1817-இல் முதல்முறையாக மதராஸ் நிலைக்கொடைகள் மற்றும் வாரிசு இன்மையால் அரசுப் பொருட்கள் ஒழுங்குறுத்தும் சட்டம் உருவாக்கப்பட்டது. கோயில்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க, கோயில்களுக்கு வழங்கப்படும் அறக்கொடைகள் முறையாக செயல்படுகிறதா என கண்காணிக்க வழிவகை செய்தது. அப்பொழுது தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன.

1858-இல் இந்திய நிர்வாகம் கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து பிரிட்டிஷ் அரசுக்கு சென்றபோது ஏற்கனவே கோயில் மூலமாக கொள்ளை அடித்த பார்ப்பன கும்பல், மீண்டும் கோயில்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. பழையபடி கோயில் சொத்துக்களை அனுபவிக்கத் தொடங்கியதுடன், மீண்டும் முறைகேடுகள் கொள்ளைகள் அரங்கேறத் தொடங்கின.

இந்தச் சூழலில்தான் 1920-இல் பனகல் அரசர் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, அப்போது மதராஸ் மாகாணத்தில் இருந்த அனைத்து கோயில்களையும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சித்தார். இதற்காக 1922-இல் இந்து பரிபாலன சட்டத்தை முன்மொழிந்த அவர், 1925-இல் இந்து பரிபாலன சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தினார். 1927-இல் ‘இந்து சமய அறநிலைய வாரியம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. 1950-ஆம் ஆண்டு இந்து கோவில் சொத்து தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று இந்திய சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அரசியலமைப்பு பிரிவு 25(2) ஆனது மத விவகாரங்களில் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டைப் பயன்படுத்துவதற்கு அரசுக்கு அதிகாரங்களை வழங்கியுள்ளது.1960-ஆம் ஆண்டு அன்றைய மெட்ராஸ் மாகாணத்தை ஆண்ட காங்கிரஸ் அரசு அமைத்த ராமசாமி ஐயர் கமிட்டி, இந்து பொது சமய நன்கொடை நிர்வாக சீர்கேடை தடுக்க அரசின் கட்டுப்பாடு அவசியம் என்றே வலியுறுத்தியது. தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை உருவாக்கப்பட்ட பிறகு தென்னிந்தியா முழுவதுமே இந்து அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. அதன்மூலம் இந்துக் கோயில்கள் தற்பொழுது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.


படிக்க: காவிரி – கர்நாடகா பந்த்: பாசிச பாஜகவை தடைசெய்!


தற்பொழுது பாரதிய ஜனதா ஆண்டு கொண்டிருக்கக்கூடிய மகாராட்டிரத்திலும் அரசின் கட்டுப்பாட்டில் கோயில்கள் உள்ளன.

குஜராத்தில் புகழ்பெற்ற சோம்நாத் கோயில் அறக்கட்டளையானது 50 சதவீதம் அரசு கட்டுப்பாடும் மீது 50 சதவிகிதம் தனியார் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.

இதெல்லாம் ஏதும் அறியாதவர் அல்ல மோடி. எதிரி நாட்டின் மீது போர் தொடுப்பது போல, எதிரி நாட்டை குற்றம்சாட்டுவது போல, தமிழ்நாட்டின் மீது பொய்யான ஒரு குற்றச்சாட்டை மற்ற மாநிலங்களில் கூறி வருகிறார்.

மணிப்பூரிலே இனக்கலவரத்தை ஏற்படுத்தி மனித மாண்புகளை கேள்விக்கு உள்ளாக்கியவர் பாரதிய ஜனதா கட்சியின் மாநில முதல்வர் பைரன் சிங் .இன்று வரை அந்த மாநில முதல்வர் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படவில்லை. பட்டினி குறியீட்டில் இந்தியா முன்னிலை, மகிழ்ச்சி குறியீட்டில் பின்னடைவு, டாலர் ஆதிக்கம் காரணமாக இந்தியாவின் ரூபாய் மதிப்பு சரிவு, அம்பானி – அதானி பாசிச கும்பலுக்காக இந்த நாட்டையே தாரை வார்த்தது என எல்லா இடங்களிலும் அம்பலப்பட்டு போன நரேந்திர மோடியின் ஆட்சி, நாட்டு மக்களால் காரி உமிழப்பட்டு கொண்டிருக்கிறது. இச்சூழலில் தான் தமிழ்நாட்டை பொது எதிரியாக காட்டுவதன் மூலம் தன்னுடைய இழந்து போன பிம்பத்தை மீட்டுருவாக்க செய்ய முயல்கிறது அமித்ஷா – மோடி பாசிச கும்பல். அதன் ஒரு பகுதியாகவே இந்து கோயில்கள் அபகரிப்பு என்ற பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

வெறுப்பு பேச்சுக்களுக்கு எதிராக பலமுறை உச்ச நீதிமன்றம் தன்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறது.

பசுவையும் கன்றையும் வாங்கிக்கொண்டு சென்ற முஸ்லிம் பால் வியாபாரி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இணையானது தமிழ்நாட்டு மக்கள் மீது நரேந்திர மோடி நடத்தியுள்ள தாக்குதல்.

தொடர்ந்து தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் வெறுப்பு பேச்சை உமிழக்கூடிய இந்த நாட்டின் பிரதமராக சொல்லிக் கொள்கின்ற நரேந்திர மோடி இந்த நாட்டின் மிகப்பெரிய பிரிவினைவாதியாக தன்னை நிரூபித்து இருக்கிறார். அவர் மீது உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த நாட்டின் பிரதமராக நீடிப்பதற்கு நரேந்திர மோடிக்கு இனியும் தகுதி இல்லை என்பதே உண்மை.

ஒரு நாட்டின் பிரதமரும் அமைச்சரவையும் ஒரு மாநிலத்துக்கு எதிராக திட்டமிட்டு வன்மத்தையும் வஞ்சத்தையும் கக்குவார்கள் என்றால், அதற்கு அடித்தளமாக இருக்கக்கூடிய ஆர்எஸ்எஸ் – பாஜக என்பது ஒரு கட்சி அல்ல. அது ஒரு பயங்கரவாத இயக்கம். நாடு முழுவதும் பிரிவினைகளை ஏற்படுத்தி கலவரங்களை உருவாக்கி ஆட்சியைப் பிடிக்கும் ஆர்எஸ்எஸ் – பாஜக என்ற பயங்கரவாத இயக்கம் தடை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து மக்கள் போராடுவது மிக முக்கியமான கடமையாகும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது,
செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
9962366321



DPI வளாகத்தில் நடைபெற்ற ஆசிரியர்களின் தொடர் போராட்டம்! | வீடியோ

திமுக அரசு சட்டமன்றத் தேர்தலின்போது தங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலக (DPI) வளாகத்தில் TNTET, இடைநிலை மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

DPI வளாகத்தில் ஆசிரியர்கள் பத்து நாள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை இன்று காலை காக்கி ரவுடிகள் மூலம் கைது செய்து உள்ளது தமிழ்நாடு அரசு.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!



மோடியின் ‘புதிய’ இந்தியாவில் இரண்டாம்தர குடிமக்களாக்கப்படும் இஸ்லாமிய மக்கள்

டந்த ஒன்பது ஆண்டுகால மோடியின் ஆட்சியில் இஸ்லாமியர்கள் மீதான  ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிச கும்பலின் தாக்குதல்களும் வன்முறைகளும் எண்ணற்றவை; அம்மக்களின் துயரங்களோ சொல்லில் அடங்காதவை. “இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும், இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும்” என காவி பயங்கரவாதிகள் வெளிப்படையாக மதவெறியைக் கக்கி வருகின்றனர். 2014 ஆம் ஆண்டில் மோடியின்  ‘புதிய’ இந்தியாவில் தொடங்கிய இந்த இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம் தற்போதைய ‘பாரத்’தில் புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது.

இசுலாமியர்கள் மீதான சங்கப் பரிவாரக் கும்பலின் வன்முறைகளும், வெறுப்புப் பிரச்சாரங்களும் அந்த சமயத்துடன் மட்டும் முடிவடைந்துவிடுவதில்லை. மாறாக, அவை மக்களின் உணர்வு நிலையிலும் இந்துக்கள், இசுலாமியர்களுக்கு இடையிலான உறவு நிலையிலும் நிரந்தப் பிளவை ஏற்படுத்துகின்றன. அந்தவகையில், சங்கப் பரிவாரக் கும்பலும் கலவரங்களுக்குப் பின்னர், இசுலாமியர்களை மனிதர்களாகவே நடத்தக் கூடாது என்று வெறுப்பைத் தொடர்ந்து உமிழ்ந்துவருகின்றன. திட்டமிட்டு அவர்களை ஒடுக்கி வருகின்றன.

இந்தக் கட்டுரை, ஹரியானாவின் நூஹ் மாவட்டக் கலவரம், 2019 டெல்லி கலவரம் மற்றும் ஜார்க்கண்ட்டின் மூன்று மாவட்ட இராமநவமி கலவரங்கள் என இசுலாமிய மக்களுக்கு எதிராக வன்முறைகள் நடத்தப்பட்ட பகுதிகளில், இக்கலவரங்களுக்குப் பிறகு இசுலாமியர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும். நாடாளுமன்றத்தில் அண்மை கால சம்பவங்கள் நாட்டின் மாண்புமிக்க இடத்திலேயே இசுலாமியர்கள் இரண்டாந்தர குடிமக்களாக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும் நமக்கு உணர்த்துகிறது.

யோகியின் பயங்கரவாத ஆட்சி நடக்கும் உத்தரப் பிரதேசம், பா.ஜ.க.வின் கொடுங்கோல் ஆட்சி நடக்கும் அசாம், திரிபுரா, குஜராத் போன்ற மாநிலங்களில் இசுலாமியர்களின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை இந்த மூன்று மாநில நிலைமைகளே நமக்கு உணர்த்திவிடும்.

இசுலாமியர்களை வெளியேற்றும் புதிய நாடாளுமன்றம்!

அண்மையில், புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் ஒரு விவாதத்தின் போது,  டெல்லியின் தெற்கு தொகுதி பா.ஜ.க எம்.பி.யான ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான டேனிஷ் அலி என்பவரை நாக்கூசும் வார்த்தைகளால் சரமாரியாகத் தாக்கினார். டேனிஷ் ஒரு இஸ்லாமியர் என்பதற்காக, அவரை  புரோக்கர், தீவிரவாதி, சுன்னத் செய்தவன், பயங்கரவாதி என அவமானப்படுத்தியிருக்கிறார்(ன்) அந்த பா.ஜ.க எம்.பி பிதுரி.  இது நடந்தது பொதுவெளியிலோ, காவி கும்பலின் மாநாட்டிலோ அல்ல, ஜனநாயகத்தின் கோயில் என பீற்றிக் கொள்ளப்படும் நாடாளுமன்றத்தில் நடந்திருக்கிறது.

இவ்வாறு ஒரு மக்கள் பிரதிநிதியை இஸ்லாமியர் என்ற காரணத்திற்காக தகாத வார்த்தைகளால் நாடாளுமன்றத்தில் பேசியதற்காக  ஒருவரைத் தண்டிக்க முடியாது என்பதுதான் இந்த ஜனநாயகத்தின் யோக்கியதை. தான் இவ்வாறு பேசியதற்காக பிதுரி வருத்தப்படவில்லை, இவ்வாறு அவர் பேசுவது முதன்முறையுமல்ல. பிற பா.ஜ.க எம்.பி.க்களும் மேசையைத் தட்டி வரவேற்றனர். அந்த அளவிற்கு இஸ்லாமிய வெறுப்பில் ஊறிப் போயுள்ளது இந்த பாசிசக் கும்பல்.


படிக்க: ஹரியானா: புல்டோசரைக் கொண்டு முஸ்லீம்கள் மீது அரசு நடத்தும் மதவெறி தாக்குதல்


இத்தனைக்கும் பகுஜன் சமாஜ் கட்சி, பா.ஜ.க.வின் மறைமுகப் பங்காளியாகத்தான் இருந்து வருகிறது. ஆனால், இசுலாமியர் என்றால் அவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் இழிவுபடுத்தப்படுவார்கள் என்பதுதான் பாசிஸ்டுகள் உருவாக்கியிருக்கும் புதிய இயல்புநிலை. மானத்திற்கு அஞ்சுகின்ற எந்த ஒரு இஸ்லாமியரும் நாடாளுமன்றத்திற்கோ சட்டமன்றங்களுக்கோ செல்வதற்குத் துணியக் கூடாது என்பதுதான் பாசிஸ்டுகள் கட்டியமைக்கும் உளவியல்.

இனிமேல் இவ்வாறு பேசினால், பிதுரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் ‘எச்சரித்ததைத்’ தாண்டி வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், இதே பாசிச கும்பல்தான், இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் அதானி குறித்து திருமாவளவன் பேசும் போது மைக்கை ஆப் செய்தது; விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்கக் கோரிய எதிர்க்கட்சிகளைச் சார்ந்த 19 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்தது. மோடியோ இந்த நிகழ்வு குறித்து  இதுவரை வாய்திறக்கவில்லை. மோடி அரசையோ, மோடியையோ விமர்சிக்கக் கூடாது என்பதற்காகவே சர்வாதிகாரி, குண்டர்களின் அரசு, ஜூம்லா,  இரட்டை வேடதாரி, நாடகம், சகுனி உள்ளிட்ட வார்த்தைகள் நாடாளுமன்றத்தில் தடைசெய்யப்பட்டுள்ளன.

இந்த வார்த்தைகளைவிட மோசமான, இழிவான வார்த்தைகள்தான் பிதுரி பேசியவை. இந்த இழிச்செயலைப் பாராட்டும் விதமாக, 29.5 சதவீத முஸ்லீம் மக்கள் நிறைந்த ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்திற்கு பிதுரியை தேர்தல் பொறுப்பாளராக அறிவித்திருக்கிறது பா.ஜ.க.

காவிகளின் ஆட்சியில் இஸ்லாமிய மக்களின் அவலநிலை:

2014-க்குப் பிறகு லவ் ஜிகாத், நில ஜிகாத், மதமாற்றம், அந்நிய ஊடுருவல் போன்றவற்றைத் தடுப்பது, பசுப்பாதுகாப்பு என பலபெயர்களில் பொய்களைப் பரப்பி இஸ்லாமியர்கள் மீது அறிவிக்கப்படாத இனப்படுகொலையை நடத்திக் கொண்டிருக்கிறது காவி பாசிசக் கும்பல். விநாயகர் சதுர்த்தி மட்டுமின்றி, அனைத்து இந்துப் பண்டிகைகளும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலுக்கான முகாந்திரங்களாகப் பயன்படுத்தப் படுகின்றன. ராமநவமியைக் காரணமாகக் கொண்டு குஜராத், மேற்கு வங்கம், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கலவரங்களை நடத்தி வருகிறது காவி கும்பல்.

ஹரியானா: அண்மையில்,  ஹரியானாவில் நூஹ் மாவட்டத்தில் கோவில் திருவிழாவை முகாந்திரமாகக் கொண்டு இஸ்லாமியர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது, விஸ்வ இந்து பரிசத் என்ற காவி குண்டர்படை. இந்த வன்முறையில் மசூதிகள் சூறையாடப்பட்டன; சாலையில் நின்ற வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன; இமாம் உட்பட அப்பாவி முஸ்லீம்கள் பலர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமுற்றனர். மேலும், கலவரக்காரர்களுக்கு சொந்தமான வீடுகளை இடிப்பது என்ற பெயரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் குடியிருப்புகளை இடித்துத் தள்ளி, பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கி இஸ்லாமியர்கள் மீது அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது ஹரியானா மாநில பா.ஜ.க அரசு.

கடைகள், வீடுகள் என இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானவற்றை இடித்துத்தள்ளி அவர்களது வாழ்வாதாரத்தைப் பறித்து சொந்த நாட்டிலேயே இஸ்லாமிய மக்களை அகதிகளாக்கியிருக்கிறது. காவி பயங்கரவாதிகள் ஆளும் உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, அசாம் போன்ற மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இத்தகைய புல்டோசர் தாக்குதல்கள் தினந்தோறும் நடந்து வருகின்றன.

நாடு முழுவதும் நடைபெற்ற பல்வேறு கலவரங்களால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களின் வலிகள் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை. குடிநீர் கூட உவர்நீராக உள்ள நூஹ் மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர், “வகுப்புவாத அரசியலாலும், வெறுப்பாலும் எங்கள் கிராமம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. எங்களுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை; எங்களது சமூக நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் எரிக்கின்ற இந்த வகுப்புவாதத் தீயை அணைப்பதற்காகவாவது தண்ணீர் ஊற்றுங்கள்” என்கிறார்.

டெல்லி: கடந்த 2020 ஆம் ஆண்டில், இஸ்லாமியர்களை சட்டப்பூர்வமாக இரண்டாந்தர குடிமக்களாக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் ஷாகீன்பாக்கில் போராடியவர்கள் மீது பெரும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது, காவி கும்பல். இவ்வன்முறையில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், இஸ்லாமிய மக்களின் உடைமைகள் சூறையாடப்பட்டன, பலர் படுகாயமுற்றனர். ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் அவர்களுக்கான நீதி கிடைக்கவில்லை என்பதே பெருந்துயரம்.

டெல்லி கலவரத்தால் தனது எலெக்ட்ரிக்கல் கடையையும் சான்றிதழ்களையும் பறிகொடுத்த அஸ்ஹர் சைதி, “நான் பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ செல்லாதது போலாகிவிட்டது” என்று வேதனையை வெளிப்படுத்துகிறார். கலவரத்தில் எரிக்கப்பட்ட தமது கடைக்காக ஆறு லட்ச ரூபாய் இழப்பீடு கேட்டதில், வெறும் 5,000 ரூபாய்தான் கிடைத்திருக்கிறது என்கிறார்.

“இந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் நிலையும் இதுதான். நீதிமன்றத்தை அணுகினால், டெல்லி அரசாங்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட நிவாரணக் கமிசனை அணுகச் சொல்கிறார்கள். அங்கோ 2,500 வழக்குகள் வந்திருப்பதாகவும், அவற்றில் 1,500 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன என்றும் கூறுகின்றனர். இதில் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கைத் தேடிக் கண்டுப்பிடிப்பதே நீண்ட செயல்முறையாக இருக்கிறது. இந்த செயல்முறையானது நீதிமன்றத்திற்கும் கமிசனுக்குமிடையிலான நடைமுறை முடிச்சுகளில் சிக்குண்டுள்ளது. இது, பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தை மேலும் அதிகரிப்பதாக இருக்கிறது” என்கிறார் வழக்கறிஞரும், மனித உரிமை செயல்பாட்டாளருமான மிஷிகா சிங்.

ஜார்க்கண்ட்: கடந்த ஏப்ரல் மாதத்தில், நடைபெற்ற ராம நவமி கொண்டாட்டத்தின் போது, ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசிராபாத் உள்ள மூன்று மாவட்டங்களில் கலவரம் நடைபெற்றது. “ஹசிராபாத்தில் கலவரம் நடைபெற்றது துரதிஷ்டவசமானது. பல வருடங்களாக, பல்வேறு மதத்தைச் சேர்ந்த மக்களும் ராமநவமிக் கொண்டாட்டத்தில் பங்கேற்றிருக்கின்றனர். 1925 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் ராம நவமி கொண்டாடும் பழக்கம் தொடங்கியது” என்கிறார் எழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான சஞ்சய் கிருஷ்ணா.

“ஜாம்ஷெட்பூரில்  பத்து நாட்களுக்குள்  இருமுறை வன்முறை அரங்கேறியிருக்கிறது. இதற்கு முன்பு சில சம்பவங்கள் நடைபெற்றிருந்தாலும் ஏப்ரல் 8-ஆம் தேதி நடத்தப்பட்ட கலவரம் இரு சமுதாய மக்களிடம் பிளவை இன்னும் அகலப்படுத்தியிருக்கிறது. மக்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்வது அல்லது  மற்றவர் கடைகளில் பொருள் வாங்குவதையும் தவிர்க்கின்றனர். இயல்புநிலை திரும்பினாலும்,  இந்த மக்களிடைய ஏற்பட்ட பிளவை சரிசெய்வது கஷ்டம்தான்” என்கிறார், சஞ்சய் கிருஷ்ணா.


படிக்க: முசாஃபர்நகர் முஸ்லீம் மாணவர் மீதான தாக்குதல்: பாசிசம் வேரூன்றியிருப்பதன் சமிக்ஞை


மேலும், இக்கலவரத்தில் அம்மாநிலத்தின் ராஞ்சியில் உள்ள இந்திரபுரியில் உள்ள மசூதி தாக்கப்பட்டது. “ஏப்ரல் முதல் நாள் காலை 5 மணிக்கு மசூதியில் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, வாயிற்கதவு உடைக்கப்பட்டது, மசூதியில் இருந்த கண்ணாடிகள் உடைக்கப்பட்டன, கற்கள் வீசியெறியப்பட்டன, முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இவை அனைத்தும் போலீசு கண் முன்னே நடந்தது. மேலும், மசூதி தாக்கப்பட்டது இதுவே முதல் முறை. மசூதிக்கு நேர் எதிராக கோவில் இருந்தபோதும் இதற்கு முன்புவரை எந்த பதற்றமும் ஏற்பட்டதில்லை” என்கிறார், சாதிக்.

“கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பங்களாதேஷ் முஸ்லீம்கள் சட்டவிரோதமாக ஜார்கண்ட்டில் குடியேறுகிறார்கள்; பழங்குடியினப் பெண்களை திருமணம் செய்து கொண்டு நிலத்தை எடுத்துக் கொள்கிறார்கள்; இதனால் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை பெருகுகிறது; பழங்குடி மக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது என்பதெல்லாம் பொய்” என்கிறார் அலி.

“ஜார்க்கண்டின் கிராமப்புற இஸ்லாமியர்களும், பழங்குடிகளும் பல ஆண்டுகளாக ஒற்றுமையாகத்தான் வாழ்ந்தனர் மற்றும் ஒரே பண்பாட்டைத்தான் கடைபிடித்து வந்தனர். 1855-56-களில் ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற சந்தால் பழங்குடியினர் எழுச்சியில்  இஸ்லாமியர்களும் தலித்துகளும்தான் ஒன்று சேர்ந்து போராடினர். 1980 மற்றும் 1995-களில் நடைபெற்ற சிபுசோரன் இயக்கத்திலும் பழங்குடியினர்களான மாஞ்சிகளும், இஸ்லாமியர்களான மோமிகளும்தான் பங்கேற்றனர். அத்தகைய மக்களின் ஒற்றுமையை அரசியல்வாதிகள் சிதைக்க முயற்சிக்கின்றனர். அதற்கு ஒரு சான்றுதான் லவ் ஜிகாத்” என்கிறார் ஜார்கண்டைச் சார்ந்த  பத்திரிக்கையாளரான பைசல் அனுராக்.

எச்சரிக்கை, இன்று இசுலாமிய மக்கள்;
நாளை, அனைத்து உழைக்கும் மக்களும்

இசுலாமியர்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரங்கள், வதந்திகளை பரப்புவதன் மூலம்  சகோதரத்துவத்துடன் பழகிக் கொண்டிருந்த மக்களிடம் மதவெறி நஞ்சை விதைத்திருக்கிறது சங்கப் பரிவார கும்பல். அடுத்தக் கட்டமாக, ஒரு திட்டமிட்ட தாக்குதலை அரங்கேற்றி இரு தரப்பு மக்களையும் இருப்பிட ரீதியாக (Physical) பிரிக்கிறது. இசுலாமியர்கள் தங்களது சொந்த இடத்தில் வீடுகளில் வாழ்வதற்கும், தெருக்களில் நடமாடுவதற்கும் பாதுகாப்பற்ற மனநிலையை உருவாக்குகிறது. அதன் பின்னர், இசுலாமியர்கள் இயல்பாக இந்து பெரும்பான்மை மக்களிடமிருந்து உணர்வு ரீதியாகவே பிரிக்கப்படுகின்றனர்; அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

சங்கப் பரிவார கும்பல் ஆதிக்கத்தில் இருக்கும் இடங்களில் இந்த நிலைமையை அடுத்தடுத்து வளர்த்துக் கொண்டே செல்கிறது. இசுலாமியர்களை என்னவேண்டுமானாலும் செய்யலாம், யாரும் கேட்கமுடியாது என்ற, கொடுங்கோன்மையை உருவாக்குகிறது.

வரவிருக்கின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, வெறிகொண்டு இஸ்லாமியர்களின் மீதான கலவரங்களைத் திட்டமிட்டு அரங்கேற்றி வரும் காவி பாசிஸ்ட்டுகள், ஆட்சியைக் கைப்பற்றினால், மேற்கண்ட நிலைமையை நாடுமுழுவதுமே உருவாக்கிவிடுவார்கள்.

இஸ்லாமியர்கள் மீது மட்டுமின்றி, இதர சிறுபான்மையினர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட பெரும்பான்மை உழைக்கும் மக்களையும் இரண்டாந்தரக் குடிமக்களாக மாற்றுவதுதான் இந்துராஷ்டிரம். அந்த வகையில், இன, மொழி, சாதிய வேறுபாடுகளும் கலவரங்களுக்கான முகாந்திரங்களாக காவி பாசிஸ்டுகளால் பயன்படுத்தப்படும்.

மணிப்பூரும், கர்நாடகத்தின் காவிரிப் பிரச்சினையும்,  தமிழ்நாட்டில் நடைபெறும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்களும் இதற்கான முன்னோட்டங்களே.


அப்பு



ஆசிரியர்களைப் பிச்சைக்காரர்களாக எண்ணும் அரசு… | ஆசிரியர் உமா மகேஷ்வரி

ஆசிரியர்களைப் பிச்சைக்காரர்களாக எண்ணும் அரசு…

நீதி எங்கே?

அவர்கள் எதுவும் புதிதாகக் கேட்கவில்லை. நீங்கள் பதவி பெறுவதற்கு முன்னர் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியைத் தான் கேட்கின்றனர். 2021-இல் பணி நிரந்தரம் செய்கிறோம் என்று நீங்கள் கொடுத்த 181 ஆவது தேர்தல் அறிக்கை வாக்குறிதியைத் தானே கேட்கின்றனர்.

ஊதிய உயர்வு ரூ. 2500 ஐ கேட்கவில்லை. முழு நேரமும் பணி கொடுங்கள், பள்ளிகளில்  மாணவர்களுக்கு  அனைத்து நாட்களும் எங்கள் பணி அவசியம் என்று தானே கேட்கின்றனர்.

நிதி நெருக்கடி இருக்கும் என்றும் முந்தைய அரசு எல்லா பொருளாதாரத்தையும் காலி செய்து விட்டது என்றும்  நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கவில்லையா முதல்வர் அவர்களே…

கல்வி அமைச்சரே…. தாங்களாவது பதவி ஏற்றவுடன் ஒரு ஆய்வு செய்திருக்க வேண்டாமா? கல்வித் துறை சார்ந்த தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை நாம் நிறைவேற்ற எத்தனை சதவீதம் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன… உடனடியாக மாற்று ஏற்பாடு என்ன செய்ய வேண்டும் என்று….

ஆசிரியர்களை இப்படி பத்துநாள் போராட்டக் களத்தில் இருக்க வைத்த பாராமுகமாக நடந்து கொண்டு, மனிதாபிமானமற்ற மனிதர்கள் என்று பெயர் எடுத்து விட்டீர்களே….எத்தனை இழுக்கு!

தமிழ்நாடு என்பதற்கு சமூக நீதி காப்பாற்றப்படும் இடம் என்று வாய் நிறைய சொல்லும் நீங்கள் இப்படி நடந்து கொள்வது  தான் சமூகநீதியா?

சமூக நீதி காக்கும் பிற அமைப்புகள் எங்கே போயின? தேர்தல் கூட்டணி வைத்த மற்ற தோழமை அரசியல் கட்சிகள் நீதி, நேர்மை, ஜனநாயகம் என அனைத்தையும் சேர்த்து  அடகு வைத்து விட்டனவா?

அரசுப்பள்ளிகளில் நிரந்தரமற்ற ஆசிரியர்களை நியமிப்பதால் குழந்தைகளின் கல்வி வெகுவாக பாதிக்கப்படுகிறது என்பதை ஏன் எவரும் உணர மறுக்கிறீர்கள்?

இப்படியே போனால் எதிர்காலம்  சூனியமாகும். பொதுச்சமூகமே…. உங்கள் தலைமுறைகள்  வாழ முடியாது, உங்கள் எதிர்காலம் இருண்டு கொண்டுள்ளது.

மீண்டும் தொடர்கின்றனர் ஆசிரியர்கள் தங்கள் அறப்போராட்டத்தை.


முகநூலில் : ஆசிரியர் உமா மகேஷ்வரி

disclaimer



நியூஸ் கிளிக் நிறுவனம் மீது பாசிச அடக்குமுறையை ஏவிய மோடி அரசு!

நேற்று (அக்டோபர் 3 , 2023) நீயூஸ் கிளிக் (NewsClick) செய்தி நிறுவனத்துடன் தொடர்புடைய பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களின் வீடுகளில் டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் சோதனைகள் நடத்தினர். நியூஸ் கிளிக் நிறுவனத்தின் தலைமை பத்திரிகை ஆசிரியர் பிரபீர் புர்கய்ஸ்தா (Prabir Purkayastha) மற்றும் மனிதவளத் துறைத்தலைவர் அமித் சக்ரவர்த்தி (Amit Chakravarty) ஆகியோரை ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளனர்.

மொத்தம் 46 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. சரியான முறையில் சோதனை உத்தரவுகளை சம்பந்தப்பட்ட நபர்களிடம் வழங்காமல், வீடுகளில் அடாவடியாக நுழைந்து சோதனை என்ற பெயரில் மடிக்கணினி, கைப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கைபற்றி இருக்கிறார்கள். மோடி அமித்ஷா கும்பலின் பாசிச ஆட்சியில், சொல்லிக்கொள்ளப்படும் பெயரளவிலான பத்திரிகை சுதந்திரத்திற்கும் கடைசி சாவு மணி அடிக்கப்பட்டுவிட்டதையே இவையெல்லாம் நமக்கு உணர்த்துகின்றன.

“குருகிராமில் உள்ள எனது வீட்டிற்கு காலை 6:30 மணிக்கு ஒன்பது போலீசார் வந்தனர். அவர்கள் என்னிடம் பல்வேறு கேள்விகள் கேட்டார்கள். நான் அவர்களுடன்  டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு அலுவலகத்திற்கு சென்றேன். என்னிடம், ஒரே மாதிரியான கேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டன. நான் நியூஸ்க்ளிக் செய்தி நிறுவனத்தின் ஊழியரா என்று கேட்டார்கள். ”இல்லை, நான் ஒரு ஆலோசகர்” என்று சொன்னேன். நான் இங்கு வந்த பிறகுதான், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்தேன்” என்கிறார் பத்திரிகையாளர் பரஞ்சோய் குஹா தாகுர்தா.

அதானியின் வரி ஏய்ப்பு பற்றி இவர் எழுதிய கட்டுரையை எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி (Economic and Political Weekly) பத்திரிகை வெளியிட்டதற்காக EPW செய்தி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது அதானி நிறுவனம். அதற்கு பயந்து EPW நிறுவனம் அந்த கட்டுரையை தனது பக்கத்திலிருந்து நீக்கிவிட்டது. இதனால் பரஞ்சோய் குஹா தாகுர்தா அந்நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


படிக்க: “தி காஷ்மீர் வாலா” சுதந்திர ஊடகம் முடக்கம்: கருத்துச் சுதந்திரத்தின் மீதான மோடி அரசின் கொலைவெறித் தாக்குதல்!


பாஷா சிங் என்ற பத்திரிகையாளர், அவரது கைப்பேசி கைபற்றப்படும் சில நிமிடங்களுக்கு முன்னதாக அவரது டிவிட்டர் கணக்கில் “இறுதியாக இந்த கைப்பேசியில் இருந்து கடைசி ட்வீட். டெல்லி போலீஸ் எனது கைப்பேசியை கைப்பற்றிக் கொண்டது” என்று பதிவிட்டிருந்தார்.

சோதனை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட பத்திரிகையாளர்களை அவர்களது வழக்கறிஞர்கள் கூட சந்திக்க முடியவில்லை. இந்த வழக்கறிஞர்களுக்கு முதல் தகவல் அறிக்கை போன்ற ஆவணங்களையும் அளிக்க மறுத்திருக்கிறது போலீஸ். பத்திரிகையாளர்களின் வீட்டிற்குள் நுழையும் முன்பே சோதனை உத்தரவுகளை போலீசார் காட்டவில்லை. சோதனை  நடந்து கொண்டிருக்கும்போது தான் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம் (UAPA) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 153A (வெவ்வேறு குழுக்களுக்கிடையில் பகைமையைத் தூண்டுதல்) போன்ற கடுமையாக பிரிவுகளின் கீழ் சோதனைகள் நடத்தப்படுவது தெரியவந்தது என்று சோதனைக்குள்ளாக்கப்பட்ட  பத்திரிகையாளர்களில் ஒருவர் தெரிவித்தார்.

இந்த சோதனைக்கு முக்கியக் காரணம்,  நியூஸ்க்ளிக் நிறுவனத்திற்கு சட்ட விரோதமாக பணமளிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தான். “இந்தியாவில் சீனாவுக்கு ஆதரவான செய்திகளை ஊக்குவிப்பதன் மூலம் செய்திச் சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும்” என்ற நோக்கத்தோடு நெவில் ராய் சிங்கம் என்பவரால்  நிதியளிக்கப்பட்ட நிறுவனங்களில் நியூஸ்க்ளிக் நிறுவனமும் ஒன்று என்ற அறிக்கையை கடந்த ஆகஸ்ட் 2023-இல், தி நியூ யார்க் டைம்ஸ் (The New York Times) பத்திரிகை வெளியிட்டது. இந்த குற்றச்சாட்டை ஆதாரமாக கொண்டுதான் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை நியூஸ்க்ளிக் நிறுவனம் தொடர்ச்சியாக மறுத்து வந்துள்ளது. தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையின் இதுபோன்ற பொய்கள் பத்திரிகைகளின் மீது மோடி கும்பலின் தாக்குதலுக்கு உடந்தையாக இருப்பதாக ஜனநாயகவாதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், நியூஸ்க்ளிக் நிறுவனத்தை டெல்லி போலீஸின் பொருளாதார குற்றப்பிரிவினர் மற்றும் அமலாக்கத்துறையினர் ஆகியோர் கண்காணித்து வந்துள்ளனர்.

ஆனால் இது ஒரு வலுவில்லாத சப்பைக்கட்டு என்பதை நாம் அறிவோம்.  ”சட்ட விரோதமான பணம் கொடுக்கப்பட்டதற்கு ஒரு செய்தி நிறுவனத்தின் பணியாளர்கள், அதற்கு செய்தி வழங்கும் சுதந்திர பத்திரிகையாளர்கள், அவர்களது நண்பர்களை எல்லாம் சோதனை வளையத்திற்குள் எப்படி கொண்டு வர முடியும்?” என்ற எளிய கேள்வியை நாம் கேட்டாலே மோடி கும்பலின் இந்த பாசிச அடாவடித்தனம் வெளிப்பட்டுவிடும்.

தீஸ்டா செதல்வாட் தலைவராக உள்ள Tricontinental என்ற சமூக ஆராய்ச்சி நிறுவனம் நியூஸ்க்ளிக் நிறுவனத்திற்கு கட்டுரைகள் வழங்கிய காரணத்திற்காகவே தீஸ்டா செதல்வாட் மீதும் சோதனை ஏவப்பட்டுள்ளது. வரலாற்றியலாளர் சோஹைல் ஹாஷ்சி நியூஸ்க்ளிக் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதற்காகவே சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர் சீதாராம் யெச்சூரி அவர்களின் வீட்டு வாளகத்தில் நியூஸ்க்ளிக் நிறுவனத்தின் பணியாளர்கள் தங்கியிருப்பதாக சந்தேகத்தின் பெயரில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.


படிக்க: இந்தியாவில் பல்லிளிக்கும் ஊடகச் சுதந்திரம்!


சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட பத்திரிகையாளரிடம், ”நீங்கள் எந்த நோக்கத்தோடு விவசாயிகளின் டெல்லிச் சாலோ போராட்டம், கொரோனா பெருந்தொற்று, CAA எதிர்ப்பு போராட்டத்தைத் தொடர்ந்து நடந்த டெல்லி கலவரம் போன்ற சம்பவங்களை செய்தியாக்கினீர்கள்? இந்த சம்பவங்களை செய்தியாக்குவதற்கு தனியாக  ஏதேனும் பணம் பெற்றீர்களா?” என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. மோடி அரசை விமர்சனம் செய்யும் பத்திரிகைகளை, செய்தியாளர்களை மிரட்டுவது தான் இந்த சோதனையின் பிரதான நோக்கம். அதாவது மோடி அரசின் தோல்விகளை, அடக்குமுறைகளை பற்றி செய்தி எழுதினால் உங்களுக்கு இந்த நிலைதான் ஏற்படும் என்று நேரடியாகவே மிரட்டுகிறது பாசிச கும்பல்.

மோடி ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்படும் வெளிப்படையான முதல் தாக்குதல் அல்ல இது. 2002-ஆம் ஆண்டில் நடைபெற்ற குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு பற்றி பிபிசி (BBC) செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படத்தை தொடர்ந்து, பிபிசி நிறுவனத்தின் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் சோதனை நடத்தப்பட்டது. அந்த நிறுவனத்தின் பத்திரிகையாளர்களின் கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டன. பிரபலமான இந்தி பத்திரிகையான ” டைநிக் பாஸ்கர்” என்ற செய்தித்தாள், கொரோனா பெருந்தொற்று காலத்தில் கங்கை ஆற்றில் பிணங்கள் மிதந்தது பற்றிய செய்திகளை வெளியிட்டதற்காக அதன் மீது அதிகாரிகள் சோதனை நடத்தினர். எல்லைகடந்த பத்திரிகையாளர்கள் (Reporters without Borders) என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கைப்படி இந்தியா பத்திரிகை சுதந்திரத்தில் மொத்தமுள்ள 180 நாடுகளில் 161 இடத்தில் உள்ளது. அதாவது, இந்தியா கடைசி 20 இடங்களில் உள்ளது.

இவையெல்லாம் நமக்கு உணர்த்துவது என்னவென்றால் இந்தியாவில் பெயரளவிலான பத்திரிகை சுதந்திரம் கூட வெளிப்படையான தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது என்பதைத்தான். ஒரு பக்கம், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தைப் பரப்பும் ஊடகங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. மறுபக்கம், மோடி அரசை விமர்சனம் செய்யும் பத்திரிகைகள் அரசு நிறுவனங்களால் இரக்கமற்ற முறையில் வேட்டையாடப்படுகின்றன. பத்திரிகையாளர்கள் இந்துத்துவ மதவெறி கும்பலால் மிரட்டப்படுகிறார்கள்; கொலை செய்யப்படுகிறார்கள். இவையெல்லாம் தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் உக்கிரமான முறையில் நடக்கும். ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து சக்திகளும் தங்களது வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு குறைந்தபட்ச மாற்றுத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணையும் போதுதான் நாம் இந்த பாசிச கும்பலின் தாக்குதல்களை முறியடிக்க முடியும்.


சீனிச்சாமி



கூட்டணியை முறித்த எடப்பாடி: சுயமரியாதைத் தூண்டுதலா, எலும்புத் துண்டுக்கான சீற்றமா?

மிழ் திரைப்பட ரசிகர்களால் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு மசாலா சப்ஜெக்ட்டை வைத்து பல நாட்களாக மாவரைத்து வருகின்றன, ஊடகங்கள். எந்திரன் திரைப்படத்தில் சிட்டி என்ற ரோபோ கதாப்பாத்திரத்துக்கு திடீரென்று மனித உணர்ச்சிகள் உண்டாவது போல, எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென்று மானமும் ரோஷமும் வந்துவிட்டதாக சித்தரிக்கின்றன, தமிழ் ஊடகங்கள்.

தமிழ்நாட்டில் ஓரளவு அரசியல் தெரிந்த பாமரர்கள்கூட இதை நம்புவதற்கு தயாராக இல்லை. நிமிர்ந்த மேனி வளைந்து, குனிந்து, தவழ்ந்து படிப்படியாக இன்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலராக ‘முன்னேறியுள்ள’ எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பரிணாம வளர்ச்சியை அறியாதவர்கள் அல்ல, தமிழ்நாட்டின் மக்கள். அப்படியிருக்க திடீரென்று அண்ணாமலையின் பேச்சுக்களை பொறுத்துக் கொள்ள முடியாமல், எடப்பாடிக்கு சுயமரியாதை உணர்ச்சி பொங்கியதாகச் சொன்னால் யாரால்தான் நம்ப முடியும்.

நம்மால் நம்ப முடியவில்லை என்பது மட்டுமல்ல, அடிமைக் கூட்டத்தின் இன்னொரு கோஷ்டியான ஓ.பி.எஸ் தரப்பும் அ.தி.மு.க. இயற்றிய தீர்மானத்தில் சொல்லப்பட்ட காரணங்களை ஏற்க மறுக்கிறது. ஒரு அடிமையின் மன ஓட்டத்தை மற்றொரு அடிமையால்தானே புரிந்துகொள்ள முடியும்.

“அண்ணாவைப் பற்றி பேசியதோ, புரட்சித் தலைவியைப் பற்றி பேசியதோ எடப்பாடிக்கு கவலை இல்லை, 2026-இல் எங்கள் கட்சி ஆட்சி அமைக்கும் என்று அண்ணாமலை பேசியதுதான் எடப்பாடிக்கு பிரச்சினை; அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றி விமர்சித்து நான்கு நாட்கள் கழித்துப் பிரச்சினையை கிளப்பினார் எடப்பாடி” என்கிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

அது சரி, நான்கு நாட்கள் கழித்துக் கூட ஒ.பி.எஸ். தரப்புக்கு சொரணை வரவில்லையே, ஏன்? என்று நாம் கேட்க முடியாது. ஏனென்றால், “எங்களிடம் நீங்கள் அதையெல்லாம் எதிர்ப்பார்க்காதீர்கள்” என்பதும் சேர்ந்ததுதான், எடப்பாடி பற்றிய பண்ருட்டி ராமச்சந்திரனின் விமர்சனத்தில் பொதிந்திருக்கும் உண்மை.


படிக்க: தே.ஜ.கூ-வில் இருந்து அதிமுக விலகல்! பாசிச மோடி அரசை பாதுகாக்கும் மற்றொரு நாடகம்!


ஆனால், அண்ணாமலை கும்பலுக்கும் எடப்பாடி தரப்புக்கும் நடைபெறும் தற்போதைய லாவணி என்பது வழக்கம்போல வரும் வாய்ப் பேச்சு தகராறு அல்ல. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக வெறும் வாய்மொழியாக அறிவிக்கவில்லை; மாறாக, தலைமை கழகச் செயலாளர், மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் எம்.எல்.ஏ, எம்.பிக்கள் ஆகியோரைக் கூட்டி நடத்தப்பட்டக் கூட்டத்தின் அதிகாரப்பூர்வ தீர்மானத்தை வெளியிட்டிருக்கிறது, அ.தி.மு.க.

அ.தி.மு.க.வின் அறிவிப்பு வெளியான பிறகு, அ.தி.மு.க, பா.ஜ.க என இருதரப்பிலும் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். “நன்றி மீண்டும் வராதீர்கள்” என்ற இணையக் குறிச்சொல் (ஹாஷ்டாக்) வேகமாகப் பரவியது.

ஏறியடித்துப் பேசிக் கொண்டிருந்த அண்ணாமலை, அ.தி.மு.க.வின் தீர்மானத்திற்கு பிறகு அடக்கி வாசிக்கத் தொடங்கியுள்ளார். “அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து தேசியத் தலைமை அறிவிக்கும்” என அறிவித்துள்ளார் அண்ணாமலை. இதற்கிடையே, அக்டோபர் 3 அன்று தமிழ்நாடு பா.ஜ.க.வின் உட்கட்சி ஆலோசனைக் கூட்டத்திலும் இதுதொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியிலிருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி ஆகியோர், “தி.மு.க.வை தோற்கடிப்பதற்காக மீண்டும் அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி சேர வேண்டும்”; “பா.ஜ.க.வின் மத்திய தலைமை இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்” என்று கோருகிறார்கள். புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த ஜெகன்மூர்த்தி, அ.தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது, உண்மையிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு சூடு சுரணை வந்துவிட்டதோ என்று கருதுவதற்கு நியாமிருப்பது போன்ற தோன்றத்தை ஏற்படுத்துகிறது.

இதை எப்படிப் புரிந்துகொள்வது?

எஜமானர் திட்டினாலும், அடித்தாலும், காறி உமிழ்ந்தாலும் வளர்ப்பு நாயானது, தனது எஜமானரையே சுற்றிச்சுற்றி வந்து காலை நக்கும். அதேநேரம் அந்த நாய் ஆசையோடு கடித்துக் கொண்டிருக்கும் எலும்புத் தூண்டை பிடிங்கி எறிய முயன்றாலோ, அதை தனது மற்றொரு வளர்ப்பு நாய்க்கு போட்டாலோ அது சீற்றம் கொள்ளாமல் இருக்குமா?. ஆனால், அந்த சீற்றத்தை சுயமரியாதை உணர்ச்சி என்று சொல்லமுடியுமா?

நிச்சயமாக அதை ‘நாயின் சுயமரியாதை உணர்ச்சி’ என்று சொல்ல முடியாது அல்லவா. ஆகவே, இது ஒரு வித்தியாசமான பிரச்சினை.

அண்ணாமலைக்கும் எடப்பாடிக்கும் மோதல் நிலவுவது என்னமோ உண்மைதான். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு விலகுவது என்ற அ.தி.மு.க.வின் அதிரடி அறிவிப்பு, சுயமரியாதைத் தூண்டுதல் அல்ல; எலும்புத் துண்டுக்கான சீற்றம்!

எடப்பாடி பழனிசாமி, ‘ஆளுமை’ ஆன கதை…

அ.தி.மு.க. என்பது ஒரு அடிமைக் கூட்டம். இந்த அடிமைக் கூட்டத்தின் மகாராணியும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஏ1 குற்றவாளியுமான ‘அம்மா’ ஜெயலலிதா இறந்துபோன பிறகு, எஜமானர் பதவியை கைப்பற்ற முயன்றார், சசிகலா. ஏ2 குற்றவாளியான ‘சின்னம்மா’, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் தனது எஜமானர் பதவியை அவரால் தக்கவைக்க முடியவில்லை. மேலும், கட்சிக்குள் இருந்த கோஷ்டி மோதலையும் அவரால் தீர்க்க முடியவில்லை.

கொள்ளையடித்த சொத்துக்களை பிரித்துக் கொள்வதிலும், கட்சித் தலைமைப் பதவியை யார் கைப்பற்றுவது என்பதிலும் தீவிரமான நாய்ச்சண்டை தொடர்ந்தது. அடிமைக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களிலேயே வலுத்தவர்கள் எஜமானர் பதவிக்காக அடித்துக் கொண்டார்கள். இது கட்சிக்குள் தேவர், கவுண்டர் சாதி மோதலாக வெளிப்பட்டது. கட்சிக்குள் இருந்த தேவர் சாதி கும்பலுக்கு ஓ.பி.எஸ்-ம், கவுண்டர் சாதி கும்பலுக்கு ஈ.பி.எஸ்-ம் தலைமை வகித்தனர்.

இந்த இருதரப்புச் சண்டையில் சிதறிக்கிடந்த அ.தி.மு.க.வை, பா.ஜ.க. தலையிட்டு ஒன்றுசேர்த்து வைத்தது. “அ.தி.மு.க. என்ற நெல்லிக்காய் மூட்டையை கட்டிவைத்ததே பா.ஜ.க.தான்” என்று எச்.ராஜா சொல்வது இதைத்தான். ஆனால், அ.தி.மு.க.வில் வலுவாக இருந்தது, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த கவுண்டர் சாதி பிரிவினர்தான். இக்காரணத்தால்தான், எடப்பாடி பழனிசாமி முதல்வராகத் தொடர்ந்தார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை தோற்கடித்து தி.மு.க. வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 66 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்தது. அ.தி.மு.க. வெற்றிபெற்ற இந்த 66 தொகுதிகளில், 41 தொகுதிகள் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவை. கொங்கு மண்டலத்தில் மொத்தமுள்ள 57 சட்டமன்றத் தொகுதிகளில் பெரும்பாலானவற்றை அ.தி.மு.க. கைப்பற்றியது.


படிக்க: நூல் அறிமுகம் : பிம்பச் சிறை (எம்.ஜி.ஆர் – திரையிலும் அரசியலிலும்)


எம்.ஜி.ராமச்சந்திரன் இருந்த காலத்திலும், அதன்பிறகு ஜெயலலிதா காலத்திலும் கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்துவருகிறது. எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், கவுண்டர் சாதியைச் சேர்ந்தவர் என்பதாலும், கட்சிக்குள் வலுவாக இருந்த கொங்கு மண்டலப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோற்று அதிகாரத்தை இழந்தாலும், உட்கட்சியில் தனது வலிமையை எடுத்துக் காட்டவதற்கும், ஓ.பி.எஸ்.ஐ கழட்டிவிட்டு, தனது தலைமையின் கீழ் கட்சியை ஒருங்கிணைக்கவும் எடப்பாடிக்கு உந்துதல் கொடுத்தது.

எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, தம்பிதுரை, செங்கோட்டையன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் போன்ற கொங்கு மண்டலத்தை சேர்ந்த அ.தி.மு.க. தலைவர்களும், வட சென்னையைச் சேர்ந்த ஜெயக்குமாரும், மதுரையில் ராஜன் செல்லப்பா தலைமையிலான ஒருபிரிவு அ.தி.மு.க.வினரும் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்க, திரைமறைவில் நடைபெற்ற பேரங்கள் ஓய்ந்து, கட்சி எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஒ.பி.எஸ். தூக்கிவீசப்பட்டார்.

இதுதான் எடப்பாடி பழனிசாமி ‘ஆளுமை’ ஆன கதை…

“அ.தி.மு.க. என்றால் கொங்கு மண்டலம்தான்; கொங்கு மண்டலத்தில்தான் அ.தி.மு.க” என்றான பிறகு, இந்த கொங்கு மண்டல ‘தளப்பிரதேச’த்தின் தளபதியாக இருப்பது எடப்பாடிதான்.

கொங்கு மண்டல லாபி: எலும்புத் துண்டுக்காக சீறும் எடப்பாடி!

தென்மாவட்டங்களில் ஒ.பி.எஸ். தலைமையில் இருக்கும் ஒருபிரிவு அ.தி.மு.க.வினரையும் வென்றெடுத்துவிட்டால், ஜெயாவிற்கு பின் அ.தி.மு.க.வை மீண்டும் பழைய வகையில் வலுப்படுத்திவிடலாம். பிறகு, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை பயன்படுத்தி, தான் வெற்றிபெற்று முதல்வராகிவிடலாம் என்பது எடப்பாடியின் கனவு. அந்த அடிப்படையில்தான் கொள்ளையடித்த பணத்திலிருந்து மாபெரும் பொருட்செலவில் மதுரை மாநாட்டை நடத்திக் காட்டினார் எடப்பாடி.

இந்நிலையில் ஒட்டுமொத்த நாட்டையும் தனது இந்துராஷ்டிரப் படையெடுப்பின் மூலமாக சுற்றிவளைத்திருக்கும் பா.ஜ.க, “மிஷன் சவுத்” என்ற இலக்கின் அடிப்படையில் தென் மாநிலங்களில் தனது கட்சியை வலுப்படுத்துவதற்கு தீவிரமாக வேலைசெய்துவருகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் அண்ணாமலையை இறக்கி, அவருக்கு அனைத்து அதிகாரங்களையும் கொடுத்து படிப்படியாக செல்வாக்கு பெற்ற தலைவராக வளர்க்க முயற்சிக்கிறது.

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை வளர்ப்பதில் அக்கும்பலின் முதல் இலக்காக இருப்பது, கொங்கு மண்டலத்தைக் கைப்பற்றுவதுதான். இந்தியாவிற்கு பசுவளைய மாநிலங்களைப் போல, தமிழ்நாட்டிற்கு கொங்கு மண்டலத்தைக் கருதுகிறது பா.ஜ.க. ஏற்கெனவே, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. செல்வாக்கு பெற்ற பகுதியாக இருக்கும் அம்மண்டலத்தை முழுமையாகக் கைப்பற்ற வேண்டுமானால், அ.தி.மு.க.வை அழிப்பதுதான் பா.ஜ.க.வின் முதல் இலக்கு (Target).

அ.தி.மு.க.வை அழித்து கொங்கு மண்டலத்தை நேரடியாக பா.ஜ.க.வின் கோட்டையாக மாற்றுவதற்கு பா.ஜ.க. இரண்டு வழிமுறைகளை வைத்திருக்கிறது. அதில் முதல் வழிமுறை, டெல்லி தலைமையின் தற்போதைய வழிகாட்டுதல்.

அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்துகொண்டே தொகுதிப் பங்கீட்டில் கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களைக் கோருவது; அ.தி.மு.க.வின் வாக்குவங்கியையும் இணைத்துக் கொள்வதன் மூலம் தேர்தல் வெற்றியை உத்தரவாதப்படுத்துவது; படிப்படியாக கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.வின் கட்சி அமைப்பை தன்னோடு செரித்துக் கொண்டு அ.தி.மு.க.வை ஒன்றுமில்லாமல் ஆக்குவது – இவைதான் டெல்லி தலைமையின் வழிகாட்டுதல்கள்.

ஆனால், பிற மாநிலங்களில் கையாளும் இந்த வழிமுறை தமிழ்நாட்டிற்கு பொருந்தாது; இரு திராவிட கட்சிகளின் மீதும் மக்களுக்கு இருக்கும் அதிருப்தியைப் பயன்படுத்தி, “கழகங்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற பிரச்சாரத்தை முன்னிறுத்தி தனித்து நின்றாலே கட்சியை வளர்க்க முடியும்; கொங்கு மண்டலத்தில் மட்டுமில்லாமல், நீண்டகால நோக்கில் மாநிலம் முழுக்கவும் கட்சியை வளர்க்க இந்த வழிமுறைதான் உதவும் என்பது அண்ணாமலை கும்பலின் கருத்து. இந்த இரண்டாவது வழிமுறை, அண்ணாமலையுடையது.

அ.தி.மு.க. பற்றிய அண்ணாமலையின் விமர்சனங்களை இந்த கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டுமே தவிர, ஏதோ அண்ணாமலை வாய்த் துடுக்கில் பேசுவதாக கருதிக் கொள்ளக் கூடாது.

000

கடந்த மார்ச் மாதம், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “கட்சியை வளர்க்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அதற்கு தனித்துப் போட்டியிட வேண்டும். அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் எனக்கு விருப்பமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டதன் மூலம் அண்ணாமலை தனது பலத்தை சோதித்துப் பார்த்துள்ளார். கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜியை வைத்து தி.மு.க. பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றிபெற்றாலும், அ.தி.மு.க. வேட்பாளர்களை விட பல இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் கூடுதல் வாக்கு சதவிகிதத்தைப் பெற்றிருந்தனர்; தி.மு.க. வேட்பாளர்களுக்கு அடுத்து இரண்டாம் இடம் பிடித்திருந்தனர்.

அமலாக்கத்துறையை ஏவி செந்தில்பாலாஜியை கைதுசெய்துள்ளதன் மூலம், இப்போது கொங்கு மண்டலத்தில் ஆதிக்கத்துக்கான போட்டியிலிருந்து தி.மு.க.வை நீக்கியுள்ளது, பா.ஜ.க.

கவுண்டர்கள், தேவேந்திர குல வேளாளர்கள், அருந்ததியினர் ஆகிய சாதியினரே கொங்கு மண்டலத்தில் பெருவாரியான மக்களாக இருக்கின்றனர். பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரான அண்ணாமலை தானே கவுண்டர் சாதியைச் சேர்ந்தவராக இருக்கிறார்; எல்.முருகனை ஒன்றிய அமைச்சராக்கியதைக் காட்டி அருந்ததியர் மக்கள் மத்தியிலும் பா.ஜ.க. வேலைசெய்கிறது; ஆர்.எஸ்.எஸ்-இன் வெளிப்படியான அடியாளாக இருக்கும் புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி தேவேந்திர குல வேளாளர்களிடையே செல்வாக்கு பெற்றவராக உள்ளார். ஆகவே, இந்த ஏற்பாடு போதும், அ.தி.மு.க. நமக்கு தேவையில்லை என்று கருதுகிறார், அண்ணாமலை.

பா.ஜ.க.வை வளர்ப்பதற்கு அண்ணாமலை முன்வைக்கும் வழி, அ.தி.மு.க.விற்கு மொத்தமாக குழிபறிப்பதாகும். அதிலும் குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் இருக்கும் கட்சி அமைப்பையே தனது அரசியல் வாழ்வுக்கு அடிப்படையாகக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியின் கனவுகளுக்கு வேட்டு வைப்பதாகும். ஆகவேதான், அண்ணாமலையை மாற்றவேண்டும் என்று பா.ஜ.க.விடம் காலில் விழுகிறார், எடப்பாடி பழனிசாமி. இந்த பிரச்சினை ஓ.பி.எஸ்.க்கு இல்லை என்பதால், அவர் பா.ஜ.க.விற்கு மிக ‘ஒழுக்கமான அடிமை’யாக இருக்கிறார்.

இப்போதைய சூழலில், “எஜமானருக்கு விசுவாசமாக இருக்கிறேன், ஆனால், என் எலும்புத் துண்டை தட்டிப் பறிக்க வேண்டாம்” என்பதே பா.ஜ.க.விடம் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் ‘மிகத் தாழ்மை’யான கோரிக்கை.

அ.தி.மு.க.வை அழிக்காமல், பா.ஜ.க.வை தடுக்க முடியாது!

“மோடி அரசுக்கு சேவை செய்வதற்கு பா.ஜ.க. என்ற பெயரும், அண்ணாமலை என்ற தலைவரும் தேவையில்லை, அ.தி.மு.க. என்ற பெயரும் எடப்பாடி பழனிசாமியுமே போதும்” என்று பா.ஜ.க. முடிவெடுக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வுடன் எடப்பாடி பழனிசாமி பேசும் பேரம். ஆனால், இந்த பேரத்திற்கு பா.ஜ.க. ஒருபோதும் மயங்கப் போவதில்லை. அண்ணாமலையின் வழிமுறையை செயல்படுத்திக் கொண்டே, பா.ஜ.க.வின் நோக்கத்திற்கு தடைகள் வராமல் பார்த்துக் கொள்வதில்தான், பா.ஜ.க. தலைமையும் கவனம் செலுத்துகிறது.

இதில் அ.தி.மு.க.வை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிப்பது பா.ஜ.க. தானே தவிர, அ.தி.மு.க. அல்ல. பா.ஜ.க.வைப் பகைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி தனியே கட்சி நடத்த முடியாது. அமலாக்கத்துறையை ஏவிவிட்டால் செந்தில் பாலாஜியைப் போல, அ.தி.மு.க. கூடாரத்தை காலிசெய்வதற்கு பா.ஜ.க.விற்கு கொஞ்ச நாள் போதும். இன்றுவரை கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அரசு திட்டங்களில் ஊழல் செய்த அ.தி.மு.க. அமைச்சர்களை கைதுசெய்து விசாரிக்க முடியாமல் தடுத்து வருவது, ஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ரவிதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இதைப் புரிந்துகொள்ளாமல், எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ சுயேட்சைத் தன்மை இருப்பதாகக் கருதுவதும், அ.தி.மு.க-பா.ஜ.க. முரண்பாட்டைப் பயன்படுத்த வேண்டும் என்று கருதுவதும் முட்டாள்தனமானவை. பா.ஜ.க.வை எதிர்ப்பது என்ற போர்வையிலேயே இருந்துகொண்டு, இதுபோன்ற கருத்துகளை வெளிப்படுத்துவது பாசிசத்தை எதிர்த்த போராட்டத்தில் மக்களை படுகுழிக்கு தள்ளிவிடும் மிக அபாயகரமான சந்தர்ப்பவாதமாகும்.

கர்நாடகாவில், கடந்த சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் பலவீனமாக இருக்கும் தொகுதிகளில், பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற அடிப்படையில் மதச்சார்ப்பற்ற ஜனதா தளத்தை சில அமைப்புகள் ஆதரித்தன. இன்று அங்கு என்ன நடந்துள்ளது? குமாரசாமி பா.ஜ.க.வோடு கூட்டணி சேர்ந்துகொண்டு, காங்கிரஸை ஒழித்துக் கட்டுவதற்கு துணை நிற்கிறார். கர்நாடகாவில் குமாரசாமி என்றால், தமிழ்நாட்டில் எடப்பாடி. இன்னும் சொல்லப்போனால், குமாரசாமியை விட பா.ஜ.க.விற்கு மிக விசுவாசமான அடிமை எடப்பாடி பழனிசாமிதான்.

அ.தி.மு.க. என்பது தமிழ்நாட்டின் அவமானச்சின்னம்! பாசிஸ்டுகளான எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தன்மானமும் சுயசார்பும் இல்லாத ஒட்டுண்ணித் துதிபாடிகள், பிழைப்புவாதிகள் கூட்டத்தை வைத்தே இக்கட்சியைக் கட்டி வளர்த்தெடுத்து வந்துள்ளனர். எந்த ஒரு சூழலிலும், இன்னொரு பார்ப்பன பாசிச கும்பல் அ.தி.மு.க.வைக் கைப்பற்றிக் கொள்ள முடியும் என்பதுதான் இக்கட்சியின் அருகதை.

காஷ்மீர் 370 சிறப்புச் சட்டம் ரத்து, குடியுரிமைத் திருத்தச் சட்டம், வேளாண் திருத்தச் சட்டங்கள், ஒரே நாடு ஒரே தேர்தல் என பா.ஜ.க.வின் பல்வேறு காவி-கார்ப்பரேட் பாசிச சட்டங்களை ஆதரித்து தாங்கி நின்றது, அ.தி.மு.க.தான். ஒருவேளை, பா.ஜ.க. புதிதாக ஏதேனும் சதிவேலைகளில் ஈடுபட்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் தனித்து நிற்கிறோம் என்ற நாடகத்தை அரங்கேற்றலாம். இதன்மூலம் தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்துகொள்ளலாம். சிறுபான்மையினரின் ஓட்டுக்களையும் திரட்ட முயற்சிக்கலாம். ஆனால், அ.தி.மு.க. வெற்றிபெறும் ஒவ்வொரு தொகுதியும் பா.ஜ.க.வின் பினாமி வென்றதாகத்தான் பொருள். அதன் பிரதிநிதித்துவம் பாசிச பா.ஜ.க.வை வலுப்படுத்துவதற்குதான் பயன்படும்.

எனவே, பா.ஜ.க – அ.தி.மு.க. முரண்பாட்டைப் பயன்படுத்த வேண்டும் என்ற சந்தர்ப்பவாதப் போக்கை நாம் முற்றாக எதிர்க்க வேண்டும். அ.தி.மு.க. என்ற கட்சியையே ஒழித்துக் கட்டுவதுதான் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை வேரூன்றாமல் தடுப்பதில் முக்கியமான நடவடிக்கை என்பதை பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் ஆழமாக உணர வேண்டும்.


பால்ராஜ்

(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2023 இதழ்)



பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு | தோழர் மருது | வீடியோ

பீகார் மாநில அரசு மேற்கொண்டுள்ள சாதி வாரி கணக்கெடுப்பு – மத ரீதியான கணக்கெடுப்பின் தாக்கம் குறித்தும், பாசிச பாஜக அரசின் இடஒதுக்கீட்டுக்கு எதிரான அரசியல் குறித்தும் மக்கள் அதிகாரம் செய்தித் தொடர்பாளர் மருது அவர்களின் விரிவான நேர்காணல்.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!