Tuesday, June 23, 2026
முகப்பு பதிவு பக்கம் 119

பணி நிரந்தரம் கோரி தற்காலிக செவிலியர்கள் போராட்டம்!

டந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் போது தற்காலிக செவிலியராகப் பணியமர்த்தப்பட்ட 3,290 பேரை நிரந்தர செவிலியர்களாகப் பணியமர்த்தக் கோரி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தி.மு.க தேர்தல் வாக்குறுதி 356-இல் குறிப்பிட்டிருந்தவாறு கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட தற்காலிக செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்று கோரி தொடர்ந்து இரண்டு நாட்களாகப் போராடி வருகின்றனர்.



பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் | தோழர் துணைவேந்தன் | தோழர் புவன்

குதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன் அவர்களும், மக்கள் அதிகாரம் அமைப்பின் சென்னை மண்டல இணைச் செயலாளர் தோழர் புவன் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!



நேரலை | கோவை | அரங்கக் கூட்டம் | வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அம்பானி, அதானி பாசிசம் ஒழிக!

2024 நாடாளுமன்றத் தேர்தல்
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்
கோடி மக்களிடம் கொண்டு செல்வோம் !

அரங்கக் கூட்டம் – கோவை|நேரலை

பாகம் 1

பாகம் 2

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!



தே.ஜ.கூ-வில் இருந்து அதிமுக விலகல்! பாசிச மோடி அரசை பாதுகாக்கும் மற்றொரு நாடகம்!

25.09.2023

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகல்!
பாசிச மோடி அரசை பாதுகாக்கும் மற்றொரு நாடகம்!

பத்திரிகை செய்தி

வேண்டாம் பிஜேபி!, ஆர்.எஸ்.எஸ் – பாஜக; அம்பானி அதானி பாசிசம் ஒழிக!, ஆர். எஸ். எஸ் – பா.ஜ.கவை தடை செய்! ஆகிய முழக்கங்கள் தமிழ்நாடு எங்கும் பரவிக் கொண்டிருக்கின்றன. பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் தமிழ்நாட்டு அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதை நோக்கி பலரும் முனைப்புடன் வேலை செய்து கொண்டிருக்கும் இந்த நிலையில், தமிழ்நாட்டு மக்களை திசை திருப்புவதற்காகவே ஆர்.எஸ்.எஸ் கும்பலால் திட்டமிட்டு நடத்தப்படும் நாடகமே பாஜக – அதிமுக உறவு முறிவு.

பண மதிப்பிழப்பு என்னும் பேரழிவு, மாநில உரிமைகளை நசுக்கும் ஜிஎஸ்டி, நீட், கியூட், புதிய கல்வி கொள்கைகள், ஒரே நாடு – ஒரே தேர்தல், குற்றவியல் திருத்தச் சட்டங்கள், அமலாக்கத்துறை இயக்குநர் பதவியில் நடந்த அதிகார முறைகேடு, மணிப்பூர் கலவரம், சமீபத்தில் தணிக்கை குழு அம்பலப்படுத்திய ஏழரை லட்சம் கோடி ஊழல், அம்பானி – அதானி பாசிச கும்பலுக்காக ஒட்டுமொத்த நாட்டையும் இயற்கை வளங்களையும் தாரை வார்த்தது – இப்படி எத்தனையோ பேரழிவுகளை இந்த நாட்டு மக்கள் மீது சுமத்திய மோடி – அமித்ஷா பாசிச கும்பலின் கூட்டாளியான அதிமுக, தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவிப்பது நகைக்கத்தக்கதாகும்.

அண்ணாமலை ஜெயலலிதாவை, அண்ணாவை, எடப்பாடி பழனிச்சாமியை திட்டிவிட்டார் என்ற காரணங்களுக்காக மட்டுமே தற்பொழுது அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி இருக்கிறது என்றால் கடந்த 9 ஆண்டுகளில் நாட்டையே சீரழித்த மோடி – அமித்ஷா கும்பலுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்ய போகிறாரா? மணிப்பூரில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இனப்படுகொலைகளுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி பேசப் போகிறாரா? வருகின்ற தேர்தலில் மோடி – அமித்ஷாவை வீழ்த்த வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்ய போகிறாரா? யாரை பிரதமராக முன் நிறுத்தப் போகிறார்? பாஜகவுடன் தாங்கள் இருந்து செய்த களவாணித்தனங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி பாவமன்னிப்பு கோரப் போகிறாரா?

எதுவும் நடக்கப் போவதில்லை. அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்பதைத்தவிர வேறு எந்த கோரிக்கையும் அதிமுகவிடம் இல்லை என்பதில் இருந்து இது மிகப்பெரிய நாடகம் என்பது தெளிவாகத் தெரிகிறது.


படிக்க: தமிழ்நாட்டின் அவமானச் சின்னங்கள்!


தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்தால் நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது என்ற ஒரு சூழல், மோடி அமித்ஷா பாசிச கும்பல் மீது தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி, இவற்றில் இருந்து மக்களைத் திசை திருப்பவும் மோடி அரசைக் காப்பாற்றவும் அதிமுக – பாஜக மோதல் திட்டமிட்ட நாடகமாக அரங்கேற்றப்பட்டு இருக்கிறது.

இந்த நாடகம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னேயும் நிறைவடைந்து விடலாம் அல்லது தனியாக நின்று குறிப்பிடத் தொகுதிகள் வென்ற பின்னர் பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைக்கலாம். இப்படி எதுவும் இல்லாமல் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில், தமிழ்நாட்டில் ஜெயலலிதா – எடப்பாடி கும்பல் அடித்த கொள்ளைகள் – கொலைகளில் இருந்து எப்படி தப்பிக்க முடியும்?

இந்த நாடகத்தை எவரும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஊடகங்களில் திட்டமிட்டு பரபரப்பு செய்தியை உருவாக்குவதன் மூலம் மக்களின் பாசிச மோடி எதிர்ப்பு சிந்தனையை முனை மழுங்கச் செய்வதே ஆர். எஸ் .எஸ் – பா.ஜ.க-வின் நோக்கம். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக! பாசிச பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட வேண்டும்! வேண்டாம் பிஜேபி! வேண்டும் ஜனநாயகம்! என உரத்து முழங்குவோம்.

அதிமுக – பாரதிய ஜனதா கட்சி – ஊடகங்கள் சேர்ந்து நடத்தும் இந்த நாடகத்தை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321



கோட்டா பயிற்சி மைய மரணங்கள்: தனிப்பட்ட மனநல பிரச்சனையா?

ந்தவொரு மனிதனும் இறப்பை தேர்ந்தெடுப்பதில்லை. தற்கொலை என்பது முழுக்க முழுக்க ஒருவர் வாழும் சூழ்நிலைகளின் தாக்கத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது. தற்கொலையை தனிப்பட்ட மனநலம் சார்ந்த பிரச்சினையாக அல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்தின் சூழல்களிலிருந்து புரிந்துகொள்ள முயிற்சிக்க வேண்டும்.

ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா (Kota) என்னும் நகரத்தில் இயங்கி வரும் பயிற்சி மையங்களில் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 23 மாணவர்கள் தற்கொலை செய்து இறந்துள்ளனர். இந்த தொடர் தற்கொலைகளை தடுக்க கோட்டா நகரின் நிர்வாகம், விடுதிகளின் மின்விசிறிகளுக்கு இரும்பு கம்பி வலை (Grills) போடவும், ஸ்பிரிங் (Spring) பொருத்தப்பட்ட மின்விசிறிகளை உபயோகிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இது இந்த பயிற்சி மையங்களுக்கு லாபவெறியை தாண்டி எந்த நோக்கமும் இல்லை என்ற வக்கிர புத்தியை காட்டுவதாகவே உள்ளது.

கோட்டாவில்  மாணவர்களின் தொடர் தற்கொலைகள் இந்தாண்டு மட்டும் புதிதாக நடக்கவில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக நடந்து வருகிறது. கடந்த பத்து வருடங்களில், கோட்டா பயிற்சி மையங்களில் இதுவரை 100 மாணவர்கள் தற்கொலை செய்து இறந்துள்ளனர். ஆனாலும், போலீஸிடம் இறந்தவர்களின் எண்ணிக்கையைத் தாண்டி,  தற்கொலை முயற்சி செய்த மாணவர்களின் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் இல்லை. அது ஆயிரத்தை தாண்டும் என்று கல்வியாளர்கள் சிலர் கூறுகின்றனர்.


படிக்க: கோட்டா – நவீன வதைமுகாம்!


கோட்டா நகரில் நீட், ஜே.இ.இ. போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த பயிற்சி மையங்களில் படிக்க வருகின்றனர். கோட்டா மாவட்ட நிர்வாகத்தின் கணக்கீடு படி, 2,25,000 மாணவர்கள் 4000-திற்கும் மேற்பட்ட விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். பயிற்சி கட்டணமாக ஒரு நபருக்கு ரூபாய்.50,000 முதல் 2 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் மட்டுமே, ஆண்டிற்கு 5000 கோடி ரூபாய் புழங்கும் இடமாக கோட்டா நகரம் உள்ளது. மேலும், விடுதிகள் மூலமாக சில நூறு கோடிகள் வரை வருவாய் ஈட்டுகிறது.

பொதுவாக பயிற்சி மையங்களில் மாணவர்கள் மிக மோசமாக நடத்தப்படுவது வழக்கம். கோட்டாவில் அது உச்சத்தை அடைந்திருக்கிறது. ஏனெனில், கோட்டாவின் பயிற்சி மையங்களின் வருவாய்க்கு ஆதாரமாக இருப்பது, “கோட்டா பயிற்சி மையங்களில் படித்தால் நிச்சயம் தேர்வுகளில் வெற்றி பெறலாம் என்ற பிம்பம் தான்”. அதை தக்கவைத்துக் கொள்ள மாணவர்களை மிக மோசமான முறையில் நடத்துகின்றனர்.

ஒவ்வொரு முறையும்  மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களிடம் வெளிப்படையான பாகுபாடுகள் காட்டப்படும்போது, மாணவர்களுக்கு தாழ்வுமனப்பான்மை வரும் வகையில் தண்டிக்கப்படுகிறார்கள். இதனால், தனிமையுணர்வு, போதைப் பழக்கம், தூக்கமின்மை, உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் வருகிறது. இது இறுதியாக மாணவர்களை தற்கொலைக்கு தள்ளுகிறது.

தற்கொலை செய்த மாணவர்கள் அனைவரும் 15 முதல் 22 வயதிற்கு உட்பட்டவர்களே ஆவர். இவர்கள் பெரும்பாலும், உத்தர பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களின் சிறிய நகரங்களையும், கிராமங்களையும் சேர்ந்த ஏழை, நடுத்தர வர்க்க பின்னணியைக் சேர்ந்தவர்கள். முடி திருத்தும் தொழிலாளி, சிறு விவசாயிகள், வண்டி கழுவும் தொழில் செய்வோர் போன்ற எளிய உழைக்கும் பின்னணியைச் சேர்த்த பெற்றோர்களின் குழந்தைகள் தான் இந்த கோட்டா பயிற்சி மையங்களில் தற்கொலை செய்து இறந்துள்ளனர்.


படிக்க: 10,12 வகுப்பு தேர்வுகளில் தோல்வி: ஒரே நாளில் 12 மாணவர்கள் தற்கொலை! தேவை மனநல ஆலோசகரா? மாணவர் நலன் அரசா?


இந்த தற்கொலைகள் அனைத்தும் தனிப்பட்ட பிரச்சினையாக கருத முடியாது. சமூக மொத்தமும் பரவிவிட்ட சமூக அரசியல் சீரழிவின் வெளிப்பாடு என்றே கருத வேண்டும். இந்த இளம் மாணவர்களின் தற்கொலைக்குக் காரணம் லாபவெறி பிடித்த பயிற்சி மையங்கள் உருவாகி வளர வாய்ப்பளித்த கல்வி தனியார்மயக் கொள்கை தான். பள்ளிக்கல்வியை முற்றிலுமாக புறக்கணித்து விட்டு, நுழைவுத் தேர்வுகளை தகுதியாக கொண்டு வந்ததற்கும் இந்தக் கொள்கை தான் காரணம்.

ஒரு மாணவனின் தனித்திறனை இங்கே யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. நமது கல்விமுறை சுதந்திர சிந்தனையை வளர்ப்பதில்லை. சமூக விழுமியங்கள் மற்றும் பொறுப்புகள் பற்றி எதையும் சொல்லிக் கொடுப்பதில்லை. கல்வி என்பது வேலை, ஊதியம், சமூக அந்தஸ்து, கட்டற்ற நுகர்வு என்ற திசையில் தான் இந்தியாவில் இருக்கிறது. சமூகத்தில் இந்த போக்குகள் இருப்பதற்கு மூலக்காரணமாக உள்ளவை, போட்டி மனப்பான்மையை தூண்டி விடும் முதலாளித்துவ சிந்தனை, நுகர்வு மற்றும் தனிநபர்வெறியை தூண்டிவிடும் ஏகாதிபத்திய பொருளாதார கட்டமைப்பு, கூலியடிமை மனோபாவம், பார்ப்பனியம், நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க சுய கௌரவம் ஆகியவை தான்.  இவையெல்லாம் அடிப்படையில் களையப்படாமல், வெறும் மனநல ஆலோசனைகள் மூலமாகவோ, அற்பத்தனமான ஸ்ப்ரிங் மின்விசிறிகள் மூலமாகவோ தற்கொலைகளை தடுக்கமுடியாது. பேராசான், தோழர்.மாவோ சொல்வது இதுதான், “நாம் எதிர்ப்பை உரத்த குரலில் தெரிவிக்க வேண்டும், சமூகத்தின் தீமைகள் பற்றி இன்னும் இறக்காத பிற மனிதர்களை எச்சரிக்க வேண்டும், நம் சமூகத்தின் எண்ணற்ற தீமைகளை கண்டிக்க வேண்டும்”. இதுதான் தீர்வுக்கான முதல் படி.

பின் குறிப்பு: இந்த கட்டுரையை எழுத தோழர் மாவோவின் “Miss Chao’s Suicide” என்ற சிறு கட்டுரை உதவியாக இருந்தது.


சீனிச்சாமி



தமிழ்நாட்டின் அவமானச் சின்னங்கள்!

பிற்போக்குதனம் தாண்டவமாடும் காலங்களில் விடுதலை உணர்வையும் தன்மான உணர்வையும் நாட்டுப்பற்றையும் மழுங்கடிக்கின்ற சக்திகள் வரலாறு நெடுகிலும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. வெள்ளையர்களின் ஆதிக்கம் கோலோச்சிய காலத்தில் எட்டப்பன், தொண்டைமான், மீர் ஜாபர் போன்ற துரோகிகள் விடுதலைப் போராட்டதைக் காட்டிக் கொடுத்தனர். இன்று, காவி-கார்ப்பரேட் பாசிசம் கோலோச்சும் காலத்தில் இந்த துரோகிகள் பல்வேறு முகங்களாக காட்சியளிக்கின்றனர்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் கணிசமான தொகுதிகளை வென்றிட வேண்டும், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியாக பா.ஜ.க.வைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் அமித்ஷாவின் தேர்தல் வியூகங்களின் அடிப்படையில் திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறது பா.ஜ.க.

ஆனால் ரஃபேல் கைக்கடிகாரம் பில், திருச்சி சூர்யா-டெய்சி ஆபாச பேச்சுக்கள், காயத்ரி ரகுராமை இழிவுப்படுத்திக் கட்சியை விட்டு நீக்கியதால் கட்சியில் குழப்பம் என அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் பா.ஜ.க.வும் அண்ணாமலையும் தமிழ்நாட்டில் எள்ளி நகையாடப்பட்டனர். கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு மேலிடப் பார்வையாளராக அண்ணாமலை சென்ற மாவட்டத்தின் ஒரு பூத்தில் பா.ஜ.க வெறும் பத்து ஓட்டுகள் மட்டுமே பெற்றது அம்பலமாகி நாறிப்போனது. காங்கிரசுக்கு போட்டியாக தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளின் வழியாகவும் அண்ணாமலையின் பாத யாத்திரை செல்லும் என்று கூறப்பட்டாலும், ஒரு நாளைக்கு சில நிமிடங்கள், சாதிக்கட்சிகளை வளைத்துப் போட்டு, சில அல்லக்கைகள், சில ரௌடிகள் என நூறு பேர் கூட இல்லாமல் இந்தப் பாத யாத்திரை கேலிக்கூத்தாக நடந்தேறியது; பத்து நாட்களே நடந்த பாத யாத்திரை பாதியிலேயே நின்றுவிட்டது. டிவிட்டரில் இந்த பாத யாத்திரையை கிண்டலடித்து போடப்பட்ட #ஆழ்ந்த இரங்கல் என்ற ஹேஷ்டாக் வைரலாகியது. அதுமட்டுமின்றி, கோஷ்டி பூசலில் பா.ஜ.க. சந்தி சிரிப்பது மட்டுமல்ல, அண்ணாமலைக்கும் எடப்பாடிக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்து பா.ஜ.க. கூட்டணியும் சந்தி சிரித்து வருகிறது.

இருந்தும், கட்சிக்குள் கோஷ்டி பூசல்களால் ஏற்படும் மோதல்களை, அண்ணாமலையின் சில்லரைகளைக் களையெடுக்கும் நடவடிக்கை என்று பா.ஜ.க. கூறுகிறது. அண்ணாமலையின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பல பொய்களை அவிழ்த்துவிட்டு, அவருக்கு நேர்மையானவர் என்ற ஒளிவட்டம் சூட்டுகிறது. பத்திரிகையாளர் சந்திப்பின் போது அண்ணாமலையைக் கேள்விக்கேட்டு திணறடிக்கும் செய்தியாளர்கள் அந்த நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். அண்ணாமலை பாத யாத்திரை செல்லும் பகுதிகளில் சாதி ரீதியான தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. அவரது பாத யாத்திரைக்கு முதன்மையான ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து நேரலை செய்கின்றன. பா.ஜ.க. ஐ.டி. துறை மூலமாக அண்ணாமலை புகழ் பாடப்படுகிறது. இவ்வாறு பலவகைகளில் தமிழ்நாட்டு பா.ஜ.க.வினைத் தூக்கி நிறுத்துவதற்கும் அமித்ஷா-அண்ணாமலை கும்பல் முயற்சித்து வருகிறது.

பா.ஜ.க. கூட்டணியில் இருந்தாலும் அ.தி.மு.க.வின் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் பொறுக்கி அரசியலின் உச்சம் தொட்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் அ.தி.மு.க.வின் தனிப்பெரும் தலைவராக தன்னைக் காட்டிக் கொள்ளும் பொருட்டும், எடப்பாடி கும்பல் மதுரையில் மாநாடு நடத்தியது. தமிழ்நாட்டு மக்களைக் கொள்ளையடித்து சேர்த்தப் பணத்திலிருந்து கோடிக்கணக்கில் வாரியிறைத்து, கொங்கு மண்டலம் மற்றும் வட மாவட்டங்களில் இருந்து ஆட்களைத் திரட்டி நடந்த இந்த மாநாட்டில் டன் கணக்கில் உணவுப் பொருட்கள் வீணடிக்கப்பட்டன. மக்களின் எந்தக் கோரிக்கைகளையும் பற்றி பேசாமல் குடியும் குத்தாட்டமுமாக இந்த மாநாடு நடத்தி முடிக்கப்பட்டது. ஓ.பி.எஸ்.சுக்கு எதிராக தேவர் சாதி ஓட்டுக்களைக் கவர்வதற்காகவும் இந்த மாநாட்டை மதுரையில் நடத்தியது எடப்பாடி கும்பல்.


படிக்க: பாமக – வை ஏத்தி விட்ட பின் நவீனத்துவ பச்சோந்திகள் !


அடுத்து 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் உல்லாசமாக ஓய்வெடுக்கச் சென்றுவிட்ட அன்புமணி ராமதாஸ் கும்பல் 2021 சட்டமன்றத் தேர்தல் வர இருந்த சூழலில், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற பிரச்சினையைக் கிளப்பியது. சட்டமன்றத் தேர்தலில் படுதோல்விக்குப் பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பதுங்கியிருந்தது. இப்போது நாடாளுமன்றத் தேர்தல் வருவதையொட்டி, நெய்வேலி என்.எல்.சி. பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்து முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தது. போலீசு அனுமதியுடன் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் வன்முறையை அரங்கேற்றியதன் மூலம் மணிப்பூர் பிரச்சினையில் இருந்து மக்களின் கவனத்தை திசைத்திருப்புவது மட்டுமின்றி, கடலூர், விழுப்புரம் மாவட்ட மக்களுக்காக பாடுபடுபவர் போல தன்னை சித்தரித்துக் கொண்டது.

ஜூலை மாத பிற்பகுதியில், மணிப்பூரில் இரண்டு குக்கி இனப் பெண்களை கும்பல் பாலியல் வல்லுறவுசெய்து அவர்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற கொடூர வீடியோக் காட்சி வெளியானதை அடுத்து, “மணிப்பூர் கலவரத்தைத் தடுக்க வேண்டும்; மோடி, பைரன்சிங் ஆகியோர் பதவி விலக வேண்டும்” என்று நாடு முழுவதும் எதிர்ப்பலை உருவான போது, சீமான் இசுலாமியர்களையும் கிருத்தவர்களையும் இழிவுப்படுத்திப் பேசினார். இதன் மூலம், மோடிக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் உணர்வை திசைத்திருப்பினார். இதைப்போலவே, ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி மோடி கும்பலுக்கு நெருக்கடி ஏற்பட்ட போது, அருந்ததி மக்களை இழிவாகப் பேசி திசைத்திருப்பினார். இப்படி மீண்டும் மீண்டும் சீமான் ஒரு தேர்ந்த சங்கி என்று தன்னை நிரூபித்து வருகிறார்.

இவைமட்டுமின்றி, ஆளுக்கொரு கட்சியை வைத்திருக்கும் சினிமா கழிசடைகளான சரத்குமார், கமலஹாசன், கார்த்திக், சேது.கருணாஸ் போன்ற கும்பல்கள் எல்லாம் அரசியல் கட்சி நடத்துகின்றனர். பா.ஜ.க.வால் ஓரங்கட்டப்பட்ட பிரேமலதா கும்பலோ விஜயகாந்த் படத்தைக் காட்டி கூட்டணிக்கு அலைந்து கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு, சினிமா கழிசடை விஜய்-க்கும் பதவி ஆசைப் பற்றிக்கொண்டுவிட்டது. இன்னொரு பக்கம், பாரிவேந்தர், ஜான்பாண்டியன், கிருஷ்ணசாமி, கொங்குவேளாளர் சாதியைச் சேர்ந்த ஈஸ்வரன், தனியரசு என நூற்றுக்கணக்கான ஆதிக்க சாதிக் கட்சி தலைவர்கள் இருக்கின்றனர்.

மேற்படி பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., நா.த.க. மட்டுமின்றி அரசியல் கட்சி நடத்தும் சினிமா கழிசடைகள், சாதிக் கட்சிகளை நடத்தும் சாதிவெறியர்கள் என அனைவரும் எந்த மக்கள் பிரச்சினைக்காகவும் போராடுவதில்லை. தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்கு எதிராக செயல்படும் ஆளுநருக்கு எதிராகவோ விலைவாசி உயர்வு உள்ளிட்ட எந்தப் பிரச்சினைகளுக்காகவோ குரல் கொடுப்பதில்லை. தலித் மக்கள் மீதான சாதிய அடக்குமுறைகளைக் கண்டிப்பதில்லை என்பது மட்டுமல்ல, இவர்கள்தான் இந்த சாதிவெறியர்களைத் தூண்டும் மறைமுக சக்திகளாக இருக்கின்றனர். அதிகபட்சம் தி.மு.க.வைக் குறைக்கூறுவதையும் மக்கள் போராட்டங்களைத் திசைத்திருப்புவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றனர்.

பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம், எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கத் திட்டம் என மக்களுக்கு எதிரான எந்தத் திட்டங்களையும் இவர்கள் ஆதரிக்கின்றனர். இதனால், இவற்றிற்கு எதிரான எந்த மக்கள் போராட்டங்கள் குறித்தும் கண்டு கொள்வதில்லை. மக்கள் எக்கேடு கெட்டாலும் என்னவகையான துன்பங்களை அனுபவதித்தாலும் இந்த கழிசடைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை; அவற்றைக் கண்டுகொள்ளப்போவதுமில்லை.


படிக்க: கைப்பிள்ளைகளோடு கம்பு சுழற்றும் கலைஞானி கமல் !


ஒவ்வொரு கும்பலும் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்துக் கோடிக்கோடியாய் சொத்து சேர்த்து வைத்துள்ளன. இவர்களில் பலரும் தரகு முதலாளிகளாகவும் கார்ப்பரேட் முதலாளிகளாகவும் ரியல் எஸ்டேட் செய்வது, காண்ட்ராக்ட் பிடிப்பது, கமிசன் பார்ப்பது போன்றவற்றை நிரந்தரத் தொழிலாகவும் கொண்டிருக்கின்றனர். சேர்த்த சொத்துக்களைப் பாதுகாத்து வளர்த்துக் கொண்டும், உல்லாசமாக இரகசிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டும் பதுங்கி இருக்கின்றனர்.

ஆனால், தேர்தல் வரப்போகிறது எனத் தெரிந்துவிட்டால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால், அறிக்கைவிடுத்துக் கொண்டு, பா.ஜ.க.விற்கு ஆதரவாக தமிழ்நாட்டு மக்களின் ஓட்டைப் பிரிப்பது அல்லது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் பங்கேற்பதற்கு அலைவது என்று புறப்பட்டு வந்துவிடுகின்றனர்.

பிழைப்புவாதம், காரியவாதம், குடி, கூத்து, கோஷ்டி சண்டை, சாதி-மதவெறி கலாச்சாரம், பொறுக்கித் திண்ணுதல், மக்களைக் கொள்ளையடித்தல், புகழுக்காகவும் சொத்துக்காகவும் எந்தக் கட்சிக்கும் தாவுதல் என சீரழிந்த இந்த கோஷ்டிகள்தான் தங்களை தி.மு.க.விற்கு மாற்றாகக் காட்டிக்கொள்கின்றன.

காவிக்கு தன்னை மாற்றாகக் கூறிக்கொள்ளும் தி.மு.க.வோ கார்ப்பரேட் மயமாக்கத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. காவிரி நீர் பிரச்சினை, நீட் தேர்வில் மதிப்பெண் எடுத்தும் இடம் கிடைக்காததால் மாணவர் ஜெகதீஷ் தற்கொலை, அவரது தந்தை மரணம், தலித் மக்களுக்கு எதிரான சாதி ஆதிக்க வெறியர்களின் தாக்குதல்கள் போன்ற அனைத்திலும் சந்தர்ப்பவாதமான போக்கையே கடைபிடித்து வருகிறது. இதற்கெதிராகக் கூட இந்த எதிர்க்கட்சியினர் எந்தப் போராட்டத்தையும் நடத்தியதில்லை. அதிகபட்சம் எடப்பாடி, சீமான் போன்ற ஒருசிலர் திடீரென தோன்றி, தி.மு.க.வைக் குற்றஞ்சாட்டி சில அறிக்கைகளை விடுவதுடன் பதுங்கிக் கொள்கின்றனர்.

இன்னொருபுறம், ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார கும்பலோ தமிழ்நாட்டின் அனைத்து மட்டங்களிலும் ஊடுருவி வருகிறது. சாதிச் சண்டைகளை உருவாக்க திட்டமிட்டு முயற்சித்து வருகிறது. அரசியல் ரீதியாக பா.ஜ.க. கூட்டணியினர் தோல்வி முகத்தில் இருந்தாலும், இந்த சங்கப் பரிவார கும்பல் பா.ஜ.க.வின் வெற்றிக்கு உள்ளூர தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

ஆர்.எஸ்.எஸ்.யின் ஏஜெண்டாகவே செயல்படும் தமிழ்நாட்டின் ஆளுநர் தமிழ்நாட்டின் நலன்சார்ந்த எந்தத் திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வருகிறார். ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க. நீட் தேர்வை ரத்து செய்யவில்லை; தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரை கொடுக்க முயற்சிக்கவில்லை; ஜி.எஸ்.டி.யில் தமிழ்நாட்டிற்குரிய எந்த பங்கையும் வழங்கவில்லை. தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிரான காவி-கார்ப்பரேட் திட்டங்களை மேலும் மேலும் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது ஒன்றிய அரசு.

எனினும், கமலஹாசன், சீமான் போன்ற சினிமா கழிசடைகளும், சாதிக் கட்சித் தலைவர்களும் தேர்தல் நேரத்தில் என்ன செய்வார்கள், எந்தக் கூட்டணியை ஆதரிப்பார்கள் என்று ஆவலாக எதிர்ப்பார்ப்பதும், கழிவுகளை வெளியேற்றுவது போல, அவர்கள் விடுக்கும் தேர்தல் அறிக்கைகளை உச்சிமுகர்ந்து எடுத்துவைத்துக் கொண்டு ஊடகங்கள் விவாதிப்பதும், இந்த கும்பல்களுக்கு தேர்தலில் வாக்களிப்பதுமான தன்மான உணர்வுமற்ற பெரும் கூட்டமும் தமிழ்நாட்டில் இருக்கிறது. இதைப் போலவே இன்னொரு பிரிவு தி.மு.க.-காங்கிரசு கூட்டணியை ஆதரித்துக் கொண்டும் தேர்தல் வந்தால் அறிக்கை விட்டுக்கொண்டும் தமது இருப்பைக் காட்டி பங்கு போட்டுக்கொண்டிருக்கின்றன.

அரசியல் கட்சிகளை நடத்தும் இந்த சினிமா கழிசடைகளும், சாதிக்கட்சிகளை நடத்தும் சாதிவெறித் தலைவர்களும் தமிழ்நாட்டு பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க., நா.த.க. போன்ற பிழைப்புவாத காரியவாத பொறுக்கித் திண்கிற, ஆளும் வர்க்கத்திற்கு நேரடியாக சேவைசெய்கின்ற கட்சிகளும் தலைவர்களும் தமிழ்நாட்டின் அவமானச் சின்னங்கள்!

ஆகையால், பா.ஜ.க.வை அரசியல் களத்தில் இருந்து விரட்டியடிப்பது, ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கப் பரிவார கும்பலையும் தடை செய்வது எந்த அளவிற்கு அவசியமானதாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு பாசிச கும்பலுக்கு ஐந்தாம்படையாகவும் செயல்படுகின்ற இந்த சினிமா கழிசடைகளையும் சாதிக்கட்சி தலைவர்களையும் விரட்டியடிப்பதன் மூலமே, தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.


தங்கம்

(புதிய ஜனநாயகம் செப்டம்பர் மாத இதழ்)



உளுந்தூர்பேட்டை: விநாயகர் சிலையை வைத்து கலவரம் செய்ய முயன்ற பிஜேபி – ஆர்எஸ்எஸ் குண்டர்கள்

ள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் அரும்பலவாடி கிராமத்தில் செப்டம்பர் 17 அன்று கலவரத்தை ஏற்படுத்துவதற்காக ஆர்எஸ்எஸ் – பிஜேபி கும்பலைச் சேர்ந்தவர்கள் அனுமதியின்றி விநாயகர் சிலையை திட்டமிட்டு இரவு நேரத்தில் வைத்தனர். அக்கிராமத்தை சேர்ந்த மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு போலீசு சிலையை எடுத்துச்சென்றது.

இது காவிகளை ஆத்திரமூட்டியது. இதனால் இரவு 12 மணியளவில் வி.சி.க கட்சியைச் சேர்ந்த சூசை அவர்களின் வீட்டிற்கு முன்பும் இஸ்லாமிய மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் பிஜேபி, ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்பட்டது. வி.சி.க தலைவரை கொச்சைப்படுத்தியும் கோஷங்களை எழுப்பியது. பிறகு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசு வந்ததும் அந்த கும்பல் பதுங்கிவிட்டது.

இதனை கண்டித்து அடுத்த நாள் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்ட பிஜேபி – ஆர்எஸ்எஸ் கும்பலை சேர்ந்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி எலவனசூர்கோட்டை போலீசு நிலையத்தில் வி.சி.க மாவட்டச் செயலாளர் அறிவுக்கரசு தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் காவிகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

எலவனசூர்கோட்டையில் செப்டம்பர் 21 அன்று மாலையில் வி.சி.க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைந்த பேரணி, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் அதிகாரம் தோழர்களும் கலந்து கொண்டனர்.


தகவல்
தோழர் வினாயகம்,
உளுந்தூர்பேட்டை,
மக்கள் அதிகாரம் – கடலூர் மண்டலம்.



இந்தியா – பாரத், ஒரே நாடு ஒரே தேர்தல், சனாதனம்: பி.ஜே.பி-யை கிழித்த மாணவர்கள்! | வீடியோ

இந்தியா – பாரத், ஒரே நாடு ஒரே தேர்தல், சனாதனம்: பி.ஜே.பி-யை கிழித்த மாணவர்கள்!

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!



நீட் எனும் மோசடித் தேர்வு: முதுநிலை மருத்துவ படிப்பில் சேர “0” மதிப்பெண் போதுமாம்!

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்தும் அதிக இடங்கள் காலியாக உள்ளதால் அந்த இடங்களை நிரப்புவதற்காக நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக (0 percentile) அறிவித்துள்ளது மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழு.

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க நீட் தேர்வில் பங்கேற்றிருந்தால் போதுமானது என்றும், தகுதி மதிப்பெண் தேவையில்லை என்றும் எம்.சி.சி. கூறியுள்ளது.

இந்த அறிவிப்பு நீட் தேர்வில் தேர்ச்சியடையாமல்  போனவர்களை காப்பாற்றுவதற்காக அல்ல, ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வரை கல்விக்கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும்  தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான ஏற்பாடாகும்.

ஒருபேச்சுக்கு  நாளை இளநிலை மருத்துவ படிப்புகளிலும் இதேபோன்று காலியிடங்கள் உருவாகுகிறது என வைத்துக்கொள்வோம் அப்போது, இளநிலைக்கும் நீட் தேர்வு மதிப்பெண்ணும் பூஜ்ஜியமாக்கப்படும். இந்த நீட் எனும் மோசடித் தேர்வே, மருத்துவ துறையை தனியார் முதலாளிகளின் லாபவெறிக்கு பலியாக்க கொண்டுவரப்பட்டதுதான்.

நீட் தேர்வு மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தும், தகுதியான மருத்துவர்களை உருவாக்கும் என்ற காவிகளின் பிரச்சாரத்தின் சாயம் மீண்டும் வெளுத்துவிட்டது. நீட் தேர்வு தனியார் முதலாளிகளின் நலனுக்காகத் தான் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

புதிய ஜனநாயகம்
23.09.23



ஒருவிரல் புரட்சியா, மக்கள் எழுச்சியா: பாசிசத்தை எதிர்கொள்ள, “சாத்தியமான மாற்று” எது?

லகின் அனைத்து நாடுகளிலுமுள்ள ஆட்சிமுறைகளை ஆய்வுக்கு உட்படுத்தி, அவற்றின் தன்மையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் குறித்து அவ்வப்போது அறிக்கை வெளியிட்டுவருகிறது ஸ்வீடனின் கோதன்பக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த “வி-டெம்” (V-DEM – Varieties of Democracy) என்ற நிறுவனம். இந்த ஆண்டு மார்ச் மாதம் வி-டெம் நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. “எதேச்சதிகாரமயமாக்கத்தை எதிர்கொள்ளல்” (Defiance in the Face of Autocratization) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை, கடந்த பத்தாண்டுகளில் உலகின் 42 நாடுகளின் அரசுகள், தங்களது ஜனநாயகக் கூறுகளை கைவிட்டு ஏதேச்சதிகாரத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்ற அதிர்ச்சிகரமான முடிவை வெளியிட்டுள்ளது.

அவ்வாறு ஏதேச்சதிகாரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நாடுகளில், இந்தியா பாய்ச்சல் வேகத்தில் முன்னேறுகிறது என்பதுதான் நமது பரிசீலனைக்கு உரிய விசயம். இந்தியாவில் நிலவும் ஆட்சிமுறையை அந்த அறிக்கை “தேர்தல் எதேச்சதிகாரம்” (Electoral Autocracy) என்று வகைப்படுத்தியுள்ளது.

தேர்தல்கள் நடத்தப்பட்டாலும், அவை வெளிப்படையாகவும் நியாயமாகவும் நடத்தப்படாமல் இருப்பது; கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை, அமைப்பாய் திரளும் உரிமை போன்ற அடிப்படை ஜனநாயக உரிமைகள் வெட்டிக் குறுக்கப்பட்டிருப்பது ஆகிய நிலைமைகளை “தேர்தல் எதேச்சதிகாரம்” என்று வகைப்படுத்துகிறது வி-டெம் அறிக்கை.

2021-ஆம் ஆண்டிலேயே வி-டெம் நிறுவனம் இந்தியாவை “தேர்தல் எதேச்சதிகாரம்” கொண்ட நாடு என்று வகைப்படுத்திவிட்டது. வி-டெம் மட்டுமின்றி, அதே ஆண்டில் சுதந்திர வீடு (Freedom House) என்ற அமைப்பு இந்தியாவை “அரைகுறை சுதந்திரம்” (partly free) என்றும், ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான நிறுவனம் (Democracy and Electoral Assistance) என்ற அமைப்பு ” ஜனநாயக பின்னடைவு” (backsliding democracy) என்றும், உலகளாவிய ஜனநாயக நிலை (Global State of Democracy) என்ற அறிக்கை “மிகப்பெரும் வீழ்ச்சியடைந்த ஜனநாயகம்” (major decliner) என்றும் இந்தியாவை வகைப்படுத்தி இருந்தன.


படிக்க: கர்நாடக தேர்தல்: பாசிஸ்டுகளின் தோல்வி – நாம் இறுமாந்து இருக்க முடியுமா? || தோழர் மருது


விவாத சுதந்திரம் நசுக்கப்படுதல், கலாச்சார உரிமைகள் பறிக்கப்படுதல், மக்கள் மீதான அடக்குமுறைகள், சுயேட்சையான நிறுவனங்கள் அரசியல் சார்போடு செயல்படுதல் – என பல்வேறு வகைகளில், ‘உலகின் மாபெரும் ஜனநாயகம்’ ஐ.சி.யூ. வார்டில் இருப்பதாக மேற்கண்ட முதலாளித்துவ நிறுவனங்களின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பல்வேறு பெயர்களில் இதை விளக்கினாலும், “தேர்தல் எதேச்சதிகாரம்” என்ற சொல் மற்றவற்றைக் காட்டிலும் மிகப் பொருத்தமான சொல்லாகவே நமக்குப் படுகிறது. ஏனெனில், சட்டப்பூர்வ முறைகளிலேயே ஒரு பாசிச ஆட்சி நடைபெற்றுவருவதை, “தேர்தல் எதேச்சதிகாரம்” என்ற சொல்தான் ஓரளவேனும் நெருக்கமாகப் பிரதிபலிக்கிறது.

“தேர்தல் ஜனநாயகம் நிலவும் நாட்டில் உள்ள சர்வாதிகாரப் போக்குகள்” என்று சொல்லவில்லை; “தேர்தல் முறையிலேயே மோசடிகள் நடைபெறும் எதேச்சதிகார ஆட்சிமுறை நிலவும் நாடு” என்ற பொருளிலேயே இந்த சொல்லை வி-டெம் நிறுவனம் கையாளுகிறது.

இந்தியாவில் நிலவும் போலி ஜனநாயக அரசமைப்புதான் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் பாசிச ஆட்சிக்கு அடித்தளமாக இருக்கிறது என்று நாம் தொடர்ந்து பேசிவருகிறோம். மேலும் அந்த போலி ஜனநாயக அரசமைப்பையே, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் தமது இந்துராஷ்டிர லட்சியத்திற்கு ஏற்றவகையில் மறு ஒழுங்கு (Remodify) செய்துகொண்டிருப்பதையும் பல்வேறு நிகழ்வுகளில் சுட்டிக்காட்டியிருக்கிறோம். அந்தவகையில், இன்று தேர்தல் அமைப்பில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் மேற்கொண்டுவரும் மறு ஒழுங்கு நடவடிக்கைகள் என்பது முக்கியமானதாக இருக்கிறது.

‘உலகின் மிகச் சக்திவாய்ந்த ஜனநாயக’த்தின், ‘மிகச் சுதந்திரமான’ அமைப்பான தேர்தல் ஆணையத்தை பாசிஸ்டுகள் தங்களது நோக்கங்களுக்கு ஏற்ப எப்படியெல்லாம் வளைத்துள்ளார்கள் என்பது தொடர்பான விவரங்களை, அண்மையில் வெளிவந்த பொருளாதார உதவிப் பேராசிரியர் சப்யசாச்சி தாஸின் ஆய்வறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது. சப்யசாச்சி தாஸின் ஆய்வறிக்கை வெளியான பதினைந்து நாட்களில், “தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் (சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) மசோதா 2023”-ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது பா.ஜ.க. அரசு.

இப்படிப்பட்டச் சூழலில், பாசிச எதிர்ப்புக்கு தேர்தலை ஒரு களமாக பயன்படுத்துவது இருக்கட்டும், பா.ஜ.க. என்ற கட்சியை வீழ்த்துவதற்காகவாவது இந்த தேர்தலை பயன்படுத்த முடியுமா? என்ற கேள்வியை நம் முன் எழுப்புகிறது, பேராசிரியர் சப்யசாச்சியின் அறிக்கையும், மோடி அரசின் தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டமும்.

அம்பலமானது தேர்தல் அதிகாரிகள் + பாசிஸ்டுகளின் கள்ளக்கூட்டு!

கடந்த ஜூலை 25-ஆம் தேதியன்று, அசோகா பல்கலைக்கழகத்தில் பொருளாதார உதவிப் பேராசிரியராக பணிபுரிந்துவந்த சப்யசாச்சி தாஸ் என்பவர், “உலகின் மிகப்பெரும் ஜனநாயகத்தில் ஜனநாயகப் பின்னடைவு” (Democratic Backsliding in the World’s Largest Democracy) என்ற தலைப்பில், 50 பக்க ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க. தேர்தல் ஆணைய அதிகாரிகளின் உதவியுடன் பல்வேறு இடங்களில் மோசடிகளில் ஈடுபட்டு வெற்றிபெற்றிருக்கிறது என்பதை புள்ளிவிவரங்களுடன் அந்த ஆய்வறிக்கை அம்பலப்படுத்தியிருந்தது.

இந்த ஆய்வறிக்கை சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டவுடன், பா.ஜ.க. தரப்பிலிருந்து பேராசிரியருக்கு பகிரங்கமான மிரட்டல்கள் வந்தன. மற்றொருபுறம், அசோகா பல்கலைக்கழக நிர்வாகம் அந்த ஆய்வறிக்கைக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென்று விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டதோடு, பேராசிரியர் சப்யசாச்சி தாஸை மிரட்டி ராஜினாமாவும் செய்யவைத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் அடியாளைப் போல செயல்பட்டுவரும் அசோகா பல்கலைக்கழகத்தின் இந்நடவடிக்கைக்கு கல்வியாளர்கள் மற்றும் ஜனநாயக சக்திகளிடமிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. பேராசிரியர் சப்யசாச்சி தாஸின் ஆய்வறிக்கையில் அம்பலப்படுத்தியிருக்கும் விசயங்கள் இன்று ஜனநாயக சக்திகள் மத்தியில் மிகப்பெரிய விவாத அலையை எழுப்பியுள்ளது.

000

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க.வுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் கடுமையான போட்டி நிலவிய தொகுதிகள் பெரும்பாலானவற்றில், தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டதன் மூலமே பா.ஜ.க. வெற்றிபெற்றிருக்கிறது என்பதுதான் பேரா.சப்யசாச்சி ஆய்வறிக்கையின் சாரம். இந்த தேர்தல் மோசடிகள் எந்தெந்த வகைகளில் நடைபெற்றிருக்கக் கூடும் என்பதை அவர் பல்வேறு அதிகாரப்பூர்வ தரவுகளிலிருந்தே ஒரு சித்திரமாக வரைந்துகாட்டுகிறார். ஆகையினால்தான், தனது யோக்கியதையை கேள்விக்குள்ளாக்கும் இந்த அறிக்கையைப் பற்றி, இதுவரை எவ்வித பதிலறிக்கையும் தராமல் கள்ள மௌனம் சாதித்துவருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.

பா.ஜ.க.வுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் கடுமையாக போட்டி நிலவிய – அதாவது இருதரப்பும் வெல்வதற்கு 50 சதவிகிதம் வாய்ப்பு இருந்த 59 தொகுதிகளில், 41 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெற்றுள்ளது. இப்படியான வெற்றிவாய்ப்புகளுக்கு கடந்த தேர்தல்களில் முன்னுதாரணங்கள் இல்லை என்று சுட்டிக்காட்டும் ஆய்வாளர் சப்யசாச்சி தாஸ், வெற்றிப்பெற பா.ஜ.க. இத்தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தி பிரச்சாரம் செய்திருக்க வேண்டும் அல்லது ஏதேனும் மோசடி நடைபெற்றிருக்க வேண்டும் என்ற கருதுகோளுக்கு வந்தடைகிறார்.

வளரும் சமூகங்களுக்கான ஆய்வு மையத்தின் (Centre for Developing Societies) தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி, கடுமையான போட்டி நிலவிய அத்தொகுதிகளில், பா.ஜ.க.வை விட எதிர்க்கட்சிகளே தீவிரமான பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்ற முடிவைக் காண்கிறார். ஆகவே, எஞ்சியிருப்பது தேர்தல் மோசடிதான். தேர்தலில் மோசடிகளில் ஈடுபட்டால் அவை எந்தெந்த வடிவங்களில் நடைபெற்றிருக்கக் கூடும் என்று மூன்று சாத்தியக் கூறுகளை முன்வைத்து தனது கருதுகோள்களுக்கான ஆதாரங்களைத் தேடுகிறார்.

ஒன்று, வாக்காளர் பட்டியலில் இருந்து பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போடாதவர்களின் பெயர்களை நீக்குதல்; இரண்டாவது வழி, பா.ஜ.க.-வை ஆதரிக்காத வாக்காளர்களை வாக்குச்சாவடிக்குச் செல்லவிடாமல் தடுத்தல்; மூன்றாவது, வாக்கு எண்ணிக்கையில் மோசடி – இந்த மூன்று சாத்தியங்களுமே நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளது என்பதை அவர் ஆதாரங்களோடு அம்பலப்படுத்துகிறார்.

ஒட்டுமொத்த மக்களவைத் தொகுதிகளின் வாக்காளர் வளர்ச்சி விகிதத்தை ஒப்பிடும்போது, கடுமையான போட்டி நிலவி, பா.ஜ.க. வெற்றிபெற்ற தொகுதிகளில் வாக்காளர் வளர்ச்சிவிகிதம் வெகுவாக குறைந்திருப்பதை ஆய்வாளர் காண்கிறார். அதாவது, ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்கு பிறகு புதிய வாக்காளர்களைக் கொண்ட பட்டியல் வெளியிடப்படும்; அவ்வாறான பட்டியலில் மேற்கண்ட தொகுதிகளில் குறைவான வாக்காளர்களே சேர்க்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, முஸ்லிம்கள் கணிசமாக உள்ள தொகுதிகளில், இந்த முரண்பாடு பளிச்செனத் தெரிவதாக ஆய்வாளர் சுட்டிக்காட்டுகிறார். அதாவது முஸ்லிம் வாக்களார்களில் கணிசமானோர் வாக்காளர் பட்டியலில் சேர்க்காமல் விடப்பட்டுள்ளனர் என்பதே இதன் பொருள்.

தன்னுடைய கருதுகோளுக்கு கூடுதல் வலுசேர்க்கும்விதமாக, குயின்ட் தளத்தின் புலனாய்வு செய்திப் பிரிவின் ஆசிரியர் பூனம் அகர்வால், 2019-ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட புலனாய்வுக் கட்டுரையை ஆதாரமாக எடுத்துக் கொள்கிறார், சப்யசாச்சி தாஸ்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, இந்திய தேர்தல் ஆணையமானது பதிவான வாக்குகள், எண்ணப்பட்ட வாக்குகள் என்று இரண்டு தரவுத் தொகுப்புகளை வெளியிட்டது. இத்தரவுத் தொகுப்பில் பதிவான விவரங்களின்படியே, சுமார் 373 தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் வேறுபாடு இருந்தது. இந்த மோசடியைச் சுட்டிக்காட்டி பூனம் அகர்வால் தனது கட்டுரையை எழுதியிருந்தார்.

இந்த விவகாரம் அம்பலமானதற்குப் பிறகு தேர்தல் ஆணையம் தான் வெளியிட்ட தரவுத் தொகுப்புகளை அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து நீக்கிவிட்டது. அவை வெறுமனே நிர்வாகக் கோளாறால் நிகழ்ந்த ‘எழுத்துப் பிழைகள்’ என்று சொத்தைக் காரணத்தைச் சொல்லியது. பூனம் அகர்வாலின் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுசெய்த பேரா.சப்யசாச்சி தாஸ், அந்த ‘எழுத்துப் பிழைகள்’ பெரும்பாலும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள தொகுதிகளிலேயே குறிவைத்து நிகழ்ந்திருப்பதை அடையாளம் காணுகிறார்.

பா.ஜ.க. மோசடி செய்து வெற்றிபெற்றதாக ஆய்வாளர் குறிப்பிடும் தொகுதிகளுள் பெரும்பாலானவை (22), அக்கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் உள்ளவை என்பதோடு, இந்த விவரம் ஒத்திசைந்து போகிறது. இதன்மூலம் மோசடிக்கான முகாந்திரத்தை ஆய்வாளர் உறுதிசெய்கிறார்.

முஸ்லிம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருப்பது; வாக்கு எண்ணிக்கை பா.ஜ.க.விற்கு சாதகமாக இருக்கும்வகையில் மோசடி செய்திருப்பது போன்றவை தேர்தல் ஆணைய அதிகாரிகளின் துணையில்லாமல் நடைபெற முடியாது. ஆகவே, சர்ச்சைக்குரிய அத்தொகுதிகளில் தேர்தல் பொறுப்பாளர்களாக வேலைபார்த்த அதிகாரிகளின் பின்னணியையும் ஆராய்ந்திருக்கிறார் பேரா.சப்யசாச்சி தாஸ். சொல்லிவைத்தாற்போல, அவர்களெல்லாம் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலிருந்து அனுப்பப்பட்ட மாநில குடிமைப் பணி அதிகாரிகள்.

ஆகவே, தேர்தல் அதிகாரிகளின் துணையோடு, பாசிச பா.ஜ.க.வினர் மிகப்பெரிய தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை பேரா.சப்யசாச்சி தாஸின் ஆய்வறிக்கை மெய்ப்பித்துள்ளது.

போலி ஜனநாயகத்திற்கே உரிய “தேர்தல் எதேச்சதிகாரம்”

அமலாக்கத்துறை, சி.பி.ஐ, வருமான வரித்துறை ஆகியவற்றைப் போல, தேர்தல் ஆணையமும் பாசிச பா.ஜ.க.வின் கைப்பாவையாக செயல்படும் அமைப்புதான் என்பது இதற்கு முன்பே பலமுறை அம்பலமாகியிருக்கிறது. பேராசிரியர் சப்யசாச்சியின் அறிக்கை அதற்கு “வலுவான புதியதொரு ஆதாரம்” என்று வேண்டுமானால் சொல்லலாம்.

மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், தேர்தல் ஆணையம் பா.ஜ.க.விற்கு ஆதரவாகவும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் செயல்பட்டதை நாடறியும். தேர்தல் தேதி அறிவிப்பது வரை அனைத்தும் பா.ஜ.க. அலுவலகத்தில்தான் முடிவுசெய்யப்பட்டன.

அரிதினும் அரிதாக, 2019-ஆம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையர்களுள் ஒருவராக இருந்த அசோக் லவாசா என்ற அதிகாரி, நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எதிர்க்கட்சிகள் அளித்த புகார்களுக்கு அடிப்படை இருப்பதாக கருத்துத் தெரிவித்தார். அவரது கருத்து தேர்தல் ஆணையக் குழுவில் இருந்த மற்ற இரண்டு அதிகாரிகளால் பெரும்பான்மை அடிப்படையில் நிராகரிக்கப்பட்டபோதும், தனது கருத்தை சிறுபான்மை என்று பதிவுசெய்து வெளியிடக் கோரி போராடினார். அவரது கருத்து ஏற்கப்படவில்லை. அதற்கடுத்து, அவரது சகோதரரின் நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை ரெய்டு ஏவப்பட்டது. காவிக் கும்பலால் அச்சுறுத்தப்பட்ட அவர், கடைசியில் ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

வாக்காளர் பட்டியலில் இருந்து முஸ்லிம்கள், தலித்துகள் குறிவைத்து நீக்கப்படுவதும், முஸ்லிம்கள் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கவிடப் படாமல் காவி குண்டர்களாலும் போலீசாலும் விரட்டியடிக்கப்படுவதும் ஒவ்வொரு சட்டமன்ற, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின்போதும் உத்தரப் பிரதேசத்தில் பொதுப்போக்காகவே இருக்கிறது. உத்தரப் பிரதேசம் மட்டுமின்றி, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்படுவது குறித்து பல புகார்கள் வெளிவந்துள்ளன. பகிரங்கமாகவே அம்பலமான இந்நிகழ்வுகளை ஒட்டி தேர்தல் ஆணையம் இதுவரை எந்தத் துரும்பையும் கிள்ளிப் போட்டதில்லை.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் விவரப்படி, இந்தியாவில் சுமார் 12 கோடி வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து ‘காணாமல் போயுள்ளனர்’ என்று கூறுகிறார்கள், “காணமல்போன வாக்காளர்கள்” (missing voters) என்ற செல்போன் செயலியை நடத்திவரும் தன்னார்வலர்கள். இவர்களுள் ஆகப் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளிலேயே கீழ்நிலைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் அதிர்ச்சிக்குரிய செய்தி.

000

தேர்தல் ஆணையத்தைக் கைக்குள் போட்டுக்கொண்டு, அராஜகங்களிலும் மோசடிகளிலும் ஈடுபடுவது பிரச்சினையின் ஒருபகுதிதான். அவற்றைத்தான் மேலே சுருக்கமாக விளக்கியுள்ளோம். இதுவே முழுமையல்ல.

இதையே முழுமை என்று புரிந்துகொண்டால், பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிகள் அனைத்தும் மோசடிகளால் பெறப்பட்டவை, மற்றபடி அதன் இந்துவெறி அரசியலுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்ற தவறான முடிவுகளுக்கு நாம் வந்துசேருவோம்.

‘பெரும்பான்மை’ மக்களை தமது இந்துமதவெறி – தேசவெறி அரசியலுக்கு வென்றெடுத்திருப்பதுதான், பா.ஜ.க.வின் வெற்றிகளுக்கு முதன்மைக் காரணம். 303 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி, நாடாளுமன்றத்தில் பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக, அசுர பலத்தோடு அமர்ந்திருப்பதற்கு தேர்தல் மோசடிகள் கூடுதல் காரணங்களாகும்.

ஆனால், இந்த ‘பெரும்பான்மை’ எப்படி உருவாக்கப்படுகிறது என்பதில்தான் சூட்சுமம் அடங்கியிருக்கிறது!

303 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியில் அமர்ந்தாலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதன் வாக்கு சதவிகிதம் – அதாவது ஒட்டுமொத்த வாக்காளர்களில் பா.ஜ.க.வை தேர்வு செய்தவர்களின் சதவிகிதம் 37.36 சதவிகிதம் மட்டுமே. அத்தேர்தலில் மொத்த வாக்குப்பதிவு 67 சதவிகிதமாகும். அந்தவகையில் பா.ஜ.க பெற்ற ஆதரவானது மொத்த வாக்காளர்களில் சுமார் 25 சதவிகிதம் மட்டுமே.

இதற்கு முந்தைய 2014 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க.வின் வாக்கு சதவிகிதம் 31 மட்டுமே. அத்தேர்தலில் மொத்த வாக்குப்பதிவு 66.4 சதவிகதமாகும். அந்தவகையில் பா.ஜ.க பெற்ற ஆதரவானது மொத்த வாக்காளர்களில் சுமார் 20 சதவிதம் மட்டுமே.

இப்படி ஆகப் பெரும்பான்மை மக்கள் நிராகரித்த ஒரு கட்சிக்கு ‘பெரும்பான்மை’ கிடைக்கச் செய்திருப்பது இந்தியாவின் போலி ஜனநாயக அமைப்பு முறைதானே ஒழிய, தேர்தல் மோசடிகள் அல்ல. இன்னும் சொல்லப் போனால், தேர்தல் மோசடிகளை அரங்கேற்றுவதற்கே இந்த போலி ஜனநாயக அமைப்பு முறைதான் அடிப்படையாக இருக்கிறது. “மோசடி” என்று சாட வேண்டுமென்றால், இந்த போலி ஜனநாயக அமைப்புமுறையைத்தான் சாட வேண்டும்.

ஒரு தொகுதியில் அதிகப்படியான வாக்குகளை பெறும் வேட்பாளர் மக்கள் பிரதிநிதியாகவும் பெரும்பான்மை பிரதிநிதிகளை கொண்ட கட்சி அல்லது கூட்டணி ஆளும் தகுதி பெறுகின்ற இந்த போலி ஜனநாயக தேர்தல் மோசடிதான் இந்து மதவெறி, சாதிவெறி, தேசவெறியை தூண்டிவிட்டு வாக்குகளை பெறுவதற்கு வழிவகை செய்து கொடுக்கிறது; பணபலம், அதிகார பலத்தைப் பயன்படுத்தி எதிர்கட்சிகளை விலைக்குவாங்கவும் மிரட்டவும் தமக்கு வாக்களிக்காத மக்களை ஓட்டுப்போட விடாமல் தடுக்கவும் வாய்ப்பளிக்கிறது. இன்னும் சொல்லப் போனால், 50 சதவிகிதத்திற்கும் குறைவாக வாக்குப்பதிவு நடைபெற்றால் கூட அத்தேர்தலை அங்கீகரித்து அதில் அதிக வாக்கு பெற்றவர்களை மக்கள் பிரதிநிதியாக அறிவிக்கும் மோசடி காலங்காலமாக நடந்து வருகிறது.

1952-க்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளில் இராணுவத்தின் நேரடி தலையீட்டினால் தேர்தல்கள் நடத்தப்பட்டன. பல பகுதிகளில் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க முடியாமல் தடுக்கப்பட்டனர். காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் போன்ற பகுதிகளில் 10 சதவிகித மக்கள் கூட வாக்களிக்காத நிலையில் அத்தேர்தல்கள் அங்கீகரிக்கப்பட்டன.

போலி ஜனநாயகத்திற்கே உரிய இந்த எதேச்சதிகார அம்சம், அதை தேர்தலில் அறுவடை செய்துகொள்ளும் வாய்ப்பை தற்போது பாசிஸ்டுகளுக்கு வழங்குகிறது. குறிப்பாக, இந்துமதவெறி பார்ப்பனிய சித்தாந்தம் கொண்ட, அரசு மற்றும் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் ஊடுருவி ஆதிக்கம் செலுத்துகின்ற ஆர்.எஸ்.எஸ் போன்ற சட்டவிரோத பாசிச அமைப்பு எளிதாக இந்த போலி ஜனநாயகக் கட்டமைப்பை பயன்படுத்தி பெரும்பான்மையை உருவாக்கிக் கொள்கிறது.

ஒவ்வொரு தொகுதியிலும், எந்தெந்த சாதியினருடன் கூட்டணி வைத்துக் கொண்டு, எந்த சாதியினருக்கு எதிராக பிரச்சாரம் செய்தால் வெற்றிபெறலாம் என்பதையும்; இஸ்லாமியர்கள் கணிசமாக உள்ள தொகுதிகளில், இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரங்களை பரப்புவதன் மூலம் இந்து வாக்குகளை வேட்டையாடுவதையும் திட்டமாக வகுத்துக் கொண்டு பா.ஜ.க. வேலைசெய்கிறது. இப்படித்தான் தனது இந்துவெறி பாசிச அரசியலையும், வாக்குவங்கி அரசியலையும் ஒன்றிணைக்கிறது. இதுதான் புகழ்பெற்ற அமித்ஷா ஃபார்முலா!

இதுநாள்வரை பிழைப்புவாத, காரியவாத கட்சிகள் பயன்படுத்திய மேற்கண்ட கேடுகெட்ட இழிந்த வழிமுறைகளை ஒரு பாசிச சித்தாந்த அமைப்பு பயன்படுத்தி இக்காரியவாத, பிழைப்புவாத கட்சிக்களுக்கான அடித்தளத்தையே ஒழித்துக்கட்டுகிறது.

இஸ்லாமியர்கள், கிறித்தவர்களின் இடஒதுக்கீடுகளை இந்துக்களின் இடஒதுக்கீட்டுக்கு எதிராக சித்தரிப்பது, இந்துப் பண்டிகைகளை ஒட்டி அரசு சலுகைகளை அறிவிப்பது, தேர்தல் வாக்குறுதிகளை வழங்குவது போன்ற பா.ஜ.க.வின் அண்மை நடவடிக்கைகளெல்லாம் இந்த ஃபார்முலாவின் நீட்சியே.

தனது இந்துத்துவ வாக்குவங்கிக்கு ‘பெரும்பான்மை’ கிடைப்பதை உறுதிசெய்யவும், அதனை சிதறடிக்கும் வாக்காளர்களின் (முஸ்லிம்கள், கிறித்தவப் பழங்குடிகள், தலித்துகள்) வாக்குரிமையை பறிக்கும் நடவடிக்கைகளையும்தான் தேர்தல் ஆணையத்தை வைத்து கூடுதலாக செய்துவருகிறது பா.ஜ.க. கும்பல்.

தேர்தல் முறையில் மேற்கொள்ளப்படும் மறுஒழுங்கமைப்பு நடவடிக்கைகள்!

இவ்வளவும் கஷ்டப்பட்டு செய்வதை சுலபாக முடித்துத் தருவதற்குத்தான், “தொகுதி மறுவரையறை” வர இருக்கிறது. இதன் மூலம் இஸ்லாமியர்கள் மற்றும் தமக்கு சமூக அடித்தளமாக இல்லாத சாதிகள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளை உடைப்பது, தமது இந்து மதவெறி அரசியலுக்கு சமூக அடித்தளமாக உள்ள சாதிகள், மக்கள் பிரிவுகள் பெரும்பான்மையாக அமையும்படி தொகுதிகளையே மாற்றியமைப்பது ஆகியவைதான் தொகுதி மறுவரையறையின் நோக்கம்.

காஷ்மீர், அசாம் ஆகிய மாநிலங்களில் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை  முயற்சிகள், நாளை நாடு முழுக்கவும் அமலுக்கு வரும் என்பதை புதிய நாடாளுமன்றத்தின் கூடுதல் இருக்கைகள் நமக்குப் பளிச்செனக் காட்டுகின்றன.

தொகுதிகளை மாற்றியமைப்பது மட்டுமில்லை. தேவைப்பட்டால், மாநிலங்களையும் தமக்கு தோதான வகையில் உடைத்து, தனி மாநிலங்களாக, யூனியன் பிரதேசங்களாக அமைப்பதும் பாசிச பா.ஜ.க.வின் சதித் திட்டத்தில் உள்ளவைதான். காஷ்மீரை லடாக், ஜம்மு காஷ்மீர் என்று உடைத்தது அதற்கு ஒரு சான்று. தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தை உடைத்து “கொங்கு நாடு” அமைக்க வேண்டும், தென் மாவட்டங்களை தனி மாநிலமாக அமைக்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத்தும் ஆர்.எஸ்.எஸ். கும்பலும் பேசிவருவது, பரிகசிக்கத்தக்கது அல்ல; அது அவர்களின் நீண்டகால நோக்கம். தம்மால் வீழ்த்தப்பட முடியாத இரும்புக் கோட்டையான தமிழ்நாட்டை துண்டாடுவதற்குதான், சாதிச் சங்கங்களை கொம்பு சீவி வளர்த்துவருகிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல்.

வாக்காளர்களிடையே தங்களுக்கு பெரும்பான்மையை உருவாக்க, தொகுதி மறுவரையறை  ஒரு வடிவம் என்றால், “ஒரே நாடு ஒரே தேர்தல்” மற்றொரு வடிவம். தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் பகிர்வு போன்று ஒவ்வொரு மாநிலங்களுக்கும் உள்ள தனித்த பிரச்சினைகளையும், கல்வி, சுகாதாரம், குடிநீர், வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளையும், வாக்காளர்களின் சிந்தனையிலிருந்தே அப்புறப்படுத்திவிட்டு; சீன ஆக்கிரமிப்பு, பாகிஸ்தான் போர் அபாயம், ஐந்து டிரில்லியன் பொருளாதாரம், சந்திரயான் – ககன்யான் திட்டங்கள் போன்றவற்றைக் காட்டி தேசவெறியூட்டி வாக்காளர்களை மூளைச் சலவைசெய்வது; இவற்றையெல்லாம் எதிர்கொள்ளக் கூடிய “ஒரு வலிமையான தலைவருக்கு” வாக்களிக்க வைப்பது என்ற அணுகுமுறைதான் ஒரே நாடு ஒரே தேர்தல்.

இவை மட்டுமின்றி, ஒவ்வொரு வாக்காளர்களையும் தனித்தனியாகக் கண்காணித்து, அவர்களுக்கு இருக்கும் தேவைகளைக் கண்டறிந்து சலுகைகளை அறிவித்தோ, மிரட்டியோ தங்களுக்குச் சாதகமாக வாக்களிக்க வைப்பதற்கும் சட்டரீதியாகவே புதுப்புது ஏற்பாடுகளை செய்துவருகிறது பாசிச பா.ஜ.க.

குஜராத்தில் தொழிற்சாலைகளில் வேலை செய்யக் கூடிய தொழிலாளர்கள், தேர்தல்களின்போது வாக்குச் செலுத்தினார்களா, இல்லையா என்பதைக் கண்காணித்து, வாக்களிக்காதவர்களின் பெயர்களை தொழிற்சலைகளின் அறிவிப்பு பலகைகளில் ஒட்டுவது என்ற திட்டத்தை தொடங்கியிருக்கிறது குஜராத் தேர்தல் ஆணையம். ஜனநாயக நாட்டில் வாக்களித்தல் என்ற முக்கியமான கடைமையில் அனைவரையும் பங்கேற்க வைப்பது என்ற பெயரில் இந்த பாசிச உளவு வேலைக்கு நியாயம் கற்பிக்கிறது குஜராத் தேர்தல் ஆணையம்.

2022 ஜூன் மாதம் முதலாகவே இதற்காக குஜராத் தேர்தல் ஆணையம் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. நாளை இது மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படலாம். இப்படிப்பட்ட முறைகள் இல்லாதபோதே, ஆதாரில் உள்ள முகவரிகளைத்  திருடி, பா.ஜ.க. பூத் அளவில் வாட்சப் குழுக்களை அமைத்த கதையை நாம் அறிந்திருக்கிறோம். இந்த பாசிச உளவு வேலைக்கு தற்போது சட்டப்பூர்வமான வடிவம் கொடுத்துள்ளார்கள் காவிகள்.

தொகுதி மறுவரையறை , ஒரே நாடு ஒரே தேர்தல், கட்டாய வாக்களிப்பை உறுதிசெய்யும் நடவடிக்கைகள் ஆகியவையெல்லாம் நிலவும் போலி ஜனநாயக முறையையே, இந்துராஷ்டிரத்திற்கு ஏற்ப மறு ஒழுங்கமைப்பு செய்யும் பாசிச நிகழ்ச்சிப் போக்காகும். இவையெல்லாம் அரசியல் அமைப்புச் சட்டதிற்கு விரோதமாக நடைபெறவில்லை. ஏற்கெனவே ஜனநாயக விரோதமாக, பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு எதிராக உள்ள இந்த கட்டமைப்பை, பாசிஸ்டுகள் அதன் அடுத்த பரிணாமத்திற்கு கொண்டுசெல்கிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும்.


படிக்க: 2024 நாடாளுமன்றத் தேர்தல்: வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | துண்டறிக்கை!


அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டமானது, பாசிசக் கும்பல் தனக்கு விசுவாசமான அடியாட்களை தேர்தல் ஆணையக் குழுவில் நியமனம் செய்வதற்கான ஏற்பாடாகும். தப்பித் தவறிக்கூட அசோக் லவாசா போன்ற தேர்தல் அதிகாரிகள், தேர்தல் ஆணையக் குழுவில் நுழைந்துவிடக் கூடாது என்பதே இதன் நோக்கமாகும்.

ஏற்கெனவே சந்திரசூட், கே.என்.ஜோசப் போன்ற நீதிபதிகள் தப்பித்தவறி உச்சநீதிமன்ற நீதிபதிகளாக வருவதை ஒழித்துக் கட்டவேண்டும் என்பதற்காக, கொலிஜியம் அமைப்பை ரத்துசெய்து, நீதிபதிகள் நியமன ஆணையத்தை அமைக்கத் துடிக்கிறது காவி கும்பல். அதையே தற்போது  தேர்தல் ஆணையத்திற்குச் செய்து முடித்திருப்பதுதான் “தேர்தல் ஆணையர்கள் நியமனம் சட்டம் 2023”.

கடந்தாண்டு, “நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு எப்படி அரசியல் தலையீடு இல்லாத அமைப்பாக கொலிஜியம் அமைப்பு இருக்கிறதோ, அதேபோல தேர்தல் ஆணையமும் அரசியல் தலையீடு இல்லாத வகையில் முறைப்படுத்தப்பட வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. கடந்த மார்ச் மாதம் அவ்வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி கே.என்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டத்திற்கு உட்பட்டு, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் என்று தீர்ப்பளித்தார்.

உச்சநீதிமன்றத்தின் மேற்கண்ட தீர்ப்பை கேலிக்குரியதாக்கும் வகையில், தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் குழுவிலிருந்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கியுள்ளதோடு, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் பிரதமரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சர் ஒருவர் அடங்கிய குழு தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் என்று சட்டத்திருத்தம் செய்துள்ளது மோடி அரசு. இதன் மூலம் தனது அடியாட்களையே தேர்தல் அதிகாரிகளாக நியமனம் செய்வதை உத்தரவாதப்படுத்தியிருக்கிறது பாசிசக் கும்பல்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தோடு, தற்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரியான அனுப் சந்திர பாண்டேவின் பதவிக் காலம் முடியும் நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, இந்த புதிய சட்டப்படிதான் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவுசெய்யப்பட இருக்கிறார்கள்.

உண்மைக்கு முகம்கொடுங்கள்!

இவையெல்லாம் அமலுக்கு வருவதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். நம்மில் பலரும் கருதிக் கொண்டிருப்பதைப் போல, இந்த அரசியலமைப்பையோ, தேர்தல் முறையையோ பாசிசக் கும்பல் ரத்துசெய்ய வேண்டிய அவசியமே இருக்காது. தேர்தல்கள் நடைபெறும், ஆனால் அந்த ‘ஜனநாயகப் போரில்’ பாசிஸ்டுகளை ஒருக்காலும் நம்மால் வீழ்த்தமுடியாது!

நெருப்புக் கோழி தனது தலையை மண்ணுக்குள் போட்டுப் புதைத்துக் கொள்வதுபோல, மேற்கண்ட உண்மைகள் எதையும் காண மறுத்து, “தேர்தலில் யாரை ஆதரிக்கிறீர்கள்”; “சாத்தியமானதைப் பேசுங்கள்” என்று நம்மிடம் வம்பளக்கிறார்கள், பாசிச எதிர்ப்பு போர்வையில் ஒளிந்திருக்கக் கூடிய “மிக அபாயகரமான சந்தர்ப்பவாதிகள்”.

பாசிச அபயாத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் துணிச்சல் அவர்களுக்கு இல்லை. ஜல்லிக்கட்டுப் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், ஷாகீன்பாக், டெல்லிச் சலோ என்று ஒவ்வொரு திருப்பத்திலும் முகிழ்த்தெழும் மக்கள்திரள் போராட்டங்களை, பாசிஸ்டுகளுக்கு எதிரான ஒரு மக்கள் எழுச்சியாக மாற்றமுடியும்; அதன் மூலம் பாசிசத்துக்கு அடிக்கொள்ளியாக இருக்கிற போலி ஜனநாயக அரசமைப்புக்கு மாற்றாக, ஒரு பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை கட்டியமைக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. ‘சாத்தியமற்றது’ என்ற அவர்களது அவநம்பிக்கையை, அவர்கள் ஒட்டுமொத்த பாசிச எதிர்ப்பு சக்திகள் மீதும் திணிக்கிறார்கள்.

ஆனால், சாத்தியமானது எது, சாத்தியமற்றது எது என்பதை தீர்மானிப்பது, கருதுகோள்கள் அல்ல; “உண்மை”. தயவுசெய்து உங்களது கண்களைத் திறவுங்கள், “உண்மையைக் காணுங்கள்!”


பால்ராஜ்

(புதிய ஜனநாயகம் செப்டம்பர் மாத இதழ்)



லிபியா பேரழிவு: இரத்தவெறிபிடித்த அமெரிக்காவும் நேட்டோவுமே முதல் குற்றவாளிகள்!

0

டந்த செப்டம்பர் 10 அன்று வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் கிழக்கு பகுதியை மத்தியதரைக் கடலில் உருவான டேனியல் புயல் தாக்கியது. இதன் காரணமாக அங்கு பெங்காசி, சூசா, பைடா, அல்-மார்ஜ் மற்றும் டொ்ணா ஆகிய நகரங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதனால் வாடி டெர்ணா (Wadi Derna) ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரண்டு அணைகள் உடைந்தன; 4 பாலங்கள் இடிந்தன. அணைகள் உடைந்ததால் டொ்ணா நகரம் சுனாமி போன்றதொரு வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டது.

இவ்வெள்ளத்தில் சிக்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். டொ்ணா நகரில் 11,300 பேர் இறந்துள்ளதாகவும் 10,100 பேர் காணாமல் போயுள்ளதாகவும் லிபிய செம்பிறைச் சங்கம் ( Libyan Red Crescent) கூறியது; கிழக்கு லிபியாவின் மற்ற பகுதிகளில் 170 பேர் இறந்திருக்கலாம் என்றும் கூறியது. ஆனால், உலக சுகாதார நிறுவனத்தின் தரவு 3,958 பேர் இறந்துள்ளதாகவும் 9,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் கூறுகிறது. கிழக்கு லிபிய அரசோ இதுவரை 3,283 பேரை புதைத்துள்ளதாகக் கூறுகிறது. எண்ணிக்கை எதுவாயினும் மக்களின் சடலங்கள் இன்னும் கடலில் மிதந்து கொண்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. இடிபாடுகளில் சிக்கி மீட்கப்படாத உடல்கள் அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கிவிட்டன. உலக வரலாற்றில் இது நிச்சயம் மிகப்பெரிய பேரழிவாக இருக்கும்.

வாடி டெர்ணா (Wadi Derna) ஆறு | நன்றி: பிபிசி

000

கிழக்கு லிபியா பகுதியில் மிக டுமையான மழைப்பொழிவு இருந்தது. டொ்ணா நகருக்கு அருகில் உள்ள அல்-பைடா (Al-Bayda) நகரைப் பொறுத்தவரை, அங்கு செப்டம்பர் மாதத்தில் வழக்கமாகப் பெய்யும் மழையின் அளவு என்பது 12.7 மில்லமீட்டர் (மிமீ) தான்; ஆண்டு சராசரியே 543.56 மிமீ தான். ஆனால், செப்டம்பர் 10 காலை 8 மணி முதல் செப்டம்பர் 11 காலை 8 மணி வரை பெய்த மழையின் அளவு மட்டுமே 414.1 மிமீ. அதாவது, அல்-பைடா நகரில் ஒரு ஆண்டு பெய்ய வேண்டிய மழையில் 75 விழுக்காட்டிற்கும் அதிகமான மழை 24 மணி நேரத்தில் பெய்திருக்கிறது.

பெரும் பகுதி பாலைவனமான லிபியாவில் இவ்வளவு மழைப்பொழிவு ஏற்பட்டதற்குக் காரணம் புவி வெப்பமயமாதலும் பருவநிலை மாற்றமும் தான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். புவி வெப்பமயமாதலுக்கு ஏகாதிபத்திய சுரண்டலும் லாபவெறியும் தான் காரணம் என்பதைக் கூட முதலாளித்துவ ஊடகங்கள் பலவும் எழுதுகின்றன. இது முற்றிலும் சரியானதே. ஆனால், இந்த ஊடகங்கள் திட்டமிட்டே ஒரு விடயத்தை மறைக்கின்றன, அதைத்தான் நாம் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.


படிக்க: லிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!


டேனியல் புயல் உருவானதற்கும் அதீத மழைப்பொழிவு ஏற்பட்டதற்கும் மட்டும் தான் புவி வெப்பமயமாதல் காரணம். ஆனால், கொத்துக் கொத்தாக மக்கள் பெருவெள்ளத்திற்கு பலியானதற்கான காரணம் யார் என்பதைத் தான் கிட்டத்தட்ட அனைத்து முதலாளித்துவ ஊடகங்களும் பேச மறுக்கின்றன. அந்த குற்றவாளிகள் யாரென்று தெரியாததால் இவர்கள் பேசாமலிருக்கவில்லை; அவர்களிடம் பொறுக்கி உண்பதால் தான் பேச மறுக்கிறார்கள்.

அந்தக் குற்றவாளிகள் யார் தெரியுமா? அமெரிக்க ஏகாதிபத்தியமும் நேட்டோவும் தான்.

2011-ஆம் ஆண்டு ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு நேட்டோ படையைக் கொண்டு லியியா மீது ஆக்கிரமிப்புத் போரைத் தொடுத்தது. நாற்பத்திரண்டு ஆண்டுகளாக லிபியாவின் சர்வாதிகாரியாய் இருந்து வந்த முவாம்மர் கடாஃபியை (Muammar Gaddafi) வீழ்த்தி லிபியாவில் ஜனநாயகத்தைக் கொண்டுவருவதற்கு உதவுவதாக அமெரிக்கா தனது ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தியது. ஆனால், எண்ணெய் வளத்திற்காகவும் பெட்ரோ டாலரின் மேலாதிக்கத்தைக் காத்துக்கொள்வதற்காகவும் தான் 25,000 லிபியர்களைக் கொன்று அப்போரை நடத்தியது.

போரின் இறுதியில் கடாஃபி கொல்லப்பட்டார். ஆனால், அன்று முதல் இன்று வரை லிபியாவில் உள்நாட்டுப்போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எண்ணெய் வளமிக்க நாடான லிபியா தற்போது ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் போரினால் லிபியாவில் தற்போது இரண்டு அரசாங்கங்கள் உள்ளன: ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட திரிபோலி (Tripoli) நகரைத் தலைநகராகக் கொண்டு மேற்கு பகுதியில் இயங்கும் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் (Government of National Unity), கிழக்கு பகுதியைக் கட்டுப்படுத்தும் பெங்காசியை (Benghazi) தலைமை இடமாகக் கொண்ட லிபிய தேசிய ராணுவத்தின் (Libyan National Army) தலைவர் கலீஃபா ஹப்தார் (Khalifa Haftar) தலைமையிலான அரசாங்கம். இன்னும் சில பகுதிகள் பயங்கரவாதிகள் மற்றும் பழங்குடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. தற்போது பாதிக்கப்பட்டுள்ள டெர்ணா லிபியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லிபியாவை கட்டுப்படுத்தும் அரசாங்கங்கள் | நன்றி: டி.டபுள்யூ நியூஸ்

முன்னதாக அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ-வுடன் நெருக்கமாக இருந்த கிழக்கு பகுதியைக் கட்டுப்படுத்தும் கலீஃபா ஹப்தார் தற்போது ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகளோடு நெருக்கம் காட்டி வருகிறார்.

மேலும், டெர்ணா பகுதியில் சில இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களும் அமெரிக்க உளவாளிகளும் செயல்பட்டு வருவதால் அப்பகுதியை ஹப்தார் கண்டுகொள்ளவில்லை. தற்போது உடைந்துள்ள இரு அணைகளிலும் விரிசல்கள் இருந்ததை முன்னரே அறிந்திருந்தும் கவனம் செலுத்தவில்லை.

லிபியாவில் கடாஃபியை ஒழித்துக் கட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளை அமெரிக்கா ஊட்டி வளர்த்தது. அதன் காரணமாகத்தான் லிபியாவில் தற்போது வரை உள்நாட்டுப் போர் தொடர்கிறது. இந்த உள்நாட்டுப் போர் சூழலால்தான் லிபியாவில் ஒரு நிலையான அரசு அமையவில்லை. இதனால் லிபியாவின் பெரும்பாலான பகுதிகள் எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் பின்தங்கியுள்ளன. “கடாஃபி இறந்ததிலிருந்தே இதுதான் எங்களுடைய நிலை இதுவாகத்தான் உள்ளது” என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.


படிக்க: லிபியா – அமெரிக்காவின் மற்றுமொரு புதைகுழி ?


லிபியாவின் இந்த அவலநிலைக்கும், தற்போது அணைகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் அணை உடைந்து ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் அமெரிக்காவும் அதன் தலைமையிலான நேட்டோ கூட்டணி நாடுகளும்தான் காரணம்.

லிபியாவின் இந்த நிலைக்குக் காரணமான அமெரிக்க ஏகாதிபத்தியம் தற்போது லிபியாவின் நிவாரணத்துக்காக 12 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 26 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது. ஆனால், 2011-ஆம் ஆண்டில் லிபியா மீதான ஆக்கிரமிப்பு போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகையோ 1.1 பில்லியன் டாலர்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் நிவாரண உதவிகளை வழங்கி மனித முகம் கொண்டதாகத் தன்னைக் காட்டிக் கொண்டாலும், முதலாளித்துவ ஊடகங்கள் இப்பேரழிவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பங்கு குறித்துப் பேச மறுத்தாலும் இந்த பேரழிவால் ஏற்பட்ட மரணங்களுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியமும் நேட்டோ கூட்டணியும்தான் காரணம் என்பதை மறைக்க முடியாத உண்மை. எவ்வளவு நிதியுதவி அளித்தாலும் தங்கள் கரங்களில் படிந்துள்ள இரத்தக்கரையை இவர்களால் மறைக்க முடியாது.


பொம்மி



ஒரு ஊடகவியல் மாணவனின் மனக் குமுறல்!

வர் பள்ளி மாணவர் தலைவராக இருந்தாரா? பள்ளியின் கலைக்குழு தலைவராக இருக்கும் ஒருவரால் எப்படி இப்படியொரு முடிவை எடுக்க முடிந்தது?” என்று கேள்விகள் தொடுக்கப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட மாணவி ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்கெடுத்து திரும்பும் நபரிடம் இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுகிறது. “இதுபோன்ற கேள்விகளை தயவுசெய்து கேட்காதீர்கள். நாங்கள் ஏற்கனவே துக்கத்தால் மனமுடைந்து போயிருக்கிறோம்” என்று சொல்லும் அவரை கேமராக்கள் இடைவிடாமல் துரத்துகிறது.

மேலும், மாணவியின் உடல் கொண்டு வரப்பட்ட ஆம்புலன்ஸை கேமராக்கள் துரத்தியது, மகளை இழந்த தந்தையின் சோகமான முகத்தை பின்னணி இசையுடன் ஒளிபரப்பியது, மாணவிக்கு ஏதேனும் மனநலம் சார்ந்த பிரச்சினை இருந்ததா என்று இறுதிச் சடங்கிற்கு வந்திருந்த நண்பர்களிடம் ( அவர்கள் அனைவரும் 16 வயது சிறுவர்கள் தான்) கேட்டது போன்ற மிகவும் தரம் தாழ்ந்து இழிவான முறையில் ஊடகங்கள் நடந்துகொண்டன.

ஒரு தற்கொலை செய்தியை திரும்பத் திரும்ப ஒளிபரப்பு செய்யக்கூடாது என்றும், இதுபோன்ற செய்திகளை வெளியிடும் போது “தற்கொலை தடுப்பு உதவி எண்கள்” பற்றியும் குறிப்பிட வேண்டுமென்ற அடிப்படை ஊடக விதிமுறைகளைக் கூட மதிக்காமல் நடந்துகொண்டன. ஊடகங்கள் இரக்கமற்ற முறையில் நடந்துகொண்டது மட்டுமல்ல, தங்களுக்கென வகுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளைக்கூட மதிக்காமல் நடந்துகொண்டன.


படிக்க: ஜெகதீஸ்வரனை மீண்டும் கொல்லும் ஊடகங்கள் !


இவையனைத்தும், இன்றைய ஊடகங்கள், செய்தி தொலைக்காட்சிகள், யூடியூப் சேனல்கள் அனைத்தும் எவ்வாறு அறமற்ற மனிதத்தன்மையற்ற முறையில் நடந்து கொள்கின்றன என்பதற்குச் சான்றாகும். இறந்துபோன மாணவி சினிமா பிரபலம் ஒருவரின் மகளாக இருப்பதாலே, செய்தி தொலைக்காட்சிகளும் யூடியூப் சேனல்களும் இப்படி மனிதத்தன்மையற்ற முறையில் நடந்துகொண்டன என்று நாம் பொதுவாக எடுத்துக்கொள்ள முடியாது.

இப்படி மனிதத்தன்மையற்ற முறையில் நடந்துகொண்டதற்கு செய்தியாளர்களையும் கேமராமேன்களையும் மட்டுமே நாம் குற்றம் சொல்லமுடியாது. அவர்கள் தங்கள் பிழைப்பிற்காக வேலை செய்யும் கூலியாட்கள் மட்டுமே. இந்த மனிதத்தன்மையற்ற செயல்களின் அடிப்படை, செய்தியை ஒரு சரக்காக விற்கும், அதன் மூலம் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் ஊடக நிறுவனங்கள் தான். ஒரு தற்கொலை பற்றிய செய்தியை எப்படி வெளியிடவேண்டும் என்ற ஊடக விதிமுறைகள் பற்றி அனைத்து ஊடகங்களும் அறிந்துதான் இருக்கின்றன. இருப்பினும், தங்களது லாபவெறிக்காக இத்தனை கீழ்த்தரமாக நடந்துகொள்ளத் துணிகின்றன. இந்த முதலாளித்துவ ஊடகங்கள் லாபத்தை தவிர வேறு எதுவொன்றையும் நோக்கமாக கொள்வதில்லை. அவை இறந்தவரின் மாண்பையும், உயிர் ஒன்றை இழந்த குடும்பத்தினரின் மனநிலையையும் பற்றி மட்டுமல்ல, ஆபத்தான முறையில் ஆம்புலன்ஸை பின்தொடர்ந்து செய்தியளிக்கும் தங்களது செய்தி நிறுவனத்தின் ஊழியர்கள் பற்றியும் கவலைப்படுவதில்லை. உண்மையில், அப்படியான கீழ்த்தரமான ஆபத்தான முறையில் செய்தி சேகரித்தால் மட்டுமே வேலையில் நீடிக்க முடியும் என்ற நிர்ப்பந்தத்தை ஊழியர்களுக்கு இந்த நிறுவனங்கள் தான் ஏற்படுத்துகின்றன.

நானும் ஒரு ஊடகவியல் மாணவன் என்ற‌ முறையில்தான் இதை எழுதுகிறேன். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் எங்களுக்கு ஊடக அறம் பற்றிய தனிப்பாடமே இருக்கிறது. அவை முழுக்க முழுக்க முதலாளித்துவ அறம் என்றாலும் ஒரு செய்தியை சிறிதேனும் நுண்ணுணர்வுடன் அணுக வேண்டும் என்ற அடிப்படையை கற்பிக்கும். ஆனால் அதை நாங்கள் வேலை செய்யும் ஊடக நிறுவனங்களில் கடைப்பிடிக்க முடியாது. அறமுடையவனுக்கு வேலையில்லை.


படிக்க: ஓஷன்கேட் நீர்மூழ்கிக் கப்பல் விபத்தும், ஊடகங்களின் ஒப்பாரியும்!


கொரானா காலத்தில் நண்பர் ஒருவர் வேலை செய்த ஊடகத்தில் அவரது பணியே எப்போதும் பரபரப்பு செய்திகள் கொடுப்பதுதான். இதற்காக அவர் எப்போதும் கொரானா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையை இணையத்தில் தேடிக்கொண்டே இருப்பார். ஆனால் அவர் உடன் வேலைசெய்த மற்றொரு பணியாளர் கொரானா தொற்றால் இறந்துவிட்டார். தன்னுடன் இரத்தமும் சதையுமாக பழகிய ஒருவர் இறக்கும் வரை, லட்சக்கணக்கான மக்கள் அடிப்படை மருத்துவ வசதியின்றி இறந்துபோனதை வெறும் எண்ணிக்கையாக மட்டுமே அணுகும் வகையில் அவர் பயிற்றுவிக்கப்பட்டிருந்தார். இதில் நாம் யாரை முதன்மையாக குற்றம் சாட்டவேண்டும்? தான் கல்லூரியில் கற்ற ஊடக அறத்தை மட்டுமல்ல தன்னுடைய குடும்பம், நடைமுறை வாழ்க்கை ஆகியவற்றின் மூலமாக கற்றுக்கொண்ட அடிப்படை நேர்மையுணர்ச்சி, சுயமரியாதை, மனிதத்தன்மை ஆகியவற்றையும் இழக்கும் போது மட்டுமே ஒரு ஊடக நிறுவனம் அவரை வேலைக்கு எடுத்துக்கொள்ளும். இந்த யதார்த்தம் எத்தனை கொடுமையானது. மோடி அரசை விமர்சனம் செய்ததற்காக பல பத்திரிகையாளர்களை அவர்கள் வேலை செய்யும் நிறுவனமே வெளியேற்றிய செய்தியை நாம் அறிந்துதான் இருக்கிறோம்.

இவையெல்லாம் நமக்கு எடுத்துக்காட்டுவது ஒன்றைத்தான். நேர்மையற்ற, மனிதத்தன்மையற்ற இழிவான முறையில் செய்திகள் வெளியிடப்படுவது ஏதோ தனிப்பட்ட ஊடக நிறுவனம் அல்லது செய்தியாளர்கள் சார்ந்த தனிப்பட்ட பிரச்சினை அல்ல. மாறாக, இது சமூக பிரச்சினையின் சிறிய வெளிப்பாட்டு வடிவம் மட்டுமே. பிறரது அந்தரங்கத்தையும் கூட செய்தியாக மாற்றி மக்களை கட்டற்ற நுகர்வு வெறிக்கு பழக்குவது, சில்லறை விசயங்களை பரபரப்பு செய்தியாக வெளியிடுவது, அரசியல் கட்சிகளிடம் விலை போவது என ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ள கலாச்சார ரீதியான சீரழிவு என்பது இன்றைய ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்க காலகட்டத்தின் அரசியல் சமூக சீரழிவின் உப விளைவு மட்டுமே. இவற்றையெல்லாம் சரி செய்யாமல் ஊடகங்களுக்கு அறத்தை பற்றி புத்திமதி சொல்வதும், புதிய விதிமுறைகளை உருவாக்குவதும் எந்த வகையிலும் ஊடகங்களின் இன்றைய சீரழிந்த நிலைக்குத் தீர்வாகாது.


சீனிச்சாமி



சனாதனம் ஒழிப்போம்! | ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு புதிய பாடல்

சனாதனம் ஒழிப்போம்!
ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு புதிய பாடல்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

அசாம் தொகுதிகள் மறுவரையறை: வாக்குவங்கியை காவிமயமாக்கும் புதிய மாடல்!

டந்த ஆகஸ்ட் மாதம் அசாம் மாநிலத்தில் உள்ள 126 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 14 நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளன. மோடி அரசின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையம் பெரும்பான்மையான தொகுதிகளில் ஆளும் பா.ஜ.க. கும்பல் வெற்றி பெறும் வகையில் இத்தொகுதி மறுவரையறையைச் செய்துள்ளது.

அசாமில் மட்டுமல்ல, சென்ற ஆண்டில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டன. இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள 53 லட்சம் மக்கள்தொகை கொண்ட ஜம்முவில் சட்டமன்றத் தொகுதிகள் 37-லிருந்து 43 ஆக உயர்த்தப்பட்டன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள 68 லட்சம் மக்கள்தொகை கொண்ட காஷ்மீரில் சட்டமன்றத் தொகுதிகள் 46-லிருந்து 47 ஆக மட்டுமே உயர்த்தப்பட்டன. மொத்தத்தில், காஷ்மீர் பகுதியை விட ஜம்முவில் சட்டமன்ற தொகுதிகள் உயர்த்தப்பட்டுள்ளன.

அரசுக் கட்டமைப்பில் ஆர்.எஸ்.எஸ். ஆட்களை புகுத்தி காவிமயமாக்குவதுபோல, மக்கள் வாழும் பகுதிகளை தங்களுக்கு சாதகமான முறையில் சாதிரீதியாகவும், மதரீதியாகவும், இனரீதியாகவும் பிரித்து வரையறுப்பதன் மூலம் வாக்குவங்கியையும் காவிமயமாக்க தொடங்கியுள்ளது ஆர்.எஸ்.எஸ்–பா.ஜ.க. கும்பல்.

அசாம் மாநிலத்தில் முஸ்லிம் மக்களை எதிரிகளாக காட்டி பெரும்பான்மையான இந்து மக்களை தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்து இருக்கிறார்கள், இந்துமதவெறியர்கள். “வங்கதேச குடியேறிகள்-அந்நியர்கள்” என்ற இன அடிப்படையிலான வெறுப்பையும், “முஸ்லிம்” என்ற மத அடிப்படையிலான வெறுப்பையும் அசாமியர்களிடையே திட்டமிட்டு பரப்பி வருகிறது காவிக் கும்பல்.


படிக்க: நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் திறப்பு: இந்துராஷ்டிரத்திற்கான கால்கோள்!


2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, அசாமின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம் மக்கள் 34.22 சதவிகிதம். இதில் வங்கதேசத்திலிருந்து குடிபெயர்ந்த வங்காள வம்சத்தை சேர்ந்த முஸ்லிம் மக்கள் நான்கில் ஒரு பகுதியாக உள்ளனர். இது பாசிசக் கும்பலின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு சாதகமாக உள்ளது.

அசாமை பொறுத்தவரை 35 சட்டமன்றத் தொகுதிகளிலும், 6 மக்களவைத் தொகுதிகளிலும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது 31 சட்டமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். முஸ்லிம் மக்கள் மத்தியில் காங்கிரஸ், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF) ஆகிய இரு கட்சிகளும் ஆதிக்கம் செலுத்துகின்றன. பா.ஜ.க கட்சியில் ஒரு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லை.

அசாமில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்ட பிறகு, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை. மாறாக, ஆளும் பா.ஜ.க. கும்பலின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் வகையில் பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தப்பட்டு; முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தொகுதிகளுக்கான பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடு 24-லிருந்து 28 ஆக உயர்த்தப்பட்டுள்ளது; நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இடஒதுக்கீட்டில் புதிதாக ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. சான்றாக, 70 சதவிகிதத்திற்கும் அதிகமாக முஸ்லிம் மக்கள் வசிக்கும் பார்பெட்டா பிராந்தியத்தில் சில தொகுதிகள் பட்டியலின மக்களுக்கும், மேற்கு கோல்பாரா தொகுதி பழங்குடியின மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், பா.ஜ.க. வலுவான அடித்தளம் கொண்ட இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் வசித்துவரும் வடக்கு அசாமில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை. ஆனால், முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வசித்துவரும் கீழ் மற்றும் மத்திய அசாமில் பெரும்பாலான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டங்களில் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன. இந்துக்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களில் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

சான்றாக, போடோலாந்து பிராந்தியப் பகுதியில் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 12-லிருந்து 15 ஆகவும், கர்பி அங்லாங் தன்னாட்சி பகுதிகளில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து ஐந்தாகவும், மூன்று வடக்கு அசாம் மாவட்டங்களில் தலா ஒரு சட்டமன்றத் தொகுதியும் அதிகரிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பார்பெட்டா பிராந்தியத்தில் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை எட்டிலிருந்து ஆறாகவும், கரீம்கஞ்ச் மற்றும் ஹைலகண்டி மாவட்டங்களில் தலா ஒரு தொகுதியும் குறைக்கப்பட்டுள்ளன.

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ரஃபிகுல் இஸ்லாம் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜானியா தொகுதியின் பெரும் பகுதியும் காங்கிரஸின் ஷெர்மன் அலி அகமது பிரதிநிதித்துவப்படுத்தும் பாக்பர் தொகுதியும் இணைக்கப்பட்டு புதிய மாண்டியா தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்காக போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது இக்கட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்றத் தொகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம் மற்றும் இந்துக்கள் வாழும் கிராமங்களை உள்ளடக்கிய கிராம பஞ்சாயத்துகள் கூட பிளவுப்படுத்தப்பட்டுள்ளன. பார்பெட்டாவில் உள்ள ஹல்தியா காவ்ன் பஞ்சாயத்து 10 கிராமங்களை உள்ளடக்கியது. ஜானியா சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்த இந்த பஞ்சாயத்து உடைக்கப்பட்டு மூன்று வெவ்வேறு சட்டமன்றத் தொகுதிகளின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது. “பாஜகவின் நலனை உறுதி செய்வதற்காக அவர்கள் பஞ்சாயத்துகளை கூட உடைத்துள்ளனர்” என்று தேர்தல் ஆணையத்தை விமர்சிக்கிறார் காங்கிரஸ் கட்சியின் பார்பெட்டா நாடாளுமன்ற உறுப்பினரான அப்துல் கலீல்.

மேற்கூறியவாறு அசாம் மாநிலத்தில் தொகுதிகளை மறுவரையறை செய்துள்ளதன் மூலம் வாக்குவங்கியை காவிமயமாக்கி ஒரு புதிய மாடலை உருவாக்கியுள்ளது, காவி பாசிச கும்பல். இனிவருங்காலங்களில் அசாம் மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

இதன்மூலம், காவிக் கும்பல் உருவாக்க இருக்கும் ‘புதிய’ இந்தியாவில் முஸ்லிம் மக்களின் வாக்குகள் அவர்களுக்கு தேவையில்லை என்ற நிலைமையை உருவாக்கி வருகிறது.


படிக்க: புதிய நாடாளுமன்றம் – யாருக்கு இது? | கவிதை


வாக்குவங்கியை காவிமயமாக்குவது என்ற பாசிச நடவடிக்கைக்கு எதிராக மாநில எதிர்க்கட்சிகள் பெயரளவிலான எதிர்ப்பையே தெரிவித்துள்ளன. தேர்தல் ஆணையம் பா.ஜ.க. அரசின் வலது கையாக செயல்படுவதாக விமர்சித்து சில அடையாளப் போராட்டங்களை நடத்தியுள்ளன. தேர்தல் ஆணையத்தின் தொகுதிகள் மறுவரையறை நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. ஆனால், உச்சநீதிமன்றம் தொகுதி மறுவரையறைக்கு தடைவிதிக்காமல், பா.ஜ.க.வின் மற்றொரு ஏஜெண்டு போல செயல்பட்டுள்ளது.

சமீபகாலமாக, அசாம் மாநில அரசு முஸ்லிம் மக்கள் மீது “வங்கத்தேசத்தவர்கள்-அந்நியர்கள்” என்று இனவெறி நடவடிக்கைகளையும் “முஸ்லிம்கள்” என்று மதவெறி நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி வருகிறது. இதன்மூலம் முஸ்லிம் மக்களை எந்த உரிமைகளுமற்ற இரண்டாம்தர குடிமக்களாக மாற்றி வருகிறது.

ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கும் மேலாக அசாமில் வசித்துவரும் வங்காள முஸ்லிம் மக்களின் வீடுகள், ‘ஆக்கிரமிப்புகளை அகற்றுவது’ என்ற பெயரில் இடிக்கப்படுகின்றன; அம்மக்கள் நிர்கதியாக்கப்பட்டு வருகின்றனர். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு வங்காள முஸ்லிம் மக்களே குற்றவாளிகள் ஆக்கப்படுகின்றனர். கடந்த ஜூலை மாதத்தில் காய்கறிகளின் விலை உயர்வுக்கு வங்காள முஸ்லிம்கள் தான் காரணம் என்று வெறுப்பைக் கக்கினார், முதல்வர் சர்மா.

அசாம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டிருப்பது, இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வாக்குவங்கியை காவி மயமாக்குவதற்கான ஒரு தொடக்கக்கட்ட நடவடிக்கை ஆகும்.

“நாடாளுமன்றத்தின் மொத்த இடங்கள் மற்றும் எம்.பி.க்களின் எண்ணிக்கை வருங்காலத்தில் அதிகரிப்பதை காணவிருக்கிறோம்” என புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவில் உரையாற்றினார், பிரதமர் மோடி. மதவாத, இனவாத, சாதிவாத, கவர்ச்சிவாத, அடையாள அரசியல் என ஏற்கெனவே தேர்தல் ஜனநாயகம் சீரழிந்து போயுள்ளது. இப்போது வாக்குவங்கியை காவிமயமாக்கி வருவதன் மூலம் தேர்தலை ஒரு சடங்காக்கி, பாசிச சர்வாதிகாரத்தை நிரந்தரமாக்கியுள்ளது.

இருப்பினும் இந்த அடையாள தேர்தல் மூலமே பாசிஸ்டுகளை வீழ்த்தி விட முடியும் என எதிர்க்கட்சிகள் பகல்கனவு கண்டு வருகின்றன.


சிவராமன்

(புதிய ஜனநாயகம் செப்டம்பர் மாத இதழ்)



பொதுப் பாடத்திட்டம்: தி.மு.க. அரசின் மற்றொரு கார்ப்பரேட் சேவை!

திறன்’ சார்ந்த மாணவர்களை உருவாக்கும் நோக்கத்தில், தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகளுக்கு பொதுப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது தி.மு.க. அரசு. இதற்கு முன்னர், உயர்கல்வித்துறையில் ‘வளர்ச்சி’த் திட்டம் என்ற பெயரில் கவர்ச்சிகரமான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற “நான் முதல்வன்” திட்டமும் ‘திறன்’ சார்ந்த மாணவர்களை உருவாக்குவது என்ற அடிப்படையில் தான் செயல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் பெரியார், பாரதிதாசன் போன்ற பல்கலைக்கழகங்களும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு கலை, அறிவியல் தன்னாட்சி கல்லூரிகளும் உள்ளன. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தன்னாட்சி கல்லூரிகளும் தங்களுக்குரிய பாடத்திட்டத்தை தாங்களே வகுத்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. இந்த பாடத்திட்ட வேறுபாடு காரணமாக மாணவர்கள் மதிப்பெண் பெறுவது தொடங்கி, துறை ரீதியான அறிவு பெறுவது வரையில் ஒரு மாநிலத்துக்குள்ளேயே ஏற்றத்தாழ்வுகள் இருப்பதால், அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் தன்னாட்சி கல்லூரிகளுக்கும் இந்த ஆண்டு முதல் பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்திருக்கிறது மாநில உயர்கல்வித்துறை.

இந்த பொதுப் பாடத்திட்டத்தை “தேசிய கல்விக் கொள்கை 2020-இன் அடிப்படையில் யு.ஜி.சி வழிகாட்டுதலின் அடிப்படையில் உருவாக்கியிருக்கிறார்கள்” எனக் குற்றம்சாட்டுகிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு. மேலும், இது பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளின் தன்னாட்சி அதிகாரத்தை பறிக்கும் வகையில் இருப்பதாகவும் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பேராசிரியர்கள், கல்வியாளர்களின் எதிர்ப்பின் காரணமாக, பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளுக்கு அனுப்பியிருப்பது “மாதிரி பாடத் திட்டம்” என்று கூறியுள்ளது, உயர்கல்வித் துறை. மேலும், இதைக் கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறவில்லை; இது ஆலோசனை மட்டுமே; பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகள் பொதுப் பாடத்திட்டத்தை பின்பற்றாமலும் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.


படிக்க: தமிழ்நாடு அரசின் பொது பாடத்திட்டம்: புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியே!


ஆனால், கல்வி நிலையங்களில் பொதுப் பாடத்திட்டம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு தான் வருகிறது. ஒருபுறம் மாநில அரசின் நிர்பந்தத்தின் காரணமாகவும், மறுபுறம் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள், முதல்வர்களின் முயற்சியாலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. “பொதுப் பாடத்திட்டத்தை 90 சதவிகித அரசு உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்லூரியின் தன்மைக்கேற்ப சில மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தியுள்ளன” என உயர்கல்வித் துறை செயலர் கார்த்திக் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதே இதற்குச் சான்றாகும்.

தன்னாட்சி அதிகாரத்தை ஒழித்துக்கட்டும் பொதுப் பாடத்திட்டம்!

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் தலைமையில் தான் பொதுப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளார். குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமை, மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படாமை போன்ற கல்வி நிலையங்களில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக, பாடத்திட்டங்களை உருவாக்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளின் தன்னாட்சி அதிகாரத்தை பறித்துக்கொண்டிருக்கிறது, உயர்கல்வி மன்றம்.

பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி அதிகாரம் பாடத்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதில் தான் உள்ளது. பல்கலைக்கழகங்கள் தங்களுடைய பாடத்திட்டங்களை “சிறப்பு பாடத்திட்டக் குழுக்கள்” மூலம் தகுந்த வல்லுநர்களைக் கொண்டு உருவாக்கிக் கொள்கின்றன. பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள கல்லூரிகள் அதை பின்பற்றுகின்றன.

பாடத்திட்டங்களை உருவாக்கிக் கொள்வதற்கான தன்னாட்சி அதிகாரமும், வெவ்வேறு பகுதிகளில் பரவலாக பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டதும் ஒவ்வொரு வட்டாரத் தன்மையும் கல்வியில் வெளிப்பட வேண்டும் என்பதற்காகத் தான். அதன் நோக்கம் மாணவர்கள் பரந்துபட்டு சிந்திக்க வேண்டும் என்பதுதான். அதை ஒழித்துக்கட்டுவதற்காகத் தான் பொதுப் பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மேலும், பொதுப் பாடத்திட்டத்தில் ஆயிரத்தெட்டு குளறுபடிகள் உள்ளதாக விமர்சிக்கின்றனர், பேராசிரியர்கள். பயிற்சி (practical) தேவைப்படும் பாடங்களுக்கு பயிற்சி இல்லாமலும், முக்கியமான பாடங்களின் (core subjects) தன்மையைச் சிதைத்தும் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி இருப்பதாக கூறுகின்றனர். “தமிழகத்தின் பாடத்திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். ஆனால், புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் பாடத்திட்டமோ, ‘பழைய சோறாக’ இருக்கிறது” என விமர்சிக்கிறார், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் டி.வீரமணி.

இத்தகைய குளறுபடியான பாடத்திட்டத்தை தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கலந்தாலோசிக்காமல் வகுத்துள்ளது, உயர்கல்வி மன்றம். நடைமுறைப்படுத்தும் போதும் கருத்து கேட்கவில்லை. இத்தகைய சதித்தனமான நடவடிக்கையை தமிழ்நாட்டின் கல்வியாளர்கள் அம்பலப்படுத்தியப் பிறகு, இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் 300-க்கும் மேற்பட்ட பாடத்திட்டங்களை அந்தந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற 922 பேராசிரியர்களுடன் விவாதித்து பொதுப் பாடத்திட்டத்தை உருவாக்கி இருப்பதாக கூறியது, உயர்கல்வி மன்றம்.


படிக்க: NEP பரிந்துரைக்கும் முறைசாரா கல்வியின் ஒரு வடிவமே இல்லம் தேடி கல்வித் திட்டம் || CCCE


உயர்கல்வி மன்றத்தின் இக்கூற்றானது, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் தலைமையில் ‘திறன்’ சார்ந்த பாடத் திட்டத்தை உருவாக்குவதற்கு ஆதரவு தெரிவிக்கின்ற தங்களுக்கு சாதகமான பேராசிரியர்களிடம் மட்டும் விவாதிக்கப்பட்டு பொதுப் பாடத்திட்டம் உருவாக்கப் பட்டுள்ளதை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பொதுப் பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், 500-க்கும் மேற்பட்ட பாடத்திட்டக் குழுக்கள் கலைக்கப்படும் நிலைமை உருவாகும். பாடத்திட்ட உருவாக்கத்தில் பல வல்லுநர்களின் பங்கேற்பு மறுக்கப்படும். சிலர் மட்டுமே, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உயர்கல்விப் பாடத்திட்டங்களை உருவாக்கும் சர்வாதிகார அமைப்பு உருவாகும். இதன் மூலம், பல்கலைக்கழகங்களில் எத்தகைய மோசமான பாடத்திட்டத்தையும் திணிக்க முடியும்.

கார்ப்பரேட்டுகள் விரும்பும் திறனற்ற ‘திறன்’

“மாணவர்களை அறிவு சார்ந்தவர்களாக உருவாக்காமல் ‘திறன்’ சார்ந்தவர்களாக மாற்றி நிறுவனங்களுக்கான தொழிலாளர்களாக ஆக்குவதுதான் பொதுப் பாடத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாக இருக்கிறது” என்கிறார், அகில இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் துணைத்தலைவர் ரவி.

அறிவு சார்ந்த கல்வி மாணவர்களுக்கு ஏன் தரப்படுகிறது? எதிர்காலத்தில் அந்த மாணவர்கள் சமுதாயத்திற்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக தான். மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி, அவர்கள் ஏதாவது ஒரு துறை சார்ந்த அறிவை பெறும் வகையில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த மாணவர்கள் எதிர்காலத்துக்கான கல்வியாளர்களாக, எழுத்தாளர்களாக, விஞ்ஞானிகளாக உருவாக முடியும். ஆனால் பொதுப் பாடத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் கல்வி, கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒரு இயந்திரத்தை இயக்குவதற்கான அல்லது ஒரு குறிப்பிட்ட வேலையை மட்டும் செய்வதற்கான திறனை மட்டுமே கற்றுக் கொடுக்கிறது.

உயர்கல்வியை ‘திறன்’ சார்ந்த கல்வியை வழங்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்ற நோக்கம் மோடி அரசிற்கும் உள்ளது. “கல்வி முறையின் அடித்தளத்தை மேலும் நடைமுறைக்கு ஏற்ற வகையிலும் தொழில் சார்ந்ததாகவும் மாற்றும் வகையிலும் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது” என இந்தாண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற இணையவழிக் கருத்தரங்கில் கூறினார், பிரதமர் மோடி.

இந்தியாவில் ஆலையைத் தொடங்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு, ஒரு குறிப்பிட்ட வேலையை மட்டும் செய்யக்கூடிய திறன் கொண்ட, மலிவான கூலிக்கு வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களை உருவாக்கிக் கொடுக்கும் வகையில் கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்பதே மோடி அரசின் நோக்கமாகும். ஏனென்றால், பன்னாட்டு கார்ப்பரேட் கும்பல்கள் விரும்பும் வகையில் இந்தியாவை உலகத்தின் உற்பத்தி மையமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உற்பத்தித்துறையை மாற்றி அமைத்து வருகிறது, மோடி அரசு.

இந்தியாவில் தங்களுடைய ஆலைகளை அமைக்க விரும்பும் கார்ப்பரேட் நிறுவனங்களை, தமிழ்நாட்டை நோக்கி ஈர்ப்பதற்காகத் தான் ‘திறன்’ சார்ந்த கல்வி முறையை புகுத்திக் கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு. இதற்கு முன்னர் 12 மணி நேர வேலைச் சட்டத்தை தி.மு.க. நடைமுறைப்படுத்த முயன்றதும் அந்த நோக்கத்தின் அடிப்படையில்தான்.

“நவீன காலத்துக்கேற்ப படிப்புகளை நாங்களே உருவாக்கி இருக்கிறோம். இன்றைய சூழலில் என்ன படித்தால் மாணவர்களுக்கு வேலை கிடைக்கும் என்று சிந்தித்துத் தான் பாடத்திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறோம்” என உயர்கல்வி மன்றத்தின் துணைத்தலைவரான அ.ராமசாமி கூறுவதும் மேற்கூறியதையே தெளிவுபடுத்துகிறது. எனவே, தி.மு.க அமல்படுத்திக் கொண்டிருக்கும் பொதுப் பாடத்திட்டமானது உயர்கல்வி முடித்துவரும் மாணவர்களை கார்ப்பரேட் அடிமைகளாக மாற்றும் ஒரு கார்ப்பரேட் “பயங்கரவாத”த் திட்டமாகும்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தேவையான நிலங்களை விவசாயிகளிடம் இருந்து பிடுங்கி அடிமாட்டு விலைக்கு தூக்கி கொடுப்பது, வரிச்சலுகைகளை வாரி வழங்குவது என கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவையாற்றி வந்த தி.மு.க. அரசானது, தற்போது கார்ப்பரேட்டுகள் விரும்பும் வகையில் ‘திறன்’ சார்ந்த தொழிலாளர்களை உருவாக்குவதற்காக கல்வி முறையையே மாற்றி அமைத்து வருகிறது.

தி.மு.க. அரசின் கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளை எதிர்க்கும் கூட்டணிக் கட்சிகளும் பொதுப் பாடத்திட்டத்தை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. கல்லூரி பேராசிரியர்களும் கல்வியாளர்களும் தான் இதற்கெதிராக குரல் கொடுத்து வருகின்றனர். அவர்களுடன் இணைந்து மாணவர்களும் மற்ற உழைக்கும் வர்க்கங்களும் தி.மு.க. அரசை பணிய வைக்கும் களப்போராட்டங்களை கட்டியமைக்கும் போது தான் இத்தகைய பயங்கரவாத திட்டத்தை முறியடிக்க முடியும்.


அமீர்

(புதிய ஜனநாயகம் செப்டம்பர் மாத இதழ்)