Saturday, August 16, 2025
முகப்பு பதிவு பக்கம் 191

பெண்கள் முழுக் கால்ச்சட்டை (பேண்ட்) அணிந்த போராட்ட வரலாறு | சிந்துஜா

பெண்கள் வேலைக்கோ அல்லது வெளியில் செல்லும்போதோ அணிவதற்கு வசதியாக இருக்கும் காரணத்திற்காக முழுக் கால்சட்டை (பேண்ட்) அணிந்து சென்றால் அபராதமும் தண்டனையும் விதிக்கப்படும் என்றால் ஏற்றுக் கொள்வீர்களா?
என்ன? பேண்ட் அணிந்தால் அபாரதமா?
இந்தக் கேள்வியை இன்று ஆச்சரியமாகக் கேட்கிறோம். ஆனால், நீண்ட காலத்திற்கு முன்பு இது ஆச்சரியப்படும் விசயம் அல்ல. லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டினால் எப்படி அபராதம் என்பது இன்று இயல்பானதோ அப்படித்தான் அன்று பெண்கள் கால்சட்டை அணிந்து வெளியே சென்றால் அபராதம் விதிக்கப்பட்டது. எங்கு தெரியுமா ?
முன்னேறிய நாடு என பீற்றிக் கொள்ளப்படும் அமெரிக்காவில் 1938-ம் ஆண்டு வரை பெண்கள் பேண்ட் அணிந்ததற்காக அபராதமும், சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு வரை பிரான்சில் “ஆண்களைப்போல உடை” அணிவது சட்டநுட்ப ரீதியாக சட்டவிரோதமானதே. (ஆனால் நடைமுறையில் அவ்விதிகள் அமல்படுத்தப்படவில்லை). எனவே, ஆடை சமத்துவத்திற்காக, பெண்கள் தங்களது வசதிக்காக உடை அணியப் போராடிய பெண்களைக் கௌரவிக்க சிறிதுநேரம் ஒதுக்குவோம்.
வரலாற்றுப் போக்கில், கால்சட்டைகள் பல பெயர்களில் – ஸ்லாக்ஸ் (Slacks), கால் சட்டை (Trousers), பாண்டலூன்கள் (Pantaloons), ப்ரீச்சர்கள் (Breechers) மற்றும் நிக்கர் போக்கர்ஸ் (Knickerbokers) – அடையாளப்படுத்தப் பட்டிருக்கின்றன.
கால்சட்டை (பேண்ட்) முதலில் தோன்றியதன் காரணம் அதன் வசதிதான். அதனால்தான் அது இன்னமும் நடைமுறையில் நீடித்துக் கொண்டிருக்கிறது. கால்சட்டைகள், கால்களைப் பாதுகாப்பதோடு அல்லாமல் அணிந்திருப்பவர் தனது வேலையை தங்குதடையின்றி செய்ய உதவுகிறது.
தொழில் வளர்ச்சி ஏற்பட்ட பின்னர், பெண்கள் பணிக்குச் செல்லும் காலகட்டத்தில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற இடங்களில் உள்ள பெண்களுக்கு ஆடை சுதந்திரம் என்பது மிகவும் முக்கியமானதாக இருந்தது. பணிபுரியும் பெண்களுக்கு வேலைக்கு வசதியான ஆடையாக பேண்ட் இருந்தது. அதை அணிவதற்கு இருந்த கட்டுப்பாடுகள், அவர்களது அதிகாரம், சமத்துவத்துக்கு எதிராகவும், உடல், சமூக மற்றும் தார்மீக ரீதியான கட்டுப்பாடுகளாகவும் இருந்தது.
படிக்க :
ரவிக்கையின் ‘பாரம்பரியமும்’ சாதிய வர்க்க பாகுபாட்டு வரலாறும் | சிந்துஜா
நைட்டி : தேசங்கள் கடந்த பெண்களின் பொது உடை || சிந்துஜா
கால் சட்டை அணிந்த பழங்கால பெண்கள்
பண்டைய சீனாவில் உழைக்கும் பிரிவு ஆண்களும், பெண்களும் பொதுவாக கால்சட்டை அல்லது லெக்கின்ஸ் போன்ற கால்சட்டைகள் அணிந்தனர் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். பண்டைய கிரேக்க கலாச்சாரத்தில், கி.மு. 400-களின் பிற்பகுதியில் வர்ணம் பூசப்பட்ட மண்பாண்டங்களின் மீது பெண் போர் வீரர்கள் கால்ச்சட்டை அணிந்திருப்பதைப் போன்ற சித்திரங்களைக் காண முடிகிறது.
பண்டைய கிரேக்கத்திற்கு அருகிலுள்ள ஆரம்பகால நாடோடிகள், கரையோர மக்கள் மற்றும் சித்தியன்ஸ் (Scythians) பழங்குடியினர் போன்றவர்கள் பொதுவான உடையாக பேண்ட் இருந்திருக்கிறது. சித்தியன்ஸ் என்பது பண்டைய நாடோடி பழங்குடியினரின் குழுவாகும். தற்போதைய தெற்கு சைபீரியா பகுதியில் அன்று அவர்கள் வாழ்ந்தனர். அதன் பிறகு கி.மு. 900 முதல் கி.மு. 200 வரை அவர்களின் கலாச்சாரம் செழித்தது; அந்த நேரத்தில் அவர்கள் தங்கள் செல்வாக்கை மத்திய ஆசியா முழுவதும் நிறுவி சீனாவின் வடக்குக் கருங்கடல் பகுதி வரை விரிவுபடுத்தினர்.
படம் 1 : 3,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதரால் குதிரைசவாரி செய்ய பயன்பட்ட முதல் பேண்ட் ; படம் 2 : பண்டைய கிரேக்க அட்டிக் ஒயிட்-கிரவுண்ட் அலபாஸ்ட்ரான் Attic white-ground alabastron, c.), கிமு 470, பிரிட்டிஷ் அருங்காட்சியகம், லண்டன்
இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட கால்ச்சட்டைகளின் பழமையான ஜோடி, கி.மு. 1200 முதல் கி.மு. 900-க்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது. மேற்கு சீனாவின் டர்ஃபான் சோலைக்கு (Turfan oasis) அருகில் உள்ள யாங்காய் கல்லறையில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டதில் M21 மற்றும் M157 கல்லறைகளில் கம்பளி கால் சட்டையின் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை கி.மு. 13 மற்றும் 10-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என ரேடியோ கார்பன் டேட்டிங் மூலம் தெரியவருகிறது. இது சித்தியன்ஸ் நாகரிகத்திற்கு முந்தையது எனவும் மேய்ச்சல் நகர்வால் (Mobile pastoralism) கிழக்கு மத்திய ஆசியாவில் பரவிருக்கலாம் எனவும் தொல்லியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1700-களில் ஹன்னா ஸ்னெல் (Hannah Snell) போன்ற மிக பிரபலமான பெண்கள் உட்பட பல கடற்சிப்பாய்கள் கால்சட்டை அணிந்து தங்களது அடையாளங்களை மறைத்து ஆண்களுடன் அவர்கள் போரிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. வெகு காலத்திற்குப் பிறகு, கி.பி. 1861 முதல் கி.பி. 1865 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க உள்நாட்டுப் போரில் பங்கேற்ற பெண்கள் கால்சட்டை அணிவிக்கப்பட்டு ஆண்களாக காட்சிப்படுத்தப்பட்டனர்.
படம் : க்ரினோலின் வரலாறு, விக்டோரியன் பேஷன் ஆடை.The History of Crinoline, the Victorian fashion garment.
வரலாற்று ரீதியாக, அமெரிக்காவில் பெண்களின் ஆடைகள் அனைத்தும் உடல் கட்டமைப்பை வெளிக் காட்டுவதிலும், அவர்களைக் கட்டுப்படுத்துவதிலுமே இருந்ததால், பெண்கள் எந்தவித செயல்பாடுகளுடனும் தொடர்பற்றவர்களாக இருத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
கோர்செட்டுகள் (corsets), கிரினோலின்கள் (crinolines) மற்றும் எஃகு வளையங்களை (steel hoops) பற்றி நினைத்துப் பாருங்கள்.  நாகரிக ஆடைகளாக பெண்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆடைகள் முற்றிலும் ஆபத்தானவை. பெண்களுக்காக உருவாக்கப்பட்ட  கோர்செட்டுகள் இடுப்பு வளைவுகளில் இறுக்கமாக இருக்கும். கிரினோலின்கள் மேலும் அதிக எரிச்சலை உண்டாக்கும். பெண்களின் கிரினோலின்கள் தீப்பிடித்தால் அவற்றை அகற்ற முடியாதபடி, பல அடுக்குகளுடன் ஓரங்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இப்படித்தான் பெண்களை முடக்கிவைக்கும் விதமான ஆடைகளே அமெரிக்காவில் பிரதானமாக வலம்வந்தன.
1850 – 1920
1850-களின் மத்தியில், பெண்கள் உரிமை ஆர்வலர்கள் பலர் பிரபலமடைந்தனர். அமெலியா ஜென்க்ஸ் ப்ளூமர் (Amelia Jenks Bloomer) எனும் பெண்ணியவாதி தனது செய்தித்தாளில் ஆடையின் சுதந்திரத்தையும் வசதியையும் ஊக்குவித்து எழுதியுள்ளார்.
படம்1 : பால் பொய்ரெட் வடிவமைப்புகள் Paul Poiret’s designs படம் 2: மார்லின் டீட்ரிச் Marlene Dietrich
அமெலியா ப்ளூமர், தி லில்லி (The Lily) என்ற மாதமிருமுறை  பத்திரிகையை வெளியிட்டார். இதில், நிதானம் (Temperance) மற்றும் பெண்களின் பிரச்சினைகள் (women issues) குறித்த தனது கருத்துக்களை எழுதி வந்தார்.  அதோடு பெண்ணியவாதி மற்றும் வாக்குரிமையாளரான எலிசபெத் கேடி ஸ்டாண்டனும் (Elizabeth Cady Stanton) தி லில்லிக்கு கட்டுரைகளை எழுத தொடங்கினார். .
அமெலியா ப்ளூமர் தனது காலத்தில் வழக்கத்தில் இருந்த, பாரம்பரிய பாணி ஆடைகளைக் காட்டிலும் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் அற்ற ஒரு ஆடை பாணியை ஆதரித்தார். கோர்செட்டுகள், உள் பாவாடைகள் மற்றும் தரை நீளப் பாவாடைகளை கேள்விக்கு உட்படுத்தினார். பெண்கள், தனது அன்றாட உடல் செயல்பாடுகளில் ஈடுபடவும், உடற்பயிற்சி செய்யவும் ஏற்ற சௌகரியமான ஆடையையே தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும் என்ற இவரின் குரல் முக்கியமானது.
எலிசபெத் ஸ்மித் மில்லர் (Elizabeth Smith Miller), கால்சட்டை அணிந்த முதல் நவீன பெண்மணியாகக் கருதப்படுகிறார். மில்லர் வாக்குரிமை பெற்றவர். 1800-களில் அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையைப் பெற உதவுவதே அவரது குறிக்கோளாக இருந்தது.
ஆடை சீர்திருத்தம் ஆரம்பக் காலப் பெண்களின் உரிமை ஆர்வலர்களிடையே (women’s rights activists) குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்தது. அன்றைய நாகரிகம் எனச் சொல்லப்பட்ட கட்டுப்பாடான ஆடைகளை பெண்கள் அணியவேண்டும் என்ற வரையறைக்கு எதிரான கிளர்ச்சி உருவானது. இது ஒரு நடைமுறை தேவையாகவும் சமூக சீர்திருத்தத்தின் மைய புள்ளியாகவும் இருந்தது. “புளூமர்” ஆடையை பெண்கள் உரிமைகள் இயக்கத்தின் பெரும்பாலான தலைவர்கள் சில காலம் அணிந்திருந்தனர். அது பலமுறை மாற்றப்பட்டது. இறுதியில், அவற்றின் மீதான விமர்சனத்திற்கு பிரபலமான பத்திரிகைகள் கவனம் செலுத்தியதால், அது கைவிடப்பட்டது.
நியூயார்க் பொது நூலகத்தின் எலிசபெத் ஸ்மித் மில்லர் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட, ஆடை சுதந்திரம் குறித்த அவரது விளக்கம் பின்வருமாறு :
“I am asked to give a statement of my experience in adopting wearing, and abandoning the short skirt.”; “’The question is no longer how do you look, but woman, how do you feel?”
”உடைகள் அணிவது மற்றும் குட்டைப்பாவாடைகளைக் கைவிடுவது ஆகியவை குறித்த எனது பார்வையைக் கூறுமாறு கேட்கின்றனர்.”; “பெண்களே, கேள்வி நீங்கள் எப்படிக் காட்சியளிக்கிறீர்கள் என்பது பற்றியல்ல ! ஆனால். நீங்கள்  எவ்வாறு உணர்கிறீர்கள்? என்பதைப் பற்றியது” என்றார்.
1851-ல் ஒரு நாள் தோட்டத்தில் வேலை செய்யும் போது, தனது துருக்கிய பாணி பேண்ட்-ஐ முதலில் உருவாக்கியதாகக் கூறுகிறார், எலிசபெத் மில்லர். அவை பாவாடையின் கீழ் கணுக்காலில் குறுகி, அணிந்திருந்த நீண்ட பேக்கி பேண்ட்டுகள்.
இந்த ஆரம்பகாலக் காலுறைகள் ‘விக்டோரியன்’ உடையில் எதிர்பார்க்கப்படும் ‘கண்ணியத்தைப்’ பாதுகாக்கும் அதேவேளையில் பெண்களுக்கு அதிக சுதந்திரத்தை வழங்குவதற்கு ஏற்ற வகையிலும்  வடிவமைக்கப்பட்டுள்ளன. மில்லர் இந்த பாணியிலான கால்சட்டையை அறிமுகப்படுத்திய பிறகு அவர், இவ்வகை கால்சட்டையை தனது உறவினரான எலிசபெத் கேடிஸ்டாண்டனுடன் பகிர்ந்து கொண்டார். பின்னர் அவர் தனது அண்டைவீட்டாரான அமெலியா ஜென்க்ஸ் ப்ளூமருடன் பகிர்ந்து கொண்டார்.
முக்கிய ஊடகங்களில் இவர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். அக்காலகட்டத்தில் பெண்கள் உரிமை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்ட பெண்கள் பெரும்பாலானோர் கால்ச்சட்டை அணிந்திருந்தனர்..
மில்லர் தனது நடவடிக்கைகளால் கவனத்தைப் பெற்றார் என்றாலும்கூட கால் சட்டை அணிந்த முதல் நவீன மேற்கத்திய பெண் ஃபேனி ரைட் (Fanny Wright) என்பவரே ஆவார்.
படம் : ஃபிரான்சஸ் கிளேட்டன் உள்நாட்டுப் போரில் போரிடுவதற்காக தன்னை “பிரான்ஸ் கிளாலின்” போல் மாறுவேடமிட்டுக் கொண்டார். (காங்கிரஸ் நூலகம்)
ஃபேனி ரைட் ஒரு ஸ்காட்லாந்துப் பெண். அவர் 1825-ல் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். அவர் ஒரு எழுத்தாளர், பெண்ணியவாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதியாக அறியப்படுகிறார். ரைட், ஃப்ரீ இன்க்வைரர் (Free Inquirer) என்ற செய்தித்தாளின் இணை நிறுவனர் ஆவார். அவர் சமூகத்தைப் பற்றிய தனது கருத்துக்களை அதில் பகிர்ந்து கொண்டார்.
1820-களில் அவரது இளம்வயதில் ரைட், நியூ ஹார்மனி என்ற சோசலிச கம்யூனில் வாழ்ந்தார். அங்கு அவர் தளர்வான ரவிக்கைகள் மற்றும் முழங்கால்கள் வெட்டப்பட்ட ஆடைகளுடன் கணுக்கால் நீளமுள்ள பாண்டலூன்களை அணிந்தார்.
ரைட், மில்லர் மற்றும் ப்ளூமர் போன்ற பெண்கள் பெண்களின் உரிமைகளுக்காக தமது வலுவான கருத்துக்களால், சமத்துவ இயக்கத்தை முன்னெடுத்தனர். இருப்பினும், பெண்கள் கால்சட்டை அணிந்திருப்பது, பல ஆண்டுகளாக சர்ச்சைக்குரியதாகவே இருந்தது.
19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சைக்கிள் உலகம் முழுக்க பிரபலமடைய தொடங்கியது. அப்போது அங்கு பெண்கள் சைக்கிள் ஓட்டத் தடை செய்யப்பட்டு இருந்தது. அதுவும் அது பெண்ணின் உடல் சார்ந்த இலக்கணமாக மதப் போதனைகளாக வரையறுக்கப்பட்டிருந்தது. அதிலும் மதப்போதனையில் சைக்கிள் பற்றி பல இடங்களில் “Bicycle run for Satan”  “the bicycle is the devil’s advocate agent morally and physically ” என கூறப்பட்டது. அதாவது, “சைக்கிள் சைத்தானுக்கான வாகனம்”, “தார்மீகரீதியிலும், எதார்த்தத்திலும் சைக்கிள் ஒரு எதிர்நிலை சக்தி” என்று கூறப்பட்டது.
இதில் இன்னொரு விஷயம் மேலும் பெண்களைக் கேலிக் கூத்தாக்கிறது. திருமணமான பெண்கள் குறிப்பாக தாய்மை விரும்பும் பெண்கள் சைக்கிள் ஓட்டக் கூடாது என்பது போன்ற கட்டுக்கதைகளையும் மத நிறுவனங்கள் பரப்பின.  இப்படியாக பெண்கள் கைக்கு சைக்கிள் சென்றால் அவர்களை கட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்பதில் மதகுருமார்கள் தெளிவாக இருந்தனர்.
ஆண்களுக்கான வகையில்  இடைக்கம்பியுடன் வடிவமைக்கபப்ட்ட சைக்கிளை பெண்கள் ஓட்டுவதற்குத் தடையாக அவர்களது உடை இருந்தது. பாவாடை வகையிலான உடைகள் சைக்கிளை ஓட்டுவதற்குத் தடையாக இருந்தன. இதனைத் தகர்த்தெறியும் வகையில் ஆடைப் புரட்சி (Rational Dress Reform) சைக்கிள் ஓட்டுவதற்கு ஏற்ற உடையை பெண்களுக்கு வழங்கியது. முழுக் கால்ச்சட்டையின் வரவு பெண்களுக்கு சைக்கிளைப் பயன்படுத்து வாய்ப்பை வழங்கியது. அதன் மூலம் அவர்களை சுதந்திரமாக உணரச் செய்தது.
1911-ஆம் ஆண்டில், பால் பொய்ரெட் (Paul Poiret) என்ற ஒரு பிரெஞ்சு ஆடை வடிவமைப்பாளர், “ஜூப் குலோட் (jupe culotte)” என்ற ஆடையை அறிமுகப்படுத்தினார். 1918-ல், லெவி ஸ்ட்ராஸ் (Levi Strauss) என்பவர் ஃப்ரீடம் – ஆல்ஸ் (Freedom-Alls) என்ற ஆடையை உருவாக்கினார்.
முதலாம் உலகப் போரிலிருந்து பெண்களுக்கு தனது ஆடை சுதந்திரத்தை தேர்ந்தெடுக்க உரிமை இருந்தது. இந்த நடைமுறை உலகில் வெற்றியும் பெற்றது. 1920-களில், லெவி ஸ்ட்ராஸ் (Levi Strauss) பெண்களுக்கு தனித் தனியாக கால் சட்டைகளை அறிமுகப்படுத்தினார்.
1930 – 1970
1930-களில், மார்லின் டீட்ரிச் (Marlene Dietrich) மற்றும் கேத்தரின் ஹெப்பர்ன் (Katharine Hepburn) போன்ற திரை நட்சத்திரங்கள் பெண்கள் பேண்ட் அணிவதை யதார்த்தமாக்க முயன்றனர். இருந்தும் கூட, சமூகம் அதை ஏற்றுக்கொள்வதில் இருந்து வெகுதொலைவில் இருந்தது. இரண்டாம் உலகப்போரின் போது பணிபுரியும் பெண்கள் உடுத்திய கால்சட்டை உடை, பின்னர்  ஃபேஷனாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1950-களில் கால்ச்சட்டை இயக்கம் (trouser movement) மீண்டும் தனது அடையாளங்களை இழக்கத் தொடங்கியது. கிறிஸ்டியன் டியரின் (Christian Dior’s) நிறுவனம் ‘நியூலுக் (New Look)’ என்ற பெயரில் பெண்களுக்கான பாவாடைகளை மீண்டும் பிரபலப்படுத்தியது. அதன்பின் பெண்கள் இந்த ஆடம்பரமான ஆடையை நோக்கி செல்லத் தொடங்கினர். அதன் விளைவாக இளம் பெண்களிடம் இருந்த பேண்ட், பழைய நாகரிகமாக (Old Fashion) மாறியது.
இன்று கால்ச்சட்டை அணியும் பெண்கள், அதை இயல்பானதாகப் பார்க்கின்றனர். ஆனால் இயல்பைத் தாண்டி கால்ச்சட்டை அணிவது என்பது பெண்ணுக்கான அதிகாரம், சக்தி, இன்னும் சொல்லப்போனால் அது ஒரு அரசியல். நாம் ஒரு உடை என்ற வகையில் கால்ச்சட்டையை அணிவதை விட நாம் எதற்காக அணிகின்றோம், எதற்காகக் கொண்டாடுகிறோம் என்பதில்தான் நமது புரிதல் மட்டம் அடங்கியிருக்கிறது. இங்கு ஆணின் ஆடை மிடுக்குத்தனம், மரியாதை, தைரியம் ஆகியவற்றின் அடையாளமாகக் காட்டப்படுகிறது.
பெண்களுக்கான கலாச்சார உடைகளாகக் கூறப்படுபவை அவர்களின் செயல்பாட்டை ஒடுக்குபவைகளாக இருக்கின்றன.
படிக்க :
பிரா அணிவதும் அணியாததும் யாருடைய பிரச்சினை ? || சிந்துஜா
புடவை கடந்து வந்த பாதையும் அது சார்ந்த போராட்டங்களும் ! || சிந்துஜா
அடுத்தமுறை, பெண்கள் பேண்ட் அணியும்போது நினைவில் கொள்ள வேண்டியது, இதற்காக இங்கு எத்தனைப் பெண்கள் போராடி இருக்கிறார்கள் என்பதையும் அவர்களது போராட்டத்தையும் ஆகும். அடிப்படை உரிமையான ஆடையை அணிந்ததற்காக கைது செய்யப்படுவது, இன்று கேலிக்குரியதாகத் தெரியலாம். ஆனால், வரலாற்றில் அவ்வளவு சாதாரணமாக இந்த பேண்ட் நம்மிடம் வந்துவிடவில்லை.
ஆடைகள் என்பது நம்மை நாம் எப்படிப் பார்க்கிறோம், உலகம் நம்மை எப்படிப் பார்க்க வேண்டும், நமக்கு எந்த அளவிற்கு வசதியாக இருக்கிறது என்பதன் வெளிப்பாடாக வேண்டும். எனவே, அடுத்தமுறை நீங்கள் ஒரு ஜோடி பேண்ட்டை அணியும் போது, அதன் முக்கியத்துவத்தையும், தனித்தன்மையும் கருத்தில் கொள்ளுங்கள். அதனை அணியும் உரிமைக்காக போராடிய பல பெண் போராளிகளை நினைவில்கொள்ளுங்கள்..
சிந்துஜா
சமூக ஆர்வலர்
disclaimer

பிரிட்டிஷால் உருவாக்கப்பட்ட கங்காணி பதவியே ஆளுநர் பதவி !

1
மிழ்நாட்டின் ஆளுநர் R.N.ரவி, தமிழக அரசு செயல்பாட்டில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறார் என்ற சர்ச்சைகள் அன்றாடம் எழுகின்றன. மாநிலத்திற்கு புதிதாக பதவியேற்கும் ஆளுநரை மரியாதை நிமித்தமாக மாநில முதலமைச்சர் நேரில் சந்திப்பது வழமையானது.
ஆளுநருக்கு மாநில அரசிடமிருந்து விவரங்கள் ஏதேனும் தேவையெனில் முதலமைச்சரிடம் கேட்டு பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அப்படிச் செய்யாமல் மாநில அரசின் தலைமை செயலரையும், போலீசுத்துறை டிஜிபி-யையும் நேரில் அழைத்துப் பேசியிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு மட்டுமே கட்டுப்பட வேண்டியவர்களை, நேரடியாக தனிப்பட்ட முறையில் நேரில் அழைத்துப் பேசுவது வழமைக்கு மாறானது. ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.
அழைத்துப் பேசியது அல்லாமல் தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிக்கை தரும்படி தலைமை செயலரிடம் கோரியதும், அவரும் அவருடைய பங்கிற்கு முதலமைச்சரிடம் கலந்து ஆலோசிக்காமல் ஒவ்வொரு துறை அரசு செயலரிடமும் அவரவர் துறை குறித்து அறிக்கையை தயாராக வைத்திருக்கும்படி உத்தரவுகளை அனுப்பியிருந்தார்.
அதேபோல் ஆளுநர் டிஜிபி-யை அழைத்து பேசிய பிறகு ரவுடிகள் கைது – ஆயுதங்கள் பறிப்பு என்ற ஆரவாரங்களை அரங்கேற்றினார் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான அண்ணாத்துரை, ஆட்டுக்குத் தாடியும் மாநிலத்துக்கு ஆளுநரும் தேவையில்லை என்று விமர்சித்தவர். கடந்த ஐந்தாண்டுகளில் அடிமை எடப்பாடி அரசு ஆட்சியதிகாரத்தில் இருந்தபோது தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் மாநில அரசு நிர்வாகத்திற்குள் தலையை நுழைத்ததைக் கண்டித்து போராட்டம் நடத்தியது அன்று எதிர்க்கட்சியாக இருந்த திமுக.
படிக்க :
ஆர்.என். ரவி : தமிழ்நாட்டைச் சுற்றிவளைத்துள்ள நச்சுப் பாம்பு !
சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் உரை – கருத்துக் கணிப்பு
ஆளுநர் சென்ற இடங்களில் எல்லாம், எதிர்க்கட்சிகள் நேரடியான எதிர்ப்பும் ஆர்ப்பாட்டங்களும் பண்ணியதைக் கண்டு ஆத்திரமடைந்த பன்வாரிலால் புரோகித், “ஆளுநரை வேலை செய்யவிடாமல் தடுத்தால் ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்” என்று ஆத்திரமும், அதிகாரத் திமிரும் தலைக்கேறியதன் விளைவாகக் கதறினார்.
ஆனால் இன்று ஆர்.என். இரவியின் நடவடிக்கைகளுக்கு ஆளும்கட்சியான திமுக என்ன எதிர்வினை ஆற்றியுள்ளது ?
யார் இந்த ஆளுநர்?
கவர்னர் (ஆளுநர்), வைசிராய் பதவிகள் ஆங்கிலேய காலனிய அரசால் உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியாவில் 1935-ஆம் ஆண்டில் இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டத்தின்கீழ் மாகாண ஆட்சியினைக் கண்காணிக்க ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். உழைக்கும் வர்க்கத்தை ஒட்டப் பிழிந்து எடுக்க எஸ்டேட்டுகளில் பணிக்கு நியமிக்கப்பட்டவர்கள் தான் கங்காணிகள். அவ்வகையில் மாநில ஆட்சியைக் கண்காணிக்க 1947-ஆம் ஆண்டு அதிகார மாற்றம் நடைபெற்ற பிறகு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ‘கங்காணி’ பதவி முறையை ஒழித்துக் கட்டியிருக்க வேண்டும்.
அக்காலகட்டத்தில், ஆளுநர் பதவி குறித்து அரசியல் நிர்ணய சபையில் கடும் விவாதங்கள் நடந்தன. விவாதங்களின் அடிப்படையில் இரண்டு வரைவுகள் முன்வைக்கப்பட்டன. ஒன்று, ஆளுநர் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற வரைவு. இது ஒரு மாநிலத்தில் இரு முதலமைச்சர்களை உருவாக்கிவிடும் என்று இவ்வரைவு நிராகரிக்கப்பட்டது.
மேலும், ஆளுநருக்கான வேட்பாளர் பட்டியல் ஒன்றை சட்டமன்ற ஒப்புதலுடன் குடியரசுத்தலைவர் தேர்வுக்கு அனுப்புவது என்ற மற்றொரு வரைவும் மாநிலத்தில் ஆளும் கட்சியின் ஆதரவாளர் தான் ஆளுநராக வரமுடியும் என்ற வரைவும் முன் வைக்கப்பட்டது. ஆனால், இதில் மாநிலத்தில் பிரிவினைவாதம் வளர்வதற்கான  வாய்ப்புள்ளதால், இவ்வரைவும் நிராகரிக்கப்பட்டது.
இதற்குக் காரணம், இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைச்சாலையில் இருந்து ஏதேனும் தேசிய இனம் தனது விடுதலையைத் தேடி பிரிந்துவிடும் என்ற அச்சம்தான். இதனால் மாநிலத்துக்கு நெருக்கமான ஒருவரை அந்த மாநிலத்தில் ஆளுநராக நியமிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். மேலும், ஆளுநர்கள் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் மாநில / மாகாண பிரிவினை உணர்ச்சியும் குறுகிய மாநில / மாகாண உணர்வுகளையும் ஊக்கப்படுத்திவிடும். ஆகையால், மாநிலத்திற்கு தொடர்பு இல்லாத ஒருவரையே நியமிக்க வேண்டுமென்பதில் நேரு உறுதியாக இருந்தார்.
இதனடிப்படையில் ஒன்றிய ஆளும் கட்சி கைக்காட்டும் நபரை ஆளுநராக குடியரசு தலைவர் நியமிக்க வேண்டும் என்பதையும், அனைத்து மாநிலங்களிலும் ஒன்றிய அரசின் அதிகாரம் நிலை நாட்டப்பட வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டது. ஆனால், ஆளுநர் நியமனத்தில் மாநில அரசுடன் கலந்தாலோசித்து ஆளுநரை நியமிக்க வேண்டும் என்ற மத்திய – மாநில உறவுகள் குறித்த ஆணையங்களின் பரிந்துரை காலங்காலமாக உதாசீனப்படுத்தப் பட்டுள்ளது.
ஒன்றிய அரசு கைக்காட்டும் நபர் குடியரசு தலைவரால் மாநில அரசின் கங்காணியாக ஆளுநர் என்ற பெயரில் நியமிக்கப்படுவார். இதிலிருந்தே அவர் யாருக்கு விசுவாசமாக இருப்பார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. இதனடிப்படையில்தான் மோடி பிரதமரானவுடன் நான்கு மாநிலங்களின் ஆளுநர்களை – எம்.கே. நாராயணன் (மேற்குவங்கம்), இஹ் வனி குமார் (நாகாலாந்து), பி.எல். ஜோஷி (உ.பி), சேகர் தத்தா (சத்தீஷ்கர்) – கட்டாயப்படுத்தி விலகவைத்தார். குஜராத் ஆளுநர் கம்லா பெனிவுர் மிசோரம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார்.
ஒன்றிய அரசின் கங்காணிகளான ஆளுநர்களின் பிரதான வேலை, பதவிப் பிரமாணம் செய்து வைப்பதுதான். அமைச்சர்கள், நீதிபதிகள், முக்கிய அதிகாரிகள், வாரிய தலைவர்கள் உள்ளிட்டோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதும், மாநிலங்களைப் பற்றி மத்திய அரசுக்கு  aறிக்கை அனுப்புவது, மாநில நலன் கருதி எடுக்கப்படும் முடிவுகள், மத்திய அரசுக்கு விரும்பத்தகாததாக  இருந்தால் அவற்றுக்கு முட்டுக்கட்டை போடுவது இதுதான் ஆளுநரின் பணி. இந்த வேலை செய்பவருக்கு ஆடம்பர மாளிகை எதற்கு? சொகுசு வாழ்க்கை எதற்கு? இதற்காக கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணம் செலவழிப்பது எதற்கு?
ஆளுநர் மாளிகைகள் ஆடம்பரங்களில், வீண் செலவுகளில் கொழுத்துப் போய்க் கிடக்கின்றன. நேருவின் சகோதரியாகிய விஜயலட்சுமி, மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராக சிறிது காலம்  பணியாற்றி, பின்னர் அப்பதவியைத் துறந்தார். “ஆளுநர் பதவியே பயனற்றது. அரசமைப்பு சட்டத்திலிருந்தே ஆளுநர் பதவியை நீக்கிவிட வேண்டும்” என்று தன் விலகலுக்குப் பிறகு கூறினார்.
இதன்படி, மாநிலத்திற்கு ஆளுநர் தேவையில்லை என்பதை நடைமுறைப்படுத்தினால் ஒரு ஊதாரியான கங்காணிச் செலவு மிச்சப்படும். அந்தப் பணத்தை வளரும் தொழில்களுக்கு ஆக்கபூர்வமாக பயன்படுத்தினால் வேலைவாய்ப்பும் சமூகத்தில் வாங்கும் சக்தியும் பெருகும்.
ஆளுநரின் அதிகார மீறலும் அவர் மாநிலங்களில் கங்காணி வேலை பார்ப்பதும் இன்று மட்டுமா நடக்கிறது? இல்லை காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்தேதான் நடந்து வருகிறது. தனக்கு சாதகமான நபரை ஆளுநராக குடியரசுத் தலைவர் மூலம் நியமிப்பது, அவர் மூலம் மாநிலத்தின் செயல்பாட்டை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது காலங்காலமாக நடக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இன்றைய சூழல் வழக்கமான காலகட்டத்தைப் போன்றது அல்ல.
ஒட்டுமொத்த மாநிலங்களையும் தனது பாசிச வளையத்திற்குள் கொண்டு வருவதற்கு தமிழ்நாட்டிலும் ஆளுநரைக் கொண்டு தனது பாசிச நோக்கங்களுக்கு முரணான நடவடிக்கைகளை தடுத்திருக்கிறது ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசு.
நீட் தேர்விலிருந்து விலக்கு, 7 பேர் விடுதலை, விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள், மசோதாக்களின் மீது கருத்துக்கள் கூறாமல் காலவரையின்றி தள்ளிப்போடுவது, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் கிடப்பில் போடுவது; இதன்மூலம் தீர்மானங்களை மசோதாக்களை நீர்த்துப்போக வைத்து மாநில அரசிற்கு நெருக்கடியை உருவாக்குவது என ஆளுநர் மூலம் ஒன்றிய அரசு மாநில அரசின் உரிமைகளில் தலையிட்ட சம்பவங்கள் ஏராளம்.
பாசிச பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பல், தமிழக அரசால் நிராகரிக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையை ’இல்லம் தேடி கல்வி’ போன்ற திட்டங்கள் மூலம் படிப்படியாக அரங்கேற்றுவது, இக்கல்வியில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களையும்  உறுப்பினர்களையும் புகுத்துவதன் மூலம் பிஞ்சு மனதில் பார்ப்பனிய – மதவெறி நஞ்சை விதைப்பது என ஒரு புறத்தில் பாசிச நஞ்சை அடித்தளத்தில் விதைத்துக் கொண்டிருக்கையில், அதற்குச் சாதகமாக மேல்தளத்தில் ஆளுநரையும் மாநில அரசின் உயர் அதிகாரிகளையும் வைத்து காய்நகர்த்துகிறது.
மேலும், தற்போது ஆர்.என். ரவியின் மூலம் பாஜக மேற்கொள்ளும் நகர்வுகள் மிகவும் முக்கியமானவையாகப் பார்க்க வேண்டியவை. தமிழகத்தில் இல்லாத நெருக்கடியை இருப்பது போலக் காட்டுவது, சட்டம் ஒழுங்கு கெட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதும், இலஞ்ச ஊழல் பெருகியதைப் போன்ற அறிக்கையை பெறுவது  என ஆட்சியைக் கலைப்பதற்கோ அல்லது ஆட்சியைக் கலைப்பதாக மிரட்டி தொடைநடுங்கி திமுக அரசின் காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்கோ தேவையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதி தான், இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்ட, ஆளுநரின் தலைமைச் செயலர், டி.ஜி.பி சந்திப்புகள்.
டெல்லியில் அம்மாநில முதல்வருக்கு தொல்லை கொடுத்து, அம்மாநில அதிகாரிகளைச் செயல்படவிடாமல், டெல்லி மாநில அரசை முடக்கியதைப் போலவே தமிழ்நாட்டிற்கு தொல்லைகள் கொடுப்பது, மறைமுக சதிகளை அரங்கேற்றுவது, அடக்குமுறைகளை அரங்கேற்றி தங்களது நோக்கத்தை நிறைவேற்றுவது என்பது ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிஸ்ட்டுகளுக்கு கைவந்த கலை. இதற்குப் பொருத்தமாகத்தான் முன்னாள் உளவுத்துறை அதிகாரியான R.N.ரவி யை தமிழ்நாட்டின் ஆளுநராக நியமித்திருக்கிறது மோடி கும்பல்.
படிக்க :
சூரப்பாவை இடைநீக்கம் செய்வாரா தமிழக ஆளுநர் ?
ஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் !
நம் நாட்டில் யார் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களுக்கே இல்லாத – அதாவது ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும் மக்களுக்கே இல்லாத – ஆட்சியைக் கலைக்கும் அதிகாரத்தை இந்தக் கங்காணித் தொழிலுக்காக நியமிக்கப்பட்ட ஆளுநருக்கு வழங்கியிருக்கிறது அரசியல் சாசனச் சட்டம். இந்த நடைமுறை ஒழிக்கப்படும் வரை, மாநில மக்களின் உணர்வுகளும், தேவைகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் நிறைவேற்றப்படுவது சாத்தியமில்லை.
சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, மோடி நடத்திய சட்டமன்ற சபாநாயகர்களின் கூட்டத்தில் கலந்து கொள்கையில், மாநில அரசின் தீர்மானங்களின் மீது ஆளுநர் முடிவெடுப்பதற்கு கால வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எல்லாம் ஒரு போதும் பலனளிக்காது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் எடுக்கப்பட்ட முடிவை யாரோ நியமித்த ஒரு கங்காணி நிறுத்தி வைப்பதற்கு அனுமதிக்க முடியாது என்ற போர்க்குரலை எழுப்புவதுதான் அவசியமானது. அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதுதான் அவசியமானது!

கதிரவன்

கிராம தெய்வங்களைப் பற்றிய கதைப்பாடல்கள் || நா. வானமாமலை

0
தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை -இறுதிப்  பாகம்
முதல் பாகம்…………………………………………………………………………………………முந்தைய பாகம்
நா. வானமாமலை
தெய்வம் பற்றிய கதைப் பாடல்கள்

னி கதைப்பாடல்களில் பாமர தெய்வங்களைப் பற்றிய வில்லுப் பாடல்களும். அம்மானைகளும் அடங்கும். வில்லுப் பாட்டுகள் நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்னும் பாடப்படுகின்றன. அவற்றில் சொல்லப்படும் கதை பாமரர் வணங்கும் தெய்வங்களின் வரலாறுகளே. இவற்றை இருவகையாகப் பிரிக்கலாம்.

பெண் தெய்வங்களைப் பற்றிய கதைகள் பழமையானவை. மாடன் முதலிய தேவர்களைப்பற்றிய கதைகள் இடைக்காலத்தவை. திரு.கி.வா.ஜகந்நாதன் அவர்கள் ‘அலையோசை’ என்ற நாட்டுப்பாடல் திரட்டில் பாமரர் வணங்கும் தெய்வங்களின் அட்டவணையொன்று கொடுத்துள்ளார்கள். அவற்றுள் வேதக் கடவுளரை நீக்கிவிட்டால் 60 தெய்வங்கள் இருக்கின்றன, இத்தெய்வங்கள் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகின்றன.

தேவியரில் பெரும்பாலானவை மூர்க்க தேவதைகளே, பரட்டைத்தலை, கொட்டை விழி, கோரப்பற்கள் முதலிய அசுர அம்சங்கள் எல்லாத் தேவதைகளுக்கும் பொதுவானவை. இவை பெண்ணாதிக்கச் சமுதாயத்தின் எச்சமாக நிற்கின்றன. இவற்றுள் முத்தாரம்மன், குமரி, செல்லி முதலிய தேவியர் தென்பாண்டி நாட்டில் பிரபலமானவை. இவை மணம் புரிந்துகொள்ளாத தேவியர், இவற்றை பயத்தோடு தான் மக்கள் வழிபட்டனர். இவை தமக்குக் கொடுக்க வேண்டியதைப் பக்தர்கள் தராவிட்டால் பெருந்துன்பம் விளைவிக்கக் கூடியவை என்று நம்பினார்கள்.

படிக்க :

நூல் அறிமுகம் : வேதாந்தத்தின் கலாசார அரசியல்

நூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்

‘யஷி’ என்று சமண மதத்தவரது சாந்த தேவதை, பாமர மக்களின் இசக்கியாக மாறிவிட்டது. காளி, மாரி முதலியன வங்கத்திலிருந்தும், கர்நாடகத்திலிருந்தும் – பண்பாட்டுக் தொடர்பின் காரணமாக இங்குக் குடியேறியவை. சக்கம்மாள், ராஜ கம்பள நாயக்கர்களது தெய்வம், கொத்து பல்லாரியிலிருந்து அவர்கள் வருகிற காலத்தில் அதனையும் கூடவே கொண்டு வந்து விட்டார்கள்.

தேவியரில் பல வேதக் கடவுளரோடு இணைப்புப் பெற்று விட்டன. காளி தனியாகவே வணங்கப்பட்டது. அது சைவ சமயத்தில் பார்வதியோடு சேர்ந்து ஒரு அம்சமாகி விட்டது. பெரும்பாலும் பழமையான தேவதைகள் சிவனது மனைவிகளாக மாறிவிட்டன. ஆயினும் சிவன், விஷ்ணு கோயில்கள் இல்லாத சிறு சிறு கிராமங்களிலும் ஒரு தேவியின் கோயில் இருக்கும். இக்கோயிலுக்குச் சிறப்பான நாட்களில் கொடை கொடுப்பார்கள். நவராத்திரியின் போது திருவிழாவும் நடைபெறும். சிறு கோயில்களில் ஒரு நாள் மட்டுமே கொடை நடைபெறும்.

பாமர மக்கள் தேவி கோயில்களுக்கு வாசல் காவலர்கள் என்று மாடன் முதலிய தெய்வங்களை வணங்குகிறார்கள். ஆரம்பகாலத்தில் மாடன் முதலிய தெய்வங்களுக்கு உருவம் இல்லை. செங்கல்லால் கட்டப்பட்ட தூண் ஒன்றுதான் அத்தெய்வத்தைக் குறிக்கும். மாடன் முதலிய தெய்வங்கள், போரிலோ, கலகத்திலோ, அல்லது சதிக்குள்ளாகியோ உயிர் விட்டவர்களது நினைவுச் சின்னங்களே.

சின்னத்தம்பிக்கு, திருக்குறுங்குடி, பாப்பாங்குடி ஆகிய இடங்களில் கோயில்கள் இருக்கின்றன. அவை தனிக் கோயில்கள் அல்ல; பிற கோயில்களைச் சார்ந்தே இருக்கும், சுடலை மாடனுக்கு ஊர்தோறும் பல கோயில்கள் உண்டு. அவற்றில் உருவச் சிலைகள் இல்லை. சில தெய்வங்களுக்கு உருவச் சிலைகள் இருக்கின்றன. கருப்பசாமி, சங்கிலி பூதத்தான், முத்துப்பட்டன் ஆகிய தெய்வங்களுக்குச் சிலைகள் உள்ளன. இவை பிற்காலத்தில் ஏற்பட்டவை.

மாடன் போன்ற தெய்வங்கள் சில குடும்பங்களுக்குக் குலதெய்வமாக இருக்கும். ஒன்று தெய்வமாகக் கருதப்படுகிற அம்மனிதனது வழிவந்தவர்களுக்கு அவன் குலதெய்வமாக இருக்கலாம். அல்லது அவனைக் கொன்றவர்களுக்குக் குலதெய்வமாக இருக்கலாம்.

இவையாவும் பயத்தினால் வணங்கப்படும் தெய்வங்களே. வேதக் கடவுளரில் சிவன், நாராயணன் முதலியோரைப் பாமர மக்கள் வணங்குவது உண்டு. எனினும் அவர்கள் வீர சைவர்களோ, வீர வைணவர்களோ அல்ல. லக்ஷ்மி, சரஸ்வதி முதலிய தேவியர்களை அவர்கள் வணங்குவது அபூர்வம். முருக வணக்கம் பழங்காலம் முதல் தமிழ்நாட்டில் நிலவி வந்தது. இன்று உருவமில்லாமல் வேலினை மட்டும் பாமர மக்கள் வணங்குகிறார்கள். அது ஆயுத வணக்கமாக இருக்கலாம்.

பௌத்த சமணச் சிறு தேவதைகளும் அம்மதங்கள் அழிந்த பின்னர், பாமரர் வணக்கத்திற்குரியனவையாயின. ஆனால் அவை உருமாறி, இந்துமத தெய்வங்களோடு ஒன்றி விட்டன. இவற்றுள் ஒன்று விநாயகர். இப்பெயர் புத்தருடைய பெயர்களுள் ஒன்று வேசாந்தர ஜாதகத்தில் புத்தர் யானைப் பிறவியெடுத்தார் என்ற கதை கூறப்பட்டுள்ளது. எனவே புத்தர் பீடங்களிலிருந்த சிலைகளை அகற்றிவிட்டு பிற்காலத்தார் யானைமுகக் கடவுளை வைத்து விட்டனர். அவை அரசமரத்தடியில் இருப்பதும் இக்கூற்றை மெய்பிக்கும் சான்று.

சாஸ்தா’ சிறு தெய்வங்களுக்குள் உயர்ந்தவராகக் கருதப்படுகிறார். இவர் சிவனுக்கும் மோகினி உருவத்திலிருந்த திருமாலுக்கும் பிறந்தவர். சாத்தன் என்ற பெயரும் புத்தர் பெயர்களுள் ஒன்று. பிற்காலத்தில் புத்தனும், இந்துத் தெய்வங்களுள் ஒன்றாகக் கலந்தபோது சாஸ்தாவுக்குப் பல ஊர்களில் கோயில்கள் தோன்றின. அவர் சாந்த தெய்வம்.

பாமரர் தெய்வங்கள் அதீத சக்தியுடையனவாவென்று அவர்களால் கருதப்படவில்லை. மனிதனை விடச் சிறிது அதிகமான சக்தியுடையவை. அவ்வளவுதான். அவை புராணங்களில் சொல்லுவது போல சத்திய லோகம், கைலாசம், வைகுண்டம் முதலியவற்றில் வாழ்வன அல்ல. இவ்வுலகிலேயே, கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் இயற்கைச் சக்திகளைப் போன்றவையே. அவை மனிதர் உடலுள் நுழைந்து பேசும் என்றும் மக்கள் நம்பினார்கள். இதனால் வஞ்சகர்களால் ஏமாற்றவும் பட்டார்கள்.

சமூக நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள், புராணக் கதைகள் இவைபற்றி உழைக்கும் மக்களின் கருத்துக்களின் வரலாறு முழுவதையும் நாட்டுக் கதைப் பாடல் பற்றிய ஆராய்ச்சி நமக்குத் தெளிவாக்கும். ஆனால் இக்கதைப் பாடல்களைக் குறித்த ஆராய்ச்சி எதுவும் இதுவரை தமிழ்நாட்டில் தொடங்கவில்லை. இவற்றை ஆராயாமல் தமிழ் நாட்டு மக்களின் பண்பாட்டு வரலாற்றை ஆராய முடியாது. இக் கதைப்பாடல்கள் ஆயிரக் கணக்கில் கிடைக்கின்றன. இவற்றின் ஆராய்ச்சியின் மூலம் நமது நாட்டு மக்களின் பண்பாட்டு வரலாற்றை சுமார் கி.பி.1330 முதல் கி.பி.1801 வரை ஆராய முடியும். இம் முயற்சிகளை தமிழறிஞர்கள் மேற்கொள்ள வேண்டும். இப்பணி பொதுப் பணியாகையால், ஆராய்ச்சிக் கழகங்களும், தமிழ்நாடு அரசினரும் இதற்கு உதவ வேண்டும்.

இந்நாட்டுப் பாடல்களின் மூலம் நாம் அறிந்துகொள்வன

1. நாட்டுப்புற மக்கள், வரலாற்றை எவ்வாறு நோக்குகிறார்கள்? வரலாற்று வீரர்களைப் பற்றி அவர்களுடைய சிந்தனை என்ன?
2. சமூகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர்கள் உயர்வாகக் கருதுவது எதனை? இழிவாகக் கருதுவது எதனை?
3. அவர்களுடைய நம்பிக்கைகள், துன்பங்கள் இன்பங்கள் இவை யாவை?
4. புராணங்களில் அவர்களுக்கு விருப்பமானவை எவை? அவற்றில் எத்தகைய மாறுதல்கள் அவர்கள் கருத்துக்களுக்கு உகந்தது?
5. அவர்கள் உருவாக்கியுள்ள பண்பாட்டையும், அதைச் சீரழிக்கும் முயற்சிக்கு அவர்கள் தெரிவிக்கும் எதிர்ப்பையும், இக்கதைகளில் நாம் காண்கிறோம்.

நம் நாட்டு மக்களின் பண்பாட்டு வரலாற்றை நாம் மதிப்பிட, நமது இலக்கியம், கலைகள் நாம் வளர்த்துள்ள பழக்க வழக்கங்கள் இவற்றோடு நாட்டுக் கதைப் பாடல்களையும் ஒரு பகுதியாகக் கொள்ள வேண்டும்.

(முற்றும்)
« முந்தைய பாகம்
தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

எழுவர் விடுதலை – இஸ்லாமிய கைதிகள் விடுதலைக்கு அநீதி இழைக்கும் திமுக அரசு || மக்கள் அதிகாரம்

PP Letter head
தேதி : 30.11.2021
எழுவர் விடுதலையும் இஸ்லாமிய கைதிகள் விடுதலையும்
சாத்தியம் ஆக்கப்பட வேண்டும்!
பத்திரிகை செய்தி
தி.மு.க.வின் கடந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், எழுவர் விடுதலையும் இஸ்லாமிய கைதிகள் விடுதலையும் முக்கியமான ஒன்றாக இடம் பெற்றிருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அண்ணா பிறந்தநாளை ஒட்டி விடுவிப்பதாக சொல்லப்பட்ட கைதிகளின் பெயர் பட்டியலில் ராஜீவ் வழக்கில் தண்டனை பெற்றவர்களும் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட இஸ்லாமிய கைதிகளும் இடம்பெறவில்லை.
தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்தி எழுவர் விடுதலைக்காக தமிழக மேற்கொண்ட போராட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என தமிழகத்தை ஸ்தம்பிக்க வைத்தனர்.
ஈழ விடுதலைப் போராட்டங்களை கொடூரமாக ஒடுக்கிய ஜெயலலிதாவையே எழுவர் விடுதலை குறித்த சட்ட மன்றத் தீர்மானம் இயற்ற வைத்ததும் மக்கள் போராட்டங்கள் தான்.
படிக்க :
விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு பணிந்தது பாசிச மோடி அரசு || மக்கள் அதிகாரம்
எதிர்த்துக் கேட்டால் ஊபா : பாசிஸ்டுகளின் சோதனைக் களமாகும் திரிபுரா || மக்கள் அதிகாரம்
மிகச்சிறிய வயதில் கோவை குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணை என்ற பெயரிலேயே  அழைத்துச்செல்லப்பட்ட இஸ்லாமியர்கள் பலர். அவர்கள் மீதான வழக்கு இருபது ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்ற விசாரணையிலேயே உள்ளது. தண்டனை வழங்கப்படாமலேயே இத்தனை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இக்கொடுமை உலகத்தில் வேறு எங்கேயாவது நடைபெற்று இருக்குமா?
பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசியதாலும் மோடி எதிர்ப்பு அலையாலும் வென்ற தி.மு.க. அரசுக்கு, எழுவர் விடுதலையையும் இஸ்லாமிய கைதிகள் விடுதலையையும் சாத்தியமாக்குவதற்கான எல்லா உரிமையும் பெற்றிருக்கிறது. எனினும் அவர்கள் விடுதலை செய்யப்படாமல் இருப்பது அநீதியான ஒன்றாகும்.
இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று போராடியவர்கள் கைது செய்யப்படுவது அராஜகமான நடவடிக்கையாகும். உடனே தமிழக அரசு கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு பல ஆண்டுகள் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களையும் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள எழுவரையும் உடனே விடுதலை செய்வதற்கான ஆணை வெளியிட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
அவ்வாறு தவறும்பட்சத்தில் எழுவரின் விடுதலைக்காகவும் இஸ்லாமியர்களின் விடுதலைக்காகவும் தமிழகம் மீண்டும் போர்க்களம் ஆகும். அதைத் தவிர்க்கவே முடியாது.

தோழமையுடன்,
தோழர் சி. வெற்றிவேல்செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321.

விவசாயிகள் போராட்டம் வெற்றி : சாதனையும் கற்றுக்கொள்ள வேண்டியவையும்!

பாசிச மோடி ஆட்சியை மண்ணை கவ்வ வைத்த விவசாயிகள் !
சாதித்தது எப்படி? நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?
மோடி ஆட்சியில் அமர்ந்த பின் நடைபெற்ற பல போராட்டங்கள் இறுதிவரை நிலைக்காமல் சிதைந்து போனதை நாம் பார்த்திருக்கிறோம். பாராளுமன்றம் உட்பட எவரையும் மதிக்காமல் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்து தன்விருப்பப்படி மோடியால் கொண்டுவரப்பட்ட  மக்கள் விரோத சட்டங்கள் ஓநாய்கள் போல் மக்களின் இரத்தத்தைக் குடித்துக் கொண்டிருக்கின்றன.
நீதிமன்றங்கள் உட்பட அரசின் அத்துணை நிறுவனங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் உட்புகுத்தப்பட்டு இந்துராஷ்டிரமாக மாற்றப்படுவதற்கான இடைவழியில் இந்தியா நிற்கிறது. மக்களுக்கோ கடுமையான எதிர்காலம்தான் கண்களில் தெரிகிறது.
இத்தகைய சூழலில்தான் விவசாயிகள் போராட்டம் வெற்றியை சாதித்து, மோடி ஆட்சியை நடுங்க வைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து நாட்டின் பிரதான ஊடகங்கள் முதல், தேசிய செய்திதாள்கள், உள்ளூர் ஊடகங்கள், உள்ளூர் செய்தித்தாள்கள் வரை கள்ள மெளனத்தின் மூலம் தங்களை காப்பாற்றிக் கொள்ளலாம் எனக் கனவு காண்கின்றன.
இந்த ஓராண்டு போராட்டத்தின் போது, 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு காரணங்களுக்காக தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளனர். பல விவசாயிகள் பா.ஜ.க. காவி குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எத்தனையோ அடக்குமுறைகளையும் மத்திய மாநில அரசுகளின் போலீசு குண்டர்களின் கொலைவெறி தாக்குதலையும் எதிர்கொண்டே அஞ்சாமல் களத்தில் உறுதியாக நின்று இத்தகைய வெற்றியை சாதித்துள்ளனர் விவசாயிகள். இது வெடி வெடித்து கொண்டாட வேண்டிய வெற்றி! நமது மகிழ்ச்சியை உரக்க கத்தி ஊரெல்லாம் கேட்க திருவிழாவாக கொண்டாட வேண்டிய, போற்றப்பட வேண்டிய வெற்றி!
படிக்க :
டெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் !!
சிங்கு படுகொலை : விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சி !
அந்த போராட்ட வெற்றியில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கின்றன.
ஒரு போராட்டத்தின் போக்கை மூன்று வகை பிரதான காரணிகள் தீர்மானிக்கின்றன.
1.இந்த மூன்றிலும் மிக முக்கியமான பிரதானமானது ஒரு இயக்கம் தனது பிரச்சனைகளை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் எளிய நடையில் விளக்கும் அதேவேளை அந்த செய்தியை நாடெங்கும் கொண்டு செல்ல வழிமுறைகளை உருவாக்கவும், பயன்படுத்தவுமான அதன் திறமை. அதன்மூலம் போராட்டத்திற்கு வெளிப்படையாக இல்லாவிட்டாலும் அதன் நியாயத்தன்மையை மக்கள் புரிந்து கொள்ளுமளவு செய்தாலே போதும்.
2.அடுத்தது, யாரை எதிர்த்து போராடப்போகிறோம் என்பதில் ஒளிவுமறைவின்றி வெள்ளிடை நீர் போல தெளிவாக இருப்பது. அந்த தெளிவை இயக்கத்தின் அனைவரையும் உணரவைப்பது. போராட்டத்தின் போது எதிரியின் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை உருவாக்கி வளர்த்துக் கொள்வதிலான முன்முயற்சி. ஒரு அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்துப் போராடி வெற்றியை சாதிப்பது என்பது ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிரான போராட்ட வழிமுறைகளைக் காட்டிலும் மிக மிக வித்தியாசமானது. ஏனெனில், அரசாங்கம் என்பது தன்னிடத்தில் வரம்பற்ற அதிகாரத்தையும் அமல்படுத்துவதற்கான நிறுவனங்களையும் கொண்டவை.
3. மூன்றாவதாக, தனது உறுதியான ஆதரவாளர் தளத்தை தாண்டி பொதுவெளியில் மக்களது ஆதரவை பெற்று போராட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டியது ஒரு இயக்கத்தின் வெற்றிக்கு மிக மிக அவசியமானது.
கொள்கையளவில் பிரச்சனையின் முக்கியத்துவம் என்பது ஒரு போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு மிக முக்கியமான பங்கினை கொண்டிருக்கிறது. ஆனால், நாட்டின் ஊடகங்கள், போலீசுத்துறை போன்ற அனைத்து அதிகார உறுப்புகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொண்டு தன்னை எதிர்ப்பவர்கள் மீது மோடி அரசு கொடுந்தாக்குதலை தொடுத்துக் கொண்டிருக்கும் சூழலில் ஒரு இயக்கத்தின் வெற்றி என்பது, நிறுவனங்கள் மீதான அரசின் கட்டுப்பாட்டை உடைத்தெறிவதற்கான, அல்லது புறம்தள்ளுவதற்கான வழிமுறைகளை உருவாக்கி, வளர்ப்பதில் அடங்கியிருக்கிறது.
இதை எப்படி வெற்றிகரமாக செயல்படுத்துவது என்பதை நடைமுறையில் நிரூபித்து காட்டியிருக்கிறது விவசாயிகள் போராட்டம்.
கட்டுமான கள வேலைகள்:
சொந்த தலைமை கட்டமைப்புடன் இருந்த பல்வேறு அமைப்புகளிலிருந்த விவசாயிகள், இயக்கம் தொடங்கியவுடன் நம்பிக்கையோடு கூட்டாக ஒன்றிணைந்து போராட்டத்திற்கு தேவையான அணிகளை திரட்டிக்கொண்டனர். இந்த ஒத்தக்கருத்துடைய  கூட்டுத்தலைமை பெற்ற வெற்றிதான் நமக்கு அளித்திருக்கும் முதல் பாடம். இந்த நடைமுறையே மோடி அரசால் யார் மீதும் குறிப்பாக இலக்கு வைக்க முடியாதவாறு செய்தது.
அணிதிரட்டுதல், போராடுதல் ஆகியவற்றுக்கு முன்னதாகச் செய்ய வேண்டிய அவசியமான வேலை கற்பித்தல். எல்லோருக்கும் போராட்டம், கோரிக்கைகளை பற்றிப் புரியவைத்து தெளிவாக்குவது. இது அடிப்படையான ஆதரவாளர்களுக்கு, பிரச்சனைகளை புரிந்து கொள்வதையும், எதிராளிகளின் தந்திரங்களை அறிந்து கொள்வதையும் உறுதிசெய்து  இயக்கத்தை தடம்புரளாமல் காப்பாற்றுகின்ற ஒரு நடவடிக்கையாக அமைந்தது.
இந்த போராட்டத்தின் மூகமாக வெளிப்பட்ட ராகேஷ் திகாய்த் மீது குறிவைத்து இழித்தும், பழித்தும் ஏராளமான அவதூறுகள் ஊடகங்கள் வாயிலாக பரப்பப்பட்டன. ஆனால், எதுவும் எடுபடாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாகும். போராட்டத்தின் பல்வேறு காலக்கட்டங்களில் சில முடிவுகளை திகாயத் தன்னிச்சையாக எடுத்திருப்பதாக செய்தி  வெளியிட்டு போராட்டத்தில் குழப்பம் செய்ய ஊடகங்கள் முயன்றன. ஆனால், களத்தில் நின்ற விவசாயிகளுக்கு அனைத்து சங்கங்களின் ஒருமித்த ஆணை மற்றும் கூட்டு தலைமை அமைப்பின் வடிவத்தை பற்றிய தெளிவிருந்ததால் இந்த பிரச்சாரத்திற்கு பலியாகாமல் போராட்டத்தில் உறுதியாக நின்றனர்.
கூட்டு தலைமை மற்றும் உறுதிபடுத்தப்பட்ட தீவிர ஆதரவாளர்கள் என்ற கட்டுமானம் ஸ்தாபிக்கப்பட்டவுடன் ஒரு இயக்கம் தனது செய்திகளை ஆதரவாளர்கள் மட்டத்தை தாண்டி பொதுமக்களிடம் எடுத்துச்செல்லும் வகையில் ஒரு ஊடகத்தை உருவாக்க வேண்டியது அவசியமாக இருந்தது.
ஊடகம்:
எதிரியின் தலைநகரை சுற்றி பெருமளவு எண்ணிக்கையில் வீரர்களை முகாமிடச் செய்வதன் மூலம் முற்றுகை செய்து முடக்குவது என்ற அம்சத்தை கடந்த கால இராணுவ நடவடிக்கைகளின் வரலாற்றிலிருந்து பெற்று விவசாயிகளை பெருமளவில் அணிதிரட்டி டெல்லியின் எல்லைப்புறங்களில் முகாமிட முடிவெடுக்கப்பட்டது.
ஊடகங்களின் கவனத்தை தங்கள் பக்கம் வைத்திருக்க இடைஇடையே பேரணிகள் மற்றும் பந்த் போன்ற வடிவங்களை அறிவித்து அரங்கேற்றினர். பொதுமக்கள் ஆதரவைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும், விவசாயிகள் எதை சொல்ல விரும்புகிறார்களோ அதை – எப்படி சொல்ல விரும்புகிறார்களோ அப்படியே – நாடு முழுதும் பரப்பப்பட வேண்டும் என்பதில் உறுதியோடிருந்தனர். அரசு ஆதரவு ஊடகங்களுடன் தொடர்பு வைத்திருப்பதால் தங்களது செய்திகள் மக்களை ஓரளவுக்காவது சென்றடைய வைக்க முடியும் என்றாலும் போராட்டக்காரர்களின் இப்படிபட்ட தொடர்பினை அந்த ஊடகங்கள் தவறாக இயக்கத்திற்கு எதிராகவே பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதை புரிந்தே வைத்திருந்தனர்.
தேசிய ஊடகங்களின் செய்தி ஆதிக்கத்தை ஓரங்கட்ட தங்களுடைய யூடியூப் சேனல்கள் மற்றும் தங்களுக்கென சொந்தமாக “ட்ராலி டைம்ஸ்” என்ற செய்திதாளையும் ஏற்படுத்திக் கொண்டனர். மோடி அரசுடன் தாங்கள் ஒரு அறிக்கை போரில் இருப்பதை போராட்டக்காரர்கள் புரிந்து கொண்டனர். அதற்கேற்றவாறு தங்களது செய்திகளின் வரம்பினையும் அமைத்துக் கொண்டனர். சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்திதாள் மூலமாக தங்களது செய்திகளை பரவ செய்வதின் வழியாக அயல்நாட்டு முக்கியஸ்தர்கள் மற்றும் இந்திய அறிவுத்துறையினரின் ஆதரவு குரல்களையும் பெற்றனர்.
அணிதிரட்டல் அமைப்பாக்குதல்
ஒரே நாள் பேரணிகளை அதிக எண்ணிக்கையில் மக்களை பங்கேற்க செய்து நடத்துவது ஒப்பீட்டளவில் எளிதானது. ஆனால் அதே அளவு அதிகமான மக்களை (பெண்கள் உட்பட) கூட்டி வைத்து பல மாதங்கள் கடந்து ஒரு எதிர்ப்பு இயக்கத்தை நடத்துவது என்பது – அதிலும் நடுங்கவைக்கும் உயிரை வதைக்கும் கொடுங்குளிர்காலம்,  எரித்து சாம்பலாக்கும் கோடைகாலம், முடக்கிப்போடும் மழைகாலம் ஆகியவற்றைக் கடந்து என்பது – ஒரு சாதாரண சாதனையல்ல. இரவில் போராட்ட இடங்களில் பாதுகாப்பாளர்கள் கண்ணும் கருத்துமாக இருந்ததன் மூலம் பல அசம்பாவித சம்பங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
ஒரு நாள் இரவில் முகாமை எரிக்க இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு ஆளையும் பிடித்துள்ளனர். இதுமாதிரி ஏராளமான நிகழ்வுகளை பத்திரிகையாளர்கள் மற்றும் அறிவுத்துறையினர் அங்கே தங்கியிருந்து அனுபவமாக எழுதியுள்ளனர். இம்மாதிரியான இயக்கத்தை மாதங்கள் கடந்து ஒரு ஆண்டு வரை நடத்துவது என்றால் அதற்கு மிகப்பெரிய திட்டமிடல் மற்றும் நிறுவனத் திறன் அமைப்பின் வலு இருந்திருக்க வேண்டும் என்ற ஆச்சரியம் எல்லோருக்கும் வந்துள்ளது. போராட்டத்தின் ஆரம்பத்திலேயே ஆறு மாதங்களுக்கு தயாராக வந்திருக்கிறோம் என்று சொன்னபோது அதை நம்பியவர்கள் கொஞ்சம் பேராகத்தான் இருக்க முடியும்.
அந்த பகுதிக்கு புறநகர்கள், கிராமங்களிலிருந்து சிலசமயங்களில் பல நூறு கிலோமீட்டர்கள் பயணம் செய்து கலந்து கொள்ள வரும் பல நூறு ஆயிரம் விவசாயிகளுக்கு குளிரை தாங்குமளவு ஆடைகள் – தங்கி தூங்க இட படுக்கை வசதி – உணவு – குளிக்க குடிக்க நீர் வசதி – மின்வசதி – துணிகளை துவைத்து உலர்த்த வசதி – மருத்துவ சேவை – இயற்கை உபாதைகளுக்கான இடங்கள் – நூலகங்கள் மற்றும் மக்களை தொடர்ந்து ஈடுபாட்டுடன் மற்றும் எழுச்சியோடு வைத்திருப்பதற்கு தொடர்ச்சியான கலைநிகழ்ச்சிகள்.
தொடர்பு சாதனங்கள்:
தங்களது செய்திகளை தங்களுக்குள் முகாம்களுக்கிடையே பரிமாறிக்கொள்ள தொடர்பு சாதனங்கள் தேவை. அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த திறன் கொண்ட நிபுணர்கள் தேவை. இவை உள்ளிட்டு செய்தி ஊடகங்களை பராமரிப்பதும் அடக்கம். எல்லாவற்றுக்கும் மேலாக இத்தனை தேவைகளையும் பூர்த்திசெய்ய நிதி – பணம் மிக மிக அவசியம்.
இயக்கத் தலைமைகள் இவற்றை தளவாட ரீதியாகவும், பணரீதியாகவும் தொடர்ந்து தக்கவைக்க தவறினால் அந்த இயக்கம் மிக எளிதாக நீர்த்துப் போய்விடும். இதை உணர்ந்து நிதியை பற்றாக்குறை இல்லாமல் உறுதிசெய்ய விவசாயிகளிடமிருந்து ஆதரவாளர்கள் முற்போக்காளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரிடமிருந்து நன்கொடைகளை உறுதிசெய்தனர் மற்றும் போராட்ட இடங்களுக்கு தேவையானவற்றை முகாம்களுக்கு உடனுக்குடன் கொண்டு வருவதற்கான உறுதியான விநியோக வழிகள் ஏற்படுத்தப்பட்டன.
நங்கூரம் போட்டு அசையாமல் நின்ற கோரிக்கை
இந்த நாட்டின் தலைநகரைச் சுற்றி போராட்டக்காரர்கள் ஆரம்பத்தில் முகாமிட்டு தங்கத் துவங்கிய போது பேச்சுவார்த்தைக்கு அழைப்பது உள்ளிட்ட மோசடி வித்தைகள் மூலம் எளிதாக கலைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் மோடி அரசு இருந்தது. ஆனால், போராட்டத்தலைவர்கள் எவ்வித சமரசத்திற்கும் தயாரில்லை என்பதை தங்களது செய்கைகள் மூலம் மோடிக்கு உணர்த்தினர்.
பேச்சுவார்த்தைக்கு செல்லும்போதெல்லாம் அரசினால் தரப்பட்ட உணவு குடிநீர் எல்லாவற்றையும் தொடவும் மறுத்தனர். தாங்கள் எடுத்துபோன உணவையே உண்டனர். தங்கள்வசம் வைத்திருந்த நீரை குடித்தனர். அதேபோலத்தான் புதிய விவசாய சட்டங்கள் அனைத்தும் எவ்வித நிபந்தனையுமின்றி முழுதுமாக திரும்பப்பெற வேண்டும் என்ற தங்களது கோரிக்கையிலும் சமரசத்துக்கிடமின்றி உறுதியாக நின்றனர்.
ஒருபுறம் ஊடகவியலாளர்கள் இது மோசமான தந்திரம் என்றும் வெறும் பிடிவாதம் என்றும் விவசாயிகளுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டனர். இன்னொருபுறம் விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு மிகுந்த நன்மையையே தரக்கூடியது என்ற மோடி அரசுக்கு ஆதரவாக இடைவிடாத பிரச்சாரம். இவற்றையெல்லாம் முறியடிக்க போராடும் விவசாயிகளுக்கு முன்னால் இருந்த சாத்தியமான ஒரே உத்தியாக இதுதான் இருந்தது.
படிக்க :
டெல்லி விவசாயிகள் பேரணி – மோடி போலீஸ் நடத்திய தடியடி ! படக்கட்டுரை
டெல்லி சலோ : பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியை வீழ்த்திய நிலமற்ற தலித் கூலி விவசாயிகள் !
அரசு தரப்பில் இந்த சட்டங்களில் நன்மை பயக்கும் அம்சங்களும் இருப்பதாக கூறப்பட்டதை ஏற்றுக்கொண்டிருந்தால் போராட்ட அமைப்பு பல்வேறு பிரிவுகளாக பிளவுபட்டு போயிருக்கும் என்பதே விவசாயிகளின் கண்ணோட்டமாக இருந்திருக்கிறது. அவ்வாறு மட்டும் நடந்திருந்தால் ஒவ்வொரு பிரிவையும் விருப்பப்படி ஆட்டுவிப்பது மோடி – அமித்ஷாவுக்கு மிக எளிதான ஒன்றாகியிருக்கும். அதனால்தான் இதை அனுமதிக்கவே முடியாது. இவை விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கும் சட்டங்களே; இவற்றை முழுமையாக திரும்பப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி கொண்டே பேச்சுவார்த்தையிலும் கலந்து கொள்ள சம்மதித்து வந்தனர்.
எல்லாவற்றையும் தெரிந்து கொண்டே அரசுடன் பேச்சுவார்த்தைக்கு ஏன் ஒத்துழைத்தார்கள்? என்ற கேள்வி சாதாரணமாக வரக்கூடிய வாய்ப்பு நிச்சயமாக இருக்கிறது. தங்களுடைய செயல்பாடுகள் எல்லாவிதத்திலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும் அதேவேளை பொதுமக்கள் கருத்தும் தங்களுக்கு எதிர்நிலையில் போய்விடக் கூடாது என்பதில் விவசாயிகள் கவனமாக இருந்தார்கள். இவ்வாறு நடக்கும் அரசுடனான போரில் பொதுமக்கள் கருத்தை தங்கள் பக்கம் வைத்திருப்பதில் முன்னேற்றத்தை சாதித்துக் கொண்டே அதை வைத்து அரசையும் நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கி தங்களது கோரிக்கையான விவசாய சட்டங்களை முழுதுமாக திரும்பப் பெற்றுக்கொள்வதை அரசை ஏற்கச்செய்ய வேண்டும் என்பதை சாதித்தார்கள்.
உறுதிபடுத்திக் கொள்ள நிபந்தனைகள்
எல்லாவற்றையும் தாண்டி இந்த போராட்டம் வெற்றிபெற முக்கிய காரணம் தடைகளை மீறி ஒரு ஆண்டு காலம் நீடித்ததுதான். தொடர்ச்சியான எதிர்ப்புகளை மீறி தொடர்ச்சியாக இந்த நீண்டகாலத்தை கடந்திருக்காவிட்டால் விவசாயிகளது கோரிக்கைகளை மோடி அரசு எளிதாக புறந்தள்ளியிருக்கும். இந்த நாடும் இப்படி ஒரு போராட்டமே நடந்திருக்கவில்லை என மறந்துவிட்டு கடந்து போயிருக்கும். தொடர்ந்து நீண்ட காலத்திற்கு தலைநகரின் எல்லையில் தங்களின் இருப்பை உறுதிசெய்து கொண்டிருந்ததுதான் நாட்டு மக்களின் மனதில், விவசாயிகளின் வாழ்க்கை அவலங்களையும் கோரிக்கை நியாயங்களையும் உயிருடன் வைத்திருக்க முடிந்தது.
அதுமட்டுமல்லாமல் தாங்கள் வெற்றி பெறவேண்டுமானால் குறிப்பிட்ட அளவு தொடர்ச்சியான பார்வையாளர்களை உருவாக்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டிருந்தனர். அதனால் தங்களது கோரிக்கையையும் அதிலிருக்கும் நியாயத்தையும் தொடர்ச்சியாக திரும்ப திரும்ப வலியுறுத்திக் கொண்டிருந்தனர்.
வேளாண் சட்டங்களை எதிர்த்த போராட்டத்தில் வெறுமனே உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டத்தில் மட்டுமே நம்பிக்கை வைத்து வீதிப் போராட்டத்தைக் கைவிடாமல் இருந்தது ஒரு முக்கியமான அம்சமாகும். ஏற்கெனவே நமக்கு வரலாறு காட்டியிருப்பது போல உச்சநீதிமன்றம், ஒன்று அரசுக்கு ஆதரவான முடிவெடுத்து விவசாயிகள் சட்டத்தை ஏற்றுக்கொள்ள உத்தரவிடும் அல்லது நடுநிலையாக ஒரு சமரச முடிவு என்ற பெயரில் மறைமுகமாக அரசுக்கு ஆதரவாக விவசாயிகளை போராட்டத்தை நிறுத்திக் கொள்ள உத்தரவிடும். இந்த நடவடிக்கையில் இணைவதன் மூலம் உச்சநீதிமன்றத்திற்கு பணிய வேண்டும். இல்லையேல் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத வகையில் பொதுமக்களின் கருத்து விவசாயிகளுக்கு எதிராக எளிதாக திரும்பிவிடும் அபாயநிலையும் இருந்தது.
உச்சநீதிமன்றம் என்ன செய்யும் என்பது பற்றிய விவசாயிகளின் மதிப்பீடு துல்லியமானது என நிரூபணம் ஆனது. நீதிமன்றம் தலையிட்டபோது, அது வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முன்வந்தது மற்றும் பிரச்சினையை ஆராய ஒரு குழுவை முன்மொழிந்தது. அத்தகைய குழுவில் நியமிக்கப்பட்ட அனைவரும் விவசாய சட்டங்களின் தீவிர ஆதரவாளர்கள். இவர்கள் என்ன செய்வார்கள்? தவிர்க்க முடியாமல் அரசாங்கம் விரும்பும் சட்டங்களின் அனைத்துக் கூறுகளையும் உயிர்ப்புடன் வைத்துக்கொண்டு சமரசத்தை எட்டபோவதாக பிரச்சாரம் செய்து விவசாயிகளின் போராட்டத்தை நிறுத்திவைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு கொண்டு வந்து விட்டிருப்பார்கள்.
பெரிய தவறுக்காக தூண்டில் போட்டு காத்திருந்த மோடி அரசு :
இதுபோன்ற ஒரு இயக்கத்தில் போராடுபவர்கள் ஏதாவது ஒரு பெரிய தவறு செய்வதற்காக  அரசும் அதிகார வர்க்கத்தினரும் காத்திருப்பார்கள். அப்படி தவறு செய்தால் அதை கையிலெடுத்துக்கொண்டு போராடுபவர்களை போராட்டத்திலிருந்து விலக செய்துவிடலாம் என்பதற்காக. மிருகத்தனமான சக்தி, பணத் தூண்டுதல்கள் அல்லது ஒரு பெரிய எதிர் சக்திக்கு எதிரான மறைமுக உத்திகள் போன்ற கருவிகள் எதுவும் விவசாயிகளிடம் இல்லை. அவர்களிடம் இருந்தது, தங்களது நேர்மையான கோரிக்கை மற்றும் இந்த நாட்டு மக்கள் மீதான உண்மையான பற்று.
போராட்டக்காரர்களைச் சுற்றி அகழி வெட்டியது, தடுப்பரண்கள் கட்டியது, போலீசுத்துறை, இராணுவம் ஆகியவற்றைக் கொண்டு தடுப்புச் சுவர் அமைத்தது ஆகிய நடவடிக்கைகளிலிருந்து மோடி அரசு விவசாயிகளைப் போன்று சாதாரண நிலையில் மக்களின் மீதான பற்றுடன் இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.
ஜனவரி 26-ம் தேதியன்று செங்கோட்டையில் நடந்த டிராக்டர் பேரணியில் பங்கேற்ற விவசாயிகளை இழிவுபடுத்திப் போராட்டத்தை முடக்கிட முயன்றது மோடி அரசு. விவசாயி தலைவர் ராகேஷ் திகாய்த், எந்த நிலையிலும் போராட்டம் தொடரும்; கேவலப்படுத்தும் பிரச்சாரங்களால் எங்களை முடக்கிவிட முடியாது என்று உருக்கமான உரையை ஆற்றி போராட்டத்தின் வீச்சை அதிகப்படுத்தினார்.
காலிஸ்தான் ஆதரவு அல்லது வெளிநாட்டு சக்திகளின் வேலை என்று முத்திரை குத்துவதன் மூலம் இயக்கத்தை சட்டவிரோதமாக்குவதற்கு மோடி அரசும் அதன் ஆதரவாளர்களும் தங்களால் இயன்றவரை முயற்சித்தார்கள். ஆனாலும், போராட்டக்காரர்களையும் போராட்டத்தின் நியாயத்தையும் சிறிதும் அசைக்க முடியவில்லை. நாளாக நாளாக மக்களின் ஆதரவு பெருகவே செய்தது. ஏனெனில், சமூகத்தில் உள்ள உள்ளூர் பெரியவர்கள் தங்கள் நேரடி சமூகங்களுக்குள் மாலை தேநீர் மற்றும் ஹக்காவுக்கான இடைவேளைகளில் அவர்களின் வாய்மொழியில் இயக்கத்தின் காரணங்களை மீண்டும் வலியுறுத்தினர். இது வாட்ஸ்அப் மற்றும் செய்தி ஊடகங்கள் மூலம் செய்திகள் சமூகத்தில் பரவியதை போன்ற வலிமையை பெற்றிருந்தது. மேலும், இது அனைத்து எதிர்கால இயக்கங்களுக்கும் ஒரு பாடமாக உள்ளது.
மாநில அரசுகளின் பலத்தைப் பயன்படுத்தி போராட்டத்தை கலைக்க மோடி அரசாங்கம் பல முறை முயற்சித்தது. எனினும் இந்த கேவலமான தந்திரங்கள் எதுவும் விவசாயிகளிடம் செல்லுபடியாகவில்லை என்பது தெளிவாகிவிட்டது. போராட்டத்தின் தலைவர்கள் விவசாயிகளாக இருந்ததால், வருமான வரி மற்றும் அமலாக்கத் துறை போன்ற புலனாய்வு அமைப்புகளை ஏவிவிட்டு எதிர்கட்சி தலைவர்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.க்கள் ஆகியோரை வழிக்கு கொண்டுவரும் மோடியின் மோசடியான முயற்சிகள் எதையும் விவசாயிகளிடமும் தலைவர்களிடமும் செய்ய முடியாமல் போய்விட்டது. ஏனெனில், அவர்களின் வருமானம் விவசாய வரம்புக்குள் இருந்தது. இறுதியாக மோடி அரசாங்கத்திடம் முடிவு என்பது அவர்களின் விருப்பத்திற்கெதிராக இருப்பதை தவிர்க்க முடியவில்லை.
லக்கீம்புரில் விவசாயிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய்மிஷ்ரா பொதுமேடையில் பேசினார். அதை கண்டித்து அமைதியாக பேரணி நடத்திய விவசாயிகள் மீது அவரது மகன் ஆசிஷ் மிஸ்ரா தலைமையில் வேண்டுமென்றே காரை ஏற்றி அந்த இடத்திலேயே நான்கு விவசாயிகளை கொன்றனர். ஆசிஷ்மிஸ்ரா துப்பாக்கியால் விவசாயிகளை நோக்கி சுட்டதும் அம்பலமானது. பட்டபகலில் நடந்த இந்த மாபாதக கொலைகளுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மோடியும் ஆதித்யநாத்தும் பல நாட்கள் வரை செயல்பட மறுத்ததும் மக்கள் மத்தியில் கொதிநிலையை உருவாக்கியது.
படிக்க :
டெல்லி விவசாயிகள் போராட்டம் : ஷாகின் பாக் – மூதாட்டி பில்கிஸ் தடுத்து நிறுத்தம் !
அரியானா : போராடிய விவசாயிகள் மீது போலீசு கொலைவெறித் தாக்குதல் !
அந்த நேரத்தில், மேற்கு உ.பி.யில் பா.ஜ.க. வாக்குகளை மீண்டும் பெறவேண்டுமென்றாலோ, பஞ்சாபிற்குள் கால் வைத்து பிரச்சாரம் செய்ய வேண்டுமென்றாலே அதற்கும் ஒரே வழி விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்து விவசாயச் சட்டங்களை மொத்தமாக ரத்து செய்வதே என்பதை விவசாயிகள் இயக்கத்தின் ஆதிக்கம் உறுதி செய்தது. கடைசியில் வெல்லப்பட முடியாதவர் என்ற மோடியின் பிம்பம் உடைந்து நொறுங்கியது.
விவசாயிகள் வெற்றி பெற்றதற்குக் காரணம், அவர்கள் இயக்கத்தை நீண்டகாலம் தக்கவைத்து, மக்கள் ஆதரவை உயிர்ப்புடன் வைத்திருந்தது, அதே நேரத்தில் மோடியின் அடக்குமுறை யுக்திகள் அம்பலமாகியதன் விளைவாக தங்களையே பலவீனப்படுத்திக் கொண்டது, அதன் மூலம் தொடர்ந்து மக்களின் ஆதரவை இழந்தது. போராட்டங்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தேர்தல்கள் அடிவானத்தில் உள்ளன என்ற உண்மைதான், மோடி அரசாங்கத்திற்கு நெருக்கடியை தீவிரப்படுத்தியது.
விவசாயிகள் போராட்டம் எதிர்கால இயக்கங்களுக்கு பல படிப்பினைகளை வழங்கியிருக்கிறது. அதே வேளையில், அது மோடி அரசுக்கும் பல பாடங்களை கற்பித்திருக்கலாம். இந்த போராட்டம் வெற்றி பெற்றிருப்பதானது மோடி அரசுக்கு மக்களின் எதிர்ப்பு பொதுவெளியில் இயக்கங்களாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் திறக்கப்பட்டுள்ளன. வெல்லவே முடியாது என்ற இந்த மோடி அரசாங்கத்தின் பிம்பம் சிதைந்து சின்னாபின்னமாகியிருக்கிறது.
தோற்று போயிருப்பது மக்களுக்காக யோசிக்கும் அரசு அல்ல. கார்ப்பரேட்களின் நலனை தனது உயிர்மூச்சாக கொண்டிருக்கும் காவி – கார்ப்பரேட் பாசிச மோடியின் அரசு. போராடிய அப்பாவி விவசாயிகளுக்கு எதிரான அடக்குமுறைக்கான சாத்தியக் கூறுகளையும் புறக்கணிக்க முடியாது. அந்த எச்சரிக்கை உணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்த செய்து அவர்களுக்கு பாதுகாப்பாக, அரணாக முற்போக்கு ஜனநாயக திராவிட புரட்சிகர தொழிலாளர் வர்க்கத்தினர் விளங்க வேண்டும். அடக்குமுறையை எதிர்கொண்டு போராட தயாராக வேண்டும்.
நாடு முழுவதும் ஆவலோடு எதிர்பார்த்திருப்பது இதனைத்தான்!

மணிவேல்
மூலக் கட்டுரை : த வயர்
மூலக் கட்டுரையாளர்கள் : சிவம்சங்கர்சிங், ஆனந்த் வெங்கடநாராயணன்

நவம்பர் 26 : விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் மக்கள் அதிகாரம் பங்கேற்பு!

கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான விவசாயிகள் விரோத மூன்று வேளாண் சட்டங்களையும் இரத்து செய்வதாக மோடி வாயில் சுட்ட வடையை ஏற்காமல், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை திரும்பப் பெறுவது பற்றி முடிவு செய்ய முடியும் என்று டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிக்கை வெளியிட்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்று (29/11/2021) நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதாவை நிறைவேற்றியது மோடி அரசு. விவசாயிகளின் உறுதிமிக்க போராட்டத்தின் வெற்றி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்நிலையில் கடந்த நவம்பர் 26, 2021 அன்று டெல்லியில் விவசாயிகள் போராடத் துவங்கியதில் இருந்து ஓராண்டு நிறைவுபெற்றதையொட்டி தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் சங்கங்களுடன் இணைந்து புரட்சிகர அமைப்புகளும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் செய்தித் தொகுப்பு !
மதுரை :
கார்ப்பரேட் ஆதரவு 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்திய விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு நவம்பர் 26 மதுரை திருநகர் யூனியன் அலுவலகத்தின் அருகில் விவசாய ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து பேரணி, பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றன.
ஒன்றிய அரசே ! மோடி அரசே !
♠ நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முதல் நாளிலேயே விவசாயி விரோத 3 சட்டங்களை ரத்து செய்!
♠ அனைத்து வேளாண் விளை பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதப்படுத்தும் வகையில் சட்டம் இயற்று!
♠ மின்சார திருத்த மசோதா 2020 திரும்பப் பெறுக!
♠ போராட்டத்தில் உயிரிழந்த அனைத்து விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு வழங்குக!
♣ தொழிலாளர் விரோத நான்கு தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெறு!
ஆகிய கோரிக்கைகளை ஒன்றிய மோடி அரசுக்கு முன்வைத்து ஐக்கிய விவசாயி முன்னணி பேரணி பிரச்சார பொதுக்கூட்டம் நடத்தியது. இதில் மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் பல்வேறு முற்போக்கு அமைப்பினர், கட்சிகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

தகவல்:
மக்கள் அதிகாரம்
மதுரை மண்டலம்
000
சென்னை :
வம்பர் 26, 2021அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் சார்பாக, மூன்று வேளாண் சட்டங்களை மோடி அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்ததையொட்டியும், மீதமுள்ள கோரிக்கைகளான அத்தியாவசிய வேளாண் பொருட்களுக்கு அடிப்படை ஆதார விலையை கொடு, மின்சார மசோதாவை ரத்து செய்! என்ற முழக்கங்களை முன் வைத்தும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
SKM சென்னை பெருநகர குழுவின் சார்பாக பங்கேற்ற அமைப்புகளின் தலைவர்கள் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர். சென்னை மண்டல மக்கள் அதிகாரம் தோழர் அமிர்தா உரையாற்றினார்.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
000
தருமபுரி :
மூன்று வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் ஓராண்டு நிறைவை ஒட்டியும், போராட்டத்தில் இறந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், விவசாயிகள் மீதான பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு எதிரான மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். முதல் நாள் கூட்டத்தொடரிலேயே மூன்று வேளாண் சட்டம் திரும்பப் பெறும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) ஒருங்கிணைப்பில் பேரணி ஆர்ப்பாட்டம் தருமபுரி தலைமை தபால் நிலையம் அருகில் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு SKM தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தோழர் அர்ஜுனன்   தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்ட உரை :
தோழர் கோபிநாத், மக்கள் அதிகாரம்.
தோழர் முத்து, அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கம், மாவட்ட செயலாளர்.
தோழர் கோவிந்தராஜ், சி.பி.ஐ. (ML) விடுதலை, மாவட்ட செயலாளர்.
தோழர் பிரதாபன், தமிழ் மாநில விவசாயிகள் சங்கம், மாவட்ட செயலாளர்.
தோழர் கிள்ளிவளவன், விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம், மண்டல செயலாளர்.
தோழர் ரங்கநாயகி, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு, மாவட்ட பொறுப்பாளர்
ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் ரவீந்திரன் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர் மலையன் அவர்கள் நன்றி உரையாற்றினார்.

This slideshow requires JavaScript.

தகவல்:
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்
9790138614
000
கோவை :
ணிந்தது மோடி அரசு! கார்ப்பரேட் ஆதரவு 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவுப் பேரணியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக கோவை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நவம்பர் 26-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் அதிகாரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜன் மற்றும் பகுதித் தோழர்கள் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்.
94889 02202

பெண்ணின் உடல் அதிகாரம் செலுத்துவதற்கானதல்ல ! ஆடை அவமதிப்பதற்கானதல்ல !

<< முந்தைய பாகம்
யற்கை பல்வேறு நிறங்களை உடையது. அதில் கருப்பு நிறம் அனைத்து வண்ணங்களையும் உள்ளடங்கியது. இன்றைய சமூக நிகழ்வுகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், வறுமைப்பட்டவர்கள், கல்வியறிவற்றவர்கள், நாகரீகம் அல்லாதவர்கள், அழகற்றவர்கள் ஆகியோருக்கான குறியீட்டு நிறமாகவே சித்தரிக்கப்படுகிறது.
திருமண சந்தையில் பணம் என்பதைப் போலவே, அதற்கு சற்றும் குறையாத அழுத்தத்துடன் பெண்ணின் நிறமும் தீர்மானிக்கிற சக்தியாக விளங்குகிறது. அதாவது சாதாரண மனிதனின் அழகுணர்ச்சியைப் பொறுத்தமட்டில், கருப்பு என்பது அழகற்ற நிறமாகும். இக்கருத்து சமூகத்தின் பொதுச் சிந்தனையில் நிரப்பப்பட்டிருக்கிறது.
ஒரு சமூகத்தின் வாழ்க்கை நெறிகளை வரலாற்றுப் போக்கில் அளவிட்டு அறிய உதவும் சான்றுகளில் இலக்கியம் முதன்மையானது. தமிழ்ச் சமூகம் மிக நீண்ட இலக்கிய மரபினை உடையதாக இருக்கிறது.
படிக்க :
♦ “கற்பழிப்பா” ? பாலியல் வல்லுறவா ? || வி.இ.குகநாதன்
♦ பாரதத்தின் ‘கற்பு’, இந்தியாவின் ‘கற்பழிப்பு’ – ஆர்.எஸ்.எஸ் பித்தலாட்டம்!
தொல்காப்பியம், திருக்குறள் போன்ற தொன்மையான தமிழ் நூல்களில் கருப்பு நிறம் குறித்த பாகுபாடோ, உயர்த்தி தாழ்த்திக் கூறுதலோ கிடையாது. தொல்காப்பியத்தில், “கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள” எனத் தொடங்கும் செய்யுளை பலரும் நிறப் பாகுபாட்டைக் குறிப்பதாகக் கருதுகின்றனர். ஆனால் இங்கு நாம் கவனிக்க வேண்டியது, தமிழில் “கறுப்பு” என்பது கறுவுதல் – பகை கொள்ளுதல் என்று பொருள்தரும். “கருப்பு” என்பதுதான் நிறத்தைக் குறிக்கும் சொல்லாகும்.
தொல்காப்பியத்தின் அச்செய்யுள், “பகை கொள்வதையும், சினம் கொள்வதையும் (சிவத்தல்), கடுங்கோபம் (வெகுளி),” ஆகியவற்றைக் குறிக்கிறது.
அதே போல திருக்குறளில்,
“கறுத்தின்னா செய்த அக்கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்”
என்ற குறளும் கறுத்தல் என்பதை பகை கொள்ளுதல் என்றே பொருள்படும். ஆகவே இவை கருப்பு நிறத்தை குறைத்து மதிப்பிடும் செய்யுள்கள் அல்ல.
இவ்விரு நூல்களுக்குப் பின் தோன்றிய மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகியவற்றில் மனித உடல் சார்ந்த வர்ணனைகள் இருக்கின்றன. ஆனால் அவையனைத்தும் உடல் சார்ந்தும், அவர்களின் உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இருந்துகிறது. உயர்வு, தாழ்வு, என்ற கருத்தோட்டங்கள் இந்த வருணைகளில் காணப்படவில்லை .
ஆனால் பக்தி இலக்கியங்களில் நிறங்கள் இடம்பெற்றுள்ளன. பக்தி இலக்கியங்களில் நாம் காணும் மற்றொரு செய்தி கருப்பு நிறம் போற்றுதலுக்குரிய நிறமாய் குறிப்பிடப்படுகிறது. திருமாலை ஆண்டாள் “கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக்கிடப்பேன்” என்கிறார்.
தன்மீதுபட்ட ஒளியைப் பளபளப்புடைய கருப்புநிற மனிதத்தோல் எதிரொளி செய்துகாட்டும் என்பதை கம்பரும் சேக்கிழாரும் விவரிப்பது தனி அழகாகும் என்று தனது “பண்பாட்டு அசைவுகள்” எனும் நூலில் பேராசிரியரும், தமிழகத்தின் முன்னணி ஆய்வாளருமான தொ. பரமசிவம் அவர்கள் குறிப்பிடுகிறார்.
ஆகவே, பண்டைய தமிழ்ச் சமூகம் நிறத்தின் அடிப்படையில் எந்த பாகுபாட்டையும் காட்டவில்லை. ஆனால் இன்று கருத்த நிறத்தை சமூகம் பார்க்கும் விதம் மோசமானதாகவே இருக்கிறது. அழகுணர்ச்சியில் நிறப் பாகுபாடு புகுந்தமுறை என்பது தனியாக ஆய்வு செய்யத்தக்க ஒன்றாகும்.
நிர்வாணம் அசிங்கமல்ல அதிகாரம் :
“ஆடைதான் பெண்ணின் கவசம். அது லேசாக விலகினாலோ, ஏதேனும் ஒரு கயவனால் அது நீக்கப்பட்டாலோ, அல்லது தனது ஆடையில்லாத புகைப்படம் பொதுவெளியில் வெளியானாலோ அது ஒரு பெண்ணிற்கு மிகப்பெரும் அவமானம்” என்பது ஒரு பொதுப்புத்தியாக உலகம் முழுவதும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அது இன்றளவும் நீடிக்கிறது. அதன் விளைவாகத்தான் பாலியல் வன்முறைக்குள்ளான பெண்கள் சமூகத்தின் புறக்கணிப்பு அச்சம் மற்றும் அவமான உணர்ச்சியாலும் தன் உயிரை தானே மாய்த்துக் கொள்ளும் அவலம் இன்னும் நீடிக்கிறது.
“எந்திரன்” எனும் திரைப்படத்தில், நிர்வாணமாக இருக்கும் ஒரு பெண்ணை, உயிர் காக்கும் நோக்கோடு விபத்தில் இருந்து காப்பாற்றிய ‘சிட்டி’ எனும் எந்திரனை, மனித உணர்வுகளை அறியாத ஒரு இயந்திரமாகக் காண்பித்து, அந்தப் பெண் செய்யாத தவறுக்காக, பொதுச் சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட அவமான உணர்ச்சிக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொள்வதை மனித உணர்வாகவும் காண்பிக்கப்பட்டிருக்கிறது.
எதிர்பாராத சந்தர்ப்பத்திலோ, ஆணாதிக்கத் திமிரின் வன்முறையாலோ நடத்தப்படும் வன்முறை மற்றும் ‘அவமானப்படுதல்’ காரணமாக உயிரை விடுவது என்பதன் புரிதல் என்ன ? தன் உடலை ஒரு  ஆண் பார்ப்பது, அதாவது அத்துமீறி பார்ப்பதே தனக்கு அவமானம் என்கிற எண்ணம் மட்டுமல்ல, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஒரு பெண்ணை “நடத்தை கெட்டவளாக”, “கெட்டுப் போனவளாக”, “ஆண்களின் இச்சைக்கு இடம் கொடுத்தவளாக” சித்தரித்து இழிவுபடுத்தும் பொதுச் சமூகத்தின் இழிவான எண்ணமும் முக்கியக் காரணம். வன்கொடுமை செய்யப்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொள்வதற்கும், மனச்சிதைவு அடைவதற்கும் பின்னால் இந்த எண்ணம் தானே இருக்கிறது?
பாலியல் வன்கொடுமை என்பது அதை செய்யும் ஆணிற்கான அவமானமே அன்றி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான அவமானம் இல்லை. பெண்களுக்கெதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்தியா போன்றொரு நாட்டில், “நடந்தது உன் தவறல்ல.. உன் மானம் உன் உடலில், உன் யோனியில் இல்லை” என்ற நம்பிக்கை வார்த்தைகளும் தான் தேவைப்படுகின்றன.
காலா திரைப்படத்தில், போலீஸ்காரர்கள் தன் பேண்ட்டை உருவிய பிறகும், கையை கூனிக் கொண்டு நிற்காமல், பேண்ட்டை எடுத்து மறைக்கக் கூட முயலாமல், தனது உடலை வைத்து தன்னை அவமதிக்க நினைத்தவனை, அது எனக்கு அவமானம் அல்ல, உன் புத்திக்கு உரைக்கும் வகையில் பதிலடி கொடுக்கிறே பார் என லத்தியை எடுத்து அதே போலீசுக்காரனைத் தாக்கும் பாயல் கதாப்பாத்திரங்களால் தான் பாலியல் வன்முறையை ஒழித்துக் கட்ட முடியும்.
ஆடை – அதிகார வர்க்கம் தன் அதிகாரத்தை செலுத்தும் ஓர் கருவி :
ஆளும் வர்க்கங்களும் அதிகார வர்க்கமும் தமது அதிகாரத்தை அடுத்தவர் மீது செலுத்துவதற்கான ஒரு கருவியாக ஆடை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவமதிக்கப்படுவதற்கு, ஒடுக்குவதற்கும், கூனிக் குறுகச் செய்வதற்கும் நிர்வாணம் குறித்த அவமான உணர்ச்சி அதிகாரத்தால் பயன்படுத்தப்படுகிறது.
அதனால் தான், உலகம் முழுவதிலும் இராணுவ ஆக்கிரமிப்பு நடக்கும் இடங்களில் எல்லாம் பெண்கள் துகிலுறியப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்படுகிறார்கள். காலா படத்தில் வரும் பாயல் போல அந்த அதிகாரத் திமிரை பொதுவெளியில் அம்பலப்படுத்தும் நோக்கோடு, “Indian Army Rape us” என்று இந்திய இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட மணிப்பூர் தாய்மார்கள் நிர்வாணப் போராட்டம் நடத்தினர்.
மணிப்பூரில் தங்ஜம் மனோரமா என்ற பெண்ணை விசாரணைக்காக அழைத்துச் சென்ற இந்திய ராணுவம், அவரை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி கொன்று வீசியது. இதற்கு எதிரான போராட்டம் மணிப்பூர் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. அது வெறுமனே மனோரமாவுக்காக நடத்தப்பட்ட போராட்டம் அல்ல. மணிப்பூரில் இராணுவம் தொடர்ந்து பெண்களின் மீதான பாலியல் வன்முறையை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வந்ததற்கு எதிர்வினையாகவே அத்தகைய போராட்டங்கள் நடைபெற்றன.
அதற்கெதிராக போராடத் திரண்டவர்களில், 12 பெண்கள் இந்திய இராணுவ அலுவலகத்தின் முன் தங்கள் ஆடைகளைக் களைந்து இந்திய இராணுவத்திற்கு எதிரான தங்கள் போராட்டத்தை தொடங்கினர். “அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கிறது. எங்களிடம் எங்கள் உடல்தான் இருக்கிறது. உடலே எங்கள் ஆயுதம். நாங்கள் மனோரமாவின் தாய்மார்கள். இந்திய ராணுவம் எங்களையும் பாலியல் வன்முறைக்குள்ளாக்கட்டும்” என்ற கோஷத்துடன் உடலை ஆயுதமாக்கி போராட்டம் நடத்தினர்.
அந்த பெண்களின் போராட்டம், ‘ட்ரெஸ்ஸை அவுத்துப் போட்டு’ செய்யும் போராட்டம் அல்ல. அதிகார வர்க்கத்தின் துகிலுறிப்பு ஆயுதத்திற்கு எதிராக தங்கள் நிர்வாணத்தை ஆயுதமாகப் பயன்படுத்தினர் அந்தத் தாய்மார்கள்.
உலகம் முழுக்க பெண்ணின் உடலை அவமானப்படுத்துவதையே, ஒரு சமூகத்தையோ, பெண்களையோ ஒடுக்குவதற்கான ஒரு ஆயுதமாக அதிகார வர்க்கம் பார்க்கிறது. சமீபத்தில் வந்த “ஜெய்பீம் ” படத்தில் கூட லாக்கப்பில் இருக்கும் பெண்ணை ஆடை அவிழ்ப்பது தான் அவரை நிலைகுலையச் செய்யும் ஆயுதம் என்பதை தன்னளவில் அந்த போலீசு கும்பல் நடைமுறைப்படுத்துவதை காட்சிப்படுத்தியிருப்பார்கள்.
இந்தியாவிலோ கூடுதலாக, பெண்ணுடல் ஒரு குடும்பத்தின் கௌரவமாக, பரம்பரை மானமாகப் பார்க்கப்படுகிறது. இங்கிருந்துதான் ஆடை குறித்த அரசியலும் பெண்கள் மீதான ஒடுக்குமுறையும் துவங்குகிறது.
இன்னும் ஆழமாகப் பரிசீலிப்போமானால் பெண்ணுடல் மீதான அதிகாரம் என்பது சொத்துடைமை கொண்ட வர்க்கங்கள், முதலாவதாக தங்களது சொத்துடைமையை பாதுகாப்பதற்கான ஆயுதமாகவும், இரண்டாவதாக சொத்தில்லாத வர்க்கத்தை ஒடுக்குவதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இங்கு நடக்கும் சாதி ஆணவப் படுகொலைகள் முதலாவதற்கும், இராணுவத்தாலும் ஆதிக்கச் சாதியினராலும் ஒடுக்கப்பட்ட சாதியினரோ, இனத்தவர்களோ பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுவது இரண்டாவதற்கும் கண்கூடான உதாரணங்கள் ஆகும்.
பெண்களை ஒடுக்கும் வேறுவிதமான நைச்சியமான ஆயுதங்கள் :
“ஒரு பெண் இப்படித்தான் அடக்க ஒடுக்கமாய் இருக்க வேண்டும்” என்று ஒரு ஆண் மூலம் சொல்வது ஒருவகை அரசியல். இது வெளிப்படையான அரசியல். இதற்கு உடனே எதிர்வினைகள் கிளம்பி அத்தகைய கருத்துக்கள் நொறுக்கப்பட்டு விடும். இதையே ஒரு பெண் மூலம் சொல்வது இன்னொரு வகை அரசியல். இதற்கும் கொஞ்சம்  தாமதமான, கொஞ்சம் மென்மையான எதிர்வினைகளை கிளப்பி அவை புறம் தள்ளப்பட்டும் விடும்.
ஆடை படத்தில் பெண்ணியவாதியாக காட்டப்படும் காமினி – அதாவது, பெண்ணுக்கு எதிரான அத்தனை பிற்போக்குத்தனங்களையும் எதிர்க்கும், சுதந்திரமாய் வாழும் ஒரு பெண் – மூலமே பெண்கள் அடங்கிச் செல்ல வேண்டும் என்று சொல்வதுதான் புதிய வகையான நைச்சியமான அரசியல்.
இது முன்னதைப் போன்ற எந்தவொரு பெரிய எதிர்வினைகளையும் கொண்டு வராது. ஏனென்றால் இதைச் சொல்வதே ஒரு தைரியமான பெண்தானே? அதுவும் அத்தனை பிற்போக்குத்தனங்களையும் எதிர்த்து வாழ்ந்த ஒரு பெண்ணாயிற்றே? அதுவும் அவள் சாதாரணமாக சொல்லவில்லை. ஒரு பதறவைக்கும் சம்பவத்திற்கு பிறகே இதை சொல்கிறாள் என்றால் அதை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியுமா? ஏற்றுக்கொண்டு தானே ஆக வேண்டும்? ‘அவளே சொல்லிட்டா பாத்தல?’ என்று விதிவிலக்குகளைக் காட்டி பெண்களை ஒடுக்கும் இந்த மூன்றாவது வகை அரசியல்தான் மிகவும் ஆபத்தானது.
இட ஒதுக்கீடு தேவையில்லை என்று ஒரு ஒடுக்கப்பட்ட மாணவனையே சொல்ல வைப்பது போன்றது இது. ஸ்டெர்லைட் தேவை என்று தூத்துக்குடி மக்களையே சொல்ல வைத்து வீடியோ எடுப்பது போன்றது இது. ஆடை படம் முடிவதும் இதே தொணியில்தான்.
000
நம் நாட்டில் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் பாலியல் வன்புணர்வுகள் நிகழ்கின்றன. ஒரு பெண் ஒவ்வொரு கணத்திலும் பாதிக்கப்படக்கூடியவள்; அது காலையோ அல்லது மாலையோ எதுவாயினும் ஒன்றே. இதற்குள் தான் சமூகம் ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தகைய பாலியல் வன்முறைகள் அனைத்தும் இயல்பானவையாக மாற்றப்படுகின்றன. சமீபத்தில் இறந்த சின்மயா பள்ளி மாணவியிடம், “ பேருந்தில் இடிக்கிறார்களே, அது போல இதையும் கடந்து போ” என்று பாலியல் வன்முறையை இயல்பாக்கி ஒரு பெண் தலைமை ஆசிரியர் கூறியது ஒரு உதாரணம். அந்தத் தலைமை ஆசிரியையான மீரா ஜாக்சன் இன்றைய சமூக நிலைமையை பிரதிபலிக்கும் கண்ணாடி.
இங்கு தேவையானது, பாலியல் வன்முறையாளர்களைத் தண்டிப்பது மற்றும் பெண்கள் குறித்த ஆண்களின் மனநிலைமையை மாற்றுவது தானேயன்றி, பாதிக்கப்பட்டவர்களிடம் பாலியல் வன்முறையை இயல்பான ஒன்றாகக் கருதி கடந்து போகச் சொல்பவர்களின் உபதேசங்கள் அல்ல.
பெண்கள் மேற்கத்திய ஆடை அணிவதோ, இரவில் பயணம் செய்வதோ, நள்ளிரவு வரை வெளியில் இருப்பதோ பாலியல் வன்முறைகளுக்கான காரணம் இல்லை. இந்தியாவில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில், வர்க்கம் மற்றும் மதங்களைக் கடந்து எங்கும் எல்லா இடங்களிலும் இம்மாதரியான எண்ணங்கள் நிரம்பி இருக்கிறது. இவை எதுவும் செய்யாத பெண்களே பெருமளவில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஆகவே பிரச்சினை வன்முறையைச் செலுத்துவோரான ஆண்களிடம் உள்ளது.  அவர்களுக்கு இந்தச் சமூகம் ஊட்டி வளர்க்கும் ஆணாதிக்கச் சிந்தனையில்தான் பிரச்சினை பொதிந்துள்ளது.
பெண்ணின் உடலின் மீது தாம் அதிகாரம் செய்வதற்கான உரிமை இருப்பதாகத் தான் ஆணாதிக்கச் சிந்தனை ஒரு ஆணுக்குப் போதிக்கிறது. அவர்களது பொருளாதார ரீதியான தற்சார்பின்மை, அவளை தமது உடமையாக அல்லது தாம் ஆக்கிரமிக்கத்தக்க ஒரு பொருளாகப் பார்க்கிறது.
படிக்க :
♦ பெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் !
♦ பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குடும்பத்தில்தான் அதிகம் !
ஒரு பெண் ஒரு ஆணின் இச்சைக்குக் கீழ்படிவதற்கு அழுத்தம் கொடுக்கப்படலாம். அதற்கு அப்பெண் முடியாது என்று  சொல்லிவிட்டாலோ, அமைதி காத்தாலோ அவளுக்கு உடன்பாடில்லை என்பதுதான் பொருள்.
அதே சமயத்தில் ஒரு பெண் கொலை மிரட்டல், வன்முறை மிரட்டலுக்குப் பயந்தோ, பொருளாதார ரீதியாக வேலைபறிப்பு, வருமான இழப்பு, வாழ்வாதார இழப்பு என்ற வகையிலோ, கலாச்சாரரீதியாக, நிர்வாண புகைப்படம், பொதுவெளியில் அவமதித்தல் என்ற வகையிலோ நேர்மறையாகவோ, மறைமுகமாகவோ மிரட்டப்பட்டு ஒப்புக் கொள்ளச் செய்யப்பட்டாலோ, அல்லது அவள் அமைதியாக இருந்தாலோ அப்பெண்ணிற்கு உடன்பாடில்லை என்றுதான் பொருள். “No means No”. ஆனால், “மவுனம் சம்மதம்” என சினிமா டயலாக்குகளை அடித்து சீண்டலைத் தொடர்வது, வற்புறுத்துவது ஆகியவையெல்லாம் ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடுகள்.
மொத்தத்தில், பெண் உடல் அதிகாரம் செலுத்துவதற்கான பொருள் அல்ல. அவளது ஆடையும் அவமானப்படுத்துவதற்கான ஆயுதமும் அல்ல.
இந்திய சமூகமே, பெண்களை யாரும் கொண்டாட வேண்டாம். அவள் உடலைப் புனிதப்படுத்த வேண்டாம். உங்கள் கவுரவங்களை அவள் உடலில் கொண்டுபோய் பாதுகாக்க வேண்டாம். அவள் அவளாகவே இருக்கட்டும்.  இந்தப் புரிதலை எல்லோரிடத்திலும் விதைப்போம் !
(முற்றும்)
சிந்துஜா
சமூகச் செயற்பாட்டாளர்.
disclaimer

ஆங்கிலேயர் காலத்திய நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் || நா. வானமாமலை

0
தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 21
முதல் பாகம்…………………………………………………………………………………………முந்தைய பாகம்
நா. வானமாமலை
ஆங்கிலேயர் காலத்தில் வரலாற்றுப் பாடல்கள்
தன் பின்னர் ஆங்கிலேயர் ஆதிக்கம் மறைமுகமாகவும், அதன் பின்னர் நேரிடையாகவும் வளரத் தொடங்குகிறது. இவ்வளர்ச்சி எதிர்ப்பின்றி நடைபெற்றுவிடவில்லை.
பூலித்தேவர் கதை
வெவ்வேறு காலங்களில் எட்டயபுரத்தாரும், கட்டபொம்மன் முன்னோரும், சிவகிரி வன்னியரும், வடகரைச் சின்னணைஞ்சாத் தேவரும் நவாபையும், அவர்களது வசூல் குத்தகைதாரர்களான ஆங்கிலேயர்களையும் எதிர்த்து நின்றனர். ஆனால் அவர்களிடையேயிருந்த உட்பூசல்கள் காரணமாக எல்லோரும் ஒன்று சேரவில்லை. 1795-ல் பூலித்தேவர் முடிந்த அளவுக்குப் பாளையக்காரர்களை ஒன்று திரட்டி வரிகொடா இயக்கம் நடத்தினார். அவரை அடக்காமல் தென்பாண்டி மண்டலத்துப் பாளையங்களை அடக்க முடியாதென்று கண்ட ஆங்கிலேயர்கள் கர்னல் ஹீரான், மாபூஸ்கான். கம்மந்தான் கான்சாகிப் என்ற மூன்று தளபதிகளின் தலைமையில் பெரும்படையை அனுப்பி வைத்தார்கள்.
சிறிய படையோடு நெற்கட்டான்செவல் கோட்டையிலும், மலையரண்களிலும் புகுந்துகொண்டு சமயம் நேர்ந்தபோது விரைவாகப் பாய்ந்து பெரும் படையைத் தாக்கிய பூலித்தேவரை அவர்களால் அடக்க முடியவில்லை . அவரது திண்மையும், வீரமும் மற்றப் பாளையக்காரர்களையும், மக்களையும் கவர்ந்தது. அவருக்கு ஆதரவு திரண்டது. அவர் ஆங்கிலேயரை எதிர்க்கும் அனைவரையும், ஓரணியில் இணைக்க முயன்றார். முடிவில் ஐதர் அலியோடு தொடர்பு கொண்டு தென்னாடு முழுவதிலும் ஆங்கில எதிர்ப்புப் போரை விஸ்தரிக்க முயன்றார். ஆனால் எதிர்ப்பு அணியிலேயே பல பிளவுகள் ஏற்பட்டதால் இதனை அவரால் சாதிக்க முடியவில்லை . ஆனால் இம் முயற்சியால் உயிர்விட்ட பூலித்தேவர் விடுதலை வேட்கைக்கும், வீரத் தியாகத்துக்கும் ஒளிவிளக்காக விளங்குகிறார்.
அவரது வரலாறு ஆங்கில ஆசிரியர்களது நூல்கள் வாயிலாகவே நமக்குக் கிடைக்கிறது. அவற்றில் அவரைக் கலகக்காரராகவும், கொள்ளைக்காரராகவுமே சித்திரிக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் அவரைப்பற்றிய தனி நாட்டுப்பாடல்களும், ஒரு ஒயில் பாட்டும், சிந்துப் பாடலும் வழங்கி வருகின்றன. அவை இன்னும் முழுமையாக அச்சாகவில்லை. சிற்சில பாடல்களே வெளியாகியுள்ளன. அவை சேகரித்து வெளியிடப்பட வேண்டும்.
படிக்க :
திப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி !
விடுதலைப் போரின் வீர மரபு – அறிமுகம்
கான்சாகிபு கதை
இப்போரில் ஆங்கிலப் படையின் தளபதி யூசப் கான் என்பவன், அவன் இந்துவாக இருந்து, ஒரு முஸ்ஸீம் வணிகனால் அபிமான புத்திரனாக வளர்க்கப்பட்டான். அவன் நவாபின் படையில் சிப்பாயாகச் சேர்ந்து தனது வீரத்தாலும், திறமையாலும் தளவாயாக உயர்ந்தான். பரங்கிமலையிலும், சதுரங்கப்பட்டணத்திலும் காலூன்றியிருந்த டச்சுக்காரர்களின் கோட்டைகளைப் பிடிக்க ஆங்கிலேயருக்குத் துணை செய்தான். அவனது போர்த் திறமையைக் கண்டு வியந்த ஆங்கிலேயர்கள் அவனைத் தங்கள் படையில் சேர்த்துக்கொண்டு கம்மந்தானாக (Commander) நியமித்தனர். தென்னாட்டை அடக்க அவனையே அனுப்பி வைத்தார்கள். பல ஆண்டுகள் முயன்று அவன் தென்னாட்டுப் பாளையங்களை அடக்கினான்.
முக்கியமாகப் பூலித் தேவரது வலிமையை ஒடுக்கினான். பல கொடுமைகள் செய்து ஆங்கிலேயர் ஆட்சியைத் தென்னாட்டில் நிறுவினான். ஆனால் ஆங்கிலேயர் நவாபின் விருப்பப்படி அவனை நவாபின் படைக்கு அனுப்பிவிட முடிவு செய்தனர். இவ்வாறு அவனது செல்வாக்கைக் குறைத்துவிட அவர்கள் முயன்றனர். ஆனால் பாளையக்காரர்களின் வீரவுணர்வைக் கண்ட அவன் தென்னாட்டில் சுயேச்சை அரசை நிறுவ எண்ணி மதுரையில் முடிசூட்டிக் கொண்டான்.
நவாபும், ஆங்கிலேயரும் அவனை ஒழித்து விட எண்ணினர். அவன் ஏற்கனவே ஆங்கிலேயரின் கையாளாகத் தென்னாட்டின் பாளையக்காரர்களை விரோதித்துக் கொண்டிருந்தான். ஆகவே அவனுக்கு இருபுறமும் இடி தோன்றியது. ஏககாலத்தில் சிவகங்கையையும் ஆங்கிலேயரையும் எதிர்த்தான். சிவகங்கையின் மன்னன் ஆங்கிலேயர்களோடு சேர்த்து கொண்டான். அதன் பின்னர் நிகழ்ந்த போரில் கான்சாகிப் தோற்றான். சூழ்ச்சியால் அவன் சிறைப்பட்டுத் தூக்கிலிடப்பட்டான். கடைசிக் காலத்தில் ஆங்கிலேயனை எதிர்த்த கான்சாகிப், தனது முற்காலத்துச் செயல்களால் தென்னாட்டுப் பாளையக்காரர்களை ஒன்றுதிரட்டி ஆங்கிலேயருக்கு எதிரான முன்னணியை உருவாக்க முடியவில்லை. அவனது செயல்களின் விளைவால் அவன் அழிந்தான்.
அவனது வரலாறு ஆங்கிலேய ஆசிரியர்கள் எழுதிய வரலாற்று நூல்களில் குறிப்புகளாகக் காணப்படுகின்றன. S.C.ஹில், கால்டுவெல் ஆகியோர் எழுதிய நூல்களிலும் மதுரை, திருநெல்வேலி, கெஜட்டியர்களிலும் அவனது வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மக்கள் அவனைப் பற்றிக் கொண்டிருந்த கருத்து ‘கான்சாகிப் சண்டை’ என்ற நாட்டுப் பாடலில் வெளியாகிறது. இது போன்ற சில நாட்டுப் பாடல்கள் மதுரை மாவட்டத்தில் வழங்கி வருகின்றன. அவை அச்சாகவில்லை. அவையனைத்தும் சேகரித்து வெளியிடப்பட வேண்டும்.
கட்டபொம்மு
வீரபாண்டிய கட்டபொம்மன்
வீரபாண்டிய கட்டபொம்மன்
கான்சாகிபுவின் மரணம், திப்புவின் தோல்வி, ஆர்க்காட்டு நவாப்பின் வீழ்ச்சி இவற்றின் காரணமாக கிழக்கிந்திய கம்பெனி தென்னாட்டில் நேரடி ஆட்சியை மேற்கொண்டது. தமிழ்நாட்டுப் பாளையங்களின் சில ஆதிக்க உரிமையைக் கட்டுப்படுத்தி வரி வசூலிக்க நிலங்களை செட்டில்மெண்டு செய்தனர்.
இந்த செட்டில்மெண்டு மூலம் பணிந்து விட்ட பாளையக் காரர்களுக்கு, தங்களிடம் பணியாத பாளையக்காரர்களின் நிலங்களைப் பிடுங்கி வழங்கினர். இவ்வாறுதான் பாஞ்சாலங் குறிச்சிப் பாளைய நிலங்கள் உள்ள அருங்குளம் சுப்பலபுரம் என்ற கிராமங்களை எட்டயபுரத்தாருக்கு வழங்கினர். கட்டபொம்மு ஆங்கிலேயரின் உரிமையை எதிர்த்தான். அவர்களுக்கு வரி செலுத்தவும் மறுத்தான். இதன் விளைவு என்ன என்று அவனுக்குத் தெரியும்.
தென்னாட்டில் சிவகெங்கை மருதுவைத் தவிர மற்ற எல்லாப் பாளையக்காரர்களும், ஆங்கிலேயரின் நவீனப்படை வலிமைக்கு அடி பணிந்து விட்டனர். மேற்கு வட்டகைப் பாளையக்காரர்களும் கிழக்கு வட்டகை நாயக்கர் பாளையங்களும், சேதுபதி முதலிய பெரிய பாளையக்காரர்களும், வெள்ளையர் ஆட்சிக்கு அடிபணிந்துவிட்டனர். ஆயினும் கட்டபொம்மு ஆங்கில ஆட்சியின் ஆணையை ஏற்க மறுத்தான். அவனை அடிமைப்படுத்த ஆங்கிலேயர்கள் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தனர். மண் கோட்டையிலிருந்து வாளும், வில்லும் கொண்டு சிறிய படையோடு, பீரங்கியும், துப்பாக்கியும் கொண்ட பெரும் படையை எதிர்த்துப் போராடினான் கட்டபொம்மன். முதற் போரில் தளபதி காலின்ஸ் இறந்தான். கட்டபொம்மனது தளபதி வெள்ளையனும் இறந்தான். முற்றுகை உடைந்தது.
வெள்ளையர் படை, சிதறியது. 1799-ல் மறுபடியும் பெரும் படையோடு மேஜர் பேனர் மேன் கோட்டையைத் தாக்கினான். கோட்டை பிடிபட்டது. ஆனால் வெள்ளையர் படைக்குப் பெருஞ் சேதம் ஏற்பட்டது. ஆயினும் வெள்ளையர் வென்றனர். கட்டபொம்மன் தூக்கலிடப்பட்டான். பாஞ்சாலங்குறிச்சி தடம் தெரியாமல் அழிக்கப்பட்டது. ஆனால் வீர கட்டபொம்மனது தியாகம் சுற்றிலுமுள்ள மக்கள் மனத்தில் வீர உணர்வை எழுப்பியது. மக்கள் படை திரண்டது. பாளையங்கோட்டைச் சிறையிலிருந்த ஊமைத்துரையும், அவனது உறவினரும் விடுதலைப் படையால் விடுவிக்கப்பட்டனர். ஏழு நாட்களில் கோட்டை மறுபடியும் கட்டப்பட்டது. வெள்ளையர் எதிர்ப்பு அணி சுற்றிலும் பரவியது. தூத்துக்குடி துறைமுகத்தை ஊமையன் படை கைப்பற்றியது. வெள்ளையர் கலங்கினர். பெரும் படையோடு வெள்ளையர் தளபதி பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிட்டு அதனைக் கைப்பற்றினான். ஊமையன் தப்பியோடிச் சிவகங்கைக்குச் சென்றான்.
மருது சகோதரர்கள்
சிவகங்கையில் ஆண்ட பெரிய மருது அரச வம்சத்தினன் அல்லன், வெள்ளையரை எதிர்த்து நின்ற சிவகங்கை மன்னன் முத்துவடுகநாதன் ஆட்சியை மருதுவிடம் ஒப்படைத்தான். அவனது விதவை வேலு நாச்சியார் அவனை மணந்து கொண்டாள். இவ்வாறு அவன் பாளையக்காரனானான். அரசியல் திறமை மிக்க தனது தம்பி சின்ன மருதுவின் துணையோடும். மக்கள் ஆதரவோடும் அவன் சுயேச்சையாக நாட்டைக் காத்து வந்தான். பலமுறை அவனை வெள்ளையர் பயமுறுத்தி வந்தனர். அவன் பணியவில்லை. வெள்ளையர்களை எதிர்த்து நிற்கும் பாளையங்களுக்கு அவன் உதவியளித்து வந்தான். அவனோடு சேர்ந்து போராடவே ஊமைத்துரை சிவகங்கை சென்றான். அவனைத் தங்களிடம் ஒப்படைத்து விடும்படி வெள்ளையர்கள் கேட்டார்கள். மருது உடன்படவில்லை. இதனையே சாக்காக வைத்துக்கொண்டு, தங்களை எதிர்த்து நிற்கும் கடைசிப் பாளையக்காரனான மருதுவை ஒழித்துவிட வெள்ளையர்கள் முடிவு செய்தார்கள்.
கர்னல் வெல்ஷ் என்ற தளபதி பெரும் படையோடு சிவகங்கையைத் தாக்கினான். பல போர்களுக்கு அப்புறமும் மருதுவை வெல்ல முடியவில்லை. மருது முத்து வடுகன் நேர் பரம்பரையைச் சேர்ந்தவனல்லன் என்றும், பரம்பரைப் பாளையக்காரர்களின் சாதியான தேவர் சாதியைச் சேர்ந்தவனல்லன் என்றும் கூறி முத்து வடுகனின் தாயாதி உறவினன் ஒருவனை பாளையக்காரனாக்கி தேவர் சாதியினரை மருதுவின் பக்கமிருந்து பிரித்தனர். இச் சூழ்ச்சிக்கு இரையான தேவர்கள் வெள்ளையருக்கு ஆதரவாகத் திரண்டனர். இவ்வாறு மருதுவின் அணியைப் பிளவு செய்து மருதுவைப் பலவீனப்படுத்தினர். கடைசியில் மருது பிடிபட்டான். சின்ன மருதுவும் ஊமையனும் பிடிபட்டனர். மூவரும் தூக்கிலிடப்பட்டனர். அவர்கள் குடும்பத்தினர் நாடு கடத்தப்பட்டனர். இவ்வாறு ஆங்கிலேயருக்கு எதிர்ப்பு ஓய்ந்தது.
படிக்க :
மாப்பிளா கிளர்ச்சியைக் கண்டு காவிக்கும்பல் அஞ்சுவது ஏன் ? || மு இக்பால் அகமது தொடர்
கெதார் இயக்கம் : விடுதலைப் போரின் வீரஞ்செறிந்த மரபு !
வரலாற்றுப் பாடல்களைப் பற்றிய கருத்து
இவ்வரலாறு அனைத்தும் ஆங்கிலேயர் எழுதிய நூல்களில் காணப்படுகின்றன. ஆனால் இவ்வீரர்கள் பிடிவாதமும் மூர்க்க குணமும் உடைய கலகக்காரர்களாகவே அவர்களால் வருணிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது மானிடப் பண்புகளும் வீரத்தன்மையும் அவர்கள் மக்கள் பால் பெற்றிருந்த நன்மதிப்பையும் அவர்கள் மறைத்துவிட்டார்கள்.
ஆனால் மக்களுடைய படைப்புகளான நாட்டுக் கதைப் பாடல்கள் இவ்வீரர்களின் சிறப்பான பண்புகளைப் போற்றிப் பாடுகின்றன. அவர்களது வீரச் செயல்களைப் பற்றிக் கூறி நாம் பெருமை கொள்ளச் செய்கின்றன. மருதுவைப் பற்றிய பாடல்களில் இரண்டு ‘ஓரியண்டல் மானுஸ்கிரிப்ட்ஸ்’ தொடரில் சென்னை அரசினரால் வெளியிடப்பட்டுள்ளன, கட்டபொம்மன் கதைப் பாடலை என்னுடைய ஆராய்ச்சியோடு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளார்கள் : இன்னும் பல பாடல்கள் ஏட்டிலேயே புதைந்து கிடக்கின்றன. அவையாவும் திரட்டி வெளியிடப்படவேண்டும்.
(தொடரும்)
« முந்தைய பாகம் ………………………………………………………………………………… அடுத்த பாகம் »
தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறையும் நிறப் பாகுபாடும் !

பெண்கள் உடை அணிவதும் போராட்டம் ! அதை உதறி தள்ளுவதும் போராட்டம் ! என்ன வினோதமான புதிர்!  இது புதிர் மட்டுமல்ல, சமூகத்தில் நீடிக்கும் நிதர்சனமான உண்மையும் கூட. ஆடை நாகரீகத்தின் குறியீடு எனும் அதே வேளையில் ஆடையில் கடைபிடிக்கப்படும் பாலின, வர்க்க, சாதிய, இன பாகுபாடுகள் நம்மை மேலும் மேலும் அச்சுறுத்துகின்றன.

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் ஆடையை பற்றிய புரிதல் கட்டாயம் தேவை . நாம் நாடு, கலாச்சாரம், மரபுகளை பற்றி நாம் பேசிக்கொண்டு இருக்கும் போது லண்டனின் தாம்சன் ரியூடர்ஸ் அமைப்பின் (Thomsan Reuters Foundation) அறிக்கையில் பெண்களுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இடம்பெற்ற 193 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் மூன்று காரணிகளின் (கலாச்சார மரபுகள், பாலியல் வன்முறை, ஆள் கடத்தல்) அடிப்படையிலான தரப்பட்டியலில் இந்தியா கீழிருந்து 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.

பெண்களைத் ‘தாயாகப்’ போற்றும் நாடு, பெண்களைப் பாதுகாக்க முடியாமல் போனதற்கான காரணம் என்ன ? பெரிதாக ஒன்றுமில்லை. குற்றமிழைத்தவனை விட்டுவிட்டு பாதிக்கப்பட்ட பெண்களைக் குற்றவாளியாக்கும் போக்கு இந்தியாவில் பெருமளவில் நீடிப்பதாலும், அதனை அங்கீகரிக்கும் பார்ப்பனிய ஆணாதிக்கச் சிந்தனை சமூகத்தில் நிரம்பி வடிவதாலும் தான்.

படிக்க :

பெண்களுக்கான ஜீன்ஸ் பாக்கெட்டில் செல்போன் நுழைவதில்லை ஏன் ?

ஜீன்ஸ் : ஆடையின் வரலாறும் – பொதிந்துள்ள உழைப்பின் வரலாறும் !

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு காரணம், பெண்ணின் ஆடைதான் என சொல்பவர்களின் வாய், ஆணின் பார்வையிலும் சிந்தனையிலும் இருக்கும் கோளாறைப் பற்றி ஏன் பேச மறுக்கிறது? இங்கே பாதிப்புக்குட்பட்டவர்கள் மீது தான் பல கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பெண் என்ன ஆடை உடுத்தியிருந்தாள்? எத்தனை மணிக்கு அங்கு சென்றாள்? அந்த நேரத்தில் அங்கு அவளுக்கு என்ன வேலை? என்பது போன்ற கேள்விகள் பெண்களிடம் கேட்கப்படுகிறது.

இந்த ஆணாதிக்கச் சமூகத்தால் வழங்கப்பட்டிருக்கும் “என்ன இருந்தாலும் ஆம்பள” என்ற தனிச் சலுகையை, துஷ்பிரயோகம் செய்பவர்களின் ஆதிக்க மனநிலையை கேள்வி கேட்காமல், அம்மனநிலையை அறிந்து அதனை மாற்றி அமைக்க முற்படாமல், ​​பலரும் பாதிக்கப்பட்ட பெண்களின் மீதே பொறுப்பை சுமத்துகிறார்கள். பெண்கள் அணியும் ஆடைகள், அவர்கள் வெளியே செல்லும் நேரம், செல்லும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்களின் மீதே குற்றம் சுமத்தப்படுகிறது. இது சரியான பார்வையாகுமா?

சிதைக்கப்பட்ட சிறுமி ஆசிபா

கடந்த 2017-ம் ஆண்டு அண்டை வீட்டில் வாழ்ந்த துஷ்யந்த் எனும் கிரிமினலால்  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட 7 வயது சிறுமி ஹாசினி என்ன ஆபாசமான ஆடை அணிந்திருந்தாள் ? கடந்த 2018-ம் ஆண்டு, காஷ்மீரில் கோவிலில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்யப்பட்ட ஆசிபா எனும் 8 வயது சிறுமி என்ன ஆபாசமான ஆடை அணிந்திருத்தாள் ?

சென்னை அயனாவரம் குடியிருப்பு ஒன்றில் காது கேளாத 11 வயதுச் சிறுமியை, 15 பேர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியது நினைவிருக்கலாம். அவள் என்ன உடை அணிந்திருந்தாள் ? இந்தச் சிறுமிகள் எல்லாம் பட்டப்பகலில் வெவ்வேறு இடங்களில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள். எனவே நிகழும் பாலியல் வன்கொடுமைகள் எல்லாம், ஆடையாலோ, இடத்தாலோ, நேரத்தாலோ நிகழவில்லை என்பது தெளிவாக புலப்படுகிறது.

இந்திய மரபுகளை ‘ஆக்கிரமிக்கும்’ மேற்கத்திய ஆடைக் கலாச்சார தாக்கங்கள்தான் பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளுக்குக் காரணமாகவும் ஒரு வாதம் வைக்கப்படுகிறது. மேற்கத்திய ஆடைகளின் வாசமே படாத இந்தியாவின் கிராமப்புறங்களில் தொடர்ந்து பாலியல் வன்முறைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. எனில், பிரச்சினை எங்கிருக்கிறது ?

ஒரு சமூகமாக பெண்களை நாம் பார்க்கும் பார்வையில் தான் கோளாறு இருக்கிறது. அதாவது, பெண்ணின் உடல் பாலியல் பண்டமாகவே பார்க்கப்படுகிறது என்பதன் வெளிப்பாடுதான் நடைபெறும் பாலியல் வன்முறைகள் அனைத்துமே.

இயற்கை ஆண் ,பெண் இருவரையும் சமாகத்தான் படைத்தது. அதன் பின் உண்டான சமூக மாற்றங்கள், பாலினம், மதம், இனம், சாதி, மொழி ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாட்டை படைக்கின்றன. இவற்றில் முதன்மையாகத் தோன்றியது பாலின பாகுபாடு.

பெண்களுக்கென்றே சில விதிமுறைகளையும், புறக்கணிப்பையும் ஒடுக்குமுறைகளையும் காலம்காலமாக வெவ்வேறு வடிவங்களில் சமூகம் வகுத்து வைத்திருக்கிறது. பெண் என்ற காரணத்தினாலேயே மனித இனத்தின் கிட்டத்தட்ட சரிபாதி பேர் ஒடுக்கப்படுகின்றன. அதனால் தான் பெண்கள் பாதுகாப்பு என தனியாகப் பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்களின் பாதுகாப்புப் பற்றி பேசுவதில்லையே என அங்கலாய்ப்பவர்களுக்கு, இப்போது காரணம் புரிந்திருக்கும் எனக் கருதுகிறேன்.

படிக்க :

ராபியா சைஃபி பாலியல் வன்கொலை : பார்ப்பனிய ஆணாதிக்க அதிகார வர்க்கத்தின் வெறியாட்டம் !

பாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் !

ஆடை குறித்த வரலாற்றை இதற்கு முன்னர் பல பதிவுகளில் பார்த்தோம். அதில் இரு விதமான போராட்டங்கள் சமூகத்தில் நடந்து வருவதைப் பற்றி பார்த்திருக்கிறோம்.  ஆடை உடுத்துவதற்கான போராட்டமும், ஆடை சுதந்திரத்தைக் கோருவதற்கான போராட்டமும் தான் அவை.

உதாரணமாக, பிரா அணிவதும் அணியாததும் எங்களது உரிமை என்று பெண்கள் முன்னெடுத்த போராட்டம், தமக்கு வசதியான ஆடையை தாமே முடிவெடுத்து உடுத்தும் சுதந்திரத்துக்கான போராட்டம். அதே சமயத்தில், ஐரோப்பிய நாடுகள் முஸ்லீம் பெண்களை அவர்களது மத நம்பிக்கையான பர்தா அணிவதைத் தடை செய்வதற்கு எதிரான போராட்டம், ஆடை உடுத்தும் உரிமைக்கான போராட்டம்.

வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று தனியாக நிர்பந்திக்கப்படவில்லை. மாறாக குறிப்பான சமூகத்தைப் பீடித்திருக்கும் சாதி, மத, இனம் சார்ந்த சட்டங்களும், சமூக விதிமுறைகளும் இயல்பாகவே பெண்களை அடிமைப்படுத்துகின்றன என்பதே எதார்த்தம்.

000

இந்தியாவில் மதம் , இனம் , வர்க்கம் , சாதி ஆகியவை வகுக்கும் பெண்கள் மீதான கட்டுப்பாடுகளும், கற்பிதங்களும் குறித்துப் பார்த்தோம். இது ஒருவகையான ஒடுக்குமுறை என்றால், பழைமையிலிருந்து பெண்களை விடுவிக்க வந்ததாகச் சொல்லிக் கொள்ளும் நவீன முதலாளித்துவமோ, வேறுவகையில் பெண்களை இரண்டாம் தரக் குடிமக்களாகவே இருத்தி வைத்திருக்கிறது.

“என்ன முதலாளித்துவமா?” என்றால் “ஆம், அதே முதலாளித்துவம் தான்” என்பதே பதில். பெண்ணை ஒரு போகப் பொருளாகவும், அழகுடன் இருந்தால் மட்டுமே வாழத் தகுதி உடையவள் என்பதாகவும் வரையறுத்திருப்பதோடு அதனை பொதுப்புத்தியிலும் தொடர்ந்து பதிய வைக்கிறது. அதை விட இன்னும் ஒருபடி மேலே போய், எது அழகு என்பதையும், எப்படி அழகு என்பதையும், அதை யாருக்காக செய்கிறோம், என எல்லாவற்றையும் நிர்ணயிக்கும் ஜாம்பவனாக முதலாளித்துவம் இருக்கிறது.

பெண் எப்படி இருந்தால் அழகு என்பதற்கு முதலாளித்துவம் சிலபல வரையறைகளை உருவாக்கி வைத்திருக்கிறது. “ஸிரோ சைஸ் ஹிப், அளவான மார்பு, ஹை – ஹீல்ஸ், ஸ்ட்ரெயிட்டனிங் ஹேர்”, இவை எல்லாவற்றுக்கும் பொதுவான ஒன்றாக “வெள்ளை நிறம்” என அழகுக்கான வரையறைகளை வகுத்துள்ளது.

இயல்பாக இருந்த உலகம் இப்போது எதை அழகு என்று சொல்லுகிறது ?. மேலாதிக்கம் செலுத்தும் நாட்டின் நிறம், உருவ அமைப்பு, மேட்டுக்குடி வர்க்க பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே “அழகு” வரையறுக்கப்பட்டு, அது உலகம் முழுவதும் பரப்பபடுகிறது.

உதாரணமாக மேற்கத்திய பெண்களின் நிறத்தையும், உடல் அமைப்பையும் வைத்துக் கொண்டு ஆப்பிரிக்கா பெண்களின் “அழகை” வரையறைப்பது எவ்விதத்தில் சரியானதாக இருக்க முடியும் ?

இயற்கையாகவே மேற்கத்திய சமூகத்திய பெண்கள் வெள்ளை நிறத்தவர்களாக இருக்கின்றனர். நீண்ட நாட்களாக அங்கு நீடிக்கும் முதலாளித்துவ சமூகம் அழகு எனக் கற்பிதப்ப்படுத்தியிருக்கும் ஒல்லியான உடல்வாகு கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்

ஆனால், ஆப்பிரிக்க பெண்கள் இயற்கையாகவே கருப்பு நிறத்தைக் கொண்டவர்கள். பின் தங்கிய உற்பத்திமுறை இயற்கையாகவே கோரும் அதிக உடலுழைப்பின் காரணமாக அவர்களுக்கு இயல்பாகவே அமைந்திருக்கும் அகன்ற தோள்பட்டை, தடிமனான உடல்வாகு ஆகியவை கொண்டிருக்கின்றனர்.

படிக்க :

அழகு – சில குறிப்புக்கள் !

“போ.. போய் உன் பர்காவை போடு” – ஆப்கான் அவலம் !

இந்தியா போன்ற நாடுகளிலும் கிட்டத்தட்ட இதனை ஒத்த நிலைமைதான். எனில் மேற்கத்திய இயல்பை ‘அழகு’ என இந்தியாவில் சித்தரித்து அந்த ”அழகின்” அளவிற்கு இல்லாதவர்கள் சமூகத்தில் புறக்கணிக்கப்படத் தக்கவர்களாக சித்தரிக்கிறது முதலாளித்துவம். இது நாகரீக சமூகம் நம் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் மிகப்பெரும் தீண்டாமை உணர்வு ஆகும். சாதி, மத பேதம் பார்க்காத ‘முற்போக்கு’ ஆண்களிலும் கூட பலர் இந்தத் தீண்டாமையைக் கடைபிடிக்கத்தான் செய்கிறார்கள்.

இங்கு நாடு, எல்லைகள் கடந்து இயங்கும் ஒரு முதலாளித்துவ சந்தைதான் அழகைத் தீர்மானிக்கிறது. அது பெண் உடலை ஒரு பாலியல் பண்டமாகவே மாற்றிக்கொண்டும் இருக்கிறது. பெண்களைப் போகப் பொருளாக்கி, அந்தப் போகப் பொருளாக்கும் செலவையும் பெண்களையே செய்ய வைத்து, அவர்களை பாலினரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சுரண்டுகிறது.

பொருளாதாரத் தளத்தில் முதலாளித்துவம் ஏற்படுத்தும் பாலியல் சுரண்டலை, அதன் பக்கபலமாக நின்று, கலாச்சார ரீதியாக சமூகத்தின் பொதுக்கருத்தாக்கும் பணியை திரைப்படங்கள் செய்து கொண்டிருக்கின்றன.

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை, பெண்களை வெறும் பாலியல் பண்டமாகவும், அழகுப் பதுமைகளாவும் காட்டுவதுதான் அன்றிலிருந்து இன்றுவரை சினிமாவின் பொதுமொழியாக இருந்திருக்கிறது. சமீபத்தில் ஒருசில மாற்றுச் சிந்தனையாளர்களின் படங்கள் அந்தக் கட்டமைப்பை உடைக்கின்றன என்ற போதிலும், பெரும்பான்மையான சினிமாக்கள் பெண்களை பாலியல் பண்டமாகத்தான் காட்டுகின்றன.

பாலிவுட்டில், மதர் இந்தியா (Mother India), சூப்பர் 30 (Super 30) என பல்வேறு படங்களில் இனவெறி மற்றும் வகுப்புவாத – சாதிய பாகுபாடுகள் இன்றும் தொடர்கின்றன. இங்கு தமிழ் சீனிமாவும் விதிவிலக்கு அல்ல.

பெண்களின் உடலை வெறும் பாலியல் சார்ந்த பண்டமாகவும், பெண்களைப் பலவீனமானவர்களாகவும், பெண் என்ற அடையாளத்தை அவமானப்படுத்தலின் சின்னமாகவும் காட்டுவதில் உலகம் முழுவதிலும் உள்ள சினிமாக்கள் ஒரே தாழ்ந்த தரத்தில்தான் இருக்கின்றன.

ஒரு பெண்ணின் உடையை ஆண்களுக்கு அணிவதை ஒரு கேலிக்கூத்தாக, இழிவானதாகச் சித்தரிப்பதுவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சமீபத்தில் வந்த டாக்டர் திரைப்படத்தில் கூட ஒரு விளையாட்டில், ஆண் தோல்வியுற்றால் நைட்டி அணிந்து கோமதி என்ற பெயருடன் பூ வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வதன் மூலம் பெண்ணின் ஆடை அவமானத்திற்குரியதாகவும், அவள் அடையாளங்களை தோல்வியின் சின்னங்களாகவும் சொல்லப்படுகிறது.

இயக்குனர் சங்கரின் படங்களில் சொல்லவே வேண்டியதில்லை. அவரது சிவாஜி எனும் படத்தில் கதாநாயகனின் நிறம் கருப்பாக இருந்தாலும் அது அழகு என்று காட்டுவதும் பெண்ணின் கருப்பு நிறம் கேலிக்கூத்தக்கப்படுவதையும் காணலாம். அங்கவை, சங்கவை என்ற இரண்டு கதாபாத்திரங்கள் மூலம் சங்கர் அவமானப்படுத்தியிருப்பது தமிழகத்தின் பெரும்பான்மைப் பெண்களைத்தான்.

இதே போன்று “ஐ ” படத்தில் கதாநாயகி கருப்பாக இருக்கும் பொது அந்த கதாநாயகன் அவளை பார்க்காமல் ஒதுக்குவதும் பின் பேர்னஸ் கிரீம் போட்டவுடன் கதாநாயகி வெள்ளையானதும் அவர்களுக்கு காதல் மலர்வது போன்று காட்சிப்படுத்தி இருப்பதன் நோக்கம் தான் என்ன ? இது நிறத் தீண்டாமை தானே !

தமிழ் சமூகத்தில் கருப்பின் அர்த்தம் தான் என்ன ? கருப்பு நிறங்களின் சங்கமம், பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நிறம், நீதியின் நிறம் என்றெல்லாம் சொல்கிறோம். ஆனால், எதார்த்தத்தில் கருப்பு எதன் வெளிப்பாடாக கட்டமைக்கப்படுகிறது ?

கருப்பு ஆடையை நல்ல நிகழ்ச்சிக்கு அணியக் கூடாது. ஏன் என்றால் அபசகுனமாம். அப்படியானால் கருத்த நிறத்தையுடையவன் ? கருப்பு நிறத்தை சிறுமைப்படுத்தும் திரைப்படங்கள் நம் மனதில் எதைக் கட்டமைக்க விரும்புகின்றன? இச்சமூகத்தின் பெரும்பான்மை மக்களின் நிறத்தை தாழ்வானதாக சித்தரிப்பதன் மூலம் இந்தச் சமூகத்தின் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையை கட்டமைக்கின்றன. இவற்றின் வெற்றிதான் பார்ப்பனியத்தின் வெற்றியை நீடிக்கச் செய்கிறது.

ஆனால் கருப்பு நிறத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் தமிழகத்திலோ அப்படி ஒரு நிலைமை இன்றுவரை ஏற்படவில்லை. ஆனால், பெரும்பான்மை வெள்ளை நிறத்தவர் வாழும் அமெரிக்காவில், இத்தகைய போக்கிற்கு எதிராக குரல்கள் எழுந்திருக்கின்றன.

அமெரிக்காவில், கடந்த 2015-ம் ஆண்டில், வழக்கறிஞராக இருந்து செயல்பாட்டாளரான மாறிய ஏப்ரல் ரெய்ன் என்பவர் டிவிட்டரில், “#OscarsSoWhite” என்ற ஹாஷ்டேக் மூலம்  அங்கிருக்கும் வெள்ளை நிற வெறியை எல்லோரின் கவனத்திற்கும் கொண்டு வந்தார். கடந்த 2016-ம் ஆண்டுக்கு ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டபோது, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, சிறந்த நடிப்புக்கான அனைத்து 20 பரிந்துரைகளும் வெள்ளை நடிகர்களுக்கே வழங்கப்பட்டது. அதை அம்பலப்படுத்தி ஏப்ரல் ரெய்ன் கிளப்பிய விவாதம் , உண்மையில் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது.

இதே போல, ஹாலிவுட் நடிகரான டாம் குரூஸ் தனது மூன்று கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி அளித்தற்கு அவர் கூறிய காரணங்களும் ஹாலிவுட்டில் நீடிக்கும் வெள்ளை மேலாதிக்கத்தை அம்பலப்படுத்தியது. “கோல்டன் குளோப்ஸ் விருதிற்கான தேர்தெடுக்கும் குழுவில் பன்முகத்தன்மை இல்லாமை மற்றும் கறுப்பின உறுப்பினர்கள் ஜூரியில் இல்லாததன் காரணமாக அந்த விருது அதன் பொலிவையும் மதிப்பையும் இழந்துவிட்டது” என்றார்.

இப்படிப்பட்ட குரல் தமிழ்நாட்டு சினிமாத்துறையிலோ அல்லது பொதுச் சமூகத்திலோ ஒலிக்குமா? கருப்பு நிறத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள சமூகத்தில் இக்குரல்கள் எழாதது எதைக் காட்டுகிறது என்பதை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

(தொடரும்)

சிந்துஜா
சமூகச் செயற்பாட்டாளர்

அமெரிக்கா ஜனநாயகத்தை தூக்கிப் பிடித்த போது … || கேலிச் சித்திரங்கள்

னநாயக உச்சி மாநாடு” என்ற பெயரில் எதிர்வரும் டிசம்பர் 9,10 ஆகிய தேதிகளில் அமெரிக்கா நடத்த இருக்கும் மாநாட்டுக்கு இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 110 நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
“ஜனநாயகம்” – அமெரிக்காவுக்கு உயிராதாரமான சொல்லல்லவா ?
உயிராதாரமான சொல் என்றால் ஜனநாயகத்தை உயிர் அளவிற்கு நேசிப்பது என்ற பொருளில் புரிந்து கொண்டால் கம்பெனி பொறுப்பாகாது. ஜனநாயகம் என்ற வார்த்தையை வைத்துத் தான் பிற நாடுகள் மீது போர்தொடுத்து அந்த நாடுகளை கபளீகரம் செய்து, அங்கு தனது பொம்மை அரசாங்கங்களை நிறுவி அந்த நாடுகளைக் கொள்ளையடித்துக் கொழுத்துள்ளது.
அதன் காரணமாகத்தான் “ஜனநாயகம்” அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அந்த ஜனநாயகத்தைக் காப்பாற்ற பாகிஸ்தான், இந்துத்துவ மோடியின் கீழ் சிக்கியிருக்கும் இந்தியா உள்ளிட்ட 110 நாடுகளை அழைத்த அமெரிக்கா சீனாவையும் ரசியாவையும் அழைக்கவில்லை என்பது சர்வதேச அளவில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
சீனாவிலும், ரசியாவிலும் ஜனநாயகம் இல்லை என்பது ஒருபுறமிருக்கட்டும், ஜனநாயகம் குறித்துப் பேசுவதற்கு அமெரிக்காவிற்கு என்ன தகுதியிருக்கிறது என்பதை இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் சில கேலிச் சித்திரங்கள் விளக்குகின்றன.
அமெரிக்கா ஜனநாயகத்தை உயர்த்திப் பிடித்த போது எடுத்த படம் …
கந்தலான அமெரிக்க ஜனநாயகத்திற்கு மேற்பூச்சு கொடுக்க முயலும் ஜோ பைடன்
அங்கிள் சாம் : வேறு எந்த நாட்டிற்கு ஜனநாயகத்த ஏற்றுமதி பண்ணனும் ?
அசிஸ்டண்ட் : உள்நாட்டிலேயே அது கிழிஞ்சிதான் தொங்குது. அத முதல்ல சரி பண்ணப் பாருங்க பாஸ் !
சர்வதேச ஜனநாயகக் காப்பாளனின்” உள்நாட்டு ஜனநாயக யோக்கியதையை “Black Lives Matter” போராட்டம் உலகுக்கே அம்பலப்படுத்தியது..
“பயங்கரவாதத்தை” எதிர்த்து “ஜனநாயகத்துக்காக” போராடும் சர்வதேச பயங்கரவாதி அமெரிக்கா !
வளர்ந்திருக்கும் கண்காணிப்பு அரசு தான் அமெரிக்காவை இன்று “ஜனநாயகமாக” பராமரித்துக் கொண்டிருக்கிறது
ஒரு நாட்டைச் சுரண்டி, அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு துண்டு ரொட்டியைப் பிச்சையாகப் போடுவதை கருணை முகமாகக் காட்டுவதுதான் “ஜனநாயகத்தை” நிலைநாட்டுவது.
“அமெரிக்கன் ஸ்டைல்” ஜனநாயகத்தின் சமீபத்திய உதாரணம்
கேலிச்சித்திரங்கள் : குளோபல் டைம்ஸ் மற்றும் இணைய வெளியில் எடுக்கப்பட்டவை
தொகுப்பு : கர்ணன் 

ரோந்து போலீசு கையில் துப்பாக்கி வழங்கலாமா ? கருத்துக் கணிப்பு

திருச்சியில் கடந்த நவம்பர் 21-ம் தேதியன்று இரவு ஆடு திருடும் கும்பலை விரட்டிப் பிடிக்கச் சென்ற போலீசு சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) பூமிநாதனை, ஆடு திருடும் கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இந்தக் கும்பலில் சிறுவர்களும் அடங்கும் என்பதுதான் தமிழகத்தின் இன்றைய நிலைமையை எடுத்துக் காட்டும் கண்ணாடியாக இந்த நிகழ்வின் மூலம் தெரியவருகிறது.
இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேதிரபாபு திருச்சியில் உள்ள பூமிநாதனின் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்திப் பேசினார். தனது உரையில் பூமிநாதனின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசிய அவர், இரவு நேரத்தில் ரோந்து செல்லும் போலீசுத் துறையினர் கையில் ஆறு புல்லட்டுடன் கூடிய கைத்துப்பக்கியை எடுத்துச் செல்லுமாறும் ஆபத்து ஏற்பட்டால் சுடுமாறும் அதற்கு சட்டத்தில் அனுமதி உள்ளது என்றும் “போலீசுக்கே” சட்டம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
பொதுவாக தோழர்கள் போராட்டத்திலோ, ஆர்ப்பாட்டங்களிலோ கைதாகும் சமயத்தில், சட்டப்படி தமக்கு இருக்கும் உரிமைகள் குறித்து போலீசு அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினால், “போலீசுக்கே சட்டம் சொல்லித் தர்றியா?” என்று பாய்வார்கள் அதிகாரிகள். அந்த அளவிற்கு சட்டம் தெரிந்த போலீசாருக்கு டிஜிபி சட்டம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
படிக்க :
♦ காந்தியைக் கொன்ற துப்பாக்கி யாருடையது?
♦ “யாரையும் சும்மா விடக் கூடாது ! “ – என்ன செய்யப் போகிறோம் ?
கொள்ளையர்களை துரத்திப் பிடிப்பது போன்ற துணிகரமான சம்பவத்தில் ஒரு போலீசு ஈடுபட்டு, சமூக விரோதிகளால் அந்த அதிகாரி கொல்லப்படும் சமயங்களில் இத்தகைய பேச்சுக்கள் சமூகத்தின் அங்கீகாரத்தை உடனே பெற்றுவிடுகின்றன. தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவும் இதனை அறியாதவர் அல்ல. அந்த வகையில் அரசின் ஒடுக்குமுறைக் கருவியான போலீசுக்கு, ஆயுதத்தை தாராளமாக பயன்படுத்துவதற்கான அங்கீகாரத்தை  சரியான நேரம் பார்த்து வழங்கியிருக்கிறார் டி.ஜி.பி.
எஸ்.ஐ. தரத்திற்கு மேல் இருக்கும் போலீசு அதிகாரிகளுக்கு ஏற்கெனவே கைத்துப்பாக்கியை கையாளும் உரிமை இருக்கும் நிலையில், மீண்டும் ஒருமுறை தமிழக டிஜிபி அழுத்திக் கூறுவதன் பொருள் என்ன ?
அந்நிகழ்வில் பேசிய டிஜிபி கூடுதலாக அதிகாரிகள் மட்டத்தில் இருக்கும் போலீசாருக்கு கைத்துப்பாக்கி, ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், பிற போலீசாருக்கும் அந்த பயிற்சி விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசு நிலையத்தில் கொடூரமாகத் தாக்கி படுகொலையை நிகழ்த்தியது கொரோனா ஊரடங்கு ரோந்து போலீசுதான். மதுரையில் விவேகானந்தக் குமார் எனும் இளைஞரை அடித்துக் கொன்றதும் ரோந்துப் போலீசுதான்.  இவர்கள் கையில் துப்பாக்கி இல்லாத போதே இத்தனைப் படுகொலைகள் நடந்துள்ள நிலையில், இத்தகைய போலீசுகளிடம் கைத்துப்பாக்கியை ஏந்திச் செல்ல  அறிவுறுத்துகிறார்.
பென்னிக்ஸ், ஜெயராஜ் படுகொலையில் கூட போலீசு நிலையத்தில் போய் அடித்த காட்சியைக் கண்ட சக பெண் போலீசு ஒருவர் கொடுத்த வாக்குமூலத்தால் அந்தப் போலீசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இனி அந்தப் பிரச்சினையும் போலீசுக்கு இல்லை. பார்த்த இடத்திலேயே ‘சம்பவம்’ செய்துவிட்டு சர்வ சாதாரணமாக உயிருக்கு ஆபத்து நேர்ந்தது, அதனால் சுட்டேன் என்று கூறிவிட்டு மறுவேலையைப் பார்க்கச் செல்லலாம்.
எல்லாப் போலீசாரும் அப்படிப்பட்டவர்கள் இல்லையே என்றோ, உண்மையான கிரிமினல்களை பிடிக்கச் செல்லும் போலீசுக்கு என்ன பாதுகாப்பு என்றோ கேள்வி எழலாம். உண்மையான கிரிமினல்களைப் பிடிக்கச் செல்லும் நேர்மையான போலீசாரின் பாதுகாப்பிற்கு பல வழிகள் உள்ளன. கூடுதலாக போலீசை உடன் அழைத்துப் போகச் சொல்லலாம். பிற போலீசாருடனான தகவல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு செல்லலாம். சட்டையில் பொருத்தும் கேமராவோடு கூட ரோந்துக்குச் செல்லச் சொல்லலாம். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு கையில் ரிவால்வரை எடுத்துக் கொடுப்பது என்பது, போலீசின் அதிகாரத்தை வரம்பற்றதாக்குவதோடு ’நல்ல’ போலீசுகளின் எண்ணிக்கையை ’கெட்ட’ போலீசுகளின் எண்ணிக்கையோடு சேர்த்துவிடும்.
காவி – கார்ப்பரேட் பாசிசம் வளர்ந்து வரும் சூழலில் போலீசு உள்ளிட்ட அதிகார வர்க்கத்திற்கு கொடுக்கப்படும் மேலதிக சலுகைகள் தான் பாசிஸ்ட்டுகள் அரியணையில் ஏறி அமர துணை புரிகிறது என்பதுதான் வரலாறு. இங்கு டிஜிபி சைலேந்திரபாபு போலீசாருக்கு அறிவித்துள்ள துப்பாக்கிச் ‘சலுகை’, முற்போக்காளர்களுக்கும், சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும் எதிரானது என்பது அல்ல பிரச்சினை. போலீசால் கொல்லப்பட்ட மதுரை விவேகாணந்தனோ, ஜெயராஜ் – பென்னிக்சோ யாரும் செயற்பாட்டாளர்களோ போராளிகளோ அல்ல. சாதாரண நடுத்தர்வர்க்கத்தினர் தான் !!
தமிழக டிஜிபி ரோந்து செல்லும் போலீசார் கைய்டில் துப்பாக்கி ஏந்திச் சரியான அணுகுமுறையா ?
அவசியமான அணுகுமுறை
அபாயகரமான அணுகுமுறை
முடிவெடுக்க முடியவில்லை
வாக்களிப்பீர் !!
கருத்துக் கணிப்பில் பங்கேற்க :

 

யூடியூபில் வாக்களிக்க : இங்கே அழுத்தவும்

டிவிட்டரில் வாக்களிக்க:

காந்தியைக் கொன்ற துப்பாக்கி யாருடையது?

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் மரணம் குறித்தே ஏகப்பட்ட புத்தகங்கள் வந்துவிட்டன. மனோகர் மல்கோங்கரின் The Men Who killed Gandhi, தூஷார் காந்தியின் Let’s Kill Gandhi ஆகியவை இதில் மிக முக்கியமானவை. அதிலும் Let’s Kill Gandhi புத்தகம் மிகவும் விரிவானது. இந்த இரண்டையும் படித்துவிட்டாலே, காந்தி கொலைக்கான பின்னணி, சூழல், சம்பந்தப்பட்ட சதிகாரர்கள் குறித்து அறிந்துகொள்ளலாம்.
இந்த நிலையில், காந்தியின் கொலை குறித்து புதிதாகச் சொல்வதற்கு ஏதாவது இருக்கிறதா? அப்பு எஸ்தோஸ் சுரேஷ், பிரியங்கா கோதம்ராஜு எழுதி சமீபத்தில் வெளிவந்திருக்கும் The Murderer The Monarch and The Fakir புத்தகம் தேசப்பிதாவின் கொலை குறித்து புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது.
படிக்க :
காந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ !
காந்தி படுகொலைக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். தப்பிப் பிழைத்தது எப்படி ?
காந்தி கொலையில் நாதுராம் கோட்ஸே, வி.டி, சாவர்க்கர், ஆப்தே உட்பட 9 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு, அதில் சாவர்க்கர் மட்டும் தப்பித்துவிட மீதமுள்ளவர்கள் தண்டனை பெற்றார்கள்.
ஆனால், இந்தக் கொலையில் வேறு சிலரின் தொடர்பும் இருந்திருக்கிறது. அதில் ஒருவர் ஆல்வாரின் மகாராஜாவான தேஜ் சிங் பிரபாகரும் ஒருவர். காந்தியைக் கொலை செய்யப் பயன்பட்ட ப்ரெட்டா பிஸ்டல், மகாராஜாவின் ஆயுத சேகரிப்பிலிருந்து வந்தது என அப்புவிடம் குறிப்பிடுகிறார் ஒரு மூத்த அதிகாரி.
இதிலிருந்து தன் தேடலை துவங்குகிறார் அப்பு. காந்தி கொலை குறித்த பல்வேறு தகவல்கள், ஆவணங்கள் ஆகியவற்றை மறுபடியும் புரட்டுகிறார். பிறகு இந்தத் தேடலில் பிரியங்காவும் இணைந்து கொள்கிறார்.
இந்தத் தேடல் முடியும் புள்ளி, வி.டி. சாவர்க்கர். காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்டு ஆதாரங்கள் இல்லாமல் விடுவிக்கப்பட்டவர் சாவர்க்கர். காந்தி கொலையில் சாவர்க்கருக்கு தத்துவார்த்தரீதியான பங்கிருந்ததே தவிர, நேரடியாக அந்த சதியில் பங்கேற்கவில்லை என்பதுதான் தற்போதுவரை சாவர்க்கர் ஆதரவாளர்களின் வாதம்.
ஆனால், உண்மையில் அந்த சதித்திட்டத்தின் எல்லாக் கட்டங்களிலும் பங்கேற்று, முழுமைப்படுத்தியவர் சாவர்க்கர் என்ற முடிவுக்கு இந்தப் புத்தகம் வருகிறது.
தேசத்தந்தை கொல்லப்படுகிறார். அவர் கொல்லப்படுவதற்கான சித்தாந்தத்தை சாவர்க்கர் தருகிறார். அதற்காக நபர்களை ஒருங்கிணைக்கிறார். திட்டம் நிறைவேறிய பிறகு விலகிக்கொள்கிறார்.
சமீபத்தில் வெளிவந்த வரலாற்று நூல்களில் விறுவிறுப்பான, அட்டகாசமான புத்தகம் இது. கண்டிப்பாக படியுங்கள்.
நூலின் உட்தலைப்புகள் :
Book I : The Murderer
1. The August Conspiracy
2. The Accidental Breakthrough
3. The Recruit
4. The Beretta Gun that killed Gandhi
Book II : The Monarch
1. The Open Secret
2. Alwar and the Princely Affair
3. The Militarization of the Hindus
Book III : The Fakir
1. Imagined Enemies
2. The Idea of Hindutuva
3. Hindu Khatre Mein Hai
4. The Cult of Godse
வெளியீடு: ஹார்ப்பர் காலின்ஸ்.
நூலாசிரியர்கள் : அப்பு எஸ்தோஸ் சுரேஷ் , பிரியங்கா கொடம்ராஜூ
விலை: ரூ. 399.
முகநூலில் : K Muralidharan
disclaimer

விவசாயிகள் மீதான மோடியின் ஒடுக்குமுறையை உலகம் மறக்காது || கருத்துப்படங்கள் !

மோடி விவசாயிகளுக்கு புரிய வைக்க முயற்சித்த போது… || பாகம் 2

பாகம் 1 :

மூன்று வேளாண் சட்டங்களை இரத்து செய்ய வலியுறுத்தியும், குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி நிர்ணயிக்கக் கோரியும் டெல்லியில் ஓராண்டாக விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் மீது மோடி அரசு நடத்திய அரச வன்முறை வெறியாட்டங்களில் சில.. இங்கே கருத்துப்படங்களாக !

கருத்துப் படங்கள் :

(முற்றும்)

வினவு கேலிச்சித்திரங்கள்

 

 

ஆர்.எஸ்.எஸ்-க்கு தரகு வேலை செய்யும் ராமதாஸ் கும்பல் !

NEW DELHI, OCT 10 (UNI):-PMK Founder President S Ramadoss and his son and Rajya Sabha Member Anbumani Ramadoss calling on Prime Minister Narendra Modi, in New Delhi on Thursday. UNI PHOTO CH 2 U
ன் நியூஸ் தொலைக்காட்சியில் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை ஒட்டி நடத்தப்பட்ட விவாத மேடை நிகழ்ச்சியில் பாமகவின் வழக்கறிஞர் கே. பாலு, “வன்னியர்களுக்கும் தலித்துகளுக்கும் தீண்டாமை என்ற ஒன்றைத் தவிர பொருளாதாரரீதியாக எவ்வித வேறுபாடும் இல்லை.” என்று கூறினார்.
அவர் கூறியது 100% உண்மை. வன்னியர் சாதியைச் சேர்ந்த மக்களில் பெரும்பான்மையிலும் பெரும்பான்மையானோர் மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கிறார்கள்.
கார்ப்பரேட் பாசிச திட்டங்களான 8 வழிச்சாலை முதல் ஹைட்ரோகார்பன், பாரத் மாலா வரை அனைத்து திட்டங்களிலும் பாதிக்கப்படக்கூடிய மக்களாகவும் வன்னியர் சாதியை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.
நாயக்கர், படையாட்சி, வன்னியர், வன்னிய கவுண்டர், பந்தல் வன்னியர், அரசு வன்னியர் இப்படி பல பிரிவுகளாக இருக்கும் இந்த சாதியை ராமதாஸ் மருத்துவராக இருந்தபோது துவங்கி ராமதாஸ் உள்ளிட்டவர்கள் வன்னியர் சங்கமாக ஒருங்கிணைக்க முயற்சி செய்தனர்.
இந்தச் சாதிகளில் நாயக்கர்கள் படையாட்சிக்கோ, படையாட்சிகள் வன்னிய கவுண்டருக்கோ பெண் கொடுப்பது கிடையாது. ஏனெனில் அதற்குள்ளும் இவர்கள் படிநிலை வைத்திருக்கின்றனர். இந்தத் தீண்டாமையையும் உள்ளடக்கியதுதான் “வன்னியர் ஒற்றுமை”.
000
1987 இட ஒதுக்கீடு போராட்டம், அதைத் தொடர்ந்து பல தேர்தல்களில் மாறி மாறி  அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி வைத்துக் கொண்டு நாறிப் போன பிறகும் ராமதாஸ் எப்படி வன்னியர் மக்களிடம் செல்வாக்கு மிக்க தலைவராக இருக்கிறார்?
ராமதாஸ் தன்னுடைய அரசியல் செல்வாக்கு சரியும் போதெல்லாம் ஒன்றுமில்லாத பிரச்சனையை கிளப்பி அதன் மூலம் மட்டுமே உயிர் வாழக் கூடிய ஒரு பிராணி.
2002 ஆம் ஆண்டு செல்வாக்கு சரிந்த நேரத்தில், ரஜினி திரைப்படங்களில் சிகரெட் குடிக்கிறார் என்ற மொக்கையான காரணத்தை வைத்துக் கொண்டு, பாபா திரைப்பட பெட்டிகள் திருடப்பட்டன, எரிக்கப்பட்டன, தியேட்டர் அதிபர்கள் கடத்தப்பட்டார்கள். அந்த வேலைகளில் முக்கியமாக ஈடுபட்டது இன்றைய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் அன்றைய ராமதாஸின் முக்கிய நம்பிக்கையாக இருந்த வேல்முருகன்.
இப்படிப் பல மொக்கையான காரணங்களை பூதாகரமாக்கித்தான் வன்னியர் சமூகத்தினரின் மீதான தனது செல்வாக்கை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் ராமதாஸ். ஆனால் ஒருபோதும், வன்னியர் சாதி மக்களுடைய பொருளாதார பிரச்சினைகளைப் பற்றி உரக்கப் பேசியது கிடையாது.
தற்போதும் சீண்ட ஆளின்றி செல்வாக்கு சரிந்திருக்கும் நேரத்தில், ஜெய்பீம் படத்தை ஒட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சம்பவங்களைப் பார்க்கும்போது, வன்னியர் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து போன ராமதாசுக்கு இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. இதுபோன்ற குறுகிய சாதி ஆதிக்க பிரச்சினையை கிளப்பிவிட்டு தன்னை ஒரு அரசியல் தலைவராக எப்போதும் நிலைநாட்டிக் கொள்ள வேண்டும். அதற்காகத் தான் வன்னியர் சாதி இளைஞர்களை சாதிவெறியூட்டி கலவரங்களில் ஈடுபடுத்துவதும் ராமதாசு கும்பலின் ஒரு வழக்கமாக இருக்கிறது.
000
ன்னியர் சங்கத்தின், பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை என்பது ராமதாசை பாதுகாப்பதுதான். இதைத் தாண்டி வேறு எதுவும் எப்போதும் இருந்ததில்லை .
வன்னியர் சங்கத்தில் இருப்பவர்கள் ஆகட்டும், பாட்டாளி மக்கள் கட்சியில் இருப்பவர்கள் ஆகட்டும் அவர்களை ராமதாஸ் எப்படி வைத்திருக்கிறார் என்பதற்கு சில சான்றுகள்.
தற்பொழுது வன்னியர் சங்கத்தின் தலைவராக இருக்கக் கூடிய அருள்மொழியின் தம்பி இளங்கோவன் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து வெளியே போனபோது இளங்கோவனை மிகவும் ஆபாசமாக வசை பாடி போஸ்டர்கள் ஒட்டினார்கள். ஒரு காலத்தில் ராமதாசுக்கு, புரட்சி சாயம் பூசிய தீரனுக்கு இதைவிட மிக மோசமான நிலைமை இருந்தது. தீரன் மீண்டும் பாமகவிற்கு வந்து வந்துவிட்டார்.
தலித் ஒருவரை எப்போதும் பொதுச் செயலாளராக வைத்திருப்பேன் என்று கூறிய ராமதாஸ், தன்னை எவ்வாறு அவமானப்படுத்தினார் என்பதை கண்ணீர் விட்டு அழுதார் தலித் எழில்மலை.
வீரப்பனை வைத்து நாடகம் எடுத்து, வீரப்பன் பெயரைச் சொல்லி வன்னிய இளைஞர்களை சாதிவெறியேற்றி பெரும்பணம் சம்பாதித்த ராமதாஸ் இடம் சென்று “எனக்கும் என் குடும்பத்திற்கும் பணம் கொடுங்கள்” என்று கேட்ட வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி துரத்தி அடிக்கப்பட்டார் தைலாபுரத்தில் இருந்து.
ராமதாசுக்காக பல கலவரங்களை செய்து புகழ்பெற்ற காடுவெட்டி குரு, மருத்துவம் பார்க்க வழி இல்லாமல் கிடந்ததும் அதற்காக அவர்கள் குடும்பத்தினர் தைலாபுரத்தில் வாசலில் காத்துக் கிடந்ததும், அவர்களையும் துரத்தியடித்தவர் தான் இந்த ராமதாஸ் .
வன்னியர் சாதியை சேர்ந்த ஏழைக் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற வன்னியர்களை வன்னியர் சங்கம் தண்டிக்கவில்லை. ஜெயலலிதாவுக்காக கோவை வேளாண் கல்லூரி மாணவர்கள் 3 பேரை உயிரோடு எரித்த வன்னியர்களை வன்னியர் சங்கம் கண்டிக்கவில்லை.
வன்னியர் சங்கத்திலும் பாட்டாளி மக்கள் கட்சியிலும் கடுமையாக உழைக்கும் யாருக்கும் எப்பொழுதும் எம்எல்ஏ, எம்.பி சீட்டு கிடைப்பதில்லை. மாறாக அவருடைய நெருங்கிய உறவினர்கள் பினாமிகளுக்கே சீட் கொடுக்கப்படுகிறது. இது எல்லாம் வன்னியர் சங்கத்தில் இருக்கும் நபர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியில் இருக்கும் நபர்களுக்கும் தெரியாதா?
தெரியும். சாதி என்று வந்து விட்டால் எல்லா அநியாயங்களும் அக்கிரமங்களும் புனிதம் ஆகிவிடும் என்பதற்கு ராமதாசு ஒரு எடுத்துக்காட்டு. பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்ட நபர்கள் கூட சாதி பாசத்தால் பாமகவிற்கு ஓட்டு போட்டனர், ஓட்டு கேட்டனர்.
ஆர்எஸ்எஸ் எப்படி சித்தாந்த ரீதியாக யாரும் கேள்வி கேட்கக் கூடாது இந்த அடிமைகளை உருவாக்கி வருகிறதோ அதே போல ராமதாஸ் உள்ளிட்ட சாதி வெறியர்கள் சாதி சங்கத்தை அடிமைகளுக்காகவே உருவாக்கி வருகிறார்கள்.
000
ஒதுக்கீடு – உள்ஒதுக்கீடு என்ற ஏமாற்று!
1987 இட ஒதுக்கீடு போராட்டத்தின் விளைவாக, ஏறத்தாழ 108 சாதிகளை ஒருங்கிணைத்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் உருவாக்கப்பட்டு
20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய பகுதிகளில் ஏறத்தாழ 15 சதம் வரை அவர்களே அனுபவித்தனர்.
திடீரென்று உள்ஒதுக்கீடு ஒரு பிரச்சினை என்று கூறி ராமதாஸ் ஒரு நாள் கலவரம் செய்து 10.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றார். இது உருவாக்கும் பொழுது சட்டத்தின் முன் நிற்காது தோற்றுவிடும் என்று ராமதாஸ் உட்பட அனைவருக்கும் தெரியும். தெரிந்தாலும் வன்னியர் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காகவே அதை உருவாக்கினார்.
இந்த உள் ஒதுக்கீடு கோரிக்கையை கூட முதலில் ராமதாஸ் வைக்கவில்லை. சி.என். ராமமூர்த்தி என்பவர் இது தொடர்பாக பல ஆண்டுகள் வழக்கு நடத்தி அதற்கான தீர்ப்பையும் பெற்றார். அதன்படி உள் ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிலை ஏற்படும் பொழுது ராமமூர்த்தி பெயர் வாங்கி விடக்கூடாது என்பதற்காகவே ராமதாஸ் ஒரு நாள் கலவரம் செய்து 10.5 சதவிகிதத்தைப் பெற்றார். அனைத்துத் துறைகளும் தனியார் மயமாகி விட்ட பிறகு ஒதுக்கீடு வைத்து நாக்கு கூட வழிக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை .
இன்றைக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என ஆனபிறகு அதை வைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள மற்ற சாதியினர் மீதும் தலித்துகள் மீதும் அவதூறு பரப்புவதையே முக்கிய வேலையாக கொண்டார்.
ஆர்.எஸ்.எஸ்-ம் வன்னியர் சங்கமும் :
சில பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்தே கிராமங்கள்தோறும் உள்ள வன்னியர் சங்க கிளைகள் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டிற்குள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் வன்னியர் சாதியைச் சேர்ந்த மக்கள் பொருளாதாரரீதியாக படிப்படியாக முன்னேறி வருகின்றனர். அவ்வாறு முன்னேறி வரும் பொழுது அவர்கள் இதுவரை தங்கள் பழக்க வழக்கத்தில் இல்லாத பல பார்ப்பனிய சடங்குகளில் மூழ்கிப் போய் கிடக்கின்றார்கள்.
குறிப்பாக, திருமணங்களில் பார்ப்பனர்களை அழைக்கும் வழக்கம் வன்னியர்களுக்கு இல்லை. இப்பொழுது ஏனைய மற்ற சாதிகளைப் போலவே வன்னியர்கள், பார்ப்பனர்களை அழைப்பதை ஒரு முக்கியமான விதி ஆக்கியிருக்கிறார்கள்.
ராமதாஸ் தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் கொள்ளையடிப்பதற்காகவுமே வன்னியர் சங்கத்தை பார்ப்பனியத்திடம் அடகு வைத்திருக்கிறார் .
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழ் பாடும் உரிமைக்காகப் போராடிய ஆறுமுகசாமி பிறப்பால் வன்னியர் சாதியை சேர்ந்தவர். அவருடைய தமிழ் பாடும் உரிமைக்காக போராடி அவரை சிற்றம்பல மேடையில் ஏறி பாட வைத்தது நக்சல்பாரி கம்யூனிஸ்ட் அமைப்புகள் தலைமையிலான கூட்டமைப்புதான். இந்தப் போராட்டத்தில் பாமகவின் பங்கு என்ன? பொதுக்கூட்டத்தில் பங்கு கொண்டதும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதும் என்பதைத் தாண்டி என்ன இருக்கிறது?
தன்னுடைய சாதியை இழிவு படுத்திவிட்டார்கள், கேவலப்படுத்திவிட்டார்கள் என்பதற்காகவும் ராமதாஸ் சொன்னதைக் கேட்கவில்லை என்பதற்காகவும் ராமதாசை எதிர்த்து பேசினார்கள் என்பதற்காக நடத்தப்பட்ட கலவரங்கள் , போராட்டங்களின் தன்மையோடு வன்னியர் சாதியைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்படக்கூடிய நதிநீர் பிரச்சினை, விவசாய பிரச்சனை, அடிப்படைப் பொருளாதார பிரச்சினைக்கு ராமதாஸ் என்ன செய்தார் என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள் அப்போதுதான் ராமதாஸின் உண்மை முகம் தெரியும்.
படிக்க :
பூங்கொடி கொலை : வன்னிய மக்களே சிந்திப்பீர் !
வன்னியன் நாடாளணும்னா அன்புமணி அமைச்சராகணும் – கார்ட்டூன்
விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்படுவதால், பெட்ரோல் விலை உயர்வால், சிலிண்டர் விலை உயர்வால், ஜி.எஸ்.டி.-யால் வன்னியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லையா?
அதற்கெல்லாம் வெறுமனே ஒரு அறிக்கையோடு நின்றுவிடும் ராமதாசு, ஜெய்பீம் படத்தை வைத்து ஆடுவதற்கு காரணம் என்ன?
மக்கள் பாதிக்கப்படக்கூடிய அடிப்படை பிரச்சினைகளை எதிர்த்துப் போராடினால் அது ஆளும் வர்க்கத்திற்கு எதிராகப் போய் முடியும். ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவாக மாறிவிட்ட ராமதாசும் அவரது குடும்பமும் இழந்த சொர்க்கத்தை மீட்டு எடுப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
தங்கள் தேவைக்காக வன்னியர் சாதி மக்களை அடகு வைக்கிறார்கள். கொம்பு சீவி விடுகிறார்கள். இது எல்லாம் வன்னியர் சங்கத்தினருக்கு தெரிந்த போதும் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்?
பாமகவுடன்  கூட்டணி வைக்க 500 கோடி வாங்கினார் என்றும், எங்கையா யாரு கூட எப்ப வேணா கூட்டணி வைப்பார் என்றும், பெருமையாக பேசிக் கொண்டு திரிபவர்களைத் தானே ராமதாஸ் உருவாக்கி இருக்கிறார் .
இது சரியோ அதற்காக போராட வேண்டும் இது நியாயமோ அதற்காக உறுதியாக இருக்க வேண்டும் என்பதைத் தாண்டி எவன் நம் ஜாதியோ அவனுக்காக இருக்கவேண்டும் என்ற இழிவான ஒரு பண்பாட்டை உருவாக்கியிருக்கின்றன, சாதி சங்கங்கள். இது ஆதிக்க சாதி சங்கங்களின் மட்டுமல்ல தற்போது தலித் சாதி சங்கங்களிலும் பரவி வருகின்றது. தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் தாங்களும் மன்னர் பரம்பரை ஆதிக்கசாதி பெருமை பேசி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இது ஒன்றே இந்துத்துவ பார்ப்பனியத்திற்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய வெற்றி.
10.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் ஏற்கெனவே இதுவரை முரண்பாடே ஏற்பட்டிராத சாதிகளுக்குள்ளும் முரண்பாட்டை உருவாக்கி இருக்கிறது ஆர்எஸ்எஸ்.
000
ஜெய்பீம் படத்தில் அக்கினிச்சட்டி காலண்டர் இருக்கின்ற ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு, அடுத்ததாக குருவின் பெயர் உள்ளது என்றும் அதற்குப் பிறகு வன்னியர்கள் இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட குறவர் இன மக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டார்கள் என்றும் அதற்கடுத்து வன்னியர்களை மொத்தமாக அவமதித்து விட்டார்கள் என்றும் ஒரு நீண்டகால திட்டத்தோடு வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை அடுத்தடுத்து செயல்பட்டு வருகின்றன .
சேலம் தெற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சியின் எம்எல்ஏவான அருள் என்பவர் சேலம் மாவட்டம் முழுவதும் சூர்யாவுடைய திரைப்படத்தை எந்தத் திரையரங்கும் திரையிடக்கூடாது என்று மிரட்டல் கடிதம் அனுப்புகிறார் .
பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞரான பாலு, ஜெய் பீம் திரைப்படம் திரையிடப்பட்டு இருந்தால் வன்னியர் மக்களின் உணர்வுகள் ‘வேறு’ மாதிரி இருந்திருக்கும் என்று மிரட்டுகிறார்.
ராமதாஸ் கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட காடுவெட்டி குருவின் மகனும் மருமகனும் சூர்யாவுக்கு மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கின்றனர். ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள காடுவெட்டி குருவின் மருமகன் அக்னி கலசத்தை அவமானப்படுத்தி விட்டார்கள், அது வன்னியர்களின் சின்னம் என்று கூறுகிறார்.
இயக்குனர் வ. கௌதமன் வன்னிய குடியே தமிழகத்தில் மிகப்பெரிய குடி. அதை அவமானப்படுத்துகிறார்கள், திராவிடர்கள் திட்டமிட்டு தமிழ் சாதிகளுக்குள் சண்டையை மூட்டி விடுகிறார்கள் என்று புதுக்கரடி விடுகிறார். சீமானோ, அக்னி கலசத்தை திட்டமிட்டு வைத்ததாக கூறுகிறார்.
வன்னியர் சங்கம் ஆரம்பிக்கும் போது இருந்து ஒவ்வொரு வன்னியர்கள் வீட்டிலும் செங்கல், சிமெண்ட், நகையாகவும் பணமாகவும் பெற்ற பல கோடி ரூபாய் வன்னியர் அறக்கட்டளையாக இருந்தது. வன்னியர் அறக்கட்டளையை தற்பொழுது ராமதாஸ் தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொண்டு விட்டார். தமிழகத்திலேயே மிகப்பெரிய குடியான வன்னிய குடியை ஏமாற்றிய ராமதாஸ் மீது கவுதமனுக்கு கோபமில்லை .
கௌதமன் எப்பொழுதும் பாதிக்கப்பட்ட வன்னியர்களுக்காக இருந்தாரா ? இல்லை, அவர் அதிகாரவர்க்கத்தின் வன்னியர்களுக்கான நபராகவே இருந்திருக்கிறார்.
சந்தன கடத்தல் வீரப்பன் பற்றி நாடகம் எடுத்த வ. கௌதமன், பாதிக்கப்பட்ட வன்னியர்களுக்கு ராமதாஸ் எதுவும் செய்யாததை பற்றி எதுவும் சொல்லவில்லை. இதுதான் அவர் யோக்கியதை.
சமீப கால வரலாற்றில் சுமார் 30 ஆண்டுகளுக்குள் நடந்த வரலாற்றிலாவது வன்னியர்களுக்கு ராமதாஸ் ஏதாவது உதவி செய்திருக்கிறாரா ? உபத்திரவம் தான் செய்திருக்கிறார். அதற்கான உதாரணங்களையும் இங்கு பார்க்கலாம்.
வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த அதிவிரைவு படை
பழங்குடியின மக்களையும் வன்னியர்களையும் சித்திரவதை செய்து கொண்டிருந்த காலம் அது. பள்ளி கட்டிடங்களிலும் போலீஸ் நிலையங்களிலும் சித்திரவதை செய்வதற்கென்றே தனி இடம் இருந்தது.
அதில் வன்னியர் சாதியை சேர்ந்தவர்களையும் பழங்குடியின மக்களையும் கொண்டுவந்து போலீசை சித்திரவதை செய்வார்கள். ஜன்னல்களில் கையை கட்டி போட்டு தண்ணீரை தட்டில் வைப்பார்கள் நாய்போல நக்கித்தான் குடிக்க வேண்டும்.
அங்கே தங்கியிருந்த அதிரடிப்படைக்கு எதிராக , வன்னியர் சாதி மக்கள் சித்திரவதை செய்யப்படுவதற்கு எதிராக ஒருநாள்கூட வன்னியர் சங்கமும் பாட்டாளி மக்கள் கட்சியோ போராட்டம் நடத்தியதில்லை.
வீரப்பன் படுகொலை செய்யப்பட்டபோது, இன்றைக்கு வீரப்பனுடைய படத்தை பெருமையாக போட்டுக்கொண்டு திரியும் எந்த வன்னியர் சங்கமும் எந்தப் போராட்டமும் நடத்தவில்லை. போலீசின் அடக்குமுறைக்கு எதுவும் பேசாமல் ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்த வேலையைத்தான் வன்னியர் சங்கமும் பாட்டாளி மக்கள் கட்சியும் செய்தது.
தேவாரத்திற்குப் பிறகு அதிரடிப் படைக்கு பொறுப்பு ஏற்று செயல்பட்ட மேட்டூர் பகுதியைச் சேர்ந்த வன்னியரான கோபாலகிருஷ்ணன் என்ற போலீஸ் அதிகாரி வன்னியர் சாதி மக்களையும் பழங்குடியின மக்களையும் செய்த சித்தரவதைகள் கொஞ்சநஞ்சமல்ல. அதனாலேயே வீரப்பன், கோபாலகிருஷ்ணனுக்கு குறிவைத்ததும் கோபாலகிருஷ்ணன் கண்ணிவெடியில் சிக்கி சின்னாபின்னம் ஆனதும் அனைவரும் அறிந்ததே.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவரான தோழர் கொளத்தூர் மணி தன்னுடைய பேட்டியில் , “எங்களுடைய ஊரில் இருந்து இரண்டு பேருந்துகள் நிறைய மக்கள் அதிரடிப்படை வன்னியர்களை சித்திரவதை செய்வது தொடர்பாக தைலாபுரத்தில் சென்று முறையிட்டார்கள். அவர்களுக்கு எந்த உதவியும் ராமதாஸ் செய்யவில்லை” என்பதையும் “வன்னியர் என்றாலே அவர்களை கைதுசெய்து அதிரடிப்படை போலீஸார் கடும் சித்திரவதைகள் செய்தனர்” என்பதையும் பதிவு செய்துள்ளார்.
இன்றைக்கு ஒட்டுமொத்த வன்னியர் மக்களின் அத்தாரிட்டி ஆக தன்னைக் கூறிக்கொள்ளும் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸின் யோக்கியதையை தெரிவிப்பதற்காகவே மேற்கண்ட சில சம்பவங்களை கூறவேண்டி உள்ளது.
000
சூர்யா நடமாட முடியாது என்று கூறும் காடுவெட்டி குருவின் மகனும் மருமகனும் வன்னியர் சொத்துக்களான பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஏமாற்றிய ராமதாஸ் வீட்டின் முன் நின்று பேசுவதற்காகவாவது வக்கிருக்கிறதா ? இவர்கள் எல்லோரும் சாதியை வைத்து பிழைப்பு நடத்தும் பிராணிகள்.
ராமதாஸ் போல தங்களால் வன்னியர் சாதி மக்களை கொள்ளையடிக்க முடியவில்லையே, அதிகாரத்தை செலுத்த முடியவில்லையே என்பதுதான் இவர்களின் ஏக்கம். அதனால்தான் ராமதாஸுக்கு எதிராக இருந்தாலும் ராமதாஸின் திட்டத்தில் இவர்களெல்லாம் அணிவகுத்து நிற்கிறார்கள்.
படிக்க :
பாமக-வின் ஜெய்பீம் எதிர்ப்பு ‘நாடக ’ அரசியல் !
பா.ம.க வை நிராகரிக்கும் வன்னியர்கள் – கள ஆய்வு !
வன்னியர் அறக்கட்டளை மூலமாக எத்தனை வன்னியர் சாதியை சேர்ந்த ஏழை மாணவர்கள் இலவசமாக படித்து உள்ளார்கள்?
செங்கல்வராய நாயக்கர் என்ற வன்னியர் சாதியைச் சேர்ந்தவர் தன்னுடைய சொத்துக்களை வன்னியர் சாதியை சேர்ந்த ஏழைகளுக்கு எழுதி வைத்துவிட்டு இறந்து போனார். செங்கல்வராய நாயக்கர் ட்ரஸ்டின் சொத்துக்களையும் கைப்பற்றுவதற்கு பாமக முயற்சிசெய்தது, செங்கல்வராய நாயக்கர் டிரஸ்ட்டை ஆய்வு செய்ய வந்த நீதிபதியை கொலை செய்யவும் முயற்சி செய்தது.
அக்னி கலசம் வன்னியர்களின் சின்னமா?
உலகத்தில் எந்த ஒரு ஜாதியும் பிறக்கும்போதே குறிப்பிட்ட சின்னத்தோடு பிறப்பதில்லை. அந்த சாதிக்காக உருவாவதாக, உருவாக்கியதாக சொல்லப்படக்கூடிய கட்சிகள் தங்களுக்கு என்று ஒரு சின்னத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். அந்த சின்னத்தை கேலி பேசினாலே அது ஒட்டுமொத்த ஜாதியும் இழிவுப்படுத்துவதாக பேசுகிறார்கள்.
அக்கினி கலசம் என்பது வன்னியர்களின் சின்னம் அல்ல . அது மாறாக ராமதாசுடைய வன்னியர் சங்க சின்னம் தான் என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் துணைத் தலைவரான திருமால்வளவன் ஒரு ஊடகப் பேட்டியில் தெரிவிக்கிறார். 1980-களில் தொடங்கப்பட்ட ஒரு சங்கத்தின் சின்னம் எப்படி ஒட்டுமொத்த வன்னியர்களின் சின்னமாக இருக்க முடியும்?
ஒவ்வொரு சாதியும் தங்கள் சாதிப் பெருமையைப் பறைசாற்றுவதற்காக பார்ப்பனர்களின் அடிமையாக இருப்பதை நிரூபிப்பதற்காக பல்வேறு புராணங்களையும் கதைகளையும் அவிழ்த்து விடுகிறார்கள். அதன்படி புராணம் கொண்ட ஒரே சாதி வன்னியர் சாதிதான் என்ற பெருமையோடு வன்னியர் பெருமை தொடங்குகிறது.
அசுரர்களை அழிப்பதற்காக சிவபெருமான் தனது நெற்றியில் இருந்த வியர்வையை யாககுண்டத்தில் விட்டு அதிலிருந்து பிறந்தார்கள் வன்னியர்கள் என்ற கட்டுக்கதையை உண்மையாக்க ராமதாசு, கௌதமன் போன்றவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
அறிவியலுக்கு ஒவ்வாததை புறந்தள்ள வேண்டும் என்பதே மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்கான முக்கியமான விதியாகும். ஆனால் யாககுண்டத்தில் இருந்து பிறந்தார்கள் என்ற ஒரு அறிவியலுக்குப் புறம்பான ஒன்றை அவர்கள் நம்புகிறார்கள் என்றால் அது அவர்களின் உரிமை. ஆனால் அதைத்தான் எல்லோரும் நம்ப வேண்டும் என்று திணிப்பது எவ்விதத்தில் நியாயம்? டி.என்.ஏ டெஸ்ட் செய்தால் தெளிந்துவிடும் நெருப்பிலிருந்து வந்தார்களா இல்லையா என்று?
திண்டுக்கலில் கிறித்துவ வன்னியர்கள் குறிப்பிடத்தகுந்த அளவு இருக்கிறார்கள். அவர்களும் சிவபெருமானின் நெற்றியிலிருந்து வந்தார்களா என்ன? விவிலியத்தில், உலகத்தை இயேசு உருவாக்கிய கட்டுக்கதைகளை, கிருத்துவர்கள் நம்பிக் கொண்டிருந்தாலும் அதை கேலிக்குள்ளாக்குபவர்கள் மீது வன்மத்தோடு பாய்வதில்லை. ஏனென்றால் உலகம் ஒரு கோள வடிவமானது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது.
குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்ற சார்லஸ் டார்வினின் கோட்பாடு உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. உடல்நிலை சரியில்லை என்றால் அனைவரும் மருத்துவமனைக்கு தான் சொல்கிறார்கள். கோயிலுக்குத் தூக்கி செல்பவர்களை உலகமே மூட நம்பிக்கையாளர்கள் என்று கேலி பேசிக்கொண்டிருக்கிறது.
இச்சூழலில் நாங்களெல்லாம் யாககுண்டத்தில் இருந்து வந்தவர்கள் என்று வன்னிய சாதிவெறியர்கள் சொல்வதற்கும், நாங்களெல்லாம் சிவபெருமானுடன் கயிலாயத்தில் இருந்து நேரடியாக வந்தோம் என்று தீட்சிதர்கள் சொல்வதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
நாங்கள் பிறப்பிலேயே சிறந்தவர்கள் , மேன்மையானவர்கள் என்ற மூடநம்பிக்கை தவிர வேறு ஒன்றும் இல்லை. இதன்மூலம் இயல்பிலேயே தங்கள் ஆதிக்கம் நியாயமானதுதான் என்பதை கூறுகிறார்கள்.
000
எதைப்பற்றி யாரும் விமர்சனம் செய்தாலும் எங்கள் இனம், எங்கள் சாதி, எங்கள் மதம் புண்பட்டு விட்டது என்றால் எதைத் தான் பேச முடியும் ? பெருமாள்முருகன் ஒரு கதையை எழுதினார் என்பதற்காக தங்கள் மனம் புண்பட்டதாகச் சொல்லி, கவுண்டர் சாதிவெறியர்கள் மிரட்டி உருட்டி அவரை ஊரைவிட்டே துரத்தினார்கள்.
ஒரு படைப்பைப் பற்றிய விமர்சனம் அரசியல் ரீதியாக இருக்கவேண்டுமே, ஒழிய தங்கள் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகிறது என்று பேசுவதாக இருந்தால் யாரும் எதையும் உருவாக்க முடியாது படைக்க முடியாது. அப்படிப்பார்த்தால் வ. கௌதமன் எடுத்த சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும் ஆட்டோ சங்கர் தொடர்பான நாடகங்கள் போலீஸ் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதாகச் சொல்லலாமல்லவா ?
தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கு மேல் வன்னியர் சாதி மக்களின் எண்ணிக்கை இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் ராமதாசுக்கு ஓட்டு போடுவதில்லை. தமிழகத்தின் வட மாவட்டங்களில் கலவரம் செய்வதற்காக ஒரு கும்பலை உருவாக்கியிருக்கிறார். அதன்மூலம் தன்னுடைய அரசியல் செல்வாக்கை நிலைநாட்டுவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அதில் குறிப்பிடத்தகுந்த அளவு வெற்றியும் பெற்றுள்ளார். ராமதாஸின் இடத்தைப் பெறுவதற்கு தான் அனைத்து சாதிக் கட்சிகளும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன.
ஜெய் பீம் திரைப்படம் குறித்து அன்புமணிக்கு பாரதிராஜா கடிதம் எழுதினார். இதுகுறித்து பதில் கடிதம் எழுதியுள்ள அன்புமணி, வில்லனுக்கு பின்புறம் அக்னிசட்டிக்கு பதிலாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அல்லது தீரன் சின்னமலையின் படம் இருந்தால் என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார். தலித் சாதி மட்டுமல்லாமல், ஏனைய பிற ஆதிக்க சாதிகளுடனும் முரண்பாட்டை உருவாக்கி அதன் மூலம் வன்னியர் சாதி மக்களை தன் பிடிக்குள் கொண்டுவர வேண்டும் என்ற முனைப்போடு ராமதாஸ், அன்புமணி கும்பல் தீவிரமாக இறங்கி இருக்கிறது .
10.5 சதவீத சதவிகித உள் ஒதுக்கீடு உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பிறகு இருந்து மற்ற சாதியினர் உடனான முரண்பாட்டை ராமதாஸ் கும்பல் தொடர்ச்சியாக வளர்த்து வருகிறது.
இதன் மூலம் இழந்த பெருமையை மீட்டுருவாக்கம் செய்ய ராமதாஸ் துடித்துக் கொண்டிருக்கும் பொழுது அதற்கு உதவியாக ஆர்.எஸ்.எஸ் தற்பொழுது களமிறங்கி இருக்கிறது. வட இந்தியாவைப் போல தமிழ்நாட்டில் சாதி மதம் இவற்றிலிருந்து பெரும்பான்மையான மக்கள் ஓட்டு போடுவதில்லை. ஆனால் அதை நோக்கி தமிழ்நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது.
தமிழகத்திலுள்ள தமிழ் இன உரிமைக்கான போராட்டங்களை ஒழித்துக் கட்டுவதன் மூலமாகத்தான் தமிழ் நாட்டை அடிமைப்படுத்த முடியும் என்பதில் மோடி ஆர்எஸ்எஸ் கும்பல் தெளிவாகவே இருக்கிறது. அதற்கு ஒரு வாய்ப்பாகவே ஜெய்பீம் படப் பிரச்சினையை பயன்படுத்திக் கொண்டுள்ளது.
வட மாவட்டங்களிலும் வன்னியர் சங்கம் அசாதாரணமான வளர்ச்சி பெற்றது எவ்வாறு என்பதற்கான பதிலை காடுவெட்டி குரு கொடுக்கிறார். “வன்னியர் சங்கம் தொடங்கப்படவில்லை என்றால் வன்னியர்கள் பலரும் நக்சலைட் ஆகி இருப்பார்கள் “, என்று கூறியிருக்கிறார்.
வட ஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் பற்றி எழுந்த நக்சல்பாரி இயக்கத்தை ஒழித்துக் கட்டுவதற்காக வன்னியர் சங்கத்தை ஆளும் வர்க்கம் பயன்படுத்திக்கொண்டது, ஊக்குவித்தது. நக்சல்பாரி இயக்கத்தின் தியாகி தோழர் பாலன் தலைமையில் எங்கெல்லாம் இரட்டைக் குவளை முறை அழித்து ஒழிக்கப்பட்டதோ, சாதி வேற்றுமை களையப்பட்டதோ அங்கெல்லாம் வன்னியர் சங்கம் மூலம் மீண்டும் தீண்டாமைக் கொடுமைகள் நிறைவேற்றப்பட்டன, நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
000
இந்தியாவில் சாதியும் வர்க்கமும் பின்னிப்பிணைந்து இருக்கிறது. நாட்டின் உழைக்கும் மக்களை சுரண்டி ஓட்டாண்டியாக்குகின்ற தனியார்மய தாராளமய உலகமயக் கொள்கைகளை எதிர்த்தும் அதற்கு எதிரான போராட்டங்களை வலுப்படுத்த வேண்டியதே இன்றைய நம் முன்னுள்ள கடமை. அதற்குத் தடையாக இருக்கக்கூடிய பார்ப்பனிய இந்து மத வெறியையும் அதற்கு அடிப்படையாக உள்ள சாதி வெறியயும் ஒழித்துக்கட்டுவதும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய பணியாகும்.
2024-ம் ஆண்டு காவி கார்ப்பரேட் பாசிச அரசை நிறுவ வேண்டும் என்ற லட்சியத்தோடு செயல்படும் மோடி – ஆர்.எஸ்.எஸ்.-க்கு தமிழகத்தை கூறுபோட்டாக வேண்டும் என்பது லட்சியம்.
மக்களுடைய அடிப்படை பிரச்சனைகளுக்காக அவர்களை வர்க்கமாக அணிதிரட்டி காவி கார்ப்பரேட் பாசிசத்துக்கு எதிராக நிறுத்துவது என்ற பணியை நாம் தீவிரமாக முன்னெடுக்கா விட்டால், பார்ப்பனியத்திற்கு எதிரான தமிழ் இன ஓர்மையை ஒழித்துக்கட்டி சாதி ரீதியாக பல கூறுகளாக தமிழகத்தை பிரித்து வைக்கும் ஆர்எஸ்எஸ் திட்டம் நிறைவேறி விடும் என்பது மட்டும் உண்மை .
மருது
மக்கள் அதிகாரம்

சரித்திரம் பற்றிய மக்களின் கண்ணோட்டத்தை காட்டும் வரலாற்றுக் கதைகள் || நா. வானமாமலை

0
தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 20
முதல் பாகம்…………………………………………………………………………………………முந்தைய பாகம்
நா. வானமாமலை
வரலாற்றுக் கதைகள்
ரலாற்றுக் கதைப் பாடல்கள் கிடைப்பது அரிதாக உள்ளன. ஆயினும் கிடைப்பனவற்றைக் கொண்டு பார்த்தால், சுமார் நானூறு வருட காலமாக பாமர மக்கள் சரித்திர நிகழ்ச்சிகளைப் பற்றிய தங்கள் கண்ணோட்டத்தைப் பாடல்கள் மூலம் வெளியிட்டுள்ளார்கள் என்று நிச்சயமாகச் சொல்லலாம். இவற்றுள் பல ஏட்டிலேயே மங்கிக் கிடக்கின்றன. இவற்றுள் மிகப் பழமையானது ‘பஞ்ச பாண்டவர்’ கதை அல்லது ‘ஐவர் ராஜாக்கள்’ கதையாகும்.
ஐவர் ராஜாக்கள் கதை
பாண்டியர் பேரரசு வலிமை குன்றி சிற்றரசுகளாகப் பிரிந்த காலத்தில் இஸ்லாமியப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்துவதற்காக விஜயநகரப் பேரரசு தமிழ் நாட்டைத் தனது ஆட்சிக்குள் கொணர முயன்றது. கம்பணன் தென் நாட்டில் படையெடுத்தான். தென்பாண்டி நாட்டில் பாண்டியர் வம்சத்தைச் சேர்ந்த ஐந்து அரசர்கள், ‘நாயக்கரது மேலாதிக்கத்தை ஏற்க மறுத்தனர். வித்தவராயன் படை கொண்டு தெற்கே வந்தான். கயத்தாறில் பெரும்போர் நிகழ்ந்தது. தோற்றுப் பின்வாங்கிய பாண்டியர்கள் பணியாமல் போராடிக் கொண்டே இருந்தனர். வள்ளியூரில் நடந்த போரில் நான்கு பாண்டியர்கள் இறந்து போனார்கள்.
எல்லோரிலும் இளையவனான குலசேகர பாண்டியன் சிறைப்பட்டான். விசுவநாதனது மகளை அவனுக்கு மணம் செய்வித்து விட்டால் பாண்டியர் எதிர்ப்பு அடங்கும் என்று கன்னடிய மன்னன் எண்ணினான். ஆனால் அந்தத் திருமணம் நடக்கவில்லை . குலசேகரன், வைரம் தின்று இறந்து விட்டான். அவனையே மணப்பதென்று எண்ணியிருந்த கன்னட இளவரசி உடன்கட்டையேறினாள்.
படிக்க :
மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் : விவசாயிகளின் வெற்றி நிலையானதா ?
தத்தளிக்கும் டெல்டா : விவசாயிகளுக்கான இழப்பீட்டை குறைக்கும் தமிழக அரசு !
இக்கதையே இருப்பதற்குள் மிகவும் பழமையானதாகத் தோன்றுகிறது. இக்கதையின் நிகழ்ச்சிகள் சுமார் 400 வருஷங்களுக்கு முன் நடைபெற்றவை, கதை நிகழ்ச்சிகளில் போர் நிகழ்ந்ததென்பது உண்மை. குலசேகர பாண்டியன், கன்னட இளவரசி இவர்களைக் குறித்த நிகழ்ச்சிகள் உண்மையா என்றறிய வழியில்லை. ஆனால் இது மக்களைக் கவர்ந்து விட்டதோர் கற்பனையாக இருக்கலாம்; திருமணத்தாலும் அடிமைத்தனத்தை வரவேற்கக் கூடாது என்ற உணர்ச்சியின் உருவமாக நாட்டுப் பாடல் குலசேகரனைச் சித்திரிக்கிறது. தமிழ் நாட்டு மரபின்படி கன்னட இளவரசி தனக்கு மணம் பேசிய மணமகன் இறந்ததும் வேறொருவரை மணம் செய்துகொள்ள விருப்பமில்லாமல் இறந்து விடுவதாகக் கதை சொல்லுகிறது. இக்கதை மனிதப் பண்பின் இரண்டு உயர்ந்த அம்சங்களை எடுத்துரைக்கிறது.
ராமப்பய்யன் கதை
திருமலை நாயக்கன், தன்னுடைய காலத்தில் தமிழகம் முழுவதையும் ஒரு குடைக்குக் கீழ் கொணரப் பல போர்களை நடத்தினான். அவனுடைய தளவாய் ராமய்யன் தென் பாண்டி நாடு முழுவதையும் வென்று அடிமைப்படுத்தினான். இராமநாதபுரம் சேதுபதிக்கும், ராமய்யனுக்கும் பல போர்கள் நடந்தன. இப்போரில் இலங்கையிலிருந்து வந்த டச்சுப் போர்க் கப்பல்கள் பங்கு கொண்டன. சடைக்கத் தேவனது மருமகன் வன்னியன் வீரத்தோடு போராடி மாண்டான். இறுதியில் சேதுபதி சிறைப்பட்டான்.
செஞ்சிக் கோட்டை
தண்டனையால் பகைமையை வளர்த்துக் கொள்ளுவதைவிட நட்புரிமையால் சேதுபதியை அணைத்துக் கொள்ள எண்ணி திருமலை நாயக்கன் அவனை விடுதலை செய்து கடற்கரை மண்டலத்தின் அதிபதியாக நியமித்து, ‘திருமலை சேதுபதி’ என்ற பட்டமும் அளித்து அவனோடு உறவு பூண்டான். இச் சேதுபதியே பிற்காலத்தில் மைசூர் மன்னன் மதுரையைப் பாதுகாக்கப் பெரும் படையோடு சென்று போராடினான். திருமலை நாயக்கனது பெருமையையும், ராமய்யனுடைய வீரத்தையும், சடைக்கனுடைய வீரத்தையும், நன்றியுணர்வையும் போற்றிப் பாடும் நாட்டுப்பாடல் ராமப்பய்யன் அம்மானை.
இரவிக்குட்டிப்பிள்ளை
இதுபோலவே ராமப்பய்யன் தெற்குக் கோடியில் திருவனந்தபுரம் மன்னர்களோடு, பல போர்கள் புரிந்திருக்கிறான். ஆரல்வாய் மொழிக் கோட்டையிலிருந்து அடிக்கடி வரும் படையெடுப்புகளைத் தடுக்கவும், நாஞ்சில் நாட்டைக் கைப்பற்றவும் செய்த முயற்சியே இது. இம் முயற்சியை நிறைவேற்ற ராமய்யன் பெருபடை கொண்டு ஆரல்வாய் மொழியை முற்றுகையிட்டான். மலையாள மன்னன் படை சிதறியோடியதும் இரவிக்குட்டி என்ற இளைஞன் படைகளைச் சேகரித்து பெரும் படையை எதிர்த்துப் போராடினான். அரசனை எதிர்த்து நின்ற எட்டு வீட்டுப் பிள்ளைமார் என்ற பிரபுத்துவத் தலைவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுக்க முன்வந்தார்கள்.
படிக்க :
மன்னர் காலத்து சுரண்டல்களை எடுத்தியம்பும் தமிழர் வரலாறு || நா. வானமாமலை
இந்து ராஷ்டிரக் கனவோடு வரலாற்றைத் திரிக்கும் சங்கப் பரிவாரக் கும்பல் !
இரவிக்குட்டிப்பிள்ளைக்கு துணைப்படை அனுப்புவதாக வாக்களித்துவிட்டு நல்ல சமயத்தில் அவனைத் தனியே தவிக்கவிட்டனர். இரவிக் குட்டிப்பிள்ளை வீரமரணம் எய்தினான். அவனது இணையற்ற வீரத்தைப் போற்றும் தமிழ்நாட்டுப் பாடலும், மலையாள நாட்டுப் பாடலும் உள்ளன. இச்சம்பவங்கள் 1637லும், 1639லும் நடைபெற்றவை.
தேசிங்குராஜன் கதை
நாயக்கர் ஆட்சிக் காலத்திற்குப் பின் முகலாயப் படையெடுப்பு நடந்த காலத்தில் அப்பேரரசை எதிர்த்து செஞ்சிக் கோட்டையின் சிற்றரசன் தேசிங்கு போராடினான். அவனுக்கு உதவி செய்தவன் செஞ்சி முஸ்லீம்களின் தலைவன் முகமதுகான். ஜாதியையும் மதத்தையும், மேலாகக் கருதாமல் நட்பையும், நாட்டுப் பற்றையுமே மேலெனக் கருதியவன் முகமதுகான். இவர்களது வரலாற்றுக் கால வாழ்வு பத்து மாதங்கள் தான். நீண்டநாள் அரசாண்ட மன்னர்களின் பெயர் மக்களின் மனத்தில் இடம் பெறாமல் போயின. ஆனால் பத்து மாதங்கள் ஆண்ட தேசிங்கின் பெயர் தெரியாதவர் தமிழ்நாட்டில் இல்லை. ஏன்?
இலட்சம் படை வீரர்களும், நானூறு பீரங்கிகளும் கொண்ட முகலாயர் படையை முன்னூறு குதிரைவீரர்களைக் கொண்டு எதிர்த்தான் தேசிங்கு. முகலாயப் படைத்தலைவன் சதகுத்துல்லாவைக் கொன்று விட்டான். தானும் உயிர்நீத்தான். பணியாது போராடிய தேசிங்கின் நண்பன் ஒரு முஸ்லீம். அவன் நண்பனுக்காகத் தன் மதத்தினரை எதிர்த்தான்; அவனும் உயிர் நீத்தான். முரட்டு வீரமாயினும் தேசிங்கின் அஞ்சாமைக்குத் தமிழகம் தலைவணங்குகிறது.
(தொடரும்)
« முந்தைய பாகம் ………………………………………………………………………………… அடுத்த பாகம் »
தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்