Wednesday, July 23, 2025
முகப்பு பதிவு பக்கம் 212

ஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் || NDLF

வந்துவிட்டது, தொழிலாளி வர்க்கத்தின் இணையக் குரல்!

அன்பார்ந்த தொழிலாளத் தோழர்களே,

மாபெரும் பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் அவர்களது  151-வது பிறந்தநாளில் (22, ஏப்ரல் 2021) தொழிலாளி வர்க்கத்தின் இணையக் குரலாக “புதிய தொழிலாளி” என்கிற  இணையப் பக்கத்தை அறிமுகம் செய்து, துவக்கி வைப்பதில் உற்சாகம் அடைகிறோம்.

செப்.2014 முதல் 2019 வரை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தனிச் சுற்று இதழாக வெளிவந்த “புதிய தொழிலாளி” மாத இதழ் பல்வேறு காரணங்களால் நின்றுபோனது. பிப்-மார்ச் 2020-ல் கலைப்புவாதிகளால் அமைப்பு சீர்குலைக்கபட்ட காரணத்தினாலும், கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு இன்று வரை அமலில் இருக்கும் பலகட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளாலும் இதழை அச்சிட்டு, தொழிலாளர்களிடம் கொண்டு செல்வது சாத்தியம் இல்லாமல்போனது.

காவி – கார்ப்பரேட் பாசிசம் தொழிலாளி வர்க்கத்தையும், ஏனைய உழைக்கும் மக்களையும் கார்ப்பரேட் இலாபவெறிக்குப் பலியிட்டு வருகின்ற சூழலில் “புதிய தொழிலாளி” தனது போர்க்குரலை மீண்டும் ஒலிக்கத் துவங்கியுள்ளது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சீர்குலைவுவாதிகளிடமிருந்து பாதுகாக்க மாநில அளவில் ஒருங்கிணைப்புக் குழு கட்டப்பட்டிருப்பதை 16.4.2021 தேதியிட்ட பத்திரிகை செய்தி மூலமாக அறிவித்திருந்தோம். பு.ஜ.தொ.மு-வின் பொதுச் செயலாளராக இருந்த சுப.தங்கராசுவின் பாட்டாளி வர்க்க விரோதப் போக்குகளால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு செப்.2020-ல் நீக்கப்பட்டார். அவரை கண்காணிக்கத் தவறியதற்காக அன்றைய ஒட்டுமொத்த மாநிலக் குழுவும் நீக்கப்பட்டு, அடுத்து வருகின்ற 4 ஆண்டுகளுக்கு பு.ஜ.தொ.மு-வின் எந்த மட்டத்திலும் பொறுப்புக்கு வர தடை விதிக்கப்பட்டது.

இந்த பின்னணியில், புதிய மாநில நிர்வாகக் குழுவை தேர்வு செய்யும் மாநில மாநாட்டை நடத்தப் பொறுபளிக்கப்பட்ட 3 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழுவில் இருந்த 2 பேர், திட்டமிட்ட வகையில் மாநிலக் குழுவை தமது தரப்பினர் கைப்பற்றும் வகையில் பல்வேறு தகிடுதத்தங்களை செய்தனர். தேர்தல் குழுவின் பெரும்பான்மை என்கிற பெயரில் எந்த மரபு மீறலையும் செய்யத் துணிந்தனர்.

இனியும் இதை அனுமதிக்கக் கூடாது என்று களமிறங்கிய மாவட்டக் குழுக்கள், முன்னணியாளர்கள் ஆகியோரைக் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கப்பட்டது. புரட்சிகர தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு-வை சீர்குலைவுவாதிகளிடமிருந்து பாதுகாத்து, குறிப்பிட்ட காலத்துக்குள் புதிய மாநிலத் தலைமை ஒன்றை உருவாக்குவதே ஒருங்கிணைப்புக்குழுவின் முதன்மையான பணி. அதனை மேற்கொள்ளவும், தொழிலாளி வர்க்கத்தை வர்க்க உணர்வூட்டி அமைப்பாக்கவும் இந்த இணையக் குரல் முன்னணி பாத்திரமாற்றும் என நம்புகிறோம்.

புரட்சிகர வாழ்த்துக்களுடன்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக்குழு,
தமிழ்நாடு.
செல்பேசி : 80563 86294
இணைய தளம் : புதிய தொழிலாளி

கொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்

ந்தியாவில் கொரோனா தீவிரம் மிகவும் அதிகமாக உள்ளது. உத்திரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பிணங்களை எரிக்ககூட நீண்ட வரிசை நிற்கிறது.

தமிழகத்தில் பகலில் திறந்துவிட்டு இரவில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் கும்பமேளாவில் கூட்டம் கூட அனுமதித்துக் கொண்டும், தேர்தல் கூட்டங்களை அனுமதித்துக் கொண்டும் மற்றொரு பக்கத்தில் சமூக இடைவெளி பற்றியும் ஊரடங்கு பற்றியும் வகுப்பெடுக்கிறார் மோடி.

மோடி கும்பலின் இந்த கொரோனா ஊரடங்கிற்கு பின்னால் இருக்கும் நோக்கங்களை அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன்

பாருங்கள் ! பகிருங்கள் !!

இலங்கையில் தொடரும் போலீஸ் சித்திரவதைகள் || எம். ரிஷான் ஷெரீப்

ண்மையில் ஒரு போலீஸ் அதிகாரி பட்டப் பகலில் எல்லோரும் பார்த்திருக்க நடுத்தெருவில் வைத்து ஒருவர் மீது ஏறி மிதித்து தாக்குதல் நடத்தினார். அதற்காக, இலங்கை போலீசாரை மிகவும் வன்மையாகக் கண்டித்து பல எதிர்ப்புகள் கிளம்பிக் கொண்டிருக்கும் அதே வேளையில், அந்த சூடு ஆறும் முன்பே கொழும்பு, மருதானை போலீசாரால் மற்றுமொருவர் குரூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற சுகாதார சேவையின் ஆர்ப்பாட்ட நிகழ்வை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த சுயாதீன ஊடகவியலாளரான மலிக அபேகோன் இவ்வாறு போலீசாரால் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தொழிற்சங்க சேவையாளர்களும், சட்டத்தரணியும்  (வழக்கறிஞர்) மலிகவை சந்திக்க மருதானை போலீசுக்கு சென்ற போதிலும் அவர்களுக்கு அவரை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை.

படிக்க :
♦ இலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் !

♦ இராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை ! || புஜமாலெ கட்சி

பின்னர் சட்டத்தரணியால் எழுத்து மூலமான விண்ணப்பம் விடுக்கப்பட்டு வெகு நேரத்திற்குப் பின்னரே அவரைச் சந்திக்க முடிந்திருக்கிறது. அவரைக் கொண்டு செல்லும் போது ஜீப்பினுள் வைத்தும், காவலரணில் வைத்தும், போலீஸ் நிலைய அதிபரின் அறைக்குள் வைத்தும் தொடர்ச்சியாக அவர் மீது பல தடவைகள் போலீசால் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் (Frontline Socialist Party) செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்திருக்கிறார்.

போலீஸ் தடுத்து வைத்திருந்த நிலையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள மலிக அபேகோனை கடந்த எட்டாம் தேதி மாளிகாகந்த நீதிமன்றத்தில் விசாரணைக்காக கொண்டு வந்த போலீஸ், அங்கு போலி தகவல்களை உள்ளடக்கிய மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. அவ்வேளையிலும் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருந்த மலிக நீதிமன்ற வளாகத்தில் விழுந்து விட்டார். அதன் பிறகே அவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு வழக்கு விசாரணை மீண்டும் 12-ஆம் தேதிக்கு ஒத்திப் போடப்பட்டது.

“ராஜபக்சே அரசாங்கமானது எப்போதும் கேமராவுக்கும், பேனாவிற்கும், இணையத்துக்கும்  பயப்படும் அரசாங்கம். காரணம், 2015-ஆம் ஆண்டுக்கு முன்னர் நடந்த அனைத்து விடயங்களும் இப்போதும் எமக்கு நினைவிருக்கிறது. அமைதியான ஆர்ப்பாட்டமொன்றைத் தடுத்து நிறுத்த நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக் கொள்வது அக்காலத்தில் அதற்கு மிகவும் இலகுவானக் காரியமாக இருந்தது.

அவ்வாறே அமைதியான ஆர்ப்பாட்ட நிகழ்வுகளின்  போது, அது செய்து வந்த காரியமான குண்டர்களை அனுப்பி மிரட்டுவதை எம்மால் இன்னும் மறந்துவிட முடியாது. குறிப்பாக, சிவில் போலீஸ் அதிகாரிகளைப் பயன்படுத்தி தம்மை எதிர்ப்பவர்களைப் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பது ராஜபக்சே ஆட்சியில் மிகவும் பரவலாக நடைபெற்றது. அது வடக்கு – கிழக்கிலும் கூட நடைபெற்றது.

மலிக அபேகோன்

எமக்கு இந்த நிகழ்வை வைத்துப் பார்க்கும்போது, ஊடகவியலாளர் ஒருவர் கையில் கேமராவை வைத்திருப்பதுவும் கூட அவரை மிகவும் பயங்கரமான நிலைமைக்கு இட்டுச் செல்லும் நிலைமை மீண்டும் உருவாகியிருப்பதை, இது தெளிவுபடுத்துகிறது. இங்கு போலீசை மாத்திரம் குற்றம் சொல்ல முடியாது. இது, போலீசைப் போலவே இந்த ஆட்சியின் செயற்பாடுகளிலும் உள்ள வன்முறைகளையே எடுத்துக் காட்டுகிறது.

ஆட்சி முறையானது ஜனநாயக எதிர்ப்புடன் செயற்படுமானால் இவ்வாறு மோசமான விடயங்கள் நடைபெறுவதை தடுக்க முடியாது. ஆட்சியாளர்கள் ‘சட்டம் என்றால் தாம்தான்’ என்று கூறியவாறு மார்தட்டிக் கொண்டு செயற்படுகையில் இந்த மோசமான நிலைமை மேலும் மேலும் அதல பாதாளத்துக்குச் சென்றுவிடும்.

இது எமக்குத் தெளிவாகத் தென்படும் இடம் போலீஸ் நிலையம். ஆகவே இந்த போலீஸ் வன்முறை ஆனது, புரையோடிப் போயிருக்கும் புண்ணின் மேலே தென்படும் நாற்றமடிக்கும் சீழ் மாத்திரம்தான்” என்று ஒரு ஊடக செயற்பாட்டாளர் இந்த சம்பவம் தொடர்பாக குறிப்பிட்டிருக்கிறார்.

எவ்வாறாயினும், இலங்கை போலீஸ் எனும் போது உடனே நினைவுக்கு வருவது சித்திரவதைதான். இலங்கை போலீஸ் என்றால் சித்திரவதை என்று குறிப்பிட்டால் அது கூட பிழையில்லை. இதை கடந்த பல வருடங்களாகத் தொடர்ச்சியாகக் கண்டு வருகிறோம். குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒருவரை சித்திரவதைக்கு உட்படுத்தாமல் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க எத்தனையோ வழிமுறைகள் உள்ள போதிலும் அவற்றைப் பொருட்படுத்தாத நிலைமைதான் இப்போது வரைக்கும் இலங்கை போலீசிடம் காணப்படுகிறது.

அடுத்ததாக, எந்தவொரு பயங்கரமான குற்றச் செயலையும் பகிரங்கமாக செய்பவர் ஒருவர் அரசியலுடனும், அரசியல்வாதிகளுடனும் சம்பந்தப் பட்டிருப்பாரேயானால் அவர் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நிலைமை இலங்கைக்குள் காணப்படுகிறது. அவ்வாறே குறிப்பாக, பாதுகாப்புப் பிரிவு, சிறைச்சாலை, போலீஸ் நிலையம் போன்ற இடங்களில் நிகழ்ந்த பெரும்பாலான குற்றச் செயல்கள் தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.

படிக்க :
♦ இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் உண்மையான நோக்கமும் மோடியின் வஞ்சகமும் !

♦ இலங்கை : முஸ்லீம்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை கண்டிக்கும் பு. ஜ. மா. லெ கட்சி !

இவ்வாறான நிலைமையில் ‘சட்டத்தைக் காப்பதற்காக இருக்கிறோம்’ என்று தம்மைத்தாமே கூறிக் கொள்ளும் போலீசாரால், இவ்வாறு ஆட்கள் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுதல் என்பது ‘குற்றம் செய்தவருக்கு தண்டனை வழங்கப்படாதிருக்கும் கலாச்சாரம்’ எனும் மோசமான நிலைமையின் நீட்சியாகும்.

போலீசை மாத்திரம் சுட்டிக் காட்டி அவர்கள் மீது குற்றம் சாட்டி நிறுத்திக் கொள்வது அல்லாமல், நாட்டை ஆள்பவர்களால் மேற்கொள்ளப்படும் ‘ஜனநாயக எதிர்ப்பு’ செயற்பாட்டுக்கு எதிராக ஒன்றிணைந்த மக்களால், ஒருமித்தத் தளத்தில் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான செயற்பாடுகளால் மாத்திரமே இந்த மோசமான நிலைமையை மாற்ற முடியும்.

தமிழில் :  எம். ரிஷான் ஷெரீப்

disclaimer

தோழர் லெனின் 151-வது பிறந்த தினம் || கருத்துப்படம்

தோழர் லெனின் 151-வது பிறந்த தினம்

பாசிசத்தை வீழ்த்துவோம் ! சோசலிசத்தைப் படைப்போம் !

முதலாளித்துவத்தின் அழுகல் நிலைதான் ஏகாதிபத்தியம் என்றார் லெனின். ஏகாதிபத்தியத்தின் புல்லுருவித் தன்மையையும், நிதியாதிக்கக் கும்பல்களின் ஆதிக்கத்தைப் பற்றியும் விரிவாக விளக்கியிருக்கிறார் லெனின். நிதியாதிக்கக் கும்பல் தனது கட்டற்ற சூறையாடலால் உலகளாவிய பொருளாதார – கட்டமைப்பு நெருக்கடியை உருவாக்கியது. நெருக்கடி எனும் புதை சேற்றில் இருந்து தன்னை மீட்டுக் கொள்ள நிதியாதிக்கக் கும்பல் மேற்கொள்ளும் ஆகப் பிற்போக்கான அவதாரமே பாசிசம் !! பாசிசக் கும்பலை வெற்றி கொள்ள தோழர் லெனினின் பிறந்தநாளில் உறுதியேற்போம் !!

கருத்துப்படம் : மு.துரை

ஜீன்ஸ் : ஆடையின் வரலாறும் – பொதிந்துள்ள உழைப்பின் வரலாறும் !

டை என்பதை நாம் நம் கலாச்சாரத்துடன் இணைத்துப் பார்ப்பது போல் ஆடையை ஒரு நபரின் நடத்தையுடன் பார்ப்பது தவறு. ஆடை மனித பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கம். தேவை மற்றும் சூழ்நிலைகேற்ப மாறிவரும் தன்மையுடையது. சமீபத்தில் உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வர் திரட் சிங் ராவத் பெண்கள் அணியும் உடை குறித்துப் பேசி சர்ச்சையில் சிக்கினார்.

பெண்கள் ஜீன்ஸ் அணிவது அடுத்த தலைமுறைக்கு மிக மோசமான வழிகாட்டுதல் என்ற அவரின் ட்வீட் சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாக ஆன உடனே, “நான் ஜீன்ஸ் அணிவது பற்றி பேசவில்லை. நான் கிழிந்த ஜீன்ஸ் பயன்படுத்தும் பெண்களை தான் குற்றம் சாட்டுகிறேன்” என்றார்.

படிக்க :
♦ ஜீன்ஸ் பேண்ட்டும், பாலியல் வன்முறையும் !

♦ சட்டை ரூ.15.000, ஜீன்ஸ் 13.000, கைப்பை 1 இலட்சம்…..!

இதே போன்று ராஜஸ்தானில் பல இடங்களில் பெண்கள் ஜீன்ஸ் போடுவது கலாச்சார கேடு என்பது போன்று ஒரு பிம்பம் ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் சமூக நிலையில் பிற்படுத்தப்பட்ட ஆண்கள் ஜீன்ஸ், ‘கூலிங் கிளாஸ்’ போட்டுக் கொண்டு இடைநிலை சாதியில் உள்ள பெண்களைக் கவர்ந்து நாடகக் காதல் செய்கின்றனர் என்று சாதிய தலைவர் ஒருவர் (இராமதாஸ்) பேசியிருக்கிறார். இது போன்று நிறைய தருணங்களில் ஆடையுடன் பெண்களின் நடத்தை ஒப்பிட்டுப் பேசப்படுகிறது. இது ஒரு வகையான ஆண் ஆதிக்க மனவோட்டத்தின் வெளிப்பாடு.

சமூகம் நாகரிக வளர்ச்சியை நோக்கி செல்லும்போதே சில நடத்தை விதிமுறைகளின் மூலம் பெண்கள் உற்பத்தியிலிருந்து விலக்கப்பட்டு, வரலாறு நெடுகிலும் ஆண்களால் ஒடுக்கப்பட்டு வந்துள்ளனர். பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும், எந்தந்தப் பொறுப்புகளை சுமக்க வேண்டும் என்று வரையறுத்துள்ளது.

இது எல்லா சமூகங்களுக்கும் பொருந்தும். இதற்கு அந்த சமூகத்தின் சுழலும் சந்தர்ப்பமும் பொருத்து பெண்களின் சக்தி மற்றும் கட்டுப்பாடு தனிப்பட்ட தேர்வாககிறது. சுய வெளிப்பாடு மற்றும் அடையாளத்தை நிலைநாட்டுவதன்  பின்னணியில் ஆடையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்படி பல சர்ச்சையிலிருந்தே ஜீன்ஸின் வரலாறு விரிகிறது.

ஜீன்ஸ் பற்றிய வரலாறு இன்றைய இளைஞர்களிடமிருந்து துவங்கவில்லை. இதனைக் கடந்து போராளிகள்,  பழமைவாதிகள், நவீனவாதிகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என பலர் மத்தியிலும் பயணித்த நீண்ட பயணம் அது. உலகளாவிய ஜீன்ஸின் இந்த பயணம் மிகவும் நீண்டது.

இதில் நுகர்வோர், தொழிலாளர்கள், பணம் படைத்த முதலாளிகள் என அனைவரும் அடங்குவர். உற்பத்தி மேலை நாடுகளிலிருந்து வெளியேறி இந்தியாவில் குடிபெயர்ந்துள்ளதற்குக் காரணமாக ஒருபுறம் இந்தியாவின் மலிவான உழைப்புச் சந்தையும், தண்ணீர் வளமும் இருக்கையில், மறுபுறத்தில் ஜீன்ஸ் தேவையும், உற்பத்தியும் அதிகரித்துள்ளதற்கு மற்றொரு காரணம் சமகால நுகர்வோரின் தேவையே.

ஜீன்லின் வரலாறு

இதன் வரலாற்றை சற்றே புரட்டினோமெனில் அது, மத்திய காலகட்டங்களில் வடக்கு இத்தாலியில் உருவான ஐரோப்பிய பருத்தி ஆடை நிறுவனத்தில் இருந்து துவங்குகிறது. பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பின் பருத்தி ஆடை லுகுரியா பகுதியில் மிகவும் பிரபலமானது. அதன் கனமான மற்றும் கரடுமுரடான ஆடைகளுக்கு இந்தப் பகுதி பெயர்போனது.

தரம் குறைவான பருத்தி இழைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆடைகள் டெனிம்கள் எனப்பட்டன. பின் கைத்தறி மற்றும் பருத்தியிலிருந்து நெய்யப்பட்ட குறுக்காக (Diagonal pattern) வடிவமைக்கப்பட்ட ஆடை ‘ஜீன்ஸ்’ என்று அழைக்கப்பட்டது. ஜெனோவா துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டதே இந்த ஆடைக்கு “ஜீன்ஸ்” என்ற பெயர் வர காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இது நவீன டெனிமிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருந்திருக்கலாம். ஆனால், அது முற்றிலும் பருத்தியிலிருந்து தயாரிக்கப்பட்ட குறுக்கு விட்ட (diagonal) வடிவத்திலான இழைகளால் பிணைக்கப்பட்டது. ஜீன்ஸ் என்ற சொல் ஜெனோவா துறைமுகத்தில் இருந்து வந்ததைப் போல, டெனிம் என்ற சொல் ‘செர்ஜ் டி நைம்ஸ்’ என்பதிலிருந்து வந்தது. இது பிரான்சின் நைம்ஸில் தயாரிக்கப்பட்ட மற்றொரு குறுக்காக வடிவமைக்கப்பட்ட ஆடை என்று பொருள்

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜீன்ஸ் அதிகளவில் பருத்தியில் இருந்து தயாரிக்கப்பட்டது. பின் தொழில்துறைப் புரட்சியின் போது, ​​லங்காஷயரின் ஆலைகள் ஜீன்ஸ் துணியின் மறுபிரவேசத்தையும் மற்றொரு வகையையும் அறிமுகப்படுத்தியது. அவற்றில் பெரும்பாலானவை இண்டிகோ நீலத்தில் சாயம் பூசப்பட்டன.

தொழில்துறைப் புரட்சி, இந்தியாவுடன் ஆழமானத் தொடர்பைக் கொண்டிருந்தது. சாயமிடுதல், பருத்தி ஆடைத் துறை ஆகியவற்றில் ஆழமான அறிவு, இந்திய கைவினைஞர்களிடம் இருந்து பெறப்பட்டது.

எல்லோராலும் விரும்பும் இந்த ஆடை, கடினமான வேலை செய்பவர்கள் உடுத்தும் ஆடையாக இருந்து வந்துள்ளது.  இது அனைவருக்குமான உடையாக அமெரிக்காவில் தான் உருவெடுத்தது. 1873-ம் ஆண்டு தொழிலதிபரான டேவிஸ் மற்றும் லெவிஸ் இணைந்து ஆடையில் சில மாறுதல்களை சேர்ந்து தொழிலாளர் வர்க்கம் பயன்படுத்தக் கூடிய முழுமையான ஆடையாக அறிமுகப் படுத்தினர். டேவிஸ் மற்றும் லெவிஸ் இணைந்து அதற்கானக் காப்புரிமைகளைப் பெற்றனர். பின் இருவரும் இணைந்து சான் ப்ரன்சிஸ்கோவில் உற்பத்தி மற்றும் விற்பனைக் கடைகளை துவங்கினர்.

அடுத்த பத்தாண்டுகளில் ஜீன்ஸை, ‘நாகரிக’ மற்றும் உயர்குடி மக்கள் பயன்படுத்தத் தொடங்கினர். பன்னிரெண்டாம் நுற்றாண்டுக்கு பின்னால் டெனிம் ஒரு எதிர்மறையான பயணத்தைத் தொடக்கியது. அமெரிக்க இளைஞர்களுக்குக் கவர்ச்சி, கிளர்ச்சியின் காற்று, புரட்சி ஆகியவற்றுக்கான குறிப்பை உடையில் அளித்தது. டெனிம் கலாச்சாரம் விரைவில் உலக அளவில் பெருவரவேற்பு பெற்றது. மேற்கத்தியக் கலாச்சாரத்தால் இந்தியாவிலும் இந்த அலை இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை உருவாக்கியது.

தொழிலாளர்கள் முதல் நவ நாகரீகம் வரை

தொழிலார்கள் பயன்படுத்தும் நீல நிற ஜீன்ஸ் காலப்போக்கில் நவ நாகரிக ஆடையாக மாறியது. ஆனாலும், அதன் தொடக்கம் என்னவோ அமெரிக்க தொழிலாளர்களிடம் இருந்துதான். தற்போது, ஜீன்ஸ் நாம் தினசரி பயன்பாட்டில் தவிர்க்க முடியாத ஆடையை மாறியுள்ளது. இதற்குச் சான்றாக, சமீபத்தில் கொரோனா காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் நடைப் பயணமாக சென்ற பலரும் ஜீன்ஸ் உடுத்தி இருந்தனர் என்கின்றது ஒரு ஆய்வு.

எப்படியோ ஜீன்ஸ் எல்லோருக்குமான ஆடையாக மாறியது. இப்படி உலகளாவிய சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தது ஜீன்ஸ். கொரோனா பெரும்தொற்றுக்கு முன்னர் உலகிலேயே அதிகமான உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெறுவது இந்தியாவில்தான். இங்கு உற்பத்தி பெருகுவதற்கு, மலிவான விலையில் கிடைக்கும் பருத்தி, குறைவான தொழிலாளர் கூலி, நீர்வளம் என அனைத்தும் காரணமாகும்.

ஜீன்ஸ் இன்று பெருநகர சாலைகளை ஆக்கிரமிப்பதற்குப் பின்னால், தொழிலாளர் சுரண்டல், குறைவான ஊதியம் ஆகியவை இருப்பது பெரும்பாலானோரின் கண்களுக்குப் புலப்படுவது இல்லை. அதையெல்லாம் கடந்த ஜீன்ஸ் உற்பத்தியில் உண்டாகும் கழிவுகள் சுற்றுச் சுழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. ஒரு ஜோடி ஜீன்ஸ் தயாரிக்க ஆகும் செலவை விட அதிலிருந்து வெளிபடும் கழிவுகள்தான் நம்மை மேலும் அச்சுறுத்துகின்றன.

இந்தியாவில் அதன் தாக்கம்

வேதிப் பொருட்கள் மற்றும் அதிக நீர் எடுக்கும் தன்மை கொண்ட பருத்தி சாகுபடி ஆகியவை டெனிம் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில்தான் பருத்தி சாகுபடி மிகப்பெரிய பகுதியில் நடக்கிறது. ஆனால், இங்கு உற்பத்தியாகும் பருத்தி வேறு எங்கும் இருப்பதை விட, கிலோ இழைக்கு அதிக தண்ணீரை எடுத்துக் கொள்ளும் தன்மையுடன் இருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

டெனிம் உற்பத்தியின் போது, செயற்கை இண்டிகோ மற்றும் சல்பர் சாயங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இதனால் உண்டாகும் நச்சுக் கழிவுகள் நீர் நிலைகளில் வெளியேற்றப் படுகின்றன. டெனிம் உற்பத்தியும் மற்ற பருத்தி துணிகளை விட அதிக சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகிறது.

ஒரு ஜோடி ஜீன்ஸ் தயாரிக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 11,000 லிட்டர் தண்ணீர் செலவு செய்யபடுகிறது. இது ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களின் தினசரி குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானது. இது ஒரு பருத்தி சட்டை  தயாரிக்கப் பயன்படும் நீரை போன்று நான்கு மடங்கு அதிகம். மேலும், சுற்றுச்சூழல் விதிமுறைகளை அமல்படுத்தாத நிலையில், உற்பத்தி மையங்களுக்கு அருகில் வாழும் மக்கள் உடல்நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் மாசுபாடுகள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

படிக்க :
♦ பிராண்டட் ஆடைகள் – பாதையோர ஆடைகள் : இலாப நட்டம் யாருக்கு ?

♦ ஜீன்ஸ் பயங்கரவாதம் – தினமணியின் திருக்கோவில் லூலாயி !

உற்பத்திச் சங்கிலியுடன் இணைந்த, ஜவுளி மற்றும் ஆடைத் தொழிலாளர்கள், குறைந்த ஊதியம், நீண்ட வேலை நேரம், சுரண்டல் மற்றும் கடுமையான நோய் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.  இப்படியான இன்னல்களுக்கு இடையே உற்பத்தி செய்யப்படும் ஜீன்ஸ்-ஐ ஆயத்த ஆடை நிறுவனங்களில் தையல் செய்யும் ஆடைத் தொழிலாளி பெரும்பாலும் ஒரு ஏழை இளம் பெண்ணாகவே இருக்கும்.

நாம் தேர்ந்தெடுக்கும் ஆடை அணிவதற்கான நமது சுதந்திரத்தை வலியுறுத்தும், இவ்வேளையில் நம்முடைய ஆடைகளைத் தயாரிப்பவர்களையும் நினைவில் கொள்வோம். ஆடை அவரவர் விருப்பம்.. அவரவர் சுதந்திரம் ! அது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அதன் உற்பத்தியின் பின்னிருக்கும் மக்களின் வாழ்வும் இந்த உலகின் சுற்றுச் சூழலும் முக்கியம் !


சிந்துஜா
மூலக் கட்டுரை: நீதா தேஷ்பாண்டே
நன்றி : TheWire

கொரோனாவில் அம்பலமாகும் மோடியின் குஜராத் மாடல்  !!

ந்தியாவின் மாடல் மாநிலமான குஜராத் மாநிலத்தின் மக்கள் தங்களது அரசாங்கம் 25,000 ரெம்டெசிவர் வைரஸ் தடுப்பு மருந்து குப்பிகளை உ.பி-க்கு அனுப்பியது குறித்த செய்தியை கடந்த வியாழன் (15.04-2021) அன்று செய்தித்தாளில் படித்ததும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

குஜராத் மாநிலத்தில் கொரோனா நெருக்கடி அந்த அரசாங்கத்தால் மிக மோசமான முறையில் குறைத்துக் காட்டப்படுவதை, கொரோனா நோயாளிகளின் குடும்பத்தினர்  ரெம்டெசிவிர் மருந்தைப் பெற 8 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் சுட்டிக் காட்டுகிறது.

உதாரணமாக, வியாழன் (15-04-2021) அன்று இரவு, குஜராத்தில் 8,112 பேருக்கு கொரோனா தொற்றுக் கண்டறியப்பட்டது. இது வரையிலான தினசரி அளவில் இது உச்சபட்சமாக இருந்தது. இதன் மூலம் குஜராத்தின் நடப்பு கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 44,298 ஆனது. அந்த 24 மணி நேரத்தில்  81 பேர் கொரோனாவால் இறந்ததாக மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

படிக்க :
♦ குஜராத் மாடல் : குவியும் கொரோனா மரணங்கள் !
♦ குஜராத் மாடல் அரதப் பழசு ! உ.பி. மாடல் தான் புத்தம் புதுசு !

இதற்கிடையில், அதே காலகட்டத்தில் குஜராத்தின் அண்டை மாநிலமான மராட்டியத்தில் புதிதாக 61,695 பேருக்கு கொரோனா தொற்று மற்றும் 349 கொரோனா மரணங்கள் நிகழ்ந்தது.

புதன் (14-04-2021) அன்று அஹமதாபாத் மருத்துவக் கழகம், மருத்துவமனைகளைத் தவிர மற்ற துறைகளுக்கு ஆக்சிஜன் உருளைகளைப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு ஒரு கடிதம் எழுதியது. இந்த கடிதமானது கொரோனா நோயாளிகளுக்கு முறையாக மருத்துவம் பார்க்க மருந்துகள், ஊசிகள், ஆக்சிஜன் உருளைகள் போன்றவை கிடைக்காமல் மருத்தவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

ஆனால், குஜராத் அரசு தொடந்து இந்த நெருக்கடியை குறைத்துக் காட்டுகிறது.   குஜராத் மக்கள், மருத்துவமனைகளில் போதுமானப் படுக்கைகள் இல்லாமல், போதிய ஆம்புலன்ஸ் இல்லாமல், எரியூட்டும் இடங்கள் நிரம்பி வழியும் நிலைமை இருக்கையில், இதனை புறக்கணித்துவிட்டு, மருத்துவமனைப் படுக்கைகள் முறையாகக் கிடைக்கின்றன என்ற தனது கூற்றுக்கு ஆதரவளிக்கும் விதமாக விவரங்களை மட்டும் குஜராத அரசு கொடுக்கிறது.

அனேக மக்களுக்கு, இந்த பெருந்தொற்றின் இரண்டாம் அலைக்கு குஜராத் அரசு கொடுக்கும் முக்கியத்துவம் குழப்பமானதாகவே தெரிகிறது. ஒரு புறம், முகக் கவச விதிமுறையை மீறிதாக ரூ.1000 அபராதம் விதிக்கிறது. மறுபுறம், மாநிலத்தின் ஆளும் கட்சியான பா.ஜ.க எதிர் வரும் மோர்வா ஹடஃப் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்காக கடந்த புதன்கிழமை நடந்தப் பிரமாண்டமான இரு சக்கர வாகன பேரணியில் யாரும் முகக் கவசம் அணியவில்லை.

“எங்கெல்லாம் தேர்தல் நடக்கிறதோ, அங்கெல்லாம் பி.ஜே.பி-க்கு கொரோனா கிடையாது’’ என்று தி வயர் இணைய தளத்திடம் கூறுகிறார் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பாரத் சோலங்கி.

குற்றமும் கொரோனா வைரசும் :

கடந்த 96 மணி நேரத்தில் (ஏப்ரல் 16-க்கு முன்) பெருந்தொற்றை மேற்கண்டவாறு கையாளுவதைச் சுற்றி நிகழும் இந்தக் குழப்பமானநிலை, மோசடி மற்றும் முறைகேடுகளுக்கு வழிவகுத்துள்ளது. இதுவரை குறைந்தபட்சம் 4 புகார்கள் இது தொடர்பாக போலீசுக்கு வந்துள்ளன.

அகமதாபாத்தில், ஒரு அரசு மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவரின் உடலை அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து பிணவறைக்கு கொண்டுசென்ற நேரத்தில், இறந்தவரின் உடலிலிருந்து ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள தங்க வளையலை திருடியதற்காக ஒப்பந்த ஊழியர் ஒருவரை போலீசு கைது செய்துள்ளது. குஜராத்தின் இருவேறு இடங்களில் நடந்த இருவேறு வழக்குகளில் ரெம்டெசிவர் மருந்துக் குப்பி ஒன்றை ரூ.12,000-க்கு விற்றுக் கொண்டிருந்த இரு கள்ளச் சந்தைகாரர்களை போலீசு கைது செய்துள்ளது.

ரெம்டெசிவர் மருந்துக் குப்பி ஒன்றின் அரசு விலை ரூ.800 அல்லது ஆய்வகத்தில் இருந்து நேரடியாகப் பெற்றால் ரூ.690 மட்டுமே. அந்த கள்ளச் சந்தை  பேர்வழிகள் வெளிப்படையாக போலீசிடம்  இதுவரை தாங்கள் 50 குப்பிகளை விற்றுள்ளதாக தெரிவித்தனர். ஆனால், அவர்கள் இன்னும் பல மருந்துக் குப்பிகளை விற்றிருக்கக் கூடும் என்று போலீசு நம்புகிறது.

இன்னொரு கள்ளச் சந்தை சம்பவத்தில், 18 டோஸ் ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகளுடன் இரண்டு நபர்களை வல்சாத் என்ற இடத்தில் குஜராத் சிறப்பு போலீசுக் குழு கைது செய்தது. அவர்கள் அம்மருந்துக் குப்பி ஒன்றை ரூ.25,000 வீதம் விற்க திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

இதற்கிடையில் ராஜ்கோட்டில் ஒரு நோயாளிக்கு ரெம்டெசிவர் கொடுப்பதற்கு ரூ.45,000 வாங்கிக் கொண்டு அதன் பிறகும் கூட அம்மருந்தை அந்த நோயாளிக்குப் போடாமல் இருந்ததற்காக ஒரு மருத்துவமனை ஊழியரின் பெயரும் நகராட்சி வார்டு ஒன்றின் பா.ஜ.க தலைவர் ஒருவரின் பெயரும் போலீசிடம் உள்ள புகார் கடிதத்தில் இடம்பெற்றிருந்தது. ராஜ்கோட் நகரம் முதலமைச்சர் விஜய் ரூபானியின் சட்டமன்ற தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் தலைவர் இந்திரனில் ராஜ்யகுரு “இது எந்த விழுமியத்தையும் கடைபிடிக்காத மோசமானக் காலகட்டம்” என்கிறார். இவர் ராஜ்கோட் தொகுதியில் விஜய் ரூபானியை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ராஜ்யகுரு தொலைபேசியில் பேசுகையில், “குஜராத் பரோபகாரத்திற்கு பெயர் போன மாநிலம். இன்று அந்த பிம்பம் பாழாகிக் கொண்டிருக்கிறது.

நோயாளிகள் மிக மோசமான நிலையில் உள்ளனர். உறவினர்கள் ரெம்டெசிவிரும், டோசிலிஜூனப்பையும் வெளியே வாங்கி வருமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர். ஆனால், உறவினர்கள் உடனில்லாத அனேக நோயாளிகள் ராஜ்கோட் நோயாளியை போன்று அதே மாதிரியான வழியில், மோசடியான மருத்துமனைகளாலும் மருத்துவர்களாலும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதுதான் மிக மிக கவலைக்குரிய விசயம்.’’ என்று கூறினார்.

ராஜ்யகுரு தி வயர் இணையதளத்திடம் பேசிய பின்னர், அவர் கோவிட்19 சிகிச்சைக்காக ராஜ்கோட் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார்.

வேறுசில வடிவங்களிலான கொரோனா ஊழல்களும் கூட நடைபெற்று வருகிறது. இந்த வாரம், 3,000-கும் மேற்பட்ட RT-PCR சோதனைகள் மேற்கொண்டிருந்த அகமதாபாத்தின் கொடசார் அருகில் உள்ள ஒரு சோதனையகம், அங்கே கொரோனாவுக்கு சோதனை எடுத்துக் கொண்டவர்களின் புகாரின் பேரில் அகமதாபாத் மாநகராட்சி கழகத்தால் சோதனையிடப்பட்டது.

அச்சோதனையின் மூலம் அந்த சோதனையகத்தில் ரேபிட் ஆன்டிஜன் சோதனை செய்வதற்கான எவ்வித கருவிகளோ கிட்டுகளோ இல்லை என்று கண்டறியப்பட்டது. ஆனால், அந்த சோதனையகங்கள் மக்களை முட்டாளாக்கி பொய்யான அறிக்கைகளைக் கொடுத்து வந்துள்ளதுத் தெரிய வந்துள்ளது.

குஜராத்திலிருந்து வந்து சேர்ந்த ரெம்டெசிவிர் மருந்தை லக்னோ ஏர்போர்ட்டில் இருந்து எடுத்துச் செல்லும் காட்சி

மக்கள் கொரோனா சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் மருந்தை கள்ள சந்தையில் வாங்க தங்களது நகைகளையும் வீட்டையும் விற்றுக் கொண்டிருந்ததாக செய்திகள் வந்து கொண்டிருந்த நேரத்தில், குஜராத் அரசு 25,000 ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகளை உத்திரப் பிரதேசத்திற்கு அனுப்பியதாக வந்த செய்திப் பேரபாயத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

இந்த செய்தி அறிக்கையை ஆதாரமற்றது, கற்பனையானது என்று குஜராத் அரசு மறுத்தாலும், லக்னோவில் செயல்படும் பாரத் சமாச்சர் என்ற செய்தி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர், பிரஜேஷ் மிஸ்ரா குஜராத்திலிருந்து 25,000 ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகள் உ.பி அரசு கடந்த புதன்கிழமை அன்று தருவித்துள்ளதால் உ.பி மக்களுக்கு ரெம்டெசிவர் பற்றாக்குறை ஏற்படாது என்று கூறினார்.

எனினும், குஜராத் அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. அந்த ரெம்டெசிவர் மருந்து உற்பத்தி கம்பெனியின் செய்தி தொடர்பாளரும் தி வயர் இணையதளத்திடம் இது குறித்து பேச கிடைக்கவில்லை.

இதற்கிடையில் புதன்கிழமை (14-03-2021) அன்று,  கிட்டத்தட்ட எல்லா உயர் அமைச்சர்களும் அதிகாரிகளும் ஒன்று கூடி மாநில அரசு கொரோனா நெருக்கடிக்கு மாநில அரசு சார்பாக பதில் கொடுக்கும் முகமாக ஒரு அறிக்கையை கொடுத்தனர். வியாழன் அன்று அந்த அறிக்கை உயர்நீதி மன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இது ஒரு வாரத்திற்கு முன்பு, கொரோனாவை கையாள்வதில் கவலையும் அதிருப்தியும் தெரிவித்திருந்த உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு பதில் கொடுப்பதன் ஒரு பகுதியாக அமைந்தது. உயர்நீதிமன்ற வாதத்தின் போது குஜராத் அரசு வழக்கறிஞர் கமல் திரிவேதி ஏப்ரல் 12, 2021 வரை 53 சதவீதப் படுக்கை வசதி மட்டுமே உள்ளது என்று அறிக்கை சமர்பித்தார்.

கிரிக்கெட் விளையாட்டு முக்கிய காரணி

ஆச்சரியப்பட வைக்கும் வகையில் குஜராத்தில் திடீர் கோவிட்-19 உயர்வுக்கு காரணமாக நம்பப் படுவது என்னவென்றால் கடந்த மாதம் நரேந்திர மோடி விளையாட்டரங்கத்தில் நடந்த  இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் விளையாட்டு போட்டிதான். கிட்டத்தட்ட 75,000  பேர் கலந்து கொண்டதில் அனேகமாகப் பெரும்பாலானோர் முகக்கவசமின்றிக் காணப்பட்டனர். அகமதாபாத் IIM–ல் மட்டுமே 49 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. காந்தி நகரில் உள்ள IIT-யில் 25 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் பாரத் சோலங்கி,  இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தின் தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷாவின் கொள்ளைக்காகவே குஜராத் அரசு செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். ஜெய் ஷா, பார்வையாளர்களைக் கொண்டு விளையாட்டை நடத்த ஆர்வமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

“குஜராத் அரசு முதுகெலும்பு அற்றது. அது கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யுங்கள் என்று ஜெய் ஷாவிடம் சொல்லாது” என்று சொலங்கி தி வயர் இணையதளத்திடம் கூறினார். “இரு விளையாட்டுப் போட்டிகளுக்கு பிறகு, பெரிய அளவிலான மக்களின் கூக்குரலுக்குப் பின்னர்தான் விளையாட்டு நிகழ்ச்சியை ஸ்டேடியத்திலிருந்து பார்க்கப் பார்வையாளர்கள் தடைசெய்யப்பட்டது நிகழ்ந்தது.”

பெரும்பாலான ஆங்கில ஊடகங்கள் கூடவோ குறையவோ கோவிட்-19 குறித்து அரசின் கருத்துடன் ஒத்துபோகிறது. அதே நேரத்தில் குஜராத்தி மொழியில் வெளிவரும் பத்திரிகை குஜராத் அரசு கோவிட்-19 இரண்டாம் அலையை கையாளுவது குறித்து உண்மையை வெளிக்கொண்டு வருகிறது.

திவ்ய பாஸ்கர் என்ற தினசரி பத்திரிகையின் ஆசிரியர் தேவேந்திர பட்நகர், குஜராத் மாநில பாஜக செயலர் சி.ஆர் பாட்டில்-ன் தொலைப்பேசி எண்ணைப் பிரசுரித்து அவரிடம் ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகள் குறித்து தொடர்பு கொண்டு கேட்குமாறு கேட்டுக் கொண்ட போது நல்ல வரவேற்பைப் பெற்றது.

ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகளைப் பெற மக்கள் இரவு பகலாக கால்கடுக்க வரிசையில் நின்று கொண்டிருக்கும் அதே நேரத்தில் சி.ஆர்.பாட்டில் 5000 ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகளை பெற்று அவற்றை நவ்சரியில் உள்ள பி.ஜே.பி அலுவலகத்திலிருந்து வினியோகம் செய்தார் என்ற செய்தி ஏப்ரல் 12 அன்று பிரசுரிக்கப்பட்டது.

ஆனால், பி.ஜே.பி குஜராத்தில் பெருந்தொற்று பாதிப்பில் பாகுபாடுக் கட்டுகிறது, பெருந்தொற்றை வைத்து அரசியல் செய்கிறது என்று விமர்சனம் வந்த ஒருநாளுக்கு பிறகு பாட்டிலினுடைய ‘முன்முயற்சி’ கைவிடப்பட வேண்டியதாகிவிட்டது. அவை ரெம்டெசிவர் மருந்து தகுதியான மருந்தாளுனர்களால் மட்டுமே மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற பரிந்துரை உள்ளது என்ற உண்மை நிலையிலிருந்து எடுத்தாளப்பட்டது.

அகமதாபாத்தின் சைடஸ் கடிலா நிறுவனம் என்பது இந்தியாவில் மிகப் பெரிய அளவில் ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகளைத் தயாரிக்கக் கூடிய நிறுவனங்களில் ஒன்று. ஆனால், கடந்த ஆறு மாதங்களில் இந்திய அரசு ரெம்டெசிவர் மருந்தை உற்பத்தி செய்யக் கூடிய சிப்லா, சைடஸ் கடிலா, ஹெடெரோ, டாக்டர் ரெட்டி மற்றும் பல நிறுவனங்கள் என எல்லா உற்பத்தியாளர்களுக்கும் அந்த மருந்தை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

படிக்க :
♦ அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றவரின் அனுபவம் !

♦ கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் ? || தோழர்கள் மருது – சுரேசு சக்தி முருகன் உரை || வீடியோ

இந்திய, பார்மா கம்பெனிகளுக்கும் அமெரிக்காவின் கிலீட் அறிவியல் நிறுவனத்துக்கும் இடையிலான தன்னார்வ உரிம ஒப்பந்தத்தின் அடிப்படையில் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட ரெம்டெசிவிர் மருந்து டோஸ்கள் சுமார் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அரசாங்கக் கூற்றுப்படி, இந்தியா ஒரு மாதத்தில் 38.80 லட்சம் ரெம்டெசிவர் மருந்து யூனிட்டுகள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. பெருந்தொற்று தீவிரமாகிற இச்சூழலில் மூன்று நாட்களுக்கு முன்பு மத்திய அரசு ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.

குஜராத்தில் காங்கிரசும் பி.ஜே.பி-யும் கொரோனா காலத்தில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிவரும் நிலையில் அம்மாநிலத்தின் மக்கள் துயர நிலையில் உள்ளனர். வியாழன் அன்று, தினேஷ் பட்டேல் (அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பெயர் மாற்றப்பட்டுள்ளது) இந்தியாவிலே மிகப்பெரிய பொது மருத்துவமனையான அகமதாபாத்தின் அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட இருந்தபோது, அவரது குடும்பத்தினர் அவரை ஆம்புலன்சில் ஏற்றிய பிறகு மருத்துவமனை வாயிலுக்கு முன்பு ஒன்றரை மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கு நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்கக் காத்திருந்த 35 ஆம்புலன்ஸ்களில் ஒரு ஆம்புலன்சில் பட்டேல் இருந்தார்.

“மக்கள் ஆம்புலன்சுகளில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியும்” என்கிறார், மருத்துவர் ஜே.வி மோடி. “ஆனால், முறையான நடைமுறைகளை பின்பற்றாமல் மக்களை எங்களால் அனுமதிக்க முடியாது” என்கிறார் அவர்.

இதற்கிடையில் அகமதாபாத் மற்றும் சூரத்தில் இடுகாடுகளும், எரியூட்டு மையங்களும்  24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. அங்கும் காத்திருப்புப் பட்டியலில் காத்திருக்கும் நிலை கண்கூடாக இருக்கையில், குஜராத் அரசோ கடந்த வியாழன் அன்று சூரத் மற்றும் அகமதாபாத்தில் 24 மரணங்கள் மட்டும்தான் நிகழ்ந்துள்ளது என்று அறிவித்துள்ளது.

பிரபலமான குஜராத் பத்திரிகையான சித்திரலேகா என்ற சூரத் பதிப்பின் வாரப் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ஃபாய்சல் பகிலி, “சூரத் நிர்வாகம்  பெருகிவரும் கொரோனாப் பரவலைத் தடுக்க தயாராக இல்லை என்றும் மேலும் இதை எதிர்கொள்ள எவ்வித செயல்திட்டமும் இன்னும் வகுக்கப்படவில்லை என்றும் தி வயர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், சுடுகாட்டில் கடுமையான வேலைப்பளுவில் பணியாற்றும் ஊழியர்கள் எரியூட்டுவதற்கு இதுவரை வழக்கமாக பயன்படுத்தி வந்த நெய்யிற்குப் பதிலாக பிணங்களை வேகமாக எரியூட்ட இப்போது மண்ணெண்ணையை பயன்படுத்துகின்றனர்” என்றார்.

சுனித் கமி என்ற சூரத்வாசி, “தன் மாமா கோவிட்டால் இறந்தபோது, சுடுகாட்டில் 12 மணி நேரம் காத்திருப்புப் பட்டியலில் இருக்க வேண்டியிருந்தது” என்றார். “ஆகவே, நாங்கள் அருகாமை நகரமான பர்டோலிக்கு உடலை இறுதி சடங்கிற்காக கொண்டு வந்தோம்” என்றார் சுனித் கமி.

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும் தற்போது வழக்கறிஞருமான ராகுல் ஷர்மா தி வயர் இணையதளத்திடம், “பெருந்தொற்றின் இந்த இரண்டாவது அலை பாதிப்புக் குறித்து குஜராத் அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதாகத் தெரிகிறது” என்றார். “குஜராத் அரசு சோதனை செய்யும் வசதிகள், உயிர் காக்கும் கட்டுமானம் ஆகியவற்றில் தனது திறனைக் கட்டி வளர்ப்பது பற்றி கவலைக் கொள்ளவில்லை” என்றார். “பொன்னான நேரத்தை வீண்டித்து விட்டது” என்றார்.

அகமதாபாத்தில் உள்ள ஒரு மூத்த மருத்துவர் தி வயர் இணையதளத்திடம், திடீர் கொரோனா அதிகரிப்புக் குறித்து சுகாதார அதிகாரிகளின் கவனத்திற்குத் தான்  கொண்டு சென்றதாகவும், அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறினார். “குஜராத் உள்ளாட்சி தேர்தல் அந்த நேரத்தில் நடந்து வந்ததால் அதுவரை சுகாதாரத் துறையை அமைதி காக்குமாறு அரசு கூறியிருக்கலாம்” என்றார்.

மேலும் “எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை, எந்த ஏற்பாடும் செய்யவில்லை. தன்னை விளம்பரபடுத்துவதிலே அரசு கவனம் செலுத்தியது. இந்த நோய் அதிகரிப்பு என்பது தவறான நிர்வாகம், அராஜகம் ஆகியவற்றின் விளைவு என்றார். மேலும் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளை முழுமையாகத் தவிர்த்திருக்க வேண்டும்” என்றார்.

அகமதாபாத்வாசியான ஹரிதா தேவ், இது குறித்து தி வயரிடம் பேசுகையில், ஆம்புலன்ஸ்கள் கிடைக்கவே இல்லை என்று கூறினார். ஏப்ரல் 13 அன்று,  மிக மோசமான நிலையில் உள்ள 58 வயதுடைய பக்கத்து வீட்டு நோயாளிக்காக ஆம்புலன்சை அழைத்தார் அவர்.

“108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொண்டபோது, தற்போதைய சூழ்நிலை காரணமாக எந்த ஆம்புலன்சும் இல்லை. உங்கள் கோரிக்கையைப் பதிவு செய்கிறோம். கூடிய விரைவில் அழைக்கிறோம் என்று கூறினர். மூன்று மணி நேரத்திற்கு பின்னர், இன்னும் ஆம்புலன்ஸ் தேவையில்தான் இருக்கிறீர்களா என்று கேட்டு ஒரு அழைப்பு வந்தது” என்றார், தேவ்.

மெஹல் நரேந்திரபாய் என்ற மற்றொரு அகமதாபாத் வாசி ஒரு ஆம்புலன்சிற்காக ஏப்ரல் 14 அன்று காத்திருந்தார். “நாங்கள் மாலை 3.30-க்கு ஆம்புலன்சை அழைத்தோம். ஆனால் மறுநாள் அதிகாலை 1.00 மணிக்குதான் எங்களை அழைத்தனர். இதற்கு இடைபட்ட நேரத்தில் நாங்கள் நகரத்தில் உள்ள 50 முதல் 60 மருத்துவமனைகளுக்கு தொடர்பு கொண்டு ஒரு எமர்ஜென்சி கேஸை எடுத்துக் கொள்வீர்களா என்று கேட்டோம்.  ஆனால், படுக்கைகள் ஏதும் இல்லை என்று கூறிவிட்டனர்’’ என்றார்.

ஏப்ரல் 13 அன்று, ஆல்ட் நீயூசின் இணை நிறுவனர் பிராத்னிக் சின்கா, “ஆம்புலன்சுகள் ஒவ்வொரு 10-15 நிமிடத்திற்கு ஒரு முறை எங்கள் வீட்டை மிக வேகமாகக் கடந்து கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் இரண்டு சைரன் சத்தங்களுக்கு இடையிலான காலகட்டம் 5 நிமிடத்திற்கும் குறைவாக இருக்கிறது. இவை அகமதாபாத்தின் நிலை எவ்வாறு மோசமாக இருக்கிறது என்று அச்சுறுத்துகிறது’’ என்று தனது ட்விட்டில் தெரிவித்தார்.

சந்தேஷ் என்ற பிரபலமான குஜராத் தினசரியை சேர்ந்த இம்தியாஸ் உச்சைன்வாலா, ரோனக் ஷா ஆகிய இரு செய்தியாளர்களும் கோவிட்-19 நெருக்கடி குறித்து ஆய்வு செய்யும் முகமாக ஏப்ரல் 11 அன்று இரவு அகமதாபாத்தில் உள்ள ஒரு அரசு மருத்தவமனைக்கு சென்றிருந்தபோது அங்கு 63 பிணங்கள் பிணவறையிலிருந்து எடுத்து சென்றதை பார்த்தனர்.

“நாங்கள் பிணங்களை எண்ணினோம். அந்த ஒரு மருத்துவனையிலிருந்து மட்டுமே மொத்தம் 63 பிணங்கள்’’ என்று அந்த இரு நிருபர்களும் தி வயர் இணையதளத்திடம் கூறினர். “எரியூட்டும் இடம் குறித்து இரவு ஆய்வுக்கு சென்றிருந்த எங்கள் மற்ற நிருபர்கள்  அந்த மருத்துவமனையிலிருந்து வந்த அந்த 63 பிணங்களும் அரசின் கோவிட் வழிமுறைப்படி எரியூட்டப்பட்டதாக எங்களிடம் தெரிவித்தனர்.

இதைபோல் மற்ற மருத்துவமனையிலிருந்தும் கொண்டுவந்து பிணங்களை எரித்தனர். ஆனால், அகமதாபாத்தில் கோவிட் மரணங்கள் பற்றி ஏப்ரல் 12 அன்று அறிவிக்கப்பட்டபோது, 20 பேர் இறந்ததாக அதிகாரப் பூர்வமாகத் தெரிவிக்கபட்டது. அரசின் இந்தக் கணக்கு அபத்தமானது.’’

காங்கிரஸ் தலைவர் சோலங்கி, குஜராத் அரசு கொரோனா குறித்த அனைத்து  விவரங்களைக் குறைத்துக்காட்டி கொடுக்கப்படும் அறிக்கைகள் இப்போது அம்பலபட்டுவிட்டது என்று தி வயரிடம் கூறினார்.

சென்ற ஆண்டு கொரோனா தொற்று பாதித்து அகமதாபாத் ஷ்ரேய் மருத்துவமனையில் தன் மனைவியை சேர்த்திருந்தார் வழக்கறிஞர் சுஹல் திர்மிஜி.  அந்த மருத்துவமனையில் ஏற்பட்ட  துயர தீ விபத்தில் தன் மனைவியைப் பறிகொடுத்த அந்த வழக்கறிஞர்  குஜராத் மாநில அரசு மற்றும் மத்திய அரசு மீது கடுஞ்சீற்றத்தில் உள்ளார்.

“புதிய விமானங்களை வாங்குவதற்குப் பதிலாக அல்லது தமது பிம்பத்தை உயர்த்திக் காட்டுவதற்கான ஆலோசகர்களை அமர்த்திக் கொள்வதற்குப் பதிலாக தேவையான எண்ணிக்கையில் வெண்டிலேட்டர்கள், ஊசிகள், பிராணவாயு உருளைகள் வாங்க கவனம் செலுத்த வேண்டும்’’ என்று அவர் தி வயர் இணையதளத்திடம் கூறினார். “மேலும் அவர்கள் மருத்துவமனையில் உள்ள வென்டிலேட்டர்களின் ஆற்றல் பயன்பாட்டை சோதிக்க மின் பொறியாளர்களைப் பணிக்கு அமர்த்தியிருக்க வேண்டும். வெண்டிலேட்டரில் ஏற்பட்ட தீ தான் என் மனைவியின் உயிரைப் பறித்தது” என்று கூறினார்.

வைரலாக சென்ற அரசியல்

இந்த சூழ்நிலையில் கூட, குஜராத் மக்கள் நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டுவதில்லை. அவர் பிறந்த நகரம் அகமதாபாத். அவர் இந்தியப் பிரதமராகுவதற்கு முன்பு குஜராத்தின் முதலமைச்சராக இருந்திருக்கிறார்.

உண்மையிலேயே,  மோடி இப்போது குஜராத்தின் முதலமைச்சராக இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்பதுதான் இப்போது பாடப்படும் பல்லவி.

ஒரு டோஸ் ரெம்டெசிவர் மருந்துக் குப்பிக்காக 9 மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் பிரனய் தாக்கர், “மோடி இருந்திருந்தால் எல்லாம் கிடைத்திருக்கும். இப்பிரச்சினைகள் எல்லாம் 48 மணி நேரத்தில் தீர்வு கண்டிருக்கும். நான் கடவுள் கிருஷ்ணன் மீது நம்பிக்கை வைத்திருப்பது போல் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளேன்” என்று தி வயர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

தனது குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ள பிரிதிபென் பட் என்ற பெண்மணி இந்த சூழ்நிலை ஏற்பட்டதற்கு மோடியின் தவறு காரணமல்ல என்கிறார். “உண்மையிலேயே, மோடி முதலமைச்சராக இருந்திருந்தால் கொரோனா குஜராத்தை நெருங்கியிருக்காது’’ என்கிறார்.

ஆனால், சில மக்கள் இந்த நம்பிக்கையுடன் ஒத்துப் போகவில்லை. காந்தியை பற்றி படிக்கும் மாணவரான பிரவின் மக்வானாவை பொறுத்தவரை, குஜராத் அரசு இந்த கொரோனா பாதிப்பு சூழ்நிலையை,  குஜராத் மாடலில் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது என்று எளிதாகக் குறைத்துக் காட்டுகிறது. (பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முன்னுதாரணமிக்க மாநிலம். இந்த குஜராத் மாடலை மற்ற எல்லா மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறார்) “குஜராத் மாடல் கட்டுக்கதை அம்பலமாகிக் கொண்டிருப்பதை மோடியால் தடுக்க முடியாது” என்றார், மக்வானா.

குஜராத் அரசு உயர் நீதிமன்றத்தில் வியாழன் (15.04.2021) பதில் அளிப்பதற்குத் தயாராக,    புதன்கிழமை அன்றே நடமாடும் ஆர்.டி-பி.சி.ஆர் (Drive in RT-PCR) சோதனை மையம், 900 படுக்கைகள் கொண்ட டி.ஆர்.டி.ஓ.மருத்துவனை கோவிட் நோயாளிகளுக்கு அர்ப்பணிப்பு, கூடுதலான பிராண வாயு சப்ளை, மேலும் கள்ளச் சந்தையை கண்காணிக்க ஒரு அவசர சிறப்புக் குழு என மற்ற சில திட்டங்களுடன் ரெம்டெசிவர் மருந்து குறித்த நிலைப்பாட்டையும் திட்டமிட்டது.

உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம், குஜராத் போலீசு, பல்வேறு நகராட்சி அலுவலகத்தின் ஊழல் தடுப்பு துறைகள் ஆகியவை இந்த கண்காணிப்பை நல்ல முறையில் செயல்படுத்தப் பொறுப்பேற்கும்.

பிரபல அகமதாபாத் மருத்துவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ-வுமான மருத்தவர் ஜிடுபாய் பட்டேல், அரசாங்கத்தின் இத்திட்டங்கள் குறித்து கிண்டலடித்துள்ளார். “இன்னும் படுக்கைகள் நிரப்பப்படாமல் உள்ளது, குஜராத் சூழல் கட்டுக்குள் உள்ளது. ஊடகங்களால் சூழல் கைமீறியதாக பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது என்று அரசாங்கம் சொல்கிறது, அப்படி என்றால் 900 படுக்கைகள் கொண்ட டி.ஆர்.டி.ஓ.மருத்துவமனையை இரண்டு வாரத்தில் அகமதாபாத்தில்  அமைக்க மத்திய அரசிடம் ஏன் விஜய் ரூபானி கேட்டிருக்கிறார்?” என்று கேட்கிறார் மருத்துவர் பட்டேல்.

படிக்க :
♦ வல்லரசு இந்தியா : கொரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை || கருத்துப்படம்

♦ கொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா ? அடிமை சாசனத்தில் கையெழுத்திடு !

இது ஒரு அரசியல் கேள்வி, ஆனால் சரியான கேள்வி. குஜராத்தில் வாழ்வின் எல்லா அம்சங்களையும் அரசியல் ஆளுமை செய்வதாகத் தெரிகிறது. இவற்றை அரசின் மிக மோசமான நிர்வாகக் கோளாறு என்று விமர்சிக்கும் காங்கிஸ் கட்சி, குஜராத் அரசின் திட்டங்கள் எல்லாம் மேலோட்டமானவைதான் என்று சொல்கிறது.

பி.ஜே.பி-யின் எதிர் கட்சிகள் குஜராத் மாடல் என்பதே மோசடியானது என்ற மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கூற்றை பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன. ஏப்ரல் 11 அன்று, சுயட்சை எம்.எல்.ஏ ஜிக்னேஸ் மேவானி, கொரோனா சூழ்நிலையை குறைத்துக்காட்டி நிர்வாக கோளாறு செய்து அனேக மக்களை மரணத்திற்கு தள்ளும் உங்களை குஜராத் ஒருபோதும் மன்னிக்காது என்று குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு ட்வீட் செய்துள்ளார்.

இதற்கிடையில், அப்பட்டமான மிக மோசமான நிர்வாக சீர்கேட்டால் குஜராத் தொடர்ந்து துன்புறுகிறது.

தி வயர் இணையதளம், குஜராத் சுகாதாரத்துறை அமைச்சரையும், செயலரையும் தொடர்பு கொள்ள முயற்சித்தது. ஆனால், அவர்களிடமிருந்து பதில் ஏதும் கிடைக்கவில்லை.


கட்டுரையாளர் : தீபல் திரிவேதி
தமிழாக்கம் : முத்துக்குமார்
நன்றி : The Wire

விவேக் மரணமும் கோவிட் தடுப்பூசியும் || ஷாஜஹான்

டுப்பூசி போட்டதால்தான் விவேக் போயிட்டாரு” என்பது இன்றைய சூடான விஷயம், சிலர் பரப்பும் விஷமம். அவருக்கு ஏற்கெனவே இதயத்தில் பிரச்சினை இருந்திருக்கலாம். தடுப்பூசிக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை எல்லாம் நம்புவதற்கு அவர்கள் தயாராக இல்லை.

அவர்களைப் பொறுத்தவரை, தடுப்பூசி வேண்டாம், அதற்கு இன்னொரு சாக்கு இது. (நொண்டிச்சாக்கு என்று எழுதியிருந்தேன். அந்தச் சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று நண்பர் பாலபாரதி சொன்னதால் திருத்தியிருக்கிறேன்.)

“கோவிட் தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட் தொற்று ஏற்படுகிறதே…?” என்பதும் இப்போது புதிதாக எழுந்துள்ள கேள்வி. இந்தக் கேள்வியில் இரண்டு வகை.

  1. அறிவியல் ரீதியாக அறிந்துக் கொள்வதற்காகக் கேட்பது ஒருவகை.
  2. பாத்தியா… தடுப்பூசி எல்லாம் வேலைக்காகாதுன்னு சொன்னா கேட்டியா… அதுக்குதான் உணவே மருந்து, மருந்தே உணவுன்னு சொல்றோம் என்கிற கோஷ்டிகள் / கபசுர நீர் போதும், கோமியத்தைவிட சிறந்தது என்ன இருக்கு என்கிற கோஷ்டிகள்.

இந்த இரண்டாவது கோஷ்டி அரைவேக்காடுகள் தடுப்பு மருந்துகள் போட்டுக் கொள்ளாமலும் இருக்கக் கூடும் அல்லது வெளியே வீறாப்பு பேசிவிட்டு மறைமுகமாகப் போட்டுக் கொள்ளவும் கூடும். அப்படிப் போடாவிட்டால், கோவிட் தொற்றுக்கு ஆளாகி மற்றவர்களுக்கும் பரப்புவார்கள். ஆனாலும், மக்கள்திரள் நோயெதிர்ப்பு சக்தி ஏற்பட்ட பிறகு தடுப்பூசி போடப்படாவிட்டாலும் பாதிப்புக்கு உள்ளாகாமல் தப்பித்து விடுவார்கள், பாத்தியா எனக்கு எதுவும் ஆகலே என்று சொல்லித் திரிவார்கள். இவர்களுக்கு என்ன விளக்கம் சொல்லியும் பயனில்லை.

படிக்க :
♦ நம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா
♦ ஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு

உண்மையிலேயே வேக்சின் குறித்து அறிய விரும்புவோருக்கு எனக்குத் தெரிந்த சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் மருத்துவனோ, மருத்துவத் துறை சார்ந்தவனோ அல்ல. ஆர்வத்தாலும் தொழில் ரீதியாகவும் விஷயங்களைக் கற்றுக் கொள்பவன். சுமார் ஒரு மாதத்துக்கு முன்னால் மொழியாக்க வேலை ஒன்று அமெரிக்காவில் இருந்து எனக்கு வந்தது.

இன்று இங்கே என்ன கேள்வி எழுப்பப்படுகிறதோ அதே கேள்வி அங்கே அப்போதே எழும்பி விட்டது போலிருக்கிறது. அதனால், அந்தக் கேள்விகளுக்கான பதில்களை (தமிழிலும்) அளித்து மக்களுக்குப் பரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார்கள். அந்த மொழியாக்கத்தில் இருந்தும், இதர தகவல்களில் இருந்தும் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

000

கோவிட் வேக்சின் என்பது என்ன?

கோவிட் வேக்சினுக்கு நான்குவகை வேக்சின்கள் பரிசோதிக்கப்பட்டன.

1. Whole virus vaccine என்பது வைரசைக் கொண்டே தயாரிக்கப்படுவது.

2. Nucleic acid vaccine என்பது வைரசின் மரபணுவின் (டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ) கூறுகளைக் கொண்டு தயாரிக்கப்படுவது.

3. Protein subunit vaccine என்பது, வைரசின் புரதத்திலிருந்து பிரித்தெடுத்த புரோட்டீன்களைக் கொண்டு தயாரிக்கப்படுவது.

4. Viral vector-based vaccine என்பது, திருத்தப்பட்ட வைரஸைக் கொண்டு தயாரிக்கப்படுவது.

இப்போது பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்ட், விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஸ்புட்னிக் வி ஆகிய இரண்டும் வைரல் வெக்டார் வேக்சின்கள். அதாவது, வேறொரு வைரசின் திருத்தப்பட்ட வடிவத்தைக் கொண்டு தயாரிக்கப்படுவது. கோவிஷீல்ட், சிம்பன்சி குரங்குகளிடமிருந்து எடுக்கப்பட்ட அடினோவைரஸைப் பலவீனப்படுத்தி, கொரோனா வைரஸ் போலவே தோற்றமளிக்குமாறு தயாரிக்கப்பட்டது.

ஸ்புட்னிக் வி, நுரையீரல் சார்ந்த நோய்களை உருவாக்கும் மனித வைரஸ்களிலிருந்து உருவாக்கப்பட்டது. கோவாக்சின் முதல் வகையைச் சேர்ந்தது – கொல்லப்பட்ட கொரோனா வைரசிலிருந்து தயாரிக்கப்படுவது. (அமெரிக்காவில் போடப்படும் Pfizer மற்றும் Moderna வாக்சின்கள் மரபணுக் கூறுகளைக் கொண்டு (mRNA வாக்சின்) தயாரிக்கப்படுபவை.)

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் AdV26 என்ற வேக்சினுக்கும் விரைவில் இந்திய அரசு அங்கீகாரம் அளிக்கும் எனக் கூறப்படுகிறது. இதுவும் சேர்ந்தால், கோவிஷீல்ட், ஸ்புட்னிக், AdV26 ஆகிய மூன்று வைரல் வெக்டர் வேக்சின்களாக இந்தியாவில் தரப்படும்.

000

கோவிட் வேக்சின்கள் எவ்வாறு செயல்படுகின்றன?

எளிமையாகச் சொல்வதானால் – கொரோனா வைரஸைப் போன்ற வலுவற்ற வைரசைக் கொண்டவைதான் வேக்சின்கள். (வைரத்தை வைரத்தால் அறுப்பது என்பார்களே, அதுபோல, கிட்டத்தட்ட எல்லா நோய்களுக்கான வேக்சின்களும் அந்தந்த நோய்க் கிருமியைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.) இவை உடலில் நுழைந்ததும், உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தி விழித்துக் கொண்டு இவற்றை எதிர்த்துப் போராடி அழிக்கின்றது.

ஒருமுறை அப்படி ஆகிவிட்டால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியில் உள்ள மெமரி செல்கள் இந்த வைரசை நினைவில் வைத்துக் கொள்கின்றன. அடுத்து எப்போது இந்த வைரஸ் தாக்கினாலும் உடனே எதிர்வினை காட்டி, வைரஸை எதிர்த்துப் போராடி அழிக்கும்.

இப்போது சாமானியர்களின் கேள்விகளுக்கு வருவோம்.

000

வேக்சின் போடப்பட்டவர்களுக்கு கோவிட் வருமா? ஏன் வருகிறது? அப்படியானால் வேக்சின் வேலை செய்யவில்லையா?

கோவிட் மட்டுமல்ல, எந்தவொரு தடுப்பு மருந்தும் உடனடி பலனைத் தராது. கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் தரப்பட்ட பிறகு, உடலில் நோயெதிர்ப்பு சக்தி உருவாக சில வாரங்கள் ஆகும். இரண்டாவது டோசும் தரப்பட்ட பிறகே முழுமையான தடுப்புத் திறன் கிடைக்கும். (இரண்டாவது டோசும் தரப்பட்ட பிறகு இரண்டு வாரங்கள் கழித்தேப் பாதுகாப்பு கிடைக்கும் என்கிறார்கள். இதை விண்டோ பீரியட் என்கிறார்கள்.

ஒருவருக்கு ஏற்கெனவே தொற்று ஏற்பட்டிருந்து, வேக்சின் போடும்போது தெரியாமல் இருந்திருந்தால், அதன்பிறகு பரிசோதனை செய்யும்போது பாசிடிவ் காட்டும் சாத்தியங்கள் உண்டு. தடுப்பூசியின் காரணமாக கோவிட் ஏற்படுவதில்லை. முழுமையானப் பாதுகாப்புக் கிடைக்கும் வரை தொற்றுக் கண்டறியப்பட வாய்ப்பு உண்டு.

தடுப்பூசிகள் நோய்களைத்தான் தடுக்கும், தொற்றினைத் தடுக்காது. அதாவது, தொற்றுக்கு ஆளானாலும் நோயின் தீவிரம் ஏற்படாமல், உயிருக்கு ஆபத்தில்லாமல் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

000

பக்க விளைவுகள் இல்லை என்றால் மருந்து வேலை செய்யவில்லை என்று அர்த்தமா?

நீங்கள் சாதாரணமாகப் பயன்படுத்தும் ஏதேனுமொரு மருந்துக்கான பக்க விளைவுகளைத் தேடிப் படித்துப் பாருங்கள். அதன் பக்க விளைவுகளின் பட்டியலைப் படித்தால், அந்த மருந்தையே சாப்பிட மாட்டீர்கள்!. உதாரணமாக, மீதமுள்ள என் ஆயுள் முழுமைக்கும் தினமும் ஒரு மருந்தை இரண்டு வேளை எடுத்தாக வேண்டும்.

Mesahenz அல்லது mesalmine போன்ற அந்த மருந்தின் பக்க விளைவுகள் — Flatulence, Headache, Itching, Diarrhea, Nausea, Stomach pain/epigastric pain, Dizziness, Joint pain, Muscle pain, Vomiting. (வாயு பிரிதல், தலைவலி, அரிப்பு, வயிற்றுப் போக்கு, குமட்டல், வயிற்று வலி, தலைசுற்றல், மூட்டுவலி, தசை வலி, வாந்தி)! இந்தப் பக்க விளைவுகளுக்கா நான் மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் பதிவு எழுத முடியுமா!

ஒரு மருந்தின் பக்க விளைவுகள் எனப் பட்டியல் இடப்படும் எல்லாம் எல்லாருக்கும் ஏற்படும் என்பதில்லை. கோவிட் வேக்சின் பொறுத்தவரை, ஊசி போட்ட இடத்தில் வலி அல்லது வீக்கமும், சிவத்தல், அரிப்பு, காய்ச்சல், குளிர் காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி போன்றவை பக்க விளைவுகளாக இருக்கலாம்.

இவை எல்லாம் ஏற்பட்டால்தான் நல்லது என்று நினைத்துவிட வேண்டாம். சிலருக்கு எல்லா பக்க விளைவுகளும் இருக்கலாம், சிலருக்கு எந்தப் பக்க விளைவும் இல்லாமலும் இருக்கலாம். பக்க விளைவுக்கும் மருந்து வேலை செய்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

000

வேக்சின்கள் எந்த அளவுக்கு பாதுகாப்புத் தரும்?

பல்வேறு நோய்களுக்கு உருவாக்கப்பட்ட பல தடுப்பு மருந்துகள் பல்வேறு அளவில் பலன் தந்துள்ளன. சில தடுப்பு மருந்துகள், சில நோய்களை முற்றிலும் ஒழித்து விட்டன (உதாரணம், சின்னம்மை, போலியோ போன்றவை). இந்தியாவில் கோவிட் வேக்சினைப் பொறுத்தவரை, இரண்டு டோஸ்களும் போட்டால் — கோவிஷீல்ட் திறன் 90% என மதிப்பிடப்பட்டுள்ளது.

கோவாக்சின் பொறுத்தவரை, மத்திய அரசின் அவசரகால நடவடிக்கைகளின் காரணமாக, முழு பரிசோதனை முடியாமலே அங்கீகரிக்கப்பட்டது. இப்போது மூன்றாம் கட்டப் பரிசோதனையின் இடைக்கால அறிக்கை வந்துவிட்டது. இதன் திறன் 81% எனக் கூறப்படுகிறது

ஸ்புட்னிக் வி வேக்சின் திறன் 92% என மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் Pfizer மற்றும் Moderna வாக்சின்களின் திறன் 94% என மதிப்பிடப்பட்டுள்ளது.

அப்படியானால், எல்லாருக்குமே பயன் கிடைக்காதா என்று கேட்டால், ஒருவர் விடாமல் மக்கள் அனைவருக்குமே தடுப்பூசி போட்டாக வேண்டும் என்பதில்லை. போதுமான அளவுக்கு மக்கள் COVID-19-ல் இருந்து பாதுகாக்கப்பட்டு விட்டால், பிறகு மக்கள் திரளிடையே நோய் எளிதாகப் பரவ இயலாது.

இதுதான் “மக்கள் திரள் நோயெதிர்ப்பு சக்தி” (Herd immunity) என அழைக்கப்படுகிறது; இது ஏற்பட்டுவிட்டால், மருத்துவமனைகளின் மீது பாரம் குறையும், இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும். அமெரிக்காவைப் பொறுத்தவரை, யு.எஸ்.இல் மக்கள் திரள் நோயெதிர்ப்பு சக்தி ஏற்பட வேண்டுமானால், குறைந்தது 70% பேருக்கு வாக்சின் போடப்பட வேண்டும் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

000

இப்போது இந்தியாவில் டபுள்-ம்யூடன்ட் (பிறழ்வுற்ற வைரஸ்) வைரஸ்கள் பரவி வருகிறதாமே? இப்போது போடப்படும் வேக்சின், புதிய வகை வைரசுக்கு எதிராகவும் வேலை செய்யுமா?

இந்தியாவில் மட்டுமல்ல, எட்டு நாடுகளில் பிறழ்வுற்ற வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இரட்டைப் பிறழ்வு வைரஸ் எனப்படும் வைரசும் கூட 15 வகைகள் உள்ளன என்கிறார்கள். கொரோனா வைரசைப் பொறுத்தவரை இன்னும் பல வகை பிறழ்வுகள் ஏற்பட்டிருக்கின்றன, இன்னும் ஏற்பட்டிருக்கலாம், இன்னும் கண்டறியப்படாமலும் இருக்கலாம். இந்தியாவில் கோவிட் திடீரென அதிகரிப்பதற்கு இந்த பிறழ்வுற்ற வைரஸ்தான் காரணம் என்று கருத இடமிருக்கிறது. அறிவியலார் இதை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலே கண்ட கேள்விக்கானப் பதிலைக் கண்டறிய முனைந்திருக்கிறார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி என்பது சிக்கலான ஒரு விஷயம். நமது உடல் பல்வேறு வகையான ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. பல்வேறு ஆன்டிபாடிகள் வைரசின் பல்வேறு பாகங்களைத் தாக்குகின்றன. எனவே, கோவிட் வேக்சின் வேலை செய்யுமா என்பது, கொரோனா வைரசின் ஸ்பைக் புரோட்டீன் மீது ஆன்டிபாடிகள் எந்த அளவுக்கு தாக்குதல் நடத்துகின்றன என்பதைப் பொறுத்து இருக்கிறது.

அதற்காக, இப்போதைய வேக்சின் புதிய பிறழ்வுற்ற வைரசிடமிருந்துப் பாதுகாப்புத் தராது என்றும் சொல்லிவிட முடியாது. எல்லா வேக்சின்களும் கொரோனா வைரசிலிருந்தே தயாரிக்கப்படுவதில்லை. முதலில் குறிப்பிட்டதுபோல, கொரோனா வைரஸ் என்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறதோ அதேபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்திய இதர வைரஸ்களையும் கலந்தே இந்த வேக்சின்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே, பிறழ்வுற்ற வைரசிலிருந்தும் இவை பாதுகாக்கும் என்று நம்பலாம்.

நம்மிடம் இருப்பது இப்போதைக்கு இந்த வேக்சின்தான். கண்டவர்களும் பரப்பும் வதந்திகளை நம்பி தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் விட்டால், இன்னும் பரவல் அதிகரிக்கவே செய்யும். இன்னும் பல்லாயிரம் பேர் இறக்க நேரிடும். எனவே, தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வயது / வாய்ப்பு உள்ளவர்கள் அவசியம் தடுப்பூசிப் போட்டுக் கொள்ளுங்கள்.

000

தடுப்பூசி போட்டதால் மாரடைப்பு போன்ற பாதிப்புகள் நேர்கிறதா?

இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் இதுபோல சிலர் கிளப்பி விட்டதால்தான் தடுப்பூசி விழிப்புணர்வுக்காக ஆரம்பத்தில் குறிப்பிட்ட மொழியாக்க வேலை எனக்கு வந்தது. தடுப்பூசியால் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது, நோயெதிர்ப்பு சக்தி பாதிக்கிறது போன்ற வதந்திகள் அங்கே சுற்றுகின்றன.

கொரோனா வைரசால் பல்வேறு சிக்கல்கள் வரலாம். நுரையீரலை, சுவாச மண்டலத்தைத் தாக்குவது தவிர, மற்ற சில நோய்கள் உள்ளவர்களும் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். கொரோனா இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை.

வைரஸ்தான் பிரச்சினைகளை ஏற்படுத்துமே தவிர, வைரசுக்கு எதிரான வேக்சின் பிரச்சினைகளை ஏற்படுத்தாது. ஏனென்றால், வேக்சினின் வேலை வைரசை அடையாளம் கண்டு தாக்குவதற்கான ஆன்டிபாடிகளை உருவாக்கச் செய்வதுதான். ஏற்கெனவே பார்த்தது போல சில வேக்சின்கள் வைரசின் ஸ்பைக் புரோட்டீனைத் தாக்கும். வேறு சில, மரபணு அமைப்பைத் தாக்கும்.

தடுப்பூசி போட்டதால் மாரடைப்பு வந்து விட்டது, தடுப்பூசி போட்டதால் கோவிட் வந்து விட்டது போன்ற பதிவுகளைக் கண்டால் கண்டித்துத் திருத்துங்கள், நீக்கச் சொல்லுங்கள். அவை மேலும் பரவாமல் தடுத்து நிறுத்துங்கள்.

000

தடுப்பூசி போட்டுக் கொண்டாயிற்று. பிறகு எதற்கு மாஸ்கும், இடைவெளியும்?

தடுப்பூசி போட்டுக் கொண்டது உங்களைப் பாதுகாத்துக் கொள்ள. மாஸ்க் அணிவது உங்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்க. வாக்சின் போடப்பட்ட மக்களும் அறிகுறிகள் இல்லாமலே தொற்றுக்கு ஆளாகியிருக்கவும் கூடும். தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் தொற்றுக்கு ஆளாகக் கூடும் என்பதை மேலே பார்த்தீர்கள் அல்லவா? எனவே, மாஸ்க் அணிவதும் இடைவெளி பராமரிப்பதும் உங்களிடமிருந்து மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக.

ஒரு வாதத்துக்காக, இப்போதைய வாக்சின் புதிய வகை வைரஸ்களுக்கு வேலை செய்யாது என்றே வைத்துக் கொள்வோம். அப்படியானால் நமக்கு பாதுகாப்புதான் என்ன? இதற்கான தீர்வினை அறிவியலார் கண்டறியும் வரை மாஸ்க் அணிவதும், கூட்டங்களைத் தவிர்ப்பதும், இடைவெளி பராமரிப்பதும், சானிடைஸ் செய்வதும்தான்.

000

எச்சரிக்கை

மருத்துவமனைகள் நிரம்பிக் கொண்டிருக்கின்றன. நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு இடம் கிடைக்க அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.

கோவிட் டெஸ்ட் எடுக்கவும் டிமாண்ட் கடுமையாக அதிகரித்து வருகிறது. சில லேப்களில், இன்று புக் செய்தால் அடுத்த வாரம்தாம் டெஸ்ட் எடுக்க வருவார்கள். (தில்லியில் அரசு நடத்தி வந்த சில பரிசோதனை மையங்களை மூடிவிட்டது.)

கோவிட் பாசிடிவ் எனக் கண்டறியப்பட்ட தமிழக நண்பர் ஒருவர், தான் தனியாக இருப்பதால் மருத்துவமனைக்குச் சென்று தங்கி விடலாம் என்று சத்தர்பூர் சென்றிருக்கிறார். அங்கே மருத்துவமனைக்கான அடையாளமே இல்லை. இந்தியாவிலேயே மிகப்பெரிய கோவிட் சிறப்பு மருத்துவமனை என்று படம் காட்டப்பட்ட சில தற்காலிக மருத்துவமனைகள் பிரிக்கப்பட்டுவிட்டன. குஜராத் நிலைமை பற்றியெல்லாம் சொல்லவே வேண்டாம்.

இன்னும் சில நாட்களில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு வரப்போகிறது. இரண்டாவது டோஸ் போட வேண்டியவர்களுக்காவது தட்டாமல் கிடைக்குமா என்ற கேள்வி பிரம்மாண்டமாக நிற்கிறது.

படிக்க :
♦ கொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது

♦ கொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்

கொரோனாவாவது மயிராவது, எல்லாம் மாஃபியா, இல்லுமினாட்டி சதி, தடுப்பு மருந்துகளே தேவையில்லை, இயற்கை மருத்துவத்தில் தீர்வு இருக்கிறது என்னும் வாட்ஸ்அப் வாயர்களின் உளறல்களை நம்பிக் கொண்டு இருந்தீர்கள் என்றால், உங்கள் சுற்றத்தாரையும் பிள்ளைகளையும் அபாயத்தில் தள்ளுகிறீர்கள் என்றுதான் பொருள்.

பி.கு. – தடுப்பூசி போட்ட பிறகு விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் தடுப்பூசியால்தான் ஏற்பட்டதா என்பதை மருத்துவ ஆய்வுகள்தான் காட்டும். அதற்குள், வதந்திகளைப் பரப்பக் கூடாது.

பக்க விளைவுகளைப் பற்றி ஏற்கெனவே பார்த்தோம். சிலருக்கு தீவிரமான சில பக்க விளைவுகள் ஏற்படலாம். ஆனால் அவை மிக மிக அரிது. மிகச் சிலருக்கு மிக அரிதாக ஏற்படும் பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு பலகோடிப் பேருக்கு ஏற்படக் கூடிய பயனைப் புறக்கணித்துவிடக் கூடாது.

பதிவுக்கு உதவிய வலைதளங்கள்

1. Gavi
2. Outlook
3. BBC
4. NewYork Times

முகநூலில் : Shahjahan R

disclaimer

#JusticeForSaraswathi : நீலிக் கண்ணீர் வடிக்கும் சாதி வெறியர்கள் !

3

ள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தேவியாநத்தல் கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி எனும் இளம்பெண் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அவரது வீட்டின் அருகே கழுத்து நெறிபட்ட நிலையில் இறந்து கிடந்திருக்கிறார்.

இந்த மரணம் தொடர்பாக விசாரித்த போலீசு, அதே ஊரைச் சேர்ந்த ரெங்கசாமி, ரவீந்திரன், கிருஷ்ணசாமி ஆகிய மூன்று தலித் இளைஞர்களை கொலைக் குற்றத்தில் கைது செய்திருக்கிறது.

பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள், வன்னிய சமூகத்தைச் சேர்ந்த சரஸ்வதியும் தலித் சமூகத்தைச் சேர்ந்த ரெங்கசாமியும் காதலித்து வந்த நிலையில், வீட்டில் பார்த்த பையனையே சரஸ்வதி திருமணம் செய்துகொள்ளப் போவதை அறிந்த ரெங்கசாமி, சரஸ்வதியை தனது நண்பர்களுடன் இணைந்து கொலை செய்ததாகத் தெரிவிக்கின்றன.

படிக்க :
♦ மணப்பாறையில் தலித் – வன்னியர் மணவிழா !
♦ வன்னியர் சங்கம் உள்ளிட்ட ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய் !

சமூக வலைத்தளங்களில் பா.ம.க மற்றும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இதனை ஒருதலைக் காதல் என்றும் தனது காதலை சரஸ்வதி ஏற்கவில்லை என்பதற்காக சரஸ்வதியை ரெங்கசாமி கொலை செய்துள்ளான் என்றும் குறிப்பிடுகின்றனர்.

இந்தக் கொலை கடந்த ஏப்ரல் 2-ம் தேதி நடந்த நிலையில், விசாரணையின் முடிவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேரையும் போலீசு கைது செய்துவிட்டது. இந்தக் கொலையைத் தாங்கள்தான் செய்ததாக அந்த மூவரும் வாக்குமூலம் கொடுத்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதற்குப் பிறகுதான், #JusticeForSaraswathi எனும் ஹேஷ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. அதாவது, குற்றவாளிகளைக் கைதுசெய்த பின்னர் தான் #JusticeForSaraswathi என்ற ஹேஷ்டேக் பரபரப்பாக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண், காதலை ஏற்றுக் கொள்ள மறுப்பதற்கும் அல்லது ஏற்கெனவே காதலித்த ஒருவனை விட்டுப் பிரிவதற்கும் அனைத்து உரிமையும் அப்பெண்ணிற்கு உண்டு. சரஸ்வதி, ரெங்கசாமியை முன்னரே காதலித்திருந்தால் பின்னர் ரெங்கசாமியை விட்டுப் பிரிவதற்கும், ஒருவேளை அது ரெங்கசாமியின் ஒருதலைக் காதலாக இருந்திருந்தால் அதை மறுப்பதற்கும் சரஸ்வதிக்கு அனைத்து உரிமையும் உண்டு.

தனது காதலை சரஸ்வதி மறுத்ததை ஏற்றுக் கொள்ள முடியாத ஜனநாயகமற்ற ஆணாதிக்க மனநிலையில் இந்தக் கொலையை, ‘காதல்’ என்ற பெயரில் அரங்கேற்றியிருக்கிறான் ரெங்கசாமி. இந்தக் கொலை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஒருபுறத்தில், பெண்களை அழகுப் பதுமைகளாகவும், சுய அறிவு அற்றவர்களாகவும், தனக்கென்று ஒர் நிலைப்பாடுகளற்றவர்களாகவும் உருவகப்படுத்தி வரும் சினிமா கழிசடைத்தனங்கள் இத்தகைய கொடூரங்கள் நிகழ காரணமாக இருக்கின்றன. மறுபக்கத்தில், சமூக நடைமுறைகளிலும் குடும்பங்களிலும் எதார்த்தமாக நிலவும் பெண்கள் மீதான ஒடுக்குமுறையும் இத்தகைய வன்கொலைகள் தொடரக் காரணமாக இருக்கின்றன.

இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நடக்கையில், குற்றம் இழைத்தவர்களின் சமூகப் பின்னணிதான் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை துவங்கி வழக்காடு மன்றங்கள் வரை பாதிக்கப்பட்டவருக்கு கிடைக்க வேண்டிய நீதியின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன.

பல சமயங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் பலவீனமானவர்களாக இருந்து குற்றம் இழைத்தவர்கள் மிகவும் பலமானவர்களாக இருக்கையில் முதல் தகவல் அறிக்கைகள் கூட பதியப்படாமல் பிரச்சினைகள் நிர்மூலமாக்கப் பட்டிருக்கின்றன.

அத்தகைய சமூகச் செல்வாக்கு கொண்டோருக்கு ஆதரவாகவும் பாதிக்கப்பட்டோருக்கு எதிராகவும் போலீசு உள்ளிட்ட அதிகார வர்க்கங்கள் செயல்படும்போது மட்டுமே ஜனநாயகவாதிகள் மற்றும் முற்போக்காளர்கள் களத்தில் இறங்கி குரல் கொடுக்கின்றனர். அதிகாரத்துவத்தின் குடுமியைப் பிடித்து உலுக்குகின்றனர். அச்சமயங்களில் சமூக வலைத்தளங்களில் #JusticeFor என்ற ஹேஷ்டேக்குகளில் வலைத்தளச் செயற்பாட்டாளர்கள் நீதிகேட்டு போராடுகின்றனர். ஒடுக்குமுறைக்கு எதிராக விரிவான பரப்புரை செய்கின்றனர்.

தற்போது சரஸ்வதி படுகொலையை ஒட்டி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் #JusticeForSaraswathi எனும் ஹேஷ்டேக் பற்றி பார்க்கலாம். இங்கு கொலையில் ஈடுபட்டதாக போலீசு கைது செய்திருக்கும் மூன்று தலித் இளைஞர்களும் தப்பிச் செல்லவில்லை. இவர்களுக்கு போலீசும் ஆதரவாக நடந்து கொள்ளவில்லை. இதுவரையில் அனைத்தும் சட்டப்படி சரியாக நடந்து கொண்டிருக்கிறது.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வரும் சூழலில், #JusticeForSaraswathi டிரெண்டிங் செய்யப்பட வேண்டிய அவசியம் என்ன ?

முகநூலில் தேடிப் பார்த்தால் #JusticeForSaraswathi எனும் ட்ரெண்டிங்கை முன் நின்று நடத்துவது, பாமக, பாஜக, அதிமுக மற்றும் சில சீமானிச தமிழ்த் தேசியவாதிகள் தான். சுருக்கமாகச் சொன்னால் சாதிவெறியை நேரடியாகவும் மறைமுகமாகவும் வளர்க்கும் கூட்டம்தான் இதனை செய்து வருகிறது. பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், தைலாபுரத்திலிருந்து திடீரென தலையைத் தூக்கி, “இது நாடகக் காதல் கும்பலின் வெறியாட்டம்” என அறிக்கை விட்டிருக்கிறார். அவரது அடிபொடிகள் அனைவரும் திருமாவளவனை குறிவைத்துத் தாக்கத் துவங்கியிருக்கின்றனர்.

சமூக வலைத்தளங்களில் இதை டிரெண்டிங் செய்து தொடர்பவர்களின் முதல் இலக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் தான். நாடகக் காதலை ஊக்குவிப்பவர் என்பதாகவும், அவரது தூண்டுதலால்தான் இளைஞர்கள் பெண்களைக் காதலித்து ஏமாற்றுவதாகவும் குறிப்பிட்டு, சரஸ்வதி படுகொலையை நாடகக் காதலோடு இணைத்திருக்கிறது சாதிவெறிக் கும்பல்.

பாலியல் ஜல்சா கட்சி என அழைக்கப்படும் பா.ஜ.கவை சேர்ந்த ஒரு இழிபிறவி ஒருபடி மேலே போய், சரஸ்வதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக எழுதியிருக்கிறது.

கொல்லப்பட்ட இளம்பெண் சரஸ்வதி

ந்த ஹேஷ்டேக்ஐ டிரெண்டிங் செய்வது நிச்சயமாக சரஸ்வதி மரணத்திற்கு நீதி பெற்றுத் தரும் நோக்கத்திற்கு இல்லை என்பது ராமதாஸ் மற்றும் சங்க பரிவாரக் கும்பல்களின் பதிவுகளில் இருந்தே பளீரெனத் தெரிகிறது. சரஸ்வதியின் மரணத்தைப் பயன்படுத்தி மனுநீதிக்கும், அதன் காவலர்களான பாரதிய ஜனதாவோடு தாங்கள் கூட்டு வைத்துக் கொண்டதற்கும் நியாயம் கற்பிக்க விரும்புகிறது இந்த சாதிவெறிக் கும்பல்.

இவர்களது அடுத்த இலக்கு சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்துவரும் ஜனநாயக சக்திகள் மற்றும் முற்போக்காளர்கள் தான்.

இதுவே ஒரு தலித் பெண் இறந்திருந்தால் கொந்தளித்து எழும் இந்த முற்போக்காளர்கள், ஒரு வன்னிய சாதிப் பெண்ணை தலித் இளைஞன் கொன்றதற்கு வாய் திறக்க மாட்டார்கள்” என்று சமூகச் செயற்பாட்டாளர்களை அவர்களது விழுமியங்களை நோக்கி கேள்வி எழுப்புகின்றனர் சாதி வெறியர்கள். இந்தக் கும்பலின் இந்த “மாரல் (Moral) மிரட்டலுக்கு” முகம் கொடுக்கும் சமூக வலைத்தளச் செயற்பாட்டாளர்களும், #JusticeForSaraswathi என ஹேஷ்டேக் போட்டு தமது கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

இவர்கள் கூறுவதைப் போல ஜனநாயகவாதிகளும் முற்போக்காளர்களும் சாதியின் அடிப்படையில் மட்டுமா இவ்வளவு காலமும் பொது வெளியிலும் இணைய வெளியிலும் குரல் கொடுத்தார்கள் ?

சமூகத்தில் யார் யாருக்கெல்லாம் நீதி மறுக்கப்படுகிறதோ, அவர்களுக்கெல்லாம் குரல் கொடுத்து வந்துள்ளனர். எங்கெல்லாம் பலவீனமானவர்கள் ஒடுக்கப்படுகிறார்களோ அக்கெல்லாம் குரல் கொடுத்து வந்துள்ளனர்.

சாத்தான் குளத்தில் போலீசால் கொல்லப்பட்ட தந்தை மகனுடைய வழக்குகள் போலீசு அதிகாரத்தால் முடக்கப்பட்ட போது அவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பலநூறு பெண்களை சீரழித்த கிரிமினல்களை அடிமை எடப்பாடி அரசு காப்பாற்ற முயற்சிக்கையில் அவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். இங்கு யாரும் சாதி பார்க்கவில்லையே !

..டி போன்ற உயர் கல்வி நிலைய அக்ரஹாரங்களில், பாத்திமா லத்தீஃப்களும், ரோஹித் வெமுலாக்களும் நஜீபுகளும் சனாதனக் கும்பலால் கொல்லப்படுகையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்தார்கள்.

இப்படி ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படும் சூழல்களில்தான் தமிழக முற்போக்காளர்களும் ஜனநாயகவாதிகளும் குரல் கொடுத்து வந்தனர். சரஸ்வதி கொலை என்பது முழுக்க முழுக்க ஆணாதிக்கத் திமிரினால் நிகழ்த்தப்பட்ட கொலை. இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தப்புவிக்கும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. ஆகவே இங்கு நீதி மறுக்கப்படும் பிரச்சனை எதுவுமே எழவில்லை.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தவறிழைக்கையில் அவர்களை உடனடியாக கைது செய்கிறது போலீசு. அது சரியானதுதான். ஆனால் அதே தவறை ஆதிக்கச் சாதியினர் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீது நடைமுறைப்படுத்துகையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முயற்சிக்கிறது. ஆதிக்கச் சாதியினரை தப்பிக்கச் செய்கிறது.

இது சாதி ஆதிக்கம் என்பதில் மட்டுமல்ல. ஆதிக்க சாதி எதிர் தலித், இந்து மதம் எதிர் இஸ்லாம், ஆண் எதிர் பெண், அதிகார வர்க்கம் எதிர் சாமானியர்கள், முதலாளிகள் எதிர் தொழிலாளர்கள் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தும் பிரிவினருக்கு ஆதரவாகச் செயல்படும் அதிகார வர்க்கத்தின் செயல்பாட்டுக்கு எதிராக எழுப்பப்படும் குரல் தான் #JusticeFor எனும் ஹேஷ்டேக்.

படிக்க :
♦ கல்லூரி மாணவி திலகவதி படுகொலை ! தீர்ப்புக்கு முன்பே தீ மூட்டும் சாதி வெறி !
♦ ஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன ?

சரஸ்வதி படுகொலை விவகாரத்தில், ஆதிக்கச் சாதி ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விடும் பா.ம.க கும்பல் இந்த ஹேஷ்டேக்ஐ அதன் நோக்கத்திற்குப் பயன்படுத்துகிறது. சமூக விடுதலைக்குப் பயன்படுத்தப்பட்ட அந்த ஹேஷ்டேக், நாடகக் காதல் எனும் கட்டுக்கதையோடு இணைத்து தலித்துகளுக்கு எதிரான வெறுப்பையும் ஒடுக்குமுறையையும் வளர்ப்பதற்கு பயன்படுத்துகிறது.

ஆதிக்கத்தை செலுத்துவதற்காக #JusticeFor எனும் ஹேஷ்டேக்சாதிவெறி, மதவெறிக் கும்பல்கள் பயன்படுத்துவதை வன்மையாகக் கண்டிப்பதுதான் ஆண் ஆதிக்கத்தால் கொல்லப்பட்ட சரஸ்வதிக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.


சரண்

கொரோனா 2-வது அலை : பேஷாக கையாளும் மோடி || கருத்துப்படம்

கொரோனா 2-வது அலையை பேஷா கையாளும் மோடி ஜி !

கொரோனா தொற்று வீச்சுடன் பரவும் வேளையில் மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மோடி.


கருத்துப்படம் : மு. துரை

கும்பமேளா – கொரோனா வைரசிற்கு எதிரான போரின் அடையாளமாம் || கருத்துப்படம்

கும்பமேளாவில் சமூக இடைவெளி இன்றி கூட்டம் கூட அனுமதித்த பின்னர்,  “கொரோனா வைரசுக்கு எதிரான போரின் அடையாளமாக கும்பமேளா திகழ வேண்டும்” என மோடி பேசுகிறார். உள்நாட்டில் தடுப்புமருந்து தட்டுப்பாடாக இருக்கையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார் மோடி !

கருத்துப்படம் : மு. துரை

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் ? || தோழர்கள் மருது – சுரேசு சக்தி முருகன் உரை || வீடியோ

கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா முதல் நிலையில் ஏற்பாட்ட பாதிப்புக்களைப் படிப்பினையாகக் கொண்டு தற்போது அதற்குத் தகுந்தாற்போல செய்யப்பட வேண்டியவை குறித்து கவனம் செலுத்தாமல் மெத்தனமாக இருக்கிறது அரசு. இது குறித்து மக்கள் அதிகாரம் தோழர் மருது மற்றும் வழக்கறிஞர் சுரேசு சக்தி முருகன் ஆகியோர் உரையாடுகின்றனர். அதனை இரண்டு பாகங்களாக வெளியிட்டிருக்கிறோம் !

பாகம் 1 – கொரோனா தடுப்பூசியை அரசே தயாரிப்பதில்லை ஏன்?

கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் இரண்டு தனியார் நிறுவனங்கள் தயாரித்து இந்திய அரசுக்கு கொடுத்துவருவதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. ஆனால், இந்திய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி அதிகமாகக் கிடைக்கச் செய்யும் வகையில் ஏன் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மேலும் தற்போது இரண்டாம் அலை பரவி வருகையில் அதனைக் கட்டுப்படுத்த எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் ஏன் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை. இது குறித்து இந்தக் காணொலியில் வழக்கறிஞர் சுரேசு சக்தி முருகன் மற்றும் மக்கள் அதிகாரம் மருது ஆகியோர் விவாதிக்கின்றனர் !

***

பாகம் 2 – கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கும் தீர்வுகள் என்ன ?

கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் சூழலில் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய அரசு மக்களை அச்சுறுத்தியும் துன்புறுத்தியும் வருகிறது.  “கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்குத் தேவையான பொருட்களை, ஊரடங்கு காலங்களில் எப்படி பெற்றுக் கொள்வார்கள்? அவர்களை எப்படி பாதுகாப்பது?” என்பது போன்ற எந்த அக்கறையும் இல்லாமல் ஊடரங்கை அமல்படுத்தி வருகிறது. இந்த ஊரடங்கை பயன்படுத்தி மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்தவும் பார்க்கிறது.

பழைய அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவும் தவறியிருக்கின்றன மத்திய மாநில அரசுகள். மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற சாத்தியமான தீர்வுகள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுரேசு சக்தி முருகன் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர் மருது ஆகியோர் இந்தக் காணொலியில் விவாதிக்கின்றனர்.

காணொலிகளை பாருங்கள் ! பகிருங்கள் !!

வல்லரசு இந்தியா : கொரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை || கருத்துப்படம்

வல்லரசு இந்தியா

ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரே படுக்கையில் இரு கொரோனா நோயாளிகளை சேர்த்திருக்கும் அவலம்.  ஆர்.எஸ்.எஸ். -ன் கனவான அகண்ட பாரதத்தில் அதாவது ‘ஹிந்தி’ய வல்லரசில் மருத்துவத்தின் நிலைக்கான சான்று !


கருத்துப்படம் : மு.துரை

கொரோனா கால அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டுவோம் || தோழர் வெற்றிவேல் செழியன்

கோவையில் இரவு பத்தரை மணிக்கு மேல் உணவு விடுதியைத் திறந்து வைத்திருந்ததற்காக உள்ளே புகுந்து அங்கு உணவருந்திக் கொண்டிருந்த சாதாரண மக்களையும் , கடைப் பணியாளர்கள் மற்றும் உரிமையாளரையும் சரமாரியாக தாக்கியுள்ளார் அப்பகுதி போலீஸ் எஸ்.ஐ.

சி.சி.டிவி-யில் பதிவான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதன் காரணமாகவே அந்த எஸ்.ஐ-யின் காட்டுமிராண்டித்தனம் அம்பலமானது. இதனைத் தொடர்ந்துதான் அந்த காட்டுமிராண்டி போலிசு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

சாதாரண மக்களை ஈவிரக்கமின்றி தாக்கும் போலீசு, இரவு நேர சொகுசு விடுதிகளிலும், சொகுசு பார்களிலும் சென்று என்றாவது இத்தகைய தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறதா ? சமூக குற்றத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகள், கிரிமினல்கள் மேல் எந்த அடக்குமுறையையும் இந்தப் போலீசு செய்வதில்லை. ஆனால் சாமானிய மக்கள் மீது அடக்குமுறையை ஏவுகிறது என போலீசின் அடக்குமுறைகளுக்கு எதிரான கேள்விகளை எழுப்புகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன்.

பாருங்கள் ! பகிருங்கள் !!

மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

கும்பமேளா கொரோனா – ரொம்ப சாதுவானதாம் || கருத்துப்படம்

கொரோனா மேளா : சைவ இந்து கொரோனா – ரொம்ப சாதுவானது!

ப்லிக் ஜமாத் கூட்டத்தோடு
கும்பமேளாவை ஒப்பிடக்கூடாது.

தப்லிக் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அந்நியர்கள்;
இது உள்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
தப்லிக் ஜமாத் ஒரு காம்பவுண்டிற்குள் நடைபெற்றது;
கும்பமேளா புனித கங்கையின் திறந்தவெளி.

– திரத்சிங் ராவத்
உத்திரகாண்ட் முதலமைச்சர்.


கருத்துப்படம் : மு.துரை

அமெரிக்கப் போலீசின் நிறவெறி : தொடரும் கருப்பின மக்கள் படுகொலை || படக்கட்டுரை

போக்குவரத்து விதிகளை மதிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி 20 வயது கருப்பின இளைஞனான டான்ட் ரைட்டை அமெரிக்க போலீஸ்  சுட்டு கொன்றுள்ளது.

கைது நடவடிக்கையின் போது தவறுதலாக மின்சார துப்பாக்கிக்கு பதிலாக கைத்துப்பாக்கியினால் போலிஸ் அதிகாரி  சுட்டுவிட்டார் என்று வழக்கம் போல காவல்துறை ஒரு காரணத்தைக் கூறியிருக்கிறது. ரைட்டை சுட்ட அந்த வெள்ளைப்பெண் அதிகாரியும் சம்பளத்துடன் கூடிய விடுப்பில் சென்று விட்டார்.

இடது : சுட்டு கொல்லப்பட்ட கருப்பின இளைஞன் டான்ட் ரைட், வலது : ரைட்டை சுட்ட அந்த வெள்ளைப்பெண் அதிகாரி

அமெரிக்க போலீசுக்குள் இருக்கும் வெள்ளை நிறவெறி பயங்கரவாதத்திற்கு பலியான கருப்பின மக்கள் ஏராளம்.  2020-ம் ஆண்டு மே மாதத்தில் ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்ட அதே மினியாபோலிஸ் நகரத்தில்தான் ரைட்டும் கொல்லப்பட்டிருக்கிறார். ஜார்ஜ் ஃபிளாய்ட்டின் படுகொலைக்கு எதிர்வினையாக அமெரிக்கா முழுதும் கடுமையாகப் போராட்டம் வெடித்தது.

அதற்கு இப்பொழுதுதான் வழக்கு விசாரணையே நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் புரூக்ளின் மைய மேயர் மைக் எலியட் டான்ட் ரைட்டிற்கு ‘உரிய நீதியை’ எப்படியும் பெற்றுத் தறுவதாக உறுதியளித்துள்ளார். ஆயினும் இந்த உறுதிமொழிகளை கருப்பின மக்கள் நம்பத் தயாராக இல்லை. அவர்கள் வீதிகளில் இறங்கி விட்டனர்.

படிக்க :
♦ இந்தியாவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் போராட்டங்கள் ஏன் நடக்கவில்லை ?
♦ கருப்பின மக்களின் வாழ்வும், அமெரிக்கா எனும் ஜனநாயக சோதனையும் !

 

மினசோட்டா, புரூக்ளின் செண்டரில் உள்ளூர் போலீசால் டுவான்ட் ரைட் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினரால் குறிப்பிடப்படும் இடத்திற்கு அருகில் போலீஸ் அதிகாரியை ஒரு போராட்டக்காரர் எதிர்கொள்கிறார்.

 

டுவான்ட் ரைட் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திற்கு அருகே போராட்டக்காரார்கள் எதிர்ப்பை தெரிவிக்க கைகளை உயர்த்துகின்றனர்.

 

புரூக்ளின் செண்டரில் டுவான்ட் ரைட்டை போலீசார் சுட்டுக் கொன்றதை எதிர்த்து நடக்கும் போராட்டத்தின் போது ஒரு ஆர்ப்பாட்டக்காரர் போலிஸை எதிர்கொள்கிறார்.

 

மினியாபோலிஸின் வடமேற்கில் உள்ள புரூக்ளின் சென்டரில் உள்ள காவல் நிலையத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருக்கின்றனர்.

 

புரூக்ளின் செண்டரில் போலீசால் கொல்லப்பட்ட் 20 வயதான டான்டே ரைட்டின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள். ஞாயிற்றுக்கிழமை தனது காரில் ஏறிச் செல்வதற்கு முன்பாக அவரை போலீசார் சுட்டதாகவும் பின்னர் அவர் இறந்து போனதாக செய்தி கிடைத்து என்று குழுமியிருக்கும் கூட்டத்திடம் ரைட்டின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

 

டான்டே ரைட்டை புரூக்ளின் செண்டர் போலிஸ் சுட்டுக்கொன்றதை எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் போலிஸ் வண்டியின் முன் கண்ணாடியின் மீது கோபமாக ஒருவர் ஏறுகிறார்.

 

புரூக்ளின் செண்டர் துப்பாக்கிச்சூட்டில் சம்மந்தப்பட்ட போலிஸ் அதிகாரியை விசாரிப்பதாக” மினசோட்டா குற்றவியல் புலனாய்வு பணியகம் கூறியது. ஆனால் பாதிக்கப்பட்டவரை அடையாளம் காண மறுத்து விட்டது.

 

புரூக்ளின் செண்டரில் போராட்டக்கரார்கள் மற்றும் போலீசாருடனான மோதலில் ரப்பர் குண்டினால் சுடப்பட்ட ஒருவரை மக்கள் கவனிக்கின்றனர்.

 

புரூக்ளின் செண்டர் காவல் துறை அலுவலகத்திற்கு வெளியே காவல் பணியில் ஒரு போலீஸ் அதிகாரி.

 

புரூக்ளின் செண்டர் காவல் நிலையம் முன்பாக கண்ணீர்ப்புகைக் குண்டுகளின் புகைமூட்டத்திற்கிடையில் போலீஸ் அதிகாரிகள்.

 

புரூக்ளின் சென்டர் காவல் நிலையம் முன்பு போலீசாரின் கண்ணீர்ப் புகைக் குண்டுகளிடம் இருந்து தப்ப, மக்கள் பாதுகாப்பு உடை உடுத்தியிருக்கின்றனர்.

தமிழாக்கம் : ஆறுமுகம்
நன்றி : Aljazeera