Sunday, June 28, 2026
முகப்பு பதிவு பக்கம் 345

ஒடம்புல தெம்பு இருக்குற வரைக்கும்தான் இந்த பொழப்பு !

”இருபது வருசத்துக்கு முன்னாடி எங்க அப்பாவோட இங்க பொழைக்க வந்தேன். எட்டாவது வரைக்கும் படிச்சிருக்கேன். சொந்த ஊரு தேவகோட்டை. சொந்தத்துலேயே கல்யாணம் பண்ணிகிட்டேன். ரெண்டு புள்ளங்க இருக்காங்க. கவர்மெண்டு ஸ்கூல்ல தான் படிச்சிட்டிருக்காங்க” தன்னைப் பற்றிய அறிமுகத்தை இவ்வாறு கொடுத்தார் கரும்பு ஜூஸ் கடை வைத்திருக்கும் முருகவேல்

“ஊர விட்டு எதுக்காக இங்க வந்தீங்க ?”

“ஊர்ல சொந்தமா நெலமெல்லாம் இருக்குது. ஆனா விவசாயத்துக்கு தண்ணி இல்ல அதான் இங்க வந்துட்டோம். எங்க ஊரு ஆளுங்க பாதி பேரு சென்னையிலதான் பொழக்க வந்துருக்காங்க. நெறையா பேரு மிலிட்டிரில இருக்குறாங்க. தண்ணி இருந்துச்சுன்னா நாங்க ஏன் இங்க வந்து கஷ்டப்பட போறோம்.” என்றவாறு கத்தையான கரும்புத் துண்டுகளை மிஷினின் உருளைகளுக்கு இடையே திணித்தார்.

“கரும்பு ஜூஸ், கொஞ்ச நல்ல வருமானம் கெடைக்கிற தொழிலுதான். ஆனா பாதிநாள் கடை போட விட மாட்டேங்குறாங்க. இந்த ரோடு முக்கியமானதுங்குறதுனால வாரத்துல ரெண்டு மூணு நாளு விஐபி-ங்க போவாங்க, அப்பல்லாம் நாங்க கட போடக்கூடாது. ஒருவாட்டி ரிப்போர்ட்டரு ஒருத்தரு வந்து போட்டோ பிடிச்சிட்டு போயி சாலையை ஆக்கிரமிச்ச கடைன்னு நியுஸ்-ல போட்டு கடைய காலி பண்ண சொல்லிட்டாங்க. மாசக்கணக்கா கடை போட முடியாம கட்டிட வேலைக்கு போயிதான் சமாளிக்க வேண்டியதாயி போச்சு. பின்ன எப்படி காசு சம்பாதிக்க முடியும். ரேசன்ல அரிசி, பருப்பு கெடைக்கிறத வெச்சு சமாளிச்சிகிட்டு இருக்கோம்.” என்றார் கரும்பை வெட்டிக் கொண்டே..

“தனியா எப்படி கடைய சமாளிக்கிறீங்க ?”

“கரும்பு, ஐஸ் எல்லாமே ஆர்டர் குடுத்தா இங்க வந்துடும். அதுக்குன்னு தனித்தனியா ஆளுங்க இருக்காங்க. நம்மளாவே எல்லாத்தயும் போயி தனித்தனியா வாங்கிட்டு வரனும்னா முடியுமா? ஒருத்தர நம்பி ஒருத்தருன்னு தான் இந்த தொழில் ஓடிக்கிட்டிருக்கு” என்றவரிடம் “சரி, வியாபாரமெல்லாம் எப்படிண்ணே போகுது ?” என்று வினவினோம்.

“ஒரு நாளைக்கு 3-லேருந்து 5 லிட்டர் டீசல் செலவாகுது. மிஷினு ஓடிக்கிட்டேயிருந்தா-தான் வர்றவங்க நின்னு ஜூஸ் குடிப்பாங்க. இல்லன்னா பழைய சரக்குன்னு நெனச்சுகிட்டு குடிக்காம போயிடுவாங்க. ஐஸ் போட்டது 15 ரூவா, ஐஸ் இல்லாமன்னா 20 ரூவா. புள்ளங்கள எப்படியாவது படிக்க வெச்சுட்டா அதுங்க பின்னாடி எங்கள பாத்துக்குங்க, இதுல வர்ற காச வெச்சு வேற ஒன்னும் பண்ண முடியாதுங்க.”

“காலைல 10 மணிக்கு வந்து கடை போட ஆரம்பிச்சா, சாயங்காலம் வரைக்கும் ஓடும். ஒடம்புல தெம்பு இருக்குற ஆளுங்களாலதான் கரும்ப உள்ள தள்ளி எடுக்க முடியும். கரும்ப சீவி சுத்தம் பண்ணி கையெல்லாம் காப்பு காச்சு போயி கெடக்கு. ஒரு கத்தி வாங்குனா ஒரு வருசத்துக்கு தாக்கு புடிக்கிறதே செரமம்தான். 6 தண்ணி கேன் பக்கத்துல போயி தூக்கிட்டு வரணும். எலுமிச்சம் பழம், இஞ்சி இதெல்லாம் கைக்காசு போட்டுதான் வாங்கிட்டு வரணும். கரும்பு சக்கையெல்லாம் குப்ப வண்டியில நம்மதான் போயி போடனும். முக்கியமான ரோடுல்ல… சுத்தமா வெச்சுக்காட்டி கடை போட விடமாட்டாய்ங்க…”

படிக்க:
வாகன விற்பனையில் மந்த நிலை :  32000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் !
உன்னாவ் பாலியல் வன்முறை : பாதிக்கப்பட்ட பெண்ணைக் கொல்ல முயற்சி ?

“குடிக்க வர்றவங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா எதிர்பார்ப்பாங்க. ஏன் இனிப்பா இல்லன்னு கேப்பாங்க. ரொம்ப இனிப்பா இருந்துச்சுன்னா சக்கர போட்டியான்னு கேப்பாங்க. கேன்சர் ஆஸ்பத்திரி பக்கத்துல இருக்கதுனால நெறையா பேரு இஞ்சி வேணாம்னு சொல்லுவாங்க. அதனால கேக்குறவுங்களுக்கு ஏத்த மாதிரி போட்டுக்கொடுத்தாதான் வியாபாரம் ஓடும். புள்ளங்க தல தூக்குற வரைக்கும் இதுதான் எங்க வாழ்க்கை, அதுவரைக்கும் இத நம்பித்தான் வாழணும்.” என்றவாறு அதிரும் கரும்பு மிஷினுக்குள் கரும்புத் துண்டுகளை நுழைக்கத் தொடங்கினார்.


வினவு புகைப்படச் செய்தியாளர்

தமிழகத்தை நாசமாக்காதே ! புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019

தமிழகத்தை நாசமாக்காதே ! புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019

  1. அணுக்கழிவு, ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச் சாலை: தமிழகத்தை நாசமாக்காதே!
    கார்ப்பரேட் கொள்ளைக்கான அழிவுத் திட்டங்களை எதிர்த்துப் போராடுவதுதான் நாட்டுப் பற்று. அத்தகைய போராட்டங்களைக் காட்டிக் கொடுப்பவன்தான் மக்கள் விரோதி எனப் பிரகடனப்படுத்துவோம்.
  2. ஒரு நாடு ஒரு தேர்தல்: இந்து ராஷ்டிரம் அணிந்துவரும் முகமூடி!
    பிற முதலாளித்துவ கட்சிகளின் ஆதரவோடு இத்தாலியில் ஆட்சியைப் பிடித்த முசோலினி, பின்னர் கூட்டணிக் கட்சி, எதிர்க் கட்சி என்ற வேறுபாடின்றி அனைத்து முதலாளித்துவக் கட்சிகளையும் அமைப்புகளையும் தடைசெய்துவிட்டு, ஒற்றைக் கட்சி, ஒற்றை ஆட்சியை அந்நாட்டில் ஏற்படுத்திய வரலாற்றை, ஆர்.எஸ்.எஸ். -பா.ஜ.க. நாளை இந்தியாவிலும் செயல்படுத்தக் கூடும்.
  3. என்.ஐ.ஏ., உபா சட்டத் திருத்தங்கள்: சட்டபூர்வமாகிறது பாசிசம்!
    ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கல்வித் திட்டம், ஒரே நுழைவுத்தேர்வு, ஒரே ரேஷன் கார்டு ஆகியவற்றின் வரிசையில் ஒரே போலீசைக் கொண்டுவரும் திட்டம்தான் என்.ஐ.ஏ. சட்டத் திருத்தம்.
  4. குஜராத்: இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை!
    2002-இல் நடைபெற்றதைப் போன்ற வெளிப்படையான வன்முறை மீண்டும் ஒரு முறை குஜராத்தில் நடக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லீம் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதைச் சான்றுகள் காட்டுகின்றன.
  5. போலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம்!
    தமிழக மக்களின் ஜனநாயக உரிமைகளைச் சட்டவிரோதமாக மறுப்பதையும் அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டு பணிந்துபோவதையும் இயல்பான ஒன்றாக மாற்ற முயலுகிறது, தமிழக போலீசு.
  6. வரைவு தேசியக் கல்விக் கொள்கை 20I9 : மனுநீதியின் புதிய பதிப்பு ! – பேராசிரியர் கருணானந்தன்
    பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினராக இருக்கும் அவர், வரலாற்றுப் புலத்தில், குறிப்பாக இந்து மதவெறி பாசிஸ்டுகள் வரலாற்றைக் காவிமயமாகத் திரித்துப் புரட்டிவருவதற்கு எதிராகப் போராடிவருகிறார்.
  7. தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது!
    கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் 180-க்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகள் நடந்திருக்கும்போது, தமிழகத்தைச் சமூக நீதியின் பூமியென்று பெருமை பாராட்டிக் கொள்வது அவமானகரமானது.
  8. மோடியின் ஆட்சியில்… அம்பானியின் சொத்து வீங்குகிறது! குழந்தைகள் சோறின்றி, மருந்தின்றிச் சாகிறார்கள்!
    பீகார் மாநில அரசு முசாஃபர்பூர் மாவட்டக் குழந்தைகளின் பட்டினியையும் போக்கவில்லை. அரசு மருத்துவமனைகளில் அம்மலிவான மருந்தையும் வாங்கி வைக்க வில்லை. விளைவு, கொத்துக்கொத்தாக சிறுவர்களின் அகால மரணங்கள்.
  9. வர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கையின் மருந்து !
    நேற்று இந்த வேலை, நாளை அந்த வேலை என்று மிதந்துகொண்டு இருக்கின்ற ஒரு உழைப்பாளியை எப்படிச் சங்கமாக சேர்ப்பது என்பதுதான் இன்றைய காலக்கட்டத்தின் சவால்!
  10. குடி கெடுக்கும் எடப்பாடி!
    “டாஸ்மாக் கடைகள் கள்ளச் சாராயச் சாவுகளை ஒழித்துவிட்டதாக” வெட்கமின்றி பெருமை பாராட்டிக் கொண்டது அ.தி.மு.க. அரசு.

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

பங்கு சந்தை : காசேதான் கடவுளடா ! | பொருளாதாரம் கற்போம் – 29

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 29

மாபெரும் வீழ்ச்சி – பாகம் 1

அ.அனிக்கின்

லோ எந்த ஒரு நாட்டுக்கும் விசுவாசமானவரல்ல; ஒரு கருத்துக்கே விசுவாசமாக இருந்தார். அவர் தம்முடைய கருத்தை முதலில் ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, ஜினோவா குடியரசு ஆகிய நாடுகளிடமும் ஸவோய் கோமகனிடமும் கூறினார்; ஆனால் பலனில்லை. கடைசியில் பிரான்ஸ் அவருடைய கருத்தை ஏற்றுக்கொண்ட பொழுது அவர் தன்னை ஒரு பிரெஞ்சுக்காரராகவே மனப்பூர்வமாக நினைத்துக் கொண்டார். அவர் உடனே பிரெஞ்சுக் குடியுரிமையைப் பெற்றார். பிறகு தன்னுடைய திட்டம் வெற்றியடைவதற்கு அவசியமானதாகக் கருதியதால் கத்தோலிக்கராகவும் மதம் மாறினார்.

இந்தக் கருத்தின் மீது லோ உண்மையான நம்பிக்கை கொண்டிருந்தார்; பிரான்சில் அது வெற்றி பெற வேண்டுமென்பதற்காக தன்னிடமிருந்த எல்லாப் பணத்தையும் கொடுத்ததோடு இதயத்தையும் கொடுத்தார். இயன்றவரை சுருட்டிக் கொள்வது, பிறகு திருட்டுப் பணத்தோடு ஓடிப் போய்விடுகின்ற சாதாரணப் போக்கிரியோடு லோவை ஒப்பிட முடியாது.

பிற்காலத்தில் அவர் எழுதிய “சுயவிளக்க அறிக்கைகளில்”, என்னுடைய நோக்கம் அப்படி இருந்திருக்குமானால் என் சொத்து முழுவதையும் பிரான்சுக்குக் கொண்டு வந்திருக்க மாட்டேன், அதிகாரத்தில் இருந்து கொண்டிருந்த பொழுதே சில சொத்துக்களையாவது வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்திருப்பேன் என்று திரும்பத் திரும்ப எழுதியிருந்தார். “அவருடைய இயல்பில் பேராசையோ, போக்கிரித்தனமோ இல்லை” என்று சான்-சிமோன் கோமகன் எழுதியிருப்பதை நாம் நம்பலாம். அவருடைய திட்டத்தின் தவிர்க்க முடியாத, தர்க்க ரீதியான விளைவினால் அவர் போக்கிரியாக்கப்பட்டார்!

1715 டிசம்பர் மாதத்தில் பொறுப்பு அரசருக்கு எழுதிய கடிதத்தில் லோ மறுபடியும் தன் கருத்துக்களை விளக்குகிறார். அதில் காணப்படுகின்ற ஒரு மர்மமான பகுதி மோசடியைப் போலத் தோன்றுகிறது. “இந்த வங்கி என்னிடமிருக்கும் ஒரே ஒரு கருத்து அல்ல; அது என்னுடைய மிகப் பெரிய கருத்துமல்ல. என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது; அதைச் செயல்படுத்தும் பொழுது பிரான்சுக்குச் சாதகமான முறையில் ஏற்படப் போகின்ற மாற்றங்களைக் கண்டு ஐரோப்பாவே திகைத்து நிற்கும். இந்தியாவிற்குக் கடற்பாதையைக் கண்டு பிடித்ததைக் காட்டிலும், கடன் வசதியைப் பின்பற்றியதைக் காட்டிலும் மிக முக்கியமான மாற்றங்கள் அதனால் ஏற்படும். மாட்சிமை பொருந்திய அரசுப் பிரதிநிதி அவர்கள் இந்தப் பணியைச் செய்வதன் மூலம் இன்று இந்த ராஜ்யம் இருக்கின்ற வருந்தற்குரிய நிலையிலிருந்து அதை உயர்த்த முடியும்; இதுவரையில் எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு அதிகமான பலமுள்ளதாக ஆக்க முடியும்; நிதித் துறையில் ஒழுங்கை ஏற்படுத்தி விவசாயம், தொழில்கள், வர்த்தகம் ஆகியவற்றுக்குப் புத்துயிரளித்து ஆதரவு கொடுத்து வளர்க்க முடியும்.” (1)

திட்டங்களைத் தயாரிப்பவர்கள் எப்பொழுதுமே ஆட்சியாளர்களிடம் தெருவெல்லாம் தங்கம் கொழிக்கச் செய்வோம் என்று வாக்குறுதிகள் கொடுப்பதுண்டு. ஆனால் இங்கே ஒரு பொருளாதார இரஸவாதி ஏதோ ஒரு வகையான “மந்திரக் கல்லை” ஏற்படுத்துவேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார். இந்தத் தெளிவற்ற வாக்குறுதிகளுக்குப் பின்னர் இருந்த திட்டம் என்ன என்பது இரண்டு வருடங்களுக்குப் பிறகு தெளிவாகத் தெரிந்தது. 1717-ம் வருடத்தின் கடைசியில் லோ தனது இரண்டாவது பிரம்மாண்டமான நிறுவனத்தை, இந்தியத் தீவுகள் கம்பெனியை ஏற்படுத்தினார். அப்பொழுது பிரான்சுக்குச் சொந்தமாக இருந்த மிலிஸிப்பி பள்ளத்தாக்கில் மக்களைக் குடியேற்றுவதை நோக்கமாகக் கொண்டு முதலில் தொடங்கப்பட்டபடியால் அது மிஸிஸிப்பி கம்பெனி என்று வழக்கமாகச் சொல்லப் பட்டது .

இதில் குறிப்பிடத்தக்க புதிய அம்சம் ஏதும் இருப்பதாக வெளியே தெரியவில்லை. இங்கிலாந்தில் ஒரு நூற்றாண்டுக்கு மேல் கிழக்கிந்தியக் கம்பெனி வளங்கொழித்துக் கொண்டிருந்தது. ஹாலந்திலும் அதைப் போன்று ஒரு கம்பெனி இருந்தது. ஆனால் லோ தொடங்கிய கம்பெனி இவற்றி லிருந்து வேறுபட்டிருந்தது. கம்பெனியின் பங்குகளைத் தமக்குள்ளாகவே பிரித்துக் கொண்டுள்ள வர்த்தகர்களின் குறுகலான கோஷ்டியின் சங்கம் அல்ல அது.

மிஸிஸிப்பி கம்பெனியின் பங்குகளை முதலாளிகளில் சற்று அதிகமான பகுதியினருக்கு விற்பனை செய்யவும் பங்குச் சந்தையில் தீவிரமாக விற்பனை செய்யவும் உத்தேசிக்கப்பட்டிருந்தது. இந்தக் கம்பெனி அரசுடன் மிகவும் நெருக்கமாக இணைக்கப்பட்டிருந்தது. இது அரசிடமிருந்து பல துறைகளில் அதிகமான சலுகைகளையும் ஏகபோக வர்த்தகம் செய்வதற்குரிய அதிகாரத்தையும் பெற்றிருந்தது என்பது மட்டும் இதன் அர்த்தமல்ல. அதன் தலைமையிடத்தில், அமைதியே உருவெடுத்த ஸ்காட்லாந்துக்காரருக்கு அருகில் பிரான்சின் பொறுப்பு அரசர், ஆர்லியானைச் சேர்ந்த ஃபிலீப் அமர்ந்திருந்தார்.

படிக்க:
♦ மாணவர்கள் கையில் பட்டாக்கத்தி : யார் காரணம் ?
♦ தர்மபுரி சாதிமறுப்பு திருமணம் : இளைஞரின் குடும்பத்தையே கட்டி வைத்து அடித்த ஆதிக்க சாதி வெறி !

1719-ம் வருடத்தில் ஜெனரல் வங்கியை அரசு எடுத்துக் கொண்டபடியால் அது ராயல் வங்கி என்று அழைக்கப்பட்டது. அந்த வங்கியோடு இந்தக் கம்பெனி இணைக்கப்பட்டது. மிஸிஸிப்பி கம்பெனியில் பங்குகள் வாங்குவதற்காக இந்த வங்கி முதலாளிகளுக்குக் கடன் கொடுத்தது. அந்தக் கம்பெனியின் நிதிப் பொறுப்பையும் வங்கி கவனித்துக் கொண்டது. இரண்டு ஸ்தாபனங்களின் நிர்வாகப் பொறுப்பையும் லோ தன்னிடமே வைத்துக் கொண்டார்.

ஆகவே, லோவின் இரண்டாவது “மாபெரும் கருத்து” என்பது மூலதன மத்தியப்படுத்துதல், மூலதனக் கூட்டமைப்புக் கருத்தாகும். இங்கும் லோ ஒரு தீர்க்கதரிசியாக, தன்னுடைய காலத்தைக் காட்டிலும் ஒரு நூற்றாண்டு அல்லது அதற்கு மேலும் முந்தியிருப்பவராகத் தோன்றுகிறார். மேற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலும் கூட்டுப் பங்குக் கம்பெனிகளின் வேகமான வளர்ச்சி தொடங்கவில்லை. இன்று வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் பொருளாதாரம் முழுவதிலுமே, குறிப்பாக பெரும் அளவில் உற்பத்தி நடைபெறும் துறையில், அவையே இருக்கின்றன.

பெருந்தொழில்களை ஒரு முதலாளி – சில முதலாளிகள் கூட – அவர் எவ்வளவு பணக்காரராக இருந்த போதிலும் தனியே ஆரம்பிக்க முடியாது. அத்தகைய தொழில்களில் பல முதலாளிகளின் மூலதனத்தையும் ஒன்று சேர்ப்பது அவசியமாக இருக்கிறது. சிறு பங்குதாரர்கள் பணத்தை மட்டுமே கொடுக்கிறார்கள், அங்கே நடைபெறும் காரியங்களில் அவர்களுக்கு ஒரு வகையான செல்வாக்கும் கிடையாது. மேலே உட்கார்ந்திருக்கும் சிலர் தொழிலை நடத்துகிறார்கள். மிஸிஸிப்பி கம்பெனியைப் பொறுத்த வரையிலும், லோவும் அவருடைய கூட்டாளிகளான சிலரும் அப்படிப்பட்ட நிலையில் இருந்தார்கள். இத்தகைய கூட்டுப் பங்குக் கம்பெனிகள் வகித்த முற்போக்கான பாத்திரத்தைப் பற்றி மார்க்ஸ் பின்வருமாறு எழுதினார்: ”ஒரு ரயில்வே அமைப்பை நிர்மாணிப்பதற்குப் போதுமானதாக இருக்கும் அளவுக்குச் சில தனிப்பட்ட மூலதனங்கள் வருகின்ற வரை மூலதனத் திரட்சி காத்திருப்பதென்றால் உலகத்தில் இன்னும் ரயில்வேக்கள் ஏற்பட்டிருக்காது. இதற்கு மாறாக, மத்தியப் படுத்துதல் கண்ணைச் சிமிட்டும் நேரத்தில் கூட்டுப் பங்குக் கம்பெனிகள் மூலம் இதைச் செய்து முடித்தது”. (2)

கூட்டுப் பங்குக் கம்பெனிகளின் நடவடிக்கைகளில் பங்குகளை வாங்குவதிலும் விற்பனை செய்வதிலும் மோசடிகளும் ஊக வாணிகமும் தவறாமல் உண்டு. லோவின் திட்டம் இது வரையிலும் அறிந்திராத அளவுக்குப் பங்கு மோசடி நடைபெற உதவியது. கம்பெனி ஒரு வருட காலத்துக்குப் பிறகு உறுதியாக ஸ்தாபிக்கப்பட்டதும் லோ பங்குகளின் விலையை அதிகப்படுத்துவதற்கும் அவற்றின் விற்பனையைப் பெருக்குவதற்கும் தீவிரமான நடவடிக்கைகள் எடுத்தார். அவர் ஒரு ஆரம்பம் என்ற வகையில் 500 லிவர் பங்குகளில் இரு நூறு பங்குகளை வாங்கினார். அப்போது இவை ஒவ்வொன்றுக்கும் 250 லிவர் தான் விலை. ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒவ்வொரு பங்குக்கும் அன்றைக்கு அது என்ன விலைக்குப் போனாலும் கூட அதன் அறிவிக்கப்பட்ட மதிப்பான 500 லிவர் கொடுப்பதாக அவர் உறுதியளித்தார். இது பலருக்கும் பொருளற்ற காரியமாகத் தோன்றியது. ஆனால் இதற்குப் பின்னால் நுண்ணறிவு கொண்ட ஒரு திட்டம் இருந்தது. அது வெகுசீக்கிரத்தில் நிறைவேறியது , ஆறு மாதங்களில் ஒவ்வொரு பங்கின் மதிப்பும் அதன் அறிவிக்கப்பட்ட மதிப்பைப் போல பல மடங்கு அதிகமாயிற்று; லோ ஏராளமான லாபத்தை ஒதுக்கிக் கொண்டார்.

ஆனால் அது அவ்வளவு முக்கியமல்ல. இப்பொழுது அவருக்குச் சில நூறாயிரங்கள் அத்தனை முக்கியமல்ல. பங்குகளை விளம்பரப்படுத்த வேண்டும், வாங்குபவர்களைக் கவர வேண்டும் என்பதே அவருடைய நோக்கம். அதே சமயத்தில் அவர் கம்பெனியின் வர்த்தகத்தை மிகவும் பெரிய அளவுக்கு, மிக அதிகமான வேகத்தோடு விரிவாக்கிக் கொண்டிருந்தார். அவர் உண்மையான வர்த்தகத்தைத் திறமைமிக்க விளம்பரத்தோடு இணைத்தார். இந்த விஷயத்திலும் பிற்காலத்தில் நடக்கப் போவதை அவர் முன்கூட்டியே செய்து காட்டினார்.

misisipi company political economy
மிஸிஸிப்பி குறித்த கதைகள் லோ -வின் வார்த்தை ஜாலத்தால் செல்வம் கொழிக்கும் இடமாக புனையப்பட்டது.

லோ மிஸிஸிப்பி பள்ளத்தாக்கில் மக்கள் குடியேறுவதற்கு ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார். அங்கே ஒரு நகரத்தை ஏற்படுத்தினார்; பொறுப்பு அரசரை கௌரவிக்கின்ற வகையில் அதற்கு நியூ ஆர்லியான் என்று பெயரிட்டார். அங்கே குடியேறுவதற்கு சொந்த விருப்பத்தின் பேரில் வந்தவர்களின் எண்ணிக்கை போதுமான அளவுக்கு இல்லாதபடியால் கம்பெனியின் வேண்டுகோளின் படி அரசாங்கம் திருடர்களையும் போக்கிரிகளையும் விபசாரிகளையும் கட்டாயப்படுத்தி அங்கே அனுப்பியது. அதே சமயத்தில் லோ பலவிதங்களிலும் கவர்ச்சிகரமான பிரசுரங்களை அச்சிட்டு வினியோகிக்க ஏற்பாடு செய்தார். இந்தப் பிரசுரங்களின் படி அது கற்பனையையும் மிஞ்சும் வகையில் வளங்கொழிக் கும் நாடு; அங்கே வசிப்பவர்கள் பிரெஞ்சுக்காரர்களைச் சந்திப்பதில் பேரானந்தம் அடைகின்றவர்கள்; நம்முடைய அற்பமான சிங்காரப் பொருள்களுக்குப் பரிவர்த்தனையாக அவர்கள் தங்கம், வைரம், இன்னும் பலவிதமான விலையுயர்ந்த பொருள்களைக் கொடுக்கிறார்கள். அங்கே இருக்கும் சிகப்பு இந்தியர்களைக் கத்தோலிக்க மதத்துக்கு மாற்றுவதற்காக ஏசு சபையைச் சேர்ந்த பாதிரியார்களைக்கூட அவர் அங்கே அனுப்பி வைத்தார்.

அப்பொழுது மோசமாக நடைபெற்றுக்கொண்டிருந்த சில பிரெஞ்சுக் காலனி கம்பெனிகளை லோவின் கம்பெனி விழுங்கி அது சக்தி மிக்க ஏகபோகக் கம்பெனியாக மாறியது. அந்தக் கம்பெனிக்குச் சொந்தமான சில டஜன் பழைய கப்பல்கள் லோவின் சொல் வன்மையாலும் அவருடைய உதவியாளர்களின் பேனா வன்மையாலும் வெள்ளியையும் பட்டுத் துணிகளையும் வாசனைத் திரவியங்களையும் புகையிலையையும் பிரான் சுக்குக் கொண்டு வருகின்ற மாபெரும் கப்பல் படையாக மாறின.

பிரான்சிலும் கூட அந்தக் கம்பெனி வரி வேட்டையை மேற்கொண்டது; நியாயமாகச் சொல்வதென்றால் தனக்கு முன்பு கொள்ளையடித்த பலரைக் காட்டிலும் அதிகமான அறிவோடும் திறமையோடும் இந்த வேலையைச் செய்தது. பொதுவாக, இவை அனைத்தும் சிறப்பான ஸ்தாபன ஏற்பாடுகளும் துணிச்சலான தொழிலூக்கமும் கட்டுக்கடங்காத வீரசாகஸமும் கேவலமான மோசடியும் சேர்ந்த விசித்திரமான கலவையாக இருந்தன.

இந்தக் கம்பெனி மிகவும் குறைவான லாப ஈவுத் தொகையையே கொடுத்து வந்த போதிலும், 1719-ம் வருட வசந்த காலத்தின் போது அதன் பங்குகளின் விலை பலூன்களைப் போல மேலே ஏறின. இதற்காகத்தான் லோ காத்துக் கொண்டிருந்தார். சந்தையைத் திறமையோடு பயன்படுத்திக் கொண்டு அவர் புதிய பங்குகளை வெளியிட்டார்; அவற்றை மேலும் மேலும் அதிகமான விலைகளில் விற்பனை செய்தார். வெளியிடப்படும் பங்குகளைக் காட்டிலும் தேவை அதிகரித்தது; புதிய பங்குகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப் பட்டதும் கம்பெனியின் தலைமை நிலையத்துக்கு முன்பு ஆயிரக் கணக்கானவர்கள் இரவு பகலாகக் காத்துக் கொண்டு நின்றனர்.

படிக்க:
♦ பங்குச் சந்தை 4 : மிசிசிப்பி கம்பெனி – உலகின் முதல் பொது பங்கு நிறுவனம்
♦ பைசாவா சேத்தாலே ஒன்னும் காணல! இதுல இளநீரை டெய்லி குடிக்க முடியுமா? | படக் கட்டுரை

இத்தனைக்கும் 1719 செப்டெம்பர் மாதத்திலேயே கம்பெனி 500 லிவர் மதிப்புள்ள பங்குகளை 5,000 லிவர் தொகைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தது. செல்வாக்கு மிக்கவர்கள், பிரபுக்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தலைமை நிலையத்துக்கு முன்னால் காத்திருக்கவில்லை; அவர்கள் லோவையும் மற்ற இயக்குநர்களையும் சூழ்ந்து கொண்டு தாங்களும் பணம் கட்ட அனுமதிக்கப்பட வேண்டுமென்று கெஞ்சினார்கள். ஏனென்றால் வெளியிட்டதும் 8,000 லிவர் விலை சொல்லப்படுகிற ஒரு பங்கை மறு நாளே பங்குச் சந்தையில் 7,000 அல்லது 8,000 லிவர் தொகைக்கு விற்பனை செய்துவிடலாம்! இது பற்றிக் குறிப்பிடத்தக்க சில நிகழ்ச்சிகளை வரலாறு பதிவு செய்திருக்கிறது. பலர் புகைபோக்கியின் வழியாக இறங்கி லோவின் அலுவலகத்துக்குள் நுழைவதற்கு முயன்றிருக்கின்றனர்; ஒரு சீமாட்டி லோவின் வீட்டுக்கு முன்னால் தன்னுடைய கோச் வண்டியைக் கவிழ்க்குமாறு தன்னுடைய வண்டிக்காரனுக்கு உத்தரவிட்டாள்; வண்டி கவிழ்ந்து கிடப்பதைப் பார்த்துக் கருணை மிக்க லோ உதவி செய்ய வருவார்; அப்பொழுது அவரிடம் தன்னுடைய கோரிக்கையைச் சொல்லலாம் என்று நினைத்தாள்.

லோவைச் சந்திப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தவர்கள் கொடுத்த லஞ்சப் பணத்தின் மூலம் அவருடைய செயலாளர் பெரும் பணக்காரரானார். பொறுப்பு அரசருடைய தாயார் குத்தலாகப் பேசக் கூடிய, வயோதிகப் பெண்மணி. அவர் ஜெர்மனியிலிருந்த தன்னுடைய உறவினர்களுக்கு எழுதிய கடிதங்களில் இந்த நம்ப முடியாத விசித்திரமான காலத்தைப் பற்றிய பதிவுக் குறிப்பைத் தந்திருக்கிறார். ”அவர்கள் எப்பொழுதும் லோவுக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இரவிலும் பகலிலும் அவருக்கு ஓய்வே கிடையாது. ஒரு கோமகள் பகிரங்கமாக அவர் கையில் முத்தமிட்டிருக்கிறாள். ஒரு கோமகள் அவர் கையை முத்தமிடுகிறாளென்றால் மற்ற பெண்கள் அவருடைய உடலின் எந்த பாகங்களையெல்லாம் கெளரவிக்கத் தயாராயிருக்கிறார்களோ?” என்று எழுதினாள்.

1719 நவம்பர் 9-ம் தேதி எழுதிய கடிதத்தில் அவள் பின்வரும் நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறாள்: “சமீபத்தில் சில பெண்கள் அவரைச் சூழ்ந்து நின்று கொண்டிருந்த பொழுது அவர் அறையிலிருந்து வெளியே போக விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார். அவர்கள் அவரைப் போக விடவில்லை. அவர் வேறு வழியில்லாததால் என்ன காரணத்துக்காகப் போக வேண்டும் என்பதைச் சொல்லியிருக்கிறார். ‘பூ! இது ஒரு கஷ்டமா? நீங்கள் இங்கேயே செய்யுங்கள். நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பெண்கள் அவரோடு தொடர்ந்து இருந்திருக்கிறார்கள்” (3)

misisipi bubble political economy
பங்குசந்தை அமந்துள்ள தெருவை சுட்டும் ஓவியம்.

பங்குச் சந்தை இருந்த கென்காம்புவா வீதியில் இன்னும் விசித்திரமான காரியங்கள் நடந்து கொண்டிருந்தன. அதிகாலையிலிருந்து அந்தி நேரம் வரையிலும் அங்கே பெருந் திரளான மக்கள் நின்று கொண்டு பங்குகளை வாங்குவதும் விற்பனை செய்வதும் விலைகளைப் பேசிக் கொண்டும் கணக்குப் போட்டுக் கொண்டும் நின்றனர். ஐந்நூறு லிவர் மதிப்புள்ள பங்குகள் பத்தாயிரத்துக்கு உயர்ந்தன; பிறகு பதினையாயிரத் துக்கு மேலே போய் இருபதாயிரத்தில் நின்றன. திடீரென்று பணத்தைக் குவிக்க வேண்டும் என்ற வெறி எல்லா வகுப்பினரையும் ஒன்றுபடுத்தியது. இதற்கு முன்பு மாதாகோவில் வழிபாட்டில் கூட அவர்கள் ஒன்று சேர்ந்ததில்லை. சீமாட்டி வண்டியோட்டியோடு நெருக்கி நின்றாள்; கோமகன் காவற்காரனோடு வாய்ச்சண்டை போட்டார். மதகுரு பெட்டிக் கடைக்காரனோடு கூட்டுச் சேர்ந்து கணக்குப் போட்டார். காசே கடவுளடா!

பங்குகளின் விலைக்காகக் கொடுக்கப்பட்ட தங்கம், வெள்ளியை வாங்குவதற்கு மக்கள் தயங்கினார்கள். இந்த திடீர் உயர்வின் போது பத்து பங்குகள் 1.4 அல்லது 1.5 டன் வெள்ளியின் விலைக்குச் சமமாக இருந்தன! அநேகமாக எல்லா வழங்கீடுகளுமே காகிதப் பணத்தில் தான் செய்யப்பட்டன. இந்தக் காகிதச் செல்வம் – பங்குகளும் வங்கி நோட்டுகளும் – நிதி மாயாவி லோவின் படைப்பாகும்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1)  J. Law, Oeuvres complètes, Vol. 2, Paris, 1934, p. 266.

(2) K. Marx, Capital, Vol. 1, Moscow’, 1972, p. 588.

(3) C. Kunstler, La vie quotidienne sous la Régence, Paris, 1960, p, 121.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

பைசாவா சேத்தாலே ஒன்னும் காணல! இதுல இளநீரை டெய்லி குடிக்க முடியுமா? | படக் கட்டுரை

0

சென்னை அடையாறு காந்தி மண்டபம் அருகே இருக்கும் புற்றுநோய் மருத்துவமனையின் நுழைவாயிலில் சாலையோர இளநீர்க்கடை வைத்திருக்கிறார் சவுந்தர்ராஜன். 

இளநீர் கடை வைத்திருக்கும் சவுந்தர்ராஜன்.

“மயிலாடுதுறையிலிருந்து பஞ்சம் பொழக்க 40 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்தேன். தூரத்து உறவினர்கள் ஆரம்பத்தில் எனக்கு சிறு உதவிகள் செய்ய, பல வேலைகளுக்குப் பிறகு இளநீர்க்கடையை நிரந்தரமாக்கிக்கொண்டேன்.” என்றவரிடம் “வியாபாரம் எல்லாம் எப்படிப் போகுது?” என்று கேட்டோம்.

“சாலையோர ரவுடிகள், கார்ப்பரேசன் அதிகாரிகள் மற்றும் போலீசு இவர்களின் அடி, உதை, மிரட்டல் எல்லாத்தையும் பாத்துட்டேன். துணிந்து நின்ன பிறகுதான் ஏதோ அரைவயிறு கஞ்சியாவது குடிக்க முடியுது. இதுவும் மாதத்தில் 10 நாள் , பக்கத்தில் காந்தி மண்டபம், கவர்னர் மாளிகை இருப்பதால் விஜபிக்கள் வருகிறார்கள் என்று எல்லாக் கடைகளையும் போலீசு துரத்திவிடும். பொழப்பு கெடும். அந்த நாட்களில் கை செலவுக்கு டீக்குக்கூட வழியில்லாமல் திண்டாடுவோம். கடன் வாங்கி ஓட்டுவோம்.” என்றவாறு அடுத்து வந்த வாடிக்கையாளருக்கு இளநீரை சீவிக் கொடுத்தார்.

“உங்க வீடு எங்கைய்யா.. குடும்பமெல்லாம் எங்க இருக்காங்க?” என்றதும் சற்று சலிப்போடு தொடர்ந்தார், “ இந்த சிரமத்திற்கு மத்தியில் எனக்கு பொறந்தது மூனும் பொண்ணு. அதுங்கள கட்டிக்கொடுத்து சீர்சனத்தி செய்வதற்குள் என் வயசு முடிந்துவிட்டது. இப்போது என் பொண்டாட்டிக்கு வயதானதால் உடல்நிலை சரியில்லை. குறைகாலத்தில் அதை வைத்து கஷ்டப்படுறேன்.

இந்தத் தள்ளுவண்டியை ரெடி செய்வதற்கு 30 ஆயிரமாச்சு. சரக்குப் போடுவதற்கு 10 ஆயிரம். முன்பெல்லாம் நாளொன்றுக்கு 200 காய் போவும். இப்போ வெறும் 50 காய் போறதே பெரும்பாடாயிருக்கு.

தினமும் விடியற்காலை 4 மணிக்கு எழுந்துவிடுவேன். கோயம்பேடு போயி வண்டி நிறைய சரக்கு போட்டுகிட்டு காலை 7 மணிக்கு திரும்புவேன். அந்நேரத்திலேயே கடை திறந்தால்தான் நாளு காய் விக்கும். காலை, மதியம் சாப்பாடெல்லாம் வெளியிலதான். வீட்டுல உடம்பு சரியில்லங்கிறதால நேரத்துல எழுந்து சமைக்க முடியாது.

பக்கத்தில் இருக்கிற சாப்பாடு தள்ளுவண்டிக்காரர்களிடம் வாங்கி சாப்பிடுவேன். நாள் முழுதும் வெயிலிலேயே நிப்பதால் உடம்பு அநியாயமா சூடாகும். ஓயாமல் சாலையில் வண்டி போவதால் புகை மூக்கையும் கண்ணையும் ரொப்பும். அதனாலே எப்போதும் பாதி கண்ணுலதான் பாக்குற மாதிரி இருக்கும். கண் பார்வையும் மோசமாகிட்டு வருது. ஏதோ ஒரு பழக்கத்தில் காயை சீவுகிறேன். எப்போ கைமேல் கத்திய போடுவேன்னு எனக்கே தெரியாது. அந்த பயம் வேறு. பயத்தை வெளியில் காட்ட முடியாது.

இளநீர் குடிப்பவர்கள் சீக்கிரம் வெட்டவில்லை என்று பக்கத்து கடைக்குப் போய் விடுவார்கள், அதனால் வியாபாரம் படுத்துவிடும். ஏதோ என்னோட காலமும் ஓடுது.

இப்போது இளநீர் விலையும் ஏறிவிட்டது என்று குடிப்போர்கள் குறைபட்டுக் கொள்கிறார்கள். புயலால் தஞ்சாவூர் வரத்து நின்று விட்டது. லாபமும் முன்பு மாதிரி இல்லை. எல்லா பணமும் சரக்கு வாங்குவதற்கே சரியாக இருக்கிறது. மார்கெட்டில் நாளுக்கொரு விலை சொல்கிறார்கள். மீதி காலத்தை எப்படி ஓட்டப் போகிறேன் என்றே கவலையாக இருக்கிறது., படுத்தால் தூக்கம் வருவதில்லை.” என்று கூறி முடித்தார்.

“உடம்பு சூட்டுக்கு நடுவுல ஒரு இளநீரக் குடிச்சுக்க வேண்டியதுதானே?” என்றோம். நம்மை வித்தியாசமாகப் பார்த்தார். நாங்க தினமும் இளநீர் குடிச்சா குடும்பம் நடத்த வேண்டாமா? ஒவ்வொரு பைசாவா சேத்தாலே ஒன்னும் காணல. இதுல இளநீரை டெய்லி குடிக்க முடியுமா? என்று நம்மைப் பார்த்தார்.

மேலும் படங்களுக்கு :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )


வரதன்

தர்மபுரி சாதிமறுப்பு திருமணம் : இளைஞரின் குடும்பத்தையே கட்டி வைத்து அடித்த ஆதிக்க சாதி வெறி !

தருமபுரியில் மீண்டும் அரங்கேறும் ஆதிக்க சாதி தாக்குதல்கள் : சாதி மறுத்து திருமணம் செய்து கொண்டதற்காக பெற்றோரைக் கட்டி வைத்து அடித்த ஆதிக்க சாதி வெறி !

ருமபுரியில், இளவரசன் திவ்யா காதல் திருமணத்தைத் தொடர்ந்து நத்தம் காலனி எரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இளவரசனின் மரணமும் நிகழ்ந்தது. அப்போது இது அநீதி என்று பலராலும்  பரபரப்பாக பேசப்பட்டது. எழுதப்பட்டது. ஆனால் இது போன்ற சம்பவங்கள் இன்று குறைந்திருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லமுடியும்.

சொல்லப்போனால், தமிழகம் சாதி வெறியர்களின் சொர்க்க புரியாக மாறிவருகிறது. சாதி மறுப்பு திருணங்கள் செய்து கொள்வோர் இன்று ஆணவக்கொலை செய்யப்படுகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் 180-க்கும் மேற்பட்ட ஆணவப்படுகொலைகள் நடந்துள்ளன. சாதிவெறியர்கள், தமிழகத்தை வட மாநிலங்களாக மாற்றி வருகிறார்கள்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகில் உள்ள பிக்கம்பட்டி கிராமத்தில் நாவிதர் சமூகத்தை சேர்ந்த 10 குடும்பங்கள் வசித்துவருகின்றனர். அந்த ஊரில் அந்த  சமூகத்தை சேர்ந்த  காளிதாசின் மகன் அஜித்குமார் (23) ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரிங்க் படித்துவிட்டு பெங்களூரில் வேலை செய்து வருகிறார். இவர், பிக்கம்பட்டிக்கு அருகில் உள்ள  தாளப்பள்ளம் கிராமத்தில் உள்ள வன்னிய சமூகத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மகள் பிரியாவை(22)  காதலித்து 35 நாட்களுக்கு முன்பு  இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் உயிருக்கு பயந்து வெளிமாநிலம் சென்றுவிட்டனர். பெண்ணின் பெற்றோர் அதியமான் கோட்டை காவல்நிலையத்தில் புகார் தரவே போலிசு அஜித்குமாரின் பெற்றோரை அழைத்து பையனையும், பெண்ணையும் அழைத்துவரும்படி கூறியுள்ளனர்.

பின்னர் விசாரணையில் இருவரும் திருமணம் செய்து கொண்டு தலைமறைவாகியுள்ளனர் என்று போலிசு கூறியதைத் தொடர்ந்து சாதிவெறி தலைக்கேறிய பெண் வீட்டார் உறவினர்களை வைத்து பல இடங்களில் அஜித்குமாரை தேடினர். எங்கும் கிடைக்காத ஆத்திரத்தில் வன்னிய சமூகத்தை சேர்ந்த சில ஆதிக்க சாதி வெறியர்கள் பிக்கம்பட்டியில் உள்ள நாவிதர் சமூகத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் அருகில் உள்ள செக்காரப்பட்டியில் நாவிதர் சமூகத்தினரின் வீடுகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் அச்சமடைந்த அவர்கள் ஊரைவிட்டு வெளியேறி பெங்களூர் சென்று விட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்நிலையில் கடந்த  24.07.2019 அன்று ஆதிக்க சாதி வெறியர்களான பாஸ்கர், செந்தில், தர்மலிங்கம், பென்னாகரம் முனியப்பன் உள்ளிட்டவர்கள் கும்லாக காரில்   பெங்களூர் சென்று அஜித்குமாரின் தந்தை காளிதாஸ், தாய் வித்யா(40) மற்றும் அஜித் குமாரின் உறவினர்களான காளிதாசின் சகோதரி சின்னக்கா, காளிதாசின் தம்பி ஹரிகரன், இவரது மகன் மஞ்சுநாத், உறவினர்கள் சரஸ்வதி, கிருஷ்ணமூர்த்தி, நாகராணி, செல்வம் ஆகியோரை நைச்சியமாக பேசி; “கூ.கீ. அன்பழகனெல்லாம் (அதிமுக முன்னாள் மாநில நிர்வாகி) ஊரில் இருக்கிறார்கள். அவர்களை வைத்து நாம் ஊரில் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்..” என்று கூறி காரில் அழைத்துவந்தனர்.

இரவு தாளப்பள்ளத்திற்கு அழைத்து வந்த அவர்கள் நேரடியாக பிரியாவின் வீட்டிற்கு அழைத்து சென்று இரவு முழுதும் அவர்களை நிர்வாணப்படுத்தி தாக்கினர். ஓஸ் பைப், பெல்ட், (பச்ச) தேங்காய் மட்டை போன்றவற்றால் நாக்கூசும் வார்த்தைகளால் திட்டிக்கொண்டே கடுமையாக தாக்கியுள்ளனர். ஊரில் உள்ள ஆண்கள், பெண்கள் என பலரும் கூட்டமாக சேர்ந்து அவரவர் கையில் கிடைத்ததை கொண்டு தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த மாநில துணைச்செயலாளர் தவமணியும் ஈடுபட்டதாகவும்,  அவர் தனது செருப்பு காலால் எட்டி உதைத்ததாகவும், அவருடைய ஆட்கள்தான் இதில் முக்கியமாக ஈடுபட்டார்கள் என்றும் கூறுகிறார்கள் இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள்.

படிக்க:
பூங்கொடி கொலை : வன்னிய மக்களே சிந்திப்பீர் !
♦ மாணவர்கள் கையில் பட்டாக்கத்தி : யார் காரணம் ?

இதில் அஜித்குமாரின் தந்தை காளிதாஸ், தாய் வித்யா(40), காளிதாசின் சகோதரி சின்னக்கா, காளிதாசின் தம்பி ஹரிகரன், இவரது மகன் மஞ்சுநாத், நாகராணி, உறவினர்கள்  சரஸ்வதி, கிருஷ்ணமூர்த்தி, செல்வம் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டனர். பெண்களை மார்பில் கைவைத்து பாலியல் ரீதியாக கொடுமைபடுத்தியுள்ளனர். சீமண்ணெயை உடலில் ஊற்றி தீப்பந்தம் எடுத்து வந்து பெண்ணையும் பையனையும் எங்கே வைத்திருக்கிறீர்கள், சொல்லுங்கள் இல்லையென்றால் கொளுத்திக் கொன்று விடுவோம் என்று கூறி தாக்கியுள்ளனர்.. அடிதாங்க முடியாமல் தப்பியோடிய செல்வத்திற்கு கீழே விழுந்து எலும்பு முறிந்துவிட்டது.

இரவு 12 மணியிலிருந்து மறுநாள் காலை 8 மணிவரை ஓடிபோனவர்கள் எங்கே இருக்கிறார்கள்  என்று கேட்டு, விடாமல் தொடர்ந்து தாக்கியுள்ளனர். இதில் அஜித்குமாரின் தந்தை காளிதாஸை மறுநாள் காலை 9 மணிக்கு பென்னாகரம் அருகில் உள்ள தாசம்பட்டியில் அவர்களின் உறவினர் ஒருவருடைய வீட்டில் வைத்து நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர். காளிதாசின் பிறப்புறுப்பில் சிகரெட்டால் சுட்டுள்ளனர். மாலை வரை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

மற்றவர்களை 25.07.2019 அன்று  காலை பத்து மணிக்கு,  தாக்கப்பட்டவர்களை ஒகேனக்கல் ஃபாரஸ்ட் ஆபிசில் வைத்து பூட்டிவிட்டு காவலுக்கு சிலரை வெளியே நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். இறுதியாக,  மாலை நேரத்தில் காரில் ஏற்றிச்சென்று ஒசூர் பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டு, போலிசுக்கோ, கவர்மென்ட்டுக்கோ புகார் கூறினால் குழந்தை குட்டிகளையெல்லாம் கொன்றுவிடுவோம், உங்கள் வம்சமே இல்லாமல் செய்துவிடுவோம் என்று மிரட்டி, ரூ 100 பாண்டு பேப்பரில் கையெழுத்து பெற்றுக்கொண்டு  அனுப்பியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள்  நேரடியாக  பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சென்று சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் ஜெயின் மருத்துவமனையிலும் மருத்துவம் பார்க்கின்றனர். இதில் ஏற்கெனவே நோயாளியாக இருந்து மருந்து மாத்திரை சாப்பிட்டுக்கொண்டிருந்த அஜித் குமாரின் தாய் வித்யா(40) தாக்குதலில் படுகாயமடைந்து சுயநினைவு இன்றி உள்ளார்.

சாதி வெறியர்களின் கொலை மிரட்டலைக் கண்டு அச்சம் அடைந்து பாதிக்கப்பட்டவர்கள் இன்றுவரை புகார் ஏதும் தரவில்லை. வாட்ஸ் அப்பில்,  பாதிக்கப்பட்டவர்கள் காயங்களுடன்  உள்ள புகைப்படம் வெளியாகி பரவியதை தொடர்ந்து இக்குற்றச் செயலை இண்டூர், பாப்பாரப்பட்டி, அதியமான் கோட்டை போலிசு விசாரிக்க கிளம்பியுள்ளது.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை கூட இல்லாதொழிக்க திட்டம் போடும் காவி பாசிஸ்டுகள் ஆளும் நாட்டில், “ஆணவப்படுகொலைகள் எனது ஆட்சியில் மட்டும்தான் நடக்கிறதா?” என்று பொறுப்பற்ற முறையில் பேசும் எடப்பாடி ஆட்சிசெய்யும் மாநிலத்தில் சாதிவெறியர்கள் தண்டிக்கப்பட வாய்ப்பே இல்லை.

இச்சாதி வெறி தாக்குதல் இறுதியானதும் அல்ல.  மக்களும், ஜனநாயக சக்திகளும் இந்த அரசு கட்டமைப்புக்கு வெளியே தீர்வை தேடி, ஒன்றிணைந்து போராடுவதை தவிர வேறு வழியும் இல்லை.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்.
தொடர்புக்கு : 9790138614

மாணவர்கள் கையில் பட்டாக்கத்தி : யார் காரணம் ?

1
  • “பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரூட்’ பிரச்சினையில் வெட்டிக்கொண்டார்கள்”
  • இனி வன்முறையில் ஈடுபட மாட்டோம் – ரூட் தல மாணவர்கள் உறுதிமொழி
  • ரூட் தல என்ற முறையே இருக்கக் கூடாது – காவல் இணை ஆணையர் சுதாகர்

♣ 2011-ல் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக தங்கள் கல்லூரி அழிக்கப்படுவதற்கு எதிராகப்போராடிய மாணவர்களைப் பார்த்து சோ சொன்னார் “இந்த பச்சப்பாஸ் பசங்கள இராணுவத்தை வச்சு அடக்கணும்” அவர் அடக்கமாகிவிட்டார். அவரின் கருத்துக்கள் மீண்டும் உயிர்த்தெழுந்து நிற்கின்றன.

♣ ரூட் சண்டையில் ஈடுபட்டவர்கள் இவர்கள்தானா என்று விசாரணை செய்து முடிவெடுப்பதற்கு முன்னால் அத்தனை பேரும் கீழே ‘வழுக்கி விழுந்து’ கை உடைந்து போயிருக்கிறார்கள். ஆனால் திருச்சியில் கர்ப்பிணிப் பெண் உஷாவை உதைத்துக்கொன்ற காமராஜின் பாத்ரூம் மட்டும் வழுக்காமல் இருக்கிறது என்றால் அது ஆச்சரியம் தானே!

chennai pachaiyappa college 2ஜல்லிக்கட்டு முதல் ஹைட்ரோகார்பன் வரை மக்கள் பிரச்சினைக்காக எப்போதும் முன்னே நிற்கக்கூடிய மாணவர்கள் மீது இப்போது மிகப்பெரிய வன்முறை ஏவிவிடப்பட்டு இருக்கிறது. “ஆமா, ரோட்ல பட்டாக் கத்தியில வெட்டிக்கிட்டா போலீசு சும்மாவா இருக்கும்” “பேனா பிடிக்கும் கையில் அருவா பிடித்தால் அவன் மாணவனா?” என்றும் பலரும் கேட்கிறார்கள். ஹீரோவாக இருந்த மாணவர்கள் வில்லன்களாகிவிட்டார்கள். மாணவர்களை கிண்டல் செய்தும் கேவலப்படுத்தியும் பல மீம்ஸ்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எல்லோரும் திட்டிக்கொண்டு இருக்கும் மாணவர்கள் யார் ? அவர்கள் எல்லாம் அந்தரத்தில் இருந்து குதித்தார்களா? நம் வீட்டிலிருக்கும் பிள்ளைகள்தானே அவர்கள்?

“இவர்களை எல்லாம் ஸ்டூடண்ட்ஸாக பார்க்காதீர்கள்? கிரிமினல்களாக பாருங்கள்” என்கிறார் இணை ஆணையர். போலீசில் லஞ்சம் வாங்கியும்; கிரிமினல் குற்றம் செய்தும் மாட்டிக்கொண்டவர்களிடம் குற்றவியல் விசாரணை நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 107ன் கீழ் எப்போதும் ‘எதுவும் வாங்கிவிடவில்லை’. அதிகபட்ச தண்டனையே ஆயுதப்படைக்கு மாற்றுவதும் காத்திருப்போர் பட்டியலில் வைப்பதும்தானே!

படிக்க:
பச்சையப்பன் கல்லூரி : கல்விக் கூடமா மாட்டுத் தொழுவமா ?
♦ உங்கள் ரயில் பயணங்களைப் பதம்பார்க்கக் காத்திருக்கும் அம்பானிகள் !

லஞ்ச ஒழிப்புத்துறையின் ஐஜி, பெண் எஸ்பியிடம் தவறாக நடந்து கொண்டாராமே அவரிடம் கு.ந.ச. பிரிவு 107ன் கீழ் உறுதிப்பத்திரம் வாங்குவீர்களா? அமைதியைப் பேணுவதற்கான பிணையம் வாங்குவது என்ற பெயரில் கல்லூரி மாணவர்களிடம் உறுதிப்பத்திரம் வாங்கும் போலீசு, சீரழிவுகளோடு இருக்கும் தங்கள் பிள்ளைகளிடம் என்ன பத்திரம் வாங்கப்போகிறீர்கள்?

சொல்லப்போனால் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த ரூட் சண்டையானது நடப்பதற்கு முன்னரே கல்லூரி நிர்வாகத்துக்கும், போலீசுக்கும் தெரிந்து இருக்கிறது. இதை போலீசும் நிர்வாகமும் தடுக்கவில்லை. இப்படி ஒரு பிரச்சினையை நடக்கவிட்டு வேடிக்கைப்பார்த்து அதன் மூலம் மொத்த மாணவர்களையுமே கிரிமினல்களாக்குவதுதான் போலீசின் நோக்கம்.

ஈழம் மாணவர் எழுச்சி
ஈழம் மாணவர் எழுச்சி

பச்சையப்பன் கல்லூரியில் போலீசு சுதந்திரமாக திரிகிறது. எந்த வகுப்பறையிலும் போலீசு வந்து ‘பாடம் கேட்கும்’ நிலைதான் இப்போதும் இருக்கிறது. நேர்மையான ஆசிரியர்களையும்; மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்கும் ஆசிரிரியர்களையும்; கண்காணித்து அவர்களை ’போட்டு’க்கொடுப்பதற்கென்றே போலீசு தனியாக இருக்கிறது. ஒரு வகுப்பில் யார் யார் எந்த அமைப்பில் இருக்கிறார்கள், அவர்களை எப்படி வெளியேற்றுவது என்பதுதான் போலீசு கல்லூரி நிர்வாகங்களுக்கு கொடுத்த அசைன்மெண்ட்.

போலீசுக்கு எப்போதும் எத்தனை பேரை கிரிமினலாக்கினோம்; ரவுடி லிஸ்டில் கொண்டுவந்தோம்; எத்தனை பேரை ரிமாண்ட் செய்தோம் என்பதுதான் இலக்கு. வேறெதையும் சிந்திக்க முடியாது. ஏனென்றால் போலீஸ் உருவாக்கப்பட்ட ‘டிசைன்’ அப்படி. மொத்த சமூகத்திற்கும் போலீசுதான் அத்தாரிட்டி என்பது போல ஒரு மாயை உருவாக்கப்பட்டிருக்கிறது. மொத்த சமூகத்தையும் இயக்குவது கட்டிக்காப்பது உழைப்பாளி மக்கள்தான். பத்து நாள் குப்பையள்ளாமல் விட்டால், சாக்கடை அடைப்பு எடுக்காவிட்டால், மருத்துவம் பார்க்கா விட்டால் தெரியும் எது சமூகத்திற்கு தேவை என்பது. போலீசுதான் ஏதோ சமூக மாற்றத்திற்கு வித்திடுவது போல கதையளந்து கொண்டு இருக்கிறார்கள்.

இதுவரை உலகம் முழுவதும் நடைபெற்ற சமூக மாற்றங்களுக்கு யார் காரணம் போலீசா? மாணவர்களா? போலீசு எப்போதும் நிலவுகின்ற அரசை காப்பதையே கடமையாகக் கொண்டவர்கள். அதனால்தான் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள் “நாங்க என்ன சார் பண்றது, அது எங்க டியூட்டி” ஆனால் மாணவர்கள் சமூக மாற்றத்தை நோக்கி சிந்திக்கக்கூடியவர்கள். அதனால்தான் தங்களுக்குள் கருத்துவேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும் கல்லூரிக்கு ஒரு பிரச்சினை என்றாலோ, மாணவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றாலோ, மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றாலோ முன்னேவந்து நிற்பவர்கள். அவர்களை, அவர்களில் தவறான எண்ணங்களை அழிப்பதற்கு அரசியல்தான் சிறந்த மருந்து. அதை ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலேயே பார்த்து இருப்போம்.

அத்தனை லட்சம் பேர் திரண்டு இருந்தபோதும் மக்களுக்கான அரசியல் அவர்களை நல்வழிப்படுத்தியது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கும் கல்லூரியில், சண்டைகளைக்கூட தடுக்க வக்கற்றுப்போயிருக்கிறது இந்த கார்ப்பரேட்டுக்கான அரசு. மக்களுக்கான அரசாக இருந்தால் ஒரு பிரச்சினை என்றால் அது உருவாகக்காரணம் என்ன? எப்படி களைவது? அதன் சமூகத்தாக்கம் என்ன? என்பதையல்லவா யோசித்திருக்கும்.

ஒரே ஒரு மெரீனா போதும் மாணவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் போலீசு எப்படிப்பட்டது என்பதையும் நிரூபிப்பதற்கு.

chennai pachaiyappa college 1

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி (பு.மா.இ.மு) பல கல்லூரிகளிலும் ரூட் சண்டைகளை தடுத்து நிறுத்தி மாணவர்களை நல்வழிப்படுத்தி இருக்கிறது. அதன் தலைமையில்தான் ஈழப்போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்கள் நடந்திருக்கின்றன. அப்போதெல்லாம் எல்லா ரூட் மாணவர்களும், அனைத்துக்கல்லூரி மாணவர்களும் வந்திருக்கிறார்கள். அவர்களுக்குள் சண்டை வந்ததில்லை. அவர்களை மக்களுக்கான அரசியல் ஒன்றுபடுத்தியது. இப்போது அரசியலை போலீசு வெளியேற்றிவிட்டது. அதனால் மீண்டும் ரூட் சண்டைகள் தொடங்கிவிட்டன.

பு.மா.இ.மு தலைமையில் மாணவர்கள் டாஸ்மாக் கடையை உடைத்து தமிழகத்துக்கே முன்மாதிரியாக இருந்தார்கள். அப்போது போலீசும் நிர்வாகமும் என்ன செய்தார்கள் ? டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடியவர்களுக்கு ஆதரவா கொடுத்தார்கள்? அத்தனை பேரையும் சஸ்பெண்ட் செய்தனர். முன்னணியாளர்களை டிஸ்மிஸ் செய்தனர். இப்படி படிப்படியாக மணவர்களிடம் துண்டுப்பிரசுரம் கூட கொடுக்கவிடாமல் தடுத்து மாணவர்களை அரசியலற்றவர்களாக்கி இன்றைக்கு அவர்களை கிரிமினல் போல கத்தியோடு திரிய வைத்தது யார்? அவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது?

படிக்க:
பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம்! போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!!
♦ குழந்தைகளே ! தாய் மொழி உங்கள் மனதின் தொட்டில் !

அன்றாடம் டிவி-யும் , சினிமாவும் என்ன கற்றுக்கொடுக்கிறதோ அதைத்தானே செய்வார்கள் குழந்தைகள். எப்படிப்பட்ட இழிவு வேலை செய்தாலும் சரி, எப்படி மானங்கெட்ட அடிமையாக இருந்தாலும் சரி, சம்பாதித்தால் போதும் என்ற மன நிலையில் இருக்கும் சமூகத்திற்கு மாணவனை கிரிமினல் என்று பேசத் தகுதி இருக்கிறதா என்ன? ஏன் போலீசுக்கு குழந்தைகள் இல்லையா? அவர்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள் எனத் தெரியாதா? அடிதடி சண்டையில் ஈடுபடாமல் பவுசாக வீட்டில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்களா? பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருப்பவன் கையில் கத்தி எடுக்காமல் என்ன செய்வான் என்பதை யோசிக்க முடியுமா போலீசால்? சமூகத்தை நேசிக்காத எந்திரமாகக் குழந்தைகள் மாற்றப்பட்டுக் கொண்டிருப்பது பெற்றோர்களான போலீசுக்குத் தெரியாதா?

மாணவர்கள் இன்று கத்தியைப்பிடித்துக் கொண்டு திரிகிறார்கள் என்றால் அதற்கு போலீசும், ஆசிரியர்களும் முக்கியக்காரணம். பலருக்கும் இது அதிர்ச்சியாக இருக்கலாம். பச்சையப்பன் கல்லூரி அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் ஈழப்பிரச்சினை வரை மொத்தத் தமிழகத்திற்கே வழிகாட்டியாக இருந்த அக்கல்லூரியை யாராவது நேரில் சென்று பார்த்து இருக்கிறீர்களா? மாணவர்களுக்கு போதிய அளவு குடிநீர் வசதி உள்ளதா? கழிவறை ஏதாவது இருக்கிறதா? விளையாட்டு உபகரணங்கள் இருக்கிறதா? பல்கலைக்கழக விதிகளின்படி ஆண்டுதோறும் அனைத்து விழாக்களும் நடத்தப்பட்டு இருக்கிறதா?

அங்கு மாணவர்களுக்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கிறதா என்ன? ஜே.என்.யூ. -வில் தேர்தல் நடக்கிறது, டெல்லி பல்கலை கழகத்தில் தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு மட்டும் ஏன் தேர்தல் நடப்பதில்லை? மாணவர்களுக்கு நியாயமான ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படும்போது அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கேட்டால் மாணவர்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்பதையே காரணமாகச்சொல்கிறார்கள். சட்டமன்ற – பாராளுமன்ற தேர்தல்களில் நடக்காத சண்டையா – தில்லுமுல்லுகளா – பிராடுத்தனங்களா- மொள்ளமாரித்தனங்களா? அதற்காக பொதுத்தேர்தலை ரத்து செய்ய போலீசு சொன்னால் கேட்டுக்கொண்டு போவார்களா? சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட – சரி செய்யத்தான் போலீசு! இதெற்கெல்லாம் ஆசிரியர் சங்கங்கள் போராடியதோ – பேசியதோ இல்லை. மாணவனுக்கு கொடுக்க வேண்டிய எவ்வித உரிமையும் இல்லாமல் வைத்திருக்கக்கூடிய இந்த அரசுக்கு என்ன தண்டனை கொடுப்பது?

சென்னையில் எந்தக் கல்லூரியிலும் மாணவர் அமைப்பு என்ற ஒன்றே இருக்கக்கூடாது என்பதை கடந்த 10 ஆண்டுகளாக சதித்திட்டம் தீட்டி நிறைவேற்றி இருக்கிறது போலீசு. அதற்கு கல்லூரி நிர்வாகங்களும் உடந்தையாகத்தான் இருந்திருக்கின்றன. அப்போதைய பச்சையப்பன் கல்லூரியின் முதல்வர் ஒருவரே போலீசு இன்பார்மர் போல செயல்பட்டு எந்தெந்த மாணவர்கள் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியில் இருக்கிறார்கள் என்று போலீசுக்கு காட்டிக்கொடுக்கும் வேலையை கச்சிதமாகச் செய்தார்.

மாணவர்கள் மக்கள் பிரச்சினைக்காகப் போராடினால் காட்டிக்கொடுக்கும் வேலையை கல்லூரி முதல்வர் தெளிவாக மேற்கொள்வார். ஏன் சில நாட்களுக்கு முன்னர் கூட மாநிலக்கல்லூரியின் வாசலில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக துண்டறிக்கை விநியோகம் செய்த அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தைச்சேர்ந்த ஒருவரை பேராசிரியர்களும், கல்லூரி அலுவலர்களும் தாக்கி போலீசிடம் ஒப்படைத்து இருக்கின்றனர்.

மாணவர்களிடம் புதிய கல்விக்கொள்கை பற்றிபேசினால் பேராசிரியருக்கும் அலுவலர்களுக்கும் என்ன கேடு? அப்படிப்பேசினால் மாணவர்கள் சண்டையின்றி ஒற்றுமையாக இருப்பார்கள். நிர்வாகம் ஊழல் செய்து பொறுக்கித்தின்ன முடியாது, போலீசுக்கு வேலையில்லாமல் போய்விடும், அதை எப்படி அனுமதிப்பார்கள்?

chennai pachaiyappa college route thalaமாணவர்களிடம் 107-ன் படி பிரமாணப்பத்திரம் வாங்கினால் பிரச்சினை தீரும் என்று நினைத்தால் அது முட்டாள்த்தனமே. பச்சையப்பன், மாநிலக்கல்லூரி, நந்தனம் போன்ற அரசு – அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மட்டுமல்ல தனியார் கல்லூரிகளிலும் மாணவர்கள் சண்டையிட்டுக்கொள்ளாமல் இல்லை. இப்பிரச்சினையை எப்படி சரி செய்வது என்ற அறிவியல்பூர்வமான விவாதமே தேவை. கல்வியை மொத்தமாக தனியாருக்கு தாரைவார்த்துவிட்டு, மொத்தமும் கிரிமினல்மயமாகிப்போன இந்த அரசு அதைச்செய்யுமா என்ன?

நிர்பயா வழக்குக்குப்பின் பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர் கடுமையான சட்டம் – தண்டனை என்று எத்தனையோ ஜாலங்கள் சொல்லியபோதும் பாலியல் குற்றங்கள் பெருகிக்கொண்டேதான் செல்கிறது. (இரு வாரங்களுக்கு முன்பு கூட முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் திருமுல்லைவாயலில் குழந்தையை பலாத்காரம் செய்து கொன்றிருக்கிறார்.) ஆணாதிக்க – நுகர்வு வெறியே அடிப்படையாக இருக்கும் இச்சமூகத்தை அகற்றாமல் கடுமையான சட்டப்பிரிவுகளை உருவாக்குவதன் மூலம் எதுவும் செய்ய முடியாது. சாக்கடையை தூர்வாராமல் கொசு மருந்து அடிப்பதால் பயனேதும் இருக்கப்போவதில்லை.

படிக்க:
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாய் புதிய கலாச்சாரம் நூல்கள் !
♦ நூல் அறிமுகம் : டி.டி.கோசாம்பியின் வரலாற்று ஆய்வு

மணல் கடத்தல் தொடங்கி எட்டுவழிச்சாலை, ஹைட்ரோகார்பன், அணுக்கழிவு மையம் வரையிலான திட்டங்களை மேற்கொள்வதில் மாபியாத்தனமான கிரிமினல் கும்பலாக அரசு இருக்கும் இச்சமூகத்தில், குற்றவாளிகள் உற்பத்தி செய்யப்படுகிறார்கள். கிரிமினல் அரசு, மாணவர்களின் நலனை ஒருபோதும் சிந்திக்காது. மாணவர்கள் ரவுடிகள்தான் என்று பட்டம் கொடுத்து எதிரியிடம் பலிகொடுப்பதை நிறுத்திவிட்டு அவர்களிடம் உள்ள குறைகளை நீக்குவது என்பது பற்றிய அறிவுப்பூவமான அறிவியல் பூர்வமான விவாதத்துக்குத் தயாராக வேண்டும்.

அநியாயத்துக்கு எதிரான போராட்டங்கள் முதல் சமூக மாற்றம் வரை மாணவர்களால்தான் எப்போதும் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்வதுதான் போலீசும் அரசும் செய்யும் வேலை. மாணவனை ஒடுக்கும் அதே கைகள்தான் ஹைட்ரோகார்பன், எட்டுவழிச்சாலை உள்ளிட்ட மக்கள் விரோதத் திட்டங்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றன. இப்போது சொல்லுங்கள் . நீங்கள் யார் பக்கம்?

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு, தொடர்புக்கு : 94451 12675.

நூல் அறிமுகம் : டி.டி.கோசாம்பியின் வரலாற்று ஆய்வு

தொன்மவியல், இனவரைவியல், மானிடவியல், தொல் பொருளியல் ஆகியவற்றில் ஒருவர் எந்த அளவு புலமையாளரோ அந்த அளவு அவர் வரலாற்றில் பயணித்தல் சாத்தியமானது. கோசாம்பி இந்த எல்லைகளையெல்லாம் பொருள்முதல்வாத வழிமுறையால் அதிரடியாக உடைத்தெறிந்தார். அவர் அணுகுமுறையில் ஆய்வு செய்யப்பட முடியாத, தேடியடைய முடியாத மறைஞானம் ஒன்றுமில்லை. நன்கறியப்பட்ட தொன்மவியல் ஆர்வலர் மிர்ஸியா இலியாட் சொல்வதைப் பார்ப்போம்.

“உலகின் படைப்பு என்பது ஒப்புயர்வற்ற படைப்பு நிகழ்வு தான் என்ற வகையில் அண்டப் பிறப்புக் கோட்பாடு, எல்லாப் படைப்புகளுக்கும் பின்பற்றத்தக்க முன்மாதிரி ஆகிறது.”

எல்லாவற்றிற்கும் முதலில் குறிப்பிடப்பட வேண்டியது, மனிதனாலோ தெய்வீக முகமையினாலோ படைக்கப்பட்டது என்பதற்கு எந்தவொரு சான்றும் இல்லை. ஆனால், இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் உண்டு. மனித வாழ்வில் படைப்புக் கான முன்மாதிரி,  அவர்கள் அறிந்த படைப்புக்கான முன்மாதிரி பெண் தான் என்பதுதான் முக்கியமான விஷயம். கடந்த காலத்தில் அறியப்படாதது ஒன்றுமில்லையென்றால், நாம் அறிவதற்கும் ஒன்றுமில்லை. அறியப்படாததன் முன்மாதிரியைக் கண்டுபிடிப்பது என்பது ஒரு பாசாங்கு வேலைதான்! அறியப் படாத ஒன்றுக்கு முன்மாதிரி இருக்கலாம். ஆனால், அது என்ன என்பது நமக்குத் தெரியாத ஒன்றே! எனவே, அதைப் பற்றிப் பேச முனைவது என்பது எலியாட் சொன்னதைப் போல மறை ஞானத்தைத் தேடும் நிலைதான். ஆராய்ச்சிக்கு உட்படாத தளங்களிலிருந்து தொடங்கி உள்நோக்கிப் பார்த்துவிட்டுச் சொல்வதைவிட மனித அனுபவத்துடன் தொடங்கிச் சொல்வது மிகவும் விரும்பத்தக்கது.

இவற்றில் மனிதர்கள் எதை நோக்கிச் சொல்வது?

உற்பத்தித் திறமுடைய மனித வாழ்க்கைதான் படைப்புத் தொன்மங்களுக்கான நல்ல துவக்கம். கருத்து முதல்வாத விளக்கம் என்பது மிக முக்கியமானதொரு மானிட முயற்சியே! ஆனால், அதை இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் பயன் படுத்தும்போதுதான் தவறுகளுக்கு இட்டுச்செல்கிறது.

இதைப் பற்றிய விழிப்புணர்வினை, தன்னுடைய பிற்கால எழுத்துகளில் கோசாம்பி வெளிப்படுத்தியுள்ளார்.  (நூலிலிருந்து பக்.3-4)

கோசாம்பி உற்பத்தி முறையை அடியொற்றி, சமூக வரலாற்றின் உண்மைகளைப் பற்றிக்கொண்டு புராணங்கள், மதம், தத்துவம் ஆகியவற்றைப் பற்றி உருப்படியான விளக்கங்களை நமக்கு அளித்துள்ளார். ”தொன்மமும் உண்மை நிலையும்; இந்தியப் பண்பாடு உருவாக்கம் பற்றி ஆய்வு” என்னும் நூலில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“நாகரிகம் துவங்கிய காலத்திலிருந்து இன்று வரைக்கும் எஞ்சியிருக்கும் இந்தியத் தொன்மங்கள், சடங்குகளின் மூல முதலான அடிப்படைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இது, ஏறத்தாழ ஒவ்வொரு வரலாற்றுக் காலத்திலும் அழியாமல் நிலைத்து நிற்கும் தன்மைகளைத் தக்கவைத்துக் கொண்டுள்ள சமகால சமூகம் நிலவிவரும் ஒரு நாட்டில் மிகவும் சிரமமான காரியமன்று. இதுபோன்ற பகுப்பாய்வைப் புறக்கணிப்பது என்பது, இந்திய வரலாற்றினை மூடத்தனமான உருக்குலைப் பதற்கும், இந்தியப் பண்பாட்டைப் பற்றிய தவறான புரிதலுக்கும் இட்டுச்செல்லும். இதை நுட்பமான இறையியலோ அல்லது வறட்டுத்தனமான பொருள் முதல்வாத பெருமைகளோ ஈடு செய்ய முடியாது.” (நூலிலிருந்து பக்.6-7)

பகவத் கீதையின் சமூக, பொருளியல் கோட்பாடு

கோசாம்பியின் ஆய்வுமுறை “பகவத்-கீதையின் சமூக பொருளியல் கோட்பாடு” என்னும் நூலில் மிகவும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இது வரலாற்றுப் பொருள்முதல்வாத  ஆய்வு தெளிவுநிலையைக் கொண்ட தலைசிறந்த சிறுபடை ஆகும். அது, பத்தொன்பதாம் நூற்றாண்டைய கருத்தியல்வாத வரலாற்றுருவாக்கம் முடிந்த நிலையில், மறைஞானத்தை எந்திர வியல் தெளிவுபடுத்த முனைந்தது; வரலாற்றை இயங்கியல் பொருள்முதல்வாதம் தெளிவுபடுத்தியது. இச்சிறு ஆய்வில், கிருஷ்ணன் அனைத்தையும் படைப்பவனும், அழிப்பவனும் ஆவான். அத்துடன் அனைத்து வீரர்களையும் சண்டையிடச் செய்து அழித்திருக்கிறான். கீதையின் தர்மம் என்பது ‘என் மீது நீ நம்பிக்கை வைக்கிற வரை, உன்னுடைய எல்லாப் பாவங்களுக்கும் மன்னிப்பு உண்டு. கடமை உனக்கு ஆணையிட்டால், நீ உன் சொந்த சகோதரனையே கருணையின்றிக் கொன்று அழி.’ இப்படி முன்பே திட்டமிடப்பட்ட துரோக வேலைகள், டெய்லர் எழுதிய புனித வாழ்வும், புனித இறப்பும் (Holy Living and Holy Dying) மாக்கிய வல்லியின் ‘இளவரசனை’ப் போலப் பழங்காலத்தில் புகழ்பெற்று விளங்கியதும் இந்திய அரசியல் நூலுமான அர்த்தசாஸ்திரத்தில் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது” என்று கோசாம்பி மெய்ப்பிக்கிறார்.

கீதை மகாபாரதத்தின் முதலிடத்தில் வைக்கப்பட்டது ஏன் என்று கேட்கிறார் கோசாம்பி. அதற்கு அவர் சொல்லும் பதில்: “பழங்காலப் போரைப் பற்றிய வீரயுகக் கதைப்பாட்டுகளை ரசித்துக் கேட்கக்கூடியவர்கள் கீழ்நிலை வர்க்கத்தினரே. மேலும், காவியமானது, பிராமணர்கள் இடைச்செருக விரும்பிய எந்தக் கோட்பாட்டையும் புகுத்திப் பரப்புவதற்கான சாதனமாகப் பயன்படுத்தப்பட்டது.”

அவர் கேட்கும் இரண்டாவது கேள்வி. ஆளும் வர்க்கத்தின் புது மறை நூலை எடுத்துரைப்பதற்குக் இருஷ்ணன் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்? அதற்கு அவர் அளிக்கும் பதில்: “மிகச் சரியாக இந்த நேரத்தில்தான் கிருஷ்ணன் பக்தி பண்பாடு மக்களிடையே பரவத் தொடங்கி, ஒன்றிணைந்த நாராயணனுடன் இணைக்கப்பட்டது. தண்ணீருக்கு மத்தியில் உள்ள தன் அறையில் உறங்கும் இந்த நாராயணன் சுமேரியப் பெரு வெள்ள உருவாக்கப் புனைகதைக்காக வடிவமைக்கப்பட்டு பின்னர் யூதர்களுக்கு நடுவில் நோவாவாகக் காட்சியளிக்கிறார். மற்ற எந்தக் கடவுளையும்விட கிருஷ்ணன் மிகவும் இன்றியமையாதவராகிறார்.

படிக்க:
ஆரியப் பழக்க வழக்கங்களை ஏன் கட்டி அழுகிறீர் ?
கார்ப்பரேட் – மனுவாத பாசிசத்தை முறியடிப்போம் | பெங்களூரு கருத்தரங்கம்

ஏனெனில் இந்திரன் (அதுவரை கடவுள்களுக்கெல்லாம் தலைவன்) யக்ஞங்களை மறுதலித்திருந்த புத்தமதம் குறுக்கிட்டதன் விளைவாக தனது மேன்மையை இழந்திருந்தான். கடவுள்களுக்கெல்லாம் மன்னனான இந்திரன் நாட்டுப்புற வாழ்வு வாழ்ந்த செம்புக்காலத்தின் போதுதான் ஒப்புயர்வற்ற நிலையில் இருந்தான். கிருஷ்ணனின் ஆதிக்கம் கி.மு.800-வாக்கில் பஞ்சாபில் துவங்குகிறது. இந்தக் காலகட்டத்துக்குப் பிறகுதான், அவன் தெற்கிலும் கிழக்கிலும் பயணிக்கிறான். அப்போதுதான் அவன் ஒருங்கிணைக்கும் இயக்கங்களுக்கு மிகவும் பயனுள்ளவன் ஆனான். உதாரணமாக, தக்காண யாதவர்கள் தங்களைச் சுற்றி வாழ்ந்த மக்களுக்கு மேலாக உள்ளூர்க் குலத் தலைவர்களை உயர்வுபடுத்திக் காட்டும் நோக்கத்தில் கிருஷ்ணன் வழியைத் தங்கள் கால்வழி மரபுடன் இணைத்துக் கொண்டனர்.” (நூலிலிருந்து பக்.10-11)

நூல் : டி.டி.கோசாம்பியின் வரலாற்று ஆய்வு
ஆசிரியர் : டேல் ரியபெ
ஆசிரியர் : கீதாபாரதி

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 2848 2441, 2848 2971.
மின்னஞ்சல் : aaa.com

பக்கங்கள்: 16
விலை: ரூ 10.00

இணையத்தில் வாங்க : noolulagam

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

குழந்தைகளே ! தாய் மொழி உங்கள் மனதின் தொட்டில் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 13

கலந்து பழகும் மகிழ்ச்சி

ள்ளி வாழ்க்கையின் இரண்டாவது நாளன்று நான் குழந்தைகளைக் கேட்டேன்:

“ருஷ்ய மொழி பயில விருப்பமா?”

அவர்கள் உற்சாகமாக பதிலளித்தனர்:

“ஆம்.”

அவர்கள் “ஆம்” என்று சொல்ல, ஆர்வமும் எதற்கு ஒப்புக் கொள்கிறோம் என்று தெரியாததும் மட்டும் காரணமல்ல, அவர்கள் உண்மையிலேயே ருஷ்ய மொழி பேச விரும்புவதுதான் காரணம். குடும்பத்தில் இவர்கள் ருஷ்ய மொழியின் முக்கியத்துவம் பற்றி நிறையக் கேட்டிருக்கின்றனர், தொலைக்காட்சியில் வரும் ருஷ்ய மொழி நிகழ்ச்சிகளைப் புரிந்து கொள்ள இவர்கள் விரும்புகின்றனர், மாஸ்கோவிற்குச் செல்ல வேண்டுமென ஆசைப்படுகின்றனர், ருஷ்ய மொழியில் பேசும் தம் வயதுச்சிறுவர் சிறுமியருடன் கலந்து பழக விரும்புகின்றனர். இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

அவர்களுக்கு ருஷ்ய மொழி போதிக்க எனக்கும் பல காரணங்கள் உள்ளன.

தாய் மொழி உங்கள் மனதின் தொட்டில். ருஷ்ய மொழி உங்களது பன்முக வாழ்வின், நமது மாபெரும் நாட்டுக் குடிமகனின் தொட்டிலாகும்.

ஓ, எனது சொந்த ஜார்ஜிய மொழியே! உனது புதல்வர்கள் பலரைப் போன்றே என்னுள்ளும் எனது மக்களின் மனச்சாட்சி, மகிழ்ச்சி, இன்பம், துன்பம் எல்லாவற்றையும் ஊட்டி என்னை மனிதனாக்கியிருக்கின்றாய்! ஜார்ஜியாவை எனக்குப் பரிசாக வழங்கியிருக்கின்றாய், இதன் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றிய அக்கறையை என் மீது சுமத்தியிருக்கின்றாய்! தாராள மனப்பான்மை மிக்க, நேர்மையான ஜார்ஜிய மொழியாகிய நீதான், நான் சோவியத் நாட்டின் குடிமகன் என்று பெருமிதமடையக் கற்றுக் கொள்வதற்காக என்னை உன் மாபெரும் சகோதரனாகிய ருஷ்ய மொழியிடம் அனுப்பியிருக்கின்றாய்!

ஓ, மாபெரும் சர்வதேசியமாகிய ருஷ்ய மொழியே, உண்மையான ருஷ்ய மனநிலையைப் பேணிக்காக்கும் மொழியே! கலந்து பழகும் மகிழ்ச்சிக்காக ஏங்கித் தவிக்கும் எண்ணற்ற ஏராளமானோரைப் போன்றே எனக்கும் நம்பகரமான பாலமாக நிற்கிறாய்; இப்பாலம் சகாப்தங்கள், கலாசாரங்களின் ஊடாக ருஷ்யர்களின் இதயங்களை நோக்கி, விரிந்து பரந்த என் தாயகத்தின் பல்வேறு மக்களினத்தவரின் இதயங்களை நோக்கி, நல்லெண்ணம் கொண்ட உலக மக்களின் இதயங்களை நோக்கிச் செல்கிறது.

குழந்தைகளே, நீங்கள் கண்டிப்பாக மாஸ்கோவிற்குச் செல்வீர்கள், லெனின் கல்லறை, கிரெம்ளின் ஆகிய இடங்களைச் சுற்றிப் பார்ப்பீர்கள், உங்கள் தாயகத்தைப் பற்றிய பெருமிதம் உங்களை ஆட்கொள்ளும். நீங்கள் – அனேகமாக முதன்முதலாக – உங்களில் ஒவ்வொருவரும் மாபெரும் லட்சியங்களை நிறைவேற்றுவதற்காகப் பிறந்திருக்கின்றீர்கள், உங்கள் மீது பெரும் நம்பிக்கைகள் உள்ளன என்பதை உணருவீர்கள். ஒரு வேளை நீங்கள், சோவியத் யூனியனின் குடிமகனாக இருப்பது எவ்வளவு கெளரவமானது, பொறுப்புமிக்கது என்பதை முதன் முதலாக உணருவீர்கள். இன்று குறும்புக்காரச் சிறுவர்களாயிருக்கும் உங்களுக்கு ருஷ்ய மொழியைச் சொல்லித் தருகிறேன், இது உங்களுக்கு நீண்ட, தொலைதூரப் பயணங்களுக்கு இறக்கைகளாயிருக்கும். உங்கள் இறக்கைகளில் நீங்கள் எங்கு பறந்து சென்றாலும், எவ்வளவு தொலைதூர பிரதேசங்களுக்குப் போனாலும், எப்படிப்பட்ட மக்களோடு கலந்து பழகினாலும், எங்கும், எல்லா இடங்களிலும் உங்களது ஜார்ஜிய மனப்பாங்கு, திறமை, படைப்பாற்றல், உழைப்பார்வம், நேர்மை, நட்புக் கொள்ளும் குணம் ஆகியவற்றைக் கண்டு மக்கள் மகிழ வேண்டுமென நான் கனவு காண்கிறேன்.

நான் உங்களுக்கு ருஷ்ய மொழியைச் சொல்லித் தரத் துவங்கும் போது என் முன் உள்ள லட்சியங்கள் இவைதான். இதன் மீது உங்களுக்கு அன்பு பிறக்க நான் பாடுபடுவேன். எப்படிப்பட்ட முறையைப் பயன்படுத்துவது? இந்நோக்கங்களின் அடிப்படையில் இதைத் தேடுவேன். எனது முயற்சிகளில் தோல்விகள் ஏற்பட்டால் மன்னியுங்கள், இவை வேண்டுமென்றே செய்யப்படுபவை அல்ல. லட்சியத்தைத் தேர்ந்தெடுப்பதில் தவறு செய்யாமலிருப்பதுதான் முக்கியம்.

சரி, எந்த முறையைப் பயன்படுத்துவது? இது! எப்படிப் பட்டதாயிருக்க வேண்டும்? நான் பின்வரும் கோட்பாடுகள் முக்கியமெனக் கருதுகிறேன்.

முதலில் ஒரு ஜார்ஜியனுக்கு ருஷ்ய மொழியில் பேசக் கற்றுக் கொள்வது எளிதான காரியமல்ல என்றாலும் இது ஒன்றும் முற்றிலும் கடினமான விஷயமல்ல என்பது குழந்தைகளுக்குப் புரிய வேண்டும். பல குழந்தைகள், தம் தவறுகளைக் கண்டு நண்பர்கள் சிரித்துப் பரிகசிக்கக் கூடாதே என்பதற்காக ருஷ்ய மொழியில் பேச அஞ்சுகின்றனர்; பெரியவர்களான பின் கூட இந்த அச்சம் மறைவதில்லை: ருஷ்ய மொழியில் தப்புந்தவறுமாகப் பேச வெட்கப்படுகின்றனர். என் வகுப்புக் குழந்தைகளுக்கு இந்த அச்சம் இருக்கக் கூடாது. அவர்கள் அடிக்கடி சைகைகள் செய்யட்டும், தாய் மொழிச் சொற்களைப் பயன்படுத்தட்டும், தப்புகள் செய்யட்டும். முக்கியமானது என்னவெனில் ருஷ்ய மொழியில் கலந்து பேசும் நாட்டத்தை, மொழியுணர்வை அவர்களிடம் வளர்ப்பதாகும். குழந்தைகளுக்கு நான் எப்படி ருஷ்ய மொழி போதிக்கிறேன் என்பதை அவர்கள் கிட்டத்தட்ட கவனிக்க மாட்டார்கள், ஏனெனில் இது அவர்கள் கலந்து பேசிப் பழகும் போது நேரிடையாக செய்யப்படும்.

இரண்டாவதாக, தமக்கு ருஷ்ய பேச்சு புரிகிறது, தம்மால் ஏற்கெனவே இம்மொழியில் விளக்க முடியும் எனும் உணர்வு இயன்ற அளவு விரைவாகக் குழந்தைகளிடம் தோன்ற வேண்டும். இது இவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும், மொழியைப் பயிலும் ஆர்வத்திற்கு ஊக்கமளிக்கும். குழந்தை என்னிடம் ஏதோ ருஷ்ய மொழியில் கூறுகிறான், நான் உன்னிப்பாகக் கேட்கிறேன், “ஆமாம், ஆமாம், எனக்கும் புரிகிறது” என்று நான் தலையாட்டுகிறேன். இயன்றவரை அதிகமாக, நீண்ட நேரம் பேசும்படி அவனை ஊக்குவிக்கிறேன், “அப்படியா? என்ன? எப்போது இப்படி நடந்தது?” என்றெல்லாம் ஆச்சரியப்படுகிறேன். ஏதோ ருஷ்ய மொழி மீது எனக்கு அக்கறையில்லாதது போன்றும், அவன் சொல்வதன் மீதுதான் அக்கறையுள்ளது போன்றும் பாவனை செய்கிறேன். கதை, கவிதைகளைப் படிக்கும் போது அவர்களுக்கு நன்கு புரிவதற்காகப் பல சமயங்களில் சைகைகளை, பாவனைகளை, நடிப்பைப் பயன்படுத்துகிறேன். சொற்கள், வாக்கியங்கள், சொற்றொடர்களைப் புரியும்படியும் தெளிவாயும் உச்சரிப்பேன்.

ஒவ்வொரு முறையும் குழந்தைகளுக்குப் புத்தம் புதியவற்றை படிக்கப் போவதில்லை. 10-12 கதைகள், கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வெவ்வேறு பாடங்களில் படிப்பது சிறந்ததாயிருக்கும். குழந்தைகளுக்கு இவை உடனடியாகப் புரியாமலிருக்கலாம், ஆனால் இவற்றை மீண்டும் மீண்டும் படிப்பது இரண்டு விஷயங்களைச் செய்யும்: ருஷ்ய மொழியின் இனிமை, வார்த்தைகளின் ஒலியமைப்பு குழந்தைகளுக்குப் புரியும்; அந்தந்த வார்த்தைகள், சொற்றொடர்கள் படிப்படியாகப் புரிவதும், உள்ளடக்கத்தில் மூழ்குவதும் மொத்தத்தில் புதியவற்றை அறியும் மகிழ்ச்சியைத் தரும். இரண்டு, மூன்று வருடங்களுக்குப் பின் இந்தக் கதைகள், கவிதைகளை இவர்கள் தம் பாடநூல்களில் சந்தித்தால் எவ்வளவு சிறப்பாயிருக்குமென நான் எண்ணுகிறேன். இவ்வாறு படிக்கும் போது முன்னர் கேட்டது புரிந்தும் புரியாதது மாய் நினைவிற்கு வரும். இப்போது எளிதாகப் படித்து, புரிந்து கொள்கையில் குழந்தைக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் தெரியுமா! அல்லது இக்கதையை நினைத்துப் பார்க்கையில் ஞாபகத்திலிருக்கும் பல வார்த்தைகள், சொற்றொடர்கள் திடீரெனப் பலவற்றைச் சொல்லும், உடனே குழந்தை “அப்படியா விஷயம், நான் வேறு மாதிரியாக அல்லவா நினைத்தேன்!..” என்று சொல்லிக் கொள்வான்.

படிக்க:
ஏகாதிபத்தியங்களால் வஞ்சிக்கப்படும் தெற்கு சூடான் | புகைப்படக் கட்டுரை
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் சிறுவர்களுக்கு பாதுகாப்பான நாடு கியூபா !

மூன்றாவதாக, சொல்லிக் கொடுக்கும் போது பாடத்தோடு சம்பந்தப்படாத பேச்சு சூழ்நிலைகளை அடிக்கடி ஏற்படுத்த முயலுவேன். அதாவது, நான் ருஷ்ய மொழியை போதிப்பதைக் குழந்தை உணர மாட்டான், எனக்கு எதையோ சொல்ல விரும்பி, என்னோடு உரையாட விரும்பி பேசத் துவங்குவான். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் விளையாட்டுக்களின் போது தோன்றும். அதுவும் குழந்தைகளே இவற்றைச் சிந்தித்து உருவாக்கும் போது சிறப்பாயிருக்கும். விளையாட்டுக்களின் விஷயத்தில் நான் பின்வரும் முதுமொழியைப் பின்பற்றுகிறேன்:

எந்த விளையாட்டுகள் எல்லாக் குழந்தைகளையும் ஒன்றாகச் சேர்த்தும் ஒவ்வொருவரையும் தனித்தனியாயும் சுய கெளரவ மட்டத்திற்கு உயர்த்துகின்றனவோ அவற்றைத்தான் வகுப்பறைக்கேற்ற விளையாட்டுகளாகக் கருத முடியும். வேறு விளையாட்டுகள் குழந்தைகளின் மேன்மைக்கு சிறிதளவு பங்கமேற்படுத்தினாலும் இவை வகுப்பறைக்கு ஏற்றவையல்ல, இவற்றை வகுப்பறையில் அனுமதிப்பது ஒழுக்கக் கேடானது.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

ஏகாதிபத்தியங்களால் வஞ்சிக்கப்படும் தெற்கு சூடான் | புகைப்படக் கட்டுரை

0

லகம் முழுவதும் பருவ நிலை மாற்றத்தால் ஒரு சில இடங்களில் அதீத மழையும், மேற்குலக நாடுகளில் அதீத வெப்பமும், இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையான வறட்சியும் ஏற்பட்டு வருகிறது. உள்நாட்டுப் போர் மற்றும் ஏகாதிபத்திய நாடுகளின் சுரண்டல் பிடியில் சிக்கித் தவிக்கும் ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானும் இதற்குப் பலியாகி வருகிறது.

தெற்கு சூடான் நாட்டில் நிலவிவரும் அரசியல் ஸ்திரமின்மையால், எதிர்வரப்போகும் பஞ்சத்திலிருந்து தங்களின் கால்நடைகள்  மற்றும் தங்களின் உணவுப் பாதுகாப்பைக் குறைந்தபட்சமாவது உறுதிசெய்யும் நோக்கத்துடன் அரசாங்கத்தை எதிர்பாராமல் நீர்நிலைகளைத் தாங்களே தூர்வாரி வருகின்றனர் பொதுமக்கள்.

தெற்கு சூடானின் ஜோங்லே மாநிலத்தில் ருவார் லீக் எனும் கிராமம் தற்போது நிலவிவரும் கடும் வறட்சியின் பாதிப்பில் சிக்குண்டுள்ளது. தண்ணீர் இருந்த இடங்களெல்லாம் பாலம் பாலமாக வெடித்துக் காணப்படுகிறது. கால்நடைகளை வளர்த்து வருபவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் கால்நடைகளை ஓட்டிச்சென்றால் மட்டுமே தண்ணீர் கிடைக்கும் என்ற நிலையில் இருக்கின்றனர்.

படிக்க:
ஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் ! | தாகத்தில் தமிழகம் – ஆவணப்படம் !
பாகிஸ்தான் நிரம்பிவிட்டது நிலவுக்குச் செல்லுங்கள் ! – அடூர் கோபாலகிருஷ்ணனை மிரட்டும் கேரள பாஜக

இப்போது அவர்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு, குளம், குட்டைகளைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தங்கள் கால்நடைகளுக்கு அருகாமையிலேயே தண்ணீர் கிடைக்கும் என்கிறார் ஜேம்ஸ் ஜாங்கு நியாங்.

தெற்கு சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போரின் விளைவாக பாரிய அளவிலான மக்கள் கொல்லப்பட்டதோடன்றி, மருத்துவம், தண்ணீர், கல்வி போன்ற அடிப்படை வசதிகள் அனைத்துமே சீர்குலைந்துவிட்டன.

(முகப்புப் படம் : ஜோங்லே மாநிலத்தின் ருவார் லீக் கிராமத்தினர் கடுமையான பஞ்சத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள குளம் ஒன்றைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.)

ஜேம்ஸ் ஜாங்கு நியாங், வயது 55 சிறு குட்டையுடன் ஊடாக நடந்து வருகிறார். வறட்சி அதிகமாகி இந்தக் குட்டை வறண்டு போகும்போது, இதை நம்பி வாழும் மக்கள் அனைவரும் தண்ணீரைத் தேடி அலையும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

ஜேம்ஸ் ஜாங்கு நியாங் தன்னுடைய கால்நடைகளின் ஊடாகச் செல்கிறார். உள்ளூரிலேயே அவற்றிற்குத் தண்ணீர் கிடைக்கும்பட்சத்தில் அவை பாதுகாக்கப்பட்டுவிடும் என்கிறார். கடந்த வருடப் பஞ்சத்தில் நிறைய கால்நடைகள் தண்ணீரின்றி மடிந்து விட்டன. என்னிடம் எத்தனை கால்நடைகள் இருக்கின்றன என எண்ணுவதேயில்லை, அப்படி எண்ணும்போது அவற்றில் ஒன்று இறந்துவிடும் என்ற மூடநம்பிக்கை இங்கு நிலவுகிறது என்கிறார்.

கடந்த ஏப்ரல் மாதத்திலேயே இந்தக் குட்டையைத் தூர்வாரும் பணியைத் தொடங்கிவிட்டோம். இதனால் கூடுதல் தண்ணீர் சேர்ந்து என்னுடைய கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்போகிறது, மேலும் அவை காணாமல் போவதும் தடுக்கப்படுகிறது என்கிறார் ஜேம்ஸ் ஜாங்கு நியாங்.

மண்வெட்டி, கோடரிகளுடன் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 316 பேர் ஒன்றிணைந்து தூர்வாரும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

கொத்தி எடுக்கப்பட்ட மண்ணை கையாலேயே வாளியில் அள்ளிப்போடும் பெண். 20 நாட்கள், 80 மணி நேர வேலை என இலக்கு நிர்ணயிக்கப்பட்ட இந்த வேலையை முடிக்கும் பட்சத்தில் 50 கிலோ சோளம், 5 கிலோ பட்டாணி மற்றும் 3 லிட்டர் எண்ணெய் கிடைக்கும்.

ஆன்யீத் காரங் (ஆரஞ்சு நிற உடையணிந்திருப்பவர்) குட்டையில் உள்ள காலி டப்பா ஒன்றை அப்புறப்படுத்துகிறார். 2013-ம் ஆண்டு நடந்த சண்டை ஒன்றில் தன் கணவரை இழந்த தன் போன்ற பெண்களுக்கு இந்தக் குட்டை தூர்வாரப்படுவது ஆறுதலைத் தரும் என்கிறார்.

கால்நடைகள் அடைக்கும் பட்டியில் பொருட்களைக் காய வைக்கிறார் காரங்.  “என்னுடைய மகன்கள் வீட்டைப் பழுதுபார்ப்பதிலும், புணரமைப்பதிலும் குறியாக உள்ளனர். இதனால் என்னுடைய கால்நடைகள் கவனிப்பாரின்றி கிடக்கின்றன.” என்கிறார்

சக கிராமவாசியுடன் உரையாடும் காரங். இந்தக் குட்டையைத் தூர்வாருவதால்   “என்னுடைய கால்நடைகளுக்கு வறட்சி காலத்தில் தண்ணீர் கிடைக்கும். எங்கள் குடும்பத் தேவைகளுக்கும் இந்தத் தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்வோம்.”

தன்னுடைய பசுமாட்டின் மேல் சாம்பலைத் தடவும் ருவார் லீக் கிராமவாசி ஒருவர். கால்நடைகளை நீண்டதூரம் மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வது என்பது இங்கு மிகவும் ஆபத்தான காரியமாகிறது. “திருடர்களால் நீங்கள் கொல்லப்படலாம் அல்லது உங்கள் கால்நடைகள் திருடப்படலாம் என்ற அசாத்திய சூழல் நிலவுகிறது” என்கிறார் சீமோன் அன்யாங் கொர்யோம்.

ஜேம்ஸ் ஜாங்கு நியாங் மாட்டுச் சாணத்தை எரிபொருள் தேவைக்காக வெயிலில் உலர்த்துகிறார். என் கிராமத்திலேயே வைத்துப் பராமரிப்பதையே நான் விரும்புகிறேன். தொற்று நோய் பரவலைத் தடுக்கலாம், ஒருவேளை கால்நடைகள் பாதிக்கப்பட்டாலும் மருத்துவச் செலவுக்குப் பணம் ஏது என்கிறார்.

ருவார் லீக் கிராமத்தில் பால் கறக்கும் பெண் ஒருவர். வங்கிப் பரிவர்த்தனை வசதியேயில்லாத அல்லது மிகக் குறைந்த வசதி கொண்ட கிராமங்களில் கால்நடைகள் தான் ஒருவரின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.

மேரி நியாஞ்ஜாக் புயோச்  வயது 35 – ஆறு குழந்தைகளுக்குத் தாயான இவர் தான் வளர்க்கும் ஆடுகள்தான் தன்னுடைய சொத்து. பணப் பரிவர்த்தனைக்கான வங்கி போன்றிருப்பது என்னுடைய ஆடுகள். குழந்தைகளைப் பராமரிக்கப் பணம் தேவைப்படும்போது ஆடுகளை விற்றுத்தான் சமாளிக்கிறேன் என்கிறார்.

தண்ணீர் கேனை சுத்தம் செய்யும் சிறுவன், அருகில் சாக்கடை நீரைப் பருகும் பசு ஒன்று – இடம் தோனவாய் கிராமம், ஜோங்லே மாநிலம்.

தூர்வாரும் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பத் தயாராகும் பெண்கள். “இந்தத் திட்டம் எங்களுக்குப் பல்வேறு வகையில் உதவி புரிகின்றது.  எதிர்காலப் பிரச்சினைகளை சமாளிப்பதற்கான வேலைகளைச் செய்வது நிறைவைத் தருகிறது. மற்ற கிராமங்களும் இது போன்ற வேலைகளை முன்முயற்சியுடன் செய்கின்றனர்.”


தமிழாக்கம் : வரதன்
மேலும் படிக்க : aljazeera

மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் | மதுரை கருத்தரங்கம்

0

மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! என்கின்ற தலைப்பில் கடந்த ஜூலை-25, வியாழக்கிழமை அன்று மாலை மதுரை சோக்கோ அறக்கட்டளை அரங்கில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் அரங்கக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பு.மா.இ.மு.வைச் சேர்ந்த தோழர் ஸ்னேகா தலைமை தாங்கினார்.

சிறப்புப் பேச்சாளர்களாக மதுரை காமராஜர் பல்கலையின் மேனாள் பேராசிரியர் சீனிவாசன், பள்ளி ஆசிரியர்கள் சிவா, சரவணன் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன் ஆகியோர் உரையாற்றினர்.

கூட்டத்திற்கு திரளான மாணவர்கள் கலந்து கொண்டது ஆர்.எஸ்.எஸ் கொண்டு வரும் இந்த புதிய கல்விக் கொள்கையை முறியடித்துவிட முடியும் என்கின்ற நம்பிக்கையை தருவதாக இருந்தது. அதற்கு தகுந்தாற் போல் இந்த கல்வி கொள்கையை முறியடிக்க வேண்டியதன் அவசியத்தை மாணவர்களுக்கு உணர்த்துவதாகவும், கருத்தியல் ஆயுதத்தை மாணவர்களுக்கு தருவதாகவும் சிறப்புப் பேச்சாளர்களின் உரைகள் இருந்தது.

முத்தாய்ப்பாக ஆசிரியர் சிவா பேசும்போது “இந்த வரைவு அறிக்கையின் கடைசி பத்தியில் ஒரு ரூபாய் முதல் போட்டால் பத்து ரூபாய் லாபம் கிடைக்கும் கல்வி துறையில் நாம் கவனம் செலுத்தாமல் இருக்க முடியாது என்று கூறுவது ஒன்றே போதும் இந்த கல்விக் கொள்கை என்ன நோக்கத்திற்காக கொண்டுவரப்படுகிறது” என்று பேசியது ஒட்டு மொத்தமாக இனி வரும் ஆண்டுகளில் நம்முடைய குழந்தைகளின் கல்வி உரிமை கானல் நீராக மறைந்து போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை பளிச்சென்று புரியவைப்பதாக இருந்தது.

அதே போல் கருத்து கேட்பு கூட்டத்தை பகிரங்கமாக மக்களுக்கு தெரியப்படுத்தி நடத்தாமல் ரகசியமாக நடத்துவது, கோவையிலும், திருச்சியிலும் நடந்தது போல் தோழர்கள் கண்டுபிடித்து வந்துவிட்டால் உடனே “இங்கே நடப்பது கருத்து கேட்பு கூட்டம் அல்ல, துறை ரீதியான கலந்தாலோசனைதான்” என்று சமாளிப்பதையும் இதே போல் கடந்த 22 ஆம் தேதி அன்று மதுரையில் ரகசியமாக நடக்க இருந்த கருத்து கேட்பு கூட்டத்தை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சுவரொட்டி மூலம் மக்களுக்கு பகிரங்கமாக தெரிவித்த பின்னர் உடனே அந்த கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்துள்ளது என்பதையும் பேச்சாளர்கள் அம்பலப்படுத்தி பேசினர்.

கூடுதலாக 26-ம் தேதி அன்று மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியில் நடக்க இருந்த கருத்துக் கேட்பு கேட்பு கூட்டத்தையும் துறைரீதியான கூட்டம் என்பதாக அறிவித்துவிட்டு, மக்கள் யாரும் வர வேண்டாம் என அரசே பத்திரிக்கையில் செய்தி கொடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டி பேசினர்.

படிக்க:
செய்யாத குற்றத்திற்கு 23 ஆண்டுகள் சிறை ! முசுலீமாய் பிறந்ததுதான் குற்றமா ?
‘சாஹேபுக்காக’ இளம் பெண்ணைக் கண்காணித்த அமித் ஷா பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழு தலைவராம் !

இறுதியாக பு.மா.இ.மு. வின் தோழர் ஆனந்த் தனது நன்றியுரையில் இந்த அரங்க கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள் மற்றும் மாணவர்கள் இந்த கருத்துக்களை தங்களுடைய நண்பர்கள் உற‌வினர்கள் என அனைவரிடமும் எடுத்து செல்ல வேண்டும்; அவர்களையும் இதை எதிர்த்து போராட தயார்படுத்த வேண்டும். அதுவே இந்த கூட்டத்தை நடத்தியதன் நோக்கம் என்று மாணவர்களை அறைகூவி அழைத்தார்.

தகவல் :
பு.மா.இ.மு,
மதுரை.

வெற்றிப் பெருமிதம் உறைந்த முகத்துடன் கமிஸார் உயிர் நீத்தார் !

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 11

மே மாதம் முதல் தேதி கமிஸார் உயிர் நீத்தார். அவரது மரணம் ஒருவரும் கவனிக்காத வகையில் நிகழ்ந்தது. அதிகாலையில் முகங்கை கழுவித் தலைவாரிக் கொண்ட பின், முகம் மழித்த நாவிதச்சியிடம் பருவ நிலை நன்றாயிருக்கிறதா, விழா நாள் மாஸ்கோ நகரம் எப்படி காட்சி அளிக்கிறது என்றெல்லாம் கேள்விமேல் கேள்வி போட்டுக் குடைந்து எடுத்தார் அவர். வீதிகளில் தடையரண்கள் அகற்றப்படுகின்றன என்பதை அறிந்து மகிழ்ந்தார். பளிச்சென்று வெயில் கொஞ்சும் இத்தகைய அற்புதமான வசந்த நாளில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடக்காது என்பதைக் குறித்து வருந்தி அங்கலாய்த்தார். அவர் உடல் நிலை முன்னைவிடச் சீர்பட்டுவிடுவது போலத் தோன்றியது. ஒரு வேளை அவர் குணமடைந்து விடுவார் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் உண்டாயிற்று.

வெகு நாட்களாகவே, அவரால் செய்தித்தாள் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது முதலே, வானொலி வாங்கிச் செவிக் குழாய்கள் அவருடைய கட்டிலருகே வைக்கப்பட்டிருந்தன.

வானொலித் தொழில் நுட்பம் ஓரளவு அறிந்திருந்த க்யோஸ்தியேவ் அவற்றில் ஏதோ புத்தமைப்புகள் செய்தான். அப்புறம் அவை வார்டு முழுவதற்கும் கேட்கும் படி முழங்கின, உரக்கப் பாடின. அந்த நாட்களில் உலகினர் எல்லோரும் கேட்டு அறிந்திருந்த குரலை உடைய செய்தி அறிவிப்பாளர், காலை ஒன்பது மணிக்கு மக்கள் தற்காப்புக் கமிஸாரின் உத்தரவைப் படிக்கத் தொடங்கினார். அதில் ஒரு வார்த்தையைக் கூடக் கேட்காமல் விட்டுவிடக் கூடாது என்பதற்காக எல்லோரும் கப்சிப்பெற்று அடங்கிவிட்டார்கள். சுவற்றில் தொங்கிய இரு கறுப்பு வட்டக் குழாய்கள் மீதே எல்லோரது கவனமும் லயித்திருந்தது. “மாபெரும் லெனினது வெல்லரும் கொடியின் கீழ் வெற்றியை நோக்கி முன்னேறுவோம்!” என்ற சொற்கள் ஆர்த்தன. அப்புறமும் வார்டில் இறுக்கம் நிறைந்த நிசப்தம் குடி கொண்டிருந்தது.

“ஒரு விஷயத்தை எனக்குத் தெளிவுபடுத்துங்கள், தோழர் கமிஸார்” என்று ஆரம்பித்த குக்கூஷ்கின் திடீரென்று “தோழர் கமிஸார்” எனக் கலவரத்துடன் வீரிட்டான்.

எல்லோரும் அங்கே பார்வையை திருப்பினார்கள். கமிஸார் கட்டில் மீது நேராக நீட்டி விரைத்துக் கிடந்தார். அவரது விழிகள் முகட்டின் மேல் ஏதோ ஒரு புள்ளியில் அசையாது குத்திட்டிருந்தன. வாடி வெளிறிய அவருடைய முகத்தில் வெற்றிப் பெருமிதமும் அமைதியும் மாண்பும் துலங்கும் பாவம் உறைந்து போயிருந்தது.

குக்கூஷ்கின் அவரது கட்டிலருகே முழந்தாள் படியிட்டு, “காலமாகிவிட்டார்! இறந்து போனார்!” என்று கதறினான்.

குழப்பம் அடைந்த அறைத் தாதிகள் வார்டுக்குள் ஓடி வருவதும் வெளியே ஓடுவதுமாக அலை பாய்ந்தார்கள். நர்ஸ் பரபரத்தாள். மருத்துவர் ஓடுகிற ஓட்டத்திலேயே அங்கிப் பொத்தான்களை மாட்டியவாறு பாய்ந்து வந்தார். சச்சரவு இடுபவன், சுமுகமாகப் பழகத் தெரியாதவன் என மதிக்கப்பட்ட லெப்டினன்ட் கன்ஸ்தாந்தீன் குக்கூஷ்கின், ஒருவரையும் கவனியாமல், குழந்தையைப் போலப் போர்வையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு, ஓசையுடன் மூக்கை உறிஞ்சியவாறு, தோள்களும் உடல் முழுவதுமே பதற, காலமான கமிஸாரின் மார்பு மீது சாய்ந்து குலுகுலுங்கி அழுதான்……

அன்று மாலை, இடம் காலியான நாற்பத்து இரண்டாம் வார்டுக்குப் புதிய ஆள் கொண்டுவரப் பட்டார். தலைநகரின் விமானப் பாதுகாப்பு டிவிஷனைச் சேர்ந்த சண்டை விமானி மேஜர் பாவேல் இவானவிச் ஸ்த்ருச்கோவ் அவர். மேதின விழா நாளில் மாஸ்கோ மீது பெருத்த விமானத் தாக்கு நடந்த பாசிஸ்டுகள் தீர்மானித்தார்கள். அனேக அணிகளாக முன்னேறிய அவர்களது விமானத் தொகுதி சோவியத் சண்டை விமானங்களால் தடுக்கப்பட்டு, உக்கிரமான போருக்குப்பின் பத்ஸோல் கெச்னயா என்னும் இடத்தருகே தகர்த்து வீழ்த்தப்பட்டது. ஒரே ஒரு “யூன்கெர்ஸ்” விமானம் மட்டும், சோவியத் விமான வளையத்தின் ஊடாகப் பாய்ந்து வெளியேறி மாஸ்கோவை நோக்கித் தொடர்ந்து பறந்தது. விழாக் கொண்டாட்டத்தைப் பாழ்படுத்தும் பொருட்டு என்ன நேர்ந்தாலும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு இடப்பட்டிருந்த பணியை நிறைவேற்றுவது என்று அந்த விமானத்தின் ஊழியர்கள் முடிவு செய்துவிட்டனர் போல் இருந்தது. விமானச் சண்டைக் கெடுபிடியிலேயே அந்த விமானத்தைக் கவனித்துவிட்ட ஸ்தோருகோவ் அதைத் துரத்திச் சென்றார். சண்டை விமானப் படைக்கு அப்போது வழங்கப்படத் தொடங்கியிருந்த சிறந்த சோவியத் விமானங்களில் ஒன்றை அவர் ஓட்டிக் கொண்டிருந்தார். மாஸ்கோ நகர்புறத்துக்கு மேலே, தரைக்குமேல் ஆறு கிலோ மீட்டர் உயரத்தில் எதிரி விமானத்தை எட்டிப் பிடித்து, அதன் வாலருகே லாவகமாக நெருங்கி, பகை விமானத்தை இலக்கு வைத்துச் சுடுவிசையை அழுத்தினார். பிறகும் மெஷின்கன் குண்டுகளின் வழக்கமான சடசடப்பு கேட்காதிருக்கவே அவர் வியப்படைந்தார். சுடுவிசை பழுதடைந்திருந்தது.

பகை விமானம் சற்று முன்னே சென்றது. வெடி விமானத்தைப் பின்புறத்திலிருந்து காத்த இரு மெஷின்கன்களிலிருந்து அதன் வால் பகுதியால் மறைக்கப்பட்டவாறு சுடமுடியாத நடு மையத்தில் அதைத் தொடர்ந்தார் ஸ்த்ருச்கோவ். தெளிந்த மே மாதக் காலையில் மாஸ்கோ நகரம் புகைபோர்த்த சாம்பல் நிறக் குவியல்களின் தொகுதி போன்று தொடுவானில் மங்கலாகத் தென்பட்டது. ஸ்த்ருச்கோவ் அப்போதே முடிவு செய்துவிட்டார். இருக்கை வார்களைக் கழற்றி, விமான வளை முகட்டைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஜெர்மன் விமானத்தின் மேல் தானே பாயப்போவது போலத் தசைநார்களை எல்லாம் இறுக்கியவாறு பதுங்கிக் கொண்டார். தமது விமானத்தின் வேகத்தை ஜெர்மன் விமானத்தின் வேகத்துக்கு ஏற்பச் சரியாக இசைவித்துக் கொண்டு அவர் இலக்குப் பார்த்தார். கண்ணுக்குப் புலப்படாத கயிற்றினால் ஒன்றுக்கொன்று நெருக்கமாகப் பிணைக்கப்பட்டவை போல ஒன்றன் பின் ஒன்றாக அவை கணப்போது காற்றில் சமீபமாக மிதந்தன. பகை விமானத்தின் ஒளிபுகும் முகட்டின் ஊடாக ஜெர்மன் மெஷின்கன் வீரனின் கண்கள் ஸ்த்ருச்கோவுக்குத் துலக்கமாகத் தெரிந்தன.

ஸ்த்ருச்கோவின் ஒவ்வொரு பாய்ச்சலையும் உன்னிப்பாகக் கவனித்தவாறு, அவரது விமான இறக்கையின் ஒரு பகுதியேனும் மறைவிலிருந்து வெளிப்படாதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் அந்த பாசிஸ்ட். பதற்றம் காரணமாக, அவன் தன் தலைக் காப்பைக் கழற்றிவிட்டதை ஸ்த்ருச்கோவ் கண்டார். அவனுடைய நீண்ட வெளிர் நிறத் தலைமயிர் சிறு சிறு கற்றைகளாக அவனது நெற்றி மேல் விழுந்திருந்தது கூட அவருக்குத் தெரிந்தது. மெஷின்கன்னின் பெரிய இணைக் குழாய்களை ஸ்த்ருச்கோவின் பக்கமே நோக்கியவாறு, உயிருள்ளவை போன்று எதிர்பார்ப்புடன் அசைந்தன. திருடன் தன் மீது ரிவால்வரைக் குறிவைத்திருக்கும் போது தான் நிராயுதபாணியாய் இருப்பதாக ஸ்த்ருச்கோவ் கணநேரம் உணர்ந்தார். ஆயுதமற்ற தைரியசாலிகள் இத்தகைய சந்தர்ப்பங்களில் என்ன செய்வார்களோ அதையே அவர் செய்தார். தாமே பகைவன் மீது பாய்ந்து தாக்கினார் அவர். தரையில் போன்று முட்டிகளால் அல்ல, விமானத்தின் பளிச்சிடும் உந்து சக்கரத்தைப் பகை விமானத்தின் வாலுக்குக் குறி வைத்து விமானத்தை முன்னே பாய்ச்சினார்.

படிக்க:
ஆரியப் பழக்க வழக்கங்களை ஏன் கட்டி அழுகிறீர் ?
கார்ப்பரேட் – மனுவாத பாசிசத்தை முறியடிப்போம் | பெங்களூரு கருத்தரங்கம்

மடாரொலி அவர் செவிகளில் படக் கூட இல்லை. பயங்கரமான உந்துதலால் வீசி எறியப்பட்டு, தான் காற்றில் தலைகுப்புற விழுவதை அவர் உணர்ந்தார். தரை அவரது தலைக்கு உயரே விரைந்தது, பின்பு ஓரிடத்தில் நிலைத்து, பச்சைப் பசேலென்று ஒளிர்ந்தவாறு அவரை எதிர்கொண்டு சீழ்கையுடன் பாய்ந்து வந்தது. அப்போது அவர் பாராஷூட்டின் வளையத்தைச் சுண்டி அதை விரித்தார். பாராஷூட் கயிறுகளில் உணர்வின்றித் தொங்குவதற்கு முன், சுருட்டு வடிவான “யூன்கெர்ஸ்” விமானத்தின் வால் உடைந்து உடல் இலையுதிர் காலக் காற்றில் மேப்பிள் இலை போலச் சுழன்றவாறு தம் அருகாகக் கடந்து கீழே சரிவதைக் கடைக் கண்ணால் கண்டுகொண்டார் அவர். பாராஷூட் கயிறுகளில் தன் வசமின்றி ஊசலாடியவாறு வந்த ஸ்த்ருச்கோவின் உடல் ஒரு வீட்டுக் கூரைமேல் தடாலென்று மோதியது. மாஸ்கோ நகர்ப்புறத்தில் விழாக் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்த வீதியில் அவர் நினைவற்று விழுந்தார்…….!

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

ஆரியப் பழக்க வழக்கங்களை ஏன் கட்டி அழுகிறீர் ?

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 16

பெரும்பாலரான திராவிட மக்கள், சூத்திர நிலை, தீண்டாமை முதலிய ஆரியப் படுகுழிகளில் வீழ்ந்து உழல்வதற்கும், விரல்விட்டு எண்ணக்கூடிய சிறு வகுப்பினராகிய ஆரியர் சுகவாழ்வு வாழ்வதற்கும் ஆதாரமாயிருக்கிற ஆரியப் பழக்க வழக்கங்களை ஏன் கட்டி அழுகிறீர் என்று கேட்டால், கற்காலத்திலிருந்து நடைபெற்று வருகிற இந்தப் பழக்க வழக்கங்களை எப்படிக் கைவிடுவதென்று திராவிட மக்களிலே பலர் கூறுகின்றனர். இதைக் கேட்கும் போது திராவிட நாகரிகத்தின் மறுமலர்ச்சியை நாடும் நண்பர்களின் மனம் துடியாய்த் துடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் சொல்லுகிற படியாவது இந்த ஆரியக் கொள்கைகளும் வழக்கங்களும் உண்மையாகவே முற்காலம் முதல் ஏற்பட்டு நடந்து வருகின்றனவா என்று பார்த்தால், அப்படியும் இல்லை.

வரலாற்றுக் காலத்தில் வாழாத வடநாட்டரசன் இராமன் இடைநாட்டு வானரர் துணைக்கொண்டு, அணைகட்டிக் கணைதொடுத்து இணையற்ற தென்னாட்டுப் பேரரசன் இராவணனை அழித்த செய்தி, இதிகாசப் பெயரால் இயம்பப்படுகிறது.

முற்காலத் திராவிட மக்கள் இவ்வித ஆபாசமான, இழிவையே தரும், தன்மானத்தைக் கெடுக்கும் மதச் சடங்குகளையும் சாதிக் கட்டுப்பாட்டையும் கையாண்டதில்லை. அக்காலத்திய திராவிட நாகரிகம் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஓர் உயர் தனி நாகரிகமாயிருந்தது. இவையெல்லாம் சரித்திர ஆராய்ச்சியில் வெளிப்பட்டுள்ள உண்மைகள்.

ஆரிய நூலாசிரியர் சிலரும், இந்த உண்மையை ஒருவாறு எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

அவற்றுள், ஒரு சிறிய அத்தாட்சியை இங்கே எடுத்துரைக்க விரும்புகிறோம்.

விஜய நகரம் மகாராஜா கல்லூரிச் சரித்திரப் பண்டிதர் தோழர் எம்.எஸ்.இராமசாமி ஐயங்கார் எழுதியுள்ள (மதுரை ஜில்லா பூவருணனை) நூலில் பின்வருமாறு கூறியிருக்கிறார்.

ஆதிகாலத்திலே திராவிடர்கள் சாதி பேதமின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். பின்பு ஆரியர், திராவிட நாட்டில் வந்து குடியேறித் திராவிட மன்னர்களின் தயவைப் பெற்றார்கள். ஆரியரில் சிலர் அந்த மன்னர்களுக்குக் குருவானார்கள். அதன் பின்னர்தான் தமிழ்நாட்டில் ஆரிய நாகரிகம் பரவத் தொடங்கிற்று. ஆரிய மதமும் தெய்வங்களும் ஆசாரங்களும் சாதி வித்தியாசங்களும் தமிழ்நாட்டில் வேரூன்றிவிட்டன.

கி.மு. முதலாவது நூற்றாண்டு முதல் மூன்றாவது அல்லது நான்காவது நூற்றாண்டு வரையில் புகழ்பெற்ற சங்கங்கள் இருந்தன. அரிய பெரிய கவிஞர்களும் வித்துவான்களும் இச்சங்கங்களில் அங்கத்தினராயிருந்தார்கள். அவர்கள் எழுதி வைத்த நூல்களின் மூலமாக அரசாங்கத்தில் தமிழ்நாட்டில் பரவியிருந்த மதங்களின் வரலாறு நன்றாய்ப் புலப்படுகின்றன. அக்காலத்தில் பௌத்த சமண மதங்கள் பரவியிருந்தன.

இக்காலத்து மதநிலையைப் பற்றி நாம் முக்கியமாய் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு. அதாவது தற்காலத்தில் குடும்பத்திலிருக்கும் ஒருவன் ஒரு மதத்தை விட்டு வேறு மதத்தைத் தழுவினால், அவனைச் சாதியில் சேர்த்துக் கொள்வது வழக்கமில்லை. சங்க காலத்தில் அப்படியில்லை, ஒவ்வொருவரும் தம் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் எந்த மதத்தை வேண்டுமானாலும் அனுசரிக்கலாம். அதனால் அவனுக்கு யாதொரு குற்றமும் ஏற்படாது. குடும்பத்தார் அவனை நீக்குவதும் இல்லை. இது அக்காலத் தமிழர்களுடைய விரிந்த மனப்பான்மையையும் நாகரிக உயர்வையும் காட்டுகிறது’’.

இது நாம் கூறுவதல்ல. ஆரிய ஆசிரியர் ஒருவரே எடுத்துக் கூறியிருக்கும் உண்மை. அக்காலத்தில் பொதுமக்கள் தங்கள் விருப்பம் போல் பல்வேறு தெய்வங்களை வழிபட்டு வந்தாலும், அதனால் அவர்களுக்குள் வேறுபாடோ, வெறுப்போ, பிரிவினையோ இல்லாமல் எல்லோரும் ஒரே குடும்பத்தினர் போல், ஒரே இனமாக ஒற்றுமையுடனும் சகோதர பாவத்துடனும் பழகி வந்தனர். இது தமிழ் நாகரிகத்தின் மாண்பு. ஆரியர் வந்த பின்தான் மேலே குறிப்பிட்டபடி தமிழ்நாட்டில் சாதி வித்தியாசங்களும் மத வேற்றுமைகளும் மதத்துவேஷமும் வளர்ந்து தற்காலச் சிறுமை நிலை ஏற்பட்டது. இதெல்லாம் ஆரியர் சேர்க்கையால் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள மகத்தான கேடு! இந்தச் சீர்கேடும் சிறுமை நிலையும் நம் முன்னோர் காலத்தில் உள்ளதல்ல என்பதும், இடைக்காலத்திலே ஆரியர் வரவால் உண்டானதென்பதும், மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டால் தெற்றென விளங்குகிறது. இதற்கு ஆதாரமாக இது போன்ற நூற்றுக்கணக்கான சான்றுகளைச் சரித்திரத்திலிருந்து எடுத்துக் காட்டலாம்.

முற்காலத் திராவிட மக்கள் இவ்வித ஆபாசமான, இழிவையே தரும், தன்மானத்தைக் கெடுக்கும் மதச் சடங்குகளையும் சாதிக் கட்டுப்பாட்டையும் கையாண்டதில்லை.

ஆகவே, முன்னோர் வழக்கம் என்று தவறாக எண்ணிக் கொண்டு ஆரியர் சிறுமை நிலைகளுக்கு இடங்கொடுக்க வேண்டியதில்லை. திராவிட நாட்டு மாபெருந் தலைவர் ஈ.வெ.ரா-வின் இடைவிடாத முயற்சியால், தமிழர் மீது சுமத்தப் பெற்ற ஆரிய இழி நிலைகள், ஒவ்வொன்றாக வீழ்ந்து வருகின்றன! இந்த அரிய தருணத்திலே, தமிழ்ப் பெருமக்கள் ஆரிய சூழ்ச்சியினால் மறந்து போன, மறைந்து கிடக்கும் பழந்தமிழ் நாகரிகத்தை அன்றாட வாழ்க்கையில் நடைமுறைக்குக் கொண்டுவர, ஒவ்வொரு வழியிலும் முற்பட வேண்டும். திராவிடத் தமிழ் நாகரிக மறுமலர்ச்சியே, திராவிடர்களின் முன்னேற்றத்திற்கும் திராவிட நாட்டின் விடுதலைக்கும் வழிகோல வல்லது.

தென்னிந்திய மொழிகளை நன்றாக ஆராய்ந்த அறிஞர் கால்டுவெல், இவை வடமொழியினின்று தோன்றியவை அல்லவென்றும் வட மொழி திராவிடத்தினின்று கடன் பட்டுள்ளதென்றும் கூறியுள்ளார். ‘இந்தியக் கலையின் அடிப்படை, திராவிடக்கலையே’ என்று டாக்டர் கில்பர்ட் ஸ்லேட்டர் அவர்களும் இந்தியக் கலைகளை ஆராய்ந்து வெளியிட்டுள்ளார்.

இனித் திராவிடம் தெற்கில் சிறப்பதேன், என்பதை இந்தியத் துணைக் கண்டத்தின் உண்மை வரலாறு காண, வரலாறு, வேதகால வேதியர் சிந்துக்கரையிலும் கங்கைக்கரையிலும் வாழ்ந்ததிலிருந்து தொடங்குவது மாறி வைகை, காவேரி, பாலாறு ஆகிய ஆற்றோரங்களில் அமைந்த அரசுகளின் பழமையிலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்றும், அதுவே உண்மையான வரலாற்றை உணர வழியென்றும், பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை அவர்கள் கூறியது மறைக்க – மறுக்க முடியாததோர் உண்மையாகும்.

படிக்க:
கார்ப்பரேட் – மனுவாத பாசிசத்தை முறியடிப்போம் | பெங்களூரு கருத்தரங்கம்
செய்யாத குற்றத்திற்கு 23 ஆண்டுகள் சிறை ! முசுலீமாய் பிறந்ததுதான் குற்றமா ?

இந்திய வரலாற்றின் ஏட்டைப் புரட்டினால், வரலாற்றுக் காலத்தில் வாழாத வடநாட்டரசன் இராமன் இடைநாட்டு வானரர் துணைக்கொண்டு, அணைகட்டிக் கணைதொடுத்து இணையற்ற தென்னாட்டுப் பேரரசன் இராவணனை அழித்த செய்தி, இதிகாசப் பெயரால் இயம்பப்படுகிறது. பாண்டவரிடையே நடந்த போரும், நூற்றுவர் ஐவரிடையே இருந்த நியாயமும் கூறப்படுகிறது. ஆனால் பாரதப்போரில் பெருஞ்சோறளித்த சேரனைப்பற்றிய குறிப்புக் காணப்படுவதில்லை.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

0

கும்பகோணம் அரசு கலைக் கல்லுரியில் மோடி அரசு கொண்டுவரும் தேசிய கல்விக் கொள்கையை நிராகரிக்கக் கோரியும், சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்தும் கடந்த 25/07/2019 அன்று வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது.

வகுப்பு புறக்கணிப்பின் பொது கியூ பிரிவு போலீசார் இருவர் கல்லூரி வளாகத்திற்குள் வேவு பார்க்க நுழைந்தனர். அப்போது மாணவர்களிடம் அந்த இருவரையும் உளவு பார்ப்பவர்கள் என்று கும்பகோணம் பு.மா.இ.மு அமைப்பாளர் தோழர் திலிப் அடையாளம் காட்டிய பின்னர், மாணவர்களே அந்த இருவரையும் கல்லூரிக்கு வெளியே அனுப்பினர்! அதன் பிறகு புதியதாகக் கொண்டுவரப்படும் தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் என்றும் இக்கொள்கை சர்வாதிகாரப் போக்குடையது என்றும் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசிற்கு எதிராக முழக்கம் இட்டனர்.

பின்னர், தேசிய கல்விக் கொள்கையின் சாராம்சத்தை பு.மா.இ.மு தோழர்கள் ஒலிப்பெருக்கியால் மாணவ, மாணவிகளிடம் எடுத்துரைத்தனர். இக்கல்விக் கொள்கையைப் பற்றி எடுத்துரைத்த பிறகு அனைவரிடமும் நம் கல்வி உரிமையை பறிக்கும் புதிய கல்விக் கொள்கை நமக்குத் தேவையா? என்று கேள்வி எழுப்பியதும் மாணவ, மாணவிகள் கோபத்துடன் தேவையில்லை என்று கூறினார்கள். அங்கு வந்த பிற பத்திரிகையாளர்கள் விவரங்களைக் கேட்டுச் சென்றனர். போராட்டமே மகிழ்ச்சி !
புரட்சியே தீர்வு ! அரசின் ஏழை மக்கள் விரோத,  மாணவர் விரோத முடிவுகளை எதிர்த்து விடாப்பிடியாகப் போராடுவோம் !

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கும்பகோணம்.
தொடர்புக்கு: 97902 15184

நாள் முழுக்க உங்களால் இரைச்சலை ரசிக்க முடியுமா ? | படக்கட்டுரை

சென்னையின் சாலை இரைச்சலை மட்டுப்படுத்தியது, மாவு மிசின் இரைச்சல்… உள்ளே நுழைந்தோம். இரைச்சலுக்கு மத்தியில் காது மூக்கு என மொத்தமாக மிளகாய் நெடி. பெண்களும் ஆண்களும் பிளாஸ்டிக் வாளி, அலுமினியம் குண்டான் என்று பல்வேறு வீட்டுப் பாத்திரங்களில அரைக்க வேண்டிய மளிகை சாமான்களோடு நின்றிருந்தனர்.

கடை உரிமையாளர் மோகன்.

அதன் மத்தியில் மாவு மிசின் ஓனர் மோகனிடம் (65) சத்தமாக, “நாங்கள் இந்த தொழில் பற்றியும் அதன் நிலைமை பற்றியும் பேச வந்திருக்கிறோம்” என்றோம். அவர் சத்தமாக “அப்படியா…?” என்று, மீண்டும் வேலையில் மூழ்கினார்.

நாம், அங்கிருந்த வாடிக்கையாளரிடம் “ஆச்சி, சக்தியின்னு பாக்கெட் மசாலா வந்துவிட்டது, வேலை மெனக்கெட்டு இங்கு வந்து ஏன் அரைக்க வர்றீங்க?”

“அதை நம்பி சாப்பிட முடியாது. வயிறு கெட்டுப் போகும். அதில் என்ன பொருட்களைப் போடுகிறார்கள் என்றே தெரியாது. கையில் பொருட்களாக வாங்கினாலே அதில் ஆயிரத்தெட்டு கலப்படம். அரைத்து பாக்கெட்டில் கொடுத்தால் ஒழுங்காகவா இருக்கும்? அரைத்துப் பயன்படுத்தினால்தான் நமக்கு ஏற்ற மாதிரி ருசி.. வயித்துக்கும் பிரச்சினை இல்லை” என்றார், பனிமலர் கல்லூரியில் ஆசிரியாராக இருக்கும் சந்திரன்.

பனிமலர் கல்லூரி ஆசிரியர் சந்திரன் : ”வேலை மிச்சம்னு பாக்கெட் மசலா வாங்கினா டாக்டருக்கு யார் செலவுபண்றது? கால்குடைச்சல், கைகுடச்சல், நெஞ்செறிச்சல், வயித்தெறிச்சல்னு மாறிமாறி ஓடணும். நமக்கு தேவையா?”

“வேலை மிச்சம்னு பாக்கெட் மசலா வாங்கினா டாக்டருக்கு யார் செலவுபண்றது? நமக்கு தேவையா? கால் குடைச்சல், கை குடைச்சல், நெஞ்செரிச்சல்னு மாறிமாறி ஓடணும். ஒபிசிடி, தொப்பன்னு ஜிம்முக்கு போகணும்; இல்ல சைக்கிளிங், ஜாக்கிங் செய்யணும். இது தேவையா…?” என்றார்.

அதற்குள் கடை உரிமையாளர், “என்ன கேட்கப் போறீங்க?” என்று அருகில் வந்தார்.

“மாவு மிசின் இரைச்சல், நெடி 5 நிமிடம்கூட எங்களால தாங்க முடியல. நாள் முழுக்க எப்படி வேலை பார்க்கிறீங்க” என்றோம்.

“அதெல்லாம் பழகிவிட்டது. மொதல்ல வேலையை முடிக்கணும். நெடி, இரைச்சலெல்லாம் நான் எங்கே கவனிப்பது?” என்றார்.

வாடிக்கையாளர் கூட்டம் கொஞ்சம் குறைந்தவுடன் அவரிடம் “ஒரு தொழிலாக உங்களால் இதைத் தொடர்ந்து நடத்த முடிகிறதா? ஏதும் பிரச்சினை இல்லையா?” என்றோம்.

“இந்தத் தொழில் எங்க அப்பா கொடுத்த சொத்து. தாத்தா, எண்ணெய் செக்கு வைத்திருந்தவர். இத்தொழில் எங்கள் குடும்பத்து கவுரவம். 40 வருஷமா இந்தத் தொழில செஞ்சுதான் பையன மெக்கானிக் படிக்க வச்சேன். இப்போ சொந்த வீட்டோடு இருக்கிறான்.

தினமும் கடைய திறக்கும்போது, 1000 ரூபாய்க்காவது அரைக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்வேன். 50 கஸ்டமர்கள் வந்தால் போதும். அரை கிலோ, ஒரு கிலோன்னு சராசரியாக ஆளுக்கு 30 ரூபாய் வீதம் வந்தாலே என் பொழப்பு போகும். சீசனுக்கு தகுந்தாற்போல்தான் வேலை. தீபாவளின்னா கூட்டம் அதிகமா வரும். சீர் வரிசை, பலகாரம், முறுக்கு, அதிரசம் என அவுங்கவுங்க தேவைக்கேற்ப அரைப்பாங்க. விஜயதசமி வந்தால் அய்யர்மார் நிறையபேர் வருவாங்க. சீடை, முறுக்கு, தட்டு மாதிரியான பலகாரங்களுக்கு அரைச்சிப் போவாங்க.

மிளகாய், தனியா (மல்லி), கறிவேப்பிலை, கடுகு, வெந்தயம், துவரம் பருப்பு, சோம்பு, சீரகம், அரிசி, உளுந்து ஒவ்வொன்றையும் தனித்தனியா இளம் வறுவலா வறுத்து அரைச்சா, அதோட சுவையே தனிதான்.

ஆடி மாதம் அம்மன் கோயில்களில் கூழு ஊற்றுவதற்கு கேழ்வரகு அதிகம் வரும். ஆனால் மழைக்காலமுன்னா வேலையிருக்காது, கடையில காத்துதான் வரும். அப்போ 300 ரூபா சம்பாதிப்பதே பெரும்பாடு. தண்டலுக்குக் கடன் வாங்கித்தான் வாடகை, கரண்ட் பில்லுன்னு சமாளிப்போம். ஆண்டுக்கு 6 மாதம் இப்படியும் அப்படியும் இருக்கும். சில நேரம், சிறு வியாபாரம் செய்றவங்க 10, 20 கிலோன்னு மொத்தமா அரைச்சி போவாங்க. அரிசி சேமியா, சர்க்கரை, கடல பருப்பு மாவு இப்படி ரவா லட்டிலிருந்து புட்டு வரைக்கும் பாக்கெட் போட்டு விக்கிறவுங்க வருவாங்க.

இதிலும் சில சிரமம் இருக்கத்தான் செய்யுது. 2 கிலோவ 1.5 கிலோன்னு சொல்வாங்க. மல்லுகட்டி அவர்களிடம் காசு வாங்குவது பெரும்பாடாகி விடும். பத்து இருபத மிச்சப்படுத்தி வீடா கட்டப் போறாங்க; ஏதோ வீட்டுக்கு கொஞ்சம் காய்கறி, குழந்தைகளுக்கு திண்பண்டமுன்னு வாங்கிப் போவாங்க. பாவம் என்ன செய்யிறது! ஆனால், அதிகமாக ஏமாத்துனா விடமாட்டேன். எடை மிசின்ல வெயிட் போட்டு திருப்பி அனுப்பி விடுவேன்.

இந்த நெடியிலும் சத்தத்திலும் எப்படித்தான் நிற்கிறீர்களோ என வாடிக்கையாளர்களே அலுத்துக்கொள்வார்கள். வயிறுன்னு ஒன்னு இருக்கிறதே என்று சிரிப்பேன். உண்மையில் இந்த நெடியும் இரைச்சலும் என் உடம்புக்கு உரமாகத்தான் இருக்கு. இதுவரை எந்த நோய் நொடியும் வந்ததில்லை. மசாலாத் தூள்களின் மனம் என் உடம்புக்கு போசாக்கு தருகிறதோ என்னவோ. நீங்கள்லாம் செய்து சாப்பிட்டாத்தான் மணம். நான் வாசனை புடிச்சாலே போதுமே” என்று சிரித்தார்!

இங்கு, மிளகாய்க்கு தனி மிசின்; அரிசி மாவு அரைக்க தனி மிசின்; பருப்பு, நவ தானியம், கோதுமை, கேழ்வரகு அரைக்க தனி மிசின். சீயக்காய் அரைக்கன்னு தனி.

இங்கு, மிளகாய்க்கு தனி மிசின்; அரிசி மாவு அரைக்க தனி மிசின்; பருப்பு, நவ தானியம், கோதுமை, கேழ்வரகு அரைக்க தனி மிசின். சீயக்காய் அரைக்கன்னு தனி. ஒரே மிசினுல அரைச்சா, அரிசி மாவு கலராகிடும். ருசியும் போயிடும். இதை ஓட்டுவதற்கு 10 எச்பி மோட்டர்கள் தேவை. 3 பேஸ் பவர் இருந்தால்தான் சுணக்கமில்லாமல் வேலை நடக்கும்.

நாளொன்று 1000 ரூபாய்க்கு அரைத்தால் கரண்டு, வாடகைக்குன்னு மேல் செலவு 400 ரூபாய் எடுத்து வைக்கணும். மிசின் பிளேட் அடிக்கடி தேஞ்சிடும். ஒரு மிசினுக்கு 2 பிளேட் வேணும். அதை சாணை பிடிக்க 400 ரூபா. வேலையைப் பொருத்து ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவ, இல்ல ரெண்டு தடவ செலவு வைக்கும். அரைக்கிற வருமானத்துலதான் இதெல்லாம் பாக்கணும்.

 

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

மாவு மிசின்காரங்களுக்கு சாதாரணமா வாடகைக்கு கடை கிடைக்கிறதில்ல. மாடி வீடும் ஆகாது. ஒரே சத்தமுனு சண்டைக்கு வருவாங்க.

இந்தத் தொழில்ல நான்தான் கடைசி. இந்தத் தலைமுறை பசங்க யாரும் விரும்புறதில்ல. இதெல்லாம் ஒரு வேலையான்னு ஓடுறாங்க” என்று சோகங்கலந்த சிரிப்போடு மிளகாயை மிசினில் கொட்டினார்.

ரன்வே பெல்ட் சுற்றியது. நெடியும் இரைச்சலும் மேலோங்கியது. இப்போது மட்டும் அந்த இரைச்சல், வயதான கிழவனின் தொடர் இருமலை ஒத்திருந்தது.

விடுதி பணிப்பெண் : ஒரு மாசத்துக்குத் தேவையான மிளகாத் தூளை அரைச்சு வச்சிப்போம். ஹாஸ்டல்ல தங்கியிருக்கவங்க இதத்தான் விரும்பி கேக்குறாங்க.

பாக்கெட் மசாலா வாங்கி சாப்பிட்டா வயிறு கெட்டுப் போகும். அதில் என்னென்ன போடுறாங்கன்னே தெரியாது. கண்ணால பாக்குறதிலேயே ஆயிரத்தெட்டு கலப்படம். அரைத்து பாக்கெட்டில் கொடுத்தால் ஒழுங்காகவா இருக்கும்?

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் !

1

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் மோடியின் தேசிய கல்விக் கொள்கை 2019 – ஐ எதிர்த்து போராட்டம் !

ன்பார்ந்த மாணவர்களே, பெற்றோர்களே, பேராசிரியர்களே !

மோடி தற்போது கொண்டுவந்திருக்கும் தேசிய கல்வி கொள்கை 2019 இது பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமையை பறிக்க கூடிய வகையில் உள்ளது. இதனை, எதிர்த்து தமிழகம் முழுக்க கல்வியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர் அமைப்புகள் என தொடர்ச்சியாக கருத்தரங்கம் – அரங்க கூட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் மோடி அரசு கல்வி கொள்கை சம்பந்தமாக இரகசிய கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அதையும் பல்வேறு அமைப்புகள் எதிர்த்து போராடி தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால் இதனை ஒவ்வொன்றாக மறைமுகமா நடைமுறைப்படுத்தி வருகிறது அரசு. அதில் நீட், கேட் எக்ஸிட் ,TANCET, NTA என பல்வேறு தேசிய தகுதித் தேர்வு வைத்து அதனை நடைமுறையில் படிப்படியாக கொண்டுவருவது.

மேலும் தற்போது இந்திய பட்ஜெட் தாக்கலின்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த கல்விக் கொள்கையை அமுல் படுத்தும் விதமாக 400 கோடி ஒதுக்கியது. ஆகிய இந்த நடவடிக்கைகள் ஒட்டுமொத்த இந்திய மாணவர்களுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும்.

ஏனென்றால் ஜூலை 31 வரை கருத்து சொல்லலாம் என சொல்லிவிட்டு, நடைமுறையிலோ இதனை அமுல்படுத்தி பார்ப்பன சூழ்ச்சி புத்தியை காட்டி வருகிறது ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பல்.

கல்வியை முழுவதும் தனியார்மயப்படுத்தவும், காவிமயப்படுத்தக் கூடிய வகையில் இருக்கிறது தே.க.கொ 2019. இட ஒதுக்கீடு, உதவித்தொகை என எல்லாவற்றையும் ஒழித்து கட்டக்கூடிய வகையிலும்; 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு வைத்து ஏழை மாணவர்களை வெளியே தூக்கி எறியவும் போகிறது.

படிக்க :
♦ திருச்சி : கள்ளத்தனமாக நடத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை கருத்துக் கேட்புக் கூட்டம் முறியடிப்பு !
♦ தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிப்போம் ! – ஒரு நாள் கருத்தரங்கச் செய்திகள் படங்கள்

பல்கலைக்கழக  மானியக் குழுவை கலைத்துவிட்டு, உயர்கல்வி ஆணையம் அமைகிறது; இதன் தலைவர் பிரதமர் மோடி ஆவார். கல்வியாளர்களுக்கு இதில் இடமில்லை, இவ்வளவு ஆபத்து நிறைந்த நயவஞ்சகமான கல்விக்கொள்கை கூடாது.

இதனை வலியுறுத்தியும், தேசிய கல்விக் கொள்கை 2019-யை நிராகரிக்க வேண்டும் என்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் கடந்த 24.07.2019 அன்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை பேராசிரியர்களும் ஆதரித்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் தொடர் போராட்டம் நடக்கும் என அறிவித்து மாணவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கடலூர் மாவட்டம். தொடர்புக்கு : 97888 08110