Saturday, June 20, 2026
முகப்பு பதிவு பக்கம் 837

தெலுங்கானா : புதைந்துள்ள உண்மைகள்

vote-012இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது, தெலுங்கானா தனி மாநில விவகாரம். தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவின் தொடர் உண்ணாவிரதம், உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம், உயிர்த் தியாகங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, காங்கிரசு தலைவி சோனியாவின் பிறந்த நாளான டிசம்பர் 9-ஆம் தேதியன்று, தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்க கொள்கையளவில் ஒப்புக் கொண்டது, ஆளும் காங்கிரசு கூட்டணி அரசு. இதை எதிர்த்து ஆந்திராவின் பிற பகுதிகளில் போராட்டங்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல், அதைத் தொடர்ந்து, ஒருமித்த கருத்து உருவாகும்வரை உடனடியாகத் தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கப் போவதில்லை என்று காங்கிரசு ஆட்சியாளர்கள் அடித்த பல்டி, அதை எதிர்த்து தெலுங்கானாவில் மீண்டும் போராட்டம் – என ஆந்திர மாநிலம் தொடர் போராட்டங்களால் நிலைகுலைந்து போயுள்ளது.

+++

கடலோர மாவட்டங்கள், ராயலசீமா, தெலுங்கானா என மூன்று பெரும் பிராந்தியங்களைக் கொண்டதுதான் ஆந்திரப் பிரதேசம். இதில் தெலுங்கானா ஒப்பீட்டளவில் பெரியது. வாரங்கல், அதிலாபாத், கம்மம், மெஹ்பூப் நகர், ரங்கா ரெட்டி, கரீம் நகர், நிஜாமாபாத், மேடக், நலகொண்டா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிதான் தெலுங்கானா என்றழைக்கப்படுகிறது. முன்பு நிஜாம் சமஸ்தானமாக இருந்த காரணத்தால், தெலுங்கானாவில் பேசப்படும் தெலுங்கில் உருது கலப்பு அதிகமாக உள்ளது. கம்யூனிஸ்டுகள் தலைமையிலான மாபெரும் தெலுங்கானா பேரெழுச்சியைத் தொடர்ந்து, போலி சுதந்திரத்துக்குப் பின்னர் கடுமையான அடக்குமுறைக்குப் பிறகு, தெலுங்கானா சமஸ்தானம் இந்தியாவுடன் கட்டாயமாக இணைக்கப்பட்டது.

காந்தியவாதியான பொட்டி சிறீராமுலு, தெலுங்கு பேசும் மக்களுக்கான தனி மாநிலம் கோரி உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்ததன் விளைவாக, அன்று சென்னை ராஜதானியில் இருந்த ஆந்திரப் பிரதேசம், மொழிவழி மாநிலமாக 1953-இல் பிரிக்கப்பட்டது. அப்போது கர்நூல்தான் அதன் தலைநகர். பின்னர், மொழிவாரி மாநிலம் என்ற அடிப்படையில் தெலுங்கு மொழி பேசும் மக்களைக் கொண்ட தெலுங்கானாவையும் உள்ளடக்கிய ஆந்திரப் பிரதேசமாக 1956-இல் ஒருங்கிணைக்கப்பட்டது. தெலுங்கானா பிராந்தியத்தைக் கொண்ட நிஜாம் சமஸ்தானத்தின் தலைநகராக இருந்த ஐதராபாத், ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரானது. ஒட்டுமொத்த ஆந்திராவின் மக்கள்தொகையில் நான்கு சதவீதம் மட்டுமே உள்ள ரெட்டிகளும் சவுத்திரிகளும் தெலுங்கானா பகுதியில் அரசாங்கத்தால் குடியமர்த்தப்பட்டனர். நிலப்பிரபுக்களான இவர்களின் ஆதிக்கம், அரசாங்கப் பதவிகளில் இவர்கள் பெரும்பாலானவற்றைக் கைப்பற்றிக் கொண்டதன் காரணமாக, தெலுங்கானா பிராந்திய நடுத்தர வர்க்கத்தினர் ஆந்திராவுடன் இணைய மறுத்து, தனி மாநிலமாக்கக் கோரினர்.

அதன் பின்னர், 1961 தேர்தலுக்குப் பிறகு உருவாகும் அம்மாநில சட்டசபை, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆந்திரப் பிரதேசத்தில் இணைவதாகத் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும், தெலுங்கானா பிராந்தியத்தை ஆந்திரப் பிரதேசத்துடன் இணைப்பது; இல்லையேல், தனிமாநிலமாக நீடிக்க அனுமதிப்பது என்று அன்றைய மாநில மறுசீரமைப்புக் கமிஷன் பரிந்துரை செய்தது. அப்பரிந்துரையையும் இதர எழுதப்படாத ஒப்பந்தங்களையும் மைய அரசு கைகழுவியது. இதனால் தெலுங்கானா பிராந்திய நடுத்தர வர்க்கத்தினர் அதிருப்தியடைந்தனர். தனி மாநிலக் கோரிக்கை அவ்வப்போது குமுறலாக வெளிப்பட்டு வந்தது.

ஆந்திராவின் பிற பகுதிகளைச் சேர்ந்த நிலப்பிரபுக்கள்-முதலாளிகளின் ஆதிக்கம், கல்வி – வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவிகளில் தெலுங்கானா நடுத்தர வர்க்கத்துக்கு உரிய பங்கு கிடைக்காமை ஆகியவற்றினால் ஏற்பட்ட குமுறல்களின் காரணமாக 1969-இல், தெலுங்கானா பகுதியில் மாணவர்கள்-இளைஞர்கள் தனித் தெலுங்கானா மாநிலம் கோரிப் போராட்டங்களை நடத்தினர். ஏறத்தாழ 360 பேர் அப்போராட்டத்தில் உயிரிழந்தனர். கடும் அடக்குமுறைக்குப் பிறகு, அந்தப் போராட்டம் படிப்படியாக நீர்த்துப் போனது.

தனியார்மய-தாராளமயமாக்கலைத் தொடர்ந்து கல் குவாரி, நிலக்கரி மற்றும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள், வீட்டுமனைத் தொழில், தகவல் தொழில்நுட்பத்துறை, சேவைத் துறை, சினிமாத் துறை, காடுகள் முதலானவற்றில் தெலுங்கானாவுக்கு வெளியேயுள்ள பிற மாவட்டங்களின் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்களின் ஆதிக்கமும் சூறையாடலும் தெலுங்கானா பிராந்தியத்தில் தீவிரமடைந்தன. ஆடம்பர, உல்லாச, களிவெறியாட்டங்களில் இக்கும்பல் கொட்டமடித்தது. இப்புதுப் பணக்கார கும்பலின் வாரிசுகள் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவிகளைப் பெருமளவில் கைப்பற்றிக் கொண்டனர். தெலுங்கானா நடுத்தர வர்க்கம் அவர்களோடு போட்டியிட இயலாமல் குமுறியது.

அதன் எதிரொலியாக, தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகிய சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற புதிய கட்சி 2001-இல் உருவாகியது. தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்க வேண்டும் என்பதே இக்கட்சியின் மையமான கோரிக்கை.

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவைத் தொடர்ந்து, காங்கிரசில் நிலவும் கோஷ்டிச் சண்டையைச் சாதகமாக்கிக் கொண்டு, தோல்வியடைந்து கிட்டத்தட்ட முடமாகிவிட்ட தமது கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்துடன், தனித் தெலுங்கானா கோரி கடந்த நவம்பர் இறுதியிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், சந்திரசேகர ராவ். அதை ஆதரித்து மாணவர்களும் இளைஞர்களும் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். மாணவர்கள் மீதான போலீசின் கண்மூடித்தனமான தடியடித் தாக்குதலைத் தொடர்ந்து ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், வழக்குரைஞர்கள், அறிவுத்துறையினர் – என அம்மாநிலமெங்கும் போராட்டத்தை ஆதரித்து நடுத்தர வர்க்கத்தினர் அணிதிரண்டனர். தனித் தெலுங்கானா மாநிலம் கோரி சிலர் தற்கொலை செய்து கொண்டதும், உணர்ச்சிமிகு போராட்டமாக அது மாறத் தொடங்கியது.

இதற்கு மேலும் தெலுங்கானா தனிமாநிலக் கோரிக்கையைத் தட்டிக் கழித்தால், தெலுங்கானா பிராந்தியத்தில் காங்கிரசு செல்லாக்காசாகிவிடும் என்பதாலும், இதேபோல நாட்டின் இதர பகுதிகளிலும் தனி மாநிலம் கோரி போராட்டங்கள் பெருகத் தொடங்கிவிடும் என்ற அச்சத்தாலும், போராட்டத்தைச் சாந்தப்படுத்தி நீர்த்துப் போக வைக்கும் உத்தியுடனும் காங்கிரசு ஆட்சியாளர்கள் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை கொள்கையளவில் ஏற்பதாக அறிவித்தனர். தனி மாநில அறிவிப்பைத் தொடர்ந்து சந்திரசேகர ராவ், உண்ணாவிரதத்தைக் கைவிட்டதோடு, போராட்டங்களை நிறுத்திக் கொள்வதாக அறிவித்து, 2014-க்குள் தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கித் தருமாறு மைய அரசிடம் கோரினார்.

ஆனால்,தெலுங்கானா மாநிலம் உருவானால், அது இன்றைய ஆந்திரப் பிரதேசத்துக்கு இழப்பாக இருக்கும், தலைநகரான ஐதராபாத் தெலுங்கானாவுக்குப் போய்விடும் என்றெல்லாம் வாதங்களை வைத்து, தெலுங்கானா கோரிக்கையை ஆந்திராவின் பிற பகுதிகளில் உள்ள பெருமுதலாளிகளும், புதுப் பணக்கார நில மாஃபியா-சுரங்க மாஃபியாக்களும் எதிர்க்கின்றனர். தெலுங்கானா பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவதும் இவர்கள்தான். ஐதராபாத் மற்றும் தெலுங்கானா பிராந்தியத்திலுள்ள பெரு நகரங்களில் சினிமாத் துறை, வீட்டுமனைத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை முதலானவற்றில் கோடிகோடியாய் முதலீடு செய்து சூறையாடுவதும் இந்தக் கும்பல்கள்தான். இவர்கள்தான் இப்போது தெலுங்கானா எதிர்ப்புப் போராட்டத்தை பின்னணியிலிருந்து இயக்குகிறார்கள்.

அரசியல் சட்டப்படி, புதிய மாநிலத்தை உருவாக்குவதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதன் பிறகு, அரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று, கருத்தறிவதற்காக அம்மாநிலச் சட்டமன்றத்துக்கு அனுப்பப்பட வேண்டும். சட்டமன்றத்தின் கருத்தை நாடாளுமன்றம் ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் காங்கிரசு ஆட்சியாளர்களோ, இத்தீர்மானம் ஆந்திர சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒருமித்த கருத்தின்படி முடிவு செய்யப்படும் என்று கூறுகின்றனர். காங்கிரசின் நிதியாதாரமாக உள்ள புதுப் பணக்கார மாஃபியா கும்பலைச் சாந்தப்படுத்தவும், ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று காரணம் காட்டி,மீண்டும் இழுத்தடிக்கவுமே காங்கிரசு கயவாளிகள் முயற்சிக்கின்றனர். இதனாலேயே, தனித் தெலுங்கானாவை எதிர்த்து நடக்கும் போராட்டங்களைக் காரணம் காட்டி, தீர்மானம் நிறைவேறாத வகையில் ஆந்திர சட்டமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க மைய அரசு கொள்கை அளவில் இசைவு தெரிவித்துள்ளதன் எதிரொலியாக, பல்வேறு பெரிய மாநிலங்களிலும் இத்தகைய கோரிக்கை எழுந்துள்ளது. வன்னியர் நாடு என்ற கோரிக்கையுடன் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று முன்பு கோரி வந்த பா.ம.க.வின் ராமதாசு, இப்போது மீண்டும் சென்னையைத் தலைநகராகக் கொண்ட வட தமிழ்நாடு என்றும், மதுரையைத் தலைநகராகக் கொண்ட தென் தமிழ்நாடு என்றும் பிரிக்க விரும்புவதாக சாதிய அடிப்படையில் அறிவித்துள்ளார். இந்திய அரசியல் சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் கடந்த 50 ஆண்டுகளில் 12 புதிய மாநிலங்கள் உருவாகியுள்ளதைக் காட்டி, உ.பி. மாநிலத்தை மூன்றாகப் பிரிக்கக் கோருகிறார், மாயாவதி. உ.பி.-பீகாரிலிருந்து போஜ்பூர், அசாமிலிருந்து போடோலாந்து, உ.பி.-ம.பி.யிலிருந்து பண்டேல்கண்ட், மகாராஷ்டிராவிலிருந்து மரத்வாடா மற்றும் விதர்பா, ஒரிசாவிலிருந்து மகா கவுசல், பீகாரிலிருந்து மிதிலாஞ்சல், ராஜஸ்தானிலிருந்து முரு பிரதேஷ், உ.பி.யிலிருந்து பூர்வாஞ்சல், குஜராத்திலிருந்து சௌராஷ்டிரா – எனத் தேசிய இன அடிப்படையில் அல்லாமல், ஒரே இனம் – ஒரே மொழி பேசும் மாநிலத்திலேயே, பிராந்திய அடிப்படையில்-சாதிய அடிப்படையில், மொழிச் சிறுபான்மையினர் அடிப்படையில் தனி மாநிலக் கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன.

முதலாளித்துவ அரசியல் பொருளாதாரக் கட்டுமானத்தில், நிர்வாகத்தைத் துறை வாரியாகப் பிரிப்பதும், அது போல மாநிலங்களையும், மாவட்டங்களைப் பிரிப்பதும் நடக்கக்கூடியதுதான். அவ்வாறு மாவட்டங்களைப் பிரிக்கக் கோரி மக்கள் போராடுவதை ஜனநாயகக் கோரிக்கையாகக் கருத முடியாது. பெரம்பலூர் மாவட்டத்துடன் அரியலூரைச் சேர்க்கக் கூடாது என்று அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டமும், செங்கல்பட்டில் இருந்து மாவட்ட நீதிமன்றங்களை காஞ்சிபுரத்துக்கு மாற்ற வேண்டும், மாற்றக் கூடாது என்று அந்தந்த பகுதிவாழ் மக்கள் நடத்திய போராட்டமும், அரசுத் திட்டங்கள்-சலுகைகளைப் பெறுவதற்கான பொருளாதாரப் போராட்டம்தானே தவிர, அது முற்போக்கான – ஜனநாயகக் கோரிக்கையுடன் நடத்தப்படும் போராட்டமல்ல.

இப்படித்தான் தெலுங்கானா தனி மாநிலப் போராட்டத்தையும் பார்க்க முடியும். பிராந்திய உணர்விலிருந்து எழும் பொருளாதாரவாதக் கோரிக்கைதான் இது. ராயலசீமா மற்றும் கடற்கரையோர மாவட்டங்களைச் சேர்ந்த புதுப் பணக்கார மாஃபியா கும்பல்களின் ஆதிக்கம்-சூறையாடலைக் கண்டு குமுறி, அவர்கள் இடத்தை தாங்கள் பிடிக்க வேண்டும் என்ற ஏக்கத்திலிருந்துதான் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கைக்கான போராட்டம் நடக்கிறது. தெலுங்கானா பிராந்தியத்தில் வீட்டுமனை, கல் குவாரிகள், கனிமச் சுரங்கங்கள், காட்டுவளம் முதலானவற்றைச் சூறையாடி ஆதிக்கம் செலுத்திவரும் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்களுக்கு எதிராக தெலுங்கானா பிராந்திய மக்கள் இதுவரை எந்தவொரு போராட்டத்தையும் கட்டியமைக்கவில்லை. மாறாக, தாங்கள் வளர்ச்சித் திட்டங்களில் புறக்கணிக்கப்படுவதாக, பின்தங்கிய நிலையில் இருத்தி வைக்கப்பட்டுள்ளதாகவே நடுத்தர வர்க்கம் குமுறுகிறது. உயர்கல்வி,-வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவிகள் முதலானவற்றில் தாங்களும் அமர வேண்டும் என்ற வேட்கையே தனி மாநிலக் கோரிக்கையாக எழுந்துள்ளது.

ஆனால் மாவோயிஸ்டுகளோ, அரசுக்கு எதிரான எந்தப் போராட்டத்தையும் நாம் ஆதரிக்க வேண்டும், அது முற்போக்கான போராட்டம் என்று கருதுகின்றனர். போராட்டத்தின் கோரிக்கையைப் பற்றிப் பரிசீலிக்காமல், அப்போராட்டத்தைப் போர்க்குணமிக்கதாக மாற்றுவதன் மூலம், அதை புரட்சிகரப் போராட்டமாக வளர்த்தெடுக்க முடியும் என்றும் குருட்டுத்தனமாக நம்புகிறார்கள். ஏற்கெனவே, காலிஸ்தான் போராட்டத்தை இந்த நோக்கத்தில்தான் ஆதரித்தனர். பின்னர், ’80-களில் தனித் தெலுங்கானா போராட்டத்தை முன்னெடுப்பது என்ற பெயரில் தெலுங்கானா பகுதியில் சில சாகசவாத நடவடிக்கைகளிலும் இறங்கினர். இப்போது நடந்த தனித் தெலுங்கானா போராட்டத்தையும் இந்த அடிப்படையிலேயே ஆதரித்துப் பத்திரிகைகளுக்குப் பேட்டியளிக்கின்றனர்.

ஓட்டுக்காக, சந்தர்ப்பவாதமாக பல கட்சிகள் தனி மாநிலக் கோரிக்கையை ஆதரிக்கின்றன. தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கைக்கான போராட்டத்தை இந்துவெறி பா.ஜ.க.வும் ஆதரிக்கிறது. அது, ஒரே மொழி பேசும் ஒரு தேசிய இனத்தைக் கொண்ட மாநிலத்தை, நிர்வாக வசதிக்காகப் பிரிப்பதில் தவறில்லை என்று வாதிடுகிறது. இதன்மூலம் நிர்வாகம் எளிமையானதாகவும் சிறப்பாகவும் அமையும் என்கிறது. ஆனால் பா.ஜ.க.வின் நோக்கம் வேறானது. ஒரே மொழி பேசும் ஒரே இனத்தைச் சேர்ந்த மாநிலம் என்றால், அங்கு தமிழ்நாடு போல தேசிய இனப் போராட்டங்கள் எழும்; தேசிய ஒருமைப்பாடு கந்தலாகிப் போகும்; ஒரே இனத்தை பல மாநிலங்களாகக் கூறு போட்டால், அத்தகைய போராட்டங்கள் எழுவது நீர்த்துப்போகும். எனவே, தேசிய இன-மொழி அடையாளங்களுக்கு அப்பால், இந்துத்துவ அடிப்படையில் “தேசிய’ ஒருமைப்பாட்டை நிறுவவே அது விழைகிறது. காங்கிரசும் இதே நோக்கத்தைத்தான் கொண்டுள்ளது.

மேலும், பெரிய மாநிலம் என்றால் பிராந்திய கட்சிகள் செல்வாக்கு செலுத்தி மைய அரசை ஆட்டிப் படைக்கின்றன. எனவே, மாநில அளவில் செல்வாக்கு பெற்றுள்ள பிராந்திய கட்சிகள் ஆட்சியதிகாரத்தில் கூடுதல் பங்கு கேட்டு நிர்ப்பந்திப்பதைத் தடுக்க, சிறிய மாநிலங்களாகப் பிரிக்கலாம் என்பதே ராகுல் காந்தியின் பிரித்தாளும் சூழ்ச்சித் திட்டம். இதனால்தான் வெள்ளோட்டமாக இப்போது தெலுங்கானாவைப் பிரிப்பதாக அறிவித்து, விளைவுகளைப் பரிசீலித்து, அடுத்த கட்டமாக பிற மாநிலங்களையும் பிரிக்க மைய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்போல, மொழி-இன அடிப்படையில் அல்லாமல், நிர்வாக அடிப்படையிலான பிரிவினை கொண்டதாக, பெரிய மாநிலங்களை மாற்றியமைக்கும் நோக்கத்துடன்தான், தற்போது மாநில மறுசீரமைப்புக் கமிசன் உருவாக்கப்படுகிறது.

மறுபுறம், ஒரே தேசிய இனத்தைக் கொண்ட பெரிய மாநிலம் என்றால், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் மறுகாலனியாக்கச் சூறையாடலுக்கான ஒப்பந்தங்களைப் போடுவதில் பல சிக்கல்கள் எழுகின்றன. பிராந்திய நலன்களை முன்வைத்து, அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க்கட்சிகள் இத்தகைய ஒப்பந்தங்களை எதிர்த்து நிறைவேற்ற முடியாமல் இழுத்தடிக்கின்றன. சிறிய மாநிலங்கள் என்றால், பின்தங்கிய மாநிலத்தின் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் எதிர்க்கட்சிகளை வாயடைக்கச் செய்து, இத்தகைய மறுகாலனியச் சூறையாடலுக்கான ஒப்பந்தங்களை அதிக சிக்கல் இல்லாமல் நிறைவேற்ற முடிகிறது. இதற்கு, சிறிய மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட ஜார்கண்டும், சட்டிஸ்கரும் சான்றுகளாக உள்ளன. ஏகாதிபத்தியவாதிகள் இந்த நோக்கத்தோடுதான் நிர்வாக வசதிக்காக சிறிய மாநிலங்களாகப் பிரிப்பதை ஆதரிக்கின்றனர். ஏகாதிபத்தியவாதிகளின் விருப்பத்தையே தேசியக் கட்சிகளும்எதிரொலிக்கின்றன. இந்த உண்மைகளைக் காண மறுத்து, தனி மாநிலக் கோரிக்கையை குருட்டுத்தனமாக ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அடிப்படையிலேயே தவறானதாகும்.

எனவே தற்போது தனி தெலுங்கானா கோரி நடக்கும் போராட்டம், பொருளாதாரவாதக் கோரிக்கைதானே தவிர, அது தேசிய இன உரிமைக்கான போராட்டமே அல்ல. அரசுக்கு எதிரான போராட்டம், மக்களின் நீண்டகால விருப்பம் என்பதை வைத்து அதை முற்போக்கான-ஜனநாயகக் கோரிக்கையுடன் நடக்கும் போராட்டமாகவும் கருத முடியாது. அதேசமயம், தெலுங்கானா பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தி சூறையாடிவரும் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்கள், தெலுங்கானா பிரிவினையை எதிர்த்து, ஒரே ஐக்கியப்பட்ட ஆந்திரா என்ற கோரிக்கையுடன் நடத்தும் எதிர்ப்போராட்டமும் நியாயமானதல்ல. அரசாங்கப் பதவிகளுக்கும் சுரண்டலுக்கும் ஆதிக்கத்துக்குமான போட்டாபோட்டியில், பாட்டாளி வர்க்கம் இதில் எந்தத் தரப்பையும் ஆதரிக்க முடியாது.

– புதிய ஜனநாயகம், ஜனவரி, 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்

வரதட்சணைக்காக நிர்வாணப்படத்தை வைத்து மிரட்டிய வக்கிரக் கணவன்!!

211

vote-012ஞாயிற்றுக் கிழமை (14.02.10) டைம்ஸ் ஆஃப் இந்தியாவைப் புரட்டிக் கொண்டிருந்த போது அந்தச் செய்தி கண்ணில் தென்பட்டது.

செல்பேசி செக்ஸ் முறைகேடுகள் மலிந்து விட்ட நாட்டில் அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக சொந்த மனைவியை நிர்வாணப் படமெடுத்து வரதட்சணைக்காக மிரட்டியிருக்கிறான் ஒரு சென்னைக் கணவன்.

26வயது சதீஷ் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) டிசம்பர் 2008இல் திருமணம் செய்து கொண்டான். பொன்னும், பொருளும், பணமுமாய் 20 இலட்சம் வரை வரதட்சணையாக பெண் வீட்டிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகும் வரதட்சணை வெறியடங்காத சதீஷ் வீட்டார் அந்தப் பெண்ணை மேலும் கொண்டு வருமாறு வற்புறுத்தியிருக்கின்றனர். இதற்காகவே அந்தப்பெண்ணுடன் தாம்பத்ய உறவு கூட வைக்காமல் இருந்திருக்கிறான் அந்தக் கணவன்.

பொறுமையிழந்த அந்தப்பெண் தனது பெற்றோரிடம் இந்தக் கொடுமைகளை சொல்லி அழுதிருக்கிறாள். அவர்களும் இது குறித்து சதீஷ் வீட்டில் நியாயம் கேட்டிருக்கின்றனர். இதற்குப் பிறகு கொடுமை அதிகரித்ததே தவிர குறையவில்லை. சதீஷும் அவனது சகோதரர்களும் அந்தப் பெண்ணை சித்திரவதை செய்திருக்கின்றனர். சதீஷின் அப்பா மருமகளிடம் எல்லை மீறி நடக்க முயற்சித்திருக்கிறார். இதை கணவனிடம் புகாராகச் சொல்லியும் அவன் அதை சட்டை செய்யவில்லை.

இறுதியாக அந்தப் பெண்ணை தனியறையில் அடைத்து சன்னல் வழியாக உணவு மட்டும் கொடுத்து, அவளது நிர்வாணப் படங்களை நண்பர்கள் மூலம் வெளியிட்டு நாசப்படுத்துவேன் என்று சதீஷ் மிரட்டியிருக்கிறான். இதற்கு மேலும் பொறுமை காப்பதில் பலனில்லை என்று அந்தப் பெண் அந்தச் சிறையிலிருந்து எப்படியோ தப்பிவிட்டு தனது வீட்டுக்குக் கூட போகாமல் நேராக போலீசிடம் போய் புகார் செய்திருக்கிறாள். போலீசும் வரதட்சணை பிரிவு, பெண்ணை அடித்து துன்புறுத்துதல் முதலான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் சதீஷையும் அவனது உறவினர்களையும் தேடிவருகிறார்கள்.

இதுவரை இந்தச்செய்தியை படித்துவிட்டு செல்லும் ஆண்கள் சதீஷின் வக்கிரத்தை எல்லோரையும் போல் கண்டித்துவிட்டு மறந்துவிடக் கூடும். ஆனால் தம்முள்ளும் சதீஷ் அளவுக்கு வக்கிரமாயில்லையென்றாலும் சற்று மென்மையான ஒரு சதீஷ் இருப்பான் என்பதை எத்தனை பேர் மறுக்க முடியும்?

ஊடகங்களில் சிறப்புத் தள்ளுபடி விற்பனை மூலம் காதலர் தினம் தனது பொருளாதார முக்கியத்துவத்தை உணர்த்தி விட்டுச் சென்று விட்டது. இந்து மதவெறியர்கள் வழக்கம் போல தாலிகளை வைத்து காதல் என்றால் ஆபாசம், மேலைநாட்டு வக்கிரமென்ற உதார்களும் நம்மில் பலர் பார்த்திருக்கக் கூடும். சாதிக்குள்ளே மணம் முடித்து இந்து மதத்தின் மேன்மையை காப்பாற்றுவது அவர்களது நோக்கம். ஆனால் அவர்களது நோக்கத்திற்குப் பங்கம் வராமல் பெற்றோர் பார்த்து முடிக்கும் சம்பிரதாய திருமணங்கள்தான் நாட்டில் அதிகம்.

காதலும் கூட சாதி மறுப்பு என்பதை விட சம தரத்திலான சாதி, வர்க்கம், அந்தஸ்து, பணம், வேலை எல்லாம் பார்த்துத்தான் நடக்கிறது என்பது வேறு விசயம். இதையே சாதிக்குள் நடத்தினால் அது நிச்சயிக்கப்பட்ட திருமணம். இந்த எழவுகளை பொருத்தம் பார்த்து எப்படியோ திருமணம் செய்து கொண்டு ஒழியட்டும். ஆனால் எனக்கு வரதட்சணை வேண்டாமென்று இத்தகைய திருமணங்களில் கூட செய்து காட்டலாமே?

தன்னை முற்போக்காளன், நல்லவன், புரட்சிக்காரனென்று அற்ப விசயங்களுக்காக சித்தரித்துக் கொள்ளும் இளைஞர்கள் கூட இந்த வரதட்சணையை வேண்டாமென்று மறுப்பதில்லை. அல்லது நாசுக்காக மொக்கையான காரணங்களைச் சொல்லி சமாளிக்கிறார்கள்.

மணம் முடிக்கும் பெண்களை ஆண்கள் ஆயுசு வரைக்கும் காப்பாற்றுவதற்காகத்தான் இந்த வரதட்சணையை பெண்ணின் தந்தை தரவேண்டுமென்று பாரம்பரிய விளக்கத்தை முதலில் சொல்வார்கள். இதன்படி பெண்ணென்பவள் சுமை. அல்லது மாடு. அந்த மாட்டிற்கு தீனியும், தண்ணீரும் கொடுத்து தொழுவத்தில் கட்டிவைப்பதற்குத்தான் அந்த தட்சணை. பதிலுக்கு அந்த மாட்டுப்பெண் சமையல், துவையல், இல்லப் பராமரிப்பு, விருந்தினர் உபசரிப்பு, குழந்தைகள் வளர்ப்பு, செவிலியர் வேலை, இரவில் தாசி வேலை எல்லாம் நேரத்திற்கு செய்யவேண்டும்.

இப்படி எல்லாவகையிலும் பெண்ணின் இரத்தத்தை அட்டைகள் போல உறிஞ்சிக்கொள்ளும் ஆணிணத்து புண்ணியவான்கள் என்றைக்காவது இந்த வேலைகளை செய்வதற்கு முன்வந்தது உண்டா? கிடையாது. போகட்டும். செய்யாத, செய்ய முடியாத, விரும்பாதா இந்த வேலைக்கு ஊதியம் கணக்கிட்டு பார்த்தால் ஒவ்வொரு கணவனும் முழு ஆயுளில் பல இலட்சங்களை செலவிட வேண்டியிருக்கும்.  குடும்பத்து வேலையை எல்லாம் பணத்தால் மதிப்பிட முடியாது என்று நொள்ளை பேசும் வீட்டின் பெருசுகள் திருமண நேரத்தில் வாங்கும் வரதட்சிணையின் மதிப்பை வைத்தே அந்தப் பெண்ணை அளவிடுவார்கள். கூடவே இந்த மதிப்பிட முடியாத வேலை செய்வதற்கு ஒரு பெண்ணோடு வரதட்சணையாக பெரும் சொத்தையும் பிடுங்குகிறோமே என்று எள்ளளவும் குற்ற உணர்வு கிடையாது.

அடுத்து இந்த வரதட்சணையை அந்த பெண்ணின் நன்மைக்காகத்தானே வாங்குகிறோம் என்று அளப்பார்கள். விசேசங்களுக்கு குடும்பத்தின் அந்தஸ்தை நிலைநாட்டும் அலங்காரக்கடை பொம்மையாக மருமகள் அவதரிக்க உதவும் நகைகள் மற்ற நேரத்தில் பீரோவில் தூங்கும். பெரும் செலவுகள் வரும்போது கணவனுக்கு கைகொடுப்பது அந்த நகைகள்தான். பின்னர் பெண் குழந்தை ஆளாகி மணமகளாக செல்லும்போது அந்த நகைகளும் புதிய தட்சணையாக செல்ல நேரிடும். இதைத் தவிர அந்த நகைகள் அந்தப் பெண்ணுக்கு ஒரு மயிரும் பலனளிப்பதில்லை.

“பையனை செலவு செய்து படிக்க வைத்திருக்கிறோம், அதனால் கை நிறைய சம்பளம் வாங்குகிறான், அப்படி உயர்ந்த இடத்திற்கு வாக்கப்பட வேண்டுமென்றால் வரதட்சணை கொடுப்பதுதானே முறை” என்று வியாபாரக் கணக்கு பேசுவார்கள். இல்லையென்றால் ஏழை பாழைகளைக் கல்யாணம் செய்யலாம் என்றும் உபதேசிப்பார்கள். காசுக்கேற்ற தோசை மாதிரி ஏழைகளும் ஏதாவது செலவழித்துத்தானே திருமணங்கள் செய்யவேண்டியிருக்கிறது. சமூகத்தில் வரதட்சணை என்பது அழிக்க முடியாத விதி என்று ஆகிவிட்டபோது ஏழை மட்டும் அதை மீறுவது எப்படி சாத்தியம்?

ஏற்கனவே கை நிறைய சம்பளம் வாங்கும் கபோதிகள் அத்தோடு திருப்தி அடையவேண்டியதுதானே? நியாயமான உழைப்பில் கல்விச் செலவை செய்திருந்தால் இந்த அநியாயமான தட்சணையை எதிர்பார்க்கத் தோன்றாது. ஊரைக் கொள்ளையடித்தோ, லஞ்சம் வாங்கியோ, முறைகேடுகள் செய்தோ செலவழித்திருந்தால் கண்டிப்பாக தட்சணை மூலம் எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்றுதான் தோன்றும். சுயநிதிக் கல்லூரிகளில் சில பல இலட்சங்கள் கொடுத்து சீட்டு வாங்கி டாக்டராகவோ, இன்ஜினியராகவோ குதிப்பவர்கள் திருமண வியாபாரம் மூலமே அதை சரிக்கட்டுகிறார்கள்.

இத்தகைய உயர் குடி ஆண் குதிரைகள் அதிகம் விலைபோகும் என்பது பெண்கள் விற்கபடும் சந்தையை வைத்தே உருவாக்கப்படுகிறது. மணமகளின் தந்தையும் ஊரைக் கொள்ளையடித்து வந்திருந்தால் தட்சணையை கணக்கு பார்க்காமல் கொடுப்பான். நேர்மையானவானாக இருந்தால் இருக்கும் சொத்துபத்துக்களை விற்றுவிட்டோ இல்லை கந்து வட்டிக்கு கடன்வாங்கியோ வரதட்சணை கொடுப்பதற்கு தயாராக இருப்பான். இதன் மூலம் அந்த தந்தை தனது எஞ்சிய வாழ்நாட்களை ஆயுள்கைதி போல கழிப்பதற்கு தயாராவார்.

இதில் 100பவுனுக்கு ஒரு பவுன் குறைந்தால் கூட போதும், பையன் வீட்டார் அந்தப் பெண்ணை ஏமாற்றுக்காரியாகவே நடத்துவார்கள். தமிழகத்தின் ஏழை மாவட்டங்களில் பெண் சிசுக் கொலை என்பது இந்த வரதட்சணை அநீதியின் காரணமாகத்தான் நடக்கிறது என்பது உண்மை. அந்த வகையில் வரதட்சணை வாங்கும் ஒவ்வொருவரும் தருமபுரியிலோ, உசிலம்பட்டியிலோ கொல்லப்படும் பெண் சிசுக் கொலைக்கு காரணமாகத்தான் இருக்கிறார்கள்.

சமீபத்திய வரவான ஐ.டிதுறை மற்றும் அமெரிக்க மாப்பிள்ளைகள் என்பது மேட்டுக்குடியின் வரதட்சணையை ராக்கெட் வேகத்தில் எகிற வைத்திருக்கிறது. தனது பெண் அமெரிக்காவில் சீரும் சிறப்புமாக வாழ்வாள் என்று நம்பி மொத்த வாழ்க்கை சம்பாத்தியத்தையும் மகளுடன் அனுப்பி வைக்கும் தந்தைமார்கள் அதன்பிறகாவது நிம்மதியாக வாழ்கிறார்களா? இல்லை காரில் இருந்து தள்ளப்பட்டு குற்றுயிரும் கொலையுயிருமாக வரும் மகளுக்காக விமான நிலையத்தில் காத்திருக்கிறார்களா?

வாரிசுகளில் இருபாலாரும் இருந்தால் வரதட்சணை கொடுப்பதற்காக வரதட்சணை வாங்குவதாக நியாயம் பேசுவார்கள். ஏன் வரதட்சணை வாங்காதவனுக்குத்தான் எனது மகள் என்று முடிவெடுக்க வேண்டியதுதானே? அப்படி முடிவெடுத்து விட்டு திருமணம் செய்ய நினைக்கும் இளைஞர்களை சமூகம் பைத்தியக்காரன், பிழைக்கத் தெரியாதவன் என்று வைத்திருக்கிறது என்பதால் எந்தத் தந்தையும் தனது மகளின் வாழ்வில் ரிஸ்க் அல்லது நல்ல முடிவு எடுப்பதில்லை.

இன்னும் விதவையாக இருந்தால் மனிதாபிமானம் அதிகம் இருக்கும் என்று எண்ணாதீர்கள். விதவையைக் கல்யாணம் செய்யும் ‘தியாக’ உள்ளங்களுக்கு பிரதிபலனாக லஞ்சம் அதிகம் கொடுக்க வேண்டும். அதுவும் குழந்தை உள்ள பெண்ணாக இருந்தால் ரேட் இன்னும் அதிகம். இரண்டாம் மணம் என்றாலும் அங்கே முதல் மணம் ஏன் தோல்வியுற்றது என்று பாடம் கற்காமால் அதே போல தட்சணை கொடுத்துத்தான் அடுத்த மணமும் நிறைவேறும்.

இறுதியாக “வரதட்சணையை நாங்களாக ஏதும் கேட்கவில்லை, நீங்களாக பார்த்து செய்தால் போதும்” என்று நல்லவர்கள் போல பேசுவார்கள். உறவினர்களை விட்டு குடும்பத்தின் மேன்மை, சமீபத்தில் நடந்த திருமணங்களில் கொடுக்கப்பட்ட வரதட்சணையின் அளவு எல்லாம் சொல்லி மறைமுகமாக ரேட்டை நிர்ணயம் செய்வார்கள். நேரடியாக கேட்பதை விட இரகசியமாக கேட்பது மகா கேவலமானது. இதன்மூலம்தான் பெண் வீட்டார் தங்கள் தகுதிக்கும் மேல் சீர்வரிசை செய்வது நடக்கிறது. வரதட்சணையில் நல்லது கெட்டது என்று ஏதும் இருக்க முடியுமா என்ன?

இப்படி எல்லா வழிகளிலும், வகைகளிலும் கண்கொத்திப் பாம்பாக பெண்களை குதறக் காத்திருக்கிறது வரதட்சணை.

இந்தக் கயமைத்தனத்தை ஜீன்ஸ் பேண்டிலும், செல்பேசியிலும் நவீனத்தை தேடும் இளைஞர்கள் நேரடியாகவும், நாசுக்காகவும், மறைமுகமாகவும் செய்தே வருகிறார்கள். ரொம்ப இறுக்கிப் பிடித்துக் கேட்டால் “நான் வாங்க மாட்டேன், என் பெற்றோர் விரும்பினால் என்ன செய்வது” என்று வாகாய் நழுவுவார்கள். சாதி பார்த்து, ஜாதகம் பார்த்து, அந்தஸ்து பார்த்து எல்லா எழவும் பார்த்துக்கூட தொலையட்டும். குறைந்த பட்சம் வரதட்சணையாவது வாங்க மாட்டேன் என்று முடிவெடுப்பதற்குக்கூட நேர்மையற்ற இந்த இளைஞர்களை வைத்துத்தான் அப்துல் கலாம் 2020இல் இந்தியாவை வல்லரசாக்கப் போகிறாராம்.

குழந்தைகள் உழைப்பை எதிர்ப்பார்கள், சுற்றுச்சூழலுக்காக குரல் கொடுப்பார்கள், சுயமுன்னேற்ற நூலென்றால் விழுந்து விழுந்து படிப்பார்கள், ரோட்டோரத்துப் பிச்சைக்காரனுக்காக சில்லறைகளையும் கொடுப்பார்கள்…இப்படியெல்லாம் நல்லது செய்வதாக கற்பித்துக் கொண்டிருக்கும் இந்த இளைய சமூகம்தான் இந்த வரதட்சணைப் பேயை இன்னும் வீரியமாக வாழவைத்துக் கொண்டிருக்கிறது. குறுக்கு வழியில் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதன் சமூக அங்கீகாரத்தில்தான் வரதட்சணையும் சாகாவரம் பெற்று ஜம்மென்று உயிர் வாழ்கிறது.

வட இந்தியாவில் கேஸ் அடுப்பு வெடித்து கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடிக்கொண்டுதான் இருக்கிறது. தென்னிந்தியாவில் படித்தவர்கள் அதிகம் என்பதால் இந்த வரதட்சணை கொடுமைகள் சதீஷ் போல நாகரீக கனவான்களின் நவீன தொழில்நுட்ப சித்திரவதையாக பரிணாமம் பெற்றிருக்கிறது. சதீஷைப் பொறுத்தவரை அவனது மனைவி என்பவள் வெறும் உடம்பு மட்டும்தான். அந்த உடம்பிற்கு மானமிருக்கிறது என்பதனால்தான் அவன் அவளது நிர்வாண படங்களை வெளியில் விடுவேன் என்று பயமுறுத்த முடிகிறது. உடல் மானம் மட்டுமல்ல குடும்ப மானமும் போனால் கூடப் பரவாயில்லை என்று துணிந்து அந்தப் பெண் போலீசுக்கு வரவேண்டுமென்றால் அவள் எவ்வளவு துன்பம் அடைந்திருக்க வேண்டும்?

வரதட்சணைக் கொடுமைகளை நிறுத்துவது பெண்களிடம் இருந்துதான் துவங்க வேண்டும். இப்படி பொன்னும், பொருளும் வாங்கிக் கொண்டு திருமணம் செய்ய விரும்பும் இளைஞர்களை காறித்துப்புவதற்கு பெண்கள் முன்வரவேண்டும். வரதட்சணை மறுப்பதுதான் ஆண்மையின் தகுதி, விரைக்கும் ஆண் குறியில் அல்ல எனுமளவுக்கு அந்தப் போர் நடைபெற வேண்டும். காதலோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ வரதட்சணை மறுப்புத்தான் முதல் தகுதி என்றாக்கப்படவேண்டும். ஊழலால் சூழ வாழும் இந்த சமூக அமைப்பில் வரதட்சணைக்கெதிரான போராட்டம் துவங்கினால் அது ஏனைய பிணிகளை எதிர்த்து விரியும் போராட்டமாகக்கூட மாறும்.

எதெல்லாம் வரதட்சணை?

  1. பவுன் கணக்கில் கொட்டப்படும் நகையோடு பெண் திருமணமாவது – தங்க தட்சணை!
  2. பணம் வாங்குவது, திருமணச்செலவு முழுமையும் பெண் வீட்டார் செய்வது – ரொக்க தட்சணை!
  3. வரதட்சணைப் பணத்தை வைத்து வேலை வாங்குவது, அமெரிக்கா செல்வது – வேலை தட்சணை!
  4. வீடு, வாகனங்கள், இதர சொத்துக்கள் பெறுவது – சொத்து தட்சணை!
  5. தீபாவளி, பொங்கள் இதர நாட்களை வைத்து பெண் வீட்டாருக்கு செலவு வைப்பது – பண்டிகை தட்சிணை!
  6. முக்கியமாக பிரசவ செலவை மாமனார் வீட்டிற்குத் தள்ளிவிடுவது – பிரசவ தட்சணை!
  7. குழந்தை பிறந்தால் அதற்கும் காது  குத்து, மொட்டையடிப்பது என்ற பெயரில் பெண் வீட்டாருக்கு செலவு வைப்பது – குழந்தை தட்சணை!
  8. மனைவியை வீட்டுவேலைகளுக்கு மட்டும் பயன்படுத்துவது, அதில் பங்கேற்காமல் இருப்பது – வேலைக்காரி தட்சணை!
  9. மனைவியை இருட்டுக்கு மட்டும் இலவசமாய் பயன்படும் பொருளாய் பார்ப்பது – தாசி தட்சணை
  10. எந்த முக்கியமான விசயங்களிலும் மனைவியோடு கலந்தாலோசிக்காமல் இருப்பது – அடிமை தட்சணை!
  11. மனைவியை அடிப்பது, சித்திரவதை செய்தவது – டார்ச்சர் தட்சணை!

……… மொத்தத்தில் முடிவு பெறாது இந்த வரதட்சணை!

இப்போது சொல்லுங்கள் உங்களில் யார் சதீஷை கண்டிக்கிறீர்கள்?

************

vote-012

தொடர்புடைய பதிவுகள்

இது மாவோயிஸ்ட் புரட்சியல்ல;ஒடுக்கப்பட்ட மக்களின், ஏழைகளின் புரட்சி.

28

vote-012ஹிமான்ஷு குமார், இவர் ஒரு காந்தியவாதி. ஒரு சுதந்திரப் போராளியின் மகன். சட்டீஷ்கர் மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய தண்டிவாடா மாவட்டத்தில் ஆதிவாசி மக்களிடையே பணியாற்றிவருபவர். 17 ஆண்டுகளாக அயராத உழைப்பால் கட்டப்பட்டுவந்த வனவாசி சேத்னா ஆசிரம் என்ற அவரது அறநிலையம் ஜனநாயகக் கடமையின் [தேர்தல்] முடிவுகள் வெளியான மறுநாள் முடிவுக்கு வந்தது.  17.5.2009 அன்று 500 போலீசார் அரைமணி நேரத்தில் அதை இடித்துத் தரைமட்டமாக்கினர்.  இந்தப் பயங்கரப் புழுதிகளை எல்லாம் அலட்சியமாய் உதரிவிட்டு, தங்களுக்காகப் பேச வக்கில்லாத அந்த ஆதிவாசி மக்களுக்காகப் பேசுகிறார் ஹிமான்ஷு குமார்.

அந்த ஆதிவாசிகளின் கல்வி அறிவின்மைக்கும், அவர்களுக்கு உள்ள உரிமை பற்றிய அவர்களின் அறியாமைக்கும் எதிராக இதுநாள்வரை சலியாது போராடிய அவர், இன்று அரசு தம் மக்கள் மீதே தொடுத்திருக்கும் இன அழிப்புப் போருக்கு எதிராகக் களத்தில் நிற்கிறார். அக்டோபர் 31 அன்று மும்பையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் ஆற்றிய உரை இதோ… ..  ..

இன்றைய சடீஷ்கர் மாநிலத்தின் அடர்ந்த அந்த காடுகளில், மலைகளில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவர்கள் அந்த ஆதிவாசிகள். அவர்கள் சமூகத்தில் குற்றம் என்று ஏதுமில்லை. எனவே அவர்களுக்கு போலீசின் துணை என்றும் தேவைப்பட்டதில்லை.  ஆனால் இன்று அவர்களைக் காப்பதற்காக என்று அரசு ஆயுதம் தாங்கிய படைகளை ஆயிரக்கணக்கில் அனுப்புகிறது.  யாரிடமிருந்து காப்பதற்கு?  தனது சொந்த பூமியிலேயே இராணுவத்தையும் வான்படையையும் அணிவகுக்கச் செய்யவேண்டியதன் அவசியம் அப்படி என்ன வந்தது?

ஆனால் இது ஒன்றும் புதிய கதையல்ல. ஏற்கனவே [டாடா ஸ்டீல் கம்பெனியுடன் பஸ்தாரில் பத்தாயிரம் கோடி ரூபாய் சுரங்க நிறுவனம் அமைக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான மறுநாள் – ஜூன் 2005ல்] அந்த ஆதிவாசிகளை ஒழித்துக்கட்ட அரசு சல்வா ஜுடூம் என்ற கூலிப்படையை களமிறக்கியது. அவர்கள் அதற்கு ஒரு வழி கண்டார்கள்.  ஆதிவாசிகளை அவர்கள் கிராமங்களில் இருந்து அப்புறப்படுத்தி தெருவோரங்களில் காவல் நிலையத்தின் அருகே குடியமர்த்தினார்கள். காடுகளில் இருந்தால் இவர்கள் நக்சலைட்டுகளை ஆதரிப்பார்கள், அதனால்தான் காவல் நிலையத்தின் அருகே இந்த குடியமர்த்தம் என்று அதற்கொரு விளக்கமும் அளித்தார்கள்.  இந்த நடவடிக்கையைக் கண்டு ஆதிவாசிகள் அஞ்சினார்கள்.  தமது காடுகளையும், நிலங்களையும், ஆறுகளையும் விட்டுவிட்டு இந்தக் காவல் நிலையத்தின் அருகே ஏன் வரவேண்டும் என விழித்தார்கள்.  அதனால் மறுத்தார்கள்.

ஆதிவாசியினர் தம் கிராமங்களை விட்டு ஓடச் செய்வதற்காக மத்திய சேமக்காவல் படை, துணைராணுவத் துருப்புகள், போலீசு இவற்றுடன் சில தீய சக்திகளும் சேர்ந்துகொண்டு எல்லோருமாக அக்கிராமங்களைத் தாக்கினார்கள்.  பிடிபட்டவர்களை முகாமுக்கு ஓட்டிவந்தார்கள்.  குப்பைமேட்டை ஒத்த பகுதியில் அமைந்த முகாம்களில் 50000 ஆதிவாசிகளை பலாத்காரமாய்த் திணித்தார்கள்.  அங்கொன்றும் இங்கொன்றுமாய் இயற்கைச் சூழலில் குடிலமைத்து வாழ்ந்த ஆதிவாசிகளை அரசு தகரக் கொட்டகையில் கறிக்கோழிகளைப்போல் அடைத்தது.

இக்கொடுமையை விடாப்பிடியாக எதிர்த்து நின்ற ஆதிவாசிகளோ சுட்டுக் கொல்லப்பட்டனர், பெண்கள் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டனர், சிறுபிள்ளைகளும் கொலை செய்யப்பட்டனர்.  இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.  நக்சலிசம் பரவாமல் தடுப்பது என்ற பெயரில் பலர் ஒட்டுமொத்தமாகக் கொன்றொழிக்கப்பட்டனர்.  அடைக்கப்பட்ட 50000 ஆதிவாசிகளும் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமை சகியாது அண்டை மாநிலங்களான ஆந்திரா, ஒரிசா, மகாராட்டிரத்துக்குத் தப்பி ஓடினர். அரசுக்கு ஆதரவாய் இருப்பவர்கள் சல்வா ஜுடூம் முகாம்களில் உள்ளனர்;  ஏனையோர் எல்லாம் நக்சலைட்டுகளின் பக்கமிருப்பவர்கள்; அவர்கள் காடுகளில் ஒளிந்திருக்கிறார்கள் என தொலைக்காட்சி, வானொலி மூலம் அறிவித்தார் அம் மாநில முதல்வர்.  ஒரு மாநில முதல்வர், காடுகளில் தங்கள் சொந்த நிலத்தில் வாழ்பவர்களை எல்லாம் நக்சலைட்டுகள் என முத்திரை குத்துவது வியப்பாக இருக்கிறது.  அவர்களை எல்லாம் ஒட்டுமொத்தமாய்க் கொன்றொழிக்கும் முடிவையும் அறிவித்துவிடுவீரோ என்று அவரைக் கேட்டேன்.  அஞ்சியபடி அவர் அவ்வாறே செய்துவிட்டார்.

சிந்திக்க முடியாத அட்டூழியங்கள் எல்லாம் அரங்கேறின.  ஒரே கிராமம் 20 முறை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.  வேட்டை முடிந்தது என்று கருதி காடுகளில் பதுங்கிய மக்கள் கிராமம் திரும்புவர், வீடுகளை சீர்செய்து நிலங்களைப் பண்படுத்தி பயிர் செய்யத் தொடங்குவர்.  மீண்டும் பாதுகாப்புப் படை வரும், பயிர்நிலங்களை எரிக்கும். இப்படி இது ஒரு முடிவிலா சுழற்சியாகிவிட்டது. தொடரும் இந்த கொள்ளை, கற்பழிப்பு, கொலைகளால் வெருப்புற்ற ஆதிவாசிகள் தங்கள் பிள்ளைகளைக் காவலிருக்கப் பணித்தனர். அப்பிள்ளைகளும் தங்கள் தடிக்கம்பு, வில், அம்புகளுடன் கிராமத்தைக் காவல் காத்தனர்.  படைகள் தாக்க வருவதை முன்னறிந்து பெண்கள், முதியோரைப் பாதுகாப்பாய்க் காட்டுக்குள் பதுங்க வழிசெய்வதே அவர்களின் நோக்கமாய் இருந்தது.  அவர்கள் தங்கள் தானியங்களை காடுகளில், பாறைகளுக்கு அடியில் பத்திரப்படுத்த வேண்டியிருந்தது.  ஏனெனில் படைகள் வந்தால் அவற்றை எரித்து அழித்துவிடுவது வழக்கம்.

தங்கள் குக்கிராமங்களைக் காவல்காக்கும் இந்த சிறுவர் சிறுமியரைத்தான் அரசுக்கு எதிராய் ஆயுதம் தாங்கியிருக்கும் மாவோயிஸ்டுகள் என்கிறார் சிதம்பரம்.  ஆகவே, இந்த மாவோயிஸ்டுகளைக் கொன்றொழிக்கத்தான் இந்திய ராணுவத்தை ஏவுகிறார்கள் அவர்கள்.  உங்களோடு சண்டையிட இந்த ’நக்சலைட்டுகள்’ உங்கள் தில்லிக்கு வரவில்லை, உங்களைப்பற்றி அவர்களுக்கு ஒரு பொருட்டும் இல்லை என்று இந்த அரசியல்வாதிகளுக்கு நாங்கள் சொல்கிறோம்.  அவர்கள் ஆதிவாசிகள், காடுகளில் வாழ்பவர்கள்.  நக்சலைட்டுகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றச் சொல்லி அவர்கள் உங்களை என்றைக்குமே கேட்டதில்லை. ஆக, நீங்கள் அனுப்பும் இந்தப் படைகள் யாரைப் பாதுகாப்பதற்காக?

உண்மையில், அரசு ஏன் இந்தப் படைகளை ஆதிவாசிகள் மேல் ஏவுகிறது? கனிவளம் நிறைந்த அந்தக் காடுகளைக் காலிசெய்து கொழுத்த தொழிலதிபர்களிடம் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே.  அதற்காகத்தான் இந்த ஆயுதப் படைகள் அங்கே ஏராளமாய் குவிக்கப்படுகின்றன.  இப்போது இந்த அரசாங்கம் சொல்கிறது, அதற்கு அமைதி வேண்டுமாம்.  நித்தமும் அந்த ஆதிவாசிகளை உங்கள் படை வதைக்கிறது, நீங்கள் அமைதியைப் பற்றிப் பேசுகிறீர்கள்.  நீங்கள் அமைதி வேண்டுவது உண்மையானால், உங்கள் படைகளை ஏன் திரும்பப் பெறக் கூடாது?

அரசாங்கம் பேசத் தயாராய் இருக்கிறதாம், இன்று காலை அறிவிப்பு வருகிறது.  நக்சலைட்டுகளிடம் எனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி வன்முறையைக் கைவிடும்படி நான் அவர்களைக் கோரவேண்டுமாம். ஆனால் நீங்கள் அல்லவா அம்மக்களின் வாழ்விடங்களைத் தொடர்ச்சியாய்த் தாக்குகிறீர்கள்.  நீங்கள் அல்லவா வன்முறையைக் கையாள்கிறீர்கள்.  எனவே உங்கள் வன்முறைப் பாதையைக் கைவிடுங்கள் என்று நான் உங்களை வலியுறுத்துகிறேன்.  நீங்கள் அங்கு பிரயோகிக்கும் படைக்கு தினமும் மதுவும் மாமிசமும் பெண்களும் தேவைப்படுகிறது.  அதற்காக அவர்கள் தினந்தோறும் அந்தக் கிராமங்களைத் தாக்குகிறார்கள்.  மக்கள் அதைத் தடுத்தால் அவர்களை நக்சலைட்டுகள் என்கிறீர்கள்.  வன்முறையிலிருந்து அந்த ஆதிவாசிகளைக் காப்பாற்றுங்கள் என்று என்னிடமும் கூறுகிறீர்கள்.   ஆனால், இந்த அரசுதான் வன்முறையாளனாய் இருக்கிறது.

700 கிராமங்கள் தாக்கப்பட்டு எரித்து சாம்பலாக்கப்பட்டன.  ஆதிவாசிகளை மீள்குடியமர்த்தவும், எரிக்கப்பட்ட வீடுகளின் உடைமையாளருக்கு நட்டஈடு தரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  ஆனால் அரசு அவர்களை மீள் குடியமர்த்தவோ, ஒரு நபருக்குக் கூட நட்டஈடு தரவோ இல்லை.  ஆகவே, நாங்கள் ஒரு சிறு முயற்சியில் இறங்கினோம்.  நாங்கள் அவர்களை மீள் குடியமர்த்தம் செய்கிறோம் என்று சொன்னோம், செய்தோம்.  ஆதிவாசிகள் திரும்ப வந்தனர், வாழ்வை, விவசாயத்தைத் தொடங்கினர்.  அங்கே வன்முறை இல்லை.  போலீசு அந்த கிராமங்களை வளைய வந்தது, இருந்தும் அசம்பாவிதம் ஏதுமில்லை.  ஆனால் இன்றோ, அந்த அமைதியான கிராமங்களை போலீசு மீண்டும் தாக்கத் தொடங்கியிருக்கிறது.  உண்மை என்னவென்றால் அந்த ஆதிவாசிகள் அவர்கள் கிராமங்களில் நிலைகொள்வதை அரசு விரும்பவில்லை.  அவர்களை அங்கிருந்து பிடுங்கி எரிய விரும்புகிறது.   மக்கள் தங்கள் இடத்தையும் இல்லத்தையும் விட்டுத் தலைதெரிக்க ஓடச்செய்ய விரும்புகிறது.  காலிசெய்த நிலத்தைத் தொழிலதிபர்களுக்குக் கையளிக்க விரும்புகிறது.  உண்மையில் நீங்கள் அமைதியை விரும்புகிறீர்களா? அப்படி என்றால் அது ஒரே ஒருவாரத்திய முயற்சியில் அடையக் கூடியதே.

வன்முறையை நம்பும் நக்சலைட்டுகளுடன் எப்படிப் பேசுவது என்று அவர்கள் கேட்டார்கள்.  நக்சலைட்டுகளுடன் பேசவேண்டாம், உங்கள் மக்களுடன் பேசுங்கள்.  தண்டிவாடாவுக்கு வாருங்கள். அவர்கள் மேல் இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றி அவர்களிடம் கேளுங்கள் என்று நாங்கள் பதிலளித்தோம்.  நீங்கள் சல்வா ஜுடூம் நடவடிக்கையைத் தொடங்கியது முதல் 700 கிராமங்கள் சுடுகாடாக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் நீங்கள் ஒருவரும் வந்து அதுபற்றி விசாரித்து அறியவில்லை. குழந்தைகள் தாக்கப்பட்டார்கள், இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள் .. கேட்க நாதியில்லை.  நீங்கள் அங்கு போக வேண்டியதுதானே, உங்களை யார் தடுத்தது?  இந்த நாட்டின் பிரதமர் அங்கு போகட்டும்.  நக்சலைட்டுகளுடன் அவர் பேசவேண்டாம்.  அவரது சொந்த குடிமக்களிடம் பேசட்டுமே.. முடியாதா?  ஏன் அவர்கள் அதைச் செய்யவில்லை?  ஏனென்றால் இந்த பிரச்சினை தீர்க்கப்படுவதை அரசு விரும்பவில்லை.  ஏனென்றால், அவர்கள் அம்மக்களின் நிலங்களைத் திருட விரும்புகிறார்கள்.  மேலும், தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ள மறுக்கும் அளவுக்குத் தலைக்கனம் ஏறியிருக்கிறது அவர்களுக்கு.  கற்பழிப்பா.. கொலையா, எதையும் ஒப்புக்கொள்ள அவர்கள் தயாரில்லை.  ஆனால், அவர்கள் அங்கு செல்ல நேர்ந்தால், அவர்கள் செயல் இன்னதென்று மக்கள் சொல்லுவார்கள்.  அவர்கள் படைகளல்லவா இதைச் செய்திருக்கிறார்கள்.. ஏற்க மனம் வராது, அவர்களுக்கு.

கொலைகள், கற்பழிப்புகள், எரிப்புகள், ஆள் கடத்தல்கள் என ஆயிரம் புகார்களுக்கு மேல் நாங்கள் அளித்திருக்கிறோம்.  ஆனால் ஒற்றை முதல் தகவல் அறிக்கைகூடப் பதியப்படவில்லை.  கிராம மக்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் புளுகுமூட்டைகளாக இருப்பதால் மு.த.அ பதியவில்லை என போலீசு உச்ச நீதிமன்றத்துக்கு எழுதுகிறது.  மு.த.அ. சரியா, தவறா என்று போலீசு முடிவு செய்ய முடியாது, பதிவதும், ஆய்வதும் அவர்கள் கடமை என்கிறது இந்த நாட்டின் சட்டம்.  ஆனாலும் சட்டத்தின் காவலர்கள் முதல் தகவல் அறிக்கையைப் பதியவும் மறுக்கிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் நடந்த சம்பவத்தில் 19 ஆதிவாசிகள் சுற்றிவளைக்கப்பட்டனர்.  அவர்களில் நான்கு பெண்களும் அடங்குவர்.  அப்பெண்கள் கற்பழிக்கப்பட்டு கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.  ஏனையோர் சுட்டுத் தள்ளப்பட்டனர்.  நாங்கள் அவ்வழக்கை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றோம்.  விசாரிக்க அவர்களுக்குத் தேதி கிடைக்கவில்லை. வாய்தா மேல் வாய்தா, அடுத்தடுத்து நீதிபதிகள் மாற்றம்.  அந்த ஏழை மக்கள் நியாயம் பெறுவதற்கான வழிகள் அனைத்தையும் அடைத்துவிட்டீர்கள்.  நீதிமன்றத்துக்குப் போனால் உங்கள் நீதி அவர்களை ஏரெடுத்தும் பாராது; போலீசிடம் போனால் அவர்கள் மீது குண்டாந்தடிகள் பேசும்.  கங்கிரஸ், பி.ஜே.பி. என்ற பேதமில்லாது எல்லா அரசியல் கட்சித் தலைமைகளும் போக்கிடமற்ற அம்மக்கள் மீது அமைதிப் படையை – சல்வா ஜுடூம்- ஏற்றிச் செல்கிறார்கள்.  நக்சலைட்டுகளிடம் செல்வது தவிர்த்த வேறு எந்த வழியை அவர்களுக்கு விட்டுவைத்திருக்கிறீர்கள்?  இன்றைய தண்டிவாடாவின் நிலை என்ன? போலீசு அம்மக்களைத் தாக்குகிறது, நக்சலைட்டுகள் காப்பாற்றுகிறார்கள்.  இந்நிலையில், நீங்கள் அரசாங்கம் அல்லவா, மக்களைக் காப்பது உங்கள் வேலையல்லவா, தயவுசெய்து இவ்வாறு செய்யாதீர்கள், மக்களைத் தாக்காதீர்கள் என்று நாங்கள் சொல்கிறோம்.  நக்சலைட்டுகள் மோசமானவர்கள் என்று, நீங்கள் சொல்கிறீர்கள். இருக்கட்டுமே, அவர்களல்லவா ஆதிவாசிகளைக் காப்பாற்றுகிறார்கள்.

மூன்று தினங்களுக்கு முன் நான் ஒரு பெரிய அரசியல்வாதியை சந்தித்தேன். நக்சலைட்டுகள் என்றால் அவருக்கு பயம்.  ஏன் பயப்படுகிறீர்கள், நீங்கள் ஒரு ஜனநாயக நாட்டின் தலைவர் அல்லவா, என்று கேட்டேன்.  ஒரு ஜனநாயக நாட்டின் அரிச்சுவடியே நீங்கள் மக்களை நேசியுங்கள், அவர்கள் உங்கள் மீது நேசமாய் இருப்பர் என்பதுதானே.  ஏன் பயப்படுகிறீர்கள்.  ஏனென்றால் மக்கள் இனியும் உங்களை நேசிக்கப் போவதில்லை, மாறாக, அவர்கள் நக்சலைட்டுகளை நேசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஏனிந்த தலைகீழ் மாற்றம்? உங்கள் மீதான அவர்களது வெறுப்பின் காரணத்தைக் களையுங்கள், அவர்களிடம் செல்லுங்கள், அவர்களை நேசியுங்கள்.  அவர்களும் உங்களை நேசிப்பர்.  ஆனால், நீங்களோ படைகளை அனுப்புகிறீர்கள்.

வர்க்கப் போராட்டம் பற்றி நெடுநாட்களாகவே நக்சலைட்டுகள் மக்களிடம் கூறிவருகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  ஒருநாள், ஒரு கிராமத்தைக் கடந்து நான் சென்றுகொண்டிருந்தேன். அப்போது மரத்தடியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ஒரு முதியவர் என்னை அழைத்தார். ”ஒரு பெரிய சண்டை நடக்கப்போகுதுல்ல.., நடக்கும்தானே?” என்று கேட்டார்.  அவர் அந்தப் போருக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறார்.

எனவேதான் இந்த அரசாங்கத்திடம் போர்தொடுக்காதீர்கள் என்று சொன்னேன்.  ஒரு போர் தொடங்கப்படுவதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.  நீங்கள் ஒரு போரில் இறங்கினீர்களாயின், ஒரு 50 ஆண்டுகளுக்கு நீங்கள் அதிலிருந்து மீள முடியாது.  அவர்கள் ஆதிவாசிகள். நாங்கள் அவர்களை அறிவோம்.  பார்ப்பதற்கு அவர்கள் சாமானியர்கள் தான். ஆனால், ஆயுதங்களை இறுகப்பற்றி மாமலையாய் வெகுண்டெழுந்து நிற்பார்கள். இந்த ஆதிவாசிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியாது, அவர்கள் [என்னைப்போல] உ.பி. காரர்கள் அல்ல. வேட்டைக்காரர்கள், கட்டிவைத்து உரித்துவிடுவார்கள்.  படுகுழியில் சிக்கிவிடுவீர்கள், உங்கள் படைகள் பெருத்த இழப்பை சந்திக்க நேரும்.  கடந்த ஐந்தாண்டுகளில் சட்டீஷ்கரில் உங்கள் ஆயுதப்படைகளின் இழப்பு பாரதூரமானது.  எனவே இந்த ராணுவத் தலையீட்டை செய்யாதீர்கள் என்று சொல்கிறேன்.  காட்டு வேட்டைக்கு சென்ற உங்கள் கோப்ராக்கள் ஒரு நக்சலைட்டைக்கூட வேட்டையாட முடியவில்லை. கணப்பொழுதில் ஆறு கோப்ராக்களை இழந்ததுதான் மிச்சம்.  இரண்டு நாட்களுக்கு அவர்களது பிரேதங்களைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், வெருப்புற்றுத் திரும்பியவர்கள் வெறித்தனமாய்க் கொன்றதோ, கிழவர், கிழவிகளையும், குழந்தைகளையும் தான்.

நாம் ஒரு சமூக அமைப்பின் அங்கம் என்ற முறையில் அதனையும் அதன் உட்கிடையான வன்முறையையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். உலகெங்கும் காணப்படும் வளங்கள் அனைத்தும் யாருக்குச் சொந்தம்?  நல்லது, இது நம் அனைவருக்கும் பொதுவானது.  உண்மையில் ஈ, எறும்பென இப்புவியில் வாழும் எல்லா ஜீவராசிகளுக்கும் கூட அது சொந்தமானது.  அவற்றுக்கும் இதில் உரிமை இருக்கிறது, இல்லையா?  ஆனால், மனிதர்களாய் இருக்கும் நாமோ, நாம் தான் தலைசிறந்தவர்கள் எனக் கருதுகிறோம்.    நமக்கே இப்புவியில் வளங்கள் அனைத்தும் சொந்தமென நினைக்கிறோம்.  இது எல்லோருக்கும் பொது என்கிறது இயற்கையின் விதி.  ஆனால் நடப்பில் அது அவ்வாறு இல்லை.  யாருக்கு எந்த அளவுக்கு இது உடைமை என்பதை எவ்வாறு தீர்மானிப்பது?   ஆனால், நாம் தீர்மானித்துவிட்டோம்.. நாம் வாழும் இந்த சமூகம் ஏற்கனவே இதைத் தீர்மானித்துவிட்டது.  அதற்கான முன்னுரிமைச் சட்டங்களும் எழுதப்பட்டுவிட்டன.  நாங்கள் படித்தவர்கள் அதனால் எங்களுக்குக் கூடுதல் பங்கு; நீ கைநாட்டு அதனால் உனக்குக் குறைவான பங்கு. நான் மேல் சாதிக் காரன். எனவே எனக்குக் கூடுதல் பங்கு; கீழ்சாதிப் பயல்களுக்குக் குறைவான பங்கு. நான் நகரவாசி. எனவே எனக்குக் கூடுதல் பங்கு, நீ ஒரு கிராமத்தான், உனக்குக் குறைவான பங்கு.

இப்படி இந்த அசமத்துவம் நமது அங்கீகாரத்தைப் பெற்று நமது சமூக மதிப்பீடுகளிலும் இடம்பிடித்துவிட்டது.  இவ்வாறு ஆனபின், அரசியல் அமைப்பும் கூட இதைச் சார்ந்தே செயல்படத் தொடங்கியது.  இந்த அசமத்துவத்தைக் கெட்டிக்க வேண்டியே சட்டங்களும் இயற்றப்பட்டன.  இவ்வாறாக, முதலில் சமூக அமைப்பு, தொடர்ந்து அதற்கான அரசியல் அமைப்பு, பின் அதற்குத் துணைசெய்ய ஒரு பொருளியல் அமைப்பு.  இம்மூன்றும் சேர்ந்து ஒரு சமூகக் கட்டமைவாய் உருப்பெற, பணக்காரனை பணக்காரனாகவும், ஏழையை என்றும் ஏழையாகவும் பராமரிக்கும் இந்த சமூக அமைப்பில் நாமும் ஓர் அங்கமானோம்.  நமக்கு இந்த சமூக அமைப்பில் பிரச்சினை ஏதுமில்லை. ஏனென்றால் நமக்கு வயிறுமுட்ட உணவும், உடைகளும், வீடும், வண்டி வாகனங்களும்,   நம் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பும் தடையின்றிக் கிடைக்கிறது.  எனவே நாம் இந்த சமூக அமைப்பில் நிறைவுகொள்கிறோம்.  இதை உடைக்கவோ, மாற்றவோ நமக்கு மனமில்லை.  ஆனால், இந்த சமூகக் கட்டமைவால் ஒடுக்கப்பட்ட மக்கள், நமது கொழுத்த வாழ்க்கையால் அழுத்தப்பட்ட மக்கள், அன்றாடம் தாக்கப்படும் ஆதிவாசிகள், நித்தம் பட்டினியால் செத்துப் பிழைப்பவர்கள்.. இவர்கள் இந்த சமூகக் கட்டமைவை எதிர்க்கிறார்கள்.  இதைத் தகர்த்தெறிய விரும்புகிறார்கள்.  அதற்கான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள்.

ஆகவே, நினைவில் கொள்ளுங்கள், இது மாவோயிஸ்டு புரட்சியல்ல, இவ்வமைப்பால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஏழைகளின், ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சி.  சற்று யோசியுங்கள், ஒருக்கால் நீங்கள் அந்தக் கடைகோடி மக்களில் ஒருவராய் இருந்தீர்களானால், கொலை, கற்பழிப்பு, ஒடுக்குமுறைகள் உங்கள் மீது ஏவப்பட்ட வண்ணம் இருக்குமானால் நீங்களும் இத்தகையதொரு புரட்சியை செய்யமாட்டீர்களா?  இச்சூழலில் மாவோயிஸ்டுகள் அல்லது நக்சலைட்டுகள் எனப்படுவோரின் இருத்தல் ஒரு தற்செயல் நிகழ்வு மட்டுமே.  நக்சலைட் என்ற பெயரில் இல்லையானால் அவன் இன்னொரு பெயரின் கீழ்ப் போராடியிருப்பான்.  இவ்வுலகில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும்வரை போராட்டம் தவிர்க்க முடியாதது.  திரு. மாவோ அவர்கள் ஒருக்கால் பிறக்கவில்லை என்றால் அந்த ஏழை மக்கள் தமது ஏழ்மை நிலைக்கு எதிராகப் போராடியிருக்க மாட்டார்களா? தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருக்க மாட்டார்களா?  அதுபோல் காந்தி இல்லையென்றால் அவர்கள் போராடியிருக்க மாட்டார்களா?  இல்லை, போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.  அந்த ஏழைகளுக்கு ஒரு தலைமையோ, ஒரு அமைப்போ, அல்லது வேறு எதுவோ, எதுவும் முக்கியமில்லை.  அவன் போராடுவான், போராடிக்கொண்டிருக்கிறான்.  சில நேரங்களில் அவனை ஆதரிப்பவர் காந்தியாக இருக்கிறார், சில நேரங்களில் வினோபாவாக சில நேரங்களில் மாவோயிஸ்டுகளாக இருக்கிறார்கள்.  தன்னை ஆதரிப்பவர்களை அந்த ஏழை ஏற்றுக்கொள்கிறான்.  இதுகாரும் வீழ்த்தப்பட்டதுபோலவே, சிலநேரங்களில் அவன் வீழ்த்தப்படுகிறான். ஆனால், இந்த மூர்க்கமான சமூகக் கட்டமைவை எதிர்த்த அவனது போராட்டம் மட்டும் ஓய்வதில்லை.

இந்த ஏழைகளின் போராட்டத்தை போலீசையும் இராணுவத்தையும் வைத்து ஒடுக்கிவிடலாம் எனத் தவறாக நினைக்கிறார் திரு. சிதம்பரம்.  மாறாக, ஒடுக்குமுறை போராடுவோரின் உளத் திண்மையை வலுப்படுத்தவும், போராட்டத்தை நீட்டிக்கவும் மட்டுமே செய்யும். எனவே பலாத்காரத்தால் இதை ஒழித்துவிடலாம் என நீங்கள் நினைப்பது மாபெரும் தவறு.  அங்கு அமைதி நிலவவேண்டும் என நீங்கள் விரும்பினால், இந்த போர் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என நீங்கள் விரும்பினால், அங்கே செல்லுங்கள், அந்த பழங்குடியினரின் மகிழ்ச்சியைக் கூட்ட ஏதாவது செய்யுங்கள்.  அவர்களது பள்ளியை இழுத்து மூடினீர்கள், அங்கன்வாடியை, சுகாதார நிலையத்தை, ரேஷன் கடையை, இன்னும் அவர்கள் சந்தைகளை எல்லாம் தடைசெய்தீர்கள்.. போய் எல்லாவற்றையும் திறவுங்கள்.  போர் சற்று ஓயும், என்று நாங்கள் அவர்களிடம் கூறினோம்.  இதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.  அம்மக்களை வதைப்போம், கொலை செய்வோம். அதன்மூலம் இந்தப் போரை முடிப்போம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.  தீயைக் கம்பளத்தால் மூடினால், கம்பளம்தான் எரிந்து பாழாகும்.

காட்டுவேட்டை என்ற பெயரில், பாதுகாப்புப்படை ஒரு வீட்டில் நுழைந்து ஒரு முதியவரையும் அவர் மனைவியையும், மகனையும், 15 வயது மகளையும் குத்திக் கொன்றது.  அங்கு ஒரு சண்டை இல்லை, யாரும் ஓடவும் இல்லை.  ஆனாலும் போலீசும், கோப்ராக்களும் அவர்களைக் கொன்றனர்.  இரண்டு வயது குழந்தையைக் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை.  துப்பாக்கியின் அடிக்கட்டையால் இடித்து அதன் பல்லை உடைத்தார்கள், நாக்கை அறுத்தார்கள், பின் அதன் பிஞ்சு விரல்களை வெட்டி எரிந்தார்கள்.  கொல்லப்படுவதற்கு முன் அந்த மூதாட்டியின் மார்பகங்கள் அவர்களால் அறுத்தெரியப்பட்டன.  அவர்கள் மாவோயிஸ்டுகளுடன் போராடிக்கொண்டிருக்கிறார்களாம், அரசு சொல்கிறது.  உங்களுக்கு வெறி தலைக்கேறிவிட்டதா? இதைத்தான் மாவோயிஸ்டுகள் உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.  நீங்கள் இதை எந்த அளவுக்கு செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அவர்கள் பலம் பெருகும்.  நீங்கள் இங்கு இருப்பது அவர்கள் பலத்தை அதிகரிக்கவா?

அரசு மிருகத்தனமாக நடப்பதாக அங்குள்ள மக்கள் சொல்கிறார்கள். நீங்கள் அவர்களை நேசியுங்கள், அவர்கள் உங்கள் பக்கம் வருவார்கள்.  ஆனால், நீங்கள் செயல்படும் விதம் அவர்களை மாவோயிஸ்டுகள் பக்கம் செல்ல வைக்கிறது.  அவர்கள் பலத்தை நீங்கள் கூட்டுகிறீர்கள்.

பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக நிலத்தை காலிசெய்து கொடுக்கும் நடவடிக்கை இங்கு, சட்டீஷ்கரில் மட்டும் நடக்கவில்லை, உலகெங்கும் இதே கதைதான் என்று உணர்கிறேன்.  இந்த பூமியின் வளங்கள் எல்லாம் வேண்டாத இந்த ஏழை மக்களால் விரயமாகிறது; எனவே பொருளாதாரத்துக்கு சுமையாய் இருக்கும் இவர்களை ஒழிக்க வேண்டியதுதான் என்று உலகத்து பணக்காரர்கள் முடிவு செய்துவிட்டதாய்த் தெரிகிறது. ஆகவே, ஆகப்பலவீனமான ஆதிவாசிகள் முதலில் துடைத்தெறியவேண்டியவர்கள் ஆகியிருக்கிறார்கள்.  இது ஒரு இனப்படுகொலை.  மொத்த சமூகமும் கொன்றொழிக்கப்பட இருக்கிறது.  அடுத்த இடி தலித்துகளின் தலையில் விழும், அடுத்தது சிறுபான்மையினர் மீது.  இந்த நவநாகரீக உலகம் பலகீனமானவர்களை அழித்தொழிக்கும், சக்திவாய்ந்த சிலரே இறுதியில் எஞ்சுவார்கள், அவர்கள் மொத்த உலகையும் தின்று தீர்ப்பார்கள். இந்த இலக்கை நோக்கித்தான் அவர்கள் பயணப்பட்டிருக்கிறார்கள். வலுத்தவன் எளியோரைக் கொன்றொழிக்கும் இச்செயலை, இதுதான் “சமூக டார்வினிசம்” என்று அவர்கள் இயல்பாய்க் கூறக்கூடும்.

இதுதான் நாம் வாழுகின்ற உலகம், நாம் காண்கின்ற கொடுமை.  இப்போது சொல்லுங்கள் இச்செயலை நீங்கள் ஆதரிக்கப் போகிறீர்களா?  இந்த மிருகத்தனமான முயற்சியைத்தான் இவர்கள் பஸ்தாரில் தொடங்கியிருக்கிறார்கள்.  நீங்கள் இதைத் தடுக்க விரும்பினால், வாருங்கள் என்னுடன். கண்ணெடுத்துப் பாருங்கள் பஸ்தாரின் கொடுமையை. எழுப்புங்கள் உங்கள் எதிர்ப்புக் குரலை.  நீங்கள் அந்த ஆதிவாசிகளின் பக்கம் நில்லுங்கள்.  இங்கும் சரி, வேறு எங்கும் சரி, அந்த ஏழை மக்களைக் கொல்ல விடமாட்டோம் என்று அரசை நோக்கி முழங்குங்கள்.

வெளியார் அனைவரையுமே ஆதிவாசிகள் தங்கள் எதிரியாய்க் கருதும் அளவுக்கு பஸ்தாரின் நிலை இன்று படுமோசமாகி இருக்கிறது.  சொந்த நாட்டின் சக மனிதனையே பகையாய்க் காணும் அளவுக்கு என்ன பயங்கரமான நிலைமை இது.  இந்த நிலை நமது ஜனநாயகத்துக்கு மிகப்பெரும் அபாயமாக உங்களுக்குத் தோன்றவில்லையா?  அந்த லட்சக்கணக்கான மக்களை கொன்றொழித்துவிட முடியும் என இந்த அரசு நினைகிறதே .. முடியுமா? நீங்கள் அவர்களைக் கொல்ல முயற்சிப்பீர்கள். பின்னர் அவர்கள் உங்களுக்குப் பதிலடி கொடுக்கத் தொடங்குவார்கள்.

இவ்வுலகில் மூன்று வகையான ஏழைமக்கள் இருப்பது பற்றி முன்னர் நான் பேசிக்கொண்டிருந்தேன்.  சிறு வர்த்தகர்கள், தெருக்கூட்டுபவர்கள், உங்கள் வீட்டு வேலைக்காரர்கள் போன்று உங்களுக்கு சேவை செய்பவர்கள் ஒரு வகை.  இவர்கள் உங்கள் தாராள மனத்தால் சற்று ஆதாயம் அடைபவர்கள்.  உங்களின் முன் கைகட்டி வாழ்கிறார்கள்.  ஏனெனில், பணக்காரர்கள் கிள்ளி இறைக்கும் தர்மங்களில் தாங்களும் காலம் தள்ளிவிட முடியும் என நினைக்கிறார்கள்.  எனவே, இவர்கள் உங்களுடன் சண்டை செய்வதில்லை.

தாங்கள் பணக்காரர்கள் ஆகத் தகுதியற்றவர்கள் என்று நம்புகிறவர்கள் இரண்டாவது வகையினர்.  இவர்கள் படிப்பறிவற்றவர்கள், விவசாயிகள்.  தமது ஏழ்மையோடு சமரசம் செய்துகொண்டு வாழப் பழகிவிட்டதால் இவர்கள் உங்களைத் தீண்டமாட்டார்கள்.

மூன்றாவது வகையினர் காடுகளில் வாழும் ஏழை ஆதிவாசி மக்கள்.  உங்களிடம் அவர்கள் எதையும் எதிர்பார்த்ததில்லை, உங்களைப் பொருட்படுத்தியதும் இல்லை.  இருப்பினும் பணத்தாசையால் உந்தப்பட்டு வலிந்து சென்று அவர்களைத் தாக்குகிறீர்கள்.  அதனால், சில இளைஞர்கள் அவர்களுடன் இணைந்து உங்களைத் திருப்பித் தாக்குகிறார்கள்.  இன்று அவர்கள் ஆயுதங்களைக் கையிலெடுத்துப் பீடுநடை போட்டு வருகிறார்கள்.  ஏனைய இருவகை ஏழைகளும் அவர்களோடு இணைந்தார்களாயின் இந்த சமூக அமைப்பையே அவர்கள் புரட்டிப் போடுவார்கள்.  எனவே, இந்த சமூகத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பது உங்கள் விருப்பமானால், உங்கள் இராணுவம்தான் பஸ்தாரில் வன்முறை வித்துக்களை விதைக்கிறார்கள் என்பதை முதலில் உணருங்கள்.

அவர்கள் சல்வா ஜுடூமைத் தொடங்குகையில் மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை ஐயாயிரமாக இருந்ததாகப் போலீசுப் புள்ளிவிவரம் கூறுகிறது.  அது தொடங்கப்பட்ட பின்னால், அதன் கொடுஞ் செயல்கள் தொடர்ந்த பின்னால், மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 22 மடங்கு உயர்ந்து 1,10,000 பேராக அதிகரித்து இருக்கிறது.  நீங்கள் செய்துகொண்டிருப்பது என்னவென்று தெரிகிறதா என்று இந்த அரசைக் கேட்கிறோம்.  நீங்கள் மீண்டும் தாக்குதலில் இறங்குவீர்களானால், மிச்சம் இருப்போரும் மாவோயிஸ்டுகள் ஆவார்கள்.  முழுநேரப் போராளிகள் ஆவார்கள்.  அவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் செயல்பரப்பும் விரிவடையும்.  அதன் தொடர்ச்சியான விரிவு மும்பையையும், தில்லியையும் தொடக்கூடும்.  அவர்களை அழித்துவிடலாம் என மனப்பால் குடிக்கிறீர்கள்.  ஆனால் அவர்களை விரிந்து பரவச் செய்வீர்கள், அவ்வளவே.

************

ஆங்கில மூலம் www.nowpublic.com/satyen – தமிழாக்கம்: அனாமதேயன்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

தமிழ்நாட்டில் கரையேறினேன்… அகதியாய்…!

29

vote-012அகதி. இது வெறும் ஒற்றைச் சொல்லா அல்லது மனமும் சதையும் சேர்ந்த சொந்தமண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட மனிதர்களின் ஏதுமற்றவர்கள் அல்லது யாருமற்றவர்கள் என்கிற உணர்வா? அது உணர்வுகள் மட்டுமல்ல. இதையெல்லாம் தாண்டி எங்களின் அடையாளங்களை தொலைத்து புதிய தேசத்தில் புதிதாய் எதையெதையோ தேடி ஓடும் ஓர் வாழ்வியல் போராட்டம்.

அகராதியின் அகதிக்கான பொருள் விளக்கம் அதன் வலிகளைப் பேசுவதில்லை, உணர்வுகளை விளக்குவதில்லை. அது முடியவும் முடியாது. அனுபவங்களை சொன்னால்  மட்டுமே அதன் வலிகளை புரியவைக்க முடியும். அகதி அனுபவத்தை சொல்ல  எங்கிருந்து எப்படி தொடங்குவது என்று யோசித்தால் நான் எப்படி அகதி ஆக்கப்பட்டேன் என்ற கேள்விக்குள் மீண்டும் தள்ளப்படுகிறேன். ஏன் இப்படி என்று காரணகாரியங்களை எல்லாம் ஆராய்வதில்லை என் பதிவின் நோக்கம்.

ஆனால், என் பதிவை தொடர்ந்து படித்தவர்களுக்கு நானும் என் போன்றவர்களும் புலம் பெயர்ந்ததின் காரணம் புரியாமல் இருக்காது. போலி ஜனநாயகத்தில் மறுக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகள், பேரினவாதம் தத்து எடுத்ததில் தறிகெட்டு போய் உயிர் கொல்லும் ராணுவம், சொந்த குடிகளையே ஏய்த்துப் பிழைக்கும் அரசியல்வாதிகளால் சீரழிந்த பொருளாதாரம், ஊழல், நிர்வாக சீர்கேடு, இயற்கை அனர்த்தம் என எனக்குத்தெரிந்து இவையெல்லாம்தான் அகதிகளை உருவாக்கும் காரணிகள்.

ஏதோவொரு காரணத்திற்காய் எத்தனையோ தேசங்களிலிருந்து அகதிகளாய் ஆக்கப்பட்ட மனிதர்கள் இந்த பூமிப்பந்தில் ஆங்காங்கே இறைந்து கிடந்தாலும், பேரினவாதம் என்ற சுனாமியில் சிக்கி சின்னாபின்னப்பட்டு உலகத்து வீதிகளிலெல்லாம் தூக்கி எறியப்பட்ட ஈழத்து அகதிகள் என்ற குப்பைகளில் நானும் ஒருத்தி.

ஈழத்தில் என் பாடசாலை நாட்களில் தமிழ் ஆசிரியர் ஒருமுறை சொன்னார் உங்கள் கற்பனையில் ஓர் சடப்பொருள் பேசினால் எப்படியிருக்கும் என்று ஓர் கட்டுரை எழுதுங்கள் என்று. நானும் ஓர் கடிதாசியின் வாழ்க்கை வரலாறு என்று கட்டுரை எழுதி என் ஆசிரியரின் “கெட்டிக்காரி” என்ற பாராட்டு வாங்கியது ஏனோ இப்போது நினைவில் வருகிறது. இதுவும் அகதி என்ற ஓர் ஜடத்தின் வரலாறு தான். ஆனால், இது பாராட்டுக்காய் எழுதப்படும் கதையோ கற்பனையோ அல்ல.

இன்னும் ஈழத்தமிழன் முட்கம்பிக்குப் பின்னாலும், கடல் நீரால் சூழப்பட்டும் அகதியாய் முடக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறான்.  இந்த பதிவை எழுதும் பொது ஏனோ என்னால் இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் Oceanic Viking என்ற ஓர் உடையும் தருவாயிலுள்ள கப்பலில் ஈழத்தமிழர்கள் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பற்றி நினைக்காமல் இருக்கமுடியவில்லை.

காடுகளில் மாதக்கணக்கில் ஒழிந்து கிடந்து, கடல் மேல் நூறு நாட்களையும் தாண்டி குறைந்த பட்சம் மனிதர்கள் என்ற அங்கீகாரமேனும் கொடுத்து இலங்கைக்கு எங்களை திருப்பி அனுப்பாதீர்கள் என்று சர்வதேசத்திடம் கெஞ்சுகிறார்கள். ஈழத்தமிழர்கள் என்பதால் அவர்களின் மனிதாபிமான கோரிக்கைகள் கூட அலட்சியத்தோடு புறந்தள்ளப்படுகிறது. சாவிலிருந்து மீண்டு வந்தவர்களை  மீண்டும் வாழ்வா, சாவா என்ற அவலத்திற்குள் தள்ளிவிட்டிருப்பதுதான் சர்வதேசம் ஈழத்தமிழர்கள் விடயத்தில் செய்து முடித்த இன்னோர் சாதனை.

இந்த கப்பலில் வந்தவர்களில் இருவர் உரிய மருத்துவ வசதி சரியான நேரத்தில் கிடைக்காததால் இறந்தார்கள் என்பது செய்தி. இறந்தவர்களில் ஒருவர் 29 வயது உடையவர். இரண்டுநாட்களாக இரத்தவாந்தி எடுத்தே உயிரை விட்டார். மீதமுள்ளவர்கள் கடல் என்ற தண்ணீர் தேசத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அப்பாவிகள் ஈழத்தமிழர்களாய் பிறந்ததை தவிர வேறெந்த தவறையும் செய்யவில்லை.

அவர்கள் வேண்டுவதெல்லாம் எங்கள் மீது “அகதி” என்றதொரு முத்திரையை குத்திவிடுங்கள் நாங்கள் உயிராவது  பிழைத்துக்கொள்கிறோம் என்பதுதான். சர்வதேசத்தின் திரைமறைவு நாடகங்களுக்கும், வாழ்வா சாவா போராட்டத்திற்கும் இடையே இப்படி அவலப்படுவர்களின் வாழ்வும் விடிய வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளீராம். உலகமயமாக்கலில் இந்த பூமி ஓர் “Global Village”. ஆமாம். ஆனால், ஈழத்தமிழன் மரண பூமியிலிருந்து தப்பிப் பிழைத்து ஒதுங்க இடம் கேட்டால் சர்வதேசத்தின் சகல சட்ட விதிகளும் ஈவிரக்கமில்லாமல் அவன் மீது பாய்கின்றன. இந்த கூற்றுகளுக்கும், கூத்துகளுக்கும் நான் சிரிக்கவா, அழவா தெரியவில்லை? சரி விடுங்கள். ஈழத்திலிருந்து நான் கிளம்பிய கதையைச் சொல்கிறேன்.

போரின் வலிகளை எத்தனை நாளைக்குத்தான் தாங்கவும், சுமக்கவும் முடியும்? நாங்களும் மனிதர்கள்தானே.எல்லோருக்கும்  அப்போதெல்லாம் குண்டுச்சத்தங்கள் இல்லாமல் இருந்தாலே நிம்மதியாய் இருக்கும் என்று தோன்றியது. கூடவே, உணவு கூட பேரினவாதத்தின் போராயுதமாய் மாறிய பின் தப்பித்தல் என்பது ஒன்றும் தந்திரோபாயம் என்று தோன்றவில்லை. துன்பங்களிலிருந்து தப்பிக்க நினைப்பது மனித இயல்பு இல்லையா?

வீட்டில் எல்லோருக்கும் எப்படி தப்பிப்பது என்ற கேள்வி பூதாகரமாய் இருக்க எனக்கு மட்டும் “ஏன்” என்ற கேள்வி பதில் தெரிந்திருந்தும் மீண்டும், மீண்டும் என் சிந்தனைகளில் அறைந்து கொண்டே இருந்தது. சினத்தை கிளப்பியது. யாருடனும் பேசக்கூடப் பிடிக்கவில்லை. எல்லாக்காலங்களிலும், எல்லா விடயங்களிலும் என் வீடு என்ன முடிவெடுக்கிறதோ அதுவே என் முடிவல்ல. ஆனாலும், என் வீட்டை எதிர்த்துக்கொண்டு எதையும் செய்யத்துணியும் அளவிற்கு வயதோ அல்லது சமூக, பொருளாதார அங்கீகாரமோ இல்லாத சூழலில் எனக்கும் சேர்த்து என் உறவுகள் முடிவெடுக்க அதற்கு வேண்டா வெறுப்பாக கட்டுப்பட்டேன்.

நிச்சயமாக கொழும்பு சென்று அங்கிருந்து உயிர் தப்பி எங்காவது செல்வது என்பது அந்நாட்களில் குதிரைக்கொம்பாக இருந்தது. அது ஆபத்துகள் நிறைந்த பயணமும் கூட. எங்களுக்கு இருந்த ஒரேயொரு தெரிவு தமிழ்நாடு தான். எப்படி போவது? வேறெப்படி, படகில் தான் (ஈழத்தில் வள்ளம் என்ற சொல் தான் வழக்கம்). படகு பயணம் ஒன்றும் ஆபத்து இல்லாதது அல்ல. எனக்கு மருந்துக்கும் நீச்சல் தெரியாது. படகு நடுக்கடலில் கவிழ்ந்தால் பரலோகம்தான்.

அப்போதெல்லாம், ஊரில் பேசிக்கொள்வார்கள், இன்னார் இந்தியாவுக்கு தப்பி போயிட்டினமாம் என்று. இன்னார் தமிழ்நாட்டுக்கு சென்று சேரவில்லையாம். ஆகவே, படகு நடுக்கடலில் கவிழ்திருக்க வேண்டும் அல்லது சிங்களப்படைகளிடம் மாட்டியிருக்க வேண்டும். நீச்சல் தெரிந்தவர் யாராவது நீந்தி வந்தால்தான் உண்மை கரையேறும். உயிர் பிழைத்தால் தமிழ்நாடு இல்லையென்றால் நடுக்கடலில் படகு கவிழ்ந்து சுவாசப்பையின் காற்றை கடல் நீருக்கு கொடுத்து, காற்றுக்குப் பதில் கடல் நீரை சுவாசப்பை முழுக்க நிரப்பி மூச்சுக்காற்றுக்கு திணறி, மூச்சடைத்து கைகால்களை உதறி, உதறி செத்துப்போவோம். பிறகு, எங்கள்  உடல் மீனுக்கு இரையாகும். இதெல்லாம், தெரிந்தே சமுத்திரத்தை தாண்டிக் கடக்கும் முயற்சியில் இறங்கினோம். சாகத்துணிந்தவனுக்கு சமுத்திரமும் வாய்க்கால் என்பது இதைத்தானோ?

கடற்படையின் கண்களில் இருந்து தப்பிப்பது என்பது ஒன்றும் எளிதான காரியம் அல்ல. அதனால், படகில் ஏறி தப்பிக்க மாதக்கணக்கில் கரையோரத்தில் ஒவ்வொரு ஊராக அலைந்தோம். அப்படி அலைந்தபோதுதான் எங்கள் மீது வீசப்பட்ட ஓர் விமானக்குண்டில் என் மைத்துனரின் கால் பறிபோனது. குண்டு போட விமானம் செங்குத்தாய் விரைந்து வர எங்கள் மீது தான் குண்டு விழப்போகிறது என்று சுதாகரித்து ஓட, எங்களின் பிடரிக்குப் பின்னால் குண்டுகள் விழுந்து வெடித்துக்கொண்டே இருந்தன. கொதிக்கும் இரும்புத்துண்டுகள் எங்களை சுற்றி நெருப்பு மழைபோல் சிதறிக்கொண்டிருந்தது.

அப்படி சிதறிய ஓர் துண்டுதான் எனக்கு முன்னால் தன் சின்னக்கால்களால் ஓடிக்கொண்டிருந்த என் மைத்துனரின் பின் முழங்காலுக்கு கீழே கிழித்து உள்ளே சென்றது. காலிலிருந்து இரத்தம் வழிகிறது என்று நான் நிலைமையை உணருமுன்பே அந்த குழந்தை கால்கள் குத்தி நிலத்தில் விழுந்தது. அருகிலுள்ள சீமெந்து கூரையுள்ள ஓர் மலசல கூடத்தின் உள்ளே காயம் பட்டவரை கிடத்தி கிடைத்த ஏதோ ஒரு அழுக்கு துணியால் காயத்தை இறுக்கி கட்டிவிட்டு, மீண்டும் அவரை தூக்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தோம்.

அதன் பிறகு இந்தியா, தமிழ்நாடு செல்லும் முயற்சியை கைவிட்டு செத்தாலும் ஈழத்திலேயே சாகலாம் என முடிவெடுத்து ஊரில் தங்கிவிட்டோம். ஆனால், நிலைமைகள் மிக மோசமான பின் இனிமேல் ஒன்று வாழவேண்டும் அல்லது செத்தே ஆக வேண்டும் என்பது விதியானது. எங்களுக்கு தெரிந்த ஒருவரின் படகில் பருத்தித்துறை முனை கடற்கரையில் இருந்து தமிழ்நாட்டுக்கு கிளம்பினோம். படகு கிளம்பிவிட்டது. படகு புறப்படத் தொடங்கியதிலிருந்து கடற்கரையும் அங்கேயிருந்த மீதமுள்ள என் இனம், சனம் எல்லோரையும் மிக விரைவில் திரும்பி வந்து பார்ப்பேன் என்று ஏதோ ஓர் நம்பிக்கையுடனும், அவர்கள் நிச்சயமாய் உயிரோடிருப்பார்கள் என்றும் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

எனக்கும் என் மண்ணுக்கும் இடையேயுள்ள தூரம் என்னை பிரிக்க, என் உயிரும், மனமும் இன்னும், இன்னும் ஆழமாக அதை நேசிக்க, காதலிக்க தொடங்கியது. என் மண்ணோடு எனக்குள்ள பந்தம் எப்படி விடுபட்டுப்போகும்? நினைவுகள் என் தேசத்தின் மண்ணோடு, காற்றுவெளியோடு, கடை, தெரு, உறவு, நட்பு என்று மூழ்கியிருக்க உடல் மட்டும் அலைமேல் படகில் கிடந்தது. என் மண்ணின் எல்லை தாண்டி, கடல் கடந்து  தமிழ்நாட்டு கடற்கரையில் கால்வைத்தவுடன் அந்த மண்ணோடு சேர்ந்து அகதி என்ற பெயர் என்மீது ஒட்டவில்லை. அது முத்திரையாய் குத்தப்பட்டது. இந்த அகதிகளை சிலர் தரம் தாழ்த்தி அற்ப சந்தோசப்பட நினைத்தால் “கள்ளத்தோணிகள்” என்றும் அழைப்பதுண்டு.

பொதுவாக தமிழ்நாட்டு தமிழர்கள் எங்களுக்கு வைத்த பெயர், “சிலோன் அகதிகள்”. நாங்கள் தமிழ்நாட்டில் கால் வைத்த போது ஏதோ வேற்றுக்கிரகவாசிகள் போல்தான் வரவேற்கப்பட்டோம். என் வாழ்நாளில் மறக்க முடியாதவைகளில் அதுவும் ஒன்றாய்ப்போனது. எங்களை விழிகள் விரியுமளவிற்கு பார்க்கும்படி வேடிக்கைப்பொருள் ஆனோம். எங்களின் பசி, தாகம் பற்றி அக்கறையாய் விசாரிக்கப்படாதது ஏனோ மனதை காயப்படுத்தியது.

அனிச்சை செயலாய் அப்போது தமிழ்நாட்டில் இருந்த எங்கள் ஊர்க்காரர் ஒருவரின் கண்களில் இடறினோம். “வள்ளம் வந்திருக்கு எண்டு சொன்னாங்கள். அதான் ஆராவது எங்கட ஊராக்கள் இருக்கினமோ எண்டு பாக்க வந்தனான்” என்றார். ஏதோ திக்கு தெரியாத காட்டில் திசைகாட்டி போல் இருந்தது அவரின் ஊர்ப்பாசம். படகில் வந்ததில் ஏறக்குறைய அவரவர் வாந்தியில் அவரவரே நனைந்து, ராட்சத அலைகளில் குளித்து, அதையே குடலை பிடுங்குமளவிற்கு விழுங்கி குற்றுயிராய் தமிழகத்தில் நாங்கள் கரை ஒதுங்கியத்தின் அவலத்தை அவரின் அனுபவத்தின் மூலம் உணர்ந்திருப்பார் போலும்.

அவர் முதலில் கேட்ட கேள்வி உண்மையிலேயே என்னை அந்த சந்தர்ப்பத்தில் கண் கலங்க வைத்தது. “களைச்சுப்போய் இருக்கிறியள். ஏதாவது சாப்பிட்டீங்களோ?”. ஓர் அகதியின் வலி இன்னோர் அகதிக்குத்தான் புரியுமோ? பசி வயிற்றை பிடுங்கினாலும், அதை வெளியே சொல்லமுடியாதவாறு தன்மான உணர்வு தடுக்க, இல்லை பசிக்கவில்லை என்று சொல்லிவைத்தோம். அவசரமாய், சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதை தயங்கித் தயங்கி சொன்னோம். தன் வீட்டுக்கு வாருங்கள் என்று எங்களை அனுமதி கேட்காமலேயே கூட்டிச்சென்றார்.

அவரது வீட்டைப் பார்த்தபோது உண்மையிலேயே அதிர்ந்துதான் போனேன். ஊரில் எவ்வளவு வசதியாய் வாழ்ந்த மனிதர் இப்போது எலிவளையில் ஒண்டிக் கொண்டிருந்தார். ஒருவாறு, சிரம பரிகாரம் செய்து, உடைமாற்றி மீண்டும் வந்த இடத்திற்கே போகிறோம் என்றவர்களை வற்புறுத்தி ஓர் ரெஸ்டாரண்டில் சாப்பிடவைத்து சந்தோசப்பட்டார். பிறகு, இனிமேல் எங்களுக்கு என்ன நடக்கும் என்பதை அவரின் அனுபவத்தை கொண்டு விளக்கினார்.

மீண்டும் வந்த இடத்திற்கே திரும்பி, அதிகாரிகளின் வருகைக்காய் காத்திருந்தோம். நீண்ட நேரத்திற்குப்பின், அதிகாரிகள், காவல்துறை இன்னும் யார் யாரோ வந்தார்கள். அவர்களின் சம்பிரதாய அகதி விசாரணையை செய்து முடித்தார்கள். பிறகு, எங்களையும் எங்களோடு வந்த சிலரையும் ஓர் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு இரவிரவாய் எங்கெங்கோ அடித்துப் பெய்யும் மழையில் கொண்டு திரிந்தார்கள். இடையிடையே நிறுத்தி காவல் துறையினர் குளிரைப் போக்க தாங்கள் மட்டும் தேநீரும் குடித்து, சிகரெட்டும் பற்றவைத்துக் கொண்டார்கள். அவர்களும் மனிதர்கள் தானே என்று நினைத்துக்கொண்டேன்.

ஏறக்குறைய ஒரு நாள் முழுப் பொழுது தாண்டியபின்னும் கூட எங்கள் பசி, தாகம் பற்றி ஒற்றைவார்த்தையேனும் கேட்கப்படாதது நெஞ்சை அறுத்தது. ஆனால், ஒவ்வொரு முறை அவர்கள் இறங்கி ஏறும்போதும் எங்கள் தலைகளை பொறுப்புணர்வுடன் எண்ணி, எண்ணிப்பார்த்து தங்கள் கடமையுணர்வால் வேறு எங்களை கண் கலங்க வைத்தார்கள். ஒருவாறு, விடிந்தபின் ஓர் அகதிமுகாமில் வண்டி நின்றது. எனக்கு அதிகம் பிடிக்கும், நான் ரசிக்கும் சூரிய வெளிச்சம் சுள்ளென்று முகத்தில் அடித்தது. நீண்டநாட்களுக்கு பிறகு அதை உயிர்ப்பயமின்றி, வெடிச்சத்தமின்றி நான் ரசித்த அந்த கணம் இன்றுவரை என் மனதில் பசுமையாய் இருக்கிறது.

வண்டியிலிருந்து இறங்கி நின்று என் உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் பரவட்டும் என்று வெடிமருந்தின் மணமில்லாத அந்த காற்றை சுகமாய் என் சுவாசப்பைகளில் நிரப்பிக்கொண்டேன். ஆனாலும், அடுத்த கணமே என் அவலநிலை என்னை யதார்த்த உலகிற்கு இழுத்து வந்தது. அந்த அற்ப கணநேர சந்தோசமும் எனக்குள் உறைந்து போனது. மறுபடியும் உணர்வுகள் மரத்துப்போக, பார்வையை சுழல விட்டபோது ஈழத்தமிழர்களும், ஈழத்தமிழுமாய் கண்களையும், காதுகளையும் வலியாகவும், மகிழ்ச்சியாகவும் இனம்புரியாத ஓர் உணர்வு தீண்டியது.

பொட்டல் வெளியில் என் பார்வை தீண்டிய தூரம் வரையில் நிறைய ஓலைக்குடிசைகள் (கிடுகுகளால் வேயப்பட்டது), அவற்றுக்கிடையே உள்ள இடைவெளியில் நிறையவே மனித தலைகள். இனிமேல் இழப்பதற்கு ஏதுமில்லாத மனிதர்கள். அந்த ஒற்றை குடிசையை தவிர ஒதுங்க கூட இடமில்லாதவர்கள். சொந்தமண்ணில் எது, எதுக்கெல்லாமோ சொந்தக்காரர்கள், கெளரவ மனிதர்கள். தஞ்சமடைந்த பூமியில் ஏதுமற்ற ஏதிலிகள். இவர்களின் பெயர் அகதிகள். இவர்கள் ஒதுங்கிய இடத்தின் பெயர் தான் அகதி முகாம்.

தொடரும்

ரதி

தொடர்புடைய பதிவுகள்

வட இந்தியாவில் சாதி – எனது பயண அனுபவங்கள் !

24

சாதி

பொதுவில் பயண அனுபவங்களை எழுதி வைக்க வேண்டும் எனும் எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் நாளை நாளை என்று தள்ளிப்போட்டுப் போட்டு மொத்த விஷயமும் நமுத்துப் போய்விடும்.

பயண அனுபவம் என நான் கருதுவது செல்லும் ஊர்களின் அழகியல் அம்சங்களை பட்டியலிட்டுக் காட்டுவது எனும் அம்சத்தில் அல்ல. மாறாக மாறுபட்ட கலாச்சாரம், மற்றும் அந்தக் கலாச்சாரத்தில் அடித்தளமாய் இருக்கும் பொருளாதாரம், அந்தப் பொருளாதாரத்தால் தீர்மானிக்கப்படும் அங்குள்ள மனிதர்களிடையே நிலவும் உறவுகள், அந்த உறவுகளினிடையே ஏற்படும் முரண்பாடுகள் போன்றவற்றைக் கண்டு பதிந்து வைப்பதைத்தான். வடநாட்டுப் பயணம் என்பது என்னளவில் ஒரு முக்கியமான திருப்புமுனை.

ஒரு நாலைந்து ஆண்டுகள் முன்பு இந்தியா எனும் மாய நினைவுகளோடே தில்லியில் வந்திறங்கியவனை ஒரு உலுக்கு உலுக்கி நாம் உண்மையில் ஒரு எல்லைக்குள் இருக்கும் பல தேசத்தவர் என்பதை உணர வைத்தது.

இப்போது மீண்டும் தில்லி. இந்தப் பயணம் ஒருமாத அளவுக்குக் குறுகியவொன்றாயிருந்தாலும் முந்தைய அனுபவங்களின் நினைவுகள் மீண்டும் அவ்வப்போது உரசிச் செல்வதை உணர முடிந்தது.

தில்லி என்பது ஒரு அடையாளம். ஆளும் வர்க்க / மேட்டுக்குடி வர்க்கத்தினரின் ஆணவத்தினுடைய அடையாளம். தனது வளர்ச்சிக்கு உரமாய் இருந்தவர்களையெல்லாம் சீரணித்துச் சக்கையாகத் துப்பி விடும் துரோகத்தின் அடையாளம். புறக்கணிப்பைப் புறக்கணித்து இந்நகரின் மேன்மைக்காய் உழைத்து உழைத்து நடைபாதைகளில் கண்களில் வெறுமை தெறிக்கத் தங்கியிருக்கும் அந்த உழைக்கும் மக்களுடைய தியாகத்தின் அடையாளமும் இதே தில்லிதான்.

இப்போது காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை தில்லியில் நடத்தப் போகிறார்கள். அதற்காக நகரத்துக்கு மேக்கப்போடும் வேலை வெகு வேகமாக நடந்து வருகிறது. முகத்திலிருக்கும் கரும்புள்ளிகளை அசிங்கமாகப் பார்ப்பதைப் போல பாதையோரங்களை அடைத்துக் கிடக்கும் உழைக்கும் மக்களையும் அசிங்கமாகப் பார்க்கிறது அரசு. தில்லி மெட்ரோவின் பாதைகளை அமைக்க உயரமான கான்க்ரீட் தூண்களை அமைக்கும் தொழிலாளிகள், அம்மாநகரத்தின் அழகிய வானுயர்ந்த கட்டிடங்களை அமைக்கும் தொழிலாளிகள், இன்னும் பூங்காக்கள், பாலங்கள்.. என்று அந்நகரத்தின் அழகை மெருகூட்டும் உழைக்கும் மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது. அழகுபடுத்தல் முடிந்ததும், அதன் ஒரு அங்கமாய் அதற்காக வேர்வை சிந்தியவர்களையும் கூட தூக்கியெறியப் போகிறார்கள்.

குர்காவ்ன், நோய்டா போன்ற சாடிலைட் நகரங்களில் வானை எட்டிப் பிடிக்க நிற்கும் பளபளப்பான ஒவ்வொரு கட்டிடமும் நம்மிடம் சொல்ல ஓராயிரம் கதைகளுண்டு. நான் வந்து சேர்ந்த இரண்டாவது நாளில் நோய்டாவில் நடைபாதையில் தங்கியிருந்த ஒரு கூலித் தொழிலாளி – ஒரு முதியவர் – நடுக்கும் குளிரில் செத்துப் போயிருந்தார். அவர் கட்டிடத் தொழிலாளியாய் பணிபுரிந்த கட்டடத்திற்கு மிக அருகாமையிலேயே ஒரு நடைபாதையோரம் வாழ்ந்து வந்தார். ஒருவேளை அந்தக் கட்டிடத்துக்கு மட்டும் உயிரும், இதயமும், கண்களும் இருந்திருந்தால் தன்னை பார்த்துப் பார்த்து வளர்த்த அம்முதியவரின் மரணத்துக்காக அழுதிருக்குமோ என்னவோ. ஆனால் அந்தக் கட்டிடத்திலியங்கும் அலுவகங்களில் வேலை பார்க்கும் எவரும் சும்மா வேடிக்கை பார்க்கக் கூட அருகில் வரவில்லை. இங்கே ஏழ்மையையும் வறுமையையும் தொற்று நோயைப் போல பார்த்து ஒதுக்குகிறார்கள்.

இங்கே மூன்று உலகங்கள் இருக்கிறது – ஒன்று உலகத்து இன்பங்களையெல்லாம் சாத்தியப்பட்ட எல்லா வழிவகைகளிலும் துய்க்கும் நுகர்வு வெறியோடு அலைபவர்களின் உலகம்.. அடுத்த உலகம் அருகிலேயே இருக்கிறது – அது வெயிலென்றும் குளிரென்றும் பாராமல் ஓயாமல் உழைத்து எங்கோ பீகாரிலோ உத்திர பிரதேசத்திலோ மத்தியபிரதேசத்திலோ ஒரிசாவிலோ இருக்கும் வயதான பெற்றோர்களுக்கு மாதம் நூறு ரூபாய்களாவது அனுப்ப வேண்டுமே எனும் தவிப்பில் உழலும் இடம்பெயர்ந்த உழைப்பாளிகளின் உலகம். மூன்றாவது உலகம் இவை இரண்டுக்கும் இடையிலிருந்து கொண்டு தமக்கு மேலே உள்ள உலகத்தவர்களின் ஆடம்பரக் கார்களைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டே கடன்பட்டாவது ஒரு மாருதி 800 வாங்கி ஓட்டுவதை பெருமையாக நினைக்கும் நடுத்தர வர்க்க மக்களின் உலகம்.

வடக்கில் பிகார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உ.பி ஆகிய மாநிலங்களை BIMARU என்கிறார்கள். இம்மாநிலங்களில் விவசாயம் பொய்த்துப் போனதாலும் அந்தந்த வட்டாரங்களில் பிழைக்க வேறு வழியில்லாததாலும் வீசியெறியப்படும் மக்கள் தில்லியில்தான் வந்து குவிகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தலித்துகள். இவர்கள் பெரும்பாலும் வசிப்பது நடைபாதைகளில்தான். லட்சக்கணக்கான குடும்பங்கள் இப்படி பிள்ளை குட்டிகளோடு இடம் பெயர்ந்து வந்துள்ளதைக் காண முடிகிறது. குர்காவ்ன், நோய்டா மற்றும் தில்லியின் பல பகுதிகளில் நடைபாதைகளில் இவர்கள் வசிக்கிறார்கள். மொத்த குடும்பமே ஏதோவொரு கூலி வேலைக்குச் சென்றால்தான் ஜீவனத்தை ஓட்ட முடியும். இவர்களுக்கான சுகாதார
வசதிகளோ, இந்தக் குடும்பங்களின் பிள்ளைகள் படிக்க ஏற்பாடோ  எதுவும் கிடையாது. இவர்கள் இத்தனை சிரமத்துக்குள்ளும் ஒரு பெருநகரத்துக்கு இடம் பெயர்ந்து வர வெறுமே பொருளாதாரக் காரணங்கள் மட்டும்தான் இருக்கும் என்று நான் நம்பவில்லை.

இங்கே வந்த சில நாட்களில் வேலை தள்ளிப் போய்க்கொண்டு இருந்ததால் கூட ஒரு பீகாரி நண்பனையும் கூட்டு சேர்த்துக் கொண்டு லும்பினி செல்லக் கிளம்பிவிட்டேன். பேருந்தில் அயோத்தி வரை செல்வது, அங்கே எனது கல்லூரி நண்பன் சரவணரகுபதியும் அவனது நண்பனும் எங்களோடு சேர்ந்து கொள்வார்கள் என்பதும், தொடர்ந்து லும்பினிக்கு இரண்டு புல்லட்டுகளில் சென்றுவிட்டு மீண்டும் அயோத்தியிருந்து தில்லிக்கு பேருந்தில் பயணம் என்பது திட்டம். இந்தப் பயணத்தின் இடையில் ஒரு நாள் ஏதாவது ஒரு சிறிய டவுனில் இரவு தங்கிவிட்டு அடுத்த நாள் மீண்டும் பயணிப்பது என்றும் முடிந்தவரையில் தேசிய நெடுஞ்சாலையை விட்டு விலகியே பயணிப்பது என்றும் தீர்மானித்துக் கொண்டே கிளம்பினோம்.

திட்டமிட்டபடி வழியில் அயோத்தியில் என் நண்பன் சரவணனும் அவன் நண்பன் வைபவ் த்ரிபாத்தியும் எங்களோடு இணைந்து கொண்டனர். அங்கிருந்து இரண்டு புல்லட்களில் கோரக்பூர் கிளம்பினோம் – கிளம்பும் போதே மதியம் 3 ஆகிவிட்டது. பஸ்ட்டி எனும் நகரத்தைத் தாண்டியதும் ஒரு கிராமத்தில் வைபவ்வின் உறவினர் வீட்டில் தங்கினோம்.

அடுத்த நாள் விடியகாலை சீக்கிரம் எழுந்து திறந்த வெளிப் புல்கலைக்கழகத்தைத் தேடி நடந்த போது ஒரு தலித் குடியிருப்பைக் கடந்தோம் – காலை ஒரு மூன்று மணியிருக்கும். குடிசைகளில் அந்த நேரத்துக்கே சமையல் வேலை நடப்பதைக் காண முடிந்தது. வைபவ்விடம் விசாரித்தேன் – பொதுவாக இங்கே மொத்த குடும்பமும் பண்ணைகளின் நிலத்தில் வேலைக்குச் சென்று விடவேண்டும் என்பதால், காலையிலேயே மொத்த நாளுக்கும் சேர்த்து சப்பாத்தி சுட்டு வைத்துக்கொள்கிறார்கள். சப்ஜி என்று எதுவும் கிடையாது; ஒரு பச்சைமிளகாயை எடுத்து சப்பாத்தியை அதில் சுருட்டி அப்படியே சாப்பிட வேண்டியது தான். இதுவேதான் மதியத்துக்கும் இதுவேதான் இரவுக்கும். கோதுமையை பண்ணையாரே கொடுத்துவிடுவார் – கூலியில் பெரும்பாலும் கழித்து வடுவார். கூலியென்று பார்த்தாலும் ஆணுக்கு இருபது ரூபாயும் பெண்ணுக்கு பத்து ரூபாய்களும்தான்; சிறுவர்களின் வேலைக்கெல்லாம் கூலி கிடையாது. பெரும்பாலும் கூலிக்கு பதிலாய் தானியங்கள் கொடுத்து விடுவார்களாம்.

இதில் வேலை முடிந்ததா வீட்டுக்கு வந்தோமா என்றெல்லம் கிடையாது; பண்ணையார் எப்போது கூப்பிடுகிறாரோ அப்போதெல்லாம் போய் நிற்க வேண்டும். இவர்களெல்லாம் பரம்பரை பரம்பரையாக தொண்டூழியம் செய்பவர்களாம்; இப்போது பண்ணையாருக்கு முடிவெட்டுபவரின் தந்தை பண்ணையாரின் தந்தைக்கு வெட்டியிருப்பார் – இவர் மகன் பண்ணையாரின் மகனுக்கு எதிர்காலத்தில் முடிவெட்டுவார் – இப்படி! இங்கே பெரும் பண்ணைகளிடம்தான் நிலங்கள் மொத்தமும் குவிந்துள்ளன. தலித்துகள் பெரும்பாலும் நிலமற்றவர்களே (தமிழ்நாட்டைப் போலத்தான்). மொத்த குடும்பமும் – குஞ்சு குளுவான்கள் முதற்கொண்டு கூலி வேலைக்குச் சென்றாக வேண்டும். பிள்ளைகளுக்குக் கல்வியென்பதே கிடையாது.

பெரும்பாலும் அங்கே நான் கவனித்தது நமது மாநிலத்துக்கும் அங்கேயுள்ள நிலைமைகளுக்கு மலையளவு இருந்த வித்தியாசத்தை.  உத்திர பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் உயர்சாதியினருக்கு சட்டமே கிடையாது என்பது போல்தான் தெரிகிறது. சர்வசாதாரணமாக அங்கே நாட்டுத் துப்பாக்கிகள் தூக்கிய குண்டர்களுடன் உயர்சாதிப் பண்ணைகள் நடமாடுவதைக் கவனித்து இருக்கிறேன். பேருந்துகளில் அவர்கள் ஏறினால் டிக்கெட் எடுப்பதில்லை. பேருந்துகளில் ஏறும் தலித்துகள் இருக்கைகள் காலியாய் இருந்தாலும் உட்காருவதில்லை – குறிப்பாக இரண்டு பேர் அமரும் இருக்கையில் ஒரு உயர் சாதிக்காரர் உட்கார்ந்து இருந்தால் அருகில் ஒரு தலித் உட்கார முடியாது.

நிலப்பிரபுத்துவம் தனது உச்சகட்ட கொடுமைகளை அங்கே கட்டவிழ்த்து விட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. முசாகர் எனும் ஒரு சாதியினரைப் பற்றி எனது பீகாரி நண்பன் சொன்னான் –  தமிழகத்திலிருந்து சென்றிருக்கும் எனக்கு (இங்கே இரட்டைக் குவளையை முறையைக் கண்டிருந்தாலும் கூட) அவர்களைப் பற்றி கேள்வியுற்றதெல்லாம் கடுமையான வியப்பை உண்டாக்கியது. அங்கே வீடுகளின் உயரத்தைக் கூட சாதிதான் தீர்மானிக்கிறது. தாக்கூரின் வீடு பார்ப்பானின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், யாதவர்களின் வீடு தாக்கூர்களின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க  வேண்டும், தலித்துகளின் வீடுகள் யாதவர்களின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், முசாகர்களின் வீடுகள் தலித்துகளின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும். கதவுகளும் அவ்வாறே அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதால், முசாகர்களின் வீட்டுக்குள் நுழைவது என்பது எலி வளைக்குள் நுழைவது போலத்தானிருக்குமாம்.

குடியிருப்புகள் அமைந்திருக்கும் திசைகூட காற்றின் திசைக்கு ஏற்ப தான் இருக்க வேண்டுமாம். அதாவது தலித்துகளின் குடியிருப்பைக் கடந்து மேல்சாதியினரின் குடியிருப்புக்குக் காற்று செல்லக் கூடாதாம். இந்த மாதத்தில் ஓலைக் குடிசையாய் இருந்த தனது வீட்டை ஒரு முசாகர் காரை வீடாக கட்டிவிட்டதற்காக அதை இடித்துத் தள்ளியிருக்கிறார்கள் மேல்சாதி இந்துக்கள். எனக்குத் தமிழகமும் பெரியாரும்  நினைவுக்கு வந்தார் – உண்மையில் அந்த தாடிக்காரக் கிழவனுக்கு நாம் நிறையவே கடன்பட்டிருக்கிறோம்.

இது போன்ற சமூகக் காரணிகள், பொருளாதாரக் காரணிகளோடு இணைந்துதான் அவர்களை தில்லிக்கு விரட்டுகிறது – இங்கே தில்லியின் கருணையற்ற இதயத்தை சகித்துக் கொண்டு தொடர்ந்து வாழ நிர்பந்திக்கிறது. BIMARU மாநிலங்களின் பலபகுதிகளின் பொருளாதார நிலையும் சமூக ஒடுக்குமுறையும் நமது கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்டதாய் இருக்கிறது.

நாங்கள் பஸ்ட்டியிலிருந்து காலையில் சீக்கிரமாகவே கிளம்பி விட்டோம் – வழியில் வைபவ்வின் புல்லட் இஞ்சின் சீஸ் ஆகி விட்டது. மிதமான வேகத்தில் கோரக்பூர் சென்றபோது மாலை நான்கு. ஒரு மெக்கானிக்கைப் பிடித்து ரீபோரிங் செய்யச் சொல்லிவிட்டு நாங்கள் நால்வரும் தங்க இடம் பார்க்கவும், ஊரைச் சுற்றிப்பார்க்கவும் கால்நடையாகக் கிளம்பிவிட்டோம்.

இரவு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம் – நான் அங்குள்ள சாதி ஒடுக்குமுறைகள் விவசாயம் மற்றும் பிற தொழில்கள் பற்றியும் அவர்களிடமிருந்து கேட்டறிய முடிந்தது. அவர்களிடம் நம் மாநிலம் பற்றி நிறைய சொன்னேன். பிரதானமாக அவர்களுக்கு இருந்த ஆச்சர்யங்கள் இரண்டு – 1) அது ஏன் தமிழ் நாட்டில் இந்தியை எதிர்க்கிறீர்கள்? 2) அது எப்படி கருணாநிதி ராமரைப் பற்றி இழிவாகப் பேசியும் தமிழ் நாட்டு மக்கள் கண்டுகொள்ள மாட்டேனென்கிறார்கள்.. நீண்ட நேரமாக அவர்களுக்கு பெரியார், அவருக்கு முன் இருந்த பார்ப்பனிய எதிர்ப்பு மரபுகள் போன்றவற்றை விளக்கினேன். மற்றபடி அங்குள்ள நிலைமைகளை அவர்களிடம் கேட்டறிந்ததனூடாகவும் இந்தப் பயணத்தில் இடையிடையே நிறுத்தி நேரில் கண்டவற்றினூடாகவும் எனக்கு பளிச்சென்று தெரிந்தவொன்று – தமிழ்நாட்டுக்கும் வட நாட்டிற்கும் இருந்த மலையளவிலான சமூகப் பொருளாதார வேறுபாடுகள்.

தமிழ்நாட்டில் சாதி ஒடுக்குமுறையை எதிர்த்து தலித்துகள் போராடுகிறார்கள் – இரட்டைக்குவளை முறையை இன்னும் ஒழிக்க முடியாத திராவிட ஆட்சி என்று உண்மைத்தமிழன் வினவு தளத்தில் ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார்.. இரட்டைக்குவளை முறையை எதிர்த்து போராடும் செய்திகள் வருவதாலேயே அது நடப்பில் இருப்பது இவருக்கு தெரிந்திருக்கிறது. ஆனால், வடக்கிலோ ஒடுக்குமுறையை எதிர்த்து தலித்துகள் போராடுவது சாத்தியமில்லை. அதற்குக் காரணம் அவர்கள் ஆண்டைகள் தம்மேல் ஏவிவிடும் ஒடுக்குமுறையை கேள்வி வரைமுறையில்லாமல் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்பதல்ல; அங்குள்ள பொருளாதாரச் சூழல் அவர்களை போராடும் ஒரு நிலைக்கு அனுமதிப்பதில்லை என்பதே காரணம்.

தமிழ்நாட்டில் ஒதுகுபுற கிராமங்களில் இருந்து அதிகபட்சம் மூன்று மணிநேர பேருந்துப் பயண தூரத்தில் ஏதேனும் ஒரு சிறு நகரமாவது இருக்கும். பேருந்துக் கட்டணமும் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது குறைவு – பேருந்து இணைப்பின் அடர்த்தியும் வடக்கை ஒப்பிடும் போது அதிகம். கிராமப்புறங்களில் நிலத்தின் மேல் தலித்துகளுக்கு பொதுவாக இந்தியா முழுவதிலும் உரிமை கிடையாது. சாதி இந்துக்கள்தான் நிலங்களை வைத்திருக்கிறார்கள். இயல்பாகவே கிராமப்புறத்தில் தலித்துகள் கூலிவேலை பார்ப்பவராயும், சாதி இந்துக்களுக்கு தொண்டூழியம் செய்பவராயும் இருக்கிறார்கள். இந்த நிலையில், தமிழ்நாட்டைப் பொருத்தளவில் ( குறிப்பான சில விதிவிலக்குகள் இருக்கலாம்) தலித்துகள் முற்று முழுக்க தமது சோற்றுக்கு கிராமப்புற பண்ணையை நம்பித்தானிருக்க வேண்டும் எனும் கட்டாயம் கிடையாது. அருகிலிருக்கும் நகரங்களுக்கு கூலி வேலையாக வரும் தலித்துகள் இயல்பாகவே தமது கிராமங்களுக்குத் திரும்பும் போது அங்கு நிலவும் ஒடுக்குமுறையை சகித்துக் கொள்ள முடியாமல் போராட எத்தனிக்கிறார்கள்.

உதாரணமாக நான் திருப்பூரில் சில ஆண்டுகள் தங்கியிருந்த போது பக்கத்தில் ஒரு ஷெட்டில் கோவையின் ஏதோ ஒரு ஒதுக்குப்புற கிராமத்திலிருந்து இங்குள்ள பனியன் பட்டரையில் வேலைக்காக வந்திருந்தவர்கள் சேர்ந்து தங்கியிருந்தனர். அவர்களிடம் பேசிப்பார்த்த போது, அங்கே அவர்கள் கிராமத்தில் கவுண்டர்கள் இவர்களை மோசமான முறையில் ஒடுக்கிவந்ததும், இவர்கள் அதை எதிர்த்து போராட ஆரம்பித்தவுடன், அந்த வட்டாரத்திலிருக்கும் கவுண்டர்களெல்லாம் சேர்ந்து இவர்களுக்கு தமது நிலத்தில் வேலை தரக்கூடாது என்று முடிவு செய்து விட்டதாகவும், எனவே இவர்கள் வீட்டுக்கொருவராகக் கிளம்பி திருப்பூருக்கு வேலைக்கு வந்துவிட்டதாகவும் தெரியவந்தது.

இதில், இங்கும் அவர்கள் வேலைசெய்யும் கம்பெனி முதலாளி ஏதாவதொரு ஆதிக்க சாதிக்காரனாகத்தானிருப்பான், ஆனால் – அவர்கள் கிராமத்தில் சந்தித்த ஒடுக்குமுறை பிரதானமாக சாதி ரீதியிலானதும் அதற்கு சற்றும் குறையாத பொருளாதாரச் சுரண்டலும் – இங்கே பொருளாதார ஒடுக்குமுறையே பிரதானமானது; சாதி ரீதியிலான ஒடுக்குமுறையின் கணம் லேசாகக் குறைந்து அது தன் வடிவத்திலிருந்து மாறுபட்டு பொருளார அம்சங்களை தன்னோடு சேர்த்துக் கொண்டிருக்கிறது.

இந்த இடத்தில் தமிழ்நாடு திராவிட ஆட்சிகளால் சொர்க்க புரியாகிவிட்டது எனும் அர்த்தத்தில் சொல்லவதாக புரிந்து கொள்ள வேண்டாம். தமிழ்நாட்டில் ஒடுக்குமுறையின் பரிமாணம் வேறு தளத்துக்கு நகர்ந்து விட்டது. இங்கே மக்கள் தமது பாரம்பரிய வாழிடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு தொழில்நிறுவனங்களில் குறைகூலிக்குச் செல்ல நிலபிரபுத்துவம் நிர்பந்திக்கிறது. மறுகாலனியாதிக்க பொருளாதாரக் கொள்கைகளும் நிலபிரபுத்துவமும் கைகோர்த்துக் கொள்வது இந்த அம்சத்தில்தான். அமெரிக்கனுக்கு குறைந்த விலையில் டீசர்ட் கிடைக்க ஆலாந்துரையைச் சேர்ந்த கவுண்டனும் ஒரு மறைமுகக் காரணமாகிறான். ஒடுக்குமுறையானது அதன் வடிவத்தில் மாறுபட்டு வருகிறது – ஆனால் ஒடுக்குமுறைக்கான பிரதான காரணமான வளங்களின் மேல் அதிகாரமற்று இருப்பது அப்படியேதான் தொடர்கிறது.

ஆனால் இங்கே வடக்கில் நிலைமை சற்று வேறு விதமானது – சமூக ரீதியாக இன்னமும் மூன்னூறு ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமை தான் பெரும்பாலான பகுதிகளில் நிலவுகிறது. இங்கே எளிதில் இடம்பெயர நகரங்கள் கைக்கெட்டும் தொலைவில் இல்லை. நாங்கள் பயணம் செய்த போது, காலையில் ஒரு நகரத்தைக் கண்டோமென்றால், மாலையில் தான் அடுத்த நகரத்தைப் பார்க்க முடியும். அங்கும் இடம்பெயர்ந்து வருபவருக்கெல்லாம் வேலை கொடுக்குமளவிற்கு தொழிற்சாலைகள் ஏதும் இருக்காது. கிராமத்தில் ஆண்டைகளின் ஒடுக்குமுறையைச் சகித்துக் கொண்டு அடிபணிந்து கிடப்பதைத் தாண்டி வேறு வாய்ப்புகள் குறைவு.

இப்போது இதன் பின்னணியில் வடக்கிலும் மத்தியிலும் சிலபகுதிகளில் மாவோயிஸ்டுகள் செலுத்திவரும் செல்வாக்கைப் புரிந்து கொள்ள முடியும். இங்கே சாதி ரீதியில் / சமூக ரீதியில் / பொருளாதார ரீதியில் ஒடுக்கப்படும் உழைக்கும் மக்களுக்கு மாவொயிஸ்டுத் தோழர்கள் கம்யூனிஸ்டுகளாய் அல்ல; ஒரு மீட்பராகவோ, ஒரு தேவதூதராகவோதான் தெரிவார்கள் என்று நினைக்கிறேன். அவர்களின் துப்பாக்கிக் குழாயிலிருந்து அதிகாரம் மட்டுமல்ல, ஆண்டாண்டு காலமாய் நிலபிரபுத்துவ ஒடுக்குமுறையின் கீழ் புழுங்கிச் சாகும் மக்களின் விடுதலையும் கூட அந்தக் குழாயிலிருந்து நெருப்புப் பிழம்பாய்ப் புறப்படும் ஈயக்குண்டுகளின் உள்ளே தான் சூல் கொண்டு இருக்கிறது. மாவொயிஸ்டுகள் தமது கட்டுப்பாட்டுப் பிராந்தியத்திலிருக்கும் மக்களின் மனங்களில் அசைக்கமுடியாத மாவீர்களாய் (invincible heros) வீற்றிருப்பார்கள் என்பதை மற்ற பகுதிகளில் நான் கண்ட நிலைமை எனக்கு உணர்த்தியது.

அந்த மக்கள் காக்கிச் சீருடையுடனும், கையில் கட்டிய சிவப்புப் பட்டையுடனும், போலீசிடம் இருந்து பறித்த ஹைதர் காலத்துக் கட்டைத் துப்பாக்கிகளோடும், பாதவுரை அணியாத வெறும் கால்களோடும், பசியில் உள்ளடங்கிய கண்களோடும், மலேரியா காய்ச்சல் மருந்துகளோடும் என்றைக்காவது வந்து சேரப்போகும் மக்கள் விடுதலைப் படையை எதிர்நோக்கி இருக்கிறார்கள். இல்லாவிட்டால், தில்லியின் நடைபாதையில் தமக்கான இடத்தைத் தேடிக் கிளம்பிவிட வேண்டியது தான் – அங்கே இரத்தத்தை உறையவைக்கும் டிசம்பரின் கருணையற்ற குளிரும் – இரத்தத்தை ஆவியாக்கக் காத்திருக்கும் ஏப்ரல் வெயிலும் இவர்களுக்காகக் காத்திருக்கிறது.

கோரக்பூரின் ஒதுக்குப்புற சந்துகளில் நான் சில தாக்கூர்கள் துப்பாக்கி ஏந்திய காவலாளியோடும் கண்களில் மரண பீதியோடும் வலம் வருவதைக் காண நேர்ந்தது. கிராமப்புறங்களின் அரசு இயந்திரமே இல்லை எனும் நிலையென்றால்; சிறு நகரங்களில் அந்த இயந்திரத்தின் அச்சாக ஆதிக்க சாதியினரே இருக்கிறார்கள். பெரும்பாலும் உழைக்கும் தலித் மக்களுக்காகவென்று பேச பிரதான ஓட்டுக் கட்சிகள் எவையும் கிடையாது. தமிழ்நாட்டில் தேர்தல் சமயத்திலாவது ஓட்டுப்பொறுக்கிகள் ஏழைக் கிழவிகளைக் கட்டிப்பிடிப்பது போல போஸ் கொடுப்பதும், தலித் காலனிக்குள் வருவதும் என்று ஓட்டுப் பொருக்கவாவது ஸ்டண்ட் அடிப்பார்கள். வடக்கின் நிலைவேறு – நிலபிரபு எந்தக் கட்சியை நோக்கி கைகாட்டுகிறானோ அதற்கு ஓட்டுப் போட்டு விட வேண்டும். இந்த நிலபிரபுக்கள் வெவ்வேறு ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்களாயிருப்பார்கள் – இந்த நிலபிரபுக்கள் மட்டத்தில்தான் சாதி அரசியலே நடக்கிறது.

அடுத்தநாள் கோரக்பூரிலிருந்து காலை கிளம்பினோம் – அந்த மெக்கானிக் விடியவிடிய வேலை பார்த்திருக்கிறார். நிதானமான வேகத்தில் சென்று மகராஜ்கன்ச் எனும் இடத்தில் இந்திய நேபாள எல்லையைக் கடந்து லும்பினி சென்றடைந்தோம். புத்தர் பிறந்த இடம் இது தான். எனக்கு அதில் பெரிய அளவு ஆர்வம் இல்லை – போனது ஊரைச் சுற்ற – ஒரே இடத்தில் தேங்கி நிற்பதில் அர்த்தமில்லை என்பதால் மீண்டும் அயோத்தி நோக்கி கிளம்பினோம். எனக்கு அயோத்தியில் ஒரு நாள் கழிக்க வேண்டும் என்று விருப்பம் இருந்தது. அங்கே இடிக்கப்பட்ட மசூதியையும், ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட இராமன் கோயிலையும் காணவேண்டும் – முடிந்தால் சில போட்டோ க்கள் எடுக்க வேண்டும் என்றும் ஆவல்.

இதை நான் சரவணனிடம் சொல்லப்போக, அவன் பதறிவிட்டான்.  அது அங்கே கூட்டம் அதிகம் வரும் நாளென்றும், குறிப்பாக பண்டாரங்கள் அதிகமாக வருவார்கள் என்றும், வடநாட்டுச் சாமியார்கள் பொதுவில் காட்டான்களென்றும் சொல்லி பயமுறுத்தவே அந்த திட்டத்தை உடைப்பில் போட்டுவிட்டு நானும் எனது நண்பனும் பேருந்தில் தில்லிக்குக் கிளம்பிவிட்டோம்.
_______________________________

இன்று டிசம்பர் 31. அறைக்கு வெளியே குளிரில் நடுங்கிக் கொண்டே தெருவில் நடக்கும் கும்மாளங்களை வேடிக்கை பார்த்து நிற்கிறேன். சிகரெட்டின் காரமான புகை நுரையீரலெங்கும் பரவி குளிரை விரட்டப் போராடிக் கொண்டிருக்கிறது.. நாளை திரும்பவும் ஊருக்குக் கிளம்ப வேண்டும். மீண்டும் மீண்டும் நோய்டாவில் குளிரில் பற்கள் கிட்டித்து செத்துக் கிடந்த அந்தக் முதியவர் நினைவுக்கு வருகிறர். இன்னும் இன்னும் இப்படி தில்லிக்கு வந்து குளிரிலும் வெயிலிலும் வதைபட்டுச் சாக எத்தனையோ முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உத்திரபிரதேசத்தின் ஏதோவொரு கிராமத்திலிருந்து நாளும் நாளும் வந்து கொண்டேயிருக்கிறார்கள்.. மாயாவதியின் தங்க நிறச் சிலைகள் சிரித்துக் கொண்டிருந்ததை வரும் வழியில் பல இடங்களில் காண நேர்ந்தது.

அந்தச் சிலைகள் யாரைப் பார்த்து சிரிக்கிறது?

சேச்சிகளை இழிவுபடுத்தும் விவேக் ! மலையாளிகளை விரட்டச்சொல்லும் தமிழினவெறியர்கள் !!

313

ஜெயராம்

நடிகர் ஜெயராம் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கூறிய தடித்த தமிழச்சி குறித்த நகைச்சுவை தரமானது அல்ல, சற்று ஆபாசமானதுதான். பொதுப்புத்தியில் இத்தகைய நகைச்சுவை, சாதாரண மக்களை கேலிசெய்யும் பார்வை ஊடுறுவியிருக்கும் போது ஜெயராமை மட்டும் குற்றம் சொல்லி என்ன பயன்? ஒருவேளை ஜெயராம் தமிழச்சி என்ற பதத்தைப் பயன்படுத்தாமல் வெறும் வேலைக்காரி என்று கூறியிருந்தால் இப்போது குதிப்பவர்கள் யாரும் துள்ளமாட்டார்கள். வேலைக்காரிகளைப் பற்றியெல்லாம் யார் கவலைப்படப்போகிறார்கள்?

நாட்டில் கோபப்படுவதற்கும், சீறுவதற்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் போது இந்த தொலைக்காட்சி நேர்காணலை புலனாய்வு செய்து கண்டு பிடித்து பிரதியை தமிழனின் தன்மானப்பிரச்சினையாக்கிய சிகாமணிகள் யாரென்று தெரியவில்லை. பத்திரிகைகள், தமிழ் சானல்கள் எல்லாம் இதை உலக மகா பாதகம் போல கட்டியமைத்தன. ஈழத்தமிழன் சாவதை வேடிக்கை பார்த்த தமிழர் தளபதிகள் எல்லாம் அறிக்கைகளின் மூலம் களத்திலறங்கி ஜெயராமை வைத்து தமிழ்மானப் புழுதியைக் கிளப்பிவிட்டார்கள்.

பொதுச்சூழல் இப்படி வாகாக மாறியிருப்பதைப் பார்த்து காகிதப்புலி சீமானின் தம்பிகள் ஜெயராமின் வீட்டை போலீஸ் பாதுகாப்புடன் தாக்கிவிட்டு புறநானூற்றுத் தமிழனின் பெருமையை மீட்டு வந்தார்கள். ஒன்றுக்கு இரண்டாக ஜெயராம் மன்னிப்பு கேட்டதால் இந்தப்பிரச்சினை இப்போதைக்கு முடிவுக்கு வந்திருக்கிறது.

தமிழனை 24 மணிநேரமும் ஆங்கிலத்தாலும், தமிங்கிலத்தாலும் இழிவு படுத்தும் வேலையை சன்னும், கலைஞரும் செவ்வனே செய்து வருகின்றன. இதையே பெரியதிரையில் கோடம்பாக்கம் செய்து வருகிறது. கோடம்பாக்கத்து கவிராயர்கள் எல்லாம் அர்த்தமில்லாத லாலாக்கு டோல்டப்பிமா பாடல்களையும், அப்பட்டமான ஆங்கில வரிகளுக்கிடையில் சில தமிழ்வார்த்தைகளைச் சேர்த்தும் பாடுகிறார்கள். ரிலையன்ஷ் பிரஷ் பெயர்ப்பலகை ஆங்கிலத்திற்கு 90 சதவீதத்தையும், தமிழுக்கு போனால் போகிறதென்று பத்தையும் ஒதுக்கியிருக்கிறது.

தனது படங்களில் கறுப்பான தமிழச்சிகளைப் புறக்கணித்து பாவனா போன்ற வெள்ளையான மலையாள நடிகைகளை பயன்படுத்தும் சீமானின் வீரத்தம்பிகள் தாக்கியிருக்க வேண்டுமென்றால் இவர்களைத்தானே பின்னியிருக்கவேண்டும்? அத்தகைய வீரமெல்லாம் அவர்களிடம் இல்லையென்பதைவிட அப்படி சிந்திப்பதற்கு மூளைகூட அனுமதி தராது. அப்படி சுயதணிக்கை செய்து கொண்டு தமிழைக் கொல்லும் தளபதிகளின் தயவில் வெற்றுக்கூச்சல் போடுவதுதான் அண்ணன் சீமானின் அரசியல் போலும். ஆனால் அந்த வெற்றுக்கூச்சலைக்கூட தெற்காசிய முதலாளியாகிவிட்ட கருணாநிதி அனுமதிக்க மாட்டார் என்பது வேறு விசயம்.

இல்லாததையும், பொல்லாததையும் இட்டுக்கட்டி இப்போது மலையாளிகள் தமிழர்களை இழிவுபடுத்துவதாக பலரும் ஆராய்ச்சி செய்கிறார்கள். மலையாளப்படங்களில் வேட்டி சட்டை அணிந்த தமிழ் பாத்திரத்தை வைத்து கிண்டல் செய்வார்களாம். பாண்டிக்காரர்கள் என்று பட்டப்பெயர் வைத்து தமிழர்களை காட்டான்கள் என்று சித்தரிப்பார்களாம். இவையெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட நகைச்சுவை துணுக்குகள் என்பதைத் தாண்டி என்ன முக்கியத்துவம்? இல்லை அவை உண்மையென்றே ஒரு வாதத்திற்காக வைத்துக்கொண்டாலும் அதற்குப் பதில் தமிழ்ப்படங்கள் மலையாளிகளை எவ்வாறு சித்தரிக்கின்றன?

மும்தாஜ், ஷகிலா உள்ளிட்ட நடிகைகளை பெரிய மார்புடைய மலையாளப் பெண்களாகக் காட்டி காமத்திற்கு அலையும் சேச்சிகளாக விவேக்  உணரவைப்பது மட்டும் போற்றத்தக்கதா? விவேக்கின் இந்த நகைச்சுவைக்கு ஒரு சமூக அடிப்படையும் இருக்கத்தான் செய்கிறது. “மலையாளப் பெண்களுக்கு மார்பகங்கள் பெரிது, காம உணர்ச்சி அதிகம், கணவன் வெளிநாட்டில் இருப்பதால் சுலபமாக சேச்சிகளை வளைக்கலாம், அல்லது சேச்சிகள் இன்பத்திற்காக அலைவார்கள், அங்கே கள்ள உறவு அதிகம்” இப்படித்தான் தமிழக இளைஞர்களிடம் மலையாளச் சேச்சிகளைப் பற்றி பொதுக்கருத்து நிலவுகின்றது.

தமிழனைக் காட்டானாக சித்தரிப்பதைவிட இது கேவலமில்லையா?  இதையெல்லாம் ஒரு புகாராக மலையாளிகள் என்றும் சொன்னதில்லையே? மலையாளிகள் தமிழனது உருவத்தையும், வடிவத்தையும் கேலிசெய்வதற்கும் தமிழர்கள் மலையாளிகளின் ஆளுமையையும், பண்பையும் கேலி செய்வதற்கு பாரிய வேறுபாடு இருக்கிறது. முன்னது நகைச்சுவையாகவும் பின்னது காழ்ப்புணர்வாகவும் வெளிப்படுகிறது. ஊர்மேயும் தமிழ் ஆண் மனம் மலையாளப் பெண்களை கற்பனையில் வன்புணர்ச்சி செய்வதுதான் ஆகக் கேவலமான ஒன்று.

வெளியிடப்படும் புதுத்தமிழ்ப்படங்கள் எல்லாம் கேரளாவின் எல்லா நகரங்களிலும் ஓடுகின்றன. இங்கு வெற்றி பெறும் அல்லது கவனத்தைப் பெறும் முக்கியமான படங்கள் அங்கும் பாராட்டப்படுகின்றன. முக்கியமாக கேரளாவில் ஓடும் தமிழ்ப்படங்களை பார்ப்பது மலையாளிகள் என்பதுதான் முக்கியம்.

ஆனால் சென்னையில் வெளியிடப்படும் நல்ல மலையாளப்படங்களை மலையாளிகள் மட்டும்தான் பார்க்கிறார்கள். பலான மலையாளப்படங்களை மட்டும் தமிழர்கள் பார்க்கிறார்கள். அதுவும் மாமனாரின் இன்ப வெறி, காமக்கொடூரன் போன்று தமிழர்களை சுண்டி இழுக்கும் சுத்தமான தமிழ்ப் பெயர்களுடன். தமிழ், மலையாளத்தின் சினிமா கொடுக்கல் வாங்கலின் தரம் இப்படித்தானே இருக்கிறது?

இன்னும் கேராளவின் கிரன் தொலைக்காட்சியில் தமிழ்ப்படங்கள் ஓடுகின்றன. பாடல் போட்டிகளுக்கு வரும் மலையாளப்பாடகர்கள் பிரபலமான தமிழ்ப்பாடல்களைப் பாடுகிறார்கள். 80,90களின் சாதாரண மலையாளிகளது விதம்விதமான வாழ்க்கைகளைச் சித்தரிக்கும் நல்ல மலையாளப்படங்களின் பொற்காலம் என்றால் அந்த பொற்காலத்தை தமிழ் மசாலா ஃபார்முலாவிற்குள் கொண்டு வந்ததுதான் தமிழ் படங்கள் கேரளத்திற்கு செய்திருக்கும் தொண்டு. தமிழில் கிளாமர் போட்டியில் தோல்வியடைந்த நடிகைகளை மலையாளத் திரையுலகம் குடும்பப் பாங்கானா பாத்திரங்களுக்கு பயன்படுத்துமென்றால், மலையாளத்தில் குடும்பப் பாங்கான பாத்திரங்களை நடிக்கும் இளம் நடிகைகளை கவர்ச்சி கன்னிகளாய் பிரபலமாக்குவதுதான் தமிழ்த் திரையுலம் செய்யும் எதிர்வினை.

சித்ரா, சுஜாதா உள்ளிட்ட மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஏராளமான பின்னணிப் பாடகர்கள் தமிழ்ப்படங்களுக்காக பாடியிருக்கிறார்கள். அது போல தமிழ்ப்பாடல்கள் மட்டுமல்ல இளையராஜாவும் கேரளத்தில் பிரபலம். தமிழக அரசியல் செய்திகள் கூட மலையாளப் பத்திரிகைகளில் முதன்மையாய் இடம்பெறும். கேரளச்செய்திகள் அப்படி இங்கு இடம்பெறாது. ஜெயா, கருணாநிதி பற்றி சராசரியான மலையாளி அறிவானென்றால் இங்குள்ளோருக்கு நம்பூதிரிபாடும், நாயனாரும், கருணாகரனும், அச்சுதானந்தனும் அதிகம் தெரியாது என்பது உண்மையுங்கூட.

மொத்தத்தில் கேரளம் பொருளாதாரத் தேவைகளுக்காக மட்டுமல்ல, பண்பாட்டு வகைகளுக்கும் தமிழகம் என்ற பெரிய அண்ணனைத் தொடரும் சிறிய தம்பியாகத்தான் வாழ்கிறது. அதனால்தான் தமிழகத்தைப்பற்றி ஒரு சராசரியான மலையாளி அறிந்து வைத்திருக்கிறான். கொச்சி துவங்கி திருவனந்தபுரம் வரை நீங்கள் தமிழில் பேசியபடி எங்கும் செல்லலாம். வரலாற்றிலும், மொழியிலும், தேசிய இனத்திலும் தமிழிலிருந்து பிரிந்து வளர்ந்த இனம்தானே அது? அப்போது தமிழும் கூட ஒரு தேசிய இனமாக தலையெடுத்திருக்கவில்லை. அத்தகைய தொல்குடி உறவு இன்றும் தொடர்கிறது என்பதை வெத்துவேட்டு தமிழ் வீரர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

நல்லது, கெட்டதுகள் எல்லாம் எல்லா தேசிய இனங்களுக்கும் சொந்தம்தான். ஒன்று முன்னேறியது, மற்றது பிற்போக்கானது என்றெல்லாம் இல்லை. தமிழில் பார்ப்பனிய எதிர்ப்பு வலுவாக இருந்தது என்றால் கேரளத்தில் அப்படி இல்லை. கேரளத்தில் இடதுசாரி இயக்கம் வலுவாக இருந்தது என்றால் தமிழகத்தில் அப்படி இல்லை. இங்கே கருவறை நுழைவுப் போராட்டம் நடத்துவதும், சங்கராச்சாரியை கைது செய்வதும் நடக்க முடிந்தது என்றால் கேரளத்தில் நடக்க வாய்ப்பில்லை. தொழிற்சங்க உரிமை கேரளத்தில் பலம் வாய்ந்தது என்றால் தமிழகத்தில் அப்படி இல்லை.

அதனால்தான் தினசரி உடலுழைப்புக் கூலிவேலைக்கு கேரளத்தில் ஊதியம் அதிகம் என்பதால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து பல இளைஞர்கள் கேரளம் செல்கிறார்கள். சொரணைபடக் கூறுவதென்றால் இங்கு தமிழனது சுரண்டலால் வாழ முடியாமல் தமிழர்கள் கேரளத்திற்கு படையெடுக்கிறார்கள். கேரளத்தில் கல்வியறிவும், பெண்ணுரிமையும் அதிகம் என்றால் தமிழகம் பெண் சிசுக்கொலைகளோடுதான் இன்னும் இருக்கிறது. இப்படி மாற்றி மாற்றி இரண்டு மாநிலங்களும் மற்றதின் நல்ல விசயங்களைப் பார்த்து கற்றுக் கொள்ள ஏராளமிருக்கின்றன.

முல்லைப்பெரியாறு பிரச்சினை முற்றிலும் கேரள அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்ட பிரச்சினை. அதற்கு கணிசமான மக்கள் பலியாகியிருந்தாலும் அதை வைத்து மட்டும் மலையாளிகளை எதிரிகளென்று சித்தரிப்பது அயோக்கியத்தனம். முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி அமல்படுத்தினால் அணையின் எல்லையில் ஆக்கிரமிப்பு செய்து குடியேறிய சில ஆயிரம் ஓட்டுக்களை இழக்க நேரிடும் என்பதற்காகவே கேரள அரசியல்வாதிகள் அதை அயோக்கியத்தனமாக எதிர்க்கிறார்கள். இதை வைத்து தமிழகத்தின் மீதான வெறுப்பை கேரள மக்களிடம் ஏற்படுத்தவும் முயல்கிறார்கள். அனால் கேரளத்தின் அன்றாட வாழ்க்கையில் தமிழகத்தை புறக்கணித்து விட்டு ஒரு நாள் கூட வாழ முடியாது.

எல்லா உயிராதாரப் பொருட்களும் இங்கிருந்துதான் கேரளத்திற்கு செல்கின்றன. அதை வைத்து கேரளத்தின் எல்லையில் இருக்கும் தமிழக விவசாயிகள் பயனடைகிறார்கள். நாமக்கல்லின் கோழிக்கும் முட்டைக்கும் கேரளாவும் ஒரு முக்கியமான சந்தையாக உள்ளது. இதை வைத்து கேரளத்திற்கு பொருட்கள் அனுப்புவதை நிறுத்தவேண்டுமென சில தமிழினவாதிகள் மிரட்டுகிறார்கள். அப்படி நிறுத்தினால் முதலில் பாதிக்கப்படுவது இங்குள்ள விவசாயிகள்தான். சொல்லப்போனால் அவர்களே அதை முதலில் எதிர்ப்பார்கள். கேரள மக்களிடம் தமிழகத்தின் நியாயத்தைச் சொல்லி புரியவைக்கும் சாதகமான நிலை வாழ்க்கையில் உள்ளது. அதே சமயம் இதற்கு எதிராக இருக்கும் கேரள போலிக் கம்யூனிஸ்டுகளை முல்லைப்பெரியாறு விசயத்தில் அம்பலப்படுத்துவதும் அவசியம்தான்.

நமது தரப்பு நியாயத்தை புரியவைப்பதற்காக கேரளத்தின் மீதான பொருளாதார முற்றுகை போராட்டம் கூட கடைசிபட்சமாக நடத்தலாம் என்றாலும் இருமாநில மக்களின் நலனை வைத்தே அதை முடிவு செய்யவேண்டும். அதை வைத்து தமிழனவாதிகளும் – வெறியர்களும் ஆதாயம் அடைவதை பெருங்கேடாக நினைத்து முறியடிக்க வேண்டும்.

எம்.கே. நாராயணன், சிவசங்கர்மேனன் என்ற உயர் அதிகாரிகளை வைத்து மலையாளத்துக்காரர்கள் ஈழத்திற்கெதிராக சதி செய்வதாக முன்னர் பல அறிவாளிகள் பேசினார்கள். அப்படி சதி செய்தற்கு இது என்ன செல்வராகவனின் ஃபேன்டசி படமா என்ன? அவர்கள் இந்திய அரசின் அதிகாரிகள். இந்திய முதலாளிகள் – அதிகார வர்க்கத்தின் நலனுக்காக செயல்படுபவர்கள். அவர்களுக்கெல்லாம் தேசிய இனமென்ற அடையாளமெல்லாம் கிடையாது. அவர்கள் இடத்தில் தமிழ்பேசும் தமிழர்கள் அதிகாரிகளாக இருந்திருந்தால் அவர்களும் அதேதான் செய்திருப்பார்கள்.

விடுதலை இராசேந்திரனும், மணியரசனும் ஒரு பெரும் மலையாள அதிகாரிகளின் பட்டியலை வைத்து அப்போது இதை மாபெரும் கண்டுபிடிப்பாகவும் ஈழத்தின் துயருக்கு முக்கிய காரணமென்றும் சித்தரித்து வந்தார்கள். ஒரு அதிகார வர்க்கத்தின் இயங்குதன்மையைக் கூட புரிந்து கொள்ளாத இவர்களது முட்டாள்தனம் ஆச்சரியமளிக்கக் கூடியது. பாசிச ஜெயாவை வைத்து புலிகளுக்கு தப்பான நம்பிக்கைகளை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் பின்பு தங்களது தவறுகளை மறைக்க இப்படி மலையாள துவேசத்தை எடுத்துக் கொண்டார்கள். அதன் தொடர்ச்சியாக இப்போது தமிழ்நாட்டிலுள்ள மலையாளிகளை துரத்த வேண்டுமென்று பெ.மணியரசன் தலைவராக இருக்கும் தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சி பிரச்சாரம் செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் இருக்கும் மலையாளிகள் யார்? சென்னையை எடுத்துக் கொண்டோமானால் இங்கிருக்கும் மலையாளிகளில் ஆண்களில் பெரும்பாலானோர் தேநீர்க்கடையில் வேலை செய்பவர்களாகவும், பெண்களில் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களாகவும் இருக்கின்றனர். இவர்களையா துரத்த வேண்டும்?

குறிப்பான விவசாய வளர்ச்சியோ, தொழில் வளர்ச்சியோ அற்ற கேரளத்தில் வாழ்ந்து பிழைக்க முடியாது என்றுதான் பலரும் பல இடங்களில் குடியேறி வேலை செய்கின்றனர். முன்னர் போல வளைகுடா நாடுகளுக்கு சென்று பிழைப்பது இப்போது சாத்தியமில்லை என்ற காரணத்தினால் இத்தகைய இடப்பெயர்ச்சி முன்பைவிட அதிகரித்திருக்கிறது. இது மலையாளிகளுக்கு மட்டுமல்ல எல்லா மாநில மக்களுக்கும் ஏன் தமிழர்களுக்கும் கூட உண்டு.

சென்னையில் தேநீர்க்கடை வைத்திருக்கும் மலையாளிகளும் அங்கே வேலை செய்யும் மலையாளிகளும் அல்லும் பகலும் கடின உழைப்புடனே நாட்களைத் தள்ளுகிறார்கள். அதிகாலையில் ஆரம்பிக்கும் வேலை நள்ளிரவு வரை ஒயாது. குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு இங்கு எந்திரவாழ்க்கை வாழ்ந்து கொண்டு சென்னை மாநகரம் முழுமைக்கும் எல்லா நேரமும் இனிய தேநீர் வழங்கும் இந்த மக்களைப் பார்த்து வெளியேற்றுவோம் என்று சொன்னால் அந்த முண்டங்களை எதைக் கொண்டு அடிப்பது?

கையேந்தி பவனில் சம்சாவும், ஜிலேபியும் விற்கும் இந்தி பேசும் சிறுவனும் அம்பானியும் ஒரே தேசிய இனமா என்ன? இப்போது சென்னையின் அன்றாட வாழ்க்கையில் பல இன மக்களும் கலந்து விட்டார்கள். இரவுக் காவலுக்கு நேபாளத்துக் கூர்காக்கள், குழிதோண்ட கன்னட உழைப்பாளிகள், தொழிற்சாலைகளில் பீகார் இளைஞர்கள், காங்கீரீட் கலவைக்கு தெலுங்கு தொழிலாளர்கள், பாலீஷ் வேலைக்கு ராஜஸ்தான் தொழிலாளிகள், ஒட்டல் வேலைக்கு வடகிழக்கு இளைஞர்கள் என்று பார்த்தால் இங்கே மட்டுமல்ல முழு தமிழக நகரங்களிலும் இந்தக் கலப்பு நடந்தேறி வருகிறது. இதேபோல தமிழக தொழிலாளிகளும் கேரளா, பெங்களூர், மும்பை என்று செல்கிறார்கள்.

இப்படி தேசிய இனம் கடந்து உழைக்கும் மக்கள் ஒன்றாகத் திரளும் கண்கொள்ளாக் காட்சி மறுகாலனியாதிக்கத்தின் விளைவு என்றாலும் இந்த ஒன்று கலப்பைக் கொண்டாட வேண்டாமா? ஆனால் உழைத்துப்பிழைக்க வந்த இந்த உழைப்பாளிகளைக் கூட தமிழின் பெயரால் வெறுப்புணர்வு கொண்டு பார்க்கிறார்கள் என்றால் அவர்களை என்ன செய்வது?

இந்தியாவில் மொழிகளும், தேசிய இனங்களும் விதவிதமாக பிரிந்திருந்தாலும் வர்க்க ரீதியில் உழைக்கும் மக்களாக ஒன்றாக இருப்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். உழைக்கும் மக்கள் தேசிய இன அடையாளங்களைக் கடந்து ஒன்றானால்தான் அதே அடையாளமின்றி வர்க்க ரீதியாக சுரண்டும் முதலாளிகளை எதிர்க்க முடியும். சென்னையில் முதல்முறையாக ம.க.இ.க தோழர்கள் கிரீன் ஹண்டுக்கெதிரான பிரச்சார இயக்கத்திற்காக இந்தியில் துண்டுப் பிரசுரம் போட்டு வடமாநிலத் தொழிலாளர்களிடம் விநியோகித்தார்கள். போதுமான கல்வியறிவு இன்றி அதை எழுத்துக்கூட்டிப் படித்த தொழிலாளிகளுக்குத்தான் எத்தனை ஆர்வம்? தங்களடமிருந்த நிதியை மனமுவந்து அளித்ததோடு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள். அவர்களது வாழ்க்கைக்கு தொடர்பேதுமில்லாத மத்திய இந்தியாவின் மலைவாழ் மக்களுக்கு ஆதரவான அவர்களது புரிதல்தான் இந்த ஒற்றுமையின் பலம். சட்டீஸ்கரின் ஆதிவாசிக்காக, தமிழ்நாட்டுத் தமிழன் பீகாரின் இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்வதுதான் இந்த இனிய ராகத்தின் வெளிப்பாடு.

அலைந்து திரிந்து ஒரு தேநீர்க்கடையில் ஒதுங்கி சூடாக, ஸ்டாராங்காக ஒரு தேநீர் குடிக்கும் போது அது நமது சேட்டன் போட்ட தேநீர் என்ற உழைப்பின் சுவையை நீங்கள் உணர்ந்திருந்தால் இந்த மலையாள துவேசத்தை வன்மம் கொண்டு எதிர்க்க வேண்டும். மலையாளிகளைத் துரத்தவேண்டும் என்று எக்காளமிடும் சிறு கூட்டத்தை நிர்மூலமாக்க வேண்டும். இது தேநீருக்கு செய்யப்படும் நன்றிக்கடன் அல்ல. உழைக்கும் மக்கள் தங்களுக்குள் வெளிப்படுத்த வேண்டிய வர்க்க ஒற்றுமை. அந்த ஒற்றுமைதான் இந்தியாவின் எல்லாச்சாபக்கேடுகளையும் வீழ்த்தும் வல்லமையைக் கொண்டிருக்கிறது.

ருச்சிகா மானபங்க வழக்கு: தீர்ப்பா? கேலிக்கூத்தா?

12

“காக்கிச்சட்டை கிரிமினல்கள்”என நாம் போலீசாரைக் குற்றம் சுமத்தும்பொழுது, அது பற்றி முகம் சுளிப்பவர்கள் யாராவது இருந்தால், அவர்கள் (மறைந்து போன) ருச்சிகா கிர்ஹோத்ரா என்ற சிறுமியின் கதையை அறிந்துகொள்ள வேண்டும்.

ருச்சிகா கிர்ஹோத்ரா 1990-இல் தனது பெற்றோர் மற்றும் சகோதரனுடன் அரியானா மாநிலத் தலைநகர் சண்டிகர் அருகிலுள்ள பஞ்சகுலா பகுதியில் வசித்து வந்தார்.  அச்சிறுமிக்கு, எதிர்காலத்தில் தானொரு மிகச்சிறந்த டென்னிஸ் வீராங்கனையாக வர வேண்டும் என்ற கனவு இருந்ததோடு, அதற்கான பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். அச்சமயத்தில்,எஸ்.பி.எஸ்.ரத்தோர் அரியானா மாநிலக் கூடுதல் போலீசு தலைமை இயக்குநராகவும், அரியானா மாநில டென்னிஸ் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தான்.  “ருச்சிகாவைத் தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டு, டென்னிஸ் வீராங்கனையாக உருவாக்கிக் காட்டுவதாக” அச்சிறுமியின் பெற்றோர்களிடம் கூறிவந்த ரத்தோர், இது தொடர்பாகத் தன்னை வந்து சந்திக்க ருச்சிகாவை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டான்.

இதன்படி, ருச்சிகா தனது தோழி ஆராதனாவை அழைத்துக்கொண்டு, ஆகஸ்டு 12, 1990 அன்று ரத்தோரைச் சந்திப்பதற்காக, அவனது அலுவலகத்திற்குச் சென்றார். ஆராதனாவை ஏதோவொரு சாக்கு சொல்லி வெளியே அனுப்பிய ரத்தோர், அதன்பின் சிறுமி ருச்சிகாவிடம் தனது வக்கிரத்தைக் காட்டத் தொடங்கினான்.  ஆராதனா போன வேகத்திலேயே திரும்பிவிட்டதால், ரத்தோர் தனது வக்கிர விளையாட்டை நிறுத்திக் கொள்ள நேர்ந்தது.  ரத்தோரின் வக்கிரப் புத்தியைப் புரிந்து கொண்ட ருச்சிகா, தனது தோழியோடு தப்பித்து வெளியே ஓடிவிட்டார்.

ருச்சிகா, சம்பவம் நடந்து இரண்டொரு நாட்கள் கழித்து, ரத்தோரின் பாலியல் தாக்குதலைத் தனது பெற்றோரிடமும், தனது தோழி ஆராதனாவின் பெற்றோரிடம் கூறினார்.  அவர்கள் இது குறித்து மாநில அரசிற்கும், போலீசு உயர்அதிகாரிகளுக்கும் புகார் அளித்தனர்.  அப்பொழுது அரியானா மாநிலப் போலீசு தலைமை இயக்குநராக இருந்த ஆர்.ஆர்.சிங் இப்புகார் குறித்து விசாரணை நடத்தி, அடுத்த மாதமே அது குறித்த அறிக்கையை மாநில அரசிடம் அளித்தார்.

அவ்வறிக்கை ருச்சிகாவின் புகாரை உண்மையென உறுதிப்படுத்தியிருந்த போதும், அரியானா மாநில அரசு அவ்வறிக்கையின்படி ரத்தோரின் மீது நடவடிக்கை எடுக்காததோடு, அறிக்கையினை வெளியிடவும் மறுத்துவிட்டது.  அதேசமயம், ரத்தோர் தனது வரம்பற்ற போலீசு அதிகாரங்களைப் பயன்படுத்திக் கொண்டு, ருச்சிகாவின் குடும்பத்தை வேட்டையாடத் தொடங்கினான்.

ருச்சிகா ‘ஒழுங்கீனம்’ காரணமாகப் பள்ளியில் இருந்து வெறியேற்றப்பட்டார்.  அவரது சகோதரன் ஆஷு கிர்ஹோத்ரா மீது 11 திருட்டு வழக்குகள் போடப்பட்டன.  ரத்தோர் மீது கொடுத்த புகாரைத் திரும்பப் பெறுமாறு ருச்சிகா, ஆராதனாவின் பெற்றோர்கள் மாவட்ட போலீசு கண்காணிப்பாளராலும், ரத்தோர் ஏவிவிட்ட குண்டர்களாலும் மிரட்டப்பட்டனர்.  ஆஷு கிர்ஹோத்ரா சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு, போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டார்.  இந்தத் துன்புறுத்தல்களையும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலையும் பொறுத்துக் கொள்ள முடியாத பதி னான்கே வயதான சிறுமி ருச்சிகா 1993, டிசம்பரில்  பூச்சிமருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.  ருச்சிகாவின் பெற்றோர் போலீசின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி, சண்டிகரை விட்டுவெளியேறி தலைமறைவாக வாழத் தொடங்கினர்.

அதேபொழுதில் காக்கிச்சட்டை கிரிமினல் ரத்தோருக்கு மாநிலப் போலீசு தலைமை இயக்குநராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.  ஆராதனாவின் பெற்றோர் ஆனந்த் பிரகாஷும் மாது பிரகாஷும் போலீசின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல், ரத்தோர் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரித் தொடர்ந்து போராடினர்.  அரியானா மாநில உயர்நீதி மன்றமும், அதன்பின் உச்சநீதி மன்றமும் இப்புகாரில் தலையிட்ட பிறகுதான், 1999 ஆம் ஆண்டு டிசம்பரில் ரத்தோர் மீதான புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதோடு, வழக்கு விசாரணையும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.  அதன்பின் 11 ஆண்டுகள் கழித்து, டிசம்பர் 21, 2009 அன்றுதான் ரத்தோருக்கு ஆறு மாதக் கடுங்காவல் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.  இதற்குள் ரத்தோர் பணியிலிருந்து கௌரவமாக ஓய்வு பெற்றுக் கொண்டு போய்விட்டார்.

சட்டப்படி பார்த்தால், ரத்தோரின் மீது சுமத்தபட்டுள்ள குற்றச்சாட்டிற்கு இரண்டு ஆண்டுகள்வரை தண்டனை   அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால், ரத்தோரின் வயோதிகத்தைக் காரணமாகக் காட்டி, அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படாமல் கருணை காட்டப்பட்டுள்ளது.  அது மட்டுமின்றி, ரத்தோர் மீது சுமத்தப்பட்ட மற்ற குற்றச்சாட்டுகள் – ருச்சிகாவின் பெற்றோரை மிரட்டியது, ஆஷு கிர்ஹோத்ரா மீது பொய் வழக்கு போட்டது, ருச்சிகாவைத் தற்கொலை செய்யுமாறு தூண்டியது – அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.  நீதிமன்றம் தனது சாயம் வெளுத்துப் போய்விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, பேருக்கு தண்டனை அளித்திருக்கிறது.  ரத்தோர் பத்தொன்பது ஆண்டுகளாக தண்டிக்கப்படாமல் அரசின் பாதுகாப்போடு சுற்றிவந்தது மட்டுமல்ல, இந்தப் பஞ்சு மிட்டாய்த் தீர்ப்பும் அருவெறுக்கத்தக்கதுதான்!

தேவநாதன் பூசை செய்யலாம், ஒரு தலித்தோ – தேவரோ பூசை செய்யக்கூடாதா?


vote-012தி.மு.க அரசு 2006 ஆம் ஆண்டில் தொடங்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில், ஒன்றரை ஆண்டுக்காலம் முறையாகப் பயின்ற 207 மாணவர்கள் பணி நியமனம் பெற இயலாமல் கடந்த 2 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். பார்ப்பன சாதியைச் சார்ந்த சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் என்ற பிரிவினரைத் தவிர்த்து, பிற சாதியினரை அர்ச்சகராக்குவது ஆகமவிதிகளுக்கும், இந்துமத சம்பிரதாயங்களுக்கும் எதிரானது என்று மதுரையைச் சேர்ந்த பட்டர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருப்பதே இதற்குக் காரணம்.

இந்தத் தடையாணையின் விளைவாக, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் முடங்கிவிட்டன. சைவ / வைணவக் கோயில்களில் வடமொழி மற்றும் தமிழில்  வழிபாடு நடத்துவதற்கு முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டு, தேர்வில் வெற்றி பெற்று, தீட்சையும் பெற்றிருக்கும் இந்த மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளாகச் சான்றிதழும் வழங்கப்படவில்லை. 2009 நவம்பரில் இம்மாணவர்களை நாங்கள் சங்கமாகத் திரட்டினோம். உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தோம். இதன் தொடர்ச்சியாக 2010 ஜனவரியில்தான் இவர்களுக்கான சான்றிதழே வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் உச்ச நீதிமன்றத் தடையாணை காரணமாக இவர்கள் யாரும் இதுவரை அர்ச்சகராக நியமிக்கப்படவில்லை. இவ்வழக்கு 2010, பிப்ரவரி 10 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் இறுதி விசாரணைக்கு வருகிறது. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் சார்பில் இவ்வழக்கில் நாங்கள் இணைந்து (implead) கொண்டிருக்கிறோம்.

பார்ப்பன சாதியில் பிறந்த பட்டாச்சாரியார்கள் அல்லது சிவாச்சாரியார்கள் தவிர வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் கருவறையில் உள்ள சிலையைத் தீண்டினால், சிலை தீட்டுப்பட்டுவிடும் என்றும், சிலையிலிருந்து கடவுள் வெளியேறிவிடுவார் என்றும் கூறுகின்ற தீண்டாமைக் கருத்துக்கு எதிரான இந்த வழக்கு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1970 இல் பெரியார் அறிவித்த கருவறை நுழைவுக் கிளர்ச்சியைத் தொடர்ந்து, 1971 இல் அர்ச்சகர் வேலையில் நிலவிவந்த வாரிசுரிமையை ஒழிக்கும் சட்டமொன்றைத் திமுக அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் “அர்ச்சகர்கள் எனப்படுவோர் இந்து அறநிலையத்துறையால் நியமிக்கப்படுபவர்கள் என்பதால், அதில் வாரிசுரிமை கோர முடியாது என்றும் தகுதியான நபர்களை அரசு தெரிவு செய்யலாம்” என்றும் கூறிய உச்சநீதிமன்றம், “அவ்வாறு அர்ச்சகராக நியமனம் செய்யப்படுபவர்கள், குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியிலிருந்துதான் தெரிவு செய்யப்பட வேண்டும்“ என்றும் வலியுறுத்தியது. “இதனை மீறி அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது, அரசியல் சட்டம் வழங்கியுள்ள இந்து மத உரிமையில் தலையிடுவதாகும் “என்று கூறி, சாதியையும் ஆலயத் தீண்டாமையையும் அங்கீகரித்துத் தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். 1972 இல் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான், 2006 இல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வண்ணம் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் இடைக்காலத்தடை விதித்திருக்கிறது.

ஆணாதிக்கத்தை நிலைநாட்டி வந்த உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், பலதார மணம் போன்ற சமூகக் கொடுமைகளும், சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்த தேவதாசி முறை, தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலில் நுழையவிடாமல் தடுத்தல் போன்ற அநீதிகளும் “இந்து மத உரிமை“ என்ற பெயரில்தான் நியாயப்படுத்தப்பட்டு வந்தன. மக்கள் போராட்டங்கள் மற்றும் சமூக நிர்ப்பந்தத்தின் விளைவாக இத்தகைய இந்து மத உரிமைகள்  இன்று கிரிமினல் குற்றங்களாக்கப்பட்டு விட்டன. எனினும் ஆலயத் தீண்டாமை எனும் குற்றம், ஆகமவிதிகளின் பெயரால் மூடிமறைக்கப்பட்டு, அரசியல் சட்டத்தாலும் உச்ச நீதிமன்றத்தாலும் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வழக்கு 207 மாணவர்கள் பணி நியமனம் பெறுவது தொடர்பான வழக்கு மட்டுமல்ல; ஆலயத் தீண்டாமையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழக்கு. சமூக நடவடிக்கைககளில் தீண்டாமை குற்றமாக்கப்பட்டிருந்தாலும், அர்ச்சகர் நியமனத்தைப் பொருத்தவரை தீண்டாமை என்பது இந்துமத உரிமையாகவே அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் பார்வையில், இந்த 207 மாணவர்களின் ஒரே தகுதிக் குறைவு அவர்களது பிறப்புதான். குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியில் பிறந்தவர்கள் என்ற காரணத்தினாலேயே இன்று பல்வேறு கோயில்களில் பணி செய்து வரும் அர்ச்சகர்கள் பலர், அவர்களே கூறுகின்ற ஆகம விதிகளின் அடிப்படயில் தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. திருமணமாகாதவர்கள், திருமணமாகி மனைவியை இழந்தவர்கள் போன்றோர் சாமி சிலையைத் தீண்டக்கூடாது என்று ஆகம விதிகள் கூறுகின்றன. ஆனால் அத்தகைய பலர் அர்ச்சகர்களாகப் பணி செய்து வருகின்றனர். அவர்களில் தேவநாதன் போன்ற “ நல்லொழுக்க சீலர்களும்“  அடக்கம். 207 மாணவர்களுக்கு தேர்வு நடத்தி அவர்களுக்குத் தகுதி இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்த தமிழக அரசு, தேவநாதன் உள்ளிட்டு இன்று பணியில் இருக்கும் அர்ச்சகர்கள் யாருக்கும் அத்ததகைய தேர்வு எதையும் நடத்தவில்லை. வழிபாட்டு முறைகள் தெரிந்தவர்களா, ஒழுக்கமானவர்களா என்று கண்காணிக்கும் அதிகாரம் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு இருந்தும்கூட, அவ்வாறு யார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதும் இல்லை. இவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரே தகுதி சாதி மட்டும்தான்.

மாதச் சம்பளம் வழங்குவதுடன், அர்ச்சனைத்தட்டில் பக்தர்கள் போடுகின்ற பணத்தை எடுத்துக்கொள்ளவும் அர்ச்சகர்களுக்கு உரிமை வழங்கியிருக்கிறது தமிழக அரசு. இந்து அறநிலையத்துறையின் உள்துறைப் பணியாளர்களாக இருந்து கொண்டு, மாதம் பல ஆயிரங்களை வருவாயாக ஈட்டும் மதுரைக் கோயில் பட்டர்கள்தான், அறநிலையத்துறை கொண்டு வந்த சட்டத்துக்கு எதிராக இன்று உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறார்கள்.  சிதம்பரம் கோயிலை அறநிலையத்துறை மேற்கொள்ளலாமென்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து ஒரு ஆண்டு கடந்த பின்னரும், இந்தக் கணம் வரை தில்லைக் கோயில் தீட்சிதர்கள், நகைகளையும், கணக்குகளையும், நிர்வாகத்தையும் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கவில்லை. அரசும் அவர்கள் மீது நடவடக்கை எடுக்கவில்லை.

அரசின் ஆணைகளையும், நீதிமன்றத் தீர்ப்புகளையும் துச்சமாக மதிக்கும் அர்ச்சகர்கள் மீது, சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று தமிழக அரசைக் கோருகிறோம். தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில், தமிழக அரசின் சார்பில் நியமிக்கப்பட்டிருக்கும் மூத்த வழக்குரைஞர் திரு. பராசரன் அவர்கள்தான், அர்ச்சகர் நியமனம் தொடர்பான வழக்கில்  தமிழக அரசுக்கு எதிராக மதுரை பட்டர்கள் சார்பில் வாதாடுகிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பொருத்தமான தகுதி வாய்ந்த மூத்த வழக்குரைஞர்களை அமர்த்தி, தமிழக அரசு இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த நாங்கள், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தலையிட்டிருக்கிறோம். ஆலயத்தீண்டாமையை ஒழிப்பதற்கான இந்த முயற்சியில் இறுதிவரை போராடுவோம்.

–          மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (HRPC), தமிழ்நாடு. செல்பேசி: 94432 60164


vote-012

தொடர்புடைய பதிவுகள்

மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!! பிப்-20 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்!!

– அனைவரும் வருக –

தொடர்புக்கு – (91) 97100 82506

அழைப்பிதழின் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

மின்னிதழ் அச்சுத்தரமுள்ளது – கோப்பின் அளவு 1MB, கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

அவசியம் அழைப்பிதழை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும். நன்றி

vote-012

தொடர்புடைய பதிவுகள்

தலித் பெண்களுக்கு விமானத்தில் இடமில்லை!!

43


vote-0122006 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தின் ஆதிதிராவிட நலத்துறை தலித்துக்களின் விமோச்சனத்திற்காக ஒரு திட்டத்தை பெரும் விளம்பரத்துடன் அமல்படுத்தியது. வருடத்திற்கு நூறு தலித் மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு விமானப் பணிப்பெண் பயிற்சி கொடுத்து வேலை வாங்கி கொடுப்பதுதான் அந்த விமோச்சனத் திட்டம். இந்தத் திட்டத்தின் பலனை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறார் அஜிதா கார்த்திகேயன், டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் (5.2.10).

இதற்கென்று சென்னையில் இருக்கும் பிரபலமான கல்லூரியைத் தேர்ந்தெடுத்து வருடத்திற்கு ஒரு கோடி ரூபாயை அரசு செலவழித்திருக்கிறது. ஒரு மாணவிக்கு ஒரு இலட்சமென்று இதுவரை நான்கு வருடங்களில் நானூறு பெண்கள் பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தின் பல்வேறு கிராம, நகரப் பகுதிகளிலிருந்து வந்த தலித் பெண்களுக்கு நடை, உடை, பாவனை, அலங்காரம், உள்ளிட்டு எல்லா எழவுகளும் தீவிரமாகப் பயிற்சி கொடுக்கப்பட்டன. நடுத்தர வர்க்கத்தின் கனவுப் பத்திரிகையான இந்தியா டுடே போன்றவை தலித் பெண்கள் விமானத்தில் பறக்கப் போவதை வைத்து இந்தியா முன்னேறிவிட்டதென்று செய்தி போடவும் தவறவில்லை.

ஆனால் என்ன பலன்? இந்த நான்கு ஆண்டுகளில் ஒரு தலித் பெண் கூட விமானப் பணிப்பெண் வேலைக்கு தேர்வு செய்யப்படவில்லை. இவ்வளவிற்கும் அந்தப் பயிற்சிக் கல்லூரி 60% மாணவிகளுக்கு வேலை வாங்கித்தர வேண்டுமென்பது அரசு செய்துள்ள உடன்பாடாம். இது குறித்து கேட்டதற்கு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் தமிழரசி அந்தக் கல்லூரிக்கு தரவேண்டிய தொகையை நிறுத்தியிருப்பதாகக் கூறியிருக்கிறார். எவ்வளவு நாள் நிறுத்துவார்கள்? கமிஷன் வாங்கிய கைகள் குற்ற உணர்வு இல்லாமல் இருக்குமா என்ன?

வருடத்திற்கு ஒரு கோடியை ஸ்வாகா போட்ட அந்தக் கல்லூரி என்ன சொல்கிறது? மாணவிகள் எவரும் விமான நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதியில் இல்லையாம். அந்த எதிர்பார்ப்பு தகுதிகள் என்ன?

தமிழ் சினிமா இயக்குநர்கள் கதாநாயகிகளுக்காக உசிலம்பட்டி போகிறார்களா, இல்லை மும்பைக்கு பறக்கிறார்களா? வெள்ளையும், சொள்ளையும், வாட்ட சாட்டமாக இருக்கும் அழகிகள்தான் அவர்களது தேவை. இது ஒரு அக்மார்க் தமிழ்ப் பெண்ணிடம் இருக்காதில்லையா?

தமிழ்நாட்டு தலித் பெண்கள் மட்டுமல்ல, பெரும்பாலான தமிழ்ப் பெண்களும் சற்றே குள்ளமாகவும், கருப்பு, மாநிறமாகவும்தான் இருக்கிறார்கள். இந்தத் ‘தகுதிகளோடு’ ஆங்கில மொழி தேர்ச்சியின்மையும் ஒரு யதார்த்தமான பிரச்சினைதானே? விமானத்தில் பறக்கும் மேட்டுக்குடியினருக்கு சேவை செய்யும் பெண்கள் என்றால் சும்மாவா? இது குறித்து கேட்டதற்கு விமான நிறுவனப் பிரதிநிதிகள் தாங்கள் கலரெல்லாம் பார்ப்பதில்லை, பிளீசிங் பெர்சனால்ட்டியைத்தான் பார்க்கிறோம் என்றார்களாம்.

அப்படி ஒரு பெர்சனால்ட்டி வரவேண்டுமென்றால் அது சுண்டி இழுக்கும் வெள்ளையழகில் இருந்துதானே வரும்? பார்ப்பனியம் மட்டுமல்ல முதலாளித்துவம் கூட தலித்துகளை ஓரமாகத்தான் வைத்திருக்க விரும்புகிறது. இட ஒதுக்கீடு என்றால் தகுதி குறைந்து விடும் என்று கூப்பாடு போடும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கும் இத்தகைய அழகு விதிகளை வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் என்ன வேறுபாடு? அப்படி என்ன விமானத்தில் சேவை செய்து கிழிக்கிறார்கள்? சரக்கு ஊத்தி கொடுப்பது என்ன உலகில் யாரும் செய்ய முடியாத வேலையா என்ன?

“இதுதான் தகுதியென்றால் எங்களுக்கு அப்படி ஒரு பொய்யான நம்பிக்கையை ஊட்டி ஏமாற்றியிருக்க வேண்டியதில்லையே” என அங்கலாய்த்துக் கொள்ளும் அந்த தலித் மாணவிகளில் பெரும்பாலோர் வீட்டிலிருக்க சிலர் மட்டும் ஹவுஸ் கீப்பிங்க முதலான வேலைகளில் சேர்ந்திருக்கிறார்கள்.

உண்மையில் இந்த அரசு செலவிட்ட நான்கு கோடி ரூபாயை ஆதி திராவிட மாணவர் விடுதிகளை மேம்படுத்துவதற்கு ஒதுக்கியிருந்தால் கூட பலனுண்டு. மாட்டுத்தொழுவங்கள் போல பராமரிக்கப்படும் அந்த விடுதிகளிலிருந்துதான் நமது தலித் மாணவர்கள் கல்லூரி படிப்பை மேற்கொண்டு வருகிறார்கள்.

தலித் மக்களை முன்னேற்ற வேண்டுமானால் இந்த அரசு என்ன செய்திருக்க வேண்டும்? தலித் மக்களில் ஆகப் பெரும்பான்மையினர் நிலமற்ற விவசாயிகளாகத்தான் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். அவர்களுக்கு நிலத்தை வழங்கினால் அது அவர்களது வாழ்க்கைப் பொருளாதாரத்தை மட்டுமல்ல ஆதிக்க சாதிகளிடம் சிக்கியிருக்கும் சுயமரியாதையையும் மீட்டு வரும். ஆனால் எல்லா அரசியல் கட்சிகளும் இந்த ஜீவாதாரமான பிரச்சினையை வேண்டுமென்றே தவிர்த்து விட்டு தலித்தை ஜனதிபதியாக்கிவிட்டோம், அமைச்சராக்கி விட்டோம், சில தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறோம் என்று ஏமாற்றி வருகின்றன.

தலித்துக்களில் படித்து முன்னேறியிருக்கும் மிகச் சிறுபான்மையினரான நடுத்தர வர்க்கத்தினை சாட்சியாக வைத்து மற்ற தலித்துகளும் முன்னேறலாம் என்ற மாயையை ஆளும் வர்க்கம் பரப்பி வருகிறது. இந்த செயல்திட்டத்தினை ஏற்றுத்தான் தலித் மக்களின் உரிமை பற்றி பேசும் தலித் அரசியல் கட்சிகளும் செயல்படுகின்றன. அதன் தொடர்ச்சிதான் இந்த விமானப் பணிப்பெண் வேலைத்திட்டம். ஆனாலும் இந்த அற்ப மாயையைக்கூட அமல்படுத்த முடியவில்லை என்பதுதான் இதன் அவலம்.

இத்தகைய கவர்ச்சி தூண்டிலுக்கு இரையாகாமால் தலித் மக்கள் பிற உழைக்கும் மக்களுடன் இணைந்து போராடும் போதுதான் அவர்களுடைய சமத்துவமும், பொருளாதாரமும் மீட்கப்படும். அதுவரை விமானங்களில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் கூட இடம் கிடைக்காமல் போகலாம்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

ஆப்கான் ஆக்கிரமிப்புப் போர்: புதைமணலில் சிக்கியது அமெரிக்கா!

vote-012அமெரிக்க ஏகாதிபத்தியம் சின்னஞ்சிறு ஏழை நாடான ஆப்கானை ஆக்கிரமித்துக்கொண்டு, கடந்த எட்டு ஆண்டுகளாக அந்நாட்டின் மீது ஒரு அநீதியான போரை நடத்தி வருகிறது. சின்னஞ்சிறு ஏழை நாடாக இருந்தாலும், “ஆப்கான் ஏகாதிபத்தியங்களின் இடுகாடு” எனக் கூறப்படுவது மீண்டும் நிரூபணமாகி வருகிறது.

ஒசாமா பின்லேடனைப் பிடிப்பது, அல்-காய்தாவை நிர்மூலமாக்குவது, தாலிபானைத் தோற்கடிப்பது, ஆப்கானில் ஜனநாயக அரசைக் கட்டியமைப்பது – இவை அனைத்தையும் போரைத் தொடங்கிய ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே செய்து முடிப்பது எனத் தம்பட்டம் அடித்து, இந்த ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கிய அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதனின் “நேடோ” கூட்டாளி நாடுகளும், தமது சபதங்களை நிறைவேற்றவும் வழியின்றி, அதே சமயம், ஆப்கானில் இருந்து கௌரவமாக வெளியேறவும் விருப்பமின்றி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றன.

இப்படிபட்ட தருணத்தில், ஆப்கானுக்கு மேலும் 30,000 அமெரிக்கத் துருப்புகளை அனுப்பப் போவதாக அறிவித்திருக்கிறார், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா. அதனுடன், “இன்றிலிருந்து 18 மாதங்கள் கழித்து, ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறப் போவதாகவும்” ஒபாமா அறிவித்திருக்கிறார். இராணுவச் சிப்பாய்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, போரை முன்னைவிடத் தீவிரமாக நடத்துவதற்கான முயற்சி என்பது பாமரனுக்கும் புரியும். ஆனால், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர் அல்லவா; அதனால், “ஆப்கான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகத்தான் சிப்பாய்களின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதாக”த் தேன் தடவிப் பேசியிருக்கிறார், அவர். இந்த விளக்கத்தைக் கேட்கும் பொழுது கேப்பையில் நெய் வழிகிறது என்ற நம்மூர் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கான் ஆக்கிரப்புப் போருக்காக 2006-ஆம் ஆண்டு செலவழித்த தொகை ஏறத்தாழ 1,900 கோடி டாலர்கள் (95,000 கோடி ரூபாய்). இந்தப் போர்ச் செலவு 2009-இல் மூன்று இலட்சம் கோடி ரூபாயாக (6,020 கோடி அமெரிக்க டாலர்கள்) அதிகரித்திருக்கிறது. தற்பொழுது துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் போர்ச் செலவு 10,000 கோடி அமெரிக்க டாலர்களைத் தொட்டுவிடும் என மதிப்பிடப்படுகிறது.

வேலையையும் வீட்டையும் இழந்து, பொருளாதார நெருக்கடியால் நடுத்தெருவுக்கு வந்துவிட்ட அமெரிக்கர்களின் மத்தியில் இந்த ஊதாரித்தனமான போர்ச் செலவு ஆப்கான் போருக்கு எதிரான மனோநிலையைத் தோற்றுவித்திருக்கிறது. எனவே, இந்த ஆக்கிரமிப்புப் போரையும் போர்ச் செலவையும் நியாயப்படுத்த தேசிய வெறியைத் தூண்டிவிடும் அயோக்கியத்தனத்தில் இறங்கியிருக்கிறார், ஒபாமா. அமெரிக்காவை மீண்டும் தாக்கும் திட்டங்கள் போடப்படுவதாகக் கூறி, அமெரிக்கர்களின் மத்தியில் பீதியூட்டி வருகிறார், அவர். கூடுதலாக 30,000 அமெரிக்கத் துருப்புகளை ஆப்கானுக்கு அனுப்ப எடுத்த முடிவை இராணுவத்தினர் மத்தியில் அறிவித்து, ஒபாமா உரையாற்றியதைக் கேட்டால், போர் வெறியன் ஜார்ஜ் புஷ் ஆவி ஒபாமாவுக்குள் புகுந்துவிட்டதோ என்ற சந்தேகம் தோன்றும்.

ஒபாமா அதிபரான பிறகு, துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமலேயே ஆப்கான் போரில் வெற்றியை ஈட்ட வேண்டும் என்ற போர்த் தந்திரத்தைக் கையாண்டு வந்தார். பொருளாதார நெருக்கடி நிலவும் சமயத்தில் துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்தால், போர்ச் செலவு அதிகரித்து, ஏழை அமெரிக்கர்களின் கோபத்தை சம்பாதித்துக் கொள்ள நேரிடும்; அது, தனது எதிர்கால அரசியல் நலனுக்கு நல்லதல்ல என்பதாலேயே இந்தப் போர்த் தந்திரத்தைக் கையாள எண்ணி வந்தாரேயன்றி, வேறெந்த நல்லெண்ணமும் காரணம் அல்ல.

இதற்கு மாறாக, அமெரிக்கத் துணை அதிபர் ஜோ பிடேன், துருப்புகளின் எண்ணிக்கையைச் சற்று அதிகரிப்பதோடு, ஆளில்லா விமானத் தாக்குதலை ஆப்கான் மீது மட்டுமின்றி, பாகிஸ்தான் மீதும் தீவிரமாக நடத்த வேண்டும் எனக் கூறி வந்தார். அமெரிக்க அரசின் உள்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன், இராணுவச் செயலர் ராபர்ட் கேட்ஸ் மற்றும் அமெரிக்க இராணுவத் தளபதிகள் ஆகியோர் ஆப்கானில் அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்க வேண்டும் எனக் கூறி வந்தனர். துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற திட்டத்திற்கு அமெரிக்காவின் பத்திரிகைகளும், குடியரசுக் கட்சியும், வலதுசாரி அறிவு ஜீவிகளும் ஆதரவு தெரிவித்தனர். கடந்த சில மாதங்களாக இந்த மூன்று அணிகளுக்கு இடையே ஆப்கான் ஆக்கிரமிப்புப் போரை எப்படி நடத்திச் செல்வது என்பது குறித்து நடந்து வந்த நாய்ச் சண்டையில், அதிபர் ஒபாமா தீவிர வலதுசாரி கும்பலிடம் சரணடைந்துவிட்டார்.

“தீவிரவாதத்துக்கு எதிரான போர்” என்ற போர்வையில் கடந்த எட்டு ஆண்டுகளாக நடந்துவரும் இந்த ஆக்கிரமிப்புப் போர், தாலிபான் மற்றும் அல்-காய்தாவைத் தோற்கடிக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, குறிப்பாக ஆப்கான் மக்கள் மத்தியில் மீண்டும் தாலிபானின் செல்வாக்கு வளருவதற்கு வளமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. அமெரிக்கா, ஆப்கான் மீது படையெடுத்த ஐந்து வாரங்களுக்குள்ளாகவே தாலிபானின் அதிகாரம் காபூல் பகுதியில் வீழ்த்தப்பட்டாலும், அப்பொழுதே ஆப்கானின் தென்மேற்கு பகுதியிலுள்ள ஹெல்மண்ட் மாகாணத்தில் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தும் அளவிற்கு, அப்பகுதியில் தாலிபான் செல்வாக்கு செலுத்தி வந்தது. இப்பொழுதோ, தாலிபானின் செல்வாக்கு ஆப்கானின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வளர்ந்து வருவதாக முதலாளித்துவப் பத்திரிகைகள்கூட ஒப்புக் கொள்கின்றன.

இதனால், தாலிபானைத் தோற்கடிப்பதைவிட, அவ்வமைப்பின் செல்வாக்கு தலைநகர் காபூல் பகுதியில் மீண்டும் வளர்ந்துவிடாமல் தடுப்பதுதான் அமெரிக்காவிற்கும் அவர்களது கூட்டாளி நாடுகளுக்கும் தலைபோகிற விசயமாகிவிட்டது. இதற்காகவே துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதோடு, தாலிபானுக்கு எதிரான யுத்தப் பிரபுக்களோடு ஒரு புனிதக் கூட்டணியையும் அமெரிக்கா-நேடோ துருப்புகள் அமைத்துள்ளன. மேலும், தாலிபானை உடைத்து அமெரிக்காவிற்கு உதவக் கூடிய ‘நல்ல’தாலிபான்களை – கருங்காலிகளை- உருவாக்கவும் அமெரிக்கா முயன்று வருகிறது. இதற்காக அமெரிக்காவின் இராணுவ பட்ஜெட்டில் 130 கோடி அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

+++

அமெரிக்காவின் தயவிலும், பாதுகாப்பிலும் ஆப்கானை ‘ஆண்டு’ வரும் ஹமித் கர்சாய் அரசோ, ஊழல்பேர்வழிகள், போதை மருந்து கடத்தும் அரசியல் தாதாக்கள், தாலிபானை எதிர்க்கும் யுத்தப்பிரபுக்களால் நிரம்பி வழிகிறது. ஆப்கான் அதிபர் ஹமித் கர்சாயின் சொந்த சகோதரரான அகமது வாலி கர்சாய் ஆப்கானைச் சேர்ந்த போதை மருந்து கடத்தல் பேர்வழிகளுள் முக்கியமானவர் எனும்பொழுது, ஆப்கானில் அமெரிக்கா திணித்துள்ள ஆட்சியின் யோக்கியதைப் பற்றி மேலும் விரிவாக விளக்கத் தேவையில்லை. “அகமது வாலி கர்சாயின் போதை மருந்து கடத்தல் தொழிலை மேற்குலக பத்திரிகைகள் அம்பலப்படுத்தத் துணிந்தால், நேடோ-அமெரிக்கத் துருப்புகளுக்கும் அதில் பங்கு இருப்பதை அம்பலப்படுத்துவேன்” என அந்நாட்டின் போதை மருந்து கடத்தல் தடுப்பு அமைச்சரே எச்சரிக்கும் அளவிற்கு ஆப்கானில் போதை மருந்து கடத்தல் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது.

ஆப்கான் வரலாற்றிலேயே மிகக் கொடூரமான யுத்தப் பிரபுவாகக் கருதப்படும் முகம்மது ஃபஹிம்தான் அந்நாட்டின் துணை அதிபர். உஸ்பெக் இனத்தைச் சேர்ந்த மற்றொரு யுத்தப் பிரபுவான ரஷித் தோஸ்தம் அதிபர் கர்சாயின் நெருங்கிய அரசியல் கூட்டாளி. பஷ்டுன் இன மக்கள் வாழும் பகுதியில் அமெரிக்க-நேடோ துருப்புகளுக்குத் தேவைப்படும் ஆயுதத் தளவாடங்களைக் கொண்டு செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை யுத்தப் பிரபுக்கள்தான் செய்து கொடுத்து, சன்மானம் பெற்றுக் கொள்கிறார்கள். போதை மருந்து கடத்தல் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் யுத்தப் பிரபுவான நஸ்ரி முகமது, ஜெர்மன் ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையாக இருந்து வருவதை அமெரிக்காவைச் சேர்ந்த அனைத்துலக கூட்டுறவு மையம் என்ற அமைப்பு அம்பலப்படுத்தியிருக்கிறது.

ஆப்கானில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக நடந்த அதிபர் தேர்தலில் ஹமித் கர்சாய்க்கு விழுந்த வாக்குகளில் ஏறத்தாழ 10 இலட்சம் வாக்குகள் கள்ள வாக்குகள் எனக் கண்டுபிடிக்கப்பட்டதால், அதிபர் தேர்தலின் முதல் சுற்றில் கர்சாய் அடைந்த “வெற்றி”, பின்னர் ரத்து செய்யப்பட்டது. எனினும், கர்சாய் இரண்டாம் சுற்றுத் தேர்தலைச் சந்திக்காமலேயே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தயவால் மீண்டும் நாட்டின் அதிபராக முடிசூட்டிக் கொண்டுள்ளார். பாலஸ்தீனத்தில் அமெரிக்காவை எதிர்க்கும் ஹமாஸ் இயக்கம் நியாயமான முறையில் தேர்தலைச் சந்தித்து, காசா முனையில் வெற்றி பெற்றதை இதுவரை ஏற்றுக் கொள்ளாத அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள், ஆப்கானில் நடந்த மோசடித் தேர்தலையும், ‘சட்டவிரோதமான’ முறையில் கர்சாய் மீண்டும் அதிபராகியிருப்பதையும் எவ்வித முணுமுணுப்புமின்றி ஏற்றுக் கொண்டுள்ளன.

அந்நிய ஆக்கிரமிப்பு, அமெரிக்க மற்றும் நேடோ படைகள் நடத்திவரும் படுகொலைகள் – கடந்த எட்டு ஆண்டுகளில் ஏறத்தாழ 31,000 ஆப்கானியர்கள் ஆக்கிரமிப்புப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர் – கர்சாயின் ஊழல் ஆட்சி, ஐ.நா. மன்றம் போடும் சோத்துப் பொட்டலத்தை நம்பியே வாழ்க்கையை ஓட்ட வேண்டிய அளவிற்கு உள்நாட்டுப் பொருளாதாரம் நாசமாகிக் கிடப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆப்கான் மக்கள் மத்தியில் தாலிபானின் செல்வாக்கு மீண்டும் வளரத் தொடங்கியிருக்கிறது. அமெரிக்கா இப்பொழுது இதனையே காரணமாகக் காட்டி துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதோடு, ஆளில்லா விமானத் தாக்குதலைத் தீவிரப்படுத்த வேண்டும்; அல்-காய்தாவை ஒழிக்க பாகிஸ்தான், சோமாலியா, ஏமன் ஆகிய நாடுகள் மீதும் தீவிரவாதத்துக்கு எதிரான போரைத் தொடுக்க வேண்டும் எனக் கூப்பாடு போடத் தொடங்கியிருக்கிறது.

ஆப்கானில் அமெரிக்க-நேடோ படைகள் சந்தித்துவரும் தோல்வியையும், அங்கு நிலவும் உள்நாட்டுக் குழப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டு ஆப்கானில் சமாதானத்தை ஏற்படுத்துவது என்ற பெயரில் ரசிய ஏகாதிபத்தியமும், சீனாவும் அந்நாட்டினுள் நுழைய முயன்று வருகின்றன. இந்தியா, ஆப்கானிலிருந்து பாகிஸ்தானை ஓரங்கட்ட வேண்டும் என்ற திட்டத்தோடு, அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு மட்டுமின்றி, கர்சாய் கும்பலுக்கும், தாலிபானை எதிர்க்கும் யுத்தப் பிரபுக்களுக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறது. மேலும், ஆப்கானைப் புனரமைப்பது என்ற போர்வையில் அமெரிக்க இராணுவத்திற்குத் தேவைப்படும் கள உதவிகளைச் செய்து கொடுத்தும் வருகிறது, இந்தியா. பாகிஸ்தானோ ஒருபுறம் அமெரிக்காவிற்கு ஆதரவளித்துக் கொண்டு, இன்னொருபுறம் தாலிபானுக்குக் கொம்பு சீவிவிடுகிறது. இப்படியாக ஆப்கான், தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் வேட்டைக் காடாக மாற்றப்பட்டுள்ளது.

இரானின் எல்லையையொட்டி அமைந்திருப்பதாலும், மத்திய ஆசியப் பகுதியில் கிடைக்கும் எண்ணெய் வளத்தை அரபிக்கடல் பகுதிக்கு எடுத்துச் செல்லுவதற்கான தரைமார்க்கமாகவும் இருப்பதாலும், ஆப்கான் நாட்டைத் தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவே அமெரிக்கா விரும்புகிறது. இந்த நிலையில் அதிபர் ஒபாமா பதினெட்டு மாதங்கள் கழித்து ஆப்கானில் இருந்து படைகளை முழுவதுமாகத் திரும்பப் பெற்றுக் கொள்வார் என நம்புவதற்கு இடமே கிடையாது. 19 -ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து ஏகாதிபத்தியமும், 20-ஆம் நூற்றாண்டில் சோவியத் சமூக ஏகாதிபத்தியமும் ஆப்கான் மக்களால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டதைப் போல், அமெரிக்க மேலாதிக்க வல்லரசும் தோற்கடிக்கப்பட்டதால்தான், அதற்குப் படைகளைத் திரும்பப் பெறும் “நல்ல புத்தி” வரும்!

– புதிய ஜனநாயகம், ஜனவரி, 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்

கோவா, தமிழ்ப்படம்: செத்துச் செத்துச் சிரிக்கலாமா ?

107

vote-012“ஒழுங்கா படி. இல்லேன்னா உன்னை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வெச்சிடுவேன்!” – ஒரு தந்தை மகனிடம் பேசுவதாக சமீபத்திய ஆ.விகடனில் வெளிவந்த நகைச்சுவை துணுக்கு. வினவில் நேற்றுதான் ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படும் பிரச்சினையின் சகல பரிமாணங்களையும் விளக்கிய கட்டுரையை வெளியிட்டிருந்தோம். அதைப் படித்தவர்கள் எவரும் இந்த துணுக்கை படித்து சிரிக்க முடியாது.

கல்கி காலத்திலிருந்து இப்படித்தான் ஆ.விகடன் தீவிரமான சமூகப் பிரச்சினைகளை நையாண்டியின் பெயரில் நீர்த்துப் போகச்செய்யும் வேலையை செய்து வருகிறது. இதில் ஊழல், மோசடி, செய்யும் ஆளும் வர்க்க பிரதிநிகள் மட்டும் எப்போதும் இடம்பெறமாட்டார்கள். அதாவது அம்பானி, ஜெயேந்திரன் போன்ற ஒழுக்க சீலர்களை கேடி, கிரிமினல் காமடியன்களாக நீங்கள் சிரித்திருக்க முடியாது. நடுத்தர வர்க்கத்தின் நகைச்சுவை இரசனையை தீர்மானிக்கும் இதன் மற்றொரு வெளிப்பாடுதான் எஸ்.வி.சேகரின் காமடி நாடகங்கள். இன்றைக்கு ஆ.விகடனில் இத்தகைய நகைச்சுவைகள் அதிகம் வருவதில்லை. சேகரின் நாடகங்களும் முன்பு மாதிரி பரபரப்பாக நடைபெறுவதில்லை. ஏன்?

விகடனோ, சேகரோ திருந்திவிட்டதனால் இது நடைபெறவில்லை. இவர்களின் பங்கை தொலைக்காட்சியின் விதவிதமான நையாண்டி நிகழ்ச்சிகள் எடுத்துக் கொண்டுவிட்டன. அதனால் முழு சமூகமும் அப்படி பேசி, சிரிக்க, சிந்திக்க பழகிவிட்டது. இந்த நகைச்சுவை உணர்வு ஆரோக்கியமானதா?

அதற்கு முன் மக்கள் எதற்கு சிரிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒருவன் தெருவில் கிடக்கும் வாழைப்பழத்தோலில் மிதித்து வழுக்கி மண்டை அடிப்பட்டு இரத்தம் ஒழுக கிடக்கும் போது முழு தமிழகமும் அவன் விழுந்ததை நினைத்து சிரிக்கிறது. சூழ்நிலையின் இயல்பில் நடக்கும் இந்த சிறு மாற்றமே சிரிப்பதற்கு போதுமானது என்பதால் சுருங்கச் சொன்னால் மக்கள் தங்களைப் பார்த்தே சிரிக்கிறார்கள்.

அரசியல், சமூக உரிமைகள், ஜனநாயகத்தில் என்ன தரம் இருக்கிறதோ அதுதான் நகைச்சுவையில் இடம் பெறுகிறது என்று சொன்னால் முதலில் உங்களால் ஏற்க முடியாமல் இருக்கலாம். ஜேயேந்திரன் பெண்களுக்கு அறிவுரை சொல்லும் போதும், ஜெயா ஈழம்பற்றி சவடால் அடிக்கும் போதும், அழகிரி நேர்மையான தேர்தல் முறை குறித்து பேசுவதும், ராகுல் காந்தி வாரிசு அரசியல் நல்லதல்ல என்று கூறுவதும், ரஜனி திருட்டு சி.டி குறித்து கோபப்படும் போதும் இங்கு யாருக்கும் சிரிப்பு வருவதில்லை. கோபமும் வருவதில்லை.

பிளாக் டிக்கெட் விற்ற காசில் சூப்பர் ஸ்டாரான கோடிசுவர ரஜினியும், வெளிநாட்டில் பீட்டர் வாழ்க்கையில் ஜாலியாக இருந்த ராகுல் வாரிசு என்ற ஒரே தகுதியில் வலம் வருவதும், மதுரை ரவுடிகளின் ரவுடி அழகிரி வள்ளலாகவும், தேர்தல் நிபுணராகவும் வரும் போது, ஈழம் பற்றி முனகினாலே போடாவில் போடும் ஜெயா ஈழத்தாயாக போற்றப்பட்ட போதும், ஜெயேந்திரனது கொலை, கூத்துக்களை மறந்து அவரது உலாச் செய்திகள் ஊடகங்களில் மரியாதையுடன் குறிப்பிடப்படும் நாட்டில் காமடிக்கு என்ன அருகதை இருக்க முடியும்?

உண்மையான கோபமும், ரோஷமும் வராத சமூகத்திடமிருந்து உண்மையான நகைச்சுவை மட்டும் வந்து விடுமா என்ன?

வாழ்க்கையின் போராட்டத்தில் முன்னேற்றம் இல்லாத போது மெலிதான சிணுங்கல் கூட தமிழனை சிரிக்க வைக்க போதுமானதாக இருக்கிறது. இந்த சிணுங்கலுக்கு தனது மூளையக் கழட்டி ஆணியில் மாட்டி விட்டு டி.வியின் முன்னால் அமரும் மனிதர்கள் சீக்கிரமே பழக்கப் படுகிறார்கள். வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் அவர்களது மொழி, அறிவு, இரசனை எல்லாம் இதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. சமூக அறிவினால் தீர்மானிக்கப்படும் நகைச்சுவை உணர்வு நேரெதிராய் நகைச்சுவை உணர்வால் அறியப்படும் சமூக அறிவாக ஆபாசமாக மாறிவிடுகிறது.

தமிழ்ப்படத்தின் முதல் காட்சியில் ஒரு கிராமத்தில் ஆண் குழந்தைகளை கள்ளிப் பால் வைத்து கொல்லும் வழக்கம் உள்ளதாக காட்டப்படுகிறது. அதற்கான பிளாஷ் பேக் பஞ்சாயத்து காட்சியின் கிண்டலில் சிரிக்க ஆரம்பிக்கும் ரசனையின் மூலம் தமிழ் நெஞ்சங்கள் பெற்றதென்ன?

தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறந்தால் கொலை செய்வது இன்னும் வழக்கில் உள்ளது. இவ்வளவு முன்னேற்றங்களும், வாழ்க்கை கருவிகளும் பெருகி விட்ட நாட்டில் இன்னும் ஒரு பெண் குழந்தையை வளர்த்து ஆளாக்க முடியாது என்ற அவலம் மாறவில்லை. சமூகத்தின் பாதி எண்ணிக்கையிலிருக்கும் அந்த பாவப்பட்ட பாலினத்தின் தலையெழுத்துக்காக ஒவ்வொரு மனிதனுக் வெட்கித் தலைகுனிய வேண்டிய நாட்டில் அதே விசயம் ஒரு திரைப்படத்தின் அறிமுக நகைச்சுவையாக இருக்கிறது. அதுவும் ஆண் குழந்தைகள் கொல்லப்படுவது போல. இனி கள்ளிப்பால் கொடுமைகள் ஏதும் செய்தியாக வந்தால் படிப்பவர்கள் தமிழ்ப்படத்தை நினைத்து சிரித்து விட்டு போய்விடுவார்கள். அல்லது அந்தக் கொடுமையை செய்வதற்கு சமூகக் காரணங்களால் தள்ளப்பட்டவர்கள் அடைய வேண்டிய குறைந்த பட்ச குற்ற உணர்வை கூட இந்தப்படம் இல்லாமல் செய்து விடுகிறது.

பதிவுலகில் இப்படத்தை மாய்ந்து மாய்ந்து பாராட்டிய எந்தப் பதிவரின் அறிவுக்கும் இது தென்படவில்லை. ஏனெனில் அவர்கள் சிரிப்பதற்கு மட்டுமே பழக்கப்பட்டவர்கள் ஆயிற்றே.

கோவா, தமிழ்ப்படம் இரண்டிலும் ஆரம்பக் காட்சிகளாக கிராமப் பஞ்சாயத்து காட்டப்படுகிறது. தலைவர், மீசை, உறுமல், செம்பு, துண்டு, வேட்டி, வெற்றிலை எச்சில் எல்லாம் இருக்கிறது. ஆனால் தமிழ் சினிமா காட்டிய வகையிலும், காட்டாத வகையிலும் உள்ள நிஜ பஞ்சாயத்துக்களின் அருகதை என்ன? இந்த பஞ்சாயத்துக்களின் மூலம்தான் தீண்டாமை மறுப்பு மணம் செய்த காதலர்கள் எரிக்கப்பட்டிருக்கிறார்கள், தலித் பெண்களை வல்லுறவு செய்த ஆதிக்க சாதி ஆண் பொறுக்கிகள் சில நூறு ரூபாய்களை அபராதமாக கட்டிவிட்டு தப்பித்திருக்கிறார்கள், இரண்டாவது மணம் செய்வதற்காக முதல் மனைவிகள் எந்த நிவராணமுமின்றி வெட்டி விடப்பட்டிருக்கிறார்கள், தீண்டாமை குற்றத்தை மீறி செருப்பு போட்டதற்காகவோ, இல்லை சைக்கிள் மிதித்ததற்காகவோ பல தலித்துக்கள் ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது ஊரை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார்கள்… என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

சாதி ஆதிக்கத்தையும், பணம் படைத்தோரின் சட்டங்களையும் இன்றும் நிலைநாட்டி வரும் இந்தப் பஞ்சாயத்துக்கள் இந்த இரண்டு படங்களிலும் எப்படி செம்பு, வெத்தலையாக மாற்றப்பட்டிருக்கிறது பாருங்கள்? இதைப்பார்த்து வயிறு வலிக்க சிரிப்பவர்கள் இனி இத்தகைய கொடுமை பற்றிய செய்திகளை எப்படி எடுத்துக் கொள்வார்கள்? பொய்மையின் இருட்டில் உண்மையின் வெளிச்சம் அழிக்கப்படுகிறது.

தமிழ்ப்படத்தில் மாஸ் ஹீரோ, ஓப்பனிங் சாங், விரலைசைவு, கட்டவுட், வில்லன்களை வீழ்த்துவது எல்லாம் மேலோட்டமாக கிண்டலடிக்கப்படும் போது இரசிகர்கள் குறிப்பிட்ட காட்சிகள் எந்தப்படத்தை நினைவு படுத்துகிறது என்று பேசியவாறு சிரிக்கிறார்கள். உடன் கண்டுபிடிப்பவர்கள் பொது அறிவில் விற்பன்னராக ஆராதிக்கப்படுகிறார்கள். ஆனால் நினைவு படுத்தப்பட வேண்டிய விசயங்கள் என்ன?

சூப்பர் ஸ்டார்களை யார் உருவாக்குகிறார்கள்? சினிமா முதலாளிகள், ஊடக முதலாளிகள் இருவரும் பெரும் இலாபத்தை பறிக்க வேண்டுமானால் இந்த நட்சத்திரங்கள் அவசியம். குறிப்பிட்ட நடிகரின் குறிப்பிட்ட ஃபார்முலா நடிப்பு தற்செயலாக வெற்றி பெற்று விட்டால் அவருக்கு ஊதியத்தை கோடிகளில் பெருக்கி, பம்பாய் நடிகை, அமெரிக்க படப்பிடிப்பு என்று ரிச்சாக உயர்த்துவது யார்? ரஜினி அமெரிக்காவில் மொட்டை அடித்த கதையும், இமயத்தில் ஒன்னுக்கு போன கதையும், கனடா மாப்பிள்ளைக்காக வெட்கப்படும் ரம்பாவின் முகமும், நவ்யா நாயரின் திருமணத்தை விலாவாரியாக விவரிப்பதும் யார் செய்கிறார்கள்?

மணிரத்தினத்தின் வீட்டில் சிறு குண்டு வீசப்பட்டு அதை ரஜினி கண்டித்து அவர் அரசியலுக்கு வரப்போவதாக பேசப்பட்ட நேரத்தில் அதற்கு அஞ்சிய தளபதிகள், தமிழினத் தலைவர்கள், புரட்சிப்புயல்கள் எத்தனை பேர்?

இப்படி தமிழனின் அன்றாட கவலையாக மாறிவிட்ட நட்சத்திரங்களை கிண்டல் செய்யவேண்டுமென்றால் இவர்கள் எல்லோரையும் திரையில் நிறுத்த வேண்டும். அப்போதுதான் அடிமுட்டாளான ரஜினியும், ரேஷன் பொருட்களை வீட்டுக்கே கொண்டு வந்து படியளக்கும் கோமாளி விஜயகாந்தும், தமிழ் தெரியாததை உயர்வாக நினைக்கும் தமிழ்ப்பெண் த்ரிஷாவும், தமிழ் மக்களின் தெய்வங்களாக போற்றப்பட்டதை போட்டு உடைக்க முடியும்.

தமிழ்ப்படத்தில் தமிழ் சினிமாவில் வரும் ரேப் சீன்களைக் கிண்டல் செய்வதற்காக சொர்ணா அக்கா எனும் ரவுடிப்பெண் ஒரு கல்லூரி இளைஞனை வல்லுறவு செய்ய முயல்வதாக காட்டுகிறார்கள். இதற்கு முன் கற்பழிப்புக் காட்சிகளில் ஜாக்கெட் எப்போது கிழியும் என்று எதிர்பார்க்கும் ஆண் இரசிகர்கள் இதையும் பார்த்து சிரிக்கிறார்கள். காமத்தின் இடத்தில் காமடி. ஆனால் இப்போதுதான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகமாக நடக்கின்றன. கல்லூரி மாணவியோ, இல்லத்தரசியோ மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, வீடியோ எடுக்கப்பட்டு சொல்லக்கூசும் அருவெறுப்புகள் நிகழ்த்தப்படும் காலத்தில் ஆண் கற்பழிப்பு எனும் கற்பனையே யாருக்கும் விகாரமாகத் தெரியவில்லையே?

ஜாக்கெட் தேவைப்படாமல் முக்கால் உடம்பைக் காட்டுவதே நாயகிகளின் தகுதி என்ற இந்தக்கால நிலையில் ஜாக்கெட் கிழிபடும் எம்.ஜி.ஆர் கால கற்பழிப்புக் காட்சிகள் மறைந்து விட்டன. இதில் கிண்டலடிக்க வேண்டுமென்றால் கற்பழிப்பை தடுத்து நிறுத்த வரும் ஹீரோவை மட்டுமல்ல, நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு தவிக்கும் ஆண் இரசிகனையும் குறி வைக்க வேண்டும். பெண்ணடிமைத்தனத்தை நியாயப்படுத்தும் விதமாக கணவன்மார்கள் மனைவிகளின் புடவையைத் துவைப்பதாக வரும் பத்திரிகை ஜோக்குகளுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?

தமிழ்ப்படத்தில் பிளாட்பார வியாபாரியாகவும், பேப்பர் போடுபவனாகவும் வேலை செய்யும் ஹீரோ பணக்காரனாகி விடுகிறான். சைக்கிள் கேப்பில் ஹீரோக்கள் வாழ்வில் உயர்ந்துவிடுவதைக் கிண்டலடிக்கும் பார்வையில் அந்த உழைக்கும் மக்கள்தான் உண்மையில் நகைச்சுவையாக இழிவுபடுத்தப்படுகிறார்கள். நிஜத்திலோ, திரையிலோ உழைப்பால் உயர்ந்தவர் யாருமில்லை. மோசடி எனும் விதியன்றி யாரும் மில்லியனராகிவிடுவதில்லை. ஆனால குறுக்கு வழியில் பங்குச் சந்தை மூலம் லாட்டரி அடிக்கலாம் எனும் நடுத்தர வர்க்கம் தனது சேமிப்பு பணத்தை போட்டு எமாறுவது அதனுடைய தவறா இல்லை எல்லா பத்திரிகைளும் அப்படி பணக்காரராகிவிடலாம் என தன்னம்பிக்கை தொடர் வெளியிடுகிறதே அவர்களுடைய தவறா?

இலட்சக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்யும நாட்டில் இந்தியா 2020இல் வல்லராசாகி விடுமென்று கூவுகிறாரே தன்னம்பிக்கைகளின் பிதாமகன் அப்துல் கலாம், அவரை கிண்டல் செய்திருந்தால் நாமும் அதை வரவேற்றிருக்கலாம்.

கோட்டு சூட்டு போட்ட அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பன்னாட்டு நிறுவனங்களிடம் அடிபணிந்து மாமூல் பெற்று சுவிஸ் வங்கியில் பில்லியன் கணக்கில் சேர்க்கும் போது தமிழ்த்திரைப்படம் மார்க்கெட் மாமூலை கிண்டல் செய்கிறது. முன்னாள் ரவுடிகள், சாராயம் காய்ச்சியோரெல்லாம் கல்வி வள்ளலாக கல்லா கட்டும் நேரத்தில் இந்த மாமூலெல்லாம் எவனுக்கு வேண்டும்?

கோவா படத்தில் வெள்ளைக்கார பெண்களை மணம் செய்து ஃபாரினில் செட்டிலாகிவிடலாமென மூன்று இளைஞர்கள் கோவா செல்கிறார்கள். எப்போதும் பிகினி பெண்களை இரசித்துக் கொண்டு பீர் குடித்துக்கொண்டு ஜாலியாக வாழ்கிறார்கள். எந்தக் கதையும், பிரச்சினையும் இல்லாமல் குடி கும்மாளமென்று வாழும் இந்தப்படத்தை எடுப்பதற்கென்று இயக்குநருக்கு எவ்வளவு தைரியம் இருக்கவேண்டும்?

கிராமங்களலிருந்து வாழவைக்க முடியாத வாழ்க்கையால் சென்னைக்கும், பெங்களூருக்கும், மும்பைக்கும் விரட்டியடிக்கப்படும் இளைஞர்களின் காலத்தில் கோவா அவர்களைக் கேலி செய்கிறது.

வெள்ளையினப் பெண்ணை ஒரு இந்தியன் காதலித்து மணக்கிறான் என்றால் அதில் கேலிக்கும், புரிந்து கொள்வதற்கும் நிறைய விசயங்கள் உள்ளன. இருவேறு பண்பாட்டுச் சூழலில் வாழ்ந்த இருவரின் வாழ்க்கையும் மோதும்போது ஏற்படும் விளைவுகளில் சிரிப்பதற்கும், சிந்திப்பதற்கும் நிறைய உள்ளன. ஆனால் கோவா படத்தில் அந்த வெள்ளையினப்பெண் காலால் கோலமிட்டு வெட்கப்படும் தமிழ்ப்பெண்ணாக மாற்றப்படுகிறாள்.

கருப்பை தேசிய நிறமாகக் கொண்டிருக்கும் தமிழ் ஆண் வெள்ளை நிறத்தின் மீது கொண்டிருக்கும் காம ஈர்ப்பை கேலி செய்வதற்குப் பதில்படம் ஆராதிக்கிறது. அது நிறைவேறவும் கூடுமென ஆசையும் காட்டுகிறது. நிறம், அழகு குறித்து இளையோரிடம் நிலவும் மூடநம்பிக்கைகளை கேலிசெய்து உண்மையை புரியவைத்து அவர்களது தாழ்வு மனப்பான்மையை போக்குவதற்கு பதில் கோவா படம் பொய்மையை ஊதிப்பெருக்கி அதில் திளைக்க வைக்கிறது.

படத்தில் ஓரினச்சேர்க்கை பற்றிய நகைச்சுவையான சித்தரிப்பைப் பார்த்து சிலர் பாராட்டலாம். ஆனால் சிறுவர்களை குதறவரும் சீமைப்பன்றிகளின் உல்லாசபுரியாக இருக்கும் கோவாவை பாராட்ட முடியுமா? இந்தியாவின் எல்லா தேசிய இனப்பெண்களும் விபச்சாரத்திற்கென்றே அனுப்பப்படும் கோவாவை, தெற்காசியாவின் முக்கியமான குழந்தை விபச்சார மையமாக திகழும் இந்த நகரத்தை கோவா படம் இளையோர் செல்ல வேண்டிய அற்புத உல்லாச நகராக சித்தரிக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்து பிகினியில் இருக்கும் வெள்ளைக்கார பெண்களை சுலபாமாக மடக்கிவிடலாமென சிலருக்காவது தோன்றாமல் போய்விடுமா என்ன?

கோவா படத்தை ரஜினியின் மகளும், தமிழ்ப்படத்தை அழகிரியின் மகனும் தயாரித்திருக்கின்றனர். தமிழ் மக்களின் சாபக்கேடான அரசியல் கேவலமும், சினிமாக் கேவலமும் தத்தமது வாரிசுகளைக் கொண்டு இந்தப்படங்களை தயாரித்திருப்பது தற்செயலான ஒன்றா? யார் யாரைக் கேலி செய்கிறார்கள்?

சென்னையின் புறநகர் ஒன்றின் சுமாரான திரையரங்கு ஒன்றில் நள்ளிரவு காட்சியில் தமிழ்த்திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியேறும் போது அந்த அறிவிப்பு பலகை தென்பட்டது. வரும் வெள்ளியன்று அஜித் நடித்த அசல் ரிலீசாம். வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாளும் காலை ஏழுமணிக்கு சிறப்புக்காட்சிகளாம். தமிழ்படம் ஓடிய அதே திரையரங்கு. இன்று கைதட்டிய இரசிகர்கள் நாளைக்கு அதே திரையரங்கில் அஜித்தின் ஓபனிங் சீனுக்கும் பாட்டுக்கும், மாஸ் ஹீரோ சீன்களுக்கும் கைதட்டுவார்கள். பதிவுலகிலும் பட்டாசு வெடிப்பார்கள்.

எப்போதும் போல தமிழ் வாழ்க்கை தன்னைத்தானே கேலி செய்து கொண்டு ஓடிக்கொண்டிருக்கும். அந்த ஓட்டத்தில் பெரும்பாலானோர் தவறி விழுந்தாலும் சிரிப்பதெற்கென்று சிலர் இல்லாமலா போய்விடுவார்கள்?

vote-012

தொடர்புடைய பதிவுகள்

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் !

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

  1. “தில்லை நடராசர் கோயிலில் நமது முப்பாட்டன் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பியிருக்கும் தீண்டாமைச் சுவரைத் தகர்த்தெறிவோம்!” – மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் பிரச்சாரம், பொதுக்கூட்டம்!
  2. விலையேற்றம்: மக்கள் மீதான அரசின் திட்டமிட்ட தாக்குதல்!
  3. காட்டு வேட்டை: மக்கள் மீது போர் நடத்தும் கொலைகார ப.சி.
  4. அவலத்தில் அரசு மருத்துவமனை போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள்
  5. கம்யூனிசத் துரோகி ஜோதிபாசு: டாட்டா – பிர்லாவின் கூட்டாளி! பாட்டாளிக்குப் பகையாளி!
  6. பி.டி கத்திரிக்காய்: மறுகாலனியாக்கத்தின் அடுத்த குண்டு!
  7. ஆஸ்திரேலியாவின் நிறவெறி! இந்தியாவின் ‘சகிப்புத் தன்மை’!
  8. வீட்டுப் பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கை
  9. கிரிமினல் போலீசுக்கு வரம்பற்ற அதிகாரம்: இது எந்த வகையில் நியாயம்?
  10. “நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் அரசுடைமையாக்கு!” – பு.மா.இ.முவின் பிரச்சாரம் – ஆர்ப்பாட்டம்
  11. “நக்சல் எதிர்ப்பு நரவேட்டைப் போரை முறியடிப்போம்! மறுகாலனியாக்க எதிர்ப்புப் போரில் அணிவகுப்போம்!” –தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் சூறாவளிப் பிரச்சாரம்
  12. ஒபாமா: கழுதையின் மூக்கு வெளுத்தது!
  13. பாக்ராம்: அமெரிக்கப் பயங்கரவாதத்தின் புதிய கொலைகார முகம்
  14. பணமூட்டைகள் உருவாக்கும் செய்திகள்
  15. காட்டுவேட்டை: நாட்டு மக்கள் மீதான போர்தான் இந்த நக்சல் ஒழிப்புப் போர்!

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

vote-012

தொடர்புடைய பதிவுகள்

ஆஸ்திரேலியாவின் நிறவெறி! இந்தியாவின் ‘சகிப்புத்தன்மை’!

“ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் மீதான வெள்ளை நிறவெறித் தாக்குதல்” சென்ற மாதம் முழுவதும் இந்திய ஊடகங்களில் முக்கியச் செய்தியாகத் தொடர்ந்து இடம் பெற்றிருந்தது. பஞ்சாபைச் சேர்ந்த நிதின் கார்க் என்ற 21 வயது வணிகவியல் பட்டதாரி மாணவர், அவர் பகுதி நேரமாக வேலை செய்து வந்த உணவு விடுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பலால் வழிமறித்துக் குத்திக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் யார் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

நிதின் கார்க் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கண்டனங்கள் எழுந்த போதிலும், அடுத்த ஒரு வாரத்திலேயே ஜஸ்பிரீத் சிங் என்ற டாக்சி ஓட்டுனரைத் தீ வைத்துக் கொளுத்த ஒரு கும்பல் முயன்றிருக்கிறது. தீக்காயங்களுடன் அவர் உயிர் தப்பியிருக்கிறார். இந்தியர்கள் மீதான தாக்குதலுக்காக சென்ற ஆண்டில் மட்டும் 1400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தாக்கப்படும் பலர் போலீசில் புகார் கொடுப்பதில்லை என்பதால், தாக்குதலின் எண்ணிக்கை உண்மையில் இதை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்று ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய மாணவர்கள் கூறுகின்றனர்.

நிதின் கார்க் கொலையைத் தொடர்ந்து, இது நிறவெறித்தாக்குதலாக இருக்க வாப்பு இருக்கிறது என்று முதன் முறையாக விக்டோரியா மாகாணத்தின் தலைமை போலீசு கமிசனரே ஒப்புக் கொண்டிருக்கிறார். எனினும் இவையனைத்தும் வழிப்பறி, ரவுடித்தனம் போன்ற வழமையான குற்றங்களேயன்றி நிறவெறித் தாக்குதல்கள் அல்ல என்கிறது ஆஸ்திரேலிய அரசு.

ஆஸ்திரேலியாவுக்குப் பிழைக்கப்போன டாக்சி டிரைவர்கள் போன்ற அடித்தட்டு வர்க்கங்களைச் சேர்ந்த இந்தியர்களின் மீது இத்தகைய தாக்குதல்கள் நடக்கும்போதும், வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியாவில் இதைவிடக் கொடூரமாக இந்தியத் தொழிலாளிகள் நடத்தப்படும்போதும் அவற்றைக் கண்டு கொள்வதற்குக் கூட மறுக்கும் இந்திய அரசும், இந்திய ஊடகங்களும் சமீபகாலமாகக் குமுறிக் கொந்தளிப்பதற்குக் காரணம், அடி வாங்குபவர்களின் வர்க்கமும் சாதியும்தான். தற்போது தாக்கப்படுபவர்கள், இலட்சக்கணக்கில் பணம் கட்டி அங்கே படித்து விட்டு, பின்னர் ஆஸ்திரேலியக் குடியுரிமை வாங்கி அங்கேயே “செட்டில்” ஆக விரும்பும், உயர் நடுத்தர வர்க்க, உயர்சாதி இந்தியர்கள் என்பதனால், ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்கள் அளவுக்கு அதிகமாகச் சாமியாடுகின்றன. பாலிவுட் திரைப்பட இயக்குநர் மொகித் சூரி, இந்தத் தாக்குதல்களை மையமாக வைத்துப் படமெடுப்பதற்குத் திரைக்கதையே தயாரித்து விட்டார்.

இத்தகைய சூழ்நிலையில் “கடுமையான” கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விட்டது இந்திய அரசு. சில மாதங்களுக்கு முன் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சாதாரணக் கண்டனத்தைக் கூடத் தெரிவிக்க மறுத்த இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா, “இது அப்பாவி இந்தியர்கள் மீது நடத்தப்பட்டுள்ள கொடூரத் தாக்குதல் மட்டுமல்ல, மனித குலத்தின் மீது இழைக்கப்பட்டுள்ள கொடுங்குற்றமும் ஆகும்” என்று வருணித்தார். பார்ப்பதற்குக் கடும் கண்டனம் போலத் தெரிந்தாலும், நிறவெறித் தாக்குதல் என்று குற்றம் சாட்டுவதற்குக் கூடப் பயப்படுகின்ற இந்திய அரசு, கண்டனம் என்ற பெயரில் உதிர்த்துள்ள நகைச்சுவைத் துணுக்குதான் இது .

இத்தாக்குதல்களைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை கொடுத்துள்ள வழிகாட்டுதலே இதனை நிரூபிக்கிறது; “தீவிரமான குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்ட போதிலும் தாக்குதல்கள் தொடர்கின்றன. ஆஸ்திரேலியாவில் ஆகப்பெரும்பான்மையான இந்தியர்களுடைய அனுபவம் நேர்மறையானதே என்றபோதிலும், கீழ்க்கண்ட தற்காப்பு நடவடிக்கைகளை இந்தியர்கள் மேற்கொள்வது நல்லது. மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத பகுதிகளுக்குத் தனியாக செல்லாதீர்கள். எங்கே போகிறீர்கள், எப்போது திரும்புவீர்கள் என்பதை யாரிடமாவது சோல்லாமல் வெளியே போகாதீர்கள். மடிக்கணினி போன்ற விலை உயர்ந்த பொருட்களை மற்றவர்களுக்குத் தெரிவது போல எடுத்துச் செல்லாதீர்கள். ஆபத்து என்றால் யாருக்குத் தகவல் சொல்லவேண்டும் என்பதை எழுதி சட்டைப் பையில் வைத்திருங்கள்” என்று நீள்கின்றன, இந்திய அரசின் வழிகாட்டுதல்கள்.

நிலைமை இவ்வளவு மோசமாக இருந்தபோதிலும், ஆஸ்திரேலிய அரசிடம் இந்திய அரசு அடக்கி வாசிப்பதற்குக் காரணம் இருக்கிறது. அமெரிக்கா அமைத்துள்ள ஆசிய-பசிபிக் பிராந்தியத்துக்கான இராணுவக் கூட்டணியில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியாவும் அங்கம் வகிக்கிறது என்பதுடன், அணு ஆயுதப் பரவல் தடையில் கையெழுத்திடாமலேயே, யுரேனியத்தைப் பெறுவதற்கும் இந்திய அரசு, ஆஸ்திரேலியாவைத் தாஜா செய்து வருகிறது. மேலும், ஆஸ்திரேலியாவில் கல்வி நிறுவனங்களைத் தொடங்கும் வாய்ப்பு இந்தியக் கல்வி வியாபாரிகளுக்கு இப்போது கிடைத்துள்ள சூழலில், சவடாலுக்காகக் கூட நிறவெறி எதிர்ப்பு பேசி வருமானத்தைக் கெடுத்துக் கொள்ள இந்திய ஆளும் வர்க்கங்கள் விரும்பவில்லை.

இந்திய ஊடகங்கள் சாமியாடுவதை ஆஸ்திரேலிய அரசு சகித்துக் கொள்வதற்கும் காரணம் உள்ளது. அந்நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் சரக்குகளில் நான்காவது இடத்தில் இருக்கிறது கல்வி. ஆண்டொன்றுக்கு 15.4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான வருமானத்தை கல்வி வியாபாரத்தின் மூலம் ஈட்டுகிறது ஆஸ்திரேலியா. இதில் இந்திய மாணவர்களின் பங்கு 2 பில்லியன் டாலர்கள். தற்போது இந்தியாவிலும் தனது கல்வி வியாபாரத்தைத் தொடங்கவிருக்கிறது. வெள்ளைக் கனவான்கள் கண்ணியம் காப்பதற்குக் காரணம் இதுதான். மற்றபடி, ஆஸ்திரேலிய ஆளும் வர்க்கத்தின் வெள்ளை நிறவெறியை நிரூபிப்பதற்கு அதிகம் சிரமப்படவேண்டிய அவசியமில்லை.

ஆஸ்திரேலியப் பழங்குடிகளைத் துப்புரவாக வேட்டையாடி ஒழித்து அந்த கண்டத்தையே கைப்பற்றிக் கொண்டது மட்டுமின்றி, பழங்குடி மக்களின் மொழி மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளையும் தடை செய்தது அரசு. அம்மக்களின் குழந்தைகள் மூலம் அந்தப் பண்பாட்டின் எச்சங்கள் கூட மிஞ்சி இருக்கக் கூடாது என்பதற்காக, 5 வயதுக்கு உட்பட்ட பழங்குடியின குழந்தைகளை அவர்களுடைய பெற்றோரிடமிருந்து பலவந்தமாகப் பறித்தது. இந்த நடவடிக்கைகளில் நேரடியாகப் போலீசாரே ஈடுபடுத்தப்பட்டனர். இந்தப் பிள்ளை பிடிக்கும் கொடுமை 1970-ஆம் ஆண்டு வரை தொடர்ந்திருக்கிறது என்பது ஆஸ்திரேலிய ஆளும் வர்க்கத்தின் யோக்கியதைக்குச் சான்று.

இந்திய ஆளும் வர்க்கத்தைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. தீண்டாமைப் படுகொலைகள் கூட சாதாரணக் கொலைக்குற்ற வழக்குகளாகவே இங்கு பதியப்படுகின்றன. தீண்டாமையோ இந்துக் கலாச்சாரத்தின் அங்கமாகவே கருதப்படுகிறது. இந்நிலையில் வெள்ளை நிறவெறியைப் பற்றி வரம்பு மீறிப் பேசினால், தீண்டாமையும் சர்வதேசப் பிரச்சினையாகச் சந்திக்கு வந்துவிடும் என்ற அச்சமும் இந்திய அரசுக்கு இருக்கிறது.

உள்நாட்டில் வேலை தர வக்கில்லாததால் வெளிநாடு செல்ல இந்தியர்களை ஊக்குவிப்பதும், அந்த அந்நியச் செலாவணிக்காசை அண்டி நிற்பதும் இந்திய ஆளும் வர்க்கங்களின் பொருளாதாரத் தேவை. மக்கள் தொகை அதிகரிக்காத ஆஸ்திரேலியாவுக்கோ, ஆசிய நாடுகளிலிருந்து மலிவான கூலிக்கு ஆட்கள் தேவை. இந்தியாவில் வர்க்க முரண்பாடுகளைத் திசை திருப்புவதற்கு இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு சாதி எப்படிப் பயன்படுகிறதோ, அப்படித்தான் நிறவெறியும் அங்கே பயன்படுகிறது. முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி காரணமாக கல்வி, வேலை வாய்ப்புகளை இழந்து வரும் வெள்ளை இளைஞர்களின் கோபம் தனக்கெதிராகத் திரும்பாமல், ஆசிய நாட்டினருக்கும், கருப்பினத்தவருக்கும் எதிராகத் திரும்பும் அளவில், வெள்ளை நிறவெறி ஆஸ்திரேலிய முதலாளி வர்க்கத்துக்கும் பயன்படுகிறது. சாதிவெறியாகட்டும், நிறவெறியாகட்டும் எல்லாமே தமது தேவைக்கு உகந்த அளவில் தொடரவேண்டும் என்பதே முதலாளி வர்க்கத்தின் விருப்பம்.

கடந்த 3 ஆண்டுகளில் இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே வருவது பற்றிக் கேட்டபோது, “கடந்த மூன்றாண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு வரவிரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் 30,000 இலிருந்து 1,00,000 ஆக உயர்ந்திருக்கிறதே” என்று பதிலளித்தார் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய ஹை கமிசனர் பீட்டர் வர்கீஸ். நிதின் கார்க்கிற்கு விழுந்த கத்திக்குத்தை விடவும் வலிமையானது இந்தக் குத்து. இருப்பினும் இந்தக் குத்தெல்லாம் என்.ஆர்.ஐ. அம்பிகளின் தோலைக்கூடத் துளைக்க முடியாது.

___________________________________________

புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2010
___________________________________________

ஆயிரத்தில் ஒருவன்: 32 கோடியில் வக்கிரக் கனவு !!

91

காதல் கொண்டேன் படத்தின் இறுதிக் காட்சியில் அந்த சேட்டுப் பையனை கீழே கிடத்தி தனுஷ் கொரில்லா போல சுற்றி வருவாரே நினைவிருக்கிறதா? அந்தத் திரைப்படத்தில் செல்வராகவனின் ஏனைய பாத்திரங்களையெல்லாம் ஒப்பிடும்போது தனுஷ்ஷின் பாத்திரம் மட்டுமே இயக்குநரின் முழு சக்தியையும் உள்வாங்கிக் கொண்டு படைக்கப்பட்டிருந்தது. மற்ற பாத்திரங்களைப் பற்றி அவர் கவலைப்படவில்லை என்பதை விட அவர் விரும்பிய பாத்திரம் தனுஷின் சைக்கோ பாத்திரம்தான். அதற்கு ஏழ்மை, அனாதை போன்ற பிளாஷ் ஃபேக் இருந்தாலும் பிற்பகுதி சைக்கோதான் முதன்மை.

அதனால்தான் பின்பாதியில் ஆவேசமடையும் தனுஷின் ஆணாதிக்க உரையாடல்களுக்கும், உடல்மொழிக்கும் ரசிகர்கள் கைதட்டினார்கள். பெண்ணுடலை நுகர்ந்தெறியும் பண்டமாக கருதும் ஆணுள்ளங்களை அந்தப்படம் புண்படுத்தவில்லை. செய்ததெல்லாம் அதை ஆடவிட்டு இரசிகனின் அலைவரிசையில் ஒன்று கலந்து பெண் சதையை தின்பதற்கு முழுபடமும் ஆரவாரம் எழுப்பியதே. அப்போதே செல்வராகவனிடம் ஏதோ கோளாறு இருப்பதாக ஊகித்தோம். இப்பொது சரியென்று தோன்றுகிறது.

7ஜி ரெயின்போ காலனியில் கூட திண்ணை அரட்டையின் நட்பில் வாழும் வேலை வெட்டியற்ற நடுத்தர வர்க்க இளைஞன் தன்னை ஒரு பெண் காதலித்தே ஆகவேண்டும் என்பதற்கு ஆணவமாய் எல்லா தமிழ் ஹீரோக்களையும் போல விரட்டுகிறான். கூடவே விடலைப்பருவத்தின் சேட்டைகளை, குடும்பத்தோடு இயல்பாய் முரண்படும் அவர்களது உணர்ச்சியை சேர்த்துக் குழைத்ததால் இங்கும் ஆண் ரசிகன் ஒன்று கலந்தான். காதலிக்க வைக்கப்பட்ட பெண்ணை குறைந்த பட்சம் உடலுறுவு கொண்டுவிட்டாவது மறந்து விடலாம் என்ற அரிய சேதியை அதற்கு தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் ஆண் காதலர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.

புதுப்பேட்டை சிட்டி ஆப் காஃட் எனும் பிரேசில்படத்தை பார்த்து புலியென்று நினைத்து வரையப்பட்ட பூனை. அரிவாளால் கழுத்தை அறுப்பதையெல்லாம் பயிற்சியில் கற்கும் ரவுடிகளை சித்தரிக்கும் திரைப்படத்தில் அரிவாளைத் தாண்டி அரிவாளுக்கு அரசியல் மற்றும் பாதுகாப்பு வளையத்தை வழங்கும் ஆளும் வர்க்கத்தின் பாத்திரம் தவிர்க்கப்பட்டது. ஜெயேந்திரன் போன்ற காவிக்கயவர்கள் கூட அப்பு முதலான ரவுடிகளை வைத்து கொலை செய்யும் காலத்தில் ரவுடிகளை வெறும் விளைபொருளாக மட்டும் சிலாகித்த படமது.

என்றாலும் தனுஷ் கொரில்லா போல சுற்றி வரும் காட்சியை த்தரூபமாக சித்தரித்திருக்கும் செல்வராகவன் அத்தகைய மனநிலையில் யோசித்து வெளியிட்ட படம்தான் ஆயிரத்தில் ஒருவன். அந்த மனநிலைதான் அவருடைய ஆளுமையின் சாரமாகவும் இருக்கலாம்.

இரண்டு, மூன்று படங்கள் வெற்றியடைந்து விட்டால் எல்லா இயக்குநர்களும் அவர்களுடைய உலகில் கடவுளாகி விடுவார்கள். அதன் பிறகு விரிந்த மெத்தையின் கருவறைப் பகுதியில் அவர்கள் மானாவாரியாக பேசிக் கொண்டிருக்க, பலியாடுகளாக உதவி இயக்குநர்கள் ஆமாம் போட இந்த உலகு தங்களிடமிருந்தே துவங்குவதாக அந்த கடவுள் இயக்குநர்கள் துணிகிறார்கள். அந்த வகையில் நிஜ வாழ்க்கையிலிருந்தும் துண்டித்துக் கொள்கிறார்கள். கற்பதையும், தேடுவதையும், புற உலகை உற்று நோக்குவதும் கொள்ள வேண்டிய படைப்பாளிப் பண்புகள் தலைகீழாக மாறிவிடுகின்றன. படைப்பின் உள்ளடக்கத்தை விழுங்கும் வடிவமும், இதுதான் ரசிக்கப்படும் என்ற ஃபார்முலாவும், அவர்களின் அரதப்பழசான தத்துவக் கண்ணாட்டமும் மூன்றாவது படத்திற்கான தகுதிகளாக இயல்பாக அமைந்து விடுகின்றன.அதுவே ஐந்தாவது படமென்றால் ஆண்டவனும் கையேந்த வேண்டும். இது செல்வராகவனின் ஐந்தாவது படம்!

பதிவுலகில் ஆயிரத்தில் ஒருவன் விமரிசனங்களை வகைக்கொன்றாக படித்ததிலிருந்து புரிந்த விசயங்கள்: “முதல் பாதி விறுவிறுப்பு, இரண்டாம் பாதி போர்-புரியவில்லை” இது இரசிகர்களின் அளவை வைத்து படத்தை நிராகரித்த விமரிசனம். “வித்தியாசமான முயற்சி, கோலிவுட்டையும் – ஹாலிவுட்டையும் இணைக்கும் படம், தமிழின் முதல் ஃபேண்டசி – திரில்லர் படம்” இது படத்தை இரசித்தவர்களின் விமரிசனம். அப்புறம் நமது பின்நவீனத்துவ நண்பர்கள் வியந்தோதும் காட்சிகளையும், மொழிகளையும் கொண்டிருக்கும் படம், அதாவது ” பாலியல் விழைவுகளை ஒளிக்காத நபர்கள், விளிம்பு நிலை மக்களின் சிக்கல்கள், மனிதனின் ஆதிகால போர் வெறியை தொன்மங்களின் வழியாக பிரதி காட்டும் நிகழ் உலகம்…இத்யாதிகள்.

சத்தியமாய் இத்தனை நுட்பங்களும் நாம் படம் பார்க்கும் போது துளியேனும் உணரவில்லை. இது வினவின் பாமரப் பார்வையா, கலை விசயங்களில் இருக்கும் ஔரங்கசிப்தனமா?

ஃபேண்டசி எனப்படும் இல்லாததை விரும்பும் கனவுகளும், விரும்பியே ஆகவேண்டியவற்றை நினைக்கும் பகல் கனவுகளும், மாந்தீரிகத்தையும், சாகசத்தையும் துணைக்கழைத்துக் கொண்டு புனையும் கனவுகளும் உண்மையில் சமூக வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விலகியதா? இல்லை. அவை குறிப்பிட்ட சமூக யதார்த்தத்தின் தேவைகளிலிருந்தே அந்த தேவையை அடைய முடியாத சிக்கல்களிலிருந்தே இயல்பாக தோன்றுகின்றன.

குழந்தைகளின் ஆளுமை வளர்வதற்கும், அவை இந்த உலகுடன் பெரும் உரையாடல் நிகழ்த்தி புரிந்து கொள்வதற்கும் பேசும் குருவிகளும், சினேகமாய் இருக்கும் யானைகளும், சேட்டைகள் செய்யும் மிக்கி மௌவுசும் ஓரளவுக்கு தேவையாக இருக்கின்றன. இந்த தேவையை பகாசுரமாக்கி மழலையின் உணர்ச்சியை வெறியுடன் சுரண்டும்போது அவை வன்முறை மிகுந்த வீடியோ கேம்களாக படையெடுக்கின்றன. என்றாலும் இது கூட ஃபேண்டசிதான்.

ஆதிகாலத்தில் புராதானமாய் இயற்கையின் நீட்சியாய் மனிதக்கூட்டம் இருந்த காலத்தில் இயற்கையின் பேரழிவுகள் புரியாமல் அதிலிருந்து தப்பிப்பதற்கு மனிதன் புனைந்த முதல் புனைவு மாந்தீரிகம் கலந்த இறைச்சக்தி. அதுவே பின்னர் மதமாகி இறுகியது. உழைப்பின் வலி தெரியாமல் அவர்கள் உடல்தாளத்திற்கேற்ப இசைத்த பொருளற்ற வார்த்தைகள் பின்னர் சிம்பனி வரைக்கும் வளர்ந்தது, வளர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த நாள் வேட்டைக்கு அவர்கள் தமது மனதை புத்துணர்வாக்கிய புனைவுகளின் வழியேதான் கலையும் அதன் எண்ணிறந்த வடிவங்களும் பிறந்தன. தெரிந்தவனவற்றின் சாத்தியங்களிலிருந்து தெரியாதவற்றை கண்டுபிடிக்கும் புனைவுகள்தான் அறிவியலாக இன்று பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது.

இப்படி 21ஆம் நூற்றாண்டின் முன்னேறிய வாழ்க்கையை மனித குலம் கண்டறிந்தது ஃபேண்டசி எனப்படும் கற்பனையின் மூலம்தான். ஆனால் அது மட்டுமே தனியாக ஒரு சில மூளைகளில் தோன்றி வளரவில்லை. மனிதனின் உழைப்பு, அதுவும் கூட்டிழைப்பு செயற்காடுகளிலிருந்தே நாம் வியந்தோதும் இந்தக் கற்பனை, புனைவெளியின் எல்லையை உடைத்துக் கொண்டு அதையே தொட்டறியக்கூடிய வாழ்க்கையின் உண்மையாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. ஃபேண்டசியின் பால் மனம் கவரக்கூடிய கலைஞன் இத்தகைய வரலாற்றை அறியாத போது நிகழும் விபத்துதான் ஆயிரத்தில் ஒருவன்.

அவதார் படம் கூட ஃபேண்டசிதான். என்றாலும் அதன் வேர் அனைவருக்குள்ளும் இருக்கக்கூடிய அடிமைத்தனத்திற்கு எதிராக போராடக்கூடிய மனித வரலாற்றின் மிகச்சாதாரண ஒன்றில் இருக்கிறது. இங்கே சாதாரணம் என்பது அதன் பரந்து தழுவிய ஒன்றைக் காட்டுகிறது. இயற்கையோடு ஒன்றி வாழும் ஆதிவாசிகளும் அவர்களது இயற்கையை பணமாக சுரண்ட நினைக்கும் முதலாளிகளும் உலகெங்கும் இருக்கிறார்கள். எல்லா முதலாளித்துவ நாகரீகங்களும் அநேகமாய் இந்த ஆதிவாசிகளை நரபலி கொடுத்தே சாத்தியமாகியிருக்கின்றன. அதுவே இன்று ஆப்பரேஷன் கீரீன் ஹண்ட்டாய் மத்திய இந்தியாவில் ஆட்டம் போடுகிறது.

அதனால்தான் அவதாரில் உளவாளியாக செல்லும் மனிதன் அந்த வேற்றுக்கிரக ஜீவன்களோடு ஒன்றி காதல், விளையாட்டு, போர், துக்கம் என எல்லாவற்றிலும் இணையும் போது நம் கண்கள் கிராபிக்சின் மாய உலகைக் கண்டு வியந்தாலும், இதயமோ நல்லது வென்று கெட்டது அழியவேண்டுமென்ற ஆதி உணர்ச்சியை அடைகிறது. இந்த உணர்ச்சியை கைவிட்டு விட்டால் அவதார் படம் கூட வெறும் வீடியோ விளையாட்டாக மாறிவிடும்.

எனில் ஆயிரத்தில் ஒருவன் எந்த உணர்ச்சியைக் கொண்டு கற்பனை செய்ய முயல்கிறது? ஒரு வெங்காயத்திலும் இல்லை என்பதுதான் முதல் பதில். சற்று யோசித்துப் பார்த்தால் வெள்ளையன் ஆட்சிக்காலத்து ஜமீன்தார்கள், மிட்டா மிராசுகள், மாளிகைக்கு வெளியே ஏழைகள் உழைத்து ஓடாக தேய்ந்திருக்கும் போது வெளிநாடு சென்று அங்கு ஒரு கழிப்பறை வெள்ளியில் செய்யப்பட்டிருந்தால், அதையே உள்நாடு திரும்பி தங்கத்தில் செய்து அழகு பார்ப்பார்கள். கூடவே விருந்து வைத்து ஏனைய நாட்டாமைகளுக்கு தமது மலசல தங்கக் கழிப்பறையை பெருமையுடன் காட்டுவார்கள். இந்த ஃபேண்டசியின் உணர்ச்சி என்ன? வக்கிரம்? எனில் அதுதான் ஆயிரத்தில் ஒருவனின் உணர்ச்சியும் கூட.

ஏழுகோடியில் போடப்பட்ட பட்ஜெட் 32 கோடிக்கு சென்றது வெறும் புள்ளிவிவரச் செய்தியல்ல. அங்குதான் தங்கக் கழிப்பறை மறைந்திருக்கிறது.

வரலாறு என்பது நம்மிடையே மன்னர்களின் டைரிக்குறிப்பாக பதிந்திருக்கிறதா, மக்களின் போராட்டமாக பதிந்திருக்கிறதா என்பதை நம்முடைய வரலாற்றுப் பார்வை தீர்மானிக்கிறது. அவ்வகையில் வரலாற்றை விட வரலாற்றுப் பார்வை முக்கியம். ஒரு முசலீம் மன்னன் ஒரு இந்துக் கோவிலை இடித்து விட்டான் என்று இந்துமதவெறியர்களின் பார்வையில் ஒரு வரலாறு முன்வைக்கப்படும் போது அது உண்மையென்றே வைத்துக்கொண்டாலும் அது உண்மையா? நோண்டிப் பார்த்தால் பல இந்து மன்னர்கள் அருகாமை இந்து மன்னர்களின் நாட்டை கொள்ளையடித்ததும், கோவில்களை இடித்ததும், அதே போல பல முசுலீம் மன்னர்கள் போட்டி முசுலீம் மன்னர்களின் நாட்டை ஆக்கிரமித்திருப்பதும், மசூதிகளை இடித்திருப்பதும் கூட வரலாறுதான். இங்கு மன்னர்கள் எனும் வர்க்கமும், அவர்களது ஆட்சியின் இருப்பும் எதனால் சாத்தியமாகிறது என்பதை புரிந்து கொள்வதற்கு வரலாற்றுப் பார்வை தேவையாக இருக்கிறது.

அதே போல வரலாற்றை நினைவு கூர்வதும், படிப்பினைகளை ஏற்பதும் கூட நிகழ்கால வாழ்வில் நீங்கள் நடத்தும் போராட்டத்தை சார்ந்திருக்கிறது. அமெரிக்காவின் காலனி நாடாக இந்தியா மாறிவருகிறது என்று உணர்த்துவதற்கு சின்ன மருதுவின் ஜம்புதீவுப்பிரகடனம் தேவைப்படுகிறது.

நாம் செல்வராகவனின் வரலாற்று பார்வையை எங்கஙனம் புரிந்து கொள்வது? இயக்குநர் செல்வராகவன் பலரும் கருதுகிறபடி ஒருமசாலா இயக்குநர் இல்லையே? ஆனாலும் அவரின் புனைவுக்கான வரலாற்று உந்துதல் எதையும் நம்மால் காணமுடியவில்லை. தமிழகத்தில் சோழர்களின் ஆட்சியில்தான் பவுத்த, சமண மதங்கள் முறியடிக்கப்பட்டு, பார்ப்பனியமாக்கம் வேகமாக்கப்பட்டு, பொருளாதார ரீதியில் பார்ப்பனர்களையும், வேளாளர்களையும் மையமாகக் கொண்ட நிலவுடைமைச் சமூகம் நிலை கொண்டது. பல கிராம மக்கள் பார்ப்பனர்களுக்கும், கோவில்களுக்கும், அடிமைகளாக தாரைவார்க்கப்பட்டார்கள். சைவமாய் இறுகிய பார்ப்பனியத்தின் பிடியில் நந்தன்கள் எரிக்கப்பட்டார்கள்.

இத்தகைய எதுவும் இயக்குநரின் கண்களுக்கோ, அவர் வித்தியாசமான படம் எடுத்த்தாக சிலாகிக்கும் இரசிகர்களுக்கோ படவில்லை. அவர்களைப் பொறுத்தவரை இந்த படத்தின் கதைக்கு இரண்டு மன்னர்கள் அதுவும் தமிழ் மக்கள் அறிந்த இரண்டு ராஜாக்கள் தேவைப்படுகிறார்கள். அவ்வளவே. அதனால்தான் அமெரிக்க ஏகாதிப்த்தியத்திற்கு பெயர்பெற்ற வியட்நாம் என்ற பெயர் சோழர்களின் பெயரால் வாழும் தற்குறிகள் மற்றும் காட்டுமிராண்டிகள் இடமாக மாறியிருக்கிறது.

வரலாற்று உணர்ச்சியற்ற இந்தப்படத்தில் இயக்குநர் ஒன்றியிருப்பது தடைகளைத்தாண்டும் காட்சிகளும், படம் நெடுக எது எதற்கோ ஊளையிடும் மனிதக் குரல்களும்தான். இந்த தடைகளில் அவர் பலவற்றையும் கேவலப்படுத்தியிருப்பதை எப்படித்தான் “வித்தியாசமான” படக்கோஷ்டிகள் இரசித்தனரோ தெரியவில்லை. ஒருவேளை ஒன்றுமே புரியமால் பாராட்டினால்தான் மதிப்பார்கள் என்ற பரிதாபமா, அதுவும் தெரியவில்லை.

மீனவர்களின் தாயான கடலைக் கேவலப்படுத்தி, சிவப்பு வண்ண ஆதிவாசிகளை கேவலப்படுத்தி, அப்புறம் பாம்புகளைக் கேவலப்படுத்தி, பாம்பையும், ஆதிவாசிகளையும் கொசுபோல கொல்லும் துப்பாக்கிகளைக் கேவலப்படுத்தி, பாலைவனத்தை வில்லனாக்கி, குகைக்குள் கருப்பு சாயம்பூசிய மக்களைக் கேவலப்படுத்தி, இறுதிக் காட்சியில் எல்லாவற்றையும் கேவலப்படுத்தி, இந்தக்காட்சிகளுக்கு கருப்பு, சிவப்பு வண்ணம் பூசிய நூற்றுக்கணக்கான துணைநடிகர்களை கேவலப்படுத்தி, அவர்களுக்கு தயாரிப்பாளர் சம்பளம் கூடக் கொடுக்கமுடியாமல் பட்ஜெட்டை கேவலப்படுத்தி, தூயதமிழைக் கேவலப்படுத்தி, இந்த எழவுக்கு செட்போட்ட தொழிலாளிகளின் உழைப்பை கேவலப்படுத்தி,படப்பிடிப்பு முடிந்த உடன்தான் திரைக்கதையை எடிட்டிங்கில் எழுதி அகிரோ குரசேவாவைக் கேவலப்படுத்தி, படம் சோதனையென்று புறக்கணித்த இரசிகர்களுக்கு பிரஸ் மீட் வைத்து கதையைச் சொல்லி கேவலப்படுத்தி….  அப்பப்பா தாங்க முடியவில்லை.

செல்வராகவன் எனும் இயக்குநர் வித்தியாசமாக எடுப்பதற்கு இத்தனை கேவலங்களையும் 32 கோடியில் அளிக்க முடியும் என்றால் இதுதான் தமிழர்கள் இளித்தவாயர்கள் என்பதோ?

ரீமா சென் நடிப்பில் பின்னிப் பெடலெடுத்துவிட்டார் என்று சில பதிவர்கள் பாராட்டுகிறார்கள். கப்பலில் பாடும் எம்.ஜி.ஆர் பாட்டுக்கு ஜெயல்லிதாவின் அபிநயம், மேசைக்கு அடியில் துப்பாக்கி நீட்டுவது, செம கட்டையென்று பேசுவது இவையெல்லாம் ஓடிப்போலாமா புகழ் மணிரத்தினத்தின் அபிநயங்கள், பார்த்திபனுடன் போடும் விரத தாப சண்டையெல்லாம் காதல் கொண்டேனில் சோனியா அகர்வால் ஆடிய அபிநயங்கள், ஆங்கிலத்தில் சண்டை போடுவது, தூய தமிழில் வஞ்சுவது இறுதியில் சிஜடி சகுந்தலாவாக அக்மார்க் வில்லியாக மாறும்போது இரசிகர்கள் ஆறுதலடைகிறார்கள் அதாவது தங்களது ஆண்மையை கார்த்திக் வழியாக சீண்டிய பெண்ணை வென்று விட்டோமென. மொத்த்த்தில் ஒரு நாலைந்து முகபாவனைகளை செயற்கையாக காட்டியதற்கே இத்தனை புகழ் என்றால் தமிழர்களை கருணாநிதியும், ஜெயாவும் ஏன் சுலபமாக ஏமாற்ற முடியாது?

அடுத்து பின்நவீனத்துவத்தின் பக்கம் கொஞ்சம் பார்க்கலாம். பிரதி வெளிப்படுத்தும் உவகையான கொண்டாட்டத்தை யாரும் மனம் போனபடி அர்த்தமாக்கலாம். ஞான குரு டோண்டு ராகவனிடம் கேட்டால் குண்டலினியில் இருக்கும் மூலாதாரச் சக்தியை ஏழு தடைகளைக் கடந்து சிரசில் இருக்கும் பிரம்மத்துடன் இணைவது என்று விளக்கமளிக்கலாம். முள்ளி வாய்க்காலின் துயரத்தை உண்மையாக பார்த்து வராத சோகம் செட்டுபோட்ட சண்டையின் மூலம் வருவதை தள்ளிவைத்துப் பார்த்தால் ஈழத்தை இந்தப்படம் நினைவுபடுத்தலாம். ஜே.கே போன்ற ஞானிகளிடம் கேட்டால் மனிதனின் ஆதார ஏழு உணர்ச்சிகளின் ( அது என்னவென்று எம்மிடம் கேட்டால் தெரியாது ) ஆழமான உளவியல் ஆட்டத்தை படம் கொடுத்திருப்பதாக சொல்லலாம்.

லீனா மணிமேகலை போன்ற COCKtail பெண்ணியவாதிகளிடம் கேட்டால் சங்க காலம் தொட்டு, ஈழக்காலம் வரை ஆணின் குறி போல ஆட்டம் போடும் போர்வெறியின் நள்ளிரவு தாக நீட்சியை, அற்புதமான உள்ளொளி புனைவு படும பராக்கிரமங்களின் வழி படம் உரசுகிறது என்று சொல்லலாம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்தான்.

படம் என்ன அதிகாரத்துவத்தை கேள்விக்குள்ளாக்குகிறது? என்ன விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வை கட்டியமைக்கிறது? என்ன விதமான பாலியல் விழைவுகளை போட்டு உடைக்கிறது? இப்படி பொருளே இல்லாத சுற்றி வளைத்து மூக்கை தொடும் மொழியில் கேட்காமல் சாதாரணமாக யோசித்துப் பார்த்தாலே இரசிகனுக்கு ஏது ஏறியிருக்கிறது என்பதன் மூலமே பதிலைத்தேடலாமே?

வரலாறு புரியாமல் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கினால், ஒரு குடிகாரக் கணவனின் கையில் அவதிப்படும் பெண்ணும், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பினால் விதவையாகும் பெண்ணும் ஒன்றெனத் தோன்றுவார்கள். குடிகாரனும், உலக கொலைகாரனும் அருகருகே நாற்காலிகளைப் போட்டு பின் நவீனத்திற்காக அமரும் காட்சி நம்மால் சகிக்க முடியவில்லை.

ஆயிரத்தில் ஒருவன் உண்மையில் விளிம்பு நிலை மக்களை எவ்வளவு இழிவு படுத்த வேண்டுமோ அவ்வளவும் அதற்குமேலும் இழிவு படுத்தியிருக்கிறது. ரீமா சென்னின் மூலம் பெண்களை, சிவப்பு ஆதிவாசிகள் மூலம் பழங்குடிகளை, கஞ்சிக்கில்லாமல் பரிதவித்தாலும் மல்லனது சண்டையைப்பார்த்து ஆவேசக் கூச்சலாக இறையும் மக்களை, மக்களே இப்படி இருக்கும்போது எப்போதும் புணர்தலுக்கும், சண்டைக்கும் விரும்பக்கூடிய பார்த்திபன் அல்லது உண்மையான அதிகார மையம் மறைந்து கொள்ளும் தந்திரங்களை,….. கூட்டிக் கழித்துப் பார்த்தால் இங்கு மையமும் இல்லை, விளிம்பும் இல்லை, வெங்காயமும் இல்லை.

மனித குல வரலாறு பசிவெறி, தாகவெறி, பாலுறுவுவெறி போன்ற அடிப்படை உணர்ச்சிகளுக்கிடையில் மட்டுமே நகர்ந்திருக்கிறது என்று கற்பிதம் செய்து புரிந்து கொண்டால் இந்தப்படத்தையும் சிலாகிக்கலாம். ஆனால் இந்த அடிப்படை உணர்ச்சிகள் மனிதர்களை, கூட்டமாக, சமூகமாக வாழவைத்து, வாழ்வை முன்னேற்றுவதற்கு உரிய சக்திகள், அந்த சக்திகளை கிடைக்க விடமால் செய்யும் உடமைச்சக்திகள் என்று வரலாற்றை பார்ப்பவர்கள் எவரும் இந்தப்படத்தை சகிக்க முடியாது. ஏனெனில் இந்தப்படம் வெவ்வேறு தருணங்களில் வெளிப்படும் மனிதத்தின் அடிப்படை அறத்தை எந்தப் பொருளுமில்லாமல் வன்மத்துடன் கேலிசெய்கிறது.

இறைச்சிக்காக அடித்துக் கொள்ளும் மக்கள் பின்பு மைதானத்தில் மல்லனது குண்டால் இரத்தச் சகதிகளாக சிதறும் மனிதர்களைக் கண்டு ஆரவாரமிடுகிறார்கள் என்ற காட்சி இதற்கோர் சான்று. உடன்வந்தவர்கள் பல தடைகளால் காக்கை குருவிகள் போல மடிந்து போவதை மறந்து படத்தின் முக்கிய பாத்திரங்கள் மூவரும் சகஜமாக பயணத்தை தொடர்வது மற்றோர் சான்று. இவையெல்லாம் ஒரு ஃபேண்டசி படத்தை லாஜிக் என்ற கத்தி கொண்டு வெட்டுவதாக சிலர் கருதலாம்.

ஆனால் இங்கே காரணகாரியங்கள் விவாதப்பொருளல்ல. ஆனால் நடக்கும் கதை இந்த காரணகாரியங்களை இழிவுபடுத்துகிறது என்பதே நம் விமரிசனம். செல்வராகவன் முன்னரே சொன்னபடி எந்த அறவுணர்ச்சியிலோ, வரலாற்று உணர்ச்சியோலோ இந்தக் கதையை கட்டியமைக்கவில்லை. அவரது வினோதமான பாத்திரங்களும் அந்த வினோதத்தை விகாரமாக காட்சிப்படுத்தும் வடிவமும்தான் இந்தப்படத்தின் கலை ஊற்று.

இத்தனைக்கும் பிறகும் இந்தப்படத்தில் நல்லது எதுவும் வினவின் கண்ணுக்குப்படவில்லையா என்று கேட்பவர்களை ஆறுதல் படுத்த ஒன்று சொல்லலாம். அது பார்த்திபனின் லிங்க தரிசனம் வசனம் இந்து முன்னணி வகையறாக்களுக்கு கடுப்பேற்றியிருக்கும் என்பதே. தற்செயலாக அமைந்து விட்ட இந்த ஒன்றுக்காக மட்டும் படத்தைப் பாராட்டலாம்.

வேட்டைக்காரன், குத்தாட்டம், காமடி, சண்டை என வழமையான தமிழ்படத்தை பார்த்து சலித்தவர்கள் இந்த மாறுபட்ட கோணங்களையும் காட்சிகளையும் வண்ணங்களையும் ஒரு சேஞ்சுக்காக இரசிக்கலாம்.

நம்மைப்பொறுத்தவரை வேட்டைக்காரன் ஆயிரத்தில் ஒருவனை விட நல்ல படம். உழைத்து களைக்கும் மக்கள் அந்தப்படத்தில் ஏதோ கொஞ்சம் இளைப்பாறிவிட்டு அடுத்த நாள் வேலைக்கு சென்று விடுவார்கள். ஆயிரத்தில் ஒருவன் அதைக் கூட செய்யவில்லை.