Friday, July 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 186

Don’t Look up : நாம் மேலே பார்ப்பதை தவிர்க்கிறோம் || ராஜசங்கீதன்

“அந்த இரண்டு மார்க்சிஸ்டுகள் உலகம் முழுவதும் சென்று உலகம் அழியப் போவதாக சொல்லிக் கொண்டிருப்பதை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது”என ஒரு வசனம் Don’t look up படத்தில் வருகிறது.
நாயகனும் நாயகியும் விஞ்ஞானிகள். ஒருநாள் நாயகி ஆராய்ந்து கொண்டிருக்கும்போது ஒரு விஷயத்தைக் கண்டுபிடிக்கிறாள். வால் நட்சத்திரம்! புதிய கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் கொண்டாடுகின்றனர். நாயகன் வால் நட்சத்திரம் இருக்கும் தூரத்தைக் கணக்கிடுகிறான். வால் நட்சத்திரத்தின் தூரம் ஒவ்வொரு கணக்கிடலிலும் குறைந்து கொண்டே இருக்கிறது.
வால் நட்சத்திரம் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது! ஆறு மாதங்கள்தான் கெடு! நாம் அறிந்த வகையில் இருக்கும் உலகம் அழிந்துவிடும்!
இந்த மூன்று விஷயங்களை உலகுக்கு அறிவிக்க முயலும் இரு விஞ்ஞானிகளின் கதைதான் படம்.
படிக்க :
சுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” !
சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !
முதலில் அமெரிக்க ஜனாதிபதியிடம் பேச முயலுகிறார்கள். நடக்கவிருக்கும் தேர்தலை வால் நட்சத்திரம் பற்றிய செய்தி பாதிக்கும் என யோசிக்கிறார். தொலைக்காட்சியில் சொல்ல முயலுகிறார்கள். ‘இந்த வால் நட்சத்திரத்தை என் முன்னாள் மனைவியின் வீட்டு மேல் விழச் செய்ய முடியுமா?’ என சொல்லி விட்டு சிரிக்கிறார்.
இவை அன்றி, கூப்பிட்டால் ஜனாதிபதி பம்மி ஓடி நிற்கும் ஒரு முதலாளி, வால் நட்சத்திரத்தில் பல ட்ரில்லியன் டாலர் மதிப்பு வாய்ந்து மினரல்கள் இருப்பதாகச் சொல்கிறார். அவற்றை எப்படி எடுப்பது என்பதைப் பற்றி ஜனாதிபதி தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடக்கிறது.
சமூகதளங்கள் முழுக்க ‘க்ரெட்டா’வைப் போல் நாயகியை ட்ரோல் செய்யும் பிரச்சாரம் முடுக்கி விடப்படுகிறது. அரசு, முதலாளி என ஆளும்வர்க்கம் விரும்புகிற பாணியில் மக்களை மந்தைகளாக்க சமூக தளங்கள் பயன்படுகின்றன.
இறுதியில் என்னவாகிறது என்பது மிச்சக் கதை!
கதையில் வரும் வால் நட்சத்திரம், வால் நட்சத்திரம் அல்ல; நிகழ்ந்து கொண்டிருக்கும் காலநிலை மாற்றமே என்பதை மேற்கண்ட கதையிலேயே ஒருவர் புரிந்துகொள்ள முடியும். காலநிலை மாற்றத்துக்கான எல்லாவித சாட்சிகளும் நேரடியாக நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே எப்படி insensible ஆக அரசும் ஆளும்வர்க்கமும் இருக்கின்றன என்பதையும் காலநிலை மாற்றத்தை மறுக்கும் ஆளும் வர்க்க அடிவருடிகள் சமூக ஊடகங்களைக் கொண்டு எப்படி மக்களை முட்டாள்களாக்குகின்றனர் என்பதையும் முதலாளியம் ஏன் தீர்வாக முடியாது என்பதையும் அறிவியலில் முதலாளிக்கான அறிவியல், மக்களுக்கான அறிவியல் என இரு வகை இருப்பதையும் படம் பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது.
இத்தகையக் கதைக்குள்தான் இரு விஞ்ஞானிகளையும் பிடிக்காத ஒரு நபர் அவர்களை மார்க்சிஸ்டுகள் எனக் குறிப்பிடுகிறார்.
விஞ்ஞானம் பேசுபவர்கள் எப்படி மார்க்சிஸ்டுகளாக முடியும்? ஆக முடியும். விஞ்ஞானம் முதலாளிகளுக்கானதாகவும் மக்களுக்கானதாகவும் இரு வகையாக இருப்பதை புரிந்து, மக்களுக்கான விஞ்ஞானத்தை அரச எதிர்ப்பு, மக்களின் பொதுப்புத்தி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் பேசுபவர்கள் மார்க்சிஸ்டுகள்தான்.
அறிவியலுக்குள் இருக்கும் லாபவெறி, வர்க்கம் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளாமல் ஒற்றையாய் அறிவியலைப் புரிந்து கொண்டு கண்மூடித்தனமாக பேசுபவர்கள் அறிவியல் பூசாரி கணக்கில்தான் வருவார்கள்.
காலநிலை மாற்றத்துக்கான தீர்வு அரசநிலை மாற்றமும் உற்பத்தி முறை மாற்றமும்தான் என்பதை முதலாளியமே ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைக்கு விஞ்ஞானம் அவர்களைத் தள்ளியிருக்கிறது. அதனால்தான் க்ரெட்டா உள்ளிட்டோர் ‘The system has to be changed’ என மார்க்சிய மொழியில் பேசுகிறார். உலகளாவிய இடதுசாரிகள் ‘System change, not climate change’ என அரசநிலை மாற்றத்தை பிரசாரம் செய்கின்றனர்.
மானுடத்தை அழிவிலிருந்து காக்க இயற்கையே முன் வைக்கும் தீர்வு, மார்க்சியம்தான். அதனால்தான் உலகமெங்கும் சூழலியலாளர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். சமூக ஊடகப் பதர்களைக் கொண்டு Cancel செய்யப்படுகிறார்கள். அரசுகள் காலநிலை மாற்றத்துக்கான தீர்வை முதலாளியத்துக்குள்ளேயே தேடுகின்றன.
பாசாங்கையோ வழக்கமான அரசியல் உத்திகளையே கதைக்குதவாத வாதங்களையோ முன்னெடுக்கும் காலத்தை தாண்டிவிட்டோம் என்கிறோம். ஆனால் கேட்பாரில்லை.
உண்மை என்னவோ பூமியை அழிக்க வந்த வால் நட்சத்திரம் போல் தெள்ளத்தெளிவாக வானில் தெரிகிறது. நாம்தான் மேலே பார்ப்பதைத் தவிர்க்கிறோம். படத்தைப் பார்த்துவிடுங்கள்!

முகநூலில் : Rajasangeethan
disclaimer

மாரிதாசுக்கு முந்தைய ‘கருத்துரிமைக்’ கழிசடைகள் !

மாரிதாஸுக்கு கருத்துரிமை கிடையாதா?
2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதியன்று கோத்ரா இரயில் எரிப்பு நடந்தது. எந்த விசாரணையும் துவக்கப்படுவதற்கு முன்னர், அடுத்த நாளே குஜராத்தின் மிகப்பெரிய பத்திரிகைகளான சந்தேஷ் மற்றும் குஜராத் சமாச்சார் ஆகியவற்றில், மிகக்கொடூரமான வெறுப்புச் செய்திகள் பக்கம் பக்கமாக வெளியிடப்பட்டன. அதிலும் சந்தேஷில் “ஐம்பது இந்துக்கள் எரித்துக் கொலை” என்று முழுக்க முழுக்க படங்கள் அச்சிடப்பட்டு வெளியாகின. அந்த பத்திரிகையை பல்லாயிரக்கணக்கில் ஜெராக்ஸ் எடுத்து, வி.ஹெச்.பி.-யினர் தெருத்தெருவாக விநியோகித்து மிகப்பெரிய வெறுப்புப் பிரச்சாரத்தைத் துவங்கினர்.
அதுமட்டுமில்லாமல் மற்றொரு கட்டுரையில், “கோத்ரா இரயில் எரிப்பில் மீட்கப்பட்ட இரண்டு பெண் குழந்தைகளின் உடல்களை ஆய்வுசெய்ததில், அவர்கள் கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களது மார்பகங்கள் அறுத்து எறியப்பட்டிருக்கின்றன. அவர்கள் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்” என்று சந்தேஷில் வெளியாகி இருந்தது.
படிக்க :
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் !
கோத்ரா தீர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் சதிக்கு வக்காலத்து! அப்பாவி முஸ்லீம்களுக்குத் தூக்கு!!
மார்ச் 1-ம் தேதியன்று சந்தேஷில் வெளியான மற்றொரு கட்டுரையில், “இஸ்லாம் ஆபத்தில் இருக்கிறது. மசூதியில் இருந்து அனைவரையும் உடனடியாக கோத்ரா இரயில் நிலையத்திற்கு அழைத்து வாருங்கள். இஸ்லாமுக்கு எதிரானவர்களை கொன்று தீர்ப்போம்” என்று முஸ்லிம்கள் சொல்லியதாக எழுதப்பட்டிருந்தது.
மார்ச் 1-ம் தேதியில் வெளியான ஒரு கட்டுரையில், “சபர்மதி எக்ஸ்பிரஸ் கோத்ரா இரயில் நிலையத்திற்கு வரும்போது, அதற்காகவே 7000 – 8000 முஸ்லிம்கள் அந்த இரயில் நிலைய ப்ளாட்பாரமில் காத்துக்கொண்டிருந்தனர்” என்று எழுதப்பட்டது.
அதே மார்ச் 1-ம் தேதியன்று வெளியான இன்னொரு கட்டுரையில், “உத்தரப் பிரதேசத்தில் இருந்து குஜராத்துக்கு இடம்பெயர்ந்து வந்த முஸ்லிம்கள் தான் குஜராத்தின் பல இடங்களில் மினி பாகிஸ்தானை உருவாக்குகிறார்கள். அதனால் போலீசுத்துறை அவர்களை ‘கவனிக்க’ வேண்டும்” என்று எழுதப்பட்டிருந்தது.
கோப்புப்படம் : குஜராத்தின் மிகப்பெரிய பத்திரிகைகளான குஜராத் சமாச்சார் மற்றும் சந்தேஷ்
மார்ச் 6-ம் தேதியன்று, “சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயிலின் ஒரு பெட்டியை எரிப்பதற்கு பதிலாக ஒட்டுமொத்த இரயிலையே எரிக்கத்தான் அவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இன்னொரு தாக்குதலை நடத்தவும் அந்த கும்பல் தயாராக இருந்தது” என்று குஜராத் சமாச்சார் பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது.
மார்ச் 7-ம் தேதியன்று, “ஹஜ்ஜு-க்கு சென்று வரும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாத்தான் திரும்பி வருகிறார்கள். அவர்களால்தான் இந்துக்களுக்கு ஆபத்து” என்று ஒரு கட்டுரை சந்தேஷில் வெளியானது.
அதே மார்ச் 7-ம் தேதியன்று, “கோத்ரா இரயில் எரிப்பைக் கொண்டாடி, கராச்சியில் ஒரு ஊருக்கு கோத்ரா என்றே பெயர் சூட்டியிருக்கிறது பாகிஸ்தான்” என்று இன்னொரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டது.
மார்ச் 8-ம் தேதியன்று, “இப்போது போய் முஸ்லிம்களெல்லாம் இந்துஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிடுவது வேடிக்கையாக இருக்கிறது” என்று இன்னொரு கட்டுரை வெளியானது.
மார்ச் 16-ம் தேதியன்று, “ஃபத்தேகஞ்ச் மசூதியினால் கொளுத்தப்பட்ட நெருப்பு” என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை வெளியானது.
மார்ச் 24-ம் தேதியன்று குஜராத் சமாச்சார் பத்திரிகையில், “சாத் கைவல் கோவிலையும், சர்சா கோவிலையும் இந்து பாடசாலைகளையும் ரிமோட் கன்ட்ரோல் மூலமாக வெடித்துச் சிதறடிக்கத் திட்டமிட்டிருக்கின்றனர்” என்று ஒரு முதல் பக்கத்திலேயே தலைப்புச் செய்தி வெளியிடப்பட்டது.
மார்ச் 26-ம் தேதியன்று, “பிலாலின் ஒற்றை வார்த்தையைக் கேட்டு எந்தக் குற்றத்தையும் செய்யத் தயாராகாவே பல கிரிமினல் இளைஞர்கள் இருக்கின்றனர். அப்படித் திட்டமிட்டுத்தான் சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயிலையே கொளுத்தியிருக்கிறார்கள்” என்று குஜராத் சமாச்சார் பத்திரிகையில் கட்டுரை வெளியானது.
முஸ்லிம்கள் மீது வெறுப்பைக் கக்கும் வகையிலான ஒரு வீடியோ சிடி தயாரிக்கப்பட்டு, தெருத்தெருவாக விநியோகிக்கப்பட்டது.
இப்படியான “கருத்துகள்” பரப்பப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான், குஜராத் கலவரம் கொழுந்துவிட்டு எரிந்தது.
எந்தவொரு கருத்தையும் எவரும் சொல்வதற்கு உரிமை இருக்கிறது என்கிற நட்டநடுவாதிகளின் வாதப்படி பார்த்தால், மேலே சொன்னவை அனைத்துமே கருத்துகள்தான். இக்கருத்தை சொல்லியதன் மூலம் எவரொருவரையும் அவர்கள் தாக்கவில்லைதான். ஆனால், ஒட்டுமொத்த குஜராத் மக்களின் மனதிலும் ஆழமான முஸ்லிம் வெறுப்பினை விதைத்தன. கையில் கிடைக்கிற எதனையும் எடுத்து, முஸ்லிம்களை எங்கு பார்த்தாலும் தாக்குவதையும் கொல்வதையும் ஊக்கப்படுத்தியது இத்தகைய “கருத்துகள்”.
படிக்க :
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிக்கு ஓய்வு பெற்ற பிறகும் பதவி !
12-ம் வகுப்பு தேர்வில் குஜராத் கலவரம் தொடர்பான கேள்வி : பதறிய சி.பி.எஸ்.இ
தமிழகத்தில் மாரிதாஸ் என்பவன் யூட்யூப் வழியாக பரப்பிக் கொண்டிருக்கிற “கருத்துகள்” அனைத்தும், மேலே நான் குறிப்பிட்டிருக்கிற கருத்துகளுக்கு கொஞ்சமும் சளைத்தவை அல்ல. பொய்களையும், வதந்திகளையும் வெறுப்புணர்வைத் தூண்டு வகையில் பரப்பிக்கொண்டிருக்கிற மாரிதாஸ் பேசுவதையெல்லாம் கருத்து என்றோ, அவனுக்கு அதற்கெல்லாம் “உரிமை” இருக்கிறது என்றோ சொல்பவர்களை மனிதர்கள் என்கிற வகையிலேயே சேர்க்கமுடியாது.
கருத்து சுதந்திரம் மிகமிக அவசியம்தான். ஆனால் மாரிதாஸ் பேசுவதெல்லாம் “கருத்து” என்கிற வகையிலேயே வராது. இந்த சமூகத்தை அழிப்பதற்காக காற்றில் கலக்கப்படுகிற விசம் என்றுதான் அதனைச் சொல்லவேண்டும்.

முகநூலில் : Chinthan EP

disclaimer

COP26 பருவநிலை மாநாடு : முதலாளித்துவ அரசுகளின் மற்றுமொரு அரட்டை மடம்!

கிளாஸ்கோ பருவநிலை மாநாடு (COP26) :
முதலாளித்துவ அரசுகளின் மற்றுமொரு அரட்டை மடம்!
‘‘புவி வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கடந்த நூற்றாண்டுகளுக்கு முன்பு எப்போதோ ஓரிருமுறை நிகழ்ந்த பேரிடர்கள் இனி வரும் காலங்களில் ஆண்டுதோறும் நிகழும்’’ – என எச்சரித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி பருவநிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசுக் குழுவின் (IPCC) ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை வெளியானது. இவ்வறிக்கையும் பருவநிலை மாற்றத்தால் தொடர்ச்சியாக நடந்துவரும் பேரிடர்களும் இப்புவிக்கோளத்தைப் பற்றிய அச்சத்தோடு கூடிய அக்கறையுணர்வை மக்கள் மனதில் தூவியுள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜுலை மாதங்களிலும்கூட பருவநிலை மாற்றத்தின் கோரமான, மிகச் சமீபத்திய விளைவுகளை உலக நாடுகள் சந்தித்திருக்கின்றன. மேற்கு கனடா மற்றும் வடமேற்கு அமெரிக்காவின் பெரும்பகுதியை கொடூரமான வெப்ப அலைகள் தாக்கின. ஒரு மதிப்பீட்டின்படி, இதனால் பாதிக்கப்பட்டு சுமார் 1,400-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கின்றனர். ஜெர்மனியில் இரண்டு மாதங்களில் பெய்ய வேண்டிய மழை இரண்டே நாட்களில் கொட்டித் தீர்த்தது. சீனாவின் ஹுனான் பகுதியில் அம்மாகாணத்தின் ஓராண்டு சராசரி மழை அளவு வெறும் நான்கு நாட்களில் பெய்து வெள்ளக்காடாக்கியது. தெற்கு ஐரோப்பா பெரும் காட்டுத்தீயுடன் போராடியது. கிரீன்லாந்தில் முதல் முறையாக பனிப்பொழிவுக்கு மாறாக மழை பெய்தது. இந்தியாவிலும் கேரளா, உத்தரகாண்ட், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பெய்துவரும் கனமழையால் நகரங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
படிக்க :
பருவநிலை மாற்றமும் – முதலாளித்துவ அரசுகளின் மாநாடும் !
ஐ.பி.சி.சி அறிக்கை : பருவநிலை மாற்றம் குறித்த அபாய எச்சரிக்கை!
இந்நிலையில்தான், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதற்கான 26-வது ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்ற மாநாடு (COP26) உலகெங்கும் உள்ள சுற்றுச்சூழலியலாளர்கள், அரசியல் பார்வையாளர்கள் மற்றும் புவியின் மீது அக்கறையுள்ள இளம் தலைமுறையினரால் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்கப்பட்டது. அக்டோபர் 31 முதல் நவம்பர் 13 வரை இரண்டு வாரங்களுக்கு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று முடிந்த இம்மாநாட்டில் 200 நாடுகளில் இருந்து 30,000 பிரதிநிதிகள், 120 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
‘சூழலியல் அக்கறை’, முதலாளித்துவ அரசுகளுக்கு முதல்முறை வருவதல்ல!
COP26 மாநாடு, 1994-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ‘காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு உடன்படிக்கை’-இன் (UNFCCC) கீழ் நடைபெறும் ஒரு வருடாந்திர மாநாடு ஆகும். நிலக்கரி, பெட்ரோல் உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் உருவாகக்கூடிய புவி வெப்பமயமாதலுக்கு காரணமான, பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை (கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ்-ஆக்சைடு உள்ளிட்டவை) இந்த நூற்றாண்டின் பாதிக்குள் உலகளாவிய அளவில் நிகர பூஜ்ஜியத்திற்கு கொண்டுவருதல்; அதன் மூலம் உலக வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்துதல்; பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கவும், உமிழ்வுகளை குறைப்பதற்கும் ஏழை நாடுகளுக்கு, பணக்கார – வளர்ந்த நாடுகள் ஒவ்வொரு ஆண்டிற்கும் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்க வேண்டும் என்ற 2009-ம் ஆண்டு உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட குறிக்கோள்களோடு இம்மாநாடு நடைபெற்றது.
இந்த ‘குறிக்கோள்கள்’ ஒன்றும் புதியவையுமல்ல. இவற்றை அடைவதற்காக நடத்துவதாகச் சொல்லப்படும் இதுபோன்ற மாநாடுகளும் புதியவையல்ல. இது ஐ.நா.வின் 26-ஆவது மாநாடாகும் (COP26). வரன்முறையற்ற கனிமவளச் சுரண்டல், காடுகள் அழிப்பு, நீர்நிலைகள் அழிப்பு, சுற்றுசூழலை நாசம் செய்யும் நாசகர தொழிற்சாலைகள், அவை வெளியேற்றும் கழிவுகள் என பருவநிலை மாற்றத்திற்கு மூலக்காரணமே சூழலியலைப் பற்றி சிறிதும் கவலைகொள்ளத் தயாரில்லாத ஏகாதிபத்திய முதலாளித்துவ உற்பத்திமுறையும் இலாபவெறியும்தான்.
முதலாளிகளின் நலனைக் கட்டிக் காக்கும் அரசுகளின் பிரதிநிதிகளோ தாங்கள் சூழலியல் சிதைவைப் பற்றி பெரிதும் ‘கவலைப்படுவதாகவும்’ அதனை சரிசெய்வதற்காக ‘பெருமுயற்சியெடுத்து’ வருவதாகவும் ஒவ்வொரு முறையும் உலக மக்களை ஏய்ப்பதற்காக இதுபோன்ற மாநாடுகளை நடத்துவதும், அதில் கூடிப் பேசி கலைவதும் வழக்கம். இதுவரை போடப்பட்ட உடன்படிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட இலட்சணத்தைப் பற்றி பரிசீலித்தாலே இதைப் புரிந்துகொள்ள முடியும்.
1997-ல் முதன்முதலாக, கியோட்டோ உடன்படிக்கை (Kyoto Protocol) போடப்பட்டது. இந்த உடன்படிக்கை, ‘‘தொழில்துறையில் வளர்ந்த‌ ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 37 நாடுகளே வரலாற்றுரீதியாக புவி வெப்பமயமாதலுக்கு காரணம். எனவே அவை உடனடியாக பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வைக் குறைக்க வேண்டும்’’ என்று கூறியது. பெரும்பாலான நாடுகள் இவ்வொப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தன. ஆனால், அதிக அளவில் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் நாடான அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தைக் கைவிட்டதால் ஓராண்டில் இவ்வொப்பந்தம் தன்னியல்பாக காற்றில் கரைந்தது.
அதன்பிறகு, 2015-ல் போடப்பட்ட பாரிஸ் ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 192 நாடுகளால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தமானது, ‘‘பூமியின் வெப்ப அதிகரிப்பை 2 டிகிரிக்குள் வைத்திருக்க பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வைக் குறைக்க வேண்டும்; பருவநிலை மாற்றத்திற்கான நிதியாக ஆண்டுதோறும் 100 பில்லியன் டாலர்களை வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும்’’ என்று கூறியது. இது இரண்டுமே தற்போது நடைபெற்ற COP26 மாநாடுவரை நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், தற்போது நடந்துள்ள COP26 மாநாட்டின் முடிவுகளையும் உள்ளபடியே இவர்கள் குப்பைத் தொட்டியில் தூக்கிப் போடத்தான் போகிறார்கள் என்பதற்கு இவர்களது கடந்தகால மாநாடுகளே சான்று. எனினும் தற்போது மாநாடு நடந்த விதம் அதில் தலைவர்கள் ஆற்றிய உரை, நிறைவேற்றிய தீர்மானங்கள் ஆகியவற்றிலிருந்தும் இந்த மாநாட்டு முடிவுகள் எவ்வாறு வெறும் பகட்டு ஆரவாரங்களாக உள்ளன என்பதைப் பார்ப்போம்.
ஒப்பந்தங்களல்ல.. கழிப்பறை காகிதங்கள்!
இந்த மாநாட்டில் 2030-க்குள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தில் கனடா, பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தோனேசியா என 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கையொப்பமிட்டுள்ளனர். இந்தோனேசிய அரசு அதிகாரிகள் இதில் கையெழுத்திட்டுள்ள நிலையில் இந்தோனேசிய அமைச்சர் சிடி நுர்பயா பாகர், ‘‘எங்களால் செய்யமுடியாததை அதிகாரிகளால் உறுதியளிக்க முடியாது. இந்தோனிசியாவிற்கு ‘வளர்ச்சி’தான் பிரதானமானது’’ என போட்டுக்கொண்ட ஒப்பந்தத்திற்கு எதிராக பகிரங்கமாகவே பேசியுள்ளார்.
உலகத்தின் நுரையீரலான அமேசான் காடுகளை அதே ‘வளர்ச்சிப் பணிகளுக்காக’ அழித்து வரும் பிரேசிலும் 2030-க்குள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பிரேசிலின் முன்னாள் அதிபர் பொல்சனாரோ ஆட்சியில், கடந்த ஆண்டில் மட்டும் இலண்டன் நகரை விட ஏழு மடங்கு பெரிய அமேசான் மழைக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்ற செய்தியும், தற்போதுள்ள அரசும் சுற்றுச்சூழலைக் காப்பதற்கான எந்த அக்கறை கொள்ளவில்லை என்பதும், இத்தீர்மானங்கள் – ஒப்பந்தங்கள் நடைமுறைக்குப் போவதன் மீது நமக்கு கேள்வியை எழுப்புகின்றன.
ஏற்கெனவே 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாநாட்டில், இதே போல் 2030-க்குள் காடழிப்பை நிறுத்த ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், அதன் பிறகு காடழிப்பு விகிதம் 41 சதவிதம் அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து 2010-ம் ஆண்டிற்குள்ளான பத்து ஆண்டுகளில், சராசரியாக ஆண்டொன்றுக்கு 1.5 கோடி ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டன. ஆனால் 2015-லிருந்து 2020 வரையான ஐந்தாண்டுகளில் – அதாவது பாரிஸ் ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு – சுமார் 1 கோடி ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களை முதலாளித்துவ நாடுகள் வெறும் கழிப்பறைக் காகிதமாகத்தான் கருதுகிறார்கள் என்பதற்கு இவையே சான்று.
000
கிளாஸ்கோவில் 120 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட COP26 பருவநிலை மாநாடு.
அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளே, வாக்குறுதி கொடுக்கத் தயங்கி தங்களது இலக்குகளைத் தெளிவாக முன்வைக்காமல் இருந்தபோது, நமது ‘56 இன்ஞ்’ மோடி அரசோ, தைரியமாக ஒரு திட்டத்தை முன்வைத்திருப்பது உலகநாடுகளால் பாராட்டப்பட்டிருப்பதாக செய்திகள் பரப்பப்பட்டன. அத்திட்டத்திற்குப் ‘பஞ்சாமிர்தம்’ (ஐந்து அம்ச திட்டம்) என பெயர்சூட்டியது இந்திய அரசு. ‘‘2070-ம் ஆண்டு இந்தியா பூஜ்ஜிய உமிழ்வை அடையும்; 2030-ம் ஆண்டிற்குள் தனது ஆற்றலின் 50 சதவிதத்தை புதுப்பிக்கத்தக்க வளத்திலிருந்து பெறும், புதைபடிவ பொருள் அல்லாத எரிசக்தியின் திறனை 500 ஜிகா வாட்டாக அதிகரிப்போம்; 2030-ம் ஆண்டு முடிவுக்குள் ஒரு பில்லியன் டன் அளவுக்கு  கரியமிலவாயு உமிழ்வைக் குறைப்போம்; நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2005-உடன் ஒப்பிடும்போது கார்பன் தீவிரத்தை 45% குறைப்போம்’’ – என ஐந்து வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறார்.
இந்தியாவின் தற்போதைய மின் உற்பத்தித் திறன் 388 ஜிகா வாட்டாகத்தான் உள்ளது. ஆனால், மோடியோ 2030-ம் ஆண்டிற்குள் புதிப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து  மட்டும் 500 ஜிகா வாட் திறனை பெறப்போவதாக கூறியுள்ளார். இக்காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மொத்த ஆற்றலில் 50 சதவிகிதம் புதைபடிம எரிபொருளல்லாத மின் உற்பத்தியின் மூலம் சாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அப்படியானால், 2030−ஆம் ஆண்டுக்குள் 1000 ஜிகா வாட்-டுக்கும் அதிகமான மின்னுற்பத்தி செய்தால் மட்டுமே அது சாத்தியம். எனில், அடுத்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் மின் தேவை கிட்டத்தட்ட 2.5 மடங்கு அதிகரித்துவிடுமா என்ன?
அது சரி, வாக்குறுதிகளை நிறைவேற்றும் பழக்கம் இருந்தால் தானே இதைப்பற்றி எல்லாம் யோசிக்க வேண்டும். மோடியின் வரலாற்றிலேயே அந்தப் பழக்கம் கிடையாதே. ஆக, இதுவும் ‘5 டிரில்லியன் பொருளாதாரம்’ கட்டியெழுப்பப்பட்ட கதைதான்.
சூழல் அழிப்பு குற்றவாளிகளுடன், சூழலியல் ‘நீதி விசாரணை’
ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்பட்ட மாநாட்டின் பங்கேற்பாளர்களின் பட்டியலை ஆய்வு செய்த போது , COP26-ல் எந்தவொரு தனி நாட்டையும் விட புதைபடிவ எரிபொருள் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தான் மிகப்பெரிய எண்ணிக்கையில் பங்கெடுத்தது தெரியவந்ததுள்ளது. உலக அளவில் 71 சதவீத பசுமை இல்ல வாயு உமிழ்வுகளுக்கு, வெறும் 100 உலகளாவிய நிறுவனங்கள் தான் காரணமாகின்றன. யார் இந்த சுற்றுசூழல் சீர்குலைவுக்கு முக்கியமான காரண கர்த்தாக்களோ அவர்களோடு ஆலோசனை நடத்தித்தான் ‘பூமியை பாதுகாப்பது’ பற்றி திட்டம் வகுத்திருக்கிறார்கள்.
இந்த மாநாட்டின் இறுதியில் இந்தியா, சீனா உள்ளிட்டு அதீத நிலக்கரி பயன்பாட்டாளர்களின் அழுத்தத்தால், மாநாட்டின் வரைவறிக்கையில் நிலக்கரி பயன்பாட்டை ‘‘படிப்படியாக நிறுத்த வேண்டும்’’ என்ற சொல்லுக்கு பதிலாக  ‘‘படிப்படியாக குறைக்க வேண்டும்’’ என்று மாற்றப்பட்டதை முதலாளித்துவ ஊடகங்களே கடுமையாக விமர்சித்தன. மொத்தத்தில், இம்மாநாடு ஏகாதிபத்திய முதலாளித்துவ அரசுகளால் நடத்தப்பட்ட ஒரு கபட நாடகமே என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளே!
கண்துடைப்புக்கான வாய்ச் சவடால் இலக்குகள்
புதைபடிம எரிசக்தியைத் தவிர்த்து புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதன் மூலம் புவி வெப்பமயமாதல், காலநிலை மாறுபாட்டைத் தவிர்ப்பதற்காக, நிர்ணயிக்கப்பட்ட ‘‘தேசவாரியாக தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள்’’ (NDC-Nationally determined contributions) COP26-இன் குறிக்கோளாகச் சொல்லப்பட்ட 1.5 டிகிரி வெப்பநிலையில் புவியை பராமரிப்பது என்ற திட்டத்திற்கு போதுமானதாக இல்லை என்று சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
பாரிஸ் ஒப்பந்தத்தின்படி ‘‘தேசவாரியாக தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள்’’-ஐ ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை விவாதித்து மாற்றியமைக்கும் வழக்கம் இருந்துவந்தது. இந்த மாநாட்டில்  ‘‘தேசவாரியாக தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள்’’ புதியதாக தீர்மானிக்கப்பட்டன. ஆனால் அந்தந்த நாடுகள் தமது பங்களிப்பை  முழுமையாக நிறைவேற்றினாலும் கூட 2.4 டிகிரிக்கு மேலாக வெப்பநிலை உயரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த 2.4 டிகிரி வெப்பநிலை உயர்வினால் உலகில் பேரழிவுகள் நிகழக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. உலகின் வெப்பநிலை வெறும் 2 டிகிரி உயர்ந்தாலே ஒரு பில்லியன் மக்கள் கடுமையான வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள்.
இதன் காரணமாக, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையே NDC-க்களை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முடியும் என்ற வழமையான முறையை மாற்றி 2022-ல் 27-வது பருவநிலை மாற்ற மாநாட்டில் இதனை மாற்றும் முடிவுக்கு வந்துள்ளார்கள்.
புவியைக் காக்க, முதலாளித்துவத்தின் கழுத்தை நெறி!
COP26 மாநாட்டை எதிர்த்து கிளாஸ்கோவில் மக்கள் பேரணியாக செல்கிறார்கள்.
COP26 மாநாடு ஒரு ஏமாற்று நாடகம் என்று உலகெங்கும் உள்ள சுற்றுச்சூழல் களச் செயல்பாட்டாளர்கள் மாநாடு துவங்கும் முன்னரே கூறிவந்தனர். இத்தகைய மாநாடுகளில் ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தங்கள் கழிவறைக் காகிதமாகவே அனைத்து நாடுகளின் அரசுகளால் கையாளப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டியே இவ்வாறு கூறுகின்றனர். முதலாளித்துவ நாடுகள் தங்கள் இலாப வெறியையே முதன்மையாகக் கருதி சூழலியலின் மேல் அக்கறை காட்டுவதில்லை என்பதையும் அவர்களின் நோக்கமெல்லாம் தங்களது முதலாளிகளின் இலாபத்தை உறுதிப்படுத்துவது மட்டும்தான் என்பதை அவர்கள் புரிந்துவைத்துள்ளார்கள்.
உலகின் பலநாடுகளையும் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இளைஞர்கள் என ஒரு இலட்சம் பேர் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற மாநாட்டை அம்பலப்படுத்தி அந்நகரின் வீதிகளில் திரண்டு மிகப்பெரிய பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினார்கள். குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள், வகுப்புத் தோழர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் வீதிகளில் இறங்கினர். தங்களது கண்டனக் கூட்டத்தில் COP26 மாநாட்டில் கூடியிருந்த அரசு பிரதிநிதிகள் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.
இம்மாநாட்டில் கலந்துக்கொண்ட பருவநிலை மாற்ற செயல்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க் COP26 மாநாடு ஒரு “தோல்வி”, ‘‘தலைவர்கள் எதுவும் செய்யவில்லை, அவர்கள் தீவிரமாக ஓட்டைகளை உருவாக்கி, தங்களுக்கு நன்மை பயக்கும் கட்டமைப்புகளை வடிவமைத்து வருகின்றனர். மேலும் இந்த அழிவுகரமான அமைப்பில் இருந்து தொடர்ந்து இலாபம் ஈட்டுகின்றனர்’’ என்று சாடினார். ‘‘எங்களுக்கு ‘2030க்குள்.. 2070க்குள்’ போன்ற வாக்குறுதிகள் தேவையில்லை.. நாங்கள் இப்போதே, இன்றே மாற்றத்தை எதிர்ப்பார்கிறோம்’’ என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் முழங்கினர்.
புவிப் பரப்பே நிலைத்திருக்குமா? என்று மனிதகுலமே கவலையோடு பருவநிலை மாற்ற அபாயத்தை எதிர்கொள்ளும் நிலையில், புதை படிம எரிபொருளிலிருந்து திடீரென புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதன் மூலம் ஏற்படக்கூடிய மிகப்பெரிய நட்டத்தை ஏற்றுக்கொள்ள முதலாளிகள் தயாராக இல்லை. முதலாளிகளின் நலனைக் காக்கவே உருவாக்கப்பட்டுள்ள இந்த முதலாளித்துவ அரசுகள், முதலாளிகளுக்கு எப்படி அழுத்தம் கொடுப்பார்கள்?
படிக்க :
முதலாளித்துவமும் பருவநிலை மாற்றமும் !
பருவநிலை மாற்றம் : எச்சரிக்கும் ஃபானி புயல் !
ஆகவே, இதுபோன்ற மிகப் பிரம்மாண்டமான சர்வதேச மாநாடுகள் நடத்துவதும் அதில் வெற்று ஒப்பந்தங்களையும், பொய் வாக்குறுதிகளையும் கொடுப்பதெல்லாம், சுற்றுச் சூழல் சீர்கேடுகளால் கொதித்தெழும் மக்களின் எதிர்ப்புகளுக்கு முகம்கொடுக்க முடியாமல் முதலாளித்துவ அரசுகள் நடத்தும் நாடகமே.
இந்த ஒட்டுமொத்த முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் அடித்தளமே இலாப வெறியாக இருக்கும்போது, பசுமைக்குடில் வாயுக்களைக் குறைப்பது, கரியமில வாயு உமிழ்வைக் குறைப்பது போன்ற தமது இலாபத்தைப் பாதிக்கும் எவ்வித முயற்சிகளையும் முதலாளிகள் நடைமுறைப்படுத்தப் போவதில்லை. வேதாந்தா என்ற ஒரு கார்ப்பரேட்டின், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சுற்றுச் சூழல் மாசுபாட்டை தடுத்து நிறுத்தவே 15 பேர் படுகொலையையும், பலநூறு பேர் மீதான வழக்கையும் கடந்துதான் சாதிக்க முடிந்திருக்கிறது. எனில் இந்தப் புவியின் மீதான ஒட்டுமொத்த கார்ப்பரேட் கும்பலின் தாக்குதலைத் தடுத்து நிறுத்த, எவ்வளவு வீச்சான மக்கள் திரள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டியது இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
சுற்றுச் சூழல் மாசுபாட்டுக்கு எதிரான சூழலியல் போராட்டங்கள் முன்னேறி வளர்ந்துவருவதை நாம் ஆதரிக்கும் அதேவேளையில், முதலாளிகளின் இலாபவெறியே போட்டி போட்டுக் கொண்டு சுற்றுச் சூழலை சீரழித்து வருகிறது என்பதை உணரவேண்டும். முதலாளித்துவப் பொருளாதாரக் கட்டமைப்பைத் தகர்த்தெறிய, உழைக்கும் மக்களின் நேரடிக் கட்டுப்பாட்டிலான சமூகக் கட்டமைப்பை − சோசலிசத்தை − மாற்றாக முன்வைக்கும் அரசியல் முழக்கத்தின் கீழ் அணிதிரள வேண்டும். அதுதான் சுற்றுச்சூழல் பேரழிவில் இருந்து இந்த உலகைக் காப்பதற்கான ஒரே வழி!

மதி

ஆதார் – வாக்காளர் அட்டை இணைப்பு : மோடியின் பாசிச நடவடிக்கை | தோழர் சுரேசு சக்தி

மோடி அரசு நாடாளுமன்றத்தில் எந்தவித விதாதங்களும் இன்றி, எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி தேர்தல் சட்ட திருத்த மசோதா – 2021-ஐ நிறைவேற்றியுள்ளது.
இது நாட்டின் உழைக்கும் மக்களின் ஆதிமுதல் அந்தம் வரை அனைத்து தகவல்களையும் சேகரிக்கும் ஓர் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. வரவிருக்கும் தேர்தலில் மக்களின் வாக்களிக்கும் சுதந்திரத்தை பறித்து தான் வெற்றி பெறுவதற்கான அடைப்படையை உருவாக்குவதற்கான திட்டத்தின் ஓர் அங்கம்தான் இந்த சட்டம்.
தேர்தல் கமிசனுக்கு தெரிந்த வாக்காளர்களின் தனி உரிமை விவரங்கள் தற்போது ஆளும் வர்க்கத்தின் கார்ப்பரேட் முதலாளிகளின் அனைவருக்கும் கிடக்கபெறும் தகவல்களாக மாறும். ஓர் தனி மனிதனின் அனைத்து உள் விவகாரங்கள் வெளிப்படையாகவே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பாசிச மோடி அரசுக்கும் தெரிய வழிவகை செய்து கொடுக்கும் சட்டம்தான் இது.
பாசிசம் அரங்கேறுவதற்கு முன் ஹிட்லர், தான் ஒடுக்க நினைக்கும் மக்களின் அனைத்து விவரங்களையும் சேகரித்தான். அதன்பின் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது. அதேபோல் தற்போது மோடி அரசு தன் இந்துராஷ்டிர கனவிற்கான பாசிச செயல்திட்டத்திற்கும், கார்ப்பரேட் சேவைக்கும் மக்களை கண்காணிக்கவே இந்த திட்டத்தை பயன்படுத்த முனைகிறது.
எனவே உழைக்கும் மக்கள் அனைவரும் பரவி வரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக ஒன்றினைந்து போராடவேண்டியுள்ளது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த சட்டத்தின் அபாயங்களை விரிவாக இந்த காணொலியில் விளக்குகிறார் தோழர் சுரேசு சக்தி முருகன்.
காணொலியை பாருங்கள்! பகிருங்கள் !!

சென்னையின் துயரம் – பெருவெள்ளம் : யார் காரணம் ?

2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்குப் பிறகு, தற்போது பெய்த கனமழையானது சென்னை மக்களை மீண்டும் கொடும் துயரத்தில் தள்ளியிருக்கிறது. மழைக்காலங்களில் வழமையாக பாதிக்கப்படும் சென்னைப் புறநகர் பகுதிகளான வேளச்சேரி, பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி போன்ற பகுதிகள் மட்டுமல்லாமல் தி.நகர், புரசைவாக்கம், கே.கே.நகர், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், ஓட்டேரி, வில்லிவாக்கம் உள்ளிட்டு நகரத்தின் பல முக்கிய பகுதிகளும் வெள்ளக்காடாகியுள்ளன.
பல பகுதிகளில் படகுகளின் மூலம்தான் போக்குவரத்து மேற்கொள்ளமுடியும் என்ற நிலை உருவாகியது. சாலைகளில் தேங்கிய மழைநீர், வடிகால்கள் வழியே வெளியேறவில்லை. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து அனைத்து பொருட்களையும் நாசப்படுத்திவிட்டது.
சென்னையின் இந்த துயரத்திற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று சுற்றுச்சூழல் பேரழிவு. ‘‘இது வழமையாக பொழிகின்ற மழைபோல அல்ல. இயல்புக்கு மாறான அதிதீவிர மழை. காலநிலை மாற்றத்தின் விளைவாக ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை ஒருசில நாட்களிலேயே பெய்து விடுகிறது’’ என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது உலகளாவிய அளவில் ஒருபுறத்தில் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க, சென்னை வெள்ளத்தில் மூழ்கியதற்கு மற்றொரு முக்கியக் காரணம் இருக்கிறது.
படிக்க :
சென்னை மழை வெள்ளம் : ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் ஆக்கிரமிப்புகள் !
சென்னை மழை வெள்ளம் – ஐ.டி நிறுவனங்களின் இலாப வெறி !
அந்த இரண்டாவது காரணம், ஆக்கிரமிப்புகள். நீர்த் தேக்கங்களாகவும் வெள்ளநீர் வடிகால்களாகவும் செயல்படக்கூடிய ஏரி, குளம், குட்டை போன்றவற்றை ஆக்கிரமித்து குடியிருப்புகள், நிறுவனங்களை கட்டிவைத்தது; மழைவெள்ளம் வடிவதற்கான முறையான கால்வாய்களை வடிவமைக்காதது, இதற்காக ஒதுக்கப்பட்ட திட்டங்களில் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல் போன்றவைகள்தான்.
இந்த இரண்டு காரணங்களுமே பாரிய முறையில் நாம் பரிசீலிக்க வேண்டியவை.
பேரிடர்களுக்கு இடையில் வாழும் காலம்..
இலாபவெறி பிடித்த ஏகாதிபத்திய முதலாளித்துவம் இயற்கையை வரைமுறையின்றி சுரண்டியதன் விளைவாக உயிர்க்கோளமே பேரழிவின் விளிம்பில் நிற்கிறது. அதீதமழைப் பொழிவு, கடும் வறட்சி, எதிர்பாராத திடீர் புயல்கள், தகிக்கும் வெப்ப அலை என காலநிலை மாற்றத்தால் பல்முனைத் தாக்குதல்களை எதிர்கொள்கிறது மனித குலம். ‘‘ஒரு பேரிடரைக் கடந்து வந்தால் சற்று இடைவெளிக்குப் பிறகு மற்றுமொரு பேரிடரை நாம் எதிர்நோக்கிக் காத்திருக்கலாம். இது பேரிடர்களுக்கு இடையில் வாழும் காலம்’’ என எச்சரிக்கிறார்கள் சூழலியல் செயல்பாட்டாளர்கள். சென்னை மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?
கடந்த 2011-ம் ஆண்டு தானே புயல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, 2015-ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சென்னையே மிதந்தது, அதன்பிறகு 2017-ல் ஒக்கிப்புயல், 2018-ல் கஜா புயல், 2019-ல் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு, 2020−ம் ஆண்டு நிவர் புயல், கோடைக்காலத்தில் இதுவரை இல்லாத அளவு 106 டிகிரிக்கு அதிகரித்த வெப்பநிலை என பல்வேறு பேரிடர்களைச் சந்தித்திருக்கிறது சென்னை. அதன் தொடர்ச்சிதான் தற்போதைய அதீத கனமழை.
கடந்த நவம்பர் 7-ம் தேதி முதல் 12-ம் தேதிவரை சென்னையில் பெய்த மழை வழக்கத்தைக் காட்டிலும் ஐந்தரை மடங்கு அதிகம். வானில் எங்கும் கருமேகங்கள் சூழ்ந்தவண்ணமிருந்தன. மேற்சொன்ன ஆறு நாட்களில் பெய்த மழையின் அளவு 46 செ.மீ ஆகும். இது வழக்கமாகப் பெய்கின்ற அளவை விட 491 சதவிகிதம் அதிகமாகும். இவையெல்லாம் காலநிலை மாற்றத்தின் அபாயங்கள் என்கிறார்கள் சூழலியல் செயல்பாட்டாளர்கள்.
இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், ஒட்டுமொத்த மழையின் அளவானது 4.4 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் இந்நூற்றாண்டின் இறுதியில் 20.5 சதவிகிதமாக அவை மேலும் அதிகரிக்கும் என்றும் சொல்கிறார்கள். ‘‘மழையின் அளவு அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல. 60 நாட்களில் பெய்யும் மழை வெறும் 20 நாட்களிலேயே பெய்யும். ஒரே நேரத்தில் மழை பெய்துவிடுவதால் அதைத் தேக்கிவைப்பது இயலாத காரியமாக இருக்கும். இதனால் வறட்சி ஏற்படும்’’ என்று சொல்கிறார் சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன்.
பக்கிங்காம் கால்வாயை அழித்துக் கட்டப்பட்டிருக்கும் சென்னை இரயில் வழித்தடம்
கடந்த அக்டோபர் மாதத்தின் இறுதியில், ‘ஆற்றல், சுற்றுச்சூழல், தண்ணீருக்கான குழு’ என்ற அமைப்பானது (CEEW – council for energy, environment and water) இந்தியாவின் காலநிலை பாதிப்பு குறித்து மாவட்ட அளவிலான மதிப்பீட்டாய்வை நடத்தி, அதன் அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவில் அதிக வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ளும் நகரங்களின் பட்டியலில் சென்னை ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. வெள்ளம், வறட்சி, புயல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளை எந்த நகரம் அதிகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது குறித்த பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
தன் கட்டமைப்புகளை இழந்த சென்னை
சென்னையைப் பொருத்தவரையில் தீவிர மழைப்பொழிவின் காரணமாக ஆற்றிலோ, ஏரிகளிலோ நிரம்பி வழிந்தோடும் நீர் ஒருபுறம் வெள்ளத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்துகிறது என்றால், மறுபுறத்தில், ‘‘மிகக் கன மழை’’ ஒன்றுக்கே சென்னையின் சாலைகளில் தண்ணீர் தேங்கிவிடுவதோடு, சுரங்கப் பாதைகள் வரை நிரம்பிவிடுகின்றன. ஆறு, ஏரி, குளம், கால்வாய், குட்டை என சென்னையின் பூர்வீக நீராதாரங்கள் அனைத்தையும் சிதைத்துவிட்டு நிற்பதோடு, முறையான வடிகால் கட்டமைப்புகளை வடிவமைக்காமலும் பராமரிக்காமலும் விட்டதுதான் சென்னை தத்தளிப்பதற்கு காரணம்.
000
இன்றைய சென்னை நகரம் ஒருகாலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நஞ்சை விவசாயம் (நெல் விவசாயம்) செய்து வந்த பாசனக் கிராமங்களை உள்ளடக்கிய தொகுதி. எண்ணற்ற ஏரிகள், கோயில் குளங்கள், குட்டைகள் என நீர்த் தேக்கங்கள் நிறைந்த பகுதி. சென்னையை ஊடறுத்துப் பாய்ந்து ஓடும் கூவம், அடையாறு, கொற்றலை ஆகிய ஆறுகள் இன்றுள்ளது போல கழிவுநீர் சாக்கடைகளல்ல. அன்றைய சென்னையின் விவசாயத்திற்கு உயிராதாரமாக இருந்தவை. வெள்ளம் வந்தாலும் நெல்வயல்களில் நீர்வடிவது போல, விரைவாக வெளியேறும் வகையில் ஏரிகள் ஆறுகளோடு இணைக்கப்பட்டிருந்தன. சென்னை வங்கக் கடலோரம் அமைந்துள்ளதால் ஆற்றின் வெள்ளம் கூட எளிதாக கடலில் கலந்துவிடும் வண்ணம் இருந்தது.
கூடுதலாக, நகரத்தினுள் மிகப்பெரிய வெள்ள நீர் வடிகாலாக செயல்பட்டது பக்கிங்காம் கால்வாய். சுமார் 210 ஆண்டுகளுக்கு முன்பு (1806−ம் ஆண்டு) வெள்ளையர்களால் வட சென்னையையும் எண்ணூரையும் இணைப்பதற்காக வெட்டப்பட்ட பங்கிங்கம் கால்வாய், பின்னர் படிப்படியாக விரிவாக்கப்பட்டு தற்போது ஆந்திராவின் காக்கிநாடாவில் இருந்து சுமார் 792 கிலோ மீட்டர்கள் வங்க கடற்கரையோரம் பயணித்து, சென்னையின் ஊடே ஓடிக் கடந்து, விழுப்புரத்திற்கு அருகே முடிவடைகிறது.
பக்கிங்காம் கால்வாயின் சிறப்பு என்னவென்றால், அது சென்னையில் ஓடுகின்ற மூன்று ஆறுகளையும் பல்வேறு கால்வாய்களையும் இணைக்கிறது. நகரத்திற்குள் ஓடுகின்ற மழைநீரை மட்டுமல்லாமல், ஏரிகளிலிருந்து வடியும் உபரிநீரையும் உள்ளிழுத்துக் கொண்டு விரைவாக வெளியேற்றும் வேலையைச் செய்தது. மேலும் தென்சென்னையில் பொழிகின்ற மழைநீரும் பள்ளிக்கரணை சதுப்பு நிலக்காடுகள் வழியாக வழிந்தோடி பங்கிங்காம் கால்வாயில் கலக்கிறது. இதுபோன்ற வெள்ள வடிகால் இந்தியாவின் வேறெந்த நகரத்திற்கும் இல்லாத சிறப்பு.
சென்னையும் புதிய தாராளவாத ‘வளர்ச்சியும்’
பலநூறு ஆண்டுகளாக சென்னையின் பூர்வகுடி மக்களின் உழைப்பால் பராமரிக்கப்பட்ட ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் எல்லாம் வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்தில் மராமத்துப் பணிகள் செய்யாமல் விடப்பட்டன. விதிவிலக்காக பக்கிங்காம் கால்வாய் சரக்குகள் ஏற்றிச் செல்வதற்கான வழித்தடமாகப் பயன்பட்டதால் அது முறையாக பராமரிக்கப்பட்டது. 1990-களுக்குப் பின் புதிய தாராளவாதக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட பின்னர்தான் மேற்கண்ட கட்டமைப்புகள் அனைத்தும் நாசமாக்கப்பட்டு அதன் மேல் ‘வளர்ச்சித் திட்டங்கள்’ கட்டியெழுப்பப்பட்டன. அதற்கு முதல் பலி பக்கிங்காம் கால்வாய்.
1995-ம் ஆண்டின் இறுதியில், பக்கிங்காம் கால்வாய் பகுதியை சிதைத்து, அதன்மேல்தான் பறக்கும் ரயில் (MRTS) என்று அழைக்கப்படும் வேளச்சேரி இரயில்வே பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. விளைவு, அடுத்த ஆண்டே (1996) ஆகஸ்ட் மாதம் பெய்த கன மழையால் சென்னை பெரு வெள்ளத்தைச் சந்தித்தது. அப்போதே ‘‘எக்ஸ்னோரா இண்டர்நேஷனல்’’ என்ற தன்னார்வ நிறுவனம், வெள்ளத்திற்குக் காரணம் இரயில்வேயின் கட்டுமானப் பணிகள்தான் என ஆதாரங்களோடு முன்வைத்து உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது. உடனடியாக அக்கட்டுமானப் பணிக்குத் தடைவிதிக்காத நீதிபதிகள், வழக்கினை ‘விசாரிக்கலாம்’ என பத்து ஆண்டுகள் கடத்தினர். அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.
இறுதியாக, 2006-ம் ஆண்டு இவ்வழக்கின் தீர்ப்பில், ‘‘சென்னை வெகுவேகமாக நகரமயமாகி வருவதால் பள்ளிக்கரணை போன்ற சதுப்பு நிலங்களையும் ஏரிகளையும் காப்பாற்ற முடியாது’’ என்ற அரசு முன்வைத்த வாதத்தை அடுத்து ‘மதிப்பிற்குரிய’ நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, ‘‘பறக்கும் இரயில் போன்ற பல திட்டங்களை உருவாக்கினால்தான் உலக அரங்கில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கும். சுற்றுச்சூழல்வாதிகள், தன்னார்வலர்கள் தேவையற்ற விவாதங்களை நடத்தி ஒன்றுமில்லாததைப் பெரிதாக்குகிறார்கள்’’ என்றது. இன்று அதே நீதிமன்றம்தான் 2015 மழைவெள்ள பாதிப்புக்கு பிறகு ஆக்கிரமிப்புகள் குறித்துக் கவலைப்படுகிறது.
1996-ம் ஆண்டிற்குப் பிறகு 1998, 2005, 2015 என பலமுறை சென்னை வெள்ள பாதிப்புகளைக் எதிர்கொண்டிருக்கிறது. பக்கிங்காம் கால்வாய் சிதைப்பு மட்டுமல்லாமல் 1990-களிலிருந்து சென்னையின் ஏரி, குளங்கள், சதுப்புநிலங்கள், கால்வாய்கள் என அனைத்தையும் ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் ஆக்கிரமித்தபோது ‘வளர்ச்சியின்’ பெயரால் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டன. நீர்நிலைகளை ஆக்கிரமிப்பது சட்டவிரோதமானது என்றபோதும் ‘வளர்ச்சியை’ பாதிக்கும் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை தமிழக அரசே சட்டப்பூர்வமாக மாற்றியது.
சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை சட்டப்பூர்வமானதாக அங்கீகரித்து town and country planing act என்ற சட்டத்தை 1998-ம் ஆண்டு ஒருமுறையும் 2007-ம் ஆண்டு மற்றொரு முறையும் கொண்டுவந்த தமிழக அரசின் நடவடிக்கை அதற்கு ஒரு சான்று. இவ்வாறாக, சென்னையிலுள்ள கட்டிடங்களில் 50 சதவிகிதம் கட்டிடங்கள் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
000
அமிதாங்ஷூ ஆச்சாரியா மற்றும் அஜயா தீட்சித் ஆகிய சூழலியல் ஆர்வலர்கள் இணைந்து எழுதிய ‘‘நீருடன் வாழக் கற்றுக் கொள்வது’’ என்ற கட்டுரையில் ‘‘நகர்ப்புற நீர் வழித்தடங்கள் மற்றும் சதுப்பு நிலங்களின் மிகப்பெரிய ஆக்கிரமிப்பாளர் உண்மையில் தமிழக அரசு என்று சுட்டிக்காட்டுகிறார்கள். தமிழக நீர்நிலைகளில் நடைபாதைகள், பேருந்து முனையங்கள் மற்றும் ஐ.டி. பூங்காக்களை அரசு உருவாக்கியுள்ளது’’ என்று குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் அக்கட்டுரையில் நகர்ப்புறங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளைப் பற்றிக் குறிப்பிடுகையில், ‘‘காலநிலை நெருக்கடி பற்றிய சந்தேகங்களுக்கான விளக்கங்களைத் தேடுகையில், காலநிலையானது, முன்னெப்போதையும் விட தீவிர மழை நிகழ்வுகளை மிகவும் கடுமையானதாகவும் கணிக்க முடியாததாகவும் ஆக்கியுள்ளது. இருப்பினும், நகர்ப்புறங்களில் வெள்ளம் மீண்டும் மீண்டும் வருவதை ஓரளவு மட்டுமே விளக்குகிறது. இதற்கான விளக்கமும் நில அரசியலில் புதைந்து கிடக்கிறது.
இந்திய துணைக்கண்டத்தில் உள்ள அனைத்து நகரங்களும் நீர்நிலை நகரங்கள். அவை ஆறுகளால் இழைக்கப்பட்டவை, சதுப்புநிலங்கள் மற்றும் நீரூற்றுகள் கொண்டவை, மேலும் அவை கண்ணுக்கு தெரியாத நீர்நிலைகளின் மேல் உருவாக்கப்பட்டுள்ளன’’ என்கிறார்கள்.
இப்படி நில அமைப்பை, சூழலியலை ஒரு பொருட்டாக மதிக்காமல், அவற்றை சிதைக்கும் வகையில் கட்டியமைக்கப்பட்ட நகரங்கள் அனைத்தும் புதிய தாராளவாதம் உருவாக்கிய ‘வளர்ச்சி’யாகும். அதன் பரிசுதான் வெள்ளப் பேரிடர்.
யார் ஆக்கிரமிப்பாளர்கள்?
சென்னை வெள்ள பாதிப்பை எதிர்கொள்ளும்போது மட்டும்தான் ஆக்கிரமிப்பு குறித்த விவாதங்கள் அனல் பறக்கின்றன. அவ்வாறான நேரங்களில் பொதுவாக ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்லும்போது அனைத்து மக்களையும் அதற்குள் நிறுத்திப் பேசும் போக்கு மேலோங்கி இருக்கிறது. ஆற்றங்கரையோரம் போடப்பட்ட சிறு குடிசைகள் மற்றும் சிறு வீடுகளில் உள்ள சாதாரண மக்களைக் குற்றவாளியாக்குகிறார்கள். அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மைநிலவரம் இந்த இலக்கணத்திற்கு எதிர்நிலையாக உள்ளது.
2015 வெள்ளத்திற்குப் பிறகு தமிழக அரசுக்கு அறிக்கை அளித்த அதிகாரிகள் குழு, ‘‘நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பும் மழைநீர் வடிகால்கள் சரியாகச் செயல்படாததும்தான் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதற்கான காரணம்’’ என்று கூறியது. அதைத் தொடர்ந்து நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள 71,262 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு அவற்றை அகற்றும் பணியைத் தொடங்கினார்கள். இதுதொடர்பாக, ‘‘மிதக்குமா, மீளூமா?’’ என்ற தலைப்பில் 21.11.2020 அன்று விகடன் இணையதளத்தில் வெளிவந்த சிறப்புக் கட்டுரை ஒன்று, மொத்தமுள்ள 71,262 ஆக்கிரமிப்புகளில் 17,400 மட்டுமே அகற்றப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து கூறியது.
மேலும், ‘‘முதல்வர் அகற்றியதாகக் குறிப்பிட்ட 17,400 ஆக்கிரமிப்புகளும் ‘கல்வித்தந்தைகள்’ கட்டிய வானுயரக் கல்லூரிகளா, கார்ப்பரேட் மருத்துவமனைகளா, பிரமாண்டமான ஜவுளிக் கடைகளா, மலைக்கவைக்கும் மால்களா என்றால் சத்தியமாக இல்லவே இல்லை. ஓலைக் குடிசையில் சாக்கைப் போட்டு ஒண்டியிருப்பவர்களை விரட்டிவிட்டு, ‘ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டோம்’ என்று பொல்லாத கணக்கு எழுதுகிறது அரசு. சொல்லப்போனால், ‘‘அந்தக் குடிசைகளையெல்லாம் அகற்றவே தேவையில்லை… வெள்ளம் வந்தால், தானாக மிதந்து சென்றுவிடும்’’ என்று எந்த வகையான ‘ஆக்கிரமிப்புகள்’ அகற்றப்பட்டன என்பதையும் கட்டுரையாளர் அம்பலப்படுத்தியுள்ளார்.
மீதமுள்ள சுமார் 53,000 ஆக்கிரமிப்புகளும் யாருடைய ஆக்கிரமிப்புகள் என்று சொல்லாமலே விளங்கும். சந்தேகமில்லாமல் அவை, கல்வித் தந்தையர்களின் கல்லூரிகள், கார்ப்பரேட் மருந்துவமனைகள், பிரம்மாண்ட ஜவுளிக்கடைகள், மால்கள், அபார்ட்மெண்ட் குடியிருப்புகள் போன்றவைதான்.
பொத்தேரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள பச்சமுத்துவின் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகம், குன்றத்தூர் மாதா கல்லூரி, போரூர் ராமச்சந்திரா கல்லூரி, மதுரவாயில் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம், ஜேப்பியாரின் பனிமலர், சத்தியபாமா, ஆவடி வேல்டெக், செயிண்ட் பீட்டர்ஸ் கல்லூரி போன்ற பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள்; இராமாபுரம் மியாட் மருத்துவமனை, பாடி சரவணா ஸ்டோர்ஸ் போன்றவையெல்லாம் ஏரிகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டவைதான். அமைந்தகரையில் உள்ள ‘‘ஸ்கை-வாக்’’ மால் கூவம் ஆற்றை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டது. பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை ஐடி கம்பெனிகளும் ரியல் எஸ்டேட் கும்பல்களும் ஆக்கிரமித்துள்ளன.
இவையெல்லாம் ஒருநாளும் விவாதப் பொருளாவதில்லை. ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் குடிசையில் வசிக்கின்ற சாதாரண அடித்தட்டு மக்களை நகரப்புறங்களுக்கு வெளியே வீசி எறிகிறார்கள். மறுகுடியமர்வு என்று இவர்களைக் கொண்டுபோய் குடியேற்றும் பெரும்பாக்கம், செம்மஞ்சேரி போன்ற பகுதிகளே கூட ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டவைதான். ஸ்மார்ட் சிட்டி, சிங்காரச் சென்னை என்று நகரங்களை கார்ப்பரேட்டுகளுக்கு வாரிக் கொடுக்கும் அரசுக்கு ‘ஆக்கிரமிப்பு அகற்றம்’ என்பது ஒரு சாக்காக அமைந்துவிட்டது என்பதுதான் உண்மை.
அ.தி.மு.க.வின் கொள்ளையும் தி.மு.க.வின் கொள்கையும்
கடந்த 2015 வெள்ள பாதிப்புக்குப் பிறகு, சென்னை நகரில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைப்பதற்கென்றே ரூ.8,820 கோடி ஒதுக்கியது எடப்பாடி அரசு. மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கென பிரத்யேகமாக சென்னையில் ரூ.1,200 கோடிகளை ஒதுக்கியது. இந்த ரூ.10,020 கோடி பணமும் எப்படி செலவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை இந்த பெருமழை காட்டிக் கொடுத்துவிட்டது. ஆயிரக்கணக்கான கோடி மக்கள் பணத்தை கொள்ளையடித்துவிட்டு, ‘‘ஒருநாள் மழைக்கே தாங்கவில்லை தி.மு.க. அரசு’’ என கொஞ்சமும் கூச்சமில்லாமல் பேசுகிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
குளமாகத் தேங்கி நிற்கும் மழை நீரில், தன் குழந்தையை பாதுகாப்பாக தக்கை ஓட்டில் அழைத்துச் செல்லும் பெற்றோர்கள்.
சென்னையின் உள் மற்றும் பிரதான சாலைகளின் மொத்த நீளம் சுமார் 3,000 கி.மீ. உள்ள நிலையில், சென்னை மாநகராட்சி பராமரிக்கும் வடிகால்களின் நீளமோ 1,894 கி.மீ. மட்டுமே. போதுமான வடிகால்கள் இல்லாததே மழைநீர்த் தேக்கத்திற்கு முக்கிய காரணம் என்பதால் கூடுதலாக பல இடங்களில் மழைநீர் வடிகால்கள் அமைப்பது என முடிவெடுக்கப்பட்டு, அதற்குத்தான் ரூ.8,820 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலும் அவ்வாறு புதிய வடிகால்கள் எதையும் கட்டவில்லை. ஏற்கெனவே இருந்த பழைய வடிகால்களையே இடித்து புதியதைப் போல கட்டி கணக்கு காட்டியிருக்கிறார்கள். குறிப்பாக உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணியின் பினாமிகளுக்குத்தான் பெரும்பான்மையான ஒப்பந்தங்கள் சென்றுள்ளது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள மழைநீர் வடிகால்கள் சில குறிப்பிட்ட பெரிய வடிகால்களோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த பெரிய வடிகால்கள் அடையாறு, கூவம், கொற்றலை என சென்னையிலுள்ள மூன்று ஆறுகளோடு இணைக்கப்பட்டிருக்கும், அதன் மூலம் உள்ளிழுத்துக் கொள்ளப்படும் நீரை பெரிய வடிகால்கள் ஆற்றில் கொட்டும், ஆற்றில் கலக்கும் நீர் வங்கக்கடலை நோக்கிப் பயணிக்கும். இதுதான் மழைநீர் வடிகால்கள் செயல்படும் முறை.
ஆனால் நகரத்திலுள்ள பெரும்பான்மையான வடிகால்கள் பெரிய வடிகால்களோடு இணைக்கப்படாமல் துண்டுதுண்டாக அப்படியே விடப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கும்போது குறிப்பிட்ட தூரம்வரை செல்லும் நீர் அதன் கொள்ளளவு முடிந்ததும் ஏற்கெனவே அதனுள்ளிருந்த சாக்கடையோடு சேர்ந்து மேலே கொப்பளித்து வந்து நாறுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.200 கோடி செலவு செய்யப்பட்ட தியாகராய நகரில், மழைநீர் குளம் போலத் தேங்கிக் கிடக்கிறது.
000
அ.தி.மு.க.வின் ஊழல் ஒருபக்கம் அம்பலப்பட்டு நாறிக்கொண்டிருக்கையில், ‘‘சென்னை மழைவெள்ளத்திற்கு காரணம் அ.தி.மு.க.வின் கடந்த பத்தாண்டு கால ஊழலே, இதுபற்றி ‘விசாரணை’ மேற்கொள்ளப்பட்டு அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்’’ என உறுதிமொழிகிறார் மு.க.ஸ்டாலின்.
ஆட்சிக்கு வந்ததிலிருந்து டெண்டர் ஊழல், நிர்வாக முறைகேடு – என பல விசயங்களில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியை தி.மு.க. குற்றம் சாட்டியது. ஆனால் என்ன ‘விசாரணை’ நடத்தி யாரை தண்டித்துவிட்டது? சென்னை கே.பி. பார்க் குடிசைமாற்று வாரிய கட்டிட ஊழல் பற்றி ஐ.ஐ.டி. அறிக்கை வந்தபிறகு நடவடிக்கை எடுக்கப்படுமென்று சொன்னார் அமைச்சர் சேகர்பாபு. டெண்டரில் ரூ.27 கோடி ஊழல் நடந்திருக்கிறது என்று அறிக்கை வந்திருக்கிறது. ஆனால் தி.மு.க. இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?
முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் காமராஜ், ரேஷன் கொள்முதலில் ரூ.2,028 கோடி ஊழல் செய்திருக்கிறார் என்பது ஆதாரத்துடன் அம்பலமாகி இருக்கிறது. முந்தைய ஆட்சிக் காலத்தில் மின்சாரக் கொள்முதலில் ஒரு இலட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் மீதெல்லாம் தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?
நாம் தொடக்கம் முதலே சொல்லிவருவதைப் போல, தி.மு.க.வானது அ.தி.மு.க.வின் ஊழல் குறித்து பேசுவதெல்லாம் வெறும் அரசியல் ஆதாயத்திற்காகத்தான். ஏனெனில், நடவடிக்கை எடுக்குமளவிற்கு தி.மு.க.வினர் யோக்கிய சிகாமணிகளல்ல. வடிகால் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட ரூ. 10,000 கோடிக்கும் மேலான மக்கள் பணத்தை கொள்ளையடித்து தின்றுவிட்டு, தற்போது சென்னை மக்களை மீண்டும் வெள்ளத்தில் தவிக்கவிட்டிருப்பது அ.தி.மு.க. மட்டுமல்ல, துறைசார்ந்த அதிகாரிகளும்தான். அத்துறைகளின் அதிகாரிகள் இல்லாமல் ஊழல் செய்திருக்க வாய்ப்பே இல்லை. எனில், அ.தி.மு.க.வைப் பற்றிப் பேசும் தி.மு.க., அதிகாரிகளைப் பற்றி பேசவில்லையே, ஏன்?
படிக்க :
சென்னை மழை வெள்ளம் – புவியியல் குறிப்பு
சென்னை மழைக்கு எல் நினோ மட்டும்தான் காரணமா ?
கடந்த ஆட்சியில் வெள்ளத்தடுப்பு பணிகளில் அ.தி.மு.க. அமைச்சர்களுடன் கூட்டுக் கொள்ளையடிப்பதில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சிப் பொறியாளர் நந்தகுமாருடன் உட்கார்ந்து கொண்டுதான் இந்த மழைவெள்ளம் குறித்துப் பேட்டி கொடுக்கிறார் மா.சுப்ரமணியன். இக்கொள்ளையில் பங்குபெற்ற இன்னொரு ஐ.ஏ.எஸ். அதிகாரியான கார்த்திகேயனுக்கு உயர் கல்வித்துறை செயலாளர் பொறுப்பு கொடுத்து கவுரவித்திருக்கிறது தி.மு.க. அரசு. ‘அம்மா’வின் அரசானாலும் சரி, ‘தளபதியார்’ அரசானாலும் சரி, காசு பார்க்க வேண்டுமென்றால் அதிகாரிகளின் துணையில்லாமல் முடியுமா? கொள்ளையில் கொள்கை வேறுபாடற்றவர்கள் இவர்கள். இந்த இலட்சணத்தில் குற்றவாளிகள் மீது ‘விசாரணை’ நடத்தி நடவடிக்கை எடுப்போம் என ஏய்த்து வருகிறது தி.மு.க. போதாதகுறைக்கு ‘‘எங்கள் தலைவர் செயல்தலைவர், பாருங்கள்.. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கே சென்று நேரில் பார்வையிடுகிறார், நிவாரணம் வழங்குகிறார்’’ என விளம்பரம் வேறு.
ஒவ்வொரு மழைக்காலத்திலும் எல்லா ஆட்சியிலும், ஏறக்குறைய இத்தகைய ஆய்வுகளும் நிவாரணங்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த ஆட்சிகளும் இதற்கெல்லாம் காரணம் முந்தைய ஆட்சிதான் எனக் குற்றம்சாட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. நாமும் நிவாரணக் கோரிக்கை வைப்பதோடு முடித்துக்கொள்கிறோம். சென்னையின் துயரம் இனிமேலும் தொடராமல் இருக்க வேண்டுமென்றால், அதிகார வர்க்கம், அரசியல்வாதிகளின் கூட்டுக் கொள்ளையை அம்பலப்படுத்தி அவர்களைத் தண்டிப்பதற்காகவும் போராட வேண்டியிருக்கிறது.

பால்ராஜ்

தைவான் : அமெரிக்க, சீன உலக மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய மையம் !

சீனாவில் மன்னராட்சியைத் தூக்கியெறிந்த 1911-ம் ஆண்டுப் புரட்சியின் 110-ஆவது நினைவுக் கூட்ட நிகழ்ச்சியில் பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங், ‘‘தைவான் அமைதியான முறையில் சீனாவுடன் இணைக்கப்படும், தைவான் அரசின் தனிநாட்டுப் பிரிவினைவாதம்தான், தாய்நாடான சீனாவுடன் மீண்டும் தைவானை ஒன்றிணைப்பதற்கு தடையாக இருக்கிறது. சீன அரசாங்கம் தனது தாய்நாட்டை முழுமையாக ஒன்றிணைக்கும் வரலாற்றுப் பணியை நிச்சயமாக நிறைவேற்றும்’’ என்று பேசியதைத் தொடர்ந்து சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலுள்ள பிரச்சினை சர்வதேச அளவில் பேசுபொருளானது.
ஷி ஜின்பிங்கின் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய தைவான் அதிபர் சாய் இங் வென், ‘‘நாம் எந்த அளவுக்கு சாதிக்கிறோமோ, அந்த அளவுக்கு சீனாவிடமிருந்து வரும் அழுத்தமும் நமக்கு அதிகரிக்கும். தைவான் சீனாவுடன் இணைக்கப்படும் என்ற சீனாவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் நாங்கள் அடிபணிய மாட்டோம்’’ என்றார்.
தைவான் இணைப்பு குறித்து ஷி ஜின்பிங் பேசுவதற்கு சில மாதங்களுக்கு முன்பிலிருந்தே,  150−க்கும் மேற்பட்ட போர் விமானங்களை அடுத்தடுத்து தைவான் வான் பரப்பில் பறக்கவிட்டிருக்கிறது, சீனா. இதுபற்றி ‘‘கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவுடனான உறவில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. 2025-ம் ஆண்டுக்குள் சீனா, தைவான் மீது போர்த்தொடுக்கும் நிலை உருவாகியிருக்கிறது’’ எனக் கூறுகிறார் தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சர் சியூ குவோ-செங்.
சீனாவுக்கும் தைவானுக்கும் இடையில் இவ்விவகாரங்கள் போய்க் கொண்டிருக்கும்போதே, பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘‘தைவானுக்கு சீனாவால் ஏதாவது ஆபத்து நேர்ந்தால், தைவானுக்கு நாங்கள் பாதுகாப்பளிப்போம்’’ என்கிறார். அதாவது அமெரிக்காவின் இராணுவத் தலையீடு இருக்குமென்கிறார். அவர் சொன்னதைப் போல, தைவானுக்குள் தனது இராணுவத் துருப்புகளை இறக்கியது அமெரிக்கா. ‘‘தைவான் இராணுவ வீரர்களுக்குப் பயிற்சியளிக்க குறைந்த அளவிலான அமெரிக்கத் துருப்புகள் உள்ளன’’ என பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த சாய் இங் வென், ‘‘எங்கள் பாதுகாப்பு திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்காவுடன் நாங்கள் பரந்த அளவிலான ஒத்துழைப்பை மேற்கொள்கிறோம்’’ என்று கூறினார்.
படிக்க :
தாலிபான்களிடம் ஆப்கானை தாரைவார்த்த அமெரிக்கா !
கியூபா நாட்டில் அமெரிக்கா நடத்தும் அடாவடித்தனங்கள் !
தைவானை சீனாவுடன் இணைக்கப்போவதாக ஷி ஜிங்பிங் கூறுவதும் ‘தைவானுக்கு ஆதரவு’ எனும் பெயரில் அமெரிக்கா தனது இராணுவத் துருப்புகளை தைவானில் குவிப்பதையும் புரிந்துகொள்ள நாம் தெற்காசியாவின் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவப் போக்குகளின் நிலைமைகளிலிருந்து இப்பிரச்சினையைப் பரிசீலிப்பது அவசியம்.
தைவான் மீது சீனாவிற்குள்ள மரபுரிமையும்
அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடும்
சீனா-தைவான் பிரச்சினை இன்று நேற்றல்ல, கிட்டத்தட்ட 1949-ம் ஆண்டில் இருந்தே தொடர்கிறது. காலங்காலமாக தைவான் சீனாவின் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது. தைவானைச் சேர்ந்தவர்களும் சீனாவைச் சேர்ந்தவர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள், ஒரே மொழி, நெருங்கிய பண்பாடு, வரலாற்றைக் கொண்டவர்கள். 1895-ம் ஆண்டு சீனாவை ஆண்ட கிங் வம்ச அரசுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான போரில், தைவானை ஜப்பான் கைப்பற்றி தனக்கு சொந்தமாக்கிக் கொண்டது.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் படுத்தோல்வி அடைந்தவுடன், தைவானை மீண்டும் சீனாவிடமே ஒப்படைத்துவிட்டது. உலகப் போர் முடிவடையும் போது, தோழர் மாவோ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியால், சீனாவில் புதிய ஜனநாயகப் புரட்சி வெடித்துக் கிளம்பியது. பெய்ஜிங்கை தலைநகராக கொண்ட சீனாவை ‘‘மக்கள் சீனக் குடியரசு’’ (PRC – People’s Republic of China) என தோழர் மாவோ அறிவித்தார். கோமிண்டாங் படைகள் விரட்டியடிக்கப்பட்டு தற்போதுள்ள சீனா முழுமையையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது.
சீனாவை முடக்குவதற்கு, அரசியல், பொருளாதாரம், இராணுவம் என அனைத்துத் துறைகளிலும் அமெரிக்க மேல்நிலை வல்லரசு நெருக்கடி கொடுத்து வருகிறது.
உள்நாட்டுப் போரில் விரட்டியடிக்கப்பட்ட சியாங்கே ஷேக் தலைமையிலான கோமிண்டாங் கட்சி தனது படைகள் – பரிவாரங்களுடன் சீனாவின் ஒரு பிராந்தியமான தைவான் தீவுக்கு தப்பியோடியது. தைபெய் (taipei) நகரை தலைநகரமாக கொண்டதுதான் உண்மையான ‘‘சீனக் குடியரசு’’ (ROC − Republic of China) என தன்னிச்சையாக அறிவித்துக் கொண்டது. அப்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் மாவோ தலைமையிலான புதிய ஜனநாயக சீனாவை சட்டப்பூர்வ நாடாக ஏற்றுக் கொள்ளவில்லை. தைவானையே சீனாவாக ஏற்றுக் கொண்டன. அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் தயவில்தான் இன்றைய தைவான் ‘இறையாண்மை’ பெற்ற தனிக் குடியரசானது.
1971-இல், சீனா தனது பொருளாதாரத்தை வலுவாகக் கட்டியெழுப்பி தலைதூக்கி நின்றபோது பெய்ஜிங்கை தலைநகராகக் கொண்ட மக்கள் சீனக் குடியரசை (PRC) அங்கீகரிக்கப்பட்ட நாடாக ஐ.நா சபையின் பெரும்பான்மையான நாடுகள் ஏற்றுக்கொண்டன. முன்னர் தைவானுக்கு வழங்கிய அங்கீகாரத்தை இரத்து செய்தன. அப்போது தைவானை மீண்டும் சீனா தன்னுடன் இணைத்துக் கொள்ள முயற்சித்தபோது, அதற்கு தைவான் எதிர்ப்பு தெரிவித்தது. தைவான் சீனாவினுடைய ஒரு பிரதேசம்தான் என்பதை 1979-ம் ஆண்டு (சீனாவை முதலாளித்துவப் பாதைக்கு அழைத்துச் சென்ற டெங் சியாவோ பிங் ஆட்சிக்காலம்) அமெரிக்காவும் ஏற்றுக் கொண்டாலும் சீனாவின் இறையாண்மைக்குக் கீழ் தைவான் கொண்டுவரப்படுவதை ஏற்றுக் கொள்ளாமல் இரட்டை நிலை வகித்தது.
அதாவது, அன்று மக்கள் சீனக் குடியரசான (PRC) தற்போதைய சீனாவும், சீனக் குடியரசாக (ROC) தன்னை அறிவித்துக் கொண்ட இன்றைய தைவானும் தாங்கள்தான் உண்மையான சீனா என்று கூறி ‘‘ஒரே சீனக் கொள்கையை’’ அறிவித்தன. இதில் மக்கள் சீனக் குடியரசின் (PRC) ஒரே சீனக் கொள்கையை அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. அதே நேரத்தில், சீனக் குடியரசு (ROC) என்று தைவான் தன்னை அறிவித்துக் கொள்வதையும் அதன் தனி இறையாண்மையையும் அமெரிக்கா மறுக்கவில்லை.
மாறாக, தைவான் உறவுச் சட்டம் (Taiwan Relation act − 1979) என்ற ஒரு சட்டத்தை அமெரிக்காவின் செனட் சபையில் கொண்டுவந்து தைவானுடனான உறவை அதிகாரப்பூர்வமற்ற வழிமுறைகளில் தொடர்ந்தது. அமெரிக்கா அன்றே கடைபிடித்த இந்த இரட்டை நிலைப்பாடுதான் இன்று சீனாவுக்கு எதிராக தைவானில் அது தலையிடுவதற்கான முகாந்திரத்தைக் கொடுத்துள்ளது.
ஏகாதிபத்திய சீனாவும் தைவான் தீவும்
1949-ம் ஆண்டினைப் போல தற்போதைய நிலை இல்லை. அன்று தைவானுக்கு மரபுவழி உரிமை கோரியது சோசலிச சீனா. இன்று சீனா அமெரிக்காவுக்கு சவால்விடக்கூடிய அளவிற்கு ஒரு ஏகாதிபத்திய நாடாக வளர்ந்துவரும் கட்டத்தில் உள்ளது. ஆசிய – ஆப்பிரிக்க கண்டங்களிலுள்ள பல நாடுகளை தனது அரசியல் – பொருளாதாரத் திட்டத்திற்குள் கொண்டுவந்து செல்வாக்கு மண்டலங்களை உருவாக்கி வருகிறது. உலக நாடுகளை இணைக்கும் சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டத்தை இதற்குச் சான்றாகச் சொல்லலாம். மேலும் பல்வேறு நாடுகளுக்கு கடன்கொடுத்து அங்கு தனது மூலதன நலன்களை விஸ்தரித்து வருகிறது.
அன்றைய சோசலிச சீனா தைவான் மக்களை சுரண்டலின் பிடியில் இருந்து விடுவிப்பதற்காக நின்றது, இன்றைய ஏகாதிபத்திய சீனா சுரண்டலுக்காக நிற்கிறது. எனவே இரண்டையும் நாம் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது.
தனது ‘ஒரே சீனக்’ கொள்கையின்படி தைவானின் வரம்புக்குட்பட்ட கிங்மென், பெங்கு, மாட்சு போன்ற சிறிய தீவுகளை சீனா தன்னுடன் இணைத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தைவானின் புவியியல் பரப்பு என்பது கிழக்கு ஆசியா மற்றும் தென் சீனக் கடலில் இராணுவ முக்கியத்துவம் பெற்ற பகுதியாக உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா மீது தாக்குதல்களை நடத்த தைவான் தீவைதான் ஜப்பான் பயன்படுத்தியது. இதுமட்டுமன்றி, தைவான் தீவு உலகின் கப்பல் போக்குவரத்திற்கு முக்கியமான இடமாக விளங்குகிறது. இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கிழக்கு சீனக் கடலில் உள்ள சீனாவின் கடற்கரையோரத்தில் ஆழமான நீர்த்துறைமுகங்கள் இல்லை. எனவே, தைவானை சீனா தன்னுடன் இணைத்துக் கொண்டால், அதன் நீர்மூழ்கிக் கப்பல்கள் தைவானின் ஆழ்கடல் துறைமுகங்களில் இருந்து பசிபிக் பகுதிக்கு மிக எளிதாக கொண்டு செல்லமுடியும்.
மேலும் 1990-களுக்கு பிறகு தைவான் மிகப் பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தைவானில் இருந்து மின்னணுப் பொருட்கள், கணினி, கார் உதிரி பாகங்கள், மருத்துவ சாதனங்கள், இரும்பு, கனிம இரசாயனங்கள், எண்ணெய் உள்ளிட்ட  எரிபொருட்கள், ஸ்மார்ட்போனுக்கு தேவையான உதிரிபாகங்கள் ஆகியவை தைவானிலிருந்து பெரியளவில் ஏற்றுமதியாகின்றன. தைவானை தன்னுடன் இணைத்துக் கொள்வதன் மூலம் இப்பொருளாதாரத்தை கட்டுப்படுத்த முடியும் என்பதோடு, ஏற்கெனவே உலகின் உற்பத்தி மையமாக உள்ள சீனாவுக்கு மலிவான உழைப்புச் சக்தியும் கிடைக்கும்.
1981-ம் ஆண்டு ‘ஒரு நாடு இரண்டு அமைப்புகள்’ என்ற கொள்கைப்படி ஹாங்காங்கில் இருப்பது போல தைவானுக்கும் தன்னாட்சி அதிகாரம் வழங்குவதாக சீனா முன்வைத்தது. ஆனால், தைவான் ஏற்றுக்கொள்ளவில்லை. 2005-ம் ஆண்டு, தைவானுக்கு எதிராக பிரிவினை எதிர்ப்புச் சட்டத்தை (Anti-Secession Law) பிறப்பித்தது சீனா. அமைதியான வழிமுறைகளின் மூலம் தைவானை தன்னுடன் இணைக்கும் முயற்சிக்கு தைவான் இணங்காவிட்டால், இராணுவ வழிமுறைகளைப் பயன்படுத்த சீனாவிற்கு இந்தச் சட்டம் உரிமை வழங்குகிறது.
சீனாவின் வளர்ச்சியைத் தடுக்க,
தெற்காசியாவில் களம் அமைக்கும் அமெரிக்கா!
சீனா மீது பொருளாதாரத் தடை, காப்புவாதம் ஆகிய ஆயுதங்களை அமெரிக்க மேலாதிக்க வல்லரசு ஏவியபோதிலும், அதனால் வெற்றி பெற முடியவில்லை. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுக்குப் போட்டியாக ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும்கூட சீனா சந்தையைக் கைப்பற்றி வருகிறது. தனது பொருளாதார ஆற்றலைக் கொண்டு அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்குப் போட்டியாக சீனா வளர்ந்துள்ளதால், அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையிலான முரண்பாடும் மோதலும் தீவிரமடைந்து வருகிறது. எனவே சீனாவை முடக்குவதற்கு, அரசியல், பொருளாதாரம், இராணுவம் என அனைத்து துறைகளிலும் அமெரிக்க மேல்நிலை வல்லரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. குறிப்பாக தனது கவனத்தை தெற்காசியாவின் பக்கம் திருப்பியிருக்கிறது.
அதில் ஒரு பகுதியாக, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு சீனாவுக்கு எதிராக அமெரிக்கா குவாட் என்னும் நான்கு முனைக் கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள நாடுகள், கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபடுவதோடு, தங்களது போர் விமானங்கள், போர்க் கப்பல்கள் உள்ளிட்டவற்றை மற்ற நாடுகளின் விமான நிலையங்களிலும் துறைமுகங்களிலும் நிறுத்தி பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் எரிபொருள்களை நிரப்பிக் கொள்ளவும் உணவு, உடை, நீர், மருத்துவம் மற்றும் இதர தொழில்நுட்ப சேவைகளைச் செய்துகொள்ளவும் முடியும். தன்னுடைய சீன எதிர்ப்பு இராணுவ போர்தந்திரத்திற்காகவே இந்த குவாட் கூட்டணியை உருவாக்கியுள்ளது என்பது உலகறிந்த இரகசியம்.
மேலும் சீனாவுடன் எல்லைப் பிரச்சினைகளைக் கொண்டுள்ள இந்தியா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை தூண்டிவிட்டு அவர்களை சீனாவுக்கு எதிரன நடவடிக்கைகளில் இறக்கிவிடுவதையும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது அமெரிக்கா. கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15 தேதி லடாக் எல்லையை ஒட்டியுள்ள கல்வான் பள்ளத்தாக்கில், சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் நடந்த பயங்கரமான மோதலின் தொடர்ச்சியாக அமெரிக்கா இந்தியாவை தொடர்ந்து போருக்குத் தூண்டிவிட்டதே இதற்குச் சான்றாகும்.
சீனாவின் அண்டை நாடுகளில் மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகள் மட்டுமல்லாமல், சீனாவிற்குட்பட்ட சுயாட்சிப் பகுதிகளில் உள்ள பிரச்சினைகளைப் பயன்படுத்தியும் சீன அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை கட்டியமைத்து நெருக்கடி கொடுத்துவருகிறது அமெரிக்கா.
ஹாங்காங்கின் ‘‘கைதிகள் பரிமாற்றச் சட்டத்தில்’’ திருத்தம் கொண்டுவர ஹாங்காங் அரசு 2019 ஏப்ரலில் முடிவு செய்தது. இச்சட்டத் திருத்தத்திற்கு எதிராக, மாணவர்களும் இளைஞர்களும் ஹாங்காங் அரசிற்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இப்போராட்டங்களை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் கூடுதலாகத் தூண்டிவிட்டன.
இதேபோல, சீனாவின் வடமேற்கு பகுதியிலுள்ள ஷின்ஜியாங் மாகாணத்தின் உய்குர் சுயாட்சிப் பிரதேசத்தில், அம்மக்களின் தனித்த அடையாளம், மரபுகள் மற்றும் பண்பாட்டுக்கு எதிராக சீன அரசின் சட்டங்களும் நடவடிக்கைகள் அமைந்துள்ளதாகக் கூறி அங்குள்ள துர்கிஸ்தான் இஸ்லாமிய கட்சியானது (TIP – Turkistan Islamic Party) தனிநாடு கோரிக்கையை முன்வைக்கிறது. இக்குழுவை அமெரிக்காதான் ஊட்டி வளர்க்கிறது. சீனாவின் பயணிகள் விமானத்தைத் தகர்க்க முயற்சித்ததோடு, பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது கஷ்கர் நகரில் குண்டு வெடிப்புகளை நடத்தி பலரைப் படுகொலை செய்தது இத்தீவிரவாத குழு.
இவ்வாறு தெற்காசியப் பிராந்தியத்தில், சீனாவை சுற்றி வளைத்து நெருக்கடி கொடுத்து வரும் அமெரிக்காவிற்கு தற்போதைய சீனா – தைவான் பிரச்சினை பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக மாறியிருக்கிறது. ‘தைவானின் இறையாண்மையைக் காக்க உதவுகிறோம்’ என்ற போர்வையில், சீனாவிற்கு எதிராக இராணுவ மிரட்டல் விடுக்கும் வாய்ப்பை அமெரிக்காவிற்கு வழங்கியிருக்கிறது.
படிக்க :
கொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை !
மக்கள் சீனக் குடியரசு – 72 : சீனா சிவப்பானது எப்படி ?
நெடுங்காலமாக தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்துவரும் அமெரிக்கா, தற்போது மிகப்பெரிய அளவில் விற்பனையை அதிகரித்திருக்கிறது. 2020-ம் ஆண்டில் 280 பில்லியன் டாலர் ஆயுதங்களை விற்பனை செய்த அமெரிக்கா, 2021-ம் ஆண்டில் அதை 750 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. மேலும் தைவானுக்கு இராணுவப் பயிற்சியளிப்பதில் தொடங்கி, தனது இராணுவத் தளவாடத்தையே தைவானில் அமைத்து சீனாவை அச்சுறுத்துகிறது அமெரிக்கா.
கூடுதலாக அமெரிக்கா, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடத்தவிருக்கும் முதல் சர்வதேச ஜனநாயக உச்சி மாநாட்டிற்கு, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் தைவானை தனி நாடாக அங்கீகரித்து அழைப்புவிடுத்துள்ளது. இவையெல்லாம் சீனா – தைவான் இடையே மேலும் கடுமையான மோதல் போக்கையும், சீனாவுடனான அமெரிக்காவின் பனிப்போரையும் தீவிரப்படுத்தியிருக்கிறது.
தைவான் சீனாவுடன் இணைவதும் இணைய மறுப்பதும் அம்மக்களுக்கும் சீன அரசுக்கும் உள்ள பிரச்சினை. சீனாவுடன் தைவான் மக்கள் இணைய மறுத்தால், அதற்கெதிராக அவர்கள் சுயமாக அணிதிரண்டுப் போராடுவதே சரியானது.
உலகெங்கும் உள்ள ஜனநாயக சக்திகளும் உழைக்கும் மக்களும் அப்போராட்டத்தை வரவேற்க கடைமைப்பட்டிருப்பார்கள். ஆனால், தங்கள் ‘இறையாண்மையை’ வென்றெடுக்க தாம் உதவுவதாகக் கூறி உள்நுழையும் அமெரிக்காவை அம்மக்கள் நிச்சயம் புறக்கணிக்க வேண்டும். ஒரு மேலாதிக்கத்திற்கு எதிராக, இன்னொரு மேலாதிக்கத்தை அரவணைப்பதன் மூலம் உண்மையான விடுதலையையும் இறையாண்மையையும் என்றுமே வென்றெடுத்ததில்லை.
எல்லா ஏகாதிபத்தியங்களின் நோக்கமும் மேலாதிக்கம்தானே ஒழிய அவர்கள் நமக்கான ‘மீட்பர்கள்’ இல்லை. ‘‘அதிபர் சாய் இங் வென் தனது அமெரிக்க எஜமானது மேலாதிக்க நோக்கத்திற்காக தைவானை அடகு வைக்கும் தேசத் துரோகத்தை எதிர்த்து முறியடிப்போம்! தைவானது சுயநிர்ணய உரிமையை உழைக்கும் மக்கள் முடிவுசெய்வோம்!” – என்ற முழக்கம்தான் தைவானில் எழுப்பட வேண்டியுள்ளது.

வெண்பா

நாடெங்கும் உரத் தட்டுப்பாடு : விவசாயிகளை வஞ்சிக்கும் மோடி அரசு!

ந்தியாவின் இரண்டு முக்கியமான பயிரிடும் பருவங்களில் ஒன்று குறுவை. வடகிழக்குப் பருவமழை தொடங்கும் இந்தக் காலகட்டத்தில் வடநாட்டில் கோதுமை – கடுகும், தென்னாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் நெல்லும் பிரதானமாக பயிர் செய்யப்பட்டு வருகின்றன. அரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் விவசாய வேலைகள் மும்முரமாக நடக்கும் காலமிது. ஆனால், நாடெங்கும் கடும் உரத் தட்டுப்பாடு நிலவுவதால் வழக்கமான விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் நெருக்கடிக்கும் பெரும் வேதனைக்கும் ஆளாகியிருக்கிறார்கள் விவசாயிகள்.
ஏற்கெனவே வாங்கியிருந்த கடன்களின் அழுத்தம், தொடர்ந்து அதிகரித்து வரும் டீசல் விலை – அதனால் அதிகரித்துவரும் டிராக்டர் வாடகை, மின் கட்டண உயர்வு (பல மாநிலங்களில் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் இல்லை) இவை உருவாக்கியுள்ள நெருக்கடி ஒருபக்கம், உரிய காலத்தில் மழைப்பொழிவு இருந்தும் போதிய உரங்கள் கிடைக்காத நெருக்கடி மறுபக்கம் என விவசாயிகள் பல்முனை நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். விதைப்புப் பருவம் தவறி விடுமோ, முளைத்த பயிர்கள் வளராதோ, கதிர்விட்டவை சோடை போய்விடுமோ எனத் தாளமுடியாத மன உளைச்சலில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தில் நாட்கணக்கில் உரம் வாங்குவதற்காக வரிசையில் நிற்கும்போதே சில விவசாயிகள் நிலைகுலைந்து வீழ்ந்து  இறந்துள்ளனர். அதே மாநிலத்தில் இன்னும் சில விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இத்தனை உயிர்ப்பலிகள் நேர்ந்தாலும், உரத் தட்டுப்பாடு அறவே இல்லை எனப் புளுகும் அதிகாரிகள், அமைச்சர்களின் பேச்சுகள் விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளன.
படிக்க :
விவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு !
உர விலையேற்றம்: விவசாயத்தைச் சூறையாடும் தனியார்மயத் தாக்குதல்!
இதன் விளைவாக, விவசாயிகள் ஆங்காங்கே உரக் கிடங்குகளுக்குச் சென்று உரங்களைக் கைப்பற்றி வருகின்றனர். மத்தியப்பிரதேசத்தில், ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமரின் தொகுதியிலேயே    விவசாயிகள் இவ்வாறு உர மூட்டைகளைக் கைப்பற்றிய சம்பவம் நடந்துள்ளது. பல இடங்களில் தனியார் உரக் கிடங்குகளில் உள்ள உர மூட்டைகளைக் கைப்பற்றி எடுத்துச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாகி வருகின்றன.
இவ்வாண்டில் தமிழ்நாட்டிலும் தேவைக்கு அதிகமாகவே மழை பெய்துள்ள நிலையில், குறுவை சாகுபடிக்குப் போதுமான உரங்கள் இல்லை. மாநிலத்துக்குத் தேவையான உரங்களை அனுப்பி வைக்குமாறு மாநில வேளாண் அமைச்சர், ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். பல்வேறு கட்சித் தலைவர்களும் இப்பிரச்சினை தொடர்பாக அறிக்கைவிட்டு வருகின்றனர். தஞ்சை, ஈரோடு, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் போதுமான உரங்கள் கிடைக்காத நிலையில், அடுத்த லாரி எப்போது வருமென்று உரக்கடைகள் முன் விவசாயிகள் காத்துக்கிடக்கின்றனர்.
உரத் தட்டுப்பாட்டையும், விவசாயிகளின் அவலநிலையையும் பயன்படுத்திக் கொண்டு, தாறுமாறாக விலையேற்றி கள்ளச்சந்தையில் விற்பது ஒருபக்கம்; களைக்கொல்லிகள், நுண்ணூட்டச் சத்துகள் போன்ற இடுபொருட்களைச் சேர்த்து வாங்க வேண்டும், பழைய கடன்களை அடைத்தால்தான் உரங்களைத் தருவோம் என்றும் தனியார் உரக்கடைகள் விவசாயிகளைச் சுரண்டி வருவது மறுபக்கமும் நடந்து கொண்டிருக்கிறது.
விவசாய விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்கு பாடம் சொல்லித்தர நினைத்து, மோடி அரசு இத்தகைய பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் சங்கத் தலைவரும் விவசாயப் போராட்ட முன்னணியாளருமான ராகேஷ் திகாயத் குற்றஞ்சாட்டியுள்ளார். தற்போதைய உரத் தட்டுப்பாட்டுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனினும், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் இத்தகைய நெருக்கடிகளுக்குப் பின்னால் இந்திய அரசின் விவசாய விரோத – கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளே ஒளிந்திருக்கின்றன.
இறக்குமதியே முதன்மைக் காரணம்
இந்தியாவில் 1906-ம் ஆண்டே இராணிப்பேட்டையில் உரத் தொழிற்சாலை தொடங்கப்பட்டிருந்தாலும் பசுமைப் புரட்சிக்குப் பிறகு, பெருமளவில் இரசாயன உரப் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. நாட்டின் உரத் தேவைக்கு ஏற்ப புதிய உரத் தொழிற்சாலைகளை அரசு நிறுவவில்லை. நாடு முழுவதும் 56 பெரிய ஆலைகள், 72 நடுத்தர மற்றும் சிறு ஆலைகள்  இயங்கினாலும், 9 பொதுத்துறை மற்றும் இரண்டு கூட்டுறவு உரத் தொழிற்சாலைகள்தான் அரசு சார்பில் இயங்கி வருகின்றன.
மத்தியப் பிரதேசத்தில் உரம் வாக்குவதற்காக வரிசையில் அலைமோதும் விவசாயிகள்.
இவை, தொடர்ந்து அதிகரித்துவரும் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானவையாக இல்லை. மேலும் உரத் தயாரிப்புக்கான மூலப்பொருட்களும் தேவைக்கேற்ப இல்லை. இதனால் நீண்ட காலமாகவே, தேவையான உரங்களை பெருமளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருந்துவருகிறது. யூரியா, டி.ஏ.பி போன்றவை குறிப்பிட்ட அளவுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்டாலும் பொட்டாஷ் உரம் மற்றும் அதற்கான மூலப்பொருட்களுக்கு முழுமையாக இறக்குமதியைச் சார்ந்தே இந்திய உரச் சந்தை இயங்குகிறது.
இந்நிலையில், பாஸ்பேட் உரங்களுக்கான மூலப்பொருட்கள் ஒருசில நாடுகளில் மட்டுமே இயற்கையாகக் கிடைப்பதால், உர மூலப்பொருள் விலைகள் உலகெங்கும் பெருமளவில் உயரும் என்றும், அதன் உற்பத்தி குறைக்கப்பட்டு விடும் என்றும் சர்வதேச வேளாண்மைப் பொருளாதார நிபுணர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே தெரிவித்து வந்தனர். இந்தியாவில் கிடைக்கும் பாஸ்பேட்டும் நாட்டின் உரத் தேவைகளுக்கு இனிவரும் 29 ஆண்டுகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
டி.ஏ.பி. போன்ற உரத் தேவைகள் குறைவாக உள்ள பிரிட்டன் போன்ற நாடுகள் கூட பாஸ்பேட் உரத்திற்கான மாற்றுகளை வெற்றிகரமாக கண்டுபிடித்து வணிகரீதியில் செயல்படுத்த முயற்சி செய்து வருகின்றன. ஆனால், நூற்றுக்கணக்கான வேளாண்மை ஆய்வு நிறுவனங்கள் உள்ள இந்தியாவில் அதற்கான ஆராய்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்படவில்லை. ‘சுயசார்பு இந்தியா’ என முழங்கும் மோடி அரசிலும் இதே நிலைதான்.
காங்கிரஸ் வழியிலேயே மோடி
எப்போதெல்லாம் மோடி அரசின் மக்கள் விரோதத் திட்டங்களுக்கு மக்கள் எதிர்ப்பு உருவாகிறதோ, அப்போதெல்லாம் மோடியும் அவரது சகாக்களும் காங்கிரசை நோக்கிக் கைகாட்டுவார்கள்; காங்கிரஸ் தொடங்கி வைத்ததைத்தானே செய்கிறோம் என்பார்கள். தேர்தல்கள் வந்துவிட்டாலோ, ‘‘இத்தனை ஆண்டுகளாக நாட்டைச் சீரழித்தது காங்கிரசு தான், அதை வேரறுக்க வேண்டும்’’ என வீரவசனம் பேசுவார்கள். ஆட்சிக்கு வந்ததும் காங்கிரசை விட வேகமாக கார்ப்பரேட் ஆதரவு மக்கள் விரோதத் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்துவார்கள்.
அதே அணுகுமுறையைத்தான் உர இறக்குமதியிலும் மோடி அரசு கையாண்டு வருகிறது. 2011-ம் ஆண்டில் சௌமித்ரா சௌத்ரி குழு பரிந்துரையின் அடிப்படையில் உரங்களின் விலையைத் தீர்மானிக்கும் உரிமையை உர நிறுவனங்கள் – முதலாளிகள் கையில் ஒப்படைத்தது அப்போதைய காங்கிரஸ் அரசு. விவசாயிகளுக்கு நுண்ணூட்டச்சத்து அடிப்படையில் மானியம் என்ற பெயரில் நேரடியாக கம்பெனிகளுக்கே மானியத்தைக் கொடுப்பதாக அறிவித்து செயல்படுத்தியும் வருகிறது ஒன்றிய அரசு. மேலும், தேவைக்கேற்ப உரங்களை இறக்குமதி செய்யும் உரிமையையும் தனியாருக்கே தாரைவார்த்துவிட்டது. அதாவது, விவசாயத்தைக் கார்ப்பரேட் பிடியில் சிக்கவைக்கும் சிலந்தி வலையின் ஓர் அங்கமே இத்திட்டம். நாட்டை மறுகாலனியாக்கும் நோக்கத்தில் காங்கிரசு கொண்டு வந்த இந்த விவசாய விரோத திட்டத்தைத் தீவிரமாகவும் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தி வருகிறது மோடி அரசு.
மானிய வெட்டும் உரத் தட்டுப்பாடும்
உற்பத்தி, இறக்குமதி, விலை நிர்ணயம் என எல்லாவற்றிலும் தனியாரின் ஆதிக்கத்தை அனுமதித்த நிலையில், அதனால் தொடர்ந்து ஏற்படும் விலையுயர்வை ஈடுகட்ட, ஆண்டுதோறும் ஒரு இலட்சம் கோடிக்கும் அதிகமாக மானியம் என்ற பெயரில் உரக் கம்பெனிகளுக்கு அள்ளிக்கொடுத்து வருகிறது ஒன்றிய அரசு. இத்திட்டம் உர நிறுவனங்களுக்கே அதிகம் பலனளித்தாலும், நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் பொசிவதைப் போல விவசாயிகளுக்கு ஓரளவு ‘குறைந்த விலையில்’ உரம் கிடைத்து வந்தது. இவ்வாண்டில், மோடி அரசு இதிலும் கை வைத்திருக்கிறது.
பறிமுதல் செய்த உர மூட்டையை விவசாயி ஒருவர் தன் தோளில் தூக்கிச் செல்கிறார்.
கடந்த 2020-21 நிதியாண்டில் ரூ.1,33,947 கோடி உர மானியத்திற்காக ஒதுக்கிய மோடி அரசு, நடப்பாண்டில் ரூ.79,530 கோடிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. அதாவது ரூ.54,417 கோடி வெட்டப்பட்டுள்ளது. அதன்பிறகு ஜூன் மாதத்தில் ஒருமுறையும், அக்டோபரில் ஒருமுறையும் மானியத்தொகையை உயர்த்தியதால், மொத்தமாக ஒரு இலட்சம் கோடியைத் தாண்டும் எனினும், இத்தொகை கடந்த ஆண்டை விடக் குறைவே.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மானியக்குறைப்பை சாக்காக எடுத்துக்கொண்ட உர நிறுவனங்கள், ‘‘சர்வதேச சந்தையில் மூலப் பொருட்கள் விலையேறிவிட்டன, போதுமான தொகையை அரசு தரவில்லை’’ என்று கூறி உற்பத்தியைக் குறைத்திருக்கின்றன. மேலும், தங்களுக்குள் கூட்டணி அமைத்துக்கொண்டு உரங்களின் விலையையும் கடுமையாக உயர்த்தியிருக்கின்றன. ரூ.1,200-க்கு விற்று வந்த ஒரு மூட்டை டி.ஏ.பி.யை ரூ.2,400 என நிறுவனங்கள் விலையை உயர்த்திக் கொண்டுவிட்டன. பொதுவாக விலை உயர்வு குறித்து கோபமடைந்தாலும், வேறுவழியில்லாத இந்திய விவசாயிகள் கூடுதல் விலை கொடுத்தே வாங்கினர். இப்போது ஒன்றிய அரசு மானியத்தொகையை ரூ.700 அதிகப்படுத்தி மூட்டைக்கு ரூ.1,200-ஆக ஆக்கியுள்ளது. அதாவது ரூ.2,400 விலை வைக்கப்பட்ட உரத்தை விவசாயிகள் ரூ.1,200-க்கு இனி  பெறுவார்கள்.
இந்த மானியத்தையும் கூட காலங்கடந்து, அதாவது அக்டோபர் மூன்றாவது வாரத்தில்தான் வழங்கியது. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான குறுவை சாகுபடி தொடங்கிய பிறகே, அதாவது ‘கண்கெட்ட பிறகே சூரிய வணக்கம்’ செய்திருக்கிறது மோடி அரசு. இதன் விளைவாக உர நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைத்து, கடும் தட்டுப்பாடு உருவாகியிருக்கிறது. இப்படி குறுவை சாகுபடியை சீர்குலைத்துவிட்டு, உரத் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை விவசாயிகள் நம்ப வேண்டாம் என்கிறார் ஒன்றிய உரத்துறை அமைச்சர் மாண்டவியா. உரம் கிடைக்காமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட உ.பி.யிலோ உரத் தட்டுப்பாடே இல்லையென அமைச்சர், அதிகாரிகள் அனைவரும் ஊடகங்களின் முன் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த நிதியாண்டில் (2020−21) உரத் தயாரிப்புக்கான பெட்ரோலிய மூலப்பொருட்களின் விலை, சர்வதேசச் சந்தையில் இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்தது. இதன் காரணமாக, நார்வே உள்ளிட்ட பல முன்னணி உற்பத்தி நாடுகள், யூரியாவின் மூலப்பொருளான அமோனியா உற்பத்தியைப் பாதியாகக் குறைத்துவிட்டன. இந்த உற்பத்திக் குறைவின் எதிரொலியாக அமோனியா விலை சர்வதேசச் சந்தையில் மூன்று மடங்குக்கும் மேல் அதிகமாகியுள்ளது.
உலகின் பல நாடுகள் உரத் தேவைகளுக்கான மூலப்பொருள் தேவையை நிறைவு செய்ய பெட்ரோலிய நிறுவனங்களுடன் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விலை நிர்ணய ஒப்பந்தம் செய்து கொள்வது வழக்கம். இப்படிப்பட்ட விலை நிர்ணய ஒப்பந்தங்களை இந்திய அரசும் கடந்த ஆண்டுவரை செய்து வந்தது. அப்படி பெறப்பட்ட மூலப் பொருட்கள் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப பிரித்து வழங்கப்பட்டு வந்தன.
ஆனால் கடந்த ஆண்டில் மோடி அரசு, தனியார் உர ஆலைகள் அவரவர் தேவைக்கு ஏற்ப தனித்தனியாக சர்வதேச ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளலாம் என்று தன் பொறுப்பைக் கைகழுவிவிட்டது. அதே சமயத்தில், ஆகஸ்ட் மாதத்தில் உரத் தட்டுப்பாடு பூதாகரமாக தெரியத் தொடங்கிய போது, உற்பத்திக் குறைவுக்கு தனியார் ஆலைகள்தான் காரணம் என்றனர் மோடி அரசின் அதிகாரிகள்.
இன்னொரு பக்கத்தில், இஃப்கோ (IFFCO) நிர்வாக இயக்குநர் யு.கே. அவஸ்தி, சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள மூலப்பொருட்களின் விலையுயர்வே காரணமென சாதிக்கிறார். சர்வதேச விலையுயர்வு ஒரு அம்சம்தான் என்றாலும், மோடி அரசின் மானிய வெட்டும், விவசாய விரோதக் கொள்கையும்தான் காரணம் என்பதைப் பற்றி இருதரப்புமே மூச்சுகூட விடுவதில்லை.
உரத்தட்டுப்பாடு, விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடும் தமிழக விவசாயிகள்.
தனியார்மயம், கார்ப்பரேட்மயம் என்றாலே இலஞ்ச ஊழல் தவிர்க்க முடியாத அம்சம் என்பது இந்த விசயத்திலும் அம்பலமாகியிருக்கிறது. விலை உயர்வுக்கு நியாயம் கற்பித்துப் பேசும் அவஸ்தி மீது, சி.பி.ஐ தொடுத்துள்ள ஊழல் வழக்கை உதாரணமாகக் கூறலாம்.
மானியத்தில் மஞ்சள் குளிக்கும் அதிகார வரக்கம்:
உர இறக்குமதி விவகாரத்தில் துபாயைச் சேர்ந்த கிசான் டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திடமிருந்து கோடிக்கணக்கில் இலஞ்சம் வாங்கியதாக, கூட்டுறவு உற்பத்தி நிறுவனமான இஃப்கோ (IFFCO) -வின் நிர்வாக இயக்குனர் யு.கே. அஸ்வதி மற்றும் இந்தியன் பொட்டாஷ் லிமிட்டெட் (ஐ.பி.எல்) நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் பர்விந்தர் சிங் கெலாட் மீது கடந்த ஜூன் மாதத்தில் சி.பி.ஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. கடந்த 2013 – 2017 ஆண்டுகளில் இறக்குமதி செய்யப்படும் உரம் மற்றும் மூலப்பொருட்களுக்கான மானியத்தில் மோசடி செய்யும் நோக்கில், செயற்கையாக விலையேற்றத்தைக் கணக்குக் காட்டி இறக்குமதி செய்துள்ளதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதற்கான இலஞ்சமாக ரூ.685 கோடியைப் பெற்றுள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கை குறிப்பிடுகிறது.
இதையடுத்து, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவது, உர நிறுவன முறைகேடு ஆகிய வழக்குகளில் மத்திய அமலாக்கத்துறை, துபாயை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஜோதி டிரேடிங் கார்ப்பரேஷன் என்னும் நிறுவனத்தின் துணைத்தலைவரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான அமரேந்திர தாரி சிங்கை கைது செய்தது. அவஸ்தி மற்றும் பர்விந்தர் மீது சி.பி.ஐ நடவடிக்கை எடுக்கும் முன்பாக தன்னிடம் அனுமதி பெற வேண்டுமென டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை ஆகஸ்ட் மாதத்தில்  பிறப்பித்துள்ளது.
உரத்துக்கான மானியத்தை கம்பெனிகளுக்கே நேரடியாகக் கொடுப்பது, இறக்குமதி செய்து கொள்ளவும், விலையைத் தீர்மானித்துக் கொள்ளவும் கம்பெனிகளுக்கே அதிகாரம் கொடுத்தது போன்றவை பெரும் ஊழலுக்கு வழி செய்துள்ளன என்பதை மேற்சொன்ன வழக்கு உறுதிப்படுத்தியுள்ளது.
000
தேர்தல் வாக்குறுதிகளில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக சூளுரைத்த மோடியின் அரசு, உரங்களின் விலையைத்தான் இரட்டிப்பாக்கி இருக்கிறது. விவசாயிகளின் நண்பன் என்று சொல்லிக்கொண்டு உரங்களுக்கான மானியத்தைத்தான் வெட்டிக் கொண்டிருக்கிறது. ஊழலுக்கு எதிரான ‘தூய’ ஆட்சி தரும் மோடியின் ஆட்சியில்தான் அதிகார வர்க்கம் மானியத்தின் பெயரால் மஞ்சள் குளித்து, இலஞ்ச ஊழலில் ஊறித் திளைக்கிறது.
படிக்க :
விளைந்த நெல்லை கொள்முதல் செய்ய எடப்பாடி அரசிடம் சாக்குப் பைகள் இல்லையாம் !
முளைவிடும் அறுவடை நெல் || அம்பலமாகும் சங்கிப் பள்ளிகள் || கருத்துப்படங்கள் !
விவசாயிகளோ, பருவத்தில் விதைக்க வேண்டும், தருணத்தில் உரமிட வேண்டுமே என்ற பதைபதைப்பில் இருக்கிறார்கள். உரம் கிடைக்காத நிலையில், அலைந்து திரிந்து நெஞ்சடைத்து சாகிறார்கள். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் ‘நாட்டுக்காக உழைக்கும்’ மோடியோ, கடைசி நேரம் வரை போராடும் விவசாயிகளைச் சந்திப்பதுமில்லை, அவர்களின் நலன் குறித்து சிந்திப்பதுமில்லை. நேரெதிராக, விவசாயிகளை விவசாயத்தை விட்டு விரட்டுவது குறித்தும், விவசாயத்தைக் கார்ப்பரேட்மயமாக்குவது குறித்துமே மோடியின் அரசு சிந்திக்கிறது.
புளூம்பர்க் போன்ற சர்வதேச புள்ளிவிவர, பொருளாதார நிறுவனங்கள் வரும் ஆண்டுகளில் உணவுத் தட்டுப்பாடும் உணவுப்பண்ட விலைகளும் இந்தியா போன்ற பல நாடுகளில் அசாதாரணமான சூழ்நிலையை உருவாக்கும் என்று எச்சரித்துள்ளன. நல்வாய்ப்பாக, இந்தியா கடந்த பத்து ஆண்டுகளில் பெரும் வறட்சியையோ பயிர்ச்சேதத்தை உருவாக்கும் பெரும் விளைவுகளையோ எதிர்கொள்ளவில்லை. ஆனால், ‘வளர்ச்சி நாயகன்’ மோடியின் அரசு உருவாக்கியுள்ள உரத் தட்டுப்பாடும், அதைத் தொடர்ந்து வரவிருக்கும் உற்பத்திக்குறைவும் சில காலம் தொடர்ந்தால் அந்நிலை நிச்சயம் ஏற்படக் கூடும்.
விவசாய விரோத வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் குறித்து ஓராண்டு காலமாக அலட்டிக் கொள்ளாத மோடி, உத்தரப்பிரதேச தேர்தல் நெருங்கும் சமயத்தில் பின்வாங்கியிருக்கிறது. அதே நோக்கம்தான் உரத்துக்கான மானியவெட்டிலிருந்து பின்வாங்குவதிலும் ஒளிந்திருக்கிறது. இப்போது வெளிப்படுவது விவசாயிகள் மீதான மோடியின் அக்கறையல்ல, கார்ப்பரேட் விசுவாசமே. உரிய தருணத்துக்காக அவர்கள் பதுங்குகிறார்கள்.

கிருஷ்ணராஜ்

ஆதார் அபாயம் : காங்கிரஸ் பிஜேபி கள்ளக் கூட்டணியும் இடதுசாரிகள் செய்யத் தவறியதும் || மு. இக்பால் அகமது

ஆதாரே ஆபத்தானது : காங்கிரஸ் பிஜேபி கள்ளக் கூட்டணியும் இடதுசாரிகள் செய்யத் தவறியதும்
வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைப்பதால் ஆபத்து என்று இடதுசாரிகளுடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சியும் கூச்சல் போடுவது கள்ளத்தனம்.
அன்றைய காங் மன்மோகன் அரசுதான் மக்களை உளவுபார்க்கும் கருவியாக ஆதாரை பிடிவாதமாக சட்டமாக்கியது. அன்று அதன் அபாயத்தை இடதுசாரிகள் குறைத்து மதிப்பிட்டார்கள் அல்லது உணரவே இல்லை என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆதார் குடிமக்கள் அட்டை அல்ல, வெறும் அடையாள அட்டை மட்டுமே, கட்டாயம் அல்ல, விருப்பத்தின் பேரில் பெற்றுக்கொள்வது என்றெல்லாம் ஏமாற்றினார்கள்.
இப்போது கழிப்பறை தவிர அனைத்து பயன்பாட்டுக்கும் அல்லது உயிர் வாழ்வதற்கும் ஆதாரை கட்டாயமாக்கியுள்ளது பாஜக அரசு. இதை தொடங்கி வைத்தது காங்கிரஸ், அதன் அபாயத்தை உணர்ந்து தடுப்பதற்கான முயற்சி எதையும் செய்யாமல் இருந்தவர்கள் இடதுசாரிகள். நான் நேரடியாக குற்றம்சாட்ட காரணம் உள்ளது.
ஒன்பது வருடங்களுக்கு முன்பே பேச வேண்டிய இடத்தில் பேசினேன், பதிவு செய்ய வேண்டிய இடத்தில் எழுத்திலும் பதிவு செய்தேன். பாறை போன்ற மவுனம் மட்டுமே பதிலாக வந்தது கண்டு சோர்வுற்றேன், வெறுப்பே மிஞ்சியது. ஒரு படி மேலே சென்று, இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆதார் கார்டு பெற்றுவிட்டதால் அமைதியாக இருக்கின்றீர்களா என்றும் எழுத்தில் கேட்டுவைத்தேன், அதற்கும் பதில் இல்லை. இப்போது தும்பைவிட்டுவிட்டு வாலைப்பிடிக்க ஓடுவது அறிவான செயல் அல்ல.
படிக்க :
“ஆதார் முதல் ஆரோக்கிய சேது வரை” – மக்களை கண்காணிக்கும் அரசு !
ஆதாரோடு வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் தேர்தல் சட்ட திருத்த மசோதா – 2021 !
இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் மட்டும் ஆதாரை தடுத்து நிறுத்தி இருக்க முடியுமா என்று தோழர்கள் கேட்க கூடும். உண்மை என்னவெனில், இப்படிப்பட்ட ஒரு அடையாள அட்டை குறித்து இடதுசாரி இயக்கத்துக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச எச்சரிக்கை உணர்வு கூட அன்று இடதுசாரி கட்சிகளுக்கு இல்லாமல் இருந்தது, அதனால்தான் அவர்கள் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. இதுவன்றி வேறு காரணங்கள் எதுவும் எனக்கு தெரியவில்லை.
இப்போது ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைப்பது ஆபத்து என்று இடதுசாரிகள் கொந்தளிப்பது அர்த்தம் இல்லாதது. ஆதார் என்பதே இந்த அரசுகள் மக்களையும் ஜனநாயக சக்திகளையும் உளவு பார்ப்பதற்கு பயன்படுத்தும் ஆபத்தான ஒரு கருவி என்பதை பெரும் இடதுசாரி அறிவாளிகளும் அறிவுஜீவிகளும் காலத்தில் உணர்ந்து குரல் எழுப்பாமல், இப்போது வாக்காளர் அட்டையுடன் இணைப்பதுதான் ஆபத்து என்று அலறுவது அர்த்தம் இல்லாதது, காலம் கடந்தது. நான் சொன்னது இன்று நடக்கின்றது.
தமிழ்ச்செல்வன் சொல்வது ஆதாருக்கும் பொருந்தும்: அமைதிக்காலங்களில்தான் எதிர்கால வகுப்பு கலவரங்களுக்கான விதைகள் தூவப்படுகின்றன, ஆனால் அப்போது நாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கின்றோம்.
ஆதாரின் பின்னால் மறைந்திருக்கும் அபாயங்கள் என்ற கட்டுரையை தனியே பதிவிட்டுள்ளேன், 2013-ல் எழுதியது

000

ஆதாரின் பின்னால் மறைந்திருக்கும் அபாயங்கள் (2013-ல் எழுதியது, மீள்பதிவு)
1. குற்றப்பரம்பரைச்சட்டம் (Criminal Tribes Act) :
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது வெவ்வேறு காலகட்டங்களில் நிறைவேற்றப்பட்ட குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான சட்டம் ஆகும்.
முதன்முதலாக 1871-ல் இயற்றப்பட்ட இச்சட்டம் பெரும்பாலும் வட இந்திய சமூகத்தவரையே அதிக அளவில் குறிவைத்து உருவாக்கப்பட்டதாகும். பின்னாளில் வங்கமாகாணத்திற்கும் 1876-ல் அமலாக்கப்பட்டது. அதன்பின் 1911-ல் சென்னை மாகாணத்தில் அமலாக்கப்பட்டு பல திருத்தங்களுக்கு உள்ளாகி கடைசியாக குற்றப் பரம்பரைச் சட்டம் (1924-ம் ஆண்டின் ஆறாவது திருத்தம்) என இந்தியா முழுவதும் அமலானது.
குறிப்பிட்ட சமூகத்தவரை ஒடுக்கவும் குலத்தொழிலாக திருட்டு போன்ற சமூக விரோத காரியங்களில் ஈடுபடுவோரை சிறையில் அடைக்கவும் இச்சட்டம் வழிசெய்தது. இச்சட்டத்தின் கீழ் வரும் சமூகத்தவர் குழந்தைகள் தவிர்த்த ஆண்கள் அனைவரும் அருகில் உள்ள போலீசு நிலையத்தில் வாரம் ஒருமுறை தங்கள் இருப்பை பதிவு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் முக்குலத்தோர் என்று சொல்லப்படும் கள்ளர், மறவர், பிரமலைக்கள்ளர், வலையர், கேப்மாரி, அகமுடையோர் என 89 சாதிகள் குற்றப் பரம்பரைச் சட்டத்தின் பட்டியலில் இருந்தனர்.
2. கைரேகைச் சட்டம்:
குற்றப் பரம்பரைப் பட்டியலில் கொண்டுவரப்பட்ட சாதி ஆண்கள் 16 முதல் 60 வயதானவர்கள் போலீசு கண்காணிப்பில் இருப்பார்கள்.அவர்களிடம் நாள்தோறும் கைரேகை பதிவு செய்யப்படும். பெரும்பான்மையான நேரங்களில் அவர்கள் போலீசு நிலையத்திலேயே தூங்குமாறும் அங்கேயே இருக்குமாறும் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இச்சட்டத்தை எதிர்த்து பல்வேறு கட்டங்களில் தனிநபர்களும் இயக்கங்களும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தியுள்ளனர், போலீசுத்துறை அடக்குமுறையில் உயிர் இழந்துள்ளனர். இறுதியாக 1947 ஏப்ரலில் சென்னை மாகாண உள்துறை அமைச்சராக இருந்தவரும் பெரியாரின் ஆதரவாளரும் சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவருமான டாக்டர் பி.சுப்பராயன்தான் இக்கொடிய சட்டத்தை ஒழிக்கும் சட்டமுன்வடிவை ஆளுனருக்கு சமர்ப்பித்து 1947 ஜூன் 5-ம் நாளில் ஆளுனர் ஒப்புதலுடன் குற்றப் பரம்பரைச் சட்டத்தை ஒழித்தார்.
3. தென் ஆப்பிரிக்காவில் ஆசியர்கள் பதிவுச் சட்டம் 1906 (The Asiatic Registration Act):
நூறு வருடங்களுக்கு முன்பான தென் ஆப்பிரிக்க வரலாறு இது. இச்சட்டத்தின்படி இந்தியர்களும் சீனர்களும் அரபு மக்களும் துருக்கியரும் ஆசியர்களாக கருதப்பட்டனர்; இவர்கள் ஒவ்வொருவரும் தம்மை அரசிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும்; ஒரு அடையாள அட்டையில் கையின் பெருவிரல்ரேகை பதிவுசெய்யப்பட்ட சான்றிதழை எப்போதும் தன் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
எட்டு வயதிற்கு மேற்பட்ட ஆசிய ஆண்கள் பெண்கள் ட்ரான்ஸ்வால் நகரில் குடியிருக்கவேண்டுமெனில் ஆசியர்களுக்கான பதிவாளரிடம் தம்மைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். பதிவு செய்யாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள்; அபராதம் விதிக்கப்படும்; சிறையில் அடைக்கப்படுவார்கள், நாடுகடத்தப்படுவார்கள்.
மஹாத்மா காந்தி அப்போது தென் ஆப்பிரிக்காவில் இருந்தார்; 1906 செப்டம்பர் 11 அன்று காந்தி 3000 இந்தியர்களைத் திரட்டி இச்சட்டத்திற்கு எதிராக ஒரு பொதுக்கூட்டத்தை கூட்டினார். “இச்சட்டம் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை மையமாகக்கொண்டது; இச்சட்டத்தை ஏற்றுக்கொண்டால் தென் ஆப்பிரிக்க இந்தியர்கள் வேரோடு அழிவார்கள்; இச்சட்டத்தை எதிர்ப்பதானது வாழ்வா சாவா என்ற போராட்டமே” என அறிவித்தார். நீண்ட ஏழு வருடங்கள் போராட்டத்திற்குப்பின் ஜெனரல் ஜான் கிறிஸ்டியன் ஸ்மட்ஸ் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டார்.
1871-ல் இந்தியாவில் வந்த சட்டம், 1906-ல் தென் ஆப்பிரிக்காவில் வந்த சட்டம் இரண்டுமே மனிதர்களின் தன்மானத்தில் கைவைத்த அடக்குமுறைகளே; ஒரு மனிதனின் கைரேகை இன்னொரு மனிதனின் ரேகையை ஒத்திருப்பதில்லை; அடிப்படையில் கிரிமினல் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவும் ஒரு உத்திதான் கைரேகை என்பது.
ஒரு மனிதனின் கைரேகையை அடக்குமுறையால் அரசு ஆவணத்தில் பதிவுசெய்வது என்பது ‘நீ குற்றவாளியோ இல்லையோ, அது பற்றி கவலை இல்லை, உன் கைரேகை அரசிடம் உள்ளது, எனவே எல்லா நேரங்களிலும் அரசின் கண்காணிப்பில் உள்ளாய் என்பதை மறக்காதே; நீ குற்றவாளியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் குற்றம் நடக்கின்ற இடங்களில் பெறப்படும் கைரேகையோடு உன் கைரேகையும் ஒப்பிட்டுப்பார்க்கப்படும்’ என்று அச்சுறுத்துவதோடு தனிமனிதனை அவமானப்படுத்துவதும் ஆகும். அதாவது எப்போதும் முதுகுக்குப்பின்னால் ஒரு போலீஸ்காரன் நின்றுகொண்டு ஒரு மனிதனின் எல்லா நடவடிக்கைகளையும் 24 மணி நேரமும் கண்காணிப்பதன்றி இது வேறில்லை.
4. ஆதார் அடையாள அட்டை:
தற்போதைய மன்மோஹன் சிங், சிதம்பரம், மாண்டேக்சிங் அலுவாலியா கும்பலால் நடத்தப்படும் மத்திய அரசு ஆதார் அடையாள அட்டை என்ற ஒரு அட்டையை கூவிக்கூவி வாங்கச்சொல்கின்றது; கைரேகையோடு, கண்ணின் கண்மணியையும் பதியச்சொல்கின்றது; ஆதார் அடையாள அட்டை இல்லாமல் இனி எந்த ஒருமனிதனும் இந்தியாவில் சாப்பிட முடியாது, மலஜலம் கழிக்க முடியாது, தூங்க முடியாது, தெருவில் நடமாட முடியாது, மனைவியுடன்/கணவனுடன் உறவுவைத்துக்கொள்வது கூட கஷ்டம்தான் என்ற ரீதியில் பரப்பப்படும் பிரச்சாரத்தை காணும்போது தலை சுற்றுகின்றது; ‘நாங்கள்தான் உலகத்திலேயே ஆகப்பெரும் ஜனநாயக நாடுங்கோ’ என்ற காதைக்கிழிக்கும் குடுகுடுப்பைச் சத்தம் வெறும் வெத்துவேட்டுச்சத்தம் என்று மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்படுகின்றது.
♠ ஆதார் நாடாளுமன்ற நிலைக்குழுவால் (Parliament Standing Committee) நிராகரிக்கப்பட்ட ஒன்று
♠ ஆதார் என்பது கட்டாயம் அல்ல; அது தனி நபரின் விருப்பத்தைப் பொறுத்தது (It is voluntary) என்று ஆதார் குறித்த இணையதளமே சொல்கின்றது.
♠ ஆதார் அட்டையில் ஒரு நபரின் உயிரியல் கூறுகளான கைரேகையோடு கண்ணின் கண்மணியும் பதியப்படும்.
5. இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது:
இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 21 கூறுவது: No person shall be deprived of his life or personal liberty except according to procedure established by law. ‘எந்த ஒரு மனிதருக்கும் அவர் உயிருடன் வாழும் உரிமையையோ அவரது சுதந்திரத்தையோ பறித்தலாகாது; சட்டத்தின் அடிப்படையிலான நடவடிக்கைகளின் பேரில் மட்டுமே இந்த உரிமையோ சுதந்திரமோ மறுக்கப்படலாம்’. ஆதார் நாடாளுமன்றத்தால் ஒப்புதல் வழங்கப்படாத ஒரு அட்டை, ஆதார் நிறுவனம் ஒரு அரசு நிறுவனமே அல்ல என்ற நோக்கில் பார்த்தாலும் சரி, ஒப்புதல் வழங்கப்பட்ட ஒன்று, அரசு நிறுவனமே என்று வைத்துக்கொண்டாலும் கூட இச்சரத்தின்படி ஒரு தனிமனிதனின் கைரேகையையோ கண்மணியின் பதிவையோ பதிவு செய்வது என்பது அவனது தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதும் 21ஆவது சரத்தை மீறுவதும் ஆகும்.
இத்தகைய பின்னணியில் அடிப்படையான கேள்விகள் சில எழும்புகின்றன:
♣. ஆதார் அட்டை கொடுக்கும் பொறுப்பை ஏற்றுள்ள நிறுவனம் ஒரு அரசு நிறுவனமே இல்லை என்பது முக்கியம்; இத்தகைய ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதை கொள்கை அளவிலே கூட மத்திய நிதியமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு நிராகரித்துவிட்டது என்பதை அழுத்தமாக சொல்லவேண்டியுள்ளது. இன்ஃபொசிஸ் என்ற தகவல்தொழில் நிறுவனத்தில் வேலை செய்த நந்தன் நீல்கேணி என்பவர் இந்த நிறுவனத்தின் தலைவராம். அரசு நிறுவனமே இல்லை என்றால் இவர் அரசு ஊழியரும் இல்லைதானே? அப்படியெனில் இந்தியாவில் குடியிருக்கும் ஒவ்வொரு மனிதரின் கைரேகையையோ விழிப்பதிவையோ பதிவு செய்யும் உரிமையை அரசியலமைப்பு சட்டத்தை மீறி அவர் எங்கிருந்து பெறுகின்றார்?
♣. இந்த நீலகேணி என்ற தனிநபர் தான் திரட்டும் தகவல்களை எங்கே வைக்கின்றார்? தகவல்களைத் திரட்ட அவரால் நியமிக்கப்படும் நபர்களும் அரசு ஊழியர்கள் இல்லை என்றால் திரட்டப்படும் தகவல்களுக்கு இவர்கள் எந்த வகையில் எந்த அளவுக்கு பொறுப்பாளி ஆகின்றார்கள்?
♣. நீலகேணி உள்ளிட்ட இந்த காண்ட்ராக்ட் தொழிலாளிகளிடம் இந்திய மக்களை வற்புறுத்தி கைரேகை விழிப்பதிவு ஆகியவற்றை பதிவு செய்யச்சொல்லும் அரசு சட்டத்தை மீறும் அரசு ஆகாதா?
♣. இந்த காண்ட்ராக்ட் தொழிலாளிகள் தாங்கள் திரட்டும் தகவல்களை பிற தனியார் நிறுவனங்களுக்கோ பிற நாடுகளுக்கோ விற்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
♣. போலீஸ், ராணுவம், உளவுத்துறை போன்ற அமைப்புக்கள் இத்தகைய தகவல்களைப் பெற முடியுமா? கேட்டும் கேட்காமலும் பெறலாம் என்றால் இத்தகவல்களை எதற்காகவெல்லாம் பயன்படுத்த முடியும்?
♣. தனது தனிபட்ட உயிரியல் தகவல்களைக் கொடுத்த ஒருவர் பிற்பாடு தனது தகவல்களை அழிக்க வேண்டும் என விண்ணப்பித்தால் அழிக்கப்படுமா?
6) உச்ச நீதிமன்றத் தீர்ப்பு :
ஆதார் அடையாள அட்டை பெறுவதை கட்டாயமாக்குவதை எதிர்த்து கர்நாடகா மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த புட்டஸ்வாமி அவர்களும் பிறரும் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சரியாகவே தீர்ப்புச் சொல்லியுள்ளது.
அவர்களின் வாதம் இவ்வாறு இருந்தது: ”ஆதார் என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது, ஏனெனில் அடிப்படை உரிமையான உயிர் வாழ்வதற்கான உரிமையை வழங்குகின்ற இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 21-க்கு எதிரானது என்பதால் ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரத்திற்குள் அத்து மீறுவதாகும். ஆதார் அட்டை வாங்குவது ஒருவரின் விருப்பத்தைப் பொருத்தது என்று அரசு ஒரு பக்கம் சொல்லிக்கொண்டே மறுபுறம் உணவுப் பாதுகாப்பு, சமையல் எரிவாயு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (ப்ராவிடெண்ட் ஃபண்ட்) நிதி, அரசு நிதி உதவி நேரடியாக பயனாளியின் கணக்கிற்கு வருகின்ற திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஆதார் அட்டை அவசியம் என்று சொல்வது முரணானது.”
கட்டாயம் இல்லாத ஒரு அட்டையை சமையல் எரிவாயு சிலிண்டர் பெறவும், அரசின் உதவித் திட்டங்கள் பெறவும் கட்டாயமாக்குவது செல்லாது என்பதே அத்தீர்ப்பு. கட்டாயம் இல்லாத ஒரு அட்டையை சமையல் எரிவாயு பெற கட்டாயப்படுத்துவது மறைமுகமாக மானிய எரிவாயு சிலிண்டர்களையும், ரேசன் முறையையும், கல்விக்கடன், விவசாயிகளுக்கான கடன், இன்னபிற சாமானிய மக்களுக்கான அரசின் உதவித் திட்டங்களையும் ஒழித்துக்கட்டும் ஒரு முயற்சிதான் என்பதையும் எச்சரிக்கையுடன் கவனிப்போம்.
7) எட்வர்ட் ஸ்னோடென்னும் சல்மான் குர்ஷித்தும்… :
அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.(CIA)யில் 2009 வரை தொழினுட்ப உதவியாளராக வேலை செய்தவர்; மேலும் அதிரகசிய அமெரிக்க உளவு நிறுவனமான நேஷனல் செக்யூரிட்டி ஏஜென்சி (NSA)யின் காண்ட்ராக்ட் கம்பெனிகளான பூஸ் ஆல்லன் ஹாமில்டன் உள்ளிட்டவற்றில் வேலை செய்தவர்;

எட்வர்ட் ஸ்னோடென் ஒரு நாள் தன் வேலையை உதறிவிட்டு வெளி உலகுக்கு சொன்ன சேதிகள் அதிர்ச்சி அளிப்பவை: ”என் ஒரே நோக்கம் என்னவெனில் அமெரிக்க மக்களின் பெயரால் அமெரிக்க அரசு என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கின்றது, உண்மையில் அவர்களுக்கு எதிராக அந்த அரசு என்ன செய்து கொண்டிருக்கின்றது என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும்”.

ஒரு நிலையான வேலையும் நிறைவான ஊதியமும் அமைந்த வாழ்க்கையை உதறித்தள்ள முடிவு செய்ததற்கு அவர் சொன்ன காரணம்: “அனைத்தையும் உதறித்தள்ள நான் தயார்; இப்படியான ஒரு பிரமாண்டமான ரகசிய ஒற்றறியும் அரசு எந்திரத்தை உருவாக்கி, உலக மக்கள் அனைவரது அடிப்படை சுதந்திரத்தையும் தனிநபர் விவகாரங்களையும் உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும், தனக்கு வேண்டப்பட்டவர்கள் எதிரிகள் என யாரையும் விட்டுவைக்காமல் அவர்களை எப்போதும் உளவு பார்த்துகொண்டே இருக்கின்றது; தன் சொந்த நாட்டு மக்களையும் எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றது. இத்தகைய ஒரு பணியில் அமெரிக்காவுக்கு உதவ என் மனச்சாட்சி இடங்கொடாது”.
ஸ்னோடென் இப்போது அமெரிக்காவால் வேட்டையாடப்படும் ஒரு நபர், ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். சமீபத்தில் ஜெர்மனிய அதிபரின் கைபேசியை பல வருடங்களாக அமெரிக்கா ஒட்டுக்கேட்டதாக செய்திகள் வந்துள்ளன; உலக ரட்சகன் ஒபாமா இது குறித்து சற்றும் அலட்டிகொள்ளவில்லை; ‘அப்படியா?’ என்று கொட்டாவி விட்டுக்கொண்டுள்ளார்; உண்மையில் அவரது உத்தரவின்பேரில்தான் இந்த ஒட்டுகேட்கும் வேலைகள் நடந்துள்ளன; இப்படி ஒரு செய்தி வெளியானதும் நேரடியாக ஒபாமாவிடம் தொடர்பு கொண்ட ஜெர்மனிய அதிபர் ஏஞ்ஜெலா மெர்கெல் தனது கண்டனத்தை தெரிவித்ததுடன், ஜெர்மன்-அமெரிக்க உறவுகளை புதிய ஒரு புள்ளியில் இருந்து தொடங்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்; ஐரோப்பிய யூனியனில் உள்ள பெரும்பான்மை நாடுகளும் இதேபோன்ற கவலையில் ஆழ்ந்துள்ளன.
ஃப்ரான்ஸ் நாட்டின் ஏழு கோடிக்கும் மேற்பட்ட தொலைபேசிகள் அமெரிக்க உளவு நிறுவனத்தால் ஒட்டுக்கேட்கப்பட்ட்தாக செய்திகள் வருகின்றன்; அதனைத் தொடர்ந்து அமெரிக்க தூதரை அழைத்து ஃப்ரான்ஸ் அரசு விளக்கம் கேட்டுள்ளது.
இத்தாலிய மக்களின் தொலைபேசிகள், ஈமெயில்கள், எஸ் எம் எஸ் ஆகியவை அமெரிக்காவால் ஒட்டுக்கேட்கப்படுவதாக செய்திகள் வந்தபோது இத்தாலிய பிரதமர் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
பிரேசில் நாட்டவர்களையும் அமெரிக்கா உளவு பார்த்ததாக செய்திகள் வந்தன; பிரேசில் குடியரசுத்தலைவர் டில்மா ரூசெஃப்பின் அலுவலகமும் இதில் இருந்து தப்பவில்லை என டேவிட் ஃப்ளீஸர் என்ற அரசியல் விஞ்ஞானி கூறுகின்றார். இதனைக் கண்டிக்கும் விதமாக அமெரிக்காவுக்கு செல்ல இருந்த திட்டத்தையே பிரேசில் குடியரசுத்தலைவர் ரத்து செய்தார்.
இந்திய அரசின் முக்கியமான அரசுத்துறை நிறுவனங்களும், குறிப்பாக இந்திய விண்வெளித்துறை உள்ளிட்ட தேசப்பாதுகாப்பு தொடர்புடைய நிறுவனங்கள் அமெரிக்காவால் ஒற்றறியப்படுகின்றன, இந்தியாவின் முக்கிய அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் ஆகியோரின் தொலைபேசிகளும் அவர்களது இ-மெயில் தொடர்புகளும் ஆன்லைனில் ஒற்றறியப்படுவதாக செய்திகள் வந்தன;
மேலும் தலைநகர் டெல்லியில் உள்ள முக்கிய அரசு அலுவலகங்கள், அதிகாரிகளின் இணையதள இணைப்புக்கள், ஈமெயில்கள் யாவும் நேரடியாக அமெரிக்காவால் உளவு பார்க்கப்படுகின்றன; அமெரிக்காவில் இருந்து இங்கு இறக்குமதியாகும் கம்ப்யூட்டர்கள், அதிலுள்ள முக்கிய சிப்கள் யாவற்றிலும் ரகசிய கட்டளைகள் பதியப்பட்டுள்ளன என்றும், இவற்றைப் பயன்படுத்துவோருக்கு இது குறித்து தெரியாது என்றும், இக்கம்ப்யூட்டர்களில் பதிவாகும் தகவல்களை தேவைப்படும் நேரத்தில் அமெரிக்க உளவு நிறுவனங்கள் இறக்குமதி செய்து கொள்ள முடியும் என்றும் தகவல்கள் வருகின்றன.
அமெரிக்காவால் அதிகம் உளவறியப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஐந்தாவதாக இந்தியா உள்ளதாக செய்திகள் வந்தபோது ”இது உளவு வேலை இல்லை; செய்யப்பட்ட அழைப்புக்கள், அனுப்பப்படும் ஈமெயில்கள் பற்றிய ஒரு கம்ப்யூட்டர் பகுப்பாய்வு மட்டுமே; இத்தகைய ஆய்வின் உதவியால் கிடைத்த சில தகவல்கள் அடிப்படையில் பல நாடுகள் மீது திட்டமிடப்பட்ட மோசமான தீவிரவாத தாக்குதல்களை அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளது” என இந்திய அரசின் வெளியுறவுத்துறை மந்திரியான சல்மான்குர்ஷித் அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஆகவிசுவாசமான ஒரு வேலையாள் போல கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது தனது வீடு, அண்டை அயலார் வீடு என பாகுபாடு இல்லாமல் உளவறியும் நிலைமைக்கு அமெரிக்கா வந்துவிட்டால் அதன் நிலைமை உச்சகட்டப்பரிதாப நிலையில் உள்ளது என்றே பொருள், அதாவது ஒரு மனநோயாளியின் மனநிலைக்கு அமெரிக்க அதிபரும் அவரது உளவு நிறுவனங்களும் வந்துவிட்டார்கள் என்பதே பொருள்; இது மிக அபாயகரமான ஒரு திருப்பமாகும். ஒரு மனநோயாளியின் கையில் மிகப்பயங்கரமான ஆயுதங்கள் இருப்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். கோழைகள்தான் ஆயுதங்களை தேவைக்கு அதிகமாக சேர்த்துக்கொண்டே போகின்றார்கள் என்பதை வரலாற்றில் நாம் படித்துள்ளோம்; காந்தியடிகளுக்கு ஒரு கைத்தடி நடப்பதற்கு மட்டும் தேவைப்பட்டது, நாதுராம் கோட்சே போன்ற கொலைகாரர்களுக்கே ஆயுதங்கள் தேவைப்படுகின்றன.
தனது குடிமக்கள் மீதே நம்பிக்கையற்று ஒற்றறியும் ஒரு நாடு உலகமக்கள் அனைவரையும் தீவிரவாதிகளாகப் பார்ப்பதில் வியப்பேதும் இல்லை; அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் மட்டுமல்ல, வெளுத்ததெல்லாம் கூட பேயாகத்தெரிகின்றது; உலக மக்கள் 400 கோடிப்பேரின் தனிப்பட்ட விவரங்கள், அங்க, உயிரியல் அடையாளங்கள் உலகரட்சகன் அமெரிக்காவுக்கு பல்வேறு காரணங்களுக்காக தேவைப்படுகின்றது என்பதையே தொடர்ந்து வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இத்தகைய ஒரு அடையாள அட்டையை அரசு கொண்டுவர முயற்சித்தபோது மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது என்பதை மறக்க வேண்டாம்.
8. என்ன செய்ய வேண்டும்?
வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் அட்டை, வாகன ஓட்டுனர் உரிமம், சொத்துள்ளவர் எனில் அவரது சொத்துவரி ரசீது, ஊதியம் பெறுபவர் எனில் வருமானவரி எண் அட்டை (அரசு ஊழியர்களுக்கு இது கட்டாயம்), வங்கிக் கணக்கு புத்தகம், பிறப்புச் சான்றிதழ், அரசு ஊழியர் எனில் அவரது நிறுவனத்தால் வழங்கப்படும் அடையாள அட்டை என எத்தனையோ அடையாள அட்டைகள் இந்தியாவில் இருக்க, ’பெறுவது கட்டாயம் இல்லை’ என்ற அளவில் உள்ள ஒரு சாதாரண அட்டையில் இந்திய மக்கள் ஒவ்வொருவருடைய அடிப்படையான தனிப்பட்ட அடையாளங்கள், உயிரியல் விவரங்களை பதிவு செய்ய இந்திய அரசு ஒரு திட்டத்தை தீட்டி அதனையும் ஒரு தனியார் நபரிடம் கொடுத்துள்ளது என்பது அபாயகரமான ஒன்றாகும்.
படிக்க :
ஏழைகளை பட்டினிச் சாவுக்குத் தள்ளும் ஆதார் !
சமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் ! மோடியின் அடுத்த அடி !
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது 1871-ல் நிறைவேற்றப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டம், அதன் துணைச்சட்டமான கைரேகைச் சட்டம், தென் ஆப்பிரிக்காவில் கொண்டுவரப்பட்ட ஆசியர்களை இழிவுபடுத்தும் ஆசியர்கள் பதிவுச்சட்டம் ஆகியவை சகமனிதர்களை இழிவுபடுத்துகின்ற சட்டங்கள், நூறு வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில், அதாவது காலனிய ஆட்சிக்காலத்தில் தம்மை எதிர்த்துப் போராட்டங்களை நடத்திய மண்ணின் மைந்தர்களை அடக்கவும் ஒடுக்கவும் ஆக்கிரமிப்பாளர்களான அன்னியர்கள் கொண்டுவந்த சட்டங்கள் அவை என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.
எனில் உலகின் ஆகப்பெரிய ஜனநாயக நாடு நாங்களே என்று மார்தட்டிக்கொள்கின்ற நமது நவீனகால ஆட்சியாளர்களுக்கு சொந்த நாட்டின் மக்களுடைய கைரேகை, விழிப்படலம் உள்ளிட்ட பதிவுகள் எதற்கு என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியுள்ளது.
இத்தகைய ஒரு சூழலில் இந்திய மக்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உயிரியல் அடையாளங்களை அரசுக்கு பதில் சொல்லவேண்டிய எந்த ஒரு பொறுப்பும் இல்லாத ஒரு நபரிடம் ஒப்படைப்பதானது எந்த அளவுக்கு அறிவார்ந்த ஒரு செயல், கட்டாயமற்ற ஒரு அட்டை எனில் இதன் உள்நோக்கம் என்ன, இத்தனை விளம்பரம் எதற்கு என்ற அடிப்படைக் கேள்விகளுக்கு அரசு பதில் சொல்ல வேண்டும்; பதில் சொல்லுமாறு கட்டாயப்படுத்த வேண்டிய கடமை பொறுப்புள்ள அரசியல் கட்சிகளுக்கும் மனித உரிமைக்காகப் போராடும் அமைப்புக்களுக்கும் உண்டு.

முகநூலில் : மு இக்பால் அகமது
disclaimer

நெதர்லாந்து நூலகத்தில் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்கள் !

மிழ் பேசும் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் அரசியல் வெளியில், சுமார் 36 ஆண்டுகளாக மிகப்பெரும் பங்கை செலுத்திவரும் மார்க்சிய – லெனினிய அரசியல் ஏடாக புதிய ஜனநாயகம் திகழ்ந்து வருகிறது. பிற்போக்கு, சந்தர்ப்பவாத, பிழைப்புவாத அரசியல் சக்திகளை அரசியல் அரங்கில் அம்பலப்படுத்தி – முடமாக்கி மக்கள் மத்தியில் புரட்சிகர அரசியல் பாதையை பிரச்சாரம் செய்வது புதிய ஜனநாயகத்தின் முக்கியமான பங்களிப்பு.
விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் ஈழத் தமிழர் விடுதலை பற்றிய சரியான பார்வை; 90-களில் அமல்படுத்திய மறுகாலனியாக்கக் கொள்கையின் அரசியல் – பொருளாதார விளைவுகள்; பார்ப்பன பாசிச பேரபாயம் ஆகியவை தொடர்பாக புதிய ஜனநாயகம் எழுதிய கட்டுரைகள் அரசியல் அரங்கில் உள்ள அறிவுத்துறையினர் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை. தற்போது, காவி – கார்ப்பரேட் பாசிசத்தின் பலமுனைத் தாக்குதல்களை அம்பலப்படுத்தியும், பாசிசத்தை முறியடிப்பது பற்றி சரியான மார்க்சிய – லெனினியக் கண்ணோட்டத்தைக் கொடுக்கும் வகையிலும் எழுதி வருகிறது.
படிக்க :
புதிய ஜனநாயகம் டிசம்பர் – 2021 அச்சு இதழ் !
புதிய ஜனநாயகம் டிசம்பர் 2021 மின்னிதழ் !
அரசியல் தளத்தில் புதிய ஜனநாயகம் மேற்கொண்ட பிரச்சாரப் பணியை, பண்பாட்டு தளத்தில் செய்தது புதிய கலாச்சாரம் இதழ். பேச்சு, காட்சி, கேள்வி, உணர்ச்சி, நுகர்ச்சி என அனைத்தின் வழியாகவும் ஆளும் வர்க்கப் பண்பாடு பரந்துபட்ட மக்கள் மீது திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் அதை திரைகிழித்து உழைக்கும் வர்க்கம் தனது சொந்த (மார்க்சிய – லெனினிய) பார்வையைப்பற்றி நிற்பதற்கு துணை செய்தது புதிய கலாச்சாரம்.
புதிய ஜனநாயகம் மற்றும் புதிய கலாச்சாரத்தின் புரட்சிகர பிரச்சாரப் பணியை தமது பணியாக நினைத்து தோள்கொடுத்து உதவிய பல ஆதரவாளர் தோழர்கள் இல்லையேல் இவை எதுவும் சாத்தியமாகியிருக்காது. அந்தவகையில் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் ஏடுகளை ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான நெதர்லாந்து வரை கொண்டு சேர்த்திருக்கிறார் தோழர் கலையரசன்.
நெதர்லாந்தில் வசிக்கக்கூடிய ஈழத்தமிழரான கலையரசன் இடதுசாரி ஆதரவாளராவார். வினவு வாசகர்களுக்கு கலையரசனை பற்றி புதிதாக அறிமுகம் கொடுக்கத் தேவையில்லை. கலையகம் என்ற அவரது வலைப்பூவில் அவர் எழுதும் முக்கியத்துவமிக்க கட்டுரைகளை நமது தளத்திலும் மீள்பிரசுரம் செய்திருக்கிறோம்.
புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களை அஞ்சல் சந்தா மூலம் பெற்று வாசித்து வந்த அவர், தனது பிரதியை நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலுள்ள நூலகம் ஒன்றிற்கு அன்பளிப்பாக வழங்கிவந்திருக்கிறார். அந்நூலகம் அவற்றை ஆவணப்படுத்தி பாதுகாத்து வருகிறது. தோழரின் இந்த அரசியல் முன்முயற்சியையும் தோழமையுணர்வையும் எண்ணி நாம் பூரிப்படைகிறோம்.
இதுதொடர்பாக, தோழர் கலையரசன் தமது வலையொலியில் வெளியிட்ட காணொலி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயகம்

பெண் தொழிலாளர்களின் போராட்டத்தை எதிர்ப்பவர்களும் அவதூறு செய்பவர்களும்  யார்?

திரு. அருள் எழிலன் அவர்களே நீங்கள் யார் பக்கம்?
பாக்ஸ்கான் மறியல் – நாம் தமிழர், இடதுசாரிகள், சில அரசு ஊழியர்கள் பரப்பிய வதந்தி!” என்ற தலைப்பில் பத்திரிகையாளர் திரு. அருள் எழிலன் அவர்கள் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
வட இந்தியாவில் மதக்கலவரங்கள் பரவுவதற்கு வதந்திகள் காரணமாக இருக்கின்றன. இங்கே தங்கள் அரசியல் மாறுபாடுகள் உள்ளவர்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கு வதந்திகளை பரப்புகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.
மேலும், குறைந்த கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் சிலருக்கு தரமற்ற உணவுகள் கொடுக்கப்பட்டதாகவும் அது அவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியதாகவும் அது ஆலைவாயில் போராட்டமாக இருந்ததாகவும் தெரிவிக்கிறார்.
போராடியவர்களில் 8 பேரை போலீசார் கொண்டு சென்று கொன்று விட்டதாக வதந்தி பரவியதால் பலமணிநேரம் சாலைகள் முடங்கியதையும் குறிப்பிடுகிறார்.
படிக்க :
இயந்திரமயமாக்கம் பெயரில் தொழிலாளிகளைக் கொல்லும் ஃபாக்ஸ்கான்!
ஃபாக்ஸ்கான் பயங்கரவாதம் – நேரடி ரிப்போர்ட்
இடதுசாரிகள் எனப்படுவோர் இப்போதும் இந்த வதந்தியை பரப்புவதாகவும் அவர்களில் சிலர் அரசு ஊழியர்களாக இருப்பதாகவும் தெரிவித்து போலீசுக்கு போட்டு கொடுக்கின்ற வேலையையும் சிறப்பாக செய்கிறார்.
வட இந்தியாவில் நடைபெறும் பார்ப்பன பாசிச சக்திகளின் திட்டமிட்ட கலவரத்தையும் பன்னாட்டு நிறுவனமான பாக்ஸ்கான்-க்கு எதிரான பெண் தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டத்தையும் ஒன்றாகச் சமப்படுத்துவதன் மூலம் அவர் யார் பக்கம் நிற்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.
வதந்திகளை பரப்பியதாக கூறும் மேற்கண்ட அமைப்புகளை சேர்ந்தவர்களை கைது செய்ய வேண்டும்  என்பதுதான் அவர் வைக்கும் மறைமுகமான கோரிக்கை.
திரு அருள் எழிலன் முகநூல் பதிவு
அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாகத்தான் சி.ஐ.டி.யூ. தோழர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பொது நல மாணவர் எழுச்சி இயக்கத்தின் தலைவரான தோழர் வளர்மதியை டிசம்பர் 18 முதல் போலீசு நிலையத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்.
பெண் தொழிலாளர்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன், இந்தப் போராட்டத்திற்கு அடிப்படை காரணம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் சுரண்டலும் திமுக அரசின் அடக்குமுறையும்தான் என்பதைத் தெளிவாக தெரிவித்திருக்கிறார்.
10 பேர் தங்கக் கூடிய அறையில் 20 பேர் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். 20 பேருக்கு ஒரு கழிவறை என்றால் எப்படி அங்கே இருக்க முடியும்? இப்படி ஒரு சூழலில் நாம் இருந்திருந்தால் எப்படி ஒரு முறையான போராட்டத்தை நடத்த முடியும்? 8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உறக்கம் என்ற எதுவும் முறையாக இல்லாத இந்தச் சூழலில் சமூகத்தில் முறையான பண்பாட்டையும் முறையான ஒரு போராட்டத்தையும் எதிர்பார்ப்பது தான் அறிவீனம்.
இன்று காலையில் சி.ஐ.டி.யூ.வின் தோழர்கள் பலர் போலீசார் கடுமையாக தாக்கப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமான தகவல்கள் வந்திருக்கின்றன. பெண் தொழிலாளர்களை பாலியல் ரீதியாக போலீஸ் தாக்கியதாகவும் இதற்கு காரணமான மாவட்ட எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அச்சங்கம் வலியுறுத்தி இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு தொழிற்சாலையில் நூற்றுக்கு மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் தரம் கெட்ட உணவினால் உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் இதுவரை விடுதிக்குத் திரும்பவில்லை. அவர்களை தொடர்பு கொள்ளவும் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
இதுதான் தொடக்கப் பிரச்சனை. மையமான பிரச்சனை என்பது ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் சுரண்டலும் பெண் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் அவல நிலையும் தான்.
பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே இப்பிரச்சனை தொடர்பாக முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அடுத்த நடவடிக்கையை தொழிலாளர்கள் வேறு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
தரமற்ற உணவு வழங்கிய விடுதி மேலாளர் அப்பொழுதே கைது செய்யப்பட்டிருந்தால் இதற்கு காரணமான பாக்ஸ்கான் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் வதந்தியை பரப்பி இருந்தாலும் ஏன் இந்த பிரச்சனை எழுகிறது?
போராடும் பெண் தொழிலாளர்கள் அத்துமீறும் போலீசு
பெண் தொழிலாளர்களின் நீடித்த அந்தப் போராட்டம், தமிழக அரசிடமும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்திடமும் “மருத்துவமனையில் உள்ள பெண் தொழிலாளர்களுக்கு எவ்வித பிரச்சனை ஏற்பட்டாலும் அதற்கு தாங்களே பொறுப்பு” என்று எழுதி வாங்கி இருக்கிறது. இதுதான் தமிழக தொழிலாளி வர்க்கம் கற்றுக்கொள்ள வேண்டியது ஆகும்.
போராடுகின்ற தொழிலாளர்கள் ஆங்காங்கே போராடுகிறார்கள் என்பதும் ஒரு முறைக்குள் வரவில்லை என்பதும் பலரும் சொல்லுகின்ற குற்றச்சாட்டு.
தொழிலாளர்கள் பல இடங்களில் பிரித்து தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கிராமத்திலிருந்து வந்தவர்கள், விவரம் ஏதும் பெரிய அளவில் அறியாதவர்கள்.
தொடர்ச்சியாக அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டு எரிமலையாய் வெடித்தார்கள். அவர்கள் ஆங்காங்கே தங்களுக்கு தெரிந்த செய்தியை வைத்துக் கொண்டு போராட துவங்குகிறார்கள். அந்த பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டிய தமிழக அரசும் நிறுவனமும் அதை அடக்குமுறையாக கையாண்டதன் விளைவாகத்தான் சாலைகளையும் முடக்கினார்கள். முறையற்ற வகையில் அரசும் நிறுவனமும் நடந்து கொண்டதற்கு எதிர்மறையாகவே முறையற்ற போராட்டம் துவங்குகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அது ஒன்றும் மன்னிக்க முடியாத குற்றம் அல்ல, கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினை அவ்வளவுதான்.
தொழிற்சங்க வரலாற்றையும் தொழிற்சங்க உரிமைகளையும் கற்றுத் தேர்ந்து அந்தத் தொழிலாளி வர்க்கம் பாட்டாளி வர்க்க விடுதலைக்கு முன்னணியில் நிற்க வேண்டிய அவசியத்தையும் தொழிலாளர்களுக்கு தொழிலாளி வர்க்க உணர்வை ஊட்டுவது தொழிற்சங்கத்தின் கடமை என்பதையும் இந்த போராட்டம் உணர்த்துகிறது.
முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்பு பிரச்சனை என்றால் எல்லா இடங்களுக்கும் ஓடிச்சென்று ஆதரவளித்த  மு.க. ஸ்டாலின், இங்கே வந்திருக்க வேண்டியதுதானே.
அவ்வேளையில் அவரோ பங்காரு அடிகளாருக்கு சால்வை போர்த்திக்கொண்டிருந்தார். இதைப்பற்றி அருள் எழிலன் போன்றவர்கள் ஏன் எழுதுவதில்லை.
எரிமலை வெடிப்பதற்கு ஒருபோதும் வதந்திகள் பயன்படுவதில்லை. இதெல்லாம் தெரியாதவர்கள் அல்ல, பெண் தொழிலாளர்களின் போராட்டத்தை எதிர்ப்பவர்களும் அவதூறு செய்பவர்களும்  யார்? அவர்களின் நோக்கம் திமுக அரசின் மீது எவ்வித குறையும் யாரும் சொல்லிவிடக் கூடாது என்பது மட்டுமல்ல. இந்த அரசின்,  ஆளும்வர்க்கத்தின் தூண்களாகவேத்தான் இருக்கிறார்கள்.
பாசிசத்தை வீழ்த்த திமுக-வுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று பலரும் தங்கள் வேட்டி சட்டை எல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு விழுந்து விழுந்து வாக்கு சேகரித்தார்கள். தேர்தல் புறக்கணிப்பு என்று கூறிவந்தவர்களில் சிலர் கூட தேர்தலில் பங்கேற்பதன் அவசியத்தை வலியுறுத்தி வலியுறுத்தி திமுக-வின் வாயாகவே மாறி போனார்கள்.
பாசிசம் என்றால் என்ன? அரசு என்றால் என்ன? அது யாருக்கு செயல்படும் என்பதைப் பற்றியெல்லாம் தெரியாதவர்கள். கடவுள் மீதான மூடநம்பிக்கை போல வேறுவழியில்லை என இந்த அரசின் மீது நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.
கடந்த ஏழு மாத கால ஆட்சியில் மக்களின் போராட்டங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. திமுக-வுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று பிரச்சாரம் செய்தவர்கள் எல்லாம் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.
அன்றாடம் மக்கள் பாதிக்கப்படும் பிரச்சனையைப் பற்றி பேசாமல் திமுக அரசை எப்படி காப்பாற்றுவது என்பதையே அனுதினமும் யோசித்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு,  பெண் தொழிலாளர்களின் இந்த போராட்டம் கொடுத்த அச்சமே இப்படி எல்லாம் அவர்களை சிந்திக்க வைக்கிறது.
படிக்க :
ஸ்டான் சுவாமி மரணம் : மோடி அமித்ஷா நடத்திய படுகொலையே || தோழர் மருது நேர்காணல்
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் ? || தோழர்கள் மருது – சுரேசு சக்தி முருகன் உரை || வீடியோ
எழும்பூர், கொளத்தூர், வள்ளுவர் கோட்டம் போன்ற இடங்களில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்றப்படும் மக்களின் போராட்டங்கள் அரசை நாறடிக்கச் செய்திருக்கும் இந்த சூழலில்தான், பாக்ஸ்கான் போராட்டம் எரிமலையாய் வெடித்து இருக்கிறது.
தாங்கள் தோற்றுப்போனதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.
அதற்கு ஆர்.எஸ்.எஸ்., பாஜக, கலவரங்கள், நாம் தமிழர் என்ற வரிசையில் இடதுசாரிகளையும் சேர்த்து தங்கள் ஆளும் வர்க்க வெறிக்காக வஞ்சம் தீர்த்துக் கொள்கிறார்கள்.
நெருக்கடியான காலகட்டங்களில் ஒவ்வொருவரும் யார் என்பதை வரலாறு அறிவிக்கிறது. தான் ஒரு சாதி வெறியன்தான் என்பதை கண்மணி குணசேகரன் தெரிவித்தார்.
அருள் எழிலன் அவர்களோ தான் ஆளும் வர்க்கத்துக்கானவர் என்பதை அறிவித்திருக்கிறார்.
“கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே” தோழர் மாவோ சொன்னது மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.
ஒவ்வொரு சொல்லுக்கு பின்னும் வர்க்கம் இருக்கிறது என்று சும்மாவா சொன்னார்கள்.

மருது
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்.

காஷ்மீரில் தொடரும் ஒடுக்குமுறைகளும், அமித்ஷாவின் பொய்யுரைகளும் !

ம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புரிமை வழங்கும் பிரிவு 370 மற்றும் 35A சட்டங்களை கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இரத்து செய்ததுடன் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக துண்டாடியது மோடி – அமித்ஷா கும்பல். அம்மாநிலத்தின் மற்றொரு பகுதியான லடாக்-ஐ ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது.
ஜம்முவின் ஸ்ரீநகரில் அமித்ஷா நடத்திய பொதுக்கூட்டம்.
அதனைத் தொடர்ந்து அங்கு எழுந்த மக்கள் எதிர்ப்பை முடக்குவதற்காக இராணுவ ஒடுக்குமுறையை அதிகரிப்பது, இணைய முடக்கம், அரசியல் தலைவர்களை கைது செய்வது, வீட்டுக் காவலில் வைப்பது, பத்திரிகைகளை கடுமையான தணிக்கைக்கு உட்படுத்துவது, ஊபா, பொதுப்பாதுகாப்புச் சட்டம் போன்ற கொடூரச் சட்டங்களின்கீழ் அப்பாவிப் பொதுமக்களை கைது செய்வது என காஷ்மீரை நரகமாக்கிய மோடி, ‘புதியதொரு காஷ்மீர்’ பிறந்திருப்பதாக கொஞ்சமும் கூச்சமின்றி பேசினார்.
காஷ்மீர் முடக்கப்பட்டு, இரண்டாண்டுகள் கழித்து, முதன்முதலாக கடந்த அக்டோபர் மாதம் காஷ்மீருக்கு மூன்றுநாள் (23, 24, 25) பயணமாகச் சென்ற அமித்ஷா ‘‘ஜம்மு காஷ்மீர் ஓரங்கட்டப்பட்ட காலம் முடிந்துவிட்டது, இனி அது வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும்’’ என முழங்கியதோடு ‘‘பிரிவு 370 இரத்துக்குப்பின் ஒரு நோக்கம் இருந்தது, அது ஜம்மு – காஷ்மீர் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட லடாக் ஆகியவற்றை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது பற்றியது. 2024-ம் ஆண்டிற்குள் எங்கள் முயற்சியின் பயனை நீங்கள் காண்பீர்கள்’’ என பேசியுள்ளார்.
படிக்க :
குற்றத் தலைநகரம் டெல்லி : அமித்ஷாவின் டெல்லி போலீசு இலட்சணம் !
விரைவில் சி.ஏ.ஏ. சட்டங்களை அமல்படுத்தப் போவதாக அமித்ஷா பேச்சு
காஷ்மீருக்கு விரைவில் சட்டமன்றத் தேர்தலை நடத்தவிருப்பதாகவும் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்போவதாகவும் தெரிவித்த அமித்ஷா, சிறப்புச் சட்டம் இரத்து செய்யப்பட்ட பிறகு பயங்கரவாதம் எப்படி கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது, காஷ்மீரில் என்னென்ன ‘வளர்ச்சிப் பணிகள்’ நடந்துவருகிறது, இளைஞர்களுக்கு எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது என புள்ளிவிவரத்தோடு ஒப்பிக்க ஆரம்பித்தார்.
அவர் பேசியதை காஷ்மீரிகளல்லாதவர்கள் அல்லது களநிலவரம் தெரியாதவர்கள் யாராவது கேட்டிருந்தால் நிச்சயம் அதில் சொக்கிப்போகலாம். ஆனால் காஷ்மீரின் உண்மை நிலவரம் என்ன? அமித்ஷாவின் காஷ்மீர் பயணத்தின் நோக்கம் என்ன? அமித்ஷாவின் காஷ்மீர் பயணம் அச்சத்தின் வெளிப்பாடு என்பதையும் அவரது பேச்சுக்கள் அனைத்தும் புகழ்மிக்க பொய்யுரைகள் என்பதையும்தான் காஷ்மீரின் களநிலவரம் நமக்கு உணர்த்துகிறது.
காஷ்மீரை சிறைவைத்து ‘வெளிப்படையாக’ பேசிய அமித்ஷா
பயணத்தின் கடைசிநாளில், ஸ்ரீநகரில் தாம் பங்கேற்ற கூட்டமொன்றில், மேடையில் தமக்கு முன்பு பொருத்தப்பட்டிருந்த குண்டு துளைக்காத கவசத்தை நீக்கச் சொல்லிவிட்டு பேசிய அமித்ஷா, ‘‘நான் காஷ்மீர் மக்களுடன் மனம்திறந்து பேசவிரும்புகிறேன். என்னைக் கிண்டல் செய்தார்கள், கண்டனம் செய்தார்கள். இன்று நான் உங்களிடம் வெளிப்படையாகப் பேச விரும்புகிறேன். அதனால்தான் இங்கு குண்டு துளைக்காத கவசமும் இல்லை. பாதுகாப்பும் இல்லை. நான் உங்கள் முன் இப்படி நிற்கிறேன்’’ என்று தன் உரையைத் தொடங்கினார்.
குண்டு துளைக்காத கண்ணாடியை நீக்க உத்தரவிட்டதைச் சுட்டிக்காட்டி சங்க பரிவாரத்தினர் கொண்டாடினர். அவ்வளவு பெரிய தைரியசாலியா அமித்ஷா? உண்மை என்னவென்றால், அமித்ஷா காஷ்மீருக்கு வருவதற்கு முன்பே அங்கு வெகுவாக பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுவிட்டது. காஷ்மீர் முழுவதும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) உலாவத் தொடங்கின. நகரில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டன. இருசக்கர வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. சந்தைக்கு சென்றவர்கள் கூட சந்தேகக் கண்ணோடு பார்க்கப்பட்டனர். கல்லெறிந்தவர்கள், ‘தீவிரவாதிகளின்’ உறவினர்கள் என்று காரணம் காட்டி கிட்டத்தட்ட 900 பேர் வரை போலீசால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பலரும் கைது செய்யப்பட்டனர். பலர் காஷ்மீருக்கு வெளியே உள்ள சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். இப்படி மொத்த காஷ்மீரையும் சிறை வைத்துவிட்டுதான் சிறிய கண்ணாடி கவசத்தை விட்டு வெளியேற துணிந்தார் ‘மாவீரர்’ அமித்ஷா. என்ன இருந்தாலும் ‘வீர’ சாவர்க்கர் பரம்பரை அல்லவா?
ஜம்மு பகுதியில், அம்பானி நூறு ரிலையன்ஸ் சில்லறை வணிகக் கடைகளை திறந்துள்ளதற்கு எதிராக போராடும் சிறு வணிகர்கள்.
மேலும் பேசிய அமித்ஷா, தாம் இளைஞர்களுடன் நட்பு நாடி வந்திருப்பதாகவும் காஷ்மீர் இளைஞர்கள் மோடி அரசுடன் ஒத்துழைத்தால் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டலாம் என்று கூறினார். இந்திய இராணுவத்தின் துப்பாக்கி முனையில் காஷ்மீர் இளைஞர்களை நிறுத்தி வைத்து அவர்களிடம் நட்பு பாராட்டுவதாகத் தெரிவித்திருப்பதெல்லாம் வக்கிரத்தின் உச்சம்.
அமித்ஷாவின் காஷ்மீர் வருகை சமயத்தில்தான், T-20 கிரிக்கெட் போட்டியில், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பெற்ற வெற்றியை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கொண்டாடியதாகக் குற்றம்சாட்டப்பட்டு மாணவர்கள் மீது, ஊபா கொடுஞ்சட்டம் பாய்ச்சப்பட்டது. இந்தியாவின் தோல்வியைக் கொண்டாடியதன் மூலம் அமித்ஷா கோரியபடி இந்திய (மோடி) அரசிடம் ‘ஒத்துழைத்துப் போவதற்கோ’, ‘நட்பு செய்வதற்கோ’ காஷ்மீர் இளைஞர்கள் தயாரில்லை என்பதை தங்களது செயலால் காரி உமிழ்ந்து சொல்லிவிட்டார்கள்.
காஷ்மீர் இளைஞர்கள் மீது ஊபா சட்டத்தைப் பாய்ச்சியதைதான் ‘மனம் திறந்து’ பேச விரும்புகிறார் போலும் என அமித்ஷாவை ஜம்மு – காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கேலி செய்துள்ளார்.
போராடியவர்களுக்கும் எதிர் கருத்து தெரிவிப்பவர்களுக்கும் எதிராக மட்டுமல்ல, பத்திரிகையாளர்களுக்கும் எதிராக ஊபா சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. காஷ்மீர் மக்களின் இரண்டாண்டு வாழ்க்கையை முடக்கிய பாஜக – சங்க பரிவாரக் கும்பலின் மீது காஷ்மீர் இளைஞர்கள் கடும் கோபத்தில் இருக்கும் நிலையில் இளைஞர்களிடம் நட்பு நாடி வந்திருப்பதாக அமித்ஷா கூறுவதே கேலிக்கூத்து!
பயங்கரவாதம் ஒழியவில்லை…. புதிய வடிவில் பிறப்பெடுத்திருக்கிறது!
தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு காஷ்மீரில் பயங்கரவாதம் கடுமையாக ஒடுக்கப்பட்டிருப்பதாகப் பேசிய அமித்ஷா, 2004 – 2014 வரையிலான பத்தாண்டுகளில் 2,081 பொதுமக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாகவும் பாஜக ஆட்சிக்கு வந்த 2014 முதல் செப்டம்பர் 2021 வரை அது 239-ஆகக் குறைந்துள்ளதாகவும் அதாவது ஆண்டுக்கு 208 பேர் என இருந்த உயிரிழப்பு தற்போது ஆண்டுக்கு 30 பேர் என குறைந்துள்ளதாகவும் புள்ளிவிவரம் கொடுக்கிறார். ஆனால், கடந்த அக்டோபர் மாதம் அமித்ஷாவின் காஷ்மீர் வருகையின்போது அங்கு நிலவிய சூழல் ‘பயங்கரவாதத்தை ஒடுக்கிவிட்டதாகக்’ கூறும் அவரின் அண்டப் புளுகுகளை அம்பலப்படுத்துகிறது.
காஷ்மீரில் பயங்கரவாதம் புதிய வடிவில் பிறப்பெடுத்திருக்கிறது. சிறுபான்மை இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் காஷ்மீரிகள் அல்லாத புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட சாதாரண பொதுமக்கள், எதிர்ப்பு முன்னணி (The Resistance Front) என்ற பெயரில் புதிதாக உருவாகியுள்ள பயங்கரவாதக் குழுவினரால் குறிவைத்துக் கொல்லப்படுகிறார்கள். இந்த ஆண்டு (2021) மட்டும் சுமார் 31 பேரும் குறிப்பாக அமித்ஷா காஷ்மீருக்கு வந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 11 பொதுமக்களும் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
ஆதிக்கசாதி இந்துக்களான காஷ்மீரி பண்டிட்டுகள், பாஜக-வின் சமூக அடித்தளமாக இருப்பவர்கள். இதுபோன்ற சம்பவங்களால் அச்சமுற்ற பண்டிட்டுகளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் கூட்டம் கூட்டமாக காஷ்மீரைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை இராணுவத்தினர் மீது மட்டுமே நடத்தப்பட்டு வந்த பயங்கரவாதத் தாக்குதல், தற்போது சிறுபான்மையினரை (பொதுமக்களை) குறிவைத்துக் கொல்வது என நூதன வடிவெடுத்துள்ளது. இதுபோன்றதொரு எதிர்வினையை சமாளிக்க முடியாமல் திணறிவருகிறது இராணுவம்.
எதிர்ப்பு முன்னணியின் படுகொலைகளுக்குப் பிறகு, பயங்கரவாதிகளைப் பிடிக்கிறேன் என இராணுவம் நிகழ்த்தும் அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கண்ணில்படும் அப்பாவி காஷ்மீரிகளை சுட்டுக் கொன்றுவிட்டு, ‘பயங்கரவாதிகள் சுட்டுப் பிடிக்கப்பட்டனர்’ என போலி மோதல் படுகொலைகளை அரங்கேற்றி வருவதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
‘சிறுபான்மையினரை குறிவைத்துக் கொல்லுதல்’ என்ற பயங்கரவாத வடிவம் 1990-களை நினைவுபடுத்துகிறது என்கின்றன பத்திரிகைகள். 1990-களில், காஷ்மீரிலுள்ள மத அடிப்படையிலான பயங்கரவாதக் குழுக்கள் காஷ்மீர் பண்டிட்டுகளைக் குறிவைத்துக் கொன்றனர். காஷ்மீரை விட்டு அவர்கள் வெளியேற வேண்டும் என மிரட்டல் விடுத்தனர். 1990 – 1992-க்கு இடைப்பட்ட காலத்தில், சுமார் 70,000 பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேறினர். தற்போது அந்தச் சூழல் மீண்டும் உருவாகிவிடுமோ என்று அச்சம் நிலவுகிறது.
இந்த சூழலில்தான், காஷ்மீரை சாந்தப்படுத்துவதற்காக சில அறிவிப்புகளை வெளியிடவும் தனது அடித்தளமாக உள்ள பண்டிட்டுகளுக்கு ஆறுதலளிப்பதற்காகவும் மூன்றுநாள் பயணத்தை திட்டுமிட்டுக் கொண்டார் அமித்ஷா.
30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது, மீண்டும் அப்படியொரு பயங்கரவாதக் குழு  தலையெடுத்திருக்கிறதென்றால் அதற்கு மோடி – அமித்ஷா தலைமையிலான பாஜக அரசுதான் காரணம். சிறப்புச் சட்டம் இரத்து செய்யப்பட்ட பிறகுதான் எதிர்ப்பு முன்னணி (TRF) என்ற பயங்கரவாதக் குழு உருவாகியிருக்கிறது. சிறுபான்மையினர் மீதான படுகொலைக்குப் பொறுப்பேற்றிருக்கும் எதிர்ப்பு முன்னணி, ‘‘நாங்கள் அப்பாவிப் பொதுமக்கள் யாரையும் கொல்லவில்லை, ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகளைத்தான் கொல்கிறோம்’’ என்று நியாயம் சொல்கிறது. ஆனால், எதிர்ப்பு முன்னணி கொன்றவர்கள் எல்லோரும் ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதிகள் இல்லை. பிற மாநிலங்களில் இருந்து பணிக்காக அங்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களை உள்ளடக்கிய சிறுபான்மையினர் கொல்லப்பட்டிருந்தார்கள். ‘‘காஷ்மீருக்கு வந்து குடியேறும் அனைவரையும் நாங்கள் ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகளாகத்தான் கருதுவோம்’’ என்று காரணம் சொல்கிறது எதிர்ப்பு முன்னணி.
இத்தகைய பயங்கரவாதக் குழுக்கள் உருவாகுவதற்கான அடித்தளத்தை மோடி அரசு இந்த இரண்டாண்டுகளில் பல்வேறு சட்டங்கள் மூலம் அடித்தளமிட்டிருக்கிறது. காஷ்மீர் சிறப்புச் சட்டம் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு சட்டங்கள் அங்கு திருத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, 15 ஆண்டுகள் காஷ்மீரில் வசிக்கும் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என்ற சட்டத்திருத்தம், காஷ்மீரில் யார் வேண்டுமானால் நிலம் வாங்கலாம் என்ற சட்டத்திருத்தம், அரசு வேலைகளில் காஷ்மீரிகளுக்கு இருந்த 50 சதவிகிதம் பிரதிநிதித்துவத்தை 33 சதவிதமாக குறைத்தது போன்றவை இந்தச் சட்டத் திருத்தங்களில் அடங்கும்.
பாலஸ்தீனத்தைப்போல காஷ்மீரின் மக்கள் தொகை விகிதத்தையே மாற்றமுனையும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சதித்திட்டத்தின் அங்கம்தான் இந்தச் சட்டத் திருத்தங்கள் என்றும்,  இதன் காரணமாகவே காஷ்மீரிகள் அல்லாத எல்லோரையும் ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகளாகத்தான் பார்ப்போம் என்றும் சொல்கிறது எதிர்ப்பு முன்னணி.
தெளிவாகப் பார்த்தோமென்றால், அமித்ஷா பீற்றிக் கொள்வதைப்போல பாஜக அரசு அங்கு பயங்கரவாதத்தை ஒடுக்கிவிடவில்லை. மாறாக, பழைய பயங்கரவாதக் கும்பல்களோடு ஒரு புதிய பயங்கரவாதக் குழுவின் பிரசவத்திற்கு வழிவகுத்திருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவதோ அப்பாவி பொதுமக்கள்தான்.
மாநில ‘ஜனநாயகத்திற்கு’.. பாஜகவின் உள்ளாட்சி ‘ஜனநாயகம்’ ஒரு சாட்சி!
ஜம்மு – காஷ்மீரில் எல்லைகள் மறுநிர்ணயம் செய்யப்பட்டு, தொகுதிகள் பிரிக்கப்பட்டபின் மீண்டும் ஜம்மு – காஷ்மீருக்கு மாநில தேர்தலை நடத்தப்போவதாக சொல்லும் அமித்ஷா, அதற்கு ஆதரமாக, காஷ்மீரில் தாங்கள் ஏற்கெனவே உள்ளாட்சித் தேர்தல் நடத்தியிருப்பதைக் குறிப்பிட்டு பெருமையடைகிறார்.
குறிப்பாக, ‘‘70 ஆண்டு காலமாக ஜம்மு – காஷ்மீரை ஆண்ட மூன்று குடும்பங்கள் 87 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 6 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு என்ன கொடுத்தன. திரு நரேந்திர மோடி 30,000 உள்ளாட்சி பிரதிநிதிகளை வழங்கியுள்ளார். இப்போது பஞ்ச்களும் சர்பஞ்ச்களும் (காஷ்மீர் உள்ளாட்சி பிரதிநிதிகளை இவ்வாறு அழைக்கின்றனர்) இந்திய அரசில் அமைச்சராகலாம், ஜம்மு – காஷ்மீரின் முதல்வராகலாம்’’ என்று பேசியிருக்கிறார் நமது  ‘ஜனநாயக மூர்த்தி’ அமித்ஷா.
இந்த உரையைக் கேட்கும் காஷ்மீர் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளின் கண்கள் நிச்சயம் கோபத்தால் சிவந்திருக்கும்.. ஏனெனில், காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் நடந்ததே தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு முறையான அதிகாரம் வழங்கப்படவில்லை.
‘‘ஜி.ஆர்.எஸ்., கிராம சேவகர்கள், பி.டி.ஓ., ஏ.சி.டி., ஏ.சி.ஆர். உள்ளிட்ட கிராம அளவிலான அதிகாரிகளிலிருந்து மாவட்ட அளவிலான நிர்வாகம் வரை யாரும் எங்கள் பிரச்சினைகளுக்கு செவிசாய்க்கவில்லை. நாங்கள் பலமுறை அவர்களை அணுகி பல்வேறு கடிதங்களை சமர்ப்பித்தோம், ஆனால் அவர்கள் எங்கள் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வும் சொல்லவில்லை’’ என்று பஞ்சாயத்து உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ரம்பன் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 70 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இக்காரணங்களால் கூண்டோடு பதவி விலகியுள்ளனர்.
ஜனநாயக அலங்காரத்திற்காக உள்ளாட்சித் தேர்தல்! பொம்மைகளாக பஞ்சாயத்து தலைவர்கள்! ‘வேர்மட்ட ஜனநாயகமே’ பல்லிளிக்கும் இலட்சணத்தில், மாநிலத் தேர்தலை நடத்தி கூடுதல் ‘ஜனநாயகம்’ வழங்கப்போவதாக அமித்ஷா கூறுவது, எப்படிப்பட்ட ஜனநாயகமாக இருக்குமென்பதை இதிலிருந்தே நாம் அவதானித்துக் கொள்ளலாம்.
கூடுதலாகச் சொல்ல வேண்டுமென்றால், காஷ்மீரில் ‘வேர்மட்ட ஜனநாயத்தை’ தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக உறுப்பினர்களும் கூட அனுபவிக்க முடியவில்லை. அதற்கும் மோடிதான் காரணம். 370 சிறப்புச் சட்டம் இரத்து செய்யப்பட்ட 2019 ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்த ஆண்டு (2021) ஆகஸ்டு மாதம்வரை சுமார் 23 உள்ளூர் பாஜக தலைவர்களும் உறுப்பினர்களும் பயங்கரவாதிகளால் குறிவைத்துக் கொல்லப்பட்டனர். அதிலும், குறிவைக்கப்பட்ட பெரும்பாலானோர் பஞ்சாயத்துத் தலைவர்கள், உறுப்பினர்கள். இக்காரணங்களாலும் பலர் பதவி விலகினர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பல பிரதிநிதிகளை அரசு மற்றும் தனியார் விடுதிகளில் பாதுகாப்போடு தங்கவைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. குடும்பத்தைப் பார்க்கக்கூட அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கடந்த ஜூன் மாதம் காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் மாவட்ட கவுன்சில் உறுப்பினரான அஷாக் ஹுசைன் ஹுர்ரா தனது ஹோட்டல் அறைக்குள் தற்கொலைக்கு முயன்ற கொடுமையும் அரங்கேறியுள்ளது.
‘வளர்ச்சி’த் திட்டங்களின் உண்மை முகம்
சிறப்புச் சட்டம் இரத்து செய்யப்பட்டது காஷ்மீரை வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதற்குத்தான் என்று கூறிய அமித்ஷா, ‘‘இங்கு 9 மருத்துவக் கல்லூரிகள், 15 நர்சிங் கல்லூரிகள், ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி., ஐ.ஐ.எம்.சி., 2 கேன்சர் இன்ஸ்டிடியூட், பாலிடெக்னிக், நர்சிங் கல்லூரிகள் என பல கல்வி நிறுவனங்கள் கட்டப்பட்டு தொடங்கப்பட்டுள்ளன… இனி மருத்துவம் படிக்க காஷ்மீர் இளைஞர்கள் பாகிஸ்தான் போக வேண்டியதில்லை… இந்த பகுதிக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கும் இடையிலான வளர்ச்சியை ஒப்பிட்டுப் பாருங்கள், அங்கு மின்சாரம், சாலைகள், கழிப்பிட வசதிகள் ஏதேனும் உள்ளனவா எதுவும் இல்லை. மறுபுறம் இங்கோ, மற்ற இந்தியர்களைப் போலவே உங்களுக்கும் (காஷ்மீரிகளுக்கும்) உரிமை உள்ளது’’ என்றார்.
மேலும், கடந்த ஆறு மாதத்தில் ஜம்மு – காஷ்மீரில் ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு வந்துள்ளதாகவும், அதனை 2022-க்குள் ரூ.51 ஆயிரம் கோடியாக்க இலக்கு வைத்துள்ளதாகவும் கூறுகிறார். இதன்மூலம் ஜம்மு – காஷ்மீரில் 5 இலட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்று கூறுகிறார் அமித்ஷா.
முதலாவதாக, மருத்துவக் கல்லூரிகள், ஐ.ஐ.டி.க்கள் கட்டப்பட்டுள்ளதாக சொல்வதைப் பற்றி பார்க்கலாம். காஷ்மீர் மண்ணின் மைந்தர்களுக்கு இருந்த சிறப்புரிமைகள், சலுகைகள் எல்லாவற்றையும் பறித்து, அம்மாநிலத்தை துண்டாக்கி இராணுமயப்படுத்தி ஒடுக்கி வருவது, குறிப்பாக மத அடிப்படையிலான பாகுபாடுகள் போன்றவற்றால் காஷ்மீர் இளம்தலைமுறையினர் பாகிஸ்தானை ஆதரிக்கும் எதிர் மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அதை எப்படியாவது சரிகட்டவிட வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகள்தான் இவை.
எதார்த்தத்தில், இதில் இன்னொரு அம்சமும் இருக்கிறது. அங்கிருக்கு மருத்துவக் கல்லூரிகளோ, ஐ.ஐ.டி.க்களோ காஷ்மீரிகளுக்கு மட்டுமா கல்வி வழங்கப்போகிறது? மருத்துவத் துறையைப் பொறுத்தவரை நீட் தேர்வு நுழைந்ததிலிருந்து பணம் கட்டி கோச்சிங் சென்றால்தான் வெற்றிபெற முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இந்தியா முழுவதுமுள்ள உயர் வர்க்கத்தாரும் அதன் விளைவாக பெருமளவில் உயர்சாதியினரும் ஆதாயமடைவார்களே தவிர இதனால் காஷ்மீரிகளுக்கு பெரிய நலன் இருக்க முடியாது. ஐ.ஐ.டி.களைப் பற்றி தனியாக எதுவும் சொல்லத் தேவையில்லை. அது ஏற்கனவே பார்ப்பன உயர்சாதியினரின் கூடாரங்களாத்தான் இருக்கிறது.
இரண்டாவதாக அமித்ஷா, ரூ.51 ஆயிரம் முதலீடு, 5 இலட்சம் பேருக்கு வேலை என்கிறாரே, உண்மையிலேயே காஷ்மீர் இளைஞர்களுக்கு மோடி அரசு வேலைவாய்ப்பை உருவாக்கியிருக்கிறதா? எதார்த்தத்தில் இது குறித்த புள்ளிவரங்கள் அனைத்தும் அமித்ஷாவின் பிதற்றல்களைப் பார்த்து பல்லிளிக்கின்றன. காஷ்மீரின் சிறப்புரிமை இரத்து செய்வதற்கு முன்பு 7.9 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் 2021 ஆகஸ்டில் 13.6 சதவீதமாக உயர்ந்தது. பின்னர் ஒரே மாதத்தில் 21.6 சதவீதமாக வேலையின்மை விகிதம் அதிகரித்தது. இது தேசிய சராசரியான 6.9 சதவீதத்தைவிட பல மடங்கு அதிகமாகும். உண்மையைச் சொன்னால், இந்திய இளைஞர்களுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு கொடுத்த கதைதான், இந்த 5 இலட்சம் வேலைவாய்ப்பும்.
படிக்க :
புதிய ஜனநாயகம் டிசம்பர் – 2021 அச்சு இதழ் !
புதிய ஜனநாயகம் டிசம்பர் 2021 மின்னிதழ் !
அப்படியெனில், தற்போது வந்துள்ள ரூ.12 ஆயிரம் கோடி முதலீடும், அடுத்த ஆண்டிற்குள் வரவிருக்கும் ரூ.51 ஆயிரம் கோடி முதலீடும் யாருக்கான வளர்ச்சியை உருவாக்கப்போகின்றன, சிறப்புச் சட்டம் இரத்து செய்தபிறகு ஏன் இவ்வளவு மூலதனம் குவிந்துள்ளது, இவையெல்லாம் யாருடைய முதலீடுகள்…? சந்தேகமே வேண்டாம் அம்பானி, அதானி உள்ளிட்ட மோடியின் கார்ப்பரேட் நண்பர்கள் காஷ்மீரை சுரண்டிக் கொழுக்க செய்துள்ள முதலீடுகளே அவை. இந்த முதலீடுகளுக்குத் தோதாகத்தான் விவசாய காரணங்களுக்காக அல்லாமல் வேறு காரணங்களுக்காக நிலம் வாங்க முடியாது என்றிருந்த காஷ்மீரின் பெரும் பண்ணை ஒழிப்புச் சட்டத்தை நீக்கி கார்ப்பரேட்டுகள் அபகரித்துக் கொள்ள வழியேற்படுத்தியிருக்கிறது.
இந்த மையமான நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளத்தான் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமை இரத்து செய்யப்பட்டது. அப்போது மோடி ‘‘நயா காஷ்மீர்’’ (புதிய காஷ்மீர்) பிறந்துள்ளதாக அறிவித்தார்.
உழுபவனுக்கு நிலம், ஆண் – பெண் சமத்துவம், அனைவருக்கும் வாக்குரிமை என நிலப்பிரபுத்துவ மன்னராட்சியை எதிர்த்துப் போராடி வென்ற காஷ்மீர் மக்கள் 1940-களில் முழங்கிய முழக்கம்தான் ‘‘நயா காஷ்மீர்’’. அவர்கள் போராடிப் பெற்ற ஒவ்வொரு உரிமைகளையும் பறித்துவிட்டு, கார்ப்பரேட்டுகளின் மற்றுமொரு சுரண்டல் நிலமாக மாற்றப்பட்டிருக்கும் காஷ்மீரை, ‘‘நயா காஷ்மீர்’’ என்று சொல்வதற்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் தேவை இந்த காவிக் கும்பலுக்கு…

துலிபா

எல்லைப் பாதுகாப்புப் படை விரிவாக்கம் : இராணுவ சர்வாதிகாரம்!

எல்லைப் பாதுகாப்புப் படை விரிவாக்கம் :
‘தேசப் பாதுகாப்பு’  என்ற பெயரில் அரங்கேறும் இராணுவ சர்வாதிகாரம் !
ந்தியாவை இந்து ராஷ்டிரமாக்க வேண்டும் என்ற தனது கனவை நனவாக்குவதற்கு மிக மூர்க்கத்தனமாக செயல்பட்டு வருகிறது, ஆர்.எஸ்.எஸ். காவி கும்பல். அதற்காக, மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து அதிகாரத்தை மத்தியில் குவிப்பது; ‘‘ஊழல் ஒழிப்பு’’, ‘‘தேச வளர்ச்சி’’ என்ற பொய்ப் பிரச்சாரங்களின் மூலமும் மதவெறி, தேசவெறியைத் தூண்டிவிட்டு கலவரங்கள் நடத்துவதன் மூலமும் மாநிலங்களில் நேரடியாக ஆட்சியைப் பிடிப்பது; ஆட்சிக்கு வந்தபின், தான் ஆளும் மாநிலங்களில் மிகத் தீவிரமாக காவி − கார்ப்பரேட் திட்டங்களை அமல்படுத்துவது எனத் துல்லியமாக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
தான் நேரடியாக ஆட்சி செய்யாத மாநிலங்களில், ஆளும் கட்சியினரை மிரட்டி அவர்களுடன் கூட்டணி சேர்ந்துகொண்டு அதிகாரத்தில் பங்குபெறுவது, குதிரை பேரம் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது என பார்ப்பனியத்திற்கே உரிய தந்திரத்துடன் செயல்பட்டு வருகிறது காவிக் கும்பல். தனக்கு சல்லிக்காசு கூட செல்வாக்கு இல்லாத மாநிலங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களை ஆளுநர்களாக நியமிப்பதன் மூலம் அம்மாநிலங்களின் அதிகாரத்தைக் கைக்குள் வைத்துக் கொள்கிறது. இந்த நடவடிக்கைகளின் அடுத்தகட்டமாக இராணுவ ரீதியிலான திடீர் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது, மோடி – அமித்ஷா கும்பல்.
***
எந்தவித முன்னறிவிப்புமின்றி பஞ்சாப், மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF − border security force) அதிகார வரம்பை 15 கி.மீட்டரிலிருந்து 50 கி.மீட்டராக அதிகரித்து கடந்த அக்டோபர் 11 அன்று அரசாணை வெளியிட்டிருக்கிறது ஒன்றிய உள்துறை அமைச்சகம். எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) அதிகார வரம்பை அதிகரித்திருப்பதற்கான உரிய காரணங்கள் எதுவும் இந்த அரசாணையில் குறிப்பிடப்படவில்லை.
படிக்க :
AFSPA -ஐ இரத்து செய் : நாகாலாந்து கிராம மக்களை சுட்டுக் கொன்ற துணை இராணுவப்படை
நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல !
மோடி அரசின் இந்த பாசிச நடவடிக்கையை, ‘‘எல்லைப் பாதுகாப்புப் படையின் செயல்திறனை மேம்படுத்துவது மற்றும் நாடு முழுவதும் ஒரே சீரான தன்மையை உருவாக்குவது’’ என்று நியாயப்படுத்துகிறார் எல்லைப் பாதுகாப்புப் படை ஐ.ஜி. சாலமன் யாஷ் குமார் மின்ஸ்.
அசாமின் பா.ஜ.க. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள அதே நேரத்தில், பஞ்சாப், மேற்குவங்க மாநிலங்களோ இந்த இராணுவ நடவடிக்கையை ‘‘கூட்டாட்சியின் மீதான தாக்குதல்’’ என எதிர்க்கின்றன. எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பை அதிகரிக்கும் அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ‘‘சட்டம் ஒழுங்குப் பிரச்சினை மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும், மாநில போலீசுத் துறையின் மீதான நம்பிக்கையற்ற தன்மையின் வெளிப்பாடுதான் இந்த அரசாணை’’ என்றும் விமர்சித்துள்ளார் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி. மேற்குவங்க முதல்வர் மம்தாவோ, ‘‘இது கூட்டாட்சியின் மீதான தாக்குதல். இதனால் மக்கள்தான் தொல்லைக்குள்ளாவர்கள்’’ என்று எதிர்க்கிறார்.
பா.ஜ.க.வின் தமிழக செய்தித் தொடர்பாளர் நாராயணன், ‘‘தேசப் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள முடியாது. இது நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு. முக்கியமாக அசாம், பஞ்சாப், மேற்குவங்க மாநிலங்களின் நலன் கருதியே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்று தமிழகத்திலும் இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்வதற்கான அடித்தளத்தைப் போடுகிறார்.
விரிவுபடுத்தப்படும் பி.எஸ்.எஃப். படையின் அதிகாரம்
2014-ல் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்கள் முழுவதும், குஜராத்தில் 80 கி.மீ, ராஜஸ்தானில் 50 கி.மீ, பஞ்சாப், அசாம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் 15 கி.மீ வரை சர்வதேச எல்லையிலிருந்து எல்லைப் பாதுகாப்புப் படையின் (பி.எஸ்.எப்) கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இதில் திருத்தம் செய்யப்பட்டு மேற்கூறியபடி எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பு மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது.
எல்லைப் பாதுகாப்பு படை விரிவாக்கத்தை கைவிட வேண்டும் என மோடியிடம் கோரிக்கை வைக்கிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா.
குறிப்பாக நமது அண்டை நாடான பாகிஸ்தானுடன் 425 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்கிற பஞ்சாப் மாநிலத்தில் அதிகார வரம்பு விரிவாக்கப்பட்டுள்ளதால் மாநிலத்தில் பாதி எல்லைப் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. பங்களாதேஷூடன் 2216.7 கீ.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்கிற மேற்குவங்க மாநிலத்தில், மொத்தமுள்ள 23 மாவட்டங்களில், மால்டா, நொய்டா, முர்சிதாபாத், கூச் பெஹர், ஜல்பைகுரி, உத்தர் தினைஜ்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் பங்களாதேஷ் எல்லையில் இருப்பதால், பி.எஸ்.எஃப்−ன் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன. இதனால் மாநிலத்தின் வட பகுதி முழுவதும், அதாவது மூன்றில் ஒரு பங்கு மாநிலம் இராணுவத்தின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால்தான் இம்மாநிலங்கள் இதை எதிர்க்கின்றன.
தேசப் பாதுகாப்பு எனும் போலியான நியாயவாதம்
இந்திய இராணுவத்தின் 7 பிரிவுகளில் ஒரு படைப்பிரிவே எல்லைப் பாதுகாப்புப் படையாகும். இந்தியா – பாகிஸ்தான் போருக்குப் பிறகு, 1968-ல் எல்லைப் பாதுகாப்புப் படைச்சட்டம் உருவாக்கப்பட்டு, 1969-லிருந்து இப்படை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. 1968 – சட்டத்தின்படி, அண்டை நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களின் எல்லையைப் பாதுகாப்பது இப்படையின் வேலையாகும்.
இப்படை தொடங்கப்பட்ட காலத்தில், எல்லையோர மாநிலங்களில் போதிய எண்ணிக்கையில் போலீசு நிலையங்கள், வாகன மற்றும் தொழில்நுட்ப வசதிகள் மாநில போலீசுத் துறையிடம் இல்லை. இதனைக் காரணமாகக் கொண்டு, ‘தேசப் பாதுகாப்பு’ என்ற பெயரில் அண்டை நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களில் சர்வதேச எல்லையிலிருந்து 15 கி.மீ வரை எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டது.
இதன் மூலம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், விசா சட்டம் 1962 மற்றும் 1967, சுங்க வரி சட்டம், கஞ்சா ஒழிப்புச் சட்டம், ஆயுத தடுப்புச் சட்டம் மற்றும் அன்னியச் செலாவணி சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த 15 கி.மீட்டருக்குள் தேடுதல் வேட்டை நடத்த, கைது மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள எல்லைப் பாதுகாப்புப் படைக்கு சிறப்பு அதிகாரம் உள்ளது. சுருக்கமாகச் சொன்னால், இந்த 15 கி.மீட்டருக்குள் போலீசு வேலையை இராணுவம் செய்யும் என்பதுதான்.
ஆனால், 1969-களில் இருந்த போலீசுத் துறை இன்று இல்லை, போலீசு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, வாகனம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளால் போலீசுத்துறை நவீனமயமாக்கப்பட்டுள்ளதால் எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பை அதிகரிக்கத் தேவையில்லை என முதலாளித்துவ பத்திரிகைகளே விமர்சிக்கின்றன.
பஞ்சாப், மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF – Borser Security Force) அதிகார வரம்பை 15 மி.மீட்டரிலிருந்து 50 கி.மீட்டராக அதிகரித்திருக்கிறது.
போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கத்தான் எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் சங்கிகள். ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் ரூ.21,000 கோடி மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்ட போது குஜராத்தின் எல்லைப் பாதுகாப்பு படை என்ன செய்தது? அப்பாவி முஸ்லீம்களை சுட்டுக் கொல்லும் இராணுவம் ஏன் முந்த்ரா துறைமுகத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவில்லை? போதைப் பொருள் கடத்தலைத் தடுப்பது என்பதெல்லாம் வெறும் சப்பைக்கட்டு என்று இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.
போதைப் பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல், பயங்கரவாத ஊடுருவல் ஆகியவை அனைத்தும் அதிகாரவர்க்கத்தின் துணை இன்றி நடப்பது இல்லை. பிரச்சினை எல்லையிலேயே இருக்கும்போது அந்த எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகாரத்தை விரிவுபடுத்தி என்ன பயன்? ஆகவே கடத்தல், எல்லை தாண்டிய ஊடுருவல் ஆகியவையெல்லாம் தங்களுடைய காவி பாசிச நோக்கத்தை மறைப்பதற்காக ஆர்.எஸ்.எஸ். காவிக் கும்பல் பயன்படுத்தும் சொற்சிலம்பங்களே அன்றி வேறல்ல.
காவி பாசிச கும்பலின் உண்மையான நோக்கம் என்ன?
கோவா, மணிப்பூர், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மேகாலயா வரிசையில் பஞ்சாப் மாநிலமும் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் தனது தேர்தல் வியூகத்தை வகுத்து செயல்படத் தொடங்கிவிட்டது. மோடி அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் நடத்திவரும் மக்கள் திரள் போராட்டம் பா.ஜ.க.வை அம்மாநிலத்திலிருந்தே துடைத்தெறிந்திருக்கும் நிலையில் அங்கு தாம் ஆட்சியைப் பிடிப்பது பற்றி காவிக்கும்பல் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.
மேற்கு வங்கத்தில், பா.ஜ.க. மெல்ல மெல்ல வளர்ந்துவந்தாலும், மம்தாவின் கவர்ச்சிவாத பொறுக்கி அரசியலின் செல்வாக்கு, மாநில அரசு எந்திரத்தில் தனது விசுவாசிகளை வலுவாகப் பெற்றிருப்பது போன்றவை பாசிச பா.ஜ.க.விற்கு சவாலாக உள்ளன. இதனால் திரிணாமுல் காங்கிரசிலிருந்து விலைக்கு வாங்கி பா.ஜ.க.வில் சேர்க்கப்பட்ட பல்வேறு எம்.எல்.ஏ., எம்.பி.க்களும் மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்து வருகிறார்கள்.
எனவே, இவ்விரு மாநிலங்களும் இந்திய – பாகிஸ்தான், இந்தியா – பங்களாதேஷ் எல்லையில் அமைந்துள்ளதை முகாந்திரமாக வைத்துக் கொண்டு, பயங்கரவாத பீதியூட்டி இம்மாநிலங்களில் இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான முயற்சியாகவே எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பு 50 கி.மீட்டராக அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பஞ்சாப், மேற்குவங்க முதல்வர்கள் சொல்வதைப் போல ‘‘மாநில உரிமை பறிப்பு’’ என்ற வரம்போடு இதனைச் சுருக்கிப் பார்க்கக் கூடாது.
மேலும், இந்தச் சட்டங்கள் பஞ்சாப், மேற்குவங்கம் என்ற வரம்போடு நின்றுவிடும் என்றும் கனவு காணக் கூடாது. இன்றைய சூழலில் சங்கிகளுக்கு எட்டாக்கனியாக இருக்கும் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் இந்தச் சட்டத்தைக் கொண்டு வரமுடியும். குறிப்பாக தமிழ்நாட்டில், இலங்கை வழியாக சீன அச்சுறுத்தல், விடுதலைப் புலிகள் ஊடுருவல் என பல்வேறு காரணங்களைக் காட்டி இங்கு தனது அதிகாரத்தை இராணுவத்தின் மூலமாகக் குவிக்க முடியும்.
இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் உள்ள பஞ்சாப், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் தீவிரவாதிகள் ஊடுருவல், முஸ்லீம் பயங்கரவாதம், முஸ்லீம் அகதிகள் ஊடுருவல், போதைப் பொருள் கடத்தல் என்ற பெயரில் விசாரணையின்றி யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம், தேடுதல் வேட்டை நடத்தலாம், துப்பாக்கி சூடு கூட நடத்தவும் முடியும். படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள், மனித உரிமை மீறல்கள், பொய் வழக்குகள் என அனைத்திலும் தேர்ச்சி பெற்றது எல்லைப் பாதுகாப்புப் படை என்பதை, வடகிழக்கு மாநிலங்களின் வரலாறு நமக்குச் சொல்லும்.
ஏற்கெனவே, அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு, சி.ஏ.ஏ. ஆகியவற்றின் மூலம் முஸ்லீம்களின் குடியுரிமையைப் பறித்து அகதிகளாக்கியுள்ளது காவிக் கும்பல். இந்த எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பு அதிகரிப்பின் மூலம் அப்பாவி முஸ்லீம்களின் மீது இராணுவ நடவடிக்கையும் பாய இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் தெற்கு திரிபுராவில் எல்லைத் தாண்டினார் என்று கூறி 23 வயது ஜாஸ்கிம் மியா என்ற இளைஞரை சுட்டுப் படுகொலை செய்துள்ள சம்பவம் இதற்கு நல்ல சான்று.
மேற்கு வங்கத்தில் மட்டும் இதுவரை 250 வழக்குகள் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு எதிராகப் பதிவாகி உள்ளன. 33 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்குவதற்கான போராட்டக் குரல்கள் காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் இன்னும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதிலிருந்து இராணுவத்தின் யோக்கியதையை நாம் புரிந்து கொள்ள முடியும். இனி இந்தப் படுகொலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் போகின்றது என்பதைத் தாண்டி அம்மாநில மக்களுக்கு ஒன்றிய அரசின் இந்த ‘‘வரம்பு விரிவாக்க’’ நடவடிக்கையால் எவ்விதப் பலனும் இல்லை. ஆனால் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கோ தங்களது இந்துராஷ்டிரக் கனவை வெல்வதற்கான அடித்தளங்களில் இதுவும் ஒன்று.
படிக்க :
புதிய ஜனநாயகம் டிசம்பர் – 2021 அச்சு இதழ் !
புதிய ஜனநாயகம் டிசம்பர் 2021 மின்னிதழ் !
அசாம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, மிசோராம், நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும், ஜம்மு – காஷ்மீர் – லடாக் ஒன்றிணைந்த மாநிலமாக இருந்த போதும், யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகும் கூட தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்கள் என்பவை பெயரளவிற்கானவையே. அவை முழுக்க முழுக்க இராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் அடக்கி ஒடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, தேசப் பாதுகாப்பு என்ற போலிக் காரணத்தைக் கூறி தமக்குச் சாதகமற்ற அரசியல் நிலைமைகள் உள்ள பஞ்சாபையும், மேற்குவங்கத்தையும் இன்னுமொரு காஷ்மீராகவும், வடகிழக்கு மாநிலங்களைப் போன்றும் மாற்றுவதற்கான முயற்சியே காவிக் கும்பலின் இந்த நடவடிக்கை. எனவே இது வெறும் அதிகார வரம்பு பற்றிய பிரச்சினையில்லை, காவி பாசிசத்தை நிலைநாட்ட இராணுவ சர்வாதிகாரத்தை உருவாக்குவதற்கான முன்னோட்டம்!

அப்பு

உத்தரப்பிரதேசம் : இந்து ராஷ்டிரத்திற்குள் ‘சாத்தியமான மாற்று’ இல்லை !

“காவி – கார்ப்பரேட் பாசிச அபாயத்தை முறியடிப்பதற்கான ஒரேவழி, பரந்துபட்ட உழைக்கும் மக்களையும் ஜனநாயக சக்திகளையும் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமையின் கீழ் அணிதிரட்டிப் போராடுவது ஒன்றுதான்” என்று நாம் சொல்கிறோம். ஆனால் பாசிச அபாயத்தை உணர்ந்தாலும் தற்போதைக்கு பா.ஜ.க.வை அதிகாரத்திலிருந்து கீழிறக்கி, அதற்கெதிராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் ஒரு கட்சியை ஆட்சியில் அமர்த்துவதுதான் உடனடியாக ஆகக்கூடிய ‘சாத்தியமான மாற்று’ என்று சிலர் சொல்லிவருகிறார்கள். ஒரு புரட்சிகர கட்சியின் அரசியல் தலைமையில் வெகுமக்களை அணிதிரட்டுவது ‘அசாத்தியம்’ என்பதுதான் அவர்களின் உளக் கருத்து என்றபோதும் மக்களை அணிதிரட்டுவதற்கான ஒரு ‘சுவாசிக்கும் அவகாசமாக’ அப்படியொரு ‘சாத்தியமான மாற்று’ தேவை என்று பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.

‘புரட்சியாளர்கள்’ என்று தங்களை கூறிக்கொள்ளும் இவர்கள், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது “தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும்.. வாக்களிக்க வேண்டும்” என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் பிரச்சாரம் செய்தார்கள். பா.ஜ.க.வை வெறுக்கும் தமிழக மக்களின் ஓட்டுக்களை அறுவடை செய்வதற்காக தி.மு.க.வும் பா.ஜ.க.விற்கு எதிரான கட்சியாக தன்னை முன்னிறுத்திக் கொண்டு சமூக நீதி, மாநில உரிமை, மொழி உரிமை என முழங்கியதானது அப்‘புரட்சியாளர்களின்’ பிரச்சாரத்திற்கு தோதாக அமைந்தது.

உண்மையில் தமிழகத்திற்கே உரிய களநிலைமைதான் தி.மு.க.வின் முற்போக்கு பிரச்சாரத்திற்கு அடித்தளமாக அமைந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் தமிழகத்திற்கு எதிர்நிலை உதாரணமாக, இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக மாறியுள்ள உத்தரப் பிரதேசத்தின் தேர்தல் கூத்துகளோ ‘பாசிசத்திற்கு எதிராக போராட தற்போதைக்கு ஒரு சாத்தியமான மாற்று’ எனும் மாயையை கலைப்பதாகவும் புரட்சிகர கட்சியின் தலைமையே ஒரே மாற்று என்பதை உணர்த்தும் சாட்சியமாகவும் இருக்கிறது.

000

ரவுடி சாமியார் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரப்பிரதேசம் இன்னும் சில மாதங்களில் தேர்தலைச் சந்திக்க தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்துராஷ்டிரத்தின் அடையாளமாக அயோத்தியில் ராமர் கோயில், கோமாதாக்களுக்கென தனி ஆம்புலன்ஸ் சேவை, ஊர்களின் பெயர்கள் இந்துத்துவமயமாக்கம் என காவி மணம் கமழ்கிறது உத்தரப் பிரதேசத்தில்.

முஸ்லீம்களை குறிவைக்கும் மதமாற்றத் தடைச்சட்டம், தலித்துக்கள் மீதான சாதிவெறித் தாக்குதல்கள், கொரோனா கால சுகாதார நெருக்கடியால் கங்கைக் கரையில் மிதந்த பிணங்கள், போராடும் மக்கள் மீது சர்வசாதாரணமாக ஏவப்படும் ஊபா கொடுஞ்சட்டம், லக்கிம்பூர் – கேரியில் நிகழ்த்தப்பட்ட விவசாயிகள் படுகொலை என யோகி அரசு எத்தனை கொடூரங்களில் ஈடுபட்டபோதும் அடுத்த தேர்தலிலும் பா.ஜ.க.தான் வெல்லும் என தற்போதுவரை வெளிவந்துள்ள தேர்தல் கணிப்புகள் சொல்கின்றன. பல ஆண்டுகளாக காவிக் கும்பலால் இந்துத்துவ அரசியலில் பண்படுத்தப்பட்ட நிலமல்லவா உத்தரப் பிரதேசம்! எனவே இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லைதான்.

இதே காரணத்திற்காகத்தான் தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு எதிராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் கட்சிகளைப் போலல்லாமல் உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க.விற்கு எதிராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் காங்கிரஸ் உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகள் எதுவும் அதன் காவிக் கொள்கையை எதிர்த்து மூச்சுகூட விடுவதில்லை.

இவர்கள் காவி அரசியலை எதிர்ப்பவர்களில்லை என்பது பழையநிலை; பா.ஜ.க.வை எதிர்ப்பதாகச் சொல்லி களம் காண்பவர்களே, அதன் ‘இந்து அரசியலை’ தன்வயப்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தற்போது முதிர்ச்சிபெற்றுவரும் புதிய எதார்த்தம். ஆம், அடுத்த ஆண்டுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துக் கொண்டிருக்கின்றன. பா.ஜ.க.வை எதிர்த்து காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் போட்டியிடுகின்றன. பிரச்சாரங்களின் உள்ளடக்கமோ பா.ஜ.க.வின் ‘இந்து’ அரசியல் VS பா.ஜ.க. எதிர்ப்பு ‘இந்து’ அரசியல் என்பதாக உள்ளது. ‘சாத்தியமான மாற்று’ என்று எவையும் நம் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை புலப்படவில்லை.

பிரியங்காவின் அஸ்திரம் : கவர்ச்சிவாதம் + ‘இந்து’ அடையாளம்

தேர்தலில் பெண்களுக்கு 40 சதவிகித இடஒதுக்கீடு, மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன், ஸ்கூட்டர், பெண்களுக்கு பேருந்துகளில் இலவசப் பயணம் என பிரஷாந்த் கிஷோர் வகுத்துக் கொடுக்கும் கவர்ச்சிவாத வாக்குறுதிகளை முன்னிறுத்தி, பெண்களின் ஓட்டுக்களைக் குறிவைத்து களமிறங்கியிருக்கிறார் பிரியங்கா. எனினும் உ.பி.யில் வெற்றிபெற வேண்டுமானால் அதுமட்டும் போதாது எனத் தெரிந்துவைத்திருக்கும் பிரியங்கா, தனது போலி மதச்சார்பின்மையையும் கூட தூக்கி எறிந்துவிட்டு தன்னை தீவிரமாக ‘இந்து’ அடையாளத்துடன் இணைத்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த அக்டோபர் மாதம் மோடியின் வாரணாசி தொகுதியில் உள்ள காசி விஸ்வநாதரையும் துர்க்கையையும் வழிபட்ட பிரியங்கா, “விவசாயிகளுக்கான நீதி” (கிசான் நியாய்) என்ற பெயரில் தனது கட்சி ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டமொன்றில், நெற்றியில் குங்குமத் திலகமிட்டு கழுத்தில் ருத்ராக்ஷ மாலையுடன் ‘தெய்வகாடாக்‌ஷமாக’ காட்சியளித்தார். பிரியங்கா மட்டுமல்ல, அங்கு மேடையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் பெருந்தலைகளின் நெற்றி அனைத்தும் அன்று வண்ணமயமாகத்தானிருந்தது.

பொதுக்கூட்டம் தொடங்கியதும் மேடையிலிருந்த பிரியங்கா, சதீஷ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் “ஹர் ஹர் மஹாதேவ்” என ஓங்காரமாக முழங்கினார்கள். பிரியங்கா பேசத் தொடங்கும் முன், தாம் நவராத்திரி விரதமிருப்பதாகச் சொல்லி துர்கா சப்தசதியிலிருந்து “யாதேவி சர்வ பூதேஷூ” என்ற ஸ்லோகத்தை உச்சாடனம் செய்துவிட்டு ‘ஜெய் மாதா தி’ என ஓங்காரமாக முழங்குகிறார். கூட்டத்திலுள்ளவர்களையும் முழங்கச்சொல்கிறார். இது காங்கிரசின் கூட்டம்தானா, இல்லை சங்க பரிவாரத்தினரின் கூட்டமா என்று இனம் காண முடியாத அளவுக்கு அக்காட்சி அமைந்திருந்தது.

இராமர் கோயில் அறக்கட்டளை சார்பாக நிலம் வாங்கியதில் மோசடி நடந்த விவகாரத்தை மற்ற கட்சிகளைவிட காங்கிரஸ் பெரிய அளவில் விவாதப் பொருளாக்கியது. “கடவுள் இராமரின் பெயரைச் சொல்லி பா.ஜ.க.வால் எப்படி இவ்வளவு பெரிய ஊழலைச் செய்ய முடிகிறது” என காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜிவாலா ஆதங்கப்பட்டார். கடந்த ஜூன் மாதம் உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி, “கொரோனா தொற்றுக் காலத்தில் மற்ற எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்வதற்கு அனுமதிக்கும்போது, ஏன் அமர்நாத் யாத்திரைக்கு அனுமதிக்கக் கூடாது. நம்பிக்கைகள் ஏன் ஏமாற்றமடைய வேண்டும்” என்று ‘இந்துக்களுக்காக’ குரல் எழுப்பினார். ஊரடங்கு விதிகள் காரணமாக தி.மு.க. அரசு கோயிலைத் திறப்பதற்கு தடை விதித்திருந்தபோது, தமிழக பா.ஜ.க. இந்துக் கோயில்களைத் திறக்க வேண்டும் என ஆர்பாட்டங்கள் நடத்தியது, அதன் மூலம் தி.மு.க. எதிர்ப்பில் ‘இந்து’ அணிதிரட்டலை மேற்கொண்டது. அதைப் போல பா.ஜ.க. எதிர்ப்பு ‘இந்து’ அணிதிரட்டலுக்கான ஒரு வாய்வீச்சுதான் அது.

மாயாவதியின் ‘தலித் – பார்பனக் கூட்டணி 2.0’

“தலித் பிரச்சினையை தலித் மக்களால் மட்டுமே உணர முடியும். தலித்துக்களுக்குத் தலித்துகள்தான் தலைமை தாங்க வேண்டும். தலித்துகளே, பிற கட்சிகளில் சேராதீர்கள்; பிற ஆதிக்க சாதியினரை எமது கட்சியில் சேர்க்கவே மாட்டோம்” என்றெல்லாம் ஆரம்பக் காலத்தில் அடையாள அரசியல் சவடாலடித்துவந்த பகுஜன் சமாஜ் கட்சி, உ.பி.யின் ஓட்டுப் பொறுக்கி அரசியல் களத்தில் மூழ்கி ஞானம் பெற்றபோது பச்சையான பார்ப்பன பாதந்தாங்கி கட்சியாக இழிந்துபோனது.
தேர்தலில் வெல்ல வேண்டுமென்றால், தலித்துகளின் 23 சதவிகித ஓட்டுகள் மட்டுமே நமக்கு போதாது. உ.பி.-யின் மக்கள் தொகையில் 13 சதவிகிதம் வரையுள்ள பார்ப்பனர்களின் ஓட்டுகளைப் பெற்றால் சுலபமாக ஆட்சியைப் பிடிக்கலாம் என கணக்கு போட்ட மாயாவதி, அதற்குத் தகுந்தாற்போல் எடுத்த புது அவதாரம்தான் ‘தலித்-பார்ப்பனக் கூட்டணி’. எங்கள் கட்சி தலித்துகளுக்கான கட்சி மட்டுமில்லை, ஏழை பார்ப்பனர்களுக்கான கட்சியும்தான் என்று தாளம் மாறியது பகுஜன் சமாஜ் கட்சி. பார்ப்பனர்களுக்கும் ஆதிக்க சாதியினருக்கும் அக்கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இடம்தந்தது.

இவ்வாறு தனது அடையாளத்தை மறுவார்ப்பு செய்துகொண்டு பார்ப்பனர்களே ‘தமக்கான கட்சி’ என்று போற்றுமளவிற்கு செயல்பட்டதால் 2007 ஆம் ஆண்டு மாயாவதி உ.பி.யின் முதல் ‘தலித்’ முதலமைச்சரானார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உ.பி. சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ‘தலித்-பார்ப்பனக் கூட்டணி’ பிரச்சாரத்தை கையிலெடுத்திருக்கிறார் மாயாவதி. இதற்காக தனது பிரச்சாரத்தை ஜூலை மாதமே தொடங்கிவிட்டது பகுஜன் சமாஜ் கட்சி.

முதல்கட்டமாக பார்ப்பனர்களை கவர்வதற்காக, ‘பிராமண சம்மேளனம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாநாடுகளை நடத்துவதற்கு திட்டமிட்டார்கள். சாதி பெயரில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களை நடத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் தடைவிதித்திருப்பதால் அம்மாநாட்டின் பெயரை ‘ஞானம் பெற்ற வகுப்பினரை கவுரவிக்கும் கருத்தரங்கு’ (Seminar in honor of the enlightened class) என மாற்றி நடத்தியிருக்கிறார்கள். அயோத்தியில் நடந்த முதல் மாநாட்டின் சிறப்பு விருந்தினர் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா என்ற பார்ப்பனர். கூட்டத்திற்கு சில மணிநேரம் தாமதமாக வந்த சதீஷ் சந்திர மிஸ்ரா, தாம் ராம்லல்லாவுக்கும் ஹனுமான்கடிக்கும் சென்றுவந்ததாக கூறினார்.

பின்னர், இக்கூட்டத்தில் பேசிய மிஸ்ரா, பார்ப்பனர்களின் ‘முக்கிய பிரச்சினைகள்’ குறித்து விவாதித்தார். “ராமர் கோயிலுக்காக கடந்த 30 ஆண்டுகளாக வசூலிக்கப்பட்ட பணத்திற்கு என்ன கணக்கு? ஓராண்டாகிவிட்டது இன்னும் அஸ்திவாரம்கூடப் போடப்படவில்லை, கோயிலைக் கட்டுவார்களா இல்லையா என்பதே கேள்வியாக இருக்கிறது” என்று ஆத்திரப்பட்ட அவர், உ.பி.யின் மிகப்பெரிய தாதாவாக வலம்வந்த விகாஸ்துபே (இவன் பார்ப்பன சாதியைச் சேர்ந்தவன்) என்கவுண்டரைச் சுட்டிக்காட்டி, கடந்த நான்காண்டு காலத்தில் பல பிராமணர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் உ.பி. அரசின் கீழ் ‘பிராமணர்கள் மீதான கொடுமைகள்’ அதிகரித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். எனவே பா.ஜ.க.விற்கு மாற்றாக பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரிக்கும்படியும் “மாநிலத்தில் 13 சதவிகிதமுள்ள பிராமணர்கள் 23 சதவிகிதமுள்ள தலித்துகளுடன் இணைந்தால் வெற்றி நிச்சயம்” என்றும் பிளந்துகட்டினார்.

இந்தியாவிலேயே உத்திரப்பிரதேசத்தில்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது, சாதிவெறித் தாக்குதல்கள்; படுகொலைகள்; பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்கள் அதிகம் நடப்பதாக சமீபத்தில் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் அறிக்கை விவரம் காட்டியது. அப்படிப்பட்ட ஒரு மாநிலத்தில் இருந்துகொண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்படும் கொடூரங்களுக்கு எதிராக போராடாத பகுஜன் சமாஜ் கட்சி, பார்ப்பனர் ஓட்டைப் பொறுக்குவதற்காக ரவுடி விகாஸ்துபேவுக்கு நீதிகேட்கிறது. மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள் என தலித்துகள் கொல்லப்படும்போது பசுப் பாதுகாப்பு கொட்டகையில் பசுக்கள் ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை என்று வருத்தப்படுகிறது.

‘நாங்களும் இந்துதான்’ என்று வண்டியில் ஏறும் அகிலேஷ் யாதவ்

உத்தரப் பிரதேசத்தில் எதிர்க்கட்சியாக உள்ள சமாஜ்வாதி கட்சியின் வாங்குவங்கி அடித்தளமாக இருப்பது யாதவ்கள் மற்றும் முஸ்லீம்கள்தான். அதனாலேயே பா.ஜ.க. தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியையும் அகிலேஷ் யாதவையும் கடுமையாக தாக்கி வருகிறது. “முஸ்லீம்களின் ஓட்டுக்களை வாங்குவதற்காக அகிலேஷ் மதம் மாறினாலும் மாறுவார்” என்று சாடினார் யோகி ஆதித்யநாத். இப்படியே தாம் தாக்கப்பட்டால் இந்து யாதவ்களின் ஓட்டுக்களையும் இழந்துவிடுவோமோ (அஹிர்கள் என்றழைக்கப்படும் யாதவ் சாதியினரின் ஒரு உட்பிரிவை ஆர்.எஸ்.எஸ். தன் செல்வாக்கிற்கு கொண்டுவந்துவிட்டது) என்று அஞ்சிய அகிலேஷ் ‘நாங்களும் இந்துதான்’ என்று வலிந்து காட்டிவருகிறார்.

“கடவுள் இராமர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர். நாங்கள் இராமர் மற்றும் கிருஷ்ணரின் பக்தர்கள்” என்று கூறிய அகிலேஷ் யாதவ், பிப்ரவரி மாதம் முதலே அயோத்தி, சித்திரகூடம், ஃபருகாபாத் என கோயில் கோயிலாக சுற்ற ஆரம்பித்துவிட்டார். அவ்வாறு தாம் சென்று வழிபடும் இடங்கள், சாதுக்களிடம் ஆசீர்வாதம் பெறுவது போன்றவற்றை புகைப்படங்களெடுத்து டிவிட்டரில் பதிவிட்டார். “உண்மையான இராமராஜ்ஜியத்தை உருவாக்குவதற்காக நாங்கள் வெற்றிபெற்றால், கோயில்களிலிடமிருந்து வசூலிக்கப்படும் நகராட்சி வரிகளை தள்ளுபடி செய்வோம்” என வாக்குறுதியளித்திருக்கிறார்.

‘இந்து’ அடையாளத்தோடு சாதி அரசியலையும் சேர்த்து கையாளுகிறது சமாஜ்வாதி கட்சி. தாங்கள் ஆட்சி செய்தபோது, விஸ்வகர்மா ஜெயந்தியை விடுமுறை நாளாக அறிவித்திருந்த நிலையில், தற்போதைய யோகி அரசு அதை வாபஸ் பெற்றதன் மூலம் ஒட்டுமொத்த விஸ்வகர்மா சமூகத்தையும் அவமதித்துவிட்டதாக சாடிய அகிலேஷ் யாதவ் தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விஷ்வகர்மா ஜெயந்தி நாளை மீண்டும் விடுமுறையாக அறிவிப்போம் என்றும் கோமதி நதிக்கரையில் விஸ்வகர்மாவுக்கு பிரம்மாண்டமான கோயில் கட்டப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாளன்று அம்பேத்கர் பிறந்தநாள் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் ‘தலித் தீபாவளி’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டிருக்கிறது.

ஆம் ஆத்மி: ஆளும் வர்க்கங்களுக்கு வாய்த்த ஸ்டெப்னி, ஆர்.எஸ்.எஸ்.க்கு வாய்த்த மற்றொரு அரசியல் கருவி!

மற்ற கட்சிகளெல்லாம் உத்தரப்பிரதேச தேர்தலில் வெற்றிபெறுவதற்கான ஒரு உத்தி என்ற முறையில் ‘இந்து’ அரசியலோடு சங்கமமாகத் தொடங்கின என்றால், “ஊழல் ஒழிப்பு, வேர்மட்ட ஜனநாயகம்” என்றெல்லாம் பேசி ஆட்சிக்கு வந்த கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, தன்னை உணர்வுப் பூர்வமாகவே இந்துத்துவ அரசியலோடு கரைத்துக் கொண்டு, இந்துத்துவத்தின் மற்றுமொரு அரசியல் பிரிவாகவே உருமாறிக் கொண்டு வருகிறது. பா.ஜ.க.வை எதிர்த்து உத்தரப் பிரதேசம், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தனித்துப் போட்டியிடும் இக்கட்சி, அங்கு மட்டுமல்லாமல் தான் ஆட்சி புரியும் டெல்லியிலும் கூட பா.ஜ.க.வின் ‘மதவாதம்-தேசியவாதம்’ என்ற இருமுனை ஆயுதத்தை புதிய பாணியில் பயன்படுத்துகிறது.

அயோத்தியில் கட்டப்பட்டுவரும் இராமர் கோயிலுக்கு சென்றுவந்த கெஜ்ரிவால், இனி டெல்லிவாசிகள் அயோத்திக்கு வந்து வழிபடுவதற்கான செலவை அரசே ஏற்கும் என அறிவித்திருக்கிறார். கடந்த தீபாவளியின் போது இராமனை வழிபடுவதற்காக டெல்லியில் அயோத்தியில் கட்டப்படும் வடிவிலான தற்காலிக இராமர் கோயில் ஒன்றை நிறுவிய கெஜ்ரிவால், தம் மனைவி, அமைச்சர்கள் புடைசூழ கோலாகலமான ஆன்மீக வழிபாட்டில் ஈடுபட்டார். ஒரு கட்சியாகவும் அரசாங்கமாகவும் சட்டப்படி பெயரளவிற்காகவாவது மதச்சார்பின்மையை கடைபிடிக்க வேண்டும் என்பது பொதுவிதியாக இருக்கும் நிலையில், கெஜ்ரிவாலின் இந்த கூத்து ஆம் ஆத்மி கட்சியை இன்னொரு பா.ஜ.க.வாகவே காட்சிப்படுத்தியது.

அவரின் இந்த திடீர் இராம பக்தி, கோயில் கோயிலாக சுற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை ஒட்டி ஆம் ஆத்மி ‘மென்மையான’ இந்துத்துவத்தைக் கடைபிடிக்கிறது என்ற விமர்சனம் எழுந்தபோது, “நான் ஒரு ‘இந்து’. நான் இராமர் கோயிலுக்கும் போவேன் அனுமன் கோயிலுக்கும் போவேன், இதில் யாருக்கு என்ன பிரச்சினை” என்று பொங்கினார். மேலும் “மென்மையான இந்துத்துவம் என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை, நான் இந்த நாட்டின் 130 கோடி மக்களை ஒன்றிணைக்க விரும்புகிறேன். ஒரு மனிதனை இன்னொரு மனிதனுடன் இணைக்க விரும்புகிறேன். இதுதான் இந்துத்துவா.. இந்துத்துவா ஒன்றுபடுத்துகிறது, இந்துத்துவா உடையாது” என்று ஆர்.எஸ்.எஸ்.இன் இலக்கணத்தை அச்சுபிசகாமல் ஒப்பித்தார்.
“நாங்கள்தான் உண்மையான இந்துத்துவா” என்று காவி நீரோட்டத்தோடு தான் கலந்துவிட்டதை பகிரங்கப்படுத்திய கெஜ்ரிவால், பா.ஜ.க.வின் “தேசபக்தி” ஃபார்முலாவையும் விட்டுவைக்கவில்லை. டெல்லியிலுள்ள மாணவர்களுக்கு ‘தேச உணர்வை’ வளர்க்கும் விதமாக, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தனிப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆம் ஆத்மி அரசு. அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்நோக்கியிருக்கிற உத்தரகாண்டில் தங்களது முதல்வர் வேட்பாளராக, இராணுவத்தில் கர்னலாக பணியாற்றிய அஜய் கோத்தியாலை முன்னிருத்தியிருக்கிறார்கள். உத்தரகாண்டில் ஆட்சியைப் பிடித்தால், அம்மாநிலத்தை ‘இந்துக்களின் ஆன்மிகத் தலைநகராக்குவோம்’ என்று அறிவிப்பு விடுத்திருக்கிறார் கெஜ்ரிவால்.

உத்தரப்பிரதேசத்தில் தங்களது தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக, கடந்த செப்டம்பர் மாதம் அயோத்தியில் திரியங்கா (மூவர்ணக் கொடி) யாத்திரை என்ற பெயரில் தேசியக்கொடியோடு ஊர்வலம் போனது ஆம் ஆத்மி கட்சி. இந்நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்த ஒருநாள் முன்பே வந்த டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோதியா மற்றும் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சஞ்ஜய் சிங் ஆகியோர் ராம ஜென்ம பூமியையும் ஹனுமன் கிராந்தியையும் தரிசித்துவிட்டு, சரயு நதியில் தலைமுழுகி பக்தியோடு ஹனுமன் சாலிசா பாடினார்கள்.

பகுஜன் சமாஜ் கட்சி எப்படி உ.பி.யில் 13 சதவிகிதமுள்ள பார்ப்பனர்களின் ஓட்டுக்களை பொறுக்குவதற்கு ‘ஞானம் பெற்ற வகுப்பினரை கவுரவிக்கும் மாநாட்டை’ நடத்தியதோ அதேபோல, ஆம் ஆத்மி கட்சியும் ‘சாணக்ய விசார் சம்மேளனம்’ என்ற பெயரில் நடத்தியுள்ளது.

தொகுப்பாக பார்க்கும்போது மற்ற கட்சிகளைவிட ஆம் ஆத்மி பேசும் இந்துத்துவ அரசியல் நேரடியாக காவி பாசிசத்துடன் நெருக்கமுடையது. 2019 ஆம் ஆண்டு டெல்லியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பயங்கரவாத பாசிசத் தாக்குதல்கள் அரங்கேறியபோது, அமைதியாக அதை ஆதரித்து வேடிக்கைப் பார்த்தவர்தான் கெஜ்ரிவால். சென்ற அக்டோபர் மாதம் பஞ்சாபில் விவசாயிகளுடனான கூட்டமொன்றில் கலந்துகொண்ட கெஜ்ரிவாலிடம், “காஷ்மீரின் 370-ஆவது சிறப்புச் சட்டத்தை இரத்து செய்திருக்கும் மோடியின் நடவடிக்கையைப் பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று ஒரு விவசாயி கேள்வி எழுப்பியபோது, “இது ‘அரசியல் கேள்வி’, வேறு எதாவது இருந்தால் கேளுங்கள்” என்று சொல்லிக் கூட்டத்தை முடித்துக் கொண்டு கிளம்பியிருக்கிறார்.

ஆம் ஆத்மியின் இந்தப் போக்கை விமர்சிக்கும் லிபரல்கள், அவரை ‘பா.ஜ.க.வின் பி டீம்’ என்கின்றனர். ஆம் ஆத்மி பா.ஜ.க.வின் பி டீம் என்று சொல்வதைவிட ஆளும் வர்க்கங்களின் பி டீம் என்று சொல்வதுதான் பொருத்தமானது. மோடி அரசின் பொருளாதாரத் தாக்குதல்களால் கிளர்ந்தெழும் உழைக்கும் மக்கள் நாளுக்குநாள் பா.ஜ.க.வின் மீது அதிருப்தியையும் ஆத்திரத்தையும் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் அதன் சித்தாந்தமான இந்துத்துவத்தின் மீதோ, தேசவெறியின் மீதோ அல்ல.. இச்சூழலில் பா.ஜ.க.வின் செல்வாக்கு சரிந்தால் அதே ‘இந்துத்துவம்-தேசவெறியைப்’ பேசி வெகுமக்களைக் கவரக்கூடிய ஒரு கட்சியாக உருமாற வாய்ப்புள்ள ஆம் ஆத்மியை ஆளும் வர்க்கங்கள் தத்தெடுத்துக் கொள்ளும். சுருக்கமாகச் சொன்னால் பா.ஜ.க. என்ற டயர் பஞ்சரானால் வேறொன்றை மாற்றிக் கொள்வதற்கான ஸ்டெப்னியாக (Stepney) ஆளும் வர்க்கங்களுக்கு வாய்த்திருக்கிறது ஆம் ஆத்மி.

மேலும் ஆர்.எஸ்.எஸ். என்ற பாசிசப் படை, பா.ஜ.க. என்ற கட்சியை மட்டும் பயன்படுத்தித்தான் இந்துராஷ்டிரத்தை அடையவேண்டுமென்பதில்லை. ஆர்.எஸ்.எஸ்.க்கு பா.ஜ.க. ஒரு கருவி மட்டுமே. பா.ஜ.க. அல்லாத வேறொரு கட்சியையும் கூட ஆர்.எஸ்.எஸ். தங்கள் அரசியல் கருவியாக பயன்படுத்திக் கொள்ளமுடியும். அது, இந்திய நாட்டில் நூறாண்டுகால வேர்களைக் கொண்டிருக்கிறது. எந்தக் கட்சியையும் தனது கருத்துருவாக்கத்துக்கு பணிய வைக்கக் கூடியது என்கிறார் சி.பி.ஐ.(எம்.எல்) ரெட் ஸ்டாரைச் சேர்ந்த தோழர் பி.ஜே.ஜேம்ஸ். (நவ தாராளவாதம் மற்றும் நவ பாசிசம்: ஒரு இடதுசாரி பார்வை – என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆற்றிய உரை)

படிக்க :

ரூ. 10,72,000 கோடி : மோடியின் ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன் !

மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் அணைப் பாதுகாப்பு மசோதா !

இந்துராஷ்டிர அபாயத்தை எதிர்கொள்வதெப்படி?

பார்ப்பன இந்துமதவெறி பாசிசம் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வேரூன்றி வளருகிறதோ, அந்த அளவிற்கு ‘சாத்தியமான மாற்று’களெல்லாம் மறைந்துகொண்டிருக்கின்றன. ஒன்று, பாசிச சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லை, பாட்டாளி வர்க்கக் கட்சியின் தலைமையில் உழைக்கும் மக்களைத் அணிதிரட்டி மோத வேண்டும். இவை இரண்டிற்கும் இடையிலான இடைக்கட்டம் – சுவாசிப்பதற்கான அவகாசம் – எதுவுமில்லை. இதுதான் எதிர்வரும் உத்தரப்பிரதேசத் தேர்தல் நமக்கு உணர்த்தும் உண்மை.

பா.ஜ.க.விற்கு எதிராக தமிழகத்தில் தி.மு.க.வை ஆதரிக்கச் சொன்னவர்கள், தற்போது உத்தரப்பிரதேசத்தில் எந்தக் கட்சியை ஆதரிக்கலாமென சொல்ல முடியுமா? தமிழக அளவில் தி.மு.க. ‘சாத்தியமான மாற்றென்றால்’, இந்திய அளவில் சாத்தியமான மாற்று எது? காங்கிரசு என்று சொல்வார்களானால், கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் சி.பி.எம்.ஐயும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் எதிர்க்க வேண்டுமா? ஆனால் அங்கெல்லாம் மாநில அளவில் உள்ள நிலையை கவனித்தால் சி.பி.எம்.-உம் திரிணாமுல் காங்கிரசும் தானே மாற்றாகத் தெரிகிறது. எனவே இது மக்களைத் திரட்டுவதில் நம்பிக்கையில்லாத அவநம்பிக்கை வாதம் என்பதோடு படுகுழப்பமான வாதமுமாகும்.

காவி – கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்த்து முறியடிப்பதோ, இல்லை அதற்காகப் போராடும் சக்திகளுக்கு துணை செய்வதோ காங்கிரசு, தி.மு.க. உள்ளிட்ட எந்த ஓட்டுக் கட்சிக்கும் நோக்கமல்ல. ஓட்டுப் பொறுக்கி ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதும் அதனைப் பயன்படுத்திக் கொண்டு சுரண்டிக் கொழுப்பதும்தான் நோக்கம். அதற்கு மக்களுடைய ஆதரவைப் பெறும் ஓரே காரணத்திற்காக தங்கள் பிரச்சாரங்களையும் கொள்கைகளையும் வடிவமைத்துக் கொள்கிறார்கள். தமிழகத்தின் பா.ஜ.க. எதிர்ப்புணர்வு தி.மு.க.வுக்கு சமூக நீதியைக் கொடுத்தது. உத்திரப்பிரதேசத்தின் இந்துமதவெறி மேற்சொன்ன கட்சிகளை இந்துத்துவத்தோடு சங்கமிக்கச் செய்திருக்கிறது.

பாசிச எதிர்ப்பு போராட்டத்தில் தீர்மானகரமான அம்சம் எதுவெனில், யார் மக்களை அரசியல்படுத்துவது என்பதுதான். பாட்டாளி வர்க்க அரசியிலின் கீழ் பரந்துபட்ட உழைக்கும் மக்களை நாம் மக்களை அணிதிரட்டப்போகிறோமா, இல்லை இந்துத்துவ அரசியலின் கீழ் எதிரி அணிதிரட்டப்போகிறானா என்பதுதான் விவகாரமேயன்றி ‘சாத்தியமான மாற்று’ என்ற பெயரில் ஆளும்வர்க்க கட்சிகளுக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதல்ல.

 செவ்வந்தி

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் : யாருடைய நலனுக்கானது ?

ந்திய நகரங்களில் எழும்பி நிற்கும் வானுயர்ந்த கட்டிடங்கள் நமது நாட்டின் வளர்ச்சிப் பாதையை காண்பிக்கின்றன என்று மோடி அரசு மார்தட்டிக் கொள்கிறது. முன்னோர்கள் கூறியதுபோல் “ஒரு வீட்டின் அழகை அவன் வீட்டின் முன்புறம் பாக்காதே! கொள்ளைப்புறம் பார்” என்பது போல இந்தியாவின் வளர்ச்சியை முன்பக்கம் வானுயர்ந்து நிற்கும் கட்டிடங்களைக் கொண்டு பார்க்க முடியாது. பின்பக்கமுள்ள சேரிகளின் உண்மை நிலையை வைத்துத் தான் பார்க்கவேண்டும். அதன் பரிமாணம் வேறொன்றாக உள்ளது.
பெரும்பணக்காரர்கள் வானுயர்ந்த கட்டிடங்களில் கொண்டாட்ட நிலையில் இருக்கும்போது, ஏழை மக்களோ ‘ஒருவேளை சோத்துக்கும், குந்தி இருக்க ஒரு குடிசைக்க்கும்கூட வழி இல்லாத நிலையில் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
அப்துல் கலாம் 2020-ல் இந்தியா வல்லரசாக இளைஞர்களை கனவு காணச் சொன்னார். இன்றைக்கோ கனவுகள் அனைத்தும் பொய்த்துப்போய் ஓட்டைவிழுந்த குடிசையில் சோறு கிடைக்காமல், கல்வி, வேலைவாய்ப்பு இல்லாமல் பல கோடி இளைஞர்களை நிர்க்கதியாக்கபட்டதே நடைமுறை எதார்த்த உண்மை. நம்மால் கனவு மட்டுமே காணமுடியும். முதலாளிகள் ஏற்கெனவே கூறுவதுபோல ‘ஏழை மக்கள் பூமிக்கு தேவை இல்லாதவர்கள்’ என்பதை உண்மையாக்க 2019-ல் ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தை கொண்டுவந்து ஏழை மக்களின் குடியிருப்புகளை – சேரிகளை நகரத்தில் இருந்து அப்புறபடுத்திக்கொண்டிருக்கிறது, அரசு.
படிக்க :
PM-CARES : பிரதமரின் கொரோனா நிவாரண நிதி மர்மங்கள் – சில கேள்விகள்
பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம் : கார்ப்பரேட்டுகளுக்கு நேரடி மானியம் !
ஏதோ மக்கள் நலனுக்காக அரசால் கொண்டுவரப்படும் திட்டங்கள் போலத் தோன்றும் பல திட்டங்கள் ஆளும்வர்க்க நலனுக்கான திட்டங்களாவே உள்ளன. அத்தகையதொரு கவர்ச்சிகரமான மாய சிலந்திவலைத் திட்டம்தான் ஏழைகளுக்கான வீடு கட்டிதரும், “பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டம்” (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா).
பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் :
காங்கிரஸ் ஆட்சி ஏழை மக்களுக்கு வீடுகட்டி தரப்போவதாக 1985-1986-ல் “இந்திரா ஆவாஷ் யோஜனா” என்ற திட்டதை கொண்டு வந்தது. 2015-ல் பாசிச பாஜக ஆட்சியில் இத்திட்டதில் சிறிது மாற்றத்தை கொண்டுவந்தது. அரசால் மானியமாக கொடுக்கப்பட்ட தொகை 1,20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் 2019 வரை 83.63 லட்சம் வீடுகளுக்கு  ஒப்புதல் வழங்கபட்டு, 26.08 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கபட்டுள்ளன என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கான மொத்த தொகையான ரூ.4,95,838 கோடியில், தற்போது வரை 5144.5 கோடி மத்திய அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2022க்குள் 2 கோடி வீடுகள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது. இத்திட்டதுக்கான தொகையில் மத்திய, மாநில அரசுகள் பங்கீடு செய்கின்றன அவை.
2019-2020 வரை ரூ.1,20,000-ஐ மானியமாக வழங்கிய அரசு, 2021-2022 ஆண்டு 1,70,000 ரூபாயாக உயர்த்தியது. அரசு கொடுக்கும் இந்த தொகை நான்கு கட்டங்களாக வங்கிகணக்கில் போடப்படுகிறது. இதற்கான வீட்டின் அளவு 269 சதுர அடிக்கு மேல் இருக்கலாமென கூறியுள்ளது. கழிவறைக்கான தொகையாக 12,000 ரூபாயும் கொடுக்கப்படுகிறது. ஒரு சதுர அடிக்கு ரூ.1500 செலவாகும் என்று வைத்து கொண்டாலும் ஒரு வீட்டை கட்டி முடிக்க (269×1500= 4,03500) 4,035,000 ரூபாய் செலவாகும். இதிலிருந்து ஒரு கேள்வி எழலாம், இப்போழுது உள்ள சிமெண்ட், கம்பி, மணல், இதர பொருட்கள் விலை ஏற்றம் இருந்தாலும் ஏழை மக்கள் ஏன் இத்திட்டத்தின் ‘பயனாளி’ ஆகிறார்கள் என்று?
மக்கள் இத்திட்டத்தை விரும்ப காரணம்?
இத் திட்டம் முதலில் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ள, வாழ்நாள் லட்சியங்களில் ஒன்றான, “சொந்த வீடு வேண்டும்” என்ற ஆசையை இலக்காக்கி தமது வலையில் ஆளும் வர்க்கம் விழ வைக்கிறது. இதை புரியாமல் அரசு கொடுக்கும் அற்ப தொகையை வைத்து வீடு கட்டிவிடலாம் என்று நினைத்து, “நாமும் இறப்பதற்குள் நல்ல வீட்டில் வாழ்ந்து விடலாம்” என்ற கனவில் வீட்டை கட்ட ஆரம்பிக்கும் போதுதான் உண்மை நிலை தெரிய வருகிறது. இத்திட்டம் நமக்கு ‘மயிரை கட்டி மலையை இழுப்பது போன்றது’ என்பதை புரிந்துக்கொள்கிறார்கள்.
அரசின் இச்செயல் சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தில் “ஒருவரை ஏமாற்றுவதற்கு அவனிடம் கருணையை எதிர்பார்க்க கூடாது, அவரது ஆசையை தூண்ட வேண்டும்” வரும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. வீடு கட்ட ஆரம்பித்த பிறகு ஏற்படும் பிரச்சினைகள் மக்களை கல்லை கட்டி கிணற்றில் தள்ளுவது போன்றதாகவே உள்ளது.
வழிபறி கொள்ளையர்கள்:
வீடு கட்டத் தொடங்கிய பிறகு அரசு அதிகாரியான கட்டிட பொறியாளர் அல்லது மேற்பார்வையாளர் (overseer) வந்து பார்வை இடுவார். அவருக்கு கப்பம் கட்டினால்தான் நமது வங்கிகணக்கில் தொகை போடப்படும். அப்படி ஒவ்வொருமுறை வங்கிக் கணக்கில் பணம் போடும்போதும் ‘மேற்படி’ செய்ய வேண்டியதை முறைப்படி செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் லோக்கல் அரசியல்வாதிகள், கணினி இயக்குபவர் என லஞ்சம் வாங்குபவர்களின் கணக்கு நீண்டுகொண்டே போகும். பஞ்சாயத்து தலைவர் போன்றோர் தன்னுடைய போலி கணக்கில் வீடு வாங்கி, தன்னுடைய வீட்டை விரிவுபடுத்துவதும் இன்னொரு பக்கம் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.
கடனில் சிக்கவைக்கப்படும் மக்கள்:
வீடுகட்ட தொடங்கும் மக்கள் இதற்காக குடும்ப உறுப்பினர்கள் உட்பட முழு உழைப்பையும் கொட்டினாலும், தப்பித்தவறி வீட்டில் மீதமிருக்கும் நகைகளை விற்றாலும் வீட்டைக் கட்டி முடிக்க இயலவில்லை. அதற்காக கடன் வாங்குகின்றனர், வங்கிக் கடன், நுண் கடன், கந்து வட்டிக் கடன் என எல்லா கடன்களையும் வாங்கிவிட்டு, வீட்டையும் கட்டி முடிக்க முடியாமல், வாங்கிய கடனையும் கட்ட முடியாமல் மன உளைச்சலில் சிலபேர் தற்கொலை செய்கின்றனர். எத்தனை கொடூரம் இது? தற்போதுள்ள நிலையில்லாத வேலையும், குறைந்த அற்ப கூலியும், அவர்களின் அன்றாடம் தேவைகளுக்கே போதவில்லை. கடனை அடைக்க மீண்டும், மீண்டும் கடன் வாங்குவது என்று புதைச்சேற்றில் சிக்கவைக்கப்படுகிறார்கள். இதனால் குடும்பத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள், மன உளைச்சல்கள் வேறு.
வீட்டை கட்டி முடித்தாலும் நிம்மதி இழந்த வாழ்க்கை :
தொடர்ந்து வீட்டுக்காக கடன் வாங்குவாதல் ஏழை மாணவர்கள் முதலில் விடுமுறை நாட்களிலும் பிறகு பள்ளி, கல்லூரிக்கு விடுப்பு எடுத்து, வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வீட்டில் யாருக்கேனும் உடல்நிலை பிரச்சினை ஏற்பட்டால், அதுவும் கடுமையான நோய் ஏற்பட்டால், குடும்பமே ஸ்தம்பித்து விடுகிறது. பாதி கட்டி முடிக்கப்படாமல் காட்சியளிக்கும் வீடோ, நான்கு சுவர்களோ, ஒவ்வொரு கணமும் வேதனையில் ஆழ்த்துகிறது. வீடு கட்டி முடிக்க 3-லிருந்து 5 ஆண்டுகள் ஆகின்றன. இவற்றையும் மீறி கட்டி முடிக்கபட்டாலும் கடன் சுமைலிருந்து மீளமுடியாமல் நிம்மதியை இழக்க வைக்கிறது.
இத்திட்டம் கிராமங்களை வளர்ச்சி பாதையில் கொண்டு விட்டதா?
இத்திட்டதின் மூலம் கூரை வீடுகள் ஒழிக்கப்படும் என்று காவி – கார்ப்பரேட் பாசிச மோடி அரசு கூறுகிறது. உண்மைதான் உண்மையாகவே கூரைகள் அழிந்து வருகின்றன. ஆனால் கான்கிரீட் வீட்டுக்கு பதிலாக தார்பாய் வீடுகளாக மாறிவருகின்றன. விவசாயம் அழிவு, வேலையின்மை காரணமாக அன்றாடம் கூலியைக்கூட ஈட்ட முடியாமல், வாங்கும் சக்தி குறைந்து அன்றாடம் வாழ்க்கையை நகர்த்தவே முடியாத நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர்.
வீட்டின் கூரை மாற்ற ரூ.10,000 வரை செலவு ஆகும் என்பதால் அவ்வளவு தொகை செலவிடமுடியாமல், அதற்கு மாற்றாக தார்பாயை தேர்ந்தெடுத்து உள்ளனர். இதன் விலையோ ரூ.2,000 ஆகும். இரண்டுமே குறைந்தது ஒரிரு ஆண்டுகள் உழைக்கும் என்பதால் தார்பாயி மூலம் கூரையை மறைக்க வேண்டியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
கிராமங்களின் நிலை இது என்றால் நகரங்களில் ஏழை மக்களின் நிலை வெறும் தகரக் கொட்டகையாக மாறிவருகிறது. தார்பாய், தகரம் இரண்டிலேயும் வெயில் காலங்களில் வீட்டிற்குள் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு  வெப்பம் அதிகமாக இருக்கும். தார்பாய் வீடுகளில் மழைக்காலங்களில் தரையில் ஓதம் (ஈரம்) ஏறும் என்று கூறுகின்றனர். இவ்வாறு நகர, கிராம ஏழை மக்கள் வாழவே முடியாத நிலையில் நிற்கின்றனர்.
இத்திட்டத்தின் பின்புலம்:
1970-ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்தம் காரணமாக ஒவ்வொரு நாட்டிலும், வல்லரசு நாடுகளின் வலியுறுத்தலுக்கு இணங்க, அந்நாடுகளின் அரசால் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதில் ஒன்று தான் 1985-1986-ல் கொண்டுவரப்பட்ட இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டம்.
மீண்டும் 2008-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் மீள முடியாத சிக்கலில் மாட்டிக்கொண்டது. இதனால் பல்வேறு துறைகள் திவால் நிலைக்கு சென்றன. இதில் கட்டுமான துறைகள் மட்டும் தப்புமா என்ன?  இந்நெருக்கடியில் இருந்து மீள முடியாமல் முதலாளித்துவம் அழுகி நாறிக்கொண்டு இருக்கிறது. இதன் விளைவாக 2010-ல் இருந்து கட்டுமானத் துறையை மீட்டெடுக்க பல்வேறு திட்டங்களை அரசு கொண்டுவந்தது. இதில் ஏழைகளுக்கான வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தின் நிதியை அதிகப்படுத்துதல் மூலம் அதிக வீடு கட்ட அனுமதி வழங்கியது.
காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் குறைவான எண்ணிக்கையில் அனுமதி கொடுக்கப்பட்டது, பிஜேபி மோடி அரசு 2016-ல் திட்டதின் பெயரை மாற்றி “பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா” என்று வீடுகளின் எண்ணிக்கையையும்  நிதியையும் அதிகரித்து செயல்படுத்தி வருகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிகமான உற்பத்தியாலும், மக்களின் உழைப்பை அதிகமாக சுரண்டியதாலும் மக்களின் வாங்கும் சக்தி குறைந்தது. இதனால் கட்டுமான பொருட்களை தயாரிக்கும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் ஏற்பட்டது. இதனை மீட்டெடுக்க கொண்டுவரப்பட்டதே இத்திட்டம்.
மக்களின் வரி பணத்தில் அம்பானி, ஆதானி, டால்மியா, டாடா தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் கொட்டிக் கொடுக்கிறது மோடி அரசு. அன்றாடம் உழைக்கும் மக்களின் உழைப்பையும், பணத்தையும் அவர்கள் சேமித்து வைத்து இருக்கும் அற்ப பணத்தையும், நகைகளையும் பிடுங்கி பெருமுதலாளிகளுக்குக் கொடுக்கின்றது.
பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களையும் அவற்றின் நலனுக்காக செயல்படும் காவிக் கும்பலையும் வீழ்த்த மக்கள் அமைப்பாய் திரள்வதே இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
படிக்க :
ஜன் தன் யோஜனா – திருட வாரான் வீட்டு கஜானா!
ஜார்கண்ட் : தொடரும் இந்திய அரசின் பட்டினிப் படுகொலைகள் !
மோடியின் வழியில் ஸ்டாலின் :
தமிழக அரசு 2031க்குள் தமிழகத்தை “குடிசையில்லாத மாநிலமாக” மாற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஏழை மக்களுக்கு 9.53 லட்சம் வீடுகள் கட்டித்தரப்போவதாக அறிவித்துள்ளது. வேளாண்மைக்குப் பிறகு அதிக வேலை வாய்ப்பை அளிப்பதும் மற்றும் அதிக வருவாய் ஈட்டிக்கொடுப்பதுமான கட்டுமானத்துறையை மேம்படுத்தப்போவதாகவும், முதல்கட்டமாக 6.2 லட்சம் மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்போவதாக கூறியுள்ளது.
மோடியும் ஸ்டாலினும் கார்ப்பரேட் நலனுக்கான கொள்கையையே நடைமுறைப்படுத்தி வருகின்றனர் என்பது நாம் அறிந்ததே. எனினும் பாஜக கும்பல் ஆளும் வர்க்கத்தின் “ஆகப் பிற்போக்கான” பிரிவை பிரதிநிதித்துவப் படுத்துகிறது. திமுக போன்ற கட்சிகள் ஆளும் வர்க்கத்தின் இன்னொரு பிரிவை பிரதிநிதித்துவ படுத்துகின்றனவா, ஒருவேளை அவ்வாறு பிரதிநிதித்துவபடுத்தி வளர்ந்து வரும்போது ஆளும் வர்க்கத்தினரிடம் எந்தளவுக்கு முரண்பாடு வெடிக்கும், இவை பாசிசத்தை எதிர்ப்பதற்கான ஐக்கிய முன்னணியில் இணையும் ஆளும் வர்க்கத்தின் இன்னொரு பிரிவாக இருக்குமா என்பதற்கு வரும்காலம்தான் பதிலளிக்கும்.
எது எப்படி இருந்தாலும், பாசிசத்தின் அடிநாதமாக இருக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு ஒன்றிய மோடி அரசும், தமிழ்நாட்டின் ஸ்டாலின் அரசும் செய்துவரும் கார்ப்பரேட் சேவையை அம்பலப்படுத்துவதை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும்.
கந்தசாமி

தொழிலாளர்களின் உணவில் பாரபட்சம் காட்டும் அசோக் லேலண்ட் || புஜதொமு கண்டனம்

ஒசூர் – அசோக் லேலண்ட் யூனிட் 1,யூனிட் 2 நிர்வாகமே!
உணவில் பாரபட்சம் காட்டாதே!
காண்ட்ராக்ட், CL , செக்யூரிட்டி, லாஜிஸ்டிக், அப்ரண்டீஸ் தொழிலாளர்களுக்கு தரமான, சரிவிகித, ஒரே மாதிரியான, சமமான சாப்பாடு வழங்கு!

அசோக் லேலண்ட் -ல் பணிபுரியும் நிரந்தர, CL, காண்ட்ராக்ட், செக்யூரிட்டிகள், லாஜிஸ்டிக் தொழிலாளர்களே!

70 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட அசோக் லேலண்ட் நிறுவனத்தில் நாம் அனைவரும் இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைத்து வருகிறோம். நமது உழைப்பில் பல ஆயிரம் கோடி இலாபம் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. ஆனால், நமது ஆலை நிர்வாகமோ தொழிலாளர்களுக்கு கேண்டீனில் வழங்கப்படும் மதிய உணவில் பெரும் அநீதி இழைத்து வருகின்றது. நாம் எல்லோரும் ஒரே ஆலையில் பணிபுரிந்து வந்தாலும் இங்கு நிரந்தரத் தொழிலாளர்களுக்கு ஒரு மாதிரியும் காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு ஒரு மாதிரியும் பாரபட்சமான வகையில் உணவு வழங்கப்படுகிறது. நிரந்தரத் தொழிலாளர்களுக்கு சப்பாத்தி, முட்டை, தயிர், வெரைட்டி ரைஸ் எனவும் காண்ட்ராக்ட், செக்யூரிட்டி மற்றும் லாஜிஸ்டிக் தொழிலாளர்களுக்கு வெறும் சாதமும் சாம்பாரும் பெயரளவிற்கு ஒரு கூட்டு மட்டும் வழங்கப்படுகிறது. அதுவும் அளவு சாப்பாடு தான். நிரந்தரத் தொழிலாளர்களுக்கு சாம்பார் கெட்டியாகவும் காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சாம்பார் தண்ணீரை போலவும் இருக்கிறது.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு வழங்குவதாக காரணம் சொல்லி சாம்பாரில் போடப்படும் மொத்த காய்களையும் வடித்தெடுத்து விடுகிறார்கள். அதனால் CL, காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது சாம்பாரா? ரசமா? என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு புது மாதிரியாக இருக்கிறது.

CL, காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் என்ன வேற்றுகிரகவாசிகளா? அவர்கள் தொழிலாளர் வர்க்கத்தின் அங்கமில்லையா? அவர்களும் நம் சொந்தபந்தங்கள்தான். நம் உறவினர் அல்லது நம் நண்பர்களின் பிள்ளைகள்தானே? அவர்களின் வியர்வையிலும் ரத்தத்திலும்தான் அசோக் லேலண்ட் நிறுவனம் இத்தனை வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.

படிக்க :

ஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் !

ரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம் !

இதுநாள் வரை தொழிலாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு வந்தவர்களை திடீரென்று டேபிளில் அமரவிடாமல் சிறிதும் மரியாதையின்றி விரட்டியடிக்கிறது நிர்வாகம். நிரந்தரத் தொழிலாளர்கள் தங்களது சாப்பாட்டை காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் டேபிளில் இருந்து குற்றவாளிகளைப் போல் துரத்தி, அவர்களை அவமானப்படுத்துகிறது.

ஒப்பீட்டளவில் அதிகாரிகளை விட மிக, மிகக் குறைவான கூலிக்கு வேலை செய்யும் CL, காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் சிறிது நேரம் ஓய்வெடுக்கவோ, உட்காரவோ விடாமல் வேலை வாங்கும் அதிகாரிகள், என்றாவது இந்த தொழிலாளர்கள் காலை டிபன் சாப்பிட்டர்களா? மதிய உணவு கிடைத்ததா? வயிறார சாப்பிட்டார்களா? ஆரோக்கியமான உணவுச் சூழல் உள்ளதா என்று விசாரித்திருக்கிறார்களா? தேவைப்படும் அளவிற்கு கேட்டு வாங்கி சாப்பிடும் உரிமை அவர்களுக்கு ஏன் இல்லை? இலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் இந்த கார்ப்பரேட் அதிகாரிகளுக்கு உண்மையில் மனிதத்தன்மை என்ற ஒன்று இருக்கிறதா?

மெட்டீரியல் முவ்மெண்ட், லோடிங் – அன்லோடிங், மெசின் கிளீனிங், ஷாப்களை சுத்தம் செய்வது, கழிவறை கிளினிங் செய்வது உள்ளிட்ட பாதுகாப்பு பணிகள் என எண்ணற்ற, கடுமையான வேலைகளை காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் செய்கிறார்கள். இங்கு அவர்களின்றி உற்பத்தியில் ஒரு அணுவும் அசையாது. ஆனால், அவர்களுக்கு நல்ல தரமான உணவு வழங்காமல் தாழ்த்தப்பட்ட மக்களாகவே நடத்துகிறது,நிர்வாகம்.

கடந்த ஓராண்டாக டிவிஎஸ் லாஜிஸ்டிக்கில் பெண்களும் பணிபுரிந்து வருகிறார்கள். பெண்களை சமைப்பதற்காகவே பிறவி எடுத்தவர்கள் போல நாம் நடத்துகிறோம். வீட்டில் நமக்கு வகை, வகையாக சமைத்துப் போடுவதிலேயே தங்களது பாதி வாழ்நாளை அவர்கள் செலவழிக்கின்றனர். அப்படிப்பட்ட பெண்களுக்கு நமது ஆலையில் வெறும் சாதமும் சாம்பாரும் மட்டும்தான் வழங்கப்படுகிறது. அந்த உப்பு சப்பில்லாத சாப்பாட்டை அவர்கள் ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் ‘சாப்பிட்டுவிட்டு’ வெறுப்புடன் வெளியேறி விடுகிறார்கள். இந்த லட்சணத்தில் நிர்வாகம் லாஜிஸ்டிக் பெண்களை அழைத்து மார்ச் 8 தேதி மகளிர் தினத்தை நடத்துகின்றது. பெண்களுக்கு நல்ல தரமான சாப்பாடு கூட கொடுக்க வக்கில்லாத நிர்வாகத்திற்கு, அவர்களை அழைத்து மகளிர் தினத்தைக் கொண்டாட வைப்பதற்கு என்ன யோக்கிதை இருக்கிறது?

தொழிலாளர்களை கொடும் உழைப்புச் சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்குகின்ற TVS நிர்வாகம் கூட அனைவரையும் வரிசையில் அமர்த்தி, சமமான உணவு வழங்குகிறது. யுனிட்-2வில் உச்சபட்டமாக ஜாதிக்கு ஒரு பந்தி என்பது போல காண்ட்ராட் தொழிலாளர்களுக்கு தனி கேண்டீன் கட்டி ஒதுக்கிவிட்டது. அற்பக்கூலி பெறுவதால் படித்த CL, அப்ரண்டீஸ் தொழிலாளர்கள் நைட் சிப்ட்டில் வேலை பார்த்துவிட்டு தூங்கி எழுந்து காலை டிபன் கூட சாப்பிடாமல் நேரடியாக மதிய உணவு சாப்பிட்டு 4.30pm சிப்ட்டிற்கு வருகின்றனர். பசியுடன் 8.30pm வரை வேலையில் ஈடுபடுகின்றனர். இது மிகப்பெரிய துயரமாகும். இதயமுள்ள மனிதர்கள் எதிர்த்து நிற்பார்கள். இதில் நமது நிர்வாகமோ துளியும் மனசாட்சியின்றி நடந்து கொள்கிறது.

ஆலையில் செக்யூரிட்டிகள் 12 மணி நேரம் இரவு பகலாக கண்விழித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் பிரதான உணவு சப்பாத்திதான். ஆனால் அவர்களுக்கும் சப்பாத்தி வழங்கப்படுவதில்லை.

நிரந்தரத் தொழிலாளர்கள், காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் : கூலி மட்டும்தான் வித்தியாசம். அடக்குமுறையும் அடிமைத்தனமும் ஒன்றுதான் !

சுமார் பத்தாண்டுகளுக்கு முன் அசோக் லேலண்ட் தொழிலாளர்கள் சங்கம், “காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கும் கேண்டீனில் உணவு வழங்க நிர்வாகத்திடம் பேசி முடித்துவிட்டதாக” அறிவித்தது. சில மாதங்கள் CLகள் மட்டும் சமத்துவமாக நடத்தப்பட்டார்கள். ஆனால், இன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் நல்ல தரமான, சரிவிகித, ஒரே மாதிரியான, சமமான உணவு வழங்காமல் நிர்வாகம் வஞ்சகம் செய்கிறது. சர்வதேச அளவில் தரம், மைக்ரோசெண்டில் உற்பத்திக்கொள்கை வகுத்துள்ள நிர்வாகம் உழைப்போரின் உணவுக் கொள்கையில் ஆய்வுகளின்றி, நேர்மையின்றி நடந்துகொள்கிறது. சரிவிகித சத்தான உணவு வழங்கப்படாததால் நிரந்தத் தொழிலாளர்கள் 45 வயதுக்கு மேல் ஆரோக்கிய வாழ்வு பறிக்கப்பட்டு நடைபிணமாக்கப்படுகிறார்கள்.

இது வெறும் சாப்பாடு பிரச்சனை மட்டுல்ல. வேலையில், சம்பளத்தில், உடையில், என தொழிலாளர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்திய நிர்வாகம், உணவில் கூட வித்தியாசத்தை புகுத்தி நவீன அடிமைத்தனத்தைக் கட்டமைக்கிறது!

நிரந்தரத் தொழிலாளி, CL, காண்ட்ராக்ட், செக்யூரிட்டிகள், அப்ரண்டீஸ் என ஒவ்வொரு வேலைப் பிரிவினரையும் தனித்தனி சாதியாகவே நிர்வாகம் பராமரித்து வருகிறது என்பதை தொழிலாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நிரந்தர வேலை உரிமைக்காக போராட வேண்டிய இன்றைய காலச் சூழ்நிலையில் சாப்பாட்டிற்காக போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இது தொழிலாளர் வர்க்கத்திற்கே அவமானம். அதேநேரத்தில் தொழிலாளர்களுக்கு சமமான உணவைக் கூட வழங்காத கார்ப்பரேட் நிறுவனமான நமது அசோக் லேலண்ட் நிர்வாகம் இதற்காக மிகுந்த வெட்கப்படவேண்டும்!

அசோக் லேலண்ட் சங்கங்களே!

ஒரே ஆலைக்குள் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உணவும் கேன்டீனும் வேறு, வேறு என்ற பாகுபாட்டை நீக்கு!

காண்ட்ராக்ட், CL, அப்ரண்டீஸ், செக்யூரிட்டிகள், லாஜிஸ்டிக் தொழிலாளர்களுக்கு சரிவிகித சத்தான, தரமான, சமமான உணவை வழங்க நிர்வாகத்திடம் பேசி முடி!

அசோக் லேலாண்ட் நிர்வாகங்களே!

அனைவருக்கும் சமமான, சரிவிகித சத்தான உணவை வழங்கு!
உணவில் பாரபட்சம் காட்டாதே!
மனிதர்களை மனிதர்களாக நடத்து!

தொழிலாளர்களே!

நிர்வாகம் நம்மீது திணிக்கும் அடக்குமுறைகளை எதிர்த்து, பேசத் தயங்கினால், உரிமைகளுக்காகப் போராட மறுத்தால், நாளை தினம் நாம் சிந்திப்பதையே மறந்துவிடுவோம்!

பிறகு, அடிமைத்தனத்தையே நமது வாழ்க்கையாக மாற்றிவிடுவார்கள்! நமக்காகப் போராட எந்த அவதாரங்களும் மண்ணில் உதிக்கப் போவதில்லை.

புராண, இதிகாச அவதாரங்கள் கூட உயர்சாதி ஆதிக்கத்தையும் மக்களிடையே அடிமைத்தனத்தையும்தான் போதிக்கின்றன.

எனவே, நமது உரிமைகளுக்காக டில்லி விவசாயிகளை போல நாம்தான் ஒன்றிணைந்து போராட வேண்டும்!

பு.ஜ.தொ.மு – பிரச்சாரக் குழு, ஒசூர்
தொடர்புக்கு: 97880 11784